Blog

  • ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) – பகுதி 1

    unnamed (1)

    ஆப்ரஹாம் லிங்கன்

    (வரலாற்றுத் தொடர் நாடகம்)

    ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    (1809-1865)

    “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்” “கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.” “நான் அடிமையாக வாழ விரும்பாதவன். அதைப்போல் அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.” “எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப் பட்டவர் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும் !” “நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது ! அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில், அப்படிச் செய்வதும் தவறான வினைபோல் குற்றமானது !” ஆப்ரஹாம் லிங்கன்

    unnamed (1)

    முன்னுரை: ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று. வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.

    unnamed (3)

    ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது. 1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார். 1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !

    unnamed (4)

    அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.” 1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !

    unnamed (5)

    *************************

    unnamed (6)

    ஆப்ரஹாம் லிங்கன்

    (வரலாற்றுத் தொடர் நாடகம்)

    காட்சி -1

    நடிகர்கள் :

    ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln) (வயது 51)

    மேரி டாட் லிங்கன் (Mary Todd Lincoln)

    ஸாமுவேல் ஸ்டோன் (Samuel Stone) (50) விவசாயி

    டிமதி  கஃப்னி (Timothy Cuffney) (60) ஸ்டோர் கிளார்க்

    வேலைக்காரி சூஸன் (Susan)

    இடம் :

    ஆப்ரஹாம் லிங்கன் மாளிகை ஸ்பிரிங்ஃபீல்டு, இல்லினாய்ஸ். மாளிகையின் முன்புற விருந்தினர் வரவேற்பறை.

    காலம் :

    1860 இன் ஆரம்ப ஆண்டுகள். மார்ச் மாத இள வசந்த காலம். இருட்டும் மாலை நேரம்.

    நாடக நபர்கள் : (இதுவரை நடந்தது)

    விவசாயி, ஸாமுவேல் ஸ்டோன் & ஸ்டோர் கிளார்க் டிமதி க·ப்னி. வரவேற்பறை கணப்பு அடுப்பின் (Fire Place) முன்பு விருந்தினர் இருவரும் எதிர் எதிரே நாற்காலியில் அமர்ந்து சுருட்டுகளைப் புகைத்துக் கொண்டிருக்கிறார். லிங்கனின் மனைவி மேரி வந்து இருவரையும் வரவேற்றுப் பேசுகிறார். சிறிது நேரம் கழித்து ஆப்ரஹாம் லிங்கன் முன்னறைக்கு வந்து அவர் இருவரையும் வரவேற்று உரையாடுகிறார். அவர்கள் இருவரும் போன பிறகு வணிகர் : வில்லியம் டக்கர் (William Tucker), வழக்கறிஞர் : ஹென்றி ஹிண்டு (Henry Hind), பாதிரியார் : எலையாஸ் பிரைஸ் (Elias Price), தினச்செய்தி ஆசிரியர் : ஜேம்ஸ் மாகின்டாஷ் (James Macintosh) நுழைகிறார்கள். அப்போது தூதுவர் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்கிறார்.

    ***************

    ஸாமுவேல் ஸ்டோன்: இன்று லிங்கனைப் பார்த்து விட வேண்டும். ஆப்ரஹாம் என்பது நல்ல பெயர்தான். மனிதர் ஆறடி உயரத்துக்கும் மேலாக இருப்பார் ! சிறு தாடி வைத்திருப்பார். முகத்தைப் பார்த்தால் சோக முகமாய்த் தெரியும் ! மனிதர் மனதில் ஏதோ வாட்டி வதைத்துக் கொண்டு வருகிறது. என்ன வென்று தெரியவில்லை ! மனிதர் தானாகப் படித்து மேலாக வந்தவர் ! பேச ஆரம்பித்தால் சொற்கள் அம்புகளாய்ப் பாய்கின்றன. மனிதர் மிக்க நேர்மையானவர். எனக்கு நாற்பது வருடமாக அவரது குடும்பத்தாரைத் தெரியும். ஆனாலும் லிங்கன் மனதில் உறுத்துவதை அறிந்து கொள்வது கடினம்.

    மிஸ்டர் கஃப்னி: (சுருட்டை ஊதிக் கொண்டு) அப்படியா ? நானும் தங்கியிருந்து லிங்கனைப் பார்த்த பிறகுதான் போவேன். (சுருட்டுப் புகை அறை முழுவதும் பரவுகிறது)

    ஸாமுவேல் ஸ்டோன்: (சுருட்டுச் சாம்பலைத் தட்டில் தட்டிக் கொண்டு) மனிதர் எப்போதுமே மெலிந்து காணப்படுகிறார். அவரது உடம்பில் ஏதோ ஒன்று அவரையே தின்கிறது !

    (இறுமிக் கொண்டே வேலைக்கரி சூஸன் வருகிறாள். ஜன்னல் திரைகளை மூடுகிறாள். மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கிறாள்)

    சூஸன்: (இருவரியும் உற்று நோக்கி) மிஸிஸ் லிங்கன் இப்போதுதான் வந்தார். நேராக இங்கு வரப் போவதாக என்னைச் சொல்லச் சொன்னார்.

    மிஸ்டர் கஃப்னி: அப்படியா நன்றி.

    ஸாமுவேல் ஸ்டோன்: மிஸ்டர் லிங்கன் இன்னும் வரவில்லை அல்லவா ?

    சூஸன்: அவரும் வரும் நேரம்தான் ! சீக்கிரம் இன்று வந்து விடுவார் !

    ஸாமுவேல் ஸ்டோன்: எப்படி இருக்கும் சூஸன், உங்கள் எஜமானர் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் ?

    சூஸன்: (புன்முறுவல் பூத்து) அவருக்கு நிச்சயம் கிடைக்கும் ! அவரும் அதற்கு உழைத்திருக்கிறார் !

    மிஸ்டர் கஃப்னி: நீங்கள் எல்லாம் ஸ்பிரிங்·பீல்டை விட்டு வாஷிங்டனுக்குப் போக வேண்டும்.

    சூஸன்: எங்களுக்குச் சிரமமில்லை ! அங்கே போக நாங்கள் தயார்.

    மிஸ்டர் கஃப்னி: முதலில் நல்ல செய்தி வரட்டும். ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி என்று கேட்கும் போது செவியில் தேனாய் இனிக்கிறது !

    சூஸன்: இதோ பாருங்கள் ! மிஸிஸ் லிங்கனுக்கு சுருட்டுப் புகை ஆகாது ! வரவேற்பறையில் யாரும் புகைப்பது எஜமானி அம்மாவுக்குப் பிடிக்காது. தயவு செய்து சட்டெனச் சுருட்டை அணைத்துத் தட்டில் போடுவீரா ?

    ஸாமுவேல் ஸ்டோன்: (அவசரமாகப் புகைப்பதை நிறுத்தி சுருட்டை அணைத்து) மன்னிக்க வேண்டும். எங்களுக்குத் தெரியாது.

    (இருவரும் சுருட்டை அணைத்துத் தட்டில் இடுகிறார்)

    மிஸ்டர் கஃப்னி: இன்றைய செய்தி நடுக்கம் உண்டாக்கிறது மிஸ்டர் ஸ்டோன்.

    ஸாமுவேல் ஸ்டோன்: (வருத்தமுடன்) ஆமாம் ஜான் பிரௌன் (John Brown 1859) தூக்கில் தொங்கினார். பாவம் ! அவரது மனைவியும் பிள்ளைகளும் கதறிக் கதறி அழுகிறார் !

    மிஸ்டர் கஃப்னி: ஜான் பிரௌன் தூக்கில் தொங்க என்ன குற்றம் செய்தார் ?

    ஸாமுவேல் ஸ்டோன்: அடிமைகளை விடுதலை செய்யப் போனார் ! போன வருடம் ஹார்பர்ஸ் ·பெர்ரி, வெர்ஜினியாவில் அமெரிக்க ஆயுதக் கிடங்கைக் (American Arsenal Capture Attempt at Harper’s Ferry, Virginia in 1859) கைப்பற்ற ஜான் பிரௌன் முயலும் போதுதான் கைது செய்யப் பட்டார். அதற்குத் தண்டனை தூக்குமரம் !

    மிஸ்டர் கஃப்னி: அது சம்பந்தமாக ஜான் பிரௌனைப் பற்றி லிங்கன் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை ! எளியவரை வாழ்நாள் முழுதும் காலைக் கட்டி வாயைக் கட்டிச் செல்வந்தர் அடிமைகளாக வைத்திருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை ! அந்தக் கொடுமையை ஒழிக்க வயதான ஜனாதிபதியை எதிர்த்து வாள் உயர்த்த ஆப்ரஹாம் லிங்கன் முன்வரவில்லை ! ஆனால் நெறி கெட்ட கொள்கை அதுவென்று வெறுக்கிறார் ! அது போதுமா ? பொறுமையற்ற வெறியர்கள் அடிமை ஒழிப்புக்கு ஒன்றும் செய்ய முடியாமல் தூக்கில் தொங்கவிடப் படுகிறார் !

    ஸாமுவேல் ஸ்டோன்: லிங்கன் பாதை வேறு ! நிரந்தர விடுதலை அமெரிக்கக் கறுப்பருக்கு ! வன்முறைப் பாதை அல்ல ! அரசியல் சட்ட ரீதியாக அடிமைப் பிரச்சனைக்கு முடிவு காண விரும்புகிறார். அரசியல் சட்டம்தான் நேர்மையானத் தலைமைச் சாசனமாய் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். குறுகிய காலத்துத் தீர்வாக இல்லாமல் நீண்ட கால நெறியாக நிலைக்க வேண்டும் என்று நினைக்கிறார் ! அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்குச் சென்றால் அந்தக் கோட்பாட்டைச் சட்டமாக்க ஆணித்திரமாக நிமிர்ந்து நிற்பார் ! அடிமை வாழ்வு ஒழிப்பைக் கொண்டுவரத் தன்னுயிரையும் இழக்க அஞ்ச மாட்டார் ! தனது கோட்பாட்டைச் சட்டமாக்க அனைத்து மாநிலங்களையும் கூட்டி அவர் மனம் மாற்றுவார். சட்டப்படி போவாரே தவிர சண்டையிட்டுச் சாதிக்க மாட்டார் ! அதனால்தான் சிறைப் பட்ட ஜான் பிரௌனைப் பற்றிச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ லிங்கன் பேசவில்லை ! பத்து இருபது கறுப்பருக்கு விடுதலை கிடைப்பது போதாது ! அமெரிக்காவில் அனைத்துக் கறுப்பரையும் விடுவிப்பது எப்படி என்று லிங்கன் யோசித்து வருகிறார்.

    மிஸ்டர் கஃப்னி: தூக்கு மரத்தில் தொங்கினாரே ஜான் பிரௌன் அவர் மிக்க தைரியசாலி. ஆயிரக் கணக்கான அடிமைகளை விடுவிக்க அவரும் அவருடன் சேர்ந்து அஞ்சாமல் போராடிய கறுப்பர்களும் மெச்சத் தகுந்தவர். வரலாறு மறக்காமல் போகும் தீரர்கள் !

    ஸாமுவேல் ஸ்டோன்: உண்மைதான் ! அவரைச் சிறைப்படுத்தித் தூக்கு மரத்துக்கு ஏற்றிய போது அவர் முழக்கிய வாசகத்தை மறக்க முடியாது ! ஜான் பிரௌன் உரக்கக் கூறினாராம் : “நீங்கள் கடவுளுக்கும், மனித இனத்துக்கும் இழைக்கும் மாபெரும் கொடுமை இது ! இங்கே என்னுயிர் போகப் போகிறது ! இப்போது என்னைக் குழியில் புதைக்கப் போகிறீர் ! நான் இனிமேல் செத்துப் போனவனே ! ஆனால் இந்த அடிமைத்தனப் பிரச்சனை இன்னும் தீரவில்லை ! கறுப்பர்கள் ஒருநாள் விடுதலைச் சூரியனைக் காணத்தான் போகிறார் ! அந்தச் சூரிய உதயத்தைத் தடுக்க முடியாது ! அத்தமிக்கும் அடிமை இருள் மாறி புத்தொளி எழுவதைக் காண்பீர்.” அவரைத் தூக்கிலிட்ட போது நான் அந்தக் கோரக் காட்சியைக் கண்டேன் ! கண்ணீரில் மூழ்கி இரவு பூராவும் தூக்கமின்றிப் புரண்டேன் ! ஜெனரல் “கல் மதில்” ஜாக்ஸன்தான் (Confederate General “Stonewall” Jackson) கட்டளை இட்டவன் ! முகத்தைத் திருப்பிக் கொண்டான் ! ஜான் முழக்கத்துக்குப் பதில் உரைத்தான் ஜாக்ஸன் : “மனித இனத் துரோகிகள் இத்தோடு மாய்ந்து போட்டும்.” அடிமைகளை இழக்க விரும்பாத செல்வந்தர்தான் அந்த வார்த்தைகளை நம்பினார்.

    மிஸ்டர் கஃப்னி: அப்பாவி மனிதரை அப்படித் தூக்கிலிட்டது அநியாயம் ! செத்த பின் அவர் நினைவில் ஒரு பாட்டு எழுதினார்கள் :

    புதைப்புக் குழிக்குள்ளே சிதைந்து தேயுது ஜான் பிரௌன் மேனி ! ஆயினும் அணிவகுத் தேறுது அவருடை ஆத்மா !

    (மெதுவாக இருவரும் சேர்ந்து பாடுகிறார்)

    முதியவர் ஜான் பிரௌன் புதை குழி மீது சொர்க்கபுரித் தாரகைகள் சுடருடன் நோக்கின கனிவோடு !

    (சில விநாடிகளில் மிஸிஸ் லிங்கன் புன்னகையுடன் வருகிறார். இரு ஆடவரும் எழுந்து நிற்கிறார். மிஸிஸ் லிங்கன் இருவரையும் கைகுலுக்கி வரவேற்கிறார்.

    unnamed (7)

    மேரி லிங்கன்: குட் ஈவினிங் மிஸ்டர் ஸ்டோன் ! மிஸ்டர். காஃப்னி !

    ஸ்டோன் & கா·ப்னி: (இருவரும் ஒன்றாக) குட் ஈவினிங் மேடம் ! அரசாங்கக் குழுவினர் எப்போது வருகிறார்கள் ?

    மேரி லிங்கன்: உட்காருங்கள் ! இருவரும் நலமா ? வெகு நேரம் காத்திருக்கிறீரா ? ஏழு மணிக்கு வருகிறார்கள் ! (மூக்கில் விரலை வைத்து) ஆப்ரஹாம் புகைப்பதில்லையே ? அறை பூராவும் சுருட்டுப் புகை குமட்டுகிறதே !

    ஸாமுவேல் ஸ்டோன்: மன்னிக்க வேண்டும் ! தெரியாமல் நாங்கள் புரிந்த தவறு. மாளிகை ஜன்னலைத் திறக்கிறேன். (எழுந்து செல்கிறார்)

    மேரி லிங்கன்: வேண்டாம். நாங்கள் யாரும் முன்னறையில் புகைப்பதில்லை. பிறர் விடும் புகையை ஏற்றுக் கொள்வதுமில்லை. உடலுக்குள் போவது போக ஜன்னல் திரையிலும் ஆடையிலும் புகை மணம் ஒட்டிக் கொள்கிறது !

    ஸாமுவேல் ஸ்டோன்: (மறுபடியும் அமர்ந்து) உண்மை மேடம் ! புகைப் பழக்கத்தை நாங்கள் நிறுத்துவது நல்லது ! ஆனால் முடியவில்லை ! காரணம் அது எங்கள் உதிரத்தோடு ஒட்டி விட்டது !

    மிஸ்டர் கஃப்னி: அழைப்பை ஆப்ரஹாம் ஏற்றுக் கொண்டு விட்டாரா ?

    மேரி லிங்கன்: ஆம், அழைப்புக்கு உடன்பட்டு விட்டார்.

    மிஸ்டர் கஃப்னி: மேடம் ! அது உங்களுடைய முடிவாகதான் இருந்திருக்கும். ஆப்ரஹாமுக்கு நீங்கள்தான் முதன் மந்திரி !

    மேரி லிங்கன்: (புன்முறுவல் பூத்து) சரியாகச் சொன்னீர் ! மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு ! என் அனுதின வேலை அது ! எப்போதும் நான் அப்படித்தான் ! ஆப்ரஹாமுக்கு நான் ஓர் எஞ்சின் ! அவர் எங்கே போக வேண்டும், எப்போது போக வேண்டும், எங்கே போகக் கூடாது என்பது என் வேலை. எல்லாம் எனக்குக் கண்ணாடி போல் தெரிகிறது ! உன்னத மனிதர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கிறாள் ஒரு மாது என்று என் பெயர் வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டும் ! உயர்ந்த மானிடர் ஒருவருடன் வாழ்ந்தேன் என்று வரலாறு என்னைப் போற்ற வேண்டும் ! அவர் எத்தகைய உன்னத மனிதர் என்று எனக்குத்தான் மற்றவரை விட நன்றாகத் தெரியும் ! இப்படிச் சொல்லும் போது எனக்குப் புல்லரிப்பு உண்டாகுது ! மாதரில் சாதாரண மாது நான் ! எனக்கு ஊசி நாக்கு ! என் போக்கு ஆப்ரஹாம் நோக்குடன் செல்லாது ! சரித்திரம் அப்படித்தான் என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். பலதடவை நான் நினைத்ததே கண்முன் நேர்ந்துள்ளது ! அவரைக் கண்காணிப்பது என் வேலை ! என் கடமை ! அவர் உன்னதம் அடைய உதவி செய்வது என் பணி ! அவரால் இந்த அமெரிக்கா பயனடையப் போகிறது ! என்னைப் போல் பல மாதர் இருக்கிறார் ! ஆனாலும் நான்தான் அதிர்ஷ்டசாலி ! இல்லினாய்ஸைத் தாண்டி என் பணி நீண்டு செல்கிறது ! அதைக் கடந்து வெகு தூரம் எவரும் பாராத பீடத்துக்குப் போகிறது ! நாங்கள் ஏழையராய் இருந்த போது அவரது வாழ்க்கையை இலகுவாக்கியவள் நான் ! அரசாங்க நண்பர்கள் ஆப்ரஹாமை ஆரகன் மாநிலத்தின் கவர்னராய் (Governor of Oregon State) ஆக்குவதாகக் கூறினார் ! அவரும் ஒப்புக் கொண்டு அதை ஏற்றிருப்பார் ! அதனால் ஒரு பலாபலனும் இல்லாமல் போயிருக்கும் ! அதைத் தடுத்து நிறுத்தினேன் நான் ! இப்போது அமெரிக்க ஜனாதிபதிக்குப் போட்டியிடு என்று ஆப்ரஹாமை வற்புறுத்துகிறார் ! நிற்கும்படி நானும் அனுமதித்து விட்டேன் !

    unnamed (8)

    ஸாமுவேல் ஸ்டோன்: மேடம் ! நீங்கள் நினைப்பது நடக்காமல் போகுமா ?

    டிமதி கஃப்னி: (மேரியைப் பார்த்து) ஆமாம் மிஸிஸ் லிங்கன். அமெரிக்க ஜனாதிபதி அமரும் பீடம் மிகப் பெரியது ! அந்த இடத்தில் அமர்வதற்கு ஓர் உன்னதத் தகுதியும் பண்பாடும் ஒருவருக்கு அவசியம். ஆப்ரஹாம் லிங்கன் ரிப்பபிளிகன் கட்சித் தேர்வாளராய்க் குறிப்பிட மாநிலச் செயலாளர் வில்லியம் சீவெர்டு (William Seward, Secretary of State) என்ன சொல்கிறார் ?

    மேரி லிங்கன்: சீவேர்டு பேராசைக்காரர் ! ஆப்ரஹாம் தேர்ந்தெடுப்பை அவர் எதிர்பார்க்கிறார். சீவேர்டை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று ஆப்ரஹாம் நன்கு அறிந்தவர்.

    ஸாமுவேல் ஸ்டோன்: டெமொகிராட்டுகள் இடையே பிளவை ஏற்படுத்தினால் ரிப்பபிளிகன் தேர்வாளர் வெற்றி பெறுவார் அல்லவா ?

    மேரி லிங்கன்: ஆப்ரஹாமும் அப்படித்தான் சொல்கிறார் !

    டிமதி கஃப்னி: ஆப்ரஹாம் அமெரிக்கா ஜனாதிபதியாக வராலம் ! அவருக்கு எல்லாத் தகுதி முத்திரைகளும் உள்ளன. ஆனால் மனிதர் இன்னும் கசங்கிய தொப்பியை அணிந்து அரசாங்க சட்ட சபையில் உளாவி வருகிறாரே ! உங்கள் கண்களுக்கு எப்படித் தப்பாது போனது தொப்பி ?

    மேரி லிங்கன்: மனிதருக்கு எப்போதும் ஒரே சிந்தனை : அடிமை ஒழிப்பு ! கசங்கிய கோட்டு, மடிப்புக் கலைந்த பான்ட்டு, மிதிபட்ட தொப்பி – இவை எல்லாம் ஆப்ரஹாமின் நினைவுச் சின்னங்கள் ! புதுத் தொப்பி வாங்க வேண்டும் என்று எத்தனை தடவைச் சொல்லி இருக்கிறேன் ? வாங்குகிறேன் என்று சொல்கிறார். ஆனால் வாங்கத்தான் நேரமில்லை என்று வருந்துகிறார் ! வேலைகள் அதிகம்.

    டிமதி கஃப்னி: என் கடையில் புதுத் தொப்பிகள் ஏராளமாய் வந்துள்ளன ! அவை நியூயார்க்கிலிருந்து வந்தவை. ஆப்ரஹாமுக்கு புதிய தொப்பி ஒன்றை நான் கொண்டு வரலாமா ? ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டாரே !

    மேரி லிங்கன்: கொடுத்தால் வாங்கிக் கொள்வார். ஆனல் அவரது கை பழைய தொப்பியைத்தான் எடுத்து அணிந்து கொள்ளும் ! பழகிப் போன வேலையைக் கைகள் புரிகின்றன.

    ஸாமுவேல் ஸ்டோன்: அமெரிக்காவுக்கு முதற் பிரச்சனை அடிமைத்தனம் ! அதனால் விலகிப் போகப் பயமுறுத்துகின்றன தெற்கு மாநிலங்கள் ! இரண்டும் பெரிய பிரச்சனைகள் ! அவற்றைத் தீர்ப்பது எப்படியெனத் தெரியவில்லை ! ஆப்ரஹாம்தான் அவற்றுக்கு ஒரு முடிவு காண வேண்டும் ! தூக்கில் தொங்கிய ஜான் பிரௌனும் அடிமைப் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்றுதான் சொல்லிச் செத்தார் !

    (அப்போது ஆப்ரஹாம் லிங்கன் முன்னறைக்கு வருகிறார். நெற்றியை மறைக்காத கசங்கிய தொப்பியும் ஒரு சாதாரணப் பச்சைக் கோட்டும் அணிந்திருக்கிறார். 50 வயதிருக்கும். கோட்டுப் பைகளில் கத்தை கத்தையாக தகவல் தாள்கள். லிங்கன் மனைவியை முத்தமிட்டு நண்பர்கள் கைகளைக் குலுக்குகிறார்.)

    ஆப்ரஹாம் லிங்கன்: குட் ஈவினிங் சாமுவேல், டிமதி. இருவரும் நலமா ? (தொப்பியை எடுத்து மேஜை மீது வைக்கிறார்)

    ஸ்டோன் & கஃப்னி: (இருவரும்) குட் ஈவினிங் ஆப்ரஹாம். நலமாக இருக்கிறோம்.

    ஆப்ரஹாம் லிங்கன்: (கோட்டுப் பைகளிலிருந்து கட்டான தகவல் காகிதங்களை மேஜை மீது அடுக்கி வைக்கிறார்) . . . . நான் வரும்போது ஜான் பிரௌன் பெயர் கேட்டதே !

    ஸாமுவேல் ஸ்டோன்: தூக்கிலிடப்பட்ட ஜான் பிரௌனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் ! அடிமைகளுக்கு இன்னும் விடிவு காலம் வரவில்லை என்ற அலறிய அவரது இறுதி மொழிகளை நினைவுக்கு வருகின்றன !

    ஆப்ரஹாம் லிங்கன்: (நாற்காலியில் அமர்ந்து கொண்டு) நேரிய வினைகளைத் தவறான வழியில் யாரும் செய்யக் கூடாது ! அமெரிக்க ஐக்கிய இணைப்பில், அப்படிச் செய்வது தவறான வினை போல் சீர்கேடானது ! அடிமைகளை விடுவிக்க ஆயுதங்களைத் திருடுவது பெருங்குற்றம் ! அரசாங்க கிட்டங்கிப் பூட்டை ஜான் உடைத்தது தவறான வழி ! ஆனால் கிடைத்த தண்டனை மிகவும் கொடியது ! சிறையில் போட்டிருக்க வேண்டும் ! தூக்கிலிட்டது நியாமில்லை !

    ஸாமுவேல் ஸ்டோன்: ஜான் பிரௌனோடு சில கறுப்பரும் தூக்கில் தொங்கினர் !

    டிமதி கஃப்னி: இன்று உங்கள் சொற்பொழிவு தினம். உங்கள் பக்கம் நின்று ஆதரவாய் உங்களை ஊக்கவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். இன்று மாலையில் உங்கள் சொற்பொழிவு அற்புதமாய் இருக்கும் என்று கேட்க வந்திருக்கிறோம் !

    சாமுவேல் ஸ்டோன்: நினைக்கும் போதே எனக்கு நடுக்கம் உண்டாகுகிறது ! ஆப்ரஹாம் ! எனது நண்பர் ஒருவர் ஓர் உன்னத பீடத்தில் பட்டம் சூடப் போகிறார் ! அவரால் ஆயிரக் கணக்கான மாந்தர் நற்கதி அடையப் போகிறார் ! என் உள்ளம் குளிருது !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஸாமுவேல் ! அப்படிச் சிந்திக்கும் போது அந்த மனிதருக்கு ஒரு பணிவு உள்ளம் பூத்து மலர்கிறது ! மன உறுதி இருக்கும் எந்த மானிடனும் அத்தகைய வாய்ப்பை இழக்க மாட்டான் ! அமெரிக்க மக்களின் ஜனாதிபதி என்று உயர்வதும், பிரியும் அவரது இதயத்தை எல்லாம் ஒன்றாக இணைப்பதும் வாழ்வின் மகத்தான பணியாக நான் கருதுகிறேன் ! அந்தக் குறிநோக்க முயற்சியில் நான் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் ! அதற்காக ஏற்படும் கசப்பான தர்க்கங்கள், வசை மொழிகள், கைச் சண்டைகளை நான் மனிதரிடம் முற்றிலும் வெறுக்கிறேன் ! மெய்யாகச் சண்டை முடிவில் வருவது ஒன்றுமில்லை ! . . . நான் போக வேண்டும். கடமைகள் அநேகம் உள்ளன ! நன்றி ஸாமுவேல் ! நன்றி டிமதி ! (மேரி லிங்களைப் பார்த்து) அவர்கள் போகும் முன்பு ஒயின் மதுபானம் மறக்காமல் கொடு !

    (ஆப்ரஹாம் எழுந்து செல்கிறார். ஸ்டோன், கஃப்னி இருவரும் எழுந்து நிற்கிறார்.)

    டிமதி க·ப்னி: எங்கள் வாழ்த்துக்கள் ஆப்ரஹாம் ! உங்கள் குறிக்கோள் வெற்றி பெறும். கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பார். ஸாமுவேல் ! நானுனக்கு அமெரிக்காவையும், அதை ஆட்சி செய்ய ஆப்ரஹாம் லிங்கனையும் சமர்ப்பணம் செய்கிறேன். (சிரிக்கிறார்)

    ஸாமுவேல் ஸ்டோன்: (சிரித்துக் கொண்டு) நான் பெற்றுக் கொள்கிறேன். தேசத்துக்கு நல்ல காலம் வருகுது ! தெற்கு மாநிலங்களின் கறுப்பு அடிமைகளுக்கு விடுதலை கிடைக்கப் போகுது ! அந்தப் பணியை முடிக்க ஆப்ரஹாம் லிங்கனைக் கடவுள் அல்லவா அனுப்பி இருக்கிறார். கடவுளுக்கு நாம் நன்றி சொல்வோம்.

    மேரி லிங்கன்: (மகிழ்ச்சியுடன்) அடிமைகளை விடுவிப்பது அத்தனைச் சுலபமில்லை ! லிங்கன் இராப் பகலாய்ச் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார். சரியாக உண்பதில்லை ! இரவில் உறக்க மில்லை ! இடையிடையே எழுந்து சிந்தனையுடன் நடமாடுகிறார் ! இப்போது தேர்தல் போர் வரப் போகிறது. அதில் வெற்றி பெற வேண்டும் லிங்கன் முதலில்.

    [வேலைக்காரி சூஸன் இருவருக்கும் கண்ணாடிக் கிண்ணத்தில் மதுபானம் தருகிறாள். இருவரும் நன்றி சொல்லி மதுபானத்தை அருந்துகிறார்.)

    மிஸ்டர் க·ப்னி & மிஸ்டர் ஸ்டோன்: (இருவரும் ஒன்றாக) நாங்கள் போய் வருகிறோம். குட் நைட் மிஸிஸ் லிங்கன்.

    மேரி லிங்கன்: போய் வாருங்கள். குட் நைட் மிஸ்டர் ஸ்டோன், மிஸ்டர் க·ப்னி.

    (மிஸ்டர் க·ப்னி மிஸ்டர் ஸ்டோன் இருவரும் வெளியே போகிறார்கள்)

    மேரி லிங்கன்: (உள் அறையில் நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் ஆப்ரஹாமைப் பார்த்து) ஆப்ரஹாம் ! மணி ஏழாகப் போகிறது ! அரசாங்க அதிகாரிகள் வரும் நேரம். அவர்களை இந்த அறையில் வைத்துப் பேசுங்கள். வரவேற்பு அறையில் சுருட்டு நாற்றம் இன்னும் போக வில்லை !

    ஆப்ரஹாம் லிங்கன்: அதுதான் உனக்குச் சரியாகத் தோன்றுகிறதா ? அப்படியே செய்கிறேன் !

    மேரி லிங்கன்: ஆமாம். அவரிடம் என்ன சொல்லப் போகிறீர் ? எப்படி நீங்கள் இந்தப் பிரச்சனைக்கு முடிவு காணப் போகிறீர் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: மேரி ! என் கருத்தைக் கேள் ! இந்த தேசத்தில் அடிமைகள் என்று ஓரினத்தைச் சில மாநிலத்தார் வைத்துக் கொண்டு சிறையில் வைத்திருப்பது நியாயமற்ற ஈனச் செயல் ! அதற்கோர் முடிவை நான் காண வேண்டும். அடிமைகள் எனப்படுவோருக்கு விடுதலை கொடுத்து உரிமைகள் அளிக்க வேண்டும். அதற்குச் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள், எல்லைகள், வரம்புகள், தண்டனைகள் யாவும் அமைக்க வேண்டும். தெற்கு மாநிலங்கள் நிச்சயம் அதற்கு ஒப்புதல் அளிக்கா ! அவை யாவும் ஒன்று சேர்ந்து யூனியனை எதிர்க்கும் ! ஐக்கியக் கூட்டிலிருந்து அவை பிரிந்து போகக் துணிந்து நிற்கும் ! அதை நான் அனுமதிக்க முடியாது ! ஐக்கியம் அறுந்தால் அமெரிக்க முறிந்து போய்விடும் ! உடைந்து போனவற்றை இணைக்கப் குருதி வெள்ளம் கொட்ட வேண்டிய திருக்கும் ! அந்தப் போராட்டத்தில் என்னுயிருக்கும் ஆபத்து எழலாம் !

    unnamed (9)

    மேரி லிங்கள்: (கண்களில் நீர் துளிக்க) அப்படிச் சொல்லாதீர்கள் ! என்னிதயம் வெடித்து விடும் ஆப்ரஹாம் ! போரின்றி அடிமைத்தனம் ஒழிய ஒருவழி உள்ளதா வென்று பாருங்கள் ! இந்த அடிமை விடுதலைப் போரை நடத்த உங்களைத் தவிர இங்கு யாருமில்லை ! ஆனால் உங்கள் உயிருக்குப் பாதகம் விளையும் என்றால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ! உங்கள் உயிர்தான் எனக்கு முக்கியம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் அந்தப் போராட்டத்தை நடத்த வேறு யாருமில்லை ! எனக்குத் தெரியும் அது ! என்னுயிருக்கு ஒன்றும் நேராது மேரி ! அதற்கு நீ அஞ்ச வேண்டாம். நான் அஞ்சவில்லை ! என் பணி முடியாமல் என்னுயிர் போகாது !

    மேரி லிங்கன்: அப்படியானால் முன்னடி வைப்பீர் ! அந்தப் போராட்டத்தில் நீங்கள் வெல்ல வேண்டும் ! அமெரிக்க வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டும் ! புறப்படுங்கள் ஆப்ரஹாம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அதற்கு நீ முதுகு எலும்பாய் நின்று எனக்குத் துணைபுரி ! உன் உத்தரவுக்கு என் பணிவு ! போகிறேன் மேரி !

    மேரி லிங்கன்: அதற்கு முன் முதலில் இந்த கசங்கிய தொப்பியை மாற்றுங்கள் ! எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன் ! நீங்கள் சரி சரியென்று சொல்லிக் கொண்டு அதே அழுக்குத் தொப்பியுடன் சட்ட மன்றத்துக்குப் போகிறீர் ! மாற்றாமல் அதையே அணிந்து கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வருகிறீர் ! அமெரிக்க ஜனாதிபதியாக வரப் போகிறீர் ! உங்களுக்கே மூளையில் உதிக்க வேண்டாமா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் மேரி ! எனக்கு ஞாபக மறதி ! மாற்றத்தான் நினைக்கிறேன் ! பிறகு நான் அதை மறந்துதான் போகிறேன் !

    மேரி லிங்கன்: நாளைக்கு நானும் உங்களுடன் வருகிறேன் ! தொப்பியை வாங்கி உங்கள் தலையில் வைத்த பிறகுதான் வீட்டுக்குத் திரும்புவேன்.

    ஆப்ரஹாம் லிங்கன்: (முறுவலுடன்) அது நல்லது ! நீயே வந்து தொப்பியை வாங்கி என் தலையில் வைத்திடு ! அதுதான் சரி !

    (அப்போது வேலைக்காரி சூஸன் வந்து அரசாங்க அதிகாரிகள் வாசலில் நிற்பதை ஆப்ரஹாம் லிங்கனுக்கு அறிவிக்கிறாள்)

    சூஸன்: அதிகாரிகள் வாசலில் காத்திருக்கிறார்.

    மேரி லிங்கன்: நான் வந்து அவர் எல்லோரையும் வரவேற்கிறேன். சூஸன் ! நீ சிற்றுண்டி தயார் செய் எல்லோருக்கும் !

    (மேரி லிங்கன் வாசலுக்குப் போகிறாள். ஆப்ரஹாம் சுவரில் தொங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் படத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மேரி அதிகாரிகளை உள்ளே அழைந்து வருகிறாள். அப்போது வணிகர் : வில்லியம் டக்கர் (William Tucker), வழக்கறிஞர் : ஹென்றி ஹிண்டு (Henry Hind), பாதிரியார் : எலையாஸ் பிரைஸ் (Elias Price), தினச்செய்தி ஆசிரியர் : ஜேம்ஸ் மாகின்டாஷ் (James Macintosh) நுழைகிறார்கள்.

    வில்லியம் டக்கர்: (ஆப்ரஹாம் லிங்கனைப் பார்த்து) என் பெயர் வில்லியம் டக்கர். இவர் ஹென்றி ஹிண்டு, உங்களைப் போல் ஒரு வழக்கறிஞர். இவர் பென்சில்வேனியா பாதிரியார் எலையாஸ் பிரைஸ், பத்திரிகை ஆசிரியர் ஜேம்ஸ் மாகின்டாஷ் இவர்.

    (ஆப்ரஹாம் லிங்கன் கைகுலுக்கி அனைவரையும் வரவேற்று அமரச் சொல்கிறார். மேஜையைச் சுற்றி எல்லோரும் நாற்காலியில் அமர்கிறார்.)

    வில்லியம் டக்கர்: நான்தான் இந்தத் தூதுக் குழுவினர் தலைவன். நாங்கள் சிகாகோ ரிப்பபிளிகன் தேர்தல் அரங்கிலிருந்து (Republican Convention) வந்திருக்கிறோம். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ரிப்பபிளிகன் கட்சிப் பிரமுகராய் நிற்க ஒப்புக்கொள்வீரா என்று கேட்க வந்திருக்கிறோம். நீங்கள் அதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றவர் என்பது எமது அபிப்பிராயம். உங்கள் உடன்பாட்டை நாங்கள் இன்றே அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

    (வந்த விருந்தினர் நால்வரும் மிக்க ஆர்வமாக ஆப்ரஹாம் லிங்கனை நோக்குகிறார்)

    எலையாஸ் பிரைஸ்: தேர்தல் பேரவை உங்களைத்தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளது மிஸ்டர் லிங்கன் ! டெமொகிராடிக் கட்சி உறுப்பினர்கள் பிளந்துபோய் உள்ளதால், இம்முறை ரிப்பபிளிகன் தேர்வாளி வெற்றி பெறுவது நிச்சயம். அதுவும் நீங்கள் நிற்பதானால் பெருமித வெற்றி கிடைக்கும் என்று ரிப்பபிளிகன் கட்சி உறுதியாக நினைக்கிறது. டெமொகிராடிக் தேர்வாளி ஒருவர் நியமிக்கப் படுவது கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

    ஆப்ரஹாம் லிங்கன்: அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு எனக்குத் தகுதி இல்லாமல் இருப்பது பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா ?

    ஹென்றி ஹிண்டு: அவற்றை எல்லாம் கட்சி உறுப்பினர் சுதந்திரமாகப் பேசி முடிவில் அந்தப் பதவிக்கு நீங்கள்தான் தகுதியானவர் என்று முடிவு செய்திருக்கிறார் மிஸ்டர் லிங்கன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: எனக்குக் குறைபாடுகள் உள்ளன. நளினமாகப் பேசத் தெரியாதவன் நான் ! பாசாங்கு செய்யாமல், பணிவாகப் பேசாமல் நேரே பிரச்சனைக்குப் போவது என் தனி முறை. பலரை அதனால் நான் பகையாளி ஆக்கியிருக்கிறேன். வாஷிங்டன் இதை யெல்லாம் மறப்பதில்லை.

    வில்லியம் டக்கர்: மிஸ்டர் லிங்கன் ! இவை யாவும் அற்பத் தவறுகள் ! உங்களுக்குள்ள தகுதியும், உன்னத குறிக்கோளும் இங்கு வேறு யாருக்கும் இல்லை. ரிப்பபிளிகன் கட்சியிலும் இல்லை. டெமொகிரடிக் கட்சியிலும் இல்லை ! உங்கள் முழு வெற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம். அதில் சிறிதளவு ஐயப்பாடும் வேண்டாம் மிஸ்டர் லிங்கன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ரிப்பபிளிகன் கட்சியில் போட்டியிடும் ஸீவேர்டு (William Seward : Secretary of State) ஹ¥க் (Hook) இருவரும் என்னை விட மேலான அனுபவம் பெற்றவர். அவருடன் போட்டி போட எனக்கு அருகதை இல்லை ! அவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்.

    ஜேம்ஸ் மெகின்டாஷ்: ஸீவேர்டுக்கு அனுபவம் இருக்கலாம். ஹ¥க் உங்களை விட அனுபவசாலியாக இருக்கலாம். ஆனால் ஸீடேர்டு உங்களைப் போல் எதையும் அழுத்தமாகப் பேச முடியாது. அவருக்குச் கட்சி உறுப்பினர் ஆதரவில்லை !

    ஆப்ரஹாம் லிங்கன்: வைராக்கியமாக இருந்தாலும் நானொரு மிதவாதியே ! தெற்கு மாநிலங்கள் அடிமை வைப்புச் சட்டத்தை நீடிக்க வற்புறுத்தினால், அதனால் அமெரிக்க தேசத்தைத் துண்டிக்க அவை உரிமை கொண்டாடினால் அதைக் கையாண்டு தீர்மானிப்பது எனது முடிவு ! அதை அறிவீர் நீவீர் அனைவரும். அப்படி நேர்ந்தால் வரப் போவது எதிர்ப்பு ! பெரும் எதிர்ப்பு ! அதாவது குருதி கரை புரண்டோடும் உள்நாட்டுப் போர் ! வடக்குக்கும் தெற்குக்கும் போர் ! அதாவது அமெரிக்கருக்கும் அமெரிக்கருக்கும் போர் ! ரிப்பபிளிக்கன் ஜனாதிபதியாக வரும் ஒருவர் கையாள வேண்டி வரும் ஒரு முரண்பாட்டு யுத்தம் ! அதற்கெல்லாம் ரிப்பபிளிகன் கட்சி உறுப்பினர் தயாரா ?

    எலையாஸ் பிரைஸ்: மிஸ்டர் லிங்கன் ! அவையெல்லாம் உங்கள் பொறுப்பு ! ரிப்பபிளிகன் உறுப்பினர் உங்களுக்கு ஆதரவு அளிப்பார். உங்களின் நேர்மை நெறியை நாங்கள் அறிவோம்.

    ஆப்ரஹாம் லிங்கன்: ஸீவேர்டும், ஹ¥க்கும் எனக்குக் கீழ் வேலை செய்ய விரும்ப மாட்டார். எனக்கு இணையாகவும் அவர் நடத்தப்பட மாட்டார் !

    வில்லியம் டக்கர்: அவரெல்லாம் உங்கள் ஆணைக்கு எதிர்மொழி கூற மாட்டார். அனுபவம் குறைவாக இருந்தாலும் நீங்கள் ஜனாதிபதியான பிறகு உங்கள் ஆணைக்குக் கட்டுப்படுவார் இருவரும். கவலைப்பட வேண்டாம் மிஸ்டர் லிங்கன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஜேம்ஸ் ! உங்கள் ரிப்பபிளிகன் தினசரி அச்சகம் என்னை ஆதரிக்குமா ? என் கொள்கையை வழிமொழியுமா ?

    ஜேம்ஸ் மெகின்டாஷ்: உங்களை ஆதரித்து நான் தலையங்கம் எழுதி இருக்கிறேனே ! …. இதோ பாருங்கள் (தினசரி இதழைக் காட்டுகிறார்.)

    ஆப்ரஹாம் லிங்கன்: என்னைப் பாராட்டி நீங்கள் தேர்ந்தெடுத்தால் தென்னவர் உங்களை எள்ளி நகையாடுவார் !

    ஹென்றி ஹிண்டு: அவர்கள் எள்ளி நகையாடினால் அதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

    ஆப்ரஹாம் லிங்கன்: யார் என்னைக் கேலி செய்தாலும் நான் தாங்கிக் கொள்ள முடியும் ! அதற்குக் கடவுள் எனக்களித்த பயிற்சி இருக்கிறது ! ஆனால் இந்த அடிமைத்தன வாழ்வு இருக்கிறதே அது கொடிய சிறை ! ஆயுள் தணடனை அது ! ஆறாத மனக்காயம் அது ! கசப்பான உயிர் வாழ்க்கை அது ! ஆழமாய்ப் புரையோடிய அதிகாரப் பிணி அது ! அதை நான் அறிவேன் ! இந்தப் போராட்டத்தில் எனக்குள்ளது ஒரே சிந்தனைதான் ! அதில் எந்த மாறாட்டமும் இல்லை எனக்கு ! என் தீர்மானத்தை யார் எதிர்ப்பினும் நான் துறக்க மாட்டேன் ! எவர் எதிர்ப்பினும் நில்லேன் ! அஞ்சேன் ! அடிமைத்தன ஒழிப்பு சட்ட ரீதியாக வருவதற்கு நான் என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் துணிவேன் !

    ++++++++++++++++

    (பத்து மாதங்களுக்குப் பிறகு)

    காட்சி -2 பாகம் -1

    unnamed (10)

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன் – பதவி ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி

    வில்லியம் ஸீவேர்டு : அமெரிக்கப் பொதுச் செயலாளர் (William Seward, Secretary of State)

    ஜான்ஸன் வொயிட் : தென்பகுதிக் கூட்டு மாநிலப் பிரதிநிதி (Johnson White, Commissioner of Confederate States)

    காலெப் ஜென்னிங்ஸ் : தென்பகுதிக் கூட்டு மாநிலப் பிரதிநிதி (Caleb Jennings, Commissioner of Confederate States)

    மற்றும் ரிப்பபிளிக்கன் கட்சி அரசியல்வாதிகள்.

    இடம் : வாஷிங்டன் D.C. இல் வில்லியம் ஸீவேர்டின் அறை

    (இதுவரை நடந்தது)

    ரிப்பபிளிகன் குழுத் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க ஆப்ரஹாம் லிங்கள் ஒப்புக் கொள்கிறார். லிங்கன் முதன்முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு பதவி ஏற்கிறார்.

    இப்போதைய காட்சி: லிங்கனின் ரிப்பபிளிக்கன் கட்சி அரசாங்கப் பொதுச் செயலாளர் (Secratary of State) வில்லியம் ஸீவேர்டு தன் அறையில் அமெரிக்கத் தென்பகுதிக் கூட்டு மாநிலங்களின் கமிஷனர் (Commissioners of Southern Confederate States) ஜான்ஸன் வொயிட், காலெப் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் அமர்ந்து பேசிக்கொண்டிடுருக்கிறார்.

    ஜான்ஸன் வொயிட்: மிஸ்டர் ஸீவேர்டு ! தெற்கு மாநிலங்களில் உலவி வரும் வதந்தி இது ! வாஷிங்டனில் நீங்கள் ஒருவர்தான் தெளிந்த சிந்தனையுடன் இந்தப் பிரச்சனையின் முழு வடிவத்தைக் காண்பவர் என்று. இப்படிச் சொல்லும் போது நமது ஜனாதிபதியை (ஆப்ரஹாம் லிங்கனை) நான் குறைத்துப் பேச வில்லை.

    unnamed (11)

    வில்லியம் ஸீவேர்டு: உங்கள் நோக்கம் எனக்குப் புரிகிறது மிஸ்டர் வொயிட் ! அமெரிக்க யூனியன் முறிக்க முடியாத யூனியன் இல்லை ! நமக்குப் பெரும் போராட்டம் வந்திருக்கிறது ! மெய்யான போராட்டம் அது ! நமது ஐக்கியத்துக்கு வந்து விட்டது கத்தி ! பிளவு ! பாதிப்பு ! தென் மாநிலங்களில் முதன்முதல் தென் கரோலினா யூனியனிலிருந்து பிரிந்தது ! பிறகு அதைப் பின்பற்றி மிஸ்ஸிஸிப்பி பிரிந்தது, அப்புறம் பிளாரிடா, அலபாமா, ஜியார்ஜியா, லூயிஸியானா, முடிவில் டெக்ஸஸ் ஆக மொத்தம் ஏழு மாநிலங்கள் யூனியனிலிருந்து பிரிந்து போவதாய் அறிவித்து விட்டன ! என்ன கொடுமை முடிவு இது ? ஜனாதிபதி எதிர்பார்த்த பிளவு நடந்து விட்டது. உறுதியாக நான் சொல்கிறேன் : நானும் என்னைச் சார்ந்தோரும் ஜனாதிபதிக்கு முற்றிலும் ஒத்துழைப்போம். அது போல் அறிவித்து நாட்டைப் துண்டாக்குவது நியாய மற்றது ! அமெரிக்க ஐக்கியம் சின்னா பின்னமாய்ப் போவதைக் காட்டுகிறது !

    காலெப் ஜென்னிங்ஸ்: மிஸ்டர் ஸீவேர்டு ! எல்லாம் நமது சமரச இணக்கத்தில் உள்ளது ! ஒரு பிரச்சனையைப் பற்றி இருதரப்பார் தர்க்கமிடும் போது இருபுறமும் விட்டுக் கொடுத்து உடன்பாடு உண்டாக்க வேண்டும். கோட்டைக் காவற்படையைத் தடுத்து ஸம்டெர் அரணிலிருந்து (Garrison at Fort Sumter) பின்னடி வைக்கச் சொல்வீரா ? ஜெனரல் பியூரிகார்டு (General Beauregard) மேற்கொண்டு தொடராமல் தாக்குதலை நிறுத்தும்படி ஆணை இடுவீரா ? அப்போதுதான் தென் கரோலினாவின் அதிகாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கே அமைதி உண்டாகும். பிரிந்து செல்ல முனையும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாதிரியாய் அது முன்வழி நடத்தும்.

    ஸீவேர்டு: எவரும் ஏற்றுக் கொள்ளும் முன்மொழியாகத் தெரிகிறது எனக்கு.

    வொயிட்: அப்படிச் செய்தால் உள்நாட்டுப் போரைத் தவிர்த்த உத்தமராய் உம்மை மாநிலங்கள் அனைத்தும் போற்றிடும் மிஸ்டர் ஸீவேர்டு !

    ஸீவேர்டு: ஸம்டர் அரணைப் பிடித்து வைத்துக் கொள்வது ஜனாதிபதி தன் பதவி ஏற்புப் பேருரையில் எடுத்துக் கூறிய தீர்மானம் ! அதிலிருந்து அவர் பின்வாங்க மாட்டார். எடுத்த தீர்மானத்தில் எப்போதும் ஜானாதிபதி அழுத்தமாக கால் ஊன்றி நிற்பார்.

    வொயிட்: மிஸ்டர் லிங்கனை மிக்கப் பிடிவாதக்காரர் என்று சொல்வோர் இருக்கிறார். அவரிடம் சாமர்த்தியமாகப் பேசினால் அவர் முடிவை மாற்றிவிடலாம். வரப் போகும் உள்நாட்டுப் போரைத் தவிர்க்கலாம். ஆயிரக் கணக்கான உயிர்கள் மடியப் போவதை நிறுத்தலாம். நான் சாதாரணமான நபராய்ப் பேசுகிறேன். மிஸ்டர் லிங்கன் நல்ல பண்பாடுகள் கொண்ட ஓர் உன்னத மனிதர். நான் இருமுறை அவரிடம் உரையாடிய போது பிரமிப்பு அடையாமல் இருக்க முடிய வில்லை. உண்மை இல்லையா மிஸ்டர் ஜென்னிங்ஸ் ?

    unnamed (12)

    ஜென்னிங்ஸ்: உண்மை ! உண்மை ! நீவீர் சொல்வது முற்றிலும் உண்மை !

    வொயிட்: ஆனால் உங்களைப் போல் மிஸ்டர் லிங்கன் அரசியல் அனுபவம் அடையாதவர் என்பது என் கருத்து. அவருக்குத் தெரிய வேண்டாமா சில விஷயங்களில் சில சிறப்பாளருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ? எல்லாம் சுய முடிவாக எடுக்கிறார் ! அதில் வரும் இன்னல்களை அவர் எடைபோட்டுப் பார்ப்பதில்லை ! பிறர் சொற்படிக் கேட்பதும் இல்லை.

    ஸீவேர்டு: (கோபமாக) நாமெல்லாம் கவனமாகப் பேச வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் சுவர்களுக்கும் காதுகள் உள்ளன ! கண்களும் உள்ளன ! ஆவேசத்தில் பேசக் கூடாது.

    ஜென்னிங்ஸ்: அப்படிச் சொல்வது நியாயமா ? சந்தேகமின்றி தன் முதற்பதவி ஆசனத்தில் அமரும் மிஸ்டர் லிங்கன் அல்லவா மிக்க உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறார் ?

    ஸீவேர்டு: நீங்கள் சொல்வது உங்களுக்கு நியாயமாகத் தோன்றலாம். என் முடிவு வேறு ! சந்தேகமின்றி என் முழு ஆதரவு ஜனாதிபதி மிஸ்டர் லிங்கன் ஒருவருக்கே இருக்கும் !

    வொயிட்: ஓ அப்படியா ? உம்மை விட அனுபவம் குறைந்த மிஸ்டர் லிங்கன் மீது உமக்கு இத்தனை மதிப்பா ? மனிதப் பற்றா ? வியப்பாக இருக்கிறதே !

    ஸீவேர்டு: எல்லாமே ஜனாதிபதியின் மனதில் நிறம்மாறிப் போய்விட்டது அடிமைத்தனப் பிரச்சனையிலே ! அடிமைத்தன ஒழிப்பைச் சட்ட ரீதியாகக் கொண்டு வருவதற்கே மிஸ்டர் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி பதவியை ஏற்றிருக்கிறார் என்று நீங்கள் முதலில் தெரிந்து கொள்வீர் !

    காட்சி -2 பாகம் -2

    ஸீவேர்டு: ஜனாதிபதியின் மனதில் நிறம் மாறிப் போய் விட்டது அடிமைத்தனப் பிரச்சனையிலே ! அடிமைத்தன ஒழிப்பைச் சட்ட ரீதியாகக் கொண்டு வருவதற்கே மிஸ்டர் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி பதவியை ஏற்றிருக்கிறார் என்று நீங்கள் முதலில் நீவீர் தெரிந்து கொள்ள வேண்டும் !

    ஜென்னிங்ஸ்: மிஸ்டர் லிங்கன் மனதில் இருக்கும் தவறான கருத்தை மாற்ற முயலுவீரா ?. அடிமைத்தனம் ஒன்றும் கொடிய தில்லை. சம்டர் கோட்டை முற்றுகையை விட்டுவிடும்படி அவரை இணங்க வைப்பீரா ? அவரிடம் அழுத்தமாய் முறையிடுவீரா ? அதற்குப் பிறகு நாமெல்லாம் வட்ட மேஜை உரையாடலில் தீர்மானம் செய்யலாம். அடிமைத்தனத்தை நீக்கிவிடத் தென் மாநிலங்களிலும் பெருத்த ஆதரவு இருக்கிறது. வரப் போகும் உள்நாட்டுப் போரால் சில மாநிலங்களில் வணிகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அடிமைத்தன ஒழிப்பு பெரிதா அல்லது இந்த நிதி இழப்புகள் பெரிதா வென்று ஒப்பிட்டுப் பாருங்கள்.

    வொயிட்: எங்களால் நம்ப முடியவில்லை, தெற்கு மாநிலங்கள் சேர்ந்து கொண்டு பிரிந்து போகத் தயாராய் உள்ளன என்று பயமுறுத்துவது. அவ்விதம் செய்து காட்ட அவருக்கு உள்ள உரிமையைக் காட்டுகிறாரே தவிர வேறு ஒன்றுமில்லை. சம்டர் கோட்டையை விட்டு நீங்கினாலே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். அமெரிக்க யூனியனுக்குச் சாதகமான ஓர் ஏற்பாட்டை அமைக்க இயலும். கோட்டையை அடைத்துக் கொண்டதால் எந்த நல் விளைவும் நேரப் போவதில்லை. யூனியன் மீது தென்னவருக்கு வெறுப்பைத்தான் உண்டாக்கும்.

    ஸீவேர்டு: உமக்கு அந்த விளைவு தெரிகிறது. நீவீர் எடுத்துச் சொல்லலாம். அதிகார பூர்வமாக நான் எதுவும் அதைப் பற்றிப் பேச முடியாது மிஸ்டர் வொயிட் !

    ஜென்னிங்ஸ்: மிஸ்டர் ஸீவேர்டு ! இவை எல்லாம் எங்கள் சிறு ஆலோசனைகளே.

    ஸீவேர்ட்டு: என்னுடைய அனுதாபம் உங்களுக்கு உண்டு ! அது இல்லையென்று நான் சொல்ல வில்லை.

    வொயிட்: நன்றி மிஸ்டர் ஸீவேர்டு ! எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வோர் ஆட்சியில் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம்.

    ஜென்னிங்ஸ்: அந்த உயர்ந்த மனப்பாங்குக்கு வெகுமதி கிடைக்கும் மிஸ்டர் ஸீவேர்டு !

    ஸீவேர்டு: (சற்று மெதுவாக) கவனம் வைப்பீரா ? இங்கே நமக்குள் உரையாடியது வெளியே யாருக்கும் தெரியக் கூடாது. இரகசியமாக இருக்க வேண்டும். செய்தித் தாள்களில் வெளியாகி விடக் கூடாது. புரிகிறதா நான் சொல்வது ?

    வொயிட்: நன்றாகப் புரிகிறது மிஸ்டர் ஸீவேர்டு ! எங்களை நம்பலாம். இந்த இரகசியம் எங்கும் செல்லாது. செய்தித் தாளுக்குப் போகாது ! நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

    ஸீவேர்டு: (எழுந்து கொண்டே) அப்படியானல் சரி போய் வாருங்கள், வணக்கம்.

    வொயிட், ஜென்னிங்: (எழுந்து கொண்டு) உங்களுடன் அந்தரங்கமாய்ப் பேசியதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. போய் வருகிறோம். வணக்கம் மிஸ்டர் ஸீவேர்டு !

    (அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கிறது.)

    ஸீவேர்டு: ஆம், உள்ளே வரலாம்.

    (ஸீவேர்டின் ஓர் அலுவல் பணியாள் நுழைகிறார்)

    பணியாள்: மிஸ்டர் ஸீவேர்டு ! நமது ஜனாதிபதி மாடிப் படிகளில் ஏறி வருகிறார்.

    ஸீவேர்டு: நன்றி. (பணியாள் திரும்பிக் கீழே போகிறார்) இது மகா இக்கட்டான தருணம் ! ஒன்றும் சொல்லாதீர். தயவு செய்து உடனே போய் விடுங்கள்.

    (லிங்கன் மெதுவாக உள்ளே நுழைகிறார். ஜென்னிங்ஸ், வொயிட் வெளியே நழுவிச் செல்லக் கடக்கும் போது லிங்கன் அவரைத் தடுத்து நிறுத்துகிறார்)

    ஜனாதிபதி லிங்கன்: குட் மார்னிங் மிஸ்டர் ஸீவேர்டு ! குட் மார்னிங் ஜென்டில்மென் !

    ஸீவேர்டு: போய் வாருங்கள் மிஸ்டர் ஜென்னிங்ஸ் ! மிஸ்டர் வொயிட் ! (இருவரும் வெளியே போகிறார்)

    லிங்கன்: பத்து நிமிடம் தங்குவீரா ! உங்கள் பிரச்சனைகளை நானும் தெரிந்து கொள்ளலாமா ?

    ஜென்னிங்ஸ்: (திரும்பிப் பார்த்து) எல்லாவற்றையும் நாங்கள் சொல்லி விட்டோம் மிஸ்டர் ஸீவேர்டு அவர்களிடம் ! அவரே சொல்வார். நாங்கள் போகிறோம். மன்னிக்க வேண்டும் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: தெற்கிலிருந்து வருவோரின் கருத்துக்களை நான் நேராக அறிய விரும்புகிறேன். பத்து நிமிடங்கள் தங்குவீரா ?

    ஜென்னிங்ஸ்: (தயக்கமுடன் விழித்து) அப்படியே செய்கிறோம் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: நன்றி. மிஸ்டர் ஸீவேர்டு இந்த நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்துவீரா ? எதிர்பாராத விதமாக எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் இது. நேருக்கு நேராக தென் மாநிலத்து நண்பருடன் உரையாடுவது எனக்குப் பிடிக்கும்.

    ஸீவேர்டு: இவர் ஜான்ஸன் வொயிட், இவர் காலெப் ஜென்னிங்ஸ் மிஸ்டர் பிரசிடெண்ட் ! இருவரும் கன்•பெடரேட் கவுன்சிலர்கள் ! . . . நான் வெளியே போகிறேன், நீங்கள் தனியே பேசுங்கள்.

    லிங்கன்: இல்லை மிஸ்டர் ஸீவேர்டு ! நீங்கள் என்னோடிருந்து பேச்சில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு எனக்குத் தேவைப்படும். . . . . எல்லாரும் உட்காருங்கள் ! (எல்லாரும் மேஜையைச் சுற்றி அமர்கிறார்) என்ன செய்தியைச் சொல்ல வாஷிங்டனுக்கு

    நீங்கள் வந்தீர்கள் ?

    வொயிட்: ஒன்றுமில்லை ! உங்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை !

    லிங்கன்: அப்படியா ? மிஸ்டர் ஸீவேர்டிடம் நீங்கள் என்ன சொல்ல வந்தீர் ? அதை நான் அறிந்து கொள்ளலாமா ?

    ஜென்னிங்ஸ்: எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    ஸீவேர்டு: நமது முடிவில் தீவிரமில்லாத அமைதியான தீர்வு எதுவும் இருக்கிறதா என்று அறிய வந்துள்ளார் இந்த இரண்டு கவுன்சிலரும் !

    லிங்கன்: அவசியம் நானிதைக் கேட்க வேண்டும் மிஸ்டர் ஸீவேர்டு ! தீவிரமில்லாத அமைதியான தீர்வு என்பது என்ன ? விளக்குவீரா மிஸ்டர் ஜென்னிங்ஸ் ?

    ஜென்னிஸ்: (பயந்து கொண்டு, தடுமாறியபடி) அது சொல்ல இயலாத விஷயம் மிஸ்டர் பிரெசிடெண்ட் ! எப்படி உங்களிடம் சொல்வது என்று தயங்குகிறேன். நாங்கள் மிஸ்டர் ஸீவேர்டுடன் உரையாடியது சாதாரணமான பேச்சுதான்.

    காட்சி -2 பாகம் -3

    லிங்கன்: சாதாரணமான பேச்சென்றால் என்னிடம் சொல்லத் தயங்க வேண்டுமா ? நீங்கள் வெகுதூரம் கடந்து வாஷிங்டனில் மிஸ்டர் ஸீவேர்டைக் காண வந்த காரணம் சாதாரணம் என்று நான் கருதவில்லை ! என்ன காரணம் என்று எனக்குச் சொல்லுங்கள் !

    வொயிட்: நாங்கள் சொல்ல வந்ததைப் பிரசிடெண்ட் அவர்களிடம் கூறலாமா மிஸ்டர் ஸீவேர்டு ?

    லிங்கன்: (இடைமறித்து) நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். எனக்குப் புரியாவிட்டால் மிஸ்டர் ஸீவேர்டு ஐயமின்றி ஒளியூட்டுவார்.

    ஜென்னிங்ஸ்: இந்த ஆரம்ப காலத்தில் உங்களுக்கு நாங்கள் தொந்தரவு தர விரும்ப வில்லை மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: ஆரம்ப காலமா ? எதற்கு ஆரம்ப காலம் ?

    ஜென்னிங்ஸ்: நான் சொல்ல வருவது . . . . . !

    ஸீவேர்டு: இந்தக் கோமகனார் இருவரும் போரில்லாமல் அமைதிக்கு வழியிருக்குமா வென்று காண வந்துள்ளார். நல்லதோர் சமாதான ஏற்பாடுக்கு ஆலோசனை அளிக்க வந்துள்ளார்.

    லிங்கன்: யாருக்கு ஆலோசனை அளிக்க வந்திருக்கிறார் ?

    ஸீவேர்டு: அரசாங்கத்துக்கு . . ! ஆம் அமெரிக்க அரசாங்கத்திற்குத்தான் . . !

    லிங்கன்: அரசாங்க அதிபதி இங்கேதான் நின்று கொண்டிருக்கிறார் ! சொல்லுங்கள் கோமான்களே ! என்ன ஆலோசனை அது ? என் செவிகள் இரண்டும் திறந்துள்ளன !

    ஜென்னிங்ஸ்: சம்டர் கோட்டை முற்றுகை பற்றித்தான் எங்கள் ஆலோசனை மிஸ்டர் பிரசிடெண்ட் ! கோட்டை முற்றுகையை நிறுத்திப் படைகள் திருப்பி அழைக்கப் பட்டால், அது உங்களின் பலவீனமாய் கருதப்படாது ! அது இயற்கையான உரிமையாக ஒரு தாராள விட்டுக் கொடுப்பாக எண்ணப்படும். தென்னகத்து மாநிலங்கள் துண்டித்து பிரிந்து போவதை மனப் பூர்வமாய் விரும்பவில்லை என்று நாங்கள் நம்புகிறோம் ! தமது வினைகளைத் தாமே நிறைவேற்றத் தமக்குரிமை உண்டு என்பதைக் காட்ட விரும்புகிறது தென்னகம்.

    லிங்கன்: அமெரிக்க தேசத்தின் அடிமைத்தன ஒழிப்பு அங்கீகாரத்தை மிதிக்க விழைகிறது தென்னகம். அதைத் தென்னகம் தடுப்பது தகாத செய்கை.

    வொயிட்: அதுவல்ல பிரச்சனை மிஸ்டர் பிரசிடெண்ட் ! தென்னக மாநிலங்களில் எங்கும்அடிமைத்தனத்தை எதிர்க்கும் சட்டம் எதுவும் இல்லை !

    லிங்கன்: சட்டங்கள் பெரும்பாலோர் ஏகோபித்த கருத்திலிருந்து ஆக்கப்படும் மிஸ்டர் வொயிட். தென்னக மாநிலங்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

    ஜென்னிங்ஸ்: மிஸ்டர் பிரசிடெண்ட் ! பணிவாக நான் சொல்கிறேன் ! உங்களுக்கு அது புரியவில்லை !

    லிங்கன்: அப்படியா ? நீங்கள் கூறியது மிஸ்டர் ஸீவேர்டுக்குப் புரிந்ததா ?

    வொயிட்: நாங்கள் அப்படித்தான் நம்புகிறோம்.

    லிங்கன்: நீங்கள் நினைப்பது தவறு ! அவருக்கும் புரிந்திருக்க முடியாது ! காரணம் நீங்கள்அவருக்குப் புரியும்படி சொன்னதாகத் தெரியவில்லை. உங்கள் மீது நான் பழிபோட வில்லை. நீங்கள் மக்களின் நலம்நாடி மேலானதைச் செய்வதாக நினைக்கிறீர். நேர்மையான போராட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக நினைக்கிறீர். ஆனால் உங்கள் பிரச்சனையை நான் விளக்கிச் சொல்கிறேன் ! உள்ளதை உள்ளபடி உங்கள் முன் உரித்து வைக்கிறேன். இந்த நாட்டில் பெரும்பான்மையோர் அடிமைத்தன ஒழிப்பை விரும்புகிறார். பலருக்கு விருப்பமில்லை. எவருக்கு உரிமை உண்டு அல்லது எவருக்கு இல்லை என்று இப்போது நான் எதுவும் சொல்ல வில்லை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அது வரப் போகுது என்று ஒவ்வொருவரும் அறிவார். தென்னகம் ஏன் பிரிவினையை வேண்டுகிறது ? காரணம் : அடிமைத்தன ஒழிப்பு சட்டமாக வந்து விடலாம் என்ற பயம். அதை விரும்பவில்லை தென்னகம். அதைத் தவிர்க்க விழைகிறது தென்னகம் ! அடிமைகளை வைத்துக் கொள்ளும் உரிமையை நீடிக்க விரும்புகிறது தென்னகம் ! அடிமைகளை இந்நாட்டில் வைத்திருப்பதற்கு நாம் எல்லோருமே குற்றவாளிகள்தான். ஆனால் வடபகுதியில் நாமெல்லாம் நமது பழைய வழிமுறைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். நீங்கள் அப்படி இல்லை ! நாட்டை இரண்டாய்ப் பிரிவு செய்து உங்கள் சட்டத்தை உருவாக்க விரும்புகிறீர் ! நீங்கள் எதிர்க்கத் தயாராக இல்லை ! எதிர்த்துப் போராட நீவீர் விழைய வில்லை. முதல் கலவரத்தைக் கடந்து செல்லக் கருதுகிறீர். பிரிந்து போவதாய்ப் பயமுறுத்தி அடிமை வணிகத்தைத் தொடர முனைகிறீர். அதுதான் உங்கள் உண்மைத் திட்டம். அவ்விதம் நீங்கள் மிஸ்டர் ஸீவேர்டுடன் உரையாட வில்லை ! தென்னகக் கோமான்களே ! இதை ஒரு மூலையில் மறைத்து மூடி வைக்க முடியாது. அடிமைப் பிரச்சனைக்கு ஓர் முடிவான முடிவு காண வேண்டும். சில நாட்களுக்கு முன்பு நான் இப்படிக் கூறினேன் : எங்களால் முடிந்தவரை சம்டர் கோட்டை முற்றுகை தொடரும் ! அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் ! அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் ? அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா ? அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் ? காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை ! ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் ! அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா ? நீவீர் அதை இப்போது மறுக்க முடியாது

    ஜென்னிங்ஸ்: மிஸ்டர் லிங்கன் ! நீங்கள் விரும்பிய அளவு வேட்கையில் அடிமைத்தன விடுதலையை எப்படியாவது எங்கள் மீது திணிக்க முற்படுகிறீர். ஆனால் நாங்கள் அடிமைத்தன நீடிப்பை அழுத்தமாய்ப் பிடித்துக் கொள்ள முனைவோம் என்று கவனத்தில் வைப்பீர் !

    லிங்கன்: இதற்கு மேலாக நான் எடுத்துச் செல்ல இயலாது மிஸ்டர் ஜென்னிங்ஸ் ! அந்தத் தீர்மானமே அமெரிக்க யூனியன் நியதி ! பொதுமக்களின் நேரிய உரிமையை நிலைநாட்டும் ஐக்கிய உடன்பாடு ! அதுதான் அமெரிக்காவின் அடித்தளக் கட்டுமானம் ! அதைத்தான் ஒவ்வொரு நேர்மையான அமெரிக்கனும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

    காட்சி -2 பாகம் -4

    லிங்கன்: இதற்கு மேலாக நான் எடுத்துச் செல்ல இயலாது மிஸ்டர் ஜென்னிங்ஸ் ! அந்தத் தீர்மானமே அமெரிக்க யூனியன் நியதி ! பொதுமக்களின் நேரிய உரிமையை நிலைநாட்டும் ஐக்கிய உடன்பாடு ! அதுதான் அமெரிக்காவின் அடித்தளக் கட்டுமானம் ! அதைத்தான் ஒவ்வொரு நேர்மையான அமெரிக்கனும் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்தப் பிரச்சனையைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வீர். போர் ஒன்று வருமானால் அது அடிமைத்தனத்தை முன்னிட்டு இருக்காது ! தென்னகத்துக்கு அமெரிக்க ஐக்கியத்தின் மீது தேசப்பற்று இருக்குமானால் அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தைத் தவிர்க்க அரசியல் முறையில் தர்க்கமிட்டு முடிவு காணலாம். அவ்விதமின்றி நாட்டைத் துண்டாக்கும் உரிமையைத் தென்னகம் மேற்கொண்டால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாட்டுப் பிரிவினையைத் தடுத்து நாமதைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மாநிலமும் ஐக்கியத்தை ஒப்புக்கொண்டு நமது பிதாக்கள் உறுதி கூறியதை நிலைநாட்டவும், அமெரிக்க யூனியன் நிச்சயம் போரைத் துவக்கும். நாங்கள் நாட்டைப் பிரிக்க விட மாட்டோம். நீங்களும் நாட்டைத் துண்டாக்கக் கூடாது. உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதோ அல்லது துவக்குவதோ அது உங்கள் கைகளில்தான் உள்ளது, என் கைகளில் அல்ல ! போருக்கு நீங்கள்தான் முதல் காரணக் கர்த்தாக்கள் ! நீங்கள்தான் முதல் ஆக்கிரமிப்பாளர் ! நாம் இருவரும் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே ! நாம் பகைவராய் மாறக் கூடாது ! உணர்ச்சி வசப்பட்டு மனமுறிவு ஏற்பட்டாலும் நமக்குள் இருக்கும் பந்த பாசம் முறியக் கூடாது ! அதுதான் எங்கள் பதில் ! போய்ச் சொல்வீர் தென்னக மாந்தரிடம் ! சொல்வீரா ?

    வொயிட்: உங்கள் முடிவு உறுதியாகி விட்டதா ?

    லிங்கன்: நான் சொன்னதைத் தென்னவரிடம் தயவு செய்து கூறுங்கள் !

    ஜென்னிங்ஸ்: உங்கள் விருப்பப்படி நடக்கும் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: ஜெனரல் பியர்கார்டு திரும்பிட ஆணையிடும்படி வேண்டுங்கள் ! இப்போதே இங்கிருந்து தந்தி கொடுப்பீர் ! செய்வீரா உடனே !

    வொயிட்: அப்படி நீங்கள் விரும்பினால் தந்தி அடிப்போம் இப்போதே !

    லிங்கன்: மிஸ்டர் ஸீவேர்டு ! இவருக்கு உதவி செய்ய ஓர் ஆ·பீஸ் பணியாளரை ஏற்பாடு செய்வீரா ? நமக்குப் பதில் தெரிய வேண்டும் உடனே !

    (ஸீவேர்டு மணி அடிக்கப் பணியாள் ஒருவன் வருகிறான்.)

    ஸீவேர்டு: இவருக்குத் தனியாக தந்தி அடிக்க ஏற்பாடு செய் ! அவரே எழுதி அனுப்ப தனிப்பட்ட தபால் கம்பியை அமைத்துக் கொடு.

    (பணியாள் ஒப்புக் கொண்டு செல்கிறான். ஜென்னிங்ஸ், வொயிட் இருவரும் பணியாளரைப் பின் தொடர்ந்து போகிறார்கள். சிறிது நாழிகை லிங்கனும், ஸீவேர்டும் பேசாமல் சிந்தனையில் இருக்கிறார்கள். லிங்கன் இங்குமங்கும் சிந்தனையுடன் அறைக்குள் நடக்கிறார்.)

    லிங்கன்: (சினத்துடன்) ஸீவேர்டு ! இது சரியாகத் தெரியவில்லை ! நான் ஆணையிட்டபடி அவர்கள் செய்வாரா ?

    ஸீவேர்டு: எனக்கு அப்படித் தெரியவில்லை ! நீங்கள் சந்தேகப் படுகிறீர்களா ?

    லிங்கன்: அவர் இருவரையும் நான் புரிந்து கொண்டேன். உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நேராகச் செல்கிறேன். எல்லோரைக் காட்டிலும் அறிவுடன் செய்த கடவுள் எப்படித் திறமையுடன், வாஷிங்டன் மீது சுமத்தப்பட்ட மாபெரும் குறிப்பணியைச் சாதிக்க என்னை இந்த அமெரிக்காவுக்குத் தளபதியாகக் கொண்டு வந்திருக்கிறார் என்று யாராலும் சொல்ல இயலாது ! எனது அரசவைக் குழுவை (Cabinet) நியமிக்கும் போது, முதன்முதல் உங்களைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அதற்கு நான் வருத்தப்பட வில்லை ! நான் வருத்தப்படவும் கூடாது. ஆனால் ஒன்றை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மனித நம்பிக்கைதான் மனித நம்பிக்கையை சம்பாதிக்கும். ஏன் சொல்லுங்கள் ? தென்னகத்திலிருந்து வந்த அந்த இருவரும் ஏன் என்னிடம் உரையாட வராமல் உங்களைத் தேடி வந்தார் ?

    ஸீவேர்டு: (தயக்கமுடன்) என் மூலமாகப் பிரச்சனைக்குத் தீர்வு உங்களுக்கு எட்டினால் அவர்கள் நோராக உங்களிடம் சொல்வதை விட வலுவாகச் சொல்லப்படும் என்று அவர்கள் எண்ணி இருக்கலாம் !

    லிங்கன்: (சற்று கோபத்துடன்) எந்தப் பிரச்சனைத் தீர்வு பற்றி என்னிடம் சொன்னால் ?

    ஸீவேர்டு: சம்படர் கோட்டை முற்றுகை நியாயம் (Discretion) பற்றித்தான் . . . !

    லிங்கன்: முற்றுகை பற்றி மாறான நியாயம் எனக்கில்லை என்று உமக்குத் தெரியாதா ?

    ஸீவேர்டு: மிஸ்டர் பிரசிடெண்ட் ! உள்நாட்டுப் போர் மனித உயிர்களைப் பலி கொடுப்பப் போகிறது இரண்டு பக்கத்திலும் ! போர் என்றாலே பெரும் பயத்தை உண்டாக்குது !

    லிங்கன்: ஆம் நிச்சயம் உண்டாக்கும் ! போர் கொடிது என்று எனக்குத் தெரியாதா ? உம்மை நான் இப்போது புரிந்து கொண்டேன் மிஸ்டர் ஸீவேர்டு ! உமது மனமும் தென்னக மாந்தருக்கு இரக்கம் காட்டுகிறது ! போரைத் தவிர்க்க முடியாது ! எனக்குத் தெரியும் ! உமக்கும் தெரியும் அது ! சொல்லுங்கள் எப்போது நாம் போரைத் தவிர்க்க முடியும் ? போருக்கு அடிப்படையான மூல காரணத்தை நீக்க முடிந்தால் ! நீவீர் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியவில்லை ! வரப் போகும் உள்நாட்டுப் போரில் தெற்கில் ஒரு காலும், வடக்கில் ஒரு காலும் ஊன்றிக் கொள்ளப் போகிறீரா சொல்லுங்கள் ?

    காட்சி -2 பாகம் -5

    லிங்கன்: ஆம் நிச்சயம் உண்டாக்கும் ! போர் கொடிது என்று எனக்குத் தெரியாதா ? உம்மை நான் இப்போது புரிந்து கொண்டேன் மிஸ்டர் ஸீவேர்டு ! உமது மனமும் தென்னக மாந்தருக்கு பரிவைக் காட்டுகிறது ! போரைத் தவிர்க்க முடியாது ! எனக்குத் தெரியும் ! உமக்கும் தெரியும் ! சொல்லுங்கள் எப்போது நாம் போரைத் தவிர்க்க முடியும் ? போருக்கு அடிப்படையான மூல காரணத்தை நீக்க முடிந்தால் ! நீவீர் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியவில்லை ! வரப் போகும் உள்நாட்டுப் போரில் தெற்கில் ஒரு காலும், வடக்கில் ஒரு காலும் ஊன்றிக் கொள்ளப் போகிறீரா சொல்லுங்கள் ? நம் படையினர் சம்டர் கோட்டை முற்றுகையை விட்டுவிட்டு விலகுவது அடிமைப் பிரச்சனையை நீக்காது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா ? இந்த தேசத்தின் ஒருபாதி அமெரிக்க யூனியனை ஒப்புக் கொள்ள மறுக்கும் உரிமையைக் கையாளும் போது, நமக்கிடையே இருக்கும் ஒவ்வோர் உண்மைப் பாதுகாப்பாளர் உள்ளத்திலும் போருக்குக் காரணம் அதுதான் என்பது தெரியும். சம்டர் கோட்டை முற்றுகையை விட்டுவிட்டு நாம் பின்வாங்கினால் மூல காரணத்தை ஒழிக்க நாமெதுவும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. நாட்டைத் துண்டாக்குவது நம்பிக்கைத் துரோகம் என்று நாம் அவருக்கு அழுத்தமாகச் சொல்லித்தான் அதன் காரணத்தை ஒழிக்க முடியும்..

    ஸீவேர்டு: தேச மக்களுக்கு இப்படி அழுத்தமாக அறிவிப்பதில் ஒரு பயமுறுத்தல் இருக்கிறதல்லவா ?

    லிங்கன்: என்ன பயமுறுத்தலா ? சிறிது நேரத்துக்கு முன்பு என்னிடம் நீவீர் நியாயம் எது என்று கேட்டது நினைவிருக்கிறதா ? நியாயம் தவறிப் பயமுறுத்தலில் நாம் இறங்கி விட்டோம் என்று நீவீர் நினைப்பதற்குக் காரணம் என்ன ?

    ஸீவேர்டு: (தணிவாக) நான் சொல்ல வருவது என்ன வென்றால் நமது அரசியல் தீர்மானக் கொள்கையை நாம் விளக்கமாக மக்களுக்கு அறிவிக்க வில்லை என்பதுதான் !

    லிங்கன்: (ஆச்சரியமடைந்து) என்ன ? நான் செய்த தீர்மானங்களுக்கு எல்லாம் நீவீர் உடன்பாடு தெரிவிக்க வில்லையா ? உம்மையே நீவீர் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் ! நியாயமாய் நடப்பீர் என்று ஒருபுறம் சொல்கிறீர் ! பிறகு பயமுறுத்தல் வேண்டாம் என்று மறுபுறம் என்னைத் தாக்குகிறீர் ! தென்னக மாந்தருக்கு நல்ல அறிவு இருக்குமானால், அவரது ஜெனரல் பியூர்கார்டை பின்வாங்கச் சொல்வார் ! அப்போது நமக்கோர் நன்னம்பிக்கை உண்டாகும் ! அதனால் நான் எதுவும் கூறி அவரது கோபத்தைக் கிளராமல் இப்போது மனதில் தீர்மானமாய் இருக்கிறேன். அது உமக்கு பயமுறுத் தலாகத் தெரிகிறதா ? இப்போது அவரது முடிவு தெளிவாகத் தெரிகிறது எனக்கு ! காலையில் நான் பேசியதை நீங்களும் கேட்டீர் ! இந்த அரசாங்கத்துக்கு மிகுந்த அனுபவத்தை நீவீர் கொண்டு வந்திருக்கிறீர் ! மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கி இருக்கிறீர் ! உயர்ந்த ஆளுமைத் திறனை நிலைநாட்டி இருக்கிறீர் ! இந்த தேசத்தைப் பேரளவில் நேசிக்கிறீர் ! ஆனால் ஆழ்ந்து தீர்மானம் செய்யும் நான் அங்குமிங்கும் ஊசல் ஆடுகிறேன் என்றோ, பயமுறுத்துகிறேன் என்றோ நினைக்காதீர் !

    ஸீவேர்டு: (மெதுவாக) நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் ஆழ்ந்து சிந்திக்கவில்லை அதைப் பற்றி.

    லிங்கன்: (ஓர் அறிக்கைத் தாளைப் பையிலிருந்து எடுத்து) ஈதோ நீங்கள் இன்று எனக்கு அனுப்பிய தாள். அதில் என்ன உள்ளது ? படிக்கிறேன் கேட்பீர் ! “ஜனாதிபதியின் சிந்தனைக்குச் சில கருத்துக்கள் :– பிரிட்டீஷ் சாம்ராஜியம், ரஷ்யா, மெக்ஸிகோ சம்பந்தமான தேசக் கொள்கைகள் பற்றி. ஒன்று பிரசிடென்ட் இவற்றைக் கையாள வேண்டும். அல்லது அவரது அரசாங்கப் பொறுப்பாளர் ஒருவர் வசம் ஒப்படைக்க வேண்டும். அது என் பிரதேசக் கட்டுப்பாட்டில் இல்லை. அதிலிருந்து விலகிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை ! அதைப் பொறுப்பாக ஏற்றுக் கொள்ளவும் வேண்டி வரவில்லை !”

    (சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவுகிறது. லிங்கனும், ஸீவேர்டும் ஒருவரை ஒருவர் கூர்ந்து நோக்குகிறார். அறிக்கைத் தாளை லிங்கன் ஸீவேர்டிடம் தருகிறார். அதைக் கையில் வாங்கி சிறிது விநாடிகள் கழித்து, ஸீவேர்டு கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறார்.)

    ஸீவேர்டு: மன்னிக்க வேண்டும் என்னை மிஸ்டர் பிரசிடென்ட் !

    லிங்கன்: உமது மனோபாவத்தை மதிக்கிறேன் மிஸ்டர் ஸீவேர்டு (லிங்கன் ஸீவேர்டு கையைக் குலுக்குகிறார்.)

    [அப்போது கதவைத் தட்டிச் செயலாளர் ஜான் ஹே (John Hay) அவசரமாக உள்ளே நுழைகிறார்.]

    ஜான் ஹே: மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய தூதுவர் ஒருவர் வந்து காத்திருக்கிறார். அவர் நேராக சம்டர் கோட்டையிலிருந்து வருகிறார்.

    லிங்கன்: அவரை என் தனி அறைக்கு அழைத்து வா ! இல்லை நேராக இங்கே அழைத்து வா !

    (ஜான் ஹே போகிறார்)

    ஸீவேர்டு: என்ன அவசரத் தகவலாக இருக்கும் ?

    லிங்கன்: ஏதோ ஒரு வேண்டாத சம்பவம் நேர்ந்திருக்கிறது ! (லிங்கன் மணி அடிக்கிறார். உடனே ஒரு பணியாள் வருகிறான்.) யாராவது அரசாங்கக் குழுவினர் அரசவையில் இருக்கிறாரா பார் ?

    பணியாள்: மிஸ்டர் பிரசிடென்ட் ! மிஸ்டர் சேஸ் (Mr. Chase), மிஸ்டர் பிளேர் (Mr. Blair) அங்கே இருக்கிறார்.

    லிங்கன்: அவரிடம் போ ! என்னுடன் சில மணிநேரம் கலந்து ஆலோசிக்க இங்கு வருவாரா என்று கேள் ! விரும்பினால் இருவரையும் இங்கு அழைத்து வா உடனே !

    பணியாள்: அப்படியே செய்கிறேன், மிஸ்டர் பிரசிடென்ட் ! (பணியாள் போகிறான்.)

    லிங்கன்: நாம் இன்றே முடிவு செய்தாக வேண்டும் ஸீவேர்டு ! ஆம் இப்போதே தீர்மானிக்க வேண்டும். சம்டர் கோட்டை முற்றுகையில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது !

    [ஜான் ஹே முன்னே வர, அவருக்குப் பின்னால் வேர்வையுடன் புழுதியும் தூசியும் படிந்த ஒரு படைவீரன் வருகிறான். கையைத் தூக்கி ஜனாதிபதிக்கு வந்தனம் செய்கிறான். ஜான் ஹே வெளியே போகிறார்.)

    லிங்கன்: மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய தூதுவனா நீ ? எங்கே அதற்கு உன் அடையாளத்தைக் காட்டு !

    படைவீரன்: (பையிலிருந்து ஓர் அறிக்கையை எடுத்து லிங்கனிடம் தருகிறான்.) ஈதோ உங்களுக்குக் கடிதம், மிஸ்டர் பிரசிடென்ட் ! மேஜர் ஆண்டஸன் உங்களிடம் நேரடியாகத் தர எனக்கு உத்தரவு இட்டிருக்கிறார்.

    (லிங்கன் அவசரக் கடிதத்தை படித்துச் சிந்திக்கிறார்)

    காட்சி -2 பாகம் -6

    லிங்கன்: மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய தூதுவனா நீ ? எங்கே அதற்கு உன் அடையாளத்தைக் காட்டு !

    படைத் தூதன்: (பையிலிருந்து ஓர் அறிக்கையை எடுத்து லிங்கனிடம் தருகிறான்.) ஈதோ உங்களுக்குக் கடிதம், மிஸ்டர் பிரசிடென்ட் ! மேஜர் ஆண்டர்ஸன் உங்களிடம் நேரடியாகத் தர எனக்கு உத்தரவு இட்டிருக்கிறார்.

    லிங்கன்: (லிங்கன் அவசரக் கடிதத்தை படித்துச் சிந்திக்கிறார்) வாயால் சொல் முதலில் ! என்ன அவசரச் செய்தி இது ?

    படைத் தூதன்: மிஸ்டர் பிரசிடென்ட் ! மேஜர் ஆண்டர்ஸன் தன் கடமையைச் செய்கிறார் ! சம்டர் கோட்டை முற்றுகை இன்னும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்காது ! உணவுப் பண்டங்கள் இல்லை ! உதவிப் படை மேற்கொண்டு தேவை !

    லிங்கன்: (மணியை அடிக்க மூன்றாவது பணியாள் வருகிறான்) மிஸ்டர் வொயிட், மிஸ்டர் ஜென்னிங்ஸ் இருவருக்கும் ஏதாவது பதில் வந்திருக்கிறதா என்று உடனே கேட்டு வா ! அடுத்து மிஸ்டர் ஹேயை இங்கே வரச் சொல் !

    (மிஸ்டர் ஹே உள்ளே வருகிறார்)

    லிங்கன்: மிஸ்டர் ஹே ! ஜெனரல் ஸ்காட் எங்கிருக்கிறார் என்று தெரிந்து இந்தக் கடிதத்தை அவரிடம் கொடுப்பீரா ? காத்திருந்து அவரது பதிலையும் வாங்கிக் கொண்டு வருவீரா ?

    மிடே ஹே: அப்படியே செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் ! (ஹே போகிறார்)

    லிங்கன்: (படைத் தூதனிடம் கவனமாக) கோட்டையில் நிலைமை படுமோசமாக உள்ளதா ?

    படைத் தூதன்: ஆமாம் மிஸ்டர் பிரிசிடெண்ட் ! மூன்று நாட்கள்தான் உணவுப் பண்டங்கள் நீடிக்கும் என்று மேஜர் கவலைப்படுகிறார் ! எங்கள் யூகம் ஒரு நாளுக்குக் கூட வராது என்பதே !

    லிங்கன்: என்ன ? ஒரு நாளைக்குக் கூட உணவு தேறாதா ? இதை எனக்கு முன்பே மேஜர் ஏன் தெரிவிக்க வில்லை ? நிலைமை மிக மிக மோசமாகிப் போய் விட்டதே ! பட்டினி கிடக்கும் படைவீரர் எப்படி முற்றுகையைத் தொடர முடியும் ?

    (கதவு தட்டும் அரவம் கேட்கிறது.)

    ஸீவேர்டு: யாரது ? உள்ளே வரலாம்.

    (ஹாக்கின்ஸ் வருகிறார்)

    ஹாக்கின்ஸ்: மிஸ்டர் வொயிட் அவருக்குத் தகவல் தந்தி மூலம் வந்திருக்கிறது.

    லிங்கன்: செய்தி எடுத்துக் கொண்டு உடனே இங்கு வரச் சொல் வொயிட்டை !

    (ஆமோதித்துக் கொண்டு ஹாக்கின்ஸ் போகிறார்)

    லிங்கன்: மூன்று நாட்களுக்குத்தான் உணவுப் பண்டங்கள் நீடிக்குமா ? ஏன் இதை மேஜர் முன்பே தெரிவிக்க வில்லை ? பகைவர் துப்பாக்கியால் மாளாது பட்டினியால் சாவதா படைகள் ? படை வீரர் போதாவென்று எப்போது எச்சரிக்கை விடுவது ? முன் யோசனை இல்லாத தளபதி ! . . . அது சரி. ஏதோ தகவல் வந்துள்ளதாமே ! மிஸ்டர் வொயிட் என்ன குண்டைப் போடப் போகிறாரோ ?

    ஸீவேர்டு: (சற்று அழுத்தமாக) மிஸ்டர் பிரசிடெண்ட் ! இது நமக்கொரு எச்சரிக்கை ! இப்போது நாம் முற்றுகையை நிறுத்திப் பின்வாங்குவதுதான் நல்லது ! இராணுவத் தந்திரம் அதுதான். உணவுப் பண்டங்கள் இல்லை ! படைகளை வலுப்படுத்த மேற்கொண்டு படை

    வீரர் கைவசம் இல்லை. நமது யூனியன் படைகள் தோற்று அவமானம் அடைய வேண்டுமா ? நல்ல தருணம் இது ! வீணாகப் படை வீரர் மடிவதைத் தவிர்க்கலாம். முறையாகப் படை திரட்டிப் போரிடலாம் ! திட்ட மில்லாமல் முன்னடி வைத்து விட்டோம் !

    லிங்கன்: நானதை ஒப்புக்கொள்ள மாட்டேன் மிஸ்டர் ஸீவேர்டு ! திட்டமிடாமல் நான் எதையும் துவங்க மாட்டேன் ! ஆழம் தெரியாமல் காலை வைக்க மாட்டேன் ! அச்சம் அடைந்தவன் செய்யும் துச்சமான வேலை பின்வாங்குவது ! வலுவில்லாத கோழை புரியும் இலகுவான செயல் அது ! முதுகெலும்பு முறிந்து போனவன் செய்வது அது ! தற்போது பின்வாங்குவது என் திட்டம் இல்லை ! உமது ஆலோசனைக்கு நன்றி !

    (அப்போது வொயிட், ஜென்னிங்ஸ் இருவரும் உள்ளே நுழைகிறார்.)

    லிங்கன்: என்ன தகவல் வந்திருக்கிறது ?

    வொயிட்: மன்னிக்க வேண்டும் மிஸ்டர் பிரசிடெண்ட் ! தென்னகம் பிடிவாதமாக உள்ளது. அவர்கள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை !

    லிங்கன்: (சற்று சினத்துடன்) நான் எடுத்துச் சொன்ன விபரங்களை எல்லாம் கூறினீரா ?

    ஜென்னிங்ஸ்: ஆமாம் மிஸ்டர் பிரசிடெண்ட் ! அவரது தீர்மானத்தில் எந்த மாறுதலும் இல்லை !

    லிங்கன்: (அழுத்தமாக) நிலைமை படு மோசமாகப் போய் விட்டது. பயங்கரக் கட்டத்துக்கு வந்து விட்டது ! நன்றி ! போய் வாருங்கள் !

    (வொயிட், ஜென்னிங்ஸ் அறையை விட்டு வெளியேறுகிறார்.)

    லிங்கன்: கடவுளே ! மன உறுதி வேண்டும் நமக்கு ! மிஸ்டர் ஸீவேர்டு ! நம்பிக்கை வேண்டும் நமக்கு ! நமது உடும்புப் பிடியைத் தளர்த்தக் கூடாது ! (மணியை அடிக்கிறார்)

    (பணியாள் ஒருவர் வருகிறார்)

    லிங்கன்: என் தகவலை அறிவித்தாயா ?

    பணியாள்: ஆமாம் மிஸ்டர் பிரசிடெண்ட் ! மிஸ்டர் சேஸ், மிஸ்டர் பிளேர் இங்கு வந்திருக்கிறார்.

    லிங்கன்: அவர் இருவரையும் உள்ளே அழைத்து வா உடனே ! (பணியாள் போகிறான்) (சிறிது கணம் தாண்டி) ஷேக்ஸ்பியர் நாடகம் வாசிப்பதுண்டா மிஸ்டர் ஸீவேர்டு ? “மனிதர் தம் பிரச்சனைகளில் அலைகள் எப்போதும் எழுகின்றன !”

    ஸீவேர்டு: ஷேக்ஸ்பியரா ? இல்லை நான் படித்ததில்லை !

    [அப்போது நிதிப் பொறுப்புச் செயலாளர் ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon) அஞ்சல்துறை அதிபர் மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair) இருவரும் நுழைகிறார். அடுத்து அரசாங்கக் குழுவினர் (Cabinet Members : Simon Cameron, Caleb Smith, Burnet Hook & Gideon Welles) நால்வர் வருகிறார். யாவரும் வந்தனம் தெரிவித்து மேஜையைச் சுற்றி அமர்கிறார்)

    லிங்கன்: அரசாங்க உறுப்பினர்களே ! திடீரென்று எழுந்திருக்கிறது ஓர் அரசியல் நெருக்கடி ! நிலமையைச் சொல்லப் போகிறேன் ! கூர்ந்து கேளுங்கள் ! உங்கள் கருத்தைக் கூறுங்கள் ! இதுவரை எதிர்ப்படாத ஒரு கொந்தளிப்பு இக்கட்டில் அமெரிக்கா சிக்கிக் கொள்ளப் போகிறது ! சுருக்கமாகச் சொல்கிறேன். மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய அவசரத் தகவல் இது : சம்டர் கோட்டை முற்றுகையை மூன்று நாட்கள்தான் தொடர முடியும், உடனே உணவும் மிகையான படையினரும் நாம் அனுப்பாவிடில் !

    சிமான் காம்ரான்: (வியப்புடன்) அதிர்ச்சி தரும் செய்தி ! எத்தனை பேர் தேவைப்படுகிறார் ?

    லிங்கன்: இன்னும் சில நிமிடங்களில் நான் அதைக் கூற முடியும். ஜெனரல் ஸ்காட் மூலம் வரப் போகுது தகவல்.

    கிடியான் வெல்லெஸ்: ஒருவேளை அந்த எண்ணிக்கை நம்மிடம் இல்லாவிட்டால் . . . !

    லிங்கன்: எனினும் உணவுப் பண்டங்களை நாம் அனுப்ப வேண்டும் முதலில். தேவையை நம்மால் தீர்க்க முடியா விட்டாலும், முடிந்த அளவு நாம் அனுப்ப வேண்டும். உயிர் கொடுக்கும் நமது படைகளுக்கு உணவும் உதவியும் உடனே அனுப்ப வேண்டும் ! அது நமது கடமை !

    காட்சி -2 பாகம் -7

    unnamed (13)

    பர்னெட் ஹூக்: இப்போது நாம் பின்வாங்கினால் தென்னவருக்கு அனுகூலமாய்ப் போய்விடாதா ? தென்னவர் ஆதிக்கம் ஓங்கி விடாதா ? அழுத்தமான பிடியை நாம் தளர்த்தி விட்டால் அவருக்குச் சாதகமாகப் பொதுமக்கள் மனம் மாறிவிடாதா ?

    லிங்கன்: என் உள்ளம் தெளிவாக உள்ளது. நமது படை அழுத்தத்தைத் தளர்த்தவே கூடாது. சம்டர் கோட்டை முற்றுகையை நிறுத்திப் பின்வாங்கினால் தேசப் பிளவுக்குத் தென்னக மாநிலங்கள் பாதை வகுக்கும். அடிமைத்தனக் கொடுமை பரம்பரையாய்த் தொடரும். இன்றைக்கு இதை நீக்காவிட்டால் இன்னொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.

    பிளேர்: பிரசிடெண்டு கூறுவதுதான் முறை. நானதை வரவேற்கிறேன்.

    பர்னெட் ஹ¥க்: (தயக்கமுடன்) நானதை வரவேற்க வில்லை. போரைத் தவிர்க்க முற்றுகையை விட்டு விலகுவது தோல்வியாகாது. நமக்குச் சிந்தைனை செய்யக் காலம் கிடைக்கிறது. நாம் பின்வாங்க வேண்டும். உயிர்ச் சேதம், பொருட் சேதம் இருபுறமும் தவிர்க்கப்படும்.

    லிங்கன்: உங்களுக்குத் தெரிய வில்லையா ? நாம் இப்போது பின்வாங்கினால் போர் தாமதப் படும். ஆனால் போர் தவிர்க்கப்படாது. போர் வராமல் போகாது. ஒன்று இப்போது முன்னிற்கும் போர் அல்லது நம்மேல் பின்னால் புகுத்தப்படும் போர் ! தீயில் காய்ந்து இரும்பு செந்நிறத்தில் மென்மையாக உள்ள போது அதை நினைத்தபடி அடித்து நெளிப்பது எளிது ! இந்த நேரத்தைத் தவற விட்டால் இரும்பு மறுபடியும் இறுகிப் போய் உறுதியாகி விடும் ! போரை நாம் தவிர்க்க முடியாது ! நமது பிரச்சனை இப்போது : தற்போது போரா ? அல்லது தள்ளி வைக்கும் போரா ?

    காலெப் ஸ்மித்: நாம் உறுதியாக எதிர்த்து நின்றால் போரைத் தவிர்க்க முடியாதல்லவா ?

    லிங்கன்: அதைத்தான் நானும் வலியுறுத்துவேன் ! அப்போது நம் காரணத்துக்கு வலு மிகுதியாகும் ! நம் கொள்கைக்குப் பெரு மதிப்பு கிடைக்கிறது ! தளர விட்டால் நமது கொள்கையும் தண்ணீராய்ப் போகும் ! மிஸ்டர் சேஸ் ! உங்கள் கருத்தென்ன ?

    ஸால்மன் சேஸ்: மிகவும் சிக்கலான பிரச்சனைதான் ! ஆனால் என் கருத்து இப்போது பின்வாங்காமல் நீங்கள் சொல்வதுபோல் போரைத் தொடர்வது !

    லிங்கன்: மிஸ்டர் ஸீவேர்டு ! உங்கள் கருத்தென்ன ?

    ஸீவேர்டு: உங்கள் கருத்தை மதிக்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட். ஆனால் அதில் உடன்பாடில்லை எனக்கு !

    லிங்கன்: (மிக்க வியப்புடன்) என்ன ? என் கொள்கையில் உமக்கு உடன்பாடில்லையா ? இரட்டைக் குதிரைகள் இழுக்கும் வாகனம் எப்படி நேராகப் போகும், ஒரு குதிரை வலப்புறமும் அடுத்த குதிரை இடப்புறமும் திரும்பினால் ?

    (அப்போது கதவு தட்டும் அரவம் கேட்கிறது)

    லிங்கன்: உள்ளே வரலாம்.

    (ஹே வருகிறார். லிங்கன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போகிறார்)

    லிங்கன்: (கடிதத்தைப் படித்து) மேலும் இருபதினாயிரம் படையினர் தேவை என்று கூறுகிறார் நமது ஜெனரல் ஸ்காட்.

    ஸீவேர்டு: (உடனே) நம்மிடம் இருபதினாயிரம் படையினர் இல்லை மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: படையினரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கப் பல மாதங்கள் ஆகலாம் ! ஆயினும் கோட்டை முற்றுகையை நீடிப்போம். முதலில் உணவுப் பண்டங்களை நாம் அனுப்புவோம். உங்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது, இவற்றை எல்லாம் எடைபோட்டுப் பார்க்க ! போரைத் தளர்த்துவது போரை ஒருபோதும் நிறுத்தாது ! கோட்டை முற்றுகை தொடர வேண்டும் நம்மிடம் உள்ள படைகளைக் கொண்டு ! எந்த விதத்திலும் முயன்று படைகளை நாம் வலுப்படுத்த வேண்டும் ! மன உறுதி தளரக் கூடாது ! தேச ஐக்கியத்தை எப்படியாவது நாம் காக்க வேண்டும் ! போரை நினைத்தாலே என் நெஞ்செல்லாம் நடுங்குகிறது ! ஆனால் நமது காரணம் உன்னத மானது ! புனித மானது ! எதிர்காலச் சந்திகளுக்குத் தேவையானது ! நாம் ஆத்திரத்தால் எதையும் ஆக்கிரமிக்கப் போகவில்லை ! தேசப் பிளவைத் தடுக்கப் போரிடுகிறோம். நாம்தான் ஆக்கிரமப் பட்டிருக்கிறோம். நமது பரிவான அறிவுறுத்தல் யாவும் தோற்றுவிட்டன ! எதிர்த்துப் போரைத் தொடர்வதே நமது பிரதான கடமை ! அரசவை உறுப்பினரே ! உமது ஒத்துழைப்பில்தான் நமக்கு வெற்றி கிடைக்கும் ! (சிறிது தாமதித்து) கோட்டைப் படைக்கு உணவுப் பண்டங்கள் அனுப்புவதை ஆதரிப்போர் யார்யார் ?

    (லிங்கன், சேஸ், பிளேர் மூவர் கரத்தை உயர்த்துகிறார்)

    லிங்கன்: முற்றுகையை நிறுத்திப் பின்வாங்குவதை ஆதரிப்போர் யார்யார் ?

    (ஸீவேர்டு, காமரான், ஸ்மித், ஹூக் நால்வர் கரத்தைத் தூக்குகிறார்)

    லிங்கன்: உங்களில் பெரும்பான்மையோர் முடிவைக் கண்டு நான் வருத்தம் அடைகிறேன். உங்களிடமிருந்து அந்தப் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் வாக்குகளை மீறிச் செல்கிறேன். எனது “மீறல் தடுப்பைப்” (Veto Power) பயன்படுத்துகிறேன். நான் அமெரிக்கக் காங்கிரஸ் மற்றும் பொதுநபர் திருப்திக்குக் கடமைப் பட்டவன். (தயக்கமுடன் ஆனால் கடுமையாக) யாராவது என் முடிவான தீர்மானத்தை வரவேற்கா விட்டால் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம் இப்போது ! யார் பதவியை விடுவதற்கு முன்வருகிறார் ?

    (மௌனம் நிலவுகிறது. எல்லோரும் பிரமிப்பில் அசையாமல் நிற்கிறார்)

    லிங்கன்: நன்றி உங்கள் வரவேற்புக்கு கோமான்களே ! நீங்கள் போகலாம். கலப்புரையாடல் முடிந்தது.

    (எல்லாரும் போகிறார்கள். ஸீவேர்டு மட்டும் போகாமல் நிற்கிறார்)

    லிங்கன்: (சினத்துடன்) தவறு, தவறு ஸீவேர்டு ! தவறு. உமது மாறான கருத்து தவறானது.

    ஸீவேர்டு: உங்களை நம்புகிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் ! உங்கள் தீர்மானத்தை மதிக்கிறேன் ! அதோடு சரி ! ஆனால் நான் உணர்வதைச் சொல்ல வேண்டும். என் நெஞ்சம் உரைப்பதைச் சொல்லத்தான் நினைக்கிறேன்.

    லிங்கன்: மிக்க நன்றி ! பார்க்கலாம். வந்த தூதரிடம் நான் தனியாகப் பேச வேண்டும்.

    (ஸீவேர்டு வெளியேறுகிறார். நிலையாய் நிற்கும் லிங்கன் அமெரிக்கப் படத்தைப் பார்க்கிறார். பிறகு கதவைத் திறந்து தூதரை அழைக்கிறார்.)

    லிங்கன்: உள்ளே வா ! கதவை மூடு. உடனே மேஜர் ஆண்டர்ஸனிடம் தகவல் தரப் போக வேண்டும் நீ !

    தூதுவன்: அப்படியே செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: ஆண்டர்ஸனிடம் சொல் ! மேற்கொண்டு வலுப்படுத்த உடனே படைகள் அனுப்ப எம்மால் இப்போது முடியாது. எங்களிடம் இல்லை என்று சொல் !

    தூதுவன்: சொல்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: மேலும் சொல் ! தேவைப் பொருட்களின் முதல் வாகனப் பயணம் வாஷிங்டனிலிருந்து அனுப்ப ஏற்பாடு செய்வேன் இன்று மாலையே !

    தூதுவன்: அப்படியே சொல்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    லிங்கன்: சரி போய்வா ! (தூதன் வெளியேறுகிறான்) (லிங்கன் மணி அடிக்கிறார். பணியாள் வருகிறான்.) மிஸ்டர் ஹேயை வரச் சொல். (பணியாள் ஆமோதித்துப் போகிறான்.)

    (மிஸ்டர் ஹே வருகிறார்)

    லிங்கன்: ஜெனரல் ஸ்காட்டை உடனே அழைத்து வா ! நான் அவருடன் பேச வேண்டும்.

    மஸ்டர் ஹே: செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் (ஹே போகிறார்)

    காட்சி -3 பாகம் -1

    unnamed (14)

    பங்கெடுப்போர் :

    ஆப்ரஹாம் லிங்கன், மேடம் லிங்கன், பணிப்பெண் சூஸன், மற்றும் இரண்டு விருந்தினர்.

    இடம் : வாஷிங்டன் D.C. ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் ஒரு வரவேற்பு அறை.

    (இதுவரை நடந்தது)

    ரிப்பபிளிகன் குழுத் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க ஆப்ரஹாம் லிங்கன் ஒப்புக் கொள்கிறார். லிங்கன் தேர்தலில் நின்று முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்கிறார்.

    இப்போதைய காட்சி:

    லிங்கனின் ரிப்பபிளிக்கன் கட்சி அரசாங்கப் பொதுச் செயலாளர் (Secratary of State) வில்லியம் ஸீவேர்டு தன் அறையில் அமெரிக்கத் தென்பகுதிக் கூட்டு மாநிலங்களின் கமிஷனர் (Commissioners of Southern Confederate States) ஜான்ஸன் வொயிட், காலெப் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் அமர்ந்து அடிமைத்தன ஓழிப்பைப் பற்றியும் வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றியும் பேசிக் கொண்டிடுருக்கிறார். திடீரென்று லிங்கன் ஸீவேர்டு அறைக்குள் நுழைகிறார். தென்னகத்தின் பிடிவாதத்தை வெளியிடும் வொயிட், ஜென்னிங்ஸ் உரையாடல்கள் லிங்கனுக்கு வெறுப்பூட்டுகின்றன. வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றி இருவருக்குள்ளும் தர்க்கம் நடக்கிறது. அப்போது சம்டர் கோட்டை முற்றுகை செய்யும் மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய படைத் தூதுவன் அதிர்ச்சித் தகவலைக் கொண்டு வருகிறான். பிறகு நிதிப் பொறுப்புச் செயலாளர் ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase) அஞ்சல் துறை அதிபர் மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair) இருவரும் நுழைகிறார். மற்றும் அரசாங்க உறுப்பினர் சிமான் காமரான் (Simon Cameron), காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர் வருகிறார்கள். அவரோடு கலந்து போர் சம்மந்தமாக உரையாடி சம்டர் கோட்டை முற்றுகையைத் தொடர்வது என்று முடிவு செய்கிறார் லிங்கன். உள்நாட்டுப் போர் துவங்கி மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது.

    (இரண்டு ஆண்டுகள் கடந்து)

    வெள்ளை மாளிகை விருந்தினர் வரவேற்பு அறையில் ஆப்ரஹாம் லிங்கன் சில விருந்தினருடன் போரைப் பற்றி ஆவேசமாய் உரையாடுகிறார். விருந்தினர் போன பிறகு வயதான ஒர் நீக்ரோ உள்ளே வருகிறார்.

    unnamed (15)

    (இரண்டு ஆண்டுகள் கடந்து)

    மேடம் லிங்கன்: சூஸன் ! பலருக்கு அழைப்பு அனுப்பி யிருக்கிறேன். வருபவர் யாராயினும் உள்ளே அழைத்து வா ! பிரசிடெண்ட் தேனீர் விருந்தில் கலந்து கொள்வாரா என்று கேள் !

    சூஸன்: மிஸ்டர் லிங்கன் இங்கு வருவதாக இப்போதுதான் தகவல் அனுப்பி இருக்கிறார்.

    மேடம் லிங்கன்: நல்லது தேனீர் விருந்துக்கு அவரே இங்கு வருகிறார்.

    (சூஸன் போகிறாள்)

    மேடம் லிங்கன்: சூஸன் ! இங்கே வா ! உன்னிடம் இதைச் சொல்ல வேண்டும்.

    சூஸன்: (திரும்பிப் பார்த்து) இதோ வருகிறேன்.

    மேடம் லிங்கன்: இன்னும் நீ “மிஸ்டர் லிங்கன்” என்றே சொல்லி வருகிறாய். உன் பழைய புத்தி போக வில்லையே ! “மிஸ்டர் பிரசிடெண்ட்” என்று நீ சொல்ல வேண்டும் தெரியுதா ?

    சூஸன்: அப்படியே சொல்கிறேன் மேடம். பதினைந்து வருடமாக மிஸ்டர் லிங்கன் என்றே அழைத்த பழக்கத்தை மாற்ற முடிய வில்லை மேடம் !

    மேடம் லிங்கன்: மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் அவரை அழைக்கிறார். நீயும் அதை வழக்கத்துக்குக் கொண்டு வா.

    சூஸன்: இல்லை மேடம் ! பலர் அவரைக் கடைவீதிகளில் “பிதா ஆப்ரஹாம்” என்று விளிக்கிறார். அவரை விரும்பும் பலர் அதை விட இன்னும் கனிவுடன் அழைக்கிறார். இன்று கடை உரிமையாளர் மிஸ்டர் கோல்டுபென்னி என்னைப் பார்த்துக் கேட்டார், ” சூஸன் ! எப்படி வயது முதிர்ந்த ஆபி (Abe) நலமா ?

    மேடம் லிங்கன்: அதை யெல்லாம் நீ ஆதரிக்கக் கூடாது ! மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

    சூஸன்: சரி மேடம். நான் இதற்கு முன் எப்போதும் அவரை மிஸ்டர் லிங்கன் என்றுதான் அழைப்பேன்.

    மேடம்: இல்லை சூஸன் ! அப்படித்தான் அழைக்கக் கூடாது என்றுனக்கு அறிவுரை கொடுத்தேன். அதற்குள் மறந்து விட்டாயே ! மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் இனி நீ சொல்ல வேண்டும்.

    சூஸன்: இந்த மண்டைக்குள் அது ஏறாது மேடம் ! அந்த வழக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியவில்லை மேடம் ! தவறிப் போய் எப்படியாவது வாயில் வந்து விடுகிறது.

    unnamed (16)

    மேடம் லிங்கன்: தனியாக இருக்கும் போது அதைச் சொல்லிச் சொல்லிப் பழகு, அடிக்கடி பயிற்சி செய் !

    சூஸன்: அப்படியே பயிற்சி செய்கிறேன் மேடம்.

    மேடம் லிங்கன்: சரி வருபவர் யாராயினும் உள்ளே அழைத்து வா !

    சூஸன்: முன்னறையில் ஒரு மேடம் காத்திருக்கிறார்.

    மேடம் லிங்கன்: அதை அல்லவா முதலில் எனக்குச் சொல்ல வேண்டும். சரி அவரை உள்ளே அழைத்து வா.

    (சூஸன் வெளியே சென்று மிஸிஸ் கோலியாத் பிளோவை அழைத்து வருகிறாள்.)

    கோலியாத் பிளோ (Goliath Blow) வணக்கம் மிஸிஸ் லிங்கன். பிரசிடெண்ட் எப்படி இருக்கிறார் போர் மும்முரத்தில் ?

    மேடம் லிங்கன்: வந்தனம் மிஸிஸ் பிளோ, அமருங்கள். பிரசிடெண்ட் மிகவும் களைப்போடு இருக்கிறார். இரவில் தூக்கம் இல்லை ! சரியாக உண்பதில்லை ! சதா போரைப் பற்றித்தான் நினைவு ! தினமும் நமது மக்கள் இருபுறமும் சாவதை அவரால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை ! மன வேதனையில் வாடி எலும்புக் கூடாய் போய்விட்டார்.

    மிஸிஸ் பிளோ: இந்தப் போர் பயங்கரமானது ! இன்னும் எத்தனை பேர் பலியாகப் போகிறாரோ ? ஆனாலும் பிரசிடெண்ட் போரிடுவதில் மட்டும் களைப்படைய வில்லை !

    மேடம் லிங்கன்: வெற்றியோடு போர் முடியாதா என்றுதான் கவலை அவருக்கு ! ஆனால் போரை நடுவழியில் எப்படி நிறுத்துவது ? யூனியனில் பலர் அடிமை விடுதலைக்காக உயிரைப் பலிகொடுத்தது வீணாகப் போகாதா ?

    மிஸிஸ் பிளோ: மிஸிஸ் லிங்கன் ! அவர் வேதனைப்பட விடக் கூடாது நீங்கள். தென்னக அரக்கரை (Monsters) மிதித்துக் காலால் நசுக்க வேண்டும் !

    மேடம் லிங்கன்: கவலைப் பட வேண்டாம் ! பிரசிடெண்டுக்கு மன ஊக்கம் மிகுதி !

    மிஸிஸ் பிளோ: நான் நேற்று என் கணவரிடம் சொன்னேன். இந்த தென்னவர் கதறிக் கதற நோக அடித்து நொருக்க வேண்டும் என்று ! வடக்கு சரியான பாடம் தென்னவருக்குக் கற்பிக்க வேண்டும் !

    unnamed (17)

    (சூஸன் வருகிறாள்)

    சூஸன்: மேடம் ! மிஸிஸ் ஆர்தலி (Mrs. Otherly) வந்திருக்கிறார்.

    மேடம் லிங்கன்: உள்ளே அழைத்துவா !

    மிஸிஸ் பிளோ: யார் மிஸிஸ் ஆதர்லியா ? அந்த பயங்கர மாதா ? போரை நிறுத்த வேண்டும் என்று ஊரில் முரசடிப்பவள் ஆயிற்றே !

    (மிஸிஸ் ஆதர்லியை அழைத்து வருகிறாள் சூஸன்)

    மேடம் லிங்கன்: வந்தனம் மிஸிஸ் ஆதர்லி ! உட்காருங்கள். மிஸிஸ் பிளோவைத் தெரியுமல்லவா உங்களுக்கு ?

    மிஸிஸ் ஆதர்லி: ஆமாம் தெரியும் ! வந்தனம் இருவருக்கும். (அமர்கிறாள்)

    மிஸிஸ் பிளோ: மிஸிஸ் லிங்கன் ! இன்னும் மூன்று வருடத்துக்குப் போர் நீடிக்கும் என்று என் கணவர் சொல்கிறார் !

    மிஸிஸ் ஆதர்லி: மூன்று வருடமா ? அப்படியானால் அது பயங்கர யுத்தமாச்சே !

    மிஸிஸ் பிளோ: நாமெல்லாம் நமது தேவைகளைத் தியாகம் செய்ய வேண்டும், இப்போது !

    மிஸிஸ் ஆதர்லி: மாந்தரெல்லாம் உயிரைத் தியாகம் செய்கிறாரே அதற்கு மேல் எதைத் தியாகம் செய்ய வேண்டும் ?

    மிஸிஸ் பிளோ: என் இரத்தம் கொதிக்கிறது உயிரிழப்போரை நினைத்தால் !

    unnamed

    மிஸிஸ் ஆதர்லி: மரண மடைந்தவரில் பலரை நான் அறிவேன் ! அவரெல்லாம் கருணை மிக்கவர் ! நல்லவர் ! உயிரைக் கொடுத்தோர் கவலை ஒரு வகையில் தீர்ந்தது ! கணவனைப் பலிகொடுத்தோர் இழப்புதான் இப்போது தீராதது பெரிது ! மகனைப் பலி கொடுத்தோர் இழப்போ தாங்க முடியாதது ! மகனையும், பதியையும் பறி கொடுத்த மாதரின் இரட்டை இழப்புக்கு ஈடு இணை கிடையாது !

    மிஸிஸ் பிளோ: நமக்குள்ளே சிலர் தேசத் துரோகிகளாக உளவி வருகிறார். நாடு பிளவு படக் கூடாதென்று நாம் போரிட்டு நமது மக்களைப் பலி கொடுக்கிறோம். நாடு துண்டாக வேண்டும் என்று தென்னவர் நம்மைத் தீவிரமாக எதிர்த்து அவரது மக்களைப் பலி கொடுத்து வருகிறார். யார் பக்கம் நியாயம் உள்ளது ? ஐயமின்றி நம் பக்கம்தான் என்பது என் கருத்து. . . . சரி இன்று நாங்கள் வந்ததே முதலில் நமது பிரசிடெண்டைக் கண்டு பேசத்தான் ! இப்போது இங்கு வருகிறாரா ?

    மேடம் லிங்கன்: ஆமாம் சில நிமிடங்களில் பிரசிடெண்ட் வந்து விடுவார். சற்று பொறுப்பீரா ?

    மிஸிஸ் பிளோ: போரால் இழப்பு : உயிர்கள் மட்டுமல்ல ! பொருள்களின் விலைகள் ஏறிக் கொண்டே போகின்றன. நானும் என் கணவரும் செலவுகளை எல்லாம் குறைத்து விட்டோம். உணவு, உடை, பொழுது போக்கு எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டோம்.

    (அப்போது ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். மாதர் இருவரும் எழுந்து நின்று ஆப்ரஹாமின் கையைக் குலுக்கி வந்தனம் தெரிவிக்கிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: வந்தனம் இருவருக்கும். (எல்லாரும் உட்காருகிறார். சூஸன் அனைவருக்கும் சிற்றுண்டி தேனீர் வழங்குகிறாள்)

    மிஸிஸ் பிளோ: அதிர்ச்சிச் செய்தி ஏதேனும் உண்டா மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: மேடம் ! ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது என் காதில் விழும் முதல் அறிவிப்பு : நூறு, இருநூறு அல்லது ஆயிர எண்ணிக்கையில் என் தேச மாந்தர் கொல்லப்படுவது எல்லாம் என் நெஞ்சைத் தாக்கும் அதிர்ச்சிச் செய்திதான் !

    மிஸிஸ் பிளோ: அது உண்மைதான். அது சரி ! நல்ல செய்தி ஏதாயினும் உள்ளதா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! வெற்றிச் செய்தி இது ! தென்னவர் இறப்பு : 2700 பேர் ! நம்மவர் இழப்பு : 800 பேர் !

    மிஸிஸ் பிளோ: மகிழத் தக்க செய்திதான் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியா ? நமது பக்க மரணம் : 800 அல்ல ! 3500 பேர்கள் !

    மிஸிஸ் பிளோ: அப்படிச் சொல்லாதீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! கொல்லப்பட்டவர் மெய்யாக 800 பேர்தானே ? சொல்லுங்கள் எத்தனை என்று !

    ஆப்ரஹாம் லிங்கன்: மேடம் ! உங்கள் இதயத்தை விட உலகம் பெரியது !

    மிஸிஸ் பிளோ: (முறுவலுடன்) மிஸிஸ் லிங்கன் ! பிரசிடெண்ட் நம்முடன் நகைப்பாகப் பேசுகிறார் !

    (சூஸன் வந்து இரண்டாவது தடவை அனைவருக்கும் கிண்ணத்தில் தேனீர் ஊற்றுகிறாள்)

    மிஸிஸ் ஆதர்லி: மிஸ்டர் பிரசிடெண்ட் ! உங்க தேசப் பொறுப்பு எல்லோரை விட அதிகமானது ! உங்கள் வேலை மிகக் கடுமையானது ! உங்களை நான் குறைகூற முடியாது ! நானொரு கேள்வி கேட்கலாமா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: (கூர்ந்து கவனிப்புடன்) கேளுங்கள் மேடம் !

    மிஸிஸ் ஆதர்லி: வேதனைப் படும் இந்த தேசத்தின் நலத்தைக் கருதி நானிதைக் கேட்கிறேன் ! இந்தக் கொடூர உள்நாட்டுப் போரை உங்களால் நிறுத்த முடியாதா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: அந்தக் கேள்வி இந்த மண்டையில் ஒருபோதும் எழுந்ததில்லை மேடம் !

    (மிஸிஸ் லிங்கன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார்.)

    unnamed (19)

    காட்சி -3 பாகம் -2

    ஆப்ரஹாம் லிங்கன்: உங்கள் கேள்வி கருத்துள்ள கேள்வி ! கனிவுள்ள கேள்வி மேடம் ! என் போக்கு எப்போதும் திரும்பிப் பாராத நேர்போக்கு மேடம் ! போருக்குக் காரணமான மூலப் பிரச்சனையை நிறுத்த முடியாமல் போனது மேடம் ! அதற்கு வருந்துகிறேன் மேடம் ! தேச முழுமையைக் காப்பாற்ற வேண்டும் நான் ! எத்தனை உயிர்கள் பலியாகி, எத்தனை ஆண்டுகள் போரிட்டு இந்த தேசம் உருவாகி வந்திருக்கிறது ? இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தப் போர் ஒரு மணிநேரக் கசப்புக் கதையாக ஆகிவிடும் ! மற்ற மனிதரைப் போல் நானும் அதே அளவு துயரில் வேதனைப்படுகிறேன் மேடம் ! இப்போது அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த இந்தப் போரின் மூலக் காரணம் நேர்மையானது. அந்தக் காரணம் அன்றும் நியாயமானது ! இன்றும் நியாயமானது ! என்றும் நியாயமானது ! அதிலிருந்து மாறுதல் இல்லை எனக்கு !

    மிஸிஸ் ஆதர்லி: மிஸ்டர் பிரசிடெண்ட் ! உங்கள் பண்பு நேர்மையானது ! பெருந்தன்மையுள்ளது ! ஆனால் போர் கொடிது ! போர் புரிவது எக்காரணம் கொண்டிருந்தாலும் தவறானது ! மனிதரால் தவிர்க்கப்பட வேண்டியது ! மாந்தரால் தடுக்கப்பட வேண்டியது !

    மிஸிஸ் பிளோ: இந்த மாதிரி எதிர்மறைப் பேச்சுக்கள் பிரசிடெண்ட் மனதை மிகவும் பலவீனப் படுத்தும். மன உறுதியைத் தளர்த்தும்.

    ஆப்ரஹாம் லிங்கன்: அதுபோல் நீங்கள் மனம் தளர வேண்டாம் மிஸிஸ் பிளோ ! போர் என்பது தவறு, தவிர்க்கப்பட வேண்டியது என்பது என்னுடைய கொள்கைதான் ! மனிதப் பேராசை, மனிதப் பொறாமை, மனிதர் மூடத்தனம், பெரு வலிமை ஆகியவைதான் போரை ஆரம்பிக்கும். மேடம் ! மனிதர் குறைபாடு உடையவர் ! மனிதப் போக்கு நேர்மையை வெறுப்பது ! நியாயத்தை மறுப்பது ! மனிதர் பலவீனமானவர் ! பொறாமை யுடையவர் ! பேராசை கொண்டவர் ! தமது மேலான பலத்தை நிலைநாட்டுபவர் ! உலகம் வளைந்தது ! நம்மால் நிமிர்த்த முடியாது ! எளியவர், வலுவானர் இருப்பதால் போர் மூள்கிறது. வலு மிகுந்தவர் இருக்கும் வரை எளியவர் மீது அவர் தாக்குவதைத் தவிர்க்க முடியாது. வலுவானவர் ஆக்கிரமிப்பு இருந்தே தீரும். நம்மில் நல்லவர் சிலர் ! தீயவர் பலர் ! தீயவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க நல்லவர் வல்லவராக வேண்டும் ! அவ்விதம் நல்லவர் தீயவரைத் தடுக்காவிட்டால் தீயவர் தீப்போல் பரவிடுவார். அத்தகைய போராட்டம் புரிவதில் ஏதும் தவறில்லை ! ஆக்கிரமிப்பாளர் நடத்தும் போரை நாம் வேடிக்கை பார்க்க முடியாது ! போருக்கு முடிவு கட்ட அதில் புகுந்து கொண்டு போரிட வேண்டும் ! சமரசம் நிலவ வேண்டு மானால் போரிடத்தான் வேண்டும் ! முடிவில் போரினி நேரக் கூடாது என்று பிரார்த்திக்கலாம். பூரண மனிதர் வாழாத நாட்டிலே போரின்றி வாழ முடியாது ! எனக்கு நேர்மையாகத் தெரிந்த ஒரு மனித நியாயத்துக்கு நான் போரிட வேண்டியதாயிற்று ! நான் துவக்கிய உள்நாட்டுப் போர் சரியா தவறா என்று வரலாறுதான் சொல்லும் !

    unnamed (20)

    மிஸிஸ் பிளோ: உங்கள் நியாயத்துக்கு நான் உடன்பாடு தெரிவிக்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் ! தென்னகக் காட்டுமிராண்டிகளை அடித்து ஒடுக்க வேண்டும் ! அவரைக் கொன்று அழிக்காமல் ஓர் பாடம் கற்பிக்க வேண்டும். அப்படித்தான் என் கணவரும் சொல்கிறார்.

    ஆப்ரஹாம் லிங்கன்: உன் கணவர் வயதானவராக இருக்க வேண்டும்.

    மிஸிஸ் பிளோ: அப்படி ஒன்றும் வயதானவர் இல்லை மிஸ்டர் பிரசிடெண்ட் ! கணவருக்கு 38 வயதுதான் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியா அவருக்கு என் அரசவை ஆலோசனைக் குழுவில் வேலை தரலாம் !

    மிஸிஸ் பிளோ: அவருக்கு வேலைப் பளு அதிகம் ! நன்றி மிஸ்டர் பிரசிடெண்ட் ! அரசாங்க ஒப்பந்த வேலைகள் செய்கிறார். பணம் சம்பாதிப்பது அவர் முதல் கடமை ! பணத்தைச் சேமிப்பது இரண்டாவது கடமை ! ஆனாலும் போரை நிறுத்தப் போவதில்லை என்று நீங்கள் பேசுவது அவருக்குப் பிடிக்கும். போரால் அவருக்கு வருமானம் அதிகம் ! அவரிடம் உங்கள் உரையாடலைச் சொல்வேன். நாமெல்லாம் போரை எதிர்த்துப் புகாரிடலாம். போரால் ஆதாயமும் உள்ளது. அதே சமயத்தில் தியாயகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

    ஆப்ரஹாம் லிங்கன்: மிஸிஸ் பிளோ ! நீங்கள் சொல்லும் ஆதாயத்துக்கு நான் போரைத் துவக்க வில்லை ! என் காரணம் நேர்மையானது ! நியாயமானது !

    மிஸிஸ் ஆதர்லி: நன்றி மிஸ்டர் பிரசிடெண்ட் ! நீங்கள் சொல்லியவற்றை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். போர் தவறானது என்று எப்போதும் நம்புகிறவள் நான் ! என் மகனைப் போருக்குப் போகக் கூடாது என்று சொல்லி வருகிறேன் ! ஏனெனில் இந்தப் போரை நடத்துவதில் எனக்கு நல்லெண்ணம் இல்லை ! ஆனால் என் மகன் கேட்பதில்லை ! போவதற்குத் தயாராகிறான் ! போருக்குப் போகப் போகிறான் என் மகன் ! தாய் மனம் துடிக்கிறது ! (மிஸிஸ் ஆதர்லி கண்களில் கண்ணீர் பொங்குகிறது) அவனுக்கு என் அறிவுரை புரிய வில்லை ! உங்களைப் போல்தான் அவனும் உரையாடுகிறான் ! அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்று அழுத்தமாக இருக்கிறான் ! என்ன செய்வது நான் ? எப்படி நிறுத்துவது அவனை ? நீங்கள் போரை நிறுத்தினால் ஒழிய நான் என் மகனை நிறுத்த முடியாது மிஸ்டர் பிரசிடெண்ட் ! அவன் போருக்குப் போகவில்லை ! சாவதற்குப் போகிறான் !

    ஆப்ரஹாம் லிங்கன்: உன் மகனைப் பாராட்டுகிறேன் மிஸிஸ் ஆதர்லி ! போரைத் துவக்கிய எனக்கு உன் மகனைப் போன்றோர் உதவி செய்வது வலுவைக் கொடுக்கிறது ! ஆனால் உன்னைப் போன்ற தாய்மார்கள் இருப்பதால்தான் உன் மகனைப் போன்ற புதல்வர் பிறக்கிறார். அதனால் உனக்கு எனது பாராட்டுகள் அதிகம் மிஸிஸ் ஆதர்லி !

    மிஸிஸ் ஆதர்லி: மிக்க நன்றி மிஸ்டர் பிரசிடெண்ட் ! நான் போய் வருகிறேன் ! உங்களுக்கு எதிராகப் பேசியதற்கு எனக்கு வருத்தமில்லை ! என் மனக் கருத்தைச் சொன்னேன் ! மன்னிக்க வேண்டும் மிஸ்டர் பிரசிடெண்ட் ! போய் வருகிறேன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: கவலைப்பட வேண்டாம் மிஸிஸ் ஆதர்லி ! போய் வாருங்கள் ! வெளிப்படையாக நீங்கள் மனந்திறந்து பேசியது மகிழ்ச்சி அளிக்குது எனக்கு !

    (மிஸிஸ் ஆதர்லி போகிறாள்.)

    காட்சி -3 பாகம் -3

    unnamed (21)

    ஆப்ரஹாம் லிங்கன்: நாமெல்லாம் பலவீன மனிதர் மிஸிஸ் பிளோ ! என் மீது மாதராகிய நீங்கள் ஓரளவு பரிவு காட்டினால் போதும்.

    மிஸிஸ் பிளோ: பரிதாபப் படுகிறேன் நான் மிஸிஸ் ஆதர்லிக்கு ! மகன் போருக்கு போவதைத் தாயால் நிறுத்த முடிய வில்லை ! அதனால் உள்நாட்டுப் போரைப் பிரசிடெண்ட் நிறுத்த வேண்டும் என்று கண்ணீர் சிந்திவிட்டுப் போகிறாள் ! போரை நிறுத்தினால் தேசம் பிளவுபட்டுப் போகும் என்று கவலை யில்லை அந்த மாதுக்கு ! நீங்கள் நிமிர்ந்து நின்று ஒரே சிந்தனையில் போரை நடத்துவதற்கு மெச்சுகிறேன் உங்களை மிஸ்டர் பிரசிடெண்ட் ! உள்நாட்டுப் போர்தரும் தொல்லைகளை விட உங்களுக்குக் குடிமக்கள் தரும் எதிர்ப்புக் கலவரங்கள் பயங்கரமானவை. என் கணவர் சொல்கிறார்: தென்னாட்டாருக்குப் பின்னால் எந்தக் கருணையும் காட்டக் கூடாதென்று ! தென்னவர் மடியட்டும் ! அழியட்டும் ! போருக்குப் பின் அவரோடு நான் எந்தப் பேச்சும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டேன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அப்படிப் பேசாதீர் மேடம் ! தென்னவர் சண்டை யிட்டாலும் நம்மவர்தான் ! எனக்குத் தென்னவர் மீது வெறுப்புக் கிடையாது ! போர் முடிந்த பிறகு தென்னவர் வடவர் என்னும் பிரிவினை நம்மை விட்டு மறைய வேண்டும். அனைவரும் அமெரிக்கராய் மீண்டும் நடத்தப்படுவார் ! இரு குடிமக்களும் என்னிரு கண்கள் ஆவார் மிஸிஸ் பிளோ !

    மிஸிஸ் பிளோ: ஆனாலும் ஒரு கண் மறு கண்ணைக் குத்தலாமா ? அவரைப் பழி வாங்க வேண்டும் ! என் கணவர் காத்திருப்பார் ! நான் போய் வருகிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

    (மிஸிஸ் பிளோ கை குலுக்க கரத்தை நீட்டுகிறார். ஆனால் லிங்கன் கை நீட்டவில்லை )

    unnamed (22)

    ஆப்ரஹாம் லிங்கன்: (வருத்தமுடன்) போவதற்கு முன் என் அறிவுரையைக் கேளுங்கள் மிஸிஸ் பிளோ ! (வெளியே போகும் மிஸிஸ் பிளோ திரும்பிப் பார்த்து நிற்கிறாள்) பரிவுள்ள அந்த மாது மிஸிஸ் ஆதர்லி தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினாள். அவள் கருத்துக்கு நான் உடன்படா விட்டாலும், நான் அதை மதிக்கிறேன். அவள் கூறியது தவறுதான். ஆனால் அது பெருந்தன்மையான பண்பு. அதே சமயம் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ! உங்களைப் போன்ற நபரால் நான் அவமானப் படுகிறேன். நீங்கள் யாரும் எந்தத் தியாகமும் செய்ய வில்லை. மற்றவர் தென்னவரைத் தாக்கி வெற்றி பெறும் போது, உங்களைப் போன்றோர் அவரை வீழ்த்தி அழிக்க முற்படுகிறீர் ! நானிந்தப் போரை ஏற்றுக் கொண்டது, வெந்த இதயதோடுதான் ! தினமும் நொந்து நொந்து நொறுங்குகிறது என் நெஞ்சம் ! நானிந்தப் போரை ஏற்றுக் கொண்டது மனித நேயத்தை முன்னிட்டுத்தான் ! மனித நேர்மைக்கு வழி வகுக்கத்தான் ! மனித நீதிக்கு தலை வணங்கித்தான் ! வையக நன்னெறிக்குத்தான் ! மானிட அன்பு மயத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் ! ஆனால் நீவீர் என்முன் வந்து தென்னவரைப் பழிவாங்கச் சொல்கிறீர் ! பகைக்கச் சொல்கிறீர் ! வெறுக்கச் சொல்கிறீர் ! ஒழிக்கச் சொல்கிறீர் ! இந்தக் கனிவான தென்னவரைப் பற்றித் தவறான முறையில் கருதி அவமதிக்கிறீர் ! உம்மைப் போன்றவர்தான் உண்மையாக நான் கடைப்பிடிக்கும் நல்ல காரணத்தை அவமதிக்கிறீர் ! நமது மேலான காரணத்தைக் கீழான நிலைக்கு இழுத்து விடுகிறீர் ! போய் வாருங்கள் மிஸிஸ் பிளோ !

    unnamed (23)

    (மிஸிஸ் பிளோ சட்டென வெளியே போகிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: (மணி அடிக்கிறார். பணிப்பெண் சூஸன் வருகிறாள்) சூஸன் ! மிஸிஸ் பிளோ இனி ஒருமுறை வந்தால் உள்ளே அனுமதிக்காதே ! வெளி அறையிலே உட்கார வை.

    சூஸன்: அப்படியே செய்கிறேன் ஐயா. வேறு எதுவும் செய்ய வேண்டுமா ஐயா ?

    (மிஸிஸ் லிங்கன் வந்து கொண்டே சூஸனை முறைத்துப் பார்க்கிறாள்)

    சூஸன்: வேறு ஏதாகிலும் வேண்டுமா மிஸ்டர் பிரசிடெண்ட் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! மிஸ்டர் வில்லியம் கர்டிஸ் வாசலில் வந்தால் உள்ளே அழைத்து வா. நான் போய் என் கோட்டை மாற்றிக் கொண்டு வருகிறேன்.

    சூஸன்: அப்படி செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட்.

    (சூஸன் மேஜையில் இருக்கும் தேனீர் கிண்ணங்களைத் தட்டில் எடுத்து வைக்கிறாள். அவள் கதவோரம் போகும் போது எதிரே தலைமுடி நரைத்த ஒரு வயதான நீக்ரோ நிற்பதைக் கண்டு தடுமாறுகிறாள்)

    நீக்ரோ: (மிக மெதுவாக அமைதியாக) உள்ளே நான் வருவது அனுமதிக்கப்படுமா ?

    சூஸன்: (சற்று வெறுப்புடன்) நீ யாரென முதலில் சொல் ! வாசலில் நான் வந்து அழைப்பதற்குள் இத்தனை அவசரமா ? யார் நீ ?

    unnamed (24)

    Fig. 7

    Civil Torture during the Civil War

    நீக்ரோ: என் பேர் கர்டிஸ் ! வில்லியம் கர்டிஸ் ! மிஸ்டர் லிங்கன் வரச் சொன்னார் ! வந்தேன் ! வாசலில் யாருமில்லை ! உள்ளே நுழைந்தேன் மிஸ்டர் லிங்கனைப் பார்க்க ! மிஸ்டர் லிங்கன் இங்கேதானே இருக்கார் ? இல்லை யென்றால் போய் விடுகிறேன் !

    சூஸன்: (சமாளித்துக் கொண்டு) ஓ ! நீ தான் வில்லியம் கர்டிஸா ? உள்ளே வரலாம். மிஸ்டர் லிங்கன் வந்து விடுவார். உட்கார் இங்கே வரும்வரை !

    நீக்ரோ: மிஸ்டர் லிங்கன் இங்குதான் வசிக்கிறாரா ? நீ அவருடைய வேலைக்காரியா ? மிஸ்டர் லிங்கனுக்கு வேலை செய்யக் கொடுத்து வைத்த சின்னப் பொண்ணு !

    சூஸன்: ஆமாம் நான் மிஸ்டர் லிங்கனுக்கு வேலை செய்யும் பணிப்பெண்தான் !

    நீக்ரோ: அடிமையாகத் தென்னகத்தில் வேலை செய்வது கொடுமை ! படு கொடுமை !

    சூஸன்: இதோ பார் வில்லியம் ! என்னை அடிமைகளுக்குச் சமமாக எடை போட வேண்டாம் !

    unnamed (25)

    கர்டிஸ்: நீ என்னைப் போல் அடிமை இல்லையா ? வேலைக்காரி நீ ! ஆனால் விடுதலைப் பெண்ணு ! ஏழை வேலைக்காரி ! ஆனா விடுதலை உண்டு !

    சூஸன்: இதோ பாரு ! எனக்குப் பரிதாபப் படாதே உன்னைப் போன்ற அடிமையாய் நினைத்து !

    கர்டிஸ்: உனக்குப் பரிதாபப் படலே சின்னப் பொண்ணே ! நீ சாமர்த்தியக்காரி !

    சூஸன்: அப்படி இல்லாவிட்டால் நான் வெள்ளை மாளிகையில் கால் வைக்க முடியுமா ?

    கர்டிஸ்: எல்லாரும் உன்னைப் போல் விடுதலையோடு வேலை செய்ய முடியாது ! அதனாலேதான் நீ சாமர்த்தியக்காரி என்னு சொன்னேன்.

    சூஸன்: நான் அடிமைப் பெண்ணு விடுதலைப் பெண்ணு என்றெல்லாம் சிந்திப்பது இல்லை !

    கர்டிஸ்: நான் அடிமை வேலையைப் பத்திதான் எப்போதும் வேதனைப் படுவேன்.

    சூஸன்: இப்போ நீ அடிமையாக வாழ வில்லை அல்லவா ?

    கர்டிஸ்: ஆமாம். ஆனால் ஒரு காலத்தில் அடிமையா பிறந்தேன். அடிமையா வளர்ந்தேன். சிறுவனாக இருந்த போது சவுக்கடிகள் பல வாங்கி யிருக்கேன். (சட்டையை எடுத்துத் தடத்தைக் காட்டுகிறான்) தப்பி ஓடியதுக்கு என் தகப்பன் தூக்கிலே தொங்கினார் ! தாய் இன்னும் அலபாமாவில் அடிமை வேலைக்காரியா இருக்கிறாள். நான் தப்பி ஓடி வந்திட்டேன் ! என்னை எங்க எஜமான் ஆள் வைத்து தேடிக் கொண்டிருப்பதாகத் தெரியுது ! தலை மறைவா திரியுறேன் !

    சூஸன்: கேட்கவே பொறுக்கவில்லை எனக்கு ! பாவம் நீ உன் தகப்பன் தாய் ! இதோ மிஸ்டர் லிங்கன் வருகிறார். நீ அஞ்ச வேண்டியதில்லை ! அடிமைக் கெல்லாம் விடுதலை கிடைக்கப் போகுது !

    (அப்போது ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். வில்லியம் கர்டிஸ் எழுந்து தலை குனிந்து மரியாதை செய்கிறார். சூஸன் வேகமாகப் போகிறாள்.)

    காட்சி 3 பாகம் -4

    ஆப்ரஹாம் லிங்கன்: (புன்முறுவலுடன் கை நீட்டி வந்து கொண்டே) வாருங்கள் மிஸ்டர் கர்டிஸ். உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி ஊட்டுகிறது.

    (கர்டிஸ் எழுந்து சிரித்துக் கொண்டு லிங்கன் கையைக் குலுக்குகிறார். கையை வாயில் முத்தமிடுகிறார்.)

    ஆப்ரஹாம் லிங்கன்: (உட்கார்ந்து கொண்டே) உட்காருங்கள்.

    (கர்டிஸ் நாற்காலியில் அமரத் தயங்கிறார்)

    நீக்ரோ: என்னைக் கண்டு பேச அழைத்த உங்கள் கருணைக்கு வந்தனம் செய்கிறேன். உங்கள் முன்பு கூச்சம் எனக்கு ! நின்று கொண்டே பேசுகிறேன் ! அதுதான் என் பழக்கம் மிஸ்டர் லிங்கன். வெள்ளை எஜமானர் முன் நின்று கொண்டு நான் பேசித்தான் பழக்கம்.

    ஆப்ரஹாம் லிங்கன்: முதலில் அமருங்கள் ! நீங்கள் வர மறுப்பீரோ என்று பயந்தேன் !

    (கர்டிஸ் தடுமாறிக் கொண்டு அமர்கிறார். பிறகு எழுகிறார்.)

    நீக்ரோ: (சிரிப்புடன்) என்னை அழைத்ததில் மகிழ்ச்சி ! இங்கு நான் வந்ததில் மகிழ்ச்சி ! என்னோடு மிஸ்டர் லிங்கன் பேசுவதில் பெரு மகிழ்ச்சி !

    ஆப்ரஹாம் லிங்கன்: உட்காருங்கள் ! நாற்காலி அருகில் நிற்க வேண்டாம் !

    நீக்ரோ: கறுப்பருக்குப் பக்கத்தில் கறுப்பர் ! வெள்ளையருக்குப் பக்கத்தில் வெள்ளையர் ! அதுதான் விதி ! மேலும் சரியாக நான் உட்கார முடியாது மிஸ்டர் லிங்கன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: முட்டாள்தனம் ! இரண்டு முதியவர் நாம் ! சமமாக உட்காரலாம் ! எனக்கு வயது 54 ! ஏன் சரியாக உட்கார முடியாது ?

    நீக்ரோ: (தயங்கிக் கொண்டே) என் வயது 72 மிஸ்டர் லிங்கன் ! என் தொடையில் காயம் உள்ளது !

    unnamed (26)

    ஆப்ரஹாம் லிங்கன்: (வருத்தமுடன்) அப்படியா ? என்ன காயம் அது ?

    நீக்ரோ: (தடுமாறிக் கொண்டு) சவுக்கடிக் காயம் ! என் மாஸ்டர் கொடுத்தது !

    ஆப்ரஹாம் லிங்கன்: (கவலையுடன்) எங்கே நான் பார்க்கலாமா ?

    நீக்ரோ: எப்படி உங்களுக்குக் காட்டுவது ? எனக்கேப் பார்க்கச் சகிக்க வில்லை மிஸ்டர் லிங்கன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: ஆனால் நான் பார்த்தாக வேண்டும் மிஸ்டர் கர்டிஸ் !

    (மெதுவாக எழுந்து பாண்ட்டைக் கீழே தாழ்த்தி தொடையைக் காட்டுகிறார் கர்டிஸ். சிவப்பாகக் கரிந்த போனக் காயத் தடங்களை லிங்கன் பார்த்து மனம் வெதும்புகிறார். மறைமுகமாக ஒளிந்து கொண்டு பணிப்பெண் சூஸன் பார்த்துக் கண்ணீர் விடுகிறாள்.)

    ஆப்ரஹாம் லிங்கன்: (கவலையுடன்) காயம் இன்னும் ஆறாமல் உள்ளதே ! எப்போது வாங்கிய சவுக்கடி இது ? எதற்காக வாங்கிய சவுக்கடி இது ?

    நீக்ரோ: அஞ்சு அல்லது ஆறு மாசத்துக்கு முன்பு வாங்கிய சவுக்கடி ! ராத்திரி வெகு நேரம் வேலை செய்து காலையிலே தூங்கிப் போனேன் ஒருநாள் ! தாமதமா விழிச்சேன் ! விழுந்தது அடி சவுக்கடி !

    ஆப்ரஹாம் லிங்கன்: கொடுமை ! கொடுமை ! அடிமையாய் வாழ்வது கொடிது ! இதற்கு முடிவு காலம் வரப் போகுது மிஸ்டர் கர்டிஸ் ! இரவும் பகலும் இதுதான் என் கனவு !

    நீக்ரோ: நான் தப்பி ஓடிவந்தவன் மிஸ்டர் லிங்கன் ! தப்பி ஓடிய என் தகப்பனைப் பிடித்துத் தூக்கிலே போட்டாங்க ! என் தாய் இன்னும் தென்னக நரகத்தில்தான் கிடக்கிறாள் ! அவளுக்கு 90 வயது ஆகுது ! நீங்கதான் காப்பாத்தணும் என் தாயை ! நான் மீண்டும் அந்த நரகத்துக்குப் போய் தாயைக் காப்பாத்த முடியாது ! என்னையும் என் எஜமான் தேடிக் கொண்டிருக்கிறார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: அந்த நரகத்துக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது மிஸ்டர் கர்டிஸ் ! ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலிகொடுக்கிறோம் அதற்காக ! அதற்குக் கடவுள் ஆதரவு அளிக்க வேண்டு எனக்கு ! கடவுள் உதவியின்றி நான் வெற்றி பெற முடியாது !

    unnamed (27)

    நீக்ரோ: கடவுள் உங்களைப் படைத்ததே அடிமைத்தனத்தை ஒழிக்கத்தானே ! உங்கள் பிறவிப் பயனை கறுப்பராகிய நாங்கள் அனுபவிப்போம் ! எங்களை விடுவிக்கப் போரில் உங்கள் மனிதர் மடிகிறார் ! தென்னக நரகத்தை விட்டு நாங்கள் வெளியே வந்து என்ன செய்யப் போகிறோம் ? எப்படி வாழப் போகிறோம் ? எங்க இனத்துக்கு அறிவில்லை ! படிப்பில்லை ! பணமில்லை ! தனியே வாழக் குடிசை இல்லை ! எப்படி வாழ்வோம் இனிமேல் ? அடிமையாய் உள்ள போது குடியிருக்க ஒரு குடிசையாவது இருந்தது ! உண்ண உணவாவது கிடைத்தது ! அங்கே அடிமையாய் வேலை செய்து பிழைத்தோம் ! இனி எங்கே வேலை செய்வோம் ? என்ன வேலை செய்வோம் ? தென்னகத்திலே நாங்கள் எப்படி வெள்ளையர் வீட்டருகே வாழ முடியும் ? அடிமையாய்ப் பிறந்தேன் ! அடிமையாய் வளர்ந்தேன் ! இனி விடுதலை மனிதனாய் எப்படி வாழ்வேன் ?

    (லிங்கன் காகிதத்தில் கர்டிஸ் சொல்லச் சொல்ல அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்கிறார்)

    ஆப்ரஹாம் லிங்கன்: என்னை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் இந்தப் பிரச்சனைகளைக் கூறியதற்கு மிக்க நன்றி மிஸ்டர் கர்டிஸ் ! போருக்குப் பின் நேரும் கறுப்பரின் சிக்கல்களை நீக்க நான் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் ! கறுப்பருக்கு விடுதலை மட்டும் கொடுப்பது போதாது ! ஆயிரக் கணக்கில் விடுபடும் கறுப்பருக்கு நில புலன்கள், தேவை ! குடிசைகள் தேவை ! வேலைகள் தேவை ! வேலைகள் உண்டாக்கும் தொழிற் சாலைகள்  தேவை ! வேலைக்கு வைத்துக் கொள்ளும் கோமான்கள் தேவை ! படிப்பு வசதிகள் தேவை ! அரசாங்கப் பண உதவிகள் தேவை ! விடுதலை பெற்ற பிறகுதான் கறுப்பரின் பிரச்சனைகளே ஆரம்பமாகும் போல் தெரிகிறது !

    நீக்ரோ: சரியாகச் சொன்னீர் மிஸ்டர் லிங்கன் ! விடுதலை பெற்ற பிறகுதான் எங்கள் பிரச்சனைகளே தலைதூக்கப் போகின்றன ! இத்துடன் ஒரு புகாரை நான் கூறலாமா ?

    ஆப்ரஹாம் லிங்கன்: சொல்லுங்கள் மிஸ்டர் கர்டிஸ்.

    நீக்ரோ: தென்னகப் படையினர் கறுப்பர்களைப் பிடித்துச் சிறையில் போடுகிறார் ! எந்தக் கறுப்பரை ? உங்கள் இராணுவ உடை அணிந்த வடக்குக் கறுப்பரை ! சிறையிட்டு உணவு நீர் கொடுக்காது சித்திரவதை செய்கிறார் ! பட்டினியில் பிழைத்தோரைச் சுட்டுத் தள்ளுகிறார் ! அல்லது தூக்கில் இடுகிறார் !

    ஆப்ரஹாம் லிங்கன்: (மனக் கவலையோடு) எனக்குத் தெரியும் இது !

    நீக்ரோ: வடக்கோ, தெற்கோ சாவது கறுப்பர்தான் ! கறுப்பர் கோரக் கொலைகளை நிறுத்துவது எப்படி மிஸ்டர் லிங்கன் ?

    ஆப்ரஹாம் லிங்கன்: நாங்கள் கண்டனக் கடிதம் அனுப்பி இருக்கிறோம் !

    நீக்ரோ: அது போதாது மிஸ்டர் லிங்கன் !

    ஆப்ரஹாம் லிங்கன்: என்ன செய்ய முடியும் இதைத் தவிர மிஸ்டர் கர்டிஸ் ? வடக்கருக்கும் தென்னவருக்கும் நடந்து கொண்டுள்ளது போர் ! ஓர் உள்நாட்டுக் கலகப் போர் ! அநீதியை எதிர்க்கும் போரில் நீதியை நுழைக்க முடியாது ! மனிதரிடையே சிலர் மிருகங்களாய் மாறி யிருக்கிறார் ! மனித வேட்டையாடும் விலங்குகளை எப்படி ஒழிப்பது ?

    நீக்ரோ: நான் சொல்ல வருவது பதிலுக்குப் பதில் பலிவாங்குவது ! கண்ணுக்குப் பதில் கண்ணைக் குத்துவது ! பல்லுக்குப் பல்லைப் பிடுங்குவது !

    ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை இல்லை இல்லை மிஸ்டர் கர்டிஸ் ! அது தவறு ! சற்று சிந்தித்துப் பாருங்கள் ! நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்ன கூறுங்கள் ?

    நீக்ரோ: என் கண்ணுக்குக் கொலை செய்யப்படும் கறுப்பர்தான் தெரிகிறது !

    ஆப்ரஹாம் லிங்கன்: கொலைகாரைப் போல் என்னையும் கொல்லச் சொல்கிறீரா ? ஆயிரம் கறுப்பரைத் தென்னகர் கொன்றால், பதிலுக்கு நானும் ஆயிரம் வெள்ளைக்காரைக் கொல்ல வேண்டுமா ? என்ன நீதி நெறி இது ?

    நீக்ரோ: தண்டனை கொடுங்கள் ! ஆனால் கொல்ல வேண்டாம் !

    ஆப்ரஹாம் லிங்கன்: எப்படித் தண்டனை கொடுப்பது ? போர் நடக்கும் போது போர்க் குற்றவாளைகளை எப்படிப் பிடிப்பது ? எப்படித் தண்டிப்பது ? கொலைக்குப் பதில் கொலை என்பது என் கொள்கை ஆகாது ! நாம் செய்யும் போரில் ஒரு போர் நியதி உள்ளது. ஆயுதம் இல்லாதவரைக் கொல்வது கொலை ! அது முற்றிலும் தவறானது ! நமது கறுப்பர் படை தேசப்பற்று உடையது ! போரில் யாராயினும் ஆயுதம் இல்லாதவர், காயம் அடைந்தவர் காப்பாற்றப் பட வேண்டும் ! கொல்லப்படக் கூடாது ! நான் சொல்வது புரிகிறதா ?

    நீக்ரோ: (மனம் தெளிந்து) புரிகிறது மிஸ்டர் லிங்கன் ! நான் சொன்னது தவறுதான் ! என் மனதில் பட்டதைக் கூறினேன் ! தெற்கே உள்ள வெள்ளைக்காரர் அடிமைக் கறுப்பரைக் கொல்வது போதா தென்று வடக்கில் உள்ள கறுப்பரையும் அவர்கள் கொல்ல வேண்டுமா ? அநியாயம் ! எங்க இனத்தைச் சேர்ந்த கறுப்பருக்குத்தான் கண்ணீர் வடிக்கிறேன் !

    [அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. சூஸன் வந்து ஓர் அரசாங்க அதிகாரி வந்திருப்பதாகச் சொல்கிறாள்.]

    ஆப்ரஹாம் லிங்கன்: அவரை உள்ளே வரச் சொல் (சூஸன் போகிறாள்) சரி மிஸ்டர் கர்டிஸ் ! ஓர் இராணுவ அதிகாரி என்னை காண வருகிறார் ! போய் வாருங்கள் ! பல கருத்துக்களை உங்களிடமிருந்து இன்று நேரடியாக அறிந்து கொண்டேன், மிக்க நன்றி.

    (லிங்கன் கைகுலுக்க கரத்தை நீட்டுகிறார். கர்டிஸ் கரத்தை முத்தமிடுகிறார்)

    நீக்ரோ: மிஸ்டர் லிங்கன் ! மறக்க முடியாத சந்திப்பு இது ! மோஸஸ் போல எங்களை விடுவிக்க வந்த தேவதூதர் நீங்கள் மிஸ்டர் லிங்கன் !

    (கர்டிஸ் போகிறார்)

     

    Share
  • பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –

    பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் – பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ் – கே.வி. மஹாதேவன்

    பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன்

    வீர அபிமன்யூ திரைப்பாடல். திரையிசைத் திலகத்தின் தேனான இசை.. கண்ணதாசன் தேன் என்கிற வார்த்தையைத் தேன் சொட்டச் சொட்ட வடித்தெழுதிய பாட்டு! விட்டில் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தில் மயங்கி விழுவதைப் போல நமைச் சுண்டியிழுக்கும் பாட்டு! தமிழில் மட்டும்தான் இப்படி வார்த்தைகளில் விளையாட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் பாட்டு! அதுசரி.. இதையெல்லாம் ரசிக்க நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? களம் என்ன களம்.. காதல் களம்.. காட்சி என்ன காட்சி.. கணவன்.. மனைவி.. இன்னும் என்ன.. கவிஞர் கேட்க.. மற்றுமொரு ரகசியமும் பாடலில் இடம் பெற வேண்டும் என்கிறார் இயக்குனர். அதனை கவிஞரின் காதில் கூறினார். வார்த்தைகளில் சிந்திய தேன் அத்தனையும் எழில்சிந்த, அழகிய பொருள் சிந்த, பாடலை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். ரசித்திருக்கிறோம்..

    காதல் பாடலிது.. கதாநாயகன் அபிமன்யூ.. தன் மனைவியோடு கழிக்கும் கடைசி இரவு! பாடல் பிறக்கிறது! இயக்குனர் ரகசியமாய் கேட்டது என்ன தெரியுமா? அபிமன்யூ அடுத்த நாள் களத்தில் மரணத்தைத் தழுவுகிறான். அவன் வகுத்த வியூகத்தில் வெளிவர மறந்துவிடுவதால் களத்தில் மாண்டு போகிறான். அவன் கதை முடியப்போகிறது என்பதையும் சூசகமாய் சொல்லிவிட வேண்டும் பாடலில் என்பதை கண்ணதாசன் உள்வாங்கி.. கவிதையில் சரியான விதம் சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி இறக்குமதி செய்துள்ளார்..

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
    அணைத்தேன் அழகினை ரசித்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

    மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
    வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
    மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
    வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
    இல்லாதபடி கதை முடித்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
    உலகத்தை நான் இன்று மறந்தேன்
    உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
    உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    இப்போது கவனியுங்கள்.. இனித்தேன் இல்லாதபடி கதை முடித்தேன்.. என்கிற சிலேடையை லாவகமாக கையாண்டு கதையையும் சொல்லிவிட்டார்.. கவிதையையும் இனிதே முடித்திருக்கிறார் என்பது புதிய செய்திதானே!

    திரைப் படம்: வீர அபிமன்யு
    பாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ்
    இசை: கே.வி. மஹாதேவன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    ஆண்டு: 1965

    http://www.youtube.com/watch?v=qtnPiMd6-7Q

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    இன்னொரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற வகையில் இந்த புதிய ஆண்டையும் புதுமையாகவே எதிர்கொள்வோம். புது விஷயங்களையும் தெரிந்து கொள்வோம். அப்படி ஒரு புது விஷயத்தை பழைய கால நிகழ்விலிருந்து இன்றுதான் படிக்க நேர்ந்தது. உங்களுடன் அந்த புதிய விஷயத்தை புதுமையாக இந்தப் புது வருட ஆரம்பத்தில் பகிர்ந்துகொள்வது கூட எனக்கு என்னவோ புதுமையாகத்தான் படுகின்றது.

    இறைவன் மீது காவியம் பாடுவோர் பலர், மனிதனை மையமாக வைத்து காவியம் பாடுவோர் பலர். சின்னஞ்சிறு குயிலையும் கூட பாடுபொருளாக்கி காவியம் படைத்தவர் மகாகவி பாரதி. கடவுள், குயில், மனிதன் எல்லாமே நமக்குப் பழைய சங்கதிதான். ஆனால் யாரேனும் எருமை மீது காவியம் பாடுவதைக் கேட்டிருப்போமா.. அப்படிக் கேள்விப்பட்டால் அது புதுமையான விஷயம்தானே..

    இந்தப் புதிய விஷயத்தை தம் பதிவின் மூலம் வெளிப்படுத்திய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றி. இதோ அந்தச் செய்தியின் வடிவம். அவர் பதிவின்படி http://gopu1949.blogspot.in/2014/01/105-1-2.html அவர் எழுத்து மூலமாகத் தருகிறேன்.

    //’ஷாஹூஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, ‘குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியாக குழந்தையாத்தான் இருந்தார்.

    ஷாஹூஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.

    அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது ‘குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார்.

    மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே… மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே… அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை ‘சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு ‘அந்யாப தேசம்’ என்று பெயர்.

    இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.

    அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு ‘மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!

    ‘மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. ‘பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு ‘மஹிஷன்’ என்று பேரில்லை. ‘மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து ‘மஹீசன்’ ‘மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.

    குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் ‘சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது ‘ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.

    அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்… அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ‘ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் ‘உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் ‘பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே ‘தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.

    அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

    ”மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது… சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான – உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக்யத்தின் பலன்தான்!” என்று ஒரு ஸ்லோகம்.

    இன்னொன்றில், ”எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே!

    ‘எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர்களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!” என்கிறார்.

    இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு – அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே… அதனால், மனஸிலே நன்றாகத்தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.

    ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.

    அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் ‘ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் ‘மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.

    ‘ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், ‘ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிறவனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார்.

    வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.

    ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.’

    vgk photoஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? //

    நம் காலகட்டத்தில் நம் முன்னே நடமாடிய தெய்வமான காஞ்சி மகா முனிவர் அருளிய இந்த புதுமையான செய்தியை நமக்குப் பதிவாகத் தந்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்கிறோம். காஞ்சி மஹானின் செய்திகளையெல்லாம் தம் வலைப்பூவில் கொடுத்து வருவது பயனுள்ளவிஷயம் என்பதோடு அதைப் படிக்கும் இக்கால சமுதாயத்தினர் மேலும் பயன்பெறுகிறார்கள் என்பதும் இனிமையான விஷய்ம்தானே. வாழ்க அவரது உயர்ந்த பணி!!

    கடைசி பாரா: கவிஞர் ஜெயபாரதனின் புத்தாண்டு பிறந்தது’ கவிதையிலிருந்து

    சித்தர்கள் ​புதிதாய்ப் ​பிறக்கணும் !

    பித்தர்கள் தெளிவாகணும் !

    ​புத்திகள் கூர்மை ஆகணும் !

    யுக்திகள்​ புதிதாய்த் தோன்றணும்.

    சண்டைகள் ​குறையணும் !

    ​ஜாதிகள் சேர்ந்து வாழணும் ! ​

    சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !

     

    Share
  • இணைப்பு…

     செண்பக ஜெகதீசன்furious-images

    மதமென்றும் இனமென்றும்

    மொழியென்றும்,

    மற்றேதுமின்றியும்

    மனிதரில் ஆயிரம்

    மாறாத பிரிவினைகள்..

     

    இணைக்கிறது இயற்கை

    இவர்களைச்

    சாவில்-

    இயற்கைச் சீற்றங்களாய்…!

    படத்துக்கு நன்றி

    http://www.deccanchronicle.com/130615/news-current-affairs/article/rains-fail-fill-dams

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 104

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
    ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்

     

    புலிச்சின்னம் பொருந்திய கொடியை
    உயர்த்தித் தாங்கிய தேரையுடைய
    வலிமைவாய்ந்த சோழமன்னனின் வெற்றிக்காகவும்,
    மழை பொழியும் சூழலை உருவாக்குவதற்காகவும்
    தேவர்களுக்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளியில்
    வேதியர்கள் தீ வளர்த்தனர்.

     

    அந்த வேள்வித்தீயில் எழுந்த நறும்புகை
    வானுயர்ந்த மாடமாளிகையைச் சூழ்ந்து நிற்க
    அவை மேகங்கள் சூழப்பட்ட மலையைப் போல்
    மிகச் சிறப்பாய்க் காட்சியளித்தன.

     

    இத்தகைய மங்கலச்சிறப்பு பொருந்திய
    மறையோர் வாழும் இல்லங்கள் பல நிறைந்த நல்ல ஊர்.

    இரந்து கேட்பவர்களின் சுற்றத்தையும்
    புரந்து காக்கும் அரசரின் வெற்றியையும்
    தம் உழவுத்தொழில் மூலம்
    காத்து நிற்பவர்கள்
    பரந்த நீருடைய காவிரிப்பெண்ணின்
    புதல்வர்களான உழவர்கள்.

     

    அவர்கள் வாழும் பழஞ்சிறப்பு வாய்ந்த ஊர்களில்
    கரும்பாலைகளில் கரும்புச்சாறு காய்ச்சும்போது
    எழுகின்ற புகையானது
    தூற்றப்படாத நெற்குவியல்களைச் சூழ்ந்து நிற்கும்.

    அந்தத் தோற்றம்
    மேகம் சூழ்ந்த மலைபோலக் காட்சியளிக்கும்.

     

    அதுபோன்ற உழவர்கள் பலரும்
    வாழ்கின்ற இடங்கள் நிறைந்த பல ஊர்கள்;

     

    இதுபோன்ற ஊர்கள் இடையில் கொண்ட
    நாடுகளை எல்லாம் கண்டு,
    ஒரு நாளில் ஒரு காத தூரத்துக்கு மேல்
    நடக்க முடியாதவர்களாய்,
    ஆங்காங்கே இடையிடையே தங்கி
    நாட்கள் பலவாய் நடந்துதான் சென்றனர்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  142 – 155

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (21)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (21) பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம், தாய்லாந்து

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் மறையவில்லை.  ஊடகங்கள் வழியாக அவ்வப்போது போர் சம்பந்தப்பட்ட ஏதாகினும் தகவல்கள் அவ்வப்போது நமக்கு கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. இந்த இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பற்றி நினைத்துப் பார்த்தால் இன்றும் நம் மனம் அதிர்ச்சிக்குள்ளாவதைத் தவிர்க்க இயலாது.  ஜப்பானியப் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் அவர்கள் அங்கு வாழ்ந்த மக்களையும், எதிரிப்படைகளிலிருந்து பிடித்து வந்த போர் கைதிகளையும் இப்படையினர் நடத்திய விதமானது  போர் குற்றவியல் வரலாற்றிலேயே மிகக் கொடூரமானவை என்பதில் மறுப்பில்லை.

    எனது அன்மைய தாய்லாந்து பயணத்தில் நான் ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அதில் என்னை திடுக்கிட வைத்த தகவல்களை வழங்கிய ஒரு அருங்காட்சியகம் என்றால் அது பர்மா ரயில்வே அல்லது சியாம்-பர்மா ரயில்வே அல்லது பர்மா-சியாம் மரணப் பாதை (Death Railway) என அழைக்கப்படும் ரயில் பாதை வரலாற்றை விளக்கும் ஜீத் போர் அருங்காட்சியகம் (JEATH War Museum) தான்.  இந்த அருங்காட்சியகம் 1977ம் ஆண்டு தாய்லாந்தின் மேற்குப் பகுதி மாநிலமான காஞ்சனாபுரி நகரில் வாட் சாய்சும்போல் புத்த விகாரைக்கு அருகே அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.

    அருங்காட்சியகத்தின் முன்பகுதியில் பரந்த புல்வெளியில் போர்கைதிகளாக இருந்து இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் மாண்டு போன மனிதர்களுக்கான மயானமும் நினைவு மண்டபமும் அமைந்திருக்கின்றன. அருங்காட்சியகமோ அதன் எதிர் புறமாக அமைந்துள்ளது.  அருங்காட்சியகத்தின் உள்ளே புகைப்படங்களோ வீடியோ பதிவுகளோ செய்ய அனுமதி இல்லை.  நுழைவாயிலில் கட்டணத்தைக் கட்டி உள்ளே செல்லும் முன் அமைந்துள்ள விற்பனைப் பொருட்கள் கடையில் இந்த அருங்காட்சியகம் பற்றியும் மேலும் க்வாய் பாலம், ரயில் பாதை தொடர்பான நூற்களையும் பெற்றுக் கொள்ளலாம்.  இந்த நூல்கள் தாய் மொழி தவிர்த்து ஆங்கிலம், ஜெர்மன், ப்ரென்ச், ஜப்பானிய மொழிகளில் கிடைக்கின்றன.

    இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இந்த அருங்காட்சியகம். கீழ்த்தளத்தில் உள்ளே நுழையும் போதே ஜப்பானியப் படைகள் சியாம் நாட்டில் (தாய்லாந்து)  அரசருடன் உடன்படிக்கை செய்து கொண்டு,  இந்த பர்மா-சியாம் ரயில் பாதையை அமைத்த விவரங்களை வரிசைக் கிரமமாக வழங்கியிருக்கின்றனர். விளக்கங்களுக்கு விரிவான  புரிதலைக் கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளின் வழியாக சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு விளக்கக் குறிப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.  இவை விளக்கங்கள் தரும் தகவல்களுக்கு வலு சேர்ப்பனவாக அமைந்திருக்கின்றன என்றே கூறுவேன்.

    இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்ட காலம் அது.  ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வந்து பின்னர் சிங்கப்பூரிலிருந்து தங்கள் படைகளையும் பொருட்களையும் பர்மா தலைநகர் ரங்கூனுக்கு கொண்டு செல்வது ஜப்பானியப் படைகளுக்குச் சாதாரண காரியமாக அமையவில்லை.  ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பர்மாவை ஜப்பானியப் படைகள் 1942ல் கைப்பற்றின. படிப்படியாக முழுமையாக பர்மாவை ஆக்கிரமித்து இந்தியா செல்லவும் இப்படைகள் திட்டமிட்டன. ஆங்கிலேய-டச்சு படைகள், இந்த ஜப்பானியப் படைகள் மலாக்கா நீரிணை வழியாகக் கடல் பயணம் மேற்கொண்டு பர்மா செல்வதை மிகத் தீவிரமாக தடுத்து வந்தன.  இதற்காக ஆங்கிலேய-டச்சு படைகள் நீர்மூழ்கிக் கப்பலை இப்பகுதியில் இயக்கியும் வான்படைகளைக் கொண்டும், ஜப்பானியப் படைகள் இவ்வழியாக முன்னேறுவதைத் தடுத்துக் கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வந்தன. இந்தத் தடைகளைக் கடந்து பர்மா செல்ல மாற்று வழி ஒன்று ஜப்பானியப் படைகளுக்கு மிக அவசியமாகப் பட்டது.  சியாமிலிருந்து ரங்கூனுக்குச் செல்ல அப்போது ஒரே ஒரு சாலை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. அது ராஹேங் (Raheng) நகரிலிருந்து கவ்காரேய்க் வழியாகச் சென்று மாவ்ல்மெய்ன்(Maulmein)  சென்றடையும் வழி.   இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே ஒரு சாலைப் பாதையை சியாமின் பாங்காக் நகரிலிருந்து மாவ்ல்மெய்ன் வரை அமைக்க சியாமும் பர்மாவும் திட்டமிட்டன. ஆனால் அது செயல்முறைப் படுத்தப்படவில்லை.  ஆக, இருந்த ஒரே சாலைப் பாதை ராஹேங்கிலிருந்து செல்லும் பாதைதான்.  அதுவும் தரமான ஒரு பாதையாக அமைந்திருக்கவில்லை.

    இந்தச் சூழலில் கட்டாயமாக ஒரு மாற்று வழி பர்மாவிற்குச் செல்ல தேவைப்பட ஜப்பானியப் படைகளின் தளபதிகள் திடமிடுதலில் ஈடுபட்டனர்.  ஜப்பானியப் படைகள் ரயில் பாதை அமைக்க திட்டமிடுவதற்கு முன்னரே பர்மாவில் ஆட்சி செலுத்தி வந்த ஆங்கிலேய அரசு இப்பகுதில்  சியாமிலிருந்து ரங்கூனை இணைக்கும் ஒரு ரயில் பாதையை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்தனர். முழு திட்டமும் உருவாகியது. ஆனால் அது திட்டத்துடனேயே நின்று விட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு விஷயங்கள். முதலாவதாக, காஞ்சனாபுரியிலிருந்து ரங்கூன் செல்லும் பாதை என்பது அடர்ந்த காடுகள் அமைந்த நீண்ட மலைப்பகுதி. இதில் ரயில் பாதை தண்டவாளம், பாலம் என அமைப்பது என்பது சாத்தியமான ஒரு காரியம் அல்ல.  இரண்டாவது காரணம் இதற்குத் தேவைப்படும் வேலையாட்களைத் தேடுவது. ரயில் பாதை அமைப்பது, அதிலும் அடர்ந்த காட்டுப்பகுதியில் என்பது எளிமையான ஒன்றல்ல என்பதால் இப்பணிக்கு முன்வர பணியாளர்கள் தயங்கினர். அதோடு எத்தனை பேரை வைத்து இதனை சாதிப்பது? இவர்களுக்கான கூலியை எப்படி சமாளிப்பது என்பன இந்தத் திட்டம் திட்டமாக மட்டுமே இருந்து முடிந்ததற்கானக் காரணங்களாகிப் போகின.

    ஆனால் ஜப்பானியப் படைகளோ இந்த காரணங்களைத் தடைகளாக எண்ணவில்லை.  இங்கிலாந்தில் ரயில் பாதை அமைக்கும் என்ஜீனியர் துறையில் கல்வி கற்ற ஜப்பானியர்களைப் பணித்திட்டத்தில் இணைத்துக் கொண்டு முழு தீவிரத்துடன் ஒரு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஜப்பானியப் படைகள் இயங்கின. திட்டம் உறுதியாகி முடிவாக,  1942ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானியப் படைத் தலைமையகம் தம் படைகளுக்கு பான் போங் (Ban Pong ) நகரிலிருந்து பர்மாவின் எல்லையில் உள்ள மூன்று பகோடாக்களைக் கடந்து தான்புஸாயாட் (Thanbyuzayat)  செல்லும் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்து உடன் துவங்க கட்டளையிட்டது. இப்பணிக்கு வேலைக்கு பணியாட்கள் என்பதோடு ஜப்பானியப் படைகளால் கைது செய்யப்பட்ட போர் கைதிகளைக் கொண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

     unnamed

    சியாமையும் பர்மாவையும் இணைக்கும் ரயில் பாதை

    இந்த ரயில்பாதை அமைப்புப் பணியில் போர் கைதிகள் மட்டுமன்றி மலாயாவிலிருந்து 180,000 கூலிகளும் அழைத்து வரப்பட்டனர் என்று குறிப்புக்கள் காட்டுகின்றன. அப்படி மலாயாவிலிருந்து வந்தவர்களில் அதிகமானோர் தமிழர்களும், சீனர்களும் ஆவர்.  இவர்களுடன் மலாய்காரர்கள், இந்தோனிசியர்களும் அடக்கம்.  ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, டச்சு, அமெரிக்க  போர்க்கைதிகள் 60,000 பேரும் இவர்களுடன் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். (குறிப்பு: ஆஸ்திரேய அரசாங்கக் குறிப்புக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படுகின்றது. அக்குறிப்புக்களின் படி 250,000 ஆசிய தொழிலாளர்களும் 61,000 போர் கைதிகளும் இப்பணியில் ஈடுபட்டனர் என உள்ளது)

     dr3

     இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போர் கைதிகள் – உடல் இளைத்து மிகப் பரிதாபமான

    நிலையிலும் பணி செய்யும் நிலைக்கு உட்படுத்தப்பட்டனர்

    இவர்களில் 90,000 கூலிகளும் 12,399 போர் கைதிகளும் இந்த ரயில்பாதைக் கட்டுமானப் பணியின் போது சரியான சுகாதாரம் இல்லாமை, போதிய உணவு இல்லாமை, அதிகப்படியான உடல் உழைப்பு, ஜப்பானியப் படைகளின் கடுமையானத் தண்டனைகள், திடீரென்று பரவிய மலேரியா நோய் போன்ற காரணங்களால் இறந்தனர்.

     dr4

    மலாயாவிலிருந்து வந்த கூலிகள்

    அந்த நினைவுகளை அருங்காட்சியகம் வழங்கும் குறிப்புகளின் வழி வாசிக்கும் போதே நம் மனம் அச்சத்தில் உறைந்து போகின்றது. நினைத்தாலே உடலை நடுங்க வைக்கும் பயங்கரமான ஒரு கால கட்டம் அது. அக்காலச் சூழலை மேலும் விவரிக்கிறேன்.. அடுத்த கட்டுரையில்.

    தொடரும்..!

    குறிப்பு: படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (5)

    ராமஸ்வாமி ஸம்பத்  

    ’ஸீதையை எப்படியாவது ராமனிடம் இருந்து பிரிக்க வேண்டும். பிரியமான அழகு மனைவியை இழந்துவிட்டால் ராமன் அந்த பிரிவாற்றாமை தாங்காமல் உயிரையே விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படிச் செய்தால் ஸீதையையும் அடையலாம். அரக்கர் குலத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பை பழியும் வாங்கலாம்’ என நினைந்து ராவணன் தன் மாமனான மாரிசன் தவம் புரியும் ஆசிரமத்தை அடைந்தான்.

    “மாமனே, யாரோ அயோத்தி இளவரசன் ராமனாம், மனவி தம்பியோடு நாடு கடத்தப்பட்டு தண்டகாரண்யத்தில் ஒரு போலித்துறவிபோல் வாழ்கிறானாம். அவன் என் தங்கை சூர்ப்பணகையை அவமதித்து, அதற்கு பழிவாங்கப் புறப்பட்ட என் தம்பிகளான கரன் தூஷணன் திரிசிரஸ் மூவரையும் அவர்கள் படைகளையும் நாசம் செய்து விட்டான். இதற்கெல்லாம் நான் அவனுக்குப் பாடம் புகட்டவேண்டும். அதற்காக முதலில் அவன் மனைவி ஸீதையை அபஹரிக்கப் போகிறேன். அதற்கு உன் உதவி தேவை” என்று மாரீசனிடம் ராவணன் கூறினான்.

    “மருகா, நெருப்போடு விளையாடாதே. ராமன் தர்மத்தின் மறு உரு மட்டுமல்ல. அவன் உண்மையிலேயே பராக்கிரமம் பொருந்தியவன். உன் விரோதி எவனோ உன்னுடைய நம் அரக்கர் குலத்துடைய நாசத்தை நாடி இப்படிப்பட்ட யோசனையை உனக்கு கொடுத்திருக்கிறான். ராமன் பாலகனாக இருந்தபோதே அவன் வில் வலிமையை நான் அனுபவித்துத் தப்பிப் பிழைத்து வாழ்கிறேன். இந்த தற்கொலை முயற்சியைக் கைவிடு” என்றான் மாரீசன்.

    ”மாமனே, உன் அறிவுரையை நாடி நான் இங்கு வரவில்லை. நான் சொன்னபடி செய்யாவிட்டால் இப்போதே உன்னை கொன்றுவிடுவேன்.”

    ”வேண்டாம் அப்படிச் செய்யாதே. உன் கையில் சாவதைவிட ஒரு யோக்கியமான விரோதி கையில் மாள்வதே மேல். சொல். நான் என்ன செய்யவேண்டும்?”

    “அப்படி வா வழிக்கு. நீ ஒரு பொன்மயமான மான் வடிவம் எடுத்துக்கொண்டு பஞ்சவடியில் ராமனின் ஆசிரமத்துக்கு அருகில் திரிய வேண்டும். பொன்மானைப் பார்த்த வைதேகி ராமனிடம் உன்னைப் பிடித்துத் தருமாறு கேட்பாள். ராமன் உடனே உன்னைப் பிடிக்க முயல்வான், துரத்துவான். நீ அவன் கையில் பிடிபடா வண்ணம் எட்ட எட்ட ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வெகு தொலை தூரம் சென்றதும் அவன் உன்னைப் பிடித்து விட்டாலோ அல்லது உன்மீது அம்பை எய்து விட்டாலோ நீ ‘ஸீதா அபயம், லக்ஷ்மணா அபயம்’ என்று பயங்கரக் கூச்சலிடவேண்டும். மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

    ’ராவணனுக்குக் காலன் பாசத்தில் சிக்கவேண்டிய் வேளை நெருங்கிவிட்டது’ என நினைந்து மாரீசன் அவ்வாறே நடக்க ஆயத்தமானான்.

    இலங்கை மன்னனின் திட்டப்படியே பொன்மான் வேட்டை துவங்கியது. அண்ணனைத் தடுக்க முயன்ற லக்ஷ்மணனை ராமன் சமாதானம் செய்தான். “லக்ஷ்மணா, என் மனத்திற்கினியவள் இது வரை என்முன் எந்தவிதமான கோரிக்கையும் வைத்ததில்லை. அவள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்ய வேண்டாமா? அது என் கடமையல்லவா? ஆகவே, நீ ஸீதையைவிட்டு அகலாதே, நான் இந்த பொன்மானைப் பிடித்து வரும் வரையில்” என்று ராமன் கூறி மானைத் துரத்தத் தொடங்கினான். திடீரென்று ‘ஸீதா அபயம், லக்ஷ்மணா அபயம்’  எனும் பெரும் கதறலைக் கேட்ட ஸீதை, “லக்ஷ்மணா, உன் தமையனாருக்கு ஏதோ ஆபத்து போலிருக்கிறது. உடனே அவர் உதவிக்குச் செல்” எனப் பதறினாள்.

    “அன்னையே, இது அரக்கர்களின் மாயம் போல் தெரிகிறது. பதற்றம் வேண்டாம். அண்ணனுக்கு எத்தகைய கேடும் விளையாது. தவிர, அண்ணன் என்னை தங்களைவிட்டு அகலக்கூடாது என ஆணையிட்டிருக்கிறார் ” என்றான் லக்ஷ்மணன்.

    ராமனுக்கு ஆபத்து என்ற சிந்தனையால் அவள் லக்ஷ்மணன் கூற்றினைத் தவறாக புரிந்துகொண்டு தகாத சொற்களால் அவனைச் சாடி, “நீ இப்போது இங்கிருந்து அண்ணனைத்தேடி போகாவிட்டால் நான் உயிர்த்தியாகம் செய்வேன்” என்று அழுது ஆகாத்தியம் செய்தாள்.

    செவியில் நாராசம்போல் வீழ்ந்த அவள் சொற்களால் லக்ஷ்மணன். “என் அன்னைபோன்ற அண்ணியே, என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். இப்போதே அண்ணனைத் தேடி ஓடுகிறேன். தயவு செய்து தாங்கள் மட்டும் இக்குடிலை விட்டு வெளிவரவேண்டாம்” என்று கண்ணீர்மல்க அங்கிருந்து அகன்றான்.

    இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராவணன் ஒரு துறவி வேடம் தரித்து, பிச்சை வாங்குபவன்போல் நடித்து குடிலைவிட்டு வெளியே வராத ஸீதையை அக்குடிலோடு பெயர்த்துக் கடத்தி இலங்கை நோக்கிப் தன் புஷ்பக விமானத்தில் பறக்கலுற்றான்.

    “யாரடா என் மகளை கடத்துவது?” என்ற குரலைக் கேட்ட அரக்கர் மன்னன் திரும்பிப்பார்க்க ஜடாயு தன்னை நோக்கி சினத்தோடு வருவதைக் கண்டான்.

    ‘இது என்ன விபரீதம்? ராம லக்ஷ்மணர்கள் வருவதற்குள் ஸீதையைக் கடத்திச் செல்லலாம் என்றால் இப்பருந்து இடையூறாக இருக்கிறதே’ என நினைந்து, விமானத்தைக் கீழே இறக்கி, அந்த நல்ல உள்ளம்கொண்ட  பட்சியைக் கொல்ல முயன்றான். ஆனால் பலம் பொருந்திய ஜடாயு அவனைப் பலவாறு தன் கூர்மைமிக்க அலகினால் தாக்கி அந்த ’ஓராதன் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்’ உருட்டித் தள்ளினான். இனியும் தாமதித்தால் ராமன் வந்துவிடுவான் என்று பயந்து, ராவணன் தனக்கு சங்கர பகவான் வரமாகக் கொடுத்த வலிமைமிக்க வாளினால் ஜடாயுவின் இறகுகளை வெட்டி வீழ்த்தினான்.

    “ஹா! ராமா..!” என்று கதறியபடி ஜடாயு கீழே விழ்ந்தான். உடனே ராவணன், தந்தைபோன்ற ஜடாயுவை அணைத்தபடி இருந்த ஸீதையை தர தர வென்று அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக்கொண்டு விமானம் ஏறி இலங்கை நோக்கிப் பறந்தான்.

    குற்றுயிரும் கொலை உயிருமாக இருந்த ஜடாயு, “ராமா சீக்கிரம் இங்கு வந்து சேர். உனக்கு ஸீதாபஹரணத்தைப் பற்றிய தகவலை அளிக்கவேண்டும். ஐயோ! என் பிராணன் போய்விடப் போகிறதே…” என்று கதறியவாறு கிடந்தான். “என் ஆருயிரே! அவசரப்பட்டு என் உடலைவிட்டு நீங்கி விடாதே. தயவு செய்து சற்று நேரம் ராமன் வரும் வரை காத்திரு…” என்று கதறியவாறு கிடந்தான்.

    மாயமானால் மோசம் செய்யப்பட்ட ராமன் லக்ஷ்மணனின் வருகை கண்டு, “தம்பி, ஏன் ஸீதையைத் தனியே விட்டுவிட்டு வந்தாய்?” என்று கேட்க இளவல் தான்பட்ட துயரத்தை விவரித்தான். இருவரும் பயந்தபடியே குடிலும் காணவில்லை. ஸீதையையும் காணவில்லை.

    வருத்தம் மேலோங்க இருவரும் அவளைத் தேடியவாறு ஜடாயுவின் அருகில் வந்து சேர்ந்தனர். “ராமா வந்து விட்டாயா? உனக்காகவே உயிரைக் கையில் பிடித்தபடி உள்ளேன். நீங்கள் ஏன் ஜானகியைத் தனியேவிட்டுச் சென்றீர்கள்? அரக்கனான இலங்கை மன்னன் அவளைக் குடிலோடு பெயர்த்துக் கொண்டு தென் திசையாகப் பறந்து சென்றுவிட்டான். என்னால் முயன்றவரை அதனைத் தடுக்க விரும்பினேன். ஆனால் ராவணன் தன் வாளால் என் இறகுகளை வெட்டி வீழ்த்திவிட்டான். இனி நீங்கள் அந்த ’பொல்லா அரக்கனைக் கிள்ளி களைந்து’, உங்கள் குலவிளக்கினை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்” என்று சொல்லி ஜடாயு உயிர் நீத்தான்.

    ஸீதையைப் பறிகொடுத்ததோடு தந்தைபோன்ற ஜடாயுவையும் இழந்த ராமன், அப்பருந்திற்கு அந்திம சம்ஸ்காரம் செய்தான். தசரதனுக்குக் கிடைக்காத பேறு ஜடாயுவிற்குக் கிடைத்தது.

    மைதிலியின் கடத்தலைப் பற்றிய தகவல் கிடைத்த ராம லக்ஷ்மணர்கள் கோதாவரி நதியின் பாதையில் தென் திசையாக அவளைத்தேடி அலைந்தனர். வழியில் திடீரென்று கண்ணில்படாத ஒரு அரக்கனின் நீண்ட கைகளில் சிக்கித் தவித்தனர். ஒருவாறு சுதாரித்துக் கொண்டு இருவரும் அக்கரங்களை வெட்டி வீழ்த்தினர்.

    “ஐயோ, வலி தாங்கவில்லையே” என்று கதறும் அரக்கனை நோக்கினர். அவன் தலை, கால்கள் இல்லாமல் வயிற்றில் ஒற்றைக் கண்ணோடு கோரமாகக் காணப்பட்டான். எவ்வளவு முயற்சி செய்தாலும் அவனைக் கொல்ல முடியவில்லை.

    இறுதியில் அவ்வரக்கன் அழுதபடி, ”வீரர்களே, நீங்கள் யார்?” என்று வினவினான்.

    ”என் பெயர் ராமன். இவன் என் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறிய ராமனை, அவ்வரக்கன், “என்னை மன்னித்து விடுங்கள். கைகள் வெட்டப்பட்ட நிலையில் என்னால் உங்களுக்கு வந்தனம் கூட செய்ய முடியவில்லை. உண்மையில் நான் உங்களை எதிர்பார்த்தபடிதான் உள்ளேன்” என்று சொல்லி தன் விருத்தாந்தைக் கூற ஆரம்பித்தான்….

    …”நான் பலம் பொருந்திய ஒரு கந்தர்வன். என் பெயர் கபந்தன். பிரமனை வேண்டி வெகுநீண்ட ஆயுளைப் பெற்றவன். இதனால் கர்வம் தலைக்கேறி எல்லோரையும் ஹிம்சித்து வந்தேன். ஒரு சமயம் இந்திரனைக் கண்டு அவனுடன் போரிடவும் முயன்றேன். அவன் தன் வஜ்ராயுதத்தினால் என்னைக் கொல்லமுடியாமல் என் தலையையும் கால்களையும் வயிற்றுக்குள் போகுமாறு செய்தான். இந்திரனிடம் மன்னிப்புக் கோரி, ’நான் இனி எவ்வாறு உணவு உண்ணமுடியும்?’ என்று கேட்டேன். என்மீது இரக்கம்கொண்டு வானரசன் இந்த நீண்ட கரங்களையும் வயிற்றில் ஒரு கண்ணையும் கொடுத்து ’இவை மூலம் உன் இரையைப் பிடித்து ஜீவித்திரு’ என்றான். எனக்கு விமோசனம் எப்போது என்று கேட்டதும் ’கவலை வேண்டாம். அயோத்தி இளவரசர்களான ராம லக்ஷ்மணர்கள் ஓருநாள் இப்பக்கம் வந்து உன்னை விடுவிப்பார்கள். ஆகவே ராமன் வரும் வரை காத்திரு’ என்று ஆறுதல் சொல்லி அகன்றான்”…

    ராமன், ”கபந்தரே, இப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் உங்களை இந்த பயங்கர நிலையிலிருந்து விடுவிக்க?” என்றான்.

    “ராமா, என் இந்த சரீரத்தை மண்ணில் புதைத்து விடு. அது போதும்.”

    இருவரும் அவ்வாறே செய்ய, அம்மண்ணிலிருந்து ஒரு அழகான கந்தர்வன் எழுந்தான். “மிக்க நன்றி ராமா. உனக்கு ஒரு உதவி செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றான்.

    “ஐயா, என் மனைவி ஸீதையை ராவணன் எனும் அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான். அவளை மீட்க உங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா?”

    “கவலையை விடு ராமா. உன்னைப் போலவே மனைவி ருமையை இழந்து வாடும் கிஷ்கிந்தையைச் சேர்ந்த வானர வீரன் சுக்ரீவனுடம் நட்பு செய்துகொள். அவன் தற்சமயம் தன் அண்ணன் வாலிக்குப் பயந்து ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து வாழ்கிறான். ரிச்யமுக மலை கோதாவரிக்கு தென் மேற்குப் திசையில் உள்ளது. மனைவியை மீட்பதில் சுக்ரீவனுக்கு நீ உதவினால் அவன்மூலம் நீயும் ஸீதையைத் திரும்பப் பெறலாம்” என்று கூறி கபந்தன் அகன்றான்.

    அங்கிருந்து ராமனும் லக்ஷ்மணனும் கோதாவரியின் கரைதாண்டி கிஷ்கிந்தை நோக்கி நடந்து மதங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அவரைப் பற்றி விசாரித்தபோது  அம்முனிவர் மோட்சம் எய்திவிட்டார் என்றும் அவர்தம் குடிலில் சபரி எனும்பெயர் கொண்ட ஒரு வேட்டுவ குலத்தைச் சேர்ந்த மூதாட்டி இருப்பதாகவும் தெரிந்த்து. “அக்கிழவி பைத்தியம் பிடித்தவள்போல் ’ராமன் இன்னும் வரவில்லையே’ என்று வருடக்கணக்கில் புலம்பிக் கொண்டிருக்கிறாள்” என்று ஒரு வழிப்போக்கன் அவர்களிடம் தெரிவித்தான்.

    ஆச்சரியம் அடைந்த ராமன் ”முன்பின் தெரியாத என்னைப் பார்க்க ஆசைப்படும் அந்த மூதாட்டியை அவசியம் நாம் சந்திக்கவேண்டும் லக்‌ஷ்மணா” என்று சொல்லி அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

    ஆசிரமத்தில் சபரி தியான நிலையில் இருந்தாள். அவள் மோனம் நீங்கும் வரை ராமன் காத்திருந்தான். கண் விழித்த சபரி இருவரையும் வியப்போடு நோக்கினாள். “நீங்கள் யார்?” என்று கேட்டதும் இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

    “ராமா, வந்து விட்டாயா? உன் தரிசனத்திற்காகவே எவ்வளவு காலம் தவமிருந்திருப்பேன்”  என்று சபரி சொல்லி அவர்களை உபசரித்தாள். சபரி அளித்த எளிமையான இலந்தை போன்ற பழங்களை ராமன் விரும்பி உண்டான்.

    “அன்னையே, முன்பின் தெரியாத என்னைக் காண தாங்கள் ஏன் விரும்ப வேண்டும்?”

    ”ராமா, இந்த ஆசிரமத்தில் வெகுகாலம் மதங்க முனிவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அவருக்கு வேண்டிய மலர்கள், காய்கறிகள், பழங்கள், ஹோமத்திற்குத் தேவையான சமித்துகள் இவற்றையெல்லாம் தினம் கொண்டு வந்து கொடுப்பதோடு இந்த குடிலையும் துப்புரவாக வைக்கும் சேவையையும் செய்து வந்தேன். எழுதப்படிக்கத் தெரியாத, ஆன்மீக அறிவு அறவே அற்ற எனக்கு அம்மஹான் தீட்சை கொடுத்து என்னை ஓர் உயர்நிலைக்குக் கொண்டுவந்தார். ஓரு நாள் அவர், ‘சபரி, நான் இறைவனடி சேரும் காலம் வந்துவிட்ட்து. இனி நீயே இந்த ஆசிரமத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார். ’எனக்கும் இறைவனடி சேரும் பாக்கியத்தை அளிக்க்க் கூடாதா?’ என்று கேட்ட என்னை நோக்கி, ‘சபரி, கட்டாயம் உனக்கு அந்தப் பேறு கிடைக்கும். அதற்கு உனக்கு ராம தரிசனம் அவசியம். ஆகவே ராமன் வரும் வரை காத்திரு” என்று சொல்லி தன் யோக வலிமையினால் மோட்சமடைந்தார். அன்றிலிருந்து நான் உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன். இம்மலைவாழ் மக்கள் என்னை பரிகசித்தனர். அவர்களை லட்சியம் செய்யாமல், ஆசான் ஆணைப்படி உன் வருகையை ஆண்டாண்டுகளாக எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,  ராமா” என்றாள் சபரி.

    ராமன் தனது சமீபகால நிகழ்வுகளை விவரித்து கபந்தன் கூறியபடி சுக்ரீவனைத் தேடுவதாக சொன்னான். சபரி பரிவுடன் ராமனைத் தடவி ஆசியளித்தாள். “சுக்ரீவனுக்கு உன் நட்பு கிடைப்பது அவன் செய்த பூஜாபலனே. அவன் உதவியால் உன் மனைவியை நீ திரும்ப பெறுவது உறுதி.  ஆனால் அவன் தற்சமயம் வசிக்கும் ரிச்யமுக பர்வதத்தை அடைவது மிக கடினமான செயல். அடர்ந்த முட்புதர்கள் அம்மலைக்கு ஒரு அரணாக திகழ்கின்றன.  கவலை வேண்டாம். உனக்கு உதவி செய்ய ஒரு நல்மனம் படைத்தவன் அங்கு காத்திருக்கிறான்.  ராமா, உனக்காகக் காத்திருந்தேன். அரிய பெரும்பேறைப் பெற்றேன். இனி உன் அனுமதியுடன் நான் என் ஆசானின் திருவடியை அடைய விரும்புகிறேன்.” என்று சொல்லி சபரி தன் யோக வலிமையினால் அக்கினியை உருவாக்கி அதில் கலந்து மோட்சம் அடைந்தாள்.

    இதன்பின் ராமனும் லக்ஷ்மணனும் பம்பையாற்றின் வழியாக ரிச்யமுக மலை நோக்கி நடந்தனர். வழியில் கண்பட்ட சிலரை வழிகாட்ட வேண்டினர். ஆனால் அவர்கள் அங்கு செல்வது  ஒரு அபாயகரமான முயற்சி என்று சொல்லித் தப்பித்துக் கொண்டனர். ஸீதையின் பிரிவுத் துயரத்தாலும் நெடுவழி நடந்த களைப்பினாலும் ராமனின் கால்கள் தள்ளாடின.

    பம்பை நதியின் இருகரைகளிலும் ராமன் கண்ட இயற்கை காட்சிகள், ஸீதை அருகில் இல்லாததால், அவன் துயரை மேலும் மிகைப்படுத்தின. கம்பர் ராமனின் சோகத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.

    பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாளென்

    நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த

    மஞ்சு பூத்த மழையனைய குழலாள் கண்போல் மணிக்குவளாய்

    நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ

    [செம்ப்ஞ்சு குழம்பு ஊட்டம் பெற்ற விரல்களால் தாமரை மலரில் பவழம் பொருந்தினது போன்ற பாதங்களை உடையவளும், என் மனமான தாமரை மலரில் வாழ்பவளும், கரிய மேகத்தைப் போன்ற மலர்கள் அணிந்த கூந்தலை உடையவளுமாகிய ஸீதையின் கண்களைப் போன்றிருக்கும் கருங்குவளை மலரே! நஞ்சு படர்ந்த்துபோல நகைத்து (மலர்ந்து) என்னை வருத்துவாயோ?]

    பொங்கிவரும் தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு, லக்ஷ்மணன் பலவகையாக அண்ணனை உற்சாகப் படுத்தியவாறு உடன் நடந்தான்.

    (​தொடரும்)

    Share
  • கண்ணன் ஒரு கைக்குழந்தை – கவிஞர் வாலி

    கண்ணன் ஒரு கைக்குழந்தை – கவிஞர் வாலி -இசைஞானி இளையராஜா-கே. ஜே.யேசுதாசுடன்.. பி. சுசீலா

    கண்ணன்  ஒரு  கைக்குழந்தை..

    ராணி சந்திரா என்னும் கதாநாயகியுடன் மார்கண்டேயர் சிவகுமார் கதாநாயகனாக தோன்றி  நடித்த படம் பத்ரகாளி. இப்படம் வெளியாகும் முன்னதாக இக்கதாநாயகி அகால மரணமடைந்தார் என்பது மக்கிளிடம் ஒரு இரக்கத்தைத் தோற்றுவித்ததுடன் படத்தின் வெற்றிக்கும் வழி வகுத்தது.

     

    கண்ணன் என்கிற பெயர்ச் சொல்லை..  கடவுளின் திருப்பெயரை பல்லவியில் வைத்து உருவாக்கியிருக்கும் பெரும்பாலான  திரைப்பாடல்கள் அமோக வெற்றியைப் பெற்றிருக்கின்றன.  இதோ..  ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ ..

    இசைஞானி இளையராஜா இன்னிசையில் விளைந்த அருமையான கீதம்.. காவியக் கவிஞர் வாலியின் கை வண்ணம்..

    கே. ஜே. யேசுதாசுடன்.. பி. சுசீலா இணைந்து பாடிய பாடல். கணவன் – மனைவி உறவிற்கும் தாம்பதியத்திற்கும் சாமரம் வீசும் வரிகள்!!

    இசைஞானி இளையராஜா தன்  திரையுலகப் பிரவேசத்திற்கு முன்னதாக நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது அமைக்கப்பட்ட வர்ணமெட்டினை இப்படத்தில் பயன்படுத்த அதற்கேற்ற  வரிகளை திரைக்காக கவிஞர் வாலி அவர்கள் வரைந்துதர .. இனிய வடிவில் உருவான இதமான பாடல்! ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில்.

    நீங்காத கீதமாய் காதில் விழுந்து நெஞ்சில் நிறையும் மெலோடியஸ் பாடல் வரிசையில் ..  தோ..  ‘கண்ணன் ஒருகைக் குழந்தை’ ..

     

    காலத்தை வென்று இன்றும் கேட்கப்படுகிறது அதே ஜீவனுடன்!!

    கண்ணன் ஒரு கைக்குழந்தை

    கண்கள்சொல்லும் பூங்கவிதை

    கன்னம்சிந்தும் தேனமுதை
    கொண்டுசெல்லும் என்மனதை

    கையிரண்டில் நானெடுத்துப்

    பாடுகின்றேன் ஆராரோ
    மைவிழியே தாலேலோ
    மாதவனே தாலேலோ

    உன்மடியில் நானுறங்க
    கண்ணிமைகள் தான்மயங்க
    என்னதவம் செய்தேனோ
    என்னவென்று சொல்வேனோ

    ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
    சொந்தமிந்த சொந்தமம்மா
    வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
    தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

    அன்னமிடும் கைகளிலே
    ஆடிவரும் பிள்ளையிது
    உன்னருகில் நானிருந்தால்
    ஆனந்தத்தில் எல்லையது

    காயத்ரி மந்திரத்தை
    உச்சரிக்கும் பக்தனம்மா
    கேட்கும்வரம் கிடைக்கும்வரை
    கண்ணுறக்கம் மறந்ததம்மா

    மஞ்சள்கொண்டு நீராடி
    மைக்குழலில் பூச்சூடி
    வஞ்சிமகள் வரும்போது
    ஆசைவரும் ஒருகோடி

    கட்டழகன் கண்களுக்கு
    மையெடுத்து எழுதட்டுமா
    கண்கள்படக் கூடும்என்று
    பொட்டுஒன்று வைக்கட்டுமா  (கண்ணன் ஒரு)

    ஆராரிரோ ஆராரிரோ

    ஆராரிரோ ஆராரிரோ 

     

    http://www.youtube.com/watch?v=IRMy50RggbY

    Share
  • குறவன் பாட்டு-24

    குறத்தி நகரப்பெண் உரையாடல்

     

    நகரப்பெண்:

    கோடைக்கு இதமாய்க் குளிரூட்டப்பட்டு, இஞ்சிச்

    சுவையேற்றப்பட்ட மோர்கொண்டு வரட்டுமா குறத்தி?

    குறத்தி:

    ஏழைக்கு இறங்கும் இறைவனைப் போல,

    என்தாகம் தீர்க்கும் அன்பானதாயே, வணக்கம்!                                                                                   199

    நகரப்பெண்:

    என்னில்லம் தேடி வருவோரின் தாகம்,

    தீர்ப்பதென் கடமை, மனமார மோர்பருகு பெண்ணே!

    குறத்தி:

    இன்முகம் கொண்டு, இஞ்சிமணம் கொண்டு,

    வஞ்சமனம் இன்றி மோர் தந்ததால்,

    என் தாகம், கவலை தீர்ந்ததம்மா!                                                                                                 200

    நகரப்பெண்:

    காய் என்ன காயோ? சுவைக்கக்

    கனி என்ன கனியோ? சூட

    மலர் என்ன மலரோ கொண்டுவந்தாய்?

    குறத்தி:

    சமைக்கச் சுவையான கோவைக்காய் கொண்டுவந்தேன்,

    வனக்கத் தோதாகச் செங்கீரை சுமந்துவந்தேன்,

    வற்றலுக்கு ஏற்ற சுண்டைக்காய் கொண்டு வந்தேன்,

    விற்றிடல் எளிதென்று விரும்பிக் கொண்டு வந்தேன்!

     

    மணக்கும் மாம்பழங்கள் மறக்காமல் எடுத்துவந்தேன்!

    இனிக்கும் நெல்லிக்கனிகள் உங்களுக்குப் பிடிக்குமென,

    இடையில் வைத்துக் கட்டி வந்தேன்!

     

    மாம்பழம் போல் நிறம்கொண்டு, சமயத்தில்

    அதனை விஞ்சும் சுவை கொண்டு,

    மிளகைப் போல விதை கொண்டு ,

    மலிவான விலை கொண்ட பப்பாளி கொண்டு வந்தேன்!                                                           201

     

    நகரப்பெண்:

    இடையில் இருக்கும் நெல்லிக் கனியை,

    முதலில் முழுதாய் எடுத்துத் தந்திடு!

     

    சிறு நெல்லிக் கனி அளவு,

    பெரு உருவம் பெற்றிருக்கும் சுண்டைக்காயை,

    இரு கைகள் இணைத்தள்ளி இட்டுவிடு!

     

    கோவைக் காயின் வாசம் எனது,

    கணவருக் கென்றும் பிடிக்காது, எனைக்

    கோபிப்பாரே அதை நான் சமைத்தால்,

    அதனால் எனக்கது வேண்டாம் குறத்தி!

     

    வனக்கத் தோதாய் இருக்கும் கீரையில்,

    எனக்கு எட்டுக் கட்டுகள் கொடுத்திடு!

     

    உடனே அறுத்துச் சுவைக்கும் நிலையில்,

    உள்ள மாம்பழங்கள் மூன்று கொடுத்திடு!

    நாளை மறுநாள் பழுக்கும் நிலையில்,

    இருக்கும் மாம்பழம் இரண்டு கொடுத்திடு!

     

    தப்பாமல் உண்ண வேண்டும் என்றாலும்,

    பப்பாளிப் பழம் கொண்ட பெரும்சுவையை,

    எப்போதும் விரும்பாத பிள்ளைகளால்,

    இப்போது ஒன்று மட்டும் போதும்பெண்ணே!                                                                                       202

    Share
  • உண்டுண்டு

     

    அண்ணாகண்ணன்

     
    பெண்டுண்டு மகவுண்டு பேருண்டு சீருண்டு உண்டுண்டு வண்ணம் உண்டு
    செண்டுண்டு வண்டுண்டு சீருண்டு சாறுண்டு உண்டுண்டு சாரம் உண்டு

    இதழுண்டு சுவையுண்டு இடையுண்டு இசைவுண்டு உண்டுண்டு இன்பம் உண்டு
    இதமுண்டு பதமுண்டு விதமுண்டு நிதமுண்டு உண்டுண்டு மோகம் உண்டு

    ஆணுண்டு பெண்ணுண்டு தோளுண்டு துணையுண்டு உண்டுண்டு ஆசை உண்டு
    வானுண்டு மண்ணுண்டு வளமுண்டு நலமுண்டு உண்டுண்டு மேன்மை உண்டு

    உரமுண்டு திறமுண்டு உளமுண்டு திடமுண்டு உண்டுண்டு வேகம் உண்டு
    கரமுண்டு களமுண்டு கவியுண்டு கனமுண்டு உண்டுண்டு கானம் உண்டு

    வரவுண்டு செலவுண்டு தவமுண்டு வரமுண்டு உண்டுண்டு யோகம் உண்டு
    இரவுண்டு பகலுண்டு இருளுண்டு ஒளியுண்டு உண்டுண்டு தாகம் உண்டு

    பஞ்சுண்டு தீயுண்டு முள்ளுண்டு மலருண்டு உண்டுண்டு பாடம் உண்டு
    நெஞ்சுண்டு நெறியுண்டு நிழலுண்டு நிஜமுண்டு உண்டுண்டு நீதி உண்டு

    வினையுண்டு விளைவுண்டு விழியுண்டு விடிவுண்டு உண்டுண்டு வெற்றி உண்டு
    முனையுண்டு கணையுண்டு முதலுண்டு பதிலுண்டு உண்டுண்டு காலம் உண்டு

     
    (பொதிகை தொலைக்காட்சியில் 05.01.2014 அன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பான
    ’கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’ நிகழ்ச்சியில் வாசிக்கப்பெற்றது)

    Share
  • பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்

     

    Cover Image

    ஜொஹானஸ் கெப்ளர்

    (1571-1630)

    சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா

    ஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை  ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.   தன் அகத்திலும், புறத்திலும் இடர்ப்படுகளால் இன்னல் உற்றாலும், உன்னத குறிக்கோளில் வெற்றி பெற்றவர்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [ஜொஹா​னஸ் கெப்ளர் நூல் வெளியீட்டு முகவுரை 1949] 

    “எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

    ஜொஹானஸ் கெப்ளர்

     

    விண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க விஞ்ஞானிகள் 

    2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார்! அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார்! ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள்! கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார்! கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது! கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது! அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது! கோள வடிவில் பூமி இருந்தால்தான் நிலவில் அம்மாதிரி வளைவு நிழலை உண்டாக முடியும்!

    பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஊகித்தவர்களில் அவரும் ஒருவர்!  அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோ வின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு! கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்! அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது! பரிதி நிலவை விட மிகப் பெரிதென்றும், அது சந்திர தூரத்தை விட வெகு தொலைவில் உள்ளதென்றும் கூறினார். ஒரு கோள உருண்டையைத் தயாரித்து, அதனுள்ளே சூரியனை மையத்தில் வைத்து, விண்மீன்களை அப்பால் விளிம்பில் இட்டு, பிரபஞ்ச அமைப்பைக் காட்டினார்.

     

    Planetary Motions

     

    கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, வானியலில் ஒரு மைல் கல்லை நிலை நாட்டினார். எகிப்தில் அலெக்ஸாண்டிரியா, ஸைன் [அஸ்வான்] என்னும் இரு நகரில் உள்ள நிழல்களை உச்சிப் பொழுதில் ஒப்பிட்டு, அவ்விரு நகரங்களின் இடைத் தூரத்தைக் கணித்தார்! அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார்! மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார். கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வானவெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்பு களைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை! அடுத்து விண்கோள் அளப்புக் கோளம் [Astrolabe] ஒன்றையும் அமைத்தார். கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கிரேக்க வானியல் ஞானிகளின் இளவரசர் [Prince of Astronomers] என்று போற்றப்படும் மேதை!

     

    Chart -1

     

    அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth centered] அமைப்பான பிரபஞ்சத்தை டாலமி கடைப்பிடித்தார்! ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது! அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அந்த வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு!

     

    Fig 2 Geo-Centric System

    புவி மையச் சுற்று ஏற்பாடு

    பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞான வளர்ச்சி

    கி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.  வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம்.  அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது.  ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் வானியல் கணிப்பு மூலம் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங் களில் காணலாம். முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி.

    1.  சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.

    2.  பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது

    3.  ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.

    4.  பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக்       கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.

    கி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார்.  அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.   ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார்.  பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500 /57,753,336 =27.396) துல்லியமாகக் கணித்தார்.
    Fig 3 Geocentric Systemஅமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது.  அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது.  பரிதி உதிப்பது மில்லை !  அத்தமிப்பது மில்லை ! யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார்.  அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புத் தூரங்களைக் அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர்.   இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.

    பரிதி மையமானதா ? அல்லது புவி மையமானதா ?

    கி.பி. 476-550 இல் வாழ்ந்த இந்திய கணித வானியல் மேதை ஆரியபட்டா, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் ஐந்தாம் நூற்றாண்டிலே தான் எழுதிய ‘ஆரியபட்டியா ‘ என்னும் சமஸ்கிருத நூலில் கூறி யிருக்கிறார். சூரிய கிரகணத்திற்கும், சந்திர கிரகணத்திற்கும் ஆரியபட்டா தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார்! அண்டக் கோள்கள் சூரியனை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றி வருகின்றன என்றும் அப்போதே அறிவித்திருக்கிறார்! விண்வெளியில் கோள்களின் இடத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் கணித்துப் பஞ்சாங்க அட்டவணை தயாரித்துப் பாரதத்தில் ஜோதிடம் வளர்ச்சி அடைய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்! ஆரியபட்டாவை அரேபியர் நன்கு அறிந்து கொண்டு, அவரை ‘அர்ஜெஹீர் ‘ [Arjehir] என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்! கி.பி. 1473-1543 ஆண்டுகளில் வாழ்ந்த போலந்து மேதை நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] பல்லாண்டுகள் வானோக்கி ஆய்வு செய்து, ‘பரிதி மைய அமைப்பின் ‘ [Sun-centered or Helio-centric System] சீரொழுங்கை நிலைநாட்டியவர். அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன என்று விளக்க மாகக் கூறினார்!

    அரிஸ்டாடில், டாலமி போன்ற கிரேக்க ஞானிகள் பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth centered] உறுதிப் படுத்தி இருந்ததால், ஐரோப்பிய நாடுகளின் கிறித்துவ மதாதிபதிகள் பல நூற்றாண்டுகளாய் அக்கோட்பாடை எடுத்துக் கொண்டு, மக்களையும் நம்பும்படிக் கட்டாயப் படுத்தினர்! பூமைய அமைப்பை நம்பாதவரைச் சிறையில் இட்டும், சித்திரவதை செய்தும், சிரச் சேதம் செய்தும் துன்புறுத்தியதை உலக வரலாற்றில் காணலாம்! காபர்னிகஸ் கிறித்துவ மதாதி பதிகளிடம் நட்பும், மதிப்பும் நீண்ட காலம் கொண்டிருந்ததால், ‘பரிதி மையக் கோட்பாடை ‘விளக்கும் அவரது, ‘அண்டக் கோள்களின் சுற்றலைப் பற்றி ‘ [Concerning the Revolutions of the Heavenly Orbs (Six Volumes)] என்னும் நூலை மதப்பலியீடுக்குப் பயந்து மறைத்து வைத்துத், தான் சாகும் வரை அதை வெளியிட அனுமதி தரவில்லை!

    Fig 4 Heliocentric Systemடென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] தொலை நோக்கிகள் தோன்றாத காலத்திலே, மற்ற முற்போக்கான கருவிகளைக் கொண்டு சூரியன், சந்திரன், விண்மீன்கள், மற்ற கோளங்களையும் கண்டார்! பரிதி மட்டும் பூமியைச் சுற்றுகிறது என்றும், பிற அண்டங்கள் யாவும் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் பிராஹே நம்பினார்! 1572 இல் வந்த நோவாவின் [Nova] நகர்ச்சியைத் துல்லியமாகக் கூறினார். 1577 இல் தெரிந்த வால்மீன் [Comet] போக்கைக் கண்டு அது பூமண்டலத்தைச் சேராதது என்றும், விண்வெளியில் அப்பால் போகிற தென்றும் அறிவித்தார்! டென்மார்க் தீவில் அவர் கட்டிய யுரானிபோர்க் வானோக்ககம் [Uraniborg Observatory] பின்னால் பல வானோக்காள வல்லுநருக்குப் பயன்பட்டது. 1600 ஆம் ஆண்டில் ஜெர்மன் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் [Johan Kepler] என்பவர் டைசோ பிராஹேயிடம் பணி புரியச் சேர்ந்தார்.

    கெப்ளர் வானியலில் செய்த ஒப்பற்ற சாதனைகள்

    அண்டக் கோள்களின் நகர்ச்சி விதிகளை [Laws of Planetary Motion] முதன் முதல் ஆக்கிய வானியல் மேதை ஜொஹான் கெப்ளர்! பூர்வீக ‘வரைவடிவ ‘ விளக்கத்திலிருந்து [Geometrical Description] மாற்றிப் பெளதிக விசையைப் [Physical Force] புகுத்தி அதை நவீன விண்ணியக்கவியல் [Dynamical Astronomy] கோட்பாடாக்கி, வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை கெப்ளர் ஒருவரையே சாரும்! நவீன ஒளியியல் [Modern Optics] துறைக்கு வித்திட்டு அதை விஞ்ஞானமாய்த் துவக்கியரும் கெப்ளரே! தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு உலவுகிறது என்பதை முதலில் ஆய்வு செய்து, ஒருவிதமான முதல் தொலை நோக்கியையும் அமைத்தவர், கெப்ளரே! அவரைப் பின்பற்றி, இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்! கெப்ளரின் ஒளியியல் நூலே, ஸர் ஐஸக் நியூட்டனின் (1642-1726) அடிப்படைக் கருத்தாகி, ஒளித்துறைக் கண்டு பிடிப்புகளுக்கு வழி காட்டியது! கெப்ளர் கணிதத் துறையில் மிகச்சிறு எண் கணக்கியலை [Infinitesimals in Mathematics] ஆரம்பித்துக் கால்குலஸ் [Calculus] துறையைத் துவக்கியவர். அதுவே நியூட்டன் கால்குலஸ் கணித விருத்தி செய்ய ஏதுவானது! ஜெர்மன் கணித ஞானி வில்ஹெம் லெப்னிஸ் [Wilhem Leibniz (1646-1716)] தனியாக கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி செய்தார்!Fig 6 Geo-centric & Helio-centric Systems1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டு பிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனி லிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்! அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசையே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு சீரிய ஓர் ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் கூறினார். சூரியனை நடுவாய்க் கொண்டு விண்கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், காபர்னிகஸின் ‘பரிதி மையக் கோட்பாடே ‘ மெய்யான தென்ற உறுதியில் மேற்படுத்திப் ‘பிரபஞ்சம் ஓர் ஆட்ட அரங்கம் ‘ [Dynamic Universe] என்று விளக்கிக் காட்டினார். கெப்ளரது ஒப்பற்ற நகர்ச்சி விதிகளையும், அவர் கருதிய அண்டக்கோள் களின் காந்த விசைகளையும் அடிப்படை யாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச யந்திர இயக்கவியலை மேலும் விருத்தி செய்தவர், ஸர் ஐஸக் நியூட்டன்!

     

    chart -2

    ஜொஹான் கெப்ளரின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

    1571 டிசம்பர் 27 ஆம் தேதி ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] ஜெர்மனியில் வைல் டெர் ஸ்டாட், ஊட்டம்பெர்க் [Weil der Stadt, Wuttemberg] என்னும் ஊரில் நலிந்த, வேண்டப் படாத, முன்முதிர்ச்சிக் குழந்தையாய் [Premature Baby] ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். பணத்துக்கு வேலை புரியும் ஒரு பட்டாளத் தந்தைக்கும், விடுதியாளர் [Innkeeper] மகளான ஒரு தாயிக்கும் நோஞ்சான் பிள்ளையாய்த் தோன்றினார்! எலும்பும் தோலுமாய் மெலிந்த சிறுத்த தோற்றம்! ஜொஹான் கெப்ளர் ஐந்து வயதான போது, போருக்குப் போன அவனது தந்தை திரும்பி வரவே யில்லை! தாத்தாவின் விடுதியில் தாயுடன், ஜொஹான் ஓர் பணிப் பையனாக வேலை செய்து வந்தான்! சிறுவனாக உள்ள போதே, ஜொஹானின் உன்னத ஞானம் வெளிப் பட்டது! விடுதியில் தினமும் உண்ண வந்த வாடிக்கையாளர்கள், சிறுவன் ஜொஹான் கணக்கு வல்லமையைக் கண்டு பிரமித்துப் போனார்கள்! உள்ளூர் பள்ளிப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, உள்ளூர்ச் செல்வந்தர் அளித்த உபகார நிதியில், 1587 இல் டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Tubingen] சேர்ந்தார்.

     

    Fig 7 Geocentric & Heliocentric Systems

     

    பல்கலைக் கழகத்தில் கெப்ளர் படித்தவை, கணித விஞ்ஞானம் [Mathematical Science]. அவற்றில் கணக்கு, வரை வடிவியல் [Geometry], வானியல் [Astronomy], பிறகு இசை ஆகியவற்றை ஒருவர் கற்க வேண்டும்! அத்துடன் அவர் கிரேக்க, ஹீப்ரூ மொழி களையும் படித்தார். மேலும் கணிதம், வானியல் ஆகியவற்றைப் பயின்ற முக்கிய மொழி லாட்டின். அவருக்குக் கணிதமும், வானியலும் கற்பித்த ஆசிரியர், மைக்கேல் மேஸ்ட்லின் [Michael Maestlin]. கெப்ளர் முதல் வருடம் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் ‘A ‘ மதிப்பு வாங்கினார்! அப்போது மேஸ்ட்லின் புகட்டிய முற்போக்கு வானியலான ‘காபர்னிகஸின் பரிதி மையப் பிரபஞ்ச அமைப்பைப் ‘ புதிதாகக் கற்ற மாணவர்களில், கெப்ளரும் ஒருவர். ‘சூரியனை நடுவாகக் கொண்டு, அண்ட கோளங்கள் அதைச் சுற்றி வருகின்றன ‘ என்னும் காபர்னிகஸ் கோட்பாடை, முதலில் மேஸ்ட்லின் வாயிலாய் கெப்ளர் கற்றுக் கொண்ட உடனே, அக்கோட்பாடு மெய்யான தென்று அவருக்குப் பளிச்செனத் தெரிந்தது!

     

    Kepler First Two Laws

    1588 ஆம் ஆண்டில் கெப்ளர் B.A. பட்டத்தையும், 1591 இல் M.A. பட்டத்தையும் பெற்று, லூதெரன் கோயில் பாதிரியாராக [Lutheran Church Minister] விரும்பி, மதக்கல்வி [Theology] பயிலச் சேர்ந்தார். கெப்ளர் இறுதி ஆண்டில் படிக்கும் போது, ஆஸ்டிரியா லூதரன் உயர்நிலைப் பள்ளியில், கணிதப் பேராசிரியர் பதவி காலியாகவே மதக்கல்வியை முடிக்காமல் விட்டு விட்டு, 1594 இல் அப்பதவியை மேற்கொண்டார். பிறகு 1612 இல் ஆஸ்டிரியா லின்ஸில் [Linz, Austria] கணித ஆசிரியர் பணியையும் செய்தார். ஜொஹானின் முதல் மனைவி பார்பரா [Barbara] இறந்ததும், 1613 இல் இரண்டாவது மனைவி சுசானாவை [Susanna] மணந்து கொண்டார். திருமண விழாவிற்கு வந்திறங்கிய ஒயின் கொப்பரைகளில் [Wine Barrels] இருந்த ஒயின் கொள்ளளவைக் [Volume of Wine] கணக்கிட, கோல் ஒன்று நெடு நீளத்தில் [Diagonally] துளை வழியாக விட்டு அளக்கப் பட்டது! இப்படிக் கொள்ளளவை அளக்க முடியுமா ? என்று கெப்ளர் ஐயுற்றார்! அவர் கணித மூளை வேலை செய்ய ஆரம்பித்தது! அதன் அரிய விளைவுதான் ‘திடவ உருளைகளின் கொள்ளளவுக் ‘ [Volumes of Solids of Revolution] கண்டு பிடிப்பு! அம்முறையே பின்னால் போனவென்ச்சரா காவலேரி [Bonavetura Cavalieri (1598-1647)], ஐஸக் நியூட்டன் [1642-1726] ஆகியோரால் விருத்தி செய்யப் பட்டு, கால்குலஸ் [Calculus] கணித மானது!
    Fig 8 Kepler's Three Laws

    பிரபஞ்ச ஆட்ட அரங்கத்தின் சீரொழுங்கு!

    ஜொஹான் கெப்ளர் வாழ்க்கை முழுவதும் மதவாதியாக, கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்தார். அவரது படைப்புகள் யாவற்றிலும் கடவுளைப் பற்றி எழுதாத தலைப்பே யில்லை! கடவுளின் படைப்பைப் பற்றிப் புரிந்து கொண்டு எழுதிய தனது நூல்கள், ‘ஒரு கிறித்துவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்தன ‘, என்று கூறினார். கடவுளின் பிம்பத்தில் படைக்கப் பட்ட மனிதன், கடவுள் உண்டாக்கிய பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும், என்று கெப்ளர் நம்பினார்!   ‘பிரபஞ்சத்தை மேலும் கடவுள் ஒரு கணித அமைப்பாட்டில் [Mathematical Model] ஆக்கி யுள்ளார் ‘, என்பது அவரது உறுதியான கருத்து! அதே கருத்தைக் கிரேக்க மேதைகள் பித்தகோரஸ், பிளாட்டோ ஆகியோர் ஆக்கிய நூல்களிலும் காணலாம்! தனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு அடிக்கடி நன்றி கூறினார், ஜொஹான் கெப்ளர்!

    அவர் அறிந்த அகிலத்தின் மர்மத்தை விருத்தி செய்து, 1619 இல் கெப்ளர் எழுதி வெளிட்ட நூல் ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [The Harmony of the World (Cosmos)] என்பது! இந்நூலில் கெப்ளர் மிக விபரமான விளக்கத்தில் ஓர் பிரபஞ்சக் கணித அமைப்பைக் [Mathematical Model of Cosmos] காட்டுகிறார். மேலும் பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கில் அவரது மூன்றாவது அண்டக்கோள் விதி [Kepler ‘s Third Law] விளக்கப் படுகிறது! அதாவது எந்த இரண்டு கோள்களின் சுற்றுக் கால ஈரடுக்கின் விகிதமும் [Ratio of Squares of their Periods], அவற்றின் சுழல் வீதி ஆரங்களின் மூவடுக்கு விகிதமும் [Ratio of Cubes of their Radii] ஒன்றாகும்! பதினேழு ஆண்டுகள் டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹேவுடன் ஆய்வுகள் செய்து, முதலில் கனவுபோல் தென்பட்ட மூன்றாவது விதி, பின்னால் முற்றிலும் மெய்யென்று உறுதிப் படுத்தப் பட்டது!

     

    Planetary Laws of Motion

    கெப்ளர் கணித்த முப்பெரும் அண்டக்கோள் விதிகள்

    பிரபஞ்சத்தில் விண்கோள்கள் சுற்றி வரும் வீதிகள், அவற்றின் வேகம், பரிதியை அவை நெருங்கும் போது ஏற்படும் வேக வளர்ச்சி, பரிதியை விட்டு அவை அகலும் போது நிகழும் வேகத் தளர்ச்சி, அவை மேவும் விண்பரப்புக்கும் [Spatial Setup] காலத்திற்கும் உள்ள உறவு, அவற்றின் தூரத்திற்கும், சுற்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற கணிதக் கோட்பாடுகளைக் கூறுவது, கெப்ளரின் மூன்று விதிகள் [Kepler ‘s Laws]. 1609 இல் அவர் எழுதிய ‘புதிய வானியல் ‘ [New Astronomy] என்னும் நூலில் கெப்ளரின் முதலிரண்டு விதிகள் வெளியாயின! அவர் எழுதிய ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [Harmony of the World (Cosmos)] என்னும் அடுத்த நூலில் மூன்றாம் விதி 1619 இல் வெளி வந்தது! முதல் விதி:- அண்டக் கோள்கள் பரிதியை ஓர் குறிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல! அண்டங்கள் பரிதியைச் சுற்றும் வீதிகள் நீள்வட்டம் என்று வலுயுறுத்துகிறது, முதல் விதி! இரண்டாம் விதி:- ஓர் அண்டம் பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது அண்டத்தையும், பரிதியையும் சேர்க்கும் ஓர் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி! அதாவது, கோள் பரிதியை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகை யாகிறது! பரிதியை விட்டு அப்பால் செல்லச் செல்ல அதன் வேகம் குறைகிறது!

    Fig 10 The Present System

    மூன்றாம் விதி:- பரிதியிலிருந்து ஓர் அண்டம் கொண்டுள்ள தூரத்தின் மூவடுக்கு [Cube of the Distance], அந்த அண்டம் பரிதியைச் சுற்றும் காலத்தின் ஈரடுக்கிற்கு [Square of the Period] நேர் விகிதத்தில் உள்ளது. சுருங்கக் கூறினால், அண்டத்தின் தூர மூவடுக்கு/அண்டத்தின் சுற்றுக் கால ஈரடுக்கு விகிதம் ஓர் நிலை யிலக்கம் [(Cube of the Distance)/(Square of the Period), Ratio is a constant]. கெப்ளரின் மூன்று விதிகளும் அவர் கண்ணோட்டத்தில் சிந்தித்த விதிகளே [Empirical Laws]! கணித விதிகள் ஆயினும், காரண அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல! அண்டக் கோளப் பாதை, வேகம் ஆகியவற்றை விதிகள் காட்டினாலும், கோள்கள் ஏன் அவ்வாறு நகர்கின்றன என்ற காரணங்களை அவை கூறமாட்டா! அவ்விதிகளைப் பயன் படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை மட்டுமே முன்னறிவிக்கலாம்! 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம் ‘ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்! கெப்ளரின் இந்தக் கோட்பாடு அண்டங்களின் கட்டமைப்பு ஒழுங்குள்ள காபர்னிகஸின் பரிதி மையக் கொள்கையை விளக்க ஏதுவாகிறது!

     

    Copernicus Tycho Brahe & Galileo

    கெப்ளரின் குரு டென்மார்க் மேதை டைசோ பிராஹே

    டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Astronomer Tycho Brahe (1546-1601)] சூரிய மண்டலத்தின் அண்ட கோளங்களையும், 700 மேற்பட்ட விண்மீன்களையும் பல்லாண்டுகள் நோக்கி விளக்கமாக, துல்லியமாக அளந்து எழுதி வைத்தவர். 17 ஆம் நூற்றாண்டில் தொலை நோக்கிகள் கண்டு பிடிப்பதற்கு முன்னே, அவர் சேகரித்த துல்லிய வானியல் விளக்கங்கள் மிகை யானவை! ஒரு கோளம், இரு திசைகாட்டி மானிக் கருவிகளை [One Globe & Two Compasses] மட்டும் பயன்படுத்திப் பண்டைய வானியல் அட்டவணையில் [Astronomical Tables] இருந்த பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தினார்! 1572 இல் அவர் ஓர் உன்னத நோவாவைக் [Supernova] கண்டு பிடித்தார். டென்மார், நார்வே மன்னரிடம் உதவி நிதி பெற்று, 1576 இல் ஓர் வானியல் நோக்ககத்தைக் [Observatory] கட்டி, அதில் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வந்தார். பிராஹே காபர்னிகஸின் பரிதி மையக் கோட்பாடு முழுவதையும் ஒப்புக் கொள்ள வில்லை!

     

    Events and people

    அவர் டாலமியின் பூமைய அமைப்பையும் [Earthentered System], காபர்னிகஸின் பரிதி மைய அமைப்பையும் [Sun-centered System] ஒன்றாக இணைத்து, புதிதாக ‘பிராஹே ஏற்பாடை ‘ [Brahe System] உண்டாக்கினார்! பிராஹே அமைப்பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் மட்டும் சூரியனைச் சுற்றுவதாகவும், பிறகு அந்தச் சூரிய குடும்பம் சந்திரனைப் போல் பூமியைச் சுற்றி வருவதாகவும் யூகித்தார்! அதைப் போன்று விண்மீன்களும் ஒரு நாளில் பூமியைச் சுற்றி வருவதாய்க் கருதினார். அவரது பிரபஞ்சக் கோள்களின் கோட்பாடு பிழையானாலும், அவரது துல்லிய கோள் அட்டவணைப் பலருக்குப் பயன்பட்டது! 1600 இல் பிராஹேக்கு துணை யாளியாகச் சேர்ந்த ஜொஹான் கெப்ளர், அவரது ஆராய்ச்சி களையும், அட்டவணையும் உபயோகித்து, முப்பெரும் அண்ட விதிகளைப் படைத்தார்! 1601 இல் பிராஹே காலமானதும், கெப்ளர் அவரது ஆய்வுக் கூடத்தின் அதிபதியாகி, வானியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பேரரசர் ரூடால்ஃப் [Emperor Rudolf II] அரசவையில் பிராஹே வகித்த, அரசவை வானியல் நிபுணர் பதவியை, அடுத்து கெப்ளர் ஏற்றுக் கொண்டு அரசருக்கு ஆலோசனை கூறும் ஜோதிடராகவும் பணி செய்தார்!

    Fig 11 Ptolemy Geo-Centric System

    கெப்ளர் வானியல் சாதனைகளைக் கூறும் நூல்கள்

    கெப்ளர் எழுதிய அரிய வானியல் நூல்கள்: பிரபஞ்ச வரைவமைப்பு மர்மம் [Cosmographic Mystery (1596)], புதிய வானியல் [New Astronomy (1609)], பரிதியைச் சுற்றும் தூதன் [The Sidereal Messenger (1610)], ஒளியியல் [Optics (1611)], வியாழத் துணைக்கோள் பற்றி விரிவுரை [Narration Concerning the Jovian Satellites (1611)], பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு [Harmony of the World (1619)], காபர்னிக்கன் வானியல் உன்னதம் [Epitome on Copernican Astronomy (1621)], ரூடால்ஃப் கோள் அட்டவணை [Rudolfine Planetary Tables (1628)]. ஜொஹான் கெப்ளர் வானியல் மற்றும் பயிலாது, அத்துடன் ஜோதிடமும் கற்றார்! கெப்ளர் ஜோதிடத்தை நம்பினார்! சூரியன் பூமியில் கால நிலைகளை மாற்றுவது போல், சந்திரன் கடலில் அலை உயர்ச்சி, அலைத் தாழ்ச்சி [High & Low Tides] உண்டாக்குவது போல், கிரகங்கள் மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று விளக்கம் தந்தார்!

    டால்மியின் பூமையக் கொள்கையை நம்பாத கெப்ளர், கிறிஸ்துவ மதப் பலியீட்டுக்குப் பயந்து அடிக்கடித் தன் வேலையை மாற்றிக் கொண்டே இருந்தார்! கெப்ளர் கால்குலஸ் [Calculus] கணிதத்திற்கு வழி வகுத்த முன்னோடி நிபுணர். தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதையிட்ட வல்லுநர். பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஸர் ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், கோட்பாடுகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தன் உன்னத ‘ஈர்ப்பு விசை நியதியைப் ‘ [Theory of Gravitational Force] உருவாக்கினார்!

    Fig 12 Tycho Brahe

    ஒப்பற்ற வானியல் மேதை கெப்ளரின் மறைவு

    கிறிஸ்துவ மத வேதாந்தியான கெப்ளர், ‘பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிவ தென்றால், அதைப் படைத்த கடவுளின் மகிமையைப் புரிந்து கொள்வதும் அத்துடன் சேரும் ‘ என்று கூறுகிறார்! கெப்ளர் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த வானியல் மேதை காலிலியோவிடம் அவர் தொடர்பு கொண்டிருந்தார். காலிலியோ தான் அமைத்த தொலை நோக்கியில் வியாழனைச் சுற்றிடும் சந்திரன்களைக் கண்டு பிடித்ததும், கெப்ளர் மகிழ்ச்சி அடைந்து மூன்று கடிதங்கள், அவருக்கு எழுதினார். வியாழனின் அந்தச் சந்திரன்களுக்குத் ‘துணைக்கோள்கள் ‘ [Satellites] என்னும் ஓர் புதிய பெயரைக் கடிதத்தில் எழுதி அனுப்பி யிருந்தார்!

    நேபியர் [Napier] 1614 இல் ஆக்கிய லாகிரித அட்டவணையை [Logarithm Tables] வெளியிட்டதும், கெப்ளர் அவற்றைப் பயன் படுத்தித் தன் ரூடால்ஃபைன் கோள் அட்டவணையை [Rudolphine Planetary Tables] 1628 இல் பல தசமத் துல்லியத்தில் தயாரித்தார்! வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் தனது 59 ஆம் வயதில், சில நாட்கள் நோயுற்று 1630 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் காலமானார். பரிதி மையக் கோட்பாடை ஊன்றிய காபர்னிகஸின் சீடரான, வானியல் மேதை கலிலியோவின் தோழரான, ஐஸக் நியூட்டனின் ஈர்ப்பியல் படைப்புக்கு முன்னோடி யான ஜொஹான் கெப்ளர், பதினேழாம் நூற்றாண்டு வானியல் வளர்ச்சியில் ஓர் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்திருக்கிறார்! 1604 ஆம் ஆண்டில் அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு ‘கெப்ளர் சூபர்நோவா ‘ [Kepler ‘s Supernova] என்று  நாசா இப்போது பெயரிட்டுள்ளது !

     

    Fig 14 Kepler Telescope in Solar Orbit

    புதிய பூமிகளைத் தேடி நாசா ஏவிய கெப்ளர் விண்ணோக்கி

    2009 மார்ச் 6 ஆம் தேதி நாசா விண்வெளித் தேடல் ஆணையகம் பிளாரிடா கேப் கெனவரல் ஏவு தளத்திலிருந்து டெல்டா -2 ராக்கெட்டை (Delta II Rocket) உந்த வைத்து, இதுவரை அனுப்பாத மிகப் பெரிய காமிராவைத் தாங்கிய கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியை (Kepler Space Telescope) வெற்றிகரமாக அனுப்பியது. ஜெர்மன் வானியல் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) நினைவாக ஏவப்பட்ட அந்த நூதனத் தொலை நோக்கி பூமியைத் தொடர்ந்து பரிதி மையச் சுற்று வீதியில் (Earth-Trailing Heliocentric Orbit) சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் தொலைநோக்கி பூமியைப் போல் பரிதியிலிருந்து அதே தூரத்தில் (1 AU Miles) 372.5 நாட்களுக்கு ஒருமுறைச் சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் சுமார் மூன்றரை ஆண்டுகள் விண்வெளியைக் கண்ணோக்கி வரும். மூன்றே காலடி விட்டமும் 1039 கி.கிராம் எடையும் கொண்டது. கெப்ளர் தொலைநோக்கியை நாசா அனுப்பியதின் குறிக்கோள் இதுதான் : மூன்றரை அல்லது நான்கு ஆண்டுகளாய் விண்வெளியில் உள்ள 100,000 விண்மீன்களை உளவிப் பூமியைப் போலுள்ள மித வெப்பமான, மீறிய குளிரற்ற உயிரினம் வாழத் தகுதியுள்ள புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும்.

     

    Kepler Quote -1

    ***********************

    தகவல் :

    1. A Biography of Johannes Kepler (The Watershed)  By : Arthur Koestler (1960)

    2. Kepler By : John Banville (1999)

    3. Indian Astronomy (Internet Collections)

    4. Wikipedia : Delelopment of Helio-centrism

    5.  The Wonder That Was India By : A.L. Basham (1959)

    6.  http://www.physicsclassroom.com/class/circles/u6l4a.cfm

    7.  http://csep10.phys.utk.edu/astr161/lect/history/kepler.html

    8.  http://www.physicsplanet.com/articles/johannes-kepler-and-his-laws-of-planetary-motion

    9.  http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/kepler.html

    10.  http://kepler.nasa.gov/Mission/JohannesKepler/

    11.  http://www.famousscientists.org/johannes-kepler/

    12.  http://www.space.com/15787-johannes-kepler.html

    13.  http://www.britannica.com/EBchecked/topic/315225/Johannes-Kepler

    14.  http://www.10-facts-about.com/Johannes-Kepler/id/332

    15.  http://www.kidsastronomy.com/kepler.htm

    16.  http://www.einstein-website.de/biographies/kepler_content.html

    17.  http://en.wikipedia.org/wiki/Kepler_(spacecraft)

    +++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  January 4, 2014  [R-1]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • சமூக நீதியும், மருத்துவமும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மூதறிஞர் ராஜாஜி அவர்களின் குலக்கல்வித் திட்டத்தினால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் தாங்கள் இருக்கும் அதே நிலையில் நிரந்தரமாக, இருந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்றும், அவர்களும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே, அதனை எதிர்த்து ஒரு தந்தை பெரியாரும், ஒரு பேரறிஞர் அண்ணாத்துரை போன்றவர்களும் போராடிக் கொண்டுவந்த இந்த சமூக நீதியால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட , மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயமும், மலைவாழ் மக்களும், இன்று நம்முடைய தமிழகத்தில் தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இல்லாவிட்டால் நம்முடைய தமிழகமும், இன்று பீகாரைப் போலவோ, உத்திரப் பிரதேசம் போலவோ அல்லது மத்தியப் பிரதேசம் போலவோ அல்லவா இருந்திருக்கும்.. ஒரு குழந்தை ஏணியில் ஏறுவதற்கு நான்கு படிகள் வழி காட்டினால் போதும் . ஒவ்வொரு முறையும் ஏணி முழுவதும் ஏற்றிவிட வேண்டியதில்லை. அந்தக் குழந்தையும்கூட அதை விரும்பாது. ஒரு எல்லைக்கப்பால் கையைத் தட்டிவிட்டு, சுயமாக நின்று தன் வல்லமையை நிரூபிக்கவே விரும்பும். ஒரு மாணவர் தடையற கல்வி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த சமூக நீதியைக் கொண்டு வர வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கலாம். அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு உயர்ந்த நிலைக்கு வர வேண்டியது அந்த மாணவனின் கடமையல்லவா? பதவி உயர்வு என்று வரும் வேளைகளிலேனும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் சில சலுகைகளை வழங்குவதில் பிரச்சனை எழாமல் இருக்கலாம். ஆனால் தன் வல்லமையை நிரூபித்து சில முக்கியமான பொறுப்புகளைப் பெற வேண்டிய தருணத்தில் இது போன்று இலவசமாக வரும் பதவிகள் பயன் தராது. திறமையற்றவர்கள், இது போன்ற வாய்ப்புகளின் மூலம் முக்கியமான பொறுப்புகளில் போட்டியிடும்போது, திறமையுள்ள ஒருவரின் சேவையை இழக்க வேண்டி வரும் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. இதனால் நம் நாட்டின் முன்னேற்றப் பாதையில் தொய்வு ஏற்படவும் வாய்ப்பு உண்டாகலாம். சமீப காலங்களில் மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றே கல்லூரியில் நுழைகிறார்கள். இன்று அரசு அறிவித்திருக்கக்கூடிய மருத்துவத் துறையின் பணியிடங்களை நிரப்பும் ஆணை தவிர்க்க முடியாததொன்று. உயிர் காக்கும் உயரிய பொறுப்புகளுக்கும், இந்த சமூக நீதி என்ற ஒரு கருத்தை முன்வைப்பது உடன்பாடானது அல்ல. திறமை இருப்பவர்களுக்கு மட்டுமே அந்தந்தப் பொறுப்புகள் வழங்கப்படுதல் முறையாகும். அவசரமாக மருத்துவம் பார்க்க வேண்டிய நேரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றெல்லாம் பார்த்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட முடியாது. திறமை இருப்பவர்களிடம் மட்டுமே நம்பி அந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியும் என்பதே யதார்த்தம். மருத்துவர்களுக்காகவும், மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களுக்காகவும் அரசு நிர்ணயித்துள்ள ஊதியங்களைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சிகிச்சைக்காக தனியார் மருத்துவரிடம் செல்லும் போது நாம் கொடுக்கும் கட்டணம் எவ்வளவு அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயிக்கப்படுமேயானால் தங்களுடைய அதிகப்படியான வருமானத்திற்காக அவர்கள் பகுதி நேர மருத்துவமனையை நாட வேண்டிய கட்டாயம் இருக்காது. ஆகவே இதைத் தவிர்த்து மக்கள் உயிர் காக்கும் பொறுப்புகளில் வர இருப்பவர்களுக்கு ஒரு நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். எந்தத் துறையாக இருந்தாலும், குறிப்பாக மருத்துவத் துறையில் ஆண், பெண் தாழ்ந்தவன், உயர்ந்தவன், பிற்படுத்தப்பட்டவன் என்ற பாகுபாடுகளைக் களைந்து திறமை உள்ளவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அத்துறையின் முன்னேற்றத்திற்கு வழிகோலுவதாக அமையும்.

    Share
  • குவைத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!

    பர்வத வர்தினி

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    குவைத்தில் என் கணவர் பணிபுரியும் கல்ஃப் ஸ்பிக் ஜெனரல் டிரேடிங் அண்டு காண்டிராக்டிங் கம்பெனி (Gulf Spic General Trading & Contracting Co.) வெகு விமரிசையாக புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்​வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் ​தேதி மா​லை முதல் புத்தாண்டு துவங்கும் ​நேரமாகிய இரவு 12 மணி வ​ரை அற்புதமான கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை அந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வா​றே இவ்வாண்டும் சிறப்பான நிகழச்சிகள் நடந்​தேறின.

    புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளின் ஆரம்பக்கட்டமாக ​சென்ற வாரம், நிறுவனத்தில் பணிபுரி​வோரின் குழந்​தைகளுக்கான பல்​வேறு ​போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்று முதல் ஆறு வயதிற்கான குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் ​​போட்டியும், ஏழு முதல் பத்து வயது குழந்தைகளுக்கான ஓவியப் ​போட்டியும், ​மைண்ட் ​மேப்பிங் (Mind Mapping)​போட்டியும் நடத்தப்பட்டன. ​மேலும் பத்து முதல் பதினான்கு வயது பிள்ளைகளுக்கு குரூப் டிஸ்கஷன் (Group Discussion), வினா விடை​ (Quiz) போட்டிகளும் நடத்தப்பட்டன. இவற்றைத் தவிர பல்​வேறு வி​ளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

    Picture4

    வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியப் ​போட்டி

    டிசம்பர் 31 அன்று கா​லை நிறுவனத்தில் பணிபுரி​வோரின் குடும்பத்தினருக்கான ‘பழைய ​தே​வையற்ற ​பொருட்க​ளைக் ​கொண்டு உருவாக்கும் ​கைவி​னைப் பொருட்களு’க்கான ​போட்டி, முக்கியமாக பெண்களுக்கான​ வெஜிடபிள் கார்விங் (Vegetable carving) ​போட்டி மற்றும் ரங்​கோலி ​கோலப் ​போட்டிகளும் நடத்தப்பட்டன.

    Picture2

    ​கைவி​னைப் ​பொருட்கள் ​போட்டி

    Picture3

    ​வெஜிடபிள் கார்விங் ​போட்டி

    Picture1

    ரங்​கோலி ​கோலப் ​போட்டி

    அன்று மா​லை புத்தாண்டு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடனும் கடவுள் வாழ்த்துடனும் இனி​தே துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கான மாறு ​வேடப்​போட்டி (Fancy dress competition) நடத்தப்பட்டது.  குழந்தைகள், ஆண்டாளாக, அர்த்தநாரீஸ்வரராக, திருநாவுக்கரசராக, கண்ணகியாக, பட்டாம்பூச்சியாக, கண்ணனாக, சரஸ்வதியாக, வாழைப்பழமாக பல்வேறு வேடங்களில் வந்து பார்வையாளர்களை பரவசமாக்கினர்.

    Picture5

    மாறு​வேடப்​ போட்டி  மற்றும் க​லை நிகழ்ச்சிகள்

    பின்னர் குழந்​தைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், சிறு நாடகங்களும் (Skit), நிறுவன ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகளும் பார்​வையாளர்க​ளை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

    கலை நிகழ்ச்சிகளுக்குப் பின், வந்திருந்த அனைவருக்கும் ருசியான இரவு உணவு பஃ​பே மு​றையில் வழங்கப்பட்டது. வயிற்றுக்கும் உணவிட்டு​ உடனே செவிக்கும் உணவிட்டனர்; ஆம்… அந்நிறுவனத்தின் இசைக்குழு நடத்திய இன்னி​​சைக் கச்​சேரி ​​கேட்​போ​ரை ​மெய்மறக்கச்​ செய்தது.

    Picture6

    க​லை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னி​சை நிகழ்ச்சி

    நிகழ்ச்சிகளின் இ​டையி​டை​யே​ போட்டிகளில் ​வென்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பிறகு நிறுவனத்தின் ​த​லைவர் (Chairman) அவர்களின் வாழ்த்து​ரை​யை ​நிதி​ மேலாளர் (Director – Finance) அவர்கள் வாசித்தார்.

    சரியாக இரவு 12 மணிக்கு குழந்​தைகள் பு​டை சூழ ​கேக் ​வெட்டிப் புத்தாண்டு ​கொண்டாட்டத்​தை நி​றைவு ​செய்தனர். 700க்கும் ​மேற்பட்ட பார்வையாளர்கள் ஒருவருக்​கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்​ கொண்டனர்.

    புதிய ஆண்டு வாழ்வின் புதிய ​மைல்கற்​க​ளை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடனும் கலை நிகழ்ச்சிகளைக் கண்ட பரவசத்துடனும் அ​னைவரும் வீடு திரும்பி​னோம்.

    Share
  • விகர்ண கீதை

    1998 ஓம் சக்தி தீபாவளி மலரில் வெளிவந்த இந்த என்னுடைய படைப்பை வல்லமை வாசகர்களுக்கு மறு பகிர்வாக வெளியிடுகிறேன்.-கோதண்டராமன்.  

     

    விகர்ண கீதை

          போர் தவிர வேறு வழி இல்லை என்று ஆன பிறகு பாரதப் போருக்கு நாள் குறித்தாகி விட்டது. இரு தரப்பு சேனைகளும் அணி வகுத்து நிற்கின்றன. தலைவர்கள் தங்கள் தங்கள் சங்குகளை முழங்கி தாங்கள் ஆயத்தமாக இருப்பதை அறிவித்து விட்டார்கள். அர்ஜுனனின் தேர் மட்டும் விரைந்து வந்து நடுவில் நிற்கிறது. எதிரி சேனையையும் தன் சேனையையும் ஒரு முறை நோட்டம் விட்டு விட்டு அர்ஜுனன் தன் தேரோட்டி கண்ணனிடம் ஏதோ கேட்கிறான். இவன் பதில் சொல்ல அவன் கேட்க நீண்ட நேரம் உரையாடல் நடக்கிறது. அதன் பின் அர்ஜுனனும் தன் சங்கை ஊதித் தான் போருக்கு ஆயத்தம் ஆகி விட்டதை அறிவிக்கிறான்.

            அப்பொழுது தருமபுத்ரன் தன் ஆயுதங்களையும் கவசத்தையும் கழற்றி வைத்து விட்டு விடுவிடென நடந்து எதிரி சேனையின் முன்னிலையில் நின்று கொண்டிருந்த பீஷ்மரையும் துரோணரையும் சல்லியரையும் வணங்குகிறான். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக, உனக்கு வெற்றி நிச்சயம் என்று ஆசீர்வதிக்கின்றனர்.

            திரும்பி வந்த யுதிஷ்டிரன், எங்களை விரும்புகிறவர்கள் கௌரவ சேனையை விட்டு வர விரும்பினால் வரலாம் என்று உரத்த குரலில் அறிவிக்கிறான்.

            அப்பொழுது துரியோதனின் மாற்றாந்தாய் மகனான யுயுத்சு தன் சேனைகளை அழைத்துக் கொண்டு பாண்டவர் பக்கம் போய்ச் சேருகிறான்.

    இது வரை பார்த்தது, வியாச பாரதத்தில் உள்ளபடி.

    இனி வருவது என் கற்பனை.

    ———————————————————————–

          கண்ணனும் அர்ஜுனனும் போர்க் களத்தின் நடுவில் பேசிக் கொண்டு நீண்ட நேரம் கடத்தி விட்டனர். உற்சாகத்தோடு போர்க் களம் வந்த துரியோதனன் போரையும் துவக்க முடியாமல் வேறு வேலைகளும் செய்ய முடியாமல் நின்றான். எப்பொழுதும் செயலாற்றிக் கொண்டே இருக்கும் இயல்புள்ள அவனுக்கு இந்த வெறுமை உள்ளத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியது.

          யுதிஷ்டிரன் ராஜ தந்திரத்தோடு எதிர் அணியில் நிற்பவரிடம் ஆசி பெற்றதையும் யுயுத்சுவைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதையும் பார்த்தான் துரியோதனன். அவனது உள்ளத்தில் மேலும் கலக்கம் உண்டாயிற்று. இந்த யோசனைகள் நமக்குத் தெரியாமல் போய் விட்டனவே. நமது அணியில் உள்ள நமது தாத்தாவை நான் இது வரை ஒரு முறை கூட வணங்கி ஆசி கேட்டதில்லையே. தோற்று விடுவேனோ என்று சிந்திக்கத் தொடங்கினான்.

          சிந்தனையில் மூழ்கிக் கிடந்த அவனை அழைத்துப் பீஷ்மர் கேட்கிறார், “துரியோதனா, போரை ஆரம்பிக்கலாம் அல்லவா?”

    துரி- தாத்தா, ஒரு நிமிஷம். இந்தப் போரில் நாம் ஜெயித்து விடுவோம் அல்லவா?

    பீஷ்- இது என்னடா, இந்த நேரத்தில் இப்படி ஒரு சந்தேகம் உனக்கு?

    துரி- இல்லை தாத்தா, நிஜமாகத் தான் கேட்கிறேன். இந்தப் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

    பீஷ்- எங்கும் எல்லாப் போர்களிலும் இறுதி வெற்றி தர்மத்துக்குத் தான்.

    துரி- இந்தப் போரில் தர்மம் யார் பக்கம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

    பீஷ்- இது என்ன புதுக் கேள்வி? பாண்டவர்கள் பக்கம் தான் தர்மம் உள்ளது என்பதை நான் உனக்கு எத்தனை சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறேன்?

    துரி- அப்படியானால் நாம் தான் தோற்கப் போகிறோமா? தோற்கப் போகிறோம் என்பது தெரிந்தே சண்டை செய்ய வந்திருக்கிறீர்களா? முடிவு முன்னதாகத் தெரிந்து விட்டதால் சண்டை செய்வது போலப் போக்குக் காட்டி விட்டுப் போகப் போகிறீர்களா?

    பீஷ்- துரியோதனா, அடக்கு வாயை. நான் சுத்த வீரன் என்பதை இந்த ஐம்பத்தாறு தேச மன்னர்களும் அறிவார்கள். போக்குக் காட்ட நான் ஒன்றும் கோழை அல்ல. சிரஞ்சீவி வரம் பெற்ற நான் உயிருக்குப் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

    துரி- மன்னிக்க வேண்டும் தாத்தா. தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும் சண்டைக்கு ஆயத்தமாகிறீர்களே என்பதைத் தான் குறிப்பிட்டேன்.

    பீஷ்- துரியோதனா, எத்தனை நல்ல புத்தி சொன்னாலும் உனக்கு ஏறவில்லை. இந்தப் போரை இழுத்துக் கொண்டு விட்டிருக்கிறாய். ஆனாலும் நான் என் கடமையைச் செய்தாக வேண்டும். உன் வீட்டுச் சோற்றைத் தின்றதற்கு நான் வாலாட்டித் தான் ஆக வேண்டும்.

    துரி- இத்தகைய மன நிலையில் உங்களால் முழு மனத்துடன் கடமையைச் செய்ய முடியுமா?

    பீஷ்- பழைய கேள்வியையே மென்மையான வார்த்தைகளால் கேட்கிறாய். நான் கடமை செய்யும் போது என் சொந்த விருப்பு வெறுப்பு, லாப நஷ்டம், வெற்றி தோல்வி பற்றி எண்ணுவதில்லை. கண்ணனின் கொள்கையும் அப்படித் தான். இத்தனை நேரம் நட்ட நடுவில் தேரை நிறுத்தி விட்டு அர்ஜுனனுக்குக் கண்ணன் இதைத் தான் சொல்லி இருப்பான் என ஊகிக்கிறேன்.

    துரி- சரி தாத்தா. நான் இப்பொழுது போரை நிறுத்தி விடலாம் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா?

    பீஷ்- என் பேரனுக்கு புத்தி வந்ததே என்று மகிழ்வேன். ஆனால் உன் இயல்பு அது அல்ல, நீ அந்த வழியில் போகமாட்டாய் என்பதும் நான் அறிவேன்.

    துரி- உண்மையிலேயே தாத்தா, இப்பொழுது அப்படி ஒரு எண்ணம் என் மனதில் நிழலாடுகிறது. இத்தனை நாள் பாண்டவர்களுக்குத் துன்பம் கொடுக்க முயன்று முயன்று மூக்கைத் தான் உடைத்துக் கொண்டேன். இன்று இத்தனை பேரை பலிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறேன். இத்தனை பேரும் இறந்தாலும் என் கட்சி ஜெயிக்கப் போவதில்லை. என் ஒருவனுடைய வீம்புக்காக, தெரிந்தே மரணப் பாதையில் பதினெட்டு அட்சௌகிணிப் படைகளும் இறங்கி விட்டன. இத்தனை பேரைப் பலி கொடுப்பதை விட நான் ஒருவன் அடங்கிப் போகலாம் என்று தோன்றுகிறது.

    பீஷ்- அது நடவாத காரியம். நீ சமாதானமாகப் போக நினைத்தாலும் உன் தம்பிகள் உன்னைச் சும்மா விடமாட்டார்கள்.

    துரி- இல்லை, என் தம்பிகள் அத்தனை பேரும் நல்லதோ கெட்டதோ நான் எது சொன்னாலும் அதற்குக் கட்டுப்படுவார்கள்.

    பீஷ்- குழந்தாய், இதுவரை எந்த நல்ல செயலும் நீ செய்ததில்லை. எனவே உன் தம்பிகளின் சுபாவத்தின் மறு பக்கத்தை நீ அறியவில்லை. இன்று நீ நல்லவன் ஆகி விட்டால் அவர்களும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள் என்று எண்ணுவது பேதைமை.

    துரி- சரி தாத்தா. நான் மற்றவர்களைக் கலந்து வருகிறேன். அது வரையில் போரைத் துவக்க வேண்டாம்.

    ——————————————————————————–

     துரி- ஆசார்யரே, எனக்கு அவசரமாக ஒரு ஆலோசனை சொல்ல வேண்டும். இந்சப் போர் நடந்து தான் ஆக வேண்டுமா?

    துரோணர்- இது என்ன, சில நிமிஷங்களில் போர் துவங்க இருக்கும்போது இப்படி ஒரு கேள்வி? மாதக் கணக்கில் போருக்குத் தயார் செய்தாயே, அப்பொழுதெல்லாம் உனக்குத் தோன்றவில்லையா?

    துரி- இல்லை ஆசார்யரே. பதினெட்டு அட்சௌகிணி என்பது எவ்வளவு பெரியது என்பதை இப்பொழுது தான் கண்கூடாகக் காண்கிறேன். இத்தனை பேர் பலி ஆவதற்கு என் பேராசை தானே காரணம்?

    துரோ- போர் புரிவது அரசர்களுடைய ஸ்வதர்மம். இதில் போய்ப் பலி கிலி என்றெல்லாம் பிதற்றுவது சரியாக இல்லை.

    துரி- அரசர்களுக்குத் தான் பலி கொடுப்பதும் பலி ஆவதும் ஸ்வதர்மம். பிராமணராகிய உங்களைப் பலி கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்களும் உங்கள் மைத்துனரும், மகனும் போர்க்களத்தை விட்டு நீங்கி விட்டால் கூட என் மனம் மாறலாம். ஆனால் நான் போருக்குத் துணிந்ததே உங்களைப் போன்ற பெரு வீரர்களின் துணையை நம்பித் தான்.

    துரோ- துரியோதனா, போர்க் களத்திற்கு வந்த உடனே போர் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த மோசக்காரக் கண்ணன் அர்ஜுனனுக்கு ஏதோ அறிவுரை கூறுவது போலப் பாசாங்கு செய்து நேரத்தைக் கடத்தி விட்டான். காத்திருந்த அந்த நேரத்தில் உன் மண்டைக்குள் விநோதமான எண்ணங்கள் குடியேறிவிட்டன. போ, உன் இடத்துக்குப் போ, போரைத் துவக்கு.

    துரி- சற்றுப் பொறுங்கள், குருதேவா. கிருபாசாரியரிடம் ஒரு வார்த்தை கேட்டு வந்து விடுகிறேன்.

    ——————————————————————————

    துரி- கிருபாசார்யரே, போரை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கிழவர்கள் என் கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    கிருபர்- துரியோதனா, அவர்கள் சொன்ன கருத்தை அன்று நீ ஏற்க மறுத்தாய். இபிபொழுது அவர்கள் மறுப்பதாகக் குறைப்படுகிறாய். போ, லக்னம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிஷங்களே உள்ளன. அதற்குள் உன் சங்கை ஊதிப் போரைத் துவக்கு.

    துரி- என்ன ஸ்வாமி, பெரிய லக்னம்? நான் தோற்பது உறுதி என்று தாத்தா சொல்லி விட்டார். எந்த லக்னத்தில் துவக்கினால் என்ன?

    கிரு- ஓகோ, தோல்வி நிச்சயம் என்றதும் மனக்கலக்கமோ?

    துரி- போரில் வெற்றி தோல்விகள் சகஜம் தான். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. நான் இப்போரில் இறந்து விடுவேன் என்று என் உள்ளுணர்வு கூறிக் கொண்டிருக்கிறது. இத்தனை நாள் தான் பாண்டவர்களுக்குத் தீமை விளைவித்தேன். சாகப் போகும் சமயத்திலாவது அவர்களுக்கு ராஜ்யத்தை விட்டுக் கொடுத்து விட்டால்  இத்தனை பேரைப் பலியிட்ட பாவமாவது இல்லாமல் போய்ச் சேருவேன்.

    கிரு- துரியோதனா, நீ சுத்த வீரன் அல்லவா? உனக்கு மரண பயம் உண்டாகலாமா? போ, உன்  வீரத்தைக் காட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. வாழ்நாள் முழுவதும், அர்ஜுனனை மெச்சுகிறாரே என்று துரோணரைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருந்தாய். இன்று அந்தத் துரோணரே அர்ஜுனனை அம்புகளால் துளைக்கப் போகிறார். நீ சாவதானாலும் அந்தக் காட்சியை ரசித்துவிட்டு மகிழ்ச்சியுடன் போ.

    ————————————————————————

    துரி- கர்ணா, நீ தான் அன்று முதல் என் அந்தரங்க நண்பன். என் மனதை முழுமையாக அறிந்தவன். இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கத்திற்கு நீ தான் ஆறுதல் சொல்ல வேண்டும்.

    கர்ணன்- துரியோதனா, போர் அவசியமா என்று சிந்திக்கிறாய். அவசியம் தான். பிறந்தது முதல் அர்ஜுனனிடம் பட்ட அவமானங்களுக்கு எல்லாம் பழி தீர்க்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறாயே என்று நான் மகிழ்கிறேன். அதற்கு இடம் இல்லாமல் செய்து விடாதே.

    துரி- நீ தனிப்பட்ட முறையில் அர்ஜுனனிடம் ஏதேனும் செய்து கொள். அதற்காகப் பதினெட்டு அட்சௌகிணிப் படைகளைப் பலியிட உனக்கு உரிமை இல்லை. எனக்கும் இல்லை.

    கர்- யாரையும் நாம் வஞ்சகமாகக் கொன்று விட இங்கு அழைக்கவில்லை. போர் என்றால் சாவு நிச்சயம் என்று தெரிந்த வீரர்கள் மட்டும் தான் இங்கே வந்திருக்கிறார்கள். அங்கே பார், எப்பொழுதும் அகிம்சை, சத்தியம் என்று பேசி வந்த அந்த வழவழத் தருமனே போருக்கு ஆயத்தமாக நிற்கிறான். உனக்கு எப்படி இந்த மனக் கலக்கம் வநதது? காலையில் போர்க்களத்திற்கு வந்த போது உற்சாகமாகத் தானே வந்தாய்? அர்ஜுனனையும் பீமனையும் சேர்ந்து பார்த்ததும் பயந்து விட்டாயா? ஒன்றை மட்டும் மனதில் கொள். ஆயிரம் அர்ஜுனர்கள் வந்தாலும் இந்தக் கர்ணன் உள்ள வரை உன் மேல் சிறு கீறல் விழ அனுமதிக்க மாட்டான். விரைவில் உன் இடத்துக்குப் போ. என் கைகள் தினவு எடுக்க ஆரம்பித்து விட்டன. நீ போரை ஆரம்பிக்காவிட்டால் நான் பீஷ்மருக்குச் செய்த சபதத்தை மீறி இன்றே வில் ஏந்துவேன். சில நொடிகளில் என் பாணம் புறப்பட்டு விடும், போ.

    ——————————————————————————-

    துரி- விகர்ணா, நீ தான் என்றைக்குமே தர்மம் நியாயம் என்று பேசுபவன். அப்பொழுதெல்லாம் நீ பேசியதை நான் மதிக்கவில்லை. சிறிய பையன் என்று அலட்சியப்படுத்தினேன். பிரச்சனையின் முழு ஆழத்தையும் புரிந்து கொண்டவன் நீ ஒருவன் தான் என்று எனக்கு இப்பொழுது தான் புரிகிறது. இந்தப் போர் அநியாயமானது தானே?

    விகர்ணன்- ஆம். அநியாயமானது தான்.

    துரி- இப்பொழுது நினைத்தால் கூட நாம் போரை நிறுத்தி விடலாம் அல்லவா? இது வரை செய்த அநியாயங்கள் போதும். இந்தப் பெரிய அநியாயத்தைத் தடுத்து விடலாம் அல்லவா?

    விக- அண்ணா, என்ன உளறுகிறீர்கள். ஐம்பத்தாறு தேச மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பி மாதக் கணக்கில் ஏற்பாடு செய்து விட்டு இப்போது போரை நிறுத்தவா? என்ன ஆயிற்று உங்களுக்கு?

    துரி- ‘இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை, திருத்திக் கொள்ளுங்கள் அண்ணா’ என்று நீ என்னிடம் பலமுறை மன்றாடியிருக்கிறாய். விகர்ணா, எனக்குக் காலம் கடந்து இன்று தான் புத்தி வந்திருக்கிறது. இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை. திருத்திக் கொள்கிறேன். போரை நிறுத்தி விட முடிவு செய்துள்ளேன்.

    விக- நிறுத்தி விட்டு………….?

    துரி- படைகளைத் திருப்பி அனுப்புவோம். பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்யம் கொடுப்போம். சமாதான சக வாழ்வைத் துவக்குவோம்.

    விக- உங்களுக்குத் தான் பைத்தியம் பிடித்திருக்கிறது. பாண்டவர்கள் பைத்தியங்கள் அல்ல. பயந்து போய்த் தான் போரை நிறுத்தினீர்கள் என்று உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வார்கள். பாதி ராஜ்யத்துடன் திருப்தி அடையாமல் முழுவதையும் பறித்துக் கொள்வார்கள்.

    துரி- பறித்துக் கொள்ளட்டும். கவலை இல்லை. இத்தனை நாள் ஆண்டாகி விட்டது. இனி எனக்கு ஒரு கிராமம் போதும். நான் தான் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமம் கொடுக்க மறுத்தேன். யுதிஷ்டிரன் அப்படிச் செய்ய மாட்டான். நமக்கு நூறு கிராமங்கள் கொடுப்பான். அதிலேயே திருப்தி அடைந்து என் மீதி வாழ்நாளை அமைதியாகக் கழிக்கப் போகிறேன்.

    விக- அமைதியா? அது உங்கள் ஜாதகத்திலேயே இல்லையே அண்ணா. கிராமத் தலைவன் என்ற முறையில் கப்பத்தை ஏந்திக் கொண்டு தருமபுத்திரன் காலடியில் வைத்து விட்டுக் கை கட்டி நிற்க முடியுமா உங்களால்? அந்த அவமான வாழ்க்கையில் உங்கள் மனம் நிம்மதி அடையுமா?

    துரி- அது கூட எனக்குத் தேவை இல்லை. விகர்ணா, நான் துறவி ஆகி விடுவேன். என் வயிற்றுக்குத் தேவையானதைப் பிட்சை எடுத்து உண்பேன். எனக்கு வேறு ஆசைகளும் இல்லை, அதனால் வரும் துன்பங்களும் இல்லை. அப்பொழுது நான் நிம்மதியாயிருப்பதில் என்ன தடை இருக்க முடியும்?

    விக- உங்கள் ஸ்வதர்மத்துக்கு மாறான பேச்சுகளில் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

    துரி- அந்தப் பிராமணரும் ஸ்வதர்மம் ஸ்வதர்மம் என்று அடித்துக் கொள்கிறார். என்னடா பெரிய ஸ்வதர்மம்? அரச குலத்தில் பிறந்து விட்டால் போர் செய்து தான் ஆகவேண்டுமா? ஜனகர் முதலான ராஜாக்கள் அரச பதவியில் இருந்து கொண்டே துறவி போல் வாழவில்லையா?

    விக- அண்ணா, ஸ்வதர்மம் என்றால் குலத் தொழில் என்று பொருள் அல்ல.

    துரி- பின் என்னவாம்?

    விக- மனிதர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இயல்புடன் பிறக்கிறார்கள். ஒரே குலத்தில் பிறந்தவர்களுக்கிடையே ஸ்வபாவத்தில் வேறுபாடு உள்ளது. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் இடையேயும் இதைப் பார்க்கலாம். இந்த ஸ்வபாவத்தை ஒட்டிச் செய்யப்படும் வினைகள் தான் ஸ்வதர்மம்.

    துரி- நேற்று வரை நான் மூர்க்க ஸ்வபாவம் உடையவனாக இருந்தேன். இன்று என் மனம் மாறி விட்டது. அதற்கேற்ற தொழிலை நான் செய்ய முடியாதா? கூடாதா?

    விக- உங்கள் ஸ்வபாவம் மாறாது அண்ணா. உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே மாறுவதில்லை. மற்றவர்களைப் பார்த்து நாம் அது போலச் செயற்கையாக போலித்தனமாக வேஷம் போட்டுக் கொள்கிறோம். அது நிலைக்காது. இப்பொழுது நீங்கள் பேசும் பேச்சு அது போன்று போலித் தனமானது தான்.

    துரி- இல்லை, விகர்ணா. என் மனம் முற்றிலும் ஆசைகளை இழந்து விட்டுக் கருணையால் நிரம்பி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நான் தருமபுத்திரன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு விட வேண்டும் என்று துடிக்கிறது. இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை தான் போலி. அந்தப் பாசி விலகி என் உண்மையான மனம் இப்பொழுது தான் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

    விக- எது தெளிவு, எது குழப்பம் என்பதே அறியாத மன நிலையில் இருக்கிறீர்கள் அண்ணா. இதோ உங்களைத் தெளிய வைக்கிறேன். நீங்கள் துறவி ஆகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். பிட்சை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு ஊர் ஊராக அலைந்து மக்களுக்குத் தர்மத்தை எடுத்துச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மனதில் யார் மேலும் கோபம் துவேஷம் இருக்காது அல்லவா?

    துரி- நிச்சயம் இருக்காது.

    விக- அப்படி அலைந்து கொண்டிருக்கும்போது ராஜாவான தர்மபுத்திரன் தங்களைப் பிட்சை ஏற்றுக் கொள்ளக் கூப்பிட்டு அனுப்புவான். அவன் துறவிகளிடமும் தபசிகளிடமும் பெருமதிப்பு உடையவன் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி அவன் மரியாதையாகக் கூப்பிடும்போது நீங்கள் அவனது அரண்மனைக்குப் போவீர்கள் அல்லவா?

    துரி- நிச்சயம் போவேன். எனக்கு அவன் மேல் கோபம் வெறுப்பு எதுவும் இல்லை.

    விக- உங்களுக்கு உணவு பரிமாறப் பாஞ்சாலி வருவாள். உங்களுக்குத் தான் மனம் மாறி விட்டதே தவிர அவள் மாற்றிக் கொள்ள மாட்டாள். “என்ன மைத்துனரே சௌக்கியமா?” என்று ஏளனமாகக் கேட்பாள். கேட்டுக் கொண்டு சும்மா இருப்பீர்களா, அண்ணா?

    துரி- ஏளனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையை நான் அடைந்து விட்டேன்.

    விக- அப்பொழுது பாஞ்சாலி சொல்வாள், “நான் இன்னமும் விரித்த கூந்தலோடு தான் நிற்கிறேன். போர் இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்கள் ரத்தத்தைத் தடவித் தான் கூந்தல் முடிப்பேன் என்று சபதம் செய்து விட்டேன். என் கணவர்கள் அதை எடுத்துத் தர மறுத்து விட்டார்கள். இப்பொழுது நான் அதை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுக் கையில் கத்தியுடன் வருவாள். சுத்த வீரனாகிய நீங்கள் ஒரு பெண் கையால் குத்துப் படவேண்டுமா? மார்பைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா?

    துரி- போதும் விகர்ணா போதும். ஆ, அந்தப் பாஞ்சாலி! அவள் சிரித்த சிரிப்பு இன்னமும் என் மனதில் ஆழமான காயமாக இருக்கிறது. அவள் கையால் குத்தப்பட்டுச் சாவதை விட பீமன் கதைக்குப் பலியாவதையே நான் விரும்புகிறேன். போர் தொடங்கட்டும். சங்குகள் முழங்கட்டும். என் அறிவுக் கண்ணைத் திறந்து என் கலக்கத்தைப் போக்கினாயே, விகர்ணா, உனக்கு நன்றி.

    விக- இப்பொழுது தான் அண்ணா நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள். உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டு விட்டீர்கள். உங்கள் இயல்புப்படி போர் புரிந்து மரணம் அடையுங்கள். அதனால் உங்களுக்குப் புகழே ஏற்படும். மற்றவர் தர்மத்தைப் பின்பற்றித் துறவியானால் உங்களுக்கு அவமானம் தான் ஏற்படும். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப் படாமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள். வாழ்க உங்கள் புகழ்.

    Share
  • இறந்தவர்களின் நினைவுகளூடே ஒரு பயணம்

    இறந்தவர்களின் நினைவுகளூடே ஒரு பயணம்:

     

    காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் “ தனிமையின் நூறு ஆண்டுகள் நூலை முன்  வைத்து..

     

                                      சுப்ரபாரதிமணியன்

    “ மனிதர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்யும் போது இலக்கியம் சரக்காகப் போகும் இந்த உலகம் நாசமாகப் போகட்டும் “  புயேந்தியா வம்சத்தின் ஆறாவது தலைமுறையைச் சார்ந்த ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது. 100 வருடங்களாக அலைந்து திரிகிறவன் நடப்பியலை எழுதி வைக்கிறான்.  அது லத்தீன் மொழிப் புத்தகமாக இருக்கிறது.  கடைசித்தலைமுறை வெளியிலிருந்து வந்தவன் குடும்பத்தின் வரலாற்றை எழுதியிருப்பதைச் சொல்கிறான். திரைப்படம் என்ற தொழில் நுட்பத்தைக் கூட யதார்த்தம் அற்ற கற்பிதங்கள் நிறைந்ததாக கண்டு நிராகரிக்கிற அவர்களின் இலக்கியம் குறித்த  வாக்குமூலம் முக்கியமானதே.

      மகோந்தா எனும் சிற்றூரின் வரலாற்றுக் கதை இந்தநாவல்.. நான்கு மலைகளுக்கு நடுவில் அமைந்த ஊர். புயேந்தியா என்பவரின் தலைமையிலான  ஒரு குடும்பம்.. வெளியுலகத்துடன் தொடர்பேதுமின்றி வாழும் வாழ்க்கை விரிகிறது. தனிமை படுத்தப்பட்ட உலகம் .  அந்த ஊருக்கு அவ்வப்போது வந்து போகும் நாடோடிகள், புதிய விசயங்களைக் கொண்டு வருகிறார்கள்.. . புயெந்தியாவுக்கு புதியவை மீது  ஆர்வம் அதிகம்.  அவருக்கு பனிக்கட்டி தொலைனோக்கிக் கருவிகள் அறிமுகமாகின்றன. புதியவை பற்றி தங்கள் தனிமைமீறி ஈடுபாடுகொள்பவர்களாக அவரின் குடும்பத்தினர் அமைகின்றனர்..மெல்ல. பிற ஊர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஊர்கள் சேர்ந்து நாடாகிறது. .  மகோந்தோவில் உள் நாட்டுக்கலவரங்களும்  தொடர்ந்த மரணங்களும்  நிகழ்கின்றன..ஆட்சி மாற்றங்கள்… அக்குடும்பத்தினைச் சார்ந்த மூர்க்கமான ஒருவர் ஒருவர் சர்வாதிகாரியாகிறார்.  மரண தண்டனையில் சாகிறார்.. அடுத்து வரும் மேயர் ஒருவரும்  கொல்லப்படுகிறார். அவருக்குப் பின் கலகம் முடிவுக்கு வருகிறது; சமாதான உடன்பாடுக்குப் போகிறார்கள். தவிர்க்க இயலாத, தவிர்க்க முடியாத வகையில் வரலாற்றின் தொடர்ச்சியாக வாழும் ஆர்லினோ மக்கள் இதில் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    புயேஃதியா குடும்பத்தின்  ஆறு தலைமுறைகளின் வாழ்வும் வீழ்ச்சியும் மகோந்தா என்ற புனைவு  நகரக் கட்டமைப்போடு விவரிக்கப்பட்டிருக்கிறது. லத்தின் அமெரிக்காவின் கலாச்சார அம்சங்கள் நாவலின் எடுத்துரைப்பில் பின்னிப் பிணைந்துள்ளன. காலம் ஒரு வட்டமாய் சுழன்று பழைய அம்சங்களை நிர்மூலமாக்கி நிற்கிறது.

     இதில் வரும் குறீயீட்டு அம்சங்கள்  நாவலை இன்னொரு படிம நிலைக்குக் கொண்டு செல்கிறது. தங்க மீனகள் துள்ளி விளையாடுகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட இரண்டாவது  ஆர்லினோ போர் வாழ்க்கையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு  தாத்தாவுடன் இணைந்து  தங்க மீன்களை உருவாக்குவதில் மூழ்கிப்போகிறான். ஒரு நிலைமைக்கு மேல் போர் என்பது தேவையில்லை. உயிரிழப்புகள் சகித்துக் கொள்ள முடியாததாய் போய் விடுகிறது. தனிமையும் தாத்தாவும் தங்க மீன்களை உருவாக்கப் பயன்படுகிறது.  புதிய உலகத்தின் குறியீடுகளாக புகைவண்டிப் பாதைகள் அமைகின்றன.  புதிய மாற்றங்களுக்கு வழி சொல்கின்றன.  மகோந்தா  நவீன நகரமாக  உருப்பெருகிறது. நவீனம் நரகத்திற்கு  பாதையை இட்டுச் செல்கிறது.  நகரத்திற்கு வெளியே ஒரு வாழைப்பழத்தோட்டம்  நிறுவப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு  வேலை செய்கிறார்கள்  கொத்தடிமைகளாக நடத்தப்படுவதை எதிர்த்து ஐந்தாம் தலைமுறையினர்  போராடுகிறார்கள்.  பழத்தோட்டத் தொழிலாளர்களை விருந்திற்கு அழைத்து  பீரங்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள். புகை வண்டியில் பிணங்களைப் போட்டு கடலில் எறிகிறார்கள்.  மகோந்தா தொத்து வியாதி நகரமாகிறது. மறதி என்ற வியாதி எல்லோரையும் தொத்திக் கொள்கிறது. யாரையும் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. யாரும் நகரத்தை விட்டு வெளியே போக முடிவதில்லை.  வாழைமரங்கள் இரத்தக்கறைகளுடன் அடித்துச் செல்லப்படுகின்றன.  தேடித்தேடி கொலை செய்யப்படுகிறார்கள்.செகுண்டோ தன் தாத்தாவின் சுரங்கத்தில் ஒளிந்து கொள்கிறான். தாத்தாவுடன் சேர்ந்து தங்க மீன்களை உருவாக்குகிறான்.சைக்களோப்பிடியா  மிமி உருவாக்கமும்   முக்கிய நிகழ்வாகிறது. முதலில் சித்திரங்கள் மூலம் சொல்லப்பட்டது. பின்னர் கதைகள் சம்பவங்கள் மூலம் சொல்லிக் கொடுக்கும் நிலை வருகிறது.  மொழி தெரியாததால் தங்களை வெளிப்படுத்த முடியாத நிலை  கடந்து போகிறது.பியந்தியா குடும்பத்தினருக்கு வழிகாட்டிகள் இல்லை.  அடுத்த சந்ததிக்கு மிமியின் அறிவு பயன்படப்போகிறது.

    பூர்வீக இந்தியர்களுக்கும் கறுப்பு அடிமைகளுக்குமான தொடர்பும் லத்தின் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு முந்திய உள்நாட்டுக் கலவரங்களும்ம் தொடர்ந்து காட்டப்பட்டிருகின்றன.அமெரிக்கர்களின் வருகை நவீன ஏகாதிபத்தின் ஆதிக்கமாக அமைகிறது.  வாழைத்தோட்ட உற்பத்திமுறைகளும் அந்த தொழிலாளர்களின் கொடூர கொலைகளும் கொலம்பியாவின் சரித்திர நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட்டவை.வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கமும் சர்க்கரை, காபி, பெட்ரோலியம் போன்றவற்றில் அவர்களின் ஆதிக்கத்தையும் குறிப்பவை. வாழைத்தோட்ட தொழிலாளர்களின் கொலைகள் கொலம்பிய அரசுப் படைகளுக்கும்  பழக்கம்பனிதொழிலாளர்களுக்குமிடையிலான 1928 ம் ஆண்டின் நிகழ்வுகளை மையமாகக் கொண்டிருக்கிறது.  இந்த நாவலின் காலநிகழ்வுகள் புதிய ஏற்பாடு சார்ந்த சொர்க்க பூமியாகத் திகழ்ந்த காலம்,     பின்            அந்த சொர்க்கம் மறதி நோயால் மூழ்கடிக்கப்படுகிறது.  புயந்தியா வம்சத்தைச் சார்ந்த கலப்பு இந்திய வேலைக்கார்களால்  அந்த நோய் கொண்டு வரப்படுகிறது. அந்த இந்தியர்கள்  அமெரிக்காவின் இந்திய மக்களின் பிரதிநிதிகளாக அமைக்கிறார்கள். மறதி வியாதி அரசியல் சமூக சரித்திரங்களையும், மொழியின் சிறப்பையும், யதார்த்தத்தின் முந்திய நிகழ்வுகளையும்  நிராகரிக்கிற குறியீடாக அமைகிறது.

    அரசியல் தளத்தில் ஆக்கிரமிப்புகளும், போர்களும் வன்முறையும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.ஆர்லினோ கர்னல் வெளியேற அர்காடியோ வெற்றி பெருகிறான். போரில் 17 மகன்கள் செத்துப் போகிறார்கள். சமூகத்தில்  நடப்பவை  வெளித்தொடர்பு மூலம் கொண்டு வரப்படுகின்றன,சரித்திரம் திரும்பவும் நிகழ்த்தப்படுகிறது, மனிதர்கள் திரும்பத்திருமப் ஒரே மாதிரியானவர்களாய்  வந்து போகிறார்கள். ஒரே தோற்றம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். பவுதீக ஒற்றுமைகள், நினைவுகளுடன் கூடவே  பலரின் பெயர் ஒரே மாதிரியாகவும் , முன்னோர்களின் பெயர்களைக் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. காலமும் சில சமயம் உறைந்து போகிறது. ( காற்றைப்பார். சூரியனின் ரீங்காரத்தை கேள். நேற்றையும், முந்திய நாளையும் போல் இன்றைக்கும்  திங்கட்கிழமைதான் “ பக்கம் 86 )சிறுமி ரெமேதியோ குழந்தைப் பருவப் பழக்கங்களைத் தாண்டும் முன்பே  பூப்படைந்திருந்தாள் 88 ) சிதைந்து போனவர்கள் தங்களின் மனவுறுதியை இழந்து முற்றிலும் சிதைந்து போய் சுவற்று மண்ணைத் தின்கிறார்கள்   எது யதார்த்தம், எது கறபனை என்பதை கண்டு கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

    இந்த நாவலில் காணப்படுபவர்களில் உடல் பலத்துடன் மூர்க்கத்தனத்துடன்  பலர் இருக்கிறார்கள்.புயெந்தியாவின்  முதல் மகன், உடல் பலத்துடன் இருப்பவன். . சிந்தனை இரண்டாம் பட்சம்தான். அறிவைத் தேடிப் போகிறவர்களாகவும் தனிமைப்படுத்திக் கொண்டவர்களாகவும் பலர் இருக்கிறார்கள் உதாரணமாக அவரின் இரண்டாவது மகன், சமூக நிகழ்வுகளில் அக்கறை கொண்டவனாகவும்  விசித்திரமானவனாகவும் இருக்கிறான்.பெண்கள் நாலைந்து வகையினராக இருக்கின்றனர். முக்கியமாக உருசுலா இகுவாரா. மற்றவர்கள் தனிமையில்  ஞாபகச்சக்தி இழந்தவர்களாக இருக்கும் போது இவள் அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவளாக இருக்கிறாள். குடும்பத்தின் நூறு வருடங்களுக்கு வழி காட்டிக் கொண்டு செல்பவளாக இருக்கிறாள்.

     புயெந்தியாக்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் சாவு., திருமணம், காதல், எல்லாம் விரிவாய் இடம் பெறுகிறது, மாற்றங்களின் அடையாளமாக வாழைத்தோட்டங்கள் காட்டப்பட்டிருகின்றன.அமெரிக்க

    முதலாளித்துவம் சுரண்டலை ஆரம்பிக்கிறது..  சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் வாழைத்தோட்டத்தில் வேலை செய்வோர் ஆளாகிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டு அவர்களின் . உடல்கள் கடலுக்குள் வீசப்படுகின்றன.பிணக்குவியலிலிருந்து தப்பித்து வரும் ஜோஸ் ஆர்கடியோ செகுண்டோ மகோந்தாவிற்குச் திரும்பிச் செல்கிற போது அந்நகரம் படுகொலைகள் பற்றிய எந்த நினைவும் இல்லாமல் அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்தில் அமிழ்ந்து போய் இருப்பதைக் காண்கிறான்.  ஐந்தாண்டுகள் நிற்காத மழைபெய்து . மகோந்தோ உருக்குலைகிறது. வன்முறையும், மக்களுக்கு பயனில்லாத முன்னேற்றமும்  மக்களை அலைக்கழிக்கிறது. புயெந்தியாவின் குடும்பத்தின் சீரழிவு ஊரின் சீரழிவின் ஒரு பகுதியாகக் காட்டப்படுகிறது.

    தனிமைப்பட்டுப்போகிறது. அக்குடும்பத்தில் எஞ்சிய ஒருவர் பழைய சுவடிகளை ஆராய்கிறபோது   நடந்தவை முன்பே எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. புயேந்தியா வம்சத்தின் முதல் நபர் ஹோசே அர்க்காதியோ முதற் கொண்டு  கடைசியாகத் தென்படும் அவுரேலியானோ வரை பெரும்பான்மையான கதாபாத்திரங்கள்  தனிமைக்குள் உழன்று வாழ்க்கையை முடித்துக் கொள்கிறவர்கள் தான். பல கதாபாத்திரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.  ஒரு குறிப்பிட்ட கால அளவை நிகழ்வுகள் கொள்ளாமல் தாறுமாறாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

    . கற்பனையின் உச்சமும்  யதார்த்தமும் கலந்து  உருவாகும் புனைக்கதை காவியத்தன்மை பெருகிறது.. நம்பகத்தன்மையும், நடக்க சாத்தியங்கள் கொண்ட விசயங்களும் புனைவுக்கதையை வெற்றியாக்கும்.  நடப்பு கதை சொல்லலில் மிகையானதாகவும் அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளையும் சேர்த்து வழங்குவது ஒரு வகை எழுத்தாக உருவான கால கட்டத்தின் உச்சமான வெளிப்பாடாக இது விரிகிறது. யதார்த்தம் பழங்கதைகள்,   மரபானத் தொன்மக்கதைகளின் இயைந்த தன்மையில்  புது வெளிப்பாட்டு முறையாக அமைக்கப்பட்டிருக்கிறது. 1940களில் அமெரிக்க மனநிலையை வெளிப்படுத்தவும் யதேச்சையான வெளிபாட்டு முறையாக கால் கொள்ள ஆரம்பித்து மாய யதார்த்தமாக உருக்கொண்டது இந்நாவலில் பரிணமித்துள்ளது. பின்நவீனத்துவ நவீனவாதிகளும் பின் காலனிய எழுத்தாளர்களும் சரித்திரத்தை மறு உருவாக்கம் செய்ய மாய யதார்த்த எழுத்து பயன்பட்டிருக்கிறது.

    நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில்  மார்கெஸ் உருவாக்கியுள்ள முறை சிறப்பு மிக்கது. நினைவோடை உத்தி சார்ந்து இயங்குவது விலகுவதும் மாயத்தன்மையை இணைப்பதும் லாவகமாகச் செய்யப்பட்டிருக்கிறது. இதில், சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளை இணைந்து கொள்கின்றன..  அவருடைய ஆரம்ப புதினங்கள்   இதற்கான அடிப்படையாக அமைந்துள்ளன. யதார்த்த வாழ்க்கையினூடே கற்பனைச் சித்திரங்கள் உயிரோட்டமாய் கொலம்பியாவின்  கறைபடிந்த வரலாற்றையும் அரசியல் சூழல்களையும்  கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை  நினைவுகளை அடுக்கிச் செல்வதன் மூலம் வரலாறு கட்டமைக்கப்படுகிறது. நினைவுகளும் சரித்திரக் குறிப்புகளும் நாவலை  ஆக்கிரமிக்கின்றன. நினைவிழந்து மனிதர்கள் வாழ்கிற போது நினைவுகளை கட்டமைப்பது இழையாக எங்கும் படர்ந்திருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் மீதான சுரண்டல் முதலாளித்துவத்தின் மனித உரிமை மீறல் அம்சங்களையும் வன்முறையையும் தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கிறது. இது மகோந்தாவின் பூர்வக்குடிகளூக்கும் அதிகார பலம் கொண்ட இராணுவத்திற்குமான போராட்டமாக அமைகிறது.

    இந்த நாவலில் அறிமுகமாகும் மகந்தோ  நகரம் முன்பே  அவரின் முதல்  நாவலான லீப் ஸ்ட்ராமில் இடம் பெறுகிறது. மகந்தோ   என்றால் வாழை என்று பொருள். வாழைப்பயிர் செய்யும் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை நடத்தும் முறையும், அதுமூடப்பட்ட பின்பு நடக்கும் சிரமங்கள் அந்த மக்களை மிகவும் பாதித்திருக்கிறது. 1928ல் நடைபெற்ற யுனைடெட் ப்ரூட் வேலை நிறுத்தம் அவரின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்ததாகும்.முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் அவர்களின் கோரிக்கைகளைமுன் நிறுத்தி  ஒரு இரவில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடிய போது  அவர்கள் மேல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.  நூற்றுக்கணக்ககான விவசாயிகள் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போய் விட்டனர்.  அப்படி ஒரு கலவரம் நடக்கவேயில்லை என்று அரசு மறுத்தது. வரலாற்று நூல்களில்  அந்தச் சம்பவம் நடைபெறவே இல்லை என்றபடி இல்லாமல் போனது.  அவரின் தாத்தா, பாட்டி,, அத்தைகளோடு வளர்ந்த வீட்டுச்சூழலையும் அவர்களையும்    இந்நாவலில் கொண்டு வந்திருக்கிறார். காப்ரியேல் அவரது தகப்பனாருக்கு பதினோறாவது குழந்தை.  அவரின் பெற்றோர்  அவரை தாத்தா, பாட்டியிடம் விட்டு விட்டு  வேறு நகரத்திற்குச் சென்று விட்டனர். பாட்டியின் வளர்ப்பின் போது பாட்டியின் தொன்மக்கதைகள் அவரை  மிகவும் பாதித்தன.அங்கிருந்த ஊழல் அரசியலை எதிர்த்துக் குரல் கொடுத்த ஜார்ஜ் எலீசர் கெய்டன் முந்திய பல படுகொலைகள் பற்றி விசாரணை செய்ய தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.  மிதவாதக்கட்சியில் பிளவு ஏற்படுத்தும் அளவு வளர்ந்தார்.  ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பழமைவாதிகளின் அச்சுறுத்தல் மீறி மதவாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள். கெய்டன் கொலை செய்த பின் நடந்த தொடர்ந்த வன்முறை,  மூவாயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.  இரண்டு கட்சிகளும் கொரில்லா படைகளைத் தயார் செய்து குழப்பம் விளைவித்தனர். பத்து லட்சம்  விவசாயிகள் வெனிசூலாவுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.  மிதவாதிகள்  கொல்லப்பட்டனர்.  கொலம்பியா துண்டாடப்பட்ட காலத்தில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்ட வன்முறையும் காப்ரியலை மிகவும் பாதித்து அவரின் படைப்புகளில் அதன் தாக்கத்தை உண்டு பண்ணியது.

    சாவு, பிறப்பு, சுயபிரக்ஞையற்ற வாழ்வு, துன்பங்கள், சடங்குகளின் ஆதிக்கம்,புதிய பெயர்களிலும் புதிய சடங்குளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, தங்களின் பூர்வ அடையாளங்களைக் கண்டு கொள்வது என்று  நகர்கிறது. காலம்  முடிந்து போனதிற்கும் ., நிகழ் காலத்திற்குமாக அலைக்கழிகிறது,அடிமைத்தனத்தின் கோரமும், காலனிய ஆதிக்க வன்முறையும் அலைக்கழிப்பும் மாந்திரீக அம்சங்களோடு சொல்லப்படும் போது யதார்த்தத்தை மீறிய வலிமை சேர்கிறது. தமிழ்க் கலாச்சார சூழலில் பல அம்சங்களைப் பொருத்திப் பார்க்கவும் இயல்பாக அமைந்திருக்கிறது, இன்றைய இந்தியச் சூழலின் அரசியல் கலாச்சார பொருளாதார அம்சங்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவலின் பல அம்சங்கள் கோடிடுவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழிபெயர்ப்பு வெகு சிரத்தையுடன் செய்யப்பட்டிருப்பதை ஆங்கில மொழிபெயர்ப்பின் சிக்கல் சொற்றொடர்களை ஒப்பிட்டு கண்டு கொள்ள முடியும் வறக்காப்பி முதல் பாஷாணம் வரையிலான பல சொற்களின் பிரயோகங்கள் மொழிபெயர்ப்பின் இயல்புத்தன்மையை வளப்படுத்துகிறது. உதிரி உதிரியாக மார்க்கேஷின்  படைப்புகள் தமிழில் கிடைத்து வந்த சூழலில்  ஒரு முழு நாவல் வெளியிடப்பட்டிருப்பது மொழிபெயர்ப்பின் மூலம் தமிழ்வாசகன் சென்றடையும் அதிக பட்ச வாசிப்பு சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது.

    ( தனிமையின் நூறு ஆண்டுகள் : காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் நாவல்,  பக்கங்கள் 406 ;ரூ 350 : வெளியிடு : காலச்சுவடு , நாகர்கோவில் )

     

    சுப்ரபாரதிமணியன்.,

    8/2635 பாண்டியன் நகர்.,

    திருப்பூர் 641 602.

    9486101003

    Share