குவைத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!
பர்வத வர்தினி
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
குவைத்தில் என் கணவர் பணிபுரியும் கல்ஃப் ஸ்பிக் ஜெனரல் டிரேடிங் அண்டு காண்டிராக்டிங் கம்பெனி (Gulf Spic General Trading & Contracting Co.) வெகு விமரிசையாக புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி மாலை முதல் புத்தாண்டு துவங்கும் நேரமாகிய இரவு 12 மணி வரை அற்புதமான கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை அந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வாறே இவ்வாண்டும் சிறப்பான நிகழச்சிகள் நடந்தேறின.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளின் ஆரம்பக்கட்டமாக சென்ற வாரம், நிறுவனத்தில் பணிபுரிவோரின் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்று முதல் ஆறு வயதிற்கான குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும், ஏழு முதல் பத்து வயது குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும், மைண்ட் மேப்பிங் (Mind Mapping)போட்டியும் நடத்தப்பட்டன. மேலும் பத்து முதல் பதினான்கு வயது பிள்ளைகளுக்கு குரூப் டிஸ்கஷன் (Group Discussion), வினா விடை (Quiz) போட்டிகளும் நடத்தப்பட்டன. இவற்றைத் தவிர பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியப் போட்டி
டிசம்பர் 31 அன்று காலை நிறுவனத்தில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான ‘பழைய தேவையற்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கும் கைவினைப் பொருட்களு’க்கான போட்டி, முக்கியமாக பெண்களுக்கான வெஜிடபிள் கார்விங் (Vegetable carving) போட்டி மற்றும் ரங்கோலி கோலப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
கைவினைப் பொருட்கள் போட்டி
வெஜிடபிள் கார்விங் போட்டி
ரங்கோலி கோலப் போட்டி
அன்று மாலை புத்தாண்டு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடனும் கடவுள் வாழ்த்துடனும் இனிதே துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கான மாறு வேடப்போட்டி (Fancy dress competition) நடத்தப்பட்டது. குழந்தைகள், ஆண்டாளாக, அர்த்தநாரீஸ்வரராக, திருநாவுக்கரசராக, கண்ணகியாக, பட்டாம்பூச்சியாக, கண்ணனாக, சரஸ்வதியாக, வாழைப்பழமாக பல்வேறு வேடங்களில் வந்து பார்வையாளர்களை பரவசமாக்கினர்.
மாறுவேடப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள்
பின்னர் குழந்தைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், சிறு நாடகங்களும் (Skit), நிறுவன ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
கலை நிகழ்ச்சிகளுக்குப் பின், வந்திருந்த அனைவருக்கும் ருசியான இரவு உணவு பஃபே முறையில் வழங்கப்பட்டது. வயிற்றுக்கும் உணவிட்டு உடனே செவிக்கும் உணவிட்டனர்; ஆம்… அந்நிறுவனத்தின் இசைக்குழு நடத்திய இன்னிசைக் கச்சேரி கேட்போரை மெய்மறக்கச் செய்தது.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி
நிகழ்ச்சிகளின் இடையிடையே போட்டிகளில் வென்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பிறகு நிறுவனத்தின் தலைவர் (Chairman) அவர்களின் வாழ்த்துரையை நிதி மேலாளர் (Director – Finance) அவர்கள் வாசித்தார்.
சரியாக இரவு 12 மணிக்கு குழந்தைகள் புடை சூழ கேக் வெட்டிப் புத்தாண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்தனர். 700க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
புதிய ஆண்டு வாழ்வின் புதிய மைல்கற்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடனும் கலை நிகழ்ச்சிகளைக் கண்ட பரவசத்துடனும் அனைவரும் வீடு திரும்பினோம்.
அன்பின் வர்தினி,
புத்தாண்டு வாழ்த்துகள். குவைத் நாட்டில் இருந்துகொண்டு குழந்தைகளுக்கு நம் பண்பாடு, கலாச்சாரங்களை நினைவு கூரும் வகையில் பலவிதமான மாறு வேடங்கள், ஓவியப்போட்டி, ரங்கோலிப்போட்டி என அசத்தியிருக்கிறீர்கள். இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் உங்கள் கணவரின் நிறுவனத்தாருக்கும் நம் வாழ்த்துகள். இதுதான் நம் தமிழர் பண்பாட்டின் அடி நாதம். எங்கு சென்றாலும், ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்’ என்று வாழும் அந்த உன்னத பண்பு! பங்கு பெற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கும் வாழ்த்துகள். அழகாகப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் பாராட்டுகள். படங்கள் எல்லாம் மிகவும் அழகு!
அன்புடன்
பவள சங்கரி
அன்பான தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🙂