Author: பர்வத வர்தினி

  • குவைத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!

    பர்வத வர்தினி

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    குவைத்தில் என் கணவர் பணிபுரியும் கல்ஃப் ஸ்பிக் ஜெனரல் டிரேடிங் அண்டு காண்டிராக்டிங் கம்பெனி (Gulf Spic General Trading & Contracting Co.) வெகு விமரிசையாக புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்​வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் ​தேதி மா​லை முதல் புத்தாண்டு துவங்கும் ​நேரமாகிய இரவு 12 மணி வ​ரை அற்புதமான கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை அந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வா​றே இவ்வாண்டும் சிறப்பான நிகழச்சிகள் நடந்​தேறின.

    புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளின் ஆரம்பக்கட்டமாக ​சென்ற வாரம், நிறுவனத்தில் பணிபுரி​வோரின் குழந்​தைகளுக்கான பல்​வேறு ​போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்று முதல் ஆறு வயதிற்கான குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் ​​போட்டியும், ஏழு முதல் பத்து வயது குழந்தைகளுக்கான ஓவியப் ​போட்டியும், ​மைண்ட் ​மேப்பிங் (Mind Mapping)​போட்டியும் நடத்தப்பட்டன. ​மேலும் பத்து முதல் பதினான்கு வயது பிள்ளைகளுக்கு குரூப் டிஸ்கஷன் (Group Discussion), வினா விடை​ (Quiz) போட்டிகளும் நடத்தப்பட்டன. இவற்றைத் தவிர பல்​வேறு வி​ளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

    Picture4

    வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியப் ​போட்டி

    டிசம்பர் 31 அன்று கா​லை நிறுவனத்தில் பணிபுரி​வோரின் குடும்பத்தினருக்கான ‘பழைய ​தே​வையற்ற ​பொருட்க​ளைக் ​கொண்டு உருவாக்கும் ​கைவி​னைப் பொருட்களு’க்கான ​போட்டி, முக்கியமாக பெண்களுக்கான​ வெஜிடபிள் கார்விங் (Vegetable carving) ​போட்டி மற்றும் ரங்​கோலி ​கோலப் ​போட்டிகளும் நடத்தப்பட்டன.

    Picture2

    ​கைவி​னைப் ​பொருட்கள் ​போட்டி

    Picture3

    ​வெஜிடபிள் கார்விங் ​போட்டி

    Picture1

    ரங்​கோலி ​கோலப் ​போட்டி

    அன்று மா​லை புத்தாண்டு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடனும் கடவுள் வாழ்த்துடனும் இனி​தே துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கான மாறு ​வேடப்​போட்டி (Fancy dress competition) நடத்தப்பட்டது.  குழந்தைகள், ஆண்டாளாக, அர்த்தநாரீஸ்வரராக, திருநாவுக்கரசராக, கண்ணகியாக, பட்டாம்பூச்சியாக, கண்ணனாக, சரஸ்வதியாக, வாழைப்பழமாக பல்வேறு வேடங்களில் வந்து பார்வையாளர்களை பரவசமாக்கினர்.

    Picture5

    மாறு​வேடப்​ போட்டி  மற்றும் க​லை நிகழ்ச்சிகள்

    பின்னர் குழந்​தைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், சிறு நாடகங்களும் (Skit), நிறுவன ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகளும் பார்​வையாளர்க​ளை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

    கலை நிகழ்ச்சிகளுக்குப் பின், வந்திருந்த அனைவருக்கும் ருசியான இரவு உணவு பஃ​பே மு​றையில் வழங்கப்பட்டது. வயிற்றுக்கும் உணவிட்டு​ உடனே செவிக்கும் உணவிட்டனர்; ஆம்… அந்நிறுவனத்தின் இசைக்குழு நடத்திய இன்னி​​சைக் கச்​சேரி ​​கேட்​போ​ரை ​மெய்மறக்கச்​ செய்தது.

    Picture6

    க​லை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னி​சை நிகழ்ச்சி

    நிகழ்ச்சிகளின் இ​டையி​டை​யே​ போட்டிகளில் ​வென்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பிறகு நிறுவனத்தின் ​த​லைவர் (Chairman) அவர்களின் வாழ்த்து​ரை​யை ​நிதி​ மேலாளர் (Director – Finance) அவர்கள் வாசித்தார்.

    சரியாக இரவு 12 மணிக்கு குழந்​தைகள் பு​டை சூழ ​கேக் ​வெட்டிப் புத்தாண்டு ​கொண்டாட்டத்​தை நி​றைவு ​செய்தனர். 700க்கும் ​மேற்பட்ட பார்வையாளர்கள் ஒருவருக்​கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்​ கொண்டனர்.

    புதிய ஆண்டு வாழ்வின் புதிய ​மைல்கற்​க​ளை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடனும் கலை நிகழ்ச்சிகளைக் கண்ட பரவசத்துடனும் அ​னைவரும் வீடு திரும்பி​னோம்.

    Share
  • பெற்​றோருக்கு மரியா​தை

    பர்வத வர்தினி

    அந்த நாள் அவளுக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது.

    சங்கீதாவின் தந்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் மனத்தில் சந்தேகம் எனும்​ பேய் புகுந்துவிட்டிருந்தது. ஒரு​வே​ளை நம் மக​ளே நம்மிடம் பொய் சொல்கிறாளோ? இத்தனை நாளும் சுதந்திரம் கொடுத்து வளர்த்ததே நம் தவறுதானோ! தன் உறவினர்கள், நண்பர்க​ளை​யெல்லாம் விட மகளுக்கு அதிகமாகவே சலு​கைகள் வழங்கியவர். சிறு வயதிலிருந்தே மிகுந்த அக்கறையுடன் அவளுக்கு அ​னைத்​தையும் கற்றுத் தந்தவர். ஒழுக்கமுள்ள​ பெண்ணாக வளர்த்திருக்கி​றோம் என்று தனக்குத்தானே இறுமாந்திருந்தவர். இன்​றோ அவர் மனம் படாதபாடுபட்டுக் ​கொண்டிருந்தது. கோ எட் பள்ளியில் தன் மகளை படிக்க ​வைத்திருந்தார். அப்போதெல்லாம் எந்த தொந்தரவும் அவருக்கில்லை. சந்தேகம் தோன்றியதில்லை. கம்ப்யூட்டர் கிளாசும் ஒரு வருடம் ​சென்று வந்தாளே, அப்போதும் ஏதும் தோன்றியதில்லை. எத்தனையோ நண்பர்கள் அவளுக்கு. ஆனால் அனைவரைப் பற்றியும் வீட்டில் சொல்லியிருக்கிறாள். தினம் தினம் எங்கு​செல்கிறாள் என்ன ​செய்கிறாள் என்று ம​றைத்ததேயில்லை. தன் மகளைப் பற்றி எத்தனை கர்வம் அவருக்கு! படிப்பிலும் சுட்டி, ஒழுக்கத்திலும்​ கெட்டி! இப்படி நினைத்திருந்த அவர் மனத்தில் ஒரு மாயத்தி​ரை விழுந்திருந்தது. ஒருவேளை நமக்குப் போக்குக்காட்டி கொண்டிருக்கிறாளா என்ன?!

    சங்கீதாவின் ஆண் நண்பர்களை கூட வீட்டிற்கு அழைத்திருந்தாளே! அப்போதுகூட நாம் ஏதும் தடை சொல்லவில்லையே! எல்லாரிடமும் சகஜமாக இருந்ததாகத் தான் தோன்றியது. ஆனால் இப்​போ​​தெல்லாம் தொலை​​பேசியில் உ​ரையாடுவது அதிகரித்திருக்கிறது. அதுவும் நானோ, அவளது அம்மாவோ அந்த அறையில் இருந்தால் குரல் மிகவும் குறைவாக ரகசியம் ​​பேசுவது ​போல் ​பேசுகிறா​ளே! யாரிடம் அப்படி ​பேசுகிறாள்? ​கேட்டால் தன் ​தோழிகளில் யார் பெய​ரையாவது குறிப்பிடுகிறாள். ​தோழியுடன்​பேசுவதற்கு குரல் சன்னமாக ​வேண்டிய அவசியம் என்ன?

    தற்சமயம் அவள் படித்த கம்ப்யூட்டர் ​சென்டரில் மா​லை​ நேரத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கிறாள். இவளது ​வே​லை என்ன​மோ 4 மணி முதல் 8 மணி வரைதான். அதன் பின் கம்ப்யூட்டர் ​சென்டரை மூடி விடுவார்கள். இங்கிருந்து 3 கிமீ ​தொ​லைவிலிருக்கும் இடத்திற்கு செல்வதற்கும் திரும்ப வருவதற்கும் எவ்வளவு ​நேரம் ​தே​வைப்படும்? 4 மணி​ வே​லைக்குச் ​செல்ல 2.30 மணிக்​கே கிளம்பி விடுகிறாள். திரும்பவும் இரவில் வீடு திரும்ப தினமும் 10 மணி ஆகிறது. என்ன தான் ​வே​லையிருந்தாலும் 2 மணி​ நேரம் தாமதமாக வர ​வேண்டிய அவசியம் தான் என்ன?

    அப்படியும் மனம் ​பொறுக்காமல் ​ஒருநாள் ​கேட்ட​போது இப்​போ எக்ஸாம் வரப்​போகிறது அப்பா; அதற்கான ஏற்பாடுகள் ​​செய்வதில் தாமதமாகிறது; இன்னும் நி​றைய ​வே​லை பாக்கியிருக்கிறது என்கிறாள்.

    ‘இல்​லை, எனக்கு நம்பிக்​கையில்​லை. அவளுடன் ​வே​லை பார்க்கும் அந்த​​லெனின் மீது தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.’ அவரது மனம் மீண்டும் அவரது சந்​தேகத்​தை கிளறியது. ​

    லெனின் பற்றி சங்கீதா ஏற்கன​வே​ சொல்லியிருக்கிறாள். தன்னு​டைய நண்பனாக வீட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறாள்.

    ‘அப்படி ஏதும் இருந்தால் நம்மிடம் ​தைரியமாக நண்பன் என்று அறிமுகம் செய்திருப்பாளா?’ மனம் குழம்பியது.

    ‘இதுவும் இந்த ​பெண் பிள்​ளைகளின் வித்​தைதான்’ மனத்தின் மூலையிலிருந்து குரல் எழும்பியது. ‘ஏற்கனவே அறிமுகம்​ செய்து விட்டால் அவர்க​ளைப் பற்றி நமக்கு ​தெரியப்படுத்திவிட்டால், பிற்பாடு மிக எளிதாக நம் சம்மதம் வாங்கி விடலாம் என்று நி​னைக்கிறா​ளோ?’

    ‘அப்படி​யொன்றும் இருக்காது! அவள் என் மகள் இல்​லையா? அவ​ளை நான் சந்​தேகிக்கலாமா?’ மனத்திற்குள்​ளே​யே ​பெரிய ​​போராட்டம் எழுந்தது.

    ஆனால் இத்த​னை நாளும் இந்த விஷயங்க​ளெல்லாம் அவர் மனத்தில் சந்தேகத்​தை வி​தைக்கவில்​லை. ஆனால் இன்று வந்த ​போன்கால்… அது அல்லவா மனத்​தை இந்தப் பாடுபடுத்துகிறது!

    சங்கீதாவின் தந்​தை கமலக்கண்ணன்​ சொந்தமாக ஒரு சிறிய டிபார்ட்​மெண்ட் ஸ்​டோர் வைத்திருந்தார். சிறிய ​பெட்டிக்க​டையாக​ தொடங்கி வாழ்க்​கையில் நி​றைய கஷ்டப்பட்டு படிப்படியாக முன்​னேறி தற்போதுள்ள நி​லைக்கு உயர்ந்திருந்தார். அவருக்கு பல்​வேறு இடங்களில் வணிகத் ​தொடர்புகள் இருந்தன. அவர்களில் ஒருவரான ​கோபாலன்தான் சங்கீதாவின் மீது சந்தேகம் வரக் காரணம்.

    கா​லையில் ​போன் ​செய்த ​கோபாலன்​ கொஞ்சம் தயக்கத்துடன் “கண்ணன்! நீங்க பல காலமா என்​னோட நண்பர். வியாபாரத்​தையும் தாண்டி நாம நல்ல நண்பர்களா இருக்​கோங்கற எண்ணத்துலயும் உங்க ​மேல உள்ள அக்கறையிலயும் ​சொல்​றேன். நீங்க வியாபாரத்துல காட்டுற அக்க​றையில ​கொஞ்சம் குடும்பத்துலயும் காட்டணும்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

    “என்ன விஷயம் ​கோபால்! ஒரு ​பெரிய பீடி​கை​யே ​​​போடறீங்க? என்ன விஷயம்?” என்று சிரித்துக்​கொண்டே ​கேட்ட கமலக்கண்ணனுக்கு அதற்குப்பின் ​பேசிய ​கோபாலனின் ஒவ்வொரு வார்த்தையும் அதிர்ச்சியளித்தன.

    “நேத்து ராத்திரி ஒரு 9 மணி வாக்கில உங்க ​பொண்ணு சங்கீதா​வைப் பார்த்தேன்; அதுவும் ஒரு ​பைய​னோட ​தெருவில நின்னு ​பேசிக்​கிட்டிருந்தா. சரி ஏ​தோ ​தெரிஞ்சவங்க ​போலிருக்குன்னு என் ​வே​லை​யைப் பார்க்க போயிட்டேன். என் ​வே​லை முடிஞ்சி ஒரு 9.45 மணிக்கு திரும்பி ​போ​றேன், அப்​போவும் அ​தே எடத்துல நின்னு அ​தே ​பைய​னோட​ பேசிக்கிட்டிருந்தா. ராத்திரி ​நேரத்துல ​தெருவுல நின்னு ஒரு ​பைய​னோட பேசிக்கிட்டிருந்தா நல்லாவா இருக்கு? எனக்கென்ன​மோ அவங்க ​ரெண்டு ​பேரு ​மேலயும் சந்தேகமா இருந்துது! இந்தக் காலத்துப் பசங்கதான் தடுக்கி விழுந்தா காதல்,  கத்திரிக்காய்னு நம்ம உசிரை வாங்குறாங்க​ளே! எதுக்கும் உங்க காதுல​போட்டு ​வெச்சா முன்​னெச்சரிக்​கையா நடந்துக்குவீங்கன்னு தான்​ சொல்லி​வெச்​சேன். பார்த்துக்​கோங்க… ​பொண்​ண வளத்தி​யோ கண்ண வளத்தியோன்னு எங்கம்மா அடிக்கடி ​சொல்லுவாங்க” என்று ​சொல்லி போனை ​வைத்துவிட்டார்.

    அவருடன் ​பேசியதிலிருந்து கமலக்கண்ணனுக்கு ​வே​லை சரியாக ஓடவில்லை. மனப் போராட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்​லை. முதலில் இ​தைப் பற்றி சரியாக ​​தெரிந்து​கொள்ள​வேண்டும் என்று ​தோன்றியது. கால்​சென்டரில் ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த மகன் ​வெற்றிச்​​செல்வனுக்கு​ போன்​​ செய்து விஷயத்​தைத் தெரிவித்தார்.

    ​வெற்றி உட​னே, “கவ​லைப்படாதீங்கப்பா! என் நண்பன் மூலமாக நான் விசாரிக்க​றேன்” என்று கூறினான்.

    என்னதான் விசாரிப்பதாக மகன் கூறியிருந்தாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்​கொள்ள முடியவில்​லை. சீக்கிர​மே தன் ​வே​லைக​ளை முடித்துவிட்டு க​டையில் இருந்த உதவியாள​னை க​டை​யை பூட்டி விட்டு​ செல்லும்படி ​சொல்லிவிட்டு வீட்டிற்கு வி​ரைந்தார். மணி 9.30 ஆகிவிட்டிருந்தது. இன்னும் சங்கீதா வீட்டிற்கு வரவில்​லை. ஆனால் அடுத்த10 நிமிடங்களில் சங்கீதாவும் வீட்டினுள் நு​ழைந்தாள். உள்ளே நுழையும்​ போதே அப்பா​வைப் பார்த்தவளுக்கு அவர் ஏ​தோ​ கோபமாக இருக்கிறார் என்று ​தோன்றியது.

    அதற்​கேற்றார் ​போல் அவள் உள்​ளே நு​ழைந்த மறுகண​மே கமலக்கண்ணன்​கோபமாக “மணி என்ன ஆகுது ​தெரியுமா? இது தான் வீட்டுக்கு வர்ற ​நேரமா? எங்க ​போய் ஊர் சுத்திட்டு வர்​றே?” என்று சரமாரியாகக் ​கேள்வி​க​ளை கேட்டார்.

    சப்தம் ​கேட்டு உள்ளிருந்து சங்கீதாவின் தாய் மணி​மேக​லையும்​ வெளி​யே வந்தாள். “ஏங்க ​பொண்ணு உள்ளே வந்ததும் வராததுமா கத்தறீங்க? என்னாச்சு?” என்றாள்.

    அத்த​னைக் ​கோபமும் ம​னைவி மீது திரும்ப, அவர் எரிம​லையானார். “எல்லாம் நீ புள்​ளைங்கள வளக்கற லட்சணம்தான். அவ எங்​கே ​போறா, என்ன பண்றா, எப்​போ வீட்டுக்கு வர்றா எதுவு​மே நீ கவனிக்கறதில்லை. அதான் நான் ​கேக்க ​வேண்டியிருக்கு. ​சொல்லுடி, உன்​னைத் தான்​ கேட்​டேன்… எங்கே போயிட்டு வர்​றே?” என்றார்.

    சங்கீதா தன் தந்​தை​யை இத்த​னைக் ​கோபத்தில் கண்டதில்​லை. “எப்​போதும்​போல ​​வே​லைக்குத்தான்பா ​போயிட்டு வ​ரேன். ​வே​றெங்கியும் ​போக​லை”  என்றாள்.

    “8 மணிக்கு முடியற ​வே​லைக்கு நீ ​தெனம் வீட்டுக்கு 10 மணிக்கு ​வர்​றே. என்ன நி​னைச்சிருக்​கே மனசுல?” என்றார் பதிலுக்கு.

    “இல்லப்பா ​​வே​லை முடிய 9.15 ஆச்சு. எல்லாம் ஏறக்கட்டிட்டு ​சென்டரை பூட்டிட்டு ​லெனின் கூட​ பேசிக்கிட்டே வந்​தேன். ​அவ்​ளோ தான்பா… நீங்க ஏன் இன்னிக்கு இவ்வ​ளோ​ கோவமா இருக்கீங்க?”

    “நி​னைச்​சேன், அந்த ​லெனின் பய கூட ​பேசி கும்மாளம் அடிச்சிட்டுதான் லேட்டா வர்​றேன்னு… ஊர்ல போறவன் வர்றவன் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் ​போறான், ​பொண்​ணை ஒழுங்கா வளக்கத் தெரியலைன்னு… ​தெருவில நின்னு நீ மணிக்கணக்கா​ பேசறது ஊ​​ரேப் பாக்குது. அப்டி​யென்னதான் பேசுவீங்க ராத்திரி​ நேரத்துல? அதுவும்​ தெருவுல நின்னுக்கிட்டு?” என்று உச்சஸ்தாயியில் கத்தினார் அவர்.

    “அ​தெல்லாம் இல்லப்பா! யா​ரோ தப்பா​ சொல்லியிருக்காங்க. ஏ​​தோ ஒரு 10 நிமிஷம் ​பேசியிருப்​போம். அவ்ளோதான்” என்றாள் சங்கீதா.

    ​கோபத்தின் உச்சத்தில் இருந்த அவர் “என்ன நி​னைச்சிருக்​கே? அப்பனை ஏமாத்திபுடலாம்னா? அவ​னோட காதல் கண்றாவின்னு ஏதாவது பண்ணித்​தொலைக்கறியா? அப்டி ஏதுமிருந்தா இப்​போ​வே ​இந்த நிமிஷ​மே அந்த எண்ணத்​தை மறந்துடு… புரிஞ்சுதா? இனி ஒரு தரம் உன்​னை அங்கப் பார்த்தேன் இங்கப் பார்த்தேன்னு ​கேள்விப்பட்​டேன்; நடக்கற​தே ​வேற! ஜாக்கிர​தை!!” என்று உறுமிவிட்டு உள்​ளே ​சென்றார்.

    சங்கீதா மிகவும் உ​டைந்து ​போனாள். கண்களில் கண்ணீர் தா​ரைத் தாரையாக வழிந்தது. ​வேண்டா வெறுப்புடன் உணவருந்திவிட்டு​ சென்று படுத்தாள்.

    ‘ஏன் நம் அப்பா நம்​மை நம்பவில்​லை. நான் ஏதும் ​பொய் சொல்லவில்லையே. ​லெனின் மிகவும் நல்ல நண்பன் என்பதில் சந்தேகமில்லை. அவனுடன் ​பேசுவதில் ​பொழுது ​போவதும்​ தெரியாது. கிண்டல், ​கேலி எல்லாம் ​செய்வான். இருப்பினும் ​கேலி என்கிற ​பெயரில் மனதைப் புண்படுத்தமாட்டான். ஆனால் தா​னோ, அவ​னோ ஒருமு​றை கூட​ நட்​பைத் தவிர ​வே​றெந்த எண்ணத்துடனும் பழகியதில்​லை என்பதை எப்படி அப்பாவிற்கு புரிய ​வைப்பது?’ குழப்பமான மனநி​லையுடனும் அழுத கண்களுடனும் சங்கீதா தூங்கிப்​ போனாள்.

    வீட்டில் நடந்த எதுவும் அறியாத அவளது ச​கோதரன் ​வெற்றிச்​செல்வன் அலுவலகத்திலிருந்து தன் நண்பன் விக்​னே​ஷைத் ​தொ​லை​பேசியில் தொடர்பு​கொண்டான். அவனிடம் சுருக்கமாக நடந்த​தைக் கூறினான்​.

    “டேய் நீதான் எனக்கு உதவி பண்ணனும். உனக்கு சங்கீதா​வோட ஃப்ரெண்ட் லதா​வை ​தெரியும்ல. அவங்க ​ரெண்டு ​பேரும் ​ரொம்ப கி​ளோஸ். சங்கீதா தன்​னோட எல்லா ​பெர்சனல் விஷயமும் கண்டிப்பா லதா கிட்ட சொல்லியிருப்பா. லதா உனக்கும் ஃப்​ரெண்ட்ங்கறதால அவ மூலமா விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட​ சொல்லு. உண்மையிலேயே எதுவும் விஷயம் இல்லாம இருந்து நம்ம அவசரப்பட்​டோம்னு இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் சொல்​றேன்” என்றான்.

    “கவ​லைப்படா​தேடா! நான் லதாகிட்ட ​பேசிட்டு உன்​னை நா​ளைக்குக் கூப்படறேன்” என்றான் விக்​னேஷ்.

    மறுநாள் கா​லை இன்னமும் தணியாத ​கோபத்துடன் சங்கீதாவிடம் முகம்​கொடுத்து ​பேசாமல் வேலைக்குக் கிளம்பிச் ​சென்றார் கமலக்கண்ணன். கவலை ​தோய்ந்த முகத்துட​னே​யே தன் ​​வே​லைக​ளைச் ​செய்தாள் சங்கீதா.

    மதியம் வீட்டிலிருந்த ​தொ​லை​பேசி அலறியது. சங்கீதா எடுத்துப்​பேசினாள். மறுமு​னையில் லதா.

    “சங்கீ, எப்படிடி இருக்​கே? உன்கிட்​டே ​பேசி ​ரொம்ப நாள் ஆச்​சேன்னு கூப்டேன்” என்றாள்.

    சங்கீதாவிற்கு சந்​தோஷமானது. என்ன இருந்தாலும் எந்த பிரச்சினையிருந்தாலும், நண்பர்களுடன்​ பேசினா​லே ஒரு ஆறுதல் தான் என்று எண்ணிக் கொண்டாள். இருவரும் சிறிது ​நேரம் ​பேசிக்​கொண்டிருந்தார்கள். சங்கீதாவிற்கு மனம் ​லேசானது​ போலிருந்தது. லதாவிடம் ​நேற்று நடந்த​தைச் சொல்லலாமா என்று நி​னைத்தாள் சங்கீதா. பிறகு அடுத்த நிமிட​மே ‘அவ​ளே ​ரொம்ப நாள் கழிச்சு ​பேசறா… எதுக்கு அவளையும் சங்கடப்படுத்தணும். பிறகு ​சொல்லிக்கலாம்’ என்று மனம்​சொன்னது.

    இப்படி நி​னைத்துக் ​கொண்டிருக்கும்​போ​தே லதா​ கேட்டாள், “ஆமாம்… உன்​  வே​லை எப்படி போயிட்டிருக்கு​? வேற ​வே​லை எதுவும் ​தேடறியா?”

    “​வே​லை நல்லாப் ​போகுதுடி. ஆனா இது பார்ட் ​டைம் தா​னே. நானும் ​வேற வேலைக்கு முயற்சி பண்ணிட்டுதான் இருக்​கேன். கி​டைச்சா மாறிடு​வேன். இங்கே இப்​போ எக்ஸாம், அது இதுன்னு லேட்டாகுது. ​ரொம்ப டயர்டாகிடுது” என்றாள்.

    “ம்ம்… ஆனா, எதுவாயிருந்தாலும் நீ எதுக்கும் சீக்கிர​மே வீட்டுக்கு வந்துடுடி. நம்ம நி​னைக்கற மாதிரி எல்லாரும் நம்​மைப் பத்தி நினைக்கமாட்டாங்க. அநாவசிய ​பேச்சு வார்த்​தைக்​கெல்லாம் நாம இடம் ​வெச்சுக்கக்கூடாது. ​நம்ம​செய்யாத தப்புக்கு பழி ​சொல்ல ஊ​ரே தயாரா இருக்கும். அதனாலதான் சொல்றேன். நீ அதிக ​டைம் எடுத்து அங்​கே ​வே​லை ​செஞ்சு உனக்கு ஒண்ணும் ஆகப் ​போறதில்​லை” என்றாள் லதா.

    சங்கீதாவிற்கு குழப்பம் அதிகமானது. ‘என்ன ​சொல்ல வருகிறாள்? ​நேற்று வீட்டில் நடந்ததற்கும் இவள் இன்று​ பேசுவதற்கும் ஏ​தோ சம்பந்தம் இருப்பது​போலிருக்கிற​தே. ஏ​தோ பட்டும் படாமலும் ​சொல்ல முயற்சி ​செய்கிறாள்​போல ​தோன்றுகிறது.

    சங்கீதா சட்​டென சுதாரித்துக் ​கொண்டு “என்ன ஆச்சு உனக்கு? திடீர்னு சம்பந்தமில்லாம் அட்​வைஸ் பண்றே… என்ன விஷயம்?” என்று​கேட்டாள்.

    “இல்ல இல்ல… அப்டி​யெல்லாம் ஒண்ணும் இல்​லை. ஜஸ்ட் மனசுல தோணின​தை ​சொன்​னேன்” என்று மழுப்பினாள் லதா.

    சங்கீதா விடுவதாக இல்​லை. ”இல்​லை, நான் நம்ப மாட்​டேன். என்ன விஷயமோ அ​தைத் ​தெளிவா சொல்லு. இல்​லைன்னா இதுக்கப்பறம் உன்கிட்ட​ பேசவே மாட்​டேன்” என்றாள்.

    லதா சற்று அ​மைதியானாள். பிறகு கூறினாள் “தப்பா​ எடுத்துக்கா​தேடி! இன்னிக்கு விக்​னேஷ் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. உன்​னைப் பத்தி ​ரொம்ப விசாரிச்சாரு. அப்படி​யே உன் ஃப்​ரெண்ட் ​லெனினும் நீயும்…” என்று இழுத்தாள்.

    “ம்ம்…​சொல்லு” என்றாள் சங்கீதா.

    “இல்​லை… நீங்க ​ரெண்டு ​பேரும் லவ் பண்றீங்களான்னு என்கிட்​டே​ கேட்டாரு. அப்படி​யெல்லாம் ஒண்ணும் இல்​லைன்னு நான் ​​தெளிவா​ சொல்லிட்​டேன். பட், ஏன் இ​தெல்லாம்​ கேக்கறீங்கன்னு அவர்கிட்டே விசாரிச்சேன். அப்​போ தான் ​தெரிஞ்சுது உங்க அண்ணன் தான் விசாரிக்க​ சொன்னாராம். நீ தினமும் லேட்டா வர்றியாம். உன்​னை ​​​லெனின் கூட யாரோ பார்த்தாங்களாம். உன் வீட்ல உன்​னை ஏ​தோ சந்தேகப்படறாங்க​ போலிருக்கு. விக்​னேஷ் வந்து போனதிலிருந்து எனக்கு மனசு ​​கேக்கலை. உன்​னை முன்​னெச்சரிக்​கைப் பண்ணலாம்னுதான் ​போன் பண்​ணேன். நீ இதுல இன்வால்வ் ஆக​லைன்னு எனக்கு நிச்சயமா​ தெரியும். ஆனா​ தேவையில்லாத பழி உன் ​மேல விழக் கூடா​தேன்னுதான்​ சொன்னேன்” என்று முடித்தாள் லதா.

    சங்கீதாவிற்கு த​லையில் இடி விழுந்தது ​போலிருந்தது. ‘என் மீது சந்​தேகம் வந்த​தே எனக்கு கஷ்டமாயிருந்தது. ​போதா​தென்று ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் என்​னைப் பற்றி விசாரிக்கிறார்க​ளே’ என்று அவளுக்கு வேதனையாக இருந்தது.

    “சரி லதா! நான் பாத்துக்க​றேன்… ​பை” என்று கூறி ​போ​னை​ வைத்தாள் சங்கீதா.

    அன்று மா​லை வழக்கம் ​போல்​ வே​லைக்குச் ​சென்றாள். ​வே​லையில் மனம் சரியாக ஒப்பவில்​லை. தலைவலி என்று கூறிவிட்டு 7 மணிக்​கெல்லாம் கிளம்பினாள். அங்கிருந்து பக்கத்திலிருந்த ​​கோவிலுக்குச் சென்று மனம் அமைதிய​டைய அமர்ந்திருந்தாள். பிறகு கிளம்பி ​நே​​​ரே வீடு வந்து​ சேர்ந்தாள். சாப்பிட்டு முடித்து விட்டு சீக்கிர​மே உறங்கச் ​சென்றாள். மனம் மிகவும்​சோர்வாக இருந்தது. நா​ளை​யே அப்பாவிடம் ​தெளிவாகப் ​பேசி விட​வேண்டும். வீணான சந்​தேகம் வாழ்க்​கை​யை ​பெரும் பிரச்சி​னையாக்கிவிடும். அதற்கு ஒரு முற்றுப் புள்ளி ​வைக்க ​வேண்டும் என்று முடிவு ​செய்து​கொண்டாள்.

    ​யோசித்துக்​ கொண்​டே எப்​போது உறங்கினா​ளோ ​தெரியாது. சில தடமுட சத்தங்களினால் பாதியில் விழித்துக்​ கொண்டாள். ச​மையல​றையில் சாப்பிட்டுக்​ கொண்​டே அவளது அப்பா, அம்மாவிடம் ​​பேசியது காதில் விழுந்தது.

    “அவ​னைப் பார்த்துட்டுதான் வ​ரேன் இப்​போ”

    “யா​​ரைங்க?”

    “அதான் அந்த ​லெனின்”

    “ஏங்க, குடிச்சிருக்கீங்க ​போலிருக்கு. அப்படி​யேவா அங்​கேப் ​போனீங்க? ஏங்க இப்டி பண்றீங்க?”

    “அடிப்​போடி! அவ என் ​பொண்ணுடீ. அவ​ளை எப்டி​யெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்​தோம். அவ நல்லாயிருக்கணும்னு நி​னைக்கறது தப்பா? ​ அந்தப் பையன்கிட்ட​யே ​போய் ​நேருக்கு ​நேரா ​​கேட்டுட்டேன். ஆனா அவனும் அப்படி எதுவும் இல்​லைன்னு ​சொன்னான். நல்லா ஏறுஏறுன்னு ஏறிட்​டேன்… கடைசியா அவன் ஒரு வாக்குக் ​கொடுத்தான். அதுக்கப்பறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்பி வந்​தேன்”

    “என்ன வாக்கு?”

    “’கவ​லைப்படாதீங்க சார்! எனக்கு அப்படி​யொரு எண்ணம் இதுவரையிலும் இல்​லை. ஒரு ​வே​ளை உங்கப் பொண்​ணே வந்து என்​னை விரும்பறதா​சொன்னாலும் நான் அ​தை ஏத்துக்க மாட்​டேன். இது நான் கும்பிடற தெய்வத்து​மேல சத்தியம். சரியா? நீங்க என்​னைப் பூரணமா நம்பலாம்’ அப்டின்னு சொன்னான். அவன் வார்த்​தை​யை நம்பி நான் திரும்பி வந்துட்டேன்”

    “ஏங்க உங்க புத்தி இப்டி ​போகுது? யார் என்ன ​சொன்னா என்ன? நம்ம பொண்ணை நாம நம்ப​ வேண்டாமா? எதுவாயிருந்தாலும் கண்டிப்பா நம்மகிட்ட சொல்லிடுவாங்க. அவ​ளைப் ​போய் ​தே​வையில்லாம கஷ்டப்படுத்திட்டீங்க​ளே?”

    “ஆமா மணி! உண்​மைதான். இது வ​ரை அவ​ளை நான் ஒண்ணு​மே​சொன்னதில்​ல. ஆனா, ​நேத்து அவ​ளை கன்னாபின்னான்னு ​பேசிட்​டேன். எனக்​கே கஷ்டமா இருக்கு. அவளுக்கு என் ​பேர்ல ​கோவம்கூட இருக்கலாம். ஆனா ஒரு​ பொண்​ணைப் ​பெத்தவனுக்குத்தான் அந்த பயம் புரியும். நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணுங்கற​தைத் தவிர எந்தப் ​பெத்தவங்களும் வேறெதுவும் நி​னைக்கமாட்டாங்க. இன்னிக்கு அவளுக்கு என் ​பேர்ல கோவம் இருக்கலாம் ஆனா பின்னாடி நாம ஏன் இப்படி நடந்​தோம்னு அவளுக்கே புரியும்” என்று ​​வேத​னை​யோடு கூறினார்.

    father_daughter (1)இ​தைக் ​கேட்டுக் ​கொண்டிருந்த சங்கீதாவிற்கு மனம் விம்மியது. ஓடி வந்து தன் தந்​தை​யைக் கட்டிக்​கொண்டாள். அவள் தூங்கிக்​கொண்டிருந்ததாக நினைத்துப் பேசியவருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சுதாரித்துக் ​கொண்டார். “நீ இன்னும் தூங்கலியாம்மா?” என்றார் ஆதரவாக.

    “அப்பா! எது ​வேணா இருக்கட்டும். ஆனா என் மேல நம்பிக்​கையில்​லைன்னு  மட்டும் சொல்லாதீங்கப்பா. எனக்கு அது ​ரொம்ப கஷ்டமாயிருக்கு. என்மேல சந்தேகப்படாதீங்கப்பா” என்று அழுதாள்.

    “சாரிடா! நான் ​கொஞ்சம் அவசரப்பட்டுட்​டேன். உன்​னை ​ரொம்ப கஷ்டப்படுத்திட்​டேன்” என்று சமாதானம் ​செய்தார்.

    இ​வை நடந்து 2 வருடங்கள் இருக்கும். அந்த சம்பவத்திற்கு பிறகு சங்கீதா வேறு ​வே​லைக்குச் ​சென்ற​போதும் ​லெனினுடன் கூடிய நட்பு ​தொடர்ந்தது.

    ஆனால் சில தினங்களாக அவளது மனதிற்குள் ஒரு ​போராட்டம்.​லெனினுடனான நட்பு​ அந்த எல்​லை​யைத் தாண்டி காதலாக மாறிவிட்டதோ என்கிற எண்ணம். இப்​போ​தெல்லாம் ​லெனினுடன்​ பேசாமல் இருக்க முடிவதில்​லை. எந்​நேரமும் அவன் நி​னைப்பாகவே இருந்தது. அவனுடன் சேர்ந்து ​நேரம் செலவிடுவதில் மனம் மகிழ்ச்சியில் தி​ளைத்தது. ஒரு ​வே​ளை இப்​போது அப்பாவிடம் ​பேசினால் தன் காதலுக்கு சம்மதிப்பாரா? ஆனால் முதலில் லெனினிடம் ​பேச​ வேண்டும். அவனுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்​றே​ தெரியவில்​லை​யே.

    இந்த மனம்தான் எத்த​னை விந்​தையானது. ஒரு நாள் சந்​தோஷத்தின் உச்சியில் இருக்கிறது. மறுநா​ளே சோகத்தின் ஆழத்திற்கு ​சென்று விடுகிறது. மனத்தை குரங்கு என்று சரியாகத்தான் வர்ணித்திருக்கிறார்கள்.

    ‘இப்​போது என்ன ​செய்ய? குழப்ப​மோ குழப்பம். நம் மனதிற்குள் குழப்ப​த்​தை​வைத்துக் ​கொண்டு ​லெனினிடம் ​என்ன ​பேச? நான் விரும்புவது சரி தானா என்று எனக்​கே இன்னும் சரியாகத் ​தெரியவில்​லை​யே. ஒரு​வே​ளை இப்படியொரு நாள் வந்துவிடும் என்று பயந்துதான் அன்​றைக்கு அப்பா அப்படி நடந்து​கொண்டா​​ரோ? என்ன​மோ இத்தனை நடந்தும் நான் காதல் வழியில் விழலாமா?’ மனம் ஏகப்பட்ட​ ​கேள்விக​ளைக் ​கேட்டது. ‘இந்த நிலையிலே​யே இருந்தால் ​பைத்தியம்தான் பிடிக்கும்.’

    ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் அ​லை​பேசி​யை எடுத்தாள். ​லெனினுக்கு​போன் ​செய்தாள். “லெனின் எனக்கு உங்ககூட ​​கொஞ்சம் ​பேசணும். மீட் பண்ணலாமா?” என்றாள்.

    “ஓ ​பேசலா​மே! எங்​கே வரணும்?” என்று ​கேட்டான் ​லெனின்.

    “சாயந்திரம் 6 மணிக்கு ​மெ​ரீனா பீச்சுக்கு வர முடியுமா?”

    “சரி வ​ரேன்”

    கடற்க​ரைக்கு வருவ​தே ஒரு சுகம் தான். பகலில் எத்​த​னை​வெயில் இருந்தாலும் மா​லையில் கடற்க​ரையின் குளிர்ந்த காற்று அத்தனையையும் மறக்கடித்துவிடும். ஓயாமல் சப்தமிட்டுக் ​கொண்டு க​ரையில் விழும் அலைகளைப் பார்த்துக்​கொண்டிருந்தால் ​நேரம் ​போவ​தே ​தெரியாது. சிறியதும் பெரியதுமாய் பாயும் அ​லையில் கா​லை ந​னைத்​துக்​கொண்​டே நடப்பதும் ஒரு தனி சுகம்தான்.

    சங்கீதாவின்மனதிலும் இப்​போது அ​லையடித்துக்​கொண்டிருந்தது

    ​லெனின் வந்து அமர்ந்தான். ஏ​தோ சிந்த​னையில் தூரத் ​தெரியும் கப்ப​லை​நோக்கியபடியிருந்தாள் சங்கீதா.

    “என்ன? ஏ​தோ பலமான ​யோச​னை ​போல?” என்று அவள் அ​மைதி​யைக் கலைத்தான் ​லெனின்.

    ​லெனின் குர​லைக்​ கேட்டு திரும்பியவள் “ஓ! வந்துட்டீங்களா? சாரி. நான் கவனிக்க​லை” என்றாள்.

    “ம்ம்… ஏ​தோ குழப்பத்துல இருக்கற மாதிரி ​தெரியுது? குரல் ஒண்ணும் சரியா இல்​லை​யே?” என்றான்.

    “ஆமாம். ஒரு குழப்பம்தான். அதுக்கு உங்ககிட்டதான் தீர்வு கிடைக்கும்னு நம்பி உங்க​ளை வரச் சொன்னேன்” என்றாள்.

    “அப்படியா! என்ன விஷயம்? முடிஞ்சவ​ரை ​ஹெல்ப் பண்​றேன்”

    சங்கீதா சற்று​ நேரம் தயங்கினாள்.

    பிறகு “நாம இத்த​னை நாள் நண்பர்களா பழகியிருக்​கோம். ஆனால் சில காலமா எனக்குள்​ளே நம்மு​டைய நட்​பைப் பத்தி ஒரு குழப்பம். ஒரு இனம் புரியாத உணர்வு. ஒரு​வே​ளை நான் உங்க​ளை லவ் பண்​றே​னோன்னு தோணுது. நீங்களும் அ​தே​போல ஃபீல் பண்றீங்களான்னு எனக்குத் தெரியலை. நான் நினைக்கறது சரியா தப்பான்னும் புரியலை. அதான் உங்ககிட்ட​யே டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்​தேன்” என்றாள் ​தெளிவாக.

    ​லெனின் ஒரு விநாடி பிரமித்து நின்றான்.

    சற்று சுதாரித்துக்​கொண்டு “சங்கீதா! நீ நி​னைக்கறது சரியா தப்பான்னு என்னால சரியா ​சொல்ல முடியாது. ஃபீலிங்கறது ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட விஷயம். ஆனா நானும் அ​தே ​போல நி​னைக்க​றேனாங்கறதுக்கு​வேண்ணா பதில் ​சொல்ல முடியும். இ​தே வார்த்​தை​யை ஒரு​வேளை நீ 2 வருஷத்துக்கு முன்னாடி​யே ​சொல்லியிருந்தா, நான் எப்படி ரியாக்ட் பண்ணியிருப்​பே​னோ​ தெரியாது. ஆனால் இன்னிக்கு என்னால அ​தை ஏத்துக்க முடியாது. நான் உங்கப்பாவுக்கு வாக்குக் ​கொடுத்திருக்​கேன். உன்​மேல நான் ஆசைப்பட்ட காலமும் உண்டு. ஆனால் இப்​போ அதையெல்லாம் தாண்டி வந்துட்​டேன். உங்கப்பா அன்னிக்கு என்கிட்ட வந்து ​பேசினப்போ அவருக்கு உன் ​மேல இருந்த அதீத அன்புதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுது. அதனாலதான் அவர்கிட்ட என்னிக்கு​மே நமக்குள்ள காதல்ங்கற உணர்​வோ உற​வோ இருக்காதுன்னு சத்தியம் பண்ணிக்​கொடுத்​தேன். என் வாக்​கை நம்பித்தான் இன்னிக்கு வரைக்கும் உங்கப்பா நம்ம நட்புக்கு குறுக்​கே வர​லை. என்னிக்கு​மே நீ என் ஃப்​ரெண்ட். அதுல சந்​தேகம் இல்​​லை. உனக்கு எந்த நேரத்துலயும் உதவி​ செய்யத் தயாரா இருப்​பேன். ஆனா நட்புக்கு அடையாளமா தா​னே தவிர, காதலுக்கு அ​டையாளமா இல்​லை. நீ சில காலமா இருக்கற இந்த உணர்வுகளுக்கு மதிப்பு ​கொடுக்கற​தை விட நீ பிறந்ததி​லேர்ந்து உன்​னைப் பத்தியும் உன் வாழ்க்கை பத்தியும் கனவு காணற அவங்க​ளோட உணர்வுகளுக்கு மதிப்பு ​கொடு. நிச்சயம் நமக்கு நல்லதைத் தான் அவங்க ​செய்வாங்க. மன​சை கலங்க விடாம சந்​தோஷமா இரு.”

    அவனது தீர்க்கமான​ தெளிவான ​பேச்சு சங்கீதாவின் மனதில் பதிந்தது​. முதலில் ஏமாற்றமாகத் தோன்றினாலும்  அவன் கூறிய வார்த்​தைகள் அனைத்தும் சரி​யென்று புத்தி ​அறிவுறுத்தியது.

    “தேங்க்ஸ் ​லெனின். நீங்க சரியான முடிவு தான் ​சொல்லுவீங்கங்கற நம்பிக்கைல தான் என் குழப்பத்தின் ஆரம்பத்தி​லே​யே உங்ககிட்ட வந்தேன். இனி என் மனசு அ​லைபாய விட மாட்​டேன். ​தேங்க்ஸ் அ​கைன்!”  என்று கூறி புன்ன​கைத்தாள் சங்கீதா.

    படத்திற்கு நன்றி: http://reallyducksoup.blogspot.com/2011/04/sacred-child.html

    Share
  • கால இயந்திரம்-(பாகம்-3)

     

    பர்வத வர்தினி

    இரண்டு நாட்கள் கழித்து பூங்கொடியின் அரசாங்க ஆணைப் பத்திரத்துடனும் பொன்னுமலையான் போன்று வேடமிட்டிருந்த கிருஷ்ணசாமியுடனும் சாரு கோட்டைக்குள் புகுந்தாள். ஆணைப் பத்திரத்தைக் கண்டவுடன் இவர்கள் உள்ளே செல்ல தடையேதுமின்றி அனுமதிக்கப்பட்டது. 

    அது மாலைப்பொழுது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மல்லிகை வாசம் நாசியைத் துளைத்தது. இருவரும் மிகவும் ஜாக்கிரதையாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சென்றனர். கடம்பூரின் அரண்மனையும் அதன் பின்புறம் தோட்டமும் மாலை சூரியனின் சிவந்த ஒளியில் அழகுற காட்சியளித்தது. 

    சாரு கிருஷ்ணசாமியிடம் மெல்லிய குரலில் “நான் படிச்சிருந்தபடி இந்த இரவிலே தான் அந்த சம்பவம் நடக்கப் போகுது. அதுக்கு முன்னாடி வந்தியத்தேவர் அரண்மனை தோட்டத்துக்கு வருவார். அங்கிருந்துதான் மணிமேகலை அவரை சுரங்க வழிக்கு அழைச்சுக்கிட்டு போவா. அவர் மணிமேகலையை பார்க்கறதுக்கு முன்னாடி நான் அவரை சந்திக்கணும். ஸோ நாம கொஞ்சம் இருட்டினதும் அந்த மதில் சுவர் மேலே ஏறி அந்தப்பக்கம் அரண்மனைத் தோட்டத்துக்குள்ளே குதிச்சுடணும். சரியா?” என்று கேட்டாள். 

    “மதில் சுவர் மேலே ஏறி குதிக்கறது என்ன சாமானிய காரியமா?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி. 

    “அங்கிள், அங்கேப் பாருங்க! ஒரு பெரிய மரம் சுவருக்குப் பக்கத்திலே இருக்கு. இந்த இடமும் ஆள் நடமாட்டம் கம்மியா இருக்கு. கண்டிப்பா முடியும்” என்று ஊக்குவித்தாள். 

    “சரி ஆகட்டும்” என்றார் அவர். 

    சற்று நேரம் அவர்கள் கடைவீதியில் உலாவிவிட்டு இருட்டியதும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவ்விடமே அமைதியாக நிச்சலனமாக இருந்தது.சாரு அங்கிருந்த பெரிய மரத்தின் மீது ஏறத் துவங்கினாள். மரம் ஏறி பழக்கம் இல்லாததால் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஆனாலும் வந்தியத்தேவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவளை மேலும் மேலும் ஏறச் செய்தது. பின்னாலேயே கிருஷ்ணசாமியும் மூச்சிரைக்க மரம் ஏறிக் கொண்டிருந்தார். மரத்தினை முக்கால்வாசி ஏறியதும் மதில் சுவருக்கு தாவி சில அடிகள் நடந்து அந்தப்பக்கம் இருந்த மற்றுமொரு மரத்தைப் பிடித்துக் கொண்டு இறங்கினாள் சாரு. கிருஷ்ணசாமியும் இவளைத் தொடர்ந்து வந்திறங்கினார். 

    பதுங்கி பதுங்கி சென்று தோட்டத்தில் தாமரைக்குளத்தை இருவரும் கண்டுகொண்டனர். அப்போது யாரோ தோட்டத்திற்குள் வரும் சப்தம் கேட்டு இருவரும் ஒளிந்து கொண்டனர். வந்தது வந்தியத்தேவன் என்று தெரிந்ததும் இருவரும் வெளியில் வந்தார்கள். அவர்களைக் கண்டு வந்தியனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. “இங்கே எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டான். 

    “ஆழ்வார்க்கடியானின் உதவியுடன் வந்தோம். உங்களைப் பார்க்கவே சிரமப்பட்டு வந்தோம்” என்றாள் சாரு. 

    “எதற்கு? என்ன விஷயம்? ஆழ்வார்க்கடியான் ஏதேனும் சேதி சொல்லி அனுப்பினானா?” என்று கேட்டான் வந்தியத்தேவன். 

    “அவர் சேதி ஒன்றும் அனுப்பவில்லை. நாங்கள் திரும்பி செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களிடம் விடை பெற்று செல்ல வந்தோம். அத்துடன் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்யவும் வந்தோம். இன்று,இளவரசருக்கு ஆபத்து காத்திருக்கிறது. நீங்கள் அவருடன் இருந்தாலும் அவரை உங்களால் காப்பாற்ற முடியாது. ஆகையால் நீங்கள் எங்காவது சென்று விடுங்கள். அவருடன் நீங்கள் இருந்தால் ஒரு பெரும் பழிக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதைத் தெரிவிக்கவே வந்தேன்” என்று கண்களில் நீர்மல்க கூறினாள் சாரு. 

    வந்தியத்தேவனுக்கு இவளது அன்பைக் கண்டு மனம் கனிந்தது. சூதும் சூழ்ச்சியும் நிறைந்த இந்த உலகத்தில் அன்புடன் தனது பாதுகாப்பை எண்ணி பேராபத்துக்கிடையில் இவள் கோட்டைக்குள் புகுந்திருக்கிறாளே என்று வியப்பு ஏற்பட்டது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது தெய்வப்புலவரின் வாக்கல்லவா! காலங்கள் தாண்டி என்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று எண்ணினான். 

    “சாரு உன்னு​டைய அன்பு என்னை பேச முடியாதபடி கட்டிப்போடுகிறது. இருந்தாலும் நான் என் கடமையை செய்யக் கடமைப்பட்டவன். எத்தகைய நிலையிலும் இளவரசரைப் பிரிய மாட்டேன் என்று எனது உயிருக்கும் மேல் நான் போற்றும் இளவரசி குந்தவையிடம் வாக்களித்திருக்கிறேன். ஆபத்துக​ளை சமாளித்துக் கொள்​வேன்! நீ கவலைப்படாதே! நீ பத்திரமாக உன் காலத்திற்கு செல்” என்றான் வந்தியத்தேவன். 

    கொஞ்ச தூரத்தில் மணிமேகலையின் குரல் கேட்கவே வந்தியத்தேவன் அவசரமாக “சாரு நீ சென்று விடு. மணிமேகலை வருகிறாள். அவள் உங்கள் இருவரையும் பார்த்து விட்டால் குழப்பம் தான் அதிகரிக்கும்” என்றான். 

    சூழ்நிலையை புரிந்து கொண்டு சாருவும் கிருஷ்ணசாமியும் அவசரமாக அகன்று சென்றனர். 

    தோட்டத்தின் மறுபகுதிக்கு வந்தபின் சாரு நின்றாள். சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். வந்தியத்தேவரை பின் தொடர்ந்து சென்றால் வேட்டைமண்டபத்தை அடையலாம். ஆனால் அங்கே சதிகாரர்களிடம் தானும் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். வேறெப்படி அந்தப்புரத்திற்குள், நந்தினியின் அறைக்குள் நுழைவது? அங்கு தான்ஆதித்தகரிகாலரின் மரணம் ஏற்படும் என்று படித்திருக்கிறோமே! 

    தீவிரமாக யோசித்ததில் அவளுக்கு ஒரு யுக்தி தோன்றியது. 

    “அங்கிள், எனக்கு ஒரு ஐடியா!” 

    “என்ன சாரு? சொல்லு” என்றார் கிருஷ்ணசாமி. 

    “என்னுடைய கணிப்பின்படி மேல்மாடத்துலே ஒரு துவாரத்தின் வழியா காபாலிக உருவத்துல பெரிய பழுவேட்lடரையர் நந்தினியைப் பார்க்கப் போவாரு. நான் ஒளிஞ்சிருந்து அவர் போகும் போது அவருக்குப் பின்னாலேயே போனேன்னா கொலை நடக்கபோற இடத்துக்கு ஈஸியா போய்டலாம்னு நினைக்கிறேன். ஆனா நீங்க இங்கேயே எனக்காக காத்திருக்கணும். நான் போய்ட்டு திரும்பினதும் நாம கால இயந்திரத்துலே கிளம்பிடலாம். ஒருவேளை நான் வர லேட்டானா, நீங்க கிளம்பிடுங்க. ஏன்னா அதுக்கும் மேல இங்கிருந்தா உங்களுக்கும் ஆபத்தா முடிஞ்சிடும்” என்றாள் சாரு. 

    “இதெல்லாம் தேவையில்லாத விஷப் பரீட்சைம்மா. நாம இப்போவே கிளம்பலாம்னு நினைக்கறேன்.” 

    “வந்த காரியத்தை அரைகுறையா விட்டுட்டு வர மனசில்லே  அங்கிள். ப்ளீஸ் இது தான் கடைசி முறை” என்றாள் கெஞ்சலாக. 

    “சரி. ஆனா உன்னை நான் பத்திரமா கூட்டிட்டு போகாம தனியா திரும்பி போக மாட்டேன். நீ சொன்னபடி உனக்காக இங்கேயே காத்திருக்கேன்” என்றார். 

    “நான் போய் தயாரா ஒளிஞ்சிக்கறேன் அங்கிள். நீங்களும் பத்திரமா இருங்க” என்று சொல்லி விட்டு சாரு மெல்ல நடந்து மேல்மாடத்திற்கு போகும் வழியைக் கண்டுபிடித்து சென்றாள். மேல் மாடத்தில் ஒரு பெரிய தூணின் பிரம்மாண்ட நிழலில் மறைந்துகொண்டாள். காபாலிகரின் வருகைக்காக காத்திருக்கலானாள். 

    நேரம் கடந்துகொண்டே இருந்தது. காபாலிகர் வரும் வழியாகத் தெரியவில்லை. ஒருவேளை வேறேதேனும் வழியில் போயிருப்பாரோ என்று அவள் மனம் யோசிக்கத் துவங்கியபோது அங்கே ஆஜானுபாகுவான உடல்கட்டுடன் கழுத்தில் ஒரு மண்டை ஓட்டு மாலையுடன் காபாலிகர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி மறைந்து மறைந்து வந்தார். சற்று தூரம் சென்று தரையில் ஓரிடத்தில் அமர்ந்து ஏதோ நெம்புவது போல் செய்யவும் கீழே ஒரு துவாரம் தோன்றியது. அது தான் களஞ்சிய அறைக்குச் செல்லும் வழியென சாரு புரிந்து கொண்டாள். அவர் உள்ளே சென்றதும் அவரைத் தொடரலாம் என்று எண்ணி எழுந்தவளுக்கு அதிர்ச்சி. அவருக்குப் பின்னே மற்றுமொரு மனிதன் அவர் சென்ற வழியிலேயே சென்று அதே துவாரத்திற்குள் இறங்கியதைக் கண்டாள். இவன் யார்? எதற்குப் பழுவேட்டரையரை பின்தொடர்கிறான்? என்று யோசித்தபடியே அவனை சாரு பின்தொடர்ந்தாள். 

    திறந்திருந்த துவாரத்தின் வழியே மெல்ல எட்டிப் பார்த்தபோது உள்ளிருந்த தீபத்தின் மங்கலான ஒளியில் அந்த சிறிய களஞ்சிய அறை கண்ணுக்குப் புலனாகியது. அங்கே ஒருவரும் இருக்கவில்லை. எனவே அவளும் அந்த துவாரத்தின் வழியாக நுழைந்து கீழே இறங்கினாள். அவள் இறங்கவும் பக்கத்து அறையில் தடதட என சப்தம் கேட்டது. தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு அவள் கண்ட காட்சி அவளுக்கு மிகுந்த பயத்தை அளித்தது. தவறியும் தான் அலறிவிடக்கூடாது என்று தன் கைகளால் தன் வாயைப் பொத்திக்கொண்டாள். களஞ்சிய அறையின் வாயிலில் வந்தியத்தேவன் மயங்கிக் கிடந்தான். நந்தினி பழுவேட்டரையரைக் கண்ட பயத்தில் நிலைகுலைந்து நின்றிருந்தாள். வேட்டை மண்டபத்திலிருந்து வெளிப்பட்ட ரவிதாசனும் அவனது ஆட்களும் பழுவேட்டரையரைத் தாக்கி நினைவிழக்கச் செய்தனர். 

    காபாலிக உருவத்தில் வந்த பழுவேட்டரையரின் கரத்தில் இருந்த ஒரு திருகுகத்தியைக் கொண்டு அவரைத் தொடர்ந்து வந்த மனிதன் ஆதித்தகரிகாலனை கொன்றிருந்தான். “கடைசியில் எனக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது. இடும்பன்காரியின் கையினால் உனக்கு மரணம் என எமதர்மன் விதித்திருக்கிறான், பார்த்தாயா? ஹாஹாஹாஹா” என்று கொக்கரித்தான் அவன். இனியும் இங்கு நிற்பது ஆபத்து என்று ரவிதாசன் அனைவரையும் கிளம்புமாறு ஆணையிட்டான். நந்தினியின் வேண்டுகோளின்படி பழுவேட்டரையரையும் அவர்கள் தூக்கிச் சென்றனர். அனைவரும் சுரங்கவழியே தப்பிச் சென்றனர். அடுத்த சில விநாடிகளில் அந்த அறையில் இறந்து போன இளவரசரையும் மயங்கிக் கிடந்த வந்தியத்தேவனையும் தவிர யாரும் இல்லை. 

    சாருவின் மனம் பதைபதைத்தது. இந்தக்கட்டத்​தை பொன்னியின் செல்வன் புத்தகத்தில் படிக்கும்போது ஏற்பட்ட துயரமே மிக அதிகம். அந்தக் காட்சியை இப்போது நேரிலும் கண்டுவிட்ட பிறகு அவளது நிலையை என்னவென்றுசொல்ல! இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் துவண்டு கிடந்த வந்தியத்தேவனைக் கண்டாள். தன் மனதில் முடிவு செய்துகொண்டாள். இவர் இங்கு இருந்தால்தானே இவர் மீது பழி சுமத்துவார்கள். இவரை உடனே இங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். ஆனாலும் மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்ணாகிய தான் அவரைத் தூக்கி நிறுத்தமுடியாது. அதற்குப் பதில் அவரை எழுப்பி கூட்டிச் செல்லலாம் என நினைத்தாள். 

    “வந்தியத்தேவரே! எழுந்திருங்கள். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இனியும் நீங்கள் இங்கிருந்தால் ஆபத்து. எழுந்திருங்கள்! கிளம்புங்கள் என்னுடன்!” என்று அழுதுகொண்டே வந்தியத்தேவனை எழுப்பினாள். 

    திடீ​ரென அவளது தோள்பட்டையில் ஒரு கரம். பயத்துடன் திரும்பிப் பார்த்தவள் அங்கிருந்தது கிருஷ்ணசாமி என்று கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள். “அங்கிள், அவரை எழுப்புங்க. இல்லாட்டி வீண் பழி அவர் மேலே விழும்” என்று கதறத் துவங்கினாள். 

    அவளது வாயை பொத்தி கிருஷ்ணசாமி அவளது பேச்சை நிறுத்தினார். “சாரு, இனி ஒரு கணமும் நாம லேட்பண்ணக் கூடாது. அது பெரிய ஆபத்துல தான் கொண்டு போய்விடும். யாராவது நம்மை இங்கே பார்த்துட்டா அந்த கொலைப்பழி நம்ம மேலே கூட விழ வாய்ப்புண்டு.  இங்கிருந்து இப்போவே நாம கிளம்பணும். போகலாம் வா,எழுந்திருசாரு” என்றார். 

    சாரு மறுத்தாள். “வந்தியத்தேவரை காப்பாத்தணும், அதை செய்யாம நான் வரமாட்டேன்” என்று அரற்றினாள். 

    “எழுந்திரு சாரு நேரமாகுது. எழுந்திரும்மா” என்றார் கிருஷ்ணசாமி மீண்டும். 

    “எழுந்திரு சாரு” 

    “எழுந்திரு” 

    “நேரமாகுது” 

    “எழுந்திரு சாரு” 

    திடீரென பெரும் அலை முகத்தில் அடித்தது போலிருந்தது சாருவிற்கு. விருட்டென எழுந்தாள். எழுந்ததும் ஒன்றும் விளங்கவில்லை. திருதிருவென விழித்தாள். 

    “என்னடி இது? இவ்வளோ நேரம் தூங்கியிருக்கே! அதுக்கும் மேலே ‘காப்பாத்தணும் வரமாட்டேன்’னு ஒரே புலம்பல். நானும் எழுப்பிட்டே இருக்கேன். நீயும் தூக்கத்துலே உளறிட்டே இருந்தே! அதான் முகத்திலே தண்ணி ஊத்தி உன் தூக்கத்தைக் கலைச்சேன்” என்றாள் சாருவின் தாய். 

    “நான் எங்கே இருக்கேன்? வந்தியத்தேவர் எங்கே? நீ எப்படிம்மா இங்கே வந்தே? கிருஷ்ணசாமி அங்கிள் எங்​கே போனார்?” என்று கேள்விகளை அடுக்கினாள் சாரு. 

    “சரியாப் போச்சு போ. நீ நம்ம வீட்டுல தான் இருக்​கே. கனவு கண்டியா? பொன்னியின் செல்வன் புக்கை கையிலே வெச்சிண்டு தூங்கிட்டு கனவு வேற கண்டிருக்கே. எப்​போதான் இந்தப் பைத்தியம் உனக்கு தெளியு​மோ​தெரிய​லை! சரி சரி. சீக்கிரம் போய் முகம் கழுவு. சித்து கொஞ்ச நேரத்துல வரேன்னு ஃபோன் பண்ணினான்” என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்றாள் சாருவின் தாய். 

    இன்னமும் கனவிலிருந்து விடுபட முடியாமல் முதல் நாள் நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்த சாருவிற்கு அப்போது தான் விளங்கியது. அட நேத்து தான் ஒரு இங்கிலீஷ் சினிமா பார்த்தோம்.  டைம் மெஷின் மூலமா கடந்த காலத்துக்குப் போற கதை. அதுவும் பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியும் கலந்து இப்படி ஒரு அற்புத கனவு வந்திருக்கும்போல. ஆஹா, இது நினைவாகவே இருந்திருக்கக் கூடாதா? என்று ஏக்கம் ஏற்பட்டது. 

    சிறிது நேரத்திற்கு பின் சித்து வந்தான். சாரு அவனிடம் “சித்து, உங்க மாமா பேரு என்ன?” என்று ஆர்வத்துடன் கேட்டாள். 

    ஏன் இப்படி இவள் கேட்க வேண்டும் எனப் புரியாமல் பார்த்தான் சித்து.. இருந்தும் சற்று நிதானமாகவே சொன்னான். 

    “கிருஷ்ணஸ்வாமி”

     

    Share
  • கால இயந்திரம்-(பாகம்-2)

     

    பர்வத வர்தினி

    ஒரு சில நிமிடங்களிலேயே கால இயந்திரம் அமைதியடைந்தது போல் தோன்றியது. மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள் சாரு. கிருஷ்ணசாமி அவளைக் கண்டு “நாம வந்து சேர்ந்துட்டோம் சாரு” என்றார். பிறகு கதவைத் திறக்க ஒரு பொத்தானை அழுத்தினார். கதவு சத்தமின்றி மெல்லத் திறந்தது. இருவரும் கால இயந்திரத்தை விட்டு இறங்கினார்கள். அவர்கள் இருந்த இடத்தை சுற்று முற்றும் பார்த்தார்கள். அது இரவு நேரம். வானில் வெண்ணிலா பால்மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த இடம் நிறைய மரம் செடிகளுடன் ஏதோ காடு போல் தோன்றியது. 

    சாரு மெல்ல நடக்கத் துவங்கினாள். கிருஷ்ணசாமி அவளிடம் சற்று பொறுமையுடன் இருக்கும்படி கூறிவிட்டு அந்த இடத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஏதோ தேடுவது போல் தோன்றியது. சற்று நேரத் தேடுதலுக்குப் பிறகு அவர் சாருவை அழைத்தார். “இங்கே பாரு சாரு” என்று ஓரிடத்தைக் காண்பித்தார். அங்கே செடிகளும் புதர்களும் மிகவும் அடர்த்தியாக இருந்தன. “நம்மோட கால இயந்திரத்தை இந்த இடத்திலே மறைச்சு வெச்சுட்டு கிளம்புவோம்” என்றார். பிறகு மெல்ல கால இயந்திரத்தை புதர்களுக்கு நடுவில் மறைத்து வைத்தார். 

    “நாம போயிட்டு சீக்கிரம் வந்துடணும். நாம சரியான காலத்துக்கும் இடத்துக்கும் வந்திருக்கோமான்னு பார்த்துட்டு,நீ தெரிஞ்சிக்க விரும்பினதையும் தெரிஞ்சிக்கிட்டு கூடிய சீக்கிரம் வரணும். இது யார் கண்ணிலேயும் பட்டுடக்கூடாது” என்று கூறினார் கிருஷ்ணசாமி. 

    “நிச்சயமா அங்கிள்! இப்போ நாம போகலாம்” என்றாள் சாரு. 

    அவர்கள் இருவரும் அந்தக் காட்டில் வழி தேடி நடந்து சென்றார்கள். 

    சற்று தூரம் சென்ற போது காட்டில் ஏதோ வினோதமான சத்தம் கேட்டது. மிகவும் எச்சரிக்கையாக இருவரும் தொடர்ந்து முன்னேறினார்கள். சற்று தொலைவில் மங்கலான வெளிச்சத்தில் மிகவும் வியப்பிற்குரிய காட்சி தெரிந்தது. அங்கே மரங்களின் ஓரத்தில் ஒரு கோட்டை மதில் சுவரும் அதன் மீதிருந்து இறங்க யத்தனிக்கும் ஒரு வாலிபனும் தெரிந்தார்கள். அவனது கையில் ஒரு வாள் இருந்தது. அவனது உடை பழங்கால வீரர்களின் உடையைப் போன்று தோன்றியது. கீழே ஒரு நாய் ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது, அருகில் ஒருவன் சிரித்துக் கொண்டிருந்தான். எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருவரும் மெல்ல நடந்து சென்று ஒரு மரத்தின் பின் மறைந்து கொண்டார்கள். கீழேயிருந்தவன் மேலிருந்தவனோடு ஏதோ பேசினான். பிறகு மேலிருந்தவன் கீழிருந்தவன் மீதே குதித்தான். இருவரும் சண்டையிட்டனர். இடையில் தடிமனான மற்றொருவன் ஒரு மரத்தின் பின்னிருந்து வந்து நாயின் மீது ஒரு கயிற்றையிட்டு மரத்தில் கட்டினான். பிறகு மேலிருந்து குதித்தவனுக்கு உதவியாக கீழே நின்றிருந்தவனோடு சண்டையிட்டான். கீழேயிருந்தவன் மயங்கி விழுந்தான். 

    இவையெல்லாம் ஏதோ ஊமைப்படம் போலே சாருவுக்கும் கிருஷ்ணசாமிக்கும் தெரிந்தது. அவர்கள் பேசியது ஏதும் காதில் விழவில்லை. ஆனால் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு சாரு மேலிருந்து குதித்தவன் வந்தியத்தேவன் என்றும் உதவி செய்த  குண்டு மனிதன் ஆழ்வார்க்கடியான் என்றும் நாயுடன் வந்து சண்டையிட்டவன் தேவராளன் என்றும் தெரிந்துகொண்டாள். அவளுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. அதை வெளியில் சொல்ல வாயெடுத்தவளை கிருஷ்ணசாமி தடுத்து தாழ்ந்த குரலில் கூறும்படி சைகை செய்தார். அவளும் இவர்கள் யாராக இருக்கக்கூடும் என்று கிருஷ்ணசாமிக்குக் கூறினாள். “நாம சரியான இடத்துக்கு சரியான காலத்திற்கு வந்துட்டோம்” என்று அவரும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 

    “நீ வந்தியத்தேவனைத் தானே பார்க்கணும்னு சொன்னே? இப்போதான் பார்த்தாச்சே? நாம போகலாமா?” என்று கேட்டார். 

    “அங்கிள் ப்ளீஸ்… இவ்வளோ தூரம் வந்துட்டோம். அவர்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போகலாமே. அதோட ஆதித்தகரிகாலனைக் கொன்னது யாருன்னும் தெரிஞ்சிக்கலாம்னு ஆசைப்பட்டேன்” என்றாள் கெஞ்சும் பாவனையில். 

    “சரி சாரு. ஆனா ஒரு விஷயம் நினைவுல வெச்சுக்க. நாம கடந்த காலத்துக்கு வந்திருக்கோம். நம்முடைய செயல் எதுவும் வரலாற்றை பாதிக்காதபடி பார்த்துக்கணும்.  இல்லைன்னா அதன் பின்விளைவுகள் ரொம்ப பயங்கரமா போயிடும். ஜாக்கிரதையா நடந்துக்கோ. அதேபோல இந்த காலத்துல வாழற இவங்களுக்கு தன்னுடைய எதிர்காலம் பத்தி முழுமையா தெரியக்கூடாது. அதுவும் பிரச்சினையா ஆகிடும். ஜோசியர்கள் சொல்ற மாதிரி பட்டும் படாமயும் தெரிஞ்சா பரவாயில்லை. ஆனா முழுசா தெரியக்கூடாது. இதெல்லாம் நீ மறக்கவே கூடாது. புரிஞ்சுதா? இனி நாம தொடர்ந்து போகலாம் வா” என்று கூறிவிட்டு கிருஷ்ணசாமி முன்னேறினார். 

    மயங்கியிருந்த தேவராளனைத் தாண்டி வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றனர். அவர்களுக்கு பின் சிறிது இடைவெளி விட்டு சாருவும் கிருஷ்ணசாமியும் தொடர்ந்தார்கள். வனாந்தரத்தின் இருள் கரியதாக இருந்தாலும் நிலவு போதிய வெளிச்சத்தைத் தந்திருந்தது. சற்று தூரம் சென்றதும் சட்டென்று வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள் என்று தேடியபடியே சாருவும் கிருஷ்ணசாமியும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அப்போது சடாரென பக்கத்திலிருந்த பெரிய மரத்தின் பின்புறமிருந்து வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இவர்களை சூழ்ந்து கொண்டனர். 

    “யார் நீங்கள்? எதற்காக எங்களைத் தொடர்ந்து வருகிறீர்கள்?” என வந்தியத்தேவன் கோபத்துடன் கேட்டான். 

    வந்தியத்தேவனையும் ஆழ்வார்க்கடியானையும் அத்தனை அருகில் பார்த்து சாருவும் கிருஷ்ணசாமியும் பேசத் திராணியற்று பிரமிப்புடன் நின்றனர். அந்த நேரத்தில் தான் வந்தியனும் நம்பியும் அவர்களை ஆராய்ந்தார்கள். சுடிதார் அணிந்திருந்த சாருவும் பேண்ட் சட்டை சகிதம் இருந்த கிருஷ்ணசாமியும் அவர்களுக்கு விந்தையாகத் தோன்றியதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாதல்லவா? வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை பார்த்து, “வீர வைஷ்ணவரே, இவர்களைப் பாரும்! இவர்கள் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்று தெரியவில்லையே. ஏதோ அயல்தேசத்திலிருந்து வந்திருப்பார்கள் போலும். அயல் நாட்டவர் இங்கெ எப்படி ஊடுருவியிருக்க முடியும்? மேலும் இவர்களுக்கு நாம் பேசுவது விளங்குமோ என்னமோ தெரியவில்லை. நான் கேள்வி கேட்டும் இவர்கள் திருதிருவென முழிக்கிறார்களே! நாம் அவசரமாக செல்லும் இவ்வேளையில் இவர்களை என்ன செய்வது?” என்று கேட்டான். 

    ஆழ்வார்க்கடியானும் “சற்று பொறு தம்பி! ஏதேனும் கேட்டுப் பார்ப்போம். அல்லது சைகையினாலே கேட்போம்” என்றான். 

    “சரியாகச் சொன்னீர்கள் வைஷ்ணவரே! ஆனால் எனக்கு சைகை மொழியெல்லாம் தெரியாது. நீங்களே முயன்று பாருங்கள்” என்று கூறினான் வந்தியத்தேவன். 

    இவர்களது சம்பாஷணையின்போதே தனது ஆச்சரியம் நீங்கப் பெற்ற சாரு மெலிதாக புன்னகைத்தாள். 

    “நாங்கள் அயல் தேசத்தை சேர்ந்தவர்கள் இல்லை. நாங்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்” என்று தன்னால் இயன்ற அளவிற்குத் தூய தமிழில் பேசினாள் சாரு. 

    “நல்ல வேளை! நீங்கள் தமிழில் பேசி நாங்கள் சைகை புரிய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று இன்னும் கூறவில்லையே. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிறீர்கள், ஆனால் உங்கள் நடை,உடை, பாவனை அனைத்தும் மிகவும் வேறுபட்டு உள்ளதே” என்றான் வந்தியத்தேவன். 

    “என் பேரு கிருஷ்ணசாமி, இவ பேரு சாருலதா. நாங்க உங்களையெல்லாம் பாக்கலாம்னு தான் எதிர்காலத்துலேர்ந்து வர்றோம்” என்றார் கிருஷ்ணசாமி. 

    வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் ஒருவரை  ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டனர். வந்திருந்த இருவரையும் சந்தேகக்கண்ணுடன் நோக்கி “என்ன எதிர்காலத்திலிருந்து வருகிறீர்களா? நீங்கள் என்ன மாயாவிகளா? இது எப்படி சாத்தியம்? மேலும் செந்தமிழ் ஏன் உங்கள் நாவில் இப்படி அவஸ்தைக்குள்ளாகிறது?”என்று கேள்விகளை அடுக்கினான் ஆழ்வார்க்கடியான். 

    “சார், இதைப் பத்தி விரிவா சொல்றது கஷ்டம். ஆனால் ஒரு இயந்திரத்தை உருவாக்கி 1043 வருஷங்கள் தாண்டி உங்களைப் பாக்க வந்திருக்கோம். அதுலேயும் சாருவுக்கு வந்தியத்தேவரைப் பாக்க அவ்வளோ ஆசை. அதனாலே தான் வந்தோம்” என்று பதில் கூறினார் கிருஷ்ணசாமி. “உங்களோட சில தினங்கள் இருந்துட்டு போகலாம்னு எங்க விருப்பம்” என்றும் கூறினார். 

    “சார் – அப்படியென்றால்?” என்று கேட்டான் ஆழ்வார்க்கடியான். சாரு முந்திக் கொண்டு “சார் என்றால் ஐயா என்று அர்த்தம்” என்றாள். “ஓ அப்படியா சேதி!” என்று வந்தியத்தேவனைப் பார்த்தான் ஆழ்வார்க்கடியான். 

    வந்தியனோ சந்தோஷத்தில் திளைத்தான். பிறகென்ன 1000 ஆண்டுகள் கடந்தும் தன் புகழ் பரவியிருக்கிறதே!தன்னைப் பார்க்க ஒரு பெண் காலங்களைத் தாண்டி வந்திருக்கிறாள் என்றால் கேட்கவா வேண்டும்! பெருமையுடன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்தான். அவனுக்கோ அவன் பார்வையின் பொருள் விளங்கியது. “1000ஆண்டுகள் கழித்தும் வந்தியனின் புகழ் பரவியிருக்கிறதா என்ன?” என்றான் சந்தேகத்துடன். 

    உடனே சாரு, “ஐயா! இவரது புகழ் மட்டுமல்ல. தங்கள் புகழும் பரவியிருக்கிறது. மேலும் இளவரசர் அருள்மொழிவர்மர், இளவரசர் ஆதித்தகரிகாலர், இளவரசி குந்தவைதேவியார் என அனைவரின் புகழும் பரவியிருக்கிறது. உங்களைப் பற்றியெல்லாம் நாங்கள் அறிந்துகொள்ள முக்கிய காரணமாயிருந்தவர் திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உங்களையெல்லாம் நாங்கள் அறியும் வண்ணம் அற்புத காவியம் படைத்திருக்கிறார்” என்று கூறினாள். 

    ஆழ்வார்க்கடியான், “அம்மா நீ சொல்வது எவ்வளவு தூரம் உண்மையோ எமக்குத் தெரியாது. ஆனால் நீ சொல்வதைக் கேட்டு எங்கள் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. 

    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

    தோன்றலின் தோன்றாமை நன்று 

    என்று வள்ளுவப் பெருமான் கூறியிருப்பதற்கிணங்க எங்கள் புகழ் நாங்கள் மறைந்த பின்பும் இருப்பதைக் காட்டிலும் வேறென்ன வேண்டும். கல்கி​யெனும் அந்தப் பெருந்த​கைக்கு நன்றிக் கடன்பட்டிருக்கி​றோம்” என்று கூறி ஆனந்தித்தார். 

    சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தவராக “உங்கள் இருவரையும் சந்தித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் இப்போது அவசர வேலையாகச் செல்கிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்” என்றான். 

    “ஆதித்தகரிகாலரை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்கத்தானே போகிறீர்கள்?  நாங்களும் உங்களுடன் வருகிறோம்” என்றாள் சாரு. 

    கிருஷ்ணசாமி உடனே “சாரு நாம இங்கே வந்திருக்கறது யாருக்கும் தெரியக்கூடாது. இவங்களை நீ பாக்கணும்னு சொன்னதாலே இவங்களை சந்திக்க அனுமதிச்சேன். மத்தபடி நாம இவங்களோட போறது சரியில்லை என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. 

    சாருவின் முகம் வாட்டமடைந்தது. “அப்படின்னா அட்லீஸ்ட் நாம இங்கே எங்கேயாவது தங்கலாம் அங்கிள். நான் பாக்க வந்த விஷயம் என்னன்னு உங்களுக்குத்தான் தெரியுமே” என்றாள். 

    வந்தியத்தேவன் அவர்களிடம் “உங்களை எங்களுடன் அழைத்துச் செல்வது இயலாத காரியம். வேறேதும் உதவி தேவையென்றால் கூறுங்கள். முடிந்ததை செய்கிறோம்” என்றான். 

    “நாங்க சில நாளு தங்க ஏற்பாடு செஞ்சு தர முடியுமா?” என்று கிருஷ்ணசாமி கேட்டார். 

    ஆழ்வார்க்கடியான் சற்று யோசித்து “எனக்குத் தெரிந்த ஒரு விவசாயி​கோட்டைக்கு வெளி​யே குடிசை அ​மைத்துக்​கொண்டு தன் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார். நீங்கள் அவர்களுடன் சில காலம் தங்கியிருங்கள். உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டான். 

    இருவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க​வே, நால்வரும் காட்​டை விட்டு மெல்ல​வெளி​யேறினர். சிறிது தூரத்தி​லே​யே ஏகாந்தமான ஓரிடத்தில் ஒரு குடி​சை அமைந்திருந்தது. நால்வரும் அங்​கே​ சென்றனர். ஆழ்வார்க்கடியான் மெல்ல கதவைத் தட்டினார். சில விநாடிகளில் குடி​சையின் கத​வைத் திறந்து கொண்டு ஒரு முதியவர் வெளி​யே வந்தார். ஆழ்வார்க்கடியா​னைக் கண்டதும் “திரும​லை நீங்களா? வாருங்கள் வாருங்கள்” என்று முகம் மலர வர​வேற்றார். 

    அ​னைவரும்  உள்​ளே நு​ழைந்ததும் ஆழ்வார்க்கடியான்​”பொன்னும​லையா​னே! இவர்கள் இருவரும் நம் ஊ​ரைப் பார்க்க வெளி​தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்க​ளை சில நாட்கள் உனது விருந்தாளிகளாக வைத்திருக்க வேண்டும். மேலும் நம் தேசத்தின் மக்கள் உடுத்தும் உ​டைக​ளையும்​ கொடுத்து உதவ​வேண்டும். நான் அவசர காரியமாக சென்று கொண்டிருப்பதால் உன்னிடம் இந்தப் பொறுப்​பைத் தருகி​றேன். செய்வாயா?” என்று கேட்டான். 

    “அதற்​கென்ன திரும​லை, நிச்சயம் ​செய்கி​றேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பொன்னும​லையான் எனும் அந்த முதியவர். “உன் பேத்தி பூங்​கொடி எங்​கே?” என்று ஆழ்வார்க்கடியான் விசாரிக்கவும், “அவள் பின்புறம் வே​லை செய்து​கொண்டிருக்கிறாள். இ​தோ அ​ழைக்கி​றேன்” என்று​ சொல்லி “பூங்​கொடி பூங்​கொடி” என்று அ​ழைத்தார். 

    பூங்​கொடி பின்புற கத​வைத் திறந்து கொண்டு வந்தாள். அவ​ளைப் பார்த்த மாத்திரத்தி​லே​யே சாருவிற்கு பிடித்துவிட்டது. பூங்​கொடி ஆழ்வார்க்கடியானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு புதிதாக வந்திருந்த மூவ​ரையும் பார்த்தாள். முக்கியமாக சாரு மற்றும் கிருஷ்ணசாமியின் உ​டைக​ளையும் வியப்புடன் பார்த்துக்​கொண்டிருந்தாள்.“என்ன பார்க்கிறாய் அம்மா? இவர்கள் நம் விருந்தாளிகள். சில காலம் நம்முட​னே இருப்பார்கள். இவர்களுக்கு வேண்டிய மாற்று​டைக்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்” என்றார் பொன்னும​லையான். 

    ஆழ்வார்க்கடியான் கிருஷ்ணசாமியிடம் “நாங்கள் சென்று வருகி​றோம். விரைவிலே​யே தங்க​ளை திரும்பவும் சந்திக்கி​றேன்” என்று கூறி வி​டை ​பெற்றான். வந்தியத்​தேவனும் வணக்கம் கூறி விட்டு ​வெளி​யே ​சென்றான். 

    ஏ​னோ சாருவிற்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. தான் வந்தது வந்தியத்​தேவனுடன் அளவளாவுவதற்கும் அவனது வீரப்பயணத்தில் பங்கு​கொண்டு மகிழ்ச்சிய​டையவும் அல்லவா? ஆனால் அதற்கு வாய்ப்பின்றி பிரிந்து ​செல்கிறானே என்று​ தோன்றியது. இருப்பினும் அவள் தனது நிலை​யையும் மறக்கவில்​லை. எதிர்காலத்​தை​சேர்ந்த நாம் கடந்த காலத்திற்கு வர முடிந்த​தே பெரிய விஷயம். இதற்கும் மேல் ஆ​சைப்படக்கூடாது என்று தன்​னைத் தா​னே சமாதானம் செய்து​கொண்டாள். 

    அதற்குள் பூங்கொடி அவர்களுக்கு மாற்றுடைகளைக் கொண்டு வந்து கொடுத்தாள். இரவு உணவருந்தி விட்டு சாருவும் பூங்கொடியும் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். சாரு வித்தியாசமான தமிழில் பேசுவதாக பூங்கொடிக்குத் தோன்றியது. நிறைய பேசிய போதும் தான் கால இயந்திரம் கொண்டு கடந்த காலத்திற்கு வந்ததை மட்டும் சாரு தெரிவிக்கவில்லை. 

    பொன்னுமலையானும் கிருஷ்ணசாமியும் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டனர். பொன்னுமலையானுக்கு தன் விருந்தாளி பேசுவது சரிவர புரியவில்லை. இவர் வேறேதோ மொழியை கலந்து வேறு பேசுகிறார். அதனால் சீக்கிரமே ஓய்வெடுக்கச் சென்று விட்டார். 

    மறுநாள் காலை பொன்னுமலையான் தன் வயலில் வேலை செய்ய கிளம்பினார். பூங்கொடி வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சாரு அவளிடம் ஊரைச் சுற்றிப் பார்க்க தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்கவும் தன் வேலைகளை சீக்கிரம்முடித்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். 

    அழகிய தோட்டங்கள், வயல்வெளி, எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று இருந்தது. விதவிதமான மலர்களும் பழங்களும் நிறைந்து அற்புதக் காட்சியாக இருந்தது. ஊருக்குள்சென்றால் சில மாட்டு வண்டிகள் காணப்பட்டன.சென்னையில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் வளர்ந்திருந்த சாருவிற்கு இந்த இடம் சொர்க்கம் போல் தோன்றியது. ஊருக்கு நடுவில் ஒரு சிறிய சிவன் கோயிலும் வெளியில் ஒரு ஐயனார் கோயிலும் இருந்தன. தெருக்கள் சுத்தமாக காணப்பட்டன. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சாணமிட்டு மெழுகி கோலம் போட்டிருந்தனர். கோலத்தின் நடுவில் பூ வைத்து அழகுபடுத்தியிருந்தார்கள். 

    மாலை வேளையில் கோயிலில் தேவாரப்பாடல் ஒலித்தது. ரம்மியமான இந்த சூழலைப் பற்றியே சாரு பூங்கொடியிடம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள். சொர்க்கமயமான இந்த வாழ்வு சாருவிற்கு மிகவும் பிடித்துப் போனது. 

    கிருஷ்ணசாமியோ தன் கால இயந்திரத்திற்கு ஏதும் ஆபத்து நேராதிருக்க அவ்வப்போது யாரும் பார்க்காத தருணத்தில் காட்டிற்கு சென்று பார்த்து விட்டு வந்தார். 

    இப்படியாக இரண்டு நாட்கள் நகர்ந்தன. மறுநாள் காலை ஊரே உற்சாகத்தில் காணப்பட்டது. மக்கள் அனைவரும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு எங்கோ விரைந்து கொண்டிருந்தனர். சாரு பூங்கொடியிடம் அது பற்றி கேட்கவும் “இன்றைக்கு சோழநாட்டின் நிகரில்லா வீரரும் நமது இளவரசருமாகிய வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்தகரிகாலர் கடம்பூருக்கு விஜயம்செய்கிறார். அவரது  திருமண ஏற்பாடு நடக்குமென தெரிகிறது. அவரைக் காணத் தான் எல்லோரும் செல்கிறார்கள். நாமும் அங்கே செல்லலாம் சாரு” என்றாள். 

    சாருவின் மனம் சட்டென தான் வந்த நோக்கத்தை நினைவுபடுத்தியது. ஆதித்தகரிகாலரின் ஆயுள் முடியும் தருணம் வரப்போகிறது.  அவரைக் கொலை செய்யப் போவது யாராக இருக்கும்? யாருடைய கரத்தின் வாள் அவரது உயிரை மாய்க்கப்போகிறது? இதை அறியத் தானே நாம் இங்கு வந்திருக்கிறோம். ஆனால் அதை அறிய கோட்டைக்கு வெளியில் இருந்து கொண்டு என்னசெய்வது? எப்படி கோட்டைக்குள் செல்வது? இளவரசர் வருவதால் கோட்டையில் பலத்த பாதுகாப்பு இருக்குமே என்று தீவிரமாக யோசித்தாள். 

    பூங்கொடி, பொன்னுமலையான், சாரு மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய நால்வரும் மக்களுடன் மக்களாக காத்திருந்து இளவரசர் வருகையைக் கண்டனர். கட்டியக்காரன் வருவோரின் கீர்த்தியையும் பெயரையும் அறிவிக்கலானான். உயரமாக கம்பீரமாக தனது குதிரையை லாவகமாக செலுத்திக்கொண்டு ஆதித்தகரிகாலர் கடம்பூர் கோட்டை வாயிலை அடைந்தார். அவருடன் கூடவே வந்தியத்தேவன் மற்றுமொரு குதிரையில் வந்தான். அவர்களுக்குப் பின் மேலும் ஒருவர் வந்தார். கட்டியக்காரன் அவரை பார்த்திபேந்திர பல்லவன் என்று அறிமுகம் செய்தான். அவருக்குப் பின் படை வீரர்கள் வந்து சேர்ந்தார்கள். 

    இளவரசருக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தனைக்கும் நடுவில் வந்தியத்தேவன் சாருவைக் கண்டுகொண்டு கண்களினாலே தெரியப்படுத்தினான். சாருவிற்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. விழிபிதுங்கும் கூட்டத்திற்கு நடுவிலும் வந்தியத்தேவன் தன்னைக் கண்டது பேரானந்தமாக இருந்தது. 

    இளவரசர் ஆதித்தகரிகாலர் உள்ளே சென்றதும் கோட்டைக்கதவுகள் தாளிடப்பட்டன. இனி தான் எப்படி உள்ளே செல்வது என்ற யோசனையுடனேயே பூங்கொடியின் வீட்டிற்கு திரும்பி சென்றாள் சாரு. 

    அன்று மாலை கிருஷ்ணசாமி தனித்திருக்கும்போது தன் சந்தேகத்தைக் கேட்டாள் சாரு. “அங்கிள், இப்போ என்ன பண்றது? ஆதித்தகரிகாலருடைய கொலை நடக்கும் சமயம் நான் அங்கே இருந்தா தானே யாரு கொலை செய்தாங்கன்னு கண்டுபிடிக்கமுடியும்? அதுக்கு கோட்டைக்குள்ளே போகணும். எப்படி போறது? ஒண்ணுமே புரியலையே” என்றாள். 

    கிருஷ்ணசாமியோ, “எனக்கென்னமோ நாம இப்போ திரும்பி போயிடலாம்னு தோணுது சாரு. வீணா வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்” என்று அவர் கூறிக்கொண்டிருக்கையிலேயே யாரோ வருவது போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அங்கே ஆழ்வார்க்கடியான் வந்துகொண்டிருந்தான். “இதோ இவரிடமே கேட்போம்” என்று சாரு உற்சாகமடைந்தாள். 

    “நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இருவரையும் கண்டு விடைபெறவே நான் வந்தேன். நான் இப்போது நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்றான் ஆழ்வார்க்கடியான். 

    உடனே சாரு, “எங்களுக்கு நீங்கள் மற்றுமொரு உதவி செய்ய வேண்டும். நான் ஒரு முறை வந்தியத்தேவரை சந்திக்க வேண்டும். அதன் பின் நாங்கள் திரும்பவும் எங்களுடைய காலத்திற்கே சென்று விடுவோம். அவரோ கோட்டைக்குள் இருக்கிறார். தாங்கள் தான் உதவ வேண்டும்” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டுக்கொண்டாள். 

    “அம்மா, இப்போது இளவரசர் கடம்பூருக்கு வந்திருக்கிறார். மேலும் அவரது உயிருக்கு ஆபத்து நேருமென நிமித்தங்கள் கூறுகின்றன. இந்நேரத்தில் நீ கோட்டைக்குள் செல்வது கடினம். அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன” என்றான் அவன். 

    “ஐயா, அதை அறிந்திருக்கிறேன். அதனாலேயே நான் வந்தியத்தேவரை சந்திக்க வேண்டியது அவசியமாகிறது. வந்தியத்தேவர் வீண் பழியில் மாட்டிக் கொள்ளும் அபாய நிலை ஏற்படக்கூடும். அதிலிருந்து அவரை காக்க விரும்புகிறேன். இதற்கு மேல் கூறுவதற்கு எனக்கு உரிமையில்லை. தயவு செய்து என் விருப்பத்தை நிறைவேற்ற உதவி செய்யுங்கள்” என்றாள். 

    ஆழ்வார்க்கடியான் யோசித்தான். பிறகு “சரி. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அரசாங்க வேலைக்காக பூங்கொடி கோட்டைக்குள் செல்ல வேண்டியுள்ளது. நான் அவளிடம் கூறி விடுகிறேன். அரசாங்க வேலைக்கான ஆணைப் பத்திரம் அவளிடம் உள்ளது. அதை நான் உனக்குப் பெற்றுத் தருகிறேன். அவளுக்கு பதில் நீ உள்ளே சென்று விடு. சாமர்த்தியமாக நடந்து கொள். ஜாக்கிரதை. பத்திரமாக நீ உன் காலத்திற்கு திரும்பி செல்ல வேண்டும், நினைவு கொள்!” என்று கூறினான். 

    “ஐயா! இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை நான் மறக்கமாட்டேன்” என்று சாரு கூறினாள். 

    அவர்களிடம் விடை பெற்று கொண்டு ஆழ்வார்க்கடியான் புறப்பட்டான். போவதற்கு முன் தான் வாக்களித்தப்படி அரசாங்க ஆணைப்பத்திரத்தை சாருவிடம் சேர்ப்பித்தான். 

    கிருஷ்ணசாமி சாருவிடம் “இதனாலே உனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கும்மா” என்றார். 

    “ஒண்ணு பண்ணலாம் அங்கிள். பூங்கொடி தன் தாத்தா பொன்னுமலையானோடதான் கோட்டைக்குள்ளே போறதா இருந்தது. நீங்க வேண்ணா அவருக்கு பதில் என் கூட கோட்டைக்குள்ளே வந்துடுங்க. நம்மோட காரியம் முடிஞ்சதும் சீக்கிரமே இங்கிருந்து கிளம்பிடலாம். சரியா?” என்று கேட்டாள். 

    இந்த யோசனை கிருஷ்ணசாமிக்கும் பிடித்திருந்தது. அவர் அதற்கு சம்மதித்தார். 

    (அடுத்து வரும்)

    படங்களுக்கு நன்றி –

    http://zaraahatke.blogspot.in/2008/02/ponniyin-selvan.html

    Share
  • கால இயந்திரம்-(பாகம்-1)

    பர்வத வர்த்தினி

     

     மேன்! நிஜமாவா சொல்றே? உங்க மாமா சயின்டிஸ்டா?” 

    “ஆமாம் சாரு. அவரு ஒரு சயின்டிஸ்டு தான். ஆனா பெரிசா சொல்லும்படி இதுவரைக்கும் ஒண்ணும் கண்டுபிடிச்சதில்லை.ஏகப்பட்ட புக்ஸுக்கும் நிறைய தட்டுமுட்டு சாமானுக்கும் மத்தியிலே உக்காந்து ஏதோ செஞ்சிட்டு இருப்பாரு. ஏதாவது கேட்டா அவர் சொல்ற பதிலும் நமக்கு புரியாது. உருப்படியா வேலை செஞ்சு காசு சம்பாதிக்கற எண்ணமும் இல்லை. நல்லவேளை அவரு பண்ண ஒரே நல்ல காரியம் கல்யாணம் எதுவும் பண்ணிக்கலை. இல்லைன்னா இப்படி இவரு பொறுப்பில்லாம இருக்கறதுக்கு ரொம்பவே கஷ்டமா போயிருக்கும்.” 

    “என்ன சொல்றே சித்து! அப்போ அவருடைய தினசரி செலவுக்கு என்ன செய்யறாரு?” 

    “அதுவா… எங்க தாத்தா தஞ்சாவூர்லே நிறைய நிலபுலத்துக்கு சொந்தக்காரரா இருந்தாரு. அந்த நிலத்தோட குத்தகைப் பணம் மாமாவுக்கு  மாசம் தவறாம வந்துடும். அதுல தான் அவருடைய தினசரி செலவுக்கும் ஆராய்ச்சிக்கும் செலவு பண்ணுவாரு. அப்படியும் ஏதோ ஆராய்ச்சிக்குன்னு சொல்லி பாதிக்கு மேலே நிலத்தை மாமா வித்துட்டாரு. 

    “நீ சொல்றதெல்லாம் பாக்கும் போது உங்க மாமாவை பாக்க எனக்கு ஆசையா இருக்கு, சித்து.” 

    “அதுக்கென்ன, வர்ற சனிக்கிழமை போய் பாக்கலாம். ஆனா ரொம்ப எதிர்ப்பார்ப்போட வராதே, நீ ஓவரா நினைக்கற அளவுக்கு ஒண்ணும் இருக்காது.” 

    “சரி சித்து. சனிக்கிழமை அன்னிக்கு போகலாம். சரி. நான் கிளம்பறேன். டைம் ஆகுது. பை.” என்று சொல்லி விடை பெற்றாள் சாரு. 

    சாருலதா, சித்தார்த் – இருவரும் ஒரே கல்லூரியில் பிஸினஸ் மானேஜ்மண்ட் படித்து வருகிறார்கள். தினமும் உணவு இடைவேளையின்போது அரட்டை அடிப்பது அவர்களது வழக்கம். அன்றைக்கும் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கும்போது பேச்சு விஞ்ஞானிகளைப் பற்றி திரும்பியது. அப்போது அவர்கள் பேசியது தான் நாம் மேலே கண்டது. 

    சாருலதா அதீதகற்பனை விஷய்களில் அதிக ஆர்வம் கொண்டவள். படிப்பில் சுட்டியாக விளங்கிய போதும் நேரம் கிடைக்கும் போது நிறைய திரைப்படங்கள் குறிப்பாக இந்த ஃபேண்டஸி திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். புத்தகங்கள் மற்றும் நாவல்கள் படிப்பதும் அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. அவளுடைய புத்தக ஆவலுக்கு வித்திட்டதே அவளுடைய பாட்டிதான். அவள் எட்டாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் விடுமுறைக்காக தன் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள். எப்போதும் மாமாவின் மகனும் மகளும் மற்றும் சித்தியின் மகனும் விடுமுறைக்கு வருவார்கள். அவர்களுடன் நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பாள். அல்லது ஊரில் உள்ள வெயிலெல்லாம் இவர்கள் தலையில் விழும்படி ஆளுக்கு ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு  ஓட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த வருடம் மாமா குடும்பத்தினர் மாமியின் தம்பி திருமணத்திற்காக அவர்களுடைய வீட்டிற்கு சென்று விட்டார்கள், சித்தியின் மகனோ ஏதோ சம்மர் கிளாஸ் சேர்ந்திருந்ததால் பாட்டி வீட்டிற்கு வரவில்லை. 

    எவ்வளவு தான் பாட்டி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு மிகவும் போர் அடித்தது. போர் அடிக்குது பாட்டி என்று புலம்பிய தன் பேத்தியைப் பார்த்து அவளது பாட்டி கெளசல்யா ஒரு புத்தகத்தை அவள் முன் நீட்டினாள். “சாரு, புத்தகம் படிக்க உனக்கு பிடிக்குமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனா இந்த புத்தகம் உன்னை அப்படியே கட்டிப் போட்டுடும். தொடரா வந்திட்டிருந்த போது நான் ஒவ்வொரு பகுதியும் எடுத்து வெச்சு பைண்ட் பண்ணி வெச்சிருக்கேன்” என்று சொல்லி கொடுத்தாள். 

    ‘பொன்னியின் செல்வன்’ என்று முதல் பக்கத்தில் போட்டிருந்தது. ஏதோ பாட்டி மனம் நோகக்கூடாது என்று தான் சாரு அந்தப் புத்தகத்தைப் படிக்கத் துவங்கினாள். ஆனால் பக்கங்கள் திருப்ப திருப்ப அவளுக்கு அதில் நிரம்ப ஆர்வம் ஏற்பட்டது. முழுவதுமாக அது அவளை ஆட்கொண்டது. எங்கு சென்றாலும் பொன்னியின் செல்வன் கையுமாகவே சென்றாள். இரவில் வெகு நேரம் படித்தாள். விடியலில் சீக்கிரம் எழுந்து படித்தாள். அவள் பள்ளித் தேர்விற்கு கூட அப்படி படித்ததில்லை. 5 பகுதிகளையும் 5 நாட்களில் படித்து முடித்தாள். அதன் பின்பு இருந்த எல்லா தினங்களிலும் பாட்டியுடன் அந்த நாவலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். அவளது ஆர்வத்தைக் கண்டு அவளது பாட்டியும் அந்தப் புத்தகத்தை அவளுக்கே கொடுத்து விட்டாள். அதன் பின்பு பற்பல நாவல்களையும் புத்தகங்களையும் தேடி தேடி படிப்பதே அவளுக்கு பொழுதுபோக்கு ஆனது. இருந்தும் பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய தாக்கத்தை வேறெந்த நாவலும் அவளுக்குள் ஏற்படுத்த இயலவில்லை. 

    அடடே! பொன்னியின் செல்வன் மீது சாருவிற்கு இருந்த ஆர்வம் நம்மையும் தொற்றிக் கொண்டு விட்டதோ! நாம் தற்சமயம் நடக்கும் கதைக்கு வருவோம். 

    அன்று கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்லும் வழியிலெல்லாம் சாருவின் மனம் சித்தார்த்தின் மாமாவாகிய அந்த விஞ்ஞானி பற்றியே இருந்தது. ஒரு விஞ்ஞானியை இத்தனை எளிதில் பார்க்கமுடியும் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் சினிமாவில் மட்டுமே விஞ்ஞானிகளை கண்டிருக்கிறாள். அவரிடம் என்ன பேசுவது என்ன கேட்பது என்று யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள். 

    எப்போதும் போல் தினசரி வேலைகளை முடித்துவிட்டு தன் கல்லூரி பாடத்தையும் படித்து விட்டு டிவியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தையும் பார்த்துவிட்டு இரவு தன் படுக்கையில் வந்து படுத்தாள். இன்னமும் அவள் மனம் விஞ்ஞானியை சுற்றியே இருந்தது. 

    ன்று சனிக்கிழமை. கல்லூரிக்கு விடுமுறை. சித்து சாருவை அழைத்துச் செல்ல அவள் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி சித்தார்த்தின் மாமா வீட்டிற்கு சென்றனர். சித்துவின் மாமாவைக் கண்டதும் சாருவிற்கு ஆச்சரியம். உயரமாக நீளமான தலைமுடியுடனும் குறுந்தாடியுடனும் கண்ணாடி அணிந்து கிட்டத்தட்ட எந்திரனில் வந்த  வசீகரனான ரஜினிகாந்த் போல் இருப்பார் என்று எண்ணிய சாருவிற்கு சாதாரண பாண்ட் சட்டை அணிந்து சீராக தலைவாரி நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்துடன் இருந்த அவரைப் பார்த்ததும் நம்புவது கடினமாக இருந்தது. வயது நாற்பது அல்லது சற்று அதிகமாக இருக்கலாம். ஆழ்ந்து நோக்கும் கண்கள். இவரைப் பார்த்தால் விஞ்ஞானி போல் இல்லையே. எல்லோரையும் போல் சாதாரணமாகத் தான் இருந்தார். அது சரி, நாம் சினிமாவில் தான் விஞ்ஞானிகளைப் பார்த்திருக்கிறோம். சினிமா நமக்கு அப்படியொரு இமேஜ் ஐ தான் கொடுத்திருக்கிறது என்று நினைத்துத் தன்னுள் சிரித்துக் கொண்டாள். இருந்தும் அவரிடம் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் இருந்தது. 

    “மாமா, இவள் பேரு சாருலதா. என்னோட காலேஜ்மேட். உங்களைப் பத்தி சொன்னதும், பார்க்கணும்னு ரொம்ப ஆர்வமா கேட்டா. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் சித்தார்த். 

    “அப்படியா, வாம்மா உள்ளே வா” என்றார் அவர். 

    “வணக்கம் அங்கிள்” என்றவாறே உள்ளே நுழைந்தாள் சாரு. 

    இருவருக்கும் குடிக்க குவளைகளில் பழச்சாறு கொடுத்தார். “சொல்லும்மா, என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தே” என்று அன்புடன் விசாரித்தார். 

    “நீங்க சயின்டிஸ்ட்னு சித்து சொன்னதுமே எனக்கென்னமோ உங்களைப் பார்க்கணும்னு தோணிடுச்சு. இத்தனைக்கும் எனக்கும் சயின்சுக்கும் ரொம்ப தூரம். சயின்ஸ் படிக்க பயந்தே நான் ப்ளஸ் டூ’ல காமர்ஸ் க்ரூப் எடுத்தேன்” என்று பற்கள் தெரிய பளீரென சிரித்தாள். கிருஷ்ணசாமியும் அவருடன் சேர்ந்து சிரித்தார். மேலும் அவள், “என்னமோ ஒரு உந்துதல், உங்களைப் பார்த்து நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்.  ஆனால் உங்களுக்கு விருப்பமிருந்தா மட்டும் சொல்லுங்க அங்கிள். நான் கட்டாயப்படுத்தலை” என்றாள்.  

    சாருவின் பேச்சு கிருஷ்ணசாமிக்குப் பிடித்திருந்தது. “அதுக்கென்னம்மா, கண்டிப்பா சொல்றேன் இப்போ…” என்று தொடங்கியவரை சித்து பாதியில் நிறுத்தினான். “மாமா, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் ஒரு சின்ன வேலையை முடிச்சுட்டு ஒரு மணி நேரத்திலே வந்து சேர்ந்துடறேன்” என்றான். 

    “என்ன சித்து? முக்கியமான வேலையா?” என்று கேட்டாள் சாரு. 

    “ஆமாம் சாரு. இன்னிக்கு விட்டா ஒரு வாரத்துக்கு ஒண்ணும் பண்ணமுடியாது. நீ பேசிட்டு இரு. நான் சீக்கிரம் வந்துடறேன்” என்றான் சித்து. சரி என்று தலையசைத்தாள் சாரு. 

    முகத்தில் ஒரு புன்னகையுடன் “போய்ட்டு வா சித்து” என்றார் கிருஷ்ணசாமி. 

    சித்து வெளியே சென்றதும் “இவன் இப்போ எதுக்கு போறான் தெரியுமா? நான் என்னோட ஆராய்ச்சிப் பத்தி பேச ஆரம்பிச்சேன்ல, அதனால தான். சித்துவுக்கு அதுல சுத்தமா உடன்பாடு கிடையாது. சான்ஸ் கிடைச்சா எஸ்கேப் ஆகிடுவான்” என்று சொல்லி சிரித்தார். சாருவும் புன்னகைத்தாள். 

    “சரி உன்னை என்னோட லேப்புக்குக் கூட்டிட்டு போறேன் வா” என்ற கிருஷ்ணசாமி ஹாலின் பக்கவாட்டில் இருந்த ஒரு கதவைத் திறந்து வழிகாட்டினார். அவர் முன்னே செல்ல சாரு அவரைத் தொடர்ந்தாள். கதவைத் திறந்ததும் ஒரு சிறிய படிக்கட்டு கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த இடம் கிட்டத்தட்ட ஒரு கொடெளன் போல தான் காட்சியளித்தது. ஆனால் அது கொடெளன் அல்ல என்பதற்கு சாட்சியாக நிறைய புத்தகங்கள் இறைந்து கிடந்தன. மேலும் பல சாமான்கள் சுற்றிலும் இருந்தன. அந்த அறையின் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு பொருள் பெரிய சீலை கொண்டு மறைத்திருந்தது. 

    அவள் சுற்றும்முற்றும் பார்க்கையில் “இதுதான் சாரு. என்னோட லேப்  பொதுவா நான் இங்கே யாரையும் அனுமதிக்கறது இல்லை. ஏனோ நீ கேட்டதும் உனக்கு காமிக்கலாம்னு தோணிடுச்சு”. 

    “ரொம்ப நன்றி அங்கிள். இப்போ நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்க?” என்று கேட்டாள் சாரு. 

    “அதைப் பத்தி உனக்கு நான் கண்டிப்பா சொல்றேன், ஆனா அதுக்கு முன்னாடி நீ இங்க பார்க்கறதைப் பத்தியோ நாம பேசறதைப் பத்தியோ யார்கிட்டேயும் சொல்லக்கூடாது. சொல்லமாட்டேன்னு உறுதி தந்தா நாம  தொடர்ந்து பேசலாம்” என்றார். 

    “கண்டிப்பா அங்கிள். நிச்சயமா யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்றாள் சாரு. 

    “சரிம்மா. நான் இப்போ பண்ணிட்டு இருக்கிற ஆராய்ச்சி கால இயந்திரத்தைப் பத்தினது” என்றார் அவர். 

    “கால இயந்திரமா?” என்று கண்களில் ஆச்சரியம் மின்னக் கேட்டாள் சாரு, “யூ மீன் டைம் மெஷின்?” என்றாள் உற்சாகத்துடன். 

    “ஆமாம் சாரு. டைம் மெஷின்தான். கிlட்டத்தட்ட 20 வருஷமா இந்த ஆராய்ச்சியைத்தான் பண்ணிட்டு இருக்கேன்.99 சதவீதம் முடிச்சுட்டேன்” என்று சொல்லிக் கொண்டே அறையின் ஓரத்தில் சீiலையிட்டு மறைத்திருந்த பொருளுக்கு அருகில் சென்றார். 

    “இதோ இதுதான் நான் தயாரிச்சிருக்கற கால இயந்திரம்” என்று சொல்லிக்கொண்டே அந்தச் சீலையை விலக்கினார். 

    சாருவின் புருவங்கள் ஆச்சரியத்தால் மேலே சென்றன. ஒரு பெரிய அளவிலான கோழி முட்டை போன்று அதன் வெளித்தோற்றம் இருந்தது. அதன் முன்புறம் கண்ணாடியினால் ஆனது, சில விளக்குகளும் காணப்பட்டன. மேல்புறமும் சில விளக்குகள் இருந்தன. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டு கதவுகள் இருந்தன. கீழே இரண்டு சக்கரங்களும் பின்புறம் இறக்கை போன்ற வடிவமைப்புடனும் இருந்தது. கிருஷ்ணசாமி கதவுகளைத் திறந்து காண்பித்தார். உள்ளே, முன்னால் இரண்டு பின்னால் இரண்டு என நான்கு இருக்கைகள் இருந்தன. ஓட்டுனரின் இருக்கைக்கு எதிரே கார் போன்று ஸ்டீயரிங் இருக்கவில்லை. ஆனால் சில பட்டன்களும் விளக்குகளும் இருந்தன. ஒரு டிவி திரை (screen) போன்ற ஒன்றும் இருந்தது. மேலும் ஒரு திசைகாட்டி. இவையாவும் பொருத்தப்பட்டிருந்தன. 

    “வாவ் அங்கிள்! பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. இது எப்படி வேலை செய்யும்? நம்மாலே நிஜமாவே டைம் டிராவல் பண்ண முடியுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் சாரு. 

    “இது எந்த அளவுக்கு வேலை செய்யும்னு நான் இனிமேல் தான் சோதனை செய்து பார்க்கணும்.  ஆனால் கண்டிப்பா சரியாக வேலை செய்யும்னு நம்பிக்கை இருக்கு. இதற்காக நான் பயன்படுத்தற எரிபொருள் நிலக்கரி. இது எப்படி வேலை செய்யும்னு மட்டும் என்னாலே இப்போ உன்கிட்ட சொல்ல முடியாது. அது ரகசியம். அப்படியே நான் சொன்னாலும் உனக்கு அது புரியாது” என்று சொல்லி சிரித்தார் கிருஷ்ணசாமி. 

    சாருவிற்கு அது எப்படி வேலை செய்யும் என்பதில் அக்கறையிருக்கவில்லை. ஆனால் இதைப் பயன்படுத்தி தான் ஒருமுறை கடந்த காலத்திற்கு செல்ல வேண்டுமென்று விரும்பத் துவங்கினாள். தன் மனதில் தோன்றியதை கிருஷ்ணசாமியிடமும் கூறினாள். “அங்கிள், நீங்க கோவிச்சுக்கலைன்னா என்னை இதுலே ஏற்றி பழங்காலத்திற்கு அழைச்சுட்டு போவீங்களா?” என்று தயங்கி தயங்கிக் கேட்டாள். 

    கிருஷ்ணசாமி சாரு தன்னிடம் இதைத்தான் கேட்பாள் என்று எதிர்பார்த்திருந்தார். “உனக்கு நம்பிக்கையிருந்தால் நிச்சயம் அழைச்சுட்டுப் போறேன். நானும் இதை சோதனை செய்ய வேண்டியிருக்கு.” 

    சாருவிற்கு தலை கால் புரியவில்லை. “தாங்க்ஸ் அங்கிள்! தாங்க்யூ  ஸோ மச்!” என்று சொன்னதையே திருப்பி திருப்பி கூறினாள். 

    “சரி. நீ கால இயந்திரத்தில் ஏறிக்கோ” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணசாமி ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்தார். சாருவும் துள்ளிக்குதித்து அவருக்கருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். “பெல்ட் போட்டுக்கோ,சாரு. ஏன்னா நாம போகப் போகிற வேகம் அப்படி” என்று சொல்லிக்கொண்டே ஒரு பச்சை நிற பொத்தானை அழுத்தினார். இத்தனை நேரம் அமைதியாக இருந்த கால இயந்திரம் சட்டென உயிர் பெற்றது. உள்ளே பல வண்ண விளக்குகள் எரிந்தன. கதவுகள் தாமாக மூடி பூட்டிக்கொண்டன. டிவி திரை போல் இருந்த திரையில் வணக்கம் என்று ஒளிர்ந்தது. பின்பு போக வேண்டிய தேதி போக வேண்டிய இடம் என்று இரண்டு கேள்விகள் தோன்றின. 

    “சொல்லு சாரு. உனக்கு எந்த காலகட்டத்திற்கு போகணும்? எந்த இடத்துக்கு போகணும்? உன்னோட விருப்பப்படி நாம போகலாம்” என்றார். 

    சாருவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று அவள் எண்ணியதே இல்லை. 

    “அங்கிள் நாம கி.பி. 969ம் ஆண்டுக்கு போகலாம். போக வேண்டிய இடம் கடம்பூர்” என்று உடனடியாக கூறினாள். 

    எந்த காலத்திற்கு என்று கேட்டதும் சற்று யோசிப்பாள் என்று நினைத்த கிருஷ்ணசாமிக்கு அவள் உடனே தீர்க்கமாக சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியம். “அடடே எங்கே எப்போ போகணும்னு ஏற்கனேவே முடிவு பண்ணிட்டியா?” என்று கேட்டார். 

    அவள் புன்னகைத்தபடியே “என் கனவிலும் நினைவிலும் நான் போக விரும்பறது பொன்னியின் செல்வன் காலத்துக்குத்தான். அந்த காலத்துக்குப் போய் என் பேவரிட் காரக்டர் வந்தியத்தேவனைப் பார்க்கணும், அப்புறம் ஆதித்த கரிகாலனை கொன்னது யாருன்னு தெரிஞ்சுக்கணும்” என்று ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கூறினாள். 

    இளமைக் காலத்தில் அவரும் அந்தப் புத்தகத்தை படித்திருந்தபடியால் “சரி உன்னிஷ்டப்படியே போகலாம்” என்றார். 

    அந்த திரையின் கீழ் இருந்த கீபோர்டு கொண்டு போக வேண்டிய  காலத்தையும் இடத்தையும் நிரப்பினார் கிருஷ்ணசாமி. பின்பு மற்றுமொரு பெரிய பொத்தானை அழுத்தவும் கால இயந்திரம் இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தது. அடுத்த வினாடி விர்ரென்ற சத்தத்துடன் கால இயந்திரம் பயணிப்பது சாருவிற்கு தெரிந்தது. கண்ணாடி வழியே ஒன்றும் தெரியவில்லை. மிக வேகமாக இயந்திரம் செல்வது மட்டும் உணர முடிந்தது. வயிறு கலங்குவது போல் இருந்தது. ஒரு வேளை இந்த இயந்திரம் சரியாக வேலை செய்யாமல் போனால் என்னவாகும் என்று திடீரென மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன இருந்தாலும் இப்போது ஏதும் செய்ய முடியாது, என்ன தான் ஆகிறது பார்ப்போமே என்று மற்றுமொரு கணம் தோன்றியது. பயத்தில் இருக்கையை அழுந்த பிடித்தபடி கண்களை மூடிக் கொண்டாள்.

    (அடுத்து வரும்)

    புகைப்படங்களுக்கு நன்றி:

    http://www.clipartguide.com/_pages/0511-0810-1419-0753.html

    http://www.xaraxone.com/FeaturedArt/may04/html/08.htm

    Share