Blog

  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை..

    பொன்னை விரும்பும் பூமியிலே..

     

     

    மண்ணில் பிறந்த மனிதருக்கு இயல்பான ஆசைகள் மூன்று.. மண், பெண், பொன் என்பார்கள். இந்த மூன்றிலிருந்தும் விடுபட்டு வாழ்பவர்கள் ஞானியாகிறார்கள். எனினும் அஃது அத்தனை எளிதன்று!

    ஆசைகள் சிறகடிக்க.. சிறகடிக்க.. நாமும் கற்பனை வானத்தில் பறக்கிறோம். கைகூடவில்லையெனும்போது கதறியழுகிறோம். அளவான ஆசையை வைத்து வாழ்பவனே வளமாக வாழ்கிறான். எல்லாம் மனதின் பாகுபாட்டின் விளைவுகளே!

    காலையும் மாலையும் அந்திவானம் சிவப்பதும் அழகுதானே! செக்கர் வானம் சிவப்பது உழைப்பாளிகளின் இரத்தத்துளிகளாய் ஒரு கவிஞனுக்குப் படுகிறது! அந்த வானம் சிவப்பது தன் காதலியின் கன்னமென இன்னொரு கவிஞனுக்குப் படுகிறது. பொருள் ஒன்றுதான். எடுத்து ஆளும்விதம்தான் மாறுபடுகிறது! இதயம் இடம் மாறும் அதிசயம் காதலில் நடப்பதுண்டு என்றாலும் இடம் பார்த்தே காதல் வருகிறது என்பதே உண்மை. இப்படிப் பலபேர் இருந்துவிட்டுப் போகட்டும்! என்னை விரும்புவது நீயல்லவா? நீ பொன்னுக்காகவோ.. பொருளுக்காகவோ.. என்னை விரும்பவில்லையே! என்னை எனக்காகவே நீ விரும்புகிறாய்! அன்பு மலரே.. என் ஆனந்த மலரே.. இன்பம் நீயே.. என்று காதலன் தன் காதலியைக் கொண்டாடும் இன்பம் இருக்கிறதே கேளுங்கள்..

    ஆலயமணியில் உருவான திரைப்பாடல்.. நடிகர் திலகத்துடன் அபிநய சரஸ்வதி – இணைய கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி வெற்றிக் கூட்டணியில் விளைந்த முத்தமிழ்ப் பாடலிது! தென்றலோடு நடந்துபோகும் சுகம் காணுங்கள்!

    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே
    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே

    ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
    ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
    தாய்மை எனக்கே தந்தவள் நீயே
    தங்க கோபுரம் போல வந்தாயே
    புதிய உலகம் புதிய பாசம்
    புதிய தீபம் கொண்டு வந்தாயே
    (பொன்னை விரும்பும் பூமியிலே)

    பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
    பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
    அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
    அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
    இந்த மனமும் இந்த குணமும்
    என்றும் வேண்டும் என்னுயிரே
    (பொன்னை விரும்பும் பூமியிலே)

    ஆலமரத்தின் விழுதினைப் போலே
    அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
    வாழைக் கன்று அன்னையின் நிழலில்
    வாழ்வது போலே வாழவைத்தாயே
    உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
    உள்ளம் ஒன்றே என்னுயிரே

    (பொன்னை விரும்பும் பூமியிலே)
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    திரைப்படம்: ஆலயமணி

    http://www.youtube.com/watch?v=5c6fQL-diJg

    http://www.youtube.com/watch?v=5c6fQL-diJg

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
    அன்புடன்
    காவிரிமைந்தன்

    Share
  • குறளின் கதிர்களாய்… (17)

     

     செண்பக ஜெகதீசன்

     

    பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்

    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

    -திருக்குறள்- 481 (காலமறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இரவுக்கரசன் கோட்டானும்

    இலகுவாய்த் தோற்றிடும்,

    பகலில் ஒரு

    காக்கையிடம்..

     

    பாடம் இதுதான்

    ஆட்சியாளர்களுக்கும்,

    காலமதை நன்கறிந்து

    காயை நகர்த்தினால்தான்

    கிடைக்கும் வெற்றி

    களத்தில்…!

     

    குறும்பாவில்…

     

    காக்கை வென்றிடும் கூகையைப் பகலில்..

    கதையிதுதான் ஆட்சியாளருக்கும,

    காலமறியாது சென்றால்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    இருளிலும் தெரியும் கண்களாலே

    இரவை ஆண்டிடும் கோட்டானும்

    உருவில் சிறிய காக்கையிடம்

    வந்தால் பகலில் தோற்றுவிடும்,

    தெரிந்திடு உண்மை இதைத்தானே

    தெளிவாய்ப் பொழுதைத் தெரிந்திட்டே

    சரியாய்ச் செயலைச் செய்தால்தான்

    சேரும் வெற்றி ஆட்சியர்க்கே…!

     

    லிமரைக்கூ…

     

    பகலில் தோற்கும் காக்கையிடம் கூகை,

    பொழுதைத் தெரிந்தே

    செய்யும் போரில் சூடிடலாம் வாகை…!

     

    கிராமியப் பாணியில்…

     

    பாருபாரு நேரம்பாரு

    பாயத்தான் பதுங்கத்தான் நேரம்பாரு- சரியா

    நேரம்பாரு..

     

    ராப்போது ராசாதான் கூவபாரு- அது

    பகலவந்து மாட்டிக்கிட்டா

    தோத்திருமே காக்காக்கிட்ட- சின்னக்

    காக்காக்கிட்ட..

     

    ராச்சியத்து ராசாவுக்கும்

    கதயிதுதான்- சொல்லும்

    கருத்திதுதான்,

    காலநேரம் பாத்துசெஞ்சா

    செயம் வருமே- எல்லாமே

    செயம் வருமே..

     

    பாருபாரு நேரம்பாரு

    பாயத்தான் பதுங்கத்தான் நேரம்பாரு- சரியா

    நேரம்பாரு…!

     

            -செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • கவிஞர் வாலி

    மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்..

    இருபெரும் கவிஞர்களென்று இதயம் திறந்து பாராட்ட வேண்டுமென்றால் கவியரசு கண்ணதாசன் அவர்களையும் காவியக்கவிஞர் வாலி அவர்களையுமே சேரும்! திரைப்பாடல்கள் வரிசையிலே எளிய இனிய தமிழை ஏந்தி வந்த இவ்விருவரும் பல நேரங்களில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டது என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் பலருக்கு உண்டு. இதுபற்றி மேடையிலே கவிஞர் வாலி அவர்கள் “எனது பாடலை தங்கத்தோடுதான் ஒப்பிடுகிறார்களே தவிர, தகரத்தோடு அல்ல” என்று பெருமை பொங்க குறிப்பிட்டார்.

    இருமலர்கள் என்னும் திரைச்சித்திரத்தில் ஒரு பாடல் காட்சி! சித்திரம்போல் இருவர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழா ஒன்றில் – காதலன் காதலியாக நடிக்க வேண்டம். பாத்திரப்படைப்புகளாக.. பொறுப்பேற்றவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும் ஆவர். இக்காட்சியில் இடம்பெற்ற பாடல் .. மாதவிப் பொன்மயிலாள்.. தோகை விரித்தாள்.. கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னுகிறது பாருங்கள்..

    ஆம்.. சங்ககாலப் புலவர்களின் சமகால வாரிசோ என்று எண்ண வைக்கும் இனிய வரிகள்.. இலக்கியத்தரம் மிகுந்த அற்புதப் பாடலாய் அமைந்திருந்த இப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் நம்மை ஒரு இலக்கிய காலத்திற்குள் கடத்திச் சென்றுவிடுகிறது. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த அனைத்து கீதங்களும் இன்ப நாதங்கள்!!

    குறிப்பாக கதையின் நாயகி பத்மினி அவர்களின் முகபாவனைகள், நாட்டியம் என மனக் கண்ணில் இன்றும் நீங்காத பாடலாய் நிலைபெறுகிறது. திரைப்பாடலிலும் இத்தனை இலக்கிய ரசம் பொங்கி வழிய முடியுமென இதோ வாலியின் வரிகள் வரிந்துகட்டிக் கொண்டு வருகின்றன பாருங்கள்!

    வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்.. இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்..
    கூனல் பிறைநெற்றியில் நிலவாட.. அந்த நிலவொளியில்
    நிழலாட.. அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட..
    மாதவிப் பொன்மயிலாள் தோகைவிரித்தாள்.. வண்ண மையிட்ட ..

    முதலில் குறிப்பிட்டதைப் போல திரைப்படம் வெளியானபோது, அமோக வெற்றி பெற்றது மாதவிப் பொன்மயிலாள் பாடல்! இப்பாடல் கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்றே கவிஞர் கண்ணதாசன் இல்லத்திற்கு ரசிகர்கள் கடிதங்கள் வந்து குவிந்தன. கடிதங்களைப் படித்த கண்ணதாசன் இந்தப் பாடல் நான் எழுதவில்லையே.. தம்பி வாலி எழுதியது! அவற்றையெல்லாம் ஒரு மூட்டைகட்டி வாலியின் வீட்டில் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி தனது உதவியாளரிடம் உத்தரவிட்டதுடன் கவிஞர் வாலிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து இந்தப் பாடலைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார் என்பதும் அத்துடன் தனது பரிசாக ‘ரம்’ எனப்படும் மதுவகை பானம் ஒன்றையும் அனுப்பியதும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மேதாவிலாசத்திற்கு ஒரு சான்று!

    http://www.youtube.com/watch?v=8OH8Fdl0ack

    பாடல்: மாதவிப் பொன் மயிலாள்
    திரைப்படம்: இரு மலர்கள்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1967

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
    வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
    கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
    குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
    கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
    குளிர் முகத்தில் நிலவின் நிழலாட – கலை
    மானின் இனம் கொடுத்த விழியாட
    ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
    மானின் இனம் கொடுத்த விழியாட – அந்த
    விழி வழி ஆசைகள் வழிந்தோட – நல்ல
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் – நல்ல
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
    கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
    ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
    ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
    ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
    மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்
    தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
    தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
    தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
    பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
    பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்
    பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
    பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
    ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
    ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
    ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
    ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

    http://youtu.be/8OH8Fdl0ack

    http://youtu.be/8OH8Fdl0ack

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அண்ணா கண்ணன்

    சித்திரம் பேசுதடி என்றன் சிந்தை மயங்குதடி என்ற வரிகளுக்கு இணங்க, ஓவியமும் நிழற்படங்களும் நம் உள்ளத்தை என்றும் கொள்ளை கொள்ளக் கூடியவை. புதிய திறமைகளை ஊக்குவிப்பதில் வல்லமை எப்போதும் முன் நிற்கிறது. அவ்வகையில் சிறந்த நிழற்படக் கலைஞர்களைக் கவுரவிக்க உள்ளோம்.

    திவாகர் அவர்கள் பயணத்தில் இருப்பதால், இந்த வார வல்லமையாளரை வல்லமை பிளிக்கர் படக் குழும நிர்வாகி சாந்தி மாரியப்பன் (அமைதிச் சாரல்) தேர்ந்தெடுக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களும் சாந்தியே தேர்ந்தெடுக்க உள்ளார்.

    இனி, சாந்தியின் மடல் –

    முதல் தேர்வு: வனிலா பாலாஜி.

    இயற்கையான ஒளியை மிகச் சிறப்பாகக் கையாள்வது இவரது தனித் தன்மை. வீட்டினுள் எடுத்தவையாக இருந்தாலும் கூட அவரது படங்களில் காணப்படும் அழகு சொல்லி முடியாது.

    71516183@N03_r

    இந்தப் படத்தில் மரப்பாச்சிப் பொம்மைகளின் மேல் படிந்திருக்கும் மெல்லிய ஒளி ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது. அருமையான காட்சியமைப்பு, முரண்பாடான வண்ணங்கள், nice arrangement, மிக மிகத் துல்லியமான படப்பிடிப்பு என்று எல்லாமும் இந்தப் படத்திலிருந்து கண்களை எடுக்க விடாமல் கட்டிப் போடுகின்றன.

    vanila balaji
    http://www.flickr.com/photos/vanilabalaji/11099741773/in/pool-1922937@N20

    மேலும் படங்களை இவரது ஃப்ளிக்கர் பக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.
    http://www.flickr.com/photos/vanilabalaji/with/11338932554

    சாந்தியின் தேர்வினை வழிமொழிந்து, வனிதா பாலாஜி அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவரது திறனும் புகழும் மேன்மேலும் உயர வாழ்த்துகள். உரியவரைத் தேர்ந்தெடுத்த சாந்திக்குப் பாராட்டுகள்.

    கடைசி பத்தியில் விசாலம் அம்மா –

    தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்.

    Share
  • சொந்த சிறை

    பவள சங்கரி

    இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க!

    “இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே.. எத்தன பாடுபடுத்திச்சு என்னய.. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி.. கை குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும் போது தான தெரியும் இந்த ராசுவோட அருமை. நல்லா இருக்கும்போது என்னைய கண்டுக்காம இன்னைக்கு என்னை காப்பாத்துறதுக்கு மூச்சு முட்ட உசிர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறியே.. உனக்கு எம்மேல பாசம் இல்லாமயா இப்புடி ஒரு காரியத்தை பன்னற.. நீ நெம்ப நல்லவிகதான் மாமா.. ஆனா.. “

    உடலெல்லாம் உணர்வற்று மரத்துப்போன நிலையில் மனம் மட்டும் அரை மயக்கத்தில் விழித்த நிலையில் எதை எதையோ பிதற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ராசுமணிக்கு. கழிப்பறை, மின்சார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கேத் திண்டாடும் இந்த குக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று போராடி சாதித்து, அதற்காகத் தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவன் வீரய்யன். ஆசை, ஆசையாக மாமன் மகளை மணந்துகொண்டு அவளையும் சீமாட்டியாக வாழ வைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறான். எல்லாம் என்ன சினிமா கதையா.. ஒரே பாடலில் நினைத்ததெல்லாம் நடந்து முடிந்து ஊரே சுவர்க்கபுரியாக மாறுவதற்கு. இந்த ஆரம்பப் பள்ளியை ஊரில் தொடங்குவதற்குள் அவன் பட்டபாடு சொல்லி முடியாது. பதினான்கு கிலோமீட்டர் அன்றாடம் நடந்து சென்று தான் படித்துவிட்டு வந்து பட்டபாடெல்லாம் இப்போதைய குழந்தைகளுக்கு இருக்கக் கூடாது, அவர்களும் நாலெழுத்துப் படித்து நன்றாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாக இல்லாமல் இருக்கச் சொல்லி, காலில் விழுந்து கும்பிட்டுக்கூட கேட்டாகிவிட்டது. ராசுவும் புரிஞ்சிக்கிற வழியைக் காணோம். அன்றாடம் சண்டை, சந்தேகம், குதர்க்கமான பேச்சு.. சே.. வாழ்க்கையே சலிப்பாகத்தான் போகிறது, வீராவிற்கு. வயிற்றில் குழந்தையை சுமக்கும் ஒரு தாய் போலவா நடந்துகொள்கிறாள். இன்னும் சின்னக் குழந்தையாட்டம் தொட்டதெற்கெல்லாம் அடம் பிடித்துக்கொண்டு, சொல்வதையும் புரிந்து கொள்ளாமல் கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால் ஒரு மனிதன் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். இதோ, வயிற்றில் எட்டு மாத குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் இப்படி ஒரு சாதாரண விசயத்திற்காக சண்டை போட்டு இன்று கீழே விழுந்து படாத இடத்தில் ஏதும் அடிபட்டு விட்டதோ என்னமோ தெரியவில்லை. திடீரென்று இரத்தப் போக்கு ஆரம்பித்துவிட்டது. மயங்கி விழுந்த ராசுவிற்கு தண்ணீர் தெளித்தும் தெளியவே இல்லை. பதறியடித்துக்கொண்டு ஊரில் இருக்கும் இரண்டே இரண்டு குதிரை வண்டியும் , மாட்டு வண்டிகளும், பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றுவிட்டது. மினி பஸ் காலையில் 11 மணிக்கு மட்டுமே ஒரே ஒரு முறை வரும். இரவு 8 மணிதான் ஆகிறது, தெருவே மயான அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த நேரத்தில் செய்வதறியாது, யோசிக்கவும் நேரமில்லாமல், அன்பு மனைவியை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு 14 கி.மீ. தள்ளி இருக்கிற மகப்பேறு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறான் இந்த வீரா, கூடவே மனப்பாரத்தையும் சுமந்தபடி.

    “ஏ மாமா நீயே நினச்சிப்பாரு.. விவரம் தெரிஞ்சு, நானே பாவாடை கட்டுன நாளுலயிருந்து உன்னையத்தான அந்த நாடாவுல முடிஞ்சு வச்சுக்கிட்டு இருக்கேன், உனக்கு ஏன் அது புரிய மாட்டீங்கிது.. எப்பப் பார்த்தாலும் ஊருக்காக, பள்ளிக்கூடப் பிரச்சனையின்னு சுத்திக்கிட்டே திரியறயே, என்ர மாமன் எனக்கு மட்டும்தான் சொந்தம்னு இருக்கோனுமின்னு நான் நினச்சது தப்பா.. நீ வெறுங்கால்ல கஷ்டப்பட்டு அத்தனை தூரம் நடந்து பள்ளிக்கூடம் போறது மனசு பொறுக்காமத்தானே என்ர சிலுவாட்டுக்காசெல்லாம் போட்டு, சாமியண்ணகிட்ட சொல்லி உனக்கு செருப்பு தச்சுக் கொடுத்தேன். அன்னாடம் களியே தின்னு வாய் செத்துப்போய்க் கடக்கறியேன்னுதானே நான் மச்சு ஊட்டுக்கு வேலைக்குப்போய் உனக்கு நல்லஞ்சோறும், கறி குழம்பும் வாங்கியாந்து கொடுதேன். இதெல்லாம் சின்ன வயசிலருந்து பாத்துப் பாத்து பண்ணுனதெல்லாம் சொல்லிக்கிட்டா இருக்க முடியும் சொல்லு….”

    அந்த குக்கிராமத்தில் சிப்பம் போடவும், துண்டு முடியவும் இப்படி சின்ன சின்ன கூலி வேலைக்குப் போகிறதை தவிர வேற என்ன செய்ய முடியும். கூலியாகக் கிடைக்கிற அந்த கொஞ்ச பணத்துல மேல் செலவும், கேப்பைக் களியும்தான் செய்து சாப்பிட முடியும். இதில் படிப்பதற்கு ஆசைப்படுவது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், அவனை எப்படியாவது ஒரு வாத்தியார் வேலைக்குப் படிக்க வைக்க வேண்டும் என்பது அந்த அப்பாவின் ஆசையாக இருந்தது.

    ”ஏஞ்சாமி, ஒழுங்கா படிச்சுப்போட்டு, எப்படியாச்சும் ஒரு வாத்தியார் வேலய வாங்கி, நம்ம ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் வரதுக்கு வழி பண்ணு ராசா.. இந்த ஊரு பேருதா பிள்ளை நிலா, ஆனா இங்க இருக்குற புள்ளைகளெல்லாம், வெய்யில்லயும், முள்ளுக்காட்டுக்குள்ளாறயும் அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்தும் நொந்து போய் கிடக்குதுக.. கால் வவுறு கஞ்சிக்கு பாவம் கால்கடுக்க நின்னுகிட்டு கிடக்குதுக. கூலி வேலயத் தவுர வேற ஒன்னும் தெரியாம நாங்கதேன் இதா.. இம்புட்டுப் பாடுபட்டுகிடக்கறோம். . இனிமேப்பட்டாவது நம்ம புள்ளைக கஷ்டம் படாம இருக்கோணும். இளமைல கொடியது வறுமையப்பா.. இனிமேப்பட்டு வர தலைமுறைனாச்சும், ஏதொவொரு நல்ல, வருமானம் வர தொழிலுக்குப் போவணும். வவுறார சோறாவது நேரத்துக்குக் கிடைக்கோணும் என்னப்பெத்த ராசா, நீதான் அதுக்கு வழி பண்ணோனும் சாமி” என்று அப்பா கண் கலங்கி பேசுறது நெஞ்சே பொளக்குற மாதிரி இருக்கும்..

    அதற்குத் தகுந்தாற்போல வீராவும் சிரத்தையாக 15 மைல் தினமும் முதலில் நடந்து போயும், பின்னால் அப்பா மிகவும் சிரமப்பட்டு வாங்கிக் கொடுத்த ஒரு பழைய சைக்கிள் மூலமும் படித்துவிட்டு வந்தான். எப்படியோ பத்தாம் வகுப்பு முடித்தவுடன், நல்ல மார்க்கு வாங்கி பாஸ் பண்ணியிருந்ததால் அவன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரே அவனை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். வீட்டு நிலைமை தெரிந்து கர்ம சிரத்தையாக படித்து சாதி அடிப்படையில் மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவு என்பதால் உடனே வேலையும் கிடைத்துவிட அந்த ஊருக்கே நல்ல காலம் பிறந்தது அவனால். ஒரு நான்கு ஆண்டுகால போராட்டத்தின் பலனாக அந்த ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளி வந்துவிட்டது. பிள்ளைநிலா என்று பெயர் கொண்ட அந்த ஊர் அன்றுதான் பிள்ளைகளுக்காக வாழும் ஊரானது. அந்த ஊரிலேயே நாலெழுத்து படித்தவன் என்ற பெருமையில் யாருக்கும், பெட்டிசன் எழுதுவது, ரேஷன் கார்டு விண்ணப்பப் படிவம், முதியோர் உதவித் தொகை வாங்கிக் கொடுப்பது போன்ற வேலைகளும் செய்து கொண்டிருந்தான். இன்று கழிவறை கட்டுவதற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி நல்ல பலனும் கிடைத்திருந்தது. இதிலெல்லாம் ராசுவிற்கு மாமன் செய்யும் காரியத்தால் ரொம்ப பெருமைதான். ஆனால் அவ்வப்போது கிறுக்கு பிடித்ததுபோல நடந்துகொள்வாள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் மச்சு வீட்டிற்கு வேலைக்குப் போய்க்கொண்டுதான் இருந்தாள். ஆறு மாதம் ஆனவுடன் வீராதான் அவளைக் கட்டாயப்படுத்தி வேலைக்குப் போவதை நிறுத்தச் சொன்னான். அதற்குப் பிறகுதான் அவள் போக்கு ரொம்ப மோசமாகிவிட்டது. வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை அவளால். அக்கம் பக்கத்தில் வேலை செய்பவர்களிடம் போய் உட்கார்ந்துகொண்டு எதையாவது பிரச்சனையை கிளப்பிக்கொண்டு இருக்க ஆரம்பித்தாள்.

    “மாமா, பள்ளியூடத்துல, எவளோ புதுசா வேலைக்கு வந்திருக்காளாமே.. ஏம் மாமா உனக்கு ஆம்பள வாத்தியானே கிடக்கலியாக்கும்.. இல்ல.. நீயே தேடிப்புடிச்சு இப்புடி வெள்ளத்தோலு தொரசாணிய கொண்டாந்தியாக்கும்..”

    நரம்பில்லாத நாக்கு இப்படி பச்சை, பச்சையாக பலதும் பேச, எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அடங்காமல் இன்னும் மோசமாக பேசிக்கொண்டிருக்க, பொறுக்காதவனாக ஓங்கி ஒரு அறை விட்டான் வீரா.. அவ்வளவுதான், அடுத்த மூனு நாள் அவ செய்த ரகளை இவ்வளவுதான்னு இல்லை. ஊரைக்கூட்டி வைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுது, பெற்றவர்களையும் வரவழைத்து நியாயம் கேட்கச் சொல்லி ஏகப்பட்ட ரகளை செய்துவிட்டாள். இவனுடைய பேச்சு அங்கு துளியும் எடுபடவில்லை. எல்லோரும் அவளுக்கே ஒத்து ஊதிக்கிட்டு இருக்க, வெறுத்துப்போய் அந்த இடத்தைவிட்டு தள்ளிப்போனான். வயிற்றில் குழந்தை வேறு உண்டானவுடன் அவளுடைய பிடிவாதமும், வாய்ப்பேச்சும் சொல்ல முடியாத அளவிற்கு மோசமாகப் போனது. என்னதான் மாமன் மகளாக இருந்தாலும், தன் மீது அளவிற்கதிகமாக அன்பு வைத்திருப்பவள் என்றாலும், தன்மானத்தைத் தீண்டும் அளவிற்கு பேசினால் எந்த ஒரு கணவனால் தாங்கிக்கொள்ள முடியும்.

    கழிப்பறை வசதிகூட ஒழுங்காக இல்லாத ஒரு கிராமத்திற்கு டவுனில் படித்து, சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள் வேலைக்கு வரவேண்டும் என்று வேண்டுதலா வைத்துக்கொள்கிறார்கள். ஒற்றை ஆசிரியர் மட்டும் இருக்கும் பள்ளியையெல்லாம் அடுத்த ஊர் பள்ளியோடு இணைக்க வேண்டும் என்று எளிதாக சட்டம் போடுபவர்களுக்கு, மதிய உணவிற்காகவாவது உள்ளூர் பள்ளியில் ஒதுங்கும் நிலை பற்றி யோசிக்க முடியவில்லை. வர வாத்தியாருங்க எல்லாம் மூனு மாசம் கூட நிலைச்சு நிக்கிறதில்ல. எங்க பள்ளிக்கூடம் போயிடுமோன்னு மனசு கிடந்து தவிக்கறப்பல்லாம் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதுக்கு குறுக்கால நிற்கிறவங்களை தட்டிக் கேட்பதிலும் தவறில்லை என்றே இருந்தது வீராவிற்கு. இந்தப் பள்ளிக்கூடத்தை எப்படியும் கட்டிக்காத்துவிட வேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது அவனுக்கு. நேரங்கழித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சாப்பாடு கிடைப்பதும்கூட அரிதானது. பல நாட்கள் வயிறு முட்ட தண்ணீர் குடித்துவிட்டு சுருண்டு கிடக்க வேண்டியிருந்தது அவனுக்கு. எந்த நேரத்தில் அவளுக்குக் கோபம் வரும் எதைத் தூக்கி அடிப்பாள் என்று தெரியாத இந்த நேரத்தில் வயிற்றில் குழந்தை. அந்தக் குழந்தையை சேதாரம் இல்லாமல் பெற்றெடுக்க வேண்டுமே என்று கோவிலில் வேண்டுதலோடு, தன் அத்தையையும் கெஞ்சிக்கேட்டு கூட வந்து தங்கச் செய்ததால் பயம் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. இப்படி ஒரு வெறி பிடித்த அன்பா ஒருத்தி கணவன் மீது வைப்பாள். தன்னையும் துன்புறுத்திக்கொண்டு , மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறாள்.

    “என்ர மாமன் எப்பவுமே இவ்ளோ கோபமா இருந்ததே இல்ல.. இப்பவெல்லாம் என்னக் கண்டாலே அதுக்குப் புடிக்காமப் போச்சு. அதுக்கெல்லாம் காரணம், அந்த வெள்ளத் தோலுக்காரிதான். அவளாலதான் மாமன் என்னயவே இப்புடி போட்டு அடிக்குது.. இனிமே நாம யாருக்காக பொழச்சிக் கடக்கணும்.. உசிருக்குசிரான மாமனே என்னை வெறுத்து ஒதுக்குனப்பறம் இனிமே நான் இருந்தா என்ன, செத்தா என்ன.. மாமா… என்ன இப்புடியே உட்டுப்போடு மாமா.. இன்னும் ஏன் தூக்கிட்டு சொமக்குற.. மாமா.. மாமா.. வாயில் வார்த்தை ஏதும் வரவில்லையே.. என்ன ஆச்சு எனக்கு.. நான் பேசறது யாருக்கும் கேக்கலையா.. உடம்பும் காத்தாட்டமா இருக்கு. ஒன்னியும் பிரியலியே.. மாமா.. மாமா..”

    வேகமாக ஓடுகிற ஓட்டத்தில் இருதயம் துடித்த துடிப்பு, ஒரு வேளை எகிறி வாய் வழியாக வெளியே வந்தே விழுந்துடுமோ என்று பயம் வந்தாலும், எப்படியும் மருத்துவமனைக்குப் போய் சேர்ந்தே ஆகவேண்டும் என்ற வெறியில் எதைப் பற்றியும் நினைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறான் வீரா.. சுய நினைவு சுத்தமாக இல்லை ராசுக்கு. துவண்டு போய் கிடப்பது தெரிகிறது. ஏற்கனவே ஒல்லிப் பிச்சானாக இருப்பவள், அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு ஒழுங்காகச் சாப்பிடவில்லையோ என்னவோ, இன்னும் இளைத்துப்போய் இருக்கிறாள். ஒரு வழியாக ராசிபுரம் மகப்பேறு மருத்துவமனை அருகில் வந்து சேர்ந்துவிட்டான். எல்லைச்சாமி, முனிதான் என் தங்கத்தைக் காக்க வேண்டும் ஐயனே, என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே வந்து சேர்ந்துவிட்டான். நல்ல வேளையாக டியூட்டி டாக்டர் இருந்ததால் ராசுவை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, பெஞ்சியில் அப்படியே சாய்ந்தவன், இனி நடக்கப்போவது எல்லாம் அவன் கையில் என்று மேலே மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தான். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ராசுவைப் பார்க்க உள்ளம் பொறுக்கவில்லை.

    நர்சு வந்து டாக்டர் உள்ளே கூப்பிடுவதாகக் கூறியபோது, வீராவின் கால்கள் நடுக்கம் எடுத்துவிட்டது. பிரசவ அறைக்குள் நான் எப்படி.. என்று இழுத்துக்கொண்டு வர மறுத்த வீராவை கட்டாயப்படுத்தித்தான் அந்த நர்சு உள்ளே கூட்டிச் செல்ல வேண்டியிருந்தது.

    “என்னப்பா.. என்ன ஆச்சு, எப்படி அடிபட்டுச்சு. உன் மனைவி இப்ப உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா தெரியுதா உனக்கு.. என்ன நடந்திச்சின்னு சொல்லு.. கிட்டத்தட்ட 14 கிலோ மீட்டர் உன் மனைவியையும் தூக்கிட்டு ஓடியே வந்திருக்கே. அதுலயே தெரியுது உன் மனைவி மேல நீ எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு. அப்படியிருக்கும்போது ஒரு நிறைமாத கர்பிணியை எப்படி இப்படி கேர்லஸ்ஸா விட்டீங்க. “

    “சார், என்னை வெளிய விட்டுருங்க சார். என்னால இதெல்லாம் பாக்க முடியல.. வெளியே வாங்க சார் சொல்றேன்.. எல்லாம் என் நேரம், விதி சார்”

    “இல்லையில்லை, நீங்கள் இங்கே இருக்கலாம். வெளிநாட்டிலெல்லாம் இது சர்வ சாதாரணமா நடக்கிற ஒரு விசயம். நாங்க இங்கே கட்டாயப்படுத்துவதில்லை என்றாலும், இப்ப உங்க மனைவி இருக்கிற நிலையில் நீங்கள் இங்கு இருப்பது நல்லது. அவங்க எங்களோட ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்க.. உயிர் பிழைக்கிற ஆசையே இல்லை அவங்களுக்கு. அவங்களோட ஒத்துழைப்பு இருந்தா மட்டும்தான், இரண்டு உயிரையும் காப்பாற்ற முடியும்.. ஏதாவது பேசுங்க, அவங்ககிட்ட நீங்க எப்படி அன்பா பேசுவீங்களோ அப்படி பேசுங்க.. என்ன நடந்ததுன்னு அவங்க கோவிச்சிக்கிட்டாங்களோ அதைப்பத்தின உங்க சமாதானத்தைச் சொல்லுங்க.. “

    “சார், என்னோட சமாதானத்தைச் சொல்ல என்ன இருக்கு.. எல்லாம் என் விதி. நான் உசுரா நினைக்கிற என் ராசாத்தியே என்னைப் புரிஞ்சிக்கலைங்கறதுதான் என் கெட்ட நேரம்.. ” சொன்னவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

    மருத்துவர் அவனை சமாதானம் செய்துவிட்டு, தைரியமாக இருக்கச் சொன்னார். தண்ணீர் கொஞ்சம் கொடுத்து குடிக்கச் சொல்லி தட்டிக் கொடுத்தார் . வீரா ஓரளவிற்குத் தெளிவாக இருந்தாலும், மனைவி நல்லபடியாக பிழைத்து வரவேண்டுமே என்ற கவலையும் அதிகமாகவே இருந்தது. மனம் திறந்து பேச ஆரம்பித்தான்.

    “எங்க ஊரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க எவ்வளவு சிரமம் இருந்ததுன்னு யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. மூனு வருஷ போராட்டம்ங்க. அதுக்கப்பறம் ஆசிரியர் இங்க யாரும் நிலைச்சு நிக்கலீங்க. நானும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்துட்டேன். வரவங்கெல்லாம் கொஞ்ச நாள் இருந்துட்டு மாற்றல் வாங்கிட்டோ , இல்லேனா வேலையையே ராஜினாமா பண்ணிட்டுக்கூட போயிடறாங்க. ஒற்றை ஆசிரியர் பள்ளி என்பதால் இதையும் மூடிட்டாங்கன்னா, அதுக்கப்பறம் எங்க ஊர் குழந்தைகள் கட்டாயம் அவ்வளவு தூரம் பக்கத்து ஊருக்குப் போயெல்லாம் படிக்க மாட்டாங்க. ரொம்ப கவலையா இருந்தப்பதான், நம்ம ஊர்க்காரர் ஒருவர் முனியப்ப சாமி கோவிலுக்கு வந்திருந்தார். நம்ம இந்திய இராணுவத்தில வேலை பார்ப்பவர். ஏதோ வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக வந்திருந்தார். நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எனக்கு சீனியர் அவர். 10 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஊரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நம் பள்ளியில் ஆசிரியர் பிரச்சனை பற்றி சொன்னேன். அவரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அருகில் இருந்த மனைவியிடம், அவர் டீச்சர் டிரெய்னிங் எடுத்தவர் என்பதால், தான் வரும்வரை தன் ஊர் பள்ளியில் ஆசிரியை பணியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னபோது கொஞ்சம் யோசித்தவர், கணவன் சொல்லை தட்டாததோடு, உண்மையான நிலைமையைப் புரிந்துகொண்டு, தான் இந்த ஊரிலேயே தங்கி பணியாற்றுவதாக ஒப்புக் கொண்டார். இங்கு வந்த நேரம் ஏற்கனவே போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் குழந்தைக்கு அடிக்கடி உடம்புக்கு தொந்திரவு வந்ததால், மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வது, குழந்தையை பார்த்துக்கொள்வது போன்ற சில உதவிகள் செய்ய வேண்டியிருந்தது. உடன் பிறவா ஒரு சகோதரி நம் கண் முன்னால் சிரமப்படும் போது, அதுவும் ஒரு நல்ல காரியத்திற்காக என் பேச்சை நம்பி வந்து இந்த கிராமத்தில் இப்படி ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அல்லல்படும்போது உதவாமல் இருக்க நான் அத்தனை கல் நெஞ்சக்காரன் இல்லை சார். அதுவும், நாம் இங்கு நிம்மதியாக சாப்பிட்டு, நிம்மதியாத் தூங்கி எழுந்திரிக்க வேண்டி, அங்கு மழையிலும், பனியிலும் நம் நாட்டிற்காக, எல்லையில் காத்து நிற்க, இங்கு அந்த மவராசனோட குடும்பம் துன்பப்படுவதை சும்மா வேடிக்கைப் பார்க்க முடியுங்களா.. அந்த குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டியது அவசியம் இல்லீங்களா? அந்த ஒரு குறைந்தபட்ச மனசாட்சி கூட இல்லாமல் எப்படிங்கய்யா இருக்க முடியும், நீங்களே சொல்லுங்க.
    நானும் ராசுவிடம் விவரமாக சொல்ல முயன்ற போதெல்லாம் அவள் என் பேச்சை காது கொடுத்து கேட்கத் தயாராகவே இல்லை. தானே ஒரு விசயத்தை கற்பனை செய்து மனதில் உறுதியாக வைத்துக்கொண்டு, வேறு எதையும் உள்வாங்காமல் இன்று இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டாள். இவ்வளவு தூரம் ஆன பிறகு, அந்த அமலா டீச்சரும், ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டார்கள். அவர்கள் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஊரைவிட்டுப் போய்விடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். இனி இந்தப் பள்ளியை ஆண்டவன் தான் காக்க வேண்டும். நான், இப்போது உயிருக்குப் போராடும் மூன்றாவது உயிரான எங்கள் பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கவலைப்படுவேனா, அல்லது என் உயிரே இங்கே போகத் துடிப்பதை வேடிக்கைப் பார்க்கப் போறேனா.. இது இரண்டையும் என்னால தாங்க முடியாது சார். விதிப்படி நடப்பது நடக்கட்டும்” என்று விரக்தியாகச் சொல்லி அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியவனை மருத்துவர் ஒரு ஓரமாக இருந்த சேரில் போய் உட்காரச் சொன்னார்.

    திடீரென்று ராசுவின் இருதயத் துடிப்பு சீராகக் காட்டும் மானிட்டரைப் பார்த்து டாக்டரின் முகத்தில் நிம்மதி பிறந்தது.. எப்படியும் அமலா டீச்சரை ஊரை விட்டுபோகாமல் நிறுத்தி, பள்ளியை நல்லபடியாக நடக்கச் செய்ய வேண்டும் என்று ராசு துடித்த துடிப்பை அந்த மானிட்டர் துல்லியமாகக் காட்டியது!

    முற்றும்

    Share
  • வார ராசி பலன்: 16- 12-2013-22-12-2013

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: இந்த வாரம் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்தும் விதமாக அமைவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பணிகள் தடங்கலின்றி நடைபெறும் . கலைஞர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வர். பொது வாழ்வில் உள்ளவர் கள் செயல்படுத்தும் திட்டங்களில், அடுத்து வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், தவறுகளைக் களைந்து, முன்னேற முடியும்.மாணவர்கள் விரும்பிய பொருள் கிடைப்பதில் இழுபறி இருக்கும் .
    ரிஷபம்:வியாபாரத்தில் கடுமையான போட்டி இருந்தாலும், புத்திசாலித் தனமாக செயல்படும் வியாபாரிகளுக்கு வெற்றி உறுதி. வயதானவர்கள் உடல்நலக்குறைவிற்கு, சொந்த வைத்தியம் மேற்கொள்ளாமல், தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்தல்,நல்லது. மாணவர்கள் அதிக நேரம் கண் விழித்து பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் விளைவுகளை யோசித்தபின் கடினமான செயலில் இறங்குவது அவசியம். பெண்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் திறமைகள் உங்களை வழி நடத்தும்.பணியில் இருப்பவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாமல் இருக்கும்.
    மிதுனம்:மாணவர்கள் கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றி பணிகளை மேற்கொள் ளுங்கள். அதிக மதிப்பெண்களை பெற்று மகிழலாம். இந்த வாரம் கலைஞர்கள் அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை வராதவாறு, விழிப்புடனிருப்பது அவசியம். பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பிய வாழ்க்கை உங்கள் வசமாகும். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும், சுயதொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகத் திகழும்.
    கடகம்: பெண்கள் உங்களால் நிறைவேற்றக்கூடிய காரியங்களுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பது நல்லது. கை வினை கலைஞர்கள் சிரமங்களுக்கு நடுவே தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில எதிர்ப்பு களையும், எதிரிகளையும் சமாளிக்க பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். மாணவர்கள், நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை உணர்ந்து செயலாற்றினால், அதிக லாபம் பெறலாம். கலைஞர்கள் பத்திரங்களில் பேரில் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது.
    சிம்மம்: உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு பணிகளை உடனுக்குடன் முடித்து விடுங்கள். வியாபாரிகள் தோள் கொடுத்து பாடுபடும் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்பட்டால், பிள்ளைகளுடன் செலவிட நேரம் ஒதுக்கலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களில் இருந்து ஒதுங்கி இருங்கள். மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். மாணவர்கள் , பேச்சைக் குறைத்து, தன்னுடைய செயலில் தீவிரம் காட்டி வந்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
    கன்னி: பணியிடத்தில், கருத்து வேறுபாடும், தேவையற்ற மோதல்களும் தோன்றும் வாய்ப்பிருப்பதால், இயன்றவரை அமைதியாய் இருந்தால், அல்லல்கள் அருகே வராது. பெண்கள் வேலையாட்களை நம்பாமல், அத்தியாவசியமான வேலைகளை நீங்களே செய்து விடுவது நல்லது. வியாபாரிகள் முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடுவதோடு புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி நடந்தால், யாவும் சிறப்பாக நடக்கும். இந்த வாரம் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், அதனைத் தக்கவைத்துக் கொள் ளவும், தீவிரமாக உழைப்பார்கள்.
    துலாம்: கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்களின் தரும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால், நஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் தைரியத்தோடு துணிந்து நின்றால், பாதி வெற்றி கிடைத்து விடும். மீதி வெற்றியை உங்கள் உழைப்பு நல்கும். கலைஞர்களுக்கு செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உதவி செய்தவர்களே சில சமயம் உபத்திரவங்களைத் தருவார்கள். மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும்.
    விருச்சிகம்: தலைசுற்றல், மயக்கம் ஆகியவை வாராதவாறு முதியவர்கள் உணவில் கட் டுப் படாய் இருப்பது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே மாணவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். வியா பாரிகள் பண சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.பல தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். இந்த வாரம் நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொள்ளும் பெண்கள் ஈடுபடும் காரியங்களுக்கு உறவுகளும் துணையாய் நிற்கும்.
    தனுசு: பெண்கள் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை ஏற்படாது. வியாபாரிகள் சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். புதிய இடங்களில் மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்னைகளை பெரிதாகாமல் தடுக்கும்.சுயதொழில் புரிபவர்கள் சுணக்கமின்றி, தீவிர முயற்சி செய்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் மன அழுத்தமும் சற்றே அதிகமாகும்.
    மகரம்: கலைஞர்கள் ஒப்பனைப் பொருட்களின் மூலம் ஒவ்வாமை ஏற்படாதவாறு, தரமான பொருட்களை பயன்படுத்துதல் நல்லது. பெண்கள் அக்கம்பக்கத்தாருக்கு ஆலோசனை வழங்குமுன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளாவர்கள் முறையான சிகிச்சையோடு எளிய பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். மாணவர்கள் நண்பர்களிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பும், நட்பில் விரிசலும் ஏற்படாது.மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். பல வெற்றிகளைப் பெறலாம்.
    கும்பம்: வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் அற்ப காரணங்களுக்காக, பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதை சிக்கென பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
    மீனம்: இந்த வாரம் மாணவர்கள் நட்பு வட்டம் தரும் தொந்தரவுகளை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் உடல்நிலையில் தகுந்த கவனம் செலுத்தி வந் தால், மருத்துவச் செலவுக்கு அவசியமிராது. வேலை செய்யும் இடத்தில் சிறு பூசல்க ளை வளர விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். அமைதியாக வேலைகளை செய்யலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெற பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை எண்ணி கவலைப்பட நேரிடலாம். உங்கள் வேலையில் சலிப்பு எழாதவாறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்து கொள்ளுங்கள்.

    Share
  • 18. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்

    18. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (3), பாரிஸ், ப்ரான்ஸ்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இப்போது நாம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய நாகரீகச் சின்னங்கள் அரும்பொருட்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கின்றோம்.

    1798-1801 ஆண்டு காலவாக்கில் நெப்போலியன் போனபார்ட்டின் எகிப்திய வருகை அவனுக்கு அந்த தேசத்தின் பண்டைய கலைப் பொக்கிஷங்களின் மேல் அளவற்ற ஆர்வத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியிருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் அவன் பயணம் முடிந்து திரும்புகையில் கொண்டு வந்தவையாக இங்கு கணிசமான எகிப்திய தொல்லியல் சான்றுகளோ ஏனைய ஆவணங்களோ இல்லை. மாறாக இங்கிருப்பவை பெரும்பாலும் அதற்கும் முன்பே மன்னன் 18ம் லூயிஸ் காலத்தில் சேர்த்தவையும் மேலும் தனியார் சேகரிப்பாக இருந்து பின்னர் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து சேர்ந்தவையும் என்றே குறிப்பிடலாம்.

    மன்னன் லூயிஸின் காலத்தில் சேகரிக்கப்பட்ட எகிப்திய அரும்பொருட்கள் ஏராளம். இன்றிருக்கும் நக்தோர்ஹெப் சிலையும் சேக்மட் சிலையும் அப்போது கொண்டு வரப்பட்டவையே. 1824லிருந்து 1827 வரை பற்பல சேகரிப்புக்களிலிருந்து என ஏறக்குறைய 9000 அரும்பொருட்கள் இங்கே கொண்டு வரப்பட்டதாம். இவை அனைத்தையும் பாதுகாக்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஒரு தனித்துறையை லூவ்ரே அருங்காட்சியகத்தில் அப்போதைய மன்னன் அமைத்திருக்கின்றார்.

    இக்காலகட்டத்தில் லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஆதரவில் தொல்லியல் ஆய்வறிஞர் மரியேட் எகிப்துக்குப் பயணமானார் அங்கே அவர் கண்டெடுத்தவையே செராப்பியம் சக்காரா இவையிரண்டு கலைசிற்பத் தொகுதிகளும். இங்கே அவர் தொடர்ந்து களப்பணிகளை நடத்திக் கொண்டிருந்தார். 1852 முதல் 1853 வரை நடத்திய களப்பணிகளில் 5964 அரும்பொருட்கள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தையுமே ஒன்று விடாமல் பாரிஸுக்கு அனுப்பி வைத்தார் மரியெட். களப்பணி முடிந்து பாரிஸ் திரும்பியதும் இவரே லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய அரும்பொருட்கள் பகுதியின் அமைப்பாளராக பணியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அகழ்வாய்வின் போது உயிரைப் பணையம் வைத்து களப்பணிகளில் ஈடுபட்டவர் மரியட். அப்படித் தேடி கண்டெடுத்த விலைமதிப்பற்ற அப்பொருட்களின் அருமை பெருமை அறிந்து அவை சரியாகப் பாதுகாக்கப்பட வேண்டும், இதனால் ப்ரான்ஸ் நாட்டிற்கும் பெருமை ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு மனம் நிறைய இருந்திருக்க வேண்டும்.

    இக்காலகட்டத்தில் ஆங்கிலேய, ஜெர்மானிய, ப்ரென்ச் தொல்லியல் அறிஞர் குழுக்கள் சில எகிப்தில் வரிசையாக பல அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தன. உதாரணமாக அபு ரோசா அகழ்வாய்வு, ஆசூய்ட் அகழ்வாய்வு, பாவிட் அகழ்வாய்வு, மெடாமுட் அகழ்வாய்வு என சிலவற்றை குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் தொடர்ந்து சில அரும்பொருட்கள் லூவ்ரெவிலும் வந்து சேர்ந்தன.

    லூவ்ரெவின் எகிப்திய அரும்பொருட்கள் பகுதியில் இருக்கும் சில அற்புதப் படைப்புகளைக் காண்போம்.

    1

    மூன்று கடவுள்கள் இருக்கும் வகையில் ஒரே க்ரனைட் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. தரையில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு அரசன் (ராம்ஸஸ் II அல்லது மெர்னெபத் ஆக இருக்கலாம்) இடது புறத்திலிருக்க, கழுகுத் தலை கொண்ட இறைவடிவமான ஹோருஸ் வலது புறமிருக்க நடுவிலே கடவுள் ஓஸிரிஸ் நிற்கும் வகையில் அமைந்த சிற்பம் இது. ஏறக்குறைய கிமு 1279-1203 வாக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. 1.34 மீட்டர் உயரமும் 0.78 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு வடிவம். 1818ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

     2

    மன்னர் 3ம் ராம்ஸஸின் உடலை வைத்திருந்த கல்லறை கற்பெட்டி. இந்தக் கற்பெட்டியைச் சுற்றிலும் ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அருங்காட்சியகத்தின் குறிப்பின்படி இது Book of Amduat நூலின் 7ம், 8ம் அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. இக்கற்பெட்டியின் உள்ளே Book of Gates நூலின் முதல் அத்தியாயம் ஹிரோக்லிப்ஸ் எழுத்துருவில் கீறப்பட்டிருக்கின்றது. இதன் காலம் கிமு 1184-1153. இது கண்டெடுக்கப்பட்ட இடம் அரச பள்ளத்தாக்கு (Valley of King, Tomb of Ramses III). 1826ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

    அக்தெதொப் மஸ்தாபா - சக்காரா சேகரிப்பு.
    அக்தெதொப் மஸ்தாபா – சக்காரா சேகரிப்பு.

    இதில் ஒரு ஊழியன் ஆட்டினைப் பிடித்து இழுத்துச் செல்வது போல வடிக்கப்படுள்ளது. இது ஒரு பெரிய பாறையின் மேல் தீட்டப்பட்ட தொடர் சித்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே. இச்சித்திரங்களோடு ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்களும் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம். இச்சித்திரத்தின் கதையினை விளக்கும் முகமாக அவை கீறப்பட்டிருக்க வேண்டும்.

    இவை மட்டுமின்றி, 3ம் ராம்ஸஸ் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், மன்னன் எக்னத்தோன் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், அரசர்கள் பள்ளத்தாக்கில் நிகழ்த்திய தொல்லியல் ஆய்வுகளின் போது கிடைத்த மம்மிகள், அவற்றோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பொன்னும் மணிகளும், வைர வைடூரியங்களினாலான ஆபரணங்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்களாகிய நாற்காலி, ஜாடிகள், மேசை என பல பொருட்கள் இங்கே அடுத்தடுத்து என நமது கண்களுக்கு விருந்தாகிப் போகும்.

    மன்னர்கள் அல்லது ராஜ குடும்பத்தைச் சேர்ந்தோர் இறந்து போனால் அவர்களின் உடலை பதப்படுத்தி மம்மியாக்கி அதனை ஒரு பேழைக்குள் வைத்து அப்பேழைக்குள் அந்த மனிதரின் பொருட்களையும் சேர்த்து வைத்து புதைப்பது அக்கால எகிப்திய வழக்கம். இப்படி மம்மியாக செய்யப்படுபவர்களின் அந்தஸ்திற்கேற்ப பேழைகளின் தன்மைகள் அமையும். உதாரணமாக துரதிஷ்டவசமாக மிக இளம் வயதிலேயே இறந்து போன தூத்தான்சாமூனின் மம்மியும் அம்மம்மியோடு கூடவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பொருட்களும் இப்பகுதி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்கத்தினாலான பேழைக்குள் மன்னனின் மம்மி உடல் இருந்தது. மூன்று பேழைகள், தேர்கள், படுக்கைகள், என வரிசை வரிசையாக பல பொருட்களை அம்மன்னன் இறந்தும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தே வைத்துப் புதைத்து விட்டார்கள்.

    இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன். இது போல பல மன்னர்களின் இறந்த உடலின் மம்மியோடு கண்டெடுக்கபப்ட்ட விலைமதிக்க முடியாத ஆபரணங்களும், அரும்பொருட்களும் மண்ணுக்குள் புதையுண்டு போகாமல் ஐரோப்பா மட்டுமின்றி அமெரிக்காவின் பல அருங்காட்சியகங்களிலும் வீற்றிருந்து பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

    தொடரும்..

    Share
  • இணையான வார்த்தைகள் (Equivalent Words)

    சதீஷ் குமார் டோக்ரா

    வல்லமை குழுமத்தில் திரு பழமைபேசி கீழ்கண்ட ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் கொடுத்து அவை  பொருத்தமான வார்த்தைகளா என்று குழும உறுப்பினர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டார்:

    Objective

    Something that you plan to achieve. எண்ணுவம்

    Goal

    Something that you hope to achieve. நோக்கம்

    Aim

    The thing that you try to achieve by doing something. குறிக்கோள்

    Target

    Something that you try to achieve. இலக்கு

    அதன் தொடர்ச்சியாகக் கிளம்பிய விவாதத்தின் அடிப்படையில் பொதுவான சில விஷயங்களை இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறேன்.

    நாம் ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையாகப் பயன்படுத்தும் வார்த்தை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னதற்கு தேமொழி அவர்கள் இவ்வாறு சொல்லியுள்ளார்கள்:

    “இந்த முயற்சி …பல சூழ்நிலைகளிலும் மாறாத பொருள் தரும் ஒரு சொல் பயன்பாடு பொதுவாக அறிவியல் பயன்பாட்டிற்கு என்று  மட்டும்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இலக்கியம் என்று கருத்தில் கொள்ளும்பொழுது….

    பல சொற்களை ஒரு பொருளுக்குப் பயன் படுத்துவதும்,

    ஒரு சொல்லை பல பொருட்பட கூறுவதும் இலக்கிய  நயம் என்றும் போற்றப்படுகிறது.

    பயன்படுத்திய பதமே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படாது தவிர்ப்பதும், ஒரு சொல்லை சொற்சிலம்பம் ஆடுவது போல பலவகையில் பயன்படுத்துவது ஒரு மொழியின் வளத்திற்கு அறிகுறியாகும்.”

    இது குறித்து நான் சொல்ல விரும்புவது யாதெனில் இலக்கிய ஆக்கங்களை மொழிபெயர்ப்பு செய்யும்போது தேமொழி அவர்கள் சொல்வது போல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வார்த்தைகளைக் கையாளுவது அழகு. ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால் மனச்சோர்வு ஏற்படும். பலச்சுவை தான் இந்தச் சந்தர்ப்பத்தில் விதிமுறை.

    அது மட்டும் அல்லாமல், ஒவ்வொரு மொழியிலும் கருத்துகளை எடுத்துரைக்கும் பாணி வேறுபடும். கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனியுங்கள்:

    அவர் அங்கே உட்காரந்துகொண்டிருந்ததைப் பார்த்து வியந்தேன்.

    I was surprised to see him sitting there.

    ஆங்கில வாக்கியத்தில் அவர் உட்கார்ந்துகொண்டிருந்தபோது நான் அவரைப் பார்த்ததாகவும், தமிழில் அவர் உட்கார்ந்துகொண்டிருந்த செயலைப் பார்த்ததாகவும் பொருள்படுகிறது. ஆங்கில வாக்கியத்திற்கு இணையாக தமிழில் எழுத வேண்டுமானால் இவ்வாறு எழுதுவோம்: அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த போது அவரைப் பார்த்து வியந்தேன். அதே போல தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் அப்படியே சொல்ல வேண்டுமானால் I was surprised to see that he was sitting there என்று சொல்வோம். ஆனால், பொதுவாக நாம் அவ்வாறு சொல்வதில்லை.

    ஆக, ஒரே எண்ணத்தைச் சொல்லும் விதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெவ்வேறாக இருக்கிறது. அதற்குக் காரணம் தமிழில் நாம் வேற்றுமைகளைப் பயன்படுத்தி அந்தந்த வார்த்தையை மாற்றியமைத்து இலக்கணத்தை வார்த்தையின் பாகமாகவே சேர்த்துவிடுகிறோம். கீழ்கண்டவற்றைப் பாருங்கள்:

    நீங்கள் சொன்ன செயல்

    நீங்கள் சொன்ன அது

    நீங்கள் சொன்னது

    நீங்கள் சொன்ன செயலைச் செய்தேன்

    நீங்கள் சொன்ன அதைச் செய்தேன்

    நீங்கள் சொன்னதைச் செய்தேன்

    இவ்வாறு சமஸ்கிருதம், தமிழ், ருஷிய மொழி போன்ற வேற்றுமைகளின் அடிப்படையில் இலக்கணம் அமைந்துள்ள மொழிகளில் வார்த்தையின் இலக்கண வடிவத்தை மாற்றுவது சுலபம்.

    ஆக, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி அந்தரங்க செயலாற்றுவிதம் (internal logic) உண்டு. அத்துடன், ஏற்கனவே இருக்கின்ற வார்த்தைகளிலிருந்து புதிய வார்த்தைகள் உருவாகும்போது புதிய வார்த்தையின் அர்த்தம் தாய் வார்த்தையின் சாயலாகவே இருக்கும்.  உதாரணத்திற்கு மிகு எள்ற தமிழ் வார்த்தை to be full of , to be replete with என்பதைக் குறிக்கிறது. மிக மென்மையான உதடுகள் என்பதை நாம் very soft lips என்று மொழிபெயர்த்தாலும் தமிழில் இதற்கு  full of softness என்று பொருள்தான் வரும். மிக்க நன்றி என்பதை many thanks என்று மொழிபெயர்த்தாலும் தமிழில் அதன் பொருள்  full of thanks என்பதுதான். மிகைப்படுத்தல் என்ற வார்த்தையை நாம் exaggerate என்று மொழிபெயர்த்தாலும் நம் மனதில் நாம் உணருவது showing it as more full than it actually is என்பதுதான்.

    மொழியியல் நிபுணர்கள் மொழியை உணருதல்  அல்லது feel of the language என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அதே முறையில் நாம் ‘மிகு’ மற்றும் அதன் வடிவங்களைப் பயன்படுத்தும்போது  full of என்ற பொருளை உணருகிறோம்.

    மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தைபெயர்க்கலாம். ஆனால், அப்படிச் செய்வதால் இலக்கியத்தின் சுவை போய்விடும். ஆகவே, பொதுவாக மொழிபெயர்ப்பாளர்கள் மூலத்தின் feel of the language யை பெயர்க்கப்படும் மொழியின் feel of the language ஆக மாற்றியமைக்க முயற்சிப்பார்கள். அவ்வாறு செய்யும்போது பெயர்க்கப்பட்ட வடிவம் மூலத்தை விலகிப்போக வாய்ப்பு இருக்கும்.

     மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைகளைச் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்துவது சிறந்தது. அவ்வாறு செய்து ஒரே அர்த்தமுள்ள வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி இலக்கியத்திற்கு பலச்சுவை வழங்க இயலும். தேமொழி அவர்கள் சொன்னதில் எனக்கு நூற்றுக்கு நூறு உடன்பாடு உள்ளது.

    ஆனால், திரு பழமை பேசியின் செய்தியால் கிளம்பிய விவாதம் மொழிபெயர்ப்பைப் பற்றி அல்ல, ஒரு மொழியிலுள்ள வார்த்தைகளுக்கு இணையான இன்னொரு மொழி வார்த்தைகளைப் பற்றியானது.

    பசிக்கிறது என்பதைப் பலவாறாகச் சொல்லலாம்:

    சாப்பாடு கொடுக்கமாட்டாயா?

    பட்டினியாக் கிடக்கணுமா?

    சோறு இல்லையா?

    அன்னம் எங்கே? இத் இத்.

    ஆனால் wheat க்கு இணையான தமிழ்வார்த்தை எது என்று கேட்டால் ‘கோதுமை’ என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர ஒரு தடவை ‘அன்னம்’  என்றும் இன்னொரு தடவை ‘சாப்பாடு’ என்றும் சொல்வதாகாது.

    இது அறிவியலுக்கு மட்டும் அல்ல இலக்கியத்திற்கும் பொருந்தும்.

    ஒரு ஆங்கில வார்த்தைக்கு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையும், இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு தமிழ் வார்த்தையும் இணையான வார்த்தையாக இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். A love story ஒரு காதல் கதை என்பது போல mother’s love for her son என்பதை மகனுக்காக தாயின் காதல் என்று கூற முடியாது.

    ஆகவே, சில ஆங்கில வார்த்தைகளுக்கு ஒரே ஒரு வார்த்தை இணையான வார்த்தையாகக் கண்டுபிடிக்க முடிவதில்லையென்றாலும், இணையான வார்த்தைகளைத் தேடும்போது அவசரப்பட்டு ஏதோ ஒரு வார்த்தையைத் தூக்கியெடுத்து இதுதான் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ற அணுகுமுறையையும் தவிர்க்க வேண்டும்.

    ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கும்போது அது ஆங்கில வார்த்தை பயன்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

    அவர் என் வீட்டுக்கு வந்த நோக்கம் என்ன? What was his purpose in coming to my house? What was his aim in coming to my house? What was his intention in coming to my house? Why at all should he come to my house? என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

    ஆனால், “‘நோக்கம்’ என்ற வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை எது?” என்று ஒருவர் கேட்க, நாம் மிக மிக துல்லியமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர வெறும் பொருளைப் புரிய வைக்கும் வார்த்தையை தேர்ந்தெடுக்கக் கூடாது.

    ‘வல்லமை’ விவாதத்தில் தோன்றிய இன்னும் ஒரு கேள்வியை விவாதிக்க விரும்புகிறேன்.

    Goal என்ற வார்த்தைக்கு சமஸ்கிருத வார்த்தையான ‘கந்தவியம்’  என்பதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் சொன்னதற்கு திருமதி பவளசங்கரி தழிழ் வார்த்தையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.

    மொழி நம் அனைவரின் கூட்டுச்சொத்து. இதை விரிவுபடுத்துவதும், அழகுப்படுத்துவதும் நம் அனைவரின் கடமை. ‘வல்லமை’ குழுமத்தில் இம்முயற்சி அறிவாளிகளால் ‘நான்தான் ஜெயிப்பேன்’ என்ற போட்டி மனப்பான்மை இன்றி கற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் நடைபெறுவதைக் கண்டு மனம் நெகிழ்கிறோம். அதே முறையில் நாம் ஒரு குழுவாகவே மற்ற மொழிகளுக்கு இணையான துல்லியமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்யும்போது வார்த்தை எந்த மொழியைச் சேரந்தது என்பதைப் பார்ப்பது அவசியம்தானா என்பதை விவாதிப்பதிலும் தவறு இல்லை.

    இன்று எத்தனை பிறமொழி வார்த்தைகள் தமிழில் தமிழ் வார்த்தைகளாக இருக்கின்றன, எத்தனை தமிழ் வார்த்தைகள் பிறமொழிகளில் ஊடுருவி அந்த மொழியில் கரைந்து நம்மாலேயே இது தமிழிலிருந்து சென்ற வார்த்தை என்று அடையாளம் காண முடியாதவாறு மாறிவிட்டன என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.  வாசகர்கள் என் கீழ்கண்ட கட்டுரையை வாசிக்க கோருகிறேன்:

    http://dogratamil.com/index.php/2013-03-25-17-05-18?id=111

    ருஷிய புரட்சிக்குப்பின் அப்போதைய சோவியத் அரசாங்கம் ருஷிய மொழியின் வளர்ச்சியைத் திட்டமிட ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அறிவியல் வார்த்தைகளுக்குப் புதிய ருஷிய வார்த்தைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளுக்கு ருஷிய வடிவம் அளிக்கலாம் என்று முடிவு செய்தது. ஆகவே டெலிவிஷன் ருஷிய வடிவம் பெற்று செலிவீஸ்ர் ஆனது. லிட்ரேச்சர் (Literature) என்பது லிச்சராத்தூரா என்று மாறியது.

    இன்றைய உலகத்தில் பிறமொழி வார்த்தைகளை தன்னுடையதாக்கும் மொழிகள் வலிமை பெற்று வளர்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் ஆங்கிலத்தில் சேர்ந்துள்ளன. இது குறித்து என் கீழ்கண்ட கட்டுரையைப் படிக்கக் கேட்டுக்கொள்கிறேன்:

    http://dogratamil.com/index.php/component/content/article?id=156

    அந்தக் கட்டுரையிலிருந்து இதோ ஒரு பகுதி:

    மொழி காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே இருக்கும். புதியதாக உருவெடுக்கும் வார்த்தைகளும் ‘ஓஈடீ’யில் சேர்க்கப்படுகின்றன. சிம்ப்ஸனின் பணிக்காலத்தில் 60,000க்கும் மேற்பட்ட புதிய வார்த்தைகள் ‘ஓஈடீ’யில் சேர்க்கப்பட்டன.

    சிம்ப்ஸன் சொல்கிறார்: மாறுவது ஒரு மொழியின் இயல்பு. மொழியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது மக்களின் விருப்பம். ஒருவரைக் கழுத்தைப் பிடித்து ‘நீ இப்படித்தான் பேச வேண்டும்’ என்று சொல்வது சரியாகாது.

    சில பிறமொழி வார்த்தைகளை எடுத்துக்கொள்வதால் தமிழ் மொழியின் செய்தியறிவிப்புத் திறன் (power of communication) மேம்படும் என்றால் அவற்றை எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. உதாரணத்திற்கு பிஸி (busy) என்ற வார்த்தை நாம் சொல்ல விரும்புதை துல்லியமாக எடுத்துரைக்கிறது: “இப்பொழுது சற்று பிஸியாக இருக்கிறேன். அப்புறம் வாருங்கள்.”

    ஆக, பிஸியை தமிழ் வார்த்தையாக மாற்றிவிடுவோமே!

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை..

    கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..

       ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!

     

    அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை!  கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை  என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!

    மக்கள் திலகத்தை வைத்து அதிகமான திரைப்படங்களைத் தயாரித்த மாபெரும் தயாரிப்பாளர்  சாண்டோ சின்னப்பத் தேவர் ஆவார்.  அத்தனைப் படங்களிலும் அற்புத இசையமைப்பு கே.வி.மகாதேவன் அவர்கள்.  பாடல்கள் அனைத்தும்  கவியரசு கண்ணதாசன் அவர்களே!!

    தேவர் படங்களென்றால் விறுவிறுப்பும்சண்டைக் காட்சிகளும் விலங்குகளைச் சாகசம் செய்ய வைத்த வித்தியாசமான படைப்பாகவும் ஒருபுறமிருக்கதேனான இசையில் நம்மை மயக்கும் தெள்ளுத் தமிழ்ப்பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வரிசையில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் – இன்றும் சாகாவரம் பெற்றவையாக மக்கள் மனதில் உலா வந்து கொண்டிருக்கின்றன.  திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வின்றி இருக்க தேவரின் பார்முலா’ ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளியிலும் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இடம் பெற வேண்டுமென்பதாகும்.

    தாய்க்குப் பின் தாரம் எனத் தொடங்கி.. ’ வரிசையில்.. அதுவும் மக்கள் திலகம் கதாநாயகனாக.. தர்மம் தலைகாக்கும்தாயைக் காத்த தனயன்தாய் சொல்லைத் தட்டாதே.. தனிப்பிறவி என பட்டியல் நீளும்!

    இவ்வரிசையில் அமைந்த தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தில் விளைந்த பாடலொன்று காதல் சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல விளங்குகிறது!

    ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடல் புனைவது.. மரபாக நடந்து வருகின்ற ஒன்றுதான்..  அதிலே கண்ணதாசன் பாணி இதுவோ..

    கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
    கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
    காதல் என்னும் சாறு பிழிந்து
    தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
    தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!… (கட்டி)

    தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
    சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – தான்
    கிட்டக் கிட்ட வந்தது கண்டு 
    எட்டி எட்டிச் சென்றது வண்டு!… (கட்டி)

    தங்கரதம் போல வருகிறாள்! – அல்லித் 
    தண்டுகள் போலே வளைகிறாள்!
    குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
     
    கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!… (கட்டி)

    காலையில் மலரும் தாமரைப் பூ! – அந்திக் 
    கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
    இரவில் மலரும் அல்லிப்பூ! – அவள்
    என்றும் மணக்கும் முல்லைப் பூ!… (கட்டி)

    காதல் ரசம் பொழியும் பாடலாகவே எல்லோரும் நோக்கும் இந்த வரிக்கு (பம்மல்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத் தலைவி பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமனாதன் அவர்கள் தந்த விளக்கமிதோ..

    குங்குமப் பூ போல் சிரிக்கிறாள்..

    ஒரு பெண் குங்குமப்பூ போல் சிரிக்க வேண்டும். குங்குமப்பூ எப்படியிருக்கும்இதழ் எப்படியிருக்கும் என்பதை நோக்கும்போது .. மிகச் சிறிய கோடு விழுந்ததுபோல். தெரியுமாம்.. அதுதான் அந்தப்பூவின் இதழ் திறப்பு.. பெண்கள் அப்படித்தான் மெல்லிய புன்னகை புரிந்தால்தான் அழகு! (எனவேதான் பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழி கூட வந்துள்ளது).

     

    கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..

     

    கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
    காதல் என்னும் சாறு பிழிந்து
    தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
    தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!… (கட்டி)

    தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
    சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – தான்
    கிட்டக் கிட்ட வந்தது கண்டு 
    எட்டி எட்டிச் சென்றது வண்டு!… (கட்டி)

    தங்கரதம் போல வருகிறாள்! – அல்லித் 
    தண்டுகள் போலே வளைகிறாள்!
    குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
     
    கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!… (கட்டி)

    காலையில் மலரும் தாமரைப் பூ! – அந்திக் 
    கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
    இரவில் மலரும் அல்லிப்பூ! – அவள்
    என்றும் மணக்கும் முல்லைப் பூ!… (கட்டி)

     
    http://www.youtube.com/watch?v=1VbkvbbJ4p4
    http://www.youtube.com/watch?v=1VbkvbbJ4p4

     

    காவிரிமைந்தன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
    அன்புடன்
    காவிரிமைந்தன்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 101

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    இந்த ஒலிகள் மட்டுமன்றி
    இசைக்கருவிகளான
    ஆம்பி, கிழார்,

    உரத்து ஒலிக்கும் ஏற்றம்,
    நீர் இறைக்கும் கூடை

    இவற்றின் ஒலியும் கேட்டபடி இருந்தது.

     

    வயல்களில் கரும்பும் நெல்லும்
    செழித்து வளர்ந்துள்ள
    மருதநிலத்தின் நீர் நிலைகளில்
    பசுமையுடனும் பொலிவுடனும்
    தாமரைகள் பூத்து நிற்கும்.

     

    சம்பக்கோழியும்
    உரத்து ஒலிக்கும் நாரையும்
    செங்கால் அன்னப்பறவையும்
    பசிய கால்களைக் கொண்ட கொக்கும்,
    கானாங்கோழியும், நீர்க்காக்கையும்
    உள்ளானும், குளுவையும்,
    கணத்துப்பறவையும், பெருநாரையும் ஆகிய
    நீர்நிலைப்பறவைகள் ஒன்றுகூடி
    உரத்த பலவகைக் குரல்களை எழுப்பின.

     

    இருபெரு வேந்தர்கள்
    போரிடும் போர்க்கள ஓசையைப் போலவே
    அப்பறவைகள் எழுப்பிய ஒலிகள்
    இடையறாது எங்கும் ஒலித்தபடி இருந்தது.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 110 – 119

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • விளம்பரங்களுக்கு விலை போகிறோம்

    நீச்சல்காரன்

    நாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிருக்கும். அதைப்போல பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரம் என்கிற மாயத் தேவையும் நம்முடன் சேர்ந்துவிட்டது. இதனால் அறிவியல் அணுகுமுறைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு ஆடம்பர அணுகுமுறையே பிரதானமாக மாறிவருகிறது. எங்கு யார் சொன்னாலும் உடனே மாறிவிடுவோம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் வேண்டிய ஊட்டச்சத்து இல்லை அதனால் இந்தச் சத்து மாவைப் பாலில் கலக்கிக் குடியுங்கள் என்றதும், குடும்பமே விழுந்து விழுந்து குடிப்போம். அந்த மாவைக் குடிக்காவிட்டால் குடல்வெந்து குன்றிவிடுவோம் என நினைத்துக் கொள்கிறோம்.

    ஆல், வேம்பு, வேல் போன்ற மரக்குச்சி கொண்டும், நெற்சாம்பல், செம்மண் போன்ற தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் கொண்டும், பற்பொடிகள், மூலிகைத் தூள்கள் என்று பிற தயாரிப்பைக் கொண்டும் பல் விளக்கி வந்த நம்மிடம், சுகாதாரம் என்கிற போர்வையில் எத்தனைப் பொருட்கள் வந்துள்ளன என்று பார்ப்போம். தூத்பிரஸ் என்கிற புதுவகை பல்குச்சி வஸ்துவை இறக்குமதி செய்தோம். பின்னர் பாரம்பரிய முறைகளை முடக்கிவிட்டு, பற்பசையுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தோம். அதோடு நிற்கவில்லை, பற்பசைகளில் பல வகை வெளிவரத்தொடங்கின, வெண்மை நிறம் தருபவை, சுவாசப் புத்துணர்ச்சி தருபவை, கிருமிகளை நீக்குபவை, ஈறுகளைப் பலப்படுத்துபவை, உப்புவுள்ளவை என வே​ளைக்கு ஒன்றாக வந்து கொண்டே உள்ளன. பற்பசை இப்படியிருக்க பல்குச்சியும் தன் பங்கிற்கு, ஃபிலக்சிபில், ஜிக்ஜாக், 360டிகிடி, மருத்துவர்கள் பரிந்துரை எனப் பலவகைகளில் பரிணாமம் அடைந்துவிட்டது. இதற்கிடையில் நாக்குத் துடைப்பான், வாய் கழுவுநீர் என்று புதிய பரம்பரைகளும் வந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நாளில் ஒவ்வொரு பல்லிற்கும் ஒவ்வொரு பற்குச்சியும், பற்பசையும் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒவ்வொரு விளம்பரமும் சில ஆயிரம் மக்களின் மனதில் அறிவீனத்தை அறிமுகப்படுத்துகிறது. தங்களுக்குள்ளேயே தான் பயன்படுத்தும் பொருள் சரியில்லையோ என எண்ண வைக்கிறது. எத்தனை நவீனம் வந்தாலும் வேப்பங்குச்சிக்கு இணையாக பல்லைப் பலப்படுத்துமா? விரல்கொண்டு தேய்ப்பதைவிட எதுவும் ஈறுகளுக்கு வலுசேர்க்குமா?

    இங்கே சுட்டிக் காட்ட விரும்புவது அறிவியல் வளர்ச்சியைப் பகடிசெய்வதல்ல; மாறாக நாம் விலை போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே. நமக்குத் தேவையிருக்காத போதும் விற்கப்படுகிறதே என்று வாங்குவோர் அதிகரித்துவிட்டனர். தற்போது பயன்படுத்திவரும் பொருள் திருப்திகரமாகயிருந்தாலும், தனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஒரு பற்பசை விளம்பரத்தில் சிரித்தார் என்பதற்காகவே அந்தப் புதுப் பொருளை வாங்குவோர் எத்தனைப் பேர்? ஷாம்பூ எனப்படும் சிகைகழுவியை எடுத்துக் கொள்ளுங்களேன், பொடுகு போக்குபவை, கறுப்பு நிரம்தருபவை, நீளமான முடிவளர்ப்பவை, சிக்கு நீக்குபவை, பட்டுபோன்ற மென்மைதருபவை என வகை வகையாக வந்துவிட்டன. அதுவரை சிகைக்காய் போட்டு வளர்ந்த தலைகள் கூட சிகைகழுவியின் மீது ஆர்வம் கொள்ளப்பட்டன. ஆனால் அப்படியென்ன சிகைக்காய் செய்யாததை இந்தத் திரவங்கள் செய்துவிட்டன என்றால் ஒன்றுமில்லை. ஆனால் இத்தகைய இரசாயனச் சிகைகழுவிகளால் முடியும், தோலும் கெட்டதுதான் மிச்சம். எவை வேண்டுமோ பயன்படுத்துங்கள் ஆனால் அவற்றின் தேவை இருக்கிறதா என யோசித்துப் பார்த்துப் பயன்படுத்துங்கள்.

    மற்றும் ஒரு எளிமையான நுகர்பொருள் கைப்பேசி. ஒரு குழந்தை பிறந்து விவரம் தெரிகிறதோ இல்லையோ, கைப்பேசியை இயக்கத் தெரிந்திருக்கிறது, தனக்கு என்று ஒரு கைப்பேசியை வாங்கிக் கொள்ளவும் முனைகிறது. அப்படி வாங்கிய கைப்பேசியை எத்தனை நாள் பயன்படும் என்றால் அடுத்த பிறந்த நாள் வரும்வரை மட்டுமே. இது குழந்தையின் பிறந்த நாள் அல்ல புதியதாகச் சந்தைக்கு வரும் கைப்பேசியின் பிறந்த நாள் ஆகும். இதைக் குழந்தைகள் மட்டும் செய்யவில்லை ஏறக்குறைய பலரும் புது ரகம் வந்தவுடன் தனது பழைய பொருட்களை வீசிவிடுகிறார்கள். தனக்குத் தேவையே இல்லாவிட்டாலும் அந்தப் புதிய பொருளைப் பயன்படுத்திவிடவே ஆசைப்படுகிறார்கள். அந்தப் புது ரகம் எடை குறைவாக இருக்கிறது அல்லது சத்தம் துல்லியமாக இருக்கிறது என்று வலுவற்ற காரணங்களுக்காக விலை கொடுத்து வாங்குகிறார்கள். உண்மையில் அவர்களை விளம்பரங்கள் வாங்கிவிட்டன.

    சிகப்பழகு பெற்று உலகை உங்கள் பக்கம் திருப்புங்கள் என்று கூவி முகக்களிம்புகள் விளம்பரம் செய்யப்பட்டால், ஏதோ அந்தக் களிம்புதான் சொத்து என்கிற ரீதியில் காட்டுவதை எல்லாம் முகத்தில் பூசிக் கொள்கிறோம், பின்னர் இளவயதிலேயே தோல் சுருக்கங்களைப் பெற்று வருத்தங்கள் கொள்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால் இதைப் போன்றவொரு பொருள் விளம்பரமே இல்லாமல் அண்ணாச்சிக் கடைகளில் இருக்கலாம், அல்லது அம்மா கைப்பக்குவத்தில் கடலை மாவும் பாசிபருப்பு மாவும் போதுமானதாக இருக்கலாம். இதெல்லாம் பத்தாது அதுதான் வேண்டும் என்றால் குறைந்தது ஒரு பொருளை மட்டுமாவது பயன்படுத்துங்கள். அடிக்கடி தோல் சார்ந்த அழகு சாதனப் பொருட்களை மாற்றிவதும் ஆபத்து என்பதை மனதில் கொள்க.

    போன தலைமுறையில் நமக்கெல்லாம் கம்பங்கஞ்சியும், கேப்பக்கூழும், கைக்குத்தல் அரிசியும் தான் பிரதான உணவாகயிருந்திருக்கும். ஆனால் ஆடம்பரம், கெளரவம்,என்கிற பல காரணங்களுக்காகப் படிப்படியாக பாலிஷ் போட்ட அரிசி, இன்ஸ்டன்ட் மாவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என கிடைப்பதையெல்லாம் உண்டு பல நோய்கள் கிடைக்கப்பெற்றுள்ளோம். கடைசியில் பழங்கஞ்சி உண்டு வாழ மருத்துவரொருவர் பரிந்துரைப்பதுடன் முடிகிறது ஒரு தலைமுறை. இந்த அறிவுரையை முன்னரே கடைபிடித்திருந்தால் எவ்வளவு ஆரோக்கியம்?

    ஒரு சாராரின் வாதம் என்னவென்றால் தொழிற்நுட்பம் வளர்கிறது அதனால் நவீனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதாகும். அதைத்தான் கட்டுரையும் சொல்கிறது அந்தத் தொழிற்நுட்பம் என்ன? அது நமக்குத் தேவையா? பின்விளைவுகள் வருமா? என ஆராய்ந்து பிறகு வாங்குங்கள் என்கிறது. விளம்பரங்களைக் கண்டு விலை போகாதீர்கள் என்கிறது.

    மற்றொரு சாராரின் வாதம் என்னவென்றால் இப்படி நுகர்வோர்கள் பொருட்களை அதிகம் வாங்கினால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதாகும். ஆனால் இப்படி தேவையில்லாதவற்றை வாங்குவதற்கு ஏன் பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கத்தைக் குறைக்கவேண்டும்? பணவீக்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே, குறைந்தது அந்தப் பணம் வேறு எங்காவது முதலீடாகவாவது மாறுமே. நமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்களின் சேமிப்பே. நமது சேமிப்பின் மூலமே பல முக்கியப் பணிகளுக்கு முதலீடு கிடைக்கிறது. இத்தகைய நுகர்வோர் கலாச்சாரத்தால் பணச் சேமிப்பும் பாதிக்கும்.

    எது தேவை எது தேவையில்லை என நாம் செய்யும் தொழிலில் தீர்க்கமாக முடிவெடுக்கும் நாம் செலவளிக்கும் பணத்தில் தீர்க்கமாக ஆராய்வதில்லை. சேமிப்பு என்பது உற்பத்திக்குச் சமம் என்பதையும் மனதில் கொண்டு விளம்பரங்களுக்கு மயங்கி தேவையில்லாதவொன்றை தேடிப்போகாமல் இருக்கலாமே.

    Share
  • சில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

     

     Binay Star System

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU

    http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013]

     

    ஊழி முதல்வன் மூச்சில்
    உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி
    சப்பி மீளும் ஒரு யுகத்தில் !
    விழுங்கிடும் கருந்துளைக் கும்பியில்
    உயிர்க்கும் ஒளிமீன் கோள்கள் !
    விண்வெளி  விரிய விண்ணோக்கியின்
    கண்ணொளி நீண்டு செல்லும்!
    நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை
    ஊடுருவிக் காமிரா
    கண்வழிப் பூமிபோல் தெரியும்
    பேரளவுக் கோள்கள் பற்பல !
    சூரிய மண்டலம் போல்
    வெகு தொலைவில் இயங்கிச்
    சுய ஒளிவீசும்
    விண்மீன்  ஒன்றைச் சுற்றிவரும்
    மண்ணுலகம் பற்பல !
    ஈர்ப்பு விண்வெளியில் முதலாக
    பூமியைப் போல்
    நீர்க்கோள்  இரண்டைப்
    பார்த்திடும் கெப்ளர் விண்ணோக்கி !
    சில்லியின் வானோக்கி மூலம்
    விண்வெளியில்
    கண்ட கோள்கள் பற்பல ! ஆயினும்
    இன்னும் சவாலாகக்
    கண்ணுக்குத் தெரியாமல் நிபுணர்
    தேடிச் செல்லும்  கோள்கள்
    கோடிக் கணக்கில் !

    +++++++++++++++

    Odd Planet 2013

    “அருகில் உள்ள இரு முகில் திரட்சிகள் முறியும் போது, இரட்டை விண்மீன் ஏற்பாடு [Binary Star System] ஒன்று தனித் தனி விண்மீனாக  உருவாகலாம்.   அவை மிக நெருங்கி இருந்தால், ஒன்றை ஒன்றை ஈர்க்கும் விசையால், ஒன்றை ஒன்று ஓர் சுற்றுவீதியில் சுற்ற ஆரம்பித்து, ஓர் ஈர்ப்பு சுழற்சிப் பந்தத்தை உண்டாக்கிக் கொள்கின்றன.     (சமீபத்தில் கண்டுபிடித்த)  இரட்டை விண்மீன் – கோள் ஏற்பாடு [HD 106906 System]  சூரியனும் அதன் ஒற்றைக் கோளும் வாயு முகில் திரட்சி களிருந்து தனித்தனியாக முறிந்து உருவாகி உள்ளன.   ஏதோ ஓர் காரணத்தால் ஒரு கோளின் பூர்வ முன்னோடித் திரட்சி [Planet’s Progenitor Clump] ஈர்ப்புத் திரட்சியில் பெரிதாக முடியாது, பொறி தூண்ட இயலாது விண்மீன் ஆகாமல் வெறும் கோளாகப் போனது.”

    வனஸ்ஸா பெய்லி  [வானியல் துறை, அரிசோனா பல்கலைக் கழகம்]

    “பொதுவாக இரட்டை ஏற்பாட்டு விண்மீன்கள் [Binary System Stars] வடிவத்தில் 10:1 வீதத்திற்குக் கூடுதலாய் அமைந்தி ருக்காது.   தற்போதையக் கண்டுபிடிப்பில் அந்த இரட்டை ஏற்பாடு விண்மீன் – கோள் பிணைப்பு 100:1 வீதத்திற்கும் மேலாக இருப்பது வியப்பாக உள்ளது !   இம்மாதிரி பேரளவு வீத வடிவ அமைப்பு இரட்டை ஏற்பாடு விண்மீன் அமைப்பு நியதி விதிப்படிக் காணப்பட வில்லை.   அதுபோல் சுற்றும் கோள், மூலச் சூரியன் நிறையிலிருந்தும் உருவான தில்லை என்ற வேறு கோட்பாடுக்கும் விதி விலக்காய் உள்ளது. ”

    வனஸ்ஸா பெய்லி  [வானியல் துறை, அரிசோனா பல்கலைக் கழகம்]

    Chile Space Observatory that Discovered the Binary System Star HD 106906 B

    சில்லி விண்ணோக்கி புதுவித இரட்டை ஏற்பாடு விண்மீன் – கோள் பிணைப்பைக் கண்டுபிடித்தது.

    2013 டிசம்பர் 4 ஆம் தேதி சில்லி விண்ணோக்கி ஒருவித விந்தையான இரட்டை ஏற்பாட்டு விண்மீன் – கோள்  [Binary System Star – Planet]  பிணைப்பைக் கண்டுபிடித்துள்ளது.   அதன் பெயர் [HD 106906 B] என்று குறிப்பிடப் பட்டுள்ளது.   அந்த இரட்டைப் பிணைப்பு ஏற்பாட்டில் உள்ள சூரியனை நமது பூதக்கோள் வியாழனைப் போல் 11 மடங்கு நிறையுள்ள ஒரு வாயுக் கோள் சுற்றி வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.   அவற்றிடையே உள்ள தூரம் : நமது பரிதி – பூமிக்குள்ள இடைவெளி போல் 650 மடங்கு தொலைத் தூரம் !   இதில் வியப்பென்ன வென்றால்,  சுற்றும் துணைக் கோள் மூல விண்மீன் நிறையி லிருந்து உருவான தில்லை !   இந்த இரட்டை ஏற்பாடு விண்மீன் – கோள் பிணைப்பைக் கண்டுபிடித்து ஆராய்ந்து வரும் குழுவினர் தலைவி :  வனெஸ்ஸா பைலி.  இவர் அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள வானியல் விஞ்ஞான மாணவி.  இந்த  இரட்டை ஏற்பாடு உதிப்பு விதியைத் தற்போதுள்ள எந்தக் கோட்பாட்டு நியதியும் விளக்க வில்லை.

    அருகில் உள்ள இரு முகில் திரட்சிகள் முறியும் போது, இரட்டை விண்மீன் ஏற்பாடு [Binary Star System] ஒன்று தனித் தனி விண்மீனாக  உருவாகலாம்.   அவை மிக நெருங்கி இருந்தால், ஒன்றை ஒன்றை ஈர்க்கும் விசையால், ஒன்றை ஒன்று ஓர் சுற்றுவீதியில் சுற்ற ஆரம்பித்து, ஓர் ஈர்ப்பு சுழற்சிப் பந்தத்தை உண்டாக்கிக் கொள்கின்றன.     (சமீபத்தில் கண்டுபிடித்த)  இரட்டை விண்மீன் -கோள் ஏற்பாடு [HD 106906 System]  சூரியனும் அதன் ஒற்றைக் கோளும் வாயு முகில் திரட்சி களிருந்து தனித்தனியாக முறிந்து உருவாகி உள்ளன.   ஏதோ ஓர் காரணத்தால் ஒரு கோளின் பூர்வ முன்னோடித் திரட்சி [Planet’s Progenitor Clump] ஈர்ப்புத் திரட்சியில் பெரிதாக முடியாது, பொறி தூண்ட இயலாது விண்மீன் ஆகாமல் வெறும் கோளாகப் போனது.

    “பொதுவாக இரட்டை ஏற்பாட்டு விண்மீன்கள் [Binary System Stars] வடிவத்தில் 10:1 வீதத்திற்குக் கூடுதலாய் அமைந்தி ருக்காது.   தற்போதையக் கண்டுபிடிப்பில் அந்த இரட்டை ஏற்பாடு விண்மீன் – கோள் பிணைப்பு 100:1 வீதத்திற்கும் மேலாக இருப்பது வியப்பாக உள்ளது !   இம்மாதிரி பேரளவு வீத வடிவ அமைப்பு இரட்டை ஏற்பாடு விண்மீன் அமைப்பு நியதி விதிப்படிக் காணப்பட வில்லை.   அதுபோல் சுற்றும் கோள், மூலச் சூரியன் நிறையிலிருந்தும் உருவான தில்லை என்ற வேறு கோட்பாடுக்கும் விதி விலக்காய் உள்ளது. ”

    தோன்றி 13 மில்லியன் ஆண்டுகள் கடந்தும், மிச்சமுள்ள வடிவ வெப்பத்தால் இந்த இளமைக் கோள் இன்னும் வளர்ச்சி அடைந்து வருகிறது !   காரணம் :  மூல விண்மீனை விட இந்தக் கோள் 1500 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் [2700 டிகிரி F] குன்றிய குளிர்ச்சியில், வளர்ச்சி அடைகிறது.   ஒப்புநோக்க நமது பூமி 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பே தோன்ற ஆரம்பித்து, இன்னும் பூமியின் உட்கருவில் திரவ உலோகங்கள் கொதித்து வருகின்றன.   அவை பீச்சும் எரிமலைக் குழம்பாய்ப் பூமியில் துளையிட்டு வெளியேறி, ஹவாயி போன்ற தீவுகளை உருவாக்கி வருகிறன.   ஒப்பு நோக்கினால் நமது பூமி புதிய கோளை விட [HD 106906 B] 350 மடங்கு பூர்வீகமானது.  இந்த இரட்டை விண்மீன் -கோள் ஏற்பாடு தொடர்ந்து வானியல் விஞ்ஞானிகளால்  கண்காணிக்கப் படும்.

    Hunt for Earth like planets

    “இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல.   அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை.    ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால்  அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை  உடையவரா என்பது தெரியாது.   இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான் நீடிக்க முடியும்.   ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும்.  மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”

    லீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]

    Blue Gaseous Planet -1

    கண்டுபிடித்த நீர்க் கோள்கள் கெப்ளர் -62e,  கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன.   அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன.  நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது.  கணனி மாடலின்படித் துருவம் வரை பூராவும் சூடான வெக்கை மயமானது [Warm and Humid].   தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு  வாயுவை மிகுதியாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது.   இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”

    டிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]

    Two Water Planets“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”

    ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    Kepler -62 System

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள் களைக் கண்டு பிடித்தது 

    2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன் முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது.   அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62].  விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது.  அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் :  கெப்ளர் -62e, கெப்ளர் -62f  [Kepler -62e and Kepler -62f].   நீர்க்கோள்  கெப்ளர் -62e,  அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்;  நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள்.  அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f  40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப் பட்டுள்ளன.  வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலமின்றிப் பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார்.   கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும்,  பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது.  தூரத்தில் சுற்றும் நீர்க்கோள்  கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில்  நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது.  இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

    2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள  அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b.   2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது.  2013  ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது.  நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியிலிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.   மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும்  நிலவு போல் காணப் பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கரமானது : 2000 டிகிரி F.  வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவ தில்லை.   அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது.  2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope]  விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F  என்று கணிக்கப் பட்டது.

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம்.  ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி !  அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas) ”

    பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

    ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

    Hubble Space Telescope

    “மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது.  அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை.  ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம்.  பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”

    அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London’s Science Museum]

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென்  [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

    Total exoplanets 2012

    Size of Planets 2013

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

    “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது !  எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    பூமியைப் போன்ற வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிப்பு !

    250 ஆண்டுகளுக்கு முன்பே விண்கோள் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜெர்மன் மேதை இம்மானுவல் கென்ட் 1755 இல் அண்டக் கோள்கள் விண்மீனைச் சுற்றும் வாயுத் தூசித் தட்டிலிருந்து உதிக்கின்றன என்று முதன்முதலில் அறிவித்தார் !  இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை !  தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார்.  இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார்.  1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள்.  அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள்  [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !  புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது.  7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது !  ஆயினும் பூமியைப் போல் நீர்வளம் மிக்க நீர்க்கோள் ஒன்று இதுவரையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை !

    2006 நவம்பர் அமெரிக்க வானியல் இதழில் (American Astronomical Journal) பரிதியைப் போன்ற விண்மீன் எப்ஸிலான் எரிடானியை (Epsilon Eridani Star) பத்தரை ஒளியாண்டு தூரத்தில் விஞ்ஞானிகள் கண்டதாக அறிவிக்கப்பட்டது.  சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரிய வாயுத் தூசித் தட்டில் ஒரே சமயத்தில் உருண்டு திரண்டு உதித்தவை.  4.5 பில்லியன் வயதுடைய நமது பரிதி ஒரு நடு வயது விண்மீன் !  அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது !  ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது.  அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் !  ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது !  எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது !  அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு !  அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) !  அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன !  ஹப்பிள் தொலைநோக்கி முதலில் அந்த மங்கலான வாயுக் கோளைக் காண முடியா விட்டாலும், 2007 இல் பரிதி ஒளியைப் பிரதிபலித்த போது தெளிவாகப் படமெடுக்க முடிந்தது.சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதியதோர் பூமியைக் கண்டுபிடித்தார்

    ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் (ஏப்ரல் 25, 2007), சூரியனைப் போன்ற ஆனால் வேறான ஒரு சுயவொளி விண்மீனைச் சுற்றிவரும் மனித இனம் வாழத் தகுந்ததும், பூமியை ஒத்ததுமான ஓர் அண்டக்கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள்.  தென் அமெரிக்காவின் சில்லியில் உள்ள அடாகமா பாலைவனத்து ஈஸோ வானோக்கு ஆய்வகத்தின் [Atacama European Science Observatory, (ESO) La Silla, Chille, South America] 3.6 மீடர் (12 அடி விட்டம்) தொலைநோக்கியில் பிரெஞ்ச், சுவிஸ், போர்ச்சுகீஸ் விஞ்ஞானிகள் கூடிக் கண்டுபிடித்தது.  அந்த ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத கோள்களின் ஈர்ப்பாற்றல் விளைவால் ஏற்படும் “முன்-பின் திரிபைத்” [Back-and-Forth Wobble of Stars, caused by the gravitational effect of the unseen Planets] தொலைநோக்கி வழியாக மறைமுகமாக விண்மீனைக் காண்பது.  கண்டுபிடிக்கப்பட்ட கோள் நமது பூமியைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது;  அதன் விட்டம் 12,000 மைல்.  புதுக்கோளின் எடை நமது பூமியைப் போல் 5 மடங்கு.  அது சுற்றும் சுயவொளி விண்மீனின் பெயர்: கீலீஸ் 581 c [Gliese 581 c].  புதிய கோள், கிலீஸை ஒரு முறைச் சுற்றிவர 13 நாட்கள் எடுக்கிறது. கிலீஸா ஒளிமீன் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்தி லிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  ஒளியாண்டு என்பது தூர அளவு. ஓர் ஒளியாண்டு என்றால் ஒளிவேகத்தில் [விநாடிக்கு 186,000 மைல் வேகம்] ஓராண்டு காலம் செல்லும் தூரம்.  நாசா விண்வெளித் தேடலின் முடிவான, முக்கியக் குறிக்கோளும் அவ்விதக் கோள்களைக் கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் புரிவதே!

    பரிதி மண்டலத்தைத் தாண்டி இதுவரை [டிசம்பர் 10, 2013] 1051, 797 பரிதிக் குடும்பங்கள்]  வெளிப்புறக் கோள்கள் (Exoplanets) கண்டுபிடிக்கப் பட்டாலும், சமீபத்தில் கண்ட இந்தக் கோள்தான் சிறப்பாக நமது பூமியை ஒத்து உயிரின வாழ்வுக்கு ஏற்ற வெப்ப நிலை கொண்டதாக உள்ளது. மேலும் அந்த உஷ்ண நிலையில் நீர் திரவ வடிவிலிருக்க முடிகிறது.  கிலீஸ் விண்மீனைச் சுற்றிவரும் நெப்டியூன் நிறையுள்ள ஓர் வாயு அண்டக்கோள் ஏற்கனவே அறியப் பட்டுள்ளது.  பூமியைப் போன்று எட்டு மடங்கு நிறையுள்ள மூன்றாவது ஓர் அண்டக் கோள் இருக்க அழுத்தமான சான்றுகள் கிடைத்துள்ளன.  வானோக்கிகள் மூலமாகப் புதிய பூமியின் வாயு மண்டலத்தில் மீதேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா, நமது பூமியில் தென்படும் ஒளிச் சேர்க்கைக்கு வேண்டிய குளோரோ·பைல் காணப்படுகிறதா என்றும் ஆய்வுகள் மூலம் அறிய முற்படும்.

    Einstein Planet

    மறைமுக நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அண்டக்கோள்கள்

    2005 மார்ச் 17 ஆம் தேதி வார்ஸா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆன்டிரி உதல்ஸ்கி [Andrzej Udalski] முதன்முதலாக ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வு முறையில் [Optical Gravitational Lensing Experiment (OGLE)] பூமியிலிருந்து நமது காலாக்ஸியின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்று, அதற்கும் அப்பாலுள்ள விண்மீன் முன்பாக நகர்வதைத் தொலைநோக்கி வழியாகக் கண்டார்.  ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றை நோக்கிய போது விந்தை ஒன்றை விண்வெளி விஞ்ஞானி கண்டார்.  வெகு தொலைவிலிருந்த விண்மீன் வியப்பாக 100 மடங்கு வெளிச்சத்தில் மின்னியது.  அதாவது திடீரென வெளிச்சத் திண்மையில் திரிபு காணப்பட்டது.  அந்த வித விரைவு வெளிச்சத் திரிபு தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்:  அதாவது முன்னிருந்து ஒளித்திரிபை உண்டாக்கிய விண்மீன் ஐயமின்றி ஓர் அண்டக்கோளே!  அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே!  அதாவது புவி எடைக் கோள் ஒன்று அந்தப் பகுதியில் இருந்தால் நாம் தொலைநோக்கியில் அக்கோளைக் காணலாம்.  சில்லியின் லாஸ் காம்பனாஸ் வானோக்கு ஆய்வுக் கூடத்தின் 1.3 மீடர் [4 அடி விட்டம்] தொலைநோக்கியில் ஆண்டுக்கு 600 மேற்பட்ட நுண்ணோக்கு லென்ஸ் ஆய்வுகள் [Micro-lensing Experiments] நடத்தப் படுகின்றன.

    ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வுகள் என்றால் என்ன?

    நாம் வானிலை நூல்களில் பார்க்கும் அழகிய விண்மீன்கள் பெரும்பான்மையானவை ஹப்பிள் தொலைநோக்கி மூலமாகவோ அல்லது மற்ற தொலைநோக்கிகள் வழியாகவோ குறிப்பிட்ட தூரத்தில் [உதாரணமாக 400 ஒளியாண்டு] பார்த்துப் படமெடுக்கப் பட்டவை.  அந்த தூரம் நமது பால்வீதி காலாக்ஸி விட்டத்தின் 1% தூரம்.  மற்ற காலாக்ஸிகள் பில்லியன் ஓளியாண்டுக்கும் அப்பால் உள்ளன.  1936 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விண்மீன் களின் ஈர்ப்பாற்றல் தளங்கள், ஒரு கண்ணாடி லென்ஸ் போல ஓளியை வளைக்கின்றன என்று கூறினார்.  ஈர்ப்பாற்றல் லென்ஸின் விளைவுகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் இப்போது காணப்படுகின்றன.  அம்முறை மூலமாக வெகு தூரத்தில் உள்ள ஒளிமீன்களைத் தெளிவாகக் காண முடிகிறது.  ஈர்ப்பாற்றல் லென்ஸ் விளைவின் அடிப்படை விளக்கம் இதுதான்:  பூமியின் தொலைநோக்கி மூலமாக இரண்டு விண்மீன்களை நேர் கோட்டில் கொண்டு வந்தால், அண்டையில் உள்ள விண்மீனின் ஈர்ப்பாற்றல் தளம் [லென்ஸ் போன்று] அப்பால் உள்ள விண்மீனின் ஒளியை வளைக்கிறது.  அவ்வளைவு ஒளி ஒரு வட்ட வடிவில் தெரிகிறது.  அதுவே “ஐன்ஸ்டைன் வளையம்” [Einstein Ring] என்று அழைக்கப் படுகிறது.  அந்த நுண்ணோக்கு லென்ஸ் ஈர்ப்பாற்றல் மூலமாகத்தான், புதிய பூமி இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடையே மாபெரும் புத்துணர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

    CHIO Observatory, Chile

    பரிதி மண்டலத்துக்கு அப்பால் கோள்களை நோக்கும் முறைகள்

    நேர்முறையில் நோக்க முடியாது பலவித மறைமுக முறைகளில் புறவெளிப் பரிதிக் கோள்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன.  தாய் விண்மீனைப் போல் ஒளியின்றி புறவெளிக் கோள்கள் மிக மிக மங்கலாகத் தெரிவதால் அவற்றைக் நோக்கி உளவுவது சிரமமான ஆராய்ச்சி.  மேலும் தாய்க் கோளின் ஒளி எதிரொளி (Glare) வேறு கொடுப்பதால், மங்கலான வெளிச்சமும் வெளுத்துப் போகிறது. புறவெளிக் கோள் கண்டுபிடிப்பு முறைகள் எவை ? வானியல் அளப்பு முறை, ஆரத்தின் வேக முறை, டாப்பிளர் விளைவு முறை, பல்ஸர் கால முறை, கடப்பு முறை, ஈர்ப்பாற்றல் நுட்ப லென்ஸ் முறை, விண்மீன் சுற்றும் தட்டு முறை, இரட்டைத் தடுப்பு முறை, சுற்றுவீதி நிலை முறை, மறைப்பு அளப்பு முறை (Astrometry, Radial Velocity or Doppler Method, Pulsar Timing, Tansit Method, Gravitational Micro-Lensing, Circumsteller Discs, Eclipsing Binary, Orbital Phase, Polarimerty) போன்றவை. ஹப்பிள் விண்வெளி நோக்கு முறையைத் தவிர இதுவரைப் பயன்படுத்தப்பட மற்ற முறைகள் யாவும் பூதள அமைப்புத் தொலைநோக்கிகள் மூலம் (Ground-Based Telescopes)  கண்ட முறைகளே.  அவற்றை விட மேம்பட்ட முறைகள் தொலைநோக்கிகளை அமைதியற்ற வாயு மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் அனுப்பிக் காணும் முறைகளே.

    1. 2006 டிசம்பரில் புறவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க ரஷ்யா அனுப்பிய ஐரோப்பிய கோரட் (COROT) விண்ணோக்கி ஊர்தி.

    2. ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கி இதுவரை ஒருசில புறவெளிக் கோள்களைப் படமெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாசா & ஈசா திட்டமிட்டுள்ள குறிப்பணிகள் :

    3. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி (Kepler Space Telescope) பிப்ரவரி 2009 இல் நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

    4. புதிய உலகங்கள் தேடும் திட்டம் (New Worlds Mission) ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.

    5. ஈசாவின் திட்டம் : டார்வின் உயிரினக் கோள் தேடும் திட்டம் (ESA’s Darwin Space Mission) (ஏவும் ஆண்டு : 2015)

    6. நாசாவின் விண்வெளிக் கோள் திட்டம் (Space Interferomerty Mission) (SIM) (திட்டம் ஆண்டு : 2015 or 2016)

    7. விண்வெளிக் கோள் நோக்கி (Terrestrial Planet Finder) (TRF) (ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.)

    8. பேகஸி (பறக்கும் குதிரைத்) திட்டம் : (PEGASE) PEGASE is a proposed space mission to build a double-aperture interferometer composed of three free-flying satellites. The goal of the mission is the study of Hot Jupiters (pegasids), brown dwarfs and the interior of protoplanetary disks  The mission would be performed by the Centre National d’tudes Spatiales and is currently being studied for launch around 2010-2012.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Are There Other Planets Like The Earth ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Science – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)

    21 National Geographic Magazine – Discovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)

    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]

    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40704261&format=html (திண்ணைக் கட்டுரை – பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்)

    25 National Geographic Magazine – Searching the Stars for New Earths (Dec 2004)

    26 Scientific American – Does Methane Point to Bacteria on Mars & Titan ? By : Sushil K. Atreya. (May 2007)

    27 News Week Magazine The New Solar System – Our Changing Way of the Universe -(Sep 2006)

    28 Cosmos Magazine – Three-Planet Solar System Detected (May 2006)

    29 Cosmos Magazine – Origin of Planets Confirmed (Oct 2006)

    30 Cosmos Magazine – Earth-Like Planet Await Discovery (Sep 2006)

    31 Cosmos Magazine – Distant Sun Has System of Five Planets (Nov 2007)

    32 Cosmos Magazine – Catalogue of Strange New Worlds (May 2007)

    33 Cosmos Magazine – New Earth-Like Planet May Hold Liquid Water (April 2007)

    34 Astronomy Magazine – Earth-Like Planets May Be Common (Dec 2003)

    35 Omnome Science – Earth -2 How to Find Earth-Like Planets (June 2006)

    36 Extra-Solar Planets By : Wikipedia [31 July 2008]

    36(a)  http://revolutionizingawareness.com/tag/space/  [December 24, 2011]

    36(b)  http://www.kavlifoundation.org/science-spotlights/searching-best-and-brightest  [2011]

    37  http://www.messagetoeagle.com/alienwaterworldskepler.php#.Uem1lo3VCPU  [April 18, 2013]

    38  http://www.dailygalaxy.com/my_weblog/2013/07/two-alien-planets-with-endless-oceans-unlike-anything-in-our-solar-system-.html  [July 11, 2013]

    39  http://www.scientificamerican.com/article.cfm?id=first-distant-planet-be-seen-in-color-blue&print=true  [July 11, 2013]

    40  http://science.gsfc.nasa.gov/sed/index.cfm?fuseAction=home.main&&navOrgCode=667  [NASA Sites for Exoplanets]

    41  http://www.spacedaily.com/reports/Hubble_Finds_a_Cobalt_Blue_Planet_999.html [July 12, 2013]

    42.   https://en.wikipedia.org/wiki/Exoplanet  [December 11, 2013]

    43.  http://en.wikipedia.org/wiki/HD_106906_b  [December 12, 2013]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  December 13, 2013

    http://jayabarathan.wordpress.com/

    UA Astronomers Discover Planet That Shouldn’t Be There
    Share
  • ‘செம்மை, முழுமை, மகத்தான ஆளுமை’

    முனைவர் அண்ணாகண்ணன்

    ஆசிரியர், யாஹூ தமிழ்த் தளம்,

    பெங்களூரு

    annakannan@gmail.com

    ——————————————————————————————————-

    இதோ, சிறந்த முன்மாதிரி!

    புலத்துறை முற்றிய கற்றுத் துறைபோகிய தென்மராட்சி அறிஞர் என்ற அடிப்படையில், மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டிச் சிறப்பிக்கும் செய்தி அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

    உலகளாவிய பார்வை கொண்ட சச்சி அவர்களை உலகத் தமிழர் எனப் பல்லோர் உவந்து போற்றுவர். ஐ.நா. நிறுவனத்தில் பணியாற்றியவர். உலகம் முழுதும் ஆழமும் விரிவுமான நட்புக் கொண்டவர். 60க்கும் மேலான நாடுகளுக்குப் பயணித்தவர். 23 அரசுகளுக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர். இத்தகையவருக்கு, சொந்த மண்ணில் பாராட்டு. நாட்டுக்கு அரசர் ஆனாலும் தாய்க்குப் பிள்ளை அன்றோ!

    சச்சி அய்யா, நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க் (http://thevaaram.org) தளங்களின் நிறுவனர்; உலகம் முழுவதும் சைவத் திருமுறைகளை எடுத்துச் செல்லும் தமிழ்த் தூதர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர், அன்பிற் சிறந்த சான்றோர்;

    ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டுவதில் உறுதி கொண்டவர்.

    ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை….. ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

    எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையிலான உடன்பாடு எப்படி இருக்க வேண்டும்? பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையிலான உடன்பாடு எவ்வாறு அமைய வேண்டும்? எனப் பலவற்றைத் தமிழில் நேர்த்தியாக எழுதியவர். பதிப்புத் தொழில் உலகம் என்ற மாத இதழில் சீரிய முறையில் பதிப்பக நெறிகளை வரைந்து காட்டியவர். எந்தச் செயலிலும் செம்மையும் முழுமையும் வெளிப்படுமாறு பணியாற்றுபவர்.

    சீசெல்சுத் தீவில் பிள்ளையார் கோவிலைக் கட்டியதில் தொடங்கி, மறவன்புலவில் பொங்கல் விழாவை முன்னெடுப்பது வரை, பல்வேறு சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களின் ஆசிரியர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவருடன் இணைந்து ‘சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை’ என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு, எனக்கு அமைந்தது. இவரது தூண்டுதலின் பேரில், ‘காந்தளகம் – 20 ஆண்டுகள்’, ‘தகத்தகாய தங்கம்மா’ ஆகிய நூல்களை இயற்றினேன். இவருடன் 1994 தொடக்கம் இன்று வரை நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருப்பது, எனது பேறு.

    ஒருவரின் தகுதியை உணர்ந்து, அடையாளம் கண்டு பாராட்டுவது, உண்மையில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக இல்லை. அதனினும் அதிகமாக, அவரைப் போல நாமும் பணியாற்ற வேண்டும், முன்னேற வேண்டும் எனப் பிறரை ஊக்குவிப்பதற்கே. “தனி மனிதரின் ஆற்றலை முழுமையாக உணராமல், அதைச் சிறப்பாகப் பயன்படுத்தாமல் ஒரு சமுதாயம் இருக்குமானால், அதனால் ஏற்படும் இழப்பு, அந்தத் தனி மனிதருக்கு உரியதில்லை. அந்தச் சமுதாயத்திற்கே உரியது (அகமொழி 13)” என்ற எனது சிந்தனைத் துளியை இங்கே நினைவுகூர்கிறேன்.

    அறிஞர் சச்சிதானந்தன் அவர்களைப் பாராட்டுவதன் மூலம், தென்மராட்சி கல்விக் கழகம், தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுகிறது. இதற்காக இந்தக் கழகத்தினருக்கு எனது பாராட்டுகள். சச்சி அய்யாவின் பணியும் புகழும் மேன்மேலும் வளர்ந்திட, எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

    Share
  • மஹாகவிக்கு ஒரு விண்ணப்பம்

     

    சு.ரவி

    எனக்கொரு கனவு இருக்கிறது…….

    அன்பே மதமாய், அறமே அரசாய்,ts
    அறிவே ஒளியாய், இசையே மொழியாய்,
    உலகே உறவாய், பொறையே குணமாய்,
    மானுட வாழ்வை மாற்றி அமைக்க
    (எனக்கொரு)

    இனங்கள், குலங்கள், நிறங்கள் கடந்து
    மனங்கள் இணைந்து, மகிழ்ந்து கலந்து,
    கவலைகள் இன்றிக் குவலயமே ஒரு
    குடும்ப மாகக் குதூ கலித்திட
    (எனக்கொரு)

    நாடுகள் என்ற கோடுக ளின்றி
    காடுகள், மலைகள், கழனிகள், நதிகள்,
    அலைகடல் எல்லாம் எவர்க்கும் உரித்தென
    உலகம் அனைத்தையும் ஒன்றாய் இணைத்திட
    (எனக்கொரு)

    முன்னால் ஓநாய்ப் பார்வைகளும்,
    பின்னால் பசியும், பெருமூச்சும்,
    ஒருபுறம் செல்வப் பெருமிதமும்,
    மறுபுறம் மிடிமைப் படுகுழியும்-இம்
    முரண்பாடுகளை மோதித் தகர்க்க
    ( எனக்கொரு)

    கவிதைக் கனலே! இரவும் பகலும்
    சுதந்திரக் கனவைச் சுமந்தவனே! என்
    கனவுக ளெல்லாம் கரைசேர்ந்திட நீ
    கரம் கொடுப்பாய் ஒரு வரம் கொடுப்பாய் என
    (எனக்கொரு)

    Share
  • குறவன் பாட்டு-21

    ஆலமரமும் வண்ணத்துப் பூச்சிகளும்

     

    பனைமரம் போலப் பருத்துத் திரண்ட,

    பற்பல நூறு விழுதுகள் மண்ணில்,

    பலநூ றாண்டுக ளாகத் தொடர்ந்து,

    பதியம் ஆகிச் செழித்த ஆலம்!                                                                                                                    170

     

    ஆயிரம் கால் மண்டபம் போல்,

    அகன்று நின்ற ஆலமரம், தொழும்

    ஆலயத்தின் கோபுரம் போல் உயர்ந்து,

    அரியவகைப் பறவைகளின் சரணாலயம் ஆகும்!                                                                             171

     

    தூண் போன்ற விழுதுகள் இடையே,

    தூரிகை போன்ற மெல்லிய விழுதுகள்,

    துதிக்கை மண்தொட நடக்கும் பிடியாய்,

    தரையைத் தொட்டும் தொடாமல் நின்றன!                                                                                            172

     

    மேனிலைக் கிளைகளில் அமர்ந்த மந்திகள்,

    தேயிலை பறிக்கும் பெண்கள் போல,

    ஈரிலைக் கொத்தாய்ப் பறித்துப் பறித்து,

    ஆலிலைக் கொத்தைக் கீழே அனுப்பின!                                                                                 173

     

    பச்சைச் சிறகை விரித்துச் சுற்றும்,

    பட்டாம் பூச்சிகள் போலக் காற்றில்,

    படபட வென்று பறந்த இலைகள்,

    பூக்களைப் போல மண்ணில் விழுந்தன!                                                                                                  174

     

    உச்சிக் கிளைகளில் கூடுகள் அமைத்தால்,

    உக்கிரக் கதிரவன் சுடுவா னென்று,

    அடிமரக் கிளைகளில் கூடுகள் கட்டி,

    குளுகுளு வென்று பறவைகள் வாழ்ந்தன!                                                                                             175

     

    தனிமரம் ஒன்று தோப்பென் றாகி,

    பலகரம் ஊன்றி மண்ணில் நின்று,

    அடிமரம் உயிரைத் துறந்த பின்னும்,

    புதுமரம் போலப் பசுமை பேணும்!                                                                                                               176

     

    கரியமில வாயுவைக் களிப்புடன் ஏற்று,

    உயிரமுத வாயுவை உலகுக்கு ஈந்து,

    கருணையுடன் வாழும் கானகம் கொண்ட,

    தருக்களின் தலைவன் ஆலமரம் ஆகும்!                                                                                                177

    Share