மழையால் ஒரு புதிய சுற்றுலாத் தலம் உருவாகிவிட்டது.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மழையால் ஒரு புதிய சுற்றுலாத் தலம் உருவாகிவிட்டது.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தாம்பரத்தில் மழை நின்றபோதும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எந்த இடத்தில் எவ்வளவு தண்ணீர் நிற்கின்றது? இதோ வெள்ளத்தின் ஊடே ஒரு பயணம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

வெள்ளத்தில் பொதுவாகத் தண்ணீர் மட்டும் வருவதில்லை. ஊரில் உள்ள குப்பை கூளங்களும் மீன்கள், தவளைகள், வண்டுகள், பூச்சிகள் எனப் பலவும் கூடவே வரும். இன்று தாம்பரம் பாப்பான் கால்வாயில் பெருகி ஓடும் வெள்ளத்தில் ஒரு பாம்பினைப் பார்த்தேன். இதோ அந்தக் காட்சிகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

-மேகலா இராமமூர்த்தி
தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களை நாம் வரிசைப்படுத்தினால் அதில் குறிப்பிடத்தக்கதோர் இடத்தைப் பெறுபவர் வல்லிக்கண்ணன் அவர்கள். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திறனாய்வு என்று இலக்கியத்தின் பல வகைமைகளிலும் சுவடுபதித்த வல்லிக்கண்ணன், கட்டுரையாளராகத் தனிமுத்திரை பதித்த சாதனையாளராவார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள திசையன்விளை எனும் ஊரில் நவம்பர் 12, 1920இல் சுப்பிரமணியப் பிள்ளை, மகமாயி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் ரா.சு. கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர்கொண்ட வல்லிக்கண்ணன்.
பின்னாளில் அவர் எழுத்தாளராக மாறியபின் தமக்கொரு புனைபெயர் சூட்டிக்கொள்ள விழைந்து, தம் முன்னோர்களின் பூர்வீகமான இராஜவல்லிபுரத்திலுள்ள ’வல்லி’யையும், தம் பெயரான கிருஷ்ணசாமி என்பதன் தமிழாக்கமான ’கண்ணனை’யும் இணைத்து வல்லிக்கண்ணன் ஆனார்.
சிறு பத்திரிகைகளுடனான அறிமுகம் வல்லிக்கண்ணனுக்குச் சிறுவயதிலேயே கிடைத்துவிட்டது. பரலி சு. நெல்லையப்பரின் லோகோபகாரி எனும் சிற்றிதழும், சங்கு சுப்பிரமணியம் என்பவர் நடத்திய சுதந்திரச் சங்கு எனும் பத்திரிகையும், காந்தி, மணிக்கொடி போன்ற இதழ்களும் அவருக்குப் பள்ளி நாட்களிலேயே படிக்கக் கிடைத்தன. அதனால் இளம்பருவத்திலேயே சிற்றிதழ்களின் காதலன் ஆனார் வல்லிக்கண்ணன்.
படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதிலும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, தாமும் கதைகள் கட்டுரைகள் என்று எழுதத் தொடங்கினார். அவ்வாறு பதினாறு வயதில் தொடங்கிய அவரின் எழுத்துப்பணி அவர் வாழ்வின் இறுதிவரைச் சலிப்பின்றித் தொடர்ந்தது.
பள்ளியிறுதிப் படிப்புக்குப் பின் அரசுவேலையில் சேர்ந்த வல்லிக்கண்ணன், தம்முடைய ஓய்வுநேரத்தை படிப்பதிலும் எழுதுவதிலும் செலவழித்துவந்தார். அதனால், பணியிடத்தில் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளானார். ஒருகட்டத்தில் அரசுப்பணி தம் எழுத்துப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து அதனைத் துறந்து முழுநேர எழுத்தாளரானார்.
சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் பலவற்றில் வல்லிக்கண்ணனின் தொடக்ககாலப் படைப்புகள் வெளிவந்தன. திருமகள், சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் முதலிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.
புகழ்பெற்ற குடந்தை எழுத்தாளரான தி. ஜானகிராமனின் முதல் நாவலான ‘அமிர்தம்’ கிராம ஊழியன் பத்திரிகையில் வல்லிக்கண்ணன் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான் வெளிவந்தது.
பாரதி பரம்பரையில் வந்த கவிஞர்களுள் தலைசிறந்தவரான பாவேந்தர் பாரதிதாசனின் கவியாளுமையை விளக்கும் வகையில், ’பாரதிதாசனின் உவமை நயம்’ என்ற கட்டுரைத் தொடரை கிராம ஊழியன் இதழில் எழுதினார் வல்லிக்கண்ணன். பாவேந்தரே அக்கட்டுரைகளைப் படித்துவிட்டு வல்லிக்கண்ணனைப் பாராட்டியிருக்கின்றார்.
வல்லிக்கண்ணன் என்ற பெயரே அல்லாமல் நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் எனப் பல புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். எனினும், வல்லிக்கண்ணன் என்ற பெயரே அவருக்கு நிலைத்தது.
ஈட்டிமுனை, கோவில்களை மூடுங்கள், எப்படி உருப்படும்?, கொடு கல்தா போன்ற சமூக விழிப்புணர்வூட்டும் கட்டுரை நூல்களை கோரநாதன் என்ற பெயரில் அறச்சீற்றங் கொண்ட இளைஞனாக எழுதியவர் வல்லிக்கண்ணன்.
’எப்படி உருப்படும்?’ என்ற நூலில் சினிமா உலகின் இயல்பையும் அது சமூகத்தைச் சீரழிக்கும் விதத்தையும் கண்டு உள்ளங் குமுறி,
”இன்றைய பட முதலாளிகளுக்குக் கலை வளரவேண்டும், நாட்டுக்கு நல்லன புரியவேண்டும், மக்களின் பண்பாட்டை உயர்த்த வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. இவர்களுக்கு வேண்டியது பணம், படாடோப வாழ்க்கை. செலவுசெய்கிற பணத்தைவிட அதிகமான லாபம் வருகிறது; அத்தோடு ரகரகமான உருப்படிகளை, நட்சத்திரங்களை இஷ்டம்போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வெறி நினைப்பு, மன அரிப்பு முதலியவைகளால் உந்தப்பட்டு சினிமாத் தொழிலில் ஈடுபட்ட முதலாளிகளே அதிகம் காணப்படுகின்றார்கள்.” என்று சினிமா எனும் மாய உலகின் நடப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்.
மிவாஸ்கி என்ற புனைபெயரில் வல்லிக்கண்ணன் எழுதிய ’அடியுங்கள் சாவுமணி’ என்ற நூலில்,
”புதுயுகம் பிறக்கவேண்டுமா?
அடியுங்கள் சாவுமணி மக்களின் அறியாமைக்கு!
மக்களை அடிமைகளாக்க முயல்கின்ற சுரண்டும் கும்பலுக்கு!
மக்களின் மிருக வெறிக்கு!
மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு!” என்கிறார் ஆவேசமாக.
இரஷிய இலக்கிய மேதையான மேக்ஸிம் கார்க்கியின் (Maxim Gorky) கட்டுரைகள் சிலவற்றையும், அவரின் சிறுகதைகள் சிலவற்றையும், இரஷிய இலக்கியத்தின் மற்றொரு மகத்தான ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் கதைகள் சிலவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள வல்லிக்கண்ணன், இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் இராகுல் சாங்கிருத்தியாயன், தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவையல்லாமல், பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் – விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், ஊர்வலம்போன பெரிய மனுஷி, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அமர வேதனை, ஆண் சிங்கம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் வல்லிக்கண்ணன்.
‘ஊர்வலம் போன பெரிய மனுஷி’ என்ற வல்லிக்கண்ணனின் சிறுகதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.
‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற அவருடைய நூலுக்கு1978-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. இந்நூலைத் தாம் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்கவரும் வல்லிக்கண்ணன்,
“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலான கட்டுரைகள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். தீபம் இலக்கிய ஏட்டில் ’சரஸ்வதி காலம்’ பற்றிய கட்டுரைத் தொடரை நான் எழுதி முடித்திருந்த நேரம், அடுத்ததாக இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தீபம் இதழின் ஆசிரியர் நா. பார்த்தசாரதி.
அதே சந்தர்ப்பத்தில் எனக்குக் கடிதம் எழுதிய இலங்கை எழுத்தாளர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள், ”புதுக்கவிதை பற்றி ஏதேதோ விவாதங்கள் நடைபெறுகின்றனவே; அதன் வரலாறு உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே; நீங்கள் ஏன் அவ்வரலாற்றை எழுதக்கூடாது?” என்று கேட்டிருந்தார். கவிஞர் மீராவும் புதுக்கவிதைகளின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி குறித்து நான் எழுதவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு நண்பர்கள் பலர் கேட்கவே, புதுக்கவிதையின் வரலாற்றை 1972 நவம்பர் முதல் 1975 மே முடிய தீபம் இதழில் கட்டுரைத் தொடர்களாக எழுதினேன்.
இது புதுக்கவிதையின் வரலாறுதான்; புதுக்கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ எழுதப்பட்ட விமர்சனமோ ஆய்வுரையோ அன்று. புதுக்கவிதைகளின் வரலாறு ஆண்டுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு இதில் எழுதப்பெற்றுள்ளது. போகிற போக்கில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கின்றேன்” என்கிறார்.
இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பின்னர் நூலாக வெளிவந்தது.
பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘லைலா மஜ்னு’ என்ற படத்திற்கு வசனம் எழுதுமாறு வல்லிக்கண்ணனை அவரின் நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்தவே, அப்படத்தின் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியிருக்கின்றார் வல்லிக்கண்ணன். அதன்பிறகும் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், இலக்கியத்துறையில் ஈடுபடுவதிலேயே ஆர்வங் கொண்டிருந்த வல்லிக்கண்ணன் சினிமாத் துறையில் தன்னைத் தொலைக்க விரும்பாததால் அவ்வாய்ப்புகளை ஏற்கவில்லை.
திறனாய்வாளராகவும் திகழ்ந்த வல்லிக்கண்ணன், படைப்பாளிகளைப் பாராட்டுகின்ற நேரிய அணுகுமுறையையே அதிகம் கடைப்பிடித்தார்; அதுவே அவரின் குறையாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டது. ”வல்லிக்கண்ணன் படைப்பாளிகளைத் தேவைக்கு அதிகமாகப் புகழ்கின்றார்; படைப்புகளின் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை” என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்பட்டது.
அதற்கான பதிலை ஒரு நேர்காணலில் அளித்த வல்லிக்கண்ணன்,
”பாராட்ட வேண்டியதைப் பாராட்டாமல் தவறவிட்டதாலே, பல நல்ல காரியங்கள் வளராமலே போய்விட்டன’’ என்று மகாகவி பாரதியே சொல்லியிருக்கிறார். பொதுவாக, பாராட்ட வேண்டியதை பாராட்டுகிற மனநிலை நம்மவர்களிடம் இல்லை. வளர விரும்புகிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். பாராட்டு அவர்களுக்கு மகிழ்ச்சியையும், மேலும் உழைக்க உற்சாகத்தையும் வளர்வதற்கான ஊக்கத்தையும் அளிக்கும்.” என்றிருக்கின்றார்.
உண்மையில் மிகவும் அரிதான, வியக்கத்தக்க பெருந்தன்மை இது!
‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற அவருடைய நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது.
‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்ற தன்வரலாற்று நூலில் தம் வாழ்வின் சுவையான அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கின்றார் வல்லிக்கண்ணன். இந்நூல் ஓர் அரிய வரலாற்று ஆவணமாய்த் திகழ்கின்றது.
தம் வாழ்வின் இறுதிவரை திருமணமே செய்துகொள்ளாத வல்லிக்கண்ணன், சென்னையிலும் நெல்லை இராஜவல்லிபுரத்திலுமாக மாறி மாறி வசித்துவந்தார். அவர் இராஜவல்லிபுரத்தில் தங்கியிருக்கும் காலத்தில் அவரைக் கண்டு அளவளாவிச் செல்வதற்காக அந்நாளைய இலக்கிய இளவல்களான வண்ணதாசன், வண்ணநிலவன், நம்பிராஜன், கலாப்பிரியா போன்றவர்களும், கி.ராஜநாராயணன் (கி.ரா), தீப. நடராஜன் (இரசிகமணி டி.கே.சியின் பேரன்), தஞ்சை பிரகாஷ் போன்றோரும் அடிக்கடி வந்து சென்றிருக்கின்றார்கள்.
பல எழுத்தாளர்களுக்குப் பெயர்சூட்டிய பெருமையும் வல்லிக்கண்ணனுக்கு உண்டு. வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அப்பெயர்களைச் சூட்டியவர் வல்லிக்கண்ணனே ஆவார்!
”வல்லிக்கண்ணனின் முத்து விழாவின்போது அவருக்குக் கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல கிரீடங்கள் சூட்டப்பட்டன. இந்த கிரீடங்கள் அனைத்திலும் கட்டுரையாளர் என்ற கிரீடமே அவர் தலைக்கேற்ற அளவில் பொருத்தமாய்ச் செய்யப்பட்ட சரியான கிரீடமாகும்” என்று குறிப்பிடும் அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்,
”மிக நேர்த்தியான வடிவமைப்பு, பிசிறில்லாத தெளிந்த நடை, திடீரென உரத்த குரலில் பேசாமல் கட்டுரை முழுவதையும் ஒரே தொனியில் பேசச் செய்திடும் ஆற்றல், கடும் உழைப்பைத் தந்து நம்பகமான தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்புணர்ச்சி இவையெல்லாம் வல்லிக்கண்ணனுடைய கட்டுரைகளின் பொதுத்தன்மைகள்” என்று பாராட்டுகின்றார்.
ஆடம்பரம் என்ற சொல்லையே அறியாதவராய் மிக எளிமையாய் வாழ்ந்து காட்டியவர் வல்லிக்கண்ணன். ”ஒல்லிக்கண்ணன்” என்று அவருடைய எழுத்தாள நண்பர்கள் வேடிக்கையாய்க் குறிப்பிடும் அளவுக்கு மெலிந்த தேகம் படைத்தவர்; ஆனால், அழுத்தமான நெஞ்சுறுதி உடையவர்.
இலக்கியத்துக்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்து எழுத்தையும் எழுதுகோலையுமே தெய்வங்களாய்க் கருதிவாழ்ந்த வல்லிக்கண்ணன், 2006-ஆம் ஆண்டு தம்முடைய 85ஆம் அகவையில் நிமோனியா காய்ச்சலால் மறைந்தார்.
தற்காலக் கவிதை இலக்கியத்தின் வரலாற்றைத் தம் எழுத்துக்களால் நிலைநிறுத்திய வல்லிக்கண்ணனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார் சிறந்ததோர் தமிழ் ஆளுமையாய்!
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
https://ta.wikipedia.org/wiki/வல்லிக்கண்ணன்
http://www.geotamil.com/pathivukal/vallikkannan_a.htm
https://www.hindutamil.in/news/blogs/63933-10-2.html
http://tamilonline.com/thendral/article.aspx?aid=3121

சென்னை அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரத்திற்கு அருகில் அதன் கரையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாகத் தண்ணீர் ஓடுகிறது. பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நிர்மலா ராகவன்
நூறு வயதைக் கடந்த ஒருவர் வேடிக்கையாகக் கூறியது: “நம்மை ஒத்தவர் என்ன நினைப்பார் என்ற கவலை இனி இல்லை. ஏனெனில், அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை!”
பிறர் என்ன நினைப்பார்கள்!
நாம் அப்படி நினைத்துக் குழம்பாவிட்டாலும், பதின்ம வயதிலிருந்து, `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று கண்டித்துக்கொண்டே இருப்பார்கள் பெற்றவர்கள். அதனால், வயது ஏற ஏற, பிறருக்குப் பயந்தே வாழ்வது பழக்கமாகியிருக்கும்.
வீண் கட்டுப்பாட்டைப் பொறுக்க முடியாது, சுதந்திரமாக நடக்கத் தலைப்பட்டவர்களுக்கு வசவும், கெட்ட பெயரும் கிடைக்கும்.
அறுபது வயதில், யாரும் நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கவில்லை என்பது புலனாக, `இவர்களுக்காகவா பயந்து பயந்து, நம் வாழ்க்கையை வீணடித்தோம்!’ என்ற அயர்ச்சி உண்டாகும்.
“இளமையை நல்லபடியாகக் கழித்திருந்தால், முதுமை ஓய்வாக இருக்கும்!” (ஸ்பானிஷ் நாட்டுப் பழமொழி)
முதுமையில் வாட்டமா?
நாம் வளர்க்கும் குழந்தைகளும் ஒரு நாள் பெரியவர்கள் ஆவார்கள்; அப்போது, அவர்களுடைய அன்பும் அண்மையும் நமக்குத் தேவைப்படும் என்பது புரியாது, அத்தியாவசியத் தேவைகளைக் கொடுப்பதுடன் தம் கடமை தீர்ந்தது என்று நினைத்து நடப்பவர்கள் முதுமையில் வாடத்தான் நேரும்.
கதை
நாற்பது வயதுக்கு மேல் மூன்றாவது குழந்தை ஆயிஷாவைப் பெற்றெடுத்தாள் ஹப்ஸா.
உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் சமயத்தில், `இது என்ன தொந்தரவு!’ என்ற எரிச்சல் ஏற்பட, குழந்தையை வளர்க்க ஒரு பெண்ணை அமர்த்தினாள். குழந்தை எப்படி வளர்கிறாள் என்று கவனிக்கும் ஆர்வம் கிஞ்சித்தும் அவளிடம் இருக்கவில்லை.
ஒரு சமயம், “உன்னை எதற்குத்தான் பெற்றேனோ!’ என்று ஹப்ஸா எரிந்து விழ, அவள் மனம் உடைந்துபோயிற்று.
ஆயிஷாவுக்குப் பத்து வயதானபோது, தாய் எது கூறினாலும், “நீ என்னை வளர்க்கவில்லையே” என்று எதிர்த்துப் பேசினாளாம். (அண்மையில், தன் கதையை வருத்தத்துடன் அப்பெண்ணே என்னிடம் பகிர்ந்துகொண்டது).
அன்பு கிடைக்காது ஏங்குபவர்கள் தீய நட்பை நாடுவார்கள். ஆனால், ஆயிஷா நல்ல பெண். மகா புத்திசாலி வேறு. கல்லூரிப் படிப்புடன், தன் கவனத்தைப் பல ஆக்ககரமான வழிகளில் செலுத்தினாள்.
தீபாவளிக்கு எங்கள் இல்லத்திற்கு வந்துவிட்டு, “நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்ததே இல்லை. இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கலாமா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.
அவள் உணவருந்தும்போது, மெள்ள பேச்சுக் கொடுத்தேன்.
“நீங்கள் செய்வதுபோல், எங்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து, பேசிச் சிரித்தபடி சாப்பிடமாட்டோம். பண்டிகைச் சமயங்களில் அப்படிச் சாப்பிட்டாலும், பேசுவது கிடையாது,” என்றாள்.
குடும்பத்தில் யாராவது தனியாகச் சாப்பிட்டாலும், கூடவே ஒருவர் இருக்கவேண்டும் என்பது நான் என் பாட்டியிடம் கற்ற பாடம். சாப்பிடுபவர் அதிகம் பேசக் கூடாது. ஆனால் உடன் இருப்பவர் சுவாரசியமாக ஏதாவது கதை சொல்வார். அனேகமாக, அது அவர் வாழ்க்கையில் சந்தித்த நபர்களைப் பற்றி இருக்கும்.
“காரில் போகும்போதும் நான் இப்படித்தான் எதையாவது அலசிக்கொண்டிருப்பேன். பொதுவாக, அதிகம் பேசாதவர்கள்கூட அப்போது பேசுவார்கள்,” என்று நான் கூற, “நாங்கள் காரிலும் பேசிக்கொள்வது கிடையாது. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்,” என்று, விரக்தியுடன் பதில் வந்தது.
இன்றும், `அம்மாவை எப்படியெல்லாம் ஆத்திரப்படுத்தலாம்?’ என்று யோசிப்பவள்போல் நடந்துகொள்கிறாள்.
அவளைச் சொல்லிக் குற்றமில்லை. சிறு வயதில் அன்பாக வளர்க்கப்பட்டு இருந்தால்தானே தனக்குக் கிடைத்ததைத் திருப்பி அளிக்க முடியும்?
வீடு திரும்புகையில், “உங்கள் கதைகளுக்கு மிக்க நன்றி,” என்று பலமுறை கூறி விடைபெற்றாள் ஆயிஷா.
வயதானவர்களா? போர்!
தமிழ்நாட்டில், `பெரிசு’, `கிழவி’ என்று பேரன் பேத்திகளே அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் ஒரு நாள் முதுமை அண்டாதா?
அதுதான் அவர்கள் பழக்கம் என்றாலும், மரியாதை இல்லாதது போலிருக்கிறதே!
முதுமை ஒரு நோயல்ல. எத்துணை அனுபவங்களை, இடர்ப்பாடுகளைக் கடந்து வந்திருந்தாலும், முதியோர்களில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்வை நடத்துகிறார்களே!
வயதானவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள், வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என்று கூற முடியாது. அதற்கு இளமையில் சற்று கவனமாக நடந்திருக்க வேண்டும்.
`எனக்கு வயதானவர்களுடன் பேசவே பிடிக்காது. போரடிப்பார்கள்!’ என்று கூறும் நடுத்தர வயதினர் முதுமை அடைந்ததும், நிராதரவாக உணர்வார்கள் — `நாம் நினைத்தது போல்தானே பிறரும் நம்மை மதிப்பிடுவார்கள்!’ என்ற தயக்கத்துடன்.
அறிவுரையை ஏற்கலாமா?
“நான் புகை பிடிப்பதில்லை. என் தந்தைக்கு அந்தப் பழக்கத்தால் உடல்நிலை சீர்கெட்டுவிட்டதென்று, `நீயும் இந்தப் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாதே! அதை விடவே முடியாது,’ என்று அவரே சிறுவயதிலிருந்து எனக்கு அறிவுரை கூறினார்,” என்று நண்பர் ஒருவர் கூறினார்.
வயதில் மூத்தவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல.
ஒரு வேறுபாடு: `நான் செய்த தவற்றை நீயும் செய்யாதே!’ என்ற நல்லெண்ணத்துடன் கூறுகிறார்கள் என்று புரிந்துகொண்டால், அவர்கள் சொற்படி நடக்கமுடியும். அதுவே அவர்களுக்கு அளிக்கக்கூடிய மரியாதை.
அறிவு வளர வேண்டுமானால், வயதும் கூடிக்கொண்டே போகவேண்டும் என்பதல்ல. பிறரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அவர்கள் செய்த தவற்றை நாமும் செய்யாதிருப்போம்.
எப்போதும் பாதுகாப்பா!
சில குழந்தைகள் பாதுகாப்பை நாடி, எப்போதும் தாயை ஒட்டியபடிதான் இருப்பார்கள்.
`மகளுக்குத்தான் என்மீது எத்தனை அன்பு!’ என்றெண்ணும் தாய்க்கு இப்போக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், குழந்தையின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. தனியாக இயங்க வேண்டிய தருணங்களில் அச்சம்தான் எழும்.
கதை
பத்து வயதான மகளிடம் வீட்டு வேலை செய்யச் சொன்னாள் தாய்.
“என் வயதில் நீ செய்தாயா?” என்ற சந்தேகம் பிறந்தது மகளுக்கு.
“இல்லை,” என்று உண்மையை ஒத்துக்கொண்டாள் பெரியவள்.
“பின்னே, என்னை மட்டும் செய்யச் சொல்கிறாயே?” சிறு குழந்தைகளுக்கே உரிய எதிர்ப்பு.
“நான் வளர்ந்தபோது, எங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்கள் இருந்தார்கள். அது வேறு காலம், வேறு நாடு. நீ வளர்ந்தபின், எல்லா வேலைகளையும் நீயேதான் செய்ய வேண்டியிருக்கும். அதற்காகத்தான் இப்போதே பழக்குகிறேன். என்னை மாதிரி நீயும் திண்டாடமாட்டாய், பார்!”
சில குழந்தைகளுக்கு இத்தகைய விளக்கம் புரியும். வேறு சிலர், அம்மாமேல் ஆத்திரப்படுவார்கள். தாய் உறுதியாக இருந்தால், அவளுடைய கண்டிப்பின் காரணம் பிற்காலத்தில் புரியும்.
அறுபது, எழுபது வயதுக்குமேல் செய்யும் ஒவ்வொரு காரியமும் மலை ஏறுவதுபோல் பிரயத்தனப்பட்டுதான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், மலைமேலிருந்து பார்ப்பதுபோல், வாழ்க்கையின் அழகான தன்மையை உணரமுடியும் என்கிறார் திரு. அனுபவசாலி.
வயதானால் குறைந்துகொண்டே வரும் புற அழகு. ஏன், மறைந்துவிடவும் கூடும். ஆனால், மனம் அழகாக இருந்தால், எந்த வயதிலும் அழகாகத் தெரிவார்கள்.
காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா உயிர்களின் உடலும் அப்படித்தான். ஆனால், நம் எண்ணங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றி நடந்துகொண்டால், நன்மதிப்பும் மரியாதையும் நிலைக்கும்.
கதை
பெரிய பணக்காரனாக வேண்டும் என்று இளமையில் கனவு கண்டு, அதற்காகக் கடுமையாக உழைத்தான் ரகுபதி. தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகவே பணம் கொடுத்தான். பணத்துடன் அதிகாரமும் வந்தடைந்தது.
அவற்றிற்கான விலை: நேரமின்மையால் குடும்பத்தைக் கவனியாதது.
தங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நபர் இருப்பதையே அவன் குடும்பத்தார் உணரவில்லை.
வயதானதும், ரகுவின் உடல்நிலை சீர்கெட்டது. எதிர்பார்த்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டவில்லை. ஏமாற்றமும் உலகத்தாரின் `நன்றிகெட்ட’ போக்கால் ஆத்திரமும்தான் மிஞ்சின.
அன்பு, கனிவான பேச்சு ஆகியவற்றைக் காசு பணத்தால் ஈடுகட்டிவிட முடியுமா? இது புரியாததால்தான் இறுதிக்கட்டத்தில் பலரது வாழ்க்கையும் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறது.
முதுமையில் முடிந்துவிடுமா வாழ்க்கை?
குழந்தைகள் வளர்ந்து, கூட்டைவிட்டுப் பறந்ததும், “அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!” என்று விரக்தியுடன் பெருமூச்சு விடுவது எதற்கு?
உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. புதிதாகக் கற்க எவ்வளவோ இருக்கின்றன.
துணுக்கு
“நீ உன் வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளேன்!” என்று சிடுசிடுத்தாள் மகள்.
அலட்சியமாக, தாய் அளித்த பதில்: “எல்லாரும் அப்படி நடந்துகொள்வதால்தான் உலகம் இப்படி சீர்கெட்டுக் கிடக்கிறது!”
கதை
அழகழகாக உடுக்கவேண்டும், புதிய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவேண்டும், பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஏதேதோ ஆசைகள் மேரிக்கு.
ஆனால், வன்முறையை பிரயோகித்த கணவன், அவளுக்கு வாய்த்திருந்தான். தாற்காலிகமான வேலை செய்து குழந்தைகளைக் காப்பாற்ற நேர்ந்தது.
அவளுடைய முதுமையில், கணவன் இறந்தான். ஆனால், அவள் நிர்க்கதியாக விடப்படவில்லை.
பல ஆண்டுகள், தங்களுக்காக தாய் அனுபவித்த அவதி புரிந்து, மகன் வெளிநாட்டில் வேலை செய்து, நிறைய காசு அனுப்பினான். ஒவ்வொன்றாக அவளும் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டாள்.
மகிழ்ச்சியுடன், “கடவுளால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!” என்கிறாள். கடந்தகாலம் கடந்தே போய்விட்டது.
வயது ஏறிக்கொண்டே போனாலும், சிறு குழந்தைகளைப்போல், எல்லாவற்றையும் அறியும் ஆர்வமும் மகிழ்ந்து சிரிக்கும் குணமும் இருக்கும்வரை யாரையும் முதுமை அண்டுவதில்லை.
இளமையிலிருந்த அவர்களுடைய அழகு, முகத்திலிருந்து இருதயத்திற்குப் போய்விடுகிறதோ?

பாஸ்கர்
அந்தக் காலத்தில் லாயிட்ஸ் சாலையில் வக்கீல் வீ பீ ராமன், பெரும்புகழ் பெற்றவர். எல்லா அரசியல் மற்றும் திரையுலகப் புள்ளிகள் அவரைச் சந்திக்க வருவார்கள். பெரும்பாலும் வழக்கு அல்லது அரசியல் அபிப்ராயம் பகிர்ந்துகொள்ள இந்தக் கூட்டம் சேரும். அந்தக் குடும்பமே சட்டத்தைக் கரைத்துக் குடித்த குடும்பம். எல்லாப் பெயரும் ஒரு ராமனில் முடியும். கல்யாணராமன் முதல் கிட்டத்தட்ட ஜானகிராமன் வரை.
கண்ணதாசன் மேல் அப்போது பலர், பல வழக்குகளைத் தொடுத்த நேரம். கவிஞர் வந்து வீ பீ ஆரைப் பார்த்த பின் வெளியே வந்த வீட்டு வாசலில் உள்ள பெயர்ப் பலகைகளைப் படித்து, என்ன படித்த குடும்பம் எனச் சொல்லி, காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.
போன இடம் ஏ எல் எஸ் புரோடக்க்ஷன் அலுவலகம். அங்கிருந்து பாடல் இயற்றும் தளத்திற்குச் சென்றவர் (சாரதா படப்படிப்புத் தளம்) விசுவைப் பார்த்து என்ன சிச்சுவேஷன் என வினவ அவர், கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் படலம் என்றார். நிர்மலா பாடற சீன் அது என்றார்.
கணேசு வராரா ஸீன்ல என வினவினார். அவர் தான் அண்ணன் என்றார் விசு.
கவிஞர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட பாடல், ராமன் எத்தனை ராமனடி. படம். லக்ஷ்மி கல்யாணம். வெளி வந்த ஆண்டு 1968.

சென்னை தாம்பரம் சுற்று வட்டாரத்தில் இன்றைய மழை – வெள்ள நிலவரம் எப்படி? களத்திலிருந்து இதோ நேரடிக் காட்சிகள். இரண்டாம் பகுதி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தாம்பரம், முடிச்சூர் சாலையின் அவல நிலையைப் பாருங்கள். மழைக் காலத்தில் சாலையைத் தோண்டிப் போட்டு மூடாமல் செல்வது பேராபத்து. இதனால், சாலையின் ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. அந்தச் சாலையே கொழகொழவெனக் கூழாக மாறிவிட்டது. நடந்து செல்வோரும் வழுக்கி விழுகின்றனர். தாம்பரம் மாநகராட்சி, சாலையை உடனடியாகச் செப்பனிட வேண்டும். இந்தச் சாலையைக் கடந்து செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாம்பரம் சுற்று வட்டார நண்பர்களுக்கு இதைப் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
இலைமலிந்த சருக்கம்
அரிவாட்டாய நாயனார் புராணம் (மின்னு)
இப்புராணத்தின் அடுத்த அடியாராகிய அரிவாட்டாயனார் அருள் வரலாற்றை இனிக் காண்போம்.
பொன்னிநாடெனும் சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில், கரும்பும் செந்நெல்லும் வளர்ந்து தேனும் முத்தும் சொரியும் தாமரையும், நீலமலர்களும் விளைந்தன. அவ்வூரில் செல்வம் மிக்க வேளாண் குடியில் தாயானார் என்னும் திருப்பெயர் கொண்ட அடியார் வாழ்ந்தார். அவர் சிவன் கழல் மறவாத சிந்தையர். அவர் அடியார்க்கு உணவளித்த பாங்கினை
மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெ லின்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்று மமுதுசெய் விப்பரால்.
என்ற பாடல் கூறுகின்றது. இப்பாடலின் பொருள்:
விளங்குகின்ற சிவந்தசடையினையுடைய வேதியராகிய சிவபெருமானுக்கு ஆகுமென்று செந்நெலரிசியின் இனிய அமுதுடன், செங்கீரையும், நிலைத்த பசுங்கொத்தாகிய மாவடுவையும் கொண்டு அவற்றை ஒவ்வொரு நாளும் நியதியாய் அவரை அமுது செய்விப்பர் (தாயனார்).
விளக்கம்
மின்னு செஞ்சடை என்ற தொடர் அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார் பாடிய
“மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை”
என்ற பாடலையும், பொன்வண்ணத்தந்தாதியின்,
“மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை”
முதலியதிருவாக்குக்களைநினைவூட்டுகிறது.
சடைசெவ்வான வொளியுடையது என்க. தாயனார் அமுதுசெய்வித்து வழிபட்ட இறைவர் திருத்தண்டலை நீணெறியில் எழுந்தருளிய மூர்த்தி என்றறியப்படுகின்றது.
இத்தலத்தேவராத்தில் “சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடையார்” என்று ஆளுடைய பிள்ளையார் இவரது சடையினைச் சிறப்பித்தருளியது சிந்திக்க.
வேதியர்க்கு ஆகும் என்ற தொடர் வேதியரது பூசைக்கு உரியன ஆகும்செந்நெல்லைக் குறித்தது. வேதியர்கள் செந்நெல் உண்ணும் வழக்கும் குறிப்பதாம்.
அன்புடைய மக்கள் தாம் உயர்வாக உவக்கும் உணவையே இறைவனுக்கு ஊட்டுவர். கண்ணப்பநாயனார் வேட்டையாடிச் சேர்த்து இறைவனை ஊட்டிய பண்பு இங்குச் சிந்திக்கத் தக்கது. இதுபற்றியே தாயனார் செந்நெல் அமுதினையே நாளும் இறைவனுக்கு அமுது செய்வித்தனர் என்க. அதுவே இனிய அமுது என்ற காரணத்தால் அதனை ஊட்டினர் என்பார் இன் அமுது என்றார்.
கீரையும் மாவடுவும் உணவுக்கு ஒத்த உதவிச்சுவை தருவனவாதலன்றி அவையே உணவாதவில்லை. நெல்லரிசியமுதே உணவாம். இச்சிறப்புப்பற்றி அமுதோடு கீரையும் வடுவும் தந்தார் என்று பிரித்தோதினார்.
செங்கீரை – இது செந்நெல் அமுதுடன் ஒத்த சுவையும் குணநலமும் தருவது பற்றி இதனை ஊட்டினர் என்க.
மன்னு பைந்துணர் மாவடு – வடுவின் பசுமையும் இளமையும் மாறாதபடியே பன்னாளும் நிலைக்குமாறு ஊறவைத்துப் பாதுகாக்கப்பட்ட என்ற குறிப்புப்பெற மன்னு என்றார். மாவடு உணவைச் சீரணிக்க உதவுவது என்ப. மிக இளைய உவர்ப்பிஞ்சு.
அமுது செய்விப்பரால் என்ற தொடர், ஒவ்வொரு நாளும் நியதியாய் ஊட்டுவிப்பார். ஆல் – நியதிபிழையாத உறுதிக் குறிப்புத்தரும் அசை. செய்விப்பர் – பூசைக்குரிய சிவவேதியர்களைக்கொண்டு அமுதமைப்பித்து ஊட்டுவித்தார் என்ற குறிப்புப்பெறப் பிறவினையாற் கூறினார்.
இப்பாடல் தாயனார் அடியார்களுக்கு உணவூட்டும் செயலின் முழுமையை உணர்த்துகிறது! இம்முறையில் சிறிதும் வழுவாமல் அவர் நடந்து கொண்ட அருமையை இனிமேல் காணப் போகிறோம் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா.
“கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே”, “கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப் போற்றுகின்றார்கள். எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். “வைதா ரையும் வாழவைப்பான் முருகன்” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.
கந்தக்கடவுள் எங்களின் சொந்தக்கடவுள் என்று என்ணியே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேலை வணங்குவதே வேலை என்றும் மனத்தில் இருத்தியும் வைத்திருக்கிறோம்.வேலும் மயிலும் வேதனை போக்கிடும், சோதனை தீர்த்திடும் என்னும் நம்பிக்கை – கந்தக்கடவுளைச் சொந்தக் கடவுளாய் நினைப்பவர்களிடம் நிறைந்தே இருக்கிறது. தெய்வங்கள் பல உண் டேனும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் காட்சி தருவது கந்தக் கடவு ளேதான் என்பதை யாவரும் அகத்தில் அமர்த்தியே இருக்கிறார்கள். கரு ணைகூர் முகங்கள் ஆறு , கரங்கள் பனிரெண்டு கொண்டு , உலகுய்ய திரு மேனி கொண்ட அருள் தெய்வமாய் கந்தக்கடவுள் விளங்குகிறார்.அந்தக் கருணைக் கடல் ஏந்துவது அயில்.அவரைத் ஏந்துவதோ மயில். வேல் என்றால் “வெல்” என்பதுதான் பொருள். வெற்றியை அளிப்பதுதான் வேல். வே லைக் கரத்தில் தாங்கியதால் கந்தக்கடவுள் வேலவனாகி நிற்கின்றார். வென்று வேற்றியை உலகிலே தரக்கூடியது எது என்றால் – அது “ ஞானந் தான் “ .ஞானத்தை அறிவு என்றும் சொல்லலாம்.அறிவு என்பது செந்தமிழ்ச் சொல்லாகும்.செந்தமிழ் முருகனின் கையிலுள்ள வேல் – அறிவினது பூரணமான உருவம் என்றே சொல்லலாம்.ஆழமாய், அகலமாய் கூர்மையாய் அறிவென்பது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமை யான அறிவாக அமை யமுடியும்.முருகன் கையின் வேலும் ஆழமாயும், அகலமாயும், கூர்மையாகவுமே இருக்கிறது அல்லவா ! வேலவன் என்றால் பூரணமான அறிவின் இருப்பிடம் என்றுதான் என்ணிடத் தோன்றுகிறதல்லவா !
வேல் என்றாலே அஃது – அஞ்ஞானத்தை அகற்றி. வினையினை வேரறுக்கும். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாய் உருப்பெற்று நின்றவர்கள்தான் சூரபது பதுமனும் அவனின் தம்பியருமான – சிங்கமுகனும் ,தாரகனுமாம். இவர்களைச் சாய்த்தது ஞானமாகிய வேல்தான். நான் என்னும் அகங்காரம் தலையெடுத்தால் அழிவு நிச்சயம் என்பதை சூரசம்ஹாரம் வெளிப்படுத்தி நிற்கிறது. வரம் பெறலாம். அதனால் உரமும் பெறலாம். வரமும் உரமும் கிடைத்த பின்னர் அதனை அறவழியில் பயன்படுத்தாமல் – அறத்துக்குப் புறம்பான வழியிலே பயன் படுத்தினால் என்ன நேரும் என்பதையே சூரசம்ஹாரம் உணர்த்தி நிற்கிறது. கடுந்தவத்தால் பெற்ற வாழ்வும் வளமும் – தர்மத்தைத்தைத் துணையாக் காமல் இருந்த காரணத்தால் ஒழிந்தே போய்விட்டது.தர்மத்தை மதி யாது நடந்து – தலைகால் தெரியாது நடக்கும் பொழுது – அதனை தடுக்க நிச்ச யம் ஒரு சக்தி வந்தே நிற்கும். அந்தச் சக்திதான் கடவுள். அந்தக் கடவு ளாய் வேலவன் வந்தார். வேலால் வென்றார். வினைகளை ஓட் டினார்.
வேலேந்தும் வேலவனை விளக்கும் வகையில் அமைந்ததுதான் கந்தபுராணம்.கந்தபுராணம் என்றதும் எங்கள் நினைவில் வந்து நிற்பார் நல்லை நக ர் ஆறுமுகநாவலர் பெருமான். கந்தபுராணத்தைச் சொந்தப் புராணம் என் று மனமிருத்தியவர் அவர். கோவில்கள் தோறும் கந்தபுராணத்தை பிரசங்கம் செய்து – யாவரும் அறிய வேண்டும் என்று அரும்பணியாற்றினார். கந்தனது புராணத்தை மையப்படுத்தி ” கந்தபுராண கலாசாரம் ” என்னும் சைவத் தமிழ் கலாசாரம் தோற்றம் பெற்றது மிகவும் முக்கிய விடயம் எனலாம். ஒரு கலாசாரமாக உருவாகி வருமளவுக்கு கந்தப் பெருமானின் மீதான பக்தி ஆழப்பதிந்து இருந்திருக்கிறது என்பது மனங் கொள்ளத் தக்கதேயாகும்.
கந்தப்பெருமையை மனமெண்ணி நிற்கின்ற அடியவர்கள் “கந்தசஷ்டி விரதத்தை” வாழ்விலே பெரும் விரத மாகவே கொண்டிருக்கிறார்கள். கந்தசஷ்டி வருவதை உன்னிப்பாய் கவனித்தபடியும் இருப்பார்கள். இந்தியா, இலங்கை எங்கணும் இருக்கின்ற கந்தனது அடியார்கள் கந்தசஷ்டியைக் கண்ணுங் கருத்துமாய் கடைப்பிடித்தே வருகிறார்கள். கந்தசஷ்டி என்றதும் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நல்லைக் கந்தனே வந்து நிற்பார். நல்லைக்கந்தன் சன்னிதானத்தில் பல அடியார்கள் கந்தசஷ்டி காலங்களில் கந்தனின் பூசையினைக் கண்டு அங்கு கொடுக்கும் தீர்த்தத்தை மட்டுமே பருகி – ஆறு தினங்களுமே எதுவுமே சாப்பிடாமல் விரதம் அனுட்டிப்பார்கள் என்பது முக்கியமாகும். நல்லூர் வரமுடியாத அடியார்கள் தங்கள் வீட்டிலேயே கடும் விரதமாய் இருப்பார்கள் – இன்றும் பலர் விரதத்தை விடாமல் அனுட்டிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாண த்தில் பலர் பல வருடங்களாகவே இடை விடாது தொடர்ந்து கந்தசஷ்டி யைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதும் மனங்கொள்ளத் தக்கதேயாகும். நீரை மட்டும் அருந்துவார் சிலர்.மாலையில் பாலை மட்டும் பருகு வார் சிலர்.பாலையும், ஒரு பழத்தையும் மாலையில் எடுப்பாரும் இருக்கி றார்கள். முதியவர்கள் மட்டுமன்றி – இளைஞர்களும் கூட கந்தசஷ்டியை பக்தி பூர்வமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதேயா கும்.
கந்தசஷ்டி நோற்கும் காலங்களில் யாவருமே கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வார்கள். கோவில்களில்களில் விரதமிருக்க அடியார்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பாடுவதற்கு வசதியாக – கந்தசஷ்டி கவசத்தை ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பும் வழக்கம் இடம்பெற்றும் வருகிரது. கந்தசஷ்டி கவசத்தை மனனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் பொருத்தமாய் அமைகிறது. ஆனால் பெரும்பாலனவர்கள் கந்தசஷ்டி கவசத்தை மனப்பாடம் செய்தே வைத்திருப்பார்கள். கந்தப் பெருமானை மனமெண்ணிப்பாடும்பொழுது அப்பாடல் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறந்த பாதுகாப்புக் கவசமாய் அமைகிறது என்பதால்தான் அப்பக்தி துதிக்கு “கந்தசஷ்டி கவசம்” என்று பெயர் அமைந்ததோ என எண்ணிடத் தோன்றுகிறது.
கந்தசஷ்டி கவசம் இலகுவான மொழிநடையில் அமைந்திருக்கிறது. இசையுடன் பாடவும் பொருத்தமாய் அமைந்திருக்கிறது.கந்தசஷ்டி கவசத்தை பலரும் மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதில் பொதிந்திருக்கும் தத்துவத்தை பெருதும் கண்டு கொள்ளுவதே இல்லை. கந்தசஷ்டி கவசத்தை உன்னிப்பாய் கவனித்தால் அதில் பொதிந்திருக்கும் பொக்கிஷ ங்களைக் கண்டு கொள்ளலாம். அவற்றை மனமிருத்துதல் வாழ்க்கைக்கு அவசியமாகும். பக்திப்பாடல்கள் பாடப்படுவதால் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சாதாரண பாடல்களும் தருகின்ற இன்பம் வேறு. அப்பாடல்களினால் ஏற்படும் உளநலம் வேறு. சாதாரண பாடல்கள் பார்க்கும் பார்வை வேறு. பக்திப்பாடல்கள் பார்க்கும் பார்வை வேறு. அந்த வகையில் கந்தசஷ்டி கவசம் தருகின்ற கருக்கள் உடலையும், உள்ளத்தையும் தூய் மையாக்கவும், உறுதிப்படுத்தவும், நல்லுணர்வுகளை ஏற்படுத்தவும் உறு துணையாகி நிற்கின்றன என்பதை யாவரும் மனமிருத்துதல் அவசியமாகும்.
நீறிடுநெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடையழகும் இணை முழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
என்று. கந்தப்பெருமானைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டுத்தான் கந்தசஷ்டிகவசம் தன்னுடைய தத்துவங்களைத் தந்து நிற்கிறது. போர்புரிபவர்கள் எதிரியிடமிருந்து வருகின்ற படைக்கலங்களின் பாதிப்பி லிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அணிவதுதான் “கவசம்”. அது சாதாரண கவசம். இதுவோ “கந்தசஷ்டி கவசம்”. அகப்பகை, புறப்பகை எதுவுமே எம்மைத் தாக்கிடா வண்ணம் காத்திடவல்லதாகும். கந்தனது வேல் ஞானத்தின் பேருவம். அந்த ஞானத்தின் துணைமட்டும் வாய்த்து விட்டால் வந்தவினையும், வருகின்ற வல்வினையும் – வந்தவழியே ஓடி ஒழிந்தே விடும்.
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல், வயிற்றை விளங்குவேல் காக்க
சிற்றிடைய அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின் கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
எத்தனை வேல்கள்! அத்தனை வேல்களும் பெறும் பெயர்களல்ல. எத்தகைய கொடிய பகைகளைகளையும் எம்மிடத்து வாராமல் காத்து நிற்கும் கருணைநிறை வேல்கள்! நம்மை என்றுமே வாழ்வில் காத்துமே நிற்கும் என்னும் நம்பிக்கையை நம்மனத்தில் ஊன்றும் வகையில் கந்த சஷ்டி கவசம் அமைந்திருக்கிறதல்லவா! எங்களது உடம்பில் உள்ள அத்தனை பகுதிகளும் எந்தவிதமான பாதிப்பும் இன்றிக் காக்கப்பட வேண்டும் என்று – அந்த வேலவனிடம் வேண்டுகோள் விடுக்கும் முறையும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்பாக அமைகிறது அல்லவா! உடம்பின் ஒவ்வொரு பாகமும் காக்கப்பட வேண்டும் என்னும் சிந்தனையும், அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் பாடல்களின் வரிகளும், பாடல் வரிகளின் நிறைவில் “காக்க” என்று அமைவதும் – உள்ளத்தை நலப்படுத்துகிறது, உடலை நலப்படுத்துகிறது. “காக்க” என்பதும் சிறந்த மந்திரமாய் அமைகிறதல்லவா! இந்த வரிகளைப் பாடும்பொழுது – தியானத்தில் இருப்பதுபோன்ற ஒரு உணர்வு நம்முள் ஏற்படுகிறது அல்லவா! திரும்பத் திரும்ப இந்த வரிகளை வாய் உச்சரிக்க – எம்மை அறியாமலேயே எம்முள் ஒரு சக்தி உட்புகுவதை நாம் அனுபவித்தால் அறி வோம். பில்லி, சூனியம், பெரும்பகை, வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனி, பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனி, கொள்ளிவாய்ப் பேய்கள், குறளைப் பேய்கள் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர், அத்தனையும் கந்தசஷ்டி கவசத்தின் ஒலி கேட்டவுடன் உருக் குலைந்தே போய்விடும் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். பில்லி , சூனியம் என்பது இன்றும் கிராமப்புற மக்களின் மனதில் குடியிருக்கும் பயமாகும். நவநாகரிகத்தில் இவை மூட நம்பிக்கையாய் இருக்கலாம். ஆனால் – பில்லி சூனியம் என்பதை “எம்மை விடாது பிணித்தி ருக்கும் கொடியவினை” என்று கருதிவிட்டால் கருத்து மனம் அமரும் அல்லவா!
புலியும் ,நரியும் ,புன்னரி நாயும், எலியும் கரடியும்,கிட்டவராது ஓடிவிடும். தேளும், பாம்பும், செய்யான், பூரான், கடிப்பதால் வரும் விஷங்களும், அதனால் ஏற்படும் கடித்துயரங்களும் இறங்கிவிடும். அதுமட்டுமட்டமல்ல ஒளிப்பும், சுளுக்கும், ஒரு தலை நோயும், வாதம் சயித்தியம், வலிப்பு, பித்தம், சூலை, சயம், குன்மம், சொக்குச் சிரங்கு குடைச்சல், சிலந்தி, குடல்விப் பிரிதி, பக்கப் பிளவை, படர் தொடை வாழை, கடுவன் படுவன், கைத்தாள் சிலந்தி, பற்குத்து அரணை, பருஅரை யாப்பும், ஆகிய பிணிகள் எல்லாம் எம்மை விட்டு அகன்றே விடும் என்று கந்தச்சஷ்டி கவசம் – வாழ்வியலுக்குப் பெருந்துணையினை வழங்கி நிற் கிறது.எங்களுக்கு வருகின்ற நோய்கள் அத்தனையும் வரிசைப் படுத்திக் காட்டியிருக்கும் பாங்கினை வியக்காமல் இருந்திடவே முடியாது. அதும ட்டுமல்ல விஷங்களைக் கொட்டி உயிராபத்தை தருகின்ற அத்தனை ஜந் துக்களின் பெயர்களையும் வரிசைப்படுத்தி பாங்கு – ஒரு சிறந்த விஷக்கடி வல்லுனரையே மனத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது எனலாம்.
எங்களுக்கு மனத்துயரங்கள், ஆபத்துகள், ஏற்படுகின்ற தருணத்தில், எங்கள் உறவுகள் நோயினால் அல்லது வேறு துன்பத்தால் அல்லல்படுகின்ற வேளையில் எல்லாம் நாங்கள் “கந்தசஷ்டி கவசத்தை” சொல்லியபடி இருப்போம். அப்படி நாங்கள் இருப்பதற்கு அடிப்படையே – ஆபத்திலிருந்து அல்லலிருந்து நிச்சயம் காப்பாற்றப்பட்டுவிடலாம் என்னும் அசையாத நம்பிக்கையே எனலாம். இன்றும் இதனைப் பலரும் செய்கிறார்கள், செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். இதனை வலியுறுத்தி, மனத்தில் நல்ல நம்பிக்கை தரும் வகையில் கந்தசஷ்டி கவசத்தின் முதல் துதியே உறுதி பயந்து நிற்பது ஐயத்தைப்போக்கி அணைப்பதாய் அமைகிறதல்லவா!
“துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை”
கந்தசஷ்டி கவசத்தை ஓதுங்கள் ! ஓதியபடி இருங்கள் என்பதற்குச் சான்றாக வருகின்ற இக்கருவினை மனமிருத்தல் அவசியமேயாகும்.
காசினியிற் றுன்பகலக் கந்தனருள் பெற்றுயர
மாசில்லாச் சீரெய்த மாமனையும் – பேசுதிரு
காதலரும் பெற்றுவக்க கந்தர் கவசத்தை
ஓத வெவரும் உவந்து
நிறைவில் எல்லாவற்றையும் அளிக்கின்ற வேலினை வணங்குவோம். அந்த வேலினைக் கையேந்தும் வேலவ்னையும் வணங்குவோம்.கந்தசஷ்டி கந்தனை மனமிருத்தும்.கந்தனை அருகழைக்கும் !
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் – வாரி
குளித்தவேலி கொற்றவேல் சூர்மார்புங் குன்றக்
துளைத்தவே லுண்டே துணை

முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்
அரிய கையெழுத்துச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
வ.உ.சி. என்றவுடன் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போன்றவையே மனதினில் எழும். காரணம் அவரின் சுதந்திரப் போராட்டங்கள் நினைக்கப்படும் அளவிற்கு இலக்கியப் பங்களிப்புகள் மனதினில் எழுவது இல்லை. ஏன் அதிகம் அறியப்படவே இல்லை. இலக்கணப் புலமை மிக்க வ.உ.சி. கட்டுரை, பதிப்பு, உரை, படைப்பாக்கம் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்தவர். தமது சுயசரிதையைச் செய்யுளில் படைத்தவர். அவரின் ஆக்கங்களுள் அவரின் மொழிபெயர்ப்புகளுக்கும், உரைகளுக்கும் தனி இடம் உண்டு. அவற்றைக் குறித்து இப்போது பார்க்கலாம்.
மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரையில் அவரின் நிறைவான பெயர்ப்புகளாக நமக்குக் கிடைப்பன நான்கு நூல்கள். நான்குமே ஜேம்ஸ் ஆலன் உடைய ஆங்கில நூல்கள். இவருடைய முதல் மொழிபெயர்ப்பு பணி சிறைச்சாலையில் தான் தொடங்கி உள்ளது. ஜேம்ஸ் ஆலனின் As a Man Thinketh எனும் நூலை மனம்போல் வாழ்வு என்று 1908 இல் மொழிபெயர்த்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே 1905 லேயே ஜேம்ஸ் ஆலனுடைய நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வ.உ.சி.க்கு இருந்ததாம். ஆனால் அவ்வெண்ணம் 1908இல் அவர் சிறையில் இருந்தபோது தான் நிறைவேறியுள்ளது.
சிறைச்சாலையில் கடுமையான தண்டனைப் பெற்றுவந்த அவருக்குச் சிறிது காலம் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அது பற்றி அவரது சுயசரிதையில்
“திங்கள் ஒன்றில் சென்னை ஐக்கோர்ட்டில்
செய்த அப்பீலில் திருத்தமும் ஒழுக்கமும்
தேசாபிமானமும் சேர்ந்த நல் ஜட்ஜ் சங்கரநாயர் தகுதியில் – பின்னியின்
தீர்ப்பினை சஸ்பெண்டு செய்து அறிவித்தார்
தொலைந்தது வேலை – சொந்த உணவும்
சொந்த உடையும், சொந்த படுக்கையும்
வந்தன. கொண்டவை மகிழ்வுடன் இருந்தேன்”
என்று எழுதியிருக்கிறார்.
சங்கர நாயர் என்கிற ஓர் இந்தியர் அந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்ததால் தான் தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதித்ததாலேயே சிறிது தப்ப முடிந்தது வ.உ.சிக்கு. இதனால் பிற கடும் குற்றங்கள் புரிந்த கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதிலேயிருந்து கொஞ்சம் காலம் விலக்கு கிடைக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் வ.உ.சி.யால் சிறைக்குள்ளே படிக்கவும் எழுதவும் முடிந்திருக்கிறது. அவர் ஜேம்ஸ் ஆலனுடைய நூல்களை மட்டுமே மொழிபெயர்த்திருப்பதற்கான காரணம் – அதாவது அந்த ஈர்ப்புக்கான காரணம் சிந்திக்கத்தக்கது. வ.உ.சி. ஆங்கிலேய விதேசி அரசுக்கு எதிராகப் போராடியவர். சுதேச சிந்தனையாளர். அவரது ஈர்ப்புக்குக் காரணம் ஜேம்ஸ் ஆலனின் கருத்தியல்தான். ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த ஜேம்ஸ் ஆலன், இங்கிலாந்தில் 1864இல் பிறந்தவர். இளம் வயதிலேயே அதிபுத்திசாலியாக இருந்தவர். வாலிப வயதிலேயே தந்தையை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றவர்.
ஆங்கிலேயராக இருந்தாலும் புலால் மாமிச உணவுகளை உண்பதில்லை மது அருந்துவதில்லை. இது போன்ற பழக்கங்கள் இல்லாதவராக இருந்தாராம். நாம் “ஆசிய ஜோதி” என்று சொல்கிற ‘The Light of Asia’ நூலை அவர் படித்த பின்னரே மெய்யுணர்வு அவரக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். நமது பாரத தேச நூல்கள் மீதும், மெய்யியல் அதாவது தத்துவவியல் மீதும் அளவுக்கு அதிகமான ஈர்ப்பு இருந்துள்ளது. “கீழ்நாட்டரே மெய்ஞ்ஞான கருவூலம்” என்பதாக அடிக்கடி ஜேம்ஸ் ஆலன் கூறுவாராம். வ.உ.சி. இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர் வாக்கின்று வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நமது நாட்டு நீதியும் மதக் கோட்பாடும் கலந்திருக்கும்.” என்கிறார்.
இவை எல்லாம், வ.உ.சி.க்கு ஜேம்ஸ் ஆலனின் படைப்புகள் மேல் ஈர்ப்பு வர காரணமாக இருக்கலாம்.
1908இல் “As a Man Thinketh-“ மனம் போல் வாழ்வு என்கிற முதல் மொழிபெயர்ப்பு நூல் எழுதப்பட்டுள்ளது இது “ வ.உ.சி.யின் நண்பர் சுவாமி வள்ளிநாயகம் அவர்களால் 1909இல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஐந்தாம் பதிப்பு 1938இல் வெளிவந்துள்ளது. அதன் வெளியீட்டாளர் தூத்துக்குடி விக்டோரியா பிரிண்டிங் பிரஸ்சார் ஆவார்.
இந்த நூலின் உடைய மொழிபெயர்ப்பானது சரியான ஆக்கம், அதாவது முறையான மொழியாக்கம் என்று சொல்லலாம். மொழிப்பெயர்ப்புகளில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. அதில் ஒன்று செய்யுள்களை மொழியாக்கம் செய்வது. தமது மொழியாக்கத்தைக் குறித்து வ.உ.சி. சொல்லும்போது, “இதனை முதனூற்குச் சற்றேற குறையச் சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள சொற்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளன அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன்.
மற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும் சில இடங்களில் முதனூலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழி பெயர்த்திருக்கிறேன். “ அன்றியும், “கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக”, என்றபடி, இந்நூலின் அரிய பொருள்களைத் தமிழுலகம் நன்குணர்ந்து கைக்கொண்டொழுகுதல் வேண்டும் என்ற எண்ணமே என் மனதின் கண் முற்பட்டு நின்றமையின், நமது நாட்டில் மிகுதியாக வழங்கும் வடமொழிகளை இதில் மிகுதியாக உபயோகித்திருக்கிறேன்.” என்கிறார். இதிலிருந்து செய்யுள்களை அதன் தன்மை மாறாமல் உள்ளது உள்ளபடி அமையுமாறு மொழி ஆக்கம் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றவராக வ.உ.சி. இருந்துள்ளதை அறியமுடிகிறது. மக்கள் வழக்கில் பயன்படுத்தும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். அவையே அவர்களின் புரிலுக்கு மிகவும் பயனுடையதாக அமையும் என்ற எண்ணம் உடையவராகவும் இருந்துள்ளார். மனிதனின் எண்ணங்களே அவனுடைய வாழ்வை வடிவமைக்கிறது என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்ட நூலாக இது உள்ளது.
அடுத்ததாக அவர் மொழிபெயர்த்த நூல், Out from the Heart என்ற ஆங்கில நூல் அதற்கு அகமே புறம் என்று பெயரிட்டுள்ளார். இது நூலாக வெளிவந்தது 1914 இல்.
இதில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று கட்டுரைகள் சுப்பிரமணிய சிவம் நடத்திய ஞானபாநு இதழில் வெளிவந்தவை. அகமும் வாழ்வும் – ஆகஸ்ட் 1913, மனதின் தன்மையும் வன்மையும் – செப்,1913, சுபாவத்தை ஏற்படுத்துதல் – அக்.1913 ஆகிய ஞானபானுவில் வெளிவந்த கட்டுரைகளை நூலின் தொடக்கமாக அப்படியே அமைத்துள்ளார். 1916 இல் சென்னை புரோகிராம் பிரஸ் மூலம் அதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. நூலின் முக உரையில் வ.உ.சி. மூல நூலில் உள்ள ஒரு அத்தியாயத்தை நான்கு சிறிய அத்தியாயங்களாகப் புரிதற்பொருட்டு அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
மிக மிக எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் அத்தியாயங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கலாம். ஒழுக்கத்தை மிக உயர்ந்ததாக எடுத்துரைப்பதாக இந்த நூல் உள்ளது.
மூன்றாகப் பகுத்துத் தந்துள்ள உயர்தர வாழ்வு என்ற தலைப்பு (முதல் பாடம் / இரண்டாம் பாடம் / மூன்றாம் பாடம்) முழுவதுமே இந்த ஒழுக்கம் பற்றியதுதான். இதிலிருந்தே ஒழுங்கமைந்த வாழ்வை வ.உ.சி. மிகவும் நேசித்துள்ளது விரும்பியுள்ளது தெரிகிறது.
முதற்பகுதியில் மனதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகக் குறிப்பிடுகிறார். அதன் முதல் சாதனம் சோம்பலை ஒழிப்பது என்கிறார். உணவுக் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தின் பாற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இப்படியேதான் இரண்டாம் பாடம், மூன்றாம் பாடம் ஆகியவற்றிலும் ஒழுக்கத்தின் உயர்வுகளையே சொல்லி செல்கிறார். உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் தான் அழகு.
அவர் மொழிபெயர்த்த நூல்களில் மூன்றாவது நூலாகக் கிடைக்கப் பெறுவது, வலிமைக்கு மார்க்கம் என்கிற நூல்.
ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power” என்ற நூலின் முதல் பகுதி The Path of Prosperity என்பது. அதனை மட்டும் 1916இல் வலிமைக்கு மார்க்கம் என்பதாக ஆக்கித் தந்தவர் நம்முடைய வ.உ.சி. இந்த பெயர்ப்பின் சில இடங்களில் தழுவுதல் தன்மை இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். இதனைப் பாயிரம் பகுதியில் வ.உ.சி. சொல்லியிருப்பதில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
“மூல நூலின் ஐந்தாவது அதிகாரத்தின் தொடக்கத்தில் கண்ட ஆங்கிலக் கதையை நம்மவரில் பெரும்பாலார் கேட்டிருக்க மாட்டாராதலால் அக்கதையின் பெயரினை இந்நூலில் குறிப்பதால் பயனில்லையென்று கருதி அதற்குப் பதிலாகப் பாரதக் கதை என்று குறித்துள்ளேன்.
முதல் நூலின் கருத்துகளை நம்மவர்கள் எளிதில் உணருமாறு சிற்சில இடங்களில், சில சொற்களைக் சேர்த்தும் சில சொற்களை விடுத்தும் இம் மொழிபெயர்ப்பைச் செய்துள்ளேன்”. என்று பாயிரப் பகுதியில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.
நூலில் வலிமைக்கு உரிய, உயரிய வழியாக அவர் சொல்வது நீதி நெறியில் இருந்து தவறாது நடந்து கொள்வதுதான். “நீதி மார்க்கத்தை விட்டு விலகினவர் போட்டி தம்மைப் பாதிக்காதபடி தம்மைக் காத்துக் கொள்வதற்காக எண்ணிறந்த முயற்சிகள் செய்கின்றனர்.
நீதி மார்க்கத்தில் நடக்கின்றவர் போட்டியில் தம்மைக் காப்பதற்காக முயற்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்பன போன்ற அற வாழ்வை எடுத்துச் சொல்லி அதுவே வலிமைக்கான மார்க்கம் என்று வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
சாந்திக்கு மார்க்கம் என்கிற மொழிபெயர்ப்பு நூல் 1939இல் வெளிவந்துள்ளது. ஜேம்ஸ் ஆலனின் The Way of Peace என்ற நூலின் மொழியாக்கம் இது.
நமது பாரத தேசம் அன்பு மயமான வாழ்வைப் போதிப்பதில் உயர்ந்த இடத்தில் உள்ளது. அன்பின் வழியது உயிர்நிலை என்போம் அத்தகைய அன்பு மயமான வாழ்க்கைக்குரிய பல்வேறு வழிகளைப் பல கோணங்களில் எடுத்துரைப்பதாக இந்த நூல் உள்ளது. மனதுள் சுழலும் நமது எண்ணங்கள் நமது எதிர் காலத்தை வடிவமைக்கும் என்பதை எளிமையாக எடுத்துரைக்கிறார்.
முதல் அத்தியாயமான தியான வலிமை தலைப்பில், “நீங்கள் எதனைப் பற்றி அடிக்கடி ஆழ்ந்து நினைக்கின்றீர்களோ, வேலையற்ற நேரங்களில் எதனிடத்தில் உங்கள் ஆத்மா இயற்கையாகச் செல்கிறதோ அதனை எனக்குச் சொல்லுங்கள்; நீங்கள் எந்தத் துன்ப இடத்திற்கு அல்லது இன்ப இடத்திற்குச் சென்று கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் தெய்வ வடிவாகவோ? அல்லது மிருக வடிவாகவா? வளர்ந்துகொண்டு இருக்கிறீர்களா? என்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன், என்பதாகக் குறிப்பிடுகிறார் இப்படி வாழ்வியல் எதார்த்தத்தை எளிமையாகப் புரியும் வகையில் தந்துள்ளது உண்மையிலேயே சிறப்பு.
அனைத்து மொழிபெயர்ப்புகளிலுமே எளிய நடையில் கருத்துகளை வாசகர்களின் புரிதலுக்குக் கொண்டு செல்லும் பாங்கினைப் பார்க்க முடிகிறது. நுட்பமான பகுதிகளையும் சுவை குன்றாமல் நல்லதொரு யதார்த்த நடையில் கொண்டு செல்வதில் வ.உ.சி. வெற்றியடைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
அடுத்ததாக வ.உ.சி.யின் உரைகள் குறித்துப் பார்க்கலாம் உரை நூல்கள் என வரும் போது திருக்குறள், இன்னிலை, சிவஞான போதம் ஆகிய நூல்களுக்கு அவர் உரை எழுதியுள்ளார்.
திருக்குறளைப் பொறுத்தவரையில் திருக்குறள் முழுமைக்கும் வ.உ.சி. உரை கண்டுள்ளார். இருந்தாலும் திருக்குறள் அறத்துப் பாலை மட்டுமே அவர் நேரடியாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இன்று அவரின் திருக்குறளுக்கான முழு உரையும் கிடைத்துள்ளது அவரது அறத்துப்பால் விருத்தியுரை 1935ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1917 இல் திருக்குறள் மணக்குடவர் உரையைத் தந்தவர் இவர். தனியாக இவர் உரை கொடுப்பதற்கான காரணம் குறித்து அவரின் சிவஞான போதம் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் என்னும் நூல்கள் முறையே நீதி நூல்களிலும், சித்தாந்த நூல்களிலும், வேதாந்த நூல்களிலும் ஒப்புயர்வற்றவை என்பது வ.உ.சி.யின் கருத்து.
இவற்றுள் திருக்குறள், சிவஞான போதம் இரண்டின் உரைகளும் கடின நடையில் அக்காலத்தில் இருந்ததாம். அதனால் அவற்றை எளிமைப்படுத்த எண்ணியே வ.உ.சி. எளிய நடையில் உரை வழங்கியதாகக் குறிப்பிடுகிறார்.
வ.உ.சி., திருக்குறளை மூன்று பால்களாகவே பகுத்திருந்தாலும் இயல் அமைப்பில் சில வேறுபாடுகளைச் செய்துள்ளார். அதிகார அமைப்பு, அதிகாரப் பெயர், குறள் வைப்பு முறை ஆகியவற்றிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். குறள்களுக்கு நேரடியாக எளிய விளக்கங்கள் தந்துள்ளது. முக்கியமாக இலக்கணக் குறிப்புகள் தந்துள்ளது போன்றவற்றால் வ.உ.சி.யின் உரை மேலும் சிறப்பு பெறுகிறது.
இதை போன்றே வ.உ.சி.யின் சிவஞான போத உரைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு. இதன் ஒவ்வொரு நூற்பாவின் சாரத்தையும் அதனதன் தலைப்பாகக் குறிப்பிடுகிறார். பாடலின் பொருளையும் பொருள் எனத் தலைப்பிட்டு எளிய நடையில் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஒருங்கிணைத்து எளிதில் புரிந்துகொள்ள வகை செய்துள்ளார் வ.உ.சி.
செய்யுள் முதற் குறிப்பகராதி, அரும்பத அகராதி, உரை மேற்கோள் அகராதி ஆகியவற்றோடு இந்நூலை வ.உ.சி. கொடுத்திருப்பது சிறப்புக்குரியது.
பொய்கையார் எழுதியுள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னிலை நூலுக்கு வ.உ.சி. வழங்கியுள்ள உரையும் சிறப்புடையது. இதில் பொய்கையார் குறித்த பெரும் ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார்.
நாலாயிரத் திவ்யபிரபந்தத்தில் இடம் பெறும் ஆழ்வார் பொய்கையார், களவழி, புறநானூறு ஆகியவற்றில் வரும் பொய்கையார் ஆகியோரோடு இன்னிலை ஆசிரியர் பொய்கையாரையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.
பொய்கையார் என்கிற பெயரில் இடம் பெறும் அனைவரும் ஒரே புலவர்தான் என ஏற்றுக் கொள்ள இயலாது என்பதே வ.உ.சி.யின் கருத்து. அதேநேரம் ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான பொய்கையாரே இன்னிலையையும் இயற்றியிருக்க வேண்டும் என்கிறார்.
மொத்தத்தில் மொழிபெயர்ப்பு, உரை ஆகிய இரண்டு தளங்களிலும் வ.உ.சி.யின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வ.உ.சி மொழிபெயர்த்துள்ள ஜேம்ஸ் ஆலனின் வாழ்வியல் படைப்புகள் தமிழில் தோன்றியுள்ள தன்னம்பிக்கை, சுய முன்னேற்ற நூல்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம்.

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து ‘தாரகாசுரன் சரிந்து’ எனத் தொடங்கும் பாடலை, திருமதி நாகி நாராயணன் குரலில் கேட்டு மகிழுங்கள். சூர சம்ஹாரம் நிகழும் இந்த நாளில், வேல்வீச்சினைப் போல் வேகவேகமாக இதன் வரிகள் பாய்ந்து வருகின்றன. இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி விழாவைக் கொண்டாடுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சென்னை தாம்பரத்தில் மழை – வெள்ள நிலவரம் எப்படி? களத்திலிருந்து இதோ நேரடிக் காட்சிகள். தாம்பரம்வாசிகளுக்கு இதைப் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பாஸ்கர்
சினிமா ஒரு விஷூவல் மீடியா என்ற விஷயம் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த முறை இதைச் செய்தது ஜெய் பீம்.
ஒரு திரைப்படத்தை எப்படி வடிவம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உத்தி இந்தப் படத்தில் அழகாக வெளிப்பட்டு இருக்கிறது. நலிந்தவர், ஏழை, படிப்பு இல்லை என்ற வேறுபாடுகள் ஒரு பக்கம். ஜாதி, வகுப்பு என்று இன்னொரு பக்கம். எல்லாவற்றிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி போன ஒரு வகுப்பினரின் கதை இது. எல்லாவற்றிற்கும் அடிப்படை, கோலோச்சும் அதிகார வர்க்கம், அரசு ஊழியர்கள், காவல் துறை, வன்மம் ஊறிப் போன மக்களின் வாழ்க்கைத் தரம் எனப் பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் காணாமல் போன நகைகளைக் கண்டுபிடிக்க முடியாமல், நலிந்த இருளர் மக்கள் மீது பொய் வழக்குப் போட்டு காவல் துறை ஒரு குடும்பத்தைச் சிதைய வைப்பது மூலக்கதை இதன் பின்னணி, அரசியல். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் இல்லை. காவல் துறை, ஏவல் துறை எனக் காலம் காலமாய் நடக்கும் ஒரு விஷயம் எனக் கடந்து போக முடியாது. அதன் வீர்யம், வன்மம் பல தலைமுறைகளுக்கு வலியைக் கொடுக்கும். இது உண்மைக் கதையா இல்லையா என்பது ஒரு பக்கம். ஆனால் நம் நாட்டில் இன்னும் நடந்துகொண்டு இருக்கிறது. அலங்காரமான காவல் நிலையத்தின் பின்னால் நடக்கும் பல அவலங்கள் நமக்குத் தெரியாது.
விரைப்பான உடை அணிந்து ஒரு சல்யூட் அடிக்கும் அழகுக் காவலரின் முகம்தான் நமக்குத் தெரியும். ஆனால் அந்த விரைப்புக்குப் பின் இருப்பது ஒரு பெரும் வெறுப்பு/வன்மச் சிந்தனை. இதைத்தான் ஜெய் பீம் சொல்கிறது.
தனி மனித ஒழுக்கம், பிசகிவிட்ட வாழ்க்கை தான் இன்றைய நிலை என்றாகிவிட்டது. இது கலியுகம் எனச் சாக்குபோக்குச் சொல்லி நகர்ந்து போகலாம். அந்தச் சிந்தனையே சுயம் சார்ந்த ஒன்று தான். வழக்கறிஞராக வரும் சந்துரு அப்படி யோசிக்காமல், மக்கள் நலன், நீதி முக்கியம் என இறங்கிப் போராடுவதுதான் இந்த ஜெய் பீம்.
சத்தியம் வெல்லும் என்று உரக்கச் சொல்லி இருக்கும் படம்.
ஒவ்வொருவரின் நடிப்பும் மஹா அற்புதம் . அந்தக் கதாநாயகி, அவனது குடும்பத்தினர், சூர்யா, பிரகாஷ் ராஜ் என்ற பட்டாளம் இந்தப் படத்தை உச்சத்திற்குக் கொண்டு போய் உள்ளது.
தவறுக்கு எதிராய்ப் போராடும் குணம், நேர்மை, இரக்க உணர்வு, அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணம், தட்டிக் கேட்கும் தைரியத்தை எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.
என்ன தான் பொய் சொல்லி, பித்தலாட்டம் செய்து உண்மைக்கு மாறாய் இருந்தால் கூட சத்தியம் முன் எதுவும் செல்லாது என்ற நீதி அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது .
வசனம், ஒளிப்பதிவு, அந்த லைட்டிங் எப்பெக்ட். எடிட்டிங் உத்தி எனப் பல பரிமாணத்தில் இந்தப் படம் மிளிர்கிறது.
இது தான் சினிமா. இப்படித்தான் எடுக்கப்பட வேண்டும் என்று உலகத்திற்குச் சொல்லி இருக்கிறது ஜெய் பீம்.
சிங்கம் ஒன்னு, இரண்டு போன்ற சமாச்சாரங்களைத் தவிர்த்து இது போன்ற விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். அவருக்குச் சமூக அக்கறை உள்ளது. நிறைய தான தர்மங்களைச் செய்பவர்.
இந்தப் படத்தில் பாடல்களை அகற்றி, கருப்பு வெள்ளையில் சர்வதேச அளவில் திரை இடப்பட்டால் தமிழ் சினிமா பெரும் உச்சம் தொடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பாதிக்கப்பட்டோருக்குக் கடைசிப் பாதுகாப்பு நீதி மன்றங்கள் தான் எனச் சொல்லி இருப்பது மிக்க இதமான விஷயம். இந்த நம்பிக்கை மக்களுக்கு இருந்தால் அதுவே ஒரு வெற்றி தான்.
இந்தத் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். எல்லாக் காவலர்களும், நீதிமான்களும் இதனைப் பார்க்க வேண்டும். இந்தத் திரைப்படம் நேர்மை, ஒழுக்கம், நியாயம் என்ற நல்ல சிந்தனை உள்ள வாழ்க்கை முறைமையைத் தொட்டு இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவை ரசித்துக்கொண்டு இருக்கும் ஒரு பாமரனின் பாராட்டு. வாழக ஜெய் பீம்.