Blog

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 40

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 40

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சமுதாயச் சிந்தனைகள் உவமங்களான கதை

    முன்னுரை

    அகப்பொருள் புலப்பாட்டுக் கருவியாகத் தன் பணியைத் தொடங்கிய உவமம், காலந்தோறும் தன் பணிக்களப் பரப்பை விரித்துக் கொண்டே வந்திருக்கிறது. புறப்பொருண்மைகளுக்கும்  அழகியல் உணர்வை மிகுவித்துக் காட்டுதற்கும் பயன்பட்டிருக்கின்றன. தத்துவக் கோட்பாடுகளை விளக்குதற்கும் இறையுணர்ச்சியைத் துல்லியமாகச் சொல்லுவதற்கும் கூட அவை  பயன்பட்டுள்ளன. அடியார் மனத்து இறைவன் நிலைபெற்றிருக்கும் நிலையைக் ‘கறந்த பால் கன்னலோடு நெய்கலந்தாற்போல’ என்னும் உவமத்தால் விளக்குகிறார் மணிவாசகப்பெருமான்.  இத்தகைய பக்திப் பரப்பிலிருந்து தனது சிறகை விரித்தெழுந்த   உவமம் சமுதாயக் களத்திற்குத் தாவி வந்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ‘மானுடம் பாடுவது’ என்னும் கம்பனின் கோட்பாடு அவனுக்குப் பின்னாலே வந்த கவிஞர்கள் அனைவரையும் பாதித்து இன்றளவும் தொடர்கிறது. சமுதாயச் சிக்கல்களைப் பாடாத யாரையும் எவரும் கவிஞராக ஏற்றுக் கொள்வதில்லை. அல்லது ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். சமுதாயச் சிந்தனைகளைப் பாடுபொருளாக்குவதற்கும் அச்சிந்தனைகளையே உவமங்களாக அமைத்துக் கொள்வதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. சமுதாயக் கருத்துக்களைப் பிற உவமைகளைக் கொண்டு விளக்குவது எல்லாக் கவிதைகளிலும் காணக்கூடியதே. அச்சிந்தனைகளே பிற பொருள்களுக்கு உவமைகளாக அமைவது கவிஞனின் பட்டறிவைப் பொருத்ததாகும். பட்டினிக் கிடந்த பட்டறிவால் பசியைப் பற்றி எழுதுவதற்கும் பட்டினியால் துடிப்பவனைப் பார்த்து அப்பசியைப்பற்றி எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. இந்தப் பின்புலத்தில் சமுதாயத்தைப் பற்றிய கவிஞர்களின் அக்கறையும் கரிசனமும் அவர்கள் கவிதைகளில் உவமங்களாக அமைந்துள்ள பாங்கினைச் சுருக்கமாக ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

    கவிஞனும் சமுதாயச் சிந்தனைகளும்

    சமுதாயத்தின் உள்கட்டமைப்புக்களான பொருளாதாரம், சமூக நிலை ஆகியவை எல்லாக் காலத்திலும் ஒரே தன்மையுடையனவாக இருப்பதில்லை. அவற்றின் சிக்கலுக்கேற்ப அவற்றின் தன்மைகளும் நிலைப்பாடுகளும் மாறுபடுகின்றன. இலக்கியம் சமுதாயத்திலிருந்து, அவற்றிலிருந்து கிடைக்கும் பட்டறிவிலிருந்து பிறப்பதாதலின், மேற்சுட்டிய பொருளாதாரச், சமூக மாறுபாடுகளும் அவற்றால் உண்டாகும் விளைவுகளும் படைப்பிலக்கியத்தில் எதிரொளிக்கவே செய்யும். ஒரு சமூகப் பிரச்சினை குறித்து ஊடகங்கள் பலவும் கருத்துத் தெரிவிக்கின்றன. அரசு, பொருளியல்  அறிஞர்கள் அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன. கவிஞனும் அச்சிக்கல் குறித்த தன் பார்வையைப் பதிவு செய்கிறான். பிற யாவற்றிலும் இருந்து கவிஞனின் பார்வை வேறுபட்டதாக இருக்குமென எதிர்பார்ப்பது  தவறன்று. ஏனெனில் கவிஞன் வாழ்க்கைச் சிக்கல்களை அறிவுப்பூர்வமாக மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் அணுகுகிறான்.

    சமுதாயப் பார்வை கவிஞனுக்கு மேற்சட்டையன்று

    இலக்கியத்தின் தலையாய நோக்கம் இன்புறுத்துவதே.  அழகியல் குறையாமல், அது வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளை உணர்ந்து கொள்வது அதன் பயனாகும்.  இன்புறுத்துவது நோக்கம். ஏற்றம் பெறச் செய்வது பயன். “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்” என்னும் தொடரின் சாரம் இதுவே. வாழ்க்கைச் சிக்கல்களையும் நெறிகளையும் கற்பனை கொண்டு வடிவமைக்க முடியாது. சமகாலச் சமுதாய நிகழ்வுகளிலிருந்தும் உண்மை நிலவரங்களிலிருந்துமே அவற்றை வடிவமைக்க வேண்டியதிருக்கிறது. முன்னரே சுட்டியது போல் சமுதாய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதும், கண்டிப்பதும், திருத்த முயல்வதும், தீர்வு காண்பதும் ஒரு கவிஞனுடைய வேலைதான். எனவே கவிஞனுக்குச் சமுதாயச் சிந்தனைகள் புறமன்று., அகம். அவன் சிந்தை, அணு ஒவ்வொன்றிலும் சமுதாயமே நிறைந்திருத்தல் வேண்டும். இலக்கியத்தில் சமுதாயத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்வதும் சமுதாயச் சிந்தனைகளையே இலக்கியமாகப் படைத்துக்காட்டுவதும் தமிழுக்குப் புதியதல்ல.

    “சமுதாயப் பார்வையினைச்
    சட்டையைப் போல் மாட்டாதீர்!
    அதை உங்கள்
    உடம்பின் சதையாகவே
    உருவாக்கிக் கொள்ளுங்கள்”

    என்பர். சமுதாயத்திலிருந்து சமுதாயத்திற்காகச் சமுதாயத்தோடு கலந்த ஒருவனால் படைக்கப்படுவதே இலக்கியம் என்னும் ‘கவிதை மக்களாட்சித் தத்துவத்தைத்தான்’ சுருக்கமாக ‘இலக்கியம் என்பது ஒரு காலக்கண்ணாடி’ என்று அறிஞர்கள் வரையறை செய்திருக்கிறார்கள்.

    சமுதாயக் கட்டமைப்பும் கவிஞனின் சிந்தனைகளும்

    சமுதாயக் கட்டமைப்பு மாறுகிறபோது சமுதாயச் சிந்தனைகளும் மாறுவது  இயல்பே. முடியாட்சிக் காலத்தில் கவிஞன் ஒருவனுக்கு இருந்த சமுதாயச் சிந்தனைகள் வேறு. குடியாட்சிக் காலத்தில் கவிஞன் ஒருவனுக்கு இருக்கின்ற சமுதாயச் சிந்தனைகள் வேறு. அரசமைப்பு மாற்றம் மட்டுமே இதற்குக் காரணம் எனக் கருதுவதைவிடச், சமுதாயக் கட்டமைப்புக்களுக்கேற்பச் சமுதாயச் சிக்கல்களின் தன்மைகள் மாறுபடுவதே காரணம் என்பது பொருத்தமாகலாம். ஆனால் தமிழ்க்கவிதைப் போக்கில் முற்றிலும் வியப்பான மாற்றத்தைக் காணமுடிகிறது. அதாவது சமுதாயக் கட்டமைப்பு மாறாதபோதே சிந்தனை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தெளிவாகச் சுட்டுவதானால், முடியாட்சிக் காலத்திலேயே குடியாட்சிச் சிந்தனைகளைத் தமிழ்க்கவிதை உலகம் பதிவு செய்திருக்கிறது.  இது பற்றி விரிப்பின் பெருகும்.

    தமிழ்க்கவிதை உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்

    இதிகாசக் கதைப்பொருளாயினும், மன்னராட்சி ஓங்கியிருந்த சங்க காலப் பாடுபொருள்களாகிய அகம், புறமாயினும் அழகியலும் கற்பனை வளமும் தூக்கலாகத் துலங்கும் இடைக்கால இலக்கியப் படைப்புக்களாயினும் சமய இலக்கியங்களாயினும் தற்காலத் தமிழ்க்கவிதைகளாயினும் சமுதாயச் சிந்தனைகளை அடியொட்டிய உவமங்கள் ஆங்காங்கே பயிலப்பட்டு வந்துள்ளமையை அறியலாம். சமுதாயச் சிந்தனைகளைப் பாடுபொருளாக்குவதன்றி, அச்சிந்தனைகளையே உவமமாக அமைத்துக் காட்டுவது  சங்க கால இலக்கியங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது.

    வறியவன் இளமையும் வாடிய சுரமும்

    சங்க இலக்கியம் ‘ஓர் உவமத் தோரணம்’. சமுதாயச் சிந்தனைகள் என்பன பெரும்பாலும் வறுமை பற்றியனவே என்பது ஓர் எழுதாச் சட்டமாகத் தமிழ்க்கவிதைப் படைப்புலகத்திலும் திறனாய்வுலகத்திலும் நிலவிவருகிறது. ‘சமுதாயம்’ என்பது தனிமனிதர்களின் தொகுப்பு. தனிமனிதன் வறுமையுறுகிறபோது சமுதாயம் தன்னிலையில் தாழ்கிறது. கயமை மேலோங்குகிறபோது கடமையுணர்வு தவறுகிறது. பிறருக்குக் கேடு சூழ்வான் முடிவும் கேடாகவே அமைகிறது. சமுதாயம் தடுமாறுகிறபோது அரசும் தடுமாறுகிறது. தடுமாறும் அரசின்கீழ் உள்ள மக்களும் வாடி உலர்கிறார்கள். உதிர்கிறார்கள்.

    “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
    சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி
    யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல்
    வேரொடு மரம்வெம்ப விரிகதிர்  தெறுதலின்
    அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக்
    கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடி அவன் நிழல்
    உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்”

    மேற்கண்ட பாடலின் பாடுபொருள் சமுதாயமன்று. பாலைத்திணையே. பாலையின் கருப்பொருள்களை வண்ணனைச் செய்யப் புகும் கவிஞருக்குச் சமுதாயம் பற்றி ஓடிய சிந்தனைகள் உவமைகளாக அமைந்துவிடுகின்றன. பாலையின் வாடலுக்கு, வறியவனின் இளமை உவமமாக அமைத்திருப்பதைப் போலவே தலைவியின் வாடலுக்கும் பொருளற்றவனின் இளமை உவமமாக்கப்பட்டுள்ளது.

    “இருளிடை என்னாய் நீ இரவஞ்சாய் வந்தக்கால்
    பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை
    அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்”

    மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களிலிருந்து மறைபொருளாகிய அகத்திணையைப் பாடுகிற நேர்வுகளிலும் புறப்பொருளாகிய சமுதாயச் சிந்தனைகள் தமிழ்க் கவிதைகளில் உவமமாக அமைந்துவிடும் பாங்கை அறியலாம். பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வறியவன் ஒருவனுடைய இளமையையும் அருளாளன் ஒருவனுடைய ஆக்கத்தையும் உவமமாக அமைத்திருக்கிறார்கள்.

    உவமங்களில் உலா வரும் ஊமன் 

    வறியவன் இளமை உவமமானது போலவே, வாயில்லா ஊமையும் உவமமாகியிருக்கிறான். வாயில்லாதவன் ஊமன். கவிஞர் ஒருவர் வாயில்லா அவனைக் கண்ணில்லா ஊமனாக்கி அவன்மேல் கழிவிரக்கத்தைப் பெருக்குகிறார்.

    “மாரி இரவின் மரங்கவிழ் பொழுதில்
    ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
    கண்ணில் ஊமன் கடல்பட்டாங்கு”

    தன்னைப் புரக்கும் வெளிமானின் மறைவைத் தாங்கிக் கொள்ள இயலாத பெருஞ்சித்திரனார் தன்னுடைய இரங்கத்தக்க நிலையை உவமத்தால் வெளிப்படுத்துங்கால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். ‘மாரி இரவு’ என்பதால் ஊமனைக் ‘கண்ணில்லா ஊமன்’ என, ‘இருபொறி இழந்தவன் இருட்டில் படும் வேதனையை’ உவமமாக்கிக் கூறுகிறார். இருட்டிலே தவிக்கும் கண்ணில்லா ஊமன் நிலை இதுவாயிருக்கக், கண்ணுடைய ஒருவனைக் கையில்லா ஊமனாக அகத்திணைப் பாடலொன்று உவமமாக்கிக் காட்டியிருக்கிறது.

    “ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
    கையில் ஊமன் கண்ணில் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன்று இந்நோய்”

    தலைவியைப் பிரிந்த தலைவனைப் பாங்கன் தேற்றுகிறான். தேற்றுகிற பாங்கனுக்குத் தானுற்ற காமநோயை வெளிப்படுத்தும் தலைவன், மேற்கண்ட உவமத்தைப் பயன்படுத்துகிறான். ‘வெண்ணெய் உணங்கல்’ தலைவனின் மேனிக்கு உவமை. அதனை ‘ஞாயிறு காய்தல்’ நோய் பரவுதற்கு உவமை. கையில் ஊமன் தலைவனுக்கு உவமை. ‘கையில்லாமையால் உருகும் வெண்ணெயை எடுத்து நிழலிட்டு உருகாமற் காக்கவும், ஊமனாதலின் பிறர்க்கு அதனை உரைக்க இயலாமை பற்றிப் பிறராலே ஓம்பவும் இயலாதவன் ஆனாற்போலத், தானும் தன் அகத்தைத்  தானேயாதல் பிறர் உதவியாலாதல் ஓம்ப முடியாதவன் ஆயினான்’ என்னும் தலைவன் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு இவ்வுவமை அமைந்துள்ளது. கண்ணில்லா ஊமன் புலவர். கையில்லா ஊமன் தலைவன். இவர் இருவருமன்றி இன்னொருவருக்கும் ஊமன் உவமமாகப் பயன்பட்டிருப்பதையும் அறியமுடிகிறது.

    தலைவனைப் பிரிந்து வாடுகிறாள் தலைவி. அவள் வாட்டம் கண்டு மனம் வருந்துகிறாள் தோழி. அத்தோழியின் வருத்தம் தனக்கு எத்தகைய துன்பத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கூற வந்த தலைவி,

    “……..கூவல்
    குரால்ஆன் படுதுயர் இராவில் கண்ட
    உயர்திணை ஊமன் போலத்
    துயர்பொறுக் கல்லேன் தோழி!”

    பாங்கனுக்குப் பதிலுரைத்த தலைவனைப் போலப் பாங்கியின் பாசம் கண்டு வருந்திய தலைவியும் இவ்வாறு ஓர் ஊமனை உவமையாக்கிக் காட்டுகிறாள். கிணற்றினுள் வீழ்ந்துவிட்ட குரால் நிற பசு படுகின்ற துன்பத்தை இரவிலே கண்ட மக்களினத்து ஊமன் போல் தோழிக்காகத் தலைவி வருந்துகிறாள் என்பது கருத்து. மேலே சுட்டிய எடுத்துக்காட்டுக்களில் ‘கண்ணில் ஊமன்’, ‘கையில் ஊமன், ‘உயர்திணை ஊமன்’ என்றவாறு பல நிலைகளில் ‘வாயில்லா ஊமை’ உவமிக்கப்பட்டிருப்பது கொண்டு, தமிழ்க்கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் உவமமாக்கப்படும் முயற்சி  தொடக்கக் காலத்திலேயே கால் கொண்டுள்ளது என அனுமானிக்கலாம்.

    ஊமையைத் தொடர்ந்த ஓர் ஏர் உழவன்

    ஊமனைத் தொடர்ந்து உழவன் ஒருவனையும் உவமமாகத் தமிழ்க்கவிதை உலகம் கண்டிருக்கிறது. பிரிந்து சென்ற தலைமகன், மீண்டும் திரும்பி வருங்கால் தலைவியின் நிலையை எண்ணுகிறான். அவளைக் காண விரைந்து செல்ல வேண்டிய தன் நிலையையும் கருதுகிறான்.

    “ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
    ஓரேர்  உழவன் போலப்
    பெருவிதுப் புற்ற”

    அவன் நிலை உவமத்தின் வழிச் சுட்டப்படுகிறது. ஓர் ஏரை மட்டுமே உடைமையாகக் கொண்ட ஏழை உழவன், மழையினால் ஈரம் பட்ட காலம், அந்த ஈரம் உலர்வதற்குள் நிலத்தை உழுதுவிட வேண்டும் என்னும் நிலை, அதனால் அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல்’ என்னும் உவமப் பாங்கு ஒருபுறம். ‘தலைவன் செல்ல வேண்டிய இடைவழியோ தொலைவு., பருவம் கண்ட தலைவியின் ஆற்றாமை, ஆற்றாமை நீளின் அவள் இறந்துபடும் ஏதம், விரைந்து சென்று அவள் துயர் துடைக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஏற்படும் மன உளைச்சல்’ எனப் பொருண்மை நிலை மற்றொரு புறம். பொருள் புலப்பாடே உவமத்தின் தலையாய பணி என்பதை நன்குணர்ந்திருந்த  இப்புலவர் தலைவனின் மனநிலைக்கு உழவனின் மனநிலையை உவமையாக்கித் தமது சமுதாயச் சிந்தனைக் கொள்கையை நிலைநிறுத்துகிறார். தலைவியின் பிரிவுத் துயரைப் போக்கவரும் தலைவனின் உள்ளத்தில் உழவனைப் பற்றிய சிந்தனையைப் பதியவைக்கும் சங்கச் சான்றோருடன் சமுதாயப் பார்வை பற்றிய கவிதைத் தொழில்நுட்பம் பெரிதும் வியக்கத்தக்கதாம்.

    சமர்க்களத்திலும் சமுதாயச் சிந்தனைகள்

    கற்பனை வளத்திலும் மொழி ஆளுமையிலும் தமக்கென தனித்த இடத்தைப் பெற்றுத் திகழ்வன இடைக்கால இலக்கியங்கள். அவற்றுள் ‘கலிங்கத்துப் பரணி’ என்பது தமிழின் கவிச்சக்கரவர்த்திகள் மூவருள் ஒருவரால் பாடப்பட்ட பெருமையினையுடையது. எள்ளின் முனையளவும் சமுதாய நோக்கு தேவைப்படாத பாடுகளத்தைத் தனக்கிடமாகக் கொண்டது. முடியாட்சியின் மாண்புகளை முழுமையாகக் காட்சிப்படுத்தும் இலக்கியம் அது. அத்தகைய இலக்கியத்தில்கூடச் சமுதாயச் சிந்தனைகள் உவமங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அறியக் கிடக்கின்றது. போர்க்களத்தைப் பாடுகிற செயங்கொண்டார் சமுதாயம் பற்றிய தம்முடைய சிந்தனைகளை உவமங்களால் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

    “சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
    சாருநர்போல் வீரர்உடல் தரிக்கும் ஆவி
    போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
    போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்”

    வறுமையைப் போக்குதற்கான மக்களாட்சி நெறிமுறைகளில் ஒப்புரவும் ஒன்று. அதுபற்றித் திருவள்ளுவர் தனி அதிகாரமே செயதிருக்கிறார். அவர் காலத்தில் அத்தகைய கருத்தாக்கமே பெரும் புரட்சிக் கருவாகும். ‘போராட்டத்தின் மூலமே வறுமையை ஒழிக்க முடியும்’ என்னும் கருத்தாக்கம் நிலைகொண்ட இருபதாம் நூற்றாண்டுப் பாரதிதாசனே இந்த ஒப்புரவைக், ‘கடுகுள்ளம், துவரையுள்ளம், தென்னையுள்ளம், மாம்பிஞ்சு உள்ளம்’ எனப் படிநிலை வளர்ச்சி காட்டிப் பாடியிருப்பதொன்றே இதன் சிறப்பைக் காட்டப் போதுமானதாகும். அலந்தார்க்கு உதவுதலாகிய இச்சிந்தனையைக் கவிஞர் ‘நரியின் ஏமாற்றத்திற்கு’ உவமமாக அமைத்துக் காட்டியிருக்கிறார். ‘உதவுவார்’ என எதிர்பார்த்து ‘உதவவே மாட்டார்’ என்னும் முடிவையும் அறியாமல் ஏங்கி நிற்கும் நரிக்குலத்திற்குக் கவிஞர் காட்டும் உவமம், சமுதாயச் சிந்தனைகளில் அவருடைய உள்ளம் தோய்ந்த பாங்கை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

    பாரதிதாசன் உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்

    பாரதிதாசன் கவிதைகளில் இடம்பிடிக்காத உவமங்களே இல்லை எனலாம். அவருடைய கவிதைகளில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும்’ உவமங்களில் சமுதாயச் சிந்தனைகளைத் தாங்கிய உவமங்கள் தனிச்சிறப்புக்குரியன. தான் பெற்ற மழலையைத் தாயைப் போலத் தந்தை தூக்க முடியாது. வளர்ந்த நிலையில் குழந்தைகளை எவரும் தூக்கலாம். இந்தப் பட்டறிவைத் தம்முடைய நுனித்த நோக்கினால் கண்ட பாரதிதாசன் உவமங்களால் வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.

    “ஆழியில் உள்ள அழகு மட்கலத்தை
    இயற்றி யோர்க்கே எடுப்பதுமுடியும்
    சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்”

    “உலைஅமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல் போல்
    தவறாது தூக்குவது தலையாகிய கடன்”

    தான் வனையும் மட்பாண்டங்களைச் சக்கரத்தில் இருந்து எடுக்க குயவனால் மட்டுமே இயலும். அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அழகு மட்கலத்தை யார் வேண்டுமானாலும் தூக்கித் தட்டிப் பார்க்கலாம். பச்சைப் பானையைத் தூக்குவது குயவனால்தான் இயலும். பச்சைக் குழந்தையைத் தூக்குவது தாய்க்கு மட்டுமே கூடும். குழந்தையைப் ‘பச்சைமண்’ என்னும் வழக்கு ஒப்பு நோக்கத்தக்கது. குழந்தையைத் தூக்குதற்குரிய புறச்செயலுக்குக் குயவனை ஒப்புமை கூறியிருக்கும் பாங்கு இதுவாக, அப்பொழுதில் இருக்க வேண்டிய எச்சரிக்கையுணர்வை வறுமையில் உழன்ற ஒருத்தி, தான் வடித்த உலைச்சோற்றுப் பானையை நழுவ விடாது பொறுப்புடன் தூக்கி இறக்கிவைப்பதுடன் ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் பொருத்தப்பாடு  நேர்த்தி  நிறைந்தது.  அதனால் நெஞ்சு கவர்ந்தது.

    “உலக நிகழ்ச்சிகளை எத்துணைக் கூர்ந்து நோக்கியுள்ளான் என்பதைப் புலப்படுத்தும் முகத்தால் உவமை அவனது புலமையையும் காட்டுகிறது”

    ஒப்புமை அடிப்படையில் பொருள் புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு கவிஞனின் நுண்ணோக்கினை வெளிப்படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது என்னும் அறிஞர் கைலாசபதியின் மேற்கண்ட கருத்து ஈண்டு ஒப்பு நோக்கிற்காகச் சுட்டப்படுகிறது.

    புதுக்கவிதை உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்

    காலமாறுதல், சமுதாயச் சிக்கல்கள், அறிவியல் வளர்ச்சி,  நாகரிகம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் கலப்புக்கள், உலகச் சிந்தனைப் போக்கின் மாறுதல்கள் எனப் பெருகி வளரும் காரணிகளின் அடிப்படையில் புதிதாகத் தோன்றிய ஓர் இலக்கிய வடிவமே ‘புதுக்கவிதை’ ஆகும். பெரும்பாலும் பொருண்மை நிலையினாலும் வெளிப்பாட்டு உத்தியாலும் அவைகள் அப்பெயர் பெற்றன என்பது பொருந்தும். மரபுக் கவிதைகளைவிடப் பன்மடங்கு சமுதாயச் சிந்தனைகளைத் தமக்கு உள்ளடக்கமாகக் கொண்டு விளங்குவன புதுக்கவிதைகள் ஆகும். அவற்றுள் பொருள் புலப்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் உவமைகளில் பல சமுதாயச் சிந்தனைகளைத் தாங்கி நிற்பதை அறியமுடிகிறது.

    முடி திருத்திய முத்தும் மீராவின் உவமமும்

    கவிஞர் மீரா குறிப்பிட்ட ஒருவரிடமே முடி திருத்திக் கொள்வார். ஒரு நாள் அவர் கடைக்குச் செல்லும் போது முடி திருத்தும் முத்து என்பார் மறைந்த சேதியைக் கேட்டு அவருக்குக் கையறுநிலை பாடுகிறார். அக்கையறுநிலைக் கவிதையில் முத்து கடையில் எப்பொழுதும் குழுமியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் உவமை சொல்கிறார்.

    “ஒரு கிராமத்துத்
    திருமணப் பத்திரிகையில் வரும்
    தாய் மாமன்களின்
    பெயர்களைப் போல”

    அக்கடையில் குழுமியிருப்பார்களாம். பாடுபொருளாக்கப் பட்டிருப்பவர் முடி திருத்தும் தொழிலாளி என்பது புதுக்கவிதையின் சமுதாயப் பாடுபொருள். அக்கடையில் குழுமியுள்ளவர்களுக்குத் திருமண அழைப்பிதழில் அச்சடித்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் தாய்மாமன்கள் குழு உவமம். அழைப்பிதழில் செலுத்திய மீராவின் ஆழ்ந்த நோக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது  இந்த உவமம்.

    காதலை அளக்கும் கண்ணீரும் வியர்வையும்

    ‘உள்ளங்களின் இடப்பெயர்ச்சியே காதல்’ என்பது தமிழ்க்கவிதைகளின் காதல் பற்றிய ஒருவரிக் கருதுகோளாகலாம். ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்’ என்பது கம்பன் பார்வை. அந்தக் கருதுகோளின் பன்முகப் பரிமாணங்களே தமிழ்க்கவிதைகளின் பெரும் பரப்பை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றன. மரபிலக்கியங்களில் காணப்படாத ‘தலைவன் புலம்பல்’  என்பது தற்காலக் கவிதைகளில் பெருவழக்கு. காதலியை நோக்கி அவள் காதலைப் பெருமைப்படுத்தும் காதலன்,

    “நீ எனக்குக் காதலைத் தந்தாய்
    அது
    உழைப்பாளிகளின் வியர்வையைப் போல்
    உயர்வானது”

    என உழைப்பாளியின் வியர்வையைத் தலைவியின் காதலுக்கு உவமையாக்குவதைக் காணமுடிகிறது. தலைவியின் காதலுக்கு மாற்றாகத் தான் தரும் காதல் காவியத்தை ஏழையின் கண்ணீரோடு ஒப்பிட்டு உரைப்பதையும் காணமுடிகிறது.

    “நான் உனக்கு இந்த
    வசன காவியத்தைத் தருகிறேன்.
    இது
    ஏழையின் கண்ணீரைப் போல்
    உண்மையானதா என்று பார்!”

    காதலியின் காதல் உயர்வுக்கு உழைப்பாளியின் வியர்வைத் துளிகளை உவமிக்கும் மீரா, தன்னுடைய காவியத்தின் உண்மைக்கு ஏழையின் கண்ணீரை உவமித்துக் காட்டியிருக்கும் திறன் சுட்டத்தகுந்தது.

    ஊசியில் காதும் உள்ளத்துக்கு வழியும்   

    தமிழ்க்கவிதைகளின் தலைமைப் பாடுபொருள் காதல். இருப்பினும் தற்காலக் கவிதைப் படைப்புக்களில் சமுதாயச் சிந்தனைகளே மேலோங்கியிருக்கின்றன என்பது அக்கவிதைகளை ஆராய்ந்தோர் கண்ட முடிபு. காதலியின் உள்ளத்தில் காதலன் இடம் பிடிப்பதைப் பாரதிதாசன்,

    “கண்படைத்த குற்றத்தால் அழகி யோன்என்
    கருத்தேறி உயிரேறிக் கலந்து கொண்டான்”

    எனத் தலைவி கூற்றாக அமைத்துக் காட்டுவார். இந்தச் சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட வைரமுத்து,

    “விழியில் விழுந்து இதயம் நுழைந்து
    உயிரில் கலந்த உறவே”

    என வழிமொழிவார். உயிரேறிக் கலந்து கொண்டதற்கும், உயிரில் கலப்பதற்கும் உவமம் ஏதும் மேற்கண்ட கவிதைகளில் சுட்டப்படவில்லை. ஆனால் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவி கூற்றாக இருக்கும் மேற்கண்ட உள்ளடக்கத்தைத் தலைவனுக்கு மாற்றுவதோடு அதற்குச் சமுதாயம் சார்ந்த உவமையையும் கூறுகிறார். காதலியின் உள்ளத்துக்குள் செல்லும் வழியறியாமல் தடுமாறும் காதலனின் தடுமாற்றத்தைக், கண் தெரியாத முதுமையடைந்த தையல்காரன் ஒருவன், ஊசியில் காது தேடும் தடுமாற்றத்துடன் ஒப்பிடுவதைக் காணமுடிகிறது.

    “உன் இதயத்திற்குள் நுழைய
    வழி பார்க்கிறேன்,
    ஊசியின் காதைத் தேடும்
    பார்வை மங்கிய
    கிழட்டுத் தையல்காரனைப் போல”

    பாவேந்தர் கண்ட காதலியும் வைரமுத்து கண்ட காதலியும் தத்தம் காதலர்களுக்குத் தம் உள்ளத்துள் நுழைய அனுமதித்த நிலையில் அப்துல் ரகுமான் கண்ட காதலன் தன் காதலியின் உள்ளம் நுழைய வழிதேடும் அழகியலும் அவ்வழகியலைச் சிந்திக்க வைக்கும் உவமமும் கவிதையின் அகப்புற அழகை மேம்படுத்துவதைக் காணலாம்.

    காதலன் துடிப்புக்குக் கவிஞனின் உவமைகள்

    சங்க இலக்கியத் தலைவன் தலைவியைக் காண இடர்ப்படுவான். ‘அல்லகுறிபட்டு அலமறுதல்’ அவனுக்கு இயல்பு. தற்காலக் காதலன் காதலியைக் காணப் பதற்றமடைவான். இந்தப் பதற்றத்திற்குக் கவிஞர் மீரா காட்டும் உவமைகள் சுய பட்டறிவையும் கண்ணெதிரில் நிகழும் சமுதாய நிகழ்வுகளையும் ஒருசேரப் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன.

    “முதல் தடவையாய்
    நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்
    ஒரு வேலையில்லாப்
    பட்டதாரியைப்  போல்”

    “எதிர்பாரா விதமாய்
    மணமேடையில் அமரும்
    ஒரு ஏழைப் பெண்ணைப் போல்”

    நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பட்டதாரியின் படபடப்பும், எதிர்பாரா வகையில் மணமகளான ஏழைப் பெண்ணின் பதற்றமும் முறையே ஐயத்திற்கிடையே தோன்றும் அச்சத்திற்கும், எதிர்பாராதது கிட்டியதனால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் உவமைகளாய் அமைந்து அவ்விருவர்தம் சமுதாய நிலைப்பாடுகளில் கவிஞருடைய பார்வையை உணர்த்துவதாக உள்ளன. மேற்கண்ட சில சான்றுகளால் பொருள் புலப்பாட்டுக்காக அமைகின்ற உவமங்களில் படைப்பாளனின் சமுதாயப் பார்வையும் பொருத்தமான உவமங்களாய் அமைகின்ற பாங்கு ஓரளவு புலப்படுத்தப்பட்டுள்ளது.

    நிறைவுரை

    ‘உவமம் என்பது செய்யுளுக்குப் புறத்தே நிற்பதன்று, அகத்தோடு கலந்து நிற்பது’ என்பதையும், அதனை வெறுமனே ‘அழகியல் வெளிப்பாட்டு உத்தி’ எனக் கருதுவதினும் பொருள் புலப்பாட்டுக் கருவி எனக் கருதியதே பழந்தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாடு என்பதையும் எப்பொருளைப் பற்றிப் பாடும் கவிஞன் எவராயினும் அவன் மானுடத்தைச் சேர்ந்தவன் ஆகையால் அவனால் சமுதாயத்தைவிட்டு விலகி நிற்க முடியாது என்பதையும் இந்தக் கட்டுரைத்தொடர் தொடர்ந்து வலிமையான தரவுகளால் நிறுவி வருகிறது. அவற்றோடு கவிதைக்கு அழகு, அடர்த்தி கூட்டும் உவமம் கவிஞனின் சமுதாயச் சிந்தனைகளாக அமைகிறபோது படைப்பாளனின் அகப்புற முகவரியாகவே மாறிவிடுகிறது என்பதை இந்தக் கட்டுரை ஓரளவு சொல்ல முயன்றிருக்கிறது.

    (தொடரும்…)

    Share
  • கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] – தீர்மானங்கள்

    கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] – தீர்மானங்கள்

    சி. ஜெயபாரதன், கனடா

    கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மானித்தார்?

     

     

    ===========================

    2021 காப்பு-26 [COP-26] பேரரங்கம் செய்த தீர்மானங்கள்

    1. வரம்பு குறிக்கோள் உஷ்ணம் 1.5 C என்பது மாறவில்லை.
    2. ஆண்டுக்கு 1.4 பில்லியன் டன் கரிவாயுக் குறைப்பு நல்ல முயற்சி.
    3. சைனா உலகப் பூகோளக் கரி வெளியேற்றத்தில் 30% பங்கு பொறுப்பு
    4. மற்ற நாடுகள் 70% அளவுக்குப் பொறுப்பு.
    5. சைனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் நிலக்கரி பயன்படுத்தி வருகின்றன. [2021] காப்பு-26 பேரரங்கில் ரஷ்யா, சைனா கலந்துகொள்ளவில்லை.
    6. சைனா பேரளவு சூரிய, காற்றாடி எரிசக்தி மீள்புதிப்பு சாதனங்கள், மின்னணு வாகனங்கள், பேருந்துகள் பயன்படுத்தி வருகிறது.
    7. இந்தியப் பிரதமர் மோடி 2070ஆம் ஆண்டில்தான் பூஜிய விஷவாயுச் சூழ்வெளி இந்தியாவில் கொண்டுவர இயலும் என்று அறிவித்தார்.
    8. ரஷ்ய & சைனப் பிரதிநிதிகள் 2060ஆம் ஆண்டுக்குள் பூஜிய விஷ வாயுக் கடைப்பிடிப்பு என அறிவித்தனர்.
    9. ஓர் ஆண்டுக்கு 1.4 பில்ல்லியன் டன் கரிவாயு வெளிவீச்சு குறைப்புத் திட்டம், பூஜிய விஷ வாயுச் சூழ்வெளியை 2050இல் நிறைவேற்றும்.
    10. இப்போதுள்ள நிலைமை நீடிப்பு, மேலும் வெளிவீச்சுகளைக் குறைக்காமை இன்னும் 11 ஆண்டுகளில் வரம்பு உஷ்ணம் 1.5 டிகிரி செல்சியசுக்கு எட்டிவிடும். இது 50% அனுமான அறிவிப்பு.

    தகவல்

    1. https://ukcop26.org/

    Share
  • மாடித் தோட்ட உலா

    மாடித் தோட்ட உலா

    இந்த நாள் இனிய நாள் ஆகுக!

    எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தை அலங்கரிக்கும் செடிகொடிகளுடன் கைகுலுக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மல்லீ

    மல்லீ

    பாஸ்கர்

    அந்தப் பூ விற்கும் பெண்மணியிடம் நேற்று வழக்கம் போல் சென்றேன் .

    கொஞ்சம் சாமந்தி கொடும்மா என்றேன்.

    பண்டிகை நாளுப்பா, விலை ஜாஸ்தி

    சரி , இருபது ரூபாய்க்கு எவ்வளவு வருமோ கொடு என்றேன்.

    கொஞ்சம் எடுத்துப் பையினுள் போட்டுக் கொடுத்தாள்.

    மல்லி வாங்கிக்கோ என்றார்கள் அந்த அம்மா.

    இல்லை. காசு கம்மியா இருக்கு. நாளைக்குப் பார்க்கலாம் என்றேன்.

    உன்னைக் காசா கேட்டேன். இந்தா எடுத்துண்டு போ என ஒரு முழம் கொடுத்தார்கள்.

    எனக்கு உங்கிட்ட இலவசமா வாங்கிக்கக் கஷ்டமா இருக்கு என்று ஜோபியை துழாவி, சில்லறையைக் கொடுத்தேன்.

    அவர்கள் அந்தச் சில்லறையை எண்ணிப் பார்க்க அவர்களிடம் காசு தான் வேணாம்னு சொன்னியே, இப்ப ஏன் எண்ணின்டு இருக்க எனக் கேட்டேன், தப்பாகக் கேட்டு விட்டோம் என்ற உறுத்தலை மீறி.

    பத்து ரூபாய்க்கு மேல இருந்தா உங்கிட்ட கொடுத்துடலாம்னு தான் எண்ணறேன் என்றாள்.

    நல்லவர்கள் ஏமாறக்கூடும். ஆனால் ஏமாற்ற மாட்டார்கள்.

    Share
  • பூகோளம் முன்னிலைக்கு மீளாது!

    பூகோளம் முன்னிலைக்கு மீளாது!

    சி. ஜெயபாரதன், கனடா

    காலவெளி ஒருபோக்கில்
    மாறிப் போச்சு !
    வாலிப வனப்பு அதற்கினி
    மீளாது !
    நூறாண்டு போராடி நாம்
    காரணங்கள்
    களை எடுத்தாலும்,
    முன்னிலைக்கு
    மீளாது ! மீளாது! மீளாது !

    சூடேறிப் போச்சு
    பூகோளம் !
    வீடேறி வந்திருச்சு
    சீர்கேடு !
    நாடெல்லாம் முடமாகி
    நாச மாகப் போச்சு !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    நூறாண் டுக்கு
    முன்னிருந்த நிலைக்கு பூமி
    மாறாது !
    போன வாலிபம் பூமிக்கு
    மீளாது !

    பூமி சுற்றச்சு பூகம்பத்தால்
    சாய்ந்து போச்சு !
    நிமிர்த்த முடியாது ஆயிரம்
    கோடரியால் !
    எரிமலை பொங்கி எழுந்து
    கனல் குழம்பு
    கொட்டி ஆறு, ஆறாய் ஓடுது !
    விஷ வாயுக்கள்
    சூழ்வெளியை நிரப்புது !
    பூகோளம் முன்னிலைக்கு
    மீளாது
    ஒருபோதும் !

    Share
  • குறளின் கதிர்களாய்…(375)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(375)

    ஒன்றாமை யொன்றியார் கண்படி னெஞ்ஞான்றும்
    பொன்றாமை யொன்ற லரிது.

    – திருக்குறள் – 886 (உட்பகை)

    புதுக் கவிதையில்

    நெருங்கி நன்றாய்ப்
    பழகுவோரிடத்துப்
    பகை தோன்றுமாயின்,
    அந்த உட்பகையால்
    அரசனுக்கு
    அழிவு வருவதைத் தடுக்க
    எப்போதும் இயலாது…!

    குறும்பாவில்

    அடுத்து வந்து பழகுவோரிடத்து
    உட்பகை தோன்றிடில் அதனால் அரசனுக்கு
    வருமழிவைத் தடுக்க முடியாது…!

    மரபுக் கவிதையில்

    அருகில் நெருங்கியே நன்றாக
    அன்புடன் பழகுவோர் தம்மிடத்தும்
    வருந்த வைத்திடும் பிணியாக
    வதைத்திடும் உட்பகை தோன்றிவிடில்,
    மருந்தா யதனையே போக்கிடவே
    மன்னவன் தனக்குமெவ் வழியுமிலை,
    வருமே அழிவது நிச்சயமாய்
    வழியிலை யதனையும் தடுத்திடவே…!

    லிமரைக்கூ

    அரசனும் அழிவான் ஆங்கு,
    நெருங்கிப் பழகுவோர் தம்மிடத்தும் தோன்றிடில்
    உட்பகை யென்னும் தீங்கு…!

    கிராமிய பாணியில்

    கொடியது கொடியது
    உட்பக கொடியது,
    கொலத்தயே அழிக்கும்
    உட்பக கொடியது..

    நெருங்கி நல்லாப்
    பழகுறவங்கக் கிட்டயும்
    கேடுகெட்ட உடபக
    வந்திட்டுண்ணா,
    நாட்ட ஆளுற ராசாவுக்கும்
    அழிவு வாறத
    ஆராலும் தடுக்கமுடியாதே..

    தெரிஞ்சிக்கோ
    கொடியது கொடியது
    உட்பக கொடியது,
    கொலத்தயே அழிக்கும்
    உட்பக கொடியது…!

    Share
  • திருப்புகழ் | பாதி மதிநதி

    திருப்புகழ் | பாதி மதிநதி

    அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து ‘பாதி மதிநதி’ எனத் தொடங்கும் பாடலை, திருமதி விஜயலட்சுமியின் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி திருவிழாவைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பயிரில் ரசாயனம்! பாலில் அமோனியா!

    பயிரில் ரசாயனம்! பாலில் அமோனியா!

    வேளாண் விளைபொருட்களில் ரசாயனக் கலப்பு எந்தெந்த வகைகளில், அளவுகளில் உள்ளது? அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது? வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் வெங்கி என்கிற வெங்கட்ராமன் ராமச்சந்திரன் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சரவெடி 2021

    சரவெடி 2021

    சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. எனினும் இந்தத் தீபாவளி அன்று சரவெடி பரவலாக வெடிக்கப்பட்டது. சென்னையில் நேற்று இரவு வெடிக்கப்பட்ட சரவெடி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீபாவளி 21

    நேர்மறை எழுக எதிர்மறை விழுக
    பார்மறை ஒதும் படி………………………………………………..1

    புகையும் பகையும் அகலும் அகலால்
    குகையும் ஒளியாகவே………………………………………….2

    ஒளியும் ஒலியும் வழியும் அறியும்
    விழியும் மனதும் களி……………………………………………..3

    சக்கரம் சுற்றிட சங்கடம் கலைய
    இக்கணம் இறையைப் பிடி……………………………..4

    புத்தாடை அணியும் இந்நாளில்
    பக்தியும் வளர்க்கப் பார்…………………………………….5

    கசப்பினை மறந்து இனிப்புச் சுவைத்தாலும்
    கசப்பிலே அகலும் பிணி……………………………………6

    நடிப்பும் நாடகம் (தீப)ஒளியில் தெரிந்தபின்
    படிப்பினை பயனாக முயல்……………………………7


    தெரியாதென நினைத்துப் பிழைகள் செய்தாரை
    சரியாகக் காட்டும் நாள்…………………………………….8


    குருவிடமே திருடும் மாணவர் பலருக்கும்
    குருடுமே அளிக்கும் விதி…………………………………..9


    தீயால் வண்ணம் தீட்டிடும் வளியதை
    தூய்மை ஆக்க முனை……………………………………….10

    இல்லோர் அகமகிழ இருப்பதைப் பகிரவே
    இருப்போர் பெற்ற பயன்…………………………………….11

    வாழ்த்தோடு மட்டும் பயனிலை வையத்தில்
    வீழ்ந்தோரை எழுப்பி விடல்……………………………….12

    முறுக்கோடு காரம் சுவைக்கும் போதிலே
    பொறுப்போடு பற்கள் துணை………………………..13

    கங்கை நீராடின் கசடுபோம் வினையகல
    அங்கை யால்தானம் செய்………………………………….14

    ஊசியின் பட்டாசு வெடிப்பது அன்றி
    ஓசியில் மனதும் கெடும்……………………………………15

    தலையாய் தீபாவளி பலருக்கு சிலருக்கு
    தலையில் தீராத வலி…………………………………………….16

    இருட்டில் ஒளியான பின்னரும் சிலருக்கு
    இருட்டில் தான்வயிர் வளர்ப்பது…………………17

    கெடுவது இனுமென்ன இருக்கிறது ஆட்சியில்
    சுடுவதே கொள்கை யானபின்……………………18

    கற்றவர்க்குச் சிறப்பிலை தேர்வில் தோற்று
    உற்றவர்க்கு ஊடகம் இனி………………………………..19

    எரிவாயு கடனேற சம்மதம் ஊடகமே
    கரிவாயு வந்தால் பிணி…………………………………….20

    வாழ்த்தினை வழங்கினால் கீர்த்தி வெறுத்து
    காழ்ப்பினை அளித்தே அழி………………………….21




    Share
  • பழகத் தெரிய வேணும் – 90

    பழகத் தெரிய வேணும் – 90

    நிர்மலா ராகவன்

    படைத்தலும் ரகசியமும்

    `நான் பல புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். அதனால் மகா புத்திசாலி!’

    இப்படி எண்ணிப் பெருமைப்படுகிறவர்கள் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. நிறைய புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் அறிவு வளர்ந்துவிடாது. கற்பனைத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஓயாமல் தன்னைப்பற்றியோ, பிறரைப்பற்றியோ யோசிப்பதால் நேரம்தான் விரயமாகும்.

    ஒருவர் தனக்குப் பிடித்த ஆக்ககரமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டால், அவரால் பிறருக்கும் உபயோகமானதாக எதையாவது செய்ய இயலும்.

    அவசியம் இருந்தால்தான் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் நிலை வரும் என்பதல்ல.

    `இப்படிச் செய்தால் என்ன? ஏன், இம்மாதிரியும் இருக்கலாமே!’ என்று, நடைமுறையில் பின்பற்றப்படுவதை வேறுவகையில் மாற்றுகிறார்கள் படைப்பாளிகள். அது கண்களால் பார்க்கும் தொலைவில் இல்லாவிட்டாலும், கற்பனையால் அவர்கள் எதிரில் இருப்பதைப்போல் காண்கிறார்கள்.

    கற்பனையில் கண்டதைக் கனவாகக்கொண்டு, அதிலேயே நிறைவு கண்டுவிடாது, அவற்றை நனவாக்கவும் முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள்.

    எந்தக் கண்டுபிடிப்பையும், `இது பாதுகாப்பானதுதான்!’ என்று முதலில் உறுதி கூறவும்முடியாது. இருப்பினும், அதன் உபயோகம் நேரத்தையும், சக்தியையும் மிச்சமாக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன், துணிச்சலுடன் செய்கிறார்கள்.

    ஒருவர் புதியதாக எதையாவது செய்ய முயன்றால், `புரட்சி’ என்பார்கள். அதனால் விளையும் நன்மைகள் அதை முயல்கிறவருக்குத்தான் புலப்படும்.

    புதியதாக எந்தக் காரியத்தைத்தான் உடனுக்குடன் செய்ய முடியும்! பொறுமையும் விடாமுயற்சியும் அதிக அளவில் இருக்கவேண்டும். அதற்காக நிறைய உழைக்கவேண்டும். பல பிழைகளும் சறுக்கல்களும் எதிர்ப்படும்.

    இவற்றால் உற்சாகத்தை இழக்காது, எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதியுடன் ஈடுபட்டால்தான் முயற்சி திருவினையாகிறது.

    தற்காலத்தில், எல்லோராலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ப்ரெஷர் குக்கர் டெனிஸ் பாபின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரரால், 350 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

    `நீராவியாலும், அழுத்தத்தாலும் பருப்பு, அரிசிபோன்ற எல்லாவற்றையும் வெகு விரைவாக வேகவைக்க முடியுமோ?’ என்ற யோசனை அவருக்கு முதலில் எழுந்திருக்கவேண்டும்.

    ஆரம்பத்தில், `இது நம்மால் முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்திருந்தால், அதை அவரே வென்றிருக்கக்கூடும். எதையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியமாயிற்றே!

    (இந்தியாவில் அறிமுகமானபோது, அதை உபயோகிக்க பலரும் பயந்தார்கள். அழுத்தம் அதிகமாக இருந்தபோதே, விவரம் புரியாது, மூடியைத் திறக்கமுயன்ற சிலர் முகத்தில் ஆவி அடித்தது காரணமாக இருக்கலாம்).

    ஆரம்ப சூரத்தனம்

    எந்தத் துறையாகிலும், நாம் செய்ய ஆரம்பித்த ஒரு காரியத்தை ரகசியமாக வைக்கவேண்டுவது அவசியம். சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிட்டு, முடிப்பதற்குள் அதைப் பற்றிப் பிறருடன் பெருமையாக பேச நினைப்பது அபாயம்.

    யாரோ ஒருவர், அதைக் கவனமாகக் கேட்டுவிட்டு, `நீ சொல்வது நடக்காது!’ என்று சந்தேகம் ஏற்படச் செய்வார் முதலில்.

    அவரது போலி சந்தேகத்தைச் சவால் என்றெடுத்துக்கொண்டு, விரிவாக விளக்குவோம்.

    இதைத்தானே அவரும் எதிர்பார்த்தார்!

    நம்மை முந்திக்கொண்டு, தானே முயன்று கண்டுபிடித்ததைப்போல், தக்க இடத்தில் விரிவாகக் கூறி, லாபம் சம்பாதிப்பார்.

    இக்காலத்தில் இம்மாதிரியான நம்பிக்கைத் துரோகிகள் மலிந்துவிட்டார்கள்.

    கதை

    ஒரு இசைக்கலைஞர் தான் இயற்றிய பாடல்களை தன் குருவிடம் காட்டினார், அவர் மகிழ்ந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்து.

    அப்பாடல்களை நோட்டமிட்ட குரு ஒன்றும் சொல்லாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அதன் காரணம் பிறகுதான் புரிந்தது.

    தான் இயற்றியவை அவை என்று குரு அவற்றைப் பிரகடனப்படுத்தினார்!

    `உங்களை எவ்வளவு நம்பினேன்! நீங்கள் என்னை இப்படி ஏமாற்றலாமா?’ என்று சீடரால் குருவைத் தட்டிக்கேட்க முடியவில்லை. குருபக்தியும், அவர்மேல் கொண்டிருந்த மரியாதையும் தடுத்தன.

    ஆனால், ஆயுள் முழுவதும் குருவின் நேர்மையற்ற செயல் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது. வருத்தம் மறையவே இல்லை.

    ஏன் காப்பி அடிக்கிறார்கள்?

    பிறரைக் காப்பி அடிப்பது எளிதாக இருக்க, `நமக்கு இருக்கிற கொஞ்சம் மூளையைக் கசக்கி, எதையாவது கண்டுபிடிப்பது முடிகிற காரியமா!’ என்ற கொள்கை உடையவர்கள் இப்படிப்பட்டவர்கள்.

    இவர்களுடைய சாமர்த்தியம் வேறுவிதமாக வெளிப்படும்.

    ஒரு ராகத்தில் அமைந்த பல பாடல்களைக் கேட்டால், இசை நன்கு பயின்றவர்களுக்குக் கற்பனை ஓடும். அவற்றை எப்படியெல்லாம் மாற்றலாம் என்ற யோசனை எழும்.

    `அவ்வளவு கஷ்டப்படுவானேன்!’ என்றுதான் காப்பி அடிக்கிறார்கள்!

    கதை

    கர்னாடக இசையில் தேர்ந்த ஒருவர் வேறு ஒருவரது பாடலுக்குத் தானே மெட்டமைத்து, ஒரு கச்சேரியில் பாடியிருந்தார். பக்கவாத்தியம் வாசித்தவர்களிடம் அடக்கமாக, தன் பங்களிப்பைத் தெரிவித்துக்கொண்டார்.

    அவர் மறைந்ததும், திரைப்பட இசை அமைப்பாளர் ஒருவர் அந்த மெட்டைத் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டார். அதனுடன் வேறு வாத்தியங்களையும் இணைத்தது மட்டும்தான் அவருடைய கைங்கரியம்.

    அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. `Genius’ என்றுகூட ஒரு ரசிகர் பாராட்டியிருந்தார்!

    குழுவில் படைப்பு

    இருவரோ, மூவரோ இணைந்து ஒரு படைப்பைப் படைத்தால் எளிதாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். இதில் ஒருவர் நடைமுறையில் இருப்பதைப் புரிந்து வைத்திருப்பார். இன்னொருவர், `இப்படிச் செய்தால் என்ன?’ என்று புதிய கற்பனையைக் கொண்டுவருவார். மற்ற இரண்டையும் இணைப்பார் மூன்றாமவர்.

    அறிவிலும், திறமையிலும் ஒத்திருப்பதுடன், அவர்களுக்குள் போட்டி, பொறாமை இருக்கக்கூடாதென்பதும் அவசியம். விவாதம் வரலாம். ஆனால், சண்டையில் முடியக்கூடாது.

    `நான்தான் செய்தேன்!’ என்று கூறி, தானே முழு பாராட்டையும் பெற எண்ணுகிறவர் சுயநலவாதி. அடுத்த முறை, யார் அவருடன் இணைவார்கள்!

    கதை

    “நான்குபேர் இணைந்து, ஒரு கதையை எழுதுகிறோம். நான் இரண்டாவது, நீங்கள் மூன்றாவதாக எழுதுங்கள்,” என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்க, நான் ஒப்புக்கொண்டேன்.

    எழுதி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மறந்தேபோனேன்.

    வெளியானதும், `இரண்டாவது பகுதி சுமாராக இருக்கிறது. கடைசி ஒரு பக்கம்தான் சுவாரசியமாக இருக்கிறது,’ என்று தோன்றியது.

    அடுத்த மாதம் நான் எழுதியது வெளியாக, அதிர்ச்சி உண்டாயிற்று.

    அப்போதுதான் புரிந்தது, என் பகுதியின் முதல் பாகத்தை அவர் தனதாக ஆக்கிக்கொண்டார் என்பது.

    `இப்படிச் செய்துவிட்டீர்களே!’ என்று நான் கேட்கவில்லை. நான் அவரைவிடத் திறமைசாலி என்று சமாதானம் செய்துகொண்டேன்.

    அடுத்த பல மாதங்கள் அப்பத்திரிகைக்கு எதுவும் எழுதவில்லை. அப்போது அவருக்குப் புரிந்திருக்கும் என் மனவருத்தம்.

    மனச்சாட்சியே இல்லாது, இன்னொருவரின் ஆக்கபூர்வமான வேலையைத் `திருடினால்’ உண்மையான நிறைவு கிடைக்குமா?

    ஆசை இருக்கு கதையெழுத, ஆனால்…

    ஒரு படைப்பை ஆரம்பிப்பதற்குமுன், அதற்கான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி வளமும் அவசியம்.

    `எனக்குக் கதையெழுத, பாடல்கள் புனைய ஆசை. ஆனால், படிக்கப் பிடிக்காது!’ என்றால் எப்படி?

    முன்னூறு வருடங்களுக்குமுன் இருந்த தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்களைப் பார்ப்போமா?

    சிறுவயதிலேயே அவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற குருமார்களிடம் அனுப்பினார்களாம் அவர்களது பெற்றோர். அதைத் தவிர, மதத்தைப்பற்றியும் கற்றார்கள்.

    பக்தி மிகுந்து, தென்னாட்டில் கோயில் கோயிலாகப் போக, அங்கிருந்த தெய்வங்களின்மேல் பாடல்களைப் புனையும் திறன் வந்தது. தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில், கர்னாடக இசைப்பாணியில் இயற்றினார்கள்.

    அவர்களுடைய கற்பனைத்திறன் இன்றளவும் பாராட்டப்படுவது எப்படியென்றால், ஆர்வத்துடன், படைப்புக்கு வேண்டிய ஆதாரமான அறிவு, மொழித்திறன் இரண்டையும் பெற்றிருந்ததுதான்.

    எந்தத் துறையானாலும், கற்பனைவளம் மிக்கவர்களே முன்னுக்கு வருகிறார்கள்.

    தமிழ்த் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்தில், செந்தமிழில் உரையாடினார்கள்.

    ஐம்பதுகளில், `நாம் அன்றாடம் அப்படிப் பேசுவது கிடையாதே! எல்லாருக்கும் இந்தத் தமிழ் புரியுமா?’ என்ற சந்தேகம் எழ, சற்றே மாற்றினார்கள். இருந்தாலும், உணர்ச்சிமயமான இறுதிக்கட்டத்தில் செந்தமிழ் துள்ளி விளையாடும்.

    காலப்போக்கில், அதுவும் மாற, வெவ்வேறு உச்சரிப்புகளுடன்கொண்ட தமிழ் பயன்படுத்தப்பட்டது.

    தெய்வங்கள் எப்படிக் காட்சி அளிப்பார்கள்?

    பரம பக்தர்களுக்குத்தான் இக்கேள்விக்குப் பதில் புலனாகும்.

    நம்மைப்போன்ற பாமரர்களுக்காக, தெய்வீகமான படங்களின் இயக்குனரின் கற்பனையால், உடை, ஆபரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டன. தெய்வங்கள் செந்தமிழில் உரையாட, நகைச்சுவைப் பாத்திரங்கள் தற்காலத்தமிழில் கொச்சையாகப் பேசுவார்கள்!

    ரசிகர்களும் இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்களின் கற்பனையை ஏற்றுக்கொண்டனர். அவ்வப்போது, விமரிசகர்கள் குறிப்பிட்ட குறைகளையும் நிவர்த்தி செய்தனர்.

    கதை

    நான் மேற்பயிற்சிக்காகப் போயிருந்தேன். நான்குவிதமான தலைப்புகள் முதலிலேயே கொடுக்கப்பட்டிருந்தன. விரிவுரையாளர்கள் அவற்றை ஒட்டிப் பாடம் நிகழ்த்தினார்கள்.

    அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி முடியும் தறுவாயில், நீண்ட கட்டுரை ஒன்று எழுதவேண்டும் – மலாய் மொழியில்.

    எங்கள் குழுவில் சீன ஆசிரியைகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் கற்றது, கற்பித்தது எல்லாமே சீன மொழியில்தான். ஓரளவு ஆங்கிலம் மட்டும் பேசுவார்கள்.

    மலாய் அறவே தெரியாது என்ற நிலையில், அவர்களுக்கெல்லாம் கட்டுரை எழுதித் தந்து சம்பாதித்தார் ஒருவர்! அவர்களது நிலை புரிந்து, எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை.

    கற்பனை இருந்திருக்கலாம். ஆனாலும், இவர்களால் படைக்க முடியவில்லை. ஏனெனில், மொழி தெரியாமல் போயிற்று.

    Share
  • கண்ணன் தீபாவளி – இசைச் சொற்பொழிவு

    கண்ணன் தீபாவளி – இசைச் சொற்பொழிவு

    நரகாசுரனைக் கண்ணன் வதம் செய்த நாளையே தீபாவளி எனக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், கண்ணனின் அருமை, பெருமைகளை இசைச் சொற்பொழிவாக வழங்கியுள்ளார், நாகி நாராயணன். இந்த அமர கீதங்களைக் கேட்டு, தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 39

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 39

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பேசாத வாய் பேசிய உவமங்கள்!

    முன்னுரை

    பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் உவமம் பற்றிய ஆய்வு உவம இயல், அகத்திணை இயல், பொருளியல் முதலியவற்றில் நிகழ்ந்திருப்பதால் உவமம் பொருட்பகுதியாகவே கருதப்படும் என்பது அறிஞர் கருத்து. அகத்திணைக் கூறுகளான உள்ளுறை, இறைச்சி ஆகியன உவமத்தின் நுண்ணியச் செறிவுகள் ஆதலின் உவமம் பெரும்பாலும் அகத்திணைப் பாடல்களிலேயே பயன்பட்டு வந்திருக்கக்கூடும் என்பது ஒரு வலுவான அனுமானம். தொடர்ந்து உவமங்கள் புறச்செய்திகளைக் கூறவும் பயன்படத் தொடங்கின என்பது இலக்கிய வரலாறு காட்டும் உண்மை. இதனையும் தொடர்ந்து பக்தியுணர்ச்சியை வெளிப்படுத்தவும் அது பயன்பட்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நீதிநெறிகளை விளக்கவும் பயன்பட்டு வந்திருக்கிறது என்பது திருக்குறள் தொடங்கிய நீதி நூல்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும். அந்த வகையில் சைவப்பெருந்தகை குமரகுருபரர் அவர்கள் பாடிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் பயின்றுள்ள சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    விறகுக்கும் ஆகாத நெடுமரம்

    ஒரு நூலை மங்கலத்தில் தொடங்கி மங்கலத்தில் நிறைவு செய்வது என்பது தமிழிலக்கிய நெடிய மரபின் ஒரு பகுதி. ‘உலகம்’ என்ற சொல் எந்தெந்த இலக்கியங்களில் தொடக்கமாக அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் அறிஞர்கள ஆய்ந்திருக்கிறார்கள். அதுபோலவே உவமத்திலேயே தொடங்கிய இலக்கியங்களையும் அடையாளம் காணமுடியும். ‘அகர முதல’ என உவமத்திலேயே இறைவனுக்கு உண்மை கூறினார் திருவள்ளுவர். ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு” என்பது திருமுருகாற்றுப்படையின் தொடக்கம்.  இன்னும் பல., உரைப்பின் பெருகும். இந்த மரபைக் குமரகுருபரரும்  இறைவணக்கத்திலேயே பின்பற்றுகிறார்.

    “நீரில் குமிழி இளமை., நிறைசெல்வம்
    நீரில் சுருட்டும் நெடுந்திரை – நீரில்
    எழுத்தாகும் யாக்கை நமரங்காள்! என்னே
    வழுத்தாத எம்பிரான் மன்று? “ (நீ.நெ.வி.4)

    நில்லாத இளமை நீர்க்குமிழிக்கு ஒப்பாகும். முக்காலத்தும் நிறைந்தாலும் செல்வம் காற்றால் மொத்துப்பட்டலையும் அலைகளுக்கு ஒப்பாகும். ஒப்பனையால் பொலிவு பெறும் உடம்பு நீர் மேல் எழுதப்படும் எழுத்துக்கு ஒப்பாகும். இவ்வளவு உண்மைகளை அறிந்திருந்தும் நிலையான இறைவனை அவன் நிற்கும் திருக்கோயில் சென்று வணங்காதது ஏன்? என்பதுதான் குமரகுருபரரின் வினா. இளமைக்கு நீர்க்குமிழியையும் செல்வத்திற்குத் திரைகளையும் அழியும் உடம்பிற்கு நீர் மேல் எழுத்தையும் கடவுள் வாழ்த்திலேயே கூறும் குமரகுருபரர், நூல் தொடக்கத்தில் உவமப் பயன்பாட்டிலும் உவமங்களிலும் மரபினையே பின்பற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.

    மலர் பொன்னானால் மணம் என்னாகும்?

    சில நூல்களில் பயின்றுள்ள சொற்களும் தொடர்களும்  உவமங்களும் உத்திகளும் நம்மையுமறியாமல் நம் ஆழ் மனத்துள் சென்று தங்கிவிடும். அவ்வாறு தங்கிவிடுவதுதான் அதன் சாயல், பின்னாலே வரும் படைப்புக்களில் வெளிப்படுத்தித் தலைக்காட்டுவதற்குக் காரணமாகும். இது நகலெடுப்பதன்று. தாயின் சாயல் பிள்ளைக்கு வருவது போன்றது. திருவள்ளுவர் சொல்லாற்றலைப் பற்றிச் சுருக்கமாகத் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்.

    “இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
    உணர விரித்துரை யாதார்” (கு.எண்.650)

    இந்தக் குறள் சொல்வன்மையின் சிறப்பினை எதிர்மறையால் கூறுகிறது. ‘பூங்கொத்தின் பயன் அதன் மணம்’ என வரையறுக்கிறது. மணம் இல்லாவிடின் பூங்கொத்துக்களினால் பயனில்லை என்பதைக் குறிப்பாகச் சொல்கிறது. இந்தச் சிந்தனையின் நீட்சியாக நீதிநெறி விளக்கத்தில் பின்வரும் பாடல் அமைந்திருப்பதாகக் கருதலாம்.

    “எத்தணைய ஆயினும் கல்வி இடனறிந்து
    உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் – உய்த்துண்ர்ந்தும்
    சொல்வன்மை இன்றெனின் என்னாம்? அஃதுண்டேல்
    பொன்மலர் நாற்றமுடைத்து” (நீ.நெ.வி. 5)

    திருவள்ளுவர் உவமத்தை எதிர்மறையாகக் கூறிப் பொருட்சிறப்பையும் அவ்வாறே பெறவைத்தார். குமரகுருபரர் பொருட்சிறப்பை எதிர்மறையாகக் கூறி உவமத்தின் சிறப்பை உடன்பாட்டில் பெற வைக்கும் நுண்ணியம் உணர்க. ‘மணக்காத பூவால் பயனில்லை’ என்பது வள்ளுவர் விளக்கம். உயர்த்துணர்வதும் உய்த்துணர வைப்பதும் இல்லாயின் கல்வியினால் பெருமையில்லை என்பது நீதிநெறி விளக்கம். ஆயினும் திருவள்ளுவர் உணர வைப்பதையே பொருளாகக் கொள்ள, குமரகுருபரர் உணர்வதையும் உணர வைப்பதையும் பொருளாகக் கொள்கிறார். கொண்டு உணரும் திறனை அதாவது ‘எண்பொருளவாகப்’ பிறர் சொல்லும் நுண்ணியங்களை உணரும் கற்றவனைப் பொன்மலரோடு ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடு திருக்குறளில் இல்லை. நாறா மலரைத்தான் திருக்குறள் காட்டுகிறது. பொன்மலரை நீதிநெறி விளக்கம் காட்டுகிறது. பூ மணம் பூமணமாகவே இருக்கும். ஆனால் பூ பொன்னாலானால் மணம் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணர முடியாது. காரணம் உவமம் இல்பொருள். இவ்வாறு இல்பொருளைக் குமரகுருபரர் உவமமாகக் சொன்னதற்குக் காரணம் அரியது நோக்கி. அதாவது உணர்வதும் அவ்வாறு உணர்ந்ததைப் பிறர்க்கு உணர்த்துவதும் அரிய செயல். எனவே அத்தகையோர் அரியர். எனவே இல்பொருள் உவமமாக்கப்பட்டுள்ளது.  மேலும் திருக்குறள் ஒரு பொருள் பற்றி ஆராய, நீதிநெறி விளக்கம் இருபொருள் பற்றி ஆராய்வது சிந்திக்கத்தக்கது.

    பிணம் விட்ட பெருமூச்சு!

    பிணம் பெருமூச்சு விடுமா? விடாது. கருத்து என்னவென்றால் பெருமூச்சு விடுவதனாலேயே அது உயிர்பெற்ற மனிதனாகிவிட முடியாது என்பதுதான். பெருமூச்சுவிடுவது அதன் இருப்புக்கு அடையாளம். அவ்வளவுதான். ஆற்றல் மிகு உரையாசிரியர் பரிமேலழகர் ஒரு சில குறட்பாக்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கவுரை எழுதியிருப்பார். அவற்றுள் ஒன்று,

    “ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவும்ஓர் நோய்” (கு.எண். 848)

    என்னும் குறட்பாவாகும். இதற்குப் “புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்;  அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்” எனப் பதசாரம் எழுதி,

    “உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருடல் தன்மைத்தாய் வேறுபடுதலின், ‘அவ்வுயிர்’ என்றும், அதனின் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் ‘போமளவும்’ என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் ‘ஓர் நோய்’ என்றும் கூறினார்”

    என்று விளக்கவுரை தருகிறார் பரிமேலழகர். ‘அவ்வுயிர்’ என்னும் சேய்மைச்சுட்டால் சுட்டியதும் ‘அவன் இருக்கும் வரை’ என்னாது ‘அது போகிறவரை’ என உயிரை அஃறிணையாக்கி உரைத்ததும் ‘போஒம்’ எனச் செய்யுளிசை அளபெடையை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்திக் கொண்டதுமான திருவள்ளுவரின் சதுரப்பாடு மிகவும் உயர்ந்ததாம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது இதனால் ஈர்க்கப்பட்ட குமரகுருபர சுவாமிகள்,

    “முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
    உடுப்ப உடுத்து உண்ப உண்ணா – இடித்திடித்துக்
    கட்டுரை கூறின் செவிகொளா! கண்விழியா!
    நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்” (நீ.நெ.வி.31)

    என்னும் ஒரு வெண்பாவை எழுதியிருக்கிறார். ‘நினைத்தவாறே ஒழுகித், தான் நினைக்கின்ற செயல்களையே செய்து முடித்துப், பூசுவன பூசி, உடுப்பன உடுத்து, உண்பனவற்றை உண்டு என்று தன்னிச்சையாகவே செயல்படும் ஒருவனுக்கு அவனிழைக்கும் தவறைப் பிறனொருவன் சுட்டிக்காட்டினால் செவி கேளாது. கண்ணும் குருடாகும். ஆதலின் அவன் பெருமூச்சுவிடும் பிணத்திற்கு ஒப்பாவான்” மேலே சுட்டிய திருக்குறள் மற்றும் நீதி நெறி வெண்பாக்களின் கருத்தொற்றுமையைக் கற்பார் எளிதில் புரிந்து கொள்ளலாம் எனினும் நடைப்பிணம் கிடைப்பிணமாகும் நாளை திருவள்ளுவர் எதிர்நோக்க, ‘பெருமூச்சும் நிற்காதா?’ என்று குமரகுருபரர் பெருமூச்சு இடுவதை உணரமுடிகிறது. தானாகவும் தெரியாது பிறர் சொல்வதைக் கேட்கவும் மறுதலித்துத் தனக்கும் உலகத்துக்கும் துன்பமாகித் திரிபவர்களுக்கான உவமம் இருபெரும் சான்றோர்களுக்குப் பெரும்பாலும் ஒத்திருப்பது வியப்பானதன்று!

    உடையார் முன் இல்லார்

    தமிழகத்தில் கல்வி பெறுவதில் இருவகை முறைகள் இருந்திருக்கலாம். குருவிற்குக் கொடுத்துப் பெறுவது. பிச்சையெடுத்தாகினும் கல்வி பெறுவது. இரண்டினையும் உறழ்ந்து நோக்கினால் குருவிற்குக் கொடுப்பதற்காகப் பிச்சையெடுப்பது நிகழ்ந்திருக்கக்கூடும். இரந்தும் உயிர் வாழ்தற்கு இது மாறானது. உயிர்வாழ்தற்குப் பிச்சையெடுப்பது இழுக்கு. கல்வி பெறுவதற்குப் பிச்சையெடுப்பது ஏற்புடையது என்பது பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை.

    “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”

    என்னும் புறநானூறும்,

    “கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே”

    எனக் கற்றலை அடுக்கில் கூறிப் பின்னரும் அனுவதித்த வெற்றி வேற்கையும் இத்தகைய எண்ணங்களையே ஏற்படுத்துகின்றன. ‘சிற்றுயிர்க்கு உற்ற துணையாதலின்’ கல்வியின் பெருமை இம்மை மட்டும் சார்ந்தது அன்று உயிரோடு சார்ந்தது’ என்பது பெறப்படும். படவே அது ‘எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பதும் புலப்படும். படுதலின் கல்லாமையின் இழிவையும் கல்வியின் பெருமையையும் பன்முக உத்திகளில் பாடும் நிலை சான்றோர்க்கு வந்திருக்கிறது என்றே எண்ண வேண்டியதிருக்கிறது. ‘கல்வியழகே அழியா அழகாதலின்’ அதன் சிறப்பு நோக்கி வலியுறுத்தும் போக்கினையே காண முடிகிறது. ‘உடைமை செல்வம்’ என்றால் ‘இன்மை வறுமை தானே! கல்வியைப் பெற்றவர்கள் கல்விச் செல்வத்தில் உயர்ந்தோர். கல்வியைப் பெறாதார் அது இல்லாமையின் வறியர். வறியர் செல்வரிடத்தில் இரப்பது இயல்பு. இதனைத்தான் திருவள்ளுவர்,

    “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
    கடையரே கல்லா தவர்.” (கு.எண்.395)

    என உவமமாக்கியுரைக்கிறார். இந்த உவமத்தால் கவரப்பட்ட குமரகுருபரர் திருவள்ளுவரின் பொருள் செயல்வகை என்னும் அதிகாரக்கருத்தினையும் ஒருசேரத் தழுவி எழுதுகிறார் இப்படி!

    “கல்வி யுடைமை பொருளுடைமை என்றிரண்டு
    செல்வமும் செல்வம் எனப்படும் – இல்லார்
    குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
    தலைவணங்கித் தாழப் பெறின்” (நீ.நெ.வி. 16)

    இந்த வெண்பாவில் கல்வியையும் செல்வத்தையும் செல்வம் என அடையாளப்படுத்தியதில் அவ்வளவாகச் சிறப்பில்லையெனினும் இரண்டு குறட்பாக்களை நினைவுபடுத்துகிறார் குமரகுருபர். திருவள்ளுவர் கல்வியைப் பெறுதற்குக்  காட்டிய உவமத்தைப் பொருளுக்கும் காட்டுவது புதிய உத்தி எனலாம். ‘குறையிரந்து தம் முன்னர் நிற்பபோல்’ என்பது திருவள்ளுவர் கல்வியிலார் அதனைப் பெறுதற்குச் செல்வர்க்கு முன்னால் நிற்கும் நிலையைக் காட்டிய உவமம். திருவள்ளுவர் மிக நுட்பமாக அந்தக் குறட்பாவில் செய்திருக்கும் பதிவு நேர்த்தியை ஒரு துறைக்குச் சொல்லப்பட்டது போல் காட்டப்பட்ட அந்த உவமத்தை இரு துறைக்கும் தெளிவாகக் காட்டிய குமரகுருபரர்,

    “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வந் தகைத்து” (கு.எண். 125)

    என்னும் குறட்பாவின் கருத்தையும் உள்வாங்கியிருப்பதோடு பொருத்தமாக இருக்குமானால் ஒரு பொருளை விளக்குதற்கான  உவமத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் உவமக் கோட்பாட்டையும் அறிமுகம் செய்திருக்கிறார் என்பதற்கும் சான்றாகத் திகழ்கிறது.

    சிந்திய பருக்கையால் செழித்திடும் உயிரினம்

    குருடர்கள் தடவிய யானையைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால்  முழுயானையைப் பாடிய கவிஞர்கள் கூட ஒரே மாதிரி நோக்கவில்லை என்பதையும் ஒரே புலவர் கூட யானையைப் பலவகையாக நோக்கியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது, திருக்குறளில் யானை பற்றிய குறட்பாக்கள் யானை, களிறு என்ற பெயர்களில் எட்டு இடங்களில் (24, 597, 678, 599, 758, 772, 774, 1087) கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த எட்டு இடங்களிலும் திருவள்ளுவரின் பார்வை மிக நுண்ணிய வேறுபாடுகளை உடையதாக அமைந்திருக்கிறது. விரிப்பின் பெருகும். எனினும் 597, 678, 599 ஆகிய மூன்று குறட்பாக்களிலும் அது உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடங்களிலெல்லாம் யானையின் பெருமிதத்தையும் வீரத்தையும் சுட்டுகின்றனவாகவே உள்ளன. ஆனால் புறநானூற்றுப் பாடல் ஒன்று யானைக்கு முறையாக இடப்படும் உணவுக் கவளத்தைக் காட்டி அதன் உண்ணும் முறையை உவமமாக்கியிருக்கிறது.

    “காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
    மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;
    நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
    வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
    அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
    கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
    மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
    யானை புக்க புலம்போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே!” (புறம். 184)

    இந்தப் பாட்டில் யானை நேரடியாக உவமமாகக் கூறப்படவில்லை.   யானையை எப்படிக் கையாள வேண்டும் என்பதையே உவமமாக்கி அதனால் அரசன் செய்ய வேண்டிய ஆட்சிமுறைமையை விளக்குகிறார் புலவர் பிசிராந்தையார். முறையாக அளிக்கப்படுமாயின் யானை ஒழுங்காக உண்ணும். கட்டவிழ்த்துவிட்டால் கழனியும் பாழாகும். ஒட்டுமொத்த உலகமும் அழியும் என்பது கருத்து. இந்தப் பாட்டில் முறையாகக் கொடுக்கப்படும் கவளத்தை அது உண்கையில் சிதறும் பருக்கைகளைப் பற்றிய சிந்தனை குமரகுருபரருக்கு வந்திருக்கிறது. அவர் எழுதுகிறார்,

    “வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்தப்பின்
    தூங்கும் களிறோ துயர் உறா – ஆங்கதுகொண்டு
    ஊரும் எறும்பிங்கு ஒரு கோடி உய்யுமால்
    ஆரும் கிளையோடு அயின்று” (நீ.நெ.வி. 38)

    யானையின் ஒரு சிறு செயலைச் சித்திரிக்கும் இப்பாடல் முழுவதையும் ‘பிறிது மொழிதல்’ என்னும் அணி உத்தியால் அலங்கரித்த குமரகுருபரர், ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதைக் குறிப்பாகப் பெறவைக்கிறார். விலங்குகளின் உறவுகளுக்குக் ‘கிளை’ என்பது தொல்காப்பியச் சுட்டெனினும் இலக்கியங்களில் அவ்வளவாகப் பயின்று வருவதில்லை. ‘கல்லென் சுற்றம்’ என்பதுதான் புறநானூற்றின் பொருண்மைத் தொடர்.  ஆனால் ‘யானையின் கிளையும் அயிறும்’ என்ற தொடராட்சியால்  செல்வர்களின் சிறு செல்வம் அதனைப் பெறுவாருக்கும் பெறுவார்தம் சுற்றத்தார்க்கும் (கிளைக்கும்) பயனாகும் (சுற்றத்தோர்க்கும் தொடர்புறு கிளைஞர்க்கும்’ — சிலப்பதிகாரம்) என்பதைக் குறிப்பாகப் பெற வைக்கும் சுவாமிகளின் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது. உவமம் ஒன்றானாலும் அதன் பன்முகப் பரிமாணத்தை உற்று நோக்கிப் பல பொருண்மைகளை விளக்கலாம் என்பதும் தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடாக அமைந்துள்ளது என்பதை இதனால் புரிந்து கொள்ள இயலும்.

    நிறைவுரை

    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகளால் சில ஆழமான உவமக் கோட்பாடுகளை வரையறுக்க முடியும். முன்னோர்கள் சொன்னதெல்லாம் பழைமை என்பதற்காகத் தள்ளிவிட வேண்டியதில்லை. குறிப்பிட்ட பொருண்மைக்குச் சொல்லப்பட்ட உவமமே  மிகப் பொருத்தமானது என்று கருதினால் பின்வருவோர் அதனையே உவமமாகக் கொள்வதில் தயக்கம்  காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஒரு வழியாக நோக்கப்பட்ட அந்த உவமத்தைத் தம் நுழைபுலம் காரணமாகப் பன்முகமாக நோக்கிப் புதிய பொருண்மைகளை விளக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘பரியது கூர்ங்கோட்டது’ என யானையைச் சிறப்பித்தாலும் புலிக்கு அஞ்சும் அதனை எதிர்மறையாகத் திருவள்ளுவர் நோக்கியிருப்பதும் பல இடங்களில் அதன் பெருமிதத்தைப் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருப்பதும் ஒரே உவமத்தின் பன்முகப் பரிமாணமும் உவமமாகலாம் என்பதைக் காட்டுகிறது. செய்யுளுக்குப் புறம்பாக நிற்கும் அணியிலக்கணத்தைச் செய்யுளுக்கு அகமாகவும் ஆக்க முடியும் என்பதற்குக் குமரகுருபரின் உவமங்கள் சான்றாகி நிற்கின்றன.

    (தொடரும்…)

    Share
  • ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி!

    ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    இருளகன்று ஒளிபரவ இறைவனிடம் வேண்டிடுவோம்
    இடரகன்று இனிமைவர இறைவனிடம் வேண்டிடுவோம்
    புவிமலர்ந்து வாசம்வர புனிதனிடம் வேண்டிடுவோம்
    புத்துணர்வு நிறைந்துவர நித்தமுமே வேண்டிடுவோம்

    மத்தாப்பு பட்டாசு மனமதிலே வருகிறது
    தித்திக்கும் பட்சணமோ தினமுமே தெரிகிறது
    மொத்தமுள்ள உறவுகளில் முகமலர்ச்சி வருவதற்கு
    தித்திக்கத் தீபாவளி வரவெண்ணி வேண்டிடுவோம்

    முடங்கியே இருந்திட்டோம் முகம்பாராது இருந்திட்டோம்
    பயணவழி அத்தனையும் பார்க்காமல் இருந்திட்டோம்
    விருந்துண்ணல் தவிர்த்திட்டோம் விமானத்தை மறந்திட்டோம்
    மனந்திரும்ப தீபாவளி மலர்ந்திடவே வேண்டிடுவோம்

    முகமூடி வாழ்க்கையினை முழுவுலகும் பார்த்ததுவே
    அகம்முழுக்க ஆசைகளை அடக்கியே வைத்தோமே
    ஆரவாரம் அத்தனையும் அடங்கியே நின்றதுவே
    ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி

    அருகிருந்தும் ஆலயத்தை அணுகவே முடியவில்லை
    ஆறுதலாய் வெளிசென்று அளவளாவ முடியவில்லை
    கலைநிகழ்ச்சி களியாட்டம் காணாமல் ஓடியதே
    களிப்புதனைக் கையேந்தி வந்திடட்டும் தீபாவளி

    பழையபடி கடைத்தெருவில் பட்டுக்கள் வாங்கவேண்டும்
    பலவகையில் பட்சணங்கள் வாங்கியே உண்ணவேண்டும்
    பக்குவமாய் கையணைத்து பலருமே மகிழவேண்டும்
    பார்சிறக்க மனம்சிரிக்க மலரட்டும் தீபாவளி

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 148 (மனம் தளரும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 148 (மனம் தளரும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மானக்கஞ்சாறர் அளித்த கூந்தலை  வாங்குவர் போல நின்ற அடியார் அங்கேயே மறைந்து, ஆகாயத்தில்  மலைமகள் உமையம்மையுடன் இடப வாகனத்தின் மேல் இறைவனாக எழுந்தருளினார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிய  இவரும் வீழ்ந்து வணங்கினார்.

    அவ்வாறு வணங்கிய அன்பரிடம், நிலவைத் தாங்கிய சடையுடைய  இறைவன் ‘’ நம்பால்  உனக்கிருந்த பேரன்பை உலகறியச் செய்தேன்!’’ என்று அருளினார். இடப வாகனத்தின் மேல் எழுந்தருளிய இறைவரின் கணங்களின் நாதர் போற்ற, வானவர் வந்து சேர, அவர்கள் முன்னே உச்சியில் குவித்த கரங்களுடன் நேராகவே இறைவனருளைப் பெற்றார்.

    உடனே வானவர் வணங்க கொன்றைமலரணிந்த சடையுடைய இறைவன் கைலை சென்றார். அப்போது வண்டுகள் மொய்க்கும் மலர்க்கூந்தலை உடைய மணமகள் கரம்பற்ற, கலிக்காமனார் வந்தார். அங்கே நிகழ்ந்த இறைவனருட் செயலைக் கேள்வியுற்று, மனம் மகிழ்ந்தார், தாம் அப்பேறு பெற வில்லையே என்ற மனத்தளர்வு  நீங்க, இறைவன் அருளால் மீண்டும் கூந்தலைப் பெற்ற மணமகளைத் திருமணம் புரிந்து கொண்டு அந்தணர்க்குப்  பொருள்  தானம் செய்து திருமணத்தை ஊரினர் அனைவரும் சிறப்படைய தம் இனம் வளர , தம்முடைய நகர் நோக்கிச் சென்றார்.

    மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால்
    புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து,
    தனம் பொழிந்து பெரு வதுவை உலகெலாம் தலை சிறப்ப
    இனம் பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார்.

    இவ்வாறு  தம் ஒரே மகளின் கூந்தலைத் திருமண நாளன்றே இறைவனுக்கு அளித்த  அடியாரின் பெருமையைப் போற்றுதல் தம்மளவில் இயலாது என்றார் சேக்கிழார்.

    பொருள்

    மனம் தளரும் இடர் நீங்கி என்ற தொடர், மனந்தளர்ந்ததனால் உண்டாகிய துன்பம் நீங்கியவராய், தேவதேவருடைய திருவருளினால் முன் புனைந்திருந்த வண்ணமே மலர்களணிந்த கூந்தலினை வளரப்பெற்ற பூங்கொடி போன்ற மணமகளாரை மணஞ்செய்து;  நிதிகளையாவர்க்கும் மிகக் கொடுத்துப் பெருங்கல்யாண மகிழ்ச்சி உலகெங்கும் ஒங்கிச் சிறக்கச் செய்து;சுற்றத்தார்கூடிப் பெருக நிறையத் தமது மதில் சூழ்ந்த பழவூரினைச் சென்று சேர்ந்தனர்.

    விளக்கம்

    தேவ தேவராதலின் ஆக்குதல், அழித்தல் முதலிய எல்லாம் வல்லவர்; அவரது அருள், களையப்பட்ட கூந்தலை முன் இருந்தவாறே மீள வளரச் செய்தது புனைந்தமலர்க்குழல் – மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் என முன் அரிந்தெடுக்கப் பட்டவாறே மீளவும் உளதாயினமை குறித்தார். சிறுத்தொண்டநாயனார் சரிதத்தில் சமைத்து இலையிற் படைத்த கறி,மீளப் பாலகனாக வரத் திருவருள் செய்ததென்றால், வளருந் தன்மைத்தாய குழல் விரைவில் வளர்ந்த இது ஓர் அற்புதமன்றே! மலர்க்குழல் பெற்ற என்ற இக்குறிப்பினைக் கொண்டு, கலிக்காமனார் குழல் களையப்பட்ட பெண்ணை எவ்வாறு மணப்பதென்று மனந்தளர்ந்தனர் என்பார் சிலர். அருணிகழ்ச்சி காணும்பேறு பெறவில்லை எனச் சிந்தை தளர்ந்தனராதலின் கலிக்காமனார் காணும்படி புனைந்த மலர்க்குழல் பெறத் தரும் இவ்வருள் வெளிப்பாட்டினை இறைவர் செய்தருளினர் என்க.

    புனைந்தமலர்க்குழல் – அரியும்முன், தேனக்க மலர்க்கூந்தல், மலர்க்கூந்தல் என்றும், மீளக்குழல் வளர்ந்தபின், இங்குப் புனைந்தமலர்க்குழல் என்றும் கூறிய ஆசிரியர் இடையில், அடியில் அரிந்தெடுக்கப்பட்ட நிலையில், வண்டுவார்குழல் என்று வாளா கூறிய நயம் சிந்திக்க.

    தனம் பொழிந்து – கல்யாணத்தில் மணமகன் வீட்டார் தமது இயல்புக்கேற்றபடி இரவலர் முதலியோர்க்கு ஈகையிற் சிறத்தல் இயல்பு. அரசர் சேனாபதி குடியில் வந்த ஏயர்கோனார் தம் நிலைமைக்கேற்றவாறும், அவ்வாறே அரசர் சேனாபதிக்குடியில் வந்தவராய்த் திருவருள் பெற்றுப் போந்த மானக்கஞ்சாறனாரது பெருமைக்கும் புனைந்த மலர்க்குழல் மீளப்பெற்ற மகளாரது பெருமைக்கும் ஏற்றவாறும், இருவர்க்கும் இடையாடிச் செய்த சிவபெருமானது திருவருட் சிறப்பினுக்கேற்றவாறும் தனம் பொழிந்தனர் என்க. இதனால் அது பெருவதுவையாகி உலகெலாம் தலைசிறக்க ஓங்கி விளங்கிற்று என்பதாம். தலைசிறத்தலாவது – புகழ் மேம்படப் பாராட்டப்பெறுதல்.

    இனம்பெருக – மணத்தின் பின்னர் இருபாலின் இனத்தவர்களும் ஒருங்கு கூடிச் செய்தலாலும், கலிக்காமனாருடன் தம் சால்புநிறை சுற்றம் தலைநிறையக்  கூடி வர, அவர்களோடு மானக்கஞ்சாறனாரது நீள்சுற்ற மெலாம் ஒப்பரிய இப்பெருவதுவையினாற் பிணைக்கப்பட்டு ஒன்று கூடுதலாலும், முன் வந்ததனைவிட மிகப் பெருங்கூட்டமாதலின் இனம்பெருக என்று தேற்றம் பெற எடுத்துக் கூறினார்.இனிச் சிவனடியார் இனம் வளர என்றும் நுட்பப்பொருள் காணலாம்.

    தம்முடைய எயில்மூதூர் – இது திருப்பெருமங்கலம்என்பதாம்.  இவ்வூர் ஏயர்கோன்  கலிக்காம நாயனார் புராணத்தில் விளக்கப் பெறும்.   இவ்வூர் திருப்புன்கூருக்கு வடக்கில் ஒரு நாழிகையளவில் மட்சாலையில்,உள்ளது. திருக்கோயிலும் அதில் ஏயர்கோனாரது திருவுருவமும் உண்டு. சைவர் பூசை. நாயனாரது உற்சவம் கொண்டாடுகின்றனர். பன்னிருவேலி என்ற கிராமமும் உண்டு. தலச்சிறப்பும் பிறவும் விரிவாய் ஏயர்கோனார் புராணத்திற் கண்டு கொள்க.

    Share