Blog

  • (என்னைக்) கொல்ல நினைக்கும் எவனோ ஒருவனுக்கு..

    மாதவன் இளங்கோ

    எவனோ ஒருவன் என்னை கொலை செய்ய ஏங்குகிறான்!

    ஏழை செல்வந்தனாக ஏங்குவது போல

    செல்வந்தன் மேலும் செல்வந்தனாக ஏங்குவது போல

    எழுத்தாளன் அங்கீகாரத்திற்கு ஏங்குவது போல

    குழந்தைகள் பொம்மைகளுக்கு ஏங்குவது போல

    சிங்கம் மானுக்கு ஏங்குவது போல

    அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான்!

    ஏக்கம் மட்டுமல்ல; துடிக்கிறான்!

    சிந்திக்கிறான்; திட்டமிடுகிறான்;

    அத்தனையும் ஒளிந்துகொண்டே செய்கிறான்!

    evano oruvan

     

    அவனுக்கு என்னை தெரியாது

    எனக்கும் அவனைத் தெரியாது

    இருப்பினும் அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான்!

    இன்னும் சொல்லப்போனால்,

    அவன் கொன்றுவிடத் துடிக்கும் மனிதர்களின் பட்டியலில்

    நான் இருப்பது கூட

    அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

     

    அவன் என்னை தாராளாமாகக் கொல்லலாம்!

    அதற்கான உரிமையை நான் அவனுக்குத் தருகிறேன்

    எனினும் அவனுக்கு நான் சொல்வதற்கென்று

    சில விஷயங்கள் இருக்கின்றன:

     

    “என்னைக் கொன்றுவிடத் துடிக்கும் எவனோ ஒருவனே,

    நீ என்னை தாராளமாகக் கொல்லலாம்!

    அதற்கான உரிமையை நானுனக்குத் தருகிறேன்!

    எனக்குத் தெரியும் –

    நீ என் இசைவிற்கோ

    நீ என் அனுமதிக்கோ

    காத்திருக்காதவன்!

    அதுபற்றி உனக்குக் கவலையுமில்லை!

    ஆயினும் நான் உன்னை அனுமதிப்பதன் மூலம்

    உன் வேலை சுலபமாகும் என்பதை

    நீ நிச்சயம் மறுக்கமாட்டாய்!

     

    இன்னொன்று –

    நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம்!

    பல வழிகளில்..

    பல இடங்களில்..

    எந்த வழி, எந்த இடம்

    என்பது உன் விருப்பம்.

     

    என் ரயில் பிரயாணத்தில்

    நான் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் போது

    குண்டு வைத்துக் கொல்லலாம்!

     

    நான் பயணிக்கும் விமானத்தை

    எங்கோ கடத்திக் கொண்டுபோய்

    இடித்துக் கொல்லலாம்!

     

    நான் ஒரு பேரங்காடியில்

    என் மகளுக்கு பொம்மை வாங்கிக்கொண்டிருக்கும் போது

    சுட்டுக் கொல்லலாம்!

     

    இன்னும் எத்தனையோ வழிகளிலும் கொல்லலாம்!

    அதுபற்றி உனக்கு நான் சொல்லியா தெரியவேண்டும்?

     

    உனக்கு மற்றொன்றையும் கூற ஆசைப்படுகிறேன் –

    நீ கொல்வதற்கு முன்

    தயவுசெய்து, என்னை அறிந்துகொள்!

    உன் பட்டியலில்

    நான் இருப்பதை தெரிந்துகொள்!

    என்னைக் கொல்வதற்கான

    காரணங்களை வைத்துக்கொள்!

    அறிந்து கொல்!

    தெரிந்து கொல்!

    காரணங்களை வைத்துக் கொல்!

    துருவ கரடிக்குக் கூட

    அதன் குட்டிகளைக் கொன்று

    தின்றுவிட வேண்டியதன்

    காரணமிருக்கிறது;

    அவசியமிருக்கிறது!

    உனக்கு என்மீது தனிப்பட்ட முறையில்

    எந்தவித பிரச்சினையுமில்லை!

    அதை நானறிவேன். நீயுமறிவாய்.

    நீயும் நானும் தான் சந்தித்ததே கிடையாதே!

    அதனால் என்னைக் கொல்ல

    எந்தக் காரணமும் உன்னிடம் இருக்காது!

    ஆனால் நான் கேட்பதெல்லாம்

    அந்தக் காரணம் ஒன்று மட்டும் தான்!

    அரசாங்கம், முதலாளித்துவம்

    மதம், சாதி என்பது போன்ற

    பொதுவான காரணங்கள் எனக்கு வேண்டாம்!

    நீ என்னை கொல்ல விழைவதற்கான

    தனிப்பட்ட காரணம் என்ன?

    சொல்; பின் கொல்!

     

    உன்னிடம் அதற்கான காரணங்களே இல்லையென்றாலும்

    நீ என்னை கொல்ல இன்னொரு வழி இருக்கிறது. 

    உண்மையில் இதைவிட எளிதானதொரு வழியை

    உன் குருநாதர்கள் கூட உனக்கு

    கற்றுக் கொடுத்திருக்கமாட்டார்கள்!

    உண்மையில் இந்த வழியில்

    ‘நீ கொலையே செய்யப்போவதில்லை!’

    ஆனால் நீ நினைப்பது நிறைவேறும்!

    ஆச்சர்யமாக இருக்கிறதா?

    தொடர்ந்து வாசி.  

     

    முதலில் நான் உன் பட்டியலில் இருக்கிறேன்

    என்பதை உறுதிபடுத்திக் கொள்!

    என்பற்றிய தகவல்களைச் சேகரி –

    நான் ஏற்கனவே கூறியது போல்

    என்னைத் தெரிந்து கொள்!

    எனக்கு ஒரு நாற்பது வருடங்கள் கொடு!

    கோபப்படாதே! சொல்வதைக் கேள்!

     

    அந்த நாற்பது வருடங்கள்,

    நீ என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ

    பின்தொடர்வது உன் விருப்பம்!

    பின்தொடர்வது சிரமமாக இருந்தால்

    என்னுடன் நீ (என் காரில் கூட) பயணிக்கலாம்

    என் இல்லத்திற்கு வந்து என் குடும்பத்துடன் உணவருந்தலாம்

    நீ எங்களில் ஒருவனாகக் கூட ஆகலாம்!

    அத்தனையும் சாத்தியம்!

    ஆனால் உன் குறிக்கோளில் இருந்து

    நீ பின்வாங்க வேண்டியதில்லை!

     

    உனக்கு என்னை பின்தொடர விருப்பமில்லையெனில்

    நான் கூறிய நாற்பது வருடங்கள் கழித்து

    என்னை வந்து சந்தி!  

    பெரும்பாலும் நான் இறந்திருப்பேன்!

    பெரும்பாலும் நீ கூட இறந்திருப்பாய்!

    நீ அதிர்ஷ்டக்காரனாயிருந்தால்,

    இருபது ஆண்டுகளிலேயே கூட

    என்னைப் பற்றிய அந்த நற்செய்தி

    உன்னை வந்தடைய வாய்ப்பிருக்கிறது!

    அவ்வளவு ஏன்,

    நீ இதை வாசித்துக்கொண்டே இருக்கும்போது கூட

    வந்தடைய வாய்ப்பிருக்கிறது!

    நீ உன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே

    நான் இறப்பதை காணும் வாய்ப்பு

    உனக்கு கிட்டும்!

    அதனால் தான் கூறினேன் –

    இந்த வழியில்,

    நீ கொலையே செய்யப்போவதில்லை என்று!

    ஆயினும் உன் எண்ணம் நிறைவேறும்!

    நிறைவேறாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை!

     

    உனக்கு இன்னொன்று தெரியுமா?

    உன் பட்டியலில் இருக்கும்

    பெரும்பாலோனோருக்கு

    நீ கொல்லும் போது

    உண்டாகும் வலியைவிட –

    ‘வலிமிகுந்தது அவர்களின் வாழ்க்கை!’

     

    எனவே தான் சொல்கிறேன் –

    உன் கொலைத்தொழிலை

    காலத்தின் கையில் கொடுத்துவிடு!

     

    இப்படிக்கு, 

    நீ கொல்லத் துடிக்கும் ஒரு சாமானியன்.

    Share
  • கண் திறந்தது

    கே.எஸ்.சுதாகர்.

    ஜய வருடம் பிறந்தது. சிவா – விஷ்ணு கோவிலுக்குச் சென்றோம். சுவாமி கும்பிட்டு அருச்சனை செய்து வெளியே வர மணி பன்னிரண்டரை ஆகிவிட்டது.

    அன்னதானத்திற்கு ’ கோவில்’ மண்டபத்தைச் சுற்றி பெரிய வரிசை காத்திருந்தது. சின்னஞ்சிறிசுகள் முதல் முதியோர்கள் வரை நிரையில் நின்றார்கள். நாங்களும் அந்த வரிசையில் இணைந்து கொண்டோம். வரிசை மெதுவாக ஊர்ந்தது. பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் கோடை வெய்யில். அனல் காற்று அடித்தது. எங்களுக்கு முன்னால் மெல்பேர்னின் பிரபல வைத்தியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் குடை ஒன்றின் கீழ்.

    ’கன்ரீனிலை காசு குடுத்துச் சாப்பிடலாம்” சொல்லியபடி ஒருசிலர் வரிசையிலிருந்து விலகிச் சென்றார்கள்.

    வைத்தியரும் வர்த்தகரும் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். வரிசையில் உள்ளவர்களிடம் காசு இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல. வருடப்பிறப்பு தினத்தில் கோயிலில் சாப்பிடவேண்டும் என்று ஒரு இறை உணர்வுதான்.

    “நீங்கள் சுவாமியைச் சந்திக்கவா இதிலை நிற்கின்றீர்கள்?” என ஒருவர் வந்து திடீரென்று என்னைக் கேட்டார். அருகே நின்றவர்கள் உதட்டிற்குள் சிரித்தார்கள். என்ன கேட்கின்றார்? சுவாமியைச் சந்திக்கவா? ஒருவாறு ஊகித்து ‘இல்லை. இது அன்னதானத்திற்கான கியூ’ என்றேன்.

    எங்களுக்குப் பின்னால் ஒரு பெண் தன் சுட்டிப்பையனுடன் நின்றாள். அவர்களுக்கும் பின்னால் ஆறேழு வயது மதிக்கத்தக்க மூன்று வாண்டுகள். உனக்கு என்ன வயது? என்றான் ஒரு சிறுவன்
    – பத்து வயது என்றான் அவன்.
    – பத்து வயது மாதிரித் தெரியேல்லையே!
    – ஏன் பத்து வயது ஆள் குட்டியாக இருக்கக்கூடாதோ?
    – இண்டைக்கு இரவு கோயிலிலை தேர் ஓடும்
    – தேர் எண்டா என்ன?
    – உனக்கு இன்னும் தேர் தெரியாதா?
    அவர்களின் கலகலப்பான உரையாடலிலும் வேடிக்கைகளிலும் வரிசை நகர்ந்தது தெரியவில்லை.

    சுட்டிப்பையன் வரிசையை விட்டு வெளியே போய் விளையாடுவதும் பின்னர் அம்மாவுடன் சேர்வதுமாக இருந்தான். அந்தப்பெண் எங்களைப் பார்த்து புன்முறுவல் செய்தாள். அதில் ஒரு சோகம் கலந்திருந்தது. ’அவளை முன்பு எங்கேயோ பார்த்திருக்கிறேன்’ மனம் சொன்னது.
    அந்தப் பெண்ணிற்கு ஒரு ரெலிபோன் வந்தது.
    “கோயிலில் தான் நிற்கின்றேன்” அவளின் முகம் கறுத்தது. பரபரபுடன் அங்கும் இங்கும் பார்த்தாள்.

    நான் எதிர்பார்க்காத நேரத்தில் அந்தச்சிறுபையன் வந்து என் கால்களைக் கட்டிப் பிடித்தான். வாஞ்சையுடன் கால்களைப்பற்றியபடி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடினான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனைவி என்னைப் பார்த்தாள்.

    “உன்னைத் தூக்க வேணுமா… வா” என்று சொல்லிக் கொண்டே அந்தப்பெண் அவனை என்னிடமிருந்து விடுவித்துத் தூக்கிக் கொண்டாள்.

    அன்னதானம் குடுக்குமிடம் நெருங்கிவிட்டோம். நான்கு மனிதர்களின் இடைவெளி தூரம். அந்தச் சிறுபையன் அன்னதானம் குடுக்குமிடத்திற்கு முன்பாக நின்று அன்னதானம் குடுப்பவர்களைப் பார்த்தபடி நின்றான். அவனுக்குப் பசியை அடக்க முடியவில்லை.

    அப்பொழுதுதான் அவன் வந்தான். கிழிந்த சட்டை, அழுக்கான ஜீன்ஸ், கலைந்த கேசம். அந்தப் பெண்ணிடம் நெருங்கி ஏதோ கதைத்தான். அவள் வாயிற்குள் முணுமுணுத்தாள். அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டான். எல்லாரும் திகைத்துப் போனோம். அவளை வரிசையிலிருந்தும் கரகரவென்று இழுத்துப் போனான். பையன் அம்மாவின் சட்டையைப் பற்றியபடி நிலத்துடன் இழுபட்டுக் கொண்டிருந்தான்.

    எல்லாரும் அந்தக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது. மேடும் பள்ளமுமான அந்த நிலத்தில் கால் இடறுப்பட்டு அவன் விழுந்தான். விழுந்தவன் பின்னர் எழுந்திருக்கவில்லை. அந்தப்பெண் ‘ஹெல்ப் ஹெல்ப்’ என்று கத்தினாள்.

    சிலர் ஓடிச்சென்று அவனைத் தூக்கினார்கள். கோவில் மண்டபத்திற்கு முன்னால் இருந்த, சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு அவனைத் தூக்கிச் சென்றார்கள். அங்கேயிருந்த வாங்கொன்றின்மீது அவனைப் படுக்க வைத்தார்கள். அங்கு நின்றவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

    நானும் மனைவியும் அங்கே போனபோது அவனுக்கு யாரோ நீர் பருக்கிக் கொண்டு நின்றார்கள். அவனின் மனைவி கொப்பி ஒன்றினால் அவனிற்கு விசுக்கிக் கொண்டு நின்றாள். அவளின் அருகே எங்கள் நண்பரும் அவரின் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் கூட்டத்திலிருந்து வெளியே வந்தாள் நண்பரின் மனைவி.
    “யார் இவர்கள்?” என்றாள் என் மனைவி.
    “எங்கள் வீட்டு பேர்த்டே பார்டிகளில் அந்தப்பெண்ணைக் கண்டிருப்பீர்களே! அவன் ஒரு குடிகாரன். வேலைக்கும் ஒழுங்காகப் போவதில்லை. மனைவியையும் ஒரு இடத்திற்கும் கூட்டிச் செல்வதில்லை. எந்த நேரமும் அவளுக்கும் பிள்ளைக்கும் அடித்தபடி இருப்பான்.”

    “பேசாமல் டிவோர்ஸ் செய்திட்டுப் போறதுதானே!” என்றேன் நான்.

    “அவள் ஒரு கிறாட்யுவட். அவளுக்குக் கீழை இரண்டு தங்கைச்சிமார் கலியாணம் செய்யாமல் யாழ்ப்பாணத்திலை இருக்கினம். அதுதான் பொறுமையா இருக்கிறாள். பிறகு எல்லாம் வடிவாச் சொல்லுறனே!” சொல்லிவிட்டு கூட்டத்தை விலத்தியபடி உள்ளே சென்றாள்.

    உள்ளே அந்த மனிதன் வாங்கிலே எழுந்திருந்தான். அவன் நெற்றியில் விபூதி சந்தணம். காதிலே பூ. அவனுக்கு கோயில் அன்னதானத்தை ஊட்டிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. சிறுபையன் அவன் மடிமீது இருந்தான். அவன் மலங்க மலங்க சுற்றுமுற்றும் உள்ளவர்களைப் பார்த்தான்.

    அவனின் ‘கண் திறந்தது’.

     

     படம் உதவி: http://www.chandigarhtamilsangam.in/Karthik_Mandir/Photos/2012-kumbhabhisegam/Annadhanam/1.JPG

    Share
  • பூமரம்

     

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)
    அடுக்குமாடிimages
    கட்டடத்தின் கீழேதான்
    அந்த இடம்

    அமைதியைத்தரும்
    அந்த இடத்தில்
    கவிதையைத்தேடித்தான்
    தினமும் வருகிறேன்

    முதியோர் அமரும்
    மூலையிலிருந்து
    படித்துவிட்டுத்திரும்புவது
    வழக்கம்

    உடற்பயிற்சிக்காக
    முதியவர்கள் வந்து
    பேசாமலிருப்பதும்
    பேசிக்கழிப்பதும் வழக்கம்

    வீட்டிலே வேலையே
    இல்லாமல்
    உடம்பைக்கனக்கவிட்டவர்கள்
    கண்டிப்பாக வந்து
    அங்கேயிருக்கும்
    உடற்பயிற்சிக்கருவிகளோடு
    உரையாடுவதும் வழக்கம்

    வழக்கத்திற்குமாறாக
    மஞ்சள்பூக்களை
    உதிர்த்துவிட்டு நின்றது
    மரம்

    அழகின்வியப்பில்
    தேடிக்கொண்டேவந்தேன்
    என்னையே தோண்டினேன்

    பூக்களைச்
    சிரிப்பாகக்கருதினேன்

    சிரிப்பை உதிர்த்துவிட்டமனிதனை எண்ணினேன்

    சிரிப்பை உதிர்த்துவிட்டு
    நிற்கிறது வெறும்மரம்

    வெறும் மரமா?
    வெறும் மனிதனா?

    நாளைக்கும் யோசிக்கலாமே
    என
    விடுதலையடைந்தேன்
    (21.1.2014 பிற்பகல் 1.30க்கு எழுதியது)

    Share
  • சிறுகை அளாவிய கூழ் (20)

    இவள் பாரதி

     
    ஏதேதோ காரணங்களால்unnamed
    அவசரப்பட்டு அடித்துவிட்டு
    துடித்துக் கொண்டிருக்கிறேன்
    ஒவ்வொருமுறையும்

    அடித்த மறுநொடி
    மடிநோக்கி வரும் குழந்தையை
    முத்தமிட்டுக் கொஞ்சும்போதெல்லாம்
    குற்ற உணர்வில் குமைகிறேன்

    இயற்கையே வரம் தருவாய்
    அத்தனை துயரிலிருந்தும் விடுபட்டு
    நானுமொரு குழந்தையாய் மாற

    ——————–

    எந்தக் காதல் பாடல்களைக் கேட்டாலும்
    எங்கே காதல் கவிதைகளைப் படித்தாலும்
    உனக்காக நான் பாடுவதைப் போலவும்
    உனக்காக நான் எழுதுவதைப் போலவும்
    நினைத்துக் கொள்கிறதென் தாய் மனம்

    கவிதையோ
    பாடலோ
    எழுதப்பட்ட வரிகள்
    எல்லாம் உன்னையே பிரதிபலிக்கின்றன

    எழுதப்படாத கவிதைகளும்
    பாடப்பெறாத பாடல்களும்
    எங்கெங்கோ தேடுகின்றன
    இளைப்பாறுவதற்கும்
    நிலைபேறு பெறுவதற்குமான இடமொன்றை

    உன்னையவை கண்டடையும்
    சிறுபொழுதுகளில்
    மழை இசைக்கும் தனது பாடலொன்றை
    நிலவு எழுதும் தனது கவிதையொன்றை

    ———————-

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 118

     

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை
    இடப்பக்கத்துச் செல்லும் வழி

     

    அந்த வலப்பக்கம் செல்லாதுunnamed
    இடப்பக்கம் செல்வீராயின் அங்கே
    செவ்வழிப் பண் இசைத்துச் சத்தமிடும்
    சிறகுள்ள வண்டுகள் திரிகின்ற
    குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலை,
    தாழ்ந்த வயல்கள், குளங்கள்
    இவற்றைக் கடந்து,
    கடப்பதற்கு அரியனவாக இருக்கும்
    வழிகளையுடைய காட்டுப் பகுதியைக் கடந்து
    அழகர் மலை சென்று சேர்வீர்கள்.

    அங்கு, பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும்
    மயக்கத்தைப் போக்க வல்ல குகை ஒன்றுண்டு.
    அங்கு, தேவர்களால் புகழ்ந்து போற்றப்படும்
    மிக்க வியப்பை ஏற்படுத்தக்கூடிய
    மூன்று பொய்கைகள் காணப்படும்.
    பொய்யாத சிறப்புடைய
    புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி
    இம்மூன்று பொய்கைகளும் அருகருகே காணப்படும்.

    புண்ணிய சரவணப் பொய்கையில் நீராடுவீராயின்
    விண்ணவர் தலைவனாம் இந்திரனால்
    அருளிச் செய்யப்பட்ட
    ஐந்திரம் என்னும் இலக்கண நூலறிவு பெறுவீர்கள்.
    பவகாரணிப் பொய்கையில் மூழ்கி நீராடுவீராயின்
    இந்தப் பிறவிக்குக் காரணமாயுள்ள
    உங்கள் முற்பிறப்பினைப் பற்றி அறிவீர்கள்.
    இட்டசித்திப் பொய்கையில் நீராடுவீராயின்
    உங்களுக்கு விருப்பமானதை எல்லாம்
    அடையப் பெறுவீர்கள்.
    அங்கே காணப்படும்
    குகைக்குள் நுழைய முற்பட்டால்,
    ஓங்கி உயர்ந்த மலையில் எழுந்தருளியுள்ள
    மேலான இறைவனை வணங்கி,
    மனதில் அவன் அடிகளை எண்ணித் துதித்து,
    அம்மலையை மூன்று முறை வலம் வரவேண்டும்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  87 –  107

     

     

    Share
  • மென்மைகள்!

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    parrot

    அதிகாலை உதயத்தில்
    அரசமரத் தளிரிலை
    மென் காற்றில் அசைகையில்
    மரக்கிளையமர்ந்து அவசரமற்று
    செவ்வளை மூக்கால்
    உடலிறகு தூய்மை செய்யும்
    பச்சைக் கிளி, மாலையில் மெதுவாய்
    மொட்டவிழ்ந்து காலையில்
    மொத்தமாய் மணம் பரப்பும்
    நித்ய கல்யாணிச் செடியிடை
    உடல் வளைத்து முகம் புதைத்துத்
    தூங்கும் வெண்ணிறப் பூனைக்குட்டி,
    மடி கனத்து மெல்ல வரும் பசு மாட்டின்
    மேலமரும் இரட்டைவால் குருவி,
    குளித்து ஈரத் தலைமுடித்துக்
    கோலமிடும் இளம் பெண்கள்,
    மெல்லக் கம்பூன்றி
    நடந்து வரும் முதியவர்கள்,
    மெத்தென்ற பெரும் பாதம்
    அழுத்தமாய்ப் பதித்துக்
    கம்பீர நடை நடந்து
    வருகின்ற கோவில் யானை,
    முலை சப்பும் ஞாபகத்தில்
    வாயசைத்துத் தூங்கும் சிறு குழந்தை,
    தூரத்தில் கேட்கும் நாதஸ்வர இன்னிசை..
    இன்னும் எத்தனையெத்தனையோ
    மென்மைகள் நிறைந்த அழகிய அதிகாலை
    விடியலின் அழகே அழகுகளில் அழகு!

     

    Share
  • தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே

    கவிஞர் காவிரி மைந்தன்

    தூளியிலே ஆடவந்த

    தாய் ஒருத்தி மட்டும்தான் இன்னும் பால்போல் தூய்மையாய் இருக்கி்றாள் இந்தத் தரணியில்! தன் குழந்தை – தன்னுதிரம் என்னும்போதிலே தன்னையே தருகின்ற தாய்மைக்கு நிகராக ஏதுமில்லை! கண்போல் வளர்த்திட வேண்டுமென யாரும் அவளுக்குப் பாடம் கற்றுத் தருவதில்லை! இயல்பாய் அவளின் பரிணாமம் தாய்மைப் பேற்றோடு பின்னிப்பிணைந்திருக்கிறது! எத்தனை துன்பமென்றாலும் அதையெல்லாம் தான் ஏற்று, தன் செல்வம் அனைத்து வகைகளிலும் பாதுகாப்பாய் இருக்க வேண்டி, விரதம் இருப்பதுமுதல்.. மேனியிளைப்பதுவரை.. எதையும் தாங்குகிறாளே தாய்..அவளின் அன்பிற்கு.. கருணைக்கு, சேவைக்கு எங்கே மாற்று?

    அம்மா என்கிற ஒற்றைச் சொல்லில் குழந்தை அழுவதும் சிரிப்பதும் எனத் தொடங்கி, காலூன்றி நடக்கின்ற அழகெல்லாம் தன் கண்ணே பட்டுவிடப் போகிறதென்று திருஷ்டிகழித்து அவள் ஒவ்வொருநாளும் உனக்காக தன் கண்ணுறக்கம் மறக்கின்ற உலகில் எத்தனை வகையான உறவுகள் வந்தென்ன வாழ்ந்தென்ன? தாயே உனக்கு நிகராக கடவுள்கூட என் கண்ணில் படவில்லையே!
    அவள் தந்த தாலாட்டில் உறங்கியிருந்து.. அவள் தந்த பாலில் உடல் வளர்த்து… அவள் இமையின் நிழலில் படுத்துறங்கி, அவள் பட்ட பாடுகளையெல்லாம் கண்ணுற்று, அவளை தெய்வமென்று கருதாமல் என்ன செய்ய?

    கவிதை இழையோடும் பாடலா? இது இசையில் அசைந்தாடும் கீதமா? மழலைக் கண்மூட தாலாட்டா? கேட்கும்போதே நாமும் உறங்க வேண்டும் எனத் தோன்றும் கானமா? தாயின் பாசத்தையும் மகன் கொண்ட நேசத்தையும் பாமர வரிகளில் பந்தலிட்டு, ‘சின்னத்தம்பி’ திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் தவழ்ந்துவரும் கவிஞர் வாலி அவர்களின் பாட்டு! மனோ அவர்களின் குரலில் இந்தப் பாடல் வழங்கப்பட்டிருக்கிறது! உலகமெங்கும் மொழிபெயர்க்கப்பட்டால் இந்தப் பாடல் அகிலமெங்கும் பவனி வரும் என்பதில் ஐயமொன்றில்லை!

    பெண்குரலிலும் இந்தப் பாடல் மழை பொழிகிறது.. சித்ரா அவர்களின் குரலில் படத்தின் பெயர்போடும்போது.. இந்த முத்தான பாடல் நம் நெஞ்சில் பதிகிறது!!
    பாடல்: தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
    திரைப்படம்: சின்னத்தம்பி

    பாடியவர்: மனோ
    இயற்றியவர்: வாலி
    இசை: இளையராஜா
    ஆண்டு: 1991

    தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கேunnamed
    ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
    தொட்டி மேலே முத்து மாலை
    சின்னப் பூவே விளையாடா
    சின்னத் தம்பி இசைப் பாட…

    தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
    ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
    தொட்டி மேலே முத்து மாலை
    சின்னப் பூவே விளையாடா
    சின்னத் தம்பி இசைப் பாட…

    பாட்டேடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
    பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
    ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
    ஏழு கட்ட எட்டு கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
    நான் படிச்ச ராகமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
    ஏடு எடுத்து படிக்கவில்லை சாட்சியன்ன பூமிதான்
    தொட்டி மேலே முத்து மாலை
    சின்னப் பூவே விளையாடா
    சின்னத் தம்பி இசைப் பாட…

    தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
    ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
    தொட்டி மேலே முத்து மாலை
    சின்னப் பூவே விளையாடா
    சின்னத் தம்பி இசைப் பாட…

    சோறு போடத் தாயிருக்க பட்டினியை பார்த்ததில்லை
    தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கும் போனதில்லை
    தாயடிச்சு வழிச்சதில்லை இருந்தும் நான் அழுவேன்
    நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா
    ஆக மொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
    வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
    தொட்டி மேலே முத்து மாலை
    சின்னப் பூவே விளையாடா
    சின்னத் தம்பி இசைப் பாட…

    Chinna_Thambi.jpg

    Thooliyile Aadavantha (Male) HD Song

    Share
  • திருமால் திருப்புகழ் (75)

     

    கிரேசி மோகன்

    Vittala. #krishnafortoday Keshav
    Vittala. #krishnafortoday Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் காப்பு’’….
    ————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்,
    விண்ணவர் கண்ணில் விழுந்திட, -செந்நிற
    சாயங்கா லத்தில் , சகாக்களுடன் வீடேகும்,
    காயாம்பூ வண்ணனே காப்பு….

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்,
    தோளினில் ஆடிய தெய்வமே, -காளியின்
    அண்ணனே, கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனே, வேண்டினேன் காப்பு….

    பூதனை மார்பை புசித்தவள் ஆவியை,
    வேதனை இன்றி விரட்டியவா, -தீதினை
    ஓட்டவும், தர்மம் உயரவும், பாண்டவ
    கூட்டம், பிணைந்தவா காப்பு….

    தாய்க்குப் பணிந்தன்று, தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க, உரலிழுத்த சாகஸா, – வாய்க்குள்,
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய,
    கீதா உபதேசா காப்பு….

    எதுரா எதுராவென, எங்கெங்கோ தேடும்,
    புதிராம் புவிவாழ்வு போதும், – மதுரா
    நகரொளிந்த தெய்வம், நவனீதக் கண்ணன்,
    குகனணைந்து ஐவரானோன் காப்பு!!

    —————————————————————————————————

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • அட்சய திருதியையும், மூட நம்பிக்கைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    அட்சய திருதியை என்ற இந்நாளை நம் இந்துக்கள் மற்றும் சமணர்கள் புனித நாளாகக் கருதுகின்றனர். இந்த அட்சய திருதியை பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட காலத்திலிருந்து இருக்கக்கூடிய ஒரு சிறப்பான நாள். ஆனால் இந்த ஐந்தாறு வருடங்களாகத்தான் மிக அதிகமான விளம்பரங்கள் மூலமாக மக்கள் மனதைக் கெடுத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளவர்கள் நகைக் கடைக்காரர்கள். இதனை வியாபார யுக்தியாகப் பயன்படுத்தியவர்கள், இரண்டு கிராம் தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் கூட அது 200 கிராமாக விரைவில் வளரும் என்று பாமரர்களை எளிதாக மூளைச்சலவை செய்கிறார்கள். இதை நம்பி தங்கள் வாழ்வும் வளமாக மாறும் என்ற ஆசையில் தங்களுடைய கடைசி பைசாவைக் கூட குறிப்பிட்ட அந்த நாளில் நகைக் கடையில் சென்று கொட்ட ஆரம்பித்துள்ளார்கள்.. கொட்டியவர்களின் வாழ்க்கை வளமானதோ இல்லையோ, நகைக் கடைக்காரர்களின் வாழ்க்கை வளமானது. மக்கள் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நின்று நகை வாங்க கையிருப்பைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த வெள்ளி வியாபாரிகளும் தங்கள் பங்கிற்கு, வெள்ளி என்றால் ‘சுக்கிரன்’ அதனால் அன்று வெள்ளி வாங்கினால் சுக்கிர திசை தேடி வந்து செல்வந்தனாக்கும், அதனால் அட்சய திருதியையில் வெள்ளி வாங்குங்கள் என்று விளம்பரம் செய்ய அங்கும் மக்கள் கூட்டம்! இதே போல துணிக் கடை, மின் சாதனங்கள், தொழில்நுட்பச் சாதனங்கள் போன்ற அனைத்தையும் பாரபட்சமில்லாமல் அட்சய திருதியையில் சேர்த்துவிட்டார்கள், அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் ஊக்குவிக்கிறார்கள். அந்த வகையில் நில விற்பனையாளர்களும் இதில் பங்குபெற்றுள்ளனர்.

    இதையெல்லாம்விட மோசமான கொடுமை ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் அருகிலுள்ள பாகான் – கி- தானி என்ற கிராமத்தில் மக்கள் இதை நியாயப்படுத்துவதோடு அவர்கள் மேற்கொண்ட செயலைக் கேட்கும்போது உள்ளம் பதறுகிறது. பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். காரணம் அட்சய திருதியையில் திருமணம் செய்தால் வாழ்க்கை பூத்துக் குலுங்கும் என்று எவரோ கிளப்பி விட்டதைக் கேட்டு, பலர் அவசர அவசரமாக, சட்டத்திற்குப் புறம்பாக, தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். எட்டு வயது சிறுவனுக்கும், 5 வயது சிறுமிக்கும் உள்பட இது போன்று பல திருமணங்கள் நடந்தேறியுள்ளன. ஜெய்ப்பூர் மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் என்று ஒரு புறம் செல்வச் செழிப்போடு காணப்பட்டாலும், மறு புறம் மக்கள் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, திருமணச் செலவை குறைப்பதாக எண்ணிக்கொண்டு, 7 வயது சிறுமிக்குத் திருமணம் செய்வதே தவறு என்ற போதிலும், அவளுடைய இளைய சகோதரிகளான 4, 5 வயது நிரம்பாத இளம் குழந்தைகளுக்கும் அதே மேடையில் திருமணம் செய்திருக்கிறார்கள்.

    காலச் சூழலில் சிக்கி அல்லாடும் மக்கள் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர்களின் மன உணர்வுகளை விலை பேசும் ஒரு கூட்டம் புதிது புதிதாகத் தங்கள் வியாபார யுக்திகளைப் பெருக்குகிறார்கள். பிரதோசக் கால வழிபாடு, பௌர்ணமி பூசை, கிரிவலம் போன்ற அனைத்து ஆன்மீக நம்பிக்கைகளும் இன்று வியாபார நோக்கிலேயே செயல்படுவது நல்லதொரு மாற்றம் அல்ல. மனித உணர்வுகளைப் பணயம் வைத்து தங்கள் சுய இலாபங்களைக் கருதி திட்டம் போட்டு மக்களை ஏமாற்றுபவர்கள் மனித நேயத்தோடு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நாமும் மூட நம்பிக்கைகளில் சிக்காமல் சுய உணர்வுடன், சிந்தித்து செயல்பட விழித்துக் கொள்ள வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றுதான் என்றாலும், அது நம்மைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவரவர், தத்தம் சூழ்நிலைகளுக்கேற்ப அமைவதாக இருந்தால்தான் வளமான வாழ்வு கிடைக்குமேயொழிய விளம்பரத்தைக் கண்டு மயங்கி நின்று ஏமாந்தால் அதனால் வளம் பெறப் போகிறவர்கள் விளம்பரதாரர்கள் மட்டுமே என்ற விழிப்புணர்வும் வேண்டும்.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து எப்போது திசை மாறப் போகின்றன ?

    Earth's Pole Reversal

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பூமியின் காந்த துருவங்கள்
    புதிராய்த் திசை மாறும் !
    ஆமை வேகத்தில் வட துருவம்
    தென் துருவ மாகும் !
    பூமியின் சுழற்சி நின்று
    எதிர்த் திசையில் ஓடுமா ?
    பரிதியின் உதய திசை அப்போது
    கிழக்கா ? மேற்கா ?
    உயிரினம், மனித இனம் என்ன வாகும் ?
    மின்காந்த இயக்கங்கள் பூமியில்
    தன்னியல் மாறுமா ?
    சூழ்வெளி மண்டலம் முறிந்து
    பாழ்வெளி ஆகுமா ?
    நீர் மண்டலம் ஆவியாகி
    நிலம் பாலை ஆகுமா ? சூடேறி
    உயிரினங்கள் தவிக்குமா ?
    பயிரினங்கள்
    பசுமை இழக்குமா ?
    அரை மில்லியன் ஆண்டுகட்கு
    ஒருமுறை நேர்ந்திடும்
    துருவத் திருப்பம்,
    பிறகு மீளும் !
    இயற்கை விதி முறையின்
    திருவிளை யாடல் !
    பருவ காலம் தாறுமாறாகி
    வாழ்க்கைப் போக்கு
    பாழாகுமா ?
    பிரளய நர்த்தனத்தின் பயிற்சி
    அரங்கேற்றமா ?

     

    +++++++++++++

     

    Earth magnetic field

    “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !”

    பிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்

    பூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம்.  அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு,  காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது.  அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது.  அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது.   காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது.   அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்

    மோனிகா கோர்ட்டே  [Scientific Director, Niemegk Geomagnetic Observatory, Germany]

    jai1

    கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்பதாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    பூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் ?

    நமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார்.   அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே  தக்க நிரூபணம் தருகின்றன.   முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது.   அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி  அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.

    Earth's Core

    அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும்,  உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது.  துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது.   அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது.  இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது.  அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது.  மிக வேகமாய்ச் சுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும்.   அச்சோதனைகளில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறிவிக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம்  நிகழப் போகிறது எனப்படுவது.  இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப்  ரஷ்யா” [Voice of Russia].   அறிவித்த நாள் :  ஏப்ப்ரல் 29, 2014.

    பூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.   அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.  சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது.   துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது.  அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம்.  துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா ?  பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா ?  எதிர்ர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா ?  இவை போன்ற கேள்விகள் எழுகின்றன !  ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை.  அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.

    Fig 1 Polat Shift in Earth

    “பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல்.  பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது !  பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    “கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

    டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

    Fig 1B Magnetic Pole Shift

    “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”

    பேராசிரியர் பிராடு ஸிங்கர்.

    பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !

    பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல !  அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன !  பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் !  அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது !  பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

    Fig 1C Structure of Earth

    பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது !  பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன !  கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது !  அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது !  மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

    Fig 1E Relative Size of Sunspots

    2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது.  அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது !  அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது !  தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது.  ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

    Fig 1 Polat Shift in Earth

    பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?

    பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன.  சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள்.  வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது !  அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் !  பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Earth magnetic field -2

    பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறைகளைக் (Patterns) கண்டறிந்தனர்.  வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Fig 4 Power of Geodynamo

    பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்

    2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன !  பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை !  அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles).  துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன.  அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.

    11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார்.  அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் !  2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன !  அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    [தொடரும்]

    +++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986) 2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007) 3. Astronomy Facts File Dictionary (1986) 4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990) 5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986) 6. Cosmos By Carl Sagan (1980) 7. Dictionary of Science – Webster’s New world (1998) 8. Physics for Poets By :  Robert March (1983) 9. Atlas of the Skies (2005) 10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002) 11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002) 11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993) 11 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985) 12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008] 13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton 14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003) 15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003) 16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005) 17 Solar Pole Shift & Pole Reversal in 2012 -2013 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009) 18.http://worldlywise.pbworks.com/w/page/26834992/The%20causes%20and%20effects%20of%20earthquakes%20and%20how%20people%20respond%20to%20them 19. http://www.livescience.com/18426-earth-magnetic-poles-flip.html[February 10, 2012] 20. http://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal [April 30, 2014]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]   May 2, 2014

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • திருமால் திருப்புகழ் (74)

     

    கிரேசி மோகன்

    The Udupi Krishna series. #krishnafortoday - keshav
    The Udupi Krishna series. #krishnafortoday – keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ‘’கண்ணன் காப்பு’’
    —————————–

     

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கஷ்டம் கலைந்திடும், நஷ்டம் நகர்ந்திடும்,
    இஷ்டம் நமக்கு இணங்கிடும், – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய, லேகிய வண்ணனின்,
    காகநிறக் காலிரெண்டும் காப்பு!

     
    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை,
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்,-பூக்களிட்டு
    அப்பம் , அதிரசம், முப்பழங்கள், அப்பயல்முன்
    கப்பம்நீ கட்டிடக் காப்பு!

    மாதவனை, கேசவனை, மாலொழிய வந்தவனை,
    ஆதவனை, ஆயர் அணிவிளக்கை, -யாதவனை,
    ரோகினி அஷ்டமியாய், ஆகிய கீதையை,
    காகீ எனக்கத்தக் காப்பு!

    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்,
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா,-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல.
    குப்பம் நுழைந்தவனே காப்பு!

    கட்டு மயிற்பீலி, கொண்டை யிலணிந்து,
    பட்டுப்பீ தாம்பரம், பூண்டாவை, -வெட்ட
    வெளிதனில், மேய்க்க வேய்ங்குழல் ஊதும்,
    களிமிகு கண்ணனே காப்பு!!

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

    Share
  • TamilKushi.com – Isai Sanjeevini Event on May 3rd 2014 at 6p.m IST

     

    Madhu mitha

     
    ஹாய் ஃப்ரண்ட்ஸ்…

    தமிழ் குஷியின் “இசை சஞ்சீவினி”

    மே -3

    கலக்கலான கேம்ஸ் இருக்கு…
    ரம்மியமான இசை நிகழ்ச்சியும் இருக்கு…
    வாங்க சந்தோஷமா இருக்கலாம்.

    நாங்க ரெடி… நீங்க ரெடியா?

    எல்லாம் அங்க மீட் பன்னலாம் வாங்க….

    முன்பதிவுக்கு முந்துங்கள்

    *அனுமதி இலவசம் தானுங்க*

    மாலை 5 மணி முதல்

     

    asa

     

    Please consider this as a personal invitation and please do come to the joyous interactive musical event for our Tamil Radio – TamilKushi.com – Isai Sanjeevini on May 3rd 2014 at 6p.m IST in MGR Janaki Women’s college AC Auditorium. Please find attached is the e-invitation.

     

    asm

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (73)

    கிரேசி மோகன்

     

    கண்ணன் திருப்புகழ்….
    ————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    ——————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    “ஈவிரக்க நெஞ்சுக்(கு) இறைத்திடும் பக்திநீர்,
    நாவிறக்க மாய்வாய்ப்பண் ணாகமாறி, – போயிறக்கம்
    விண்நனைய மண்ணில் விழலுக்கும் பாயும்காண்;
    கண்ணனை நெஞ்சே கருது!

    “ஆயர் சகாயன் ,அலேக்நிரஞ்சன், மண்தின்று,
    தாயார் திகைத்திட தன்பவள -வாய்க்குள்ளே,
    வண்ணமதைக் காட்டி, விசுவரூபக் காட்சிதந்த,
    கண்ணனை நெஞ்சே கருது”

    ’’பெண்ணழகைக் கண்டு பரவசிக்கும் போதினில்,
    கண்ணைப் பறிக்கின்ற காட்சியில், -உன்இடர்
    புண்ணை சொறிகையில், பேரின்ப சாட்சியாய்
    கண்ணனை நெஞ்சே கருது’’….

    “பெண்ணொருத்தி பின்னலை பாரதிப் பிள்ளையவன்
    பின்நின்(று) இழுக்கையில் பிய்ந்ததால், -மின்னலாய்,
    சென்னியில் சூடி சிருங்கார கோலமுற்ற,
    கண்ணனை நெஞ்சே கருது”….

    “ஆடா(து) அசங்காது, வாடாது வற்றாது,
    மாடோ, மனிதனோ, மாமுனியோ ,-கூடாமல்
    எண்ணி எதிர்போர்க்கும், முன்னம் குதித்திடும்,
    கண்ணனை நெஞ்சே கருது”

    கூட்டுக் குடும்பமாய் காட்ஷி தருகின்ற,
    பாட்டுக்(கு) ஒருகவி பாரதியின் -வீட்டினுக்கு,
    அண்மையில் நிற்கின்ற, அல்லியூர் சாரதியை,
    கண்ணனை நெஞ்சே கருது!!

    ——————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    Share
  • குண்டு வெடிப்பும் நம் மெத்தனமும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னை இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்ட பிறகு மிக விரைவாக நமது ஆய்வினைத் துவக்கியுள்ளோம். பெங்களூரூ இரயில் நிலையத்தில் குறிப்பிட்ட அந்தப் பயணி ஏறியிருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கை மூலம் அறிய முடிகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத் துறையின் மூலமாக நமக்குக் கிடைத்த தகவலின்படி, தென்னிந்தியாவில் இது போன்ற தீவிரவாதம் நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். அதை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்றைய இந்த இழப்பைச் சந்திக்காமல் இருந்திருக்கலாம். மற்றுமொரு தகவல் அறிக்கையின்படி தினசரி ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் மக்கள் பயனிக்கக்கூடிய இது போன்ற மிகப்பெரும் இரயில் நிலையங்களில், பயணிகளைச் சோதிப்பது எங்கனம் சாத்தியம் என்கின்றது. சென்னை இரயில் நிலையத்தில் ஒளிவருடிகள் (ஸ்கேனர்கள்) மற்றும் கண்காணிப்புக் கருவிகள் இருந்தபோதிலும் அவைகள் பயன்படுத்தப்படுவதில்லை. சாலைப் போக்குவரத்தில் ஒரு வழிப்பாதை அமைப்பது போல இந்த கண்காணிப்பான் வழியாகத்தான் பயணிகள் அனைவரும் செல்ல வேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டியது அவசியம். இரயில் நிலையத்தின் உள்ளே வருபவர் மட்டுமன்றி வெளியேறுபவர்களும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்தான். பெரும் திரளாக மக்கள் வெளியேறக்கூடிய சூழலில் அவர்களையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இரயில் நிலையங்கள் சிறியதோ அல்லது பெரியதோ அவைகள் ஒரு முனைப்படுத்த வேண்டியது அவசியம். மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீதி மன்றங்கள், மருத்துவமனைகள், போன்ற இடங்களிலும் இத்தகையக் கட்டுப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய வழிபாடு பயன் தராது! பொது இடங்களிலும், உள் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி, அமைதிப்பூங்காவான நம் தமிழ் நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். . தனி நபராக இருப்பினும், மத்திய, மாநில கூட்டமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும் நாட்டின் பொது நலன் கருதி அவைகளின் உதவிகளையும் கோரிப் பெற்று தீர்வு காண்பதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. .  ஜெய்ஹிந்த்!

    Share
  • தமிழ் இணைய மாநாடு 2014, புதுச்சேரி

    முனைவர் மு.இளங்கோவன்

     

    மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு

    உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாட்டைப் புதுச்சேரியில் 2014, செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. உத்தமம் தமிழ் இணைய மாநாட்டைப் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான  மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்த உள்ளது.

    மாநாடு நடைபெறுவதற்கான செயற்குழுக்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான “மாநாட்டு நிகழ்ச்சிக் குழு”விற்கு மாநாட்டின் தொழில்நுட்ப அரங்குகளில் படைக்க உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஒன்றுசேர்த்து, பரிசீலனை செய்து, தக்க கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத்  தலைப்பாகக் கொடுக்கப்படும்.

    இவ்வகையில் 2014 மாநாட்டிற்குத் “தமிழ் மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு” முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டுள்ளது.

    மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    • இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச் சொல்லாளர்(சொற்பிழை திருத்தி,

        சந்திப்பிழை திருத்தி…) ஒளியெழுத்துணரி, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு  பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த்திறனாய்வு நிரல்கள்,     இலக்கணத் திருத்திகள், மின்னகராதி அமைத்தல்…

    • கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தல், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க் கணினி குறுஞ்செயலிகள்   (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)

    • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.

    •  கணினி மற்றும் இணையவழி தமிழ்க் கல்வி கற்றல், கற்பித்தல்.

    • தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்

    • தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ் நூல்கள் ஆய்வு,     கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….• தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்-பட்ட

       கணினி மென்பொருள்கள்.

    மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில் 1-2 பக்கங்களில் ஜூன் 30ஆம் தேதிக்குள் cpc2014@infitt.org  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறியில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.

    மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை மிகக் கவனமாக ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம் கொண்ட கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு  ஜூலை 31ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.  கட்டுரை பரிசீலனைக்கு தேவையெனில் ஆய்வுக்குழு கட்டுரை ஆசிரியர்களிடம் முழுக்கட்டுரையை அனுப்பிக்க கேட்கலாம்.

    தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக்கட்டுரைகள் 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வகையில் கட்டுரைச் சுருக்கம் மற்றும் முழுக்கட்டுரை பற்றிய நிகழ்ச்சிகள் குழுவின் கருத்தே கடைசி முடிவாக இருக்கும்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறொம்.

    மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட-வுள்ளது.  இம்முறை மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர் திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  இவ்வாறான எண்ணுடன் வெளியிடப்படும் புத்தகங்கள்  உலகின் முக்கிய/பெரிய  நூலகங்களில் தக்க முறையில் நூல்கள் பட்டியலில் உள்ளிடப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளில் தரமான முறையில் கூர்வு செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.

    தமிழ் இணைய மாநாடு 2014இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2014@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    முனைவர் கு. கல்யாண சுந்தரம்

    தலைவர், மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு

    13 ஆவது உலகத் தமிழிணைய மாநாட்டிற்கான முக்கியமான  இறுதி நாட்கள்:

    கட்டுரையின் ஆய்வுச்சுருக்கம் அனுப்ப     : 30 ஜூன் 2014

    தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச்  சுருக்கங்கள் பற்றிய அறிவுப்பு  : 31 ஜூலை 2014

    முழுக்கட்டுரை அனுப்ப    : 30 ஆகஸ்ட் 2014

    மாநாடு நடைபெறும் நாட்கள்  :  19-20 செப்டம்பர் 2014

    மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவின் உறுப்பினர்கள்

    முனைவர் கு. கல்யாணசுந்தரம் (லுசான்),

      பேராசிரியர் ஆ. க. இராமகிருட்டினன் (பெங்களூர் ),

      திரு. சிவ பிள்ளை (இலண்டன்),

      முனைவர் (திருமதி) சீதா லட்சுமி (சிங்கப்பூர்),

      முனைவர் அ. சிவகுமாரன் (சிங்கப்பூர்),

      முனைவர் (திருமதி) மாலா நேரு (சென்னை),

      முனைவர் (திருமதி) வி. தனலட்சுமி (சென்னை),

      முனைவர் இல. சுந்தரம் (சென்னை),

      திரு. அனுராஜ் (கொழும்பு),

      திரு. முகுந்தராஜ் சுப்ரமணியன் (பிரிஸ்பேன்)

    ———

    Tamil Internet 2014  (13th International Conference)

    Puducherry, India  – September 19- 21, 2014

     

    CALL FOR PAPERS 

    The International Forum for Information Technology in Tamkl (INFITT) is

    pleased to inform that arrangements are currently underway to hold

    the next Tamil Internet Conference 2014 at Puducherry (aka Pondicherry),

     India (Pondicherry University campus) during 19-21 September 2014.

    The INFITT annual conference is being co-hosted by the following

    institutions: Pondicherry University, Puduvai Tamil Sangam, Puducherry

    Institute of Linguistics and Cultures (PILC), Puduvai Tamil Sangam,

    Pallavan Group of Institutions and the Central Institute of Indian Languages (CIIL).

    One of the committees formed to organize “Tamil Internet 2014, the

    “Conference Program Committee” (CPC)* has been given the task to

    collect, review and select papers for presentation in various technical

    sessions of the conference. “Natural Language Processing (NLP) as applied

    to Tamil” has been chosen as the principal theme for the Tamil Internet

    Conference 2014.

    The CPC is pleased to release the following “Call-for-Papers for presentation

    at the Tamil Internet 2014″.  We welcome research papers on the following

    topics to be addressed at various technical sessions of the Conference.

    • NLP applications in Tamil: Spellchecker, OCR, Voice recognition,

        speech synthesis, Search engines, Machine Translation, Data-mining, etc.

    • Tamil “enabling” in mobile platforms (smartphones, tablets,..) with

       particular emphasis for Tamil Apps for use on iOS, Android and Windows 8 platforms

    • Open Source Tamil softwares and Tamil Localization

    • Computer- and online-assisted Teaching, Learning of Tamil

    • Tamil content and delivery via Internet:  Blogging, microblogging,

         Wikipedia, Podcasting, social networks,…

    • Tamil Digital Library and e-content delivery across various handheld

        devices (ebooks, ezines,..)

    • Tamil Databases and e-commerce

    • Any other hardware, software development related to Tamil computing technology

    All those interested to make an oral presentation at the conference are

    requested to submit a 1-2 page (A4) summary/abstract of their planned

    presentation to the CPC (email ID: cpc2014@infitt.org) on or before 30 June 2014.

    The conference program committee will send an acknowledgement mail

    on the receipt of the abstract.

    The abstracts can be in Tamil, English or bilingual (Tamil and English) but

    all abstracts must be based on Unicode encoding. The abstract submission

    can be in the form of plain text (.txt), Microsoft Word (.doc or .docx),

    Open office and html formats (formats where the content can be extracted).

    Please try to be as precise on what you want to present.

    Submission of an abstract implies that at least one author of the paper

    attends the conference to present the work in person. Proxy or remote

    presentation is not permitted. In cases where the message from the abstract

    is not clear, CPC may request more details in the form of an expanded

     abstract (4-6 pages) to judge adequately the submission.

    Authors of papers accepted for oral presentation will be informed on or

    before 31 July 2014. As with the abstracts, the full paper of the presentation

    (4-6 A4 size pages inclusive of all graphics and tables) is to be submitted

    in the form of Plain Text, HTML, Microsoft Word or Open Office format file.

     To ensure proper formatting, full paper may be submitted “additionally” in

     the form of PDF (with font embedding). Only the quality of the final paper

    will determine the participation in the conference and the decision of the

    Conference Program Committee will be final in all respects.

    The Conference Proceedings will be published in printed paper format

    and as an e-book. Arrangements are being made to have the Conference

    Proceedings of the annual Tamil Internet Conferences published with an

    ISSN (International Standard Serial Number). ISSN will permit routine

    indexation of the Conf. Proceedings in bibliographic databases of all

    leading libraries across the globe and proper referencing of the content

    of the Proceedings in academic journal publications.

    We look forward to your active participation in the Tamil Internet 2014 conference.

    If you have any questions or need further clarifications, feel free to

    send us a note to <cpc@infitt.org>.

    (sd.). K. Kalyanasundaram

    Chair, CPC, Tamil Internet 2014

    http://www.infitt.org/ti2014/ (cpc2014@infitt.org)

    Some Key Deadlines to observe:

    • Paper abstract: 30th June 2014

    • Paper acceptance notification      : 31st  July 2014

    • Camera ready copy submission     : 31st August 2014

    •  Conference Dates   : 19-21 Sept. 2014

    *Members of the Conference Program Committee (2014):

       Dr. K. Kalyanasundaram (Lausanne, CH, Chair),

       Prof. A.G. Ramakrishnan (Bangalore, India),

       Mr. Siva Pillai (London, UK),

       Dr. S. Seetha Lakshmi (Singapore),

       Dr. A. Sivakumaran (Singapore),

       Dr. Ila Sundaram (Chennai, India),

      Dr. Mala Nehru (Chennai, India),

      Dr. V. Dhanalakshmi (Chennai, India),

      Mr. Anuraj (Colombo, Sri Lanka)

      Mr. S. Muguntharaj (Brisbane, Australia)

    முனைவர் மு.இளங்கோவன்

    Dr.Mu.Elangovan

    Assistant Professor of Tamil

    K. M. Centre for Postgraduate Studies,

    Government of Puducherry,

    Puducherry-605 008, India

     

    E.Mail : muelangovan@gmail.com

    blog: http://muelangovan.blogspot.com

    cell: +91 9442029053

    Share