Blog

  • 2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]

     
     

    Pluto

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ

    http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE

    http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html

    (கட்டுரை -3)


    (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

     

    புதுத் தொடுவான் விண்கப்பல்
    பூதக்கோள்
    வியாழனைச் சுற்றி
    ஈர்ப்பு வீச்சில்
    வேகம் மிகையாகி
    விரைவாய் உளவப் போகுது
    புளுடோ வையும்
    சேரன் என்னும்
    துணைக் கோளையும் !
    முதலிரு வாயேஜர்
    விண் கப்பல்கள் காணாத
    புதுமைகள் காணும் !
    புளுடோ வுக்கும் அப்பால் பறந்து
    கியூப்பர் வளையத்தின்
    கோள்களை
    உளவச் செல்லும் !
    வால்மீன் மந்தை தோற்ற
    வளர்ப்பிடத்தை
    தெளிவாக
    ஆய்வுகள்  செய்யும் !
    வாயேஜர் விண்ணூர்தி போல்
    பரிதி மண்டல
    வரம்பைத் தாண்டி
    வரலாற்றிலே அடுத்த
    புதிய மைல் கல்
    நடும் நாசாவின்
    அதிசயத் தொடுவான் கப்பல் !

    +++++++++++

    நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு  உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சேரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங்களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருக்கும் !

    அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

    அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    New Horizon Approac to Pluto

    குள்ளக் கோள் புளுடோவில் கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியம் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

    கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

    நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

    2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2014] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளைத் தாண்டப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜனவரியில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15  புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

    இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

     

    New Horizon Travel Path

    இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

    அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

    “சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

    ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

     

    “சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

    “இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

    மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

    “பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்தியதோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

    அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

     

    “இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

    ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

    நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

    2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.    விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

    சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

     

     

    முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

     

    New Horizon Spaceship

     

    புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

    1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல்களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

     

    Current position of spacecraft

    2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

     

    புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

    புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

    அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

     

     

    பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமியிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

    வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

    Project Details

    வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

    புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

     

     

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

    d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html (Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2019)

    7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

    8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

    9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

    10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

    11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

    12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

    13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

    14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

    15.  http://en.wikipedia.org/wiki/New_Horizons  [March 12, 2014]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) March 15, 2014

    Launch of NASA’s New Horizons Spacecraft

    ScienceCasts: Countdown to Pluto

    Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”
    Share
  • திருமால் திருப்புகழ் (26)

     

    தசாவதாரத் திருப்புகழ்….
    ———————————————

    images (5)
    ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று’’ மெட்டில்
    ஏழு மலையேறி எமையாளும் முகமொன்று….

    ——————————————————————————————————————-
    “மீனமென வந்துமறை மீட்டமுகம் ஒன்றுImage4
    மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
    ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
    தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
    தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
    மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
    கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
    ஞாலபரி பாலதச மானபெரு மாளே”….
    ——————————————————————————————————–

     

     

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (25)

     
    கிரேசி மோகன்

    1rama
    தாத்தன தத்த தனந்த தாத்தன தத்த தனந்த
    தாத்தன தத்த தனந்த -தனதான….

    ——————————————————————————————————————–
    “சாப்பிடும் சக்தி இழந்து, பேச்சில்பி தற்றல் மிகுந்து Ramana11
    மூப்பினில் புத்தி மழுங்க -எமனேள
    காப்பிடு பத்னி கலங்க , தீக்கிட மக்கள் நெருங்க
    ஆப்பதில்சிக்கு குரங்கின் -கதையாவாய்

    கேட்பதை விட்டு ணவின்றி ,மாற்றுடை யற்று, குளிர்ந்த
    காற்றினில் வெப்பில் திரிந்த -ரமணேசர்
    மூச்சைய டக்கி மடிந்து கூற்றைவி ருப்பில் கலந்து
    வேற்றுரு வுற்று விரைந்து -அருணேசர்

    கூப்பிட அப்ப திசென்று சேர்த்த சுகத்தி னில்பங்கு
    வாய்க்கயெ னக்கு வழங்க -அருள்வாயே
    சூர்பகை யுச்சம் விளங்க வேற்படை வெற்பி லெறிந்த
    தீக்கண்பி றப்பு குகன்தன் -முறைமாம

    சூர்ப்பண கைக்கு வலிந்து மூக்கைய றுத்தவ் விலங்கை
    ராக்கத னுக்குள் புகுந்த -அவதார
    வீற்றுப டுத்து நிமிர்ந்து ஆற்றடி,வெற்பில் அமைந்த
    நூற்றொடு யெட்டில் இலங்கு -பெருமாளே”

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​4​

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -2​4

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    jay1

    jay2

    தகவல் :

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

     

    Share
  • அன்புள்ள மணிமொழி

    பி.தமிழ் முகில்

    மதுரை

    12.03.2014

    அன்புள்ள மணிமொழி அக்காவிற்கு,

    அன்புடன் உன் தங்கை மணிமேகலை எழுதிக் கொள்வது. இங்கு அனைவரும் நல்ல சுகம். அதுபோல் அங்கு உனது மற்றும் அத்தான் நலம் குறித்தும், பிள்ளைகள் கவின்பாரதி, கவின்மலர் நலம் குறித்தும் அறிய ஆவல்.

    கல்லூரியில் உனது விரிவுரையாளர் பணி எப்படி போய்க் கொண்டிருக்கிறது? மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாயே? விண்ணப்பித்து விட்டாயா?

    அக்கா! என் மனதை மிகவும் நோகடித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களை உன்னிடம் பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேடிக் கொள்ளவே இக்கடிதத்தை எழுதுகிறேன். மனதிற்குள்ளேயே போட்டு வைத்து குமைந்து கொண்டிருப்பதை விட எவரிடமேனும் கொட்டித் தீர்த்து விட்டால், மனம் சற்று இலேசாகும் என்ற எண்ணத்தின் விளைவே இக்கடிதம்.

    நீ பலமுறை என்னிடம் கூறியிருக்கிறாய். “பெண்ணுக்கு பெண்ணே எதிரி!” என்று. நானோ, அதெப்படி இருக்க முடியும் என்று உன்னிடம் வாதிட்டிருக்கிறேன். இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள சில அனுபவங்கள், நீ கூறியவை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்று பறைசாற்றுபவையாகவே இருக்கின்றன. என் மனதில் தோன்றியுள்ள இந்த எண்ணம் சரியானது தானா என்பது எனக்கு விளங்கவில்லை.

    என்னை இவ்வாறு எண்ண வைத்த சில சம்பவங்கள்:

    திருமண வயதுப் பெண்ணொருத்தி, நல்ல மணவாழ்க்கை வேண்டி இறைவனுக்கு விரதங்கள் மேற்கொண்டு, பூஜை வேளைகளில் இறைவனுக்கு விளக்கேற்றச் செல்கிறாள். அப்படி செல்கையில், தனக்கு துணையாக தன் சமவயது தோழியையும் உடனழைத்துச் செல்கிறாள். தோழியும் பூஜையில் கலந்து கொள்கிறாள். அப்படி கலந்து கொண்ட சில நாட்களிலேயே, உடன் சென்ற தோழிக்கு பல நல்ல இடங்களில் இருந்து திருமண வரன்கள் வருவதாகவும், விரதம் மேற்கொண்டவளுக்கு வரன்கள் ஏதும் அமையவில்லையே என்று வருத்தப்படுவது போல பேசிவிட்டு, இனிமேல் நீ மட்டும் கோவிலுக்குப் போய் உன் பிரார்த்தனைகளை செலுத்திக் கொள் என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்லி, அந்தப் பெண்ணின் மன வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறாள்.

    வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அந்தப் பெண்ணிற்கு மனதில் இரக்கம் இல்லை என்று எண்ணுவதா, அல்லது, அடுத்தவர் படும் துன்பத்தில் இன்பம் காண்பவள் என்று எண்ணுவதா?

    மற்றோர் சம்பவம்.

    பல வருட காலமாக சந்திக்காத தோழி  ஒருத்தியை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சி அடையாதவர் எவரும் உளரோ? அப்படி ஓர் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் வழக்கமாக நிகழ்வது எதுவாக இருக்கும்? பரஸ்பரம் நலன் விசாரிப்பு, படிப்பு முடித்து வேலைக்குச் செல்லும் வயதுப் பெண்களாயிருப்பின், திருமணம் குறித்த பேச்சுக்கள், இவை தானே. இப்படியான பேச்சுகள் சகஜம் தானே. அப்படி பேசும் வேளையில், தோழியிடம், “உனக்கு திருமணம் எப்போது? வீட்டில் வரன்கள் பார்க்கிறார்களா?” என்று கேட்க, ” உனக்குத் தான் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகப் போகிறதே, உனக்கு இன்னும் குழந்தை இல்லை. உனக்கு குழந்தை பிறந்ததும் எனக்குத் திருமணம்” என்று  படபடவென்று பேசிவிடுகிறாள்.

    பிறரது மன உணர்வுகள், தனது பேச்சால் பின்விளைவுகள் என்ன விழையும் என்பதை சற்றும் சிந்தியாது இருக்கும் இது  போன்ற பெண்களை என்னவென்று சொல்வது? பிள்ளைப் பேறு என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை உணராத பெண்களும் இருப்பார்களோ?

    இன்னொரு பெண்ணோ, பிள்ளைப் பேற்றுக்காக ஏங்கி தவம் கிடக்கும் பெண்ணொருத்தியிடம்,

    “என்ன! குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லை போலுள்ளதே! இப்போது தான் மணமுடித்துக் கொண்ட இளம் தம்பதியரைப் போல், வாழ்வை அனுபவிக்கிறீர்கள். மணமாகி இரண்டாண்டு ஆகப் போகிறது. குழந்தை என்று வந்து விட்டால், இஷ்டம் போல் வாழ்வை அனுபவிக்க முடியாது  என்ற எண்ணமோ?”

    இப்படி எல்லாம் ஒரு பெண்ணின் வாழ்வில் நடைபெறும் ஒவ்வோர்  நிகழ்வுகள் சார்ந்த விஷயங்களில், சம்மந்தப்பட்ட பெண்ணின் மனதை புண்படுத்துவது பெண்களே தான். இதை எல்லாம் அவர்கள் உணர்ந்து தான் செய்கிறார்களா என்பதை இறைவனொருவனே அறிவான்.

    பெண் என்பவள் தாயாக, சகோதரியாக, மகளாக, மனைவியாக, தோழியாக என்று தன் வாழ்நாளில் பல பரிணாமங்களை எடுக்கிறாள். அவள் தான் எடுக்கும் காரியத்தை செவ்வனே செய்து முடிக்க தன்னையே அர்ப்பணிக்கிறாள். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் எவருக்கும் எழுவதில் அர்த்தமில்லை. ஆனால், அவளது தியாகம், அன்பு, பொறுமை, பெருமை எனும் மேன்மை பொருந்திய குணங்களனைத்தும் அவளது சிந்தை தவறிய ஒரு நொடிப் பொழுது பேச்சால் நசிந்து போய்விடுகின்றனவே. இதை உணர்ந்து நடந்து கொண்டால், பெண்ணின் பெருமை எந்நாளும் நிலைத்து நிற்குமன்றோ.

    என் மனதில் தோன்றிய எண்ணங்களை, வருத்தங்களை, கோபதாபங்களை எல்லாம் இக்கடிதத்தை ஒரு வடிகாலாய் எண்ணி உன்னிடம் கொட்டித் தீர்த்து விட்டேன் அக்கா. எதிர்காலத்திலேனும், நீ சொல்வாயே, ” பெண்ணுக்குப் பெண்ணே எதிரி ” என்று. இந்தக் கூற்று பொய்யாய்ப் போய்விடில் மகிழ்ச்சியே.

    கவின்பாரதி, கவின்மலர் இருவருக்கும் அன்பு முத்தஙகள். மற்றவை உன் கடிதம் கண்டு.

    அன்புடன்,

    உன் தங்கை மணிமேகலை

    Share
  • யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்!

    மேகலா இராமமூர்த்தி

    புதுச்சேரி,

    12.03.2014

    அன்புப் பெயர்த்தி மணிமொழிக்கு,

    தாத்தா எழிற்கோ ஆவலோடு எழுதுவது. நீயும், தம்பி மலர்ச்செல்வனும் நலமா? உன் தாய் தந்தையர் நலமா?

    அமெரிக்காவில் இருக்கும் உங்கள் அனைவரோடும் நானும் பாட்டியும் அடிக்கடித் தொலைபேசியில் பேசுகிறோம்; ’யாஹூ மெசஞ்சர்’, ’ஸ்கைப்’ போன்றவற்றின் வழியாக உரையாடுகின்றோம் என்றாலும் அவை எல்லாவற்றையும்விட வலிமையானது மடல் வழியாக மனவுணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதே மணிமொழி; அதனால்தான் இந்த மடல்!

    தூயதமிழில் நான் இம்மடலை எழுதுவதன் நோக்கமே நம் தாய்த்தமிழை நன்றாகப் பேசவும், ஓரளவிற்கு எழுதவும் படிக்கவும் கற்றுவைத்துள்ள நீ (சற்றே கடுமையான நடையில் எழுதப்பட்டுள்ள) இம்மடலை எழுத்துக்கூட்டியேனும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணமும், வாசித்துவிடுவாய் என்ற நம்பிக்கையுமே!

    நீ நினைக்கலாம்….ஏன் இந்தத் தாத்தா எப்போது பார்த்தாலும் தமிழ்..தமிழ் என்றே புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று. நான் உன் தாத்தா மட்டுமல்ல….ஓய்வுபெற்ற ஓர் தமிழ்ப்பேராசிரியரும் ஆவேன் என்பது நீ அறிந்ததே! அமுதத்தின் சுவை அதனைச் சுவைத்தவனுக்கே தெரியும். அதுபோல் நம் அமுதத் தமிழின் அருஞ்சுவையை நான் நன்கறிவேன்.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லுவார்,

    தமிழுக்கும் அமுதென்று பேர் ! — அந்தத்
    தமிழின்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!’ என்று.

    மகாகவியும், பன்மொழிப் புலமையாளருமான பாரதியும்,

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம் என்று வாயூறிப் பேசுவார்.

    இப்படிப் பெரும்புலவர்கள் பலரால் போற்றப்படும், ஏற்றப்படும் ஓர் உன்னத மொழி உனக்குத் தாய்மொழியாக அமைந்தது நீ பெற்ற பேறேயல்லவா? ஆம்…மிகவும் உயரிய நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்களாகிய நாம். சிறந்த இலக்கண இலக்கிய வளமும், தொன்மைச் சிறப்பும், உயர்ந்த கருத்துக்கள் செறிந்த நூல்கள் பலவும் உடையதாய் விளங்குவதாலேயே நம் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியாய் (Classical language) இன்றும் திகழ்கின்றது என்பதை மறவாதே!

    மணிமொழி! அயல்நாட்டில் பிறந்து அதையே வாழ்விடமாகவும் கொண்டிருக்கும் நீ அங்குள்ள மக்கள் பேசும் மொழியில் தேர்ச்சி பெறவேண்டியது மிக அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. ‘When in Rome, do as the Romans do!’ என்பது பழமொழி. எனவே அமெரிக்கவாசியான நீ ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெறவேண்டும்; அத்தோடு அங்கு பேசப்படும் பிறிதோர் முக்கிய மொழியான ஸ்பானிஷையும் நன்கு கற்றுக்கொள்! பள்ளியில் கற்றுத்தரும் ‘பிரெஞ்சு’ மொழியிலும் தேர்ச்சி கொள்! இன்னும் எத்தனை எத்தனை மொழிகளை உன்னால் கற்றுக்கொள்ள முடியுமோ அத்தனையையும் கற்றுக்கொள்! அப்போதுதான் ‘Global village’ என்று சொல்லுகின்ற அளவிற்குத் தொலைத்தொடர்பு வசதிகளாலும், கணினிப் பயன்பாடுகளாலும் மிகவும் சுருங்கிவருகின்ற இன்றைய நவீன யுகத்தில் வெற்றி மங்கையாய் உன்னால் வலம்வர முடியும்!

    நாம் அறிந்துகொள்கின்ற பல்வேறு மொழிகளும், வாழ்வியல் பண்புகளும் நம் அறிவை விசாலமாக்கவும், உலகத்தோடு ஒட்ட ஒழுகவும் பெரிதும் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் உன்னுடைய சிந்தனையும் செயற்பாடுகளும் நம் பண்பாடு மற்றும் நாகரிகம் சார்ந்ததாகவே அமைதல் வேண்டும் என்பதே என் அவா. வளரும் சூழ்நிலையால் நீ அமெரிக்கப் பெண்ணாக இருந்தாலும் பிறப்பால் ஓர் தமிழ்ப்பெண் என்பதை எப்போதும் நினைவில்கொள்! எனவே சிறந்த தமிழ்ப்பெண்ணாக நீ வளரவும் வாழவும் வேண்டுமெனில் நம் பண்டைத் தமிழரின் செம்மாந்த வாழ்வையும், அவர்தம் சிந்தனைகளையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்குச் சிறந்த வழி…நம் முன்னோர்கள் தந்துவிட்டுச் சென்றுள்ள சங்க இலக்கியப் புதையலையும், திருக்குறள் முதலிய அறநூல்களையும் நீ அறிந்துகொள்வதே!

    இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் வெளிநாடுகளுக்கு எளிதில் செல்லவும், தங்கவும் முடிகின்றது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தைத் தவிர வேறிடங்களுக்குச் சென்றறியாத தமிழ்ப் புலவரான கணியன் பூங்குன்றனார் என்பவர்,

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    தீதும் நன்றும் பிறர்தர வாரா…’ எனும் ஒப்பற்ற சிந்தனைகளைத் தமிழ்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார். ’Three principles of French Revolution’ பற்றி உனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். Liberté, Egalité, Fraternité (Liberty, Equality and Fraternity in English) என்பவையே அவை. இதனையே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று தமிழில் அழைக்கின்றோம். இதில் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரத்துவத்தையே கணியன் பூங்குன்றனாரின் யாவரும் கேளிர்’ என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது. எனவே சகோதரத்துவம் எனும் உயரிய கோட்பாட்டை முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களே தமிழர்கள்தான் என்பதை நான் உனக்குப் பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் மணிமொழி.

    பக்குடுக்கை நன்கணியார் எனும் மற்றொரு சங்கப் புலவர்,

    ’…..இன்னா தம்மஇவ் வுலகம்
    இனிய காண்கித னியல்புணர்ந் தோரே என்கிறார் தன் புறப்பாடலில். ’இவ்வுலகம் மனத்துக்கு இனிமைதராத பல நிகழ்வுகளையும், சம்பவங்களையும் தன்னகத்தே கொண்டது; மனிதர்களாகிய நாம் அவற்றைக் கண்டு கலங்காது இன்னாதவற்றையும் இனியவையாகக் காண்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்’ என்பதே இவ்வடிகள் மூலம் அப்புலவர் நமக்கு உணர்த்தும் உண்மை!

    இதையேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவரும், இன்பத்தை விரும்பாதவனாய், துன்பம் இயற்கையானது என்ற தெளிவோடு இருப்பவன் துன்பம் வந்தபோதும் துன்புறுவதில்லை என்கிறார்.

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

    துன்பம் உறுதல் இலன்என்பதே அக்குறள். மேலைநாட்டு அறிஞர்களிடம் தேடினாலும் காணக் கிடைக்காத அரிய சிந்தனைகள் இவை!

    மற்றொரு இனிய பாடலில் ’நரிவெரூஉத்தலையார்’ என்ற புலவர் பெருந்தகை, ’மனிதர்களே! நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தீமை செய்யாமலாவது இருங்கள்; அதுதான் எல்லாரும் விரும்புவது; அத்தோடு உங்களை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் வழியும் அதுவே!’ என்று அன்போடு அறிவுரை அளிக்கிறார்.

    பல்சான் றீரே பல்சான் றீரே

    …………………………………………………………….

    நல்லது செய்த லாற்றீ ராயினும்
    அல்லது செய்த லோம்புமின் அதுதான்
    எல்லாரு முவப்ப தன்றியும்
    நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.’

    (மேலே நான் குறிப்பிட்டுள்ள பாடல் உனக்கு மிகவும் பரிச்சயமான பாடல்தானே மணிமொழி! சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இப்பாடலை நீ மனப்பாடமாக ஒப்புவித்துப் பரிசுபெற்றது இப்போதும் என் நினைவிலிருக்கின்றது!)

    இதுபோன்று இன்னும் எத்தனையோ முத்துக்களும் மணிகளும் நம் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன. அதனால்தானோ என்னவோ….சங்க நூல்களில் ஒன்றான அகநானூற்றின் ஒரு பகுதிக்கு மணிகள் மற்றும் பவளங்களின் இணைவு என்ற பொருள்தரும் ‘மணிமிடைபவளம்’ என்ற அழகிய பெயரினையும், மற்றொரு பகுதிக்கு ’முத்துமாலை’ எனப் பொருள்தரும் ‘நித்திலக்கோவை’ என்ற இனிய பெயரினையும் சூட்டியிருக்கின்றனர் தமிழ்ச்சான்றோர்; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் தமிழின் சிறப்பை! இவற்றையெல்லாம் நீ கற்று மகிழவேண்டும் அம்மா! அத்தோடு நில்லாமல், உன் தோழர் தோழியர்க்கும் நம் தமிழ்ச்சிந்தனையின் ஆழத்தை, அகலத்தை அறியத்தரவேண்டும். அதற்காகவேனும் நீ செந்தமிழ் இலக்கியங்களைக் கற்கத்தான் வேண்டும்.

    மணிமொழி! இப்போது நீ சிறுமி. நான் எழுதுகின்ற செய்திகளையும், அவற்றின் இன்றியமையாமையையும் புரிந்துகொள்ளுகின்ற வயதோ பக்குவமோ உனக்கில்லை என்பதை நானறிவேன். பின்பு ஏன் இப்போதே இவற்றையெல்லாம் உனக்குச் சொல்லுகிறேன் என்றால்…..மனித வாழ்வு நிலையற்றது; நேற்றிருந்த ஒருவன் இன்றில்லை என்னும் இயல்புடையது.

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

    பெருமை உடைத்திவ் வுலகு என்ற தெய்வப்புலவரின் பொய்யாமொழி புகல்வது வாழ்வின் நிலையாமையையே. எனவே வயதான நான் உனக்குச் சொல்லவேண்டிய அறிவுரைகளையும், அறவுரைகளையும் காலந்தாழ்த்தாமல் சமயம் வாய்க்கும்போதெல்லாம் சொல்லிவிடுவதே நல்லதல்லவா?

    பழைய தலைமுறையினரான நாங்கள் கிணற்றுத் தவளைகளாக – வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாதவர்களாகவே வாழ்ந்துவிட்டோம். உன் தலைமுறை அப்படியில்லை. பல்வேறு வண்ணமும், எண்ணமும் கொண்ட மக்களோடு கலந்து பழகும் அரியதோர் வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கின்றது. இதனைச் சரியான வகையில் நீ பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பிற மொழிகளோடு தமிழையும் தவறாது பயில்! நீயே வியக்கும் வகையில் விரைவில் நல்ல தமிழ்ப்புலமை வாய்க்கப்பெறுவாய்!

    தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் தொலையாமல், அழியாமல் காக்கும் பெரும்பொறுப்பு உன்னைப் போன்ற இளந்தமிழர் கைகளில் இருக்கின்றது மணிமொழி.

    எதிர்காலத்தில் நீ சிறந்த தமிழறிஞராய்த் திகழவேண்டும்! உலகெங்கும் தமிழ் முழக்கம் செய்யவேண்டும்! அப்போது உன் அன்புப் பாட்டனார் உன்னுடன் இல்லாமல் போகலாம்; ஆயினும் இம்மடல் உனக்கு என்னை என்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்!

    மகாகவியின் பாடல் வரிகளோடு இம்மடலை நிறைவு செய்கின்றேன். (இவ்வரிகளை உனக்காகவே பாரதி எழுதினானோ என்று எனக்குத் தோன்றுகின்றதே……..இஃதென்ன விந்தை!!)

    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்

    ……………………………………………………………….

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை யில்லை
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.’

    (பி.கு: என் ஆசைகளையும், விருப்பங்களையும் உன் அன்புப் பாட்டியும் உளப்பூர்வமாக வழிமொழிவதாக உன்னிடம் தெரிவிக்கச் சொன்னார்.)

    உனக்கும், மலர்ச்செல்வனுக்கும் எங்கள் அன்பு முத்தங்கள்!

    தமிழ் வாழ்க!

    என்றும் உன் நலனையே நாடும்,

    தாத்தா எழிற்கோ

    Share
  • ஏழையின் பசி!

    நந்திதா

    ஏய்..கோவாலு… அடி வயிற்றிலிருந்து ஒரு அதட்டலுடன் தன் மகனைக் கூப்பிட்டாள் முனியம்மா. அன்றாடக் காச்சியில் அல்லலுறும் இந்தியப் பிரஜை. கிராமத்தில் உறவுகளை விட்டு, புலம் பெயர்ந்து கணவனுடன் நகரத்தை நோக்கி நடை போட்டு வந்தவள்.  சும்மா சொல்லக்கூடாது. கூலி வேலை செய்து மனைவியைக் கண் கலங்காமல் காப்பாற்றி வந்தான் முனியம்மாவின் கணவன் வேலுச்சாமி. இவர்களின் இன்ப வாழ்க்கையின் இலக்காக கோபால் பிறந்தான். அப்பனும் ஆத்தாளும் உச்சி குளுந்து மகிழ்ந்தனர். ஏழைகளுக்கு இன்பம் நீடிக்க இயற்கைக்கு எப்பொழுதும் விருப்பம் இருக்காது போலும். கோபாலை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு  ஒரு காச்சலில் நிரந்தரமாக ஓய்வு பெற்று உலகை விட்டுச் சென்றுவிட்டான், வேலுச்சாமி. கோபாலை பள்ளியில் சேர்த்தும் படிப்பு ஏறவில்லை. ஆகவே அம்மாவுடன் சின்னச் சின்ன வேலை செய்து வந்தான். முனியம்மா வீட்டு வேலை செய்வாள். மாலையில் இட்லி, வடை செய்து விற்றும் வந்தாள். அவள் வசிக்கும் இடத்தில் அவளுக்கும் சில வாடிக்கைக்காரர்கள் இருந்தனர்.

    அவர்களின் வீடு ஒரு பெரிய கட்டடத்தின் பக்கவாட்டின் சுவரை ஒட்டியது. சுவர் ஒரு பக்கம். அதில் இரண்டு பக்கம் ஆணி அடித்து கயிறு கட்டி அதில் பழைய பாய், பிளாஸ்டிமக் திரை என்ற பெயரில் ஒரு சுவர். எத்தைனையோ குடும்பங்களில் இவர்களும் ஒருவர்.  பெரிய மழை வந்தால், கட்டிடத்தின் வாட்ச் மேன் கருணையில் வராண்டாவில் ஒதுங்க இடம் கிடைக்கும். எப்படியாவது கோபாலு டிரைவர் ஆகி விட்டால் இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும். அதுவரை கஷ்டம் தான்.இது முனியம்மாவின் கனவு.

    அந்தக் கட்டடத்தில் அவ்வப் போது ஏதாவது ஒரு கூட்டம் நடைபெறும். அப்பொழுது முனியம்மா ஏதாவது தின் பண்டம் செய்து விற்பாள். வியாபாரமும் நன்றாக ஓடும். அவளுடன் போட்டி போட புது புது தின்பண்டக் கடைகள் முளைக்கும். முதல் நாளே வாட்ச் மேன் சொல்லிவிடுவார். நாளைக்கு விழா நடக்கப் போகிறது  என்று. அன்றும் அப்படித்தான் கூற முனியம்மா சிறிது அதிகமாகவே மசால் வடை சுட்டு தன் மகனிடம் கொடுத்து அனுப்பினாள். வேலையை முடித்துவிட்டு அவளும் ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கலானாள். இலவசமாக வடை கிடைப்பதால் ஒரு நல்ல இடமாகவே முனியம்மாவிற்கு கொடுப்பார் வாட்ச் மேன்.

    இன்னைக்கு யார் வருவாக என்று கேட்டாள் முனியம்மா. இன்னிக்கு பெரிய பெரிய ஆட்கள், மேலதிகாரிகள், பெரிய படிப்பு படிச்சவங்க, பேப்பர்லே போட வீடியோகாரங்க, யாரோ புத்சா ஒரு சினிமா நடிகை, இதற்காக போலிஸ் எல்லாம் வருது புள்ளே.  முனியம்மா தொடர்ந்தாள். காரணம் இன்னும் நிறைய நேரம் இருந்தது. …ஆமா என்னத்தை செய்வாகளாம்.. அட நீ ஒண்ணு..உனக்கு படிக்கத் தெரியாது, சொன்னாலும் புரியாது… சரி சொல்றேன்..கேட்டுக்க.. இப்போ விலைவாசி எல்லாம் ஒசந்துகிட்டே போகுது இல்லே, ஏழைகளெல்லாரும் கஸ்டப் படறாங்களாம்… அதற்கு இவக கூட்டம் போட்டு எப்படி இதே தீர்க்கலாம்னு ரோசனை செய்யப் போராங்களாம்…என்று சொல்லி விட்டு கேட் வாசலில் நிற்கச் சென்றார்.  ஏதோ நாட்டுலே நல்லது நடந்தா சரி என்று ஒதுங்கி நின்றாள் வேடிக்கைப் பார்க்க.

    முதலில் ஒரு வேன் நுழைய.. அதில் மாலைகளும் தோரணங்களும் இறங்கின. அதைத் தொடர்ந்து ஆட்களும் இறங்கி வாசலை அலங்கரித்தனர். இவர்களுக்குப் பின் 5 நட்சத்திர ஹோட்டலிலிருந்து வந்த பெரிய பெரிய பாத்திரங்களில் உணவு பண்டங்கள் உள்ளே சென்றன. கூட்டமும் வர ஆரம்பித்தது. பெரிய கார்களில் செல்வ செழிப்பில் மிதக்கும் பல அதிகாரிகள், பெண்கள் அவர்களைத்தொடர்ந்து காவல் அதிகாரிகள், ரிப்போர்டர்கள்.. எல்லாரும் கட்டடத்தின் உள்ளே செல்ல.. ஒரு கார் வந்ததும் பொது மக்களின் கூச்சலுடன் ஒரு நடிகை இறங்கி உள்ளே சென்றாள். முனியம்மாவும் எம்பி பார்த்தாள்.  அவள் மனதில் இன்று பூரா வடையும் வித்துப் போகும் என்று. ஏன் என்றால், உள்ளே போனவர்கள் வெளியே வருவதற்குள் வந்த ஜனங்களுக்கு பசிக்குமே. ஜனங்கள் வடையை வாங்கிச் சாப்பிடுவாங்க….

    வெளியில் வாலிபக்கூட்டத்தை போலிஸ் கட்டுக்குள் வைத்திருந்தது. இதைக் கண்ட முனியம்மாவிற்கு மனசுக்குள் காத்தாடி சுழல ஆரம்பித்தது. வந்த அத்தினி ஆளும் நல்லா படிச்சவங்களாக தெரியறாங்க, என்னை மாதிரி விவரம் கெட்டவங்க இல்லே.. அவுக ஏறி வந்த அத்தினி காரும், அவுக போட்டுக்கிட்டு இருக்கிற துணியும் ரொம்ப விலை உசந்ததாக இருக்கு,, ஆமா.. இத்தினி படிச்சவக மத்தியிலே இந்த சினிமா நடிகை எதுக்கு வந்தாங்களோ,,, சரி எல்லாம் முடிஞ்சபொறகு வாட்ச் மேன் அண்ணே சொல்வாரு அப்ப தெரியுஞ்சுக்கலாம்… இப்படி ஏதோ ஏதோ எண்ணங்களுடன் கால் கடுக்க நின்றிருந்தாள்.

    வெளியில் வந்தக் கூட்டத்திற்கும் உள்ளே நடக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை, அவர்கள் வந்தது நடிகைக்காகத்தான். நேரம் ஓடி ஒரு வழியாக மூடியிருந்த கதவுகள் திறக்கப் பட்டன. உள்ளே ஏ.சி,யில் இருந்துவிட்டு வநதவுடனே வெய்யிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் முகத்தை சுருக்கி கொண்டு வந்தனர் அதிகாரிகள். சிலருக்கு நன்றாக சாப்பிட்டு உடனே நடக்க முடியவில்லை போலும். ஆடி ஆடி நடந்து வர, அவர்களின் கார் டிரைவர்கள் அவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்து காரின் கதவைத் திறந்து விட, எஜமானர்கள் ஏறிச் சென்றனர். பத்து நிமிடத்தில் கட்டடம் காலியானது, நடிகை வெளிவர கூட்டத்திலிருந்து விசில், சத்தம், வாழ்க வாழ்க எனும் சத்தம். எப்படி காருக்குள் ஏறிச் சென்றாள் என்பது ஒருவருக்குமே புரியவில்லை. அப்படி ஒரு மின்னல் வேகம். எல்லோரும் சென்ற பின்னர் உணவு எடுத்து வந்த ஹோட்டல் சிப்பந்தினர், அவர்களின் பாத்திரங்களுடன், ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா நிறைய எச்சல் பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் நிறைந்த குப்பைகளை கேட்டின் வாசலில் கொட்டிவிட்டு அவர்களின் வேனில் பறந்தனர்.

    அவ்வளவுதான் இதற்காகக் காத்திருந்தது போல் ஒரு கும்பல் அந்தக் குப்பையை நோக்கி ஓடியது. ஹோட்டல் ஆட்கள் மிஞ்சிய உணவையும் குப்பையுடன் கொட்டிவிட்டுச் சென்றது, இந்தக் கும்பலுக்கு அன்று தீபாவளிதான். எச்சல் உணவை எடுத்துச் சாப்பிட அங்கேயும் ஒரு கூச்சல், சண்டை. இதில் தினமும் குப்பைத் தொட்டையிலிருந்து பிளாஸ்டிக் பைகளை எடுக்கும் சிறுவர்கள், பெண்கள், பிச்சைக் காரர்கள் இவர்களுடன் தெரு நாய்களும் “எல்லா இனமும் ஓர் இனம்” என்றவாறு சாப்பிட்டனர். கூட்டத்தை விரட்ட வாட்ச் மேன் கம்புடன் ஓடினார். இந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முனியம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

    வறுமையை எப்படி ஒழிப்பது என்பதை பேசவந்தவர்களுக்குப் பசியின் கொடுமை என்ன என்பது எப்படித் தெரியும். அவர்களின் சொகுசு காரும், உடையும் பார்த்தால் பசியில் ஒரு வேளை கூட இவர்கள் இருந்து இருக்கமாட்டார்கள். சில மணி நேரத்திற்கு இத்தனை தீனியா. அதை ஒருவரும் சரியாக சாப்பிடாமல் எறிந்துவிட்டு போய் இருக்கிறார்கள்.

    முனியம்மாவிற்கு மனது கொதித்தது. அரிசி விக்கிற விலையில் இப்படியா சோத்தைக் கொட்டுவாக… சாப்பிடாட்டியும் பரவாயில்லை.. இந்த பாவி ஹோட்டல் ஆளுக இந்த ஏழை சனங்களுக்கு கையிலே கொடுத்துருக்கலாம்மிலே….  இருட்டில் காலி ஐஸ்கீரீம் டப்பாவிலிருந்து கையைவிட்டு ஒரு சிறுமி துழாவி நக்கிக் கொண்டிருந்தது.

    இதைக் கண்ட முனியம்மாவின் நெஞ்சில் ரத்தம் கசிந்தது…நெசமாகவே முனியம்மாவிற்கு இந்த மீட்டிங்க் போட்டவர்கள் எப்படி ஏழையின் பசியைத் தீர்ப்பார்கள் என்று புரியவில்லை!

    Share
  • சொல்லும் சொல்லும் கவிதை

     

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    எங்கே

    என்

    குறிப்புப்பெட்டகங்கள்  ?

     

    அவை

    தோண்டக்கிடைக்காத

    வைரங்கள்

    வேண்டக்கிடைக்காத

    வரங்கள்

     

    தேடிக்கொணருங்கள்

    அத்திரவியத்தை

     

    கழித்துக்கட்டும்

    கடைக்குப்போடும்

    பழைய சரக்கல்ல

     

    அவை

    மின்னல்களின்

    சேகரிப்பு

     

    மின்சாரக்

    கிடங்கு

     

    பற்றும்

    கற்பூரம்

     

    மணக்கும்

    ஊதுவத்தி

     

    சிரிக்கும்

    மெழுகுவத்தி

     

    ஒவ்வொரு பக்கத்தையும்

    பவ்யமாய்ப் புரட்டுங்கள்

     

    ஒவ்வொரு பக்கத்திலும்

    உறங்கிக்கொண்டிருக்கும்

    என் கவிதை

     

    உறைந்துகிடக்கும்

    என் கற்பனை

     

    சிறைபட்டிருக்கும்

    என் சிந்தனை

     

    சொற்களெல்லாம்

    சிக்கிமுக்கிக் கற்கள்

    விருட்சமாய்

    விளையும் விதைகள்

     

    ஒவ்வொரு சொல்லும்

    வாமன வடிவம்

    ஒவ்வொரு சொல்லும்

    சுரங்கம்

    ஒவ்வொரு சொல்லும்

    ஒரு

    சூத்திரம்

     

    சூத்திரம் விரிந்தால்

    சூட்சுமம் விளங்கும்

     

    விளக்காய் எரியும்

    ஒவ்வொரு சொல்லும்

    சொல்லும் எனக்குக்

    கவிதை

    (07.03.2014 பிற்பகல் 12.50க்கு)

    Share
  • அன்புள்ள மணிமொழி!…

     

    மணிமொழி ! நீ என்னை மறந்து விடு ! (விலகிப்போனவனின் ஒரு கடிதம் )

    அன்புள்ள மணிமொழிக்கு

    நீ நிரம்ப நேசிக்கிற ராஜாதான் எழுதுகிறேன்.

    ஆமாம் ! ராசியில்லா ராஜாவேதான்.

    கைபேசிகளின் சாம்ராஜியத்தில் பூஜ்யமாகிப்போன கடிதமா என்று யோசிக்கிறாயா. நேருக்கு நேராக போசுகிற திறனும் பேசுதற்கான சொற்களும் சிக்காத போது இன்னும் நமக்கு மிச்சமிருப்பது இந்த கடிதங்கள்தாம். கடிதங்களுக்கிருக்கும் மகத்தான சக்தி இன்னும் அழிந்து போய் விட்டதாக நான் கருதவில்லை.

    மணிமொழி ..
    இந்த கடிதம் உன் கைகளுக்கு கிடைக்கிறபோது இந்ததேசத்தின் இன்னொரு மூலைக்கு நான் நகர்ந்திருப்பேன். அதிர்ச்சியுற வேண்டாம். ஆழ்ந்து ஆய்ந்தெடுத்த முடிவுதான். கடந்த காலங்களைப்போல அவசரப்பட்டு விடவில்லை .ஒருவேளை என்னை கண்டறிய நீயோ வேறு எவரோ முயற்சித்தால் . . . வேண்டாம் ! அது தோல்வியில்தான் முடியக்கூடும்.

    மணிமொழி !
    நான் வாழ்ந்த வளர்ந்த வடச்சேரி வலிவலம் கிராமத்தை ஒட்டிய ஒரு பகுதிதான். வலிவலமும் வடச்சேரியும் அரசு நிர்வாக வரைபடத்தில் இன்றும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இரண்டும் எப்போதுமே இரு வேறு துருவங்கள் என்பதை மறந்துவிடமுடியாது.வலிவலம் கிராமத்தின் கிழக்கு எல்லையோரம் உதிர்ந்து கிடப்பது வடச்சேரி. இரண்டுக்கும் இடையே பௌதீக அளவில் அப்படியொன்றும் வெகுதூரமில்லை. ஆனால் இந்த மண்ணின் மறபு வழியில் ஏற்பட்டுவிட்ட மேற் சாதி கீழ்சாதி என்ற சூத்திரத்தில் சிக்குண்டு தீண்டத்தகாத தூரத்தில் அமைந்து விட்டது. காலங்காலமாக மேற்சாதி கீழ்ச்சாதி என்று பழகிப்போன கட்டமைப்பில் ஒருவருக்கொருவர் எப்போதும் விலகியே நின்றனர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும்கூட இவர்களுக்கு இருவேறு நீர்நிலைகள் தனித்தனியாகத்தான் இருந்தது. இருந்தபோதும் அவர்கள் தங்கள் தங்கள் உயரங்களை வெகு நன்றாகவே உணர்ந்திருந்தனர். பெரும்பாலும் அவரவர் வாழ்க்கை அவரவர் போக்கில்தான் போனது. மேலத்தெரு ஈஸ்வரன் கோயிலில் வடச்சேரி மக்கள் நுழைய அரசு ஒத்துக்கொண்டாலும் இவர்கள் அந்த ஈஸ்வரனை நேருக்கு நேர் காண என்றைக்குமே முயர்ச்சித்ததில்லை.. மேலத்தெரு வாசிகள் வரிந்துகட்டிக்கொண்டு இவர்களை தடுக்க நேர்ந்ததுமில்லை..

    அதனால் வலிவலத்தின் சட்டம் ஒழுங்குக்கு இதுவரை எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லை.

    ஆனால் என்ன ஆயிற்று இந்த வலிவலத்துக்கு..
    இந்த இரண்டு மாதத்தில் நடக்கக்கூடாத எத்தனையோ காரியங்கள் நடந்து விட்டது.
    எண்ணிப்பார்க்கவே நெஞ்சம் பதருகிறது.
    இத்தனைக்கும் நீயும் நானும்தான் காரணமா. என்ன வேடிக்கை. வயதுக்கு வந்த ஒரு ஆணும் வயதுக்கு வந்த ஒரு பெண்ணும் இந்த மண்ணில் காதல் புரிதல் ஆண்டுக்கு ஆண்டு காதல் தினங்கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் ஒரு மாபாதகச் செயலா.
    ஆனால் அப்படியல்லவா எடுத்துக்கொண்டார்கள்.
    இந்த நாடு விடுதலையுற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐந்துக்குமேற்பட்ட ஐந்தாண்டுத்திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றிவிட்டோம். கல்வியிலும் பொருளாதாரத்திலும்கூட கணிசமாக முன்னேறிவிட்டதாக சொல்கிறார்கள். பின் எப்படி இந்த வெறியாட்டம்.. நாம் பெற்ற கல்வி ஒரு நல்ல சமூகத்துக்கு வேண்டிய பண்புகளை போதிக்கத்தவறிற்றா.
    இந்த கொலைவெறிக்கு இரண்டு இளம் கன்றுகள் வேலிதாண்டி வாழ முயற்சித்தது மட்டுமே காரணமா..
    ச்சே ! மனுஷனாக பிறந்ததற்கு ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டாமா.

    மணிமொழி ..
    ரெண்டு வருஷத்துக்கு முன்னால் கல்லூரி இலக்கியவிழா கூட்டமொன்றில் உன்னை நான் சந்தித்தபோது நீ வலிவலம் மேலத்தெரு பாபுத்தேவர் மகளென்று அறிந்திருக்கவில்லை. பின்னால் நாமிருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிய நேர்ந்தபோது நம்மிடையே எதார்த்தமாக துளிர் விட்ட நேசம் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது.
    வடச்சேரியைச் சேர்ந்த மிகமிக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த என்மேல் உனக்கேற்பட்டுவிட்ட நேசம் நமது கிராமத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்ற உறவு என்பதை நான் நன்கு அறிவேன். இதன் விளைவுகள் பெரும் விபரீதமாகக்கூடும் என்பதையும் அப்போதே உணர்ந்திருந்தேன்.
    இருந்தபோதும் நம்மிடையே ஏற்பட்டுவிட்ட இந்த காதலுணர்வு அதுமட்டுமல்லாமல் என் இளம்வயது அறியாமை இவையெல்லாம் என் கண்களை மறைத்துவிட்டது. தனிப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட ஒரு காதலுக்கு இந்த ஜாதீய பிசாசுகள் ஒரு வளர்ந்து வரும் நல்ல கிராமத்தையே கசக்கி சின்னா பின்னமாக்கி விட்டனவே ..
    நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது..
    நாளுக்கு நாள் நம்மிடையே மலர்ந்த நேசம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்தபோது வலிவலம் விழித்துக்கொண்டது.
    இத்தனை நாளாக நீருபூத்த நெருப்பாக மூடிக்கிடந்த வர்கவேறுபாடு , ஜாதீய வெறி தலைதூக்கித்தாண்டவமாட நாம் காரணமாகி விட்டோம்.
    நடந்தது என்ன.
    சம்பிரதாயங்களின் வார்ப்படங்களாக இறுகிப்போயிருந்த இந்த மக்களின் ஆழ்மனங்கள் சீண்டப்பட்டபோது வலிவலம் எத்தனை கொலை வெறிக்கு உள்ளாயிற்று. இந்த மக்களிடையே உள்ளுக்குள் எத்தனை குரோதம். எத்தனை வன்மம்.
    அடுத்தடுத்த கணமே அருவாளும் கடப்பாறையும் அல்லவா அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டன .பொழுது சாய்ந்தால் சாராயக்கடையில் சங்கமம் ஆகும் மேலத்தெரு தங்கப்ப நாய்க்கரும் வடச்சேரி காத்தானும் இன்று கோடாலியும் கடப்பாரையுமாக எதிர் கொள்ளவேண்டிய ஒரு சூழல்.
    குடிக்கும் நீரிலேயே விஷத்தை கலந்தார்கள் என்றால் எப்படியொரு அகங்காரம். .
    மேலத்தெருவிலும் வடச்சேரியிலும் பத்துக்குமேற்பட்ட பலிகள் நடந்ததே. முப்பதுக்கு மேற்பட்டோர் இருக்கும் இடம் இல்லாமல் போயிற்றே..ஒரு மாதத்துக்கு மேலாக வலிவலம் கிராமமே இரவு பகலாக போலீசாரின் பிடியில் அல்லவா முடங்கிக்கிடக்கிறது. குழந்தை குட்டிகள் கசங்கிபோயிற்றே.ஆடு மாடுகள் சிதைந்து எம் மக்களுக்கு எத்தனை நஷ்டம்.
    . ஒன்றை நினைத்துப்பார்க்கிறேன்.
    சமூக நீதி பேசுகின்ற அரசியல் இயக்கங்கள் அத்தனையுமே இன்னும் சாதிகளை மையமாக கொண்டே இயங்குகிறது. வர்க பேதம் களைய வேறு வழியில்லாமல் அரசு கூட இன்னும் ஜாதீய விபரங்களை பதிவு செய்வதை தவிர்த்துவிடவில்லை. அலுவலகங்களிலும் தொழிற்கூடங்களிலும் இணைந்து இயங்கும் நாம் சுயவாழ்வென்று வரும்போது தத்தம் சாதிகளைத்தானே தேடி ஓடுகிறோம்.
    .
    இலக்கியம் பேசுபவர்களும் சமூக நெறியாளர்களும் ஏன் ஆளுகிற போலீசும்கூட நம் காதலுக்கு துணையாக நிற்கலாம். ஊடகங்கள் நாலுபேரை வைத்து நமக்கு ஆதரவாக நான்கு நாட்களுக்கு தொடர் விவாதங்கள் நிகழ்த்தலாம்.புது கவிஞர்கள் அச்சு ஊடகங்களில் மெய்யுருக கவி புனையலாம்.நவீன ஓவியர்கள் நம் அவலங்களை வண்ணத்தில் வடித்து காட்சிகளில் வைக்கலாம்.
    ஆனால் இவையெல்லாம் போதுமா. .
    ஒரு முறை பாவேந்தரிடம் பாரதி சொன்னானாம்
    ‘ சுப்பு ! எனக்கொரு ஆசை. எனக்குத்தெரியாமல் என்மகள் ஒரு அரிஜன இளைஞனை இழுத்துக்கொண்டு ஓடி ரகசியதிருமணம் செய்து கொண்ட தகவல் எனக்கு வரவேண்டும். நான் சந்தோஷமாக உயர்ந்து கர்ஜிக்கவேண்டும். ஐயரு மகளே அரிஜனனோட சம்பந்தம் வைச்சிட்டாரேண்ணு எல்லா சாதியினரும் மாறமாட்டாங்களா.. ’
    ஐயா பாரதி உன் ஆசை நிறைவேற நாங்கள் இன்னும் எத்தனை தலைமுறைகளை கடந்தாக வேண்டும்..இந்த இனம் எத்தனை பலிகளை கொடுத்தாகவேண்டும்.
    தாங்காதய்யா . . தாங்காது !
    உன் ரத்தம் என் ரெத்தம் எல்லாம் ஒன்றுதான் என்று இந்த சமூகம் உணர்வதர்க்கு கல்வி உதவும் என்றிருந்தோம்.ஆனால் சாதி மதங்களுக்கு சாமரம் வீசுகிற பணியைத்தான் இன்றைய கல்வி செய்திருக்கிறது.
    காலம் தொடர்ந்து மாறும்போது மட்டுமே காதல் ஜெயிக்கும்.

    மணிமொழி !
    ஒருவேளை நீயும் நானும் பொருநகரங்களில் இருந்திருப்போமேயானால் நம்முடைய காதல் நம் குடும்பங்களின் தனிப்பட்ட பிரச்சனையாகியிருக்கக்கூடும். இப்படியொரு தேசிய முக்கியத்துவத்தை இன்று வலிவலம் கிராமம் பெற்றிருக்க முடியாது.
    காலங்காலமாக சாதீய கட்டமைப்புகளை சுமந்து வளைந்து கொடுக்காமல் உடையக்கூடிய வார்ப்புகளாக வாழ்ந்த உன் தந்தையை நீ இழந்திருக்க வேண்டாம்.. தான் பெற்ற மகள் தன்கண்ணெதிறே நெடுங்காலமாக அனைத்திலும் காலடியில் கிடந்த ஒரு சமூகத்தில் சம்பந்தம் கொள்வதா..
    . .என்று எல்லாருக்கும் இயல்பாக ஏற்படுகிற மனப்பான்மைதானே அந்த உயர்ந்த மனிதரை தற்கொலைக்கு தூண்டியது .அவருக்கேற்பட்ட அந்த வலி அவரவர்க்கு வரும்போதுதான் உணர்வர். அது கடந்தகாலங்களில் ஊட்டி வளர்த்த சிந்தனை. காலஓட்டங்கள் மட்டுமே அழிக்ககூடியது.
    பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து தன் உதிரத்தை உணவாக ஊட்டி வளர்த்த ஒரு தாயின் கனவுகளை உதறிவிட்டு ஒரு நொடியில் வெகுதூரம் ஒடுவது எத்தனை துரோகம்.
    மரபுகளின் குழிகளில் வார்ப்பாக வார்கப்பட்ட உன் தந்தை வெட்கமுற்று கூனிக்குறுகி தற்கொலை செய்து கொண்ட அவலம்
    தலைவிரி கோலமாக கையறு நிலையில் நின்ற உன்தாயின் தோற்றம்
    இவை இரண்டுமே என்னை இன்று வெகுதூரம் விரட்டிற்று.. அவர்களை நினைத்த ஒவ்வொரு கணமும் என் முகங்களில் யாரோ மாறிமாறி அறைவதை உணர்கிறேன்.
    இத்தனையையும் இழந்து விட்டு இந்த காதலில் நாம் எதை சாதிக்கப்போகிறோம்.

    மை டியர் பிரண்ட்
    நான் என்ன செய்யவேண்டுமென்பதை முடிவெடுத்து விட்டேன். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.
    கடந்து போனவற்றை கனவென்று கருதி மறந்துவிடு.
    நாம் பெற்றிருக்கும் மனிதப்பிறவி பல்வேறு பக்கங்களை உள்ளடக்கியது. அதில் கல்வி ஒரு முழுமையான வாழ்க்கைக்கு தேவையான பயிற்சி ! காதல் ஒரு நல்ல குடும்பத்துக்கான முயற்சி.!
    இவை எல்லாமே மனிதவாழ்வில் ஒரு சில அத்தியாயங்கள்தான்.. அவை வாழும் நிலைகளை பெரும்பாலும் வசீகரமாக்கக்கூடும். ஆனால் அவையே வழ்க்கையின் ஆதார சூத்திரமல்ல. அவை இல்லாமலும் பயனுள்ள வாழ்வை வாழலாம். காதலையும் கல்வியையும் கடந்து நீதி நேர்மை அன்பு பண்பு பாசம் பரிவு என்று இன்னும் எத்தனையோ உண்டு. இந்த இளம் வயதில் அவைகளெல்லாம் நம் கண்களுக்குப்புலப்படுவதேயில்லை. ஏன் நீ நேசிக்கும் ராஜாவே அதில் ஒரு அங்கம்தான்.. எல்லாமே நமக்கு நாமே சீராக வாழ ஏற்படுத்திக்கொண்ட வழிமுறைகள்தாம்.. ஒன்றுக்காக நேசித்த இன்னொன்றை பிடிவாதமாக பலியிடுவது பண்பல்ல.

    மணிமொழி ! நீ அடிக்கடி சொல்லுவாயே
    இந்த கிராமத்தின் சீரழிவுக்கு இனி அரசை நம்பி பயனில்லை.நான் டாக்டராகி இந்த வலிவலம் கிராமத்தை சீரழிக்கும் நோய் நொடிகளை அடியோடு ஒழிப்பதுதான் எனக்குள்ள ஆசை

    அந்த நோக்கம் மட்டுமே இப்போது உனக்காக காத்திருக்கிறது. அதுதான் மணிமொழி. . . கண்களை மட்டுமல்ல.. மனதையும் துடைத்துக்கொண்டு காத்திருக்கும் காரியங்களை கவனி. தடைபட்ட கல்வியில் முயன்று மருத்துவராகும் உன் அறிய கனவை நிஜமாக்கு.எஞ்சியிருக்கும் உன் தாயை காப்பாற்று.
    உன் மருத்துவத்தில் இந்த வர்கபேதம் ஒருபோதும் குறுக்கே வராது. சாதிபேதம் எந்த சங்கடத்தையும் தராது. வலிவலத்தோடு வடச்சேரி மக்களும் விலகி வாழட்டும்.
    உன் மருத்துவத்தின் நெடி என் நாசிகளுக்கு எட்டும்போது நான் வருவேன்.
    இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.

    மணிமொழி நீ என்னை மறந்துவிடு !

    அவ்ளவுதான் . . .
    ராஜா
    நெடுந்தொலைவிலிருந்து . . .

    பாண்டியன் ஜி     ( வில்லவன் கோதை )

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…99

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றுமொரு வாரத்தில் மற்றுமொரு மடலுடன் மாற்றமில்லா மனதுடன் உங்களுடன் என் மனக்கருத்துக்களைப் பதிவு செய்யும் மற்றுமோர் இனிமையான தருணம்.

    வித்தியாசமான மனிதர்கள் , வித்தியாசமான பார்வைகள், வித்தியாசமான கோணக்கள் இவைகளின் உறைவிடம் தான் இவ்வகிலம்.

    என்றோ? யாருக்கோ? எப்போதோ? ஒவ்வாதவன் எனும் ஒரு மனிதன் தன் மறைவுக்குப் பின்னால் அவனைத் தூற்றியவர்களினாலேயே போற்றப்படும் நிகழ்வுகளைக் காண்கிறோம்.

    இது இன்று நேற்றல்ல காலம் காலமாக இவ்வகிலத்தில் நடைபெற்றும் சாதாரண நிகழ்வுகளே !

    உதாரணமாக எமது பார் புகழும் மகாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளுங்களேன். அன்று அவரது புரட்சிகரமான கருத்துக்களைப் பைத்தியக்காரத்தனம் என்று ஒதுக்கிய அதே சமூகம் இன்று பாரதியார் இல்லாத காலத்தில் அவருக்காக மணிமாளிகைகளைக் கட்டி வைத்துப் போற்றிப் புகழ்ந்திருக்கவில்லையா?

    பாரதியாருடைய இறுதிச்சடங்கில் வந்திருந்த மக்களை விட அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஓரிடத்தில் கூறியதை நினைவு கூர்கிறேன்.

    என்னடா இவனின் இந்த மடல் எம்மை எத்திசை நோக்கி இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் அன்பு உள்ளங்களில் எழுவதில் வியப்பொன்றுமில்லை.

    சில தினக்களுக்கு முன்னால் இங்கிலாந்தின் தொழிற்சங்ககங்களில் பலம் வாய்ந்ததும் , பெரியதுமான “ஆர்.எம்.டி(RMT)” எனும் தொழிற்சங்கத்தின் தலைவரான ” பொப் குறோ(Bob Crow)” என்பவர் மாரடைப்பினால் தனது 52வது வயதில் காலமானார்.

    அது சரி அவரைப் பற்றிக் குரிப்பிடுமளவிர்கு அவரிடம் உள்ள சிறப்பம்சம் என்ன? எனும் கேள்வி எழுவது இயற்கை.

    தனது திழிலாளர் யூனியம் அதாவது முக்கியமாக லண்டன் நிலக்கீழ் புகையிரதம் (Underground) சார்பான தொழிலாளர்களின் நலன்களை முன்வைத்துப் போராடியதில் இவர் தனித்துவம் பெற்றவர்.

    இங்கிலாந்தின் லேபர் கட்சி அதாவது இங்குள்ள மிகப்பெரிய அரசியல் கட்ச்சிகளில் ஒன்றின் ஆரம்பம் தொழிலாளர் யூனியன்களின் பங்களிப்பினாலேயே ஏற்பட்டது.

    அதனால் எப்போது லேபர் கட்ச்சி அரசமைத்தாலும் அவ்வர்சாங்கத்தில் தொழிலாளர் யூனியன்கள் பெரும் பங்கு வகிப்பதுண்டு.

    ஆனால் டோனி பிளேயர் அவர்களின் லேபர் அரசாங்கம் இதனை மாற்றியமைத்தது. தொழிலாளர்களுடன் மட்டுமில்லாமல் பெரிய ஆலை முதலாளிகளுடனும் தமது உறவைப் பேணுவதே தற்ல அரசியலின் காலத்தின் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் பெரிய வியாபார முதலாளிகளிடன் நெருக்க,மானார்கள்.

    அடிப்படையில் இடதுசார்பான சோசலிஸ்ட் கொள்கைகளைப் பின்பற்றிய லேபர் கட்ச்சி தமது டைத்தளத்திலிருந்து விலகி வலது சார்பாகிறார்கள் எனும் வாதத்தை முன் வைப்பதில் முன்னனி வகித்தவர் பொப் குறோ.

    பாரம்பரியமாக கன்சர்வேடிவ் அரசாங்கத்தை எதிர்த்து வந்த தொழிலாளர் யூனியன்களில் பொப் குறோ மாரு பட்டார் அவர் டோனி பிளேயர் தலையிலான லேபர் கட்ச்சியுடனும் இருந்து கொள்கைரீதியில் பிளவு பட்டிருந்தார்.

    தனது அங்கத்தினர்களின் கோரிக்கைகளை முவைத்து பல வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து தமது அங்கத்தினர்களின் நலன்களை தனது இறுதிக்காலம் வரை பாதுகாத்து வந்தார்.

    எந்தவொரு அரசாங்கம் ஆகட்டும் பொப் குறோ அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார்.

    தொழிலாளர் நலன்கள் மட்டுமின்றி நிலக்கீழ் சுரங்க ரயில்வே திணைகளம் ஆட்குறைப்புச் செய்வது பொதுமக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை எதுவித தடங்களுமின்றி ஊடகங்கள் மத்தியில் முன்வைத்தார்.

    அவருடைய கம்யூனிசம் மர்ரும் அதிதீவிர சோசலிஸ்ட் கொள்கைகள் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாது இருந்தாலும் தான் தெரிவு செய்யப்பட்டிருந்த தனது யூனியன் தலைவர் பதிவியின் பொறுப்பை தத்ரூபமாக உணர்ந்து அதைச் செயல்படுத்திய சொற்பமானவர்களில் இவரும் ஒருவர்.

    இவர் உயிரோடிருக்கும் போது நாட்டு நலன்களின் முதலாவது எதிரி இவர் என்பது போல பேசிய பல முன்னனித் தலைவர்கள் இன்று அவர் மறைந்ததும். இவரைப் போல கொள்கையில் ஆத்மார்த்தமான் ஈடுபாடு கொண்டவர்கள் இல்லை என்பது போல பேசி வருவது எம்மைத் திகைக்க வைக்கிறது.

    ஒ ! இதுதான் உலகமா ? இதுதான் நாட்டு நடப்போ ?

    அடடா ! எனக்குத்தான் புரியவில்லை போலும். . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    அவருடைய நேர்காணலுக்கான காணொளி
    http://www.youtube.com/watch?v=aiUVsky6Obg

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மனத்தையே உலுக்குதே !

      எம்.ஜெயராமசர்மா images

    இந்திய எண்ணமோ இமயத்திற் பெரியது
    இந்திய தேசமோ ரிஷிகளைப் பெற்றது
    என்றுமே யாவரும் வியத்திடும் வேளையில்
    வந்திடும் சேதிகள் மனத்தையே உலுக்குதே

    சங்கரர் காலடி சன்மார்க்கம் தந்தது
    எங்குமே கோவில்கள் இதயமாய் இருக்குது
    சங்கடம் நாளுமே பெருகியே வருகுது
    எங்குதான் இந்தியா போகுதோ தெரியலை

    மண்ணினை தாயென மதித்த நற்தேசமே
    புண்ணிய நதியெலாம் பெண்ணெனப் போற்றினை
    கண்ணென மதித்தவுன் பெண்ணினை நாளுமே
    மண்ணிலே மிதிப்பதை மனுக்குலம் பொறுக்குமா

    உண்ணுகின்ற உணவுக்கு அன்னமெனப் பெயரிட்டு
    உணவளிக்கும் போதெல்லாம் அன்னலக்‌‌ஷிமி எனவழைத்து
    காணுகின்ற போதெல்லாம் கண்ணியமாய் சொல்லிசொல்லி
    காறியே உமிழ்கின்ற காட்டுத்தனம் ஏன்தானோ

    வாழுகின்ற மண்ணதனை தாயெனவே அழைத்திட்டு
    பேசுகின்ற மொழிதன்னை பெண்மையினால் பெயரிட்டு
    வாசமென திகழ்கின்ற மாண்புமிகு பெண்ணினத்தை
    நாசமுறச் செய்வதனால் நாடெல்லாம் கலங்குதிப்போ

    உதிரத்தை பாலாக்கி உயிரூட்டும் பெண்மைதனை
    உலகெங்கும் உயர்வாக மதிக்கின்ற வேளையிலே
    ஊர்நடுவே கூடிநின்று உருக்குலைக்கும் உலுத்தர்தமை
    ஆருள்ளார் தடுபதற்கும் அக்கூட்டம்  அழிவதற்கும்

    பாஞ்சாலி கதறியதும் பார்த்திபனே உதவிநின்றாய்
    பலபெண்கள் கதறுவதுன் காதினுக்கு கேட்கலையா
    நஞ்சுநிறை வஞ்சகரால் நாசமுறும் பெண்ணினத்தை
    நாராயணா நீயும்  பாராதிருப்ப தென்ன

    http://www.rebellesociety.com/2013/03/12/crying-yoga/                                                  

    Share
  • வாழ்க்கை நலம் – 51

    குன்றக்குடி அடிகள்

    51. நடுவு நிலைமை

    நடுவு நிலைமை ஓர் உயர்ந்த குணம்; பண்பு. நடுவு நிலைமை என்பது சார்புகள் காரணமாக முடிவு எடுக்காத கொள்கையாகும். எவரையும் எந்தச் சூழ்நிலையைப் பற்றியும் கவலைப்படாமல், யார் யார் சொன்னாலும் விருப்பும் வெறுப்பும் இன்றிக் கேட்டு, ஆய்வு செய்து விவாதித்து முடிவு எடுத்தலாகும்.

    நடுநிலைப் பண்பு, நீதியைச் சார்ந்தது. நீதி உயிர்; நடுவு நிலைமை உடல், நடுவு நிலைக் குணம் அனைத்துக் குணங்களுக்கும் தாய் போன்ற முதல்நிலைக் குணம்.
    மாந்தர் இயல்பாகச் சஞ்சலப்புத்தி உடையவர்கள். வெற்றியையும் இன்பத்தையுமே விரும்புவர் தோல்வி, துன்பங்கள் கண்டு அஞ்சுவர். இதனால், மாந்தர் இச்சை பலவுடையவராக இருப்பர். விழிப்புணர்வு மிகமிகக் குறைவு; ஏமாறவும் செய்வர். இதனால் தற்காப்பு, தன்முனைப்பு ஆகியனவற்றின் வயப்பட்டு நடுநிலை பிறழ்வார்.

    நிறுவை செய்யப் பயன்படுவது தராசு. தராசின் தட்டுக்கள் இரண்டும் சம எடையில் இருப்பதை துலாக்கோலை – நிறுக்கும் கருவியைத் தூக்கிச் சரிபார்த்துக் கொண்டுதான் நிறுவை செய்ய வேண்டும். நிறுவைத் தட்டுக்களில் ஏதாவது ஒன்றில் ஒரு பாக்கு அளவு புளி ஒட்டிக்கொண்டிருந்தால்கூட நிறுவை பாதிக்கும்.

    அதுபோல் நாம் பலருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேட்பதற்குமுன் நமது மனநிலையைச் சார்புகளிலிருந்து விடுதலை செய்து கொண்டும், சொல்லுவோர் அனைவரிடத்திலும் சமநிலை மனோபாவத்துடனும் கேட்க வேண்டும். ஒரு மனிதனுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இருகட்சிகளையும் – பல கட்சிகளையும் அமைதியாய்க் கேட்க வேண்டும். கேட்கும் செய்திகளைச் சார்பின்றி விருப்பு வெறுப்பின்றிக் கேட்க வேண்டும்.

    நமக்கு என்று ஒரு கருத்து இருந்தாலும் அக்கருத்தை காய்தல், உவத்தலின்றிக் கேட்க வேண்டும். இப்படிக் கேட்க மறுத்தால் சுதந்திரம் பறிபோகும்; சமத்துவக் கொள்கைக்கு ஊறு விலையும்; நடுநிலைமை பிறழ்வதால் சமுதாயத்தில் சீர்குலைவு தோன்றும்; மாந்தர் பாதுகாப்பை இழந்துவிட்டதாக உணர்வர். இது வரவேற்கத்தக்கதல்ல.

    ஆதலால் மனிதர்களை, சாதிகளை, மதங்களை இவற்றை மையமாகக் கொள்வது மனிதம்-நன்று-தீது என்ற அடிப்படையிலேயே நடுவுநிலைமை வளர வேண்டும்.

    “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி” (திருக்குறள் – 118)

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • பரம்பொருள் பாமாலை-4

    வானமா மலையில் பூக்கும் சிறுவானி,

    தூயகா விரியில் இணையும் பூவானி,

    பாயுமாப் பொதிகைப் பொருநை தண்வானி,

    போலவே குளிரும் ஈசன் திருமேனி!                                    17

     

    சுற்றும் விண்ணோடு சுழலும் சிவனின்,

    முக்கண் என்பதன் மெய்ப்பொரு ளறிந்தால்,

    முத்தண் ணாறுகள் முறையாய்க் கூடும்,

    பித்த வாதகபம் பரம்பொரு ளாகும்!                                   18

     

    புங்கன் மர நிழலைப் போல,

    அங்கம் அது குளிர்ந்தவன் நீயே,

    பொங்கும் சுடர் நுதற்கண்ணோடு, குளிர்

    திங்கள் தனைச் சுமப்பவன் நீயே!                                     19

     

    இரு வேறு துருவங் களையும்,

    அரு கருகே அமைபவன் நீயே,

    திரு வோடு சுமப்பவர் களையும்,

    பரி வோடு அணைப்பவன் நீயே!                                                                           20

     

    பெண் சுமந்த பாகத்தான், பிட்டுக்கு,

    மண் சுமந்த தேகத்தான், இன்னும்

    என் சுமக்கச் சொன்னாலும் சுமந்திடுவான்,

    தன் பண் சுமந்த பக்தனுக்காய்!                                                                          21

     

    அட்ட மா சித்திகளைப் பெற்றவரும்,

    சுட்ட மா வறுமையினை உற்றவரும்,

    நட்ட மாடு முன்னைக் கண்டறிந்தால்,

    கட்டி மா மனமதனை ஆண்டிடலாம்!                                                                   22

     

    மதுவேந்தும் மலர்களை ஏந்திடும் மார்பினனை,

    மழுவேந்தும் கைகளுடை தீஞ்சுடர் மேனியனை,

    விழுதேந்தும் மண்ணாக மனதினில் ஏந்தி,

    பழுதேதும் இல்லாமல் பணிவுடன் வாழ்வோம்                                     23

     

    வெற்றுடம்பை வாட்டும் குளிர் காற்றாய்,

    வெட்டிரும்பை வார்க்கும் அனல் காற்றாய்,

    வெப்பமுமிழ் கண்ணின் அருள் காற்று,

    வட்டமிட்டு வாழ்வை வளமாக் கும்!                                                                24

    Share
  • வாசிப்புகளின் வாசலில்… (2)

    தி. சுபாஷிணி

    தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்?

    கோவை ஞானி

    New Doc 1 (1)

    சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் 15 ஆம் நாள், கோவையில் ஆறு தமிழ்ச்சங்கங்கள் கூடின. புவனேஷ்வர் தமிழ்ச்சங்கம், ஷிமோகா தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், கல்லிடக்குறிச்சி தமிழ்ச் சங்கம், விசாகப்பட்டினத் தமிழ்ச்சங்கம் மற்றும் திருச்சியிலுள்ள செண்பகராமன் இலக்கிய சங்கம், கோயம்புத்தூரிலுள்ள சிற்றிதழ்களின் சங்கம், மேலும் ஓர் இலக்கிய வட்டம் என, ஹிந்துஸ்தான் கலையியல் கல்லூரியில் கூடி, ஒருவொருக்கொருவர் அறிமுகமாகி தங்கள் படைப்புகளையும், சங்கங்களின் பணிகளையும் பகிர்ந்து கொண்டன. புவனேஷ்வர் தமிழ்ச் சங்கத்திற்கு, சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு அக்கல்லூரி தாளாளர் தலைமை வகித்தார். அக்கல்லூரியின் தமிழ்த் துறையினர் விழா ஏற்பாட்டை மிகவும் சிறப்பாக கவனித்தார்கள். அவ்விழாவிற்கு திருப்பூரிலுள்ள திரு. நாகேஸ்வரன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அவர் தம் வாழ்நாள் பணியே, எல்லாத் தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒருவொருக்கொருவர் உதவி புரிந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்பதுதான். அவர் என்னை அவ்விழாவிற்கு அழைத்து, என் படைப்புகளை ஏனையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதற்காக நான் கோவை சென்றபோது திரு. ‘கோவை ஞானி’ அவர்களைச் சந்தித்தேன். அப்போது எனக்கு, ‘தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது.  முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா?  என்ற அச்சம். ஆனால் படிக்க படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

    “கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக நாம் நிறைய பேசி வரும் தமிழ் நாகரிகம், தமிழர் நாகரிகம் இவற்றின் கூறுகளை வரையறுத்துக் கொள்ளலாம்” என்றுதான் இக்கட்டுரையைத் தொடங்குகிறார் கோவை ஞானி.

    “5,000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும், மேன்மையும் கொண்ட தமிழ் மொழி, ஏனைய கிரேக்க இலத்தீன், ரபிரேயம், சீனம் ஆகிய மொழிகளின் தொன்மையையும், இலக்கிய, இலக்கண, பண்பாடு மேன்மையும் கொண்டது.  வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மருத்துவம் முதலிய எத்தனையோ துறைகளில் தமிழ் மக்களின் சாதனைகள் சிறப்பானவை. சிந்து நாகரிகம் திராவிட நாகரிகமே என்று இப்போது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. கடல் வாணிபத்தில் தொன்மைக் காலம் முதலே தமிழ் மக்கள் பெற்றிருந்த சிறப்பை இன்று அயல்நாட்டவரும் ஒப்புக்கொள்கின்றனர். தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழர் நாகரிகம் ஆழமாகப் பரவியிருந்தது என்பதற்கும் உறுதியான சான்றுகள் உள்ளன. திராவிட மொழிகளின் பரவல் என்பது ஜப்பான் வரை சென்று இருக்கின்றது.  தமிழ் மன்னர்கள் பேரரசுகளைப் படைத்திருக்கிறார்கள். நீர்ப்பாசனத்திட்டங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், மாபெரும் கட்டடங்கள் முதலியவற்றை உருவாக்குவதற்குத் தேவையான பொறியியல், கணிதம் முதலிய அறிவுத் துறையிலும், தமிழர்கள் தேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.  தமிழிசைதான் வட இந்திய இசைக்கும், மேற்கத்திய இசைக்கும் அடிப்படையாக அமைந்தது என்பதை இசைத்தமிழ் அறிஞர்கள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்கள்.

    தொல்காப்பியரின் தினைக்கோட்பாடு உலக அளவில் தனித்துவமிக்கது. இலக்கியத்தின் உச்சம் சங்க இலக்கியம், உன்னதம் பக்தி இலக்கியம், சாரம் சித்தர் இலக்கியம்.

    தமிழ் அறம் என்பது சமத்துவம், சமதர்மம் என்பதை திருக்குறளும், தொல்காப்பியமும், சிலம்பும் கூறுகின்றன.  சாதி, மதம், சடங்குகள் என்பன தமிழச் சமூகத்திலும் இடம் பெற்றிருந்தன. இவற்றின் ஆதிக்கத்திற்கு இடம் தராமல் உணர்வோடு வாழும் வாழ்க்கைதான் தமிழறத்திற்கு ஒத்தது என்பது வரலாறு கூறும் உண்மை. மனித மேன்மைதான் தெய்வம் என்று படைக்கப்பட்டது. படைத்தது மனிதன்தான்.

    தமிழர் நாகரிகத்திற்கு இன்று நேர்ந்துள்ள நெருக்கடிகள் உச்ச அளவிலானவை. இவைகளில் முதன்மையானவை வடக்கிலிருந்து வந்த ஆரியத்தின் தாக்குதல்தாம்.

    இரண்டாவது, மைய அரசுக்குத் தமிழக அரசு தன்னை விட்டு கொடுத்ததன் மூலம் இந்தியை தடுக்க முடியாதது, மூன்றாவது, தமிழ் ஆட்சி மொழியாய் இல்லாதது, நான்காவது, உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்பன.  இறுதியாக, தமிழின் தொன்மையைப் பற்றியும், இலக்கிய மேன்மையைப்பற்றியும் பேசினாலும் தமிழை ஆழமாக கற்கவும் இல்லை. தமிழன் என்கிற உணர்கிற இல்லை.

    இவ்வாறு இருக்கையில், தமிழ் நாகரிகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றனதா?.

    முதலில் மைய அரசு அறிவித்த செம்மொழியாம் தமிழ் மொழியை நாம் சீரிய வகையில் வளர்க்க பல்துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இருப்பதால், ஏனைய மொழிகளுடனும், மாநிலங்களுடனும் தொடர்பு கொண்டு, பல ஆய்வுகள், கருத்தரங்குகள் நடத்தி அவர்களுடன் நம் உறவை பலப்படுத்த வேண்டும். அமெரிக்கா போன்றவற்றின் ஆதிக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ் மொழியில் தேவையான மனித நேயம், மெய்யியல், பண்பாடு, இலக்கியம் முதலியவற்றைத் தமிழ் தன்னுள் தாங்கிக்கொண்டுச் செம்மொழியாய் நிற்கின்றது. மனித வாழ்வின் ஆதாரமாகிய சமத்துவம், சமதர்மம், அன்பு ஆகியவற்றின் குரலாகத்தான் தமிழ்க்குரல் இருக்கின்றது.  இதை தமிழன் உணர்ந்து உலகுக்கும் காட்ட வேண்டும். மேலும் ஆதிக்க அரசியலைத் தவிர்த்தல் நலம். தமிழ் நமக்கு ஒரு பேராற்றல். இதைத்தமிழன் கண்டறிய தமிழ்க் கல்வி அவசியம். தமிழ் என்பது அன்பு, அறம், ஆண்மை, பெண்மை, தாய்மை, அழகு, கலை, தவம், இவ்வகையில்தான் நம் வாழ்வின் உயிராகிறது, மெய்யியல்ஆகிறது. இந்தவகையில் தான் தமிழ் கற்க வேண்டும். தமிழைக் கற்பிக்க வேண்டும்.

    மேலும், எந்த அரசியல், அரசு அதிகாரத்தை நோக்கமாக கொள்ளவில்லையோ அந்த அரசியல், அரசுதான் தமிழ் தேசியமாகவும், அதன் வழியாக தமிழர் நாகரிகத்தை வளர்ப்பதாகவும் இருக்கும். மேலும் பண்பாட்டு ஆதிக்கமும் தமிழர் நாகரிகத்திற்கு இடையூறாகத்தான் இருக்கும். தமிழ் வரலாற்றோடு, தமிழ் வாழ்வோடு, தமிழ் மக்களோடு, தமிழ் மக்களின் மேம்பாட்டோடு நம்மை இணைக்கிற இயக்கம் என்கிற முறையில் தமிழ் தேசிய இயக்கத்தின் முன் பல கடமைகள் உள்ளன. அவை: ஆதிக்கத்தை மறுக்கும் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டும். மார்க்ஸியமும் பெரியாரியமும் இணைகின்ற போழ்து, தலித்தியமும் பெண்ணியமும் உறவுகொள்ள ஏதுவாகிறது. இது தமிழ் தேசியமாக மலர்ந்து தமிழர் நாகரிகத்தைக் காப்பாற்ற இயல்கிறது. இதனால் இயற்கையைக் காப்பாற்றும் தமிழ் வேளாண்மை, தமிழ் மருத்துவம், தமிழ் சார்ந்த மரபு தொழில்கள், சிற்பக்கலை போன்றவை ஆதரிக்கப்பட்டுவிடும். தமிழ் தாய்ப் பள்ளிகள் அரசு உதவியோடு தொடங்க வேண்டும். தமிழ் தேசிய இயக்கம், தம் கிளைகள் என்ற முறையில் படைப்பாளிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உழவர்கள், நெசவாளர்கள், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு வகையினருக்கும் ஒரு கிளை முறைணை உருவாக்கி செயல்பட வேண்டும். இறுதியாக அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து, வள்ளுவரும், இளங்கோவும், பாரதியும், பாரதிதாசனும் நமக்குள் இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும்.

    மேலே குறிப்பிட்ட கட்டுரையைத் தன் ‘தமிழ் நேயம்’ பத்திரிகையில் வெளியிட்டு, அதற்கு எதிர்வினையாக வந்த 27 கட்டுரைகளையும் தொகுத்து இந்த நூலை அளித்திருக்கிறார் கோவை ஞானி.

    முதல் கட்டுரையாக, பேராசிரியர் ம.இலெ.தங்கப்பரவல் கட்டுரை அமைகிறது. அதில் “தமிழ் மக்கள் தாங்கள் யார்?  தங்கள் நாகரிகம் எத்தகையது? என்பதை அறியாமல் உறங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் விழித்தெழவில்லை என்பதைத் தவிர வேறு எல்லா நலக்கூறுகளும் அவர்கட்கு உண்டு. இன்று இனவுணர்வற்று உறங்கிக் கிடக்கும் தமிழர் இன உணர்வு பெற்று விழித்தெழச் செய்ய வேண்டும், செய்தால்போதும்” என தன் கருத்தை முதன்மைப்படுத்துகிறார்.

    “பாரதி வாழ்ந்த காலத்திலேயே நூலகமொழியாகத் தமிழ்வளம் பெறுவதற்கான வழியை நமக்குக் காட்டிச் சென்றிருக்கிறார். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி கூறியிருக்கின்றார். எனவே தமிழ் நூலக மொழியாக இடம்பெற வேண்டும்” என்பது மருத்துவர் கோபியின் கருத்து.

    தமிழோசை கு.முத்துக்குமார், “மண்ணையும் மக்களையும் பிரித்து தமிழை மட்டும் வளர்த்தெடுக்க முடியாது” என்று ஆணித்தரமான அடிப்படையான கருத்தை முன்வைக்கின்றார்.

    “தமிழர் வரலாறு, பண்பாடுகள், தமிழ் மொழி மேன்மை என்பனவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் வேலைக்கான கவலையிலும், வீணான பொழுதுபோக்குகளிலும், மலிவான திரைப்பட நுகர்வு& பேச்சிலும்& தமிழில் என்ன இருக்கின்றது என்று அரைகுறை தாங்கிய பயிற்சி அளவிலேயே அறியாமை வெளிப்படப் பிதற்றித் திரிவதிலும்& குறிக்கோளோ நோக்கமோ அற்று, இணைய வலையத்து விளிம்புகளில் தொற்றித் தொங்கும் & இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயத்தை இன்று எழுபதும் எழுபதுக்குமேலுமென மூத்த வயதுடைய தமிழ் தேசியர்கள் எப்படி மாற்ற முடியும்? என்ற வினாவை எழுப்புகிறார் கவிஞர் தமிழன்பன்.

    முனைவர் சு.வேணுகோபால் கவலைப்படுவதும், ஆதங்கப்படுவதும் முந்தையக் கருத்தையொட்டித்தான் இருக்கின்றது.

    “சென்ற தலைமுறைத் தமிழறிஞர்களான தெ.பொ.மீ., வ.சுபா மாணிக்கனார், வையாபுரி பிள்ளை, வேங்கடசாமி நாட்டார், மு.வரதராசனார் போன்றோர்கள் வணங்கத்தக்கவர்கள்.  இன்று 50 வயதை நெருங்கத்தக்கவர்களில் எத்தனைபேர் தமிழறிஞர்கள்? எத்தனைபேர் தொடர்ந்து வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்?  தன் பிள்ளை, தன் “தமிழ் மாணவர்”களாக உருவாவார்கள். இவர்களின் மாணவர் தான் பிற்காலத்தில் எப்படியும் ஆசிரியப் பயிற்சி முடித்தோ, இளநிலை முனைவர் முடித்தோ, பணம் சேர்க்க வேலை தேடுவார்கள். தமிழ் உருப்படுமா?”

    சாத்தூர் சேகரன் தன் கட்டுரையில் “தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை முனை” என்கிறார். “சோர்ந்து கிடக்கும் தமிழனுக்கு இன்று தேவை பணமல்ல. வீரவுரைகள், எழுச்சியுரைகள். இவையே போதும். தன்னம்பிக்கையை ஊட்டி விட்டால் எளிதில் கிடைப்பது வெற்றியாகும், பெரு வெற்றியாகும்.

    சமீபத்தில் மறைந்த சேலம் தமிழ் நாடன் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக கோவை ஞானி கருதியிருக்கிறார்.

    “தமிழ் தேசியம், தமிழர் நாகரிகம்”&இவற்றைப் பற்றிய விரிவான விளக்கத்தை இந்நூல் தருகிறது. தன் சிந்தனைகளை நூலக வடித்து நமக்கு அளித்த கோவை ஞானி அவர்களின் தமிழ் உணர்வும், சமுதாயத்தின்பால் உள்ள அக்கறையும் தெளிவாகத் தெரிகிறது.

    தலைப்பு & தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்? 

    தொகுப்பாசிரியர்    & கோவை ஞானி

    வெளியீடு                     & புதுப்புனல், பாத்திமா டவர், 117 திருவல்லிக்கேணி

                                                      நெடுஞ்சாலை, சென்னை & 5

    பக்கம்                               & 160

    விலை                             & ரூ.120

    Share
  • வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞர்கா.மு.ஷெரீப்

    · எத்தனையோ திரைப்பாடல்கள் நம் மனதைத் தொடுகின்றன. இன்னும் சில பாடல்கள் மனதில் நிறைகின்றன. தொடுகின்ற பாடல்களில் வரிகள் சுகமாயிருக்கும்! நிறைகின்ற பாடல்களில் அர்த்தங்கள் நிரம்பக்கிடைக்கும்!

    · வெறும் கற்பனைப் பூக்களை விற்பனை செய்யாமல், கருத்து முத்துக்களை அள்ளிவழங்கிய பெருமையை இந்த ஒற்றைப்பாடலில் ஒருவர் தட்டிச்செல்கிறார்.

    · அட.. விவரிக்க வேண்டியிராத வைரங்களைச் சொற்களாக்கி, எதார்த்தமான வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகின்ற கவிஞர்! இப்பாடல் எழுதிய காலம் சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்குப் பின்னரும் இன்றைக்கும் பொருந்துகின்ற ஜீவாம்சம் தெரிகிறது பாருங்கள்!

    · எளியவார்த்தைகளைமட்டும் பயன்படுத்தி இன்னும் சொல்லப்போனால், நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்களைவைத்து இவர் பட்டியலிட்டுள்ள அனுபவப்பதிவுகள் மானுடவாழ்விற்கு என்றைக்கும் தேவைப்படுகின்றன!

    · வாழ்ந்தாலும்ஏசும்தாழ்ந்தாலும்ஏசும்

    வையகம்இதுதானடா..

    வாழ்ந்தாரைக்கண்டால்மனதுக்குள்வெறுக்கும்
    வீழ்ந்தாரைக்கண்டால்வாய்விட்டுச்சிரிக்கும்
    இல்லாதுகேட்டால்ஏளனம்செய்யும்
    இருப்பவன்கேட்டால்நடிப்பெனமறுக்கும் (வாழ்ந்தாலும்ஏசும்..)

    பண்பாடுஇன்றிபாதகம்செய்யும்
    பணத்தாசையாலேபகைத்திடநினைக்கும்
    குணத்தோடுவாழும்குடும்பத்தைஅழிக்கும்
    குணம்மாறிநடந்தேகொடுமையைவிளைக்கும்

    (வாழ்ந்தாலும்ஏசும்..)

     

    · படம் : நான்பெற்றசெல்வம் இசை : ஜி. ராமனாதன்

    · பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன் பாடலாசிரியர்: கா.மு.செரிப்

    · கவிஞர் கா.மு.ஷெரீப் என்னும் கவியுள்ளத்திலிருந்து உருகிய வெள்ளமிது! எக்காலத்திற்கும் ஏற்றபாடலாய் – கேட்டு ரசித்த பாடலாய் நில்லாமல் மெய்யுணர்வால் மேனிசிலிர்த்த பாட்டு! ஜி.இராமனாதன் இசையில் இது நான் பெற்ற செல்வத்திற்காக விளைந்த பாடல்! ஏழிசைவேந்தர் டி.எம்.செளந்திரராஜன் குரலில் நம் இதயங்களில் நிறைந்த பாடல்!

    Share