Blog

  • நான் ‘கமர்சியல் ஆர்டிஸ்ட்’ தான் – ஓவியர் ஸ்யாம் – 4

    நான் ‘கமர்சியல் ஆர்டிஸ்ட்’ தான் – ஓவியர் ஸ்யாம் – 4

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    “நான் ‘கமர்சியல் ஆர்டிஸ்ட்’ தான். மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே என் குறிக்கோள்” என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் ஓவியர் ஸ்யாம். சமகால ஓவியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ரசிகர்கள், பேஸ்புக் நண்பர்கள் ஆகியோருடனான அனுபவங்களையும் மனம் திறந்து பேசுகிறார். டிஜிட்டல் ஓவியங்கள், பேஸ் ஆப், வரையும் கருவிகள் உள்பட ஓவியத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த தன் பார்வையையும் பகிர்ந்துகொள்கிறார். எங்கள் வாழ்க்கையை உங்கள் ஓவியங்களில் காண்கிறோம் எனக் கசிந்துருகும் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற ஸ்யாம், இதோ நம் முன்னே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    திருப்பாவை – 26

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா | ஸ்வேதா குரலில்

    திருப்பாவையின் முந்தைய பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ என்றும் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் என்றும் சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன் என்றும் பாடியவர் ஆண்டாள்.

    கண்ணனுக்காகக் கட்டிய மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்து, அதன் பிறகுக் கோவிலுக்கு அனுப்பியவர் ஆண்டாள்.

    கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
    மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

    என நாச்சியார் திருமொழியில் சங்கிடம் கேட்டவர் ஆண்டாள்.

    பாவை நோன்புக்குச் சங்கு வேண்டும் என்றதும், பால்வண்ணத்தில் இருக்கும் உன் பாஞ்சசன்னியத்தைப் போல் சங்குகள் வேண்டும் என்கிறார். அதுவும் ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் சங்கு. ஓம் என்ற நாதத்தின் விஸ்வரூபத்தைப் போல், ஓங்கி ஒலிக்கும் அந்தச் சங்கு. உறங்கிக் கிடந்த சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்தது போல், நமக்கு அறிவூட்டி விழிப்பூட்டும் அந்தச் சங்கு. அதன் பேரரவம் ஒலிக்கட்டும். மாலே மணிவண்ணனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மார்கழிக் கோலங்கள் – 4

    மார்கழிக் கோலங்கள் – 4

    கோலங்கள், நம் பண்பாட்டு அடையாளங்கள். நம் எழிலார்ந்த, தனித்துவம் மிக்க மரபின் சாட்சிகள். நம் ரசனையின், அழகியலின் துளிகள். நாம் இடும் ஒவ்வொரு புள்ளியும் நம் முன்னோர் இட்ட புள்ளியின் தொடர்ச்சி. நம் கைகளின் வழியே நம் பாட்டிகளும் பூட்டிகளும் கோலம் இடுகிறார்கள். இந்த வண்ணங்களும் வளைவுகளும் நூற்றாண்டுகளைக் கடந்து பயணிக்கின்றன. இங்கே அவற்றை ஆவணப்படுத்துகிறோம். இதோ, கோலமிகு தமிழகத்தின் கோலாகலக் கோலங்கள். கண்டு மகிழுங்கள். உங்கள் கோலங்களையும் எமக்கு அனுப்புங்கள்.

     

    தொகுப்பு – இயேகாம்பரம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    திருப்பாவை – 25

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
    தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
    அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய் | ஸ்வேதா குரலில்

    உன்னைக் கொல்ல ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் கம்சன் வயிறு பற்றி எரிந்திருக்கிறது. இதைத்தான் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே என ஆண்டாள் வர்ணிக்கிறார். அடுத்தொரு பாடலில், பகைவருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா எனவும் பாடினார். அதே நேரம் பக்தர்கள் இந்தத் தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, அவர்கள் தீவினைகள் யாவும் தீயினில் தூசாகும் என்று முன்னரே பாடியிருக்கிறார். ஒரே தீ, பகைவரிடத்தில் ஒரு விதமாகவும் பக்தர்களிடையே ஒரு விதமாகவும் செயல்புரிகிறது. நம் வருத்தம் தீர்ந்து மகிழ்வதற்கு, இந்த நெடுமாலைச் சரண்புகுவோம். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 292

    படக்கவிதைப் போட்டி – 292

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் மாரியப்பன் கோவிந்தன் எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (10.01.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • எனக்குப் பிடித்த பெண்கள் – ஓவியர் ஸ்யாம் – 3

    எனக்குப் பிடித்த பெண்கள் – ஓவியர் ஸ்யாம் – 3

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ஓவியர் ஸ்யாம் இந்த அமர்வில், தனக்குப் பிடித்த பெண்கள், ஈர்த்த நடிகைகள், கவர்ந்த பேரழகிகள் ஆகியோரைப் பற்றி விவரிக்கிறார். தனது ஓவியங்களில் இடம்பெறும் பெண்கள் யார் யார்? வரையத் தூண்டும் முகங்கள் எவை? பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்கள், இராஜபாளையத்துத் தேவதைகள், அவர்களின் உடல்வாகு, நிர்வாண மேனிகளின் மீது சாக்லெட்டால் தான் வரைந்த ‘பாடி பெயின்டிங்’ உள்ளிட்ட பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்

    திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்

    திருப்பாவை – 24

    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
    சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
    பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
    கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
    குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம் | ஸ்வேதா குரலில்

    கண்ணனின் அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி வந்த ஆண்டாள், குன்று குடையாய் எடுத்ததைச் சொல்லும்போது குணம்போற்றி என்கிறார். வேலெடுத்து வென்று பகைகெடுக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வேண்டிய இடத்தில் காட்டும் வீரச் செயல்கள். ஆனால், அவனது உண்மையான குணம், பக்தர்களைக் காப்பது. மலையளவு இடர் வரினும் சுண்டு விரலின் நுனியில் அதைக் களைபவன் கண்ணன்.

    ஒரு சிக்கலைப் பல வகைகளில் தீர்க்க முடியும் எனினும் எவரும் எதிர்பாராத விதத்தில், முற்றிலும் புதுமையான முறையில் அதைத் தீர்ப்பவன் கண்ணன். இத்தகைய வீறு படைத்த அதிவீரன் கண்ணனுக்கு என்றென்றும் சேவகம் புரிய அருள வேண்டும் என்பதைக் குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது என்ற வரிகளுடன் இணைத்துப் பார்க்கலாம். அன்று இவ்வுலகம் அளந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் இன்று கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர்! 

    பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர்! 

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழிலக்கிய வரலாறு படைத்த பேராசிரியர் மு. வரதராசனார் எனும் மு.வ.வை நம்மில் பலர் நன்கறிவோம். அதேசமயம் தமிழ் இலக்கிய வரலாற்றை மிக விரிவாக 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்றாண்டுவரை நூற்றாண்டு வாரியாக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிய இலக்கிய வரலாற்றறிஞர் மு. அ. எனப்படும் மு. அருணாசலனாரை நம்மில் பலருக்குத் தெரியாது.

    அருணாசலனார் இலக்கிய வரலாற்றறிஞர் மட்டுந்தானா? இல்லை! கட்டுரையாளர், சொற்பொழிவாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், தமிழிசை ஆய்வாளர், சைவசமய அறிஞர், காந்தியச் செயற்பாட்டாளர் எனும் பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞராவார்.  அவரையும், அவருடைய செயற்கரிய பணிகளையும் இன்றைய தமிழ்மக்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சிற்றூரான திருச்சிற்றம்பலத்தில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29ஆம் நாள் முத்தையாப் பிள்ளை கௌரி இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் அருணாசலம். தொடக்கக் கல்வியைத் திருச்சிற்றம்பலத் திண்ணைப் பள்ளியில் முடித்துக் குத்தாலம் எனும் ஊரில் உயர்பள்ளிக் கல்வியை முடித்தார்.

    சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் கணக்கியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து அதில் பட்டம்பெற்றார். இக்கல்லூரியே பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது என்பது குறிப்பிடத்தக்கது. புகுமுக (Intermediate) வகுப்பில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படித்திருந்ததால் கல்லூரிக் காலத்திலேயே தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் நல்ல புலமை பெற்றவராய்த் திகழ்ந்தார் அவர்.

    1930ஆம் ஆண்டு இராஜராஜேஸ்வரி எனும் அம்மையாரை மணம்புரிந்த அருணாசலனார், 1931இல் சென்னையில் அரசுப்பணி கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தார். சென்னை இடமாற்றம் அவர் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் விளைய வழிவகுத்தது.

    தியாகராய நகரில் அவர் குடியிருந்த இல்லத்துக்கு அருகில் மூதறிஞர் இராஜாஜி, இரசிகமணி டி.கே.சி, வே. சாமிநாத சர்மா போன்ற சிறந்த அறிஞர்கள் வசித்துவந்தனர். அவர்களுடன் பழகவும், உ.வே.சா., திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்களுடன் நெருக்கமான உறவைப் பேணவும் சென்னை வாழ்க்கை அருணாசலனாருக்கு வாய்ப்பளித்தது.

    பட்டம்பெற்றது கணிதம்சார்ந்த துறையாக இருந்தபோதினும், தமிழிலக்கியங்கள்பால் தணியாத காதல் கொண்டிருந்த மு. அருணாசலனார், தமிழறிஞர்களின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்குச் சென்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழறிஞர்கள் பலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும் 1933-34ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையுடன் ஏற்பட்ட தொடர்பே அவருடைய வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

    சென்னை மயிலையில் சைவசித்தாந்த சாத்திர நூலான சிவபிரகாசத்திற்கு வையாபுரிப்பிள்ளை பாடம் சொல்வதை அறிந்து அங்குச் சென்று வையாபுரியாரிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, அவர் அப்போது செய்துவந்த ’புறத்திரட்டு’ எனும் தொகைநூல் ஆராய்ச்சிப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் அருணாசலனார். மேலும் சில தமிழ்நூல்கள் பதிப்புப்பணியிலும் வையாபுரிப் பிள்ளைக்கு உதவிய அவருக்குத் தமிழ் இலக்கியத் தளத்தில் பரந்த வாசிப்பை மேற்கொள்ளவேண்டும், தமிழ்க்கல்வியாளராகத் தம்மைத் தரம் உயர்த்திக்கொள்ளவேண்டும் என்ற வேட்கை எழுந்தது. அதனை நிறைவேற்றிக்கொள்ளுவதற்கு வசதியாக 1936இல் சென்னைப் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையே பொறுப்பேற்கவும், அவரிடம் நேரடித் தமிழ் மாணவராக இணைந்த அருணாசலனார், 1940இல் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

    தம்முடைய பதிப்புப் பணியின் தொடக்கமாக 1940ஆம் ஆண்டு ’முக்கூடற்பள்ளு’ என்ற நூலைப் பதிப்பித்தார் அருணாசலனார். வையாபுரியாரின் பணிகளில் உதவிய அனுபவம் இதற்குப் பெரிதும் கைகொடுத்தது.

    வையாபுரிப்பிள்ளையின் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்திலேயே தம் இல்லத்திற்கு அருகில் குடியிருந்த இரசிகமணியுடனும் நெருங்கிய தொடர்பு அருணாசலனாருக்கு ஏற்பட்டது. அதன் பயனாய் மிகச்சிறந்த இலக்கிய இரசனை வாய்க்கப்பெற்றவரானார்.

    டி.கே.சி.யின் இல்லத்தில் வார இறுதிநாட்களில் நண்பர்கள் ஒன்றுகூடி தமிழிலக்கியங்கள் குறித்து விவாதிப்பர். அவ்வாறு வட்டமாக ஆர்வலர்கள் அமர்ந்து விவாதிக்கும் அக்குழுவுக்கு ’வட்டத்தொட்டி கூட்டம்’ என்று பெயர். இலக்கிய இரசனையில் புதிய நோக்கும் போக்கும் கொண்டவர்களை ’வட்டத்தொட்டி மரபினர்’ என்று அழைக்கும் வழக்கம் இலக்கிய வட்டத்தில் அப்போது ஏற்பட்டது.

    அருணாசலனார் படைத்த கட்டுரைகளான கன்னிமான், நடந்த காவேரி, சாதிப் பலாப்பழம், சிறு நெருஞ்சில் முதலியவற்றில் இரசிகமணி டி.கே.சி.யின் தொடர்பால் அவருக்கு ஏற்பட்ட இலக்கிய இரசனையின் வெளிப்பாட்டை நாம் தெளிவாய்க் காணமுடியும்.

    டி.கே.சி.யின்மீது மிகப்பெரிய மதிப்பும் அன்பும் கொண்டிருந்த அருணாசலனார் தம்முடைய ஒரே மகனுக்கு டி.கே.சி.யின் பெயரான சிதம்பரநாதனைச் சூட்டி அழகுபார்த்தார்.

    சைவ சித்தாந்த மகா சமாஜத்தைத் தோற்றுவித்த ஞானியாரடிகளுடன் அருணாசலனாருக்கு அப்போது தொடர்பு ஏற்பட்டது. அடிகள் நடத்திய சைவ சமய வகுப்புகளுக்குச் சென்று தம்முடைய சைவ சமயச் சாத்திர அறிவை மேம்படுத்திக்கொண்டார்.

    மும்மொழிப் புலமை, சைவ சித்தாந்தச் சாத்திரக் கல்வி, சைவ மடங்களுடனான தொடர்பு, தமிழில் முதுகலைப் பட்டம் போன்ற தகுதிகள் காரணமாகத் திருப்பனந்தாள் காசிமடத்தின் அறக்கட்டளை இருக்கையில் காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் (Banaras Hindu University) சைவ சித்தாந்தத் தத்துவவியல் துறையிலும், தமிழ்த்துறையிலும் பேராசிரியராக 1944இல் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார் அருணாசலனார்.

    பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தராக இருந்த  சர்வபள்ளி டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களால் மு.அருணாசலனார் அப்பணியில் நியமிக்கப்பட்டார்.

    காசிப் பல்கலைக்கழக வாழ்க்கை அருணாசலனாரின் சிந்தனையை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு மாற்றியது. தமிழறிஞர்களின் தொடர்பிலிருந்து விடுபட்ட அவருடைய உள்ளத்தைக் காந்தியம் முற்றாய் ஆட்கொண்டது.  இயல்பிலேயே காந்தியவாதியான அருணாசலனார், காந்தியடிகளின் ஆதாரக் கல்வி, நிர்மாணத் திட்டம் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு 1946இல் காசிப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகி, மகாராட்டிர மாநிலத்திலுள்ள வர்தா நகர்  சேவா கிராமத்தில் ஆதாரக் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பதற்கான பயிற்சியை முறையாகப் பெற்றார். ஆதாரக் கல்வி சார்ந்து இயங்கிய பெருந்தகையாளர்களான ஜாகீர் ஹுசைன், வினோபா பாவே, ஆசாரியக் கிருபாளனி, ஜே. சி. குமரப்பா போன்றோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அருணாசலனாருக்கு அப்போது கிட்டியது.

    வர்தா நகரில் ஆதாரக் கல்விக்கான பயிற்சியைப் பெற்ற அவர், அக்கல்விமுறையைத் தம் சொந்த கிராமத்திலும் செயற்படுத்த விரும்பி திருச்சிற்றம்பலத்தில் ’காந்தி வித்யாலயம்’ என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

    பெண்களுக்கான தங்கும் விடுதி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அநாதை இல்லம், ஆடவர் பெண்டிருக்கு ஆசிரியர் பயிற்சிச் சாலை ஆகியவற்றைத் தொடங்கினார். ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலம் இக்கல்விப்பணியில் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டார் அருணாசலனார். திருச்சிற்றம்பலத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த எளிய மக்கள் கல்விபெறுவதற்கு மு. அருணசாலனார் ஏற்படுத்திய கல்விக்கூடங்கள் பெருந்துணை புரிந்தன எனில் மிகையில்லை. அவர் தொடங்கிவைத்த கல்வி நிறுவனங்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் இன்றும் இயங்கிவருகின்றன; அவருடைய குடும்பத்தார் அவற்றை நிர்வகித்து வருகின்றனர்.

    கல்விப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டகாலத்திலும் எழுத்துப்பணிக்கு  ஓய்வளிக்கவில்லை அருணாசலனார். 1946 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் அவர் எழுதிய கட்டுரைகளும் நூல்களும் காந்தியச் சிந்தனைகளை மையமாகக் கொண்டே அமைந்திருந்தன.

    1963ஆம் ஆண்டு ‘சித்தாந்தம்’ என்ற சைவ சமய இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று ஏறக்குறைய 19 ஆண்டுகள் அதில் பணியாற்றினார் அருணாசலனார். சைவ சமயம் சார்ந்த சிந்தனைகள், தத்துவங்கள், மரபுகள் தொடர்பான பல கட்டுரைகளை அவ்விதழில் தொடர்ந்து எழுதிவந்தார். 1969 முதல் 1977 வரையிலான காலக்கட்டதில் அவருடைய அருஞ்சாதனை என்று கருதத்தக்க தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களை நூற்றாண்டு வாரியாக எழுதிக் காந்தி வித்தியாலயம் வாயிலாக வெளியிட்டார்.

    தம் இலக்கிய வரலாற்றுப் பணிகளுக்கான ஆதாரங்கள் அனைத்தையும் தம் நூலகத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் அளவுக்கு 15000க்கும் மேற்பட்ட அரிய நூல்கள், சுவடிகள், இதழ்களின் தொகுப்புகள் ஆகியவை அடங்கிய தகவல் களஞ்சியமாக அருணாசலனாரிடம் நூலகம் இருந்தது என்று வரலாற்றாய்வாளர் முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதி தெரிவிக்கும் செய்தி நம்மை வியப்பிலாழ்த்துகின்றது.

    9-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றைக் கால முறைப்படி மிக விளக்கமாக ஆராய்ந்து, பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறைக்குப் புத்தொளி பாய்ச்சிய சாதனையாளர் அருணாசலனார்.  எந்த இலக்கிய வரலாற்று நூலுடனும் ஒப்பிடவியலாத வகையிலும் வேறெவராலும் செய்ய இயலாத முறையிலும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள இவ்வரலாற்று நூல்களின் வாயிலாகப் பலருக்கும் பெயர்கூடத் தெரியாத தமிழ் நூல்களைப் பற்றியும், தமிழ்ப்புலவர்களைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    பரந்த வாசிப்புத் தளத்தில் நின்று ஆழ்ந்தும் அகன்றும் நுணுகியும் எழுதப்பட்டுள்ள இந்நூல்களை வெறும் இலக்கிய வரலாறு என்ற சிமிழிக்குள் நாம் அடைத்துவிட முடியாது. அதனையும் தாண்டி இலக்கியம் உருவாவதற்குக் காரணமான சமூக வரலாறாகவும் இவை விரிகின்றன.

    பதிப்புத் துறை முன்னோடிகளான உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் தொடர்பு காரணமாக பதிப்புத்துறையிலும் ஆர்வத்தோடு திகழ்ந்த மு.அருணாசலனார், முக்கூடற்பள்ளு என்ற நூலை முதலில் பதிப்பித்ததைத் தொடர்ந்து, கூளப்ப நாயக்கன் காதல், திருவானைக்கா உலா, திருமலை முருகன் பள்ளு, அம்பிகாபதிக் கோவை, சிதம்பரக் குறிஞ்சி, தத்துவப் பிரகாசம், பிரபந்த மரபியல் உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

    செவ்வியல் இலக்கியங்களுக்கு முன்னோடியாகக் கருதத்தக்க வாய்மொழி இலக்கியம் குறித்த சிந்தனைகள் தமிழகத்தில் பரவலாக்கப்படாத 1940களிலேயே வாய்மொழிப் பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் அருணாசலனார் ஈடுபட்டு அத்துறையின் முன்னோடியாகவும் திகழ்ந்திருக்கின்றார். காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம், Ballad poetry போன்றவை அவர் வாய்மொழி இலக்கியம் சார்ந்து எழுதிய நூல்களாகும்.

    தோட்டக்கலையிலும் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த மு.அ., காய்கறித் தோட்டம், பழத்தோட்டம், பூஞ்செடிகள், வாழைத்தோட்டம் போன்ற தலைப்புகளிலும் நூல்கள் படைத்துள்ளார். காய்கறித் தோட்டம் எனும் நூல் வெளிவந்த சில ஆண்டுகளுக்குள் மூன்று பதிப்புகள் கண்டு, விற்பனையில் சாதனை படைத்த நூலாகும். இந்து, தினமணி, சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் இந்நூலைப் பாராட்டி மதிப்புரை எழுதியுள்ளன. தமிழக அரசின் பரிசையும் இந்நூல் வென்றுள்ளது.

    1974ஆம் ஆண்டு ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களால் தொடங்கப்பெற்ற தமிழ் சமஸ்கிருதம் மற்றும் பன்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று  ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அருணாசலனார் அங்கே பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

    கர்நாடக இசையாக இக்காலத்தில் வளர்ச்சிபெற்றுள்ள இசை, அன்றைய தமிழிசையே என்பதைச் சான்றுகாட்டி நிறுவும் வகையில் ’தமிழிசை இலக்கிய வரலாறு’ மற்றும் ’தமிழிசை இலக்கண வரலாறு’ எனும் இரு நூல்களை எழுதித் தமிழிசை ஆய்வாளராகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் மு. அருணாசலனார்.

    தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரே கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று அறியப்பட்ட வரலாற்றை மறுக்கும் வகையில் காலவரையறையுடன் கூடிய ஆராய்ச்சியை மேற்கொண்டு, அவர்களுக்கு முன்பே முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் ஆதி மும்மூர்த்திகளாக இருந்துள்ளனர் என்பதை ‘கருநாடக சங்கீதம் தமிழிசை – ஆதி மும்மூர்த்திகள்’ என்ற தம் நூலில் நிறுவியுள்ளார்.

    காந்தியாரின் ஆதாரக்கல்வி சார்ந்து ஆங்கிலத்தில் வெளிவந்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தம்மைத் தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் வெளிப்படுத்தியவர் அருணாசலனார்.

    எழுத்தோடு நில்லாது நாவீறு படைத்த பேச்சாளராகவும் பரிமளித்த அவர், தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் மடைதிறந்த வெள்ளமெனப் பேசும் ஆற்றலாளர். பன்முகச் செயற்பாடுகளில் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும் அவை அனைத்திற்கும் அடிநாதமாய் வெளிப்பட்டு நிற்பது அவருடைய ஆராய்ச்சி அணுகுமுறையே ஆகும்.

    அருணாசலனாரைச் சிறப்பிக்கும் வகையில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு அவருக்குத் ’தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டத்தினை நல்கியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு ’முதுமுனைவர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

    பன்முக ஆளுமையாகத் திகழ்ந்து தம்முடைய நிறைந்த அறிவாலும் குறையாத ஆர்வத்தாலும் அற்புதமான நூல்களைப் படைத்தளித்திருக்கின்றார் பேரறிஞர் மு. அருணாசலனார். அவருடைய அரிய உழைப்பின் விளைச்சல்களாய்க் கிடைத்திருக்கும் நூல்களைத் தமிழர்களாகிய நாம் தேடிக் கற்பது, தமிழின் விரிவான இலக்கிய வரலாறு குறித்தும், இசை வரலாறு குறித்தும் பல அரிய உண்மைகளை நாம் அறிய உதவும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1.https://ta.wikipedia.org/wiki/ மு._அருணாசலம்
    2.https://www.dinamani.com/editorial-articles/ 2009/aug/16/ அறிஞர்களின்- அறிஞர்-முஅருணாசலம்-58762.html
    3.https://www.geotamil.com/pathivukal/images/magazine_puththakampesuthu_january2011.pdf

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 50

    பழகத் தெரிய வேணும் – 50

    நிர்மலா ராகவன்

    ஊக்கமும் உந்துதலும் உனக்குள்ளே

    “பலர் எழுதுவதும் அரைத்த மாவையே அரைப்பதுபோல் — ஒரே மாதிரி — இருக்கிறது. நீங்கள் எப்படி வித்தியாசமாக எழுதுகிறீர்கள்?” இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் என்மேல் தொடுக்கப்பட்ட கேள்வி இது.

    “எதையும், `இப்படித்தான் இருக்கவேண்டும்,’ என்று பிறர் சொல்வதை ஏற்காதீர்கள். அது குழந்தைகளுக்குத்தான் சரி. `ஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்று சிந்தித்துப்பாருங்கள்,” என்றேன்.

    அதன்பின், என்னைத் தனிமையில் சந்தித்த ஒரு பெண்மணி, “நானும் உங்களைமாதிரிதான் — எல்லாவற்றையும் வித்தியாசமாக யோசிப்பேன். எழுதவேண்டும் என்று மிகவும் ஆசை,” என்றுவிட்டு, “ஆனால், பிறர் என்ன நினைப்பார்களோ என்று பயமாக இருக்கிறது!” என்றாள்.

    உலுக்கும் உலகு

    நம்மைச் சுற்றியிருக்கும் பலரும் நம்மைக் கீழே இழுக்கக் காத்திருப்பார்கள். நம் எண்ணத்தில் உறுதியாக இருந்தால், தோல்வி அடைவது அவர்களாகத்தான் இருக்கும்.

    இதை ஒட்டித்தான், “பழி வாங்குவது பலகீனமானவர்கள் செய்வது. மன்னிப்பது திடமானவர்களின் குணம். நம்மை உலுக்குபவர்களை அலட்சியம் செய்வது அறிவுடையோரின் தன்மை,” என்று அலசுகிறார் திரு.அனுபவசாலி.

    ஆசை இருக்கு. ஆனால் சந்தேகமும் கூடவே வருதே!

    நமக்கு என்னென்னவோ செய்யவேண்டும் என்ற ஆசைகள் இருக்கலாம். ஆனால், அதைப்பற்றியே யோசிக்கும்போது, வேண்டாத சந்தேகங்களும் எழத்தான் செய்யும். அவற்றைத் தவிர்க்கமுடியாது.

    அதற்காக, `இதைச் செய்யலாம், இதைச் செய்யலாம்,’ என்ற கனவுலகிலேயே சஞ்சரித்து, அதிலேயே திருப்தி அடைந்துவிட்டால் எப்படி? எதையும் ஆரம்பித்தால்தானே முடிக்க முடியும்?

    `இப்படிச் செய்யப்போகிறேன்,’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் அபாயம்.

    கதை

    ரகுராமன் கனவுகளிலேயே நிறைவு காண்பவர். அறிவில் சிறந்திருந்தாலும், `அட! தனக்கு இவ்வளவு கற்பனை வளம் இருக்கிறதே!’ என்று ஆச்சரியம் கொண்டவராக, தான் நினைப்பதையெல்லாம் பிறரிடம் கூறுவார்.

    நெடுஞ்சாலைகளில் வளைந்த இடங்களில் வாகன விபத்துகள் அதிகம் நிகழ்கின்னறன என்று படித்ததும், அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது. சாலை ஓரமாக, வாகனம் ஓட்டுபவர்களின் கண்ணில் படும் நிலையில் ஒருவித விளக்குகள் பொருத்தினால் என்ன என்று யோசித்தார்.

    தன் எண்ணத்தை `நண்பன்’ என்று கருதிய ஒருவனிடம் ரகுராமன் தெரிவித்தபோது, அவன் `இதெல்லாம் நடைமுறைக்கு உதவாது,’ என்றான் அலட்சியமாக.

    தன்மீதுள்ள அக்கறை, தான் தோல்வியுறுக்கூடாது என்ற நல்லெண்ணம் நண்பனுக்கு என்று எண்ணினார் அந்த அப்பாவி.

    பெருமிதத்துடன், அதை எவ்வாறு தயாரித்து, எப்படிப் பொருத்தவேண்டும் என்று விரிவாக விளக்கினார். அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு.

    ரகுராமனுடைய கற்பனையில் உதித்த கண்டுபிடிப்பைத் தானே தயாரித்ததுபோல் அந்த நண்பன் தகுந்த இடத்தில் கூற, அது நடைமுறைக்கு வந்தது. திருடியவனுக்குப் பெருமளவு லாபம்!

    எந்தத் துறையானால் என்ன! நம் வாயைப்பிடுங்கி, நம் யோசனைகளையெல்லாம் தமது என்று சொல்லிக்கொள்ளும் இரண்டாந்தார மனிதர்கள் இல்லாமலா போவார்கள்!

    இவர்களுக்குச் சுயமாகச் சிந்திக்கும் திறன் கிடையாது. ஆனால், சிந்தனை வளம் உடையவர்களை ஏளனம் செய்வதுபோல் பாசாங்கு செய்து, உண்மையை வரவழைக்கும் சாமர்த்தியம் உண்டு.

    உன்னையே ஊக்கிக்கொள்

    நமக்குச் சரியென்று தோன்றுவதை, பிடித்ததைச் செய்யும்போது பிறரது உந்துதல் தேவையில்லை. பிறர் ஊக்கம் அளிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் விளையும்.

    ஊக்கம் என்பது தனக்குத்தானே அளித்துக்கொள்வது.

    “தன்னையே நம்புகிறவன்தான் பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும்” (யூதர்களின் பழமொழி).

    ஒரே இடத்தில் உட்கார்ந்து, யோசனை செய்தபடியே இருந்தால் அவநம்பிக்கை பெருகிவிடும். அப்போதுதான் பிறரது ஆலோசனையை, அவர்களது பக்கபலத்தை, நாடத் தோன்றுகிறது. நாம் செய்யப்போகும் காரியத்திற்குப் பிறரது உத்தரவு ஏன்?

    `முடியாத காரியம்’ என்று நாம் கைவிட்டதைப் பிறர் எப்படிச் செய்து முடிக்கிறார்கள்?

    அவர்களுக்கு அதிகத் திறமை இல்லாமல் இருக்கலாம். பயம் எழும்போதெல்லாம், வேறொரு காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால் தெளிவும் பெறுகிறார்கள். விருப்பத்துடன் உழைப்பதால் வெற்றி அடைகிறார்கள்.

    கதை

    நான் ஆங்கிலத்தில் மறைந்த என் மகனைப்பற்றி எழுத ஆரம்பிக்கும்போது, அதைப் பிரசுரிக்கும் எண்ணமே வரவில்லை. என் நினைவுகளைப் பதிவு செய்வதற்காக ஆரம்பித்தேன்.

    பல நினைவுகள் ஒரே சமயத்தில் எழ, சில நாட்கள் ஒரே மூச்சில் பதினாறு பக்கங்களைக் கைப்பிரதியாக எழுத முடிந்தது. பேசுவது குறைந்தது.

    “உனக்கு வேண்டுமானால் அது பெரிய துக்கமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு என்ன வந்தது? நீ எழுதுவதை ஏன் படிப்பார்கள்?” என்று அவநம்பிக்கை தெரிவித்தவள் பொறாமையால் பேசுவது புரிந்து, அவளை அலட்சியம் செய்தேன்.

    நான் எழுதும்போதே அதைப் படித்து, ஊக்கமளித்துவந்த என் கவுன்சிலர்-தோழியோ, `நீ கண்டிப்பாக இதைப் பிரசுரிக்கவேண்டும். இதனால் பலருக்கு நன்மை,’ என்று வற்புறுத்தினாள்.

    கதை

    குழந்தையே வேண்டாம் என்று உறுதியாக இருந்தாள் ஸியூ ஙா. என்னுடன் பணிபுரிந்த இளம்பெண் அவள்.

    நான் எழுதியதை உடனுக்குடன் படித்ததும், சிறு வயதில், தந்தை தன் குடும்பத்தைக் கொடுமை செய்திருந்தால் என்ன, தான் இப்போது ஒரு நல்ல அம்மாவாக இருக்கமுடியாதா என்ற எண்ணம் பிறந்தது அவளுக்கு.

    `தாய்-குழந்தைக்கு இடையே இவ்வளவு அருமையான நெருக்கம் இருக்க முடியுமா!’ என்று பிரமித்தாளாம். அதன் விளைவாக, தன் முடிவை மாற்றிக்கொண்டாள். சீக்கிரத்திலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

    தோழி கூறிய இக்கதையைக் கேட்டவுடன், `யார் பிரசுரிப்பார்கள்?’ என்ற ஐயம் எழுந்தது.

    பதிப்பாளர்கள் நம்மைப்பற்றிப் பிறரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வார்கள் என்பதால், `ஆங்கில தினசரிக்கு அடிக்கடி எழுது. அன்றாட நிகழ்வுகளை ஒட்டி இருக்கவேண்டும்,’ என்றெல்லாம் குடும்பத்தினரால் எனக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    வெளியாகும் ஏதாவது செய்தியைக் குறித்து என் கருத்துக்களை கணினியில் உடனுக்குடன் எழுதி அனுப்ப முடிந்தது. நான் அனுப்பிய பல கடிதங்கள் Letter of the day என்ற பகுதியில் வந்தன. அனுப்பிய அடுத்த நாளே பிரசுரமாக, நம்பிக்கை எழுந்தது.

    அத்துடன், இந்திய கலைத்துறையில் விமர்சனம், சமூக இயல் சம்பந்தமான, நகைச்சுவையுடன் கூடிய கட்டுரைகள். (அடிக்கடி என் கணவரின் மண்டை உருளும்!).

    சில நாட்களில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் வெளியாகின.

    ஆரம்பத்தில் எழுந்த தயக்கம் மறைந்தது. பதினான்கு ஆண்டுகள் இப்படிக் கழிந்தன.

    `உங்கள் எழுத்துலக அனுபவங்கள்?’ என்று அயல்நாட்டு பதிப்பாளர் கேட்டு அனுமதிக்க, தமிழில் எழுதியவைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, புத்தக வடிவில் கொணர முடிந்தது.

    சிலரிடம் எதைப்பற்றியாவது விவாதித்தபின், “நீங்கள் எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று ஆர்வத்துடன் விசாரிப்பார்கள்.

    “எப்படி எழுதப்போகிறேன் என்று எனக்கே இப்போது தெரியாதே!” என்று உண்மையை ஒப்புக்கொண்டால் கோபிப்பார்கள்.

    கரு கிடைத்தவுடன் எழுத ஆரம்பித்தால் அந்த அவசரம் எழுத்துப்படிவத்தில் வெளிப்பட்டுவிடும். படபடப்பு இல்லாது, நிதானமாக யோசித்து எழுதினால்தான் சுவையாக இருக்கும்.

    இது புரியாது, பிறர் நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டால்…, விடுங்கள்!

    மனிதர்களை மாற்ற முடியாது. புரிந்துகொண்டால் போதாதா?

    Share
  • தாடி

    தாடி

    பாஸ்கர் சேஷாத்ரி

    இவர் தாடி கண்ணன். எண்பது வயது இளைஞர். எங்கள் குடும்ப தூரத்து உறவு. அம்பது வருஷத்துக்கும் மேலான நட்பு. திரிலோக சஞ்சாரி. பிரம்மச்சாரி. குடும்பக் குழந்தைகளுக்கு இவர் தாடி தாத்தா. எல்லாத் தகவல்களும் இவர் விரல் நுனியில். பழைய பீம்சிங்கில் ஆரம்பித்து இன்றைய பீ. சி. ஸ்ரீராம் வரை அவரிடம் தகவல் உண்டு..

    என் மேல் மகா ப்ரியம். அய்யா என்று என் குடும்பம் என்னை அழைக்கும். இவரும் அப்படி அழைக்கும் போது என் தந்தை நினைவு வரும். வாஞ்சைக்கும் அன்புக்கும் இவர்தான் கொள்முதல்.–ரேஷன் கடை பிரச்சனையா இவரிடம் சொன்னால் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்வார். என் கட்டுரை, கடிதம், புகைப்படம் தினசரியில் வந்தால் இவர் உடனே என்னை அழைத்து, தான் பார்த்து ரசித்ததைச் சொல்வார். அபார நினைவு. சில மாதங்கள் முன்பு காலை என் இல்லம் வந்து, கொஞ்சம் உணவருந்தி, பழைய நினைவுகளை அசை போட்டார். எதிர்பார்ப்பு இல்லாத உறவு. அன்பு. குணம்தான் தாடி கண்ணன்.

    சாலையில் செல்லும் போது இரைச்சலில் கூட அய்யா எனக் குரல் கேட்டால் அது தாடி தான். மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி இருப்பின் இவருக்கு நான் மகனாகப் பிறக்க வேண்டும். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது.

    பெரும்சுமை தலையில் அமிழ்த்துவது போல உணர்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு போன். சார் நீங்க பாஸ்கரா என எதிர்க் குரல் -ஆமாம் எனச் சொல்லி, தாடி தாத்தா என்கிற கண்ணன் மாமா, உங்கள் எண்ணைத் தான் நினைவு வைத்துக்கொண்டு இருக்கிறார் என்றார்.

    நீங்கள் யாரெனக் கேட்டேன். கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி எனச் சொல்லி வைத்துவிட்டார். அவர் உறவுக்கார்களைத் தேடித் தேடித் தகவல் சொன்னேன். யாரும் இங்கு சென்னை வந்து பார்க்கும் சூழலில் இல்லை. வயது, நோய்த்தொற்று எனப் பல காரணங்கள். அதற்கு ஒரு வாரம் முன்பு, பாஸ்கர் எனக்கு ஒரு கார் அனுப்பு எனத் தாடி (மற்றவர்களுக்கு தாத்தா) கேட்டார். ஆட்டோ அனுப்புகிறேன் எனச் சொல்லி உடன் சென்று வண்டியில் அனுப்பினேன்.

    ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்ந்தார். அன்றே நாங்கள் எல்லோரும் போய்ப் பார்த்தோம். அதிகாரியைப் பிடித்து, கொஞ்சம் குணப்படுத்தி, சாயங்காலம் வீட்டுக்கு அனுப்பினேன். அவருக்கு உறவென்று பலர் இருந்தாலும் யாரும் பக்கத்தில் இல்லை. சொந்த வீடு உண்டு எனப் பலர் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். விவரங்கள் பெரிதாக எதுவும் தெரியவில்லை. நிறையத் தகவல்களை அள்ளி வீசுவார்.

    பலமான நினைவாற்றல். ஒரு மெலிதான தொளதொள சட்டை. உடம்பில் ஓட்ட வேண்டுமே என்ற அலட்சியமயமான வேஷ்டி. தோள் அங்கவஸ்திரம். நெற்றியில் ஸ்ரீசூரணம். சிரித்துக்கொண்டே இருக்கும் முகம். தாடி எனக் குரல் கொடுத்தால் ஒய் என எதிர்க்குரல் உடன் கேட்கும். எண்பதைத் தாண்டிய வயது. சினிமா, அரசியல், கோயில் என எதை எடுத்துக்கொண்டாலும் அவருக்கு என்று ஒரு தனித் தகவல் உண்டு. இயக்குநர் ஜி. என். வேலுமணி எனச் சொன்னால் அது வேல்மணி எனத் திருத்துவார். ஆள்வார்பேட் வக்கீல் அடிகா என்றால் ஒரு முழு மங்களூர் கதை வரும்.

    அவ்வப்போது வழியில் பார்க்கும் போது, கொஞ்சம் பணம் கொடுப்பேன். தாத்தாச்சாரி டிரஸ்ட் பணத்தில் அவருக்கு மாதாமாதம் பணம் உண்டு. திடீரென இல்லம் வருவார். இந்தா இது ஆலப்பாக்கம் கன்னி கோயில் பிரசாதம் என்பார். அடுத்த வாரம் களத்தூர் ராமர் கோவில் குங்குமம் என்பார். அன்பின் மொத்த வடிவம் அவர்.

    நேற்று காலை அவர் காலமானார். நொறுங்கிப் போய் நிற்கிறேன். இந்த வலி இரண்டு நாளில் போகும். நினைவுகளைச் சுமந்துகொண்டு நான் அலைந்துகொண்டு இருக்க வேண்டியதுதான். உறவுகளின், அன்பின் வெளிப்பாடு இந்த வலி. எங்கோ பெய்த மழையில் என்றோ விளைந்த புல்லின் மேல் பாசம் வைப்பது போல மனித வாழ்க்கை. அடுத்த காற்றில் அல்லது பெருமழையில் அல்லது கால் பட்டு, புல் சிதைந்து போகும். மீண்டும் புல் முளைக்கும். இது வாழ்க்கை அமைப்பு. வாழ்க்கை பிடிபடாது, புரிபடாது இருக்கத்தான் இந்த நிலையாமை. அது உள்ளே ஊற ஊறத்தான் தெளிவு பிறக்கிறது. இதோ இன்று தீயுடன் வலி தெரியாமல் கலக்க இருக்கும் ஒரு முதிர் கிழம் அவர்.

    அவர் அறிவு, பசி, வலி, வேதனை, கலக்கம், ஏமாற்றம் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது.

    தினசரியில் எனது செய்தி வந்தால் உடனே போன் செய்து, சந்தோஷத்தை வெளிப்படுத்தி என்னைக் கொண்டாடும் தாடி இனி இல்லை. மரணம் ஞானப் புத்தகம். முடிவற்ற தொடர். பிறப்பும் மனிதன் வாழ்க்கையும் ஒன்றுமில்லை, எல்லாம் பெரும் அபத்தம் என்ற உயர் தத்துவத்தை இன்று உரைத்துச் சென்றுவிட்டார் தாடி. திடீரென சாலையில் அய்யா எனக் குரல் கேட்காதா என அபத்தமாய் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

    இவரைப் பற்றி நான் முகநூலில் எழுதியதை மாட வீதியில் படித்துக் காண்பிக்க, உங்கள் கண்களில் நீர் வந்ததை நான் அறிவேன். இப்போது என் கண்களில் வடியும் கண்ணீர் உமக்கு தெரியுமா ? நீயும் ஏமாற்றிவிட்டாய் தாடி.

    Share
  • படக்கவிதைப் போட்டி 291இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 291இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    புன்னகை பூக்கும் மழலை மலர்களைத் தம் படக்கருவிக்குள் அடைத்து வந்திருப்பவர் திருமிகு. ஆர். கே. லட்சுமி. இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. பெண்மணிகள் இருவர்க்கும் என் நன்றிகள்!

    ”கள்ளமிலாப் பிள்ளைகள் சிரிப்பில் நம்
    உள்ளக் கவலைகள் ஓடி மறையும்
    கேடில் கல்வியை இவர்கள் பெற்றால்
    நாடும் வீடும் நலமுற் றோங்கும்!” 

    கவிஞர்களே, இனி உங்கள் சிந்தனை முத்துக்களைக் கவிதைகளாக்கித் தர வாருங்கள்!

    *****

    ”மின்னல்வெட்டியதுபோல் புன்னகை பூக்கும் இம்மழலைக் கூட்டங்கள் தோல்வியே காணாத தோழமையோடு இருக்கட்டும்” என்று வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    ஐந்து முகங்கள் நூற்றியறுபதோ பற்கள்
    புன்னகை வெள்ளமோ புரண்டோடியது
    கன்னக்குழியோடு ஓர் புன்னகை
    காந்தமதைத் தோற்கடித்த ஓர் புன்னகை
    மின்னலை வெட்டியதோ ஓர் புன்னகை
    மீண்டு வரமுடியாத ஓர் புன்னகை
    மகிழ்ச்சிக் குவியலோடு ஒரு புன்னகை

    ஒற்றுமைக்கு ஓர் இலக்கணம்
    இம்மழலைக் கூட்டங்கள்
    தோளில் போட்ட கைகளோடு
    தோரணைப் பார்வை
    எதை நோக்கி என்றே தெரியவில்லை
    தோல்வியே காணாத
    தோழமையோடு இருக்கட்டும்!

    *****

    ”வெள்ளப் பெருக்கின் ஓட்டம்போல் துள்ளித் துள்ளி ஆட்டமிடும் பிள்ளையாய் இருந்துவிடின் இன்பத்துக்குப் பஞ்சமில்லை” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    குழந்தைப் பருவம்

    ஆட்டம் பாட்டு விளையாட்டு என்று
    வாட்டம் துன்பம் கேடுகள் நீக்கிக்
    கூட்டம் குழுவாய்க் கூடி நின்று
    காட்டும் இன்பம்போல் ஏதுமில்லை!

    பணிச்சுமைகள் ஏதுமில்லை
    பிணிப்பிடுங்கல் நோய்களில்லை
    கனியமுது மொழிகள் போலத்
    தேனமுதுச் சுவைகள் இல்லை

    கள்ளங் கபடம் ஏதுமின்றி
    வெள்ளப்பெருக்கின் ஓட்டம்போல்
    துள்ளித் துள்ளி ஆட்டமிடும்
    பிள்ளைப்பருவம் போல் வேறில்லை

    அச்சம் நாண வேடங்கள் போட்டு
    நெஞ்சில் உள்ளதை மறைப்பதில்லை
    வஞ்சம் அறியாக் குழந்தையாய் இருப்பின்
    கொஞ்சமும் இன்பம் குறைவதில்லை…

    *****

    மழலையரின் இன்முகங்களைக் கண்ட நம் கவிஞர்கள் மகிழ்வெய்தி நன்மொழிகளைக் கவிதைகளாக்கித் தந்திருக்கின்றார்கள்; அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் உரித்தாகின்றன!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

    மாறிடும் மனிதன்…

    சிரிக்கும் சின்னஞ் சிறுமலர்கள்
    சிந்தையில் நஞ்சிலா நறுமலர்கள்,
    தெரியா சூது வாதுடனே
    தெளிந்த நீர்நிலைச் சிரிப்பினிலே,
    புரியா வயதின் புனிதங்கள்
    பொய்யிலா பிள்ளைச் செல்வங்கள்,
    அரிய காட்சி வளர்ந்தபின்னே
    அனைத்து வஞ்சமும் சேர்வதாலே…!

    ”மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது” என்பார் பட்டுக்கோட்டையார். அதுபோல், ”சிந்தையில் நஞ்சிலா நறுமலர்களின்  புரியாவயதுப் புனிதங்கள் வளர்ந்தபின் காண்பதற்கு அரிய காட்சி” என்கிறார் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசன் நயம்பட. அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

        

    Share
  • திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்

    திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்

    திருப்பாவை – 23

    மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
    கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
    சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில் | ஸ்வேதா குரலில்

    மழைக்காலத்தில் மலைக்குகையில் கிடந்துறங்கும் சிங்கம், உணர்வுற்று, தீயென விழித்து, மேனி உதறி, பிடரி சிலிர்த்து, தலை நிமிர்ந்து, மலையதிரக் கர்ச்சித்து கம்பீரமாக நடப்பது போல், நீல வண்ணக் கண்ணா, உன் கோயிலிலிருந்து கிளம்பி இந்தச் சிறப்பு மிக்க சிங்காசனத்தில் எழுந்தருளி, எமது தேவைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகின்றார்கள்.

    இதில் அறிவுற்றுத் தீவிழித்து என்பதை நாம் கவனிக்க வேண்டும். நல்லறிவை உற்று (அனுபவித்து) உணர்ந்தால், அஞ்ஞான இருளில் உறங்கும் நம் அகம் விழிக்கும். அதன் பிறகு நாம் சிங்கம்போல் தலைநிமிர்ந்து நடக்கலாம். நம் காரியம் யாவும் நிறைவேறும் என்பது உட்பொருள். ஆண்டாள் ஆராய்ந்து அருளிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மார்கழிக் கோலம் – 3

    மார்கழிக் கோலம் – 3

    மார்கழிக் கோலங்களின் அடுத்த அணிவரிசை இதோ.

    தொகுப்பு – சுதா மாதவன்

     

    உங்கள் கோலங்களை annakannan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது 91-9841120975 என்ற எண்ணுக்கு வாட்ஸாப் செய்யுங்கள். நம் அலைவரிசையில் ஆவணப்படுத்துவோம். அடுத்த தலைமுறையும் அறியச் செய்வோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரு ஆணியும் பிடுங்கவில்லை

    ஒரு ஆணியும் பிடுங்கவில்லை

    பாஸ்கர்

    நான் ஏதும் செய்யவில்லை தானாக நடந்தது அதுவே
    பொழுதை நான் புடிக்கவில்லை அது பாட்டுக்குப் போகின்றது
    புல்லை நான் வளர்க்கவில்லை தாலாட்டிக் குதிக்கின்றது
    மூச்சை நான் விடவில்லை மூச்சும் என்னை விடவில்லை
    நான் ஒன்றும் செய்யவில்லை தென்றல் மட்டும் தீண்டிச் செல்லும்
    புன்னகைத்து நன்றி சொன்னால் முகத்தினிலே முத்தமிடும்
    வானுயரும் வெளி அளந்தால் கண்களும் மனசு ஆகும்
    விண்வெளியும் புல்வெளியும் முன்நெளியும் கோலமிகு வாழ்வு இது.
    கட்டி போட மனசை இங்கே கயிறுடன் ஆளுண்டா?

    Share
  • Tanker Foundation enters Twenty Eighth Year

    Tanker Foundation enters Twenty Eighth Year

    Baskar Seshadri

    It was in June 1993 Tanker Foundation was started by the managing Trustee Smt Latha Krishnaswamy in chennai and now after completing its twenty seven years of yeomen service its going to commence its twenty eighth Year. It had provided subsidised dialysis for more than three lakhs times to over one thousand Eight Hundred patients. It has provided the financial support to more than four thousands patients. They provide 5850 dialysis per month, of which 5629 are free of cost with valuable help from the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS), Greater Chennai Corporation and other valuable donors. Tanker is supported by many individuals and corporate institutions.

    Additionally they have a dialysis unit at PIMS. Tanker supports Kerala Kidney research foundation and totally it has eleven subsidized dialysis units in tamilnadu. They extend the best of their services to those who are in need of dialysis . Corporate Hospitals charge a sky high rate for the medical service but Tanker our chennai based NGO is extending such a support which we all should cherish for ever in life . That too at a subsidised rate for the benefit of the poor and needy. Am Glad that i am a small part of Tanker Foundation.

    People who wish to extend the assistance to this institution can reach 044 – 28341635 and they are headquartered at T Nagar, 11 , Thirumurthy street. Please support them. After all Life is there to give, what all one can.

    Salutes to Tanker. We are with you as usual as always. In case of any assistance i can be reached at 98410 33888 too and i too can be of a little help

    Share