-மேகலா இராமமூர்த்தி

புன்னகை பூக்கும் மழலை மலர்களைத் தம் படக்கருவிக்குள் அடைத்து வந்திருப்பவர் திருமிகு. ஆர். கே. லட்சுமி. இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. பெண்மணிகள் இருவர்க்கும் என் நன்றிகள்!

”கள்ளமிலாப் பிள்ளைகள் சிரிப்பில் நம்
உள்ளக் கவலைகள் ஓடி மறையும்
கேடில் கல்வியை இவர்கள் பெற்றால்
நாடும் வீடும் நலமுற் றோங்கும்!” 

கவிஞர்களே, இனி உங்கள் சிந்தனை முத்துக்களைக் கவிதைகளாக்கித் தர வாருங்கள்!

*****

”மின்னல்வெட்டியதுபோல் புன்னகை பூக்கும் இம்மழலைக் கூட்டங்கள் தோல்வியே காணாத தோழமையோடு இருக்கட்டும்” என்று வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

ஐந்து முகங்கள் நூற்றியறுபதோ பற்கள்
புன்னகை வெள்ளமோ புரண்டோடியது
கன்னக்குழியோடு ஓர் புன்னகை
காந்தமதைத் தோற்கடித்த ஓர் புன்னகை
மின்னலை வெட்டியதோ ஓர் புன்னகை
மீண்டு வரமுடியாத ஓர் புன்னகை
மகிழ்ச்சிக் குவியலோடு ஒரு புன்னகை

ஒற்றுமைக்கு ஓர் இலக்கணம்
இம்மழலைக் கூட்டங்கள்
தோளில் போட்ட கைகளோடு
தோரணைப் பார்வை
எதை நோக்கி என்றே தெரியவில்லை
தோல்வியே காணாத
தோழமையோடு இருக்கட்டும்!

*****

”வெள்ளப் பெருக்கின் ஓட்டம்போல் துள்ளித் துள்ளி ஆட்டமிடும் பிள்ளையாய் இருந்துவிடின் இன்பத்துக்குப் பஞ்சமில்லை” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

குழந்தைப் பருவம்

ஆட்டம் பாட்டு விளையாட்டு என்று
வாட்டம் துன்பம் கேடுகள் நீக்கிக்
கூட்டம் குழுவாய்க் கூடி நின்று
காட்டும் இன்பம்போல் ஏதுமில்லை!

பணிச்சுமைகள் ஏதுமில்லை
பிணிப்பிடுங்கல் நோய்களில்லை
கனியமுது மொழிகள் போலத்
தேனமுதுச் சுவைகள் இல்லை

கள்ளங் கபடம் ஏதுமின்றி
வெள்ளப்பெருக்கின் ஓட்டம்போல்
துள்ளித் துள்ளி ஆட்டமிடும்
பிள்ளைப்பருவம் போல் வேறில்லை

அச்சம் நாண வேடங்கள் போட்டு
நெஞ்சில் உள்ளதை மறைப்பதில்லை
வஞ்சம் அறியாக் குழந்தையாய் இருப்பின்
கொஞ்சமும் இன்பம் குறைவதில்லை…

*****

மழலையரின் இன்முகங்களைக் கண்ட நம் கவிஞர்கள் மகிழ்வெய்தி நன்மொழிகளைக் கவிதைகளாக்கித் தந்திருக்கின்றார்கள்; அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் உரித்தாகின்றன!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

மாறிடும் மனிதன்…

சிரிக்கும் சின்னஞ் சிறுமலர்கள்
சிந்தையில் நஞ்சிலா நறுமலர்கள்,
தெரியா சூது வாதுடனே
தெளிந்த நீர்நிலைச் சிரிப்பினிலே,
புரியா வயதின் புனிதங்கள்
பொய்யிலா பிள்ளைச் செல்வங்கள்,
அரிய காட்சி வளர்ந்தபின்னே
அனைத்து வஞ்சமும் சேர்வதாலே…!

”மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது” என்பார் பட்டுக்கோட்டையார். அதுபோல், ”சிந்தையில் நஞ்சிலா நறுமலர்களின்  புரியாவயதுப் புனிதங்கள் வளர்ந்தபின் காண்பதற்கு அரிய காட்சி” என்கிறார் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசன் நயம்பட. அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

    

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *