Blog

  • மக்கள் தொலைக்காட்சியில் அண்ணாகண்ணன்

    மக்கள் தொலைக்காட்சியில் அண்ணாகண்ணன்

    2021ஆம் ஆண்டு எழுத்துத் துறை எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் தொலைக்காட்சியிலிருந்து கேட்டார்கள். எங்கள் வீட்டுக்கே வந்து என் கருத்துகளைப் பதிந்தார்கள். அவர்களும் இவர்களும் என்ற இந்த நிகழ்ச்சியில், அச்சு எழுத்தாளர்கள், இணைய எழுத்தாளர்கள் சார்பில் கருத்துகளைப் பெற்றார்கள். என்னுடன் எழுத்தாளர்கள் வையவன், கே.பாரதி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். 01.01.2021 புத்தாண்டு அன்று காலையில் இந்த நிகழ்ச்சி, ஒளிப்பானது.

    என் கருத்துரையில், எழுத்துத் துறை, பத்திரிகைத் துறை, பதிப்புத் துறை, தமிழ் வளர்ச்சி ஆகியவை 2021இல் எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொண்டேன். என் கருத்துரை இங்கே. இதைப் பார்த்து, உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

     

    நன்றி – மக்கள் தொலைக்காட்சி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 291

    படக்கவிதைப் போட்டி – 291

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் ஆர்.கே.லட்சுமி எடுத்த இப்படத்தை ஃபிளிக்கர் தளத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.01.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • திருவெம்பாவை – 17 | செங்கண் அவன்பால்

    திருவெம்பாவை – 17 | செங்கண் அவன்பால்

    திருவெம்பாவை – 17

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
    எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
    கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
    இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
    அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
    நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://www.thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8b/Dasabuja_rishaba_thandava_moorthy.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • யானைக் குளியல்

    யானைக் குளியல்

    கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில் சபாரி யானைகள் குளிக்கும் அழகிய, அரிய காட்சி இதோ.

    வர்ணனை – காயத்ரி சேஷா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 2021 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

    2021 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

    2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இடர்கள் தீருமா? மகிழ்ச்சி கிட்டுமா? நினைத்தது நடக்குமா? 2021ஆம் வருடத்துக்கான ஆண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் அவர்கள், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

    மேஷம் | 2021 ஆண்டுப் பலன்

    ரிஷபம் | 2021 ஆண்டுப் பலன்

    மிதுனம் | 2021 ஆண்டுப் பலன்

    கடகம் | 2021 ஆண்டுப் பலன்

    சிம்மம் | 2021 ஆண்டுப் பலன்

    கன்னி | 2021 ஆண்டுப் பலன்

    துலாம் | 2021 ஆண்டுப் பலன்

    விருச்சிகம் | 2021 ஆண்டுப் பலன்

    தனுசு | 2021 ஆண்டுப் பலன்

    மகரம் | 2021 ஆண்டுப் பலன்

    கும்பம் | 2021 ஆண்டுப் பலன்

     

    மீனம் | 2021 ஆண்டுப் பலன்

     

    ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களிடமிருந்து உங்கள் பிரத்யேக பலன்களைப் பெற, ஜாதகம் கணிக்க, பொருத்தம் பார்க்க, வேலை, தொழில், திருமணம், மகப்பேறு, ஆரோக்கியம் போன்றவை தொடர்பான துல்லியமான ஜோதிட ஆலோசனைகளைப் பெற, nallayogam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள். இது கட்டணச் சேவை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே

    திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே

    திருப்பாவை – 17

    அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
    எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
    அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
    உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
    செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 17 | அம்பரமே தண்ணீரே | ஸ்வேதா குரலில்

    கொழுந்து என்பது புத்தம் புதியது, இளையது, முகப்பில் உள்ளது, முதன்மையானது. புதுமையின், மரபின் தொடர்ச்சியாய், அடையாளமாய்த் திகழ்வது. கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி என ஆண்டாள், யசோதையைப் பாடும் அருள்மொழிகள் அனைத்தும் ஆண்டாளுக்கும் பொருந்தும். அம்பரம் ஆகிய வானை ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான், நம் இடர்களை எல்லாம் ஊடறுத்து, இன்பம் ஓங்கச் செய்ய வேண்டுவோம். தேமதுரத் திருப்பாவையின் 17ஆவது பாடல் அம்பரமே தண்ணீரே, இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

    கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

    மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான ஆளுமையை உருவாக்கிக் கொண்டது. அதற்குப் பல அறிஞர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இக்கல்லூரியில் நான் 1995-2000 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக்கொண்டு இருந்தேன். தியாகராசர் கல்லூரி சைவ மரபிற்கும் தமிழ் அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் பெயர்பெற்ற கல்லூரி. எப்போதுமே மரபின் ஆளுமையும் ஆதிக்கமும் மேலோங்கி நிற்கும். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கம் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் அறிவுத்தளத்திலும் தனது செல்வாக்கைச் செலுத்தியது. ஆக மரபுக்கும் புதுமைக்கும் இடையேயான இடைவெளி மாறத் தொடங்கியது. இது தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையையும் பாதித்தது.

    பேராசிரியர் மாணிக்கம், பேரா. மாரியப்பன், பேரா. அருணகிரி, பேரா. காளிதாஸ் என்று மரபைப் போற்றும் சைவநெறி பின்பற்றும் பேராசிரியர்கள் ஒரு பகுதியாகவும் பேரா.சக்திவேல், பேரா. தொ.பரமசிவன், பேரா. கு. ஞானசம்பந்தன், பேரா. கருணாமூர்த்தி, பேரா. பேச்சிமுத்து என்று புதிய சிந்தனைகளோடு இருந்த பேராசிரியர்கள் ஒரு பகுதியாகவும் செயல்பட்டனர். இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையே காணப்படும் அனைத்து முரண்பாடுகளும் இங்கும் காணப்பட்டன. பேரா தொ.ப அவர்கள் புதுமையின் அடையாளமாக வலம் வந்தார். இவரின் ஆய்வு மனப்பான்மையாலும் சிந்தனைத் தெரிப்பாலும் பலர் கவரப்பட்டனர். எப்போதும் நண்பர்கள் கூட்டம் மாணவர்கள் கூட்டம் என்று விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். மேற்கோள் காட்டும் நூல்களைப் படிக்க இவருக்கு எப்போது நேரம் கிடைக்கும் என்றும் எந்த வகையில் இத்தகைய நூல்களை அறிந்து கொள்கிறார் என்றும் பல நேரங்களில் வியந்தது உண்டு. ஏதேனும் கேள்விகள் கேட்டால் அதற்கான நேரடியான பதிலைக்கூறி இந்தப் புத்தகத்தை, சிறுபத்திரிக்கையைப் படி என்று கூறுவார். இவரின் ஆளுமையைத் தூரத்திலிருந்து வியந்த தருணங்கள் அனேகம். அப்போதெல்லாம் எனக்கு மனதில் தோன்றிய எண்ணம் படிக்க வேண்டும் என்பது தான். ஆனால் கோட்பாட்டுப் பார்வையோடு படிக்க வேண்டும் ஆராய வேண்டும் என்ற பார்வை எனக்கு ஏற்படவில்லை. என்றாலும் அவரின் தோற்றம் என்னையறியாமல் என்னுள் பதிந்தது. மண் சார்ந்த பண்பாட்டு ஈர்ப்பும் அவர் மேல் ஆழமான பற்றுதலை உருவாக்கியது.

    தொ.ப அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழும் கற்றார். இதன் பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1976ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். முனைவர் பட்ட ஆய்வுக்காகப்  புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு செய்ய விரும்பினார். ஆனால், இவருடைய ஆய்வு நெறியாளர் மு. சண்முகம் பிள்ளை, கோயில் குறித்து ஆய்வுமேற்கொள்ளும்படி கூறவே, மதுரையில் உள்ள அழகர் கோயிலைத் தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார். இந்தக் கோயில் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வு, கோயில் குறித்த ஆய்வின் எல்லைகளை விரிவடையச் செய்தது. இவரது ஆய்வுக் கட்டுரையினை மதுரை காமராசர் பல்கலைக்கழம் “அழகர் கோயில்” என புத்தகமாக வெளியிட்டது. வழக்கமாக கோயில்கள் குறித்த ஆய்விலிருந்து இவரது அணுகு முறை முற்றிலும் மாறி, அழகர் கோயிலுக்கும் பல்வேறு சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்ததாக அமைந்தது. தமிழ் மொழியின் மீது பெரும் பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தவராக இருந்தபோதும் தன்னுடைய ஆய்வினைச் செம்மைப்படுத்தும் நோக்கில் சமஸ்கிருதமும் கற்றார்.

    சாக்கிர் உசைன் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998 முதல் 2008 இல் இளைப்பாறும் வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

    மக்கள் பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டவை. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளைக் காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.

    இவரின் நூல்கள் பலதரப்பட்ட பதிப்பகங்களின் வெளியீடாக வெளிவந்துள்ளன. அவை அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன் நேர்காணல்கள், விடு பூக்கள், உரைகல், இந்து தேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் போன்றவையாகும்.

    முதுகலை பயிலும் காலத்தில் பேரா. தொ.ப அவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று விட்டார். அக்காலத்தில் இவரின் ‘நாள் மலர்கள்’ புத்தகம் எங்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தைப் படித்துவிட்டுப் பாவை பதிப்பகத்தைத் தேடிய காலம் அது. ‘அழகர் கோயில்’ படித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து அழகர்மலை வரை நினைவுகளோடு பயணித்த காலம். கள்ளந்திரி, வைகை ஆற்றுக் கால்வாயில் குளித்து மகிழ்ந்த காலம் என்று வாழ்வோடு கலந்துவிட்டது. ‘பண்பாட்டு அசைவுகள்’ காலச்சுவடு வெளியிட்ட நூலில் பீட்டர் பாண்டியன் என்று அன்போடு அழைக்கப்படும் ஆங்கிலேய அதிகாரியின் வாழ்க்கைச் செய்திகளைத் தொ.ப எடுத்துக் கூறும் விதம் புதுமையானது. எந்த ஒப்பனைகளும் இல்லாமல் திருக்குறளை நினைவுபடுத்தும் சுருங்கச் சொல்லி சிந்திக்க வைக்கும் இவரின் கட்டுரை வடிவம் உவப்பானது, முன்மாதிரியானது. இவரின் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பற்றிய சிந்தனைகள் வியப்பானவை மற்றும் இன்றளவும் கண்டுகொள்ளப்படாதவை.

    இவர் இந்து நாளிதழில் அளித்துள்ள நேர்காணல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய தமிழாய்வு எப்படி சென்று கொண்டிருக்கிறது என்ற தனது கருத்துக்களை விரிவாகக் கூறியுள்ளார். “அவர்களைப் (நாட்டுப்புற மக்கள்) படிக்கிறதுதான் உண்மையாகவே தேசத்தைப் படிப்பதாகும். அவர்களுடைய வாழ்க்கை அசைவுகள் அர்த்தமுடையவை. இன்னும் சொல்லப்போனால், நாட்டார் என்று நாம் அடையாளங்காட்டும் ஒவ்வொருவரையும் ‘படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள்’ என்று சொல்லலாம். அந்தப் புத்தகங்களைத்தான் நான் ரொம்ப விரும்பிப் படிக்கிறேன். அவர்களிடம் இருக்கும் இயல்பான ஞானம், நம்ம நகர்ப்புறத்துக்காரங்கக்கிட்ட இல்லைங்கிறதுதான் சோகமான விஷயம்” என்று கூறுவதன் மூலம் தனது ஆய்வுக்களம் நாட்டார் மக்களிடமிருந்தே தொடங்குவதைக் காட்டுகிறார்.

    மேலும் “அப்படி நம்பிக்கையளிக்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் நம்பிக்கையிழந்து போயிருக்கிறோம் என்பதுதான் இப்போதைய சோகம். நீங்கள் சொல்வது போல், வானமாமாலை, லூர்து போன்றவர்கள் முதல் தலை முறையினர். எங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு அடுத்தத் தலைமுறை. மூன்றாவது தலைமுறைக்கு இப்போது ஆள் இல்லையென்பதுதான் உண்மை” என்று ஆய்வுத் தொடர்ச்சி அறுபட்டுப் போன சோகத்தை அவரின் இறுதி நாள் வரை காண முடிந்தது. 1990 களுக்குப் பிறகு ஏற்பட்ட பின் நவீனத்துவ மாற்றமும் 2000க்கு பிறகு ஏற்பட்ட கல்வி வணிகமயமானதும் தமிழாய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக அறிவு சார்ந்த தேடுதல் மாற்றமடைந்து பதவி பெறுதல் சார்ந்த அறிவு தேடுதல் நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாகத் தன்னை இழந்து தமிழிலக்கியத்தை வளர்த்தெடுத்தத் தன்னார்வ உணர்வாளர்கள் தமிழ்ச் சூழலில் ஒதுங்கிக் கொண்டனர் அல்லது ஓரங்கட்டப்பட்டனர். இவ்வாறு தமிழாய்வு அறுபட்ட பட்டமாகக் காற்றில் திசையற்று அல்லாடிக்கொண்டு இருக்கிறது.

    மேலும் ஆய்வாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு “என்னைவிட, முத்துமோகனுக்கு சித்தாந்தத் தெளிவு நிறைய இருக்கிறது. அவருடைய ‘ஏகம், அநேகம், சாதியம்’ என்ற புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘தெய்வங்களும் சமூகமரபுகளும்’ என்ற புத்தகத்துக்கு அவர் முன்னுரை கொடுத்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஒரே படகில் பயணிப்பவர்கள்” என்று கூறியுள்ளது சிந்திக்கத் தக்கது.

    தொ.பவின் ஆய்வுப்போக்கைக் கீழ் கண்ட அவரின் வெளிபாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    “பாளையங்கோட்டையைப் பற்றிய இதுபோன்ற நிறைய நுணுக்கமான சான்றுகள் அழிந்துவிட்டன. அதற்குப் பிறகுதான் நான் என் ஆய்வுகளைத் தொடங்கினேன். ஹென்றி பவரின் நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், ஹென்றி பவர் சிந்தாமணிக்கு ஒரு உரை எழுதியிருக்கிறார். சிந்தாமணியைப் பாடம் சொல்வதற்கு தமிழ் ஆசிரியர்கள் இப்போதும் பயப்படுவார்கள். ஆனால், ஹென்றி பவர் 1865-லேயே ‘நாமகள் இலம்பகம்’ பகுதிக்கு உ.வே.சாவிற்கு முன்னர் உரை எழுதியிருக்கிறார். ஆனால், உ.வே.சா அதைச் சொல்லவேயில்லை” என்பதன் மூலம் ஆய்வாளரின் அறத்தொடு நிற்றலைச் சிந்திக்கத் தூண்டுகிறார். எச்சார்பும் இல்லாமல் தமிழ்ச் சார்ந்து வாழ்ந்த தொ.ப பழுமரம். இலக்கியப்பறவைகளின் வாழ்விடம்.

    நன்றி: தமிழ் விக்கிப்பீடியா, இந்து தமிழ் நாளிதழ்.

    Share
  • மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா!

    மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    இருபதே சென்றுவா
    இருபதொன்றே நன்றுவா
    வந்திடும் கொரனாவை
    வராதுமே செய்துவா!

    நல்லன அளிக்கவா
    வல்லன கொடுக்கவா
    வெல்லுவோம் என்றிடும்
    வீரத்தை உணர்த்தவா!

    மதுவினை ஒழிக்கவா
    மங்கையர் காக்கவா
    சதிகளை தடுக்கவா
    சன்மார்க்கம் நிலைக்கவா!

    அரசியல் சிறக்கவா
    ஆட்சிகள் நிலைக்கவா
    கயமைகள் விரட்டவா
    கண்ணியம் காக்கவா!

    உழவர்கள் உயரவா
    உழைப்பவர் சிரிக்கவா
    கயவர்கள் ஓடவா
    காமுகர் மடியவா!

    ஆணவம் அகலவா
    ஆன்மீகம் பெருகவா
    நாடெலாம் நலமுடன்
    நாளுமே இருக்கவா!

    கற்றிடும் மாணவர்
    கல்வியில் உயரவா
    பெற்றவர் வாழ்விலே
    பெருஞ்சுமை குறையவா!

    மழைவளம் சிறக்கவா
    வறட்சியை விரட்டவா
    மாநிலம் எங்கணும்
    மங்கலம் பொங்கவா!

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 49

    பழகத் தெரிய வேணும் – 49

    நிர்மலா ராகவன்

    நல்லவரை இனங்காண்பது

    “என் மகள் கல்யாணத்திற்குமுன் கலகலப்பாக இருப்பாள். இப்போது அதிகம் பேசுவதில்லை. சாந்தமாக, பொறுப்பாக இருக்கிறாள்,” என்று கூறும் பெற்றோர் மகளின் மாற்றம் அவளுக்கு நல்லதுதானா, அல்லது வயது கூடியதால் நேர்ந்ததா என்று யோசிப்பதோ, அதனால் கவலைப்படுவதோ கிடையாது. ஏனெனில், அனேகமாக எல்லாப் பெண்களுமே இப்படித்தான் மாறுகிறார்கள்.

    கதை

    பல இளைஞர்கள் தங்கள் நண்பனுடைய திருமணத்திற்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள்.

    மணமகனுடைய உறவுக்காரப்பெண் மல்லிகா அவர்களுடன் கல்லூரியில் மேற்படிப்புப் படித்தவள். பழைய நண்பர்களைப் பார்த்ததும் உற்சாகம் பெருக, அவர்களுடன் உட்கார்ந்து, பழைய நாட்களைப்போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

    ஆனால், ஒரு வித்தியாசம். மல்லிகாவுக்கு இப்போது கல்யாணம் ஆகி, பிள்ளைகளும் இருந்தார்கள். மாமியார் முகம் சுண்டிப்போயிற்று.

    கல்யாணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். எப்போதும் அப்படியா!

    `இவள் கண்ட ஆண்களுடன் பேசினால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்!’ என்று ஆத்திரப்பட்டாள். தன் மகனுக்குத் தூபம் போட்டாள்.

    காதலித்து மணந்த மனைவியின் போக்கை அவன் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. “நாங்க எல்லாரும் ஒண்ணாப் படிச்சவங்கம்மா,” என்றான் அலட்சியமாக.

    கணவனோ, மாமியாரோ, ஒரு பெண் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு, அதில் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால் அப்பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்?

    `பெரியவர்களை மதித்து நட,’ என்று தாயும், கணவரும் போதிக்க, குடும்பத்தில் பிரச்னைகளைத் தவிர்க்க பழைய போக்கை மாற்றிக்கொள்வாள் — மகிழ்ச்சியுடன் என்று கூற முடியாது.

    கதை

    காமாட்சிக்குத் தான் பெற்ற குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதோடு திருப்தி கிடைக்கவில்லை.  வீட்டுக்குப் பெரியவள் என்ற முறையில், பேரக்குழந்தைகளுக்கும் தானே பெயர் வைக்கவேண்டும் என்பது அவள் நம்பிக்கை.

    ஆனால், புதுமையாக, நாகரிகமாக, தான் பெற்ற அருமை மகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்று ஒரு மருமகள் எண்ணினாள். அப்படி ஒரு பெயரை யோசித்தும் வைத்திருந்தாள்.

    `இந்தத் தெருவில் எல்லார் வீட்டிலும் அந்தப் பெயர்கொண்ட ஒரு சிறுமி இருக்கிறாள். நன்றாக இருப்பதால்தானே வைத்திருக்கிறார்கள்!’ என்பது காமாட்சிப்பாட்டியின் எண்ணம்.

    `நாளைக்கு என் குழந்தை தெருவில் போகும்போது அந்தப் பெயரைச் சொல்லி அழைத்தால், பல குழந்தைகள் திரும்பிப் பார்க்கும்!’ என்பது மருமகளுடைய வாதம்.

    `நான் சொல்வதை யார் கேட்பார்கள்!’ என்று மாமியார் அரற்றினாள். இறுதியில், அவள் பிடிவாதம்தான் வென்றது.

    இவ்வாறு, `நீ என்னைக் கஷ்டப்படுத்துகிறாய்!’ என்பதுபோல் தன்னிரக்கத்துடன் பேசுவதால் மற்றவர் மனதைத் துன்புறுத்துகிறோம் என்று சிலருக்குப் புரிவதில்லை.

    நம்மிடம் ஓயாது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, `உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்,’ என்று சப்பைக்கட்டுக் கட்டுபவர்கள் உற்றவர்கள் அல்லர்.

    கதை

    “என் பெண்ணின் முகத்தில் சிரிப்பே மறைந்துவிட்டது. `ஏன் எனக்குக் கல்யாணம் செய்துவைத்தாய்?’ என்று கோபிக்கிறாள்,” என்று ஒரு தாய் என்னிடம் குறைப்பட்டாள்.

    மாப்பிள்ளை நல்லமாதிரிதான். பின் என்ன குறை?

    “வெளியில் எங்காவது போனால், பட்டுப்புடவைதான் கட்டிக்கொண்டு போகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறாளாம் மாமியார். இவளுக்கோ, நைலக்ஸ்தான் பிடிக்கிறது!’

    உடுத்துவது ஒவ்வொருவருடைய சொந்த விருப்பம். சிறு சமாசாரம்தான். ஆனால், ஒருமுறை விட்டுக்கொடுத்தால், தம் பிடியை இறுக்கிக்கொள்வார்களே, அதிகாரம் செலுத்துபவர்கள்!

    புன்சிரிப்பு மறையாது, `இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் நடக்கவேண்டும்,’ என்று பிறரைத் தொணதொணத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றம்தான் கிட்டும் – அவர்கள் எவ்வளவு இனிமையாகச் சொல்வதாக நினைத்தாலும்.

    இம்மாதிரியானவர்களால் நம் நேரம்தான் விரயமாகிறது. அவர்கள் சுயநலம் பிடித்தவர்கள், அல்லது பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று புரிந்துகொண்டால் பிழைக்கலாம். ஏனெனில் அவர்கள் செய்வது உணர்ச்சிபூர்வமான வதை.

    கேள்வி: ஏன் வதை? அக்கறையுடன், நம் நன்மைக்குத்தானே சொல்கிறார்கள்?

    பதில்: “உனக்கு சந்தர்ப்பத்துக்குச் சரியாக நடக்கத் தெரியாது. அறிவோ, அனுபவமோ போதாது!” என்று மறைமுகமாக மட்டம் தட்டுவது போலில்லை?

    உடனிருப்பவர் பழித்துவிடுவாரே என்று பயந்து, எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் அதீத கவனத்துடன் செய்தால், அல்லது விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால், ஒருவரது தன்னம்பிக்கை குறைந்துகொண்டே போய்விடாதா!

    “இம்மாதிரி ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து, உடலும் மனமும் ஒருங்கே பாதிக்கப்பட்டு வாழ்வதைவிட தனியாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது மேலானது,” என்கிறார் ஓர் அனுபவசாலி.

    உபயோகமான, மகிழ்ச்சி மட்டுமே அளிக்கும் உறவுகள் நம் கனவுகள் நனவாக கூடியவரை ஒத்துழைப்பார்கள். அப்படி இல்லாவிடினும், `இது நடக்கிற காரியமா!’ என்று அவநம்பிக்கை தெரிவிக்காமலாவது இருப்பார்கள்.

    ஒருவர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் ஆறுதலாக இருக்கும் ஒரே நபர்தான் நல்ல நண்பர்.

    கதை

    ஒரு நாளிரவு, “உன்னை நாளைக்குப் பார்க்கமாட்டேன்னு தோணுது!” என்று கணவன் சொல்ல, சரோ சிரித்தாள். “ராத்திரி அப்படி எங்கே போயிடப்போறீங்க?”

    அப்போது இருவருமே எதிர்பார்க்கவில்லை, அவன் இவ்வுலகைவிட்டே போகப் போகிறான் என்று.

    சரோவால் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை.

    `முப்பது வயதுகூட நிரம்பவில்லை! இவள் என்ன பாவம் செய்தாளோ!’ என்பதுபோல், அவள் காதுபடவே சிலர் கரித்தார்கள்.

    அவளுடைய சுந்தரி வயதில் மூத்தவள். அடுத்த சில ஆண்டுகளில், சரோ மேற்படிப்பைத் தொடர்ந்து, நல்ல உத்தியோகத்திலும் அமர்ந்தாள். முன்பு பழித்தவர்கள் இப்போது சொந்தம் கொண்டாட வந்தபோது அவளுக்கு உலகம் புரிந்தது.

    வெளியூரில் இருந்த தன் இல்லத்திற்கு தூரத்து உறவினளான சுந்தரியை வற்புறுத்தி அழைத்து, நன்கு உபசரித்தாள்.

    `ஒரு மாதம், தினமும், இரண்டு மைல் தொலைவிலிருந்த என் வீட்டிற்கு நடந்தே வந்து, ஆறுதலாகப் பேசினீர்களே! அந்த நன்றியை மறக்கவே மாட்டேன்!’ என்று திரும்பத் திரும்பச் சொன்னாளாம், நன்றிப் பெருக்குடன்.

    இப்படிப்பட்ட நண்பர்கள் வெவ்வேறு துறையில் ஈடுபாடு கொண்டவராக இருக்கலாம். ஒத்த மனத்தினராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. வயது வித்தியாசமும் பெரிதில்லை.

    நல்ல நண்பரை எப்படி இனங்கண்டுகொள்வது?

    அவருக்காக நாம் மாற வேண்டியிருக்காது. நம் கடந்த காலப் பிழைகள் அவருக்குத் தெரிய வந்தாலும், எதிர்காலம் சிறப்பாகத்தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கிறபடியே நம்மை ஏற்பார்.

    பிரதிபலனை எதிர்பாராது, நம்மை ஊக்குவிப்பார்.

    நம்மையே நமக்கு உணர்த்துகிறவர். நம் வெற்றிக்காகப் பெருமைப்படுகிறவர்.

    நம் இழப்புகள், குறைகள் பெரிதாகத் தோன்றாதுபோக, நம்மை நம்மால் ஏற்கமுடியும்.

    அவர் அண்மையில் இருக்கையில், நாம் அதிகம் சிரிப்போம்.

    நாம் என்ன சொன்னாலும், மனதில் எதை நினைத்து அப்படிச் சொல்கிறோம் என்பது அவருக்குப் புரியும்.

    இப்படி ஒருவர் கிடைத்தால், அவரை SOULMATE (ஆத்மார்த்தி) என்கிறோம்.

    இப்போதெல்லாம், இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தால் அவர் நாணுவதில்லை. நல்லவர்களை `ஏமாளி’ என்று எண்ணிவிடும் காலம் இது.

    நமக்கென்று சில உண்மையான நண்பர்கள் கிடைக்காமலா போவார்கள்!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 34

    கதை வடிவில் பழமொழி நானூறு – 34

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 69

    மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
    கூடம் மரத்திற்குத் துப்பாகும் – அஃதேபோல்
    பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
    ‘ஈடில் லதற்கில்லை பாடு’.

    பழமொழி – ‘ஈடில் லதற்கில்லை பாடு’.

    எங்கடா கூட்டிண்டு போற. ஏதோ முக்கியமான இடத்த காண்பிக்கப் போறதா சொல்லிட்டு நிக்காம ஒரு மணிநேரம் கார ஓட்டிண்டே இருக்கியே. வழியில எவ்வளவு அழகான பூங்காக்களெல்லாம் இருந்தது. பச்சைப்பசேல்னு. அதவிடவா பெரிய இடம். அம்மா புலம்பிக்கொண்டே இருந்தாள்.

    பாட்டி டோன்ட் வொரி. இப்போ நாம உங்களுக்குப் பிடிச்ச பழைய கலாச்சாரத்து சாமான்கள் வைக்கப்பட்டிருக்கிற மியூசியத்துக்குத்தான் போய்க்கிட்டிருக்கிறோம். அங்க ஒவ்வொரு மாநிலத்திலையும் முன்னாடி காலத்துல என்ன பொருட்கள் உபயோகிச்சாங்களோ அவைகளையெல்லாம் பாக்க முடியும். ரொம்ப நல்லா இருக்கும்.  நானும் அப்பாவும் ஏற்கனவே பாத்துட்டோம். உங்களுக்காகத்தான் இப்போ போய்க்கிட்டிருக்கோம். இந்தாங்க இத காதுல மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டுக்கிட்டே வாங்க. அம்மாவின் தொணதொணப்பை நிறுத்தினான் என் பதினைந்து வயது மகன் சுஷாந்த்.

    இன்னும் பத்துநிமிசத்துல நாம போய்ச் சேந்துடலாம். அம்மாவை உற்சாகப்படுத்தினேன். இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டிக்கிட்டு வரேன். அம்மா என்ஜாய் பண்ணலேன்னா சப்புனு ஆயிடும்.

    உள்ளே நுழைந்ததுதான் தாமதம். முதலில் இருந்த ஒரிசா சாமான்களை மந்தமான முகத்துடன் பார்த்துக் கொண்டே நடந்த அம்மா அடுத்த அறையின் தமிழ்நாடு என்ற பலகையைப் பார்த்தவுடனேயே உற்சாகமானாள். பாருடா பழங்காலத்து பித்தளை பொம்மைகள் வச்சிருக்காங்க.

    இங்க வா சுஷாந்த் இதுக்குப்பெயர் தான் வார்ப்பு. கல்யாணத்துக்கெல்லாம் மைசூர்பாகு, பால்கோவா எல்லாம் இதுலதான் கிண்டுவா. ஆமா பக்கத்துல பெயர் எழுதிருக்குபாரு படிச்சுச் சொல்லு.

    அம்மணி அம்மாள் என சுஷாந்த் பெயர் வாசித்தவுடன் சுற்றிலும் இருப்பவர்களை மறந்து அம்மா பேச ஆரம்பித்தாள். இது நம்ம ஊர்லேந்து எடுத்துண்டு வந்த பாத்திரம். அம்மணி மாமிய நாங்கெல்லாம் மைக் மாமினு தான் கூப்பிடுவோம். அவ்ளோ சத்தமா பேசுவா. எத்தன கல்யாணத்துக்கு மைசூர்பாகு கிண்டின பாத்திரம் இது.

    அடுத்த பெயர வாசிடாப்பா. எல்லாமே பாக்கறச்ச நம்ம ஊர்லேந்து கொண்டு வந்தது மாதிரி தான் இருக்கு. கொப்பரை, அன்ன விளக்கு என வரிசைகள் நீண்டன.

    அடுத்த அறைக்குச் சென்றவுடன் கல் உரல், அம்மி, எந்திரம் வரிசையாகப் பார்த்த பாட்டியின் கண்கள் கலங்கின. இதெல்லாம் நான் புழங்கினது. நீ பெயரே வாசிக்க வேண்டாம். அப்பெல்லாம் திருப்புளியிலேந்து (சமயலறையிலேந்து) கொல்லப்புறம் வரை கல்தொட்டிலதான் தண்ணி உட்டு வைப்போம். சைஸ் வாரியா இருக்கும்.

    உப்பு, புளி, ஊறுகாய்கள், பழைய சாதம்  போட்டுவைக்க எடை குறைஞ்ச கல் பாத்திரம். அப்பயெல்லாம் ஏது பிரிட்ஜ். வாங்கின காய்கறிகள ஆட்டு உரல்குள்ள போட்டு மூங்கில்தட்டால மூடிவைப்போம். மாவு அரைக்கிற நேரம் மட்டும் அது வெளிய இருக்கும். பாட்டி உற்சாகத்தில் தானே பேசிக்கொண்டிருக்கிறாள்.

    காஸ் அடுப்பு வந்து அரைவை மிஷின்களெல்லாம் வந்தவொடனே ஒவ்வொண்ணயா தூக்கி கொல்லப்புறத்துல வைக்க ஆரம்பிச்சோம். அப்பறம் நம்ம ஊர் ராமன்தான் எதுக்கு வீணா எடத்த அடைச்சிண்டிருக்குனு சொல்லி ஒரு லாரியில தெருவுல இருந்த எல்லா கல்தொட்டி, பழைய பாத்திரங்கள், மரச்சாமான் எல்லாத்துக்கும் ஒரு விலை போட்டு எடுத்துண்டு போய் எங்கியோ குடுத்தான். ஆனா அதெல்லாம் இத்தன தூரம் பிரயாணம் பண்ணி இங்கவந்து சேரும்னு நான் எதிர்பார்க்கல.

    நம்மாத்து தூணப் பாத்தியா. ஆத்த இடிச்சு மாத்திக் கட்டும்போது வெளிய வச்சது. நடுரேழியில பல வருசம் நின்ன தூண். அப்பயெல்லாம் இந்த வரி இடுக்குகள்ல மூட்டப்பூச்சி வரிசையா வந்து நின்னுடும். ஊக்கால அதக் கீழதள்ளி நசுக்குவோம். இப்ப அதுக்கு வந்த வாழ்வப் பாத்தியா. எல்லாமே இந்த இடத்துல பளபளனு கம்பீரமா நிக்கறதுகள்.

    இணையில்லாத சிறப்புடைய ஒன்றுக்கு என்னைக்கும் அழிவே கிடையாதுனு பழமொழியே இருக்கே. அந்தப்பழமொழிய நீ படிச்சிருக்க மாட்ட. இருந்தாலும் சொல்றேன் தெரிஞ்சிக்கோ என ‘ஈடில் லதற்கில்லை பாடு’ என்ற பழமொழியை என் மகனிடம் சொல்கிறாள் அம்மா. .

    பாடல் 70

    முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
    பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? – இன்னிசை
    யாழின் வண்டார்க்கும் புனலூர! ‘ஈனுமோ
    வாழை இருகால் குலை?

    பழமொழி – ‘ஈனுமோ வாழை இருகால் குலை?’

    டேய். சீக்கிரம் வாடா. இவன் ஒருத்தன் இப்பதான் பொண்ணுமாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு நிக்கறான். அம்மா நிக்கறதால ஒண்ணும் சொல்லவும் முடியல.

    புலம்பினான் கோவிந்தன்.

    என்னடா..  என்னமோ குசுகுசுனு பேச ஆரம்பிச்ச. என்னயப் பாத்தவொடனே நிறுத்திட்ட. ஊர்சுத்தாம போய் படிக்கற வழியப் பாருங்க.  போலீஸ் தோரணையில் அதட்டுகிறாள் என் அம்மா.

    அட போங்கம்மா. நாங்க என்ன பெரிசா பேசிடப்போறோம். பக்கத்துவீட்டு ஆண்ட்டி ரொம்ப நேரமா காம்பவுண்ட் சுவர்லேந்து எட்டி எட்டி நம்ப வீட்டையே பாக்கறாங்க. ஏதோ வம்பு சொல்லணுமா இருக்கும். அம்மாவை விரட்டினேன்.

    உண்மைதான் இந்த ஆண்ட்டிக்கு காலங்காத்தால அப்டி என்ன வம்பு இருக்கும். நான் தலைசீவிக்கொண்டு நிற்கும் கண்ணாடி அருகேயிருக்கும் சன்னல்வழி பக்கத்துவீட்டு பக்கவாட்டுச் சுவர நல்லாப் பாக்க முடியும். அங்கதான் நிக்கறாங்க ஆண்ட்டி.

    டேய் எவ்ளோ நேரம்டா. சீக்கிரம் வாடா. அங்க பெரிய பிரச்சினையே போயிக்கிட்டிருக்கு. என்னமோ ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டு இருக்க. நண்பன் திரும்பவும் ஆரம்பிக்கிறான்.

    ஒருவழியா கிளம்பி அவனுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் வழியில்….  டேய் நம்ப சுரேஷ ஸ்கூல்லேந்து ரஸ்டிகேட் பண்ணிட்டாங்கடா.

    என்னடா சத்தமே காணோம். அதாண்டா ஸ்கூல விட்டு விலக்கிட்டாங்க.இனிமே அவனால படிக்கமுடியாது. அந்த வருத்தத்துல அவன் வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம காணாம போயிட்டானாம். காலையில எங்கப்பா சொன்னதிலேந்தே எனக்கு வயத்தக் கலக்கிருச்சு. அதான் உன்னயப் பாக்க வந்தா நீ என்னவோ சீவி சிங்காரிச்சு இவ்ளோ லேட் பண்ணி உட்டுட்ட.

    சரி இப்ப எங்கடா போய்கிட்டிருக்கோம். நான் கேட்கிறேன்.

    அதான் நம்ம தனபால் இருக்கான்ல அவன் வீட்டுக்குப்போயி அவனுக்கு ஏதும் தெரியுமானு கேக்கலாம். எப்படியும் நாம நாலுபேரும்தானே எப்பவும் ஒண்ணாச் சுத்தினோம். இப்ப சுரேஷுக்கு ஒரு பிரச்சினைனா நம்மளத் தேடி தானே வருவான். நம்ம ரெண்டுபேர் வீட்டுக்கும் வரல. அதான் தனபாலக் கேக்கலாம்.

    ஒருநிமிசம் நில்லுடா. பேசாம நாம ஸ்கூலுக்குப் போயி ஹெட்மாஸ்டர்கிட்ட உண்மயச் சொல்லிடலாம். எல்லாத்துக்கும் நிரந்தரமா தீர்வு கிடைச்சுரும். நான் கூறுகிறேன்.

    நல்லா உதை வாங்குவோம். அவ்ளோதான் நடக்கும். நம்மளையும் ஸ்கூலவிட்டு

    நிறுத்திடுவாங்க. ‘ஈனுமோ வாழை இருகால் குலை?’னு கேட்டதில்லையா. வாழை ரெண்டுதரம் குலை ஈனாது. அதுமாதிரிதான் நம்ம ஹெட்மாஸ்டர் எவ்வளவுதான் பொறுமசாலியா இருந்தாலும் முதல்தடவ தப்புசெஞ்சப்போ நம்ம எல்லாரையும் மன்னிச்சு விட்டாரு. ஆனா மேல மேல பெரிய தப்ப நாம செஞ்சிக்கிட்டேயிருந்தா அவர் மன்னிக்கணும்னு ஒரு அவசியம் இல்ல. இந்தமாதிரி தண்டனதான் கிடைக்கும். நண்பன் முடித்தவுடன் நான் ஆரம்பித்தேன்.

    பாவண்டா சுரேஷ். நம்ம அல்ப சந்தோஷத்துக்காக ஸ்கூல் கேண்டீன்காரர் போட்டு வச்சிருந்த டீயில கரப்பான் பூச்சியப் போட்டோம். விசயம் தெரிஞ்சு கண்டுபிடிச்சு நம்மள அவர் முன்ன நிறுத்தினப்போ எவ்ளோ பொறுமையா அறிவுரை சொன்னார். இப்ப ஒருபடி மேல போயி விளையாட்டுத்தனமா கிளாஸ்ரூம் சன்னல் கண்ணாடிகள உடைக்கறதுல பந்தயம் வச்சிக்கிட்டோம். அத நம்பிதானே சுரேஷ் வாட்டர் பாட்டில சன்னல்மேல எரிஞ்சான்.  நாம மூணுபேரும் ஒடிப்போயிட்டோம். அவன் மாட்டிக்கிட்டான். உடைஞ்ச கண்ணாடித்துண்டுகள் பாட்டிலோட கீழ்த்தளத்துல நின்னுக்கிட்டிருந்த ஒண்ணாம்கிளாஸ் பையன் தலையில பட்டுட்டதாலதான் இவ்ளோ பிரச்சினையும்.

    பேசாம நாம போய் ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுறலாம். அப்பறம் அம்மா அப்பாகிட்ட சொல்லி அடிஒத வாங்கிக்கிட்டு சுரேஷத் தேட உதவலாம்.

    நண்பன் ஒப்புக்கொண்டதால் பள்ளிக்கூடம் நோக்கி விரைகிறோம்.  .

    Share
  • Your Attention Please

    Your Attention Please

    Seshadri Baskar

    The Issue of the last mile connectivity between Velachery and St. Thomas Mount has been in the court for almost a Decade and many actions/meetings from the Government, Railways and the affected residents had never helped to see the light.

    The court interfered and increased the compensations to those who were affected but it was rejected by the people that it was not at par with the realty value of today. In between few politicians entered the scene who had been too active and tried their hands to drag the matter but the court had made a final say now.

    All the people concerned who were affected were given the compensation and the last beneficiary too received the payment as per the court order last week. Now the demolition work had started and the remaining portion of railing is to be started soon and based on the information i had received from a local it seems only a little length of Five Hundred metres work is pending to be completed which it seems may take a maximum of Six months.

    Assuming the work goes on at a good pace probably by mid of next year we can have the rail connection to Adambakkam and St. Thomas Mount mid of next year. Ist a real boon to those who live in the belt of Nanganallur , Velachery, St Thomas Mount and Adambakkam. And for a Mylaporean reaching tambaram will be a bed of roses. One can take the train here and alight at Mount only to take the next train to tambaram parallel to the area where he detrains .

    Congrats SR, We are waiting . .

    Share
  • படக்கவிதைப் போட்டி 290இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 290இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    நமைப் பீடித்திருக்கும்…
    இன்னல்கள் மறைக!
    இன்பங்கள் நிறைக!

    *****

    கம்பிகளுக்குப் பின்னே நிற்கும் இந்தத் தம்பியைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு. ஐயப்பன் கிருஷ்ணன். இந்த ஒளிப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து நமக்கு வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றிகள்!

    ”இரும்புக் கம்பிகள் உன்முகத்தைச் சற்றே மறைத்திடினும்
    அரும்பே உன்றன் பார்வையின் கூர்மை எமை ஈர்க்கிறதே!” என்று சொல்லத் தோன்றுகின்றது இச்சிறுவனைக் காண்கையில்!

    கரும்புக் கவிதைகளை இந்த அரும்புக்குப் பரிசாய்த் தரக் காத்திருக்கும் கவிஞர்களைக் கனிவோடு வரவேற்கின்றேன்!

    *****

    வெட்டவெளியில் விளையாடிய பிள்ளை வீட்டுக்குள் அடைந்ததன் காரணங்களைத் தம் கவிதையில் ஆராய்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    எதனால்…

    வெட்ட வெளியில்
    கட்டுப்பாடின்றி
    ஓடி விளையாடிய பிள்ளை,
    வீட்டுக்குள் அடைந்துகிடந்து
    வெளியே பார்க்கிறது
    பரிதாபமாய்…

    நோய்த் தொற்றால்
    வந்த உள்ளிருப்பு
    காரணமா,
    கைப்பேசி நோண்டும்
    பெரியவர்கள்
    கண்டுகொள்ளாமல் விட்டதாலா…

    பல வீட்டுச்
    சன்னல்களில்
    பார்க்கிறோமே இப்படி…!

    *****
    ”தடுப்பின் பின்னிருக்கும் சுட்டிப் பயலே! கட்டிக் கரும்பே! உன் மனவோட்டத்தைச் சொல்லடா” என்று  சிறுவனிடம் உரிமையோடு கேட்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    அழகிய முகமதில் கூரிய பார்வை
    ஆழப்பதியும் எண்ணக் கோவை
    வடிவழகிய உதட்டில் தடுப்புப் பாதை
    வெண்பற்களின் அழகும் தெரியாவண்ணம்
    மஞ்சள் வெயில் முகத்தில் விழ
    கன்னமது பளப்பளக்க
    உன் மனவோட்டம் யாமறியோம்
    சுட்டிப் பயலே கட்டிக் கரும்பே
    சொல்லடா கனிமொழியில் சொல்லடா!

    ”ஒளிபடைத்த கண்ணினாய்…விழிமொழியால் உலகாளலாம்;
    வெளி பெரிது வெளியே வா; வழி விரியும் வாழ்வு புரியும்” என்று சின்னக் கண்ணனுக்கு நம்பிக்கை மொழி நவில்கின்றார் திரு. யாழ். பாஸ்கரன்

    பட்டு விழிப் பாவைகள் வண்ணப்
    பட்டாம்பூச்சியாய்ப் படபடக்க – பார்வை
    பட்ட இடமெல்லாம் பட்டொளி பூக்கப்
    பட்டென்று தொட்டுவிட்டாய் நெஞ்சை!

    சின்ன சாளரம் வழியே விழி பாய்ச்சும்
    சின்னக் கண்ணா என்ன எண்ணமடா- உன்
    சிந்தை அதனுள்ளே பொங்கி எழுந்து
    சிந்தனைக் கதிர்களை சீறிப்பாய்ச்சுகிறது?

    ஒளிபடைத்த கண்ணினாய்
    விழி மொழியால் உலகாளலாம்
    வெளி பெரிது வெளியே வா
    வழி விரியும் வாழ்வு புரியும்!

    தலைமகனே தளையறு
    தடை உனக்கு யார் இட்டாலும்
    தலை வணங்கும் தரணி
    தலை எடு தலைவனாக!

    சிறுவனை வைத்துப் பெரிய கருத்துக்களைப் பாங்காய் உரைத்திருக்கும் கவிஞர்பெருமக்களுக்குப் பாராட்டுக்கள் பல!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    புதுப்பாதை!

    துள்ளிக் குதித்து
    புத்தகப் பையைத் தூக்கிப்
    பள்ளிக்குச் செல்ல முடியவில்லை!
    அள்ளித் தெளித்துப்
    போட்டுவைத்தக் கோலம் அழித்து ஓடி
    விஷமம் செய்ய முடியவில்லை!
    வெயிலில் புழுதியில்
    உடைகள் அழுக்காக்கி
    ஆட்டம் போட முடியவில்லை!
    கையில் காலில் சிறுகாயம் கொள்ளத்
    தாய்தந்தை தேற்றும்
    விளையாடல் இருக்கவில்லை!

    முகமறியா நபர்களிடம் பழகத்
    தடை விதித்தார்கள்; இப்போது
    முகம் மூடா நபர்களைக் காணமுடிவதில்லை!

    வீட்டை விட்டு வெளியே வந்து
    ஆட்டம் போடமுடியவில்லை!
    கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகள்
    சிறகை விரித்து உலகம் காணவில்லை!

    ஜன்னல் காட்சியே உலகம் ஆனது!
    பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது!
    எத்தனை காலம் சும்மா இருப்பது
    புத்தாண்டே புதுப்பாதை வகுக்க வா!!

    ”கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகளான நாங்கள் சிறகை விரித்து உலகைக் காண இயலவில்லை; ஜன்னல் காட்சியே எங்கள் உலகம் ஆனது; பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது; புத்தாண்டே வா! புதுப்பாதை தா!” என்று ஏக்கமொழிகள் பகரும் சிறுவனை நம் கண்முன் நிறுத்தியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • உண்மைச் சம்பவம் 1 – புறவழிச் சாலையிலே

    உண்மைச் சம்பவம் 1 – புறவழிச் சாலையிலே

    அண்ணாகண்ணன்

    சென்னைப் புறவழிச் சாலையில் எனக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை விவரித்துள்ளேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற

    திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற

    திருப்பாவை – 16

    நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
    கோயில் காப்பானே கொடிதோன்றும் தோரண
    வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
    ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
    நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 16 | நாயகனாய் நின்ற | ஸ்வேதா குரலில்

    கதவு என்பதை இலக்கிய நடையில் கதவம் என எழுதுவர். கதவம் என்ற சொல், திருப்பாவையில் மூன்று இடங்களில் வருகிறது. 9ஆம் பாடலில், மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய் என்கிறார். 16ஆவது பாடலில் இரு இடங்களில் கதவம் வருகின்றது. வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் என்றும் நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் என்றும் பேசுகின்றார். இதே கதவை வாசற்கடை என்றும் சொல்வதுண்டு. நின் வாசற் கடை பற்றி என்றும் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் என்றும் ஆண்டாள் பாடுகிறார்.

    2020ஆம் ஆண்டு முடிந்து, 2021ஆம் ஆண்டின் மணிக்கதவம் திறக்கும் தருணம், இது. புதியன பிறக்கட்டும், நல்லன நடக்கட்டும் என நாயகனை வேண்டுவோம். நாயகனாய் நின்ற நந்தகோபனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மார்கழிக் கோலம் – 2

    மார்கழிக் கோலம் – 2

    மார்கழிக் கோலம் – 2 | Margazhi Kolam – 2

    மார்கழியின் அடையாளமாகத் திகழும் வண்ண வண்ணக் கோலங்கள், நம் வீதிகளை அலங்கரிக்கும் கோலத்தைப் பாருங்கள்.

    மார்கழிக் கோலம் – 1 | Margazhi Kolam – 1

    மார்கழி என்றாலே இசை, நாட்டியத்திற்கு மட்டுமின்றி, கோலத்திற்கும் தனி இடம் உண்டு. வீதிகள் முழுவதும் வண்ண வண்ணக் கோலங்கள் அலங்கரிக்கும். எத்தனை எத்தனை கோலங்கள். அவற்றுள் எத்தனை எத்தனை வண்ணங்கள். இதோ, கோலங்களுள் ஒரு வகையான கம்பிக் கோலத்தை எப்படி இடுவது என்று நமக்கு வரைந்து காட்டுகிறார் திருமதி கெளரி. இதைப் பார்த்து, நீங்களும் முயன்று பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share