மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா.
இருபதே சென்றுவா
இருபதொன்றே நன்றுவா
வந்திடும் கொரனாவை
வராதுமே செய்துவா!
நல்லன அளிக்கவா
வல்லன கொடுக்கவா
வெல்லுவோம் என்றிடும்
வீரத்தை உணர்த்தவா!
மதுவினை ஒழிக்கவா
மங்கையர் காக்கவா
சதிகளை தடுக்கவா
சன்மார்க்கம் நிலைக்கவா!
அரசியல் சிறக்கவா
ஆட்சிகள் நிலைக்கவா
கயமைகள் விரட்டவா
கண்ணியம் காக்கவா!
உழவர்கள் உயரவா
உழைப்பவர் சிரிக்கவா
கயவர்கள் ஓடவா
காமுகர் மடியவா!
ஆணவம் அகலவா
ஆன்மீகம் பெருகவா
நாடெலாம் நலமுடன்
நாளுமே இருக்கவா!
கற்றிடும் மாணவர்
கல்வியில் உயரவா
பெற்றவர் வாழ்விலே
பெருஞ்சுமை குறையவா!
மழைவளம் சிறக்கவா
வறட்சியை விரட்டவா
மாநிலம் எங்கணும்
மங்கலம் பொங்கவா!


Leave a Reply