Blog

  • கதை வடிவில் பழமொழி நானூறு – 31

    கதை வடிவில் பழமொழி நானூறு – 31

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 63

    மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
    சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார்
    கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
    ‘இறந்தது பேர்தறிவார் இல்’.

    பழமொழி – ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’

    என்னிக்குமில்லாத படபடப்பு இன்னிக்கு. நிலவன் அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமா எதையோ யோசிச்சுக்கிட்டே நடந்துக்கிட்டு இருக்கார். அந்த அறை குளிரூட்டப்பட்டு இருந்தாலும் அவருக்கு வேர்க்குது. அவர் மனைவி வேலைக்காரிக்கு கட்டளையிடறாங்க.

    மேகலா… ஐயாவுக்கு சட்னு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வாம்மா.

    சொல்லிவிட்டு அந்த அறையில் போடப்பட்டிருக்கிற பெரிய சைஸ் குஷன் நாற்காலியில சாய்ந்து உட்கார்ந்து தன் ஆரணி பட்டுப் புடவைத் தலைப்பால முகத்தைத் துடைச்சிக்கிறாங்க. ஆரஞ்சு நிற புடவையிலிருக்கிற நீலநிற வண்ணத்துப்பூச்சிகள் அதிலேருந்து விடுதலையாகி அந்த அறை முழுக்க பறக்கற மாதிரி இருக்கு. அந்த வண்ணத்துப் பூச்சிகளப் பாத்தவொடனே நிலவனுக்கு மனதில் சந்தோசம். இருக்காதா பின்ன அவர் கவிஞர் இல்லயா. கவிதை எழுதி தான் சம்பாதிச்ச இருபது பவுன் நகைகளில் பிரச்சினைன்னுதானே இப்ப இவ்வளவு துக்கம் அவருக்கு.

    யோவ்…. நிறுத்துய்யா. வண்ணத்துப்பூச்சி புடவைத் தலைப்புலேந்து வெளிய வந்து பறக்குதுங்கறதே ஜாஸ்தி. அதுல ஒரு கவிஞர் கவிதை எழுதியே இவ்வளவு சம்பாதிச்சிட்டாருன்னு காட்டினா சீரியல யாரும் பாக்க மாட்டாங்க. நமக்கு நஷ்டம்தான்.

    யாருய்யா இந்த எழுத்தாளர இங்க கூட்டிக்கிட்டு வந்தது. இவர் ஏதோ குழந்தைகளுக்குக் கதை எழுதரவர் போல. நம்ம சீரியலோட ரேஞ்சுக்கு ஒருத்தரக் கூட்டிக்கிட்டு வாங்கன்னா ….. என்னய்யா நீங்கயெல்லாம். பேசாம நானே உக்காந்து எழுதித் தொலைச்சிரலாம் போல. இப்ப நேரம் வேற இல்ல.

    சரி. உன் கற்பனையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு நேரடியா கதையச் சொல்லு. அதுல ஏதாவது மாற்றம் செய்யணும்னா நான் சொல்றேன். டேரக்சன்லேந்து மேக்கப் வரை எல்லாம் பண்ணியாச்சு. என்ன…. எனக்குக் கற்பனை கொஞ்சம் கம்மினு நினைச்சு கதை எழுத முயற்சிக்கல. இனிமே அதையும் செஞ்சிட வேண்டியதுதான்.

    அந்த சிடுமூஞ்சி சீரியல் டேரக்டர் வசவுகளை நிறுத்தியவுடன் நான் சொல்ல ஆரம்பித்தேன். அந்த நிலவனுக்கு அன்னிக்கு வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதுல அவர் அடகு வைத்த இருபது பவுன் நகைகளும் போலினு நிரூபிக்கப்பட்டதால இருபத்துநான்கு மணிநேரத்துக்குள்ள வங்கியிலேந்து வாங்கின பணத்தைத் திருப்பிக்கட்டணும்னு சொன்னாங்க. இல்லையினா சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்களாம். இதைச் சொன்னது.வங்கி மேலாளரான அவரதுநெடுநாள் நண்பர்தான். அவராலதான் பணம் விரைவா கிடைச்சது. வாங்கின பணத்தை மகனோட பொறியியல் படிப்புக்காக கல்லூரியில கட்டியாச்சு. மிச்சப் பணத்த பெரியப்பா மகனுக்கு அனுப்பி ஒரு துண்டு நிலமும் வாங்கச் சொல்லியாச்சு. இப்ப போயி இப்படின்னா மானப் பிரச்சினையில்லயா.

    மனைவியோட நகை முழுக்க பெண் கல்யாணத்துக்கு செலவழிஞ்சுபோச்சு.

    நிலவனோட மனைவி அந்த நகை வாங்கிய கடையோட சீட்டத் தேடிக்கிட்டு இருக்காங்க. அவங்க போலி நகை வித்தாங்களானு கண்டுபிடிக்க. இது இப்படியிருக்க அவரோட பெரியப்பா மகன்னு ஒரு கேரக்டர் சொன்னேனே அவர் மனசுக்குள்ள சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கார்.

    நிலவன் அண்ணன் பட்டணத்துல நல்லா சம்பாதிக்குது போல. நம்மகிட்ட குடுத்துவச்சிருந்த இருபது பவுன ஆட்டையப்போட்டு மக கல்யாணத்த சிறப்பா நடத்தியாச்சு. இருந்தாலும் எம் பொஞ்சாதி கெட்டிக்காரி. அண்ணன சமாளிச்சுக்கிடலாம்னு  அதுகணக்காவே கவரிங் நகை வாங்கி குடுத்து உட்டுட்டா.  அண்ணன் பேங்குல வைக்கப்போறேம்னு சொன்னப்போ கொஞ்சம் திக்குனு இருந்திச்சு. பெறகு அதைவச்சு வாங்கின பணத்தையும் எங்கிட்டல்லா அனுப்பி நிலம் வாங்கச்சொல்லுது. இனி ஒரு பிரச்சினையில்ல…. மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே வரப்ப்புல நடந்துக்கிட்டு இருக்கார்.

    என்னய்யா இது. உன் கதையில எல்லாரும் நடந்துக்கிட்டே இருக்காங்க. தனக்குத்தானே பேசிக்கிறாங்க. இதுல ஒரு வசீகரமும் இல்லயே… சரி உன்னயத் திட்டி எனக்கு என்ன லாபம். நாளைக்கு வா பாக்கலாம்… என்னை அனுப்பி விட்டார் சிடுமூஞ்சி டேரக்டர். ஏதோ கதை சொல்லி கொஞ்சம்பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்ச எனக்கு ஏமாற்றம்தான். மொதல்ல வீட்டுக்குப்போய் உக்காந்து அம்மா கூட எல்லா சீரியலயும் பாக்கணும்.அப்பதான் இவர் என்ன எதிர்பார்க்கறார்னு தெரியும். நான் என்னமோ கருத்து சொல்லலாம்னு இந்தக் கதையச் சொன்னேன். முழுசா சொல்ல உட்டாதானே. ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’ங்கற பழமொழியச் சொல்லி தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமேயல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும் அப்டிங்கற அதன் பொருளக் கடைசியில சொல்லணும்னு இருந்தேன்.

    நல்லவேளை சொல்லல. சொல்லியிருந்தா நான் என்ன பொழுதுபோக்குக்காக சீரியல் எடுக்கறேனா அல்லது பாடம் நடத்தறேனான்னு அதுக்கும் கத்தியிருப்பார். நல்லதுக்குக் காலம் இல்ல.

    பாடல் 64

    இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
    கரப்பவர் கண்டறியார் கொல்லோ – பரப்பிற்
    துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
    ‘இறைத்தோறும் ஊறும் கிணறு’.

    பழமொழி – ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’

    ஏ…..ஐயா…. கதவ ஒருக்களிச்சு வச்சுக்கிட்டு சாப்பிடக்கூடாதா. மட்ட மல்லாக்க திறந்து வச்சா யாரும் உள்ள வந்துற மாட்டாகளா… அப்பத்தா தன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போகிறாள். இன்னிக்கு எங்க வீட்ல ஸ்பெஷல் சமயல். அவியல், சாம்பார், வாழைக்கா பொடிமாஸ், வாழைப்பூ வடை, அப்பளம்….. இப்படி. எங்க அப்பத்தா சமைச்சது. நானும் என் மனைவியும் எல்லாத்தையும் மேசைமேல பரப்பி வச்சிக்கிட்டு நிதானமா ஒரு கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்

    பாம்பேக்கு தனிக்குடித்தனம் வந்ததிலேந்து நம்ம ஊரு சமயல இப்படி சாப்பிடவே முடியல. வந்த முதல் நாளே வெள்ளக் காடா இருந்த பாம்பேயில தான் கால் வைச்சோம். கொரோனா ஊரடங்கால வொர்க் ப்ரம் ஹோம்னு சொல்லிட்டதால வெளியில போக வேண்டிய அவசியமே ஏற்படல. சாமான்களையும் வீட்டுக்கே வர வச்சிடறோம். திரும்பத் திரும்ப சமைச்சு சாப்பிட்டுட்டு வீட்டுக்குள்ளயே இருக்கறதால இங்க உள்ள பழக்கப்படி சப்பாத்திக்கு அதிகமா மாறிட்டோம். இரண்டு நாள் முன்ன அப்பாவும், அப்பத்தாவும் வந்ததிலேருந்துதான் தோசை,இட்லி எல்லாம் பாக்க முடியுது. சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே எதிர் ப்ளாக் அன்மோல் வருகிறார். அவர் கூட அவரோட பத்து வயசுபொண்ணும் நுழையறாங்க.

    என்ன பையா சௌத் இந்தியன் சாப்பாடு மணக்குது. பாட்டியோட கைப்பக்குவமானு கேட்டுக்கிட்டே டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கிட்டு உட்காரறார். அங்க இருந்த தட்டை எடுத்துவச்சி என் மனைவி அவரை உபசரிக்கிறாள். பாப்பா இப்பதான் சாப்பிட்டான்னு சொல்லிட்டு தான் பாட்டுக்கு ரசிச்சுச் சாப்பிட ஆரம்பிச்சுட்டார். நாங்க இங்க குடி வந்ததிலேருந்து அவர் அப்படி வித்தியாசம் பாக்காம சொந்தக்காரன் மாதிரிதான் பழகிக்கிட்டு இருக்கார். ஆனா அப்பாக்கும் பாட்டிக்கும் இது புடிக்கலனு நல்லாவே தெரியுது.

    அப்பத்தா திரும்பவும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்குதான் கதவ மூடி சாப்பிடுனு சொன்னேன். சொன்னா அப்பத்தா… கஞ்சம்னு நினைச்சுக்கிடுவீங்க.. நாங்களும் நாலுபேருக்கு தினமும் சோறுபோட்டுதான் வாழ்ந்தோம். உங்க தாத்தா தெனைக்கும் வரையிலேயே யாரையாச்சும் கூட்டிக்கிட்டு தான் சாப்பிட உட்காருவார். விறகு அடுப்புல சமைக்கறதால பொசுக்குனு பொங்கிப்போட முடியாதுனு மதியம் நாலுபேருக்குள்ள சாப்பாட்ட சேத்து பொங்கறது வழக்கந்தான். ஆனா அவுக கூட்டிக்கிட்டு வாரவுகயெல்லாம் சோத்துக்கு வீங்கி அலையுதவங்கயில்ல. வெறுங்கைய வீசிக்கிட்டு வரமாட்டாக. ஒரு குலை வாழைப்பழம், மாங்கா, என்னமும் விளைஞ்சத கையில குடுத்துட்டுதான் அடுத்த வீட்ல கைநனைப்பாக. என்னம்போ எம் மனசுல பட்டதச் சொல்லிப்போட்டேன். இந்த ஆளு சாப்புட உக்காந்தாலே வந்துருதார். சோத்துல கொதி போட்டுட்டாருன்னா  பொறவு சங்கடந்தான். அதுக்குத்தான் சொல்லுதேன்.

    அன்மோல் அப்பத்தாவப் பார்த்து சொல்றது எதுவும் அவங்களுக்குப் புரியல. அவர் அவங்கள தன்னோட குழந்தைகள் காப்பகத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார். அவங்களுக்காக புது கட்டிடம் கட்டியிருக்காராம். இப்ப இருக்கற கட்டிடத்துல அடிக்கடி வெள்ள நீர் நுழைஞ்சிருதாம். அதோட தொடக்க பூசைக்குதான் அப்பத்தாவ வரச்சொல்றார். அங்க இருக்கற இருபது பிள்ளைகளுக்கும் ஏதாவது ஸ்வீட் பண்ணிக்குடுக்க முடியுமான்னு கேக்கறார். லட்டு பண்ண மிடாயிவாலாவ வரச்சொன்னாராம். அப்பத்தா சரின்னாங்கன்னா அவன வரவேண்டாம்னு சொல்லிடுவேங்கறார்.

    அவர் சொன்னதை முழுசும் சொல்லாம என் மனைவி, அப்பத்தா…..  உங்களுக்கு லட்டு பண்ணத் தெரியுமா இவர் கேக்கறார்னு சொன்னவுடனே கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டாங்க. படுத்துக்கிட்டு இருந்த அப்பாவ எழுப்பி கூட்டிக்கிட்டு வராங்க.

    உம்மவன் செய்யுத நாயத்த நீயே கேளு அய்யா. நான் பேசுதது எதுவும் புரிஞ்சுக்கிடாம புருசனும் பொஞ்சாதியும் அந்த ஆளுக்கே பரிஞ்சுக்கிட்டு வாராக. இனி நான் இருக்க மாட்டேன். ரயிலுக்கு புக் பண்ணிப்போடு. அப்பத்தா கத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அப்பா எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து கேட்டுட்டு அப்பத்தாவுக்கு வயசாகிப்போச்சு. திடீர்னு லட்டு பண்ணச்சொன்னா டென்சன் ஆயிடும்னு சொல்லிட்டார்.

    அடுத்த நாள் எல்லாரும் கிளம்பி அன்மோல் நடத்தற காப்பகத்துக்கு வந்துட்டோம். உள்ள நுழையும்போதே ஒரு ஒல்லியான பையன் ஓடி வந்து ஆச்சினு அப்பத்தாள கட்டிப்பிடிச்சிக்கிட்டான். அவன் அழுதுக்கிட்டே எங்க ஆச்சியும் உங்கள மாதிரிதான் இருப்பாங்க. எங்கம்மாவும் அப்பாவும் விபத்துல இறந்த பிறகு ஆச்சிதான் என்னய இட்லி வித்து காப்பாத்திக்கிட்டு வந்தாங்க. பெறகு போனவருசம் பெய்த மழையில குளிர்தாங்க முடியாம ஆச்சி இறந்துட்டாங்க. பக்கத்துல கடை வச்சிருந்த அண்ணாச்சி என்னய இங்க கொண்டு வந்து சேத்து விட்டாங்கனு சொல்றான்.

    அப்பத்தாளுக்கு கண்ணுலேந்து கண்ணீர் தாரதாரையா கொட்டுது. என்னப்பெத்த ஐயா இவ்வளவு நல்ல மனசுக்காரன புரிஞ்சுக்கிடாம என்னமெல்லாம் பேசிப்போட்டேன். அப்பன் ஆத்தா இல்லாம ரோட்டுல நிக்குத புள்ளைங்கள கூட்டியாந்து தம் பிள்ளை கணக்கா பாத்துக்கிடுதவருக்கு ஒரு வாய் சோறுபோடாம வாய் ஓயாம வஞ்சிக்கிட்டு இருந்தேனே….. இந்தப் பிள்ளைங்களுக்கு நாளைக்கு நானே என் கையால சோறு ஆக்கி பரிமாறுவேன். அதை அன்மோலுக்கு விளக்கியவுடன்… பேசிக்கிட்டே நிக்கற அப்பத்தாள அன்மோல் கட்டிக்கொள்கிறார். நீ ஒண்ணுத்துக்கும் கவலப்படாத. ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’னு பழமொழியே இருக்கு. உனக்கு மேல மேல நிறைய காசுபணம் வந்து சேரும். அப்பத்தா வாழ்த்த அதன் பொருளை அறிய என் முகத்தைப் பார்க்கிறார் அன்மோல்.

    அது ஒண்ணுமில்ல. கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்னு சொல்றாங்கனு நான் அவருக்கு விளக்கறேன்.

    Share
  • தனிமை

    தனிமை

    சு. திரிவேணி
    கோயம்புத்தூர்

    தனித்திருக்கிறேன் நான்
    கருவுக்குள் இருக்கும்
    கருவைப் போல.
    கவசமாய்த் தனிமை என்னைக்
    காத்து நிற்கிறது
    உலகச் சுழல்கள் தீண்டாத
    பாதுகாப்பான இடத்தில்
    நானிருக்கிறேன் வாழும் பொருட்டு
    சாகுமளவு போராட்டம்
    தேவையாய் இருப்பதில்லை
    எந்த வரவையும்
    இயல்பாய் ஏற்க முடிகிறது
    யாரையும் பயமின்றிப்
    பார்க்க முடிகிறது
    சுதந்திரமாய்
    சுவாசிக்கவும் வாசிக்கவும்
    ஏற்ற சூழல்
    யாருமற்ற தனிமைதான்
    என் வாழ்வையும் நேரத்தையும்
    யாரும் ஆக்கிரமிக்காமல்
    காத்துக் கொள்ளும்
    மெத்த மகிழ்ச்சி
    தருவதிந்தத் தனிமைதான்
    ஆனாலும்
    மனதை உறுத்துவது
    பரிதாபம் காட்டும் உங்கள் விழிகளே!

    Share
  • குறளின் கதிர்களாய்…(329)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(329)

    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.

    – திருக்குறள் – 104 (செய்ந்நன்றி அறிதல்)

    புதுக் கவிதையில்...

    தினையளவு மிகச்சிறிய
    உதவியே
    ஒருவன் செய்திருந்தாலும்,
    உதவியதன் பயனை
    நன்கு அறிந்தவர்கள்
    அதனைப்
    பனையளவு
    பெரிய உதவியாகவே
    கருதுவர்…!

    குறும்பாவில்...

    செய்த உதவி தினையளவு
    சிறிதெனிலும் அதைப் பனைபோல் கருதுவர்,
    உதவியதன் பயனை நன்கறிந்தோர்…!

    மரபுக் கவிதையில்...

    தினையின் அளவே சிறிதெனிலும்
    தெரிந்தே செய்த உதவியதை
    நினைவில் சிறிதெனக் கொண்டேதான்
    நினைவ தகற்றிச் செல்லாமல்,
    பனையி னளவுப் பெரிதாகப்
    பண்பி லுயர்வெனக் கருதுவரே
    அனைத்து முணர்ந்தே உதவியதன்
    அரிய பயனதை அறிந்தவரே…!

    லிமரைக்கூ..

    செய்த உதவி தினையளவு,
    உதவியின் பயனதனை நன்றாய் அறிந்தவர்கள்
    கொள்வர் அதனைப் பனையளவு…!

    கிராமிய பாணியில்...

    மறக்காத மறக்காத
    செய்த ஒதவிய மறக்காத,
    சின்ன ஒதவியா இருந்தாலும்
    செய்த ஒதவிய மறக்காத..

    தெனயளவு
    சின்ன ஒதவி
    ஒருத்தருக்குச் செய்தாலும்,
    அதனோட பயனப்பத்தி
    நல்லாத் தெரிஞ்சவுருக்கு
    அது
    பனயப் போலப்
    பெருசாத் தெரியுமே..

    அதால
    மறக்காத மறக்காத
    செய்த ஒதவிய மறக்காத,
    சின்ன ஒதவியா இருந்தாலும்
    செய்த ஒதவிய மறக்காத…!

    Share
  • திருக்கார்த்திகை விளக்கீடு

    திருக்கார்த்திகை விளக்கீடு

    திருக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று நம் இல்லத்தில் தீபங்கள் ஏற்றி வழிபட்டோம். எல்லோர் வாழ்வும் ஒளிரட்டும்!

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீபம் ஏற்றுவோம்!

    தீபம் ஏற்றுவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    கந்தனை நினைந்து போற்றுவோம் வாரீர்
    வீட்டிலும் வெளியிலும் ஏற்றுவோம் வாரீர்
    வேலவன் திருவடி பற்றுவோம் வாரீர்

    அகமதில் உறைந்திடும் ஆணவ இருளை
    அகற்றிடத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    சிவனது மைந்தனைச் சிந்தையில் இருத்தி
    சிறப்புடன் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    கார்த்திகைப் பெண்கள் ஏந்திய குழந்தை
    கந்தனாய் வந்தனன் கலியுகம் காக்க
    கந்தனைச் சொந்தமாய்க் கொண்டிடும் பக்தர்
    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    மாலயன் அடிமுடி தேடிய நிலையில்
    மாபெரும் சோதியாய் வந்தனன் சிவனும்
    பேரொளிப் பிழம்பு தோன்றிய நாளை
    யாவரும் கார்த்திகைத் தீபமாய்க் கண்டனர்

    அக்கினித் தலமாய் ஆகிய தலத்தில்
    அகண்ட தீபம் ஏற்றுவார் அடியார்
    கார்த்திகை நாளில் ஏற்றிடும் தீபம்
    கந்தனைத் தந்தையை இணைத்திடும் தீபம்

    சோதியாய் சுடராய் ஆகிடும் தெய்வம்
    ஆதியாய் அந்தமாய் ஆகிடும் தெய்வம்
    அப்பனாய், பிள்ளையாய் அமைந்திடும் தெய்வம்
    அனைத்துமே கார்த்திகைத் தீபத்துள் சுடருமே

    Share
  • கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி?

    கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி?

    அண்ணாகண்ணன்

    கிராமபோன் என்ற இசைக்கருவியை நாம் பழைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். இன்று ஒரு காட்சிப் பொருளாகவே மாறிவிட்டது. ஆனால், 100 ஆண்டுகள் பழைமையான ஒரு கிராமபோன், இன்றும் இயங்குகிறது. சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. இதைக் கொண்டு, கிராமபோன் எப்படி இயங்குகிறது? அதில் எப்படிப் பாட்டுக் கேட்பது என்று பாருங்கள்.

     

    அந்தக் காலத் தொலைபேசி

    இன்று நம் செல்பேசிகள், உள்ளங்கைக்குள், கைக்கடிகாரத்தில், மோதிரத்தில் சுருங்கிவிட்டன. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பேசுவதற்கும் கேட்பதற்கும் தனித் தனியே இரண்டு பாகங்களைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்தினோம். அப்படியான ஒரு தொலைபேசி, சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. அந்தத் தொலைபேசியை இன்று பார்ப்போம்.

     

    அந்தக் காலத் தொலைநோக்கி

    அந்தக் காலத் தொலைநோக்கி வழியே அந்தக் காலத்தையே பார்க்கலாம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செர்ரி தக்காளி

    செர்ரி தக்காளி

    அண்ணாகண்ணன்

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் விளைந்துள்ள செர்ரி தக்காளிகளை இன்று அறுவடை செய்தோம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • ஆள்காட்டிப் பறவையின் குரல்

    ஆள்காட்டிப் பறவையின் குரல்

    அண்ணாகண்ணன்

    இன்று காலை எழுந்தவுடன், ஆள்காட்டிப் பறவையின் உரத்த பாடலைக் கேட்டேன்.

    கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) என்ற தலைப்பில் சற்குணா பாக்கியராஜ், வல்லமை மின்னிதழில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

    பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது, “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில், “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்த குரலில் “twit-twit-twit-twit”, என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali. p.139-140).

    இந்தக் காணொலியில் உள்ளது எந்த ஆள்காட்டிப் பறவையின் குரல் என்பதை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

     

    முகப்புப் படத்திற்கு நன்றி : https://www.wikiwand.com/en/Red-wattled_lapwing

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனமழையில் இரு பறவைகள்

    கனமழையில் இரு பறவைகள்

    அண்ணாகண்ணன்

    நிவர் புயல் விர்ரென வீசிய நவம்பர் 25ஆம் தேதி கனமழையும் பிளந்து கட்டியது. அப்போது நம் வீட்டருகே உள்ள மதிலில் இரு பறவைகள் நடை பயின்றன. நத்தை குத்தி நாரையும் உண்ணிக் கொக்கும் நெருங்கி வந்து என்ன பேசியிருக்கும்?

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!

    தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!

    அண்ணாகண்ணன்

    நிவர் புயல் தாக்கத்தால் மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆயினும் படிப்படியாக இப்போது குறைந்து வருகின்றது. ஆயினும் குப்பைகளும் பாம்புகளும் இறந்த உயிரினங்களின் சடலங்களும் ஆங்காங்கே சூழ்ந்துள்ளன. மரங்களும் மரக்கிளைகளும் விழுந்து கிடக்கின்றன. தேங்கியுள்ள நீரிலிருந்து குபுகுபுவென குமிழ்கள் வெளிவருகின்றன. இதோ, களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 286

    படக்கவிதைப் போட்டி – 286

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்த இப்படத்தை அவரது ஃபிளிக்கர் பக்கத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (29.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • Salute the Heroes

    Salute the Heroes

    Baskar Seshadri

    It was around seven am this morning (November 26, 2020).

    Rain was moderate. The activity on road was almost nil except for few people who have to move out anyway for the daily bread.

    It was at this time I spotted these uniformed men of the conservancy contractor company who were cleaning. These people are hardworking, young, affable and friendly too. They were thankfully in their rain suit and doing their work tirelessly.

    We may know that even to clean a house its a big task but doing that on a big road like RK Mutt road is no way a small task. And they don’t do for the sake of doing it.

    They literally engage with their full heart and do it. I have seen them even cleaning the areas under the bus shelter near Mylapore tank bus stand and in next thirty minutes the road was clean and neat. They did this amid the rains with a little cup of tea and biscuit and since they know me well they extended their gesture with a big smile.

    I reciprocated. But they need this from all. When you happen to see them next time on the road just stop for a minute and say that they are doing a yeomen service and pat their shoulders if you can or wish a women worker with a Namaste. They need this and we need them.

    Our salutes Guys for all that you do to us in the climate of all seasons braving rain and shine .

    Share
  • பழகத் தெரிய வேணும் – 44

    பழகத் தெரிய வேணும் – 44

    நிர்மலா ராகவன்

    நம்மையே வருத்திக்கொள்ளலமா?

    எல்லா வயதிலும் மன அழுத்தம் உண்டாகிறது.

    `தவறு செய்தால் தாய் திட்டுவார்களோ!’ என்ற பயம் சிறுவர்களுக்கு.

    `தாய்’ என்ற வார்த்தைக்குப்பதில் அலுவலக மேலதிகாரி, வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று போட்டுப் பார்த்தால், அனேகருக்கும் பொருந்தும்.

    எல்லாத் தருணங்களிலும், பிறரை மகிழ்விக்க விரும்புவோருக்கு, `மாட்டேன்,’ `வேண்டாம்,’ என்றெல்லாம் கூறத் தெரியாது. இதனால், தம்மையே வருத்திக்கொள்கிறார்கள்.

    கதை

    திருமணமான முதல் வருடம் ஒரு பெண் அழுதுகொண்டே இருந்தாள். பொறுக்க முடியாது, அவளைத் தாய்வீட்டுக்கே அனுப்பினார் கணவர்.

    எந்நேரமும் அழுதுகொண்டிருந்தவளுக்கு என்ன குறை என்று புரியாத தந்தை உளவியல் சிகிச்சைக்கு அழைத்துப்போனார். அங்கு, தன்னால் தன் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்று மேலும் அழுதாள்.

    `காதலனைத்தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்,’ என்ற உறுதி அவளுக்கு இருக்கவில்லை. அப்போது நிதானமாக யோசித்து, தனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்காதது அவளுடைய குற்றம்.

    கணவன்மேல் குற்றம் கண்டுபிடித்து, `காதலனை மணந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்காதே!’ என்று சிலர் வருந்துவார்கள். அவனுக்கு மட்டும் குறைகளே இருந்திருக்காதா? காதலனாக இருக்கும்போது வெளிவராத பல குணாதிசயங்கள் கணவனானபிறகுதான் தெரியவரும்.

    சில சமயம், விரும்பி ஏற்ற உறவுகள் முறியலாம். ஆனால், ஆரம்பத்தில் மன ஒற்றுமை இருந்ததால்தானே இணைந்திருப்பார்கள்?

    கனடா நாட்டில் நான் சந்தித்த ஒரு பெண் தான் காதலித்து மணந்த கணவன் தன் அனுமதி இல்லாமல் தன்னுடன் உடலுறவு கொண்டான், அது வன்முறை என்று வழக்கு தொடுத்து, விவாகரத்து பெற்றிருந்தாள்.

    “ஆனால், எங்களுக்குள் சில இனிமையான தருணங்களும் இருந்தன,” என்று அந்த இளம்பெண் கூறியபோது, அந்த நேர்மை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.

    கீதோபதேசம்

    ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அது நடந்தே ஆகும். `நடந்திருக்கக் கூடாதா!’ என்று காலங்கடந்து ஏங்கி என்ன பயன்?

    கதை

    நான் இயற்றிய பாடல்களை உடனுக்குடன் எழுதி வைத்துக்கொள்வேன். அலமாரியில் வைத்திருந்த நாலைந்து நோட்டுப் புத்தகங்களில் சிறு புழுக்கள் இருந்ததைப் பார்த்து அவைகளை வெயிலில் காயவைத்தேன். (புழுக்களை அல்ல).

    செய்த காரியத்தை மறந்துவிட்டு, வெளியில் போய் திரும்பியபோது, மழையில் புத்தகங்கள் நனைந்து, நுனியிலிருந்த எழுத்துக்கள் உருமாறி இருந்தன.

    `நடந்ததை இனி மாற்றவா முடியும்? என்று தோன்ற, நான் புத்தகங்களைக் காயவைத்ததோடு நிம்மதி அடைய வேண்டியதாயிற்று.

    `அதைப்பற்றி நினைக்காதே!’ என்று என்னை நானே கடிந்துகொண்டு, அதன்படி நடந்துகொண்டேன்.

    விடாமுயற்சி இங்கு உதவாது

    எதையாவது தொலைத்துவிட்டு, வெகு நேரம் தேடினாலும் அது கிடைக்காது. தேடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதுதான் மிச்சம். பிறகு, நாம் எதிர்பாராத விதத்தில் எங்கிருந்தாவது கிடைத்துவிடும். இது புரியாது, தொலைந்ததை விடாது தேடி, மன உளைச்சலுக்குத் தம்மை ஆளாக்கிக்கொள்கிறவர்கள் பலர்.

    ஒரு கதையையோ, பாடலையோ எழுத ஆரம்பித்தபின், பாதியில் எப்படித் தொடர்வது என்று எனக்குப் புரியாதுபோகும். அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு காரியங்களில் கவனம் செலுத்துவேன். ஓரிரு மாதங்கள் கழிந்தபின், அது முற்றுப்பெற்றதும் உண்டு. இதனால், `பாதியில் நின்றுவிட்டதே! அப்புறம் என்னவென்று தெரியவில்லையே!’ என்று மனதைக் குழப்பிக்கொள்வது கிடையாது.

    நம் வாழ்வில் தினமுமே நம்மை ஆத்திரப்படவைக்கும், ஏமாறவைக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை அதிகம் பாராட்டாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும்.

    வம்படித்துப் பொழுது போக்குகிறவர்

    நம்மை ஆத்திரப்படவைக்கிறாரா ஒருவர்?

    `அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று பெரியமனதுடன் விடவேண்டியதுதான்.

    பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள் என்று கூறுவதுண்டு. பிடிக்கிறதோ, இல்லையோ, கடந்த காலத்திலேயே நிலைத்திருப்பார்கள் சிலர். தம்மை நோகடித்ததைப்பற்றி, பலமுறை, பிற பெண்களிடம் கூறிக்கொள்வார்கள். அப்போது கிடைக்கும் அனுதாபம் அவர்களுக்கு அன்பாகத் தோன்றிவிடும்.

    அதேபோல், பிறர் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அப்போதுதானே, `நல்லவேளை, நமக்கு இப்படி நிகழவில்லையே!’ என்று திருப்தி அடையமுடியும்?

    “உன் மகனைப்பற்றிச் சொல்!” என்றாள் என்னுடன் எப்போதோ வேலைபார்த்த ஒருத்தி, சற்று அதிகாரமாக. அவன் மறைந்ததைப்பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைப் பொறுத்தவரை, பொழுதைப் போக்க அது ஒரு வழி. அவ்வளவுதான்.

    அது புரிந்து, “ஸாரி. நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை,” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு, அப்பால் நகர்ந்தேன், தான் அலட்சியமாக நடத்தப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியை அவளுக்கு அளித்துவிட்டு.

    நம்மைப் பாதித்ததைப்பற்றி ஓயாது பேசினாலோ, வருந்தினாலோ அதன் பாதிப்பு குறைந்துவிடப்போவதில்லை. ஒவ்வொரு முறையும் மேலெழுந்து, நம்மை வாட்டும். மாற்ற முடியாததை ஏற்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்?

    நம் துயரத்தைப் புரிந்துகொள்கிற ஓரிருவரிடம் மட்டும் கூறுவதுதான் விவேகம். ஆறுதல் கிடைக்கும்.

    ஏமாற்றத்தின் விளைவுகள் பலவிதம்

    சிறுவயதில் நாம் எதையாவது அடைய விரும்பி, அது கிடைக்காமல் போனால் ஏமாற்றம் விளையும். வளர்ந்தபின்னும் அதே மனநிலை இருந்தால் திண்டாட்டம்தான்.

    மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கியிருந்த ஓர் இளைஞனைப் பார்த்தேன்.

    தெரிந்த கதைதான். ஒரு பெண் அவனைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்துவிட்டு, பிறகு ஏமாற்றிவிட்டாள்.

    நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்கு அதற்குப்பின் எல்லாவற்றிலும் ஆர்வம் போயிற்று.

    இதேபோன்று, ஒரு பெண் ஏமாற்றப்பட்டபோது, அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவர், `இது உன் தவறல்ல. உன் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை,’ என்று ஆதரவாக இருந்தனர்.

    பிறகு, வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துகொண்டாள். எப்போதாவது மனம் உறுத்தும். ஆனால், தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, அதைச் சமாதானப்படுத்திக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது.

    பல வருடங்கள் கழிந்ததும், `அந்த கயவன் செய்த காரியத்துக்காகவா அவ்வளவு வருத்தப்பட்டேன்!’ என்று தோன்றிப்போயிற்று.

    எதிர்மறையான உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது ஆக்கபூர்வமான, கடினமான எதையாவது செய்தால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். தோட்டவேலை, விளையாட்டு, நாட்டியம் – இப்படி அவரவர்களுக்குப் பிடித்தது ஏதாவது இருக்காதா?

    பொறுக்க முடியாததைப் பொறுத்தபின்

    வெளிநாட்டுக்கு உத்தியோக நிமித்தம் செல்பவர்களுக்கு, `வாழ்க்கை இத்தனை கடினமானதா!’ என்ற அயர்ச்சி உண்டாகும். புதிய இடம், வசதியின்மை, கலாசார மாறுபாடு, உறவினரைப் பிரிந்து, தனிமையில் வாடவேண்டிய கொடுமை என்று எவ்வளவு இல்லை!

    எப்படியோ சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டியபின், `நாம் எத்தனை இடர்களைத் தாங்கி, அவைகளைக் கடந்து வந்திருக்கிறோம்!’ என்ற மலைப்புடன், பெருமையும் எழும். பிறருக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்திருப்பார்கள்.

    உனக்காகவும் நேரம் ஒதுக்கு

    நான் உத்தியோகம் பார்த்த காலத்தில், திங்கட்கிழமையிலிருந்து, சில சமயம், சனிக்கிழமைகூட வேலை செய்ய வேண்டியிருக்கும். எனக்கென்று ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி இருப்பேன் — கூடியவரை, அன்று பகலில் வெளியில் போவதைத் தவிர்த்துவிட்டு.

    இது சுயநலமா? எனக்கு முக்கியமான, பிடித்த காரியங்களில் நேரத்தைச் செலவிட முடிகிறதே!

    பிறருக்குப் பயந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்துவிட்டு, மகிழ்ச்சியின்றி எதற்கு வாழ்வது?

    Share
  • படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 285இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    கான மகளும் வான மகளும் துணையிருக்கக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் வேலவனை ஒளிப்படத்தில் பிடித்துவந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்வழகிய படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒளிப்படக்கலைஞருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

    ”தாமரை போன்ற எழிலார் திருவடிகளையும் பவழமொத்த மேனியையும், குன்றிமணிபோல் சிவந்த ஆடையையும் கிரவுஞ்ச மலையைப் பிளந்த நெடுவேலையும் உடைய சேவலங்கொடியோனாகிய முருகவேள் காப்பதனால் இவ்வுலக உயிர்கள் இன்பமாய் வாழ்கின்றன” என்று அழகன் முருகனின் அருளையும் ஆற்றலையும் வாயூறிப் பேசுகின்றது பெருந்தேவனாரின் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல்.

    தாமரை புரையும் காமர் சேவடி
    பவழத் தன்ன மேனி திகழொளி
    குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
    நெஞ்சுபக எறிந்த அம்சுடர் நெடுவேல்
    சேவலம் கொடியோன் காப்ப
    ஏம வைகல் எய்தின்றால் உலகே.
    (குறுந்தொகை – கடவுள் வாழ்த்து)

    படத்தில் மனைவியரோடு மாண்புறக் காட்சிதரும் கந்தவேள் குறித்த தம் சிந்தனைகளைக் கவிதையில் அள்ளித்தரக் காத்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள்; அவர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****
    ”வனத்துக்குக் குறத்தியையும் வான மகளையும் மணந்தவனை, சூரனைச் சீறி அழித்தவனை, அந்த மயில்வாகனனைப் பணிந்தால் அருள்கிட்டும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அருள்தரும் வேலன்…

    வனத்து வள்ளிக் குறத்தியுடன்
    வான மகளை மணந்தவனை,
    சினத்தில் வந்த சூரனையே
    சீறும் வேலால் அழித்தவனை,
    தனமும் கலையும் தருபவனைத்
    தானே மயிலில் வருபவனை
    மனத்தில் எண்ணிப் பணிந்திடுவாய்
    மறவா தருள்வான் வேலவனே…!

    *****
    ”ஆறுமுகன் ஏறுமுகன் அழகுமுகன் செந்தில் நகைமுகன்
    குறவஞ்சி மகன் காரிருள் விலக்கும் கந்தனவன்” என்று முருகனின் தோற்றம் வீரம் பண்பு அனைத்தையும் பாங்குறப் பட்டியலிடுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    வள்ளி தெய்வானையுடன்
    வடிவேல் முருகன்
    வேலினைக் கையிலேந்தும்
    வெற்றி வேல்முருகன்

    சூரனை வதம் செய்த
    ஆறுமுக வடிவழகன்
    கடலையே முறியடித்த
    மக்கள் சூழ் மால்மருகன்

    வேழனின் இளையவனிவன்
    புவி வலம் வந்த மருகன்
    ஆறுமுகன் ஏறுமுகன்
    அழகுமுகன் செந்தில் நகைமுகன்
    இவனே குறவஞ்சி மகன்
    தணிகை மகன் சாந்த முகன்

    காரிருள் விலக்கும் கந்தனவன்
    அடியார் கொஞ்சுமுகன்
    அருள் மழை பொழியும் மாலன்
    இவனே சரவணன் சக்திமகன்

    *****

    ”ஓரெழுத்து மந்திரத்துப் பொருள் மறந்த காரணத்தால் பிரமனையே சிறைப்பிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்து, சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!” என்று சந்தக் கவியில் ஆறுபடையப்பனின் வாழ்க்கை வரலாறுரைத்து நம் சிந்தை கவர்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    ஆறுபடையப்பன்

    நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து
    ஆற்றுப்படுத்தி நக்கீரன் நலம்பெற்று வாழ
    போற்று தெய்வயானை மணமுடித்த கோலமுடன்
    பரமசினக் குன்றமர்ந்து அருளும் பெருமானே!

    வியாழனவர் தவமியற்ற, தூயசுடர் தனிலுதித்துத்
    தாய்சக்திவேல் தொடுத்துத் தீயசூரன் தனையழித்து
    ஆழிசூழ் புவனங்காக்கச் சேவற்கொடி ஏந்திச்
    சேயோனாய்க் குன்றழித்து நின்ற செந்தில்நாதா!

    பானுவும் தேனுவும் இலக்குமியுடனே
    பேணிடும் வேல் கொண்ட கரத்துடனே
    சுத்த ஞான சித்தம் கொள் பக்தர் நலங்காக்கத்
    தென்பொதிகைப் பழனிபதி நின்ற பாலகுருநாதா!

    ஓரெழுத்து மந்திரத்துப் பொருள் மறந்த காரணத்தால்
    பிரமனையே சிறைப்பிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்துச்
    சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை
    ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!

    துள்ளிவரு வேலெடுத்துச் சூரர்தலை கிள்ளிச்
    சினம்விடுத்துத் தேவவேழ வாகனத்திலேறி
    வள்ளிமலைப் பெண் மயக்கி மணமுடித்துக்
    குன்றுதோறும் ஆடிநிற்கும் ஞானவஜ்ரவேலா!

    சிலம்பாற்றங் கரையினிலே இளைப்பாற வந்தவளின்
    ஞானப்பசிதீர நாவல் பழந்தானுதிர்த்து
    அழகுமாமன் சூடும் அரளி மாலையேந்திச்
    சோலைமலை தானமார்ந்த வெற்றிவேலா!

    ஆறுபடை மீதுறைந்து நீயருளுகின்ற போதும்
    கூறுதமிழ் நல்லுலகம் சென்றவிடந்தோறும்
    குன்றிருக்கு மிடமெல்லாம் குமரன்இடம் எனவே
    செந்தமிழால் போற்றித்தொழும் கந்தகுருநாதா!!!

    *****

    ”சங்கத்தமிழ்த் துதி துதிக்க…தங்கத்தேர் குலு குலுங்க…வெள்ளித்தண்டை ஒலி எழுப்ப வள்ளியோடு நீ வருவாய்!” என்று உள்ளம் அள்ளும் துள்ளிசைப் பாடலில் சிங்கார வேலனை அழைக்கின்றார் திருமிகு. ராதா.

    சின்ன மயில் சிலுசிலுக்க…
    சின்ன இடை தளதளக்க…
    சித்தர் போற்றும் சீமானே
    சிங்காரவேலா நீ வருவாய்!

    பட்டாடை பளபளக்க…
    பார்ப்பவர் மெய்மறக்க…
    பாவங்களைப் போக்கிடவே
    பாலகனே நீ வருவாய்!

    செஞ் சிலம்பு சலசலக்க…
    சேவல்கொடி படபடக்க…
    செந்தூரில் நின்றாடும்
    தேவாதி தேவனே நீ வருவாய்!

    பால்குடம் பொங்கப் பொங்கப்
    பக்தர்களும் பாடி வர
    பாவங்களைப் போக்கிடவே
    பால முருகனே நீ வருவாய்!

    சக்திவேல் மினுமினுக்க…
    சங்கடங்கள் பறந்து
    சரணங்கள் பாடிவந்தேன்
    சண்முகா நீ வருவாய்!

    சங்கத்தமிழ்த் துதி துதிக்க…
    தங்கத்தேர் குலு குலுங்க…
    வெள்ளித்தண்டை ஒலி எழுப்ப
    வள்ளியோடு நீ வருவாய்!

    *****
    ”ஆலயத்தில் இனியுனக்குப் பன்னீர் சந்தன அபிஷேகமில்லை;
    சுத்திகரிப்பான்தான்! அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்!
    அத்தொல்லையுணர்ந்தாவது வேல்கொண்டு விரட்டி அடித்துத் துரத்த
    மாட்டாயா கொரோனாவை?”  என்று தம் ஆதங்கத்தைப் பாட்டில்
    வெளிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    ஆதங்கத்துடன்…. அரகரோகரா!

    ஆறுமுகத்தோனே உன் அண்ணன்
    ஆனை முகத்தானெங்கே?
    ஆதிமுதல்வனென அவனை
    அனுதினமும் துதிபாடி
    ஆளுக்கொரு சிலைசெய்து
    ஆற்றங்கரையில் கரைத்தோம்!
    அழகாய்த் தீபம் ஏற்றி உன் அப்பன்
    அண்ணாமலையாரைத் தொழுதோம்!
    ஆடித்தபசில் கைகூப்பி உன்
    அன்னையையும் வேண்டினோம்!
    அடுத்துவரும் கார்த்திகையில்
    அன்புடன் வணங்குவோம் உன்னையும்!
    அகிலமெல்லாம் வியக்கச் சூரனை வென்ற நீ
    அடங்க மறுக்கும் நோய்த்தொற்றால்
    அவதியுறும் எம்மக்களின் துன்பம்
    அறியாது வள்ளிதெய்வானையுடன்
    அளவளாவி நிற்கின்றாயோ?
    ஆலயத்தில் இனியுனக்குப் பன்னீர் சந்தன
    அபிஷேகமில்லை சுத்திகரிப்பான்தான்!
    அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்!
    அத்தொல்லையுணர்ந்தாவது வேல் கொண்டு விரட்டி
    அடித்துத் துரத்த மாட்டாயா கொரோனாவை…?

    கருத்துச் செறிவான தம் கவிதை மலர்களால் தமிழவேள் முருகனுக்கு அணிசெய்திருக்கின்றார்கள் நம் திறன்மிகு கவிஞர்கள்; அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    முப்பாட்டன் முருகனுக்கு அரகரோகரா – எங்க
    முத்துக் குமரனன்றோ அரகரோகரா!
    எப்பாடு பட்டாச்சும் அரகரோகரா – எங்களை
    எலக்ஷனிலே வெல்ல வைப்பாய் அரகரோகரா!

    ஊர் முழுதும் சுத்தி வந்தோம் அரகரோகரா – எமக்கு
    ஒரு வழியும் தெரியலையே அரகரோகரா!
    தேரிழுத்தும் நாம் வருவோம் அரகரோகரா – எங்களைத்
    தேர்தலிலே ஜெயிக்க வைப்பாய் அரகரோகரா!

    வேலெடுத்து நாம் வருவோம் அரகரோகரா – எமக்கு
    வெற்றியை நீ தந்திடுவாய் அரகரோகரா!
    காலலுக்க நடக்கின்றோம் அரகரேகரா – எங்க
    கட்சியை நீ வெல்ல வைப்பாய் அரகரோகரா!

    கள்ளவோட்டுப் போட்டாலும் அரகரோகரா – எங்களைக்
    காட்டி நீயும் கொடுத்திடாதே அரகரோகரா!
    வெள்ளமென ஓட்டு வந்து அரகரோகரா – எமக்கு
    விழுந்திடவே வேண்டுமையா அரகரோகரா!

    அரவிந்த மலரெடுத்து அரகரோகரா – உனக்கு
    அர்ச்சனைகள் செய்திடுவோம் அரகரோகரா!
    தரவேண்டும் ஆதரவை அரகரோகரா – எங்கும்
    தாமரையே பூக்க வேண்டும் அரகரோகரா!

    வெற்றிவடி வேலவனே அரகரோகரா – எமக்கு
    வேறுவழி இல்லை ஐயா அரகரோகரா!
    பொற்பாதம் பணிந்து நின்றோம் அரகரோகரா – நாங்கள்
    போடும் வேஷம் வெல்ல வேண்டும் அரகரோகரா!

    அரசியல் கட்சிகள் தேர்தலில் வெல்வதற்காக முருகனின் பெயராலே செய்யும் வேடிக்கை விநோதங்களைத் தம் பாட்டில் நயம்பட நவின்றிருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம்

    தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம்

    அண்ணாகண்ணன்

    நாங்கள் வசிக்கும் சென்னை, மேற்குத் தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளே தெரியாத அளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதோ ஒரு நேரடிக் காட்சித் தொகுப்பு.

     

    Alert: தாம்பரத்தில் வெள்ளம் ஏறுகிறது

    சென்னை, மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி, அதன் நீர்மட்டம் ஏறுகிறது. வீடுகளிலிருந்து சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் பெயர்ந்து வருகிறார்கள். தண்ணீர் வடியும் என்று பலரும் காத்திருக்கிறார்கள். களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share