Blog

  • இயற்கை மொழிச் செயலாக்கங்களின் தற்போதைய போக்குகள் & சவால்கள்

    இயற்கை மொழிச் செயலாக்கங்களின் தற்போதைய போக்குகள் & சவால்கள்

    முனைவர் மோ. ஜெயகார்த்திக்
    உதவி இயக்குநர் (கல்வி), தமிழ் இணையக் கல்விக்கழகம்,
    கோட்டூர், சென்னை – 25
    மின்னஞ்சல்: jeya_karthic@yahoo.com 

    முன்னுரை

    இயற்கை மொழிச் செயலாக்கம் (Natural Language Processing)  என்பது கணினி விஞ்ஞானத்தில் அதிக ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். NLP, கணினிகள் மற்றும் மனித மொழிகளுக்கிடையில் ஒரு  பரஸ்பர தொடர்பினை ஏற்படுத்துகின்றது. இயற்கை மொழி ஆய்வுக் குறியீடுகள் மற்றும் செயற்பாட்டுத்  தொகுப்புகள் மற்றும் மாதிரி தரவுகள்  என்பனவற்றைத் தன்னகத்தே உள்ளடக்கி இருப்பதால் இயற்கை மொழிச் செயலாக்கத்தை (Natural Language Processing) எளிதில் நடைமுறைப்படுத்த  முடியும். பொதுவாக இயற்கை மொழி செயலாக்கத்திற்குத் (NLP) தேவையான முக்கிய செயற்பாடுகளைப் பற்றி விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

    தமிழில் இயற்கை மொழி ஆய்வுக்கான முன்னேற்பாடுகள்

    இந்திய மொழிகள் அனைத்தும் கணிப்பொறி அறிவியலில் உரிய இடத்தைப் பெறுவதற்காக நடுவண் அரசும் மாநில அரசும் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. நடுவண் அரசின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி (TDIL- Technology Development of Indian Language) என்ற திட்டத்தை உருவாக்கிச் செயல்பட்டு வருகிறது. இதற்காக  நாடு முழுவதும் 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இந்திய மொழிகள் பலவற்றின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலும் மாநில அரசானது தமிழ்மொழியின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கான பல திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்று, தமிழ் இணையக் கல்விக் கழகமும் நிறுவப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்களும் தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்காக மானிய உதவியைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மொழி உருவாக்கம் (Language formulation)

    மொழியியல் என்பது மொழியை அறிவியல்பூர்வமாக ஆராய்வது. ஒலியனியல் நிலை, உருபனியல் நிலை, பொருண்மையியல் நிலை ஆகியப் படிநிலை அமைப்பில் வரும் மொழி அலகுகளாகப் பிரித்தாய்ந்து மொழியின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளக் கணிப்பொறியைப் பயன்படுத்தலாம்.  மேலும், சிறிய மொழிக் கூறுகளிலிருந்து பெரிய மொழிக் கூறுகளை ஆக்கலாம். இதனை மொழிப் பகுப்பாய்வு என்றும் மொழி ஆக்கம் என்றும் அழைக்கலாம்.

    இலக்கண விதிகளை எளிமைப்படுத்திக் கணினிக்கு உணர வைக்க, மொழியியல் கோட்பாடுகள் அவசியமாகின்றன. இவை ஒரு சொல்லையோ அல்லது அதன் பகுதியையோ கணினி அறியப் பயன்படுகின்றது. கணினியுடன் தொடர்புகொள்வதற்குத் துணை நிற்பது நிரல்மொழி. ஜாவா, பேர்ல், சி, சி++, பைத்தான் போன்ற நிரல்களை இயற்கை மொழி ஆய்வுகளுக்கு ஆய்வாளர்கள் தேர்வு செய்கிறார்கள். இவற்றின் மூலம் உருபனியல் பகுப்பாய்வியை உருவாக்குவது என்பது எளிதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் இதன் வெளியீடானது தொடரியல் பகுப்பாய்வுக்கு உள்ளீடாகக் கொடுக்கப்படுகிறது. இது  இயந்திர மொழிபெயர்ப்புக்கு உதவியாக அமைகின்றது.

    இயற்கை மொழி ஆய்வு

    கணிப்பொறி ஒரு மொழியாய்வுக் கருவி. செய்திகளை 1,0 என்ற எண்களால் ஆய்வது தான் கணிப்பொறி. மனித மூளை 0,1 என்ற அடிப்படை எண்களை வைத்துக்கொண்டு இயந்திர மொழி மூலம் எழுத்துகளும், எண்களும் தனித்தன்மையான குறியீடுகளும் (Special Symbols) உருப்படுத்தம் செய்யப்படுகின்றன. மொழியியலார் கணினியை மொழியின் கடினமான செயல்பாடுகளைச் செய்யும் கருவியாகப் பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது. மொழியியல் சார் கணிப்பொறி ஆய்வைக் கணினி மொழியியல் ஆய்வு அல்லது இயற்கை மொழி ஆய்வு என்பர். இவ்வாய்வுப் பேச்சைத் தெரிந்துகொள்ளுதல், பேச்சை உருவாக்குதல், உரைகளை பேச்சாக்குதல், பேச்சுகளை உரை ஆக்குதல், இயந்திர மொழிபெயர்ப்பு, விரிதரவுகளை ஆய்தல், உரைகளை ஆய்தல், மொழி அலகுகளைப் பகுப்பாய்வு செய்தல் என்பனவற்றை உள்ளடக்கும். மொழியாய்வு மொழியைப் புரிந்துகொள்ளுதல் என்பதுடன் உரை அல்லது பேச்சுச் செய்திகளைப் பொருள் கொண்டுப் புரிந்துகொள்ளுதல், மொழிபெயர்த்தல், உரைகள் அல்லது பேச்சுச் செய்திகளை உருவாக்குதல் முதலானவற்றையும் ஆய்வதாக அமைகின்றது.

    இயற்கை மொழி ஆய்வின் அணுகுமுறைகள்

    இயற்கை மொழிச் செயலாக்க அடிப்படையில் இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தலாம். 1. இயற்கை மொழிப் புரிதல் என்பது, இயற்கை மொழியில் கொடுக்கப்படுகின்ற உள்ளீட்டைப் பயனுள்ள அமைப்புகளாக அல்லது குறியீடுகளாகப் பொருத்துவது, மற்றும் மொழியின் பல்வேறு அம்சங்களைப் பகுப்பாய்வு செய்தல் என்பதைக் குறிக்கின்றது. 2. இயற்கை மொழி உருவாக்கம் என்பது இயற்கை மொழியின் உள்ளீட்டுக் குறியீடுகளிலிருந்து பொருண்மை பொதிந்த சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் உருவாக்கும் செயல்முறையாகும். இச்செயல்முறை  உரைத் திட்டமிடல், வாக்கியத் திட்டமிடல், உரை உணர்தல் என்ற உட்கூறுகளில் செயல்படுகிறது. மேலும், இயற்கை மொழியைப் புரிந்துகொள்ளுதல் என்பது இயற்கை மொழி உருவாக்கத்தைவிடக் கடினமானது ஆகும்.

    இயற்கை மொழி ஆய்வின் படிநிலைகள்

    இயற்கை மொழி ஆய்வில் ஐந்து படிநிலைகள் உள்ளன.

    1. சொல் பகுப்பாய்வு என்பது சொற்களையும் சொற்களஞ்சியத்தையும் உள்ளடக்கிய மொழி ஆய்வு ஆகும்.

    2. தொடரியல் பகுப்பாய்வு என்பது வாக்கியங்களைத் தொடர்களாகவும் சொற்களாகவும் பிரித்து அவற்றின் தொடரியல் மற்றும் சொல் வகையிலான பண்புகளை அடையாளப்படுத்தும் நடைமுறையாகும்.

    3. பொருண்மையியல் ஆய்வானது மொழியில் உள்ள சொற்களின் பொருண்மையை அறிவியல் நோக்கில் ஆராய்வதாகும்.

    4. சொல்லாடல் என்பது மொழியில் பொருண்மையைக் கொடுப்பதும் பெறுவதுமாக நிகழும் பரிமாற்றமாகும்.

    5.  சூழ்பொருளியல் ஆய்வானது சொற்றொடரின் பொருளுக்கும் பேசுபவரின் பொருளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வது.

    இயற்கை மொழி ஆய்வின் போக்குகள்

    இயற்கை மொழியை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது, சிக்கலான மொழி பழக்கத்திற்கு உட்படுகின்றது. ஒலியனியல் பகுப்பாய்வு, உருபனியல் பகுப்பாய்வு, பொருண்மையியல் பகுப்பாய்வு, பயன்வழியியல் பகுப்பாய்வு, கருத்தாடல் பகுப்பாய்வு ஆகியவை கணினி மொழியியலுக்கு அடிப்படை ஆய்வுகளாகும்.

    ஒலியனியல் பகுப்பாய்வு, ஒலி அடையாளக் குறிகளிடமிருந்து அல்லது கேட்கும் அடையாளக் குறிகளிடமிருந்து சொற்களைப் பிரித்தெடுக்கும் பேச்சைத் தெரிந்துகொள்ளும்.

    ஒலிகள்   →   சொற்கள்

          /b/+/ɔ:/ +t ® bɔ:t/ ‘boat’

         க் + ஆ+ல்+அ+ம்                  காலம்

    உருபன்களிலிருந்து சொற்களைப் பெறல், சொற்களை உருபன்களாகப் பகுத்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

    உருபன்கள்  →   சொற்கள்

    சிலை+கள்             சிலைகள்

    தொடரியல் பகுப்பாய்வில் சொற்களின் வரிசை அமைப்பிலிருந்து வாக்கிய அமைப்பைப் பெறுவது அல்லது  வாக்கியங்களைச் சொற்களாகப் பிரித்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

    சொல்வரிசை    →    வாக்கிய அமைப்பு

    இராமன் சீதையை மணந்தான் என்ற சொல் வரிசையில்,

    இராமன் +  சீதை யை+  மணந்தான்

    (பெ.தொ.)  (வே.தொ.)  (வி.தொ.)

    (பெ.)+        (பெ.)+(வே.உ)+  (வி.)

    பொருண்மையியல் பகுப்பாய்வு என்பது வாக்கிய அமைப்பு சொற்பொருண்மையில் இருந்து வாக்கிய பொருண்மையைப் பெறலாம். எ.கா. இராமன் சீதையை மணந்தான் என்று பகுப்பில் இருந்து மணந்தான் இராமன், சீதை என்பதைப் பெறமுடியும்.

    பயன்மொழியியல் பகுப்பாய்வில் வாக்கியப்பொருள் மற்றும் சூழல் இவற்றிலிருந்து சரியான பொருளைப் பெறமுடியும். இது பொது அறிவையும் முன்னர் வந்த கூற்றின் அறிவையும் உள்ளடக்கும்.  எ.கா. அவன் சீதையை மணந்தான் என்ற வாக்கியத்தில் வரும் பதிலீட்டுப் பெயர் (அவன்) முன்னர் வந்த வாக்கியத்தின் அறிவால் அவன்= ராமன் என்று புரிந்துகொள்ளப்படும்.

    முடிவுரை

    மொழி ஆய்வில் கணினி பெரிதும் பயன்பட்டு வருகின்றது.  கணினியில் தமிழைக் கையாளுதல் என்பது சில சமயங்களில் சிக்கலுக்குரிய செயலாக உள்ளது. அச்சிக்கலைக் களைவதற்கு மொழியியல் அறிஞர்களும் கணினித் தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து செயல்பட்டால் இயற்கை மொழி ஆய்வில் ஏற்படும்  இடர்ப்பாடுகளைக் களையலாம்.

    பார்வை நூல்கள்

    1. Agesthialingom, S. 1967, Generative Grammar of Tamil, Annamalai University, Annamalai Nagar.
    2. Chomsky, N. 1965,   Aspects of theory of Syntax, MIT Press, Cambridge.
    3. அரங்கன், கி. 1975, தொடரியல் மாற்றிலக்கண அணுகுமுறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    4. இராசேந்திரன், ச. 2019, கணினி மொழியியலும் தமிழ்மொழியின் தொழில்நுட்ப வளர்ச்சியும், கோயம்புத்தூர்.
    5. சண்முகம், செ. 1998, சாம்ஸ்கியின் புது மாற்றிலக்கணம், கவிதா பதிப்பகம், சென்னை.
    Share
  • பழகத் தெரிய வேணும் – 45

    பழகத் தெரிய வேணும் – 45

    நிர்மலா ராகவன்

    மனைவி கணவனது உடைமையா?

    ஆப்ரஹாம் லிங்கனிடம், “இந்த உலகில் நாம் செய்யும் எல்லா செயல்களும் சுயநலத்தின் அடிப்படையில் எழுந்தவைதான்,” என்று நண்பர் ஒருவர் கூற, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அதை மறுத்தார்.

    “நான் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். அது எப்படி சுயநலமாகும்?” என்று கேட்டார்.

    நண்பர் அயராமல், “அப்படி உதவி செய்தால், உனக்கு என்ன கிடைக்கிறது?” என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

    “மகிழ்ச்சி,” என்று பதில் வர, “பார்த்தாயா? உன் மகிழ்ச்சிக்காகச் செய்வது சுயநலமில்லையா?” என்று மடக்கினார் நண்பர்.

    நம் நலனைக் கவனித்துக்கொள்வது அவ்வளவு விரும்பத்தகாத குணமா?

    `தன்னலமற்ற சேவை செய்பவர்’ என்று அபூர்வமான சிலரைப் போற்றுகிறோம்.

    ஒருவர் தன் சொந்த நலனைப் பெரிதாகப் பாராட்டாது, அறவே ஒதுக்கினால், அவரால் எப்படிப் பிறருக்குச் சேவை செய்யமுடியும் என்கின்ற கேள்வி எழுகிறதே!

    பொதுவாகவே, பெண்கள் இப்படி இருந்தால்தான் அவர்களுக்கு நல்ல பெயர் கிட்டுகிறது.

    கதை

    லட்சுமி சிறுவயதிலிருந்தே ஆண்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்திருந்தாள்.

    அவள் செய்யப்போகும் ஒவ்வொரு காரியமும் இப்படித்தான் இருக்கவேண்டும், தான் யாருடன் பேசலாம் என்று கூறுகிறோமோ அவருடன் மட்டும்தான் அவள் பேசவேண்டும் என்று பலவகையிலும் கணவர் கட்டுப்படுத்தியபோது அவரது போக்கைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

    கைத்தொலைபேசியில் அவள் யாருடனெல்லாம் தொடர்பு கொள்கிறாள் என்று அவர் வேவு பார்த்தபோது, அவளுக்கு வாழ்வில் உற்சாகம் குறைந்துகொண்டே போயிற்று.

    கணவருடைய அன்புக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்தபோதும், தான் ஏன் மகிழ்ச்சியே இல்லாமல் இருக்கிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. சிலமுறை கணவனின் போக்கை எதிர்த்துப்பார்த்தாள்.

    “எனக்கு உன்மேல் மிகுந்த அன்பு, அதனால்தான் நீ பிறருடன் பழகினால் பொறாமை வருகிறது,” என்று சமாதானப்படுத்தினான் அவன். அவளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பது அவனுக்குப் புரியவில்லை.

    இம்மாதிரியான ஆணுக்கு மனைவிமேல் நம்பிக்கை கிடையாது என்பதில்லை. சுயநம்பிக்கை குறைவு. அவ்வளவுதான். தன்னைவிட அவள் எந்த விதத்திலாவது உயர்ந்தவள் என்று தோன்ற, அப்படி நடக்கிறான்.

    ஒருவர் தன் மகிழ்ச்சிக்காகவோ, இல்லை, சொந்த நலனுக்காகவோ பிறரைக் கஷ்டப்படுத்துவது அன்பில் சேர்த்தியில்லை.

    இப்படிப்பட்ட கணவனுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் குடும்பத்தில் எவருக்குமே மகிழ்ச்சி கிட்டாது.

    ஒரேமாதிரி அனுபவம் வெவ்வேறு மனிதர்களிடம் வித்தியாசமான பாதிப்புகள் ஏற்படுத்தும்.

    கதை

    வனமாலா தன்னைக் கட்டுப்படுத்திய கணவனிடம் சிறிது காலம் அடங்கிப்போனாள். காதலனாக இருந்தபோது, அவனுக்கு விட்டுக்கொடுத்து நடந்தவள் அவள். ஆனால், அப்படியே நடந்தபோது, தன் இயல்பான குணாதிசயமே மாறிக்கொண்டு வருகிறது என்பதை உணர்ந்தாள்.

    எதிலும் சவாலை எதிர்நோக்கும் குணத்தால் இப்படி ஒருவரை மணந்துவிட்டோமோ என்று முதலில் குழம்பினாள் அந்த விளையாட்டு வீராங்கனை.

    பிறகு, `கணவனுக்குத் தீயகுணம்கொண்ட நண்பர்கள் இருந்தால் என்ன, இது என் வாழ்க்கை!’ என்று தெளிந்தாள். தனக்குப் பிடித்த, பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவற்றில் ஈடுபட்டாள்.

    கரடுமுரடான பாதையில் ஏறுவது கடினமாக இருந்தாலும், மனங்கலங்காது தொடர்ந்தால் அழகான காட்சிகள் அமையலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

    `சுயநலம் பிடித்தவள்!’ என்று கணவன் பழித்ததை அலட்சியம் செய்தாள். (அவன் மட்டும் சுயநலக்காரன் இல்லையா?)

    காதலனாக இருந்தபோது அவனிடம் அவளுக்கு அவனிடம் பிடித்த குணங்களை மீண்டும் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை எழ, பொறுமையாக இருந்தாள்.

    தன் போக்கால் அவளுக்குத் தன்னிடம் அன்பு குறைந்து வருவது புரிய, முதலில் கேலி, பிறகு சண்டை என்று இருந்தவன் நாளடைவில் மாறினான். அவளைக் கட்டுப்படுத்துவதைக் குறைத்துக்கொண்டான்.

    கதை

    பெண்பார்க்கும் படலம் முடிந்ததும், `எனக்கு இந்தப் பெண் வேண்டாம். அவளுக்கு நிறைய சாதிக்கவேண்டும் என்ற கனவுகள் இருக்கின்றன,’ என்று ஓர் இளைஞன் மறுத்தான்.

    அவனைப் பொறுத்தவரை, ஓர் இலக்குடன் சாதிக்கும் வெறி நிறைந்த பெண்களிடம் பெண்மைக்குணம் இருக்காது.

    மனைவி அவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொருள். அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துகொடுத்தால் அவள் அன்பான மனைவி. அவளுக்குத் தனக்கென்று எந்த ஒரு லட்சியமோ, ஆசையோ இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன்.

    அது மட்டுமா? பெண் என்றால் அதிர்ந்து பேசாது, அல்லது பிறர் எதிரில் வாயே திறக்காது, கணவனுக்குக் கீழ்ப்படிகிறவள்.

    அப்படிப்பட்ட ஒரு பெண் திருமணமானதும், குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டோமே, ஏன் வாழ்க்கை மகிழ்ச்சியற்றுப் போய்விட்டது என்று புரியாது தவித்தாள்.

    கதை

    “எல்லாப் பெண்களுக்கும் பிடித்த ஒன்று எது என்று கண்டுபிடித்து வா,” என்று அரசன் ஒருவனுக்குக் கட்டளையிட்டான்.

    அந்த மனிதன் எங்கெங்கோ தேடி, அறிவாளி என்று பிறர் சிபாரிசு செய்த ஒரு சூனியக் கிழவியிடம் அக்கேள்வியைக் கேட்டான்.

    `நான் விடையளித்தால் உன் உயிர் தப்பும். எனக்கு என்ன கிடைக்கும்?” என்று அவள் கேட்க, “நீ கேட்பதைத் தருகிறேன்,” என்று வாக்களித்தான்.

    எக்காலத்துக்கும் பொருந்தும் அவள் பதில்: “தான் சம்பந்தப்பட்ட சமாசாரங்களில் எந்தப் பெண்ணும் சுயமாக முடிவெடுக்கவே விரும்புகிறாள்”.

    அரசனுடைய பாராட்டுடன் அவளை மீண்டும் சந்தித்தவன், “உனக்கு வேண்டியதைக் கேள்,” என்றான்.

    “என்னை மணந்துகொள்,” என்றவள் ஒரு நிபந்தனையும் விதித்தாள். “நீ வெளியில் போகும்போது நான் கிழத்தோற்றத்துடன் வருவேன். வீட்டில் இளம்பெண்ணாக நடப்பேன். இல்லையேல், வீட்டில் கிழவி, வெளியில் இளம்பெண். உனக்கு எப்படி வேண்டும்?”

    “உன் விருப்பம்!”

    அவள் மகிழ்ந்து, எப்போதும் இளம்பெண்ணாகவே தோற்றமளிப்பதாக உறுதியளித்தாள்.

    `திருமண வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடி இல்லை,’ என்று இளம்பெண்கள் மனம் வெறுத்துப் பேசுகிறார்கள்.

    திருமணத்திற்கு முன்னால், திருமணத்திற்குப் பின்னால் என்று ஆராய்ந்தால், உறவில் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.

    எப்போதும் கணவன் அல்லது மனைவி தன்னையே நாடவேண்டும், தான் சொற்படி நடக்கவேண்டும், பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு ஒவ்வாதது.

    நல்ல குடும்பம் என்றால், ஒவ்வொருவருடைய திறமையும் வெளிப்பட அவர்கள் நினைத்ததைச் சாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும் – அது ஆணோ, பெண்ணோ, குழந்தைகளோ! எவரிடமும் எதிர்பார்ப்பு இல்லாது செலுத்துவதே அன்பு.

    தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வாழ்க்கைத்துணையிடம் சொல்லி, அனுமதி கேட்கும் நிலை வந்தால் அது அடிமைத்தனம்.

    “உங்களுக்காக எவ்வளவு செய்தேன்!” என்று சொல்லிக்காட்டினால், பெற்ற குழந்தைகள் கொண்டிருக்கும் அன்புகூட குறைந்துபோகும் அபாயம் இருக்கிறது.

    “நான் இப்போது செய்கிறேன். நீங்கள் நாளைக்குச் செய்யவேண்டும்!” என்பவர்களும் உண்டு. உறவுகள் என்ன, பண்டமாற்று வியாபாரமா?

    பெற்ற குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது அவர்கள் பிற்காலத்தில் நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனா?

    அல்லது, வயது முதிர்ந்த பிராயத்தில் அவர்கள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றா?

    குடும்பத்தினர் நல்லபடியாக வளர்வதைக் கண்டே மகிழ்ச்சி அடையலாமே!

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 2

    அண்ணாகண்ணன் காணொலிகள் 2

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    கத்தரிக்காய் காய்த்தது

    நம் வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் காய்த்தது.

     

    Black Drongo on electric line

    மின் தடத்தில் ஊஞ்சலாடும் கரிச்சான் | இரட்டைவால் குருவி | கரிக்குருவி | ஆனைச்சாத்தன்

     

    நினைத்ததை நடத்தியே முடிப்பவன்!

    உச்சியில் இரட்டைவால் குருவி

    ஹாஹாஹா, இந்தப் படத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். இதை எடுக்கும்போது என் கை மெல்ல ஆடியது. ஆனால், படத்தைப் பார்த்தால், கம்பத்தை யாரோ இங்கும் அங்கும் நகர்த்த, உச்சியில் இரட்டைவால் குருவி அசையாமல் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது, இல்லையா?

    Do your duty!

    What ever the situation, do your duty!

    On a rainy day in Cyclone Puravi, the pigeon is busy as usual!

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 287

    படக்கவிதைப் போட்டி – 287

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் கீதாமதி எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (06.12.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 286இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 286இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்திருக்கும் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 286க்கு வழங்கியிருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றிகள்!

    கட்டுக்களை விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல் பறப்பதற்குப் பயிற்சி எடுக்கிறாரோ எந்த இளைஞர்?

    கவிஞர்களைக் கேட்போம்!

    *****

    ”காசு பணத்தின் ஆசையிலே காற்றாய்ப் பறந்து அழிகின்றானே மனிதன்!” என்று மனிதனின் பேராசையால் நேரும் விபரீதத்தைச் சுட்டிக்காட்டி வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பறக்காதே…

    ஆசை மனிதனுக் கதிகம்தான்
    அளவோ டிருந்தால் வெற்றியேதான்,
    ஆசைப் பட்டே வான்பறக்க
    அழகாய்ப் பறக்கிறான் விமானத்தில்,
    மோசம் வந்திடும் மனிதனவன்
    முகிலுடன் பறக்கத் தான்சென்றால்,
    காசு பணத்தின் ஆசையிலே
    காற்றாய்ப் பறந்தே அழிகிறானே…!

    *****

    ”ஏன் இந்தக் குதியாட்டம் இளைஞனே? தூரத்து வானைத் தொடும் முயற்சியில் கிட்டிய ஆரம்ப வெற்றியாலா? ஒதுக்கீட்டில் இலட்சங்கள் செலவின்றி இலட்சியம் நிறைவேறியதலா? காரணம் எதுவாக இருப்பினும் வழுக்குப் பாறையருகே இந்தச் சாகசம் ஆபத்தானது!” என்று எச்சரிக்கின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

    எச்சரிக்கை

    உள்ளம் களிப்பு
    கொள்ள
    உடல் உயரே
    துள்ள
    எள்ளளவும் பயம் இன்றி
    ஏனிந்தக் குதியாட்டம் வாலிபனே?

    தூரத்து நீலவானைத்
    தொட்டு விடும் முயற்சியில்
    ஆரம்பத்து வெற்றி கண்ட
    ஆனந்தக் கொண்டாட்டமோ!

    7.5% இட ஒதுக்கீட்டில்
    இலட்சங்கள் செலவில்லாமல்
    இடம் கிடைத்த மகிழ்ச்சியோ!

    ஈராண்டாய்க் காதலித்துப்
    போராடிப் ‌பலனின்றி
    இதயம் மிகக் கனத்த வேளை
    இருவீட்டார் சம்மதத்தால்
    எழுந்தது இந்தக் களிப்பாமோ!

    வருத்திடும் கொரானா நோயினை
    எதிர்த்திடும் தடுப்பூசிக்கு
    மருத்துவ அங்கீகாரத்திற்கான
    மகிழ்ச்சியின் வெளிப்பாடோ!

    எல்லையில்லா மகிழ்ச்சியில்
    இதயம் திளைத்தாலும்
    எச்சரிக்கை இல்லாது
    எழும்பி உயர குதித்து
    வழுக்கும் பாறையில் அடிபட்டு
    வாழ்க்கையை
    நரகமாக்கிடாதே வாலிபனே!

    *****

    ”உயர உயரப் பறந்து போ! பட்சியாய் மாறு; பரவச வானம் உன்வசம் தான்!” என விண்ணை நோக்கித் தாவும் மனிதனுக்கு ஊக்கமூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    வானத்தைத் தொடப் பறக்கிறாயா?
    இல்லை உன்னுடனே அழைத்து வரத் துடிக்கிறாயா?
    வானமே எல்லைதான்
    வானவில் அதன் அங்கம்தான்
    நட்சத்திரக் கூட்டமும் அதிலுண்டு
    சந்திர சூரியரும் அதில் உலா வருவர்
    அவர்களையும் பிடித்து வா!
    மேகங்கள் உனை மூழ்கடிக்கும்
    உலகமே உன் கையிலெனத் தோன்றும்
    உயரஉயரப் பறந்து போ!
    பட்சிகளாய் மாறு
    பரவச வானம் உனது தான்!

    *****

    ”இந்திர உலகம் எட்டிடவே மந்திரம் ஏதும் கிடையாது; பெரியோர் உரைத்த நல்வழி சென்றால் வெற்றிக்கு இங்குத் தடையேது! என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    துள்ளிக் குதித்து வானம் தொட்டு
    உள்ளம் உவந்து களித்திருக்க
    நித்தமும் ஏங்கித் தவித்திருந்தால்
    இன்பம் கிட்டிட வாய்ப்பு இல்லை!

    வெள்ளத்தளவே மலர் நீட்டம் என்று
    வள்ளுவம் கூறும் கூற்றைப் போல்
    தெள்ளிய சிந்தையின் வழிவந்த
    தன் திறம் இன்றித் தந்திரம் இல்லை!

    வெள்ளை மனமும் கருணைக் குணமும்
    உள்ளவர் இன்பம் அழிவதில்லை
    கள்ளும் கயமையும் தந்திடும் களிப்பு
    காலம் முழுவதும் தொடர்வதில்லை!

    தொல்லிய பெரியோர் உரைத்தது போல்
    நல்லறம் செய்து உய்தலன்றி
    இந்திரன் உலகம் எட்டிடவே
    மந்திரம் ஏதும் இங்கு இல்லை!

    *****

    உயரத் தாவும் இந்த இளைஞனை மையமாக வைத்து உயர்வான கருத்துக்களைக் கவிதைகளில் பொதிந்து தந்திருக்கும் நம் கவிஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    தூங்கிய விழிகள் துடித்து விழித்தன
    ஏங்கிய மனது எட்டித் தாவியது
    ஓங்கிய வானம் விட்டு விலகி விரிந்தது
    எங்கும் இல்லை எனக்கு எல்லை!

    சிறகில்லை ஆயினும் என்ன?
    சிறகானது கரம் இரண்டும் – விரியட்டும்
    சிறு முயற்சி தானே? சிக்கினால் சிகரம்!
    சிக்காது சறுக்கினால் பயிற்சி!

    வெளியே வழியாய் ஒளியே துணையாய்
    வளியோடு வளியாய் ஒலியல்லா மொழியில்
    விழியின் வழியே விழுங்கி அழகினால்
    களிகொண்டு துள்ளித் திரியத் துணிந்தேன்!

    எட்டாதன எல்லாம் கிட்டும்!
    கிட்டாதன எல்லாம் எட்டும்!
    விடாத முயற்சியின் வினையால்
    விடை பெறட்டும் அயர்ச்சி!

    விண்ணளக்கும் நம்பிக்கையோடு
    விசையுடைய நரம்புகள் இணையட்டும்!
    விதைபிளந்த விளைபயிர் முனை போல எழு!
    விரிவானும் விளையாட்டுக் களமாகட்டும்!

    நீல வானும் நீட்டும் நீண்ட கரம்
    நிலவும் கூட நீ வா என விழி சிமிட்டும்
    நிலமகளோ எனை ஏற்றிவிடுவாள்
    நீ சாதிக்கப் பிறந்தவன் என்றே!

    ”உயரத் தாவும் இந்தச் சிறு முயற்சியில் எட்டினால் சிகரம்; சறுக்கினால் அதுவும் பயிற்சியே! விண்ணளக்கும் நம்பிக்கையோடு விசையுடைய நரம்புகள் இணையட்டும்; விரிவானும் விளையாட்டுக் களமாகட்டும்!” என்று தேர்ந்த சொற்களைப் பெய்து தம் கவிதையைச் சிறப்பாய் நெய்திருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 1

    அண்ணாகண்ணன் காணொலிகள் 1

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் விழிக்கு விருந்தாக. பார்த்துக் கருத்துகளைப் பகிருங்கள்.

    வெண்தொண்டை மீன்கொத்தி

    நம் வீட்டு வேப்ப மரத்தில் வீற்றிருக்கும் மீன்கொத்தி. இடம்: தாம்பரம், சென்னை.

     

    மீன்கொத்தியும் பெண்குயிலும்

    மீன்கொத்தியும் பெண்குயிலும் நம் வீட்டு வேப்ப மரத்தில் எதிரெதிரே அமந்து காற்று வாங்கும் காட்சி.

     

    The walking Myna

    இன்று காலையில் நம் வீட்டெதிரே நடைபழகிய மைனா.

     

    Cute kitten fight on tree

    மரத்தின் மீது இரு பூனைக்குட்டிகள் போடும் செல்லச் சண்டையைப் பாருங்கள்.

     

    Cattle Egret is walking

    உண்ணிக் கொக்கு உன்னிப்பாக நடக்கிறது!

     

    மூன்று புறாக்களும் ஒரு காக்கையும்

    மூன்று புறாக்களும் ஒரு காக்கையும் இரையுண்ணும் போது…

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Attention Mannar please

    Attention Mannar please

    Maravanpulavu K. Sachithananthan

    Mannar, one of the five districts in the Northern Province, one of the nine provinces of Sri lanka.

    It is a Hindu minority district in a province with 85% Hindus.

    Around 9,000 Hindu families are at the mercy of the Bishop of Mannar. This is the situation since Portugese conquest. Francis Xavier came to Mannar. His infamous Mannar inquisition left many pits of human skeleton now under excavation by the Archeological department.

    Empowering Hindu families is our goal. Mens agitat molem is the Latin phrase. Mind moves matter. Stronger the mind, stronger is your will power. Stronger will power of individuals makes a strong social fabric. Hindu social fabric is weak because Hindu minds are weak.

    When you are surrounded by a strongly knit Abrahmic social order, determined to break the minority Hindu social fabric, weaker minds further weakens.

    Empowering them has been my agenda for the last 50 years.

    As Secretary General of the Federation of Young Men’s Hindu Associations, I had the direction from my colleagues to plan a Hindu Youth empowerment programme in Mannar district, fifty years ago.

    We formed Young Men’s Hindu Associations in almost all Hindu villages in Mannar district. We took volunteers from other districts to inject moral courage among Hindu youth.

    We planned self employment projects. We arranged for training of Hindu youth from Mannar in Canada and India. Mr. Ganeshamurthy from Mannar who was tarined at Madurai, is now the secretary of the Federation of Saiva Tamil templs in UK. He always addresses me as his guru.

    War intervened and all our projects were abandoned. Internal displacements and international migration made the Abrahamic religionists to strengthen their base. In fact people here talk about how Abrahamic religionists were fanning and flaming the war to weaken the Hindu base and exploit the weakness to penetrate, permeate and proselytize.

    Post war, the Abrahamic priesthood induced their missionaries and love jihadis to fully exploit the situation. Demographically Hindus became a minority in a district where they were the only religionists a few centuries ago.

    During the past four years I took upon myself the task of recruiting volunteers to stem this tsunami tidal wave of Abrahmic onslaught. I should say that the Abramists are taking me seriously and working out ways to elbow me out without much success.

    My success in the neighbouring Cheddikulam division of the district of Vavuniya in wiping out missionary activity was due to visits to every Hindu house, installing Hindu flag posts in each house. We followed it with a poster campaign. Periodically I took Hindu sevakas from South India (Tamil Nadu and Karnataka) to conduct in-situ training for the youth.

    Dedicated volunteering made it possible to nearly wipe out any activity. Vigilance continues as these carcinogenic proselytizers do not give up easily.

    A volunteer from Mannar having been invited went to Goa to attend the Hindu Jana Jaguritu conference during July 2018.

    In Mannar I am following the Cheddikulam pattern with one addition. I compiled an 864 page hard bound book on Mannar and its hallowed Hindu history. I wrote in detail about the Mannar inquisition of Francis Xavier.

    I included a chapter to make any one perform pooja at a temple.

    I included a chapter on the ceremonies related to the death of a Hindu.

    I included a chapter on days of pooja and fasting for each of the 12 months.

    Then I followed with the relevant hymns to be recited at these poojas.

    I have given a list of 424 temples in the district against a government list of 92 registrations.

    I have given the denominational demographic composition of each of the 153 basic administrative units.

    A la Cheddikulam, I am visiting along with volunteers carrying Hindu flags, a copy of the 864 page book and a poster to each Hindu house in Mannar district, initially covering the vulnerable areas.

    The pictures you see are images of our work on 28th and 29th Nov. covering six villages, viz: Musali – Puthukudyiruppu 62 Hindu families, Musali -Kouukupadayan 45 Hindu famuilies, Musali – Maruthamadu 17 Hindu families, Musali – Potkerny 7 Hindu families, Mannar town – Nagathalvu 67 Hindu fmilies and Mannar town Sinnakadai 83 Hindu families.

    These are the projections. It is for Sivaperuman to decide and direct us to the pattern and design HE has.

    Share
  • கதிரவன் எழுந்தனன் !

    கதிரவன் எழுந்தனன் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    கதிரவன் எழுந்தனன்
    காரிருள் அகன்றது
    பறவைகள் பாடின
    பகலவன் மகிழ்ந்தனன்
    நிலமகள் மலர்ந்தனள்
    நீள்துயில் கலைந்தது
    மலர்களின் வாசனை
    வளியினில் கலந்தது

    சங்கொலி கேட்டது
    சன்னதி திறந்தது
    மங்கல வாத்தியம்
    மனமதை நிறைத்தது
    கருவறை திறந்தது
    கரமெலாம் குவிந்தன
    மந்திரம் ஒலித்தது
    மனந்தெளி வடைந்தது

    மணிநிறை கதிர்கள்
    மண்ணினைத் தொட்டன
    குலையொடு வாழைகள்
    தளர்விலா நின்றன
    அணிலது கடியால்
    சிதறின மாங்கனி
    அயர்விலா உழவர்
    வயல்களில் இறங்கினர்

    கன்றுகள் ஓடின
    கறவைகள் சுரந்தன
    வண்டுகள் பறந்துமே
    தேனினைச் சுவைத்தன
    மயில்களும் ஆடின
    குயில்களும் கூவின
    பனித்துளி நிலமெலாம்
    பளிச்செனச் சிரித்தது

    Share
  • பறக்கும் நாரைகள்

    பறக்கும் நாரைகள்

    வரிசையாக அமர்ந்திருக்கும் மூன்று நாரைகள் (நத்தை குத்தி நாரைகள்) ஒன்றன்பின் ஒன்றாக, மேலெழுந்து உயரப் பறக்கும் காட்சி, இன்றைக்குப் பார்க்கக் கிடைத்தது.

    இதில் ஒரு நாரை, மெல்ல நடந்து, பக்கத்தில் இருந்த உண்ணிக் கொக்கைத் தன் பேரலகு திறந்து சிரித்துக்கொண்டே விரட்டிவிட்டது ஓர் அழகான நாடகம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வண்ணத்துப்பூச்சியின் நாக்கு

    வண்ணத்துப்பூச்சியின் நாக்கு

    அண்ணாகண்ணன்

    வண்ணத்துப்பூச்சி நடந்து செல்வதை இன்றுதான் பார்த்தேன். மேலும் அதன் நீண்ட குழல் போன்ற நாக்கையும் அதைக் கொண்டு அது உறிஞ்சி உண்பதையும் இன்றுதான் கண்டேன். இதன் இறக்கைகள், இரும்புக் கவச உடை போல் அமைந்து, எந்திரப் பூச்சி போல் நகர்ந்தது, புதுமையாக இருந்தது.

     

    புதிய கோணத்தில் இரட்டைவால் குருவி

    இன்று கண்ட இரட்டைவால் குருவி (கரிச்சான்), என் தலைக்கு மேல் இருந்த கிளையில் அமர்ந்தது. இதனால் அதைப் புதிய கோணத்தில் காண முடிந்தது. அது கூரிய அலகால் சிறகைக் குடைந்தது. வெயிலில் சிறகு விரித்துக் காய வைத்தது. காலால் தலையை நறநறவென்று சொறிந்துகொண்டது. இத்தனையும் இரண்டே நிமிடத்தில்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 1

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 1

    மீனாட்சி பாலகணேஷ்

    1. கோலம் வரையும் பருவம்

      (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை.

    பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா?

    ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை. இக்கட்டுரையைப் பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்களுக்கு அனுப்பிவைத்து, அவர் பார்த்தபின்பே பதிப்பிற்கு அனுப்புகிறேன். பேராசிரியர் ஐயா, இனி இப்பருவங்களையும் பிள்ளைத்தமிழ் பாடுவோர் தமது நூல்களில் சேர்த்துப் பாடப் பரிந்துரைக்கலாம் எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.

                                                   —————————————

    ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில், ‘தையொரு திங்களும்,’ எனத்துவங்கும் பாசுரத்தொகுப்பில் கோலம் வரைவதனைப் பற்றிக் கூறுகிறாள்.

    தை மாதம் முழுவதும் (எல்லா நாட்களிலும்) கண்ணபிரான் வரும் இடம் முழுவதிலும், தரையைத் தூய்மை செய்து, அலங்கரித்து, அழகாக உள்ள மண்டலவடிவில் (வட்டவடிவில்) கோலம் இட்டு, அவன் வரும்வழியினை அழகுபடுத்தி வைத்தேன்,’ என்கிறாள். ‘கண்ணனோடு என்னைச் சேர்த்துவை,’ என அனங்கனான காமவேளையும் அவன் தம்பியையும் வேண்டுவன இப்பாடல்கள்.

    ‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
             தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
    ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
             …………………………………..‘ என்பது பாடல்.

    —————————-&————————-

    இனி, பிள்ளைத்தமிழில் எவ்வாறு இப்பாடல்களை அமைக்கலாம் எனக் காணலாம்.

    அதிகாலை நேரத்தில் வீட்டின்முன் பசுஞ்சாண நீர்தெளித்துக் கூட்டி, கோலமாவினால் அழகான கோலங்களை வரைந்து வைப்பது நம் மிகப்பழைய வழக்கம். பெண்குழந்தைகள் அரிசிமாவையோ அல்லது வெண்கற்களையும் நுண்ணிய வெண்மணலையும் பொடித்து, இடித்துச் சலித்துச் செய்த கோலப்பொடியையோ கொண்டு சாணநீரால் தெளித்துக் கூட்டிய வீட்டு முன்வாசலில் கோலமிடுவதில் ஐந்தாறு வயது முதலே ஆர்வம் காட்டுவார்கள்.

    அவ்வாறு இச்சிறுபெண், பத்துவயதுப் பைங்கிளி, வட்டிலில் கோலமாவை எடுத்துவந்து அன்னை அருகிருக்கப் பிஞ்சுவிரல்களால் மாவினை எடுத்து முதலில் புள்ளிகளை வைக்கின்றாள். தாய் அவள் வயதுக்கேற்ற  சிறிய கோலங்களைக் கற்றுக் கொடுத்துள்ளாள். இவளோ தாயும் அறியாமல் பாட்டியிடமும் மற்றவர்களிடமும் தன் திறமைக்கும் மிஞ்சிய பெரிய கோலங்களை வரையக் கற்றுக் கொண்டுள்ளாள்.

    அதுவும் மகளிர் விரும்பும் மார்கழிமாதம் வந்துவிட்டால் போதும்! எங்கு நோக்கினும் தெருவெங்கும் கோலங்கள்! விதவிதமான கற்பனைகள்! ஓரிடத்தில் ஒரு மங்கை அவளுடைய இல்லத்தின் முன்பு நீராழி மண்டபம் கோலம் வரைகின்றாள். புள்ளிகளைக் கணக்கிட்டு வைத்து, இரு விரல்களிடையே அள்ளிய வெண்மையான கோலமாவை அழகான இழைகளாக்கி அப்புள்ளிகளை இணைத்தும் வளைத்தும் அவளிடும் கோலம் கண்ணுக்கு விருந்தாகிறது.

    ‘எதற்காக இன்று இவ்வளவு பெரிய கோலம்? மார்கழிமாதம் கூட இல்லையே!’ எனப் பெண்டிர் வியக்கின்றனர். அவள் இழைக்கும், வரையும் கோலத்தின் அழகைக் காண பெரியவர்களும் சிறுவர்களுமாக பெண்கள் கூட்டம். அவள் கோலம்வரையும் நளினமான அழகைக்காணப் பல பாட்டிமார்கள்! சாட்டைபோலவந்து முன்னே விழும் அழகான கருநாகம்போலும் பின்னல். அதனை பின்னால் தள்ளிக் கொண்டபடியே மும்முரமாகக் குனிந்து புள்ளிவைப்பதிலும் கோலத்தில் இழைகளைச் சேர்ப்பதிலும் முனைந்திருக்கிறாள்.

    “மங்கையை உள்ளே அழைத்துக்கொண்டுபோய் சுற்றிப்போடடி அம்மா!” என ஒரு முதியவள் ‘அறம்வளர்க்கும் மங்கை’ எனப்பெயர் கொண்ட அப்பெண்ணின் தாயிடம் கரிசனத்துடன் கூறுகிறாள். அவளருகேயும் வந்து, “மங்கை, இங்குவா,”என அவளை அழைத்த பக்கத்து வீட்டம்மாள், உரிமையோடு அவளுடைய நீண்ட பின்னலைப் பிடித்துச் சுற்றிச் சுருட்டி ஒரு கொண்டையாக்கி விடுகிறாள். அவளைப் பார்த்துக் கன்னங்குழியப் புன்னகைக்கும் மங்கையை ஆசைதீரக் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்து, விரல்களைச் சொடுக்கிக் கொள்கிறாள். அறம்வளர்க்கும்மங்கை ஊரில் எல்லாருக்கும் செல்லப்பெண்!

    இன்று பஞ்சநதீஸ்வரர் எனும் ஐயாறப்பர் திருவீதி ஊர்வலம் வரப்போகிறாராம். கோவிலும் அதனைச் சூழ்ந்த தெருக்களும் அமளிதுமளிப்படுகின்றன. தெருக்களில் நீர் தெளிக்கப்பட்டு, கோலங்களிழைக்கப்படுகின்றன. மங்கையின் அண்ணன் மணிவண்ணனும் அவர்கள் இல்லத்தின் முன்பு அழகான தோரணங்களைக் கட்டிவைத்துள்ளான். ஐயாறப்பர் வலம்வரும் பிரதான வீதியிலன்றோ அவர்கள் இல்லம் அமைந்துள்ளது!

    கோலமிழைக்கும் இப்பெண் யார்? அந்த அறம்வளர்த்த நாயகியே சிறுபெண்ணாக வந்துதித்தாளோ?கண்டு மயங்குகிறோம்!

    விநாயகப்பெருமான், மயிலேறி உலவும் முருகன், ஆலமரத்தடி அமர்ந்து மௌனகுருவாகி உபதேசிக்கும் அண்ணல் சிவபிரான், மாலவனாம் மாயவனாகிய திருமால் அனைவரும் மனம் மகிழும் மங்கை இந்த அறம்வளர்க்கும் நங்கை.

    அத்தன் சிவபிரானளித்த இருநாழி நெல்லினைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் சலியாது செய்து உலக மக்களைப் புரப்பவள் அறம்வளர்த்த நாயகி அம்மை!

    நாதசுரம் எனும் மங்கள வாத்தியத்தினின்று எழும் இன்னிசையுடனும், பின்னால் மறையோதும் அந்தணர்கள் வேதவொலி முழக்கி வர, வீதித் திருவுலா வருகின்ற ஐயாறப்பனின் வரவுக்காக, அனைவரும்  தத்தம் மனைகள்முன்பு, நீர்தெளித்து, அழகான பெரிய  கோலங்களை வரைந்து அவன் வருகையை ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

    சிறுபெண்ணான அன்னையே! அவனை வரவேற்க நீயும் அழகழகான கோலங்களை இழைத்தருளுக.

    குறும்பும் உற்சாகமும், மகிழ்வும் மலர்ச்சியும், அழகும் நளினமும் கூத்தாடும் இளம்சிறுமியான அன்னையே! அறம்வளர்க்கும் நாயகியே! எம்மை ஆண்டருள்கவே!

    இதோ எமது எளிய காணிக்கை உன் திருவடிகளுக்குத் தாயே!

    ஞாலமுதல் வனாவேழமுகத் தனுநீல மயிலேறி
    உலவும் சமர்த்தனு
    மாலமரத்தடி யில்நாளும மர்ந்து அருள்மழை
    வழங்கிடு மண்ணலு
    மாலவன் மாயவனு முளமகிழு மங்கையே
    அறம்வளர்க்கு நாயகியே!
    கோலமயில் நீயுந் தோழியருட னிணைந்து
    கோலம்வரைந் திடுவாயே! (1)

    நாழியிரண்டு நெல்லளித்து நல்லறம்நீ
    ஆற்றுகென நாதன்பணித்திட
    ஆழிசூழகில மெலாந்தாவி யணைத்தரு
    ளுந்தேவியான வாதிசத்திதாயும்நீ
    வாழிவளமுட னெண்னான்கு அறமியற்றி
    வழுவாதுவர மருளுந்தேவி
    கோழிகூவுங் காலைப்போதில் கன்னியருடன்
    கூடிக்கோலமி ழைத்திடுவாயே! (2)

    நாதசுர முழங்க கீதவொலி யெழும்ப
    வேதமறை யொலிக்கவுன்       
    நாதனை யாறப்பன் வீதிவல(ம்) வருங்கால்
    காதலுடன் காந்தள்       
    போதனைய கையால் கோலப்பொ டியதனை
    யள்ளிப்புள்ளி களிட்டு
    மாதரசே! மனமிக மகிழ்ந்து மாடக்குள
    சித்திரமாம் கோலமிடுவாயே! (3)

    (இவை திருஐயாறு அறம்வளர்த்த நாயகி மீது இயற்றப்பட்ட பாடல்கள்)

    சித்திரம் வரைந்தது: டாக்டர் சுப்பையா புகழேந்தி.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 20

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 20

    -மேகலா இராமமூர்த்தி

    சீதையைக் கவர்தல் உனக்கும் உன் குடிக்கும் கேடாய் முடியும் என்றுரைத்த மாரீசனைக் கடுஞ்சொற்களால் நிந்தித்த இராவணன், ”உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை மாமனே! எனக்கு நீ உதவினால் பிழைப்பாய்; இல்லையேல் என் வாளால் உனைக் கூறாக்கிவிட்டு யான் எண்ணியதை முடிப்பேன்” என்று உறுமவும், ”மனச் செருக்கோடு தருக்கித் திரிபவர் அழிவது உறுதி என்பது தத்துவ வார்த்தையன்றோ” என்று தன்னுள் எண்ணி, உருக்கிய செம்பின்மீது வார்த்தநீர் அடங்குதல்போல் அடங்கிய மாரீசன், ”இராவணா! உன்னுடைய நன்மைக்காகவே இத்தனையும் சொன்னேன்; என்னுடைய சாவுக்காக அஞ்சியன்று! என்ன செய்வது? அழிவு நெருங்கிவரும் காலத்தில் பிறர் நல்லது சொன்னாலும் அது தீமையாகத்தான் தோன்றும்; தீய நெறியில் செல்லத் தலைப்பட்டுவிட்டவனே! நான் என்ன செய்யவேண்டும்? புகல்வாய்!” என்றான்.

    உன்வயின் உறுதி நோக்கி உண்மையின்
         உணர்த்தினேன் மற்று
    என்வயின் இறுதி நோக்கி அச்சத்தால்
         இசைத்தேன் அல்லேன்
    நன்மையும் தீமை அன்றே நாசம்
         வந்து உற்ற போது
    புன்மையின் நின்ற நீராய்
         செய்வது புகல்தி என்றான். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3366)

    அதைக் கேட்ட இராவணன் சினம் மாறி மாரீசனைத் தழுவிக்கொண்டு, மாமனே! காமன் அம்பால் சாவதைவிட இராமன் அம்பால் சாவதே மேல் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். காரணம், கட்டழகி சீதையின் நினைவால் இனிய தென்றலும் என்னைச் சுட்டிடுதே! ஆகவே, சீதையை எனக்காகக் கொண்டுவந்து தருவாய்!” என்றான்.

    என்றலும் எழுந்து புல்லி
         ஏறிய வெகுளி நீங்கி
    குன்று எனக் குவிந்த தோளாய்
         மாரவேள் கொதிக்கும் அம்பால்
    பொன்றலில் இராமன் அம்பால் பொன்றலே
         புகழ் உண்டு அன்றோ
    தென்றலைப் பகையைச் செய்த
         சீதையைத் தருதி என்றான் (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3367)

    இந்தப் பாடலிலேயே இராமனை எதிர்த்தால் தனக்குச் சாவு நேர்வது உறுதி என்பதை இராவணன் வாக்காலேயே உணர்த்திவிடுகின்றார் கம்பநாடர் என்பது கருதத்தக்கது.

    தன்னுடைய கட்டளையை நிறைவேற்றக் காத்திருந்த மாரீசனைப் பார்த்து, ”நாம் வஞ்சனையால்தான் அந்த வஞ்சியாளை வௌவ வேண்டும்; ஆதலால், நினைத்த வடிவெடுக்கும் ஆற்றல்வாய்ந்த நீ, மாயப் பொன் மானாய் மாறவேண்டும்; சீதையை மயக்க வேண்டும்” என்றான் இராவணன்.

    ”எப்படியும் தான் சாகப்போவது உறுதி! பிறன்மனை விழையும் இழிபிறப்பினனான இராவணன் கையால் சாவதைவிட இராமபாணம் பட்டுச் சாவதே மேல்; அஃது என்னை உயர்கதிக்கு எடுத்துச்செல்லும்” என்று எண்ணிய மாரீசன், இராவணனின் யோசனைக்கு இணங்கினான். காண்போர் சிந்தைகவர் விந்தை மானுருக் கொண்டு இராம இலக்குவரும் சீதையும் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் சென்றான்.

    அப்போது வைதேகி மலர்வனத்தில் பூக்கொய்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் படும்வகையில் அந்தப் பொன்மான் அங்குமிங்கும் துள்ளி விளையாடிற்று. அந்த மாயமானின் வண்ணத்தையும் வடிவையும் கண்டுவியந்த சீதை, அதைப்பற்றிச் சொல்வதற்காக இராமனை நாடிச் சென்றாள். அவனைக் கண்டு,

    ”அன்பரே! நான் ஒரு மானைக் கண்டேன். அஃது ஆணிப் பொன்னால் ஆனது; அதன் மேனியொளியால் தொலைவில் நிற்கும்போதும் பளபளக்கின்றது; அதன் வலிய காதுகளும் கால்களும் சிவந்த மாணிக்கத்தால் ஆனவை; காண இனிய அழகுடையது” என்றுரைத்து இராமனை வணங்கினாள், அவன் தனக்கு அம்மானைப் பிடித்துத் தரவேண்டும் எனும் உளக் குறிப்போடு.

    ஆணிப் பொனின் ஆகியது
         ஆய் கதிரால்
    சேணில் சுடர்கின்றது திண்
         செவி கால்
    மாணிக்க மயத்து ஒரு
         மான் உளதால்
    காணத் தகும் என்றனள்
         கை தொழுவாள். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3383)

    சீதையோடுவந்து அம்மானைக் கண்ட பெம்மானும் அதன் தோற்றத்தால் கவரப்பட்டான்; அதைப் பிடித்துவர ஆவல்கொண்டான்.

    இராமன் மானின் அழகில் மடம்பட்டிருந்த வேளையில் இலக்குவன் அவன் சிந்தையைத் தெளிவிக்க விரும்பி, ”அண்ணா! இந்த மானின் நிறமும் வடிவும் இயற்கையானதாக இல்லை; இது ஒருவகை மாயை என்றே எனக்குத் தோன்றுகின்றது” என்றான்.

    அவன் கருத்தை மறுத்த இராமன், ”இளையவனே! அறிவில் வல்லாரும் உணர்ந்துகொள்ள இயலாத வகையில் எண்ணிலாக் கோடிகளாய் உலகத்து உயிர்கள் விரிந்து பரந்துள்ளன. ஆகையால் இவ்வுலகில் இல்லாததொன்றில்லை என்றறிக” எனப் பதிலிறுத்தான்.

    நில்லா உலகின் நிலை நேர்மையினால்
    வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்தாம்
    பல் ஆயிரம்கோடி பரந்துளதால்
    இல்லாதன இல்லை இளங்குமரா! 
    (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3387)

    அதன் பிறகும் இலக்குவன் அதனை ஒப்பவில்லை. ”இந்த விசித்திரமான மானைப் பார்த்தால் விசுவாமித்திரர் தவத்துக்கு ஊறுசெய்ய முற்பட்ட வேளையில் உம்முடைய பாணத்தால் தாக்குண்டு கடலில் வீழ்த்தப்பட்ட மாரீசனே மானுருவில் வந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகின்றது. எனவே, மானைப் பிடிக்கவேண்டும் என்றால் நானேசென்று பிடித்து வருகின்றேன்; நீங்கள் செல்லவேண்டாம்!” என்று அண்ணனைத் தடுத்துப் பார்த்தான்.

    அவ்வேளையில் சீதையோ சிறுபிள்ளைத்தனமாய்த் தன் கணவனே மானைப் பிடித்துத் தரவேண்டும் என்று வற்புறுத்தினாள். இராமனும் மனையாளின் விருப்பத்துக்கு உடன்பட்டுப் புறப்பட்டான். போகும்போது இலக்குவனைச் சீதைக்குக் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைப் பின்தொடர்ந்தான்.

    அந்த மாரீச மானோ இராமனுக்கு வசப்படுவதாயில்லை. ஒரு சமயம் அது மலையின் மீதேறும்; அடுத்த நொடி வான்முகில்களிடையே சென்று பாயும்; அருகில் சென்றால் விலகி ஓடும்; மெதுவாகச் சென்றால் அண்மையதாக வந்துநிற்கும். கொடுத்த பணத்துக்கேற்ப அன்புகாட்டும் மணமிகு மாலைசூடிய விலைமகளிரைப் போல் நிலையில்லா மனத்தோடு சென்றது அம்மான்!

    குன்றிடை இவரும் மேகக் குழுவிடைக்
         குதிக்கும் கூடச்
    சென்றிடின் அகலும் தாழின் தீண்டல்
         ஆம் தகைமைத்து ஆகும்
    நின்றதே போல நீங்கும்
         நிதிவழி நேயம் நீட்டும்
    மன்றல் அம் கோதை மாதர் மனம்
         எனப் போயிற்று அம்மா. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3407)

    ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் தாவிச்செல்லும் மானுக்கு நிலையில்லா மனங்கொண்ட விலைமகளிரை உவமையாக்கினார் கம்பர்.

    இவ்விலைமகளிரை, ”அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்” என்று அடையாளப்படுத்துவார் வள்ளுவர்.

    உண்மையான மானின் இயல்புக்கு மாறாக அம்மான் இயங்குவதையும், களைப்பென்பதையே அறியாத அது தன்னை வெகுதொலைவு இழுத்துக்கொண்டு வந்துவிட்டதையும் அறிந்த இராமன், இலக்குவன் சொன்னதுபோல் அது மாயமானே எனத் தெளிந்தான்.

    இராமன் சிந்தனை செய்வதைக் கவனித்த மான் வடிவினனான மாரீசன், அவன் இனித் தன்னைப் பற்ற முற்படமாட்டான்; பகழியால் கொல்லவே முற்படுவான் என்றுணர்ந்து வானை நோக்கி உயரப் பாய்ந்தான்.

    உடனே இராமன் தன் கணையை மானின் மார்பை நோக்கிச் செலுத்தவே மாரீசன், ”சீதா…! இலக்குவா…!” என்று இராமன் குரலில் கதறியபடித் தன் இயற்கை வடிவத்தோடு மலை வீழ்வதுபோல் கீழே வீழ்ந்திறந்தான்.

    தரையில் வீழ்ந்துகிடந்த மாரீசனின் உடலத்தைக் கண்ட இராமன், இலக்குவனின் நுண்மாண் நுழைபுலத்தை எண்ணி வியந்தான். அடுத்த கணம், மாரீசன் என் குரலில் அலறிக்கொண்டு வீழ்ந்தமையால் சீதை எனக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்றெண்ணிக் கவலுவாளே என வருந்தினான். இலக்குவன் துணையிருப்பதால் அவளைத் தெளிவிப்பான் என்ற எண்ணம் தோன்றியதால் சற்று ஆறுதலடைந்தான்.

    மாரீசனின் செயலைப் பார்த்தால் அவன் சாவதற்காக இங்கே வந்ததாகத் தெரியவில்லை; இதன் பின்னணியில் வேறு ஏதேனும் தீயநோக்கம் இருத்தல்கூடும் என்று சிந்தித்த இராமன், அதனைத் தடுக்கும் நோக்குடன் தன் இருப்பிடம் நோக்கி விரைந்தான்.

    [தொடரும்]

    *****
    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

     

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 24 (முதுவாய்ப் பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 24 (முதுவாய்ப் பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    ‘முதுவாய்’ என்னும் அடைத்தொடர்  தொகையிலக்கியத்தில் பல பெயர்களுக்கு முன்னர் பயின்று வருவதைக் காண்கிறோம். ‘முதுவாய் வேலன்’, ‘முதுவாய்க் குயவன்’, ‘முதுவாய்ப் பெண்டிர்’ என்றெல்லாம் வழங்கியுள்ளது. இக்கட்டுரை முதுவாய்ப் பெண்டிர் பற்றியதாக மட்டும் அமைகிறது.

    கட்டுவிச்சியின் வாழ்க்கை நிலை  

    முதுவாய்ப் பெண்டிர் என அழைக்கப்  படுபவர் கட்டுவிச்சிகள் ஆவர். இவர்களது தொழில் கட்டுப் பார்த்துக் குறி சொல்வதாகும்.  வாய்விட்டுக் கூறும் அத்தொழிலைப் பன்னெடுங் காலமாகச் செய்து  வந்தவர் ஆதலால்; அவர்கட்கு ‘முதுவாய்’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது எனலாம். இத்தொழிலைப் பாரம்பரியமாகப் பெண்களே பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கட்டுப் பார்க்கும் ஆண்களைத் தொகை இலக்கியத்துள் காண இயலவில்லை. அத்துடன் இவர்கட்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ‘முதுவாய்’ என்னும் அடைமொழியின் காரணம் இவர்கள் திணைமாந்தர் என்று சொல்லாமல் சொல்கிறதோ எனும் ஐயமும் எழுகிறது. ஏனெனில் இவ்அடைமொழி திணைமாந்தனாகிய வேலனுக்கும்   உரியதாகிறது. ஆநிரை கவரும் மறவர் சீறூரில் அவளது குடில் இருந்தது  எனப் பாடியிருப்பதால் அவள் திணைமாந்தருள் அடங்குகிறாள் (அகம்.- 63).

    ‘முதுமை வாய்த்தலை உடைய  பெண்டு’  என ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளையும் உரை கூறியிருப்பது முற்றிலும் பொருத்தமற்றது (அகம்.- 63). அதே உரையாசிரியர்கள் அதே தொடர்க்கு ‘அறிவு வாய்த்தலை உடைய பெண்டிர்’ எனவும் கூறி உள்ளனர் (அகம்.- 22). ‘முதுமை வாய்ந்த கட்டுவிச்சி’ என்ற அவர்களது  உரையும் (அகம்.- 98) வயதான கட்டுவிச்சி என்று  பொருள்படுவதால் முழுமையாக ஏற்க இயலாதது ஆகிறது. ‘பேசி முதிர்ந்த வாய்’ என்ற விளக்கமும் தொடர்கிறது. மூன்று பாடல்களில் இடம்பெறும் ஒரே தொடருக்கு நான்கு பொருள்கள் சொல்லி இருப்பது தொடக்க காலத்துத் தெளிவற்ற நிலையைக் காட்டுகிறதே அன்றி வேறில்லை.

    முதுவாய்ப் பெண்டிரின் வாழ்வு நிலையைப் பற்றிய குறிப்பு அவர்களது  ஏழ்மை நிலையைக் காட்டுகிறது.

    “முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை” (அகம்.- 63)

    எனும் அடி வலியற்ற காலை உடைய குடிலே அவளுக்கு உரியதென்கிறது. அதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர் என்பதில் ஐயமில்லை.

    கட்டுப்பார்த்தல்

    கட்டுப் பார்க்கும் நிகழ்வைத் தொகையிலக்கியம்  காட்சிப்படுத்தி உள்ளது. சுளகில் நெல்லை எடுத்து வைத்து; யாருக்காகக் கட்டுப் பார்க்கிறார்களோ; அவரை முன்னர் நிறுத்தித்; தெய்வத்திற்குப் பலிப் பொருட்களைப் படைத்து வழிபட்டுப்; பின்னர் நான்கு நான்காக நெல்லை எண்ணி எடுத்து இறுதியில் எஞ்சிய நெல்மணிகள் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றாக இருப்பின் முருகு அணங்கியதால் நேர்ந்த நோய் எனவும்; நான்காக இருப்பின் வேறு நோய் எனவும் குறித்துச்  சொல்வதே கட்டுப்பார்த்தல் என்கிறார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (நற்.- 288).

    சிறுபாத்திரத் தகுதி

    கட்டுவிச்சி பாடல் காட்சியில் நேரடியாக இடம் பெறாத போதும் அவள் கட்டுப்பார்த்துக் கூறிய குறி பற்றித் தலைவியும்  தோழியும் பேசுகின்றனர் (நற்.- 288). முருகு அணங்கியதால் உண்டான நோய் என்று கட்டுவிச்சி கூறியதால்; அன்னை வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வாள் என்ற எதிர்பார்ப்பினைச் சிறைப்புறத்து நிற்கும் தலைவன் காதுபடப் பேசுகிறாள் தோழி.

    வேலன் வெறியாட்டு முடிந்த நாளின் நள்ளிரவில் தலைவனைக் களவில் கூடி மகிழ்ந்த தலைவியின்  கூற்றில்; முதுவாய்ப் பெண்டிர்  குறி சொன்ன செய்தி இடம் பெற்றுள்ளது.

    “நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
    முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற…
    முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்… …” (அகம்.- 22)

    என வேலன் வெறியாட்டிற்கு மூலமாக அமைந்து வழி வகுத்தது கட்டுவிச்சியின் குறி என்கிறாள் தலைவி.

    தலைவியின் வளை நெகிழ்ந்தவுடன் கட்டுவிச்சியிடம் குறி கேட்ட தாய்க்கு; முருகணங்கியதாக உரைத்த முதுவாய்ப் பெண்டு பற்றிய பாடலும் உள்ளது (அகம்.- 98).

    நையாண்டியும் நாடகமுரணும் 

    மேற்சுட்டிய பாடல்கள் எல்லாம் பண்டைத் தமிழகத்தில் நிலவிய நம்பிக்கையை அங்கதத்துடன் எடுத்துச்சொல்கின்றன. முதுவாய்ப் பெண்டு தலைவியின் பேச்சில் குறிப்பான கிண்டலுக்கு உரியவள் ஆகிறாள். அவள் சொல்லும் குறியின் மேல் நம்பிக்கை வைக்கும் தாயும் வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வதால்; வேலனுடன் சேர்த்தே குறிப்பாகக் கேலிக்குரியவள் ஆகிறாள். ஏனெனில் தலைவி தனது களவு  வெளிப்படா வண்ணம் மறைக்கும் திறம் பெற்றவளாக உள்ளாள். தாயின் நம்பிக்கை தலைவியின் நகைப்பொருள் ஆகிறது.

    கட்டுப் பார்த்து; முருகு அணங்கியது என்று நம்பி; வேலனை அழைத்து வெறியாடச் செய்து; வழிபாடு நிகழ்த்திய நாளின்  இரவில்  பிரிந்து சென்றிருந்த தலைவன் தலைவியைச் சந்திக்கின்றான். அவனோடு கூடி இன்புற்ற தலைவி நோய் நீங்கி மகிழ்கிறாள். நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்துச் சிரிக்கிறாள்.

    “இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
    நக்கனன் அல்லனோ யானே எய்த்த
    நோய்தணி காதலர் வர ஈண்டு
    ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே“ (அகம்.- 22)

    என்கிறாள். யாரோ ஒருவனாகிய வேலன் வெறியாட; அந்த ஆட்டத்திற்கு ஆட்பட்ட  தலைவி; தன் உயிர் குழையக் காதலனைத் தழுவி; உடல் பூரித்தமை பற்றிச் சொல்லும் போது; உண்மை தெரியாது கட்டுவிச்சி கூறிய குறி, வேலன் ஆடிய வெறி,  நம்பிய தாய் அனைவரும் அறியாமையின் உச்சத்தில் இருப்பது ஒரு நாடக முரண் போல அமைந்து இலக்கியச்சுவை பயக்கிறது. இது கவிதையே ஆயினும்; நாடகச்சுவை பொதுளிய பாடலாக அமைந்துள்ளது.

    அகவன்மகளும் முதுவாய்ப் பெண்டும்

    இத்தொடரில் முன்னர் அகவன்மகள் குறி சொல்வது பற்றிப் பார்த்தோம். முதுவாய்ப் பெண்டும் அகவன்மகளும் குறி சொல்லும் ஒரே தொழில் தான் செய்கின்றனர். ஆயினும் இருவரும் வெவ்வேறு திறத்தவர் என்பது கண்கூடு. ஏனெனில் அகவன்மகள் கையில் கோலுடன் காட்சியளிக்கிறாள். தலைவியின் முகம் பார்த்துப் பாடிக் கொண்டே குறி உரைக்கிறாள். ஆனால் முதுவாய்ப் பெண்டின் கையில் கோல் கிடையாது. அவள் பாடுவதாகவும் குறிப்பில்லை. தெய்வத்திற்குப் பலிப்பொருள் வைத்து வழிபட்டு; சுளகின் நெல்லை எண்ணிக் கணக்கிட்டுக் குறி உரைக்கிறாள். எனவே இருவரும் வெவ்வேறானவர்; தொழிலையும் மிஞ்சிய வேறுபாடு ஒன்று உள்ளது என்பதில் ஐயமில்லை. கட்டுவிச்சி என்ற பெயருக்கு உரியவள் முதுவாய்ப் பெண்டு மட்டுமே ஆவாள்.

    முடிவுரை

    கட்டுவிச்சி பாடல் காட்சியில் நேரடியாக இடம் பெறாத போதும் அவள் கட்டுப்பார்த்துக் கூறிய குறி பற்றித் தலைவியும் தோழியும் பேசுகின்றனர். முதுவாய்ப் பெண்டிரது குடில் மறவர் குடியிருப்பில்  இருந்தது. அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த திணைமாந்தர் ஆவர். முதுவாய்ப் பெண்டு இடம் பெறும் பாடல்கள் பண்டைத் தமிழகத்தில் நிலவிய நம்பிக்கையை அங்கதத்துடன் எடுத்துச் சொல்கின்றன. முதுவாய்ப் பெண்டும் அகவன்மகளும் குறி சொல்லும் ஒரே தொழில் செய்யினும் இருவரின் நடைமுறையும் வெவ்வேறு ஆகக் காணப்படுகிறது. தொழிலையும் மிஞ்சிய வேறுபாடு ஒன்று இருந்தது எனத் தெரிகிறது. அதுவே அழுத்தமான சாதி வேறுபாட்டிற்கு  ஆதாரமாகி இருக்கலாம்.

    Share
  • என்னைப் புகழாதே! (சிறுகதை)

    என்னைப் புகழாதே! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    (`அம்மா! நீ இன்னிக்கு அழகா இருக்கே!’ `அடீ, ஏதாவது வேணுமானா நேரடியா கேளு. இது என்ன கெட்ட வழக்கம், காரியம் ஆகணும்னு ஐஸ் வைக்கிறது!’)

    “இந்தாம்மா. வேண்டியவங்களுக்கெல்லாம் அனுப்பிடு. அழகா அச்சடிச்சிருக்கான்,” என்று அவளுடைய திருமண அழைப்பிதழ் கட்டை அப்பா கொடுத்தபோது, நினைத்தும் பார்த்திருப்பாளா, தொலைபேசியில் எல்லாரையும் அழைத்து, `கல்யாணம் நின்றுவிட்டது!’ என்று சொல்ல நேரிடும் என்று?

    பரிசுப்பொருட்களுடன் எல்லாரும் வந்துவைத்தால், அது வேறு துக்கம்.

    அந்த எண்ணம் உதிக்கையிலேயே, `அப்படி என்ன துக்கம் வந்துவிட்டது இப்போது?’ என்று தன்மீதே ஆத்திரப்பட்டாள் நளினி.

    `ஏதோ, இதுவரைக்கும் காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே’ என்று நிம்மதி அல்லவா அடையவேண்டும்!

    `பாம்பு யார், மணிவண்ணனா? நம் மனம்தான் எத்தனை சீக்கிரம் மாறுகிறது!’ லேசாகச் சிரிப்புகூட வந்தது நளினிக்கு.

    அடேயப்பா! அவனைப்பற்றி நினைக்கும்போதே தான் துடித்த துடிப்பென்ன, தனக்குத்தானே சிரித்துக்கொண்டதும், நிமிடத்துக்கு நிமிடம் கண்ணாடிமுன் நின்று தன் அழகை ரசித்ததும், பாட்டு முணுமுணுத்ததும்!

    முதன்முறையாக அவளைப் பார்த்தபோதே, “நீங்க எப்போ லைப்ரரிக்கு வந்தாலும், ஒங்களுக்குப் பக்கத்திலே எனக்கு இடம் பிடிச்சு வைங்க!” என்று சொல்வதானால், தான் அவரை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கவேண்டும் என்ற பெருமைதான் உண்டாயிற்று அவளுக்கு.

    “நளினி! அன்னிக்கு, ஒன் பக்கத்திலே இடம் கேட்டேன். இப்போ, எப்பவும் என் பக்கத்திலேயே இருப்பியான்னு கேக்கத்தோணுது. ஒன் அழகைத் தரிசிச்சுக்கிட்டே இருக்கலாமில்ல?” என்று சினிமா வசனம் பேசினான், ஒரு நாள்.

    “எங்கப்பாகிட்ட வந்து பேசுங்க,” சற்றே நாணியபடி நளினி பதிலளித்தபோது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த அப்பா `வேண்டாம்’ என்றால் வேறு ஒருவனுக்குக் கழுத்தை நீட்டிவிடுவாளோ?

    “ஒங்கப்பாவைக் கேட்டுக்கிட்டா என்னோட சுத்தினே?”

    எப்போதும் அதிராத குரலில் பேசியவர்! எதற்கு இந்தக் கோபம்?

    அவள் மிரண்டு போனதைப் பார்த்து மணிவண்ணனின் தைரியத்தில் சிறிதளவு திரும்பியது.

    அவள் தோளைப்பற்றி அணைத்துக்கொண்டான். “ஸாரிடா. எங்கே நீ என்னைவிட்டுப் போயிடுவியோங்கிற பயம்,” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டான்.

    அப்படியே ஒருவரை ஒருவர் உராய்ந்தபடி அந்தப் பூங்காவில் நடந்துகொண்டிருந்தபோது அந்தக் குரல் கேட்டது: “ஹலோ, நளினி!”

    “டேய் சங்கர்! நீயா? உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! இந்த ஒலகத்திலேதான் இருக்கியா?” கலகலவென்று சிரித்தாள்.

    மணிவண்ணனின் முகம் சிறுத்தது. `யார் இந்த தடியன்? ஒரு மரியாதைக்காவது எனக்கு ஒரு ஹலோ சொல்லி இருக்கவேண்டாம்?’

    “என்னடா? முந்தி சோனியா இருப்பே. இப்ப ரொம்ப குண்டா ஆயிட்டியே!” உற்சாகமாகப் பொரிந்துதள்ளிய நளினியைக் கண்களைக் குறுக்கிக்கொண்டு பார்த்தான் மணிவண்ணன். சந்தேகமும் பொறாமையும் கொப்புளித்தன அப்பார்வையில்.

    அப்போதுதான் பக்கத்தில் ஒருவன் இருப்பதே நினைவு வந்தவளாக அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள்: “இது.. சங்கர். நாங்க ரெண்டு பேரும் கிண்டர் கார்டனிலேருந்து பன்னண்டு வருஷம் ஒண்ணாப் படிச்சோம். தமிழ்ச்சங்கத்திலே துடிப்பா இருப்போம். எத்தனை சண்டை போட்டிருக்கோம்! ஞாபகம் இருக்கா, சங்கர்?”

    பேசிக்கொண்டே போனவளை ஓர் அனல் பார்வை பார்த்துவிட்டு, எதிரிலிருந்த எதிரியைப் பார்த்து, “சரி, பாக்கலாம்,” என்று அவள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அப்பால் நடந்தான் மணிவண்ணன்.

    பாலியத்தோழனிடம் விடைபெறவும் மறந்து, ஏதோ குற்றம் புரிந்தவள்போல், நிழலாகக் காதலனைத் தொடர்ந்தாள் நளினி.

    அவளை அடக்கிவிட்ட பெருமிதத்துடன், “எப்பவோ ஒண்ணாப் படிச்சிருந்தா என்ன? அதுக்காக இப்படி கண்ட ஆம்பளைகிட்ட கொஞ்சிக் குலாவணுமா?” என்று மிரட்டிய மணிவண்ணனின் தலையுடன் குரலும் உயர்ந்தது. “நாளைக்குக் கல்யாணம் ஆகிட்டாலும் இந்தக் குணம்தானே வரும்?”

    வாயடைத்துப்போயிற்று நளினிக்கு.

    செல்லமாக அவளை இடித்தான் மணிவண்ணன். “என்ன செய்யறது, நளினி? நீ எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் ஆசைப்படறது தப்பா? என்னை அவ்வளவு பைத்தியமா அடிச்சிருக்கே நீ!”

    தன் தடுமாற்றத்தை மறைக்க நளினி சிரிக்க முயன்றாள்.

    `அதிகம் யோசிக்காது எதற்குள்ளேயோ காலை விட்டுவிட்டோமோ? இவரிடம் அப்படி என்ன பிடித்துப்போயிற்று எனக்கு?’

    அவளுடைய குழப்பத்தைக் கவனியாது, “எங்கம்மா அவங்க மருமகளைப் பாக்க ஆவலா இருக்காங்க, நளினி. இப்பவே வா!” என்று அழைத்துப்போனான்.

    நளினியை மேலும் கீழும் பார்த்த பார்வதி அம்மாளின் முகம் சுருங்கியது. “ஒரு தோடுதான் போட்டிருக்கே. அதுவும் கண்ணுக்குத் தெரியாதமாதிரி. மத்தபடி, பொட்டுத்தங்கத்தைக்கூடக் காணுமே! பாங்கிலேயாவது வெச்சிருக்கீங்களா?”

    அவமானத்தால் சுருங்கிய நளினியைப் பொருட்படுத்தாது, பார்வதி தன்போக்கில் அடுக்கினாள்: “மணி எனக்கு ஒரே மகன். கறுப்புதான். ஆனாலும், ஆம்பளை இல்லியா? அவனோட படிப்புக்கு அம்பதாயிரம், லட்சம்னு குடுத்து, அதோட அம்பது பவுன் நகையும் போட எங்க சொந்தக்காரங்களே தயாரா இருக்காங்க. ஏதோ, ஒன்னோட அதிர்ஷ்டம் அவனுக்கு ஒன்னைப் பிடிச்சுப்போச்சு. அதுக்காக சும்மா பண்ணிக்க முடியுமா? ஒரு இருபதாயிரம் ரிங்கிட்டாவது கையில குடுப்பாரில்ல ஒங்கப்பா?”

    மெள்ளத் திரும்பி காதலனை ஒரு பார்வை பார்த்தாள், `நீ கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்!’ என்று எப்போதும்போல் ஆதரவாக ஏதாவது சொல்வான் என்ற எதிர்பார்ப்புடன்.

    அவனோ, `எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!’ என்பதுபோல் தலையைத் திருப்பி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.

    நடந்ததைக் கேட்டு அப்பா ஏன் கொதித்தெழவில்லை என்று ஆச்சரியப்பட்டாள் நளினி.

    “பெண்ணைப் பெத்துட்டா, இதுக்கெல்லாம் பயப்பட முடியுமாம்மா? முப்பத்தஞ்சு வருஷம் உழைச்சு நான் சேத்து வெச்சிருக்கிறதை ஒனக்கில்லாம, வேற யாருக்காக செலவழிக்கப்போறேன்!” என்று பாசத்தைக் கொட்டினார்.

    உடனே, “அவசரமா அவ்வளவு புரட்ட முடியுமோ, என்னமோ!” என்று கவலைப்பட்டுவிட்டு, “வட்டிக்கு வாங்கினாப்போச்சு!” என்று வயதுக்குரிய நிதானத்துடன் பேசியபோது, தந்தையை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தாள் நளினி.

    கல்யாணப் பத்திரிகையைக் கையில் எடுத்தபோது அதுவரை எழுந்த கவலை, குழப்பம் எல்லாம் மறைந்தன.

    “நளினி மணிவண்ணன்’ என்று மந்திரம் ஜபிப்பதுபோல் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அடிநாக்கில் இனித்தது.

    இனி யாருக்கும் பயந்து திரைப்படங்களுக்குப் போக வேண்டியதில்லை. உரிமையுடன் என் கணவரின் கையோடு என் கையைக் கோர்த்துக்கொண்டு எங்கு வேண்டுமானால் போகலாம்.

    நான் அணியவேண்டிய உடைகளை அவர் தேர்ந்தெடுப்பார். நான் அவருக்குப் பிடித்த வகைகளைச் சமைத்துப்போட்டு..!

    அத்தையிடம் கேட்கவேண்டும் அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று.

    சிந்தனையில் ஒரு சறுக்கல்.

    `மாமியார்!’ என்று சொல்லி, ஒரு சிறு துரும்பை எடுத்துப்போட்டால்கூடத் துள்ளுமாமே!

    தலையை இருபுறமும் வேகமாக ஆட்டி, அந்த வேண்டாத எண்ணத்தைத் தள்ள முயன்றாள் நளினி.

    `ஆரம்பத்தில் அப்படித்தான் கெடுபிடியாக இருக்கும். ஒரு பேரனைப் பெற்றுக்கொடுத்தால்..!’ கற்பனை போன திசையை உணர்ந்து நளினியின் முகம் சிவந்தது.

    “நளினி! யார் வந்திருக்காங்க, பாரேன்!” தந்தையின் உற்சாகக் குரல் கேட்டது.

    “வாங்க மாப்பிள்ளை! உக்காருங்க!”

    `கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை. அதுக்குள்ளே அவசரத்தைப் பாரு!’ போலிக்கோபமும் வெட்கமுமாக நளினி வெளியே வந்தாள்.

    `எத்தனை வருடப் பழக்கம்! இப்போது என்ன, புதிதாக வெட்கம்?’ தன்னிடம் தோன்றிய மாறுதல் அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.

    “ஒக்கார நேரமில்லே மாமா”. அவளைக் கவனியாது வேகமாகப் பேசினான் மணிவண்ணன். “அம்மா ஒரு சேதி சொல்லி அனுப்பினாங்க. நீங்க சொன்னதுக்குமேலே பத்து பவுனில ஒரு நெக்லஸ் போடணுமாம். அப்பத்தான் சபையில கௌரவமா இருக்கும்னாங்க”.

    அந்த இடத்தில் ஓர் அசாதாரணமான மௌனம் நிலவியது.

    “என்ன மாமா யோசனை? ஒங்க பொண்ணுக்குத்தானே செய்யச் சொல்றோம்? நானா வளையலும் நெக்லஸும் போட்டுக்கப்போறேன்?”

    அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை நளினியால். “இப்படி அம்மாபிள்ளையா இருக்கிறதுக்கு வளையல் போட்டுக்கிட்டா ஒண்ணும் தப்பில்லே, என்று ஆங்காரத்துடன் கத்தியவள், கையிலிருந்த பத்திரிகையை இரண்டாகக் கிழித்தாள்.

    “நளினி!” பதறினார் தந்தை.

    “சுயபுத்தி இல்லாம, அம்மா பேச்சுக்குத் தாளம் போடறவரோட என்னால வாழமுடியாதுப்பா. இவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அந்தப் பண்டிகை, இந்தப் பண்டிகைன்னு ஏதாவது சுரண்டிக்கிட்டே இருப்பாங்க,” என்று பொரிந்தவள், “நான் மட்டும் என்னப்பா, விலைபோகாத சாமானா?” என்றபோது குரல் கம்மியது. வெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.

    கரிய முகம் மேலும் கறுக்க, விறுவிறுவென்று வெளியே நடந்தான் மணிவண்ணன்.

    ஏதோ சொல்லவந்த தந்தையைப் பேசவிடாது, “நல்லவேளை, அவங்க குணம் கல்யாணத்துக்கு முன்னாலேயே தெரிஞ்சுபோச்சு! எனக்காக வேற ஒருத்தர் பிறந்திருக்கமாட்டாரா, என்ன!” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள் நளினி.

    `இனிமேல் யார் என்ன புகழ்ந்தாலும் மயங்கிவிடக் கூடாது,’ என்று அவள் முடிவெடுத்தது அப்போதுதான்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 20

    பரிமேலழகர் உரைத்திறன் – 20

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொல் – சொற்பொருள் – சொற்பொருள் விளக்கம்

    முன்னுரை

    திருக்குறளில் பயின்று வரும் சீர்களாகிய சொற்கள் உரையாசிரியர்கள் பார்வையில் அகராதிப் பொருளைத் தருவதில்லை. திருக்குறளின்  பொருண்மையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு எழுதும் உரையாசிரியர்கள் அச்சொற்களுக்குப் புலனெறி வழக்கத்திலும் உலகியல் வழக்கத்திலும் உள்ள பொருளைத் தராது சிறப்புப் பொருளைத் தருகின்றனர். இவ்வாறு இயல்பாக உள்ள பொருளைத் தவிர்த்துப் பொருள்புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டு பாட்டில் அமைந்துள்ள சொற்களுக்குச் சிறப்புப் பொருள் தருவதையே தலைப்பின் ‘சொற்பொருள்’ என்பது குறிக்கும். இனி அப்பொருளுக்கேற்ற விளக்கத்தையும் அவர்கள் தந்திருக்கிறார்கள். சொல், சொற்பொருள், அதற்கான விளக்கம் என்னும் நிரலை முற்றுமாகக் கற்கின்ற நிலையில்தான் அச்சொல்லுக்கு இயல்பான பொருளைத் தவிர்த்துச் சிறப்புப் பொருள் தந்ததன் உரை நுட்பம் புலப்படுகிறது. ஆசிரியர் பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இவ்வாறு உரைத்த சில இடங்களை ஆராய்ந்து சுட்டிக்காட்டுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    சேர்தல் – நினைத்தல்

    ‘’அவன் சென்னை சென்று சேர்ந்தான்’’ ‘இந்த வண்டி மதுரைக்கு எப்போது சென்று சேரும்?’ ‘இந்தப் பள்ளியில் நான் சேரலாமா?’ என்றெல்லாம் செவிமடுத்திருக்கலாம் இந்தத் தொடர்களில் உள்ள ‘சேர்தல்’ என்னும் சொல் அந்த வாகனம் அல்லது மாணவன் பௌதிக ரீதியாகச் சேர்வதைக் குறிக்கும். அதாவது வாகனம் சென்னை சேரும். மதுரை சேரும். மாணவன் பள்ளியில் சேர்வான். இந்தச் ‘சேர்தல்’ என்னும் சொல் ‘மானம்’ என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றும் வழக்கில் பேசப்படுவது உண்டு. ‘அவன் நல்லவனாகத்தான் இருந்தான் சேர்மானம் சரியில்லை, கெட்டுவிட்டான்’ என்பது போல அது அமையும். இங்கே ‘சேர்மானம்’ என்பதைப் ‘பிடிமானம், அடமானம், வெகுமானம், வருமானம்’ என்ற சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால்,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    என்னும் குறட்பாவில் வரும் ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு மேற்கண்ட பொருள் கொண்டால் இறைவனுடைய திருவடியை அடியார் தழுவிக் கொண்டதாகப் பொருள்படும். பாட்டின் பொருண்மை அதுவன்று. தற்காலத்தில் ஒருவர் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றால் இறந்துபோனார் என்றுதான் பொருள். அவருக்குத்தான் சுவரொட்டி வழியாகக் கண்ணீர் சிந்துவார்கள். அதே பொருளை இங்கே கொண்டால் பாட்டுக்கான பொருள் முரண்படும். என்ன முரண்? உள்ளத்தில் இறைவனை இடைவிடாது எண்ணுவார் வீட்டுலகின்கண்  அழிவின்றி வாழ்வார் என்பதுதான் பாட்டின் பொருள். கடவுள்வாழ்த்து பாயிரத்துள் அமைந்திருப்பதாலும் நூலின் ஒட்டுமொத்தப் பொருளையும் சுருக்கமாக முன்னுரைபோலச் சொல்ல வேண்டியது பாயிரத்தின் பணியாதலாலும் மேற்கண்ட ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு இயல்பான அகராதிப் பொருளைச் சொல்லுவது முரணாகும் என்பதோடு குழப்பத்தையும் உண்டாக்கும். எனவே பரிமேலழகர்,

    “சேர்தல் – இடைவிடாது நினைத்தல்”

    என்று உரையெழுதிக் காட்டுகிறார். சரி, இவ்வாறு இவர் உரைகொள்ளுவது சரியா? சரியானால் அதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் திருக்குறள் அதிகாரக் குறட்பாக்களை அவர் நோக்கிய பாங்கு புலப்படும். அதாவது,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல” (4)

    “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (5)

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” (7)

    என்னும் நான்கு குறட்பாக்களையும் அவர் ஓரலகாகக் கொள்கிறார். அது என்ன ஓரலகு? இறைவனை வழிபடு முறைகளின் தொகுப்பாகக் காண்கிறார். மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான் வழிபடு முறைகள். நினைப்பதும் வழிபாடு. இறைவன் திருநாமங்களைச் சொல்வதும் வழிபாடு. நித்திய, நைமித்தியங்கள் செய்வதும் வழிபாடே. மூன்றும் தத்தம் அளவில் சிறந்து நிற்பன. ‘உள்ளம் பெருங்கோயில்’ என்றார் திருமூலர். ‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்’ என்பார் அப்பர் பெருமான். “தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” என்பார் ஆண்டாள் நாச்சியார்.

    மேற்கண்ட உணர்வுப் பதிவுகளை உற்றுநோக்குவார் பரிமேலழகர் அதிகாரத்துக்குள் உள்ள இந்த நான்கு குறட்பாவையும் ‘இறைவழிபாடு’ என்னும் ஓர் அலகுக்குள் கொண்டு வரும் நுட்பம் உணரக்கூடும். அதாவது இறைவனை நினைத்தவர்க்கும் வீடுபேறு உண்டு. அவன் திருநாமங்கள் வாழ்த்தியோருக்கும் வீடுபேறு உண்டு. அவன் நெறிநின்றார் தமக்கும் வீடுபேறு உண்டு என்பது கருத்து.

    ‘நெறிநின்றார்’ எனத் தெளிவாக அமைந்திருக்கிறது. ‘புரிதல்’ என்பதும் ‘சேர்தல்’ என்பதும் அவ்வாறு அமைந்திருப்பதாகக் கருத முடியாது. புரிதல் என்பதற்குப் புரிந்து கொள்ளுதல் என்பதே நேர்பொருளாகும். எனவே ‘புரிதல்’ என்பதற்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என்று உரை காண்கிறார் அழகர். அதாவது இறைவன் திருநாமங்களை எப்போது உச்சரிப்பது ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’  அத்திருநாமங்களைச் சொல்லுவது வீடுபேற்றுக்கு வழிவகுக்கும் ஆதலின் இறைவனுடைய பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதல் வேண்டும் என்கிறார். இதற்கேற்பப் ‘புரிதல்’ என்னும் சொல்லுக்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என உரைகாண்பதை அறியலாம்.

    அறியவே மனத்தால் எண்ணுவார்க்கும் வீடுபேறு என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனைத் திருவள்ளுவர் இரண்டு பாடல்களால் சொல்லுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். இறைவனை எண்ணுகிறபோது அவனுடைய ஏனைய உறுப்புக்களைவிடத் திருவடியே நினைவுக்கு வரும்., வரவேண்டும் என்பது மரபு. ‘ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி’, ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்னும் திருவாசகமும் அவை. ‘மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரியபுராணம். ‘திருவடிப்புகழ்ச்சி’ என்பது வள்ளலார் பாடியது. ‘சொற்கழிவு பாதமலர்’ என்பது திருவாசகம். அந்தத் திருவடியை மனத்தால் எண்ணுதல் வேண்டுமல்லவா? ‘மாணடி சேர்ந்தார்’, ‘இலானடி சேர்ந்தார்’ என்னும் இரு பாடல்களில் பயின்றுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இடைவிடாது நினைத்தல் என உரைகாண்கிறார். ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என்பது அபிராமி அந்தாதி. ‘மாணடி சேர்ந்தார்’ என்பதிலுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இவ்வாறு உரைகண்ட பரிமேலழகர் அடுத்த பாடலில் ‘இலானடி சேர்ந்தார்’ என்பதில் உள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கான அவ்விளக்கத்தை மீளவும் குறிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

    1. ‘மாணடி சேர்ந்தார்’, இலானடி சேர்ந்தார்’ என்னும் இரண்டு குறட்பாக்களையும் இறைவனைச் சிந்திப்பதற்கும்
    1. ‘புகழ்புரிந்தார்’ என்பதை இறைவன் திருநாமங்களைச் சொல்லுவதற்கும்
    1. ‘ஒழுக்க நெறிநின்றார்’ என்பதைச் செயலுக்கும்

    அவர் பொருத்திக் காட்டி எழுதுகிறார்.

    “இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவார் என்பது கூறப்பட்டது”

    என்னும் விளக்கத்தாலேயே அவர் ‘சேர்தல்’ என்பதற்கு ‘இடைவிடாது நினைத்தல்’ என்றும் புரிதல் என்பதற்கு எப்போதும் சொல்லுதல் என்றும் உரையெழுதியதற்கான காரணம் புலப்படுகிறது. ‘சேர்தல் என்பது குறட்பாச் சொல். இடைவிடாது நினைத்தல் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள்.  ‘புரிதல்’ என்பது குறட்பாச் சொல். ‘எப்போதும் சொல்லுதல்’ என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். இவ்விரு சொற்பொருளுக்குமான அவர் தந்த காரண விளக்கங்கள் மேலே தரப்பட்டன.

    ‘குறை’ என்றால் இன்றிமையாத பொருள் (முக்கியம்)

    பொதுவாகக் ‘குறை’ என்ற சொல்லுக்குக் குற்றம் என்பது பொருள். ‘எப்பொழுதும் குறைசொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு இயல்பு’ குறையே இல்லாதவர் இவ்வுலகில் இலர். நிலவிலும் குறை உண்டு ‘நிறைகுறை நோக்கி’ என்பன வழக்கு. இலக்கியங்களிலும் இப்பொருளே பெரும்பான்மை. ஆனால் பரிமேலழகர் இந்தச் சொல்லுக்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகண்டிருக்கிறார்.

    “வினைக்கண் வினைகெடல் ஓம்பல்! வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு” (612)

    “வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது. அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக!” என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அமைந்துள்ள தொடர்களை முன்பின்னாக்கி உலகு வினைக்குறை தீர்ந்தாரின் (ஐ) தீர்த்துவிடும் ஆதலின் வினைக்கண் வினை கெடல் ஓம்பாது ஒழிக’ என்னுமாறு கண்ணழித்து உரையெழுதுகிறார்.

    இங்கே ஆய்வுக்குள்ளாவது ‘வினைக்குறை’ என்னும் சொல்லாகும். வினையாகிய இன்றியமையாத பொருளைக் கைவிட்டாரை இந்த உலகம் மதிக்காது என்பது கருத்து. இந்த உரையை முன்னெடுக்கும் பரிமேலழகர் ‘குறை’ என்பதற்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகாண்கிறார். பாட்டில் ‘குறை’ என்று இருக்க பரிமேலழகரோ (வினையாகிய) ‘இன்றியமையாத பொருள்’ என்று உரைசொல்வதற்குரிய முகாந்திரம் ஏதேனும் உண்டா என்பதே கருதுகோள்.

    குறை – இன்றியமையாப் பொருள்.

    அதாவது வினையாகிய இன்றியமையாத பொருளாம். தொடக்கத்தில் கூறியவாறு ‘குறை’ என்பதற்குப் ‘பழுது’ என்றே பொருளிருக்க பரிமேலழகர் தாம் கொண்ட பொருளுக்குப் புறநானூற்றுப் பாடலில் வந்த இந்தச் சொல்லைத் துணைக்கழைக்கிறார். அந்தப் பாட்டு,

    “படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்கு
    ‘பயக்குறை இல்லை’ தாம் வாழும் நாளே!” (188)

    என்னும் பாடலாகும். இந்தப் பாடலின் இறுதி வரியிலுள்ள ‘பயக்குறை’ என்ற சொல்லில் உள்ள ‘குறை’ என்பதற்கான பழைய உரையைத் தன்னுரைக்குச் சான்றாக்கிக் கொள்கிறார். மழலையின் செயல்களால் அறிவு மயங்கும். அத்தகைய குழந்தைகளைப் பெறாதவர்க்கு இல்லறத்தின் பயனாகிய ‘இன்றியமையாப் பொருள்’ வேறு ஏதும் இல்லை என்பது இப்பாட்டிற்கான பழைய உரை. இதனை,

    அது “பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” என்பதனானும் அறிக.

    என்னும் தமது விளக்கவுரைக் குறிப்பின் வழி இதனை அறிய வைக்கிறார் பரிமேலழகர். மழலையாகிய இன்றியமையாத பொருள் இல்லையெனின் வாழ்நாள் பெருமை இல்லை. வினையாகிய இன்றியாமையாப் பொருள் இல்லையெனின் ஆள்வினைப் பெருமை இல்லை என இயைத்துப் பொருளறிக.

    ‘குறை’ என்பது குறட்பாச் சொல். இன்றியமையாப் பொருள் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். அச்சொல் அப்பொருளுக்கு உரித்தாமாறு புறநானூறு கொண்டு விளக்கியது அவர்தம் சொற்பொருள் விளக்கம்.

    இதற்கு இவ்வாறு உரைகாணாது வேறுவகையாக உரைகண்டால் ‘வினையே ஆடவர்க்குயிரே’ என்னும் கருத்தினை உள்வாங்கிக் குறள் கூறும் கருத்து சிறக்காமல் போய்விடுவதுடன் ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தோடும் பொருந்தாதாம்.

    ‘உயர்வு’ என்பது பணியாமை

    உலகியலிலும் இலக்கிய வழக்கிலும் உயர்வு என்பது உடன்பாட்டுச் சொல். அது எதிர்மறை அன்று. ஒருவன் உயர்ந்தான் என்றால் அவன் தாழ்ச்சியடையவில்லை என்பது பொருளன்று. முன்பு இருந்த நிலையைவிட இன்னும் உயர்ந்திருக்கிறான் என்பதுதான் பொருள். ‘தாழ்ச்சியடையவில்லை’ என்றால் இருந்த நிலையிலேயே இருந்திருக்கிறான் என்றே பொருளாகும்.  இத்தகைய பொருளைப் பரிமேலழகர் குறட்பா ஒன்றில் பதிவு செய்து தம் உரை நுண்ணியத்தை உறுதி செய்வதைக் காணலாம்.

    “பெருக்கத்து வேண்டும் பணிதல்., சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு”  963

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்குக்,

    “குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும். குறைந்த நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்.”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்பதற்கு அவர் எழுதிய செல்வம் உளதாயவழிப் பணிவு வேண்டும் என்ற உரையில் மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் சுருக்கத்து வேண்டும் உயர்வு என்பதற்கு அவர் ‘நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்’ என்று எழுதுகிற உரைதான் ஆய்வுப் பொருளாகிறது.

    இந்த உரைக்கு மூலமாக அவர் வருவித்துக் கொண்ட சொல் ‘குடிப்பிறந்தார்’ என்பதாகும். இது இதற்கு (97) முந்தைய அதிகாரமான ‘குடிமை’ (96) என்னும் அதிகாரப் பொருண்மை நோக்கி அமைந்ததாகும். எப்படி? குடிப்பிறந்தார்க்குப் பணிவு இயல்பு. ‘தன்னிலையில் தாழாமை’ (96) என்று குறிப்பாகப் பொருள் விரிப்பார் பரிமேலழகர். எனவே செல்வம் வந்து உற்றக்காலை ஆணவம் கொள்வதும் செல்வம் குறைந்து வறுமை வந்தக்கால் குலைந்து நடுங்குவதும் அவர் அறியாதவை. வறுமையாகிய சுருக்கம் வந்துற்ற காலை அவர் நிமிர்ந்து நிற்பது முந்தைய பணிவு நிலையையே குறிக்கும். இந்தப் பணிவு செல்வம் வந்து குவியும் போது உயராது. அதனால் செல்வம் குறைகிறபோது தாழாது. அதாவது முந்தைய பணிவிலிருந்து குறையாது. அதனால்தான்,

    ‘பணியாமை – தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல்’

    என்று உரையெழுதுகிறார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கருதிய பரிமேலழகர்,

    “செல்வக்காலை அது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும் அல்லற்காலை அது தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம்”

    என்றும் விளக்கவுரை எழுதுகிறார். செல்வம் தன்னை உயர்த்துங்கால் உயராமல் தாழ்ந்து நிற்றலும் செல்வம் இல்லாத போது அச்செல்வம் தன்னைத் தாழ்த்த தான் உயர்ந்து நிற்றலும் குடிப்பிறந்தார்க்கு இயல்பாம் என்பது இவ்விளக்கவுரையால் பெறப்படும். பணிவும் உயர்வும் செல்வத்தை நோக்கியது என்பது அறிக.

    இவ்வுரையில் ‘உயர்வு’ என்பது குறட்பாச் சொல். அதற்குப் பணியாமை என்பது பரிமேலழகர் கண்ட சொற்பொருள். “அது (செல்வம்) தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும்” என்பது அச்சொற்பொருளுக்கான விளக்கம்.

    உயர்வு ‘பணியாமை’ என்றால் பணிவு ‘உயராமை’ என்பது பெறப்படும். ‘மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு’ என்பதும் ‘மெய்த்திருப் பதம் மேவு என்ற போதினும் ‘இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருக்கும் முகம்’ (5088) என்னும் கம்பராமாயணமும் இந்த வெளிப்பாட்டை ஒத்திருப்பதை உணரலாம். இது எந்த நிலை வந்தாலும் இருந்தநிலை மாறாதிருத்தல். இவ்வாறு உரைகாணாது ‘உயர்வு’ என்பதற்கு இயல்பான பொருளைக் கொண்டால் குடிப்பிறந்தார் இயல்பாகக் கொண்டிருந்த பணிவு சலனத்திற்கு ஆளாகிவிடும் என்பது அறிக.

    நிறைவுரை

    வள்ளுவர் சொல்லுக்குப் பரிமேலழகர் காணும் பொருளும் அதற்கான விளக்கமும் ஒரே அலைவரிசையில் நிற்பதைக் காணலாம். திருக்குறளில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த உரைநெறியை அவர் பின்பற்றியிருக்கிறார். அவர் சொல்லுக்கு இவர் தரும் பொருள் அகராதியில் கிட்டாது. முன்னது மொழிசார்ந்தது. பின்னது படைப்பவன் உள்ளம் அறியும் முயற்சி சார்ந்தது. ஏனைய உரையாசிரியர்களாலும், இல்லாத காரணங்களைச் சுட்டியோ மிகச் சிறுபான்மை மாற்றுக்கருத்துக்களுக்காகவோ அவர் கருத்தினை மிகக் கடுமையாக மறுப்பவர்களாலும் எண்ணிப் பார்க்க இயலாத இத்தகைய புலமைப் பேராற்றல் அவருக்கு இயல்பு.

    (தொடரும்…)

    Share