Blog

  • கணம்தோறும் வியப்புகள்

    கணம்தோறும் வியப்புகள்

    விப்ரநாராயணன்

    தென்னங் கீற்றிடைத் தோன்றும் ஒளியும்
    விண்ணில்  தோன்றும் வான வில்லும்
    கண்ணில் கசியும் காமத் துளிகளும்
    எண்ணி நொடியில்  மறந்த சொற்களும்
    மின்மினிப் பூச்சியின் மின்னல் வாழ்வும்
    நுண்ணிய அணுவில் நுண்துகள் ஓட்டமும்
    மண்ணில் காணும் கரோனா ஆட்டமும்

    மழையில் தோன்றும் காளான் கூட்டமும்
    அழைப்பை விடுக்கும் அணங்கின் சேட்டையும்
    வழவழா தரையில் வழுக்கி வீழ்தலும்
    எழுந்தான் மறைந்தான் என்று கேட்டலும்
    தொழுதான் தரையில் கிடந்தான் என்றலும்
    மதுவில் மயங்கி மக்கள் வீழ்தலும்

    இதயத் துடிப்பும் இதயம் நிற்பதும்
    உதய  சூரியன்  உதிக்கும் அழகும்
    புதிய திருப்பம் புத்துயிர்  கொடுத்தலும்
    விதியை மாற்றும்  அதிரடி நிகழ்வும்
    கதவின் பின்னே காணும் முகமும்
    பதவி மோகத்தில் பதறி வீழ்தலும்

    கண்டதும் காதலும் கொண்டதும் மறுத்தலும்
    அண்டத்தில் நிகழும் இயற்கையின் சீற்றமும்
    பிண்டத்தில் நிகழும் உயிர்த் தோற்றமும்
    பணத்தைக் கண்டால் பறிபோகும் கற்பும்
    மணத்தைக் கண்டால் மயங்கும் மனிதனும்
    கண்ணன் பார்வையில் உதித்த கீதையும்
    கனவில் தோன்றும் காதல் காட்சியும்

    உலையில் புரளும் உலைக்குமிழ் காட்சியும்
    மலையில் தவழும் மேகக் கூட்டமும்
    கறவை மாடுகளின்  கத்தும் ஒலியும்
    பிறந்த குழவியின் முதலழு குரலும்
    பறவைகள் விண்ணீல் பறந்து மறைதலும்
    பரவையில் மீன்கள் பரப்பில் தோன்றலும்
    பிரசவ வலியில் பிறக்கும் உறுதியும்
    மரண நிகழ்வில் மயான உறுதியும்

    குடும்பத் தொல்லையில் குதிக்கும் உறுதியும்
    திடுமெனத் தோன்றும் தற்கொலை நிகழ்வும்
    மூச்சு இழுத்தலும் மூச்சு விடுதலும்
    பேச்சு வருதலும் பேச்சு நிற்றலும்
    நங்கையின் நாணமும் மங்கையின் மயக்கமும்
    தங்கையின் பரிவும் சிங்கத்தின் சீற்றமும்
    பள்ளியில்  மாணவன் பயிற்சியில் உறக்கமும்
    பள்ளி விட்டபின் மாணவன் மறைதலும்

    விந்தைப் பூச்சியின் விதவித நிறமும்
    அந்தி வானத்தின் அழகிய நிறமும்
    புந்தியில் தோன்றும் புதிய கவிதையும்
    கடலில் அலைகள்  குதிப்பதும் போவதும்
    உடலில் நீர்கள் உறுப்பில் சுரத்தலும்
    கருத்து உதிப்பதும் கதைகள் பிறப்பதும்
    விருத்தப் பாக்கள் தோற்றமும்என்
    கருத்தில் உதித்த கணத்தின் வியப்பே

    (வானவில் பண்பாட்டு அமைப்பு நடத்திய உலகக் கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற  கவிதை)

    Share
  • Blue Bed Sheet

    Blue Bed Sheet

    Baskar Seshadri

    I was on my terrace again. Sounds as if I was climbing to my brain and making a deep enquiry. Not though.

    This evening was very fresh and the small plane at an altitude to me was like a small snail just moving and I could not keep my head or eye on it for long.

    There were other things. That wonderful blue sheet of canvas was amazing and having seen it several times it never made me tired and every time I look up it was there.

    And I only do not see it. When I see it I wonder how I have missed it for too long. But I will board a different plane altogether after seeing it.

    What then happens to the sky when I don’t see it? Nothing. It used to be like it was when I saw last.

    Me seeing and not seeing enjoying it or ignoring it does not make a difference to it. It is neither for a boquette nor for a brick bat. It doesn’t need me. No one either. It can be there for no one and not even for itself. A probing mind on science or astronomy can resolve by saying the existence in years but what about and how about it being there

    Do we need mathematics here or the art of beatitude and wonder of the nature?

    Am I the part of the sky or the earth?

    Why should I be fascinated towards that blue bed sheet?

    How is that I become nothing when I am with it?

    Is that being nothing is everything in life?

    I am back to work and that sky is in me and I can make it alive anytime I want.

    After all the very thought of the sky can evoke me if I think about it.

    I am the thought. sky is being thought . I am the sky. I wonder at it. At me too.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 22

    பரிமேலழகர் உரைத்திறன் – 22

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகர் உரையும் அருத்தாபத்தி அளவையும்

    முன்னுரை

    மக்கள் வழக்கே மொழிக்கு அடிப்படை. இலக்கியத்திற்கு மக்கள் வாழ்க்கையே அடிப்படையாகும். இது இயல்பானது. எந்த படைப்பிலக்கியம் ஆனாலும் புலவனின் சிந்தனையாலும் பட்டறிவாலும் வெளிப்படும் நீதி இலக்கியமே ஆனாலும் மக்கள் வாழ்க்கையின் தாக்கம் இல்லாமல் தனித்து அமைய முடியாது. இதற்குப் பல சான்றுகள் காட்ட முடியும். வெளிப்பாட்டு உத்திகளிலும் இத்தகைய சமுதாய தாக்கம் ஆங்காங்கே அமைந்து கற்பாரின் சிந்தனையைக் கூர்மையாக்கும். அவ்வுத்திகளில் ஒன்றுதான் ‘அருத்தாபத்தி’ என்பது. பொதுவாகக் கவிதை அல்லது செய்யுள் என்பது ஒன்றினைச் சொற்களால் விளக்குவது அன்று. ஒன்றினைக் காட்சிப்படுத்துவது. ஒரு அனுபவத்தைச் சொற்கள் வழிக் கற்பாருக்கு உணர்த்துவது. அந்தக் காட்சியை முழுமையாகக் காட்சிப்படுத்துவது படைப்பு நெறி ஆகாது. ஒரு பொருளின் ஒரு பக்கத்தைக் காட்டி ஏனைய பக்கங்களை உய்த்துணரச் செய்வதே படைப்பு நுட்பம். ‘அருத்தாபத்தி’ என்பது இத்தகையதே. ஒரு கருத்தினை விரிவாகச் சொல்லாமல் ஒன்றினைச் சொல்லி மற்றொன்றைப் பெற வைப்பது. ‘அவன் பணக்காரன் அல்லன்’ என்றால் ஏழை என்பது பெறப்படுவது போல. அருத்தாபத்தி என்பது சமயக்கோட்பாடுகளிலும் தத்துவ விசாரணைகளிலும் பயன்படுத்தப்படும் அளவையியல் (LOGIC) வகைகளில் ஒன்று. திருக்குறளில் அமைந்த அருத்தாபத்தி நுட்பங்களைப் பரிமேலழகர் கண்டுணர்த்தும் பாங்கினை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    அருத்தாபத்தி – ஒரு விளக்கம்

    ‘நல்லாற்றான் நாடி அருளாள்க’ (242) என்னும் குறட்பாத் தொடருக்குத் தாம் எழுதிய பொழிப்புரையில் ‘ஆறு’ என்பதற்கு விளக்கமளிக்கும் பரிமேலழகர் ‘அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும்’ என்று குறிப்பிடுகிறார்.  விளக்கவுரையில் அளவைகளின் வகைகளை நிரல்படக் கூறுகிறார்.

    “பொறிகளால் காணும் காட்சியும், குறிகளால் உய்த்துணரும் அனுமானமும் கருத்தாமொழியாகிய ஆகமமும்’ என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும்  உண்மைக்கு மாறாய இன்மையும்  என இவற்றையும் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் ஒருவாற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்றென்றலே கருத்து”

    பரிமேலழகர் மேற்சுட்டிய விரிவான ஆறு அளவைகளுக்கும் விளக்கம் கூறுவது கட்டுரையின் பொருள் சிறக்க உதவக்கூடும்.  அளவைக்கு வடமொழியில் ‘தர்க்க சாஸ்திரம்’ என்று பெயர். அதாவது ஒரு பொருளின் உண்மையை அளவிட்டு அறிவதற்குக் கருவியான பிரமாணங்களையே தர்க்கம் என்னும் சொல்லால் குறிப்பிடுவர். வடமொழியில் பிரதியட்சம், அநுமானம், உபமானம், ஆகமம், அருத்தாபத்தி, அபாவம், ஐதிகியம், சம்பவம் என எட்டு வகையாக அழைக்கப்படும்.

    1. கண்ணால் காண்பது பிரதியட்சம்
    2. புகையைக் கண்டு நெருப்பு உண்டென்பது அநுமானம்.
    3. குயில் போலப் பாடுவாள் என்பது உபமானம்
    4. சான்றோர் சொல் ஆகமம்
    5. பகல் உண்ணான் பருத்திருப்பான் என்றால் ‘இரவில் ஒளித்துண்பான்’ என்பது அருத்தாபத்தி
    6. ‘நேற்றில்லை இன்றில்லை எனவே நாளையுமில்லை’ என்பது அபாவம்
    7. இம்மரத்தில் பேய் இருக்கிறது என்பது ஐதிகியம் (ஐதீகம்)
    8. ஆயிரத்தில் நூறு என்பது சம்பவம்

    மேற்கண்டவற்றுள் ஐதிகியத்ததையும் சம்பவத்தையும் பலரும் கொள்ளார். எனவே பரிமேலழகர் கூறிய ஆறு மட்டுமே அளவைகள் எனக் கருதப்படும். இருப்பினும் பட்டியலில் காட்டிய எட்டனையும் காட்சி, அனுமானம், ஆகமம் என்னும் மூன்றனுள் அடக்குவர்.

    1. உபமானம் காட்சியில் அடங்கும் (2)
    2. அருத்தாபத்தி, சம்பவம் இரண்டும் அனுமானத்துள் அடங்கும் (3)
    3. ஐதிகியம் ஆகமத்தில் அடங்கும் (2)

    எஞ்சியிருக்கும் அபாவம் காட்சி, அனுமானம், ஆகமம் என்னும் மூன்றனுள்ளும் அடங்கும். எனவே எட்டு மூன்றாயிற்று என்க.

    அளவைகள் எட்டாயினும் ஆறாயினும் அவற்றுள் ‘அருத்தாபத்தி’ என்பது தவிர்க்க இயலாத ஒன்று. இந்த அருத்தாபத்தியைத்தான் முன்னுரையில் கூறியபடி மக்கள் வழக்கிலிருந்து வந்த இலக்கியக் கூறு என இக்கட்டுரை முன்னெடுக்கிறது. ‘அவன் நல்ல பழக்கம் உடையவன் அல்லன். அவனோடு சேராதே’ என்பது வழக்கு. இல்லாத நல்ல பழக்கம் செயல்பட முடியாது. சூனியம் செயல்படாது. வினைமுதலே செயல்படும். இவன் கெட்டுவிடுவான் என்றால் மற்றவனிடத்தில் இருக்கிற தீய பழக்கம் இவனைக் கெடுத்துவிடும் என்பது பொருள். எனவே ‘நல்லொழுக்கம் இல்லாதவன்’ என்றால் ‘தீயொழுக்கம் உண்டு’ என்பது பெறப்படும், அழுக்காறு என்பது போல. தீயொழுக்கம் செயல்படும். தீயொழுக்கம் அவனிடத்தில் இருக்கிறது என்று சொல்லாமல் அல்லது அவன் தீயவன் என்று சொல்லாமல் ‘நல்லொழுக்கம் இல்லாதவன்’ என்னும் சொல்லால் ‘தீயன பழகியவன்’ என்பதை உணர வைப்பதைச் சமுதாயத்திலிருந்து, சமுதாய வழக்கிலிருந்து பெறமுடிகிறதல்லவா? எனவே அருத்தாபத்தியின் மூலம் உலக வழக்கே! இந்த அருத்தாபத்தி திருக்குறளில் பயின்று வரும் இடங்களும் பரிமேலழகர் அதனைக் கண்டறியும் பாங்கும் தொடர்ந்து ஆராயப்படுகிறது.

    விலங்காய்ப் பிறப்பதே மேல்

    ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று அப்பர் பாடினார் என்றால் இப்பிறவியின் பெருமை நோக்கி என்க. இப்பிறவி பெருமை பெறவேண்டுமானால் புகழ் பெறவேண்டும். ஒருவனுடைய ‘பிறவி சிறந்தது’ என்பது அவனடைந்த புகழலால் அறியப்படும். திருவள்ளுவர் இல்லறவியலின் இறுதியில் ‘புகழ்’ என்னும் அதிகாரத்தில் இதனைச் சுட்டுகிறார்.

    “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று” 236

    என்னும் குறள் ‘வாழ்ந்தால் புகழோடு வாழ்க’ என்னும் பொருளை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. இதற்கு உரையெழுதிய பரிமேலழகர்,

    “மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க, அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று”

    என்று கூறுகிறார். பாட்டில் தோன்றின் புகழொடு தோன்றுக என்னும் தொடரில் உள்ள ‘தோன்றுக’ என்னும் வியங்கோளுக்கு எழுவாய் இல்லை. வியங்கோளுக்கான எழுவாய் மூவிடத்திலும் அமையலாம். ‘மக்களாய்ப் பிறக்கின்’ என உரை காண்பதற்குரிய சொல் குறட்பாவில் இல்லை. ஆனால் அழகர் எழுதுகிறார். எப்படி? அஃதிலார் (அப்படிப் பிறக்கமாட்டாதவர்) என உயர்திணையில் இருப்பதால் ‘தோன்றுக’ என்னும் வியங்கோளும் மக்களை நோக்கியதாகவே இருத்தல் வேண்டும் என்பதாக அனுமானிக்கிறார். எனவே   ‘மக்களாய்’ என்பதை வருவித்துக் கொள்கிறார். இனித், ‘தோன்றலின் தோன்றாமை நன்று’ என்பதற்குப் ‘பிறத்தலின் பிறவாமையே நன்று’ என்றுதான் உரை எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதினால் பிறப்புக்குத் தடைசெய்வதுபோல ஆகிவிடும். அழகர் ‘மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று’ என்று எழுதுகிறார். ‘தோன்றுவதைவிடத் தோன்றாமையே நன்று’ எனக் குறட்பாவில் இருக்க ‘விலங்காய்ப் பிறத்தல் நன்று’ என்று அவர் எழுதுவதற்குத் துணையாக இருப்பதுதான் அருத்தாபத்தி அளவை. ‘தோன்றுக’ என்னும் உடன்பாட்டால் தோன்றாமை என்னும் எதிர்மறையும் உடன்பாடாகிறது. எபப்டி;? புகழோடு பிறக்க முடியுமென்றால் சரி. இல்லையாயின் பிறக்காதே என்னாமல் விலங்காய்ப் பிறப்பதே நல்லது என்கிறார். இது உலகியல் தழுவியது.  ‘செய்தால் இப்படிச் செய் இல்லையென்றால் அப்படிச் செய் என்பது உலக வழக்கு’ உலக வழக்கில் இருக்கின்ற இந்த அருத்தாபத்தி அளவையைப் பயன்படுத்திக் கொண்ட பரிமேலழகர்,

    ‘அஃதிலார் என்றமையின் மக்களாய்’ என்பதூஉம் மக்களாய்ப் பிறவாமை என்னும் அருத்தாபத்தியால் ‘விலங்காய்ப் பிறத்தல் என்பதூஉம் பெற்றாம்”

    என்று எழுதுகிறார். பிறப்பைத் தடை செய்ய முடியாது அல்லவா?

    தின்பது இல்லையானால் கொல்வதும்  இல்லை!

    ‘அருளல்லது யாதெனின்’ (254) என்னும் குறட்பாவினாலும் ‘உண்ணாமை உள்ளது’ (255) என்னும் குறட்பாவினாலும் (கொலைசெய்யாவிட்டாலும்) ஊன் தின்பவர்க்குக் ‘கொலைப்பாவம் உண்டு’ என்பது சொல்லப்படுகிறது. ‘கொலை செய்பவன் வேறொருவன் ஆதலின் அப்பாவம் அவனுக்கேயன்றி ஊன் உண்பவனுக்கு வராது’ என்பது ஒரு வாதம். இந்த வாதத்தை மறுத்துப் பின்வரும் குறட்பாவில் திருவள்ளுவர் தம் கருத்தினைப் பதிவு செய்கிறார்.

    “தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யார்யார்க்கும்
    விலைபொருட்டால் ஊன் தருவார் இல்” (256)

    இந்தக் குறட்பாவிற்குப்,

    “பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாரும் இல்லை.”

    எனக் கிடக்கை நிலையிலேயே எந்த மாற்றமும் இல்லாமல் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்குப் பின்னால் அமையும் விளக்கவுரையில்தான் பரிமேலழகர் தம் உரைநுண்ணியத்தைக் காட்டுகிறார். ஈண்டு உரை நுண்ணியம் என்பது திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை. பாட்டுக்குள் கிடக்கும் ஆழமான பொருளை வெளிப்படுத்துவதாகவும் திருவள்ளுவரின் உள்ளம் அறியும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.

    “பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம்  இன்மையின் தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணம் ஆதலைச் சாதித்தலின்”

    “காரணம் காரியம் என்னும் இரண்டனுள் காரணம் முற்பட்டிருப்பதும் காரியம் பிற்பட்டிருப்பதும் யாவரும் ஒப்புக் கொள்ளும் இலக்கணமாம். ஆதலால், முன்னே செய்கின்ற கொலைத்தொழிலுக்குப் பின்னே மற்றொருவன் ஊன் தின்பது காரணமாகாது. ஆதலால் கொலைப்பாவம் கொன்றவனைச் சேராது. தானே கொன்று தின்னக் கூடாதேயன்றிப் பிறன் கொன்று விற்றதை விலைகொடுத்து வாங்கித் தின்னத் தடையில்லை” என்பது ஒரு வாதம். இவ்வாறு வாதம் செய்வானை நோக்கி, ‘இவன் வாங்குவான் என்னும் நம்பிக்கையே கொலைஞன் கொல்லுதற்குக் காரணம் ஆதலால், கொலைப்பாவம் கொன்றவனைச் சேரும் என்பது நியாயம். ஊனை வாங்குவார் இல்லையாயின் விற்பார் இல்லை என்னும் கருத்து இவன் தின்னுதற்கு வாங்குவான் இல்லையாயின் அவன் கொன்று விற்றல் செய்யான் என்பது அருத்தாபத்தி பிரமாணம். அதாவது காரணம் முன்னும் காரியம் பின்னுமாய் அமைவதே உலகியல்பு. இங்கே ஊன் தின்பதாகிய காரணம் பின்னிருக்கிறது. இக்காரணத்தின் விளைவு முன்னிருக்கிறது. இதனைத் தெளிவுபடுத்துகிறார் அழகர்.

    இந்த விளக்கத்தை உள்ளடக்கிய பரிமேலழகரின் விளக்கவுரை அமையாதிருக்குமாயின் குறட்பாவில் அட்ங்கியிருக்கும் தர்க்க நியாயம் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

    நல்லவன் இல்லையென்றால் தீயவன் தானே!

    கட்டுரையின் முன்னுரையில் கூறியவாறு இன்மை செயல்படாது. இன்மைக்கு மாறாய உண்மைதான் செயல்படும். ஒருவனை நேரடியாகக் குற்றம் சாட்டுதலறியாத பண்பாடு நோக்கிய தமிழியல் பதிவு இது. ஒழுக்கமுடையவளும் அது இல்லாதவளும் இணைந்து போனால் ஒழுக்கம் உடையவளுக்குத்தான் கேடு. உடன் செல்லும் ஒழுக்கமிலாதவளின் எதிர்மறைப் பண்புகளால் இவள் பாதிக்கப்படுவாள் என்பது நடப்பியல். ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என்று கூறிய திருவள்ளுவர் ‘சிற்றினம் சேராமை’ என்றதும் இது நோக்கியே. இது போன்ற குறிப்புக்களைத் திருவள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவற்றுள் அருத்தாபத்தியைச் சார்ந்த சில குறட்பாக்கள் ஆராயப்படுகின்றன.

    “பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது” (811)

    என்பது ‘மாறாத மிக்க அன்பு கொண்டார்போல் பழகுவார் ஆயினும் தீய குணங்களை உடையவருடைய நட்பு வளர்வதைவிடத் தேய்தலே சிறந்தது., நன்மையைத் தரும் என்னும் பொருளைத் தரும் இந்தக் குறட்பாவிற்குக்,

    “காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு வளர்தலின் தேய்தல் நன்று”

    என்று பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். எழுதிக், குறட்பா, தான் தந்த பொழிப்புரை அவ்விரண்டனையும் கற்பாருக்குத் தோன்றும் ஐயம் ஆகிய அனைத்தையும் சிந்திக்கிறார். சிந்தித்த பிறகு குறட்பாவில் ‘பண்பிலார் கேண்மை’ என்னும் தொடரில் உள்ள ‘பண்பிலார்’ என்னும் சொல்லுக்குத் ‘தீக்குணம் உடையார்’ என்று தாம் எழுதியது சரியா என்பதற்கான விளக்கத்தையும் விளக்கவுரையில் தந்திருக்கிறார்.

    “நற்குணமில்லார் எனவே தீக்குணம் உடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது.”

    என்பதே அந்த விளக்கம். நற்குணம் இன்மையே ஒருவனிடம் செயல்படாது. அடையாளப்படுத்தாது. அதற்கு மாறாய தீக்குணமே செயல்படும். ஒருவனை அடையாளப்படுத்தும். பாட்டில் அவ்வாறு இல்லையே என்றால் அதற்குத்தான் அருத்தாபத்தி அளவை பயன்படுகிறது. கற்பாருக்குத் தெளிவையும் தருகிறது. இதனையொத்த வேறுசில குறட்பாக்களுக்கும் பரிமேலழகர் அருத்தாபத்தி அளவையைப் பயன்படுத்தி உரையெழுதியிருப்பதைக் காணமுடிகிறது.

    “இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்” (851)

    என்னும் குறட்பாவையும்,

    “எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம் இகல் என்று சொல்லுவர் நூலோர்”

    “நற்குணமின்மை அருத்தாபத்தியான் தீக்குணமாயிற்று”

    என மேற்கண்ட குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும் பொழிப்புரை மற்றும் விளக்கவுரை ஆகியனவற்றைக் கற்பார் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

    தனிப்படர் மிகுதியும் தனிமைப் புலம்பலும்

    காமத்துப்பால் அதிகாரங்களுள் ‘தனிப்படர் மிகுதி’ என்பதும் ஒன்று. தன்னைப் பிரிந்த தலைவனை எண்ணித் தலைமகள் தனிமையில் புலம்புதல். அதாவது தனிமைத் துன்பம். இது உலகியல் வழக்கும் புலனெறி வழக்குமாகும். ஆனால் புலனெறிவழக்கில் தலைவியைப பிரிந்த தலைவன் புலம்புதற்கு இலக்கியம் இல்லை. கற்பியலில் பிரிவு அறுவகைப்படும். ஓதற்பிரிவு, பொருள்வயின் பிரிவு, பரத்தையிற் பிரிவு என்னும் மூன்றனையும் தவிர, காவற்பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ என்ற மூன்றும் அறத்தை நோக்கிய பிரிவுகளாம். எனவே ‘அவன் புலம்பினான்’ என்று இலக்கியம் செய்தால் அது அறத்திற்கும் பொருளுக்கும் ஏலாதென்க. இதனைப் பரிமேலழகர். ”அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் அவன்கண் இல்லையாயிற்று’ என எழுதுகிறார்.

    தலைவியின் புலம்பலில் ஒன்றினைச் சொல்கிறாள். தாம் விரும்பும் கணவனால் தாம் விரும்பப்படவில்லையெனின் தான் நல்வினை செய்யவில்லை என்றுதானே பொருள்?’ என்று வேதனைப்படுகிறாள். இதனை,

    “வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்” (1194)

    என்னும் குறளாலும் அதற்குப் பரிமேலழகர் எழுதிய,

    “கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும் தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்”

    என்னும் பொழிப்புரையாலும் அறியலாம். விளக்கவுரையில்,

    ‘கெழீயின்மை’ — நல்வினையின்மை அது அருத்தாபத்தியான தீ வினையுடைமை யாயிற்று”

    என்று எழுதுகிறார். குறட்பாவில் உள்ள ‘கெழீஇயிலர்’ என்னும் சொல்லுக்கு  நல்வினை யின்மை’ என்பதுதான் பொருள். ‘கெழுதகை இன்மை’ என்பதாம் ஆனால் அழகர் ‘தீவினையாட்டியர்’ என உரைகாண்கிறார். காரணம் நல்வினை ‘இன்மை’ செயல்படாது. தீவினை ‘உண்மையே’ செயல்படும். அதாவது இவள் தீவினை காரணமாகவே கணவன் இவளை விரும்பவில்லையாம் என்பது மனைவியின் கருத்து.

    புகழும் அழியாது! புகழுடையவனும் அழியமாட்டான்

    ‘அவன் யாரோடும் ஒட்டமாட்டான்’ என்பது உலகியல். பொருளதிகாரத்தில் இது இகல். அதாவது இரு மன்னர்களும் போர்க்களத்தில் தமது ஆற்றலை வீணாக்குவதற்கு ஏதுவான கருத்து மாறுபாடு அல்லது பகையுணர்வு. விட்டுக் கொடுத்தல் என்பது அதற்கு எதிர்மறை. இந்தப் பகையுணர்வை நீக்கியார்க்கு அழியாத புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். இந்தக் கருத்தினை உள்ளடக்கிய,

    “இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்  தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்” (853)

    என்னும் குறட்பாவிற்குப் பரிமேலழகர்,

    “மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்றும் நீக்குமாயின் அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கு  ஏதுவாய்ப் புகழைக் கொடுக்கும்”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அழிவில்லாத புகழைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘எஞ்ஞான்றும் உளன் ஆதற்கு ஏதுவாய’ என்பதற்கான சொற்கள் குறட்பாவில் இல்லை. ‘தவல் இல்லாமை’ என்பதற்கு ‘அழிதல் இல்லாமை’ என்பது பொருள். ‘எக்காலத்தும் உளதாதல் இன்றி ‘அழிதல் இல்லாமை’ கூடாது. எனவே ‘தவலில்லா’ என்னும் புகழுக்கான அடைமொழியால் ‘எக்காலத்தும் உளனாதற்கு ஏதுவாய’ என்னும் உரியவனுக்கான அடைமொழி அருத்தாபத்தியான் பெறப்பட்டது. அதாவது புகழுக்குரிய பண்படை புகழைச் செய்தவனுக்கும் அடையானது அருத்தாபத்தியின் பொருட்கொடை என்க. இதனைத்,

    ‘தவலில்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று’

    என்னும் தொடரால் விளங்க வைக்கிறார் பரிமேலழகர்.

    மறந்தவர் தானே  நினைக்க முடியும்?

    கண்ணதாசன் கண்ட தலைவி தன் மனத்தைப் பார்த்து ஒரு வினா தொடுக்கிறாள். அது ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பதாகும். திருவள்ளுவர் கண்ட தலைவியோ உண்மையில் தன்னை எப்போதும் தன் நினைவில் வைத்திருந்த தலைவனை அவன் மறந்ததாகப் பொய்யாகக் கற்பித்து ஊடுகிறாள். காரணம் ஊடுதல் கூடுதலின் அடர்த்தியை அதிகரிக்கும் என்பது இருவருக்கும் தெரியும். குறிப்பாகத் தலைவிக்குத் தெரியும்.  கூடி மகிழாமல் இவ்வாறு ஊடிப் பொழுதை வீணாக்குவது ஏன் என்று வினவிய தோழியிடம் தலைவன் சொல்கிறான்,

    “உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்றென்னை
    புல்லாள் புலத்தக் கனள்” (1316)

    என்பது தலைவன் கூற்று!

    தலைவன் கருத்து (பரிமேலழகரின் பொழிப்புரை)

    “பிரிந்த காலத்து நின்னை இடையீடின்றி நினைத்தேன் என்னும் கருத்தால் ‘உள்ளினேன் என்றேன்’ (என அதனை (அவ்வாறு நான் சொல்லியதனை) ஒரு கால் மறந்து பின்நினைந்தேன் என்றதாகக் கருதி) “என்னை இடையே ஏன் மறந்தீர் என்று சொல்லி முன் புல்லுதற்கு (கூடுதற்கு) அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு (ஊடுதற்கு)” அமைந்தாள்’

    அருத்தாபத்தியால் அளந்த இடம்

    காமத்துப்பால் முழுமையும் நாடக வழக்கு. திருவள்ளுவர் இந்த இருபத்தைந்து அதிகாரங்களிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டு அகத்திணை மாந்தர்களைப் பேச வைத்திருக்கிறார். இந்த நுட்பத்தை அறிந்த பரிமேலழகர் தலைமக்கள் மற்றும் தோழி கூற்றாகவே இந்த அதிகாரத்திற்கு உரை எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டில் அருத்தாபத்தி அளவையைப் பரிமேலழகர் நேரடியாகத் தான் கண்டதாகக் கூறாமல் தலைவி கண்டதாகக் கூறுகிறார். இது மிகப்பெரிய நுட்பம்.

    தலைவன் “எப்பொழுதும் நினைத்தேன் என்கிறான். மறந்தால்தானே நினைக்க வேண்டி வரும்? அப்படியானால் என்னை மறந்தது ஏன்?’ என்று ஊடுகிறாளாம் தலைவி.

    ‘அவன் எழுந்தான்’ என்றால் விழுந்தது பெறப்படும் அல்லவா? குமரகுருபரர் பேசினார் என்றால் அதற்குமுன் அவர் ஊமையாக இருந்தார் என்பது பெறப்படும். அதுபோலத் தலைவன் ‘நினைத்தான்’ என்றவுடன் ‘ஏன் மறந்தீர்’ என்பது தலைவி தலைவனை அளந்த அருத்தாபத்தி. தலைவி ஊடுதற்கும் இந்த அருத்தாபத்தி உதவியிருக்கிறது என்பதுதான் சிறப்பு!.

    நிறைவுரை

    ‘அருத்தாபத்தி’ என்னும் அளவை தத்துவ விசாரணைக்கும் சமயக் கோட்பாடுகளுக்குமானது. அதனை இலக்கிய உரையில் தேவையான இடத்தில் பயன்படுத்தி மூலப்பொருளைத் துல்லியமாக விளக்கியதுதான் பரிமேலழகரின் உரைத்திறன்!. திருக்குறளுக்கான ஏனைய உரைகளில் இவ்வாறு அளவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து சொல்வது கற்பார் கடன்!

    (தொடரும்…)

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 26 (வேலன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 26 (வேலன்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியச் சிறுபாத்திர வரிசையில் முத்தாய்ப்பாக இடம் பெறுபவன் வேலன். அவன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்;  தாயிடமும்  தலைவனிடமும் பேசுகின்றனர். தலைவன் தேர்ப்பாகனிடம் பேசும் போது அமையும் பின்புலத்திலும் வேலன் இடம் பெறுகிறான்.

    தலைவியும் தோழியும் நல்கும் சிறுபாத்திரத் தகுதி

    “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” (நற்.- 34)

    என்று தோழி பேசுங்கால் வேலன் வெறியாட்டின் போது அணங்காகிய முருகனிடம் வேண்டியமை பற்றிக் கூறுகிறாள். அதுபோல் வேலன் பொதுவாகச் சொல்லும் காரணம் பற்றியும் தலைவனிடம் பேசுகிறாள் (நற்.- 273, 322; குறு.- 111; ஐங்.- 246).

    வெறியாட்டு நிகழ்ந்த நாளின் நள்ளிரவில் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வந்து தலைவியுடன் கூட; நோய் நீங்கிய தலைவி;

    “ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே” (அகம்.- 22)

    சிரிக்கிறாள். அயலானாகிய வேலனின் பாட்டிற்கும் இசைக்கருவிகளின் தாளத்திற்கும் ஏற்பத் தன்னிலை இழந்து தான் ஆடியதை எண்ணி நகைதோன்றத் தோழியிடம் எடுத்துக் கூறுகிறாள். தலைவி கூறும் வேலனின் செயலும் பேச்சும் பிற பாடல்களிலும் உள்ளன (குறு.- 360).

    “அறியா வேலன் வெறி எனக் கூறும்” (ஐங்.- 243)

    என்று தோழி தாயிடம் கூறுவதாலும் வேலன் சிறுபாத்திரத்தகுதி பெறுகிறான். வேலன் வெறியாட்டை அடியொட்டி அமைந்துள்ள வெறிப்பத்துப்  பாடல்களில் தோழி வெறி விலக்கி அறத்தொடு நிற்கும் போதெல்லாம்    வேலன் இடம் பெறுகிறான்.  (ஐங்.- 241, 244, 249).

    தலைவன் தேர்ப்பாகனிடம்; தன் மனைவி தோழியோடு பேசக்கூடியது பற்றி உரையாடும் போது; வேலன் வெறிக்களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பது போன்ற மணம் மிகுந்த மழைக்காலத்துக் காடு பின்புலமாக வருணிக்கப்படுகிறது (அகம்.- 114).

    வேலனின் சிறப்பு

    “முதுவாய் வேலன்” (நற்.- 282; அகம்.- 388);

    “ஊர்முது வேலன்” (ஐங்.- 245)

    என்றெல்லாம்; அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது வேலனின் பாத்திரப்படைப்பைத் தெளிவாக்குகிறது. காலங்காலமாக அவன் முருகனுக்கு வெறி அயரும் தகுதி உடையவன் மட்டுமல்லன்; கழங்கு உருட்டிக்; கட்டுவிச்சியின் குறியாகிய  ‘தலைவியின் நோய் முருகன் அணங்கியதால் நேர்ந்தது’ என்பதை முடிபாகக் கூறுபவன். அதனால்; ‘முது’, ‘முதுவாய்’ என்னும் அடைமொழிகளுக்கு உரியவன் ஆகிறான்.

    “மெய்ம்மலி கழங்கின் வேலன்” (நற்.- 268)

    என அவன் கழங்கு மூலம் நிறுவிய  முருகணங்கு பற்றிப் பிற பாடல்களும் கூறுகின்றன (நற்.- 282; ஐங்.- 245, 248).

    வெறியாட்டின் வருணனை

    மலைப்புறத்துச் சிறுகுடியின் மன்றத்து வேங்கைமரம் பொன் வண்ணப் பூக்களை உதிர்த்திருக்கும் முற்றத்தில் விழா அயரும் குறவர் குடியின் மூத்த பெண்டிர் சேர்ந்து குரவையாடிய இடம் போன்று; வெறியாட்டிற்குரிய களம் மிகுந்த பூப்பலியால் பொலிந்து தோன்றும்   எனத் தோழி தலைவியிடம் பேசுபவள் போலத் தலைவனிடம் பேசி; உடன் திருமண ஏற்பாடு செய்யத் தூண்டுகிறாள் (அகம்.- 232).

    வேலன் வெறிக்களத்தில் மிகுந்த பூக்கள் சிதறிக் கிடப்பது உவமையிலும் எடுத்துரைக்கப்படுகிறது (அகம்.- 182).

    இசைக்கருவிகள் அனைத்தும் சேர்ந்து ஒத்த இசையெழுப்ப; அவற்றுடன் இயையும்படி முருகப்பெருமானைப்  புகழும் பாடலைப் பாடும் வேலன் வெண்போழ்கடம்பைச் சூடிக்கொண்டு; கைகளைப் பொருத்தமாக வீசி ஆட அகன்ற பந்தல் இடப்பட்டு இருந்தது (அகம்.- 98). மறியறுத்த குருதியளைந்து செந்தினை படைக்கப்பட்டது (அகம்.- 22). அத்துடன் செந்நெல் வெண்பொரியும் படைத்தனர் (குறு.- 53). முருகனுக்குரிய படிமமும் செய்து வைத்து வெறி ஆடியமை;

    “கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி” (ஐங்.- 245)

    என்ற தோழியின் வருணிப்பில் இடம் பெறுகிறது. உரையாசிரியர் கன்னம் என்பதைப் படிமம் என்கிறார்.

    உயிர்ப்பலித் தடுப்பும் வாதமும் 

    வேலனுக்கு உரிய வெறியாட்டுக் களத்தை அழகுபடுத்தி; முருகனைப் போற்றிப் பாடிப்; படையல்களும்  அறுப்பதற்குரிய ஆடும்  தயாராக இருக்க;

    “… … … பல்பிரப்பு இரீஇ
    அறியா வேலன் தரீஇ அன்னை
    வெறியயர் வியன்களம் பொலிய ஏத்தி
    மறி உயிர் வழங்கா அளவை” (அகம்.- 242)

    விரைந்து இவளை மணந்து கொள் என்று தலைவனிடம் தோழி கூறும் போது; ஆட்டைப் பலியிடுவதன்  முன்னர் செயல்படுவாயாக என்று  தூண்டுகிறாள்.

    அன்னை வெறியாட்டு நிகழ்த்த மிகுந்த பொருட்செலவு செய்தாள். சிறுமறியை முருகனுக்குப் பலியிடத்  தயாராக வைத்திருந்தாள்.

    “அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென்முறிச்
    சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ
    மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறிபுரி
    ஏதில் வேலன் கோதை துயல்வரத்
    தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்” (அகம்.- 292)

    என்று தலைவி பகுத்தறிவுவாதி போலப் பேசுகிறாள். வெட்டிய ஆட்டை எடுத்துச் செல்லப் போகிறவன் வேலனே என்பது அவளது பதைப்பில் தெரிகிறது. தன்னுடைய  களவொழுக்கம் பற்றி அறியாத அயலவனாகிய வேலன் ஒரு ஆட்டுக்குட்டிக்காக அதைத் தாயிடமிருந்து பிரித்துக் கொல்ல; தன் கழுத்தில் கோதை தொங்க ஆடிப் பாடி; ‘முருகு அணங்கினள்’ என்று சொல்லப்போவதை எண்ணி வெட்கப்படுவதாகக் கூறுவது நோக்கத்தக்கது.

    வெறியாட்டில் பங்கேற்கும் தலைவியின் நிலை

    மேற்சுட்டிய இசையும் தாளமும் பாடலும் ஒருங்கு ஒலிக்க; பூக்களும் பிற பலிகளும் படையலாக இருக்கத்; தனக்கே உரிய மாலையோடும் வேகத்தோடும் வேலன் ஆடத்; தன்வசமிழந்து; பொறி அமைந்த பொம்மை முடுக்கப்பட்டது போலத் தானும் ஆடி நிற்க வேண்டி வரும் என்று அச்சத்தோடு தலைவி வெறியாடலை எதிர்நோக்குவது பற்றித் தோழியிடம் கூறுகிறாள். தலைவி மட்டுமின்றிப் பிற பெண்களும் அந்த இசையால் தன்னிலை அழிந்தனர் என்பதை;

    “…………………………………………..மயங்கிய
    மையல் பெண்டிற்கு நொவ்வலாக
    ஆடிய” (அகம்.- 98)

    என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

    வேலன் வெறியாடுங்கால் தாமும் கட்டுப்படுத்த இயலாமல் ஆடியது பற்றிய தலைவி கூற்று இக்கட்டுரையின் முன்னரும் உள்ளது (அகம்.- 22).

    முடிவுரை

    வேலன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்;  தாயிடமும்  தலைவனிடமும் பேசுகின்றனர்; தலைவன் தேர்ப்பாகனிடம் பேசுகிறான். காலங்காலமாக வேலன் முருகனுக்கு வெறி அயரும் தகுதி உடையவன். கழங்கு உருட்டுவதன் மூலம்; கட்டுவிச்சியின் குறியை முடிபாகக் கூறுபவன் அதனால்; ‘முது’, ‘முதுவாய்’ என்னும் அடைமொழிகளுக்கு உரியவன் ஆகிறான்.

    வெறியாட்டிற்குரிய களம் மிகுந்த பூப்பலியால் பொலிந்து தோன்றியது. இசைக்கருவிகள் எல்லாமாகச் சேர்ந்து ஒத்த இசையெழுப்ப; அவற்றுடன் இயையும்படி முருகப்பெருமானைப் புகழும் பாடலைப் பாடும் வேலன் கடம்பைச் சூடிக்கொண்டு; கைகளைப் பொருத்தமாக வீசி ஆட; அகன்ற பந்தல் இடப்பட்டு இருந்தது. மறியறுத்த குருதியுடன் அளைந்து செந்தினை படைக்கப்பட்டது. அத்துடன் செந்நெல் வெண்பொரியும் படைத்தனர்.  முருகனுக்குரிய படிமமும் செய்து வைத்து வெறி ஆடினர். உயிர்ப்பலித் தடுப்பில் ஈடுபடுபவளாகத் தோழி  திகழ்கிறாள். வேலன் ஒரு ஆட்டுக்குட்டிக்காக; அதைத் தாயிடமிருந்து பிரித்துத்; தன் கழுத்தில் கோதை தொங்க ஆடிப் பாடி; ‘முருகு அணங்கினள்’ என்று சொல்லப்போவதை எண்ணி வெட்கப்படுகிறாள் தலைவி. பொறி அமைந்த பொம்மை முடுக்கப்பட்டது போலத் தலைவியும் வேலனோடு ஆடினாள். களத்திலிருந்த பிற பெண்களும் ஆடினர்.


    பின்னுரை

    2.1.2010 முதல் 11.1.2010 வரை பத்து நாட்கள் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தமிழ்த்துறை; சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையோடு ‘பண்டை இலக்கியப் பாத்திரங்கள்’ என்ற தலைப்பில்  மாணவர்க்கு ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியது. இந்தத் தலைப்பும் அதற்குரிய திட்ட வரைவும் நல்கிய கோணம் அப்போதைய நிறுவன ஆய்வாளர்களை மிகவும் ஈர்த்தது. அதில் என் பங்காக ‘அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினேன். ஒரு மணி நேரம் நான் ஆற்றிய உரைக்காகக் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள்; அதாவது கருத்தரங்கிற்கு அனுமதி கிடைத்த நாள் முதல் அது நடத்தப்பட்ட நாள் வரை; நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்றாடம் அகஇலக்கியங்களைப் படித்துச் சேர்த்த பட்டியலில் பதின்மூன்று சிறுபாத்திரங்கள் இருந்தன. ஓய்வு பெற்ற பின்னர் அவ்வுரைச் செய்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிப்பிக்க  நான் எடுத்த மூன்று முயற்சிகள் தோற்றன.

    எட்டு மாத காலம்  அகஇலக்கியத்தைப் பார்வையிட்டு உழவனும் குயவனும்  ஒரே ஒரு பாடலில் தான் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர் என்றும்; கூற்று நிகழ்த்தும் தகுதி உடைய பார்ப்பான் அகத்தொகை நூல்களில் பேசவே இல்லை என்றும்; கூற்று நிகழ்த்தும் தகுதி பெறாத பாகன்  ஒரு பாடலில் நேரடியாகக் கூற்று நிகழ்த்துகிறான் என்றும்; நான் சொல்ல வந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முன்னிலையாரும்  சில மாதங்களாவது அகஇலக்கியமே குறியாகப் பயில வேண்டும் அல்லவா?! அதற்கு வழியில்லாமல் போனதால் தான் இதைத் தொடர் கட்டுரைகளாக எழுத முடிவு செய்தேன்.

    வலை உலகில் நுழைந்த பிறகு http://tamilconcordance.in/TABLE-sang.html  தளம் பற்றிய அறிமுகம் கிடைத்ததால் நான் சேகரித்திருந்த தரவுகளைச் சரிபார்க்க முடிந்ததுடன் மட்டுமன்றி; அப்பட்டியல் பதின்மூன்றிலிருந்து இருபத்தாறாக நீண்டது. இதுவே முடிபு; இதற்கு மேல் இல்லை என்று சொல்ல மாட்டேன். அதுகாறும் தெரிந்து கொள்ளாத புதுச்செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அத்தளத்திற்கு நன்றி.

    விடுபட்ட முரண்பட்ட கருத்துகளும் உள்ளன. பாகனுக்குப் பேசும் வாய்ப்பைத் தொல்காப்பியம் கொடுக்கவில்லை. ஆனால் பாகன் கூற்றில் அமைந்த பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது (பா.- 121). தொல்காப்பியம் ஒரு சாராரின் கொள்கையே அன்றி அது ஒருமித்த விதிகளைச் சொல்லவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

    உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் அகவன்மகளைக் கட்டுவிச்சி என்று குறிப்பிடுவது தவறு. முதுவாய்ப் பெண்டு மட்டுமே கட்டுவிச்சி ஆவாள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அகஇலக்கியத்தைப் படித்துப் பார்த்தால் வேறு சில புதுக்கருத்துகள் தோன்றலாம். பதிப்பித்து உதவிய வல்லமை ஆசிரியர்க்கும் நிர்வாகக்  குழுவினர்க்கும் நன்றி.

    முற்றும்

    Share
  • அக்கரைப் பச்சை (சிறுகதை)

    அக்கரைப் பச்சை (சிறுகதை)

    பாஸ்கர்

    கிட்டத்தட்ட நாலு மணி நேர பயணம்.

    கொஞ்சம் வண்டிய நிறுத்த சொல்லுப்பா

    ஏன் பா.

    இன்னும் பத்து நிமிஷ பிரயாணம் .அக்ரகாரம் வந்துடும்

    இல்லடா, நீங்க போங்க.

    கொஞ்ச நேரம் கண்மாயில உட்கார்ந்துட்டு வரேன்

    இறங்கி வேட்டியை இறுக்க கட்டி கையில் இருந்த கைபேசியை மகனிடம் கொடுத்தேன்.

    தலையில் முண்டாசு கட்டி கொண்டு நீ கிளம்பு.

    நான் நடந்தே வரேன் என்றேன்.

    சுமார் இருபது வருஷங்கள் முன்பு இங்கு வந்தது.

    கட்டிடம் எல்லாம் மறந்தே போயின.

    பஞ்சாயத் ஆபிஸ் மூன்று மாடி கட்டிடமாகி நிற்கிறது.

    ஆனால் தெருக்கள் மாறவே இல்லை.

    குளக்கரை படிக்கட்டுகள் எல்லாம் உடைந்து போய் நீர் மறந்து நின்றது.

    யார் முகமும் சட்டென தெரியவில்லை .

    வக்கீல் வீட்டு வாசல் ஊஞ்சலை காணவில்லை

    தெருக்கிணறு பக்கம் நாலு வெண்கல குடங்கள்

    தாறுமாறாய் இருந்தன.

    அது பெரிய உறை கிணறு. நிச்சயம் நீர் இருக்கும் .

    மஞ்சள் சாணம் தெளித்த செட்டியார் வீடு அப்படியே இருக்கிறது.

    அப்புறம் போய் அரச மரத்தை பார்க்க வேண்டும்.

    மாலை ஆறு மணிக்கு நானும் அவளும் அது சந்தித்து கொள்ளும் இடம்.

    ஒரே நாளில் பிரிந்த உறவு.

    அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு.

    இதே போர்ட் ஸ்கூல் தான்.

    வணக்கம் சார் என்றார் ஒருவர்.

    யாரென தெரியவில்லை. உங்க பேரு அய்யா என கேட்டேன்.

    சார் என்னா சார், நான் பச்சை என்றான்.

    குழம்பி நின்றேன். சார் பேக்கடையை சுத்தம் செய்ய வருவேனா சார்.

    மன்னிச்சுக்குப்பா.

    எனக்கு உடனே பிடிபடவில்லை என்றேன்.

    சிரித்தபடி சென்று விட்டான். இங்க இப்ப டீ கடை உண்டா?

    இருக்கு சார். மூணாவது தெரு.

    ஆனா பெஞ்ச் எல்லாம் இல்லை.

    மல்லி காபி தான். பில்ல காபியெல்லாம் இல்லை

    சரிப்பா

    சார் எனக்கு சைக்கில் வாடகைக்கு கிடைக்குமா என எதிரில் இருந்த கடையில் கேட்டேன்.

    உங்களை தெரியாதே என்றார் ஒருவர்.

    பழைய தாசில்தார் வீடு. அவர் எங்க அப்பா தான்.

    அய்யயோ, இந்தாங்க. இது அவர் கடை. எங்கப்பாவும் போயிட்டாரு.

    உங்கப்பா போன நாலாம் மாசம்.

    அச்சோ, அவர் பேரு என்ன?

    மறந்து போயிட்டேன்.

    பாளையம் சார் என்றார் .

    வண்டிய ஓட்ட முடியவில்லை.

    கொஞ்ச நேரம் தள்ளி கொண்டு போனேன்.

    திரும்பவும் ஓட்ட முயற்சி செய்த போது மூச்சு வாங்கியது.

    பையன் எதிரில் வந்து விட்டான்.

    இதெல்லாம் எதுக்குபா? நீயே மாத்திரை போடற ஆள்.

    லீவ் மீ. நான் இனிமே இங்க தான் இருக்க போறேண்டா.

    அப்பா எட்டு நாள் மொத்த லீவு.

    இத மாதிரி எதனா யோசிக்காதே.

    நீ நடந்து போ.

    எந்த பக்கம் கடை என கேட்டான்.

    இரவு தூக்கம் எனக்கு பிடிபடவில்லை. மாத்திரை போட்டும்.

    காலை எழுந்து முதலில் சென்றது வயக்காட்டுக்கு.

    சுமார் இரண்டு மணி நேரம்.

    வெயில் கம்மி

    டீ கடை திறக்கவில்லை.

    பேப்பர் கடை பக்கத்தில் இல்லை.

    நடந்து சென்ற ஒரு கடையில் தினத்தந்தி மட்டும் இருந்தது.

    கிங்க்ஸ் இல்லை. சார்ம்ஸ் தான் என்றார் கடைக்காரர். வேண்டாம் என்றேன்.

    கைபேசியை எடுத்தால் சார்ஜும் கம்மி,

    தொடர்பு இல்லாத இடமாய் இருந்தது.

    வைபிக்கு வசதியும் இல்லை.

    எங்கள் பழைய வீட்டில் வெஸ்டன் கழிப்பறை வசதியும் இல்லை.

    அசதி வேறு. கொஞ்சம் தள்ளாமையில் நடந்து வந்தேன்.

    வாப்பா சாப்பிடலாம் என்றான் மகன்.

    இருக்கட்டும் , உனக்கு எப்படா லீவு முடியறது என கேட்டேன்.

    ஏம்பா?

    கிளம்பலாம் எப்பவேணாலும் .

    Share
  • குறளின் கதிர்களாய்…(331)

    குறளின் கதிர்களாய்…(331)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(331)

    இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
    னில்லவள் மாணாக் கடை.

    – திருக்குறள் -53 (வாழ்க்கைத் துணைநலம்)

    புதுக் கவிதையில்...

    நல்ல குணமும்
    நல்ல செயலும்
    கொண்ட
    மாண்புடையளாய் ஒருவனுக்கு
    மனைவி அமைந்துவிட்டால்,
    அவனுக்கு வாழ்க்கையில்
    இல்லாதது எதுவுமில்லை..

    மாண்பற்றவளாய் அவள்
    அமைந்துவிட்டால்,
    அவன் வாழ்வில்
    உள்ளதென்பது
    எதுவுமே இல்லை…!

    குறும்பாவில்...

    மாண்புடைய மனைவி அமைந்துவிட்டால்
    வாழ்வில் ஒருவனுக்கு இல்லாதது எதுவுமில்லை,
    அமையாவிடில் உள்ளதென்பது ஏதுமில்லை…!

    மரபுக் கவிதையில்...

    குணமது நல்லதாய்க் கொண்டவளாய்க்
    குன்றிடா மாண்பது உடையவளாய்
    அணங்கவள் மனைவியாய் அடைந்தவன்தான்
    அவனியில் வாழ்வதில் விரும்புகின்ற
    கணக்கிலாப் பேறெலாம் பெற்றேயவன்
    கையினில் இலாதது எதுவுமில்லை,
    பிணங்கிடும் மனைவியைப் பெற்றவன்தான்
    பெற்றவை அனைத்துமே இலையெனாமே…!

    லிமரைக்கூ..

    வாய்த்தால் மாண்புடையவளாய் இல்லாள்,
    அவனிடம் இல்லாதெதுவுமில்லை, உள்ளதென்பதும்
    இல்லாததாகும் வந்தமைந்தால் பொல்லாள்…!

    கிராமிய பாணியில்...

    அமையணும் அமையணும்
    நல்லதா அமையணும்,
    வாழ்கத்தொண நல்லதா அமையணும்..

    நல்ல கொணத்தோட
    நல்லவளா பொஞ்சாதி அமைஞ்சவனுக்கு
    வாழ்க்கயில
    இல்லாதது எதுவுமே இல்ல..
    அது அமையாதவனுக்கு
    உள்ளதுங்கிறதும்
    எதுவுமே இல்லதான்..

    அதுக்கு
    அமையணும் அமையணும்
    நல்லதா அமையணும்,
    வாழ்கத்தொண நல்லதா அமையணும்…!

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 6

    அண்ணாகண்ணன் காணொலிகள் 6

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    பவழமல்லி பூத்தது

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் பவழமல்லி பூத்துள்ளது. மகிழ்ச்சி.

    வெட்சிப் பூவில் வண்ணத்துப்பூச்சி

    இட்லிப் பூ என அழைக்கப்படும் வெட்சிப் பூவில் வண்ணத்துப்பூச்சி தேனருந்தும் அற்புதக் காட்சி.

    பொன்முதுகு மரங்கொத்தி

    பொன்முதுகு மரங்கொத்தியை இன்று முதல் முறையாகக் கண்டேன். நம் வீட்டு வேப்பமரத்தில் சிறிது நேரம் இளைப்பாறியது.

    Loten’s Sunbird | Purple Sunbird 2

    நம் தோட்டத்தில் இன்று கண்ட ஊதா தேன்சிட்டு.

    Black Drongo

    கரிச்சான் | இரட்டைவால் குருவி | கரிக்குருவி | ஆனைச்சாத்தன்

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 288

    படக்கவிதைப் போட்டி – 288

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் ராமலக்ஷ்மி எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தில் இருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (13.12.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 21

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 21

    -மேகலா இராமமூர்த்தி

    இராமன் பதற்றத்தோடும் கவலையோடும் இலக்குவனும் சீதையும் தங்கியிருக்கும் இலைக்குடில் நோக்கி விரைந்துவந்துகொண்டிருந்த வேளையில் ஆங்குச் சீதையின் நிலை என்ன என்பதைக் கவனிப்போம்.

    மாரீசன் இராமன் குரலில் ”சீதா! இலக்குவா!” என்று கத்திவிட்டு உயிர்நீத்ததால் சீதை கலக்கமடையக் கூடும் என்று இராமன் ஊகித்ததுபோலவேதான் நடந்தது. இராமனின் ஓலக்குரல் காதில் விழுந்ததும் துணுக்குற்ற சீதை, இராமனுக்கு ஏதோ பேராபத்து நேர்ந்துவிட்டது என்றெண்ணி மயங்கிக் கீழே விழுந்தாள்.

    இடியுண்ட நாகம்போல் துன்புற்ற அவள், மானைப் பிடித்து வா என்று ஏவி, கணவனோடு கூடிவாழும் நல்வாழ்வைப் பேதையாகிய நான் முடித்துக்கொண்டேனே என்று வருந்தினாள். அருகில் எவ்விதப் பதைபதைப்பும் இன்றி இலக்குவன் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தவள் வெகுண்டாள்.

    ”எவ்விதக் குற்றமுமற்ற என் தலைவன் இராமன் அங்கே அரக்கரின் வஞ்சத்தால் வீழ்ந்துபட்டது கண்டும், அவருடைய தம்பியாம் நீ ஒருவனும் அசையாது நிற்கின்றாய்! என்று சீறினாள்.

    குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
    மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்
    இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்
    நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள்.
    (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3420)

    ”தன் கணவனுக்குத் துன்பம் நேர்வதை இலக்குவன் விரும்புகின்றான்” என்ற உட்பொருள் தொனிக்கும் வகையிலும் ”இவனும் இராமனுக்குத் தம்பி” என்ற எள்ளல் குறிப்போடும் இவ்விடத்தில் சீதையின் பேச்சை நுட்பமாக அமைத்திருக்கின்றார் கம்பர்.

    அதைக்கேட்ட இலக்குவன், ”அன்னையே!  அண்ணனை வெல்லக்கூடிய வலிமை வாய்ந்தோர் யாரும் இப்பூவுலகில் இல்லை; வீணாகக் கவலைப்படாதீர்கள்! அண்ணன் என்னை உங்களுக்குக் காவலாக இங்கேயே இருக்கச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார்; அவர் ஆணைப்படி நடப்பது என் கடமை!” என்று மொழிந்தான்.

    அதைக் கேட்டுக் கொதித்தெழுந்த சீதை, இலக்குவனின் நடத்தையைச் சந்தேகித்து அவனை மிக அநாகரிக மொழிகளில் ஏசத் தொடங்குகின்றாள் மூலநூலான வான்மீகத்தில்!

    ”சுமித்திரையின் மைந்தனே! இராமனின் தோழன்போல் பாசாங்கு செய்துகொண்டு எங்களோடு வனத்துக்கு வந்தாய். இப்போது என் கணவர் ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அதை வரவேற்பவன்போல் நின்றுகொண்டிருக்கிறாய். ஏனென்று கேட்டால்… அவர் ஆணைப்படி இங்கேயே காத்திருப்பேன் என்று கூறுகின்றாய். உன் நோக்கம் எனக்குப் புரிந்துவிட்டது. என் கணவர் இறந்துபட்டதும் என்னை உனக்கு உரியவள் ஆக்கிக்கொள்வது உன் திட்டம்; அஃது ஒருநாளும் நிறைவேறாது! நீ மட்டும் இப்போது இங்கிருந்து புறப்பட்டு என் கணவரைக் காக்கப் போகாவிட்டால் நான் இப்போதே கோதாவரியில் குதித்து என்னை மாய்த்துக்கொள்வேன்!” என்கிறாள்.

    தமிழ் மரபுக்கேற்ற வகையில் தேவையான இடங்களிலெல்லாம் இராமகாதையில் மாற்றங்கள் செய்துவரும் கம்பர், இங்கே வரம்புகடந்து செல்லும் சீதையின் அநாகரிக மொழிகள் அவளுக்குப் பெருமை தரா என்று கருதி, அப்பேச்சின் நீளத்தைக் குறைத்ததோடல்லாமல் அவள் பேசுகின்ற சொற்கள் கோபத்திலும் நாகரிகத்தோடு வெளிப்படும் வகையில் மாற்றியமைத்துவிட்டார்.

    கம்பர் படைத்த சீதை இலக்குவனிடம்,

    ”ஒருநாள் பழகினவராயினும் உண்மையான அன்புடையார் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவுவர். ஆனால் நீயோ ஆண்களில் சிறந்தவனான இராமனுக்குத் துன்பம் வந்திருக்கின்றது என்பதைக் காதால் கேட்டும் அதற்காகச் சிறிதும் அஞ்சவில்லை. இனி எனக்கு வேறொரு வழியும் தெரியவில்லை; நான் இவ்விடத்திலேயே எரியில் விழுந்து சாகின்றேன்!” என்கின்றாள்.

    ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
    பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ
    வெருவலை நின்றனை வேறு என் யான் இனி
    எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா.
      (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3429)

    சீதையை நெருப்பில் விழாமல் காக்கும்பொருட்டு அவள் திருவடி தொழுத இலக்குவன், ”உங்கள் கட்டளையை ஏற்று நான் அண்ணனைத் தேடிப் போகின்றேன். விதி நம்மை மிகுந்த கோபத்தோடு சோதிக்கின்றது. நான் மனம் வெந்து, நெஞ்சு நொந்து இங்கிருந்து போகின்றேன்!” என்று கூறியவாறு புறப்பட்டான். சீதைக்கு ஏதேனும் தீங்குநேருமாயின் அப்பகுதியில் வசிப்பவனான கழுகரசன் சடாயு தன்னாலியன்ற அளவு காப்பான் என்ற எண்ணம் இலக்குவன் மனத்தில் தோன்றவே, அதைச் சீதையிடம் வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றான்.

    அதற்காகவே அங்கே மறைவாகக் காத்திருந்த இராவணன், திரிதண்டம் ஏந்திய தவசி வேடம்பூண்டு, தன் நெஞ்சகத்தில் குடியிருந்த வஞ்சக எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு இலைக்குடில் நோக்கி வந்தான்.

    திரிதண்டம் என்பது மூன்று தண்டுகளை உடையது. காமம் வெகுளி மயக்கம் எனும் மும்மலங்களையும் வென்றவர்கள் கையில் ஏந்துகின்ற முக்கோல் அது. அதனை ஏந்தியவர்களை ’முக்கோற் பகவர்’ என்று குறித்தனர் நம் முன்னோர்.

    போலி சந்நியாசியான இராவணன், முக்கோலுடன் இளைத்த மேனியனாய், பூணூல் அணிந்த மார்பினனாய், கூன்விழுந்த முதிய வடிவினனாய், சாம வேதம் இசைத்துக்கொண்டு, ஓர் அந்தணத் துறவி வடிவில் இலைக்குடிலின் வாயிலுக்கு வந்து “இங்கே இருப்பது யார்?” என்று நா நடுக்குற வினவினான்.

    முதிய சந்நியாசி ஒருவர் குடில் வாயிலில் நிற்பதுகண்ட சீதை, அவரை ”உள்ளே வாருங்கள்” என்று அன்போடு வரவேற்றாள்.   

    இதுவரை உருவெளியாகக் கண்டு வந்தவளின் திருவுருவை முதன்முறையாக நேரில் கண்டான் இராவணன். குயிலின் குரலோடும் தேவலோக மங்கையரினும் விஞ்சிய அழகோடும் நின்றிருந்த அவளைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இராவணனின் வீரத்தோள்கள் ஒருகணம் பூரித்தன; மறுகணம் அவளை அடைவது எங்ஙனம் என்ற ஏக்கத்தில் மெலிந்தன என்கிறார் கம்பர்.

    தூங்கல்இல் குயில் கெழு
         சொல்லின் உம்பரின்
    ஓங்கிய அழகினாள்
         உருவம் காண்டலும்
    ஏங்கினன் மன நிலை யாது
         என்று உன்னுவாம்
    வீங்கின மெலிந்தன
         வீரத் தோள்களே. (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3443)

    சீதையின் அழகெனும் தேனை இராவணனின் கண்களாகிய வண்டுகள் அள்ளிப் பருகின. திருமகளையொத்த இவளைக் கண்டுமகிழ எனக்கு இருப்பவை இருபது கண்கள்தாமே; ஆயிரம் இல்லையே என்று வருந்தியது ஆசைக்கடலில் தத்தளித்த அவனுள்ளம்!

    அவன் வஞ்ச உள்ளத்தை ஓராத வஞ்சியாள் சீதை, அவனை வரவேற்று பிரம்பு இருக்கையில் அமரச்செய்தாள். அமர்ந்தவன் இந்த இலைக்குடிலில் உறைபவர்கள் யார் என்று அது குறித்துத் தான் ஏதுமறியாதவன்போல் சீதையை விசாரிக்கவே, ”பழைமையான இட்சுவாகு குலத்தில் தோன்றிய தயரதனின் மகன் தம் தம்பியோடு, தம் அன்னையின் விருப்பப்படி, இங்கே உறைகின்றார். அவரைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடுமே?” என்றாள் அவள்.

    ”கேள்விப்பட்டிருக்கின்றேன்; ஆனால் நேரில் கண்டதில்லை. மருதவளம் நிறைந்த அயோத்தி பக்கம் ஒருமுறை போயிருக்கிறேன்” என்றுரைத்த துறவு வேடத்தான், ”வாள்போலும் நீண்ட கண்களையுடையவளே! நீவிர் யாருடைய மாமகள்? வாழ்வின் அரிய நாட்களை ஏன் இந்தக் கொடிய காட்டிடை கழிக்கின்றீர்? என்று கேட்டான் சீதைக்காகத் தான் பெரிதும் வருந்துபவன்போல் காட்டிக்கொள்ள!

    நும்மையொத்த குற்றமிலாத் தவசீலர்களையே தெய்வமெனக் கருதும் சனகனின் மகள் நான்; என் பெயர் சானகி. காகுத்தன் மரபில் வந்த இராமனின் மனைவி என்று தன்னைப் பற்றிச் சொன்னாள் பொற்புடைக் கற்பினளாகிய சீதை.

    அனக மா நெறி படர்
         அடிகள் நும் அலால்
    நினைவது ஓர் தெய்வம் வேறு
         இலாத நெஞ்சினான்
    சனகன் மா மகள் பெயர்
         சனகி காகுத்தன்
    மனைவி யான் என்றனள்
         மறு இல் கற்பினாள் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3455)

    சொல்லிவிட்டு, “பெருமூதாளராய் இருக்கும் நீவிர் இந்தக் கொடிய காட்டிற்கு எங்கிருந்து வருகின்றீர்?” என்று வந்திருந்தவரைப் பார்த்து வினவினாள் பரிவோடு.

    இராவண சந்நியாசி தான் அங்குவந்த காரணத்தை விளக்கத் தொடங்கி்னான்.

    ”இந்திரனுக்கு இந்திரனாகவும், ஓவியத்தில் எழுதவொண்ணாச் சுந்தரனாகவும், அனைத்து உலகங்களையும் வென்றவனாகவும் விளங்குகின்ற நான்முகன் மரபில் வந்த மாவீரன் ஒருவன் இருக்கின்றான். அவன் சிவனார் உறையும் கைலாய மலையைப் பெயர்த்தெடுக்கும் ஆற்றலான்; தேவர்கள் ஏவல்செய்யும் கடல்சூழ் இலங்கையை ஆளுகின்றவன்; நல்லொழுக்கமுடையவன்; விரிந்த வேதங்களை ஓதி உணர்ந்தவன்; அனைத்துலகிலுமுள்ள அழகிற் சிறந்த மங்கையரெல்லாம் அவன் அருளுக்காக ஏங்கி நிற்க, அவனோ தன் மனத்துக்கினியாளைத் தேடுகின்றான்.

    அந்த அற்புதத் தலைவன் ஆட்சிபுரிகின்ற இலங்கை மாநகரில் சிலகாலம் தங்கியிருக்கச் சென்றேன்; ஆனால் அவனைப் பிரிய மனமின்றி அங்கேயே நெடுங்காலம் தங்கிவிட்டேன்; பிறகு இங்கு வருகின்றேன்” என்று வேண்டிய அளவுக்கு இராவணனின் சிறப்புக்களை விதந்தோதி, சீதையின் மனத்தில் இராவணன் குறித்த நல்லெண்ணத்தை விதைக்க விழைந்தான் அந்தப் போலித் துறவி.

    ஆனால் சீதை அடுத்துத் தொடுத்த வினாவோ அந்தத் துறவியின் எண்ணத்திற்கு நேர்மாறாய் இருந்தது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • பழகத்தெரிய வேணும் – 46

    பழகத்தெரிய வேணும் – 46

    நிர்மலா ராகவன்

    உழைப்பும் சவாலும்

    உத்தியோகத்திற்கான பேட்டி ஒன்றில்:

    “இந்த வேலையில் சேர்ந்தால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்குமே!” என்று சவால்விட்டார் அதிகாரி.

    “கடுமையான உழைப்பு யாரையும் சாகடித்தது கிடையாது!” இப்படிச் சொன்னவருக்கு வேலை கிடைத்தது.

    `முயற்சி செய்கிறேன்,’ என்று சொல்லியிருந்தால், அது அரைமனதான பதிலாக இருந்திருக்கும் — `பார்க்கலாம்,’ என்று தட்டிக்கழிப்பதுபோல்.

    ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒத்துக்கொள்பவர், `சரி,’ அல்லது `இப்போது முடியாது,’ என்று கூறினால், அவர் முழுமனதுடன் அதில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையாவது எழும்.

    `எனக்கு அவனைவிடத் திறமை அதிகம். படிப்பிலும் நான் அவனை மிஞ்சியவன்! அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம்!’ என்று தன்னை மிஞ்சிவிட்ட ஒரு நண்பனைப் பார்த்துப் பொருமுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

    அறிவும் திறமையும் முக்கியம்தான். ஆனால், அவற்றை முழுமையாக வெளிக்காட்ட கடும் உழைப்பு வேண்டாமா?

    சிலர் ஒரு காரியத்தை ஆரம்பிப்பார்கள். ஆரம்பித்த வேலை நீண்டுகொண்டே போனால், `இதற்கு என்னதான் முடிவு!’ என்ற அலுப்பு ஏற்படும். அப்போது அரைகுறையாக, எப்படியோ செய்து முடிக்கத் தோன்றிவிடும்.

    வேலை செய்யும் தருணங்களை ரசித்தால், செய்பவருக்கு மகிழ்ச்சி கிட்டும். எடுத்த காரியமும் சிறப்பாக அமையும்.

    பிடிக்கிறதோ, இல்லையோ, செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, முழுமனதுடன் ஈடுபட்டால் செவ்வனே செய்து முடிக்க முடியும்.

    படைப்பவர் ரசித்துச் செய்தால்தான் பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படும். சமையல், இசை, எழுத்து – எதுவாக இருந்தார் என்ன!

    “சமைப்பது என்றால் எனக்கு வெறுப்பு! மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டே, எதற்கு அந்த வேலை!” என்று அலுத்துக்கொள்வாள் என் தோழி ஒருத்தி.

    அவள் சமைத்ததை அன்றாடம் சாப்பிட வேண்டியிருக்கும் குடும்பத்தினரிடம் பரிதாபம்தான் எழுந்தது எனக்கு.

    “நான் எத்தனை வருடங்களாக எழுதுகிறேன்! எனக்கு ஒரு பட்டம்கூடக் கிடைக்கவில்லை,” என்று என்னிடம் குறைப்பட்டார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

    பரிசுகளும், பட்டங்களும் பெறலாம் என்ற நோக்கத்துடன் எழுத ஆரம்பித்தால் அந்த இலக்கே சரியில்லை. எத்தனை கால அனுபவம் இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்று, காலத்திற்கேற்ப எழுதுவது ஒருபுறமிருக்க, எழுதும்போதே மகிழ்ச்சியாக உணர்ந்தால்தான் ஒருவரது படைப்பு சிறப்பாக அமையும். எழுதுபவரது மகிழ்ச்சியும் பிறரை போய்ச்சேரும்.

    எடுத்த காரியத்தை ஒரு சவாலாக ஏற்று, விடாமுயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

    வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு சவால் என்று நினைத்து, அதன்படி செயல்படுகிறார்கள் சிலர்.

    இது அறிவுடைமையா, முட்டாள்தனமா?

    கதை

    சரவணன் ஒரு பெண்ணை மணந்தான். காதல் வயப்பட்டு அல்ல. அவள்மேல் பரிதாபப்பட்டு. அவளுக்கு ஏதோ வியாதி. `நம்மை விட்டால் வேறு யார் இவளை மணக்கப்போகிறார்கள், பாவம்!’ என்று எண்ணினான்.

    மணந்தபின், நோஞ்சானான அவளுடைய உருவத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று.

    கணவனை வார்த்தைகளாலேயே துளைத்தாள் — தான் கிடைத்தற்கரிய பிறவி, அதனால்தான் இந்த முட்டாள் தேடிவந்து மணந்தான் என்றெண்ணியவளாக. `எந்த விஷயத்திலும்’ ஒத்துழைக்கவில்லை.

    மிகவும் குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும் ஆளான சரவணன் என்னிடம் ஆலோசனை கேட்டபோது, “மனைவியாகத் தன் கடமையைச் செய்ய மறுப்பவளுடன் எதற்குச் சேர்ந்து வாழவேண்டும்? இவளை விவாகரத்து செய்ய வேண்டியதுதான்!” என்றேன்.

    “அது பாவமில்ல?” என்று குழம்பியவனிடம், “உங்கள் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லையா? உங்களுக்கு இன்னும் இளமை இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எத்தனை காலம் இப்படியே நொந்துபோய் இருப்பீர்கள்?” என்றேன் வற்புறுத்தலாக. வேறு வழி தெரியவில்லை.

    அப்படியே செய்தான். சில மாதங்களுக்குப்பின், “நீங்க சொன்னபடி செய்தேன். இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன், ஆன்ட்டி,” என்று தெரிவித்தான்.

    பெண்கள் இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வை முறித்துக்கொள்ள மாட்டார்கள்.

    உயிர் போகும் நிலையில் காப்பாற்றப்பட்டு, அந்த மாது மறுவாழ்வு நிலையத்தில் இருந்தபோது சந்தித்தேன்.

    சுமார் முப்பது வருடங்கள் கணவரிடம் வன்முறையைத் தவிர வேறு எதையும் அனுபவித்திராதவள், “அவர் மாறுவாருன்னு பொறுமையா இருந்தேங்க,” என்றாள். அப்போதும் அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு இருக்கவில்லை.

    தன்னம்பிக்கையை இழந்தவர்களிடம் எந்த ஆற்றலையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்குச் சவால் என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தம் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.

    கதை

    கெண்டகி fried சிக்கன் நிறுவனத்தை ஆரம்பித்தபோது, கர்னல் ஸாண்டர்ஸ் என்பவருக்கு 67 வயது. அதற்குமுன், தெரு ஓரத்தில் ஒரு சிறிய உணவுக்கடை வைத்திருந்தார். வேறு ஒருவர் அப்பண்டத்தை விற்றபோது, அதில் குறை கண்டுபிடித்து, அதைவிடச் சிறப்பாகத் தயாரித்து, பெரும் வெற்றி பெற்றார்.

    இளம்வயதில் பண்ணையாளாக, பஸ் கண்டக்டராகப் பணி புரிந்திருந்த ஒருவர் தனது 88-வது வயதில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்த துரித உணவுச் சங்கிலியின் (fast food chain) நிறுவனராக எப்படி ஆனார்?

    தன் திறமையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. பிறர் பாராட்டாவிட்டாலும், பின்வாங்காது தன் இலக்கைக் குறிவைத்துச் சென்றார்.

    கடுமையாக உழைக்கப் பயந்து, பின் வருத்தப்படுவது எதற்காக? வழியில் எத்தனையோ தவறுகள் வந்திருக்கலாம். அவைகளிலிருந்து சரியான வழி எது என்று கற்றிருப்பார்.

    பிறர் பொறாமைப்படுவதற்காகப் பெருமைப்படவேண்டுமே அல்லாது, பயந்துவிடக்கூடாது என்று புரிந்திருப்பார்.

    `கிட்டத்தட்ட தொண்ணூறு வயதிலும் தன் அனுபவங்களையும், திறமையையும் கொண்டு சாதித்திருக்கிறாரே, இவருக்கெல்லாம் உடலில் அப்படி ஒரு பலமா!’ என்ற பெருவியப்பு எழுகிறதா?

    மனிதனோ, மிருகமோ, என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பது என்பது நடக்காத காரியம். இது புரியாது, உடல்நலம் பாதிக்கப்பட்டால், தன்னைப் பார்த்துத் தானே பரிதாபப்பட்டுக்கொண்டு இருந்தால் யாருக்கு நஷ்டம்?

    ஒருவருக்கு இடுப்புவலி. மருத்துவர் slip disc என்று ஏதோ பெரிய பெயர் சொல்ல. மனிதர் பயந்துவிட்டார். அதன்பின், உடல்நிலை சரியானபோதும், மாடிப்படிகளில் ஏற பயம்.

    மிகக் கனமான சாமான்களைத் தூக்க முடியாது என்றால் நியாயம். நடக்கவே பயந்தால்?

    இப்போதெல்லாம் வியாதியைப்பற்றிப் பேசுவது நாகரிகமாக ஆகிவிட்டது.

    முன்பெல்லாம், வயது முதிர்ந்த பெண்கள் சந்தித்துக்கொள்ளும்போது, “சௌக்கியமா?” என்று விசாரிப்பார்கள். இப்போது அந்த முகமன், “என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று மாறிவிட்டது.

    தான் தன் உடல் உபாதையைப்பற்றி விவரிக்க, அடுத்தவர் அனுதாபம் காட்டவேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு. அதனால், உடல்நிலை சீராகிவிடுமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது.

    நாம் ஒவ்வொரு முறையும் நமக்கு வந்த, ஆனால் இப்போது சரியாகிவிட்ட, நோயைப்பற்றி ரசனையுடன் விவரித்தால் கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ, நம் உல்லாசம் பறிபோய்விடும்.

    ஒரு சிலர், தாம் ஆரோக்கியமாக இருந்தாலும், தமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரின் உடல்நிலைக் குறைபற்றி விவரிப்பார்கள்.

    `நமக்கு இப்படியெல்லாம் நேரவில்லேயே!’ என்ற நிம்மதியாலா?

    அல்லது, தம் ஆரோக்கியக் குறைவை சில நொடிகளாவது மறப்பதற்காகவா?

    எனக்குப் புரியத்தானில்லை.

    Share
  • படக்கவிதைப் போட்டி 287இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 287இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பறவை, புழுவைச் சரியாகக் கவ்வியிருக்கும் செவ்வி பார்த்து அதனைத் தம் படப்பெட்டியில் கச்சிதமாய் அடக்கி வந்திருக்கின்றார் திருமிகு. கீதாமதி. இவ்வரிய படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. பெண்மணிகள் இருவருக்கும் என் நன்றி மலர்களை உரித்தாக்குகின்றேன்.

    ஓருயிர் மற்றோர் உயிர்க்கு உணவாவது இயற்கையே எனினும் சிற்றுயிரொன்று படும் வாதையும் அருள்நெஞ்சினோருக்கு வேதனையளிக்கவே செய்கின்றது.

    இப்படத்தைக் காணும் நம் கவிஞர்களின் எண்ணவோட்டம் என்ன சொல்கின்றது என்பதை அறிவதுதானே நம் அடுத்த வேலை! புறப்படுங்கள் என்னோடு கவிதைகளைச் சுவைக்க!

    *****

    ”உணவுத் தேடல் ஒருபுறம்; உயிரின் வாடல் மறுபுறம்;
    உற்றுநோக்கினால் வலியது பிழைக்கும் என்ற உலகின் இயக்க விதி உதிக்கிறது” என்றுரைத்துத் தக்கன பிழைக்குமெனும் இயற்கை விதியை தக்கவகையில் தம் கவிதையில் கோத்திருக்கின்றார் திரு. யாழ் பாஸ்கரன்.

    புலர் காலை வனப்பில்
    புல் வெளிப் பரப்பில் ஒரு படுகொலை!
    புள் அலகினில் அகப்பட்ட
    புழு துடிக்கிறது மனதும் கூட வலிக்கிறது!

    உயிர்ப் போராட்டம் இரண்டுக்கும்
    உருவாக்கிவிட்டது யாரோ?
    உருவாக்கியவனாலா? இல்லை
    உருவானவையாலா?

    உணவுத் தேடல் ஒருபுறம்
    உயிரின் வாடல் மறுபுறம்

    உற்றுநோக்கினால் வலியது பிழைக்கும் என்ற
    உலகின் இயக்க விதி உதிக்கிறது!

    வாழ்வியல் உண்மைகளை
    வழமையாகச் சொல்லிச் செல்கிறது
    வாழ வாய்ப்பளித்த இயற்கை வெளி
    வழக்கமான தடுமாற்றங்களுடனே நாம்!

    கல்லாய்க் கரடாய்க் கிடந்த மண்ணில்
    புல்லாய்ப் பூண்டாய் பூத்த செடிகளும் கொடிகளும்
    புள்ளினமும் புழுவினமும் இன்ன பிறவும்
    புதிர்களைப் போட்டு அவிழ்க்கின்றன புரிதலுடனே!

    புரியாத மானுடம் மட்டும்
    புதிது புதிதாய்ப் பேராசை கொள்கிறது
    புவியின் புணர்ச்சி விதி தெரியாமல்
    புலம்பித் தவித்து பழியைப் பலர்மீதும் போட்டு!

    *****

    ”பறவைக் குஞ்சுகளுக்குப் புழு இரையாகக் கிடைத்தவேளையில், புழுக்கள் தம் தாயை இழந்த அவலம் நேர்ந்ததே! இயற்கையின் இந்தச் சட்டத்திலிருந்து பறவையும் தப்பமுடியாது!” என்று இயற்கை விதியை எடுத்தியம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.    

    இயற்கைச் சட்டம்…

    குஞ்சுகளின் பசிதீர்க்கக்
    கிடைத்தது பறவைக்கு
    புழு ஒன்று,
    அது
    தன் குஞ்சுகளுக்கு இரை
    தேடிவந்தபோது…

    பறவைக் குஞ்சுகளுக்கு
    இரை கிடைக்கும்போது

    இல்லாமல் போனதே
    புழுவின் குஞ்சுகளுக்குத் தாய்…

    இதுதான்
    இயற்கைச் சட்டமோ…?

    இதோ இங்கே,
    காத்திருக்கிறான் மனிதன்-
    பறவைக்காக…!

    *****

    ”புழு பூச்சி அனைத்தையும் உண்டு வானில் பறந்து திரியும் பறவையினமே! உமைப் போலவே பறந்து திரிய ஏங்குகின்றதே எம் மனமே!” என்கிறார் திருமிகு. சுதா மாதவன்.

    வாயில் உன் உணவு
    வானத்தில் என்னப் பார்க்கிறாய்?
    நிலத்தில் நிரம்ப உணவுண்டு
    நீர்நிலைகளில் மிதக்கிறாய்

    பசுமைச் செடிகொடி இலைகளிலே
    பாய்ந்து பறந்து பிடிக்கின்றாய்
    புழு பூச்சி புல்பூண்டு
    என்றே சொன்னால் மிகையாகா
    அனைத்தும் உங்களின் உணவன்றோ!
    அதிசயப் பிறவி நீங்களன்றோ!

    பறவையினமே உங்களைப் போல்
    பறந்து திரிய நினைக்கிறோமே!
    பாடியாட மனம் தவிக்கிறதே

    உனைப் பார்ப்பதால் மனம் களிக்கிறதே!

    *****

    பறவையும் அதன் வாயில் சிக்கிய புழுவும் நம் கவிஞர்களின் சிந்தனைகளைக் கிளறி சீரிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கக் காண்கின்றேன். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    இரையாகத் துடிக்கும் புழுக்கள்!

    கருமுட்டைதனிலிருந்து
    உயிர் கொண்டு,
    மேல்புழுவாய் வளர்ந்து
    சிறகு வளர்த்து
    சீர்வண்ணப் பூச்சியாகி
    உலகளந்து ஊர் மெச்ச வலம்வந்து
    மலரமர்ந்து
    மதுரத்தேன் தான் குடித்து
    முழுவாழ்க்கை வாழ்ந்திடாமல்
    சிறுதொகைக்கும்
    சிற்றின்ப போதைக்கும்
    சாதிமதச் சார்பு கொண்டும்
    மதுக்கோப்பைக் குப்பிக்கும்,
    ஆள்பவரை அமர்த்தவைக்கும்
    வாய்ப்பதனைத் தவறவிட்டு
    ஆண்டுகள் ஐந்தும் அழுதுநின்று
    அரசியல் வல்லூறுகளின் அலகினிலே
    இரையாகத் துடிக்கும் புழுக்களெனப்
    புரியாமல் தவிக்கின்றோம்…

    புதுத்தேர்தல் வரும் நேரம்!
    புதுப்பாதை வகுப்போமா? – அன்றிப்
    புதைசேற்றில் வெளியேற வழியின்றி
    புலம்பல்களை மொழியாக்கித்
    தலைவிதியை நொந்திருந்து
    தவிப்பதையே தொடர்வோமா?

    அரசியல் வல்லூறுகளின் அலகுகளில் இரையாகும் புழுக்களைப்போல், நல்லாரை விட்டு அல்லாரைச் சாதி மத சார்புக்கும் மதுக் கோப்பைக்கும் அடிமையாகி அமர்த்திவிட்டு அல்லற்படும் நம் அவலநிலை புதுத் தேர்தல் வரும் நேரம் மாறுமா? என்று ஏக்கத்தோடு வினா எழுப்பியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • இன்று இராஜாஜியின் திருநாள்

    இன்று இராஜாஜியின் திருநாள்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    1961 மாசி நடுப்பகுதியில் தமிழரின் உரிமைக் கோரிக்கையை முன்வைத்து இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அரசு அலுவலகங்கள் முன்பு அறவழிப் போர் நிகழ்த்தினர் தமிழ் மக்கள்.

    அக்காலத்தில் சென்னையில் மாணவர்களாக இருந்த நாங்கள் தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்தோம்.

    இராஜாஜியையும் சந்தித்தோம் அவர் தனது சுயராஜ்யா இதழில் இலங்கைத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என எழுதினார். இராஜாஜி எழுதிய வரிகளைக் கீழே தந்துள்ளேன்.

    அறிஞர் அண்ணாதுரை சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி ஆதரவு அளித்தார்.

    Remembering Rajaji on his day today

    A non violent campaign towards a rightfully Tamil political space in Sri Lanka by blocking public offices began around mid February 1961.

    As students in Chennai we drew the attention of all shades of Tamil Nadu political leadership.

    Rajaji supported us. He wrote an article in his Swarajya.

    Annadurai led a massive meeting at Marina.

    Below is the text of what Rajaji wrote:

    April 1961

    THE CEYLON STRUGGLE

    By

    C. RAJAGOPALACHARI

    The Ceylon Tamils (who are old Ceylonese and are as attached to their mother island as any other citizens of Ceylon) are asking for a federal form of government in which the Tamil speaking population of North and East Ceylon may have autonomy subject to the Federal Government of all Ceylon.  This will enable them to take pride in Ceylon nationality, without any bar-sinister of inferiority.

    The language issue is merely an outer symbol of the competition between the two nationalities.  It is a battle between communities, not at a battle of cultures or languages. Neither culture nor language is in danger.  Either can stand on its own strength and is not capable of being extinguished or even hurt in a substantial degree.  The question is whether the Tamil-speaking people are to be treated as equals or not. Equality will be ensured under a federal regime.  The unitary Government is necessarily leading up to place them on an inferior level.  This is the more unjust because the progress so far achieved and the present status of Ceylon as a whole depended not a little on the patriotic services of the eminent Tamilians of Ceylon.  The refusal to grant equal status on a federal basis to the Tamil population amounts to ingratitude.

    Let not the Tamil Northern and Eastern Ceylon population be confounded by superficial readers of news in India with the people of South Indian origin who have migrated to Ceylon when the plantations needed hard labour and who have settled down in and around the plantations as permanent but yet unrecognised citizens of Ceylon.  They are an entirely different group.  Their quarrel is a different one.

    Any sympathy from South India extended to the original Tamil speaking  people of Ceylon, who are fighting a tremendous battle for autonomy within a federal regime, can be easily mistaken for a Tamil conspiracy to bring Ceylon sovereignty and its integrity into jeopardy.  That is the reason why South Indian leaders have been patient and have not given too swift expression to their feelings of sympathy with those who fight a just battle in Ceylon on the language and federalist issues.  The present Ceylon Government party has been for sometime past pretending to see a great conspiracy between South Indian Tamils and Ceylon Tamils, which of course is mere myth born of an inferiority complex.

    The question of direct action and the advisability of continuing it is quite a different question and should be judged entirely by the leaders of the movement.  One who is at a distance and who is a votary of peace may be inclined to advise compromise if it could be had on honourable terms.  It is hard to believe that reason will not ultimately prevail.  We all hope in India, who have seen the lady-Premier of Ceylon, that she will bring her best emotions into play and succeed in controlling the extreme elements on the Sinhalese or Buddhist side (what ever name we may give it) and bring the protest movement to a suspension on honourable terms.

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 5

    அண்ணாகண்ணன் காணொலிகள் 5

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    என் இனிய தவிட்டுக் குருவி

    கிலுகிலுகிலுகிலுவென உருளும் குரல், தத்தும் நடை, விர்ரெனச் சிறகு விரித்துப் பறக்கும் எழில், கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என ஈர்க்கும் என் இனிய தவிட்டுக் குருவியே! தவிட்டு வண்ணம் கொண்டதனால் இப்பெயர் பெற்றாயோ! ஒவ்வொரு கணத்தையும் அமர கணமாக்கும் வித்தையை எனக்குக் கற்றுத் தருவாயா?

     

    புள்ளி மூக்கு வாத்து | Spot-billed Duck

    புள்ளி மூக்கு வாத்து அல்லது புள்ளி மூக்கன், நீரின் மேற்பரப்பில் உணவருந்தும் வாத்து வகைகளுள் ஒன்றாகும். இவற்றின் அலகின் நுனியில் ஒரு மஞ்சள் நிறப்புள்ளி இருக்கும். காலை, மாலை வேளைகளில் ஆண், பெண் பறவைகள் எப்போதும் இணையாக இணைந்துதான் இரை தேடும். மதிய நேரத்தில், கண்ணை மூடித் தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டது.

    நேற்று முதல்முறையாகப் புள்ளி மூக்கு வாத்துகளைப் பார்த்தேன். நம் வீட்டுக்குப் பின்னால் உள்ள மதிலில் அழகாக அமர்ந்திருந்தன. அவற்றுடன் ஆள்காட்டிப் பறவைகளும் அமைதியாக அமர்ந்திருந்தன. மடையான் ஒன்று பறந்து வந்து, இவற்றை எல்லாம் விரட்டிவிட்டது.

    Purple Sunbird | Loten’s Sunbird

    பறந்தபடி பூக்களில் தேனருந்தும் பேரலகுத் தேன்சிட்டு என்கிற ஊதாத் தேன்சிட்டு.

    Loten’s Sunbird

    பூக்களில் தேனருந்தும் தேன்சிட்டு!

     

    Butterfly at my window

    என் ஜன்னலில் ஒரு வண்ணத்துப்பூச்சி.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கவிதை மட்டும்: அண்ணாகண்ணன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

    கவிதை மட்டும்: அண்ணாகண்ணன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

    கவிதை மட்டும் என்ற வாட்ஸாப் குழுவை நண்பர், இயக்குநர் ஏகம்பவாணன் நடத்துகிறார். இந்தக் குழுவில் தினந்தோறும் ஒரு தலைப்பு அறிவித்து, கவிதைப் போட்டி நடத்துகிறார். அதே போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை நடுவராக அறிவிக்கிறார். வரக்கூடிய கவிதைகளை அந்த நடுவரிடம் ஒப்படைத்து, சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார். அந்த வகையில், 2020 நவம்பர் 5ஆம் நாளுக்கான கவிதைப் போட்டிக்கு என்னை நடுவராக அறிவித்தார். வரப்பெற்ற கவிதைகளைத் திறனாய்ந்து, பரிசுக்கு உரிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கினேன். அந்தப் பதிவு இங்கே. பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொலைத்தது (சிறுகதை)

    தொலைத்தது (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்!

    கோயிலில் நடந்த அந்த வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என் உடல்நிலைமேல்தான் பழி போடவேண்டும். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா?

    `இதெல்லாம் இயற்கை. தலைக்கு ஜலம் விட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே?’ என்று வாதாடுவாள் அந்த சண்டைக்காரி.

    மறைவான இடம் எங்கு இருக்கிறது என்று நான் விழித்துக்கொண்டிருந்தபோதே அவள் என்னைப் பார்த்துவிட்டாள். கழுத்தில் அழுக்கேறாத மஞ்சள் கயிறு.

    அந்த புது மணப்பெண் எதுவும் கேட்குமுன்னரே நான் முந்திக்கொண்டேன். “ஸாரி பிரேமா. ஒன் கல்யாணத்துக்கு வரமுடியல”.

    பிரேமா கலீரென்று சிரித்தாள். பேரழகியான அவள் முகத்திற்கு இன்னும் மெருகேற்றியது அந்தச் சிரிப்பு.

    “கல்யாணம் நடந்திருந்தாத்தானே!” சிரிப்பு பலத்தது.

    “பின்னே..?” என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்ற தர்மசங்கடத்துடன் அவள் கழுத்தையே பார்த்தேன்.

    “சாயந்திரமா ஒங்க வீட்டுக்கு வந்து, விவரமா சொல்றேன், பானு. சாப்பாட்டு வேளை முடிஞ்சதும், ஒடனே வேலைக்கு வராட்டா, அந்த மானேஜர் பிசாசு கத்துவான்!”

    யாருக்கும் அடங்காத இவளை அவ்வளவு தூரம் பயமுறுத்தி வைத்திருக்கும் அந்த `மானேஜர் பிசாசைப்’ பார்க்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.

    பதினேழு வயதிலேயே உத்தியோகம் பார்த்துச் சம்பாதிக்க வேண்டும் என்று பிரேமாவுக்கு என்ன கட்டாயம்?

    `பொறுமையாக இரேன். அவள்தான் வீட்டுக்கு வந்து சொல்லப்போகிறாளே!’ நிதானமின்றி அலைந்த மனதை வைதேன்.

    பிரேமாவும் நானும் பேசிக்கொண்டிருந்தபோது, `இந்த தறுதலையோட என்ன பேச்சு!’ என்று அம்மா உள்ளே முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.

    பிரேமாவின் காதிலும் விழுந்திருக்கும். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதனால் பாதிக்கப்படாததுபோல் நடந்துகொள்வாள்.

    “என்னைக் கேக்காம, அப்பா அந்தக் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டார். அந்தக் கறுப்பனை யார் கட்டிப்பாங்க! அதான், கல்யாணத்துக்கு மொதநாள் அவனோட அண்ணனோட ஓடிப்போயிட்டேன்!” மீண்டும் சிரிப்பு. “அவனோட பேர் என்ன தெரியுமா? ரெமோ! முழிக்காதே. ரெங்கசாமி மகன் மோகன்!”

    எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை.

    “எனக்கு ஒங்கிட்ட மனம்விட்டுப் பேச முடியுது, பானு. நாம்ப சின்ன வயசிலேருந்து பழகினவங்க இல்லியா? அதான்,” என்றவள் தொடர்ந்தாள். “ரெமோவுக்கு இன்னும் படிப்பு முடியல. நான்தான் வேலை செஞ்சு சம்பாதிக்கிறேன்”.

    ஒரு வழியாக என் குரல் வெளிப்பட்டது. “ஒங்க வீட்டிலே?”

    பதிலுக்கு, இடி இடியென்று சிரித்தாள் பிரேமா. “நாங்க பண்ணின காரியத்துக்கு எந்த வீட்டிலே சேர்ப்பாங்க?”

    அதன்பின், பத்து வருடங்கள் கழித்துத்தான் நான் பிரேமாவைப் பார்த்தேன். அவளுடைய சிரிப்பு மட்டும் மாறாது, அப்படியே இருந்தது.

    “ரெமோவுக்குப் படிப்பு முடிஞ்சு, நல்ல வேலை கிடைச்சுடுச்சா?” நிறைய தங்க நகைகள் அணிந்திருந்தவளைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் அப்படி ஒரு கேள்வி எழுந்தது.

    “யாரு? ஓ, அவனா!”

    அப்படி என்ன அலட்சியம்?

    “இப்போ நான் அவனோட இல்லே”. இன்னொரு அதிர்ச்சியை அளித்தாள்.

    `நல்லவேளை, அம்மா அருகில் இல்லை, இவள் பேசுவதைக் கேட்க!’ என்று சிறிது நிம்மதி எழுந்தது எனக்குள்.

    “நான் முந்தி வேலை செஞ்சிட்டு இருந்தேன் பாரு, அந்தக் கடை முதலாளி என்மேல ஆசைப்பட்டார். `உன்னை ராணிமாதிரி வெச்சுக்கறேன்’னார். எதுக்காக ரெமோவுக்கு உழைச்சுக் கொட்டறது?”

    “இன்னொரு கல்யாணமா?” என் குரல் எனக்கே கேட்கவில்லை.

    “போதும். ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பட்ட அவதி! `ஒனக்குப் பிறந்ததை நீயே வெச்சுக்கடா’ன்னுட்டு, என் மகனையும் அவங்கிட்ட குடுத்துட்டு, நான் ஜாலியா வெளியே வந்துட்டேன்!”

    இதற்கும் ஒரு சிரிப்பா?

    நான் முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டேன்.

    வெளிநாட்டில் பல வருடங்கள் கழித்துவிட்டு, அம்மாவைப் பார்க்கத் திரும்பி வந்தேன்.

    “பிரேமாவைப் பாத்தியா? எப்படிம்மா இருக்கா?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

    தலையைத் திருப்பிக்கொண்டு உள்ளே போனாள் அம்மா. காதில் விழவில்லை என்று நான் நினைத்துக் கொள்ளவேண்டுமாம்!

    ஒரு கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளாமல் போனதுபோல் தவிப்பாக இருந்தது எனக்கு.

    சொல்லி வைத்தாற்போல், அவளே என்னைத் தேடி வந்தாள்.

    “ஒங்கம்மாவை மார்க்கெட்டில பாத்தேன். நீ வந்திருக்கிறதா சொன்னாங்க,” என்று ஏதோ ஒப்பிப்பதுபோல் சொன்னாள்.

    இளமையின் உற்சாகம் எப்போதும் நிலைத்திருக்குமா? அவளுக்கும் இப்போது ஐம்பது வயதாகி இருக்காது?

    “எங்கேயாவது வெளியே போகலாமா, பானு?” என்றாள் மெள்ள.

    எனக்குப் புரிந்தது. அம்மா காதில் விழக்கூடாது!

    பிறர் நினைப்பதைப்பற்றி இவள் என்று கவலைப்பட்டிருக்கிறாள் என்ற ஆச்சரியமும் எழாமலில்லை.

    உணர்ச்சியற்ற குரலில், “ரெமோ செத்துப்போயிட்டான்,” என்று ஆரம்பித்தாள்.

    என்னதான் அவனை விட்டுப் பிரிந்திருந்தாலும், சட்டப்படி அவள் இன்னும் அவனுடைய மனைவிதானே! அந்த துக்கமோ?

    “எனக்கு யாரும் சொல்லிவிடலே. பேப்பரில பாத்துத் தெரிஞ்சுக்கிட்டேன். இறுதி யாத்திரை இந்த விலாசத்திலே, இத்தனை மணிக்குன்னு போட்டிருந்தாங்க. ரயில்ல அங்க போனேன்”. அதன்பின் நீண்ட மௌனம். அவள் பார்வை எங்கோ நிலைத்திருந்தது.

    “மொதல்ல என் மகனை எனக்கு அடையாளம் தெரியல. எப்பவோ, ரெண்டு வயசில பாத்தது. அவங்கப்பாமாதிரியே அழகா இருந்தான். அதை வெச்சுத்தான்..!”

    நான் சற்றும் எதிர்பாராவிதமாக பிரேமா விம்ம ஆரம்பித்தாள்.

    “அவன் எல்லார்கிட்டேயும் என்ன சொன்னான், தெரியுமா பானு? `எனக்கு ஒரு அம்மா இருக்கிறதே தெரியாது,’ அப்படின்னான். எங்கிட்ட வந்து, `இனிமே இங்க வராதீங்க,’ன்னு கறாரா..! என்னால அவனுக்கு அவமானமாம்! பெத்த தாய்னுகூட பாக்காம என்னை விரட்டி அடிச்சுட்டாண்டி!”

    பெரிய குரலெடுத்து அழுதவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?

    `ஒரு தாயாக நீ அவனுக்கு என்ன செய்தாய்?’ என்று கேட்கத்தான் தோன்றியது.

    ஆனால், என் கை வாயை முந்திக்கொண்டது. அவள் முதுகைப் பரிவுடன் தடவிக்கொடுத்தது.

    அடுக்கடுக்கான சங்கிலிகள்மேல் கை பட, பேச்சை மாற்றும் எண்ணத்துடன், “இவ்வளவு நகை போட்டுக்கிட்டு வெளியே வரலாமா, பிரேமா? தொலைஞ்சுடாது?” என்று செல்லமாகக் கடிந்தேன்.

    `எதை எதையோ தொலைத்துவிட்டேனே! நகை என்ன, கேவலம் உயிரில்லாத சாமான்!’ என்று எண்ணியிருப்பாள். இல்லாவிட்டால், அப்படிக் கதறியிருப்பாளா?

    பி.கு: எனக்குத் தெரிந்த மூன்று பெண்களின் குணாதிசயங்களை, அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களை, பிரேமா என்கிற ஒரு கதாபாத்திரத்துக்குள் புகுத்தியிருக்கிறேன்.

    Share