Blog

  • சேக்கிழார் பாடல் நயம் – 110 (சிந்தை)

    சேக்கிழார் பாடல் நயம் – 110 (சிந்தை)

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

    பாடல் :

    சிந்தை  செய்வது  சிவன்கழ   லல்லதொன்   றில்லார்
    அந்தி   வண்ணர்தம்   மடியவர்க்   கமுதுசெய்  வித்துக்
    கந்தை   கீளுடை   கோவணம் கருத்தறிந் துதவி
    வந்த   செல்வத்தின்   வளத்தினால்  வரும்பயன்  கொள்வார்,

    அருஞ்சொற்பொருள்:

    சிந்தை = மனத்தால்நினைப்பது, அல்லது = அன்றிவேறொன்று, அந்தி வண்ணர் = செவ்வான நிறம்படைத்தசிவன், கந்தை = கிழிந்தஆடை, கீளுடை = கோவணம். வரும்பயன் = நற்பயன்.

    பொருள்:

    அமர்நீதி நாயனார், தமது மனத்தினுள் எஞ்ஞான்றும் வைத்துத் தியானிப்பது சிவபெருமான் திருவடியேயன்றி வேறொன்றையும்  எண்ணாதவர்; அந்தி மாலையின் செவ்வான வண்ணராகிய சிவபெருமானுக்கே உரியவர்களாம் அடியார்களைத் திருவமுது செய்வித்து, அவர்கள் கருத்தறிந்து அதற்கேற்பக் கந்தையுங் கீளும் உடையும் உதவி, (அதன் பயனாகத்) தம்பால் வந்த செல்வத்தினது வளங்களினாலே தாம் இவ்வுலகிற் பிறவி பெற்று வருதலாலுளதாகிய உறுதிப் பயனைக் கொள்வாராய்(விளங்கினார்)

    விளக்கவுரை:

    இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு படுத்திப் பொருள்கொள்ளத்தக்கன. சிந்தை செய்வது – எப்போதும் எண்ணுவது.

    கழல் அல்லதொன்றில்லார் – என்றதொடரில் அல்லது ஒன்றுஇல்லார்  என்ற இரண்டு எதிர்மறைகள் தேற்றப் பொருளில் உறுதி பெற்றதோர் உடன்பாட்டுப் பொருள் குறித்தன. “அதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு“  என்ற குறளில் அல்லது  இல்லை என்றாற்போற் கழலினையல்லாது வேறொன்றினையும் இல்லாதவர்.

    அந்தி வண்ணர் – என்றதொடர் அந்தி – மாலை. அது அக்காலத்தில்தோன்றும் செவ்வான வொளிக்காயிற்று. ஆகுபெயர். “செவ்வான வண்ணர்“ – தேவாரம். தீ என்பது தி எனக் குறுகிநின்ற தென்று கொண்டு அம் தீ அழகிய தீ – நிறம் என உரைத்தாலும்  பொருந்தும் “அழல் வண்ண வண்ணர்“, எரிபோன் மேனிப்பிரான்“, “செந்தீ வண்ணர்“, “தீவண்ணர் திறம்“ முதலிய திருவாக்குக்கள் காண்க. தீ என்பது தன்னுட்பட்ட பொருள்களை எரித்துத் தீயனபோக்கித் தூயதாக்கும். இறைவன்திறம் அத்தகையது!

    கந்தை – பொந்தை. நாலைந்து ஒன்றன்மேலொன்றாக வைத்து நூலிழைகளோட்டப்பட்டிருக்கும் போர்வையாடை. கீள் – அரைநாணுக்குப் பதிலாகத் துறவிகள் கட்டிக் கொள்வது என்பார் காஞ்சிபுரம் வித்வான் சபாபதி முதலியார். கந்தை – கிழிந்த ஆடை என்றலுமாம்.

    “கந்தை மிகையாங் கருத்தும்“

    “சாம்பற் பூச்சுங்கீ ளுடையுங் கொண்ட வுருவம்“  என்பன தேவாரப்பாடல்கள்  உடை – இடையில் உடுக்கும் துகில். ஐகாரம் – செயப்படுபொருளில் வந்த விகுதி; உடுக்கப்படுவது.

    கோவணம் – அற்றத்தை மறைக்கக் கீளுடன் இணைத்துக் கட்டுவது. இது நால்விரல் அகலத்தும், ஐவிரல் அகலத்தும் கொள்ளப்படும். “நால்விரற் கோவணவாடை, “ “ஐவிரற் கோவணம்“ என்பன தேவாரம். இச்சரிதம் கோவணத்தினின்று விளைவதாகலின், பலவகை உடைகளிலும், இதனைத் தேற்றம்பெற இறுதியில் வைத்தார்.

    கருத்தறிந்து உதவி – அடியார்கள் எதையும் பெற விரும்பமாட்டார் ஆதலால், அவர்களது கருத்தைத் தாமே அறிந்து என்க. ஆதலால் அவர்தம் தேவையறிந்து, அதனை நிறைவேற்றுவது சிவனடியார்களின் நற்பண்பாகும்.

    வந்த செல்வம்  என்ற தொடர், இருந்த செல்வங்களுடன் வாணிகத்தால் ஈட்டிய செல்வத்தையும் குறித்தது  “எந்நிலத்தினும் உள்ளன வருவளம்“ என்றபடி பல நிலங்களினின்றும் வந்த செல்வங்கள். முன்னம் இறைவனைப் பூசித்ததன் பயனாய்த் தம்மிடம் வந்த செல்வம் என்றலுமாம்.

    வளத்தினால் – அவற்றின் வாணிபத்தினால்  ஈட்டிய   வளங்களைக் கொண்டு.

    வரும்பயன் – இவ்வுலகில் வருதலால்  உளதாகிய உறுதிப்பயன். பயனை வளத்தினாற் கொள்வார் என்க, கொள்வார் – கொள்வாராகி – அடைவாராகி; முற்றெச்சம். இப்பாடலை, கொள்வார் – அமுது செய்வித்து – வணங்கிச் – சமைத்தார் எனக் கூட்டி முடிக்க.

    இப்பாடலில் அமர்நீதி நாயனார், அடியார்களுக்கு மிகச்சிறிய தேவையாகிய கீளுடை கொடுத்தார் என்பதிலிருந்து, அடியாரின் மிகப்பெரிய தேவைகளாகிய உணவையும், மற்றும் வாழ்க்கைக்குரிய  பெரும் பொருள்களையும் இறையருளால்  பெற்றுக் கொடுக்கும்  பண்புநலம்  பெற்றவர் என்பதும்,  கீளுடை  என்பது இறைவன் திருவருளின்  பெருமையைக்  குறிக்கும் என்பதும்,  அதன்  வலிமையும்  தகுதியும்  மிகவும்  பெரியவை என்பதும்   இறைவனைச் சார்ந்த எப்பொருளும்  பெருமை மிக்கது என்பதும்,  செல்வமும்  கொடையும்  இறைவன் திருவருளால்  அமைவதாகும்  என்பதும்  குறிக்கப் பெற்றன,

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 10

    அண்ணாகண்ணன் காணொலிகள் 10

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    சண்டைச் சேவலின் கூவலும் எதிர்க்கூவலும்

    செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்திற்கு நேற்று சென்றேன். அழகிய காட்சிகள் பலவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்தச் சண்டைச் சேவல் கூவ, பதிலுக்கு எங்கிருந்தோ வேறொரு சேவல் கூவியது. வழக்கமாக, நாய் ஒன்று குரைக்க, பல இடங்களில் உள்ள நாய்கள் குரைக்கும். இங்கே சேவல்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகின்றன.

    தென்னங்கீற்றில் ஆனைச்சாத்தன்

    திருப்பாவையின் 7ஆவது பாடலில் ஆனைச்சாத்தன் இடம்பெற்று, உலகமெங்கும் இந்தப் பாடல் பாடப்படுகிறது. இந்த 7ஆம் நாளை ஆனைச்சாத்தன் நாள் (The day of Black Drongo) எனக் கொண்டாடினால் என்ன? 

    ஆண்டாள் பாடிய ஆனைச்சாத்தன் குருவிகளில் சில, நம் வீட்டருகே குடியிருக்கின்றன. இவை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் அமரும். முன்பு வாழையிலையில் அமர்ந்ததைப் பகிர்ந்தேன். தென்னங்கீற்றில் அமர்ந்த கோலம் இங்கே.

    பொன்வண்டு| Jewel Beetle | Ponvandu

    செங்கல்பட்டு அருகே நென்மேலி கிராமத்தில் இந்தப் பொன்வண்டைப் படம் பிடித்தேன்.

    இரைதேடும் நத்தை குத்தி நாரை

    நம் வீட்டுக்குப் பின்னுள்ள புல்வெளியில் நத்தை குத்தி நாரை, இன்று காலை இரைதேடியது. பின்னர் சிறகடித்துப் பறந்து, அருகில் உள்ள மதிலில் அமர்ந்தது. இந்த அழகான காட்சியைப் பாருங்கள்.

    Asian Openbill Stork On Air

    நத்தை குத்தி நாரை / அகலவாயன் / Anastomus oscitans / Asian openbill / Asian openbill stork

     

    Kingfisher – 2 | மீன்கொத்தி – 2

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணித மேதை ராமானுஜன் 133ஆவது பிறந்த நாள்

    கணித மேதை ராமானுஜன் 133ஆவது பிறந்த நாள்

    இன்று கணித மேதை ராமானுஜனின் 133ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.

     படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா

    By India Post, Government of India – [1] [2], GODL-India, https://commons.wikimedia.org/w/index.php?curid=74857228

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கீசுகீசு எனும் ஆனைச்சாத்தன்

    கீசுகீசு எனும் ஆனைச்சாத்தன்

    கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனத் திருப்பாவையில் கேட்கிறார். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் இதுதான். இரட்டைவால் குருவி, கரிச்சான், கரிக்குருவி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதன் கீசுகீசு என்ற குரலை நான் பல முறைகள் பதிவு செய்துள்ளேன். ஆனைச்சாத்தனின் குரலை இங்கே கேளுங்கள்.

    ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தனின் கீசுகீசு எனும் குரல் இங்கே

    ஆண்டாள் ரசித்த ஆனைச்சாத்தன் பறவைக்காகவே தனி இழை தொடங்கியுள்ளேன். இதில் 18 பதிவுகள் உள்ளன. பார்த்து மகிழுங்கள்.

    படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | ஸ்வேதா குரலில்

    அரவம் என்ற சொல், ஆண்டாளுக்குப் பிடித்துப் போயிற்று போலும். திருப்பாவையில் இரண்டு பாடல்களில் நான்கு முறை, இந்தச் சொல் இடம்பெறுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரே பாட்டில் இரு முறைகள். அதுவும் அடுத்தடுத்த பாடல்களில் வருகின்றது. 6ஆவது பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம், அரியென்ற பேரரவம் என்கிறார். 7ஆவது பாடலில், ஆனைச்சாத்தனின் பேச்சரவம், தயிரரவம் என்கிறார். நான்கு இடங்களிலும் இதற்கு ஓசை என்றே பொருள். இந்தச் சொல், பாடலுக்குத் தனித்த அழகையும் மிடுக்கையும் தருகின்றது. திருப்பாவையின் 7ஆவது பாடல் கீசுகீசு என்றெங்கும், இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | சேகர் முத்துராமன் குரலில்

    நாயகப் பெண்பிள்ளாய்! எனத் தோழியரை ஆண்டாள் அழைத்தாலும் அந்த விளி, அவருக்கே அழகாகப் பொருந்துகிறது. இந்தப் பாடலில் தேசமுடையாய் என ஆண்டாள் சொல்வது, இந்தக் காலப் பொருளில் இல்லை. தேசு என்ற சொல்லுக்கு ஒளி, அழகு எனப் பொருள்கள் உண்டு. ஒளி பொருந்திய பெண்ணே என்ற பொருளிலேயே தேசமுடையாய் என அழைக்கிறார். கீசுகீசு என்றெங்கும் என்ற 7ஆவது பாடலை இப்போது சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 2021 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

    2021 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

    2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இடர்கள் தீருமா? மகிழ்ச்சி கிட்டுமா? நினைத்தது நடக்குமா? 2021ஆம் வருடத்துக்கான ஆண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் அவர்கள், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒஹாயோ பறவைகள்

    ஒஹாயோ பறவைகள்

    அமெரிக்காவின் பல பகுதிகளில் இப்போது பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. ஒஹாயோ மாகாணத்தின் பனி படர்ந்த ஏரிக்கரையில், பறவைக் கூட்டம் ஒரே தாளகதியில் கீழிறங்குவதும் சிறகடித்து மேலேறிப் பறப்பதும் மிக ரம்மியமாக இருக்கிறது. இந்த வசீகரக் காட்சியை ஒஹாயோவிலிருந்து படமெடுத்து அனுப்பியிருக்கும் திலகா சுந்தருக்கு நம் நன்றிகள்.

     

    Share
  • திருவெம்பாவை – 6 | மானே நீ நென்னலை

    திருவெம்பாவை – 6 | மானே நீ நென்னலை

    திருப்பாவை வெளியிட்ட போது, திருவெம்பாவை எங்கே என்று அன்பர்கள் கேட்டார்கள். இதோ, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரிலிருந்து நமக்காகப் பாடுகிறார், திருமதி ஸ்ருதி நடராஜன். இவரை நமக்கு அறிமுகப்படுத்திய திருமதி சுதா மாதவன் அவர்களுக்கு நன்றி.

    திருவெம்பாவை பாடல் 6
    இயற்றியவர்: மாணிக்கவாசகர்
    பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ், அமெரிக்கா
    ராகம்: கமாஸ்

    மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
    நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
    போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
    வானே நிலனே பிறவே அறிவரியான்
    தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
    வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
    ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
    ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண்

    திருப்பாவை 6

    புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
    பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண் | ஸ்வேதா குரலில்

    மார்கழியின் குளிரை நாம் அறிவோம். திருப்பாவையில் ஆண்டாள், இரண்டு இடங்களில் குளிர் பற்றிப் பேசுகிறார். 6ஆவது பாடலில் அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிறார். 27ஆவது பாடலில் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிறார். இரண்டுமே உள்ளம் குளிர்தலைப் பற்றியது. இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில் திருப்பாவையின் 6ஆவது பாடல் புள்ளும் சிலம்பினகாண். கேட்டு உள்ளம் குளிருங்கள், இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண் | சேகர் முத்துராமன் குரலில்

    சேகர் முத்துராமன் குரலில் திருப்பாவையின் 6ஆவது பாடல் புள்ளும் சிலம்பினகாண். ராகம் – சங்கராபரணம். வாயினால் பாடி, மனத்தினால் சிந்தியுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

    கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

    Dr. ச. கண்மணி கணேசன் (ப.நி.)
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்
    ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி, சிவகாசி. 626189, இந்தியா.
    kanmanitamilskc@gmail.com

    அறிமுகம் 

    பள்ளியிறுதித் தேர்வு முடித்துக் கல்லூரிக்கு வரும் மாணவர்  கற்றுக்  கொள்ள வேண்டிய பொதுத்தமிழைக் கணினி மூலம் எவ்வாறு கற்கலாம்; கற்பிக்கலாம் என்பதை அலசிப் பார்ப்பதே  இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். எழுதுவதற்கு மட்டுமே முதன்மை கொடுக்கும் போக்கு கல்லூரிக் கல்வியில் பல்லாண்டு காலமாக நிலைத்திருப்பதால்; தமிழ்க் கல்வியின் தரத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தேவை உள்ளது.

    கல்லூரியில் தமிழ் கற்பித்த அனுபவம் இக்கட்டுரையின் பரப்பும் எல்லையுமாக அமைய; தன்னாட்சியில் பாடத்திட்டம் தீட்டிய பயிற்சி சிக்கலுக்குத் தீர்வு  காண முனைகிறது. காரணகாரியத் தொடர்புடன் விளக்கும் மரபுவழிப்பட்ட ஆய்வாக அமைந்து; சிக்கலைக் கணினிப் பயன்பாட்டால்  தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையை  அளிக்கிறது.

    கற்றல் கற்பித்தலுக்கு முன்னும் பின்னும்

    கற்பிக்கும் உத்திகள் பாடத்திட்டத்துடன் தொடர்புடையன. மாணவர் கற்ற பிறகு சோதனை செய்வது ஆசிரியப் பணியின் அடுத்த பொறுப்பு. கற்றல் கற்பித்தல் ஒருபுறம் பாடத்திட்டத்தில் காலூன்றி; மறுபுறம் தேர்வுமுறையை எட்டிப் பார்க்கும். அதனால் தான் பல்கலைக்கழக நதிநல்கைக் குழுவின் தேசீயத் தரநிர்ணய மதிப்பீட்டுக் குழுமம் (National Assessment and Accreditation Council) கல்வி நிறுவனங்களின் தகுதியை மதிப்பிடப் பாடத்தன்மைகளை (curricular aspects- 1st criterion) முதல் கூறாகவும்; கற்றல் கற்பித்தல் மதிப்பீடு செய்தலை (teaching learning and evaluation) அடுத்த கூறாகவும் வரையறுக்கிறது. எனவே இக்கட்டுரை பாடத் திட்டத்திலிருந்து தொடங்குகிறது.

    மொழியும் மொழிக்கல்வியும்

    மொழி என்னும் கருத்துப் பரிமாற்றத்திற்குரிய கருவி; பேசும் வரை மட்டுமே உயிர்த்திருக்கும். அன்றாட வாழ்வில் பேசாத மொழி காலப் போக்கில் அழிந்துவிடும். எனவே  மொழிக்கல்வி; எழுதக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வாய்த்திறனுக்கும் கொடுத்தல் நலம். மொழியின் அடிப்படை அலகு ஒலி. மொழிக் கல்வியிலும் இந்த அலகு சிறப்பிடம் பெறவேண்டும். பள்ளிக்கல்வியில் வாய்மொழிப்  பயிற்சியும் தேர்வும்  பாலர் பள்ளியில் மட்டுமே உள்ளன.

    இன்றைய சிக்கல்    

    பெரும்பாலான மாணவர் வாயாரத் தமிழ் வாசிக்கத் தடுமாறுகின்றனர். தட்டுத்தடுமாறி வாசிப்பவரின் தமிழில் /ல்,ள்,ழ்/,  /ர்,ற்/, /ன்,ண்/ ஆகியவற்றின் ஒலிப்பில் வேறுபாடு இல்லை. மேற்சுட்டிய ஒலிகள் பொருள் வேறுபாட்டிற்கு உரிய அடிப்படைக் காரணிகள். அவற்றை மாற்றி ஒலிப்பதும், எழுதுவதும் பெரும்பிழை ஆகும். ஒற்று மிகும் இடங்களை ஒலிக்கும்போது கொடுக்க வேண்டிய அழுத்தம் இன்றியமையாதது. நிறுத்தி வாசிக்க வேண்டிய இடம் எது? சேர்த்து வாசிக்க வேண்டிய இடம் எது? என்னும் வேறுபாடும், விளைவும் பற்றிய புரிதல் தேவை. இயந்திரத்தன்மையுடன் ஒரே சீராக ஏற்ற இறக்கங்களின்றி வாசிப்பதால்  பொருள் தெளிவுறாது. இந்நடைமுறைப்  பிரச்சினைகளைக்  கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைய வேண்டும்.

    பட்டப்படிப்பில் பொதுத்தமிழுக்குக்  கிடைக்கும் நேரம்

    ஒவ்வொரு பட்டப் படிப்பிற்கும்; முதல் நான்கு பருவங்களில்  (semesters) பொதுத்தமிழுக்கென ஒதுக்கப்படும்  (6×15=90)× 4= 360 மணி நேரத்தில் செய்யக்கூடியதை மட்டுமே நாம்  திட்டமிட இயலும். இந்தக் கால அளவில் மாற்றம் நிகழ வழியில்லை. ஏனெனில் இது பல்கலைக்கழக நதி நல்கைக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட திட்டவரைவில் இடம்பெறும் பரிந்துரை ஆகும். ஒரு பருவத்திற்கு 90மணி நேரம் வீதம் நான்கு பருவங்களில் நடக்கும்   பொதுத்தமிழ் வகுப்புகள் இலக்கியம், இலக்கணம், இலக்கியவரலாறு ஆகிய பாடங்களை மட்டுமே இன்றுவரை கற்றுத்தருகின்றன. இவற்றுடன் வாய் விட்டுத் தமிழை வாசித்தலும் அதை மதிப்பீடு செய்வதும் சேர்த்துக் கொள்ள வேண்டியவை ஆகின்றன.

    தமிழைத் தாய்மொழியாகப் பெறாத மாணவர்களுக்கும், பள்ளியில் தமிழ் பயிலாத மாணவர்களுக்கும் அடிப்படைத் தமிழ் என்ற பெயரில் நடத்தும் பாடங்களுடனும் இதே பயிற்சியைச் சேர்ப்பதில் முட்டுப்பாடு ஏதுமில்லை. அவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு மணி நேரம் என ஒரு பருவத்திற்கு 30மணி நேரம்; ஆக நான்கு பருவங்களில் (30×4=) 120மணி நேரம் தமிழ் வகுப்புகள் நடக்கும்.

    தமிழ்வகுப்பில் கணினிப் பயன்பாடு

    தொற்று நச்சில் காரணமாக உள்ளிருக்கும் இக்காலம் இதுநாள் வரை இருந்த பல நடைமுறைகளைக்  காலாவதி ஆக்கி விட்டது. பள்ளிக்   குழந்தைகளும்  தமது பாடங்களைக் கணினி மூலம் கற்கின்றனர். கல்வியாண்டின் ஒவ்வொரு பருவத் தொடக்கத்திலும் வகுப்பாசிரியர் தாம் எடுக்கவிருக்கும் பாடங்களைக்  காலஅட்டவணைக்கு  உட்படுத்தித் தலைமையிடத்தில் கணினி உபகரணங்களாகச் (notes of lesson) சமர்ப்பித்து விட வேண்டும். கல்லூரிப் பாடங்கள் தமிழ் உச்சரிப்புக்கு முதலிடம் கொடுத்து குறுந்தட்டுக்களாகவோ;  அது போன்ற வேறு பிற உபகரணங்களாகவோ ஒலிப்பதிவு செய்யப்பட்டு பருவத்தின் தொடக்கத்திலேயே மாணவர்க்கு வழங்கப்பட வேண்டும். மாணவர் அன்றாடம் அதைத் திரும்பத்திரும்ப வீட்டில் கேட்டு உடன்சேர்ந்து வாய் விட்டுப் பயில்வது அவசியம். அப்பதிவுகள் சரியான உச்சரிப்பில் அமைய வேண்டும் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்வதன் மூலம் வகுப்பில் மாணவர் தமிழ் வாசிக்கத் தாராளமாக நேரம் கிடைக்கும். அவர்கள் வாசிப்பதும் சொல்வதும் கணினி உதவியுடன் மதிப்பிடப்பட வேண்டும். மொழியியல் சோதனைச் சாலைகளில் ஒலிகளைச் சரிவர அடையாளம் காணும் கருவிகள் உள்ளன. எனவே கணினித் துணையுடன் மாணவர் சொல்வதை மதிப்பிட இயலும். தமிழ்வகுப்புகளில் அதற்குரிய உபகரணங்கள் இருக்க வேண்டும்.

    வாசிப்புப் பயிற்சிக்குரிய பாடம்

    அந்தந்தப் பருவத்திற்குரிய பாடங்களே வாசிப்பதற்கு உரியனவாய் அமைவது தான் வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்கும். இதன் மூலம் பாடத்தை ஆழமாகவும் அகலமாகவும் பயின்று கொள்வதுடன்; மொழி உச்சரிப்பும் சீராகும்.

    முதல்பருவத்தில் அடிப்படை அலகாகிய ஒலிகளுக்கும் அவற்றைத் தவறின்றி  உச்சரிப்பதற்கும் முதலிடம் தந்து சொற்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கலாம். அவ்வாறு சொற்பயிற்சி அளிக்கப் பாடப்பகுதியில் காணும்  தொடர்புடைய சொற்களின் குறைஒலி இணைகளைத் (minimal pairs) தொகுத்துப் பாடமாக்கலாம். எடுத்துக்காட்டாக பாடப்பகுதியில் ‘முல்லை’ என்ற சொல் இருப்பின்;

    முல்லை  கொல்லை     கல்லை   வல்லை     புல்லை   சொல்லை
    முள்ளை  கொள்ளை கள்ளை  வள்ளை   புள்ளை     சொள்ளை

    என்ற போக்கில் 100சொல் தொகுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலே காட்டியிருப்பது ஒரு சொல் தொகுதி மட்டுமே.

    இரண்டாம்பருவம்  சொற்றொடர்கள்  வாசிக்கும் பயிற்சியாக அமைய வேண்டும். /க், ச், த், ப்/ ஒற்று மிகும் இடங்களுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்கப் பழக்க வேண்டும். சான்றாக;

    எடுத்துக்கொடுத்தான்          எடுத்துச்சொன்னான்
    எடுத்துத்தைத்தான்          எடுத்துப் பார்த்தான்

    இதுபோல் 100தொடர்த் தொகுதிகள் பாடப்பகுதியுடன் தொடர்புடையனவாய் அமைக்க வேண்டும்.

    மூன்றாவது பருவத்தில் முழுமையான தொடர்களை வாசிக்கும் பயிற்சி தரவேண்டும் நிறுத்தற்குறிகளுடன்; பாடத்தோடு தொடர்புடைய   100வாக்கியங்கள்  உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் சரிவர நிறுத்தி வாசிக்கக் கற்றுத் தர வேண்டும்.

    நான்காவது பருவத்தில் ஒட்டுமொத்தத் திறனைப் பாடல் வாசிப்பின் மூலமும், உரைநடை வாசிப்பின் மூலமும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

    அடிப்படைத்தமிழ் மாணவர்க்கு விளம்பரப்பலகைகள், பேருந்துத்  தடஅறிவிப்பு, செய்தித்தாள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகை வாசித்தல் எனப் புதிய கோணங்களில் தமிழ் கற்றுக் கொடுப்பதே நல்லது. அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய திருக்குறள், நாலடியார், மூதுரை, கொன்றை வேந்தன் போன்ற பாடல்களை நான்காம் பருவத்தில் பாடமாக வைக்கலாம்.

    அகமதிப்பீடும் புறமதிப்பீடும் (internal and external assessments)      

    மதிப்பீடுகளைப் பங்கீடு செய்வதில் தன்னாட்சி நிறுவனங்களுக்குச்  சுதந்திரம் உள்ளது. 50% அகமதிப்பீடும் 50% புறமதிப்பீடும் முறையே பேசும் தமிழுக்கும் எழுதும் தமிழுக்கும் ஒதுக்கலாம். அகமதிப்பீட்டுக்கென நடைபெறும் மூன்று சுழல் தேர்வுகளில் (cycle tests) பாடத்தின் ஆழமான அறிவைத் துல்லியமாகச் சோதித்தறியும் வினாடிவினா, தானாக வடிவமைக்கக் கூடிய பயிற்சிக்கட்டுரைகள், தமிழ் வாசிப்பு என மூன்றும் இடம்பெற வேண்டும். எப்போது வாய்மொழித்தேர்வு மதிப்பிடும் முறைகளில் ஒன்றாக  ஆக்கப்படுகிறதோ; அப்போது தான் வாய்மொழிப் பயிற்சிக்கு உரிய சிறப்பிடம் கிடைக்கும். வாசிப்புப் பயிற்சியின் அகமதிப்பீட்டைக் கணினியே மதிப்பிடவேண்டும். புறமதிப்பீட்டில் எழுத்துத் தேர்வை (written exam) மட்டும்  வைத்துக் கொள்ளலாம்.

    பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னர் வாய்மொழிப் பயிற்சிகள் உள்ளன எனினும்; பள்ளியில் வாய்மொழிப் பயிற்சி முக்கியத்துவம் பெறவில்லை என்பது பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர் மூலம் தெரிகிறது.

    முடிபும் பயனும்      

    செந்தமிழும் நாப்பழக்கம்’என்ற முதுமொழியின் படி வாய்மொழிப்பயிற்சிக்கும் தேர்வுக்கும் இடம் கொடுப்பது சிறந்தது. கற்றல் கற்பித்தல் மதிப்பிடுவதில் கணினிப் பயன்பாடு இடம்பெறும் போது; தமிழுக்கே உரிய சிறப்பு ஒலிகளை இறவாமல் பாதுகாக்க இயலும்.

    Share
  • The Man with More Stamps

    The Man with More Stamps

    Baskar Seshadri

    Many of us in Mylapore may well Know Rouf Basha a stamp paper vendor who has been in the trade for more than two decades.

    He said when i met him few days back that it was never his idea to start a vending activity but somehow it happened and he feels like working with the same spirit which he had on the first day of his activity. He has his house in the same place where he sells the stamp papers.

    As like others he too feels that the Covid had a big brake on the registrations of all kinds and strangely with lock down still in place with a bit of relaxation, the registrations are up for the past two weeks. That means he says “The real estate market had woken up ” Bhoy fondly being called by all is a cool man and he has answer for all the queries and can attend to the needs of the papers then and there.

    Even by chance if he doesn’t have he will get it readied the day next and is always ready to meet what his customer needs.

    His office is open from Nine in the morning and closes for the Lunch at 1. Again in the noon he vends between 3 pm to Eight in the Night.

    He had experienced visitors knocking at the doors even at Eleven pm in the Night asking for stamp papers on some urgency for the registration the very next morning.

    He has his shop at 17, Paripoorna Vinayagar koil street near Rayars cafe on Arundale street Mylapore. He can be reached at 044 – 24982427 and his Mobile is 98404 52821.

    This energetic Rouf Basha is going to be 75 Next year. He also sells Non judicial stamp, Notarial stamp, Share stamp and Insurance stamp too. His office though a small one has all the best of protocol during this covid Times.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 23

    பரிமேலழகர் உரைத்திறன் – 23

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!’

    முன்னுரை

    ‘வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்’ என்பது உலக வழக்கு. ‘உரைவழக்கிற்கும்’ இது பொருந்தும். பொதுவாக நூல் ஒன்றிற்கு உரையெழுதுவார் பிற இலக்கிய இலக்கணங்களைத் தாம் கொள்கிற பொருளமைதிக்கும் கருத்துக்கும் வலிமை சேர்ப்பதற்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஒரு சிலர் எந்த நூலுக்கு உரையெழுதுகிறார்களோ அந்த நூலிலிருந்தே எடுத்துக்காட்டுக்களையும் சான்றுகளையும் பெற்று எழுதுவர். அந்த சிலருள் அழகரும் ஒருவர். இக்கட்டுரையின் தலைப்பு திருமந்திரப் பாடலொன்றின் நான்கு வரிகளில் ஒன்று. “முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்!” என்று விளித்துத்தான் இந்த வரியை அவர் பாடுகிறார். முதல் வரியால் பெறப்படும் உண்மைகள் பல. 1. கண் புறத்தில் இருந்தாலும் பார்ப்பது புறத்தை மட்டுமே. 2. மனக்கண்ணைக் காண முடியாவிட்டாலும் பிறவற்றை உற்று நோக்கும். ‘காண்பது’ என்பதன் பொருள் அதுதான். ‘காண்பது அறிவு’ என்பது வள்ளுவம். அது எந்த இடத்திலும் ‘பார்ப்பது அறிவு’ எனச் சொன்னதில்லை. 3. ‘மனக்கண்’ என்று ஒன்று இருப்பதையும் அதனாலும் ஆழமாக நோக்க முடியும் என்பதையும் அறியாதவர்களையே மூடரென்று திருமூலர் விளிக்கின்றார். இதனை நன்குணர்ந்தவர் பரிமேலழகர். தமது உரைக்குப் புறநூல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் குறளுரைக்குத் துணை நூலாகத் திருக்குறளையே பயன்படுத்திக் கொள்கிறார். அழகரின் திருக்குறள் உரையில் பொருள் விளக்கத்திற்காகத் திருக்குறள் பயன்பட்டிருக்கும் பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    தனக்குத் தானே விளக்கமான திருக்குறள்

    பரிமேலழகர் திருக்குறளைத் தமது உரைக்கு இரு வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்.

    1. அதிகாரங்களின் பொருண்மை கூடுதல் துலக்கம் பெறுவதற்கு மற்றொரு திருக்குறளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
    2. குறட்பாக்களின் சொற்பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

    இவற்றைப் பயன்படுத்தி விளக்கமளிப்பதிலும் ஒரு நுட்பம் காணப்படுகிறது. முன்னால் உள்ள குறளுக்கு நூலின் பின்னால் உள்ள குறளாலும் பின்னால் உள்ள குறளுக்கு நூலின் முன்னால் உள்ள குறளாலும் விளக்கமளிக்கிறார். இது வியப்பான ஒன்று. என்ன வியப்பு? பல நூறு குறட்பாக்களை உள்ளடக்கிய ஒரு நூலை முற்றவும் கற்று மனத்திருத்தினாலன்றி இது கூடுமா? பரிமேலழகரைப் போகிற போக்கில் குறைசொல்வார் கவனிக்க வேண்டிய இடம் இது.

    அதிகாரப் பொருண்மை விளக்கங்களில் குறள்

    இல்லறவியலில் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து ‘அன்புடைமை’ என்னும் அதிகாரம் அமைந்திருக்கிறது. இல்லறம் இனிது நடத்தற்கும் அதன் முதிர்ச்சியாகிய அருள் பிறத்தற்கும் அன்பு தேவை. முன்னதற்குச் கோவலனைப் பிரிந்த கண்ணகி இல்லறக் கடமைகளை ஆற்ற இயலாமையைச் சுட்டும் கண்ணகியின் வாய்மொழியைச் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டி விளக்கும் பரிமேலழகர், அன்பு அருளிற்குக் காரணம் என்பதை விளக்க அதனைப்போலப் புறத்தில் வேறொரு இலக்கியத்தை நாடாமல் திருக்குறளில் இருந்தே எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

    “அதனான் (அன்பால்) அருள் பிறத்தல் அருளென்னும்
    அன்பீன் குழவி (757) என்பதனானும் அறிக”

    என்று எழுதி அன்பின் முதிர்ச்சி நிலை அன்பு என்பதைத் திருக்குறளே கூறியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

    படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னுமிவை அரசனுடைய அங்கங்கள். இவற்றின் செயல்பாடுகளுக்குத் தேவையானவை தூங்காமை, கல்வி, துணிவு. இவற்றுள் கல்வி ஆறு அங்கங்களுக்கும் உரியது. ஏனைய (தூங்காமை, துணிவு) வினைக்குரியன என்பதை முன்னரே (383) தெளிவுபடுத்திவிடும் பரிமேலழகர் அடுத்த அதிகாரமாகக் கல்வியை வைத்தமைக்கான காரணத்தைப் பதிவிடுகிறார்.

    “மேல் ‘தூங்காமை கல்வி’ (குறள். 383) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃது இறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது”

    மேற்கண்ட குறள் விளக்கங்களில் பின்னது முந்தைய குறட்பாவைச் சுட்டியும் முன்னது அறுபத்தெட்டு அதிகாரங்களுக்குப் பின்னுள்ளதைச் சுட்டியும் கூறப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

    பொருள் விளக்கத்திற்கு

    ‘பித்தத்திற்கு இஞ்சி நல்லது’ என்பது உலக வழக்கு. இவ்வாறு சொல்வது ‘பித்தம் வருவதற்கு இஞ்சி நல்லது’ என்று பொருளன்று, ‘பித்தம் தெளிவதற்கு இஞ்சி நல்லது’ என்றுதான் பொருள்.

    “அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை” (76)

    என்னும் குறட்பாவின் கருத்து அன்பு அறத்திற்குத் துணைசெய்யும். மறத்திற்கும் அந்த அன்பே துணையாகும்’ என்பது போல உள்ளது.  முன்னது சரி. ‘மறத்திற்கும் அன்பு துணையாகும்’ என்றால் அறத்திற்கு எதிரான மறத்தையும் அது வளர்க்குமா? என்னும் ஐயம் தோன்றும். அதனை விளக்கிக்காட்ட  காமத்துப்பாலில் உள்ள,

    “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சம் துணையல் வழி” (1299)

    என்னும் குறட்பாவை எடுத்துக்காட்டி விளக்குகிறார் பரிமேலழகர். ‘துன்பத்திற்குத் துணை யாரோ?’ என்றால் அது வந்துழி அதனை நீக்குதற்கு அவருடைய நெஞ்சத்தையன்றி வேறு துணையில்லை என்பது பொருள். அதுபோல மறத்திற்கும் அன்பு துணை என்றால் அறத்திற்கு மாறான மறத்தை நீக்குதற்கும் அவ்வளவே துணை என்பது பொருளாம். எட்டாவது அதிகாரப் பாடலுக்கு நூற்று முப்பதாவது அதிகாரப் பாடலை எடுத்துக் கொண்டு வந்து பொருள் உரைக்கும் திறன் காண்க.

    ஒழுக்கமிலாதவனின் சுற்றமும் கெடும்

    உவமம் கூறுவதில் திருவள்ளுவர் ஒரு வேறுபட்ட ஆனால் சிறப்பான நெறியைப் பின்பற்றியிருக்கிறார். இந்த நெறி கலித்தொகை முதலிய இலக்கியங்களில் பின்பற்றிய மரபு சார்ந்த நெறியே. அதாவது கருத்துக்களையே உவமமாக்குவது. இதனால் உவமேயமான பொருளும் விளங்கும். உவமமாகச் சொல்லப்படும் கருத்தும் வலிமை பெறும். ‘வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்’ என்பதுபோல. இது ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும்’ (1230) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் தழுவிக் கொள்ளப்படும்.

    “அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்கமிலான் கண் உயர்வு” (135)

    ‘அழுக்காறு உடையவனுக்கு ஆக்கம் இல்லாதவாறு போல ஒழுக்கமிலாதவனுக்கு உயர்ச்சி இல்லை’ என்பது மட்டுமே எழுசீர்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தாகும். ஆனால் பரிமேலழகர், ஒழுக்கமிலாதவனுடைய சுற்றத்திற்கும் உயர்ச்சியில்லை’ என்று கூறுகிறார். இது இந்தப் பாட்டில் சொல்லப்படாத கருத்து. ஆனால் வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட கருத்து. அது என்ன? அழுக்காறு உடையவனின் சுற்றமும் உண்பதும் உடுப்பதுமின்றித் துன்பப்படும் என்று,

    “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்” (166)

    என்னும் குறட்பாவில் கூறியிருக்கிறார். கூறவே, இந்தப் பாட்டுக்குரியவன் மேற்பாட்டில் உவமமாகக் கூறப்பட்டுள்ளான். அழுக்காறுடையவனுக்கு ஆக்கம் இல்லையென்றால் அவன் சுற்றத்திற்கும் ஆக்கம் இல்லை. அதனால் பொருளான (உவமேயம்) ஒழுக்கமிலானுக்கு உயர்ச்சி இல்லையென்றால் அவனுடைய சுற்றத்தார்க்கும் உயர்ச்சி இல்லை’ என்னும் இந்த நுட்பத்தை,

    “உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லையென்பது பெற்றாம். என்னை? “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற”மும் (குறள். 166) நல்கூர்தலின்”

    என்று எழுதுகிறார். உரையெழுதுவது பதினான்காவது அதிகாரப் பாடலுக்கு. எடுத்துக்காட்டி விளக்கும் பாடல் அமைந்திருப்பதோ பதினேழாவது அதிகாரத்தில்!

    ‘உரம்’ என்றால் அறிவு

    பயிருக்கு இடுகின்ற உரம் வேறு. மனிதர்க்கு இருக்க வேண்டிய உரம் வேறு. முன்னது பயிருக்கு ஊட்டச்சத்து. பின்னது பிற உயிர்களினின்றும் மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது. உரமாகிய அறிவு இல்லாதவன் மரத்திற்கும் கீழானவன் என்னும் கருத்தினை,

    “உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
    மரம் மக்களாதலே வேறு” (600)

    என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் கூறுகிறார்.

    “ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி. அவ்வூக்கமிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார். சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிதில்லை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி ‘மரம்’ என்றும், மரத்திற்குள்ள பயன்பாடு இன்மை பற்றி ‘மக்களாதலே வேறு’ என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும்; தேவர் கோட்டம் இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன”.

    என்னும் பொழிப்புரையாலும் விளக்கவுரையாலும் பல நுண்ணிய கருத்துக்களைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகர், பாட்டில் பயின்றுவரும் ‘உரம்’ என்ற சொல் ‘அறிவு’ என்ற பொருளைத் தரும் என்பதற்கு,

    ‘உரம்’ என்பது அறிவாதல்; உரனென்னும் தோட்டியான் (24) என்பதனானும் அறிக.

    என்று மற்றொரு குறட்பாத் தொடர்ப் பொருளையே எடுத்துக் காட்டுகிறார். இரண்டு பாட்டிற்குமான இடைவெளி ஏறத்தாழ அறுநூறு பாக்கள் நினைவாற்றல் என்பது முன்னால் படித்ததை நினைவிற் கொள்வது என்பது பொதுவான கருத்து. பரிமேலழகரோ படித்த அத்தனையையும் நினைவிற் கொள்கிறார். அதனால்தான் அறுநூறாவது பாட்டிற்கு உரையெழுதும் போது இருபத்து நான்காவது பாடற்பொருளை அவரால் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. அந்த நிலையிலும் குறட்பாவிற்கான பொருளைக் குறட்பாவிலேயே தேடிக் கண்டடையும் அவருடைய முயற்சி வெளிப்படுவதைக் காணலாம்.

    ஆயிரம் பாடல் கடந்தாலும் ஆகுபெயர் ஆகுபெயரே

    வேந்துவினை பொருட்டு மனை விட்டுப் பிரிந்தான் தலைமகன். ‘அவ்வேந்தனின் வினை விரைவில் தீருமாயின் இல்லம் சென்று மனைவியோடு கலந்து மாலைப்பொழுதினை இனிமையாக்கலாமே’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான். ‘அவர்வயின் விதும்பல்’ என்னும் அதிகாரத்தில் வினைமுடியா நிலையில் தலைமகளை நினைந்து விதுப்புறும் தலைமகன் தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறுகிறான். இதனை,

    “வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து” (1268)

    என்னும் குறட்பாவில் காட்சிப்படுத்துகிறார் திருவள்ளுவர். பாட்டில் ‘மனைகலந்து’ என்பதற்கு ‘மனைவியைக் கலந்து’ என்பது பொருள். ‘மனை’க்கு  ‘வீடு’ என்பது பொருளாயினும் இங்கே அது மனைவியைக் குறித்தது. ‘மனைகலந்து’ என்றால் ‘வீட்டினை அணைத்து’ என்பது பொருளன்று. சரி அப்படியானால் இது ஆகுபெயரா? ஆம். இது ஆகுபெயரே. ‘மனை’ என்பது வேறு எந்தக் குறட்பாவில் ஆகுபெயராக வந்துள்ளது? இங்கேதான் பரிலேழகர் தன் நினைவாற்றலையும் குறட்புலமையையும் ஒருங்கே காட்டுகிறார். வீட்டை அழகுபடுத்துவதும் அது அழகாயிருப்பதும் வேறு. மனைவி பண்புநலன்களால் மங்கலமாக இருப்பது வேறு.

    “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு” (60)

    என்னும் குறட்பாவில் ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ என்பதில் ‘மனை மாட்சி’ என்னும் சொல் மனைவியின் மாட்சிமைப்பட்ட பண்புகளைக் குறிக்குமே தவிர வீட்டுக்குப் பூசப்படும் வண்ணங்களைக் குறிக்காது. அந்தத் தொடரில் ‘‘மனை’ என்பதை ஆகுபெயராகச் சொன்னாராம் திருவள்ளுவர். அதனை நினைவூட்டி எழுதுகிறார் அழகர்.

    தானம் பெரிதா? தவம் பெரிதா?

    தவம் துறவறத்திற்குரியதெனினும் இல்லறத்தார், துறவறத்தார் என யாவருக்கும் பொதுவானது. காரணம் அது செய்வார்க்கு வேண்டியன நல்கும் சிறப்புடையது. இவ்வுண்மை தெரிந்தும் ‘இல்லறத்தார் ஏன் தவத்தை மறந்தனர்? என்பதற்குத் திருவள்ளுவர் தற்குறிப்பேற்றமாக ஒரு கருத்தினைப் பதிவு செய்கிறார். துறந்தார்க்குச் செய்யும் தானத்தின்மேல் உள்ள ஆர்வத்தால் அவர்கள் (இல்லறத்தார்) தவத்தினை மறந்து போனார்களாம். இதனைத்,

    “துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்” (263)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். இந்தக் குறளில் தவத்தின் அருமையை விளக்க வந்த பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “வேண்டிய வேண்டியாங்கு எய்தற் பயத்த தாகலின் யாவராலும் செய்யப்படும் தவத்தைத் தாம் செய்யும் தானத்தின் மேல் விருப்பமிகுதியான் மறந்தார்போலும். எனவே தானத்தினும் தவம் மிக்கதென்பது பெற்றாம்”

    என்று எழுதியிருக்கிறார். தவத்தது சிறப்புப் பற்றிய அழகரின் குறிப்பு இதற்கு அடுத்து வரும் குறட்பாவாகிய,

    “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்” (265)

    என்னும் குறட்பாவில் அமைந்துள்ளது. அந்தத் தொடரையே உரையாக்கும் பரிமேலழகர், அதிகாரக் கருத்துக்களை நிரல்பட நோக்குவதோடு முன்பின்னாக நோக்கி முன்னதற்கான விளக்கம் இருக்கும் பிந்தைய குறட்பாவின் தொடரைப் பொருத்தமான இடத்தில் வைத்து உரைகாணும் திறன் இது.

    ‘தள்ளாது’ என்றால் ‘தவறாது’

    ‘தள்ளாத வயது’ என்றால் முதுமை என்று பொருள். ‘வண்டியைத் தள்ளிவிட உதவுக’ என்றால் ‘நகர்த்துதல்’ என்று பொருள். ‘தள்ளுபடி’ விலையென்றால் தமிழகத்துப் பெண்களின் ஏமாற்றுக் களம் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியாது. திருக்குறளில் இந்தத் ‘தள்ளாது’ என்ற சொல் பயின்று வருகிற போது அதற்குப் பொருள் தவறாது, ‘மாறாது’ என்பதாகும்.

    “கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
    தள்ளாது புத்தேள் உலகு” (290)

    என்ற குறட்பாவிற்குப், (‘கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும். கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது’ என்பது உரைநடை (PROSE ORDER)) பரிமேலழகர், கள்ளமனம் கொண்டார்க்கு  உடம்பு பாதிப்புக்கு ஆளாவது தவறாது. கள்ளமனம் இல்லார்க்கு வீட்டுலக இன்பம் தவறாது” என்று உரையெழுதுகிறார். ‘உடையார் துன்புறுவர். இல்லாதார் இன்றுவர்’ என்பது கருத்து. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ள தள்ளாது என்னும் சொல் ‘தவறாது’ என்ற பொருளைத் தருவதாகக் கூறும் அழகர், இதே சொல் இதே பொருளில் பயின்றுவரும் மற்றொரு இடத்தை எடுத்துக்காட்டித் தம் நினைவாற்றலையும் புலமைத் திறத்தையும் உறுதி செய்கிறார்.

    “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினும் தள்ளாமை நீர்த்து” (596)

    என்பது ஒரு குறட்பா. ‘முயற்சி உரிய பலனைக் கைகூட்டா விடினும் அம்முயற்சியைக் கைவிடாமல் இருப்பதே சான்றோரால் மதிக்கப்படும். இடைவிடாத முயற்சிக்கு என்றைக்கும் பயன் உண்டு. ஆதலின் முயற்சி பயனளிக்கத் தவறினும் அதனைத் தவறியதாகக் கருதாமல் உயர்ச்சியினைப் பெற்றார் போலச் சான்றோரால் மதிக்கப்படுவர். இது இந்தக் குறட்பாவின் பொருள். இந்தக் குறளில் ‘தள்ளினும் தள்ளாமை’ என்ற இரண்டு இடத்தும் அது ‘தவறுதல்’ – ‘தவறாமை’ என்னும் உடன்பாடு மற்றும் எதிர்மறைப் பொருள்களில் வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் பரிமேலழகர்.

    ‘மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதல் அறிக”

    என்று எடுத்துக்காட்டி விளக்கும் அழகரின் அறிவாற்றலை முந்நூறு பாடல்கள் இடைவெளியில் காண்க.

    கொல்லாமையா? பொய்யாமையா?

    திருவள்ளுவர் ஒரு அதிகாரக் கருத்தினை வலியுறுத்துகிறபோது அதனை முன்னெடுத்து மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதுபோல் தோன்றும். மதுவையும் புகைப்பிடிப்பதையும் பழக்கமாகக் கொண்டவனை நோக்கி “ஐயா! இந்த மதுவை மட்டும் விட்டுடு” என்று சொல்வது போன்றது அது. புகைபிடிப்பதைப் பிறகு கண்டிக்கலாம் என்பது கண்டிப்பவர் கருத்து என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாதிரியான சூழல் திருவள்ளுவருக்கும் வருகிறது.

    “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று” (323)

    என்பது குறட்பாவாகும். திருவள்ளுவருக்கு என்ன சிக்கல் என்றால் இதற்கு முன்பாகப் பொய்யாமையை வலியுறுத்தும் போது,

    “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று” (297)

    செய்தற்கு அருமையால் சில அறங்கள் தவறினாலும் அவை எல்லாவற்றின் பயனையும் தரவல்ல பொய்யாமையாகிய அறத்தையே மேற்கொள்ளுதல் சிறந்தது என்றெல்லாம் சிந்தித்தே திருவள்ளுவர் இதனை எழுதியிருக்கிறார்.  இவ்வளவு சிந்தித்து எழுதிய திருவள்ளுவர் மூன்று அதிகாரங்கள் கடந்து கொல்லாமையாகிய அறத்தினை வற்புறுத்துகிறபோது அவ்வளவு சிறப்புடைய பொய்யாமையை இரண்டாவதாக ஆக்கிக் கொல்லாமையை முதலிடத்திற்கு உயர்த்துகிறார்.  பொய்யாமைக்குத் தலைமைப் பதவி கொடுத்தவரும் அவர்தான். அதனைக் கொல்லாமைக்கு அடுத்த நிலையில் பதவியிறக்கம் செய்தவரும் அவர்தான். இப்போது திருவள்ளுவர் சொல்லியிருக்கும் நிரலில் கற்பாருக்கு ஐயம் தோன்றக்கூடும். இரண்டறங்களில் எது சிறந்தது? என்று ஐயத்தைக் களைய வேண்டிய பொறுப்பு உரையாசிரியர் பரிமேழகருக்கு நேரிடுகிறது. பரிமேலழகர் உரையெழுதிய அனைத்துக் குறட்பாக்களும் பொருள் துலக்கத்தில் சிறந்து விளங்கினும் ஒருசில குறட்பாக்களும் உரையாசிரியர் பிறர் எண்ணிப் பார்க்க இயலாத உரைகளைக் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான் மேலே காட்டிய “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்னும் குறட்பாவாகும்.

    “நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை. அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நின்று”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகருக்கு மேற்பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் ஐயம் கற்பாருக்கு வருமே எனக் கவலைப்பட்டிருக்கிறார். அந்தக் கவலையை அவர் ‘அவர்மொழி’யில் பதிவு செய்திருக்கிறார்.

    “அதிகாரம் கொல்லாமையாயினும் மேல் “பொய்யாமை பொய்யாமை ஆற்றின்” (297) எனவும், “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை” (300) என்றும் கூறினாராகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே, அது நிகழாமை பொருட்டு ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று” என்றார். முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாதலின். அதனைப் ‘பின்சார நன்று’ என்றது நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும் தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்து வருதலான் என உணர்க”

    திருக்குறளில் கருத்து முரண் என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அழகர் எழுதிக்காட்டும் இந்த உரை நுட்பம் கட்டுரையாசிரியர் தரும் பின்வரும் விளக்கத்தால் தெளிவாகலாம்.

    அழகர் உரைப்பன இவையே  

    1. அதிகாரக் கருத்தினை முன்னிறுத்தும் வழக்கம் திருவள்ளுவருக்கு இருப்பினும் இந்தப் பாடல் அத்தகையதன்று. ஒரு முரணைக் களைய முற்படுகிறது.
    1. பொய்யாமையை ஏனைய அறங்கள் எல்லாவற்றினும் சிறந்ததாக முன்னர்க் கூறிக் கொல்லாமையை இந்த அதிகாரத்தில் முன்னெடுத்தால் ‘மாறுகொளக் கூறல்’ என்னும் குற்றம் திருக்குறளுக்கு நேரும்.
    1. ‘முன்சொன்ன விதியினும் பின் சொல்லும் விதி’ சிறப்புடைத்தாதலின் பொய்யாமை, கொல்லாமைக்கு அடுத்த நல்ல அறமாகக் கொள்ளப்படும்
    1. ‘பொய்யாமை’ பின்னுக்குத் தள்ளப்பட்டதன் காரணம் என்ன? “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்” (291) “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்” (292) என்பதனால், ‘நிகழாதது கூறலும் நன்மை தந்தால்’ உண்மையெனவும், ‘நிகழ்ந்தது கூறலும் தீமை தந்தால் பொய்ம்மையெனவும் பயனை நோக்கி இவ்வாறு வாய்மையின் தன்மை மாறுபடும். கொல்லாமையோ அங்ஙனம் மாறுபடாதாதலின் பொய்யாமையினும் கொல்லாமை மேலானது காண்க.
    1. ‘கொலை’ பொய்போல நன்மை பயந்தாலும் குணமாகாது. குற்றமே! ‘கொல்லாமை’ தீமை பயந்தாலும் குற்றமாகாது குணமாம் என்க. இதனைப் பற்றி அது திரிந்து வருதலான் ‘திரியாத கொல்லாமை சிறந்தது’ என்க .
    1. ‘சான்றாண்மை’ என்னும் அதிகாரத்துக் ‘கொல்லா நலத்தது நோன்மை’ (984) என நோன்புக்கு அடையாளமே கொல்லாமை என நாயனார் கூறியதும் அறிக.

    மேற்சொன்ன அத்தனைக் கருத்துக்களும் பரிமேலழகரின் பொழிப்புரையிலும் விளக்கவுரையிலும் அடங்கியிருக்கின்றன. ஒரு குறளுக்கு உரையெழுத அதிகாரம், இயல், பால் எனத் தமது எல்லை கடந்த அகநோக்கினால் பொருளெழுதும் அழகரின் உரைத்திறன் இது!.

    நிறைவுரை

    நூலுக்கு உரைசொல்லுவது என்பது தற்காலத்தில் ஒரு பொழுதுபோக்காகக் கருதப்படலாம். கருதப்படுகிறது. திருக்குறளுக்கு வெளிவந்திருக்கும் உரைகளிற் பல சொற்கோவைகளாகவே சோர்ந்து படுத்துவிட்டன. உரை, சிந்தனை வளர்ச்சியின் அடையாளம். பன்முகப் புலமையின் பந்தி. அது முன்னோர்களை விஞ்சியது என்னும் முனைப்பின் வெளிப்பாடாக அமைந்துவிடக்கூடாது. குறட்பா இருக்கிறது. அதற்குள் சீர்கள் இருக்கின்றன. பரிமேலழகர் அவற்றுக்குப் பொருளுரை தருகின்றார். தான் தந்த உரைக்கே விளக்கவுரை தருகின்றார். அந்த விளக்கத்திற்கான சான்றுகளைத் தருகிறார். அந்தச் சான்றுகளைப் புறத்தில் இருந்து காட்டுகிறார். தான் உரையெழுதும் நூலிலிருந்தே காட்டுகிறார். முன்னால் உள்ள குறளுக்குப் பின்னால் இருந்தும் பின்னால் உள்ள குறளுக்கு முன்னால் இருந்தும் எடுத்துக் கொள்கிறார். ஒரு நூலை அவர் எத்தனை முறைப் படித்திருந்தால் இந்த நினைவாற்றலை எட்டியிருப்பார்? மரச்சிலை செதுக்கும் சிற்பி உளிப்பிடியை மரத்திலேயே செய்துகொள்வது போன்றது அழகர் செயல். அவர் படித்தது கரும்பலகையிலோ கணிப்பொறியிலோ அல்ல. ஒலைச் சுவடியில்! எண்ணிப் பார்க்க வேண்டாமா?.

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(332)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(332)

    உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
    கற்றான் கருதிச் செயல்.

    – திருக்குறள் – 949 (மருந்து)

    புதுக் கவிதையில்...

    மருத்துவ நூல்
    நன்கு கற்ற மருத்துவர்,
    நோயாளியின்
    பிணிபோக்க முயல்கையில்,
    நோயாளியின் வயது
    நோய் வந்திருக்கும் காலம்,
    குணப்படுத்தத் தேவையான
    காலம் போன்றவற்றைக்
    கருத்தில் கொண்டு
    செயல்பட வேண்டும்…!

    குறும்பாவில்...

    பிணிபோக்கக் கற்ற மருத்துவர்
    நோயாளியின் வயது நோய்வந்த தீரும் காலம்
    போன்றவற்றை ஆராய்ந்து செயல்படுக…!

    மரபுக் கவிதையில்...

    மருத்துவ நூலெலாம் நன்குகற்ற
    மருத்துவ ரொருவர் நோயாளிக்
    கிருக்கும் நோயைக் குணப்படுத்த,
    இவரின் வயது நோயதுதான்
    இருந்த குணம்பெறும் காலமதை
    எல்லாம் ஆராய்ந் தறிந்தபின்னே
    மருந்து கொடுத்துக் குணமாக்கி
    மாற்றும் செயலைத் தொடங்கிடுக…!

    லிமரைக்கூ..

    மருத்துவம் தொடங்கிடும் முன்னே
    கற்றறிந்த மருத்துவர் செயல்படவேண்டும் நோயாளியின்
    வயது நோய்க்காலம் ஆய்தறிந்த பின்னே…!

    கிராமிய பாணியில்...

    கொணமாக்கணும் கொணமாக்கணும்
    நோயாளியக் கொணமாக்கணும்,
    நல்லமொறயாக் கொணமாக்கணும்..

    நல்லாப் படிச்ச மருத்துவரும்
    நோய்க்கு மருந்துகுடுக்க
    ஆரம்பிக்குமுன்னால
    நோயாளி வயசு
    நோயோட கொணம் காலமெல்லாம்
    நல்லா அறிஞ்சி ஆராஞ்சி
    அப்புறமா ஆரம்பிக்கணும்..

    அதால
    கொணமாக்கணும் கொணமாக்கணும்
    நோயாளியக் கொணமாக்கணும்,
    நல்லமொறயாக் கொணமாக்கணும்…!

    Share
  • திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    திருப்பாவை – 5

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
    தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசுஆகும் செப்பேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு | லட்சுமிப்பிரியா குரலில்

    ஆயர் குலத்தினில் தோன்றிய எனச் சொல்லாமல், தோன்றும் அணிவிளக்கை என ஆண்டாள் ஏன் சொன்னார்? கண்ணன் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருப்பான் என்பதன்றோ, இதன் உட்பொருள். தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் செய்பிழை யாவும் தீயினில் தூசாகும் என அறுதியிட்டுக் கூறுகிறார் ஆண்டாள். திருப்பாவையின் ஐந்தாவது பாடல் ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு | ஸ்வேதா குரலில்

    ஒரு தீபத்திலிருந்து ஏராளமான தீபங்களை ஏற்றுவது போல், ஆண்டாளின் பாடல்களைப் பாடும் ஒவ்வொருவரும் அந்த ஜோதியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். வண்ண ஒளியை எண்ணங்களில் ஏற்றுகிறார்கள். இதோ செல்வி ஸ்வேதா, ஆண்டாளின் கைவிளக்கை ஏந்திப் பாடுகிறார். ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…’

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    ஓவியத்திற்கு நன்றி: SIRI DRAWS

    Share
  • திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா

    திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா

    திருப்பாவை - 4
    
    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா | லட்சுமிப்பிரியா குரலில்

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, அருட்செல்வி ஆண்டாளின் அமுதத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இதோ, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில். கேட்டு மகிழுங்கள்.

    திருப்பாவை -4 | ஆழி மழைக்கண்ணா | ஸ்வேதா குரலில்

    மழையின் அறிவியல், மணிவண்ணனின் அழகியல், பக்தியின் செவ்வியல், கவித்துவம் மின்னும் பாட்டியல் ஆகிய இவை அனைத்தையும் ஒரே பாட்டில் எட்டுகின்ற ஒப்பற்ற தமிழ்ச்செல்வி, ஓங்குபுகழ் திருச்செல்வி ஆண்டாளின் வண்ணத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இந்தப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (சுஜாதா தேசிகனின் திருப்பாவை விளக்க நூலின் அட்டைப் படத்தில் உள்ள ஆண்டாள் ஓவியத்தை இங்கே பயன்படுத்தியுள்ளோம். இதற்கு அனுமதி அளித்த சுஜாதா தேசிகன் அவர்களுக்கு நம் நன்றி.)

    Image courtesy: https://freetamilebooks.com/wp-content/uploads/2014/02/Untitled.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share