Blog

  • படக்கவிதைப் போட்டி – 289

    படக்கவிதைப் போட்டி – 289

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (20.12.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 22

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 22

    -மேகலா இராமமூர்த்தி

    இராவணனின் வீர பராக்கிரமங்களை இலைக்குடிலில் அமர்ந்திருக்கும் துறவியார் விதந்தோதுவதைக் கண்ட சீதை, அதனைச் சிறிதும் இரசிக்காது, ”ஐய! உடம்பையும் மிகையாகக் கருதும் இயல்புடைய துறவி நீர்! அப்படியிருக்க வேதங்களையும் வேதியர்களின் அருளையும் விரும்பாமல், மன்னுயிர்களைக் கொன்று புசிப்பவர்களும் பாதக வினைகளையே நன்றெனப் புரிபவர்களுமாகிய அரக்கர்தம் பதியில் வதியக் காரணம் என்ன?” என்றாள் வியப்போடு!

    வேதமும் வேதியர்
         அருளும் வெஃகலா
    சேதன மன்உயிர்
         தின்னும் தீவினைப்
    பாதக அரக்கர்தம்
         பதியின் வைகுதற்கு
    ஏது என் உடலமும் மிகை
         என்று எண்ணுவீர் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3467)

    தீயாரைக் காண்பதுவும் தீதே திருஅற்ற
    தீயார் சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
    குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
    இணங்கி இருப்பதுவும் தீது.
    (மூதுரை – 9) என்பது ஆன்றோர் சொன்ன மூதுரையாயிருக்க, இத்துறவியோ தவநெறியின் நீங்கி அவநெறியில் வாழும் அரக்கரோடு இணங்கி வாழ்ந்திருக்கின்றாரே என்ற சிந்தனை எழுந்தது சீதையின் சிந்தையில்!

    தொடர்ந்து பேசியவள், “ஒன்று காட்டில் வாழும் முனிவர்களோடு நீவிர் வாழ்ந்திருக்க வேண்டும்; அல்லது நல்லவர்கள் வாழும் நாட்டிலாவது உறைந்திருக்க வேண்டும். இரண்டையும் விடுத்து அறநெறி வழுவியோரது ஊரின்கண் வாழ்ந்திருக்கின்றீர்! என்ன காரியம் செய்தீர்?!” என்று துறவியாரின் அறம்வழுவிய செயலுக்குத் தன் கண்டனத்தையும் தெரிவித்தாள்.

    அவள் கருத்தை மறுத்த போலித் துறவியார், ”எம்மைப் போன்றோர்க்கு தேவர் நிருதர் என்ற வேறுபாடில்லை. சொல்லப்போனால் தேவர்களைக் காட்டிலும் நிருதர்கள் நல்லவரே” என்றார்.

    சீதை அதை ஒப்புக்கொள்ளவில்லை. ”அரக்கர்கள் தீயரே! அவர்வழி சேருவோரும் நல்லாராய் இருக்கமுடியாது” என்றாள் தீர்மானமாக. அரக்கர்களைத் தொடர்ந்து புகழ்ந்தால் சீதை தன்மீது ஐயங்கொள்ள நேரும் என்றெண்ணிய இராவண சந்நியாசியார், பேச்சை மாற்ற விரும்பி, ”அம்மணி! தேவர் நாகர் மானுடர் ஆகியோர்க்கு வலிமையில் மிக்கவரான அரக்கர்வழி நிற்பதல்லாது வேறுவழி என்ன இருக்கின்றது நமக்கு?” என்றார்.

    சந்நியாசியாரின் கபட உள்ளத்தை உணராத மங்கை சீதை, ”அறந்தரு வள்ளலான என் நாயகன் இராமன் பாலைவழிகளில் திரிதரும் அரக்கர்கட்கோர் முடிவுகட்டுவான்; பின்பு இவ்வுலகிற்குத் துன்பமில்லை” என்றாள்.

    அரக்கரைச் சீதை இழித்துரைக்கக் கேட்ட இராவணன், ”மீனனைய கண்ணாளே! மானிடவர் அரக்கரை வெல்வர் என்று நீ உரைப்பது யானை இனத்தை இளமுயல் வெல்லும் என்பதற்கும் ஆண்சிங்கக் கூட்டத்தைச் சிறுமான் வெல்லும் என்பதற்கும் ஒப்பானது” என்றான். நெஞ்சில் துறவாது துறந்தான்போல் வஞ்சிக்கும் இராவணனின் உண்மை மனநிலை மெல்ல மெல்ல அவன் சொற்களில் வெளிப்படத் தொடங்குவதை இங்கே நாம் காணமுடிகின்றது.

    சீதையும் சளைக்கவில்லை. ”குற்றமில்லாதவரே” என்று இராவண சந்நியாசியை விளித்து, ”தாங்கள் குறிப்பிட்ட சிங்க ஏற்றைப் போன்றவர் இராமன்; அரக்கர்களோ மான் கணத்தவர். இராமனால் அவ் அரக்கர்கள் சுற்றத்தோடு மடிவதையும் தேவர்கள் ஆரவாரிப்பதையும் விரைவில் காண்பீர். தருமத்தை என்றேனும் பாவம் வெல்லுமோ?” என்று கேட்டாள்.

    வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார்
    கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும்
    நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ
    மீளஅருந் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள்.
    (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3475)

    போலிச் சந்நியாசியார் அரக்கர்களை வானளாவப் புகழ்ந்தபின்னரும்கூட அவர் அரக்கராக இருக்கக்கூடும் என்ற ஐயம் தூயவளான சீதைக்குத் தோன்றவில்லை. காப்பியத்தின் பாவிகப் பண்புகளில் ஒன்றான ’அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதனை இங்கே காப்பியத் தலைவியின் வாயிலாகக் கம்பர் அழுத்தமாகப் பதிவுசெய்வது கருதத்தக்கது.

    அதுவரை சீதையின் சொற்களைப் பொறுத்திருந்த இராவணன், மானுட இராமன் அரக்கரினும் ஆற்றல் மிக்கவன் எனும் சீதையின் மொழிகளால் தன் இனத்துக்கு இழுக்கு நேர்ந்ததென்றெண்ணித் தன்மானம் ஓங்கிடப் பொங்கியெழுந்தான். ”இராவணனின் இருபது தோள்களின் வலியின்முன் சிறிய பூளைப் பூவைப்போல் இராமன் எனும் மானுடன் வீழ்வான்” என்றான் சீற்றத்தோடு.

    அத்தோடு விட்டானில்லை! ”பேதைப் பெண்ணே! மேருமலையைப் பெயர்க்க வேண்டுமா? வானத்தை இடிக்க வேண்டுமா? கடல்நீரைக் கலக்க வேண்டுமா? கடலிடை தோன்றும் வடவாமுகாக்கினி எனும் தீயை அவிக்க வேண்டுமா? உலகத்தைப் பெயர்த்தெடுக்க வேண்டுமா? இவ்வரிய செயல்கள் அனைத்தையும் எளிதாகச் செய்துமுடிக்கக் கூடிய வல்லவன் இராவணன். அவனை மிக எளியன் என்றா கருதிவிட்டாய்?” என்று கேட்டான்.

    மேருவைப் பறிக்க வேண்டின்
         விண்ணினை இடிக்க வேண்டின்
    நீரினைக் கலக்க வேண்டின்
         நெருப்பினை அவிக்க வேண்டின்
    பாரினை எடுக்க வேண்டின்
         பல வினை சில சொல் ஏழாய்
    யார் எனக் கருதிச் சொன்னாய்
         இராவணற்கு அரிது என் என்றான். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3478)

    இப்பாடல் அடிகளை,

    ”மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
    வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன்எனத் தான்
    முன்னிய துறைபோகலின்…”
    (பட்டின: 270-273) என்று திருமாவளவனின் ஆற்றல்சாற்றும் பட்டினப்பாலை அடிகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    வாக்குவாதம் முற்றிக்கொண்டே சென்றது. இருபது தோள்கள் கொண்ட இராவணனை ஆயிரம் தோள்கள் கொண்ட கார்த்தவீர்யார்ச்சுனன் சிறை வைத்ததைச் சுட்டிக்காட்டிய சீதை, அவ் ஆயிரந்தோளுடையவனோ இரு தோளுடைய பரசுராமனின் மழுவால் வெல்லப்பட்டான்; அந்தப் பேராற்றலாளனான பரசுராமனோ மானுடன் இராமனுக்குத் தோற்றான். எனவே இராவணனை இராமன் வெல்வது உறுதி என்றாள்.

    அதைக் கேட்டதும் சினத்தின் உச்சிக்குச் சென்ற இராவணன் அதன்பின்னரும் தவசியாய் நடிக்கவிரும்பாமல் அச்சம்தரக்கூடிய தன் உண்மை வடிவத்தை எடுத்து நின்றான். ”இவர் உண்மையான துறவி அல்லர் போலிருக்கின்றதே” என்ற ஐயம் அப்போதுதான் சீதைக்கு எழுந்தது; உடனே நடுக்கம் கொண்டாள் அந்த நங்கை!

    இராவணன் சீதையைப் பார்த்து, ”பெண்ணே! தேவர்களை வென்ற என் வீரத்தை இகழ்கின்றாய்; புழுக்களையொத்த மானிடரைப் புகழ்கின்றாய்! நீ பெண் என்பதால் பிழைத்தாய்” என்றுரைத்தான். உடனே சீற்றம் தணிந்து,
    ”அன்னமே! என்னைக் கண்டு நடுக்கம் கொள்ளாதே! யாரையும் கும்பிட்டு வணங்காத என் தலைகளிலுள்ள மணிமுடிபோல் உன்னை நான் இன்பமாக வைத்துத் தாங்குவேன்! அரம்பையர்கள் உனக்கு ஏவல்செய்ய, பெரும் செல்வத்தில் திளைத்து என்னோடு மகிழ்ந்திருப்பாயாக!” என்றான்.

    ஒருகணம் கோபமும் மறுகணம் காமமுமாகச் சீதையிடம் இராவணனின் உள்ளம் காணும் ஊசலாட்டத்தைக் கம்ப நாடகம் இப்பாடல்களில் கவினுறக் காட்சிப்படுத்துகின்றது.

    ”இராமனின் அம்பில் சிக்கி உயிரை விடுவதற்குமுன் இங்கிருந்து ஓடிவிடு!” என்று சீதை இராவணனை எச்சரிக்க, ”மலைபோன்ற வடிவுகொண்ட என்மீது உன் கணவன் விடும் கணை வெறும் மலரம்பு போன்றது; அது என்னை ஏதும் செய்யாது” என்று அலட்சியமாகப் பதிலிறுத்த இராவணன், சீதையின் அடியின்கீழ் வீழ்ந்துவணங்கி என்னை ஏற்றுக்கொள் என்று அவளிடம் இறைஞ்சினான்.

    தம் மனைவியரிடம் புலவிக் காலத்தில்கூடத் தலை வணங்காதவன் என்று பெருமை பெற்றிருந்த இராவணன், சீதைமீது கொண்ட கழிகாமத்தால் தன் பெருமித நிலையினின்று பெரிதும் இழிந்துபோனதற்கு இச்செயல் சான்றாகின்றது.

    இராவணனின் அருவருக்கத்தக்க இச்செயலால் சீதை மேலும் திகில்கொண்டு, இராமனையும் இளவல் இலக்குவனையும் அழைத்து அரற்றவும், அவளைத் தன்னோடு தூக்கிச்செல்ல முடிவெடுத்த அத் தீயவன், தனக்கு பிரமன் இட்ட சாபத்தை நினைவுகூர்ந்து, சீதையைத் தொட்டுத் தூக்காமல் அவளைப் பன்னசாலையோடு ஒரு யோசனை தூரத்துக்கு நிலத்தொடு பெயர்த்தெடுத்தான் என்கிறார் கம்பர்.

    ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்
    தீண்டான் அயன் மேல் உரை சிந்தைசெயா
    தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்
    கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல்
    . (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3490)

    பிரமனிடம் அப்படி என்ன சாபம் பெற்றான் இராவணன்?

    ”எந்தப் பெண்ணிடமும் அவள் விருப்பமின்றி வல்லுறவில் ஈடுபட்டால் இராவணன் அழிவான்” என்ற சாபத்தை அவனுக்குப் பிரமன் அளித்திருந்தான். அதுபோலவே குபேரனின் அளகாபுரியில் அவன் மருமகள் அரம்பையை இராவணன் பாலியல் வன்புணர்வு செய்தபோது அவள் இராவணனுக்கு இட்ட சாபம் “வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள் கற்புக் கனலால் எரிவாய்” என்பது. வேதவதி என்ற பெண்ணிடம் இராவணன் முறைகேடாக நடக்க
    முற்பட்டபோது அவளும் அவனுக்குச் சாபமளித்துத் தீயில் புகுந்தாள்.

    இவையல்லாமல் அரம்பையின் கணவனான நளகூபன், இராவணனால் வன்புணர்வு செய்யப்பட்ட மற்றொரு தேவலோகப் பெண்ணான புஞ்சிகத்தலை ஆகியோரிடமும் இராவணன் சாபம் பெற்ற வரலாறுகள் உண்டு!

    பிரமன் அளித்த சாபத்தை எண்ணிப்பார்த்த இராவணன், சீதையைத் தொடாமல் பன்னசாலையோடு பெயர்த்தெடுத்துச் சென்றான் என்று கம்பர் காப்பியம் பேசுகின்றது. சீதையை இராவணன் தொட்டுத் தூக்காமல் குடிலோடு எடுத்துச் சென்றான் என்று கம்பர் எழுதியமைக்கு இதைவிடவும் முக்கியக் காரணம் மணமான, கற்பிற் சிறந்த பெண்ணொருத்தியை அந்நிய ஆடவன் தொட்டுத் தூக்குவது அப்பெண்ணுக்கும் தமிழ் மரபுக்கும் இழுக்கு என்பதே.

    ஆனால் வான்மீகம் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச்சென்றான் என்றே பேசுகின்றது. இராவணன் சீதையைத் தொட்டால் இறந்துபோவான் என்ற சாபமிருக்கும்போது அவன் சீதையை வலிந்து பற்றியபோதும் ஏன் இறக்கவில்லை என்ற வினாவைச் சிலர் எழுப்புவதுண்டு!

    பெண்ணைத் தொட்டாலே இறந்துபோவான் என்பதன்று அவன் பெற்ற சாபம்! பெண்ணிடம் வல்லுறவில் அவள் விருப்பமின்றி ஈடுபட்டால் இறந்துபோவான் என்பதே அவன்பெற்ற சாபம். தீண்டுதல், தொடுதல் என்பவை வன்புணர்வைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நாகரிகச் சொற்கள் என்பதை ஓர்க!

    சீதையைக் கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த பின்பும் இராவணன் அவளிடம் தவறாக நடந்துகொள்ளாமல் பல்வேறு உபாயங்களால் அவளை வயப்படுத்த முயன்றமைக்கு(ம்) அவன் பெற்ற சாபமே காரணம். மற்றபடி சீதையின் சம்மதத்தைப் பெற்ற பின்பே அவளைத் தொடவேண்டும் என்று கருதிய உத்தமனோ ஒழுக்கசீலனோ அல்லன் இலங்கையர்கோன்!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த | லட்சுமிப்பிரியா குரலில்

    மதுரகவிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, திருப்பாவை. இது, சொல்லினிமையும் பொருளிமையும் ஒருங்கே அமைந்தது. வாய்விட்டுப் பாடுவதற்கு ஏற்றது. இசையுடன் இணைந்து பரிமளிப்பது. ஓங்கி உலகளந்த எனத் தொடங்கும் மூன்றாவது பாடலில், ஓங்கி என்று எடுக்கும்போதே திருமாலின் பேருருவம் நம் மனக்கண்முன் தோன்றிவிடும். வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்ற வரி, எண்ணி எண்ணி மகிழத்தக்கது. தமிழ்க் குலம் பெற்ற நீங்காத செல்வம் அன்னை ஆண்டாளின் மூன்றாவது பாடலைச் செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த | ஸ்வேதா குரலில்

    எம்பாவாய், எம்பாவாய் என்று நம்பாவையரை நாவினிக்க அழைத்து, பாவை நோன்பிருந்து, உத்தமன் பேர்பாடி உய்யுங்கள் என வழிகாட்டுகிறார், ஆண்டாள். ஓங்கி உலகளந்த என்ற மூன்றாவது பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 47

    பழகத் தெரிய வேணும் – 47

    நிர்மலா ராகவன்

    எனக்கு மட்டுமே சொந்தம்

    என் உறவினரின் மூன்று வயது மகளைச் சிறிது காலம் என் பொறுப்பில் விட்டிருந்தார்கள், அவளுடைய தாய் பூரணி கர்ப்பமாக இருந்தபோது.

    விவரம் புரியாது, `அம்மா’ என்று என்னை அழைத்துக்கொண்டிருந்தாள் குழந்தை.

    வெளியூரிலிருந்த வந்த பூரணி குழந்தையைப் பார்த்தவுடனே செய்த முதல் காரியம்: மிகுந்த பிரயாசையுடன் நான் அழகாக அலங்கரித்திருந்த தலைமயிரைக் கலைத்ததுதான்!

    ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது எனக்கு.

    `இது என் குழந்தை. நீ கை வைக்காதே!’ என்று அந்தத் தாய் சூசகமாக உணர்த்தி இருக்கிறாள்!

    இன்னொரு கதை

    திருமணமாகிப் பல ஆண்டுகள் கழிந்த பின்னர், உரிய சிகிச்சைக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். தன் அருமைக் குழந்தையை அவனுடைய தந்தைகூடத் தூக்க விடமாட்டாள் தாய்.

    “இப்போதான் தூக்க முடியும். இல்லியா?” என்று தந்தை மன்றாடுவார்.

    “எப்பவும் தூக்கி வெச்சுக்கணும்னு அழுவான்,” என்று காரணம் கற்பித்தாள் தாய்.

    தன் பொம்மையை வேறு ஒருவர் தொட்டுவிட்டால் வரும் ஆத்திரத்தை பொம்மையிடம் காட்டும் மூன்று வயதுப் பெண்குழந்தை. பொம்மையை `அசடு!’ என்று திட்டுவதோடு நில்லாமல், தூக்கியும் எறிவாள்.

    வளர்ந்த பின்னும் அதே மனப்பான்மையா?

    எத்தனை வயதாகியும், குழந்தைக்காகத் தான்தானே நிறைய சிரமப்பட்டிருக்கிறோம், அதனால் அவனுக்குத் தன்னை மட்டுமே பிடிக்கவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.

    இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் தாயை வெறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அப்படி வளர்ந்த ஒரு பதின்ம வயதுப் பையன், “எத்தனை வயதானாலும் குழந்தைகளை இறுகப் பிடித்துக்கொள்வதைச் சிலர் விடவேண்டும்!” என்று என்னிடம் கசப்புடன் சொன்னான். அம்மாவை நேரடியாகத் தாக்க அவனுக்கு மனமில்லை.

    கூட்டுக்குடும்பத்தில் வளரும் குழந்தைகளைப் பலரும் கண்டிப்பார்கள், கேலி செய்வார்கள். ஓயாது புத்தியும் சொல்வார்கள். தாய் எதையும் கண்டுகொள்ள மாட்டாள். பெரியவர்களானதும், அவர்கள் முதலில் நாடுவது தாயைத்தான்.

    இம்மாதிரி சொந்தம் கொண்டாடுவதை ஆண்-பெண் உறவிலும் காணலாம்.

    கதை

    பெரிய பணக்காரனான சுந்தர் அறிவும், அழகும், பெரிய படிப்பும் ஒன்றாக அமைந்த சுதாவைக் காதலித்து, அச்சாரமாக மோதிரமும் பரிசாக அளித்தான்.

    சுதாவிற்குப் பிறகுதான் தெரியவந்தது அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருந்த சமாசாரம்.

    அந்த மனைவிக்கு சித்த சுவாதீனம் இல்லை, அவன் அவளை விவாகரத்து செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான் என்ற நம்பகமான தகவல் கிடைக்க சமாதானமானாள். அவர்கள் உறவு தொடர்ந்தது.

    `வருங்கால மனைவியையாவது நான் என்றும் பிரியாது இருக்கவேண்டும்,’ என்று சுந்தர் நினைத்தான்.

    அதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் காதலி யாருடன் பேசலாம், என்ன அணியலாம் என்று எல்லா விதத்திலும் கட்டுப்படுத்த ஆரம்பித்தபோது அவளால் பொறுக்க முடியவில்லை. எதிர்த்தாள்.

    “எனக்கு உன்மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஆண்களின் வக்கிரபுத்தி உனக்குத் தெரியாது. நான் உன்னைப் பாதுகாக்க நினைக்கிறேன். என்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறாயே!” என்று உருக்கமாகப் பேசி, சமாதானம் செய்வான். பரிசுப் பொருட்கள் தொடரும்.

    ஆரம்பத்தில் சுதாவும் அவனை நம்பினாள்.

    `இது என் வாழ்க்கை. நான் தவறு செய்தால் என்ன? அதிலிருந்து கற்றுவிட்டுப் போகிறேன்!’ என்று நினைக்க ஆரம்பித்தாள்.

    மேலும் பல யோசனைகள் எழுந்தன: `வாழ்நாளெல்லாம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கப் போகிறோமா, இல்லை, விட்டுக் கொடுத்துவிட்டு, எதையோ இழந்தது போன்ற நிராசையுடன் வாழ்க்கையைக் கழிக்கப் போகிறோமா?’

    ஒருவர் எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்துத் தன் அன்பை வெளிக்காட்டினாலும், இழந்த சுதந்திரத்திற்கு அதெல்லாம் ஈடாகாது என்று தோன்றிப்போக, சுதா அவர்கள் உறவை முறித்துக்கொண்டாள்.

    சிறு வயதில் பெற்றோரில் ஒருவரையோ, அல்லது இருவரையும் பிரிந்து வாழ நேரிட்ட சிலரும் சுந்தரைப்போல்தான் தமக்குப் பிடித்தவர்களை இறுகப் பற்றிக்கொள்வார்கள்.

    `இந்த உறவும் இல்லாது போய்விடுமோ!’ என்று அவர்கள் அஞ்சலாம். ஆனால், ஓயாத கட்டுப்பாட்டால் தம்மிடம் அன்பு கொண்டவர்களை, தம்மையும் அறியாது, விலக்குகிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

    “உறவுகளில் பொறாமை, உணவில் உப்பைப் போன்றது. அளவுக்கு மிஞ்சினால் பொறுக்க முடியாது!” என்கிறார் புத்திசாலியான ஒரு பெண்மணி.

    பெண்களையும் இந்தக் குணம் விட்டுவைப்பதில்லை.

    கதை

    திருமணத்துக்கு முன் பல ஆண்கள் அவளைப் பெண்பார்க்க வந்துவிட்டு, ஏதேதோ காரணம் கூறி நிராகரித்துவிட்டதில் தங்கம்மா பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானாள்.

    அவளுக்குக் கல்யாணம் நடந்து முடிந்து, அன்பான கணவர் வாய்த்தபின்னரும், மௌன கீதங்கள் படத்தில் வரும் கதாநாயகி சரிதாவைப் போல், `என்னை விட்டுப் போயிடாதீங்க,’ என்று தினமும் அவரிடம் கதறுவாள்.

    `எனக்கு மற்ற பெண்களிடம் நாட்டமே கிடையாது,’ என்று அந்த அப்பாவிக் கணவர் எத்தனை முறை சமாதானப்படுத்தியும் தங்கம்மாவின் மனம் நிம்மதி அடையவில்லை.

    தன்னை அவள் சந்தேகிக்கிறாள்! அந்த மனிதருக்கு வெறுத்துப்போய், அவளைத் தவிர்க்க ஆரம்பித்தார்.

    கதை

    “என் மனைவி நான் ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அழகையோ, நடிப்பையோ புகழ்ந்து பேசினாலே சண்டை பிடிக்கிறாள்!’ என்று ஒருவர் தன் நண்பனிடம் குறைப்பட்டார். `உன் வீட்டில் எப்படி?”

    “என் மனைவி, `இன்று உங்களுக்குப் பிடித்த நடிகையின் படம் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள், சீக்கிரம் வந்துவிடுங்கள்,’ என்று தொலைபேசியில் அழைத்துக் கூறுவாள்,” என்று பெருமையுடன் கூடிய பதில் வந்தது.

    இரண்டாவது நபரின் மனைவி தன்னம்பிக்கை நிறைந்தவள். அவளுக்குத் தெரிந்திருந்தது, அந்த நடிகையின் முன் கணவர் போய் நின்றாலும், அவளுக்கு அவரை அடையாளம் தெரியப் போவதில்லையென்று!

    உறவு என்றால், அதனால் இருவரும் பயனடைய வேண்டும். சுதந்திரம் வேண்டுபவர் பிறருடன் ஒத்து வாழமுடியுமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.

    கணவர் விளையாட்டு வீரராகவும், மனைவி ஒரே இடத்தில் அமர்ந்து ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தாலும்தான் என்ன?

    குடும்பத்தில் பேசுவதற்கு வேறு ஏதாவது சமாசாரங்கள் இருக்காதா?

    தம்பதியர் இருவருக்கும் ஒரே மாதிரி குறைபாடுகள் அமைவது நல்லதல்ல.

    ஒருவர் பயந்தவர் என்றால், அவருக்கு வாய்ப்பவர் தைரியசாலியாக இருந்தால் இருவருமே பயனடைவார்கள். ஒருவருக்கு உடலில் பலம், இன்னொருவருக்கு மனோபலம். வேறு ஒருவருக்கு.. போதும்!

    வித்தியாசமான தன்மைகள் இருந்தால், எதிரெதிர் துருவங்களைப் போல் ஒருவரை மற்றவர் நாடுவார். உறவு பலப்படும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 288இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 288இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நடன நங்கையர் நயத்தொடு பிடிக்கும் அபிநயத்தை அழகாகப் படம்பிடித்திருக்கிறார் திருமிகு. ராமலக்ஷ்மி. இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு என் நன்றி!

    ஆடற்கலையின் நுட்பங்களையும் அபிநய வகைகளையும் சிலப்பதிகாரத்தில் மாதவி நடன அரங்கேற்றத்தினைக் காட்சிப்படுத்தும் ‘அரங்கேற்று காதை’யில் விரிவாகவும் விளக்கமாகவும் உரைக்கின்றார் இளங்கோவடிகள்!

    ”காண்போரைத் தான்மயக்கிக் கவனத்தைக் கவர்கின்ற
    மாண்பமை ஆடலுக்கு ஈடுண்டோ இவ்வுலகில்?” என்றே சொல்லத் தோன்றுகின்றது இந்நளின நங்கையரின் நடனத்தை நோக்குகையில்.

    கவிசொல்லக் காத்திருக்கும் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு வரவேற்போம் இனி!

    *****

    ”அணங்குகள் தம் முகமதில் காட்டும் நவரசங்கள் நம் அகமது குளிர வைத்திடும்; சங்கரன் தொடங்கிய இக்கலையை வளர்த்திடுவோம் வகையாக!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கலை வளர்ப்போம்…

    முகமதில் காட்டும் நவரசங்கள்
    முத்திரை பதிக்கும் உடலசைவு,
    அகமது குளிர நடனமிடும்
    அணங்குகள் ஆட்டம் அழகேதான்,
    சகலரும் ரசிக்கும் ஆட்டமிது
    சங்கரன் தொடங்கி வைத்ததுதான்,
    வகைவகை யாக வந்தாலும்
    வளர்ந்திட வைப்போம் இதுதனியே…!

    *****

    ”கலைகளின் தேவியென்று பெண்ணைக் கொண்டாடி வணங்கவும் வேண்டாம்; சதிராடும் தாசியென்று சாக்கடையில் எறியவும் வேண்டாம்!” என்று சினந்துரைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    கொத்தடிமைக் கடவுள்கள்!

    பொதுவெளியில்….
    பெண் சக்தி தெய்வமென்று
    கற்சிலைக் கடவுளாக்கிப்
    பூசனைகள் பல செய்து
    கருவறையில் தொழுதிருப்போம்!

    வீட்டினிலோ….
    படுக்கையைறைத் தாசியாக்கிப்
    பணிவிடைகள் செய்ய வைத்துக்
    காரிகையைக் கொத்தடிமையாக்கி
    அடுக்களையில் அடைத்து வைப்போம்!

    கலைகளின் தேவியென்று
    கொண்டாடி வணங்கவும் வேண்டாம்!
    சதிராடும் தாசியென்று
    சாக்கடையில் எறியவும் வேண்டாம்!

    அன்னையடி நீயென்று
    அன்புச் சங்கிலி போட்டு
    அடிமையாக்கி வைத்திருக்கும்
    அவலநிலை இனி வேண்டாம்!

    சக மனிதப் பெண்ணுக்கு
    சம உரிமை கிட்டி – அவள்
    சாதனைகள் சபையேறும்
    சமச்சீர்மை நிலை போதும்!!!

    *****

    சிந்தனையைத் தூண்டும் சிறப்பான கவிதைகளைத் தந்தமைக்குக் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    சந்திர ஒளியையொத்த முகம்
    கண்களில் கனலை வீசுவது ஏன்?
    குளிர்காற்றைப் போல் வருடும் விரலதுவோ
    சினத்தை வாரி இறைப்பது ஏன்?
    செம்மொழி சிந்தும் மலரிதழ்கள்
    நகைமொழி மறந்த நாட்டியம் ஏன்?
    உடைதனின் நிறத்தைக் கொண்டுள்ள
    குருதியின் குவலயமாய் அதுதான் ஏன்?
    கால்களின் சலங்கை ஜதி போடத்
    தாவிப் படையெடுக்கப் பறப்பது ஏன்?

    அறிந்தேன் புரிந்தேன் தெரிந்தேன்
    ஒன்றிவிட்டீர் நாட்டியக் கருத்தோடு
    ஒன்றிவிட்டீர்!
    பார் புகழ் பாரதம்
    பாரதம் புகழ் பரதம்
    வாழ்க நம் கலைகள்
    வளர்க மங்கா புகழ்!!

    ”கலையோடு ஒன்றி இக்கலையரசிகள் காட்டும் முகபாவத்தில்தான் எத்தனை வகைகள்! பரதக்கலை பாரதத்தின் புகழைப் பாரெங்கும் பரப்பும் கலையன்றோ? என்று கவின்கலையாம் பரதத்தை நயந்துரைக்கும் இக்கவிதையைத் தீட்டியிருக்கும் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 9

    அண்ணாகண்ணன் காணொலிகள் 9

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    செங்கல் அடுக்கும் கலை | Bricks over the head

    தலைக்கு மேல் 10 செங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிச் செல்லும் கட்டடத் தொழிலாளர்கள். இடம்: தாம்பரம், சென்னை.

    Two Mynas | இரு மைனாக்கள்

    மின்கம்பியில் பாடியபடி ஊஞ்சலாடும் இரு மைனாக்கள்.

     

    சிறகடிக்கும் நீர்க்காகம் | Cormorant | Neer Kaagam

    இன்று பார்த்த நீர்க்காகம் தன் சிறகுகளை அடித்துக்கொண்டே இருந்தது. அதற்கு முன்னதாகப் பார்த்த நீர்க்காகம், அருகில் உள்ள குட்டையில் மூழ்கி எழுந்து வந்து, இதே போல் சிறகடித்தது. எனவே தன் சிறகுகளை உலர்த்தவே இவ்வாறு செய்கிறது.

     

    Kingfisher | மீன்கொத்தி

    Flying Parrot | பறக்கும் கிளி

    மார்கழி முதல் நாளில் கிளியொன்று பறக்கக் கண்டேன். இது, யாரைத் தேடிச் செல்கிறது?

    Sunset at Chennai – 22

    சென்னையில் சூரியன் அஸ்தமிக்கும் அழகிய காட்சி.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்

    திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்

    திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள் | லட்சுமிப்பிரியா குரலில் 

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் வையத்து வாழ்வீர்காள்! எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா. கேட்டு மகிழுங்கள். நீங்களும் இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள் | ஸ்வேதா குரலில்

    கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள், அரங்கனை ஆண்டாள் எனப் போற்றும் வண்ணம் அன்னை பிராட்டி அருளிச் செய்த திருப்பாவையின் இரண்டாவது பாடல், வையத்து வாழ்வீர்காள்! செல்வி ஸ்வேதா பாடிய இந்தப் பாடலை வையத்து வாழும் யாவரும் கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மார்கழிக் கோலம் – 1

    மார்கழிக் கோலம் – 1

    மார்கழி என்றாலே இசை, நாட்டியத்திற்கு மட்டுமின்றி, கோலத்திற்கும் தனி இடம் உண்டு. வீதிகள் முழுவதும் வண்ண வண்ணக் கோலங்கள் அலங்கரிக்கும். எத்தனை எத்தனை கோலங்கள். அவற்றுள் எத்தனை எத்தனை வண்ணங்கள். இதோ, கோலங்களுள் ஒரு வகையான கம்பிக் கோலத்தை எப்படி இடுவது என்று நமக்கு வரைந்து காட்டுகிறார் திருமதி கெளரி. இதைப் பார்த்து, நீங்களும் முயன்று பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள்

    திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள்

    திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | லட்சுமிப்பிரியா குரலில்

    ஆண்டாள் நாச்சியார் பாடிய உயர் செவ்விலக்கியமான திருப்பாவையைப் பாடி மகிழ்வோம், வாருங்கள். மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் முதல் பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா.

    திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | ஸ்வேதா குரலில்

    ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடப் பாட, அதில் தோயத் தோய, நாவினிக்கும், மனமினிக்கும், பாடும், கேட்கும், நினைக்கும் பொழுதெல்லாம் இனிக்கும். இந்த அற்புதப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணு

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • A visit to Amma Mini Clinic

    A visit to Amma Mini Clinic

    Baskar Seshadri 

    Tamilnadu Government had opened Chief minister’s mini clinic in all parts of the state and chennai has good number of such medical rooms.

    Here in Mylapore The CM Inaugurated one on Kutchery road yesterday. The old GCC office opposite the post office had been converted as a Clinic and the earlier activity of GCC hitherto functioning on Ground Floor had been shifted to the first floor of the building. This will open in the morning at eight and shuts at twelve in the noon. Again in the evening it starts at Four pm and closes at eight pm.

    The UHPC’s Which are available in the morning hours are not open in the evening after three pm and this new mission will surely help people to make use of the facility in the evening too. All these clinics are ably supported by a Doctor, An assistant, a Nurse and this point can be used for a basic investigation too.

    This clinic is closed on Saturdays.

    People can use this at no cost and any one can walk in for a treatment and no identity proof is needed for availing the facility. The space here is comfortable and close to fifteen people can sit and wait for their turn. Besides there is also a little space available as a sit out which can be used too if the hall is fully occupied. I feel that if its used better and maintained well its sure to be a hit.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 33

    கதை வடிவில் பழமொழி நானூறு – 33

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 67

    ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
    இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
    பெருவரை நாட! சிறிதேனும் ‘இன்னாது
    இருவர் உடனாடல் நாய்’. 

    பழமொழி- ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’.

    இன்னிக்கு நடந்த கூட்டத்துல ஏதாவது முடிவு எடுத்தாங்களா. அப்பொழுதுதான் தில்லியின் பெயர்பெற்ற  சரோஜினி நகர் மார்க்கெட்டிலிருந்து கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு உட்காருகிறாள் என் தோழி. அவள் கேட்ட கேள்வியில் என் கவனம் செல்ல மறுக்கிறது. எப்போதுமே அழகா செலக்ட் பண்ற அவள் இன்னிக்கு என்னவெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காளோ? பேசாம நானும் கூடப் போயிருக்கணும். கிளம்பறதுக்கு சோம்பேறித்தனம். அதுக்காக சொசைட்டி ஜெனரல்பாடி மீட்டிங் அட்டெண்ட் பண்ணணும்னு ஒரு காரணத்த சொல்லிவச்சேன். அதனாலதான் திரும்பிவந்தப்புறம் ஞாபகமா கேக்கறா.

    மீட்டிங்ல பெரிசா ஒண்ணுமில்ல. அதே பிரச்சினைகள திரும்பத்திரும்ப பேசினாங்க. அதுக்கு பலபேர் எப்போதும் போல எதிர்ப்பு தெரிவிச்சாங்க. கடைசியில முழுசா எந்த முடிவும் எடுக்கல.

    பாபி ஆகயா….. ஹிந்தியில்  கேட்டுக்கொண்டே என் எதிர்வீட்டு அரசி வரவே பேச்சு திசை திரும்புகிறது. அவளின் விருப்பத்திற்கிணங்க தான் வாங்கி வந்த துணிமணிகளை விரித்துப் பரப்பி காண்பிக்க ஆரம்பிக்கிறாள் கோமளா. ஆங்காங்கே பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருப்பதுபோல் வெள்ளை நூலினால் பின்னப்பட்ட சோபா கவர் அவளின் கவனத்தை ஈர்த்ததுபோல. அதன் விலையைக் கேட்கிறாள்.

    கோமளா அதனை வாங்கிய நிகழ்வை எங்கள் மனக்கண் முன் கொண்டு வர முயலுகிறாள். அந்தக் கடைக்காரன் காண்பித்த எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லையாம். சற்றே தள்ளி அவன் பார்வைக்காக பரப்பி வைத்திருந்த இந்தக் கவர் அவளுக்குப் பிடித்ததால் விலை கேட்டாளாம். அதன் விலை இருநூறு ரூபாய் என்று சொன்னவுடன் வேறுபக்கம் நின்றிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி இப்போதுதானே நூற்றைம்பது என்று சொன்னாய் அதற்குள் இவர்களுக்கு இருநூறு என்கிறாயே என ஆரபித்தாளாம். அவளுடன் வந்தவள் இதைப் பின்னுபவர்களுக்கு என்ன கூலி கொடுக்கிறாய் சொல். என்னை ஏமாற்ற முடியாது. எனக்கும் பின்னத்தெரியும் எனக் கூப்பாடு போட ஆரம்பித்தாளாம். கடைக்காரர் நீங்கள் பார்த்தது வேறு என ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள் இதற்கெனவே காத்துக்கொண்டிருந்தது போல்அங்கு நின்று வேடிக்கை பார்த்த இருவர் இப்படி ஏமாற்றி வியாபாரம் செய்வது தவறு என ஆரம்பித்து மற்ற பொருட்களின் விலையைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

    பின் பக்கத்துக் கடைக்காரர்தான் என்ன பேசுவதென்றாலும் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே மறுத்துப் பேசுங்கள். ஒரே நேரத்தில் பல பேர் அவர் சொல்வதை மறுத்தால் எப்படிச் சமாளிக்க முடியும் என அனைவரையும் சமாதானப்படுத்தி அந்தக் கடைக்காரரைக் காப்பாற்றினாராம். அந்த நபர் நெற்றியில் திருநீறு அணிந்திருந்ததால் ஆர்வத்தில் அவரிடம் தமிழ் பேசுவீங்களானு கேட்டாளாம்.

    ஆமாம்மா. எனக்கு ஊர் தமிழ் வளர்த்த மதுரைதான். பாவம் பக்கத்துக் கடைக்காரன். சுலபமா வந்து நின்னு விலைபேசி திட்டிட்டு நடந்து போயிடறீங்க. அவரப் பாருங்க. வெள்ளை நூலால பின்னின சோபா கவர், மேசை விரிப்பு, டி.வி கவர் இப்படி ஒண்ணொண்ணையா எடுத்துக் காட்டும்போதே அழுக்காகிடும். இருந்தாலும் அவருக்குப் பொறுமை அதிகம். வர பெண்களை வேடிக்கை பாத்துக்கிட்டே இருக்கறதால எனக்குத் தோணினத சொல்றேன். இந்தக் கடை வாசலில  ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’ னு எழுதிவைக்கணும்னு தோணும். அப்டி எழுதி வச்சாலும் யாருக்கும் அதோட அர்த்தம் புரியப்போறது இல்லனு சொல்ல .

    எனக்கே தெரியாது என்பதை நான்தயங்கித் தயங்கிச் சொன்னேன்.  அவர் அந்தப் பழமொழியை விளக்கினார். ஒருத்தன் தான் சொல்லவறதச் சொல்லும்போது அதுக்கு மாறுப்பட்ட கருத்து உள்ள இருவர் ஒரே சமயத்தில அவனுக்கு எதிரா வாதிடத் தொடங்கறது ஒரு நாயை வச்சிக்கிட்டே இரண்டு பேர் வேட்டையாடினா  எவ்வளவு துன்பம் தருமோ அதுக்குச் சமானம்னு..

    பழமொழியைப் புரிஞ்சிக்கிட்ட நான் மன நிறைவோட திரும்ப அந்தக் கடைக்குப் போய் எனக்குப் பிடிச்ச இந்த விரிப்ப இருநூறு ரூபாய் குடுத்து வாங்கிட்டு அந்தக் கடைக்காரருக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன்.

    அவருக்கு ஒண்ணும் புரியல பாவம். இந்தச்சின்ன கைக்குட்டை மாதிரி உள்ள விரிப்ப போன் மேல போட உபயோகியுங்கனு இலவசமாக் கொடுத்தார்.

    அவள் பேசி முடித்தவுடன் நான் யோசித்தேன். காலையில நடந்த சொசைட்டி மீட்டிங்குக்கும் அந்தப் பழமொழி பொருந்தும். பாவம் பிரசிடெண்ட் வாக்கிங் போறதுக்காக புதுசா ஒரு பாதை போடலாம்னு சொன்னவொடனே எத்தனை பேர் ஒரே சமயத்தில கத்த ஆரம்பிச்சாங்க. பாவம் அவர் ஒவ்வொரு பிரச்சினையாச் சொல்லி அதுக்குப் பிறகு அனைவரையும் அமைதிப்படுத்தியே நேரம் கழிஞ்சிருச்சு. அப்படியும் விடாம குறித்த நேரத்தில மீட்டிங்க முடிக்கலனு பாதி படிச்ச மேதாவிங்க புலம்ப ஆரம்பிச்சதால ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாம மீட்டிங்க முடிச்சார்.

    பரவாயில்ல. நம்ம பழமொழிகள் எல்லாக் காலத்திலயும் எல்லாருக்கும் பொருந்துது. பின்ன… தமிழ்னா சும்மாவா. மனதுள் பெருமிதப்பட்டுக்கொண்டே வந்தவர்களுக்கு பருகுவதற்கு பழச்சாறு எடுத்துவர எழுந்தேன். .

    பாடல் 68

    விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
    கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா – இலங்கருவி
    தாஅய இழியும் மலைநாட! ‘இன்னாதே
    பேஎயோ டானும் பிரிவு’.

    பழமொழி – ‘இன்னாதே பேயோடானும் பிரிவு’

    என்னடா தூங்கி எழுந்திருச்சிட்டியா? வந்தவொடனே கேக்க வேண்டாம்னு பாத்தேன். யார் இந்தப் பொண்ணு? புது இடம்னு யோசிக்காம ஏதோ உரிமை இருக்குற மாதிரி சட்னு தூங்கிட்டா?

    பெங்களூரிலிருந்து ஊருக்கு வந்திருக்கும் பேரனிடம் விசாரணையைத் தொடக்கினாள் பாட்டி. உங்க தாத்தா வேற ஏதோ பீதியக் கிளப்பி விட்டுட்டாரு.

    எதையுமே கண்டுகொள்ளாமல் பேரன் சம்யுக்த் பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

    விடிகாலை நாலு மணிக்கு அவர்கள் உள்ளே நுழைந்ததிலிருந்தே சலசலப்புதான். வந்தவுடன் ஒப்புக்கு அவளை என் பிரண்ட் ஸ்வேதா என அறிமுகப்படுத்திவிட்டு இருவரும் களைப்பு நீங்க தூங்கப் போய்விட்டனர்.

    உடனேயே தாத்தா ஆரம்பித்தார். வந்திருக்கிறது யாரோ? எவளோ? தலையெழுத்து குலம் கோத்ரம் எல்லாம் விசாரிச்சு வை. இவன் அப்பன் அதுதான் நம்ம பிள்ளையாண்டானுக்கு புத்திமட்டு. சுதந்திரமா வளக்கறதாச் சொல்லி எப்டி செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கான் பாரு. அதுவும் தைரியமா நம்ம வீட்டுக்கே கூட்டிண்டு வரான்.

    பக்கத்தாத்து பரமசிவம் சொன்னான். இப்பயெல்லாம் குழந்தைகள் வெளி நாட்டுக்கு படிக்க வேலைபாக்கப் போறதால கேர்ள்பிரண்ட் கல்ச்சர் ஜாஸ்தி ஆயிடுத்துன்னு. ஒண்ண வச்சிண்டா சரி. தினமும் ஒருத்திகூட நின்னு போட்டோ எடுத்து பேஸ் புக்லலன்னா போடறதுகள். உனக்கெங்க புரியப்போறது. கலிகாலம்.

    தாத்தா பேசியதிலிருந்தே பாட்டிக்கு அடிவயிறு கலங்கிக்கொண்டிருந்தது. பாக்கறதுக்கும் இந்தப்பொண்ணு வடக்கத்தி மாதிரி தெரியறது. தமிழ் தெரியுமோ என்னவோ?

    நேரமாச்சு. பூஜைசாமான்கள அலம்பி வச்சிருக்கியா. நைவேத்தியத்துக்கு ரெடி பண்ணு. தாத்தாவின் குரல்.

    ஆமா. இதுவொண்ணுதான் இந்தாத்துல குறைச்சல். பொலம்பிக்கொண்டே பூஜையறையை நோக்கி நடக்கலானாள் பாட்டி.

    பாட்ஸ் நானும் ரெடி. இன்னிக்கு என்ன டிபன். சூடா டிபனக் கொடு. வேற எதுவும் இப்போ கேக்காத. பசி வயத்தக் கிள்ளறது.

    ஆமாண்டா இந்தாத்துல நான் வாயில்லாப் பூச்சியா வளையவந்து எல்லாருக்கும் வேண்டிய சவுகரியம் மட்டும் பண்ணிக்குடுத்துடணும். ஆளாளுக்கு அதிகாரம் பண்ணுங்கோ. நான் அந்தப்பொண்ணப்பத்தி ஒண்ணும் கேக்கப்போறதில்லை. எக்கேடுகெட்டுப் போ. சொல்லிக்கொண்டே இட்லி சட்னியைப் பரிமாறி விட்டு சமயல் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள் பாட்டி. சம்யுக்த் தன் வேலையைப் பற்றின அனுபவங்களைப் பகிரத் தொடங்கினான்.

    டேய் அந்தப் பொண்ண எழுப்புடா. வெறும் வயித்தோட எவ்ளோ நேரம் தூங்குவா. சமயலே முடியப்போறது. சொல்லிவிட்டு எழுப்பச்சென்ற பாட்டிக்கு ஆச்சரியம். ஸ்வேதா அங்கில்லை. நடைவாசல் பெஞ்சில் உட்கார்ந்து தாத்தாவுக்கு பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஓலை விசிறியை வீசிக்கொண்டே தாத்தா கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    பாருடா. இந்த மனுசன. அந்தப் பொண்ணு நுழஞ்சதிலேந்து என் உசிர வாங்கிட்டு இப்போ உறவு கொண்டாடிண்டிருக்கார்.

    பாட்டி தாத்தா மேல தப்பில்ல. ஸ்வேதா அந்த மாதிரி. அவ எனக்கு ப்ரெண்டோ வெல் விஷரோ இல்ல. காரியக்காரி. இப்போ என் பிராஜக்ட் நல்லா போயிட்டிருக்கறதால என் பின்னாலயே சுத்தறா. எப்டி கழட்டி விடறதுனுதான் தெரியல. கொஞ்ச நேரத்துல ஏதாவது செஞ்சு உங்ககிட்டயும் நல்லபேர் வாங்கிடுவா பாருங்க. அதுக்காக இவள முழுசா நம்பவே முடியாது. போன மாசம் வரை என்னோட எதிர் டீம் கூட சுத்திக்கிட்டிருந்தா.

    ‘இன்னாதே பேயோடானும் பிரிவுனு’ பழமொழியே இருக்கு. பேயா இருந்தாலும் பழகிருச்சின்னா பிரிஞ்சிபோகவைக்கறது கஷ்டம்னு சொல்லுவாங்க. அதனால முதலிலேயே தகுதியானவங்க யாருனு பாத்து தெரிஞ்சுக்கிட்டு பழகு.  இந்தமாதிரி ஆளுங்கள எப்டி தூரத்துல வைக்கணும்னும் கத்துக்கோ. நான் தாத்தாவக் கூப்பிட்டு மெதுவா சொல்றேன் இவளப்பத்தி. சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள் பாட்டி.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 109 (மன்னும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 109 (மன்னும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அடுத்து, சிவனடியார்களுள் சிறந்த ஒருவராகிய அமர்நீதி நாயனார் புராணம் அமைந்துள்ளது. சோழநாட்டின் பழையாறை நகரில் வாழ்ந்த அமர்நீதி நாயனாரை  திருத்தொண்டத்தொகை ,

    “அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்”

    என்று போற்றுகிறது. அவரைத்  திருத்தொண்டர் திருவந்தாதி,

    “மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்
    முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்
    கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்
    துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே! “

    என்று பாடுகிறது. இச்சரிதத்தில் பழையாறை வணிகர் அமர்நீதி நாயனாரின் செல்வமும், வளமும், உளப்பாங்கும்,  அடியாரைப் போற்றும் சிறப்பும் கூறப் பெற்றன.

    பாடல்:

    மன்னும்  அப்பதி  வணிகர்தம்  குலத்தினில்  வந்தார்
    பொன்னும்  முத்தும்நன்  மணிகளும்  பூந்துகில்  முதலா
    எந்நி லத்தினும்   உள்ளன  வருவளத்  தியல்பால்
    அந்நி   லைக்கண்  மிக்கவர்   அமர்நீதி   யாரென்பார்

    பொருள்:

    பழையாறை  என்னும் புகழ் நிலைத்த அந்தப் பதியிலே வணிகர்களுக்குரிய குலத்திலே வந்து அவதரித்தவர்; பொன்னும் முத்தும் ஏனைய நன்மணிகளும், பிற பூந்துகில் முதலியனவுமாக எல்லா நிலத்தினின்றும் வருகின்ற எல்லா வளங்களும் மிகுதியாய்ப் பெற்ற இயல்பினால் அவ்வாணிப நிலையிலே மிகுந்தவர் அமர்நீதியார் என்று போற்றப்படுபவர் வாழ்ந்தார்.

    நயம் :

    இப்பாடலில், மன்னும் அப்பதி – என்ற தொடர் பாரின் நீடிய பெருமை சேர் என்றபடி நிலைத்த புகழுடைய  அந்த ஊர். என்பதைக் குறித்தது.

    வணிகர் தம் குலம் – என்பது தொடர்ந்து வாணிபம் செய்தற்குரியதாகிய அந்த மரபினைக் குறித்தது.

    பொன்னும் முத்தும் நன்மணிகளும் பொன்னும் – பொன்வேறு; முத்துமுதலிய மணிகள் வேறு உம்மை அதனின் வேறாகிய என எச்சப் பொருள் குறித்தது.

    முத்தும் நன்மணிகளும் முத்தும் நன்மணிகளில் ஒன்றாயினும் அவை பிறக்கும் பலவகையிடங்களினின்றும் தனித்தனி முழுமணிகளாகவே விடுபட்டுப் பிறத்தலானும், ஏனைய மணிகள்போல முறுக வாங்கிக் கடைதலானன்றி இயல்பானே ஒளி பரப்புதலானும், மற்றும் பலவகையானும் தனித்தன்மைப் படுதலின்.

    நன்மணிகளும் என ஏனைய மணிகளை ஒன்று சேர்த்துத் தொகுத்து அத்தொகுதியினின்றும். முத்தினை உம்மை தந்து வேறு பிரித்துக் கூறினார்.

    நன்மணிகளும் – இந்நாளிற் கண்ணாடியா லியன்று செயற்கையாற் காணும் பலவகை யிழிந்த போலி மணிகள் போலாது இயற்கையான் விளைந்து உயர்ந்த குணமுடையன என்பார் நன்மணி என்றார் .

    பூந்துகில் – பட்டு முதலிய துகில் வருக்கங்கள்.  உம்மை தொக்கது. முதலா – பொன், மணி முதலியவற்றின் வாணிபம் ஒருபுறமும், பட்டு ஆடை முதலிய வேறு பலவகை வாணிபம் மற்றொரு புறமுமாக நடாத்தி அதனால் வளத்தில் மிக்கவர் என்க. பூந்துகில் முதலா என முதன்மைக் குறிப்புக் கொடுத்தோதியது இச்சரித நிகழ்ச்சிக் குறிப்பு.

    எந்நிலத்தினும் வரும் வளம் – ஒவ்வோர் பொருள்கள் ஒவ்வோர் நிலத்துக் குரியனவாம். ஆயினும் அவை யாவும் வாணிபப் பொருட்டால் இங்கு வந்து கூடியன என்க. இவற்றினியல்பு பட்டினப்பாலை முதலிய நூல்களுட் காண்க.

    எந்நிலம் என்றதனால் யவனம் முதலிய பிற நாடுகளும் கொள்க.

    வளத்து இயல்பால் அந்நிலைக்கண் – அந்தந்த வளங்களின் தன்மைக் கேற்றவாறு அந்தந்த வாணிபநிலைமையிலே மிக்கவர் மிக்க திறமையையும் ஊதியத்தையும்  பெற்றுவிளங்கியவர்.

    என்பார் எனப்படுவார். ‘இல்வாழ்வா னென்பான்’ என்ற குறளிற்போலக் கொள்க. செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது என்பர் பரிமேலழகர். எனப்படுவான் எனற்பாலது செயப்பாட்டு வினைப் பொருளுணர்த்தும் படு விகுதி தொக்கு என்பான் என நின்றது  என்பர் பிரயோக விவேக நூலார். தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் இவ்வாறே கூறினர். ‘எனப்போற்றப்படுவார்’, என்ற சிறப்புப் பொருளையும் காட்டுகிறது.

    இப்பாடல்  அமர்நீதியார், பன்னாட்டு வாணிகம் செய்து புகழ் பெற்றதோடு சிவனடியார்களையும் பேணிக் காத்தார் என்பதையும் கூற வந்தது

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 8

    அண்ணாகண்ணன் காணொலிகள் 8

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    Morning Sun | காலைச் சூரியன்

    மேகங்களிலிருந்து வெளிப்படும் இன்றைய காலைச் சூரியன்

    நீர்க்காகம் | Cormorant

    நீர்க்காகத்தை இன்று முதல் முறையாகப் பார்த்தேன். தாம்பரத்தில் நம் வீட்டுப் பின்புறம் ஓர் எல்லைக் கல்லில் வந்து அமர்ந்தது. தன் பெரிய சிறகுகளை விரித்தபடி, அதை ஆராய்ந்தபடி, அலகால் குடைந்தபடி, காலால் முகத்தைச் சொறிந்தபடி, சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தது. சாதாரணக் காகம் ஒன்று, அதைச் சற்று சீண்டிப் பார்த்தது.

    Voice of Myna

    மைனாவின் இனிய குரலைக் கேளுங்கள்.

     

    Sunbird in the morning

    இன்று காலை கண்ட தேன்சிட்டு.

    Squirrel on Ashoka tree

    அசோக மரத்தில் ஓர் அணில்.

     

    Kitten on the tree

    பூனைக்குட்டி, புங்க மரத்திலிருந்து இறங்கும் காட்சி.

    Aulacophora | Pumpkin Beetle

    பூசணி வண்டு

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கிறிஸ்துமஸ்: லண்டனில் விழாக்கோலம்

    கிறிஸ்துமஸ்: லண்டனில் விழாக்கோலம்

    Dazzling display of lights and decorations, sparkling LED light curtains, twinkling fairy lights, stunning colors are spreading festive vibes across. Here is a glimpse of bright London. Thanks to Navya for the visuals.

    கிறிஸ்துமஸை முன்னிட்டு, லண்டன் வீதிகளில் ஒளி விளக்குகளும் சர விளக்குகளும் வண்ணத் தோரணங்களுமாக மாநகரமே விழாக் கோலம் பூண்டிருக்கிறது. வீதியோர மரங்களும் தங்க, வைர, வைடூரியங்களாக மின்னுகின்றன. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழுங்கள். படமெடுத்து அனுப்பிய நவ்யாவுக்கு நன்றி.

    London Bridge

    புகழ்மிக்க லண்டன் பாலத்தின் எழிற்கோலம், இதோ. நமது இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தைப் போல, லண்டன் பாலமும் கப்பல் வரும்போது இரண்டாகப் பிரிந்து உயர்ந்து, கப்பலுக்கு வழிவிடும். கப்பல் சென்ற பிறகு, பழையபடி கீழே இறங்கி, சாலையாகிவிடும். ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே இவ்வாறு பாலம் பிரிந்து சேரும். பிரிவதற்கு ஒரு நிமிடமும் சேருவதற்கு ஒரு நிமிடமும் ஆகும். இது எப்போது நடக்கும் என்று தெரியாது. எனவே சிலருக்கு மட்டுமே இதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். லண்டனில் வசிக்கும் நவ்யா, லண்டன் பாலம் மூடும் காட்சியை நமக்காகப் பதிவு செய்து அனுப்பியுள்ளார். பார்த்து மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 7

    அண்ணாகண்ணன் காணொலிகள் 7

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    மஞ்சள் அழகி | Common Jezebel | Delias eucharis

    A lovely, colorful butterfly! I would suggest, we can declare this butterfly as a symbol of Holi festival.

    இந்த மஞ்சள் அழகி, மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, உயரத்தில் ஓர் இலை மீது அமர்ந்தது. படக்கருவியைத் தலைக்கு மேல் பிடித்து எடுக்க வேண்டியதாய் இருந்தது. இதன் வண்ணங்களும் வடிவும் நம்மைக் கொள்ளை கொள்கின்றன. ஹோலிப் பண்டிகையின் அடையாளச் சின்னமாக இதை அறிவிக்கலாம்.

    புடலங்காய் காய்த்தது | Snake gourd | Trichosanthes cucumerina

    நம் வீட்டுத் தோட்டத்தில் புடலங்காய் காய்த்துள்ளது. சிறிய ரகப் புடலை எனத் தெரியாமல், இன்னும் நீளமாக வளரட்டும் என்று காத்திருந்த நேரத்தில் அது பழுத்துக் கொடியிலேயே காயந்துவிட்டது. ஆனாலும், அதே கொடியில் இன்று இன்னொரு புடலை பிஞ்சு விட்டுள்ளது, பார்க்க மிக அழகாக உள்ளது.

     

    பொன்வண்டு | Ponvandu

    பொன்வண்டு, அரிதாகவே தென்படும். என்றைக்காவது தென்பட்டாலும் நம் எதிரே உட்காராமல் பறந்துவிடும். அப்படியே உட்கார்ந்தாலும் அந்நேரத்தில் நம் கையில், படக்கருவி இருக்காது. படக்கருவி, கையில் இருந்தாலும் அதில் சேமிப்பகம், சேமக்கலன் போதுமான அளவு இருக்காது. இன்று இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமைந்த பொற்கணத்தில் இந்தப் பொன்வண்டைப் படம் பிடித்தேன். சில நாள்களுக்கு முன், இதை அரை நிமிடம்தான் பதிவு செய்ய முடிந்தது. அந்தக் குறை நீங்க, இன்று ஆறு நிமிடம் காட்சி தந்தார். பொறுமையாக, விதவிதமாக எடுக்க முடிந்தது. இதைப் படமெடுக்கையில், இடையே ஒரு குளவி சுற்றிச் சுற்றி வந்து அச்சுறுத்தியது. எனினும் இதை வெற்றிகரமாகப் பதிவு செய்தேன். அரிய காட்சி, பார்த்து மகிழுங்கள்.

     

    சுழலும் சந்தன முல்லை | Rotating Santana Mullai | Jasminum Auriculatum

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் உள்ள சந்தன முல்லையில் இன்று ஒரு புதுமையைப் பார்த்தேன். செடியிலிருந்து விழுந்தும் விழாத ஒரு முல்லை மலர், தலைகீழாகத் தொங்கியபடி சுழன்றுகொண்டிருந்தது. எவ்வளவு காற்று அடித்தபோதும் விழாமல் சுழன்றுகொண்டே இருந்தது. சில பந்தங்கள் ஆழமானவை. அவ்வளவு எளிதில் விட்டு விலகுவதில்லை.

    Common Moorhen | தாழைக் கோழி

    இன்று கண்ட தாழைக் கோழி.

    வாழை இலையில் ஒரு கரிச்சான் | Black Drongo on Banana leaf

    வாழை இலையில் கரிச்சான் என்கிற இரட்டைவால் குருவி அமர்ந்திருப்பதைச் சற்றுமுன் பார்த்தேன். இதோ உடனுக்குடன் பகிர்கின்றேன். இதன் அலகு ஓரத்தில் வெண்புள்ளி ஒன்று இருப்பதை இன்றுதான் கவனித்தேன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share