Blog

  • நீலக் கண்கள் கொண்ட காட்டு மைனா

    நீலக் கண்கள் கொண்ட காட்டு மைனா

    நீலக் கண்கள் கொண்ட இந்தக் காட்டு மைனாவைக் கொடைக்கானலில் கண்டேன். என் கண்ணெதிரே சுவரிலிருந்து ஓர் இலையைப் பறித்தது. இது என்னுடையதாக்கும் என ஒரு குழந்தையைப் போல், அலகால் பற்றியபடியே இங்கும் அங்கும் சுற்றி வந்தது. கீழே போடமாட்டேன் என உறுதியுடன், இலையை வாயால் கவ்வியபடியே குரல் எழுப்பியது. அந்த அழகிய காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கட்டுமானத் துறையில் மந்தநிலையா?

    கட்டுமானத் துறையில் மந்தநிலையா?

    கடந்த பத்து ஆண்டுகளாக, நிலத்தின் விலை பெரிதாக ஏறவில்லை. கட்டப்பட்ட வீடுகள் பலவும் விற்கப்படாமல் உள்ளன. கட்டுமானத் துறையில் மந்தநிலை நிலவுகிறதா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அஷ்டலட்சுமியில் ஐந்துபேர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    மூன்றாவது மகள் பள்ளியிலிருந்து திரும்பியதும், புன்னகையுடன் கேட்டாள், ஞானம்: ‘இன்னிக்கு யாரோட சண்டை?”

    வலியப்போய் சண்டை போடமாட்டாள் என்று தெரியும்தான். வேடிக்கையாக இருந்தாலும், சற்று சலிப்பும் ஏற்பட்டது. எந்த வேளையில் அவளுக்கு வீரலட்சுமி என்று பெயர் வைத்தாளோ!

    “பின்னே என்னம்மா? `மூணும் பொண்களா!’ன்னு எங்களைப் பார்த்து சலிச்சுக்கிட்டா? அவங்களா எங்களுக்கு சாப்பாடு போடப்போறாங்க?”

    தாய் அதிர்ந்தாள். “ஒன்னைவிட பெரியவங்களோடேயா சண்டை போட்டே?”

    “சண்டை போடலேம்மா. நான் என்ன சொன்னேன், தெரியுமா?” அவள் குரலில் பெருமை. “இன்னும் நிறைய பொண்ணுங்க பிறக்கும் எங்க குடும்பத்திலேன்னு சொன்னேன்”.

    நிலைமை இன்னும் மோசமாக ஆகிவிடாது காப்பதுபோல், இரண்டாமவள் ஒரு பெரிய தாம்பாளம் நிறைய மாம்பழங்களைக் கொண்டுவந்தாள். “எல்லாம் நம்ப தோட்டதிலேருந்தும்மா!”

    அவளுடைய பூரிப்பு தாயையும் தொற்றிக்கொண்டது. “ரெண்டு கிலோ இருக்கும்போல இருக்கே!”

    “பள்ளிக்கூடம் லீவுதானே! எங்கேயாவது போகலாம்பா!” என்று கொஞ்சிய மகளைப் பார்த்துப் புன்னகைத்தார் நாராயணன்.

    “எங்கே போகலாம்? நீயே சொல்லு!”

    “குவால காண்டா (Kuala Gandah)!” என்றபடி வந்தாள் இந்திரா. முதலிலேயே பேசி வைத்துக்கொண்டு, தைரியமான தங்கையைத் தூது அனுப்பியிருக்கிறாள்!

    கர்ப்பிணியான மனைவி! “அம்மாவுக்கு முடியுமா?” என்று சற்று தயங்கினார்.

    “எல்லாம் முடியும்!” என்று உள்ளேயிருந்து குரல் எழும்பியது.

    யோசிக்க ஆரம்பித்தார். கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் போனால், கோலாலம்பூரிலிருந்து இரண்டே மணிதான். யானைகள் ஆற்றில் குளிப்பதைப் பார்க்கலாம். மரங்கள் அடர்ந்த இடமும் ரம்மியமாக இருக்கும்.

    சில வருடங்களுக்குமுன், யானை ஒன்றின் முதுகில் குழந்தைகளை ஏற்றுவார்கள். அந்த யானை ஆற்றில் நடந்து, பிறகு சாய்ந்துவிடும். எதிர்பாராவிதமாகத் தண்ணீரில் விழுந்த குழந்தைகளின் சிரிப்பும் அழுகையும்!

    பழைய நினைவுகளால் உற்சாகம் ஏற்பட, “புறப்படுங்க,” என்றார்.

    அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்த இடத்தில் இன்னொரு மகள் பிறப்பாளென்று.

    “கஜலட்சுமின்னு எனக்கு ஏன் அக்கா இந்தப் பேர் வெச்சாங்க? எல்லாரும் கஜா, கஜான்னு கூப்பிடறாங்க! நான் யானைமாதிரியா குண்டா இருக்கேன்?” என்று சிணுங்கிய தங்கையிடம், “அப்படி இல்லேடி! யானைங்களைப் பாக்கப்போன இடத்திலே நீ பிறந்துட்டே. அதனால..!” என்று சமாதானப்படுத்தினாள் இந்திரா. முதல் குழந்தைகளுக்கே உரிய பொறுமையும் கருணையும் அவளிடமிருந்தது.

    “நல்லவேளை, ஜூவில சிங்கத்தைப் பாக்கப் போனப்போ நான் பிறக்கலே!” என்று சிரித்தாள் சிறுமி.

    ஒரு வருடத்துக்குள் பிறந்த விஜயலட்சுமி தான்மட்டுமல்லாது, அக்காள் நால்வரும் கல்வி, பேச்சுப்போட்டி, ஆடல், பாடல் என்று எதிலாவது சிறக்க தன்னாலானதைச் செய்தாள்.

    ஞானத்திற்குப் பரம சந்தோஷம். ஒவ்வொரு மகளும் பெயருக்கு ஏற்றாற்போல் வளர்கிறார்கள்.

    வயிற்றிலிருக்கும் ஆறாவது குழந்தை சந்தானலட்சுமியா?

    ஆனால், பிறந்ததோ ஆண்குழந்தை. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. தன் கனவு பலிக்காமல் போய்விட்டதைக் கணவரிடம் கூறி வருத்தப்பட்டுக்கொண்டாள்.

    “சந்தானம்னு பேர் வைக்கலாம்!” என்று அவர் ஓர் உபாயம் கூறினார்.

    “இனிமே பிள்ளை பிறந்தா இவங்க உயிருக்கே ஆபத்து!” என்று டாக்டர் மிரட்டலாகக் கூற, வேறு வழி புலப்படாது, கருத்தடை சிகிச்சைக்கு உடன்பட்டாள் ஞானம்.

    அவளைப் பார்க்க வந்த கணவருக்கு மனம் பொறுக்கவில்லை. “இந்தச் சமயத்திலே அழக்கூடாதும்மா. பேத்தி பிறக்காம போயிடுமா? அந்தக் குழந்தைங்களுக்கு வித்யாலட்சுமி, தனலட்சுமின்னு பேர் வெச்சா போச்சு! அப்போ ஒன் ஆசைப்படியே நம்ப குடும்பத்துக்கு அஷ்டலட்சுமியும் வந்துடுங்க இல்லே?” என்றார்.

    மகள் எப்போது பெரியவளாகப் போகிறாள், எப்போது கல்யாணமாகி, தான் எப்போது பேத்திகளைப் பார்க்கப்போகிறோம் என்று புதிய கவலையில் ஆழ்ந்தாள் ஞானம்.

    Share
  • ஆராய்ந்து கொள்வோம் நட்பு!

    -மேகலா இராமமூர்த்தி

    மனித வாழ்க்கை செம்மையாகவும் சிறப்பாகவும் அமைவதற்கு இன்றியமையாதவை இரண்டு. ஒன்று சுற்றம்; மற்றொன்று நட்பு. ஒருவனைச் சுற்றியிருந்து செயற்படுவோர் அனைவரையும் நாம் சுற்றத்தினர் என்ற வகைப்பாட்டில் அடக்கலாம்; எனினும், பெரும்பாலும், அச்சொல் உறவினரைக் குறிக்கும் சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது.

    உறவினராகிய சுற்றத்தைப் பொறுத்தவரை நம் தாய் தந்தையரையும், உடன்பிறப்புக்களையும் அத்தை மாமன், பாட்டன், பாட்டி போன்ற ஏனைய சுற்றத்தினரையும் தேர்வுசெய்யும் உரிமை நமக்கில்லை; அஃது இயற்கை நமக்களிப்பது; ஆனால், நம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கிருக்கின்றது.

    நட்பைப் பொறுத்தவரை அதனைத் தெரிவுசெய்யும் முழு உரிமையும் வாய்ப்பும் நம்மிடமே இருக்கின்றன. எனவே, அவ்வாய்ப்பைச் சரியாகவும் திறம்படவும் நாம் பயன்படுத்தி நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு நமக்கு வழிகாட்டும் வகையில் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களைத் திருக்குறளில் வகுத்திருக்கின்றார் பொய்யில் புலவராகிய வள்ளுவர்.

    நட்பு:

    நட்பு என்பது நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிச் சிரிப்பதற்கான பொழுதுபோக்குப் பண்பன்று; நண்பன் நெறிகடந்து செல்லும்போது இடித்துத் திருத்துவதற்கும், ஆடை நழுவுகின்றபோது உடனே அதனைச் சரிசெய்கின்ற கைபோல, நண்பன் துன்பத்தில் இருக்கும்போது ஓடிச்சென்று உதவுவதற்கும் பயன்படும் உண்மையன்பே நட்பு என்கின்றார் வள்ளுவர்.

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்சென் றிடித்தல் பொருட்டு
    . (நட்பு – 784)

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு
    . (நட்பு – 788)

    அத்தகு நண்பர்களை ஆராய்ந்து கொள்ளவேண்டியதன் அவசியத்தை அடுத்த அதிகாரத்தில் விளக்குகின்றார் அவர். ”நற்பண்புள்ள குடியிற் பிறந்து, தனக்கு ஏற்படக்கூடிய பழிக்கு நாணுபவனே நண்பனாய் இருக்கத் தகுதியானவன்; அவனைப் பொருள் கொடுத்தாவது நட்புச் செய்க” என்று அறிவுறுத்துகின்றார்.

    குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    (நட்பாராய்தல் – 794)

    நெடுநாளைய நண்பர்கள் பழகிய உரிமை காரணமாகச் சிறு தவறுகளைச் செய்யும்போது அவற்றைப் பொருட்படுத்தாது நட்பினைத் தொடர்க என்று ’பழைமை அதிகாரத்தில் நம்மைத் தெளிவிக்கும் வள்ளுவர், தீய நண்பர்களை இனங்கண்டு ஒதுக்கவேண்டியதன் அவசியத்தைத் ’தீ நட்பு’ அதிகாரத்தில் வலியுறுத்துகின்றார்.

    அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை.
    (தீ நட்பு – 814)

    ”போர்க்களத்தில் தன்மீது அமர்ந்திருக்கும் வீரனைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்று நமக்கு உதவி தேவைப்படும் காலத்தில் உதவாமல் கைவிடும் நண்பர்களைவிடத் தனித்திருப்பதே மேல்” என எண்ணுகின்றது வள்ளுவர் உள்ளம். ”கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” என இதே கருத்தை நட்பாராய்தல் அதிகாரத்திலும் அவ் அறிஞர் விளம்பியிருப்பது நினைவுகூரத்தக்கது.

    It is better to be alone than in bad company” என்று அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் குறிப்பிடுவதும் இதனைத்தான்.

    இவ்வாறே உள்ளத்தால் கூடாது வெறும் உதட்டளவில் கூடியிருக்கும் நண்பர்களும் ஆபத்தானவர்களே; விலக்கத்தக்கவர்களே என்கின்றார் வள்ளுவர் தம் ’கூடா நட்பு’ அதிகாரத்தில்.

    வில் வளைந்திருப்பது பணிவுபோல் வெளிப்பார்வைக்குத் தோன்றலாம்; ஆனால், அது வளைந்துகொடுப்பது எற்றுக்கு? அம்பினைப் பூட்டி எதிரியை வீழ்த்துவதற்கு. அஃதொப்ப, நம்முன் பணிவான சொல்லோடு நடந்துகொள்வோரெல்லாம் உண்மையாகவே நம்மைப் பணிகின்றார் என எண்ணினால் அது பேராபத்தில் முடியும்; அவர்தம் தொழுத கையுள்ளும் நம்மைக் கொல்லும் ஆயுதம் மறைந்திருக்கக் கூடும் என்று எச்சரிக்கின்றார் குறளாசான்.

    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.
    (கூடாநட்பு – 827)

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.
    (கூடாநட்பு: 828)

    நண்பர்களின் இயல்பையும் அவர்களை நாம் தேர்ந்தெடுக்கும் முறைகளையும் வகுத்துரைத்து வள்ளுவம் நமக்கு வழிகாட்டுவதுபோன்றே, அறநூலான நாலடியாரும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் நண்பர்களின் இயல்பை மூன்றாய்ப் பிரித்து நமக்கு இனம் காட்டுகின்றது.

    நாலடியார் காட்டும் நட்பின் வகைகள்:

    நட்பில் கடைத்தரமானவர்கள் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்கள்; இடைத்தரமானவர்கள் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்கள்; முதல்தரமானவர்கள் பனைமரத்தைப் போன்றவர்கள் என்கின்றது நாலடியார்.

    எந்த அடிப்படையில் இந்த வகைமை?

    பாக்குமரம் இருக்கின்றதே அது பலன் தரவேண்டுமானால் அதற்கு நிதமும் கவனிப்புத் தேவை; இல்லையேல் பட்டுப்போகும்; அதுபோல் நிதமும் நம்மால் பலனில்லையேல் கடைத்தரமானவர்களின் நட்பும் விட்டுப்போகும். தென்னை மரத்துக்கு நிதமும் கவனிப்புத் தேவையில்லை; ஆனால், அடிக்கடித் தேவை; இல்லையேல் பலன் தராது; அதுபோன்றதே இடைத்தரமானவர்களின் நட்பு. ஆனால், பனை மரம் எப்படிப்பட்டது தெரியுமா? நட்டபோது தந்த கவனிப்பே போதுமானது என்று தானாய் வளர்ந்து பலன்தரும் இயல்புடையது. அதுபோல் ஒருமுறை மனங்கலந்து பழகிவிட்டால் போதும்; இறுதிவரை அந்த நட்பைப் பேணி, நண்பர்களுக்கு உதவியாய் – உறுதுணையாய் இருப்பவர்களே உண்மையான நண்பர்கள்; உயர்ந்த நண்பர்கள் என்கின்றது நாலடியார்.

    கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கி னனையர் தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
    தொன்மை யுடையார் தொடர்பு.
    (நாலடி: நட்பாராய்தல் – 216)

    நாலடியார், நட்பில் மூன்று வகையினரைக் காட்டுவதுபோல் கிரேக்கச் சிந்தனையாளரும் – மகா அலெக்சாண்டரின் ஆசானுமாகிய அரிஸ்டாட்டிலும் நண்பர்களை மூன்று வகையினராகப் பிரிக்கின்றார்.

    அரிஸ்டாட்டில் காட்டும் நட்பின் வகைகள்:

    1. மகிழ்ச்சிக்காக நட்புக்கொள்வோர் (Friendships of pleasure/delight)
    2. பயன்கருதி நட்புக்கொள்வோர் (Friendships of utility)
    3. நற்பண்புகளின் அடிப்படையில் நட்புக்கொள்வோர் (Friendships of virtue)

    இம்மூவரையும் எப்படி நாம் அடையாளம் காண்பது?

    மகிழ்ச்சிக்காக நட்புக்கொள்வோர்: இவர்கள், திரைப்படங்களுக்கும் உணவகங்களுக்கும் செல்வதற்கும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் முதலியவற்றுக்கும் துணைவேண்டி நட்புக்கொள்பவர்கள். இவர்களோடு பழகுவதால் நம் கையிருப்பும் கரைந்து, தீய பழக்கங்களுக்கும் நாம் அடிமையாவதுதான் கண்ட பலனாய் இருக்கும்; மற்றபடி வாழ்வின் முன்னேற்றத்திற்கு இவர்களின் நட்பு எள்முனையளவும் உதவாது.

    பயன்கருதி நட்புக்கொள்வோர்:  பணத்திற்காகவோ பதவி முதலிய அதிகாரங்களுக்காகவோ ஒருவரிடம் நட்புக்கொள்பவர்கள் இவர்கள். அலுவலகத்தில் நம்மிடம் பழகுபவர்களில் பெரும்பாலோர்கூட அங்கு நம்மிடமிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளுக்காகவும் ஆதாயங்களுக்காகவும் பழகுபவர்களே. எனவே, அவர்களையும் இவ்வகையில் அடக்கலாம். நம்மால் பலனில்லை என்றால் நட்பை முறித்துக்கொள்ளத் தயங்காதவர்கள் இவ்வகையினர்.

    நற்பண்புகளின் அடிப்படையில் நட்புக்கொள்வோர்: ஒருவரிடமிருக்கும் நல்ல பண்புகளுக்காகப் பழகுபவர்கள் இவர்கள். இவ்வாறு குணங்களைக் கண்டறிந்து கொள்ளும் நட்பே நல்ல நட்பாகவும் இறுதிவரை நீடிக்கும் நட்பாகவும் இருக்கும். இவர்கள், நண்பன் ஒரு தவறுசெய்யும்போது அதனை இடித்துத் திருத்துவார்கள்; நண்பனுக்குத் துன்பம் என்றால் அதனை நீக்க முயல்வார்கள்; நீக்க இயலாவிட்டால் அதில் தாமும் பங்கெடுத்துக்கொண்டு ஆறுதலளிப்பார்கள். இத்தகு நல்ல நண்பர்கள் கிடைப்பது வரமே!

    இவ்வாறு நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் துணையாயிருக்கும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அல்லாதோரை இனங்கண்டு விலக்குதற்கும் வள்ளுவமும் நாலடியாரும் அரிஸ்டாட்டிலின் சிந்தனைகளும் நமக்கு நல்வழிகாட்டுகின்றன. இவற்றின் அடிப்படையில் நண்பர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுப்போம்; வாழ்வில் உயர்வோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:
    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
    2. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்.
    3. https://en.wikipedia.org/wiki/Nicomachean_Ethics

     

    Share
  • பச்சைக் கழுத்து மயில்

    பச்சைக் கழுத்து மயில்

    மயில் பச்சை என ஒரு நிறமே உண்டு. கோவையில் தற்செயலாக இந்தப் பச்சைக் கழுத்து மயிலைக் கண்டேன். எனது நல்வாய்ப்பு, அதன் பல்வேறு உணர்வுகளை, அசைவுகளை நெருங்கி நின்று படமெடுக்க முடிந்தது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(450)

    குறளின் கதிர்களாய்…(450)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(450)

    பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
    கண்ணோட்ட மில்லாத கண்.

    -திருக்குறள் – 573 (கண்ணோட்டம்)

    புதுக் கவிதையில்…

    இசையால்
    எவ்வித பயனுமில்லை
    அது
    இணையாவிடில் பாடலோடு..

    அதுபோல்
    கண்ணோட்டம் இல்லாத
    கண்ணினாலும்
    பயனேதுமில்லை…!

    குறும்பாவில்…

    பாடலோடு பொருந்தாத பண்ணால்
    பயனேதுமில்லை, அதுபோலத்தான் எவ்வித பயனுமில்லை
    கண்ணோட்டம் இல்லாத கண்ணினாலே…!

    மரபுக் கவிதையில்…

    பாடும் நல்ல பாடலோடு
    பண்ணும் பொருந்த வில்லையெனில்
    நாடும் பயனும் வருவதில்லை
    நன்மை யெதுவும் கிடைப்பதில்லை,
    ஓடும் விழிகள் கொண்டுள்ள
    ஒளிரும் கண்க ளதனில்தான்
    கூடு மிரக்க மிலாதவைதான்
    கொடுக்கும் பயனாய் எதுமிலையே…!

    லிமரைக்கூ…

    பாடலுடன் பொருந்தணும் பண்ணே,
    பயனிலை தவறிடின், கண்ணோட்டம் இலையெனில்
    பயனெதும் தருவதில்லை கண்ணே…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    எரக்கம் வேணும்,
    காணும் கண்ணுல
    எரக்கம் வேணும்..

    பாட்டோட ராகம்
    பொருந்துனாத்தான்
    பாட்டு அது,
    இல்லண்ணா
    அதுல ஒரு பயனுமில்ல..

    அதுபோலத்தான்
    எரக்கம் இல்லாத கண்ணால
    எந்தப் பயனுமே இல்ல..

    அதால
    வேணும் வேணும்
    எரக்கம் வேணும்,
    காணும் கண்ணுல
    எரக்கம் வேணும்…!

    Share
  • கோவை ரியல் எஸ்டேட் – வானளாவிய வளர்ச்சி

    கோவை ரியல் எஸ்டேட் – வானளாவிய வளர்ச்சி

    கோவை ரியல் எஸ்டேட் துறை வானளாவிய வளர்ச்சி கண்டு வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அண்ணாந்து பார்க்கவைக்கும் அடுக்குமாடிகளும் நவீன கட்டடங்களும் புதிய புதிய கடைகளும் நமக்குச் சொல்வது என்ன? கோவையில் வளர்ச்சி வாய்ப்புகள் எப்படி உள்ளன? இங்கே வீடு வாங்கலாமா? முதலீடு செய்யலாமா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் உடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தென்னை மரத்தில் மயில்கள்

    தென்னை மரத்தில் மயில்கள்

    கோவையில் குயில் கண்டேன், கிளி கண்டேன், மைனாவும் புறாவும் வால்காக்கையும் பொன்முதுகு மரங்கொத்தியும் கண்டேன். மயிலை இன்னும் காணவில்லையே என நினைத்தேன். அடுத்த நிமிடம், மயிலின் அகவலிசை கேட்டது. அந்தக் குரலைப் பின்தொடர்ந்து சென்றேன். தென்னை மரத்தில் ஒன்றுக்கு மூன்றாய் மயில்கள் கண்டேன். ஆஹா, அந்த அழகிய காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓர் இளவரசர் இராஜாவாகிறார்

    ஓர் இளவரசர் இராஜாவாகிறார்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    2023 மே மாதம் 6ஆம் தேதி பிரித்தானிய நாட்டின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். எமது வாழ்வில் கூட இது ஒரு முக்கியமான நாளாகிறது.

    ஏன் என்கிறீர்களா ?

    இன்றுதான் நாமனைவரும் ஒரு முடிசூட்டு விழாவினை நேரடியாகப் பார்க்கும், பங்குபற்றும் சந்தர்ப்பம் பெற்றவர்களானோம்.

    இன்று ஓர் இளவரசர் இராஜாவாக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டுள்ளார் . அதுவும் சமீபகால சரித்திரத்திலேயே வயதில் முதிர்ந்த இளவரசர் எனப் பெயர் பெற்ற இளவரசர் சார்ள்ஸ் இன்று தனது 74ஆவது வயதில் மூன்றாவது சார்ள்ஸ் மன்னராக முடிசூட்டப்பட்டுள்ளார் .

    பிரித்தானியா நாட்டின் அரச கட்டிலில் அமர்ந்தவர்களில் அதிக காலம் கோலோச்சியவர் எனும் சரித்திரத்தை ஏற்படுத்தியவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஆவார்.

    70 ஆண்டுக்காலம் ஆட்சி அரியணையில் அமர்ந்திருந்து விட்டு தனது 96ஆவது வயதில் மரணமடையும் வரை அரசியாக இருந்தவர்.

    இன்று முடிசூட்டப்பட்ட சார்ள்ஸ், தனது நான்காவது வயதில் இருந்து பட்டத்துக்குரிய இளவரசராக தனது அன்னையின் நிழலில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    70 வருடகால இளவரசர் அனுபவத்தைப் பெற்ற சார்ள்ஸ், வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்நோக்காமலில்லை.

    இளவயதில் ஒரு பெண்ணைக் காதலித்திருந்தாலும் தனது பெற்றோரின் விருப்பத்தின்படி இங்கிலாந்து இராஜ பரம்பரை வழக்கத்திற்கு உட்பட்டு டயானா அவர்களைத் திருமணம் செய்து வில்லியம், ஹரி எனும் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.

    இளவரசர் சார்ள்ஸ் அவர்களுக்கும், இளவரசி டயானா அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகளினால் பல சர்ச்சைகளுக்கு  உட்படுத்தப்பட்ட அவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் தனது முன்னைய காதலியுடனும், இளவரசி டயானா டோடி எனும் இஸ்லாமியருடனும் தமது காதல் வாழ்க்கையை நடத்தினர்.

    பாரிஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளவரசி டயானா. தனது காதலன் டோடியுடன் மரணத்தைத் தழுவினார்.

    ஏழு வருடங்களின் பின்னால் இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலா பார்க்கர் போல்ஸ் என்பவரை மணமுடித்தார்.

    விவாகரத்து , மறுமணம் என்பது இராஜ பரம்பரையில் சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்பட்டதாலும், இங்கிலாந்தில் அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அது தவறென்று கருதப்பட்டதாலும் இளவரசர் சார்ள்ஸ் மன்னராவது சந்தேகத்துக்கு இடமாயிருந்தபோதும் அதனை ஏற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் இரண்டாவது புதல்வர் ஹரி, கறுப்பினக் கலப்புடைய  அமெரிக்க நடிகை ஒருவரை மணமுடித்தார்.

    ஹரி அவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் குடும்பத்தில் ஹரி தம்பதியுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது .

    இளவரசர் ஹரி இராஜ வம்சத்தினால் தனக்குக் கிடைத்த பட்டங்கள் மற்றும் சலுகைகளைத் துறந்து அமெரிக்கா சென்று சாதாரண வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்து இராஜ குடும்பத்தினின்றும் தன்னை விலக்கிக் கொண்டார்.

    அமெரிக்கா சென்ற ஹரி தம்பதியினர் அங்கு பிரபலமான ஓப்ரா வின்வரி எனும் தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு இங்கிலாந்து இராஜ பரம்பரைக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய நேர்காணலை வழங்கினர்.

    இத்தனை பிரச்சனைகளையும் எதிர்கொண்டபடியே தனது பட்டத்துக்குரிய இளவரசரின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினார் இளவரசர் சார்ள்ஸ்.

    தந்தை எடின்பரோ கோமானைத் தொடர்ந்து இரண்டாவது எலிசபெத் மகராணியாரும் உயிர் நீத்தனர்.

    கடந்த வருடம் தனது அன்னையின் மறைவினையடுத்து பிரித்தானிய நாட்டு இராஜாவாகப் பொறுப்பேற்ற இளவரசர் சார்ள்ஸ் இன்று அதாவது 2023 மே மாதம் 6ஆம் தேதி அதிகாரபூர்வமாக முடிசூட்டிக் கொண்டார்.

    தனது கலாச்சார விழுமியங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் இங்கிலாந்துக்கு நிகர் இங்கிலாந்து என்றே சொல்ல வேண்டும்.

    1953ஆம் ஆண்டு இரன்டாவது எலிசபெத் மகாராணியார் முடிசூட்டும் வைபவத்தின் போது நான் இவ்வுலகத்தில் பிறக்கவில்லை. ஆனால் அது எத்தகைய கலாச்சாரப் பின்னணியில் நடைபெற்றது என்பதைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததுண்டு.

    இன்று மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் முடிசூட்டு வைபவத்தைத் தொலைக்காட்சி நேரலை மூலமாகக் கண்டு களிக்கக்கூடிய வசதியுடையவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் .

    மன்னர் சார்ள்ஸ் அவர்களையும் அவரின் இராணியார் கமீலா அவர்களையும் நேரடியாகக் காண்பதற்காக அவர்கள் எவ்வழியாக அவர்களது இல்லத்திலிருந்து வைபவம் நடக்கும் தேவாலயத்துக்கு ஊர்வலமாகச் செல்வார்களோ அவ்வழிதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வந்து கூடாரமடித்துத் தங்கியது இந்நாட்டு மக்கள் தமது கலாச்சார விழுமியங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினைப் புலப்படுத்துகின்றது..

    தரைப் படை, ஆகாயப் படை, கப்பற்படை என முப்படைகளைச் சேர்ந்த படை வீரர்களின் அணிவகுப்போடு பொதுநலவாய நாடுகளின் படைத்தளபதிகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து முடிசூட்டப்படப்போகும் இளவரசர் சார்ள்ஸ் அவரது துணைவியார் இருவரும் அழகிய வேலைப்பாடமைந்த குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

    வைபவம் நடக்கவிருந்த வெஸ்ட் மினிஸ்டர் அபே சார்ச் மண்டபத்தில் அழைக்கப்பட்டிருந்த பொது மக்கள் , சர்வதேச நாட்டுத் தலைவர்கள் , அனைத்து மதத் தலைவர்கள் , முன்னைநாள் பிரதமர்கள் , முக்கியமான பிரஜைகள் எனப் பலரும் திரண்டு மன்னருக்காகக் காத்திருந்தனர்.

    உறவினர்கள் புடைசூழ மன்னரும், அவரது துணைவியாரும் மண்டபத்தில் அவர்களுக்கான ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

    இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் முடிசூட்டப்படும்போது அமர்ந்திருந்த அரியணை, காலம் காலமாக இங்கிலாந்து அரசர்கள் உபயோகித்த அரியணை என்பது குறிப்பிடத்தக்கது ,

    இதே தேவாலயத்தில் தான் முதன் முதலில் 1066ஆம் ஆண்டு முடிசூட்ட[ப்பட்ட மன்னரான வில்லியம் த கொன்கரர் தொடங்கி இன்றுவரை அனைத்து முடிசூட்டு விழாக்களும் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் இழைக்கப்பட்ட சிம்மாசனம். மிகவும் பிரபலமான தேவாலயப் பாடல்கள் புகழ் பெற்ற இசை வல்லுனர்களின் வழிகாட்டுதலில் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய குழுவினர்களினால் இசைக்கப்பட்டது .

    இவ்விழாவிற்கு அமெரிக்காவில் இருந்து மன்னரின் இளைய மைந்தன் ஹரி கலந்து கொண்டிருந்தாலும் அவரது மனைவி மெகனும் குழந்தைகளும் கலந்து கொள்ளவில்லை.

    ஆர்ச்பிஷப் ஆப் கண்டபெரி புரொட்டஸ்டண்ட் ஆங்கில சார்ச் இன் தலைமைக் குருவின் முன்னால் முடிசூட்டப்படும் மன்னர்களுக்கு உரித்தான பாரம்பரிய உறுதிமொழிகளை எடுத்த மன்னர் சார்ள்ஸ்க்கு முடுசூட்டப்பட்டு, ராணியார் கமீலாவுக்கும் அவருக்குரிய முடி சூட்டப்பட்டது..

    முடியேற்றப்படும் முன்னால் மன்னரைச் சுற்றி ஒரு திரையிடப்பட்டது. மன்னர் மதச் சம்பிரதாயத்தின்படி இறைவனின் பிரதிநிதியாகத்தான் அங்கு முடிசூட்டப்படுகிறார் என்பதை அறிவிப்பதற்காக தலைமை மதகுருவினால் அவரது தலையில் பரிசுத்த எண்ணெய் வைக்கப்பட்டது, இதன்போது மன்னர் தனது ஆடம்பர அங்கிகளைக் களைந்து வெறும் துணி மட்டுமே அணிந்திருந்தார். இதனைப் பார்வையாளர்கள் காணக்கூடாது என்பதற்காகவே திரைக்குப் பின்னால் நிகழ்ந்தது.

    அவரின் உறுதிமொழிகளின் போது ஒரு சிறுவன் மன்னரை நோக்கி ” நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் ” என்று கேட்டதும் “நீங்கள் எனக்குச் சேவை செய்வதற்காக இங்கு வரவில்லை உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார். இதுவும் ஒரு சம்பிரதாய வழக்கமே

    தங்கம், வைரம், வைடூரியம் இழைக்கப்பட்ட முடியைத் தலையில் தாங்கி மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    கிறிஸ்தவ வழிமுறைகளின் படி இவ்வைபவம் நடைபெற்றாலும் முடிசூட்டப்பட்ட மன்னர் அனைத்து மதத் தலைவர்கள் முன்னின்று அவர்களின் மதவழிகளில் ஆசிகளைப் பெற்றது பிரித்தானிய சரித்திரத்தில் முதன்முறையாக இடம்பெற்றது.

    குறிப்பாக, தற்போதைய இங்கிலாந்துப் பிரதமரான ரிஷி சுனாக் இந்து மதத்தைச் சேர்ந்தவராவார். இவர் இவ்வைபவத்தின் போது கிறிகிறிஸ்தவ மதநூலான பைபிளில் இருந்து ஒரு பகுதியைப் படித்தது புதிய மன்னரின் போக்கின் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததைப் பலரும் அவதானித்ததைக் கண்டுகொள்ள முடிந்தது.

    மன்னருக்கு முடிசூட்டப்பட்டதை அடுத்து நாட்டுப் பிரஜைகள் தமக்குப் பிடித்திருந்தால் புது மன்னருக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இது கட்டாயமாக்கப்படவில்லை .

    முடிசூட்டப்பட்டதை அடுத்து மன்னரும் , ராணியாரும் தங்க ரதத்தில் வைத்து ஊர்வலமாக அவரகளது உத்தியோக வாசஸ்தலமான பக்கிங்காம் பலஸ் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் . அவர்கள் பின்னால் பட்டத்து இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேட் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் மற்றொரு ரதத்தில் பின்தொடர்ந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து இராஜ குடும்பத்தின் உத்தியோகப்பூர்வமான அங்கத்தினர்கள் தொடர்ந்தார்கள்.. குறிப்பாக மன்னரின் தங்கை இளவரசி ஆன் அவர்கள் தனது உத்தியோகப்பூர்வமான அங்கிகளுடன் குதிரையில் அவ்வூர்வலத்தில் கலந்து கொண்டது அழகாக இருந்தது.

    வழிதோறும் மழையைப் பொருட்படுத்தாது சாலையோரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று மன்னரை வாழ்த்திக் கோஷமிட்டது இந்நாட்டு மக்கள் தமது பாரம்பரியத்தை எவ்வளவு முக்கியமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டியது.

    தமது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற மன்னரும், இராணியாரும் தமது குடும்ப அங்கத்தினருடன் பால்கனிக்கு வந்து தம்மை வாழ்த்தக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கையசைத்துத் தமது நன்றியறிதலைத் தெரிவித்தார்கள்.

    மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மரியாதை செய்யும் பொருட்டு வான்படையினர் வானூர்திகளில் ஊர்வலமாகப் பறந்து ஒரு கண்காட்சியை நிகழ்த்தினர்.

    அதைத் தொடர்ந்து தமது மாளிகையின் பின் தோட்டத்தில் மன்னரும் அவர் குடும்பத்தினரும் பாதுகாப்புப் படையினருக்குத் தமது பிரத்தியேகமான நன்றிகளைத் தெரிவித்தார்கள்.

    கிறிஸ்தவ மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிறிஸ்தவரான மன்னர் தாம் கிறிஸ்தவ மதத்தின் காவலர் மட்டும் அல்ல இந்நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் அனைத்து மதங்களின் பாதுகாவலர் என்பதைப் பல இடங்களில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

    மாணவனாக இந்நாட்டினுள் 48 ஆண்டுகளின் முன்னால் கால் பதித்தேன். எனது உயர் கல்வியை முடித்து, திருமணப் பருவத்தில் புகுந்து இன்று ஒரு பேத்திக்குத் தாத்தாவாக உள்ளேன்.

    என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில் நான் சந்தித்த மாற்றங்கள் அனைத்திலும் இந்நாட்டின் சட்டதிட்டங்கள் எனக்கு அனுகூலமாக இருந்தனவே தவிர என்றுமே முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.

    ஜனநாயகம் என்பதன் உண்மை அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இந்நாட்டு வாழ்க்கை எனக்கு உதவியது, அத்தகைய நாட்டின் பாரம்பரிய தலைவராகக் கருதப்படும் மன்னரின் முடிசூட்டு விழாவின் பார்வையாளராக இருந்தது எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

    ஆமாம் எங்கோ பிறந்தேன், எங்கோ தவழ்ந்தேன், இங்கே மிதந்தேன். வந்த என்னை வாழவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பிரஜைகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    பல்லாண்டுகள் வாழ்க என்று மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    Share
  • இளையராஜா, உங்கள் கர்வத்தைத் தொலையுங்கள்

    இளையராஜா, உங்கள் கர்வத்தைத் தொலையுங்கள்

    பாஸ்கர்

    மனோபாலா மரணம் இங்கு மறக்கப்பட்டு இன்று இளையராஜா அஞ்சலியில் சொன்னது பேசு பொருள் ஆகிவிட்டது. ராஜா முதிர்ந்தவர். அனுபவஸ்தர். பெரிய பிரபலம். அவரை இப்படித்தான் பேச வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இப்படி எல்லாம் பேசக் கூடாது எனச் சொல்லலாம் என்று தான் தோன்றுகிறது.

    இதற்கு மேல் அவருக்கும் என்ன பெரும் புகழும் பணமும் வேண்டும்? ரமணரை வணங்குபவர் அவர். அகந்தை பற்றி அவர் அறிந்ததும், புரிந்ததும் இவ்வளவு தான் எனில் யாரை இங்குக் குறை சொல்ல? அவர் தன்னை இன்னும் ஆழ்ந்து பார்க்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

    நான் மிக்க சின்னவன் அவரை விட எல்லா வகையிலும். ஆனாலும் அவர் பேசிய தோரணை தவறு தான். நிஜமாகவும், இயல்பாகவும் இருப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அது இளையராஜாவிற்கும் பொருந்தும். அவரின் இசை அமுங்கி வசை தான் முன் நிற்கிறது. பெரிய நடிகர்களையும், அரசியல் தலைவர்களையும் விமர்சனம் செய்ய நமக்கு உரிமை இருக்கும் போது இளையராஜா விலக்கு அல்ல. அவரிடம் இன்னும் பெயருக்கும், புகழுக்கும் ஆசைப்படும் குணம் இன்னும் குறையவில்லை. அது தவறில்லை. ஆனால் மனோபாலாவின் அஞ்சலியில் காட்டியிருக்க வேண்டாம். சத்தியமாக எனது கருத்தில் அவரின் அரசியல் கலப்பை நினைக்கவில்லை.

    அவருக்கு எங்கோ இன்னும் இன்னும் என்ற வலி உள்ளது. இனி இனி ஒன்றும் இல்லை என்று அவர் உணர வேண்டும். தத்துவம் தெரிந்த அவர் என்றோ அதனைக் கைகொண்டிருக்க வேண்டும். அன்புள்ள ராஜா சார், உங்களை இன்றும் உலகம் பெரிதும் மதிக்கிறது. உங்கள் புகழ் குடம் ஏன் இன்னும் நிரம்பவில்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் அது தளும்புகிறது என்ற விஷயம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. அல்லது தெரிந்தும் உங்களுக்குப் போதவில்லை எனில் குறை குடத்தில் அல்ல. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி என்ற அவ்வையின் பாடலை நீங்கள் படித்து இருப்பீர்கள். இதற்கு மேல் மொள்ள இயலாது என தெரிவதும், தெரிந்து நகர்வதும் தான் தெளிவு . இன்னும் மொள்ள நினைப்பது தவறு.

    உங்கள் கர்வத்தைத் தொலையுங்கள். இதற்கு மேல் சாதிக்கவும், பெயர் சம்பாதிக்கவும் உங்களுக்கு அவசியம் இல்லை இதைச் சொல்ல ஒரு கவிஞனோ, இசை அமைப்பாளரோ, ஒரு பிரபலமோ தேவையில்லை. இந்த மிகச் சாதாரணன் போதும். நீங்கள் செய்வீர்கள் எனில் உலகம் இன்னும் உம்மைக் கொண்டாடும்.

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 6

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 6

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • மனைவியிடம் கேட்கக் கூடாத கேள்வி | ஏ.வி.கிரி பேச்சு

    மனைவியிடம் கேட்கக் கூடாத கேள்வி | ஏ.வி.கிரி பேச்சு

    மனைவியிடம் கேட்கக் கூடாத கேள்வி எது தெரியுமா? தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சொல்கேளான் ஏ.வி.கிரி ஆற்றிய உரை இதோ. ஒரு காலத்தில் திக்குவாயாக இருந்தவர், எப்படிச் சரளமாய்ப் பேசுகிறார், பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முத்துமலை முருகன் – உலகின் மிக உயரமான முருகன் சிலை

    முத்துமலை முருகன் – உலகின் மிக உயரமான முருகன் சிலை

    உலகின் மிக உயரமான முருகன் சிலை என்ற பெருமையை, சேலம் மாவட்டம், புத்திர கவுண்டம்பாளையம், ஏத்தாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ள முத்துமலை முருகன் பெற்றுள்ளார். அழகும் அருளும் கனிவும் மிகுந்த முருகப் பெருமானின் இந்தத் திருக்கோவிலுக்குள் ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வந்தே பாரத் விரைவு ரெயிலில் ஒரு பயணம்

    வந்தே பாரத் விரைவு ரெயிலில் ஒரு பயணம்

    வந்தே பாரத் விரைவு ரெயிலில் அண்மையில் சென்னையிலிருந்து கோவைக்குச் சென்றோம். ஆறு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று சேர்ந்தோம். ஒரே ஒரு குறை தான்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாய்சி மைனர் | ஆஸ்திரேலியப் பறவை

    நாய்சி மைனர் | ஆஸ்திரேலியப் பறவை

    மறவன்புலவு சச்சிதானந்தன், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தம் மகள் சிவகாமியின் இல்லத்தில் தங்கியுள்ளார். அந்த வீட்டுத் தோட்டத்தில் இந்திய மைனாவைப் போலவே உருவம் கொண்டுள்ள நாய்சி மைனர் என்ற பறவையைக் கண்டார். சிட்னி மைனா, சிவகாமியின் சிட்டு என அழைத்து அதைப் பதிந்து நமக்கு அனுப்பியுள்ளார். அந்த அழகிய பறவையைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share