Blog

  • சீதாயணம் நாடகப் படக்கதை – 18

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -18

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

     
     jey
    jey 1
    தகவல் :

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞருடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்த கே.ஆர்.பாலன் எங்களில் ஒருவரானார்.  அனுபவரீதியாக பழுத்த பழம்போல் காட்சியளித்த அவர். திரையில் பல படங்களைத் தயாரித்த பெருமைக்குரியவர்.  எளிமையானவர். இனிமையாகப் பழகக்கூடியவர். இவரிடமிருந்து திரைத்துறைபற்றிய பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.   அப்படி பெறப்பட்ட செய்திதான் கவிஞர் வாலி அவர்களின் பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்கிற  பாடலின் உருவாக்கம் பற்றி நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலில் இடம்பெற்ற பகுதியாகும். 

     

    ஏ.வி.எம். நிறுவனத்தார் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ஒரே படம்.. எம்.ஜி.ஆர். நடிப்பில் சண்டைக்காட்சிகளே இல்லாத படம் என்று பல தனித்துவங்களை உள்ளடக்கிய படம் அன்பே வா..  கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல்கள் முழுவதுமாக இடம்பெற்ற இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி பதிவான பின்னணி சுவையானது.  

     

    ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் கைவண்ணத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி!!

     

    முழுக்க முழுக்க காதலர்கள் இடையே உருவாகும் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்! கண்ணுக்கு குளிர்ச்சியாக சிம்லாவில் அன்றைய நாளில் படப்பிடிப்பு!  நாகேஷ் – மனோரமா நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்!  இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகம் கூட ஆர்.பி.எம். ரெக்கார்டு போன்று வட்டவடிவில் வந்தது இன்றும் நினைவில் உண்டு.  

     

    எம்.ஜி.ஆர். ரசிகர்களால் எண்ணிக்கை பாராமல் பார்க்கப்பட்ட பட வரிசையில் அன்பே வாவிற்கு தனி இடம் உண்டு!  புதிய வானம் புதிய பூமிலவ் பேர்ட்ஸ்நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்.. ஏ.. நாடோடி.. போக வேண்டும் ஓடோடி.. அன்பே வா.. அன்பே வா.. என்னும் பாடல்களுடன்.. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!!

     

    இந்தத் திரைப்பாடலுக்கு கவிஞர் வாலி எடுத்துக்கொண்ட நேரம்  சற்றே வித்தியாசமானது.  இசையமைப்பு (Tune)கொடுக்கப்பட்டு எழுத முயன்றும் ஏனோ வார்த்தைகள் சரியாக பிடிபடாமல்நேரம் கடந்து கொண்டே சென்றது. பாடல் கிடைத்துவிட்டால்,பதிவு செய்யப்பட்டு பாடல்காட்சியை படம்பிடித்துவிடாலாம் என்று படக்குழுவினர் காத்திருக்க.. அமைக்கப்பட்ட இசையோ.. அருமை என அனைவராலும் ஏற்கப்பட்.. அந்த முழுநாளும் பாடல் பிறக்காமல் முடிந்துவிடுகிறது.  வீட்டிற்குச்சென்ற கவிஞர் சற்றே வருத்தமுடன் காணப்பட்டார்.  இரவு உணவு கூட வேண்டாம்.  பால் மட்டும் போதும் என்று கூற அவரின் மனைவி.. அவ்வாறே பால் எடுத்துச்செல்கிறார் அந்த அறைக்குள்.. கவிஞரின் கற்பனையில் வரி ஒன்று  தோன்றுகிறது..

     

    பாவலன் மறந்த பாடலில் ஒன்று

    பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று..

    தலைவனை அழைத்தேன்.. தழுவிட துடித்தேன்..

    பாடலின் பல்லவி பின் வருகிறது.. தான் எழுத மறந்த பாடலிது என்பதையே வரியாக்கி அந்த இசைக்கட்டுக்குள் கெட்டிக்காரத்தனமாக வைத்த வாலியைப் பாராட்டலாமே!

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. கண்மூடுதே சொர்க்கம்.. கை மூடுதே வெட்கம்.. 

    எம்.ஜி,ஆர். சரோஜாதேவி.. இணைந்து குதிரை சாளர வண்டியிலே அந்தக் குளம்படிச்சத்தமே பின்னணி இசையாய் தொடரசெந்தூர வண்ணங்கள் வானம் முழுவதும் சிதறிவிழ.. மனக்கண்களில் இன்றும் தெரியும் இனிய பாடலாய்..

     

    http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8

     

     

    ராஜாவின் பார்வை ராணியின் – Rajavin paarvai
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 107 (03.02.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    அனைத்தும் அறிந்த அறிவுடையவன்,
    அறநெறியைக் கடைப்பிடிப்பவன்,
    அறிவின் எல்லையைக் கடந்து நிற்பவன்,
    உயிர்களுக்கு இன்பம் தருபவன்,
    வினைகள எல்லாம் வென்றவன்,
    தகுந்ததைச் செய்யும் சித்தமுடையவன்,
    செயல்களுக்கு மூலமானவன்,
    தருமத்துக்கு முதலானவன்;

    தேவர்களின் தலைவன்,
    புனிதமானவன் பழமையானவன்,
    புலவன் ஆனவன் சினத்தைக் கடந்தவன்,
    தேவர்களுள் முதல்வன், இவ்வுலகின் தலைவன்,
    பரமன் சிறந்த குணம் உடையவன்,
    இவ்வுலகிற்கு விளக்கானவன்;

    தத்துவங்களை அறிந்தவன்,
    ஐம்புலன்களையும் அடக்கியாள்பவன்,
    விண்ணிலிருந்து இயங்குபவன்,
    அனைத்துக்கும் மூல காரணமானவன்,
    சித்திகள் அறிந்த சித்தன்,
    பெரியவன் தலைமைப்பண்பில் சிறந்தவன்,
    ஒளியாக விளங்குபவன்,
    இறைவன் ஆசிரியன் இயல்பான நற்குணத்தினன்,
    எம்முடைய அரசன் குறைவில்லாப் புகழை உடையவன்.

    குணத்தில் சிறந்த கோமான்,
    எல்லார்க்கும் நன்மை செய்பவன்,
    எல்லாச் செல்வமும் உடையவன்,
    சுயமாகத் தோன்றியவன்,
    நான்கு முகங்களைக் கொண்டவன்,
    அங்கம் பயந்தோன், அருகன்,
    அருள் தரும் முனிவன்;

    பண்ணவன், எண்வகைக் குணங்களையுடைவன்,
    விளங்குவதற்கரிய பழம்பொருளானவன்,
    விண்ணவன், வேதத்தின் முதல்வன்,
    அறியாமை இருளை நீக்குகின்ற ஒளியானவன்.

    இத்தகைய சிறப்புப்பெயர்களையும் குணங்களையும்
    வேதத்தின் ஒளியாக விளங்குபவனுமாகிய
    அருகதேவனைச் சார்ந்து இருந்தால் அன்றி
    பிறவி எனும் மூடிய அறையில் இருந்து
    வெளியேற முடியாது…

    இங்ஙனம் சாரணன் அவனும்
    அருகனின் புகழதனை எடுத்தியம்பினன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  176 – 191

    Share
  • இதுதானா ஆப்புங்கறது..?

    பவள சங்கரி

    காட்சி – 1

    ஹலோ, ஹலோ.. ஏனுங்க எவ்ளோ நேரமா போன் அடிக்குதே. அப்புடி என்னதான் செய்வீங்க. போன் அடிச்சா உடனே எடுக்கணும்கறது குட் மேனர்ஸ் . இதுகூட தெரியாதாக்கும்..

    ஆமாம்மா எங்களுக்கு வேற பொழப்பே இல்லை பாரு.  போனையே பாத்துக்கிட்டு எப்ப அடிக்கும்னு உக்கார்ந்திருக்கோமாக்கும்.  மனுசன் காலையிலருந்து, பேல் போட்றதுக்கு மாடா உழைச்சுக்கிட்டிருந்தா உனக்கு கிண்டலா இருக்குது. பேசமாட்ட பின்ன. சுகமா வீட்டுல ஃபேனுக்கடிய உக்காந்துக்கிட்டு, ஹாயா வேலைக்காரிகிட்ட அதிகாரம் பண்ணிக்கிட்டு, நேரத்துக்கு ஜூஸ் குடிச்சு உடம்பையும் பாத்துக்கிட்டு மேடம் சுகமா இருக்கணும்னா நாங்க இங்க இப்புடி கடந்து உழைச்சாத்தானே ஆச்சு. சரி வேலை கடக்குது. என்னத்துக்கு போன் பண்ணின அதச்சொல்லு.

    ஏனுங்க என்ன இப்படி சொல்றீங்க. நானும்தானே பிசினஸ் பன்றேன். சும்மாவா இருக்கேன்.  சூரத் மில்ஸ் புடவை வியாபாரம் வீட்டில் வச்சே எப்படி விவரமா பன்றேன்னு போய் நம்ம அக்கம் பக்கத்து தெருவுல வச்சிக் கேட்டுப்பாருங்க.  எதோ எனக்கு உண்டானதை நான் சம்பாரிச்சுட்டுதானே இருக்கேன்.

    ஆமா, லட்சம், லட்சமா சம்பாதிக்கிறீங்களாக்கும். ஆர்டர் போடற புடவைல பாதி உனக்கு புடிச்சிப்போவுது. மீதி உங்க அக்கா தங்கச்சிக எடுத்தது போக பத்துப் புடவை விப்பியா , அதுல எத்தனை லட்சம் சம்பாதிப்பீங்களாம். என்னைக்காச்சும் என் பாக்கெட்டுக்கு வேட்டு வக்காம இருந்தா சரிதான் தாயீ.. அதுசரி போன் பில்லு ஓடிக்கிட்டிருக்கு, சீக்கிரம் மேட்டருக்கு வா.

    ஆமா நீங்கதான் ரேட் கட்டர் போட்டிருக்கீங்களே அப்புறம் என்னவாம்? சரி, சரி, நானும் மேட்டரை சொல்லத்தான அவசரமா உடனே போன் பண்ணினேன். அதுக்குள்ள உங்க பிரதாபத்தைச் சொல்லி என்னை டைவர்ட் பண்ணிப்புட்டீங்க. ஒரு ஆச்சரியமான விசயம். சொன்னா நீங்க அசந்து போயிடுவீங்க. நம்ம வீட்டுக்கு இப்ப ஒரு வி.ஐ.பி வரப் போறாங்களாம். எனக்கு போன் வந்துது.

    என்னது, வி.ஐ.பி.யா நம்ம ஊட்டுக்கா? அட அது யாரு? யாரு போன் பண்ணது உனக்கு?

    அதாங்க, அன்னைக்கு நாம ஹோட்டலுக்கு போனப்ப ஒருத்தர் வந்து நீங்கதான சூரத் சாரீஸ் கடை ஓனரான்னு கேட்டாரே, தன்னைக்கூட ஒரு ஜவுளிக் கடைகாரருன்னு அறிமுகப்படுத்திக்கிட்டாரே. அவருதான் போன் பண்ணினார்.

    என்னவாம். எதுக்கு போன் பண்ணினார் ?

    அதொன்னுமில்லீங்க, யாரோ ஒரு பெரிய ஜவுளிக் கடை முதலாளியாம்.  மல்டி மில்லியனராம், நம்ம வீட்டிற்கு பிசினஸ் பற்றி பேச வரப்போறாராம். என் பிசினஸ் டெக்னிக் ரொம்ப பிடிச்சிருக்காம் அவருக்கு, அதனால என்னோட பேச வேண்டுமாம்.  அவரு ரொம்ப பெரிய ஆளாம். பெரிய பெரிய அரசியல் தலைவரெல்லாம் கூட அவுங்க வீட்டில் வந்து தங்குவார்களாம். அவங்க வீடுகூட அவ்ளோ பெரிசாம்.

    அதுசரி. அவுங்களுக்கு நம்ம ஊட்டுல என்ன வேலையாம்?

    அதாங்க பிசினஸ் விசயமா பேசணுமாம். சொன்னேனே. சரி நீங்க சீக்கிரமா வீட்டுக்கு வந்துடறீங்களா. எனக்கு ஒரே டென்சனா இருக்குப்பா…

    அட ஏம்மா நீ வேற. எனக்கே இன்னைக்கு வேலை நிறைய இருக்குன்னு மதியம் சாப்பாட்டுக்கே வர முடியாதுன்னு கடக்கறேன். இன்னைக்கு ராத்திரிக்குள்ள பேல் போட்டு சரக்கை அனுப்பணும். இரண்டு ஆளுங்க வேற லீவு. நானே இங்க வேலை செய்துட்டிருக்கேன்.  சரி போனை வைக்கிறேன்.

    காட்சி  2

    ஐயா, வாங்க வணக்கமுங்க.  நீங்க வரப்போறதா அண்ணாச்சி போன் பண்ணினார். ரொம்ப மகிழ்ச்சிங்க.  காபி சாப்பிடலாங்களா?

    இல்லம்மா, நான் வெளியே எங்கேயும் எதுவும் சாப்பிடறதில்ல. எங்க வீட்டம்மாவோட ஸ்டிரிக்ட் ரூல் அது. என் ஆரோக்கியத்துல அவங்களுக்கு அவ்வளவு அக்கறை. மதியம் சாப்பாடு வீட்டிலருந்துதான் வரும். சாரிம்மா. உங்களையும் வருத்தப்பட வைக்க முடியல. மோர் மட்டும் கொஞ்சம் போல கொடுங்க.

    சரிங்க ஐயா. இதோ எடுத்துட்டு வறேன்.

    இப்ப நான் வந்த விசயமே, இந்த ஊரில நீங்கதான் சூரத் மில்ஸ் புடவைகள் ஏஜென்சி எடுத்திருக்கிறீங்க இல்லையா?  இவ்வளவு நாள் இந்த ஊரிலேயே இருந்துகிட்டு உங்களைப்பற்றி தெரியாமையே இருந்திருக்கிறேன்.  ரொம்ப சந்தோஷமம்மா. குடும்பத்தையும் கவனிச்சிக்கிட்டு வியாபாரத்தையும் நல்லபடியா செய்யுறதுன்னா அதுக்கு ரொம்ப சாமர்த்தியம் வேண்டும்.  ரொம்ப சர்வ சாதாரணமா போகிற போக்கில் நீங்கள்லாம் வீட்டில இருந்துகிட்டே அருமையா பிசினஸ் பண்ணுறீங்க. இன்றைய பெண்கள் குடும்ப பாரத்தை சுமப்பதிலும் பங்கெடுத்துக் கொள்வது பாராட்டப்பட வேண்டிய விசயம். வாழ்த்துகள் அம்மா.

    [அதற்குள் 4 முறை அந்த அதிபருக்குப் போன் வந்துவிட, அவர் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு நம்ம கதை நாயகி தாரணியிடம் பேசுவதில் முக்கியத்துவம் கொடுத்தது அவளுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. தன்னம்பிக்கை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. சே, இவரல்லவோ பெரிய மனிதர் என்று அவரை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துவிட்டாள்]

    சரிம்மா ரொம்ப அவசரமா போக வேண்டியதிருக்கிறது. நீங்க உங்க சரக்கையெல்லாம் நம்ம கடைக்கே கொடுத்துடலாம். உங்களுக்கும் வியாபாரம் பெருகுவதோடு, எளிதாகவும் இருக்கும் இல்லையா. எங்க கடையில ஒரு பக்கம் இருந்துட்டுப்போவுது. உங்களுக்குரிய கமிஷன் வந்துடும். சரியா. நீங்களும் எங்களோட பார்ட்னர் ஆயிடுவீங்க. கொஞ்ச நாள்ல நீங்களும் எங்க கடை மாதிரியே ஒரு கடை ஆரம்பிச்சுடலாம். எல்லாரும் நல்லா இருக்கோணும் அதான் நம்ம ஆசையே. என் பொண்ணாட்டம் இருக்குற உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிப்போச்சிம்மா. நீங்களும் சீக்கிரம் முன்னுக்கு வரணும். சரிம்மா நல்லதும்மா. நான் கிளம்பறேன். மத்த விசயங்களெல்லாம், இதோ இவரு என்னோட பி.ஏ. அவர் பார்த்துக்குவார். நான் வரட்டுமாம்மா.

    காட்சி  3

    அம்மா, வணக்கங்க. இதோ இந்த பங்குதாரர் ஒப்பந்தம் இருக்கு இதுல இருக்குறதை படிச்சுப் பார்த்து கையெழுத்து போட்டால் நல்லாயிருக்கும்மா.

    ஏனுங்க இது என்னங்க இவ்வளவு பெரிய தொகை பங்குப் பணமா எழுதியிருக்கீங்க. நாங்க இவ்வளவு பணமெல்லாம் போட முடியாதுங்களே.  அதனால எனக்கு இது ஒத்து வராதுங்களே. சாரிங்க.

    அம்மா, ஐயாவும் இதை யோசிச்சாங்க. அதான் இன்னொரு டீல் கூட சொல்லியிருக்காங்க. அதாவது நீங்க பணமே தர வேண்டாம், ஒர்க்கிங் பார்ட்னரா சேர்ந்துக்கலாம்.  முதலே போடாமல் பார்ட்னர் ஆகலாம். தினமும் சில மணி நேரம் கடையில் வந்து இருந்தால் போதும். வேற ஒன்னும் நீங்க செய்ய வேண்டியதில்லை.

    அப்படீங்களா.. எங்க வீட்டுக்காரர்கிட்ட கேட்டுக்கிட்டு உங்களுக்குப் போன் செய்யறேனுங்க..

    காட்சி  4

    ஏனுங்க, என்னங்க நான் நடந்ததெல்லாம் சொன்னேனே. இங்க பாருங்க இந்த பார்ட்னர்ஷிப் டீட்.

    ஏம்மா, இது எங்கயோ உதைக்குதே. அவ்ளோ பெரிய பிசினஸ்மேன் நம்மகிட்ட டீல் வச்சுகிறதுக்கு என்ன காரணம்னு புரியலியே.  கொஞ்சம் யோசிக்கலாம்மா. அவசரப்படாதே,

    அட ஏனுங்க நீங்க வேற எதுக்கெடுத்தாலும் சந்தேகம்தான் உங்களுக்கு. ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. அதைப்போய் நாம் மிஸ் பன்றது எனக்கு நல்லதா படலை.

    நான் கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடுக்கலாம்னுதான் சொல்றேன்.  அவசரப்பட்டு, புது வெள்ளம் வந்து பழைய செல்வத்தையெல்லாம் அடிச்சிக்கிட்டுப் போயிடக்கூடாது. அவசரப்படாதே, அவ்ளோதான் நான் சொல்ல முடியும். அப்பறம் உன் இஷ்டம்.

    ஏனுங்க, அவ்ளோ பெரிய பிசினஸ்காரங்க நமக்காக எவ்ளோ நாளைக்கு வெயிட் பண்ணுவாங்க. இது ஒரு சாதாரண டீல் அவங்களுக்கு. விட்டா நமக்குத்தான் நட்டம். அவ்ளோ பெரிய மனுஷர் அவர், நம்ம வீட்டை தேடிக்கிட்டு வறார். நாம அதுக்குரிய மரியாதையை கொடுக்கணுமில்லையா. நான் கையெழுத்து போடலாம்னுதான் இருக்கேன்.

    அப்பறம் உன் இஷ்டம்.  இந்த சூரத் மில்ஸ் டீலர்ஷிப் உனக்கு ரொம்ப முக்கியம். உங்க பரம்பரையா வந்துட்டிருக்கு. உங்க அப்பாவுக்காக உனக்குக் குடுத்திருக்காங்க. இந்த ஊருக்கு உனக்கு மட்டுமே கொடுத்திருக்காங்க. பார்த்து நடந்துக்க. அதுக்கு ஏதும் பிரச்சனை வந்துடப் போறது.

    இல்லைங்க நான் முடிவு பண்ணிட்டேன். ரிஸ்க் எடுக்காம வெற்றி பெற முடியாது.

    காட்சி  5

    ஏனுங்க, ஏனுங்க, நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டீங்களே.  எனக்கு மனசே சரியில்லைங்க. அவிங்க கடைக்குப் போகவே எனக்கு புடிக்கலை. அங்க மரியாதையே இல்லைங்க எனக்கு. என்னையும் அங்க வேலை செய்யிற சேல்ஸ் கேர்ள்ஸ் மாதிரி நடத்துறாங்க. தப்பு பண்ணிட்டோம்னு தோணுதுப்பா. பேசாம வெளீல வந்துடலாம்னு தோணுது. ஒரே டென்சனா இருக்கு.

    இதைத்தான் நான் முதல்லியே சொன்னேன். அவசரப்படாதேன்னு. என் பேச்சைக் கேட்டியா நீ. நாளைக்குப் போய் அந்த பெரியவர்கிட்ட பேசிப்பாரு. என்ன சொல்றார்னு பார்க்கலாம்.

    அவரைப் பார்க்கவே முடியலைங்க.  பிசியா இருக்கார்னு சொல்றாங்க. இல்லேனா வெளிநாடு போயிருக்கறதா சொல்றாங்க. ஒன்னுமே புரியலைங்க.

    சரி, அமைதியா இரு. விசாரிச்சுப் பார்க்கலாம். எதை எடுத்தாலும் எடுத்தோம், கவுத்தோம்னு செய்யிறதே உனக்கு வாடிக்கையாப்போச்சு.

    தாரணியின் கணவன் மனது கேட்காமல் அந்தக் கடை முதலாளி பற்றியும், கடை நிலவரம் பற்றியும் தன் நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது. சூரத் மில்ஸின் ஓனரின் மகனுக்குத்தான் இந்தப் பெரியவரின் மகளை சமீபத்தில் திருமணம் முடித்திருக்கிறார்கள் என்றும் பரம்பரையாக நல்ல நட்பின் அடிப்படையில் தாரணிக்குக் கொடுத்திருக்கும் டீலர்ஷிப்பை தங்களுக்கு மாற்றிக்கொள்ளவே இப்படி சாணக்கியத்தனம் செய்திருக்கும் அந்தப் பெரிய மனிதரின் திட்டம் புரிந்து போனது.  தாரணியிடம் இதைச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும் என்று நொந்தபடி வீடு வந்தான் அவள் கணவன்.

    ஏனுங்க இதுக்குப்பேர்தான் ஆப்பு வக்கிறதா?  தெரியாமப் போச்சே எனக்கு. அடக்கடவுளே. உள்ளதும் போச்சே..

    முற்றும்.

    Share
  • வார ராசி பலன்:03-02-14-09-04-14

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: சுய தொழில் புரிபவர்கள், நவீன இயந்திரங்கள் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்து இலாபம் பெறலாம். மாணவர்கள்,  இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகும். இந்த வாரம், கர்ப்பிணிப் பெண்களின் நோய்கள் தீர்ந்து, ஆரோக்கியம் சீராக இருக்கும். பணியில் உள்ளவர்கள், எதிர்பார்த்த,  வங்கிக் கடன் விரைவில் கிடைக்கும். கலைஞர்களின் முயற்சிகள் வெளி நாட்டு பயண வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். பொது வாழ்வில் இருப்போர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். திறமையான திட்டமிடுதல் மூலம்,   கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள், வேண்டிய லாபத்தை ஈட்டுவார்கள்.
    ரிஷபம்:  கலைஞர்களுக்கு வார முதல் பகுதி,  அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்கும் பணியில் உள்ளவர்கள்,  புதிய வீடு வாங்கி மகிழ்வர்.  பெண்களுக்கு, வீட்டுப் பராமரிப்பு செய்யவும் மற்றும் அலங்காரப் பொருட்களை  வாங்கவும் வேண்டிய பணம் கிட்டும். தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆதரவால், சுய தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் இருந்த இடையூறுகள் படிப்படியாய் குறையும். கிடைக்கும் நல்ல  தொடர்புகள், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்புமுனைகளை உண்டாக்கும்.
    மிதுனம்:  இதமான அணுகுமுறை மூலம் வியாபாரிகள் பாக்கிகளை எளிதில் வசூலிக்கலாம். இந்த வாரம் உறவுகள் பாராமுகமாய் இருந்த போதிலும், அவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கென்று பணமும், நேரமும் செலவு செய்யும் நிர்ப்பந்தமிருக்கும். முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பெண்கள் இதமாகப் பேசினால் உறவுகள் தொடர்கதையாகும் என்பதை அவ்வப்போது நினவில் கொள்வது நல்லது. விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும்.
    கடகம்: வெளிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதை சற்று ஆறப் போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத் திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்துக் கொள்ளலாம்.
    சிம்மம்: நெருங்கிப் பழகிய பங்குதாராரர்கள் கருத்து வேறுபாடால் உங்க ளை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்கள், இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாம லிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை நல்ல முறையில் பயன்படுத்தவும். முதலீடுகள் தொடர் பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.
    கன்னி: கலை நயத்துடன் செய்யும் காரியங்களால், அலுவலக விழா ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரச்னைக் குரிய விஷயங்களில் இருக்கும் சட்ட சிக்கல்களை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. பெண்கள் வரவு, செலவு இரண்டிலும் கவனமாக இருந்தால், பொருளாதாரம் சறுக்கா மல் இருக்கும். மாணவர்கள் கூட்டாக செயல்படும் போது அடுத்தவரின் கருத்துக் களுக்கு மதிப்பு கொடுத்து செயல்பட்டால், கருத்து வேறுபாடு தோன்றாது. கலைஞர்கள் உடனிருப்பவர்கள் நடுவே வீண் போட்டி, கருத்து பேதம் ஆகி யவை வளர இடம் கொடாதீர்கள். கட்டுக்கோப்பாய் வேலைகளை முடிக்கலாம்.
    துலாம்:குடும்ப, ஒற்றுமை சிறக்க, பெண்கள் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகள் பணியாளர்களின் சிறப்பான ஆதரவைப் பெற, அவர்களிடம் இன்முகத் தோடு நடந்து கொள்வது அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பிறர் குற்றம் சொல் லாத அளவில் தங்கள் பொறுப்புகளை முடிப்பது நல்லது. கலைஞர்களை முக்கியமான பொறுப்புகள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கலாம். சுய தொழில் புரிபவர்கள் வாக்கு றுதிகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கடுமையான உழைப்பில் இறங்க வேண்டி யிருக்கும். கடன்பட்டாவது குடும்ப உறுப்பினர்களை திருப்தி படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். பங்குச் சந்தையில் அதிக முதலீடு வேண்டாம்
    விருச்சிகம்: இந்த வாரம் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்தும் விதமாக அமைவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பணிகள் தடங்கலின்றி நடைபெறும் . கலைஞர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வர். பொது வாழ்வில் உள்ளவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில், அடுத்து வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், தவறுகளைக் களைந்து, முன்னேற முடியும்.மாணவர்கள் விரும்பிய பொருள் கிடைப்பதில் இழுபறி இருக்கும்
    தனுசு: பெண்கள் செலவுகளில் சிக்கனமாய் இருந்தால் பொருளாதாரச் சறுக்கல்கள் குறையும். இந்த வாரம் உதவுவதாக வாக்குறுதி அளித்தவர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்குவதால், சில தடுமாற்றங்கள் தோன்றி மறையும். பணியில் இருப்பவர்கள் கவனக் குறைவிற்கு இடமின்றி செயலாற்றினால், பதவிக்குரிய கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். .பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு அதிக நேரம் உழைப்பீர்கள். மாணவர்கள் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுவதால், சில எதிர்ப்புகளுக்கு ஆளாக நேரிடும். தந்தை வழி உறவுகளால், எதிர்பாராத விரயங்களோடு மன உளைச்சலும் வந்து சேரலாம்.
    மகரம்:இந்த வாரம் கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் பட்டும் படாமலும் நடந்து கொண்டால், மன உளைச்சலை தவிர்த்து விடலாம். அதிக அலைச்சல், தூக்கம் கெடுதல் ஆகியவை அன்றாட வாழ்வை பாதிக்காமல் பார்த்துக் கொண்டால், பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் தங்கள் வேலையில் ஈடுபட முடியும். மாணவர்கள் சலிப்புக்கு இடம் தராமல், பணியில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் பண ஓட்டத்திற்கு ஏற்றவாறு செலவுகளை சுருக்கிக் கொண்டால், கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து விடலாம். வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களை தேடிவர வியாபாரிகள் சுறுப்பாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவது நல்லது .
    கும்பம்: வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் அற்ப காரணங்களுக்காக, பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதை சிக்கென பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
    மீனம்: சரளமான பணவரவு பெண்கள் மனத்தில் மகிழ்ச்சியையும், உதட்டில் புன்னகையையும் பூக்கச் செய்யும். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், நேர்மையான வழியிலேயே செல்லும் வியாபாரிகளுக்கு நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். முதியவர்கள் ஆரோக்கிய நலிவுக்குரிய மருந்துகளை முறையாக உட்கொண்டால், மருத்துவச் செலவுகளை கட்டுக்குள் வைத்து விட லாம். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளை கடை பிடிப்பது அவசியம். இந்த வாரம் கலைஞர்களுக்கு வாகனங்கள் திடீர் செலவு வைக்கும். மனை வாங்குகையில் நம்பிக்கையான நபர்களை அணுகுங்கள். நல்ல தேர்வாக அமையும்.

    Share
  • சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]

    A Rogue Aseroid

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    Rogue Asteroids are the Norm in our Solar System

    http://www.youtube.com/watch?v=Pu1t1Fevajk

    http://www.youtube.com/watch?v=A8VVAZ1JAzs

     

    21 ஆம் நூற்றாண்டில் ஒரு முரண்கோள் பூமியோடு மோதி அபாயம் விளைவிக்கும் எதிர்பார்ப்பு முந்தி நினைத்ததை விட 20% மிகையானது.  ஹெர்ச்செல் விண்ணோக்கி மூலம் நோக்கியதில் ஒரு விண்கல் [Space Rock :  Apophis 99942] சில வருடங்களில் பூமியை நெருங்கி விடும் என்று ஈசா கணிக்கிறது !

    ஐரோப்பிய விண்வெளித் துறையக விஞ்ஞானிகள்.

     

    Asteroids-1

    [பிப்ரவரி 15, 2013]

    http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded

    [Meteor Strike Injures 1200 People in Russia]

    “சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ ஒரு முரண்கோள் அல்லது வால்மீன் மோதும் அபாயம் நேர்ந்து, மனித நாகரீக வாழ்வுக் கலாச்சாரம் முரணாகி மனித இனம் அழியப் போகிறது.”

    கார்ல் சேகன்

    “என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஒரு முரண்கோள் வழி தவறி நமது பூமியைத் தாக்க வருகிறது என்று முன்னறிவிக்கப் படலாம் ! அப்போது நீங்கள் என்ன செய்வீர் ?  ஒன்று செய்ய முடியும். முரண்கோளின் சுற்றுப் பாதையை மாற்றி விடலாம். அதாவது அதன் பாதையை மாற்ற ஒரு விண்கப்பலை ஏவி, முரண் கோளில் வீழ்ந்து மோதச் செய்ய வேண்டும்.”

    ஆன்டி செங்  [Chief Scientist, John Hopkins’ Applied Physics Laboratory]  

     

    Asteroid close encounter

     

    இம்மாதிரிப் பூமி-முரண்கோள் நெருங்கிக் குறுக்கிடுவது இன்னும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் நிகழலாம்.  இந்தப் பூத முரண்கோள்  இரட்டை முரண்கோள் [Binary Asteroid] என்று குறிப்பிடப் படுகிறது.   [Asteroid 1998 QE2] எனப்படும் இந்த முரண்கோளை 2000 அடி அகலத் துணைக்கோள் ஒன்று சுற்றி வருகிறது.  இது ஓர் அபூர்வக் காட்சி !  650 அடி நீளத்துக்கு [200 மீடர்] மேற்பட்ட முரண்கோள்களில் 16% எண்ணிக்கை இரட்டை முரண்கோள் அல்லது மூன்று முரண்கோள் ஏற்பாடுகளாய் [Binary or Triple Systems] அமைந்துள்ளன.

    நாசா விண்வெளி விஞ்ஞானிகள்

     

    Fig 1F Asteroid Belt Between Mars & Jupiter

    சூரிய மண்டத்தில் சுற்றித் திரியும் மூர்க்க முரண்கோள்கள்

    நாசாவின் சமீபத்தைய கணக்குப்படி சுமார் 10,000 அண்டக் கற்கள் [Space Objects] புவி நெருங்கும் முரண் கோள்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் சுமார் 1300 முரண்கோள்கள் பூமியைத் தாக்கும் அபாய எதிர்பார்ப்பு உடையவை என்று முத்திரை இடப்படுகின்றன. நாசா விஞ்ஞானிகள் கண்ணும் கருத்துமாய் அவற்றின் போக்கைக் குறித்துக் கொண்டுள்ளனர்.  அவற்றால் இப்போது எந்த அபாயமும் இல்லை என்று நாசா உறுதி அளிக்கிறது.  ஆனால் பூமிக்கு மேல் விழுந்து தாக்கப் போகும் ஒரு முரண்கோள் அபாய  எதிர்பார்ப்பு 1200 ஆண்டுகளில் ஒன்று என்று அறிவிக்கிறது !

    முன்பு மதிப்பீடு செய்தபடி, சராசரி விட்டம் 270 மீடர் [880 அடி] அளவீட்டில் 60 மீடர் [200 அடி] கூடக் குறைய இருப்பின், அதன் பயங்கரப் பளு வீழ்ச்சிப் பூமியில் 500 மெகா டன் குண்டு வெடிப்பை உண்டாக்கும்.

    சூரிய மண்டலக் கோள்கள் உண்டான ஆரம்பமான காலங்களில் பற்பல முரண்கோள்கள், வால்மீன்கள் பூமிக்கு அருகே நெருங்கித் தாக்கி ஏராளமான நீர் வெள்ளத்தைக் கொட்டின என்பதாக யூகிக்கப் படுகிறது.

     

    Fig 1A Comets

     

    சுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு [Binary System Asteroid] ஒன்று பூமியை நெருங்கிக் கடக்கிறது ! 

    2013 மே மாத 29 ஆம் தேதியன்று இரண்டு மைல் [300 கி.மீ.] நீட்சியுள்ள ஒரு முரண்கோள்  [Asteroid 1998 QE2] பூமிக்கு வெகு அருகில் 3.6 மில்லியன் மைல் [5.8 மில்லியன் கி.மீ.] தூரத்தில் கடந்து செல்கிறது.   அந்த எதிர்பாராத நெருக்க நகர்ச்சியால் பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் உறுதி அளிக்கிறார்.   அதே சமயத்தில் அந்த முரண்கோளைச் சிறு துணைக்கோள்  ஒன்று சுற்றி வருகிறது !  இந்த இரட்டை முரண்கோள் அமைப்பானது, பூமியைக் கடப்பதை விஞ்ஞானிகள் முதன் முறைக் கண்கொள்ளாக் காட்சியாய் கண்டு வியப்புறுகிறார் !   பூமி-நிலவுக்குள்ள இடைவெளி போல் 15 மடங்கு தொலைவில் முரண்கோள் கடந்தது என்று அறியப் படுகிறது.  இந்த முரண்கோள் மனிதக் கண்களுக்குப் புலப்படாது.   ஆனால் ரேடார் தேடலில் காண

    ​ ​

    முடியும்.   காலிஃபோர்னியா, பியூட்டரிகோ ரேடார்கள் மூலம் வானியல் விஞ்ஞானிகள் இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.  இவ்வித விண்ணோக்குப் பயிற்சிகள் மூலம், விஞ்ஞானிகள் மற்ற முரண்கோள் நகர்ச்சிகளைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடிகிறது. 

    Asteriods -1

     

    “2013 ஏப்ரல் மாதத்தில் வால்மீன் இஸான் [Comet ISON] , சூரியனை மிகவும் நெருங்கி வருவதால் முதன்முறையாக அதன் ஒளிவெள்ளம் பளிச்செனத் தெரிகிறது.  அத்துடன் ஆவியாகும் பனியுறைவுப் பகுதி [Volatile Frosting] இயக்கம் குன்றிய கீழடுக்கில் புலப்படுகிறது.  இப்போது வால்மீன் சூரியனை மிக்க நெருங்கி, அதன் நீர்வெள்ளம் உட்கருவிலிருந்து [Comet Nucleus] வெளியேறி, உட்பகுதியின் அந்தரங்கங்களைத் தெளிவாய்க் காட்டுகிறது.”

    காரன் மீச் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]

    “வால்மீன்கள் தம் வடிவ அமைப்பிலே ஒரு சீரான கட்டுருவில் இருப்பதில்லை !   அதன் மேற் பகுதி கொந்தளித்து வெளியேறிப், புதிய உட்பகுதி தெரிய வழி வகுக்கிறது.  இந்த வான்மீனின் போக்கை நாங்கள் அடுத்த ஆண்டும் கூர்ந்து நோக்கி ஆய்ந்து வருவோம்.  குறிப்பாக வால்மீன் பரிதிக் கனல் நெருக்கச் சூழ்நிலையில் அகப்பட்டு, பிளவு பட்டுத் துண்டு துண்டாகி, அதன் உட்பனிப் பாறைத் தோற்றம் தென்பட்டால்,  அந்நிகழ்ச்சியை வரும் 2013 நவம்பர் மாதத்தில் நாங்கள் காண மிக்க ஆர்வமோடு இருக்கிறோம்.”

    ஜாக்லீன் கீன் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]

     

    Fig 4 Asteroid Hitting the Earth

     

    சூரியனை  நோக்கி நேரே பாயும் தீவிர வால்மீன் ! 

    2013 மே மாதம் 31 இல் ஹவாயி விண்ணாய்வு நோக்கி “ஜெமினி” அடுத்தடுத்து வால்மீன் இஸானைப் [Comet C/2012 (ISON)] படமெடுத்து, அது பரிதியை நேராக மோதப் போவதாய்க் காட்டியுள்ளது.  இந்த அபூர்வ விண்வெளி வான வேடிக்கை விந்தைக் கண்காட்சி 2013 நவம்பர் அல்லது டிசம்பரில் நேரும் என்று ஜெமினி வானியல் விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்.   ஆனால் வால்மீனுக்குத் தகுதியான உட்பொருள் உள்ளதா என்பது தெரியாததால், வான வேடிக்கை நேராமலும் போய்விடலாம்.

    ஜெமினி விண்ணோக்கி கால அடிப்படையில் அடுத்தடுத்துக் கண்ட வால்மீன் நகர்ச்சியில் அது சூரியனுக்கு அப்பால் சுமார் 455-360 மில்லியன் மைல் [730-580 மில்லியன் கி.மீ] அல்லது [4.9 – 3.9 AU (Astronomical unit)] [1 AU= mean distance between Earth and Sun] தூரத்தில் எதிர்நோக்கி வருகிறது.  அது பூதக்கோள் வியாழனைச் சுற்றும் வால்மீனின் தூரத்துக்குள் வருகிறது.   அப்போது வால்மீனின் குப்பைப் பனிக்கோளத்தின் [Dirty Snowball] தூசிகள் ஏற்கனவே வெளியேறிப் போய்விட்டன என்று தெரிகிறது.  சூரியப் புயலும், கதிர்வீச்சு அழுத்தமும்  [Solar Wind & Radiation Pressure] நேர் எதிரே சுற்றிவரும் வால்மீனின் நீர் மய / அயனி நீண்ட வாலை உருவாக்குகின்றன.

     

    Spectacular Comet ISON

     

    வால்மீன் இஸான் 2012 ஆண்டில் ரஷ்யப் பொழுதுபோக்கு வானியலரால்  [Russian Amateur Astronomers] கண்டுபிடிக்கப் பட்டது.   ஓர்ட் முகில் அரங்கில் [Oort Cloud Region] உண்டாகும் வால்மீன் முதலில் சூரியனை நெருங்கிச் சுற்றிவரும் போது,  அதன் இயக்கம் உக்கிரமாய் இருந்தும், அண்டிக் கதிரடி பட்டதும் தூள் தூளாகி ஆவியாகி விடுகிறது !   வால்மீன் இஸானை நாசாவின் ஹப்பிள் தொலை

    ​ ​

    நோக்கியும் கண்டுள்ளது.  2004 இல் நாசா ஏவிய சுவிஃப்ட்டு துணைக்கோளின் புறவூதா நோக்குகள்

     ​ ​

    [NASA’s Swift Satellite Ultraviolet Observations]  வால்மீன் இஸான், ஆண்டு ஆரம்பம் முதல்  விநாடிக்கு 850 டன் தூசியை வெளித்தள்ளுகிறது என்று கணித்துச் சொல்கின்றன.   அதிலிருந்து விஞ்ஞானிகள் வால்மீன் “கோமாவின் உட்கரு”  [Coma’ Nucleus] 3 முதல் 4 மைல்கள் [5-6 கி.மீ] இருக்கலாம் என்று ஊகிக்கிறார்.   அதாவது  இஸான் வால்மீனின் “கோமாத் தலை” சுமார் 3000 மைல் [5000 கி.மீ] இருக்க வேண்டும் என்று கணிக்கிறார்.    2013 நவம்பர் 28 தேதி  வால்மீன் இஸ்கான் 800,000 மைல் தூரத்தில் [1.3 மில்லியன் கி.மீ] பரிதிக் கனல் கொந்தளிப்பு மண்டலத்தைத் [Corona] தொடப் போகலாம்.   அதற்குச் சற்று முன் வால்மீன் பேரொளிச் சுடரோடு பட்டப் பகலில் சூரியனோடு தென்படுவதைக் கருமை நிறக் கண்ணாடி மூலம் பார்க்கலாம் !  அதற்குப் பிறகு வால்மீனுக்கு என்ன கதி நேரும் என்பது கண்ணுக்குப் புலப்படாது ! 

     

    Asteroid Impact -2

     

    முரண்கோள் மோதுதலைத் தடுக்க விண்வெளிக் கோல் உந்துக் கோள் நகர்ச்சி [Cosmic Billiards] முறைகள் பயன்பாடு :

    முரண்கோள் தாக்கலிலிருந்து பூமியைப் பாதுகாக்க ரஷ்ய வானிய வல்லுநர்கள் ஒரு புதிய முறையை அறிவித்துள்ளார்.   அம்முறை இதுதான்.  பூமிக்கு அருகில் சுற்றி வருகின்ற  முரண்கோள் நகர்ச்சியைக் கட்டுப்படுத்திப் பூமிக்கு அண்மையில் ஈர்த்துப் புவிச் சுற்றில் சுற்ற இழுத்துக் கொள்ள வேண்டும்.   பூமியைப் பயமுறுத்தும் முரண்கோள்களை ராக்கெட் மூலம் அப்பால் தள்ளப் புவிச் சுற்று முரண் கோளை ஏவு தளமாக வைத்துக் கொள்ளலாம்.  அல்லது  புவிச் சுற்று முரண் கோளைப் பயமுறுத்தும் முரண்கோளுக்கு நேராக நகர்த்தி, 50,000 – 100,000 மைல் செல்ல ஏவு கோளாக உந்து விசை அளிக்கலாம்.  இம்மாதிரி விண்வெளிப் பில்லியர்டு விளையாட்டுகளை [Cosmic Billiard Games]  கணனி மாடல் மூலம் பயிற்சி செய்து இயலுமா அல்லது இயலாதா என்று பன்முறை ஆய்வு செய்ய வேண்டும்.  தற்போதுள்ள பொறி நுணுக்கத் திறமையில், மனிதரற்ற 2 டன் ராக்கெட் ஒன்றை, முரண்கோள் ஒன்றுக்கு அனுப்பி அங்கே இறக்கி விட முடியும்.    அத்தகைய ராக்கெட் ஒன்றை 1 பில்லியன் டாலர் செலவில் 10 அல்லது 12 ஆண்டுகளில் டிசைன் செய்து தயாரிக்க முடியும்.  பூமியை எப்போது முரண்கோள் தாக்கும் என்று முன்னுரைக்கவோ, எச்சரிக்கை செய்யவோ நீண்ட காலம்  கிடைப்ப தில்லை.   ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, போன்ற உலக நாடுகள் நாசா, ஈசா போன்ற விண்வெளி ஆய்வு நிறுவகங்கள் மூலமாய் பொறி நுணுக்கத் துறைமையை விருத்தி செய்து, முரண்கோள்களை அப்பால் தள்ள விண்வெளி விதிமுறைகளைக் கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

     

     Asteroid impact -3

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

    டிமிட்ரி ரோகோஜின்  [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]

    “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

    நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

    Meteor Closeby travel

     

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது.  30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு.  வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT].   வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன.  50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார்.  விளைந்த சேதாரச் செலவு :  சுமார் 33 மில்லியன் டாலர்.  பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry]  கூறுகிறார்.

     

    Russian Meteor piece

    அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது.  வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது.  அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது.  இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது !  150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !   இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !

    Location of Impact

     

    விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண் பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்

    ​ ​

    பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

     ​ ​

    என்று  ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி,  டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இந்தச் சிறப்பு அறிவிப்பு  மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார்.   மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.   இத்தகைய  மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

     

    Asteroid impact on Earth -1

     

    தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள்  [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை.   அவை விண்வெளி

    ​ ​

    யிலிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க  முடியா.   விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா !   விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும்.   மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள்  மேன்மைப் படுத்த வேண்டும். 

     

    Damage Potential

    இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது.   வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும்.   அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும்.   அந்தத் துணைக் கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவு கணைகள் அனுப்ப வேண்டும்.   அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும்,  பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது.   விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம்  பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.

     

    Meteor hits Russia

    Antarctica Meteorite

    ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி.  சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார்.  நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்ப தாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார்.  முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார்.  இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.

     

    Asteroid Impact-1

    1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி  ஏற்பட்டுள்ளது.  அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது.  “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

    இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

     

    ++++++++++++++++++++

    தகவல்: 

    படங்கள் : நாசா, ஈசா, பல்வேறு விண்வெளி வலைப் பக்கங்கள்.

    1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
    2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
    3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
    4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded 
    5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
    6.  http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
    7.  http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/
    8. http://en.wikipedia.org/wiki/Tunguska_event  [February 19, 2013]
    9. Russia Calls for United Meteor Defense [February 26, 2013
    10. Meteorite’s Powerful Blast Explosion Due to Space XCollisions [February 28, 2013]
    11. Antarctica Team Finds Largest Chondrite Meteorite in Past 25 Years [March 1, 2013
    12. http://www.nasa.gov/vision/universe/watchtheskies/swift_media.html [November 1, 2004]
    13. http://science.nasa.gov/science-news/science-at-nasa/2013/24apr_hubbleison/  [April 24, 2013]
    14. http://en.wikipedia.org/wiki/Swift_Gamma-Ray_Burst_Mission  [May 17, 2013]
    15. http://earthsky.org/space/big-sun-diving-comet-ison-might-be-spectacular-in-2013 [April 24, 2013]
    16. Massive Asteroid with its Moon to Pass Earth today [May 29, 2013]
    17. http://en.wikipedia.org/wiki/C/2012_S1  [May 22, 2013]
    18. New Images of Comet ISON, Hurtling Toward the Sun  [May 31, 2013]
    19. Scientists Suggest Cosmic Billiards to Protect Earth from Asteroids’ Attacks [Moscow] [May 31, 2013]
    20. http://zeenews.india.com/news/space/new-images-show-comet-ison-speeding-towards-sun_852031.html [[May 31, 2013]
    21. http://www.smh.com.au/technology/sci-tech/rogue-asteroid-a-fifth-bigger-than-first-thought-20130110-2chj8.html [January 10, 2013]
    22. http://www.dailymotion.com/video/xru9ma_rogue-asteroid-1280x720hb_shortfilms  
    23. http://science.time.com/2013/06/27/nasas-proposed-asteroid-capture-mission-animation/ [June 27, 2013]
    24. http://www.spacedaily.com/reports/Rogue_asteroid_a_fifth_bigger_than_thought_space_agency_999.html  [January 9, 2013]

      +++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (February 1, 2014)

    http://jayabarathan.wordpress.com/

    Space Documentary – Asteroid The Doomsday Rock

    Let’s talk Astronomy”Rogue Asteroids”

    Meteorite crash in Russia: Video of meteor explosion that stirred panic in Urals region
    Share
  • தமிழர் பெருமை

    தமிழர்பெருமை

     தமிழர்பெருமை
    தமிழர் என்று பெருமை கொள்கிறோம் .
    இந்தியர் என்று கர்வம் கொள்கிறோம்.
    உலக விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் அளித்த பங்கு என்ன?பத்துக்கு ஐந்து என்ற வீதத்தில் தமிழர் அழியாத பெருஞ்சொத்தாக  உலக விஞ்ஞானத்தை வளர்த்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
    தெரிந்தவர்கள் தம் சந்ததிக்கு  அறிவித்திருக்கிறார்களா?
    எங்கோ உலகின் வடபகுதியில் கர்மயோகி போல்

    காரியமாற்றுபவர் ஒருவர் உண்டு.எத்தனை பேர் அறிவோம்?
    வீண் பெருமைக்கும் வெட்டியாகவும் விரயம் செய்யும் பணத்தில் ஒரே ஒரு சிறிய கூறு செலவிட்டு உங்கள் எதிர்கால சந்ததிக்கு வழி காட்டலாமே!
    வாங்கிப்படியுங்கள். ஆசிரியர்க்கொரு வணக்கம் சொல்லுங்கள் வாழ்த்துக் கூறுங்கள்.
    To buy: mail to vaiyavan.mspm@gmail.com

    Share
  • வாழ்க்கை நலம் – 46

    குன்றக்குடி அடிகள்

    46. வேண்டாம் சினம்!

    சினம் – கோபம் தீமையுள்  தீமை. கோபத்தால் விளையும் தீமை பலப்பல. கோபத்தால்  இரத்த நாளங்கள் சூடேறி உடலைக் கெடுக்கிறது. ஏன் கோபம் வருகிறது? எதனால் கோபம் வருகிறது? கோபம் தோன்றும் களங்கள் எவை? எவை? விருப்பு வெறுப்புக்களால் தாக்கப் பெற்றுள்ள மனித மனத்தில் தான் கோபம் எழும்!

    காலம் காட்டும் கருவி – கடிகாரத்தை உற்று நோக்குங்கள்! ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கடிகாரங்களைச் சூழ்நிலை பாதிப்பதில்லை. அதுபோல நமது வாழ்க்கையும் ஓர் இயக்கம்.

    எந்தச் சூழ்நிலையிலும் திகைப்பும் அச்சமும் கொள்ளாமல் தொடர்ந்து செயல் செய்தல் வேண்டும். கோபத்தினால் இழப்பேயாம். ஒரு பொழுதும் ஆக்கம் இல்லை. கோபம், ஆக்கப்பணிக்கு  அடக்கி வைக்கப் பெற்ற வெப்பம் எரிசக்தியாக மாறுவதைப் போல, அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஊக்கத்தைத் தரும்.

    பணிகள் தொடர் நிலைத் தன்மையுடையன. படிப்படியாக வளரும் தன்மையதே மனிதவியல் திறன். முதலில் செய்ய இயன்றதைச் செய்க! அதன் தொடர்ச்சியாகச் செய்ய முடியாததையும் செய்யும் திறன் உருவாகும்.

    திருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஓதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.

    ஆம்! வெகுளியை மறந்து விடவேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக! வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக! யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.

    வெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம்! கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம்! எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம்.  அதலால் வேண்டாம் வெகுளி; விடுமின் வெகுளி!

    மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும்.
    (திருக்குறள் –  303)

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி யெனின்.
    (திருக்குறள் –  309)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • அமெரிக்கச் சமூகத்தின் அதீதங்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    1903-லிருந்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருஷம் தோறும் குளிர்காலத்தில் நடன நிகழ்ச்சி – இதை ஆங்கிலத்தில் Costume Ball என்பார்கள் – ஒன்றை நடத்துவார்கள்.  சிகாகோ பல்கலைக்கழகத்தின் அழகியையும் அப்போது தேர்ந்தெடுப்பார்களாம். இந்த நிகழ்ச்சியே 1970-லிருந்து 1984 வரை மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சியாக உருவெடுத்தது.  இந்த நிகழ்ச்சிக்கு முழு உடையோடு வரும் மாணவ, மாணவிகளுக்கு முழுக் கட்டணமும் பால் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உடை உடுத்திக்கொண்டு வருபவர்களுக்கு அரைக் கட்டணமும் வசூலித்தார்களாம்.  ஒன்றும் இல்லாமல் நிர்வாணமாக வருபவர்களுக்கு இலவசமாம்!  1984-க்குப் பிறகு இது மறுபடி 2008-லிருந்து நடத்தப்பட்டது.  ஆனால் முழு நிர்வாணமாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

    சிகாகோவில் ஜனவரியில் மிகவும் குளிருமாதலால் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய ஒரு இடைவெளி கொடுக்கிறார்கள்.  ஜனவரி மாதத்தில் ஒரு வாரம் – திங்கள் முதல் வெள்ளி வரை – பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  அந்த வாரத்தில் தினமும் மாணவர்களும் ஆசிரியர்களும் காலை ஆறு மணிக்கே எழுந்து – அப்போது சூரியன் உதிப்பது ஏழு மணிக்கு மேல்தான் – பல உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள்.  மாலையில் எல்லோரும் சேர்ந்து சுடச் சுட சாக்கலேட் பானம் அருந்துவது, மாணவர்களும் ஆசிரியர்களும் விவாதங்களில் ஈடுபடுவது, பனிக்கட்டியில் செய்த ஸ்டாண்டிலிருந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவது, பனிக்கட்டியில் சிலைகள் செய்வது என்று பல நிகழ்ச்சிகள் நடக்கும்.  கடைசி நாளான வெள்ளியன்று பல்கலையின் முக்கிய சதுக்கத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் Polar Bear Run என்னும் ஓட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.  அந்த நாளன்று சீதோஷ்ணநிலை எப்படியிருந்தாலும் ஓடுவதைத் தவிர்க்க மாட்டார்கள்.  எல்லா வருஷங்களிலும் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும்.  சில வருஷங்களில் கொஞ்சம் நன்றாக இருக்கும்.  குளிரைத் தங்களால் தாங்கிக்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவோ என்னவோ இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பலர் – மாணவர்களும் மாணவிகளும் – எந்த வித உடையும் இல்லாமல் முழு நிர்வாணமாக–- கலந்துகொள்கிறார்கள்.  இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி – அன்று சீதோஷ்ணநிலை 15 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது.  காற்று அடித்தால் குளிர் 40 டிகிரிக்குச் சமமாக இருக்கும்.  வேண்டிய கம்பளி உடைகள் தரித்துக்கொண்டு போனாலே அந்தக் குளிரைத் தாங்குவது கஷ்டம் – மாணவர்களும் மாணவிகளும் நிர்வாணமாக ஓடினர்.  இவர்கள் ஓடிய நேரம் சுமார் எட்டு நிமிடங்கள்.  இவர்களைப் பார்க்க சாலையின் இரண்டு பக்கங்களிலும் பலர்.  இவர்களில் சிலர் இந்தக் காட்சியைப் படம் வேறு எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

    புதிதாக வந்திருக்கும் இன்னொரு செய்தி.  முதியோர் இல்லங்களில் – இங்கு பலவிதமான முதியோர் இல்லங்கள் இருக்கின்றன.  ஓய்வு பெற்றோர் தங்கும் விடுதிகள், பிறர் உதவி இல்லாமல் வாழ முடியாதவர்கள், மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் என்று பல ரகம்.  இவை எல்லாவற்றையும் மொத்தமாக முதியோர் இல்லம் என்று அழைக்கலாம் – உடல் உறவால் பரவும் வியாதிகள் (Sexually Transmitted Diseases) அதிகரித்திருக்கின்றனவாம்.  முதியோர் இல்லங்கள் என்றாலே அமைதியாக அமர்ந்து படிப்பவர்கள், பிங்கோ, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் ஆகிய முதியோர்கள் வாழும் இடம் என்ற எண்ணம் இருந்ததற்கு மாறாக இப்போது அங்கு அதிகரித்திருக்கும் உடல் உறவால் பரவும் வியாதிகள் பற்றிய கணக்கெடுப்புகள், விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றனவாம்.  வயதானவர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer) போன்ற நோய்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கு எடுக்கும் பரிசோதனைகள் போல் இப்போது உடல் உறவால் ஏற்படும் வியாதிகளுக்கும் இந்த முதியோர்களுக்கு பரிசோதனைகள் செய்கிறார்களாம்.  20 வயது முதல் 24 வயதுடையவர்களிடையே இந்த வியாதிகள் பெருகி வருவதைப் போல் முதியோர்களிடமும் இது அதிகரித்து வருகிறதாம்.

    இதற்குரிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.  முதலாவதாக இந்த முதியோர் இல்லங்கள் – இங்கு இருப்பவர்கள் எல்லோரும் 60 வயதைத் தாண்டியவர்கள் – கல்லூரி விடுதிகள் போல் ஆகி வருகின்றனவாம்.  கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்களை ஒன்றாக இருக்கவிடுகிறார்களாம்.  அதனால் அவர்களுக்குள் பாலியல் உறவுகள் ஏற்படுகின்றனவாம்.  ‘என் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்கப்போனபோது அரை மணி நேரத்திற்குள் மூன்று பெண்கள் அவரிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.  அந்த அறிமுகம் முதியோர்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் பிரீமியம் பற்றியோ அல்லது மருந்துகளுக்கான புதிய திட்டம் பற்றியோ பேசுவதற்காக அல்ல’ என்று ஒரு பெண் கூறியிருக்கிறார்.

    இரண்டாவதாக, அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 60 சதவிகிதம் பேரும் பெண்களில் 40 சதவிகிதம் பேரும் உடலுறவு கொள்ளத் தகுதியானவர்களாக இருக்கிறார்களாம்.  ஆனால் இவர்கள் பாதுகாப்பான உடல் உறவு பற்றிச் சிந்திப்பதில்லை.  குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு இல்லையென்றாலும் மற்ற விதமான உடல் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை இவர்கள் உணருவதில்லை.  ஆணுறை சாதனங்களை இளவயதினரில் 40 சதவிகிதம் பேர் உபயோக்கிறார்களாம்.  ஆனால் முதியோர்களில் 6 சதவிகிதம் பேர்தான் உபயோகிக்கின்றனராம்.

    முதியோர்களிடையே இந்த வியாதிகள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள், மருத்துவர்கள் இவர்களிடமும் பாதுகாப்பான உடல் உறவு பற்றி அறிவுரை கூற வேண்டும் என்றும் கல்லூரி வளாகங்களில் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதுபோல் முதியோர் இல்லங்களிலும் வழங்கப்பட வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசிடமிருந்து வரும் மாதக் காசோலையில் பாதுகாப்பான உடல் உறவு பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.  ஓய்வு பெற்ற அமெரிக்கர்களுக்கான அமைப்பு (Association for America’s Retired People) ஒன்று அமெரிக்காவில் இருக்கிறது. இந்த அமைப்பிலிருந்து அவ்வப்போது வரும் கடிதங்களில் பாதுகாப்பான உடல் உறவு பற்றி அறிவுரை கூற வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள் வைக்கிறார்கள்.

    வாழும் வரை உடல் உறவு வேண்டும் என்ற (Sex for Life) என்ற இலக்கைக் கொண்ட அமெரிக்கர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்பவர்களுக்கு உடலுறவு தேவையில்லை என்று அறிவுரை கூறுவதற்குப் பதில் அதனால் வரும் பாதகங்களுக்கு எப்படிப் பரிகாரம் தேடலாம் என்பதில்தான் அக்கறை செலுத்துகிறார்கள்.

    இதெல்லாம் போதாதென்று 2006-இல் வெளிவந்த பெண்களின் பால் உணர்ச்சி பற்றி எழுதப்பட்ட புத்தகம் (Mating in Captivity) பிரபலமாகி வருகிறது.  திருமணமான தம்பதிகள் கொள்ளும் உடல் உறவில் கடைசி வரைக்கும் இருவருக்கும் முழுத் திருப்தியும் இருக்க வேண்டுமாம்.  அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் எப்படித் தங்களைத் தாங்களே தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு அறிவுரைகளை இந்தப் புத்தகத்தின் ஆசிரியை கூறுகிறார்.  இதையாவது ஒப்புக்கொள்வோம்.  ஆனால் அவர் அடுத்துச் சொல்வதுதான் தேவையற்றதாகத் தெரிகிறது.  வயதாக வயதாக குறைந்துகொண்டு வரும் பால் உணர்ச்சியை எப்படிக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் அறிவுரை கூறுகிறார்.

    இலைமறை காய்மறையாக செக்ஸ், பிறப்புறுப்புகள் பற்றி நாம் கையாண்ட விஷயங்களை அமெரிக்கர்கள் மனத்தடையில்லாமல் கையாளுகிறார்கள்.

    ‘ஒரு முறைதான் வாழ்கிறோம்.  வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட வேண்டும்.  வாழ்க்கை வாழ்வதற்கே’ என்னும் மேற்கத்திய கோட்பாடு சரியென்றே வைத்துக்கொண்டாலும் இந்த அளவிற்குப் போக வேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (12)

    ராமஸ்வாமி ஸம்பத்

    எப்பேர்ப்பட்ட போர் அது! உவமைகளைக் கையாள்வதில் வல்லவனான வடமொழிப் புலவன் காளிதாசன் தன் ‘ரகுவம்சம்’ எனும் காப்பியத்தில் சரியான உவமை ஏதும் கிடைக்காமல், “ராம-ராவண யுத்தம் எவ்வாறு இருந்தது என்றால் ராம-ராவண யுத்தம் போன்றே இருந்தது” என்று குறிப்பிடுகிறான்.

    இலங்கையில் நடந்த போரில் ஏராளமான அரக்கர்களும் வானர வீரர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். ராமனின் போர்த்திறனை ராவணனின் சேனாதிபதிகள்கூட புகழ்ந்தனர். இதனால் சினமுற்ற இலங்கை அரசனுக்கு ஒரு விபரீதமான யோசனை தோன்றியது.

    ‘ராமன் வெற்றி பெறுவான் எனும் எண்ணத்தினாலே அல்லவா ஸீதை என்னைப் புறக்கணிக்கிறாள். மாயாஜாலம் செய்து ராமன் மாண்டுவிட்டான் என்று ஸீதையை நம்ப வைத்து விட்டால் அவளை நான் சுலபமாக அடைந்து விடலாம். பின்னர் ராமனும் மனம் நொந்து உயிரை விட்டு விடுவான் அல்லது போர்க்களம் நீங்கி நாடு திரும்பிவிடுவான்’ என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியவாறு வித்யுத்ஜிஹ்வா எனும் சூனியக்காரனை அழைத்து ”வெட்டப்பட்ட ராமனின் தலை போன்ற ஒரு மாயபிம்பத்தை அசோகவனத்தில் ஸீதைமுன் வை” என்று ஆணையிட்டான். அவன் அவ்வாறே செய்ய ஸீதை மனம் கலங்கி விம்மி அழுதாள். அப்போது அங்கு வந்த ராவணன், “ஜனகபுத்திரியே! இதோ போரில் மாண்டுபோன உன் கணவனின் தலை. இனி உனக்கு என்னைத்தவிர வேறு கதியில்லை”  இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு ஓற்றன் அவன் செவியில் வானர வீரர்கள் நகருக்குள் நுழைந்து விட்டதைக் கூறினான். உடனே ராவணன் அங்கிருந்து அகன்றான். இப்படிப்பட்ட சூனிய வேலைகளுக்கு ஏவல் செய்பவன் அத்தலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும். ராவணன் அங்கு இல்லாததால் அம்மாயை பிசுபிசுத்து அத்தலை மறைந்து விட்டது. திரிஜடை இந்த சூனியவேலையை விளக்க ஸீதை ஆறுதல் அடைந்தாள்.

    தன் தந்திரம் பலிக்கவில்லை என்ற கோபத்தோடு ராவணன் போர்க்களத்துக்கு விரைந்து ராமனை முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்தான். இருவரும் உக்கிரமான யுத்தத்தில் ஈடுபட்டனர். ராமனின் விற்கணைகளுக்கு ராவணனின் படைகளும் தேரோட்டியும் பலியானார்கள். அவன் தேர் சுக்குநூறானதோடு விற்களும் பற்பல ஆயுதங்களும் பொடியாக்கப் பட்டன. தன் கையில் மிகுதியாக இருந்த சங்கரன் வரமாகக் கொடுத்த வாளை ராமன்மேல் ராவணன் எறிந்தான். அதுவும் பயனற்றுப் போயிற்று.

    நிராயுதபாணியாக நின்றிருந்த அரக்கர் கோமானை நோக்கி ராமன், “இலங்கை வேந்தே! தேர், தேரோட்டி, ஆட்படைகள், யுத்த தளவாடங்கள் அனைத்தையும் இழந்து களைப்பாக இருக்கிறாய். உன்னை இந்நிலையில் கொல்ல நான் விரும்பவில்லை. உனக்கும் ஓய்வு தேவை. ஆகவே இன்று போய் நாளை வா” என்றான்.

    ’என்னுடைய தற்போதைய நிலையைப் பார்த்தால் ஸீதை ஏளனம் செய்வாளே’ என்று நொந்த மனத்தோடு அரண்மனைக்குத் திரும்பிய ராவணன் தன் ஏகாந்தமான பூசை அறைக்குச் சென்று, “இறைவா! தவப்பலத்தால் எனக்குக் கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் வீணாகிவிட்டனவே. நீ கொடுத்த வாளும் பயனற்றுப் போய்விட்ட்தே. அவ்வாளினால் எந்த எதிரியையும் மாய்க்கலாம் என்ற உன் வாக்கு பொய்த்து விட்டதே” என்று புலம்பினான்.

    அப்போது அசரீரி பேசியது: “முட்டாளே! சிவபெருமான் உனக்குக் கொடுத்த வாளால் ஒரு விரோதியைத்தான் கொல்லமுடியும் என்ற நியதியை மறந்து விட்டாயா? எப்போது அவ்வாளால் ஜடாயுவைக் கொன்றாயோ அப்போதே அது தன் வலிமையை இழந்துவிட்டது.”

    அடுத்த நாள் காலை ராவணன் உறக்கத்தில் இருக்கும் தன் தம்பி கும்பகர்ணனை எழுப்புமாறு ஆனையிட்டான். பலத்த முயற்சி செய்து அவனை அரக்கர்கள் எழுப்பி அரசன் ஆணையை விவரித்தனர். அண்ணனிடம் வந்த தம்பி, “எதற்காக என்னை எழுப்பினாய். என்ன விபரீதம் நிகழ்ந்து விட்ட்து?” என வினவினான்.

    “தம்பி, உன் புஜபல பராக்கிரமத்தைக் காட்டவேண்டிய சமயம் வந்துவிட்டது. நீ உடனே போர்க்களத்துகுச் சென்று அந்த மனித பூச்சிகளையும் குரங்குகளையும் தவிடு பொடியாக்கி வெற்றியோடு வா.”

    ”அண்ணா, நான் முன்பே எச்சரிக்கை செய்தேன். ஸீதையை கபடமாகக் கடத்தி வந்தது பெருந்தவறென்று. அதன் விளைவே இப்போது நம் குலத்திற்கு வந்திருக்கும் சாபக்கேடு.”

    “கும்பகர்ணா, நியாய அநியாயங்களைப் பற்றி பேச இது தருணம் அல்ல. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் உணவருந்திவிட்டு உறக்கம் கொள்.”

    “அண்ணா, சினம் கொள்ளாதே. என் உள்ளத்திற்குத் தோன்றியதை சொன்னேன். நான் உனக்காக உயிரையும் கொடுக்க சித்தமாக உள்ளேன் என்பது உனக்கும் தெரியும். போரில் ராம லக்ஷ்மணர்களை தோற்கடித்து விட்டபின்தான் உன்னிடம் வருவேன். ஒரு வேளை மாண்டுவிட்டால், நீ நம் அரக்கர்குலத்தைக் காப்பதற்காகவாவது ஸீதையை ராமனிடம் சேர்ப்பிக்க வேண்டும். நீயும் நம் குலமும் அழிவதில் எனக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.”

    இவ்வாறு உரைத்து கும்பகர்ணன் போர்க்களத்திற்குச் சென்றான். பலத்த சேதத்தை ராமனின் படைகளுக்கு ஏற்படுத்தினாலும், முடிவில் கோதண்ட பிரயோகத்தால் கூற்றத்தின் வாய் விழுந்தான் கும்பகர்ணன்.

    இனிய தம்பியின் பிரிவு தமையனை வாட்டியது. அதன்பின் பல அரக்க வீரர்களை அனுப்ப அவர்களும் வீரசொர்கம் எய்தினர். ‘யார் இந்த ராம லக்ஷ்மணர்கள்? எங்கிருந்து இத்தனை பலம் பெற்றார்கள்?’ என்று யோசித்தவாறு அருமை மகன் இந்திரஜித்தை அழைத்தான். “மகனே! இப்போது நீதான் என் மானத்தைக் காக்கவேண்டும்” என்ற தந்தையிடம் இந்திரஜித், “நான் ஒருவன் இருக்கும்வரை நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆசி அளியுங்கள். வெற்றியோடு வருகிறேன்” என்றான்.

    போர்த்திறனோடு மாயாஜாலம் புரிவதிலும் வல்லவனான இந்திரஜித் தான் இருப்பது தெரியாவண்ணம் ராம லக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டி வீழ்த்தி ”இனி அவர்கள் பிழைக்க முடியாது” என்று தந்தையிடம் பெருமையாகச் சொன்னான். சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான் என் செய்வது என்று தெரியாமல் வருத்தத்தோடு அமர்ந்திருந்தனர். அப்போது சிறிய திருவடியான அனுமன் பெரிய திருவடியான கருடனை வேண்ட, நாகங்களின் ஜன்ம வைரியான அப்பட்சிராஜன் அங்கு வந்த வேளையில் அவை அந்த  அம்புகளிலிருந்து தப்பி ஓடவும் ராம லக்‌ஷ்மணர்கள் மூர்ச்சை நீங்கினர்.

    அதன் பின், இந்திரஜித் ஸீதையைப் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, வானரர்கள் முன்னே அதன் தலையைக் கொய்து அவள் மாண்டுவிட்டது போன்ற ஒரு பிரமையை அவர்களிடையே உண்டாக்கினான். இதனால் மிக்கத்துயர்கொண்ட வானரர்கள் ராமனிடம் இந்த செய்தியைக் கூறியதும் ராம லக்ஷ்மணர் இருவரும் ஸ்தம்பித்துப் போயினர். பக்கத்தில் அமர்ந்திருந்த விபீஷணன் ராமனிடம், “அண்ணலே! கவலை வேண்டாம். ராவணன் ஒரு நாளும் அன்னை ஸீதையைக் கொல்வதை அனுமதிக்கமாட்டான். இது இந்திரஜித்தின் மாயாஜாலம்” என்றான்.

    மனம் தெளிந்த ராம லக்ஷ்மணர்கள் இந்திரஜித்தோடு மீண்டும் போர் செய்தனர். அவன் உக்கிரமாகப் போரிட்டு பிரம்மாஸ்திரத்தால் லக்ஷ்மணனை வீழ்த்தினான். தம்பியின் நிலை கண்டு ராமனின் துயரம் பொங்கும் கடல்போல் கட்டுமீறியது. அவன் கதறலைக் கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார்:

     “மாண்டாய் நீயோ யான் ஒருபோதும் உயிர் வாழேன்

     ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன்தான்

     பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றார்

     வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றதால்”

    [”நீயோ இறந்துவிட்டாய். அதனால் நான் ஒரு நாளும் உயிர் வாழமாட்டேன். அதை அறிந்தால் பரதன் நாட்டினை ஆட்சி செய்யாமல் இறப்பான். என்னோடு உறவு பெற்றவர் அனைவரும் துன்பச்சுமையைத் தாங்க முடியாமல் இறப்பர். நான் சிறந்த தர்மத்துக்குப் பயந்து (பிரம்மாஸ்திரம் செலுத்தாதே என்று லக்ஷ்மணனைத் தடுத்து) தளர்ச்சி அடைந்ததால் அதன் விளைவாக இவ்வளவும் நடக்க வேண்டாவா” என்று ராமன் ஏங்கி விம்மினான்.]

    ராமனின் மாளாத்துயரத்தைக் கண்ட விபீஷணன் தன் அந்தரங்க மருத்துவனை அழைத்து வந்தான். “நாளைப் பொழுது விடிவதற்குள் இமயத்தில் உள்ள சஞ்ஜீவி மூலிகைகளைக்கொண்டுவந்தால்தான் லக்ஷ்மணன் பிழைக்க முடியும்” என்றான் அம்மருத்தவன். இதைக்கேட்ட அனுமன் சடுதியில் வடக்கு நோக்கிப் பாய்ந்து சஞ்ஜீவி பர்வதத்தையே கையில் ஏந்தி வந்தான். இளவல் மயக்கம் தெளிந்தான்.

    இதற்கிடையில் இந்திரஜித் துர்த்தேவதைகளின் உதவி கோரி நிகும்பலையில் ஒரு யாகம் செய்யமுற்பட்டான். இதை அறிந்த விபீஷணன், “இந்திரஜித்தின் இம்முயற்சியைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அவன் மிக்க பலசாலி ஆகிவிடுவான். அவனை வெல்ல முடியாது” என்று சொன்னதும், லக்ஷ்மணனும் அனுமனும் பல வானரர்கள் புடைசூழ அந்த யாகசாலைக்குச் சென்று அதனைக் கலைத்தனர். பின்னர் அங்கு நடந்த போரில் லக்ஷ்மணன் இந்திரஜித்தின் தலையை வெட்டி வீழ்த்தினான். ராமன் உள்ளிட்ட அனைவரும் இளவல்மீது புகழ்மாரி பொழிந்தனர்.

    தனிமரமாகிவிட்ட ராவணன் ராமனுடன் இறுதிப் போருக்கு சித்தமானான். இந்திரன் தன் தேரை மாதலி எனும் சாரதியோடு ராமன் உதவிக்கு அனுப்பினான். எத்தனை அம்புகளை எய்தாலும் வெட்டப்பட்ட ராவணனின் தலைகள் மீண்டும் மீண்டும் முளைத்தன. வியப்படைந்த ராமன் செவியில், மாதலி “ஐயனே, இனியும் தாமதம் செய்யவேண்டாம். பிரம்மாஸ்திரத்தை ராவணனின் மார்பில் எய்க” என்றான்.

    ராமனால் எய்யப்பட்ட பிரம்மாஸ்திரம் தன் பணியைச் செவ்வனே செய்து ராவணனின் மார்பில் பாய்ந்து அவனை வீழ்த்தியது. வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.

    தானாடாவிட்டாலும் சதையாடும் என்பதற்கொப்ப துயரம் மேலிட்டாலும், அறநெறி மறந்த தமையனுக்கு ஈமச்சடங்குகளைச் செய்ய விபீஷணன் தயங்கினான். “சிறப்பாகப் போர் புரிந்த உன் அண்ணன் வானுலகம் சென்றுவிட்டான். அவனுக்கு அந்திமக் கிரியைகளைச் செய்து அந்த ஆன்மாவைக் கடையேற்றுவது உன் கடமை. அதற்குத் தயங்கினால் நானே முன்னின்று அப்பணியைச் செய்வேன். ஏனினில் உன் சகோதரன் என் சகோதரன்கூட அல்லவோ?” என்றான் ராமன்.

    அப்பொழுதே அங்கு வந்த இலங்கை அரசி மந்தோதரி கணவன் சடலத்தின்மேல் விழுந்து இவ்வாறு புலம்பலுற்றாள்:

    வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்

    எள்ளிருக்குமிடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடி இழைத்தவாறோ

    கள்ளிருக்கும் மலர் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்

    உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி.

    [ராமன் என்னும் ஒரு மனிதனுடைய அம்பு, வெண்மையான எருக்கமாலை அணிந்த, சடைமுடியை உடைய சிவன் அமர்ந்திருக்கும் கயிலை மலையைப் பெயர்த்த ராவணனின் அழகிய உடம்பு முழுவதையும் எள் இருப்பதற்கு சிறிய இடமும் இல்லாதவாறு அவன் உயிர் இருக்கும் இடம் தேடித் துளை செய்த தன்மையோ? அல்லது தேன் இருக்கும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய ஸீதையை இதயம் என்னும் சிறையில் மறைத்து வைத்த காதல், உள்ளே எங்கேயாவது மறைந்திருக்கும் என்று கருதி அவன் உடலில் புகுந்து தேடியவாறோ?]

    ”யார் இந்த மாதரசி?” என்று வினவிய ராமனுக்கு விபீஷணன் “அவர் என் அண்ணியார் மந்தோதரி” என்று பதிலுரைத்தான். அதன் பின்னர், விபீஷணன் அண்ணனுக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதைகளைச் செய்து முடித்தான்.

    (தொடரும்)

    Share
  • எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?

    indian-man-wife

    சு. கோபாலன்

    பெரும் செல்வம் ,பதவி, அதிகாரம் இவையெலாம் தனக்கு மட்டுமன்றி

    வரும் வாரிசுகளுக்கும், தலைமுறைகளுக்கும் சேர்க்கத் துடித்திடும்

    கொலை வெறி கொலை வெறி மனதிலும் மூளையிலும் புகுந்து

    தலைவிரித்தாடி செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்

    பெருகி வரும் பாலியல் கொடுமைகள், வக்கிரங்கள் – அவற்றில் சருகாய்

    கருகி விடும் உறவுகளின் உன்னதங்கள், புனிதங்கள், நம்பிக்கைகள்

    இறையாய் போற்றத் தக்க மூத்தோர், ஆசிரியர், மருத்துவர், நீதிபதிகள்- காமப்பசிக்கு

    இரை தேடும் விலங்குகளாய் மாறிவரும் செய்திகள் கேட்கவே கூசுகிறது.

    நீதி, நிர்வாகம், கல்வி, மருத்துவம் என்று அடுக்கிக்கொண்டே போகுமளவு

    மீதி ஒரு துறையும் விட்டு வைக்காமல் புற்று நோயாய்ப் பரவி வரும்

    லஞ்சம், ஊழல்கள் சமுதாயத்தில் புரையோடிப் போயிருப்பதைக் கண்டால்

    நெஞ்சம் பதறுகிறது , கொதிக்கிறது செய்வதறியாது தவிக்கிறது.

    செல்வங்களுள மிகச் சிறந்த கல்விச் செல்வம் வழங்கும் கல்வி நிறுவனங்கள்

    செல்வம் குவிக்கும் சாதனங்களாய் தங்கச் சுரங்கங்களாய் மாறி வருகின்றன.

    மனித உயிர் காக்கும் தொழில் என்பதால் சமூகத்திலுள்ள யாவராலும்

    புனிதமாய்ப் போற்றும் மருத்துவத் துறையிலும் பணவெறி பீடித்துள்ளது.

    படாடோப விருந்துகளில் பாழாய்ப் போகும் உணவு பற்றி கவலையிலா செல்வந்தர்கள்

    படாதபாடு பட்டாலும் ஒருவேளை சோறு பெற இயலாது தவிக்கும் ஏழை மக்கள்

    தாகம் தீர்க்கும் நீர், பசி போக்கும் உணவு, நோய் தீர்க்கும் மருந்து எதுவாயிருந்தாலும்

    வேகம் வேகமாகச்  செல்வம் சேர்க்கும் வெறியுடன் கலப்படம் செய்யும் வியாபாரிகள்

    அற்ப காரணங்களுக்காகச் சற்றும் சிந்தியாது கொலை செய்திடவும்

    முற்படும் கட்டுப்பாடில்லாத கோப உணர்ச்சிகளுக்கு ஆளாகும் இளவயதினர்

    ‘அன்னை இல்லம்’ என தன் சொந்த வீட்டிற்குப் பெருமையாக பெயர் சூட்டி

    அன்னை இல்லா இல்லமாக பெற்றவளை முதியோர் இல்லம் அனுப்பிடும் பிள்ளைகள்!

    படத்துக்கு நன்றி

    http://old-photos.blogspot.in/2013/05/old-indian-couple.html

    Share
  • முயற்சியால் ஆகாதெனினும்!…

    தஞ்சை வெ.கோபாலன்

     

    பசுபதிக்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அலுவலகத்தில் முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்த அந்த நேரத்தில் இந்த தந்தி வந்திருக்க வேண்டாம். தஞ்சையிலிருந்து அந்த தந்தியை அனுப்பியிருந்தவர் அங்கு மேம்பாலத்தின் அருகிலுள்ள காது கேட்காதோர் வாய் பேசாதோருக்கான தனிப் பள்ளியின் தலைமை ஆசிரியர். பசுபதியின் மகன் கண்ணன் அங்குதான் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிறவியிலிருந்தே காதும் கேட்காது, வாயும் பேசமுடியாது. பன்னிரெண்டு வயது வரை வீட்டில் வைத்து எல்லா வைத்தியங்களும் பார்த்த பிறகு நரம்பியல் நிபுணர் ஒருவர் பார்த்துவிட்டு இனி இவனுக்கு வைத்தியம் செய்ய பணத்தைச் செலவு செய்யாதீர்கள். இவன் இப்படியே இருந்து ஏதாவது தொழிலைக் கண்ணால் பார்த்துக் கையால் செய்யத் தக்க வகையில் கற்றுக் கொடுத்து பிழைக்க ஒரு வழியைக் காட்டிவிடுங்கள். அவ்வளவுதான் நீங்கள் இனி செய்யக் கூடியது என்று சொன்னதால் தஞ்சாவூரில் இவனைப் போன்றவர்கள் தங்கி படிக்கும் வசதி கொண்ட பள்ளியில் இவனைக் கொண்டு போய் சேர்த்தார். அவனும் இப்போது கிட்டத்தட்ட ஐந்தாறு ஆண்டுகளாக அங்குதான் இருந்தான். இப்போது இன்று இந்த அவசரத் தந்தி சொன்ன செய்தி அவனைக் காலை முதல் காணவில்லை என்பதுதான். பசுபதிக்கு கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அடுத்த சீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராகவனிடம் விஷயத்தைச் சொன்னார்.

    இருவரும் பசுபதியின் மேலதிகாரியிடம் சென்று தன்னுடைய காது கேட்காத வாய் பேசமுடியாத மகனை அவர்களைப் போன்றவர்க்கென்று நடக்கும் போர்டிங் பள்ளியில் இருந்து காணாமல் போய்விட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. என் மகனை உடனே போய் தேடவேண்டும், இப்போதே தஞ்சாவூர் போக அனுமதியும் இரண்டு நாள் விடுப்பும் தேவை என்று கேட்டார்கள். வேதாரண்யத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பசுபதியின் அந்த அதிகாரி சற்று அலட்சியமாக “ஏன்யா! அவனைக் காணும்னா எங்கே போயி தேடுவீங்க? அவனுக்கோ காதும் இல்லை வாயும் இல்லை; என்னய்யா பண்ணப் போறீங்க? போய் பேசாம போலீசிலே ஒரு புகார் கொடுங்க, அவுங்க கண்டுபிடிச்சி கொடுப்பாங்க” என்றார்.

    பசுபதிக்கு ஆத்திரம் வந்தது. காணாமல் போனது அவர் மகன் இல்லை, தன்னுடைய மகன். அவருடைய மகனாக இருந்தால் இப்படிப் பேசுவாரா? அலுவலகங்களில் ஏதோ ஒரு அதிகாரி என்று உட்கார்ந்து விட்டால் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை இப்படியெல்லாம் பேச யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இவர்களுக்கு மனிதாபிமானமே இருக்காதா? இவர்தான் தூக்கிப் பிடித்து அந்த துறை பணிகளைச் செய்யப் போகிறாரா? என்ன செய்வது தன்னுடைய எதிர்காலம் இந்த ஆள் கையில் இருப்பதறிந்து பசுபதி சற்று தணிந்து போக தீர்மானித்தார்.

    “அதெல்லாம் சரிதான் சார். அவனுக்குப் பேசமுடியாது, காதும் கேட்காது என்கிறேன், அவன் யார்கிட்டே போயி தான் யார் என்பதையெல்லாம் சொல்ல முடியும். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டியது என் கடமை, சொல்லிவிட்டேன், நான் வரேன் சார்” என்றார் பசுபதி.

    “ஆபீஸ் விஷயங்களில் எல்லாம் இப்படி தூக்கி எறிந்து பேசமுடியாது மிஸ்டர் பசுபதி. இப்படிப்பட்ட ஒரு மகனை இருட்டில் குருட்டுப் பூனை குறுக்குச் சட்டத்தில் பாய்ந்ததைப் போல பிள்ளையைத் தேடப்போறேன்னு சொன்னா, எங்கே போயி தேடுவீங்க?” என்றார் அவர் மறுபடியும்.

    “நீச்சல் தெரியாம தண்ணில விழுந்துட்டா என்ன செய்வோமோ அதைச் செய்வோம் சார். காலையும் கையையும் அசைத்து நீந்த முயற்சிப்பது இல்லையா, அப்படி. அவன் போகக்கூடிய இடங்கள், அவனுக்குத் தெரிந்தவர்கள் வீடுகள், இப்படி பல இடமும் போய் தேடிப்பார்த்துத்தான் கண்டுபிடிக்க முடியும். எல்லாம் தானா வருவான் என்று உங்களைப் போல அலட்சியமா நானும் உட்கார்ந்திருக்க முடியாது சார். அவன் உடம்பில் ஓடறது என் ரத்தம். இங்கே என் ரத்தம் கொதிக்குது சார்” என்றார் பசுபதி.

    அதிகாரி விட்டபாடில்லை. “அதெல்லாம் சரிதான்யா! அப்படி தேடியும் அவன் கிடைக்கலைன்னா என்ன சார் பண்ணப் போறீங்க?” என்றார்.

    பசுபதிக்கு ஆத்திரம் தலைக்கேறியது, “அங்கேயே தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துப் போவேன் சார்” என்றார் சூடாக.

    “சரி, சரி இது போல நாடகபாணில பேசாதீங்க. போயிட்டு வாங்க. உங்க சவுகரியம்” என்றார் வெறுப்புடன்.

    “இவர் கிடக்கிறார் விடுங்க பசுபதி, இவர் புள்ளையா இருந்தா இப்படி பேசுவாரா, வாங்க நீங்க, நானும் உங்களோடு வரேன். உங்களைத் தனியா விட கவலையா இருக்கு” என்றார் நண்பர் ராகவன்.

    இருவரும் உடனே பேருந்து நிலையம் சென்று வேதாரண்யத்திலிருந்து திருச்சி செல்லும் பஸ்சில் ஏறி தஞ்சைக்குப் பயணமானார்கள். அங்கு சென்ற இருவரும் அந்த பள்ளிக்கூடத்துக்குச் சென்று என்ன நடந்தது என்று விசாரித்தார்கள்.

    அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், அன்று பள்ளித் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு ஆங்கில பாடத்தில் தேர்வு. இவனிடம் கேள்வித் தாளைக் கொடுத்த சில நிமிஷங்களில் இவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெறும் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டானாம். திரும்பி வருவான் என்று காத்திருந்த ஆசிரியர்கள் அவன் வராதது கண்டு பயந்து போய் தந்தி கொடுத்ததாகச் சொன்னார்கள்.

    இவனுக்கு இங்கு யாரையுமே தெரியாதே. எங்கு போயிருப்பான். அந்த பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருந்த மேம்பாலம் வழியாக பெரிய கோயிலுக்குப் போகவும், மறுபாதையில் சென்றால் மருத்துவக் கல்லூரி இருக்கும் பகுதிக்கும் போகலாம். அங்கிருந்து இறங்கி போகும் ஒரு பாதை ரயில் நிலையம் போகும். அந்தப் பாதையில் போய் பார்க்கலாம் என்று பசுபதியும் நண்பரும் போனார்கள்.

    சற்று தூரத்தில் ஒரு டீக்கடை. அந்த டீக்கடைக் காரரிடம் பசுபதி கேட்டார், “ஏன்யா, காது கேட்காத வாய் பேசமுடியாத ஒரு பையன் மேம்பாலம் பள்ளிக்கூடத்திலிருந்து இந்த பக்கமா வந்தானா? அப்படி யாரையாவது பாத்தீங்களா?” என்றார்.

    அவர் சொன்னார், “அமாங்க, அப்படியொரு ஊமைப் பையனை அழைத்துக் கொண்டு யாரோ ஒரு ஆள் இங்கே வந்து டீ வாங்கி குடிச்சாங்க. அவங்களைப் பார்த்தா அந்தப் பையனுக்கும் அந்த ஆளுக்கும் சம்பந்தம் இருக்கறதா தோணலீங்க. சந்தேகமா இருக்கு, ஸ்டேஷன் பக்கமா போனாங்க ரெண்டு பேரும் போய் அங்கே பாருங்க”.

    இருவரும் ஸ்டேஷன் பக்கம் போய் சுற்றிப் பார்த்தார்கள். கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் இங்கே ஒரு ஊமைப் பையனைப் பார்த்தீங்களா என்று கேட்டார்கள். எல்லோரும் கைவிரித்துவிட்டார்கள். பையனைத் தேடும் பரபரப்பில் இருவரும் ஒன்றுமே சாப்பிடவில்லை. நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. வேறு வழியில்லை போலீசில் போய் ஒரு புகாரைக் கொடுத்துவிடலாம் என்று அங்கு போனார்கள். நல்ல காலம் அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் தங்கள் விடுதியிலிருக்கும் இந்த மாணவனைக் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்திருந்தார். இவர்களும் அந்தப் புகாரில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு பஸ்சைப் பிடித்து வேதாரண்யம் போக முடிவு செய்தனர்.

    வழிநெடுக பசுபதி புலம்பிக் கொண்டே வந்தார். என்ன செய்கிறானோ, வாய்கூட பேசமுடியாம என்ன பாடு படுகிறானோ என்றெல்லாம் புலம்ப ராகவன் ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தார். வேதாரண்யம் பஸ் தஞ்சையிலிருந்து புறப்பட்டு போய்க்கொண்டிருந்தது.

    வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கோபுரம் தெரிந்தது. பசுபதி “அம்மா! மாரியம்மா! என் புள்ளைய நீதான் காப்பாத்திக் கொண்டு சேர்க்கவேணும் அம்மா. உன்னை விட்டா எனக்கு ஏது கதி” என்று சொல்லிக் கொண்டே ஓவென அழத் தொடங்கினார்.

    பஸ்சில் இருந்தவர்கள் இவரைத் திரும்பிப் பார்த்தனர். பாவம் என்ன கஷ்டமோ என்று அவர்களும் வருந்தினர். ராகவன் நிலைமையைச் சமாளித்து மெல்ல அழைத்துக் கொண்டு போனார். திருவாரூரில் இவருக்கு ஒரு உறவினர் இருந்தார். அங்கு ஒருக்கால் இவன் போயிருக்கலாமோ, அங்கேயும் போய் பார்த்துவிட்டு ஊருக்குப் போய்விடலாம் என்று திருவாரூர் போனார்கள். அங்கு அவரது உறவினர் வீட்டுக்குப் போனதும் அவர்கள் இவர்களை வரவேற்று என்ன விசேஷம் இப்படி திடீர்னு வந்திருக்கீங்க என்று விசாரித்த போதே அவன் இங்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று.

    அவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு ஒருக்கால் அவன் இங்கு வந்தால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நாகப்பட்டினம் பஸ் ஏறி அங்கிருந்து வேதாரண்யம் போய்ச் சேர்ந்தார்கள். வீட்டுக்குப் போகும்போது மணி இரண்டைத் தாண்டியிருக்கும். பசுபதியின் மனைவி வாசலில் நின்று கொண்டு இவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தாள் பாவம். பையனை எங்கும் காணவில்லை என்றதும், அவள் அந்த நள்ளிரவிலும் வாய்விட்டு ஓவென்று கதறினாள். அருகிலிருந்த சில வீட்டுக்காரர்கள் இவள் அழுகையைக் கேட்டு வாசல் விளக்கைப் போட்டு என்னவென்று அறிந்து கொள்ள வந்து சேர்ந்தனர்.

    அப்படி வந்திருந்தவர்களிடம் நடந்த காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவ்வூர் சப் இன்ஸ்பெக்டர் அங்கு மோட்டார் பைக்கில் வந்து சேர்ந்தார்.

    வந்தவர், “சார், இங்கே பசுபதிங்கறது யாரு?” என்றார்.

    போலீசைக் கண்டதும் துடிப்போடு பசுபதி, “நாந்தான் சார் பசுபதி, என்ன சார் விசேஷம்?” என்றார்.

    “இல்லை, இந்த நேரத்துல என்ன இங்கே இப்படி கூட்டமா நிக்கறீங்க?” என்றார்.

    “தஞ்சாவூர்ல இருந்த எங்க வாய்பேசமுடியாத பையன் காணாம போயிட்டான் சார். அவனைப் போய் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துட்டு இப்பதான் சார் வரேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சேதி சொல்லிக்கிட்டிருக்கேன், அதான் கூட்டம்” என்றார் பசுபதி.

    “கவலைப் படாதீங்க பசுபதி. அந்த விஷயமாத்தான் நான் வந்தேன். உங்க பையன் பத்திரமா இருக்கான். இப்பதான் சேதி வந்தது. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் உங்களைத் தேடி வந்திருக்கேன். அவனை அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து ஆட்கள் அழைச்சிட்டு வராங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாங்க” என்றார் எஸ்.ஐ.

    “என்ன ஆச்சு சார், ஏதாவது விவரம் தெரியுமா சார்” என்றார் ராகவன்.

    “இருங்க, அவுங்க வந்ததும் தெரிஞ்சுடுது. பையன் கிடைச்சுட்டான்ல சந்தோஷமா இருங்க, இப்ப வந்துடுவாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இரு போலீஸ்காரர்களும், பையனும் அவருடன் கூட வேதாரண்யத்து இளைஞர் ஒருவரும் வந்து இறங்கினார்கள்.

    பசுபதியும் குடும்பத்தாரும் ஓடிப்போய் பையனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று அழுதார்கள். அனைவரையும் ராகவனும் எஸ்.ஐ.யும் சமாதானப் படுத்தி ஆசுவாசப் படுத்தினார்கள்.

    பசுபதி மட்டும் சற்று சமாதானமடைந்து ஜாடையில் பையனிடம் ஏதோ கேட்க அவனும் ஜாடையில் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் பேசிய விவரம் அவர்களைத் தவிர மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது ஜீப்பில் வந்திறங்கிய வேதாரண்யத்து இளைஞன் மட்டும் பேசினான்.

    “ஐயா! நான் வேதாரண்யத்துக்காரந்தான். நான் பூண்டி காலேஜ்ல எம்.ஏ. படிச்சுகிட்டு இருக்கேன். அங்கே ஹாஸ்டலில்தான் இருக்கேன். நான் அடிக்கடி புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் போவேன் சார். அப்படி அங்கே போனபோது, செறுப்பு போட்டுட்டுப் போனா பார்த்துக்கன்னு ஒருத்தர் வாசலில் உட்கார்ந்திருப்பார். செறுப்பு பார்த்துக் கொள்ள அவருக்கு எல்லோரும் காசு கொடுப்பாங்க. கடைகளிலும் போடலாம் ஆனா, அங்கு டோக்கன் எல்லாம் கிடையாது, இந்த ஆள் டோக்கன் போட்டுக் கொடுப்பான்.

    அப்படி நான் போனபோது அந்த ஆளுக்குப் பக்கத்துல செறுப்புக்குள்ள டோக்கன்களைச் செறுகிக் கொண்டு இந்தப் பையன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். பையனைப் பார்த்தா இந்த வேலை செய்யறவனா தெரியலையே இவன் ஏன் இங்க உட்கார்ந்திருகான் என்று அவனை நீ யாருடான்னு கேட்டேன். அவன் நான் சொன்னதைக் கவனிச்சதாகவே தெரியல. அந்த செறுப்புக் காவல் காக்கும் நபரைக் கேட்டேன், அந்த ஆள், நீங்க உங்க வேலைய பாருங்க தம்பி, அவன் யாராயிருந்தா உங்களுக்கு என்ன? என்றான்.

    அதனால் எனக்குச் சந்தேகம் வந்தது. உடனே போய் பூண்டி போலீசிலே போய் விஷயத்தைச் சொன்னதும் அவங்கள்ள ஒருத்தர் எங்கூட வந்து செறுப்பு காவலரிடம் கேட்க அவன் விஷயத்தைக் கக்கிவிட்டான். இந்த பையனை தஞ்சை மேம்பாலம் பக்கம் பார்த்து, இவனுக்குப் பேசமுடியாதுன்னு தெரிஞ்சு தனக்கு உதவியா இருக்கட்டும்னு கூட்டிக்கிட்டு வந்துட்டதாக சொன்னான்.

    அவர்கள் தஞ்சாவூர் போலீஸ் நிலையத்துக்குக் கேட்டாங்க போலிருக்கு. அவங்க, ஆமாம் அங்க ஒரு புகார் வந்திருக்கு, இதப் போல ஒரு பையனைக் காணும்னு, அவன் ஊர் வேதாரண்யம்னு அவன் அப்பா விலாசம் எல்லாம் கொடுத்திருக்கார். பையனைப் புடிச்சிட்டிங்கன்னா உடனே வேதாரண்யத்துக்குத் தகவல் கொடுக்கச் சொன்னாங்க.

    அப்போது அம்மாபேட்டை போலீஸ் ஜீப் ஒண்ணு வந்தது. அதில் இருந்தவர்கள் தாங்கள் வேதாரண்யம்தான் போகிறோம் என்று சொன்னதால, பையனை பத்திரமா அவங்க கிட்ட ஒப்படைச்சி வேதாரண்யம் அழைச்சுப் போகச் சொன்னாங்க. நானும் பையனோடு அப்பா விலாசத்தைப் பார்த்துட்டு, அடடே நம்ம வீட்டுக்கு அடுத்த தெருதான், எனக்குத் தெரியும்னு நானும் அவுங்க கூடவே வந்துட்டேன் என்று விவரங்களைச் சொன்னார்.

    பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? புன்னை நல்லூர் மாரியம்மன் செய்த மாயமா, இதெல்லாம் எதேச்சையாக நடந்த செயலா? அதென்னவோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் பசுபதி மட்டும் நிச்சயமாக நம்பினார், நான் உன் கோயிலைத் தாண்டி வரும்போது உன்னிடம் கெஞ்சி வேண்டிக் கொண்டேன் அல்லவா, நீ அனுப்பி வச்சுட்டியே அம்மா, தாயே, மகமாயி, நீயே எனக்குக் கண்கண்ட தெய்வம் என்று சொல்லி உருகிப் போனார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..94

    சக்தி சக்திதாசன்

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..94

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    “மன்னிக்கத் தெரிந்த மனிதனின் மனது மாணிக்கக் கோவிலப்பா” எனும் வாசகம் எந்த அளவிற்கு யதார்த்தமானது?

    ஒருவர் எம்மைத் தாக்கி விட்டார் அன்றி தகாத வார்த்தைகளால் திட்டி விட்டார் இல்லை எமது மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

    இவைகளை நாம் மன்னிப்பது என்பதும், உம்மை உடலளவில் தாக்கி உள்லத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டவர்களை மன்னிப்பது என்பதற்கும் அபல வேறுபாடுகள் இருக்கின்றன.

    மனித மனதில் மன்னிப்புகளுக்கும் எல்லைகள் உண்டு என்பதே உண்மையான ஒரு கருத்தாகப் படுகின்றது.

    எதையும் எப்போதும் எப்படியும் மன்னித்து விடலாம் விட வேண்டும் என்பது பார்த்தையளவில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் ஆனால் இது எத்தனை தூரம் நடைமுறையில் சாத்தியமாகும் எனும் கேள்வி எழாமல் இல்லை.

    நான் சமீபத்தில் இணையத்தளத்தில் படித்த ஒரு செய்தி என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இத்தகிய வினாக்களைத் தொடுக்க வைத்தது.

    அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலே இது.

    ஒரு மயிரை இழந்தாலும் உயிரை விட்டுவிடும் கவரிமான் என்பார்கள். அது போல பெண்களுக்கு மானம் என்பது அவர்களது உயிரைக் காக்கும் கவசம் போன்றது.

    மானத்தை ழப்பது என்பது பெண்களுக்கு உயிரை இழப்பதற்குச் சமானம். ஆனால் அம்மானம் பலாத்காரமாக அப்பெண்ணிடம் இருந்து பறிக்கப்படும் போது கூட அப்பெண் உயிரை விடுவது தான் ஒரே முடிவா?

    மூர்க்கத்தனம் கொண்ட ஆண் வர்க்கம் தமது மிலேச்சத்தனமான இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கு பெண்களைன் மீது பலாத்காரத்தைப் பிரயோப்பதனால் அப்பெண் ணின் மானம் பறி போவது உண்மைதான் அதற்காக அப்பெண் உயிரை விட்டு விடுவது ஏற்றுக்கொள்லப்பட்க் கூடியதொன்றா?

    மனதைப் பாதிப்புக்குள்ளாஅக்கும் மிகவும் காராசாரமான கேள்வி இதுவல்லவா?

    நான் இப்போ குறிப்பிடப் போகும் சம்பவம் மன்னிப்பு எனும் பதத்தின் அர்த்தத்தை அதன் எல்லைகளுக்கப்பால் கொண்டு சென்று நிறுத்துகிறது.

    அப்படி என்னதான் நடந்தது? நீட்டி முழக்காமல் விஷயத்தைச் சொல் என்கிறீர்களா? அவசரப் படாதீர்கள் இதோ,

    லண்டனை வதிப்பிடமாகக் கொண்டவர் 40 வயது நிரம்பிய செல்வி.காட்ஜா ரோசென்பேர்க்.

    கடந்த 2008ம் ஆண்டு இவர் 16 வயதே நிரம்பிய இளஞனினால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டார்.

    இவரது கற்பழிப்பைத் தொடர்ந்து இதே இளஞன் மற்றொரு 51 வயதான் பெண்மணியையும் கற்பழித்துள்ளார்.

    இவ்விரு கற்பழிப்புக் குற்றங்களையும் ஒப்புக் கொண்ட இவ்விளைஞனுக்கு நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது

    இந்த காட்ஜா ரோசென்பேர்க் எனும் பெண் கடந்த வருடம் குர்றசெயல் மீள்பிரிவு அதிகாரிகளின் அனுசரணையுடன் தன்னைக் கற்பழித்த அந்த இளஞனை சிறையில் சென்று நேரடியாகச் சந்தித்து உள்ளார்.

    எதற்கு என்று கேட்கிறீர்களா?

    அவரைத் தான் மன்னித்து விட்டேன் என்ரு அவருக்கு தான் நேரடியாக தெரிவிப்பதற்காகவே.

    கற்பழிப்பு மற்றைய பெண்களுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியைத் த்னக்கு ஏனோ ஏற்படுத்தவில்லை என்கிரார் இவர். இத் தாக்குதல் தனது வாழ்வை மிகவும் அதிக அளவில் பாதித்திருந்தாலும் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தன்னைப் பாதிக்கவில்லை என்கிறார்.

    தான் வாழ்வில் இதனால் மிகவும் கவ்பலைக்குட்டபட்டதுவும், பல விடயங்கள் தன் வாழ்வில் பிழையாகிப் போனதுமே தனக்கு ஏற்பட்ட விளைவுகளே தவிர தான் தாக்கப்பட்டதாக உணரவில்லை என்கிறார்.

    தான் அவரிடம் நேரடியாகச் சென்ரு மன்னித்து விட்டதாக கூர எண்ணியதன் நோக்கம் அவருக்கு சிரையில் இருந்து வெளியே வந்ததும் வாழ்வதற்கு பிடிப்பு ஏற்படுத்தவே என்றும், இப்படியான செய்கையின் மூலம் அவரை வெட்கித் தலைகுனியச் செய்வதினால் அவர் இனிக் குற்றச் செயல்கள் செய்யாமல் தவிர்க்க உதவலாம் என்பதனாலுமே என்கிறார் இவர்.

    தன்மீது மூர்க்கத்தனமாக மற்றொருவரால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலைச் சமாளித்து அந்நிலைமையிலும் தனது வாழ்வைத் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த வரது துணிச்சலை பல முன்னனி மாதர் அமைப்புகள் பாராட்டியுள்ளன.

    ஆம் மனிப்பு என்பதன் அர்த்தத்தையே மார்றி அமைத்து விட்டார் இந்த வீராங்கனை.

    ஆனால் இத்தகிய செயலினால் இவரது உள்ள உறுதியும், மனிதாபிமானும் உயருகிறதே ஒழிய “கற்பழிப்பு: என்னும் படுபாதகச் செயல் எந்த விதத்திலும் அங்கீகாரம் பெறவில்லை.

    ஒர் பெண்ணின் மீது இத்தகிய தாக்குதலை மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான கொடூர மனம் கொண்டவர்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? எனு7ம் வாதமும் ஒருபுறத்தில் எழுவது நியாயமே!

    இருப்பினும் தன் மானத்தைப் பறித்த அக்கயவனின் உள்லத்தை மாற்ற மன்னிப்பு எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்த இவ்வீராங்கனையும் ஒரு விதத்தில் ஒரு கவரிமான் தான்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • செந்தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனார்!

    காவிரி மைந்தன்

    வாழும் தமிழ் மொழியின் வற்றாத ஜீவ ஊற்றை.. வகை வகையாய் எடுத்துரைக்கும் இலக்கியங்கள்! வண்ணத்தமிழ் மொழிக்கு வசந்தகாலம் வந்ததுபோல்.. வந்திருக்கும் செந்தமிழ் அங்கீகாரம்!! வள்ளுவன் முதலாக வாழையடி வாழையாய் நற்றமிழைப் பனையேட்டில் பதித்து வைத்த பைந்தமிழ்ச் சான்றோர் பலர்! இவரெல்லாம் எடுத்துரைத்தப் பொக்கிஷத்தை செல்லரித்து தின்றதுபோக.. மீதமெனப் பத்திரப்படுத்த ஒரு தாத்தா.. உ.வே.சாமிநாத ஐயர் வந்தார்! கிட்டிய தமிழ்ச்செல்வம் அத்தனையும் உயிர்ப்பிக்க தன்னுயிரையே தந்தார்!!

    அத்திருமகனாரின் அளப்பரிய சேவையினால் தப்பித்த இலக்கியப் புதையல்கள்! இவைதான் எமதென்று இன்று மார்தட்டி நிற்கும் நாம்.. தமிழின மொழி கலாச்சாரம் பண்பாடு இவைகளின் ஒட்டுமொத்த உணர்வைப் பெற்றிருந்தால்.. உலகிலேயே உயர்ந்தவர்கள் நாமென்று ஓங்கிக்குரல் கொடுத்திருப்போம்! அடிமை உணர்வுக்கு ஒருபோதும் அடிபணியாதிருந்திருப்போம்! உரிமை வாழ்வென்று உலகிற்கே எடுத்துச்சொன்ன பரம்பரையின் வரலாறு அறிந்திருப்போம்! அகத்துறை புறத்துறை எனப் பகுத்தறிந்து வாழ்ந்தவன் தமிழன்! அவ்வழி நடந்தால் இவ் வையகம் உய்திடும் உண்மையை உரக்கக் கூறுவோம்!

    அறநெறி தழைக்க வேண்டி அன்றுமுதல் புலவர் பெருமக்கள் அய்யன் முதலாக.. வரைந்துவைத்த பாக்கள்.. படிவங்கள்.. செய்யுள்கள்.. செப்புவதென்ன? வீரமும் காதலும் தமிழர் வாழ்க்கை என்கிற சீரும் சிறப்புமான வரலாற்றுப் பெட்டகங்கள் எனத் திகழும் இலக்கியப் பக்கங்களை இனிவரும் தலைமுறைகளுக்கும் எடுத்துரைக்கும் கடமையும் நம்மைச் சார்ந்ததே!

    அவ்வழியே.. தமிழர்தம் சிறப்புகளை தாங்கிநிற்கும் இலக்கியமாய்.. தன்னிகரில்லாப் பெருங்காப்பியமாய்.. ஆள்கின்ற சேரனின் தம்பியாய் பிறந்திருந்தும்.. தனிமை நாடி தவக்கோலம்பூண்டு ஒப்பிலா இலக்கியமாய் ஓங்குபுகழ் சிலப்பதிகாரம்தனை இயற்றி நீங்கிடாப் புகழ்பெற்ற இளங்கோவடிகள்!

    ஆங்கு அதனை பாரினிலே அவையோர் சபையெல்லாம் தினம் முழக்கம் செய்தவராய்.. வாழ்கின்ற வாழ்வெல்லாம் தமிழ்.. தமிழ்.. என்றே வாழ்பவராய்.. எளிமையின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் வல்லோனாய்.. புன்முறுவல் பூத்ததுபோல் திருமுகம் கொண்டவராய்.. சொல்லேதும் கடினமாய் தன்னகத்தேக் காணாதவராய்.. அல்லும் பகலும் பட்டிதொட்டியெங்கும் பயணம் கொண்டேனும் பைந்தமிழைக் காத்துநிற்கும் சீலராய்.. பாவலராய்.. நாவலராய்.. எதிரிகளே இல்லாத ஏகோபித்த மனிதராய்.. இன்னுமின்னும் இவர் புகழைச் சொல்லச் சொல்ல.. செந்தமிழ் மணக்காதோ? தென்னவரின் பெருமை சிறக்காதோ?

    அன்னவரின் அகவை 85ஆம்! நம்பவே முடியவில்லை.. நாட்டோரே.. நடமாடும் தமிழுக்கு அகவை இங்கேது? அவர் புகழைப் பாடுதலில் எந்தன் பங்கேது? சுகம் சுகமாய் இருப்பதனால் தமிழே உந்தன் சுவைஞன் நான் என்றே வாழ்கின்றேன்! சிலம்பின் பெருமையெல்லாம் உலகை வலம்வந்து எடுத்துரைத்த ஏந்தலிவர்! அருமை மிகநிறைந்த மாமனிதர்! யுகம் யுகமாகத் தேடினினும் காணக்கிடைக்கா மனிதரிவர்! வாழ்கின்ற யுகத்தில் நாம் வாழ்ந்த பெருமையுடன்.. வாழ்த்துரைக்க வயதின்றி வணங்கி மகிழ்கின்றேன்!

    Share
  • குறவன் பாட்டு-28 (நிறைவுப் பகுதி)

    குறவன் நகர வாழ்க்கையைக் கண்டு தனக்குள் வினவுதல்

     

    அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,

    அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,

    அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,

    அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!                        228

     

    புரிந்து கொள்ளாத மணவாழ்க்கை மணக்கும்,

    புரிந்த பின்னாலோ வடுவாகி நிலைக்கும்,

    பிறந்த பிள்ளைகளோ பலநேரம் வதைக்கும்,

    பிறப்பின் பொருளுணராப் பரிதாபம் எவர்க்கும்!                                                                                229

     

    முறையற்ற மோகத்தில் மனதார வீழுகிறான்,

    முடிவற்ற துன்பத்தை முதலாளாய்த் கோருகிறான்,

    மறையுற்ற பொருளெல்லாம் இருளென்று பாடுகிறான்,

    கறையுற்ற காமுகனாய்க் கண்மூடி வாழுகிறான்!                                                                              230

     

    வலியில் வாடும் உயிர்க ளிடம்,

    வணிகம் பேசிப் பொருள் சேர்த்தான்,

    வறுமையில் வாடும் ஏழையை வாட்டிச்,

    சிறுமையில் வாழப் பழகி நின்றான்!                                                                                                          231

     

    கலியுகத்தில் உள்ள கொடுமைகளில், பெரும்

    கல்விச் சுமையும் ஒரு வகையோ,

    நலிவுற்ற மக்களை நஞ்சென வருத்திப்

    பலிகொள்ளும் பள்ளிக் கல்வி இதோ!                                                                                                        232

     

    கணிவுள்ள கண்களைக் காண்ப தெல்லாம்,

    கலியுகத்தில் மிகக் கடின மன்றோ?

    பணிவுள்ள மனிதனைக் காண்ப தற்கும்

    பெருந்தவம் செய்திட வேண்டு மன்றோ!                                                                                                233

     

    தருக்கள், குருவிகள், அறுகம் புற்கள்,

    எதற்கும் தெருவில் இடம் இல்லை,

    அதற்கென வருந்திக் கண்ணீர் சிந்த

    எவர்க்கும் இங்கே மனம் இல்லை!                                                                                                               234

     

    தனதுணர்வை மதிக்காத துரோகிகள் தாள்பற்றிக்,

    கனவுலகில் மிதப்பதே கடமை என்றான்,

    இனவுணர்வு இல்லாமல், தமிழமுதம் கொள்ளாமல்,

    பணவுணர்வு கொண்டுமன நிறைவு கண்டான்!                                                                                    235

     

    பாடுபொருள் இல்லாத கவிதை யாக,

    பாகனவன் இல்லாத யானை யாக,

    பார்வையாது இல்லாத விழிக ளாக,

    பயனற்று வாழ்வதிலே இன்பம் கண்டான்!                                                                                             236

     

    கானகம் காணாக் கொடுமைகளை, நரகக்

    கலியுகம் காணுது அனுதினமும், பரவிக்

    காட்டிலும் அதுகால் பதிக்காமல், விரைந்து

    காத்திடலே என் முதற் கடமை!                                                                                                                     237

     

    இல்லம் திரும்புதல்

     

    விற்பனை முடித்து விரும்பிய வண்ணம்,

    பற்பல பொருட்களை வாங்கிக் கொண்டு,

    நற்துணைக் குறத்தியும் குறவனும் இணைந்து,

    சுற்றம் நிறைந்த இல்லம் திரும்பினர்!                                                                                                      238

     

    சிறுவனைப் போலக் குறவனும் குறத்தியும்,

    சிறுகவலையும் இன்றிப் பறவைகள்  போல,

    சிறகினை விரித்து வாழ்க்கை வானில்,

    நறுமணம் வீசிப் பறந்த னரே!                                                                                                                          239

     

    (நிறைவு பெற்றது)

     

    இயற்கையோடு இரண்டறக் கலந்து, இரசித்து வாழ்ந்து, இறுதியில் இயற்கையுடன் இரண்டறக் கலப்பதே மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை நோக்கம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு எளிமையாக வாழ்வோம்.

    வாழ்க இயற்கை!  வளர்க இயற்கை!!

    அன்புடன்,

    சச்சிதானந்தம்.

    Share