கிரேசி மோகன்
மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
தாண்டவம் ஆடித், தயிருண்டு, -வேண்டிய,
ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
யாதவா கோடிட்(டு) எழுது ….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
தாண்டவம் ஆடித், தயிருண்டு, -வேண்டிய,
ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
யாதவா கோடிட்(டு) எழுது ….கிரேசி மோகன்….
இசைக்கவி ரமணன்

எல்லோரும் மிதக்கிறோம்
எல்லைகள் விண்டுபோய் தொல்லைகள் இல்லாத
ஏகாந்த வானத்தில் மேகத்தின் பிஞ்சுபோல்
எல்லோரும் மிதக்கிறோம்
இதமான வார்த்தைகள் கேட்கும்போதும்
இதயத்தில் வீணைகள் மீட்டும்போதும், ஒரு
மிதமான மதுவூற்றி ஏற்றும்போதும், சில
மின்னல்கள் மழலைகள் பேசும்போதும், ஒரு
கதைபேச வந்துகதை கேட்கும்போதும், மனம்
காதலெனும் கோப்பையில் ததும்பும்போதும், பல
விதமாக அவள்விரல்கள் மருவும்போதும், சிறு
விதையொன்று நடுநெஞ்சில் விழிக்கும்போதும்
தாள்விட்ட வார்த்தைகள் சொல்லாமலே, வந்து
தழுவிடும் தருணத்தின் தரிசனத்தில், பல
நாள்பட்ட கனவொன்று மறந்தபின்னே, ஒரு
நனவுக்குள் இமைக்கின்ற கரிசனத்தில்
தோள்தொட்ட தாரென்று திரும்பும்போது, ஒரு
சொர்க்கமே தோழியாய்ச் சிரிக்கும்போது
கோள்தொட்டு வந்த என் கொஞ்சல்களில், ஒன்றைக்
கொத்துமல ராயவள் முகரும்போது
எல்லோரும் மிதக்கிறோம்
எல்லைகள் விண்டுபோய் தொல்லைகள் இல்லாத
ஏகாந்த வானத்தில் மேகத்தின் பிஞ்சுபோல்
எல்லோரும் மிதக்கிறோம்
(2)
எல்லோரும் கனக்கிறோம்
யாருமே நம்மை இழக்காத போதும்
யாரையோ மெளனமாய் நாம் இழக்கும் போதும்
எல்லோரும் கனக்கிறோம்
சொன்னசொல் நில்லாமல் குடையும்போதும்
சொல்லாத சொல்லொன்று சுடும்போதிலும்
இன்னவிதம் தொடருமென நினைத்ததெல்லாம், ஓர்
இழைமாறி இருள்நெஞ்சில் படரும்போதும்
நின்றதரை காலடியில் அதிரும்போதும், ஓடும்
நிழல்நின்று பரிகாசம் செய்யும்போதும்
சென்றகணம் மீளுமா? அதைமறந்து, மனம்
தெருவோரப் பிச்சைபோல் கெஞ்சும் போதும்
அலைபோலத் துன்பங்கள் வீடுவந்து, உயிரை
அள்ளாமல் நகைசெய்து விலகும்போதும்
சிலைகளின் சிதிலம்போல் கிடந்ததெல்லாம், ஒரு
சீற்றத்தில் வாளேந்திப் பாயும்போதும்
மலைதேடிப் பாய்ந்துவரும் மழைகளெல்லாம், ஏனோ
மத்தியில் வெய்யிலில் காயும்போதும், ஒரு
நிலையறிய மாட்டாத நிலையொன்றுதான், இங்கு
நிஜமென்று தலையின்றி ஆடும்போதும்
எல்லோரும் கனக்கிறோம்
யாருமே நம்மை இழக்காத போதும்
யாரையோ மெளனமாய் நாம் இழக்கும் போதும்
எல்லோரும் கனக்கிறோம்
(3)
நாமே நமக்குச் சுமையானால்
நரகம் அதுபோல் வேறில்லை
நாமே நமக்குச் சுவையானால், அந்
நலமே சொர்க்கம் வேறில்லை
சிலநேரம் தனிமையே இனிமைதரும், அதுவே
சிலநேரம் தவிடுபொடியாய் ஆக்கிடும்
பலவேறு பறவைகள் வாழ்ந்தகூடு, மரம்
தீப்பற்றும் போதுசுடு காடாகிடும்
நிலையான நிலையொன்று வாழ்விலில்லை, இந்த
நிஜம்கண்ட நெஞ்சுயர்ந்து தாழ்வதில்லை
அலைகளை வேடிக்கை பார்த்தபடியே, படகில்
அசையாமல் செல்வதே நமதுவேலை
கண்முன்பு காண்பதோ கால்பங்குதான், இன்னும்
கருவுள் மிதப்பதோ பெரும்பங்குதான்
அண்டத்தைப் பிண்டத்தில் கொண்டாடுவோம், இந்த
அல்லலும் இன்பமும் நம் எல்லைகளா?
அண்டங்கள் யாவையும் சுமையின்றியே, நாம்
அகமென்னும் துளையினில் ஏந்தும்போது
திண்ணையெது பெருவானம் காலை நீட்ட?
எங்கமிழ? எங்குபோய் நாம் மிதக்க?
நாம்யார் எனநாம் அறிந்திடவே
நம்முன் வாழ்க்கை விரிகிறது
நாம்யார் என்நாம் அறிகையிலே
வாழ்க்கை நம்மில் மிதக்கிறது!
22.10.2014 / புதன் / 19.27
— சக்தி சக்திதாசன்.
ஒளிரும் தீப ஒளியில்
கருகும் தீய எண்ணங்கள்
மிளிரும் இந்த வேளையில்
பொழியும் ஆனந்த உணர்வுகள்
விடியும் பொழுதோடு ஒரு
வெளிச்சப் பொழுதென
மலரும் தீபாவளி அதனோடு
புலரட்டும் பொன்னான காலம்
தேசத்தின் காவலில் நின்று
நேசத்தின் வாயிலைத் திறந்து
பாசத்தின் முகத்திரை கொண்டு
வீசட்டும் வாழ்த்துகள் இன்று
இருளைக் கலைத்திடும் நேரம்
ஒளியை ஈந்திடும் காலம்
இல்லங்கள் தோறும் ஏற்றிடும்
உள்ளங்கள் மலர்ந்திடும் தீபங்கள்
கொடுமைகள் அழிந்திடவும் எங்கும்
அஹிம்சைகள் தழைத்திடவும்
புரிந்திடும் அர்த்தங்கள் கொண்டு
எரியட்டும் தீபங்கள் இன்று
இருப்பவர் உள்ளங்கள் எல்லாம்
இரக்கத்தை மனதினில் ஏற்றி
இல்லாதோர் இல்லங்கள் தோறும்
இன்பத்தை இரந்திட வேண்டும்
வளமான வாழ்க்கையைக் கண்டோர்
வழங்கட்டும் கருணையை ஒளியுடன்
வருமிந்த தீபாவளித் திருநாள்
விளம்பட்டும் பொதுநலக் கருத்தை
அன்பினிய இதயங்கள் அனைத்திற்கும்
அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்
அணையாது என்னுள்ளத்து தீபம்
அதுதானே மாறாத நேசம்
அன்புடன்
சக்தி சக்திதாசன் குடும்பம்
KESHAV TOP-ANGLE திருமால் சூப்பர்….
———————————————————————–
’’நூல்எண்எண் பாரதி நாயகன் நாபியில்,
தாள்முன்னம் கோலத் திருமகள், -மால்வண்ணம்,
மேல்வண்ண மாய்த்தந்தோய், மெய்மறந்தேன், நந்தகி,
வாள்மின்னும் தீபா வளிக்கு’’….கிரேசி மோகன்….
TOP-ANGLE-சொன்னது சு.இரவி….
கிரேசி மோகன்
மைகொண்ட கண்ணாள், மகாலஷ்மி கொஞ்சிடும்,
வைகுண்ட வாசியவன் வாசுதேவன், -பொய்கொண்ட,
பூமியைப் பாராமல், பொய்யுறக்கம் போடுகிறான்,
சாமிக்கு சுப்ரபாதம் சொல்”….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
கேசவ் ,பகவான் ரமணர் இது போலத்தான் பசு லஷ்மிக்கு கரஸ்பரிஸ தீக்ஷை அளித்தார், அதன் அந்திம நேரத்தில்….
‘ஆனை முகமேறி, ஆயர் கொழுந்தவன்,
தூணை நிகர்த்த துதிக்கையை, -சோணை,
மகரிஷி போல, சுகமாய்த் தடவி,
அகருசி ‘நானை’ அளிப்பு’….கிரேசி மோகன்….
— எஸ் வி வேணுகோபாலன்.
மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்
மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில்தான் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது பிரிவு நிகழ்ந்தபோது, மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் மிகவும் நொறுங்கிப் போயிருக்கிறார். அத்தனை நெகிழ்ச்சியான அன்பு வளையத்திற்குள் தமது இறுதிக் காலத்தை நிறைவு செய்து மறைந்திருக்கிறார் ராஜம்.
நேற்று இரவு சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தபோது, அற்புத மனுஷி அவர்களது முகத்தைக் கடைசியாகப் பார்க்க இயலும் என்ற நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்துவிட்டிருந்தது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி இரா தெ முத்து அவர்கள் நேற்று பிற்பகல் சொல்லியிருந்தார், புற நோயாளிகள் பிரிவில் தலைமை மருத்துவர் மல்லிகேசன் அவர்களைச் சந்தித்தால், ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய உதவுவார் என்று. புறப்படுமுன் தீக்கதிர் தோழர் கவாஸ்கர் அவர்களிடம் கேட்டபோது, ஜி பிளாக் செல்லவும் என்று அவரும் அலைபேசியில் வழிகாட்டி இருந்தார்.
நான் சென்ற சமயம், புறநோயாளிகள் பகுதியின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தன. நேரம் கடந்துவிட்டிருந்தது. ஜி பிளாக்கின் மையப் பகுதியில் எனக்கு உடனே சென்று கேட்க தோன்றிய இடம், செவிலியர் அறை. அங்கேதான் அந்த நேயமிக்க செவிலியர் ஜெயஸ்ரீ அவர்களைச் சந்தித்தேன். மிகச் சுருக்கமாக எனது வேண்டுகோளை நான்கு சொற்களில் தெரிவித்தேன். ஹாலில் அமர்ந்திருங்கள், சார் கிட்ட பேசிவிட்டு சொல்றோம் என்றார்.
நான் வந்து உட்கார்ந்த அடுத்த நிமிடத்தில் அவர் என்னை நோக்கி நடந்துவந்தபோது நான் அந்த நொடியின் நூற்றில் ஒரு பங்கு அளவிற்குள் குழப்பத்தில் தவித்தேன். ஆனால், அவர், “வாங்க போய்ப் பார்க்கலாம், சார் பர்மிஷன் கொடுத்திட்டாங்க” என்றார்.
அந்தப் பிரிவிலிருந்து வெளியே வந்து ஒரு திருப்பத்திற்குப் பிறகு சிறிய நடை நடந்தால் மார்ச்சுவரி பகுதி வருகிறது. அந்த கால, இட இடைவெளிக்குள் எனக்குத் தெரிந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களது ஆளுமை குறித்து அவரோடு பகிர்ந்து கொண்டே நடந்தேன். நாளை அல்லது மறுநாள் வந்தாலும் வேறு யாரும் பார்க்க முடியுமா என்று கேட்டேன்…உறவினர், தெரிந்தவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் காலை ஒன்பது மணிக்குமேல் மாலை 5 அல்லது 6 மணிக்குமுன் வந்தால் நிச்சயம் மல்லிகேசன் சாரை சந்தித்தாலே போதும், உடனே அனுமதி கிடைத்துவிடும். சென்று பார்க்கலாம் என்றார் ஜெயஸ்ரீ. இன்னும் மூன்று மாதங்கள் வரை உடலை ஆராய்ச்சிக்குக் கொடுக்குமுன் பார்க்கலாம் என்றும் சொன்னார்.
‘மேஸ்திரி கிட்ட சொல்லி இருக்கோம், அவர்தான் வந்து காண்பிக்கவேண்டும், கொஞ்சம் உள்ளே காத்திருங்கள்’ என்று வேறோர் அறையைத் திறந்து உட்காரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களுக்குள் திருப்பால் வந்துவிட்டார்.
பிறகு குளிர்பதனம் செய்யப்பட்டிருந்த அறைக்குள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த உடல்கள் இருந்த ஓர் இழுவறைக்குள் புத்தம்புதிதாகச் சூட்டப்பட்டிருந்த பெரிய மலர்மாலையை அணிந்தவண்ணம் ராஜம் கிருஷ்ணன் உடலைப் பார்த்தேன்…மிகப் பெரும் வரலாறு ஒன்றை அந்தச் சிறு பெட்டி தன்னுள் எப்படி வாங்கி வைத்திருக்கிறது என்று ஒரு கணம் பார்க்கையில் சற்று மனம் நெகிழ்ந்துபோனேன்.
உப்பளம் தொழிலாளர் கதையை எழுதிய எழுத்தாளர், பாரதியை அப்படியே உள்வாங்கிக் கொண்டாடிய பெண்மணி, விவசாயிகள் எழுச்சியை, சாதாரண மக்கள் வாழ்க்கையை வாசக பெருந்திரளுக்குப் படைத்த மகத்தான எளிய மனுஷி உறக்கத்தில் இருப்பதுபோல் ஒரு பட்டுச் சொப்புக் குழந்தை போல் தெரிந்தார் அந்த இழுவறையில். நான் தலையசைத்ததும் அந்த இழுவறை மூடப்பட்டது. ஒரு சிறிய தீப்பெட்டியை மூடியதும், அப்பாவி போல தீக்குச்சிகள் உள்ளே மறைந்துவிடுவது மாதிரி அந்தப் பேருடல் அந்த அறைக்குள் ஒளிந்து கொண்டு கண்ணகன்றது.
தாளமாட்டாத உணர்வுகளின் விளிம்பில், திருப்பால் அவர்களது கைகளில் என் கண்களைப் பொத்திக் கொண்டு கொஞ்சம் மீள நினைத்தேன். இரு கரம் கூப்பி ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்…இந்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என்றேன். ஒரு குழந்தையைப் போலத்தான் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறோம் சார் என்றார் ஜெயஸ்ரீ.
மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் எப்படி நேரப்படி உணவு, மருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்து கொண்டே இருப்பார், முக்கிய தினங்களில் தமது இல்லத்திலிருந்து உணவு எடுத்துக் கொண்டுவந்து ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு உண்ணக் கொடுப்பார், முந்தைய இரவு இப்படி நேரும் என்று எதிர்பாராது கலங்கிப் போனார் என்பதை அறிந்து மேலும் நெகிழ்ந்தேன்….
ராஜம் கிருஷ்ணன் மிக உயர்ந்த மனிதர் என்றேன்….” நான் அந்த அம்மாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன் சார்” என்றார் திருப்பால்.
தனது எழுத்துக்களைக் கூட நாட்டுடைமை ஆக்கிவிடவேண்டும் என்று எப்போதோ வேண்டுகோள் வைத்தவர் என்றேன்…
“ஆமாம் சார், ஒரு பேப்பர் பேனா போதும் அவங்களுக்கு, எழுதிக் கொண்டே இருப்பாங்க எதையோ” என்றார் திருப்பால். பாட்டி, பாட்டி என்று கொண்டாடி இருக்கின்றனர் ஊழியர்கள் அவரை. மிகச் சாதாரண உழைப்பாளி மக்களுக்காத் தான் எழுதினர் அவர் என்றேன் நான். இன்னும் யாராவது வருவாங்களா சார் என்று திருப்பால் கேட்டார். வாய்ப்பில்லை என்றேன். நாளைக்குக் கூட வரலாம் சார். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் வரை பார்க்க முடியும் என்று சொன்னார்கள்.
இருவருக்கும் மீண்டும் வணக்கமும், நன்றியும் தெரிவித்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினேன். எனக்கு முன்பாக இரவு நீண்டிருந்தது நடைபாதையில். ஆனாலும், மருத்துவமனையின் அறைகளில் இருந்து வெளிச்சம் சிந்திக் கொண்டுதான் இருந்தது….மருத்துவமனை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஓர் இளம்பெண் எதிரே டார்ச் விளக்கு ஒன்றை ஏந்தியபடி கடந்து சென்றார் என்னை.
படம் உதவிக்கு நன்றி: http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/10/141021_rajamkrishnan
-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்
தீபாவளி என்றால்
தித்திப்பு மனதில் வரும்
தெருவெங்கும் மக்களெலாம் 
பெருமகிழ்வு கொண்டிடுவார்!
கோபங்களைத் தவிர்த்து
குற்றங்களை மறந்து
தீபமிட்டு வழிபட்டு
சிறப்புடனே மகிழ்ந்து நிற்பார்!
அடக்கி ஒடுக்கி நின்று
ஆணவத்தின் தலை ஏறி
அமைதியைக் குலைப்பதிலே
ஆருக்கு என்ன பயன்?
மற்றவரை வாழவிட்டு
வம்புதும்பு தனையொதுக்கி
நற்கருணை யோடிருந்தால்
நலந்தானே யாவருக்கும்?
இக்கருத்தை உள்ளடக்கி
எங்கள் தீபாவளியுளதை
எல்லோரும் மனதிற்கொளின்
இனித்திடுமே தீபாவளி!
ஏழ்மை நிலை ஒழியவேண்டும்
இரக்ககுணம் ஓங்கவேண்டும்
தாழ்வுமனம் ஓடவேண்டும்
தலைநிமிர்ந்து வாழவேண்டும்!
ஊழ்வினையை நம்பிநம்பி
ஒதுங்கிநாம் நின்றிடாமல்
வாழும் மனம் வந்துவிடின்
மலரும் நல்ல தீபாவளி!
பட்சணமும் செய்ய வேண்டும்
பட்டாசும் வெடிக்க வேண்டும்
கஷ்டமின்றி வாழ நாங்கள்
கடவுளிடம் வேண்ட வேண்டும்!
இஷ்டமுடன் யாவரையும்
ஏற்று நிற்கும் மனமும்வேண்டும்
துஷ்டரையும் துணிவுகொண்டு
தூயராக்க முயலவேண்டும்!
மட்டில்லா மகிழ்ச்சி என்றும்
வந்துகொண்டே இருந்துவிடின்
வாழுகின்ற நாட்களெல்லாம்
மலர்ந்திடுமே தீபாவளி!
பெண்ணடிமை போகவேண்டும்
பெண்பிறந்தால் போற்றவேண்டும்
மண்ணிலவர் நல்லவண்ணம்
வாழும்நிலை வளரவேண்டும்!
உண்ணுகின்ற உணவுமுதல்
ஊற்றெடுக்கும் ஆறுவரை
பெண்ணாகப் போற்றுகிறோம்
பிறகுதான் தூற்றுகிறோம்!
மனக்கதவைத் திறவுங்கள்
மங்கையரை மதியுங்கள்
மங்கையர்கள் மகிழ்ந்திட்டால்
மலர்ந்திடும் நற்தீபாவளி!
மஞ்சளொடு குங்குமமும்
மல்லிகையும் அலங்கரிக்க
மங்களமாய் பெண்கள்வரின்
மலர்ந்திடுமே தீபாவளி!
பெண்ணவளின் பெருமையினைப்
பேணிவிடும் வேளையிலே
மண்ணுலகில் தீபாவளி
மலர்ந்திடுமே நாளெல்லாம்!
–தமிழ்த்தேனீ
ஆடியிலே காற்றடிக்கும்
அம்மியையே பறக்க வைக்கும்
புரட்டாசியில் பொன்னுருகக் காய்ந்து 
மண்ணுருகப் பெய்யும் என்றெல்லாம்
எதிர்பார்த்துப் பொய்த்த மழை
மானாடி மயிலாடி மற்றவைகள்
தானாடிக் காத்திருந்து காத்திருந்து
ஏமாற்றம் தந்த மழை
இயல்பான சுழற்சியினால்
இயற்கையின் எழுச்சியினால்
திரண்டெழுந்த கார்முகிலின்
கருணையினால் ஐப்பசியில் அடை
அடையாய் அடர்ந்து பெய்த மழை
காரணமாய் ஆதவனே நனைந்தான்
ஐப்பசியின் அடை மழையில்
ஆதவனே நனைந்தான்!
உதய சூரியனோ மறையும்
சூரியனோ உலகிலே உண்டோ?
ப்ரபஞ்சம் சுழலுவதால் தோன்றி
மறைவதுபோல் மாயம்
காட்டுகிறார் சூரியனும் சந்திரனும்!
ஆதவனே நீராடும் ஐப்பசியில்
மானிடரே நாமும்தான்
தீபாவளித் திருநாளில்
கங்கையின் புனித நீரால்
நீராடி மகிழ்ச்சியில் நனைவோமே!
நாருசிக்கும் பலகாரம்
அருந்தியே மகிழ்வோமே!
ஒரு வருடம் காய்ந்த சூரியன்
ஒரு நாளில் நனைந்தான்
சூழ்நிலையின் குளிராலே
நடுநடுங்கும் சூரியனும்
குளிர்காயத் தீபங்கள் ஏற்றியே
ஒளியும் ஒலியும் காண…
நம் நாட்டுப் பட்டாசும் மத்தாப்பூ
புஸ்வாணம் ஏற்றியே மகிழ்வோமே!
விண்முட்டும் ராக்கெட்டு இங்கிருந்தே
விட்டு அத்துணை கிரகங்களையும்
ஆராய்ந்தே அங்கிருக்கும் ரகசியங்கள்
அதிசயங்கள் இங்கிருந்தே அறிவோமே!
சூரியனே நனைந்தான் நாமும்
தான் நனைந்தோம் கூட உள்ள
மக்களும் நனைந்தாரே
அவருக்கும் குளிர்தானே
நாமெடுக்கும் ஆடைகள்
விதவிதமாய்ப் பலகாரம்
குளிர் நீக்கும் பட்டாசு
அத்தனையும் மொத்தமாய்
ஓரிடத்தில் குவித்து வைத்து
ஒன்றாக எரியவிட்டால்
உலகமே வெடிந்து போகும்
வாங்கி வந்த அத்தனையும்
பங்கு போட்டுப் பிரித்தெடுத்து
அவருக்கும் அளித்தால் மகிழ்வாரே
அவர் மகிழ்ந்து புன்னகைத்தால்
அகிலமும் ஒளி பெறுமே!
நாகேஸ்வரி அண்ணாமலை
சென்ற வாரம் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பலருக்குப் பெரியாரைப் பற்றி நல்ல புரிதல் இல்லை போல் தெரிகிறது. முடிந்த அளவு பெரியாரைப் பற்றிய சரியான கணிப்பைக் கொடுக்க முனைந்ததின் விளைவே இந்தக் கட்டுரை. பெரியாரைப் பற்றி ஒன்றும் தெரியாத இளம்தலைமுறையினருக்கு ஒரு முன்னுரையாக அமையும்.
பெரியார் என்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1879-இல் ஈரோட்டில் ஒரு பணக்கார வணிகரின் மகனாகப் பிறந்தார். அவருடைய சிறு வயதில் வைஷ்ணவப் புரோகிதர்கள் சிலர் அவர் வீட்டிற்கு வந்து சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு அவருடைய தந்தையின் விருந்தோம்பலை அனுபவித்துவிட்டுச் சென்றனர். அப்போதிலிருந்து பெரியார் பிராமணர்களுக்கு ஏன் இத்தனை உபசாரம், ஏன் இத்தனை மதிப்பு என்று எண்ண ஆரம்பித்தார். அவர்கள் செய்தது அத்தனை பெரிய காரியமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போதே பிராமண எதிர்ப்பு அவர் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. வயது வந்தபிறகு ஒரு முறை காசிக்குச் சென்றபோது பிராமணர்களுக்கு உணவளித்த இடத்தில் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்ற காரணத்திற்காக இவருக்கு உணவு வழங்கப்படவில்லை. அன்றிலிருந்து சமூகத்தில் ஏன் பிராமணர்களுக்கு உயர்ந்த இடம் என்று ஆராய ஆரம்பித்தார்.
பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கலந்துகொண்டார். சேரன்மாதேவியில் இருந்த குருகுலப்பள்ளியில் பிராமண மாணவர்களுக்கும் பிராமணரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டதை எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பெரியார் பிராமணரல்லாத ஒருவரை ஆதரித்தார். ஆனால் காங்கிரஸில் இருந்த பல பிராமண வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரித்த பிராமணர் ஒருவர் வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸில் பிராமணரல்லாதவர்களின் செல்வாக்கு ஒரு போதும் ஏற்படப் போவதில்லை என்று முடிவுசெய்து காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.
சமூகத்தில் மிகுந்த ஏற்றத்தாழ்வு இருப்பதையும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதையும் உணர்ந்து எல்லோரும் சமம் என்ற உண்மையையும் எல்லோருக்கும் சுயமரியாதை வேண்டும் என்பதையும் தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார். ஆண்டாண்டு காலங்களாக சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை பிராமணர்கள் மட்டுமே படித்து இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அவர்கள் தரகராக இருப்பதை எதிர்த்தார். மதத்தின் பெயரால் – கடவுளுக்கு மிக அருகில் பிராமணர்கள்தான் இருக்கிறார்கள் என்று பலரையும் எண்ணவைத்து – பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதை மாற்ற முயன்றார். இதைத்தான் பிராமண எதிர்ப்பு என்று இன்றும் பலர் எண்ணுகின்றனர். மதத்தின் பெயரால் பிராமணர்கள் மக்களிடம் மூட நம்பிக்கைகளை வளர்த்ததால் இந்து மத எதிர்ப்பை ஆரம்பித்தார். மூட நம்பிக்கைகளில் ஒன்று பிராமணர்களுக்குத் தானம் செய்து தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடலாம் என்பது. வாழ்க்கையில் எல்லா அட்டூழியங்களும் புரிந்துவிட்டு கோவிலில் காணிக்கை செலுத்தி இறைவனை ஏமாற்றிவிடலாம் என்பது இன்னொன்று.
காலனீய காலத்தில் அரசுப் பதவிகளிலும் சட்டம், கணக்கு, மருத்துவம் போன்ற உயர் தொழில்களிலும் சிறுபான்மையராக இருந்த பிராமணர்களே ஆதிக்கம் செலுத்திய நிலை மாறி பெரும்பான்மையோருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்றும் நினைத்தார். ஜாதிகளில் ஏற்றத் தாழ்வு இருந்ததால் ஜாதி ஒழிப்பையும் தன் கொள்கைகளில் சேர்த்துக்கொண்டார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு பிராமணரே கூறியதைப் போல்தான் பெரியாரும் ஜாதிகளை ஒழிக்க முயன்றார். பெரியாரின் பிராமண எதிர்ப்பு, மத ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பவை இப்படிப் பிறந்தவைதான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்பது பெரியாரின் கொள்கைகளில் ஒன்று. கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அடிபணிய வேண்டியதில்லை. ஏனென்றால் எல்லோரும் பிறப்பில் சமம். மூடப் பழக்க வழக்கங்களை மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதற்கு மிகவும் முயன்றார்.
எல்லோரும் சமம் என்று கூறியபோது பெண்களும் ஆண்களுக்குச் சமம் என்றார். விதவை மறுமணம், பெண்கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
சமூகத்தில் ஒரு சாரார் தாழ்ந்த நிலையிலும் ஒரு சாரார் உயர்ந்த நிலையிலும் இருக்கும் அவலத்தை மாற்றிச் சமூக நீதி ஏற்பட்ட பிறகுதான் அரசியல் சுதந்திரம் வேண்டும் என்று நினைத்ததால்தான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் முன் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார். ஏற்கனவே உயர்ந்த பதவிகளில் இருந்த பிராமணர்கள் பிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நீட்டித்துக்கொள்வார்கள் என்று பயந்துதான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய நாளைத் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இது சரியோ தவறோ; இது சமூக நீதிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டும். எப்போதுமே பிரிட்டிஷார் இந்தியர்களை ஆண்டுகொண்டிருக்க வேண்டும் என்பது அவர் நோக்கமல்ல.
அரசியலில் ஈடுபட்டு பணம் நிறைய சம்பாதித்து அரசியல் அதிகாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைக்கவில்லை. மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைய வேண்டும், பிராமண ஆதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக உள்ள மதத்தையும் ஒழிக்க வேண்டும், ஜாதிகள் ஒழிய வேண்டும், சமூகத்தில் எல்லோருக்கும் சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பவையே பெரியாரின் கொள்கைகளின் அடிப்படை.
-ரா.பார்த்தசாரதி
மக்களுக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்த பண்டிகை
எல்லோரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளிப் பண்டிகை
சந்தோஷமும் உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!
விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து
மகிழ்வுடனே புத்தாடை உடுத்தி இனிப்பினைப் பகிர்ந்து
பெரியவர்களிடம் வாழ்த்தும் நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும் ஒன்றாய்க் கலந்து கொண்டாடும் தீபாவளி!
நாட்டில் உள்ளவர்கள் பலவிதமாய்க் கொண்டாடும் தீபாவளி
வடக்கே விளக்கு பூஜை எனக் கொண்டாடும் தீபாவளி
இல்லத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி
புன்சிரிப்புடன் மன நிறைவாய் வாழ்த்துப் பெறும் தீபாவளி !
வெடியும் சரமும் மத்தாப்பும் கையில் ஏந்துவோமே
வெடியின் சப்தமும் சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பினைக் காண்போமே!
மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே
சங்கு சக்கரம் புஸ்வாணப் பூக்களின் சிதறலைக் கண்டு களிப்போமே!
அசுரன் நினைவாக நாம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகின்றோம்
மனித உருவில் உள்ள அசுரர்களை அழிக்க நாம் திட்டமிடுவோம்!
பார்வையற்றவர்கள் விடுதிக்கும் முதியோர் இல்லத்திற்கும் செல்வோமே
அவர்களுடன் இனிப்பினைப் பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!!
கிரேசி மோகன்
கன்னிப்பெண் ராதைகைத் தாம்பால் கட்டுண்டு,
பின்னிப் பிணைந்த கண்ணனவன் -முன்னம்
உரலிழுத்த ந்யாபகம் உந்த உருள
மருள முழித்தனள் மாது’’….கிரேசி மோகன்….
கண்ணிநுண் தாம்புக்கும் கட்டுண்டோன், கன்னிப்பெண் ராதைக்கும் கட்டுண்டோன்….
— எஸ் வி வேணுகோபாலன்.
திரைப்படப் பாடலிலேயே முழு கதையைச் சொல்வது இங்கே தான் இருக்கிறது…என்று ஒரு முறை கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். அவர் உலகப் படங்களோடு தமிழ்ப் படங்களை மட்டும் ஒப்பிட்டாரா, பொதுவாக இந்திய மொழிப் படங்களைப் பற்றிய கருத்தா அது என்று தெரியவில்லை. அடுத்தது, திரைப்படங்களில் பாடலுக்கு என்ன தேவை என்பது. அப்படியானால் பாடல் என்ற ஒன்று எப்படி உள்ளே புகுந்தது என்பது மூன்றாவது கேள்வி. திரைப்படப் பாடலைச் சுற்றி இன்னும் இப்படி ஒரு கொண்டாட்டம் இருக்கிறது எப்படி என்பது நான்காவது அம்சம்.
பாடல்கள் நமது பிறப்பிலிருந்து நம்மைத் தொடர்கின்றன. சொல்லப் போனால் தாயின் கருவறையில் இருக்கும்போதிலிருந்தே! பிறகு அவை இறுதி வரை தொடர்கின்றன என்பது முக்கியமானது. களிப்புற்று வாழும் ஒரு மன நிலை பாடல்களில் சிறக்கிறது. இந்தக் களிப்பு ஆனந்தக் களிப்பாகவும் இருக்கலாம். துயரத்தின் பெருக்காகவும் இருக்கலாம். இன்பத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, துன்பத்தின் பிரதிபலிப்பாகவும் கூட இசை மனிதர்களது உள்ளத்திலிருந்து புறப்படுகிறது. இது பண்பாட்டின் அசைவன்றி வேறென்ன ?
மன்னன் பரிசு கொடுப்பான் என்றெண்ணி அவனை இந்திரன், சந்திரன் என்று பாடுகிற புலவர்கள், அந்த மடையன் யாதொன்றும் வழங்காது வேறு பக்கம் திரும்பிக் கொள்ளும் போது அவனை வசைபாடியும் கவிதை பாடிவிட்டுத் தான் அடுத்த வேலைக்குப் போயிருக்கின்றனர்.
‘அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும், ஆழ்ந்த துயிலினிலே அமைதியைக் காணட்டும்,’ என்பது கவியரசு கண்ணதாசனின் மிகவும் பிரபலமான கவிதை….உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் பார்த்து அவர் எழுதியது அது. பெரிய மனிதனாக வளர்ந்து அடையப் போகும் துன்பங்கள் இன்னதின்னதென்று வரிசையாகச் சொல்லிச் சென்று, அதனால் அவன் இப்போதாவது நிம்மதியாகத் தூங்கட்டும் என்று முடித்திருந்தார் அவர். ஆனால் சில நாட்கள் கழித்து ஒரு காய்ச்சலில் அந்தக் குழந்தை மரித்துப் போனபோது அவர் மிகவும் அதிர்ந்து போய்விட்டார்…..’அறம் பாடி விட்டேனோ, அறியேன் யான், சிறுகுருவி, திறம் பாட மாட்டாமல் செத்த கதை பாடுகிறேன்’ என்று மீண்டும் ஒரு கவிதை எழுதினார்.
கவிதையும், பாடலும், பழமொழிகளும் இசையோடு இசைந்த – இயைந்த வாழ்க்கையாக நமது பண்பாட்டுக் கூறுகள் அமைந்திருக்கின்றன. அவற்றின் பிரதிபலிப்புகள் திரைப்படங்களிலும் வெளிப்படுவதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. பேசும் படம் வரத் தொடங்கிய காலத்தில் பாடல்களும் சேர்ந்தே வரத் தொடங்கிவிட்டன. பாடல்களுக்கிடையில் கொஞ்சம் வசனம் என்று சொல்லும் அளவுக்கு மிக அதிகமாகப் பாடல்கள் இடம் பெற்ற படங்களும், பாடலே இல்லாத படம் என்ற அறிவிப்போடு வந்த மிகச் சில படங்களுமாக திரைப்பட வரலாறு இருக்கிறது. இன்னார் பாடல் எழுதியது, இவர் இசையமைத்தது, இவர்கள் பாடியது என்று சொல்லத் தக்க அளவில் விளம்பரப் படுத்தப் பட்டு வெற்றியடைந்த படங்கள் பலவுண்டு. பாடல்கள் திரைபப்டத்தின் முக்கிய அங்கமாகி நிலைத்துவிட்டன என்று தான் தோன்றுகிறது.
ஒரு படத்திற்கான திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டு, யார் யார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற தேர்வும் முடிவானபிறகு பெரும்பாலும் முதல் கட்ட வேலையாக நடைபெறுவது பாடல் பதிவு தான். கடந்த பல ஆண்டுகளாக, இசை வெளியீடு என்பது தான் ஒரு திரைப்படம் குறித்த முதல் பேச்சாக ரசிகர் மத்தியில் வந்து இறங்குகிறது. அதற்குமுன்பாகவே, பாடல் ஒலிப்பதிவுடன் தொடக்கம் என்ற விளம்பரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு படத்தின் பாடல்கள் ‘ஹிட்’ ஆவது திரைப்பட வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகப் பார்க்கப் படுகிறது. படம் வெளியாகும்போது திருட்டு சி டி வெளியாவது எத்தனை வேதனையோடு பார்க்கப் படுகிறதோ, அதே போல் பாடல் வெளியீடு நடக்குமுன், இணையதளத்தில் பாடல்கள் வெளியாவதும் அதிர்ச்சி அளித்துவிடுகிறது. மிக அண்மையில் கூட இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. பாடல்கள் வகிக்கும் இடம் மிக மிக நுட்பமானதாகிறது.
ஒரு படத்திற்கு மொத்தம் எத்தனை பாடல்கள் தேவைப்படுகின்றன என்பதை இயக்குனர் கலந்தாலோசித்து பாடல்களுக்கான ‘சிச்சுவேஷன்’ எத்தனை என்று முடிவெடுக்கிறார். பிறகு மெட்டுக்குப் பாட்டோ, பாட்டுக்கு மெட்டோ இசை அமைப்பாளரின் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. (நீங்கள் மெட்டுக்குப் பாட்டு எழுதுகிறீர்களா, பாட்டுக்கு மெட்டா என்ற கேள்வி கேட்டபோது, கவிஞர் வாலி சொன்னார், நான் துட்டுக்குத் தான் பாட்டு எழுதுகிறேன் !). இயக்குனர் கூறும் சிச்சுவேஷனை மனத்தில் நிறுத்தி இசையமைப்பாளர் தத்தகாரத்தில் (தான தன தந்தன தானா தானே தானா…என்பது மாதிரி) ஒவ்வொரு பாடலுக்கும் மெட்டு போட்டு முடித்ததும், கவிஞர் நுழைகிறார்.
கால ஓட்டத்தின் வேகத்தோடு ஒத்திசைவான சொற்களும், கற்பனையும், இசை இன்பமும் சேரும் போது அந்தப் பாடல் புகழ் பெறுகிறது. நிலைத்து விடுகிறது. இதற்கான உழைப்பு, நேரம், அர்ப்பணிப்பு, அனுபவம், ஆற்றல், வாய்ப்புகள் இவை எல்லாம் சிறப்பாக அமையும்போது பிறக்கும் பாடல்கள் என்றென்றும் பேசப்படுகின்றன…பாடப் படுகின்றன.
டைட்டில் போடும்போதே இசை துள்ளும் பாடல் ஒன்று சுழலத் தொடங்குவதிலிருந்து ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் ஒவ்வொரு தேவையின் அடிப்படையில் இடம் பெறுகின்றன. கோப்பையில் ஊற்றும் தண்ணீர் வழிந்து ஓடுவது போல, தேவைக்கு அதிகமாகவும் சில நேரம் ததும்புகின்றன. உணர்ச்சிப் பாடல்கள், காதல் கீதங்கள், உருக்கமான வரிகள், சிந்தனை தூண்டும் உருவகங்கள் என பாடல்கள் பலவிதமாகப் புனையப்படுகின்றன.
தொடக்க காலத்தில் மரபு இலக்கணத்திற்குட்பட்ட செய்யுளாக, கவிதைகளாக இசைக்கப்பட்ட பாடல்கள் காலப் போக்கில் வெவ்வேறு திசைவழி புறப்பட்டுப் பாய்ந்து செல்லத் தொடங்கிவிட்டன. பல்லவி, சரணங்கள் என்று படியமைக்கப்படும் இந்தப் பாடல்கள் சுத்த கர்நாடக ராக வடிவில் இசைப்பதும் உண்டு, அல்லது மெல்லிசை என்று சொல்லப்படும் வகையில் சற்றே தளர்த்திய இலக்கணங்களோடு பாடல்கள் தயாராவதுமுண்டு. வெவ்வேறு வகைப் பண்களின் வடிவிலும் திரை இசைப் பாடல்கள் எழுதி இசையமைக்கப் பட்டிருக்கின்றன.
எத்தனை ஆயிரம் பாடல்கள்…எத்தனை எத்தனை இனிய குரல்கள்…என்னென்ன புதுப்புது சங்கதிகள்…..எவ்வளவு விதவிதமான உணர்வுகளின் வெளிப்பாடுகள்….தமிழ்த் திரைப் பட வரலாற்றில் பாடல்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
அழகியல் பாடல்கள்:
இயற்கை வருணனை, அழகின் ஆராதனை மட்டுமல்ல, பக்தி வெளிப்பாட்டிலும், உறவுகள் ரசனையிலும் கூட அருமையான அழகியல் கவிதைகள் மின்னுவதைப் பல பாடல்களில் பார்க்க முடியும். செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் ), இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்), கல்லிலே கலை வண்ணம் கண்டான் (குமுதம்), மதுரையில் பறந்த மீன் கொடியை (பூவா தலையா), அன்பு நடமாடும் கலைக்கூடமே (அவன் தான் மனிதன்), உலகம் பிறந்தது எனக்காக (பாசம்)….என்று போகிறது இந்தப் பட்டியல்.
காதல் பாடல்களில் அழகின் ரசனையை வெளிப்படுத்தும் அருமையான வரிகளை பல கவிஞர்கள் படைத்திருக்கின்றனர். நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (நேற்று இன்று நாளை- புலமைப் பித்தன் ) என்ற பாடலில், சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து என்று தொடங்கும் முதல் சரணத்திலிருந்து, வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து என்று வரும் கடைசி சரணம் வரை சிறப்பான வருணனைகள். இந்திரா படத்தில் இடம் பெற்ற நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே என்ற பாடல் (வைரமுத்து) உள்பட வித்தியாசமான வகையில் எழுதப் பட்ட பல பாடல்கள் உண்டு.
தத்துவப் பாடல்கள்:
வாழ்வே மாயம் என்று எழுதினால் தான் தத்துவப் பாடல் என்ற சாதாரண புரிதல் பெரும்பான்மை ரசிகர்களிடம் நிலவுகிறது. வாழ்வியலைக் குறித்த பல்வேறு பார்வைகள் உண்டு,ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவம் என்பது புரியாதவர்கள், எதுவும் நிலைக்காது என்று எழுதிவிட்டால் அதுதான் தத்துவம் என்றும் அதுவே உலக வாழ்வின் ரகசியம் என்றும் எடுத்துக் கொள்கின்றனர். கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் என்றால், கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் (வானம்பாடி), ஆட்டுவித்தால் யாரொருவர் (அவன் தான் மனிதன்), ஆறு மனமே ஆறு (ஆண்டவன் கட்டளை), இரண்டு மனம் வேண்டும் (வசந்த மாளிகை), இது மாலை நேரத்து மயக்கம் (தரிசனம்), நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் (நெஞ்சில் ஓர் ஆலயம்)….என்று ஒரு நீள் வரிசை உண்டு. இப்படியே வாலி (கரை மேல் பிறக்க வைத்தான் – படகோட்டி, உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா – சிம்லா ஸ்பெஷல், ஒன்ன நெனச்சு பாட்டு படிச்சேன் – அபூர்வ சகோதரர்கள்), புலமைப்பித்தன் (நான் யார் நான் யார் – குடியிருந்த கோயில்), என பலரது பாடல்களைக் கூற முடியும்.
வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டும் பாடல்கள், மாற்றத்தைச் சொல்லும் பாடல்கள் ஆகியவை வந்தாலும் அவற்றை தத்துவப் பாடல்களாகக் கருதாத போக்கு இருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பல பிரபல பாடல்கள் தத்துவப் பாடல்கள் தானே….சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா, திருடாதே பாப்பா திருடாதே போன்றவை இதில் அடங்கும். மகாகவியின் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே கவிதை, பாரதி திரைப்படத்தில் ஹரீஷ் ராகவேந்தர் குரலில் மிகவும் அருமையாக ஒலிக்கிறது. மாயாவாத சிந்தனைக்கு எதிரான கவிதை அது.
உருக்கமான பாடல்கள்:
காலம் கடந்து நிற்கும் பல திரைப்பாடல்கள் இந்தப் பட்டியலில் தான் அதிகம் உண்டு. காதல் தோல்வி, நண்பனின் துரோகம், பிரிவாற்றாமை, ஏமாற்றம் போன்ற பல நிலைமைக்கு ஏற்றபடி எழுதப்படும் பாடல்கள் கேட்பவரை உருக வைக்கின்றன. இசையின் நெகிழ்ச்சியான தன்மையும், பாடல் வரிகளின் பொருத்தமான வரிகளும் உள்ளத்தை உருக வைத்துவிடுகின்றன.
ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள் ) பாடல் டி எம் சவுந்திரராஜன் குரலின் வசீகர உருக்கத்தோடு, அதன் தொடக்க ராக ஆலாபனையிலிருந்து படிப்படியாக உருக்கத்தின் உயர் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட்டு நிறைவடைகிறது. பால் போலவே, வான் மீதிலே என்ற தொகையறாவில் தொடங்கும் (உயர்ந்த மனிதன் – வாலி) எழுதியிருக்கும் நாளை இந்த வேளை பார்த்து…என்ற பாடல் பி சுசீலா குரலில் கேட்பவரை உலுக்கி எடுக்கும். கண்ணதாசனின் கடைசி திரைப்பாடல் என்று சொல்லப்படும் கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை), நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு), வாடாத ரோசாப்பு (கிராமத்து அத்தியாயம்), உனக்கென இருப்பேன்…(காதல்), உருகுதே மருகுதே (வெயில்) (பாடல்கள் இரண்டுமே நா முத்துக்குமார் ), போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா -வைரமுத்து), என அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை உணர்வுகளின் உருக்கத்தைக் கொட்டி கொடுக்கும் பாடல்கள் பலவும் உண்டு.
டி எம் சவுந்திரராஜன் (கற்பனைக்கு மேனி தந்து, ஏட்டில் எழுதி வைத்தேன்), பி பி ஸ்ரீநிவாஸ் (மௌனமே பார்வையால், மயக்கமா கலக்கமா, யார் சிரித்தால் என்ன…), எஸ் பி பாலசுப்பிரமணியம் (மஞ்சம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா, உச்சி வகிந்தெடுத்து, காதல் ரோஜாவே ), வாணி ஜெயராம் (மணமகளே உன் மணவறை கோலம்), சித்ரா (நானொரு சிந்து, கண்ணாளனே), ஹரிஹரன் (விடுகதையா, உயிரே, கல்லை மட்டும் கண்டால்), ஷங்கர மகாதேவன் (சந்தன தென்றலை ), சொர்ணலதா (போறாளே பொன்னுத்தாயி, நீ எங்கே )….என அந்த நாளைய பாடகர்களிலிருந்து இந்த காலத்தின் பாடகர்கள் வரை நெகிழ்ச்சியுறும் பாடல்களை இசைக்கவே செய்திருக்கின்றனர்.
உனது மலர் கொடியிலே, எனது மலர் மடியிலே (பாத காணிக்கை) என்று, பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி இருவரின் குரல்கள் பெண் மனத்தின் பாடுகளை எடுத்து வைக்கும் பாடல் ஒலித்தால் யார்தான் உருக மாட்டார்! காதோடு தான் நான் பாடுவேன் என்ற (வெள்ளிவிழா) பாடல் எல் ஆர் ஈஸ்வரியின் முத்திரை பாடல் அல்லவா…
ஆட வைக்கிற பாடல்கள்:
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் (கண்ணன் என் காதலன்) பாடல்களுக்கு தமிழில் பஞ்சமில்லை. தாளக்கட்டு தொடங்கும்போதே தலையை ஆட்டவும், மடியில் உள்ளங்கையைப் புரட்டிப் போடவும், உடலே குலுங்கிக் குலுங்கி எழுந்து நின்று ஆடவும் வைக்கும் பாடல்கள் எண்ணிக்கைக்குள் அடங்குமா!
இன்று வந்த இந்த மயக்கம் (காசேதான் கடவுளடா) பாடலின் இசை தொடங்கும்போதே அது நடனப் பாட்டு என்று தெரிந்துவிடாதா…யாரடி நீ மோகினி (உத்தம புத்திரன்), கண்ணும் கண்ணும் கலந்து (வஞ்சிக்கோட்டை வாலிபன்), ஆடாத மனமும் உண்டோ (மன்னாதி மன்னன்), ஓம் நமசிவாயா (சலங்கை ஒலி ), வெள்ளிச் சலங்கைகள் (காதல் ஓவியம்), மனம் விரும்புதே உன்னை (நேருக்கு நேர்), கண்ணாளனே (பம்பாய்)… என்று எத்தனை எத்தனை கவிஞர்களின் படைப்பில், இசை அமைப்பாளர்களின் உழைப்பில், பாடகர்களின் குரல் நர்த்தனத்தில் எத்தனை எத்தனை அற்புதப் பாடல்கள்.
நகைச்சுவை பாடல்கள்:
நையாண்டி, கேலி, எள்ளல், நகைச்சுவைக்கும் தமிழ்த் திரை கொண்டாட்டமான பாடல்களை வழங்கியிருக்கிறது. கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு அள்ள அள்ளக் குறையாத இன்பங்களை விளைவிக்கும் நகைச்சுவை ரசனைப் பாடல்களை நமக்குத் தந்து சென்றிருக்கின்றனர்.
காதல்வயப் பட்ட பெண்ணைப் பார்த்த மோகத்தில் அவளைக் கண்ணே, தங்கமே, தேனே ….என்றெல்லாம் வருணித்து அவள் அதைக் கண்டுகொண்டும் அறியாதவள் மாதிரி வம்புக்கிழுக்கவும் சமாளிப்பது மாதிரி பாடிச் செல்லும் ‘கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா (அம்பிகாபதி) பாடல், ஆஹா ஆஹா இன்றும் என்றும் என்றென்றும் துள்ளாட்டம் போட்டுக் கேட்க வைப்பது ஆயிற்றே. ஒவ்வொன்றாய்த் தப்பி வரும் என் எஸ் கே, கடைசியில் டி ஏ மதுரத்திடம் சிக்கிக் கொள்ளும் இடம் சிருங்கார நகைச்சுவை:
மொகரையைப் பாரு
ஐயய்யோ மொகரையைப் பாரா? மொகரையைப் பாரு, ஆஹா மொகரையைப் பாரு, ஓஹோ மொகரையைப் பாரு, மொக மொகமொ மொகரைய சரி போ சரி
இந்தாங்கையா, இனிமே ஒண்ணும் மாத்த முடியாது. சத்தியமா சொல்லுங்க, இப்போ தேனேன்னு என்னத் தானே சொன்னீங்க?
ஹங் ஹஹ ஒன்ன இல்லம்மா, எனக்கு ஒடம்பு சரியில்லே, வைத்தியர் ஒரு பஸ்பம் கொடுத்திருக்காரு, அதைக் கொழச்சு சாப்பிடருதுக்குத் தேன் வேணும்
அது சரி, எதிரிலிருந்தும் தொடப் பயந்தேனேன்னு சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தமாம்?
எதிரிலே இருக்கு தொட முடியல்லே.
என்னது?
இங்கே இல்லே, தோட்டத்துலே ஒரு மரத்திலே, உச்சியிலே இருக்கு தேன் கூடு , அது தொடப்போனா அடிக்குமோ, இல்லே கொட்டுமோ அப்படீன்னு பயமாயிருக்கு.
ஹஹங் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா என்னா மூளை என்னா மூளை
சந்திரபாபு பட்டியலில், பொறந்தாலும் ஆம்பளையா தொடங்கி எத்தனை எத்தனை பாடல்கள்! நாகேஷ் குரலுக்கான நகைச்சுவை பாடல் பட்டியலும் குபு குபு நான் எஞ்சின் (மோட்டார் சுந்தரம் பிள்ளை) என்று விரிவது. விஸ்வநாதன் வேலை வேண்டும் (காதலிக்க நேரமில்லை), அடுத்தாத்து அம்புஜத்த (எதிர் நீச்சல்), என்று எப்போதும் கேட்டு ரசிக்க பாடல்கள் உண்டு.
சகோதரத்துவ பாடல்கள்:
எந்த மதம் சார்ந்த அன்பருக்கும் எந்த மதம் என்ற பாகுபாடு தோன்றாத வண்ணம் எத்தனை எத்தனை மதுர கீதங்களைத் தமிழ் திரை இசை அளித்திருக்கிறது! எல்லோரும் கொண்டாடுவோம் (பாவ மன்னிப்பு), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே (மூன்று தெய்வங்கள்) என விரிகிற வானவில் அது. கடவுளைக் கேள்வி கேட்கும் பாடல்கள் அதிகம் தோன்றவில்லை என்றாலும், இயற்கையைப் பாடும் பல பாடல்களின் எதிரொலியில் சில அறிவார்ந்த கேள்விகளை எழுப்பவே செய்திருக்கின்றன.
சமூகத் திருவிழாக்கள் ஒவ்வொன்றுக்கும் பாடல் உண்டு. தை பொங்கலு பொங்கலு (மகாநதி), உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி (கல்யாணப் பரிசு) என்கிற வரிசையிலும் ஏப்ரல் முதல் தினம் முட்டாள்கள் தினத்துக்கும் ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல் என்றொரு சாதி என்ற பாடல் உண்டு. லாட்டரி பற்றியும் விட்டு வைக்காத தமிழ்த் திரைப் பாடல்கள், சைக்கிள் ஓட்டவும், கார் கற்கவும், ஓட்டப் பந்தயத்துக்கும், கபடி கபடி விளையாட்டுக்கும்…. எல்லாவற்றுக்கும் பாடல்களைத் தந்திருக்கிறது.
எந்த மன நிலையிலும் கேட்க:
கதையோட்டத்தினோடு எழுதப்படும் பாடல்கள் அந்தந்தச் சூழலில் இசைக்கும் ராகம், எந்த மன நிலையிலும் கேட்கவும் அல்லது அந்தந்த மன நிலைக்கு ஏற்பவும் அமைகின்றன. இப்படியோர் தாலாட்டு பாடவா (அவர்கள்) என்று கேட்கும் தமிழ்த் திரைப்பாடல் உலகம், மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் (கண் சிவந்தால் மண் சிவக்கும்) என்று புரட்சி பேசவும் செய்கிறது. கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்) என மென்காதலை இயம்புகிறது. சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா (டவுன்பஸ்) என்று தாபத்தோடு கேட்கிறது. கண்ணிலே இருப்பதென்ன (அம்பிகாபதி) என வித்தியாசமான குரலில் கொஞ்சிப் பேசுகிறது. இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வரும் யாரையும் ஏமாற்றாத ரசனைகளின் காட்டாறு அது. சிலிர்க்க வைக்கும் மலையருவி அது. கலைகளின் விரிந்த வானம் அது. சுவையடர்ந்த பெருங்காடு அது.
நன்றி:தீக்கதிர் தீபாவளி மலர்: 2014