நனைந்த சூரியன்!

தமிழ்த்தேனீ

ஆடியிலே காற்றடிக்கும்
அம்மியையே பறக்க வைக்கும்
புரட்டாசியில் பொன்னுருகக் காய்ந்து          suninrain
மண்ணுருகப் பெய்யும் என்றெல்லாம்
எதிர்பார்த்துப் பொய்த்த மழை
மானாடி மயிலாடி மற்றவைகள்
தானாடிக் காத்திருந்து காத்திருந்து
ஏமாற்றம் தந்த மழை
இயல்பான சுழற்சியினால்
இயற்கையின் எழுச்சியினால்
திரண்டெழுந்த கார்முகிலின்
கருணையினால் ஐப்பசியில் அடை
அடையாய் அடர்ந்து பெய்த மழை
காரணமாய் ஆதவனே நனைந்தான்
ஐப்பசியின் அடை மழையில்
ஆதவனே நனைந்தான்!

உதய சூரியனோ மறையும்
சூரியனோ உலகிலே உண்டோ?
ப்ரபஞ்சம் சுழலுவதால் தோன்றி
மறைவதுபோல் மாயம்           
காட்டுகிறார் சூரியனும் சந்திரனும்!

ஆதவனே நீராடும் ஐப்பசியில்
மானிடரே நாமும்தான்
தீபாவளித் திருநாளில்
கங்கையின் புனித நீரால்
நீராடி மகிழ்ச்சியில் நனைவோமே!
நாருசிக்கும் பலகாரம்
அருந்தியே மகிழ்வோமே!

ஒரு வருடம் காய்ந்த சூரியன்
ஒரு நாளில் நனைந்தான்
சூழ்நிலையின் குளிராலே
நடுநடுங்கும் சூரியனும்
குளிர்காயத் தீபங்கள் ஏற்றியே
ஒளியும் ஒலியும் காண…
நம் நாட்டுப் பட்டாசும் மத்தாப்பூ
புஸ்வாணம் ஏற்றியே மகிழ்வோமே!

விண்முட்டும் ராக்கெட்டு இங்கிருந்தே
விட்டு அத்துணை கிரகங்களையும்
ஆராய்ந்தே அங்கிருக்கும் ரகசியங்கள்
அதிசயங்கள் இங்கிருந்தே அறிவோமே!

சூரியனே நனைந்தான் நாமும்
தான் நனைந்தோம் கூட உள்ள
மக்களும் நனைந்தாரே
அவருக்கும் குளிர்தானே
நாமெடுக்கும் ஆடைகள்
விதவிதமாய்ப் பலகாரம்
குளிர் நீக்கும் பட்டாசு
அத்தனையும் மொத்தமாய்
ஓரிடத்தில் குவித்து வைத்து
ஒன்றாக எரியவிட்டால்
உலகமே வெடிந்து போகும்

வாங்கி வந்த அத்தனையும்
பங்கு போட்டுப் பிரித்தெடுத்து
அவருக்கும் அளித்தால் மகிழ்வாரே
அவர் மகிழ்ந்து புன்னகைத்தால்
அகிலமும் ஒளி பெறுமே!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *