Blog

  • முரண்கோள் [Asteroid] தாக்குதலைப் புவி மீது தடுக்கத் திசை திருப்பும் நாசாவின் பெருஞ் சவால் சுயநகர்ச்சி விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft]

    Asteroid hunting -2

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y0bkYH1Y3cQ

    http://www.space.com/25589-asteroid-impacts-on-earth-more-powerful-than-nuclear-bomb-video.html

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ex00D-IvauM

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XLqj1P7psyU

    http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded

    [Meteor Strike Injures 1200 People in Russia]

    வக்கிரக் கோள்கள் வழிதவறி
    வையத்தில் மோதிச்
    சுக்கு நூறாக்கப்
    பக்கத்தில் வருகின்றன !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆய்ந்தார்
    நாசா பொறியியல் விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீனை
    விரட்டி வாலின்
    தூசியைப் பற்றி
    காசினிக்குக் கொண்டு வந்தார் !
    வக்கிரக் கோள் மாதிரியை
    வையத்தில் இறக்கி வைத்தது
    ஜப்பான் ‘கழுகு’ !
    முரண்கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டது
    நாசாவின்
    “புலர்ச்சி” விண்ணுளவி
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !
    இரு விண்வெளி விமானிகள்
    2025 ஆண்டுக்குள் பயணம் செய்து
    முரண்கோள் ஒன்றில்
    தடம் வைப்பார்
    தளவுளவி இறக்கி
    உளவு செய்யப் பயிற்சி
    அளிக்கிறது நாசா,
    வையத்தை மோத வரும்
    வக்கிரக் கோளை நாசா குழு
    திக்கு மாற்றி
    பூமி காக்கப் போகுது !

    +++++++++++++++++

     

    Grand Challenge Spacecraft

     

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

    டிமிட்ரி ரோகோஜின்  [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]

    எதிர்பாராத சிதைவுகளைப் பூமியில் உண்டாக்கும் முரண்கோள்களின் அபாயத்தைக் கண்டறிய பொதுநபர்  பேரளவில் எங்களுக்கு உதவி செய்ய வழிகள் உள்ளன.  உலக மாந்தரின் ஆக்கபூர்வச் சிந்தனைகள், செயற்பாடுகளைப் பயன்படுத்தி,  முரண்கோள் தகவல் அறிவிப்பில் கலந்து கொண்டு, நமது பூமியை ஓர் பாதுகாப்பு அரங்கமாகச் செய்திடப் பங்கேற்க வேண்டும்.

    ஜேஸன் கெஸ்லர்  [Program Executive, NASA Asteroid Grand Challenge [AGC] Spacecraft] 

     

     

    NASA ARM BOOK

    “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப்பொழியும்.இந்தநிகழ்ச்சியில்பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

    நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

    முரண்கோள் திசை திருப்புத் திட்டங்களோடு அடுத்து 2020 ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் அனுப்பும் ஆழ்வெளி முயற்சிகளையும் விருத்தி செய்து,  முரண்கோள் மோதுதலிலிருந்து பூமியைக் காக்கும் செயல்களைத் தீவிரமாக மேற்கொள்ளப் போகிறோம்.

    வில்லியம் கெர்ஸ்டென்மையர் [NASA Human Exploration & Operation Mission]

    சூரிய மண்டலத் தோற்ற காலத்தின் எச்சத் துண்டுகள் நமது பூமியை நோக்கி நெருங்கி வரும் போது தொலைநோக்கிகள் மூலம் கூர்ந்து ஆராய்வது நம் அறிவைப்பெரிதும்  விரிவாக்கி யுள்ளது. முரண்கோள்களை நெருங்கி உளவுசெய்து, சோதிப்பது, நமது புவியைப் பாதுகாக்க உதவும் சவாலான சாதனைக்கு நம்மைத் தயார் செய்யும்.  அத்தகைய அரியபணிகளுக்கு ஏற்ற சாதனங்களில் ஒன்றுதான், ஸ்பிட்ஸர் விண்ணோக்கி. [Spitzer Observatory]

    ஜான் குருன்ஸ்ஃபெல்ட் [NASA Science Mission Directorate] 

    Mission Planning

    பூமியைத் தாக்கவரும் முரண்கோள் போக்கைத் திசைமாற்றும் நாசா விண்ணுளவி

    2014 ஜூன் 19 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பூமியை நெருங்கும் முரண்கோள்கள் [Asteroids] போக்கைத் திசை திருப்பும் சுயத்தடுப்பு விண்கப்பலைத் [Robotic Spacecraft] தயாரிக்கத் திட்ட மிட்டிருப்பதாய் வான்பௌதிக வெளியீட்டில் [Astrophysical Journal] அறிவித்துள்ளது.  தயாராகும் அந்த விண்கப்பலின் பெயர் : முரண்கோள் பெருஞ்சாதனைச் சவால்விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft].   அத்திட்டப்படி நாசா தான் ஏவிய சுயத் தவிர்ப்பு விண்ணுளவி [Robotic Spacecraft]  மூலம் பாதை தவறிப் பூமியைத் தாக்க நெருங்கி வரும் முரண்கோளைத் திசைமாற்றி நமது நிலவை நிரந்தச் சுற்றுவீதியில் வலம்வரச் செய்கிறது.  நாசாமுரண்கோள்திசைமாற்றுத் திட்டத்தின் பெயர்  [Asteroid Redirect Mission (ARM)].  2019  ஆம் ஆண்டில் நாசா அந்தச் சுயத் தவிர்ப்பு விண்கப்பலைத் தயாரித்து ஏவத் திட்ட மிட்டுள்ளது. அதற்குச் செல்வாகும் நிதித்தொகை 4.9 மில்லியன் டாலர் [2014 நாணய மதிப்பு].  அப்போது சோதனைக் கோர் முரண்கோளை நாசா தேர்ந்தடுக்கும்.  முதலில் சிறிய முரண்கோளை விண்வெளியில் கண்டுபிடித்து, திசை திருப்பச் சோதிக்கும்.  பின்னர் பெரும்முரண்கோளைத் தொட்டுமாதிரி எடுத்துச் சோதித்து, பூமிக்கு நெருங்கி வருவதை, வசப்படுத்தி திசைமாற்றும்.

    2014 ஜூன் 9 ஆம் தேதிவரை  11,140 மேற்பட்ட முரண்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பூமிமேல் மோதி அபாயம் விளைவிக்கலாம் என்று கருதப்படுபவை :  1483.  சிறுநிறை, பெருநிறை முரண் கோள்களைத் திசை திருப்ப  இவ்விருமுறைகளும்32 அடி [10 மீடர்] அளவுக்குக் குன்றிய விண்கற்களையே தேர்ந்து, நமது  நிலவைச் சுற்றிவரக் கட்டுப்படுத்தும். 2014 ஆண்டில் தான் நாசா விஞ்ஞானிகள் இவ்விரு முறைகளில் [சிறுநிறை அல்லது பெருநிறை முரண்கோள் திசை திருப்பல்] ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். 2013 ஜூனில்தான் நாசா முரண்கோள் பெருஞ்சவால் விண்கப்பல் [Asteroid Grand Challenge Spacecraft] திட்டத்தைத் தீவிரமாக மேற்கொள்ள தீர்மானித்து, இப்போது விருத்தி செய்து வருகிறது.

    Arizona Crater

     ரஷ்ய தேசத்தில் நேர்ந்த விண்கல் பாய்ச்சல் அபாயம்

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது.  30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு.  வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT].   வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன.  50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார்.  விளைந்த சேதாரச் செலவு:  சுமார் 33 மில்லியன் டாலர்.  பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry]  கூறுகிறார்.

    Asteroids-1

    அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது.  வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது.  அந்தஒளிமயமானதோரணக்காட்சிபூமியின்ஈர்ப்புவிசையால் குவிந்து வளைந்து வந்தது.  இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது !  150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !   இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !

    Location of Impact
    Russian Meteor piece

    விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண் பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”  என்று  ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி,  டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்தச் சிறப்பு அறிவிப்பு  மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார். மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  இத்தகைய மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Meteor hits Russia

    2013 பிப்ரவரி 15

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் ஒலி மிஞ்சிய வேகத்தில்  பாய்ந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது !

    Meteor damage -2

    தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள்  [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை.   அவை விண்வெளியி லிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்கமுடியா.   விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா !   விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும்.   மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள்  மேன்மைப் படுத்த வேண்டும்.

    Damage Potential

    இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது.   வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும்.   அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும்.   அந்தத் துணைக்கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவுகணைகள் அனுப்ப வேண்டும்.   அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும்,  பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது.  விண்கல்லின்திசைமாற்றஏற்றகாலப்பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம்  பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.

    ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி.  சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார்.  நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார்.  முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க  முயன்றார்.  இதுவரைஎதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.

    Antarctica Meteorite
    Impact of a Meteor

    1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி  ஏற்பட்டுள்ளது.  அதற்குப்பிறகு2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது.  “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

    இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

     

    unnamed (1)
    ++++++++++++++++++++
    தகவல்:  

    1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
    2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
    3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
    4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded 
    5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
    6.  http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
    7.  http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/
    8. http://en.wikipedia.org/wiki/Tunguska_event  [February 19, 2013]
    9. Russia Calls for United Meteor Defense [February 26, 2013
    10. Meteorite’s Powerful Blast Explosion Due to Space XCollisions [February 28, 2013]
       Antarctica Team Finds Largest Chondrite Meteorite in Past 25 Years [March 1, 2013]
    11. http://www.mnn.com/earth-matters/space/stories/asteroid-hunting-group-says-powerful-asteroids-strike-earth-surprisingly#  [April 24, 2014]
    12. http://phys.org/news/2013-06-nasa-asteroid-grand.html  [June 18, 2013]
    13. http://www.huffingtonpost.com/2013/06/19/nasa-asteroid-grand-challenge-space-rocks_n_3461730.html  [June 19, 2013]
    14. http://www.nasa.gov/mission_pages/asteroids/initiative/#.U6XmOjC_gcE [Jnue 19, 2014]

    +++++++++++++++++

    S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  June 21, 2014

    Attachments area
    Preview YouTube video NASA’s Asteroid Grand Challenge

    NASA’s Asteroid Grand Challenge

    Preview YouTube video NASA Seeks Bounty Hunters for Asteroids – $35K in Awards | Video

    NASA Seeks Bounty Hunters for Asteroids – $35K in Awards | Video

    Preview YouTube video Planetary Society Hangout: Asteroid Astronomy with Andy Rivkin

    Planetary Society Hangout: Asteroid Astronomy with Andy Rivkin

    Preview YouTube video Meteorite crash in Russia: Video of meteor explosion that stirred panic in Urals region

    Meteorite crash in Russia: Video of meteor explosion that stirred panic in Urals region
    Share
  • திருமால் திருப்புகழ் (119)

    கிரேசி மோகன்

    Grace to the fruit seller. Detail from Srimadbhagavatham. Oil on canvas - Keshav
    Grace to the fruit seller. Detail from Srimadbhagavatham. Oil on canvas – Keshav

     

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————
    தொண்டைக் கட்டு வந்தபோது வேண்டுதல் வெண்பா
    ——————————————————————————————-

    Vittala. Oil on canvas. #krishnafortoday - Keshav
    Vittala. Oil on canvas. #krishnafortoday – Keshav

     

    கொண்டை மயிற்பீலி, கொண்டென் கரகரா,
    தொண்டை சரிசெய்வாய் துப்புரவாய், -பண்டரி,
    விட்டலா பாண்டுரங்கா, வேய்ங்குழல் நாதமாய்,
    கொட்டவை வார்த்தைகளை சட்னு….(227)

    குரல்வளை தன்னை, கிரகணம் பிடிக்க,
    பொருள்விளங் காயாச்சு பேச்சு, -அருள்மழையை,
    தொண்டையில் பெய்திடுவீர், பண்டரி நாதரே,
    விண்டுரைக்க வைப்பீர் வசனம்….(228)

    வலம்புரியோ(டு) அன்று, களம்புகுந்தோன் இன்று,
    நலம்புரிந்தான் பேசிட நன்றாய், -வளம்புரிந்தான்,
    சும்மா இருந்த, சிருத்தொண்டை ஊதினான்,
    அம்மா அறிந்தேன் அரி….(229)

    வாத புரீசா, வ்ரஜகுல விஸ்வாசா,
    சேதம் அசேதனம் செய்திடுவோய், -தோது,
    புரியெந்தன் தொண்டை, சரியாகக், காக்கும்,
    அரியுந்தன் தொண்டைநீ ஆற்று….(230)

    பாடிப் பெறமோட்சப், பாதை இருக்கையில்,
    நாடிப் பறந்தேன் நவநீதா, -சாடிக்,
    கெடுக்கும் குரலெனக்கு, கொஞ்சமும் வேண்டாம்,
    முடக்கி மவுனியாய் மாற்று….(231)
    ——————————————————————————————————-

    என்னதவம் ஆனாலும், எங்கதைச் செய்தாலும்,
    தன்னந் தனியாய்த் தவிக்காதே, -கண்ணனருள்,
    கூட அழைத்துச்செல், கைகூடும் காரியங்கள்,
    மாடுகள் மேய்த்தோனின் பாடு….(232)

    ———————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 9

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 9

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​+++++++++++++++​

    1jay

    2jay

    3jay

    4jay

    Share
  • குருவிக்கூடு!

    எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    குருவி ஒன்று மரத்திலே
    கூடு கட்டி வாழ்ந்தது!                                                    bird nest
    தெருவில் போகும் மனிதரைத்
    தினமும் பார்த்து நின்றது!

    குருவிக் கூட்டில் குஞ்சுகள்
    குதூகலமாய் வளர்ந்தன!
    அனுதினமும் தாயைப் பார்த்து
    அகமகிழ்ந்து நின்றன!

    தெருவில் போகும் மனிதரின்
    தில்லு முல்லு பார்த்ததும்
    திகைப் படைந்த குஞ்சுகள்
    திரும்பித் தாயைப் பார்த்தன!

    தெருவில் சண்டை நடந்திடும்
    தினமும் மனிதர் மோதுவார்
    அதனைப் பார்க்கும் குஞ்சுகள்
    அஞ்சித் தாயைப் பார்க்குமே!

    சண்டை நடக்கும் காரணம்
    சரியாய்த் தெரியாக் குஞ்சுகள்
    மென்று விழுங்கிக் கேட்டிடும்
    மெதுவாய்த் தாயும் சொல்லுமே…

    சிண்டு முடிக்கும் குணமெலாம்
    சீராய் மனிதர் செய்குவர்!
    அண்டை அயலில் உள்ளவர்
    மண்டை உடைத்து நிற்பரே!

    வம்பு தும்பு பேசியே
    வாழ்வு நடத்தும் மனிதரால்
    எங்கும் சண்டை நடக்குதே
    இதனை எங்கு சொல்வது?

    கோள்முடிக்கும் கூட்டமும்
    குறைகள் சொல்லும் கூட்டமும்
    நாள்முழுக்கச் சண்டையை
    நடக்கவிட்டுப் பார்க்குது!

    விலங்கு பறவை என்றெமை
    விலக்கி விட்ட மனிதர்கள்
    விளக்கமின்றி நாளுமே
    வெட்டிக் குத்தி மாள்கிறார்…

    என்று சொல்லிக் குருவித்தாய்
    ஏக்க மூச்சு விட்டதும்
    எல்லாக் குஞ்சும் ஒன்றாக
    இரையைக் கொத்தி நின்றன!

    தாயைப் பார்த்த குஞ்சுகள்
    தயங்கித் தயங்கிக் கேட்டன
    எங்கள் கூட்டை மனிதர்கள்
    ஏறிப் பிடுங்க மாட்டாரா…?

    என்று கேட்டு நிற்கையில்
    எங்கிருந்தோ வந்த கல்
    குஞ்சைப் பதம் பார்த்தது
    குருவிக் கூடும் விழுந்தது!

    விலங்கு பறவை யாவுமே
    விலத்தி நின்ற போதிலும்
    நலங் குறைந்த மனத்துடன்
    நாட்டில் மனிதர் வாழ்வதேன்!?

    Share
  • சந்தோஷம் என்றும் நம் பக்கம்!

    -ரா. பார்த்தசாரதி 

    சந்தோஷம் என்றும் நம் பக்கம்! 
    சந்தோஷம் என்றாலே மனிதனுக்குப் பாதிபலம்!
    அது இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்?
    சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது!
    எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது!
    போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது!

    சூரியனைக்  கண்டால்  தாமரை
    சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்?

    கார்முகில்கள்  திரண்டு  வந்து
    மழை தந்துதான்  பழக்கம்!

    மழையைக்  கண்டால்  மயிலுக்கு
    மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்!

    காட்டில் உள்ள  குயிலுக்கோ
    சந்தோஷத்துடன் கூவித்தான்  பழக்கம்!

    கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை
    எல்லாம்  நன்மைக்கே  எனத் தெளிந்தால்
    வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்!

     

    Share
  • என்ன தான் இருக்கிறது வேதத்தில்? –11

    –சு.கோதண்டராமன்

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 12

    மனிதன் சாகாமலிருக்கலாம்

    4x5 original“சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.” – பாரதி

    பிறந்தவர்கள் சாகாமல் இருக்க முடியுமா? நாம் அறிந்தவரை அது சாத்தியம் இல்லை. சில சித்தர்கள் அவ்வாறு வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. கண்டவர் இல்லை. நான் சாகாதிருப்பேன் காணீர் என்று மார் தட்டிய பாரதிச் சித்தரும் செத்துத் தான் போனார்.

    மனிதனுக்குத் தான் சாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. சாகாமல் இருப்பது சாத்தியம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட பின்னும் சாகா நிலையை வேறு வகையில் அடைய முடியுமா என்று ஆராய்ச்சி செய்ததன் விளைவு தான் வேதத்தில் காணப்படும் அமரத்வம் பற்றிய சிந்தனை.

    தானம் செய்வதும் ஹோமம் செய்வதும் அம்ருதத்தைக் குறித்தே.[1]

    அமரத்துவம் என்பதை எந்தப் பொருளில் வேதம் பயன்படுத்துகிறது என்பதை அறிய மீண்டும் ஆழ்ந்து நோக்குவோம்.

    மரணமும் அமரத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அவை இரண்டும் சகோதரர்கள், ஒரே மரத்தில் அமர்ந்துள்ள இரு பறவைகள் என்பது வேத ரிஷிகளது கருத்து.[2]

    இதனால் தான் நூறாண்டு வாழ்வையும் அமரத்துவத்தையும் வேண்டி இரு விதமான பிரார்த்தனைகள் வேதத்தில் காணப்படுகின்றன.

    ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம்.

    நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக.[3]
    வருணா, எங்களுக்கு மழையையும் அமரத்துவத்தையும் தருக.[4]

    வேதத்தைப் பெரிதும் மதித்த பாரதியும், விநாயகர் நான்மணி மாலை என்ற நூலில், ஒரு பாடலில் “நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்” என்றும், மற்றொரு பாடலில், “நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க” என்றும் வேண்டுகிறார்.

    அவர்கள் நூறாண்டு வேண்டியது உடலுக்கு. அவர்கள் கூறும் அம்ருதம், அமரத்துவம் அல்லது சாகா நிலை என்பது உடல் அழியாமல் வாழ்வது அல்ல. அது உடல் கடந்தது; பாரதி கூறும் அமரத் தன்மையும், மதுரை வீரன் போன்றோர் நாட்டார் தெய்வங்களாக ஆனதும் உடல் அழிவின்மையைக் குறிப்பிடாமல் புகழுடம்பு பெறுவதையே குறிப்பிடுகின்றன.

    வேதம் மூன்று வகையான அமரத்வங்களைப் பற்றிப் பேசுகிறது. முதலாவது சந்ததி மூலம் அடையப்படும் அமரத்வம்.

    அக்னியே, வம்சத் தொடர் அறுந்து போகாமல் எனக்கு அமரத்துவம் தருக.[5]
    “ஆத்மா வை புத்ர நாமா அஸி” என்று சதபத பிராமணமும்[6] கூறுகிறது.

    ஒருவன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்பது பொருள். அதாவது மகன் பிறந்தால், தந்தை புத்துயிர் பெற்று வாழ்வதாகக் கருதப்படுகிறது. இதனால் அமரத்வம் என்பது சந்ததி அறுபடாமல் இருப்பதைக் குறிப்பது புலப்படுகிறது. ஒரு குழந்தையினிடத்தில் அதன் பெற்றோர்களின் குணங்கள் மட்டுமல்ல, அவர்களது மூதாதையர்களின் குணங்களும் திறமைகளும் அடங்கியிருக்கின்றன என்பதால் இக்கருத்து தோன்றியது. மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று சந்ததி நீடிக்க நீடிக்க அவன் தொடர்ந்து வாழ்வதாக, அமரத்துவம் அடைவதாகக் கருதப்படுகிறது.

    இது அனேகமாக எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இத்தகைய அமரத்துவத்தில் சிறப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில், அந்த மனிதன் இறந்த பிறகு சில காலம் அவனது சந்ததியினர் அவனை நினைத்துக் கொண்டிருப்பர், வழிபாடு செய்வர். ஆனால் இது எல்லாராலும் வணங்கப்படும் தேவ நிலையைத் தருவதில்லை.

    இரண்டாவது வகை அமரத்வம் சோம பானம் மூலம் அடையப்படுவது.

    நாங்கள் சோமனைக் குடித்து அமரத்துவம் அடைந்து விட்டோம், எங்களை எதிரிகள் என்ன செய்ய முடியும்?[ 7]

    சோமக் கொடியின் சாறு சோம பானம் எனப்படுகிறது. (இதுபற்றி விரிவாகப் பின்னர் பார்க்கப் போகிறோம்.) இது மனதை விசாலப்படுத்தும் தன்மை உடையது. மனதில் அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியது. இந்த ஆனந்தம் அனுபவிப்பவருக்கு காலம் என்னும் உணர்வு அற்றுப் போவதால் இது ஒரு வகையான அமரத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை சோம பானம் இல்லாமல் யோகப் பயிற்சியின் மூலமும் அடைய முடியும். பானத்தின் அல்லது யோகத்தின் விளைவு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் இருக்கும். இந்த நிலையை அடைந்தவர் தன் அளவில் ஆனந்தமாக இருப்பர். மற்றவர்க்கு இதனால் பயன் இல்லை. எனவே இவர்களது அமரத்வம் வணக்கத்துக்குரிய தேவ நிலையைத் தருவதில்லை.

    இனி மூன்றாவது வகையான புகழ் மூலம் அடைப்படும் அமரத்வம்.

    அவர்கள் புகழ் என்னும் உடையணிந்து அமரத்துவம் அடைகின்றனர்.[8]

    வணங்கப்படும் தேவ நிலைக்கு உயர்த்தும் அமரத்வம் என்பது புகழால் மட்டுமே ஏற்படும். புகழ் எப்பொழுது வரும்? செயற்கரிய செய்தால் தான் வரும். அதுவும் பிறர் நலனுக்காகச் செய்தால் தான் வரும். 100 மணி நேரம் ஒற்றைக் காலில் நிற்பது செயற்கரிய செயல் தான். அதனால் பிறர்க்கு நன்மை விளையுமானால் தான் அது உண்மையான புகழுக்கும் அமரத்வத்துக்கும் காரணமாகும். ரிபு சகோதரர்கள் பிறர் நன்மைக்கான பல அருஞ்செயல்கள் செய்தனர். அதனால் பெரும் புகழ் பெற்றனர். ஸவிதாவால் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். தேவர்களுக்குச் சமானமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையையும் அமரத்துவத்தையும் பெற்றனர் என்று வேதம் கூறுகிறது.

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அம்ருதம் உண்டாயிற்று. அதைக் குடித்ததால் தான் தேவர்கள் சாகாநிலை பெற்றார்கள் என்பது புராணம். அம்ருதம் பற்றி ரிக் வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

    த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.

    இது ஒரு பிரபலமான மந்திரம். ரிக் 7.59.12 இல் உள்ளது. யஜுர் 3.60 இலும் உள்ளது.

    நறுமணமுள்ளவரும் புஷ்டி அளிப்பவருமான முக்கண்ணனை வணங்குகிறோம். வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து விடுபடுவது போல, நாங்கள் மரணத்திலிருந்து விடுபட அவர் உதவுவாராக. அம்ருதத்திலிருந்து விடுபடாமல் இருப்போமாக.

    ம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்று சொல்லப்படும் இதை லட்சக் கணக்கான முறை ஜபித்தோரும் ஹோமம் செய்தவரும் இறுதியில் ஒரு நாள் மரணத்தை அடைந்து தானே தீருகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.

    மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். உடல் அழியாமல் வாழும் வரம் அவர்கள் கேட்கவில்லை. அது யாருக்கும் சாத்தியம் இல்லை என்பது அவர்கள் அறியாதது அல்ல. உடல் அழிந்த பின்னும், ரிபு சகோதரர்களைப் போல தேவ நிலை அடைந்து இறவாப் புகழுடன் விளங்க வேண்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் பொருள். எல்லோரும் ரிபுக்களைப் போல புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ ஆக முடியுமா? படிப்படியாக மனிதன் தேவ நிலையை நோக்கி முன்னேறுகிறான் என்று வேதம் காட்டுவதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

    குறிப்புகள்:
    1 –  8.31.9, 10.62.1
    2 –  1,164.20, 1,164.30
    3 –  2,33.2
    4 –  5,63.2
    5 –  5.4.10
    6 –  சதபத பிராமணம்14.6.4.8.16
    7 –  8,48.3
    8 –  9,94.4

    படம் உதவி: http://commons.wikimedia.org/wiki/File:Amitayus,_the_Buddha_of_Eternal_Life_ca_1625_LACMA.jpg

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 10

    கே.ரவி

    IMG00131-20110425-1932

    தந்தையினும் களிகூரத் தழுவி எங்களைத் தமிழிலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்திய டாக்டர் ஒளவை நடராஜன் போலவே என்னிடமும், சிவத்திடமும் பாசத்தோடு பழகிய இன்னுமோர் இலக்கிய அன்பர், தீபம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த நா.பார்த்தசாரதி.

    514-229x300

    1960-70 களில், ஓரளவு தமிழ் இலக்கிய ஈடுபாடும், லட்சிய தாகமும் கொண்ட இளைஞர்களிடம் நா.பா.வை ப் போலத் தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர் வேறு எவரும் இருந்திருக்க முடியாது. யதார்த்தத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு ஜெயகாந்தன் என்றால், இலட்சியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு நா.பா.! அவருடைய குறிஞ்சி மலர், பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகிய நாவல்களால் பாதிக்கப் படாத இளைஞர்கள் அப்போது வெகு குறைவு.

    suki---siv1

    சிவமும், நானும் நா.பா.விடம் நெருக்கமாகப் பழகித் தமிழ் இலக்கியத்தின் பல நுட்பங்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. பல பட்டிமன்ற மேடைகளில் அவரோடு கலந்து கொண்டு வாதாடியிருக்கிறோம்.

    1971-ல் என்று நினைக்கிறேன், நா.பா. அவர்களுடன் பூனேவுக்கு, (அப்போதைய பூனா) ஓர் இலக்கியக் கூட்டத்தில் உரையாற்ற சிவமும், நானும் சென்றிருந்தோம். பாரதி இளைஞர் சங்கத் தலைவர், பாரதி காவலர் கே.ராமமூர்த்திதான் ஏற்பாடு செய்து எங்களை அனுப்பியிருந்தார். அந்தக் கூட்டத்தில் நா.பா.அவர்கள் ஆற்றிய உரை எங்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியதுடன், கவிதை ரசனையின் புதிய கோணம் ஒன்றைக் கற்றுத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தக் கூட்டத்தில் பாரதியின் கவிச்சொல்லாளுமை பற்றிக் குறிப்பிட்ட நா.பா., பாரதியின் கவிச்சொற்கள் முப்பரிமாணச் சொற்கள் என்று சொல்லி விளக்கினார். ‘வெள்ளிப்பனிமலை’, ‘சுட்டும்விழிச்சுடர்’, ‘சோலைமலரொளி’, இப்படிப் பல எடுத்துக்காட்டுகளை அடுக்கி வைத்தார். மலை, பனிமலை, வெள்ளிப்பனிமலை, என்று மூன்று அடுக்குகளாகக் காட்சி விரியும் அழகை அவர் விளக்கிய விதம் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

    நா.பா.விடம் நல்ல கவிதை ரசனையும் இருந்தது, கவியூக்கமும் இருந்தது. அது என்ன கவியூக்கம்?

    உரைநடையில் ஏதாவது எழுதிக் கொண்டே வரும்போது, திடீரென்று ஓர் உந்து சக்தியால் ஊக்கப் பெற்றுச் சிந்தனையின் முயற்சி இல்லாமலேயே சொற்கள் ஜிவ்வென்று சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடும். ஆங்கிலத்தில் இதை ‘flight’ என்றே குறிப்பிடுவார்கள்.

    உரைநடையில் நான் அதிகம் எழுதியிராத போது, 1980-ல் என்று நினைக்கிறேன், சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்காக பாரதியின் மீது ‘கானப் பறவை’ என்ற தலைப்பில் ஓர் ஒலி-ஒளிச் சித்திரம் எழுதினேன். உரைநடையாக எழுதிக் கொண்டே வந்த போது, என்னையறியாமல் பல இடங்களில் மேற்சொன்னவாறு சொற்கள் சிறகடித்துப் பறந்ததை நான் அனுபவித்தேன். அதைப் படித்துப் பாராட்டித் தேர்வு செய்த தொலைக்காட்சி அதிகாரி, திரு எம்.எஸ்.பெருமாள் (நம்ம சுகி சிவத்தின் மூத்த சகோதரர்), தம் பரிந்துரையில் பல இடங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று: “கவிதை வெறும் ஆற்றல் இல்லை, அதுவோர் ஆற்றாமை”.

    நா.பா.வின் புதினங்களில் இப்படிப்பட்ட இடங்கள் விரவியிருக்கும். “தின்பதற்காக மட்டுமன்றித் தின்னப் படுவதற்காகவே அமைந்த பற்கள்” போல பல உதாரணங்கள் சொல்லலாம். அதையும் தாண்டி, அவருடைய உரைநடைப் புதினத்தில் திடீரென்று செய்யுள் நடையில் ஓரிரண்டு வரிக் கவிதைகளே வந்து விழுவதும் உண்டு. “முத்துநகை பூத்த முகம்” என்ற ஈற்றடியோடு மணிபல்லவத்தில் கனஜோராக வந்து குந்தியிருக்கும் வெண்பாவைச் சொல்வேனா? இல்லை, “சொல்லிவிட்ட பழமையெல்லாம் சீர்திருத்த முன்வந்தான், புல்லரித்து மனம்வாடிப் போகின்றான் போகின்றான்” என்று பொன்விலங்கில் இடம்பெற்ற உணர்ச்சி வரிகளைச் சொல்வேனா? இல்லை, “நிலவைப் பிடித்துச் சில கரைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம், தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு பவளம் பதித்த இதழ்” என்று குறிஞ்சி மலரில் சந்தம் மிடைந்து சுவை யூறிக் கலந்து மணி யாகத் தெறித்த வரி வந்த அழகைச் சொல்வேனா?

    கல்கி தொடங்கிய இந்த உத்தியை நா.பா. மிக அழகாகத் தம் புதினங்களில் பயன்படுத்தியிருந்தார்; புதினம் என்ற பூங்காவில் புதுவெள்ளம் போல் பொங்கிவந்த கவிதைப் பெருக்கு, வாசகர்களைத் திக்கிமுக்காடச் செய்தது.

    ஆனால், புதினங்களில் இடம்பெற்ற உன்னதக் கவிதை வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு அவற்றையெல்லாம் நீட்டி முழுக் கவிதைகளாக்கி அவர் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார். அந்தக் கவிதை நீட்டல்களில் ஆரம்ப வரிகளின் ஜீவன் இல்லை. அந்த உணர்ச்சி வேகம் இல்லை. வெறும் சிந்தனை முயற்சியாகவே அந்தக் கவிதைகள் இருந்தன. படித்துவிட்டுச் சலித்துக் கொண்டேன்.

    அவரைச் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒருநாள் அவர் இல்லத்திலேயே நடந்த கவியரங்கத்தில் நான் கலந்து கொண்டேன். கவிஞர்கள் சொன்ன கவிதைகளை ரசித்துக் கேட்டுவிட்டு அவர் ஒரு சிற்றுரையாற்றினாரே தவிர ஏதும் கவிதை படிக்கவில்லை. கவியரங்கம் முடிந்த பிறகு மெல்ல அவர் அருகில் சென்று ‘நீங்கள் ஏன் கவிதை படிக்கவில்லை’ என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன்.

    ‘நீதான் என் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு வெறும் சிந்தனை முயற்சி கவிதையாகுமா என்று விமர்சனம் செய்தாயே. அது என் மனத்துக்குச் சரியென்று பட்டது. இன்ஸ்பிரேஷன் வராமல் கவிதை எழுதுவது இல்லை என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு உள்ளூக்கமே வரவில்லை, கவிதையும் எழுதவில்லை’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். நான் எப்பொழுது அந்த விமர்சனத்தை அவர் செவிபடச் சொன்னேன் என்று இன்றுவரை ஞாபகம் வரவில்லலை. ஆனால், அவருடைய பெருந்தன்மையால் வாயடைத்துப் போய் அப்போது ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வந்து விட்டேன். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவே இல்லை.

    என்ன சிகாமணி! கவனித்தாயா, கவிதையின் கதை எங்கே போகிறது? நீ ரொம்ப அலட்டிக் கொண்டால் கவிதை வராதுங்காணும். நான் மட்டுமா சொல்கிறேன். காலேஜ் பிரின்ஸிபலே சொல்லிவிட்டார் அப்பா.

    ஆம், வ.வே.சுவும் மிக அழகாகக் கவிதையிலேயே இதைச் சொல்லிவிட்டார். அந்த வரிகளை நான் வேத வாக்காகவே மதிக்கிறேன்.

    “—— ——- ——– —- —– ——– வெறும்
    புத்தியைக் கொண்டு புனைகின்ற கவிதைகள்
    பூஜைக்குச் சேர்வதில்லை — கவி
    ஒத்திகையில் கொஞ்சம் பக்தி சேராவிடில்
    உள்ளம் தொடுவதில்லை.”

    சிகா ஏதோ சொல்ல வாயெடுத்தான். நான் குறுக்கிட்டு, ‘மனோன்மணி எங்கே?’ என்றேன்.

    ‘என்ன ஓய், விவரம் புரியாத வைதிகமாயிருக்கிறீர், எப்பப் பார்த்தாலும் நான் வேறு, மனோன்மணி வேறு என்றே நினைக்கிறீர்! என் பெயரென்ன?’ என்று கேட்டான்.

    ‘சிகாமணி; புத்தி சி கா ம ணி’ என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்லிவிட்டு அவனை உற்றுப் பார்த்தேன். அடாடா! ஒரே கணத்தில் என் நோக்கு விரிவு பெற்றது. கண்டறியாதன கண்டேன். ஆம், சிகாவும், மனோன்மணியும் கலந்த அர்த்தநாரியாக, மாதொருபாகனாக, சிகா-மணியாக என்னெதிரே அவன் விஸ்வரூப தரிசனம் காட்டி மறைந்தான். தரிசனத்துக்குப் பிறகு உடனே எதுவும் சொல்ல வார்த்தை வருமா? பிறகு சந்திக்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • மன நல ஆலோசனை – கேள்வி பதில்கள்

    கார்த்திகேயன்

    கேள்வி : 1

                           என்னுடைய வயது 26. 15 வயதிலேயே என் பெற்றோர் இறந்து விட்டனர். என் உறவினர் வீட்டில் வளர்ந்து கல்லுரி படிப்பு வரை முடித்தேன்.எப்போதும் நான் தனி அறைக்குள்ளே முடங்கிக் கிடப்பேன். யாரிடமும் பேச மாட்டேன் என்னை குடும்பத்திலே ஒரு சிலர் அன்னியர் போல பாவிக்கின்றனர். இதனால் எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லை பாதுகாப்பு உணர்வும் இல்லை. என் மேல் பிரியமாக இருந்த என்னுடைய தாத்தா ஒரு வருடத்திற்கு முன்பு  மாரடைப்பால் இறந்தார். அதிலிருந்து எனக்கு மாரடைப்பு புற்று நோய் வந்து விடுமோ என்ற பயம் வந்தது. டாக்டரிடம் போனேன் அவர் என் பயத்தைப் புரிந்து கொண்டு எல்லா சோதனைகளையும் செய்து விட்டு , எனக்கு உடல் ரீதியாக எந்த கோளாறும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் எனக்கு பயம் நீங்கவில்லை. நான்  பயம் இன்றி வாழ்வது எப்படி?

    பதில் 

                                  எப்போதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் நீங்கள் அனாவசிய பயத்திற்கு உள்ளாகிறீர்கள். மற்றவர்கள் நம்மிடம் எப்படிப் பழகுகிறார்கள் என்பது நாம் எப்படி மற்றவர்களிடம் பழகுகின்றோம் என்பதைப் பொறுத்து அமைகிறது. நீங்கள்  அன்பாக மற்றவர்களுடன் பழகி அவரவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால் உங்களை யாரும் அன்னியராகப் பார்க்க மாட்டார்கள். உங்கள் மேல் பிரியமாக இருந்த தாத்தாவைப் பற்றிய எண்ணம் சுழன்று கொண்டிருப்பதால் நீங்கள் அதிகமாக யாருடனும் பேசாமல் ஒரே அறையில் முடங்கிக் கிடப்பதாலும் உங்கள் தாத்தாவின் இறப்பிற்குக் காரணமான மாரடைப்பு நோய் பற்றி நீங்கள் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்கள். மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட நோயைப் பற்றி அதிகமாக யோசிக்கும் போது நமக்கே அந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்கின்ற பயம் ஏற்படுவது இயல்பு தான். இன்னமும் சொல்லப் போனால் மருத்துவம் படிக்கும் மாணவர்களே கூட பேத்தாலஜி எனப்படும் நோயியல் பாடம் படிக்கும் போது அதில் சொல்லப்படுகின்ற நோய்கள் நமக்கும் இருக்கின்றனவா? என்ற குழப்பத்திற்கு உள்ளாவதுண்டு. எனவே கவலையை விடுங்கள் எல்லோரிடமும் கலந்து பேசிப் பழக ஆரம்பியுங்கள் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதற்கு அல்ல.

    கேள்வி : 2

                                என்னுடைய பையனுக்கு தற்போது வயது 8 ஆகிறது. இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பிற்குச் செல்கிறான். வீட்டில் அமைதியாக இருப்பான். ஆனால் நண்பர்கள் உறவினர் வீட்டிற்கு செல்லும் போது அங்குள்ள பொருட்களை எடுத்து விளையாடச் செய்கிறான் பெரும்பாலும் உடைத்து விடுகிறான் அவன் செயலை தடுக்க முற்பட்டால் ரொம்ப அடம் பிடிப்பான் இதனால் நான் பெரும் மன வேதனை அடைகிறேன் அவனை எப்படி கட்டுப்படுத்துவது?

    பதில் : 2

    இந்த பிரச்சனைக்காக நீங்கள் அதிக கவலைப்பட வேண்டியதில்லை. 8 வயது மகனிடம் உங்களின் மனப்பக்குவத்தை எதிர்பார்க்கக் கூடாது. சிறுவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களைப் பக்குவமாகத் திருத்த வேண்டும். அது எளிது.

                         வீட்டில் அவன் அடங்கி இருப்பதால் அவன் மனதளவில் அடங்கி இருக்கிறான் என்று அர்த்தம் இல்லை. வீட்டில் பொருட்களை உடைத்தால் அடி கிடைக்கும் என்று அவன் தண்டனைக்கு பயந்து அடக்கமாக இருக்கிறான். வெளியே சென்றால் வீட்டில் செய்ய முடியாததைச் செய்யலாம் என நினைக்கிறான். அங்கே நாகரீகம் கருதி அவனை தண்டிக்க முடியாது என கருதுகிறான். ஒரு வேளை நீங்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனையால் உங்களைப் பழிவாங்கும் எண்ணத்தில் இப்படி பிள்ளையை வளர்த்து வைத்திருக்கிறாளே என்ற குறை உங்கள் மீது விழட்டும் என்று கூட அவன் இதைச் செய்யலாம். உங்கள் மகனிடம் அடக்கம் ஒடுக்கமாக இருப்பது நல்ல பண்பு வீடு, வெளி இடங்களுக்கு  எங்கு சென்றாலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்று பக்குவமாக எடுத்து கூறுங்கள். அவனை மிரட்டாமல் ஏன் பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை அமைதியாக விளக்கி என்பதையும் அடுத்த வீட்டிற்கு போய் பொருட்களை உடைப்பதால் அவர்களுக்கும் நமக்கும் ஏற்படும் சிரமங்களையும் உணர்த்துங்கள். இந்தக் குறையை வளர விடாமல் இப்போதே சரி செய்து விடுங்கள்

    கேள்வி : 3

                     என் வயது 40. சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பெரிய பதவியில் இருக்கிறேன். எனக்கு பணம்பெரிய விஷயமில்லை. நான் பாசத்திற்காக ஏங்குபவள். எனக்கு பாதுகாப்புக்கு இருக்கும் ஒரே ஜீவன் என் தாய் .அவருக்கு 65 வயது. நான் இவ்வளவு பெரிய நிலைக்கு வருவதற்கு நான் பட்ட சிரமம் எனக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள் ஏராளம். நான் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னை இழந்து விரக்திக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த போதெல்லாம் என் மீது ஒரு சுடு சொல் கூட பேசாமல், கண்னை மூடி ஆதரித்து ஏற்றுக் கொண்டு என்னை ஆளாக்கிய என் தாய் இப்போது மறதியால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அரை மணி நேரத்திற்கு முன்பு சொன்னதை கூட மறந்து விடுகிறார். பொருட்களை வைக்கும் இடத்தை மறந்து விடுகிறார். எதிலும் விருப்பம் இல்லாமல் யாரிடமும் பேசாமல் இருக்கிறார். சொந்தமாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரின் இறுதி காலம் வரை அவரை ஒரு குழந்தை போல் வைத்து பராமரிக்க விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    பதில் : 3

    உங்கள் தாய் மீது பேரன்பு வைத்திருக்கிறீர்கள். மறதி நோய்க்கு சிறந்த மருந்து அன்பு காட்டுதல் தான்.அதுவே உங்களிடம் அதிகம் இருப்பது உங்கள் அம்மாவுக்கு பலம்.தொடர்ந்து எக்காரணம் கொண்டும் அந்த பாசத்தில் குறைவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளிக்காட்டும் பாசம் அவரால் உணரப்பட வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்கது. அவரால் என்னென்ன வேலையைச் செய்ய முடியும் என்பதை பகுத்து உணருங்கள். செய்ய முடியும் என்கின்ற வேலையை அவர் செய்யட்டும் முடியாததை வற்புறுத்த வேண்டாம். தினமும் அவரிடம் பொறுமையாகப் பேசுங்கள். அவர் சொல்வதை எல்லாம் கேளுங்கள். கோபம் கொள்ளவோ எதிர்த்துப் பேசவோ வேண்டவே வேண்டாம். அவரது மறதியை குறையாக வேறு யாரிடமும் பேசி விடக்கூடாது. அப்படி நீங்கள் பேசி அவர் காதில் விழுந்தால்  மறதி நோய் போய் அதிகப்படவே செய்யும். அவரது நினைவாற்றலை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். வயதுக்கு ஏற்ற உணவை சரியான நேரத்தில் வழங்கி விடுங்கள். அவரது விருப்பங்களை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். தனியாக எங்கேயும் விட வேண்டாம். இவை அனைத்தும் பொதுவான பராமரிப்பு விசயங்கள். மேற்கொண்டு குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் நேரடியாக அணுகுங்கள்.

    Share
  • கவிஞன் யார்

     

    கவிஞ‌ன் என்பவன் யாரடி?

    காணும்   இலக்கணம் கூறடி !

    கலைஞனும் அவனும் ஒன்றடி

    அலையெனும் படைப்புகள் காணடி

     

    கவிதைப் படைப்பவன் கவிஞன் தான்

    கவிதைப் படிப்பவன் கவிஞன் தான்

    கவிதை கொடுப்பவன்  கவிஞன் தான்

    கவிதை ரசிப்பவன்  கவிஞன் தான்

     

    மொழியை மதிப்பவன் கவிஞன் தான்

    மொழியில் மித‌ப்பவன் கவிஞன் தான்

    கலையைக் களிப்பவன் கவிஞன் தான்

    கலையைக் காப்பவன் கவிஞன் தான்

     

    எளிமைப் படைப்பினில் கவிஞன் தான்

    இனிமைப் படைப்பதும் கவிஞன் தான்

    வலிமை வரிகளும் கவிஞன் தான்

    வாழ்த்தி இசைப்பதும் கவிஞன் தான்

     

    வடிவம்      பலவும் அவனெடுப்பான்

    அதனுள்    இருப்பதை அனுபவிப்பான்

    அனுபவந் தானதில் வரிசமைப்பான்

    வரிகளில் பாடல்கள் பிர‌சவிப்பான்

     

    காலம்  அவனுக்கு கைகூலி

    தனிமை அவனுக்கு பொன்வேலி

    காற்று  அவனுக்கு இசைக்கூடம்

    கற்பனை அவனுக்கு  விசைக்கூடம்

     

    அறிந்தாயானால் அவன் வெளிச்சம்

    அல்லவென்றால் நீயிருட்டு

    பழகப்பழக  அவன் புதையல்

    விலகவிலக  உனக்கிழப்பு

     

    எழிலைப் பார்த்து அவனாக்கம்

    ஏழ்மைப் பார்த்து அவனேக்கம்

    இன்னும் ஐயம் தெளியவில்லை?

    என்றால் நீயும் வளரவில்லை

     

    தொட்டு பார்த்தா தீயென்பாய்

    கட்டிப் பார்த்தா கனலென்பாய்

    குதித்து  பார்த்தா கடலென்பாய்

    கடித்து  பார்த்தா  கல்லென்பாய்

     

    நிமிர்ந்து பார்க்கையில் களிறென்பாய்

    நடந்து   பார்க்கையில் புலியென்பாய்

    கலந்து  பார்க்கையில்  மதுவென்பாய்

    வியந்து பார்க்கையில் விண்னென்பாய்

     

    கோள்கள் ஆயிரம்  இருந்தாலும்

    அதிலே புவிபோல் வாழ்வுண்டோ

    படிப்பும் பதவியும் பெற்றாலும்

    வாழ்த்தாதிருப்பதில் வாழ்வுண்டோ

     

    மொழியை வளர்ப்பவன் நீயாயின்

    மொழியின் படைப்பினை ரசிக்காமல்

    மனிதரை பார்த்து  புகழுரைத்தால்

    மறைமுக மான அசிங்கமிது.

     

    கொடுக்கும் மேகத்தை பழிக்காதே

    ஆடும்மயில் திசை பொழியுமது

    கெடுக்கும் மமதையில் இருக்காதே

    ஆடும்வரையது அழிக்குமது!

     

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (112)

    –சக்தி சக்திதாசன்.

    kaviyarasuஅன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். கவியரசர் கண்ணதாசன் பிறந்த மாதத்தின் கடைசி வாரத்தில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    கவியரசர் கண்ணதாசன் என்னுள்ளத்திலே ஏற்படுத்திய தாக்கங்கள் போன்று வேறு எவருமே ஏற்படுத்தியது கிடையாது என்று சொன்னால் மிகையாகாது.

    பதின்ம வயதுகளின் இறுதியில் லண்டனில் காலடி வைத்த எனக்கு ஆன்மீகம், தத்துவம் என்பனவற்றில் அந்தக் காலக்கட்டத்தில் எவ்வித ஈடுபாடுமே கிடையாது.

    காதல் எனும் அந்த மூன்றெழுத்தின் அர்த்தம் புரியாமல் வனப்புள்ள வனிதையரின் பால் மனம் செல்வதும், அவ்வுணர்வுகளுக்குகந்த கவியரசர் பாடல்களை மனம் முணுமுணுப்பதுமே அப்போதைய கவியரசரைப் பற்றிய எனது புரிந்துணர்வாக இருந்தது.

    காலம் கரையக் கரைய, வாழ்வின் வளைவு சுளிவுகளுக்குள்ளாக  நுழைந்து வெளியே வரும் போது அடைந்த வேதனைகள், மகிழ்ச்சிகளினால் விளைந்த இன்ப, துன்ப வலிகள், அவை விட்டுச் சென்ற அனுபவ வரிகள் இவைகளுக்கெல்லாம் காரணங்களைத் தேடி மனம் ஓலமிடும் போது, அங்கே அப்போது ஒவ்வொரு நிகழ்விற்கும் அவர் தீட்டிய ஒவ்வொர் பாடல் மருந்தாகியது.

    கவியரசரின் அனுபவ ஞானம், அந்த ஞானத்தின் ஆழம் என்பன அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது..

    வாழ்வின் உறவுகள் கொடுத்த அடிகளின் வலி தாங்காமல் எனதுயிர் நண்பனோடு நான் நிகழ்த்திய மன உணர்வுப் பரிமாற்றங்களின் பின்னே அவன் எனக்கு ஒவ்வொன்றாய் கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்களை ஒவ்வொரு பாகத்தையும் அனுப்பினான்.

    படிக்கப் படிக்க நெஞ்சம் ஆனந்தக் கண்ணீர் வடித்தது. ஆமாம் எங்கெங்கு அவரின் இதயந் தொட்ட உணர்விகளின் வரிகள் அவருக்கு ஏற்பட்ட வலிகளை விளக்கினவோ, அவைகளில் பல எனது வலிகளின் காரணங்களையும் தொட்டுக் காட்டி நின்றன.

    அவரது பாடல்கள், அவற்றில் துள்ளி விழும் வரிகளவை ஒவ்வொன்றும் வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான விளக்கங்களைக் கொடுத்தன. ஆம், கவியரசரின் பாடல்களுக்குள் புகுந்து அவற்றின் பின்னே புதைந்திருக்கும் அர்த்தங்களைத் தேடினால் அவை எமது மனநிலைக்கேற்ப வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு அனுபவங்களுக்குத் துணை வரும்.

    எதோ ஒரு இடத்தில் படித்ததாக ஞாபகம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த “தெய்வத்தாய்” எனும் படத்திற்காக டி.எம்.எஸ்சும் பி.சுசீலாவும் பாடும் பாடலான “பேசுவது கிளியா ? இல்லை பெண்ணரசி மொழியா” எனும் பாடலை யாத்தவர் கவியரசர். அப்பாடலைப் பற்றி மக்கள் திலகமும் அவருடைய அபிமானி ஒருவரும் மக்கள் திலகத்தின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, வந்தவர் மக்கள் திலகத்திடம் கவியரசரின் திறமைதான் என்ன, உங்கள் வாழ்க்கைச் சரிதத்தை இரண்டே இரண்டு வரிகளில் இயம்பி விட்டாரே என்று கூறும் போது, அப்படியா அது என்ன என்று மக்கள் திலகம் கேட்க;

    “சேரனுக்கு உறவா ? செந்தமிழர் நிலவா ?” எனும் வரிகளில் கேரளத்தில் பிறந்து இன்று தமிழர் மனங்களிளெல்லாம் நிலவாக ஒளிவீசிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார் என்று சொன்னதும் மக்கள் திலகமே ஒரு கணம் திகைத்து விட்டாராம்.

    என் வாழ்க்கையிலே நான் சந்தித்தோர் அநேகம் பேர் எனக்கு உதவியாக உந்து சக்தியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் பலர். ஆனால் என்ன ஏமாற்றி விட்டுச் சென்றவர்கள் சிலர்.

    அப்படியான ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுத்தது கவியரசர் அவர்களின் பாடல்களும் அவரது படைப்புக்களுமே.

    “வனவாசம்” பின்பு “மனவாசம்” என்று தனது வாழ்க்கைச் சரிதத்தை திறந்து வைத்த போது, ஏதோ அவர் ஒரு நூலை ஆக்கினார் என்று எண்ணுவோர்கள் பலரிருக்கிறார்கள். ஆனால் அவராக்கிய அந்த நூல்கள் எத்தனை பேரின் விடையறியா வினாக்களுக்கு விடையளித்து மனதில் ஒரு ஆறுதலைக் கொடுத்துள்ளது என்பதை உணர்தோர்கள் சிலரே.

    கவியரசரின் எழுத்துகள் , படைப்புகள் இன்றும் நிலைத்திருப்பது அவைகள் பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடைந்த காரணத்தினாலேயே.

    அப்படி பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடையக் காரணமாகவிருந்தது … அவருடைய எளிமையான  எழுத்துக்களே. அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவரது பாடல்களும் எழுத்துக்களும் இருந்தமையாலேயே…

    வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது நிலையானதல்ல. இன்று வெற்றி பெற்றோர் நாளை தோல்வியடையலாம், நாளை தோற்போர் அடுத்த நாளே ஜெயிக்கலாம் இதை,

    “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை”

    என்று எத்தனை எளிமையாக தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார். இவையெல்லாம்தான் இன்றுவரை அவரது பெயரை  உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    எழுதும் என் விரல்களுக்கு உத்வேகத்தையும், எழுத வேண்டும் அது பலரையும் சென்றடைய வேண்டும் எனும் ஆவலை எனக்கு அளிப்பதுவும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் எண்ணங்களே !

    இன்று புலம்பெயர் நாடுகளிலெல்லாம் பல படைப்பாளிகளை உருவாக்கித் தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று கவியரசரின் ஆற்றல் என்று சொன்னாலது மிகையாகாது.

    கம்பர், வள்ளுவர் என்போர் போன்ற அறிஞர்களின் ஆக்கங்களை அனைவரும் புரியும் படியாக எளிய நடையில் நமக்களித்தவர் கவியரசரே !

    என் மானசீகக்குருவைப் பற்றிய எனது சில கருத்துகளை அவர் பிறந்த இம்மாதத்திலே என் அன்பு வாசகர்களுடன் இம்மடல் மூலமாகப் பகிர்ந்து கொள்வது என் நெஞ்சத்தை நிறைக்கிறது

    “நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை”

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • உன்னைக் கண்டு நானாட…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    unnaikkandu

    ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெற்றிப்படைப்பு கல்யாணப் பரிசு!  பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் படத்திலே  கனகச்சிதமாய் பொருந்த இசையமைத்த மேதை ஏ.எம்.ராஜா.  இந்திய அளவில் கொண்டாடப்படும் இனிய பண்டிகை தீபாவளியாகும்.  அந்த தீபாவளி திரைப்படத்தில் காட்சியாக.. அதற்கேற்ற பாடல் கதைக்கேற்ப எழுதித்தர மகிழ்ச்சியின் துள்ளலில் ஒரு முறையும், பின்னர் பிரிவின் வலியோடு மறுமுறையும் இந்த ஒற்றைப் பாடல் சில வார்த்தைகள் மாற்றங்களோடு பரிணமிக்கிறது.

    பேராசிரியர் வாணியம்பாடி கவிஞர் அப்துல் காதர் அவர்கள் ஒருமுறை பம்மலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பட்டிமன்ற நடுவராய் பொறுப்பேற்று தமது தலைமையுரையில்  குறிப்பிட்ட வரிகள் சிந்தை நிறைந்த ரகம்!

    கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா..

    நம்ம குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கடன் வாங்குவதுபற்றி கற்றுத்தருகிறோம்.  வாங்குகிற முத்தத்தைக்கூட கடனில் தா.. நான் வட்டியும் முதலுமாகத் திருப்பித் கொடுத்துவிடுவதாக இயம்புவது சிறப்பே.. எனினும் சிறுவர் நெஞ்சில் கடன் மீது பற்று ஏற்பட அல்லவா இது வழிவகுத்துவிடும் என்று கேள்வி எழுப்பினார்.

    தீபாவளி என்னும் விழா கொண்டாடப்படும் நாட்களில் வருடம்தோறும் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் எல்லாவற்றிலும் இந்தப்பாடல் அன்றும் இன்றும் என்றும் நிச்சயம் இடம்பிடிக்கிறது..

    record player

    சித்திரப்பூப்போல சிதறும் மத்தாப்பூ
    தீயெதும் இல்லாமல் வெடித்திடும் டேப்பு
    முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
    முகமோ மலரோ இது என்ன ரசிப்பு


    காணொளி: -http://youtu.be/z7h_fulvE3M

    படம்: கல்யாணப்பரிசு
    பாடல்: பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடியவர்: ஜிக்கி
    இசை: ஏ.எம். ராஜா

    உன்னைக் கண்டு நானாட
    என்னைக் கண்டு நீ ஆட
    உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
    ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
    உறவாடும் நேரமடா… ஆ  ஆ ஆ
    உறவாடும் நேரமடா…

    கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
    கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
    கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
    கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

    எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
    எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
    எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
    வல்லமை சேர நல்லவனாக
    வளர்ந்தாலே போதுமடா.. ஆ ஆ ஆ
    வளர்ந்தாலே போதுமடா..

    சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
    தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
    சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
    தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
    முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
    முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
    முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
    மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
    வேறென்ன வேணுமடா… ஆ  ஆ  ஆ
    வேறென்ன வேணுமடா…

    உன்னைக் கண்டு நானாட
    என்னைக் கண்டு நீ ஆட
    உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
    ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
    உறவாடும் நேரமடா… ஆ  ஆ ஆ
    உறவாடும் நேரமடா…

    Share
  • திருமால் திருப்புகழ் (118)

    கிரேசி மோகன்

    Vaatsalyam series #krishnafortoday Keshav
    Vaatsalyam series #krishnafortoday
    Keshav

     

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————————-

    Experiments with Krishna series. #krishnafortoday Keshav
    Experiments with Krishna series. #krishnafortoday Keshav

    மார்கழி மாதத்தில், மாடுகள் மேய்த்திரவில்,
    ஓர்கழி ஊது குழலோடு, -ஊர்புகும்,
    கார்முகில் வண்ணன்மேல், கோதூளி மின்னிட,
    பார்மிசை ராப்பக லாச்சு….(222)

    கண்ணா நலம்தானா, கன்று நலம்தானா,
    அண்ணா பலராமன் நலம்தானா. -பின்னால்,
    இதுபோ லெனைநீ, இங்கிதமாய்க் கேட்டு,
    பதிலொன்(று) எழுதிப் போடு….(223)

    கண்ணா நலம்தானா, கன்று நலம்தானா,
    அண்ணா பலராமன், ஏரார்ந்த -கண்ணி,
    யசோதையாள், நந்தகோபன், யாதவரைக் கேட்டு,
    விசாரித் ததாக விளம்பு….(224)

    கல்லில் சிலையாகக், காற்றில் இசையாக,
    புல்லில் பிருந்தா வனமாக, -சொல்லில்,
    பொருளாக அல்லும், பகலாகும் கண்ணன்,
    இருதாள் எண்ணல் இணைப்பு….(225)

    பேரா யிரம்கொண்டு, ஷீராப் தியிலுறங்கும்,
    ஆரா அமுதா அடைக்கலம், -தீராத,
    பித்தாண்ட ராதையாய், புத்தாண்டில் மாறிட,
    அத்தாயென் புத்தி அமர்….(226)

    அம்மியில்லை அண்ணாந்து, அருந்ததி காணவில்லை,
    நம்முடைய சந்திப்போ நட்டநிசி, -விம்மியழும்,
    ராதைக்குக் கண்ணன், ரகசியமாய்க் கூறினான்
    கோதையே நானுன் குழவி….(227)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.. வருவான் வடிவேலன்.. கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    muruga

    இறையருள் இயக்குனர் கே.சங்கர் அவர்களின் இயக்கத்தில் எத்தனையோ தமிழ்த்திரைப்படங்கள் வெற்றியடைந்தது மட்டுமின்றி சரித்திரம் படைத்திருக்கின்றன. ஆலயமணி, இது சத்தியம், ஆண்டவன் கட்டளை, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில் என பட்டியல் நீளும். இதுதவிர, எடிட்டிங் துறையில் இவரின் திறமை அடிமைப்பெண் திரைப்படத்தில் சிங்கத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டையிடும் காட்சியென – பல படங்களில் பளிச்சிடுகிறது. மேலும் பொன்மனச்செம்மலுக்கு இவர் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவலாகும்.

    தமிழகத்தில் திருமுருகன் குடிகொண்ட திருத்தலங்கள் எல்லாம் தைப்பூசம் என்கிற உற்சவம் உற்சாகம் கரைபுரள லட்சக்கணக்கான பக்தர்கள் படைவீடுதோறும் படையெடுப்பதோடு, காவடிகள் பலவகையென எங்குபார்த்தாலும்,அணிவகுத்துச்செல்லும் அழகிற்குப் பஞ்சமில்லை. கடல்கடந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் கூட கந்தன் பெருமை ஓங்கார நாதம் முழங்க பரவசநிலையுடனே பக்தர்களின் அலைகளாக வியாபித்திருக்கிறது என்பது தமிழர்தம் வாழ்வியலில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு தலையாய இடம் தரப்பட்டிருக்கிறது என்பதை பறைசாற்றுகிறதே!

    மேற்கண்ட நாடுகளுக்கு தான் பயணம் மேற்கொண்டபோதெல்லாம் அங்குள்ள பச்சைமலை, கதிர்கிராமம் போன்ற முருகன் எழுந்தருளியிருக்கும் ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடும் பழக்கம் கொண்டவர். குறிப்பாக இந்த மூன்று ஸ்தலங்களில் தான் கண்ட இக்காட்சியை (தைப்பூச விழாவை) தமிழக மக்கள் காண வேண்டும் என்பதற்காகவே வருவான் வடிவேலன் என்கிற திரைப்படம் எடுத்து அதில் இக்காட்சியை இணைத்ததை எம்மோடு (கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தினரோடு)2001ஆம் ஆண்டு இயக்குனர் கண்ணதாசன் விருது பெற்ற தருணங்களில் பகிர்ந்தார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மனோபாவம், எண்ணம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இத்தகு நல்லெண்ணம் கொண்டவராய் நம் இயக்குனர் கே. சங்கர் – தைப்பூச நாளொன்றில் இம்மூன்று ஸ்தலங்களில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவை பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தனி விமானம் அமர்த்தி ஒரே நாளில் சிறப்புக்குழு அமைத்து சீர்மிகு வண்ணம் தங்கரதம் வரை முழுக்க முழுக்க படம்பிடித்து சென்னை திரும்பினாராம்.

    கிட்டத்தட்ட 20000 அடிகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருந்த அக்காட்சியை அப்படியே மக்களுக்குத் தருவததெப்படி என்கிற சிந்தனையில் மூழ்கியிருக்கிறார். அப்படித் தருவது டாக்குமெண்ட் படம்போல ஆகிவிடுமே என்கிற ஐயமெழ, அனைவரையும் பொறுமையுடன் பார்க்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், புதிய யுக்தியொன்றை அமைத்திட மெல்லிசை மன்னரை அணுகினாராம். தனது எண்ணத்தை எடுத்துரைத்து, தான் எடுத்துவைத்திருந்த படக்காட்சியை போட்டுக்காட்டி, இதற்காக ஒரு முழுநீளப் பாடல் ஒன்றையும் எழுதி அதற்கான இசையையும் அமைத்திடக் கேட்டிருக்கிறார்.

    எப்படியிருந்தாலும் பாடல் என்பது ஒரு சில நிமிடங்களே அமைக்க முடியும் என்கிற நிலையில் அதற்கேற்ப பல்லாயிரம் அடிகள் எடுத்து வைத்த படக்காட்சியை .. தைப்பூச நிகழ்வுகளை சில ஆயிரம் அடிகளாக தனது எடிட்டிங் திறமையால் சுருக்கித்தந்த பெருமைக்கு உரியவரானார். ஒரு சில சரணங்கள் மட்டுமே கொண்டு வரும் பாடலுக்கு பதிலாக பல வரிகளுடன் அமைக்கப்பட்ட இப்பாடலை.. முற்றிலும் புதுமையாக.. அன்றைய நாளில் பிரபலமாகயிருந்த பாடக பாடகியர்கள் தவிர பக்தியிசைப் பாடகர்களையும் சேர்த்து ஒரு அசுர சாதனையாக .. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் – கண்ணதாசன் வழங்கிய அற்புதப் பாடலிது!

    டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், பெங்களுர் ரமணியம்மாள், என ஓரு பாட்டுப் பட்டாளம் பாடும் கந்தன் பாடலிது. வருவான் வடிவேலனுக்காக.. இது வெற்றி பெற்றது என்பது அடிப்படையில் ஒரு நல்லெண்ணம், அதற்கான விடா முயற்சி, கடும் உழைப்பு, கூட்டணி வெற்றி.. எல்லாம் அமைந்திட இறைவன் ஆசி வேறென்ன சொல்ல?

    எந்தப் பாடல் ஆனாலும் கண்ணதாசனின் முத்திரை வரிகள் காணலாம் அல்லவா? இதோ இந்தப்பாடலில்..

    தங்கத்தேரை வடம்பிடிக்க மலேசியா நாட்டு அமைச்சர் வரும்காட்சியில்..

    அழகப்பன் மேனிக்கு அழகுசெய்ய அரசாங்கம் வருகின்றது.. என்று சொல்லாட்சி செய்துள்ளார்.

    கோடிக் கணக்கில் பணம் கொடுத்தான்.. அவன்
    கோவிலுக்கென்றே செலவழிப்போம்

    என்கிற வரியில் செட்டிநாட்டு மக்கள் முருகன் கோவிலுக்கு செய்யும் சேவையை நிலைநாட்டுகிறார்.

    3 Attachments

    varuvan vadivelan.jpg

    Pathu Malai

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி (9)

    கே. ரவி

    Smart-Air-Now
    நான் ஒரு பெரிய மனிதன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. சுரதா, ஒளவை நடராஜன், சுகி சிவம், இசைக்கவி ரமணன், வ.வே.சு. போன்ற பெரிய மனிதர்களோடு என் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பின்னியிருப்பதால், சுயசரிதை எழுதும் அளவுக்கு நானும் ஒரு பெரிய மனிதன்தான் என்ற நம்பிக்கையோடு இத்தொடரைத் தொடர்கிறேன்.

    சோவுக்கு பதில் சொல்வதாக அமைந்த சுரதாவின் கவிதையை ஒட்டியும் ஆமோதித்தும் சுகி சிவம் ஒரு கவிதை எழுதினான் என்று சொன்னேன் இல்லையா? அதில் சுரதாவைப் புகழும் போக்கில் மிக அழகாக இரண்டு வரிகள் போட்டிருந்தான்.

    ‘ஆடியடங்கும் வாழ்க்கையடா’ என்று சுரதா எழுதிய ஒரு பழைய திரைப்பாடலில் வரும் இரண்டு வரிகள் தெரிந்தால்தான் சிவத்தின் கவிதையை ரசிக்க முடியும்.

     “முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா – கண்
     மூடினால் காலில்லாக் கட்டிலடா”

    இவை சுரதாவின் கவிதை வரிகள்.

    சிவம் எழுதியிருந்தான்:

     “காலில்லாக் கட்டிலெனக் கவிதை சொன்னீர்
     எட்டுக்கால் கட்டிலென எதிர்த்துச் சொல்வேன்”

    சுரதா தம் கவிதையை மிகக் கச்சிதமாக முடித்திருந்தார்:

     “மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை, மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை”

    அதை அடியொட்டி, சிவம் தன் கவிதையை இப்படி முடித்திருந்தான்:

    “எலிதாக்கிப் புலியிங்கே வீழ்வதில்லை
    எருக்கம்பூ தாமரையாய் ஆவ தில்லை”

    நான் பாராட்டினேன். படித்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஒளவை நடராஜனும் முதலில் பாராட்டினார். பிறகு சிவத்தையும், என்னையும் தனியே அழைத்துச் சொன்னார்:

    ‘ராஜா, கோபுர மதிற்சுவரை மாடு முட்டுவது இயற்கையாக, அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இப்படி இயல்பான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு, மாடு முட்டும் ஆனாலும் கோபுரம் சாய்வதில்லை என்கிறார் சுரதா. அது போல், கூழாங்கல் மாணிக்கம் ஆவது இயற்கையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. ஆனால் மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை என்கிறார் சுரதா. இப்பப் பாரு ராஜா, எலி போய்ப் புலியைத் தாக்கும் நிகழ்ச்சி எங்கேயாவது நடக்குமா? இல்லை எருக்கம்பூ தாமரையாவோ, தாமரை எருக்கம்பூவாவோ ஆவதுண்டா? யோசிச்சுப் பாருங்க, அப்பத்தான் சுரதாவின் உவமைகள் எவ்வளவு யதார்த்தமானவை என்பதும், அர்த்தம் பொதிந்தவை என்பதும் புரியும்’ என்று அவர் அருமையாகப் பாடம் எடுத்த லாவகம் எங்கள் மனத்தில் அப்படியே பதிந்து விட்டது.

    மெல்ல, மெல்லப் புரியத் தொடங்கியது, சிகாமணி இல்லாமல் மனோன்மணி மட்டும் பிரயோசனமில்லை என்று. சிகா-மனோ உறவில்தான் கவிதை மலர வாய்ப்புண்டாகிறது என்ற மர்ம முடிச்சு அவிழத் தொடங்கியது.

    அந்த உறவை அற்புதமாகப் பிரதிபலிக்கும் இன்னொரு கவிதை எழுந்த வரலாற்றை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது. அந்த வரலாற்று நாயகரும் ஒளவை நடராஜன்தான்.

    எங்கள் கல்லூரி நாட்களில், சிவமும் நானும் ஒளவையுடன் அதிக நேரம் உடனிருப்போம். பெரும்பாலும் அப்போதெல்லாம் அவரோடு எங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கலாம். அவர் “சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்” என்று முனைவர் பட்டத்துக்காக ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அதற்கு ஓரளவு உறுதுணையாக இருந்த பெருமைக்கு நாங்கள் இருவரும் உரியவர்கள் ஆனோம். ஒரு சிலர் நாங்கள் ஒளவையோடு சுற்றிக் கொண்டிருந்ததைக் கடுமையாக விமர்சனம் செய்யுமளவுக்கு நாங்கள் நெருக்கமாகக் காணப்பட்டோம்.

    சிறிது காலத்துக்குப் பிறகு, எங்கள் படிப்பு, குடும்பம் என்ற பணிகள் காரணமாகவோ என்னவோ சிவமும், நானும் ஒளவையை அடிக்கடி சந்திக்க முடியாமற் போய் விட்டது. பல மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு கூட்டத்தில் ஒளவை மேடையில் வீற்றிருந்தார். நான் பார்வையாளனாக அரங்கில் சென்றமர்ந்தேன். அப்போது அவர் என்னைப் பார்த்துவிட்டு ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி அனுப்பினார். பிரித்தேன், படித்தேன், நெகிழ்ந்தேன். அந்தத் துண்டுக் காகிதத்தில் நாலு வரிகள், அமர வரிகள், எழுதப் பட்டிருந்தன:

    “ஊரார் அலர் உரைக்கக் கேட்டு – நீ
    உள்ளம் வெதுப்புறலாமா
    ஆரார் எதுசொன்ன போதும்
    யாழா முழவோடு மோதும்”

    சற்று நேரம் சிலையாகி விட்டேன். யாழும் முழவும் மோதிக் கொள்ளலாமா? ஸ்ருதியும், லயமும் இணைந்தால்தானே சங்கீதம்! எவ்வளவு பொருத்தமான ஓர் உருவகத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார்! அதுவரை அவர் எழுதியதாக எந்தக் கவிதையையும் அவர் எங்களிடம் படித்ததில்லை, காட்டியதில்லை. ஏதாவது கவிதை அதற்குமுன் எழுதினாரா என்றே தெரியவில்லை. அதற்குப் பிறகும் அவர் கவிதை எழுதியதாகத் தெரியவில்லை. ஒரே பாடலால் காலம் கடந்து வாழும் காக்கைப் பாடினியார், செம்புலப் பெயல்நீரார் போன்ற மிக உயர்ந்த புலவர்கள் வரிசையில் இந்த ‘யாழ்முழவார்’ சேர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது.

    சிகா-மனோ சரியான அளவில் கூடிய கவிதைக்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு என்பதால் சொன்னேன்.

    ஆனால், சிகா-மனோ உறவு போகப் போக மேலும் தெளிவுபடலாயிற்று. அப்போதுதான் முதல் பகுதியில் சொன்னேனே, சிற்றறிவு, பேறறிவு என்று, அந்த பாகுபாடும் புரியத் தொடங்கியது; சிகாமணியின் விஸ்வரூபம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தரிசனமாகத் தொடங்கியது.

    (தொடரும்)

    Share