Blog

  • தி.க.சி. 90

    தி. சுபாஷிணி

    அந்த இளம் காலை நேரத்தில், நெல்லை எக்பிரஸ் தட,தட என திருநெல்வேலி ஜங்ஷன் இரயில் நிலையத்தில் நுழைந்து கடக் என்று நிற்கின்றது. என் நெஞ்சில் ஒரே பட படக்கின்றது. என்னவென்று தெரியவில்லை மெதுவாக ரயிலிலிருந்து இறங்குகின்றேன். ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து, ஆட்டோவில் அமர்கின்றேன்.  ஆட்டோ ‘திருநெல்வேலி டவுன் நோக்கிளல செல்கின்றது.  வழியில் சந்திக்கும் ஆட்டோகள ஏதோ ‘போஸ்டர்’ ஒட்டியிருக்கின்றது.  ஒரு ஆட்டோ எங்கள் ஆட்டோவைக் கடக்கும் போது, அது என்னவெனப் பார்த்தேன். ஆச்சர்யப்பட்டுப் போனேன். “ஆம் நம்ம தி.க.சி. அய்யாவின் படம்.  அதன் கீழ் ஒரு கவிதை. ஆனால், படிக்க முடியாது போய்விட்டதே.  இது எப்படி? விடை தெரிய விழையும் போதே. எங்கள் ஆட்டோ சந்திப் பிள்ளையார் கோவில் தாண்டியது.  அதனுள் இருக்கும் பிள்ளையார் வந்துவிட்டாயா எனக் என்னைக் கேட்டது போல் தோன்றியது ஆட்டோவின் சத்தம் கேட்டு, தன் கடையிலிருந்து தலைநிமிர்ந்து பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தார் பொன்னையா அண்ணாச்சி.  தெருவில் இருந்த காந்தி சிலை சற்றே அசைந்து என் வருகையைப் பதிவு செய்தது.  நந்தா டீ ஸ்டாலிலிருந்து, டீக்கடைக்காரர் “அம்மா! நீங்க போங்க? அய்யா சொன்னங்க?  காபியைக் கொடுத்தனுப்புகின்றேன்” என்றார். எனக்கு வியப்போ வியப்பு! இதெல்லாம் எப்படி நடக்குது! இப்போ சுடலைமாடன் கோவில் தெருவில் ஆட்டோ நுழைந்தது. வழியில் வீட்டு வாசலில் நின்றிருந்த ஓவியர் வள்ளி நாயகம் உடனே இறங்கி வாங்க என வரவேர்றார் பின்.  ஆட்டோ ‘21 இ’ எண் வீட்டில் என்னை இறக்கி விட்டு, சென்றுவிட்டது.  படியேறி நுழைகின்றேன்.  திண்னையைத் தாண்டிச் செல்கின்றேன். முற்றத்தில் இறங்கி அய்யா வீட்டினுள் நுழைகின்றேன்.

    “அடா! வந்தாச்சா! ம் பிரயாணம் வசதியா இருந்ததா?  களைப்புத் தீர குளித்து விட்டு வா? என்று குரல் கேட்டது.  நானும் வாசிக்காத செய்தித் தாள்களிடையே சென்று குளித்து, ஆடை மாற்றி வந்தேன்.

    DSC099561-300x225

    “அக்கா? அய்யா சொன்னாங்க! இட்லியும் சட்னியும் வைத்திருக்கேன் சாப்பிட்டுங்க!  மதியம் வள்ளியண்ணன் வீட்டிலிருந்து சாப்பாடு வந்து விடும். நான் வேலைக்கு போறேன்” என்று சுந்தரி சொல்லிக் கொண்டே, போய்விட்டாள்.  “சாயுங்கால விழாவிற்கு வந்து விடுவாயல்லவா? என்று கேட்டது அவள் காதில் விழுந்த மாதிரியும் இருந்தது.  விழாத மாதிரியும் தோன்றியது.

    தட்டைக் கழுவி சாப்பிட அமர்ந்தோன். இட்லியும் சட்னியும் பரிமாறிக் கொண்டேன்.. “அத்தனையும் உனக்குத் தான். நிதானமாகச் சாப்பிடு தயார் அந்தக் கவரில் இருக்கு எடுத்துக்கோ” என்று ஒரு குரல் மெல்லியதாக ஒலித்தது காதில் கேட்டது. அக்குரல் சொல்லிக் கொண்டே வெளியேறியது போல் தோன்றியது.

    திடீரென்று, வெளியில் அய்யாவின் வெண்காவது குரல் “வாங்க! வாங்க? கமியுனிஸ்ட் கட்சி தனித்து 2016ல் போட்டியிடப் போவது குறித்து மிகவும் சந்தேஷம். சென்னையிலிருந்து சுபாஷிணி அம்மா வந்திருக்காங்க புது எழுத்தாளர்.  நாமதானே அவங்களையெல்லாம் உற்சாகப்படுத்தணும்.

    சுமார் பத்து புத்தகங்கள் வெளியிட்டு இருக்காங்க.  அதிலும் எல்லாம் அவங்க சொந்தச் செலவில் தான்.  ரசிகமணி டி.கே.சியைப் பற்றி எழுதியிருக்காங்க.  என்னுடைய சென்னையின் பிரதிநிதி என்று சொல்லி அறிமுகப்படுத்தும் ஆனந்தக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

    ஆமாம்!  அய்யா நாற்காலியில் வழக்கமாய் இருக்கும் ‘பிங்க்‘ கலர் நிரத் துண்டு இல்லையே!  நிறைய தபால்கள் வந்திருக்கு.  இதோ! ஆர். வி. சுப்பிரமணியம் கடிதம்  “இன்லண்ட் கவரில்” எழுதியிருக்கிறார்.  பிரிக்கப்படவில்லை.  இன்னும் சரவணன் வரவில்லை போலிருக்கு.  பாரதியின் கண்ணன் போல், அய்யாவில் கண்ணன் சரவணன்.

    மனமும் உடலும் ஏதோ சோர்வில் மாட்டிக் கொண்டு தவித்தன.  அவற்றை மதித்துக் கொஞ்சம் கண் அயர ஆயத்தமானேன்.

    1475795_446580005472118_1833270357_nமணி ஆகிவிட்டது.  ஒரே பரபரப்பு!  சரவணன் வந்தாச்சு. ஓவியர் வள்ளிநாயகம், வே. முத்துக்குமார் இருவரும் வந்துவிட்டனர்.  இவர்கள் மூவருமே அய்யாவின் அத்யந்த அன்பர்கள்.  தோழர்கள்.  எல்லோரும் கிளம்பி விட்டோம்.  அய்யா விருப்பப்படி மேடையில் எளிய அலங்காரம்.  ‘தி.கா.சி. 90& 30.3.2014’ என்னும் எழுத்துக்கள் தாங்கிய திரை கட்டியிருக்கிறது.  மணி ஆக ஆக ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.  மேடையில் திரு. நல்ல கண்ணு, திரு. பழநெடுமாறன், அறிவரசன் வை.கோ. காவல்துறை ஆணையாளர், ஐ.ஏ.எஸ். அதிகாரி, சிறிமி, சிறிவி தலைவர்கள் என் முன்னணியில் அமர்ந்திருந்தனர்.  பின்னணியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன், ரசிகமணி பேரன் தீப. நடராஜன், நெல்லையின் புரவலர் இந்து கல்லூரியின் அறக்கட்டளைத் தலைவர் தளவாய் ராமசாமி கி.த.பச்சையப்பன், கழனியூரான் என இன்னும் பலர் அமர்ந்து இருந்தனர்.  பார்வையாளர் பகுதி பக்கம் கண்களை செலுத்துகின்றேன்.  ஒரு பக்கம் அய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் வண்ணதாசன் இளைய மகன் சேது, அவரது மகள்கள், அவர்களது குடும்பத்தினர், உற்றார் உறவினர் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.  ஒரு பக்கம் எழுத்தாளர் வண்ண நிலவன், கவிஞர் கலாப்பிரியா, ரவி சுப்ரமணியம் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பேரன் எனப் பெருமைப்படக் கூறிக் கொள்ளும் சுகா, கவிஞர் சக்தி ஜோதி என்று இளைய கவிஞர்கள் வட்டம், என்று நிரம்பிக் கொண்டிருந்தது.  பல அமைப்புகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் கூடியிருந்தனர்.  கிட்டத்தட்ட 500, 600 பேருக்கும் மேல் இருக்கலாம்.  தோழர் பால் முகம்மது அனைவருக்கும் தாகத்திற்கு தண்ணீரே பழச்சாரோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    நான், முத்துக்குமார், ஓவியர், பொன் வள்ளி நாயகம், சரவணன் ஆகிய நால்வரும் மேடையின் பக்கவாட்டில் நின்றிருந்தோம். கவிஞர், தோழர் கிருஷி விரைந்து வந்து, கிட்டத்தட்ட தமிழ் நாடே கூடிவிட்டது.  நாம் விழாவைத் தொடங்கிவிடலாம் என்றார்.

    “அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

    அகமெலாம் அன்பென்னும் வெள்ளம்

    பொறிகள் மீது தனி அரசாணை”

    இது பாரதியின் வரிகள் என்று யாரிடமோ சத்தம் போட்டு சொல்லிக் கொண்டிருந்த அய்யாவின் குரல் கேட்டது.

    வழக்கம் போல் வே. முத்துக்குமார் மேடையேற மறுத்து விடடார்.  கவிஞர் கிருஷி விழாவைத் தொடங்க மேடையேறினார்.

    சந்தியா பதிப்பகம் “நடராஜன்”, மேடையிலுள்ள அனைவருக்கும் அய்யாவின் “நாட்குறிப்பு புத்தகத்தை” வழங்கிக் கொண்டிருந்தார்.

    கவிஞர் கிருஷி, விழாவிற்கு வந்த அனைவருக்கும் வணக்கம் கூறி தன் தொடக்கவுரையைத் தொடங்கினார்.

    திருநெல்வேலியின் அடையாளம் 21 இ சுடலைமான் கோவில் தெரு தோழர் தி.க.சி. எந்தவித தயக்கமின்றி எந்த நேரமும் அவரைக் காணச்செல்லலாம்.  வெளியில் வரும் போது அன்றைய நாளிதழ்களின் செய்திகள், சிற்றிதழ்களின் இலக்கிய வளர்ச்சி, கதைகளின் மாண்பு எனப் பல வகைப்பட்ட விஷயல்களைப் பெற்று கருத்துக்களின் கனத்துடனும், ஆனந்தத்தால் இலேசான இதயத்துடனும்தான் திரும்பி வருவோம்.  கம்யூனிஸ்ட்கட்சி பிரிந்தபோது மார்க்ஸிஸ்ட் ஆனார்.  சோவியத் யூனியன் தளர்ந்து வீழ்ந்த போது, இவர் தளர்ந்து போய்விடவில்லை.  கலை இலக்கியம் இவரைத் தாங்கி நின்றன. அதுதான் ‘மனிதம் போற்றும்’ என்னும் கொள்கை உடையவர், தி.க.சி. முதலில் கவிதை, கதை, மொழி பெயர்ப்புகள் எனத் தன் இலக்கியப் பாதையை வதித்தபோது, “விமர்சனத் தமிழில்’ நிலைத்து நின்று விட்டார்.  இதற்கு இவர் “தாமரை, சோவியத் லேண்டு” ஆகிய பத்திரிகையிலும் பணிபுரிந்தது உதவியது. இவரது நடுநிலையான விமர்சனத்திற்குத்தான் ‘சாகித்ய விருது’ கிடைத்தது.

    ரசிகமணி டி.கே.சி. பாரதி, பாரதிதாசன், வல்லிக்கண்ணன் ஆகியோரை தன் ஆசான்களாக ஏற்றதால், எப்போதும் அவர் ஆனந்தத்தை ஆராதித்தார்.  மலர்ந்த முகமும், அதில் பிறக்கும் சிரிப்பும், சிரிப்பு அளிக்கும் ஒலியின் கனமும் அவரைச் சுற்றி அலை அலையாக சூழ்ந்து கொண்டேயிருக்கும்.  அன்று இவரால் ஊக்குவிக்கப்பட்டு, உற்சாகப்படுத்தப்பட்ட படைப்பாளிகள்தான் இன்று பெரிய ஆளுமைகளாக இருக்கின்றனர்.  இன்னமும் இளைய தலைமுறைகளில் இவரைச் சார்ந்து, இவர் இட்ட உரத்தினாலும், உற்சாக நீர் பாய்ச்சியதாலும் பல படைப்பாளிகள் உயர்ந்து கொண்டு வருகின்றனர்.  விகடனில் படித்த கதைக்கும், கல்கியில் படித்த ‘ஓ‘ பக்கத்திற்கும், சிற்றிதழ்களில் படித்த படைப்புகளுக்கும், உடனே பாராட்டுக்கள் அந்தந்த எழுத்தாளருக்கு தொலைபேசி மூலமாகவோ, கார்டு மூலமாகவோ போய்ப்படும்.  இவர் கடிதம் தாங்கி வரதாத தினமணி நாளிதழ்கள் குறைவே.

    இவருக்கு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் இலக்கிய அமைப்புகள், மாணவர்கள் என அனைத்து தளங்களிலும் இவரது மனித நேயத்தால் நண்பர்கள், உண்டு.  பேப்பர் போடும் தோழர் பால் முகம்மது வந்தாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி இவரைத் தேடி வந்தாலும் ஒரே மாதிரியான ஆனந்தமான சிரிப்போடுதான் வரவேற்பு.  இவ்வாறு எளியவர்களையும், சிறந்த ஆளுமைகளையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு விளங்கும், விழா நாயகரான, 90ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் தோழர் தி.க.சி. அவர்களுக்கு சிறப்பு செய்ய மூத்த எழுத்தாளர், அய்யாவின் அன்பு நண்பர் திரு. கி. ராஜநாராயணன் அவர்களை அழைக்கின்றேன்.  அவரை நூறாண்டு காலம் வாழ வாழ்த்துமாறு எங்கள் அனைவரின் சார்பாக அழைக்கின்றேன்” என கவிஞர் தன் தொடக்க உரையை முடித்தார்.

    திரு. கி. ராஜநாராயணனன்  அவர்கள் எழுந்து வரும் சப்தம் கேட்கிறது.

    ஆனால் ‘தி.க.சி.’ அய்யாவை எங்கே காணும்?

    Share
  • அன்புள்ள மணிமொழி!…

     கீதா மதிவாணன்

     

    மகனே மணிமொழி!

    அன்புமகன் மணிமொழிக்கு,

    அம்மா எழுதுகிறேன். நலமாக இருக்கிறாயா? நீ எப்போதும் குன்றாக உடல்நலத்தோடும் குறைவிலாத மகிழ்வோடும் வாழவேண்டும் என்பதுதான் பெற்றவர்களாகிய எங்கள் எண்ணமும் ஆசையும். மனத்தாங்கலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நீ இந்நேரம் வருத்தம் நீங்கி தெளிவடைந்திருப்பாய் என்றும் எப்போதும் போல் தொலைபேசியில் பேசுவாய் என்றும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக உன்னிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நாங்களாக அழைத்தபோதும் நீ வேலையாக இருப்பதாக உன் அறைத்தோழன்தான் பேசினான். உண்மையில் வேலையாகத்தான் இருக்கிறாயா? அல்லது மனவருத்தம் இன்னும் குறைந்தபாடில்லையா? என்ற கவலையோடு எங்கே உனக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற புதிய கவலையும் சேர்ந்துகொண்டது.

    நடந்த விஷயத்தை எண்ணி இன்னும் நீ மருகிக்கொண்டிருக்கிறாயெனில் அதைப் போக்கித் தெளிவேற்படுத்தவேண்டியது பெற்றோரான எங்கள் கடமை. அதன்பொருட்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ அமைதியான மனநிலையில் இருக்கும்போது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். நீ படித்தவன்; புத்திசாலி. நான் சொல்வதை நிதானமாக யோசித்துப் புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

    நம் உறவினர்களும் நண்பர்களும் உன் அப்பாவைப் பார்த்து வியக்கும் ஒரு விஷயம்… எப்படி ஒருவரால் என்றுமே கடன் வாங்காமல் இப்படியொரு நல்ல வாழ்க்கையை வாழமுடிகிறது என்பதுதான். உச்சபட்சமாய் கலங்கிய நெஞ்சத்துக்கு “கடன்பட்டார் நெஞ்சம்போல” என்றொரு உவமையைக் காட்டுவார் கம்பர். அப்படியொரு கலக்கத்தை இதுவரை உன் அப்பாவும் அனுபவித்ததில்லை. நம்மையும் அனுபவிக்க வைத்ததில்லை.

    எனக்கும் உன் அப்பாவுக்கும் திருமணமானபோது வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இப்போது உன் அப்பா மேலாளராய் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான் ஒரு கடைநிலைத் தொழிலாளியாய் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் தன் உழைப்பாலும் திறமையாலும் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவருக்குக் கிடைத்த சொற்ப வருமானத்திலும் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தோம். நான் என்னுடைய ஓய்வுநேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்று முடிந்தவரை உன் அப்பாவுக்கு உதவினேன். எதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தோம். அநாவசிய செலவுகளைத் தவிர்த்தோம். மருத்துவம், கல்வி, போன்ற அவசியத் தேவைகளுக்கு சேமித்துவைத்தோம். அதற்காக கஞ்சத்தனமாகவும் இல்லை. விருந்தோம்பல், உறவினர் திருமணம், சுற்றுலா போன்ற மகிழ்வான தருணங்களையும் தவறவிடவில்லை.

    யாவும் நீ அறிந்ததுதான். அந்த சூழ்நிலையிலும் உன்னையும் உன் தங்கை மலர்விழியையும் நல்லபடியாகவே வளர்த்தோம். எங்களுக்கு சிரமந்தராமல் நீங்களும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்தீர்கள்; நீ மணிமொழிச்செல்வன் என்ற உன் பெயருக்கேற்ப மணிமணியாய் பேசுவாய்; அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டாய்; அரசுப்பள்ளியில் படித்தாலும் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்மாணவனாய்த் தேறினான். சென்னையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய். வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ள உனக்கு இதைவிடவும் நல்ல வாய்ப்பு அமையாது என்று எங்கள் மனத்தை திடப்படுத்திக்கொண்டு உன்னை விடுதிக்கு வழியனுப்பிவைத்தோம். கல்லூரியிலும் கருமமே கண்ணாக படித்து, நல்மாணாக்கனாய்த் தேறி மும்பையிலிருக்கும் பெரிய நிறுவனமொன்றில் நல்லதொரு உத்தியோகமும் பெற்றுக்கொண்டாய். அதன் பின்னணியிலான உன் கடுமையான உழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

    நீ வேலையில் சேர்ந்து இந்த மாதத்துடன் ஒருவருடம் ஓடிவிட்டது. நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது. நேற்றுதான் உன்னை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நினைவு! நீயும் படித்துப் பட்டம் பெற்று நல்ல உத்தியோகமும் கிடைத்து ஒருவருடம் முடிந்துவிட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. இதோ… இந்த வருடம் உன் தங்கையும் கல்லூரியில் காலடி எடுத்துவைத்துவிட்டாள்…

    “வேலை கிடைத்தவுடன் அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறாய் அண்ணா?” என்று மலர்விழி கேட்டாள். நீ உன் சம்பளப்பணத்தை முழுவதுமாய் அப்பாவிடம் தந்துவிடப்போவதாக சொன்னாய். அப்பா அதை மறுத்துவிட்டு அந்தப் பணத்தை உன் செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மீதத்தை உன் பெயரில் வங்கியில் சேமித்துவைக்கும்படியும் சொன்னதோடு அவரே அதற்கான முயற்சிகளையும் செய்து உன் பெயரில் வங்கிக்கணக்கைத் துவக்கியும் கொடுத்தார். மாதமொருமுறை ஊருக்கு வந்துபோகும் நீ ஒவ்வொருமுறையும் மனங்கொள்ளாத அன்புடனும் கைகொள்ளாத அன்பளிப்புகளுடனும் வருவதையே வழக்கமாக்கிக் கொண்டாய்.

    நீ உன் முதல்மாத சம்பளத்தில் எனக்கு ஒரு பட்டுப்புடவையும் அப்பாவுக்கு ஒரு கைக்கடிகாரமும் மலர்விழிக்கு ஒரு மடிக்கணினியும் வாங்கித்தந்தாய். அவை ஒவ்வொன்றின் விலையும் மிகவும் அதிகம் என்றபோதும் உன் திருப்திக்காக நாங்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். அதன்பின் தொடர்ந்து உன் சம்பளப்பணத்திலிருந்து எங்களுக்கு, தங்கைக்கு, வீட்டுக்கு அது இது என்று எதையாவது வாங்கித் தந்துகொண்டேதான் இருக்கிறாய். ஒன்றிரண்டு முறை நானும் அப்பாவும் சூசகமாக உன்னிடம் சேமிப்புப் பற்றித் தெரிவித்தோம். நீ அதைப் புரிந்துகொண்டாயா என்று தெரியவில்லை. புரிந்திருந்தால் நீ தேவையற்றப் பொருட்களில் பணத்தைப் போடுவதை நிச்சயம் தவிர்த்திருப்பாய்.

    சென்றவாரம் வந்தபோது அதிநவீன கைபேசிகளை ஆளுக்கொன்றாய் வாங்கிவந்திருந்தாய். அதன் விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சாதாரண கைபேசியைவிடவும் அதிகமாக இருக்குமென்று தெரியும். அது எங்களுக்குத் தேவைதானா? யோசித்துப் பார்… கைபேசியின் முக்கியப் பயன் தொலைவில் உள்ளவர்களோடு தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்வதுதான். அதற்கு இப்போதிருக்கும் சாதாரண கைபேசியே போதுமானது அல்லவா?

    நீ உன் அப்பாவிடம் அந்த கைபேசியைக் கொடுத்தபோது, “எதற்கு இந்த அநாவசியச் செலவு? இனி இதுபோல் தேவையின்றி செலவழிக்காதே” என்றார். நீ முகம் சுருங்கிப் போனாய். எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாய். அதன்பின் நீ எங்களுடன் சரியாகப் பேசவே இல்லை. அண்ணன் எப்போது வருவான் என்று ஆசையாய்க் காத்திருந்த உன் தங்கை மலர்விழியிடம்கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நானும் உன் மனநிலை சற்று மாறியதும் உன்னுடன் பேசி தெளிவுபடுத்தலாம் என்று காத்திருந்தேன். நான்குநாட்கள் தங்குவதாகச் சொல்லி வந்திருந்த நீ வேலை இருக்கிறது என்றுசொல்லி மறுநாளே மும்பை கிளம்பிச்சென்றுவிட்டாய்.

    மனவருத்தத்துடன்தான் நீ ஊருக்குச் செல்கிறாய் என்று தெரிந்தாலும் நான் தடுக்கவில்லை. நிதானமாக யோசித்தால் நீயே புரிந்துகொள்வாய் என்று விட்டுவிட்டேன். ஆனால் உன் எண்ணத்தில் சிறிதும் மாற்றமில்லை என்று தெரியவரும்போது வருத்தமாய் உள்ளது. பிள்ளைகள் தவறு செய்யும்போது திருத்துவது பெற்றவர் கடமை அல்லவா? மன்னனுக்கே இது பொருந்தும்போது… மகனுக்குப் பொருந்தாதா?

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பார் இலானும் கெடும்

    என்னும் குறளின் விளக்கம் நீ அறியாததா?

    உழைப்பு, சிக்கனம், சேமிப்பு இவற்றின் மூலமே சீரான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும் என்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருப்பவர் உன் அப்பா. ஆரம்பநாட்கள் முதலே அதற்குத் உறுதுணையாயிருந்தவர்கள் நானும் எங்கள் பிள்ளைகளாகிய நீங்களும். ஆம். சிறுகுழந்தையிலிருந்தே பார்க்கும் எதற்கும் ஆசைப்படாதவர்கள் நீங்கள். அதுவேண்டும் இதுவேண்டும் என்று நச்சரிக்காதவர்கள். ஒரு பொருளைக் கேட்டு அது கிடைக்காவிடில் அதற்காக பிடிவாதம் பிடிக்காதவர்கள். மொத்தத்தில் குடும்பத்தின் நிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டவர்கள். முக்கியமாய் நீ!

    உனக்கு நினைவிருக்கிறதா? உனக்கு பத்துவயதாயிருக்கும்போது ஒருமுறை திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். உன் தங்கை ஊதல் வேண்டுமென்று கேட்டாள். அப்பா வாங்கித்தர முன்வந்தபோது நீ சொன்னாய், “ஏன் அப்பா ஊதலுக்கு செலவு செய்கிறீர்கள்? நம் வீட்டு பூவரசு இலையில் நான் அவளுக்கு பீப்பீ… செய்து தருகிறேன்” என்று சொன்னதோடு, வீட்டுக்கு வந்தவுடனேயே விதவிதமான ஒலியெழுப்பும் ஏராளமான பீப்பீக்களைச் செய்துகொடுத்து அவளை மகிழ்வித்தாய். நானும் உன் அப்பாவும் உன் செயலை எண்ணி வியப்பும் பெருமையும் அடைந்தோம்.

    இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவரச்சொன்னால் இரண்டுதெரு தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று வாங்கிவருவாய். கேட்டால் இந்தக் கடையைவிடவும் அந்தக்கடையில் விலை மலிவு. பொருளும் தரமாக இருக்கும் என்பாய். பன்னிரண்டு வயதில் உனக்கிருந்த பொறுப்பை எண்ணி வியந்தேன்.

    சிறுவயதில் அவ்வளவு பொறுப்புடன் இருந்த நீ இப்போது முறையற்ற செலவுகளை செய்வதைப் பார்த்து இப்போதும் வியக்கிறேன். நீ இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறாய். இனி திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் எவ்வளவோ ஏற்படலாம். எதிர்காலத்தை எப்போதும் மனத்தில் வைத்து நிகழ்காலத்தில் செயல்படுவதே புத்திசாலித்தனம்.

    வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

    வைத்தூறு போலக் கெடும்

    அல்லவா?

    எங்களை வசதியாக வாழவைக்கவேண்டுமென்பதுதான் உன் ஆசையென்று அடிக்கடி சொல்வாய். வளர்ந்து பெரியவர்களானதும் பெற்றவர்களைத் திரும்பியும் பார்க்காத பிள்ளைகளுக்கு மத்தியில் இப்படியொரு அற்புதமான பிள்ளையைப் பெற்றதற்காக ஈன்ற பொழுதினும் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம். இந்த அன்பு ஒன்றே போதும். வசதியான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துவிட்டாய். இனி ஏதேனும் வாங்குவாயானால் அது ஆடம்பரம்தான். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. இனியாவது உன் சேமிப்பில் கவனம் செலுத்து. எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது நமக்கு அவசியம் தேவைதானா என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாங்கு.

    சிக்கனமும் சேமிப்பும் பணத்தில் மட்டுமன்று… தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று நமக்கு அத்தியாவசியத் தேவையான எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பின்னாளில் கையைப் பிசைந்துகொண்டு கலங்கிநிற்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

    வருமுன் காப்பவன்தானே அறிவாளி?

    வந்தபின் தவிப்பவன் ஏமாளியல்லவா?

    நீ அறிவாளியாக இருக்கவிரும்புகிறாயா? ஏமாளியாகப் போகிறாயா? அப்பாவின் சொற்ப வருவாயில் நாம் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார். இப்போது நீ கைநிறைய சம்பாதிக்கிறாய்… ஆனால் உன் எதிர்காலத்தைக் குறித்து எங்களை கவலையுறச் செய்திருக்கிறாய்… மகனே மணிமொழி! இதுவா நீ எங்களை மகிழ்வாய் வைத்திருக்கச் செய்யும் முயற்சி? நிதானமாக யோசித்துப்பாரப்பா! அடுத்தமுறை நீ நம் வீட்டிற்கு வரும்போது பை நிறைய பரிசுப்பொருள் வேண்டாம். மனம் நிறைக்கும் அன்பை மட்டுமே அள்ளிக்கொண்டுவா! நம் குடும்பத்துடன் குதூகலமாய் உன் விடுமுறை நாட்கள் கழியட்டும்! எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி அதுதான் என்பதை உணர்ந்துகொள்!

    உன் உடல்நிலையைக் கவனித்துக்கொள். உடல்நிலை சரியில்லையெனில் அலட்சியமாய் இருக்காதே. உடனே மருத்துவரிடம் காட்டு. ஏதேனும் தேவையெனில் எனக்குத் தெரிவி. உன் அறைத்தோழர்களைக் கேட்டதாகச் சொல். நாங்கள் அனைவரும் உன் அடுத்த வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

    என்றும் அன்புடன்,

    உன் அம்மா.

    Share
  • திருமால் திருப்புகழ் (40)

    கிரேசி மோகன்

    maxresdefault
    தானந்த தான தானந்த தான
    தானந்த தான -தனதான….

    ———————————————————————————————–

    யாரென்ற கேள்வி யாலந்த நானின்sri-ranganathar-temple-srirangam
    வேரொன்றி மூலம் -தனிலேகம்
    பாரென்ற சோணை யாரன்பு சீடன்
    பேரின்பம் நானும் -பெறவேணும்

    ஓரங்கை சேணம் ஓரங்கை ஆழி
    ஓரைந்து கேள -புவிவாதை
    பாரங்கள் தீர போரங்கு மூள
    தேர்நின்று கீதை -அருள்வோனே

    பேரன்பு ஓடன் மாரன்பில் கூடும்
    கோதண்ட ராமன் -பரிசாக
    ஈரைந்து கேசன் ஊர்லங்கை ஏள
    ஓர்தம்பி தோளில் -வரும்வேளை

    ஓர்தந்த வேழன் சூதொன்று ஆட
    சூழ்கின்ற ஆறின் -கரையோரம்
    சீர்மங்கை தாயி மார்தங்க சாயும்mk1
    சீரங்க நாத -பெருமாளே

    ——————————————————————————————————-

     

     

     

     

     

     

     

     

    Share
  • அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தியைக் கட்டுப்படுத்திய இத்தாலிய  விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி

    அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தியைக் கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி

    என்ரிக்கோ ஃபெர்மி (1901-1954)

    ஜெயபாரதன்B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா.

    அணுவைப் பிளந்த அசுர விஞ்ஞானிகள்

    1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான  மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான்  கணைகளால் உடைத்து, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற,  அந்த முதல் அணுப்பிளவு அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு  இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதுக் கதிர் உலோகத்துடன்  சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி  விட்டதாகப் ஃபெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்  பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக  உருமாற்றம் [Transmutation] கொண்டது!  அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை  பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப்  பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது  புரியவில்லை.

    ஜெர்மன் வெளியீடு ‘பயன்பாட்டு இரசாயனம்’ [Applied Chemistry] இதழில் ஐடா &  வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், ஃபெர்மியின்  பிழையான கருத்தை எடுத்துக் கூறி, ‘கன உலோகம் யுரேனியம், நியூட்ரான்  தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது’ என்று எழுதி  யிருந்தார்கள்.  மெய்யான இந்த விளக்கத்தை, ஃபெர்மி உள்படப் பலர் அன்று  ஒப்புக் கொள்ள வில்லை!  சாதாரண ஆய்வகச் சாதனம் அணுவைப் பிளக்க  முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான்  அணுவை உடைக்க முடியும், என்பது ஃபெர்மியின் அசைக்க முடியாத கருத்து.   பெரும்பான்மையான பெளதிகவாதிகள் [Physicists] யுரேனியம் நியூட்ரானை  விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே  நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞானிகள் அணுவைப்  பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

    அணுக்கருப் பிளவை முதலில் விளக்கிய லிஸ் மெயிட்னர்

    நியூட்ரான்களை ஏவி அணுக்கரு உடைப்பு [Nuclear Bombardments] ஆராய்ச்சியில்  பங்கேற்ற விஞ்ஞானப் பெண் மேதைகள், இருவர் குறிப்பிடத் தக்கவர். முதலாவது  இயற்கைக் கதிரியக்கம் பற்றி விளக்கி நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியின் மூத்த  புதல்வி, தாயைப் பின்பற்றிச் செயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபல் பரிசு  பெற்ற ஐரீன் கியூரி. அடுத்து ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn]  அவருடன் 30 ஆண்டு காலம் ஆய்வு உதவியாளியாகப் பணியாற்றிய, லிஸ்  மெயிட்னர் [Lise Meitner]. ஹானும், மெயிட்னரும் பலமுறை யுரேனியத் தேய்வு  அணுக்கரு இயக்கங்கள் நிகழ்த்தி ஆராய்ச்சி செய்து, ‘புரொட்டோ ஆக்டானியம் ‘  [Protoactinium] என்னும் புது மூலகம் கண்டு பித்தவர்கள். மெயிட்னர் யூதரானதால்,  ஹிட்லருக்குப் பயந்து 1938 இல் சுவீடனுக்கு ஓடி, ஸ்டாக்ஹோம் நோபல்  ஆய்வகத்தில் [Nobel Institute, Stockholm] சேர்ந்து தன் ஆராய்ச்சிகளைத்  தொடர்ந்தார்.

    ஐரீன் கியூரி செயற்கைக் ‘கதிர் ஊட்டம்’ [Irradiation] சம்பந்தமாகப் பேசிய சமயம்,  நியூட்ரானைக் கொண்டு யுரேனிய அணுவைத் துண்டிக்க முடியும் என்று  கூறியதைப் பின்பற்றி, யுரேனிய நியூட்ரான் இயக்கத்தை உண்டாக்கி, முதன்  முதலில் அணுவை உடைத்ததாக ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர்,  ஃபிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் [Fritz Strassman] இருவரும் 1938 இல் பறை  சாற்றினார்கள். இவ்வரிய புதுக் கண்டு பிடிப்பைக் கடிதம் மூலம் ஆட்டோ ஹான்,  சுவீடனில் இருந்த தனது பழைய துணையாளி, லிஸ் மெயிட்னருக்குத்  தெரிவித்தார். தகவலைப் படித்த மெயிட்னர் அவரது உறவினர், ஆட்டோ ராபர்ட்  ஃபிரிஷ் [Otto Robert Frisch] இருவரும் புதிய அணுக்கரு இயக்கத்தைப் பற்றி  விவாதித்து, ‘இயற்கை’ [Nature] ஃபிரிஷ் வெளியீட்டுக்கு உடனே இதைப் பற்றி  விபரமாக எழுதி, அதில் ‘அணுக்கருப் பிளவு இயக்கம்’ [Nuclear Fission]  நிகழ்ந்துள்ளது என்ற பதத்தைப் பயன்படுத்தி யிருந்தார்கள். அணுவைப் பிளந்தவர்  பலராயினும் மெயிட்னர், ஃபிரிஷ் இருவர்தான் முதலில் அணுக்கருப் பிளவைப்  புரிந்து உலகத்திற்கு விளக்கிய, ஐரோப்பிய விஞ்ஞானிகள். இதே ஆட்டோ ராபர்ட்  ஃபிரிஷ் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில்  அணுகுண்டு விஞ்ஞானிகளோடு சேர்ந்து அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம்,  புளுடோனியம் உலோக அளவைக் கணித்து, முதல் அணுகுண்டு செய்ய  உதவியவர்.

    அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி!

    அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி  மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்!  முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக்  கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி!  அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction]  புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும்  முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட்  ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப்  பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த  ராபர்ட் ஓப்பன்ஹைமர்!

    ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள்  நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு  ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன! 1945 இல் அமெரிக்கா  ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல்  அணுகுண்டைச் சோதித்தது! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல்  பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற  நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன! உலக நாடுகளில் 115  தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty,  NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால்  அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்,  தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத்  தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன!

    இரண்டாம் உலகப் போர் நடந்த போது, இந்திய அமெரிக்க விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் அணுக்கருத் தொடரியக்கம் முதலில் புரிந்த என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணி யாற்றியதை இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும் !

    அணுவின் அமைப்பு. பிண்ட சக்தி அழிவின்மை.

    2500 ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்க ஞானிகள் அணுவை பற்றிச் சிந்தித்து  விளக்கியதைத்தான் பிற்கால விஞ்ஞானிகள் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிரேக்க மொழியில் ‘Atomos’ என்றால் பிரிக்க இயலாதது என்று அர்த்தம்.  அதிலிருந்து Atom என்ற பதம் வந்தது. கி.மு.460-370 ஆண்டுகளில் கிரேக்க  வேதாந்த ஞானி டெமாகிரிடஸ் [Democritus] எழுதி வைத்த அணுவியல் நியதி,  [Atomic Theory] “தூய பிண்டம் [Matter] அனைத்தும் நுண்ணிய, கண்ணுக்குத்  தெரியாத, கடினமான, திணிக்க முடியாத, அழிக்க முடியாத மூலச்சிறு தூள்களைக்  [Particle] கொண்டவை. அவைதான் அணுக்கள். அணுவுக்கும் சிறிய தூள் எதுவும்  அகிலத்தில் இல்லை. அணுக்களே பிண்டத்தின் மூலத் துகள். அணுக்கள்  எண்ணற்றவை. பல வடிவம் உடையவை. எல்லையற்ற அண்ட வெளியில்  அணுக்கள் ஓயாமல் எப்போதும் அசைந்து கொண்டே இருப்பவை. அணுக்களின்  அளவு, வடிவம், நிறை வேறு பட்டாலும், அவை யாவும் ஒரே மூலப் பொருளால்  ஆனவை. அணுக்களின் தனிச் சிறப்புப் பிறழ்ச்சிகள் தான் பொருட்களில்  மாறுபாடுகளை உண்டாக்குகின்றன. இயற்கை நிகழ்ச்சியால், அணுக்களின்  முடிவற்ற இயக்கத்தில், அகிலம் உருவானது. அணுக்கள் மோதுவதாலும், தாமே  சுழல்வதாலும் பிண்டத்தின் மாபெரும் வடிவங்கள் தோன்றின”. டெமாகிரிடஸின்  அணுவியல் நியதியே, நவீனத் தத்துவமான ‘பிண்ட சக்தி அழிவின்மை’  [Conservation of Energy & Matter] கோட்பாடுக்கு அடிகோலியது.

    இந்து வேதாந்த ஞானிகள் கிரேக்க ஞானிகளுக்கு முன்பே, அணுவைப் பற்றியும்,  அவற்றின் கருவில் இருக்கும் அடிப்படைப் பரமாணுக்களைப் [Sub Atomic Particles]  பற்றியும் கூறி இருக்கிறார்கள் என்று சாமுவெல் கிளாஸ்டன் [Samuel Glasston]  தான் எழுதிய ‘அணுசக்தியின் மூலப் புத்தகத்தில்’ [Source Book on Atomic Energy]  முதல் பக்கத்திலே கூறியிருக்கிறார். அகிலத்தின் தோற்றம் பற்றியும், அண்ட  கோளங்களின் சுழற்சி பற்றியும், சக்தி பொருள் இவற்றின் அழிவின்மை பற்றியும்  இந்து வேதங்கள் பக்கம் பக்கமாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இயற்றியுள்ளன.

    அங்கிங்கு எனாதபடி எங்கும் அணுமயம்! ஆனால் அணுவை எவரும் இதுவரைப்  பார்த்ததில்லை! நமது புறக் கண்களுக்கு அணுக்களைக் காணும் திறமை இல்லை.  துளை நுண்ணோக்கிக் [Tunneling MicroScope] கருவி மூலம் தளவுளாவி [Scanning]  மின்கணணிப் பிம்பத்தில் [Computerized Image] நாம் அணுவின் அமைப்பைக்  கண்டறிய முடியும்! எட்டு மில்லி கிராம் எடையுள்ள ஒரு குண்டூசியின் நுனியில் 1  கூபிக் மில்லி மீடரில் [cubic mm] 100 பில்லியன் பில்லியன் [10 அடுத்து 17  பூஜியங்கள்] அணுக்கள் உள்ளன! ஒரு நீர்த் துளியைப் பெரிது படுத்திப் பூமி  வடிவில் நோக்கினால், நீர் மூலத்திரளில் [Molecule] உள்ள அணு, ஓர் எழுமிச்சைப்  பழம் அளவாகக் கருதலாம்.

    நூற்றுக்கும் மேற்பட்ட அணு வகைகள் உலகில் உள்ளன. நமக்குத் தெரிந்த தங்கம்,  வெள்ளி, இரும்பு, தாமிரம் [Copper], ஈயம், அலுமினியம் போன்ற பழைய  உலோகங்கள் நிலையானவை [Stable]. பின்னால் புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட  யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம், பொலோனியம் ஆகியவை  கதிரியக் கத்தால் சுயமாய்த் தேயும், நிலையற்ற [Unstable] கன மூலகங்கள் [Heavy  Elements]. இது வரை கண்டு பிடிக்கப்பட்ட 106 மூலகங்களில் 88 இயற்கையில்  தோன்றுபவை. மற்ற 18 அணுக்கருச் சிதைவிலோ, அன்றி அணு உலைகளிலோ  உண்டானவை. அணு எண் 92 மேல் மூலகங்கள் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப  தில்லை. அணுக்கள் தனியாகவோ, அன்றி கூட்டாகவோ இயற்கையில்  தோன்றுகின்றன. உதாரணமாக நீரில் ஈரணு ஹைடிரஜனும் [H2], ஓரணுப் பிராண  வாயுவும் [Oxygen] இணைந்தே [H2+O–>H2O] தென்படுகின்றன. ஈரணு, மூவணு  அன்றிப் பலவணு சேர்ந்து இயங்கும் மூலகக் கூறுகளை ‘மூலத்திரள்’ [Molecules]  என்று இரசாயனத்தில் கூறுவார்கள்.

    ஜான் டால்டன், ஹென்ரி பெக்குவரல், ஏர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு, நீல்ஸ் போஹ்ர்  ஆகிய விஞ்ஞானிகளின் புது அணுவியல் நியதியின்படி, அணுவின் அமைப்பு ஓர்  குட்டிச் சூரிய மண்டலம் போன்றது. சூரியன் போல, அணுவின் நடுவே சக்தி  அடங்கிய அணுக்கரு உள்ளது. அண்ட கோளங்கள் போல கருவைச் சதா  எலக்டிரான்கள் [Electrons] நீள்வட்ட [Elliptical] வீதியில் சுற்றி வருகின்றன. நடுக்  கருவில் நியூகிளியான் [Nucleons] எனப்படும் புரோட்டான் தனியாகவோ, அல்லது  நியூட்ரான் கூடச் சேர்ந்தோ இருக்கிறது. அண்ட வெளி போன்று அணுவின்  உள்ளும் பெரும் சூன்ய வெளி சூழ்ந்திருக்கிறது. புரோட்டான் நேர்மின் [Positive],  எலக்டிரான் எதிர்மின் [Negative], நியூட்ரான் நடுமின் [Neutral] கொடையும் [Electrical  Charge] கொண்டவை. எலக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகள்  பரமாணுக்கள் [Sub atomic Particles] எனப்படுபவை. ஓர் அங்குள நூலில்  முத்துக்களைப் போல் வரிசை யாகக் கோர்த்தால், 10 பில்லியன் பில்லியன் [10  அடுத்து 17 பூஜியங்கள்] நியூகிளியான்களை அமைத்து விடலாம்!

    இரண்டாம் உலகப் போர் நடந்த போது, இந்திய அமெரிக்க விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் அணுக்கருத் தொடரியக்கம் முதலில் புரிந்த என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணி யாற்றியதை இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும் !

    அணு எண், அணுப் பளுஎண், அணுநிறை, ஏகமூலங்கள்

    மூலகத்தின் அணு எண் [Atomic Number] என்பது, அணுக் கருவுக்குள் இருக்கும்  புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ஓர் மூலகத்தின் இரசாயனக்  குணங்கள் அதனுடைய அணு எண்ணைப் பொருத்தது. மூலகங்கள் அணு எண்  வரிசையில்தான் அணி அட்டவணையில் [Periodic Tables of Elemets] இடம்  பெறுகின்றன. அணுப் பளு எண் [Atomic Mass Number] எனப்படுவது, கருவில்  இருக்கும் நியூட்ரான் புரோட்டான் கூட்டு எண்ணிக்கையைக் காட்டும். அது  ‘நியூக்கிளியான்’ தொகை. அணு நிறை [Atomic Weight] என்பது மூலகக் கருவில்  புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு நிறை. அணு நிறை என்புது ஓர் ஒப்பு  நிறை [Relative Mass]. கரியின் [Carbon12] அணுக்கருவில் 6 புரோட்டான், 6  நியூட்டான் உள்ளன. கரியின் அணு எண் 6, பளு எண் 12, அணு நிறை  12.00000000. கரியின் அணு நிறை 8 தசமத் துள்ளியமாக இருப்பதால், மற்ற  மூலகங்களின் அணு நிறை யாவும், கரி நிறைக்கு ஒப்பாகக் கணக்கிடப் படுகிறது.  உதாரணமாக, முதல் எளிய மூலகமான ஹைடிரஜன் ஒரே ஒரு புரோட்டானைக்  கொண்டுள்ளது. அதன் அணு எண் 1. பளு எண் 1. நிறை 1.0078.

    சில மூலகங்களுக்கு ஒன்று அல்லது பல ஏகமூலங்கள் [Isotopes] இயற்கையிலோ  அன்றி செயற்கையிலோ ஆக்கப் பட்டுள்ளன. ஏகமூலங்கள் என்றால்,  அணுக்கருவில் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான்  எண்ணிக்கை கொண்ட மூலகங்கள். உதாரணமாக ஹைடிரஜன் மூலகத்திற்கு  இரண்டு ஏகமூலங்கள் உள்ளன. டியுடிரியம் [Deuterium] புரோட்டான் 1, நியூட்ரான் 1.  டிரிடியம் [Tritium] புரோட்டான் 1, நியூட்ரான் 2.

    கரி12, கரி13, கரி14 மூன்றும் கரியின் ஏகமூலங்கள். அது போல், யுரேனியம்238  இன் ஏகமூலம் யுரேனியம்235. யுரேனியம்238 இன் அணு எண்: 92 [92  புரோட்டான், 146 நியூட்ரான்], பளு எண்: 238. அணு நிறை: 238.03. யுரேனியம்235  இன் அணு எண்: 92 [92 புரோட்டான், 143 நியூட்ரான்], பளு எண்: 235.  இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் U238 விகிதம்: 99.286% U235 விகிதம்:  0.714% யுரேனியம் U235 தானாகப் பிளந்து [Spontaneous Fission] உடையும் தன்மை  யுடையது. யுரேனியம் U235 போன்று, புளுடோனியம் Pu239, தோரியம்  Th233  இரண்டும் சுயமாய்ப் பிளக்கும் தன்மை யுடையவை. ஆதலால் அணுசக்தி  நிலையங்களிலும், அணு ஆயுதங்களிலும் U235, அல்லது Pu239, அல்லது Th233  முழுமையாக [100%] அல்லது செழுமையாக [Small% Enriched] எரிக்கோலாய்ப் [Fuel  Rods] பயன் படுகின்றன.

    நிலையற்ற கன மூலகங்களான யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம்,  பொலோனியம் சிதைந்து தேய்வதற்குக் காரணம் என்ன ? கன உலோகங்களின்  அணுக்கருவில் உள்ள நியூகிளியான் [புரோட்டான் நியூட்ரான்] எண்ணிகையைப்  பார்த்தால் இதற்குப் பதில் அறிந்து விடலாம். நிலையான உலோகங்களில் ஏறக்  குறைய நியூட்ரான், புரோட்டான் சம எண்ணிக்கையில் உள்ளன. அதாவது  நியூட்ரான் / புரோட்டான் பின்னம் [Neutron Proton Ratio] = 1 [அருகில்]. யுரேனியம்  [U235] இல் நியூட்ரான்145 / புரோட்டான்92 பின்னம் = 1.55 அதாவது  அணுக்கருவில் அதிகமான, அளவுக்கு மீறிய நியூட்ரான்கள் அடங்கி நிலை யற்ற  தன்மையை உண்டாக்குகின்றன.

    மீறும் தொடரியக்கம், ஆறும் தொடரியக்கம், பூரணத் தொடரியக்கம்

    அணு உலைகளில் U235 மீது, ஒரு நியூட்ரான் கணையை ஏவிடும் போது,  அணுக்கருவில் நியூட்ரான் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி, U236 இரு  துண்டங்களாகப் பிரிந்து, இணைவு சக்தி [Binding Energy] வெளியாகி, அடுத்து 2  அல்லது 3 நியூட்ரான்கள் இயக்கத்தில் உண்டாகும். ஓர் இயக்கத்தில் தோன்றிய 2  நியூட்ரான்கள் அடுத்துள்ள U235 அணுக்களைத் தாக்கிப் பிளவுத் துணுக்குகளும்  [Fission Products] 4 நியூட்ரான்கள் வெளியேறும். இவ்வாறு நியூட்ரான் எண்ணிக்கை  2, 4, 8, 16, 32, 64 என்ற தொடர்ப் பெருக்கத்தில் [Geometric Progression] மீறிப்  போய் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அளவு கடந்த நியூட்ரான்  பெருக்க இயக்கத்திற்கு ‘மீறும் தொடரியக்கம்’ [Super Critical Reaction] என்று  சொல்லப்படுகிறது. அணு உலையில் நியூட்ரான் விழுங்கிகளைத் [Neutron  Absorbers] தக்க சமயத்தில் நுழைவித்து, எண்ணிக்கையைக் குறைத்தால் இயக்கம்  சிறிது நேரத்தில் நின்று விடும். இக்கட்டுபாடு ‘ஆறும் தொடரியக்கம்’ [Sub Critical  Reaction] எனப்படும். நடு நிலமையில் நியூட்ரான் விழுங்கிகளை ஏற்றியும்,  இறக்கியும் ஆட்சி செய்து, சம நிலை நியூட்ரான்களை நிலவச் செய்வதைப்,  ‘பூரணத் தொடரியக்கம்’ [Critical Reaction] என்பார்கள். மீறும் தொடரியக்கம்  பொதுவாக அணு ஆயுதங்களில் பயன்படும். அணு உலை ஆட்சியில் [Reactor  Control] பூரணத் தொடரியக்கமும், ஆறும் தொடரியக்கம் உபயோக மாகிறது.  எதிர்பாராத அபாய நிலை [Prompt Critical] இயக்கங்களைத் தடுக்க தடைக் கோல்  [Shut Down Rods] அல்லது தடுப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூரணத்  தொடரியத்தில் வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப் பாடாகிறது. தடுப்பு,  ஆறும் இயக்கங்களில் முறையே வெப்பசக்தி உடனே அல்லது மெதுவாகக்  குறைக்கப் படுகிறது.

    அணுஉலையில் கோடான கோடி இயக்கங்கள் ஒரு நொடிக்குள் நிகழ்கின்றன.  ஓரணுப் பிளவில் மட்டும் 200 MeV வெப்பசக்தி வெளியாகிறது. U235 சுயமாகவே  பிளவுபடுவதால், அதைச் சுற்றி நியூட்ரான்கள் வெளிப்பட்டு மறைகின்றன.  நியூட்ரான் பெருக்க இலக்கம் [Muliplication Factor] K=1 என்றால் பிறக்கும்  நியூட்ரான்கள் யாவும் இயக்கத்தில் பயன்படுகின்றன என்று அர்த்தம். K=0.5  என்றால் நியூட்ரான் எண்ணிக்கை குன்றி உலை நிறுத்தப் படுகிறது. K=1.006  என்றால் நியூட்ரான் அணு உலையில் சக்தி அதிகமாவதைக் காட்டுகிறது. K>1.5  என்றால் அபாயம்! நியூட்ரான்கள் அளவுக்கு மிஞ்சு கின்றன! தடை ஏற்பாடுகள்  உடனே இயங்கி உலையைப் பாதுகாக்க வேண்டும். K>3 என்றால் அங்கே ஓர்  அணுகுண்டு வெடிக்கப் போகிறது!

    அணுயுகம் பிறந்தது, அமெரிக்காவின் ஆய்வு அணு உலையிலே!

    இரண்டாம் உலக மகா யுத்த சமயத்தில், ஐரோப்பிய விஞ்ஞானிகள் பலர்  அமெரிக்காவுக்கு விரைந்தார்கள். குறிப்பாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ்  போஹ்ர் [Niels Bohr, Denmark], லியோ ஸிலார்டு, எட்வெர்டு டெல்லர், யுஜீன்  விஞ்னர் [Leo Szilard, Edward Teller, Eugene Wigner, Hungery], என்ரிகோ ஃபெர்மி  [Enrico Fermi, Italy], ஹான்ஸ் பெதே [Hans Bethe, Germany], ஆட்டோ ஃபிரிஷ் [Otto  Frisch, Vienna] ஆகியோரும், மற்றும் அமெரிக்காவில் பல ஆய்வுக் கூடங்களில்  பணியாற்றிய விஞ்ஞானிகள் ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer]  தலைமையில், லெஸ்லி குரூஸ் [Leslie Groves] ராணுவ அதிகாரியின் கீழ் நியூ  மெக்ஸிகோ, லாஸ் அலமாசில் மன்ஹாட்டன் திட்டத்தில் [Manhattan Project]  அணுகுண்டு தயாரிக்க ஆழ்ந்தார்கள்.

    சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் [Metallurgical  Laboratory] 1942 நவம்பர் 7 ஆம் தேதி அணுவியல் விஞ்ஞானிகள் கூடி, முதல்  அணுஉலையைக் கட்டத் துவங்கினார்கள். CP1 [Chicago Pile-1] என்று பெயர்  பெறும், இந்த அணுஉலையை டிசைன் செய்த இத்தாலிய விஞ்ஞானி, என்ரிகோ  ஃபெர்மி நிறுவன மேற்பார்வையாளர். மற்றும் ஆர்தர் காம்ப்டன் [Arthur Compton],  லியோ ஸிலார்டு, யுஜீன் விஞ்னர், வால்டர் ஸின் [Walter Zinn] குறிப்பாக  அணுஉலை ஏற்பாட்டில் நேரடிப் பங்கேற்றவர்கள். இந்த அணு உலைக் கவசமற்ற  [Unshielded], வெப்பம் தணிக்கப் படாத [Uncooled] உலை. ஃபெர்மியின் திட்டப்படி  5.5 டன் யுரேனியம், 36 டன் யுரேனியம் ஆக்ஸைடு இரண்டும் திணித்த  கரித்திரட்டுக் [Graphite] கோளங்கள் சீரணியில் அமைக்கப் பட்ட ‘சதுரப் பெட்டகம்’  [Cubic Lattice] ஒன்று கட்ட வேண்டும். அணுப் பிளவில் முதலில் எழும்  நியூட்ரான்களின் வேகத்தைக் குன்றச் செய்து மிதமாக்கிட 344 டன் கரித்திரட்டுக்  கட்டிகள் பயன் பட்டன. இதை அமைக்க, சாதனங்கள் உள்பட மொத்தச் செலவு 1  மில்லியன் டாலர். ஒரு சில வாட்ஸ் [Watts] வெப்ப சக்தி உண்டாக்கும் எளிய  ஆய்வு உலை, அணுவியல் பெளதிகச் சோதனை களுக்கும், அணுக்கருத்  தொடரியக்கம் ஏற்படுத்தவும் டிசைன் செய்யப் பட்டது. ஃபெர்மி 17 நாட்கள்  நியூட்ரான் ‘பெருக்க இலக்கம்’ [Muliplication Factor] K=1 ஆகக் கொண்டு, பூரண  இயக்கத்தில் ஆட்சி செய்து, தன் டிசைன் முடிவுகளைச் சரிபார்த்துக் கொண்டார்.

    மித நியூட்ரான்தான் யுரேனியம்235 [U235] இல் கலந்து, அணுக்கருப் பிளவை  உண்டாக்க முடியும். வேக நியூட்ரான் U235 இல் அணுப் பிளவு ஏற்படுத்துவது  இல்லை. ஆனால் நியூட்ரான் யுரேனியம்238 [U238] அணுக்கருவுடன் சேரும் போது,  புளுடோனியம்239 [Pu239] ஆக மாறுகிறது. அடுத்து மித நியூட்ரான் Pu239 தாக்கி  அணுக்கருப் பிளவு உண்டாக்கிச் சக்தி எழுகிறது.

    கரித்திரட்டு செங்கல் போல் வெட்டப் பட்டு மரச் சட்டங்களில் அமைக்கப் பட்டு,  எரிப் பண்டமான யுரேனியக் கோளங்கள், கரிக்கட்டி மூலையில் அடுத்தடுத்து  வைக்கப் பட்டன. அணுஉலைப் பாதுகாப்புக்கு நியூட்ரான் விழுங்கியான 7  ‘காட்மியம் கோல்கள்’ [Cadmium Rods] இடையே செங்குத்துத் துளைகளில்  நுழைக்கப் பட்டன. மீறும் தொடரியக்கம் எழாது தடுக்க, எப்போதும் நியூட்ரான்  தடைக் கோல்கள் அணு உலையில் தயாராக இருக்க வேண்டும். மூன்று  துளைகளில் நியூட்ரான் மிதக் கட்டுப் பாட்டுக்குப் ‘போரான் இரும்புக்’ கோல்கள்  [Boron Steel] தொங்க விடப்பட்டன. மட்டத் துளைகளில் போரான் டிரைபுளுரைடு  [Boron Trifluoride] உள்ள ‘நியூட்ரான் மானிகள்’ [Neutron Monitors] நியூட்ரான்  திணிவைக் [Neutron Flux] கண்காணிக்க அமைக்கப் பட்டன.

    1942 டிசம்பர் 2 ஆம் தேதி 3:25 P.M. சரியாக, ஃபெர்மி பச்சைக் கொடி காட்ட,  உதவியாளர் ஜார்ஜ் வீல் [George Weil] இறுதி மித ஆட்சிக் கோலை மேலே  நீக்கிடும் போது, பெருக்கு இலக்கம் K=1.0006 ஆகக் கூடி நியூட்ரான் எண்ணிக்கை  விரிந்து முதன் முதல் அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction]  சிகாகோ ஆய்வு அணுஉலையில் காட்டப் பட்டு ‘அணு யுகம்’ [Atomic Age]  பிறந்தது. மாபெரும் இந்த அரிய சரித்திர சாதனையை நேரில் கண்ட விஞ்ஞான  மேதைகள் பெர்மி, காம்ப்டன், ஸிலார்டு, விஞ்னர், வால்டர் ஸின் ஆகியோர் தவிர  மற்றும் 42 பேர்கள் பால்கனியில் நின்று, இந் நிகழ்ச்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சி  அடைந்தனர். உலகின் முதல் அணுஉலை 28 நிமிடங்களுக்கு இயங்கி அதன் பின்  ஆட்சிக் கோல்கள் மறுபடியும் நுழைக்கப் பட்டு உலை நிறுத்தப் பட்டது. இவ்வரிய  வெற்றியை, ஆர்தர் காம்ப்டன் உடனே குறி மொழியில் [Code Language]  ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் வேந்தராய் இருந்த ஜேம்ஸ் பிரையன்ட்  கொனாட் [James Bryant Conant] அவருக்குப் தொலை பேசியில், ‘இத்தாலிய  மாலுமி புதிய உலகில் கால் வைத்தார் ‘ என்று செய்தி கொடுத்தார்.

    அணு உலை, அணுசக்தியின் பிதா, என்ரிகோ ஃபெர்மி

    என்ரிகோ ஃபெர்மி 1901 இல் செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில்  பிறந்தார். ஆக்கத் திறமையும், கணித வல்லமையும், ஆய்வுச் சாதுரியமும்,  சோதனை யுக்தியும் ஒருங்கே பெற்றவர். சிறு வயதிலேயே பெளதிகத்தில் மிகுந்த  ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக் கழகத்திலும், ஐரோப்பாவில் வேறு  இடங்களிலும் படித்துப் பெளதிகத்தில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக் கழகத்தில்  பேராசிரியராகப் பணியாற்றியவர். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டாக்கதிர்  தேய்வு நியதியைத் [Theory of Beta Decay] தோற்றுவித்தவர். இயல் யுரேனியத்தை  [Natural Uranium] நியூட்ரான் கணைகளால் தாக்கி, செயற்கைக் கதிரியக்கத்தை  உண்டு பண்ணி, புது யுரேனியச் சீரணி மூலகங்களை [Trans Uranium Elements]  உருவாக்கியவர். அந்த பெளதிகச் சாதனைக்கு 1938 இல் ஃபெர்மி நோபல் பரிசு  பெற்றார்.

    அவரது மனைவி யூதரானதால், மதச் சீண்டலைத் தாங்க முடியாமல், யுத்த  சமயத்தில் அமெரிக்காவுக்கு விரைந்தார். ஆங்கு கொலம்பியா பல்கலைக்  கழகத்தில் பெளதிகப் பேராசியராகச் சேர்ந்தார். தான் முன்பே துவங்கிய யுரேனிய  நியூட்ரான் அணுக்கரு இயக்கங்கள் 1939 இல் பிரபலமாகி, ‘அணுக்கருப் பிளவு’  விளக்கமாகி ஐரோப்பாவில் வெளியான போது, ஃபெர்மி நியூ மெக்ஸிகோ லாஸ்  அலமாஸில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அடியில் அணுகுண்டு ஆக்கும் முயற்சியில்  இறங்கிய மற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணியாற்றினார்.

    சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1942 டிசம்பரில் சரித்திரப் புகழ் பெற்ற முதல்  அணுஉலையில், முதல் ‘அணுக்கருத் தொடரியக்கத்தை’ [Nuclear Chain Reaction]  நிகழ்த்திக் காட்டி, முதல் அணுகுண்டு அழிவுக்கும், முதல் அணு மின்சக்தி  ஆக்கத்திற்கும் காரண கர்த்தாவாக விஞ்ஞான வானில் ஒளி வீசினார்.  யுத்தத்திற்குப் பிறகு 1946 இல் சிகாகோ பல்கலைக் கழகப் பெளதிகப்  பேராசிரியராகப் பணியாற்றி, 1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில்  எதிர்பாராத விதமாகப் புற்று நோயில் காலமானார். அமெரிக்கா அவரது பெயரில்  50,000 டாலர் ‘என்ரிகோ ஃபெர்மி பரிசு’ [Enrico Fermi Award] ஒன்றை ஏற்படுத்தி  உள்ளது. அவரைக் கெளரவிக்க அமெரிக்கா முதலில் அவரது சாதனைக்கு அப்  பரிசை என்ரிகோ ஃபெர்மி அளித்தது !

    Enrico Fermi’s grave in Chicago

    தகவல் :

    1.http://www.pbs.org/wgbh/amex/bomb/peopleevents/pandeAMEX52.html   [Enrico Fermi]

    2.   http://www.britannica.com/EBchecked/topic/204747/Enrico-Fermi

    3.   http://www.atomicarchive.com/Bios/Fermi.shtml

    4.  http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1938/fermi-bio.html

    5.  http://www.biography.com/people/enrico-fermi-9293405

    6.  http://www.glogster.com/lilwayne4100/enrico-fermi-/g-6lip748esmk4potl8o059a0

    7.   http://www.docstoc.com/docs/6068878/Enrico-Fermi

    8. https://en.wikipedia.org/wiki/Enrico_Fermi

    9. https://www.biography.com/scientist/enrico-fermi

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    தினேஷ்

    அன்புள்ள மணிமொழிக்கு,

    அண்ணன் எழுதிக்கொள்வது, அம்மா நலமாக இருக்கிறார்களா?

    ‘அண்ணன்‘ என்ற வார்த்தையை எழுதும் போது எனக்கு உடல் கூசவே செய்தது. அந்த வார்த்தையால் என்னை அழைத்தற்காக எத்தனை முறை உன் மீது அமிலத்தை வார்த்தைகளாக வீசியிருப்பேன். என் கடந்த கால செயல்களை நியாயப்படுத்துவதற்கா நான் இந்த கடிதத்தை எழுதவில்லை. அப்படி நியாயப்படுத்திக் கொள்ளக்ககூடிய எந்த செயல்களையும் நான் செய்துவிடவும் இல்லை. இருப்பினும் கடந்த காலம் பற்றிய என் எண்ணங்களை உன்னிடம் பகிர்வதன் மூலம் என் வலிகளுக்கு, இந்த வரிகள் வடிகாலாய் இருக்கும் என நம்புகிறேன்.

    அப்பொழுது எனக்கு பனிரெண்டு வயது இருக்கும். நாங்கள் அம்மன் கோவில் தெருவில் குடி இருந்தோம். அப்பொழுதெல்லாம் அப்பா வியாபார விசயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவருவார். ஒவ்வொரு முறையும் எனக்கென்று ஏதாவது வாங்கி வருவார். வழக்கமான நடுத்தர குடும்பத்தை போல சிறு, சிறு சண்டைகளோடு சாதாரணமாக சென்று கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கை. அப்பொழுதுதான் நீங்கள் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தீர்கள்.

    ஒரு நாள் காலை அப்பா கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணை அழைத்து வந்தார். அம்மாவின் கதறல் ஊரையே எழுப்பியது. அம்மா மாரில் அடித்துக் கொண்டு அழுதாள். அவர்கள் மீது மண் வரி இறைத்து சாபம் விட்டாள். பாட்டி தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டிக்கொண்டிருந்தாள். எதுவும் புரியாத அந்த கைக்குழந்தை கதறி அழுதுக்கொண்டிருந்தது. தெருவே எங்கள் வீட்டின் முன் கூடியது. அப்பாவின் நண்பர்கள் சிலர் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர்.

    கைக்குழந்தையாக இருந்த உன்னையும், உன் அம்மாவையும் கடம்பரயான் தெருவில் அப்பா வீடெடுத்து வைத்திருந்தார். தினமும் உங்களை திட்டியே பொழுது போனது என் அம்மாவிற்கும், பாட்டியிற்கும். உங்களை, அவர்கள் திட்டிய வார்த்தைகளை பட்டியலிட வேண்டுமெனில் கானகங்கள் அத்தனையையும் காகிதமாய் செய்தாலும் பத்தாது. இப்படி எங்கள் வாழ்க்கையை சீரழிக்க வந்தவர்களாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும் தான் நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டீர்கள்.

    அப்பா உங்கள் வீட்டில் இருக்கும் சில சமயங்களில், அம்மா என்னையும், கவிதாவையும் அழைத்துக்கொண்டு உங்கள் வீட்டின் முன்னால் வந்து சத்தம் போட்டு நியாயம் கேட்பாள். என் மாமாக்கள் அவ்வப்போது வந்து உங்களை மிரட்டி விட்டு போவார்கள்.

    நம் அப்பா வியாபார விசயமாக வெளியூர் சென்ற இடத்தில் உன் அம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டு, தான் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பதை மறைத்து கல்யாணம் செய்துகொண்டார் என்பது எங்களுக்கு பின்னர் தெரிய வந்தாலும், உங்களை பற்றிய எங்கள் எண்ணங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உங்களை வெறுப்பதையும், காயப்படுத்துவதையும் நாங்கள் நிறுத்தவில்லை.

    நாம் ஒரே பள்ளியில் படித்தும் பேசிக்கொண்டதில்லை. கவிதா உன்னுடன் பேசியதை அறிந்து அவளை அறைந்ததை நீ அறிந்திருப்பாய். அப்பாவை அழைத்துச்செல்ல சில சமயம் உன் வீட்டிற்கு வரும்போது, நீ தண்ணி கொண்டு வந்து கொடுத்து ‘வாங்கண்ணா’ என அழைப்பாய். நான் உன்னை உதாசீனப்படுத்தி, வார்த்தைகளால் உன்னை குரூரமாக குத்தி காயப்படுத்துவேன். நீ கண் கலங்கிபோவாய். இருப்பினும் ‘அண்ணா’ என்று அன்பாக அழைப்பதை நீ ஒருபோதும் நிறுத்தவில்லை..

    தவறான நட்பு, எனக்கு தவறான பழக்கங்களை கற்றுக்கொடுத்தது. அப்பா தட்டி கேட்டால், அவரை குத்திக்காட்டி வாயடைக்கச்செய்வது எனக்கு எளிதாகிப்போனது. ‘படிப்பு தான் வரவில்லை, ஒழுங்காக வியாபாரத்தையாவது பார்’ என அப்பா கடை வைத்து தந்தார். பண புழக்கம், தீய பழக்கத்தை செழிப்பாக வளர்த்தது. அப்பா எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. வியாபாரம் படுத்தது, கடன் பெருகியது. ‘நீ கூத்தியா வச்சிகிட்டதால தான் என்னால படிக்க முடியாம போச்சு, இப்போ வியாபாரமும் விளங்காம போச்சு’ என அப்பாவின் மீது பழி போட்டு என் தவறுகளை மறைத்துக்கொண்டேன்.

    கவிதாவின் கல்யாணம் எங்களின் பொருளாதார நிலையை தரை தட்டச்செய்தது. அப்பா உங்கள் வீட்டிற்கு வர தடை செய்யப்பட்டிருந்தார். உங்களுக்கு எதுவும் செய்யமுடியாத தன் கையாலாகாதத் தனத்தை நினைத்து வெட்கப்பட்டு, உங்களை சந்திப்பதையே தவிர்த்தார். உன் அம்மா வீட்டு வேலை செய்து உன்னை படிக்க வைக்கிறாள் என்றும், நீயும் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் வேலைக்கு போகிறாய் என்பதையும் அறிந்து அப்பா மிகவும் வேதனை அடைந்தார். எங்களின் திட்டும், பழியும் அவரை மேலும் பலவீனமாக்கியது. அவரின் ஒரு பாவத்தின் மீது எங்களின் எல்லா பாவங்களையும் அடுக்கி வைக்கவே, அதன் பாரம் தாங்காமல் இப்பூவுலகில் இருந்து அவர் தன்னை விடுவித்துக்கொண்டார்.  அப்பாவை கடைசியாக ஒரு முறை பார்க்க எங்கள் வீட்டின் முன் அழுது கதறிய உன்னையும், உன் அம்மாவையும் நாங்கள் கடைசிவரை அனுமதிக்கவில்லை. அவர் சாவிற்கு நீங்கள் தான் காரணம் என உங்கள் மீதே பழியை சுமத்தி உங்களை விரட்டினோம்.

    அதற்குப்பிறகு உனக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகவும், நீங்கள் ஊரை விட்டு சென்று விட்டதாகவும் கேள்விப்பட்டேன். நீ பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்துக் கொண்டிருப்பதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உன் ஒழுக்கத்தையும், இரவு வேலையில் பணிபுரியும் பெண்களின் ஒழுக்கத்தையும் மட்டும் இல்லாமல், பொத்தாம்பொதுவாக வேலைக்கு செல்லும் எல்லா பெண்களின் ஒழுக்கத்தையும் கேள்வியாக்கி, கேலி செய்து எங்கள் ஆற்றாமையை ஆற்றிகொண்டோம்.

    வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு யாரும் பெண் தர முன்வராததால், வயது வித்தியாசம் பார்க்காமல் என் மாமா பெண்ணையே எனக்கு மணமுடித்து வைத்தார்கள். வருமானத்திற்கு வழியில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது சாலையோர விவசாய நிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக்கி, நகரத்து மக்களுக்கு ‘முதலீடு’ என்ற பெயரில் ஏமாற்றி விற்கும் தொழில் நம் ஊரில் விமர்சையாக நடந்தது. இருந்த கொஞ்சம் நிலத்தையும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல் விற்றேன். கடன் போக கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. எப்படியாவது பஞ்சாயத்து தலைவர் ஆகிவிட்டால் இழந்த பணம், பேர், புகழ் அத்தனையும் திரும்ப பெற்றுவிடலாம் என நண்பர்கள் ஆசை காட்டவே, அரசியல் சூதில் பணத்தை இறைத்தேன், அத்தனையையும் இழந்தேன்.

    கடன் கணக்கு என் ஞாபக சக்திக்கு மீறி சென்றுவிட்டது. தினமும் கடன் கொடுத்தவர்கள் வீட்டை முற்றுகையிட்டனர். எங்கள் மாப்பிளையும் என்னை போன்ற ‘ஆண்மகன்’, கவிதாவை அடிக்கடி வரதட்சணை வாங்கி வர தாய் வீட்டிற்கு விரட்டி விட்டான். கடைசி சொத்தான வீடும் மூழ்கும் நிலைக்கு போய்விட்டது. இந்த சூழ்நிலையில் ஒரு ஆண், வீட்டில் இருக்கும் பெண்களை பற்றி கவலைப்படாமல் நல்லதொரு முடிவெடுப்பான். ஒன்று ஊரைவிட்டு ஓடிப்போவது அல்லது தற்கொலை செய்துக்கொள்வது. எந்த முடிவை எடுக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்த சமயம் தான் ஒரு கடிதம் வந்தது, அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்தது. கூடவே இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையும் இருந்தது.

    “அன்புள்ள அண்ணனுக்கு,

    உங்கள் தங்கை மணிமொழி எழுதிக்கொள்வது. வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா?

    தயவு செய்து நீங்கள் தப்பாக நினைத்துக்கொள்ளவேண்டாம். உங்கள் நிலை எனக்கு நன்றாக தெரியும்.

    நீங்கள் என்னை தங்கையாக ஏற்காவிட்டாலும், நான் உங்களை எப்போழுதும் என் அண்ணாகவே நினைத்திருக்கிறேன். அந்த  உரிமையில் தான் இத்துடன் காசோலையையும் அனுப்பியுள்ளேன்……..”

    என்று தொடங்கும் அந்த கடிதத்தை இன்றுவரை என்னால் கண்ணீர் திரையை மீறி முழுமையாக படிக்க முடியவில்லை.

    ‘ஞானம்’ என்பது தவறவிட்ட வண்டிக்கு கிடைக்கும் பயணச்சீட்டு போல, எப்போழுதும் தாமதமாய் தான் வரும். பணம் இருந்த போது என்னுடன் இருந்த நட்பும், சுற்றமும். பணமில்லாதபோது என்னை ஒதுக்கிவிட்டார்கள். ஆனால் எப்போழுதும் உனக்கு கெடுதல் மட்டுமே செய்த என் மீது நீ எப்படி இவ்வளவு பாசம் வைத்தாய்..? பெண்களின் அளவு கடந்த பாசத்தின் அர்த்தத்தையும், ஆழத்தையும் அறிய முயற்சிப்பது முட்டாள் தனம் தான். எப்போழுதும் பெண்கள் சூழவே இருந்திருக்கிறேன், ஆனால் அவர்களை புரிந்து கொள்ள ஒருநாளும் முயற்சித்ததில்லை, எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் வரை.

    இந்த சமுதாயம் விசித்திரமானது. அது ஆண்களையும், பெண்களையும் எப்போழுதும் வெவ்வேறு தராசிலேயே வைத்திருக்கிறது. ஆண்களின் தவறுகளை எளிதாக கடந்து விடுகிறார்கள். பெண்களின் தவறுகள் மட்டும் பெரும் ஒழுக்கக்கேடாகவே பார்க்கப்படுகிறது.

    நம் அப்பா செய்த தவறுக்கு, உன் அம்மா வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவித்தார்கள். அவர்களின் உறவினர்களே ஒதுக்கிவைத்தனர், நாங்கள் கொடுமைப்படுத்தினோம். எந்த பாவமும் அறியாத நீ, எந்த உறவும் இல்லாமல், பாசமும் கிடைக்காமல், பழிக்கும், துன்பத்திற்கும் ஆளானாய். ஆண் துணை இல்லாத பெண்களாய் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருபீர்கள். ஆண்களின் பாவங்களுக்கு எப்பொழுதும் பெண்களே சிலுவை சுமக்கிறார்கள்.

    எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், பெண்கள் முன்னேற்றம் அடைந்தாலும், பொருளாதார சுதந்திரம் பெற்றாலும். ஒழுக்கம், கௌரவம் என்ற பெயரில் அவர்கள் கொடிய வன்முறைக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பலாத்காரம், கௌரவக்கொலை, வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் என பல ரூபத்தில் அவர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது இந்த சமூகம். ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக எனக்கு பெரும் அச்சமாக இருக்கிறது. என்னை போன்றவர்கள் நிறைந்த இந்த சமூகத்தில் அவளின் எதிர்காலம் எப்படி இருக்கபோகிறதோ..? எத்தனை இன்னல்களையும், பழி, பாவங்களையும் அவள் சுமக்கப்போகிறாளோ…?

    ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அத்தனை தடைகளையும் தாண்டி அவள் பெரிதாக சாதிப்பாள் என்று. ஏனெனில் அவளுக்கும் அவள் அத்தையின் பெயர் தான். ஆம்… அவள் பெயர்  மணிமொழி…

    (சில வருடங்களுக்கு பிறகு…)

    அன்புள்ள மணிமொழிக்கு,

    உன் அத்தை மணிமொழி எழுதிக்கொள்வது.. 🙂

    வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா?

    உன் பிறந்தநாள் பரிசாக மடிக்கணினி ஒன்றை அனுப்பியுள்ளேன்………

    (மின்னஞ்சலிலும் தொடரும்… ‘அன்புள்ள மணிமொழிக்கு…’)

    Share
  • அன்புள்ள தோழி மணிமொழிக்கு

    டி. விப்ரநாராயணன் 

    23-3-2014

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு

    உன் கடிதம் கிடைத்தது. உன் குழந்தைகள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று உன் கடிதத்தின் மூலம் புரிந்து கொண்டேன். நானும் மனைவியும் இங்கே தனியாகத்தான் இருக்கிறோம். மூத்தவன் சான்பிரான்சிஸ்கோவிலும் இளையவன் கனெக்டிகட்டிலும் இருக்கிறான். இளையவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. என் அத்தை காலமாகிவிட்டார்கள். என் மனைவி அத்தையின் மகள் தான் என்று உனக்கு நினைவிருக்கும். ஒரு துக்கம், ஒரு சந்தோஷம். இரண்டையும் ஒரே கடிதத்தில் சொல்கிறேனே என்று நினைக்கிறாயா? இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் மனநிலையை பெறுவதற்கு முனைய வேண்டும். அதாவது குழந்தை பிறந்தால் அழவேண்டும்;  யாரேனும் இறந்தால் சந்தோஷப் படவேண்டும். ஒன்று பிறவிக் கடலில் துக்கப்பட பிறந்துள்ளது;. மற்றொன்று பிறவிக் கடலிலிருந்து விடுதலையாகிச் செல்கிறது என்று என் தாத்தா அடிக்கடி சொல்வார். ஆனால் நாம் நடைமுறையில் அப்படியிருக்க முடியவில்லை.

    இசைக்கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறாயா? உபன்யாசங்களுக்குச் செல்கிறாயா? சென்ற கடிதத்தில் கீதையில்  இரண்டாவது அத்தியாயத்தில் 47 ஆவது ஸ்லோகம் புரியவில்லை என்று எழுதியிருந்தாய். அதுதான் கீதையின் அச்சாணி; நம் வாழ்விற்கும் அச்சாணி. ஸ்லோகத்தைக் கீழே தருகிறேன்

    கர்மண்யே வாதிகாரஸ்தே மாபலேஷு கதாசந                                       

    மாகர்ம பலஹேதுர்பூர்மாதே லங்கோஸ்தவ கர்மணி

    இதன் பொருளாவது — கருமத்தைச் செய்வதில் தான் உனக்கு அதிகாரம். அதன் பலன்களில் உனக்கு அதிகாரம் எப்பொழுதும் இல்லை. மற்றும் கரும பலன்களுக்கு காரணமாக ஆகாதே. ஆனால் கருமத்தைச் செய்யாமலிருப்பதில் மனத்தைச் செலுத்தாதே.

    ஒரு வேலை செய்தால் பலனை எதிர்பார்ப்பதுதானே மனித இயல்பு. எவ்வாறு பலனில் நமக்கு அதிகாரம் இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? —என்று நீ எழுதியிருக்கிறாய்.

    நீ கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். அப்படியிருப்பதால்தான் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற கடுமையான நோய்கள் நம்மை வந்து ஆட்கொள்ளுகின்றன. பலனை எதிர்பார்ப்பதற்கும் நோய்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று நீ நினைக்கலாம்.

    ஒரு செயலைச் செய்கிறோம். அதன் பலனை எதிர்பார்க்கிறோம், அது கிட்டவில்லை என வைத்துக் கொள்ளலாம். உடனே நம் மனம் அதை எண்ணி அசைபோடுகிறது. பெருத்த ஏமாற்றம் விளைகிறது. யாருக்காக இந்த வேலை செய்தாயோ அவன் உன்னை சீண்டக்கூட இல்லை. அவனுக்குப் பலன் கிடைத்துவிட்டது. அவன் உனக்கு நன்றி கூடச் சொல்லவில்லை என்று உன் மனம் வேதனைப் படுகிறது. அவன்மேல் கோபம் உண்டாகிறது. கோபம் வெறுப்பாகிறது. அவனைப் பார்க்கக் கூடாது; அவனிடம் பேசக் கூடாது என்றெல்லம் உன் மனம் நினைக்கிறது. மற்றவர்களிடம் சொல்லிப் புலம்புகிறாய். தூக்கம் கெடுகிறது. மனவலி அதிகமாகிறது. மயக்கமாகி விடுகிறாய். மருத்துவர் சோதனை செய்கிறார்; இதயத்தில் கோளாறு என்று கணிக்கிறார். ஒரு சிறு எதிர்பார்ப்பு எங்கே உன்னை இட்டுச் சென்று விட்டது என்று பார்த்தாயா?

    காந்திஜி நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். ஆனால் ஆகஸ்டு 15ஆம் நாள் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் நவகாளிக்கு யாத்திரையை மேற்கொண்டுவிட்டார். தான் பிரதமராவதற்கோ அல்லது ஜனாதிபதி ஆவதற்கோ அவர் தியாகம் புரியவில்லை. ஆகவே நாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது நம் கர்மங்களைச் செய்ய நாம் மனதைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

    ஸ்ரீராமானுஜர் தன் குருவிடம் உபதேசம் பெற 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தார். 18 ஆவது  முறையின்போதுதான் அவர் உபதேசம் பெற்றார். 18 முறை சென்றதற்குக் காரணம் அவர் அந்த உபதேசத்தைப் பேறுவதற்கு அவர் தயாராகவில்லை என்று அவர் குரு எண்ணினார். அந்த உபதேசத்தைப் பெற்றவுடன் அவர் அந்த மந்திரத்தை சாதி மத வேறுபாடின்றி எல்லோருக்கும் உபதேசம் செய்தார். தான் நரகம் புகுந்தாலும் மற்றவர்கள் வைகுண்டம் செல்ல வேண்டும் என்ற உன்னதமான எண்ணம்.  இவர்கள் எந்த பலனையும் எதிர்பார்க்காது மக்களுக்குத் தொண்டாற்றவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணிய மகான்கள்.

    நான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி நான் ஓய்வெடுக்கப் போகிறேன் என்பதும், என் பிள்ளையை 10 மாதம் தோளில் சுமந்தேன், அவன் என்னைக் கவனிக்காமல் விட்டு விட்டான் என்பதும், நான் அவனை இந்த வயிற்றில் 10 மாதங்கள் சுமந்து பெற்றேன்; ஆனால் இன்று அவன் இந்த வயிற்றுக்கு ஒரு வாய் சோறு கூட போடமாட்டேனென்கிறான் என்று புலம்புவதும் எதிர்பார்ப்பின் பயனே.

    குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுகிறாள். அப்பொழுது அவன் பிற்காலத்தில் தன்னை சுகமாக வைத்திருப்பான் என்றா அவள் நினைக்கிறாள். இல்லையே. ஆனால் அவன் வேலைக்குப் போன பின்பு நினைக்கிறாள். அவனுக்குத்  திருமணம் நடந்தபின் இதையே நினைக்கிறாள். அவன் மனமோ தாயைப் பற்றிய சிந்தனையில்லாது இருக்கிறது. முடிவு முதியோர் இல்லம் தான். இவையாவும் எதிர்பார்ப்பின் விளைவே.

    காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் இளம் சிட்டுகள். இரண்டு நாளில் பிரிந்து விடுகிறார்கள். காதலிக்கும்போது ஈருயிரும் ஓருடலுமாக இருந்தவர்கள் வெவ்வேறு உயிராக மாறிய விந்தைதான் எங்ஙனம்? எல்லாம் எதிர்பார்ப்பின் விளைவுதான். நான் சொன்னபடிதான் நீ இருக்கணும் என்று அவனும் தான் சொன்னபடி அவன் இருக்கணும் என்று அவளும் நினைக்க மணச் சிதைவு ஏற்பட்டுவிட்டது. பயத்தினால் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

     நாம் பிறருக்கு உதவி செய்தாலும், ஆலயங்களில் பணியாற்றினாலும் நமக்கு மோக்ஷம் கிட்டும் என்று மதங்களும் மறை நூல்களும் கூறுகின்றன. இம்மாதிரி கூறும் மதங்களைச் சாடுகிறார் வினோபாபாவே. மோக்ஷத்தைக் காட்டி பணி செய்யவைக்கக் கூடாது என்கிறார். ஆலயங்களில் எந்தவித ஊதியமுமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர். ஒருநாள் ”நாம் இத்தனை நாள் இங்கு பணியாற்றி வருகிறோம் இந்தக் கடவுள் கண்ணைத் திறக்க மாட்டேனென்கிறானே; இங்கு பணியாற்றினால் நம் பெண்ணுக்கு நல்ல வரன் வரும் என்று கூறினாரே அந்த ஜோஸியர்” என்றெல்லாம் அவர் மனம் அங்கலாய்க்கிறது. முடிவில் ஆலயத்திற்குச் செல்வதையே நிறுத்திவிட்டார்.

    அதனால் மணி மொழி நாம் நம் வேலையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். நம் கடன் பணி செய்வதே. அன்னை தெரசா, காஞ்சி பெரியவர், இரமண மகரிஷி, காந்திஜி, தியகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோருடைய அறிவுரைகளையும் வாழ்க்கையையும் படிக்கவேண்டும். எதிர்பார்க்காமல் வாழ முடியாது; ஆனால் நம்மை நாம் செய்யும் கர்மத்தில் முழுமையாக ஈடுபட்டு அதில் ஆனந்தத்தைப் பெறும் வழியைக் கண்டால் எதிர்பார்ப்பு  என்ற சொல்லே நம் அரிச்சுவடியில் வராது. இது ஒரே நாளில் வரக் கூடிய பண்பு இல்லை.

    கோவிலுக்கு ஒரு பால்காரி பால்கொண்டு வருவது வழக்கம். மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது.. அவள் மெதுவாகக் ஆற்றைக் கடந்து தாமதமாகப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். கோவில் பூசாரி அவளிடம் “நீ ஆண்டவனை மனதில் நினைத்திருந்தால் ஆறே உனக்கு வழி விட்டிருக்கும்“ என்றார். “அப்படியா! நான் முயன்று  பார்க்கிறேன்” என்றாள். மறுநாள் மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் வடியவில்லை. ஆனால் அவளோ சீக்கிரம் பாலைக் கொண்டு வந்து விட்டாள். ”எப்படி?”என்று கேட்டார் பூசாரி. “நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். ஆறு வழி விட்டது, வந்துவிட்டேன்” என்றாள் பால்காரி. உடனே பூசாரி ”என்னையும் அழைத்துச் செல்” என்றார். உடனே இருவரும் ஆற்றை நோக்கி வந்தனர். இருவரும் ஆற்றில் இறங்கினர். பால்காரி ஆற்றில் எளிதாக நடந்து சென்றாள். ஆனால் பூசாரியால் முடியவில்லை. காரணம் அவர் பால்காரி போல் அக்கறையுடன் ஆண்டவனைத் தியானிக்கவில்லை. பூசாரி ஆண்டவன் அருகில் சேவை செய்தும் அவருக்குப் பலன் கிட்டவில்லை. ஏனெனில் அவர் பலனை எதிர்பார்த்து பணியாற்றுகிறார். பொதுவாக கோயில் பூசாரிகள் தட்டில் விழும் பணத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை நாம் கவனித்திருக்கலாம்.

    மேலே சொன்ன செய்திகள் உனக்கு நன்றாகப் புரிந்திருக்கும். செய்யும் வேலையில் கவனமும் அன்பும் ஈடுபாடும் வேண்டும். பலன் தானாகவே வந்து சேரும். நீயும் நானும் படிக்கும்போது நம் பெற்றொர்கள் நம்மைப் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதுதான் நம்மை வளர்த்தார்கள். அவர்களுக்கு. வாழ்க்கையைக் கண்டு பயமில்லை. அதனால்தான் என் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர், உன்கூடப் பிறந்தவர்கள் எண்மர். நம் பெற்றொர்கள் நம் எதிர்காலம் பற்றிக் கனவு கண்டு தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டார்களா? இல்லையே. அவர்களுக்கு எந்த வியாதியும் வரவில்லை.

    எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வதற்கு ஒரே வழி கடந்தகால நினைவுகளையும் வருங்காலக் கனவுகளையும் விடுத்து நிகழ்காலத்தில் வாழ்வதுதான்.

    உன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் விசாரித்ததாகச் சொல்லவும். ஒருதடவை இங்கு வந்துவிட்டுப் போயேன்.

    உன் பிரியமுள்ள தோழன்,

    அருள்மொழி.

    Share
  • அன்புள்ள தோழி மணிமொழிக்கு

    ராஜலக்ஷ்மி பரமசிவம்

    அன்புள்ள தோழி  மணிமொழிக்கு,

    நீயும் உன் வீட்டினரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    இப்பொழுது கடிதம் எழுத என்ன அவசியம் என்று தோன்றலாம்.மேலே படி உனக்கே புரியும்.

    எனக்கு மிகவும் தெரிந்த ஒருவருடைய மகள், நன்கு படித்தவள், நல்ல உத்தியோகம், சம்பளம், கண் நிறைந்த கணவன், அழகான குழந்தை  என்று வாழ்ந்து கொண்டிருந்தவள் சட்டென்று விவாகரத்து செய்வதாக சொன்னவுடன், என் மனம் தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தது. என் ஆதங்கத்தை யாரிடமாவது சொல்ல நினைத்தேன். அதனால் தான் இக்கடிதம் எழுதுகிறேன். இப்பொழுதெல்லாம் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டதே என்கிற  ஆதங்கம் தான் மேலோங்கியது. எங்கே தவறு செய்கிறோம் என்று யோசித்தேன். என் மனதில் தோன்றியதை  இதோ கொட்டி விட்டேன்.

    உலகமே நம்மைப் பார்த்து  மூக்கில் விரல் வைக்கும் ஒரு விஷயம் உண்டென்றால், அது நம் குடும்ப அமைப்பு தான். அந்தக் குடும்ப அமைப்பை போற்றிப் பாதுகாத்து, சிறிதளவும் சிதையாமல் அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்வதில், நம் பெண்களுக்கு மாபெரும் பங்கு இருக்கிறது என்பதை யாருமே மறுக்க முடியாது. அதை  நம் பெண்களும் லாவகமாக, நேர்த்தியாக  கொண்டு சென்றார்கள்.

    ஆனால் இப்பொழுது அந்தக் குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது. நான் சொல்லவில்லை. குடும்ப நல நீதி மன்றத்தில் மலையாய்  குவிந்திருக்கும் விவாகரத்து வழக்குகள்  வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

    நம் பாட்டித் தலைமுறைப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே தன் ராஜாங்கத்தை அடக்கி வாழ பழக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் கூட்டுக் குடும்ப வாசிகள் இவர்கள். அவர்களுக்கு  கருத்து சுதந்திரம் கிடையாது. அவர்களுக்கு அடுத்தத் தலைமுறைப் பெண்கள் வீட்டையும், அலுவலகப்  பணியையும் ஒருங்கே செய்து இரட்டைக் குதிரை சவாரி  செய்தவர்கள். அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருந்தது என்று சொல்லலாம். அதற்கும் அடுத்த தலைமுறைப் பெண்கள், இக்கால இளம் மங்கையர், பெயருக்குப் பின்னால் பல பட்டம் தாங்கியவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அலுவலகத்தில் பணி புரிகிறவர்கள். இவர்களுக்கு இன்னும் கூடுதல் சுதந்திரம் இருக்கிறது. இவர்களுக்கு அவர்கள் கணவர்களுடைய உதவி பெரிய அளவில் கிடைக்கவே செய்கிறது. சமையலாகட்டும், குழந்தை வளர்ப்பிலாகட்டும் எல்லாவற்றிலும் கணவன் உதவிக் கரம் நீட்டுகிறான். பொருளாதாரத்திலும் பெண்களின் நிலைமை முன்னேறியிருகிறது. இக்காலப் பெண் பொருளாதாரத்திற்காக கணவனை நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமில்லை. இது அத்தனையும் பாராட்டுக்குரியதே. ஆனால் விவாகரத்தும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஏன்? மிகப் பெரிய கேள்வி இது.

    இந்தத் தன்னிறைவுத் தன்மையை சில பெண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தினால் அவர்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை எல்லாவற்றையும்  தொலைத்து விட்டார்களோ என்கிற அச்சம் எழுகின்றது. விட்டுக்கொடுத்துப் போவது என்பது அடங்கி வாழ்வது என்று தவறாகப் புரிந்து கொள்வதன் விளைவு, விவாகரத்தில் முடிகிறது. நான் எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. அற்பக் காரணங்களுக்காக விவாகரத்து செய்து, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று பெருமைப்படும் பெண்களை என்ன சொல்வது? இப்படிக்  கண்ணை விற்று ஓவியம் வாங்கத் துணியும் பெண்களைப் பற்றி தான் குறிப்பிடுகிறேன்.

    ஆணாகட்டும், பெண்ணாகட்டும் திருமணத்திற்கு முன் கனவுகளையும், கற்பனைக் கோட்டைகளையும் கட்டி வைத்திருப்பார்கள். சந்தேகமில்லை. அந்த எதிர்பார்ப்புகள் நடக்கவில்லையென்றால், அந்தக் கனவுக் கோட்டை தகர்ந்து நொறுங்கிப் போவதை அவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போய், ஒரு கால கட்டத்தில் தம்பதிகள் கோர்ட் படியேறி விடுகிறார்கள்.

    சரி. விவாகரத்தும் ஆகிவிடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு…..? தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறி தானே! குழந்தைகள் இருந்தால் அவர்களும் உள  ரீதியாக அலைகழிக்கப்படுவது நிஜம்.

    அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறாய்? விட்டுக் கொடுப்பது எப்பொழுதும் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாயா? ஏன் கணவன் விட்டுக் கொடுத்தால் குறைந்து போய் விடுமா? என்று  விவாதம் செய்ய வேண்டாம். தம்பதிகளுக்குள் யார் விட்டுக் கொடுப்பது என்பதில் சர்ச்சையே இருக்க வேண்டாமே. தொலை நோக்கில் பார்த்தோமானால், யார் விட்டுக் கொடுப்பது என்கிற வீர விளையாட்டில் இன்று தோற்பவர் தான், பின்பு வெற்றி காண்கிறார்.

    எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. திருமணம் என்பது வங்கி சேமிப்பு  கணக்குப் போன்றது. நாம் எவ்வளவு அன்பை செலுத்துகிறோமோ, கண்டிப்பாக அது வட்டி போட்டு பலமடங்காகி  நமக்கு திருப்பி வரும். அன்பு மட்டும் தான் பலமடங்காக வருமா என்ன?  வெறுப்பை உமிழ்ந்தால், அதுவும் பலமடங்காகி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இந்த  சமயத்தில் ‘ O Henry ‘ன்  கதை  ஒன்று   நினைவிற்கு  வருகிறது.

    நிறைய பேருக்கு இது தெரிந்திருக்கலாம்.

    அதன் தமிழாக்கம் இதோ…

    வறுமையில் வாடும் கணவன் மனைவி. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்வதற்கு அன்பைத் தவிர வேறெதுவும் பெரிதாக இல்லை. மனைவி தன் நீண்ட அழகிய கூந்தலை சீவி முடித்து கொண்டையிடும்போது ஒரு “ப்ரூச்” இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைக்கிறாள். அவள் நினைப்பது அவள் கணவனுக்குத் தெரியும்.

    ஆனால் வாங்குவதற்கு கணவனிடம் வசதியில்லை. கிறிஸ்துமஸ் பரிசாகவாவது குடுக்க முயல்வோம் என்று நினைக்கிறான் கணவன்.

    கிறிஸ்துமஸ் வருகிறது…

    மனைவிக்கு, அவள் கணவனிடம் இருக்கும் பாரம்பர்யமான வாட்ச் பற்றித் தெரியும். அதற்கு தங்க ஸ்ட்ராப் வாங்கி கொடுக்க நினைக்கிறாள். கிளம்புகிறாள். கணவனோ இவள் கூந்தலிற்கு ‘ப்ரூச்’ வாங்கக் கிளம்புகிறான்.

    இருவரும் பணத்திற்காக அலையோ அலை என்று அலைகிறார்கள்.

    கிடைக்கவில்லை. மாலை இருவரும் வீடு திரும்புகிறார்கள், மனைவி வாட்ச் ஸ்ட்ராப்புடனும், கணவன் ‘ப்ரூச்’சுடனும்.

    வீடு திரும்பிய இருவருமே அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.

    கணவன் தன்னுடைய பாரம்பர்ய வாட்சை விற்று ப்ரூச் வாங்கியிருக்கிறான்.

    மனைவியோ தன் கணவருக்காக அழகிய நீண்ட கூந்தலை ‘விக்’ செய்யும் கடைக்கு விற்று விட்டு வாட்ச் ஸ்ட்ராப் வாங்கி வந்து விடுவாள்.

    இருவருக்கும் புரிகிறது தாங்கள் வாங்கி வந்தது இனிமேல் உபயோகப்படாது என்று. கண்கள் குளமாகின்றன.

    காதலோடு மனைவியை இழுத்து அணைத்துக் கொள்கிறான்.

    அங்கு வார்த்தைகளே இல்லாமல் காதல் உணரப்பட்டது.

    வறுமையின் உச்சத்திலும் காதல் வளமாக இருக்கிறது இல்லையா?

    உண்மைக் காதல், துணையை அவர்களின் குறைகளோடு ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை. இதை சகோதரிகள் உணர்ந்து கொள்வார்களா? குறையில்லாத மனிதர் யார்? ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமா நம்மால்?

    இதை மனதில் வைத்தால் கண்ணை விற்று ஓவியம் வாங்க முயல மாட்டோம்.

    நீ என்ன நினைக்கிறாய் இதைப் பற்றி…. சொல்லேன்.  நான் நினைப்பது சரி தானே?

    அன்புடன்,

    உன் தோழி,

    ராஜலக்ஷ்மி பரமசிவம்.

    Share
  • அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு

    டி.விப்ரநாராயணன்

    அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு

    எங்கள் ஆசீர்வாதம். உன் கடிதம் கிடைத்தது. உன் கையெழுத்து நன்றாக இருக்கிறது. பாட்டி உன் எழுத்திற்கு முத்தம் கொடுத்தாள். நீ பரீட்சையில் 100 மார்க்குகள் எடுத்தது பற்றி எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நீ ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறாய் என்று அப்பா நேற்று போனில் சொன்னார். தமிழை மறக்கக் கூடாது. நீ தமிழில் கடிதம் எழுதியிருக்கிறாய். ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. நன்றாகப் படி.

    கடவுளைக் கும்பிட வில்லையென்றால் கடவுள் நம் கண்களைக் குத்தி விடுவார் என்று அம்மா பயமுறுத்துகிறாள் என்று உன் கடிதத்தில் எழுதியிருந்தாய். கடவுள் ரொம்ப கொடுமையானவரா? என்று கேட்டிருக்கிறாய்.

    நீ பயப்படாதே.கடவுள் மிகவும் நல்லவர்; அன்பானவர்; கருணையுடையவர். தினமும் காலையிலும் மாலயிலும் சாமி படத்தின் முன் நின்று பாட்டு பாடு. அவர் சந்தோஷப் படுவார். இரவு தூங்கப் போகுமுன் கடவுளை வணங்கு. ஒருவேளை மறந்து விட்டால் கவலைப்படாதே.

    நீ சென்ற கடிதத்தில் தென்னை மரத்தைப் பற்றி ஒரு பாரா எழுதியிருந்தாய். படித்தேன். பாட்டியும் படித்தாள், நன்றாகவும் பிழையில்லாமலும் இருந்தது. சிறு புத்தகங்களைப் படித்துப் பழகு. நான் ஒரு பாடல் உனக்காக எழுதியிருக்கிறேன். நீ அதைப் பாடிப் பழகலாம்.

     காகமொன்று நீர் குடிக்க

    சுற்றி சுற்றி வந்தது.

    தாகம் தீர தண்ணீரைத்

    தேடித் தேடி அலைந்தது

    வேகமாகப் பறந்தது

    மெதுவாக நடந்தது

    நாகமொன்றைப் பார்த்தது

    நடுநடுங்கிப் போயிற்று

    சோகமாய்ப் பறந்து சென்று

    மரக்கிளையில் அமர்ந்தது

    செம்பொன்று கீழே

    இருந்ததைக் கண்டது

    ஜம்மென்று பறந்துவந்து

    செம்பிற்குள் எட்டிப் பார்த்தது

    தண்ணீரைக் கண்டதும்

    காகா என்று கத்தியது

    சுற்றுமுற்றும் பார்த்தது

    ஸ்ட்ரா ஒன்றைக் கண்டது

    ஸ்ட்ராவை எடுத்து உறிஞ்சிற்று

    தாகம் தீர்ந்தது, பறந்தது

    இந்தப் பாட்டைப் பாடிப் பழகு. நீயும் இந்த மாதிரி குட்டிப் பாடலை எழுதலாம். உன் தோழிகளுக்குப் பாடிக் காட்டு. நான் உன்னைப் பார்க்க வரும் போது பல பாடல்களும் கதைகளும் கொண்டு வருகிறேன்..

    பாடங்களைத் தவறாமல் படி. பயப்படாதே. உன் தம்பியுடன் நன்றாக விளையாடு.

    இப்படிக்கு

    உன் பிரியமுள்ள தாத்தா

    Share
  • திருமால் திருப்புகழ் (39)

     
    கிரேசி மோகன்

    ஸ்ரீகுருவாயூரப்பன்….
    ——————————————

    guruvayur

    தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
    தான தான தந்த தந்த -தனதான….

    ——————————————————————————————————————-

    நாலு மூணும் அஞ்சிரெண்டும் ஏழுதானி ருந்துமந்தGuruvayur Krishna santhana seva_cr1
    பாழும்நான கந்தைவந்து -வழிவேறு
    போகுமாறு மந்த்ர தந்த்ர தூபம் போட சிந்தையெந்த்ரம்
    மாறிடாது என்றுமந்தர் -முகமாக,

    மூலம்ஈசர் என்றுணர்ந்து தேகபாவம் வென்றெழுந்து
    ஆலவாய்அ கன்றகந்த -ரமணேசர்
    கூறும்பேத நெஞ்சுகந்த போலிநான்வி ழுந்தபொந்தில்
    ஞானநான்தொ டர்ந்துபொங்க -அருள்வாயே.

    மாரிநீலன் சண்டமுண்டன் மேனியாவை யும்பிளந்த
    காளிமாயி கொங்கையுண்டு -பலமாகி
    சூரனோடு சண்டைகொண்டு வீரவேலெ றிந்துகொன்ற
    பாலனார்ம னம்கவர்ந்த -முறைமாம
    ஆலிலேமி தந்துஅன்று ஏழுலோகம் உண்டுமிழ்ந்து
    சேரநாடொ துங்கியங்கு -குருவாயூர்
    பாலனாய்வ ளர்ந்துசங்கு காலநேமி கொண்டுஅங்கை
    பீலிபீத கம்புனைந்த -பெருமாளே
    ———————————————————————————————————————-

     

     

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (4)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மேன்மைதங்கிய பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு,

    தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியபோது எங்களுடைய அடுத்த ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் இந்த ஐந்தாண்டு கால ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இல்லை என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?

    உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,

    தாங்களும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசியபோது மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும் ஏற்படும் என்று கூறியிருக்கிறீர்கள். ஊழலுக்காகத் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டும், திரு அசோக் சவானை உங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டும், நீங்கள் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு ஏற்படுத்தப் போகிறீர்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • இந்தியத் தேர்தல் வாக்குறுதிகளும் அமெரிக்கத் தேர்தல் வாக்குறுதிகளும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    27-lok-sabha-elections-2014-600-jpg

    தினம் தினம் பத்திரிக்கைகளில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும் வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் பற்றியும் படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.  வழக்கமாக தேர்தலில் கலந்துகொள்ளும் கட்சிகள் அது வரை ஆட்சியில் இருந்த கட்சிகள் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்யப்போவதாக மக்களுக்கு வாக்களிப்பார்கள்.  ஆனால் செய்ய முடியாமல் திணறுவார்கள்.  மறுபடி எதிர்க் கட்சியாக இருந்த கட்சி பதவிக்கு வந்தவுடன் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள்.  இப்படி பதவியில் இருந்தவர்கள் எதிர்க் கட்சியாக மாறுவதும் எதிர்க் கட்சியாக இருந்தவர்கள் பதவி வகிப்பதும் நடந்துகொண்டிருக்க அந்தக் கட்சிகள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதும் எப்போதும் நடந்துகொண்டிருக்கும்.

    இந்த அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாருங்கள்.  என்னென்னவோ நல்ல திட்டங்கள் வைத்திருந்தார்.  அதை நிறைவேற்றவும் உண்மையாகவே விரும்பினார்.  ஆனால் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பது அரசியல் அனுபவம் இல்லாத அவருக்குத் தெரியவில்லை.  என்னென்னவோ செய்வேன் என்று கூறிவிட்டு ஒன்றும் முடியாமல் பின் வாங்கிவிட்டார்.  அவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று கருவிக்கொண்டிருந்த வழக்கமான அரசியல் கட்சிகளும் அவருக்கு எந்த வித உத்துழைப்பும் அளிக்கவில்லை.  ஊழலிலே பிறந்து ஊழலிலே வளர்ந்து ஊழல் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பதாகக் கூறிய ஒரு கட்சியை எப்படி வெற்றி பெறவிடும்?

    இந்தியாவில் ஒரு வகையாக அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லையென்றால், அமெரிக்காவில் ஜனாதிபதி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் அவருடைய கொள்கைகளுக்குப் புறம்பான கொள்கையுடையவர்கள் – அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே கூட – முட்டுக்கட்டை போடுகிறார்கள்.  ஆனால் இது ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி கொடுக்கிறேன் என்று இந்தியாவில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பின் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதை விட மிகவும் வித்தியாசமானது.  ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி கொடுக்கிறேன் என்று சொல்லும் இந்திய அரசியல் கட்சி வேட்பாளர்கள் அதற்குப் பணம் எங்கிருந்து வரும் என்று விளக்கிக் கூறத் தேவையில்லை.  அவர்கள் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போவார்கள்.  அதை நிறைவேற்றாமல் போனால் வாக்காளர்கள் யாரும் கேட்க முடியாது.  அமெரிக்காவில் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுக்கும்போது ஏதாவது திட்டம் பற்றிக் குறிப்பிட்டால் அதற்குப் பணம் எங்கிருந்து வரும் என்று சொல்ல வேண்டும்.

    ஒபாமாவையே எடுத்துக்கொள்ளுங்கள்.  2007-இல் அவர் தேர்தலில் நின்றபோது அமெரிக்காவை எப்படி எப்படியெல்லாமோ திருத்த வேண்டும் என்று நினைத்தார்.  ஆனால் அவருடைய கட்சியிலும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியிலும் இருந்த பழமைவாதக் கொள்கையுடையவர்கள் அவர் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.  (இந்தியாவில் போல் கட்சித் தலைமையை மீற முடியாது என்பது அமெரிக்காவில் கிடையாது.  இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் சிலர் குடியரசுக் கட்சியிலும் இருக்கலாம்; வலதுசாரிக் கொள்கை உடையவர்கள் சிலர் ஜனநாயகக் கட்சியிலும் இருக்கலாம்.  கட்சித் தலைவர் சொல்லுவதையோ அல்லது தங்கள் கட்சியைச் சேர்ந்த  ஜனாதிபதி சொல்லுவதையோ அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை.  பாராளுமன்ற உறுப்பினர் எல்லோருக்கும் அவரவர்க்கென்று கொள்கைகள் உண்டு; அவர்கள் தங்கள் இஷ்டம்போல் எந்த மசோதா ஓட்டெடுப்புக்கு வந்தாலும் தங்கள் சொந்த கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.  (நம் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தாங்களாகச் சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்பது இன்னொரு விஷயம்.)

    தேர்தல் வாக்குறுதிகளில் ஒபாமா இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பற்றியும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய அமெரிக்காவின் கடமை பற்றியும் கூறினார்.  பதவிக்கு வந்தவுடனேயே எகிப்திற்குச் சென்று அமெரிக்கா முஸ்லீம்களின் எதிரியல்ல என்று கூறி மத்திய கிழக்கில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவைப் பெற முயன்றார்.  ஆனால் அமெரிக்காவில் இருக்கும் யூதர்களின் அரசியல் சங்கம் கொடுத்த நெருக்கடியால் இஸ்ரேலைக் கண்டிப்பதற்க்குப் பதில் ‘அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் உள்ள பந்தம் நெருக்கமானது.  இது எப்போதும் தொடரும்’ என்று சொல்லும் அளவிற்குப் போனார்.  ஐ.நா.வால் பாலஸ்தீன நாடாக உருவாகப் போகும் நாட்டிற்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைக்க வேண்டாம் என்று சொன்னதை இஸ்ரேல் மதிக்கவில்லை; அதை நிறுத்த முடியாத சூழ்நிலையில் ஒபாமா இருக்கிறார்.  இப்போது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பது அமெரிக்க யூதர் சங்கம்.

    உள்நாட்டு விஷயங்களிலும் ஓபாமா சாதிக்க நினைத்ததைப் பாராளுமன்ற உறுப்பினர்கள்  வெகுவாகக் குறைத்துவிட்டார்கள்.  2014-ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவில் எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்கும் என்று உறுதி அளித்தார்.  அமெரிக்க அரசே நடத்தும் இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பணக்காரர்களுக்குக் கொடுத்த வரிச் சலுகையை நீக்குவதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துச் சரிக்கட்டலாம் என்றார்.  ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.  அதற்குப் பதில் மருத்துவக் காப்பீடு வழங்கும் தனிப்பட்ட கம்பெனிகள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு எடுப்பதற்கு முன் ஏதாவது வியாதி இருந்தால் அவர்களுக்கு மருத்துவ காப்பிடு கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது என்ற நிபந்தனையை மட்டும் கம்பெனிகளிடமிருந்து பெற்றார்.  மேலும் 2014 முடிவில் எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்கும் என்று அவர் வாக்களித்ததற்கு மாறாக இரண்டு கோடி மக்கள் 2014 முடிவிலும் மருத்துவக் காப்பீடு இல்லாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குவெண்டநாமோவில் இருக்கும் சிறையை மூடிவிட்டு அங்கிருக்கும் கைதிகளை உரிமையியல் நீதிமன்றத்தில் (civil court) விசாரிக்கப் போவதாக அறிவித்தார்.  ஆனால் பாராளுமன்றத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது; வழக்கை நடத்தப் பணம் கொடுக்க மறுத்தனர். அதனால் எதுவும் நடக்கவில்லை.

    ‘அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு, சங்கங்கள் அமைத்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உரிமை என் பதவிக் காலத்தில் மறுக்கப்படுமேயானால் நானும் அவர்களோடு சேர்ந்து போராடுவேன்’ என்று அறைகூவினார்.  இப்போது பல மாநிலங்கள் தொழிலாளர்கள் சங்கங்கள் அமைக்கக் கூடாது என்று சட்டம் இயற்றியிருந்த போதிலும் ஒபாமா எந்த விதப் போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

    இந்தியாவில் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் நிறைவேற்றாவிட்டாலும் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வார்கள்.  ஆனால் அமெரிக்காவில் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அது நிரூபிக்கப்பட்டால் (அநேகமாக நிரூபிக்கப்பட்டுவிடும்) சிறைக்குச் செல்வார்கள், தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றினாலும்.

    படத்திற்கு நன்றி :

    http://tamil.oneindia.in/news/tamilnadu/nomination-filing-begins-on-march-29-lse-196591.html

    Share
  • சரிகமபத நீ..கல்யாணி

    திவாகர்

    ஸார்.. எதுக்கு இந்த விஷப்பரீட்சை.. சொன்னாக் கேளுங்க.. எனக்கு ஒரு ஞானமும் இல்லே.. கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் காத தூரம்..இல்லே இல்லே டெல்லி தூரம்.. அத்தோட ஏழு மணிக்கு ரிலையன்ஸ் க்ரூப் பார்ட்டி இருக்கு.. போகணும்..வுட்டுடுங்க ஸார்..”

    ”என்னப்பா.. என்ன சொல்லிட்டேனு இப்படிப் பெரீசா கத்தறே.. ரொம்ப முக்கியமான கச்சேரிய்யா.. இந்தம்மா ஏறத்தாழ ஒரு வருஷமா எந்தக் கச்சேரியும் பண்ணலே.ரொம்ப ஃபேமஸ்.. ஆர்கனைஸர்ஸ் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த அம்மாவின் அனுமதி வாங்கியிருக்காங்களாம்.. நானே போகணும்.. ஆனா என் கஷ்டகாலம்.. ராத்திரியானா வர்ர தலைவலி சாயங்காலமே வந்துடறது.. இதோ பார்.. நான் ரிடையர் ஆனவுடனே இந்த நாற்காலி’ல நீதான் உட்காரப்போறே! உனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்.. கர்நாடக சங்கீதம்’னா எனக்கும்தான் ஒரு எழவும் தெரியாது.. நான் அப்பப்ப எழுதல?.. அதனால.. நான் சொல்லிட்டேன்.. நீதான் அட்டெண்ட் பண்றே.. இன்னொண்ணும் சொல்லிடறேன்.. நம்ம சார்’ஜி கண்டிப்பா பாக்கற பத்தி இது.. இந்த விமர்சன ஆர்டிகிள்’ல கீழே உன் பேரை வேற போடப் போறேன்.. சார்’ஜி பாக்கணும்.. அட.. ந்னு மூக்கு’ல கையை வெக்கணும்.. ரிலையன்ஸ் க்ரூப் மீடிங் முக்கியம்தான். அதனால என்ன.. அந்த மாதிரி பார்ட்டிக்கு இன்னொரு சந்தர்ப்பம் வரும்.. ஆனா இந்தம்மா கச்சேரி சந்தர்ப்பமெல்லாம் உனக்கு வருமா? இப்போதைக்கு எனக்கும் உன்னை விட்டா வேற ஆளு இல்லே.. சங்கீதக் கச்சேரிக்கு போ.. போ.. சரிகமபத நீ’ன்னு எதையாவது எழுதித் தொலை.. அப்படியே பாடற அந்தம்மாவையும் முதல்லே பார்த்து ஒரு அவுட்சைட் பேட்டி எடுத்துக்கோ.. அதையும் பார்த்தா சார்’ஜிக்கு ஆத்மா குளிர்ந்து போகும்.. மனுசனுக்கு ரொம்ப ரொம்ப ஃஃபேவரைட்டாக்கும்.”

    வெற்றிலை மென்றுகொண்டே எடிட்டர் சொல்லிவிட்டார். பேசும்போது அவரையும் மீறி கொஞ்சம் சிவப்பு எச்சில் சொட்டுகள் என் மீது விழத்தான் செய்தன. அவரை இந்தச் சமயங்களில் பேசவைக்கக்கூடாதுதான்.. ஆனாலும் வேறு வழியில்லை.. இவர் உட்காரும் இந்த இருக்கை நாளை எனக்கு வரப்போகிறது.. இந்த விஷயத்தில் இவரும் நமக்கு சாதகம்தான்.. என்ன.. இதோ போகிறேன்.. அதோ போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர முடிவு எதுவும் எடுக்கவில்லை.. சார்’ஜி மனதில் நான் இன்னமும் ஆழமாகப் பதியவில்லை என்று அவ்வப்போது இவர் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறார்.

    ”இன்னொண்ணு.. இன்னைக்கு உன்னோட இந்த ஸ்டோரிக்கு கடைசி பக்கம் நாலு பத்தி கொடுக்கச் சொல்லி ஸ்பேஸ் ரிசர்வ் பண்ணியிருக்கேன்.. டக்கென்னு எல்லார் கண்ணுலயும் படும்.. போட்டோகிராஃபரிடம் சொல்லிட்டேன். மணிதான் வருவான். சமயம் பார்த்து எடுக்கறதுலே அவன் கில்லாடி.. அவன் எப்பாவாவது போய் எடுத்துடுவான். போட்டோவோட நீ ராத்திரி 12க்குள்ளே ஸ்டோரி ஃபைல் பண்ணிடு.. காலை’ல எழுந்ததும் ஸார்ஜி பாக்கறச்சே முதல் நியூஸ் ஐடம் உன்னோடதுதான்.. உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லறேன்.. கேட்டுக்கோ.. நியூஸ் பேப்பரை கடைசி பேஜிலேர்ந்து ஆரம்பிச்சுப் படிக்கிற பழக்கம் ஸார்ஜிக்கு எப்பவும் உண்டு..”

    நாங்கள் சார்’ஜி என்று சொல்வது எங்கள் பத்திரிகை முதலாளியான கிஷன்ஜியைத்தான்.. மிகப் பெரிய க்ரூப் கம்பெனிகளின் தலைவரான அவர் இந்தப் பத்திரிகையைக் கையால் தொடுவது கூட கிடையாது’ என்று இதே எடிட்டர்தான் ஒருமுறை தலையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவர் சங்கீதம் பற்றிய செய்தி மட்டும் பார்ப்பாராம்.. அதுவும் அவருக்கு பிடித்தமான பாடகியாமே.. கடவுளே.. என்ன நினைத்து என்னை இந்தப் பத்திரிகைத் தொழிலுக்கு அனுப்பி வைத்தாயோ..

    என் அறைக்குள் அமர்ந்ததும் குட்டி வந்தான். ‘என்ன சார்.. முகம் ஒரு மாதிரி இருக்கு.. எங்க போக சொல்லிச்சு கிழம்?” என்று கேட்டுக் கொண்டே காபியை மேஜையில் வைத்தான். ஆபீஸ்பையன் என்ற பேர்தான்.. ஆனால் எல்லாம் தெரிந்த இவனைத் தனியாக விட்டால் ஒரு பேப்பரையே நடத்திவிடுவான், என்ன.. எழுத சரியாகத் தெரியாது.. அவ்வளவுதான்.. ஆனால் இந்தக் காலத்தில் பத்திரிகையாளர்களுக்குக் கட்டாயம் எழுதத் தெரிந்துதான் ஆகணும்’ என்று யார் சொன்னது…

    “பாருடா.. பிஸினஸ் கரெஸ்பாண்டெட்’க்கும் கல்சுரல் கரெஸ்பாண்டெட்’க்கும் வித்தியாஸம் தெரிய வேணாமாடா.. இந்தம்மா கச்சேரிக்குப் போய் என்னத்த எழுதப்போறேனோ.. சங்கீதத்தைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாதேடா”..

    “ஸார்.. ஏன் கவலைப் படறே.. நான் சொல்றதைச் செய்யறியா..”

    “சங்கீதத்தைப் பத்தி நீ சொல்லறியா.. சொல்லு.. சொல்லு.. நான் இப்போ யார் என்ன சொன்னாலும் கேட்கற நிலைமைலதான் இருக்கேன்..”

    “சிம்பிள் சார்.. போனதபா நம்ம எடிட்டர் இந்தம்மா பாடின கச்சேரிக்குன்னு போனார்.. கூடவே வெத்தலைப் பெட்டியோடு நானும் போவேனில்லையா. இவரு முதல்ல என்னா பண்ணார் தெரியுமா.. சும்மா மேடை மேலே போனாரு.. அந்த சபா செக்ரடரி நின்னுகினு இருந்தாரா. அவர்கிட்டே ஏதோ முணுமுணுத்துக்கினே அந்த அம்மா பாடப் போற பாட்டோட லிஸ்ட் முளுசுமா கேட்டுக்கினார்.. அவங்ககிட்டே அதெல்லாம் டைப் பண்ணி ரெடியா இருக்கும் சார்.. கச்சேரி’ல சும்மா கொஞ்ச நேரம் முன்னாடி சீட்’ல உக்கார்ந்தார்.. நடுவுல ஏதோ போன் வந்தது மாதிரி கையில மொபைல் பிடிச்சுண்டே சடார்’னு எழுந்து வெளியே வந்தார்.. அவ்வளவுதான்.. அப்புறம் ஆபீசுக்கு வந்துட்டோம்..அந்த மாதிரி நீங்களும் பண்ணுங்க.. அந்த செக்ரடரி கொடுக்கற பேப்பர்ல இருக்கறதை அப்படியே எழுதப் போறிங்க.. நடுவுல ஆஹா அருமை.. ஓஹோ அது பிரமாதம், இது உசத்தி’ன்னு மசாலா போட்டுடுங்க..”

    அவன் சொன்ன ஐடியா அந்தக் கணத்திலேயே மிகவும் பிடித்துப் போனது.. இவனல்லவா உண்மையான பத்திரிகையாளன்..’ இருந்தாலும் குட்டி சற்று வேண்டுமென்றே அலுத்துக் கொண்டான்.

    ”ம்.. பேசாம இந்தக் கிழவன் உங்களுக்குப் பதிலா என்னிய அனுப்பிச்சிருக்கலாம்..”

    “அடேய் குட்டி, இந்தக் கிழம் போனதுமே நான் எடிட்டர்.. அப்படி வந்த உடனே உனக்கு டபுள் பிரமோஷன்..டா..”

    “என்ன சார்.. கனாக் காணறிங்களா?.. கிழம் போகும்கிறீங்க? ரெண்டு அட்டாக் பாத்தாச்சு, ஆபிஸ் செலவுல ஆபரேஷன் பண்ணிட்டு ஜாலியா அங்கே உட்கார்ந்திருக்கு.. இதோ சூடா வெங்காய பஜ்ஜி வேற வாங்கியாறச் சொல்லியிருக்கு.. நான் ஓடறேன்..” அவன் நிஜமாகவே ஓடிவிட்டான்.

    நான் என் நடையைக் கட்டினேன்.. அட, கச்சேரிக்கெல்லாம் பயமா.. சேச்சே.. ஊதிடலாம்.. நேரே ஆடிட்டோரியம் போகணும், எவனாவது செக்ரடரியைப் பார்த்துட்டு பாட்டோட லிஸ்ட் வாங்கணும்.. கொஞ்ச நேரம் அங்கே உட்கார்ந்திருக்கணும்.. அப்பறம் அப்படியே வெளியே வந்து காண்டீன்’ல ஏதாவது சூடா சாப்பிட்டவுடனே ஜூட் விட்டுட வேண்டியதுதான்.. அட, அந்தப் பாடகியை ஒரு சின்ன பேட்டி எடுக்கணுமே.. பார்க்கலாம்.. இதெல்லாம் ஒரு பிரச்னையா.. சமாளிச்சுடலாம்.. என் கண் முன்னே இன்னொரு அழகான காட்சி விரிந்தது. சார்’ஜி கை குலுக்குகிறார். அருமையா எல்லா சப்ஜக்ட்டையுமே எழுதறீங்க.. உட்காருங்க இந்த நாற்காலியில்’ என்று என்னை அமர வைக்கிறார். எடிட்டர் முகத்தில் பெருமை.. ’என் சீடனாச்சே’ என்று முதுகில் ஷொட்டுகிறார். தலையைச் சற்று அசைத்துக் கொண்டேன். கனவை நினைவாக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்தான்.

    நினைத்தவுடனே எளிதாகிவிட்ட மனதுடன் அந்த அகன்ற அரங்கத்துள் நுழைந்ததும் முதலில் என் கண்ணில் பட்டது திருமலை நாயுடுதான்.. திருமலை நாயுடு மிகவும் தெரிந்த தொழிலதிபர் என்பதோடு சென்னை மாநகர வியாபார சங்கத்துத் தலைவரென்பதாலும் அடிக்கடி நாங்கள் சந்தித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தங்களும் உண்டு. . அந்த சபாவுக்கும் அவர்தான் கௌரவத் தலைவராம்.. எனக்கு இப்படிப்பட்ட கச்சேரிகளில், அதுவும் சங்கீதத்தில், இவ்வளவு விருப்பம் இருக்கிறது என்பது தனக்கு தற்போதுதான் தெரியும் என்று எல்லோருக்கும் கேட்கும்படி கத்திச் சொல்லியதோடு அந்த சபா காரியதரிசியையும் அழைத்து என்னை அறிமுகம் செய்தார். அவரைப் பக்கத்தில் தள்ளிக்கொண்டே பேசினேன்.. ‘சார்.. உங்களைப் பத்தி எங்க எடிட்டர் ரொம்பப் புகழ்ந்து சொல்லிருக்காரு.. அது சரி, இவங்க பாடல் பாடற லிஸ்ட் கிடைக்குமா..” என்று கேட்டு வைத்தேன்.

    “அட, லிஸ்ட்’தானே.. எங்கிட்டே இல்லே.. இருந்தாலும் க்ரீன் ரூமுக்கு வாங்க.. அவங்க வந்துட்டாங்க.. அவங்ககிட்டேயே கேட்டுடலாம்.. அத்தோட ஒரு சின்ன பேட்டியும் எடுத்துடுங்களேன்.. அதுவும் நாளைக்கு பேப்பர்’ல வரட்டுமே, என்ன சொல்றிங்க.. சரிதானா.. சரிதான் சரிதான்..”

    பழம் நழுவிப் பாலில் விழுந்து அதை வாயிலும் ஊட்டினால் வேண்டாமென்றா சொல்வார்கள். ஆனாலும் அதை நான் விருப்பம் இல்லாமல் செய்பவனாகக் காட்டிக் கொண்டு அவரோடு சென்றேன். இன்னமும் அரை மணியாகும் ஆரம்பிக்க.. இந்த அம்மாளைப் பார்க்கவேண்டும்.. ஏதாவது பேசவேண்டும்.. பார்ப்போம்.. சங்கீதத்தில் எனக்கு என்னவெல்லாம் தெரியும்.. கல்யாணி ராகம், ம்ம்.. முகாரி.. ம்ம்.. ஆதி.. அட அது.. அது.. தாளமாச்சே.. ஒருவேளை ராகத்தோட பேர்தானா.. ச்சே.. எத்தனை சினிமா பார்த்தோம்.. ஆங்.. சங்கராபரணம்.. அப்பறம் ஆனந்த ராகம், இப்படி நிஜமாவே பேர் இருக்கோ இல்லையோ.. இந்த ராகத்தை அவாய்ட் பண்ணிடவேண்டியதுதான்.. தில்லானா மோகனாம்பாள், அடச்சே அது நாட்டியப்படம்.. பார்க்கலாம்.. முதல்ல இந்த லிஸ்ட் கையில கிடைச்சா போதும்.. அதுல ராகம் பேர் போட்டுருப்பாங்களே.. அதை முதல்ல வாங்குவோமே..

    ”முக்கியமான ஒரு வேண்டுகோள். கடைசில ஒரு வரி என் பேரை மட்டும் மறக்காம போடுங்கோ.. ஹி.. சும்மா ஒரு நாலு பேர் பார்வைக்கு, ரிகார்டுக்கு இருக்கட்டுமே.. என்ன சொல்றேள்.. சரிதானா? சரிதான் சரிதான்” என்று செக்ரடரி கேள்வியும் பதிலும் தானாகக் கொடுத்ததோடு அவர் விஸிட்டிங் கார்டையும் கூடவே கொடுத்தார். கல்யாணராமன் என்று பேர் போட்டிருந்தது.. அட.. இந்த ராகம்தான் தெரியுமே.. வேறு ஏதாவது ராகத்தின் பெயரை தன் பெயராக வைத்திருக்கக்கூடாதோ..

    நான் ஒன்றுமே பேசாமல் அதை வாங்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். அங்கே ஒரு வி.ஐ.பி. அறையில் கதவைச் சட்டெனத் திறந்து உரிமையாக செக்ரடரி உள்ளே நுழைய நானும் பின்தொடர்ந்தேன்..மெலிதான சப்தத்தில் வயலின் ஒலிக்க அதே குறைந்த சப்தத்தில் மிருதங்கத்தைத் தட்டிக்கொண்டிருந்தார் இன்னொருவர். கொஞ்சநேரம் அங்கேயே நின்று ரசித்தார்.

    ”அடடா.. சஹானா ராகத்துல பிச்சு உதறறேள்.. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. இதோ இவர்தான்..” அவர் சொல்வதற்குள் அந்தப் பெண்மணி முந்திக்கொண்டாள்.

    “ஐய்யோ.. இது சஹானா இல்லே பிலஹரியாக்கும்..” என்று சட்டென வெட்டியவளைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    எனக்கு என்னவோ இரண்டு புதிய ராகங்களின் பெயர்கள் கிடைத்த ஒரு சந்தோஷத்தில் ஒரு நமஸ்காரம் போட்டு வைத்தேன். வாத்தியக்காரர்கள் மெல்ல எழுந்து கொள்ள என்னை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்தாள். செக்ரடரி விடாமல் ’என்ன இருந்தாலும் நீங்க சஹானா பாடறதுன்னா நான் உயிரையே விட்டு விடுவேன்.. அப்படி ஒரு ஈர்ப்பு அந்த ராகத்துல’என்று அவரின் உயிரின் ரகசியத்தை மறுபடியும் பிடிவாதமாக ஒருமுறை அந்தப் பெண்மணியிடம் சொல்லி அசடு வழிந்துவிட்டுதான் அந்த அறையை விட்டு அகன்றார்.

    அறை காலியானதும் என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சம் முழித்தேன்.. இளமை கொஞ்சுகிறதுதான் என்றாலும் அருகாமையில் பார்க்க அவள் முக அழகு இயற்கையாகவே செழிப்பாக இருந்ததைக் கவனிக்கத்தான் செய்தேன். நெற்றியில் இருந்த சிறிய குங்குமப்பொட்டு அவள் முகத்தழகுக்கு மெருகூட்டியது கண்கள் வேறு குறும்பாகப் பார்த்ததாகப் பட்டது. அவளே ஆரம்பித்தாள்.

    “போனமுறை உங்கபேப்பர்’ல ரிவ்யூ ரொம்ப நல்லாதான் எழுதியிருந்தீங்க…. ஆனா எனக்கு ஒரு சின்னக் கோபம்..”

    குழந்தை போல பேசினாள். குரலில் கரகரப்பு இருந்ததும் அதை மெல்லமாகப் பேசும்போது ஒரு மயக்கமும் கூடவே வந்ததை உணர்ந்தேன்..

    ”அடடா.. எங்க மேல கோபமா?” நான் பொதுவாக கேட்டு வைத்தேன்..

    “உங்க எல்லார் மேலயும் கோபம்’ன்னு சொல்லலே..போனதடவை என் கச்சேரி முடியறதுக்கு முன்னாடி எழுந்து போயிட்டதா செக்ரடரி சொன்னார்.. சரிதானே..”

    அடக் கடவுளே.. இந்த எடிட்டர் கிழம் செஞ்சதை அப்படியே சொல்றாளே.. என மனதுள் நினைத்துக் கொண்டாலும் இவள் எதற்காக எங்கள் பத்திரிகைக்காரகளை மட்டும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.. வெளியே கொஞ்சம் அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்..

    “ஓ.. அது எனக்குத் தெரியாதே.. ஆனா..”

    “பரவாயில்லை.. அதனாலென்ன.. பத்திரிகைக்காரங்களுக்கு ஆயிரத்தெட்டு ஜோலி..” என்று முறுவலித்தவள் அடுத்து ஒரு இடியைப் போட்டு வைத்தாள். “அவர் வந்திருக்கிறார் இல்லையா?”

    “யார், எடிட்டரா?”

    “சேச்சே.. நான் சொல்றது கிஷன்’ஜிதான்.. வர்ரேன்னும் காலைல போன் போட்டு அவரே சொன்னாரே..”

    எனக்கு சட்டென வியர்த்தது.. சார்’ஜி வருகிறாரா.. ஐய்யோ..

    அவள் கண்கள் விரிய சிரித்தாள். “ஆனால் எங்காவது பின்னாடி உட்கார்ந்து போய்விடுவதுதான் அவர் வழக்கம்.. ரொம்ப சிம்பிள் பெர்ஸன்..” இவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது.. கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம்.

    “அவர் புரொக்ராம் தெரியல்லே மேடம்.. நான் என் ட்யூடியை செய்யவேண்டாமா.. நான்பாட்டுக்கு வந்துட்டேன்”

    “ம்ம்.. நான்பாட்டுக்கில்லே.. என் பாட்டுக்காக வந்தீங்க’ன்னு சொல்லுங்க.. நீங்க வெளிப்படையா சொல்லாவிட்டாலும் உங்க முகமே சொல்லுதே..” என்னை உற்றுப்பார்த்த அந்த பார்வை கலக்கினாலும், அவள் சாமர்த்தியம் என்னை சற்று தளர்த்தி உட்காரச் செய்தது..

    “அப்படின்னுதான் வெச்சுக்கணும்.. உங்க பாட்டுங்களைக் கேட்கக் கொடுத்து வெச்சுருக்கணுமே”..

    போனமுறை எடிட்டர் போற்றிப் புகழ்ந்தது போலத்தான் இந்த முறையும் எழுதவேண்டும்.. வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

    “ரொம்பப் புகழாதீங்க.. அப்படியே இதையும் சேர்த்து உங்க பேப்பரிலேயும் எழுதிடாதீங்க.. ஏன்னா.. புகழ்ச்சி ஒரு போதை இல்லையா.. நமக்கு எதுக்குங்க அந்தப் போதை.. என்னால் எந்தப் போதைக்கும் அடிமையாக முடியாது”

    இப்படிச் சொல்லிவிட்டு சிரித்தாள். போலியான சிரிப்பில்லாமல் மிக யதார்த்தமாக இருந்தது. நான் பொதுவாக சொல்லி வைத்தேன்..

    “இதெல்லாம் உங்க தன்னடக்கம்.ஆனா ஒண்ணு… எதை எழுதினாலும் என் மனதுக்குப் பட்டதைத்தான் எழுதப் போறேன்..”

    “உங்களை மாதிரி சங்கீத எக்ஸ்பர்ட்ஸ் எழுதறாங்கன்னா சும்மாவா.. உங்க மனசுக்கு என் பாட்டு ரொம்பவே பிடிச்சுருக்கு’ன்னு ஏற்கனவே சொல்லிட்டீங்களே.. ..”

    நான் எங்கே அப்படிச் சொன்னேன்’ என்று கேட்க விரும்பினேன்.. இருந்தாலும் பேச்சை மாற்ற விரும்பினேன்.. செக்ரடரியிடம் வாங்க விரும்பிய அந்த பாட்டு வகைகளை இவளிடமே கேட்டால் என்ன?

    “இன்னிக்கு புரோக்கிராம்’ல என்ன பாடல்கள் பாடப்போறிங்கன்னு லிஸ்ட் இருக்குமே.. கொஞ்சம் கொடுங்களேன்..”

    என் கள்ள மனத்தைப் படித்துவிட்டாளோ என்னவோ, கொஞ்சமாக முறுவலித்து இன்னொரு முறை குறும்பாக ஒரு பார்வை பார்த்தாள்

    “எனக்குத் தெரியும் நீங்க கேப்பீங்க’ன்னு.. ஆனா இந்தமுறை சஸ்பென்ஸ் வெச்சிருக்கேன்.. என் இஷ்டத்துக்கு நான் அந்த சமயத்துல பிடிச்சதெல்லாம் பாடப்போறேன்.. என்ன நான் சொல்றது பிடிச்சிருக்கா?”

    ஈசுவரா.. இதென்ன சோதனை.. சார்ஜி வருகிறார் என்கிறாள்.. கூடவே சஸ்பென்ஸ் கொடுத்து தான் பாடப்போகும் லிஸ்ட்டையும் மறைக்கிறாள்..

    “பொதுவா லிஸ்ட் வெச்சுத்தான் எல்லோரும் பாடணும்.. வாத்தியக்காரா கூட அப்பதான் சரியா ஒத்துழைப்பாங்க.. ஆனா இந்த தடவை இந்த வாத்தியக்காராளுக்கும் சேர்த்து ஒரு சோதனை.. முதல்லேயே சொன்னதாலே இப்ப அவங்களுக்கு வயித்தைக் கலக்கிண்டிருக்கு.. எப்படி என் ஸர்ப்ரைஸ்?’ என்று கலகலவென சிரித்தாள்.

    வாத்தியக்காரர்களுக்கு மட்டுமில்லை தாயே.. எனக்கும் வயிற்றைக் கலக்குகிறது.. என் மனத்துள் கிலேசம் அதிகரித்தது இவளுக்குப் புரியுமா.. ஆனால் என் மனதை இவள் கண்டுகொள்ளவில்லை என்பது அவள் அடுத்துக் கேட்ட கேள்வியில் புரிந்தது..

    “சரி, உங்களுக்காக ஒரு பாட்டு கேளுங்களேன்.. நான் பாடுகிறேன்.. ஆடியன்ஸ் எல்லோரும் அவங்களாகவே இது வேண்டும் அது வேண்டும் எனக் கேட்பார்கள். இப்போது நான் கேட்கிறேன்.. உங்களுக்கு எது வேண்டும்?” ஒரு மயக்கச் சிரிப்பு சிரித்தாள். கடவுளே.. எனக்கு எது வேண்டும்..

    பேட்டி நான் எடுக்க வந்தேனா?, இவள் என்னைப் பேட்டிக் காண்கிறாளா.. ஒரு நிமிடம் புரியாமல் பார்த்தேன். சட்டென வாயில் வந்ததை அப்படியே சொன்னேன்.

    “கல்யாணி’யில் ஒரு பாடல் பாடுங்களேன்..”

    இதைக் கேட்டதும் அவள் ஆச்சரியமாய் கண் விரித்துப் பார்த்தது அழகாகத்தான் இருந்தது.

    ”கல்யாணியா?”

    “ஆமாம்.. கல்யாணி ராகம் என்றால் மிகவும் பிடிக்கும்” என் மனது என்னைத் திட்டியது.. அடேய்.. இது எக்ஸ்ட்ரா உனக்கு’ என்றது..

    “ஓ.. கல்யாணி ராகம்னா அவ்வளோ இஷ்டமா.. அட, உங்கள் கிஷன்’ஜிக்கு மிகவும் பிடித்த ராகம் அதே கல்யாணி.. உங்களுக்குமா? உங்களுக்கு கல்யாணியில் உயிரா.. உங்கள் உயிரைப் போற்றி நிச்சயம் பாடுகிறேன்.. சரி..கல்யாணியில் என்ன பாட்டு வேண்டும்..”

    எனக்கு வேண்டும்.. நானே போய் வலையில் சிக்கிக் கொண்டேன்.. இன்று யார் முகத்தில் முழித்தோம்.. ஆஹா.. எனக்கு அந்த எடிட்டர் சீட்டே வேண்டாம்.. ஆளை விட்டால் போதும்’ என் மனதுள் ஏதோ ஒன்று சொல்லி அலறியது.

    “இந்த பாட்டுதான்னு சொல்லமுடியாது.. நீங்க எந்தப் பாட்டு பாடினாலும் அது இனிமையாகத்தான் இருக்கும்..”

    ’ஓஹோ’ என்று சொல்லி கலகலவென மறுபடி சிரித்தவள், “நீங்க இதையெல்லாம் இப்படியே நாளைக்கு பேப்பர்’ல போடப் போறீங்க’ன்னு தெரிஞ்சு போச்சு.. என்ன.. நான் சொல்றது சரிதானே..”

    “சரி, உங்களுக்குப் பிடிச்ச உங்க பாடல் எதுன்னு சொல்லுங்களேன்..”

    “அட, எனக்குப் பிடிச்ச அத்தனை பாடல்களையும்தான் பாடப் போறேனே..உங்களுக்காக அந்தக் கல்யாணியையும் சேர்த்துதான்”

    “இல்லே.. அப்படி சொல்ல வரலே. எல்லாப் பாடகர்களுக்குமே அவங்களுக்குன்னு ஒரு பிடிச்ச பாடல் இருக்கணுமே.. .. ரசிகர்களுக்காக சில பாடல்கள், உங்களுக்கு ஆத்ம திருப்திக்காக சில பாடல்கள்’னு பாடுவீங்க இல்லையா.. அந்த ஆத்மாவைத் திருப்தி தரும் ஒரு பாடல் சொல்லுங்களேன்..”

    அவள் மறுபடி ஏதோ ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். ஏதாவது கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டோமா என்ன..

    “நல்லா மடக்கறீங்க.. எந்த பாடகிக்கும் தான் பாடற அத்தனை பாடலுமே உசத்தியாதான் தோணும்.. சங்கீதத்துலயும் வெல்லப்பிள்ளையாரிலும் எந்தப் பகுதி இனிக்கும்’னு எப்படி சொல்றது? சரி, ஸர்ப்ரைஸிங்’னு சொன்னேன் இல்லையா.. இன்னிக்கு நான் பாடற அத்தனை பாடலுமே எனக்குப் பிடிச்சுப் பாடினதா எழுதிடுங்களேன்”

    அடக்கடவுளே.. எனக்கு உதவி செய்கிறாளா அல்லது உபத்திரவமாக ஏளனம் செய்கிறாளா.. ஏன் இந்த சபா செக்ரடரி நம்மை இப்படித் தனியா இவளிடம் மாட்டிவிட்டுப் போய்விட்டான்.. இவளிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா.. நீ நினைக்கிறா மாதிரி நான் சங்கீத எக்ஸ்பர்ட் இல்லேம்மா.. லிஸ்ட் இல்லாமல் சரியாக ரிவ்யூவெல்லாம் எழுதமுடியாது தாயே..’

    வேண்டாம்.. இவளிடம் எது சொன்னாலும் வம்பாகிப் போகும், போதாதற்கு கிஷன்ஜி பெயரை அடிக்கடி இழுக்கிறாள்..

    அதற்குள் அந்த சஹானா செக்ரடரி உள்ளே நுழைந்து குழைந்து மேடைக்குக் கூப்பிட்டதால் அவளும் எழுந்தாள். “சரி, பார்ப்போம் உங்க ரிவ்யூவை.. எப்படி எழுதப்போறிங்கன்னு இப்ப நினைச்சாலே மனசு ரொம்ப சந்தோஷப்படுது.. அந்த சந்தோஷத்தோடப் பாடப் போறேன்..வாங்கோ.. போகலாம்..” என்று கவர்ச்சிப் புன்னகை வீசிவிட்டு வெளியேற நானும் அவளுடன் ஏமாற்றத்துடன் வந்தேன்.

    எனக்குப் புரிந்தது.. இவள் என்னவோ ஏதோ எல்லோரையும் பரிட்சை செய்வதாக நினைத்துக்கொண்டு அந்த எல்லோரையும் மாட்டி விடுகிறாளோ.. கடவுளே.. என்ன இது.. இப்படி என்னை ஒரு இக்கட்டில் மாட்டி விட்டாய்..

    வேறு வழி தெரியாத நிலையில்தான் என்னுள் வைராக்கியம் வந்தது.. சரி எப்படியும் சமாளித்துதான் ஆகவேண்டும். ராகத்தின் பெயர் தெரியாவிட்டால் என்ன.. பேசாமல் முடிந்தவரை மொபைல் போனில் ரிகார்ட் செய்து கொள்வோம். ஒவ்வொரு பாடல் முதல் வரிகளை எழுதி வைத்துக் கொள்வோம்..

    திடீரென எங்கள் ஃபிளாட் மாடியில் குடியிருக்கும் டீச்சர் நினைவுக்கு வந்தாள். அவள் சங்கீதம் அறிந்தவள்.. அவளிடம் பாடல் வரிகளையும் நம் மொபைல் ரிகார்ட் செய்ததையும் வைத்துக் கேட்டால் சொல்லமாட்டாளா என்ன.. ஆஹா.. முடிந்து போச்சு கதை.. ஆனால் நேரம் போதாது.. ராத்திரியில் தொல்லை தருவதாக நினைத்துக்கொள்வார்களே.. என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளட்டும்.. இது ஒரு மாதிரியான சிக்கலான பிரச்னை.. பயந்தால் தீர்க்கமுடியாது.. எதையும் எப்படியும் சமாளிப்போம். நாளைக் காலை பத்திரிகையில் நம் ரிவ்யூ கொஞ்சம் நன்றாக வரவேண்டாமா.. இவள் வேறு பெரிதாக எதிர்பார்க்கிறாள்….

    மனதுள் கொஞ்சம் நிதானம் வந்தது.. ஆச்சு.. மணி ஆறரை.. எப்படியும் ஒன்பதுக்குள் கச்சேரி முடித்தாக வேண்டும். ஒன்பதரைக்கு வீடு, பத்துமணிக்குள் அந்த சங்கீத டீச்சரிடம் பாடம் கேட்டு விட்டு ஆபீஸுக்கு 11 மணிக்குள் போனாலும் கடைசி டெஸ்பாட்ச்சாக நம் ஆர்டிகிள் போட்டுவிடலாம். என்னுடைய மொபைலில் ரிகார்டிங் ஆன் செய்துவிட்டு மேடையில் கவனம் செலுத்தினேன். குங்குமப்பொட்டுக்காரி முகம் மலர அமர்ந்து பாட ஆரம்பித்தாள்.

    singer2முதலில் அவள் அழகு முகம்தான் மனதில் அப்படியே நின்றது. தூரத்திலிருந்து பார்த்தால் கூட அந்தக் குறும்பு பொங்கும் கண்களும் அழகான வட்டவடிவ குங்குமப்பொட்டும் கொஞ்சம் சலனத்தை ஏற்படுத்தியதுதான் .,, ஆனால் போகப்போக அவள் பாடப் பாட அவள் முகம் மறைந்து போய் அந்தக் குரலினிமையும் பாட்டுக்களின் நேர்த்தியும் வேறெங்கோ அழைத்துச் சென்றதுதான்.

    அவள் கச்சேரி செய்யும் விதமே தனிதான். இவள் பேசும் குரலிலிருந்த கரகரப்பு விலகி இனிமையான இசைக் குயிலாக மாறிய அனுபவமே அலாதிதான். கிஷன்ஜி என்றில்லை யார் வேண்டுமானாலும் இந்த இனிமையான குரலுக்கு அடிமையாக மாறி விடுவார்கள்தான்.. அவ்வப்போது என்னை வேறு உற்றுப் பார்க்கிறாள்.. ஒருவேளை நான் நடுவில் போகிறேனோ என்று சந்தேகப்படுகிறாளோ.. இல்லையில்லை.. இவள் கவனம் கொஞ்சமும் நம்மீது இல்லைதான்.. இசையின் இறுக்கமான அணைப்பில் இருக்கும் அவளுக்கு நான் கண்ணில் படமுடியாது என்றுதான் நினைத்தேன். எத்தனை அநாயசம்.. எத்தனை நளினம்.. அடாடா. இந்த எடிட்டர் தப்பு செய்துவிட்டார்..அவர் என்னை கட்டாயம் செய்து இங்கு அனுப்பி தவறு செய்து விட்டார். நான் வந்திருக்கக்கூடாது.. யாராவது தேர்ந்த இசை விமர்சகரை அனுப்பி இருக்கவேண்டும்.. இவள் இசைக்கு நானெல்லாம், என் எழுத்தெல்லாம் எம்மாத்திரம்.. என் எழுத்தில் இவள் இசை நயத்தைக் கொண்டு வரமுடியுமா..

    ஒன்பது மணிக்கு முன்பாகவே முடித்துவிட்டாள் என்றாலும் அவள் இசையின் தாக்கம் என்னைப் பரிபூரணமாக ஆக்கிரமித்திருந்தது. ராகங்கள் தெரிந்தால்தான் இசையை அனுபவிக்கமுடியுமா.. இவள் மந்திரக்காரிதான்.. மாயம் செய்பவள். இசையால் எல்லோரையும் மயக்கத் தெரிந்தவள்.. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சபையைக் கட்டிப் போடத் தெரிந்தவள்.. இவள் பேச்சில் கெட்டிக்காரி என்று நினைத்தது தவறு.. இசையையும் தன்னுள் அடக்கி ஆள்பவள், இவள் நினைப்புக்கேற்றவாறு அந்த இசையை தன் இஷ்டத்துக்கு திசை திருப்புபவள். இன்னமும் கச்சேரியை நீட்டித்திருக்கலாம்தான்.. இப்படி என்னையும் கூட நினைக்க வைத்ததுதான் இவள் வெற்றிதானே..

    இருந்தாலும் கடமையை மறக்காமல் என் வேலைகளை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நுழைந்தபோது மணி பத்தரையைத் தாண்டியிருந்தது. என்னுடைய மேஜையில் போட்டோகிராஃபர் மணி ஏற்கனவே போட்டோவின் பிரதி ஒன்றை வைத்திருந்தார். அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே கட்டுரையைத் தட்ட ஆரம்பித்தேன்..

    மனதுக்குள் ஒரு குரல் என்னைத் திட்டிக் கொண்டே இருந்தது. பிஸினஸ் எழுதறவன் இப்போ மியூசிக் எழுதறியா.. பார்த்து எழுது.. என்பது போல ஏதேதோ சொன்னாலும் மியூசிக் டீச்சர் பார்த்துப் பார்த்து கேட்டு கேட்டு ரசித்துச் சொன்ன ராக ஆலாபனைக் குறிப்புகளை அப்படியே கலந்தேன்.. கட்டுரை ரெடி.. இன்னொரு முறை படித்துப் பார்த்தேன்.. திருப்தியாக இருந்தது.. மணியைப் பார்த்தேன்.. பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.. மனதில் மகிழ்ச்சி ஏராளமாக உண்டாக ஏதோ ஒரு மிகப் பெரிய சாதனைப் படைத்து விட்ட திருப்தியுடன் அச்சுக்காக அனுப்பி வைத்தேன்.. சற்று நேரம் அப்படியே சாய்ந்துஅந்த மாலை நேரத்து இனிமையான பொழுதுகளை மறுபடியும் மனதில் திருப்பினேன்..

    வீட்டுக்குச் செல்லவேண்டுமா என்றுதான் மனதில் பட்டது.. ஒரு இனிமையான அனுபவத்தை அப்படியே இன்னொரு முறை ரசிக்கவேண்டும் என்ற ஆவலுடன் வெளியே வந்தேன்.. அறையில் இருந்த குளிரை விட வெளிக்காற்றின் குளிர் ஏராளமாக மகிழ்விக்க வீடு திரும்பினேன்.

    பசிக்கவில்லை.. ஏனென்று தெரியவில்லை.. சாப்பிடாமலேயே படுக்கையில் விழுந்தவனின் காதில் அந்த இசையும் அவள் குங்குமப்பொட்டு முகமும் சற்று சலனப்படுத்தியது. புரண்டு புரண்டு படுத்தேனே தவிர தூக்கம் வருவதாயில்லை..மீண்டும் மீண்டும் அந்த முகம் அவனை அலைக்கழித்தது. தூக்கமா இல்லை அரைத்தூக்கமா தெரியவில்லை.. மறுபடியும் அவள் வந்தாள்.. அந்த குங்குமப்பொட்டும் கருவிழிகளும் இப்போது சற்று அருகில் வந்தது. ‘சங்கீதம் என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமோ’ என்று கேட்டது.. ‘சரி, உனக்கு என்ன பிடிக்கும்.. கேள்.. உடனே பாடுகிறேன்.. என்றது’. நான் நினைவில் உளறினேன்.. ‘கல்யாணி ராகத்தில் பாடு’ என்றேன்.. ’ஏன் கல்யாணி என்றால் உயிரோ’ என்று கேட்டு கலகலவென சிரித்தாள். நானும் ‘கல்யாணி.. கல்யாணி…

    திடீரென்று குதித்து எழுந்தேன். அடக்கடவுளே.. நான் எழுதிய அந்தக் கட்டுரையில் இந்தக் கல்யாணி பற்றிக் குறிப்பிடவே இல்லையே.. இவள் நிச்சயம் எனக்காகப் பாடுவதாக சொல்லிச் சொல்லிச் சென்றாளே.. எங்கே போச்சு இந்த கல்யாணி? ஏன், நிச்சயம் பாடியும் இருப்பாள். ஸார்ஜிக்கு மிகவும் பிடித்த ராகமாயிற்றே.. அட, இந்த டீச்சரும் தப்பு சொல்லிவிட்டாளோ.. இல்லை.. நான் தவறு செய்துவிட்டேன்..ஒரு வார்த்தை கூட கல்யாணியைப் பற்றி எங்கும் எழுதவில்லையே.. ராகங்கள் ஏதாவது மாற்றி எழுதி விட்டேனோ.. கல்யாணியும் எங்கும் காணப்படாதது ஏன் என் அறிவுக்குத் தெளிவாகவில்லை.. கடவுளே.. நாளை ஒரு அபத்தமான கட்டுரை வெளியாகி ஊர் சிரிக்கப் போகிறதே..

    உடனே எங்கள் ஆபிஸ் பிரஸ்ஸுக்கு போன் செய்தேன்.. யாரும் எடுக்கவில்லை.. பிரிண்டர் போய்விட்டானா.. அடக்கடவுளே.. அவன் கைபேசியில் தொடர்பு கொண்டேன்.. நீண்ட நேரம் கழித்து எடுத்தான்.. ’அது சரி, நான் கொடுத்த மேட்டர் பிரிண்ட் ஆகிவிட்டதா’.. என்றதற்கு அவன் எரிச்சலாகப் பேசினான்.. ‘என்ன சார்.. மணி என்ன இப்போ.. மூணாகப் போவுதுல்ல.. பேப்பர் டெஸ்பாட்ச்சிங் டைம் சார்.. நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.. உங்க மேட்டர் சூபரா வந்திருக்கு.. கடைசிப்பக்கத்துல முதல் நான்கு பத்திதான்..” என்று சொல்லிவிட்டு கைபேசியை மூடிவிட்டான்.

    ஆஹா.. எவ்வளவு அழகாக திட்டம் போட்டு கச்சேரி முடிந்ததும் அடித்துப் பிடித்து ஓடி, தூங்கப் போன அந்த டீச்சரை எழுப்பி உட்காரவைத்து ஒவ்வொன்றாகக் கேட்கவைத்து எழுதி என்ன பயன்.. அட, நானாவது ஒரு வார்த்தை இந்தக் கல்யாணி ராகத்தைப் பற்றி அந்த டீச்சரிடம் ஞாபகம் செய்திருக்கவேண்டாமா.. அவளும் தவறுவது சகஜம்தானே..ஒரு அபத்தமான கட்டுரை அரங்கேறிவிட்டதே.. லட்சக்கணக்கில் ஊரெங்கும் பிரதியாக்கப்பட்டாகிவிட்டது..

    தியாகய்யாவின் கிருதிகள் முத்துசாமி தீட்சிதர் பாடல்கள் என்றெல்லாம் எழுதி அந்த தெய்வப்பாடல்களுக்கும் சேர்த்தா தவறிழைத்தேன்.. அரைகுறை ஞானம் கூட இப்போது சூன்யமாகப் போய்விட்டதே.. அவள் சபையில் பாடிய பத்துப் பாடல்களுமே தவறாக விளக்கப்பட்டதோ.. ஐய்யோ.. அப்படியானால் அவள் பாடியதில் எந்தப் பாடல் இந்தக் கல்யாணி?

    எனக்கு அந்தக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.. எடிட்டர் முதலில் திட்டுவார். கிஷன்ஜி ஏதும் சொல்லமாட்டார் என்றாலும் ‘அரைகுறைக்கெல்லாம் ஆசிரியர் பொறுப்பா’ என்று நம் பதவி உயர்வு கேஸை இழுத்து மூடி விடப்போகிறார்கள். அவள் அந்த இசை ராட்சஸி வந்தாள்.. இந்த முறை அவள் குரலில் இனிமை இல்லை..குரலும் கரகரப்பு அதிகமாகி காரமாக வந்தது.. ஏதோ கத்தினாள். நீயெல்லாம் ரசிகனா’ என்று திட்டுகிறாளோ..

    ஊம்ஹூம்.. அநாவசியமாக ஒப்புக்கொண்டுவிட்டேன். நான் சுயமாக இதுவரை ஈட்டிய என் புகழை இந்த ஒரு சங்கீதக் கட்டுரை ஒரேயடியாக வீழ்த்தி விட்டது.. அறியாத துறையில் தெரியாத ஆழத்தில் காலை விட்டால் முழுகவேண்டியதுதான்.. அதிகாலை வரை மனது துடித்துக் கொண்டே இருந்தது. பகல் வெளிச்சம் பளிச்செனப் பட்டதும் வாசலுக்கு வந்தேன். தரையில் போடப்பட்டிருந்த அந்த பேப்பர் எனக்கு ஒரு அவலட்சணப் பொருளாகத் தெரிந்தது. பயத்துடனே கடைசி பக்கத்தைத்தான் முதலில் பார்த்தேன். எல்லாமே நான் எழுதியதுதான்..கட்டுரைக்கடியில் பெயரை வேறு அழகாகப் பதித்த சோகத்தை என்னவெனச் சொல்வது.. இனி என்ன செய்ய.. எதுவுமே தெரியாதமாதிரிதான் இனி அலுவலகம் செல்லவேண்டும்..கண்ணீர்த் துளிகள் அந்தப் பத்தியில் விழுந்து பேப்பரை நனைத்தது.

    இன்று என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துக்கதினம்தான்..

    தூக்கம் ஒரேயடியாகப் போய்விட்டது. மதியம்தான் அலுவலகம் சென்றேன்.. அறைகள் காலியாக இருந்தன. இது கூட நல்லதுக்குதான்.. என் மேஜையில் இரண்டு கம்பெனி விழா அழைப்புகள் கிடந்தன.. ஆமாம்.. இப்படிப்பட்ட விழாக்களுக்குச் சென்று ஹலோ சொல்லி அவர்களைப் பேட்டி கண்டு எழுதுவதுதான் என் வேலை. எடிட்டர் நாற்காலிக்கு ஆசைப்படுவதற்குக் கூட ஒரு அருகதை வேண்டாமா.. தூக்கம் இல்லாதலால் சோர்வு அதிகமாக நாற்காலியில் சாய்ந்தேன்.. குட்டி சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் வந்தான்.

    ”என்ன சார், காலைலேர்ந்து மொபைல் ஆஃப் பண்ணி வெச்சிட்டிங்க.. உங்கள எங்கல்லாம் தேடறது.. தோ.. கொஞ்ச நேரம் போனா உங்க வீட்டுக்கே வந்திருப்பேன்..”

    எனக்குப் புரிந்தது.. ஏதாவது விளக்கம் கேட்பார்கள். கிஷன்’ஜி நேற்று கச்சேரிக்கு வந்திருக்கலாம்.. இன்று காலை பேப்பர் பார்த்திருக்க வேண்டும்.. எடிட்டர் தேடியிருக்கலாம்..

    குட்டி யாருக்கோ போன் செய்தான் தன் மொபைலில்.. “தோ இருங்க.. வந்துட்டார்..”

    கைபேசியை என்னிடம் கொடுத்தான். “சார் பேசுங்க.. அந்தம்மாதான்”

    ஓஹோ.. கழுத்துவரை முழுகிவிட்டோம்.. இனியென்ன.. இவளையும் சமாளிப்போம்.. இனி இவள் இருக்கும் திசை கூட போகக்கூடாது..

    “என்ன சார்.. என் மேல கோபமா.. காலைலேர்ந்து உங்களைத் தேடறேன்… ஆனால் உங்க கட்டுரை ரியல்லி சூபர்ப்.. அப்படியே பிரேம் பண்ணச் சொல்லிட்டேன்.. கிஷன்’ஜி காலைல போன் பண்ணி அரைமணி நேரம் ஒரே பாராட்டு மழைதான்.. நேத்து அவரால்ல வரமுடியலியாம்.. ஆனா உங்க ஆர்டிகிள் மூலமா விவரமா படிச்சுத் தெரிஞ்சுண்டதா சொல்லி ஆஹா ஓஹோ’ன்னு பாராட்டினாரா.. ரொம்பவே கூச்சமாயிடுச்சு.. எல்லாம் உங்க ஆர்டிகிள் செஞ்ச மாயை..”

    இவள் என்ன சொல்கிறாள்?

    “சரி புரியறது உங்க கோபம்.. நேத்து சொன்னேன் இல்லையா..

    எல்லாமே சர்ப்ரைஸிங்’ நு ஒரு பாலிஸி வெச்சுண்டு பாடப்போறேன்’னு.. அந்த சர்ப்ரைஸிங் உங்களுக்கும் சேர்த்துதான்.. ஆனா நீங்க எதையும் மனசுல வெச்சுக்காம இவ்வளோ அழகா ஒரு ஆர்டிகிள் ஒண்ணு எழுதி அசத்திட்டீங்க..நேர்த்தியா கலைக்கண்ணோட ஒவ்வொரு ராகத்தையும் அழகாக் குறிப்பிட்டு என்னோட புகழையும் நிறையவே ஏத்திட்டீங்க.. இப்படிக் கொடுத்தது உங்க பெரிய மனசைக் காட்டறது,, ஸோ.. உங்க ஆபிசுக்கு இன்னிக்கு சாயந்திரம் கார் அனுப்பறேன். நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்.. உங்களுக்கென்னு தனியா கல்யாணி ராகத்துல எத்தனை வேணும்னாலும் பாடறேன்.. கல்யாணி ராகத்தில் நேத்துப் பாடலியேங்கற குறையை, அதுவும் நீங்க கேட்டு நான் பாடலியே’ங்கற குறையை தீர்த்து வெக்கறேன்.. வர்ரீங்க இல்லே..”

    “க.. க.. கல்யாணி அப்ப..”

    ”ஆஹா! கல்யாணின்னு இவ்வளோ உருகறீங்களே.. நான் எவ்வளோ பெரிய தப்புப் பண்ணிட்டேன்னு இப்பத்தான் புரியறது.. நேத்தேப் பாடியிருக்கணும்.. கச்சேரில விளையாட்டா உங்களைப் பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிச்சேனே.. ஸாரி, இன்னிக்கு உங்க கல்யாணி விருந்து உங்களுக்கு மட்டும் விசேஷமா தரேன்.. கட்டாயம் வாங்க..”

    கையிலிருந்த கைபேசியை குட்டியிடம் கொடுத்தேன்..

    “என்ன சார்.. என்ன ஆச்சு?”

    “இன்னிக்கு சாய்ந்திரம் வீட்டுக்குக் கூப்பிடறா.. என் கட்டுரை ரொம்பப் பிடிச்சுருக்காம்.. ஆனா.. குட்டி.. என்னை இவள் சரியா ஏமாத்திட்டாடா.. எனக்காக ஒரு பாட்டு பாடறேன்’னு பிராமிஸ் பண்ணினவ.. ஆனா சபை’ல பாடலே.. நானும் மறந்து போயிட்டேன்.. கட்டுரைலயும் மறந்து எழுதிட்டேன்.. ஆனா டக்கெனு ஞாபகம் வந்தப்ப இவ கண்டிப்பா பாடியிருக்கா’ன்னு மனசார நினைச்சேண்டா.. ராத்திரி பூரா இந்த விஷயத்தை எழுதாம தப்பு பண்ணிட்டோமோ’ன்னு நான் பட்ட அவஸ்தை எனக்குதான் தெரியும்.. இப்ப என்னடா’ன்னா சிரிக்கிறா.. என்னை வீட்டுக்கு வரச்சொல்லி தனியா பாடறாளாம்.. நேத்து சாயந்திரமே அவகிட்டே பேசறச்சே பாக்கணுமே.. எதுக்குமே பிடிகொடுக்காமப் பேசினாடா.. அட, எவ்வளோ அழகா பிராமிஸ் பண்ணினா.. அவ்வளோ சிம்பிளா ஏமாத்திட்டாடா..இப்போ வரைக்கும் நான் மனசுக்குள்ளே கலங்கிண்டு இருந்தேண்டா.. நான் அவளுக்கு விளையாட்டுப் பொருளா மாறிட்டேனோ என்னவோ.. அப்படித்தான் இருக்கணும்”

    “அப்படியா சார், அடப் பாவமே.. நீங்க என்ன சார் பண்ணப்போறிங்க.. சாயங்காலம் அவங்க வீட்டுக்கெல்லாம் போவாதீங்க சார்.. ஏன்னா.. நாமளே போய் வலை’ல மாட்டப்படாது பாருங்க..”

    “சேச்சே.. என்னை என்ன மடையன்’னு நினைச்சியா.. அவஸ்தப்பட்டவங்க யாராவது மறுபடியும் போய் அதே அவஸ்தையை அனுபவிப்பாங்களாடா.. முட்டாள்தான் மறுபடி போவான்.. எதுக்கும் அவங்க போன் நம்பர் கொடுத்துட்டு போ.. கண்டிப்பா கறாரா பேசி ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு கட் பண்ணிட்டா போச்சு.. போடா.. ஒரு காபி எடுத்துண்டு வா.. தலையை வலிக்குது..”

    குட்டி போன் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்குப் பிறகு நான் அவளோடு பேசியதையும் அவள் குழைந்து பேசும் மயக்கக் குரலுக்கு மயங்கி அவள் வீட்டுக்கு ஓடியதையும் குட்டியிடம் நான் ஏன் சொல்லப்போகிறேன்…
    ————————————————————–

    படம்: ஓவியர் தேமொழி.

    Share
  • ‘அன்புள்ள மணிமொழிக்கு’ …

    செண்பக ஜெகதீசன்

     

     

    அன்புச் சகோதரி மணிமொழிக்கு,

     

    நலம்,

    நான் நாடுவதும் அதுதானே..

    அன்னையே என்று அழைக்கலாமோ,

    என்னை

    இன்றைய நிலைக்கு உருவாக்கியதால்..

    தோழி எனலாமோ,

    துணையானதால் என் வளர்ச்சிக்கு…!

     

    ‘மாதவம்’ செய்து பிறந்தவள் நீ,

    என்

    வேதனை தீர்த்து

    வெற்றிக்கு வழிகாட்டியதால்,

    அதனால் வணங்குகிறேன்…!

     

    பத்திரிக்கை ஆசிரியராய் நீ,

    பணி ஓய்வு பெற்ற நான்

    பொழுதுபோக்காய் எழுதியதைப்

    பொக்கிஷம் ஆக்கியவள் நீ..

     

    ஓடும் ஆற்றில்

    உருண்டுகொண்டிருந்த கூழாங்கல்லை

    எடுத்து

    உருவம் கொடுத்தவள் நீ..

     

    நாடோடிப் பாட்டை

    மேடைக்குக் கொண்டுவந்தவள் நீ..

     

    காட்டு மூங்கிலை

    வீட்டில் கொண்டுவந்து

    வேய்ங்குழலாக்கி

    வேணுகானம் இசைத்தவள் நீ..

     

    பேசாத கிளியைப் பழக்கி

    பெரியபுராணம் உரைக்கவைத்தவள் நீ…!

     

    என் படைப்புக்களைப்

    பார்த்தவுடன் பாராட்டி,

    குறையிருந்தால் மென்மையாய்

    மெருகேற்றச்சொல்லும் பாங்கும்,

    போட்டிகளில் என்னைப்

    பங்கேற்கப்

    பரிந்துரைக்கும் பாங்கும்,

    வென்றால்

    தான் வென்றதாய் எண்ணி

    தன்னை மறந்து

    என்னைப் பாராட்டும் பாங்கும்,

    ஆக

    எல்லாம் நிறைந்தவள் நீ,

    எங்குமானவள் நீ…!

     

    நலம்குன்றி ஒருமுறை

    நான் படுத்தபோது,

    உலகையே மறந்து எனக்காக

    உளமார

    உண்மை வேண்டுதல் செய்தாய் நீ,

    உன்னைத்

    தாயென்றால் நான்

    தாழ்ந்துவிட மாட்டேன்…!

     

    உன்

    முதல்நூல் வெளியீட்டின்போது

    முன்னிலையில் நானில்லாததை நீ

    மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டிருந்ததை

    முழுதாய் மறக்கவில்லை நான்..

     

    ‘உடன் பிறக்காவிட்டாலும்

    உன்னிடம்தானே இருக்கிறது

    வாழ்த்தும் என் இதயமும்’ என்ற

    என் வாழ்த்தை

    எல்லோரிடமும் சொல்லி மாய்ந்தாயே..

     

    இது

    உடன் பிறக்காவிட்டாலும்

    உடன்வந்த பந்தமல்லவா…!

     

    மணிமொழி,

    முழுதும் தெரியும் உனக்கு-

    எனது

    ஆறு நூற்களும்

    அம்பாள் சந்நிதிகளிலேதான் வெளியிடப்பட்டன..

    (3- செண்பகவல்லி, 3- காந்திமதி)

    அதன் காரணம் கேட்டே

    அலுத்துப் போனவள் நீ,

    அது அப்படித்தான் என்ற

    என் பதிலை அரைமனதுடன்

    ஏற்றுக்கொண்டவள் நீ..

     

    இதற்குப் பிறகும் உனக்கு

    என்னைப் பிடிக்கிறதே,

    உன்னை என்னோடு ஒட்டவைத்திருக்கும்

    உன்குணம் இதுதானோ..

    வாழ்த்தி வணங்குகிறேன்…!

     

    என் ஆசான்(கவியரசர்) சொன்னார்,

    ‘எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்

    இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்

    தாயாக மகனாக உறவாடலாம்

    தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்..’

    இது

    நம்வகையிலும் உண்மைதானே…!

     

    அன்புச் சகோதரி,

    அன்புக் கட்டளை ஒன்று-

    படைப்பிலக்கிய உலகில் மிக உயர்ந்த

    இடத்தைப் பெறப்போகும் நீ

    பிற்காலத்தில்(எனக்குப் பின்),

    சிதறிக்கிடக்கும் என் படைப்புக்களைச்

    சேர்த்து வை..

     

    கண்கலங்காதே,

    காலம் காட்டும் உண்மை இது

    கவலை வேண்டாம்

    கடமையாய்ச் செய்..

    என்றும்

    கடமைப்பட்டவன் நான்…!

     

    ஆனாலும் ஓர் ஆசை,

    ஆயுள் உள்ளபோதே ஒருமுறை

    பார்க்கவேண்டும் உன்னை..

    அந்த ஆவலுடன் தொடர்வேன்

    அடுத்த மடலிலும்…!

     

    என்றும் அன்புடன்,

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…101

    சக்தி சக்திதாசன்

    LBCBD2 LBCBD4

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    புதியதோர் வாரத்திலே புதியதோர் மடலுடன் உங்களுடன் உறவாட வந்துள்ளேன்.

    அவசரமான உலகம், அவசரமான வாழ்க்கை . இந்த வாழ்க்கையை மிகவும் அவசரமாகவே வாழ்ந்து முடித்துவிட காலத்தோடு போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்துக் கொண்டு ஓடும் சமுதாயங்கள்.

    இன்றைய காலகட்டத்திலே சமுதாயங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடையை எம்மை அரசாளும் அரசியல்வாதிகள் தருவார்கள் எனும் நம்பிக்கையோடு வாழும் மக்கள் கூட்டம்.

    ஆனால் பல்வேறு முக்கியமான் மக்கள் பிரச்சனைகள் வாதிடுவதற்கு சிக்கலாக இருப்பதனால் பல்வேறு அரசியல்வாதிகளால் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. அவை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டன என்பதற்காக அவைகள் அப்படியே மக்கள் மனங்களில் இருந்து மறைந்து போய்விடுவதில்லை.

    மாறாக நீறுபூத்த நெருப்புப் போல மக்கள் மனங்களில் புகைந்து கொண்டுதானிருக்கின்றன. மிகவும் சர்ச்சைக்குரிய விடயம் என்பதற்காக முக்கியமான விடயங்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படாமல் விடுபட்டு போவது கவலைக்குரிய விடயமே !

    ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு இத்தகைய விவாதத் தவிர்ப்பு ஓர் இழப்பு என்றே கூற வேண்டும்.

    எங்கே இந்த ஆரம்பம் எம்மை அழைத்துச் செல்கிறது என்று நீங்கள் ஆரய முற்பட வேண்டியதில்லை இதோ விடயத்திற்கு வந்து விடுகிறேன்.

    இங்கிலாந்திலுள்ள மக்களின் வாழ்க்கை வசதிகளில் ஏற்பட்ட தாக்கங்கள். நிலைகுலைந்த பொருளாதாரத்தைச் சீராக்க கூட்டரசாங்கம் எடுத்த மிகக்கடுமையான பொதுச்சேவைக்கான செலவீனக்குறைப்பு என்பனவற்றின் அதீத தக்கங்கள்,

    வேலையில்லாத் திண்டாட்டத்தின் எதிரொலிப்பு, வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்காக வழங்கப்படும் உதவிகளில் ஏற்படுத்தப்பட்ட கடும் போக்குகளின் தாக்கங்கள் என்பன இங்கிலாந்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுவோர் மீதான இந்நாட்டு மக்களின் அதிருப்தியின் அளவை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பான உண்மை.

    அன்றாடம் ஊடகங்களில் இதைப்பற்றிய கருத்தாடல்க அதிக அளவில் இடம்பெறுவதே இதற்குரிய சான்றாகிறது.

    இதை இங்கிலாந்து இனத்தவரின் இனவிரோதப் பார்வை என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. ஏனெனில் இங்கு வந்து வாழும் ஆசிய ஆபிரிக்க மக்களின் பார்வையும் இத்தகைய வெளிநாட்டவரின் வருகையை நோக்கி அதிருப்தியானதாகவே தென்படுகிறது.

    ஆனால் இதைப்பற்றிய பகிங்கரமான சர்ச்சைகளை முக்கிய அரசியல் கட்சிகளின் தலலவர்களால் எங்கே தாம் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ எனும் அச்சத்தினால் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்திலிருந்து தம்மை அகற்றிக் கொள்ள வேண்டும் எனும் வாதத்தை முன்வைத்து ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) என்று ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வருபவர் நைஜல் ப்றாஜ் (Nigel Farage) என்பவர்.

    இங்கிலாந்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றும் தற்போதைய கூட்டரசாங்கத்தின் பங்காளிக் கட்சியுமான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவர் நிக் கிளேஹ் (Nick Cleg). இவர் தனது கட்சியின் அழுத்தமான கொள்கையான இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் முக்கியமான பங்கு வகிக்க வேண்டியது தவிர்க்க முடியாது என்பதில் மிகுந்த அழுத்தமாக இருப்பவர்.

    நிக் கிளேக் ஒவ்வொருவாரமும் லண்டனின் பிரசித்தி பெற்ற எல்.பி.சி (LBC) எனும் வானொலியில் அதன் பிரசித்தி பெற்ற காலைநேர ஒலிபரப்பாளரான நிக் வெராரி (Nick Ferrari) என்பவர் நடத்தும் காலைநேர ஒலிபரப்பில் வியாழக்கிழமைகளில் பங்குபற்றி நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம்.

    சமீபத்தில் அப்படியான ஒரு நிகழ்வின் போது நிக் கிளேஹ் , நைஜல் ப்ராக் என்பவருக்கு பகிரங்கமாக இவ்வானோலியில் நிக் வெராரி தலைமையில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் பங்கு பற்ற வேண்டுமா? வேண்டாமா? என்று விவாதிக்க வரும்படி அறைகூவல் விடுத்தார்.

    விடுவாரா ? நைஜல் ப்ராக் ஏற்றுக் கொண்டார். இலவசமாக தனக்கும் தனது கட்சிக்கும் கிடைக்கும் வானொலி விளம்பரத்தை ஏன் தவிர்க்கப் போகிறார் ?

    விளைவு !

    நேற்று மாலை அதாவது மார்ச் 26ம் திகதி 7 மணிக்கு நிக் வெராரி தலைமையில் லிபரல் கட்சித் தலைவர் நிக் கிளேஹும் , ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ப்ராக்கும் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் பங்கு பற்றுவதின் சாதகங்களையும், பாதகங்களையும் பற்றிய பகிரங்க விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதன் அவசியத்திற்காக நிக் கிளேஹ் உம் , இங்கிலாந்து ஏன் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்பதன் காரணத்தை நைஜல் ப்ராக் உம் விவாதித்தார்கள்.

    இவ்விவாதத்திலே யார் சரி, யார் பிழை என்பதல்ல எனது இம்மடலுக்கான காரணம். இத்தகைய விவாதம் ஜனநாயகத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி எனும் எனது தாழ்மையான கருத்தை எனது இனிய வாசகர்களான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இம்மடலின் நோக்கம்.

    மிகவும் சிக்கலான விடயம் என்பதற்காக மக்களின் மனதில் முக்கியமாகக் கருதப்படும் ஒரு விடயத்தை ஓரங்கட்டி விடுவது என்றுமே ஆராக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது.

    மாறாக இத்தகைய பகிரங்க விவாதங்களின் மூலம் தலைவர்கள் தாங்கள் கொண்டுள்ள கொள்கைகளின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மக்களுக்கு வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வாய்க்கிறது..

    நேற்றைய விவாதத்தில் ஒருவர் வெற்றி பெற்றவரல்ல அங்கே மூன்று வெற்றியாளர்கள் இருக்கிறார்கள் .

    அவர்கள் . . . .

    பங்குபற்றிய இரு தலைவர்கள், மூன்றாமவர் “மக்கள்”

    பசும்புல்லின் மீது எப்போதும் நடப்பதல்ல உண்மையான பயணம் புற்தரை கற்தரையாக மாறும் போதும் நடையின் வேகம் தணியாமல் நடப்பதே பயணத்தின் வெற்றியைக் குறிக்கிறது.

    இதை மற்றைய பெரும் கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து கொள்வார்களா ?

    பொறுத்திருந்து பார்ப்போம் !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • அன்புள்ள மணிமொழி!..

    வி.பாலகுமார்

     

    இன்மைஉணர்தல்

    ஆகாயத்தை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் காரைக்கட்டிட அட்டைப்பெட்டி அலுவலகத்தின் புழுக்கத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து, தனித்து வியாபித்திருக்கும் பெரிய பூவரசமரத்தில், பறவைகள் அடையும் சத்தத்தினூடே இதனை எழுதத் துவங்குகிறேன் மணிமொழி ! உன் வீட்டு மொட்டை மாடியில் வடகிழக்கு மூலையில் உள்ள திண்டில் பறவைகள் வந்து நீர் அருந்தட்டுமென வைத்திருக்கும் வாய் அகலமான தண்ணீர்த் தொட்டியில் குறைந்திருக்கும் நீர் அளவைப் பார்த்து, உனக்கு மிகப்பிரியமான மிக்கி மௌஸ் படம் போட்ட ஊதா நிற பிளாஸ்டிக் குவளையை வலது கையால் பிடித்து நீர் கோரி தொட்டியை நிரப்பியபடி, காற்றில் படபடக்க விடாமல் லாவகமாய்  பிடித்த படி கண்களாலும், கழுத்தாலும் உன் பிரத்யேக செய்கையசைவில் வளைந்து வளைந்து, இடது கையில் பிடித்திருக்கும் இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருப்பதாய் கற்பனை செய்து பார்க்கிறேன். உன் வீட்டுக் கொல்லையில் இருக்கும் வேம்பு காய்க்கும் பருவமல்லவா இது. மொட்டை மாடியெங்கும் வேப்பம்பழங்கள் சிதறிக் கிடக்க, அவற்றை சேகரித்து வட்டவட்டமாய் உருவம் அமைத்து மொட்டைமாடியெங்கும் சிரிப்பான்களாய் பரப்பி வைத்திருப்பாயே, அது ஏனோ இன்று காலை எழும் போதே நினைவில் வந்தது. இல்லை, அப்படிக்கூட சொல்ல முடியாது. அந்த வேப்பம்பழ சிரிப்பான்கள் தாம் கனவில் வந்து பொழுது புலர்வதற்கு முன்பாகவே என்னை எழுப்பி விட்டன. அது முதலே, ஒரு இனம்புரியாத பரவசம் என் மனமெங்கும் சிறகடிக்கத் துவங்கி விட்டது. எழுந்து தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே அடுத்த ஆச்சர்யம் ! நூலகத்தின் நிசப்தத்தில், முல்லை நிலத்து வாழ்க்கை முறையை நாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த, மென்தூறல் விழுந்த இளமாலைப் பொழுதில் நீ உயிரைக் குழைத்து, என் கண்ணீர்க்குளங்களை தழும்பச் செய்து சன்னமான குரலில் எனக்காக மட்டும் பாடிய “கங்கைக்கரைத் தோட்டம்” ஒலித்துக் கொண்டிருந்தது.

    உயிருடனான முழு விலங்கை வாய் கொள்ளாமல் முழுங்கும் மலைப்பாம்பைப்போன்று நீண்ட பாலங்களாலும், தங்க நாற்கரச்சாலைகளாலும் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் தனக்குள் இழுத்துச் செறித்து, மீந்ததைத் துப்பி விரிவாக்கப்பகுதிகளாக தள்ளி வைத்திருக்கும் இந்த பெருநகரத்தின் ஒரு மூளையில் சந்திப்புச்சாலையைத் தாண்டி ஒடுங்கிப்போயிருக்கும் இந்த சிறு தேநீர்க்கடைக்குள்ளும், உயிர் கசியும் ஒரு தேவநொடியை எங்கிருந்தோ மீட்டுக்கொண்டு வர முடிகிறது, இந்த இசையினால். ”கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை” என்று சுசீலாம்மாவின் குரலில் உன் விசும்பலை நினைத்த அந்த கணம், என்னையும் அறியாமால் கண்கள் கசிந்து அமர்ந்திருந்தேன். என்றோ நிகழ்ந்த ஒரு உன்னத நிகழ்வின் ஞாபகச்சரடு காலங்களுக்குள் எத்தனை முறை நம்மை மீண்டும் மீண்டும் பிணைத்துக் கொள்ளுமோ, மொழி ! அலைபேசி அலாரத்தை குறைந்தது ஒரு மணி நேரத்திற்க்காகவேணும் கண்ணயர்வு கொள்ளச் செய்து தினமும் கடிகாரத்துடன் சண்டையிட்டு அடித்துப்பிடித்து அலுவலகத்துக்கு விரைபவன் நான். இன்று உனது வேப்பம்பழ சிரிப்பான் அதிகாலையே என்னை எழுப்பி விட்டு, அதிசயமாய் தேநீர்க்கடைக்கும் செல்ல வைத்து, அங்கே ஒரு மகிழ்ச்சிப் பொட்டலத்தையும் இசையாய் விரித்து வைத்திருந்தது. அந்த மென்கீதத்தின் ரீங்காரத்தூடே அறைக்கு வந்து, நிதானமாக அதே சமயம் பரவசமாக இதழ்களுக்குள் மெல்லியதொரு புன்னகையை பரவ விட்ட படியே ஆயத்தமானேன்.

    எவ்வளவு நிதானமாகக் கிளம்பி, தயாரான பின்னும் அலுவலக வாகனம் எங்கள் பகுதிக்கு வந்து சேர இன்னும் இரண்டு மணிநேரமிருந்தது. அதற்கு மேல் அறைக்குள் இருப்புக்கொள்ளவில்லை. மெதுவாக தெருமுனைக்கு வந்தேன். அந்தப்பகுதி அவ்வளவு அமைதியாக இருக்கமுடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆறரை மணிக்கும் எட்டரை மணிக்கும் இடையில் உள்ள உவமிப்பு பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. தெருமுனையில் இன்னும் தண்ணீர் லாரி வந்திருக்கவில்லை. ஷேர் ஆட்டோக்களின் சாகசங்கள் இன்னும் தொடர்ந்திருக்கவில்லை. வழக்கமாக எட்டரை மணி சுமாருக்கு, தலை நிறைய எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து படிய சீவி விட்டு, எண்ணெய்க் கைகளில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டி குழந்தைகளின் முகங்களை வெள்ளையடித்து, பொதியேற்றி பள்ளி வாகனத்திற்குள் திணிக்கும் வழக்கமுள்ள புறநகரத்துப் பெண்மணிகள் அப்பொழுது தான் அன்றைய தினத்தின் முதல் வேலையாக வாசல் தெளிக்கத் துவங்கியிருந்தனர். வீட்டு வாசல்களில் படுத்திருந்த தெருநாய்கள் தண்ணீர் பட்டும் பதற்றம் காட்டாமல், மெதுவாக எழுந்து நெட்டி முறித்து ஓரமாய்ச் சென்று மறுபடியும் படுத்துக் கொண்டன. அந்தப்பகுதியின் அடையாளமாக, தங்கள் இருப்பை எப்போதும் சத்தமிட்டு பறைசாற்றி தங்களுக்குள் சத்த யுத்தம் நடத்தும் இரும்புப்பட்டறைகள் யாவும் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. மூடியிருக்கும் அந்த பட்டறைகளின் கனத்த கரந்தியல் சாத்திகளின் மீது தியானித்திருக்கும் கடவுளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. காலியான அதிகாலை நேரத்து தெருக்களைப் பார்க்கும் போது, அவை இரவில் அகலமடைந்து, பகல் செல்லச்செல்ல சுருங்கிக் கொள்கின்றனவோ என்று தோன்றியது.

    நகரப்பேருந்துகள் காலியாகக் கூட செல்லும் என்று இன்றைக்குத் தான் தெரிந்தது, மொழி ! ஒரு ஜன்னலேர இருக்கையை தேர்ந்து சாலையை மௌனமாய் பார்த்தபடியே பயணம் செய்தேன். அடுக்கங்களின் சிறு முன்றில்களில் வளர்க்கப்படும் போன்சாய் மரங்களைப் பார்த்து நீ விசனம் கொண்ட நிகழ்வு, அன்னிச்சையாய் நினைவுக்கு வந்தது. பிராணிகளை வளர்க்கத் தடையுள்ள, வாரமொரு முறை  தாழ்வாரங்களை ஆள்வைத்து சுத்தம் செய்து, அங்கே கூடுகட்ட எத்தனிக்கும் புறாக்களை அதைரியம் கொள்ளச்செய்யும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் அறிக்கையொன்றில் நீ செய்து காண்பித்த கத்திக்கப்பல் மனதில் தோன்றியது. ஒரு மணிநேரப்பயணத்தின் முழுமைக்கும் என் அருகில் நீ அமர்ந்து வருவதாகவே எண்ணிக் கொண்டேன் மொழி ! நாம் வாசித்த கவிதைத் தொகுப்புகளை, புதினங்களை, சிறுகதைகளை நீ ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாய், பேருந்துக்கு வெளியே எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் மிதமான குளிர்க்காற்றை, அவ்வப்பொழுது வலது கையால் தடுத்து உன் முகத்துக்கு நேராக திருப்பி விட்டுக் கொண்டே வந்தேன். காற்றிலாடும் முடியை காதிற்கு பின் தள்ளியபடியே நீ பேசிக்கொண்டே வந்தாய். அலுவலக நிறுத்தம நெருந்துவதை உணர்ந்து உன்னை அப்படியே விட்டுவிட மனமில்லாது தவித்தேன். பின், அலுவலகத்திற்கு முந்தைய நிறுத்ததிலேயே இறங்கி, அருகிலிருந்த மரங்களடர்ந்த பூங்காவிற்குச் சென்றேன். விடாமல் தொடர் கேள்வி கேட்டுக் கொண்டு, தம் அப்பாக்களை வழி நடத்திச் செல்லும் சிறு பெண் குழந்தைகளின் நடைப்பயிற்சியால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது அந்த காலை நேரத்து பூங்கா. அந்த சிறுமிகளைப் பார்த்து புன்னகைத்தபடியே மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதியவர்களின் முகங்கள் பரிசுத்தமாய் காட்சியளித்தன. பூங்காவின் பெரும்பகுதி தெரிவது போன்ற இடத்தைத் தேர்ந்து, அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்தேன். கண்களை மூடி ஆழ்மூச்சில் சுவாசிக்கத் துவங்கியவுடன், அருகில் மஞ்சளின் வாசமும், செம்பருத்தியின் மணமும் கலந்த உன் வாசனையை நுகர்ந்து அருகில் நீ அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். கண்கள் மூடிய படியே உன் அருகாமையை ரசித்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தேன் மொழி ! வெயில் மெல்ல ஏறத்துவங்கியவுடன், அங்கிருந்து நடந்தே அலுவலகம் செல்வதென முடிவெடுத்து மெதுவாக அலுவலகம் சென்றடைந்தேன். எனக்குத் தெரியும் மொழி, பூங்காவில் இருந்த நீ, அங்கே கண்ணிற்குத் தட்டுப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு செல்ல பெயர் வைத்திருப்பாய், மரங்களிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு மலரோடு ஏதேனும் ஒரு ரகசிய மொழி பேசியிருப்பாய். பகலா, இரவா, வெளியே மழையா, வெயிலா, என்ன நேரம் என்ன திசை என்று கூட அறிந்து கொள்ள முடியாத கருப்புக் கண்ணாடிகள் பதித்த அடுக்குமாடி அலுவலம் உனக்கு பிடிக்காது என எனக்குத் தெரியும். எனவே தான் உன்னை உனக்குப் பிடித்தமான பூங்காவிலேயே இருக்கும் படி நினைத்துக் கொண்டேன்.

    இன்று முதல் ஆளாக அலுவலகம் வந்து இருந்தேன். மனம் முழுதும் நீயே நிறைந்து இருந்தாய். என் இன்றைய தினத்தின் பூரிப்பை, அகவெழுச்சியை, உள்ளே பொங்கும் மனவூற்றை எப்படி வெளிக்காட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அலைந்தேன். நாள் முழுமைக்கும் யாருடனும் பேசப்பிடிக்கவே இல்லை. நிமிடத்துக்கொரு முறையென கணினியிலும் , அலைபேசியிலும் ஆயிரக்கணக்கான சிரிப்பான்களை குறுந்தகவல்களாக, மின்னஞ்சல்களாக எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். அதை நான் திறந்து பார்க்கும் போதும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் ஒவ்வொரும் சிரிப்பானிலும் வேப்பம்பழத்தின் வாசமும், உன் வெள்ளந்திச்சிரிப்பின் வாசமும் மாறி மாறி வீசிக் கொண்டே இருந்தது. இந்த நாளை முழுமையாக அனுபவிக்க வைத்தாய் மொழி, இன்று என்னை மீண்டும் நானாய் உணர வைத்திருக்கிறாய் மொழி. நமது இந்த பிரிவு  உன் காதலை, நட்பை, அருகாமையை, இருப்பை, தேவையை, உன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது மொழி !

    உன் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கும் இந்த சிறு விடுமுறைப்  பிரிவில், ஆழத்தில் புதைந்து கொண்டிருந்த நம் காதலை உன் சிரிப்புருவினால் மீட்டெடுத்திருக்கிறாய் மணிமொழி ! உன்னை உன் வெகுளித்தனங்களோடும், ரசனையோடும், குழந்தைமையோடும் காதலிக்கும் உன் உயிர்த்தோழனை, நம் திருமணமான இத்தனை நாளில் தினப்பாடுகளுக்கும், அலுவலக வேலைப்பளுவுக்கும், எரிச்சல்களுக்கும், பொறுமையின்மைக்கும், நோய்மைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, ஒரு சராசரி கணவனாய் மட்டும் இருந்திருக்கிறேன் என்பதை இந்தப்பிரிவினால் உணர்த்தியிருக்கிறாய் மணிமொழி ! உன்னை நீயாய் இருக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மனதாரச் செய்யும் உன் உற்ற தோழனாய் என்னை பழையபடி மாற்றியிருக்கிறாய் மணிமொழி ! போதும், நீ பாசமாய் வளர்த்த வேப்பமரத்துக்கும், மருதாணிச்செடிக்கும், உன் தாய்வீட்டுக்கும் அவசரமாய் ஒரு பிரியா விடை கொடுத்து விட்டு உடனே நம் வீட்டுக்கு வா என் அருமை மனைவியே !

    இப்படிக்கு

    உன் இன்மையில் உன்னை முழுவதுமாய் உணரும் உன் கணவன்.

    Share