Blog

  • விலகல்

     

    எம். ரிஷான் 

    அடைமழை பெய்தோய்ந்தimages (2)
    நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
    குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
    பனியை விரலிலேந்தி கடைசிப் பேருந்திலிருந்து இறங்கினாய்

    பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
    பல்லாயிரம் விழிகள்
    அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
    தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
    தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
    இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

    பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
    புற்றெழுப்பும் கரையான்களைக்
    கொத்த வரும் சாம்பல்குருவிகளை
    பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
    வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்

    நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
    எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
    வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
    விடிகாலையில்
    அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
    தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
    உன்னைப் போலவே
    _______________________________________________

     

    Share
  • அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூட்ட நிகழ்வு

     unnamed (1)

    29.03.2014 அன்று அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூடத்தில் கூடத்தில் சேலையூர் சியோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவன் நா.நரேன் கெளதம் “இராம காதையின் அச்சாணி இலக்குவன்” என்ற தலைப்பில் அருமையாக உரையாற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது. இக்கால மாணவர்கள் தெளிவாக உள்ளார்கள். இவர்களை சரியாக வழி நடத்தும் பொறுப்பை நாம் சரியாக செய்யவில்லை என்று எண்ணுகிறேன்.
    வாழ்த்துக்கள் நரேன்.

    (படத்தில் அம்பத்தூர் கம்பன் கழக பொருளார் திரு.குருமூர்த்தி நினைவு பரிசை மாணவனுக்கு வழங்குகிறார். உடன் அம்பத்தூர் கம்பன் தலைவர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன்,ஆலோசனை குழு உறுப்பினர் மு.ராம.சிவலிங்கம் மற்றும் செயலாளர் திரு.வி.சுப்ரமணியன்)

    by சித்திரை சிங்கர், அம்பத்தூர்
    கைபேசி:9789778442

    Share
  • பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி

    (Supercontinent Split & Drift)

    சிஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

     

     

    நாமிருக்கும் கண்டங்கள்,
    பூமி என்னும்
    நர்த்தகத் தடாகத்தில்
    ஆமைபோல் நகர்ந்து செல்லும்,
    தாமரை இலைகள்!
    சுளைகள் அடுக்காய்ச் சுற்றிய
    எலுமிச்சங் கனி!
    துகிலுரிக்க முடியா தோலுடுத்திய
    வெங்காயக் கோளம்!
    கடல் வயிற்றில் கனலை மூட்டி
    எரிமலை சமைக்கும்
    கரிச்சட்டி வடைகள் போல்
    உருவாகும் தீவுகள்!
    பூகம்பம் உடல் குலுக்கிப்
    பூதளம் பிரித்து
    தீக்குழம்பில் படகுகள் போல்
    தீவுகளைத்
    துடுப்பு நெம்பு கோல்
    முடுக்கித் தள்ளும்!

    ++++++++++++++

    unnamed

    “பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல்லாண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது!  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் உடைபட்டு, வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து மெதுவாக நகர்ந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன!”

    பூகோளத்தின் அடித்தட்டு [Crust] உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மெதுவாகப் பெயர்ச்சி அடைகிறது!  கண்டங்களின் நிலப்பெயர்ச்சி நியதிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சி நிகழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகளும் உறுதியும் அளிக்கின்றன”.

    டாக்டர்ஆல்ஃபிரெட்வெஜினர்ஜெர்மன்பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

    “பூகோளப் பிறழ்ச்சித் தட்டு நியதி [Thory of Plate Tectonics] என்பது வெறும் கோட்பாடாக மட்டும் குறிப்பிடப்படாது!  டார்வின் உயிர் மலர்ச்சிக் கோட்பாடு [Evolutionary Theory], ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதி [Theory of Relativity] ஆகியவற்றைப் போல் விஞ்ஞான மகத்துவமும், முக்கியத்துவமும் பெற்றது!”

    டாக்டர்மௌரிஸ்யூவிங்அதிபர்மெரிக்கன்கடற்தளவியல்கூடம் [Dr. Maurice Ewing, Dean of American Oceanographers (1906-1974)]

     


    “இதுவரைச் சுற்றி வந்துள்ள பூகோளம் இன்றும் ஓடிக் கொண்டு வருவதுடன், இனியும் தொடர்ந்து சுற்றப் போகும் ஒரு பூத யந்திரம்!  உலகக் கண்டங்கள் படிப்படியாக நில அரிப்பில் சரிக்கப்பட்டு, அவற்றின் கழிவுத் தளங்கள் நீரால் வழித்துக் கடலுள் தள்ளப்பட்டு, கடல்மடியில் அடுக்குப் புழுதியாய் படிகின்றன.  கழிவுப் புழுதிகள் கடினமாகி, பூமியின் உட்கரு வெப்பத்தால் அவை மீண்டும் உயர்த்தப்பட்டுப் பிறழ்கின்றன!  இம்மாதிரி பூமியில் நிலஅரிப்பும், நிலப்புடைப்பும் [Erosion & Uplift] மாறி மாறிச் மீள்சுற்றில் நிகழ்கின்றன”.

    ஜேம்ஸ்ஹட்டன்நவீனப்பூதளவியல்மைப்பாளிஎடின்பரோ [The Founder of Modern Geology (1785)]

     


    “பூகோளத்தின் வெவ்வேறு ஆழத்திலிருந்தும், மேல் பரப்பிலிருந்தும் எடுக்கும் மாதிரிப் பாறைகளில் மிகச் சிறிதளவு காணப்படும் யுரேனியம், தோரியம் ஆகிய இயற்கை உலோகங்களின் மூலம், பூமியின் வயது காலத்தைக் கணக்கிட முடிகிறது!  சுயமாகத் தேயும் இந்த மூலகங்கள் முடிவில் நிலையாக மிஞ்சும் ஈயத்தின் எடையைக் கண்டு, அப்பாறை தோன்றிய காலத்தை அறிந்து கொள்ளலாம்.  சமீபத்தில் நுணுக்கமான முறைகளைக் கையாண்டு, பாறை மாதிரிகளில் எஞ்சிய ஈயத்தின் அளவைக் கணக்கிட்டு, நமக்குக் கிடைத்த பூர்வீகப் பாறையின் உச்சகாலத் தோற்றம் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக அறியப்படுகிறது !”

    ரஷ்யஅமெரிக்கவிஞ்ஞானிஜார்ஜ்காமாவ் (1904-1968)


    பூகோளக் கண்டங்கள் புலப்பெயர்ச்சி அடைந்து வருபவை

    பிரபஞ்சத்தில் ஆடாமல், அசையால், ஓடாமல், நகராமல், சுழாமல் முடத்துவ நிலையில் உள்ள அண்டங்களோ அல்லது அகிலக் கோள்களோ எவையும் இருப்பதாகத் தெரியவில்லை.  பரிதியைச் சுற்றி வந்து, தன்னைத் தானே தன்னச்சில் சுழலும் நமது பூகோளத்தின் தளப்பரப்பு இயக்கமற்று நிலையாக இருப்பது போல் தோன்றுவது மெய்யான தோற்றமில்லை! 1950 இல் ஆக்கப்பட்ட பூகோள பிறழ்ச்சித் தட்டு நியதி [Global Plate Tectonics], பூமியின் தளப்பகுதி நிலையானது என்னும் பூர்வீகக் கொள்கைக்குச் சவால் விட்டு, விஞ்ஞான உலகில் ஒருபெரும் புரட்சியை உண்டாக்கி யிருக்கிறது!  பூதள வரலாற்றின் 4.6 பில்லியன் ஆண்டுகளில் ஊதுலை இசைக்கருவி ஏறி இறங்குவது போல் [Accordion] கடல்கள் திறந்து நிரம்புவதும், மூடி அடங்குவதும் தெரியப்பட்டன!  கொந்தளிக்கும் கடலில் மூழ்கிய படகைத் தள்ளுவதுபோல் கண்டங்கள் நகர்த்தப் பட்டன என்னும் புதிய கருத்துகள் நிலவ ஆரம்பித்தன!  உலகக் கண்டங்கள், கடல்கள், குன்றுகள், தீவுகள் எப்படி உண்டாயின?  எரிமலைகள், நில அதிர்வுகள் ஏன் ஏற்படுகின்றன?  கடலடியே மலர்ந்து வரும் பூர்வப் படிவங்கள் [Marine Fossils] எப்படி இமயமலைச் சிகரத்தில் காணப் படுகின்றன?  இவை போன்ற குழப்பமான, விடை தெரியாத புதிர் வினாக்களுக்குப் பதிலளிக்கப் புரட்சிகரமான கருத்துகளைப் பூதளத்தட்டு புதுநியதி விளக்குகிறது!

     

    பூதளவியல் விஞ்ஞானத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள்

    ஒருகாலத்தில் மாறாமல் நிலையாக இருப்பதாகக் கருதிய உலகக் கண்டங்கள் உண்மையில் மிக மெதுவாக நகர்கின்றன என்பது இருபதாம் நூற்றாண்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது!  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உலகம் உண்டான காலத்தில் ஒரு பெருங் கண்டமாக இருந்து, பல பில்லியன் ஆண்டுகளாக மிக மெதுவாகப் பெயர்ச்சி அடைந்து பல கண்டங்களாகப் பிரிந்து போயின என்னும் கோட்பாடை முதலில் விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்ளவில்லை!  கி.பி. 1620 இல் இங்கிலாந்தில் விஞ்ஞான ஆராய்ச்சி ஆர்வத்தை முதலில் தூண்டிய பிரிட்டிஷ் வேதாந்த ஞானி பிரான்சிஸ் பேகன் (1561-1626) ஆ·ப்பிரிக்கா வின் மேற்குக் கடற்கரைப் பகுதியும், தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி அமையும் வடிவத்தில் உள்ளன வென்று கண்டறிந்தார்!  முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்கருத்தை வலியுறுத்தி 1912 இல் ஜெர்மன் பூதளவாதி ஆல்ஃபிரெட் வெஜினர் பூமி ஒரு காலத்தில் மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது என்பதற்குப் பூர்வப்படிவ ஆதாரங்கள் [Fossil Examples] காட்டி ஒரு புதுக் கோட்பாடை உருவாக்கி நிலைநாட்டினார்.

    சிறிய கண்டமாகத் தோன்றினாலும், ஆசியாவின் பரந்த தளப்பகுதியில் ஒரு கண்டமான இந்தியா தனித்துத் தலைதூக்கிய ஓர் பிறழ்ச்சித் தட்டாகக் [Tectonic Plate] கருதப்படுகிறது!  அத்தட்டு இந்திய-ஆஸ்திரேலியத் தட்டென்று பெயரிடப் பட்டது.  இந்திய ஆஸ்திரேலியத் தட்டின் முனை, யுரேசியத் தட்டை நெருக்கி, இரண்டு தட்டுகளின் இடைப்பட்ட அழுத்தம், பல மில்லியன் ஆண்டு களாகப் படிப்படியாக உலகச் சிகரத்தில் உயர்ந்ததைக் கொண்ட இமய மலைத் தொடரை வளர வைத்து இன்னும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு உயர்த்திக் கொண்டே போகும்!  பூகோளக் கண்டங்களின் நிலத்தட்டுகள் இடப்பெயர்ச்சி ஆவதைத் தற்போது அண்டவெளியில் சுற்றிவரும் விண்சிமிழ்கள் [Satellites] துல்லியமாகத் தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றன! ஒரு கண்டத்தின் நிலத்தட்டு திருப்பி விடும் ஒளிக்கதிரின் காலத்துக்கும், அடுத்த கண்டத்தின் நிலத்தட்டு திருப்பி விடும் ஒளிக்கதிர் காலத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் பதிவு செய்யப்படுகிறது!  அந்த கால வேறுபாடு மிகை யானாலும் அல்லது குறைந்து போனாலும், நிலப்பெயர்ச்சியின் அளவையும், வேகத்தைக் கணக்கிட முடியும்.

     

    பூகோளக் கண்டங்களின் பூர்வீக நிலப்பெயர்ச்சி

    1885 ஆம் ஆண்டில் ஆஸ்டிரியன் பூதளவாதி எட்வெர்டு சூயஸ் [Eduard Suess (1831-1914)] கூறிய மகத்தான கருத்து இதுதான்:  ஒரு காலத்தில் தென் கோளத்தின் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிகா, இந்தியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிலப்பாலம் ஒன்று இருந்திருக்க வேண்டும்.  அந்த நாடுகளில் எல்லாம் அவர் பொதுவாகக் கண்ட பூர்வப்படிவச் செடி [Fossil Fern Glossopteris (Plant)] ஒன்றின் உறுதிப்பாட்டில் அவ்விதம் கூறினார்.  அந்தப் பெருங் கண்டத்திற்கு “கோந்துவானா” [Gondwana, a district in India] என்று பெயரிட்டார்.  இந்தியாவில் கோந்துவானா என்னும் மாநிலத்தில் எட்வெர்டு சூயஸ் அந்த பூர்வச் செடியை முதலில் கண்டதால், அவை காணப்படும் அனைத்துக் கூட்டுக் கண்டங்களுக்கும் ஓர் இந்தியப் பெயரை இட்டார்.  தென்பகுதியான கோந்துவான கண்டமும் வடபகுதியான லௌரேசியா கண்டமும் [Lauresia] சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றைப் பெருங்கண்டமான பங்கயாவிலிருந்து [Pangaea] பிரிந்ததாகப் பின்னால் ஜெர்மன் விஞ்ஞானி ஆல்·பிரெட் வெஜினர் கூறினார்.  வட பகுதியான லௌரேசியா கண்டத்தில் வட அமெரிக்கா, யுரேசியா [ஐரோப்பா +ஆசியா  (இந்தியா தவிர)] இரண்டும் ஒன்றாக இருந்தன என்பது வெஜினர் கருத்து.  முதலில் தோன்றிய ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு “பங்கயா” என்று பெயரிட்டவர், ஆல்ஃபிரெட் வெஜினர்.  கிரேக்க மொழியில் பங்கயா என்றால் “எல்லாம் நிலம்” என்று அர்த்தம்.

     

    கண்டங்களின் பூர்வீக நிலப்பெயர்ச்சிக்குச் சான்றுகள்

    1912 இல் ஆல்·பிரெட் வெஜினர் ஒருகாலத்தில் கண்டங்கள் யாவும் மெய்யாகச் சேர்ந்திருந்தன என்னும் கோட்பாடைக் கூறினார்.  தென் அமெரிக்காவில் கிழக்கே பெருத்துள்ள பிரேஸில் பகுதியும், ஆ·ப்பிரிக்காவின் மேற்கில் உள்ள கினியா வளைகுடாவும் ஒத்த வயதையும், ஒரே வளைவைக் கொண்டதாகக் காணப் படுகின்றன என்று வெஜினர் சுட்டிக் காட்டினர்!  அவை இரண்டும் ஒரே பூதளவியல் துணியில் வெட்டப் பட்ட தளம் போலத் தோன்றுகின்றன.  ஒரே வித பூர்வப்படிவச் செடிகளும், குடிநீர் விலங்குகளும் [Fossil Plants & Fresh-Water Animals] தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெகு தூரத்தில் உள்ள இந்தியா ஆகிய அனைத்துக் கண்டங்களிலும் இருப்பதைக் காட்டினார்.  சேர்ந்திருந்த கண்டங்களில்தான் அந்த விலங்குகள் வாழ்ந்திருக்க முடியுமே தவிர, ஆயிரக்கணக்கான மைல் தூரம் கொந்தளிக்கும் உப்புக் கடலின் வழியே தப்பிப் பிழைத்துப் பயணம் செய்திருக்க முடியாது என்று காரணம் கூறினார்.  மெஸேசாரஸ் என்னும் ஊர்ந்து செல்லும் சிறிய விலங்கின் பூர்வப்படிவம் [Fossil of Reptile Mesosaurus] தென் அமெரிக்காவின் பிரேஸிலும், ஆ·ப்பிரிக்காவிலும் இருந்ததாக வெஜினர் சான்றுகள் காட்டினார்.

    வெஜினரின் இந்த கண்டிபிடிப்பை ஏற்றுக் கொள்ளாது விஞ்ஞானிகள் பலர் அவரை எள்ளி நகையாடினர்!  காரணம் அப்போது பிறழ்ச்சித் தட்டு நியதி [Theory of Plate Tectonics] எழுதப்பட வில்லை.  மாபெரும் கனத்த கண்டங்களை, கடற்தட்டு மீது எந்த வித பூத யந்திரசக்தி உந்த வைத்து நகர்த்திப் பிரிக்க முடியும் என்பது விஞ்ஞான முறைப்படி விளக்கப் படவில்லை.  அவ்விதம் நிலப்பெயர்ச்சி ஆகியிருந்தால், கடலடியில் நீண்ட முறிவுப் பகுதிகள் விடப் பட்டிருக்க வேண்டும். அவற்றை யாராவது கடலடியில் இதுவரைக் கண்டிருக்கிறார்களா?  1850 ஆம் ஆண்டில் தந்தி வடங்களை அட்லாண்டிக் கடலடியில் [Trans-Atlantic Telegraph Cables] அமைத்த போது, முதன்முதலில் கடல் நடுவே புதைந்துள்ள நீண்ட மலைகளைக் கண்டனர்.  அதற்குப் பிறகு பசிபிக் கடலரங்கிலும் அவ்வித நீளக் குன்றுகள் காணப்பட்டதும் அறியப்பட்டன.

    நூறாண்டுகளுக்குப் பிறகு 1950 இல் ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்தும் போது, கடலாய்வு நிபுணர்கள் [Oceanographers] டென்னிஸ் பந்தில் காணப்படும் வளைவு ஒட்டுபோல் தெரியும் 40,000 மைல் தூரம் நெளிந்து செல்லும் நீளச் சங்கிலி குன்றுத் தொடரைக் கண்டு பிடித்தார்கள்!  மலைப்பாம்பு போன்ற அந்த பூத மலைத்தொடர் நடுவே, ஆழமான குழிகளும், வெப்பமான குன்றுகளும், கசிந்து வெளிவரும் எரிமலைக் குழம்புகளும் [Lava] காணப்பட்டன!  எங்கே கடற்தளம் துண்டாக்கப் பட்டுப் பிளவுகள் காணப்பட்டனவோ அங்கே எரிமலைக் குழம்பு பீறிட்டு எழுந்து, கடினமாகிப் பிறகு புதுப் பீடபூமி உண்டானது தெரிந்தது!  விஞ்ஞானிகள் அந்த ஆதாரங்களைக் கண்டதும், கடற்தளம் குன்றுப் பகுதிகளை விட்டு ஊர்ந்து செல்லலாம் என்றும், அதனால் அடுத்து ஆழமான பெருங்குழியை நிலத்தட்டு முனையில் அகழி போல் ஆக்கி விடலாம் என்றும் ஊகித்தார்கள்!

     

    பூதளப் பிறழ்ச்சித் தட்டுகளின் நிலப்புரட்டு நியதி

    1950 இல் பூதளவாதிகள் “பிறழ்ச்சித் தட்டு நியதியை” [Theory of Plate Tectonics] விஞ்ஞான முறையில் விருத்தி செய்தார்கள்.  அந்த புதிய கோட்பாடு கண்டங்களின் நிலப்பெயர்ச்சி, கடல்-நிலத் தட்டுகளின் புணர்ச்சி, மலர்ச்சி, மலைத் தொடர்களின் வளர்ச்சி, எரிமலை களின் கிளர்ச்சி, நிலநடுக்கங்களின் எழுச்சி ஆகிய பூகோளப் புதிர்களுக்குத் தெளிவாக முதன்முதல் விளக்கங்கள் அளித்தது.  பிறழ்ச்சித் தட்டு நியதி மெய்யாக என்ன கூறுகிறது?  பூமியின் கடினமான மேலடுக்கு பனிரெண்டுக்கு மேற்பட்ட மாபெரும் தட்டரங்குகளையும், அதே எண்ணிக்கையில் உள்ள சிற்றரங்குகளையும் கொண்டது.  அவை கடற்தள மையப் பீடத்தொடராக நீண்டுள்ளன [Mid-Oceanic Ridges].  குவிந்திருக்கும் அந்த குன்றில் பாறைகள் மேலும் மேலும் கூடிச் சேர்கின்றன!  சேமித்த பாறைகள் பிறகு குன்றிலிருந்து பெயர்ச்சி யாகி விலகுகின்றன!  அவை மற்ற தட்டுகளை நெருங்கும் போது, கீழ்த்திணிப்பு விதிப்படி [Subduction Process] ஒரு தட்டு பூமிக்கடியே தள்ளப்படலாம். தட்டுகள் நெளிந்து மலைகள் உண்டாகலாம்.  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையும் அவ்விதம் சிறிது சிறிதாய் வளர்ந்து எழுந்ததாக விளக்கம் தரப்படுகிறது.  தட்டுகளின் புணர்ச்சியில் எச்சங்கள் பழுதுக் குழியில் சரிந்து போகலாம்.  காலி·போர்னியா மாநிலத்தின் நிலநடுக்கப் பகுதியில் உள்ள ஸான் ஆன்டிரியா பழுது [San Andrea Fault] இம்மாதிரி உண்டான ஒரு தட்டுப் பழுதே!

    மௌரிஸ்யூவிங்கூறியபூதளநகர்ச்சிிளக்கங்கள்

    அமெரிக்க பூதளவியல் நிபுணர் டாக்டர் மௌரிஸ் யூவிங் ஆல்பிரெட் வெஜினர் ஒற்றைக் கண்ட நியதியைப் பல ஆதாரங்களுடன் மேலும் உறுதிப்படுத்தினார்.  அவர் கூறியவை பின்வருமாறு:

    1. பூதளவாதிகளின் பூர்வீக யூகத்தின்படி பூமியின் அடித்தட்டு கடினமான திடத்தட்டோ அல்லது தகர்க்க முடியாத வலுத்தட்டோ அன்று!  பூமிதளத்தின் கீழ்த்தட்டுப் பாறைகள் தனிப்பட்ட அளவுகளுடன் [(40-60) மைல் தடிப்பு] பல்வேறு உபப்பிரிவுகள் கொண்ட பத்து பெருந்தட்டுகளாக அவற்றின் அடியே கொந்தளிக்கும் கவசக் கனல் திரவத்தில் [Hot Viscous Mantle] மிதக்கின்றன!

    2. இந்த அடித்தட்டுகள் மீது அமர்ந்துள்ள உலகின் நிலப்பரப்புகள், கடற்தளங்கள் ஆகியவை எல்லாம் ஒருகாலத்தில் ஒன்றாய் பிணைக்கப்பட்டு ஒற்றைப் பெருங்கண்டமாய் இருந்தன.  சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அசுரக் கண்டம் பிளக்க ஆரம்பித்தது!  அதன் விளைவால்தான் நாம் வாழும் ஏழு சிறு கண்டங்களும் [வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிகா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, அன்டார்டிகா] மற்ற பிற தீவுகளும் உருவாகின! அச்சிறு கண்டங்கள் பல மில்லியன் ஆண்டுகளாக மிக மெதுவாக நிலப்பெயர்ச்சியாகி தற்போதுள்ள நிலையத்தில் இருக்கை கொண்டுள்ளன!

    3. பூதள அடித்தட்டுகள் கடல் நடுவே ஆழப் பிளவுகளிலிருந்து [Deep Fissures in Mid-Ocean] பொங்கி எழும் திரவப் பாறைகளின் முனைப் பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளன!  அதே சமயத்தில் பூமியின் உட்கருவில் பல திசைகளில் உண்டாகும் அசுர ஆற்றலில் ஆண்டுக்கு அரை அங்குலம் முதல் ஆறு அங்குலங்கள் வரை அடித்தட்டுகள் உந்தித் தள்ளப்படுகின்றன!

    4. இடநெருக்கடியில் ஒடுங்கிக் கொள்ள முறியும் அடுத்தட்டுகள் உந்தும் போது, கண்களுக்குப் புலப்படும் விந்தை விளைவுகள் நிகழ்கின்றன.

    a) கருங்கல் [Granite] படிந்த நிலத்தட்டுத் திணிவான, நீரில் மிதக்காத பஸால்ட் [Basalt] தாது கலந்த கடற்தட்டைச் சந்திக்கும் போது, நிலத்தட்டு கடற்தட்டு மீது பூதத்தகர்ப்பு யந்திரம் போல [Titanic Bulldozer] அமுக்கி ஏறுகிறது!  அப்போது கீழ்த்தட்டுப் பாறைகளைத் தேங்காய் திருகிபோல் சீவி, விழும் செதுக்குத் துணுக்குகள் நசுக்கப்பட்டுக் கடலடியில் பல மில்லியன் ஆண்டுகளாகச் சேமிப்பாகின்றன!  அந்த பாறைச் சீவல்கள், நிலத்தட்டு முனைகளில் குவிந்து, குவிந்து பின்னால் தொடர்மலையாக எழுகின்றன!


    b) கடற்தளத் தட்டு கடலடியே செங்குத்தாக ஊடுறுவி, நிலத்தட்டின் முனையில் நீண்டதோர் கடற்குழியை [Ocean-Floor Tench] உண்டாக்குகிறது!  கடற்தட்டு உராய்வு வெப்பத்தால் உருகி, பூமியின் உட்கருவில் வெந்நிறத் தீப்பிழம்புக் குட்டையாக மாறுகிறது.  உள்ளே சிக்கிக் கொண்ட இந்த தீக்குழம்பு [Lava] பூமியில் துளைகளை உண்டாக்கிப் பிறகு எரிமலையாகக் குமுறி வெளியாகிறது!

    c) நிலத்தட்டு, கடற்தட்டு ஆகிய இரண்டின் மோதல், கீழ்த்திணிப்பு, நேர் அறுப்பு, துண்டாக்கல் போன்ற [Collision, Subduction, Shearing, Separation] தட்டுப் பிறழ்ச்சிகள் பூகம்ப அதிர்வுகளை [Seismic Disturbances] உண்டு பண்ணும் வல்லமை படைத்தவை.

    (தொடரும்)

     

    தகவல்கள்:

    1. The Continental Mosaic -Reader’s Digest Atlas of the World [1987]

    2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

    3. Earth’s Restless Crust -ABC’s of Nature, Reader’s Digest [1984]

    4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader’s Digest Publication [1972]

    5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

    6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

    7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

    8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

    9. Everyday Geography By: Kevin McKinney (1993)

    10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

    11 Geology Today (1974)

    12 Physical Geology By : Brian Skinner & Stephen Porter (1987)

    13 Webster’s New World Dictionary of Science (1998)

    14 The Kingfisher Science Encyclopedia (2007)

    ********************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 11, 2011

    Share
  • முத்தான முத்தல்லவோ!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்தமுத்தல்லவோ

    அன்று மலர்ந்த பாடல்கள் அத்தனையும் மனித வாழ்க்கையோடு ஒன்றிக்கிடந்தவை.  அதனால்தான் மனம் இன்னும் அப்பாடல்களை அசைபோட்டுக் கொண்டுள்ளது.  பிறப்பு முதல் நடப்புகள் அத்தனையையும் தன்னுள் கொண்டு தளிர்நடை போடும் பாடல்கள் இன்பரசம் ஊட்டும் வகையில் இன்றும் இதயம் தொடுகின்றன.  காற்றிலே மிதந்துவரும் அந்த கானங்களைக் கேட்க பிரியப்படுகிறோமே ஏன்?

    ஓரு திரைப்படம் எடுக்கப்படுகின்ற தருணத்தில் பாடல்கள் அமைவது பல்வேறு சூழல்களை உள்ளடக்கிய விஷயம்.  கவிஞரின் கைவண்ணம் அந்தப் பாடல் காட்சிக்கேற்றவாறு.. கதைக்கருவை பிரதிபலிக்க வெளிப்படுவது சிறப்பு!  இதோ.. இந்தப் பாடல்..  இன்று மதியம் வேண்டும் இரண்டு மணிக்கு என்று முன்பகல் 12மணியளவில் தெரிவிக்கப்பட்டது.  மெல்லிசை மன்னர் கவிஞரை அழைத்து அவசரத்தை வலியுறுத்த.. அம்..என்னும் முன்னும் உம் என்னும் முன்னும் வார்த்தைகள் வந்து விழும் என்று சொல்லப்படும் இரட்டையர்கள்.. கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் வந்துதிர்த்த முத்தான பாடலிது!

    தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் சிறுவயது பெண்ணுக்கு .. பிறந்தநாள்!  எல்லோரும் இணைந்து கொண்டாடும் அந்த மருத்துவமனையில்..  திரைப்படம் பார்ப்போர் மனதில் இழைந்தோடும் சோகத்திற்கு இடையே வருடும் தென்றலாய் வருகிறது இப்பாடல்!

    வார்த்தைகள் கைமுளைத்து வண்ணம் காட்டுகின்றன!  எழில்கொஞ்சும் மழலைமுகம் பால்சிந்துதோ.. பவளமல்லிகை நான் என்றே பவனிவந்ததோ!  தாலாட்டுப் பாடல்களின் தாயானவன் .. கவிஞன்.. இதோ இந்த வசந்த ரோஜாவை வர்ணிக்கும் அழகில் கொஞ்சம் மயங்குங்கள்!  விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இன்னொரு பொக்கிஷம்  – நெஞ்சில் ஓர் ஆலயம் – அதில் மலர்ந்த பாடல் ..

    முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ

    கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ

    (முத்தான)

    சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ

    செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ

    மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ

    பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ

    (முத்தான)

    வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ

    பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

    தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ

    மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ

    (முத்தான)

    பாடல் : முத்தான முத்தல்லவோ

    குரல் : P.சுசீலா

    வரிகள் : கண்ணதாசன்

    இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

    http://www.youtube.com/watch?v=7MOdsFe6_6c

    Share
  • திருமால் திருப்புகழ் (43)

    கிரேசி மோகன்

     

    திருமால் திருப்புகழ்….மந்தைவெளி மாரிச்செட்டி தெரு ஸ்ரீனிவாசப் பெருமாள்….
    ———————————————————————————————————————

    perumal mandhaveli

    தந்ததன தானத்தத்த தந்ததன தானத்தத்த
    தந்ததன தானத்தத்த -தனதான…

    ——————————————————————————————————————–

    ’’ரெண்டுவிரல் சேரக்கட்டி பஞ்சுதனை நாசிக்கிட்டுfc4343e7-934f-4b27-b37c-b2cdcf19fcc2_S_secvpf
    பிண்டமென ரேழிக்கட்டில் -சவமாக
    சங்குபறை மோளக்கொட்டு அன்புமகன் தீயைப்பற்ற
    பெண்டிரழ ஓலைக்கட்டில் -தனிலேறி

    கொண்டுசுடு காடுக்கிட்டு வெந்துதண லாகச்சுட்டு
    இந்தவுடல் போலிச்சட்டை -எனநானும்
    அந்தரம ணேசர்க்குற்ற சொந்தஅனு பூதிக்கொத்த
    உந்தனிரு தாளைப்பற்ற -அருள்வாயே

    தொண்ட(ன்)அனு மானுச்சிப்ப றந்தரத மேறிக்கற்க
    பஞ்சவிஜ யோருக்கொப்ப -மொழிகீதை,
    சந்தகிரி வாரிக்கொட்டு கந்தரனு பூதிப்பித்த
    கண்டர்விழி ஜோதிப்புத்ரர் -முறைமாம

    உண்டுலக(ம்) ஏழைத்துப்ப பண்டைஇலை ஆலத்தெப்பம்
    சென்றபலி சாயக்குட்டை -திருவோணா
    *தந்தைவழி பாட்டிக்கென்று நின்றருளும் கோமுட்டிக்கு
    மந்தைவெளி மாரிச்செட்டி -பெருமாளே

    *பின்-குறிப்பு-இந்த பெருமாளைப் பத்தி சொல்லியே ஆகணும்….உப்பிலியப்பன் எங்க குலதெய்வம்னா, இவர் எங்க காவல் தெய்வம்….25வயசு வரை எனக்கு பரிட்சை ரிஸல்ட் வந்தாலும் சரி….காலில் சிரங்கு வந்தாலும் சரி…..என்னோட தந்தை வழி பாட்டி நாலணா உண்டில போட்டுட்டு ,இந்த பெருமாளைத்தான் நம்புவோ….கோமுட்டிச் செட்டியார் கைங்கரியத்துல இந்த மந்தைவெளி மாரிச்செட்டி தெரு வெங்கடாசலபதி திருப்பணி நடக்கறது….இந்தக் கோயில் தாயார் சாக்‌ஷாத் பராசக்தி….பச்சை கலர் புடவையை இவளுக்கு சாத்திட்டு ‘’பில்-கேட்ஸ்’’ ஆகணும்னு வேண்டிண்டாலும் நிறைவேத்தி வப்பா…எதோ ஒரு சந்தத்துக்கு எழுதிண்டு போறச்சே , ஈற்றடில இவர் எழுந்தருளியபோது , ப்ரபத்தி சரணாகதியை ப்ரஸ்தாபிக்கும் வைணவ விசிஷ்டாத்வைதத்தை உணர்ந்து அனுபவித்தேன்….எல்லாம் வல்லமை வண்ணனுக்கும்,எழுதும் வல்லமைக்கு நன்றி…’’

    —————————————————————————————————————————–

    Share
  • கடித இலக்கியப் பரிசுப் போட்டி

    பவள சங்கரி

    அன்பு நண்பர்களே,வணக்கம். ‘கடித இலக்கியப் பரிசுப் போட்டி’ க்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்துவிட்ட இத்தருணத்தில் இப்போட்டியின் மாபெரும் வெற்றியாக 61 இடுகைகள், இப்போட்டிக்காக வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. படைப்புகள் அனைத்தும் வெளியிட்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிகப்படியான படைப்புகள் வந்து குவிந்துள்ளதால், முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளுக்கு மேல், மூன்றுபேருக்குத் தலா ரூ.250 ஆறுதல் பரிசாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். திருமதி தேமொழி அதற்கான தொகையையும் மனமுவந்து வழங்கியுள்ளார்கள். படைப்புகள் அனைத்தும் நம்முடைய வல்லமை இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடுப்பையும் கீழே இணைத்திருக்கிறோம். இதில் யாருடைய படைப்பாவது பிரசுரம் ஆகாமல் விடுபட்டிருந்தால் தெரிவிக்கலாம். படைப்பு அனுப்பிய தேதி, தலைப்பு, பெயர், முகவரி முதலிய விவரங்களுடன், vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

    1. மணி மொழிக்கொரு மடல் – நடராஜன் கல்பட்டு

     
     
     
     
     

    6.மணிமொழியாம் தமிழுக்கொரு மடல் – கீதா மதிவாணன்

     

    7. மணிமொழியே ஒரு மடல் – சத்தியமணி

     

    9. அன்புள்ள மணிமொழி – எஸ். பாலசுப்பிரமணியன்

     
     
    13.

    அன்புள்ள மணிமொழிக்கு –  எஸ். பழனிச்சாமி

    14. 

    அன்புள்ள மணிமொழி!… பாண்டியன். ஜி

    15.

    யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்! – மேகலா இராமமூர்த்தி

    16.

    அன்புள்ள மணிமொழி – பி. தமிழ்முகில்

    17.

    அன்புள்ள மணிமொழிக்கு – சங்கர் சுப்ரமணியன்

    18.

    அன்புள்ள மணிமொழிக்கு – சங்கர் சுப்ரமணியன்

    19.

    அன்புள்ள மணிமொழிக்கு – நேசமித்ரன்

    20.

    மணிமொழிக் கொரு மடல் – நடராஜன் கல்பட்டு

    21.

    மணிமொழிக்கு ஒரு மடல்! – சுப. திருப்பதி

    22.

    அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு! – சச்சிதானந்தம்

    23.

    அன்பு மிக்க மணிமொழிக்கு – நந்திதா

    24.

    அன்புக்குரிய மணிமொழி – நிர்மலா ராகவன்

    25.

    அன்புள்ள தோழி மணிமொழி – சித்திரை சிங்கர்

    26.

    பிரியமான மணிமொழிக்கு – சுபாஷிணி திருமலை

    27.

    அன்புள்ள தோழி மணிமொழி – அமீர்

    28.

    பொன் மாறனின் திருமுகம்! – நந்திதா

    29.

    ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்.. – மாதவன் இளங்கோ

    30.

    மணிமொழிக்கு அம்மா எழுதும் கடிதம் – விசாலம்

     

    31.

    மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே! – ரஞ்சனி நாராயணன்

    32.

    அன்புள்ள மணிமொழிக்கு!… மு. கோபி சரபோஜி

    33.

    அன்பு மணிமொழிக்கு!… ஞா. கலையரசி

    34.

    அன்புள்ள மணிமொழிக்கு – ஜெயராமன்

    35.

    அன்புள்ள மணிமொழிக்கு – நந்திதா

    36.

    அன்புள்ள மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    37.

    அன்புள்ள மணி மொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    38.

    அன்புள்ள மணிமொழி!.. – வி. பாலகுமார்

    39.

    ‘அன்புள்ள மணிமொழிக்கு’ … செண்பக ஜெகதீசன்

    40.

    அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    41.

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு – ராஜலஷ்மி பரமசிவம்

    42.

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    43.

    அன்புள்ள மணிமொழிக்கு – தினேஷ்

    44.

    அன்புள்ள மணிமொழி!… – கீதா மதிவாணன்

    45.

    கண்ணின் கருமணியாம் மணிமொழிக்கு! – சேஷா சீனிவாசன்

    46.

    அன்பு நண்பி மணிமொழிக்கு! – ஞா. கலையரசி

    47.

    அன்புள்ள மணிமொழிக்கு – கவா கம்ஸ்

    48.

    அன்புள்ள மணிமொழிக்கு, – பாரதி

    49.

    அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. – கவிஞர் காவிரி மைந்தன்

    50.

    அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. – கவிஞர் காவிரி மைந்தன்

    51.

    அன்பே மணிமொழி! – கவிஞர் காவிரி மைந்தன்

    52.

    அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே! – கவிஞர் காவிரி மைந்தன்

    53.

    அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி! – கவிஞர் காவிரி மைந்தன்

    54.

    மதிப்பிற்குரிய மணிமொழிக்கு! – ச. பொன்முத்து

    55.

    அன்புள்ள மணிமொழிக்கு – சரஸ்வதி ராஜேந்திரன்

    56.

    அன்புத் தோழி மணிமொழி – வைரமணி நடராஜன்

    57.

    அன்புள்ள மணிமொழிக்கு – புதுவை பிரபா

    58.அன்பு மகள் மணிமொழிக்கு – பஃக்ருத்தீன்

    59.அன்புள்ள மணிமொழி – பாரதி

    60. அன்பு மகள் மணிமொழிக்கு – தமிழ் செல்வி​

    61. அன்புத் தோழி மணிமொழிக்கு – சுலோச்சனா

    நன்றி.
    அன்புடன்
    பவள சங்கரி
    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (5)

    பவள சங்கரி

    தலையங்கம்

    திப்பிற்குரிய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு ராஜ்நாத் சிங் அவர்களுக்கு,

    தங்கள் கட்சியைச் சார்ந்த, பல பொறுப்புகளில் இருந்த திரு யசுவந்த் சின்கா அவர்கள் என்ன தவறு செய்தார்? நாங்கள் அறிந்த வகையில் எதிர் கட்சிகளும் பாராட்டும் வகையிலேயே அவருடைய பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அவர் தன்னுடைய தொகுதி மக்களுக்கோ அல்லது கட்சிக்கோ என்ன தவறு செய்தார் என்று புரியவில்லை. ஆறு ஆண்டுகளில் கட்சியை விட்டு அவரை நீக்கியிருக்கிறீர்களே? காங்கிரசு கட்சியிலிருந்து கட்சி மாறி வந்தவரை வேட்பாளராக அறிவித்திருப்பதற்கு என்ன காரணம்? இது போல கட்சி மாறி வருபவர்களை ஊக்குவிக்கும் தங்களால் ஊழலற்ற ஆட்சி எப்படி தர முடியும்? முதல் கோணல் முற்றும் கோணல் அல்லவா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • அன்பு மகள் மணிமொழிக்கு

    ரியாத்

    நாள்: 31 மார்ச் 2014

    பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) 

    அன்பு மகள் மணிமொழிக்கு

    பாசமிகுந்த உன் தந்தை எழுதிக்கொள்வது.  இங்கே நானும், உன் அம்மாவும், தம்பியும்,தங்கையும், உறவுகளும், நட்புகளும் இன்னபிற நம் சுற்றங்களும் இறையருளால் நலம். நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகிறோம்.  உனக்கான எங்களின் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் நேசத்துடன் இந்த கடிதத்தினூடே தெரிவித்துக்கொள்கிறோம்.

    அன்பு மகளே,

    father-daughter-e1342147565718நேற்று தான் போலிருக்கிறது, நீ பிறந்த அந்த ஒப்பிலாத் தருணம். பதினெட்டு வருடங்கள் பறந்துவிட்டன. கண்ணுக்குத் தெரியாத சிறகுகளோடு காலம் பறந்துகொண்டிருப்பதை உணர்த்துகிறது உன் வயதும் வளர்ச்சியும். அழகிய பூக்குட்டியாய் கண்மலர்ந்த உன்னை ‘உள்ள’ங்கைகளில் ஏந்தி மகிழ்ந்த அந்த இனிய நாள் இன்னமும் நினைவிலிருக்கிறது. அந்தத் தருணத்தில் எனக்கேற்பட்ட புளகாங்கிதம் வார்த்தைகளில் சொல்லித்தீராது.  அன்றிலிருந்து நீ வளர்ந்த ஒவ்வொருப் பொழுதிலும் நீ என்னில் ஒளியாய்; கண்ணின் மணியாய் ஆகிப் போனாய்.

    இதோ, இன்று கல்லூரி வாழ்க்கைக்குத் தயாராகி, பெற்றோராகிய எங்களை விட்டுப் பிரிந்து, தொலைதூர நகரத்தில் விடுதி வாசம் செய்கிறாய்.

    எப்போதும் உன் நினைவுகளுடனும் இங்கே வீட்டில் நீ விட்டுச் சென்றிருக்கும் அடையாளங்களுடனும் பிரியங்கள் நிறைத்த வாசங்களுடனும் எங்கள் பொழுதுகள் கழிகின்றன.

    மணிமொழி,

    உனக்கு நினைவிருக்கிறதா? சிறுவயதில் “யாரெல்லாம் உன் தோழியர், அவர்களின் பெயரைச் சொல்லேன்” என்று உன்னைக் கேட்கும்போது  “என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் ஃப்ரண்ட் நீங்க தான் டாடி” என்று சொல்வாய்.  முறைக்கும் அம்மாவை சமாதானப்படுத்த “அப்புறமாய் மம்மியும் தான்” என்பாய், லேசாக முறுவலித்து.  எல்லாக் குழந்தைக்கும் தந்தைதான் முதல் ஹீரோ என நான் உன் அம்மாவை சமாதானப்படுத்தினாலும்  அந்த உணர்வும் வார்த்தைகளும் பொய்யொன்றுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தான் நாங்களும் பொறுப்பான தோழமையுடனே உன்னை வழிநடத்தினோம்.

    உறவுநிலை வரைமுறை என்பதற்குட்பட்டு, வானத்திற்குக் கீழிருக்கும் அனைத்து விதயங்கள் குறித்தும் நாம் உரையாடியிருக்கிறோம்.கேள்விகளால் என் பெரும்பொழுதுகளை நிரப்பியிருக்கிறாய்..உனக்கான பதில் தேடல்களில் உன் அப்பா இன்னும் வளர்ந்து கொண்டே இருந்தேன்.

    உன் வாழ்வில் நிகழ்ந்த எந்த ஒரு சிறுசம்பவத்தையும் நீ எங்களிடம் இதுவரை பகிர்ந்து கொள்ளாமல் விட்டதில்லை. உன் நெருங்கிய தோழியுடன் கொண்ட பொய்க்கோபம் முதல் ஓவியப் போட்டியில் நீ வேறொரு தோழிக்கு உதவியது வரை. இன்னும் அடிபட்ட புறாவுக்கு அழுது தீர்த்த நாள் பொழுதும், உடல்நலம் குன்றியதொரு பொழுதில் என் நெற்றி நீவி தலை கோதி உறங்க வைத்த பொழுதில் உணர்த்தினாய் என் தாய் என்றும்..  .

    ஈன்ற பொழுதின் பெரிதுவந்த இனிய தருணங்கள் அவை.

    ஒருமுறை பள்ளியில் மாதாந்திரத் தேர்வில் கணக்குப் பாடத்தில் மதிப்பெண் சற்று குறைந்துபோனதென்று அழுதுகொண்டேயிருந்தாய். அப்போது ஆறுதலாக நான் சொன்னேன்: “மதிப்பெண்ணை வைத்து அறிவை அளந்துவிட முடியாதம்மா; இந்த முறை ஏதோ காரணங்களால் மதிப்பெண் குறைந்திருக்கும். ஆனால், நீதான் அடுத்த முறை  முதல் மதிப்பெண் பெறுவாய் பார்” . என்னுடைய இந்த அறிவுரைக்குப் பின் எதையும் நீ எளிதாக எடுத்துக்கொண்டாய். ஆனாலும் அப்போதும் உன் முதலிடத்தை நீ விட்டுத்தந்ததில்லை.தப்பும் தவறுமாக நான் பேசிய ஆங்கிலம் குறித்து உன்னிடம் வெட்கி நிற்பேன்.ஆங்கிலம் அறிவல்ல அப்பா அது மொழிதான் என்று அன்புடன் அரவணைத்த ஆசிரியையும் ஆகிப்போனாய் அன்றிலிருந்து நீ..

    “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்” என்று கலீல் ஜிப்ரான் கூறியதன் பொருள் புரிந்த பெற்றோராகவே இருந்தோம். எங்கள் வழிகாட்டுதலில், கண்டிப்பில் ஒரு புரிதலும் பக்குவமும் இருந்ததை நீயும் இப்போது உணர்கிறாய் என்பதை உனது அண்மைக்காலப் பகிர்தலில் அறிந்து கொள்ள நேரிடலில் இன்னும் அகமகிழ்ந்து போகிறேன் நான்..

    நீ ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்த ‘ஆசைமிக்கப் பெற்றோராக’ நாங்கள் இருக்கவில்லை என்றாலும், நியாயமான எந்த ஆசையையும் நாங்கள் மறுதலிக்கவில்லை.  பனிக்காலத்தில் ஐஸ்கிரீமை மறுத்தாலும், கோடைக்காலத்தில் நீ கேட்கும் முன்பே அதை வாங்கித் தந்திருக்கிறோம். இப்போது கூட இந்தக் கல்லூரியில் படிக்கிறேன் என்று உன் விருப்பத்தைச் சொன்னதால் தான், அதன்படியே இடம் வாங்கிச் சேர்த்துள்ளோம். படிப்பில் நீ சோடை போக மாட்டாய் என்பது தெரியும். அன்பு மகளே உலக கல்வியோடு உன்னதமான வாழ்க்கை கல்வியும் கற்றலில் சமர்த்தாக இருக்க வேண்டும் என்பதும் எங்கள் பேரெதிர்பார்ப்பாக இருக்கிறது..

    மங்கையராய் பிறப்பதற்கே நல்ல

    மாதவஞ் செய்திட வேண்டுமம்மா

    பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ- இந்தப்

    பாரில் அறங்கள் வளருமம்மா

     

    என்கிற கவிமணியின் பாடலை உணர்ந்து பெண்ணாகப் பிறந்ததன் பெருமையை நீ முழுமையாகத் துய்க்க வேண்டும் மணிமொழியே. பெண்களால் உலகம் செழிக்கும். அறம் வளரும். அன்பு மலரும். அதுவே இந்த உலகின் வரம்.

    பிறந்து வளர்ந்து திருமணமாகி பிள்ளைகள் ஈன்று,  பின்பு மடிவதல்ல பிறப்பின் நோக்கம். ஆணோ, பெண்ணோ , மானுடம் பயனுறச் செய்வதற்கே இந்த வாழ்நாளை நாம் செலவிட வேண்டும் – என்பதை நன்கு அறிந்தவள் அல்லவா என் மணிமொழி.

    சிறுவயதில் உன் புத்திசாலித்தனம் எங்களை வியக்க வைத்தது.  ஓரளவு விவரம் அறிந்தவளான உனக்கு, குட் டச், பேட் டச் பற்றி நாங்கள் சொல்லிக் கொடுத்தபோது, பின்பு அதையே உன் தம்பி தங்கைகளுக்கு அவர்களுக்கே புரியும் விதமாக நீ திருப்பிச் சொல்லிக் காட்டிய போதும், வார இதழ்களில் குறுக்கெழுத்துப் புதிர்களில்  பரிசுகள் – இன்றளவும் – வெல்லும் போதும் உன் புத்திசாலித்தனம் எங்களை வியக்க வைத்தது.. வைக்கிறது மகளே.  அதே சமயம், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நீ தேர்ச்சி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் மகளே.சின்ன சின்ன வெற்றிகள் உனக்கு கொடுக்கும் தன்னம்பிக்கையும் எதிர்கால வாழ்வைப்பற்றிய பயமற்ற பாடங்களையும் நீ எதிர்கொள்ள வேண்டும் என்பதும் எங்களின் அவா. நம்பிக்கை. நீ வெல்வாய் நிச்சயம்.

    பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் சமையல் செய்வதை பெண்கள் இழிவாகக் கருதும் சூழல் நிலவிவருகிறது. ஆனால், நட்சத்திர அடுக்களைகளில் அதே வேலையை ஆண்கள் கர்வத்துடன் செய்து வருகிற முரண்பாட்டையும் நீ புரிந்து கொண்டிருப்பாய். ஆகவே, சமையல் போன்ற அடிப்படைகளை இழிவென்று தள்ளாதே, . ‘எந்தப் பெண்ணும் தனக்கான ஆணின் மனதில் இடம் பிடிப்பதெல்லாம் வயிற்றின் வழியாகத் தான்’ என்றும் சொல்வார்கள்.

    ஆக, இன்றைய சூழல் குறித்த தெளிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் முதலில். ஒரு பக்கம் முன்னேற்றம் என்ற பெயரில் சுரண்டல்களும் உண்டு என்பதை விளங்க வேண்டும்.  பெண்கள் ஒடுக்கப்பட்டு ஓரமாக உட்காரவைக்கப்படுவது எவ்வளவு தவறோ, அதற்கும் சற்றும் குறையாத தவறாக, ஏன், அதனினும் பெரிய தவறாக, அதே பெண்கள், அவர்களையறியாமலே முற்றும் ‘திறந்த’வர்களாகப்பட்டு சுரண்டலுக்கு உட்படுத்தப் படும் ஒரு சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.பொறுப்பற்ற சுதந்திரம் ஏற்படுத்தும் புறவிளைவுகள் பற்றியும் உனக்கு நன்கு தெரியும் தானே மணி.. ‘பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்’ என்கிற என் வரியொன்றை சிலாகித்து உன் பள்ளி ஆண்டு விழாவில் நீ பேசியதும் நினைவுக்கு வருகிறதடா!

    எப்போதும் நீ சுதந்திரமாக, நல்லது கெட்டது புரிந்து நடந்துகொள்பவள் தான் என்றாலும் இப்போது இந்த பதின்பருவத்தில் கல்வியின் வாயிலாக வாய்த்திருக்கும் சுதந்திரம்  மிகவும் குறிப்பிடத்தக்கது. என்னுடைய ஆசிரியர் ஐயா சொல்லக் கேட்டிருக்கிறேன்: “டீன் ஏஜை ஒருவன்/ஒருத்தி வெற்றிகரமாக எந்த உணர்ச்சித் தாக்கத்திற்கும் ஆளாகாமல் கடந்துவிட்டால் போதும், அதன்பின் கவலைப்பட தேவையில்லை” என்று. ஆம் மகளே, இந்த வயதுகளில்தான் வெறும் உடற்கவர்ச்சியால் உந்தப்பட்டு பொய்க்காதல்களில் பிள்ளைகள் வீழ்வதுண்டு. நான் இப்படி எழுதுவதை ஒரு தகப்பனின் பொறுப்பான புலம்பல் என்று கருதிவிடாதே. நாட்டில் நடக்கும்  சூழலின் கண்ணாடியாகவே இந்தக் கருத்தை எழுதுகிறேன். மனோதிடம் மிகுந்த உனக்கு நான் சொல்லவருவது புரிந்திருக்கும் – உண்மையான, சரியான நேசம் என்பது பற்றி தெளிந்த புரிதலையுடையவள் அல்லவா நீ.   நமது நாட்டில் காலம் முதிராமலும் கருத்து தவறியும் நிகழ்வுறும் ஒன்றாக காதல் என்பது மாறிவிட்டுள்ளது அல்லவா! –

    உனக்கு அதிகம் கூறத் தேவையில்லை.  உன் உடல் மீதோ, மனம் மீதோ, சூழல் மீதோ, ஆளுமை மீதோ மற்றவர்களின் எந்த விதமான அத்துமீறலையும் அனுமதிக்காதிரு.  ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் தன்னைக் காத்துக் கொள்வதே தலையாயக் கடமையாகும் அல்லவா.

    உனக்கான வாழ்வை நீயே தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அதில் பெற்றவர்களின், உற்றவர்களின் வழிகாட்டுதலே சிறக்கும் என்பதைப் புரிந்துகொள்வாய் தானே.

    இந்தக் கணினியுகத்தில் என்னதான் ‘ஸ்கைப்’பில் நாம் பேசிக் கொண்டாலும், இந்தக் கடிதம் எழுதும் முறை எத்தனை அழகாயிருக்கிறது பார்.

    உன்னைக் கல்லூரியில் சேர்ப்பதற்குத் தயங்கிய உன் அம்மா இப்போது மிகுந்த நம்பிக்கையும் தைரியமும் கொண்டிருக்கிறாள் ‘என் மகள் புத்திசாலி; எப்போதும் சரியாகவே செயற்படுவாள்’ என்று பெருமிதங்கொள்கிறாள். அந்த நம்பிக்கை எப்போதும் எனக்கிருக்கிறது.நிறையவே இருக்கிறது.

    வாழ்கின்ற பொழுதுகளில் நல் எண்ணங்களையும் போராட்டங்கள் பொழுதில் நம்பிகையையும் ஒருபோதும் தளரவிடாத  போராட்டக் குணம் எப்போதுமிருக்கட்டும் உனக்கு என்பதே எனது எல்லாநேர வாழ்த்தாக இருக்கிறது.

    நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் விரும்பும் நிலைக்குச் செல்ல தடைகளோடு கூடிய போராட்டங்களை வெல்லும் பொழுதுகளுக்குதான் வாழ்க்கை என்று பெயர்.. நீ விரும்பும் இனிய நல்ல நீண்ட வாழ்க்கை அமைய இறையருள் துணை நிற்கட்டும். அதுவே காலாகாலத்துக்கும் எங்கள் பிரார்த்தனை.

    தம்பியும் தங்கையும் நன்றாகப் படிக்கிறார்கள். அவ்வப்போது உன்னை அவர்களே பிரதிபலித்துக் காண்பிக்கிறார்கள். தம்பி இனியன் கடந்த மாதம் மாவட்ட அளவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதற்பரிசு பெற்றிருக்கிறான்.  தம்பி இனியனும் தங்கை ஓவியாவும் உன்னைப் போலவே வகுப்பில் முதல் மாணவர்களாகத் திகழ்வதும் இன்னமும் பெருமிதம் அளிக்கிறது.

    பணத்தைத் தேவைக்கேற்ப செலவு செய். இதில் நான் உனக்கு அதிகம் அறிவுறுத்த ஏதுமில்லை. நீ எத்தனை பொறுப்பு மிக்கவள் என்று முன்பே உணர்த்தியிருக்கிறாய். ஏதும் அவசரம் என்றால் அங்கே உன் அத்தையிடம் பெற்றுக்கொள். அன்றாடம் அலைபேசு. உடல்நலத்தில் பெரிதும் அக்கறையாயிரு. சுவர் இருந்தால் தான் சித்திரம். தினமும் போதுமான அளவுக்கு உறக்கம் கொள்.

    மற்றவை பிறகு..

    பொங்கி வழியும் அன்புடனும் ப்ரியங்களுடனும்

    உன் அப்பா.

    பெறுநர் முகவரி:

    ப.மணிமொழி

    சாந்தி நிலையம்

    முதலாம் தெரு,

    நுங்கம்பாக்கம்

    சென்னை – 34

     படத்திற்கு நன்றி:

    http://growingleaders.com/blog/strong-fathers-strong-daughters-guest-post-by-dr-meg-meeker/

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    புதுவை பிரபா

    அன்புள்ள மணிமொழிக்கு..

                                                                    அப்பா எழுதுவது. நலமா அம்மு? எப்படி இருக்கிறது கல்லூரி வாழ்க்கை? எப்படி இருக்கிறது விடுதி உணவு? எப்படி இருக்கிறது  இந்த தற்காலிகப் பிரிவு? பனிரெண்டாம் வகுப்புவரை உனை பார்க்காமல் நானும்..எனை பார்க்காமல் நீயும் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

    பதினெட்டு ஆண்டு காலமாக இத்தகைய நீ…ளமான பிரிவை காலம் எனக்கு தராமல் இருந்ததற்கு அதை பாராட்டுவதா? அல்லது கொடுத்து கொடுத்து பழக்காமல் விட்டதற்கு அதன் மீது கோவித்துக்கொள்வதா என்று தெரியவில்லை எனக்கு.

                                    உன்னை நான் விடுதியில் விட்டுவிட்டுவந்து சரியாய் பதினைந்து நாட்கள்தான் ஆகிறது. ஆனால் மாதங்கள் பல ஆனதுபோல் இருக்கிறது. அழுதுகொண்டே இருக்கும் உன் அம்மாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூற முற்படும் வேளைகளிலெல்லாம் மௌனம் என்னை ஆட்படுத்திக்கொள்கிறது. சரி.. உன் தவிப்பையும் நன்கு உணர்ந்தவன் நான் என்கிற முறையில் உன்னை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை நான்.

                                    சில நாட்களுக்கு, புதிய இடம்.. புதிய தோழர் தோழியர்.. புதிய வகை உணவு.. இவற்றை ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாய் இருக்கும். அப்பா அம்மாவைவிட்டு பிரிந்திருக்கும் உணர்வும் உன் உழற்றும். நிதானமாய் நீ இருக்கவேண்டிய மிக முக்கிய தருணம் இது. சிறுவயதிலிருந்தே நான் சொல்லி சொல்லி வளர்த்த வாசகம் உனக்கு நினைவிருக்கிறதா? படிப்பிற்காக எதையும் விட்டுவிட துணியலாம். ஆனால் எதற்காகவும் படிப்பை விட்டுவிடக்கூடாது. ஆம். உன் வாழ்க்கையின் இலக்கு நோக்கி வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறாய் நீ. உனக்கு ஆர்வமான பாடப்பிரிவு ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் கல்லூரியில்தான் கிடைக்கும் என்று தெரிந்தும் துணிவுடன் நீ படிக்க புறப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சியை எனக்குள் பாய்ச்சியது. இலக்கே இல்லாமல் படிப்பதும், கிடைக்கும் பாடப்பிரிவை எடுப்பதும், அற்ப காரியத்திற்கெல்லாம் தங்களது எண்ணங்களை சமரசம் செய்துக்கொள்ளும் சராசரி மாணவ மாணவியர் மத்தியில் கொள்கை பிடிப்போடு படிக்கும் நீ, நான் பிரமிக்கும் பெருமை.

                                    அப்பா அம்மாவைவிட்டு இவ்வளவு தொலைவு வந்து இத்தகைய படிப்பு தேவையா? தவறு செய்துவிட்டாய் நீ என்று சக தோழர் தோழியர் கூறலாம். அல்லது  உனக்கேகூட தோன்றலாம். அவர்களது சொற்களோ..உனது மாற்று எண்ணமோ.. உனது கொள்கையின் ஆணிவேரில் அமிலம் ஊற்றிவிடாமல் பார்த்துக்கொள். படி. ஆழ்ந்து படி.. தெளி. தெளிந்தபின் தொடந்து படி. எழும் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள். அறிவு என்பது பாடப்புத்தகங்களால் மட்டுமே வாய்ப்பது கிடையாது என்று நன்கு உணர்ந்தவள் நீ. ஆகையால்…நேரம் கிடைக்கும்போது இலக்கியம் படி. தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தங்களை கல்லூரி நூலகத்தில் தேடித்தேடி படி. ஆரோக்கியமான சிந்தனைகளை உன்னுள் விதைத்துக்கொண்டே இரு.

                                    மகளே!… மனதை உன் முழு கட்டுப்பாட்டில் வை. உன் கட்டுப்பாட்டைவிட்டு விலகிவிலகி ஓட ஆசைப்படுகிற இயல்பு இந்த பருவ வயது மனதுக்குடையது. அதை சமாளிக்க கற்றுக்கொள். இயன்றவரை தனிமை தவிர். இயங்கிக்கொண்டே இரு. தூக்கம் தொடர்ந்து தொந்தரவு செய்தால்மட்டும் படுக்கைக்கு போ! விழியின்  நுனிக்கு விழிப்பு வரும்போதே கண்விழி. படுப்பதற்கு மட்டும் கட்டிலை பயன்படுத்து. படிப்பதற்கு அதை உபயோகிக்காதே. உட்கார்ந்து படி.

                                    கட்டிடத்திற்கு அடித்தளம்போல உடல்நலம். அதைப்பேணு. உணவு வகை, உணவு முறை மாற்றத்தால் சிற்சிறு பிரச்சனைகள் தலைதூக்கலாம். கவனத்தோடு அதை கையாள். எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்காதே. உடலுக்கும் அறிவு இருக்கிறது என்று சிறு வயதிலேயே உனக்கு நான் எடுத்துக்காட்டுடன் கூறியவை நினைவிருக்கிறதா? ஆம். உன் உடல் மிகவிரைவில் உன் புதுவகை உணவை ஏற்றுக்கொள்ள பழகிவிடும்.

                                    மகளே… மணிமொழி… உன்னை இன்னும் ஆறுமாத காலம் கழித்துதான் பார்ப்பேன் என்று நினைக்கும்போதே நெஞ்சு கனக்கிறது. உன் பிரிவினை பழகிக்கொள்ள இன்னும் எத்தனை நாட்கள் பிடிக்கப்போகிறதோ தெரியவில்லை. பரவாயில்லையம்மா. நீ எங்களைப்பற்றிய கவலையை மற. மறக்க முடியாவிடில் முயற்சிசெய். அதைவிட மறக்காமல் கடிதம் எழுது.. அடிக்கடி எழுது. நானும் எழுதுகிறேன்.

    அன்பு மகளுக்கு…ஆசை முத்தங்களோடு….

    அப்பா.

    Share
  • அன்புத் தோழி மணிமொழி

    வைரமணி நடராஜன்

    மார்ச்சு 31, 2014.

    5, திருவள்ளுவர் தெரு,

    அயப்பாக்கம்,

    சென்னை-53.

    அன்புத்தோழி மணிமொழி,

         உனதருமை தோழி கண்மணி வரையும் மடல். உன் நலம் அறிய ஆவல்.

         செல்பேசியில் குறுந்தகவல், கணினியில் மின்னஞ்சல் என தகவல் தொடர்பு சாதனங்களின் புதுவரவால்  தொலைந்து போன தந்தியைப் போல மெல்ல மெல்லத் தொலைந்து கொண்டிருக்கும் அஞ்சலை உயிர்ப்பிக்க நான் எழுதும் மடல் இது. குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவற்றில் நாம் அஞ்சலில் எழுதும் செய்தியில் உள்ள உயிர்ப்பு இருக்காது. மடலைப் படிக்கும் போது அனுப்பியவரின் மனநிலை, அவர் செய்த தவறுகள், அவற்றைத் திருத்திய விதம் என அனைத்தையும் அறிய இயலும். இதெல்லாம் புதுயுகத் தகவல் பரிமாற்றத்தில் கிடைக்காத நிகழ்வுகள். நிற்க!

         நீ முதுகலை அறிவியல் பட்டத்தில் விவசாய விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்து நம் கிராமத்தில் விவசாயம் செய்து வருபவள். உன் அப்பா நம் மகள் விஞ்ஞான விவசாயமுறைகளைக் கற்று நம் கிராமத்தைச் செழிப்பாக்குவாள் என தீர்க்கதரிசியாய்ச் சிந்தித்து உன்னைக் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கஷ்டப்பட்டு சேர்த்தார். நீயும் அவரை ஏமாற்றாமல் குடும்ப சூழ்நிலை அறிந்து நன்றாகப் படித்துப் பல்கலைக்கழகத் தேர்வில் மூன்றாவது இடத்தைப் பிடித்து பட்டம் பெற்று நம் கிராமத்து முதல் முதுகலை பட்டதாரி என்ற பெயர் பெற்று, நீ கற்ற அறிவியல் வேளாண் முறைகளை உன் தந்தையுடன் பகிர்ந்து உழைத்து வந்தாய். ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் நீயே மகனாகவும், மகளாகவும் இருந்து உன் குடும்பத்தைத் தலை நிமிரச்செய்தாய். அதைக் கண்டு நானும் இன்புற்றிருந்தேன்.

         மணவாழ்க்கை எனும் நிகழ்வு உன்னை விவசாயத்தை விட்டு விலகச் செய்து விட்டதோ? என எண்ணும்படியாக நீ செல்பேசியில் சொன்ன செய்தி என்னைச் சற்று கலங்கடித்து விட்டது. கிராமத்தை விட்டு பட்டணத்திற்கு வர உள்ளதாகவும் உனக்குத் தகுந்த வேலை ஒன்றை பெற்றுத்தர உதவ வேண்டும் என கேட்டாய். உன்னை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என தெரியவில்லை. உன் அப்பா காலத்திற்குப்பின் உன் கணவனுடன் விவசாயத்தினைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதைக் கண்டு நான் பெருமைப்பட்டுக் கொண்டேன். கிராமத்து வயலைக் கவனிக்க ஆள் கிடைக்கவில்லை, தண்ணீர் இல்லை என்ற காரணங்களுக்காகத் தொழிற்சாலை கட்டுவதற்கு நிலத்தைக் கேட்கிறார்கள். விற்று விட்டு பட்டணம் வருகிறேன் என்கிறாய்.

         நம் பள்ளிப்படிப்பில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் – ”‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்‘ என்பதை மறந்து விட்டாயோ? எனும் ஐயம் என்னுள் எழுந்தது. நீ சொன்ன சொல்லானது ‘விதை நெல்லை விற்று வயிறு வளர்த்த கதையாய்‘ உள்ளது. நம் கிராமத்தில் உள்ள சுத்தமான சுகாதாரமான காற்று (இங்கு எங்கு நோக்கினும் வாகனப் புகையால் மாசான காற்று), மாசில்லா குடிநீர் (இங்கு கேனில் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை), அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் அன்பு, அந்நியோன்யம் (இங்கு யார் அடுத்த வீட்டில் உள்ளார் என்பதே தெரியாத நிலை), அமைதியான ஆலயங்கள், அதனருகே அழகிய அல்லி நிறைந்த அல்லிக்குளம், மனதிற்கு ரம்மியமான பட்டாம் பூச்சி, சித்திரை மாதத்து வேப்பமரக்காற்று, சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளின் ரீங்கார ஓசை, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே வந்து செல்லும் நகரப்பேருந்து, ஒரு நாளில் ஒரே ஒரு முறை வந்து செல்லும் தொடர்வண்டி, பள்ளி செல்லும் மாணவ மாணவியரின் சைக்கிள் பெல் ஓசை, சைக்கிளில் வந்து அஞ்சல் அட்டை விற்றும், பணவிடைத்தாள் மூலம் வந்த பணத்தைக் கொடுத்தும் கிராமத்தில் உள்ள அனைவரையும் அறிந்து வைத்திருக்கும் தபால்காரர் என எதுவுமே பட்டணத்தில் கிடையாது. மாநகர வாழ்க்கையா? மாநரக வாழ்க்கையா? என இங்கு அலுத்துக் கொண்டு வாழும் நாங்கள் கிராம வாழ்க்கை சுகத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ பட்டணத்திற்கு வருகிறேன் என்கிறாய்.

         நான் இங்கு வேலைக்குச் செல்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனக்குக் கிராமத்தில் நிலம் இல்லை. அதனால் பிழைப்பு தேடி வந்தேன். அலுவலக வேலை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என்றிருந்தாலும் எங்களுக்கு அந்த 8 மணிநேரமும் 8 யுகமாகத்தான் கழிகிறது. கடும் வேலை நெருக்கடி, கூட்ட நெருக்கடியில் சிக்கித் தவித்து பேருந்து பயணம், மேலதிகாரிகளின் அதிகாரத்  தொல்லை, பணியிடத்துத் தொல்லைகள் என உழன்று கொண்டு வாழும் நிலை உனக்கு வேண்டாம். உழவன்(வி) சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்கமுடியுமா? கிராமங்களும் காங்கிரீட் காடுகளாக மாறத் தான் வேண்டுமா? வயலை விற்கும் எண்ணத்தை விட்டொழி. ஆடு, மாடு, கோழி, கிளி, குருவி, வாத்து, நாய், பூனை என மண் மணக்கும் உயிரினங்களோடு வாழும் கொடுப்பினை எங்களுக்குத் தான் இல்லை. நீ கொடுத்து வைத்தவள். அவற்றை நேசி. உனக்கு நான் சொல்வது புரியும். இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் நீ உன் வயலினை பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒளிமயமான உன் எதிர்காலம் என் கண்களில் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. எங்களுக்கும் காலம் வரும் என கூட்டுப்பண்ணை விவசாயம் தொடங்கி  செயல்படு. வெற்றி உறுதி.

    என்றும் அன்புடன்,

    உன் அன்புத்தோழி,

    கண்மணி.

    பெறுநர்

    திருமதி. மணிமொழி,

    7, பாரதி சாலை,

    பூஞ்சோலை கிராமம்,

    தஞ்சாவூர் அஞ்சல்.

    தஞ்சை மாவட்டம்.

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    சரஸ்வதி ராஜேந்திரன்

    அன்புள்ள  மணிமொழிக்கு

     நலம், நாடுவது அதுவே,   ,மணிமொழிஒரு  இடத்தில் உள்ள செடியை பிடுங்கி வேறு இடத்தில்  நடும்போது   அது முதலில் சற்று வாடி பின் தான்

    தழைக்கும்   அதுதான் இயற்கை ,ஏனெனில்  புதிய மனிதர்கள்  புதிய  சூழ்  நிலை ,புதிய இடம் ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் ,போக போக பழகிடும்  ஏனெனில் ,பள்ளியில் நீ  வீட்டிலிருந்தபடியே பள்ளியில் இருக்கமுடியுமா?எல்லாஇடங்களிலும்  வீட்டிலிருந்த படி சுதந்திரமாக இருக்க முடியாதே,இது உனக்கும் தெரியும்தானே? உனக்கு நான் அறிவுரை கூறுவதாக எண்ணாதே,  அன்புரைஎன்று எடுத்துக் கொள்ளவும் நீபுதிய பொறுப்புகளை ஏற்றியிருக்கிறாய் அந்த பதவி    அது  மனைவி  என்ற பதவியை ,உனக்கு இப்போது பொறுப்புகள்  அதிகம் நேரமும் இருக்காது ,அதனால்,  நான் சொல்ல வேண்டிய   விஷயங்களை  சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் மனித வாழ்வின் மகத்துவமான குடும்ப வாழ்வின் வெற்றியை பொறுத்த.துதான் எப்போதும் சுய நலமும் ,சுக வாழ்க்கையும்

    குடும்ப வாழ்க்கை என்பது ஒரு வேள்வி போன்றது  ஒரேகுடும்பத்தில் பிறந்த

    நம்மிடையே எத்தனையெத்தனை  வேறுபாடான குணங்களிருக்கிறது அதே

    போல்தான் புகுந்த வீட்டிலுள்ளவர்கள் குணமும் அப்படித்தானே இருக்கும்

    அதனால் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் ,தேவைப்படும்போது தியாகமும் செய்யவேண்டும் . .உன் மாமனார் ,மாமியாரை பெற்றவர்போல் பாவிக்க வேண்டும் ,உன் நாத்தி .மைத்துனரை

    தங்கை,தம்பி என்று நினைத்துக்கொண்டால்  எந்த பிரச்சனையும் இருக்காது

    இப்படியாக எண்ணி  பொறுமையாகவும் ,சகிப்புத்தன்மையுடனும் இருந்து  நீ

    புகுந்த வீட்டில் எல்லோரையும் சரிக்கட்டிக்கொண்டு  வழி நடத்துவாய்  என்று எனக்கு தெரியும் ஏனெனில்  நீபுத்திசாலியாற்றே, விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று  நீயே சொல்வாயே ,

    அதுதான் சிறந்த பண்பு .,வீடென்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும் ,இதை பகுத்துணர்ந்து  உன் புத்திசாலித்தனத்தால் எல்லவற்றையும்

    வென்று  கனவனும் ,மனைவியும்  ஒற்றுமையாக வாழ்ந்து  நன்மக்கட்பேறு பெர்று  குடும்பத்தை மங்கலமாக  ஆக்குவாய்  என்ற நம்பிக்கை எனக்குண்டு குடும்ப பார்ம்பரியத்தைகாப்பதுதானெ பாரதப்பண்பாடு ,உன்னைப்போல் நானும் உன் பிரிவை தாங்கிக் கொள்ள என்னை தயார் படுத்திக்கொள்கிறேன் சேக்கிழார் சொன்னதை ஞாபகத்தில் வை  பெண் மனையறத்தின் வேர்  என்பதை

    குடும்பத்தை பற்றிஎன் நண்பர் எழுதிய பாடலுடன்  என் கடித்த்தை முடிக்கிறேன்.

                 கூட்டாமல் கழிக்காமல்  குடும்பம் இல்லை

                  கோணாமல்  நாணாமல் இன்பம்  இல்லை

                 நீட்டாமல்  முடக்காமல்  வாழ்க்கை இல்லை

                 நெளிவின்றிச்  சுளிவின்றி நியதி இல்லை

                 ஊட்டாமல்  ஆட்டாமல்  குழந்தை இல்லை

                  ஓயாமல்   சாயாமல் .  முதுமை இல்லை

                  பூட்டாமல்  திறக்காமல்  கதவு  இல்லை

                   புகழாமல்  இகழாமல்  வளர்ச்சி இல்லை

    மகளே ,  குடும்ப வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டிய இந்த கவிதையைவிட  வேறு  உதாரணம் வேண்டுமா என்ன ?

     உன் அன்பில் மகிழும் அம்மா  அமுதா கணேசன்

    Share
  • மதிப்பிற்குரிய மணிமொழிக்கு!

     ச. பொன்முத்து

    மதிப்பிற்குரிய மணிமொழிக்கு!

    பொன்முத்து வணக்கத்துடன் எழுதும் கடிதம். இங்கு நானும் என் மனைவியும் மகளும் நலமாக இருக்கிறோம். அங்கு தங்களின் நலனையும், குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார், உறவினர் என அனைவரின் நலனையும் அறிய அவா! குழந்தைகளுக்கு அன்பு முத்தங்களும் ஆசிகளும்! அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கும் சுட்டித்தனத்திற்கும் என் வாழ்த்துகள்.

    வீட்டிலும், ஊரிலும் உள்ள பெரியவர்களுக்கும், சான்றோர்களுக்கும், மற்ற சமூகத்துப் பெரியவர்களுக்கும் என் தலைதாழ்ந்த வணக்கத்தையும் அன்பான விசாரிப்புகளையும் தெரிவிக்கவும். அவர்களின் ஆசிகளையும் வேண்டுகிறேன். தாங்கள் பணிபுரியும் இடத்திலுள்ள உயர் அலுவலர்களுக்கும், சக பணியாள நண்பர்களுக்கும் என் வணக்கங்களையும் வாழ்த்துதல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    உங்களுடன் பணிபுரியும் என் தோழி திரிசடைக்கு, என்னால் அவ்வப்போது எழுதப்படும் கடிதங்களைப் படித்துவிட்டு, மு.வ. ‘தங்கைக்கு’ எழுதியுள்ள கடிதம் போன்று இருப்பதாக பெரிதும் பாராட்டியதாகவும், சில ஐயங்களைத் தெளிவுபடுத்தி, நீண்டதொரு கடிதம் எழுதுமாறு நீங்கள் என்னை கேட்டுக் கொண்டதாகவும் தோழி தெரிவித்து உங்களின் முகவரியைக் குறிப்பிட்டிருந்தாள். மிக்க மகிழ்ச்சி!

    எனது இந்தக் கடிதம் ஜவஹர்லால் நேரு தன்னுடைய மகள் இந்திரா பிரியதர்சினிக்கு எழுதிய ‘ The Letters from a father to his Daughter போன்றதோ, பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள், ‘தம்பிக்கு’ என விளித்து எழுதும் கடிதம் போன்றதோ, மு.வ. ‘அன்னைக்கு’, ‘தம்பிக்கு’, ‘தங்கைக்கு’, ‘நண்பர்க்கு’ என எழுதிய கடிதங்களைப் போன்ற விரிவான கடிதங்களோ அல்ல. மேலும், மேற்கூறிய அறிஞர்கள் அளவுக்கு அறிவால், வயதால், அனுபவத்தால் நான் பெரியவனல்ல என்பதை முதலில் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பாராட்டுவதை நான் பெரிதும் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம்,

    தூக்க மருந்தினைப் போன்றவை
    பெற்றவர் கூறும் புகழுரைகள்!-நோய்
    தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
    கற்றவர் கூறும் அறிவுரைகள்!
    என்ற கவிஞர் புலமைப்பித்தனின் திரைப்படப் பாடல் வரிகளை மனதில் உள்வாங்கிக் கொண்டு இன்றளவும் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன்.

    என்னுடைய தாயாரின் உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. வயது மூப்பின் காரணமாகவும், தொடர்ந்து ஓராண்டாக படுத்த படுக்கையாக இருந்ததாலும், படுக்கைப் புண்கள் (க்ஷநன ளுடிசந) ஏற்பட்டிருந்தது. அதன்பொருட்டு உடனிருந்து அவ்வப்போது மருந்திட்டு கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் இக்கடிதத்தினை எழுதுவதற்கு காலதாமதமானது. அதற்காக என் வருத்தங்களைத் தெரிவிப்பதோடு மன்னிக்கவும் வேண்டுகிறேன். இனி நீங்கள் கேட்டிருந்த ஐயங்களுக்கான பதில்களுக்குப் போவோம்.

    இந்தக் கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு எப்படி வந்தது? என்பது குறித்து வினவியிருந்ததாகத் தோழி தெரிவித்திருந்தாள். இதற்கான முழுக் காரணமும் என் தந்தையையே சாரும். என் எழுத்துக்கள் நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் என் தந்தை. சிறுவர்களோடு விளையாட வேண்டிய வயதில் ‘என் துடுக்கடக்கி’ என பாரதி கூறுவது போல, விவர விருட்சத்திற்கான விதைகளை என் மனதில் தூவியவர்.

    நான் சிறுவனாக இருந்தபோது, குறிப்பாக நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, தொலைபேசியும் கைபேசியும் இல்லாத அந்தக் காலத்தில், எங்களின் உறவினர்களை நலம் விசாரிக்கவும், சிலபல நல்ல காரியங்களைத் தெரிவிக்கவும் வேண்டி, கடிதங்களுக்கான செய்திகளை, தந்தையார் தறி நெய்து கொண்டே கூற, அவற்றை வரிகளாக்கி என்னை எழுதுமாறு பணிப்பார். இவ்வாறாக, ஏராளமான கடிதங்கள் எழுத வைப்பார். எனக்கு எழுத்துப் பயிற்சியையும், மொழியறிவையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு அவர் இந்த முயற்சியைச் செய்துள்ளார் என்பதை, விவரம் தெரிந்த இன்றைய நாளில் நான் எழுதும் ஒவ்வொரு கடிதத்தின் போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

    பிறகு கல்லூரி நாட்களில், விடுதியில் தங்கிப் படிக்கும் காலத்தில், பதின்பருவ தள்ளாட்டத்தில் வழிதவறிவிடக்கூடாது என்ற நோக்கில், குடும்ப வறுமைச் சூழலை உணர்த்தாமல் உணர்த்தி, படிப்பின் அவசியத்தை மனதில் இருத்துமாறு ஒரு கடிதம் எழுதியிருந்தார். புறநானூற்றின் அறிவுப்பொற்குவியலைக் குறித்த அறிமுகம் அந்தக் கடிதம். ஒவ்வொருவரின் கடமையைக் குறித்த அறிவுறுத்தல் என்றால் அது மிகையாகாது. அக்கடிதத்தில் இடம்பெற்ற சில வரிகளை அப்படியே உங்களுக்குத் தருவது நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.

    ‘ தம் புதல்வர்களுக்கு அணியும் மணியும் அணிவித்து அகமகிழ்வதோடு நின்றாரில்லை அக்காலத்துப் பெற்றோர்கள். மக்களைக் கல்லாவரை விடல்தீது (நான்மணிக்கடிகை-94) என்ற உண்மையை அறிந்திருந்த அவர்கள் தம் புதல்வர்களுக்கு உரிய காலத்திலிருந்தே கல்வி கற்பித்து வரத் தவறவில்லை. இளமையிலிருந்தே முறையான கல்வி புகட்டிப் புதல்வர்களை நாட்டின் நற்குடி மக்களாக ஆக்கிடும் பொறுப்பு தந்தையரையே சார்ந்ததாகும். இவ்வுண்மையை அக்காலத் தந்தையர் நன்கு உணர்ந்து அதற்குகேற்ப கடனாற்றி வந்தனர். இச்செய்தியை

    ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
    சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி,
    களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

    என்ற புறநானூற்றுப் பாடல் தெரிவித்துள்ளது. இப்பாடலைப் பாடியவர் தாய்க்குலத்தைச் சேர்ந்த பொன்முடியார் என்பவராவார். சங்க காலம் என்றில்லை, இன்றைய காலத்திலும் பெற்றோர் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என்ற முனைப்பில், கல்லூரிக்கு உன்னை அனுப்பியுள்ளேன். இங்கு கடன் என்பது பணி என்ற பொருள்படும். எனவே, என் கடனாக உள்ள அதாவது பணியாக உள்ள உன்னைச் சான்றோனாக்குவதற்காக அங்கு அனுப்பியுள்ளேன்.. களிறு எறிந்து பெயரும் அன்றைய நிலை, காளையான உனக்கு இன்றில்லை என்றாலும், உனக்கான பணியை உணர்வாய் என்று நம்புகிறேன்’

    என புறநானூற்றுப் பாடலையும் என் பொறுப்பையும் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். ‘புறநானூறு’ என்ற இலக்கியத்தைக் குறித்து எழுதுகிற போதே ‘நான்மணிக்கடிகை’ என்ற இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தினார். இவ்வாறு, கடிதம் எழுதுவது குறித்து நான் பெற்ற அனுபவம் சார்ந்த ஏராளமான செய்திகளைக் எழுதிக்கொண்டே போகலாம்.
    தாங்கள், திரிசடையிடம் இன்றைய வாழ்வியல் நெறிகளைச் சார்ந்து பல்வேறு விளக்கங்களை வினவியிருந்ததாகத் தெரிவித்திருந்தாள். அதற்கான பதிலை விளக்கமாகப் பார்ப்பது உங்களுக்கான குழப்ப இருளைப் போக்கும் வெளிச்ச விடியலாக அமையும் என்று நம்புகிறேன்.

    நீங்கள் என் தோழியிடம் இன்றைய காலகட்டத்தில் கைபேசி, இணையதளம், முகநூல், டுவிட்டர் என்றெல்லாம் வந்துவிட்ட நிலையில் இன்னும் அஞ்சலில் கடிதம் எழுதும் என் நிலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகத் தெரிவித்திருந்தாள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம்.. இன்றைய நாளில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதியும் அந்தமும் தெரியாத அளவிற்கு விசுவரூபம் எடுத்து நம்மை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறோம்; ஆனால், அதிலிருந்து விலகி நிற்க மறுக்கிறோம். அதற்காக ஆதிகால வன வாழ்க்கை வாழ வேண்டுமெனக் கூறவில்லை.

    நாம் வாழும் இந்தக் காலம் பல வகையிலும் முன்னேறியிருக்கிறது. நம் முன்னோர்களின் காலத்தில் இல்லாத எத்தனையோ புதிய கருவிகளை நாம் பெற்றிருக்கிறோம். மிக வேகமாகப் பயணம் செய்ய முடிகிறது; விரைவாகச் செய்திகளை அனுப்பவும், பரப்பவும் முடிகிறது, வானளாவிய உயர்ந்த மாளிகைகளைக் கட்ட முடிகிறது; ஆயிரக்கணக்கானவர்களின் கைகள் உழைத்தும் செய்ய முடியாத அரிய வேலையை ஓர் இயந்திரத்தைக் கொண்டு செய்துவிட முடிகிறது;

    ஆனால் ஒன்றுதான் முடியவில்லை. நம் முன்னோர்களைப்போல் அவ்வளவு அமைதியாக இன்பமாக வாழ முடியவில்லை. பல வகையிலும் நமக்கு உதவி வருகிற அறிவியல் நம் வாழ்க்கையின் அமைதிக்கு அவ்வளவாக உதவி செய்ய முடியவில்லை. இயற்கைவளம் மிகுந்து செல்வம் கொழிக்கும் நாடுகளிலும் மக்களின் வாழ்க்கையில் குறைகள் பல இருந்து வருகின்றன. வறுமை மிகுந்து வாடும் நாடுகளைக் குறித்து சொல்லத் தேவையில்லை. ஆகவே பல வகையிலும் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் வாழும் வழி மட்டும் இன்னும் தெளிவாக அமையவில்லை. இத்தகு அவல நிலையை அகற்றி வளமான வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்த வேண்டிய அவசியச் சூழலில் உள்ளோம்.

    நம்மை வழிநடத்திக்கொள்ள நாம் செய்யவேண்டிது என்ன? நம் அவல வாழ்வை ஒரு சிறு எடுத்துக்காட்டு மூலம் உணரலாம். அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், காய்கறி முதலிய பலவகைப் பொருள்களையும் நிரம்பச் சேர்த்து வைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி. ஆனால், சுவையாகச் சமைத்து உண்ணத் தெரியாதவளாக இருக்கிறாள். அவள் சேர்த்து வைத்துள்ள பண்டங்களால் பயன் என்ன? அதுபோல்தான் உள்ளது இக்காலத்து வாழ்க்கையின்பம். அறிவியல் துறையின் வளர்ச்சியால் கருவிகளைப் பெருக்கிக் கொண்டோம்; வேகத்தை வளர்த்துக் கொண்டோம். ஆனால் நன்றாக வாழ மறந்தோம்.

    முன்னோர் சொன்ன வழிகள்; அவர்கள் கடந்து பயன்கண்ட வழிகள்; தேய்ந்த ஒற்றையடிப் பாதைகள் போன்றவை. ஆனால் முன்னோரின் வழிகளை நம்ப மனம் இல்லை; புதிய வழிகளைச் செம்மையாக வகுத்துக் கொள்ளவும் முடியவில்லை. குடும்பத்திலுள்ள ஆண்கள் குறிப்பாக கணவனின் உழைப்பில் பெறுகிற ஊதியம் குடும்பத்தை நடத்த இயலாது என்றளவுக்கு பெண்கள் தங்களின் நுகர்வுக் கலாச்சாரத்தை விருப்பங்கள் என்ற பெயரில் பல வகைகளில் விரிவாக்கிக் கொண்டதால் பெண்களும் பணிக்குச் செல்ல வேண்டிய பெரிதான அவலம் நம்மிடையே காணப்படுகிறது. இதன் விளைவே கல்விக்கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, விலை உயர்வு என ஒன்றை ஒட்டி இன்னொன்று என புற வாழ்க்கை பொருளாதாரத்தின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது.

    பணிக்குச் செல்ல உரிமையும் தேவையும் பெற்ற தாய்மார்கள், குழந்தை பெற்ற நிலையில் பணிக்குச் செல்ல முனைவதால் தாய்ப்பால் கட்டிவிடுகிற அபாயமும், அதன்பொருட்டு உட்கொள்கிற மருந்துகள் உடலை பாதிப்புக்குள்ளாக்குவதையும் மறந்துவிடுவதேன்? தாய்ப்பாலுக்குப் பதில், ஆவின் பால் வழங்கி வளர்க்கிற குழந்தை எப்படி, தாயை, தாய்நாட்டை நேசிக்கும்..? நாட்டுப்பற்று எப்படி வரும்? மனித நேயமிக்கதாய் இருக்கும்? பதிலாக வெடிகுண்டு வைக்கும்; தண்டவாளத்தைப் பெயர்க்கும்; விலங்கினமாகத் திரியும்.

    அறிவைப் பெருக்கப் பெற்ற உரிமையால் பெண்கள் பெருக்கியிருப்பது அணிகலன்களைத் தானே தவிர வேறொன்றுமில்லை; அறியாமையைக் குறைக்கப் பெற்ற உரிமையால் பெண்கள் குறைத்திருப்பது ஆடைகளைத் தானே தவிர வேறென்ன?; அண்டைநாடுகளின் அரசியல் நிலவரங்களைத் தெரிந்துகொள்ள பெற்ற உரிமையை, அடுத்தவீட்டு அடுக்களைத் தயாரிப்புகளையே தெரிந்து கொள்ளப் பயன்படுத்துகின்றனர்; பணிசெய்ய வேண்டி அலுவலகத்தில் பெற்ற உரிமையை துணிகளையும், நகைகளையும் பற்றியுமே பேசி பயன்படுத்திவரும் அவலம்; விவகாரங்களைத் தெரிந்து கொண்டு வீரியம் பெற பெற்ற உரிமை இன்று விவாகரத்து செய்ய மட்டுமே பயன்பட்டு வருகிறது என ஏராளமான குற்றச்சாட்டுகள் இன்றைய பெண்களின் மீது சுமத்தப்படுகிறது. இவை அனைத்தும் வாழ்வியல் என்னும் அகம் சார்ந்தவை. இதே போன்றதொரு கருத்தை முன்னொரு கடிதத்தில் திரிசடைக்கு எழுதியிருந்தேன். நீங்களும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாக இருந்தாலும், காட்டு மிராண்டிகளாய், நாடோடிகளாய், சமுதாயமாய் படிப்படியாய் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி வளர்ந்த மனித இனம், தங்களுக்கென வகுத்துக் கொண்ட வாழ்வியலை மறந்து, நெறிதுறந்து, உய்யும் வழி தொலைத்து உலகெங்கும் அல்லலுறுவதைக் காண்கிறோம். வாழ்வியலில் அகம், புறம் என்றும் வகுத்துக் கொண்ட நாம், இவ்விரண்டிலும் இல்வாழ்க்கை, விருந்தோம்பல், ஆடம்பரம், அறவுரைகள், அறிவுரைகள், அரசியல் நெறிகள், அரும்பெரும் செயல்கள், போர் நிகழ்ச்சிகள், பொருளீட்டும் முயற்சிகள், பண்பாட்டுப் பெருமைகள், பழக்கவழக்கங்கள், வரலாற்றுச் சிறப்புகள், வாணிகப் பொறுப்புகள் போன்ற பல்வேறு துறைகளில் நமது வாழ்க்கை நெறிகள் வந்துபோகின்றன.

    நம் முன்னோர்கள் நீதிநெறிகளாக வற்புறுத்திக் கூறியவை இந்த உலகில் அமைதியாக வாழ்வதற்கு தேவையானவை என்பதைத் தெளிவாக உணர வேண்டும். செத்த பிறகு முக்திக்கு உரிய வழிகள் என்று அன்பு உண்மை முதலியவற்றை ஒதுக்கி வைக்கக் கூடாது. மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கு அவை தேவையானவை என்று உணர வேண்டும். அன்பு இல்லாமல் நண்பர் இருவர் சேர்ந்து பழக முடியுமா? அன்பு இல்லாத ஒரு குடும்பத் தலைவரை மனைவி மக்கள் நம்பி வாழ்க்கை நடத்த முடியுமா? நாட்டினிடத்திலும் மொழியிடத்திலும் அன்பு இல்லாத மக்களைக் கொண்டு நல்ல ஆட்சி நடத்த முடியுமா? உண்மை இல்லாத தொழிலாளிகளைக் கொண்டு ஒரு தொழிற்சாலையை வளம்பெற நடத்த முடியுமா? நேர்மை இல்லாத அறிவாளிகளைக் கொண்டு ஓர் அலுவலகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா? ஆகவே, அன்பு, உண்மை, நேர்மை முதலியவை இந்த வாழ்க்கைக்குத் தேவையானவை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    அன்பும் அறனும் உடைத்தாயின்’, ‘மனத்துக்கண் மாசிலனாதல்’, ‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்’, ‘மறந்தும் பிறன் கேடும் சூழாமை’, எனத் திருக்குறள் போன்ற நீதிநூல்கள் ஏராளமான கருத்துகளை வலியுறுத்தி வருகின்றன. எனவே, நம்வாழ்க்கை நலம்பெற ஏடுகள்கூறும் வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றுவது சரியானதாக அமையும். “”””ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”” என்பது உண்மை. ஆனால் சுரைக்காய் குறித்து ஏடுகளில் படித்தால்தான், அதன் விளைச்சல், வணிக முறை, உணவாக்கும் பக்குவம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், தமிழிலுள்ள படைப்புகள் அனைத்தும் நமக்கான படிப்பினைகளே என்பதை மனதில் கொண்டு அதன்வழி நடந்தால் வாழ்வின் உச்சங்களை எட்டலாம்.

    அடுத்ததாக, நீங்கள் வினவியதாக திரிசடை குறிப்பிட்டிருந்தது ‘எளிய வாழ்க்கை சாத்தியமா?’ என்பதாகும். அது ஒன்றும் மிகப் பெரிய மலையைப் புரட்டும் வேலையல்ல. ஆடம்பர வாழ்க்கை வாழாது எளிய வாழ்க்கை வாழ வேண்டுமானால், நம்மைச் சுற்றிலும் ஏழைகள் உணவுக்கும் உடைக்கும் வழியில்லாமல் வாடும் போது, நாம் ஆடம்பரத்தைத் தேடுவது அவசியமா, தேவையா? என்பதை நம் மனதை நோக்கி நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஏழைகளுக்குப் பணம் கொடுத்து உதவி செய்யாவிட்டாலும், ஏக்கம் உண்டாக்கி மனதைக் கெடுக்காமல் இருக்க வேண்டும். தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது என்றைக்கும் நல்லது. அதுவே முதன்மையான தவம். ‘வேண்டாமை விழுச்செல்வம்’ என்கிறார் திருவள்ளுவர். தேவையே இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அதற்காக தேவைகளை அதிகரித்துக் கொள்வதைவிட குறைத்துக் கொள்வது நலம். இதைத்தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கான காரணம் என்கிறார்.

    இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கலாம். நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்பவர்களுக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும் என்ற எல்லை இல்லை. ஒரு லட்சம் சேர்த்தால் இரண்டு லட்சத்தை மனம் நாடுகிறது. பத்து லட்சம் சேர்த்தாலும், கோடி சேர்த்தாலும், அதற்கு மேற்பட்ட நிலையையே மனம் நாடுகிறது. வரம்பு கட்டுவதற்குப் பெரிய ஞானம் வேண்டும். அந்தத் தெளிவு ஏற்பட்டுவிட்டால், பத்தாயிரம் ஐயாயிரம் என்ற குறைந்த எல்லையிலேயே மனம் அமைதி அடைந்து விடுகிறது.
    அதனால் முயற்சியும் ஊக்கமும் குறைந்துவிடாதா? என உங்களின் மனம் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது. குறையவே குறையாது, கடமையுணர்ச்சி ஒரு பக்கம் இருந்தால், எறும்மைப் போல், தேனீயைப் போல் அன்றாடம் கடமையை விடாமல் செய்யத் தூண்டும். கடமையைச் செய்யாமல், கஞ்சி குடிப்பது குற்றம் அல்லவா? உழைக்காதவனுக்கு உணவு பெற உரிமை இல்லை. உழைத்தால் தான் உலகம் தரும் உணவில் பங்கு உண்டு என்று கடமையைச் செய்ய வேண்டும். இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

    அடுத்ததாக, பெண்ணுரிமை குறித்து வினவியதாகத் திரிசடை தெரிவித்திருந்தாள். பெரும் அறிஞர்கள் பல்வேறு வகைகளில் சிந்தித்துள்ள நிலையில், நான் ஏதேனும் புதுமையாகச் சிந்திப்பேனோ என நீங்கள் எண்ணியிருக்கலாம் என ஐயுறுகிறேன். பெண்ணுரிமையைப் பொறுத்த வரை பெண்கல்வி, வரதட்சிணை ஒழிப்பு, காதல் மணம், மணவிலக்கு, தனி வாழ்க்கை, கற்புடைமை, மறுமணம், பொருளாதாரச் சுதந்திரம் எனப் பல கோணங்களில் விளக்கலாம்.

    பழைமைக்கும் புதுமைக்கும் போர்; கடமைக்கும் உரிமைக்கும் முரண்பாடு; கற்புக்கும் காதலுக்கும் மாறுபாடு; குடும்பத்திற்கும் உலகத்திற்கும் போராட்டம்; இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் பொதுவாக வாழ்க்கை தாக்குண்டு நலிவுறுகின்றது; சிறப்பாகப் பெண்ணுள்ளம் சிதைவுறுகின்றது. எது, எங்கே, எவ்வாறு என ஒவ்வொரு துறையிலும் ஆராய்ந்து தெளியாமையும், தெளிந்தவரின் நெறியை நம்பாமையுமே இன்றைய பெண்ணுரிமை குறித்து பெண்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான முரணான காரணம். நெறியில் தெளிவும் நம்பிக்கையும் ஏற்பட்டால் வாழ்வைக் காத்துக் கொள்ள முடியும்; ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ’ முடியும்.

    இன்றைய காலகட்டத்தில் பெண்ணுரிமை என்கிற பெயரில் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வருந்தத்தக்கதாகவே உள்ளது. பெண்ணுரிமை என்ற நிலை சமுதாயத்தில் உருவான போது, திருமண ஏற்பாட்டிற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த பெண்களின் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாயின. இதன் காரணமாகத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்து வந்த குடும்ப வாழ்க்கை முறையில் பல புதிய சிக்கல்கள் தோன்றியுள்ளன.

    “”அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை”” என்று வள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறியே சிறந்தது. குடும்பம் என்பது உள்ளம் ஒன்றிய கணவனும் மனைவியும் மக்களைப் பெற்று வாழும் அன்பு நிலையம். அன்பு வளர்வதற்கும், தன்னலம் குறைந்து பொது நலம் பெருகுவதற்கும், இன்றளவும் சமுதாய வாழ்வில் ஒழுங்கு, கட்டுப்பாடு போன்றவற்றைக் காப்பதற்கும் மிகப் பெரிய காரணமாக இருக்கும் அமைப்பு குடும்பம் எனலாம். இந்நிலையில், கூட்டுக் குடும்பமாக இருந்து, எரிபொருள், பொருளாதாரச் சிக்கனம், பெரியோரின் வழிகாட்டுதல், மானுடப் பிணைப்பு என்பவையெல்லாம் பெண்ணுரிமை என்ற பெயரில் தனித்தனி குடும்பங்களாக சிதைந்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

    கல்வியறிவில் ஆண்களைவிட பெண்களில் அதிகம் பேர் எழுத்தறிவு பெற்றுவிட்டதாக கூறப்படும் இந்தக் காலகட்டத்தில், தாய்மைக்கே பெருமை சேர்க்கும் தாய்ப்பால் தர மறுப்பது எல்லாவற்றையும்விட மோசமானது. தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை, எழுத்தறிவு இல்லாத காலக்கட்டத்தில் கூறப்படாததைவிட, எழுத்தறிவுள்ள இந்த காலத்தில், அனைத்து அமைப்புகளும் அவசிய அறிவிப்புகளாய் அனுதினமும் அறிவித்துக் கொண்டே இருப்பது எதனால்…? உரிமை என்கிற பெயரால் ஊர் சுற்றுவதாலோ…? அல்லது உடலுக்கு ஊறுவிளையும் என்னும் விழிப்புணர்வின்மையா?

    அதிகம் படித்துவிட்டோம்; ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறோம்; நவீன ஆடைகளை உடுத்துகிறோம்; கைநிறைய பொருளீட்டுகிறோம் என்ற அதீத எண்ணங்களால் பெண்கள் அழிந்து வருவதையும், அவர்கள் பெற்ற அறிவு, பண்பாடு இல்லாத நிலையை எட்டியுள்ளது. பண்பாடு இல்லாத அறிவு நமக்கு உதாவது; நம்மைக் கெடுக்கவும் கெடுக்கும். அது எதற்கும் காரணம் சொல்லும்; சிறிய குற்றத்தைப் பெரிய குறையாக்கிக் காட்டும்; பெரிய குணத்தையும் சிறிதாக்கி மறக்கச் செய்யும், பண்பாடு இல்லாதபோது அத்தகைய அறிவால் பயன் என்ன? மக்கட்பண்பு இல்லாத நிலையில் நல்வாழ்க்கைக்கான சாத்தியமில்லை. இதையே,

    ‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண்பு இல்லா தவர்.’

    எனத் திருவள்ளுவர் கூறியுள்ளதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். இவையனைத்தும் ஏதோ பெண்களுக்கு மட்டுமே உரியது; ஆண்களுக்கு உரியதல்ல என நினைக்க வேண்டாம். சமூகத்தில் மக்கட்பண்பு இல்லாத அனைவருக்குமே இது பொருந்தும்.

    அடுத்ததாக, நீங்கள் கேட்டிருந்த வினா அரசியல் சாக்கடையைத் தூர் வாருவது எப்படி என்பதாகும். இலஞ்சம், ஊழல், அடிதடி, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, விதிகளை மீறுதல், மக்களுக்கு நலத்திட்டங்களைத் தீட்டுவதாகக் கூறி தன் நலனையும் தன் குடும்பத்து நலனையும் வசதிகளையும் பெருக்கிக் கொள்வது என்ற இலக்கணத்தில் செயல்படும் இன்றைய அரசியல் இழிநிலையை அகற்றுவது என்பதே இன்றைய அரசியல் மீதுள்ள அனைவரது அவாவும் கனவும் எனலாம்.

    ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்னும் கருத்தை ஆழமாக வற்புறுத்திக் கூறியிருப்பது புறநானூறு. இன்றைய மக்களாட்சி முறைக்கும் இக் கருத்து தேவைப்படுவதை உணர்கிறோம். ‘அரசு எவ்வழி குடிகள் அவ்வழி’ என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. ஒரு நாட்டின் தலைவர் அல்லது ஓர் அமைப்பின் தலைவர் எப்படி இருக்கிறாரோ அதற்கு ஏற்றாற்போலவே அந்த நாட்டின் மக்கள் அல்லது அமைப்பைச் சார்ந்தவர்கள் இருப்பார்கள். தலைவர் நீதியையும் நேர்மையையும் வழுவாமல் போற்றி நடப்பவராக இருந்தால், மற்றவர்களும் நீதியையும் நேர்மையையும் போற்றி நடப்பார்கள். சிறிதும் வழுவாமல் நடப்பதுதான் முக்கியம்.

    நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து பங்கு நேர்மையாக நடந்து ஐந்து பங்கு வழுவினாலும் மற்றவர்கள் அந்த ஐந்து பங்கையே கருதிக் கொண்டு பெருந்தவறுகள் செய்ய முற்படுவார்கள். ஆகவே ஒரு நாட்டிலோ அமைப்பிலோ ஊழல் இடம்பெறாமல் இருக்க வேண்டுமானால் அதன் தலைவர் சிறிதளவும் நேர்மை வழுவாமல் நீதி பிறழாமல் நடக்க வல்லவராக இருக்க வேண்டும். அவர் தூய்மையான வெள்ளாடைபோல் சிறிதும் மாசு இல்லாமல் நடந்தால்தான் மற்றவர்கள் ஒழுங்குமுறையை மதித்து நடப்பார்கள். இத்தகு தகுதியைக் கொண்ட தலைவர் தலைமை ஏற்கும்போது மட்டுமே அரசியல் சாக்கடையின் தூர் வாரும் பணி சிறப்புறும்.

    அடுத்ததாக தமிழக உணர்வு குறித்த உங்களது ஐயத்திற்கு விடையளிக்கிறேன். இந்தியா ஓர் ஊர்; தமிழ்நாடு ஒரு தெரு; பழம்பெருமை வாய்ந்த பண்பட்ட தெரு. தமிழ்நாட்டுத் தலைவர்கள் இந்த உண்மையை மறந்து, தமிழர் என்று சொல்லத் தயங்கும் போக்கு நீடிக்குமானால், இந்தியாவின் முற்போக்கிற்கு இடையூறாகத் தமிழ்நாடு மாறும். உலக வரலாற்றை ஆராய்ந்தால் இது இயற்கை என்பது தெரிந்துவிடும். தமிழினம் ஆங்காங்கே வெளிநாடுகளில் படும் பலவகைத் தொல்லைகளையும் இன்னல்களையும் நினைத்துப் பாரதியார் பதைபதைத்துக் கூறும்

    ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
    தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்
    பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
    பற்பல துவினும் பரவியிவ் வெளியே
    தமிழச் சாதி தடியுதை உண்டும்
    வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
    பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
    செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
    பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
    நாட்டினைப் பிரிந்த நலிவினால் சாதலும்
    இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;
    தெய்வம் மறவார் செய்யுங்கடன் பிழையார்
    ஏதுதாம் செயினும் ஏதுதான் வருந்தினும்
    இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்
    என்பதுஎன் உளத்து வேரகழ்ந் திருத்தலால்
    என்னும் கவிச்சொற்களும் இன்றைய நிலைக்கு ஏறக்குறைய பொருத்தமாகவே உள்ளன.

    இவ்வாறு வெளிநாடுகளிலும் தொல்லைபட்டுச் செத்து மடிந்தாலும், நல்ல நெறியில் நடக்கும் மக்களாக இருத்தலால் தமிழர்க்கு இறுதியில் வெற்றி கிடைக்கும் எனப் பாரதியார் நம்பினார். ஆயினும் அந்த நம்பிக்கை தளர்ந்தது என்பதை உள்நாட்டில் தமிழர்க்கு இடையே உள்ள பிளவை எண்ணும்போது உணர்ந்து வருந்தலானார்; கலங்கினார். எனினும்,
    ‘இப்பெருங் கொள்கை இதய மேற்கொண்டுகலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும் செய்தி ஒன்றதனைத் தெளிவுறக் கேட்பாய் என்று உள்ளம் நொந்து, பெருமூச்சுவிட்டுக் கூறலானார். பாட்டை முடிக்கும் நிலையில் மீண்டும் விதியை நோக்கி

    . . . . நம்மவர் எப்படி உய்வர்?
    விதியே! விதியே! தமிழச் சாதியை
    என்செயக் கருதி யிருக்கின் றாயடா?

    என மகாகவி பாரதி முறையிடுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதியின் இந்த எண்ணங்களை மனதில் கொண்டு, இந்நிலைமாறவும், தமிழக மீனவர்கள் இலங்கை நாட்டு இராணுவத்தின் இன்னலுக்கு ஆளாகாதிருக்கவும், முள்வேலிக்குள் வாழும் தமிழர்கள் விரைவில் விடுதலை பெறவும் நம்முடைய புற வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

    இன்றைய நிலையில், உலகமயமாக்கல், தனியார்மயமாதல், தாராளமயமாக்கல், என்ற கோட்பாடுகளால் நாகரிகம் என்னும் பெயரில் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் நாசகரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். உணவுக்காகவும், இருத்தலுக்காகவும் நாம் மூத்தகுடிகள் போரைத் துவங்கினர். பண்பாட்டின் உச்சத்தில், போரிலேயுங்கூடச் சில நெறிமுறைகளை மேற்கொண்டிருந்தனர். ஆநிரை கவர்தல்; அதனை மீட்க எழும் சண்டையில் வெற்றி கொள்ளுதல் என்ற நிலையோடு குறைந்த அளவே பாதிப்பு இருந்தது.

    புறநானூற்றில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான், பகைநாட்டை முற்றுகையிடுதற்கு முன் “”பசுக்களும், அந்தணர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டோரும், தென்புலத்தார்க்கு உரிய கடன்களைச் செய்தற்கெனப் புதல்வர்கள் வேண்டும், அத்தகு புதல்வர்களைப் பெறாத பெற்றோரும் ஆகிய இவர்கள், பாதுகாவலான இடத்திற்குச் சென்றுவிடுங்கள்”” என அறிவிப்பு செய்கிறான். பகையரசனுக்கும் அறம் கூறுவதுபோலவே உள்ளதால்தான் ‘அறத்தாறு நுவலும்’ என்ற சொற்களைப் புலவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதையே மதுரையை எரிக்கும் முன்னர் மேற்கூறியவர்களைத் தவிர்த்து மற்றவர்களை தீ எரிக்கட்டும் என கண்ணகி கூறுவதாக புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் வடித்திருப்பார்.

    போரை நடத்தச் சிறந்த திறமை வேண்டுமாம்! அதற்காக அளவற்ற செல்வத்தைச் செலவழிக்க வேண்டுமாம்! எங்கள் படைகள் இவ்வளவு, போர் விமானங்கள் இத்தனை, போர்க் கப்பல்கள் இந்தளவு என்று பெருமையாகப் பேசுகின்றார்கள். எங்கள் வீட்டில் இவ்வளவு நஞ்சு இருக்கின்றது என்று யாராவது பெருமை பாராட்டுவார்களா? போர்த்தளவாடங்கள் வாங்கவும், இராணுவத்தை வலுப்படுத்தவும் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு அதிகபட்ச நிதியை ஒதுக்கி வருவதை நம்மால் காண முடிகிறது. (இராணுவத்தில் அதிகமான இலஞ்சம் வாங்க, ஊழல் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறதோ என ஐயுறும் வகையில் தற்போதுவரும் செய்திகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன.)
    ‘ஐந்து பைசாவுக்கு பிரயோஜனம் இருந்தால் சொல்லுங்க’ என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. எங்கும் எதிலும் பலனை எதிர்பார்த்தே பயணிக்கிற மக்கள் நிறைந்த உலகில், அதுபோலவே கூறும் அறிவுரைகளை ஏற்று நடப்பதால் பலனுண்டா? என்று கேட்கிறவர்களே அதிகமாக உள்ள உலகில், அறநெறியில் நடப்பவர்களில் நூற்றுக்கு எத்தனைபேர் தாழ்ந்து விடுகிறார்கள். அறநெறியில் நடக்காதவர்களில் நூற்றுக்கு எத்தனைபேர் உயர்ந்து விடுகிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அவ்வாறு கணக்கிட்டுப் பார்க்காத காரணத்தால்தான் இளைஞர்களின் மனம் அவசரப்படுகிறது.

    தீயவழியில் நடப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து பேர் கெட்டுப் போகிறார்கள். யாரோ ஒரு சிலர் நூற்றுக்கு ஒருவர் இருவர்தான் செல்வம் பெறுகிறார்கள்; பதவி பெற்று உயர்கிறார்கள். அவர்கள் விதிவிலக்காக முன்னேறியவர்கள். அவர்களைப் போல் பலர் ஆவதில்லை. வேறு காரணங்களால் அவர்கள் முன்னேறினார்கள் என்பதை இளைஞர்கள் மறந்துவிடுகிறார்கள். அவர்கள் இன்னொரு வகையாகவும் எண்ணிப் பார்க்க வேண்டும். கிழக்கே ஒருவழி, மேற்கே ஒருவழி, கிழக்கு வழியில் போனவர்களில் பெரும்பாலோர் சிறு நன்மையாவது அடைகிறார்கள். மேற்கு வழியில் போனவர்களில் பெரும்பாலோர் அழிகிறார்கள்; ஒரு சிலர் மட்டுமே சிறப்பாக இருக்கிறார்கள். புதிதாக வருவோர்க்கு எந்த வழி நல்லது என்று சொல்வோம்? மேற்கு வழியில் யாரோ ஒரு சிலர் மட்டும் சிறப்புப் பெறுவதைப் பார்த்து, அந்த வழியில் போகுமாறு ஒருவருக்கும் அறிவுரை சொல்லமாட்டோம்.

    அதுபோலவே, எவ்வளவோ நன்மை வருவதுபோல் தோன்றினாலும், தவறான வழியை பிறர்க்குக் காட்டக் கூடாது. நாமும் ஏற்கக் கூடாது; அறநெறியை விட்டு விலகக் கூடாது என்பதைத் தெளிவாக உணர வேண்டும். அறநெறியால்தான் இன்பம் பெறமுடியும் என புத்தர், திருவள்ளுவர் முதலான சான்றோர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தம் வாழ்க்கையனுபவத்தால் கற்ற உண்மைகளை நம் நன்மைக்காகத் தந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கண்மூடி வாழ்ந்தவர்கள் அல்லர்; எண்ணங்களால், அனுபவங்களால் தெளிந்த உண்மைகளை நாமும் உணர்ந்து நடக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    இன்னும் எளிமையாகக் கூறவேண்டுமானால், மின்விளக்கு, மின்விசிறி, வானொலிப்பெட்டி முதலியவற்றை இயக்குகிறோம். பழுதுபார்க்கிறோம். சில அடிப்படை விதிகளை நம்பிக்கையோடு கற்றுக் கொண்டு அவற்றை நம்பி அந்தக் கருவிகளை இயக்கிப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு விதியையும் அலசி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்க நேரம் இல்லை. ஆகவே நம்புகிறோம்; கற்கிறோம். அறநெறிகளை அப்படி நம்புவதே நல்லது. ஏன் என்றால் சான்றோர் பலர் இவற்றைத் தன் வாழ்க்கையில் பயின்று பயன்பெற்று நற்சான்று வழங்கியிருக்கிறார்கள்.

    திருக்குறளில் கூறியுள்ள ஒவ்வொரு சிந்தனையையும் செயல்படுத்தினாலே நாட்டில், மக்களிடத்தில் பல்வேறு குழப்பங்களைத் தெளிவாக்க முடியும். சுருங்கக் கூறின், அன்பில் நெகிழ்வு, அறிவில் தெளிவு, ஆக்கத்தில் ஊக்கம், வாழ்வில் எளிமை, உண்மையில் உயிர்ப்பு, உழைப்பில் ஓய்வின்மை, கொள்கையில் உறுதி, இயற்கையில் ஈடுபாடு, துன்பத்தில் துணைநிலை, புலமையில் ஆழம், ஆராய்ச்சியில் நடுநிலைமை, இல்லத்தில் துறவு, பதவியில் பகட்டின்மை, புரட்சியில் முதன்மை, பண்பில் சால்பு, அறத்தில் நம்பிக்கை, புகழில் மயங்காநிலை, செல்வத்தில் செருக்கின்மை, விளம்பரத்தில் விருப்பின்மை என எளிமையைப் பின்பற்ற எல்லாம் நலமாகும்.

    ஒரு பயன்பாட்டுக்கு ஒரு வேலை என்ற நிலையில், நாகரிகம் வளர்ந்த இன்றைய நாளில் ஒரு பயன்பாட்டுக்காக மூன்று அல்லது நான்கு பணிகளைச் செய்து மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் கெடுத்து வருகிறோம். எடுத்துக்காட்டாக, வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், முன்னாளில் காலைக் கடன் கழிக்க சிறிது தூரம் நடந்து சென்று வயலுக்கு உரமாக்கிவிட்டு வருவோம். அதனைக் கால்கழுவுதல் என்பர். இன்றோ, வீட்டுக்குள்ளேயே கழிவறையை வைத்துக் கொண்டு காலையும் கழுவி, உணவுப் பொருளில் ஏற்பட்ட நாகரிக மாற்றத்தால் கழிவறையையும் சேர்த்துக் கழுவி, ஓரிரு ஆண்டுகள் ஆன நிலையில், கழிவறைத் தொட்டியை சுத்தப்படுத்தும் முயற்சியில் வாயு தாக்கி தொழிலாளி மரணமுறுகிற அவலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    இயந்திரங்களைச் சார்ந்து வாழாத அன்றைய நாளில், காலையில் எழுந்து காலார நடந்து பணிகளுக்கு நடந்து செல்வது, கிணற்றிலிருந்தோ, ஊருணியிலிருந்தோ குடிநீர் கொண்டுவருவது, குளங்களில் கிணற்றில் குதித்து நீச்சலடித்து குளிப்பது என செய்யப்படும் ஒவ்வொரு வேலையும் நம் உடலுக்கு வலிவையும், பொலிவையும், நலத்தையும் அளித்தது. தற்போதைய நிலையில் இதனைச் செய்ய, வீட்டிலிருந்து இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பயிற்சிக் கூடத்திற்கு (Gym) செல்கின்றனர்.

    இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, விலைஉயர்வு, வாகனத் தேய்மானம், வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு தீமைகளை நம்மை அறியாமலேயே நாம் செய்து வருகிறோம் என்பதை உணர வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள நடைப்பயிற்சி இயந்திரம்(Treadmill Practice,)  போன்ற இயந்திரங்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு ஏராளமானவற்றை நாம் விரயமாக்கி வருகிறோம்.

    நுகர்வுக் கலாச்சாரத்தால் துர்நாற்றம் மிகுந்த தூர்வார இயலாத சாக்கடை வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இதற்கு அங்காங்கே கொட்டப்பட்டுள்ள ஞெகிழி (Plastic) குப்பைக் குவியலும், கொசுப் பெருக்கமும் சான்றாகும். வீட்டுக்குப் பின்னாலேயே குப்பை கொட்டப்பட்ட காலத்திலும், ஆடுமாடுகள் வீட்டிலேயே வைத்து வளர்க்கப்பட்ட நிலையிலும் கூட இவ்வளவு கொசுக்களின் பெருக்கம் இருந்ததில்லை.

    சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இயந்திரங்களைச் சாராத வாழ்க்கையால் பெண்களுக்கு சுகப்பிரசவமும், ஆண் பெண் இருபாலாருக்கும் உடல் பருமன், சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, இருதயக் கோளாறு என எந்த நோயும் வந்ததில்லை. இன்றைய நாகரிகத்தினால் நோய்கள் பல்கிப் பெருகியுள்ளதையும் ‘கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்று’வதைத் தவிர்த்து, பழைமையின் பயன்பாடுகளை, நாட்டுக்குரிய நலன்களை நாமும் சமூகமும் நினைவில் கொண்டு செயல்பாட்டால் சமூகத்தின் அத்தனை அவலங்களையும் அழித்தொழிக்க முடியும்.

    முதல்நாள் இரவு சமைத்த உணவில் நீரையோ, வடித்த கஞ்சியையோ ஊற்றி வைத்தஉணவை மறுநாள் சாப்பிடுவதை நம் முந்தைய தலைமுறை நடைமுறையில் கொண்டிருந்தது. நம் தலைமுறையில் சிற்றுண்டிகளுக்கு முதன்மை கொடுத்து அந்த உணவு முறையை மறந்து விட்டோம். ஆனால் இன்றைய நாளில் வெளிநாட்டு விஞ்ஞானிகள் அந்த உணவு குறித்து ஆய்வு செய்து, அந்த உணவில் நோய் எதிர்ப்பு சக்தி, வெள்ளையணுக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் காரணிகள் என உடலுக்கு நலம்பயக்கும் பல்வேறு கூறுகள் அதில் உள்ளதாகக் கண்டுள்ளனர். இது குறித்து இன்றைய பத்திரிகைகள் பக்கம்பக்கமாய் எழுதி வருகின்றன. இதுகுறித்த செய்திகள் முகநூலிலும் டுவிட்டரிலும் வலம் வருவதாகவும் நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். அநேகமாக முகநூல் பயன்படுத்தும் நீங்கள் அத்தகு செய்தியைப் பார்த்திருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

    நம்முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகளான நிலபுலன்கள், வீடுவாசல்கள், நகைதிரவியங்கள் ஆகியவற்றை அனுபவிக்கிறோம். சில சமயங்களில் உரிமைகொண்டாடி அனுபவிக்கும் பொருட்டு சொந்த பந்தங்களோடு சண்டையிட்டுவது, நீதிமன்றத்தை அணுகித் தீர்வு காண்பது என்றெல்லாம் நம்மை ஆட்படுத்திக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த இயற்கைக் சூழலோடு இயைந்த, பல்லுயிர் நலம் சார்ந்த, மண்ணும் மக்களும் பயனுறும் வாழ்க்கை வாழ மட்டும் மறுக்கிறோம். இப்படி ஏராளமாகக் கூறலாம். இந்தக் கடிதத்தில் ஒருசில வாழ்க்கை நெறிகளை என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் விளக்கியுள்ளேன். இத்தகு எழுச்சிமிகு சிந்தனைகளை என்னுள் விதைத்த சமூக இலக்கியச் சான்றோர்களின் எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆத்திகம், நாத்திகம், புரட்சி, பொதுவுடமை, உடலோம்பல், சுற்றுச்சூழல், கொலை, களவு, காமம், பொய் முதலிய ஒழுக்கக் கேடுகளைத் தவிர்ப்பது, தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவது, இலஞ்சம், ஊழல் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பது, பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் போன்றவற்றிற்கான எனது பதில்கள் இக்கடிதத்தில் விடப்பட்டுள்ளன என்பதையும், அதுகுறித்து அடுத்தடுத்த கடிதங்களில் நிச்சயம் எழுதுகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எல்லாவற்றுக்கும் உங்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். திரிசடைக்கு என் வாழ்த்துகளையும், விசாரிப்புகளையும், தெரிவிப்பதோடு அவளுக்கு சில தினங்கள் கழித்து கடிதம் எழுதுகிறேன் என்பதையும் தயவுசெய்து தெரிவிக்கவும்.

    என்றும் நன்றியுடன்,
    ச. பொன்முத்து.

    Share
  • அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி!

    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

    அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி!

    காதலின் மொழி ஒன்று நம்மிடையே கலந்திருப்பதால் காலமெல்லாம் சுகம்! சுகமே!!  அன்பின் நெருக்கத்தால் என்னுள் அணுக்களாகி என்றும் கலந்திருக்கும் இனியவளே.. உனக்கான மடல் எழுதுவதென்பது எத்தனை சுகம் தெரியுமா? அது ஒன்றும் ஏட்டினில் எழுதுகோல் செய்திடும் அசைவுகள் அல்ல.. என் இதயத் துடிப்பின் பதிவுகள்!  மட்டிலா மகிழ்ச்சி பொங்க என் மனராணிக்கு இடம்பெயர்ந்து வாழுகின்ற இவ்வாழ்க்கையின் பக்கங்களிலிருந்து நான் வீசுகின்ற சாமரம்!  பிரிவு என்பது சுகமான வேதனைதான்!  உறவின் பெருமையை பறைசாற்ற பிரிவு வேண்டும் என்றுகூட நான் நினைப்பதுண்டு!  அருகில் இருக்கும் போது தெரியாத அருமையெல்லாம் அன்பே உன்னருகே நான் இல்லாதபோதே பெரிதும் உணர்கிறேன்!  கண்ணே.. மணியே.. அன்பே.. அமுதே என்று ஆயிரம் முறை எழுதினாலும் அனைத்தும் என் மனதில் நின்றிருக்கும் மணிமொழி உனக்கானது என்பதை நீ அறிவாயல்லவா?

    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்கிற கவியரசு கண்ணதாசன் பாடல் மொழிந்திருக்கும் அத்தனை வரிகளையும் வாழ்ந்து காட்ட வேண்டுமடி! கற்பனைகளில் மட்டும் இந்த மடல் பூத்துவிடுவதில்லை!  கனவுகளில் மட்டும் இந்த உலா நின்றுவிடுவதில்லை! சொந்தம், பந்தம், நேசம், பாசம் என்று பல சொற்களால் அழைக்கப்படும் அன்பிற்கு இலக்கெல்லாம் நீயென்கிற உரிமையிருக்கிறதே.. அதைத்தானே இப்பிறவியின் பெரும்பாக்கியமாய் கருதுகிறேன்!  சிரபுஞ்சிமழைபோல சில்லென்று பொழியும் அந்த இன்பநினைவுகள் என்னை எந்நாளும் உன்னோடு இணைத்துவைக்கும்! குற்றாலத் தென்றலோடு நாம் நடந்துபோன அந்தப் பாதை நினைக்கும்போதெல்லாம் இன்பக்கதைகள் சொல்லும்!  பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்து மறைவதில் லாபமென்ன?  கட்டாயம் நாம் அதைத்தாண்டி வாழ்ந்துகாட்டுவோம் என்கிற உன் வார்த்தைகள் என்னை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகாட்டச் சொல்கிறதே!!

    புரிதல் என்பதன் முழு அர்த்தமும் புரிந்தவள் நீ என்பதால் வாழ்க்கை எனக்கு சொர்க்கமானது என்று நான் சொல்லிய நாளில் என் தோள்மீது வந்து சாய்ந்து “போதுமடா.. இந்த ஒரு வாக்கியம்” என்றாயே.. மறப்பதில்லை! நீண்ட நெடிய வாழ்க்கையில்.. நீயும் நானும் சந்தித்தது இடையில்தான் என்கிற ஒரு குறையைத்தவிர.. நமக்கென்ன குறை என்று நான் கேட்க.. எதற்கு அந்த குறையும்.. என்று குழந்தைபோல் இருவரும் விளையாடிவிட்டால் போகிறது என்றாய் நீ!  அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்கிற வள்ளுவன் குறள்விளங்க வாழ்ந்துகாட்டுகிற உன்னை.. அடைந்தது என்பது என்றைக்கோ நான் செய்த தவம் என்பேனா? இல்லை.. இறைவன் எனக்குத் தந்த வரமென்பேனா?

    ஒரு நாள் என்பது மறுநாள் போல் இல்லை என்கிற நியதியை மாற்றி.. முதல்நாள் போலவே நீ என்றும் என்னுடன் என்பது என் அதிர்ஷ்டமன்றி வேறென்ன?  பிறந்தாய்.. வளர்ந்தாய்.. கனிந்தாய்.. இனிதாய்.. என்னை மணந்தாய்.. என் வாழ்வில் புதிதாய் இணைந்தாய்! அமிழ்தாய் மொழிந்தாய்! அன்பைப் பொழிந்தாய்! இன்பம் சுரந்தாய்! இதயம் திறந்தாய்! சுகம் தந்தாய்! சொந்தம் என்றாய்! சொல்லி மகிழ்ந்தாய்! ஸ்வரம் பாடினாய்!  உள்ளம் இனித்தாய்!  தொட்டுக் களித்தாய்! தொடர்ந்து சுவைத்தாய்! தேகம் தீண்டினாய்!  தேன் கலந்தாய்! நாணத்தில் நகைத்தாய்! பூமுகம் சிலிர்த்தாய்!  புன்னகை உதிர்த்தாய்! அன்பே என்றாய்! அள்ளி அணைத்தாய்! அடுத்து எடுத்தாய்! உச்சி முகந்தாய்! உள்ளம் குளிர்ந்தாய்! என்னில் நீயும் இத்தனைத் தாயானாய்! உன்னையே எண்ணியே நானுமே வாழ்கிறேன்! உள்ளங்கள் நெருங்கியே நித்தமும் சாய்கிறேன்!  கவிதைமலர்களால் காலம் முழுவதும் அர்ச்சனை செய்கிறேன்! காலையோ மாலையோ.. நாளும் பொழுதுமே.. உன்னில்தானே இரண்டறக் கலக்கிறேன்!!

    சித்திரம்போல் சிரிக்கின்ற என் முத்தழகே! என் இதயத்தில் விழுந்த உன்னை நான் எப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் தெரியுமா? பிறகென்ன.. நாளும் பொழுதும் உன்னுடனே உறவுமலர் பூத்தது!  உள்ளத்தில் சந்தோஷ சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது! தினம்தோறும் இன்பவிழா நடந்தது! இதயம் மகிழ்ச்சியிலே மிதந்தது! என் வானம் வண்ணமயமாய் விடிந்தது. ஒற்றைச் சொல் என்றாலும் உந்தன் சொல் என்றால் உயிர்ச்சொல்லானது!  கட்டிமுடித்த காதல் மாளிகையில் உன்னோடு என் காலம் கழிந்தது! யார் கண் பட்டதோ.. பிரிவின் வலியில் நெஞ்சம் துடித்தேன்! அப்போதுகூட அன்பே உன்னைத்தான் நினைத்தேன்! உடலின் ஏதோ ஒரு பாகத்தில் வலி ஏற்படும்போதும் கண்கள் கலங்குவதுதானே இயற்கை! அப்படித்தான் உனக்கும் இதயம் வலிக்குமே என்று எண்ணியபோதே நான் கலங்கிப்போனேன்!

    பாத்திரப்படைப்பின்படி நீ எனக்கு என்றும் நான் உனக்கு என்றும் படைக்கப்பட்டிருந்தாலும் இந்த உறவை எப்படி நடிப்பென்று நாம் கொள்ள முடியும்? வந்துபோவதுதான் வாழ்க்கை என்கிற வறட்டுத்தத்துவங்களை வழங்கிக் கொண்டிருக்காமல்.. வாழ்ந்துகாட்டுவது என்கிற வைராக்கியம் கொண்டு வா! வசந்தம் வானவில்லில் மட்டுமல்ல.. வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கிறது என்பதை நெஞ்சத்தின் எல்லாப் பக்கங்களிலும் நிறைத்து எழுதிவை!  மனதிற்குள் உள்ள ஆசைகளை மறைத்து வைத்துக்கொண்டு மெளனத்தோட்டத்தில் நீ செய்யும் ஒத்திகைகள் அம்மாடி.. அங்கேயே நான் தொலைந்துபோகிறேன்.. மெல்லமாய் நீ வந்து “ஊடல் என்பதும் உங்களுக்குப் பிடிக்குமே என்றுதான்” என்று.. என்னிடம் கதையளப்பாயே..  எங்கே சொல்ல அந்த சாதுர்யத்தை!

    மாற்றுவழியேதும் மனதில் வந்துவிடக்கூடாதென்று மளமளவென்று அனைத்துக் கதவுகளையும் அடைத்துவிடுவதும் நீயன்றோ? “பார்த்துக்கொள்கிறேன் என்று வாசகம் உச்சரிக்கப்படாமல்” உன்னுள்! எப்படி கண்டுபிடித்தேன் என்று பார்த்தாயா? அதுதான் உன் கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறதே!!  மறுபடி எப்போது என்று மனம் வருந்தி நான் கேட்டபோது.. வாய்ப்பில்லை இன்னும் சில திங்களுக்கு என்று ஒரு திங்கள் என்னிடம் சொல்ல.. அதைக்கேட்ட நான் அதிர்வில் துள்ள.. வருகிறேன் என்று சொல்லி வாரதிருத்தலைவிட.. வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி வந்துவிடும்போது இன்பம் பன்மடங்கல்லவா என்று எனைப் பரிகாசம் செய்தாய்!  ஆம்.. அப்படித்தான் எங்கே வரப்போகிறாய் என்று ஏங்கிக்கிடந்தபோது.. என் விழிகளை உன் கரங்கள்கொண்டு மூடிவிளையாடினாய்!

    அந்த மென்மையான கைகளின் உஷ்ணரேகைகள் என் உள்ளத்திற்கு தந்த உற்சாக வெள்ளத்தை எந்த அளவுகோலாலும் அளந்துவிடமுடியாது என்றேன்! அப்படியா என்றாய்! இன்றைக்கு இதுபோதுமா என்று வேறு கேள்வி!!  என்றைக்கும் தீராத தாகமடி காதல்..  படியளந்ததற்கு வேண்டுமானால் நன்றி சொல்லலாமே தவிர.. இன்னும் ஒரு பிடி கிடைக்குமா என்கிற ஏக்கத்திற்கு குறைவில்லை என்றேன்!   இன்பத்தின் அகராதியை எப்படி எழுதி முடிக்க முடியும்?

    எண்ண அலைகளில் சிக்கிய எந்த மனமும் இதுவரை அதன் எல்லைகளைச் சந்தித்ததாய் வரலாறில்லை!  சந்திக்க வேண்டும் என்கிற ஆசையும்.. சங்கமிக்க வேண்டும் என்கிற தேடலும் இயற்கையாய் ஆனபின்பு நாம் மட்டும் இதற்கென்ன விதிவிலக்காக ஆக முடியுமா?  ஆசை வழிந்தோடி வருகிற வழியில் எல்லாம் மகிழ்ச்சியின் அலைகள் கவிதை பாட.. இதயக்கடலில் எழுகின்ற அலைகள்.. அங்கே சுகராகம் பாட.. மாலையிளங்கருக்கல் இதமாய் மையலைக் கொண்டாட.. சேலைகட்டிய சிங்காரி உன்வசம் நான் என்னைத் தந்தாக.. முத்துச்சிரிப்பை கொட்டிக் கவிழ்த்து மோகனப் பண்பாடும் உன்னை முற்றிலும் கவர்ந்த கள்வன் என்பதில்தான் எத்தனைப் பெருமையோ எனக்கு!!

    கள்ளச்சிரிப்பில் உள்ளம்திருடிய உங்கள் செயலில் எனக்கும் பங்குண்டு என்பதாலே நடந்திட்ட திருட்டில் பாருங்கள் உங்கள் இதயம் என் வசம் என்று ரகசியமாய் காட்டினாய்! இன்பக்கனல் மூட்டினாய்! நாளை சந்திப்போம் என்று நகர முயன்றாய்! நல்லது.. நாளைவரை.. என்று நானிழுக்க.. நாணத்தில் உன் பார்வை போர்தொடுக்க.. ஏனத்தான் என்று சொல்லி இறுக அணைத்தாய்! போதும் எனும்வரை போவோமா என்றேன்.. போகக்கூடாது என்பதற்கு இப்படி ஒரு பொருளா என்றாய் நீ!  தேவை அறிந்த நீ எந்தன் தேவதையாய் தெரிந்தாய்!

    அன்பெனும் யாழ்மீட்டி இன்பராகங்கள் கூட்டுகின்ற இதயம் கொண்டவள் நீயென்பதால் எனக்கென்ன .. நான் ஒரு ராகமாளிகையில் வசிக்கிறேன் என்பதாக உணர்கிறேன்! நீ அழைக்கும் போது கூட ஒரு இன்பலயம் பிறக்கும்! ஸ்ருதிபேதமில்லாத பயணம் என்பதால் என் மனதில் என்றென்றும்  தென்றலடிக்கும்!  கவலைகள் ஏதும் என்னை அண்டுவதில்லை.. காரணம் உன் நாமாவளிகள்!  உதடுகள் அதையே முணுமுணுப்பதால் இதயதேசத்தில் ஆனந்த பைரவி..  ஆளப்பிறந்தவள் நீ என்பதால் அடிமையாகவும் நான் சம்மதிக்க.. அன்பில் சிறந்தவள் நீ என்பதை நிரூபித்து என்னை ஆதரிக்கும் உன்னை என்ன வார்த்தை சொல்லிப் பாராட்ட? நெஞ்சக்கமலத்தில் நீ வீற்றிருக்கும் பேரழகை.. எந்தக் கவிதையில் முழுமையாக நான் பதிவுசெய்யப் போகிறேன்? அது சாத்தியமா? சொல்லிலே அடங்கிடாத அழகு அது.. சொல்லத்தான் முயன்றாலும் கொஞ்சம்தான் என்றாக.. பார்வையின் பதிவுகளே பக்கம் பக்கமாய் நீள.. வேறெதை நான் இங்கே எழிலென்று கூற? 

    ஒரு பார்வை சொல்லும்.. மொழியை உள்வாங்கி உயிர்மெய் எழுத்துக்களில் உலவ வைத்து ஊர்வலம் போகின்றேன் பாரடி நீ!  காதலின்பம் யாது என்று அறிந்த நாள் முதல் கண்ணருகே ஓவியமாய் நீ தெரிந்த நாள் முதல்.. வேறு மனச் சிந்தனைகள் ஏதுமில்லையே? கொள்ளையிட்ட உன் மனதைக் கொஞ்சும் கோலங்கள்.. கோடையிலும் என் மனதில் குளிர்காலங்கள்! ஆவியிலே கலந்துவிட்ட ராகபாவங்கள்.. அனுதினமும் எனைவந்து சூழும் நினைவு மேகங்கள்!!   தொட்டவுடன் துள்ளல்தரும் பவளமல்லிகை.. நீ கிட்டவந்து கட்டிக்கொண்டால் நித்தம் புன்னகை! அடிமனதில் குடியிருக்கும் அன்புத்தாரகை.. நீ ஆதரித்தால் என்றும்தானே ராஜபேரிகை!!

    மொட்டவிழும் நேரம் நோக்கிக் காத்திருக்கவா.. பின்பு தொட்டணைத்தல் போதுமென்று பார்த்திருக்க வா.. விட்டுவிட்டு நீ சென்றால் விழிகள் வலிக்குமே! விரசமின்றி சரசம்பயில நெஞ்சம் துடிக்குமே!! மனக்கதவை திறந்து வைத்த கள்ளி யாரடி?  நீ மறுபடியும் மறுபடியும் என்னைப் பாரடி!!  மோகனங்கள் கூடுவது தாகம் தீரவா? தேகமது வீணையென இங்கு மாற வா!!  கார்குழலில் வெள்ளைமாளிகை கட்டுகின்றாயே.. அது மல்லிகையின் மற்றுமொரு பரிமாணமா? துள்ளிவரும் என் மனதை நீயும் அள்ளிக்கொள்ளடி! நீ தொட்டவுடன் ஆறுமந்த அனலைப் பாரடி!!

    உன் கால்சலங்கை சொல்லுகின்ற ஜதியில்தானடி.. நான் எழுதும் கவிதையிது நடந்து பார்க்குமே! தேனளந்து தருகின்ற இதழ்கள்கூடவே தித்திக்க வேண்டுமெனில் இங்கு வருகவே என்று தாமாகத் தேடி எனை நாடி அழைக்குமே!! போர்க்களத்தில் வீரமது வெற்றிகொள்ளலாம்!  உன் புன்னகைபூத்த முகத்தின் முன் அதுவும் தோற்குமே!!  கேட்ட வரம் தருவதற்கு நானும் வரட்டுமா? நீ கேட்காத சுகங்களையும் அள்ளித்தரட்டுமா?  சுற்றிவரும் பூமியினை நிற்கச் செய்வதும்.. சுழல்க என மறுபடியும் அருளச் செய்வதும் சத்தியமாய் நீ தரும் வாசகத்தில்தான் என்னுலகம் இருப்பதனைச் சுட்டிக்காட்டினேன்!  கட்டழகு தேவதையே.. கருணையதன் பூமழையே..  இனியுந்தன் விருப்பம்போல் இதயத்தைக் கொண்டுவா! இன்பப்பயிர் விளையட்டும்!! இருவர் உயிர் ஒன்றட்டும்! இமைமூடும் நாள்வரையில் இருவரல்ல ஒருவரென வளர்காதல் நாம் வளர்ப்போம்!

    இந்தப் பிறவியில் உந்தன் உறவிது ஒன்றுதான் உள்ளத்தின் கொண்டாட்டம் என்று உணர்கிறேன்!  ஒருவேளை உன்னை நான் சந்திக்காதிருந்திருந்தால் என் வாழ்க்கை சஹாரா பாலைவனம் போலன்றோ இருந்திருக்கும்!  மீட்டும் ஸ்வரஸ்தானம்.. மகிழ்ச்சியலை.. மாறாத புன்னகை.. உள்ளம்தொடும் உயிரின் வாசம், உங்களுக்காக என்று காத்திருக்கும் உன்னதம்.. எதை நான் இன்னும் பெரிதாகக் கருதமுடியும்?  வரிவரியாக.. எழுதிக் குவித்தாலும் மாளாத காதல் நாம் கொண்டது!  ஆதாம் ஏவாள் காலம் தொடங்கியே இந்த பரிமாற்றம் தொடர்ந்தாலும் ஒவ்வொரு காதலிலும் அது புதுப்பிக்கப்படுகிறது!  நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு நொடியிலும் அது உணரப்படுகிறது என்பதுதான் பெருமையே!

    இத்தனை நீளமாய் நான் மடல் எழுதியபின் நான் வேறென்ன எதிர்பார்க்கப் போகிறேன்.. அன்பின் அளவீடு என்று நாம் எதையும் சொல்லிவிட முடியாது என்றாலும் இந்த மடல்கள் அன்பிற்கு குறியீடுகளாய் காலத்தால் கணக்கில் கொள்ளப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு! எங்கே நீ எழுதும் மடல் எப்போது என்னை வந்தடையப்போகிறது என்கிற கனவில் இப்போது நான் மூழ்குகிறேன்!!

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயி றூறிய நீர்.

    வள்ளுவன் தந்த குறள்கள் ஆயிரமே இருந்தாலும் நாம் வாய்மொழிய வேண்டிய குறள் இதுதானே என்றொரு குரல் கேட்கிறதே.. உனக்குக் கேட்கிறதா?

    அன்புடன் கவிச்சந்திரன் 

    மு.இரவிச்சந்திரன் (காவிரிமைந்தன்)

    பி.கு:  அன்பே, ஆருயிரே, என் கண்ணின் மணியே.. மொழியில் தமிழமுதே, இடைத் தேர்தலை  ஏதோ  எடைத்  தேர்தல் போல்   ஆக்கிவிடாதே   என்  மெல்லிடையாளே!

    இது உன் இடைத் தேர்தலில் என் காதல் சின்னம்  வெற்றி முத்திரை இடுவதற்கான ஒத்திகை என்பேன் …..)

    Share
  • திருமால் திருப்புகழ் (42)

    கிரேசி மோகன்

     

    Vishnu-Vishwaroopam

    தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான….

    —————————————————————
    முனிகள் நார தாதீயர், அசுர தேவ பாதாளradhe-krishna
    உலகு ளோரும், பூலோக -உயிர்யாவும்,
    நிதமும் சூரி, ஆழ்வார்கள், யமுனை ராசலீலாவில்
    முழுகும் கோபி காமாதர்,-நவநீதம்,

    இனிய பாலும், மோர்பாகு, கனிகள், பீலி பீதாம்ப
    ரமமும், மேயும் கோமாதும்,-வனமாலை,
    சுழலும் ஆழி, கூராழி, சிலையும், கோலும், வாளோடு,
    துயிலும் சேட னார்,சேர -சிறுபாதர்

    அனுமன், ஈசர் மாகாளி, ரிடப தேவர், யாழ்வாணி,
    அயனும், வேட ஆலோலம -விளிமாது,
    அமர ஜாதி தேவானை, அழகு வேலர், ஓரானை
    முதலி லோட மேலோர்கள் -புடைசூழ,

    பணிய மேவு, பாலாழி வனிதை மூவர் யோகேச.
    நெடிய நீல மாலோல,-அவதாரம்
    மனித வாம னார்சீயம் மறைவ ராக மீனாமை
    ஹரிமு ராரி மூராம -பெருமாளே

    ——————————————————————————————–

    Share
  • அன்புள்ள மணிமொழி

    பாரதி

                                                                                      31-03-2014

                                                                            4, அக்ரகாரத்தெரு,

                                                                          சென்னை.

    அன்புள்ள மணிமொழி,

    இன்று ஒவ்வொரு வீட்டிலும் கணவன்,மனைவி வீட்டில் சண்டை போடுவதை நினைத்து தொலைக்காட்சியில் பார்த்து நாம் எத்தனை முறை மகிழ்ந்து சிரித்திருப்போம். அப்படியெல்லாம்கூட ஈகோ வருமா! என்ன! என்றுகூட நீ கேட்டாயே?

    நான் சொன்னேன்! பணம் காசு இன்று வரும் நாளை போகும்! ஆனால் மாறாத அன்புள்ளம்கொண்ட இல்லத்தரசி வாய்ப்பதுதான் ரொம்ப கஷ்டம்.

    இப்படியெல்லாம் எத்தனைமுறை பேசியிருப்போம்.

    ஆனால் ஒரு சிறு விஷயத்திற்காக என்னிடம் ஏனம்மா இவ்வளவு கோபப்பட்டாய்??நான் செய்தது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இருவரும் வழக்கம்போல கோவிலில் உட்கார்ந்து பேசுவோமே?அதை விட்டுவிட்டு இதென்ன புதுப்பழக்கம்…….நீ மட்டும் கோவிலுக்குத் தனியாக என்னைவிட்டுச் சென்றுவிட்டாய்? எங்கு சென்றாலும் உனது தலையலங்காரம் நான்தான் செய்துவிடுவேன். எனக்கு முடி இல்லை என்றாலும் ஆண்டவன்கிட்டபோய் கேட்டுக்கறதுதானேன்னு சிரிக்கச்சிரிக்கப்பேசுவாயே! ஒருநாளாய் எனக்கு ஒருயுகமாய் இருப்பது உனக்குத் தோணலையா!

    நான் என்ன பிரமாத தப்பு செய்துட்டேன்னு என்கிட்ட கோபிச்சுக்கிட்டு போய்ட்ட….சும்மா ஒருநாள் நான் சமைச்சுக்காட்டுறேன்னு சொன்னேன்.அதுக்கே இப்பிடிப் பண்றியே……நான் செத்ததுக்குப்பிறகு செஞ்சுக்கோங்கன்னு அலுவலகசுற்றுலான்னு எதுத்த தெருக்கோயிலுக்குக் கிளம்பிட்டியே………..என்னுயிர் கண்ணம்மா என பாரதி பாட்டைப் பாடத்தோணுதும்மா……..உன்புடவை இங்கே படுக்கையில் காற்றில் அசையறப்ப நீ கூப்பிடறமாதிரி இருக்குடா…எத்தனைவருட தாம்பத்தியம்டா உனக்கும்,எனக்கும்….50 வருஷம் அடுத்த வருஷம் வந்தா…….உனக்கு உடம்புக்கு வந்தா என்னை யாருடா பாத்துப்பான்னு நீ பையன்கிட்டபேசுனதை ரகசியமா நான் கேட்டேன்.அதான் சிம்பிளா சமைச்சுப்பாத்தேன்.கடவுள்கிட்ட கேட்டேண்டா…..எப்பவும்போல ஒண்ணா ரெண்டுபேரையும் எடுத்துக்கச்சொல்லி….எல்லாத்துக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமாடா…..யோசிச்சுப்பாரேண்டா…..நம்ம பிள்ளைங்க தங்கந்தாண்டா……ஆனா எனக்கு நீதானே எல்லாம்…..இத்தோட கடைசி…கடவுள்கிட்ட இரண்டுபேரும் ஒண்ணா செத்துப்போய்டணும்னு வேண்டிக்கோ……..சீக்கிரமா பத்திரமா வந்துடு..பிஸ்கட்மட்டும் இருக்கு…நீ வந்து பண்ணிக்கொடு…பசி தாங்குவேன்.தெருவுல ஒரு பிச்சைக்காரிக்கு நான் செய்தவற்றையெல்லாம் கொடுத்துவிட்டேன்.கோபம் தீர்ந்ததா!

    இப்படிக்கு உனது நினைவால் வாடும் அன்புக்கணவனாகிய தோழன்,

    பின்குறிப்பு-

    இப்படியெல்லாம் பொய்சொல்லி உன்னை வரச்சொல்லி விளையாடலை. நிசமாகவே இருக்கமுடியலை. பக்கத்துல ஒளிஞ்சு கடிதம் எழுதுறத நீ பாத்ததை சன்னல் பக்கத்துல நின்னு பாத்துட்டேன்.எப்ப கோவில்ல இருந்து வந்தே. உன்னாலயும் என்னை விட்டு இருக்க முடியல. கதவைத் திறந்துட்டு வந்துடு.

                                                                         வீரா

    பெறுநர்

    மணிமொழி,

    எதிர்த்த தெரு பார்த்தசாரதிகோவில்,

    சென்னை.

    Share