மக்கள் கேட்கும் கேள்விகள் (4)
பவள சங்கரி
தலையங்கம்
மேன்மைதங்கிய பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு,
தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியபோது எங்களுடைய அடுத்த ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் இந்த ஐந்தாண்டு கால ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இல்லை என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?
உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,
தாங்களும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசியபோது மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும் ஏற்படும் என்று கூறியிருக்கிறீர்கள். ஊழலுக்காகத் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டும், திரு அசோக் சவானை உங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டும், நீங்கள் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு ஏற்படுத்தப் போகிறீர்கள்?
வாக்களிப்போம்!
ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!
விலை போகாமல் வாக்களிப்போம்!!!
ஒவ்வொரு நாளும் திருட்டுத் தொழில் ஈடுபடுபவன், போதும் இனி இந்தத் திருட்டுத் தொழிலைச் செய்யக்கூடாது, நல்லவனாக இருக்கவேண்டும் என எண்ணினாலும், படுக்கையைவிட்டு எழுந்தவுடன் கை நமநமக்கும் எதைத் திருடலாம் என்று. அந்த நிலைமைதான் இனிமேல் ஒழுங்கா நடப்பேன் என்று சொல்லும் வாக்குறுதி.
இரண்டாவது கேள்விக்கு: ஜவஹர்லால் நேரு காலத்திலேயே ஒரிசாவின் முதல்வராக இருந்த பிஜு பட்நாயக் ராணுவத்துக்காக தளவாடங்கள் உற்பத்தி செய்ய ஒரு தொழிற்சாலை தொடங்குவதாக அறிவித்தார். எந்த தொழிற்சாலையும் தொடங்காதபோதே, அவருடைய கலிங்கா டியூப்ஸ் எனும் கம்பெனிக்கு மாபெரும் ஆர்டரை மத்திய அரசு கொடுத்தது. நேரு காலத்தில் வி.கே.கிருஷ்ண மேனன் ஜீப் வாங்க ஆர்டர் கொடுத்ததில் பெருத்த ஊழல் நடந்தது. வீழ்ச்சியடைய விருந்த முந்த்ரா கம்பெனியை தூக்கி நிறுத்த எல்.ஐ.சி. முதலீடு செய்து நிமிர வைத்தது. இந்த ஊழலில் சிக்கிய பிஜு பட்நாய்க், வி.கே.கிருஷ்ண மேனன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்குப் பதவி கிடைக்காமலா போயிற்று. இது காங்கிரஸ் கலாச்சாரம். யாருமே விதிவிலக்கல்ல.
1952 தேர்தலில் நாட்டுக்காக சிறைசென்ற பல தியாகிகளுக்கு காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை. காங்கிரசை முழு மூச்சோடு எதிர்த்த பல பெருந்தனக்காரர்கள் சீட் பெற்றார்கள். பாதிக்கப்பட்ட தியாகிகளில் ஜமதக்கினி, சா.கணேசன் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இப்படித்தான்…..