Blog

  • வாழ்க்கை நலம் – 49

    குன்றக்குடி அடிகள்

    49. இன்னா செய்யாமை

    திருக்குறள் ஓர் அறிவியல் நூல்; உளவியலைச் சார்ந்த அறிவியல் நூல். நெருப்பை அள்ளி அடுத்தவர் வீட்டின்மீது கொட்டினால் கை சுடாமலா போகும்? அது போல் நாம் மற்றவர்களுக்குக் கொடுமை செய்தால் நாம் கெடாமலேயா மற்றவர்களுக்குக் கொடுமை செய்ய முடியும்? அல்லது இயலும்?

    நமது சிந்தனையும் அறிவும் உணர்வும் புலன்களும் கெட்ட பிறகுதான் மற்றவர்களுக்குக் கேடு செய்ய முடியும்.  ஆதலால்,  யார் ஒருவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நமக்குத் தீங்கு செய்தாருக்குங்க்கூட நாம் திரும்பச் செய்யக் கூடாது. இப்படித் தீமைக்குத் தீமை என்னும் சித்தாந்தம் தீமை தொடர் வரலாறாகிவிடும்; தலைமுறைத் தலைமுறைக்குத் தீமை தொடரும், இது விரும்பத் தக்கதன்று.

    எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பே விரும்பத்தக்கது. அது மட்டும் அல்ல. பொறுத்துப் போதல் எளிமையானது. பொறுத்துப் போதல் ஆக்கத்திற்குத் துணை செய்யும்; அமைதிக்குத் துணை செய்யும். அதற்கு மாறாகச் செய்யும் பழிவாங்கும் முயற்சி கடினமானது; அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டிவரும்; இன்பமும் அமைதியும் குலையும்.

    பழிவாங்கும் மனப்போக்கில் பழி பாவங்களுக்குரிய அச்சம் இருக்காது. ஏன் அறிவேகூட வேலை செய்யாது. ஆத்திரம் மட்டுமே வேலை செய்யும்; புத்தி முடங்கிப் போகும். பழிவாங்கும் படலம் துன்பத்தின் தொடர் வரலாறாகிவிடும். எப்போதும் அச்சம், சட்டங்களின் (அறத்தின் – அரசின்) அச்சுறுத்தல் முதலியன ஒருங்கு கூடி வாழ்க்கையை நரகமாக்கிவிடும். பழிவாங்கும் இயல்புடையோனிடம் மனித நேயம் இருக்காது. அவன் கல்நெஞ்சனாக இருப்பான். கடினசித்தம் அவனுடைய சித்தம்! கொடுமைகளின் ஒட்டுமொத்தமான உருவகமாக விளங்குபவனே பழிவாங்குவான்; தீமை செய்வான்.

    ஆனால், மனித நேயமுடையவர்கள், சிந்திப்பவர்கள், வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள்  யார் ஒருவருக்கும், எவ்வுயிர்க்கும் கொடுமை இழைக்கமாட்டார்கள். மாறாக மறப்பார்கள்; மன்னிப்பார்கள்; பகைமை பாராட்ட மாட்டார்கள்; பண்பு நலஞ்சார்ந்து உறவு கொள்வார்கள்.  “நமக்குத் தீங்கு செய்த ஒருவரைப் பழிவாங்க வேண்டுமா? அவருக்கு நம்மையைச் செய்வதன் மூலமே பழிவாங்குக” என்று திருக்குறள் நெறி ஆற்றுப்படுத்துகிறது.

    பழிவாங்கும், கொடுமை இழைக்கும் மனமுடையோருடைய நெஞ்சு கொதித்து நிற்கும்; அறவுரை – அறிவுரைகள் யாதொன்றும் அவர்கள் காதில் ஏறாது. ஆதலால் முதலில் இவனுடைய சினத்தைத் தணிக்க வேண்டும். அவன் சினந்தணிந்த நிலையில் கேட்கத் தகுதியுடையவன் ஆவான்; சிந்திக்க முயற்சி செய்வான். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் முதற்பணி சினந்தணிக்கும் பணியே.

    எப்போதும் கெட்டவர்களைத் திருத்துவதற்குரிய ஆற்றொணாச் சினத்தில் மூழ்கி இருப்போரைத் திருத்துவதற்குரிய முதல்விதி அவர்களை மறுக்காமல் முதலில் அவர்களுடன் கொஞ்சம் உடன்பட்டு நிற்றல் வேண்டும் என்பது. இஃது உளவியல் அடிப்படையின் வாய்ப்பாடு.

    முதலில் கெட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்; திருந்துவார்கள். வாழ்க்கையும் பயனுடையதாகும்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்”
    (திருக்குறள் –  314)

    என்ற திருக்குறளை நோக்குக. இந்தத் திருக்குறளில் “ஒறுத்தல்” “அவர்நாண” என்ற சொற்கள் உடன்பாட்டுச் சொற்கள்.  இந்தச் சொற்களைக் கையாள்வதன் மூலம் பழிவாங்கும் உச்சாணிக் கொம்பிலிருப்பவன் இறங்கி வருவான்.

    அவனுடைய சினம் தணியும் . பழிவாங்கும் மனப்போக்கிலும் மறு ஆய்வு தலைகாட்டும். இந்த இதமான – இங்கிதமான சூழ்நிலையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மகிழ்வான்; மாறுவான்; என்றும் நல்லவனாக இருப்பான்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே….

     
    கவிஞர் காவிரி மைந்தன்

     

    எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! காதல் மன்னன் ஜெமினி கணேசன் திரையில் தோன்றி நடித்த பாட்டு! கற்பனைச் சிறகை விரித்து காதலின் சாம்ராஜ்ஜியத்தைத் தன்னாலும் கட்டியாள முடியும் என்று பட்டுக்கோட்டையார் எழுதி வைத்த பாட்டு! சமுதாய புரட்சிகர கம்யூனிஸ சித்தாத்தங்களை உள்ளடக்கிய பாடல்களின் ஊற்றுக்கண்ணாய்த் திகழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் உள்ளக்கண் திறந்த பாடலிது என்று கூட சொல்லத்தோன்றுகிறது!

    பெண்ணை உவமையிட்டு போற்றி மகிழும் தமிழ் உலகம்! இம்மண்ணில் சொல்லப்பட்ட உவமைகளுக்கு நிகராக வேறெந்த மொழியிலும் பெண் பாராட்டப்படவில்லை. எங்கோ இருந்தாலும் எம் கண்ணில் நிறைவதால், குளிர்ச்சி தருவதால், இரவில் வருவதால், உறவுகளுக்கு உடனிருப்பதால், உனைத் தூதுவிடவும் வைத்தனரே நிலாவே! எழுத்தாணி கொண்டு உனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் கற்பனை புலவர்களுக்கு முற்றிலுமாய் கை கொடுக்கிறதே! காலகாலமாகத் தேய்ந்து மறைந்து மீண்டும் வளர்ந்து வானில் வலம் வரும் முழுமதியே.. எங்கள் மக்கள் கவிஞன் மனதில் பொழிந்த மகரந்தப் பாடல் வரிகளிதோ..
    சந்தனத் தமிழெடுத்து சந்தங்கள் சேர்த்து சதிராட வைத்தபோது சுந்தரமாய் பாடலொன்று பிறந்திடுமே! அதிலும் நிலவைத் துணைக்கழைத்து அருமைக் காதலிக்கு உவமை சொல்லி வரைந்த பாடலிதை இனிமை என்பதன்றி வேறென்ன சொல்ல முடியும்? டி.எம்.செளந்திரராஜன் குரலில் டி.ஜி. லிங்கப்பா இசையில் பட்டுக்கோட்டையார் வடித்துவைத்தப் பட்டுக்கம்பளம்!!

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ

    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
    இளையவளா மூத்தவளா
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
    காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
    கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
    வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
    வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
    கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
    இளையவளா மூத்தவளா
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    பாடல்: என்னருமைக் காதலிக்கு
    திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    ஆண்டு: 1960

     

    http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw
    http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw

     

    Share
  • திருமால் திருப்புகழ் (8)

    கிரேசி மோகன்

     

    திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்….

    download (3)

    தய்யான தான தானன தய்யான தான தானன
    தய்யான தான தானன -தனதான

    “பொல்லாத நோயில் வாடிட தள்ளாது தேகம் ஆடிடும் download (2)
    செல்லாத காசு ஆகுவை -அதனாலே,
    அவ்வேளை சோணை மாமலை உள்ளுறும் தீயில் ஸ்நானம்செய்
    வல்லானவ் ஆல வாய்மகன் -ரமணேசர்

    சொல்லாத மோன பாஷையை அவ்வாறே நானும் பேசிட
    செவ்வேளின் தாயின் சோதர -அருள்வாயே
    செய்யாளின் மீது ராவண ஒவ்வாத காம மோடுயிர்
    கொய்யேவு வாளி வீசிடும் -ரகுராமா

    கல்லேறி சாபம் தீரவும் ,முள்ளேறி பாதம் நோகவும்
    கள்ளுறும் கேச ஜானகி -இளையோனும்
    அய்யாவுன் கூட ஏகினும் ,மெய்யான போதும் மானுட
    பொய்யான மாய மேனியில் -தளர்வாகி

    புள்ளுர்தி ஆழி நாகணை செல்லாழி சோழி யாவையும்
    கொள்ளாது ஒய்வு காணவும் -புயமாளும்
    வில்லோரம் வீசி சாலியர் நல்லோரின் மீது ஊணிடும்
    வள்ளுரின் வீர ராகவ -பெருமாளே”….
    ஸ்தல புராணம்….
    ——————————-
    “எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர திரு +எவ்வுள்+ஊர் =திருவள்ளூரில்
    வீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்….
    ———————————————————————

    Share
  • திருமால் திருப்புகழ் (7)

     

     
    கிரேசி மோகன்
    பெருமாள் திருப்புகழ்….

    தனதய்யத் தான தாத்தன தானன
    தனதய்யத் தான தாத்தன தானன
    தனதய்யத் தான தாத்தன தானன -தனதான….
    —————————————————————————————————————–
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
    ——————————————————————————–

    lordlakshmiperumal

    “ஒருகள்ளக் காதல் வாட்டிட வேடுவ
    குறவள்ளிக் காக காட்டினில் மேவிடும்
    சுரரில்லக் காவல் சூர்ப்பகை வேலவன் -முறைமாம
    பலவெள்ளிக் காசு பார்ப்பினும் ஊழவன்
    உனையள்ளிப் போக வீட்டிடை ஏகுமுன்
    வரமள்ளித் தாராய் வாய்த்திட சோணையின் -ரமணேசdownload (2)

    குரு,அய்யப் பாடு ஆக்கிடும் ஆணவ
    மதையள்ளிப் போடும் சாக்கில்வி சாரணை
    புரிவுள்ளத் தாழம் பூத்திடும் மாமெனும் -உபதேசம்
    மனதுய்யப் ,பாதம் வீற்றிட மாதுபொன்
    அலைவெள்ளப் பாலில் போட்டிடும் சேடனில்
    அறிபள்ளிக் கார ,ப்ராட்டியர் சூழவந் -தருள்வாயே

    முறைஅவ்வைப் பேதை கூட்டுடன் ஏகிட
    இலைவில்வக் காரர் வீட்டினில் சேரவும்
    தலைபெய்அத் தோளில் தூக்கிய வேழனுன் -சுடராழி
    தனைகவ்வக் காதின் நாற்கர ஆடலில்
    நகையள்ளித் தூவும் மேய்த்திடும் கோகுல
    உறிநெய்யைப் பாலை ஆய்ச்சியர் ஏசிட -களவாடி

    உறுகொள்ளைக் கார மூர்த்தியுன் லீலையை
    தடைசெய்யத் தாம்பில் பூட்டிடு தாயவள்
    உரலள்ளிப் போக வீழ்த்தினை மாமரம் -ஒருநாளில்
    கருமல்லிப் பூவுன் காத்திர வாசனை
    விரலுய்யத் தீயில் பார்த்தவுன் பாரதி
    திருவல்லிக் கேணி பார்த்தனின் சாரதி -பெருமாளே”

     

     

    படத்திற்கு நன்றி:

    http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=1639&page=1

    Share
  • சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது

     எம். ரிஷான் ஷெரீப்

     

                ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் ‘வேசி’ எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன். சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே, அந்த அதிபரான W.M சமன் இந்திரரத்னவின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் பல கொடுக்கப்பட்டிருந்த போதும், அவருக்கிருந்த அதிகாரத்தின் காரணத்தாலும், அரசியல் பலத்தாலும் அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

                கடந்த வருடம் மே மாதத்துக்கு முன்பிருந்தே இந்த அதிபருக்கெதிராகவும், அப் பாடசாலையில் இடம்பெறும் சில மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முறைப்பாடுகள் உயர் கல்வித் திணைக்களங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றபோதிலும் கூட, எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர், மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனும் மனுவை பெற்றோர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த நிலையில், இயலாத பட்சத்தில் கடந்த 2013 மே மாதம் 17ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட பாடசாலை அமைந்திருக்கும் வலயத்தின் கல்வித் திணைக்கள உயரதிகாரிக்கு  இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவிட்டு இரு மாதங்கள் கடந்த பின்னர் 2013 ஜூலை மாதம் 23 ஆம் திகதி, அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் அந்த உயரதிகாரி. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

                ஆனால், சிறுமி வெனுஷாவின் மரணத்தின் பின்னர், அவளது தற்கொலைக் கடிதம் கிளப்பிய அலை, பூதாகரமாக எழுந்தது. தான் ஒரு தீக்குச்சியாகி ஏனைய மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. அக் கடிதமும், அதன் மொழிபெயர்ப்பும் இணைய ஊடகங்களின் மூலமாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்களில் ஒன்றுசேர்ந்த நல்ல மனங்களின் காரணமாக அதிபருக்கிருந்த அரசியல்பலத்தினால் மறைக்கப்படவிருந்த உண்மைக்கும், மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்ட அநீதிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

                மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பிரிவு விஷேட காவல்துறையினரால் அதிபர் சமன் இந்திரரத்ன, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. 1995 இல 22 குற்றத் தண்டனைச் சட்டத்தின் 308 ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது மனரீதியாகத் துன்புறுத்தலும் சேர்ந்ததுதான் என்பதாலும், 2006 இல 16 குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மன ரீதியாகத் துன்புறுத்துவது என்பதுவும் குற்றமாகக் கருதப்படுவதாலும் அப் பிரிவுகளின் கீழ் அதிபருக்கு தண்டனை வழங்கப்படச் சாத்தியமிருக்கிறது. அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பத்து வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்வார்.

                அதிபர் சிறுமியின் நடத்தை குறித்து தவறாகக் கூறியதால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமியின் தந்தை, மரண விசாரணைக்கான உடல் பரிசோதனையின் போது, சிறுமியின் கன்னித்தன்மை சான்றிதழையும் வைத்தியர் குழுவிடம் கோரியிருந்தார். எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத விடயம் இது. எனினும், சிறுமி கன்னித்தன்மையுடனே மரணித்திருக்கிறாள் எனச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிபர் சிறுமி மீது குறிப்பிட்ட ‘வேசி – விபச்சாரி’ எனும் கூற்று பொய்யாகியிருக்கிறது. அத்தோடு சிறுமியின் தற்கொலைக்கு அவளது பெற்றோரே காரணமென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் உரைத்து, அதிபரைக் காப்பாற்ற முனைந்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரது கருத்துக்கள், அநீதியை எதிர்த்து எழுந்த மக்களது ஆர்ப்பாட்டங்களின் முன்னிலையில் அடிபட்டுப் போயிருக்கிறது.

                எதற்கும் தற்கொலை தீர்வல்ல. ஏனைய மாணவர்களின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்துகொண்ட சிறுமி வெனுஷாவின் நடவடிக்கையை யாரும் இங்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது. எனினும், மக்கள் ஒன்றிணைந்தால், அநீதிகளுக்கெதிராக எதையும் சாதிக்கலாம் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.

                இங்கு செய்தியாகப் பதிவிட்டும், எனது வலைத்தளம் மற்றும் ஃபேஸ்புக் முகப்பிலிருந்து பகிர்ந்தும் இந்த அநீதிக்கெதிராக ஒன்றிணைந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    19.02.2014

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே ! : 21

    இன்னம்பூரான்
    18 02 2014

    unnamed

    தருமமிகு சென்னைக்கு அருகே உள்ள வைணவ தலமாகிய ஶ்ரீபெரும்புதூர் என்ற ஊருக்கு அருகில் மாஜி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டுக் கொலையுண்டார். அந்தக் கொலையை யாரும் நியாயப்படுத்தாவிடினும், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனை ஆயுள் தண்டனையாக, இன்று [18 02 2014] உச்சநீதி மன்றத்தால், Transferred Cases (Criminal) no.2 & 3 0f 2012 என்ற தீர்ப்பில் குறைக்கப்பட்டது. இது நான் எதிர்பார்த்தது தான். சொல்லப்போனால், சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்ட ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, இதற்கு பச்சைக் கொடி காட்டியது. ‘அறம் வென்றது’ ,‘நீதி கெலித்தது’, ‘தமிழகம் போற்றும் தீர்வு’ என்றெல்லாம், இதற்கு அரசியல் அரிதாரம் பூசாமல், சட்ட நுட்பங்கள், இந்திய அரசியல் சாஸனத்தின் தீர்க்கதரிசனம் ஆகிய நோக்கில், சற்று முன் பிரசுரமான அந்த தீர்ப்பு [இங்கே] அலசப்படுகிறது.

    முதற்கண்ணாக கொலையுண்டது யார் என்பது ஒரு பொருட்டு அல்ல, தண்டனை அளிக்க. பிச்சைக்காரனுக்கும் பிரதமருக்கும் ஒரே நீதி தான். அடுத்தபடியாக, இந்தியாவில் தூக்குத்தண்டனை சட்டப்படி செல்லும். ஆகவே ஒரு கொலையாளிக்கு அதை அளித்து விட்டு, மற்றவருக்கு அதில் இருந்து விடுதலை அளிப்பது நியாயம் இல்லை. எனினும், மிகவும் அரிதாகவே, பல பின்னணிகளை மனதில் கொண்டு தான் அந்த மீளமுடியாத தண்டனை அளிக்கவேண்டும் என்ற சட்ட மரபு நடைமுறையில் உள்ளது. இந்த பின்னணியில் நோக்கினால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர் தப்பியதற்கு காரணம் குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்து நீதி வழங்கப்பட்டது இல்லை. சட்டமும், நீதி மன்றமும் அவர்களுக்கு மரண தண்டனை தான் விதித்தது. சட்டரீதியான விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின் அவர்களுக்கு ஜனாதிபதியிடம் கருணை மனு செய்ய வழி ஒன்று இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மனுக்கள் 11 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தன. Justice Delayed is Justice Denied. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பது வரையப்பட்ட சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆனால், சட்டப் புத்தகம் என்பது வரையப்பட்ட சட்டம் + அதற்குட்பட்ட ஆணைகள் + நீதி மன்ற தீர்ப்புகளின் அறிவுரைகள். அந்த வகையில் போனால், இந்த முடிவு என்றோ எடுக்கப்பட்டது எனலாம்.

    திரு.ராம்.ஜேத்மலானி என்ற பிரபல வக்கீல் மனுதாரர்களுக்காக தாக்கல் செய்த ஆவணங்களும், வாதமும் இனி நம் சட்ட வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை. மரணதண்டனை விதித்து விட்டு, வருடக்கணக்காக அந்தக் கைதிகளை இற்செறிப்பது வன்முறை, டார்ச்சர் என்பதை குழந்தை கூட புரிந்து கொள்ளும். ஆனால் 11 வருடங்கள் அவற்றை கிடப்பில் போட்டிருந்த ஜனாதிபதிகள் குழந்தைகள் இல்லையே !

    இப்படி அவர்களை தவிக்க விட்ட நிர்வாகத்தின் போக்கு இந்திய அரசியல் சாஸனத்தின் 21வது ஷரத்தை மீறுகின்றது, இந்தியா கையொப்பமிட்ட சர்வதேச நியதிகளை மீறுகின்றது என்ற வாதம், அவருடையது. அந்த வாதம் கெலித்தது.

    எதிர்வாதம் புரிந்த (புரியாமல் புரிந்த !) அரசு வக்கீலின் வாதம் விந்தையானது. கேலிக்குரியது. அது:
    அரசு தரப்பில் (ஜனாதிபதி உள்பட) தாமதம் அதிகம் இல்லை ! அப்படியே வைத்துக்கொண்டாலும் மனுதாரர்கள், ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. இங்கு செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. 11 வருடங்கள் தாமதத்தில், கரீக்டாக முன்பாதி உள்நாட்டு அமைச்சரகத்தில். ஒரு அதிகாரியின் கோப்புப் பையில் இந்த கருணைமனு கும்பகர்ண உறக்கத்தில் கிடந்தது !

    அடுத்த 5 1/2 வருட தாமதத்தை நியாயபடுத்த வழி ஒன்றுமில்லை !

    1974ல் எடிகா அன்னம்மா என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் ‘ மரண தண்டனை கைதிகள் காத்திருக்கும் வேளையில் நடைபிணம் போல’ என்ற எச்சரிக்கை மேற்படி அதிகாரிகளுக்கும், அரசு தலைமைக்கும், மாஜி ஜனாதிபதிகளுக்கும் தெரியவில்லை போலும் !

    ஈற்றடி 1: இந்த தீர்ப்பு வரவேற்கப்படவேண்டிய மைல்கல் தீர்ப்பு.

    ஈற்றடி 2: உண்மையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர்களைக் காப்பாற்றியது
    மேற்படி அதிகாரிகளும், அரசு தலைமையும், மாஜி ஜனாதிபதிகளும்.

    ஈற்றடி 3: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்கள் கருணை மனுக்களில் திரும்பத், திரும்ப, அவரவர்கள் நடை பிணமாக வாழ்வதை பரிதாபமாகக் குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த நிலையிலிருந்து அவர்களை, மனுவை நிராகரித்து, அதன் அடுத்தக் கட்டத்தில், அவர்களை உய்வித்த தற்கால ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.

    ஈற்றடி 4: இனி செக்ஷ்ஷன் 432 & 433A : Criminal Procedure 1973 க்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கலாம்.

    சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/3211/208/1600/john_abraham_bird_free.jpg

    Share
  • தண்டனை

    நிர்மலா ராகவன்

    தந்தை இறந்துவிட்டார் என்று தந்தி வந்திருக்கிறது. அதைப் பொருட்படுத்தாது, கிடாரில் ஸ்ருதி சேர்த்துக்கொண்டு இருந்த நடராஜனைப் பார்த்தான் மனோகர்.

    “புறப்படலே?” என்று கேட்டான், அவன் போய் கொள்ளி போட வேண்டிய அவசியத்தை உணர்த்த விரும்பியவனாக.

    நடராஜன் சூள் கொட்டினான். “உசிரோட இருந்தப்போ பிள்ளைங்கமேல அவர் பாசத்தைக் கொட்டினது பாழாப் போச்சு! இப்ப என் கையால கொள்ளி வாங்கத்தான் அந்த மனுஷனோட ஆத்மா காத்துக்கிட்டு இருக்காக்கும்! அது சாந்தி அடைஞ்சா என்ன, இல்லாட்டி, பேயா..!”

    ஹாஸ்டல் நண்பன் குறுக்கிட்டுப் பேசினான், உரிமையோடு. “செத்தவங்கமேல நீ இப்படி வன்மம் பாராட்டறநு நல்லாவே இல்லே, நடா. அவருக்காக இல்லாட்டியும், ஒங்க அம்மாவுக்காக..!”

    நடராஜன் உடனே இளகினான். “பாவம், அம்மா! நாலு குழந்தைகளைப் பெத்ததுக்கு அப்புறமும், மத்த பொண்ணுங்ககிட்டே எங்கப்பா விட்ட ஜொள்ளு இருக்கே! ஒங்கிட்டதான் சொல்லி இருக்கேனே!”

    நண்பன் தலையை ஆட்டினான், ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாது.

    “எங்க அக்காங்களோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரைக் கூட்டிக்குவார். சினிமா, பீச்சுனு போவோம். அப்போ..,” ஐந்து வருடங்களுக்குமுன் நடந்ததுதான். ஆனால், சிறு குழந்தைகளுடன் விளையாடுவதுபோல அப்பருவப் பெண்களின் கன்னத்தைத் தடவியும், இடுப்பில் கையைப் போட்டும் அப்பா ஆட்டம் போட்டது இந்த ஜன்மத்தில் மறக்குமா!

    முதலில் அவனும் விளையாட்டு என்று நினைத்துச் சிரித்தாலும், மீசை முளைத்ததும், பிறர் எதிரிலேயே இப்படி நடந்துகொள்பவர் அவர்களில் யாராவது ஒருவருடன் உலாவப் போகையில், செய்யக் கூடாத என்னென்னவோ செய்வார் என்பது சந்தேகமறப் புரிந்து போயிற்று.

    அக்கம்பக்கத்தில் இருந்தவர்களைவிட அப்பா நிறையப் படித்து, பெரிய வேலையில் இருந்தது பிறரை அவர்மேல் நம்பிக்கை கொள்ள வைத்தது.

    ஒல்லியும் குள்ளமுமான உடல்வாகு. அலாதிச் சுறுசுறுப்பு. தானாகப் போய் பிறருக்கு உதவுவார். எல்லாரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் — மனைவியையும், குழந்தைகளையும் தவிர. வீட்டுக்கு வந்துவிட்டால், பேசவே மாட்டார். தன் அறையிலேயே அடைந்து கிடப்பார். அப்பாவும் அம்மாவும் சுமுகமாக நாலு வார்த்தைகள் பேசிக்கொண்டதாக அவனுக்கு ஞாபகமே இல்லை.

    அம்மா! அப்பாவுக்கு நேர் எதிரிடை உருவத்திலும், குணத்திலும். அப்பாவுடைய பராமுகத்தால்தான் அப்படி ஆனாள் என்பதில் அவனுக்குச் சந்தேகமே கிடையாது.

    நினைத்து நினைத்து அழுவாள். காரணம் எதுவும் இருக்காது. நாள் தவறாது குளிப்பது, தலையை வாரிக் கொள்வது இதெல்லாம் கிடையாது. எங்கோ வெறித்துப் பார்த்தபடி, தரையில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பாள். எப்போதாவது தமிழ் பத்திரிகைகள் படிப்பாள். அனாவசியமாக நடக்காமல், உட்கார்ந்த நிலையிலேயே அளவுக்கு மீறி சாப்பிட்டதில், உடல் பருத்தது. உபாதைகள் அதிகரித்தன.

    மனோதத்துவம் சற்று புரிய ஆரம்பித்தபின், எதையோ விழுங்கவோ, அல்லது சீரணிக்கவோ முடியாது, அதற்குப் பதிலாக உணவையாவது ஓயாது விழுங்குகிறாள் என்று நடராஜனுக்குத் தோன்றியது.

    அம்மாவைப்பற்றி நல்ல விதமாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், தான் பெற்ற பிள்ளைகள்மேல் அவள் வைத்திருந்த அபார பாசத்தைத்தான் குறிப்பிட வேண்டும். அவர்களைப் பக்கத்தில் உட்காரச் செய்து, தடவித் தடவிக் கொடுப்பாள், பசு தன் கன்றை நாவால் நக்குவதுபோல்.

    என்றாவது மற்ற அம்மாக்களைப்போல் அம்மாவும் அழகாகச் சிங்காரித்துக் கொண்டு, அப்பாவுடனேயோ, அல்லது தனியாகவோ தங்களை வெளியே அழைத்துப் போயிருக்கிறாளா என்று நடராஜன் யோசித்துப் பார்த்தான்.

    அட, அதெல்லாம் வேண்டாம். தான் பெற்ற குழந்தைகளுக்காக ஏன் தானே வகைவகையாகச் சமைத்து, பரிமாறக்கூட இல்லை? நடக்கக்கூட அவள் கஷ்டப்பட்டதில், பாவம், பெரியக்காதான் பதின்மூன்று வயதிலேயே கரண்டி பிடிக்க வேண்டியதாயிற்று.

    அவர்கள் வீட்டில் ஒரு போட்டோ இருந்தது. சித்தப்பா எடுத்ததாம். மூன்று பெண்களுக்குப்பின் பிறந்த அருமை மகனாகிய அவன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் — அம்மா மடியில். பக்கத்தில் அப்பா விறைப்பாக உட்கார்ந்திருந்தார், முகத்தைக் கடு கடுவென வைத்துக்கொண்டு. பெற்றோரின் காலடியில் மூன்று அக்காமார்களும் உட்கார்ந்திருந்தார்கள், ஒரேயடியாக இளித்தபடி.

    `ஏண்டா, நம்ப அப்பா எல்லா அப்பாவையும்போல நம்பகிட்ட ஆசையா இல்ல?’ என்று, இவனைவிட இரண்டே வயது பெரியவளான நளினி இவனிடம் எத்தனை முறை கேட்டிருப்பாள்!

    இவனும், `எனக்கும் இந்த அப்பாவைக் கண்டாலே பிடிக்கலே,’ என்று ஒத்துப் பாடுவான்.

    பெற்றோர் இருவருமே உருப்படியாக இல்லாததால், அண்ணன் குழந்தைகள் ரொம்பத் தவிக்கிறார்களே என்றோ, என்னவோ, பாலு சித்தப்பா வருடம் தப்பாது அமெரிக்காவிலிருந்து வருவார். அவர்கள் வயதுக்கும், திறமைக்கும் ஏற்றபடி, பெரிய பெட்டி நிறைய விளையாட்டுச் சாமான்கள் வாங்கி வருவார். ஆசை ஆசையாய், எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போவார், வாடகைக்குக் கார் எடுத்து. ஓரிரு வாரங்களே ஆனாலும், அப்போது அனுபவிக்கும் மகிழ்ச்சி அந்தக் குழந்தைகளின் நெஞ்சில் நெடுநாட்கள் நிலைத்திருக்கும்.

    ஆனாலும், குடும்பத்தின் தலைவர் சரியாக இல்லாததால், எல்லாமே கோணலாகப் போயிற்று.

    மூத்த அக்கா, `மலடி’ என்று கணவரிடமும், மாமியாரிடமும் அடிபட்டுச் சாகிறாள். அவளைப் பொறுத்தவரை, `கல்யாணம்’ என்ற ஒன்று செய்துகொள்வது துன்பம் அனுபவிக்க. இது அம்மாவிடமிருந்து கற்ற பாடம்.

    இரண்டாவது அக்காவின் ஒரே பிள்ளைக்கும் மூளைக்கோளாறு. மூன்றாவதான நளினிதான் அம்மாவைப் பார்த்துக்கொள்கிறாள். `கல்யாணத்தைப்பத்தி நினைக்கவே பயமா இருக்குடா!’ என்று அவனிடம் பல முறை சொல்லி இருக்கிறாள்.

    யாரோ அவர்கள் குடும்பத்தைச் சபித்து விட்டார்கள் என்று அவனுக்குத் தோன்றும்.

    வேறு யார், அப்பாவால் கசக்கப்பட்ட பெண்கள், அல்லது அவர்களுடைய பெற்றோராகத்தான் இருக்கும் என்ற கசப்பு எழும். அப்படி ஒரு பெண்ணின் கணவர், `இவர் ஒருத்தரோட சுத்தினாளாமே!’என்று அவளை வீட்டுக்கே அனுப்பவில்லை?

    இப்போது, அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியை அறவே குலைத்த அப்பா ஒருவழியாகச் செத்திருக்கிறார். அப்பா இல்லாத வீட்டுக்குப் போகப்போகிறோம் என்ற நினைவே நடராஜனுக்குச் சற்று நிம்மதியை அளித்தது.

    எப்போதும், நடராஜன் நளினிக்காக துணிமணிகள் வாங்கிப்போவது வழக்கம். அப்போது அதிசயமாக அவள் முகம் மலர்வதைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. இம்முறையும் அப்படிப் போவது நன்றாக இராது என்று அடக்கிக் கொண்டான். மீண்டும் அப்பாவின்மேல் கோபம் எழுந்தது. `இருந்தும் கெடுத்தார், செத்தும் கெடுத்தார்!’ என்று மனதுக்குள் வைதான்.

    இப்போது அம்மா எப்படி இருப்பாள்? உலகத்திற்காக, ஒப்புக்கு அழுது வைப்பாளா, இல்லை, நிம்மதியாக இருப்பாளா? இந்தமாதிரி புருஷன் போனால், அம்மா எதற்காக துக்கம் அனுஷ்டிக்க வேண்டுமாம்? `தொலைந்தான்’ என்று, இனியாவது எல்லாரும் ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிக்கொள்ளச் சொல்ல வேண்டும்.

    சற்று தயக்கத்துடனேயே இழவு வீட்டுக்குள் நுழைந்தான் நடராஜன். தீப்பெட்டிபோல் வரிசை வரிசையாக கட்டப்பட்டிருந்த இரண்டடுக்கு வீடுகளில் கோடி வீடு. காம்பவுண்டு சுவர்வரை தோட்டம் போட நிறைய இடம் இருந்தது. நளினி எல்லா நேரத்தையும் அங்குதான் கழிப்பாள்.

    இனியும் அவள் தனிமையில் வாட வேண்டியதில்லை. `நீ பக்கத்தில் இருப்பதால் அம்மாவுக்கு எவ்வளவு ஆதரவு! உனக்கு வயதான காலத்தில் அப்படி ஒருத்தர் வேண்டாமா?’ என்று வாதாடி, அக்குடும்பத்தின் ஒரே ஆண்பிள்ளையாய் லட்சணமாய், அவளுக்கு ஒரு நல்ல வரனைத் தேடி முடிக்க வேண்டும். நினைக்கும்போதே பெருமையாக இருந்தது.

    வானம் இருட்டியிருந்தது. நாளைவரை எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. கைக்கடிகாரத்தில் அவன் கண்கள் பதிந்தன. அவன் கல்லூரியில் சேர்ந்தபோது, சித்தப்பா வாங்கி வந்த பரிசு. மணி, தேதியுடன், குறிப்பிட்ட நாடுகளில் என்ன நேரம் என்பதையும் காட்டும்.

    அந்த மாதிரி அப்பா அவனுக்காக என்ன செய்திருக்கிறார் என்று எழுந்த நினைப்பை ஒதுக்கினான். சின்னப் பையனாக இருந்தபோது, தலைமுடி வெட்டிக்கொள்ளக்கூட பெரியக்காதானே அழைத்துப் போவாள்!

    வீட்டு வாசலிலேயே நளினி நின்றிருந்தாள். கண்கள் சிவந்திருந்தன. மூக்கை உறிஞ்சிக் கொண்டவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் நடராஜன்.

    `அம்மா?’ என்று உதடுகளை மட்டும் அசைத்து, ஓசையெழுப்பாமல் கேட்டவனிடம், மாடியறையைச் சமிக்ஞையால் காட்டினாள். “இன்னும் யாருக்கும் சொல்லி விடல. நீ வரவரைக்கும் காத்திட்டு இருக்கணும்னு அம்மா சொல்லிட்டாங்க!” என்று ரகசியக் குரலில் தெரிவித்தாள்.

    குழப்பத்துடன் படியேறிப் போனான்.

    அது அப்பாவின் படுக்கையறை. அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அவரது நெற்றியில் ஒரு நரம்பு புடைத்திருந்தது — அந்த ஆத்மா நிம்மதியைத் தேடி அலைகிறது என்பதை உணர்த்துவதுபோல.

    கட்டிலில் அவர் அருகே — மிக அருகே — அம்மா உட்கார்ந்திருந்தாள்.  அப்படி அவர்கள் இருவரையும் அருகருகே பார்த்தது அவனுக்கு என்னமோபோல் இருந்தது. தன்னிடம் அணுக்கமாக இருந்த அம்மா இப்போது இன்னொரு ஆண்மகனுடன், அது அப்பாவாகவே இருந்தாலும், நெருக்கமாக அமர்ந்திருந்ததை அவன் மனம் ஏற்கவில்லை. செத்தால் எல்லாம் சரியாகப் போயிற்றா? இல்லை, ஊருக்காக வேஷமா? அவனுடைய கோபம் அம்மாவின்மேல் திரும்பியது.

    அவனைப் பார்த்ததும், “அப்பா நம்பளையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருடா!” என்று அலறினாள் அம்மா.

    அவனுக்கு வெறி பிறந்தது. “நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்த லட்சணம் தெரியாதா? இந்தக் கேடுகெட்ட மனுசனுக்காக எதுக்கு துக்கம் கொண்டாடணும்?” என்று கத்தினான்.

    அம்மா சட்டேன ஒரு நிலைக்கு வந்தாள். “கிட்ட வா. ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!” அவள் குரலிலிருந்த அலாதி அமைதி அவனுக்கு அச்சசத்தை விளைவித்தது.

    என்று இப்படிப் பேசி இருக்கிறாள்?

    என்ன சொல்லப் போகிறாள்?

    “நீ ஆத்திரப்பட வேண்டியது என்மேலதான்!” மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டாள். அப்பாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள். “தப்பு பண்ணினது இவரில்ல, நான்தான்!”

    அதிர்ச்சி தாங்காது, அப்படியே தரையில் விழாதகுறையாக உட்கார்ந்தான் நடராஜன்.

    “அவருக்குத் துரோகம் பண்ணின என்னையும், நான் பெத்த பிள்ளைங்களையும் தெருவில அலைய விடாம..!” விம்மலோடு பேசிய அம்மாவின் குரல் கம்மிக்கொண்டே போனதில், அவள் பேசியது அவனுக்குச் சரியாக விளங்கவில்லை.

    ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகியது. அப்பாவென்று நம்பி, தான் அடியோடு வெறுத்தவர் தன் அப்பா இல்லை.

    அப்படியானால், தன் அப்பா யார்?

    சித்தப்பா?

    `அவரேதான்!’ வீட்டுக்கு வரும்போதெல்லாம் சித்தப்பாவும், அம்மாவும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள்போல் நடந்து கொண்டதற்கு இப்போது ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது.

    அண்ணாவுக்குத் தான் இழைத்த கொடுமைக்கு விமோசனமாகத்தான் அவர் அண்ணாவின் குழந்தைகளிடம் அவ்வளவு ஈடுபாடு காட்டினாரா! கல்யாணமே செய்து கொள்ளவும் இல்லை!

    கட்டிலில் படுத்திருந்தவரின் இறுகிய முகத்தை ஒரு கணம் பார்த்தான். இந்த அப்பாவி மனிதரிடம் காலமெல்லாம் பகைமை பாராட்டினோமே! யாருக்கோ பிறந்த தன்னை வளர்த்து, படிக்க வைத்து..! நடராஜனுக்கு அழுகை வந்தது.

    அவருடைய போக்கிற்கு அர்த்தமும் புரிந்தது.

    மாற்றான் ஒருவனிடம் மனைவிக்குத் தொடர்பு இருக்கிறது  என்பது சந்தேகமறப் புரிந்து போக, தனது ஆண்மை தனக்கே சந்தேகக் குறி ஆகிவிட, `நானும் ஆண்பிள்ளைதான்!’ என்று தனக்கே உணர்த்திக்கொள்ள எந்த ஆணுக்குத்தான் தோன்றாது!

    மனைவியைப்போல் இல்லாது, கள்ளங்கபடமற்ற சின்னப் பெண்களின் அன்பு அவருக்கு அருமருந்தாகத் தேவைப்பட்டு இருக்கிறது!

    நடராஜனின் கண்கள் சடலத்தின் பக்கம் போயின. அவர் முகத்தருகே குனிந்து, `என்னை மன்னிச்சுடுங்கப்பா. இப்பவாவது ஒங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!’ என்று மனதுக்குள் திரும்பத் திரும்ப வேண்டினான். அவன் உதடுகள் விம்மின.

    “மணி என்ன ஆச்சுப்பா?” அம்மாவின் குரல் அவனை உசுப்பியது.

    அவன் கண்கள் இடது மணிக்கட்டில் பதிந்தன. சித்தப்பா அளித்த பரிசு! அந்த எண்ணமே கசப்பை விளைவிக்க, விலையுயர்ந்த கடிகாரத்தைக் கழற்றி, பக்கத்திலிருந்த மேசைமேல் வீசி எறிந்தான்.

    திரும்பியபோது, அப்பாவின் நெற்றி நரம்பு சமனாகி, இந்த மானுட உலகத்துடன் அவருக்கு இருந்த எல்லாத் தொடர்பையும் துண்டித்துக்கொண்டதுபோல் முகத்தில் சவக்களை வந்திருந்தது தெரிந்தது.

    பக்கத்தில் உடம்பைக் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மா. சற்றுமுன் அசாதாரணமாகப் பேசியவளின் பார்வை இப்போது வெறித்திருந்தது.

    அம்மா மனநோயாளியாக ஆனது அப்பாவின் நடத்தையால் அல்ல. தன்மேலேயே அவளுக்கு எழுந்த வெறுப்பால்.

    அவள் பட்டதெல்லாம் போதும், தான் வேறு தண்டிக்க வேண்டுமா என்ன்று தோன்றிப்போக, “அப்பாவுக்கு மொதல்ல என்ன செய்யணும்மா?” என்று கனிவுடன் கேட்டான்.

    Share
  • காவேரி கல்யாணம் – நாடகம்

    தஞ்​சை ​​வெ. ​கோபாலன்

    காவேரி கல்யாணம்

    (தஞ்சையை ஆண்ட ஷாஜி மகாராஜா (1684 – 1712) காலத்தில் உருவான இசை நாட்டிய நாடகம்

    (பாகவத மேளா மரபு)

    ஆசிரியர்: ஷாஜி மன்னர்

    ஷாஜி மன்னனை அந்தக் காலத்தில் ‘சகசி மன்னர்’ என்றழைத்தனர். இதில் வரும் கதா பாத்திரங்கள்:

    1. சூத்திரதாரன்: நாடகத்தை அறிமுகம் செய்து விளக்கம் கொடுப்பவன்.
    2. கட்டியக்காரன்: நாடகம் தொடங்கி வைப்பவன்
    3. கவேரராஜன்: கவேர கன்னியின் தந்தை
    4. கவேரராஜ ஸ்திரீ: கவேரராஜனின் மனைவி
    5. கவேர கன்னி: கவேரராஜனின் மகள்
    6. கவேர ராஜன் மந்திரி: அமைச்சர்
    7. சமுத்திரராஜன்: கடல் அரசன், கவேர கன்னியின் மணவாளன்
    8. அகஸ்தியர்: பொதிகை மலை வாழ் தமிழ் முனிவர்
    9. சகி: கன்னியின் தோழி’
    10. பஞ்சநதீசர்: திருவையாற்று ஈசன்

    கதைக் களம்: திருவையாறு பஞ்சநதீசர் ஆலயம் (காவிரிக் கரை)
    காலம்: ஷாஜி மன்னரின் காலம்.

    காவேரி கல்யாணம்
    (யக்ஷ கானம்)
    ராகம்: நாட்டை தாளம்: ஜம்பை
    தோடய மங்களம்
    ஜய பார்வதீ ரமண ஜய ஜானகீ ரமண
    ஜய அந்தக தமன ஜய மஹு சூதனா

    ஜய திரிபுர ஹரண ஜய வேதோத் தரண
    ஜய அகிலநுத சரண ஜய ஜனா பரண

    ஜய ரவிசகி நேத்ர ஜய அகிலநுத பாதர
    ஜய பாஅன சரித்ர ஜய ஜகன் மித்ர

    ஜய நந்தி வரவாஹ ஜய அண்டஜ வாஹ
    ஜய நித்யோத் ஸாக ஜய சமித தாஹ

    மங்கள தரு

    மஹநீய தியாகேசுனிகி மங்களம்
    மாபாலி தேவுனிகி மங்களம்
    கனக வஸந்துனிகி மங்களம்
    கமனீய சரித்ருனிகி மங்களம்
    மனஸிஜ ஹருனிகி மங்களம்
    சோமாஸ கந்த மூர்த்திகி மங்களம்
    சோபன பிருதுனிகி மங்களம்
    மாமீத தயஸேயு ஸ்வாமிகி மங்களம்
    போஸகுல சாஹேந்திர பாஸுரகுல தேவுனிகி மங்களம்
    மாசிவ தியாகேசுனிகி மங்களம்.

    சூத்திரதாரன் வசனம்: இந்தப்படிக்குச் சகல தேவதா பிரார்த்தனை பண்ணின ததனந்திரத்திலே காப்பு கேட்பிக்கின்ற மார்க்கம்.

    நீரியல் பொருமை யாற்றில் நிமலனை வணங்கு மெங் – கா
    வேரிசா கரகல் யாணம் விளங்கிய தமிழால் பாட
    பாரினில் கமலை மாதின் பாலனாம் விட்ட வாசல்
    காரியல் வண்ண மான கரிமுகன் காப்பு தானே.

    வசனம்: இந்தப்படிக்குச் சகசிராசப் பிரணிதமான காவேரி கல்யாணம் என்கிற நாடகத்திலே சகல விக்கினங்களும் நிவாரணம் பண்ண, விக்னேசுவரனைத் தோத்திரம் பண்ண விக்னேசுவரன் வருகிற மார்க்கம்.

    ஸ்ரீ விநாயகர் தருவு

    வந்தே சிவஸுதம் வரத மமரநுதம்
    ஸுந்தர குணயுதம் ஸுப்ரஸன்ன வதனம்
    பாசாங்குச தரம் பணிவர கேயூரம்
    மூஷிக வாகனம் மோதக கரம்
    பாலேந்து சேகரம் பால சிந்தூரதரம்
    லாலித பக்தவரம் லீலாய விக்னஹரம்.

    வசனம்: இந்தப்படிக்கு விக்னேசுவரன் வந்து சகல விக்கினங்களும் நிவாரணம் பண்ணின, ததனந்தரத்திலே கதாசம்விதானம் எப்படியென்றால் கவேர இராசன் ஸ்திரீ சமேதனாக நித்தியக் கொலுவுக்கு வருகிறார் என்று சகல சனங்களுக்கும் எச்சரிக்க, கட்டியக்காரன் வருகிற மார்க்கம்.

    தருவு

    தவள நாமம் சார்த்திச் சரிகை துப்பட்டிக் கட்டி
    கவேர ராஜேந்திரன் வாசல் கட்டியக்காரன் வந்தானே.

    வசனம்: இந்தப்படிக்குக் கட்டியக்காரன் வந்து எச்சரித்த ததனந்தரத்திலே கவேர இராசன் ஸ்திரீ சமேதனாகத் தன் சபைக்கு வருகிற மார்க்கம்.

    தருவு

    வஞ்சியர்கள் புடை சூழவே – இரு புறமும்
    மருவுங் கவரிகள் வீசவே
    கஞ்சமணி மார்பிலங்கவே – மனைவியுடன்
    கவேர ராசனும் வந்தானே.
    வட்ட மதிக்குடை பிடிக்கவே – புலவோர்கள்
    வந்து க்வைதைகள் படிக்கவே
    கட்டியங்கள் சில கூறவே – மனைவியுடன்
    கவேர ராசனும் வந்தானே.

    வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் ஸ்திரீ சமேதனாகத் தன் சபைக்கு வந்து சிம்மாசனத்தில் இருந்து தன்னுடைய கன்னிகையான காவேரியம்மனுக்கு, யெளவன பிராதுர்பாவம் ஆயிற்று என்றும் நல்ல புருஷனாகப் பார்த்து, கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்றும் நினைத்து, தன்னுடைய ஸ்திரீயுடன் ஆலோசனை பண்ணுகிற மார்க்கம்.

    தருவு

    ஆசையா யெப்படி யோசனை நீ செப்படி

    எப்படியடி நாமும் இப்போ திந்தக் காவேரிக்கினி
    மெப்புடன் கல்யாணம் செய்ய வேணுமே மனைவியே சொல்.

    வனிதை திரண்டு நல்ல வடிவானாள் குறை சொல்ல
    இனி சும்மாயிருப்பதல்ல எவருக்குக் கொடுப்போம் புல்ல

    நல்ல பிள்ளையாய்ப் பார்த்து நம் பெண்ணைத் தாரை வார்த்து
    வல்ல மனையில் சேர்த்து வைக்க வேண்டும் தேர்ந்து

    குலவியற்கை நம் மாது கூடா மன்னர்க்குத் தூது
    வலியச் சொல்லப் போகாது வருவோரு மில்லையிப் போது.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து, கவேர ஸ்திரீ சொல்கிற மார்க்கம்.

    தருவு

    என்னதான் உமக்கே நிப்போதிந்த யோசனை
    தன்னை யறிந்த பெண்ணிருந்தால் தானே மன்னர் வருவார்.

    மெல்லியற் கிதுவல்லாமல் மிருக சீரிட நட்சத்திரம்
    நல்ல யோகம் சாதகமும் நாம் வினவ வேணுமோ.

    நித்தியமும் சிவ பூசை நியமமாகச் செய்து வருகிறாள்
    சத்தியமா யந்தப் பலனே சந்தோஷங்கள் கொடுக்கும்.

    வாலையொரு குறத்தி நேற்று வந்து காவேரியைப் பார்த்து
    நாலு நாளில் இவளுக்கு நல்ல நாதன் வருவானென்றாள்.

    அப்படி உண்டா இவள் பேச்சுக் காலோசனை நாம் நினைக்க
    எட்டு நாளாய்க் காவேரியும் இடக்கண் துடிக்கு தென்கிறாள்.

    அப்படித் தீவிரமானால் ஐயா இந்த மந்திரியை
    மெப்புள்ள மன்னராய்ப் பார்த்து வினவி வரச் சொல்லும்.

    வசனம்: இந்தப்படிக்குக் கவேர ஸ்திரீ வசனம் கேட்டுக் கவேர இராசன் மந்திரையைப் பார்த்து சொல்லுகிற மார்க்கம்.

    தருவு

    மந்திரி காவேரிக் கேற்ற மணவாளனைப் பாராய்
    மன்னரில் சிலாக்கியமுள்ள பேராய் தந்திரி நியாயமே மெத்த
    தானோரூராய்ச் சீக்கிரமாய்த் தான் சென்று வாராய்
    வெளுக்கும் சுந்தரமான மெய்யிருக்க வேணும்
    வித்தையெல்லாம் தானே மிக வந்திருக்க வேணும்
    வாளுக்கும் பின் வாங்கா மனது இருக்க வேணும்
    வணக்கமும் மெத்தவேதான் வந்திருக்க வேணும்
    குளிர்ந்த வார்த்தை சொல்லக் குணம் இருக்கவேணும்
    கொடுக்கும் விதரணமான கொடை இருக்கவேணும்
    தளர்ந்திடாத செல்வத்துடன் தானிருக்க வேணும்
    சகல சன மித்திரனாகத் தானிருக்க வேணும்
    அரியராதியரைப் போற்றும் அன்பு இருக்க வேணும்
    ஆதிக்கம் பலமாகவே தானிருக்க வேணும்
    சரச லீலை செய்யவும் சமர்த்து இருக்க வேணும்
    சரிசமானமாகத் தான் இருக்க வேண்டும்.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன இராச வசனம் கேட்டு மந்திரி, அப்படித்தானே நல்லபுருஷனைப் பார்த்து அழைத்துக் கொண்டு வருகிறோம் என்று தேச தேசங்களும் தேடப்புறப்படுகின்ற மார்க்கம்.

    தருவு

    கவேர ராசன் சொற்படிக்குக் காவேரிக்கு நாதன் பார்க்க
    நவமத ரூப மந்திரி நாடு நடந்தனனே.

    வசனம்: இந்தப்படிக்கு மந்திரி தேச தேசங்களும் தேடிக்கொண்டு வருகிற சமயத்தில், அப்புறம் கதாசம்விதானம் எப்படியென்றால் சமுத்திர இராசன், தனக்கு ஆன கன்னிகையைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று அகத்திய மகாமுனியைப் பிரார்த்திக்க அந்த வார்த்தையைக் கேட்டு, அப்படித்தானே நல்ல கன்னிகையைப் பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறோம் என்று சமுத்திர இராசனுடன் சொல்லிக்கவேர இராசனுடைய கன்னிகை, காவேரிப் பெண் இருக்கிறாள் என்று கேட்டு, அந்தக் கன்னிகையைச் சமுத்திர இராசனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று கவேர இராசனைக் கேட்பதற்காக அகத்தியர் வருகிற மார்க்கம்.

    தருவு

    அகத்திய மாமுனி வந்தனரே

    சடையும் விரித்து வரிப் புலித் தோலும் உடுத்து
    தவள நீறும் பூசிக்கொண்டு அடிமேல் அடி நடந்து கொண்டு.

    மிரட்டிக் கண்ணை விழித்துக் கொண்டு
    விளங்கு ருத்திராக்க மாலை அணிந்து
    அர அர அர சிவனே என்று அகத்திய மாமுனி வந்தாரே.

    வசனம்: இந்தப்படிக்கு வந்த அகத்திய மகா முனியைக் கண்டு நமஸ்காரம் பண்ணி பக்தி யுடனே சமீபத்தில் நின்ற மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் நீ யார்?” இங்கு ஏன் வந்தாய்? ‘சொல்’ என்று கேட்கிற அகத்தியரிடம் மந்திரி சொல்கிற மார்க்கம்.

    தருவு

    வந்த காரியம் இதுதான் மகிழ்ந்து கேளும் ஐயா
    மந்தார புயன் கவேரன் மந்திரி நானய்யா!

    எங்கள் துரைக்குக் காவேரி என்றொரு பெண்டு
    இருக்கிறாள் அவள் திரண்டு இரண்டு மாதமுண்டு

    மங்களம் செய்ய அவட்கு மன்னரே நேற்று வந்து
    மாப்பிள்ளை விசாரி என்றார் வந்தேன் அதுகொண்டு

    நானா தேசங்களுக்குஞ் சுவாமி நடந்து நான் விளையாடி
    நாளு மன்னவர் குணமும் நன்றாய் அறிந்தோடி

    தானே இங்கு வந்தீரெங்கள் தையலுற வாடித்
    தழுவ இவரியற்கை சொல்லும் தரணியில் நான் தேடி

    கோதை குணமும் அமிருத குணம் வடிவில் மாது
    கொஞ்சு கிளி சங்கீதத்தில் குயில் எதிர் நில்லாது

    காதல் மிஞ்சு முன்னே அந்தக் கன்னி முலை மீது
    களபம் அணிந்து மருவக் கணவன் வேணும் இப்போது.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன மந்திரியைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

    தருவு

    நாமிது நிமித்த மாகவே தான் நாடி வந்தோமடா – நாளும்
    தான மிகுந்திடு சுந்தர காவேரி தன்னை அறிவோமடா.

    சமுத்திர ராசன் நம்மை நோக்கித் தவசு புரிந்தானடா – அதை
    அமர்த்த வந்த நாம் என்ன வேண்டுமென்றோம் அப்போது சொன்னது கேளடா – வெகு

    சமர்த்தாக எனக்கேற்ற பாரியை தயை செய்யும் என்றாளடா
    உமக்குக் கல்யாணம் செய்விக் கிறோமென்று ஒருவழி செய்தோமடா.

    தண்ணிக்குப் பள்ளமே வாய்த்தது போலிந்த சம்பந்தம் வாய்த்ததடா – உங்கள்
    பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஏற்றதே அல்லாமல் பேதகம் இல்லையடா – அவனைக்

    கண்ணுக்கு எதிராகக் காவேரி கண்டாலும் கன மையலாவாளடா – அந்த
    வண்ண முலையாள் தந்தை தாயரிடத்துக்கு வருகிறோம் நீயும் வாடா.

    வசனம்: அகத்தியரும் மந்திரியும் அன்யோன்யமாய் வார்த்தை சொல்லி இருவரும் கவேர இராசனுக்கு அருகில் வருகிற மார்க்கம்.

    தருவு

    விரிசடை அகத்தியரும் வினவப் போன மந்திரியும்
    வரு கவேர விராசனிடம் வகையாக வந்தனரே.

    வசனம்: இந்தப்படிக்கு வந்த அகத்தியருக்குக் கவேர இராசன் நமஸ்காரம் பண்ணி மந்திரியைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    என்ன சேதி சொல்லு – நீ போனது என்ன சேதி சொல்லு
    மன்ன ரியற்கை யெல்லாம் சிந்தை கொண்டு வகையாய்ப் பேசிக் கொண்டு

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து மந்திரி சொல்கிற மார்க்கம்.

    தருவு

    சேதியெல்லாம் இந்த முனிதானே – உமக்குத் தெரிய சொல்லுவார் கேளும்
    பாதி வழியில் கண்டேனப்பால் போகாமலே மறித்தார்
    மாது நம் காவேரிக்கொரு மன்னனையுங் குறித்தார்
    எங்கே விசாரித்தாலும் உண்மை இவர் சொல்லுக்குச் சமானமில்லை.
    அங்கும் நாம் கண்ணாரக் கண்டு அறிந்து வந்த தல்லவே
    பொங்கமாய்த் தேவரீர் உள்ளம் பூரித்திடச் சொல்லவே.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன மந்திரி வார்த்தைகளைக் கேட்டுக் கவேர இராசன் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    ஆரையா சொல்லும் என் அரிவை காவேரிக்கு
    சேரு மணவாளனை சிந்தித் துரை செய்தீராம்

    கருப்போ சிகப்போ பிள்ளை கண்ணாரக் கண்டீரோ
    உருட்டி விழியாதீர் உள்ளதையே சொல்லும்

    சேர்க்கும் மன்னவன் வந்தால் சேருவேன் என்று நான்
    பெற வந்த கன்னியும் பேசியிருக்கிறாள் காண்

    சரி சமான மில்லாத சம்பந்தம் நான் செய்தால்
    பரியாசம் செய்வார்கள் பார்த்த பேரெல்லாம்

    மரியாதை யுண்டான மன்னனானால் சொல்லும்
    பெரியாரென்று சும்மா பேச வேண்டாம் சுவாமி.

    யாரென்ன குலமவன் அல்லாமல் அவனுரைக்கும்
    பேரென்ன ஊரென்ன பெருமை உள்ளவனோ

    நீரென்ன சொன்னாலும் நிசமாயிருக்கு மவன்
    பேரென்ன சொல்லுமென் பூவைக்கு மணம் செய்வோம்.

    வேறு தருவு

    ஆனால் சொல்கிறோம் கேளாய் அணிமாலை புனை தோளாய்
    மானாமுன் காவேரிக்கு மணவாளனா மந்தச் சேதி

    விட்டுணு மேனியும் போலவே மேனியும் உள்ளவன்
    மெத்த விதரணிகன் அல்லால் சட்டமா எந்த நேரமும்

    சங்கீதம் ஓயாமல்தான் தானே பாடவல்லான் – ஆளும்
    மட்டமே யல்லாமல் நெட்டையுமல்ல

    வடிவில் மதராசன் – வெகு அஷ்டைசுவரிய
    சம்பன்னன் – புவிமீதில் அனைவருக்கும் உபகாரன்

    பூமியைச் சுற்றியவனாக நின்று புரக்கும் துரந்தரிகன் – பெரும்
    சாமி என்றனை வணங்கி வரம்பெற்ற சமுத்திர இராசன் – வெகு

    காம விகாரமாயிருக்கிறான் உன்னுடைய கன்னிகைக் கேற்ற புருடன்
    ஆமென்றால் இப்போதே என்னுடன் சொல்லு அவ்விடத்தில் சேதியெல்லாம்.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன அகத்திய மகாமுனி வசனம் கேட்டுக் கவேர இராசன் சொல்லுகின்ற மார்க்கம்.

    கவேரி இராசன் வசனம்: கேளும் சுவாமி அகத்திய மகா முனீசுவரரே, சமுத்திர இராசனுக்கு என்னுடைய கன்னிகையைக் கொடுக்கலாம் என்று சொன்னீரே. அந்த வசனம் கேட்டு மெத்த சந்தோஷமாயிற்று, சகல குணங்கலிலும் சமுத்திர இராசனுக்குச் சமானமான பேர் இல்லை. ஆகையினாலே நமக்குச் சந்தோஷம் ஆயிற்று. என்னுடைய கன்னிகை விவரம் அறிந்தவள் அல்லள். அவளிடம் இந்த விருத்தாந்தம் சொல்லித் சம்மதி பண்ண வேண்டும். அவளிடம் இப்போது சொல்வோம் என்றால் அந்தக் கன்னிகை இங்கே இல்லை. பஞ்சநதித் தலத்திலே தனக்கேற்ற புருடன் வேண்டுமென்று பஞ்சநதீசுவரரைப் பூசை செய்யப் போயிருக் கிறாள். நாம் அழைத்தால் வரமாட்டாள், ஆகையால் தேவரீர் தயை செய்து அங்கே வந்தால் நாங்களும் கூட வருகிறோம். கன்னியிடம் இந்தச் செய்தி சொல்கிறோம். அவள் சம்மதித்தால் அந்தப்படியே கல்யாணம் ஆகட்டும்.

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன, கவேர இராசனைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

    அகத்தியர்: நல்லது, அப்படித்தானே வந்து கன்னியைக் கேட்போம்.

    சூ.வசனம்: இந்தப்படிக்கு அகத்தியரும் சுவேர இராசனும் பஞ்சநதத்துக்குப் போவோம் என்று இருக்கிற சமயத்தில், அப்புறம் கதாம்சம் விதானம் எப்படியென்றால் திருவையாற்றில் காவேரி அம்மன் சகியோடு, பஞ்சநதீசுவரரைப் பூசை பண்ண வருகிற மார்க்கம்.

    திரை தருவு

    காவேரி வந்தாள் சகியுடனே

    காவேரி வந்தாள் நல்ல களப மெய்யி லணிந்து
    பூவார் குழலிலங்க பூர்ண சந்திரோ தயம்போல

    கரிய விழி புரள கனக பணி திரள
    வரிசையா யணி திரள மாலை முலைமேல் துவள

    வேறு தருவு

    காவேரி யம்மன் வந்தாள் கனக வடிவுடனே
    ஆவலாய்ப் பஞ்ச நதி அரனுக் கருச்சனை செய்ய

    சந்திர காவிச் சேலைகட்டி சரிகை ரவிக்கை அணிந்து
    அந்தை காலில் அணிந்து அன்னம் போல நடந்து

    கொவ்வை யிதழ் துலங்கக் கொடிபோலிடை துவளச்
    செவ்விள நீரைப் போலத் திரண்ட முலை குலுங்க

    திலகம் நுதலி லிட்டுச் சேல்விழிக் கஞ்சனம் தீட்டி
    நிலவுப் பூப் போல் க்றுநகை நின்று நின்று நகைத்து

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன் வந்து பஞ்சநதீசுவரரி நமஸ்காரம் பண்ணி, பக்தியுடனே தோத்திரம் பண்ணுகிற மார்க்கம்.

    தருவு

    கங்கை வேணிய கங்காளா – பஞ்ச நதீசுவரா
    கால காலா நீலகண்டா – ப
    துங்க வரவ பூஷணா – ப கையில்
    சூல கபால மேந்திய – ப
    அம்புலி தன்னைத் தரித்த – ப
    புலித்தோலை யாடையாக வுடுத்த – ப
    சம்பரா ரியைப் பார்த்த கண்ணால் – ப நல்ல
    தலைமாலை யணிந்த புய – ப
    நேமி நாதன் நான்முகன் – ப தேட
    நீள்முடி பாதம் காணாத – ப
    சாமவேத கானப் பிரிய – ப எங்கள்
    சகதிராசன் குல தெய்வமே – ப
    தேனுடன் பாலுங் கலந்த – ப உன்றன்
    சிரசில் அபிஷேகம் செய்தேன் – ப
    நானருச் சனை செய்கிறேன் – ப எனக்கு
    நல்ல புருடனாகத் தாரும் – ப

    சூ. வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன், பஞ்சநதீசுவரரைத் தோத்திரம் பண்ணிப் பூசை பண்ணுகிற மார்க்கம்.

    தருவு

    மவுனமாய் நின்றபி ஷேகம் வகையாகச் செய்கிறேன்
    புவிராசர் பணிராசனை யெனக்குப் புருடனாகப் பண்ணும்

    அம்புயக் கையால் சுகந்தம் அருச்சனை செய்கிறேன்
    கம்பீர புருடன் என்னைக் கிட்டவரப் பண்ணும்

    சந்தனம் கற்பூரத்துடன் சாத்துகிறேன் சுவாமி
    சந்தோடமாக யிருக்கும் தலைவன் வரப்பண்ணும்

    நல்லதொரு கனிகள் எல்லாம் நைவேதனம் செய்கிறேன்
    எல்லா மீதலுள்ள புருஷன் மேவவரப் பண்ணும்.

    தீபமெல்லாம் வகை வகையாய்ச் சிறக்கப் பணி மாறுகிறேன்
    கோபமில்லாப் புருடன் என்னைக் கூட வரப் பண்ணும்

    மறவாமல் பஞ்சாட்சரத்தை மகிழ்ந்து சபிக்கின்றேன்
    பிரியாமல் நித்த முத்தாடும் பிரியனை வரப் பண்ணும்

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன் பஞ்சநதீசுவரரைப் பூசை பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே கவேர இராசனும் அகத்திய மகாமுனீசுவரரும் கவேர இராசனுடைய மனைவியும் மந்திரியும் மற்றுமுள்ள பந்து சனங்களோடு கூட, பஞ்சநதீசுவரருடைய தலத்துக்கு வருகிற மார்க்கம்.

    தருவு

    பஞ்சநதீசுவரரை நித்தம் பணிந்து புருடன் கேட்கும்
    வஞ்சியிடம் அவர்கள் எல்லாரும் வந்தனரே.

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் வந்து பஞ்சநதீசுவரரைப் பனிந்து காவேரியம்மனைப் பார்த்துச் சொல்லுகின்ற மார்க்கம்.

    தருவு

    ஆசை கொண்டாலும் சம்மதியோ காவேரி சம்மதியோ
    அம்மா சமுத்திர ராசன் அதிரூப வானாம்.

    இந்த அகத்திய முனி இது நிமித்த மட்டும்
    வந்தவன் சரித்திர வகை வகையாய்ச் சொல்லுகிறார்

    கண்ணுக் கிதமாகிய கணவனைச் சேர்வேனென்று
    பெண்ணே நீ முன் சொன்ன பேச்சுப்படிப் பேசுகிறார்

    எங்களுக்கிது தானே இயற்கையாய்க் காணுது
    மங்கையே உன்றனுடைய மனதில் வாஞ்சை எப்படி?

    வாச மாமலரெடுத்து மானே இந்த ஹரனை
    பூசை செய்வது நல்ல புருடனை வேண்டியன்றோ?

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து “நல்ல புருடன் வேணுமென்று இந்தப் பரமேசுவரனைப் பூசை பண்ணின விதமெல்லாம் சொல்லுகிறேன், கேளும் ஐயா! என்று காவேரியம்மன் சொல்லுகின்ற மார்க்கம்.

    தருவு

    இப்படி நான் சிவ பூசை செய்தேன் – மெத்த
    மெப்புள்ள புருடனை நான் மேவ வேணுமென்று

    நந்தவனத்தினில் நானே அடுத்தேன் – அடுத்து
    நறுமலர் அங்கிருந்ததிலே நல்லதெல்லாம் எடுத்தேன்

    பந்து போல் சுருட்டும்படி தொடுத்தேன் – தொடுத்துப்
    பங்கயக் கையாலே சாத்திப் பார்த்தேன் உள்ளம் களித்தேன்

    முன்னே நெய்யினால் விளக்கு வைத்தேன் – வைத்து
    முத்து ரத்னாதிகளிலே முகமங்கி அமைத்தேன்

    அன்னவகை யுள்ள தெல்லாம் படைத்தேன் – படைத்து
    அஞ்சடுக்குத் தீப முதல் ஆலத்தியும் எடுத்தேன்

    சிறப்பாகப் பிரதட்டிணம் புரிந்தேன் – புரிந்து
    திருச்சிற்றம்பலமோடு தேவாரம் சொரிந்தேன்

    மறவாமல் நந்தி அருகிருந்தேன் – இருந்து
    மனத்தினில் பஞ்சாட்சரத்தை வகையாக நினைந்தேன்

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன காவேரி அம்மனைப் பார்த்து கவேர இராசன் சொல்கிற மார்க்கம்.

    வசனம்: வருவாய், மா காவேரியே! நீ பஞ்சநதீசுவரனை எத்தனைப் பிரயாசமாய்ப் பூசை செய்தாயோ அத்தனைச் சந்தோஷம் வந்து லபித்தது. இந்த அகத்திய மகாமுனீசுவரர் சகல குணங்களிலேயும் ஈடு எடுப்பில்லாமல் இருக்கிற சமுத்திர இராசனுக்கு உன்னைக் கேட்க வந்திருக்கிறார். எங்களுக்கு மிகவும் சந்தோஷமா யிருக்கிறது. உன்னுடைய அபிப்பிராயம் சொல்லு பெண்ணே.

    கன்னி வசனம்: ஆனால் நான் சொல்கிறேன், கேளும் ஐயா.

    தருவு

    பஞ்ச நதீசருடன் நெஞ்சம் சம்மதியாமல் என்
    சம்மதி எதுக்காகும் ஐய என் சுவாமி

    தஞ்சம் என்று அவர் இரு கஞ்ச மலர்ப் பாதத்தைக்
    கொஞ்சி யேத்தும் நான் அல்லவோ அனுதினமும்

    ஈசன் சம்மதியாமல் பேசேன் உங்களுக்கென்
    விசுவாசம் இன்னும் தெரியாது மனதில்

    ஆசை யுடனவரைப் பூசை செயும் எனக்கு
    நேசன் வலிய வாரானோ மருவ நல்ல

    என்னாணை இவர் வந்து சொன்னால் அல்லாமல் எங்கள்
    மன்னா நான் சம்மதிப்பேனோ இது காரியம்

    உன்னாலே தான் நமது மின்னா ளென்றோ வெண்ணிக்
    கன்னி தானம் செயப் போமோ தேவரீராலே

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் கன்னிகை சொன்ன வார்த்தை கேட்டுக் கவேர இராசன் அகத்தியரைப் பார்த்துச் சொல்லுகின்ற மார்க்கம்.

    சு.இராச வசனம்: வருக அகத்திய மகா முனீசுவரரே நமக்குச் சம்மதம். கன்னிகையைக் கேட்டால் பரமேசுவரன் வந்து சொன்னால் அல்லாமல் தனக்குச் சம்மதியில்லை என்று சொல்கிறாளே. பரமேசுவரனைப் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு, அவராலே இந்தக் கன்னிகைக்குச் சொல்லி வைக்க என்னால் ஆகாதே, நீர் தபோதனர் அன்றோ? உம்மாலேயே இது ஆகும். இனிமேல் இந்தக் கன்னிகை சொன்ன வார்த்தைக்கும் உத்தரவு சொல்லிப் பஞ்சநதீசுவரரையும் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு அவராலே இந்தக் கன்னிகைக்கும் சம்மதி பண்ணி வைத்து முஹூர்த்தம் நிர்ணயம் பண்ணிக் கன்னிகையைத் தானம் பண்ணுகிறேன். இப்போது நான் சொன்ன காரியங்களுக்குக்கெல்லாம் யத்னம் பண்ணுமையா சுவாமி.

    சூ. வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து “வாரும், கவேர ராசாவே, நம்முடைய தபோ பலத்தினாலே நீ சொன்ன காரியங்களெல்லாம் நிர்வாகம் பண்ணி இந்தக் கன்னிகைக்கு விவாகம் பண்ணுகிறோம்” என்று இராசனிடம் சொல்லி கவேரகன்னிகையைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

    தருவு

    பஞ்சநதீசரைக் கெஞ்சி நாம் சம்மதி
    பண்ணிக் கொள்கிறோம் பெண்ணே உன்

    நெஞ்சில் ஒருமையாய் வஞ்சனை பண்ணாமல்
    நீயுங்கூட நினை பெண்ணே

    உத்தரம் சொல்லாதே முத்து முத்தாட
    உனக்கேற்ற நாயகன் பெண்ணே அல்லால்

    சத்திய வாசகன் உத்தமன் பேரும்
    சமுத்திர ராசன் காண் பெண்ணே

    நித்தம் சிவ பூசை பண்ணாமல் ஆகாரம்
    நித்திரை பண்ணான் காண் பெண்ணே உன்றன்

    அத்திர விழிக்கவன் ரூபத்தைக் கண்டால்
    அப்போது தெரிய வரும் பெண்ணே

    வந்து வெகுநேரமாச்சுது பேச்சில்
    வழிவிடாதே சொல்லு பெண்ணே மனம்

    சந்தோஷ மாகவே சமுத்திர ராசனைத்
    தான் அழைத்து வருவோம் பெண்ணே!

    சூ.வசனம்: இந்தப் படிக்குச் சொன்ன அகத்தியரைப் பார்த்துக் காவேரியம்மன் சொல்லுகிற மார்க்கம்.

    கன்னி: வரவேண்டும் அகத்திய மாக முனீசுவரரே, பஞ்சநதீசுவர சுவாமி சொன்னால் அல்லாமல் நான் சுயமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறதில்லை சுவாமி.

    அகத்: கேள் பெண்ணே காவேரி! பஞ்சநதீசுவரரைப் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு அவராலே உனக்குச் சம்மதியாகச் சொல்லி வைக்கிறேன். என் திறமையைப் பார் பெண்ணே!

    சூ.வசனம்: இந்தப்படிக்கு அகத்தியர் கன்னிகையைப் பார்த்துச் சொல்கின்ற மார்க்கம்.

    தருவு

    மெத்த வொருமையாக விஷ்ணு வொரு பூநிமித்தம்
    விழியிடந்து சாத்தும் வேளையில் பக்திக் கிரங்கி வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    பிச்சிப் பூவாலருச்சனை செய்த மார்க்கண்டேயனைப் பிடிக்க
    வந்த நமனை உதைக்கவே பக்ஷமாக வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    கோட்டு முலைச்சி பரவை நாச்சியார் தனைக் கூடிக்
    கும்பிட்டுப் போற்றும் சுந்தரன் பாட்டுக் கிரங்கி வந்த
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    வாக்கிசந்த கொங்கை உமையாள் தனைப் புணர்ந்த
    மணவாளக் கோலத்துடனே ஏழை நான் பார்க்க வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    வேதம் படிக்கும் அம்பலந்தணன் யக்ஞத்தில் வரவேணுமென்று
    வருந்தும் வேளையில் பாதம் காட்ட வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    சீல முனிவர் வேஷமாகவே வந்து செங்காட்டில் சிறுத்தொண்டன்
    கறியும் உண்டபின் பாலனுடனே நின்ற நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    திசைபெறு சோழன் மனசைச் சோதிக்க நமனெனும் கன்றைத்
    தேரிலுற வைத்தபின்னும் பசுரூபங் கொண்டு வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    ஆரடி யடிதேவி உன்பிள்ளை புவியின் மீதியில் அவதரித்ததோ
    வழுகிறான் பாரம் என்று சொன்ன நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    முதலை உண்ட பிள்ளைதனை அழைத்துக் கல்யாணம் முடித்து
    அவனுடைய காணியாகிய பதியில் வைத்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    சித்தம் மகிழ்ந்து சமுத்திர ராசனை இந்தக் காவேரி சேரக்
    கல்யாணம் செய்யத் தேவரீர் பிரத்தியட்சமாக வேணுங்காண்!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    சூ.வசனம்: இந்தப்படிக்குப் பிரத்தியக்ஷமான பரமேசுவரர் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    ஈசன்: வருக! அகத்திய மாமுனியே! நீ பண்ணின தோத்திரத்திற்கு மிகவும் சந்தோஷம்.
    அப்படியே காவேரிக் கன்னிகையை சமுத்திர ராசனுக்குக் கல்யாணம் பண்ணி
    வைக்கிறோம். நீ சீக்கிரம் போய், சமுத்திரனை அழைத்துக் கொண்டு வருக!

    அகத்: மகா பாக்கியமாயிற்று சுவாமி!

    சூ.வசனம்: இந்தப்படிக்குப் பரமேசுவர வசனம் கேட்டு அகத்தியர் சமுத்திர ராசனை அழைக்கப் போகிற மார்க்கம்.

    தருவு

    அமைக்க வந்த கன்னி அமைந்ததென்று
    அகத்தியமுனி சமுத்திர ராசனை அழைக்கத்தான் நடந்தாரே!

    சூ.வசனம்: இந்தப்படி அகத்திய மகாமுனி சமுத்திர ராசனுடன் இந்த விருத்தாந்த மெல்லாம் சொல்லிச் சமுத்திரனை உடன் கூட்டிக் கொண்டு, பஞ்சநதீசுவர தலத்துக்கு கல்யாணத்துக்கு வருகிற மார்க்கம்.

    தருவு

    சமுத்திர ராசன் வந்தான் – சுந்தரமான சமுத்திர ராசன் வந்தான்
    சமுத்திர ராசேந்திரன் தனக்கே காவிரியை

    அமர்த்தும் அகத்தியர் போல் அழைத்தபடியே கூட மனத்தில் மகிழ்ச்சியும்
    கொண்டு – சிவனைக்காண வலம்புரிச் சங்கும் கொண்டு

    கனக பணியுங் கொண்டு கஞ்ச மலருங் கொண்டு
    தினக ரோதயம் போலே திருவையாறதனிலே

    சூ.வசனம்: இந்தப் படிக்குச் சமுத்திரராசன் பஞ்ச நதீசுவரரைத் தோத்திரம் பண்ணுகின்ற மார்க்கம்.

    தருவு

    சரணம் சுவாமி சரணம் செளந்தரேச சரணம்
    அரவு கங்கை திங்கள் சடையில் அணிந்த பஞ்சை நதியீசா!

    விடையேறி வரு துங்க விபூதி தவழங்கதுடி மானும் மழுவும்
    சிரசும் சூலமும் ஏந்து கையர்

    மறையோனும் மானும் காணா மகாதேவர் மலர்ப்பாதா
    அறமளித்த நாயகி பங்கினில் அமர்ந்த பஞ்சநதியீசா!

    புகழ் பஞ்ச நதிவாசா போசல குல யீசா
    சகசி ராசனிரவும் பகலும் தான் பணியும் சர்வேசா!

    சூ.வசனம்: இந்தப்படிக்குத் தோத்திரம் பண்ணின சமுத்திர ராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    உனக்கேற்ற புருடனிவன் உகந்து பார் காவேரி
    எனக்கேற்ற புருடனருள் என்று சொன்னபடி

    விதவிதமாய் மலரெடுத்து விடிஉமுன்னே நமையடுத்து
    இது நிமித்தம் வெகு பூசை இச்சையுடன் செய்து

    தந்தை தாய் இருக்கிற பேர்தானே வேண்டியது செய்வார்
    சிந்தனை யென்னென்றிராமல் தினம் வந்தெனைப் பணிந்த

    அவன் மெய்யும் சலரூபம் உன் மெய்யும் சலரூபம்
    கவலையில்லை இருவருக்கும் கலவி செய்து கூட.

    சூ.வசனம்: இப்படிச் சொன்ன பஞ்சநதியீசனைப் பார்த்துக் காவேரியம்மன் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    சந்தோஷமாச்சு சுவாமி என்றன் மனது
    சந்திரசேகரா இந்தச் சமுத்திர ராசனைக் கண்டு

    இஷ்டமாகு முன்னே பேச்சுப் பேசி முத்தாட எண்ணுவதென் மையல் நீச்சு
    திருஷ்டிப் பிரியமா வாய்த்து சிந்தைத் துயரம் போச்சு.

    கவுடாய்ப் பார்த்தானொரு பார்வை அவன் முகம் கனம் கொண்டு
    உருகுது வேர்வை
    இவனும் எனக்குக் கோர்வை என் முலை இவனுக் கேர்வை

    தரு கமலை மாதருளாலே புவியை ஆளும் சகசி இராச தேவேந்திரன்
    மேலே கருணை செய்வது போலே கல்யாணம் செய்யுமினி மேலே.

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கன்னிகை வசனம் கேட்டுப் பஞ்சநதியீசுவர சுவாமி சொல்கிற மார்க்கம்.

    ஈசன்: வருக சமுத்திர ராசாவே! நீ நினைத்தாற் போல இந்தக் கன்னிகை உன்னைக்
    கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதி பண்ணினோம். நம் முன்னிலையில் தானே
    சீக்கிரமாய்க் கல்யாணம் பண்ணிக் கொள்வாயாக.

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சமுத்திர இராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    ஈசன்: வருக கவேர இராசனே, உனக்கு நல்ல மாப்பிள்ளையாக வந்தான். இந்தக்
    கன்னிகையைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணும்.

    சூ.வசனம்: இந்தப் படிக்குச் சொன்ன பரமேசுவர வசனம் கேட்டு கவேர இராசன் சமுத்திர இராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    மலைக்கு மலையண்டை கொடுத்தாற்போல் நீ வந்து
    வாய்த்ததே நேர்த்தியையா சொல்லும்

    கலைக்கொரு வாணியைப் போல் வந்த வென்னுடைய
    கன்னி காவேரி யம்மனுக்கு

    செப்பு முலையுள்ள யெந்தேவி யென்னுடன் சிங்காரமாகக் கொண்டு
    சப்பிர மஞ்சத்திலே இருந்து விளையாடும் வேளையிலே – தங்கக்

    குப்பா சத்திலடங்காது நம் கன்னிக்குக் கொங்கையென்று சொன்னபின்
    இனி எப்படிக் கொத்த புருடன் வாரானோவென்று எண்ணி யெண்ணி யிருந்தேன்.

    அஞ்சு வயது முதற்கொண்டு நித்தம் அலர்ந்த மலரெடுத்து
    பஞ்சநதீசருக்கு அருச்சனை செய்திரு பாதம் தனைப் பணிந்து

    கெஞ்சிக் கெஞ்சி நல்ல புருடன் தாருமென்று
    கேட்டீரிந் நாளிவட்கு எங்கே
    கொஞ்சத் தனமுள்ள புருஷனாகவே கொடுக்கிறாரோ வென்றிருந்தேன்.

    அகத்திலிருந்து மந்திரி உடனிது ஆலோசனை புரிந்து
    சகத்தில் நமக்குச் சரிமன்னர் ஆரினி தேடி வா போவென்றேன்

    அகத்தியர் வந்து சமுத்திர ராசனென் றாரப்போதொரு மட்டும் உன்றன்
    முகத்தைக் கண்டதும் சந்தோஷம் மட்டல்ல முகவிச்ச வார்த்தையன்றோ

    அகத்திய மாமுனியே தேவரீருக்கனந்தம் சரணம் ஐய
    சகத்திலே நாங்கள் சுகத்தையே மென்மேல் சேர்த்திருக்கவே செய்து மகிழும்

    மதியணிந்திடு வேணியர் தேவிக்கு மாலையிடுமப்போ தந்த
    பொதியமா மலை தன்னிலிருந்து பாதி பூமியைச் சரிசெய்தீரே

    இனிய யக்ஜங்கள் செய்யும் பெரியோர்க்கு இப்புவி மீதிலுள்ள நல்ல
    முனிவர்க்கு மாதி சைவர்க்கும் கொழுந்தான மூர்த்தியாக வந்தீர்.

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனின் வசனம் கேட்டு சமுத்திர இராசன் சொல்கிற மார்க்கம்.

    சமுத்: வருக கவேர இராசாவே! உமக்கும் நமக்கும் சம்பந்தம் பண்ணுவித்தது இந்த
    அகத்திய மகாமுனீசுவரர். இவரே இந்தக் கல்யாணத்துக்குக் காரணம் சுவாமி.

    சூ.வசனம்: இப்படிச் சமுத்திர இராசனும் கவேர இராசனும் அன்யோன்யமாய் வார்த்தை சொல்லி அகத்திய மகாமுனியைத் தோத்திரம் பண்ணுகின்ற மார்க்கம்.

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் சமுத்திர இராசன், கவேர கன்னிகை, மந்திரி, கவேர இராசன் மனைவி மற்றுமுள்ள பேரும் அகத்தியரைத் தோத்திரம் பண்ண, இந்தச் சமயத்திலே பஞ்சநதீசுவரர் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    ஈசன்: வருக! அகத்திய மகாமுனியே, சமுத்திர இராசனுக்குக் கர்த்தா நீர்தானே.
    சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணி வையும்.

    அகத்தி: மகா பாக்கியமாயிற்று, சுவாமி!

    சூ.வசனம்: சொன்ன பரமேசுவர வசனம் கேட்டபடி அகத்தியர் சமுத்திர இராசனுக்கும்
    காவேரிக்கும் கல்யாணம் பண்ணுகிற மார்க்கம்.

    இந்தப்படிக்கு முஹூர்த்த சமயத்திலே கவேர கன்னிகையைப் பார்த்துச் சொல்கிற
    மார்க்கம்.

    தருவு

    மாலையிடடி பெண்ணே மாலையிடடி வால மன்மதன்
    போலவே வரும் – சமுத்திர ராசனுக்கு (மாலை)

    மெத்த நல்ல நாதனாக வேணுமென்று இவரிடத்தில்
    பக்தி செய்தாயே நீ இந்தப் பஞ்சநதியீசர் பார்க்க

    பக்ஷமாய்த் தினமும் இந்தப் பஞ்சநதி ஈசருக்கு
    அருச்சனை செய்த கையால் அலர்ந்த செந்தாமரைப்பூ

    தானு முன்னே உன்னை இந்த சமுத்திர ராசனுக்குப்
    பாணிக் கிரகணம் பண்ணப் பணம் பாக்கு வெற்றிலை எடுத்தேன்.

    சூ.வசனம்: இந்தப் படிக்குக் காவேரியம்மனுக்கும் சமுத்திர இராசனுக்கும் கல்யாணம் பண்ணுவித்து கவேர இராசன் சமுத்திர இராசன் முதலானவர்கள் பரமேசுவரனுக்கு நமஸ்காரம் பண்ணித் தோத்திரம் பண்ணுகிற மார்க்கம்.

    தருவு

    ஏழை பங்காள கங்காள – நம் பஞ்சநதீசுவரா
    விடையேறும் பரமசிவ – பஞ்சநதீசுவரா
    வேழ முகத்தானைப் பெற்றிடும் – பஞ்சநதீசுவரா
    வேதாந்த வேத்ய ஜகன்மய – பஞ்சநதீசுவரா
    பன்னக பூஷண பரமேச – பஞ்சநதீசுவரா
    பாவஜ கர்வ தமனாதீசுவரா – பஞ்சநதீசுவரா
    புன்னாக வர சர்ம பூஷித – பஞ்சநதீசுவரா தினம்
    போசல குல கசேந்திரன் பணி – பஞ்சநதீசுவரா

    சூ.வசனம்: இந்தப்படிக்குத் தோத்திரம் பண்ணி, சமுத்திர இராசன் முதலானவரை யெல்லாம் பார்த்துப் பரமேசுவரன் வாழ்த்துகிற மார்க்கம்.

    தருவு
    ராகம்: மத்தியமாவதி

    ஆல்போலவே தழைத்து நல்ல அருகு போலவே வேரோடி
    மால் போலவும் லக்ஷ்மி போலவும் வையகந் தனில் வாழ்ந்திருப்பீர்! – இருவரும்
    இருக்குவேள் போலவே வாழ்ந்திருப்பீர்
    சந்திரன் போலவே வாழ்ந்திருப்பீர் – எழு

    தாரகை போலவே வாழ்ந்திருப்பீர் வனிதையே எங்கள் காவிரியே
    சகசி மகாராசனால் சோழ மண்டலத்தில் தினமும் இந்தப் புவி
    விளையச் செய்து ஸ்திரமாக எப்போதும் வாழ்ந்திரு நீ!

    சூ.வசனம்: இந்தப்படிக்குப் பரமேசுவரன் ஆசீர்வாதம் பண்ண, சகலமான பேரும் விளங்கி சந்தோஷாதி சயத்தினால் மங்களம் பாடுகிற மார்க்கம்.

    மங்கள தருவு

    வரு சமுத்திர ராசனுக்கு மங்களம் – எங்கள்
    வனிதை காவேரிக்கு மங்களம்
    தானவர் வீரனுக்கு மங்களம்
    சகல லோக பாவனிக்கு, பவானிக்கு மங்களம்.

    மானோர்கள் மித்திரனுக்கு மங்களம்
    தண்டமிழார் சகசேந்திரன்
    தானாக வளரும் சோழ மண்டலத்தை
    வளர்க்கும் தேவிக்கு மங்களம்.

    சுபம்

    தஞ்சை மராத்தியர் கால நாட்டிய நாடகங்களின் தொடக்கக் காட்சி.

    அந்தக் கால நாட்டிய நாடக மரபின்படி கட்டியக்காரன் மேடையில் தோன்றி பேசும் பாங்கினை விளக்கும் விதமாக ‘மாதிரி உரையாடல்’ இங்கே காணலாம். கீழ்கண்ட தொடக்கக் காட்சி உரையாடல் “விஷ்ணு சாஹராஜ கல்யாணம்” எனும் நாடகத்தில் வருவது. ஷாஜி மன்னரின் அவைக்களப் புலவர்கள் இயற்றியதாக இருக்கலாம். இதில் ஷாஜி மன்னன் பாட்டுடைத் தலைவனாகவைத்து இயற்றப்பட்டிருக்கிறது. புராண பின்னணியோடு அமைந்த இந்த நாடகம் ஷாஜி வழிபடும் திருவீழிமிழலைத் தலத்துக்கு வந்து ஈசரை மகாவிஷ்ணு வழிபட்ட வரலாறு சொல்லப்படுகிறது. ஆயிரம் செந்தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு அர்ச்சிப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. அப்போது சிவபெருமான் காட்சி தருவதாக அமைந்தது இந்த கதை. இனி….

    நாடகம் துவக்கப்படுவதற்கு முன் அரங்கில் கட்டியக்காரனைச் சூத்திரதாரன் அறிமுகம் செய்து வைக்கிறான். கட்டியக்காரனுக்கும் சூத்திரதாரனுக்கும் நிகழும் உரையாடல் பின்வருமாறு அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் பேச்சு வழக்கு எப்படி இருந்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. 3ஆம் ஷாஜி ராஜா தஞ்சையை ஆண்ட காலத்தில் எல்லா நாடகங்களிலும் இதுபோன்ற உரையாடல்களைக் கேட்கலாம். இந்த உரையாடல் நடக்கும் சமயம் மேடையில் சூத்திரதாரனும் கட்டியக்காரனும் இருப்பர்; இசைக் குழுவினர், தலைமை நட்டுவன், தாளக்காரன் ஆகியோரும் இருப்பர்.

    இந்த உரையாடல்கள் இசை நாட்டிய நாடகங்களுக்குப் பொதுவானவை எனினும், இங்கு தரப்படும் உரையாடல்கள் “விஷ்ணுசாகராஜ விலாசம்” எனும் நாடகத்தில் வருபவை, இது அந்த நாடகச் சுவடிகளில் காணப்படுபவை. அப்போது தமிழ் நாட்டில் நாட்டிய ஆசிரியர்கள் நாடகத்தை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு இந்த சுவடியே ஆதாரம். மக்கள் கேட்டு மகிழும் பாங்கில் அன்றைய பேச்சு நடைமுறையில் இவை அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் தஞ்சை நகரில் நடைபெற்ற நாடக முறை பாங்கு இது.

    அன்றைய தஞ்சையை ஆண்டவர்கள் தமிழ், தெலுங்கு, மராத்தி மொழியாளர்கள். முதலில் சூத்திரதாரன் மேடையில் தோன்றுவான். அரங்கில் மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்து நாடகத்தைக் காணக் காத்திருக்கின்றனர். அப்போது கட்டியக்காரன் அங்கினுள் நுழைகிறான், இருவரும் உரையாடுகிறார்கள்.

    சூத்திரதாரன்: (கட்டியக்காரனை நோக்கி) அடேய், நீ எங்கேயிருந்து வாராய் சொல்லடா?

    கட்டியக்காரன்: மகாவிஷ்ணு சாமியண்டையிருந்து வந்தேனையா.

    சூ: நீ வந்த காரியமென்ன தெரியச் சொல்லடா?

    க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்க ஸ்வாமியைச் சேவிக்க வருகிறார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தோமையா.

    (சூத்திரதாரனும் கட்டியக்காரனும் பேசிக்கொண்டிருக்கும்போது
    நட்டுவனார் அரங்குக்கு வருகிறார்.)

    சூ: நட்டுவனாரே, நாம் ஆடற பாடற சபையிலே இவன் ஆரோ தெரியாது, வந்திருக்கிறானே! இவனுடைய பட்டை நாமம் என்ன, பட்டு துப்பட்டி என்ன, தாடி என்ன, கட்டியக்கோல் என்ன, இவனுடைய பூர்வோத்தரம் கேட்க வேணுமே!

    சூ: சரி. அரே பாய்! தும் கோன்றே (ஹிந்துஸ்தானியில் நீ யாருடா?)

    க: (காதில் வாங்கிக் கொள்ளாமல்) அம்மம்மா! இந்தப் பந்தல் பார்க்க மெத்த நன்னாயிருக்கே!

    சூ: ஓய் நட்டுவனாரே! இவனுக்கு உத்தராதி பாஷை தெரியாது. மராட்டி பாழையாலே கூப்பிடவேணும்! அஹாதூ கோடூன்? (எங்கேயிருந்து வருகிறாய்) ஆலாஸ கா! (கட்டியக்காரன் கவனிக்காமல்)

    நட்: ஐயா! அப்படிக் கூப்பிட்டாலும் பேசவில்லையே. இனிமேல் கன்னட பாஷையில் கூப்பிடவேணும் போலயிருக்கே!

    சூ: எலே தம்பி! (கன்னடத்தில்) எல்லித்து பந்தயோ? (இப்போதும் கவனிக்கவில்லை)

    நட்: ஐயா, அப்படியும் பேசவில்லையே. வடுக பாஷையினாலே கூப்பிடுவோமே!

    சூ: (வடுகில் என்று குறிப்பிடப்படுவது தெலுங்கு) ஓயி நாயடா? ஏடனுண்டி வொஸ்தி வோயி?

    நட்: ஐயா, அப்படியும் பேசவில்லை. சோழ மண்டலம் தமிழிலே கூப்பிடவேணும் அப்போ பேசுவான்.

    சூ: (தமிழில்) ஓநோய் நாயக்கரே, எங்கேயிருந்து வந்தீர் காண்? (நெற்றியில் பட்டை நாமம் போட்டிருந்ததால் நாயக்கரே என்றழைக்கிறான்)

    கட்டியக்காரன் பேசவில்லை. ஒருகால் இவனுக்குக் காது கேட்கவில்லையோ என்று சூத்திரதாரன், ஒரு காதுப் பக்கம் போய் கூப்பிடுகிறான். பதில் இல்லை. மற்றொரு காதுப் பக்கம் போய்க் கூப்பிடுகிறான், அதற்கும் பதில் இல்லை. சூத்திரதாரன் கட்டியக்காரனைச் சுற்றி வருகிறான். அப்போது தன்னை அவன் அடிக்க வருகிறானோ என்று கட்டியக்காரன் கையில் கம்புடன் சூத்திரதாரனை அடிக்க ஓங்கி மிரட்டுகிறான்.

    சூ: அடே பைத்தியக்காரா! உன்னோடு சண்டையில்லை. உன்னை இனிக் கூப்பிட மாட்டேன். நாங்கள் எல்லோரும் இங்கே கூடிக்கொண்டு வீழிநாத ஸ்வாமி ஸந்நிதியிலே நாட்டிய நாடகம் ஆடுகிறோம். நீ யார் என்று கேட்டோம்.

    க: ஓஹோ! நீ யாரடா?

    சூ: நான் வித்வானடா.

    க: என்ன வித்வாங்கனை? நம்மிடம் சொல்லுடா?

    சூ. நான் சொல்றதிருக்கட்டும் நீ எங்கேயிருந்து வந்தாய் முதலில் சொல்லடா?

    க: வடக்கே போ (கையை வடபுறம் காட்டி)

    சூ: பீஜாபுரத்திலேயிருந்து வந்தாயோ?

    க: சே! அங்கே யார் மகனாகப் போனாய்? இங்கே திரும்படா (மேற்கே கை காட்டி)

    சூ: ஆனை, மலையாளமா?

    க: இப்படித் திரும்பு (கிழைக்கை நோக்கி)

    சூ: ராமேஸ்வரத்திலேர்ந்து வந்தாயா?

    க: இப்படித் திரும்பு (வேறு பக்கம் காட்டி)

    சூ: வேதாரண்யமா?

    க: சற்றே இந்தப் புறம் போ.

    சூ: திருவாரூரா?

    க: ரெண்டு முழம் இப்படித் திரும்பு.

    சூ: கும்பகோணமா? கெளரி மாயூரமா? திருவிடைமருதூரா? சீர்காழியா? வைத்தியநாதன் கோயிலா?

    க: அடடே நில்லு. அத்தனை தூரம் யார் மகனாய்ப் போகிறாயடா? சற்றே இப்புறம் (கோலால் தரையில்
    (கோடு போட்டுக் காட்டுகிறான்)

    சூ: சாலியமங்கலமா? மாரியம்மன் கோயிலா? தஞ்சாவூரா?

    க: சபாஷ்டா! நம்ம பின்னே வா (ஒரு பக்கமாக அழைத்துப் போகிறான் அங்கு ஒரு கம்பத்தைக் காட்டுகிறான்) ஒசக்க ஏறு! கெட்டியாய்ப் பிடிச்சுக்கோடா (சுத்திரதாரன் ஏறுகிறான்)

    க: ஒரு காலை விடு, இந்தக் காலையும் விடு. அந்தக் கையை விடு. இந்தக் கையையும் விடு. கீழே விழு.

    சூ: ஓய் பலே. நன்னாச்சு. காலொடிஞ்சால் எப்படி?

    க: ஒரு பந்தக்கால் கொடுக்கிறோம். (இருவரும் முன்னால் வருகின்றனர்)

    சூ: இதெல்லாம் இருக்கட்டும்! நீ எங்கேயிருந்து வந்தாய்? நிலவரமாய்த் தெரியச் சொல்லுடா?

    க: அந்த வீட்டிலேயிருந்து இங்கே வந்தேன்.

    சூ: உன்னோட வாசம் எங்கே?

    க: வாசுதேவனிடத்தில்.

    சூ: வாசுதேவனென்றால் எனக்குத் தெரியாது.

    க: சின்னப்போ மண்டி போட்டுக்கொண்டு அரி நரி என்று படிக்கவில்லையா? அதாவது மகாவிஷ்ணு வாசலிலே இருக்கிற கட்டியக்காரன் நானடா!

    சூ: அட பைத்தியக்காரா! ஏண்டா இப்படி நாலு மூலையிலும் சுத்துகிறாய் நம்மை.

    க: பைத்தியக்காரன் நானோ, நீயோ. நம்ம மகாவிஷ்ணு எங்கே பார்த்தாலும் அங்கெல்லாம் இருப்பாரடா.

    சூ: அது சரி, நீ வந்த காரியம் என்ன சொல்லுடா.

    க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்கத்தைச் சேவிக்க வரார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தேனடா.

    சூ: அதற்கு என்னென்ன செய்ய வேணும்டா.

    க: ஸதிரு, கிதிரு, மெத்தே, கித்தே, தலகணி, பூ, சந்தனம், கிந்தனம், தூபம், தளிகை, நட்டு முட்டு, தீவட்டி

    சூ: அடே சகலமும் இங்கே இருக்கிறது. நீ போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா போ.

    க: பாக்கி எல்லோரையும் நீ இழுத்துக் கொண்டு வா.

    சூ: இதோ வந்துவிட்டார்கள் (மகாவிஷ்ணுவைத் தவிர யாவரும் வருகிறார்கல் அரங்குக்கு)

    க: நீ யாரடா? மெட்டுக்காரனா? முட்டிகோ! ஐயா மத்தளக்காரா, இந்தப்பக்கம் தட்டு. அந்தப்பக்கம் தட்டு, நடுவே தட்டு (மத்தளக்காரன் ஓசை எழுப்புகிறான்)

    க: பூனைக்காரப் பொட்டி மவனே. இந்தப் பக்கம் டும்! அந்தப் பக்கம் டும்! நடுவிலே ஒண்ணுமில்லைடா.

    க: (ஒருவனைப் பார்த்து) நீ யாரடா?

    நட்டு: நாந்தான் நட்டுவம்.

    க: கையிலே என்னடா?

    நட்டு: தாளம் ஐயா.

    க: அடி!

    நட்டு: தித்தித்தே (தாளத்தில்)

    க: இது எந்தத் தாளம்?

    நட்டு: இது திருபுடை.

    க: எங்கே திருடிக் கொண்டு வந்தாய்? இந்தத் தாளம் பேரு சொன்னால் உச்சிதம் (உயர்வு) என்ன?

    நட்டு: உன் மேலே பாட்டுப் பாடறோம்.

    க: இந்தத் தாளம் பேரு?

    நட்டு: ஒன்று இரும்பு ஒன்று வெண்கலம்.

    க: (மற்றொருவனிடம்) நீ யாரடா?

    பாடகன்: நாந்தான் பாடகன்.

    க: ஆ! பாடு.

    பாடகன்: ஆ………………..

    க: நிறுத்தடா ஆங்காதே. வாய்மூடி கண் மூடிக் கொண்டு ஆகாசம் பார்த்துக் கொண்டு பாடு.

    சூ: சரி சரி. நீ வந்து அனேக நேரமாச்சு. மகா விஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வாடா போடா.

    க: அந்தத் தாளம் பேரு சொன்னால் நம்ம மேலே பதம் பாடறோம் என்றாயே. இப்போ பாடு. நம்முடைய பட்ட நாமம், பட்டுத் துப்பட்டி, கட்டியக் கோல், இதெல்லாம் வச்சு ஒரு மேளம் நீளமாக ஏலபதம் திரி.

    சூ: நல்ல காரியம்.

    க: “பட்ட நாமம் இட்டுக் கொண்டு” (பாடுகிறான்)

    சூ: வாடா கட்டியக்காரா! உன் மேலே பாடினோம். சீக்கிரமாகப் போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா. (கட்டியக்காரன் உள்ளே போகிறான். பின்னர் நாடகம் துவங்குகிறது.)

    (இந்த உரையாடல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகச் சுவடி எண் 639இல் உள்ளபடி தரப்படுகிறது)

    (நிறைவடைந்தது)

    Share
  • திருடனுக்கு கிடைக்காத பணம்

    விசாலம்

    ஒரு வியாபாரி அதிக பணத்துடன் ரயிலில் ஏறினான். அவன் மாதா மாதம் தில்லிக்குச் சென்று வியாபாரம் செய்த பின் சென்னை திரும்புவான். ஒரு தடவை இவனிடம் நிறைய பணம் இருப்பதைக் கண்டுகொண்டு ஒரு திருடன் அவனது எதிர் சீட்டில் அமர்ந்துகொண்டான். எப்படியாவது பணத்தை வியாபாரிக்குத் தெரியாமல் எடுத்துகொண்டு விட வேண்டும் என்றும் எண்ணினான்.

    இரவில் தூங்கும் நேரம் வந்தது. வியாபாரி அந்த நேரம் தன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தான்.

    அடிக்கடி எதிரே அமர்ந்த திருடனையும் கண்காணித்தான். இதனால் திருடன் தான் பாத்ரூமுக்கு போவது போல் எழுந்துச் சென்றான். அவன் திரும்பி வந்தவுடன் வியாபாரி நன்கு  தூங்குவதைக் கண்டு தன்  வேலையை ஆரம்பித்தான். அவனது பைகளையும் பெட்டியையும் குடைந்தான்.

    திருடனுக்குப் பூட்டுத் திறக்க சொல்லியா கொடுக்கவேண்டும்!

    ஆனால் இவ்வளவு தேடியும் அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; ஏமாற்றம் தான் மிகுந்தது.

    இரண்டாவது நாளும் இதேபோல் சந்தர்ப்பம் கிடைக்க பணத்தைத் தேடினான். ஆனாலும் பணம் கிடைக்கவில்லை.

    மறுநாள் இருவரும் இறங்கும் தருணம் வந்தது. அப்போது திருடன் வியாபாரியிடம் கேட்டான்.

    “நீங்கள் பணத்தை எண்ணியதைப் பார்த்தேன். ஆனால் அதை எங்கு வைத்திருந்தீர்கள்?”

    “நீங்கள் எதற்கு இதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?”

    “நான் எதற்கு பொய் சொல்ல வேண்டும்? நான் ஒரு திருடன். உங்கள் பணத்தை அபகரிக்கவே உங்கள் முன் அமர்ந்திருந்தேன். பணமும் தேடித் தேடிப் பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலிதான் . பணத்தை எங்கு வைத்திருந்தீர்கள்?”

    “எனக்கு உன்னைப் பார்த்தவுடனேயே நீ பணத்தைத் திருட வந்தாய் என என் உள் மனம் எனக்குச் சொல்லி விட அதை  பத்திரமாக எங்கு வைப்பது என யோசித்தேன். ஆகையால் உன் தலையணையின் அடியே வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினேன். உன் பொருளை நீ சோதிக்க மாட்டாயே…”

    திருடன் பிரமித்து போனான்.

    நாமும் நமக்குள் இருக்கும் கடவுளைத் தெரியாமல் என்னெவெல்லாமோ செய்துக்கொண்டிருக்கிறோம் இந்தத் திருடன் போல் ……

    Share
  • வெண் நிலவுகள் – 1

    பசுந்திரா சசி

    “பிச்சை எடுக்கிறதுக்காகவே  பிள்ளையை பெறுவது , பிறகு – பேத்தி ,பேத்தி – எண்டு சொல்லித்திரியிறது ‘பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! ‘எண்டு சொல் வேண்டியது தானே….”   என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை  . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில்  இருந்தாலும் பார்ப்பதற்கு  அழகான சிலை போல்   ஒரு கையில்  பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் ,  மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத  அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் ‘ என்ற பாரதியின் கூற்றுக்கு ‘மாதர் தம்மை  (தாமே ) இழிவு செய்யும் மடமையைகொழுத்துவோம்   ‘ . என்ற  எழுத்தாளர் ஜெயகாந்தனின் விபரிப்பை எண்ணி மனதில் நகைத்தபடி . தாடியை தடவிக் கொண்டு அனேகமாக காதலிக்காக காத்திருந்த அந்த இளைஞனை நோக்கி நடந்தார்  பேச்சு வேண்டிய பிச்சைக்காற முதியவர் .

    யாழ் மாநகரிலே பிரசித்திவாய்ந்த கோயில்களில்  பெருமாள் கோயிலும் ஒன்று . அழகான சுற்றுசூழலில் இருக்கும் இந்த கோயிலில் தினமும் பூசைகள் தவறாது நடைபெறும் .  இவ் ஆலயம் அதிக பக்தர்கள் சூழும்  இடம் என்பதால் காதலர்கள் முதல் வியாபார நிலையங்கள் வரை ஏன்  பிச்சைக்காறர்களுக்கு கூட பஞ்சமில்லை .

    எதையுமே கண்டு கொள்ளாமல்  அவனது காணாக் காதலி மோகனா ‘ எப்ப வருவாள் ? , நேரில் எப்படி இருப்பாள் ? , என்னை இனம் காணுவாளா..? , கண்டால்  நாணுவாளா , இல்லை பிரமிப்பாளா …? பெரியோரால் திருமணமே நிச்சயிக்கப்பட்டு . இரண்டு வருடம் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசிய பின்னும் ஏன் நாண வேண்டும் !  . ஒடி வந்து கட்டிக் கொண்டாலும் தப்பில்லை . – இந்த கோயில் முன்றலிலா ? , முதல் சந்திப்பை வேறு எங்காவது வைத்திருக்கலாமோ… , பெருமாள் கோயிலில் வைத்தது தப்பாகி விட்டது . ஒரு வேளை அவள் அப்படி நினைத்தாலும் இந்த கூட்டத்தின்முன்  எப்படி கட்டிக் கொள்வாள்…? – சீ… என்  கற்பனைக்கு இங்கிதமே இல்லை. ‘ தலையை குனிந்த படி தன்னை தானே கடிந்து கொண்டான் ஜோன் . ஏறக்குறைய அவன் இவ் உலகில் இல்லை. வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக வந்திருக்கிறான் . மனைவி பற்றிய கற்பனைகள் இருக்காதா என்ன ?.

    அவன் முன்னால் ஒரு அழகிய பூங் கொத்து  நீண்டது  ‘மோகனா’என உச்சாடனம் செய்துகொண்டு  பிரமிப்போடு நிமிர்ந்தான். முன்னால் ஒரு வயோதிபர் பூச் செண்டுடை நீட்டிய படி  நின்றார் . அவர் கையில் பிச்சைப்பாத்திரமும் இருந்தது ஜோன் புரியாமல் விழித்தான் .

    ” மன்னிக்க வேண்டும் தம்பி ! என்ர பேத்தி உங்கட மோட்டார் வண்டியில் இருந்த பூச் செண்டை இழுத்து விழுத்தி விட்டாள். ”  என்று பூங்கொத்தை அவனிடம்  நீட்டினார் . திரும்பி  பார்த்தான்  பூவை தவிர மோகனாவுக்காக வாங்கி வந்த மீதிப் பொருட்கள் எல்லாம் இருந்தது.

    பின்னால் குழந்தை ஒன்று பலமாக வீரிட்டு  அழுது கேட்டது அத்திசையில் திரும்பினான் .

    “சைலஞ்சர் நல்லா சுட்டுப்போட்டுது  ” என்றபடி பிள்ளையை மடியில் வைத்து நெற்றியை உரஞ்சிக்கொண்டு இருந்தார்  தாய்.

    “அதுதான் என்ர பேத்தி , அது மகள்.  இந்த  பூங்கொத்தை எடுக்க வந்து பூவையும் விழுத்தி , தானும்  தடக்கி விழுந்து விட்டது.  வண்டியின் சைலென்னர் நெற்றில நல்லா சுட்டு போட்டுது . நானும் மகளும் பிச்சை  தட்டை குலுக்கிக் கொண்டு  இருந்ததால பிள்ளையை கவனிக்க இல்லை” . என்றார் அந்த பிச்சைக்காற முதியவர் .

    “பறவாய் இல்லை ஐயா .. ” என்று விட்டு மலரை வேண்டினான். தான் காதலிக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு  வந்த ‘கற்பறி கன்டோஸை ‘அவரிடம் கொடுத்து பிள்ளையிடம் கொடுக்கச் சொன்னான்.

    அவ் வீதியால் கோயிலுக்கு  சென்ற  இளைஞர்களில் ஒருவன். பிள்ளையோடு இருந்த அவ் இளம் பிச்சைக்காறியை காட்டி

    “ டேய்.. தொங்கல்ல இருக்கிறத பாத்தியா….?  மணித்துண்டு ” என்றான் . இன்னொருவன் இந்த முதியவரைப் பார்த்து ” தாத்தா கொடுத்து வைச்ச கட்டை !” என்றான்.

    ஜோன் முதியவரை பற்றுதல் இன்றி பார்த்தான் . சற்று முன் அவன் காதுகளில் விழுந்து அவன் கிரகிக்காமல் போன அந்த பெண்ணின்  தூற்றல் மீண்டும் எதிரொலித்தது .

    “ இந்த வயதிலும் கிழடுக்கு …. சீ…. கறுமம் , கறுமம் . போயும் போயும் இதுகளை கோயில் வாசல்ல விட்டுக்கிடக்கு …..”  .

    ஜோன் முகத்தை சுளித்துக்கொண்டு   மறு பக்கம் திரும்பி நெற்றியை தடவினான்.

    பிச்சைக்காற முதியவர் புளுப் போல நெளிந்தார் . அவன் கொடுத்த சொக்லேட் கையில் இருந்து நழுவியது. பேத்தியை கூப்பிட்டு  அதை கொடுத்து விட்டு .

    “தம்பி உம்மை பார்த்தால் நல்ல பிள்ளை மாதிரி தெரியுது . யாருக்கும் சொல்லத்தேவை இல்லை  என்று விட்டதை  ஏனோ என் மனம் உமக்கு சொல்ல வேண்ணும் எண்டு  நினைக்குது . நான் உண்மையை சொல்லிப் போடுறன் தம்பி  ! இவையள் சொல்லுறது உண்மை தான் ; அது என்ர மகளும் இல்லை , இது என்ர பேத்தியும் இல்லை .   இரண்டும் என்னை காப்பாற்றும்  கடவுள் ! ” என்று கண்ணீர் உருகினார்.

    ‘ பின்பு ஏன் பேத்தி என்று பொய் சொல்ல வேண்டும் ? ‘ என எண்ணிக்கொண்டு முதியவரை மேலும் கீழும் பார்த்தான் ஜோன் . முதியவர் தொடர்ந்தார்.

    “அவளை நான் முதன் முதலாக பார்த்தது ஒரு வெள்ளிக்கிழமை .”

    “ பாரு…,  பாருகுட்டி …,  அடி பார்கவி !  நான் மினக்கட்டு கதை சொல்லுன் நீ என்னடா எண்டால் நித்திரை கொள்ளுறியா…? ” என்ற படி கதையை நிறுத்தி விட்டு மடியில் நித்திரை கொண்ட மகளை உலுப்பினான் இந்திரன்  . அவளோ மடியில் கிடந்த படி யன்னல் ஊடாக நட்சத்திரங்கள் ஊடே  கதையின் பாத்திரங்களை மனக்கண்ணில் உலாவ விட்டிருந்தாள் . தந்தை கதையை  நிறுத்தியும்  அவள்

    சிரிஷ்டித்த பாத்திரங்கள் திரையில் நின்றும் மறையாமல் நீண்டு கொண்டு போயின . அந்த இளம் பிச்சைக்காறியின் தட்டில் கிடந்த வெள்ளிக்காசுகளாய் வான் வெள்ளிகள் மின்னின – திடீரென திடுக்கிட்டவளாய் .

    “அப்பா ஏன் கதையை நிப்பாட்டிப்போட்டீங்கள்.” என்றாள்.  “உனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு படுக்க வேண்டும்” என்றான் இந்திரன்  . “ சனிக் கிழமையில யாரப்பா பள்ளிக்கூடம் வைக்கிறது” என்று விட்டு சிரித்தாள். ஆறே வயதான மகள் பார்கவி.

    “சரி சரி சாப்பிட்டாப்பிறகு  மிச்சத்தை செல்லுறன்” என்றான்  .

    “அப்பா… அந்த இளம் பெண் எப்படி இளம் பிச்சைக்காறி ஆனாள்  ? அதை இன்னும் நீங்கள் சொல்லவே இல்லை ! ” என்றபடி தந்தையின் நாடியை பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினாள்.  இருவரும் மாடியால் இறங்கி கீழே வந்தார்கள்.

    “ இண்டைக்கு இங்க லண்டன் – M 25 – ரோட்டில விபத்தாம் தம்பி கேள்விப்பட்டனியளோ.. ? ” என்றபடி தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு எழும்பி சமையல் கட்டை நோக்கி  வந்தார் இந்திரனின் மனைவி நிலானியின் தந்தை  யோசப்பர் . “ஓம் மாமா  அதுதான் நானும் வேலையால வர சுணங்கியது அண்டகிறவுண்ட ரெயின் எண்டால் கெதியா வந்திருக்கலாம் கார் எண்டதால பெரிய கஸ்டமாப் போச்சு”என்றான். கத்தரிக்காய் கறி வாசனை மூக்கோடு  சேர்த்து அவனையும்  இழுத்தது .

    சமையல்கட்டுக்குள் நுழைந்தான்-  நிலானி பொரித்து காச்சிய  கத்தரிக்காய் குளம்பை அடுப்பை விட்டு இறக்கிக் கொண்டு இருந்தாள்.

    ” தம்பி எழும்பீற்றானா என்று ஒருக்கா பாரம்மா.. ” என்றாள் நிலனி மகள் பார்கவியிடம் .

    கத்தரிக்காய் கறியை பார்த்துக்கொண்டு “ தக்காளிக் கறி எப்படி சமைத்தாள் …?  இப்படி ஆளை மயக்குது.. ” .  என்றபடி நிலானியை நெருங்கினான்  இந்திரன். ” தக்காள் – இக்கறி –  சமைத்த முறை எல்லாம் இருக்கட்டும். தக்காள் – தகாதவள் ஆகமுதல் உடுப்பை மாத்துங்கோ… நாளைக்கும் இதைத்தான் வேலைக்கு போட வேணும் ; கறி மணக்கப்போகுது . தமிழ் பள்ளிக்கூடத்தில கொஞ்சம் வேலை இருந்ததால வீட்ட வர நேரமாகிப்போட்டுது  நாளைக்குதான் உடுப்பு தோய்க்க வேண்டும் . ” என்றபடி அகப்பைக் காம்போடு திரும்பினாள் நிலானி.

    (தொடரும்)

    Share
  • கண்ணே கலைமானே..

    கவிஞர் காவிரி மைந்தன்
    ‘க’ என்கிற எழுத்திற்கும் கண்ணதாசனுக்கும்தான் எத்தனை எத்தனை நெருக்கம்!
    கண்ணதாசன் என்கிற புனைப்பெயரைத்தவிர.. காரைமுத்துப்புலவர்..
    கண்ணதாசனை சுவீகாரம் எடுத்த ஊர் காரைக்குடி..
    கண்ணதாசன் முதலில் பாடல் எழுதிய திரைப்படம் கன்னியின் காதலி!
    கண்ணதாசன் முதலில் எழுதிய பாடல்.. கலங்காதிரு மனமே!
    கண்ணதாசன் மிகவும் விரும்பிய கடவுள் ‘கண்ணன்’
    கண்ணதாசன் மிக நெருங்கிப்பழகிய அரசியல்வாதி, இலக்கியவாதி.. கலைஞர் கருணாநிதி!
    கண்ணதாசன் அவர்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் கர்மவீரர் காமராஜர்!
    கண்ணதாசன் அவர்கள் எழுதிய கடைசிப் பாடல்.. கண்ணே கலைமானே!!

    ஒரு சகாப்தம் நிறைவு பெறுகிற நிலையில் ..
    மூன்றாம் பிறையில் விளைந்த முத்தான பாட்டல்லவா?
    இது தாலாட்டா?
    கனிவான காதலா?
    பேதமையின் தவிப்பா,
    மென்மையின் மேலாண்மையா?
    அன்பின் ஆர்ப்பரிப்பா?
    அரவணைப்பின் பரிணாமமா?
    கண்ணிலிருந்து விழும் நீர்த்துளியின் காதலின் அடர்த்தியா?
    இல்லை.. இல்லை…கவியரசர் தனது கோடிக்கணக்கான
    ரசிகர்களுக்கு எழுதி வைத்துச்சென்ற ரகசியக் குறிப்பா?
    சொல்லாமல் சொல்லிச் சென்ற குறிப்பேடா?
    காலதேவனின் அழைப்பிற்கு கவிஞர் எழுதிய மடலா?
    கண்ணதாசன் – இளையராஜா – பாலுமகேந்திரா – யேசுதாஸ்
    கூடி எழுதிய தேவ கானமா?
    கமலஹாசன் – ஸ்ரீதேவி – நடித்துத் தந்த காவியமா?

    பொதுவாக மூன்றாம் பிறைக்குப் பின்னர் முழுநிலா தோன்றும் என்பார்கள்.. எங்கள் கண்ணதாசனே! மூன்றாம் பிறையோடு முடிவுரை எழுதிவிட்டாயே!!

    ஆண் : கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே

    ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி
    ஏழை என்றால் அதிலொரு அமைதி
    நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில் பேடு
    ஏனோ தெய்வம் சதி செய்தது
    பேதை போல விதி செய்தது

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ஆண் : காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
    உனக்கே உயிரானேன் என்னாலும் எனை நீ மறவாதே
    நீ இல்லாமல் எது நிம்மதி
    நீதான் என்றும் என் சன்னிதி

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    http://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM
    http://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM

    Share
  • திருமால் திருப்புகழ் (6)

     

     

    கிரேசி மோகன்

    12_big
    தானன தானன தந்தத் தனத்தன
    தானன தானன தந்தத் தனத்தன
    தானன தானன தந்தத் தனத்தன-தனதான….
    ———————————————————————————————————————-
    “நானென தானென பந்தத் தவிப்பினில்
    நாளொரு மேனியும் நம்மைப் பிணைத்திடும்v163Ramanar2
    ஆணவ மாயவ கந்தைக் குடத்தினை -ரமணேசர்
    கூறுவி சாரணை விந்தைக் களித்திட
    தூரக டாசிஎ றிந்தக் கினிச்சுடர்
    ஞானப ராபர பந்தைச் சுழற்றிட – அருள்வாயே
    சோணையில் சாவுற எம்பிக் குதித்தவர்
    நாவினில் வேலது முந்திக் குறிப்பிட
    வேலவர் மேலவர் சந்தத் திருப்புகழ் -தனையோத
    சீரலை வாய்தனில் வஞ்சிக் குறத்தியும்
    வானவர் ஆனையும் கொஞ்சத் தவித்திடும்
    மாமயில் ஏறிடும் சங்கத் தமிழ்க்கிறை -முறைமாம
    கானகம் போவெனும் தந்தைக் குறிப்பது
    ஆரண மாயடி உந்தப் புறப்படு
    தாசர தீரகு வம்சப் பிறப்பிறை -அவதாரா
    நூறது வேரற ,அஞ்சுக் களித்திட
    பாரத வாகனம் தன்னைச் செலுத்திய
    கோகுல பாலமு குந்தக் கிருட்டிண -நவநீதா
    வானெழு தூண்என நின்றப் பலித்தலை
    மூணென வாமனம் பொங்கிக் களித்திட
    மோகன ரூபசு கந்தச் சிரிப்புடன் -வனமாலி
    ஆணென ஆயினும் பம்பைப் புழைத்துறை
    வாவரின் தோழனை உந்திக் கருப்பொருள்
    ஆகம ஹேசனின் விந்தைப் புவிக்களி -பெருமாளே”….

    —————————————————————————————

    படத்திற்கு நன்றி:

    http://www.appusami.com/Default.asp?ColsName=2&ColsValue=5561&hidtxtvid=163&catid=31

     

    Share
  • திருமால் திருப்புகழ் (5)

     
    கிரேசி மோகன்

    ananthapadhmanaba
    தத்தத் தனதத்தத் தனதன
    தத்தத் தனதத்தத் தனதன
    தத்தத் தனதத்தத் தனதன-தனதான….
    ———————————————————————————————————————
    “பெற்றப் பிணிமுற்றப் பிணமென
    பக்கத் தினில்சுற்றத் தினரழ
    முற்றத் தினில்வைத்துக் கிரியைகள் -நிறைவேற
    சத்தத் தொடுவொற்றைப் பறையெழ
    பச்சைப் பனைமெத்தைத் துயிலுற
    இட்டுச் செலும்பெற்றப் பயலுகள் -இடுகாடு
    சிற்றப் பனகத்துப் புறமதில்
    இக்கட்டு டல்கட்டுக் கதையென
    புத்திக் கறிவித்தக் கிரிவளர் -ரமணேசர்
    உற்றச் சுகமுற்றுச் சரணுற
    பக்திப் புனலிட்டுப் பயமற
    வெட்டிச் சமநிட்டைப் பொருளினை -அருள்வாயே
    ஒற்றைக் கரம்வெற்ப்புக் கடிதனில்
    வைத்துச் சுரர்கொட்டுத் துயரதில்
    திக்கற் றுழல்மக்கட் குடிமகிழ் -முகிலோனே
    கற்றைக் குழல்பற்றித், துருபதை
    துட்டர்க் கரம்பட்டுச் சபைதனில்
    நிற்கத் திரைபட்டுப் புடவைகள் -இடுவோனே
    உற்றக் கலிதப்பச் சரணுற
    உத்ரத் தினிலுச்சிச் சபரியில்
    பெற்றுப் பதினெட்டுப் படிதனில் -விளையாட
    விட்டுச் செலும்பித்தர்க் கொருகணம்
    இச்சைத் தருபத்னிப் பெருமையை
    உற்றத் திருவுற்றத் திரள்புய -பெருமாளே”….
    —————————————————————————

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சென்ற வாரம் உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு மகிழப்பட்டது. சந்தோஷம்தான். காதலை வாழ்த்திப் போற்றுவோம்.

    இதன் மத்தியில் திருக்குறளைப் பற்றிய விவரணை புத்தகம் ஒன்று எனக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை எழுதியவர் திரு சி. ராஜேந்திரன் அவர்கள். இந்திய கலால், சுங்கத்துறை ஆணையர்.

    rajendranதிரு ராஜேந்திரனுக்கு உயிர்மூச்சு என்பது திருக்குறள்தான். வாழ்நாளில் அதன் உள்ளார்ந்த தத்துவத்தை அப்படியே மனிதர்கள் கடைபிடித்தால் சண்டை சச்சரவு, நிம்மதியின்மை, கொடுமை, எல்லாமே தீரும் என்பதை தம்மை சந்திக்கும் அத்தனை பேரிடமும் சொல்லி வருகின்றார். திருக்குறள் கருத்துகள் வாழ்க்கையின் முடிவல்ல, அவை வாழ்க்கையின் அடித்தளம், திருக்குறளை வாழ்வின் ஆணிவேராகக் கொண்டு வானுயர வளர்வோம்’ என்பார்.

    இவரது ‘திருக்குறள் உவமைநயம்’ எனும் புத்தகம் ஒவ்வொரு பள்ளியிலும் ஆரம்பப்பாடமாக வைத்துப் பயிற்றுவித்தால் மாணவர்கள் நிச்சயமாக பலனடைவார்கள் என்பது என் எண்ணம். திருக்குறளுக்கு வாழ்வியல் பாடம் போல எளிய விதத்தில் விளக்கமாக எடுத்துரைக்கும் விதம் எல்லோருக்கும் மனதில் சடக்கென் புகுந்து விடும்.

    காதலர் தினம் என்று சொன்னேன் அல்லவா.. காதலைப் பற்றிய வள்ளுவரின் குறட்பாக்கள் ஏராள்மாக இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து திரு ராஜேந்திரனின் எழுத்து மூலமாக கீழே கொடுத்துள்ளேன்.

    ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
    இருதலையானும் இனிது.

    ஒருதலைக் காதல் துன்பமானது. காதல் காவடியைப் போல இருபுறத்தில் இருந்தால்தான் இன்பம்.

    இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டே இருந்து வந்திருக்கிறது இந்த சிக்கல். காதல் என்பது ஒருதலையாக இருந்தால்தான் துன்பம்தான் வரும். இந்தக் காதல் என்பதை களவு மற்றும் கற்பு என்ற இருநிலையிலும் வைத்துப் பார்க்கவேண்டும்.

    காவடியின் எடை இருபுறமும் சரியாக இருந்தால்தான் காவடியை சுமக்கும்போது பாரமில்லாமல் இருக்கும், காவடி நிலையாக இருக்கும், சுமப்பதற்கு எளிதாக இருக்கும். அதே போல வாழ்க்கை எனும் காவடி எப்போதும் நிலையாக இருக்கவேண்டும். குடும்பம் எனும் காவடி அதன் இலக்கைச் சென்று சேரவேண்டுமெனில் கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் ஒத்த அன்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்த உண்மை தத்துவத்தைப் புரிந்து கொண்டால் மணவாழ்க்கையில் கசப்பு ஏது, குழப்பம் ஏது?

    மேலும் நாம் இன்று பயன்படுத்தும் காமம் என்ற சொல்லின் பொருளுக்கும் வள்ளுவர் பயன்படுத்தும் காமம் என்ற சொல்லுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உண்டு. இன்று காமம் மிகவும் கீழ்த்தரமான செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.காதல் என்பது மென்மையான உணர்வு தொடர்பான சொல்லாகக் கருதப்படுகிறது.

    வள்ளுவரோ காமம் எனக் குறிப்பிடும்போது மென்மையான உணர்வு என்று குறிப்பிடுகிறார். காமக்கலன் (அதி.61) என்றால் விரும்பி ஏறும் படகு என்கிறார்.. உடல் சேர்ந்த இன்பத்தைப் ‘புணர்ச்சி’ ‘முயக்கம்’ என்று சொற்களைப் பயன்படுத்தி விளக்குகிறார்.

    மேலும் காமம் – காதல், திருமணத்துக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடியது. திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை மறைந்து காதலிக்கும் களவு வாழ்க்கை. கற்பு – இல்வாச்ழ்க்கை என்பது ஊரறிய உறவறிய திருமணம் முடிந்து அதன் பின் தொடரும் காதல் வாழ்க்கை. எனவே காமம் என்பது உடல் சார்ந்த சொல் இல்லை.
    (பக்கம் 288, ’திருக்குறள் உவமை நயம்’, எழுதியவர் திரு சி. ராஜேந்திரன், கவிதா பப்ளிகேஷன், தி. நகர், சென்னை, விலை ரூ 125/-)

    உண்மைதானே.. இன்று காதல் என்பது காமநோக்கில் பார்க்கப்படுகிறது. அன்று காமம் என்பது காதல் நோக்கில் பார்க்கப்பட்டது. எளிமையான விளக்கம் தந்த திரு ராஜேந்திரன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்வு செய்கிறது.. குறட்பாக்களைப் பரப்பும் வலைத்தளம் ஒன்றை www.voiceofvalluvar.org என்ற பெயரில் உருவாக்கி அனைவருக்கும் சமுதாய சேவை செய்து வரும் திரு ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

    இந்த தளத்தை ஒருமுறை அனைவரும் பார்க்கவும். திருக்குறள் எப்படியெல்லாம் ஒவ்வொருவர் வாழ்வில் பயன் தருகிறது என்று புரியும். அத்துடன் நீங்களும் இந்தத் தளத்தில் கருத்துக்க்களையும் திருக்குறள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் பதிவு செய்யலாம். வாழ்க அவரது பணி!!

    கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தியின் கவிதை:

    ஆதியும் அந்தமும் இல்லாத – அந்த

    ஆண்டவன் போலவே எந்நாளும்

    காதலும் காலத்தை வென்றதடி – வளைக்

    கைகொட்டிக் கும்மி கொட்டுங்கடி!

    Share