தஞ்​சை ​​வெ. ​கோபாலன்

காவேரி கல்யாணம்

(தஞ்சையை ஆண்ட ஷாஜி மகாராஜா (1684 – 1712) காலத்தில் உருவான இசை நாட்டிய நாடகம்

(பாகவத மேளா மரபு)

ஆசிரியர்: ஷாஜி மன்னர்

ஷாஜி மன்னனை அந்தக் காலத்தில் ‘சகசி மன்னர்’ என்றழைத்தனர். இதில் வரும் கதா பாத்திரங்கள்:

1. சூத்திரதாரன்: நாடகத்தை அறிமுகம் செய்து விளக்கம் கொடுப்பவன்.
2. கட்டியக்காரன்: நாடகம் தொடங்கி வைப்பவன்
3. கவேரராஜன்: கவேர கன்னியின் தந்தை
4. கவேரராஜ ஸ்திரீ: கவேரராஜனின் மனைவி
5. கவேர கன்னி: கவேரராஜனின் மகள்
6. கவேர ராஜன் மந்திரி: அமைச்சர்
7. சமுத்திரராஜன்: கடல் அரசன், கவேர கன்னியின் மணவாளன்
8. அகஸ்தியர்: பொதிகை மலை வாழ் தமிழ் முனிவர்
9. சகி: கன்னியின் தோழி’
10. பஞ்சநதீசர்: திருவையாற்று ஈசன்

கதைக் களம்: திருவையாறு பஞ்சநதீசர் ஆலயம் (காவிரிக் கரை)
காலம்: ஷாஜி மன்னரின் காலம்.

காவேரி கல்யாணம்
(யக்ஷ கானம்)
ராகம்: நாட்டை தாளம்: ஜம்பை
தோடய மங்களம்
ஜய பார்வதீ ரமண ஜய ஜானகீ ரமண
ஜய அந்தக தமன ஜய மஹு சூதனா

ஜய திரிபுர ஹரண ஜய வேதோத் தரண
ஜய அகிலநுத சரண ஜய ஜனா பரண

ஜய ரவிசகி நேத்ர ஜய அகிலநுத பாதர
ஜய பாஅன சரித்ர ஜய ஜகன் மித்ர

ஜய நந்தி வரவாஹ ஜய அண்டஜ வாஹ
ஜய நித்யோத் ஸாக ஜய சமித தாஹ

மங்கள தரு

மஹநீய தியாகேசுனிகி மங்களம்
மாபாலி தேவுனிகி மங்களம்
கனக வஸந்துனிகி மங்களம்
கமனீய சரித்ருனிகி மங்களம்
மனஸிஜ ஹருனிகி மங்களம்
சோமாஸ கந்த மூர்த்திகி மங்களம்
சோபன பிருதுனிகி மங்களம்
மாமீத தயஸேயு ஸ்வாமிகி மங்களம்
போஸகுல சாஹேந்திர பாஸுரகுல தேவுனிகி மங்களம்
மாசிவ தியாகேசுனிகி மங்களம்.

சூத்திரதாரன் வசனம்: இந்தப்படிக்குச் சகல தேவதா பிரார்த்தனை பண்ணின ததனந்திரத்திலே காப்பு கேட்பிக்கின்ற மார்க்கம்.

நீரியல் பொருமை யாற்றில் நிமலனை வணங்கு மெங் – கா
வேரிசா கரகல் யாணம் விளங்கிய தமிழால் பாட
பாரினில் கமலை மாதின் பாலனாம் விட்ட வாசல்
காரியல் வண்ண மான கரிமுகன் காப்பு தானே.

வசனம்: இந்தப்படிக்குச் சகசிராசப் பிரணிதமான காவேரி கல்யாணம் என்கிற நாடகத்திலே சகல விக்கினங்களும் நிவாரணம் பண்ண, விக்னேசுவரனைத் தோத்திரம் பண்ண விக்னேசுவரன் வருகிற மார்க்கம்.

ஸ்ரீ விநாயகர் தருவு

வந்தே சிவஸுதம் வரத மமரநுதம்
ஸுந்தர குணயுதம் ஸுப்ரஸன்ன வதனம்
பாசாங்குச தரம் பணிவர கேயூரம்
மூஷிக வாகனம் மோதக கரம்
பாலேந்து சேகரம் பால சிந்தூரதரம்
லாலித பக்தவரம் லீலாய விக்னஹரம்.

வசனம்: இந்தப்படிக்கு விக்னேசுவரன் வந்து சகல விக்கினங்களும் நிவாரணம் பண்ணின, ததனந்தரத்திலே கதாசம்விதானம் எப்படியென்றால் கவேர இராசன் ஸ்திரீ சமேதனாக நித்தியக் கொலுவுக்கு வருகிறார் என்று சகல சனங்களுக்கும் எச்சரிக்க, கட்டியக்காரன் வருகிற மார்க்கம்.

தருவு

தவள நாமம் சார்த்திச் சரிகை துப்பட்டிக் கட்டி
கவேர ராஜேந்திரன் வாசல் கட்டியக்காரன் வந்தானே.

வசனம்: இந்தப்படிக்குக் கட்டியக்காரன் வந்து எச்சரித்த ததனந்தரத்திலே கவேர இராசன் ஸ்திரீ சமேதனாகத் தன் சபைக்கு வருகிற மார்க்கம்.

தருவு

வஞ்சியர்கள் புடை சூழவே – இரு புறமும்
மருவுங் கவரிகள் வீசவே
கஞ்சமணி மார்பிலங்கவே – மனைவியுடன்
கவேர ராசனும் வந்தானே.
வட்ட மதிக்குடை பிடிக்கவே – புலவோர்கள்
வந்து க்வைதைகள் படிக்கவே
கட்டியங்கள் சில கூறவே – மனைவியுடன்
கவேர ராசனும் வந்தானே.

வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் ஸ்திரீ சமேதனாகத் தன் சபைக்கு வந்து சிம்மாசனத்தில் இருந்து தன்னுடைய கன்னிகையான காவேரியம்மனுக்கு, யெளவன பிராதுர்பாவம் ஆயிற்று என்றும் நல்ல புருஷனாகப் பார்த்து, கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்றும் நினைத்து, தன்னுடைய ஸ்திரீயுடன் ஆலோசனை பண்ணுகிற மார்க்கம்.

தருவு

ஆசையா யெப்படி யோசனை நீ செப்படி

எப்படியடி நாமும் இப்போ திந்தக் காவேரிக்கினி
மெப்புடன் கல்யாணம் செய்ய வேணுமே மனைவியே சொல்.

வனிதை திரண்டு நல்ல வடிவானாள் குறை சொல்ல
இனி சும்மாயிருப்பதல்ல எவருக்குக் கொடுப்போம் புல்ல

நல்ல பிள்ளையாய்ப் பார்த்து நம் பெண்ணைத் தாரை வார்த்து
வல்ல மனையில் சேர்த்து வைக்க வேண்டும் தேர்ந்து

குலவியற்கை நம் மாது கூடா மன்னர்க்குத் தூது
வலியச் சொல்லப் போகாது வருவோரு மில்லையிப் போது.

வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து, கவேர ஸ்திரீ சொல்கிற மார்க்கம்.

தருவு

என்னதான் உமக்கே நிப்போதிந்த யோசனை
தன்னை யறிந்த பெண்ணிருந்தால் தானே மன்னர் வருவார்.

மெல்லியற் கிதுவல்லாமல் மிருக சீரிட நட்சத்திரம்
நல்ல யோகம் சாதகமும் நாம் வினவ வேணுமோ.

நித்தியமும் சிவ பூசை நியமமாகச் செய்து வருகிறாள்
சத்தியமா யந்தப் பலனே சந்தோஷங்கள் கொடுக்கும்.

வாலையொரு குறத்தி நேற்று வந்து காவேரியைப் பார்த்து
நாலு நாளில் இவளுக்கு நல்ல நாதன் வருவானென்றாள்.

அப்படி உண்டா இவள் பேச்சுக் காலோசனை நாம் நினைக்க
எட்டு நாளாய்க் காவேரியும் இடக்கண் துடிக்கு தென்கிறாள்.

அப்படித் தீவிரமானால் ஐயா இந்த மந்திரியை
மெப்புள்ள மன்னராய்ப் பார்த்து வினவி வரச் சொல்லும்.

வசனம்: இந்தப்படிக்குக் கவேர ஸ்திரீ வசனம் கேட்டுக் கவேர இராசன் மந்திரையைப் பார்த்து சொல்லுகிற மார்க்கம்.

தருவு

மந்திரி காவேரிக் கேற்ற மணவாளனைப் பாராய்
மன்னரில் சிலாக்கியமுள்ள பேராய் தந்திரி நியாயமே மெத்த
தானோரூராய்ச் சீக்கிரமாய்த் தான் சென்று வாராய்
வெளுக்கும் சுந்தரமான மெய்யிருக்க வேணும்
வித்தையெல்லாம் தானே மிக வந்திருக்க வேணும்
வாளுக்கும் பின் வாங்கா மனது இருக்க வேணும்
வணக்கமும் மெத்தவேதான் வந்திருக்க வேணும்
குளிர்ந்த வார்த்தை சொல்லக் குணம் இருக்கவேணும்
கொடுக்கும் விதரணமான கொடை இருக்கவேணும்
தளர்ந்திடாத செல்வத்துடன் தானிருக்க வேணும்
சகல சன மித்திரனாகத் தானிருக்க வேணும்
அரியராதியரைப் போற்றும் அன்பு இருக்க வேணும்
ஆதிக்கம் பலமாகவே தானிருக்க வேணும்
சரச லீலை செய்யவும் சமர்த்து இருக்க வேணும்
சரிசமானமாகத் தான் இருக்க வேண்டும்.

வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன இராச வசனம் கேட்டு மந்திரி, அப்படித்தானே நல்லபுருஷனைப் பார்த்து அழைத்துக் கொண்டு வருகிறோம் என்று தேச தேசங்களும் தேடப்புறப்படுகின்ற மார்க்கம்.

தருவு

கவேர ராசன் சொற்படிக்குக் காவேரிக்கு நாதன் பார்க்க
நவமத ரூப மந்திரி நாடு நடந்தனனே.

வசனம்: இந்தப்படிக்கு மந்திரி தேச தேசங்களும் தேடிக்கொண்டு வருகிற சமயத்தில், அப்புறம் கதாசம்விதானம் எப்படியென்றால் சமுத்திர இராசன், தனக்கு ஆன கன்னிகையைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று அகத்திய மகாமுனியைப் பிரார்த்திக்க அந்த வார்த்தையைக் கேட்டு, அப்படித்தானே நல்ல கன்னிகையைப் பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறோம் என்று சமுத்திர இராசனுடன் சொல்லிக்கவேர இராசனுடைய கன்னிகை, காவேரிப் பெண் இருக்கிறாள் என்று கேட்டு, அந்தக் கன்னிகையைச் சமுத்திர இராசனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று கவேர இராசனைக் கேட்பதற்காக அகத்தியர் வருகிற மார்க்கம்.

தருவு

அகத்திய மாமுனி வந்தனரே

சடையும் விரித்து வரிப் புலித் தோலும் உடுத்து
தவள நீறும் பூசிக்கொண்டு அடிமேல் அடி நடந்து கொண்டு.

மிரட்டிக் கண்ணை விழித்துக் கொண்டு
விளங்கு ருத்திராக்க மாலை அணிந்து
அர அர அர சிவனே என்று அகத்திய மாமுனி வந்தாரே.

வசனம்: இந்தப்படிக்கு வந்த அகத்திய மகா முனியைக் கண்டு நமஸ்காரம் பண்ணி பக்தி யுடனே சமீபத்தில் நின்ற மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் நீ யார்?” இங்கு ஏன் வந்தாய்? ‘சொல்’ என்று கேட்கிற அகத்தியரிடம் மந்திரி சொல்கிற மார்க்கம்.

தருவு

வந்த காரியம் இதுதான் மகிழ்ந்து கேளும் ஐயா
மந்தார புயன் கவேரன் மந்திரி நானய்யா!

எங்கள் துரைக்குக் காவேரி என்றொரு பெண்டு
இருக்கிறாள் அவள் திரண்டு இரண்டு மாதமுண்டு

மங்களம் செய்ய அவட்கு மன்னரே நேற்று வந்து
மாப்பிள்ளை விசாரி என்றார் வந்தேன் அதுகொண்டு

நானா தேசங்களுக்குஞ் சுவாமி நடந்து நான் விளையாடி
நாளு மன்னவர் குணமும் நன்றாய் அறிந்தோடி

தானே இங்கு வந்தீரெங்கள் தையலுற வாடித்
தழுவ இவரியற்கை சொல்லும் தரணியில் நான் தேடி

கோதை குணமும் அமிருத குணம் வடிவில் மாது
கொஞ்சு கிளி சங்கீதத்தில் குயில் எதிர் நில்லாது

காதல் மிஞ்சு முன்னே அந்தக் கன்னி முலை மீது
களபம் அணிந்து மருவக் கணவன் வேணும் இப்போது.

வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன மந்திரியைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

தருவு

நாமிது நிமித்த மாகவே தான் நாடி வந்தோமடா – நாளும்
தான மிகுந்திடு சுந்தர காவேரி தன்னை அறிவோமடா.

சமுத்திர ராசன் நம்மை நோக்கித் தவசு புரிந்தானடா – அதை
அமர்த்த வந்த நாம் என்ன வேண்டுமென்றோம் அப்போது சொன்னது கேளடா – வெகு

சமர்த்தாக எனக்கேற்ற பாரியை தயை செய்யும் என்றாளடா
உமக்குக் கல்யாணம் செய்விக் கிறோமென்று ஒருவழி செய்தோமடா.

தண்ணிக்குப் பள்ளமே வாய்த்தது போலிந்த சம்பந்தம் வாய்த்ததடா – உங்கள்
பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஏற்றதே அல்லாமல் பேதகம் இல்லையடா – அவனைக்

கண்ணுக்கு எதிராகக் காவேரி கண்டாலும் கன மையலாவாளடா – அந்த
வண்ண முலையாள் தந்தை தாயரிடத்துக்கு வருகிறோம் நீயும் வாடா.

வசனம்: அகத்தியரும் மந்திரியும் அன்யோன்யமாய் வார்த்தை சொல்லி இருவரும் கவேர இராசனுக்கு அருகில் வருகிற மார்க்கம்.

தருவு

விரிசடை அகத்தியரும் வினவப் போன மந்திரியும்
வரு கவேர விராசனிடம் வகையாக வந்தனரே.

வசனம்: இந்தப்படிக்கு வந்த அகத்தியருக்குக் கவேர இராசன் நமஸ்காரம் பண்ணி மந்திரியைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

தருவு

என்ன சேதி சொல்லு – நீ போனது என்ன சேதி சொல்லு
மன்ன ரியற்கை யெல்லாம் சிந்தை கொண்டு வகையாய்ப் பேசிக் கொண்டு

வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து மந்திரி சொல்கிற மார்க்கம்.

தருவு

சேதியெல்லாம் இந்த முனிதானே – உமக்குத் தெரிய சொல்லுவார் கேளும்
பாதி வழியில் கண்டேனப்பால் போகாமலே மறித்தார்
மாது நம் காவேரிக்கொரு மன்னனையுங் குறித்தார்
எங்கே விசாரித்தாலும் உண்மை இவர் சொல்லுக்குச் சமானமில்லை.
அங்கும் நாம் கண்ணாரக் கண்டு அறிந்து வந்த தல்லவே
பொங்கமாய்த் தேவரீர் உள்ளம் பூரித்திடச் சொல்லவே.

வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன மந்திரி வார்த்தைகளைக் கேட்டுக் கவேர இராசன் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

தருவு

ஆரையா சொல்லும் என் அரிவை காவேரிக்கு
சேரு மணவாளனை சிந்தித் துரை செய்தீராம்

கருப்போ சிகப்போ பிள்ளை கண்ணாரக் கண்டீரோ
உருட்டி விழியாதீர் உள்ளதையே சொல்லும்

சேர்க்கும் மன்னவன் வந்தால் சேருவேன் என்று நான்
பெற வந்த கன்னியும் பேசியிருக்கிறாள் காண்

சரி சமான மில்லாத சம்பந்தம் நான் செய்தால்
பரியாசம் செய்வார்கள் பார்த்த பேரெல்லாம்

மரியாதை யுண்டான மன்னனானால் சொல்லும்
பெரியாரென்று சும்மா பேச வேண்டாம் சுவாமி.

யாரென்ன குலமவன் அல்லாமல் அவனுரைக்கும்
பேரென்ன ஊரென்ன பெருமை உள்ளவனோ

நீரென்ன சொன்னாலும் நிசமாயிருக்கு மவன்
பேரென்ன சொல்லுமென் பூவைக்கு மணம் செய்வோம்.

வேறு தருவு

ஆனால் சொல்கிறோம் கேளாய் அணிமாலை புனை தோளாய்
மானாமுன் காவேரிக்கு மணவாளனா மந்தச் சேதி

விட்டுணு மேனியும் போலவே மேனியும் உள்ளவன்
மெத்த விதரணிகன் அல்லால் சட்டமா எந்த நேரமும்

சங்கீதம் ஓயாமல்தான் தானே பாடவல்லான் – ஆளும்
மட்டமே யல்லாமல் நெட்டையுமல்ல

வடிவில் மதராசன் – வெகு அஷ்டைசுவரிய
சம்பன்னன் – புவிமீதில் அனைவருக்கும் உபகாரன்

பூமியைச் சுற்றியவனாக நின்று புரக்கும் துரந்தரிகன் – பெரும்
சாமி என்றனை வணங்கி வரம்பெற்ற சமுத்திர இராசன் – வெகு

காம விகாரமாயிருக்கிறான் உன்னுடைய கன்னிகைக் கேற்ற புருடன்
ஆமென்றால் இப்போதே என்னுடன் சொல்லு அவ்விடத்தில் சேதியெல்லாம்.

வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன அகத்திய மகாமுனி வசனம் கேட்டுக் கவேர இராசன் சொல்லுகின்ற மார்க்கம்.

கவேரி இராசன் வசனம்: கேளும் சுவாமி அகத்திய மகா முனீசுவரரே, சமுத்திர இராசனுக்கு என்னுடைய கன்னிகையைக் கொடுக்கலாம் என்று சொன்னீரே. அந்த வசனம் கேட்டு மெத்த சந்தோஷமாயிற்று, சகல குணங்கலிலும் சமுத்திர இராசனுக்குச் சமானமான பேர் இல்லை. ஆகையினாலே நமக்குச் சந்தோஷம் ஆயிற்று. என்னுடைய கன்னிகை விவரம் அறிந்தவள் அல்லள். அவளிடம் இந்த விருத்தாந்தம் சொல்லித் சம்மதி பண்ண வேண்டும். அவளிடம் இப்போது சொல்வோம் என்றால் அந்தக் கன்னிகை இங்கே இல்லை. பஞ்சநதித் தலத்திலே தனக்கேற்ற புருடன் வேண்டுமென்று பஞ்சநதீசுவரரைப் பூசை செய்யப் போயிருக் கிறாள். நாம் அழைத்தால் வரமாட்டாள், ஆகையால் தேவரீர் தயை செய்து அங்கே வந்தால் நாங்களும் கூட வருகிறோம். கன்னியிடம் இந்தச் செய்தி சொல்கிறோம். அவள் சம்மதித்தால் அந்தப்படியே கல்யாணம் ஆகட்டும்.

சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன, கவேர இராசனைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

அகத்தியர்: நல்லது, அப்படித்தானே வந்து கன்னியைக் கேட்போம்.

சூ.வசனம்: இந்தப்படிக்கு அகத்தியரும் சுவேர இராசனும் பஞ்சநதத்துக்குப் போவோம் என்று இருக்கிற சமயத்தில், அப்புறம் கதாம்சம் விதானம் எப்படியென்றால் திருவையாற்றில் காவேரி அம்மன் சகியோடு, பஞ்சநதீசுவரரைப் பூசை பண்ண வருகிற மார்க்கம்.

திரை தருவு

காவேரி வந்தாள் சகியுடனே

காவேரி வந்தாள் நல்ல களப மெய்யி லணிந்து
பூவார் குழலிலங்க பூர்ண சந்திரோ தயம்போல

கரிய விழி புரள கனக பணி திரள
வரிசையா யணி திரள மாலை முலைமேல் துவள

வேறு தருவு

காவேரி யம்மன் வந்தாள் கனக வடிவுடனே
ஆவலாய்ப் பஞ்ச நதி அரனுக் கருச்சனை செய்ய

சந்திர காவிச் சேலைகட்டி சரிகை ரவிக்கை அணிந்து
அந்தை காலில் அணிந்து அன்னம் போல நடந்து

கொவ்வை யிதழ் துலங்கக் கொடிபோலிடை துவளச்
செவ்விள நீரைப் போலத் திரண்ட முலை குலுங்க

திலகம் நுதலி லிட்டுச் சேல்விழிக் கஞ்சனம் தீட்டி
நிலவுப் பூப் போல் க்றுநகை நின்று நின்று நகைத்து

சூ.வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன் வந்து பஞ்சநதீசுவரரி நமஸ்காரம் பண்ணி, பக்தியுடனே தோத்திரம் பண்ணுகிற மார்க்கம்.

தருவு

கங்கை வேணிய கங்காளா – பஞ்ச நதீசுவரா
கால காலா நீலகண்டா – ப
துங்க வரவ பூஷணா – ப கையில்
சூல கபால மேந்திய – ப
அம்புலி தன்னைத் தரித்த – ப
புலித்தோலை யாடையாக வுடுத்த – ப
சம்பரா ரியைப் பார்த்த கண்ணால் – ப நல்ல
தலைமாலை யணிந்த புய – ப
நேமி நாதன் நான்முகன் – ப தேட
நீள்முடி பாதம் காணாத – ப
சாமவேத கானப் பிரிய – ப எங்கள்
சகதிராசன் குல தெய்வமே – ப
தேனுடன் பாலுங் கலந்த – ப உன்றன்
சிரசில் அபிஷேகம் செய்தேன் – ப
நானருச் சனை செய்கிறேன் – ப எனக்கு
நல்ல புருடனாகத் தாரும் – ப

சூ. வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன், பஞ்சநதீசுவரரைத் தோத்திரம் பண்ணிப் பூசை பண்ணுகிற மார்க்கம்.

தருவு

மவுனமாய் நின்றபி ஷேகம் வகையாகச் செய்கிறேன்
புவிராசர் பணிராசனை யெனக்குப் புருடனாகப் பண்ணும்

அம்புயக் கையால் சுகந்தம் அருச்சனை செய்கிறேன்
கம்பீர புருடன் என்னைக் கிட்டவரப் பண்ணும்

சந்தனம் கற்பூரத்துடன் சாத்துகிறேன் சுவாமி
சந்தோடமாக யிருக்கும் தலைவன் வரப்பண்ணும்

நல்லதொரு கனிகள் எல்லாம் நைவேதனம் செய்கிறேன்
எல்லா மீதலுள்ள புருஷன் மேவவரப் பண்ணும்.

தீபமெல்லாம் வகை வகையாய்ச் சிறக்கப் பணி மாறுகிறேன்
கோபமில்லாப் புருடன் என்னைக் கூட வரப் பண்ணும்

மறவாமல் பஞ்சாட்சரத்தை மகிழ்ந்து சபிக்கின்றேன்
பிரியாமல் நித்த முத்தாடும் பிரியனை வரப் பண்ணும்

சூ.வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன் பஞ்சநதீசுவரரைப் பூசை பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே கவேர இராசனும் அகத்திய மகாமுனீசுவரரும் கவேர இராசனுடைய மனைவியும் மந்திரியும் மற்றுமுள்ள பந்து சனங்களோடு கூட, பஞ்சநதீசுவரருடைய தலத்துக்கு வருகிற மார்க்கம்.

தருவு

பஞ்சநதீசுவரரை நித்தம் பணிந்து புருடன் கேட்கும்
வஞ்சியிடம் அவர்கள் எல்லாரும் வந்தனரே.

சூ.வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் வந்து பஞ்சநதீசுவரரைப் பனிந்து காவேரியம்மனைப் பார்த்துச் சொல்லுகின்ற மார்க்கம்.

தருவு

ஆசை கொண்டாலும் சம்மதியோ காவேரி சம்மதியோ
அம்மா சமுத்திர ராசன் அதிரூப வானாம்.

இந்த அகத்திய முனி இது நிமித்த மட்டும்
வந்தவன் சரித்திர வகை வகையாய்ச் சொல்லுகிறார்

கண்ணுக் கிதமாகிய கணவனைச் சேர்வேனென்று
பெண்ணே நீ முன் சொன்ன பேச்சுப்படிப் பேசுகிறார்

எங்களுக்கிது தானே இயற்கையாய்க் காணுது
மங்கையே உன்றனுடைய மனதில் வாஞ்சை எப்படி?

வாச மாமலரெடுத்து மானே இந்த ஹரனை
பூசை செய்வது நல்ல புருடனை வேண்டியன்றோ?

சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து “நல்ல புருடன் வேணுமென்று இந்தப் பரமேசுவரனைப் பூசை பண்ணின விதமெல்லாம் சொல்லுகிறேன், கேளும் ஐயா! என்று காவேரியம்மன் சொல்லுகின்ற மார்க்கம்.

தருவு

இப்படி நான் சிவ பூசை செய்தேன் – மெத்த
மெப்புள்ள புருடனை நான் மேவ வேணுமென்று

நந்தவனத்தினில் நானே அடுத்தேன் – அடுத்து
நறுமலர் அங்கிருந்ததிலே நல்லதெல்லாம் எடுத்தேன்

பந்து போல் சுருட்டும்படி தொடுத்தேன் – தொடுத்துப்
பங்கயக் கையாலே சாத்திப் பார்த்தேன் உள்ளம் களித்தேன்

முன்னே நெய்யினால் விளக்கு வைத்தேன் – வைத்து
முத்து ரத்னாதிகளிலே முகமங்கி அமைத்தேன்

அன்னவகை யுள்ள தெல்லாம் படைத்தேன் – படைத்து
அஞ்சடுக்குத் தீப முதல் ஆலத்தியும் எடுத்தேன்

சிறப்பாகப் பிரதட்டிணம் புரிந்தேன் – புரிந்து
திருச்சிற்றம்பலமோடு தேவாரம் சொரிந்தேன்

மறவாமல் நந்தி அருகிருந்தேன் – இருந்து
மனத்தினில் பஞ்சாட்சரத்தை வகையாக நினைந்தேன்

சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன காவேரி அம்மனைப் பார்த்து கவேர இராசன் சொல்கிற மார்க்கம்.

வசனம்: வருவாய், மா காவேரியே! நீ பஞ்சநதீசுவரனை எத்தனைப் பிரயாசமாய்ப் பூசை செய்தாயோ அத்தனைச் சந்தோஷம் வந்து லபித்தது. இந்த அகத்திய மகாமுனீசுவரர் சகல குணங்களிலேயும் ஈடு எடுப்பில்லாமல் இருக்கிற சமுத்திர இராசனுக்கு உன்னைக் கேட்க வந்திருக்கிறார். எங்களுக்கு மிகவும் சந்தோஷமா யிருக்கிறது. உன்னுடைய அபிப்பிராயம் சொல்லு பெண்ணே.

கன்னி வசனம்: ஆனால் நான் சொல்கிறேன், கேளும் ஐயா.

தருவு

பஞ்ச நதீசருடன் நெஞ்சம் சம்மதியாமல் என்
சம்மதி எதுக்காகும் ஐய என் சுவாமி

தஞ்சம் என்று அவர் இரு கஞ்ச மலர்ப் பாதத்தைக்
கொஞ்சி யேத்தும் நான் அல்லவோ அனுதினமும்

ஈசன் சம்மதியாமல் பேசேன் உங்களுக்கென்
விசுவாசம் இன்னும் தெரியாது மனதில்

ஆசை யுடனவரைப் பூசை செயும் எனக்கு
நேசன் வலிய வாரானோ மருவ நல்ல

என்னாணை இவர் வந்து சொன்னால் அல்லாமல் எங்கள்
மன்னா நான் சம்மதிப்பேனோ இது காரியம்

உன்னாலே தான் நமது மின்னா ளென்றோ வெண்ணிக்
கன்னி தானம் செயப் போமோ தேவரீராலே

சூ.வசனம்: இந்தப்படிக்குக் கன்னிகை சொன்ன வார்த்தை கேட்டுக் கவேர இராசன் அகத்தியரைப் பார்த்துச் சொல்லுகின்ற மார்க்கம்.

சு.இராச வசனம்: வருக அகத்திய மகா முனீசுவரரே நமக்குச் சம்மதம். கன்னிகையைக் கேட்டால் பரமேசுவரன் வந்து சொன்னால் அல்லாமல் தனக்குச் சம்மதியில்லை என்று சொல்கிறாளே. பரமேசுவரனைப் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு, அவராலே இந்தக் கன்னிகைக்குச் சொல்லி வைக்க என்னால் ஆகாதே, நீர் தபோதனர் அன்றோ? உம்மாலேயே இது ஆகும். இனிமேல் இந்தக் கன்னிகை சொன்ன வார்த்தைக்கும் உத்தரவு சொல்லிப் பஞ்சநதீசுவரரையும் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு அவராலே இந்தக் கன்னிகைக்கும் சம்மதி பண்ணி வைத்து முஹூர்த்தம் நிர்ணயம் பண்ணிக் கன்னிகையைத் தானம் பண்ணுகிறேன். இப்போது நான் சொன்ன காரியங்களுக்குக்கெல்லாம் யத்னம் பண்ணுமையா சுவாமி.

சூ. வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து “வாரும், கவேர ராசாவே, நம்முடைய தபோ பலத்தினாலே நீ சொன்ன காரியங்களெல்லாம் நிர்வாகம் பண்ணி இந்தக் கன்னிகைக்கு விவாகம் பண்ணுகிறோம்” என்று இராசனிடம் சொல்லி கவேரகன்னிகையைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

தருவு

பஞ்சநதீசரைக் கெஞ்சி நாம் சம்மதி
பண்ணிக் கொள்கிறோம் பெண்ணே உன்

நெஞ்சில் ஒருமையாய் வஞ்சனை பண்ணாமல்
நீயுங்கூட நினை பெண்ணே

உத்தரம் சொல்லாதே முத்து முத்தாட
உனக்கேற்ற நாயகன் பெண்ணே அல்லால்

சத்திய வாசகன் உத்தமன் பேரும்
சமுத்திர ராசன் காண் பெண்ணே

நித்தம் சிவ பூசை பண்ணாமல் ஆகாரம்
நித்திரை பண்ணான் காண் பெண்ணே உன்றன்

அத்திர விழிக்கவன் ரூபத்தைக் கண்டால்
அப்போது தெரிய வரும் பெண்ணே

வந்து வெகுநேரமாச்சுது பேச்சில்
வழிவிடாதே சொல்லு பெண்ணே மனம்

சந்தோஷ மாகவே சமுத்திர ராசனைத்
தான் அழைத்து வருவோம் பெண்ணே!

சூ.வசனம்: இந்தப் படிக்குச் சொன்ன அகத்தியரைப் பார்த்துக் காவேரியம்மன் சொல்லுகிற மார்க்கம்.

கன்னி: வரவேண்டும் அகத்திய மாக முனீசுவரரே, பஞ்சநதீசுவர சுவாமி சொன்னால் அல்லாமல் நான் சுயமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறதில்லை சுவாமி.

அகத்: கேள் பெண்ணே காவேரி! பஞ்சநதீசுவரரைப் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு அவராலே உனக்குச் சம்மதியாகச் சொல்லி வைக்கிறேன். என் திறமையைப் பார் பெண்ணே!

சூ.வசனம்: இந்தப்படிக்கு அகத்தியர் கன்னிகையைப் பார்த்துச் சொல்கின்ற மார்க்கம்.

தருவு

மெத்த வொருமையாக விஷ்ணு வொரு பூநிமித்தம்
விழியிடந்து சாத்தும் வேளையில் பக்திக் கிரங்கி வந்த நீரன்றோ!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

பிச்சிப் பூவாலருச்சனை செய்த மார்க்கண்டேயனைப் பிடிக்க
வந்த நமனை உதைக்கவே பக்ஷமாக வந்த நீரன்றோ!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

கோட்டு முலைச்சி பரவை நாச்சியார் தனைக் கூடிக்
கும்பிட்டுப் போற்றும் சுந்தரன் பாட்டுக் கிரங்கி வந்த
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

வாக்கிசந்த கொங்கை உமையாள் தனைப் புணர்ந்த
மணவாளக் கோலத்துடனே ஏழை நான் பார்க்க வந்த நீரன்றோ!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

வேதம் படிக்கும் அம்பலந்தணன் யக்ஞத்தில் வரவேணுமென்று
வருந்தும் வேளையில் பாதம் காட்ட வந்த நீரன்றோ!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

சீல முனிவர் வேஷமாகவே வந்து செங்காட்டில் சிறுத்தொண்டன்
கறியும் உண்டபின் பாலனுடனே நின்ற நீரன்றோ!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

திசைபெறு சோழன் மனசைச் சோதிக்க நமனெனும் கன்றைத்
தேரிலுற வைத்தபின்னும் பசுரூபங் கொண்டு வந்த நீரன்றோ!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

ஆரடி யடிதேவி உன்பிள்ளை புவியின் மீதியில் அவதரித்ததோ
வழுகிறான் பாரம் என்று சொன்ன நீரன்றோ!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

முதலை உண்ட பிள்ளைதனை அழைத்துக் கல்யாணம் முடித்து
அவனுடைய காணியாகிய பதியில் வைத்த நீரன்றோ!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

சித்தம் மகிழ்ந்து சமுத்திர ராசனை இந்தக் காவேரி சேரக்
கல்யாணம் செய்யத் தேவரீர் பிரத்தியட்சமாக வேணுங்காண்!
– ஹர பரமசிவ பஞ்சநதீசா!

சூ.வசனம்: இந்தப்படிக்குப் பிரத்தியக்ஷமான பரமேசுவரர் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

ஈசன்: வருக! அகத்திய மாமுனியே! நீ பண்ணின தோத்திரத்திற்கு மிகவும் சந்தோஷம்.
அப்படியே காவேரிக் கன்னிகையை சமுத்திர ராசனுக்குக் கல்யாணம் பண்ணி
வைக்கிறோம். நீ சீக்கிரம் போய், சமுத்திரனை அழைத்துக் கொண்டு வருக!

அகத்: மகா பாக்கியமாயிற்று சுவாமி!

சூ.வசனம்: இந்தப்படிக்குப் பரமேசுவர வசனம் கேட்டு அகத்தியர் சமுத்திர ராசனை அழைக்கப் போகிற மார்க்கம்.

தருவு

அமைக்க வந்த கன்னி அமைந்ததென்று
அகத்தியமுனி சமுத்திர ராசனை அழைக்கத்தான் நடந்தாரே!

சூ.வசனம்: இந்தப்படி அகத்திய மகாமுனி சமுத்திர ராசனுடன் இந்த விருத்தாந்த மெல்லாம் சொல்லிச் சமுத்திரனை உடன் கூட்டிக் கொண்டு, பஞ்சநதீசுவர தலத்துக்கு கல்யாணத்துக்கு வருகிற மார்க்கம்.

தருவு

சமுத்திர ராசன் வந்தான் – சுந்தரமான சமுத்திர ராசன் வந்தான்
சமுத்திர ராசேந்திரன் தனக்கே காவிரியை

அமர்த்தும் அகத்தியர் போல் அழைத்தபடியே கூட மனத்தில் மகிழ்ச்சியும்
கொண்டு – சிவனைக்காண வலம்புரிச் சங்கும் கொண்டு

கனக பணியுங் கொண்டு கஞ்ச மலருங் கொண்டு
தினக ரோதயம் போலே திருவையாறதனிலே

சூ.வசனம்: இந்தப் படிக்குச் சமுத்திரராசன் பஞ்ச நதீசுவரரைத் தோத்திரம் பண்ணுகின்ற மார்க்கம்.

தருவு

சரணம் சுவாமி சரணம் செளந்தரேச சரணம்
அரவு கங்கை திங்கள் சடையில் அணிந்த பஞ்சை நதியீசா!

விடையேறி வரு துங்க விபூதி தவழங்கதுடி மானும் மழுவும்
சிரசும் சூலமும் ஏந்து கையர்

மறையோனும் மானும் காணா மகாதேவர் மலர்ப்பாதா
அறமளித்த நாயகி பங்கினில் அமர்ந்த பஞ்சநதியீசா!

புகழ் பஞ்ச நதிவாசா போசல குல யீசா
சகசி ராசனிரவும் பகலும் தான் பணியும் சர்வேசா!

சூ.வசனம்: இந்தப்படிக்குத் தோத்திரம் பண்ணின சமுத்திர ராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

தருவு

உனக்கேற்ற புருடனிவன் உகந்து பார் காவேரி
எனக்கேற்ற புருடனருள் என்று சொன்னபடி

விதவிதமாய் மலரெடுத்து விடிஉமுன்னே நமையடுத்து
இது நிமித்தம் வெகு பூசை இச்சையுடன் செய்து

தந்தை தாய் இருக்கிற பேர்தானே வேண்டியது செய்வார்
சிந்தனை யென்னென்றிராமல் தினம் வந்தெனைப் பணிந்த

அவன் மெய்யும் சலரூபம் உன் மெய்யும் சலரூபம்
கவலையில்லை இருவருக்கும் கலவி செய்து கூட.

சூ.வசனம்: இப்படிச் சொன்ன பஞ்சநதியீசனைப் பார்த்துக் காவேரியம்மன் சொல்கிற மார்க்கம்.

தருவு

சந்தோஷமாச்சு சுவாமி என்றன் மனது
சந்திரசேகரா இந்தச் சமுத்திர ராசனைக் கண்டு

இஷ்டமாகு முன்னே பேச்சுப் பேசி முத்தாட எண்ணுவதென் மையல் நீச்சு
திருஷ்டிப் பிரியமா வாய்த்து சிந்தைத் துயரம் போச்சு.

கவுடாய்ப் பார்த்தானொரு பார்வை அவன் முகம் கனம் கொண்டு
உருகுது வேர்வை
இவனும் எனக்குக் கோர்வை என் முலை இவனுக் கேர்வை

தரு கமலை மாதருளாலே புவியை ஆளும் சகசி இராச தேவேந்திரன்
மேலே கருணை செய்வது போலே கல்யாணம் செய்யுமினி மேலே.

சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கன்னிகை வசனம் கேட்டுப் பஞ்சநதியீசுவர சுவாமி சொல்கிற மார்க்கம்.

ஈசன்: வருக சமுத்திர ராசாவே! நீ நினைத்தாற் போல இந்தக் கன்னிகை உன்னைக்
கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதி பண்ணினோம். நம் முன்னிலையில் தானே
சீக்கிரமாய்க் கல்யாணம் பண்ணிக் கொள்வாயாக.

சூ.வசனம்: இந்தப்படிக்குச் சமுத்திர இராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

ஈசன்: வருக கவேர இராசனே, உனக்கு நல்ல மாப்பிள்ளையாக வந்தான். இந்தக்
கன்னிகையைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணும்.

சூ.வசனம்: இந்தப் படிக்குச் சொன்ன பரமேசுவர வசனம் கேட்டு கவேர இராசன் சமுத்திர இராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

தருவு

மலைக்கு மலையண்டை கொடுத்தாற்போல் நீ வந்து
வாய்த்ததே நேர்த்தியையா சொல்லும்

கலைக்கொரு வாணியைப் போல் வந்த வென்னுடைய
கன்னி காவேரி யம்மனுக்கு

செப்பு முலையுள்ள யெந்தேவி யென்னுடன் சிங்காரமாகக் கொண்டு
சப்பிர மஞ்சத்திலே இருந்து விளையாடும் வேளையிலே – தங்கக்

குப்பா சத்திலடங்காது நம் கன்னிக்குக் கொங்கையென்று சொன்னபின்
இனி எப்படிக் கொத்த புருடன் வாரானோவென்று எண்ணி யெண்ணி யிருந்தேன்.

அஞ்சு வயது முதற்கொண்டு நித்தம் அலர்ந்த மலரெடுத்து
பஞ்சநதீசருக்கு அருச்சனை செய்திரு பாதம் தனைப் பணிந்து

கெஞ்சிக் கெஞ்சி நல்ல புருடன் தாருமென்று
கேட்டீரிந் நாளிவட்கு எங்கே
கொஞ்சத் தனமுள்ள புருஷனாகவே கொடுக்கிறாரோ வென்றிருந்தேன்.

அகத்திலிருந்து மந்திரி உடனிது ஆலோசனை புரிந்து
சகத்தில் நமக்குச் சரிமன்னர் ஆரினி தேடி வா போவென்றேன்

அகத்தியர் வந்து சமுத்திர ராசனென் றாரப்போதொரு மட்டும் உன்றன்
முகத்தைக் கண்டதும் சந்தோஷம் மட்டல்ல முகவிச்ச வார்த்தையன்றோ

அகத்திய மாமுனியே தேவரீருக்கனந்தம் சரணம் ஐய
சகத்திலே நாங்கள் சுகத்தையே மென்மேல் சேர்த்திருக்கவே செய்து மகிழும்

மதியணிந்திடு வேணியர் தேவிக்கு மாலையிடுமப்போ தந்த
பொதியமா மலை தன்னிலிருந்து பாதி பூமியைச் சரிசெய்தீரே

இனிய யக்ஜங்கள் செய்யும் பெரியோர்க்கு இப்புவி மீதிலுள்ள நல்ல
முனிவர்க்கு மாதி சைவர்க்கும் கொழுந்தான மூர்த்தியாக வந்தீர்.

சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனின் வசனம் கேட்டு சமுத்திர இராசன் சொல்கிற மார்க்கம்.

சமுத்: வருக கவேர இராசாவே! உமக்கும் நமக்கும் சம்பந்தம் பண்ணுவித்தது இந்த
அகத்திய மகாமுனீசுவரர். இவரே இந்தக் கல்யாணத்துக்குக் காரணம் சுவாமி.

சூ.வசனம்: இப்படிச் சமுத்திர இராசனும் கவேர இராசனும் அன்யோன்யமாய் வார்த்தை சொல்லி அகத்திய மகாமுனியைத் தோத்திரம் பண்ணுகின்ற மார்க்கம்.

சூ.வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் சமுத்திர இராசன், கவேர கன்னிகை, மந்திரி, கவேர இராசன் மனைவி மற்றுமுள்ள பேரும் அகத்தியரைத் தோத்திரம் பண்ண, இந்தச் சமயத்திலே பஞ்சநதீசுவரர் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

ஈசன்: வருக! அகத்திய மகாமுனியே, சமுத்திர இராசனுக்குக் கர்த்தா நீர்தானே.
சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணி வையும்.

அகத்தி: மகா பாக்கியமாயிற்று, சுவாமி!

சூ.வசனம்: சொன்ன பரமேசுவர வசனம் கேட்டபடி அகத்தியர் சமுத்திர இராசனுக்கும்
காவேரிக்கும் கல்யாணம் பண்ணுகிற மார்க்கம்.

இந்தப்படிக்கு முஹூர்த்த சமயத்திலே கவேர கன்னிகையைப் பார்த்துச் சொல்கிற
மார்க்கம்.

தருவு

மாலையிடடி பெண்ணே மாலையிடடி வால மன்மதன்
போலவே வரும் – சமுத்திர ராசனுக்கு (மாலை)

மெத்த நல்ல நாதனாக வேணுமென்று இவரிடத்தில்
பக்தி செய்தாயே நீ இந்தப் பஞ்சநதியீசர் பார்க்க

பக்ஷமாய்த் தினமும் இந்தப் பஞ்சநதி ஈசருக்கு
அருச்சனை செய்த கையால் அலர்ந்த செந்தாமரைப்பூ

தானு முன்னே உன்னை இந்த சமுத்திர ராசனுக்குப்
பாணிக் கிரகணம் பண்ணப் பணம் பாக்கு வெற்றிலை எடுத்தேன்.

சூ.வசனம்: இந்தப் படிக்குக் காவேரியம்மனுக்கும் சமுத்திர இராசனுக்கும் கல்யாணம் பண்ணுவித்து கவேர இராசன் சமுத்திர இராசன் முதலானவர்கள் பரமேசுவரனுக்கு நமஸ்காரம் பண்ணித் தோத்திரம் பண்ணுகிற மார்க்கம்.

தருவு

ஏழை பங்காள கங்காள – நம் பஞ்சநதீசுவரா
விடையேறும் பரமசிவ – பஞ்சநதீசுவரா
வேழ முகத்தானைப் பெற்றிடும் – பஞ்சநதீசுவரா
வேதாந்த வேத்ய ஜகன்மய – பஞ்சநதீசுவரா
பன்னக பூஷண பரமேச – பஞ்சநதீசுவரா
பாவஜ கர்வ தமனாதீசுவரா – பஞ்சநதீசுவரா
புன்னாக வர சர்ம பூஷித – பஞ்சநதீசுவரா தினம்
போசல குல கசேந்திரன் பணி – பஞ்சநதீசுவரா

சூ.வசனம்: இந்தப்படிக்குத் தோத்திரம் பண்ணி, சமுத்திர இராசன் முதலானவரை யெல்லாம் பார்த்துப் பரமேசுவரன் வாழ்த்துகிற மார்க்கம்.

தருவு
ராகம்: மத்தியமாவதி

ஆல்போலவே தழைத்து நல்ல அருகு போலவே வேரோடி
மால் போலவும் லக்ஷ்மி போலவும் வையகந் தனில் வாழ்ந்திருப்பீர்! – இருவரும்
இருக்குவேள் போலவே வாழ்ந்திருப்பீர்
சந்திரன் போலவே வாழ்ந்திருப்பீர் – எழு

தாரகை போலவே வாழ்ந்திருப்பீர் வனிதையே எங்கள் காவிரியே
சகசி மகாராசனால் சோழ மண்டலத்தில் தினமும் இந்தப் புவி
விளையச் செய்து ஸ்திரமாக எப்போதும் வாழ்ந்திரு நீ!

சூ.வசனம்: இந்தப்படிக்குப் பரமேசுவரன் ஆசீர்வாதம் பண்ண, சகலமான பேரும் விளங்கி சந்தோஷாதி சயத்தினால் மங்களம் பாடுகிற மார்க்கம்.

மங்கள தருவு

வரு சமுத்திர ராசனுக்கு மங்களம் – எங்கள்
வனிதை காவேரிக்கு மங்களம்
தானவர் வீரனுக்கு மங்களம்
சகல லோக பாவனிக்கு, பவானிக்கு மங்களம்.

மானோர்கள் மித்திரனுக்கு மங்களம்
தண்டமிழார் சகசேந்திரன்
தானாக வளரும் சோழ மண்டலத்தை
வளர்க்கும் தேவிக்கு மங்களம்.

சுபம்

தஞ்சை மராத்தியர் கால நாட்டிய நாடகங்களின் தொடக்கக் காட்சி.

அந்தக் கால நாட்டிய நாடக மரபின்படி கட்டியக்காரன் மேடையில் தோன்றி பேசும் பாங்கினை விளக்கும் விதமாக ‘மாதிரி உரையாடல்’ இங்கே காணலாம். கீழ்கண்ட தொடக்கக் காட்சி உரையாடல் “விஷ்ணு சாஹராஜ கல்யாணம்” எனும் நாடகத்தில் வருவது. ஷாஜி மன்னரின் அவைக்களப் புலவர்கள் இயற்றியதாக இருக்கலாம். இதில் ஷாஜி மன்னன் பாட்டுடைத் தலைவனாகவைத்து இயற்றப்பட்டிருக்கிறது. புராண பின்னணியோடு அமைந்த இந்த நாடகம் ஷாஜி வழிபடும் திருவீழிமிழலைத் தலத்துக்கு வந்து ஈசரை மகாவிஷ்ணு வழிபட்ட வரலாறு சொல்லப்படுகிறது. ஆயிரம் செந்தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு அர்ச்சிப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. அப்போது சிவபெருமான் காட்சி தருவதாக அமைந்தது இந்த கதை. இனி….

நாடகம் துவக்கப்படுவதற்கு முன் அரங்கில் கட்டியக்காரனைச் சூத்திரதாரன் அறிமுகம் செய்து வைக்கிறான். கட்டியக்காரனுக்கும் சூத்திரதாரனுக்கும் நிகழும் உரையாடல் பின்வருமாறு அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் பேச்சு வழக்கு எப்படி இருந்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. 3ஆம் ஷாஜி ராஜா தஞ்சையை ஆண்ட காலத்தில் எல்லா நாடகங்களிலும் இதுபோன்ற உரையாடல்களைக் கேட்கலாம். இந்த உரையாடல் நடக்கும் சமயம் மேடையில் சூத்திரதாரனும் கட்டியக்காரனும் இருப்பர்; இசைக் குழுவினர், தலைமை நட்டுவன், தாளக்காரன் ஆகியோரும் இருப்பர்.

இந்த உரையாடல்கள் இசை நாட்டிய நாடகங்களுக்குப் பொதுவானவை எனினும், இங்கு தரப்படும் உரையாடல்கள் “விஷ்ணுசாகராஜ விலாசம்” எனும் நாடகத்தில் வருபவை, இது அந்த நாடகச் சுவடிகளில் காணப்படுபவை. அப்போது தமிழ் நாட்டில் நாட்டிய ஆசிரியர்கள் நாடகத்தை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு இந்த சுவடியே ஆதாரம். மக்கள் கேட்டு மகிழும் பாங்கில் அன்றைய பேச்சு நடைமுறையில் இவை அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் தஞ்சை நகரில் நடைபெற்ற நாடக முறை பாங்கு இது.

அன்றைய தஞ்சையை ஆண்டவர்கள் தமிழ், தெலுங்கு, மராத்தி மொழியாளர்கள். முதலில் சூத்திரதாரன் மேடையில் தோன்றுவான். அரங்கில் மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்து நாடகத்தைக் காணக் காத்திருக்கின்றனர். அப்போது கட்டியக்காரன் அங்கினுள் நுழைகிறான், இருவரும் உரையாடுகிறார்கள்.

சூத்திரதாரன்: (கட்டியக்காரனை நோக்கி) அடேய், நீ எங்கேயிருந்து வாராய் சொல்லடா?

கட்டியக்காரன்: மகாவிஷ்ணு சாமியண்டையிருந்து வந்தேனையா.

சூ: நீ வந்த காரியமென்ன தெரியச் சொல்லடா?

க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்க ஸ்வாமியைச் சேவிக்க வருகிறார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தோமையா.

(சூத்திரதாரனும் கட்டியக்காரனும் பேசிக்கொண்டிருக்கும்போது
நட்டுவனார் அரங்குக்கு வருகிறார்.)

சூ: நட்டுவனாரே, நாம் ஆடற பாடற சபையிலே இவன் ஆரோ தெரியாது, வந்திருக்கிறானே! இவனுடைய பட்டை நாமம் என்ன, பட்டு துப்பட்டி என்ன, தாடி என்ன, கட்டியக்கோல் என்ன, இவனுடைய பூர்வோத்தரம் கேட்க வேணுமே!

சூ: சரி. அரே பாய்! தும் கோன்றே (ஹிந்துஸ்தானியில் நீ யாருடா?)

க: (காதில் வாங்கிக் கொள்ளாமல்) அம்மம்மா! இந்தப் பந்தல் பார்க்க மெத்த நன்னாயிருக்கே!

சூ: ஓய் நட்டுவனாரே! இவனுக்கு உத்தராதி பாஷை தெரியாது. மராட்டி பாழையாலே கூப்பிடவேணும்! அஹாதூ கோடூன்? (எங்கேயிருந்து வருகிறாய்) ஆலாஸ கா! (கட்டியக்காரன் கவனிக்காமல்)

நட்: ஐயா! அப்படிக் கூப்பிட்டாலும் பேசவில்லையே. இனிமேல் கன்னட பாஷையில் கூப்பிடவேணும் போலயிருக்கே!

சூ: எலே தம்பி! (கன்னடத்தில்) எல்லித்து பந்தயோ? (இப்போதும் கவனிக்கவில்லை)

நட்: ஐயா, அப்படியும் பேசவில்லையே. வடுக பாஷையினாலே கூப்பிடுவோமே!

சூ: (வடுகில் என்று குறிப்பிடப்படுவது தெலுங்கு) ஓயி நாயடா? ஏடனுண்டி வொஸ்தி வோயி?

நட்: ஐயா, அப்படியும் பேசவில்லை. சோழ மண்டலம் தமிழிலே கூப்பிடவேணும் அப்போ பேசுவான்.

சூ: (தமிழில்) ஓநோய் நாயக்கரே, எங்கேயிருந்து வந்தீர் காண்? (நெற்றியில் பட்டை நாமம் போட்டிருந்ததால் நாயக்கரே என்றழைக்கிறான்)

கட்டியக்காரன் பேசவில்லை. ஒருகால் இவனுக்குக் காது கேட்கவில்லையோ என்று சூத்திரதாரன், ஒரு காதுப் பக்கம் போய் கூப்பிடுகிறான். பதில் இல்லை. மற்றொரு காதுப் பக்கம் போய்க் கூப்பிடுகிறான், அதற்கும் பதில் இல்லை. சூத்திரதாரன் கட்டியக்காரனைச் சுற்றி வருகிறான். அப்போது தன்னை அவன் அடிக்க வருகிறானோ என்று கட்டியக்காரன் கையில் கம்புடன் சூத்திரதாரனை அடிக்க ஓங்கி மிரட்டுகிறான்.

சூ: அடே பைத்தியக்காரா! உன்னோடு சண்டையில்லை. உன்னை இனிக் கூப்பிட மாட்டேன். நாங்கள் எல்லோரும் இங்கே கூடிக்கொண்டு வீழிநாத ஸ்வாமி ஸந்நிதியிலே நாட்டிய நாடகம் ஆடுகிறோம். நீ யார் என்று கேட்டோம்.

க: ஓஹோ! நீ யாரடா?

சூ: நான் வித்வானடா.

க: என்ன வித்வாங்கனை? நம்மிடம் சொல்லுடா?

சூ. நான் சொல்றதிருக்கட்டும் நீ எங்கேயிருந்து வந்தாய் முதலில் சொல்லடா?

க: வடக்கே போ (கையை வடபுறம் காட்டி)

சூ: பீஜாபுரத்திலேயிருந்து வந்தாயோ?

க: சே! அங்கே யார் மகனாகப் போனாய்? இங்கே திரும்படா (மேற்கே கை காட்டி)

சூ: ஆனை, மலையாளமா?

க: இப்படித் திரும்பு (கிழைக்கை நோக்கி)

சூ: ராமேஸ்வரத்திலேர்ந்து வந்தாயா?

க: இப்படித் திரும்பு (வேறு பக்கம் காட்டி)

சூ: வேதாரண்யமா?

க: சற்றே இந்தப் புறம் போ.

சூ: திருவாரூரா?

க: ரெண்டு முழம் இப்படித் திரும்பு.

சூ: கும்பகோணமா? கெளரி மாயூரமா? திருவிடைமருதூரா? சீர்காழியா? வைத்தியநாதன் கோயிலா?

க: அடடே நில்லு. அத்தனை தூரம் யார் மகனாய்ப் போகிறாயடா? சற்றே இப்புறம் (கோலால் தரையில்
(கோடு போட்டுக் காட்டுகிறான்)

சூ: சாலியமங்கலமா? மாரியம்மன் கோயிலா? தஞ்சாவூரா?

க: சபாஷ்டா! நம்ம பின்னே வா (ஒரு பக்கமாக அழைத்துப் போகிறான் அங்கு ஒரு கம்பத்தைக் காட்டுகிறான்) ஒசக்க ஏறு! கெட்டியாய்ப் பிடிச்சுக்கோடா (சுத்திரதாரன் ஏறுகிறான்)

க: ஒரு காலை விடு, இந்தக் காலையும் விடு. அந்தக் கையை விடு. இந்தக் கையையும் விடு. கீழே விழு.

சூ: ஓய் பலே. நன்னாச்சு. காலொடிஞ்சால் எப்படி?

க: ஒரு பந்தக்கால் கொடுக்கிறோம். (இருவரும் முன்னால் வருகின்றனர்)

சூ: இதெல்லாம் இருக்கட்டும்! நீ எங்கேயிருந்து வந்தாய்? நிலவரமாய்த் தெரியச் சொல்லுடா?

க: அந்த வீட்டிலேயிருந்து இங்கே வந்தேன்.

சூ: உன்னோட வாசம் எங்கே?

க: வாசுதேவனிடத்தில்.

சூ: வாசுதேவனென்றால் எனக்குத் தெரியாது.

க: சின்னப்போ மண்டி போட்டுக்கொண்டு அரி நரி என்று படிக்கவில்லையா? அதாவது மகாவிஷ்ணு வாசலிலே இருக்கிற கட்டியக்காரன் நானடா!

சூ: அட பைத்தியக்காரா! ஏண்டா இப்படி நாலு மூலையிலும் சுத்துகிறாய் நம்மை.

க: பைத்தியக்காரன் நானோ, நீயோ. நம்ம மகாவிஷ்ணு எங்கே பார்த்தாலும் அங்கெல்லாம் இருப்பாரடா.

சூ: அது சரி, நீ வந்த காரியம் என்ன சொல்லுடா.

க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்கத்தைச் சேவிக்க வரார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தேனடா.

சூ: அதற்கு என்னென்ன செய்ய வேணும்டா.

க: ஸதிரு, கிதிரு, மெத்தே, கித்தே, தலகணி, பூ, சந்தனம், கிந்தனம், தூபம், தளிகை, நட்டு முட்டு, தீவட்டி

சூ: அடே சகலமும் இங்கே இருக்கிறது. நீ போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா போ.

க: பாக்கி எல்லோரையும் நீ இழுத்துக் கொண்டு வா.

சூ: இதோ வந்துவிட்டார்கள் (மகாவிஷ்ணுவைத் தவிர யாவரும் வருகிறார்கல் அரங்குக்கு)

க: நீ யாரடா? மெட்டுக்காரனா? முட்டிகோ! ஐயா மத்தளக்காரா, இந்தப்பக்கம் தட்டு. அந்தப்பக்கம் தட்டு, நடுவே தட்டு (மத்தளக்காரன் ஓசை எழுப்புகிறான்)

க: பூனைக்காரப் பொட்டி மவனே. இந்தப் பக்கம் டும்! அந்தப் பக்கம் டும்! நடுவிலே ஒண்ணுமில்லைடா.

க: (ஒருவனைப் பார்த்து) நீ யாரடா?

நட்டு: நாந்தான் நட்டுவம்.

க: கையிலே என்னடா?

நட்டு: தாளம் ஐயா.

க: அடி!

நட்டு: தித்தித்தே (தாளத்தில்)

க: இது எந்தத் தாளம்?

நட்டு: இது திருபுடை.

க: எங்கே திருடிக் கொண்டு வந்தாய்? இந்தத் தாளம் பேரு சொன்னால் உச்சிதம் (உயர்வு) என்ன?

நட்டு: உன் மேலே பாட்டுப் பாடறோம்.

க: இந்தத் தாளம் பேரு?

நட்டு: ஒன்று இரும்பு ஒன்று வெண்கலம்.

க: (மற்றொருவனிடம்) நீ யாரடா?

பாடகன்: நாந்தான் பாடகன்.

க: ஆ! பாடு.

பாடகன்: ஆ………………..

க: நிறுத்தடா ஆங்காதே. வாய்மூடி கண் மூடிக் கொண்டு ஆகாசம் பார்த்துக் கொண்டு பாடு.

சூ: சரி சரி. நீ வந்து அனேக நேரமாச்சு. மகா விஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வாடா போடா.

க: அந்தத் தாளம் பேரு சொன்னால் நம்ம மேலே பதம் பாடறோம் என்றாயே. இப்போ பாடு. நம்முடைய பட்ட நாமம், பட்டுத் துப்பட்டி, கட்டியக் கோல், இதெல்லாம் வச்சு ஒரு மேளம் நீளமாக ஏலபதம் திரி.

சூ: நல்ல காரியம்.

க: “பட்ட நாமம் இட்டுக் கொண்டு” (பாடுகிறான்)

சூ: வாடா கட்டியக்காரா! உன் மேலே பாடினோம். சீக்கிரமாகப் போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா. (கட்டியக்காரன் உள்ளே போகிறான். பின்னர் நாடகம் துவங்குகிறது.)

(இந்த உரையாடல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகச் சுவடி எண் 639இல் உள்ளபடி தரப்படுகிறது)

(நிறைவடைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.