அவனால் அவனி, அவன்தான் புவனி
அவனை அவனால் கவனி -அவனே
வருவான் குருவாய் அறிவைத் தருவான்
பெருவாய் பரம பதம்….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
குமரியின் சமூகப் பண்பாட்டை பதிவு செய்யும் சு. செல்வகுமாரனின் கவிதைகள்
-கவிஞர். சோமனூர் செந்திரு
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை என்று பாடிய இரசூல் கம்சதேவ் அவர்களின் கூற்றுப்படி தான் வாழ்ந்த மண்ணையும், தன்னைச் சார்ந்த சமூகத்தையும் தம் கவிதையில் பதிவு செய்து, அவர் வாழ்ந்த நிலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார் கவிஞர் சு.செல்வகுமாரன். தான் வாழ்ந்த, வாழும் சமூகத்தையும் அதன் செயல்பாட்டினையும் அங்கு நிகழும், ஒவ்வொரு நிகழ்வினையும் தான் பேசித்தீர்த்த வட்டார வழக்குமொழி வழியே கவிதையாக்கித் தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூந்தல் வண்டி என்னும் இத்தொகுப்பில் மொத்தம் 79 கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு கவிதையும், ஒவ்வொரு சமூகச் செயல்பாட்டின் (அல்லது) நிகழ்வின் பின்புலமாக அமைந்துள்ளது. கவிதை வாசிக்க, வாசிக்க நாமும் அக்கவிதையோடு ஊடுபாவி அச்சமூகத்திலே வாழக்கூடிய மனிதராய் மாறிப்போகும் வகையில் இத்தொகுப்பு அமைந்துள்ளதே இத்தொகுப்பின் வெற்றி எனலாம். கவிஞர் தான் அனுபவித்து வந்த பால்யகால நினைவுகளையும், வளர்ந்து வரும் நாகரீக, அறிவியல் மாற்றத்தால், அச்சமூகம் அடைந்துள்ள மாற்றமென ஒவ்வொன்றையும் தம் கவிதையில் உயிரோட்டமாய்ப் பதிவுசெய்துள்ளார்.
ஒவ்வொருவரின் வாழ்விலும், இனிமையான மறக்க முடியாத தருணம் எதுவென்றால் அனைவரின் பதில் ஒன்று போலவே இருக்கும். அது குழந்தைப் பருவம் முடித்து பள்ளிப்பருவம் தொடங்கிய காலமே. தன்னுடைய பால்ய காலத்தில் நடந்தவொன்றை எவராலும் இன்றளவும் மறக்கமுடியாது, அவை அப்படியே ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆழப் பதிந்துவிடுகிறது. குழந்தையாய் இருந்தபோது தம்மை அப்பாவாகப் பாவித்து தன் உடன் விளையாடியவர்களை அம்மாவாக, குழந்தையாக எனப் பாவித்து விளையாடிய விளையாட்டெனத் தொடங்கி, சொட்டாங்கல் விளையாடியது வரை யாராலும் மறக்கமுடியாது. அப்படிப்பட்ட தருணங்கள் இன்றைய பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விட்டது. கவிஞரோ தன் பால்ய நினைவுகளைப் “பூவரசம் பூ” என்னும் கவிதையில்,
“பூவரச இலையில் ஊத்து ஊதி
பனங்கூந்தலில் வண்டி செய்து
தெருவெங்கும் சுற்றிய நாட்கள்
பூவரசம் பூவாய் மாறிப் போனது
மஞ்சளிலிருந்து சிகப்பாக” (கூந்தல் வண்டி, ப -24)என அழகாகப் பதிவு செய்து நம்மையும் நம் பால்ய காலத்திற்கு இழுத்துச் சென்று பனங்கூந்தல் வண்டியை நம்மையும் மறுபடி ஓட்டச்செய்கிறார். கவிதைத் தொகுப்பின் தலைப்பும் இதுதான் என்பது தொகுப்பின் சாராம்சத்தை நமக்கு அடையாளப் படுத்துவதாய் உள்ளது.
உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களால், தமிழர்களின் பண்பாடு சிதைவுறாமல் இன்றளவும் காக்கப்படுகின்றதென்றாலும் தமிழர்களின் அளவிலடங்காப் பண்பாடுகள் கால வளர்ச்சியில் கணினிமயமாக்கப்பட்ட இச்சூழலிலும் ஒருபுறம் அவை அழிந்து வருகின்றன என்பது வெள்ளிடை மலையே ஆகும்.
“பெட்டி” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதையில்,
“நாருப்பெட்டி
கொட்டாப்பெட்டி
தட்டுப்பெட்டி
ஈக்காம்பெட்டி
பொட்டப்பொட்டி
பிளாப்பெட்டி
கிலுக்குப்பெட்டி
மடக்குப்பெட்டி” (கூந்தல் வண்டி, ப -28)என்று பல பெட்டிகளைப் பற்றிப் பேசுகிறார். இத்தனை வகைப் பெட்டிகள் எல்லாம் இன்று காணாமல் போய் விட்டதாகவும், தங்கள் வட்டாரப் பாரம்பரியத்தின் பெரும்பகுதி மறைந்து விட்டதாகவும் வருத்தப்படுவதை இக்கவிதை வழி அறிய முடிகிறது. கவிதையை முடிக்கும் போது,
“வீட்டு முற்றத்தில் நின்றிருந்த
பனைமரத்தைக் காணவில்லை” (கூந்தல் வண்டி, ப -48)என்று தமிழர் வாழ்வியலோடு ஒன்றிப் போயிருந்த பனைமரம் இன்று அழிந்துவிட்ட நிலையை அவலத்தோடு பதிவுசெய்வதை அறியமுடிகிறது.
ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம் அமைய வேண்டி எண்ணற்ற ஞானிகள் தோன்றிய இம்மண்ணில் இன்றளவும் அது மாற்றம் காணாதவொன்றாகவே உள்ளது. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு நிலவுகின்ற இச்சூழலில் கடவுளர்களிடம் கூட உயர்வு, தாழ்வு, பாகுபாடு பார்க்கப்படுவதைச் சுட்டி சமுதாயத்தில் நிலவும் உயர்வு தாழ்வை உவமையுடன் அடையாளப்படுத்துவது இங்கு பொருத்தமாக இருப்பதை பரிவாரத் தெய்வங்கள் கவிதைவழிக் காண முடிகிறது.
“கும்பாபிசேகம்
அலங்கார பூசை
லட்சார்ச்சனை
என மூலவரையே
சுற்றி சுற்றி வருகிறீர்கள்
பரிவார தெய்வங்களாகிய
எங்களுக்கு என்ன கிடைத்தது
நாங்கள் மழையில் நனைகிறோம்
வெயிலில் கருகுகிறோம்
விளக்கைக் கூட
காற்று அணைத்துவிட
இருளில் கிடக்குறோம்” (கூந்தல் வண்டி, ப-31)என்பதாய் இன்று ஏழைகள் படும் துன்பத்தையும் இக்கவிதை பேசுகிறது.
தரணியெங்கும், தானியம் வழங்கிய என் தஞ்சைத் தமிழ்மண், இன்று மழை பொய்த்து, காவிரியும் தன் கரம் நீட்டமறுத்து, ஒரு கவளச் சோற்றுக்கு நம் விவசாயி கண்ணீர் வடிப்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். செய்தியாய் மட்டும் பார்த்துவிட்டு அடுத்த செயலை பார்க்கச் சென்று வருகிறோம். ஏழை விவசாயியின் வாழ்விற்கு உதவ அரசாங்கமோ, அரசியல்வாதியோ, பொதுநல அமைப்போ, முன்வராத நிலைமையே இன்று நிலவுகிறது . இதனை கவிஞர்,
“மாடு கழுவிய
குளத்துநீரை வாரிக்குடித்து
குடலைக் கழுவுகிறான் விவசாயி
நெல் விளைச்சலுக்குப் பதிலாக
இந்தப் பூவில்
சாவு விளைச்சல்களே அமோகம்” (கூந்தல் வண்டி, ப-32)என்று விவசாயின் நிலையைக் குறித்து பேசுவதும் சமுதாயச் சிக்கலை எடுத்துரைப்பதாக இருக்கிறது.
முன்பொரு கவிதையில் பனைமரம் காணாமல் போனது பற்றி வருத்தத்துடன் பதிவு செய்த கவிஞர் இப்பொழுதெல்லாம் நெடுஞ்சாலைப் பணி, கட்டிடப்பணி என பல்வேறு காரணங்களால் புளியமரமும் காணாமல் போவதையும், தன்னுடைய இளமைக் காலத்தில் புளியங்காய் சாப்பிட்டதையும் ருசிபடக் கூறுவது போலக் கூறுகிறார் ஓரு கவிதையில்,
“தாழ்வாரங்களில் காய்த்துக்கிடந்த
நொண்டங்காய்களை
அக்காவுடன் பறித்து
உப்புடன் மசிய அரைத்து
அம்மாவுக்குத் தெரியாமல்
தின்ன நாட்கள்
புளியமரம் தறிபட்டது” (கூந்தல் வண்டி, ப-33)இக் கவிதையில், புளியங்காயைப் பறித்து அம்மியிலோ, குழவியிலோ வைத்து அரைத்து உண்டது பற்றிப் பேசி அவையெல்லாம் இன்று இல்லாமல் போய்விட்ட நினைவாக கூறுகிறார்.
உலகில் எத்தனையோ, தொழில் நுட்பங்களும், நாகரீக வளர்ச்சிகள் அடைந்த போதிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கும் அவலநிலையை இன்றும் நாம் பொது இடங்களில் காணமுடிகின்றது. அப்படி வெள்ளரிப் பிஞ்சு விற்கும் சிறுவனைக் கவிஞர் கண்ணுற்றார் போலும். தாம் கண்ட அக்காட்சியை,
“மதிய உணவு இன்றி
புதிய பேருந்துநிலையப் படிக்கட்டில்
காலை மடக்கித் தூங்குகின்றான்
வெள்ளரிப்பிஞ்சுச் சிறுவன்” என்று பதிவு செய்வதையும் பார்க்க முடிகிறது.”கோட்டுப் பூச்சிகள்” என்ற ஒரு கவிதையில் கிராமங்களில் பேசப்படும் பேய்கள் பற்றிய கவிதைகளை முன்நிறுத்துவது இயல்பாய் இருந்தாலும் நகரங்களில் தொழில்நுட்பத் திருடர்கள் என்ற பேய்க்கும் பயப்பட வேண்டியிருக்கிறது என்று நகர வாழ்க்கையின் நிலையைக் காட்டுகிறார்.
“தினமும் தொலைக்காட்சியில் பார்த்த
தொழில்நுட்பத் திருடர்களும்
கொலையாளிகளும்
கூடவே புரண்டு கொள்கிறார்கள்” (கூந்தல் வண்டி, ப- 95)’கால்காசானாலும் கவர்மென்ட் காசு; அரைக்காசானாலும் அரசாங்கத்துக் காசு’ என்று கொங்கு பேச்சு வழக்கொன்று உண்டு. அரசு வேலையென்பது இன்றளவில் குதிரைக் கொம்பாகிப் போன நிலை இருப்பினும் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு ஒரு அரசுவேலை கிடைத்தாலும், நிர்வாகம் சார்ந்தோ, பணிசார்ந்தோ, குடும்பம் சார்ந்தோ ஏதாவதொரு வகையில் அவர்களுக்கும் கஷ்டம், நஷ்டமென சராசரி மனிதனைப் போலவே அமைவதுண்டு. ஆனாலும் அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லையென அரசுவேலையில் இருக்கும் ஒருவரின் வருத்தத்தைப் பதிவு செய்வதாய் ஒரு கவிதை அமைந்திருப்பது கவிஞரின் எதார்த்தத்தைக் காட்டுகிறது.
“அவனுக்கென்ன அவன் அரசாங்க
வேலைக்காரன்” (கூந்தல் வண்டி, ப-101)எம்மதமும் சம்மதம், எல்லாக் கடவுளும் ஒன்றைப் போலவே அன்பும் அருளும் பாலிக்கின்றனர். கடவுள் எந்த ஊரில் இருந்தாலும், எந்தக் கடவுள் எங்கிருந்தாலும், எல்லாக் கடவுளும், ஒரே மாதிரித்தான் எந்த மாற்றமுமில்லை. தன்னை நாடி வந்தவர்க்கு நலமே தருகின்றது. மனிதர்களிடம்தான் வேற்றுமை, கடவுளிடம் எந்தவித வேற்றுமையுமில்லை என்று கூறுவதாய் ஒரு கவிதை “குலசாமிகளின் பேரன்பு” என்ற கவிதையில்,
“அந்நகரத்துச் சாமிகளும் ஒரு போதும்
அந்நியராய்க் கருதியதில்லை நண்பர்களைப் போல
விண்ணப்பித்த ஒவ்வொன்றையும்
காலம் பிடித்தாலும் கருணையோடு பரிசீலித்து
கனியமுதாய்த் திகழ்ந்தார்கள்” (கூந்தல் வண்டி, ப -104)நகர வாழ்க்கையை, நரக வாழ்க்கையே எனப் பதிவுசெய்யும் கவிஞர் அதன் தாக்கத்தைப் பல இடங்களில் பதிவுசெய்வதை அறியமுடிகிறது. அப்படியான கவிதையில் ஒன்று தான் 5 எப் தெற்குக் குறுக்குத் தெரு
“திணிக்கப்பட்ட நான்காவது மாடியில்
துர்நாற்றமும் வாசமுமாய்
தொடர்கிறது வாழ்வு” (கூந்தல் வண்டி, ப-87)சுவாசிக்கும் காற்றுக்கூட தூய்மையாய் இல்லை. ஆனாலும் மக்கள் நெருக்கடியிலும் வாழ்வியல் வேண்டி துர்நாற்றத்தோடு வாழ வேண்டியிருக்கிறது என்கிறார்.
இயற்கையைப் பாடாத, இயற்கையை நினைக்காத கவிஞரே இருப்பதில்லை என்னும்படி கவிஞர்களுக்கேயுள்ள தனித்துவமாய் இன்றைய நிலைப்பாட்டில், இயற்கையின் மாற்றம் குறித்தும், மக்களால் இயற்கைக்கு நிகழும் கொடுமையையும் கண்ணீர்த்துளியாய் வடித்துக் காட்டுகிறார் தம் கவிதைகளில் அப்படியான ஒரு கவிதை,
“பூமித்தாய் அழுகிறாள்
பாழ்படுத்தி விட்டீர்களே
நான் மனம் மகிழ
உடுத்திக் கொண்ட
பச்சை ஆடையை” (கூந்தல் வண்டி, ப- 88)மேலும் ஆற்றில் நீர் என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது, மழை நீரையும் சேமிப்பதில்லை, என்பதாக ”ஆறுகள்” அழிவுறுவது பற்றியும் தம் கவிதைகளில் சுட்டிக்காட்டுகிறார்.
“இப்போதும்
ஓடிக்கொண்டிருக்கிறது
விவசாயிகளை விட்டு விலகி
அதிவிரைவாய்” (கூந்தல் வண்டி, ப-65)இப்படிப் பல கவிதைகள் சு. செல்வகுமாரனது படைப்புகள் சமுதாய நிகழ்வுகளோடு கட்டிப் பிணைந்தவொன்று. இது காலத்தால் அழியாத செல்வமாகும். வட்டாரச் சொற்கள் நிறைந்த இத்தொகுப்பில் சில கவிதைகள் மட்டும் வட்டார மொழி அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியுமென்பது தெளிவாகிறது.
பனைமரம், பெட்டிகள் பற்றிய கவிதைகளில் ஒரு பேராய்வே நடத்திடுமளவுக்கு தகவல்கள் உள்ளமை சிறப்புக்குரியதாகிறது. ஆக குமரியின் வட்டார, சமூகப் பண்பாட்டை பிரதிபலிக்கும் சு. செல்வகுமாரனின் கூந்தல்வண்டி இனவரைவியல் மற்றும் பின்காலனிய நோக்கிலும் வாசிப்புக்கு உட்படுத்துமளவிற்கான முக்கியமான ஒரு தொகுப்பாகிறது.
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (285)
அன்பினியவர்களே!
அன்பினுமினிய வணக்கங்கள். காலத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் எமக்கு வாரங்கள் அவசரமாய்ப் புரண்டு கொண்டு ஓடுவது தெரிவதில்லை/ இதோ மற்றொரு மடலில் உங்களுடன் உறவாட விழைந்து இம்மடல் வரைகின்றேன். இந்த ஒரு வாரத்தில் இங்கிலாந்தில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. சில அனைவராலும் வரவேற்கப்பட்டவை, மற்றும் சில அனைவராலும் வெறுக்கப்பட்டவை வேறு சிலவோ கலவையான உணர்வுகளைக் கொண்டவை.
முதலாவதாக இங்கிலாந்தின் பிரதமர் திரேசா மே அவர்களின் நிலையை எடுத்துப் பார்த்தோமானால் அவரது எதிர்காலம் சிக்கல் மிக்க கேள்வியாகவே இருக்கிறது. “ப்ரெக்ஸிட்” எனும் ஒரு பெரிய சுமையை எப்போது பிரதமனாரோ அப்போதே தனது கழுத்தினூடு மாட்டிக் கொண்டு விட்டார். நவம்பர் மாதம் இங்கிலாந்தின் எதிர்கால ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான வர்த்தக உறவுகளை நிர்ணயிக்க கால எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதகான நாள் 2019 மார்ச் மாதம் 29ஆம் திகதி என்பது உலகறிந்த உண்மை. இவ்வெளியேற்றத்தின் பின்னால் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவுகளுக்கான சட்ட மூல நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக கூட்டப்பட்ட விசேட கூட்டத்தில் இதற்கான உடன்படிக்கை எட்டப்படவில்லை. சர்ச்சை மிகுந்த விடயமாக வட அயர்லாந்து விளங்குகிறது. அதற்கிடையில் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பல குழப்பங்கள். அமைச்சர்களில் சிலர் தெரேசா மே அவர்களின் நிலைப்பாட்டையும் ஒன்றியத்துடனான வர்த்தக உறவு பற்றிய அவரது கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சியோ இதனை உபயோகித்து எப்போது அரசைக் கவிழ்க்கலாம் என்று காத்திருக்கிறார்கள். பாராளுமன்றத்துக்கு வெளியேயும் நாடு பிளவுபட்டுக் கிடக்கிறது. பிரதமர் தெரேசா மே ஒரு நூலிழையில் ஊசலாடுகிறார்.
இந்நிலையில்தான் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரினால் இவ்வருடத்துக்குரிய பட்ஜெட் தாக்கலாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் அதாவது சுமார் எட்டு வருடமாக முன்னாள் பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் அமைச்சரவையினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொதுச்செலவீனக் கட்டுப்பாடு இப்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவே நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிடிருந்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த கன்சர்வேடிவ் கட்சியின் மகாநாட்டில் பிரதமர் தனது உரையின்போது இக்கொள்கை முடிவுக்குக் கொண்டு வரப்படும், இதுவரை மக்கள் அனுபவித்த பொருளாதாரச் சிக்கல்கள் முடிவடையும் என்று அறிவித்திருந்தார். இவ்வறிவித்தலை ஊர்ஜிதம் செய்யும் வண்ணமே நிதியமைச்சரின் உரையும் அமைந்தது. ஆனால் இது எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. புதிதாக ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லையே இதுவரை காலமும் சிக்கனம் எனும் பெயரில் ஒவ்வொரு துறைக்கும் கிடைக்க வேண்டிய நிதியைக் குறைத்தவர்கள் அதை இப்போது திரும்பக் கொடுக்கிறார்கள். இதிலென்ன பெரிய பிரதாபம் என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள். முக்கியமான துறைகளான காவற்துறை, கல்வித்துறை போன்றவற்றினை விடுத்து போக்குவரத்துப் பாதைகளின் குழிகளைப் பழுதுபார்ப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது நகைப்புக்கிடமானது என்கிறார்கள் வேறு சிலர். பிரபல வர்த்தக நிலையங்கள், மற்றும் மத்தியதரக் குடும்பங்களின் வரிக்குறைப்பு என்பன வரவேற்கப்படாமலில்லை. இதன் தாக்கம் மொத்தத்தில் எப்படி இருக்கும் என்பதை ப்ரெக்ஸிட் எனும் அந்தப் பூதாகரமான நிகழ்வின் பின்னாலேயே முற்றாக உணர்ந்து கொள்ள முடியும்.
மீண்டும் துப்பாக்கி வேட்டுக்கள் அமெரிக்காவை அதிர வைத்திருக்கின்றன. அநியாமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த யூதர்களில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமேரிக்காவை மட்டுமல்ல அகில உலகையுமே கலக்கி விட்டிருக்கிறது. இந்நிகழ்வினைப் பலவிதமான கோணங்களில் பல முனைகளில் இருந்து பலர் அலசியிருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு இனைத்துவேஷப் படுகொலையே! இக்கொலையைச் செய்தவனின் கொடூரச் செயலின் பின்னணியில் எது செயல் பட்டிருக்கிறது எனும் கேள்வி பல முனைகளில் இருந்துஎழுகிறது. இன்றைய மேற்குலக அரசியல் ஒழுங்கீன, நிற, மத வெறிப் பின்னணியைக் கொண்டதாக இருக்கிறதோ எனும் கேள்வி கூட எழுக்கிறது. பல முன்னணி அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற உரைகள் கூட இதற்கான காரணமாக இருக்கலாமோ என்றுகூடச் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். எது எப்படியிருப்பினும் எத்தனையோ இன்னல்களைக் கடந்து இன்று தமக்காக ஒரு வாழ்வைக் கட்டியெழுப்பியிருக்கும் யூத இன மக்களுக்கு இது ஒரு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதே உண்மை
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்,
சக்தி சக்திதாசன் -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
டாக்டர் ஸ்ரீதர்….!
செல்லப் பிள்ளை ஸ்ரீதர்
——————————-மருந்துக்கு அடங்காதது மந்திரத்துக்கு அடங்கும் என்பார்கள்….டாக்டர்.ஸ்ரீதரிடம் ஆஸ்த்மா மருந்தும் இருக்கு, கற்பகாம்பாள் ஆலய மந்திரமும் இருக்கு….நோயாளியின் ஆஸ்த்மா சாந்தி அடையும் டாக்டர் ஸ்ரீதரால்….அதேசமயம் நோயாளியின் ஆத்மா சாந்தியடையாமல் காப்பாற்றுவாள் கற்பகாம்பாள் தனது செல்லப் பிள்ளை ஸ்ரீதருக்காக….செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்….ஸ்ரீதருக்கோ ” தெய்வம் தொழலே தொழில்”….” என்னால முடிஞ்சதை செஞ்சுட்டேன் ….இனி ஆண்டவன் விட்ட வழி ” என்பார்கள் மற்ற வைத்தியர்கள்….ஸ்ரீதருக்கோ ஈஸ்வரன் கபாலி கம்பவுண்டர்….ஈஸ்வரி கற்பகாம்பாள் நர்ஸ்….அப்புறம் என்ன சார்…. ஸ்ரீதரிடம் செல்பவர்களுக்கு நோயோடு பிறவிப் பிணியும் தீர்ந்து விடும்….BOUNCE ஆனாலும் பரவாயில்லை என்று செக்கில் கூட கற்பக-தாஸன் என்றுதான் கையெழுத்திடுவார்…. எங்கள் குழுவைச் சேர்ந்த நடிகைக்கு ”வீஸிங்” பிரச்சினை….ஸ்ரீதரிடம் போகச் சொன்னேன்….அவளுக்கு ”ஆஸ்த்மாவும்” போச்சு….ஆக்டிங்கும் இம்ப்ரூவ் ஆகிவிட்டது….என் குழுவில் சேர வருபவர்களுக்கு நான் இப்போதெல்லாம் சொல்வது ”எப்படியாவது ஆஸ்த்மாவை வரவழைத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரிடம் செல்லுங்கள்….அவர் கொடுக்கும் மருந்தால் உங்கள் நடிப்பு மெருகேறும் ”….மற்ற டாக்டர்களுக்கு ”கைராசி” என்றால் ஸ்ரீதருக்கு கைகொடுப்பாள் கற்பகாம்பாள் ஆசி….
”எமக்குத் தொழில் எழுத்து” என்றார் மகாகவி பாரதியார்….ப்ரிஸ்க்ரிப்ஷனில் கவிதை எழுதும் ஸ்ரீதருக்கு வைத்தியம் தொண்டு….கவிதை தொழில்….”மருந்து சாப்பிடும் போது குரங்கை நெனைக்காதே” என்பார்கள்….வித்தியாசமான வைத்தியர் ஸ்ரீதரோ மருந்து தரும்போதே ”வானுயர அவன் வாழ்த்தும் வானர தெய்வமவன்” என்று இலக்குவணைக் காப்பாற்றிய அந்த சமய சஞ்சீவியை நினைப்பூட்டுவார்….வாசி வாசியென வாசிக்க வைக்கும் இந்த மயிலாப்பூர் வாசியின் கவிதைகள்….வாசி என்றால் மூச்சுக் காற்று என்ற ஒரு அர்த்தம் தமிழில் உண்டு….நமது மூச்சுக் காற்று தென்றலாய் வீச, இவர் மூச்சு விடாமல் வைத்தியம் பார்ப்பார்….
SRIDHAR IS A BREATH-TAKING POET and BREATH-GIVING DOCTOR….
நகமும் சதையும் என்பது பழைய பாணி….நாசியும் வாசியும் போல இவரும் இவரது துணைவியாரும் இணைந்திருக்கவும்….எல்லோருக்கும் நீண்ட ஆயுளைத் தரும் இவருக்கு நீண்ட ஆயுளை தரவும் இவர் வணங்கும் மயிலை மாதா கற்பகாம்பாளை, இந்த மணி விழா நன்நாளில் வேண்டுகிறேன்….
அன்பன் க்ரேஸி மோகன்….
——————————————————————————————————————————————————————————————————————————-
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

181031 Vishwaroopa -10×14″ icam (brushpen-microtip pen) Arches 300 gsm lr ’’பசுவரும் முன்னே, விஸுவரூபர் பின்னே,
கொசுவாகக் காண்டீபர் கெஞ்ச ,-’’அசுவரதம்
ஏறு முதலில், அருச்சுனாபின் கீதையின்
சாறுண்டு கொல்நூறு பேரு’’…. கிரேசி மோகன்….!பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
கண்ணனை நெஞ்சே கருது….! -
அள்ளூர் நன்முல்லையார் பாடல்களில் மெய்ப்பாடு
முனைவர் சு. இராமர்
முதுமுனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 21
————————————
மெய் என்பதை உண்மை எனவும், உடல் எனவும் குறிப்பது வழக்கமாகும். மெய்யினால் உணர்த்தப்படுவது மெய்ப்பாடு எனக் கொள்வர். மெய்யில் தோன்றுவது எனவும் மெய்ப்பாடு குறிக்கப்படுகிறது. மெய்யினால் உணர்த்தப்படும் செய்திகள், கருத்துக்கள் சைகை மொழி எனப்படுவதுண்டு. மொழி தோன்றும் முன்னால் மனிதர்கள் தங்கள் உணர்வுகளை, கருத்துக்களை உடல் உறுப்புகளின் வழியே வெளிப்படுத்தினர். ஓசைகள், ஒலிகள் ஆகியவை திரட்சி பெற்று மொழியாவது போல் சைகை, முகத்து வெளிப்படும் உணர்வுகள் அனைத்தும் மெய்ப்பாடுகளாக திரட்சி கொண்டன. அவை மனிதர்களின் கலைகளில் வெளிப்படுவனவாகவும் அமைந்தன. அவ்வாறு மெய்ப்பாடுகள் குறித்து கூறும் கலையாகப் பரதநாட்டியம் காணப்படுகிறது. நாட்டிய சாஸ்திரம் பற்றிய நூலை இயற்றியவரான பரத முனிவர் மெய்யுணர்வுகளை ரசம் எனக் கொண்டார். ரசங்கள் எட்டு என்று குறிப்பிட்டாலும் நாடகவியல் நூல் எழுதிய சூரிய நாராயண சாஸ்திரி அவற்றை ஒன்பது எனக் கண்டார். ஒன்பான் சுவை எனக் கூறுவது வழக்காகும். ரசம் என்பதும், பாவம் என்பதும் தமிழில் சுவை, குறிப்பு என்று கூறப்படுகின்றன.
மனித உணர்வுகள் மெய் வழி வெளிப்படுவது பாவம் என்று வட நூலார் குறிப்பிட அதுவே தமிழில் மெய்ப்பாடு என்றும் குறிப்பு என்றும் கூறப்படுகின்றன. மெய்ப்பாட்டினை விளக்கிக் கூறும் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை எளிதில் விளங்குமாறு “சுவை – காரணம், மெய்ப்பாடு – காரியம். இலக்கியத்தில் சொற்கள் சுவையையும் வருணனைகள் மெய்ப்பாட்டையும் விளக்குகின்றன” (ப.வேல்முருகன்.2012:3) என்று குறிப்பிடுகிறார் ப.வேல்முருகன். அடிப்படையில் சொற்களினால்தான் மொழியும் முழுமையடைகிறது. சொற்களின் வெளிப்பாடு உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில் சுவை கொண்டதாக மாறுகிறது. இலக்கியத்தில் சொற்களைப் பயன்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு படைப்பாளியும் மாறுபடுவது சுவையூட்டும் சொற்களைப் பயன்படுத்தும் திறனால்தான் எனலாம். சுவை காரணப் பொருளாக இலக்கியத்தில் வெளிப்படுகிறது. குறிப்பு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
“மெய்ப்பாடாவது உலகத்தாருள்ளு நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதொருவழியால் வெளிப்படுதல் என்றும் மெய்ப்பாடு பொருட்பாடு என்றுங் கூறுவர் பேராசிரியர். பொருள் – உள்ள நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு). பாடு – வெளிப்படுதல். படுதல் – தோன்றுதல் – வெளிப்படுதல். உலகத்தாருள்ளு நிகழ்ச்சி என்றது, உலகத்திலுள்ளனொருவன் ஒரு பொருள் தன் பொறியால் உணர்ந்தவிடத்து அப்பொருள் காரணமாக அவனுள்ளத்து நிகழும் நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு) என்றபடி. புலப்படுவதொரு வழி என்றது சத்துவத்தினை. ஒருவனிடத்தே நிகழ்வது உடம்பின் வேறுபாட்டால் தோன்றுமென்பது” (தொல்காப்பியம், பேராசிரியம், ப.1) என்று மெய்ப்பாட்டியலுக்கு தொல்காப்பியத்தில் விளக்கம் கூறப்படுகிறது. ஒருவன் உலகத்து நிகழ்ச்சி அல்லது பொருளைக் காணுமிடத்து அவனது உள்ளத்துத் தோன்றும் உணர்ச்சியே மெய்ப்பாடு. அது அவனது உடலின் மூலமே வெளிப்படும். உள்ளத்துத் தோன்றும் உணர்வினை முகம் வெளிப்படுத்தும் என்று கூறுவதைத்தான் அடுத்தது காட்டும் பளிங்கு என்று முகத்தினை விளிப்பர். அது போலவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற கூற்றும் இதனையே கூறுவதாக அமைகிறது. படைப்பாளியின் மனமானது உலகத்து நிகழ்ச்சிகளை தன் மனத்தில் இறுத்தி அகப்பாரிமாணமாக வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டது.
படைப்பாளியின் உள்ளத்து உணர்வுகள் புறவெளியிலிருந்து பெறப்படுகின்ற ஒன்றாகவே இருக்கின்றன. புற நிகழ்வுகள் மனிதனுக்குள் ஏற்படுத்தும் அகப்பரிமாணமே படைப்பாக வெளிப்படுகிறது. படைப்பாளியின் மனம் புறச் செயல்பாடுகளிலிருந்தே படைப்புக்கான ஊக்கத்தைப் பெறுகின்றது. நா.வானமாமலை இலக்கியத்தில் உள்ளடக்கம் தோன்றும் வகையினைக் கூறும் போது “புறவய யதார்த்தத்தின் கலைப்படைப்பே இலக்கியத்தின் உள்ளடக்கம், இவ்வரையறையில் படைப்பாளியின் உள்ளத்திற்கு வெளியே உள்ள புறவய யதார்த்திற்கும் அவனுடைய உள்ளத்தில் அது பிரதிபலிக்கும் அகவயக் கருத்துகளுக்கும் (படிமம்) உள்ள உறவை நாம் சிந்திக்கிறோம். வேறு சொற்களில் கூறுவதானால் உண்மைக்கும் இலக்கியப் படைப்பிற்கும் உள்ள உறவை இது குறிப்பிடும்” (நா.வானமாமலை. இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும், ப.11) என்ற கருத்தானது புறவய யதார்த்தம் என்னும் உண்மையைப் படம் பிடித்துக் கொள்ளும் மனதானது அவ்வுண்மையை கலைப்படைப்பாக மாற்றும் போது அகவயப் பரிமாணம் வெளிப்படுகிறது. கலைப்படைப்பில் உள்ளத்து உணர்வுகள் புறவயச் சூழலை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுகின்றன. அதில் தோன்றும் மெய்ப்பாடுகள் அல்லது உணர்ச்சிக் குறிப்புகள் இலக்கியத்திற்குச் சுவையூட்டும் வகையினவாக அமைகின்றன. சமூக சூழல்களிலிருந்தும் படைப்பாளியின் மனம் கட்டமைக்கப்படுகிறது. எனவே கலைப்படைப்பில் உருவாகும் மெய்ப்பாடுகள் அப்படைப்பின் மூலமாக சமுதாயத்தின் இயங்கு திசையை காட்டுகின்றன.
தொல்காப்பியமானது ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்று நிலையினை நான்கு காரணிகளைக் கொண்டு குறிப்பிடுகிறது. நகை என்றால், எள்ளல், இளமை, பேதமை, மடம் என்னும் நிலைகளில் தோன்றும் என்கிறது. எள்ளுதல் என்பது இகழ்தல் ஆகும். இகழ்தல் மூலம் நகைச்சுவை தோன்றும் அது போல சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதில் நகை தோன்றும், அறிவற்ற செயல்கள், அறிந்தும் அறியாத நிலையில் குறிப்பிடும் செய்திகள் ஆகியன நகையைத் தோற்றுவிக்கும் என்று கூறுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் நான்கு காரணங்களைக் கூறுகிறது. மெய்ப்பாடுகள் உள்ளத்துணர்வினை வெளிக்காட்டும் எனப்படுவதால் சமூகச் சூழ்நிலைகளில் தோன்றும் நிகழ்வுகளும் காரணமாக அமைகின்றன.
படைப்பாளிகள் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டுவதற்காகவும் இலக்கியம் படைக்கின்றனர். எனவே அவற்றில் மெய்ப்பாடுகள் அமைந்திருப்பது இயல்பாகும். சங்க காலப் புலவர்களுள் அள்ளூர் என்னும் ஊரைச் சார்ந்தவரான அள்ளூர் நன்முல்லையாரின் பாடல்கள் பெண்ணின் அகத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. அவற்றில் வெளிப்படும் மெய்ப்பாடுகள் தலைவியின், தலைவனின் உள்ளத்துணர்வுகளை காட்சிப்படுத்துகின்றன. அள்ளூர் நன்முல்லையார் மொத்தம் பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். குறுந்தொகையில் மட்டும் 9 பாடல்கள் பாடியுள்ளார். புறப்பாடல் ஒன்றும், அகநானூற்றில் ஒன்றும் எனப் அகப்பாடல் பத்தும், புறப்பாடல் ஒன்றும் எனப் பாடியுள்ளார். குறுந்தொகைப்பாடல்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் காம வெளிப்பாட்டையும் ஏக்கத்தையும், அச்சத்தையும், தலைவன் மீதான கோபத்தையும் கொண்டுள்ளன. அக்காலச் சமூக நிலையில் பெண்கள் மீதான உடைமைச் சமூகக் கட்டுப்பாடுகள் அவர்களின் உள்ளத்துணர்வுகளை குமுறலுடன் வெளிப்படச்செய்திருக்கிறது என்பதை இவரது பாடல்கள் காட்டுகின்றன. பிரிவுத் துயரை பெரிதும் வெளிப்படுத்துவனவாக குறுந்தொகைப் பாடல்கள் காணப்படுகின்றன.
“காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்
பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்
மாஎன மடலொடு தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிவுதலை வரினே” (குறுந்.32)
என்னும் பாடல் காமத்தினை வெளிப்படுத்தும் தலைவனது கூற்றாக அமைகிறது. தலைவியைச் சேர முடியாத தலைவன் காமத்தினை பொய்யாக்கும் காலப்பொழுதுகள் பற்றி தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவதாக அமைகிறது. உள்ளத் துணர்வுகளில் மகிழ்ச்சியை குறிப்பதாக காமம் காணப்படுகிறது. இக்காமச் சுவையை பெறுவதற்கு தலைவன் தலைவியின் மீதான காதலை வெளிப்படுத்த மடலேறினால் அது தலைவிக்குப் பழியையும் தருமென்று கருதுகின்ற தலைவனின் உள்ளமானது ஏக்கத்தையும், பரிதவிப்பையும், ஏமாற்றத்தையும், பழி நேருமோ என்னும் அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றது. பொய்யே காமம் என்று கூறுவதன் அறியாமையையும் தலைவனது கூற்று வெளிப்படுத்துகிறது. அறியாமை என்பது சிறுபிள்ளைத் தனத்தின் வெளிப்பாடாக நகையை வெளிப்படுத்துவதாகும். இங்கு மடலேறும் செயல் பேதமைத் தன்மையை வெளிப்படுத்தும் எனவே இதுவும் நகைக்கான மெய்ப்பாடு எனலாம். பழி நேருமோ என்னும் அச்சம் கொள்ளும் தலைவனின் உள்ளத்து உணர்வானது சமூக நிலையில் பெண்ணின் மீதான கட்டுப்பாடுகளையும் நிலவுடைமைச் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் சமூக நிலையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. தலைவன் பற்றிய தோழியின் கூற்றினை விளையாட்டுக்குக் கூறியதாகத் தலைவி எண்ணிக் கொள்வதை “நகை என உணரேன் ஆயின்” (குறுந்.96) எனக் கூறுகிறாள். அறியாப்பிள்ளை என்பதும் நகையை வரவழைக்கக் கூடிய மெய்ப்பாட்டிற்கான காரணியாகும். அச்சத்தை வெளிப்படுத்தும் தலைவியின் மனமானது விடியலை எண்ணி வாடுகிறது.
“குக்கூ என்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்று என்தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (குறுந்.157)
என்னும் இப்பாடல் தலைவியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. தலைவனைப் பிரியும் வகையில் கோழி கூவும் காலை வந்தது என்று அஞ்சுகிறாள். கவலை கொள்ளும் தலைவியின் மனமானது தலைவனைப் பிரிவதை எண்ணி அஞ்சியதாக பாடல் குறிப்பிடுகிறது. இப்பாடலில் அச்சம் வெளிப்படுகிறது. இப்பாடலும் அக்காலத்துப் பெண்களின் நிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஊரார் அறிந்து விடக் கூடும் என்ற நிலையில் தலைவன் யாரும் அறியாமல் சென்று விட வேண்டும் என்ற அச்சமும் இதில் வெளிப்படுகிறது எனலாம். வருத்தம் அல்லது அழுகை என்னும் மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒரு பாடல்,
“நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புதுமலர் முட்பயந்தா அங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே” (குறுந்.202)
என்னும் பாடலில் முல்லை நிலத்து சிற்றிலைகளைக் கொண்ட நெருஞ்சி முட்களை மிதித்து விட்டால் அது துன்பத்தைத் தரும் அது போல தலைவனும் தனக்குத் துன்பம் தருகின்றான் என்று வருந்துகிறாள். இப்பாடலானது தலைவியின் அழுகை என்னும் மெய்ப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. புலிகள் பாய்ந்து கொள்ளும் புலிகள் உள்ள காட்டினைக் குறித்து தலைவனது செயலை ஒப்பிடுகின்ற தலைவியின் கூற்றில் அச்சம் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகிறது “கோட்புலி வழங்கும் சோலை, எனைத்துஎன்று எண்ணுகோ முயக்கிடை மலைவே” (குறுந்.237) என்ற பாடல் அச்சத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது. தலைவியைத் தலைவனுடன் இணைந்து வாழ்கவென்று வாழ்த்தும் பெருமித உணர்வை,
“வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்
கூறேம். வாழியர் எந்தை செறுநர்
களிறிடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெரும! நிற் தகைக்குநர் யாரோ” (அகம்.46)
என்ற பாடல் கூறுகிறது. வாயில் மறுத்துத் தோழி தலைமகனுக்குச் சொன்னது. தலைவனின் செயல்களை சினந்து கூறும் வகையில் அமையால் அவன் நாணும்படி அவனது செயலைப் பாராட்டிப் பெருமிதம் கொள்வதாக பாடல் அமைகிறது. நான் ஊடுவதற்கு நீ எனக்கு என்ன உறவு இவ்வூரில் உள்ள நீண்ட கூந்தலைக் கொண்ட பெண்ணை மணந்துள்ளதாக அறிந்து கொண்டேன். அவளுடன் நீ வாழ்க என்று வாழ்த்துவது போல அவனை செயலை எள்ளுகிறாள். இது தலைவனுக்கு நாணத்தை அளிப்பதாக அமையும் என்று அவ்வாறு கூறுகிறாள். இதில் தலைவிக்காகத் தோழி பேசுகிறாள். வாயில் மறுத்தல் மூலம் தன் சினத்தைக் காட்டுகிறாள். தலைவனின் செயலை எள்ளுவதன் மூலம் நகைப்புக்குரியதாக தலைவனின் செயலை மாற்றுகிறாள். தலைவன் பிறிதொரு பெண்ணுடன் வாழ்வதால் அவனை வாழ்த்துவது போல வாழ்த்துகிறாள். அதில் அவள் பெருமித உணர்வை வெளிப்படுத்துகிறாள். இவ்வாறு பல்சுவையும் விளங்க பாடல் அமைந்துள்ளது.
“உள்ளார்கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம்கரி கள்ளி யங்காடு இறந்தோரே” (குறுந்.67)
என்னும் பாடல் தலைவியின் கூற்றாக அமைகிறது. தோழியிடம் கூறுகிறாள். தலைவனின் பிரிவினை எண்ணி வருந்தும் தலைவி பறவையின் அலகில் உள்ள வேப்பம்பழம் அணிகலன் செய்பவரின் கையில் பிடித்திருக்கும் பொற்காசு போல காணப்படுகிறது என்கிறாள். தலைவன் தன்னை மணந்து கொள்ளும் ஆவலை இதில் வெளிப்படுத்துகிறாள். இதில் ஏக்கமும், தலைவனின் பிரிவால் வருத்தமும் கொண்டிருக்கும் சுவைகள் வெளிப்படுகின்றன. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், உவகை, வெகுளி, பெருமிதம் என்பன போன்ற சுவைகள் ஒவ்வொரு மனிதரிடத்தும் வெளிப்படும். அவற்றை படைப்புகளில் வெளிப்படுத்தும் போது சூழல் சார்ந்து ஒவ்வொரு சுவையும் வெளிப்படும். உணர்வுகளை தூண்டும் வகையிலான மெய்ப்பாடுகளை சங்கப் பாடல்கள் பரிதும் கொண்டிருக்கின்றன. தலைவன், தலைவி இருவரிடையே நிகழும் காதல் நிகழ்வுகளில் இம்மெய்ப்பாடுகள் வெளிப்படுவதைக் காணலாம். சங்க மாந்தர்களின் உள்ளத்துணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுவனவாகவே இவை அமைகின்றன. அன்றைய சூழலில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் மெய்ப்பாட்டு உணர்தலில் வெளிப்படுகின்றன. ஆணுக்கு இருந்த சுதந்திரமான வாழ்வும். பெண்ணுக்கு இருந்த கட்டுப்பாடான வாழ்வும் உணர்வுகளையும் கட்டமைத்தன என்பதைக் காணலாம். அள்ளூர் நன்முல்லையார் பாடல்களில் பெண்ணின் தகவமைதல் சார்ந்த பல்வேறு உணர்வுகள் சுவைகளாக வெளிப்படுகின்றன. பெருமித உணர்வை தலைவனை இகழ்வதற்கு வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. நகை, அழுகை அல்லது வருத்தம், தலைவனின் பேதமை போன்ற சுவைகள் பாடல்களில் வெளிப்படுகின்றன.
துணைநூல்கள்
- தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், கணேசையர் பதிப்பு,
- ந.முருகேசபாண்டியன், அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்,
- தாயம்மாள் அறவாணன், மகடூஉ முன்னிலை,
- ப.வேல்முருகன், தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும் சங்கச் செவ்வியல் குறுந்தொகையும் புள்ளியியல் ஆய்வு
-
சேக்கிழார் பா நயம் – 9
புலவர் இராமமூர்த்தி
திருவாரூரில் வாழ்ந்த வேளாண் குடியினரைப் பற்றிச் சேக்கிழார் இப்பாடலில் கூறுகிறார்! அவர்கள்தம் நிலத்தில் விளைந்த பயிர்களில் ஆறில் ஒரு பங்கினை உடனே அரசுக்குச் செலுத்திவிடுவர். அதன் பின்னர் எஞ்சிய விளை பொருளைக் கொண்டு ஐவகைக் கடமைகளை செய்தனர். ஐவகைக் கடமைகள் யாவை? அவை முன்னரே திருவள்ளுவரால் கூறப்பெற்றன. அவை,
‘’தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் கடன்!’’
என்பனவாகும். இவ்வைந்தையும் பேணுதலே அறம் ஆகும். இவற்றைப் ‘’பரவரும் கடவுள் போற்றிக், குறவரும், விருந்தும் , பண்பின் விரவிய கிளையும் ‘’ எனப் பாடிச் சேக்கிழார் விளக்குகிறார்.இவற்றால் குடிகளே ஓங்குவர் என்கிறார்.
‘’வரப்புயர நெல்லுயரும், நெல்லுயரப் பயிர் உயரும், பயிர் உயரக் குடியுயரும் , குடியுயரக் கோன் உயர்வான் ‘’ என்பது ஒளவை வாக்கு! பயிர் உயர்ந்தால் கோனுக்கு வரி செலுத்தலாம், தென்புலத்தாராகிய முன்னோர் வழிபாடு செய்யலாம், தெய்வ வழிபாடும் செய்யலாம் ,புதியவராகிய விருந்தினரை உபசரிக்கலாம், தம் சுற்றத்தாரையும் பேணலாம். இவ்வகையில் முழுமையான அறத்தைச் செய்தலே இல்லறம் எனப்படும். இவற்றால் ஒருவனுடைய குடிமக்கள் அனைவருமே புகழ் பெறுவர். இதனைச் சேக்கிழார் சுவாமிகள்,
‘’ அரசுகொள் கடன்கள் ஆற்றி , மிகுதி கொண்டு அறங்கள் பேணிப்
பரவரும் கடவுள் போற்றிக் குரவரும் விருந்தும், பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி விரவிய குடிக ளோங்கி
வரைபுரை மாடநீடி மலர்ந்துள பதிக ளெங்கும் ‘’
என்று பாடுகிறார். இப்பாடலில் வேளாண் குடியினர் தம் வயலில் விளைந்த நெல்லில் ஆறில் ஒரு பகுதியை , அறுத்தவுடனே , அப்போதே அரசாங்கத்துக்குச் செலுத்தி விடுகின்றனர். இன்றைய வரி விதிப்பை நோக்க , ஆறில் ஒருபங்கு வருமானம் ஏறத்தாழ பதினாறு விழுக்காட்டுக்கு மேல் அமைகிறது. அவ்வாறு அதிக வரி பெற்ற அரசன், நிலத்துக்குத் தேவையான நீர், உரம், மற்றும் வேளாண் இடுபொருள்களை வழங்கி விடுவான். மேலும் எரிவாரியத்தின் மூலம் நீர்ப்பாசனத்துக்கு உதவுவான். பஞ்சவார வாரியத்தின் மூலம், எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளால் உருவாகும் பஞ்சம் என்கின்ற வற்கடம் நேர்ந்தால் வேளாண் மக்களுக்கு வேண்டிய இடுபொருள்களையும், நிதி உதவிகளையும் அரசனே வழங்கி விடுவான் ஆதலால் விளைச்சலைப் பெற்றபோதே, ஆறில் ஒருபங்கு வரியை மக்கள் மகிழ்ச்சியுடன் செலுத்தி விடுவர். அதன் பின்னரே மற்ற செலவுகளை செய்வர் . இதனைச் சேக்கிழார், ‘’அரசுகொள் கடன்கள் ஆற்றி, மிகுதி கொண்டு அறங்கள்பேணி ‘’ என்கிறார். அதாவது அடுத்த ஆறிலொரு பங்கு வருவாயை , வழிபாட்டுக்கு உரிய திருக்கோயில்களுக்கு நிவந்தம் வழங்கி, மேலும் திருவிழா, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றுக்காகப் பயன் படுத்திக் குடும்ப நலம் பேணுவர். இதனைச் சேக்கிழார், ‘’ பரவரும் கடவுள் போற்றி ‘’ என்று குறிக்கிறார். அடுத்த ஆறிலொரு பங்கை , வழிப்போக்கராகவும், கூத்தாடிகளாகவும் , இசை வாணர்களாகவும் தம் ஊர் நோக்கி வந்த புதியவர்களாகிய விருந்தினரைப் பேணப் பயன்படுத்துவர். அதற்காக சத்திரம், சாவடி ஆகியவற்றை அமைத்து ஊர்நலம் பேணுவர். மேலும் அடுத்த ஆறிலொரு பங்கினை முன்னோர் வழிபாட்டுக்காகப் பயன் படுத்திப் பரம்பரை நலத்தை உறுதி செய்து கொள்வர். இனி எஞ்சிய ஆறிலொரு பங்கினை உற்றார், உறவினர் ஆகியோருக்கு ஆற்ற வேண்டிய இல்லறக் கடமைகளை நிறைவேற்றி இம்மை வாழ்வின் இன்பங்களை உறுதி செய்து கொள்வர். இவ்வகைகளில் செலவு செய்யும்போதே எஞ்சிய பொருள்களின் மூலம் தம் வாழ்விடமாகிய வீடுகளைக் கட்டிக்கொண்டும், மாடு, முதலான வீட்டு விலங்குகளை வளர்த்தும் இனிய வாழ்க்கையை மேற்கொள்வர். இதனைக் கவிஞர், ‘’குரவரும், விருந்தும் பண்பின் விரவிய கிளையும் தாங்கி ‘’ என்று பாடுகிறார். ‘’ விரவிய குடிகள் ஓங்கி ‘’ என்ற தொடரால் குடிமக்களின் ஒற்றுமை , பழக்க வழக்கங்கள் இவற்றால் ஊர்மக்களின் இணைந்த வாழ்க்கை வளத்தைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார்.ஆதலால் தெருக்களும், ஊர்மன்றங் களும், சாலைகளும், சாத்திரங்களும் , அமைந்து விளங்கின. இதனைப் புலவர் பெருமான், ‘’வரை புரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்!’’ என்று பாடுகிறார்.
ஆகவே ஊரில் வாழும் ஒவ்வொருவரும் வேளாண்மையால், பக்திநெறியால், குடும்பவளத்தினால், துணைத்தொழில்களால், விருந்தோம்பலால் ஒருங்கி ணைந்து அரசனைப் போற்றி அன்புடன் வாழ்ந்தனர், என்பதை இப்பாடலால் சேக்கிழார் கூறுகிறார். ‘’ மேழிச்செல்வம் கோழை படாது!’’ ‘’உழுதுண்டு வாழவாரே வாழ்வர் ‘’ என்ற அனுபவ மொழிகளின் ஆழமான நுட்பத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்!
=========================================================
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
தீபாவளி தோற்றம்….!
———————————————————-ஏனத்தால் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த
மானத்தை வாங்கும் மகனபி -மானத்தால்
தந்தை மகாவிஷ்ணு தாள்தொட்டு பூதேவி
விந்தையாய் வேண்ட,வரம் விஷ்ணு….!நாரண அம்பை நரகனுக்கு தந்தபின்
வேறென்ன வேண்டுமென்ற விஷ்ணுவிடம் -பூரணத்வம்
தாவென்ற பிள்ளைக்கு ’’தாயன்றி யாராலும்
சாவில்லை என்றார் சிரித்து’’….!தீபாவளி EVE பாமா துணை
———————————————–
நமக்குள் இருக்கும் நரகா சுரனார்
இமைக்கும் பொழுதில் இறக்க -சமர்த்தன்
யதுகுலக் கண்ணன் இணைசகி பாமா(பூதேவி)
உதவிக்கு உண்டு உனக்கு….!’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
நெம்பிய வராகரே
ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’…கிரேசி மோகன்….! -
விமர்சனமா விருட்சமா நீ
செல்வி. அ. இராஜபுஷ்பம் நதியின் நடுவில்
நீந்தினாலும் குற்றம்
மூழ்கினாலும் குற்றம்
என விமர்சிக்கும்
உலகிற்கு பயந்து
மூழ்கிடாதே நீந்திடு விமர்சனங்களால் வீழ்வதைவிட
வீழ்வாய் என்றவர்களின்முன்
நீ யாரென்று
உலகிற்கு காட்டிடு
விருட்சமாய் உதித்திடு
நிமிர்ந்தே வென்றிடு……. -
மனம் ஒடிந்து போச்சு!

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடாநீ பொய் சொல்வது
எனக்குத் தெரியா தென்றா
நினைக்கிறாய் ?
உன்னால் அழ முடியாது !
காரணம் நீ
என்னைப் பார்த்து நகைக்கிறாய் .
மனம் உடைந்து போச்சு.மெய்யாக எனக்கு
எப்படிச் சிரிக்க முடியு துனக்கு ?
உன்னால் தான்
குப்புற வீழ்ந்து கிடக்கிறேன்,
தெளிவாய் நீ அதைத்
தெரிந்து கொண்டுள்ளாய் !
காதலன் வாங்கிப் போட்ட
மோதி ரத்தை
மாது நீ, தூக்கி எறிந்தாய் !
நாளொரு பொழுதும்
நடக்கும் வேடிக்கை இது !
தனித்தனி யாய் வாழ்கிறோம்
எவரும் இல்லை நமது
அருகில் !
“தொடாதே” என்று
தடுக்கிறாய் முணுமுணுத்து !
என் மனம் உடைந்து
போச்சு மாதே !
எப்படிச் சிரிப்பு வருது
உனக்கு ? -
காதலுடன் கைதொழுவோம்!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா
அன்னையும் தந்தையும் ஆற்றிய பெருந்தவத்தால்
அகிலத்தில் நம்பிறப்பு அற்புதமாய் ஆகியது
அரவணைத்துப் பாலூட்டி அன்புதனை காட்டியவர்
அறிவுடனே வாழ்வதற்கு ஆசானைக் காட்டினரே
ஆசானின் அரவணைப்பால் அசடெம்மை விட்டகன்று
ஆண்டவனின் நினைப்புடனே அருங்கல்வி அமைந்ததுவே
ஆண்டவனை நினைக்கும்படி அக்கல்வி அளித்துநின்ற
ஆசானை வாழ்நாளில் அகமதிலே இருத்திவைப்போம்எல்லோர்க்கும் ஆசானே ஏணியாய் இருந்திடுவார்
வல்லவராய் நல்லவராய் வளர்ப்பதும் ஆசானே
பொல்லாத குணமதனை போக்குவதும் ஆசானே
நல்லபல சேதிகளை நல்குவதும் ஆசானே
நல்லாசன் வாய்த்துவிடல் நாம்செய்யும் பாக்கியமே
நம்வாழ்வின் பெருங்கொடையே நல்லாசன் கிடைப்பதுவே
ஆதலினால் ஆசானை அடிபரவி நின்றிடுவோம்
அவராசி கிடைப்பதுவே அனைவருக்கும் பெருங்கொடையேஅர்த்தமுடன் வாழ்வதற்கு ஆசானின் துணைவேண்டும்
ஆணவத்தை அகற்றுதற்கு ஆசானின் துணைவேண்டும்
அறம்பற்றி அறிவதற்கும் ஆசானின் துணைவேண்டும்
அகம்பற்றி அறிவதற்கும் அவரின்துணை அவசியமே
நிலமீது நாமிருந்து நிமிர்ந்தென்றும் வாழ்வதற்கும்
நிலையான நீதியினை நெஞ்சமதில் நிறுத்துதற்கும்
அறிவான ஆசானே அருந்துணையாய் அமைந்திடுவார்
ஆதலால் ஆசானை காதலுடன் கைதொழுவோம் ! -
பிணர் (செந்தணக்கு, Sterculia urens), பிணறாயி ஊர்ப்பெயர்
டாக்டர் நா. கணேசன்
விக்கிப்பீடியாவில் பிணறாயி என்ற ஊர்ப்பெயருக்கு “பிணம்” என்ற சொல்லைவைத்து விளக்க முயன்றுள்ளனர். https://en.wikipedia.org/wiki/Pinarayi. அவ்வாறு அமங்கலமான பெயரை அவ்வூரில் வாழும் மக்கள் வைத்திருப்பார்களா என்பது ஐயமே. பிணறாயி வட கேரளத்தில் உள்ள ஊர். இவ்வூர்ப் பெயர் அகில இந்திய அளவில் செய்திகளில் காண்கிறோம். காரணம் கேரளத்தின் இன்றைய முதல்வர் பிரணாயி ஊர்க்காரர். சவரிமலை என்றி 1820-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் சபரிமலையைக் குறித்துள்ளனர். சபரிமலை போல வட இந்தியாவில் பல கார்த்திகேயன் (முருகன்), அனுமான் கோவில்களில் பிரமச்சாரி என்பதால் பெண்கள் சென்று வழிபடாத நிலை உள்ளது. பருவகால மகளிர் சவரிமலைக்கு வருதல் இல்லை என்றும் அந்த இரண்டு நூற்றாண்டு முந்தைய நூலில் பதிவாகியுள்ளது. அரசியல் கட்சிகளின் எதிரெதிர் நிலைப்பாடுகளைக் கேரளாவில் சபரிமலை விஷயமாகக் காண இயல்கிறது. நவம்பர் 13-ஆம் தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட் இந்தப் பிரச்சினை பற்றிக் கூடுகிறது.
பிணறாயி – பிணர் என்னும் சொல்லுடன் தொடர்புடையது. பிணர் என்றால் சொரசொரப்பு > சரசர. சர்ச்சரை (ஜர்ஜர jharjhara) என இந்த ஒலிக்குறிப்புச்சொல் வட இந்திய மொழிகளில் வழங்குகிறது.
மாசறக் கழீஇய யானைபோலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலை சேக்கும்… (குறுந்தொகை 12)பிணராயி – நெய்தல் திணையின் ஊர் ஆனதால், சொரசொரப்பான மண்ணோ, கல்லோ இல்லை.
பிணர் என்பது ஒரு மரம் என்கிறது சென்னைப் பேரகராதி. பிணர் = False tragacanth, (Botanical name: Sterculia urens).
பிணர் செந்தணக்கு என்றும், சோங்கு/கோங்கு என்றும் பெயர்கள் உண்டு. கோங்கு பல மரங்களுக்குப் பெயராக உள்ளது: (1) Hopea wightiana (2) Cochlospermum gossypium
பிணர்:
https://en.wikipedia.org/wiki/Sterculia_urens
http://yenforblue.blogspot.com/2015/12/the-white-ghost.html
https://books.google.com/books?id=iaOUGsZZW_MC& (search Sterculia urens)ஆயி – அங்கிருந்த அம்மனோ, அல்லது ஆயம் (இடையர் குடியிருப்பு, சுங்கச் சாவடி) போன்றவற்றால் அடைந்த பெயரோ?
பிணர் (Botanical name: Sterculia urens) – பூவும், காயும் சொரசொரப்பாக இருப்பது காண்க.
நா. கணேசன்
பிணறாயி விஜயன், கேரள முதல்வர், கம்யூனிஸ்ட் கட்சி:
https://www.thenewsminute.com/article/meet-man-behind-iron-facade-pinarayi-vijayan-keralas-next-chief-minister-43563புஷ்கரம் தலத்தில் கார்த்திகேயஸ்வாமி திருக்கோவில்
https://groups.google.com/forum/#!msg/vallamai/LZEettOi36I/WQ00Qk4MBwAJ -
படக்கவிதைப் போட்டி 184-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
பிக்சர்ஸ்க்யூஎல்எஃப்எஸ் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நனிநன்றி!
காற்றிலேறி விண்ணைச் சாடும் நோக்கமா? இல்லை… புகைப்படத்தில் புதியகோணத்தில் காட்சிதர வேண்டும் என்ற ஊக்கமா? மனிதா உன் தேடல்தான் என்ன?
கவிஞர்கள் தம் எண்ணக்குதிரையில் பயணித்து இதற்கான விடையைக் கண்டறியட்டும்! நமக்குத் தொழில் கவிதைகளை வாசிப்பதும் அவற்றின் சிறப்பை சிலாகிப்பதுமே!
******
”ஆற்றல் மிகக்கொண்டு காற்றைக் கிழித்தெறிந்து பந்தென்று அடிப்பாயோ பரிதியை?” என்று இம்மனிதனை வியந்து வினவுகின்றார் திரு. சீனிவாசன் கிரிதரன்.பந்தென்று அடிப்பாயோ பரிதியை
மாலைச் செங்கதிரின்
மங்கும் இருள் சிவப்பில்
களமாடும் வெறிகொள் வீரர்
பறிபோகும் காலம்தன்னை
வசப்படுத்தும் இறுதிப் போரில்
காற்றை கிழித்தெறிந்து
ஆற்றல் மிகக்கொண்டு
ஏற்றம் மிகக்கொண்டு
மாற்றம் பலகண்டு- இகத்
தோற்றம் பல மாற
பந்தென்று அடிப்பாயோ பரிதியை*****
”வாய்ச்சொல்லோடு முடங்கிவிடாமல் வருந்தி முயன்றால் பரிதியும் வசப்படுவது உறுதி” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
தொட்டிடலாம் சூரியனை…
வந்திடும் வெற்றி யென்றேதான்
வாய்ச்சொல் மட்டும் பேசிவிட்டு
மந்தி ரித்த கோழிபோல
முடங்கிக் கிடந்தால் மூலையிலே,
வந்தி டாதே வெற்றியதனால்
வருந்தி நீயும் முயன்றிடுவாய்,
அந்த ரத்துச் சூரியனும்
அண்மையில் வந்திடும் தொடும்படியே…!*****
”முயற்சியின் வெற்றியில் பூமியை இழந்த கால்களோடும் வானத்தை நோக்கிய கைகளோடும் தோற்றம் காட்டும் நீ, இந்தத் தலைமுறையின் தன்னம்பிக்கைச் சூரியன்” என்று தாவும் மனிதனைத் தன் பாவில் போற்றுகின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன்.
எண்ணியது நடந்துவிட்ட துள்ளலில்
வசப்பட வானமும்
மகிழ்ச்சியின் பெருவெள்ளமும்இருள் சூழ்ந்துவிட்ட பூமியில்
வெளிச்சத்தை வரவேற்க
எண்ணில்லா உயிாினங்கள்
சூரியனை எழுப்பும்
ரகசியங்கள் பேசும்
இயற்கையின் உள்ளொளியில்
உன்னை உணரும் தருணம்
இறை தரிசனம்உள்ளமது உணர்ந்துவிட்ட
ஆனந்தக் கடலில்
முத்தெடுக்க முயலும் உலகில்
முயற்சியின் வெற்றியில்
பூமியை இழந்த கால்களோடு
வானத்தை நோக்கிய கைகளோடு
தலைமுறையின் தன்னம்பிக்கை
என்றும் எழும் சூாியனாய் நீ!*****
விண்ணில் பாயும் ஏவுகணையாய்த் தாவுகின்ற இந்த மனிதனின் தன்னம்பிக்கையில் நன்னம்பிக்கை வைத்துப் போற்றிப் பாப்புனைந்திருக்கும் பாவலருக்கு என் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…
காற்றில் ஏறி வானில் மிதப்போம்!
நூல்கட்டிக் காற்றில்
பறக்கப் பட்டம் விட்டோம்
கால்கள் தவ்விக் காற்றில் ஏறிட
இறக்கை தேடினோம்
பறக்கும் பட்டத்தில் மலை மீது
நின்று குதித்து யாம்
பயணம் செய்தோம்
விமானம் செய்து உலகம்
சுற்றி வந்தோம்
சூரிய சக்தியில் ஊர்தி ஓட்டி
ஒருநாள் யாம்
உலகளந்தோம்!ராக்கெட் வடித்து நிலாவுக்குச்
சுற்றுலா போவோம்!
செந்நிறக் கோளைச் சுற்றி
வந்து யாம்
சந்திரனில் களைப்பாறி
புவிக்கு மீள்வோம்!
நியூட்டன் காட்டும்
ஈர்ப்பு விசைக்கு அஞ்சோம்
அடிபணியோம்
எதிர்த்துப் பறப்போம்
பிரபஞ்சத் துக்கு
சுற்றுலா போவோம்!”நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்று வீரமுழக்கம் எழுப்பிய அப்பர் பெருமானைப் போல, அச்சம்விட்டு உச்சம்தொட விழையும் இம்மனிதனும் செந்நிறக்கோள் சுற்றி வெண்ணிலவில் இளைப்பாறவும், ஈர்ப்பு விசைக்கு அஞ்சாது அதனை எதிர்த்துப் பறந்து வையத்தையும் வானத்தையும் அளக்கவும் விழைவதைப் பழகுதமிழில் அழகாய்ப் பாடியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. சி. ஜெயபாரதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.








