Blog

  • படக்கவிதைப் போட்டி – 186

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்.

    Share
  • POKKISAM INDIAN LARGEST TRADITONAL KOLAM

    சு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);.

    தமிழ் வளர்த்த மதுரை ,மீனாட்சி அம்மனை வணங்கி தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் பிறந்து ,ஆசான்கள் ஆசியுடன் படித்து தமிழ்ச்சங்க முத்தாக மாறி இளங்கலைப்பட்டம்(B.A.,)வும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும்(M.A.,)வும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மெய்ப்பொருளியல் நிறைஞர் பட்டமும் (M.phil.,) வும்,சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (B.Ed.,) பட்டமும் பெற்று இன்று பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர்(Ph.D.,) பட்டத்திற்காக படித்துக் கொண்டிருக்கின்றேன் .நான் *இயல்,*இசை ,*நாடகம்,*நடனம்,*கோலத்துறையிலும் படிப்படியாக என் வெற்றியைப் பதித்து அன்றைய, இன்றைய நாளிதழ் களின் பதிவுகளிலும் என்னை ஊக்குவித்த பெரியோர்களால் இன்று வரை என்னை சாதனைக் களமாக மாற்றிய பெருமை ஆசான்களையே சாரும்.இன்று அடையாற்றில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருபது வருடகாலம் பணியாற்றி வருகின்றேன்.

    நம் பாரம்பரிய பொக்கிஷமான கோலத்தை,தொடர்ந்து 5 நாட்கள் 66 மணிநேரம் வண்ணக்கோலம், புள்ளி, சிக்குக் கோலம், மாக்கோலங்கள், இழைக்கோலம், உப்பு, அரிசி, தானியங்கள், பூக்கள், வெற்றிலை-பாக்கு, ஆகிய 10 வகையான கோலத்தையும், இருபதாயிரம் சதுரஅடி நிலப்பரப்பில், 55 வகை பொருட்களால் கோலத்தில் கின்னஸ் சாதனை படைக்க, என் பதிவை பதிவு செய்ய, மற்றும் இக்கின்னஸ் சாதனையை திறம் பட செயலாற்ற இப்பாரம்பரிய இக்கோலம் (POKKISAM INDIAN LARGEST TRADITONAL KOLAM 66 HOURS..37000 DOTS(Approx.) 5 Days Individual (Place:ACS MEDICAL COLLEGE AND HOSPITAL, ACS CONVENTION CENTRE . POONAMALLEE)

    Date:22.11.2018 – 26.11.2018) இரண்டாயிரம் வருடமாக வரலாற்றுப் பதிவுகளில் இல்லாத மரபு சார்ந்த நிகழ்வான அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இதுவே முதல்முறை சாதனையாக நடைபெறும் .தங்கள் மேலான ஆசிகளுடன்,தங்களால் இயன்ற உதவி களை அளித்து இந் நிகழ்வினை சிறப்பாக நடத்திக் கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    இப்படிக்கு
    என்றும்
    உண்மையுள்ள. ஶ்ரீவித்யா
    (ஆசிரியை)

    Namaskaram.I am srividhya.I wish to make an attempt In the books of Guinness world Record under category of Indian Traditional Largest kolam(Individual). The details are attached here with.Seeking your blessings and support for the Grand success.
    Thanking you.
    Regards,
    S.Srividhya.

    My details follows:-
    REMIT. USD.………….
    To:STANDARD CHARTERED BANk
    MADISON AVENUE
    NEW YORK 10010–3603,USA
    SWIFT:SCBLUS33
    FOR CREDIT To: A/C NO:
    3582053746001.
    CORPORATION BANK
    SWIFT:CORPINBB122
    FURTHER CREDIT TO Indira Nagar
    Branch, Chennai(124)
    Bene Account No.:520101249778196
    Beneficiary Name:S.SRIVIDHYA.

    சு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);.
    திருவான்மியூர்,
    சென்னை 600 041.
    கைப்பேசி-8939052902.
    மின்னஞ்சல்:srividhyanov3@gmail.com

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (11)

    பேரா. நாகராசன்

     

    படியெடுத்தலும் குறிப்பெடுத்தலும்

     

    ஒரு மூல ஆவணத்திலிருந்து படியெடுப்பது தவறான செயல் என்பது எழுதுவோர் மாணவப் பருவத்திலேயே அறிவர். படியெடுப்பதன் மூலம் எழுதுவோர் தங்களின் இயல்பான எழுத்து நடையில் எழுதுவதைத் தவிர்ப்பதால் அவர்கள் நகலெடுக்கும் கருவியாக மாறி தங்களின் தனித்தன்மையுள்ள எழுத்தாற்றலை இழந்துவிடுவர்.

    ஒரு கருத்துரு தொடர்பான தகவலைத் திரட்டும் நிலையில் மூல ஆவணங்களை நகலெடுக்கலாம். ஆனாலும் ஆய்வுக் கட்டுரைக்குப் பயன்படுத்தும்போது மேற்கோள் காட்டவேண்டியிருந்தால் படைப்பாளரின் வார்த்தைகளை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தியவர்கள் எந்த ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அதன் ஆசிரியர், ஆவணத்தின் தலைப்பு வெளியான ஆண்டு, இடம், நாடு போன்ற தகவல்களைக் கட்டுரையில் அடிக்குறிப்பு அல்லது கட்டுரையின் இறுதிப்பகுதியில் மேற்கோள் ஆவணத் தொகுப்பில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மற்ற ஆவணங்களில் உள்ள ஆய்வுக் கட்டுரைக்குப் பொருத்தமான தகவல் ஆய்வாளரின் சொந்த நடையில் அமைய வேண்டும். அதற்கு ஆய்வாளரின் குறிப்பெடுக்கும் திறன் பேருதவியாக இருக்கும்.

    ஆய்வுக்கான ஆவணங்கள் மூன்று விதமாக அமையும். ஆய்வு முடிவுகள் முதலில் ஆய்விதழ்களில் வெளியாகும். சில நேரங்களில் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வை பன்னாட்டுக் கருத்தரங்கங்களிலும் தேசிய அளவிலான மாநாடுகளிலும் வெளியிடுவர். இந்த இரண்டுவகை ஆவணங்களும் முதல் நிலை ஆவணங்கள். ஆய்வாளர் இவ்வகை ஆவணங்களை அதிகம் குறிப்பெடுக்க வேண்டும்.

    இரண்டாம் நிலை ஆவணங்களாக நூலும், பதிப்பாசிரியரால் வெளியிடப்படும் கட்டுரைத் தொகுப்பும் அடங்கும். பொதுவாக நூல் ஆவணப்படுவதற்குச் சில ஆண்டுகள் காலம் தேவைப்படுவதால் அவற்றில் உள்ள தகவல் குறைந்தது பதிப்பிட்ட ஆண்டிலிருந்த ஐந்து ஆண்டுகள் பழையதாக இருக்கும். ஆயினும் நூல்களில் விமரிசகர்களும், ஆய்வாளர்களும் சிறந்தவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் உள்ள முக்கியத் தகவல்களைக் குறிப்பெடுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறான தகலுக்கான ஆவணங்கள் தொடர்பான குறிப்புகள் ஆய்விதழ் போன்றே அடிக்குறிப்பில் அல்லது ஆவணத் தொகுப்பில் குறிப்பிட வேண்டும். இக்குறிப்புகள் ஒரு ஆய்வாளர் ஆய்வுக் கட்டுரைக்கு உழைத்த உழைப்பைப் படம் பிடித்துக் காட்டும்.

    சொற்களஞ்சியம், அகராதி, நிகண்டு, ஒரு தலைப்பின் தொகுப்பு ஆய்வு, அச்சு ஊடகத் திரட்டி போன்றவை மூன்றாவது வகையான ஆய்வு ஆவணங்களாகும்.

    ஆய்வாளர் அச்சு ஊடக ஆவணங்களை நகலெடுக்கலாம். எண்ணிம ஆவணங்களைப் படியடுக்கலாம். ஆனால் அசலை அப்படியே எழுதினால் அது குற்றமாகும். ஆய்விதழ் நடத்துபவர்கள் இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்க இப்போது மென்பொருளைப் பயன்படுத்துவதால் இவ்வகை அறிவுத் திருட்டை மேற்கொள்வது தீங்கையே விளைவிக்கும்.

    தொடருவோம்

    Share
  • நீங்கள் Mr. ஆ? Ms. ஆ?  அல்லது Mx. ஆ ? 

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் நடக்கும் பல வித்தியாசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.  ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் (transgender) ஏன் தாங்கள் Mr. என்றோ அல்லது Mrs. என்றோ அல்லது Ms. என்றோ அழைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.  அதனால் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களில் M என்றோ F என்றோ போட்டுக்கொள்ளாமல் இரண்டிலும் சேராமல் X என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைக்கப் போகிறார்கள்.

    ஆரோவுட் என்னும் திருநம்பி (‘அவனுடைய’ என்றோ ‘அவளுடைய’ என்றோ தன்னை குறிப்பிடாமல் ‘அவர்களுடைய’  என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்; தமிழில் என்றால் இருவருக்கும் பொதுவாக ‘அவருடைய’ என்று குறிப்பிடலாம்; இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை.) அவர்களுடைய பாலை (sex) அவர்களுடைய பிறப்புச் சான்றிதழில் மாற்றிக்கொண்டுள்ளார்கள்.  Female என்பதற்குப் பதிலாக male என்று போட்டுக்கொள்வதும் சரியாகத் தோன்றவில்லையாம்.   அதனால்   F (female) என்றும் இல்லாமல் M (male) என்றும் இல்லாமல் நடுநிலையாக X என்று போட்டுக்கொள்ளப் போகிறார்களாம்.

    இப்படி ‘X’ என்று பிறப்புச் சான்றிதழில் போட்டுக்கொள்வதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது.  நியூயார்க் மாநிலப் போக்குவரத்துத்துறை வழங்கும் வாகன ஒட்டுநர் உரிமத்திலும்  மத்திய அரசு வழங்கும் பாஸ்போர்ட்டிலும் சமூக பாதுகாப்பு அட்டையிலும் (social security card) நடுநிலையான X என்ற நடுநிலை விருப்பத் தேர்வு (option) இல்லை.  ஒரே நபரின் பல சான்றிதழ்களில் ஒன்றில்  M என்றும்  இன்னொன்றில்  X என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார் திருநங்கை, திருநம்பிகளுக்காக வாதாடும் லாப நோக்கில்லாத ட்ரான்ஸ்செண்ட் லீகல் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆரோவுட்.  ஒருவரைக் குறிப்பிடுவதற்குச் சரியான அடையாளம் இல்லாவிட்டால் அவர்களைப் பற்றிய மற்ற விபரங்களும் தப்பாகிவிடலாம் என்கிறார் ஆரோவுட்.

    அமெரிக்காவில் பால் (sex) பற்றிய எண்ணங்கள் மாறிவருவதால், தங்களைப் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணங்களில் தங்கள் பாலை எப்படிக் குறிப்பிட வேண்டும்  என்று தாங்கள் விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம் என்று சில மாநிலங்கள் மக்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கின்றன; மாநிலத்தின் உரிய அலுவலங்களுக்கு அப்படி மாற்றிக்கொடுக்க அதிகாரம் கொடுத்திருக்கின்றன.  நியுயார்க் நகர கவுன்சில் சென்ற செப்டம்பர் மாதம் ஒருவருடைய பிறப்புச் சான்றிதழில் ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத பால் – அதாவது  X என்று குறிப்பிடலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது.  இதைப் பின்பற்றி கலிஃபோர்னியா, ஆரகன், வாஷிங்டன், (தலைநகர் வாஷிங்டன் அல்ல, வாஷிங்டன் மாநிலம்) நியு ஜெர்ஸி ஆகிய மாநிலங்களும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரப் போகின்றன.  வாஷிங்டன் மாநிலத்தில் இருபத்தாறு பேரும் கலிஃபோர்னியாவில் பதினாறு பேரும் இம்மாதிரி மாற்றங்களுக்காக விண்ணப்பித்திருக்கிறார்களாம்.  தலைநகரான வாஷிங்டன்  டி.சி.யும் மெயின் மாநிலமும் வாகன ஓட்டுநர் உரிமங்களில்  X என்று போட்டுக்கொள்ள உரிமை வழங்கினாலும் பிறப்புச் சான்றிதழ்களில் அப்படிப் போட்டுக்கொள்ள அனுமதி கொடுக்கவில்லை.  இதனால் பல குழப்பங்கள் விளைகின்றன.

    கலிஃபோர்னியாவைச் சேர்ந்த Mx. ஃபுருயா என்பவர்கள்தான் நாட்டிலேயே முதல் முதலாக மூன்றாவது பாலைக் குறிக்கும் X என்பதைப் பெற்றவர்கள்.   இவர்கள் சில மாதங்கள் கழித்து அம்மாநிலத்தின் வாகனத்துறைக்கு தங்களுடைய கார் ஓட்டும் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்றபோது M அல்லது F என்ற இரண்டு பிரிவுகள்தான் இருந்தனவாம்.  இதைப் பற்றித் தாங்கள் யோசிக்கவில்லை என்று கூறிய வாகனத்துறை அதிகாரிகள் இந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டிலும் சேராத மூன்றாவதான X-ஐயும் சேர்க்கப் போவதாகக் கூறினார்களாம்.

    இந்தியா உட்படப் பத்து நாடுகளில் – ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இந்தியா, மால்டா, நேபாளம், நியுஜிலாந்து மற்றும் பாகிஸ்தான் – பாஸ்போர்ட்டுகளிலோ அடையாள அட்டைகளிலோ மூன்றாம் பாலைச் சேர்க்க வசதி இருக்கிறதாம்.  இந்தியாவில் ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க eunuch என்னும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான E-ஐ பாஸ்போர்ட்டில் போடும் வசதி 2005-லிருந்து இருக்கிறதாம்.   இத்தனை நாடுகள் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் இந்த வசதியைச் செய்து கொடுத்திருக்கும்போது ஏன் அமெரிக்கா மட்டும் செய்யவில்லை என்கிறார் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வழக்கறிஞர்.  மாநில அரசு வாகனம் ஓட்டும் உரிமத்திலும் பிறப்புச் சான்றிதழிலும் X என்று ஒருவருடைய பாலைக் குறித்திருந்தால் (இவை இரண்டும் மாநில அரசால் வழங்கப்படுபவை),  வறுமைக் கோட்டுக்குக் கீழே வருபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மருத்துவ உதவி அட்டையில் ஒருவரின் பாலைக் குறிக்கும் இடத்தில் M அல்லது F என்று மட்டும் குறித்திருந்தால் அந்தக் கார்டு அந்த நபருக்குரியதல்ல என்று மறுக்கப்பட்டு அவருக்கு மத்திய அரசின் இலவச மருத்துவ உதவி கிடைக்காமலே போய்விடலாம்.  இம்மாதிரிக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு எல்லா அடையாள அட்டைகளிலும் M மற்றும் F என்பவையோடு X என்பதும் இருக்க வேண்டும் என்று வாதாடுகிறார்கள் திருநங்கைகளும் திருநம்பிகளும்.

    ஆண், பெண் என்ற பெரும் பிரிவுகளில் தங்களைச் சேர்க்காமல் தங்களுக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.  பிறந்தவுடன் அவர்களின் பிறப்புறுக்களைப் பார்த்து அவர்களை ஆண் என்றோ பெண் என்றோ பிறப்புச்சான்றிதழ்களில் குறிப்பிட்டாலும் பின்னால் அவர்கள் வளர்ந்துவரும்போது பல மாற்றத்துக்கு உள்ளாகிறார்களாம்.  அப்படி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு அவர்கள் தங்களை திருநங்கைகள் என்றோ திருநம்பிகள் என்றோ அடையாளப்படுத்திக்கொண்டால் அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  ஆரோவுட் பிறப்பின்போது பெண் என்று குறிப்பிடப்பட்டு, பின் தங்கள் மனதிலும் உடலிலும் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்கள்: “நான் ஆணாக மாறிக்கொண்டிருந்தேன் என்பதைவிட பெண் என்பதிலிருந்து விலகிப் போய்க்கொண்டிருந்தேன்.  அதனால் பெண் என்பதற்குப் பதில் ஆண் என்று போட்டுக்கொள்வதும் சரியாகப்படவில்லை”.

    ஜனாதிபதி ஒபாமா (இப்போது நான் உட்படப் பலர் அவரை மிகவும் ‘மிஸ்’ பண்ணுகிறோம்.)  இவர்களுடைய உரிமைகளுக்காகப் பொதுக் கழிப்பறைகள், குளியலறைகள், பள்ளிகளில் உடைமாற்றும் வசதிகள் என்று இவர்களுடய அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ள நிறையச் செய்தார்.  எல்லோரின் நலன்களுக்காகவும் அரசாங்கத்தில் பல மாற்றங்கள் செய்ததுபோல் இவர்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் அவர் நன்கு புரிந்துகொண்டார்.  ஆனால் ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சீர்திருத்தங்களையும்  மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு காரியங்கள் செய்துவரும் இன்றைய ஜனாதிபதி ட்ரம்ப் இவர்கள் விஷயத்திலும் தன் கைவரிசையைக் காட்டப் போகிறார்.  அமெரிக்க மக்கள் ‘அமெரிக்கா’ என்ற பூமாலையை ட்ரம்ப் என்ற இந்தக் குரங்கு கையில் கொடுத்திருக்கிறார்களே.  இதை என்னவென்று சொல்வது!  தன்னைப் பொறுத்தவரை மூன்றாவது பால் என்பது இல்லையென்றும் பிறப்புச்சான்றிதழில் ஒருவருடைய பால் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதுதான் அவர்கள் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  அதற்குரிய ஒரு அரசாணையையும் வெளியிடப் போகிறாராம்.  இதனால் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டுத் தங்களுக்குரிய நன்மைகளை இழந்துவிடுவோமே என்று அமெரிக்காவில் இருக்கும் பதினாலு லட்சம் திருநங்கைகளும் திருநம்பிகளும் பயப்படுகிறார்கள்.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  41

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களைக் கண்டு ஏன் பின்வாங்குகின்றோம்?

    வாசுவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவன் நன்கு படித்தவன். புத்திசாலி. ஆனால் அவனுக்கு தான் ஒரு புத்திசாலி என்ற எண்ணம் சற்றே தலைதூக்கி இருக்கும்.  எதற்கெடுத்தாலும் “எனக்குத் தெரியாததா என்ன?” “இதிலே என்ன புதுசா இருக்கு?”  என்று தேவையற்ற தர்க்கம் செய்து மற்றவர்களை நோகடிக்கும் மனப்பான்மை அவனுக்கு உண்டு. அதிலே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி.  சில நேரங்களில் அவன் தன்னுடைய தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது “போனவாரம் நாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது ..” என்று ஆரம்பித்தவுடன் அவனுடைய நண்பர்கள் தங்களுடைய சிரிப்பை உள்ளடக்கிக்கொண்டு  பரிதாபமாக அவனை ஒரு மனநோயாளியைப் போல் பார்ப்பார்கள். எவ்வளவு திறமை இருந்தாலும் தொழிலில் அவனால் முன்னேற முடியவில்லை. அவன் வேலைபார்க்கும் நிர்வாகிகள் இவனுடைய மனப்போக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனை முறை எடுத்துக்காட்டியும் வாசு மாற மறுக்கிறான். அவனுடைய ‘தான்’ என்ற ஆணவப் போக்கு அவனுடைய வீழ்ச்சிக்கு காரணமாகவும் முன்னேற்றத்திற்குத் தடையாகவும் இருக்கிறது. மாற்றங்களைப் பற்றி அவனுடன் பேசினால் “மன்னிக்கவும். நான் இப்படித்தான். என்னால் மாற முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடுவான்.

    செந்தில் இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். “அய்யா. ஒத்துக்கொள்ளுகின்றேன். மாற்றங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மாற்றத்திற்கும் நான் விலைபோக முடியுமா.” என்று மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். “இல்லை செந்தில், நீ மாறவில்லையென்றால் வாழ்க்கையில் பின் தங்கிவிடுவாய்’ என்று எடுத்துச் சொன்னால் “அதெல்லாம் எனக்கு கவலையில்லை. மாற்றத்தைக் கண்டு என்னால் ஆட்டத்தை மாற்ற முடியாது” என்று தர்க்கம் செய்பவன். இந்த ஒத்துழையாமைப் போக்கினால் பல சந்தர்ப்பங்களில் அவன் பின் தள்ளப்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும்.

    ஆனந்த் இன்னொரு வகையில் தோல்விகளை வரவேற்பவன். “நான் எதற்கு அய்யா மாறவேண்டும்? “என்னுடைய நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்தபோது கொடுக்கப்பட்ட பத்திரத்தில் அதெல்லாம் எழுதப்படவில்லை. இவர்கள் நாளைக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவார்கள். இதைச் செய் அதைச் செய் என்று சொல்லுவார்கள். இதனால் எனக்கு என்ன கிடைக்கபோகின்றது?” என்று சட்டங்கள் பேசி தன்னுடைய ஆதிக்கப் போக்கை நிலைநிறுத்த முயலுபவன். பல ஆண்டுகளாக செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து புதியதைக் கற்றுக்கொள்ளவும் அதன் தாக்கங்களை ஏற்றுக்கொள்ளவும் தயங்குபவன். சற்றே இவன் ஒத்துழைப்புள்ளவனாக இருந்திருந்தால் முன்னேற்றப் பாதையில் வேகமாகச் சென்றிருக்க வாய்ப்புக்கள் நிச்சயம் இருந்தது.

    தேவகிக்கு அவளுடைய நிறுவனத்தில் நல்ல பெயர். அவள் ஒரு நல்ல உழைப்பாளி. ஆனால் சில குடும்பச் சூழ்நிலைகளால் தன்னுடைய தொழில் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. “அய்யா, நான் மாற்றங்களைப் பற்றி நன்கு அறிவேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது சரி. ஆனால் இந்த மாற்றங்களை நான் ஏற்றுக்கொண்டு நிகழ்வுபடுத்தினால் எனக்கு என்ன லாபம்? புதிய பதவி கொடுக்கப் போகின்றார்களா? அல்லது ஊதிய உயர்வு கொடுக்கப் போகின்றார்களா? அல்லது டாக்டர் பட்டம்தான் கிடைத்துவிடப்போகின்றதா?” என்று கேள்விக்கணைகளை சொருகி நம்மைத் திக்குமுக்காடச்  செய்திடுவாள். “பிரச்சனைகளை ஏற்படுத்தாதே. அந்த அம்மாவை விட்டுடுப்பா” என்று மேலதிகாரிகள் தங்களுடைய அடுத்த அடுக்கு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுவர்.

    தேவகியின் முன்னேற்றம் அவளுடைய   சிந்தனைகளின் சில சறுக்கல்களால் தடைப்படுகிறது. மாற்றங்களுக்கும் கற்றல்களுக்கும் தங்களுடைய ஊதியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை அவள் உணரவில்லை. எந்தப் பதவியில் இருந்தாலும் என்ன ஊதியம் பெற்றாலும் மாற்றங்களும் அவைகளைச் சார்ந்த கற்றல்களும் வளர்ச்சியின் சில நிர்பந்தங்கள் என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை.

    சினேகாவுக்கு சற்றே பயந்த குணம். “நாம் புதிதாக ஏதாவது முயன்று அதில் தவறுகள் ஏற்பட்டால் அதன் விளைவுகளை யார் சந்திப்பது? தெரிந்ததைத் தெரிந்தபடி சிறப்பாகச் செய்துகொண்டிருந்தால் போதாதா? நமக்கு எதற்கு வம்பு, நாளைக்கு ஆயிரம் பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்று ஒதுங்கி நிற்பவள். திறமைகள் இருந்தும் அவள் பய உணர்வு அவளை முயற்சிக்கவே  விடாமல் தடுக்கின்றது.

    இனியன் -அவன் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றவர்களுடன் பழகுவதற்கு இனியன். நண்பர்கள் அதிகம். அவனைத் தேடியே நண்பர்கள் வருவார்கள். ஆனால் கொடுத்த வேலையைச் செய்யக்கூடியவன். தானாக முன்வந்து எதையும் செய்யமாட்டான்.” என்ன தம்பி, உங்க நிறுவனத்தில் புதிய பல முறைகளைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் போல் இருக்கிறதே” என்று ஒரு பெரியவர் அவனிடம் கேட்க ” ஆமாம் அய்யா, உண்மைதான். கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். யாராவது முதல்ல செய்த பின்பு அதோட விளைவு என்ன என்று பார்த்த பின்பு அதற்குப் பின் நான் முயற்சி செய்யலாமென்று நினைக்கின்றேன்.”

    மாற்றங்களைத் தவிர்ப்பதற்கும் மாற்றங்களைவிட்டு ஒதுங்கி தனித்து நிற்பதற்கும் பல காரணங்கள் உண்டு.

    1. என்னால் முடியாது ( I can’t)
    2. எனக்கு அவசியமில்லை. (I won’t)
    3. இதனால் எனக்கென்ன லாபம்? ( (What do I get?)
    4. உள்ளதும் போய்விடுமோ? (What if I lose?)
    5. பொறுத்திருந்து பார்ப்போமே! ( I will wait and see)

    ஆனால் மாற்றங்கள் இவர்களுடைய ஒப்புதலுக்காகவோ நாளைய வெற்றிக்காகவோ காத்திருப்பதில்லை.

    இதை நாம் உணர்ந்துவிட்டால் மாற்றங்களின் வழியாக நம்முடைய முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளில் நாம் எளிதாக ஏற முடியும்.

    முயன்று பார்ப்போமா?

    (தொடரும் )

    Share
  • சித்தாடல்

    -முனைவர்.த.பாலமுருகன்  

    முன்னுரை

    சித்தாடல் என்பது இயற்கை கடந்த அற்புதச் செயலாகக் கருதப்படுகிறது. இது சித்தர்களின் வாழ்வில் நிகழ்ந்ததாகவும் சித்தர்கள் நிகழ்த்தியதாகவும் அறியப்படுகிறது. அற்புத நிகழ்வுகள் யாவும் செய்திகளாகவும் அவற்றின் குறிப்புகளாகவும் கிடைக்கின்றன. இவ்வற்புதச் செயல்களைச் சித்தர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

    ‘கட்டுக்கடங்காத பாம்பைக் கட்டுவோம், இந்திரனுலகை இங்கே காட்டுவோம், தூணைத் துரும்பாக்குவோம், துரும்பைத் தூணாக்குவோம், கடலைக் குடிப்போம், மண்டலங்களைக் கையால் மறைப்போம், வானத்தை வில்லாய் வளைப்போம், நெருப்புக்குள் மூழ்குவோம், நீரினுள் மூச்சை அடக்குவோம், வன்புலியைத் தாக்குவோம், இப்பெரும் உலகை இல்லாமல் செய்வோம், செங்கதிரைத் தண்கதிராய் மாற்றுவோம், தேவர்களை ஏவல் செய்வோம், படைக்கும் தொழில் செய்வோம், கலைகள் யாவும் அறிவோம், நாதனுடன் சமமாக வாழ்வோம்’1 எனச் சித்தர்களின் சித்தாடல் பற்றிய செயல்களைப் பாம்பாட்டிச் சித்தர் குறிப்பிடுகின்றார்.

    எண்வகைச் சித்திகள்

    சித்தி என்பதற்குச் சித்தியாதல் அல்லது நிறைவு பெறுதல் என்று பொருள். சித்தர்கள் பல்வேறு சித்திகளைப் பெற்றிருந்தனர். இச்சித்திகளைச் சித்தர் இலக்கியங்களும், யோக இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. சித்திகள் எட்டு என்றும் அறுபத்து நான்கு என்றும் கோடி என்றும் கூறுவர். ஆனால் அவற்றுள் எட்டுச் சித்திகளை மட்டும் சிறப்பாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இராமலிங்க அடிகளார், சித்திகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, சித்திகள், கரும சித்தி, யோக சித்தி, ஞானச் சித்தி என மூவகைப்படும் எனக் கூறுகின்றார். இதனை,

    மூவகை சித்தியின் முடிபுகள் முழுவதும்
    ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்சோதி”
    2 எனக் கூறுவதால் அறியலாம்.

    சித்திகள் அறுபத்து நான்கு என்ற நிலையில் அவற்றுள் எட்டினை மட்டும் சிறப்பானதாகக் கருதும் மரபு இருந்து வருவதை அறியலாம். அட்டமா சித்திகளின்  மரபு குறித்தப் பாடல்கள் பின்வருமாறு.

    “அணிமா மகிமா லகிமா அரிய கரிமா பிராத்தி மலப்
    பிணிமா கடையோர்க்கு அடைவரிய பிரகாமீய மீசத்துவ
    துணிமா யோகர்க்கு எளியவசித் துவமென்றெட்டாமிவை யுளக்கண்
    மணிமா சறுத்தோர் விளையாட்டின் வகையாம்”3

    எனப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்திலும் அட்டமா சித்திகளைப் பற்றிக் குறிப்பிடும் செய்திகளைக் காணமுடிகிறது.

    சித்திகள் பொதுவாக எட்டு வகைப்படும். அவற்றை அணிமா (அணுவைப் போல் நுண்மையாதல்), மகிமா (மிகப்பெரியதாதல்), லகிமா (மிக நுண்மையாதல்), கரிமா (மிகு எடையாதல்), பிராத்தி (எங்கும் செல்லும் ஆற்றல்), பிரகாமியம் (எண்ணியது எய்தும் ஆற்றல்), ஈசத்துவம் (எதையும் ஆக்கும் ஆற்றல்), வசித்துவம் (எவரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல்) என்று வடமொழியில் கூறுவர். இவற்றினைத் திருமூலர் அணுசகம், சகத்தும், நோன்மை, ககனம், பரகாயத்தேகம், தானாவது, ஆனாத உண்மை, வியாப்பியம் என்னும் பெயர்களில் குறிப்பிடுகின்றார்.4

    அணிமா

    ‘அணிமா’ என்பது நுண்மை என்றும் அணு என்றும் பொருள்படும். அணுவைப் போல நுட்பமான ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு அணிமா என்று பெயர். பிருங்கி முனிவர் சிவனை மட்டும் சுற்றி வர வேண்டும் என்பதற்காகச் சிறு வண்டாக உருமாறினார் என்பதைப் புராணங்களின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு சிறு வண்டாக உருமாறிய தோற்றத்தை அணிமா என்று கூறலாம்.

    மகிமா

    தோற்றத்தில் மிகச் சிறிய பொருளை மிகப் பெரிய பொருளாக ஆக்குவது மகிமா. திருமால் மூன்று அடி மண் வேண்டி உலகை அளக்க எடுத்த உருவம் மகிமா ஆகும்.

    லகிமா

    கனம் இல்லாத ஆற்றலைப் பெற்றிருப்பது லகிமா என்னும் சித்தியாகும். மகேந்திர பல்லவன், சமயப்பகை காரணமாக திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது தன் உடம்பை மிதவையாக்கி அதனால் கல்லை மேலே இழுத்து வந்தது லகிமா ஆகும்.

    கரிமா

    கனம் மிகும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்குக் கரிமா என்று பெயர். அனுமன் தன் வாலின் எடையை அதிகரிக்கச் செய்து பீமனின் வலிமையைச் சோதித்தது கரிமாவாகும்.

    பிராத்தி

    எண்ணியதனை அடையும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்குப் பிராத்தி என்று பெயர். சூரன், இராவணன் முதலியோர் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடம் செல்லும் வல்லமை பெற்றிருந்தனர் என்பது பிராத்தியாகும்.

    பிரகாமியம்

    நினைத்த அக்கணமே பிறர் உடலில் நுழைந்து தோன்றுவது பிரகாமியம். மூலன் என்னும் இடையன் உடலில் சுந்தரன் புகுந்து திருமூலராய் எழுந்தது பிரகாமியம் ஆகும்.

    ஈசத்துவம்

    எதனையும் ஆக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஈசத்துவம் என்று பெயர். திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததும் சுந்தரர் முதலை உண்ட பாலகனை மீட்டதும் ஈசத்துவம் ஆகும்.

    வசித்துவம்

    உலகில் உள்ள அனைத்தையும் தன்வயப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு வசித்துவம் என்று பெயர். அப்பர் தன்னைக் கொல்ல வந்த யானையை நிறுத்தினார் என்பது வசித்துவம் ஆகும்.

    இவ்வாறு சித்தர்களின் சித்தாடும் வல்லமை பற்றியும் அற்புதச் செயல்கள் பற்றியும் செவிவழிச் செய்திகளும் இலக்கியக் குறிப்புகளும் கிடைக்கின்றன. சித்தர்கள் அனைவரும் சித்தாடினர் என்று ஏற்றுக்கொள்ள வழியில்லை என்றும், சித்தர்களில் சிலர் சித்தாடாமல் இருப்பதனால் அவர்களைச் சித்தர்கள் பட்டியலிலிருந்து நீக்கி விடுவதும் பொருத்தமாகத் தோன்றவில்லை.5 என்றும் க. நாராயணன் குறிப்பிடுகின்றார். இடைவிடாத முறையான யோகப் பயிற்சியாலும் திறத்தாலும் சித்திகள் கைவரப் பெறலாம் என யோக இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வகைச் சித்திகள் கைவரப் பெறுவதே சித்தர்களின் குறிக்கோள் என்றோ சித்தர் நிலை என்றோ கூறுவது பொருந்துமாறு இல்லை.

    “அட்டமாசித்தி எனப்படும் எண்வகைச் சித்திகளும் இலட்சியமாகவன்றித் துணைப்பேறாகவே கொள்ளப்பட்டன”6 என்று ப.அருணாசலம் அவர்கள்  குறிப்பிடுகின்றார். ‘‘சித்தர்கள் ஆயிரமாயிரம் சித்திகளை அறிந்திருந்தாலும், யோக நெறியெல்லாம் பயின்றிருந்தாலும் புருவ நடுவேயுள்ள சிற்றம்பலத்தில் கூடி மகிழும் பேறு பெற்றாலும் உலகில் சித்து விளையாடக் கூடாதென்றே கருதுவர்”7 என்று சுப்ரமணியர் ஞானம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

    “நடுவாய் சரமாறி இருந்திட்டாலும்
    நயமான யோகமெலாம் அறிந்திட்டாலும்
    கூடுவாய் தில்லையிலே கூடினாலும்
    குவலயத்தில் சித்துவிளை யாடா தென்றே”8 எனப் பட்டினத்தாரும், சித்தர்கள் இந்திரச் செல்வம் எட்டெட்டுச் சித்தியும் கைவரப் பெறும் போதெல்லாம் அதனை மறுத்து ஒதுங்குவார்கள் என்று கூறுகின்றார்.

    நிறைவாக, சித்தர்களின் இத்தகைய இயற்கை மீறிய ஆற்றல்களால் இவ்வுலகையும், அதிலுள்ள பொருள்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவதும் கட்டுப்படுத்துவதும் அதனால் மகிழ்வதும் சித்தர்களின் இறுதிக் குறிக்கோள் அல்ல. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இறைவனின் இயல்போடு இரண்டறக் கலப்பதையே சித்தர்கள் விரும்பினர். அவ்வாறு கலப்பதற்கான படிகளாகவே இச்சித்திகளைப் பெற்று இருப்பர் எனக் கருதலாம்.

    திருவள்ளுவர் இறைவனை ‘எண் குணத்தான்’9 என்று கூறுகிறார். இதற்கு விளக்கவுரை எழுதும் பரிமேலழகர் “அணிமாவை முதலாகவுடையன எனவும், கடையிலா அறிவை முதலாகவுடையன எனவும் உரைப்பாரும் உளர்”10 என்று குறிப்பதன் மூலம் இறைவன் கூட, சித்துக்கள் செய்பவன் என்று கருதும் மனநிலை பரிமேலழகர் காலத்தில் இருந்தமையினை அறியமுடிகிறது.

    அடிக்குறிப்பு

    1. சித்தர் பாடல்கள், பாம்பாட்டி சித்தர், சித்தர் வல்லபம், பா. 25, 34
    2. திருவருட்பாத் திரட்டு, பா. 239, 240.
    3. திருவிளையாற் புராணம், அட்டமாசித்தி உபதேசித்தப் படலம், பா. 22.
    4. திருமந்திரம், பா. 642.
    5. க. நாராயணன், சித்தர் சிவவாக்கியர், ப. 21.
    6. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 ஆம் நூற்றாண்டு, ப. 339.
    7. சுப்ரமணியர் ஞானம் 500, பா. 427.
    8. சித்தர் ஞானக்கோவை, பட்டினத்தார் பாடல்கள், பொது, பா. 37.
    9. திருக்குறள், 9.
    10. மேலது. பரிமேலழகர் உரை ப. 5.

    *****

    கட்டுரையாளர் –  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயக் கலை அறிவியல் கல்லூரி,கோயம்புத்தூர்- 20

     

     

    Share
  • தொண்டர்க்கும் தொண்டராகிய புண்ணியர்கள்

    முனைவர் இரா. மதன் குமார்
    இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    முன்னுரை

    சைவசமயத்தில், சரியை முதலான நால்வகைநெறிகளும் பெருமானைப் பெற்றுய்வதற்கான படிநிலைகளாகின்றன. அவ்வரிசையில், சமயக்குரவர் நால்வர்தம் அணுகுமுறைகளையும் முறையே மகன்மைநெறி, தொண்டுநெறி, தோழமைநெறி மற்றும் ஞானநெறி எனப் போற்றுதல் மரபு. நால்வகைநெறிகளுள், பூவுலகின்கண் ‘தொண்டுநெறியை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளியவர், ‘திருநாவுக்கரசு நாயனார்’. அவரை, ஞானகுருவாக்கி, ’தொண்டுநெறிக்கோர் தூமணி’ எனச் சிறப்புற்றவர், ‘அப்பூதியடிகள்’. திலகவதியாரை முதலாக உடைய இத் திருத்தொண்டர் மரபு, எளியராகிய அடியவர்கள், அரும்பொருளாகிய இறைவனை அடைவதற்குத் ‘தொண்டுநெறியே துணையாகும்’ என விளக்கிநிற்பது; ‘பொய்யன்பிலா தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ என்ற திருமுறை வாழ்வியலை என்றென்றும் விளங்கச்செய்வது; ‘தொண்டின் திலகம்’ எனத் திலகவதியம்மையாரும், அவ்வருள்திலகத்தின் திருப்பொலிவாகத் திருநாவுக்கரசுப் பெருமானும், அதன் அருள்மணமாய் அப்பூதியாரும், அவர்தம் மனைவியாரும், அவர்களது திருமகனாகிய மூத்ததிருநாவுக்கரசும் விளங்குகின்ற மேன்மையுடையது. அவ்வகையில், தொண்டர்சீர் பரவுகின்ற திருத்தொண்டர்புராணத்தில், இப்பெருமக்களது பக்திநெறியானது, ‘தொண்டுநெறியே, சைவப்பெருநெறி’ என விளங்குகின்ற பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    பெண்குலத்திலோர் பொன்மணி

    திருமுனைப்பாடி நாட்டின் திருவாமூரின் வேளாளர் குலத்தின், குறுக்கையர் குடியில் சிவம் பெருக்கும் இணையராக விளங்கியவர்கள், புகழனாரும், மாதினியாரும். அத்திருக்குடியில் மட்டுமல்லாது, உலகனைத்திலும் சைவநெறியைக் காக்கப் பிறந்தவர், ‘திலகவதியார்’. அவ்வருள்மேன்மை கருதியே அம்மையாரை, தெய்வச்சேக்கிழார் பெருமானும், ‘திருவனைய திலகவதி’ (திருநாவு.புரா.:17) என்று போற்றியுள்ளார். அவருக்குப்பின் பிறந்தவரே ‘மருள்நீக்கியார்’. பின்னாளில் தம் தம்பியாரின் வாயிலாகத் தொண்டுநெறியாகிய சைவப்பெருநெறியைத் தழைக்கச்செய்கின்ற பெருநோக்கில் அவர்தம் வாழ்க்கையும் விளங்கியது.

    திலகவதியாருக்கு, கலிப்பகையாருடனான திருமணவாழ்க்கைக் கூடாதநிலை நேர்ந்தது.  சில காலத்தில் பெற்றோரையும் இழக்க நேரிட்டநிலையில் அத்திருமகளார் தம் உயிர்த்துறக்க முற்பட்டார். ஆயினும், ‘யாதொரு ஆதரவுமற்ற தமது தம்பியார் உளராகவேண்டும்’ என இரங்கிய அன்பின் மேன்மையினால், அவர் உயிர் தாங்கியிருந்து, ஒப்பரிய சைவ அறங்களை மனையிலிருந்தே புரிந்துவந்தார்.

    “தம்பியா ருளராக வேண்டு” மென வைத்ததயா
      வும்பருல கணையவுறு நிலைவிக்க, உயிர்தாங்கி,
      யம்பொன்மணி நூறாங்கா, தனைத்துயிர்க்கு மருடாங்கி
      யிம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யாரிருந்தார்.  திருநாவு.புரா.: 34) என்பது தெய்வச்சேக்கிழார் பெருமானின் திருவாக்கு.

    திலகவதியாரின் திருநோக்கம்

    சைவ அறத்தில் தலைநின்றிருந்த அவர்தம் தம்பியார், மெய்ப்பொருள்தேடலின் பொருட்டு, சமண சமயம் சார நேரிட்டது. அந்நிலையிலும் அவருக்கெனவே வாழ்ந்து, தியாகச்செல்வியாகத் திகழ்ந்த திலகவதியார், திருவதிகைத் திருத்தலத்தில், ‘திருத்தொண்டர்’ என்னும் நிலைதாங்கி, கைத்தொண்டில் சிறந்தார். அத்துடன், ‘தமது தம்பியாரை மீண்டும் சைவசமயத்திற்கு ஆட்படுத்தத் திருவருள் வாய்க்கவேண்டும்’ எனப் பெருமானைப் பணிவதையே தமது பணியாகக் கொண்டிருந்தார். ஆண்டுகள் பல கழிந்தன; தம்பியாரும், ‘தருமசேனர்’ எனப் பெரும்பெயர் பெற்று, சமணசமயத்தில் மயங்கியிருந்தார். அவர்தம் மயக்கத்தை மட்டுமன்றி, ஆருயிர்கள் அனைத்தின் அறியாமை மயக்கையும் தொண்டுநெறி வழியே நீக்கியருளத் திருவருள் கனிந்தது.

    தம்பியாரை,  தீராத சூலை நோய்ப் பற்றி நலிவித்தது. உயிர்க் கவரும் கூற்றுவனை ஒத்த சூலையிலிருந்து பிழைத்தருள வேண்டி, தமது தமக்கையாரின் துணையினை நாடச்செய்தது. அதற்கென, தமது நோய்நிலையினை அறிவித்து, தமக்கையாரை உடன் அழைத்துவர ஏவலாளரை ஏகினார். ஆயினும்,‘சைவநெறி திறம்பாத வாய்மையின் நல்லாராகிய திலகவதியார், சமண்பள்ளிக்குத் தாம் ஏகுகின்ற எண்ணமில்லை’ என்பதனைத் தம் தம்பியாருக்கு உறுதிபட உரைத்தருளினார். அத்துடன், ‘உயிர்ப்பிணியையும் ஒருங்கே நீக்கவல்ல திருவதிகைப் பெருமானின் திருத்தலத்தை நாடி வரவுள்ள தமது தம்பியாரின் வருகையினை எதிர்நோக்கியிருந்தார்.

    அவரது சித்தத்தின் படியே, அங்குவந்த தம்பியாருக்குத் தாமே ஞானகுருவாகியிருந்து,  திருவாளன் திருநீறு தந்தருளித் தீக்கையும் செய்தருளினார். அத்துடன், தாம் முன்சென்று, தம்பியாரைத் திருக்கோயிலுக்குள் வழிநடத்தினார். அருள்மொழிகளுடன் கூடிய அவர்தம் ஆற்றுப்படுத்தலால், பெருமானின் திருமுன்பை அடைந்த நாயனாரிடத்தில், பெருமானைப் பாடிப் பணிகின்ற உள்ளுணர்வு மேலிட்டது.

    உலகுயிர்களின் பிறவித்துன்பத்தை நீக்கியருள்கின்ற திருப்பதிகச் சொல்மாலைகளின் தொடக்கமாக, ‘கூற்றாயினவாறு’ எனத் தொடங்கிப் பாடினார். அதுபொழுது முதலாக, ‘தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்’ எனச் செந்தமிழ்ப்பதிகம் பாடிப் பணிகின்ற பாங்கில், ‘நாவுக்கரசு’ என்னும் ஞானத்திருப்பெயரும் இறைவனால் சூட்டியருளப் பெற்றார். இவ்வாறு, திருநாவுக்கரசராகிய நாயனாரை சைவப்பேருலகத்துக்குத் தருகின்ற பெருநோக்கத்தில் திலகவதியாரின் திருவாழ்வு அமைந்திருந்தது. அப்பெருநோக்கத்தை நிறைவேற்ற வேண்டி, சூலைநோயினைத் தந்தருளிய பெருமான், அதைத் தீர்த்தருளத் திலகவதியாரின் மெய்ம்மைத் திருவாக்கும், திருநீறும் கருவியாகும்படி அருளினான். அத்துடன், அத்திருச்செல்வியே, நாயனாருக்கு ஞானகுருவாகவும் விளங்கத் திருவருள் செய்தருளினார். அவ்வருள் சிறப்பையே நாயனார், ’பெருமான், திலகவதியாரைத் தமக்குத் தாயாகவே தந்தருளினான்’ என்று அன்புருகப் போற்றியுள்ளார்.

                ‘அம்மை யார்? எனக்கு என்று அரற்றினேற்கு
                அம்மையாரைத் தந்தார்ஆரூர் ஐயரே’ (5:7:6) என்ற திருவாக்கின்படி, நாயனாருக்கே மட்டுமன்றி, அம்மையார்,  மன்னுயிர் அனைத்தையும் தொண்டுநெறியில் வளர்த்தெடுக்கவந்த திருத்தாயாகவும் விளங்கக் காண்கிறோம்.

     உழவாரப் படையாளியைத் தந்தார்
    தாயாகவும், ஞானகுருவாகவும் வாய்த்த தமக்கையாரின் அருளாணையின்வண்ணம் தம்பியாரும், சரியையாகிய கைத்தொண்டினையே தமக்குரிய ஞானநெறியாகக் கைக்கொண்டார். கைத்தொண்டில் திறம்பாதிருந்து, ‘உழவாரப் படையாளி’ என மிளிர்ந்தார். அப்பெருநெறியில், பதிகம் ஏழெழுநூறு பகர்கின்ற பரம கவியோகியாக அவரைச் சைவஉலகுக்குத் தந்தளித்த தனிப்பெருமை, திலகவதியாரின் தொண்டுநெறிக்குக் கிடைத்த வெற்றியாகும். சுருங்கக்கூறின், திலகவதியாரின் தியாக வாழ்க்கை, ‘ஆருயிர் அனைத்தின் மேலும் கொண்ட ஒப்பரிய அருள்வாழ்க்கை’  என்பது மிகையில்லை. அவ்வருள் பாங்கினைக் குறிக்கவே தெய்வச்சேக்கிழார் பெருமான், ‘தூண்டுதவ விளக்கனையார்’ எனப் பெருமாட்டியைப் போற்றிப் பணிந்துள்ளார். ‘தூண்டு தவம்’ – உலகச் சார்பினை விடுத்துச் சிவநல்வினையாகிய சிவச்சார்பினையே அடையும்படி தூண்டும் தவம்; இங்குத் தம்மையே தூண்டிக்கொண்டதன்றித் தம்பியாரையும் அவர்மூலம் உலகத்தாரையும் தூண்டும் தவம் (திருநாவு.புரா.:46, சிவக்கவிமணியார் உரை)’ எனத் திலகவதியாரின் திருத்தொண்டு, ‘தவம்’ என்று போற்றப்பெறுகிறது.

     ‘திருநாவுக்கரசு’ என்னும் திருநின்ற செம்மையர்

    உயிர்கள், தத்தம் வினைவழியே, எழுவகைப் பிறப்புகளிலும் மாறிமாறி பிறந்திளைக்கின்றன. அவ்வப் பிறப்புகளிலும் அவை புல், பூடு, புழு, மரம், பறவை, பாம்பு, மனிதர் என இனப்பெயர் பெறுகின்றன. அவற்றுள், மனிதப்பிறப்பினருக்குப் பெற்றோரால் இடப்பெறுகின்ற பெயர்கள் உண்டு. அவை, ‘ஊனப்பெயர்’ என்றே வழங்கப்பெறும். ‘மனிதர்கள், தாம் கொள்கின்ற, அழிகின்ற உடலுக்கே அத்தகைய பெயர்கள் சூட்டப்படுகின்றன’ என்பதனை உணர்வதில்லை; காலங்கள் பல கடந்தும் அவை நிலைப்பதில்லை.  அத்தகைய ஊனப்பெயர்களையும் கடந்து, ஞானகுருவால், ‘தீட்சைத்திருப்பெயரும்’, அனைத்து உயிர்களுக்கும் அம்மையப்பனாகிய பெருமான், சூட்டியருள்கின்ற ‘ஞானத்திருப்பெயரும்’ உள்ளன. அத்திருப்பெயரை உணர்வதும், பெருமானைப் பற்றி உய்வதும் பிறப்பின் பயன்களாகின்றன. அதற்கு, ‘ஞானகுருவின் திருப்பெயரை மந்திரமாக ஓதுதலே’ கருவியாகும்.

          ‘ஊனப்பே ரொழிய வைத்தார்
          ஓதியே யுணர வைத்தார்
          ஞானப்பேர் நவில வைத்தார்’ (4:30:7)

    நாயனார், ‘மருள்நீக்கி’ என்னும் இயற்பெயர்த் தாங்கி, மண்ணுலகில் மாந்தர்தம் அகவிருளையும், சமண் முதலான பொய்யிருளையும் போக்கவந்தவர். அவர், முந்தைய பிறப்பிலேயே ஞானம் முதிரப்பெற்றவராக, ‘வாகீசர்’ எனப் பெயர் தாங்கியிருந்தவர். ஆயினும், இராவணனின் அறியாமைச் செயலுக்கு அவர் துணைநின்றநிலை உண்டு. அக்காரணத்தால், நிகழ்பிறப்பில் தாம், மண்ணுலகில் வந்தவதரித்த அருள்நோக்கத்தைப் பலகாலம் மறந்திருந்தார். சமண் மயக்கில் ஆழ்ந்திருந்து, ‘தருமசேனர்’ என்னும் திருப்பெயர்த் தாங்கியிருந்தார்.  அவ்வறியாமை நிலை, ‘பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறை’ (திருநாவு.புரா.: 73) எனப் புராணத்துள் சுட்டப்பெற்றுள்ளது.

    நாயனார், புறச்சமயத்தில் ஒழுகியதால் பெற்ற, ‘தருமசேனர்’ என்னும் பொய்ப்பெயர் அவரிடமிருந்து அகன்றுபோகப் பெருமான் திருவுள்ளம் கொண்டான். திலகவதியாரின் திருவிண்ணப்பத்தின் படியே, தம்பியாரைச் சைவத்துக்கு மீளவும் ஆட்கொண்டருள வேண்டி, சூலைநோயினைத் தந்தருளினான். திருவதிகையில், சூலையும் நீங்கி, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரும் சூட்டியருளினான். அத்துடன், அத்திருப்பெயரின் வாயிலாக, ‘திருநின்ற செம்மையாகிய திருத்தொண்டின் வாய்மை ஏழுலகிலும் என்றென்றும் நின்று நிலைக்கட்டும்’ என வானோசையாகத் திருவருள் ஆணையும் தந்தருளினான். அவ்வருள் நிலையானது, இனிவரும் நாளிலும், ’திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரால், செய்வதற்கரிய சைவப் பெருநலங்கள் பல விளைய இருந்ததன் குறிப்பு மொழியாகும்.

          ‘மேவுற் றவிவ்வே லையினீ டியசீர்
          வீரட் டமமர்ந் தபிரா னருளாற்
        “பாவுற் றலர்செந் தமிழின் சொல்வளப்
          பதிகத் தொடைபா டியபான் மையினால்
          நாவுக் கரசென் றுலகே ழினுநின்
          னன்னா மநயப் புறநண் ணுக” வென்
         றியாவர்க் கும்வியப் புறமஞ் சுறைவா
         னிடையே யொருவாய் மையெழுந் ததுவே’. (திருநாவு.புரா.: 74)

    தொண்டுநெறியே குருநெறியான தகைமை
    ‘பாலூட்டி, குழந்தையைப் பேணுதல், தாயின் கடனாதல் போன்று, பெருமானும் அனைத்துயிருக்கும் கருணைசெய்தலைத் தன் கடமையாகக் கொள்கின்றான். மேலும், எவ்வுயிர்க்கும் கருணைசெய்தலாகிய தனது அருங்குணத்தைத் தன் காதல் அடியவர்க்கும் அளித்தருள்கின்றான்.

     ‘காதலாம் அடியவர்க்குக் குணங்களைக் கொடுப்பார்’ (4:49:9) அவ்வாறு, அன்புநெறிக்கு ஆட்பட்டு, அதற்குக் கருவியாகவல்ல தொண்டுநெறியில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியே திருநாவுக்கரசு நாயனாரும்,

                ‘தன் கடன் அடியேனையும் தாங்குதல்
                 என் கடன் பணி செய்து கிடப்பதே’           (5:19:9) என்று தொண்டுநெறிக்கு ஆட்பட்டார். அவ்வாறு, அவரைத் தொண்டுநெறியில் ஆட்படுத்தி, உலகுய்யச்செய்வதே பெருமானின் திருக்குறிப்பாகவும் அமைந்திருந்தது.  அதனாலேயே, அவரது ஞானகுருவாக வாய்த்த திலகவதியாரும், திருவதிகைத் திருத்தலத்திலிருந்து, சைவம் தழைக்கச் சரியைத் தொண்டு செய்பவராக விளங்கத் திருவருள் விளைந்திருந்தது; அதன்வழியாகவே,  திருநாவுக்கரசு நாயனாரும் தொண்டுநெறியையே தமக்குரிய குருநெறியாக ஏறிட்டுக் கொண்டார்.

    அளப்பரும் சீருடைய அடியார் திருநாமம்

    பெருமான், ‘வேதங்களும் அறிய இயலாத நுட்பமுடையவன்’. அரியவனான அவன், தனது அருங்குணங்களை அடியவர்கள் விளங்கி உய்யும் பொருட்டுப் பேராயிரமும் கொண்டருள்கின்றான்.

    ‘ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே’         (4:4:8)

    திருவைந்தெழுத்தும் அவனது திருப்பெயராகி, பிறவிக்கு வாயிலாகின்ற வினைகளைத் திண்ணமுறத் தீர்த்தருள வல்லது’ என்பதனைத் திருஞானசம்பந்தப்பெருமான்,

           ‘எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
                 நல்லார் நாமம் நச்சி வாயவே’ (3:49;5) என்று போற்றியுரைத்தார். அவ்வருஞ் சிறப்புக்குச் சான்றாகவே, திருநாவுக்கரசுப் பெருமானும்,

                ‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
                 நற்றுணை யாவது நமச்சி வாயவே’ (4:11:1) எனப் பாடினார்.

    திருவைந்தெழுத்தையே தெப்பமாகப் பெற்று,  நீர்க்கடலோடு, பிறவிக்கடலிலிருந்தும் மீண்டருளினார். பேராயிரத்தையும், திருவைந்தெழுத்தையும், அடியவர்கள் உய்வதற்குத் தனது திருப்பெயர்களாகக் கொண்டருள்கின்ற பெருமான், தன்னடியவனாகிய மருள்நீக்கியாருக்குத் திருவதிகைத் திருத்தலத்தில், தானே உவந்து, ‘நாவுக்கரசு’ என்னும் திருப்பெயரைச் சூட்டியருளினான். (ஒற்றெழுத்தை நீக்கிக் கண்டால், ஐந்தெழுத்தாகும்) அத்திருப்பெயரையும், திருவைந்தெழுத்தாகவே விளங்கச்செய்தான்.

    ‘தனது அடியார்களுக்கும் தொண்டனென’ விளங்குகின்ற பெருமான், தனது திருப்பெயரின் சிறப்பினை அடியார்கள் ஓதி உய்வதைக் காட்டிலும், தனது அடியவரின் திருப்பெயர்களை அவர்கள் ஓதி உய்யவேண்டிப் பெருங்கருணை புரிகின்றான். அத்துடன், அத்திருப்பெயர், மந்திரமாக விளங்கி, உடற்பிணியையும், உயிர்ப்பிணியையும் ஒருங்கே நீக்கவல்ல சிறப்பில் பொலியச் செய்கின்றான். அவ்வாறு, அவன், ’நாவுக்கரசு’ என்னும் திருப்பெயருக்குத் தந்த அருள்வல்லமையை விளக்கியுரைக்கின்ற அரும்புகழ்ப் புராணமாக ‘அப்பூதியடிகளின் திருவரலாறு’ விளங்குகிறது.

    பெயர்நலம் விளக்க வந்தார்  

    பெருமான், நஞ்சுண்டருளிய திருவிளையாடல், அவனது பெருந்திறத்தைக் குறிப்பது. அதன்பொருட்டு அவனுக்கு, ‘திருநீலகண்டன்’ என்னும் திருப்பெயர் அமைகிறது. திருஞானசம்பந்தர், ‘அவ்வினைக்கு இவ்வினை’ என உயிர்களைத் தொடர்ந்துவருகின்ற வலிய வினைகளையும், ’திருநீலகண்டமாகிய’ பெருமானின் திருப்பெயர் நீக்கியருளும் என்பதனைத் திருக்கொடிமாடச் செங்குன்றூரில் மெய்ப்பித்துள்ளார். அங்கு, அடியாரின் குளிர்சுரத்தைப் போக்கக் கருவியான, ‘திருநீலகண்டத் திருநாமம்’, திருநீலகண்டக் குயவனாரின் பிறவிநோயையும் நீக்கியருளியது. அத்திருப்பெயரின் அரும்பெருமை, சைவப்பேருலகில் நின்றுநிலைப்பதற்கு, குயவனார் கருவியானார். அவ்வாறே, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரை உலகேழிலும் மந்திரமாக நிலைபெறச் செய்வதற்கு, அப்பூதியடிகள் கருவியானார்.  பெருமானுக்கு அமைந்த திருப்பெயர்களின் பொருளுணர்ந்து, அவற்றை இடையறாது பற்றுங்கால், அத்திருப்பெயர், சிவத்தையே பற்றுகின்ற பேரறிவை உயிருக்கு நல்குகிறது. அது ஒப்பரிய சிவஞானத்திற்குத் திறவுகோலாகிறது. அத்துடன் அரும்பேறாகிய திருவருளையும் குறைவின்றிச் சுரந்தருள்கிறது.

    அத்தகைய பேரறிவே, ‘பதிஞானம்’ என வழங்கப்பெறும். பக்குவமுடைய ஆன்மாக்கள், முற்பிறப்புகளின் தவப்பயனால் உயிரறிவு விளங்கப்பெற்று, திருமுறைநெறியில் ஞானப்பேற்றுக்குத் தலைப்படுகின்றன. அவ்வாறு, திருமுறைகளைக் கற்றும், கேட்டும்  பலபிறப்பின் துயர்நீங்குகின்ற நல்வினைப்பயன் அனைத்து உயிர்களுக்கும் வாய்ப்பதில்லை. அவ்வுயிர்கள், அறியாமையால் உலகியல் வலைப்பட்டு, தீவினையே பெருக்கி, துன்பப்பிறவிகளுக்குத் தலைப்படுகின்றன. சிற்றறிவுடைய அவ்வுயிர்களுக்கும், ‘எளிய உய்யும்நெறியை’ விளக்கியருள்கின்ற அருங்கருணையே அப்பூதியாரின் திருவவதார நோக்கமாகிறது. அவர், அந்தணராக, அனைத்துயிரின்பாலும், அந்தமிலா அருங்கருணை பூண்டிருந்தார். அதனால், அவர்தம் தீவேட்டலாகிய மறைத்தொழிலும், கலியுகத்தின் கொடுந்துன்பங்களிலிருந்து மன்னுயிர்களைக் காக்கின்ற அறச்செயலாக மிளிர்ந்தது.

                 ‘கலிமெலிய அழலோம்பும் அப்பூதி’    (4:12:10)

    என்பது நாவரசர் நான்காம் திருமுறையில், அப்பூதியடிகளைக் குறித்துப் பாடியுள்ள திருக்குறிப்பாகும்.

    மறைத்தொழிலுடன், கா வளர்த்தும், கனிதரு சோலைகள் பேணியும், குளங்கள் புதுக்கியும், தண்ணீர்ப் பந்தல்கள் நலம்பெற அமைத்தும், அறச்சாலைகள் பலவற்றை அன்புடன் சமைத்தும், தமது ஞானகுருவாகிய நாவுக்கரசரின் நற்தொண்டுநெறி சிறக்கின்ற உயர்த்தவத்தைப் பேணினார். இப்பெருஞ் சிறப்பினைச் சாற்றவே நம்பி ஆரூரர் பெருமான்,

          ‘ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்’ (திருத்தொண்டத்தொகை: 4) எனப் போற்றியுரைத்துள்ளார்.

    பதி புண்ணியச் செல்வர்
    தன்னலம் மறந்து செய்கின்ற நற்செயல்கள் புண்ணியங்களாகின்றன. ‘அவை நடந்தேறத் தாம் கருவியாக அமைந்துள்ளோம்’ என்கின்ற பக்குவநிலையால் நல்வினைத் தொடர்பாகிய புண்ணியப்பயன் உயிரைத் தொடர்ந்து, அதற்கேற்பப் பிறப்பில் படுதல் உயிர்களுக்கு நிகழ்வதில்லை. அவ்வாறன்றி, எந்த ஒரு செயலையும், ‘யான் செய்கின்றேன்’; ‘எனது அறிவாலும், வலிமையாலும் செய்கின்றேன்’ என்ற தன்முனைப்பு, செயலில் பற்றினையும், அதன்வழியான இன்ப துன்பங்களில் நாட்டத்தையும் தந்து பிறப்புகளுக்கு வாயிலமைக்கின்ற அவலம் நேர்கிறது. அத்தகைய நிலையினை, ‘பசு புண்ணியம்’ என்பர்.

    பதிபுண்ணியங்களாகிய நற்செயல்கள், சீவன்முத்தர்களால்,  பெருமானை முன்னிட்டுச் செய்யப்படுவன. அவற்றால் வினைப்பற்றும், இன்பதுன்ப நாட்டமும், அதற்கேற்ப பிறப்பின் தொடர்ச்சியும் அமைவதில்லை. அத்தகைய பக்குவநிலையே, ‘சீவன்முத்த நிலை’ எனப்படுகிறது. உலகியல் தொடர்போடு வாழ்கின்றபோதிலும், சீவன்முத்தர்கள் தாங்குகின்ற உடலானது உயிரைத் தாங்குகின்ற கருவியாக மட்டுமே அமையவல்லது. அவ்வுடலின் கருவி கரணங்கள் உலகியலின் இன்ப, துன்பநாட்டத்தைக் கடந்து, திருவருளாகிய பேரின்பதுக்கு நிலைக்களமாகின்றன. அவ்வுடலின் வழியான சிந்தையும், சொல்லும், செயலும் சிவசிந்தனைக்கு உரியவையாகப் பண்படுகின்றன. அம்மெய்யுணர்வின் வழியிலேயே, அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை ஞானகுருவாக ஏறிட்டுக் கொண்டார். ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்ற பெருநோக்கில், அவர்தம் திருப்பெயரால் அனைத்து அறங்களையும் செய்கின்ற பாங்கில் உயர்ந்தார். ‘அனைத்தையும் ஆக்குகின்ற அருமை முதல்வர் அவரே’ எனப் பணிந்து, அறப்பணிகளுக்கு, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரிட்டுச் சிறந்தார். அத்துடன், தம் மக்களுக்கும், மனையிடை நின்ற பொருள்களுக்கும், ‘திருநாவுக்கரசு’ என்றே திருப்பெயர் வழங்கி அறம்சிறக்கச் செய்தார்.

    அன்பில் சிறந்த அப்பூதியார்

    அப்பூதியார், சாதி, குலம் என்னும் தடுமாற்றம் நீங்கித் தெளிந்த சிந்தையராய், ஆளுடைய அரசுகளின்பால் நீங்காத அடிமைத்திறம் பூண்டவர். முக்கரணங்களாலும், ‘திருநாவுக்கரசரையே’ ஞானகுருவாக ஏறிட்டுக் கொண்டு தொண்டுநெறியில் நிலைநின்றவர். அவர்,  ‘கானிடைத் தவமும், கனலிடைப் புகுதலும், உடல்வாடி நோதலும் இன்றி, உள்ளத்து அன்பின் மொழியாக, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரினை, பேசியும், எழுதியும் சைவப்பெருஞ் சாதனைக்கு வித்திட்டார். ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ என்னும் திருமொழியை, திருவருள் ஆணையாகப் பொலியச் செய்தவர். தாம், அறுவகைத் தொழிலையும் ஆற்றுவிக்கின்ற திருஞானச் செல்வராக விளங்கியபோதிலும், தன்னறிவை ஆற்றுவிக்கத் தனி குருவின் திருவருளை நாடியவர். அவ்வடிமைத்திறம், சைவசமயத்தின் அடிப்படையாகிய குருநெறியைத் திறம்பட வலியுறுத்துகிறது. அதிலும், நாயனாரைக் கண்ணால் காணாதபோதிலும்,  அவர்பால் அடிமைத்திறம் பூண்ட நிலை, அப்பூதியடிகளின் பெரும்பக்திக்குச் சான்று. அளப்பரும் இச்சாதனையால்,

                ‘உற்றானலன் தவம், தீயில் நின்றானலன் ஊண்புனலா
                அற்றானலன் நுகர்வும், திருநாவுக் கரசெனுமோர்
    சொற்றா னெழுதியுங் கூறியுமே யென்றுந் துன்பில்பதம்
                பெற்றான் ஒருநம்பி அப்பூதியென்னும் பெருந்தகையே’  என, நால்வர் நான்மணி மாலையின் (பாடல்: 38) திருப்பாடலால் போற்றப்பெற்றுள்ளார்.

    காணாதே பக்திகொண்ட பெரும்பக்தர்

    திருப்பழனம் முதலான திருப்பதிகளை வணங்கிப் பணிந்த நாயனார், திங்களூருக்கு வந்தார். அவ்விடத்தில், தமது திருப்பெயரால், அறங்கள் பல இயற்றப்படுவதைக் கண்டார். தாழ்வெனும் தகைமை மீதூர, அடியவராகிய தம்மையும் ஒரு பொருளாகக் கருதித், தம் பெயரால் அறங்களைப் புரிகின்ற திருவன்பரின் திருவடியினை வணங்கிப் பணிய ஆவல்கொண்டார். அங்கிருந்தாரிடத்தில் அவ்வன்பர்தம் ஊரும், பேரும், மனையும் முதலாயின குறித்து வினவி அறிந்தார். அவரைக் கண்ணாரக் கண்டு பணிகின்ற பெருவிருப்பில், அவர்தம் இருப்பிடம் சேர்ந்தார். வீட்டின் வாயிலில் இருந்து அழைக்க, அப்பூதியார் மனையின் உள்ளிருந்து வந்தார்.

    நடமாடும் கோயிலாகிய அரனடியாரின் வருகையினை எண்ணி மகிழ்வுற்ற அப்பூதியார்,   ‘அடியாருக்குத் தக்கவகையில் தொண்டாற்றவேண்டும்’ என விரைந்தார். மனத்தின் விரைவு, சொல்லில் வெளிப்பட்டது. ‘இறைவரீர்! அடியேனை நாடி வந்ததன் நோக்கம் யாது?’ எனக் கேட்டுப் பணிந்தார். இம்மொழி கேட்ட நாயனார், ‘தாங்கள் இயற்றுகின்ற அறங்கள் அனைத்துக்கும், ‘திருநாவுக்கரசு’ என்னும் பெயர் வழங்கிவருவதன் காரணம் யாது?; அதனினும் செம்மையுடைய திருப்பெயர்களும் உண்டே?’ என வினவினார். இதைக் கேட்ட அப்பூதியார் அளவிலாத துன்பமுற்றார். தம் முன்னால் எழுந்தருளியிருந்தவர், சிவவேடத்தால் சிறந்திருக்கின்ற நிலையிலும் அறியாமையுடன் அவ்வாறு வினவியதாகக் கொண்டார். ஆயினும், அத்திருப்பெயரின் அருஞ்சிறப்பையும் அறிந்திராத அடியாருக்கு அதனை அறிவுறுத்தியருள எண்ணினார்;  ‘அத்திருப்பெயரினும் சிறந்ததொரு திருப்பெயரும் உளதோ?’ என அவர்பால் வினவினார்.

    ’சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை’ எனப் பாடிச் சிவனடிமை பூண்டவர், திருநாவுக்கரசு நாயனார். அவரையே சிவமாகக் கண்டு, குறையாத அடிமைத்திறம் பூண்ட அப்பூதியார், ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரைக் காட்டிலும், திருவாகிய செம்மைநிறைந்த திருப்பெயர்களும் உளதோ?’ என்று அவரை நொந்துரைத்தார்.

                   “நம்மையுடை யவர்கழற்கீழ் நயந்ததிருத் தொண்டாலே
                   யிம்மையிலும் பிழைப்பதென வென்போல்வா ருந்தெளியச்
                   செம்மைபுரி திருநாவுக் கரசர்திருப் பெயரெழுத
                   வெம்மைமொழி யான்கேட்க விளம்பினீர்” (அப்பூதி. புரா.: 14)
    இத்திருப்பாடல், ‘தொண்டில் நிலைத்த அப்பூதியாரின் தூயதிருவுள்ளத்தை விளக்கிக்காட்டுகிறது.  ‘நம்மையுடைவர்’ என்பது, சிவனாரைக் குறிக்கிறது. ‘என் போல்வார்’ என்பது, சிற்றறிவுடைய தீவினை யுர்களை’.

    நமக்காக நாயனாரின் பெயரை நயந்தார்

    நம்மையுடையவராகிய, இறைவரைப் பணிந்தால், இப்பிறப்பினையே இறுதியாக்கி, இனிப் பிறவாமை பெறலாம்; அதற்குச் சிவனாரின் திருவடியைப் பற்றுகின்ற ஞானநெறிக்குத் தலைப்படுதல் வேண்டும். ஆயினும், எம்மைப்போன்று சிற்றறிவே உடையவருக்கு அப்பெருநெறியானது, பற்றுதற்கு அரியது; அதனால், எளியவாறு அப்பெருநெறியினை அணுகுகின்றவகையில், சிவனடியாரை  நயந்தேன்’; அவர்களுக்குரிய பல தொண்டினையும் செய்யத்தலைப்பட்டேன்; திருத்தொண்டுநெறியால் உலகுய்யச் சமணத்திலிருந்து, சைவத்துக்கு மீட்டருளப்பெற்று ‘வாக்குக்கோர் மன்னவர்’ என்று திருப்பெயர் பெற்றுச் சிறந்த நாயனாரே, ‘தொண்டுநெறிக்கோர் தூமணியாகத் திகழ்கின்றார்; அவர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் செம்மை மனத்தினர்; வீடும் வேண்டா விருப்புடன், அன்பர் பணியாகிய திருத்தொண்டில் நிலைநின்றவர்; யானும்,  அவ்வழியே நின்றுய்ய அவரையே ஞானகுருவாக்கிக் கொண்டேன். அன்றுமுதலாக, அவர்தம் திருப்பெயராலேயே அறங்கள் பலவும் பொலிவுற்றுச் சிறக்கின்றன’ என்று விடைகூறினார்.

    இத்திருப்பாட்டில், மன்னுயிர்களின்பால் அவர்கொண்ட கருணையால், அவற்றின் அறியாமையைத் தன்பால் ஏறிட்டுக்கொண்டும், தம்மை, அறியாமை மிக்கவராகவும் அப்பூதியார் குறித்தருளியுள்ளார். இம்மறுமொழிகளைத் தெய்வச்சேக்கிழார் பெருமான், இரண்டு திருப்பாடல்களில் குறித்தருளியுள்ளார். நாடகத்தால் அவனடியார்போல் நடித்து, தம்மை முன்னிருத்திச் சுயம் நிறுவுதலையே பக்திநெறியாகக் கொண்டுள்ள மூடர்களுக்கான வழிகாட்டுதலாக, அப்பூதியடிகளின் நிலை அமையக்காண்கிறோம்.

    அவர், அந்தணருக்கு உரியதாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் மற்றும் ஏற்றல் என்னும் அறுவகத்தொழிலில் ஈதலையும் திறம்படச்செய்தார். திருவருளால்,  அறச்செயல்களுக்கான பொருள்செல்வம் அனைத்தையும் பெற்றுச் சிறந்தபோதிலும், அறமாற்றி அருள்செல்வத்தையும் சேர்க்க முனைந்தார். அந்நிலையில் தன்முனைப்பு அற்ற உயர்ஞானத்தைக் கடைப்பிடித்தார். நாயனாரைக் காணாதபோதிலும், அவரது திருப்பெயரால் அறங்கள் சிறக்க நல்லெண்ணம் கொண்டார். குருவையே சிவமாகக் கருதி, தம் மக்கள் முதலான சுற்றத்தாரையும் அந்நன்நெறியில் ஒழுகி உய்யச்செய்தார்.

    பணிவில் தலைநின்ற பெரியார்

    அப்பூதியடிகளார் தம்மிடத்தில் கூறிய மறுமொழிகளைக் கேட்ட அளவில், நாயனாருக்கு, அவர்மீதான  நன்மதிப்பு மேலும் பெருகியது. ’அடியவனே, சூலைதந்து பெருமானால் ஆட்கொள்ளப்பெற்ற சிறுமையேன்’ என்றுகூறி, அவரைப் பணிந்தார். அதுகாறும், தம் முன்னால் எழுந்தருளியிருந்த அடியார், தமது ஞானகுருவாகிய திருநாவுக்கரசு நாயனாரே’ என்பதை அறியாத அப்பூதியார், நாயனாரின் மொழி கேட்டு, சிரத்தின் மேற் கரம்குவித்து, கண்ணீர் அரும்ப, சொல் தடுமாறி, மயிர்ப்புளகம் எய்தி, தரையினில் வீழ்ந்து நாயனாரின் திருவடியினைப் பணிந்தார். அவ்வாறு தமது திருவடி பணிந்து எழுந்த அப்பூதியாரைத் தாமும் எதிர் வணங்கி, நாயனார் எடுத்தருளினார்.

                ‘மற்றவரை யெதிர்வணங்கி வாகீச ரெடுத்தருள
                 அற்றவர்க ளருநிதியம் பெற்றார்போ லருமறையோர்
                 முற்றவுளங் களிகூர முன்னின்று கூத்தாடி
                 உற்றவிருப் புடன்சூழ வோடினார் பாடினார்’   (அப்பூதி. புரா.: 18)

    மேற்கண்ட பாடலில், ‘தன்னடியவராகிய அப்பூதியாரைத் திருநாவுக்கரசுப் பெருமான், வணங்கினார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளமையும், அவரிடத்தில் தம்மை அறிமுகம் செய்துகொள்ளுங்கால், ‘சிறுமையேன்’ என்று கூறியே பணிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கவை.

    நாயனாரின் தொண்டுநெறிக்கு, ‘ஆருயிர்கள்பால் அவர்  அளவில்லாது பெருக்கிய கருணையும், அவ்வளப்பரும் கருணையின் வெளிப்பாடாகிய பணிவும்’ இருகண்கள் எனத் திகழ்ந்தன. அப்பெருநிலையால் உடலும் உள்ளமும் பொலிவுற்ற பாங்கினாலேயே நாயனார், திருஞானசம்பந்தப் பிள்ளையாரைச் சிவிகையில் தாங்கி, ‘அப்பர்’ எனத் திருப்பெயர் ஏற்றார். அப்பெரும்பண்பில் மேலும் பெருகிய பாங்கினாலேயே, அப்பூதியடிகளிடத்திலும் தம்மை, ‘சிறியேன்’ எனவும் பணிந்தும், அவரை வணங்கியும் அன்பில் பெருகினார்.

    பெறலரும் புதல்வனின் பெருஞ்சாதனை

    அப்பூதியாரின் திருமனைக்குள் எழுந்தருளிய நாயனாருக்கு விதிப்படி, ஆசனமும், அருச்சனையும் செய்வித்து திருவமுது படையலுக்கான ஏற்பாடுகளையும் அப்பூதியடிகளார் மேற்கொண்டார். நாயனார், திருவமுது செய்தருள வேண்டி, உண்கலம் அமைக்கத் தமது மூத்ததிருமகனாகிய, மூத்ததிருநாவுக்கரசை வாழைஇலை கொண்டுவரப் பணித்தார். அத்திருமகனும், அதற்காக மிகமகிழ்ந்து, இலையினை அரிய முற்பட்ட வேளையில், நச்சரவொன்று அவன் உடலில் பல்பதித்தது.

    ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ எனப் பாடிச் சைவப்பெருநெறி வாழ உயிர்க் காத்து அருளப்பட்டவர், நாவரசர்.  அவரைப் பணிகின்ற அடியாரும் அவ்வாறு நமனை வென்று நல்வாழ்வு பெறவல்லவர்கள்’ என்பதனை உலகுக்கு உணர்த்துகின்ற பெருவாய்ப்பாக மேற்கண்ட செயல் நிகழ்ந்தேறியது. அத்துடன், உண்மையடியார்கள், தம் இன்னுயிரைத் தந்தும், தொண்டுநெறியை வாழச்செய்வர்’ என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மூத்ததிருநாவுக்கரசின் உடலில் விடமேறிய நிலையினை, ‘ஏழாம்விட வேகம்’ எனப் புராணம் குறிக்கிறது.

      ‘எரிவிட முறையே யேறித் தலைக்கொண்ட வேழாம் வேகந்
    தெரிவுற வெயிறுங் கண்ணு மேனியுங் கருகித் தீந்து
    விரிவுரை குழறி யாவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
    பரிகலக் குருத்தைத் தாயார் பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்’  (அப்பூதி. புரா.: 27)

    ‘உடலின் செரிமான மண்டலம் முதலாக, தோல் மண்டலம் ஈறாக அமைந்த அனைத்து உறுப்பு மண்டலங்களையும் கொடியவிடம் தாக்கியதால், இனிப் பிழைத்தேற வாய்ப்பில்லை’ என்னும் வகையில், பெருந்துன்பத்தை அப்பிள்ளை அனுபவித்திருக்கக்கூடும். ஆயினும், தொண்டின் மணியாகத் திகழ்கின்ற பெற்றோரின் பெருந்தொண்டுக்கு இழுக்குநேராத வண்ணம், தான் அரிந்துவந்த வாழையிலையினைத் தாயிடத்தில் ஒப்படைத்த பிறகே அவனது ஆவி உடலிலிருந்து பிரிந்ததாகக் குறிப்புள்ளது. உயிர் பிரிகின்ற தருவாயிலும்,  பெற்றோரின் தொண்டில் துணைநின்ற, ‘மூத்ததிருநாவுக்கரசின்’ பெயரால் தொண்டுநெறி இன்றளவும் செழித்தோங்குகிறது.

    திருத்தொண்டில் துளங்காத இணையர்

    பக்திநெறியினை, உலகியல்  பயனுக்காகக் கடைப்பிடிப்போர், நன்மையால் இன்பமும், தீமையால் துன்பமும் அடைவர். நன்மைக்கும், அதன் இன்பத்துக்கும் தாமே பொறுப்பேற்பதும், தீமைக்குத் திருவருளைப் பழிப்பதும் அவர்கள் இயல்பாக அமையும். ஆனால், சீவன்முத்தர்களாகிய அப்பூதியாரும், அவர்தம் மனைவியாரும் ஆருயிர்களைக் காக்கின்ற அரனே, ‘திருநாவுக்கரசு’ எனத் திருப்பெயர்த் தாங்கித் தம்பால் எழுந்தருளி வந்ததாக எண்ணிப் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

                ‘நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
                         உன்நாமம் என்னாவில் மறந்தறியேன்’         (4:1:6)

    எனத் திருநாவுக்கரசரின் திருப்பெயரையும், அவர்த் திருப்பெயரிலான தொண்டிலும் திறம்பாது நின்றனர். அதிலும், ‘வாராது வந்த மாமணி’ எனத் தமது மனைக்கு நாயனாரே எழுந்தருளியநிலையில், பெருஞ்செல்வம் பெற்ற பெருமகிழ்வில் திளைத்திருந்தனர்; அவருக்குத் திருவமுது படைக்கத் திருவருள் கூட்டுவித்தநிலையில், அதற்கு இடையூறாக மகனுக்குத் தீராத துன்பம் நேர்ந்ததனைக் கண்டனர். பெறலரும் புதல்வனாகிய மூத்ததிருநாவுக்கரசின் திருமேனியில் விளங்கிய குறிகளைக் கண்டு, அவன் விடத்தினால் உயிரற்று வீழ்ந்ததனை உறுதிசெய்து கொண்டனர்; அவ்வாறு நிகழ்ந்ததும், திருவருளின் சித்தம் என்றே துணிந்தனர். அத்தெளிவுடன்,  மறுகணமே  அடியவராகிய நாயனாருக்கு அமுதுபடைக்கின்ற அரியவாய்ப்பு தவறாதவகையில்,  மகனது உடலைப் பாயினில் சுற்றி மறைத்துவைத்தனர்.

    திருத்தொண்டில் நிலைநின்ற அவ்விணையரின் ஒப்பரிய உளப்பாங்கினைத் தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்’ எனக் குறித்தருளியுள்ளார். ‘துளங்காமை’, என்றது, ‘சிவனடிமைத்திறம் பற்றிய அன்பின் நிலையினின்று நிலைபெயராமை’ (அப்பூதி. புரா.: 28, சிவக்கவிமணியார் உரை:பக்.: 253).

      ‘தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
         தடரும் போதர னாயருள் செய்பவர்’ (5:51:8) என்ற நிலையில், ‘திருவருளின் துணைநின்று தமது துன்பத்தை நீக்கியிருக்கவேண்டும்’; அதற்கு வாய்ப்பின்றி விளைந்த பெருந்துன்பத்தை நீக்கியருள, ‘நாயனாரைச் சரணடைவோம்’ என்றும் தன்னலத்துடன் அப்பூதிஇணையர் சிந்திக்கவில்லை. மாறாக, இருவரும், குருவிடம் கொண்ட அடிமைத்திறத்திலிருந்து பிறழாதவர்களாயினர்; உள்ளத்தால் தடுமாற்றம் ஒழித்தவர்களாயினர். உயர்த்தொண்டாக, நாயனாருக்கு அமுதுபடைக்க ஆயத்தமாயினர்.

    திருநீற்றுத் திருமரபால் அருஞ்சாதனை

    ‘விதியை மதியால் வெல்லுதல்’ என்பது, திருநாவுக்கரசு நாயனார் போன்ற அருளாளர்களால் மட்டுமே அமைவது. அவர்களது பதிஞானம், முற்றுணர்வாக விளங்கி அனைத்தையும் அறிகின்றவகையில் மேம்பட்டு நிற்பது. அவ்வாறே நாயனாரும், அம்மனையிடத்தே விரும்பத்தகாத ஒன்று, நிகழ்ந்ததனை உளக்குறிப்பாக அறிய நேர்ந்தது. இருப்பினும், அதனை வெளியிட விரும்பாத மனத்தினராய், அப்பூதி இணையரின் திருத்தொண்டினை ஏற்றருள மனம் கனிந்தார். அதற்கேற்ப, இணையர் இருவரும் உடனிருந்து, நாயனாருக்கு அனைத்துச் சிறப்புகளுடனும், திருவமுது படைக்க முனைந்தனர். அவ்வேளையில், ‘திருவாய் பொலியச் சிவாயநமவென்று திருநீறு’ அளித்தருள எண்ணி, மூத்ததிருநாவுக்கரசையும் அவ்விடத்திற்கு அழைத்துவரும்படி, நாயனார் கூறினார். அடியார்கள் திருவமுது செய்தருளுவதற்கு முன்னர், தம் உடனிருப்போர்களுக்குத் திருவருள் பொலிவாகத் திருநீற்றினை வழங்கிச் சிறப்பது மரபு. அத்திருமரபே, மூத்ததிருநாவுக்கரசை மீண்டும் உயிர்ப்பெறச் செய்கின்ற சைவ அருஞ்சாதனைக்குக் கருவியானது.

    அதுகேட்ட பெற்றோர், நாயனாரின் திருவருள் ஆணையினை நிறைவேற்றத் திருவருள் துணைபுரியாத தமது நிலையினை எண்ணிக் கலங்கினர். மகன், இறந்துபட்டதை அறிந்தபோதும்கூட பெற்றோர்கள் தடுமாற்றம் அடையவில்லை; ஆனால்,  நாயனாரிடத்தில், ‘நிகழ்ந்ததனை மறைத்துநிற்கின்றோம்’ என்ற குற்றவுணர்வால், அவர்களிடத்தில் தடுமாற்றம் நிகழ்ந்தது. மகன், விடத்தால் இறந்துபட்டதனை விளக்கிக் கூறாது, ’இப்போது இங்கு அவன் உதவான்’ (அப்பூதி. புரா.: 32) என்று தடுமாறி உரைத்தனர்.  அதனைக் குறிப்பினால் உணர்ந்த நாயனார், ‘அனைவரையும் உய்விக்கின்ற திருநீற்றினை அவன் பெறுவதற்கு இயலாதவண்ணம் நிகழ்ந்ததனை உள்ளவாறு கூறுக’ எனத் தாயன்பின் பரிதவிப்புடன் மொழிந்தார். பிள்ளைக்கு நேர்ந்ததனைக் கூறக் கேட்டு, ‘உம்மையும், உமது மக்களையும் போன்று தொண்டில் திறம்பாதவர் எவரும் இல்லை’ என்று நாயனார் வியந்து மொழிந்தார்.

    அரனருளால் உண்மைத்தொண்டர்கள், ‘விதியையும் மாற்றம் செய்வர்’ என்பதனை விளக்கிக்காட்ட, திங்களூர்த் திருத்தலத்தின் திருவாயிலின் திருமுன்பிலிருந்து, ‘ஒன்றுகொலாம்’ எனத் தொடங்கிப் பாடினார். அத்திருப்பதிகத்தின் பத்தாம் திருப்பாடலில், ‘பத்து கொலாம் அவர் பாம்பின்பல்’ (4:18:10) எனக் குறித்துப் பாடிய அளவில், மீண்டும் மகன் உயிர்ப்பெற்று எழுந்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டவனைப்போல, இயல்பாக எழுந்துவந்த பிள்ளைக்கு நாயனாரும் திருநீறளித்து மகிழ்ந்தார். ‘மாண்ட மகன் மீண்டருளிய நிலையானது, ‘அப்பூதியாரின் தொண்டின் உறுதியால் வாய்த்தது’ என்பதனைப் புராணம், ‘தொண்டின் நெறியினைப் போற்றி வாழ்ந்தார்’ எனக் குறிக்கிறது.

     ‘பிரிவுறு மாவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
            நெறியினைப் போற்றி வாழ்ந்தார்; நின்றவப் பயந்தார் “தாங்கள்
            அறிவரும் பெருமை யன்ப ரமுதுசெய் தருளு தற்குச்
            சிறிதிடை யூறு செய்தா னிவ” னென்று சிந்தை நொந்தார்’ (அப்பூதி. புரா.: 37)

    தொண்டில் வலிமையும் எளிமையும்

    உயிர்ப்பெற்று எழுந்த மகனைக் கண்ட பெற்றோர், அவ்வேளையிலும், ‘பெறலரும் தம் மகனை மீளப்பெற்றோம்’ என மகிழ்வில்லையாம்; மாறாக, ‘நாயனார் திருவமுது செய்தருளக் காலம் தாழ்ந்ததற்கு, இம்மகனே காரணமாயினன்’ என்று உள்ளத்துள் வருந்தினராம்; அத்துடன், அனைத்தையும் அறியத்தக்கவராகிய நாயனாரிடத்தில் மகனுக்கு நிகழ்ந்ததனை மறைத்துநின்ற அவச்செயலுக்கான அச்சத்தையும் சுமந்து நின்றனராம்.  (மேலது பாடல்). இவ்வாறு, அப்பூதியார் மற்றும் அவர்தம் மனைவியாரின் மனநிலை தொண்டில் வலிமைபெற்றிருந்தது. அத்துடன், அங்கிருந்த நாயனாரிடத்திலும் செயற்கரும் சாதனையைச் செய்தளித்த பெருமிதம் மிளிரவில்லை; சிவனடியைப் பற்றுகின்ற பெருநிறைவாகிய பணிவே அவரிடத்தில் நிலைத்திருந்தது. அத்துடன், அப்பூதியார் மற்றும் அவர்தம் மனைவியாரின் வருத்தமும், அச்சமும் ஒருங்கே நீங்கும்படி, அப்பூதியாரையும், அவர்தம் மக்களையும் உடனிருத்தி, நாயனார் திருவமுதும் செய்தருளினார். (அப்பூதி. புரா.: 37) நாயனார், அடியாரையும் உடனிருக்கச் செய்து, அமுதுசெய்வித்த அன்பின்திறம், எல்லைகள் கடந்த தொண்டின் எளிமையையும், உயர்வையும் குறிப்பதாகும்.

     முடிவுரை

    ‘உடல்சுமந்து, பிறவியில் புகுகின்ற அவலம் நீங்கவேண்டில், உடலாலும், உள்ளத்தாலும் பணிவைப் புலப்படுத்துகின்ற தொண்டுநெறியே உற்ற துணையாகும்’ என்பதற்குத் திலகவதியார் திருச்சான்றாக விளங்குகின்றார். நாயனார், சூலையால் துன்புற நேர்ந்தது, வினைக்கழிவாய் நிகழ்ந்ததாகும். சீவன்முத்தர்களை, வினைப்பயன் உடலளவில் மட்டுமே துன்புறுத்தும்; அவர்களது உயிருக்கு உற்ற துணையாகப் பெருமான் விளங்கிப் பண்படுத்த வல்லவன்’ என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் புராணம் தெளிவுற உணர்த்துகிறது.

     நாயனாரின், திருக்கழிப்பாலைத் திருப்பதிகம், ஆருயிர்கள் ஈடேற வேண்டிப் பெருமான்,  ‘ஞானமும் நாவில் வைத்தார்’ என மொழிகிறது. ஞானத்துக்குக் கருவியாகப் பெருமானால், அருளிச்செய்யப்பட்டவையே, வேதமும், ஆகமமும், இதிகாசமும், புராணமும். அவற்றின் எளியநிலை விரிபொருளாகத் திருநாவுக்கரசு நாயனாரின் திருப்பதிகங்கள் விளங்குகின்றன.  அவை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுங்கால், செல்நெறியாகப் பெருமானின் திருவடியைக் கூட்டுவிக்கவல்லன. அதற்கேற்ற வகையில், உயர் ஞானமற்ற அறிவிலிகளும் ஈடேற அவர்தம் திருப்பெயரே திருமந்திரமாக வல்லது’ என்பதற்கு அப்பூதியடிகள் நாயனார் புராணம் சான்றாகின்றது.

    அடிகள் புரிந்த திருத்தொண்டுநெறியை, அவர்தம் மனைவியாரின் அருளுள்ளமும் தாங்கி நிற்கிறது. இது, பண்பட்ட இல்லற வாழ்வியலுக்குச் சான்றாகிறது. மேலும், ‘நன்மக்கள்பேறு’  என வள்ளுவப்பெருந்தகை குறிப்பிட்டதும், ‘பிறருக்குத் தொண்டுசெய்கின்ற நன்மக்கள்பேற்றையே’ எனலாம். அதற்கு, மூத்ததிருநாவுக்கரசின் தொண்டுள்ளம் சிறந்த சான்றாகிறது. ’தொண்டுநெறியாகிய பக்திநெறியே’ இப்பெருமக்களது வாழ்வியலாகிறது.

    ‘தொண்டுநெறியே, திருவாகிய செம்மைவாழ்க்கை’ என வாழ்ந்த திலகவதியாருக்கும், திருநாவுக்கரசு நாயனாருக்கும், அப்பூதியடிகளுக்கும், அவர்தம் மனைவியாருக்கும், திருமகனாருக்கும் அடிமைபூண்டு, ‘தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ எனப் பணிகின்ற பக்திவாழ்வியலை, திருவதிகைத் திருவீரட்டானம் மற்றும் திங்களூர் முதலான திருமுறைத் திருத்தலங்கள் விளக்குகின்றன. உலகியல் பயன்களுக்காக அவற்றை வலம்வருகின்ற அறியாமை நீங்கி, அவ்வத் திருத்தலங்களையும், அவற்றின் உயிர்நாடியாக உள்ள தொண்டுநெறியின் வழியில் பணிவது, பகுத்தறிவுடன் கூடிய பக்தி மறுமலர்ச்சிக்குத் துணையாகும்.

    ஆய்வுத்துணை நூல்கள்:

    1. பெரியபுராணம்- தொகுதி:3 , பாகம்: 1,2 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உரையாசிரியர்), பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.பதிப்பு ஆண்டு: திசம்பர், 2017.
    2. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை), பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

    இணையம்:
    thevaaram.org
    maduraitamilproject.org.

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 132

     

     

     

    நிர்மலா ராகவன்

    வெற்றிப் படிகளில் ஏற

    `நான் ஏன்தான் இப்படி எளிதாக மனம் தளர்ந்துவிடுகிறோனோ!’ என்று அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் 95% பேர் இருக்கிறார்கள்.

    நூற்றில் மூன்று பேர்தான் வெற்றிப்பாதையில் நடக்கிறார்களாம். அவர்களுக்கு மட்டும்தான் திறமை, அதிர்ஷ்டம் எல்லாம் வாய்த்திருக்கிறதோ? இல்லை. அவர்களுக்கும் குறைகள் இல்லாமலில்லை. ஆனால், வாழ்வை எப்படி எதிர்கொள்வது என்பது புரிந்தவர்கள் அவர்கள்.

    தம்மையுமறியாது மற்றொருவர் விரிக்கும் வலையில் விழுந்துவிடுகிறார்கள் பிறர்.

    யாரை எளிதாக வீழ்த்த முடியும்?

    1 `என்னால் என்னவெல்லாம் முடியாது?’ என்ற வீண்யோசனைக்குத் தம்மை உட்படுத்திக்கொள்பவர்களை.

    “சந்திரனைப் பிடிக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டால், நட்சத்திரமாவது கிடைக்கும்”. (திரு.அனுபவசாலி)

    அதாவது, `கணக்குப்பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்குவேன்!’ என்று முனைந்தால், அறுபது மதிப்பெண்களாவது கிடைக்கும். `எப்படியோ தேர்ச்சி பெற்றால் போதும்!’ என்றால்…?

    2 `இப்போது எந்தவிதப் பிரச்னையும் கிடையாது. புதிதாக ஒன்றை ஆரம்பித்து மாட்டிக்கொள்வானேன்!’ என்று ஏற்கெனவே குழம்பி, தாம் வகுத்த பாதையில் மாற்றமின்றி, ஆனால் சலிப்புடன், நடப்பவர்களை.

    3 `எளிதானது, எல்லாரும் செய்கிறார்களே!’ என்று கூடாத காரியத்தைத் துணிந்து செய்பவர். (`தலைமை அதிகாரிகளே லஞ்சம் வாங்கும்போது, நாம் வாங்கினால் என்ன தப்பு?’)

    4 ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அது எதிர்பார்த்தவகையில் நடக்காவிட்டால் மனம் தளர்ந்துவிடுபவர்கள். அதன்பின், `நான் முட்டாள், அதிர்ஷ்டம் இல்லாதவன்,’ என்று தம்மைத்தாமே குறை கூறிக்கொண்டிருப்பார்கள். இது அடக்கமா?

    `உனக்குத்தான் அதிர்ஷ்டமே கிடையாதே!’ என்று கூறியே இப்படிப்பட்டவர்களை வீழ்த்துவது எளிது. அவர்களும் தாம் நினைத்தது சரிதான் என்று நம்பிவிடுவார்கள்.

    5 மனோதிடமின்றி, எதையும் ஒத்திப்போடுபவர்கள் — `சரியான தருணத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!’ என்ற சாக்குடன்.

    என்னுடன் வேலைபார்த்த ஓர் ஆங்கில ஆசிரியை, “நான் ஐம்பது வயதுக்குப்பின் தினசரிகளுக்கு எழுதப்போகிறேன்!” என்பாள்.

    “அது என்ன கணக்கு?” என்று கேட்டபோது, “சரியான காரணத்தைத்தான் வைத்திருக்கிறேன்,” என்று நழுவினாள். காரசாரமாக எழுதினால். நிறைய அல்லல்களைச் சந்திக்க நேரிடும் என்று என்னைப் பார்த்துப் பயந்துபோயிருப்பாள்.

    இது நடந்து இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. அவள் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை.

    செய்ய வேண்டியதை இன்றே ஆரம்பிக்கலாமே! விளைவுகளுக்குப் பயந்துகொண்டே இருந்தால், எதையும் சாதிக்க முடியாது.

    கனவிலேயே சுகம்

    கனவிலேயே சுகம் காண்பவர்கள் அதை நனவில் செயலாற்ற முனைவதில்லை.

    `நான் வெளிநாட்டில் வேலை பார்த்து, ஐந்தே வருடங்களில் லட்சாதிபதி ஆகப்போகிறேன்!’ என்றவர்களைப் பார்த்திருக்கிறேன். கனவு மட்டும் போதுமா? செயலில் காட்டி, கண்ட கனவை நனவாக்கும் துணிவும் வேண்டுமே!

    காலையில் ஆறு மணிக்கு சாப்பாட்டுக்கடை ஒன்றில் வேலைபார்க்க வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் இரவு ஒன்பது மணிக்குத்தான் தன் அறைக்குத் திரும்புவார். (மிகவும் களைப்பாகத் தென்பட்ட ஒரு பரிசாரகரை நான் விசாரித்துத் தெரிந்துகொண்ட செய்தி இது).

    சம்பளம் தாய்நாட்டில் கிடைப்பதைவிடப் பன்மடங்கு அதிகம் என்றாலும், அயல்நாட்டில் அத்தியாவசியமான எல்லா பொருட்களுக்கும் விலையும் கூடுதல்தானே?

    கனவு கனவாகவே போய்விடும் என்று புரியும்போது வாழ்க்கையில் சலிப்புதான் ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் வெற்றி காண நினைப்பது அசட்டுத்தனம். அதற்கு குறுக்கு வழியில் போனால்தான் உண்டு.

    உழைப்பு மட்டும் போதுமா? நம்பிக்கை, துணிச்சல், பொறுமை ஆகியவைகளும் வெற்றிகாண அவசியமான தன்மைகள்.

    தன்முனைப்பு

    நாம் ஒரு காரியத்தைத் துவங்குமுன், `உன்னால் முடியும்,’ என்று ஊக்குவிப்பவர்கள் அரிது. `நான் செய்து காட்டுகிறேன்!’ என்று மனதுக்குள்ளேயே சவால் விட்டு, துணிந்து நமக்குப் பிடித்த ஒரு காரியத்தில் ஈடுபட்டால் சிறிதளவாவது வெற்றி கிட்டும். அப்போது, நம் நம்பிக்கையைக் குலைக்கப்பார்த்தவர்கள், `எனக்கு முதலிலேயே தெரியும், நீ வெற்றி பெறுவாய் என்று!’ என்பதுபோல் மாறுவார்கள்! உலகின் நோக்கைப் புரிந்துகொண்டால், எளிதில் மனம் தளரமாட்டோம்.

    சிறு வெற்றி, பெரு மகிழ்ச்சி

    சிறு, சிறு வெற்றிகள் வரும்போது அவைகளுக்காக மகிழக் கற்கவேண்டும்.

    எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு உடையவர் எடுத்த எடுப்பிலேயே புதினம் எழுத முயற்சிக்கலாமா? அவர் பெயரில் ஒரு துணுக்கு வெளியானாலும் மகிழ்வதே முதல் படி. அப்போது எழும் மகிழ்வில், உற்சாகத்தில், இன்னும் முயற்சிகள் எடுக்க முனைவார்.

    ஆனால், ஒரு சிறு வெற்றி கிடைத்தவுடன், `நான் சாதித்துவிட்டேன்!’ என்ற பூரிப்புடன் ஒரே நிலையில் இருந்தால் தோல்விதான் எழும்.

    தோல்வியிலிருந்து கற்க

    `ஏதாவது செய்யலாமா?’ என்று ஓய்ந்த நேரத்தில் குருட்டு யோசனை செய்வது எந்த பலனையும் அளிக்காது. மாறாக, `இதுதான் செய்யப்போகிறேன்!’ என்ற முடிவெடுத்துக்கொள்வது அவசியம். நம்மையும் அறியாமல் தகுந்த வழிமுறைகள் புலப்படும்.

    தவறாகிவிட்டது. அதனால் என்ன?

    தடைகளும், தவறுகளும் தவிர்க்க முடியாதவை. இயன்றவரை முயற்சித்தால், தானே சரியான பாதை தெளிவாகும்.

    `ஒரே முயற்சியில் நீங்கள் எதையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?’ என்று ஒரு விஞ்ஞானியைக் கேட்டபோது, `பல முறை முயன்றபின், ஒரு காரியத்தை எப்படிச் செய்யக்கூடாது என்று கற்றேன்!’ என்று பதில் வந்ததாம்.

    பிரபல எழுத்தாளர்களைக் கேளுங்கள், `அடித்துத் திருத்தாமல், என்றாவது உங்கள் படைப்புகளைப் பிரசுரத்திற்கு அனுப்பி இருக்கிறீர்களா?’ என்று.

    தவறுகள் புரியாமல் ஒரு காரியத்தைத் திருப்தியாகச் செய்வது என்பது இயலாத காரியம். அதனால் மனமுடைந்து போகாது, இனியும் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதே வெற்றிக்கு அறிகுறி.

    எதிர்பார்த்த வெற்றி கிடைத்தபின்னரும், அதிலேயே தேங்கிவிடாது, இலக்கை உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.

    தன்னையே உணர்ந்துகொண்டு, விடாமுயற்சி செய்பவரை வீழ்த்துவது கடினம்.

    தொடரும்

    Share
  • குறளின் கதிர்களாய்…(231)

     

    செண்பக ஜெகதீசன்

     

    ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை  

    யூக்கா ரறிவுடை யார்.

           -திருக்குறள் -463(தெரிந்து செயல் வகை)

     

    புதுக் கவிதையில்…

     

    வரவிருக்கும் உயர்ந்த

    ஊதியத்தை எதிர்பார்த்து,

    கையிலிருக்கும்

    முதலை இழக்கும் செயலைச்

    செய்யமாட்டார்

    அறிவுடையார் எவரும்…!

     

    குறும்பாவில்…

     

    கையிலிருக்கும் முதலை இழந்து,                   

    வரவிருக்கும் ஆக்கத்தை எதிர்பார்ப்பதை   

    விரும்பிச் செய்யார் அறிவுடையோர்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    ஊதியம் பெரிதாய்க் கிடைக்குமென்றே

         உயர்வா யொன்றை எதிர்பார்த்தே,

    ஏதுமே அறியா நிலையினிலே

         இருக்கும் கைப்பொருள் இழந்திடாதே,

    தீதே தந்திடு மிச்செயலைத்

         தெரிந்து செய்திட உடன்படாரே

    ஆதியோ டந்தம் நன்றுதீது

         அறிந்து தெளிந்த அறிவுடையரே…!

     

    லிமரைக்கூ..

     

    உயராக்கம் கிடைக்கும் என்று        

    எதிர்பார்த்தே யிழக்கமாட்டார் கைமுதலை,                       

    அறிவுடையோர் தாமே சென்று…!

     

    கிராமிய பாணியில்…

     

    தெரிஞ்சி செய்யணும்- எதயும்

    தெரிஞ்சி செய்யணும்- நல்லாத்

    தெரிஞ்சி செய்யணும்..

     

    ஊதியம் பெருசாக் கெடைக்குமுண்ணு

    எதிர்பாத்தே குடுத்து

    கையில இருக்கிற மொதலயெல்லாம்

    எழந்து

    தவுச்சி நிக்கமாட்டான்

    அறிவுள்ள எவனும்..

     

    அதால

    தெரிஞ்சி செய்யணும்- எதயும்

    தெரிஞ்சி செய்யணும்- நல்லாத்

    தெரிஞ்சி செய்யணும்…!

     

    செண்பக ஜெகதீசன்…

    Share
  • நூல்மதிப்புரை – செம்மொழிச் சிந்தனைகள்

    -மதிப்புரையாளர் – ந.முத்துமணி

    நூலாசிரியர் – முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை
    வெளியீடு –  பல்லவி பதிப்பகம்
    194, கண்ணா வணிக வளாகம்,
    2-வது தளம்,
    மேட்டூர் சாலை, ஈரோடு – 638011.
    தொலைபேசி : 0424 – 2263197, 94422 51549                                                        இணையதளம்: www.pallavinetworks.in
    மின்னஞ்சல் : pavaisentamizh17@gmail.com
    பக்கம் : 112 விலை : ரூ. 75

    நூலாசிரியர் சங்க இலக்கியத்தின் பதினாறு முத்துக்களைக் கோத்து செம்மொழிச் சிந்தனைகள் என்ற மாலையைத் தந்திருக்கிறார். ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதனால் மட்டும் உலகம் பயன்பெறாது; அவர்களுடைய ஆய்வு மற்றவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் ஆய்வுச் சிந்தனையானது பரவும் என்னும் நோக்கத்தால் தனது பதினாறு ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.

    சங்க இலக்கியங்கள் தமிழர் வாழ்வின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்துவன. ஓரினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், வாழ்க்கைநெறி ஆகிய ஒவ்வொன்றிலும் சிறந்து விளங்கியமைக்குச் சான்றாகத் திகழ்வன. இத்தகைய சிறப்பைச் சங்க இலக்கியங்கள் பெறுவதற்குக் காரணம் சங்கப் புலவர்களின் புலமையாகும். இவர்கள் புலமையால் மட்டும் சிறப்புப் பெற்றவர்கள் இல்லை, மிகச் சிறந்த மனித நேயத்தைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு விளங்கியவர்கள் என்பதை ஆசிரியரின் சங்கப் புலவர்களின் மனித நேயம் என்ற முதல் கட்டுரை விளக்குகிறது.

    ஆநிரை மேய்க்கும் தன் தந்தையின் பசு ஒன்று பயிரை மேய்ந்ததால், அவரின் கண்ணைப் பிடுங்கித் தண்டனை கொடுத்த கோசரை, அன்னிமிஞிலி என்ற பெண் உணவு உண்ணாமல், தலையை வாரி முடியாமல், தூய உடை உடுத்தாமல் வஞ்சினம் கூறி அரசரை அழித்து வெற்றி பெறுகிறாள். பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும், பெண்கள் தம் உரிமைக்காக வெகுண்டெழுவார்கள் என்பதையும், சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள் என்ற கட்டுரை விளக்குகிறது.

    தந்தையைக் கூற்றுக்கு உரிமையில்லா மாந்தர்களில் ஒருவராகத் தொல்காப்பியம் சுட்டுகிறது. எனினும் தந்தை என்னும் சொல்லாட்சி தலைவன், தலைவி, தோழி, செவிலி ஆகியோரின் கூற்றுக்களில் (அறுபது இடங்களில்) இடம் பெற்றுள்ளன. தன் மகள் சூடிக் கொள்வதற்காகப் பூத்தொடுத்துக் கொடுத்த தந்தை, தன் மகளைப் பெண் கேட்டுவந்தவன் மன்னனாக இருந்த போதும் நலம் குன்றியிருப்பதால் அவனுக்கு கொடுக்க மறுக்கும் தந்தை என தந்தை மகள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தமையை, ஒரு கட்டுரை விளக்குகின்றது. செவிலியே தலைவியிடம் மிகவும் அன்பு கொண்டவள் என்ற நிலையை மறுபரிசீலனை செய்வதாக தந்தை மகள் மீது கொண்ட அன்பின் நிலையை நூலாசிரியர் சங்ககாலக் குடும்ப அமைப்பில் தந்தை – மகள் உறவுநிலை என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

    தொல்காப்பியம் சுட்டாத வீடுபேறு என்னும் கோட்பாடு சுவர்க்கம் என்றும், புத்தேள் நாடு என்றும் சங்க இலக்கியத்தில் தோற்றம் பெற்றுள்ளமை புத்தேள் நாடு என்ற கட்டுரையில் விளக்கப்பெற்றுள்ளது. வடவரால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட இக்கொள்கை தமிழக அரசர்கள், மக்கள் ஆகியோரிடம் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியமை, பக்தி இயக்கம் காலத்தில் இது சமய நெறியாகக் கைக்கொள்ளப் பெற்றமை போன்றவை விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

    தமிழகத்தை ஆண்ட மன்னர்களுள் பாண்டியர்களும், சோழர்களும் தங்கள் வாழ்நாளைப் போர்களத்திலேயே செலவழிக்க, சேர மன்னர்கள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஆட்டனத்தி ஆகியோர் கலைகளில் சிறந்து கலைஞர்களாக விளங்கியதை சேர மன்னர்களின் பொதுவியல் கூத்து என்ற கட்டுரை விளக்குகிறது.

    சங்க அகப்பாடல்களில் காணப்படும் அரிய கூற்றான சேட்படை என்பது, தலைவியை அடைவது எளிது என்று நினைத்து வந்த தலைவனது நினைவை அஃது அத்துணை எளிதன்று என்று தோன்றும்படித் தோழி கூறுவது ஆகும். இது பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியத்தில் நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகிய நூல்கள் தவிர பிற நூல்களில் இடம் பெறவில்லை என்பதைச் சேட்படை கட்டுரை பதிவு செய்துள்ளது. தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் நன்கு உள்வாங்கியவர்கள் மட்டுமே இது போன்ற அரிய செய்திகளை வெளிப்படுத்த முடியும். இதனை இந்நூலாசிரியர் செய்துள்ளார்.

    பொதுவாக உயிரைவிட மானம் பெரியது என்பதற்கு உதாரணமாக ஒருமயிர் உதிர்ந்து போனாலும் உயிரை விடும் உயிரினம் கவரிமான் என்று  கூறுவார்கள். இதனை ஆசிரியர் கவரி என்பது மானா? என்னும் கட்டுரையில் கவரி என்பது இமயமலையில் பனிசூழ்ந்த இடங்களில் வாழும் ஒரு விலங்கு, இது மானின் ஒரு வகை அல்ல. குளிர் பகுதியில் வாழும் அவ்விலங்கு மயிர் நீப்பின் உயிர் வாழ இயலாது என்பது கருதியே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார் என்று சான்றுடன் விளக்கியுள்ளார். இது தமிழக வரலாற்றிலேயே ஓர் அதிர்ச்சியான செய்தியாகும். ஏனென்றால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக கவரி என்பதை மான் என்று கருதி வந்த, வருகின்ற தமிழ்ச் சமூகத்தில் அது மானல்ல என்பதைக் கண்டறிந்து சான்றுகளுடன் நிறுவியுள்ளமை ஆய்வாளரின் ஆராய்ச்சித் திறமைக்குத் தக்க சான்றாகும்.

    செம்மொழிச் சிந்தனைகள் என்னும் இந்நூல் சங்க இலக்கியத்தில் உள்ள அரிய தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இந்நூல் போன்ற படைப்புகள் இன்னும் வெளிவர வேண்டும். இந்நூலின் சிறப்புக்கருதி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு  இந்நூல் பாடநூலாக வைத்துள்ளது சுட்டுதற்குரியது.       

    *****

    மதிப்புரையாளர் – முனைவா்பட்ட ஆய்வாளர்
    தமிழ்ப்பண்பாட்டு மையம்
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி-3
    கைபேசி – 9843022495

     

    Share
  • தனியாக எரிகிறது

    விஜயகுமார் வேல்முருகன்

     

    இன்று ஏதோ ஒரு வித்தியாசமாகத்தான் இருந்தது சுடுகாடு.. வாசல் முழுதும் எக்கச்சக்க பூக்கள் நான்கைந்து பிணங்களின் வருகைப்போல..

    தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனுங்கூட வந்திருந்தார்கள்..

    இரண்டு தகன மேடைகளும் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்க..

    அவரவர் உறவினர்கள் அருகருகே.. தாத்தா வேர்வை மழையில் நனைந்திருந்தார்.. தகன மேடைக்கு சற்றுத்தள்ளி.. அடுத்தடுத்த இரண்டு குழிகள்..

    தாத்தாவின் மகன் ஒரு குழியிலும், பேரன் ஒரு குழியிலும் ‘சாங்கியங்களை’ முடித்துக்கொண்டிருந்தனர்..

    வியப்பாக இருந்த குமாரின் முகத்தை பார்த்து,
    வியர்வையை துடைத்தப்படி தாத்தா சிறு புன்னகை மட்டும் செய்ய சற்று தள்ளி நின்றான் குமார்..

    நேரம் ஆக ஆக.. கூட்டம் குறைய தொடங்கியது..

    அப்பொழுது “என்ன கொமாரு இங்க நிக்கிற?” என்ற குரலை கேட்டு திரும்பியவனை நோக்கி ஊர்த்தலைவர் வர.. “இங்க எதுக்குங்க தலைவரே வருவாங்க?” என்று குறும்பு சிரிப்போட கேக்க..

    “ஹா ஹா ஹா.. அதானே.. செத்தவன கொண்டுவந்து போடத்தானே வருவோம்.. சரிசரி.. கொமாரே .. கோடாங்கி அம்மா பொணத்த எரிச்சிபுட்டு கணக்கு பாக்க கிளம்புறோம்” என்று சொல்லியபடி, சாங்கிய மண்டபத்தை பார்த்து தலைவர் போக.. அவர் பின்னாடியே பறை அடிச்சவர், சங்கு ஊதி, இன்னும் சிலர் போனார்கள்..

    தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனும் கூட கிளம்பி விட்டார்கள்.. நன்றாக இருட்டி விட்டது..

    தாந்தட்டி தாத்தாவும் பானையிலிருந்த தண்ணீரை குடித்துவிட்டு “வா தம்பி கொமாரு” என அழைக்க..

    “என்ன தாத்தா இன்னைக்கி செம்ம வேட்டைப்போல” என குமார் கேட்டபடி நடந்து எதிலேயோ இடறிப்போய் விழப்போக “ஆத்தாடி.. கொமாரு” னு பதறிப்போய் தாத்தா அவனைத் தாங்கிப் பிடிக்க..

    கீழே பார்த்தால் ஓலை பாடையி்ல் ஒரு பிணம்..

    “என்னங்க தாத்தா.. இங்க ஒரு சடலம் இருக்கு? இதுக்கு யாரும் சொந்தக்காரவங்க இல்லையா?”

    “தம்பி அது யாருன்னு தெரியுதா? நல்லா உத்துப்பாருங்க” என்று சொல்லியபடியே தாத்தா தீப்பந்தத்தை எடுத்துக்காட்ட…

    “இவர எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே.. ஆஆஆஆங்.. வட்டிக்கட ஆனந்தன் தானே இவரு?..”குமார் கேட்க

    ” அநியாய வட்டி ஆனந்தன்னு சொல்லு தம்பி.. இவன் ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா.. கொஞ்சங்கூட இரக்கமே இல்லாதவன்.. வட்டிக்கு வட்டிப்போட்டு அதுபோட்ட குட்டிக்கும் வட்டிப்போட்டு எத்தன குடும்பங்கள நடுத்தெருவுக்கு தள்ளுனான் தெரியுமா..”

    “அப்படியா தாத்தா.. இவருக்கு கொழந்தைங்க இல்லைல?”

    “ஆமாந்தம்பி.. இல்லாத வரைக்கும் சந்தோசம் தம்பி.. இல்லைனா இவன் செஞ்ச பாவம் பூரா அதுங்க தலைல விழுந்திருக்கும்.. இவனோட சம்சாரம் நல்ல குணவதி.. பாவி அடிச்சி அடிச்சே பைத்தியமாக்கிட்டான்.. ஊருக்கு ஒரு கூத்தியா வச்சிருந்தும் ஒன்னுக்குக்கூட புள்ளைங்களே இல்லை தம்பி..

    உங்க தெருவுக்கு ரெண்டு தெரு தள்ளி மேற்கு தெரு இருக்கே அதுல ஒரு பெரிய மாடி வீடு இருக்கே தெரியுமா?”

    “ஆமாங்க தாத்தா.. ‘ஆனந்தம் இல்லம்’னு போட்டிருக்குமே அதானே?”

    “ம்ம்ம்.. அதேதான்..அது ஒன்னும் இவன் சொந்தமா கட்டுன வீடு இல்ல.. ராஜலிங்கம் னு ஒரு வாத்தியார் இருந்தாரு அவரோட வீடு.. ரொம்ப தங்கமான ஆளு”

    “ஆமங்க தாத்தா நான் கூட கேள்விப்பட்டுருக்கேன்.. எங்க பள்ளிக்கூடத்துல தலைமை ஆசிரியரா இருந்தார்னு போடுல எழுதி வச்சிருக்காங்க” குமார் சொல்ல..

    “அவரே தாம்பா.. இவன்கிட்ட வட்டிக்கு கடன் வாங்குனாரு.. மாசாமாசம் வட்டிய ஒழுங்கா தான் கொடுத்துட்டு வந்தாரு..

    ஒரு நாளு அசல் திருப்பிகொடுக்க, தன்னோட ஊர்ல இருந்த சொத்த வித்துட்டு வந்து பணத்த வீட்ல வச்சிருந்தாரு.. அத கேள்விபட்ட இவன் கூட்டாளிகளோட போயி அவர் வீட்ல வச்சிருந்த பணத்தை திருடியிருக்கான்..

    அத வாத்தியாரோட சம்சாரம் பாத்துட்டாங்க, அவங்கள கழுத்தை நெரிச்சி கொன்னுபுட்டான்.. அந்த நேரத்துக்கு வாத்தியாரோட பையன் வர அவனையும் கத்தியால குத்தி கொலை செஞ்சிருக்கான்.. இத பார்த்த்த அவங்க வீட்ல வேலை செஞ்சவன் ஓடிப்போயி போலீஸ்ட்ட சொல்ல.. இவன கைது செய்ய வந்தாங்க..

    கூட்டாளிகள்ல ஒருத்தன மாட்ட விட்டுட்டு இவன் தப்பிச்சுட்டான் தம்பி.. அப்பறமா .. வெளியே போயிட்டு வந்த வாத்தியாரு பொண்டாட்டி, புள்ளையும் செத்துக் கிடந்தத பாத்துட்டு நெஞ்சு வலி வந்து அவரும் செத்துபோய்ட்டாரு..

    அந்த மூனு பேரையும் அதோ அந்த எட்டி மரத்து பக்கத்துல தான் புதைச்சேன் தம்பி.. ம்ம்ம்..” என்று பெருமூச்சு விட்டார் தாத்தா..

    குமார் தாத்தாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

    “ஊர்ல இருக்குறவங்க எல்லாரோடைய வயித்தெரிச்சலையும் கொட்டிகிட்டான்..

    கடைசியில புத்து நோய் வந்து முத்திப்போயி கூட இருந்த கூட்டாளிகளும் கைவிட்டுட்டு போயிட்டாங்க.. ஒரு சொந்த பந்தமும் கிடையாது .. இப்ப அனாதையா செத்துப்போயி.. ஊர்க்கார பெரியவங்க தூக்கிஇ வந்து போட்டுட்டு செய்யிறத செய்யினு பணத்தக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க.. இதாந்தம்பி இவனோட வாழ்க்க முடிவு” என்று சொல்லியபடி மூன்றாவது தகன மேடையில் விறகு கட்டைகளை அடுக்க, கூட குமாரும் உதவியபடி..

    கடைசியில் ஆனந்தனின் சடலத்தை தாத்தா , ஒரு குழந்தையை போல தூக்க, உதவ போன குமாரை “வேண்டாம் தம்பி.. நானே தூக்கி வச்சுடுறேன்” என்று விறகுகள் மீது வைத்து வரட்டிகளை அடுக்கி, மேலேயும் பக்கவாட்டிலும் களிமண் போட்டு மூடி ஆங்காங்கே சிறு ஓட்டைகளை போட்டு வைத்தார்..

    “யேன் தாத்தா இவருக்கு மட்டும் இப்படி செய்யுறீங்க” என்று குமார் கேக்க..

    “தம்பி.. இவன் புத்துநோய்ல செத்தவன்.. அப்படியே விறகு மட்டும் வச்சு எரிச்சோம்னா சாகாத விச கிருமிகள் காத்துல கலந்து போயிடும்..

    பக்கத்துல ஏதாவது உடம்பு முடியாத ஆளுக இருந்தாங்கனா அவங்கள தாக்கிடும்.. அதான் களிமண்ணுல ஊமத்தம், ஆமணக்கு இலைகள குளைச்சி பூசிட்டு எரிச்சோம்னா எந்த விசகிருமிகளும் வெளியேறாது” என்று சொல்லியபடி ஓட்டைகள் வழியே கற்பூரங்களை கொளுத்திப்போட.. சிறிது நேரத்தில் அனைத்து ஒட்டைகள் வழியாகவும் புகை வர உள்ளே பிணம் கொளுந்துவிட்டு எரியும் சப்தம் கேட்டது..

    “அநியாய வட்டி ஆனந்தன் கொஞ்ச நேரத்துல சாம்பலாயிடுவான்.. நாம அப்படி போய்டுவோம் தம்பி” என்று சொல்லியபடி தாத்தாவும், குமாரும் வெட்டியான் தாத்தா குடிசை நோக்கி நடந்தார்கள்.

    தனியாக எரிந்துக்கொண்டிருக்கிறது அநியாய வட்டி ஆனந்தனின் பிணம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    091201 New Forever -A4 icam lr

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….!

    ”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
    (எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
    உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

    முரளி -வேணுகானம்….

    Share
  • கடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது

    Posted on November 3, 2018

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++

    சூரிய மின்சக்தி சேமிக்க,
    நூறு மெகாவாட் பேராற்றல் உடைய
    ஓரரும் பெரும் மின்கலம்
    தாரணியில் உருவாகி விட்டது
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    பசுமைப் புரட்சிச் சாதனையாய்
    சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! 
    மீள்சுழற்சிக் கனல்சக்தி !
    பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்
    பிரபஞ்சக் கொடை வளமாய்
    தரணிக்கு வற்றாத அளவில் 
    வாரி வாரி அளிக்கும் மின்சக்தி !                                                          

    கடல் நீரைக் குடி நீராக்கின்
    குடிநீருக்கும் பஞ்ச மில்லை ! 

    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரி வாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் உதித்தது !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி அளிக்கும் !
    ஒற்றை விமானி ஓட்டுவது !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்கள் தொடர்ந்து பறந்து
    அட்லாண்டிக் கடலைக் கடந்து,
    அகில உலகினைச் சுற்றி இறங்கியது !
    நூறாண்டுக்கு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    See the source image

    சூழ்வெளித் தூய பசுமைப் புரட்சி மீள்சுழற்சி எரிசக்தி வளங்கள்

    சூரியனின் கதிர்க்கனலும், கடலின் அலை ஆற்றலும் உள்ளவரை உலக மானிடருக்கு எரிசக்தி தேவைக்கும், குடிநீர் உற்பத்திச் செழுமைக்கும் பஞ்சம் ஏற்படாது.  பெருமளவில் கதிர்ச்சக்தியில் மின்சாரம் எடுத்துச் சேமிப்பதிலும், கடல்நீரில் உப்பு நீக்கிக் குடிநீர் ஆக்குவதிலும் சவாலான தேவைகள் உள்ளன.  முதற்கண் அவற்றுக்கு பொறியியல் நுணுக்கமும், மலிவான, மின்சார /  யந்திர சாதனங்களும் தேவை.  சாதனங்களை விற்கும்  வணிக பூர்வமான தொழிற் துறை அமைப்புகள் தேவை.  சூரியக் கதிர்க் கனல் மின்சக்திச் சாதங்கள்  இப்போது கிடைக்கின்றன.  ஆனால் மலிவாகக் கடல் அலை அடிப்புகள் ஆற்றல் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுணுக்கம் மேலை நாடுகளில் துவக்கம் ஆனது போல், முப்புறம் கடல் சூழ்ந்த இந்தியாவில் இதுவரை ஆரம்பமாக வில்லை.  கடற்கரை ஊர்களில் மின்சக்தி உற்பத்தி செய்யவும், உப்பு நீக்கி  குடிநீர் தயாரிக்கவும், இப்போது நம் கைவசம் திறமை இருந்தும், பயன்படாமல் காத்திருப்பது கடல் அலை அடிப்புகள்.

    ++++++++++++++++++++++
    +++++++++++++++++++
    See the source image
     
     
    உலக நாடுகளில் உள்ள கடல் அலை அடிப்பு ஆற்றல் நிலையங்கள்.
    கடல் அலை அடிப்பு ஆற்றல் பண்ணைகள் [Wave Forms]  விரல் விட்டு எண்ணும் வகையில் 2018 இல் இருப்பவை : நான்கு. பிரிட்டன், போர்ச்சுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா.  முதன் முதலில் 2000 ஆண்டு தேசீய மின்வட இணைப்பில் [National Power Grid] மின்சாரம் அனுப்பியது பிரிட்டன்.  2007 பிப்ரவரியில் 3 மெகாவாட் சிற்றளவு கடல் அலை அடிப்பு நிலையம் 4 மில்லியன் பவுண்ட் [5.2 மில்லியன் டாலர் ] செலவில் ஸ்காட்லாண்டில்  அனுமதி பெற்றது.  பிறகு கார்ன்வாலில் [இங்கிலாந்து]  20 மெகாவாட் நிலையம் நிறுவகமானது.  பிறகு அது 40 மெகாவாட் ஆற்றல் பெருகும் நிலை பெற்றது.
    See the source image
    போர்ச்சுகள் நாட்டில் 2008 இல் 2.25 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் இயங்கத் துவங்கியது.  ஆஸ்திரேலியாவில் 19 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் AU$ 66.5 மில்லியன் செலவில் 2015 ஆண்டுகளில்  இயங்க ஆரம்பித்தது.  அமெரிக்கா வில் முதன் முதலில் 45 டன் கடல் அலை ஆற்றல் மாற்றி நிறுவகம் [45 ton Wave Energy Converter] ஆனது.
    2016 அறிக்கைப்படி, அமரிக்க நாட்டின் இருபுறக் கடல் அலை அடிப்பு ஆற்றல் அளவு எதிர்பார்ப்பு, ஆண்டுக்கு  2640 டெராவாட் ஹவர்ஸ்  [terawatt-hours].  [one terawatt = 10^ 12 watts =[1000 gegawatts].  அதாவது 1 terawatt-hour மின்சார ஆற்றல் 93,000 அமெரிக்க வீடு களுக்கு ஓராண்டு பரிமாறும்.
    கடல் அலை ஆற்றல் உற்பத்தி செய்வது எளிதாகத் தெரிந்தாலும்  அவற்றை அமைப்பதிலும் சிக்கல்கள், இடர்ப்பாடுகள் உள்ளன,  கடல் அலை அடிப்புகள், கடல் அலை உயர்ச்சிகள் [Waves & Tides] சூரிய – சந்திர நகர்ச்சிக்கு ஏற்ப அனுதினம் மாறுபவை.  உப்புக் கடல் நீர் தீவிரமாய் உலோகங்களில் துரு ஏற்றுவது.  பருவ நிலை மாறுபாட்டில், ஆண்டு தோறும் சூறாவளி, பெருமழை, சுனாமி, ஹர்ரிக்கேன் தாக்கிப் பேரிடர்  விளைவிப்பவை.

    World’s Largest Lithium Ion Battery Banks

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலி யாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலி யாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    Image result for Lithium Ion Research

    Image result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

     

    Image result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw battery

    Image result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel Cell

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Image result for Lithium Ion Research

    2.  https://www.boem.gov/Renewable-Energy-Program/Renewable-Energy-Guide/Ocean-Wave-Energy.aspx

    3.  https://www.machinedesign.com/archive/electricity-ocean-waves

    4. https://gineersnow.com/industries/marine/tidal-energy-using-ocean-waves-new-source-electric-power

    4. http://www.solardaily.com/reports/Modelling_a_future_fuelled_by_sustainable_energy_999.html  [October 31, 2018]

    5.  http://www.terradaily.com/reports/New_technologies_in_the_ocean_energy_sector_999.html  [October 31, 2018]

    6.  https://en.wikipedia.org/wiki/Wave_power  [October 19, 2018]

    7.  https://scitechdaily.com/floating-power-buoy-creates-electricity-from-ocean-waves/  [November 2, 2018]

    +++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  [November 3, 2018]  [R-2]

    Posted in கனல்சக்திசூழ்வெளிப் பாதிப்புபொறியியல்மின்சக்திவிஞ்ஞானம் Leave a reply

    Attachments area

    Preview YouTube video Ocean Power Plant Generates Energy From Waves – Unlimited Cheap Clean Electricity

    Preview YouTube video Wave Power

    Preview YouTube video Many Ways To Make Electricity From Ocean Kinetic Wave Energy – Zero Emissions

    Preview YouTube video Ocean Wave Energy Sustainability Using Ocean Waves To Generate Electricity

    Preview YouTube video Ocean Waves Could Power Homes

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181103 Krishna philharmonic – indian ink – microtip- A4 100 dpi

    மாட்டுக்குக் கால்களைக் காட்டாது கண்ணன்தன்
    பாட்டுக்குத் தட்டல் தபேலாவை: -கோட்டுக்குள்
    போட்டதற்கு இந்தியன்இன்க் பூசிய கேசவ்கை
    போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….கிரேசி மோகன்….

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! – சிறப்புக் கட்டுரை!

    கட்டுரையாளர், பேரா. நாகராசன் அவர்கள் சென்னைப் பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளாக பல மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்கியுள்ள  ஆகச்சிறந்த ஆய்வறிஞர். தமது நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை ஆய்வாளர்களின் தெளிவான சிந்தையை ஊக்குவிக்கும் வகையில் மிக செம்மையாக வழங்கியுள்ளார். பேராசிரியர் ஆழ்ந்த அனுபவ ஞானம் பெற்ற வரலாறை அவர்தம் மொழியாகவே இங்கு காணலாம்..

    ஆசிரியர்

     

    1. இணையமும் காப்புரிமையும்

     

    காப்புரிமைச் சட்டம் என்பது அச்சு ஊடகப் படைப்புகளுக்காக, படைப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு சட்டப் பாதுகாப்பு. ஒரு படைப்பாளனின் எழுத்துவடிவில் உருவான புதிய கருத்தை மற்றவர்கள் திருடி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்க இந்த காப்புரிமை பயன்பட்டது.

    காப்புரிமை பற்றிய சரியான தகவல் ஆங்கிலத்தில் கீழே காணவும்:

    According to The Indian Copyright Act, 1957 (Chapter V Section 25), Anonymous works, photographs, cinematographic works, sound recordings, government works, and works of corporate authorship or of international organizations enter the public domain 60 years after the date on which they were first published, counted from the beginning of the following calendar year (ie. as of 2018, works published prior to 1 January 1958 are considered public domain). Posthumous works (other than those above) enter the public domain after 60 years from publication date. Any other kind of work enters the public domain 60 years after the author’s death. Text of laws, judicial opinions, and other government reports are free from copyright. Photographs created before 1958 are in the public domain 50 years after creation, as per the Copyright Act 1911.

    இந்த சட்ட சரத்தின்படி 1958 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அச்சு ஊடகப் பதிப்புகள் பொது வெளியில் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற உரிமையுடன் விளங்குவதைக் காணலாம். இந்த சரத்து அச்சில் வெளியானத் தகவல் மற்றும் செய்திகளுக்கு மட்டும் பொருந்தும்.

    இணைய வெளியில் வெளியாகும் எழுத்து, ஒலி, ஒளி மற்றும் புகைப்படச் செய்திகள் ஆகியவற்றின் தகவல்கள், மற்றவர்கள் எடுத்துக் கையாளப்படுவதைத் தடை செய்யும் வகையில் அமையவில்லை. இணையம் ஒரு பொது வெளி அங்கு பதியப்படும் கருத்துகளைப் பாதுகாக்க டிஜிட்டல் மேனேஜ்மென்ட் ரைட்ஸ் என்ற பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொள்வதே தற்காப்புக்கான வழி.

    இணையவெளி இணைய வழி ஆய்வுக் கட்டுரைகள் இணையத்தில் கிட்டும் எண்ணிம வடிவில் உள்ள ஆவணங்களையும் கருவூலங்களையும் மேற்கோள் காட்டுவதில் காப்புரிமைச் சட்டம் தலையிட வாய்ப்பில்லை எனலாம்.

    தமிழர்களின் தொல்லியல், மரபியல் சமூகவியல் மற்றும் வாழ்வியல் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் இணைய வெளியில் உள்ளன. அவை அனைத்தும் காப்புரிமைச் சரத்துக்குள் வராத ஆவணங்கள். எனவே அவற்றைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை.

    எந்தவிதமான தனிப் படைப்பும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பொது வெளியில் கட்டற்ற பயன்பாட்டுக்கு உரியதாக உரிமை பெற்றுவிடும். ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதும்போது எது தன் சொந்தக் கருத்து சொந்த எழுத்து என்பதை நிறுவ, தான் ஆதாரமாக மேற்கோள் காட்டிய ஆவணங்கள் பற்றிய குறிப்பை வெளியிடுவது முறையானது. கட்டுரையின் உள்ளே அடிக்குறிப்புகளாகவும் கட்டுரையின் இறுதியில் ஆதார ஆவணக் குறிப்புப் பட்டியலாகவும் கட்டாயம் குறிப்பு எழுத வேண்டும்.

    இணையத்தில் அவ்வாறு அளிக்கப்படும் தொகுப்பு வெப்ளியோகிராஃபி என்றழைக்கப்படும். இணையத்தில் எங்கு காணக்கிடைக்கும் என்ற உசாத்துணையுடன் இணையத்தில் தேடிய நாள் பற்றிய குறிப்பையும் இட வேண்டும். இது தொடர்பான மேலதிகத் தகவல் இணையத்தில் அமெரிக்கன் சைக்காலஜிகள் அசோசியேஷன் இணையதளத்தில் ஆவணமாகக் கிடைக்கும் அதைத் தரவிறக்கிப் பயன்படுத்த வேண்டும்.

     

    2. அறிதலும் ஆய்வும்

     

    அறிதல் நால்வகைப்படும். அவையாவன:

    1 முன்னோர்களின் தொன்று தொட்டு பின்பற்றப்பட்ட பழக்க வழக்கம்
    2. சான்றோர்களின் காலத்தால் அழிக்க முடியாத சிந்தனைகள்
    3. உள் மனதில் உருவாகும் எண்ணங்களின் வெளிப்பாடுகள்
    4. அறிவியல் கருத்து வளங்கள்

    மேலை நாட்டினர் அறிவியல் மூலம் நிறுவப்படும் கருத்துகளை, தரம் மிக்க நம்பகத்தன்மை மிக்க தகவல் களஞ்சியம் என்று கருதுகின்றனர். வெறுப்பு விருப்பின்றி சுயச் சார்பில்லாமல் சுற்றுச் சூழலில் உள்ள நிகழ்வுகளைத் தரவுகளாகத் திரட்டி அலசி ஆய்வதே அறிதலின் நோக்கம் என்று அவர்கள் கருதுகின்றனர். மேலே சுட்டப்பட்ட மற்ற மூன்று அறிதல் முறைகளும் ஏற்புடையதல்ல என்பது அவர்களின் தீர்க்கமான முடிவு.

    ஆனால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்த வாழ்வியலையும் மரபுகளையும் வாய் மொழியாகவும் இலக்கியமாகவும் படைத்துள்ளனர், அவற்றில் ஏராளமான கருத்துக் குவியல்கள் நிறைந்துள்ளன.

    அந்தக் கருத்து வளங்கள் இணைய வெளியில் எழுத்து வடிவிலும் ஒலி ஒளி மற்றும் காணொளி வடிவிலும் தரவுகளாகக் கிடைக்கின்றன. பல்லூடக வடிவில் பொதுக் கருத்தாக பரவியுள்ள அந்தத் தரவுகளை அறிதல், ஆய்வின் முதல் நோக்கமாகும்

    ஏட்டில் எழுதாக் கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து என்று எழுத்து வடிவுக்கு அப்பால் உள்ள தகவல்களை ஆய்வு செய்து ஆய்வுக் கருத்துகளை வெளியிடுவதே இணைய ஆய்விதழ்களின் கடமையாகும்

    முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் அச்சில் பதிவிடாமல் வாய்மொழியாக சீர் சடங்கு பாரம்பரியம் என்று தொன்று தொட்டுத் தொடரும் வழக்கங்களை இணைய வெளியில் தேடுவதும் தொகுப்பதும் இணைய ஆய்வாளர்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

    ஆவி வழிபாடு முன்னோர்களைப் போற்றும் வீர வணக்கம் உள்ளத்துள் உருவாகும் வழிபாட்டுச் சிந்தனைகளின் வெளிப்பாடு என மேலை நாட்டு அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்து வளங்கள் தமிழில் நிறைந்துள்ளன. அவை எல்லாம் இணைய ஆவணங்களாக எண்ணிம வடிவில் உள்ளன.

    உயர் கல்வியில் ஆய்வுத் துறை வளர்ச்சிக்கு தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலை ஆங்கிலம் மற்றும் சமஸ்கிரிதம் மட்டுமே ஆய்வுக்குரிய மொழிகள் என்று தீர்மானித்து தமிழ் மொழி ஆய்வுக்குகந்த மொழி அல்ல என்றும் அம்மொழியில் ஆய்வும் அறிவியலும் படைக்க வழி இல்லை என்றும் கருதியது. கீழ்த்திசை ஆய்வுகளுக்கு என்று ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்தபோதும் உலகச் செம்மொழிகள் பற்றிய ஆய்வு அங்கே நடந்தாலும் தமிழுக்கு இடம் இல்லை என்ற நிலை நீடித்தது.

    பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை என்ற நிலை ஒரு ஆங்கிலேயப் போர் வீரனின் விதவை தமிழுக்கு என்று கொடுத்த கொடையைக் கொண்டே அமைக்கப்பட்டது. படிப்படியாக பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு முனைவர் பட்டப்படிப்பு என்று தமிழ் முன்னேறினாலும் தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று பல்கலைக்கழக விதி வலியுறுத்தியது.

    தமிழில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கான உலகத் தரம் வாய்ந்த ஆய்வு இதழ்கள் தமிழகத்தில் செயல்படவில்லை. தமிழ் ஆய்வாளர்களுக்கு ஆங்கிலப்புலமை இல்லாமையால் உலக அளவிலான உயர்வான ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட இயலவில்லை.

    இன்றைய நிலையில் இணைய ஆய்விதழ்கள் அச்சு மட்டும் அல்லாது பல்லூடக வடிவில் வளங்களைத் திரட்டியும் தொகுத்தும் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட வாய்ப்பளிப்பது பெருமைக்குரியதாகும். தமிழ் ஆய்வுகள் தமிழில் இணைய வெளியில் வெளியிடுவதன் மூலம் தமிழர்களின் அறிவுப்புலம் உலக அளவில் பரவுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

    மேலை நாட்டு ஆய்வுப்பார்வை என்று தமிழ் ஆய்வைச் சுருக்கிக் கொள்ளாமல் தமிழ் ஆய்வாளர்கள் தமிழர்களின் முழுமையான அறிவுப்புலத்தை ஆய்வுலகத்துக்கு எடுத்துச் செல்ல இயலும்.

     

    3. சட்ட வரைவும் கட்டமைப்பும்

     

    ஆய்வுப் பணி என்பது ஒரு திட்டமிட்ட செயல். அறிவுலகம் எண்ணற்ற தகவல்களை அன்றாடம் உருவாக்கி அவற்றைப் புலங்களாகப் பகுத்துத் தொகுத்துவரும் நிலையில் முதலில் ஆய்வு எந்தப் புலத்தில் / புலங்களில் மேற்கொள்ள வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

    தமிழ் ஆய்வுகள் வரலாறு மற்றும் சமூகவியல் சார்ந்து அமைவது பொருத்தமாக இருக்கும். ஆய்வாளர் இந்தப் புலங்களில் அதுவரை நிகழ்ந்த ஆய்வுகளின் தொகுப்பை அலசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட தலைப்புகளையும் ஆய்வுக்குப் பயன்பட்ட ஆய்வு முறைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

    வரலாற்று ஆய்வுகள் காலப் பாகுபாட்டு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டும் தேர்வு செய்து ஆய்வு அக்காலகட்டத்துள் அமைவதாக இருக்க வேண்டும். மேலைநாட்டு நிகழ்வுகள் நீண்ட தொடராக நேர்கோட்டுப் பாதையில் அமைந்துள்ளதுபோல் தமிழக வரலாறு அமையவில்லை. அறுபதாண்டுக்கு ஒரு முறை சுழலும் சக்கர வடிவிலான வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்து கால நிர்ணயம் செய்வது எளிதான காரியம் அல்ல. எனினும் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் பல காலகட்டத்தை நிறுவியுள்ளனர். ஒவ்வொரு ஆய்வாளரும் அவர்கள் அனுமானத்திற்கேற்ப வரலாற்று நிகழ்வுகளின் காலத்தை நிறுவியுள்ளனர். அதன் காரணமாகவே சங்க காலம் என்பது கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரை குறிப்பிடப்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆய்வாளர் தன் ஆய்வுக்குரிய காலம் என்ன என்பதையும் அக்காலகட்டம் எந்த ஆய்வாளரின் காலப்பகுப்புக்கு உட்பட்டது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புக்குத் தொடர்பான அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கான ஆவணங்களை ஆய்வாளர் முதலில் திரட்ட வேண்டும். ஆவணங்கள் பல வடிவங்களிலும் பலதரம் வாய்ந்ததாகவும் இருக்கும். ஆவணங்களின் நம்பகத் தன்மையை உள்ளுறை மற்றும் வெளிப்புற விமர்சனங்கள் மூலம், விலக்குவது விலக்கி நம்பகத் தன்மை மிக்க ஆவணங்களை ஆய்வுக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

    ஆய்வாளர் ஆய்வுக்கான கேள்வியை எழுப்பி ஆவணங்கள் மூலம் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறான கேள்விகள் வழக்கில் நின்று நிலவும் வரலாற்றுத் தகவல்களைத் தகவில என்று நிறுவுவதாக அமைதல் வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வரலாற்று ஆய்வின் அடிப்படை.. சரியான காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் தகவல் புதிய தரவுகளால் தகவில என்று நிறுவுதல் மூலம் தமிழக வரலாற்று நிகழ்வுகளில் உள்ள தொன்மங்களும் புனைவுகளும் பிழைகளும் களையப்படும்.

    இவ்வாறில்லாமல் ஆய்வின் மூலம் ஒரு புதிய தகவலை ஆவணச் சான்று மூலம் நிறுவுதல் அனுமானத்தைத் தோற்றுவிக்கும் ஆய்வாக அமையும். வரலாறு என்பது அரசவை வரலாறாக எழுத்து வடிவில் இருக்கும் தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. அதில் ஆய்வாளர் பார்வையும் கோணமும் உள்ளடங்கி நிற்கும். ஆய்வுப்பொருளாக அமைந்தவர்களில் பார்வையும் கோணமும் அதில் இருப்பதில்லை. வாய்மொழி வரலாறு வரலாற்று நிகழ்வுகளை ஆய்வுப் பொருளானவர்களின் பார்வையில் அவர்கள் கோணத்தில் வெளிப்படுத்துவதாக அமையும்.

    வரலாற்று ஆய்வாளர்கள் சட்ட வரைவில்லாத கட்டமைப்பில்லாத ஆய்வைத் தொடங்கினால் அவர்கள் திக்குத் தெரியாத காட்டில் அலைந்து திரிய வேண்டியதிருக்கும் அவர்களின் ஆய்வு முடிவுகள் சமகால ஆய்வாளர்களின் கழுகுப் பார்வைக்கு இரையாகிவிடும்.

     

    4. சுய சிந்தனையும் அறிவியல் இயக்கமும்

     

    மேலை நாட்டுச் சமூகம் விக்டோரியப் பேரரசியின் ஆட்சிக் காலம் வரை சமய நம்பிக்கைக்குள் சிக்கி மக்கள் அறிவார்ந்த சிந்தனையைப் பயன்படுத்தாமல் மத குருமார்களின் கட்டுக்குள் வாழ்ந்ததை மேலை நாட்டு சமூக வரலாறு படம்பிடித்துக் காட்டும்.. விக்டோரியப் பேரரசியின் காலத்தில் அறிவியல் மறுமலர்ச்சி ஏற்பட்டதை வரலாறு சுட்டும்.

    ஆனால் தமிழர்களின் சமூக வரலாறு முற்றிலும் வேறுபட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த சமுதாயமாக வாழ்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு புறம் ஆவி வழிபாடு முன்னோர் வழிபாடு என்றிருந்தாலும் இன்னொருபுறம் சுய சிந்தனையாலும் பட்டறிவாலும் இயற்கையுடன் இணைந்து வாழும் கலையை உருவாக்கிக் கொண்டு. அச்சுறுத்தும் இயற்கைக்கு அஞ்சாமல் இயற்கையின் சக்தியை வாழ்வின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது.

    காற்றின் திசை வேகம் அலைகளின் போக்கு போன்றவற்றைப் பட்டறிவால் அறிந்து தன்னைச் சுற்றியிருந்த முக்கடல் மூலம் மேற்கிலும் கிழக்கிலும் தன் வணிகத்தைப் பெருக்கிக் கொண்டான் மனிதன். அவைதீக சமயங்களான தமிழ்ச் சமணம் தமிழ் புத்தம் வழியாக முன்னோர் வழிபாட்டுடன் அறிவிற் சிறந்த ஆன்றோர்களின் துணைகொண்டு அருளும் அறிவும் இணக்கமாகச் செயல்படும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான்.

    நீதி நெறியோடு காதல் வீரம் அன்பு அருள் போன்ற நுண்ணிய உள்மனச் சிந்தனைகளுக்கு ஊடக வடிவத்தை உருவாக்கி திறன் வாய்ந்த கலைஞர்கள் மூலம் சமுதாயம் முழுமைக்கும் பரப்புரை செய்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழ்ச் சமுதாயம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக இருக்குமாறு கட்டமைத்துக் கொண்டனர்.

    சுற்றியுள்ள சூழலையும் இயற்கையையும் புறக்கண்ணால் ஆய்ந்து கண்ட காட்சிகளுக்கு வடிவம் கொடுத்தனர். மொழி என்னும் கருவியின் மூலமும் நுண்கலைகள் மூலமும் மனத்தகத்தே நோன்றிய நுண் உணர்வுகளுக்கும் அவனால் வடிவம் கொடுக்க முடிந்தது. இடைக்காலத்தில் வைதீக ஆன்மீகச் சிந்தனைகள் மேலெழுந்து தமிழரின் சுய சிந்தனை மற்றும் பட்டறிவின் வெளிப்பாடுகளை அழுத்தி மறைத்த நிலையில் தமிழர்களின் வரலாறு ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகவே விளங்கியது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலை நாட்டு அறிஞர்களில் சிலர் கிறித்துவக் குருமார்கள் மற்றும் அவர்கள் நடத்திய திருச்சபை மக்களை அறிவுப்பாதையில் முன்னேறவிடாமல் தடுப்பதாகக் கூறி அறிவுப் புரட்சிக்கான இயக்கங்களை உருவாக்கினர். அதை அடியொற்றி சென்னையிலும் அறிஞர்கள் வைதீகச் சமயம் மக்களை இருட்டில் வைக்கும் வேலையில் ஈடுபட்டுத் தமிழன் தன் உண்மை வரலாற்றை அறிந்துகொள்ள விடாமல் தடுக்கிறது என்று ஒரு எதிர்ப்பியக்கத்தை உருவாக்கினர்.
    சுய சிந்தனையாளர் சங்கம் தமிழர்களின் கடந்த காலச் சிறப்பு எவ்வாறு சமய ஆதிக்க சக்திகளால் மறைக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்து தமிழர் சிந்தனை சுய சிந்தனையாக உருவெடுத்து தமிழர்களின் அறிவியல் படைப்புகளை மீட்டெடுக்க வலியுறுத்தினர்.

    மேலை நாட்டு அறிவியல் ஆய்வு முறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து பொருத்தமான ஆய்வு நெறிகள் மூலம் தமிழர்களின் வரலாறு வாழ்வியல் மரபியலை மீட்டெடுக்க வேண்டும்.

    இது தொடர்பான சில உசாத்துணைகள் கீழே காண்க:

    https://keetru.com/index.php/2009-10-07-12-27-44/maatruveli-mar-2014/26890-2014-07-28-11-24-03

    https://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5316513.ece

     

    5. சங்க காலமும் சம காலமும்

     

    தமிழர்கள் பெருமையுடன் குறிக்கும் சங்க காலம் என்ற கருத்துருவில் சங்கம் என்ற சொல் சமணத்தின் தாக்கத்தால் உருவான ஒன்று. சமணர்கள் ஆசிரியர்களாக விளங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனைகளைத் திரட்டியும் பரப்பியும் பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

    செந்தமிழ்நாடு என்றழைக்கப்பட்ட பாண்டிய நாட்டில் அமைந்திருந்த சம கால சம தள சம தகுதி படைத்த சான்றோர்களின் அமைப்பே சங்கம் என்றழைக்கப்பட்டது. தனியர்களின் படைப்புகள் சமூகத்தின் பொதுநிலைக் கருவூலமாக ஏற்றவை என்ற தர நிர்ணயம் இந்த சங்கத்தால் செயல்படுத்தப்பட்டது. ஒரு புதிய படைப்பு சங்கத்தின் முன் வைக்கப்பட்டு அவர்களால் திறனாய்வு செய்யப்பட்டு தரம் மிக்க படைப்புகளைத் தமிழின் கருத்துக் கருவூலங்களாக ஏற்கப்பட்டு மக்களிடையே பரவலாக்கப்பட்டது.

    சமகாலத்தில் அறிவுலகம் இதே முறையைப் பின்பற்றுவதைக் காணலாம். ஒவ்வொரு புலத்துக்கும் என்று அறிவுசால் உறுப்பினர்களைக்கொண்ட சங்கம் இயங்குவதையும் அவை ஆய்விதழ்களை நடத்துவதையும் நாம் காணலாம். சங்க காலத் தமிழ்ச் சங்கம் போன்றே இவர்களும் தனியர்களின் முனைப்பால் உருவான ஆய்வுக் கட்டுரைகளை அத்தளத்தில் புலமையும் சான்றாண்மையும் மிக்கவர்களுக்கு அனுப்பி ஆய்வுக் கட்டுரையின் நிறை குறைகளை அலசி தர நிர்ணயம் செய்யுமாறு வேண்டி அவர்களின் கருத்தின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள்.

    இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை இதுபோன்ற தரமதிப்பீட்டுக்குப்பின் வெளியிடும் ஆய்விதழ்களில் வெளியிடுவதே சிறப்பான ஆய்வு முனைப்பாக அமையும்.

    இணையத் தோற்றம் வளர்ச்சிக்குப்பின் உலகெங்கும் உள்ள சமகால சமதள சம தகுதி வாய்ந்த அறிஞர்களைத் தொடர்புகொள்வது எளிதாக்கப்பட்ட நிலையில் இதழாசிரியர் அல்லது அவரால் நியமனம் பெற்ற ஒரு சிறு குழுவின் முடிவால் ஆய்வுத்தரம் இறுதி செய்யப்படாமல் பரவலாகப் பலரின் உற்று நோக்கலுக்கும் தீர்ந்த முடிவுக்குப் பின்னர் வெளியிடப்படுவது தமிழ் ஆய்வின் தரத்தைப் பல மடங்கு உயர்த்திப்பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

     

    6. கருத்தும் தகவலும்

     

    கருத்து தனியரின் பார்வை. தகவல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வை. ஐம்புலன்களையும் கொண்டு ஐம்பொறிகளாலும் புற உலகைக் காணும்போது கருத்து மனிதனுக்கு மனிதன் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறும் தன்மைகொண்டது. ஒருவரே தன் கருத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் உண்டு. புற உலகை உற்று நோக்கலில் பயிற்சியில்லாத ஐம்பொறிப் பார்வை உண்மைக்கு மாறாகவும் அமைவதுண்டு. நிலவைக் கண்டதும் அல்லி மலர்வதாகக் கவிதை பாடலாம். நிலவு தோன்றாத இரவிலும் அல்லி மலர்வது அறிவுப் பார்வை. கதிரவன் உதிப்பதும் மறைவதும் அன்றாடம் காணும் காட்சி. பூகோளவியல் கதிரவன் எழுவதும் இல்லை மறைவதும் இல்லை என்ற அறிவியல் பார்வையைப் பள்ளிப் பருவத்திலேயே வழங்குகின்றது.

    தனியரின் கருத்துகளை சரி என்றும் தவறென்றும் நிறுவ இயலாது. ஒருவரின் கருத்து தவறு என்று எந்நாளும் நிறுவ இயலாது. கருத்து மாறும் தன்மை கொண்டது. தோற்ற மயக்கமும் காட்சிப் பிழையும் கருத்தில் இருக்கும் நிலையில் விருப்பு வெறுப்பற்ற பயிற்சி பெற்ற ஒருவர் தரவுகளின் அடிப்படையில் முன்வைப்பது தகவல். தகவலை யார் வேண்டுமானாலும் சோதனை செய்து அதன் நம்பகத்தன்மையை நிறுவ முடியும். புதிய தரவுகள் அடிப்படையில் தகவல் தொடர் மாற்றம் பெறும்.

    வழக்கில் உள்ள பல செய்திகளைப் புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவ முடியும். ரோம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பது வரலாற்றுச் செய்தி. வாடிகன் நூலக ஆவணங்களின் தரவுகள் பிடில் என்ற இசைக்கருவி நீரோ மன்னன் காலத்துக்குப் பின்னரே வடிவமைக்கப்பட்டது என்ற தகவலை முன்வைத்து வரலாற்றுச் செய்தி பிழையானது என்று நிறுவியது.

    கருத்துகள் எண்ணற்றவை. ஆனால் மனிதனின் தகவல் கையாளும் சக்தி மிகவும் குறைவானதாகும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது அறிவியல். தேவைக்கு அதிகமான கருத்துகளைச் சுருக்கித் தகவலாக மாற்றுவது ஆய்வாளர்களின் பணி. தனியனின் ஐம்பொறிகளின்மீது சுற்றுச் சூழலின் தாக்கம் மனிதனிடம் எண்ணற்ற கருத்துகளை உருவாக்க வல்லது. கருத்துகளைச் சுருக்கி சரியான செய்திகளைச் சீர்தூக்கி தகவல் ஆய்வாளர்களால் உருவாக்கப்படுகின்றது. திரட்டப்படும் தகவல் தொடரடையாக மாற்றப்பட்டு கோட்பாடுகளாக உருவாக்கப்படும். தொடர்புடைய கோட்பாடுகளின் தொகுப்பு இயற்கையின் செயல்பாடுகளை விளக்கும் விதிகளாக அமைகின்றன.

    ஆய்வாளர்கள் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் செய்திகளை முன்வைத்து தரவுகள் மூலம் அவற்றைத் தகவலாக மாற்றம் செய்கின்றனர். இந்தத் தகவல் தொகுப்பே ஆய்வுமூலம் நிறுவப்படும் தகவல் தளமாக அமையும். புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவப்படாதவரையில் அந்தத் தகவல் நின்று நிலவும். புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவப்பட்டால் அத்தகவல் ஆய்வுலகப் பார்வையிலிருந்து மறையும்.

     

    7. சிந்தனையும் கருத்துருவும்

     

    விலங்கினங்களையும் மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுவது சிந்தனை. விழித்திருக்கும்போதும், கனவுடன் கலந்த உறக்கத்தின் போதும், மனித மனம் இடைவிடாது சிந்திக்கின்றது. அறிதுயிலாயினும் அல்லது நீடு துயிலாயினும் சிந்தனை ஓட்டம் தடைப்படுவதில்லை. ஐம்பொறிகளால் உள்வாங்கப்பட்ட வெளிப்புறச் சமிக்ஞைகளையும் உள் மனத்தில் பெருக்கெடுத்தோடும் நுண்ணிய எண்ணங்களையும் மூளையால் தொடர்ந்து அலசுகின்றது. இந்தச் செயல்பாடு மனிதனை கணக்கற்ற கருத்துகளை உள் வாங்கவும் வெளிப்படுத்தவும் உதவுகிறது.

    அகத்தில் தாக்கம் ஏற்படுத்திய சிந்தனைகள் வார்த்தைகள் மற்றும் பல்லூடக வழியாகப் பரிமாற்றம் செய்ய ஏதுவான சிந்தனைகளை மனிதன் எழுத்தாலும் வாய்மொழியாலும் பரப்புரை செய்கிறான். வார்த்தைகளால் வர்ணிக்கக் கூடிய விளக்கக் கூடிய உள்மனச் சிந்தனைகள் கருத்துருவாக வடிவம் பெறுகிறது. பாசம், பக்தி, அருள் போன்று நுண்ணிய கருத்துருக்களும் புற உலகில் கண்ணால் கண்டு காதால் கேட்டு உய்த்துணரவல்ல ஐம்பொறிகளுக்கு வசப்படும் கருத்துருக்களும் சமூக வெளியில் பரவும்.

    விலங்குகள் அனைத்துக்கும் வாழ்க்கையை நடத்தத் தேவையான அறநெறி நீதி நெறி உண்டு. மீன் இனத்தில் பெரிய மீன் சின்ன மீனை வாயால் கவ்வலாம். ஆனால் சின்ன மீன் பெரிய மீனைக் கவ்வக்கூடாது. பெரிய குரங்கு சிறிய குரங்கைக் கடிக்கலாம்.. ஆனால் சிறிய குரங்கு பெரிய குரங்கைக் கடிக்கக் கூடாது அதுபோல் சேவல் கோழியைத் துரத்திக் கொத்தலாம். ஆனால் கோழி சேவலைக் கொத்தக்கூடாது.

    மனிதன் சிந்தனையால் காலத்துக்குக் காலம் வாழ்வுக்கு அடிப்படையான அறநெறிகளை உருவாக்கிக் கொள்கிறான். அவற்றில் ஒன்று ஆய்வுக்கான அறநெறி. ஆய்வுக்கான அறநெறி – தெரிந்திருப்பது தெரியாமல் இருப்பதைவிட உகந்தது. உனக்குத் தெரிந்ததை மற்றவர்கள் தெரிந்துகொள்ளச் செய் என்பதாகும். தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு கருத்துருக்களை எடுத்துச் சொல்லும்போது கற்றல் நிகழ்கின்றது. ஆசிரியர் மாணவன் குரு சீடன் என்ற உறவும் மலர்கின்றது. மரபணுக்களால் ஒரு தலைமுறையிலிந்து மற்றொரு தலைமுறைக்கு பகிர்மானம் செய்யப்படும் பண்புக் கூறுகளுக்கு அப்பால் மூளையில் இருந்து மற்ற மூலைகளுக்கு பகிரப்படும் கருத்துருக்களின் தொகுப்பு மனிதனை சிந்தனை செய்யும் விலங்காக மாற்றும்.

    வாய்மொழியாகவும் இசை நாடகம் ஆகிய வடிவங்களிலும் ஒரு குழுமத்தின் அறிவு வளங்கள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக பகிரப்படுகின்றது. வாய்மொழிப் பரப்புக்கு தகவலை மூளைக்குள் சேமிக்கும் நினைவுத் திறன் அவசியம். ஒரு லட்சம் வேத மந்திரங்களை அட்சரம் பிசகாமல் ஒப்புவிக்கும் திறன் குருவிடமிருந்து சீடனுக்குச் சென்றடைகிறது. இதன் காரணமாகவே பல்லாயிரயம் ஆண்டுகளுக்கு முன் உருவான வேத வளங்கள் மாற்றம் இன்றி பல தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளது. பாரம்பரியம், பண்பாடு, மரபு போன்றவை குழுக்களில் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பரவிவிருகின்றது.

    குழுக்களாக ஆதிக்குடிகளாக வாழ்ந்த தமிழர்கள் தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு மக்களுக்கு கதை சொல்லல், சிற்பம், ஓவியம், கல்வெட்டு செப்புப் பட்டயம், ஓலைச் சுவடிகள் எனப்பல ஊடகப் பதிப்புச் சாதனங்கள் மூலம் பதிப்பிட்டு வெளியிட்டுள்ளனர். வாய்மொழி வழக்கில் மறைந்து நிற்கும் வளங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்ற்றுக்கு வடிவம் கொடுத்து கால ஓட்டத்தால் மறையாமல் காப்பது ஆய்வின் நோக்கமாகும்.

    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்மொழியாக விளங்கிய வைதீகச் சிந்தனைகளை வியாசர் தொகுத்ததும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தென் தமிழ்நாட்டில் ஆடல் மகளிரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நாயக நாயகிப் பாடல்கள் திராவிட வேதமாகத் தொகுக்கப்பட்டதும் எடுத்துக் காட்டுகளாக அமையும்.

    அகச் சிந்தனைகளாலும் புற வெளியை ஐம்பொறிகளால் தேடுவதாலும் உருவாகும் கருத்துருக்களே ஆய்வுக்கான அடிப்படைக் கருப்பொருளாக அமையும். காலப் போக்கில் கருத்துருக்கள் பெற்ற மாற்றம் புதிய கருத்துருக்களின் தோற்றம் ஆகியவற்றைத் தேடித் தொகுப்பது ஆய்வாளர்கள் பணியாகும்.

    ஒத்த கருத்துக்களை அலசி நிரலிட்டு தொகுத்தால் அவையே கருதுகோளாக வடிவம் பெறும். இணைய வளர்ச்சிக்குப்பின் விக்கிப் பீடியா ஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கத் தேவையான கருதுகோள்களை எளிதில் கிட்டும்வண்ணம் செயல்படுத்திவருகின்றது. அச்சு ஊடகத்துக்கும் இணையத்திற்கும் நிறைய வேறுபாடுள்ளது. இணையம் பொது வெளி. கருத்துகளை வெளியிடத் தடைகள் அதிகம் இல்லை. புத்தக உலகம் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது. ஒரு நூலைப் படைத்து வெளியிடுவது இணையத்தில் எளிது புத்தக உலகில் எளிதல்ல. புத்தகத்தைப் படிப்போர் உடனே விமரிசனம் செய்ய இயலாது ஆசிரியன் படிப்போர் வளையத்துக்கு அப்பாற்பட்டு இருந்து விமரிசனங்களுக்கு அதிகம் அவதிப்படாது தற்காத்துக்கொள்ள முடியும். இணையம் அதற்கு நேர் மாறானது.

    இணையத்தில் மின் நூலகங்கள் கடந்தகாலச் சிந்தனை வளங்களை பல்லூடக வடிவில் எளிதில் கிடைக்குமாறு வாய்ப்பை அளித்துள்ளது. நூற்றாண்டுக் காலத்துக்கும் பழமையான நூல்களும் மற்ற ஆவணங்களும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும்.

    இணைய வெளியில் ஆய்வு செய்பவர்கள் விரைவாகவும் திறம்படவும் செயல்படக் கிட்டியுள்ள வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

     

    8 . காடும் மரமும்

     

    காட்டைப் பார்க்கும்போது மரத்தை எண்ண முடியுமா? மரத்தை எண்ணும்போது காட்டை முழுமையாகக் காண முடியுமா? இந்தப் புதிர் ஆய்வின் இரு பெரும் பிரிவுகளை வெளிக்கொணர வல்லது..

    ஆய்வுப்புலத்தில் நிறுவப்பட்டு நின்று நிலவும் கோட்பாடுகளையும் விதிகளையும் பருப்பொருள் அலகீடுகளால் கணக்கீடு செய்ய இயலாத கருத்துருக்களையும் ஆய்வு செய்வது ஏரண அடிப்படையில் தர்க்கவாத அடிப்படையில் செய்யப்படும் ஆய்வு என்ற ஒரு வகை. ஐம்பொறிகளைப் பயன்படுத்தி அளவிட்டுத் தரவுகளை உருவாக்காமல் ஏரணத்தின் அடிப்படையில் செயல்படும் ஆய்வு வழக்கில் உள்ள நிறுவப்பட்ட நம்பகத்தன்மை மிக்க விதிகளை தர்க்கரீதியாக அலசி புதிய தகவலை நிறுவும் முறையாகும்.

    ஒரு அன்றாட நிகழ்வை எடுத்து இம்முறையை விளக்கலாம்.

    சென்னை மாநகரில் ஒரே எண்ணிக்கை தலைமுடியுள்ள இருவர் உள்ளதை எவ்வாறு நிறுவுவது? ஒவ்வொருவரின் தலைமுடியையும் எண்ணி விடை காண்பது இயலாத காரியம். இதற்கான விடையை ஏரண அடிப்படையில் நிறுவலாம்.

     

     ஒருவரின் தலை முடியைவிட அதிகமானவர்கள் சென்னையில் வசிக்கிறார்கள் என்பது ஒரு ஏரண அடிப்படையில் நிறுவப்பட்ட தகவல்.. இந்த அடிப்படையில் நம் அலசலுக்காக ஒருவரின் தலைமுடியின் எண்ணிக்கை ஐம்பது என்று கருதினால் சென்னை மக்களின் எண்ணிக்கை ஐம்பத்தி ஒன்று என்றாகும் அல்லவா. இந்த ஐம்பத்தியொருவர்களில் எவருமே தலையில் முடியே இல்லாத சொட்டையர்களை உள்ளடக்கவில்லை என்ற நிலையில் முதலாமவருக்கு ஒரு முடி இரண்டாமவருக்கு இரண்டு முடிகள் என்று எண்ணிக்கையிடலாம். ஐம்பதுபேருக்கு ஐம்பது முடிகள் என்ற நிலையில் ஒருவர் கணக்கீட்டுக்கு வெளியே இருப்பார். அவருக்கு இந்த ஐம்பதில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் முடி இருக்கும் என்று கருதினால் சென்னையில் ஒரே எண்ணிக்கையில் தலை முடியுள்ள இருவர் உள்ளனர் என்பதை ஆய்வாளர் தன் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு சிந்திப்பதில் இருந்து தப்பிக்க வைக்கும் ஆய்வாக அமையும் .

    இதே தலைப்பில் ஒரு மானிடவியல் ஆய்வாளர் உலகெங்கும் உள்ள 720 குழுக்களைத் தனித்தனியாக ஆய்வு செய்து சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

     

    1. கட்டுப்பாடுமிக்க அமைப்புகளில் வாழும் மனிதர்களின் முடி குறுக்கி வெட்டப்பட்டிருக்கும். எ. கா. ராணுவ வீரர்கள் கைதிகள்.

    2. நீண்ட முடி வளர்ப்போர் -மேல்நாட்டறிஞர்கள், விதிகளைப் புறந்தள்ளும் இளைஞர்கள், பெண்கள்.

    3. நீண்டமுடி வாழும் சமூகத்திலிருந்து ஒதுங்கி நிற்பதையும் குறுகிய முடி சமுதாயத்தை ஒட்டி வாழ்வதையும் குறிக்கும்.

    4. சந்நியாசிகள் ஃபக்கீர்கள் நீண்டமுடியுடன் சமுதாயத்தை விலக்கி வாழ்வதைக் குறிக்கும். சடாமுடியும் மழித்த தலையும் அவர்களைச் சமுதாயத்திற்கு அப்பால் வாழ்பவர்களாக விளக்கும்.

    5. நாரதபரிவர்ச்சக உபநிஷத் குடுமி பாலுணர்வைக் கட்டுப்படுத்தி வாழ்வோரைக் குறிக்கும் என்றும் மழித்த தலை கற்பு வாழ்வைக் குறிப்பதாகவும் சடாமுடி உலக வாழ்வை வெறுத்து ஒதுக்கியவர்களையும் சுட்டுவதாகக் குறிப்பிடும்.

    இவ்வாறு சிறு பிரிவுகளாகப் பிரித்து ஐம்பொறியால் உற்றுநோக்கி அலகீடுகளால் அளவிட்டு நிறுவும் தகவல் இரண்டாவது ஆய்வு வகையாக அமயும் இது மரத்தை எண்ணி காட்டைக் காண்பதைப் போன்றது.
    ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும்போது இந்த இரண்டு முறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளலாம்.

     

    9. எடுக்கவோ கோர்க்கவோ

     

    தமிழர்களின் வரலாறு மற்றும் சமூகவியல் ஆய்வுத்தளத்தில் எண்ணற்ற கருத்துருக்கள் இணைய வெளியில் எண்ணிம வடிவிவில் கிட்டுகின்றன.

    முதல்பணி அவற்றைத் தேடுபொறி மூலம் தேடி பட்டியலிடுதல். கருத்துருக்கள் எழுத்துவடிவில் மட்டுமின்றி படமாகவும் படக்காட்சியாகவும் ஒலி வடிவாகவும் கிடைக்கும். சிதறிக்கிடக்கும் மணிகளைத் தேடி எடுக்க வேண்டும். உள்ளத்தில் தோற்றக் காட்சியாகவும் புறத்தில் ஊடக வடிவிலும் காணக்கிடைக்கும் கருத்துருக்களை எளிய தெளிவான மிகைபடல் கலக்காமல் சரியான சொற்களைப் பயன்படுத்தி விவரிக்க வேண்டும். விவரணை அடிப்படையில் அவை தெளிவான பிரிவுகளில் பகுக்கப்படவேண்டும். ஒரு கருதுகோள் அல்லது அனுமான அடிப்படையில் அவை பல்வேறு விதங்களில் தொகுக்கப்பட வேண்டும்.

    எடுத்துக் காட்டாக ஒரு மானுடவியல் அறிஞர் தாங்கள் நூறு விழுக்காடு தனித்தன்மைமிக்க அமெரிக்கர்கள் என்று தற்பெருமை பேசுவோரின் முகத்திரையைக் கிழிக்கும் வண்ணம் அன்றாட வாழ்வில் எவ்வளவு கலப்புகள் அமெரிக்கச் சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன என்பதைக் கட்டுரையாக வடித்தார். ( தமிழகத்திலும் தனித்தமிழ் பேசுவோர் தெளிய இதுபோன்ற ஆய்வுகள் உதவும்.

     

    உசாத்துணை கீழே காண்க:
    http://www.expat.or.id/info/expatstories.html

     

    அதுபோன்றே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகக் கோவில்களில் உள்ள இறையுருக்களின் பீடம் நின்ற அமர்ந்த கோலம் முத்திரைகள் ஆயுதங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு அடிப்படையில் கோர்க்கப்பட்டுள்ளதைக் கீழே கொடுத்துள்ள படங்களில் காணலாம்.

     

    10 . எண்ணும் எண்ணிமமும்

     

     

    பழந்தமிழர் வணிகத்தில் சிறந்து விளங்கிய காரணத்தால் அவர்கள் எழுத்துடன் எண்ணையும் போற்றி வளர்த்தனர். பெரிய மதிப்பையும் ஒன்றுக்கும் குறைவான சிறிய மதிப்பையும் அளவிடத் தேவையான குறியீடுகளை அவர்கள் பயன்படுத்தினர். தமிழர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான கணிதக் குறியீடுகள் கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் பரவியது. வணிகர்கள் என்ற நிலையில் மதிப்பில்லாத சூன்யத்துக்கான சுழியை அவர்கள் பயன்படுத்தியதில்லை. நூறு ஆயிரம் பத்தாயிரம் என்று குறியீடுகளை உருவாக்கியவர்கள் சுழியத்தைப் பயன்படுத்தியதில்லை. பிற்கால புத்த வைதீக சமயங்கள் சூன்யத்தையும் மாயையும் பாழ் நிலையையும் குறிக்க சுழியத்தைப் பயன்படுத்தினர்.

    ஃபிரஞ்ச் கணித மேதை புதிய கணக்கிடும் கணித முறையைக் கண்டுபிடிக்க முனைந்து இரண்டு எண் குறியீடுகளை மட்டும் வைத்து கணக்கிடும் முறையை உருவாக்க நினைத்தவர் தமிழ்க் கணித முறையில் உள்ள எண் குறியீடு ஒன்றையும் சமஸ்கிருதப் பயன்பாட்டில் உள்ள சூன்யத்தைக் குறியிடும் சுழியையும் இரண்டு எண் குறியீடுகளாகப் பயன்படுத்தினார்.

    பிற்காலத்தில் கணக்கிடும் கருவியைப் பயன்படுத்த முனைந்த அறிஞர்கள் சிக்கலற்ற எளிதான இருநிலை எண் குறியீட்டைப் பயன்படுத்தி கணினியை உருவாக்கினர். கணினிக்கு மனித மொழி தெரியாத நிலையில் கணினிக்கு ஏற்ற குறியீடுகளாக மொழியின் எழுத்துகளைக் குறியீடாக்க முனைந்தனர். கணினி எண் அடிப்படையில் இயங்கினாலும் தேவையை உணர்ந்து ஆங்கில எழுத்துகளுக்கும் எண்ணிமக் குறியீடுகளை உருவாக்கினர். இவ்வாறு எண்ணிமக் குறியீடுகள் வழியாகவே ஆங்கில எண்ணும் எழுத்தும் மின்னியல் வடிவம் பெற்றது.

    மேல்நாட்டில் உருவாக்கப்பட்ட கணினிகள் ஆங்கில மொழிக்கு மட்டுமே எண்ணிம வடிவம் உருவாக்கியதால் கணினியின் இயக்கம் பெரும்பாலும் ரோமானிய மொழிக் குடும்பத்துக்கு ஏற்றவாறு செயல்பட்டது. பின்னர் மற்ற மொழிகளின் எண்ணும் எழுத்தும் எண்ணிம வடிவம் பெற்று அம்மொழிகளின் வழங்கள் கணினியில் உள்ளீடு செய்யவும் கணினியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள எண்ணிம வளங்களை இயற்கை மொழியில் மாற்றி கணினித் திரையிலும் காகிதத்திலும் வெளிப்படுத்தினர்.

    இணைய வளர்ச்சியில் தமிழ் வளங்கள் அதிகமாக எண்ணிம வடிவம் பெற்றது. கணினியில் ஒரு தளம் மட்டுமே இயங்கும் வண்ணம் யூனிகோட் ஒருங்குறியீடு வளர்ச்சியடைந்து தமிழ் மொழியின் பல்லூடக வளங்கள் அனைத்தும் எண்ணிம வடிவில் கிட்டும் வாய்ப்பு உருவானது. எண்ணிம வளங்கள் மின்னியல் வடிவங்களில் தோன்றியதன் அடிப்படையில் தமிழ் ஆய்வு எண்ணிமத்துக்கு மாற்றம் பெற்று புதிய தளம் உருவானது

    இன்று தமிழ் ஆய்வாளர்கள் கணினியைப் பயன்படுத்தி மின்னியலில் அதி அற்புதமான முன்னேற்றங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்யும் எண்ணிம மனிதவியல் என்ற புதிய துறையை உருவாக்கியுள்ளனர்.

    எண்ணிம மனிதவியலை விளக்க கீழ்க்காணும் விளக்கம் உதவும்!

    எண்ணிம மனிதவியல் (Digital Humanities) என்பது மனிதவியல், கணினியியல் துறைகள் இணைந்த ஒரு கல்விப் புலம் ஆகும். இத்துறை மரபுசார் சமூக அறிவியல் துறைகளை (சமூகவியல், மானுடவியல், தொல்பொருளியல், மொழியியல், பண்பாட்டியல்) கணினியியல் கருவிகள், குறிப்பாக தகவல் அறிவியல் கருவினைப் (தரவு காட்சிப்படுத்தல், தகவல் மீட்டெடுப்பு, தரவு அகழ்வு, புள்ளியியல்) பயன்படுத்தி அணுகும் முறைமை ஆகும். எண்ணிமச் சேகரிப்புகளை தொகுப்பதிலிருந்து, பெரும் பண்பாட்டுத் தரவுகளை அகழ்வது வரை என இத்துறையின் அக்கறைகள் விரிவானது.

    தமிழ் ஆய்வாளர்கள் இந்தப் புதிய துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது இன்றியமையாத ஒன்று.
    தொடருவோம்

    Share