செண்பக ஜெகதீசன்

 

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை  

யூக்கா ரறிவுடை யார்.

       -திருக்குறள் -463(தெரிந்து செயல் வகை)

 

புதுக் கவிதையில்…

 

வரவிருக்கும் உயர்ந்த

ஊதியத்தை எதிர்பார்த்து,

கையிலிருக்கும்

முதலை இழக்கும் செயலைச்

செய்யமாட்டார்

அறிவுடையார் எவரும்…!

 

குறும்பாவில்…

 

கையிலிருக்கும் முதலை இழந்து,                   

வரவிருக்கும் ஆக்கத்தை எதிர்பார்ப்பதை   

விரும்பிச் செய்யார் அறிவுடையோர்…!

 

மரபுக் கவிதையில்…

 

ஊதியம் பெரிதாய்க் கிடைக்குமென்றே

     உயர்வா யொன்றை எதிர்பார்த்தே,

ஏதுமே அறியா நிலையினிலே

     இருக்கும் கைப்பொருள் இழந்திடாதே,

தீதே தந்திடு மிச்செயலைத்

     தெரிந்து செய்திட உடன்படாரே

ஆதியோ டந்தம் நன்றுதீது

     அறிந்து தெளிந்த அறிவுடையரே…!

 

லிமரைக்கூ..

 

உயராக்கம் கிடைக்கும் என்று        

எதிர்பார்த்தே யிழக்கமாட்டார் கைமுதலை,                       

அறிவுடையோர் தாமே சென்று…!

 

கிராமிய பாணியில்…

 

தெரிஞ்சி செய்யணும்- எதயும்

தெரிஞ்சி செய்யணும்- நல்லாத்

தெரிஞ்சி செய்யணும்..

 

ஊதியம் பெருசாக் கெடைக்குமுண்ணு

எதிர்பாத்தே குடுத்து

கையில இருக்கிற மொதலயெல்லாம்

எழந்து

தவுச்சி நிக்கமாட்டான்

அறிவுள்ள எவனும்..

 

அதால

தெரிஞ்சி செய்யணும்- எதயும்

தெரிஞ்சி செய்யணும்- நல்லாத்

தெரிஞ்சி செய்யணும்…!

 

செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *