க. பாலசுப்பிரமணியன்

மாற்றங்களைக் கண்டு ஏன் பின்வாங்குகின்றோம்?

வாசுவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவன் நன்கு படித்தவன். புத்திசாலி. ஆனால் அவனுக்கு தான் ஒரு புத்திசாலி என்ற எண்ணம் சற்றே தலைதூக்கி இருக்கும்.  எதற்கெடுத்தாலும் “எனக்குத் தெரியாததா என்ன?” “இதிலே என்ன புதுசா இருக்கு?”  என்று தேவையற்ற தர்க்கம் செய்து மற்றவர்களை நோகடிக்கும் மனப்பான்மை அவனுக்கு உண்டு. அதிலே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி.  சில நேரங்களில் அவன் தன்னுடைய தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது “போனவாரம் நாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது ..” என்று ஆரம்பித்தவுடன் அவனுடைய நண்பர்கள் தங்களுடைய சிரிப்பை உள்ளடக்கிக்கொண்டு  பரிதாபமாக அவனை ஒரு மனநோயாளியைப் போல் பார்ப்பார்கள். எவ்வளவு திறமை இருந்தாலும் தொழிலில் அவனால் முன்னேற முடியவில்லை. அவன் வேலைபார்க்கும் நிர்வாகிகள் இவனுடைய மனப்போக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனை முறை எடுத்துக்காட்டியும் வாசு மாற மறுக்கிறான். அவனுடைய ‘தான்’ என்ற ஆணவப் போக்கு அவனுடைய வீழ்ச்சிக்கு காரணமாகவும் முன்னேற்றத்திற்குத் தடையாகவும் இருக்கிறது. மாற்றங்களைப் பற்றி அவனுடன் பேசினால் “மன்னிக்கவும். நான் இப்படித்தான். என்னால் மாற முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடுவான்.

செந்தில் இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். “அய்யா. ஒத்துக்கொள்ளுகின்றேன். மாற்றங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மாற்றத்திற்கும் நான் விலைபோக முடியுமா.” என்று மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். “இல்லை செந்தில், நீ மாறவில்லையென்றால் வாழ்க்கையில் பின் தங்கிவிடுவாய்’ என்று எடுத்துச் சொன்னால் “அதெல்லாம் எனக்கு கவலையில்லை. மாற்றத்தைக் கண்டு என்னால் ஆட்டத்தை மாற்ற முடியாது” என்று தர்க்கம் செய்பவன். இந்த ஒத்துழையாமைப் போக்கினால் பல சந்தர்ப்பங்களில் அவன் பின் தள்ளப்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும்.

ஆனந்த் இன்னொரு வகையில் தோல்விகளை வரவேற்பவன். “நான் எதற்கு அய்யா மாறவேண்டும்? “என்னுடைய நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்தபோது கொடுக்கப்பட்ட பத்திரத்தில் அதெல்லாம் எழுதப்படவில்லை. இவர்கள் நாளைக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவார்கள். இதைச் செய் அதைச் செய் என்று சொல்லுவார்கள். இதனால் எனக்கு என்ன கிடைக்கபோகின்றது?” என்று சட்டங்கள் பேசி தன்னுடைய ஆதிக்கப் போக்கை நிலைநிறுத்த முயலுபவன். பல ஆண்டுகளாக செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து புதியதைக் கற்றுக்கொள்ளவும் அதன் தாக்கங்களை ஏற்றுக்கொள்ளவும் தயங்குபவன். சற்றே இவன் ஒத்துழைப்புள்ளவனாக இருந்திருந்தால் முன்னேற்றப் பாதையில் வேகமாகச் சென்றிருக்க வாய்ப்புக்கள் நிச்சயம் இருந்தது.

தேவகிக்கு அவளுடைய நிறுவனத்தில் நல்ல பெயர். அவள் ஒரு நல்ல உழைப்பாளி. ஆனால் சில குடும்பச் சூழ்நிலைகளால் தன்னுடைய தொழில் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. “அய்யா, நான் மாற்றங்களைப் பற்றி நன்கு அறிவேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது சரி. ஆனால் இந்த மாற்றங்களை நான் ஏற்றுக்கொண்டு நிகழ்வுபடுத்தினால் எனக்கு என்ன லாபம்? புதிய பதவி கொடுக்கப் போகின்றார்களா? அல்லது ஊதிய உயர்வு கொடுக்கப் போகின்றார்களா? அல்லது டாக்டர் பட்டம்தான் கிடைத்துவிடப்போகின்றதா?” என்று கேள்விக்கணைகளை சொருகி நம்மைத் திக்குமுக்காடச்  செய்திடுவாள். “பிரச்சனைகளை ஏற்படுத்தாதே. அந்த அம்மாவை விட்டுடுப்பா” என்று மேலதிகாரிகள் தங்களுடைய அடுத்த அடுக்கு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுவர்.

தேவகியின் முன்னேற்றம் அவளுடைய   சிந்தனைகளின் சில சறுக்கல்களால் தடைப்படுகிறது. மாற்றங்களுக்கும் கற்றல்களுக்கும் தங்களுடைய ஊதியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை அவள் உணரவில்லை. எந்தப் பதவியில் இருந்தாலும் என்ன ஊதியம் பெற்றாலும் மாற்றங்களும் அவைகளைச் சார்ந்த கற்றல்களும் வளர்ச்சியின் சில நிர்பந்தங்கள் என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை.

சினேகாவுக்கு சற்றே பயந்த குணம். “நாம் புதிதாக ஏதாவது முயன்று அதில் தவறுகள் ஏற்பட்டால் அதன் விளைவுகளை யார் சந்திப்பது? தெரிந்ததைத் தெரிந்தபடி சிறப்பாகச் செய்துகொண்டிருந்தால் போதாதா? நமக்கு எதற்கு வம்பு, நாளைக்கு ஆயிரம் பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்று ஒதுங்கி நிற்பவள். திறமைகள் இருந்தும் அவள் பய உணர்வு அவளை முயற்சிக்கவே  விடாமல் தடுக்கின்றது.

இனியன் -அவன் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றவர்களுடன் பழகுவதற்கு இனியன். நண்பர்கள் அதிகம். அவனைத் தேடியே நண்பர்கள் வருவார்கள். ஆனால் கொடுத்த வேலையைச் செய்யக்கூடியவன். தானாக முன்வந்து எதையும் செய்யமாட்டான்.” என்ன தம்பி, உங்க நிறுவனத்தில் புதிய பல முறைகளைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் போல் இருக்கிறதே” என்று ஒரு பெரியவர் அவனிடம் கேட்க ” ஆமாம் அய்யா, உண்மைதான். கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். யாராவது முதல்ல செய்த பின்பு அதோட விளைவு என்ன என்று பார்த்த பின்பு அதற்குப் பின் நான் முயற்சி செய்யலாமென்று நினைக்கின்றேன்.”

மாற்றங்களைத் தவிர்ப்பதற்கும் மாற்றங்களைவிட்டு ஒதுங்கி தனித்து நிற்பதற்கும் பல காரணங்கள் உண்டு.

  1. என்னால் முடியாது ( I can’t)
  2. எனக்கு அவசியமில்லை. (I won’t)
  3. இதனால் எனக்கென்ன லாபம்? ( (What do I get?)
  4. உள்ளதும் போய்விடுமோ? (What if I lose?)
  5. பொறுத்திருந்து பார்ப்போமே! ( I will wait and see)

ஆனால் மாற்றங்கள் இவர்களுடைய ஒப்புதலுக்காகவோ நாளைய வெற்றிக்காகவோ காத்திருப்பதில்லை.

இதை நாம் உணர்ந்துவிட்டால் மாற்றங்களின் வழியாக நம்முடைய முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளில் நாம் எளிதாக ஏற முடியும்.

முயன்று பார்ப்போமா?

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.