Blog

  • குடிகொண்டே இருக்கின்றார்!

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    பார்வியக்கப் பாரதத்தை
    பார்க்கவைத்த பேராக
    பாரததத்தின் பிரதமராய்
    நேருவந்து நின்றாரே!

    பார்நடுங்க வைத்தபெரும்                     jawaharlal-nehru
    பேர்போன வெள்ளையரை
    வேர்பிடுங்கி எடுத்தாரே
    வித்தகராம் நேருமகான்!

    ஊர்விடுங்கி உலையிலிட்டு
    ஊர்கோலம் போனஅந்தப்
    பார்பிடுங்கும் வெள்ளையரின்
    படைநடுங்க வைத்தாரே!

    ’சேர்’போட்டு அழையென்று
    சிரச்சேதம் செய்தவரை
    ஊர்விட்டு விரட்டியதை
    உலகமே வியந்ததுவே!

    பணம்படைத்த குடும்பமதில்
    பண்டிதர் பிறந்தாலும்
    பாரதத்தாய் விடுதலைக்காய்ப்
    பலவிதத்தில் உழைத்தாரே!

    ஏவலுக்கும் காவலுக்கும்
    எத்தனைபேர் இருந்தாலும்
    எங்கள்நேரு அதைவிடுத்து
    ஏற்றனரே சிறைவாசம்!

    சிறைசென்ற போதுமவர்
    பொறையிழந்து போகாது
    குறியொன்றே மனங்கொண்டு
    நெறியுடனே செயற்பட்டார்!

    சிறையிருந்து எழுதியவை
    சிறப்புடைய நூலாச்சு
    அனைவருமே படிப்பதற்கு
    அறிவுநிறை கருத்தாச்சு!

    காந்திமகான் வழிநடந்து
    காணநின்றார் பாரதத்தை
    சாந்தி சமாதனம்காண
    ஏங்கிநின்றார் நேருமகான்!

    வழித்தடங்கள் மாறிடினும்
    மனதுமட்டும் மாறவில்லை
    மாநினைப் போடுநின்று
    மகான்நேரு செயற்பட்டார்!

    யாரெதிர்த்து நின்றாலும்
    பாரதத்தின் விடிவுக்காய்
    நேருவைத்த திட்டங்கள்
    நீண்டநாள் நிலைத்தனவே!

    பதினேழு வருடங்கள்
    பாரததத்தின் பிரதமராய்ப்
    பண்டிதர் நேருமகான்
    பக்குவமாய் இருந்தாரே!

    குழந்தைகள் தினமதிலே
    குதூகலமாய் இருப்பவர்தான்
    குடும்பமாம் பாரததத்தின்
    குலவிளக்காம் நேருமகான்!

    ரோஜாவாய் இருக்குமெங்கள்
    ராஜாவாம் நேருமகான்
    குழந்தைமனம் எல்லாமே
    குடிகொண்டே இருக்கின்றார்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1
    தருமன் அழைக்கத் தவறினாலும் தர்ம,
    கருமமே கண்ணான கண்ணன், -ஒருகண்,
    திருட்டு சகுனிபோல் தான்மூடி தாயம்,
    உருட்டுகிறான் ஒத்திகையாய் ஓய் ….கிரேசி மோகன்….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . 130

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இதோ அடுத்தொரு மடல், அடுத்தொரு வாரம், அடுத்தொரு உறவாடல்.

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 9ம் திகதி இங்கிலாந்தில் போர்களில் மடிந்த வீரர்களை நினைவு கூறும் “நினைவு கூறும் ஞாயிறு” (Remembrance Sunday).

    கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே எனது மனைவி இலண்டன் டவர் ஹில் எனும் இடத்தில் முதலாவது உலக மகாயுத்தத்தின் ஆரம்பத்தின் நூறாவது ஆண்டையொட்டி அமைத்திருந்த “பொப்பி” என்றழைக்கப்படும் செந்நிறத்திலமைந்த செயற்கை மலர்களால் அமைக்கப்பட்ட ஒரு அலங்காரத்தைப் பார்வையிட வேண்டுமென்ற தன் விருப்பத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

    சரி! 9ம் திகது ஞாயிற்றுக்கிழமை செல்வோமே என்று ஒரு திட்டம் மனதிலிருந்தது. ஆனாலும் லண்டன் காலநிலை தான் நம் எண்ணப்படி நடப்பதில்லையே! எனவே ஒருவேளை அன்று இயற்கை அவ்வீரர்களை எண்ணித் தாரை தாரையாக கண்ணீர் வடிக்க எண்ணி மழையாகப் பொழியாரம்பித்தால் எமது திட்டம் தவிடு பொடி என்றே நினைத்திருந்தோம்.

    லண்டனில் எங்கு செல்வதானாலும் வசதியின் நிமித்தம் காரில் ஏறி உட்கார்ந்து சென்று விடுவதே வழக்கம். எனவே ஞாயிற்றுக்கிழமை லண்டனுக்கு செல்வதானால் பேரூந்திலேயே செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தோம்.

    சரி ஒருபடியாக ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. என்னே ஆச்சரியம் இயற்கை எம்மேல் கருணை கூர்ந்தது போலும்! மழை வருவதற்கான அறிகுறி இல்லை.

    அவசரம் அவசரமாக கிளம்பினோம் சரியாக 8.25 க்கு பேரூந்தில் ஏறி குறிய்டன் நோக்கிச் சென்றோம். அங்கு சென்ற பின்னர் தான் அங்கிருந்து எந்த எண் பேரூந்தைப் பிடித்து எப்படி ” டவர் ஹில் ” செல்வது என்று திட்டம் தீட்ட வேண்டும்.

    பேரூந்தின் வருகை நேரத்தை இணையத்தில் அறிந்து கொண்டதால் அதனைத் தவற விட்டு விடக்கூடாது என்று ஓட்டமும் நடையுமாகச் சென்றதில் பேருந்தில் ஏறி உட்கார்ந்து சில நிமிடங்கள் வரை பேசக்கூட முடியாத வகையில் மூச்சிறைத்தது.

    ஓ! ஜம்பதின் கடைசிப் படியிலல்லவா நிற்கிறோம்! மறந்து விட்டேனே! அட! ஞாபகமறதி வேறா?

    ஒருவாரு குறோய்டன் ஷாப்பிங் செண்டரில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்க எண்ணும் போது மனைவியின் கையிலிருந்த முன் அனுமதிச் சீட்டில் மேலதிக பணம் போட்டால் தானடுத்த பேரூந்தில் ஏறலாம் எனும் நிலை.மேலதிகப் பணம் போடுவதற்கான இயந்திரத்தை தேடி நடக்க ஆரம்பித்தோம்.

    நீண்ட நாட்களாக பேரூந்தில் பயணம் செய்யாததினால் மேற்கு குறொய்டன் பஸ் தரிப்பு நிலையம் அடைக்கப்பட்டு அதனுள் வேலை நடைபெற்று வருவது எமக்குத் தெரியவில்லை.

    அதனைக் கடப்பதற்கான சிறிய ஓடை போன்ற பாதையில் கால் வைத்ததும் நாற்றம் வயிற்றைக் குமட்டியது. அப்பாதை வழிப்பறி செய்பவர்களுக்காக ஏற்படுத்தப் பட்டதோ !

    poppy1ஒருவாறு அப்பிரச்சனையை முடித்துக் கொண்டு எமது பயணத்தின் அடுத்த அலகாக அடுத்தொரு பேரூந்தில் ஏறினோம். அது இரட்டைத்தட்டு பேரூந்தாகையால் மிகவும் மகிழ்ச்சியாக மேல்தட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டோம்.

    அடுத்தொரு தரிப்பில் ஒரு நடுத்தர வயதான ஆபிரிக்க பெண்மணி அம்மேல்தட்டில் ஏறி நாமிருந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வரும்போது ஏதோ பேசிக் கொண்டே வந்தாள் சரி காதில் கருவியைப் பொருத்தி மொபைல் தொலைபேசியில் தான் பேசுகிறாள் என்று எண்ணினால் .. . . .

    இல்லையே! தனக்குத் தானே அல்லவா பேசிக் கொண்டு வருகிறாள் என்றாள் என் மனைவி.

    போச்சுடா! ஒரு லூசுப் பெண்மணியிடம் போய் மாட்டிக் கொள்ளப் போகிறோமா ?

    வந்தவள் எமக்குப் பினால் இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்து கொண்டாள். அது மட்டுமல்ல தனக்குத்தானெ சம்பாஷணை வேறு!

    ஆஸ்கார் விருது கொடுப்பவர்கள் கண்டிருந்தால் சிறந்த நடிகைக்கான பரிசு அவளுக்குத்தான் போங்கள் . . . .

    இடையிடையே அவளின் குரல் உயரவும் அட எமக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் இருக்கைகளில் யாராவது அமர மாட்டார்களா ? எனும் ஒரு நப்பாசை.

    ஏதோ தெரியவில்லை அனைவருமே அதனைத் தவிர்த்து விட்டார்கள். அப்பெண்ணின் சம்பாஷணையை வி.ஐ.பிகள் போல நாம் தான் ரசித்துக் கொண்டோம்.

    poppy2ஒருவாறு அப்பயண முடிவில் லண்டனில் உள்ள “எலிபண்ட் அண்ட் காசில் (Elephant and Castle)” எனும் இடத்தை அடைந்தோம். இனி அங்கிருந்து மற்றொரு பேருந்தில் நாம் செல்ல வேண்டிய “டவர் ஹில்” எனும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

    அதற்கு முன்னால் அங்குள்ள ஷாப்பிங் செண்டரினுள் சென்றோம், கழிவறைகள் இருக்கின்றனவா என்று தேடியவாறு.

    இருந்தது ஆனால் அது கட்டணக் கழிவறை. உள்ளெ சென்றால் அப்பப்பா! தாங்க முடியவில்லை. மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் பிரசித்தி பெற்ற லண்டன் நகரிலா இப்படி ?

    அது முடிந்து வெளியே வந்தால் அங்கிருந்த படிகளில் உட்கார்ந்தபடி கையில் போதை மருந்து ஏற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டோம்.

    போதுமடா சாமி ! ஆளை விட்டால் காணும் என்று விழுந்தடித்து வந்த ஒரு பேரூந்தில் ஏறிக் கொண்டோம், அதிர்ஷ்டவசமாக அப்பேரூந்தின் சாரதி ஒரு ஆசிரியர்.

    அவரிடம் நாம் செல்ல வேண்டிய இடத்தைக் கூறியதும் அவர் நீங்கள் சரியான பேரூந்தில் தான் இருக்கிறீர்கள் என்று கூறி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகாமையில் இறக்கி விட்டார்.

    அது லண்டனில் பிரசித்தி பெற்ற “டவர் பிரிட்ஜ்” க்கு அருகாமையில். அட்ஹன் வழியாகச் சென்றால் நாம் பார்க்க வேண்டிய அந்த செயற்கை மலர்களின் அலங்காரத்தை உள்ளடக்கிய “டவர் ஹில்” சென்று விடலாம்,

    அப்பப்பா! தேர்த்திருவிழா போன்ற கூட்டம். வரிசை வரிசையாக மக்கள் தம் வாழ்வை மேன்மையாக்க உயிரை நீத்த தம் முன்னோர்களை நினைவுகூறும் வகையில் அமைந்திருந்த செயற்கை மலர்களை பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்தார்கள்.

    poppy3அவ்வரிசையோடு நாமும் இணைந்து கொண்டு சென்றோம். அங்கு நிலவிய ஒருவிதமான சகோதர உணர்வை உணரக்கூடியதாக இருந்தது..

    இங்கிலாந்து நாட்டின் பலபாகங்களில் ஒருந்து வந்தவர்களை விட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் நிறைந்து காணப்பட்டார்கள். அங்கு கண்ட ஒரு ஒற்றுமையான் உணர்வு உலகில் இன்னும் மனிதத்துவம் சாதி,மத, இன, மொழி , நிற எல்லைகளைக் கடந்து ஒளிர்ந்து கொண்டுதானிருக்கிறது எனும் எண்ணத்தை மேலோங்கச் செய்தது.

    ஆங்காங்கே கிடைத்த இடைவெளிக்குள் நுழைந்து கொண்டு அம்மலர்களின் அலங்காரத்தைப் பார்வையிட்டோம்.

    ஒவ்வொரு மலரும் முதலாவது உலக மகாயுத்தத்தில் உயிரிழந்த ஒரு வீரரைக் குறிப்பதாகவிருந்தது. இங்கிலாந்து நாட்டு வீரர்கள், மட்டுமல்ல பொதுநல்வாய நாடுகளின் வீரர்களையும் அது உள்ளடக்கியிருந்தது.

    மொத்தம் 888,246 கைகளினால் வெய்யப்பட்ட போர்சலின் மலர்கள் அங்கே அலங்கார ரூபத்தில் நாட்டப்பட்டிருந்தன.

    அன்றைய வீரர்கள் தம் உயிரைக் கொடுத்து நாட்டிய விதையின் விருட்சத்தில் நிழல் காய்ந்து கொண்டிருக்கும் நாம் அவ்வழகிய நாளின் நினைவுகள் மீட்டுத்தந்த உயருய நினைவுகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு மீண்டும் எமது இல்லம் ஏகினோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1

    குழந்தைகள் நாளின்று கோபாலக் கண்ணன்,
    வழிந்தொழுகும் வாரிதியில் வெண்ணை ,-பிழிந்து,
    எடுக்கின்றான் மத்தால், எது(டு)கைக்கு மோனை
    கொடுக்கின்றான் கீதைக் களி …கிரேசி மோகன்….

    Share
  • குழந்தைகள் நாள் வெண்பா

     

    ரமண வசனாம்ருதம்….குழந்தையும் ஞானியும் குணத்தால் ஒன்று….

    images

    ‘’விழுந்தெழுந்தும் மீண்டும் விளையாடும் வீரம்,
    இழந்தழிந்தோம் இன்னாதன ஈர்ப்பால், -குழந்தைகள்
    போலின்று நாமாவோம், போலி அகந்தையை
    வாள்ரமண வீச்சால் வகிர்ந்து’’….கிரேசி மோகன்….

    Share
  • அன்பின் பதாகைகள்……

    எஸ் வி வேணுகோபாலன்

    images (1)

    கொஞ்சம் நுங்கு
    ஒரு தேக்கரண்டி கடல்
    ஒரு விரற்கடை வானம்
    ஒரே ஒரு கிள்ளு மலை
    இரண்டே இரண்டு பூக்கள்
    போதும் என்றது இயற்கை…
    பறவைகள் தயாரித்து அருளின
    குழந்தைமையை உலகுக்கு

    உப்பும் மிளகுப்பொடியும்
    மேசையில் காத்திருக்க
    முள்ளுக் கரண்டிகளோடு
    தயாராகிறது பெரியவர்கள் சமூகம்
    மின் சூடேற்றியில்
    வெப்பமூட்டி பரிமாறப்பட இருக்கும்
    குறும்புத்தனங்களைக்
    கொத்திப் புரட்டி மென்று தின்ன!

    முன்னாள் குழந்தைகளுக்கும்
    வருங்காலக் குழந்தைகளுக்கும் இடையே
    போராடிக் கொண்டிருக்கின்றனர்
    இந்நாள் குழந்தைகள்

    கல்லடி படும் சிறகுகளோடும்
    பிய்த்தெடுக்கப் படும் தோகையோடும்
    உலுக்கி எடுக்கப்படும் பிடரி முடிகளோடும்
    புறக்கணிக்கப்படும் கொஞ்சு மொழியோடும்
    நம்மைக் கடந்து போகின்றனர்
    குழந்தைகள்

    மதிப்பெண் காயங்களில் அன்பு பூசவும்
    வகுப்பறை வன்முறையின் சூட்டைத் தணிக்கவும்
    கவனிக்கப்பட ஏங்கும் விழிகளில் முத்தமிடவும்
    அத்துமீறல்களில் கலங்கிய உள்ளங்களைத் தேற்றவும்
    மெல்லிதயங்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்
    குழந்தைகள்….

    கொண்டாட்டங்களில் இன்னும்
    நம்பிக்கையோடு உலவும் அவர்களது உலகில்
    பறக்கவிடுவோம் அன்பின் பதாகைகளை….

    நன்றி ; தமிழ் இந்து

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 31

    சு.கோதண்டராமன்.

    தஸ்யுக்கள்

     

    rig veda enemy

     

    ராட்சசரைப் போலவே தேவர்களால் அழிக்கப்படத்தக்க வேறு ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகிறார்கள். தஸ்யு என்ற சொல் எதிரி எனப் பொருள் படும்.

    யக்ஞம், பிரார்த்தனை, விரதம் இவற்றை அனுசரிக்காமல் இருப்பதில் இவர்கள் ராட்சசர்களைப் போன்றவர்கள் என்றாலும் தஸ்யுக்களுக்கும் ராட்சசர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.

    ராட்சசர்கள் இறை வழிபாட்டைத் தடுக்கும் தீய பண்புகள் என்று அறிந்தோம். ஆனால் தஸ்யுக்கள், மற்றவர்களின் இறை வழிபாட்டிற்கு இடையூறு செய்வது இல்லை.

    ரிக் வேதத்தில் எந்த ராட்சசரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சில தஸ்யுக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. – நமூசி, துனி, சும்ரி, சுஷ்ணன், சம்பரன், கௌலிதரன், வர்சின், அஹிசுவன், பிப்ரு, அனர்சனி, வ்ருஷசிப்ர. இவர்களை இந்திரன், அச்வினிகள், அக்னி, சோமன், மருத்துகள் ஆகியோர் அழித்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

    ராட்சசர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், எங்கிருந்தும் வருவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்ததும் கூறப்பட்டுள்ளது.

    தஸ்யுக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ரிஷிகள் தங்களை ஆர்யர்கள் (உயர்ந்தவர்கள்) என்று கூறிக் கொள்கிறார்கள்.

    தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதம் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.

    1. அநாஸ (மூக்கில்லாதவர்கள்),
    2. க்ரதின், (உளறுபவர்கள்), ம்ருத்ரவாச (இகழ்ச்சியாகப் பேசுபவர்கள்),
    3. அயக்ஞா (யக்ஞம் செய்யாதவர்கள்), அன்யவ்ரதர்கள் (வேறு வகையான விரதம் கடைப்பிடிப்பவர்கள்), மாயையால் விண்ணை அடையும் செல்லும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள் (8.14.14)
    4. ஆரியர்களின் எதிரிகளாகச் சிச்ன தேவர்கள் என்போர் இரு இடங்களில் கூறப்பட்டுள்ளனர் (7.21.5, 10.99.3).  சிச்ன என்பது குறி எனப் பொருள்படும்.
    5. தஸ்யு (எதிரி) என்ற சொல்லும் தாஸ (அடிமை) என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    மேலே கண்ட குறிப்புகளைக் கொண்டு மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியது பின் வருமாறு.
    ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது வட இந்தியாவில் வசித்தவர்கள் தஸ்யுக்கள்.

    1. நீண்ட மூக்கு உடைய ஆரியர்களைப் போல அல்லாமல் இவர்கள் சப்பை மூக்கு உடையவர்களாக இருந்ததால் அநாஸ எனப்பட்டார்கள்.
    2. ஆரியர்களுக்குப் புரியாத வேறு மொழி பேசியதால் உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என வர்ணிக்கப்பட்டனர்.
    3. யக்ஞம் அல்லாத வேறு வகையான வழிபாட்டு முறை உடையவர்கள்.
    4. சிச்னத்தை (சிவலிங்கத்தை) வழிபட்டவர்கள்.
    5. இரு இனத்தாருக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்றது. போரில் தோற்றவர்களை அடிமைப்படுத்தினார்கள் ஆரியர்கள். இறுதியில் திராவிடர்கள் தோற்று வட இந்தியாவை விட்டே விலகித் தென்னிந்தியாவில் குடியேறினார்கள். அவர்கள் திராவிடர்கள்.
    6. தாசர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தண்ணீரை ஆரியர்களுக்காக இந்திரன் விடுவித்தான் (5.30.5) என்பதிலிருந்து நீர் வரும் பாதையில் மேல் மட்டத்தில் உள்ள அண்டை நாட்டுக்காரர்களாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கிடையே நதி நீர்ப் பங்கீடு பற்றிய தகராறு (தற்போதைய தமிழ்நாடு கர்நாடகக் காவிரி நீர்ப் பிரச்சினை போல) இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வருகிறது.

    மேலை நாட்டவர் கண்ணில் படாத அல்லது அவர்கள் சொல்ல விரும்பாத விஷயங்கள் வேதத்திலும் உண்டு, நமது பொது அறிவிலும் உண்டு.

    1. தஸ்யுக்களாகக் கருதப்படும் தென்னாட்டவர்களுக்கும், ஆரியர்களாகக் கருதப்படும் வடநாட்டவர்களுக்கும் மூக்கு விஷயத்தில் வேறுபாடு இல்லை. எப்படிப் பார்த்தாலும் மூக்கில்லாதவர்கள், சப்பை மூக்கு உடையவர்கள் என்ற சொல்லுக்குத் தென்னாட்டவர் உரியவர்கள் அல்லர் என்று அரவிந்த கோஷ் கூறுகிறார்.
    2. ஆரியர்களும் தாசர்களும் வேறு வேறு மொழி பேசுபவர்கள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என்பதற்கு வேற்று மொழியாளர் எனப் பொருள் கொள்வது பொருத்தமாக இல்லை. ஆரியர்களும் தாசர்களும் சேர்ந்து ஒரே சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் அவர்களிடையே மொழி வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை.
    3. வேதமே பல வகையான வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொண்டிருப்பதை யக்ஞம் என்ற தலைப்பில் காணப் போகிறோம். எனவே வழிபாட்டுமுறை மாறுபட்டிருப்பதன் காரணமாகப் பகைமை ஏற்பட்டிருக்காது. மேலும், எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4) என்பதிலிருந்தும், தாசர்கள் தந்த உணவை அச்வின்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்(8.5.31) என்பதனாலும் வழிபாட்டு முறையில் தாசர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் அல்லர் என்பது தெரிகிறது.
    4. ஆரிய திராவிடப் பிரச்சினைகள் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட சாயணர் உரையில் சிச்ன தேவர் என்பதற்கு லிங்க வழிபாடு செய்பவர் என்ற பொருள் காணப்படவில்லை. மாறாக, புலன் நுகர்ச்சியில் அளவு கடந்த நாட்டம் உடையவர் என்றே காணப்படுகிறது. சிச்னத்தைச் சிவலிங்கமாகக் கருதியது ஆங்கிலேயரின் விஷமத்தனமான வேலையே.
    5. ஆரியர்களும் தஸ்யுக்களும் நிரந்தரப் பகைவர்கள் அல்லர். ஒரு மந்திரத்தில் (8.46.32 ) வச அச்வ்ய என்ற ரிஷி, தான் பல்பூத மற்றும் தருக்ஷ என்ற தாசர்களிடமிருந்து 100 பசுக்களைப் பரிசாகப் பெற்றதைக் கூறுகிறார். செல்வந்தனான ருசம பவிரு என்பவரிடத்தில் ஆரியர்களும் தாசர்களும் தானம் பெறக் குழுமினர் என மற்றொரு மந்திரம் (8.51.9) கூறுகிறது. இதிலிருந்து ஆரியர்களும் தாசர்களும் ஒரே சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் தான் என்பது உறுதியாகிறது.
    6. வேதம் இயற்றப்பட்ட இடமாகக் கருதப்படும் சிந்து கங்கைச் சமவெளியில் மழைக்கோ ஆற்று நீருக்கோ பஞ்சம் இல்லை. எனவே அணை கட்டித் தண்ணீரைத் தேக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அடுத்தவருக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக் கூடிய அணை கட்டும் தொழில் நுட்பமும் அவர்களிடத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை. எனவே ஆப: (தண்ணீர்) என்ற சொல் வேறு பொருளைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.

    மேலும், பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து தஸ்யுவால் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டனர் என்றும், தர்மத்தை மனதில் கொண்டு தஸ்யுவைக் கொன்றார்கள் என்றும் கூறப்படுவதால் தஸ்யு என்பது ஒரு உண்மையான பகைவனைக் குறிப்பிடாமல், வேறு ஒரு மறை பொருளைக் குறிப்பிடுவதை அறிகிறோம். ரிக் வேதத்தில் கிடைக்கின்ற தரவுகளைக் கொண்டு, அந்த மறைபொருளை அறிய முயல்வோம்- அடுத்த கட்டுரையில்.

    படம் உதவிக்கு நன்றி: http://www.harekrsna.com/sun/features/09-13/dasarajna5.jpg

    Share
  • குறளின் கதிர்களாய்…(46)

    -செண்பக ஜெகதீசன்

    பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
    தஞ்சு மவன்கற்ற நூல். (திருக்குறள்-727: அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்…

    கற்றதின் பலனை
    மற்றவரும் பெறவேண்டும்…

    அவையிலதை எடுத்துரைக்க
    அஞ்சுபவன் கற்றது,
    போர்க்களத்தில்
    பேடியின் கைவாள்போல்
    பயனற்றதே…!

    குறும்பாவில்…

    போர்க்களத்தில் பேடி கைவாள்
    பயனற்றது போல்தான்,
    அவையஞ்சுபவன் கற்ற நூலும்…!

    மரபுக் கவிதையில்…

    வெற்றி பெற்றிடப் போர்க்களத்தில்
    வீரர் தங்கள் கைகளிலே
    பற்றி யிருக்கும் வாளதனைப்
    பேடியும் பிடித்துப் பயனில்லை,
    கற்ற நூலின் பொருளதனைக்
    கற்றோர் அவையில் அஞ்சாதே
    மற்றவர் அறிய உரையான்நூல்,
    மாறாப் பேடியின் கைவாளே…!

    லிமரைக்கூ…

    போர்க்களத்தில் பயனில்லை பேடியின்கை வாள்,
    எடுத்துரைக்க அவை அஞ்சுபவன்
    படித்தநூலையும் இதுபோல்தான் சொல்லுவர் கேள்…!

    கிராமிய பாணியில்…

    வாளுவாளு போர்வாளு
    வெட்டிச்சாய்க்கும் போர்வாளு,
    வீரன்புடிக்கும் போர்வாளு
    வெட்டிச்சாய்க்கும் போர்வாளு,
    பேடிபுடிச்சா பேர்வாளு
    பயனேயில்லாப் போர்வாளு…

    படிச்சபடிப்ப எடுத்துச்சொல்லணும்
    பலருந்தெரிய படிச்சிச்சொல்லணும்,
    பயந்துநின்னா பலனில்ல
    படிச்சபடிப்பு பயனில்ல,
    படிச்சதெல்லாம் இதுபோலத்தான்
    பேடிகைல வாள்போலத்தான்…

    வாளுவாளு போர்வாளு
    வெட்டிச்சாய்க்கும் போர்வாளு…!

     

    Share
  • காதல் நாற்பது (24)

    வாழ்வு வாழ்வதற்கே !

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    Elizabeth Browing

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    உலகத்தின் கூர்மை தனக்குள்ளே
    உருண்டு கொள்ளட்டும்,
    மடக்குக் கத்திபோல்
    படக்கென மடித்து
    இடர் விளை விக்காது
    மென்மை யாகவும்
    வெதுவெதுப் பாகவும் இருக்கும்
    எந்தன் காதற் கரத்தின் அருகிலே !
    வாழ்வு வாழ்வதற்கே !

    உந்தன்
    தோள்மேல் சாய்கிறேன்,
    இனியவனே !
    உலக மானிட மிழைத்த
    கீறல்களை
    அலறாது தாங்கி
    உன் மயக்கு மந்திரப் பாதுகாப்பை
    உணர்கிறேன்,
    சொர்க்கத்தின் குறைவிலாப் பனித்துளிகள்
    சொட்டிடும்.

    வெண்ணிற அல்லி மலர்கள் போல்
    நமது வாழ்க்கை
    அடிவேர் முதல் மலர்ந்து
    மறுபடி உறுதிப் படலாம் !
    மலை மீது நின்று
    மனிதர் தொட முடியாது
    சீராக வளர்ந்து
    நம்மைச்
    செல்வந் தராய் ஆக்கிய,
    கடவுள் மட்டும் மாற்றக் கூடும்
    இல்லாத ஏழையராய் !

    ********************

    Poem -24

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Let the world’s sharpness, like a clasping knife,
    Shut in upon itself and do no harm
    In this close hand of Love, now soft and warm,
    And let us hear no sound of human strife
    After the click of the shutting. Life to life–
    I lean upon thee, dear, without alarm,
    And feel as safe as guarded by a charm
    Against the stab of worldlings, who if rife
    Are weak to injure. Very whitely still
    The lilies of our lives may reassure
    Their blossoms from their roots, accessible
    Alone to heavenly dews that drop not fewer;
    Growing straight, out of man’s reach, on the hill.
    God only, who made us rich, can make us poor.

    **********

    Share
  • சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி  ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள்  நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Return of Capsule

     http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY

     http://www.space.com/23976-raw-video-china-s-moon-landing-and-rover-deployment.html

    +++++++++++++++++

    சைனாவின் இரண்டாம்
    விண்ணுளவி
    சந்திரனைச் சுற்றியது !
    மூன்றாம் விண்கப்பல்
    முதலாக நிலவில் இறக்கிய தோர்
    தள வுளவி !
    அதிலிருந்து  நகர்ந்திடும் தளவூர்தி  !
    ஆசிய முன்னோடியாய்ச்
    சைனாவின் இரு தீரர்
    அண்டவெளிப் பயணம் செய்து
    விண்வெளியில் நீந்தி
    வெற்றி மாலை சூடி
    மண்மீது கால் வைத்தார்
    மறுபடியும் !
    அமெரிக்காவின்
    விண்வெளி வீரர்கள் போல்
    விண்சிமிழில் ஏறி
    வெண்ணிலவில் தடம் வைக்க
    முன்னோடிப் பயிற்சிகள்  !
    நிலவைச் சுற்றி வந்து
    மனிதரிலா விண்சிமிழ் ஒன்று
    புவிக்கு மீண்டது இன்று.
    இன்னும்
    ஐந்தாறு ஆண்டுகளில்
    சாதனை யாகச் சைனத் தீரர்
    பாதம் பதிப்பர்
    நிலவின் களத்திலே
    நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !

    ++++++++++++++++++++

    “ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”

    மா சேதுங் (1957) – சைனாவின் விடுதலைப் பிதா (Mao Tse-Tung, China Liberator) (1893-1976)

    Chinese capsule -1

    நிலவைச் சுற்றி மீண்ட சைன விண்சிமிழ் உருவாகிறது

    [அக்டோபர் 23, 2014]

    எட்டு நாட்களில் பயணம் செய்து நிலவைச் சுற்றி புவிக்கு மீண்ட சைன விண்சிமிழ்

    2014 அக்டோபர் 24 இல் சைனா ஏவிய மனிதரற்ற செஞ்சி -4 விண்சிமிழ் [Chang’e -4]  நிலவைப் பின்புறம் பாதி சுற்றித் தன்பணி முடித்துப் புவி நோக்கித் தானாய் மீண்டு பாதுகாப்பாய் இறங்கிப் புதியதோர் ஆசிய முதன்மைச் சாதனையாக செய்து கட்டியுள்ளது.   இந்த முக்கிய விண்வெளி நிலவுப் பயணத்தில் ஈடுபட்ட அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்குப் பின் சைனா மூன்றாவது நாடாகச் செய்து சாதித்துள்ளது.   மனிதரற்ற அந்தச் சோதனை விண்சிமிழ் சைனா திட்டமிட்ட மங்கோலியத் தளத்தில் பாராசூட் குடை உதவியில் பாதுகாப்பாய் வந்திறங்கியது.  140 கி.கிராம் எடையுள்ள விண்சிமிழ் பயணம் செய்த எட்டு நாட்களில் சுமார் 840,000 கி.மீ. [504,000 மைல்] தூரத்தைப் போக வரக் கடந்துள்ளது.  விண்சிமிழுக்குள் இருந்த தகவல் சிமிழை [Data Capsule] சைன ஆய்வாளர் எடுத்து, விண்ணூர்தி [Chang’e -5]  மீள்நுழைவுத் தகவல் பதிவுகளை ஆராய்ந்து  2017 இல் திட்டமிட்ட அடுத்த நிலவு மாதிரி மண் எடுப்புப் பயணத்துக்குப் பயன்மடுத்துவார்கள்.

    The Reurn Capsule

    1970 ஆண்டுகளில் நாசாவின் மனிதர் ஏறிச் சென்ற நிலவுப் பயணங்கள் யாவும் முடிவு அடைந்தன. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது நாடாகச் சைனா இந்தச் சிக்கன நிலவுப் பயணத்தைச் சாதித்துள்ளது.  2013 டிசம்பரில் சைனா அனுப்பிய யூட்டு [Yutu Rover] தளவுளவி நிலவில் இறங்கித் தகவல் அனுப்பி வருகிறது.  சைனாவின் மாபெரும் விண்வெளி நிலவுப் பயணச் சாதனையாக இது கருதப் படுகிறது.   அத்துடன் சைனாவின் விண்வெளி நிலையப் [Chinese Space Station] பயிற்சிகள், அடுத்து செவ்வாய்க் கோளில் 2020 இல் சைன விண்வெளித் தீரர் தடம் வைக்க உதவும்.  2017 இல் 31 பவுண்ட் [14 கி.கி] விண்சிமிழ் செஞ்சி -5  [Chang’e -5] நிலவின் மண் மாதிரியை எடுத்துப் புவிக்குக் கொண்டுவர முக்கட்டச் சோதனைகளைத் [Three Stage of Lunar Test Run to bring Moon Samples] திட்டமிட இந்த விண்சிமிழ் மீள்நுழைவுப் பயிற்சி ஒரு கட்டமாகும்.  புவியீர்ப்பு உராய்வில் மின்சிமிழ் மீள்நுழைவு வேகம் 25,000 mph.  அந்த பயங்கர உராய்வு வேகத்தில் உண்டாகும் தீக்கனல் வெப்பத்தில் விண்சிமிழ் எரிந்து போகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது !  இந்தச் சோதனை ஆய்வுகள், அனுபவங்கள் அடுத்து 2017 இல் நிலவு மண் மாதிரியை எடுத்துப் புவிக்கு மீளும் மூன்றாம் கட்டத் திட்டத்துக்குப் பயன்படுத்தப் படும்.

    Chinese Moon Rover 2013

    “சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”

    கியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)

    “பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.”  [கதிரியக்கம் அற்ற அணுப்பிணைவு மின்சக்தி உலைக்கு [Fusion Power Reactor] எரிக்கருவாக ஹீலியம்-3 மூலக்கூறு பயன்படுகிறது.

    ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) Head of First Phase of Lunar Exploration

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும்.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

    Lunar Module Returned

    ஆசிய முதல் சாதனையாக நிலவில் இறங்கிய சைனாவின் சந்திரத் தளவூர்தி

    2013 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சைன விண்கப்பல் செங்கி-3 [Chang’e -3]  சந்திரனை நோக்கிப் பயணம் செய்து, நிலவில் தளவுளவியை மெதுவாய் இறங்கித் தடம் வைத்தது.  பிறகு அந்த நிலைத்த சாதனத்திலிருந்து, நகரும் ஆறு சக்கர தளவூர்தி ஒன்று கிளம்பி உளவ ஆரம்பித்தது.   அது முதன்முதல் சைனா செய்த  ஆசிய தீரச் சாதனையாக உலக நாடுகள் கருதுகின்றன.   இந்த அரிய சாதனையைப் புரிந்த முதலிரண்டு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழிந்து சைனா வெற்றிகரமாகச் செய்த மூன்றாவது நாடாக உலகுக்குக் காட்டியுள்ளது.  இந்த விண்வெளித் தேரைச் [Chang’e -3, செங்கி -3] சுமந்து நிலவை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது  சைன ஏவுகணை  மார்ச் -3பி [March -3B].   ஏவு கணை ஏவி 12 நாட்கள் கழித்து,  விண்ணூர்தி சந்திர தளத்தில் இறங்கியது.  பத்தாண்டு முன்பு முதன்முறையாகச் சைனா தன் விண்வெளித் தீரரை அண்டவெளியில் நீந்தச் செய்து பெயர் பெற்ற பிறகு இந்த அரிய சாதனையை வெகு சிறப்பாகப் புரிந்துள்ளது.   சைனா 2020 ஆண்டுக்குள் தன் விண்வெளித் தீரர் நிலவில் கால் வைக்கும் எதிர்காலத்  திட்டத்திற்கு இந்த வெற்றி அடிகோலி யுள்ளது.

    Moon Rover

    சைனாவின் சந்திரத் தளவுளவியும், தளவூர்தியும் வந்திறங்கிய பகுதி, 250 மைல் [400 கி.மீ.] அகலமான ஒரு மட்டத் தளப்பகுதி.   அதன் லாட்டின் பெயர் :  ஸைனஸ் இரிடம் [Latin Name, Sinus Iridum].  அதன் பொருள் : வானவில் வளைகுடா [Bay of Rainbows].  சைனத் தளவுளவி, தளவூர்தி இரண்டும் ஒன்றை ஒன்றைப் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பின.  தளவுளவி நிலவில் ஓராண்டு ஆய்வு செய்யும்.  தளவூர்தி மூன்று மாதங்கள் நகர்ந்து சென்று நிலவில் பணிபுரியும்.  தளவூர்தியின் நகர்ச்சி வேகம் :  மணிக்கு 200 மீ. தூரம் [660 அடி] பயணம் செய்யும்.  30 டிகிரிச் சரிவுத் தளத்தில் ஏறி இறங்க முடியும் தகுதியுள்ளது.

    செங்கி -3 குறிப்பணிப் பெயர் சந்திரத் தேவதைக்கு இடப்பட்ட சைன இதிகாசப் பெயர். அதுபோல் தளவூர்தியின் பெயர் :  யூடூ அல்லது . எளிய முயல் [Yutu or Jade Rabbit] . சைனா அனுப்பியுள்ள செங்கி -3  ஆறு சக்கரத் தளவூர்தி கடைசியில் சென்ற ரஷ்ய தளவூர்தியை விட மேம்பட்டது.   சைனத் தளவூர்தியில் முற்போக்கான தள ஊடுருவு ரேடார் [Ground Penetrating Radar] உள்ளது.   அது நிலவின் மண்ணையும், மேற் தட்டையும் ஆராயும் தகுதியுடையது.  யூடூ முயலின் எடை 120 கி.கி. [260 பவுண்டு] .  யூடூ தேரை இயக்குவது சூரிய மின்சக்தி தரும் தட்டுகள்.  அதனுள் புளுடோனியம் -238 கதிரியக்க மூலகம் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.   அதன் வெப்பம் தளவூர்தியை இரவுக் குளிரில் சூடாக வைத்திருக்க  உதவும்.

    Yutu Rover

    சந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி

    2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “செங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது.  செங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும்.  முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “செங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது.  வடிவத்தில் செங்கி-2 முதலில் பயணம் செய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே !  செங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது.  செங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது.  அடுத்து வரப் போகும் செங்கி -3 & செங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது.  தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது.  தற்போது செங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும்.  குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.

    இந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார்.  அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கி னால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 !  அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.

    Chinese spacecraft control center

    இரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்

    துணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன.  பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.)  குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.)  இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும்.  முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன.  சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்).  சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்).  180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது.  ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன்.  விண்ணுளவிக்கு இட்ட பெயரான “செங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் !

    சைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும்.  “சைனா வின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும்,  விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் ! நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார்.  இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).

    இதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்

    1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன் முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது.  அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன.  அமெரிக் காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது ! இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன !  1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.

    அண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது.  1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலை வனத்தில் நிறுவியது.  சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகர மாக 1970 இல் ஏவியது.  1990-2002 ஆண்டுகளில் சைனா “செங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.

    2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது !  இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது !  2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியா வின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.

    விண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்

    1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன.  அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன.  அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம்.  சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியா கவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.  அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம்.  அதன் எடை 8.5 டன் இருக்கும்.  அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார்.  சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும். செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் ! செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யுள்ளன.

    ஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் !

    இந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது.  சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன.  அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது !  அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை  சந்திர தளத்தில் இறக்கியது !  அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008  நாணய மதிப்பு) என்று தெரிகிறது !  2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது.  2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது !  இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.

    அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக் கின்றன.  இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது !

    2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது.  இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்கா வைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது.  அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது !  ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது !

    சைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி

    1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது.  அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது.  1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது.  1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது.  1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர்.  1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது !  2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது.  அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது.  2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது.  அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது.  2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர்.  2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது.  ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே !

    (தொடரும்)

    தகவல்:

    Picture Credits:  Boston Globe, Christiamn Monitor, Xinhua News Agency & China Daily Reporter, BBC News, The Hindu.

    1. BBC News – Chinese Astronaut Walks in Space [Sep 27, 2008]
    2. BBC News – China Puts its First Man in Space [Sep 27, 2008]
    3. BBC News – China Astronauts Blast into Space [Sep 27, 2008]
    4. BBC News – Timeline Space Flights of the World Countries (2005)
    5. BBC News What’s Driving China Space Efforts By : Paul Rincon [Sep 27, 2008]
    6. BBC News – China Could Reach Moon By 2020 By : Paul Rincon [Sep 27, 2008]
    7. BBC News – China Spacecraft Returns to Earth [Sep 27, 2008]
    8. Boston Globe : China Stokes National Pride with Celebrated First Spacewalk – Maneuver Tests Nation’s Mastry of Technology, By : Barbara Demick  [Sep 28, 2008]
    9. Christian Monitors – China First Spacewalk : No Cold-War Race This Time By : Peter Spootts [Sep 25, 2008]
    10. The Times of India – India Space Program Will Put Rover on Moon [Sep 19, 2008]
    11. Christian Monitor – India Launched its First Satelite (Jan 11, 2007)
    12 The Economic Times – Chandrayaan All Set for Moon Mission (Sep 26, 2008]
    13. Asiaone – Singapore Firm Offers – Chinese Astronaut Completes Nation’s First Space Walk
    [Oct 1, 2008]
    14. China Daily Reporter – Shenzhou VII Spacecraft Lauched fir First Spacewalk By : Hu Yinan [Oct 1, 2008]
    14 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810021&format=html
    அண்டவெளியில் நீந்திய சைனாவின் முதல் விண்வெளித் தீரர் !
    14 (b) http://jayabarathan.wordpress.com/2010/09/10/chandrayaan-2/ (இந்தியாவின் இரண்டாம் நிலவுப் பயணம்)
    15 Xinhua News Agency – Lunar Orbiter a Milestone for Space Agency (October 2007)
    16 The Hindu -Facts & Figures about China’s Second Lunar Probe Chang’e -2 (Oct 1, 2010)
    17 China Launches Second Lunar Probe – Xinhua News Agency (Oct 2, 2010)
    18 Daily Galaxy : China Launches Second Moon Mission (October 3, 2010)
    19 Four Chinese Lunar Launders Mooted – By : Morris Jones, Australia (Oct 6, 2010)
    20 China’s Chang’e-2 Heads for Moon – Xinhua News Agency (October 4, 2010)
    21 Beijing Chinese Space Centre- Xinhua News Agency – Lunar Probe & Space Exploration is Chaina’s Duty to Mankind (October 7, 2010)

    22.  http://www.spacedaily.com/reports/Chinas_triple_jump_progress_in_lunar_probes_999.html  [December 1, 2013]

    23.  http://www.moondaily.com/reports/Silent_Orbit_for_Chinas_Moon_Lander_999.html  [December 9, 2013]

    24.  http://www.moondaily.com  [December 20, 2013]

    25.  http://www.space.com/23855-how-china-change3-moon-rover-works-infographic.html  [December 6, 2013]

    26.  http://www.space.com/23968-china-moon-rover-historic-lunar-landing.html   [December 14, 2013]

    27.   http://www.spacedaily.com/reports/Chinas_first_lunar_rover_lands_on_moon_State_TV_999.html[December 14, 2013]

    28.  http://news.yahoo.com/china-39-39-jade-rabbit-39-lunar-rover-220110008.html   [December 16, 2013]

    29.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/chinas-1st-moon-rover-begins-its-exploration-and-search-for-rare-resources.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29 [December 19, 2013]

    30.  http://news.malaysia.msn.com/top-stories/chinas-jade-rabbit-lunar-rover-deployed-on-moon-xinhua-6 [december 14, 2013]

    31.  http://www.bbc.co.uk/news/world-asia-25393826  [December 15, 2013]

    32.  https://en.wikipedia.org/wiki/Chinese_space_program  [December 17, 2013]

    33.  http://www.ctvnews.ca/sci-tech/china-to-launch-rock-collecting-lunar-probe-in-2017-after-latest-successful-landing-1.1595128  [December 16, 2013]

    34. http://en.wikipedia.org/wiki/Chinese_Lunar_Exploration_Program  [November 2, 2014]

    35.  http://news.yahoo.com/china-readies-moon-mission-launch-next-week-154108595.html  [October 14, 2014]

    36. http://www.moondaily.com/reports/China_gears_up_for_lunar_mission_after_round_trip_success_999.html [November 4, 2014]

    37. http://www.spacedaily.com/reports/Chinas_Lunar_Orbiter_Makes_Safe_Landing_First_in_40_Years_999.html  [November 4, 2014]

    38.  http://www.space.com/27661-china-moon-mission-sample-return.html  [November 5, 2014]

    ******************

    Share
  • குழந்தைகள் தினம்!

    -ரா. பார்த்தசாரதி

    குழந்தைகளை  வரமாகவும், குல விளக்காகவும் கொண்டாடும் நம் நாடு
    பெண் சிசுவை இரக்கமின்றிக் கொல்வதும் நம் நாடு
    பெண் குழந்தைகளைச் சுமையாக நினைப்பதும் நம் நாடு  Childrens
    காலப்போக்கில் இதனை மாற்றியதும்  நம் நாடு!

    ஆயிரம் கோடிச் சொத்துக்கள் இருந்தும் ஓர் வாரிசு இல்லையெனில்
    அச்சொத்துக்கள் யாரோ அனுபவிப்பர்
    இதனைக்கண்டு அவர்கள் சுற்றத்தார்களும் பரிதவிப்பர்
    இந்நிலைமை கண்டும் தத்து எடுக்கச் சிலர் தயங்குவர்!

    தத்து எடுப்பதில் என்றும்  தவறில்லை
    நன் முறையில் வளர்த்தால் கேடு இல்லை
    அனாதை  என்ற  சொல்லை  அகற்றிடுங்கள்
    அதுவே  உன் வாழ்க்கைக்கும்  வழிகாட்டி என உணருங்கள்! 

    குழந்தையும் தெய்வமும்  ஒன்று எனக்  கொண்டாடுகிறோம்
    பிரதமர் நேருவின்  பிறந்த நாளாகக் கொண்டாடுகிறோம் இந்நாட்டினிலே
    குழந்தைகளிடத்தில்   அவர் கொண்ட  அன்பினை  மறக்க முடியுமா?
    நம் நாட்டில் உள்ள  எல்லாக் குழந்தைகளும் அவரைப் போற்றிடுமே! 

    குழல் இனிது  யாழ் இனிது  என்ப தம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்  என்பது வள்ளுவன் வாக்கு
    குழந்தைச் செல்வம்  வாழ்க்கையின் இன்றியமையாத செல்வமே
    குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க இத்தினத்தில் சபதம் எடுப்போமே! 

     

    Share
  • தெம்பு..

    நாகினி

     

    வாழ்த்தும் பண்பு
    வானுயர்வு தரும் தெம்பு
    வாய்க்கும் எழுத்தர்களுக்கு நல்லன்பு
    வாசகர்கள் கொட்டும் கருத்தம்பு..

    கருத்தாய் எழுதும் நடையிலே
    கனிவுடன் வீரப்பாலூட்டும் செறிவிலே
    கண்ணியம் மாறா கடமையிலே
    கட்டுப்பட்டு வாழும் பொறுமையிலே..

    உயர்வும் வளமும் பெறலாமே
    உலகை என்றும் வெல்லலாமே
    உவப்பாய் வாழ்வை இரசிக்கலாமே
    உயர்ந்த மனிதனாய் உலவலாமே..

    எழுதலாம் கலைநயத்துடன் புத்தகமே
    விமர்சனமும் தரமான இலக்கியமே
    தரணியை மாற்றும் வித்தகமே
    எழுச்சியின் வரலாற்றுப் பெட்டகமே..

    வாழ்த்தும் பண்பு
    வானுயர்வு தரும் தெம்பு
    வாய்க்கும் எழுத்தர்களுக்கு நல்லன்பு
    வாசகர்கள் கொட்டும் கருத்தம்பு..!!

    … நாகினி

    Share
  • நரபலி நர்த்தகி ஸாலமி

    — சி. ஜெயபாரதன்.

     

    image

     

    நரபலி நர்த்தகி ஸாலமி

    (ஓரங்க நாடகம்)
    (Based on Oscar Wilde’s Play Salome)
    (1854-1900)
    சி. ஜெயபாரதன், கனடா

    காட்சி -1 பாகம் -1

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=czi6qt9s_qg ]

    ‘கலைஞன் அழகு வடிவங்களின் படைப்பாளி. கலையின் குறிக்கோள் கலைஞனை ஒளித்து வைத்துக் கலைத்துவக்குக் காட்சி தருவது. எழில் படைப்புகளில் அவலட்சணத்தைக் காண்போர் நளினமற்ற கள்ளத் தனம் பெற்றவர்! அவ்விதம் காண்பது தவறு. அழகு வடிவுகளில் எழிலைக் காண்பவர் அனைவரும் நாகரீகப் பண்பாளர். எந்தக் கலைஞனும் எதையும் நிரூபிப்ப தில்லை! எந்தக் கலைஞனுக்கும் ஒழுக்க நெறி மீது பரிவு கிடையாது! கலைஞன் எதையும் வடித்துக் காட்ட முடியும். எல்லாக் கலைகளும் ஆழமற்று அறிவிக்கும் மேல்முகப்புச் சின்னங்களே! எல்லாக் கலைகளும் அறவே பயனற்றவை! ‘

    ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

    image (6)

    எழுத்தாள மேதை: ஆஸ்கர் வைல்டின் வரலாறு

    எழுத்தாள மேதை ஆஸ்கர் வைல்டு டப்ளின் அயர்லாந்தில் (அக்டோபர் 16, 1854) பிறந்து, பெர்னாட்ஷா வாழ்ந்த காலத்தில், கவிதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றை எழுதிப் புகழ் பெற்றவர். கலைப் படைப்பு கலைத்துவப் பண்புக்கே (Art for Art ‘s sake) என்னும் நியதியில் காவியங் களைப் படைத்தவர் ஆஸ்கர் வைல்டு. அறிவு நூல் களஞ்சியங்கள் பலவற்றைப் படைத்து, இலக்கிய நகைச்சுவை ததும்பும் நாடகங்கள் எழுதிய நாகரீகக் கலைஞர் அவர். டப்ளின் டிரினிடி கல்லூரியிலும், ஆக்ஸ்போர்டு மெக்தாலன் கல்லூரியிலும் மேன்மையுடன் கற்று முதல் வகுப்பில் தேறி B.A. பட்டம் பெற்றவர். நடை, உடை, கலை யுணர்ச்சி ஆகியவற்றில் சற்று முரணான திரிந்த புத்தியும் கொண்டவர் அவர். வால்டர் பீட்டர், ஜான் ரஸ்கின் ஆகியோரின் அழகுணர்ச்சிக் கலை நயங்களில் ஆழ்ந்த பற்றும், ஆர்வமும் கொண்டு அவரது படைப்புக்களால் ஊக்கப் பட்டவர்.

    அவரது முதல் வெளியீட்டுக் கவிதை நூல் (1881) பேரளவில் வரவேற்கப் பட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்கா சென்று உரையாற்றினார். அங்கு தான் அவரது நாடகம் வீரா [1883] படைப்பானது. 1884 ஆம் ஆண்டில் கான்ஸ்டன்ஸ் லாயிட் என்னும் மாதை மணந்து அவர்களுக்கு சிரில், விவியன் [Cyril, Vyvyan] என்னும் இரண்டு புதல்வர் பிறந்தனர். பிறகு 1891 இல் கோமகனார் ஆர்தர் ஸாவில்லின் குற்றம், மற்ற கதைகள் [Lord Arthur Savile ‘s Crime & Other Stories], 1888 இல் பூரித்த இளவரசன் [The Happy Prince], 1891 இல் முதல் நாவல்: டோரியன் கிரேயின் படம் [The Picture of Dorian Gray], 1892 இல் மாதுளைகளின் மாளிகை [The House of Pomegranates] ஆகியவை பின்னால் வந்த அவரது கதைப் படைப்புகள்.

    ஆஸ்கர் வைல்டின் கதைகளும், கட்டுரைகளும் பலரால் மிகவும் பாராட்டப் பட்டன. அவரது உன்னத ஆக்கத் திறமை அவர் எழுதிய நாடகங்களில் வெளிப் பட்டது. லேடி விண்டர்மியரின் விசிறி [Lady Winermere ‘s Fan (1892)], படுவாவின் கோமகள் [The Duchess of Padua (1892)], ஸாலமி [Salome (1893)], ஏது மதிப்பில்லா ஒரு மாது [A woman of No Importance (1893)], ஒரு பரிபூரணக் கணவன் [An Ideal Husband (1895)], மகத்தான படைப்பாகக் கருதப் படும், மெய்யுறுதியின் முக்கியம் [The Importance of Being Earnest (1895)] ஆகியவை ஆஸ்கர் வைல்டு எழுதிய அரிய நாடகப் படைப்புகள். ஆஸ்கர் வைல்டு அக்கால மாந்தர் வெறுக்கும் ஓரினப் பாலுறவு முறைகளில் ஈடுபட்டு, குற்றம் சாட்டப்பட்டு (1895) ஈராண்டுகள் சிறையில் தள்ளப் பட்டார். அப்போது அவர் தன்னரிய பெயரையும், புகழையு மிழந்து சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டார்! சிறையில் உள்ளபோது அவர் எழுதிய சிறை அனுபவக் கவிதைப் படைப்பு, ‘சிறை அனுபவப் பாடல் ‘ [The Ballad of Reading Gaol] என்னும் நூலில் 1898 ஆம் ஆண்டில் வெளியானது. இங்கிலாந்தில் தீண்டப்படாத மனிதராய் ஒதுக்கப்பட்டு நிதிவசதி யில்லாமல் நோய்வாய்ப் பட்டு பிரான்ஸில் கடைசிக் காலங்களைக் கழித்து 1900 நவம்பர் 30 இல் ஆஸ்கர் வைல்டு காலமானார்.

    image (4)
    ஜொஹானன்
    புனித நீராட்டி ஜான்

    பைபிள் வரலாற்று நூலில் கூறப்படும், புனித நீராட்டி ஜான் [Prophet: John, The Baptist] யூதப் போதகரின் மரணத்தைப் பற்றிய ஓரங்க நாடகம், ஸாலமி. ஜொஹானன் என்று அழைக்கப்படும் ஜான், கி.பி. முதல் நூற்றாண்டில் ஏசு நாதர் காலத்தில் தோன்றி, ஏசு பெருமானுக்குப் புனித நீராட்டப் பிறந்த தீர்க்க தரிசியாகப் புதிய நெறிவாக்கில் [New Testament] காணப் படுகிறது. மிகவும் பயங்கரமாகக் கொடூர முறையில் கொலை செய்யப் பட்ட, யூத மதஞானி ஜானின் நாடகம் ஸாலமியை, முதலில் ஆஸ்கர் வைல்டு பிரெஞ்ச் மொழியில் எழுதினார். 1894 இல் அதன் ஆங்கில வசனம் எழுதப் பட்டது. ஆனால் ஸாலமி முதன்முதல் பெர்லினில் 1903 ஆண்டு அரங்கேறியது! நாடகம் அங்கே வரவேற்கப் பட்டு 200 தடவைகள் காட்டப் பட்டது. ஆனால் அந்த அரிய நாடகத்தை ஆக்கிய ஆசிரியரான ஆஸ்கர் வைல்டு ஒருதடவை கூட, அப்போது காண அவர் உயிரோடு வாழவில்லை!

    ********

    நரபலி நர்த்தகி ஸாலமி
    (ஓரங்க நாடகம்)

    காட்சி -1 பாகம் -1

    நாடக நபர்கள்:

    ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டு மன்னன்
    ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி
    ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.
    (ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)
    ஜொஹானன் (Johanan): புனித நீராட்டி, ஜான்
    ஏரோதியாஸின் சேடியர், காவலர்
    ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்
    சேனைக் காவலர்.

    நேரம்:

    அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

    image (9)
    ஜொஹானன்
    புனித நீராட்டி ஜான்

    காட்சி அமைப்பு:

    ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் அரச மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [புனித நீராட்டி, ஜான்] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    image (7)
    John baptizing Jesus

    *******************************

    ஸிரியா வாலிபன்: மேலே என்னைக் கவரும் நிலவின் முகம் எப்படிக் கீழே தெரிகிறது! பொங்கி வரும் பெரு நிலவா ? புது நிலவா ? பொன்னிலவா ? எந்த நிலா எழிலாக உள்ளது ? கீழே உலவும் உயிருள்ள நிலவா ? அல்லது மேலே நகரும் உயிரில்லாத நிலவா ? உயிருள்ள நிலவைத்தான் என் ஆத்மா நாடுகிறது! ஸாலமி! ஸாலமி! ஸாலமி! எங்கிருந்து உனக்கு இத்தனை அழகு இன்று வந்தது ? என்னிரு விழிகள் இமை தட்டாமல் உன்னைத்தான் நோக்கிய வண்ணம் உள்ளன! என் நெஞ்சம் என்னை விட்டுப் போய் உன்னிடம் அடைக்கல மாகிறது! என்னுயிர் உனக்காக நீங்கவும் எத்தனிப்பு செய்கிறது! இதோ பார், என்னை! எல்லா வற்றையும் உனக்காக அர்ப்பணித்துக் கற்சிலையாய் நிற்கிறேன் கவர்ச்சி அணங்கே! திரும்பிப் பார் என்னை! ஒருமுறை பார் என்னை! ஸாலமி என் கண்மணி!

    image (8)

    ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! ஸாலமியைப் பார்க்காதே! அது ஓர் சுறாமீன்! காதல் புரிவதற்கு ஏற்ற மாதில்லை அவள்! முழு நிலாவைப் பார்த்தால் உனக்குப் பெண்ணைப் போல் தெரிகிறது! ஆனால் சற்று கூர்ந்து பார்! அடிவானில் பரிதி சிந்திய செந்நிறக் குருதி, வானத்தின் மீது தெறித்துள்ளது! பார்த்தாலே எனக்குப் பயமாகத் தோன்றுகிறது! ஏதோ கேடு வரப் போகிறது! ஏனோ இன்று விசித்திரமாகத் தெரிகிறது எனக்கு! பிரேதக் குழியிலிருந்து எழுவது போல் நிலா தலை நீட்டுகிறது! செத்த பெண் போல விழுந்து கிடக்கிறது, நிலா! சாகும் பிறவியை நோக்குவது போல் விழிக்கிறது சந்திரன்! கேதம் விசாரிக்க வரும் பேதை மாதைப் போல் சோகமாய் உள்ளது நிலா! உனக்குத் தெரிய வில்லையா ?

    ஸிரியா வாலிபன்: எனக்கு அப்படித் தெரியவில்லை! ஸாலமி ஓர் திமிங்கலம் என்றாலும் நான் அஞ்சப் போவ தில்லை! விசித்திரப் பார்வை வெண்ணிலவுக் கில்லை! ஆனால் ஸாலமியின் வேங்கை விழிகளில் ஏதோ வேதனை தெரிகிறது! தனிமையின் கனலில் வேகிறாள் ஸாலமி! அது காதலைத் தேடும் வேதனை! கன்னிப் பெண்டிர் நெஞ்சில் கனல் பற்றி எரியும் வயதல்லவா, ஸாலமிக்கு ? அவளது விழிகள் மேலே நாடும் என்னை நோக்காமல் கீழே ஏன் சுற்றித் திரிகின்றன ? என்னை விடக் கம்பீரமான ஆடவர் மீது அவள் விழிகள் அம்புகளை ஏவுகின்றன! ஸாலமியின் கண்கள் நர்த்தனம் ஆடிப் பிறரை மயக்குகின்றன! கண்கள் வலைவீசி ஆண்களைப் பிடிக்க ஓடுகின்றன! என்னைப் பார்த்தும் பாராததுபோல் ஸாலமி நடிக்கிறாள்! அவள் கண்களின் பட்டொளி படாத ஆயிரம் பேரில் நானும் ஒருவன்!

    image (1)

    ஏரோதியாஸின் காவலன்: செத்த நிலவை மெதுவாகத் தூக்கி வருவது போல், மேகங்கள் ஏந்தி வருகின்றன, பார் வாலிபனே! ஏதோ கேடு விளையத்தான் வானத்தில் அப்படித் தெரிகிறது!

    முதன் படையாளி: [கீழே விருந்து மாளிகையில் ஆரவாரம் கேட்கிறது] என்ன ஆரவாரம் அது! யார் போடும் கூக்குரல் அவை ? கேடு விளைவது கீழேயா அல்லது வானத்தின் மேலேயா ?

    இரண்டாம் படையாளி: குடி குடித்தவர் குடில் அழிவது இடியிலே என்பது பழமொழி! குடிகாரக் கோமான்கள் போடும் கூத்தாட்டம் அவை! யாரென்றா கேட்கிறாய் ? அவர்கள் யூதர்! சிலர் பார்ஸிக்காரர், சிலர் சாதுஸீக்கள்! ஏசு கிறிஸ்துவை சிறிதும் நம்பாதவர்! ஏசு நாதர் தேவ தூதர் அல்லர் என்று புறக்கணிப்பவர்! மூச்சு விடாமல் மதச் சண்டை போடு வதில் வல்லவர்! யூதப் போதகர் ஜொஹானன் தெருவில் நின்று ஞான உரையாற்றினால், செவிகளை மூடி வீட்டுக் கதவைச் சாத்துபவர்!

    முதல் படையாளி: யூதர் எதற்காக மதச் சண்டை போடுகிறார் ?

    image (2)

    இரண்டாம் படையாளி: எனக்குத் தெரியாது! எப்பவும் அவர்களுக்குள் சண்டைதான். கேட்பது எதனையும் ஆழ்ந்து கேட்காது மேலாகக் கேட்டு, விதண்டா வாதம் செய்பவர்! பார்ஸிக்காரர் மேலோகத் தேவதைகள் இருப்பதை நம்புகிறார்! ஆனால் சாதுஸீக்கள் தேவதைகளே கிடையா தென்று அவருடன் சண்டை செய்வார்! இப்படி தெரியாத ஒன்றை வைத்துச் சண்டை போடுவது வேடிக்கையாகத் தோன்றுகிறது எனக்கு.

    ஸிரியா வாலிபன்: சண்டையால் பயனில்லை! பார்க்கிறேன் நிலவை! நோக்குவேன் ஸாலமியை! நெஞ்சில் அவள் அழகைப் படமெடுத்து நீண்ட நேரம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன்! தூங்காமல் இரவு வேளைகளில் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன்! பகலில் நேரே அவளைப் பார்த்து மீண்டும் நெஞ்சில் படமெடுத்துக் கொள்கிறேன்!

    image (5)

    ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! நீ பகலிரவு தூங்காமல் ஸாலமியை நினைத்துக் கொண்டே கிடந்தால், சிறிது நாட்களில் பைத்தியமாய்த் தெருவில் சுற்ற ஆரம்பித்து விடுவாய்!

    ஸிரியா வாலிபன்: அப்பனே! எப்போதும் அவளை நினைக்கும் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும்!

    ஏரோதியாஸின் காவலன்: ஸாலமி ஓர் அரச குமாரி! இளவரசி! நீ ஓர் குடிசைவாசி! நீ எங்கே ? அவள் எங்கே ? எப்போதும் நீ அவளையே பார்க்கிறாய்! அப்படி அவளை நீ இச்சையுடன் பார்ப்பது தவறு! நல்ல வேளை! நீ இன்னும் அந்த முற்றிய நிலைக்குப் போக வில்லை! பைத்தியம் முற்றுவதற்குள் கற்றுக்கொள் வாலிபனே! ஒரு பெண்ணை அப்படி உற்றுப் பார்ப்பது தவறு! பட்டும் படாமலும் பார்த்து அகல வேண்டும்!

    image (3)

    ஸிரியா வாலிபன்: நான் ஸாலமியைப் பார்ப்பது ஏன் தவறு ? நான் திருமணம் ஆகாத வாலிபன்! ஸாலமியும் மணமாகாத எழில் மங்கை! எழிலரசியை ஏழை ஆயினும் பார்ப்பது ஏன் தவறு ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் தின்று விடுவது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே, அது நியாயமா ? அதுதான் தப்பு! ஸாலமி மனைவியின் மகள்! ஸாலமி மாற்றாந் தாயிக்குப் பிறந்த சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயோதிகரான ஏரோத், தம்பி மகள் மீது வைத்த விழி வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு! நான் பார்ப்பது தவறில்லை!

    ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகை மீது நின்று கொண்டு, அரசர் விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி உன் கையிலே கொடுத்து விடுவேன்.

    [காட்சி-1, பாகம்-2 அடுத்த வாரத்தில்]

    (தொடரும்)

    ****
    தகவல்:

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=czi6qt9s_qg

    Picture Credits : Salome The Richard Opera By Richard Strauss DVD

    1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
    2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
    3. The Desire of Ages By: Ellen G. White
    4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)
    5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)
    6. The New Testament & Psalms, Placed By the Gideons.
    7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
    8. http://www.ncregister.com/blog/jimmy-akin/who-was-john-the-baptist-11-things-to-know-and-share [August 28, 2013]
    9. http://en.wikipedia.org/wiki/Beheading_of_St._John_the_Baptist
    10. http://en.wikipedia.org/wiki/John_the_Baptist
    11. http://www.pravoslavie.ru/english/52051.htm

    ****
    [S. Jayabarathan] jayabarathans@gmail.com [November, 1 2014]

    Share
  • திருமுறைகள் கூறும் வழிபாட்டு நெறி

    — எம்.ஜெயராமசர்மா. 

    சிவா

     

    “திரு” என்றால் உயர்ந்தது … பெருமை மிக்கது …. சிறந்தது …. மேன்மையானது …. தெய்வீகத்தன்மையானது எனப் பலநிலைகளில் பொருளைக் கொண்டிருக்கிறது. அதே வேளை செல்வம், அழகு, பொலிவு, நல்வினை என்னும் பொருள்களையும் உணர்த்தி நிற்கிறது. முறை என்றால் … நூல் என்னும் பொருளும், முறைப்படுத்துவது, நெறிப்படுத்துவது என்னும் பொருளும் அடங்கியிருக்கின்றதை காணலாம்.

    எனவே “திருமுறை” என்றால் … உயரிய சிவஞானச் செல்வத்தை மக்கள் அடைவதற்குரிய வழிகாட்டும் நூல் என்றும், பரம்பொருளை அடைந்து அருள் பெறுவதற்கு உயிர்களை நெறிப்படுத்துவது என்றும் பொருள் கொள்ளலாம். இந்தவகையில் திருமுறையானது நமது சமயத்தின் உயிர்நாடியாக விளங்குகின்றது எனலாம். திருமுறைகள் பெரும் பொக்கிஷமாகும். சமயத்தை, வாழ்வியலை, இறை அனுபவத்தை எல்லாம் யாவருக்கும் எடுத்துக்காட்டப் பெருந்துணையாகி நிற்கின்றன. இத்திருமுறைகளில் வழிபாடு பற்றி பலவித நெறிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவையாவும் நமது ஈடேற்றத்துக்கு உதவுவனவாக இருகின்றன.

    வழிபாடு என்றால் என்ன? ஒருவன் தனக்கு நன்மைகளை அளிக்கவேண்டி இறைவனை வாழ்த்தி வணங்குவது வழிபாடு ஆகும். வணங்குதல், போற்றுதல், பிரார்த்தனை என்றும் இதற்குப் பொருளை எடுத்துக் கொள்ளலாம். உலகிலே உள்ள உயிர்கள் இறைவனை சேர்வதற்கு ஏதுவாக இருப்பது வழிபடுதலேயாகும். அவ்வாறுவழிபடும் பொழுதுதான் துன்பத்துக்குக் காரணமாகிய பிறவியினின்றும் நீங்கி இன்பக்கடலான இறைவனை அடையமுடியும்.

    வழிபாடு என்பதை இறைவனிடம் செலுத்தப்படும் அன்பாகவும் கருதலாம். அன்பின் காரணமாக இறைவனைப்பற்றிய சிந்தனை உண்டாகிவிடும். அந்தச் சிந்தனையை திருமுறைகள் பலவிதமான வழிப்பாட்டின் மூலம் நமக்கெல்லாம் காட்டி நிற்கின்றன. திருமுறைகளில் பலவிதமாக வழிபாட்டு நெறிபற்றி கூறியிருப்பினும் அவைகளில் நமக்கு எது உகந்ததோ அதனை நம் வாழ்வில் நாம் கடைப்பிடித்து ஒழுகவும் கூட வாய்ப்பும் இருக்கிறது.

    சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிமுறையிலும் வழிபாடுபற்றி திருமுறைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. சற்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் வகையிலும் திருமுறைகள் வழிபாட்டைக் காட்டிநிற்கின்றன. நமக்கு எது பொருத்தமாக இருக்கின்றதோ அதனைக் கைக்கொள்வதிலும் தவறில்லை.

    திருமுறைகளில் இடம்பெறுகின்ற அடியார்கள் ஒவ்வொருவரும் ஒரே நிலையில் இருந்து வழிபட்டார்கள் என்று சொல்லமுடியாது. அவரவர் விருப்பப்படி இறைவனை வழிபட்டு தமது ஈடேற்றத்துக்கு அடிகோலினார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது.

    ஞானசம்பந்தரை கிரியைக்கும், அப்பரை சரியைக்கும், சுந்தரரை யோகத்துக்கும், மணிவாசகரை ஞானத்துக்குமாக எடுத்துக்காட்டுவதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் இவர்கள் நால்வரது வழிபாட்டிலும் கூட எல்லாவிதமான வழிபாடுகளும் கலந்து இருப்பதனை அவர்களது திருமுறைப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளவும் கூடியதாக இருக்கிறது.

    நால்வரோடு சேர்ந்து ஏனைய அடியவர்களும் திருமுறைகளில் இடம்பெறுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான சூழல்களில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்களும் தமக்கு எது ஏற்றதோ அப்படியான வழிபாட்டு முறையினையே தேர்ந்தெடுத்து இருந்தார்கள் என்பதையும் திருமுறைகள் வாயிலாக அறியலாம்.

    மிகவும் இலகுவாக இருப்பது சரியை வழிபாடுதான் என்பதை திருமுறையில் நாம் கண்டுகொள்ளலாம். அந்த வழிபாட்டை எப்படிச்செய்ய வேண்டும் என்பதை மிகவும் அழகாக அப்பர் பெருமான் நமக்கெல்லாம் காட்டும்பாங்கு அவருக்கே உரியதனித்துவம் ஆகும்.

    நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
    நித்தலு மெம்பிரானுடைய கோயில்புக்குப்
    புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
    பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
    தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்
    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
    அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
    ஆரூரா என்றென்றே அலறா நில்லே

    என அப்பர் பெருமான் சரியைத்தொண்டை மிகத்தெளிவாக திருமுறை வாயிலாகத்தந் துள்ளார். நெஞ்சமே நீ நிலை பெற வேண்டுமானால் தவறாமல் எம்பெருமான் உறையும் கோவிலுக்குப் “போ” என்கின்றார். முதலாவது நிலை கோவிலுக்குப் போவதுதான். அதன்பின்பு எம்பெருமான் இருக்குமிடத்தை விடியமுன் கூட்டிப்பெருக்கி கழுவிச் சுத்தம் செய்து பூக்களைக்கொண்டு பூமாலைகட்டி இறைவன புகழ்ந்து நெக்குருகப்பாடி, தலைமேற் கைகுவித்து ஆனந்தப்பரவசப்பட்டு ஆடி அவனது நாமங்களைச் சொல்ல வேண்டும் இதுதான் சுகமான இனிமையான வழிபாடு என்று அப்பர் காட்டுகின்றார்.  இதையே …

    “காதலாகிக் கசிந்துகண்ணீர்மல்கீ
    ஓதுவார்தமை நன்நெறிக்குய்ப்பதும்
    வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே”

    என்று சம்பந்தப்பெருமானும் சொல்லி நிற்கின்றார்.

    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
    துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
    தொழுகையர் அழுகையர் துவழ்கையர் ஒருபால்
    சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
    என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

    என்று மணிவாசகப் பெருமானும் இந்த வழிபாட்டை ஆதரித்து கூறிநிற்பதை திருமுறையின் வாயிலாக நாம் கண்டு தெளியலாம்.

    இவர்களோடு சுந்தரரும் சேர்ந்து இறைவனை
    “பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா” என்று ஏற்றி போற்றி பாடிப்பரவி நிற்கின்றார்.

    “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னைமறந்தறியேன் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்”
    என்று அப்பர் சொல்லுவதும் இலகுவான சரியைமுறைவழிபாடுதானே.

    பத்தாம் திருமுறையாக இருப்பது திருமந்திரமாகும். திருமந்திரத்தைத் தந்தவர் சித்தரான திருமூலராவார். அவரும் சரியை வழிபாடுபற்றிக்கூறி இருக்கின்றார்.

    “நாடும் நகரமும் நற்றிருக் கோவிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று
    பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சக் கோயிலாய்க் கொள்வனே”

    என்று சொல்லி இறைபுகழ் பாடிப்பரவுவதை நல்ல வழிபாடு எனச் சுட்டிக்காட்டுகின்றார் .இவ்வாறு பாடிப்பரவி நிற்கின்ற வேளையிலே என்ன நடக்கும் என்பதனை

    “விம்மும் வெருவும் விழம் எழும் மெய்சோருந்
    தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடுஞ்
    செம்மை சிறந்த திருஅம் பலக் கூத்துள்
    அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே”

    என்று ஆகிவிடும் நிலை வந்து விடும் என்கிறார் திருமூலர். இவரது கூற்று மணிவாசகரின் “இன்னிசை வீணையருடன்” ஒத்ததாக அமைந்து இருக்கிறதல்லவா?

    சரியை நெறியில் திருவிளக்கிடுதல் மிகச்சிறந்த ஒரு வழிபாட்டு நெறியாக இருப்பதை பனிரெண்டாம் திருமுறை வாயிலாகக் காணமுடிகிறது. திருவொற்றியூரில் கலிய நாயனாரும், திருவாரூரில் நமிநந்தி அடிகளும், தில்லையில் கணம்புல்லரும் திருவிளக்கிட்டே சிவகதிஅடைந்தனர் என்பதனை பெரியபுராணம் காட்டிநிற்கிறது. திருவிளக்கிட்டுவந்த நமிநந்தி அடிகளை அப்பர் பெருமான்போற்றிப் பாடும் திருமுறைப் பாடல்வாயிலாக திருவிளக்கிடுவதன் பெருமை எமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகவும் நல்லஒரு வழிபாட்டு நெறியாகவும் அமைந்து இருக்கிறதெனலாம்.

    பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்குப் பத்தராகி
    அரும்பொடு மலர்கள் கொண்டு ஆர்வத்தையுள்ளே வைத்து
    விரும்பினால் விளக்குத் தூபம் விதியினா லிடவல்லார்க்கு
    கரும்பினிற் கட்டிபோலவார் கடவூர் வீரட்டனாரே

    விளக்கினாற் பெற்றவின்ப மெழ்கினாற் பதிற்றியாகும்
    துளக்கினன் மலர்தொடுத்தாற் றூயவிண் ணேறலாகும்
    விளக்கிட்டார் பேறுசெல்லின் மெஞ்நெறி ஞானமாகும்
    அளப்பில் கீதஞ்சொன்னார்க் கடிகடாம் அருளுமாறே.

    திரு அங்கமாலை அப்பரின் முக்கிய வாய்ப்பாடாகும். இதில் வழிபாடு எப்படி நடைபெறவேண்டும் …அதற்கு உதவுவன என்ன என்பதை அட்டவணைப்படுத்தி
    இலகுவான வழிபாட்டை எல்லோருக்கும் காட்டியுள்ளார்.

    “தலையே நீவணங்காய்
    கண்காள் காண்மின்களோ
    செவிகாள் கேண்மின்களோ
    மூக்கே நீ முரலாய்
    வாயே வாழ்த்து கண்டாய்
    நெஞ்சே நீ நினையாய்
    கைகாள் கூப்பித் தொழீர்
    ஆக்கையாற் பயன் என்
    கால்களாற் பயன் என்”

    … இது ஒரு பாலபாடம் மாதிரி இருக்கிறது அல்லவா? இதைவிட இலகுவாக வழிபாட்டை எப்படிச்சொல்லுவது.

    கண்ணப்பரின் வழிபாடு ஒரு விதம். குங்கிலியக்கலயநாயனாரின் வழிபாடு இன்னொருவிதம். எறிபத்தர் வழிபாடோ முற்றிலும் வேறுபட்டது. அப்பூதியார் வழிபாடு இன்னொருவிதமானது. சிறுத்தொண்டர் செய்கையும் வழிபாடும் நினைத்தே பார்க்கமுடியாதது. மெய்ப்பொருள் நாயனாரின் செயலும் அவரின் வழிபாட்டின் போக்கும் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் தருவிப்பது. பூசலார் நினைப்பும் வழிபாடும் மிகவும் மேலோங்கியது.

    குளம்வெட்டுதலும், குங்குலியம் தூபம் போடுதலும், அடியவர்க்கு அன்னமிடுதலும் அடியவர்க்கு வேண்டிய உபசரணைகள் செய்வதும், கோவில்கட்டுதலும், அதனைப் பரிபாலிப்பதும், இவையெல்லாம் ஒரு விதத்தில் இறைவனுக்கு அர்ப்பணமாகும் வழிபாடு என்றே திருமுறைகள் வாயிலாக எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

    தினமும் கோவிலுக்குச் சென்று இயன்ற திருப்பணிகளைச் செய்வதுதான் நமக்குப் பொருத்தமானதாய் இருக்கும் என்று நினைப்போமாயின் அதனையும் செய்யலாம் என திருமுறைகள் எமக்கு வழிகாட்டி நிற்கின்றன. நமது சமயம் மிகவும் சுதந்திரமானது. செய் அல்லது ஓடிவிடு என்று ஓர் நாளும் எமது சமயம் சொன்ன வரலாறே இல்லை.
    “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை” என்று தைரியம் கூறிநின்றதுதான் எங்கள் சமயத்தின் பெருமையும், எங்கள் சமயத்தை வளர்த்தஅடியார்களின் சிந்தனையுமாகும்.

    எவர் எவர்க்கு எத்தகைய வழிபாட்டுமுறை உகந்ததாக இருக்கிறதோ அதனை அவர்கள் கைக்கொண்டு இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

    “வேண்டத் தக்கது அறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
    வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டால்
    வேண்டி நீ யாது அருள் செய்தாய்
    யானும் அதுவே வேண்டின் அல்லால்
    வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
    அதுவும் உன் தன் விருப்பு அன்றே.”

    இதுவும் மணிவாசகர் காட்டும் ஒருவித வழிபாட்டு நிலையன்றோ!

    “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
    ………………………………………………………………………..
    தன்னை மறந்தாள் தன்நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே “

    இந்த நிலை வழிபாட்டில் ஞான நிலையாகும். இதற்குள்ளும் நாம் வரலாம். ஆனால் அதற்கு எங்கள் மனம் மிகுந்த முயற்சியை எடுக்க வேண்டும். வழிபடுவதில் முக்கியம் கடவுள் மீது உண்மை அன்புடன் வழிபடுவதே ஆகும்.

    “கங்கை யாடிலென் காவிரி யாடிலென்- கொங்குதண் குமரித்துறை யாடிலென்
    ஓங்குமாகடல் ஓதநீராடிலென் – எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே”
    இதுதான் உண்மையான வழிபாடு என்று திருமுறை வாயிலாக அப்பர் எமக்கெல்லாம் அறிவுறுத்தி நிற்கின்றார். உள் அன்போடு வழிபடுதல்தான் உண்மையான வழிபாடு என்பதை மனத்தில் பதிய வைக்கவேண்டும். இதனையே திருமுறைகளும் வலியுறுத்துகின்றன.” அன்பே சிவம் என்பதை “திருமூலரும் வலியுறுத்தி நிற்கின்றார்.

    எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip.in Edu , Dip.in Soc , M.Phil Edu ,SLEAS
    (முன்னாள் கல்விப்பணிப்பாளர்)

    படம் உதவிக்கு நன்றி: http://www.meditationbangles.com/shiva_wallpaper.php

    Share
  • தொபக்கட்டீர் ! 2

    – இன்னம்பூரான். 
    தொபக்கட்டீர்‘… விபரீத புத்தி!’ பழமொழிகளை, அதுவும் வடமொழி கலப்பிலே எழுத அச்சமாக இருக்கிறது. ஆனாலும் அவை இயல்பாகவே உண்மை உரைக்கின்றன. சில ஜந்துக்கள், கூண்டோடு கூண்டாக, திருட்டு ஏணியில் வானமேறி, தன்மானம் இழந்தவர்கள். அந்த வெள்ளைக்காலர் திருடர்கள் அபரிமிதமாகவே குழப்பி, ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவார்கள். மாட்டைத் தூக்கி ஆட்டில் போடுவார்கள். தலைகீழ் நிற்பார்கள். அர்த்தராத்திரியில் பிடித்தக் குடையை அநாமதேய பினாமிகளுக்கு பரிசளிக்கும் பேமானி ஆவார்கள். எதிர்வீட்டில் அடகு பிடிப்பார்கள். பக்கத்தூர் வங்கியிலே, இல்லாளுக்குகூட தெரியாமல், மர்ம நம்பர் கணக்கு வைப்பார்கள். ஹவாலாவில் மூழ்கி எழுவார்கள். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காதபடி, முடக்கிப் போடுவார்கள். தருமமிகு சென்னை வீட்டு சொந்தக்காரர்களும், அரசு ஊழியர்களும், காலங்காலமாக, அரசை வஞ்சித்து,கையூட்டு மரபை பேணி வளர்க்கவே, வளர்த்த கடா நெஞ்சில் பாய்கிறது. அப்பன் சேத்த சொத்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காமல் போகலாம். கடந்த சில வருடங்களில் தலை விரித்து பேயாட்டம் ஆடி, பொது சொத்தை அபகரித்து, விதிமுறைகளை மீறி, பொய்க்கணக்கு எழுதி, பொல்லாதவர்களுடன் கூட்டமைத்த கஜானா களவாளிகள் எக்கச்சக்கம். அவர்களில் பலர் உங்களுக்கு அறிமுகமான பிராணிகள் தான். புலியையும், எலியையும் கூண்டில் வைக்கும் மக்கள், கொசுவையும், ஈயையும் நசுக்கும் நாம், இந்த தருமமிகு சென்னைவாழ் இராக்கதர்களை உலவ விட்டிருக்கிறோம். வேலி நம் நிலத்திலும், அடுத்தவன் நிலத்திலும், புறம்போக்கு நிலத்திலும் மேய்கிறது, கேட்பார் இல்லாமல். எந்த தனிமனிதரையும் சுட்டாத இந்த பொது அறிமுகம் முற்றிற்று. இனி அடைமொழிகள் வாரா. இது இந்த தொடருக்கு சிறப்புப்பாயிரம் என்க. ஒவ்வொரு இழையிலும் இதுவும், ஈற்றடியும் திரும்ப, திரும்ப வரும்.

    சீனாவின் மாபெரும் எயில் (சுவர்) உலகப் பிரசித்தி. அதற்குப் போட்டியாக தருமமிகு சென்னையில், நவம்பர் 8, 2014 அன்று ஒரு மாபெரும் வேலியின் திருவுருவம் அவதாரமாகி இருக்கிறது. அதைச் சற்றே அவதானிப்போம். சவுகார்பேட்டையின் நாரயணமுதலி தெருவில், ஜூன் 23, 2014 அன்று ஒரு கட்டிடம் தீயில் உருக, ஒரு உயிர் கருகியது. நமது மதிப்புக்குரிய, உள்ளூர் சுப்ரமண்யம் சுவாமியாகிய ‘ட்ராஃபிக் ராமசாமி அவர்கள், தகுந்த சான்றுகளுடன், சட்டவிரோதமான கட்டிட ஊழல்களை பற்றி ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். திடுக்கிட்டுப் போன உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7க்குள் உண்மை நிலவரம் தெரிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு சென்னை கார்ப்பரேஷனுக்கும், CMDAக்கும் ஆணையிட்டது. குட்டும் வெளிப்பட்டது. கார்ப்பரேஷனின் ஆய்வுப்படி, ஜியார்ஜ் டவுனில் அதற்குட்படுத்தப்பட்ட 11,304 கட்டிடங்களில் 72 தான் முறைப்படி கட்டப்பட்டனவாம். அதாவது ஒன்பது மீட்டருக்கு குறைவான அகலம் உள்ள சாலைகளில் முறைப்படி கட்டப்பட்டவை 0.00063% ! ஒன்பது மீட்டருக்கு அதிகமான அகலம் உள்ள சாலைகளில் முறைப்படி கட்டப்பட்டவை: 66/3146[0.02%]! இது CMDA தகவல். இது ஒரு புறமிருக்க, புரசைவாக்கம் மில்லர் தெருவில், அக்டோபர் 27.2014 அன்று ஒரு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது. மவுளிப்பாக்கத்து கவுளியின் பிலாக்கண ஓலம் முடிந்தபாடில்லை.

    சட்டமீறலை ஒத்துக்கொண்ட அரசு வழக்கறிஞர் குறித்த கெடுவுக்குள் இடிப்பதும் இன்னல், வீட்டு சொந்தக்காரர்களை தண்டிப்பதும் கடினம் என்றதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஒரு திட்டம் போட்டுக்கொண்டு வரச்சொல்லி, வழக்கை டிசம்பர் 18க்கு ஒத்தி வைத்தது. டவுன் ப்ளானிங் சட்டப்படி, இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஜார்ஜ் டவுனில் டாம் டாம் அடிச்சு, டுமீல் வெடி வச்சு இடிச்சாக்கூட மனை மீதி. விலை கூடிப்போகும். லக்ஷம் மாடி வீடு கட்டும் கோடீஸ்வர்கள் வருவார்கள். நூறு வருடத்துக்கு அப்றம், அதையும் இடிச்சு கோடி மாடி வீடு கட்டினாலும் கட்டுவார்கள். மனித ஜன்மம் அப்டி. ரொம்ப விரட்டினா, 1078ம் மாடியில் திடீர் பிள்ளையார் கோயில் கட்டி விடுவார்கள்.

    சில வினாக்கள் எழுகின்றன:
    அரசு அதிகாரிகள்/அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்று வாய் கிழிய பேசுபவர்கள், பொது ஜனம் இழைத்த இந்த ஊழலுக்கு யாரை குற்றம் சாற்றுவார்கள்? தன் தலையிலேயே சகதி வாரி போட்டுப்பார்களா?
    கூண்டோடு கைலாசம் என்று ஒரு சொலவடை உண்டு. இங்கே கூண்டோடு கையூட்டா? உடலையே ஊட்டு வைப்பார்களோ?
    எப்படியும் கார்ப்பரேஷன் ஊழியர்களும் CMDA ஊழியர்களும், பெரும்பான்மை மக்களும் செய்த இந்த கூட்டுக்களவாணித்தனத்துக்கு பரிகாரம் என்ன?
    லஞ்சம் ஒழிக்க வந்த முதல் சட்டத்திலேயே, சந்தானம் கமிட்டி பரிந்துரை படி, லஞ்சம் கொடுத்தவர்களையும் தண்டிக்க வேண்டும். சொத்து குவித்தவர்கள் மீது வழக்குத் தொடர்வது போல், லஞ்சம் கொடுத்ததற்கு ஆவணமில்லை என்றாலும், உண்மை நிலையை ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டுமோ?
    ‘டிசம்பர் 18 வரை காத்திருப்போமா, வவுத்துலெ நெருப்பைக்கட்டிக்கொண்டு? கைது செய்! கைது செய்!’ என்று குரல் கொடுத்து, குரல்வவளையை நெறிக்கும் மகாஜனத்தை என்ன செய்யலாம்?!

    ஆக மொத்தம் தொபக்கட்டீர் !
    எந்த புற்றில் எந்த பாம்போ?!
    யாரு கண்டா?

    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://cdn.toonvectors.com/images/35/69723/toonvectors-69723-940.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share