Blog

  • ஏன் இப்படி?

    எம். ஜெயராமசர்மா

    “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி” என்று பெருமை பேசுபவர்கள் தமிழர்களாகிய நாங்கள் தான். தமிழர் வாழ்வு பெருமையுடையது. தமிழர் நாகரிகம் உயர்ந்தது. கலை கலாச்சாரம் ஓங்கி உலகு அளந்தது. “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று சொல்லி தமிழன் என்றாலே துணிவும் அஞ்சாமையும் கொண்டவன் என்று பெருமை பேசுபவர்களும் நாங்களேதான். உண்மைதான்! எங்கு சென்றாலும் தன்னை அடையாளப்படுத்தத் தமிழன் தவறுவதில்லை என்பதும் வெட்ட வெளிச்சமானதாகும்.

    உலகம் முழுவதும் தமிழன் பரந்துபட்டு வாழ்கின்றான். பலவித முயற்சிகளிலும் ஈடுபடுகின்றான். தமிழன் கைபடாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். படிப்பாகட்டும், நடிப்பாகட்டும், வியாபாரமாகட்டும், யாவற்றிலும் தனது பேராற்றலை வெளிப்படுத்தியே தமிழன் நிற்கின்றான். இதனைப் பார்க்கையில் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் பெருமையில் பூரித்தே நிற்பான்.

    தமிழன் சென்ற இடமெல்லாம் கோவில்களைக் கட்டுவான். சங்கங்கள் அமைக்கத் தவறவே மாட்டான். பத்திரிகைகள் என்றால் தமிழனுக்கு உயிர் மூச்சு. கலைகளை வளர்ப்பதில் போட்டா போட்டி போடுவான். மேடைகளில் ஏறிவிட்டால் கருத்துக்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. பேனாவை எடுத்து விட்டால் கம்பனும் காளிதாசனும் கூடப் பிச்சை வாங்கவேண்டும். அந்த அளவுக்கு எழுதியே குவித்து விடுவான். பண்டிதமணி கணபதிப்பிள்ளை கம்பனை “அபரபிரமன்” என்று வியந்து கூறியிருப்பார். அவரது அந்தச் சொற்பிரயோகம் தமிழனுக்கே உரியதென்றால் அது மிகையாகாது.

    இப்படியெல்லாம் பலவித ஆற்றல் கொண்ட தமிழனிடம் மிகக் கேவலமான ஒரு குணமும் குடிகொண்டு விட்டது. அதுதான் அடிமை மனப்பான்மை. தன் இனத்திடம் மிகப் பெருமை கொண்ட பொக்கிஷங்கள் இருக்கின்றனவே என்று எண்ணுவதை விட்டு விட்டு தன்னையும் தனது இனத்தையும் தாழ்த்திக்கொள்ள நினைப்பதையிட்டுத்தான் பெரும் வேதனையாக இருக்கின்றது.

    உலகின் நனிசிறந்த மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன்று என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் உலகமொழிகளை வகைப்படுத்திய பொழுது “தமிழைப் பக்திக்குரிய மொழி” என்று சுட்டிக்காட்டினார். பக்தி இலக்கியம் தமிழ் மொழியில் உள்ள அளவு வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது தனிநாயகம் அடிகளாரின் கருத்துமட்டுமல்ல ஏனைய மொழியியல் அறிஞர்களின் கருத்து என்பதும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.

    “பக்தி” என்பதில் அன்பும் அமைதியும் சாந்தமும் கனிவும் மென்மையும்  இரக்கமும் பொறுமையும் நிறைந்திருக்கின்றது என்று கொள்ளலாம். இதனால் தான் பாட்டுக்கொருபுலவன் என்று பாராட்டப்பட்ட பாரதியும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்போலும் என எண்ணக்கிடக்கின்றது.

    தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெள்ளை இனத்தவர்கள் பலர் தமிழின் இனிமை கருதி அதனைக் கற்றதோடு நில்லாது – தமிழ் உள்ளம் கொண்டவர்களாக மாறியதையும் தமிழ் வரலாற்றில் அறிகின்றோம். ஜோஸப் பெஸ்க்கி என்பவர் தமது தீராத தமிழார்வத்தால் வீரமாமுனவராகி இன்பத்தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றதோடு நில்லாமல் பல அரிய படைப்புக்களையும் தமிழில் படைத்தார்.

    இவரால் ஆக்கப்பட்ட ‘சதுரகராதி’ பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாக, அடிப்படையாக அமைந்ததெனலாம். கம்பனது கவிநயமும் திருத்தக்க தேவரது சுவைநயமும் நிரம்பப்பெற்றதென தமிழ் உலகம் போற்றும் “தேம்பாவணி” எனும் காவியத்தையும் இப்பெருமகனார் தமிழுக்கு அளித்துப் பெருமை சேர்த்தார்.

    “போப்பையர்” என்று போற்றப்பட்ட வணக்கத்துக்குரிய ஜீ.யூ. போப் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாளராக விளங்கியவர். இவர் தமிழ் மேல் கொண்ட ஆராக காதலால் தமிழைக் கற்று திருவாசகத்தையும், திருக்குறளையும், யாவரும் அறியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் தமிழின் இனிமையையும், அதன் பெருமையையும், உலகுக்குக் காட்டிய பெருமகனாகத் திகழ்கிறார் எனலாம்.

    இவர் தனது ஆசையாக எதைக்கருதினார் தெரியுமா? “தமது கல்லறையில் தாம் ஒரு தமிழ் மாணவன்” என எழுதப்படவேண்டும் என்று தானாம். எங்கோ பிறந்து, எங்கோ படித்து வளர்ந்த ஒருவர் “தாம் தமிழனாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று சொல்லும் அளவுக்கு தமிழுணர்வு ஊறிய அந்தப் பெருமகனை நினைப்பதற்கே எமக்கெல்லாம் தகுதி உண்டா என்றே எண்ணத்தோன்றுகிறது. “நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்” எனும் எண்ணமே எழுகின்றது.

    தாமரைத் தடாகத்தில் நிரந்தரமாக வாழும் தவளைக்குத் தன்னுடன் கூடவே இருக்கும் தாமரைப்பூவின் அருமை தெரிவதில்லை. அதே வேளை எங்கேயோ தொலைவில் உள்ள காட்டிலிருக்கும் வண்டினங்கள் ஓடிவந்து தாமரைப் பூவிலுள்ள மதுவை உண்டு இன்புற்றுச் செல்லுமாம் என்றொரு பாட்டு உண்டு. இந்தப்பாட்டும் இதன் பொருளும் தமிழர்களாகிய எங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. தமிழர்களாகிய நாம் அந்தத் தாமரைத்தடாகத் தவளை போல இருக்கிறோம். எமது மொழி, பண்பாடு,  இவற்றின் பெருமைகளை அறியாது நிற்கின்றோம். தாமரையின் தேனை உண்ணவரும் வண்டுகளைப்போல மற்றவர்கள் எமது பெருமைகளை அறிந்து வந்து பயன் பெற்றுச் செல்கின்றனர். இதனைப் பார்த்தாவது நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டாமா? சற்றுச் சிந்திப்போமா?

    பொது இடங்களிலோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ தமிழர் அல்லாத அதேவேளை ஆங்கில மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் சந்திக்கும்போது அவர்கள் தங்களது தாய் மொழியிலே பேசுவதை சாதாரணமாகக் காணமுடிகிறது. ஆனால் ஒரு தமிழன் மற்றொரு தமிழனைச் சந்திக்கும் வேளை எப்படி விளிக்கின்றான்? நமது மொழியிலா? அன்னிய மொழியிலா?

    தமிழ் மொழியில் பெயரை வைத்து அதற்காக உழைக்கப் போகின்றோம் என்று  உறுதி மொழி எடுக்கும் அமைப்பின் நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பயன்படுத்தப்படுவது தமிழ் மொழியா? அன்னிய மொழியா? ஒரு அமைப்பின் பெயர் “தமிழ் வளர்ச்சிக் கழகம்”. அந்த அமைப்பின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. புதிய அங்கத்தவர்களுக்கும், புதிய உத்தியோகத்தர்களுக்கும் ஆன தெரிவு நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நடத்தியவர்கள் விளக்கம் அளித்து உரையாற்றியது தமிழில் அல்ல. அன்னிய மொழியான ஆங்கிலத்திலாகும். வேடிக்கை என்னவென்றால் அங்கு கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருமே நன்றாகத் தமிழ் பேசும் தமிழ்ப் பெருங்குடிமக்கள். நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். எனக்குத் தலை சுற்றுவது போலாகிவிட்டது. ஏன் இப்படி? இது தேவைதானா? இப்படிச்செய்வதற்கு என்ன பெயர்? அடிமை மனப்பாங்கா? அல்லது தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதில் பெருமையா? சற்றுச் சிந்திப்போமா?

    ஒரு நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. முழுக்க முழுக்க தமிழர்கள் நிறைந்த அரங்கு. அங்கு நாட்டிய நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு முழுவதும் அன்னிய மொழியில். நடனம் ஆடியது தமிழ்ப் பெண்! நட்டுவாங்கம் தொடக்கம் பக்கவாத்தியம் வரை யாவரும் சுத்தத் தமிழர்கள்! யாருக்காக இந்த அறிவிப்பு? இப்படிச் செய்வதில் என்ன பெருமை? யாராவது எம்மைப் பாராட்டுவார்கள் என்ற எண்ணமா? அன்னிய மொழியில் பாண்டித்தியமும் எங்களுக்கு இருக்கிறது என்று கூறும் நோக்கமா? இதைத்தான் ஒரு வித மாயை எனலாமா?

    உடையை மாற்றுகிறோம். உணவை மாற்றுகிறோம். உரைப்பதை மாற்றுகிறோம். ஆனால் உணர்வை மாற்றலாமா? நாம் நம்மை எப்படித்தான் மாற்றினாலும் அன்னியரும் அவர்தம் நாகரிகமும் எம்மை அவர்களோடு ஒன்றாக்கி விடமாட்டாது. அவர்கள் எக்காலத்திலும் எங்களைத் தங்களோடு  இணைக்கவே மாட்டார்கள். எங்களை அவர்கள் எப்போதுமே ஒரு வரையறைக்குள்ளேயே வைப்பார்கள். நங்கள் எப்படிச்செய்தாலும், அவர்கள் அவர்கள்தான். நாங்கள் நாங்கள்தான். இதனை ஏன் உணர மறுக்கின்றோம்? ஏன் இப்படி ஆனோம்? வேதனையாக இருக்கிறதல்லவா? வெட்கமாகவும் இருக்கிறதல்லவா?

    மங்கலகரமான இடங்களில் பெண்களுக்கு முக்கிய இடமும் பெரு மதிப்பும் கொடுப்பது எமது மரபாகும். பூ அணிந்து நெற்றியில் பொட்டிட்டு பட்டுடுத்தி வந்தால் இலட்சுமீகரமாக இருக்கும் என்பதும் பொதுவான ஒரு கருத்தாகும்.   ஆனால் இன்று இதில் ஒருவித நவீனம் புகுந்து கொண்டது. திருமண வீடாகட் டும், பிறந்த நாள் விழாவாகட்டும், பெண்களில் பலர் தலைவிரி கோலமாக நிற்பதைச் சாதாரணமாகக் காணமுடிகிறது. கோவிலில் கூட இதுதான் நிலை ஆகி விட்டது.

    பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டினாலோ அல்லது விரித்து விட்டாலோ அதனை மங்கலமாகக் கருதாது அமங்கலமாகவே கருதும் வழக்கம் இருக்கிறது. கோவலன் கொலசெய்யப்பட்டதைக் கேள்வியுற்றதும் கண்ணகி “தேரா மன்னா” என்று ஆவேசம் பொங்க கண்ணீரும் கம்பலையுமாக தலைவிரி கோலத்துடன் பாண்டியன் சபையுள் புயலெனப் புகுந்தாள் எனச் சிலப்பதிகாரத்தில் காண்கின்றோம். ஆவேசம் வந்தால் தலைவிரித்து நிற்பதும், ஆற்றொணாத் துன்பம் வந்தால் தலைவிரித்து நிற்பதும் வந்தே தீரும். ஆனால் நல்ல சுப நிகழ்ச்சிகளின் பொழுது தலைவிரித்து நிற்பது தான் ஏனோ என்று விளங்கவே முடியவில்லை. இது தான் நாகரிகமா? இது தான் எமது பண்பாடா? இதுதான் எமது மரபா? அல்லது இவர்களெல்லாம் பாண்டியன் சபையில் நிற்கும் கண்ணகிகளா? சற்றுச் சிந்திப்போமா? இது எமக்குத் தேவைதானா? சிந்தித்தால் நல்லன தோன்றுமல்லவா?

    மொழியைப் பண்பாட்டை எப்படி வளர்ப்பது? முதலில் நாம் அதன் அருமையைப் பெருமையை உணரவேண்டும். அப்பொழுதுதான் எமது வருங்காலச் சந்ததியினருக்கு அதனைக் கொடுக்க முடியும்.

    உலகில் நாகரிகங்கள் பல. அவற்றில் பலவித முறைகள் காணப்படுகின்றன. அவரவர்களுக்கு அவரவர் பழக்கவழக்கம் முக்கியமானதாகும். அதனை நாம் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. அதே வேளை எங்களுக்கான பண்பாடுகளையும் நாங்கள் மறந்தும் விடக்கூடாது. அப்படி மறந்தோமானால் தமிழனின் அடையாளம் தொலைந்து கூடப் போகலாம் அல்லவா? எனவே எங்கள் அன்னையை அணைத்தபடி இருக்க வேண்டும்.

    எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாது! அவனுக்கு வேட்டி சால்வை பற்றி ஒன்றுமே புரியாது! கூந்தல் நீளமாய் இருப்பது எனது மகளுக்குப் பிடிக்காது! பொட்டு வைப்பது புடவை கட்டுவது நாகரிகம் இல்லை என்று அவள் நினைக்கிறாள்! அம்மா, அப்பா, என்று அழைப்பதைவிட மம்மி.. டாடி என்று அழைப்பதில்தான் அவர்களுக்கு பேரானந்தம். இப்படி தங்கள் பிள்ளைகள் நினைக்கிறார்கள், சொல்லுகிறார்கள், என்பதே தற்போது பல தமிழ்ப் பெற்றாருக்கு பெரு மகிழ்ச்சியும் உள்ளுக்குள் ஒரு வித பெருமையும்.

    நீ பிறந்தது தமிழ் மண்ணில்! நீ குடித்தது தமிழ்த்தாயின் பால்! உன் உடல் பூராவும் ஓடுவது தமிழ்தான். ஆனால் உன் உணர்வில் மட்டும் ஏன் தடுமாற்றம்? தாய் மொழியில் கூடப் பேசுவது வீட்டில் தரக்குறைவு என்று எண்ணுவதனால் தான் பிள்ளைகளும் தாய் மொழியைத் தவிர்க்கின்றனர்.

    அன்னிய மோகத்தில் நீ இருந்தால் உன் கீழ்வருபவர்கள் எப்படி தாய் மொழியைப் பேணுவார்கள்? உனது தாய் மொழியைப் பேசமுடியாத உனது பிள்ளைகளால் உனக்குப் பெருமை வருமா? உன நாகரிகம் அறியாப் பிள்ளைகளால் உனக்கு என்ன பயன்? அன்னிய மொழிகள் அனைத்தையும் நன்றாகப் படியுங்கள் உங்களின் ஆற்றலை வெளிப்படுத்துங்கள். ஆனால் அன்னை மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை மட்டும் தூக்கி எறிந்து விடாதீர்கள்.

    மாறுவோமா? கட்டாயம் மாற்றம் வேண்டும்! எங்களின் அடையாளங்களைத் தொலைத்து விடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஏன் இப்படி ஆகினோம்? சற்றுச் சிந்திப்போமா?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    சித்திரம் பேசுதுகே சவ்உன் கரங்களால்,
    இத்திறன் வாய்த்தது எங்கனம், -முத்திரை
    மோதிரம் போடவரார், யாதவர் யானையில்,
    போதமர்மா தோடு பராக்’’….கிரேசி மோகன்….

    போதமர் மாது-மலரில் அமரும் அலர்மேல் மஹாலக்‌ஷ்மி

    Share
  • நரபலி நர்த்தகி ஸாலமி -2

    – சி. ஜெயபாரதன்.

     

    narabali narthagi

    நரபலி நர்த்தகி ஸாலமி – 2

     

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=VJi8xd38zwE
    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IyREn1-mCec

    (ஓரங்க நாடகம்)
    (Based on Oscar Wilde’s Play Salome)
    (1854-1900)
    சி. ஜெயபாரதன், கனடா

    காட்சி -1 பாகம் -2

    ‘கலைத்துவப் படைப்புகளில் ஒழுக்க நூல், ஒழுக்கம் தவறிய நூல் என்பது கிடையாது! நூல் முறையாக எழுதப் பட்டது அல்லது முறையற்று எழுதப் பட்டது என்றுதான் குறிப்பிடப் படும். அவ்வளவுதான். கலைஞன் தான் பின்பற்றும் நெறி வாழ்க்கை எனப்படுவது அவனைச் சார்ந்து தனித்துவம் கொண்டது. ஆனால் கலையின் நெறிமுறை குறைபாடான ஓர் ஊடகத்தின் மூலம் பூரணத்துவப் பயன்பாட்டைப் பெற எதிர்பார்க்கிறது! எந்தக் கலைஞனுக்கும் நெறித்துவம் மீது இரக்கம் கிடையாது. கலைஞனிடம் உள்ள ஒழுக்கவியல் பரிவு மன்னிக்க முடியாத ஓர் எழுத்து நடைப் பண்பாடு! கலைஞன் எவனும் மனக் கோளாறுடன் எப்போதும் இருப்ப தில்லை! எதையும் அவன் தனது மொழியில் படைத்துக் காட்ட முடிகிறது. சிந்தனையும், மொழியும் கலைஞனின் இரண்டு கலையாக்கக் கருவிகள்.

    ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

    image1

    ஏரோத் மன்னர் முன் புனித நீராட்டி

    கலைப் படைப்புக்கு நற்பண்பும், துர்க்குணமும் கலைஞனின் இருகைச் சாதனங்கள். கலை வடிவ ஆக்கங்களை ஆழ்ந்து நோக்கினால், எல்லாத விதக் கலைகளும் ஓரிசை ஞானியின் கலைத்துவப் படைப்புகளை ஒத்தவையே. கலைத்துவம் உண்டாக்கும் உணர்ச்சியை நோக்கினால், அது நடிகனின் நடிப்புத் திறனைப் போன்றதுவே! அனைத்துக் கலைகளும் தோற்றத்தில் பளிச்செனக் கவரும் வெளிப்பகட்டுச் சின்னங் களே! அவற்றின் அடித்தளத்தில் மூழ்கி ஆய்ந்திடுவோர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார். சின்னங்களை மட்டும் படித்து அறிபவரும் விபத்தில் மாட்டிக் கொள்வர்! கலைத்துவப் படைப்பு ஒன்றின் மீது பலவித முரண்பாடான கருத்துகள் எழுந்து எறியப் பட்டால் அந்தப் படைப்பு புதிதானது, சிக்கலானது, முக்கியமானது என்று குறிப்பிடலாம்! கலைத்துவம் காட்டுவது வாழ்க்கை யன்று; அது காண்பவர் பிம்பத்தைக் காட்டும் காட்சிக் கண்ணாடி!

    ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

    image2
    Princess Salome

    பாவங்களை விலக்கிப் புனித நீராடுவீர்!

    தேவன் உமது பாவத்தை மன்னிப்பார்!

    தயாரித்து வைப்பீர், பிரபுவின் பாதம்பட!

    யாரோ ஒருவர் சாலையில் முழக்குவார்!

    நேராக்குவீர் பயணத்துக் கேற்ற பாதைகளை!

    நிரப்புவீர் பள்ளத்தை! தணிப்பீர் மேடுகளை!

    நேர்பாதை ஆக்குவீர், நெளிந்து போனதை!

    கரடு முரடான பாதை வழுவழுப் பாகட்டும்!

    காண்பர் அனைத்து மாந்தரும்,

    கடவுளின் பாவத் தீர்ப்பு!

    புனித நீராட்டி: ஜான் போதகர்.

    +++++++++++++

    நரபலி நர்த்தகி ஸாலமி

    (ஓரங்க நாடகம்)

    காட்சி-1, பாகம்-2

    நாடக நபர்கள்:

    ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

    ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

    ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

    (ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

    ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

    ஏரோதியாஸின் சேடியர், காவலர்

    ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

    சேனைக் காவலர்.

    கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

    நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

    நேரம்:

    அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

    image3

    John the Baptist Preaching the Public.

    காட்சி அமைப்பு:

    ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகை யில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரை யாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக் கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

    **************

    [முன்பாகத் தொடர்ச்சி]

    image4

    ஸிரியா வாலிபன்: ஸாலமியை நான் கண்களால் பார்ப்பது ஏன் தவறு ? திருமணம் ஆகாத வாலிபன் நான்! ஸாலமியும் மணமாகாத ஓர் எழில் மங்கை! நானோர் ஏழை ஆயினும் எழிலரசியைப் பார்ப்பது தவறா ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் கொத்தித் தின்பது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே அது மட்டும் நியாயமா ? அதுதான் தவறு! ஸாலமி அவரது குருதியில் முளைக்காத புதல்வி! மாற்றான் ஒருவனுக்கும், அவர் மனைவிக்கும் பிறந்த வேற்றுப் புத்திரி! ஸாலமி மாற்றாம் தாய் வயிற்றுச் சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயது மூத்த ஏரோத், தனயன் மகள் மீது வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு! நான் பார்ப்பது நேர்மையானது. அதில் ஏதும் தவறில்லை. ஸாலமியை நான் மனதார நேசிக்கிறேன்! ஏரோதின் காமக்கனல் விழிகள் அவரது உடற்பசிக்கு ஓர் இளமானைத் தேடுகின்றன!

    image5

    John the Baptist in Jail

    ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகையில் இருந்து கொண்டு, அரசர் அளித்த விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி வீதியிலே வீசி விடுவேன்.

    முதற் காவலன்: அதோ பார்! கணவர் வைத்திருக்கும் கிண்ணத்தில் மதுவை நிரப்புகிறார், மகாராணி! நிரம்பக் குடித்து நிலை தடுமாறி நெளிகிறார் மன்னர்! மதுக்கிண்ணம் மட்டும் எப்படிக் கையிலிருந்து தவறி விழாமல் உள்ளது ?

    கப்பதோசியன்: யார் மகாராணி, தெரியவில்லையே ? தங்கக் கிரீடம் தலையில் மின்னும் மாதா ? முத்து மாலை மார்பில் ஊஞ்சலாடும் முதிய மாதா ? கூந்தலில் நீலப் பொடியைத் தூவி யிருக்கும் கோமகளா ?

    image6

    John baptizing Jesus

    முதற் காவலன்: ஆம், ஆம் அந்த கோமகள்தான் நாட்டரசி! கலிலீ நாட்டின் ஆளுநர் ஏரோதின் இரண்டாம் மனைவி! புள்ளிமான் போல் அங்குமிங்கும் துள்ளிக் கொண்டு அனைவர் விழிகளையும் ஈர்த்துக் கொண்டிருப்பவள்தான் வாலிப எழில் இளவரசி ஸாலமி! கோமகளின் ஏக புத்திரி! ஆனால் ஸாலமியின் நிஜத் தந்தை ஏரோத் மன்னரில்லை!

    இரண்டாம் காவலன்: ஏரோத் மன்னருக்கு ஒயின் என்றால் உயிர்! அவர் எத்தனை வகையான திராட்சை ரசம் சுவைப்பவர் தெரியுமா ? ஆனால் அவற்றில் அவருக்குப் பிடித்தது மூன்று ரகங்கள். ஒன்று ஸமத்ராஸ் தீவிலிருந்து வரவழைக்கப் பட்டது! அது ரோமானியத் தளபதி ஸீசர் மேலங்கியைப் போன்று பழுப்பு நிறத்தில் உள்ளது!

    கப்பதோசியன்: என்ன ஸீசரின் மேலங்கியைப் போன்ற பழுப்பு நிறமா ? நான் ஸீசரைப் பார்த்தது மில்லை! ஸீசர் மேலங்கியைப் பார்த்தது மில்லை!

    இரண்டாம் காவலன்: இரண்டாவது ஒயின் தனிச்சிறப்பாக ஸைப்பிரஸ் நகரத்திலிருந்து மன்னருக்கு வருவது. அந்த திராட்சை ரசம் தங்கத்தைப் போல் மஞ்சள் நிறத்தி லிருக்கும்.

    கப்பதோசியன்: எனக்குத் தங்கம் பிடிக்கும்! எந்த அங்கத்தை ஈந்தும் நான் தங்கத்தை வாங்கத் தயார். ஆனால் மஞ்சள் நிறம் எனக்குப் பிடிக்காது! கடவுள் ஏன் தங்கத்திற்கு மங்கிப் போகும் மஞ்சள் நிறத்தை அளித்தார் ? தங்கத்துக்கு உகந்த ஊதா வண்ணத்தைக் கடவுள் பூசி யிருக்கலாம் ?

    இரண்டாம் காவலன்: மன்னருக்குப் பிடித்த மூன்றாவது திராட்சை ரசம் ஸிசிலியிலிருந்து வருகிறது! அந்த ஒயின் குருதிபோல் செந்நிற முள்ளது! ஏன் அது சிவப்பாக இருக்கிற தென்று என்னைக் கேட்காதே! பால் வெள்ளையாக உள்ளது ஏன் என்று வினாவை எழுப்பும் ஆய்வாளன் நீ! யாருக்குத் தான் தங்கத்தின் மீது ஆசை யில்லை ?

    image7
    நியூபியன்: என் நாட்டுத் தெய்வங்கள் நரபலி கேட்பவை! மானிடக் குருதி யென்றால் நாக்கு நான்கு முழம் நீண்டு தொங்கும்! ஆண்டுக்கு இருமுறை தெய்வத்துக்கு கோர நரபலி யிடுகிறோம்! எங்கள் தெய்வங்களுக்கு ஐம்பது ஆண்கள், நூறு பெண்களை வருடந் தோறும் பலியிட்டுச் சமர்ப்பிக்கிறோம்! ஆயினும் எங்கள் தெய்வங்களுக்கு அவை போதா! தெய்வச் சீற்றத்தால் நாங்கள் கேட்பது எங்களுக்குக் கிடைப்ப தில்லை! நாங்கள் தெய்வ வெறுப்புக்கு ஆளாகி விட்டோம்!

    கப்பதோசியன்: என் தாய் நாட்டில் எந்த தெய்வமும் விட்டு வைக்கப்பட வில்லை! ரோமானியப் படையினர் எங்கள் எல்லா தெய்வங்களையும் நகரை விட்டே விரட்டி விட்டார்! கவலையே யில்லை! நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக் கிறேன், இப்போது! மலைப் பிரதேசங்களில் தெய்வங்கள் ஒளிந்துள்ளதாகக் கூறப் பட்டது! ஆனால் நானந்தக் கதைகளை நம்புவ தில்லை! மூன்று நாட்கள் மலைமுகப்பில் தங்கி எல்லா இடங்களிலும் தேடினேன். மனதார வேண்டி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்! தெய்வங்கள் என் கண்ணில் படவில்லை! பிறகு தெய்வங்களை நான் வாயாரத் திட்டினேன்! அப்போதும் என் வாயை மூடக் கடவுள் வரவே வில்லை! எனது நாட்டில் தெய்வம் யாவும் மறைந்து போய் விட்டன! அவை எதுவும் மனிதனின் ஊனக் கண்களுக்குக் காட்சிச் சிலையாய் வரப் போவதில்லை!

    image8

    முதல் காவலன்: யூதர் யாவரும் கண்ணிலே காண முடியாத கடவுளைத்தான் வணங்கி வருகிறார். ஒருவருக்கும் புரியாத ஒன்றின் மீதுதான் அவர் மிக்க நம்பிக்கை வைக்கிறார்!

    கப்பதோசியன்: எனக்குப் புரிய வில்லை அது. அவரது குருட்டு நம்பிக்கை நகைப்பிடமாக உள்ளது!

    [கீழே பாதாளாச் சிறையிலிருந்து புனித நீராட்டி ஜானின் (ஜொஹானன்) ஆங்காரக் குரல் அழுத்தமாகக் கேட்கிறது]

    ஜொஹானன்: [சிறைக் கதவை ஆட்டிப் பெருங் கூச்சலுடன்] கேளுங்கள் மானிடரே! நீவீர் என்னைப் புறக்கணிக்கலாம்! என் வார்த்தைகளை மீறலாம்! ஆனால் அடுத்து எனக்குப் பின்னால் அதோ வீதியில் வந்து கொண்டிருக்கிறார், பாரீர்! என்னை விடப் பராக்கிரமசாலி! பெரிய தீர்க்க தரிசி! அவரது காலணியின் கயிற்றை அவிழ்க்கக் கூடத் தகுதி யில்லாதவன், நான்! அந்தப் புனிதர் வரும் போது, புறக்கணிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவு கிடைக்கும்! அவர்கள் அனைவரும் ரோஜா பூக்கள் போன்று மலர்ச்சி அடைவார்! குருடாய்ப் போனவருக்குக் கண்ணொளி கிடைத்துப் பகலிரவு மாறுபாடு தெரியப் போகிறது! செவிடாய்ப் போனவருக்குக் காதொலி செம்மையாய்க் கேட்கப் போகிறது! கைசூப்பும் கைக் குழந்தை தீயைக் கக்கும் அசுர முதலை [Dragon] வாழும் குகைமீது கை வைக்கத் துணியும்! புனிதப் போதகர் [ஏசு மகான்] பிடரி மயிரைப் பிடித்து சிங்கத்தை இழுக்கும் பேராற்றல் படைத்தவர்!

    image9
    இரண்டாம் காவலன்: புலம்புபவன் வாயை அடக்கு! அவன் ஒரு கிறுக்கன்! பித்துப் பிடித்தவன்! தாறு மாறாக, ஏட்டிக்குப் போட்டியாக எப்போதும் பேசுபவன்! சிறையிலே அவனைப் போட்டாலும், வாயைக் கட்ட முடிய வில்லை! அவன் குரலை ஒடுக்க அறுக்க வேண்டும் அவன் நாக்கை! அல்லது ஊசியால் தைக்க வேண்டும் அவன் வாயை!

    முதற் காவலன்: [மனம் வெகுண்டு] அப்படிச் சொல்லாதே! அவர் ஓர் உன்னதப் போதகர்! ஒரு புனித மகான்! அவர் ஆங்காரமாய்க் கத்தினாலும் அர்த்தமுள்ள பேச்சு. அவருக்கு நெஞ்சில் கனிவு, பரிவு மிகுதி! அவர் ஒரு தீர்க்க தரிசி! தினமும் அவருக்கு நான்தான் தட்டிலே உணவு தருபவன். அன்போடு எனக்குத் தவறாமல் நன்றி சொல்வார்! மனிதர் அறநெறிகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும்; அறிவு வெள்ளம் கரை புரண்டு செல்லும். கேட்டுக் கொண்டே யிருக்கலாம்!

    கப்பதோசியன்: அத்தகைய புனித மனிதருக்கு ஏனப்பா சிறைவாசம் ? அவர் பேரென்ன ? ஊரென்ன ? ஏன் அவரை அந்தப் புலிக் குகையில் அடைத்துக் கத்த விட்டிருக்கிறார் ?

    முதற் காவலன்: அவரது பெயர் ஜொஹானன். போதகர் ஏசு நாதருக்குப் புனித நீராட்டிய ஜான் என்று அழைக்கப் படுகிறார். பாலை வனத்தில் எங்கோ ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார். ஸெக்கரையா என்னும் பாதிரியின் ஒரே மகன் அவர். தாயார் பெயர் எலிஸபெத். வாலிப வயதில் பிள்ளை யில்லாமல் முதிய வயதில் பெற்றோருக்குப் பிறந்த ஞானக் குழந்தை அவர்! பிள்ளை யில்லாத வேளையில் தெய்வ சன்னதியில் தேவதை காபிரியல் தோன்றி, பிறக்கப் போகும் குழந்தை, பின்னால் ஏசு பிரபுக்குக் கால் தடமிட முன்பாதை விரிக்கு மென்று சொன்னது! மேலும் அந்தக் குழந்தைக்கு ஜான் என்று பெயர் வைக்கும்படிக் கூறியது.

    கப்பதோசியன்: எல்லாம் ஒரு பெரிய புனை கதை போல யிருக்கிறதே! யாரிந்த ஏசு பிரபு ?

    முதற் காவலன்: நானின்னும் ஜானைப் பற்றிச் சொல்லி முடிக்க வில்லை. ஏசு பெருமானைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். ஒட்டகத் தோல் உரோமத்தில் உடுத்தி யுள்ள உடை! இடுப்பில் ஓர் பட்டை! உண்ணும் உணவு என்ன வென்று தெரியுமா ? பெரிய விட்டில் பூச்சி, காட்டுத் தேன்! அவ்வளவுதான். மனிதர் திடகாத்திரமாக இருக்கிறார்! நல்ல உயரம்! கண்களில் எப்போதும் அறிவுக்கனல் பறக்கும்! ஆனால் பார்க்கச் சற்று விகாரமாகத் தோன்றுவார்! அவரைப் பின்பற்றிச் செல்லும் சீடரோ கணக்கில் அடங்கா.

    image10குடி மயக்கத்தில் ஏரோத் மன்னன்

    கப்பதோசியன்: புனித நீராட்டி என்ன சொல்கிறார் ? ஏன் ஆங்காரமாய்க் கத்துகிறார் ?

    முதற் காவலன்: என்ன சொல்கிறார் என்பது எனக்கு முழுவதும் புரிய வில்லை. யாரையோ திட்டுகிறார்! கேட்டால் அச்சத்தை ஊட்டுகிறது! அடிவயிற்றைக் கலக்குகிறது நமக்கு! அவரது சொல்லடி யார் மீது படுகிறதோ, அவருக்கு நெஞ்சடிப்பு ஏற்பட்டு மயக்கத்தில் விழுந்து விடுவார்!

    கப்பதோசியன்: அவரை நான் காண விரும்புகிறேன். பார்க்க முடியுமா அவரை ?

    முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், அவரை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ?

    image11

    (தொடரும்)

    [காட்சி-1, பாகம்-3]

    ****

    தகவல்:

    1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

    2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

    3. The Desire of Ages By: Ellen G. White

    4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

    5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

    6. The New Testament & Psalms, Placed By the Gideons.

    7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

    ****

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 32

    சு.கோதண்டராமன்.

    தஸ்யு – மூன்று உருவகங்கள்

    indra-on-elephant

     

    தஸ்யுக்கள் என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின் அவர்கள் யார்? இந்திரன் முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது. தஸ்யுக்கள் ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்?

    தஸ்யுக்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில் விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர் குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர். இந்திரன் விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக் கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக் கொன்று ஒளியை மீட்டார்.

    ஒளியை யார் திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

    சாயணர் அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
    விருத்திரன் என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும் காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர். கறுத்த மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பொழிகிறது. வானம் வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது. இந்திரனை மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பசுக்கள் என்பதற்கு ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர். இதுவும் பொருத்தமே. ஏனெனில் வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சாயணரின் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை (சூரிய கிரணங்களை) மேகம் மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள் பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?

    உருவகம் -2 நிலச்சரிவு
    இதோ மற்றொரு ஊகம். இது சாயணர் கூறாதது.

    மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி விடும். 2008 மே 12இல் சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின் கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும் மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பி, அந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து நதியை முன்பு போல ஓடச் செய்தது.

    இந்திரன் செய்ததும் இது போலத்தான் இருக்க வேண்டும். விருத்திரன் என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன், தன் படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும். வ்ருத்ரன் என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத் தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

    அதே போல, வலன் என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின் உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால் அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். மண் அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.

    இந்த ஊகம் ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும் அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது (1.117.21, 7.5.6) இந்த உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு ஒளியை எப்படித் தடுக்க முடியும்?

    கோத்ரம்
    மூன்றாவது உருவகத்தைப் பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

    ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் (1.126.3).

    மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர் எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.

    வேதத்தில், பசு மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர். பிற்காலத்தில் இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள் ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.

    உருவகம் 3 – பொது உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
    நீரையும், ஒளியையும் போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.

    கிராமத்துக்குப் பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம சமுதாயம்.

    பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை. தட்டுப்பாடு ஏற்படும்போது, வலிமையுள்ள சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு. பொதுச் சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று அழைக்கிறோம்.

    வலன் என்ற பணி பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான் கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார். பொதுச் சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன் உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால் அவர் பணியாக(சமூக விரோதியாக)க் கருதப்படுவார். அதனால் அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று கூறுகிறது.

    அக்ரது (செயல் அற்றவர்கள்), அராதி (தானம் செய்யாதவர்கள்), அச்ரத்தா (சிரத்தை இல்லாதவர்கள்), அவ்ருதா (நல்ல காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.

    விருத்திரன் சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான். வலன் பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச் சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர் உதவியுடன், தடைகளைச் சமாளித்து இவர்களைத் தோற்கடித்ததுதான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும், விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது. இதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.

    அவர்கள் செல்வம் மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள், இனிமையான பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.

    தஸ்யுக்களை அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள் தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக வாழத் தொடங்கினர். அந்த அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான் 100 தாஸர்களைப் பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம் (8.56.37).

    அந்த தாஸர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன் என்பதிலிருந்து தெரிகிறது (7.86.75 ).

    சமூக விரோதிகளைத் தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய தாஸர்கள் கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன பல்பூதன், தருக்ஷன் பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.

    ஆர்யர்களாக இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர். அவர்கள் பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். எங்கள் எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும், ஆரியர்களானாலும் என்ற வேண்டுதல் காணப்படுகிறது (10.38.3).

    பொது உடைமைப் பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க முடியும் என்பதை விளக்கவில்லை.

    இது வரையில் மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல். இந்த மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும் இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக் கொள்ளலாம்.

    படம் உதவிக்கு நன்றி:
    How Many People did Indra Kill?
    http://tamilandvedas.com/2014/07/17/how-many-people-did-indra-kill/

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(47)

    -செண்பக ஜெகதீசன்

    இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரித்துரையா தார். (திருக்குறள்:650 – சொல்வன்மை)

    புதுக் கவிதையில்…

    விரிந்த இதழ்களுடன்
    விதவித அழகாய் இருந்தாலும்,            flower
    மலருக்கு மகிமை
    மணம்தான்…

    கற்றவர், கற்றதை
    மற்றவர் அறிய
    எடுத்துரைக்க இயலாதபோது
    அவரும்
    மணமில்லா மலர்போலத்தான்…!

    குறும்பாவில்…

    கற்றிருந்தும் பிறரறிய
    எடுத்துரைக்க இயலாதவனும்,
    மணமிலா மலர்தான்…!

    மரபுக் கவிதையில்…

    ஆர்வமாய்ப் பலநூல் கற்றேதான்
    அறிவை அதிகம் பெற்றிடினும்,
    தேர்வுகள் பலவும் வென்றிடினும்,
    திறம்படப் பிறர்க்கே உரையாதார்
    பேர்தான் கற்றவர் என்போரும்,
    பற்பல வடிவில் பலநிறத்தில்
    பார்க்க விரிந்த போதினிலும்
    பழுதாம் மணமிலா மலரொப்பரே…!

    லிமரைக்கூ…

    கற்றவற்றை எடுத்துரைத்து அறியவேண்டும் பலர்,
    விரித்துரைக்காதவர் ஆவார்
    விரிந்திருந்தும் பயனில்லாத மணமில்லா மலர்…!

    கிராமிய பாணியில்…

    பூவுபூவு காட்டுப்பூவு
    பெருசுசெறுசா பாக்கும்பூவு,
    எதுக்கொமொதவா காட்டுப்பூவு
    வாசமில்லா வெத்துப்பூவு…

    பூவுண்ணா மணமிருக்கணும்
    பக்கமெல்லாம் மணம்பரப்பணும்…

    படிப்பு கதயும் இதுதானே,
    தெரிஞ்சிருக்கணும் தெரிஞ்சிருக்கணும்
    படிச்சதெல்லாந் தெரிஞ்சிருக்கணும்,

    படிச்சிக்குடுக்கத் தெரிஞ்சிருக்கணும்
    எடுத்துச்சொல்லத் தெரிஞ்சிருக்கணும்..

    தெரியலண்ணா காட்டுப்பூவு
    அவுனுமொரு காட்டுப்பூவு
    தேவயில்லா காட்டுப்பூவு
    வாசமில்லா காட்டுப்பூவு…

    பூவுபூவு காட்டுப்பூவு
    எதுக்கொமொதவா காட்டுப்பூவு…!

     

    Share
  • அகதியின் அகத்தீ!

    -அமீர்

    என்னுரிமை
    உன்னுரிமை ஒன்றாக
    நாமென்ன சகோதரர்களா?
    என்னுயிரும்
    உன்னுயிரும்
    சமமாக நாமென்ன தோழர்களா?

    இல்லை என்பதை உணர்கிறேன்
    அதனால் தானே விரட்டப்படுகிறேன்…

    பிறந்த மண்ணை
    உரிமை கோரல் தவறா?
    ஒடுக்கிய பின்பும்
    ஒழிக்க நினைப்பது சரியா?

    ஏகாதிபத்யமே…
    உங்களுகே சொந்தம் என்பது
    இந்தப் பரந்த உலகம் மட்டுமா?
    அண்ட வெளிக் கிரகங்களும்
    அதில் அடக்கமா?

    அச்சுறுத்தலும்
    தட்டிப்பறித்தலும்
    உங்களின் அன்பா?
    கொலைமிரட்டலும்
    விரட்டி அடித்தலும்
    உங்களின் பண்பா?

    உயிர்பயத்தில்
    கால்கள் கடுக்க ஓடும்போது
    தெரியாதவலி
    இந்த உலகம்
    மவுனமாய்ப் பார்க்கும் போது தெரிகிறது…

    ஆளப்படுபவர் அனுமதியின்றி
    ஆளப்படுவது
    சர்வாதிகாரத்தின் இலக்கணமோ?
    ஆட்சியும் மாட்சியும்
    துணைவருவதால்
    சேரும்ஆணவமோ?

    உடலைவிட்டு
    உதிரம் பிரிந்தால்
    உயிருக்கு  இல்லை உத்திரவாதம்
    நாங்கள்
    உடல் ஓரிடம்
    உதிரம் ஓரிடம்
    உயிர் ஓரிடமென வாழும்
    மண் தேடும் புழு…

    நாங்கள்
    கருவரையிலிருந்து
    கழிவாக வெளியேற்றப்படாமல்
    உங்களைப் போன்றே
    ஈன்றப்பட்ட பிறவிகளல்லவா!

    தாயும்
    தாரமும்
    பிள்ளைகளும்
    இரவில் மட்டும்
    எங்கள் மார்சாய்கிறார்கள்
    புகைப்பட உதவியோடு!

    வெயிலும்
    குளிரும்
    மழையும் மட்டுமே
    நாங்கள் அறிந்த உலக இயற்கை!

    ஐ.நா.வும்
    செஞ்சிலுவையும்
    அனுப்பும் ஆடைகள்
    அணியும் தினமே
    நாங்கள் அறிந்த திருநாட்கள்!

    பாலும் பழமும்
    பல்சுவை விருந்தும்
    பசிக்குக் கிடைக்கும்
    பழைய கஞ்சியில் காண்கிறோம்!

    நாடுபிடிப்போரின்
    நலியாத ஆசையால்
    நாங்கள்
    ஈழனென்றும்
    பாலஸ்தீனனென்றும்
    சூடானி என்றும்
    திபெத்தியனென்றும்
    பரந்து கிடக்கிறோம்
    பாவப்பட்ட உலகில்…

    இனி
    பரந்து கிடந்தோமென்று
    வரலாறு சொல்ல…
    பாலைவனம் ஒன்று போதும்
    எங்கள்  சொந்த மண் என்று துள்ள…
    கால்நடையாகவே பயணிக்கிறோம்
    அது கிடைக்கும்
    நன்னாளை எதிர்நோக்கி!

     

    Share
  • 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

    மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

    உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
    இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர்(சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி…) இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல்…

    v ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.

    v கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)

    v திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.

    v கணினி மற்றும் இணையவழி தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல்.

    v தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்…

    v தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….

    v தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.

    மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில்1-2 பக்கங்களில் 25.12.2014 தேதிக்குள் cpc2015@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பின்னர் 1.02.2015ஆம் தேதிக்குள் முழுக் கட்டுரையையும் அனுப்பிவைக்க வேண்டும்.

    கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு(டேஸ்) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கத்தினை ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.

    மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு 1.03.2015 ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.

    முழுக் கட்டுரையை 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்கவேண்டும்.

    மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடப்படவுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும் உலகக் கணினிமொழியியல் ஆய்விதழிலும் வெளியிடப்படும்.

    முக்கியமான நாட்கள்
    கட்டுரைச் சுருக்கம் அனுப்ப இறுதி நாள் : 25.12.2014

    முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : 01.02.2015

    தேர்வுசெய்யப்பெற்ற கட்டுரை பற்றிய அறிவிப்பு : 01.03.2015

    மாநாடு நடைபெறும் நாட்கள் : 30.05.2015, 31.5.2015
    & 01.06.2015

    தமிழ் இணைய மாநாடு 2015இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2015@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    அன்புடன்
    முனைவர் இர. ஸ்ரீராம்
    தலைவர், மாநாட்டு ஆய்வரங்கக் குழு, தமிழ் இணையம் 2015.

    Share
  • பாசவினை

     

    பவள சங்கரி

    DSC00204

    பாசிபிடித்த மண்டபத்தினுள்
    பாசியே உணவானாலும்
    பாசபந்தங்கள் பரந்திருந்தாலும்
    சுற்றிச் சுற்றி சுழன்றாலும்
    உள்ளிருந்தே உழன்றாலும்
    சுற்றிவரும் வாளைகளின்
    சுவடுகளனைத்தும் சூரியானாலும்
    சுவனமின்றி உணவுமின்றி
    சுழன்றுவரும் தங்கவிழியும்
    கருஞ்சுனைகளும் பச்சிலைகளும்
    பசுமை நினைவுச்சுமைகளாயினும்
    பாசிபிடித்த மண்டபமே அரண்மனையாக
    பசுமை நிறைந்த நினைவுகளே
    வயிற்றின் உணவாக நாளும்
    வாழும் பாசிதின்னும் கயல்களின்
    பாசமிகு பரிதவிப்பு பாழடைந்த
    பாசிபிடித்த மண்டபத்தினுள்ளேயே
    பதுங்கித்தான் போகும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”ராகம்(ராகத்வேஷம்) கடந்த ரமணன்போல் கண்ணனும்
    தேகம் மறந்தூதும் தெய்வீக, -ராகம்
    புலன்கடந்த ஆன்மக் கலனேற்றி ஆன்றோர்
    குலம்சேர்க்கும் ஆதிவரா கம்’’….கிரேசி மோகன்….

    Share
  • ஐம்பதாண்டுக்கால இலக்கியப் பயணம்!

    அன்பினிய நண்பர்களுக்கு,

    anas
    வணக்கம். இலக்கியப் பயணத்தில் அரை சதம் (50 ஆண்டுகள்) கடந்து வந்து எழுத்துலகில் பெரும் சாதனை புரிந்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருப்பவர் திரு. நரசய்யா அவர்கள். எளிமையும், தன்னடக்கமும் தன்னகத்தேக் கொண்ட இவரது அனுபவம் வாய்ந்த எழுத்துகளும், தெளிந்த ஆய்வுக் கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், வருங்கால எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்றால் அது மிகையாகாது. இவருடைய முதல் தமிழ் சிறுகதை, தாம் தமிழ் மொழியை முழுமையாக அறியாத காலத்தில் எழுதிய கதையே, 1964ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆனந்த விகடன் முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஒன்பது கதைகள் முத்திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    narasiah-11-289x300

    1955ம் ஆண்டில் ஐ. என். எஸ். பெங்கால் என்ற கப்பலில் மாலுமியாகப் பணியாற்றியபோது, தனக்கேற்பட்ட பயங்கரமான ஒரு அனுபவத்தை சுவைபட அவர் விளக்குவதை இங்கே – அங்கிங்கெனாதபடி! காணலாம்.

    ஐயா அவர்களின் ஆன்மீக நாட்டமும், நூல் திறனாய்வுக் கலையும் அறிய இதோ இராம கதை – ஒரு சிறு விமர்சனம். இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து தம் இலக்கியப் பணியைத் தொடர திரு. நரசய்யா அவர்களை வாழ்த்திப் பணிகிறோம்.

    அன்புடன்

    பவள சங்கரி

    அவள் வீட்டு வாசல் மண்

    நரசய்யா

    ‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் புண்ணிமட்டி என்பது புண்ணியமான மண் – மிருத்திகா மட்டி என்றறியப்படுகிறது. வேஷ்யத்வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின் போது செய்ய முற்படுகையில், முதல் முதலாக ஒரு வேசியின் வீட்டு வாசல் மண் சிறிதளவாவது எடுத்துக் கொள்ளப்படும். ஏனெனில் துர்கா பூஜை சமூகத்தினால் நடத்தப்படும் பூஜை. இதற்குச் செய்யப்படும் சிலைக்கு வேண்டிய மண்ணில் ஒரு பங்கில் எல்லோர் காலும் பட்டிருக்கவேண்டும் என்பது ஒரு ஐதீகம்.! ஆகையால் இந்த மண் தேவை என எண்ணப்படுகிறது. ஜாதி மத வேறுபாடின்றி எல்லோராலும் மிதிக்கப்படும் வாசல் ஒரு பாலியல் வேலையாளரின் வீட்டு வாசல்தான் என்பதும் ஒரு நம்பிக்கை! வட கொல்கத்தா பகுதியில் இருக்கும் குமார்த்துலி என்னும் இடத்தில்தான் இப்பொம்மைகளைச் செய்யும் இனத்தவரான குயவர்கள் வசிக்கிறார்கள்.அவர்கள் தான் இம்மண்ணை எடுத்துவந்து ஏப்ரல் மாதத்திலேயே விநாயகபூஜையுடன் தமது வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதில் அவர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்கிறார்கள். பால் என்ற கடைசிப்பெயரைக் கொண்ட இவர்கள் வேலை செய்வதைக் காண்பதே ஒரு பெரிய மகிழ்வைத்தரும் விஷயம். குமார்த்துலியின் குறுகிய சந்துகளில் சென்று புகைப்படங்கள் எடுத்து இவ்விடத்திற்கு அமரத்துவம் அளித்தவர்களில் உலகின் சிறந்த புகைப்படமேதைகளான ரகுராயும் ஹென்றி கார்ட்டியர் பிரசென்னும் அடங்குவர்.

    கொல்கத்தா நகரத்தைப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து.

    திபின்பால் வைக்கோலையும் மூங்கில் குச்சிகளையும் வைத்து மற்றொரு முறை என்ன செய்வதென்று அறியாமல் துர்க்கா மாதாவின் உருவத்தைச் சீர் செய்ய ஆரம்பித்தவுடன் அவனுக்கு நேற்றைய சண்டைதான் நினைவுக்கு வருகிறது. அவன் மனைவி சுருசி அவனை வறுத்து எடுத்து விட்டாள். “வேலையும் கிடையாது. ஒரு இடத்துக்குப் போய் சம்பாதிக்கவும் வக்கு கிடையாது குடிக்கிறதுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? வெக்கமா இல்லையா?”
    அவளுக்குத் தெரியாது அவன் அங்கு பட்ட அவஸ்தை.. இந்தப் பொம்மையைச் செய்யவேண்டிய முதற்பொருளை அவன் கொண்டுவர முடியாதது அவனுக்கு அச்சத்தை அளித்தது.

    அவன் வேலை செய்ய வேண்டுமென்றுதான் நினைக்கிறான். எவ்வளவோ நம்பிக்கையுடன்தான் அவன் குழுவின் தலைவன் சொன்ன படி ஒரு பிடி மண் எடுத்து வர வேண்டி, கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியான சோனாகச்சி சென்றிருந்தான். அவனுக்குத் தெரியுமா இப்படி விரட்டியடிக்கப்படுவானென்று? ஏதோ புதிய இயக்கமாம் . தர்பார் மகிள சமானாய் சமிதி என்று பெயராம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் சொல்லியிருக்கிறார்களாம். “ஒங்களெ ஏமாத்தி வர்ற இந்தக் கேடுகெட்ட சமுதாயத்துக்கு ஒரு அடி கொடுக்கணும். அவர்கள் பூஜைக்குப் பொம்மை செய்ய ஒங்களெத்தேடித்தான் வருவார்கள். ஒரு சின்னப் பிடி கூட கொடுக்கவேண்டாம்.. . .”

    அதிகமாகத்திட்டியவள் சம்பா.! அவள் அழகுக்காக அறியப்பட்டவள்.

    திபின் பாலுக்குப் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என சம்பந்தம்? மா (துர்க்காதேவி அப்படித்தான் அறியப்படுகிறாள்) பொம்மை செய்வதில் யாருக்கு எவ்வாறு அபிப்ராயப் பேதம் வரலாம்? இந்த மண் கொண்டு வரவில்லையென்றால் பணம் கிடையாது. யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்குச் சக தொழிலாளி தான் சொன்னான், “மோஷாய் வா. . .ஒரு பாட்டில் அடிச்சிட்டுப் போயிடலாம். அப்பறம் ஐடியா ஏதாவ்து வரும்.”

    அப்படிக் குடித்துவிட்டு வந்தவனைத்தான் மனைவி ‘வறுத்து’ எடுத்தாள்.! அவனுக்கு இந்த உலகத்தின் போக்கே புரியவில்லை. எப்போதாவது ஓரிரு தடவை நாடிய சம்பாவின் நினைவு திரும்பியும் அவனுக்கு வந்தது
    சோனாகச்சியின் இருண்ட சந்துகளில் வசிக்கும் ‘அவர்கள்’ இன்று நேற்றல்ல; நாகரீகம் தோன்றிய நாளிலிருந்து தமது தொழிலை நடத்தி வருகிறார்கள். வாழ்வின் விளிம்பில் வாழ்ந்துவரும் அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பும் கிடையாது. வறுமையால் விரட்டப்பட்டு, நோயும் புறக்கணிப்பும் உடன் வர, இரவின் போர்வையில் (போர்வை தமக்கு மட்டுமல்ல தம்மைத் தேடி வரும் வக்கிர புத்தி கொண்டவர்களுக்கும்தான்) ஒதுக்கப்பட்ட இடமான கொல்கத்தாவின் சோனாகச்சியில் சொந்தபந்தங்களுக்கு அப்பாற்பட்டு தாயின் அரவணைப்பும் தந்தையின் பாசமும் எப்போதோ மறுக்கப்ப்ட்டுவிட்ட அவர்களும் இந்த மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள் தாம் என்பதையே சமூகம் மறந்து விட்ட நிலையில் உயிருடன் நடமாடுகிறார்கள். . . வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது பொய்யெனவே தோன்றுகிறது.

    இந்தச் சமூகமோ அவர்கள் தேவைகளை, தமது கோரமான வக்கிரங்களுக்கு அப்பாற்பட்டு, துர்கா பூஜையின் போது வேண்டுகிறது. இதை என்னவென்று சொல்ல? சமூகத்தின் வஞ்சப்புகழ்ச்சியா அல்லது தனது தவறுகளைத் துடைத்தெறிய முற்படும் பிராயச்சித்த ஏற்பாடா? ஒதுக்கப்பட்டு, தாழ்வாகப் பேசப்பட்டு, ஓரத்துக்குத் தள்ளப்பட்டவர்களின் வீட்டுவாசல் மண் பூஜையின் போது வேண்டப்படுவது எதனால்? ஆண்டவன் சமூகத்திற்கு இட்ட ஒருவகைத் தண்டனையா?

    வடமேற்கு நிலத்திலிருந்து சொந்தக்காரர்களின் சதியுடன் கொல்கத்தாவின் இருண்ட பகுதியான சோனாகச்சிக்குத் தள்ளப்பட்டவள் சம்பா!

    சம்பா தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். “இந்தத் தடவை வரட்டும் பார்க்கிறேன் . . . ஒரு சிட்டிகை கூட த்ர மாட்டேன்.” அப்படிச் சொன்னவள் முன்னால் வந்து நின்ற முதல் துரதிருஷ்டசாலியான தபின் பாலுக்குக் கிடைத்த திட்டுகளில் பெரும்பகுதி இவளிடமிருந்துதான் வந்தது.

    “அப்படியானால் பூஜை நடக்கக்கூடாது என்கிறாயா?” அவன் விரட்டப்பட்டவுடன் மாசி கேட்டாள். மாசி எனறறியப்பட்ட அவள் இவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. “அது அம்மாவைக் கோபமடையச் செய்யாதா?”

    “கோபம் வரட்டும். மா என்ன செய்வாள்? இதுவரை என்ன செய்திருக்கிறாள்?” மாசி பயந்து விட்டாள். “மாவைப்பற்றி அப்படியெல்லாம் பேசாதே..” இவளுக்குப் புத்தி தா தாயே என்று மாசி வேண்டிக் கொள்வதைப் பார்த்த சம்பாவுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. ’இந்த மாசியும் ஒருகாலத்தில் என்னைக் கொடுமைப் படுத்தியவள் தானே! ஆனால் இன்றோ எனக்கு ஆறுதலாகவும்துணையாகவும் உள்ளாள்’ மனதில் நினைத்துக் கொண்டாள்.

    மாசி தொடர்ந்தாள். “ஒனக்குத்தெரியுமா இந்த மண் இல்லாமே குமார்த்துலிக்காரர்களால் ஒண்ணும் செய்யவே முடியாதுன்னு? மா பொம்மை செஞ்சாதான் அவங்களுக்குச் சோறு கிடைக்கும்! நாம் நல்லவங்களோ கெட்டவங்களோன்னு எனக்குத் தெரியாது. ஒங்களையெல்லாம் கூட நான்தான் இந்தத் தொழில்லே சேத்தேன் அப்பவே எத்தனையோ பாவம் செஞ்சுட்டேன். ஆனா நான் என்ன செய்வேன்? எனக்குத்தெரிஞ்ச தொழில் இது ஒண்ணுதான்.. ஒன்னோடே நெலமையும் அதேதான். ஏதோ எந்த ஜென்மத்திலேயோ செஞ்ச பாவத்துக்கு இப்போ அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்.”

    மூச்சு விடாது பேசி முடித்த மாசியைப் பார்த்தாள் சம்பா. “நான் என்ன பாவம் செஞ்சேன்? பத்து வயசிலே கொண்டுவந்தாங்க. அதுக்கப்பறம் ஒங்கிட்டே பட்டது போதாதா? இப்போ ஒன்னே விட்டா எனக்கும் யாரும் இல்லே. இதிலே பாவமும் புண்ணியமும் எங்கேயிருந்து வந்தது? என் வயசு பொண்கள் போல இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா என்ன?”

    “ஆசை எனக்கும்தான் சம்பா இருக்கு. கொழந்தெகளைக் கொஞ்சணும். ஒரு மனிதனோடே வாழணும்கற ஆசை எனக்கு இல்லேங்க்றேயா? ஆனா முடியுமான்னு நெனச்சுப் பாரு”

    “அது நீயாதானே செஞ்சுக்கிட்டது? ஒன்னையும் கெடுத்துக்கிட்டு எங்களையும் இந்தப் பாழும் குழியிலே தள்ளினது நீதானே” கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் சம்பா. பல வருடங்களுக்குப் பிறகு அவள் அழுகிறாள். சிலை போல அமர்ந்திருந்த மாசி பேசவே யில்ல. சின்னவளாக பேரே தெரியாத இவள் இங்கு தள்ளப்பட்ட போது கொள்ளைபோகிற அழகு! இவளை வைத்து எவ்வள்வு சம்பாதிக்கலாம் என்ற ஒரே எண்ணம்தான் மாசிக்கு இருந்தது. இணங்காத இவளை எவ்வள்வோ கொடுமைப் படுத்தியதும் இவளே தான். சம்பா என்ற பெயரும் இவள் வைத்தது தான். மாசிக்கும் கண்கள் குளமாயின.

    சம்பா, நீ சொல்றது எல்லாம் சரிதாம்மா. ஆனா இப்போ என்ன செய்ய முடியும்? ஒன்னாலே போய் அந்த ஜனச்முத்திரத்திலே சேர்ந்து வாழமுடியுமா? அந்தக் கும்பல் ஒன்னை ஏத்துக்குமா? நான் ஒருதடவை காளிகட் (கொல்கத்தாவின் காளி கோவில்) போநிருந்தப்போ அங்கே பூஜை செய்யற பட்டசார்யாவைக் கேட்டேன். . . எங்களுக்கு விமோசனமே கிடையாதான்னு . ‘ஒங்கமேலே பழி போடற சமூகத்துக்குத் தெரியணுங்க்றத்துக்காகத்தான் ஒங்க வீட்டு வாசல் மண்ணைக் கொண்டுதான் மா பொம்மையைச் செய்யணும்னு மா ஒரு கண்டிஷன் போட்டிருக்கா! அப்படிக் கொடுக்கற மண்ணுலே ஆரம்பிச்சு செய்யற மா பொம்மையைத் தான் எல்லோரும் பூஜை பண்றோம். அந்த மண்ணிலே ஆரம்பிக்கப்பட்ட பொம்மையைப் பாத்துத்தான் நமஸ்காரம் பண்றாங்க. கன்னத்துலே போட்டுக்கறாங்க இல்லையா? இந்த மாதிரி செய்யறப்போ ஒங்க பாவம் கொறையத்தான் செய்யும்’” என்று அவர் சொன்னார். அதே நான் நம்பறேன். . .”

    கோபத்துடன் திரும்பினாள் சம்பா. ‘எல்லாம் கட்டுக்கதை! யாருக்கு வேணும் பாவம் கொறைய சமாசாரம்? நானா பாவம் செஞ்சேன்? என்னைக் கொண்டுவந்து இங்கே தள்ளிவிட்டு இப்போ நான் பாவம் செஞ்சதா சொல்றது மகா மடத்தனம்” ஆவேசத்துடன் அவள் பெசியதைக்கேஏட்டு பயந்து விட்டாள் மாசி. சுற்றி நின்ற பெண்களுக்கும் மாசிக்கும் அவளே ஒரு மாதாவாகக் காணப்பட்டாள். ”நம்பமாட்டேன்.! இந்த மண்ணைக் கொண்டு போகவும் விடமாட்டேன் பூஜையே இல்லாமல் போனாலும் பரவாயில்லை”

    மாசியின் பயம் உச்சக்கட்டத்தை அடைந்தது. “அப்படிச் சொல்லாதே அம்மா . . பூஜை நடக்கல்லேன்னா ஒலகமே அழிஞ்சுடும்”

    “அழியட்டுமே!” முற்றுப்புள்ளி வைத்து விட்டாள் சம்பா.

    ஓடிப்போன மாசி திருமபவும் பட்டாச்சார்யாரைச் சந்தித்தாள். நடந்ததைச் சொன்னாள். எண்பது வயதைத் தாண்டிய அவர் நிதானமாகப் பேசினார். ”அவள் சொல்றதிலே தப்பு இல்லையே! பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். மா ஏதாவது வ்ழி வைத்திருப்பாள். . .பயப்படாதே.”

    கோபத்துடன் நடந்தாள் சம்பா. சோனாகச்சியினின்றும் வந்து நகரத்துக்குள் போகும் சாலைக்கு அவள் வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. எவ்வளவோ திட்டியிருந்தும் தன்னை நோக்கி வருவது திபின்பால் என்பதைத் தெரிந்து கொண்ட சம்பா அவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள். திடீரெனத் தனது காலில் விழ வந்த அவனைத் தடுத்தாள் சம்பா. “நான் யார்னு தெரிஞ்சும் என் காலில் விழ வர்ரியே ஒனக்குப் புத்தி இருக்கா.”

    “சம்பா நீதான் ஏதாவது சொல்லணும். எனக்கு மூணு பொண்கொழந்தைங்க. வீட்லே ஒரு மீன் கொழம்பாவது எம்பொஞ்சாதி வெக்கணும்னா, இவங்கெல்லாம் பட்டினியாலே சாகக் கூடாதுன்னா இங்கேருந்து நான் மண் கொண்டு போனாத்தான் உண்டு. தயவு செஞ்சு பாரும்மா”

    பெண் குழந்தைகளா?
    பெண் குழந்தைகள். தான்! உதவி செய்யாவிடில் என்னாகும்? பணம் இல்லையென்றதால் தன்னையே விற்ற தனது மாமாவின் நினைவு வந்தது அவளுக்கு. முடியாது. இது நடக்கவிடக் கூடாது. “நீ வீட்டுக்குப் போ . .நான் பாத்துக்கறேன். காலையிலே பாத்துக்கலாம்.” என்று சொன்னவளின் உறுதியான் பேச்சைக் கேட்டு ஏதோ ஒரு வகையில் திருப்தி அடைந்தவனாக திபின் தாயை வேண்டிக்கொண்டு வீட்டைநோக்கி நடந்தான்.

    அதிகாலையில் வீட்டு வாசலில் சம்பா நிற்பதைக் கண்ட சுருசிக்குக் கோபம் எல்லையைத் தாண்டியது. “கேடு கெட்டவளே இங்கேயே வர்ற தைர்யம் ஒனக்கு வந்துடுச்சா? மண்ணு கொடுக்க மாட்டேன்னியாமே? என்ன கொழுப்பு? விளக்குமாறாலே தான் அடிக்கணும்!” அவள் சொல்லி முடிக்குமுன்பு அவளையும் தள்ளிக்கொண்டு வந்து நின்றான் திபின் பால். “மன்னிச்சுடு தாயே” என்றவன் கையில் ஒரு பெரிய பொட்டலத்தைத் திணித்துவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்று விட்டாள் சம்பா.

    அந்தப் பொட்டலம் அவள் வீட்டு வாசல் மண் எனத்தெரிந்து அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டவனின் காலில் விழுந்தாள் சுருசி!.

    (ஆனந்தவிகடன் பவள விழாவின் போது முத்திரைக் கதையாக 20-10-2002 அன்று வெளியிடப்பட்டது. திருப்பூர் தமிழ் சங்கத்தின் பரிசு பெற்ற தீர்க்கரேகைகள் என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து.. விகடனுக்கு நன்றிகளுடன் வெளியிடப்படுகிறது)

    Share
  • முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

    முனைவர் மு.பழனியப்பன்.

    BabyMurugaOriginal

     

    திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத்தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப்பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.

    முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுபதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்தொண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.

    தேனூர் வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.

    சேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார், செந்தில் வாழ் அந்தணர், திருத்தணியிற்பிறந்தார், தொண்டரடித்தொண்டர், பாடாது விடுபட்டோர், புராணிகர்கள், முருகன் திருவருளைச் சிந்திப்போர், முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர்.

    இப்புராணத்துள் ஒளவையார், மீனாட்சி அம்மையார், முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார், அருணகிரிநாதர், குமரகுருபரர், நக்கீரர், அகத்தியர், கச்சியப்ப சிவாச்சாரியார், பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.

    செந்தில்வாழ் அந்தணர் சருக்கம், கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம், வென்றி மலைச் சருக்கம், அரஹாரச் சருக்கம், காவடிச் சருக்கம், குகனேரிச் சருக்கம், கல்லாடச் சருக்கம், தென்பழநிச் சருக்கம், நின்றசீர்ச் சருக்கம், நாரதச் சருக்கம், வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது. அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

    இப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது. இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

    அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.

    இதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்
    றதல சேடனார் என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்
    மதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்
    சதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே (1181)

    என்று பாடுகின்றார்.

    கந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை
    ஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்
    பரவசமாய் வீழ்ந்தெழுந்து
    போற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்
    இனியென்று காண்பதென்று
    சாற்றினார் ஆன்ற பெரியார்க்குத் தீங்கு சாற்றிய தீமதி
    படைத்த சம்பந்தாண்டன்
    தோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று
    ஆர்த்தவையோர் தொழுதுபோற்றி (1182)

    என்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.

    பாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடையூற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது, முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்

    அவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில்) அதிபன் பரிவோடு அம்
    புவிபேண்பரிகாரம் பலபுரிந்தும் பயனிலாதலால்
    இவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இல்லையென்னலும் இம்மா
    தவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்

    பந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்
    சிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்
    வந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்
    சந்தித்தது என்பொன்றித்து புண்தழும்பறிய திதைத்தம் (2582)

    என்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.

    குமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.

    முருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய் அதுகண்டுஏங்கினோம்
    இருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து இனிதுபேசுமா
    அருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை அளித்திடும்
    கருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை காண் (1324)

    என்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று, அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.

    இவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை, அவர்களின் வாழ்வை, தொண்டை, சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழாய்வுத் துறைத்தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    படம் உதவிக்கு நன்றி: indianknowledgesystemacademy.blogspot.com

    Share
  • அமெரிக்காவில் தேர்தல் பின்னடைவு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    98f62e054ae1f4328a3471911522cfe05492baa7

    அமெரிக்காவில் 2014-க்குரிய இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற மேலவையில் சில இடங்களில் தோற்றுப் பெரும்பான்மை இழந்திருக்கிறது; கீழவையில் தேர்தலுக்கு முன்பே சிறுபான்மையாக இருந்தது; இப்போது இன்னும் சில இடங்களை இழந்து இன்னும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. 2008-இல் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா என்னென்னவோ சாதிக்கப் போவதாக அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அமெரிக்கா செல்லும் பாதையைத் திசைதிருப்பி உலக அரங்கில் அதன் படிமத்தை உயர்த்த வேண்டும், அமெரிக்காவின் ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய கஷ்டங்களை நீக்குவதற்குக் குறைந்தபட்ச ஊதியம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர வேண்டும், அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டார். இந்தக் கனவுகளை முறியடிக்கும் விதமாக 2010-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் கீழவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை போயிற்று. 2012-இல் ஜனாதிபதித் தேர்தலோடு நடந்த இடைத்தேர்தல்களில் எப்படியோ மேலவையில் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சித் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் 2014-இல் நடந்த தேர்தலில் மேலவையிலும் பெரும்பான்மை போயிற்று. இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்து நிற்பதால் ஒபாமா என்ன திட்டங்கள் கொண்டுவந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடக் குடியரசு உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    ஜனநாயகக் கட்சி இரண்டு அவைகளிலும் நிறைய இடங்களை இழந்ததற்கு இந்தத் தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் குறைந்தது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். கடந்த எழுபது வருடங்களில் – அதாவது 1942 தேர்தல்களுக்குப் பிறகு – இப்போதுதான் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 36.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பெரும் பணக்காரர்கள் அளித்த ஆதரவோடு குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் செய்த பொய்ப் பிரச்சாரங்களும் இதற்குக் காரணம் என்கிறார்கள். புஷ் காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை ஒபாமா எழுந்து நடக்கவைத்தார். ஆனாலும் புதிதாக வந்த வளத்தின் நன்மைகள் சிறுபான்மையினரான பணக்கார வர்க்கத்தினருக்கே போய்ச் சேர்ந்தது. மத்தியதர வர்க்கத்தினரும் தொழிலாளி வர்க்கத்தினரும் தங்கள் வருமானத்தில் அதிக வித்தியாசத்தைக் காணவில்லை. இதனால் பொதுமக்களிடையே அதிருப்தி நிலவியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒபாமாவின் கடந்த ஆறு ஆண்டு சாதனைகளை மறக்கும்படிச் செய்தனர். அவற்றைக் குறைத்து மதிப்பிட்டுச் செய்த பிரச்சாரங்களே வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச் சாவடிகளுக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். கருப்பர்களை வாக்களிப்பதிலிருந்து தடுத்து நிறுத்த சிலர் சில முயற்சிகளை மேற்கொண்டார்கள். கருப்பர்கள் அதிகமாக வாழும் சிகாகோவின் தென்பகுதியில் வாக்குப்பதிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று சிலர் புரளி கிளப்பியதாகச் செய்தி வந்தது. ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் இல்லினாய் மாநிலத்திலேயே ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்ட ஜனநாயக் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜெயித்திருக்கிறார். எது லோக்சபா தேர்தல், எது அசெம்பிளி தேர்தல் என்று தெரியாத பல அப்பாவி இந்திய மக்கள் இருப்பதுபோல் ஒபாமா போட்டியிடாததால் தாங்கள் ஓட்டுப் போடத் தெவையில்லை என்று நினைத்த அமெரிக்கர்களும் இருக்கலாம்.

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அவை உறுப்பினர்களும் ஒபாமாவின் முக்கியத் திட்டங்களை முறியடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு தயாராக இருக்கிறார்கள். முதலாவது பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்திருந்து அமெரிக்காவின் குடியுரிமை பெறத் துடிப்பவர்கள் பற்றியது. இவர்களுக்குச் சட்டபூர்வ குடியுரிமை வழங்க ஒபாமா எவ்வளவோ முயன்றார். அவை எல்லாவற்றையும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் முறியடித்துவிட்டனர். இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்திருப்பதால் தன்னுடைய ஜனாதிபதிக்குரிய நிர்வாக அதிகாரத்தை உபயோகித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கப் போவதாக ஒபாமா அறிவித்திருக்கிறார். இதற்குக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவைத் தலைவர் மிகுந்த எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ‘ஒபாமா நெருப்போடு விளையாடுகிறார். நெருப்போடு விளையாடுபவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்வார்கள்’ ஒபாமாவும் தன்னுடைய விஷேச அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் தன்னைத் தானே அழித்துக்கொள்வார்’ என்று பயமுறுத்துகிறார். இது ஒரு புறம் இருக்க, ஒபாமா இந்தச் சட்டத்தைத் தன் அதிகாரத்தின் மூலம் கொண்டுவந்தாலும் 2016 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதிக்குரிய இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை நீக்கிவிடலாம்.

    இரண்டாவதாக ஒபாமா மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுவந்த மருத்துவக் காப்பிட்டுத் திட்டம். இதைச் சட்டமாக்குவதற்கு குடியரசுக் கட்சியினர் என்னென்னவோ தடைகள் கொண்டுவந்தனர். ஆனாலும் ஒபாமா எப்படியோ அவர்களின் முயற்சிகளை முறியடித்து அதைச் சட்டமாக்கினார். இப்போது அதை எப்படியும் நீக்கிவிடுவது என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்படப் போகிறார்கள். இதனால் பல ஏழை அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதி இல்லாமல் போகும். 65 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு குறைந்த பிரீமியத்தில் வழங்கும் மெடிக்கேர் என்னும் மருத்துவத் திட்டத்தையும் குடியரசு உறுப்பினர்கள் தனியார்மயமாக்க முயற்சிக்கலாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சிரமம் ஏற்படும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஒபாமா மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். கனடாவிலிருந்து கச்சா எண்ணெயை சுத்தீகரிப்பதற்கு டெக்ஸாஸிற்குக் கொண்டுவர ஒரு எண்ணெய்க் கம்பெனி முயன்று வருகிறது. கச்சா எண்ணெயைக் கொண்டுவருவதற்குக் கட்டப்படும் கால்வாயினால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால் ஒபாமா இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்தக் கால்வாய் கட்டப்பட்டால் பலருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம். சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற அப்பெக் (APEC) மாநாட்டில் ஒபாமாவும் சீன அதிபரும் சேர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் கரியமில வாயுவைக் குறைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஒபாமாவின் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறைவேற்றுமா என்று தெரியவில்லை.

    தங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பல திட்டங்களைக் கொண்டுவந்த ஒபாமாவின் கைகளைப் பலப்படுத்த அவருடைய கட்சிக்கு அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்க வேண்டும். மாறாக ஏழைகளின் (இவர்களில் கருப்பர்கள் அதிகம்) நலன்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் `கார்ப்பரேட்டுகளின் நன்மைகளையே முதன்மையாகக் கொண்டு இயங்கப் போகும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை அமெரிக்கர்களின் அறியாமை என்பதா? பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் பலம் என்பதா?

    Share