Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 24, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்கள்

     

    Geetha-Ilangovan-267x300

     

     

    இந்தவார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால்  பாராட்டப்படுபவர் ஊடகவியலார் கீதா இளங்கோவன் அவர்கள். இயக்குநர் கீதா இளங்கோவன், பலராலும் பாராட்டப்பட்ட “மாதவிடாய்’’ என்ற ஆவணப்படத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னர் (டிசம்பர் 2012) வழங்கியவர். அந்தப் படம் பெற்ற வரவேற்பைக் கண்டு மேலும் பல சமுதாய நலன் கருத்துக்களைக் கொண்ட ஆவணப் படங்களை தொடர்ந்து வழங்குவதாக ஊக்கத்துடன் உறுதி அளித்தார். மாதவிடாய் படத்தைத் தொடர்ந்து அவர் உருவாக்கியிருக்கும் “நம்பிக்கை மனுஷிகள்’’ என்ற குறும்படம் சென்ற சனிக்கிழமையன்று (நவம்பர் 22, 2014) ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. இம்முறையும், ஒரு சமூக அக்கறை கொண்ட படமாக “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (தசைச்சிதைவு நோய்) என்றக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு சகோதரிகளின் தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வையும், நோயினால் துவண்டுவிடாது தங்களைப் போன்று பாதிக்கப்பட்டப் பிறருக்காக அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலம் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்து உதவும் அச்சகோதரிகளின் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை முறையைத் தொகுத்து குறும்படமாக்கியுள்ளார். இப்பட வெளியீட்டிற்காக கீதா இளங்கோவன் அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தில் ஊடகத் தகவல் அலுவலராகப் பணியாற்றும் கீதா இளங்கோவன் சமூகநல அக்கறை கொண்ட ஓர் இயக்குனர். இவரது புதிய வெளியீடான நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படமும், மற்ற இரு படங்கள் பற்றிய தகவல்களும் அவரது சமூக அக்கறையைத் தெளிவு படுத்துகின்றன.

    கீதா இளங்கோவன் இயக்கிய சமூகச் சிந்தனைக் குறும்படங்கள்:
    [1]
    நம்பிக்கை மனுஷிகள் குறும்படம் (2014 வெளியீடு)
    http://youtu.be/svH7fYOOnE4

    வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும் இரு சகோதரிகள் தசைச்சிதைவு என்ற கொடிய நோயினால் தாக்கப்படவர்கள். தசை செல்களின் புரதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மரபணுவில் ஏற்படும் கோளாறால் தசை நாளடைவில் தனது செயல்பாட்டை இழந்து விடும் நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய தசை செல்கள் உருவாக்கப்படாது இருக்கும் தசைகளும் அழியும் நிலை ஏற்பட்டு நோய் உடலை உருக்குலைக்கிறது. மனிதர்களின் தன்னிச்சை செயல்களான நடமாடுதல், தனது செயல்களைத் தானே செய்தல் போன்றவற்றை முதலில் பாதிக்கும் இந்த நோய், காலப்போக்கில் மோசமடைந்து உயிர்வாழ உதவும் அனிச்சை செயல்களான சுவாசிக்கும் நுரையீரல்கள், இரத்த ஓட்டத்திற்குக் காரணமான இதயத் தசைகளின் நிலையையும் பாதித்து உயிரிழப்பில் முடிவடைகிறது. மரபணுக் கோளாறால் உருவாகும் இந்நோய்க்கு இன்று வரை மருத்துவம் இல்லை. தொடர்ந்த உடற்பயிற்சியினால் சிறிது காலம் நடமாட்டத்தை நீட்டிக்கலாம் என்பதே இன்றுவரை இந்நோயின் நிலை.

    மூத்த சகோதரி வானவன் மாதேவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது முதலில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளில் இளைய சகோதரி இயல் இசை வல்லபியும் பாதிக்கப்பட்டார். நடப்பதற்கே சிரமப்படும் நிலையை அடைந்த சகோதரிகளிடமும், இவர்களது பெற்றோர்களிடமும் மருத்துவர்கள் நோயின் நிலையையும், சிகிச்சையால் நோயைத் தீர்க்க வழியில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இருப்பினும், நோயினால் மனம் தளராது தங்கள் பெற்றோரைத் தேற்றியதுடன், பத்தாம் வகுப்புவரை பள்ளி சென்று கல்வியை முடித்துள்ளார்கள் இந்தச் சகோதரிகள். பிறகு தனிப்பட்ட முறையில் ப்ளஸ் டூ மற்றும் அஞ்சல் வழியில் டிசிஏ படித்திருக்கிறார்கள்.

    the great sisters2the great sisters

    கொடிய நோயினால் மனம் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் போராடும் இந்தச் சகோதரிகள், தங்களைப் போன்றே தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக “ஆதவ்” என்ற அறக்கட்டளையைத் துவக்கி அவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை அளித்து உதவி வருகிறார்கள். தற்பொழுது அவர்களது நோக்கம் தசைச்சிதைவு நோயாளிகளுக்காக மருத்துவமனை ஒன்றை அமைத்து சிகிச்சைக்கு வழி செய்வது. இந்த தளரா உள்ளம் கொண்ட சகோதரிகளின் தன்னம்பிக்கையையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் கீதா இளங்கோவன் “நம்பிக்கை மனுஷிகள்” என்ற குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படம் சகோதரிகளைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிகையுடன் வாழ்வை எதிர் கொள்ளவும், பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்து அதன் மூலம் இச்சகோதரிகளின் அறக்கட்டளைக்கும், மருத்துவமனை அமைக்கும் நோக்கத்திற்கும் உதவும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. அதற்கும் மேலாக, குறையற்ற ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்தாலும் வாழ்க்கையைப் போற்றத் தெரியாதவர்களின் அறிவுக் கண்களையும் இக்குறும்படம் திறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

    ஆதவ் அறக்கட்டளை பற்றிய தகவல்களை கட்டுரையின் இறுதிப் பகுதியில் காணலாம்.

    [2]
    மாதவிடாய் குறும்படம் (2012 வெளியீடு)
    படத்தின் ஒரு சிறு பகுதி
    http://youtu.be/9JI_G7NuUR8

    பெண்களின் உடலின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக, பருவமடைந்த பிறகு இயற்கையாக அவர்கள் எதிர்கொள்ளும் `மாதவிடாய்’ எனப்படும் மாதாந்திர உதிரப்போக்கு என்பது பற்றிய ஒரு சரியான புரிதலின்றி, அதுவே பெண்களை ஒடுக்கி வைக்கும் செயலாக நம் நாட்டில் அமைந்துள்ளது. இந்த அறியாமையை, 40 மணித்துளிகளில் செய்தி தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் ஆவணப்படமாக கீதா இளங்கோவன் தயாரித்தார். “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்ற அறிமுகத்துடன் வெளியாகி மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. பல சமூக நிலைகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கருத்துக்களை அதில் பதிவு செய்தனர். மாதவிடாய் என்பது ஒரு விவாதத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தக்க வசதியை செய்துதராமல், அவர்களை கீழ்மைப்படுத்தும் தீண்டாமை செயலாக மட்டுமே மக்கள் எண்ணியிருப்பதை அப்படம் வெளிக்கொணர்ந்தது.

    Geetha-Ilangovan-1Geetha-Ilangovan-11

    மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் ஒழித்து பெண்கள் சுகாதார முறையில் மாதவிடாயை எதிர்கொள்ள பள்ளிகளில் பாலியல் கல்வி தேவை என்பது கீதா இளங்கோவன் அவர்களின் கருத்து. “பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி” என்று கீதா இளங்கோவன் வலியுறுத்துகிறார். மேலும், ”இந்த ஆவணப்படம், பெண் உலகின் சிரமங்களை, ஆண்கள் புரிந்துகொள்ள நிச்சயம் ஒரு கருவியாக இருக்கும்!” என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

    [3]
    லிட்டில் ஸ்பேஸ் (2011 வெளியீடு)
    http://youtu.be/oiB6oeGb2t8

    ‘லிட்டில் ஸ்பேஸ்’ என்ற மிகச்சிறிய படம் ஓர் ஐந்து மணித்துளிகள் கால அளவில் தொடர்வண்டி பயணத்தில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவன் எதிர் கொள்ளும் நிகழ்வுகளைத் தொகுக்கிறது. இதில் கீதா இளங்கோவனும் நடித்துள்ளார். உரையாடல்களற்ற, இசைப் பின்னணியில் மாற்றுத்திறனாளிகளின் தேவையை எடுத்துரைக்கிறார். இப்படம் பல பரிசுகளையும், ஹைதராபாத்தில் நடந்த, உலக சிறுவர்களுக்கான படவிழாவிலும் திரையிடப்பட்ட சிறப்பையும் பெற்றது.

    ஊடகங்களினால் சமுதாயப் போக்கையையே மாற்றியமைக்க முடியும் என்பது உலகறிந்த உண்மை. இதனை உணர்ந்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை, ஆனாலும் பெரும்பாலும் விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் செய்திகளை சிறப்பான குறும்படங்களாக உருவாக்கி மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடர்ந்துவரும் இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டி, வாழ்த்தி அவரது அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.

    ***

    கீதா இளங்கோவன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி: geetaiis@gmail.com
    வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி சகோதரிகளிடம் பேசுவதற்கான எண்: 99763 99403

    ஆதவ் அறக்கட்டளை நிர்வாக அலுவலக முகவரி:
    ஆதவ் அறக்கட்டளை
    489-B, வங்கி அலுவலர் குடியிருப்பு
    அஸ்தம் பட்டி, சேலம் -636007
    தமிழ் நாடு, இந்தியா
    தொடர்பு எண் :00919976399403

    ஆதவ் ட்ரஸ்ட்

    நன்கொடைகளை “Aadhav Trust” என்ற பெயருக்கு (Cheque / DD) அனுப்பலாம்.
    Bank Name : Canara Bank
    SB Account Name: Aadhav Trust
    Branch : Suramangalam
    Name : A/c No : 1219101036462
    IFSC Code: CNRB0001219
    MICR Code: 636015005
    வழங்கும் நன்கொடைகளுக்கு வருமானவரி கணக்கு பிரிவு 80G ன் கீழ் வரிவிலக்கு உண்டு.

    சகோதரிகள் வானவன் மாதேவி, இயலிசை வல்லபி ஆதவ் அறக்கட்டளை பற்றிய தகவல்கள் அறிய:
    [1] http://www.aadhavtrust.org/
    [2] https://www.facebook.com/pages/Aadhav-Trust/185118278177615?sk=photos_stream&ref=page_internal
    [3] https://aadhavtrust.wordpress.com/2013/10/25/aadhav-trust-inauguration-of-home-computer-center-library/

    கட்டுரைக்கான படங்கள் உதவி:
    http://www.thehindu.com/
    http://www.penniyam.com/

    தகவல்கள் உதவி:
    [1] http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/why-is-it-the-dirty-word/article4405543.ece
    [2] http://www.thehindu.com/features/cinema/why-is-it-the-dirty-word/article4386137.ece
    [3] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/uneasy-attitude-towards-menses/article4503438.ece
    [4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/documentary-that-brings-to-light-issues-faced-by-women/article4325003.ece
    [5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1121126
    [6] http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=27656
    [7] http://news.vikatan.com/article.php?module=news&aid=35198
    [8] http://puthu.thinnai.com/?p=26556
    [9] http://www.tamilnewstime.com/ta/content/4675
    [10] http://www.penniyam.com/2014/04/blog-post.html
    [11] http://tamilamudam.blogspot.in/2014/11/blog-post_22.html

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 5

    இன்னம்பூரான்.

     

    வாலு போச்சு! கத்தி வந்தது !

     

    neyyiபாலில் தண்ணீர் கலந்தார்கள். அதை மாதக்கணக்காகக் கச்சிதமாகவே செய்தார்கள். மனசாக்ஷியை அடகு வைத்தார்கள். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை லஞ்சாபரணங்கள்.

    அதற்கு முன்னால், செங்குன்றத்திலியோ, கருங்குளத்திலியோ, குதிரை சாணம் கலந்த தேயிலை சக்கைப் போடு போட்டது. சாயா குடிக்க எனக்கு பயம். அதற்கு முன்னாலே, அரிசியில் கல் கலந்தார்கள். இந்த மாபாவிகள் சுண்டைக்காயை கல்யாணபரங்கி என்று கூட விற்றுவிடுவார்கள். அல்லது, சில வருடம் முன் சொல்லப்பட்டப்படி கலப்பட மருந்துகளையும் காலாவதி மருந்துகளையும் விற்று கொலை செய்தார்கள். மஞ்சள்பொடி தான் க்ளோரோமைசிட்டீன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    conviction-news3இன்றைய கலப்படம்: நெய்க்கு வந்த சோதனை. இரண்டு வருஷம் முன்னால் திருநெல்வேலியில் நடந்தது. இப்போது அதருமமிகு சென்னையின் சந்தைக்கடை தி.நகரில் கண்ணம்மா பேட்டை. அங்கு சுடுகாடுகள் இரண்டு உள்ளன. ஒன்றில் இறந்தவர்களுக்குக் கொள்ளி வைப்பார்கள். மற்றொன்று முத்துரங்கன் தெருவில் இருப்பதாக ஹிந்து இதழில் இன்று செய்தி. ஊரை சொன்னவங்க பேரை சொல்லாமல் விட்டுட்டாங்க. அந்த தெரு கடைக்காரன் நம்மை எல்லாம் உயிரோடு கொளுத்தும் இனம். அவனிடமிருந்து பிடித்த ஏழு டன் நெய்யில், நிறம் மாற்றிகள், டால்டா, பாம் ஆயில் போன்றவை 90%. மேலே தடவிய நெய் 10%. இதில் தான் நான் வாங்கி சாப்பிட்ட தீபாவளி மருந்து கூட. இப்ப புரியுது, ஏன் என் வயிறு கொதித்தது என்று. இந்த அழகில் கறுப்புப் பணாதிபதிகளைப் போல பினாமி விலாசங்கள். எல்லாம் பொய். வியாபாரம் அண்ணா நகரில் கொடி கட்டிப் பறந்தது. ஒரு சமாச்சாரம் புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரி அயோக்யன் என்றாலும், கலந்தது, பொய் சீட்டு டப்பாவில் ஒட்டியது, சில்லறை வியாபாரம் எல்லாரும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே. அவர்களால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே.

    என்னத்தைச் சொல்ல !
    வாலு போச்சு!
    கத்தி வந்தது !

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: மாலைமுரசு
    http://foodsafetynews.files.wordpress.com/2012/06/conviction-news3.jpg

    நெய் !!

    Share
  • நிரந்தரக் கவிதைகள்!

     சந்தர் சுப்பிரமணியன்

    books55

    ஆயிரம் கவிதை நூல்கள்
    .. அருஞ்சுவைத் தமிழிற் கண்டோம்
    போயின காலம் யாவும்,
    .. போயினும் போகா தின்றும்
    வாயினில் வழக்கில் நம்முன்
    .. வாழ்ந்துகொண் டேயி ருக்கும்
    தோயுந்தீங் கவிதை ஏதோ?
    .. தொகுத்தனம் கவிதை யாலே (1)

    ஊரெலாம் தமதே என்றான்,
    .. உறவினர் எவரும் என்றான்,
    சாருநற் பண்பும் தீதும்
    .. தருவதால் வாரா தென்றான்;
    நேரிய வழிகள் எல்லாம்
    .. நிறைந்துள கணியன் பாடல்,
    நீருள வரையில் வாழும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (2)

    இனியநற் சொற்கள் அன்பை
    .. இயல்புடன் அளிக்கத் தோதாய்க்
    கனிகளாய்க் காத்தி ருக்கக்
    .. காய்ந்திடும் சொல்லாற் பேச்சை
    முனைவதில் பயனே இல்லை;
    .. முறையுடன் இனிமை தன்னை
    நினையெனும் குறளே மண்ணின்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (3)

    நற்றுணை நமக்கு நீறே
    .. ஞானசம் பந்தன் கூற்று;
    மற்றெதும் தேவை யில்லா
    .. மந்திரம், அதுவும் நீறே
    சொற்களிற் சுவையைச் சேர்த்துச்
    .. சுந்தர மாகும் நீற்றை
    நிற்குமோர் விதமாய்ச் சொன்னான்;
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (4)

    வஞ்சியை மாடம் ஏற்றி
    .. வளைந்தவள் விழிகள் நோக்க
    மிஞ்சிடும் அழகன் தன்னை
    .. மிடுக்குடன் நடக்க வைத்துக்
    கொஞ்சிடும் அவர்தம் பார்வை
    .. கொடுத்தனன் நமது கண்ணில்;
    நெஞ்சினுள் கம்பன் தைக்கும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (5)

    எத்தனை கோடி யென்றான்
    .. எழுமெலாம் இறையே என்றான்
    சித்தினை அசித்தோ டேற்றும்
    .. சிந்தையின் தெளிவி னாலே
    பக்தியின் நிலையைப் போற்றி
    .. பாரதி வழங்கும் பாடல்
    நித்தமும் நெஞ்சில் நிற்கும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (6)

    கருப்படு பொருளைக் கண்டு
    .. கவிதையுள் அதனைக் கூட்டி
    உருப்பட வைக்கும் விந்தை
    .. உணர்ந்தவன் கவிஞன் என்னும்
    பொருட்பட கண்ண தாசன்
    .. புதுநிலைக் கணித எண்ணம்
    நிரப்பியப் பாடல் ஒன்றே
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (7)

    ஓங்கிடும் மொழியிற் சந்தம்
    .. ஒலிக்குநல் தொடையைத் தேர்ந்து
    பாங்குடன் கருத்தைச் சேர்த்துப்
    .. பாட்டினுட் பொருளாய் யாத்துத்
    தேங்கிடும் அமுதச் சாறாய்த்
    .. தேந்தமிழ்ச் சொற்கள் கோக்க
    நீங்கிடா தொலிக்கும் எங்கும்
    .. நிரந்தரக் கவிதை அன்றோ (8)

    பொட்டினில் அறைந்தாற் போலே
    .. புலன்களை எழுப்பச் செய்து,
    கொட்டிய முத்தாய்ச் சொற்கள்
    .. கொஞ்சிடப் பொருளைக் கூறிச்
    சொட்டிடும் தேனாய் நெஞ்சில்
    .. சுகந்தரும் சந்தப் பாட்டே
    நிட்டையிற் கூட நிற்கும்
    .. நிரந்தரக் கவிதை அன்றோ (9)

    Share
  • ‘இல்லை’ இல்லை இனி…

    -செண்பக ஜெகதீசன்

    வையத்தின் கதையிதுதான்,
    வைத்துக்கொள் மனதினிலே…

    மலர்ந்த மலர்களெல்லாம்
    மணப்பதில்லை,
    மலர்ந்து மடிந்து
    உதிர்ந்தவையெல்லாம்
    உருவாக்கவில்லை
    காயை, கனியை, விதையை…

    மந்தை மந்தையாய் வந்த
    மேகக் கூட்டமெல்லாம்
    மழையைப் பொழியவில்லை…

    கடலடியில் காணும்
    கணக்கில்லாச் சிப்பியெல்லாம்
    கொண்டதில்லை முத்தைத் தம்மில்…

    கழனி விளையும்
    நெல்மணியெல்லாம்
    நல்மணியாய் ஆவதில்லை…

    இந்த
    ’இல்லை’யென்பது வேண்டாம்
    இனிய மனிதனே உன் வாழ்வில்,
    இருக்கும் நாளில்
    எதையாவது செய்திடு உருப்படியாய்,
    இதை
    ஏற்றுக்கொண்டிடு கருத்தினிலே…!

     

    Share
  • நாகர்கள் 1

    விசாலம்

    என் பள்ளியில் வருடாந்திர பரிசு விழாவின் போது ஓரு வித்தியாசமான நடனம் வைக்க எண்ணி மூங்கில் நடனம்  ஒன்றைத்தயாரிக்க முயற்சித்தோம்  {bamboo dance}. இதற்காக நாகாலாந்து பெண்மணியை அழைத்தோம். அவள் தில்லியில் இருந்ததால் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புத்துக்கொண்டு நடனம் சொல்லிக்கொடுக்கவும் ஆரம்பித்தாள். அவளிடம் பழகியதில் நாகாலாந்தின் மக்கள், கலாச்சாரம் பற்றி பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.  அவள் எனக்கு நல்ல தோழியும் ஆனாள். அவள் சொன்னதில் சில பகுதிகளை இங்கு எழுதுகிறேன். அவளது பெயர் என் வாயில் நுழையவில்லை. ஆதலால் அவளை ரீமா என்று பெயரிட்டு அழைத்தேன்.

    “ரீமா, உங்கள் இடத்தில்  எது மிகவும் பெயர் போன இடம்? எங்கு எல்லோரும் வருகை தருகிறார்கள்?”

    “அதுவா … முதலில் கோஹிமாவைச் சொல்லலாம்.”

    “உங்களைப் பார்க்க கொஞ்சம் சீனா, கொஞ்சம் ஜப்பான்  மக்களின் சாயல் தெரிகிறதே. “

    “இல்லை இல்லை. நாங்களும் பாரதத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். இந்தியர்களைப் போலவே  எங்களுக்கும் மந்திரம், பூஜை,  இசை எல்லாம் உண்டு. நாட்டுப்பாடல்கள் அதிகமாக பாடுவோம். எங்கள் ஊரில் எங்கள் முன்னோர்கள் இருந்த இடத்தில் 12 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட ஒரு கல் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா மேடம்?”

    “இல்லையே! ஏன் அந்தக் கல்லில் என்ன விசேஷம்?”

    “கேஸாகேனோமா என்ற குடியிருப்பு பகுதியில் இந்தக் கல்லைக் காணலாம். இந்தக் கல்லுக்கு கிடைக்கும் மரியாதை அபாரம். மக்கள் தினசரி இங்கு வந்து பயபக்தியுடன் கண்களை மூடியபடி தியானித்து பின் காணிக்கை செலுத்துவர். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையும் இங்கு அழைத்து வந்து அவருக்காக ஆசிகள் வேண்டி மந்திரங்களை படிப்பார்கள்.”

    “ரீமா,  இது ரொம்பவே இன்டெரெஸ்டிங், இன்னும் இந்தக் கல்லைப் பற்றி  சொல்லு.”

    “எங்கள் முன்னோர்கள் காலத்தில் இந்தக்கல்லுக்கு ஒரு மேஜிக் சக்தி இருந்ததாம். காலையில் இந்தக்கல்லின் மேல் நெற்மணிகளைப் பரப்ப  மாலையில் அது இரண்டு பங்காக வளர்ந்து விடுமாம். இந்தக்கல்லை வைத்தவர்கள் இதைப்பயன்படுத்திக்கொண்டார்களாம்.  அந்தக் கதையைச் சொல்லட்டுமா?”

    “ஆஹா! இதைத்தான்  நான் எதிர்ப்பார்த்தேன். சொல்லு.”

    “நாகர்களின் பாரம்பரிய வரலாறு இது. அவர்களின்  ஆதி முன்னோருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு திருமணம் ஆனது  குடும்பத்தைக் காப்பாற்ற  விவசாயம் கைக்கொடுத்தது. அப்போதுதான் ஒரு கல் அவர்கள் கண்ணில் பட்டது. அந்தக் கல்லில் மந்திரம் உருவேற்றப்பட்டதால் அதில் ஒரு மாதிரி தெய்வ சக்தி இருந்தது . இதை அந்தப் பிள்ளைகள் கண்டுபிடித்தனர். ஒரு நாள் அந்தக் கல்லின் மேல் காலையில் தானியங்களைக் காய வைக்க  மாலையில் அது இரண்டு மடங்கு அதிகமாகி இருந்தது. இதைக் கண்டப்பின் தினமும் அந்த மூன்று சகோதரரும் போட்டிப்போட்டுக்கொண்டு  அந்தக் கல்லின் மீது தானியங்களைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களுக்குள் சண்டை வராமல் இருக்க அந்த மூன்று பிள்ளைகளும் ஒரு அட்டவணைப் போல் போட்டுக்கொண்டு அதன் பிரகாரம் அவரவர்கள் முறை வரும் போது தானியங்களைப் பரப்பி அதை இரட்டிப்பாக ஆக்கிக்கொண்டனர் ஆனாலும் பேராசை யாரை விட்டது! தானியங்களுக்கு பதிலாக செல்வத்தை வைக்க ஆரம்பித்தனர். அதுவும் இரு மடங்கு ஆனது. அவர்கள் நடுவே போட்டியும் சண்டையும் வந்தது. அவர்களது தந்தை இதைப் பார்த்து நொந்துப் போனார். பின்னர் அந்தக் கல்லினால் தானே  ஒற்றுமை குறைந்து சண்டை வருகிறது என்று அந்தக்கல்லை நெருப்பில் போட்டார். இதனால் அந்தக் கல்லில் விரிசல் உண்டானது. அந்தக் கல்லின் ஒளியும் குறைந்தது. அந்தக் கல்லில் இருந்த ஆத்மா சுவர்க்கத்திற்கு போய்விட்டது. கல்லுக்கு இருந்த மேஜிக் சக்தியும் போய்விட்டது.”

    “அப்புறம் என்ன ஆச்சு? அந்தப் பிள்ளைகள் என்ன செய்தார்கள்?”

    “அவர்கள் மூன்று திசைகளில் தனித்தனியே சென்று பிரிந்து விட்டனர். அவர்கள் வழி வந்த மலை வாசிகளே அங்காமா, சேமா, லோத்தா போன்றவர்கள். அவர்கள் பலவேறு நாக மக்களை உண்டுபண்ணினர். ஒரு நாள் அந்தக்கல்லில் திரும்ப  தெய்வீக அம்சம் திரும்பும் என்ற நம்பிக்கை வைத்திருக்கின்றனர்  அந்த  மக்கள்.”

    “வந்தால் நன்றாக இருக்கும் இல்லயா ரீமா? நானும் அதில் என் ரூபாய் நோட்டுக்களை அடுக்கவா?” என்று சொல்லி சிரித்தேன்.

    “இன்னும் கேள். இதைத் தவிர அந்தக் கிராமத்தில் ஒரு ஸ்பெஷல் மரம் இருக்கிறது. அங்கு பறவைகளுக்கு ஆண்டு விழா நடைப்பெறும் இது எப்படி இருக்கு?”

    “அட  பறவைகளுக்கு ஆண்டு விழாவா? கேட்கவே ஜாலியாக இருக்கிறதே!”

    “ஆம் அந்த மரத்தில் ஆயிரக்கணக்கான  பறவைகள் வாழ்ந்து வருகின்றன.  டிசம்பர் மாதம் இந்த விழா நடக்கும். நாகர்களின் யாராவது ஒருவன்  தான் ஒரு மகானாக மிகச்சிறந்தவனாக ஆக வேண்டும் என்றால் அவன் அந்த மரத்திலிருந்து ஒரு பறவை பிடித்து வரவேண்டும். அப்படி செய்தால்தான் அவனுக்கு வழிபாடு செய்ய அதிகாரம் கிடைக்கும் அந்த அதிகாரமும் மிகுந்த மரியாதையுடன் ஒரு சடங்கு போல் நடத்தப்படும். எங்களது  விசேஷ  நாட்களில்  எங்கள்  அருகில் குடியிருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் உண்டு.”

    “ஆமாம் ரீமா  நாங்களும் முக்கிய பண்டிகையின் போது பல உறவினர்கள் கூடி கொண்டாடி மகிழ்வோம். ஆனால் இந்த வழக்கம் கிராமத்தில்தான் இன்னும் நிலைத்து நிற்கிறது. நகரத்தில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது .”

    “எங்கள் கிராமத்தவருக்கு விருந்து வைத்தப்பின் அது ஒரு  ஸ்பெஷல் தினம் என்பதை அறிவிக்க ஒரு கல்லை அங்கே நிறுத்தப்படுகிறது. இந்தக்கல் நாட்டும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. விருந்தோம்பல் என்பது எங்களுக்கு மிக முக்கியம் . நாங்கள் எந்த அன்னியரையும் மனம் திறந்து வரவேற்போம். பணிவிடையும் செய்வோம்.”

    “ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் வெகுகாலத்திற்கு முன்பாகவே  நெருங்கிய  தொடர்ப்பு  இருந்திருக்க வேண்டும் ஆரியர்கள் போலவே  நீங்களும்  திருவிழாக்களை மந்திரம். இசை, நாட்டுப்படல்களுடன் கொண்டாடுகிறீர்கள். நாங்கள் சில இடங்களில் சுயம்புவாக வரும் கல்லில் சிவலிங்கத்தையும், மாரியம்மனையும், பிள்ளையாரையும், அனுமாரையும் காண்கிறோம். அங்கு பூஜையும் செய்கிறோம். நீங்களும் மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்யும்  கல்லை தெய்வரூபமாக பார்க்கிறீர்கள். எல்லா இடங்களிலும் செயல்படும் விதம் வித்தியாசமாக இருக்கிறதே தவிர நம்பிக்கை மூலதனமாக இருக்கிறது இல்லையா?”

    “ஆம் எல்லாமே நம்பிக்கையின் மேல் தான்  நடக்கிறது.  முன்பு ஜப்பானிய போரில்  ஜப்பானிய படை கோஹிமாவிலும் வந்தது பாரத சிப்பாய்களில் இருந்த வீர நாகர்கள்  அணி திரண்டு  அவர்களை மேலே வரமுடியாமல் செய்து விட்டனர். அவர்களும் எப்படியாவது முன்னேறி விடவேண்டும் என்று பிரயத்தனம் செய்தனர். ஆனால்  நாகர்கள்  அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். அந்த மகிழ்ச்சியில் வெகு தூரத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்தனர் அதை மணிப்பூர். பீமாபூர் சந்திக்கும் நாற்சந்திக்கு இடையே நிறுவப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வாசகமும் எழுதப்பட்டிருக்கிறது,

    “நீங்கள் உங்கள் வீடு செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு அடிக்கடி சொல்வது இதுவே. நீங்கள் நாளை உயிரோடு வாழ நாங்கள் இன்றே விடுதலை வழங்குகிறோம்.”

    Share
  • சுமையென்று நினைத்து . . .

    வில்லவன் கோதை

    நாட்டு ஓடு வேயப்பட்ட அந்த வீடு அழுக்கேறிக் கிடந்தது.

    மரச்சட்டங்களால் தடுக்கப்பட்டிருந்த அதன் கதவுகளில் பழமையான பூட்டு ஒன்று  தொங்கிக்கொண்டிருந்தது.

    தயங்கித் தயங்கி அந்த வீட்டின் முன் நிற்கிறான் கார்த்தி.. இத்தனைக்கும் அவன் பிறந்து வளர்ந்த வீடுதான். இன்று அவனுக்கே அன்னியமாக தோன்றுகிறது.

    நடுத்தர வயதைக்கடந்த  மெலிந்த  பெரியவர் ஒருவர் குறுக்கிடுகிறார்.

    “வாத்தியார்  வைரமுத்து …”

    கார்த்தி வாக்கியத்தை முடிக்கவில்லை.

    “ஆமா தம்பி. .இப்ப அவுரு இல்லீங்க .கொஞ்ச நாளைக்கு முன்னால தவறிட்டாருங்க.“

    பெரியவரின் பதில் கார்த்தியின் உடலிலும் உள்ளத்திலும் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

    அப்ப  அவுரு பொண்ணு.

    “பாப்பாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சிங்க. மாப்பிள்ள கும்மோணம் பேங்ல செக்குரிட்டியா இருக்கிறதா கேள்வி.  வாத்தியாரு கல்யாணம் முடிஞ்சி  கொஞ்ச நாள் இங்கதான் இருந்தாருங்க.அப்ரம் பாப்பாவே கூட்டிகிட்டு போயிடுச்சிங்க..  நீங்க. தம்பி …“

    முதன் முறையாக வாத்தியாரின் மூத்த பிள்ளை என்று சொல்லிக்கொள்ள அவன் நா  தடுமாறுகிறது.  அப்படி ஒன்றும் கார்த்தி தப்பானவன் இல்லை.

    “தெரிஞ்சவுங்க..”

    “ வடக்குத்தெருவுல சீனுவாசன் டாக்டர் வீட்டுக்கு நேர் எதிர்வீடு. போனா பாப்பாவ பாக்கலாமுங்க. “

    கார்த்திக்கு தெரியாமல் நிகழந்துபோன தகவல்களை தொட்டுக்காட்டிய பெரியவர் நகர்கிறார்.

    நெஞ்சில் ஒரு இனம் புரியாத படபடப்பு. அவன் நினைவுகள் பின்னோக்கி அலசுகிறது.

    கடைசியாக அப்பாவையும் இழந்துவிட்டேன். அன்று நான் செய்த முடிவு என்னைப்பொறுத்தவரை தவறென்று தோன்றவில்லை. இருந்தும் இன்று இந்த மஞ்சுவைக்கூட  எதிர் கொள்ள போதுமான துணிவு எனக்கு ஏன் ஏற்படாமற்போயிற்று.

    இருபது வருஷம் கழிந்தபின்னும்  ஏன் இந்த குற்ற உணர்வு   !  மன உருத்தல். !

    சொற்ப வருமானத்தில் போராடிக்கொண்டிருந்த அப்பாவை உதறி நான் ஓடியிருக்கக்கூடாது.

    கனவுகளோடு கல்யாணத்தை உறுதி செய்து கொண்டிருந்த அந்த புதுப்பெண் , தீராத நோயுற்ற அம்மா  , அடுத்த பத்து வருஷத்தில் கரைசேற்க வேண்டிய தங்கை…

    நான் பொறுபற்று திரிந்தபோதும்  ஓய்வின்றி உழைத்து எங்களைச்சுமந்தவர் அப்பா. அம்மாவின் முடிவற்ற மருத்துவச்சுமைக்கிடையே என்னை முதுகலை பட்டாதாரி ஆக்கி மகிழ்ந்தவர்.

    தான் சுமக்கும் சுமைக்கு காலப்போக்கில் இவன் ஒரு சுமைதாங்கியாக இருப்பான் என்று நினைத்திருப்பாரோ என்னவோ.

    அவரை தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றிவிட்டேன்.

    அவர் தேடித்தந்த பலவேறு வேலைகள் அன்று என் கவுரவத்துக்கு இழுக்காக தோன்றிற்று.

    ச்சே ! என்ன காரியம் செய்தேன்.

    கார்த்திக்கு நினைவெல்லாம் கசந்தது.

    அன்று மனைவி உடல் மோசமடைய கார்த்திக்கு  கால்கட்டு போட நினைத்தார் வைரமுத்து வாத்தியார்.

    பெண்ணுக்கொன்றும் குறையில்லை. கார்த்திக்குகூட சம்மதம்தான். ஆனால் பெண்ணின் வயது முதிர்ந்த பெற்றோர் அவன் நினைவுகளில் இடறினர். அவர்களையும் சுமக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால்     என்ன செய்வதென்ற ஒரு அதீத கற்பனை.  கிடைத்திருக்கிற வாழ்க்கையில் சுமையின்றி சுதந்திரமாக பறக்கவிரும்பியவன். அதுதான் அவனுக்கு முக்கியம்.இந்த உறவுக்கு அவன்  தயாராயில்லை. .

    “ நம்ம குடும்பத்துக்கேத்த நல்ல பொண்ணுடா. ஒன்ன நம்பி நிச்சியம்கூட  பண்ணிட்டேன்..இதில ஒனக்கு இஷ்டமில்லேண்ணா அத்தோட உட்டுடு. அப்ரம் என் மொகத்தலயே விழிக்காதே. “

    தன் கனவுகள் தன் கண்ணெதிரே நொறுங்கிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையில்  விருட்டென்று எழுந்து கொல்லைபுறம் போகிறார் அப்பா.

    கல்யாணம் என்பதையே கால்கட்டு என்றுதானே சொல்கிறார்கள். அந்த கட்டை தானே போட்டுக்கொள்ள விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறி அன்று இரவில் சென்னைக்கு ரெயிலேறுகிறான் கார்த்தி

    பையன் யாரையோ லவ் பண்ணியிருக்கான். அதான் விட்டுட்டான் சவாரி !

    ஊரே கூடிக்கூடி பேசியிருக்கும். அப்பா முகம் எப்படி இருந்திருக்கும்.

    இந்த தேசத்தின் வரைபடங்களில் மட்டுமே அறிந்திருந்த  பல்வேறு பிரதேசங்களில்  நாயாக அலைந்து  இறுதியில் கொல்கத்தா நகரில் ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தில் அடைக்கலமாகிறான்.. அதுவரை அவன் சந்தித்த துயரங்கள் கேட்க சகிக்காதவை.

    இருபது  வருடம்கள் முடிந்து போனது.

    நாடெங்கும் சுற்றிய கார்த்தி இந்தமுறை ஒரு சுற்றுலா குழுவினரோடு தமிழகம் வந்தபோது அவன் நெஞ்சில் புதைக்கப்பட்டிருந்த நினைவுகள் அவனை இங்கே இறக்கிற்று.

    வெளி வராண்டாவில்  இந்து யாரிடமோ பேசும் குரல் கேட்டு வெளியே வந்தாள் மஞ்சுளா.

    “மஞ்சுளா அம்மா வீடு இதுதானேண்ணு இந்த மாமா கேட்டார். மஞ்சுளா வீடுதான் இது. அவுங்க அம்மா வீடுல்லண்ணு சொன்னேன். “

    வீட்டுப்பாடங்களை செய்துகொண்டே பதிலளித்தாள் இந்து. பத்து வயது இருக்கக்கூடும். மீண்டுமொருமுறை காணவிரும்பும் வசீகரமான சிவந்த முகம். துருதுருவென்ற பார்வை.

    தோளில் கருப்புப்பையொன்றை மாட்டியவாறு  கலைந்த முடியோடு நின்றிருந்த அந்த இளைஞனைப்பார்த்தும் இனம் புரியாத குழப்பமும் அதைத்தொடர்ந்து எதிர்பாராத வியப்பும் அடைந்தாள் மஞ்சுளா.ஏறத்தாழ தன்னையொத்த சாயலில் அவன் இருப்பதை உணர்ந்து அவள் அறியாமல் உடலெங்கும் மகிழ்ச்சி அலைகள் பரவின.

    அவனுக்கும் அதே மாதிரியான மனநிலைகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

    “வா ண்ணா ! “

    அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிய மஞ்சுளா அண்ணனை வரவேற்றாள். உள்ளே  நுழைந்த கார்த்தி  கைப்பையை கீழே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

    இந்துவுக்கு நடப்பது வித்தியாசமாய் தெரிந்தாலும் அவள் வீட்டுப்பாடத்தில் லயித்திருந்தாள்.

    “நல்லாருக்கியா அண்ணா  “

    எதிர் இருக்கையில் அமர்ந்த மஞ்சு பேச்சைத்துவக்கினாள்.

    கார்த்தி நா வரண்டுபோனதை உணர்ந்தான் .எந்த சொற்களும் அவனிடமிருந்து வெளியேறவில்லை. குளிர்ந்த நீரை ஒரு டம்ளர் நிறைய கொண்டுவந்து வைத்தாள் மஞ்சுளா.

    “இருபது வருஷத்ல ஒனக்கு எங்க நெனைப்பு ஒருதடவகூட வரல. அப்பா அன்னிக்கு அவரது இக்கட்டான சூழல்ல சொன்ன ஒரு வார்த்த ஒனக்கு பெரிசா போயிடுச்சி. அவர் கடைசிவரைக்கும் நீ வருவே வருவேண்ணு ..  போ . . ண்ணா ! “

    ஆத்திரமும் அழுகையும் பீரிட்டு வெளியேறுகிறது. நெஞ்சுக்குழியில் ஏதோ அடைப்பதை உணர்ந்தாள் மஞ்சுளா.

    துக்கத்தை மறைத்து அடுக்களைக்குள் நுழைந்த மஞ்சுளா .. .

    “அன்னிக்கு நிச்சியம் பண்ண  பொண்ணு நெலய நீ நெனச்சி பாத்தியா. ஊரே அப்பா மொகத்ல காரி துப்புச்சி. “

    அடுப்பிலிருந்த பாலை இறக்கி பில்டரில் இருந்த  டிகாஷத்தை சர்க்கரையோடு அளவாக கலந்து அண்ணனுக்கு முன்னாலிருந்த  மோடாவில் வைக்கிறாள்.

    காபியின் மணம் அந்த அறையை நிறைக்கிறது. கார்த்தியின் குற்ற உணர்வு அந்த மணத்தை விழுங்குகிறது.

    வலதுகையால் முகத்தைத் தாங்கியவாறு  பதில் ஏதும் பேசாமல் இருக்கையில் இருந்தான்  …

    “நீ போயி பத்து நாளைக்கெல்லாம் அம்மா போயிட்டாங்க. பெத்த பெண்ண எப்டி கரைசேர்க்கபோறோம்ங்ற பயம் அப்பாவுக்கு. அப்பாவோட ப்ரண்ட் மூலமா வந்த இவர்தான் எங்கள இக்கட்டான சூழல்லேயிருந்து விடுவிச்சார்.

    “அதுமட்டுமல்ல.  அப்பா படுத்த படுக்கையா போனப்ப ஒண்டரை வருஷத்துக்கு மேல அவர் செஞ்ச பணிவிடைகள்  கொஞ்ச நஞ்சமல்ல.அந்த விஷயத்ல அப்பா குடுத்து வெச்சவர்தான். அவருக்கு எந்த கஷ்டமும் தெரியாம  கடைசிவரைக்கும் அவருக்கு தொணையா இருந்தார்.

    இப்படியொரு புருஷன் எனக்கு கெடக்கிறதுக்கு நான் பாக்கியசாலிதான். இந்த குடும்பத்ல மூத்தவனா பொறந்த நீ பெத்து வளர்த்த  அப்பா ஏதோசொல்லிட்டாருண்ணு ஓடிப்போயிட்ட.

    எல்லாம் முடிஞ்சிபோனபிறகு இப்ப ஏண்ணா வந்த..யாராவது உசிரோடு இருக்காங்களாண்ணு பாக்கவா .இல்ல நீ உசிரோட இருக்கிறத காம்பிக்க வா.  “

    கண்களில் நீர் கொப்புளிக்க  எதிர் இருக்கையில் அமர்கிறாள்  மஞ்சுளா.

    “அப்பா சாகிற வரைக்கும் ஆபீசுலயும் வேல பாத்துகிட்டு ராப்பகலா கண்விழிச்சி . . . . அவர் ரொம்ப பாவம்ண்ணா. போன ஜன்மத்ல அவருக்கு புள்ளையா பொறந்து ஒன்னாட்டம் ஓடிட்டாரோ என்னவோ . “

    கார்த்தியின் கண்கள் கலக்கமுற்று கண்ணீரீரை வெளியேற்ற முயன்றது. முகத்தை தாழ்த்தி கட்டுப்படுத்த முயன்றான்.

    “சரி! காப்பிய குடிச்சிட்டு வா.  வென்நீர் போட்ருக்கேன்.குளிக்கலாம் “

    கலங்கிய கண்களை புடவைத்தலைப்பால் அழுந்த துடைத்துக்கொண்டே உள்ளே போனாள் மஞ்சுளா.

    தங்கையின் பேச்சைக்கேட்கக்கேட்க  கார்த்திக்கு ஓருபக்கம் தன்மீதே வெருப்பாகவும் இன்னொருபக்கம் மஞ்சுவை பார்க்க பார்க்க  வியப்பாகவும் இருந்தது

    மஞ்சுவா இப்படி பேசுகிறாள். காலம்தான்  மனிதர்களை  உடலாலும் உள்ளத்தாலும் எத்தனை எளிதாக பக்குவப்படுத்துகிறது.

    குளியலறைக்குள்  நுழைந்த கார்த்தி உடல் அசதி தீர குளித்தான். உள்ளத்தில் ஊறிக்கிடந்த நெடுநாள் குழப்பங்கள்  ஓரளவுக்கு வெளியேறியதை உணர்ந்தான்.

    தன்னுடைய பொறுப்பற்ற தன்மையும் எங்கிருந்தோ வந்த ஒருவனின் அசாத்திய பண்புகளையும் எண்ணிப்பார்த்தான். தான் கற்றிருந்த உயர்கல்வி தனக்கு இதை எள்ளளவும் போதிக்கவில்லை  என்ற எண்ணமே ஓங்கிற்று.

    “இந்து ! மாமாவுக்கு டவல் கொண்ட குடு. “

    அடுக்களையிலிருந்து குரலெழுப்பினாள் மஞ்சு.

    “ஒனக்கு இப்பிடியொரு அண்ணன் இருக்கிறதை இதுவரை சொல்லவே இல்லியே“

    என்றவாறே புதிய டவல் ஒன்றை கொண்டுபோனாள் இந்து.

    “சொல்ற மாதிரியா அவன் நடந்துகிட்டான்  ! “

    மெல்ல முணுமுணுத்த படியே  கார்த்திக்கு சுடசுட உணவு பரிமாரினாள் மஞ்சு.

    “ஒன் பொண்ணு ஒன்னாட்டம் ரொம்ப சமத்தா இருக்காளே !  இன்னிக்கு சண்டேதானே. அத்தான் எங்க போயிருக்கார். “

    முதன் முறையாக சாப்பிடுவதற்குமுன் வாயைத்திறந்தான் கார்த்தி.

    “அவுரு  மேனேஜரோட ஹெட் ஆபீசுக்கு கேம் போயிருக்கார். நாளை காலேலதான் திரும்புறார். “

    “எங்க ட்ராவல்ஸ் கோச் ஈவினிங் கும்பகோணம் வருது.அதுக்குள்ள நான் போயிடணும். “

    “நாளைக்கு இருந்து அவர பாத்துட்டு போ அண்ணா. அவரு ரொம்ப சந்தோஷப்படுவார். “

    ‘’இல்ல மஞ்சு .இன்னும் மூணுமாசத்துக்குள்ள  நான் சென்னைக்கு மறுபடி வருவேன்..  அத்தான் கிட்ட சொல்லு. அவர் மொகத்ல விழிக்கக்கூடிய தெம்பு எனக்கு மொதல்ல வரணும்.”

    அவனுக்கு பிடித்தமான வத்த கொழம்பையும்  கத்தரிக்காய் வருவலையும் நெடு நாட்களுக்குப்பிறகு தங்கை கையால் சாப்பிட நேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தான்.

    மஞ்சுவால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. அவனை பார்த்த இந்த தருணங்களே அவளுக்கு பெரிதாயிருந்தது.

    “மஞ்சு ஒன் கல்யாணத்துக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணம். இது .இந்துவுக்காவது ஒபயோகமா இருக்கட்டும். “

    அய்ந்து லட்சத்துக்கான ஒருகாசோலையை மஞ்சுவின் பெயரெழுதி இந்துவிடம் கொடுத்தான் கார்த்தி.

    “மாமா ஒரு நாள் இருங்க மாமா. “

    “நிச்சியமா இன்னொருமுறை வர்றம்மா. “

    கண்கலங்க விடை கொடுத்தாள் மஞ்சு.

    சந்தோஷம் என்பது  பொறுப்பற்று திரிவதில் இல்லை. சகமனிதர்களிடம்  அன்பை பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறதென்பதை கார்த்தி உணர்ந்து கொண்டான்.

    உறவுகளும் நட்புகளும் ஏற்பட்டிருப்பது அதற்காகத்தான்.

    Share
  • VETRIVAASAL -Full day Motivation Seminar

    MarabinMaindan Muthiah

    amm

    “Namadhu Nambikkai” magazine is conducting a full day motivation
    seminar on 21.12.2014for the ninth year.Reputed Professionals are delivering lectures and the theme for this year is Cooordination of body,mind,emotions and intellect.

    Each subject has an exclusive session and this theme is being done for the first time in Tamil.
    I am sure that this program would be of immense benefit to your staff members.

    I request you to kindly enroll your Staff members.I am enclosing details of the same

    regards
    Marabin Maindan Muthiah
    98430 63572

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ஆனை படுத்து அசுவமட் டமாகியன்று,
    தூணைப் பிளந்த துரைசிங்கத் ,-தானை,
    அறிந்தவன் தாளில் அடைக்கலம் என்று
    சரிந்தவிதம் கேசவ் சபாஷ்’’….கிரேசி மோகன்….

    அசுவமட்டம் -குதிரைமட்டம்….

    Share
  • 2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு

    Two new subatomic discovered

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=dWlNdGaZ0YE

    http://www.dailymail.co.uk/sciencetech/article-2842299/Cern-scientists-discover-two-new-particles-smashing-protons-shed-new-light-universe.html#v-1315707993001

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    அணுக்கருத் தொடரியக்கம் புரிந்து
    அணுசக்தி வெளியானது போல்,
    உயிரியல் விஞ்ஞானத்தில்
    முதன்முதல் டியென்ஏ
    மூலச் சங்கிலி வடித்தது போல்
    அகில தேச விஞ்ஞானிகள் இயக்கும்
    செர்ன் விரைவாக்கி யந்திரம்
    பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய்
    அரங்கேற்றிச் சோதிக்கும் !
    கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான்
    தடம் கண்டதை
    உறுதிப் படுத்தினர் .
    ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில்
    எதிர் எதிரே விரைவாக்கியில்
    இரு புரோட்டான்கள் மோதி
    பெருந் துகளாய் மாறிய விந்தை !
    பூஜியச் சுழற்சி ஹிக்ஸ் போஸான்
    பரமாணுவுக்கு நிறை அளிப்பது
    கடவுள் துகளே !
    புதிய பரமாணுத் துகள் இரண்டு
    உதித்தன செர்னில் !
    இரு குவார்க்கு இரு எதிர்க் குவார்க்குடன்
    உருவான பரமாணுத் துகள்
    கண்டு பிடிக்கும் !
    பராமணு வயிற்றில் அடைகாத்து
    வெடித்துப் பொரிக்கும்
    குஞ்சுகள் !
    குளுவான்கள் ! குவார்க்குகள் !
    லிப்டான்கள் !
    ஃபெர்மி யான் !  ஹிக்ஸ் போஸான் !
    பிரபஞ்ச  செங்கற்கள் !

    +++++++

     

    Particle Zoo -1

    துகள் பௌதிக விஞ்ஞானத்தில் தினமும் புதியவை கண்டுபிடிக்கப் படுவதில்லை.  அதனால் புதிய துகள் கண்டுபிடிப்பு என்பது ஓர் அற்புத பரபரப்பு நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது.   கனேடிய துகள் விஞ்ஞானிகள் லூயிஸ், ஒலோசின் ஆகியோர் முன்யூகித்த அந்த இரண்டு பரமாணுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தது நான் எதிர்பார்த்த ஓர் நிகழ்ச்சி.

    ஸ்டீஃபன் பிளஸ்க் [துகள் பௌதிக விஞ்ஞானி,  நியூயார்க் சிரக்குயூஸ் பல்கலைக் கழகம்]

     

    செர்ன் விரைவாக்கியில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு

    2014 நவம்பர் 20 ஆம் தேதி பௌதிக விஞ்ஞான இதழ்கள் அறிவிப்பின்படி புதிய இரண்டு பரமாணுக்கள் செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப்படுகிறது.  அந்த பரமாணுக்கள் இரண்டும் பாரியான்கள் [Baryons] எனப்படும் வகையைச் சேர்ந்தவை.  அவை நாமறிந்த புரோட்டான்களை விட ஆறு மடங்கு நிறையாகக் கனத்தவை.  அவற்றின் இருப்பைப் பற்றி ஏற்கனவே 2009 இல் இரு கனேடிய துகள் பௌதிக விஞ்ஞானிகள், ரான்டி லூயிஸ், ரிச்செர்டு ஒலோசியன்  [Particle Physicists, Randy Lewis & Richard Woloshyn] என்போர் முன்னறிவித் துள்ளார்கள்.  அந்தப் பரமாணுக்கள் பாரியான் [Xi_b’ and Xi_b*] வகை என்று குறிப்பிடப் படுகின்றன.   ஒவ்வோர் பாரியானிலும் மூன்று குவார்க்ஸ் [Each Baryon has 3 Quarks] என்னும்  அடிப்படைப் பரமாணுத் துகள்கள் உள்ளன.  நாம் அறிந்த அணுவின் உட்கருவில் உள்ள  புரோட்டான்களும், நியூட்ரான்களும் பாரியான்கள் வகையைச் சேர்ந்தவை.  அந்த பரமாணுக்கள் இரண்டும், வெவ்வேறு நிறை கொண்டிருந்தாலும், குறைந்த ஆயுள் உடையவை. நிலையற்றவை.   அவை உடைந்து ஐந்து சிறிய துணுக்குகளாகப் பிளவு படுகின்றன.

    நியூயார்க்கு மாநில சிரக்கியூஸ் பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிக விஞ்ஞானி, ஸ்டீஃபன் பிளஸ்க் என்பரும் & பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாத்யூ சார்லஸ் என்பவரும் இணைந்து செர்ன் பூத விரைவாக்கி யின் விளைவுத் தகவல்களை ஆராய்ந்து செய்த கண்டுபிடிப்பாகும்.   செர்ன் விரைவாக்கி ஏறக்குறைய 750 உலக விஞ்ஞானிகள் கூடி உழைக்கும் ஓர் ஆராய்ச்சி மையம்.

     

    Fig 1 CERN Ready to Smash Protons

     

    புதிரான பரமாணுத் துகள்போல் தோன்றி ஓர் உறுதியான நிலையில் இருக்கும் காட்சியை ஐயமறக் கண்டோம்.   துகள் போலிருந்த அந்தப் பரமாணுவில் இரு குவார்க்கும், இரு எதிர்க் குவார்க்கும் [Two Quarks & Two Anti-Quarks]  உள்ளிருந்தன.   இந்த அரிய கண்டுபிடிப்பு வழக்கமான குவார்க் மாடலை [Traditional Quark Model] ஒத்திருக்க வில்லை.   அந்தத் துகள் பௌதிக விஞ்ஞானத்தில் ஓர் உறுதியான ஈடுபாட்டுடன் உலவப் புதியதோர் கண்ணோட்டத்தை எங்களுக்குக் கொடுக்கலாம்.

    தாமஸ் ஸ்குவார்னிக்கி விஞ்ஞான வெளியீட்டு ஆய்வாளர்.

    “செர்ன் பூத விரைவாக்கி யந்திரத்தில் கிடைத்த பில்லியன் கணக்கான புரோட்டான்-புரோட்டான் மோதல் கணித விளைவுகளை [LHC Proton-Proton Collision Data]  ஆராய்ந்த செர்ன் விஞ்ஞானிகள் “ஹிக்ஸ் போஸான்” புதுத் துகள் இருப்பதை [99.99%] உறுதிப் படுத்தியுள்ளார்.   அதன் கண்டுபிடிப்பு நேர் போக்குத் துகள் பௌதிக விதிக்கு [Mainstream Particle Physics Priciples] ஏறக்குறைய ஏற்புடையதாய் உள்ளது.”

    டேவிட் சார்ல்டன், [CERN LHC ATLAS Team] [மார்ச் 14, 2013]

     Higgs boson Discovery

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=b4E34t9Nyn8

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2xnsMGNicho

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=K1cU8dATFkE

     http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rcZboT9Jer8

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vGWSttur878

     http://www.youtube.com/watch?feature=player_embedded&v=l6H7-GKCDBQ 

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=EGHZA4Y382w

     

    New Physics

    புதிய பௌதிகம் உருவாக்கும் புது அணுக்கருத் துகள் கண்டுபிடிப்பு

    2014 ஏப்ரல் 16 ஆம் தேதி அமெரிக்காவின் சிரக்கூஸ் பல்கலைக் கழகத்தின் [Syracuse University] பௌதிக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுவிதப் பரமாணுவை செர்ன் அணு உடைப்பி யந்திரத்தின் மூலம் கண்டு பிடித்தாக வெளியிட்டுள்ளார்கள்.   2012 ஆண்டில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட “கடவுள் துகள்” எனப்படும் “ஹிக்ஸ் போஸானுக்குப் பிறகு ஒரு சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இது  செர்ன் பூதப் பரமாணு மோதல் நளினச் சாதனத்தின் ஒரு பகுதிக் குழுமுயற்சியாகக் கருதப்படுகிறது. [CERN Large Hadron Collider Beauty Collaboration].   இந்தக் கண்டுபிடிப்பு பன்முக நாட்டு ஆய்வுத் திட்டத்தின் ஒரு விளைவு.  இக்குழு புதிய குவாண்டம் விசைகளையும், [Quantum Forces] துகளையும் ஆய்வு செய்யும்.  இந்த முயற்சி உறுதியான முறையில் ஐயப்பாடு இல்லாமல் நிரூபணம் செய்யப் பட்டுள்ளது.  குழுத் தலைவர் தாமஸ் ஸ்குவார்னிக் தான் கண்டுபிடித்த பரமாணுத் துகளில் இரு குவார்க்குகளும், இரு எதிர் குவார்க்கும் உள்ளதாக கூறினார்.   பல்லாண்டுகளாக அந்தத் துகள் இருப்பை ஊகித்தாலும், அதன் இருப்பு இப்போதுதான் ஐயப்பாடு இல்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

     

    “2012 ஜூலை மாதத்தில் கிடைத்த முன்னோடி மோதல் விளைவுகள் முக்கியமானவை.  காரணம் அவை “ஹிக்ஸ் போஸான்” கடவுள் துகளைத்தான் ஆய்ந்து வருகிறோம் என்றெனக்குத் தெளிவாய்க் காட்டின.    ஆயினும் அது எந்த வகையான ஹிக்ஸ் போஸான் என்று தீர்மானமாக அறிய இன்னும் நெடுங்காலம் ஆகும்.”

    ஜோ இன்காண்டிலா  [Physicist Spokeperson, CERN Compact Muon Solenoid Team (CMS)]

    “கண்டுபிடித்த “ஹிக்ஸ் போஸான்” எந்த வகையைச் சேர்ந்த துகளென்று அறிய, துகள் பௌதிகத்தில் ஐயத்துக்கு அப்பால் முழுமையான ஆய்வு செய்யப் பட வேண்டும்.   ஆயினும், பூஜியச் சுழற்சி [Zero Spin] உறுதியாக்கப் பட்டதால், இந்தக் கண்டுபிடிப்பு புத்துணர்ச்சி உண்டாக்குகிறது !   பூஜியச் சுழற்சி கொண்ட முதல் அடிப்படைத் துகளே ஹிக்ஸ் போஸானாகத்தான் இருக்க வேண்டும்.”

    டாக்டர் வைட்பெர்க் [CERN Particle Physics Scientist]

    கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதி செய்யப் பட்டது

    2012 ஜூலையில் பூதச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் விஞ்ஞானிகள் தடம் மட்டும் கண்ட கடவுள் துகள் எனப்படும் “ஹிக்ஸ் போஸான்” இப்போது [2013 மார்ச் 14]  விஞ்ஞானிகளால் ஏறக்குறைய [99.99%] உறுதி செய்யப்பட்டிருக்கிறது.   இந்த புதுத் துகள்தான் நமது பிரபஞ்சத்தின் தோற்றத்தின் மூலச் செங்கல் என்று கருதப்பட்டு அது இருப்பதாய் 1964 இல்  பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் அனுமானிக்கப் பட்டது.   காணப்படாத இந்த கடவுள் துகளைக் கண்டுபிடிக்க  உலக விஞ்ஞானிகள் 10 பில்லியன் டாலர் செலவில் 27 கி.மீ. நீளமான [16 மைல்] செர்ன் விரவாக்கியைக் கட்டியமைக்க வேண்டியதாயிற்று !  இந்த விஞ்ஞானத் தேடல் கடந்த 25 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வருகிறது.   அவ்விதம் அசுர சாதனை செய்து விஞ்ஞானிகள் தாம் தேடிய கடவுள் துகளை உருவாக்கிப் படமெடுத்து உறுதிப்படுத்தியது பெரிய நிதிச் செலவையும் நேரச் செலவையும் நேர்மைச் செலவாக்குகிறது !  இப்போது செர்ன் நிறுத்தம் செய்யப் பட்டு இரண்டு வருடம் பராமறிப்புப் பணிகள் நடக்கும்.  அதற்குப் பிறகு செர்ன் விரைவாக்கி இருமடங்கு மிகையான ஆற்றலில் [14 TeV] 2015 இல் மீண்டும் இயங்கி ஐந்து வகை ஹிக்ஸ் போஸான்களை ஆக்கி  ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்யும்.

    ஹிக்ஸ் போஸான் ஓர் அடிப்படைத் துகள் !  மிகக் கனமானது !  சீக்கிரம் உடைந்து சிறு துகளாவது !  காலக்ஸிகள், சூரியன்கள், அண்டக்கோள்கள், கருந்துளை, கரும்பிண்டம், உயிரினங்கள்,  போன்ற பிரபஞ்சப் படைப்புகள் அனைத்துக்கும் “மூலச் செங்கல்” என்று கருதப்படுவது.  அதன் இருப்பு அனுமானமும், கண்டுபிடிப்பு உறுதிப்பாடும், பிரபஞ்சத் தோற்றப் பெருவெடிப்பு நியதியைப் பூர்த்தி செய்து வலுப்படுத்துகிறது.  “பூஜிய சுழற்சி” [Zero Spin] இருப்பதாய் நிரூபணமான இந்த ஹிக்ஸ் போஸான் இல்லாமல் போனால் “துகள் பௌதிகத்தின் நேர்த்தி மாதிரி நிலைப்பாடு”  [Standard Model of Particle Physics] பிரபஞ்சத்தில் நிகழும் இயக்கங்களுக்கு விளக்கம் தர முடியாமல் போகும்.   அது இல்லாமல் ஈர்ப்பியல் விசையை விளக்கும் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதிக்கு உடன்பாடு ஏற்படாது.

    Fig 1H God's Particle Higgs Boson

    1969 இல் சந்திரனுக்குக் குறிப் பயணம் செய்த மகத்தான மனித முயற்சி போல் ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடிச் சென்றதும் உலக மாந்தர் கவனத்தைக் கவர்ந்தது.   நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பொல்லோ விண்வெளிக் குறிப் பணிகள்  பொதுமக்களை  விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்புகளில் ஈர்த்தன.   அடுத்த பிறவி விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி ஆர்வத்தைத் தூண்ட இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீடித்துச் செல்லும்.

    பேராசிரியர் பீட்டர் நைட் (Professor Peter Knight, President of Institute of Physics, UK. )

    ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு உயிரியல் விஞ்ஞானத்தில் “டி யென் ஏ” (DNA) மூலவி கண்டுபிடிப்புக்கு ஒப்பாகும்.  இது  டியென்ஏ  கண்டுபிடிப்பின் ஒரு பௌதிக வடிவம்.   நமது பிரபஞ்ச அமைப்புப் பின்னல் நாரைப் (Fabric of the Universe) புரிந்து கொள்ளும் முயற்சியின் போக்கில் புது தீரச் செயலுக்கு ஒரு பாதை உண்டாக்கும்.

    பேராசிரியர் பீட்டர் நைட்.

    கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை.   15 ஆண்டுகள் அகில நாடுகளின் கூட்டுறவில் மாபெரும் பரமாணு உடைப்பியைக் (Large Hadron Collider) கட்டி அமைத்ததின் பயனைப் பெற முடிந்தது.   இந்த அறிவிப்பானது  “துகள் பௌதிகத்தின்” நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics.) ஏற்பு உடையது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.

    பேராசிரியர் பீட்டர் நைட்.

    “உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

    “செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”

    ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

    “இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

    டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)


    “பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)

    “இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !”

    மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)

    “மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளி லிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,”

    ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)

    jay

    “இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collision Data) அநேகப் பட்டப் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”

    ராபர்ட் ரோஸர் (Fermilab Co-Spokeperson, CDF & DZero Analysis Groups)


    “ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன.  டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்து கிறோம்.  உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை.  அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”

    டெனிஸ் கோவர், (Dept of Energy Associate Director of Science for High Energy Physics)

    “உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”

    ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)

    “செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists).  இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”

    ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

    “இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது.  அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும்.  மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி விசையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

    டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)

     

     

    செர்ன் விரைவாக்கி யந்திரம் உண்டாக்கிய புரட்சிகரமான மூலத்துகள் ஹிக்ஸ் போஸான்

    சுமார் பதினாங்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு  நேர்ந்ததாகக் கணிக்கும் பிரபஞ்சப் பெருவெடித் தோற்றத்தில் முதன்முதல் உதித்ததாக யூகிக்கபட்ட “ஹிக்ஸ் போஸானைப்”  போன்ற ஒரு துகளைச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் புரோட்டான்களை மோத விட்டுக் கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டிஷ்  துகள் பௌதிக விஞ்ஞானிகள் 2012 ஜூலை 5 ஆம் தேதி  அறிவிப்பு செய்து ஒரு பரபரப்பை உண்டு பண்ணினார்.    அந்தத் துகளின் பெயர் :  ஹிக்ஸ் போஸான் (Higgs Boson).    அந்த அற்புதத் துகளை வடிவாக்கிய விரைவாக்கி யந்திரம் செர்ன் அல்லது  “பரமாணு பெரு உடைப்பு யந்திரம்” (CERN or Large Hadron Collider) என்பது.    கண்டு பிடித்த புதிய துகள், ஹிக்ஸ் போஸானின் பண்பாடுகள் கொண்டதற்கு மெய்யான சான்றுகள் கிடைத்துள்ள தாயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப நிலை செர்ன் ஆய்வு விளைவுகளை வைத்தே இப்போது அறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது.   கடவுள் துகளின் உறுதிப்பாடு பூரணமாக இன்னும் ஏராளமான விளைவுப் பதிவுகள் ஆராயப்பட நீண்ட காலம் ஆகலாம்.   புதுத் துகள் எந்த விதமான வடிவம் எடுத்தாலும் சரி, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணுப் பிண்டத்தின் அடிப்படை அமைப்பு (Fundamental Structure of Matter) பற்றிய நமது பழைய அறிவு பேரளவில் உயர்ந்து முன்னேறப் போகிறது.

    2012 ஜூலை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த செர்ன் விரைவாக்கி ஆய்வு நிபுணர் நடத்திய “துகள் பௌதிகப் பேரவையில்” (Major Particle Physics Conference) பிரிட்டிஷ் துகள் விஞ்ஞானிகள் இந்த அரிய கண்டுபிடிப்பை முதன்முதல் வெளியிட்டனர்.  நீண்ட காலம் எதிர்பார்த்த ஹிக்ஸ் போஸான் துகள்  உண்டாக்கிய செர்ன் அட்லாஸ், சி யெம் எஸ் சோதனைக் கருவி விளைவுகளை (ATLAS, CMS Experiments)  அறிவித்தார்.   இரண்டு சோதனைக் கருவிகளின் விளவு களும் 125 –126 GeV (Gega Electron Volt Energy) கெகா எலக்டிரான் ஓல்ட் சக்தியுள்ள துகளை உருவாக்கின.  இந்த அறிவிப்பு முன்னோடி விளைவுகளை (Preliminary Results) வைத்துச் செய்யப் பட்டது.   ஆனால் பூரண உறுதி அளிப்பதற்கு இன்னும் ஆராயப் பட வேண்டிய சோதனை விளைவுகள் ஏராளமாய் உள்ளன.   விஞ்ஞானிகள் ஆயினும் ஹிக்ஸ் போஸான் பண்பாடு உள்ள ஓர் புதுத் துகளை நிச்சயம் செர்ன் விரைவாக்கி உண்டாக்கிய விட்டதாக உறுதியாக அறிவித்தார்கள்.  2012 ஜூலை மாதக் கடைசியில் அனைத்து விளைவுகளும் ஆய்வு செய்யப் பட்டு முடிவான அறிவிப்பு செய்யப்படும் என்பது தெரிகிறது.

     

     

    ஹிக்ஸ் போஸான் மூலத்துகள் கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் என்ன ?

    இரண்டாம் உலகப் போரின் போது 1945 இல் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் சோதனைத் தளத்தில் அணுவைப் பிளந்து தொடரியக்கத்தைக் கட்டுப் படுத்தி அணுசக்தியின் பேராற்றலை முதன்முதல் வெளிப்படுத்திய நிகழ்ச்சி, நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செர்ன் விரைவாக்கியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச தோற்றத்தின் கடவுள் துகளை உருவாக்கிக் கண்டுபிடித்ததற்கு நிகராகும்.   இப்போது செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் என்ன ?   கண்டுபிடித்த ஹிக்ஸ் போஸான் துகளின் துல்லிய இயற்கைப் பண்புகளை ஆழ்ந்து அறிவது,  அதனால் இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி விளக்கமாக அறிவது போன்ற புதிய விபரங்களே.   அவ்விதம் பெற்ற துகளின் பண்பாடுகள் துகள் பௌதிகத்தில் இறுதியாக நிலைத்துவ மாடலில் நிரப்பப் பட வேண்டிய உட்கூறா (Missing Ingredient in the Standard Model of Particle Physics) என்பது தெளிவாக்கப் படும்.    அல்லது ஹிக்ஸ் போஸான் துகள் புரட்சி உண்டாக்கப் போகும் ஒரு புது அதிசயமா என்பது அறியப் படும்.

    துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் என்ன சொல்கிறது ?   நாம் தோன்றக் காரணமான மூலாதார துகள்கள், பிரபஞ்சத்தில் காணப்படும் அண்ட பிண்டங்கள் உண்டாக உதவிய அடைப்படைத் துகள்கள்,  அவற்றுடன் பின்னிப் பிணைந்து இயக்கி வரும் அகில விசைகள் (Forces of the Universe) ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.    பிரபஞ்சத்தில் அண்ட பிண்டங்களின் இருப்பு  மொத்தத்தில் 4%  மட்டுமே.   தற்போது கண்டுபிடிக்கப் பட்ட கடவுள் துகள் 96% மர்மாக இருக்கும் பிரபஞ்ச மீதிப் புதிரை விடுவிக்க ஒரு பாலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆணித்தரமான விளக்கம்  வெளிவர இன்னும் செர்ன் சோதனை விளைவுகளை ஆராய நீண்ட காலம் ஆகும் என்று அறியப் படுகிறது.

     

    ஹிக்ஸ் போஸானை முன்மொழிந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்

    கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அதை ஊகித்து விளக்கிய பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயரைக் கொண்டது.  1964 இல் அவர் ராபர்ட் பிரௌட், பிரான்காய் எங்லெர்ட், டாம் கிப்பிள், ஹேகன், ஜெரால்டு குரல்னிக் ஆகியோரின் கருத்துக்களுடன் மூன்று வெளியீடுகள் வெளியிட்டார்.   அந்தக் கோட்பாடு ஹிக்ஸ் தளம், போஸான் சார்ந்த ஹிக்ஸ் யந்தரவியல் (Higgs Mechanism Related to Higgs Field & Boson) என்று அழைக்கப் பட்டது.    ஹிக்ஸ் போஸான் ஒரு கனமான துகள் ஆனதால், அது செர்ன் விரைவாக்கியில் உருவானதும் உடனே சிதைந்து வேறு சிறு பரமாணுக்களாய் மாறுகிறது (It decays almost immediately into two jets of hadrons and two electrons, visible as lines.)   ஹிக்ஸ் போஸான் தேடல் செர்ன் விரைவாக்கியில் 2010 ஆண்டின் ஆரம்ப காலத்தில் துவங்கி,  அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் விரைவாக்கியில்  2011 ஆம் ஆண்டில் அது மூடுவது வரை ஆய்வு செய்யப் பட்டது.

    பரமாணுகளுக்கு நிறை தருவது (Mass) இந்த ஹிக்ஸ் போஸான்.  ஹிக்ஸ் தளத்தின் ஈடுபாடே  (Higgs Field Interaction) அடிப்படைத் துகள்களுக்கு நிறை கொடுக்க ஏதுவாகிறது.   ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசையே  அதன் மீதுள்ள பொருளுக்கு எடை கொடுப்பது போல் அதைக் கருதலாம்.   ஈர்ப்பு விசை பூஜியமானால் பொருளுக்கும் எடை இல்லாது போகும்.  ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் துகள்.   அடிப்படைத் துகள் சில இந்திய விஞ்ஞானி சத்தியேந்தர  நாத் போஸ் பெயரைத் தாங்கி  உள்ளன.   அவர் ஐன்ஸ்டைன் காலத்தில் அவருடன் விஞ்ஞானப் பணி செய்தவர்.   போஸன் துகள் ஒரு தனிப் பண்பு கொண்டது.  அது அதைப் போன்று ஒத்திருக்கும் பற்பல துகள்களை ஒரே இடத்தில், ஒரே குவாண்டம் நிலையில் (Quantum State)  வைத்திருக்க அனுமதிக்கும்.   மேலும் நிலைத்துவ மாடல் விதிப்படி ஹிக்ஸ் போஸானுக்கு சுழற்சி இல்லை, நேர், எதிர் மின்னேற்றங்கள் கிடையா.   நிற ஏற்றமும் இல்லை.  (No Intrinic Spin, No Electrical Charge, No Color Charge).

     

    Dark Matter in the Universe

    பூர்வீக மூலத் துகள் தேடலில் நெருங்கிச் சென்ற முதல் விரைவாக்கி யந்திரம்

    வெகு விரைவில் உலகப் பெரும் விரைவாக்கி புதிய அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கத் துவங்கும் நிலைக்கு வந்து விட்டதென்று ஒரு பெரும் செர்ன் விஞ்ஞானி அறிவித்தார். செர்ன் யந்திரத்தின் சமீபத்திய இயக்க முன்னேற்றம் தொடர்ந்தால், விஞ்ஞானிகள் இவ்வாண்டு வேனிற் கால முடிவுக்குள் துகள் பௌதிகத்தில் (Particle Physics) புதியதோர் திருப்பத்தை உண்டாக்குவார் என்று தெரிந்தது. அவற்றுள் முதலில் கண்டுபிடிக்கப்பட இருப்பவை ஏற்கனவே உள்ளதாக ஊகிக்கபட்ட இரண்டு போஸான் துகள்கள் (Boson Particles). பத்து பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்டு ஆரம்பத்தில் ஹீலியம் கசிந்து பழுதுகள் நீக்கப் பட்டு முதன்முதல் 2009 நவம்பரில் செர்ன் விரைவாக்கி யந்திரம் செம்மையாக இயங்க ஆரம்பித்து பல பில்லியன் மோதல்களை உண்டாக்கி விட்டது. பிரென்ச்-சுவிஸ் எல்லையில் ஜெனிவாவுக்கு அருகில் 27 கி.மீ. விட்டமுள்ள வட்ட அடித்தளத்தில் இயங்கி வருகிறது செர்ன் விரைவாக்கி யந்திரம். அந்த உலகப் பெரும் விரைவாக்கி அணுவின் அடிப்படைத் துகள் “ஹிக்ஸ் போஸான்” என்பதை 1000 GeV (Gega-electron Volt) மின்னாற்றலில் காணலாம் என்று விஞ்ஞானிகளால் ஊகிக்கப் பட்டது.

    புரோட்டான் நிறையைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதானது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் ஊகிப்பு அடிப்படைத் துகள். இந்த நிறை அளவீட்டில் முதலில் உதிக்கும் புதிய துகள்கள் ‘பிரதம W போஸான்கள்’ & ‘பிரதம Z போஸான்கள்’ (W Prime Bosons & Z Prime Bosons). இவை இரண்டும் கனமான போஸான்கள்.. மெலிந்த போஸான்கள் எனப்படும் ‘W போஸான்கள்’ & ‘Z போஸான்கள்’ (W Bosons & Z Bosons) நலிந்த இயக்கப்பாடுகளுக்குப் (Weak Interactions OR Weaker Nuclear Force) பொறுப் பானவை. நான்கு அடிப்படை இயக்கப்பாடுகள் : ஈர்ப்பியல் சக்தி, மின்காந்த சக்தி, வலுத்த அணுக்கருச் சக்தி, நலிந்த அணுக்கருச் சக்தி. (Four Fundamental Interactions of Nature: Gravitation, Electromagnetism, Strong Nuclear Force & Weaker Nuclear Force).

    1980 இல் W போஸான் & Z போஸான் ஆகிய இரண்டும் 100 GeV (Gega-Electron Volt) சக்தியில் பழைய செர்ன் விரைவாக்கியில் கண்டுபிடிக்கப்பட்டன. நிறை மிகையான துகள்களைப் பதிவு செய்ய அதிக சக்தி வாய்ந்த தற்போதுள்ள விரைவாக்கி யந்திரம் செர்ன் போல அமைக்க வேண்டியதாயிற்று. ஒரு சில மாதங்களில் செர்னில் 1000 GeV மின்னாற்றல் உண்டாக்க முடியும் என்று ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிகவாதி டாக்டர் டோனி வைட்பர்க் கூறுகிறார். செர்ன் விரைவாக்கியில் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3.5 TeV (Tetra- Electron Volt) மின்னாற்றலில் கணை மோதல்கள் நடத்தப் படும். செர்ன் பொறியியல் நிபுணர் படிப்படியாக மின்னாற்றலை மிகையாக்கி வருவார். 18 முதல் 24 மாதங்கள் நீடிக்கப் போகும் பில்லியன் கணக்கான செர்ன் விரைவாக்க மோதல் களின் விளைவுகளை ஆராய்வதற்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம் ! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோதல்களின் எண்ணிக்கை (10^27) (10 to the power 27). இப்போது எண்ணிக்கை (10^29). இந்த வாரத் திட்டம் (ஜூன்–ஜூலை) மோதல்கள் எண்ணிக்கை : (10^30). செர்ன் விஞ்ஞானி களின் குறிக்கோள் திட்ட எண்ணிக்கை : (10^34) மோதல்கள். இதுவரைப் புரோட்டான் வேகத்தை ஒளி வேகத்துக்கு ஒட்டி (99.99% ஒளிவேகம்) சக்தி ஆற்றலை 7 TeV அளவு உயர்த்தி உள்ளார். முடிவான குறிக்கோள் திட்ட ஆற்றல் : 14 TeV. செர்ன் விரைவாக்கியின் முழுத் தகுதிச் சக்தியில் விநாடிக்கு 600 மில்லியன் மோதல்கள் நிகழும். அப்போது டிரில்லியன் கணக்கில் புரோட்டான்கள் விரைவாக்கி வட்டக் குழலில் விநாடிக்கு 11245 தடவை சுற்றிவரும் !

     

    விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கம் நுண்துகள் உளவும் கருவிகள்

    ஆறு முக்கிய கருவிகளின் பெயர்கள் இவை: (CMS, Atlas, Alice, LHCb, Totem & LHCf) அவை புரியும் பணிகள் என்ன ?

    1. அட்லாஸ் உளவி (ATLAS Detector – A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.

    2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடையும் உளவும். இது பன்முக உளவுக்குக் கருவி (Multi-Purpose Detector)

    Higgs boson Established

    3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.
    (Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)

    4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.

    5. LHCf (Large Hadron Collider Forward) விண்வெளியில் இயற்கையாக உண்டாகும் மின்னேற்றத் துகள்கள், அகிலக் கதிர்கள் (Charged Particles & Cosmic Rays) போலி இருப்பை ஏற்படுத்தும்.

    6. Totem இது புரோட்டான்கள் எவ்விதம் சிதறும் என்று கண்டு அவற்றின் நிறையை அளக்கும்.

     

    செர்ன் விரைவாக்கி என்ன முடிவுகளைக் கண்டுள்ளது ?

    செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சத்தின் புதிர்களை விடுவிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டது என்று ஆங்கு பணி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார். நுண்துகளுக்கு நிறை எதனால் ஏற்படுகிறது ? கடவுளின் துகள் எனப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ நுண்துகளுக்கு நிறை அளிப்பது என்று முன்பே யூகிக்க பட்டதுதான். இப்போது செர்ன் விநாடிக்கு 10,000 மோதல்களை உண்டாக்குகிறது என்று பௌதிக விஞ்ஞானி ஆன்ரி கொலூட்வின் (Anderi Golutvin) குறிப்பிடுகிறார். விநாடிக்கு எத்தனை அளவு மோதல்கள் மிகையாகுமோ அத்தனை அளவு நெருக்கத்தில் “உச்ச சீரமைப்பு”, “பிண்டம்”, “ஹிக்ஸ் போஸான்” (Supersymmetry, Dark Matter, Higgs Boson) ஆகியவற்றை அடைகிறோம் என்று பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார். “செர்ன் விரைவாக்கியின் கருவி (LHCb) எதிர்ப் பிண்டத்தின் (Anti-Matter) இயற்கைப் பண்பாட்டை நுட்பமாய் நோக்கும். அதே கருவி சமீபத்தில் முதன்முதலாக “நளினி” “விபரீத அழகி” என்னும் இரண்டு பரமாணுக் களைக் (Sub-atomic Particles, Called : Charm & Strange Beauty) கண்டு பிடித்துள்ளது. “விபரீத அழகி” நுண்துகளை முதன்முதல் கண்டுபிடித்த எனது குழுவினர் பேருவகை அடைந்தனர்.

    இயல் பிண்டத்தைப் (Normal Matter) போலின்றி மாறாக இயங்கும் எதிர்ப் பிண்டத்தை (Anti-Matter) அறிய நாங்கள் இந்த நுண்துகளை பயன்படுத்துவோம். ‘விபரீத அழகி’ நுண்துகளைப் பற்றி வேறு யாரும் அறியார். அதுவே செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.” என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆய்வாளர், டாக்டர் தாரா ஸியர்ஸ் கூறினார். செர்ன் விரைவாக்கியின் சக்தியும், இயக்கமும் தயாராகி “ஹிக்ஸ் போஸான்” நுண்துகளைக் கண்டுபிடிக்க 2011 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர் வைட்பர்க் கூறுகிறார்.

    அணுகருவுக்குள் இருக்கும் புரோட்டான் மிகவும் சிக்கலான துகள். அதனுள் குவார்க்குகள், குளுவான் உள்ளன. இந்த வார முடிவில் விஞ்ஞானிகள் முதன்முதல் எதிர் எதிர் வரும் முத்திரட்சி உள்ள இரு புரோட்டான் கற்றைகளை (Two Beams Consisting Three Bunches of Protons) செர்ன் விரைவாக்கியில் மோத விட்டார். முதல் முறையாக செர்ன் படைப்புத் திறனில் இயங்கி இயல் அடர்த்தியில் (Normal Intensity) இம்மூன்று திரட்சிகளும் இருந்தன. ஆதாவது ஒவ்வொரு திரட்சியிலும் 100 பில்லியன் புரோட்டான்கள் உச்ச அளவில் ஏவப்பட்டன.


    Fig 1D Comparative Size of Particles

    இப்போது பாதி அளவுத் தீவிரத் திறனில்தான் (7 TeV) செர்ன் இயங்கியுள்ளது. ஒவ்வொரு கற்றையும் முழுத் திறமையில் (14 TeV) இயங்க 2014 ஆண்டில்தான் முடிவான சோதனையாக இருக்கும். முடிவான குறிக்கோள் திட்டம் 2808 திரட்சிகளை ஒரு கற்றைக்குள் உண்டாக்குவது. அது 2016 ஆண்டில்தான் நிகழும் என்று நம்பப் படுகிறது. புரோட்டான்கள் ஓடிச் சென்று மோதிக் கொள்ளும் வட்ட வளைக் குழலில் நான்கு பெரிய சோதனை நிகழ்த்திப் பிரபஞ்ச மர்மத்தின் புதிய பௌதிகப் படிக்க நான்கு கருவிகள் [Compact Muon Solenoid (CMS), (Atlas, Alice, LHCb] அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் விளைவுகளை ஆராயும் தலைமைத் திட்ட விஞ்ஞானி : டாக்டர் கொலூட்வின். கற்றையில் திரட்சிகள் கூடும் போது விஞ்ஞானிகள் ஒரு சிறு கருந்துளை (Mini Black Hole) தோன்று வதை எதிர்பார்க்க லாம் !  “செர்ன் விரைவாக்கியில் கருந்துளைகளை நாங்கள் படைக்க முடிந்தால் அது பேருவகை அளிக்கும் எங்களுக்கு”, என்று பௌதிகப் பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார்.

    ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்.  ஃபெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்முதலில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் !

    ஆனால் ஃபெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை.  எளிய நிறை ஹிக்ஸ் போஸானை ஃபெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்கவில்லை.  ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார்.  அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.


    ஃபெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்

    1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது.  1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் !  அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார்.  2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார்.  2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார்.  2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.

    அமெரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த ஃபெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன.  இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன.  துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும்.  (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்).  இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன.  அப்போது இத்தாலிய விஞ்ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது !

     

    வியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி !  அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை.  ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் !  2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது.  மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.

     

    ஃபெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு

    இத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய தகவலை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம்.  அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே.  உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது.  கடந்த 27 ஆண்டு களாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது.  ஃபெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது.  எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, ஃபெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கியது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் தகவலுக்கு உறுதி அளிக்கிறது.  ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாடலாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டதால், நிலவர மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிகள் மீளாய்வு செய்யப் படவேண்டும்.  2012 ஜுலை 6 ஆம் தேதி செர்ன் விரைவாக்கி துகள் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு கனத்துகளைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.    இது ஆரம்ப நிலை விளைவின் முடிவு மட்டுமே.  இன்னும் ஏராளமான செர்ன் விரைவாக்கியின் சோதனை விளைவுகள் ஆராயப் பட வேண்டும்.   கண்டுபிடித்த துவக்க நிலை கடவுள் துகளின் தடத்தை வைத்து, அது ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்று  துகள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்.

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: Fermilab, Chicago, USA, CERN, Geneva Websites.,

    1 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
    2 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
    3 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
    4. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
    5 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
    6 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
    7 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
    8 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
    9 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
    10 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)
    11. http://jayabarathan.wordpress.com/2008/09/18/cern-atom-smasher/(CERN Article-1)
    12 http://jayabarathan.wordpress.com/2008/09/26/cern-atom-smasher-2/(CERN Article-2)
    13 http://jayabarathan.wordpress.com/2009/11/05/cern-worlds-greatest-atom-smasher/ (CERN Article-3)
    14 http://jayabarathan.wordpress.com/2010/03/25/cern-atom-smasher-4/(CERN Article-4)
    14(a) http://jayabarathan.wordpress.com/2010/04/02/cern-atom-smasher-5/ (CERN Article-5)
    14(b) http://jayabarathan.wordpress.com/2010/04/09/cern-atom-smasher-6/ (CERN Article-6)
    14(c) http://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/ (What is Happening in CERN ?)
    15 BBC News LHC High Energy Results Published By Jason Palmer (Feb 9, 2010)
    16 BBC News : LHC Smashes Energy Record Again (March 19, 2010)
    17 BBC News : God Particle Hunt Set to Start By Paul Rincon (March 23, 2010)
    18 http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider (CERN Atom Smasher) (25 March 2010)
    19 BBC News : The Science of LHC By Paul Ricncon (Nov 20, 2009)
    20 BBC News : Collider Sees High-Energy Success (March 30, 2010)
    21 Large Hydron Atom Smasher Reaches Near Speed of Light (Daily Galaxy) March 31, 2010
    22 Deep Thought – The Large Hadron Collider Could Prove the Existence of a Parallel Universe (Daily Galaxy 2009 Top Story) Jan 6, 2010
    23 Atom Smasher Will Keep Revealing “The Beginning” (CTV News, Canada) March 30, 2010
    24. Why the Large Hadron Collider (LHC) ? A Few Unanswered Questions
    25. What Will the Large Hadron Collider (LHC) Reveal ? By : Steve Giddings Los Angeles Times(January 7, 2010)
    26. Will the LHC Solve the Mystery of the Great Attractor ? By Casey Kazan, Daily Galaxy (Jan 11, 2010)
    27 ABC News – Atom Smasher Closer to Big Bang By : Rachael Brown (March 31, 2010)
    28 BBC News : LHC Particle Search Nearing By : Paul Rincon (May 17, 2010)
    29 Space Daily – World’s Biggest Atom Smasher Gains Pace : CERN By : Staff Writers (June 28, 2010)
    30 BBC News : LHC Smashes Beam Collision Record By Katia Moskvitch (June 28, 2010)
    31 Telegraph, New Scientist – The Tevatron Accelerator – Competition with Large Hadron Collider Heats Up By Clay Dillow (July 12, 2010)
    32 Fermilab Web / Space Daily Fermilab Experiments Narrow Allowed Mass Range for Higgs Boson (July 26, 2010)

    32 (a) http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=41003121&format=html  (Satyendranath Bose)

    33. Wikipedia The Tevatron Collider, Fermilab (August 3, 2010)
    34 New Scientist Magazine ” Who Will Find the God Particle First ?” (Will an old Faithful Find the Higgs ?) By : Rachel Coutland (July 24, 2010)
    35.  http://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/ (July 3, 2010)
    36.  http://jayabarathan.wordpress.com/2010/08/07/god-particle-rumour/ (August 7, 2010)
    37  Daily Galaxy :  News of the Century  ?  CERN to Announce its Findings on Higgs Boson Tomorrow (July 3, 2012)
    38.  Time & Space : CERN Experiments Observe Particle Consistent with Long-Sought Higgs Boson (July 5, 2012)
    39. Time & Space :  A New particle has been Discovered- Chances are, it is the Higgs Boson(July 5, 2012)
    40.  Time & Space :  Higgs Boson Hunters Declare Victory – as Significant as DNA Discovery  (July 5, 2012)

    41.  http://www.bbc.co.uk/news/science-environment-21421460 LHC switches off for two-year Maitenance  [February 14, 2013]

    42. http://www.bbc.co.uk/news/science-environment-21785205 LHC cements Higgs boson identification [Masrch 14, 2013]

    43. CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details [March 14, 2013]

    44  Daily Galaxy : LHC Data confirms Higgs Boson [March 14, 2013]

    45.  http://en.wikipedia.org/wiki/Higgs_boson  [March 2013]

    46.  Daily Tech CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details  [March 14, 2013]

    47.  http://rt.com/news/higgs-boson-found-confirmed-274/  [March 15, 2013]

    48.  http://www.youtube.com/watch?feature=player_embedded&v=l6H7-GKCDBQ ]

    49.  http://www.popsci.com/article/science/indisputable-proof-new-four-quark-particle  [April 10, 2014]

    50.  http://www.haaretz.com/life/science-medicine/.premium-1.585887   [April 16, 2014]

    51. http://www.thestar.com/news/world/2014/11/19/scientists_at_atom_smasher_discover_2_new_subatomic_particles.html  [November 19, 2014] 

    52.  http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider  [November 20, 2014]

    53.  http://www.cbc.ca/news/technology/new-subatomic-particles-predicted-by-

    [Message clipped]  View entire message

    Attachments area
    Preview YouTube video CERN Scientists Discover 2 New Subatomic Particles

    CERN Scientists Discover 2 New Subatomic Particles

    Preview YouTube video The Standard Model Of Particle Physics 001 : Overview

    The Standard Model Of Particle Physics 001 : Overview

    Preview YouTube video 2014 God Particle Project: Opening A Bottomless Pit to Hell Now! (Disturbing)

    2014 God Particle Project: Opening A Bottomless Pit to Hell Now! (Disturbing)

    Preview YouTube video Sadhguru on the God Particle – Higgs Boson (Part 1)

    Sadhguru on the God Particle – Higgs Boson (Part 1)
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(131)

    சக்தி சக்திதாசன்.

     

     

    LOECD1

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றொரு வாரத்தில் உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    இலண்டன் பி.பி.ஸி தொலைக்காட்சியில் சமீபத்தில் ” உலகில் உயிரினங்கள் ( Life on Earth ) “ எனும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

    அந்நிகழ்ச்சியை பார்வையுற்ற போது என் மனதில் பல நினைவலைகள் அதிர்ந்து எழுந்தன.

    இப்பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் எத்தனையோ வகையானவை. அவை ஒவ்வொன்று வாழும் வகைகள் வேறுபட்டவை.

    இப்பூமி உருவானதாகச் சொல்லப்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்த உயிரினங்கள் பல அக, புற சூழல்களின் காரணத்தினால் முற்றாக அழிந்து போயின.

    வேறு பல வாழ்க்கையின் சவால்களை சந்திப்பதற்காக மாறும் சூழல்களினால் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன.

    ஏன் குரங்கு வடிவிலிருந்து மனித வடிவிற்கு மாற்றம் காணக் காரணம் கூட காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்ட சவால்கள் என்றுகூடக் கூறப்படுகின்றன..

    இந்நிகழ்ச்சியில் உயிரினங்கள் சிலவற்றின் வாழ்க்கை அணுகுமுறைகளை அவை பிறந்தது முதல் அவைகளின் பருவமாற்றங்களினூடக நிகழும் மாற்றங்களைக் கையாளும் வகையில் ஆராய்ந்திருக்கிறார்கள்.

    இவற்றில் சிலவற்றை ஒரு பேச்சுக்காக எடுத்துப் பார்ப்போம்.

    monkeysபால பருவத்திலிருந்து வாலிபப் பருவத்தையடைந்த “சிம்பன்ஸி” எனும் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்றைப் பார்க்கிறார்கள். பால பருவ குரங்குகளுடன் இணைந்து விளையாடுவதைத் தவிர்த்த இக்குரங்கு அக்குரங்குக் கூட்டத்தின் முன்னனித் தலைமைக் குரங்குகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்காக முயன்று தோல்வியடைந்து பின் வாங்குகிறது.

    இதனுடைய இம்முயற்சி எதற்காக? அக்குரங்குக் கூட்டத்தில் தன்னுடைய அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வதற்காகன முயற்சி என்கிறார்கள்.

    அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வது ஒன்றே உணவு பெறுவதில் முக்கியத்துவதையும், பெண் குரங்குகளுடனான உறவுகளில் முக்கியத்துவம் பெறுவதற்காகவும் என்று சொல்லப்படுகிறது.

    antஅடுத்து அமெரிக்காவில் அரிசோனா எனும் மாநிலத்தில் உள்ள ஒரு எறும்புச் சமுதாயத்தைக் காட்டுகிறார்கள். மழை பெய்தவுடன் ஈரமான நிலத்தில் தனக்கு ஒரு புற்று ஏற்படுத்துவதற்காக இராணி எறும்பு தரையைக் கிண்டத் தொடங்குகிறது. அதனுடன் சேர்ந்து இன்னும் ஓர் ஏழு இராணி எறும்புகள் அக்குழியைத் தோண்டுகின்றன.

    அமைக்கப்பட்ட புற்றினுள் இந்த எட்டு இராணி எறும்புகளும் முட்டையிட்டு பல தொழிலாளி எறும்புகளைத் தோற்றுவிக்கின்றன.

    அதன் பின்பு நடப்பதுதான் விசித்திரம்! அரசியலோ?

    அப்புற்றினுள் ஒரேயொரு இராணி எறும்புதான் அதிகாரம் செய்ய முடியும் விளைவு ஏழு இராணி எறும்புகள் அவைகளால் உருவாக்கப்பட்ட தொழிலாளி எறும்புகளினாலேயே அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கப்பட்டு வளரும் தலைமுறைக்கு உணவாக்கப்படுகின்றன.

    மிஞ்சிய அந்த ஒரு இராணி அவ்வெறும்புக் குழு அனைத்துக்கும் அதிகாரம் செய்யும் தலைமைத்துவத்தைப் பெறுகிறது .

    தண்ணீரிலே நீந்தும் ஒருவகை மீன் தனக்குத் தேவையான உணவை தன் வாயிலிருந்து சீறியடிக்கும் நீர்க்கற்றையின் மூலம் இலைகளில் ஒளிந்திருக்கும் பூச்சியை அடித்து நீரினுள் வீழ்த்தி அதனை உட்கொள்கின்றது.

    அதனைப் பார்த்துத் தானும் பழகிக் கொள்ளும் மீன்குஞ்சு கஷ்டப்பட்டு அடித்து வீழ்த்திய பூச்சியை அருகிலிருந்த பெரிய மீன் பாய்ந்து லபக்கென்று விழுங்க்கிக் கொள்கிறது. அந்தோ பாவம் அச்சிறிய மீன்!

    evolutionஇத்தகைய நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் அவைகளுக்கும் மனிதர்களாகிய நமக்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் தலைதூக்கியது.

    பகுத்தறிவு !

    ஆமாம்… அதன் மூலம் மட்டுமே நாம் நம்மை நாகரீகமாக வளர்த்துக் கொண்டு மனிதர்கள் என்று கூறித் தம்பட்டம் அடித்து அலைகின்றோம்.

    ஆனால் பகுத்தறிவற்ற இவ்வுயிரினங்களுக்கும் நமக்கும் அப்படி பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

    உடைகள் அணிவதிலும், நம்மை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்வதிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம் … ஆனால் அடிப்படையான தேவைகளின் உணர்வுகள் மாறுபடவில்லை.

    மனிதர்களும் அதே தேவைகளுக்குகாகத்தான் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கிறோம்..

    ஆனால் தமது வயிற்றுப்பசியை போக்கிக் கொள்ளவும், தமது சந்ததியைப் பெருக்கவுமே தமது உழைப்பை ஈந்திடும் விலங்குகள் அத்தோடு தமது இலக்குகளை நிறுத்திக் கொண்டு விடுகின்றன.

    ஆனால் மனிதர்களாகிய நாமோ நமது தேவைகளுக்கு மீறி சேர்க்கத் தலைப்பட்டு பேராசையினால் உந்தப்பட்டு அல்லல்படுகின்றோம்.

    மதம், இனம், மொழி, நிறம் எனப் பல்வேறு வேறுபாடுகளுக்கு முதலிடம் கொடுத்து நம்மைப் போன்ற அடுத்த மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

    நாமும் வாழ்ந்து அடுத்தவரும் வாழ்தற்கான ஆதாரங்கள் பலவிருந்தும், அந்த அடுத்தவருக்குக் கிடைக்க வேண்டியதையும் நாமே அமுக்கிக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தினால் நமது மனவளர்ச்சியை நாமே குந்தகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    ஓ ….இந்தச் குட்டைக்குள் ஊறும் ஒரு மட்டைதான் நானுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவிக்கு நன்றி: http://www.trunkrecords.com/turntable/life_on_earth.shtml & BBC

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

    crazy

    “மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
    தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
    இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
    மன்னார்AND COCHOR மனது”….கிரேசி மோகன் ….

    Share