Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 1, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்

    எஸ். கணேசன்

    இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.

    புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்திதாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று  துயர் களையும் நடவடிக்கையையும்  எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.

    நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும்  உதவிக்காகப்  பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.

    எஸ். கணேசன்2பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.

    இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன்.  இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.

    தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை  வல்லமையாளராகப்  பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.

    தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்

    அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
    http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கொடியவன் நீலன் சிலை அகற்றும் போராட்டம்

    தஞ்சை வெ.கோபாலன்.

    General James George Smith Neil

    James George Smith Neill (27 May 1810 – 25 September 1857)

    1857இல் வட இந்தியாவில் நடைபெற்ற இந்திய சிப்பாய்களின் புரட்சியை முதல் சுதந்திரப் போர் என்றுதான் தேசபக்தர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த புரட்சி சரியான தலைமை இல்லாமையாலும், உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பதுபோல இந்தியர்களே செய்த துரோகச் செயல்களாலும் வீரத்தோடு போராடிய பல தேசபக்த சிங்கங்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருந்ததை நாம் அறிவோம். இது தவிர ஆங்கில தளபதி நீல் என்பவன் நடத்திய வெறியாட்டம் காரணமாக எத்தனை இந்தியர்கள் உயிர் துறக்க நேர்ந்தது என்பதை அறிய வேதனை உண்டாகிறது. போதாதற்கு இந்த கொடுமைக்காரன் ராணுவ தளபதி நீலனுக்குச் சென்னையில் அப்போது ஸ்பென்சருக்கு எதிரில் சிலையொன்றையும் நிறுவி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.

    நீலனுடைய முழுப் பெயர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் (General James George Smith Neill) யார் இந்த நீல்? இவன் செய்த கொடுமைகள் எவை? அவன் சிலையொன்றை சென்னையில் வைத்தது என்ன ஆயிற்று? இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த விவரங்களை இந்தக் கட்டுரையில் சிறிது பார்க்கலாம்.

    சிப்பாய்கள் தொடங்கிய கலகம் மெல்ல மெல்ல வட இந்திய நகரங்களுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. மீரத் நகரத்தில் உருவான எழுச்சி, டெல்லியில் அதிர்வு, அசம்கர் வெற்றி இவை பற்றிய செய்திகள் எல்லாம் நாடெங்கும் பரவிய நேரம். பஞ்சாபில் இருந்த ஆங்கில அதிகாரி ஜான் லாரென்ஸ் என்பவரும் கல்கத்தாவில் தலைமை பீடத்தில் இருந்த லார்ட் கேனிங் பிரபுவும் புரட்சியை அடக்கப் பிரம்ம பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருந்தனர். வெள்ளையர் ஆதரவுப் படைகள் டெல்லியில் புரட்சியாளர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மற்ற பகுதிகளில் இருந்த வெள்ளைப் படைகள் பாதுகாப்புக்காக படைகளை அனுப்ப அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர். பம்பாய், சென்னை, ரங்கூன் ஆகிய இடங்களிலிருந்து படைகள் கலகம் நடந்த பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டன.

    அப்படி வரவழைக்கப்பட்ட படைகளில் சென்னையிலிருந்து சென்ற துப்பாக்கிப் படை ஜெனரல் நீல் என்பான் தலைமையில் கலகத்தை அடக்கப் புறப்பட்டது. இந்த நீல் என்பான் பற்றி சொல்லப்படும் குணாதிசயங்கள், இவன் தர்மம் என்பதையே அறியாதவன், எதற்கும் துணிந்த கொடியவன், மனிதாபிமானம் இல்லாத ராட்சச குணங்கள் படைத்த மனித உருவிலான அரக்கன். காசிக்கு வந்த நீலனின் படைகளுக்கு இந்திய துரோகிகளின் துணையும் கிடைத்தது.

    இவன் இந்திய படைவீரர்களுக்கு இட்ட முதல் கட்டளை அவர்கள் ஆயுதங்களை யெல்லாம் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டுமென்பதுதான். ஆனால் சுயமரியாதையும் தேசபக்தியும் கொண்ட இந்திய வீரர்கள் அவன் ஆணையை ஏற்க மறுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஜெனரல் நீல் தன் வெள்ளை படைகளோடு பஞ்சாபின் சீக்கியர் படையையும் சேர்த்துக் கொண்டு தாக்கத் தொடங்கினான். இந்தப் படை சிப்பாய்களைத் தவிர கிராமம் கிராமமாகப் புகுந்து அங்கெல்லாம் கண்ணில் தெரிந்த மனிதர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தினர். சிறை பிடித்தவர்களை ஆங்காங்கே மரங்களில் தூக்கிலிடுவது என்று வெறியாட்டம் ஆடினர். பல தூக்கு மேடைகள் அமைத்து ஓயாமல் ஒழியாமல் அப்பாவி பொதுமக்களை தூக்கிலிட்டுக் கொன்றான் நீல். தூக்கிலிட வேண்டிய கூட்டம் அதிகமாக இருந்ததால், தூக்கிலிட்ட ஒருவரின் உயிர் பிரியுமுன்பாகவே அவரை குற்றுயிரும் குலையுயிருமாகத் தூக்கி ஏறிந்துவிட்டு அடுத்தவரை தூக்கிலிட்டனர்.

    இப்படி ஒருவர் ஒருவராகத் தூக்கிலிட பலநாட்கள் ஆகுமென்பதால் ஒரு காரியம் செய்தனர். பலரை ஒரே நேரத்தில் ஒரு பெரிய மரத்தடியில் நிறுத்தி, அவர்கள் கழுத்துகளில் எல்லாம் சுறுக்குக் கயிற்றைச் சுற்றி பெரும் மரக்கிளை வழியாக மறுபுறம் கொண்டு சென்று அங்கு ஒரு யானை மூலம் கயிற்றை இழுக்கச் செய்து பலரை ஒரே நேரத்தில் தூக்கிலிட்ட கொடுமையும் நடந்தது. இப்படி பலரை தூக்கிலிட தூக்கு மேடையும், கயிறும் தேவைப்பட்டதால் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தனர். ஒரு கிராமத்தின் உட்பகுதியில் அனைவரையும் நிறுத்தி சுற்றிலும் தீமூட்டி அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பரலோகப் பிராப்தி அடையும்படி செய்தனர். அதில் தப்பி ஓட நினைத்தால் சுற்றிலும் பீரங்கிகளை நிறுத்திவைத்து சுட்டுப் பொசுக்கினர். இந்த வரலாற்றையெல்லாம் இவர்கள் பெருமையாகப் பின்னர் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.

    இந்த கொடியவன் நீலன் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; சொல்லி மாளாத கொடுமைகள். இப்படி சென்னையில் புறப்பட்டுக் கல்கத்தா சென்று அங்கு கேனிங் பிரபுவின் உத்தரவின் பேரில் இந்திய சிப்பாய்களை வழியெல்லாம் பலிகொடுத்துக் கொண்டு வந்தபோது காசியையும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் நடத்திய கொலைவெறி காட்சிகளைப் பார்த்தோம். அந்தக் கொடியவன் புரட்சியின் போது 1857இல் லக்னோ நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தன் வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த சமயம் பீரங்கியால் சுடப்பட்டுத் தன் குதிரையில் இருந்தபடியே கீழே விழுந்து உயிரைவிட்டான். மனித உருக்கொண்ட அரக்கன் இந்திய மண்ணில் இரத்தம் கக்கிச் செத்தான்.

    1861ஆம் வருடத்தில் அந்த கொடியோன் நீலனுக்குச் சென்னையில் ஸ்பென்சருக்கு எதிரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. பீடமும் சிலையுமாக 21 அடி உயரமுள்ள முழு வெண்கலத்தால் ஆன அந்தச் சிலையை வெள்ளையர்கள் நிறுவினர். அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த மக்களுக்கு அவன் செய்த கொடுமைகள் தெரியவில்லையோ என்னவோ அப்போது அவன் சிலைக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆனால் இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்றபின் சுமார் 66 ஆண்டுகள் கழித்து 1927இல் தேசிய வாதிகள் இந்த கொடியவன் நீலனின் சிலை அங்கிருந்து அகற்றப்பட வேண்டுமென போராட்டத்தைத் துவக்கினர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தை மதுரை தேசபக்தர் நா.சோமையாஜுலு என்பார் தலைமை தாங்கினார். அவருடன் பங்குபெற்ற சில தேசபக்தர்கள் கடலூர் சுப்பராயலு, மதுரை சிதம்பர பாரதி, கடலூர் அஞ்சலை அம்மாள், லீலாவதி மற்றும் பலர்.

    1927 ஆகஸ்ட் 11ஆம் தேதி தேசபக்தர்கள் ஊர்வலமாகச் சென்று ஒரு ஏணியை வைத்து அந்த சிலைமீது ஏறிக்கொண்டு கடலூர் சுப்பராயலு ஒரு சுத்தியல் கொண்டு சிலையை உடைக்கத் தொடங்கினார். சிலை வெண்கலத்தால் ஆனது என்பதால் உடையவில்லை; ஆனால் நீலனின் கையில் பிடித்திருந்த வாள் சிறிது சேதமடைந்தது. அப்போது அங்கு கூடிய கூட்டத்தினர் மத்தியில் அந்த நீலன் செய்த கொடுமைகளை விளக்கி தேசபக்தர்கள் பேசினார்கள். அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் தொண்டர்களைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போய்விட்டனர்.

    நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது தியாகி சுப்பராயலு சொன்னார், நீலன் சிலை இந்திய மக்களுக்கோர் அவமானச் சின்னம். நான் மரண தண்டனை பெறுவதாயிருந்தாலும் இதை உடைத்தே தீருவேன் என்று முழங்கினார். நீதிபதி தொண்டர்களுக்குத் தலா ரூ.300 அபராதமும் 3 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அபராதம் செலுத்த மறுத்து தொண்டர்கள் மேலும் 3 மாத சிறைதண்டனை பெற்றனர்.

    இப்படித் தொடர்ந்து பல நாட்கள் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து சிலையை உடைக்க முயல்வதும், கைதாவதும், சிறை செல்வதுமாக இருந்தனர். இதில் நா.சோமையாஜுலு உட்பட பலருக்கு ஒரு வருஷம் சிறை தண்டனையும் ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த ரூ.50 அபராதத்தைச் செலுத்த மறுத்ததால் இவர்களுக்கு மேலும் 15 மாத சிறை தண்டனை கிடைத்தது. இவர்கள் ஒரிசாவில் உள்ள பெர்ஹாம்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 13 வயதே ஆன காந்திமதிநாதன் எனும் சிறுவன் ஒரு கோடாலி கொண்டு சிலையை உடைக்க முயற்சித்துக் கைதாகி செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் நான்கு ஆண்டுகள் இருக்க நேர்ந்தது. சென்னை வந்த மகாத்மா காந்தி நீலன் சிலையை அகற்ற அஹிம்சை முறையில் போராட வேண்டுமென்றார். கடலூர் முருகப்பப் படையாச்சி, அவர் மனைவி அஞ்சலை அம்மாள், அவர்களது 11 வயது நிரம்பிய மகள் லீலாவதி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். லீலாவதி சென்னை சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் இருக்க நேர்ந்தது.

    அப்போதைய சென்னை சட்டமன்றத்தில் நீலன் சிலையை அகற்றும் தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டது. 98 உறுப்பினர்களில் 29 பேர் நீலன் சிலையை அகற்ற ஆதரவு தந்தும், ஜஸ்டிஸ் கட்சியினரும் 18 ஆங்கிலேய உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்து தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் காங்கிரசார் சிலையின் மீது களிமண் உருண்டைகளை வீசித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் ஒரு அரசாங்கம் அமைந்த பின்னர் நீலன் சிலையை அகற்றி எழும்பூர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்றார்கள். இப்படி அடக்கி ஆண்ட அந்நியர்களை மட்டுமல்ல, இந்தியர்களை மிருகத்தனமாகக் கொன்று குவித்த ராட்சசன் நீலன் சிலையைக் கூட இங்கு வைக்கக்கூடாது என்று போராடியவர்கள் நம்மவர்கள் என்பதை எண்ணி பெருமைப்படலாம். ஜெய் ஹிந்த்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(48)

    -செண்பக ஜெகதீசன்

    தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
    வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (திருக்குறள்-274: கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்…

    தகாது
    தவவேடத்தில் மறைந்திருந்து
    தப்பு செய்தல்…

    அது,
    காட்டில் வேடன்,
    புதரில் மறைந்திருந்து
    அங்கு வரும்
    பறவையைப் பிடித்தல் போன்றது…!

    குறும்பாவில்…

    துறவு வேடத்தில் தீயசெயல்,
    புதர்மறைவிலிருந்து பறவை பிடிக்கும்
    வேடன் செயலே…!

    மரபுக் கவிதையில்…

    புதரின் மறைவில் மறைந்திருந்தே
    பதுங்க வந்திடும் பறவைகளை
    இதமாய்ப் பிடித்திடும் வேடனவன்
    இயல்பை யொத்த செயல்தானே,
    மதத்தின் பெயரால் தொண்டாற்றி
    மக்கள் நன்மை பெற்றிடவே
    உதவும் துறவு வேடமதில்
    உதவாத் தீயன செய்வதுமே…!

     லிமரைக்கூ…

    புதரில் மறைந்திருந்து புள்பிடிப்பான் வேடன்,
    அதுபோல் உண்மை மறைத்துத்
    தவவேடத்தில் தீயவற்றைச் செய்பவன் கேடன்…!

    கிராமிய பாணியில்…

    வேட்டயாடு வேட்டயாடு
    வெவரமாநீ வேட்டயாடு…

    பொதருக்குள்ள ஒளிச்சிருந்து
    பதுங்கவாற பறவபுடிக்கான்
    பாதகனா வேட்டக்காரன்,
    வேண்டாவேண்டாம் இவுனப்போல
    வேட்டக்காரன் வேண்டாவேண்டாம்…

    தவசிபோல வேசம்போட்டு
    தப்புசெய்றவன் இவம்போலத்தான்,
    வேண்டாவேண்டாம் இவுனப்போல
    வேசக்காரன் வேண்டாவேண்டாம்…

    வேட்டயாடு வேட்டயாடு
    வெவரமாநீ வேட்டயாடு…!

     

    Share
  • மண்ணறை தாயின் கருவறையாம்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    மனித ஆத்மாக்கள் மகிழ்ந்து வாழ்ந்தாலும்-
    ஈடில்லை –
    அல்லாஹ்வின் அன்புக்கு …!
    அவனது சந்தோசத்துக்கு ….!!                                      allah

    அல்லாஹ்விடம் கையேந்திப் பிராத்திக்கும் போது,
    மனசு தேடுகிறது அருட்கொடை நாடி!

    அல்லாஹ் பெரியவன் ((அல்லாஹு அக்பர் )
    அவனின்றி நாம் இல்லை! 

    அல்லாஹ் விரும்புகின்றான்
    தன் அடியார்கள் –
    இறை பக்தியோடு வாழ வேண்டுமென்று!

    எனக்குக் கரு அமைத்து
    உயிர் கொடுத்து வளர்த்தவன்
    அல்லாஹ்!

    உன்னைத் தொழும்போதும், வணங்கும்போதும்தான்
    நான்  உணர்கின்றேன்
    அல்லாஹ்வின் ரஹ்மத் எப்படி என்று…!

    உன்னை நினைத்து வாழும் எந்த ஆத்மாவுக்கும்
    மண்ணில் எக்கவலையுமில்லை!  

    பரிசுத்த மனதோடு –
    மனித ஜீவன்கள் வாழ்வது தான்
    அல்லாஹ்வின் விருப்பம்!

    தன்னை நினைத்து வாழ்பவர்களுக்கு
    ஆபத்தை விட்டும் காப்பாற்றுகின்றான் அல்லாஹ்!

    சைத்தான்களுக்கு அவ்வளவு ஆசை
    நல்லடியார்களைத் தன் பக்கம் திசை திருப்புவதற்கு…!

    அருள் மழை  சொரிய
    நல்லடியார்களைத் தேடி பார்க்கின்றான்
    வல்ல பெரியோன் அல்லாஹ்!

    உனக்கு உயிர் கொடுக்கும்போது உள்ள சந்தோசம்
    உன்னுயிர் எடுக்கும்போது வருமா உன் பெற்றோருக்கு…?

    மண்ணறை தாயின் கருவறையாம்
    கவிஞர்கள் கவி பாடுகின்றார்கள்! 

    உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்,
    மலக்குமார்கள் சொல்கின்றார்களாம்
    மண்ணில் செய்த  நன்மைக்கு
    விண்ணிலிருந்து கூலி கிடைக்கின்றதாம் என்று!

    அதனால்
    நீ செய்த நல அமலுக்கான சான்றிதழை
    வானோர்கள் –
    ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் பட்டத்தோடு பதிவு செய்து விட்டார்கள்
    அல்லாஹு அக்பர் தக்பீரோடு…!

     

    Share
  • நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்)

    சி. ஜெயபாரதன், கனடா

    நரபலி நர்த்தகி ஸாலமி 

    (ஓரங்க நாடகம்) 

    காட்சி-1, பாகம்-3

    (Based on Oscar Wilde ‘s Play Salome)

    jay

    ‘புனித நீராட வரும் நச்சுப் பரம்பரைப் பாம்புகளே! எதிர்காலக் கோபத் தவறுகளிலிருந்து பிழைத்துக் கொள்ள உங்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார், அவர்! உங்களுக்குள் சொல்லித் தீர்க்க முடியாத, பாப மன்னிப்புக்கு ஏற்ற உங்கள் செய்கைக் கனிகளை அவர்முன் கொண்டு வாரீர்! நமது கடவுள் ஆப்ரஹாம் இருக்கிறார். நான் சொல்கிறேன் உங்களுக்கு: கடவுள் அந்தத் தளத்துடன் பாலகரைத் தூக்கி, ஆப்ரஹாம் வசம் அளிப்பார். அதோ, அடிமரத்தை வெட்டக் கோடரி, தயாராய் உள்ளது! நற்கனிகள் முளைக்காத ஒவ்வொரு மரமும் வெட்டிக் கீழே தள்ளப்பட்டுத் தீக்கிரையாகப் போகிறது!

    இரண்டு அங்கிகள் கொண்டவர், இல்லாதவருக்கு ஒன்றை அளிக்க வேண்டும்! உண்ண இரைச்சி மிகுதியாய் உள்ளவர், இல்லாதவருக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும்! உணவுச்சாலை நடத்துவோர், தகுதிக்கு ஏற்பப் பிறரிடம் பெற்றுக் கொள்வீர்! படை வீரர் யாருடனும் வன்முறையில் நடக்காதீர்! யார் மீதும் பொய்க் குற்றம் சாட்டாதீர்! உமக்குக் கிடைக்கும் ஊதியத்தில் திருப்பி அடைவீர்! நிச்சயம் நீரை ஊற்றி உமக்கு நான் புனித நீராட்டுவேன். ஆனால் என்னை விடப் பராக்கிரசாலி ஒருவர் [ஏசுநாதர்] வரப் போகிறார்! அவரது காலணிக் கயிறைக் கூட அவிழ்க்கத் தகுதி யற்றவன் நான்! தனது புனித ஆன்மீக சக்தியால், அவர் உமக்குத் தீயால் புனித நீராட்டப் போகிறார். ‘

    புனித நீராட்டி: ஜான் போதகர்.

    jay1

    நாடக நபர்கள்:

    ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

    ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

    ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

    (ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

    ஜொஹானன் (Johannan): ஜான், புனித நீராட்டி

    ஏரோதியாஸின் சேடியர், காவலர்

    ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

    சேனைக் காவலர்.

    கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

    நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

    நேரம்:

    அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. பொங்கி எழும் பூரணச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

    காட்சி அமைப்பு:

    ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரோத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

    ********************

    jay2

    [முன் வாரத் தொடர்ச்சி]

    முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், ஜொஹானனை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ? எதற்காக நீ ஜான் போதகரைப் பார்க்க விரும்புகிறாய் ?

    கப்பதோசியன்: போதகரை நான் காண வேண்டும். கடவுளைப் பற்றி நான் அவருடன் சற்று உரையாட வேண்டும்.

    முதற் காவலன்: உன்னாசை ஒருபோதும் நிறைவேறாது! மெதுவாகப் பேசு! நீ உரக்கப் பேசினால், உன்னைப் பிடித்துக் கொண்டு ஜொஹானன் கிடக்கும் சிறையில் தள்ளி விடுவார்! இது எச்சரிக்கை உனக்கு!

    கப்பதோசியன்: நல்ல ஆலோசனை அது ! அப்போது சிறைக் குள்ளே ஜொஹானன் கூட, நான் பேசத் தடையிருக்கா தல்லவா ? அவரிடம் கடவுளைப் பற்றி உரையாடலாம் ! சிறைக்குப் போனாலும், ஒரு போதகரின் நிழல் என்மேல் படுவதில் பூரிப்படைவேன்! அவரது அருள்வாக்கு செவியில் படுவதைப் புண்ணியமாகக் கருதுவேன்.  அவரது நெறி மொழிகள் என் ஆத்மாவைக் கழுவினால், அதுவே எனக்குப் பாப மன்னிப்பாகும்.

    முதற் காவலன்: நீ சாகும் வரை அவரோடு பேசலாம்! அல்லது ஜொஹானன் சாகும் வரை அவரோடு நீ உரையாடலாம்! கைகளைக் கட்டினாலும் உன் வாயைக் கட்ட மாட்டார்! கவலைப் படாதே. மேலும் ஜொஹானன் பேச ஆரம்பித்தால், உமது செவிகளுக்குத்தான் வேலை! வாயிக்கு வேலை யில்லை! ஆனால் உன்னாசை நிறைவேறாது! சிறைக்குப் போக வாய்ப்பில்லை உனக்கு!

    jay4

    jay3

    ஸாலமி

    ஸிரியா வாலிபன்: ஸாலமியின் மீன்விழிகள் ஏனோ வலை விரிக்கும் எனக்கு ! அவளது விழிக் கணைகள் ஒரே ஒருமுறை மேல் நோக்கி என் நெஞ்சைக் காயப் படுத்தி விட்டன! அந்தக் காயத்திற்கு அவள்தான் மருந்திட்டு ஆற்ற வேண்டும்!  எழில் கன்னி  ஸாலமியின் பட்டாம் பூச்சி விழிகள் படபடக்கும் போது, என்னிதயம் ஏனோ தடதட வென முரசடிக்கிறது!

    ஏரோதியாஸின் காவலன்: புலம்பாதே வாலிபச் சிங்கமே! அந்தப் புள்ளிமான் மீது ஆசை வைக்காதீர் ! அவள் ராஜ நர்த்தகி !  அவ மீது கொள்ளும் ஆசை உனக்குப் பேராபத்தை உண்டாக்கும்! அவளது தீக்கண் பார்வை மனிதரைச் சுட்டெரிப்பவை!  உமது தீராக் காதல் ஒருதலைக் காதல்! ஒருதலைக் காதல் உனக்குத் தலைவலி தருவது!  உறக்கத்தைக் கெடுப்பது!  உயிரைச் சிறுகச் சிறுக உண்பது! உடலை எலும்புக் கூடாய் உருக்குவது! உன்னைப் போல் பலரது உயிர்களை உருக்கி விட்டவள் ஸாலமி! உன்னுயிரை அவளிடம் இழந்து விடாதே! ஸாலமி காதலிக்கத் தகுதி யற்றவள்! உன் கண்களால் அவளைத் தீண்டாதே! அவள் நிற்கும் திசையைக் கூட கண்ணால் நோக்காதே!

    ஸிரியா வாலிபன்: ஸாலமி ஓரிளம் மங்கை!  பேரழகி ! வாலிபன் ஒருவனின் காதலுக்கு உகந்தவள்! அந்த ஆடவன் ஏன் நானாக இருக்கக் கூடாது ? இராப்பகலாக என் நெஞ்சில் கனலைக் கொட்டித் தூக்கத்தைக் கெடுக்கிறாள்!  ஒன்று ஸாலமியோடு பேச வேண்டும் இன்று; அல்லது பாதாள சிறைக் கைதியோடு பேச வேண்டும்.

    கப்பதோசியன்:  இரண்டும் நிறைவேறாது வாலிபனே ! என்ன பயங்கரமான சிறை அது தெரியுமா ? மிருகங்கள் கூட வாழத் தகுதியற்ற குகைக் கூண்டு!  உயிரோ டிருப்பவர் தானாகச் சாவதற்கு ஏற்ற நச்சுச் சிறை அது!

    இரண்டாம் காவலன்: மெய்யான வாசகம் அது! சாவதற் கேற்ற நச்சுச் சிறை! நல்ல பெயர்! உனக்குத் தெரியாது! ஏரோதின் மூத்த சகோதரர் ஃபிளிப் அந்தப் பாழும் இடத்தில்தான் சிறைப் பட்டுக் கிடந்தார்! எத்தனை வருடம் தெரியுமா ? பனிரெண்டு வருடங்கள்! அவர்தான் மகாராணி ஏரோதியாஸின் முதற் கணவர்!  பேரழகி ஸாலமியின் அருமைத் தந்தை! ஆனால் அந்தப் பாழும் சிறை அவரைக் கொல்ல வில்லை தெரியுமா ?

    கப்பதோசியன்: யார் ? ஏரோதின் சகோதரரா ? ஏரோதியாஸின் முதற் கணவரா ? அவரின்று உயிரோடில்லையா ? எப்படிச் செத்தார் என்று விளக்கமாகச் சொல்!  அவருக்குப் பரிதாபப் படுகிறேன்.

    jay5

    இரண்டாம் காவலன்: பனிரெண்டு வருட முடிவில் என்ன செய்தார்கள் தெரியமா ? அவரது கழுத்தை நெரித்துக் கொன்று விட்டான், ஒரு காட்டுமிராண்டி!

    கப்பதோசியன்: [வருத்தமுடன்] அடப் பாவிகளா ? கழுத்தை நெரித்தா கொலை செய்தான் ? யார் அந்த பயங்கரவாதி ?

    இரண்டாம் காவலன்: [சிறைக்கருகே நின்ற ஒரு நீக்ரோவைக் காட்டி] அதோ நிற்கிறானே! அந்தக் கறுப்புக் குடிகாரன்தான்! காட்டுமிராண்டி! அந்த அரக்கன்தான் ஸாலமியின் தந்தையைக் கொன்றவன்!  ஏரோதியாஸின் முதற் கணவரைக் கொன்றவன்!

    கப்பதோசியன்: அந்தக் கோர மரணம் மகாராணிக்குத் தெரியமா ? சகோதரர் ஏரோது மன்னருக்கு அந்தப் பயங்கரக் கொலையைப் பற்றித் தெரியுமா ?

    இரண்டாம் காவலன்: [காதில் குசுகுசுத்து] ஏரோதுதான் தன் முத்திரை மோதிரத்தை அனுப்பி ஏற்பாடு செய்தவர்.

    கப்பதோசியன்: என்ன ? முத்திரை மோதிரமா ?

    இரண்டாம் காவலன்: அதுதான் மரண மோதிரம்! பயங்கர வாதிக்கு மரண மோதிரத்தை அனுப்பிச் சகோதரனைக் கொல்ல ஏற்பாடு செய்தது, ஏரோத் மன்னர்தான்! மனைவி ஏரோதியாஸ் அதற்கு உடந்தை!

    கப்பதோசியன்: என்ன பயங்கரக் கொலை அது ? என்ன பயங்கர சகோதரர் ? என்ன பயங்கர மனைவி ? என்ன பயங்கர உலகம் இது ?

    [ஸாலமி அப்போது எழுந்து படியேறி மாடிக்கு வருகிறாள்]

    jay6

    ஸிரியா வாலிபன்: பார், எழிலரசி ஸாலமி எழுந்து நகர்கிறாள்! விருந்து மாளிகையை விட்டுக் கோபத்துடன் சட்டென வெளி யேறுகிறாள்! முகத்தைப் பார்த்தால் கொந்தளிப்பு தெரிகிறது! படியில் ஏறி நம்மை நோக்கித்தான் வருகிறாள்!  முகம் ஏனோ வெளுத்துப் போயிருக்கிறது ? ஒருபோதும் இப்படி முகம் தெளிவற்றுச் சோகமாய்ப் போக நான் கண்டதே யில்லை!

    ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! ஸாலமியை உற்று நோக்காதே! அவளுக்குப் பிடிக்காது! அவளது அன்னைக்கும் பிடிக்காது! அவளை நேசிப்பவர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்!

    ஸிரியா வாலிபன்:  ஸாலமி ஒரு வெள்ளி நிலா போல ஒளியை வீசுகிறாள் ! முறிந்து விழப் போகும் வெண் புறாவைப் போல, மெல்ல நடந்து வருகிறாள்!  புல்லின் இலை போல மெல்லிய தென்றலில் நடுங்குவது போல் தெரிகிறது எனக்கு!

    [ஸாலமி மாடியில் வந்து நின்று பேசுகிறாள்]

    jay7

    ஸாலமி: [ஆங்காரமாய்] நான் தங்கப் போவதில்லை இங்கே. நின்று பேச எனக்கு நேர மில்லை. என்னையே பார்க்கிறார், ஏரோத் மன்னர்! ஏனென்று தெரியவில்லை! அருவருப்பாய் உள்ளது எனக்கு! கீழே என்னால் நிற்க முடிய வில்லை! பூச்சி போன்ற மன்னர் விழிகள் என்னை நோக்கும் போது, என் மேனியில் புழு ஏறுவது போல் புல்லரிப்பு உண்டாகிறது! உற்று நோக்கும் அவரது முட்டைக் கண்கள் ஊசி முனை போல் என்னுடலைக் குத்துகின்றன! வியப்பாக உள்ளது எனக்கு! என் அன்னையின் கணவர் எனக்குத் தந்தை போன்றவர்! என் தந்தையின் தனயன் எனக்குச் சிற்றப்பன்! ஆனால் கனிவாய்ப் பார்க்க வேண்டிய கண்கள் ஏன் கழுகாய் மாறி என்னை வட்டமிட்டுச் சுற்றுகின்றன ? இமை தட்டாமல் அவரது கண்கள் ஏன் வேட்டைக்குக் கிளம்பி விட்டன ? குள்ள நரி ஆட்டை விரட்டுவது போல், அவர் விழிகள் என்னைத் துரத்துகின்றன. அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை! கீழே நான் நானாக நிற்க முடிய வில்லை! மேலே நான் மூச்செடுக்க முடிகிறது!  இப்போது என் உள்ளத்தில் எனக்கோர் ஐயம் எழுகிறது. அது உண்மையாக இருக்குமோ ?

    jay8

    ஸிரியா வாலிபன்: [ஸாலமி அருகில் கனிவுடன் வந்து] ஸாலமி! நிலவையும் மிஞ்சி நீ மிக்க ஒளி வீசுகிறாய்! பொங்கிவரும் பெருநிலவும் உன் முன் மங்கித்தான் தோன்றுகிறது! நீ வந்த பிறகு இந்த மாடித் தளத்தில் பளிச்சென வெளிச்சம் தெரிகிறது. வாலிபன் ஒருவன் உன் வாசலில் வீணை மீட்டிய வண்ணம் உனக்காக நின்று கொண்டிருக்கிறான்!

    ஸாலமி: எங்கே அந்த வாலிபன் ? வீணையின் ஓசை என் காதில் படவில்லையே! நான் அவனைப் பார்க்க வேண்டும்! மாடி மீது வீசும் இளந் தென்றல் இனிமையாக உள்ளது! முள்ளம்பன்றிகளின் ஊசிப் பார்வையிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறேன்! இங்கே நான் மூச்செடுக்க முடிகிறது! துள்ளிடும் தென்றல் என் மேனியைத் தழுவி இன்னிசை பாடுகிறது! ஜெருசலப் பகுதிலிருந்து வந்த யூதர்கள் கீழே ஆடம்பரச் சடங்குகள் வேண்டுமென்று சண்டை யிட்டு ஒருவரை ஒருவர் பிய்த்துக் கிழிக்கிறார்! காட்டுமிராண்டிகள் குடித்துக் கொண்டு ஒயினை ஒருவர் வாயில் ஒருவர் ஊற்றிக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்! ஓவியப் பொம்மை போன்ற கிரேக்கர் சிலைகள் போல் மாந்தர் மெளனமாய் அமர்ந்துள்ளார்! எகிப்தியர் நீண்ட அங்கிகளை அணிந்து கொண்டு பூதங்களைப் போலத் திரிகிறார்! திமிர்பிடித்த ரோமானியர் கெட்ட வார்த்தைகளில் யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறார்! ஏதோ தாங்கள் பெரிய செல்வக் கோமான் போல, நெஞ்சை நிமிர்த்திய வண்ணம் நிற்கிறார்! அவரைப் பார்க்கவே அருவருப்பாக உள்ளது எனக்கு! முற்றிலும் நான் வெறுக்கிறேன் ரோமானியரை!

    ஸிரியா வாலிபன்: [கையில் வீணையை எடுத்து] இளவரசி! இந்த ஆசனத்தில் அமர்வீரா ? நான் வீணை வாசிக்கிறேன். இந்த வீணையின் இன்னிசை உங்கள் எழிலை இன்னும் மிகையாக்கும்!

    ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே ! இளவரசியிடம் அப்படி நீ பேசாதே! இளவரசியை வைத்த கண் வாங்காமல் அப்படிப் பார்க்காதே! ஏதோ இன்று பெரும் இன்னல் நேரப் போவதாய்த் தோன்றுகிறது எனக்கு!

    ஸாலமி: [வானில் நிலவை உற்று நோக்கி] நிலவைப் போல் நானும் மேக மண்டலத்தில் மிதக்க வேண்டும்! பொங்கும் நிலா எப்படிப் பொலிவுடன் தெரிகிறது இன்று ? தங்க நாணயம் போல் தகதக வென்று மிளிர்கிறது, பொங்கு நிலா! வானத் தெப்பத்தில் மிதக்கும் மோன நிலா உள்ளத்தில் தேனைப் பொழிகிறது! வெண்ணிலா ஒரு தூய கன்னியாகத் துலங்குகிறது! நிச்சயம் நிலா ஒரு பச்சிளம் கன்னிதான்! ஆம் அதில் சற்றேனும் ஐயமில்லை! நிலவும் என்னைப் போலொரு தனித்த கன்னியே! என்னைப் போல் நிலவும் கறையற்ற ஓர் கன்னியே! நிலவும் என்னைப் போல் ஆடவருக்குத் தன்னை அர்ப்பணிக்காத ஓரிளம் கன்னியே!

    jay9

    ஸாலமி

    [கீழே சிறையிலிருந்து மறுபடியும் ஜொஹானன் கூக்குரல் முழங்குகிறது]

    ஜொஹானன்: [உரத்த குரலில்] யாவரும் கேளீர்! அதோ! புதுப் போதகர் உம்மை நோக்கி வருகிறார்! கடவுளின் புத்திரர் அருகே வந்து விட்டார்! மனிதக் குதிரைகள் [Centaurs (A Horse with a Man’s Head)] நதிக்குள்ளே ஒளிந்து கொள்ளும்! கடற் தேவதைகள் [Nymphs (Sea Goddesses)] காட்டு வனாந்திர மரங்களில் ஒளிந்து கொள்ளும்! மானிடருக்குப் புனித நீராட்டத் தகுதி யுடையர் அவர் ஒருவரே!  ஆம், அவர் ஒருவரே !

    ஸாலமி: [வியப்போடு] யாரது அப்படி உரக்கப் பேசுவது ? யார் வரப் போவதாய் அறிவிக்கப் படுகிறது ?

    இரண்டாம் காவலன்: ஓ! அவர்தான் போதகர்! சிறைக்குள் மன்னர் அடைத்திருக்கும் ஜொஹானன்! ஏரோத் மன்னருக்கு அச்சம் ஊட்டும் ஜான், போதகர்! ஏரோதியாஸ் தூக்கத்தைக் கெடுக்கும் ஜான் போதகர்! அவர் புனித நீராட்டிய ஏசுப் போதகர் வரப் போவதை அறிவிக்கிறார்!

    ஸாலமி: [ஆர்வமுடன்] நான் பார்த்ததே யில்லை அந்தப் போதகரை! காண வேண்டும் நான் அந்த ஞானியை!

    ஸிரியா வாலிபன்: வேண்டாம் ஸாலமி! வேண்டாம்! அவரை நீ கண்ணால் காணக் கூடாது! பாபம் செய்தாவள் நீ! பாபம் செய்தவர்தான் அவரைப் பார்க்க வேண்டும்! நீ பார்த்தால், உன்னைப் பாபங்கள் தீண்டிவிடும்! அவர் கண்பட்டால் நீயும் பாபம் செய்யத் துணிவாய்!

    ஸாலமி:  நான் அவரைக் காண வேண்டும் இன்று !

    (தொடரும்)

    [காட்சி-1, பாகம்-4 அடுத்த வாரத் திண்ணையில்]

    ****

    தகவல்:

    1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

    2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

    3. The Desire of Ages By: Ellen G. White

    4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

    5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

    6. The New Testament & Psalms, Placed By the Gideons.

    7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

    8. Encyclopaedia of Britannica [1978]

    ****

    Share
  • சூரியனின் காந்தப்புலச் சுழற்சி பூமியிலே இடி மின்னலை மிகையாக்கி அசுர ஆற்றல் ஊட்டுகிறது.

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++++

    காலக் குதிரையின்
    ஆழியைச் சுற்றுவது சூரியன்.
    ஊழியின் கரம் பூமியில்
    ஓவியம் வரைவது !
    ஒளிரும் சூரியனும் ஒருநாள்
    ஒளி வற்றி முடங்கும் !
    பூமியின் உட்கருவில்
    சங்கிலித் தொடரியக்கம்
    தூண்டி நில நடுக்கம் புரிவது
    பரிதிக் கதிர்கள் !
    பூமி ஒரு வெங்காயம் !
    உடைந்த  தட்டுகள்
    அடுக்கடுக் காய் அப்பிய
    பொரி உருண்டை !
    சூரிய காந்தம், கதிர்வீச்சு
    காமாக் கதிர்கள்
    சூழ்வெளி படைப்பவை !
    பூமியின் உட்கரு வெப்பக் கனல்
    அரங்கேற்றம் செய்யும்
    பூகம்ப அடித்தட்டு
    நடனத்தை !
    எரிமலைக் கண்ணைத்
    திறந்து விடும் !
    பரிதி வடுக்களின் காந்தப்
    புலமும் கைநீட்டி
    நிலநடுக்கம் தூண்டலாம் !
    மின்னலைப் புகுத்தி
    மேதினியில் கொட்டடித்து
    மனிதரை அழிக்கலாம்
    தனியாகத் தாக்கி !

    +++++++++++++

    Lightning on Earth

    பரிதியின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் மின்னல் அடிப்பு வீதத்தை மிகைப் படுத்தத் தூண்டுவதில் பெரும்பங்கு ஏற்கிறது.  சூரிய காந்தப்புலம் ஒரு பட்டைக் காந்தம் போல் [Bar Magnet] நடந்து கொள்கிறது.  பரிதி சுற்றும் போது, அதன் காந்தப்புலம் பூமியை நேராக நோக்கியோ அல்லது மாறாக எதிர் நோக்கியோ தென்பட்டுப் பூகாந்தப் புலத்தை இழுத்தோ, விலக்கியோ வருகிறது.  காந்தப்புல மாற்றங்கள் மின்னேற்றும் பாட்டரிபோல் [Battery Charger]  சேர்ந்து இடிமின்னல் புயல்களைத் தீவிரமாக்கி அதிகப் படுத்துகின்றன.

    டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK] 

    காலநிலை அறிவிப்போர் சம்பிரதாய முன்னறிப்புடன், துல்லியமாகப்  பரிதியின் சுழி வடிவக் காந்தப் புலத்து அளவையும் [Spiral-shaped Magnetic Field, known as Heliospheric Magnetic Field (HMF)] சேர்த்து வெளியிட வேண்டும்.   2001  ஆண்டு முதல் 2006 வரை கிடைத்த காலநிலைத் தகவலை ஆராய்ந்து, பரிதி காந்தப்புலம் பூமிக்குப் புறம்பாக நோக்கிய போது,  இங்கிலாந்தில் 50% இடிமின்னல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

    டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK] 

    LIGHTNING IN UK

    பரிதியின் காந்தப் புலச் சுழற்சி இடிமின்னலை மிகையாக்குகிறது

    2014 நவம்பர் 19 ஆம் தேதி வெளியான ஓர் விஞ்ஞான அறிக்கையில் [IOP Journal, Environmental Research Letters] இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக் கழக [University of Reading, UK] ஆராய்ச்சியாளர், ஐந்தாண்டு காலத்தில் 50% மிகையான எண்ணிக்கையில் இடி மின்னல்கள் இங்கிலாந்தில் அசுர ஆற்றலில் அடித்துள்ளன வென்று கூறியுள்ளார்.  குறிப்பாக அந்தக் காலங்களில் பூமியின் காந்தத் தளத்தைச் சூரியனின் காந்தப் புலம் ஒருபுறமாய் வளைத்துள்ளது என்று காரணம் தெரிந்துள்ளது.  விண்வெளியிலிருந்து வீழும் அகிலக் கதிர் மின்னேற்றத் துகள்களிலிருந்து [Charged Particles like Protons from the Cosmic Rays ] பாதுகாத்துக் கவசம் அளிப்பது பூமியின் காந்த மண்டலமே.  அவ்விதத் துகள்களே தொடரியக்கங்களைத் தூண்டி, தீவிரமான இடி மின்னல் களை முன்பு அறியப்பட்டது.  இம்முறைகள் மூலமாய் இப்போது பல வாரங்களுக்கு முன்பே இடி மின்னல் பேரிடர் விளைவுகளை முன்னதாகவே அறிவிக்க முடியும் என்பது புலனாகிறது.  அதைச் செய்ய காலநிலை அறிவிப்பாளருக்கு, சம்பிரதாயக் காலநிலைக் குறிப்புகளும், துல்லியமாக சூரியனின் கோள நிலைக் காந்தப் புலம் [Heliospheric Magnetic Field (HMF)]  தேவைப்படுகிறது.  சூரியன் சுற்றும் போது, பரிதிப் புயல், பூமியை நோக்கிக் காந்தப் புலத்தை உதைத்துத் தள்ளுகிறது.  இதை அறிவித்த பிரிட்டீஷ் ஆய்வாளர் டாக்டர் மாத்யூ ஓவனஸ் [Dr. Matthew Owens] “சூரியனின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் வீழும் இடி மின்னல் எண்ணிக்கையை அதிகமாக்குவதில் பெரும் பங்கு ஏற்கிறது,” என்றார்.  இங்கிலாந்தின் காலநிலை நிறுவகம் [United Kingdom Met Office], கடந்த 2001 ஆண்டு முதல் 2006 வரை கணிசமாக இடிமின்னல் எண்ணிக்கை 50% கூடியுள்ளதாக வெளியிட்டுள்ளது.

    இடிமின்னல்களின் எண்ணிக்கை, தீவிரத்தை முன்பெல்லாம் முன்னறிய முடியாது.  புதிய ஆய்வுகளின்படி எங்கு, எப்போது இடிமின்னல்கள் தாக்கும் என்பதை முன்னறிவிப்பு செய்வது எளிதானது.   சூரியனின் காந்தப் புல எழுச்சி மேலும், கீழும் ஏறி இறங்கும் போது, பூமியின் காந்தப் புலத்தை ஒருபுறம் வளைத்து, தீவிரச் சக்திப் புரோட்டான்கள் கொண்ட அகிலக் கதிர்களைப் [The Cosmic Rays (High Energy Protons)] புவித்தளம் மீது பொழியச் செய்கிறது.   அப்போது அகிலக் கதிர்கள் புவியின் வாயு மண்டலத்தில் வழியுண்டாக்கிப் புயல் முகிலில் மின்னேற்றம் மிகையாக்கி [Electrical Charge builds up in Storm Clouds] பூமியைத் தாக்குகிறது.  சூரிய கோளம் 27 நாட்களுக்கு ஒருமுறை தன்னச்சில் சுற்றுகிறது.  அதாவது சூரிய காந்தப்புலம் இரண்டு வாரங்கள் பூமியை நேர் நோக்கியும், இரண்டு வாரங்கள் எதிர் நோக்கியும் உள்ளது.  ஆதலால் பாதி பரிதி சுழற்சியில், பூமியில் தாக்கும் இடிமின்னல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

     Solar magnetic field -1

    “சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான் : பூமியின் உட்கருவை மெதுவாக ஆனால் அசுரத் தீவிரத்தில் பாதிப்பது சூரியன் ஒன்றே !  பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனே பிரதானக் காரணி என்பதை நானும் எனது கீர்த்தி பெற்ற விருந்தினர்கள் டாக்டர் பீட்டர் ஆல்ஸனும் டாக்டர்  நிகோலா ஸ்கஃபீட்டாவும்  ஒப்புக் கொண்டோம்.”

    மிட்செல் பாட்டிரோஸ் (Mitchel Battros) (Solar Rain நூல் படைப்பாளி)

    “பரிதி உச்சத்தின் (Solar Maximum) போது எப்போதும் (பரிதித் துருவத் திருப்பம்) நிகழ்கிறது !  பரிதி வடுக்களின் எண்ணிக்கை (Sunspots) உச்சமாகும் போது அதன் துருவ முனைகள் மாறுகின்றன.  இப்போது அந்த உச்ச நிலையைப் பரிதி அடைவது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.”

    டேவிட் ஹாத்தவே (David Hathaway, Solar Physicist, Marshal Space Flight Center)

    பரிதிக் கோளத்தில் (Heliosphere) நிகழும் துருவத் திருப்பத்தின் தாக்கம் மிகவும் சிக்கலானது !  பரிதி வடுக்கள் தீவிரக் காந்த முடிப்புகள் சேமிக்கப் பட்டுள்ள பெரும் களஞ்சியம். இரட்டைத் துருவக் காந்தப் பட்டை (Dipole Magnetic Field) மறைந்து போனாலும் முடிச்சு அவிழ்ந்து காந்த தளம் சுருள் சுருளாக வெளிப்புறம் பாய்கிறது.  துருவத் திருப்பம் நேரும் போது பரிதிக் கோளம் காணாமல் போவதில்லை !  வெற்றிடத்தை நிரப்பிட ஏராளமான, சிக்கலான அளவுக் காந்த அமைப்பாடுகள் இருக்கின்றன.  இதுவரை விஞ்ஞானிகள் மேலிருந்து கீழ் நேரான நோக்கில் துருவத் திருப்பத்தைக் காணவில்லை.  இப்போது “யுலிஸிஸ் விண்ணுளவி” விஞ்ஞானிகளுக்கு பரிதியின் மெய்யானச் சோதிப்பு உளவைக் காட்டப் போகிறது.

    டேவிட் ஹாத்தவே. (டிசம்பர் 9, 2005)

    “பரிதியின் காந்த மண்டலம் சூரிய குடும்பம் முழுவதையும் பரிதிக் கோளம் எனப்படும் ஒரு குமிழிக்குள் (Heliosphere Bubble) மூடிக் கொள்கிறது.  அப்பரிதிக் கோளம் 50 AU முதல் 100 AU வானியல் அளவீட்டில் நீட்சி அடைந்து புளுடோ சுற்று வீதிக்கு அப்பாலும் செல்லும்.  [1 Astronomical Unit (AU) = Unit Distance Between Sun & Earth]. சூரியனின் காந்தத் தள மாறுபாடுகள் பரிதிக் கோளத்தின் வழியாக பரிதிப் புயலால் எடுத்துச் செல்லப் படுகின்றன.”

    ஸ்டீவ் சூயஸ் (Steve Suess, Solar Physicist, Marshal Space Flight Center)

    Fig 1A Earth's Internal Structure


    Fig 1A Earth's Internal Structure
    அடித்தட்டு நகர்ச்சியின் போது பூமிக்குள்ளே என்ன நிகழ்கிறது ?

    பூமிக்குள் அடித்தட்டு நகர்ச்சியைத் (Plate Tectonics) துடிக்க வைத்துப் பூகம்பத்தை எந்த விதப் புறத் தூண்டல் உண்டாக்குகிறது என்பதைப் பூதள விஞ்ஞானிகள் இதுவரைக் குறிப்பிட்டுக் காட்ட வில்லை !  ஆனால் அவர்கள் கருதுவது : பூமியின் உட்கருவில் எழும் வெப்பம் மெதுவாக உள்தட்டு (Mantle) ஓட்டத்தைத் தடிப்பான மேல்தட்டு (Lithosphere) அடுக்கில் எழுப்பி விடுகிறது.  கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளாய்க் கடையும் இந்த கொந்தளிப்பு இயக்கமே கடற்தட்டுகளையும், அடித்தட்டுகளையும் நகர்த்தி வருகிறது.  பூதள விஞ்ஞானிகள் இவ்வித அடித்தட்டு நகர்ச்சி நிகழ்ந்து கடந்த 2.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேல் தளத்தை உருவாக்கி வந்திருக்கிறது என்று மதிப்பிடு கிறார்கள்.  இப்போதும் அந்த நகர்ச்சி தொடர்ந்து இயங்கி வருகிறது.

    இந்திய மண்திணிவு எதிர்த்துத் தள்ளுவதால் இமயத்தின் சிகரங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன !  ஹவாயித் தீவுகள் ஜப்பானை நோக்கி அங்குல அங்குலமாய் நகர்கின்றன ! ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன !  அதாவது அட்லாண்டிக் கடல் அகலமாகிப் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது !  இன்னும் மில்லியன் ஆண்டுகள் தாண்டி ஒருவர் நோக்கினால் உலகக் கண்டங்களின் புதிய அமைப்பில் வேறு முகத்தோடு செதுக்கப் பட்டிருக்கும் !  பூமியானது மாபெரும் ஏழு அடித்தட்டுகளோடு பல்வேறு சிறு அடித்தட்டுகளைப் பின்னி மேல் தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது !  உள்ளே உள்ள பூமியின் வெப்ப திரவம் வலுவற்ற பகுதிகளின் வழியே கசிந்து வெளியேறி அவற்றில் எரிமலை அரங்குகள், தீவுகள் உண்டாகின்றன.

    Sun's Pole Reversal

    ஓராண்டில் சுமார் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் பூமியில் நேருகின்றன என்று பூதள விஞ்ஞான நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது !  இவற்றில் பல மிகச் சிறிய அதிர்வுகள்.  கருவிகளால் மட்டுமே அவை உணரப்பட்டுப் பதிவாகின்றன.  ஒவ்வோர் ஆண்டிலும் சராசரிச் சுமார் 10,000 பூகம்ப மரணங்கள் நேருகின்றன.  அதாவது ஓராண்டில் இரண்டு பூகம்பங்கள் நேர்ந்தால் சராசரி மரணங்கள் 5000 (2X5000 =10,000) ஏற்படலாம்.  1900 ஆண்டு முதல் 2009 வரை 6.1 முதல் 9.5 ரிக்டர் அளவீட்டில் சுமார் 50 அசுரப் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன !  அவற்றில் 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் 9 ரிக்டர் அளவீட்டில் நேர்ந்த இந்தோனேஷியா கடற்தட்டுப் பூகம்பத்தில் எழுந்த சுனாமி அலையடிப்பில் தென்னாசியக் கடற்கரை நாடுகளில் 250,000 மக்கள் உயிரிழந்தனர் !  உடைந்த இல்லங்கள், இழப்புகள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ளவை !  வரலாற்றில் மாபெரும் மனித இனச் சேதம் !

    Fig 1C Solar Magnetic Field

    பூகம்ப நகர்ச்சியும் பூமியின் பூதள மின் ஜனனியும்

    பூகம்பம் என்பது பூமிக்கடியில் எழுந்து மேல் தளத்தில் அல்லது கடற் தளத்தில் நேரும் ஒரு திடீர் நில அதிர்ச்சி !  அந்த நிலநடுக்கத்தைப் பூமிக்கடியில் மெதுவாகப் பாறைகளில் சேமிக்கப்பட்ட சக்தியின் வெளிப்பாடே உண்டாக்குகிறது !  இந்தச் சக்திக்கு மூல காரணி யாது ?  எப்படிச் சக்தி பாறைகளில் சேமிப்பாகிறது ?  ஏன் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகிறது ?  பூமியின் உள்ளமைப்புப் படத்தைப் பார்த்தால் “லித்தோ கோளம்” (Lithosphere) முறியும் பாறைகளைக் கொண்டதாகத் தெரியும்.  அக்கோளம் சுமார் 100 கிலோமீடர் (60 மைல்) தடிப்புள்ளது.  மேலும் “ஆஸ்தெனோ கோளத்தின்” (Asthenosphere) சூடான பிளாஸ்டிக் பாறையில் அது மிதக்கிறது.  லித்தோ கோளம் அனைத்தும் “நகர்ச்சி அடித்தட்டுகள்” (Tectonic Plates) எனப்படும் ஏழு பெரும் துண்டங்களாகவும் பல்வேறு சிறு துண்டங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன !  அந்த நகர்ச்சி அடித்தட்டுகள் ஆண்டுக்குச் சதா 1 முதல் 1.8 செ,மீடர் நகர்ந்து செல்வதால், ஒன்றை ஒன்று முட்டி, மோதி, நழுவிக் குதிரை ஏறி எல்லைப் பகுதியில் (Plate Boundaries) தள முறிவுகளை ஏற்படுத்துகின்றன.  அவ்விதம் அடுத்தடுத்து ஜப்பான், இந்தோனேஷியா, ஸான்பிரான்சிஸ்கோ, தென்னமெரிக்காவின் பெரு (Peru) நாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    Fig 1D Earthquake Wave Travel

    பூதள விஞ்ஞானிகள் பூமி உட்கருவின் காந்தத் தளத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம் என்பதை நீண்ட காலமாக அறிந்திருந்தார்கள்.  நமது பூமி மற்ற சூரியக் கோள்களைப் போல் தனது உட்புறப் “பூதள மின் ஜனனியைக்” (Internal Geodynamo) கொண்டு சுயக் காந்த தளத்தை உண்டாக்கிக் கொள்கிறது.  பூமியின் மின் ஜனனி சாதாரண மின்சார ஜனனி போல் சுழலும் உட்கருவின் இயக்கத்தால் மின்னோட்டத்தை நிகழ்த்துகிறது.  நிலவைப் போல் ஏழு மடங்கு கொள்ளளவுள்ள ஓர் இரும்புத் திரவக் கடல் பூமிக்குள் சுற்றிப் பூதள மின் ஜனனியாக இயங்கி வருகிறது.

    பரிதி வடுக்களின் விளைவுச் சமன்பாடு

    பூமியின் மாறுதலைப் பற்றி ஒளிக்காட்சி (Earth Change TV) முறையில் அறிவித்து வரும் மிட்சல் பாட்டிரோஸ் (Mitchel Battros) என்பவர் சூரிய வடுக்களின் தீவிரக் காந்த சக்தி பூமியைத் தாக்கி விளைவிக்கும் தீங்குகளுக்கு ஒரு சமன்பாட்டை (Sunspot Effect Equation) எழுதி யிருக்கிறார்.  அவர் சூரிய மழை (Solar Rain) என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அவர் தயாரித்த சமன்பாடு கீழே கொடுக்கப் பட்டுள்ளது :

    Mitch Buttros Equation :

    Sunspots ==>> Solar Flares ==>> (Solar) Magnetic Field Shift ==>> (Earthern) Shifting Ocean & Jet Stream Currents ==>> Extreme Weather & Human Disruption

    Fig 3 The Equation for Sunspots & Extreme Weather

    மிட்செல் பட்டிரோஸ் சமன்பாடு :

    பரிதி வடுக்கள் ==>> பரிதி கனல்வீச்சுகள் ==>> பரிதிக் காந்த முனைத் திருப்பம் ==>> பூமியின் கடல் தட்ப வெப்ப ஆறோட்ட நகர்ச்சி ==>> அசுரக் காலநிலை மற்றும் மனித இனத் துன்பங்கள்.

    மிட்செல் பாட்டிரோஸ் இரண்டு முறை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவாதி டாக்டர் பீட்டர் ஆல்ஸன் (Dr. Peter Olson) & டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிகவாதி டாக்டர் நிகோலா ஸ்கா·பெட்டா (Dr. Nicola Scafetta) ஆகியோருடன் உரையாடித் தனது சமன்பாட்டைத் தெளிவாக விருத்தி செய்தார்.

    Fig 5 Ulysses Solar Probe

    சூரியனே பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குக் காரணம்

    பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனின் வாயுக் கோளக் கொந்தளிப்பே காரணம் என்பது பூதள விஞ்ஞானிகள் பலரது முடிவாகத் தெரிகிறது.  பூகோளச் சூடேற்றத்தின் நீட்சிக்குப் (Global Warming Trend) பரிதியின் கொந்தளிப்புப் புயலே பெரும் பங்கேற்கிறது.  அதற்கு மனித விளைவுகளின் பங்கு சிறிதளவே !  சூரியனே நமது பூமியில் நேரும் பாதிப்புகளுக்கு பூகோளத்தின் உட்கருவில் ஒரு சங்கிலி இயக்கத்தைத் தூண்டும் ஒரு யந்திரமாக உள்ளது !  நமது விஞ்ஞான நுண்கருவிகள் அனைத்தும் (விண்ணுளவிகள், தொலைநோக்கிகள்) விண்ணை நோக்கிப் பரிதியின் இயக்கத்தையும், அதனால் ஏற்படும் பூமியின் காந்த தளம், பூமியின் சூழ்வெளியில் அயனிக் கோளம், ஸ்டிராடோ கோளம் ஆகியவற்றின் பாதிப்புகளையும் ஆராய்ந்து அளந்து வருகின்றன.

    பூமியில் இடி மின்னல் தாக்குவது போல் பூமியின் சக்தி முறுக்கேறிய உட்கருவும் (Highly Charged Core) நடந்து கொள்கிறது.  பூமியின் உட்கரு, கீழ்த்தட்டு, மேல்தட்டு (Core, Mantle & Crust) ஆகியவற்றை ஆய்ந்து உளவு செய்த டாக்டர் பீட்டர் ஆல்ஸன் கருத்துக்கேற்ப பரிதியின் “கனற் திணிவு வெளியேற்றம்” [Corona Mass Ejection (CME)] மற்றும் பல்வேறு விண்வெளி அனுப்பும் மின்கொடைத் துகள்கள் (Charged Particles) மின்னல் அடிப்பு போல் தாக்கும் பொருட்களில் எதிரடியும் உண்டாக்குகின்றன !

     Fig 1G The Climate Connection

    பூகாந்த முனைத் திருப்பமும் கண்டங்கள் நகர்ச்சியும்

    1900 ஆண்டுகளில் ஜெர்மன் பூதள விஞ்ஞானி ஆல்·பிரட் வெகினர் (Alfred Wegener) உலகக் கண்டங்களின் வரைப்படங்களைக் கண்டு ஒரு யுகத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒருங்கே ஒட்டி இருந்தன என்றும் பிறகு மெதுவாக அவைத் தனித்தனியாக புலம்பெயர்ந்து தற்போதுள்ள இடங்களில் அமைந்துள்ளன என்னும் தனது “உலகக் கண்டங்களின் பிரிப்பு” நியதியை (Continental Drift Theory) அறிவித்தார்.  அதற்குச் சான்றாக பொருந்திடும் விளிம்புகளில் 1918 இல் அவர் பல்வேறு கண்டத்துப் பாறைகள் ஒத்திருந்ததைக் கண்டார்.  கடலில் மிதந்து நகரும் பெரும் பனிப்பாறைகள் போல், கண்டங்களும் பூமியின் உலோக திரவத்தில் மிதந்து நகர்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார்.  அவ்விதம் பல மில்லியன் ஆண்டுகள் மெதுவாக நகர்வதற்குச் சக்தி அளித்தது பூமியின் உட்கரு வெப்பமே என்றும் கூறினார்.  ஆல்·பிரட் வெகினர் கூறிய கண்ட நகர்ச்சி நியதிக்குக் கடும் எதிர்ப்பு பூதள விஞ்ஞானிகளிடம் முதலில் இருந்து, பின்னால் ஒப்புக் கொள்ளப் பட்டது.

    மீளும் பூகாந்த முனைத் திருப்பங்கள்

    எரிமலைக் கண்ணில் பொங்கிக் கசியும் குழம்பு (Lava) பூமியின் மேல்தளத்தில் குளிர்ந்து பாறையாக இறுக்கம் அடைகிறது.  பெரும்பான்மையாக அது கறுப்பாக இருக்கும் பஸால்ட் பாறைக் காந்தமாகும் (Magnetic Basalt Rock).  அப்பாறைக் காந்தம் குளிரும் போது பூகாந்தத் தளத்தின் துருவத் திசையிலே உண்டானது.  காந்த மானிகள் பஸால்ட் காந்த துருவத்தைக் கண்டுவிடும்.  அவ்விதம் பலதடவைகளில் எரிமலை கக்கும் போது உண்டாகும் பாறைப் படிமானங்கள் வெவ்வேறு (நேர்-எதிர்) திசைக் காந்த முனைகளைக் கொண்டிருந்ததால் பூமியானது தனது காந்த முனைத் திருப்பங்களை எத்தனை முறை செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

    [தொடரும்]
    +++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 ( http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
    18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)
    19 India Daily Technology Team (Aug 8, 2005)
    20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)
    21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)
    22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)
    23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)
    24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)
    25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)
    26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)
    27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences
    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html (Earth’s Pole Reversal)
    29 National Geographic Picture Atlas of Our Universe By : Roy Gallant (1986)
    29 (a) National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)
    30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website : http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: <http://www.sec.noaa.gov> (April 25, 2007)
    31 Philip’s World Atlas – Solar System Profile & Anatomy of the Earth (2005)
    32 Oxford Essential World Atlas – Restless Earth (2006)
    33 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    34 National Geographic Picture Atlas of Our Word (1990)
    35 Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)

    36.  http://en.wikipedia.org/wiki/Stellar_magnetic_field  [March 7, 2014]

    37.  http://www.sciencedaily.com/releases/2014/11/141119204849.htm  [November 19, 2014]

    38.  http://www.iop.org/news/14/nov/page_64495.html  [November 19, 2014]

    39. http://www.spacedaily.com/reports/Suns_rotating_magnetic_field_may_pull_lightning_toward_Earth_999.html  [November 24, 2014]

    40. http://en.wikipedia.org/wiki/Stellar_magnetic_field    [November 24, 2014]

    ******************

    jayabarathans@gmail.com (November 30, 2014)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”பார்அதன் வேருக்கு புல்லாங் குழல்நீரும்,
    நூறு’களை’ போக்க நிவாரண, -போருக்கு
    கண்ணன்கை காலில், கவசம் அணீந்தாலும்,
    எண்ணமது கோதூளி யே’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    நரஸிம்ஹ மந்த்ரராஜம்
    —————————–
    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
    ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

    crazy

    ”வீரியன், வீரன், வியாபகன், சைதன்ய,
    சூரியன், சூக்கும காரியன், -கூரிய
    சிங்கன், எதிரிக்கு சொப்பனம், காலகாலன்,
    மங்களம் சேர்த்திடும் மால்’’….கிரேசி மோகன்….

    Share
  • ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : நீர் ஊர்தி விருத்தி செய்தல் -2

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் :  
    நீர் ஊர்தி விருத்தி செய்தல் -2

    jay3

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    (1847-1922)

    “இந்த சக்தியை என்ன வென்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அது எங்கும் நிலவுகிறது என்பதை நான் அறிவேன். தனக்கு என்ன வேண்டும் என்பதை ஆழ்ந்து தெளிவாக அறிந்து, அதைக் கண்டுபிடிக்கும் வரை ஈடுபட்டு, இடையே தளர விடாமல் விடா முயற்சியில் தேடும் ஒரு மனிதனுக்கு மட்டுமே அச்சக்தி கிடைக்கிறது!”

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    “மகத்தான கண்டுபிடிப்புகள், மேன்மைப்பாடுகள் யாவும் பலரது பங்கெடுப்பு, கூட்டுப் பணிகளால்தான் ஏறக்குறைய பூர்த்தியாகி வருகின்றன. இருட்டடித்த ஒரு பாதைக்கு நான் ஒளிகாட்டியவனாக பெருமைப் படுத்தப் படலாம். ஆனால் மேற்கொண்டு அவை செம்மை ஆவதை நோக்கும் போது, மெய்யாகப் பெருமை பிறர்க்கு உரியது, எனக்கில்லை என்பதை நான் உணர்கிறேன்.”

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    படைப்பு வேலைக்கு, ஆக்க உணர்வு ஒரு சதவீதம்!

    வேர்க்கும் விடா முயற்சி, தொன்னூற்றி ஒன்பது சதவீதம்!’

    தாமஸ் ஆல்வா எடிஸன் (1847-1931)

    ‘நீராவி எஞ்சினையும், மின்சாரத் தந்தியையும் நன்றாகப் புரிந்த நிபுணர், அவற்றை விட மேம்பட்ட சாதனங்களை அடுத்துப் படைக்க வேண்டும் என்று முற்படுவதில் தமது வாழ்வைக் கழிப்பார்’.

    ஜார்ஜ் பெர்னாட்ஷா  [‘மனிதனும், உயர்மனிதனும்’ நாடகம் (1903)]

     

    முன்னுரை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதச் சாதனங்களைப் படைத்த அமெரிக்க ஆக்கமேதை தாமல் ஆல்வா எடிஸனை அறிந்து கொண்ட அளவுக்கு, உலக மாந்தர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை அறிய மாட்டார்கள்! விந்தை நிகழ்ச்சியாக அவ்விரு மேதைகளும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள்! இருவரும் வட அமெரிக்காவில் தமது வல்லமைகளைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள்! எடிஸன் பிறந்த நாள்: பிப்ரவரி 11, 1847. பெல் பிறந்த நாள்: மார்ச் 3, 1847. எடிஸன் பெல்லை விட இருபது நாட்கள் முன்பு பிறந்தவர். எடிஸன் கண்டுபிடித்துக் காப்புரிமைப் பதிவு செய்தவை, 1000 சாதனங்களுக்கு மேற்பட்டவை! பெல் கண்டுபிடித்துக் காப்புரிமை பதிந்தவை, 30 சாதனங்களே ஆயினும் இருவரும் ஒரு சதவீத ஆக்க உணர்வு கொண்டு, மீதி தொன்னூற்றி ஒன்பது சதவீதம் விடா முயற்சியில் வேர்வை சிந்தி உழைத்தவர்கள். அவர்கள் கண்டுபிடித்த சாதனங்கள் யாவும் நுணுக்க மானவை. மகத்தானவை. உலக மாந்தரால் மதிக்கப்படுபவை. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மின்சக்திப் பயன்பாட்டுச் சாதனங்களைப் படைத்து, மின்சார யந்திர யுகத்துக்கு அடித்தள மிட்டவர்கள்! இருவரும் சமகால நிபுணரானாலும், ஒருவருக் கொருவர் பகைமை பாராட்டாது ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், நட்பும் கொண்டிருந்தனர் என்பது பாராட்டுதற்குரியது.

    இருவரிலும் எடிஸன் கண்டுபிடித்தவை எண்ணிக்கையில் மிகை யானது. முக்கியமாக மின்சாரக் குமிழி, மின்சார ஜனனி, மின்சார் மோட்டர், மின்சார இருப்புப் பாதைத் தொடர்வண்டி, தொலைபேசி வாய்க்கருவி, ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி காமிரா ஆகியவை. பெல் கண்டுபிடித்தவை: பதினெட்டுக் காப்புரிமைப் பதிவுகள் அவரது தனிப் பெயரில். பிறகு அடுத்த பனிரெண்டு பதிவுகளில் அவர் ஒரு கூட்டாளி. அவற்றில் 14 பதிவுகள் தொலைபேசி, தந்தி ஏற்பாடுகளைச் சேர்ந்தவை. நான்கு ஒளிநார்ப்பேசி [Photophone], ஒன்று கிராமஃபோன் [Phonograph], ஐந்து வான ஊர்திகள் [Aerial Vehicles], நான்கு நீர்வாயு விமானங்கள் [Hydroair Planes], இரண்டு ஸெலினியம் மின் கலங்கள் [Selenium Cells]. 1888 இல் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் [National Geographic Magazine] ஆரம்பக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார்.


    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் வாலிப வாழ்க்கை

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஓர் உன்னதப் படைப்பாளி, விஞ்ஞானி, பொறிநுணுக்க நிபுணர், பெல் தொலைபேசி நிறுவகத்தை உருவாக்கியவர். தொலைத்தகவல் தொடர்புத் துறைக்குப் பணியாற்றியவர். மேலும் விமானப் போக்குவரத்துத் துறை, நீர் ஊர்தி வாகனங்கள் [Aviation & Hydrofoil Technology] விருத்திகளுக்கும் உழைத்தவர். பார்க்கப் போனால், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் எடிஸனின் திறமைகள் பலவற்றையும், ரைட் சகோதரர்களின் பறப்பியல் நிபுணத்தையும் ஒருங்கே பெற்றவராகக் காணப்பட்டார். 2004 ஆம் ஆண்டுத் தேர்ந்தெடுப்பில் கனடாவின் பத்து மகத்தான மனிதர்களில் ஒருவராகப் பாராட்டப் பட்டார். பெல் ஸ்காட்டிஷ் மண்ணில் பிறந்தவர் ஆயினும், அமெரிக்கக் குடிமகனாகிக் கனடாவில் குடியேறித் தனது நீர் விமானங்களையும், ஆகாய விமானங்களையும் சோதனை செய்தவர். கனடாவில் அவர் வாழ்ந்த நோவாஸ் கோஷியாவின் கேப் பிரிடன் தீவில் இருக்கும் பெடாக்கில் [Baddeck, Nova Scotia, Canada] அவரது நினைவுக் காட்சி சாலை நிறுவகம் செய்யப் பட்டுள்ளது.

    1847 ஆம் ஆண்டு மார்ச் 3 இல் பெல் ஸ்காட்லந்தில் இருக்கும் எடின்பர்க் நகரில் பிறந்தார். தந்தையார் பெயர், அலெக்ஸாண்டர் மெல்வில் பெல். அவரது பாட்டனார் லண்டனிலும், தந்தையுடன் பிறந்தவர் டப்ளினிலும், தந்தையார் எடின்பர்கிலும் நாவன்மை, பேச்சுக்கலை வல்லுநராகப் [Professed Elocutionists] பணியாற்றி வந்தனர். தந்தையார் பேச்சுக்கலை நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இளைஞர் பெல் எடின்பர்க் ராயல் உயர்நிலைப் பள்ளியில் படித்து, ஓராண்டு எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்று, ஓராண்டு இங்கிலாந்தின் பாத்தில் உள்ள ஸோமர்செட்ஷயர் கல்லூரியில் உரையாளராகப் பணி செய்தார். ஸ்காட்லந்தில் இருக்கும் போதே தன் தாயின் செவிடு நிலையைச் சீர்ப்படுத்த, இளைஞர் பெல் ஒலித்துறை விஞ்ஞானத்தில் [Science of Acoustics] தன் கருத்தைச் செலுத்தினார்.

    அப்போதே வாலிபர் பெல் தொலைபேசி அமைப்பிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.1870 இல் பெல்லுக்கு 23 வயதாகும் போது, பெல் குடும்பத்தினர் கனடாவுக்கு புலப்பெயர்ச்சியாகி, அண்டாரியோ மாநிலத்தின் பிரான்ட்ஃபோர்டு நகரில் [Brantford, Ontario, Canada] குடியேறினர். கனடாவில் வாழ்ந்த போது தொலைத் தகவல் யந்திரங்களில் கவனத்தைச் செலுத்தித் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். மின்சார முறையில் இசை ஒலியை நெடுந்தூரம் அனுப்பும், ஒரு புதிய பியானோவைப் படைத்தார். 1873 இல் தந்தையுடன் மாண்டிரியால் சென்ற போது, ஊமைகளுக்குப் பயன்படும் ‘வடிவப் பேச்சு முறையைச் ‘ [Visible Speech System] சொல்லிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது! அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஊமைப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் வாலிபர் பெல்லுக்குக் காத்திருந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஊமை மாந்தர் பலர் பேசக் கற்றுக் கொள்ளும், வடிவப் பேச்சு ஏற்பாடுகளைப் பெல் செய்திருக்கிறார் என்பது பாராட்டுதற்கு உரியது.

    பாஸ்டனில் அவரது தொலைபேசி ஆய்வுகளைத் தொடர்ந்து, 1876 மார்ச் 7 ஆம் தேதி தனது முன்னோடித் தொலைபேசியைப் படைத்தார். அது இசைத் தொனியைக் கம்பிகளில் அனுப்பியதுபோல், குரல் பேச்சையும் தொலைவில் அனுப்பிக் கேட்க உதவியது. அதற்கு நிதி உதவி செய்தவர், அவரது வருங்கால அமெரிக்க மாமனார். அமெரிக்கா பெல்லின் முதல் தொலைபேசிக்கு அளித்த காப்புரிமை எண்: 174,465. பெல்லின் அடுத்த படைப்பு: ஒளிநார்ப்பேசி [Photophone]. ஒளிக் கற்றை மூலம் வாய்ப் பேச்சை அனுப்பும் முறை அது. அந்த முறையே இப்போது ஒளிநார்த் தகவலில் [Fibre Optics] கையாளப் படுகிறது. அந்த முறையை விருத்தி செய்ய அவருடன் கூட்டாகப் பணி ஆற்றியவர், சார்லஸ் சம்னர் டெயின்டர் [Charles Sumner Tainter]. அதற்குப் பயன்படும் படிகம், ஒளி நுகர்ச்சி பெற்ற செலினியப் படிகச் செல் [Light-Sensitive Cells of Crystalline Selenium]. அப்படிகத்தின் சிறப்பான பண்பு: ஒளிச்சக்தியின் சார்புக்கு ஒப்பாக, அதன் மின்தடைத் தலைகீழாக மாறுகிறது [Electrical Resistance varies inversely with the Illumination Intensity]. அதாவது ஒரு பண்டம் இருட்டில் இருந்தால், படிக மின்தடை மிகையாகிறது. அது வெளிச்சத்தில் இருக்கும் போது, படிக மின்தடை குறைவாகிறது. அடிப்படை நியதி என்ன வென்றால், தொலைபேசி முன்பாக அதிரும் ஓர் ஆடியை வைத்தோ அல்லது சுற்றும் சுழலியை வைத்தோ குரல் தொனியை மாறுபடுத்தும் போது, செலினியப் படிகம் உள்ள ஓர் ஒளிவாங்கியில் அது விழும்படிச் செய்ய வேண்டும். அப்போது குரல் தொனி ஒளிக்கற்றை மூலம் அனுப்பப்படுகிறது. பெல்லின் ஒளிநார்ப்பேசி 1881 இல் காப்புரிமை அளிக்கப்பட்டது.

    நீரில் எழும்பி விரையும் நீர் ஊர்திகள்

    பலருக்கு ஏர்ஃபாயில்ஸ் அல்லது வாயு வழுக்கி [Airfoils] என்றால் என்ன வென்று தெரிந்திருக்கலாம். ஆகாய விமானம் வானோக்கி எழுந்திடவும், இறங்கிடவும் உதவும் ‘வாயு வழுக்கி ‘ இறக்கைகள் ஒருவித ஏர்ஃபாயில்கள் தான். ‘வாயு வழுக்கிகள் ‘ ‘வாயு இயக்கிப் ‘ பண்புகளைக் [Aerodynamic Properties] கொண்டவை. ஆகாய விமானத்தில் இருபுறமும் உள்ள இறக்கைகள் வாயு வழுக்கி வடிவில் அமைக்கப் பட்டவை. வேகமாய்த் தரையில் ஏகிடும் போது மூக்கைத் தூக்கி விமானத்தை மேலே எழச் செய்பவை, இறக்கைகளில் அமைக்கப் பட்டுள்ள வாயு வழுக்கிகள். வாயு வழுக்கிகள் விமானத்தை உயரத்தில் ஏற்றவும், உயரத்திலிருந்து இறக்கவும் பயன்படுகின்றன. அதே போன்று ‘நீர் வழுக்கிகள் ‘ [Hydrofoils] நீரில் படகு செல்லும் போது படகின் உடம்பை [Hull] மேலே தூக்கவும், கீழே இறக்கவும் செய்பவை. நீர் வழுக்கிக் கால்களைப் பெற்றுள்ள படகு [Hydrofoil Boat] இரு முறைகளில் இயங்குகின்றன. 1. சாதாரணப் படகுபோல் இயற்கையான தன்மையில் நீரில் படகு உடம்பு ஓரளவு இறங்கி மிதந்து செல்வது. 2. நீர் வழுக்கிகள் மட்டும் மூழ்கிப் படகு உடம்பு முழுவதும் நீருக்கு மேல் எழுந்து விரைவது.

    சாதாரணம் படகின் பெருத்த உடம்பு நீரில் ஓரளவு மூழ்கி யிருப்பதால், நீர் நகர்ச்சிக்காக ஆற்றல் விரைய மாகிறது. ஆதலால் அது மெதுவாகச் செல்கிறது. ஆனால் நீர் வழுக்கிகள் தூக்கியுள்ள படகு நீருக்கு மேலாக இருப்பதால், உராய்வு குன்றிப் படகு வேகமாகச் செல்கிறது. அதாவது குறைந்த குதிரைச் சக்தி யுள்ள மின்சார மோட்டார் [Lower Horse Power (H.P.) Motor] நீர் வழுக்கிப் படகை [Hydrofoil Boat] வெகு வேகமாகத் தள்ளுகிறது. நீர் வழுக்கிப் படகு, நீர் வாகனம் அல்லது நீர் ஊர்தி [Watercraft or Waterplane] என்றும் அழைக்கப் படுகிறது.படகின் கால்கள் போல் உள்ள நீர் வழுக்கிகள், விமானத்தின் இறக்கைகளில் உள்ள வாயு வழுக்கிகளை விட மிகவும் சிறியவை. காரணம் நீரானது வாயுவைப் போல் 1000 மடங்கு திணிவு [Density] உள்ளது! நீர் திண்மை யானதால், விமானம் போன்று அதி விரைவில் ஓடாமல், சிறிதளவு வேகத்திலே படகை நீரின் மேலே தூக்கி விடலாம்! நீரில் படகும் செல்லும் போது, நீர் வழுக்கிகள் நீரில் மூழ்கிய நிலையில் மட்டுமே படகை மேலே தூக்கி வேகமாய்த் தள்ள முடியும். நீரை விட்டு நீர் வழுக்கிகள் பிரியும் போது, தொப்பென படகின் உடம்பு நீரில் விழுந்து சேதமாகி விடலாம்! படகு உடையா திருப்பின், நீர் வழுக்கிகள் நீரில் மூழ்கி, சீரான வேகம் அடையும் போது, மீண்டும் படகின் உடம்பு நீரை விட்டு மேலே தூக்கப்படும்!

    விமானத்துக்கு முப்புறக் கட்டுப்பாடு [Thrust, Lift, Rudder (Pitch, Roll, Yaw)] உள்ளது போல், நீர் வழுக்கியும் முப்பக்கங்களில் ஆட்சி செய்யப்பட வசதிகள் தேவைப் படுகின்றன. மேலும் விமானத்தைப் போலின்றி, நீர் வழுக்கிப் படகு நீரில் ஓரளவு குறிப்பிட்ட ஆழத்தைத் தொடர்ந்து நிலைப் படுத்த வேண்டும்! தற்கால ஜெட் விமானங்களுக்கு சுமார் 40,000 அடி எல்லை வரை உயர வீச்சு [Altitude Range] உள்ளது போல், நீர் வழுக்கிப் படகைத் தாங்கும் தூண் அல்லது கால் [Strut] உயர அளவே வரையறையாக இருக்கிறது.நவீன வர்த்தகத் துறை நீர் வழுக்கிப் படகுகள் ஏணி வழுக்கிகளைக் [Ladder Foils] கொண்டவை. படகின் பின்னுள்ள ஏணி அமைப்பில் வழுக்கிகள் மற்றும் திசைதிருப்பிகள் [Rudders] இணைக்கப் பட்டுள்ளன.

    படகுக்கு உந்து விசை [Thrust] கொடுக்க இரண்டு சுழலிகள் [Twin Rotors or Propellers] பிணைக்கப் பட்டிருக்கின்றன. மேல் எழுச்சியைத் தருபவை, நீர் வழுக்கிகள். படகு நீரில் முன்னோக்கி விரையும் போது, நீர் வழுக்கிகள் நீரோட்டத்தில் எழுச்சியை உண்டாக்கிப் படகைத் தூக்குகின்றன. நீர் ஊர்திகள் [Watercrafts (Hydrofoil Boats)] வேறு, வாயு மெத்தை ஊர்திகள் [Hovercrafts] வேறு. இரண்டு ஊர்திகளிலும் படகு உடம்பு [Hull] நீருக்கு மேலே தூக்கப்படினும், அவை எழும்பும் பொறி நுணுக்க முறைகள் முற்றிலும் மாறுபட்டவை! நீர் ஊர்தியில் நீர் வழுக்கிகள் படகுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் போது, வாயு மெத்தை ஊர்தியில், வாயு அடுக்கு [Layer of Air] எழுச்சியைக் கொடுக்கும்.


    பெல் குழுவினரும் மற்றோரும் அமைத்த நீர் ஊர்திகள்

    1861 ஆம் ஆண்டிலேயே நீர் வழுக்கித் தட்டுகள் இங்கிலீஷ் கால்வாயில் வெற்றிகரமாகச் சோதிக்கப் பட்டன என்று அறியப்படுகின்றது. 1906 மார்ச்சில் பெல், சையன்டிபிக் அமெரிக்கன் இதழில் நீர் வழுக்கி முன்னோடி நிபுணர் வில்லியம் மீச்சம் [William Meacham] எழுதிய கட்டுரையைப் படித்ததாகத் தெரிகிறது. பெல்லும் அவரது கூட்டாளி கேசி பால்டுவினும் [Casey Baldwin] 1908 ஆம் ஆண்du வேனிற் காலத்தில் நீர் வழுக்கிச் சோதனைகளில் முற்பட்டதாக அறியப்படுகிறது. அவரது குறிக்கோள் விமானம் நீரில் ஓடி நீரிலிருந்தே மேலேற முடியுமா என்பதற்கு ஆய்வுகள் நடத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் மேலும் இத்தாலியப் படைப்பாளி என்ரிகோ ஃபார்லனினியின் பணிகளைப் பற்றியும் படித்தார்கள்.1906 இத்தாலிய நிபுணர் என்ரிகோ ஃபார்லனினி [Enrico Forlanini] முதன்முதலில் ஏணிப்படி வழுக்கிகள் [Ladder System Foils] கொண்ட 60 H.P. ஆற்றலுள்ள எஞ்சின் ஓட்டும் இரண்டு உந்துசக்தி சுழலிகளைப் பூட்டிய ஒரு நீர் ஊர்தியை படைத்தார். சோதனையின் போது அவ்வாகனம் மணிக்கு 42.5 மைல் வேகத்தில் சென்றது. 1909 இல் பெல் குழுவினர் தமது புதுவித நீர் வழுக்கிப் படகைத் தயாரித்து ஆராய்ந்தனர். 1910-1911 ஆண்டில் ஐரோப்பிய சுற்றுப் பிரயாணம் செய்த பெல் குடும்பத்தினரும், பால்டுவினும் இத்தாலிக்குச் சென்று, என்ரிகோ ஃபார்லனினி தயாரித்த நீர் ஊர்தியில் பயணம் செய்தனர். துரித இரயில் பயணம் போல் சுகமாக இருந்தது என்று பெல்லின் மனைவி மேபெல் [Mabel] தனது புதல்வி எல்ஸியுக்கு [Elsie] எழுதி யிருக்கிறார். வாகனத்தின் வேகம்: 45 mph. நீரில் ஊர்தி போகும் போது, அன்னம் நீந்தியது போல் நீர் கலங்காமல் இருந்திருக்கிறது.

    1911 கோடையில் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தனது HD1 நீர் ஊர்தியை அமைத்துச் சோதனை செய்தார். அவர் வாகனத்தில் பயன்படுத்தியது வாயுச் சுழலிகள் [Air Propellers]. கிடைத்த வேகம்: மணிக்கு 50 மைல் (50 mph). அட்லாண்டிக் பெருங்கடலில் எஞ்சின் இல்லாமலே, மாபெரும் நீர் வழுக்கிகள் கொண்ட பயணப் படகை ஒழுங்காக ஓட்டிவர முடியும் என்று பெல் கருதினார். அடுத்து 1912 அக்டோபரில் HD2 நீர் ஊர்தியை பெல் குழுவினர் தயாரித்தனர். அதன் கட்டமைப்புத் தளவாடங்களில் [Equipment] ஒன்று முறிந்து, வாகனம் முடமானது. 1913 இல் தயாரிக்கப் பட்ட HD3 வாகனம் விமானத்தைப் போன்று காணப் பட்டது. அது சரியாக இயங்காமல் பெல்லுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அமெரிக்கக் கடற்படை துறைக்கு [United States Navy Dept] HD3 வாகன இயக்க முறைகள் திருப்பி அளிக்க வில்லை. 1919 இல் 400 H.P. ஆற்றலுடைய லிபர்டி எஞ்சின் [Liberty Engine] பூட்டியுள்ள HD4 நீர் ஊர்தியைப் பெல் குழுவினர் அமைத்தார்கள். ரெனால்டு எஞ்சின்கள் மாட்டிய போது வேகம் 54 mph கிடைத்தது. இரண்டு 350 H.P. லிபர்டி எஞ்சின் பூட்டிய போது, கிடைத்த வேகம் 70.86 mph; அடுத்த 10 ஆண்டுகளாக யாரும் அந்த வேகத்தை மிஞ்ச வில்லை. அந்த நீர் ஊர்தி கனடாவின் கேப் பிரிடன் தீவில் உள்ள பெடாக்கில் பெல் குடும்பத்தினர் வாழ்ந்த போது [Lakes near Baddeck] சோதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது
    .
    1950 இல் தயாரிக்கப் பட்ட XCH4 கார்ல் படகு [XCH4 Carl Boat] கடல் விமானம் [Seaplane] என்று அழைக்கப் பட்டது. அது பயன்படுத்தியது 250 H.P. ஆற்றல் கொண்ட இரட்டை எஞ்சின்கள். போயிங் கம்பெனி 1960 மத்திம ஆண்டு காலங்களில் 425 H.P. ஆற்றல் உள்ள போயிங் வெப்ப வாயு டர்பைனைப் [Boeing Gas Turbine Engine] பயன்படுத்தி சுமார் 52 mph வேகத்தை எட்டியது.(பறக்கும் வான ஊர்தி கண்டுபிடிப்புப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

    [கட்டுரை தொடரும்]

    *************

    தகவல்:

    1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

    2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

    3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

    4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

    5. Encyclopaedia of Britannica (1978)

    6. The Children ‘s Encyclopedia of Science (1985)

    7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

    8. The Living World of Science in Colour (1966)

    9. Britannica Concise Encyclopedia [2003]

    10 Alexander Graham Bell & the Hydrofoils By: Robert V. Bruce (1973)

    11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

    12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]

    13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு

    (http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]

    14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]

    *******************

    jayabarathans@gmail.com [S. Jayabarathan (December 6, 2009)]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கேசவ், இன்றைய கண்ணனில், கண்ணனைவிட அவன் கொலுவிருக்கும் மாடம் எனக்கு, முதல் மூன்று ஆழ்வார்கள்,
    பொய்கையார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் சந்தித்த சத்திரத்து அறையை நினைவூட்டியது….அந்த அறையில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்….ஆழ்வார்கள் மூவரும் நின்றபோது, வானம் கருத்து மழை பெய்ததாம்….அப்போது மேக ஸ்யாமளன் அமானுஷ்யமாக அசரீரி ரூபத்தில் மூவருக்கு இடையே நின்று நெருக்கினானாம்….இந்தக் கதை நினைவுக்கு வர….!

    crazy

    “ஒருவர் படுக்க இருவர் அமர
    வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்,
    பொய்கைபேய் பூதத்தார், பின்னிப் பிணைந்திட,
    செய்த மழையோன் சரண்’’….கிரேசி மோகன்….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(132)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    எத்தியோப்பியா நாட்டிலே ஒரு சமநிலப் பிரதேசத்திலே தோன்றிய மனித சமுதாயம் இன்று உலகைப் பல கண்டங்களாகப் பிரித்து வெவ்வேறு கலாச்சாராப் பின்னணிகளுடன் தமது வாழ்க்கையை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

    மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் அவர்களின் வாழ்க்கை விரிவடைந்த விகிதாச்சாரமும் உலகின் காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடந்தேறியுள்ளது என்பதே விஞ்ஞான உலகின் தீர்ப்பு.

    இன்று உலகின் பல பாகங்களிலும் வாழும் மனிதர்கள் தமது முன்னோர்களின் ஆதிகால வாழ்க்கை முறையையும், தாம் இன்று வாழும் நிலைக்கு வந்தடைந்த பாதையின் நெளிவு சுளிவுகளையும் ஆய்ந்தறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    அதன் வழி உலகின் பல பாகங்களில் வாழும் பல சமுதாயங்கள் பலவகையிலான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வகையிலான அகழ்வாராய்ச்சிகளின் மூலமாகவும், பெரிய கட்டிடங்களின் அத்திவாரங்களுக்காக நிலங்களை வெட்டும் போது, தற்செயலான கண்டு பிடிப்புகளின் மூலம் மறைந்து போன பல சமுதாயங்களிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

    என்ன, எங்கே இழுத்துச் செல்கிறது சக்தியின் இந்தப் பீடிகை என்று எண்ணத் தோன்றுகிறது இல்லையா ?

    சில வருடங்களுக்கு முன்னால் என் மனைவி பணிபுரியும் நிறுவனத்தின் கிளை மூடப்பட்டு பலருக்கு வேலை பறிபோனது. தெய்வாதினமாக அக்கிளையில் பணிபுரிந்தவர்களில் மிஞ்சிய இருவரில் என் மனைவியும் ஒருவரானார். ஆனால் அவரின் அலுவலகம் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 120 மைல்கள் தள்ளியுள்ள “ரஹ்பி (Rugby) “ எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

    ப்ராஜெக்ட் மனேஜர் பதைவியிலிருக்கும் என் மனைவிக்கு இரண்டு நாட்கள் அலுவலகத்திலும் மீதமாயிருக்கும் மூன்று நாட்கள் இல்லத்திலிருந்து ( வாடிக்கையாளர்களை சந்திக்காத போது) பணிபுரியும் சலுகை அளிக்கப்பட்டது. ஆக என் மனைவு வாரத்தில் ஒருநாள் காலை 6 மணிக்கு கிளம்பி தனது அலுவலகம் செல்வார் அன்றைய இரவு அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி அடுத்தநாள் காலை மறுபடி அலுவலகம் சென்று மாலையில் திரும்பி எமது இல்லம் வருவார்.

    rugbyஅப்படி அவர் அங்கு செல்லும் வேளைகளில் எனக்கு அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வசதி இருந்தால் நானும் அவருடன் ரஹ்பி செல்வது உண்டு. அப்படி நேற்றைய முந்தினம் காலை அவர் தனது அலுவலகம் செல்லும் போது நானும் சென்றேன்.

    பகலில் அவர் அலுவலகம் போனதும் நான் ஹோட்டல் அறையில் தங்கி ஓய்வெடுப்பேன். இல்லையானால் அங்குள்ள சில இடங்களைச் சென்று பார்ப்பது வழக்கம். அப்படி இம்முறை நான் சென்று பார்க்க விழைந்த இடம் ரஹ்பி நகரத்தின் நூதனசாலையாகும். அவர்களின் பொதுஜன நூலகத்துடன் சேர்ந்த வகையில் நூதனசாலையும், படக் கண்காட்சி நிலையமும் அமைந்துள்ளது.

    20141125_131343[1]இந்நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மிகவும் விசித்திரமானவை. பண்டைய காலத்தில் ஒருவருடைய நிலத்தினுள் மற்றொருவர் அனுமதியின்றி நிழைவது மிகவும் அதீதமான குற்றமாகக் கணிக்கப்பட்ட காலமது. “உத்தரவின்றி உட்பிரவேசியாதீர் ” என்னும் பாதகையத் தாங்கியிருப்பன போலும். அப்படி நுழைந்த யாரும் பிடிக்கப்பட்டால் தண்டனையாக அவர்களைப் பிணைப்பதற்கான இருப்புச் சட்டம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் பலவகையான காட்சிப் பொருட்கள் அதாவது 1930ம் ஆண்டு தொடங்கி 1990கள் வரை “ரஹ்பி” எனும் அந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்திய சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நூதனசாலையில் அவர்கள் சேகரிக்கிம் பொருட்கள் அப்பகுதியில் வாழ்வோரிடமிருந்தே பெறப்படுகிறது. அப்படியே அக்கண்காட்சியைப் பார்த்துக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது கண்களில் ” ரால்ஸ் ராய்ஸ் ( Rolls Royce) “ எனும் பிரசித்தி பெற்ற கம்பெனியின் இயந்திரம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    640px-Tripontium_bathouse_remainsஅப்பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ரோமானிய காலச் சமுதாயத்தின் அடையாளங்கள் பல அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மிகவும் அதிசயமான முறையில் அந்நாளைய ரோமானியச் சமூகம் வெப்பௌ அறைய எப்படி நிர்மாணித்திருந்தார்கள் என்பதும் விளக்கப்பட்டிருந்தன. இந்த இடம் அன்றைய ரோமன் இங்கிலாந்தில் “ட்ரப்பொண்டியம் (Tripontium)“ என்று அழைக்கப்பட்டது.

    20141125_131727[1]அது மட்டுமின்றி அன்றைய ரோமன் சமூகத்தினரின் ஆபரணங்கள், உடையமைப்புகள் என்பன பற்றியும் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய ரோமன் மக்களினது இறை நம்பிக்கை பற்றியும் குறிக்கப்பட்டுள்ளது. மனிதரின் அன்றாட வாழ்க்கையில் தெய்வங்களின் ஈடுபாட்டால் மற்ரங்கள் நிகழ்கின்றன என்று அன்றைய ரோமானிய சமூகம் நம்பியது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரினது புராதனச் சின்னங்களின் கண்டுபிடிப்பு அவர்களின் வாழ்க்கை முறைகளை பற்றிய ஒரு சிறுகுறிப்பு உள்ளடங்கிய வீடியோ கண்காட்சி ஒன்று ஏறத்தாழ 4 நிமிட நேர வரையிலானது அங்கே காட்சிக்காக நிறுவப்பட்டுள்ளது.

    தமது முன்னோர்கள் நாம் வாழும் இன்றைய நிலைக்கு வரும் பாதையில் சந்தித்தவைகள் எவை என்பதை தம்மால் முடிந்த அளவிற்கு பாதுகாத்து அதை அனைவரின் கண்காட்சிக்காக இலவசமாகக் கட்டணமின்றி அனுமதிலும் இந்நாட்டவரின் இக்குணாதிசயம் மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்று.

    இப்படியான ஒரு மனப்பான்மை கொண்டவர்களால் தான் தமது நாட்டைப் பற்றிய பெருமையைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. அப்படி எம் நாட்டின் மீது நாம் பெருமை கொண்டால்தான் அதனைச் சுத்தமாக வைத்திருப்பது கொண்டு அதற்கான காரியங்களை எதுவித ஊழலுமின்றி புரியக்கூடிய மனோநிலை கிடைக்கிறது.

    அப்படியாயின் நாம் எமது புராதானச் சினக்களையும், முன்னோர்களிம் சரித்திரத்தையும் எப்படிப் பேணுகிறோம் ? சிந்திக்க வைக்கும் கேள்வி இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 33

    சு.கோதண்டராமன்.

     

    நீர், ஒளி, பசுக்கள்

    BRAHMIN_VEDAS_by_VISHNU108

     

    மூன்று வகையான உருவகங்களும் பொருந்தாத மந்திரங்களும் உண்டு. கீழே வருவனவற்றைப் பாருங்கள்.
    பசுக்களை விரும்பி அங்கிரஸ்கள் உட்கார்ந்தார்கள். அமர வாழ்வுக்கான பிரார்த்தனைகளை இயற்றினர். ருதத்தின் (தர்மத்தின்) மூலம் அவர்கள் பல மாதங்கள் செய்த முயற்சி மகத்தானது. (3.31.9)
    அங்கிரஸ்கள் பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து பசுக்களை மீட்டனர். (6.65.5)
    இந்திரா, குத்ஸனுக்காக நீ வைகறைப் பொழுதுகளைக் கொடுத்து நீரைப் பெருக விட்ட போது, உன்னிடம் நட்புக் கொண்ட புரோஹிதர்கள் ருதத்தை (தர்மத்தை) மனதில் கொண்டு வலனைக் கொன்றார்கள். (10.138.1)
    இந்திரா, பசுக்களை நாடும் எங்களுக்கு பசுச் செல்வம் பற்றிய அறிவைத் தருகிறாய். (1.33.1)
    இந்திரா, நீ யாரை விரும்புகிறாயோ, அவரிடம் பசுவை ஓட்டி வருகிறாய். (1.33. 3)
    இருட்டுக்கு அப்பால் எந்த ஒளிமயமான உணவு உள்ளதோ, அதை எங்களுக்குக் கொடு. (1.46.6)
    இருட்டு நீரைத் தடுத்தது. (1.54.10)
    இந்திரன் தன் நண்பர்களின் உதவியோடு பசுக்களைப் பின் தொடர்ந்தார், இருளில் மறைந்து கிடந்த சூரியனை வெளிப்படுத்தினார். (3.39.5)
    மேற்கண்ட மந்திரங்களில், பசு என்பது ஞான ஒளியின் குறியீடு என்றும் சரமா என்னும் நாய் மனிதனின் உள்ளுணர்வின் குறியீடு என்றும் அரவிந்தர் கூறுகிறார்.

    அக்னி மறைத்து வைக்கப்பட்ட நீரையும், ஒளியையும், பசுக்களையும் (अपः, स्वः, गाः) கண்டுபிடித்தார். (5.14.4)
    சோமன் நீர் ஒளி பசுக்களை அடைய விரும்புகிறார். (9.90.4)
    சோமனே, எனக்கு நீர் ஒளி பசுக்களைத் தருவீராக. (9.91.6)
    மேலே காட்டியது போன்று பல இடங்களில் நீர், ஒளி, பசுக்கள் (ஆப, ஸ்வர், கோ) மூன்றும் சேர்த்துப் பேசப்படுகின்றன. அரவிந்தர் கூற்றுப்படி பசுவை ஞான ஒளி என்று கொண்டால் ஆப என்னும நீரையும் ஸ்வர் என்னும் ஒளியையும் எப்படிப் பொருள் கொள்வது? தெய்விக இன்பங்கள் என்ற அவரது விளக்கம் நமக்குத் தெளிவு தரவில்லை.

    இம் மூன்றுமே இறை அருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கும் சொற்கள் என்று கொண்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடுகிறது.

    எல்லா உயிர்களுக்கும் அடிப்படையில் உணவு முதலான உடல் தேவைகள் உள்ளன. மனிதரில் சிலர், பாரதி காட்டும் வேடிக்கை மனிதர்கள், இந்த உணவு நாட்டம் மட்டுமே கொண்டுள்ளனர். இதற்கு மேம்பட்ட நிலை ஒன்று உண்டு என்பதை உணராமலே வாழ்ந்து ஒரு நாள் கூற்றுக்கு இரையாகிறார்கள்.

    பல மனிதர்கள் இதோடு நிறைவு அடைவதில்லை. மற்றவரை விட மேம்பட்டு வாழ விரும்புகிறார்கள். அடுத்தவரை விடச் செல்வத்தில், வலிமையில், கல்வி கலைகளில் மேலோங்க முயல்கிறார்கள். சிலர் மட்டும் சாதனைகள் புரிந்து புகழ் பெற்று இறப்புக்குப் பின்னும் பிறரால் போற்றப்படும் நிலையை அடைகிறார்கள். வேதத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த தேவ நிலை, அமரத்துவம், ஸ்வர் என்னும் ஒளியே மனிதனின் லட்சியமாகக் காட்டப்பட்டுள்ளது.

    புகழை நாடுபவர்கள் அதற்கு மேல் நிலை ஒன்று இருப்பதை அறியார். சில மனிதருக்கு மட்டும் புகழ் நிலைக்கும் மேலான நிலை ஒன்று இருக்கக் கூடும் என்பது உள்ளுணர்வால் தெரிகிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான பரம் பொருள் ஒன்று இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனோடு இணைய வேண்டும் என்ற பேரவா கொள்கிறார்கள்.

    ஆனால் அதை அடைவது எளிதல்ல. மனிதனின் உலகியல் அறிவு அவனை மேல் நோக்க விடாமல் செய்கிறது.

    நேற்று எனக்கு உதவி செய்தவருக்கும், நாளை எனக்கு நிச்சயமாக உதவி செய்யக் கூடியவருக்கும் மட்டுமே நான் உதவி செய்வேன் என்று சொல்வது வணிக புத்தி. இதை நாம் இறைவனிடமும் காட்டுகிறோம். திருமணம் கை கூடினால் அபிஷேகம் செய்கிறேன், வேலை கிடைத்தால் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டுவதும், இன்னின்ன தானம் செய்தால் இன்னின்ன நன்மை கிடைக்குமென்று நம்புவதும் அந்த வணிக புத்தியால் தான். இதனால் சிறு சிறு நன்மைகளைக் குறிக்கோளாகக் கொள்கிறோமே அன்றி உயர்ந்த லட்சியமாகிய நமக்கு உரிமையான பேரானந்தத்தை இழக்கிறோம். இந்த வணிக புத்தியைக் கொன்றால் தான் பேரானந்தமாகிய பசுக் கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதைத் தான் தேவர்கள் பணியைக் கொன்று பசுக்களை மீட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    அங்கிரஸ்கள் தங்கள் உள்ளுணர்வால் ஆனந்தம் இருக்குமிடத்தை அறிந்தனர். உழைப்பாலும், நற்செயல்களாலும், பிரார்த்தனைகளாலும் மலையைப் பிளந்தனர், பசுக்களை அடைந்தனர் என்ற (1.83.4, 1.71.2) மந்திரங்கள் பெரும் முயற்சி செய்து பல தடைகளைக் கடந்து இறை அனுபவம் பெற்ற அங்கிரஸ்கள் மற்றவர்கள் பேரானந்தம் அடைய இதையே பாதையாக அமைத்தனர் என்பதையே காட்டுகின்றன.

    இறைவன் என்ன செய்கிறான்? உணவு நாட்டம் கொண்டவனுக்கு உணவு கிடைக்கச் செய்கிறான். இதற்கு மானிடன் பெருமுயற்சி செய்யத் தேவை இல்லை. கல்லினுட் தேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கும் புல்லுணவு அளித்துக் காக்கும் இறைவன் அதற்கு ஏதேனும் தடை ஏற்படும்போது அதை நீக்கி உணவு கிடைக்க அருள் புரிகிறான். இது தான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நீரைப் பெருக விட்ட கதை.

    ஸ்வர் என்பதும் ஜ்யோதி என்பதும் புகழைக் குறிக்கின்றன. இந்தப் புகழ் ஜ்யோதியை மறைக்கும் தஸ்யு யார்? ஜ்யோதியை எவராவது மறைக்க முடியுமா? ஆம். நமது கையிலுள்ள குடை மறைக்கக் கூடும். நாம் அமைத்துக் கொண்ட வீடு மறைக்கக் கூடும். நாம் கண் இமைகளை மூடினால் கூட ஜ்யோதி புலப்படாமல் போகும். நம் புகழை மறைக்கும் தஸ்யு வெளியில் இல்லை. நம்மிடத்தில் தான் இருக்கிறான். ராட்சசர்களைப் பற்றிப் பார்க்கும் போது ராட்சசர் என்பார் நம் மனத்தில் உள்ள தீய பண்புகள் தான் என்று பார்த்தோம். நாம் விரும்பிய போதும் முயன்ற போதும் புகழ் பெற முடியாமல் தடை செய்பவை சோம்பல், கவலை, கோபம், பயம், பொய், ஆசை ஆகிய நம் மனத்தில் உள்ள பகைவர்களே. இந்தப் பகைவர்களை வென்று நாம் புகழ் பெற வழி காட்டுகிறான் இறைவன். இது தான் தேவர்கள் தஸ்யுக்களை வென்று ஜ்யோதியை மீட்ட கதை.

    முதல் நிலையில் நீர் கிடைக்காத துன்பம் நாம் வேண்டாமலே நீக்கப்படுகிறது. இரண்டாவது நிலையில் புகழ் இல்லாத நிலை நம்முடைய மனத்தைத் தூய்மை செய்து கொண்டால் போய் விடுகிறது. மூன்றாவது நிலையில் பேரானந்தம் பிறர் நலனுக்கான நற்செயல்கள் செய்வதில் உழைப்பதாலும், பிரார்த்தனைகளாலும் கைகூடுகிறது. இந்த மூன்றுமே மனிதர்க்குத் தேவை என்பதைத் தான் நீர், ஒளி, பசு தருக என்று வேண்டும் மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

    படம் உதவி: http://vishnu108.deviantart.com/art/BRAHMIN-VEDAS-160338756

    Share
  • சுடுமணலில் என் வெற்றுக் கால்கள்…

    -தாரமங்கலம் வளவன்

    சுடுமணலில் என் வெற்றுக் கால்கள்
    தவித்தபோது ஓங்கி வளர்ந்த ஆலமர நிழலாய்
    நீ நின்றாய்
    ஓடி வந்து உன் நிழலில் இளைப்பாறினேன்!

    சொட்டு நீர் கிடைக்குமா என்று தாகத்தில்
    என் நாக்கு வறண்ட போது
    பொங்கி வரும் நீரூற்றாய்
    நீ என் தாகம் தணித்தாய்!

    நான் சரிந்த போது என்னைத் தாங்கிப் பிடித்தாய்
    துவண்ட போது தோள் கொடுத்தாய்
    உன் அரவணைப்பை உதறித்தள்ளி ஓடியபோதும்
    என் பின்னால் ஓடி வந்தாய்!

    இன்று…
    நான் ஓடியது வெற்று ஓட்டம்
    என்பது புரிந்து விட்டது!
    என் ஓட்டம் நின்று விட்டது…
    திரும்பிப் பார்க்கிறேன்
    நீ தூரத்தில் தள்ளாடித் தள்ளாடி வருகிறாய்!

    முன்பு போல்
    உன்னிடம் வேகம் இல்லை
    காரணம் முதுமை என்கிறாய்!

    நேற்றை விட இன்று
    உன் நிழல் எனக்குக் கண்டிப்பாய்த் தேவை
    உனக்கு மூப்பும் சாவும் வரக்கூடாது
    என்றும்
    என்னுடன் நீ வர வேண்டும்!

    Share
  • குடிமுழுதும் காத்துவிடு !

        -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

          படிபூசை செய்து உனை
          பாடி நிதம் அடியார்கள்
          அடிதொழுது நிற்கின்றோம் – ஐயப்பா         ayyappan
          எங்கள் குடிமுழுதும்
          காத்து விடு – ஐயப்பா!

          அனுதினமும் பாடி உனை
          அடிதொழுது பரவி விடும்
          அடியவரின் மனதில் உறை – ஐயப்பா
          கொடிய வினை எமையகல
          குடிமுழுதும் விடிவு பெற
          அனுதினமும் அருள் தருவாய் – ஐயப்பா!

          மடிமீது குழந்தை என
          தினமும் உனைப் பார்க்கிறோம்
          மனம் இரங்கி வந்திடுவாய் –  ஐயப்பா
          தலைமீது கால் வைத்து
          தமியேனைக் காக்க என
          சடுதியாய் வந்து விடு  – ஐயப்பா!

          தேடி உனை நாடிவர
          கூடி வரு வினையகல
          ஓடி வரு அடியவரைப் பாராயோ
           பாதமது தந்து எமைக் காவாயோ!

          மலையேறி வரு மடியார்
          மனதிலுறை எண்ண மெலாம்
          உனது நினை வல்லவோ ஐயப்பா
          உன்முமதைக் காட்டிவிடு மெய்யப்பா!

           படியேறிப் பதம் பணிந்து
           பலமுறையும் துதி பாடி
           அடிதொழுது நிற்கின்றோம் ஐயப்பா
           அருள்புரிந்து காத்துவிடு ஐயப்பா!

    Share