Blog

  • ஒரு அமெரிக்கக் குழந்தையின் சோகக் கதை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவின் நியுயார்க் நகர் மருத்துவமனை ஒன்றில் போன வாரம் இரண்டு வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டது. இந்தக் குழந்தை போன வாரம்தான் ‘இறுதியாக’ இறந்தாலும் அதற்கு ஒரு வாரம் முன்பே அக்குழந்தையின் மூளை செயலற்றுப் போய் அது இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர் . குழந்தை இறந்த பின்பு தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த போராட்டத்தால் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் ஆணைப்படி அந்தக் குழந்தையை செயற்கைக் கருவிகள் மூலம் உயிரோடு வைத்திருந்தனர். அந்தக் குழந்தையின் கதை ஒரு சோகக் கதை.

    அக்குழந்தையின் பெயர் தையா ஸ்ப்ருயில்-ஸ்மித் (Thaiya Spruill-Smith). இக்குழந்தைக்கு சாதாரணமாக மற்றக் குழந்தைகளுக்கு அவ்வளவாகப் பிடிக்காத ப்ரோக்கோலி (broccoli) என்ற காய்கறி மிகவும் பிடிக்கும். மிக்கி மௌஸின் ஜோடியான மின்னி மௌஸைப் (Minnie mouse) பிடிக்கும். ‘ஸ்பேஸ் ஜேம்’ (Space Jam) என்ற சினிமாப் படத்தைப் பார்க்கப் பிடிக்கும். மாற்றாந் தகப்பனால் முரட்டுத்தனமாக உலுக்கப்பட்டு கட்டிலில் தூக்கி எறியப்பட்டதால் மூளையிலும் மற்ற இடங்களிலும் காயமுற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்தாள். தாய்க்கும் தகப்பனுக்கும் இடையே முற்றியிருந்த பிரச்சினையால் இக்குழந்தையின் பிரேத பரிசோதனை, நல்லடக்கம் எல்லாம் பிரச்சினை தீர்ந்த பிறகுதான் நடந்தன.

    தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளியிலேயே இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பு தொடர்ந்தது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.. அதனால்தானோ என்னவோ ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு என்ன ஆயிற்றோ இருவருக்கும் ஒருவரையொருவருக்குப் பிடிக்காமல் போய் தனித் தனியே வாழத் தொடங்கினர். தையாவின் தாய் ஆதாம் என்ற மற்றொருவரை மணந்துகொண்டபின் தன் மகள் மாற்றாந் தகப்பனால் துன்புறுத்தப்படலாம் என்று அஞ்சி தையாவின் தகப்பன் குழந்தை தன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதுவரை தையா தாயோடு இருந்துவந்தாள். எப்போதாவது தகப்பனோடு சில நாட்களைக் கழிப்பாள். ஒரு முறை தையாவின் தந்தை தையாவை தன் வீட்டிற்குப் பதிலாகத் தன் தாயின் வீட்டில் நான்கு நாட்கள் வைத்திருந்தார். தான் அப்படிச் செய்ததற்குக் காரணம் தையா தாயிடம் போக விரும்பாததே என்று கூறினார். ஆனால் நீதிமன்றம் குறித்திருந்த நாட்களுக்கு மேல் குழந்தையை வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். தையாவின் தந்தைக்குக் கெட்ட சகவாசம் இருக்கிறது என்றும் அவன் தன்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினான் என்றும் இதனால் தையாவைத் தகப்பனின் பொறுப்பில் இருக்கவிடுவது சரியில்லை என்றும் தையாவின் தாய் நீதிமன்றத்தில் வாதிட்டாள். தாயும் தந்தையும் குழந்தை தங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று  நீதிமன்றத்தில் வழக்காடிக்கொண்டிருந்தபோது குழந்தை இறந்த துயரச் சம்பவம் நடந்தது.

    மறுமுறை கருவுற்ற தையாவின் தாய் தன்னுடைய முன்னாள் காதலனின் நச்சரிப்பிலிருந்து தப்புவதற்காக வேறு வீட்டிற்கு மாற விரும்பினாள். அதற்குரிய வேலைகளைச் செய்ய வெளியே செல்ல வேண்டியிருந்தது. குழந்தையை தன்னோடு அழைத்துச் சென்றால் அதிக நேரம் ஆகலாம் என்பதாலும் மேலும் கணவன் அந்தச் சமயம் வீட்டில் இருந்ததாலும் குழந்தையை வீட்டில் விட்டுச் சென்றாள். தாய் தன்னை அப்படி விட்டுச் சென்றபோது குழந்தை அழுதிருக்கிறது. ஆயினும் வேறு வழியில்லாமல் விட்டுச் சென்றிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்குள்ளேயே தாய் திரும்பி வந்தபோது தையா தூங்கிக்கொண்டிருந்திருக்கிறாள். சில மணி நேரம் கழித்து எழுந்தவள் பேசியிருக்கிறாள். ஆனால் தான் விரும்பிய எதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடவில்லை. மறு நாள் காலையில் எழுந்தபோது குழந்தை நார்மலாக இல்லை. குழந்தையின் மூச்சு தாறுமாறாக இருந்தது. ஆம்புலன்ஸைக் கூப்பிட்டுக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று இரவே குழந்தை இறந்துவிட்டது. தாய் வெளியே சென்ற பிறகு தொடர்ந்து அழுதுகொண்டிருந்த தையாவை தையாவின் மாற்றாந் தகப்பன் தூக்கிப் பிடித்து முரட்டுத்தனமாக உலுக்கியிருக்கிறான். பின் கட்டிலில் தூக்கி வீசியிருக்கிறான். இதை அவனே பின் ஒப்புக்கொண்டான்.

    குழந்தை இறந்த பிறகு தாய்க்கு அவளுடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்து அவை பல குழந்தைகளுக்குக் கிடைத்து அதன் மூலம் தன் மகள் உலகில் பல காலம் வாழ்வாள் என்று எண்ணினாள். தையாவின் தந்தைக்கோ மகளின் உடலைத் துண்டுபோடுவது பிடிக்கவில்லை. ‘என் மகளின் அழகிய கண்கள் அப்படியே இருக்க வேண்டும். அவள் எப்படி இருந்தாளோ அப்படியே இறந்த பிறகும் இருக்க வேண்டும்’ என்றார்.

    தையாவின் உடல் உறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று தாயும், கொடுக்கக் கூடாது என்று தந்தையும் சண்டை போட்டதால் இந்தத் தகராறு முடியும்வரை தையாவை ‘உயிரோடு’ வைத்திருக்க வேண்டும் என்றும் அவளுடைய உடலில் இருக்கும் இணைப்புகளை அகற்ற வேண்டாம் என்றும் நீதிமன்றம் மருத்துவமனைக்கு ஆணையிட்டது. இரண்டு பெற்றோர்களின் சம்மதம் இருந்தாலொழிய குழந்தைகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முடியாது என்று சட்டம் இருப்பதால் இந்த ஆணை. கடைசியாக, தந்தைக்கு வெற்றி கிடைத்தது. தையாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படாமலே அவளுடைய உடல் புதைக்கப்பட்டது.

    தையாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருந்தாலாவது அவளுடைய வன்முறை இறப்பிற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.

    ஜெயகாந்தன் தன்னுடைய சிறு கதை ஒன்றில் குழந்தைகள் எப்படிக் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றனர் என்பதை இப்படிக் குறிப்பிடுவார்: …இருவருக்கும் பொதுவானதாய், இருவரிலிருந்தும் பிரிக்க முடியாததுமாய்…..அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தக் கூற்று எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் 40 சதவிகிதம் குழந்தைகள் திருமணமாகாத ஜோடிகளுக்குப் பிறக்கின்றன. குடும்பம் என்ற சமூக நிறுவனம் (Social Institution) அமெரிக்காவில் சிதைந்துகொண்டு வருவதால் குழந்தைகள் தாய், தகப்பன் என்று இரண்டு பெற்றோரோடு வாழும் வாய்ப்பை இழந்து வருகின்றன. இப்போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடுள்ள இரண்டு பெண்கள் அல்லது இரண்டு ஆண்கள் சேர்ந்து வாழும்போது அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர் இருவரும் ஒரே பாலைச் (gender) சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை. தாய், தந்தையரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் சமூகம் குழந்தைகளின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Share
  • நாகர்கள் 2

    விசாலம்

    ரீமா தான் ஒரு வாரம் லீவு கேட்டபடி தன் ஊர் சென்றாள். பின் அவள் திரும்பி வர இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.  மறு நாள் அவள் வந்தாள். அவள் தாமதமாக வந்ததற்கான காரணம் கேட்டேன். நாகாலாந்தில்    எல்லா வேலைகளும் பெண்களே செய்யும் நிலைமை. ஆகையினால் வருவதில் தாமதமாகிவிட்டது என்றாள்.

    “ஏன் ரீமா? அப்படி என்னென்ன  வேலைகள் நீங்கள் செய்யவேண்டும்?”

    “காலையில் எழுந்ததும் தண்ணீர் கொண்டு வர குடங்களுடன் வெகு தூரம் நடக்க வேண்டும். காட்டுப்பக்கம் போய் மரங்களிலிருந்து சுள்ளிகள், மரக்கட்டைகள் வெட்டி எடுத்து தலையில் சுமந்து வரவேண்டும். வீடு வந்தவுடன் எல்லோருக்கும் உணவு தயாரிக்க வேண்டும். பின் கள் காய்ச்ச வேண்டும். பின் நிலத்திற்குப் போய்  விதை விதைத்தல், களையெடுத்தல் என்ற பல வேலை.  பின் வீட்டிற்குத் திரும்பியவுடன்  ஆடை நெய்ய வேண்டும். இப்படி உழைப்பைத்தவிர வேறு ஒன்றும் எங்கள் வாழ்க்கையில் கண்டதில்லை.”

    “நீங்கள் கழுத்து முழுவதும் பல பாசி மணிகள், குண்டு குண்டு மணிகள் அணிகிறீர்கள். தவிர உங்கள் நாட்டியத்தில் பலர் மிருகத்தின் தலைப்பகுதியை அணிகிறார்களே!”

    “ஆமாம்  மேடம்  எங்கள் ஆண்கள் மிருக வேட்டைக்குச் சென்று  அதன் தலையை கொய்து எடுத்து வரும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களது  வீரம் வெளிப்படுகிறது. தவிர அவர்கள்  இதை மிக கௌரவமாகப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இது போல் மிருகத்தின் தலை வீட்டின் முகப்பில் அலங்கரிக்கப்பட்டு வரவேற்கும்.  காட்டெருமை, கரடி, மான், புலி என்று பல மிருகங்களின் தலைகள் வீட்டு அறையில் மாட்டப்பட்டிருக்கும். அப்படி மிருகத்தின் தலையைத் துண்டிக்காத ஆணை  எங்கள் ஜாதியில் பசு என்றும்  பெண்ணென்றும் கேலி செய்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் இது போன்ற வேட்டை தடுக்கப்பட்டிருக்கிறது.”

    ” ரீமா  உன்னுடைய திருமணம் காதல் திருமணமா? உங்கள் திருமணம் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக  உள்ளேன்.”

    ” எங்கள்  பிரிவில் ஆண் ஆதிக்கம் அதிகம், பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது. அவள் தாயாகி, குழந்தைகள் சுமந்து, உணவு தயாரித்து

    தன் சம்பாத்தியத்திற்கு உல்லன்  ஷால் அல்லது துணி நெய்து  உழைக்க வேண்டும். எந்த தீர்மானம் எடுக்க வேண்டுமென்றாலும் அதை ஆண்மகன் தான் எடுப்பான். பெண்களுக்கு அதில் உரிமை இல்லை. எங்கள் ஜாதியில் பல பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவிலேயே இருக்கும் ஒரு  பெண்ணை  அந்தப்பிரிவில் இருக்கும் ஆண் மணம் புரியக்கூடாது.”

    “ஆமாம் இது எங்களுக்கும் உண்டு. ஒரே கோத்திரத்தில்  திருமணம் செய்ய மாட்டார்கள். அவர்கள் உறவு சகோதர சகோதரி ஆகும்.”

    ” எங்கள் ஜாதியில்  வயது வந்த  பிள்ளைகள், பெண்களை  ஊர் எல்லைப்பகுதியில் எழும்பி இருக்கும் ஒரு கட்டிடத்தில் அனுப்பிவிடுவார்கள். இந்த இடத்தின் பெயர் “மொருங்க்”.

    நாகா கலாசாரத்தில் இந்த வயது வருபவர்கள் இங்கு வந்து  பல பெரியவர்களிடமிருந்து  இந்த கலாசாரத்தைக் கற்க வேண்டும். அவர்களது சடங்குகள், நாட்டியங்கள், கலைகள் எல்லாம்  நாட்டுப்பாடல் மூலமாகவும் பிரசங்க மூலமாகவும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படும். அங்கு சிற்பக்கலை, மரவேலை, நெசவு எல்லாமே படிக்க வேண்டும். தவிர எதாவது முக்கிய சமாசாரமாக  இறப்பு, பிறப்பு,  பூஜை, அபாயம் போன்ற செய்திகளை .    பெரிய பேரிகை அடித்து அந்தக்கிராமம் முழுவதும் சொல்லி வரவேண்டும். பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்படும்.”

    “அது சரி. காதலைப் பற்றி சொல்லவே இல்லையே!”

    “அங்காமி என்ற பிரிவில் ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தால் அதை அவனது தந்தையிடம் சொல்ல வேண்டும். தந்தை தன் நண்பனை அனுப்பி பெண் வீட்டு சம்மதத்தைக் கேட்பார். பெண் வீட்டில் சம்மதித்தால் தந்தை ஒரு நிகழ்ச்சியை நடத்துவார். அது  உங்களுக்கு மூட நம்பிக்கையாகக்கூட தோன்றும்.”

    “அப்படி என்ன நிகழ்ச்சி! கேட்க  ரொம்ப ஆர்வமாக இருக்கிறதே!”

    “ஒரு கோழியைக்கொண்டு வந்து நல்ல நேரம் பார்த்து அதன் குரல்வளையை நெரிப்பார். அப்போது அதன் கால்கள் துடித்து சில திசைகளில் குறுக்க முறுக்கிக்கொள்ளும். அது சுபமான  முறுக்காக இருந்தால் அந்தத் திருமணம் நிச்சயிக்கப்படும். ‘

    “அப்பப்பா  என்ன கஷ்டம் ஒரு காதலுக்கு! ஒரு பறவை பலியா?  பெண்ணிடம் சம்மதம் கேட்கமாட்டார்களா? “

    “பெண்ணும் இந்த  வரனைத் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். எப்படி என்றால் அவள் மூன்று நாட்களுக்குள்  கெட்ட கனவு கண்டால் அதைக்காரணம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்தமுடியும்.”

    “அப்பாடி  நல்ல வேளை! கொஞ்சமாவது சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களே  அதுவரை  மகிழ்ச்சிதான்”  என்று சிரித்தபடி அவளைப் பார்த்தேன். அவளும் மிகவும் வெகுளியாக சிரித்தாள். பின் தொடர்ந்தாள்,

    “எங்கள் ஜாதியில் கோன்யாக் என்ற பிரிவில் இருப்பவர்கள் அரச பதவி போல் முக்கிய ஸ்தானத்தில் இருப்பார்கள். அவர்கள் மட்டும் தங்கள் பிரிவிலேயே பெண் எடுக்கலாம். அதாவது ராணி போல் வரும் பதவியில் அதே வம்சம் தொடர்ந்து வரும். இந்த சலுகை  இந்த  கோன்யாக் என்ற பிரிவுக்கு மட்டுமே உண்டு.”

    “இது எதனால் ஏற்பட்டது ரீமா?”

    “ஓ! அதுவா அதற்கும் ஒரு கதை உண்டு. எங்கள் நாட்டு முதல் மனிதன் நிக்தோகா. இவன் திருமணம் செய்துக்கொண்டான். அவனுக்கு ஆறு மகன்கள் பிறந்தன. ஆனால் முதல் மகனுக்கு மட்டும் மணமகள் கிடைத்தாள். மற்ற  சகோதரர்கள் தங்களுக்கும் திருமணம் ஆகும் என்று பொறுத்திருந்தும் ஆகவில்லை. இதனால் வீட்டில் சண்டை வந்து அவர்கள் வீட்டை விட்டுப்போய் அன்னியத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். இதனால் தான் இந்த வழக்கம் வந்ததாம்.”

    “எங்களது போல் உங்களுக்கும்  எல்லாவற்றுக்கும் ஒரு கதை

     இருக்கிறது. சரி மேலே சொல்லு. திருமணம் எப்படி நடக்கும் ?”

    அவள் மேலே தொடர்ந்தாள்…

    Share
  • இனியதோர் ஈழத்து எழுத்தாளர் இறை உலகெய்தினார்

    சக்தி சக்திதாசன்

    ஈழத்து எழுத்தாளரும் “மித்ரா” அச்சக உரிமையாளருமான அன்பு ஐயா எஸ்.பொ அவர்கள் நேற்றைய தினம் இறைஉலகெய்தினார் எனும் துயரச் செய்தியின் பின்னனியில் அவருடனான என் நினைவுகளை இங்கு பதிவிடுகிறேன்.

    ass

    2005ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நிலாச்சாரல் இணைய இதழை நடத்தி வருபவரும். கண்னி மென்பொருள் வல்லுனரும், என் இனிய தோழியுமான நிலா என்றழைக்கப்படும் நிர்மலா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிர்பலங்கள் பலரை நிலாச்சாரல் இணைய இதழுக்காக பேட்டி கண்ட நேரம்.

    அப்போது என் அதிர்ஷடவசமாக சென்னையிலே தங்கியிருந்தார் நேற்றுக் அவ்ய்ஸ்திரேலியாவில் காலமான அன்பு ஜயா ம் ஈழத்து எழுத்தாளர் திரு. எஸ்.பொ அவர்கள்.

    சந்திப்பாரோ ? மாட்டாரோ ? எனும் ஒரு சந்தேகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

    மிகுந்த மகிழ்ச்சியுடன் ” சக்தி சக்திதாசனா? ஆமாம் உனது எழுத்துக்களை படித்திருக்கிறேன், அச்சகத்திற்கு வா ? சிற்றுண்டி அருந்திக் கொண்டே பேசலாம் ” என்றார் அந்த அன்பு எழுத்தாளர்.

    ஈழத்து இலக்கியச் சிற்பி ஒருவரை இந்தக் கற்றுக்குட்டி என்ன நேர்காணல் காணுவது ? ,அமதுக்குள் ஒரு ஆதங்கம் இருப்பினும் இத்தகைய புகழ் மிக்க என் அன்னை நாட்டு எழுத்தாளரை தமிழக மண்ணில் சந்திப்பதையிட்டு பெரு மகிழ்வோடு அவரைக் காணச்சென்றேன்.

    இனிவருவது ஏற்கனவே நிலாச்சாரலில் வெளிவந்த என்னுடனான அவரது நேர்காணல். நிலாச்சாரலுக்கு என் மனமார்ந்த நன்றியறிதல்களைச் செலுத்திக் கொண்டு அதை இங்கே சந்தர்ப்பம் கருதி மீள்பிரசுரிக்கிறேன்.

    இந்த நேர்காணலைத் தவிர்த்து அவர் எனக்கு தனது அனுபவம் சார்ந்த பல அறிவுரைகளைத் தந்தார். அவை என்றும் என் மனப்பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டேயிருக்கும்..

    காலையில் 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் வாருங்கள், காலைச் சிற்றுண்டி அருந்தியபடியே பேசலாம் ” என அன்பான, நட்பு மிளிர்ந்த அதிகாரமிக்க அழைப்பு. அதுவரை நான் சந்தித்திராத, சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்து உதாரண எழுத்தாளர் அவர்களோடு நடந்த முதல் தொலைபேசி உரையாடலின்போது அவரின் வெளிப்படையான பேச்சும் அந்த நட்புணர்வும் அவர்மீது கொண்டிருந்த மதிப்பை இன்னும் பெருக்கியது.

    திரு எஸ். பொன்னுத்துரை எனும் எஸ்.பொ. அவர்கள் பலவருடங்களுக்கு முன்னால் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்திருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் பிகப்பெரிய பங்கு வகிக்கிறார். சென்னையில் கோடம்பாக்கத்தில் “மித்திரா” என்னும் பதிப்பகத்தை நிறுவி, அதை இயக்கி வரும் இவர், ஆஸ்திரேலியாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்.

    மனந்திறந்து அவர் நிலாச்சாரல் வாசகர்களுக்காக அளித்த பேட்டி இதோ !

    உங்களுடைய இலக்கிய ஆர்வத்தின் பின்னணி என்ன ?

    என்னுடைய இலக்கிய ஆர்வம் மிகச் சிறுவயதிலேயே உருவானது. எனது முதலாவது கவிதை 14 வயதில் அச்சில் வந்தது. இதற்குக் குடும்பப் பின்னணி காரணமல்ல.மாணவர் சமுதாய இலக்கிய அரங்கில் இணைந்து , இலக்கியம் சமுதாய முன்னேற்றத்திற்கு ஓர் சரியான சாசனம் எனும் எண்ணம் கொண்டு, இளம் வயதிலேயே ஈடுபாடு வந்தது.

    உங்கள் எழுத்துக்கு முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள் ?

    என்மீது தாக்கம் ஏற்படுத்தியவர்களுள் பாரதியாரே முக்கியமானவர். அவரின் தாக்கமே என்னை முதலில் கவிதை எழுதத் தூண்டியது. தமிழினால் சமுதாயத்தை எந்தெந்த வகையிலெல்லாம் விழிக்கப்பண்ண முடியுமோ , அவ்வழிகளிலெல்லாம் அவரது கவிதையின் வீச்சுச் சென்றது. மாகாகவியே என்மீது தனது கவிவீச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

    இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய நிலை உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக உள்ளதா
    இல்லை கவலையாக உள்ளதா ?

    துணிவாகச் சொல்லுவேன் ஈழத்துத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் , இலக்கியப் படைப்புக்களாக இல்லை. அதற்காக இலக்கியம் தற்காலப் போர் சார்ந்ததாகவோ அன்றி அதனைத் தவிர்த்ததாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் தற்கால நடைமுறை பதிவுசெய்யப்படவில்லை. ஈழத்துத் தமிழ்ப் பகுதிகள் தவிர்ந்த கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு வெளிவரும் ஆக்கங்கள் , அரசாங்கக் கண்காணிப்பின் கீழ், தணிக்கைக்கு உட்படுத்தப்படும்போது , எவ்வாறு மக்களின் உண்மை நிலையை உணர்த்த முடியும்? இந்த இடைவெளியைப் பயன்படுத்திச் சிலர் , வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமே எழுதுவது போன்றும் தென்படுகிறது .

    நீங்கள் ஈழத்தை விட்டுப் புலம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டபோது, உங்கள்
    மனதினில் விளைந்த உணர்ச்சிகள் என்ன ?

    நான் ஈழத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் புலம் பெயர்ந்தவனல்ல. அரசியல் காரணங்களினால் எனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய பதவியுயர்வுகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டதாலும் மற்றும் பல அரசியல் காரணங்களினாலும் நான் ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தேன் என்பதுவே உண்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரங்களின் பின்னால் இனக்கலவரத்தின் பாதிப்பு கூர்மைப்படுத்தப்பட்டது. எமது பழைய தமிழ்த்தலைவர்கள் என்றுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கவில்லை. 1959ம் ஆண்டு திரு.செல்வநாயகம் செய்த ஒப்பந்தத்தின் போதுதான் ஈழத்தில் தமிழ்த்தேசியம் முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் தமிழ் மறைந்து கொண்டிருக்கிறது , ஈழத்தமிழர்
    தமிழை முதன்மைப்படுத்துகிறார்கள் என்று கேட்கும் போது மகிழ்வாக இருந்தாலும், ஈழத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் விளைவாகவே ஈழத்தமிழர் தமிழ்த் தேசியத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மை. இன்று உலகமெங்கும் தமிழ்த்தேசியம் உலகத்தமிழரால் முன்வைக்கப்படும்போது , நானும் அந்த உலகத்தமிழர்களில் ஒருவன் எனும் நிலையால் பெருமையான உணர்ச்சியே மேலோங்கியுள்ளது.

    நீங்கள் தமிழ்நாட்டோடு அதிகம் தொடர்புடையவர் என்னும் நிலையில் , ஈழத்தமிழர்கள் மீதான, தமிழக மக்களின் தற்போதைய கணிப்பு என்ன என்று எண்ணுகிறீர்கள் ?

    ஈழத் தமிழ் மக்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கு ராஜீவ் காந்தியின் கொலை, மற்றும் சில ஈழத்தமிழர்களின் பிழையான நடவடிக்கைகள் பத்திரிகைகளினால் பெரிது படுத்தப்படுவது போன்ற பல காரணங்கள் உண்டு.

    ஈழத்தமிழ் இலக்கியங்கள் அந்தநாட்டுப் போரைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்
    என்றொரு எதிர்பார்ப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் அது சரியானதா?

    இலக்கியங்களை எழுதுபவர்கள் கோபுரங்களில் இருந்து கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் அந்த மண்ணின் மக்களோடு வாழ்ந்து கொண்டுதான் இலக்கியம் படைக்கிறார்கள். ஆனால் அதற்காகப் படைக்கப்படும் அனைத்தும் போரைப்பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதல்ல.சமகால நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவேண்டும். மனதிலே தமிழ்த்தேசியத்தையும், ஈழத்தமிழிலக்கிய மரபுகளையும் சுமந்து கொண்டு புலம்பெயர்ந்த மக்கள் , அதை இலக்கிய நாற்றாக்கி, போராட்டத்தின் பின் ஈழத் தமிழிலக்கிய மண்ணிலே நாட்டி இலக்கியத்தைப் பேணவேண்டும் என்பதிலே நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

    ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தில் எப்படியான வரவேற்பு இருக்கிறது?

    அந்தக் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் இலக்கியத்தின் பிறப்பிடம் தமிழகம் என்றும், அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்றும் எண்ணும் மனோபாவம் வணிக ரீதியாக உண்டு. ஈழத்துத் தமிழெழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு ஓர் தனி அகராதி வேண்டும் எனும் கருத்தும் உண்டு.

    ஆனால் இந்த மனோபாவம் இன்று மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகம் இன்று தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, இன்குலாப் போன்றவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை ரசிக்கிறார்கள், வாசிக்கிறார்கள். வணிகரீதியில் மட்டுமே நாம் பிரச்சனையை எதிர் கொள்கிறோம். இது முற்றிலுமாக மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.

    புலம்பெயர்ந்த படைப்புக்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

    சென்னையிலே ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலே, பல முன்னணி எழுத்தாளர்களின் மத்தியில் 21ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களே தலைமைப்படுத்திச் செல்வார்கள் என உரக்கச் சொன்னவன் நான். ஆனால் தற்போது புலம்பெயர் நாடுகளிலே தமிழ் இலக்கியத்திற்கு மத முலாம் பூசப்பட்டு, பின்னிலைப் படுத்தப்படுகிறதோ என அஞ்சவேண்டியுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என எண்ணுகிறேன்.

    புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் தாம் வாழும் நாடுகளின் சூழல்களை மையப்படுத்தி
    இலக்கியம் படைப்பது தமிழை முன்னேற்றும் என எண்ணுகிறீர்களா?

    நிச்சயமாக ! அப்படியான ஒரு அணுகுமுறைதான் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டிருக்கும்” எம்மை ஒரு உலகளாவிய ரீதிக்குக் கொண்டு வரும். மற்றைய நாட்டு மொழியைப் படித்துத்தான் அவர்களது கலச்சாரங்களை ஒரு கண்னாடியால் பார்ப்பதுபோல் இல்லாமல் எமது எழுத்தாளர்கள் தமிழிலேயே அதை வெளிக்கொணரவேண்டும். அது மட்டுமன்றி அந்தந்த நாட்டு மொழிகளில் கூடப் புலம்பெயர்ந்தவர்கள் கவிதை,கட்டுரை வரைந்து தமிழிலக்கியச் சிந்தைகளை விசாலப்படுத்த வேண்டும்.

    கணணியில் தமிழ் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன ?

    இது ஒரு மிகவும் நல்ல முன்னேற்றமே ! தமிழ்நாட்டு முயற்சிகள் அதிகம் இருந்தாலும் மென்பொருளாக்கம் முதலியவற்றில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழரின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது. கணன்¢யின் தேவையைக் கூட்டி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது உலகத்தமிழன் என்று சொன்னால் மிகையாகாது. கணணியில் தமிழ் கண்ட வளர்ச்சி வாசிக்கும் பழக்கத்தைக் கூட்டுமேயன்றிக் குறைக்காது என்பது எனது கருத்து.

    புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன?

    யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்கள் யாழ்ப்பாணத்துக் காணிச்சண்டை, வேலிச்சண்டை, ஜாதிச்சண்டை அனைத்தையும் விடுத்துத் தமிழைச் சிந்தியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பியுங்கள். உங்களுக்குத் தமிழ் மீது நேசம் இருக்குமானால் தயவுசெய்து ஏதாவது வகையில் தமிழ்ப்பணி செய்யுங்கள். தமிழ் நூல்களை வாங்கிப் படியுங்கள்.

    அன்பு மிகுந்த வாசகப் பெருமக்கள் இந்தப் பேட்டி 2005ம் ஆண்டு இடம்பெற்றது என்பதனையும் எனது கேள்விகளும், அவரது பதில்களும் அன்றைய காலச் சூழலின் பின்னனியில் இருந்தன என்பதையும் படிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டுகிறேன்..

    அன்பு ஜயா எஸ்.பொ அவர்களின் ஆத்மசாந்திக்காக அனைவர்க்கும் பொதுவான அந்த இறையின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

    சக்தி சக்திதாசன்

    Share
  • துணிந்து நில்! தொடர்ந்து செல்! தோல்வி கிடையாது தோழி!

    பவள சங்கரி

    catching-moon
    நெஞ்சம் படபடக்க கண்கள் இருண்டு நாக்கு வறண்டு
    ஓ.. பயங்கரம் என் படகு மோதியது பாறையில்
    தவிர்க்க முடியாததை ஏற்பதுதானே சாத்தியம்
    வெளியேறும் வழியறிந்து மனம் தெளிந்தேன்
    அமைதியில் திளைக்க மோனத்தில் ஆழ்ந்தேன்
    எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்

    என்னை வீழ்த்தியதை எதிர்த்து நின்றேன்
    அச்சம் துறந்தேன் துணிவு பெற்றேன்
    இடியென முழங்கிய என் அதிரடிக்குரலை
    கேட்டீர்களா நீங்கள்! இப்போது இல்லையது
    நிமிர்ந்து நின்றேன், துணிந்து முயன்றேன்
    கடந்து வந்துவிட்டேன், தயாராகிவிட்டேன்
    பார்க்கும் அனைத்தும் இதமாய், பதமாய்
    இனிமையாய், உன்னதமாய், உய்த்தது.

    ஆம், கூரியப் பார்வையும் பெற்றேன்
    போராடும் குணமும்கூடப் பெற்றேன்
    தீயிலும் தாண்டவமாடுவேன்
    கடலிலும் எதிர்நீச்சல் போடுவேன்
    மலையோடும் மோதுவேன்
    பனியிலும் சிறகு விரிப்பேன்
    வெற்றியின் சிகரம் நானென்ற
    உறுமல் கேட்கலாம் நீங்கள்
    இன்னும் உரக்க, உரக்க
    சிம்மத்தின் கர்ஜனையாக
    என் உறுமல் கேட்கலாம்
    வெற்றிக்கனியை எட்டிப்பறிக்கும்
    என் ஆழ்ந்த மூச்சின் ஓசை
    மிதந்து வரலாம் காற்றோடு

    வண்ணத்துப் பூச்சியாய் பறந்து திரிகிறேன் இப்போது
    தேனீயாய்ச் சேகரித்தேன் – என் இன்ணுணர்வுகளை
    தொட்டேவிட்டேன் சிகரம் – அடிமட்டத்திலிருந்து

    வீழ்த்த வீழ்த்த வீழாமல் நிமிர்ந்தேன்
    தூசியாய் துயரங்களை ஊதியபடி
    உரக்கக் கேட்கும் குரல் என்னுடையதே
    இடியென முழங்கும் எம்குரலைக் கேட்டீரோ
    பொறுத்ததெல்லாம் போதுமென பொங்குவேனினி

    பெற்றேன் வேங்கையின் கூரிய பார்வை
    போராடும் குணமும்கூடப் பெற்றேன்
    தீயிலும் தாண்டவமாடுவேன்
    கடலிலும் எதிர்நீச்சல் போடுவேன்
    மலையோடும் மோதுவேன்
    பனியிலும் சிறகு விரிப்பேன்
    வெற்றியின் சிகரம் நானென்ற
    உறுமல் கேட்கலாம் நீங்கள்
    இன்னும் உரக்க, உரக்க
    சிம்மத்தின் கர்ஜனையாக

    வெற்றி முழக்கம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்
    அச்சம் துறந்தேன் ஆனந்தமாய் அங்குசம் பெற்றேன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”ராஜகோ பாலன் ரமண ரகுராமன்,
    ஆஜானு பாகன் அரவிந்த -லோசனன்,
    தேஜோ மயன்தாயின் தாம்புக்கும், தாலாட்டு
    ஜோஜோக்(கு) அடங்கிடும் சேய்’’….கிரேசி மோகன்….

    Share
  • சொர்க்கம் வேண்டாம்!

     

    சொறிபிடித்த தெருநாயின் சிறுகதைகள்:

     சொர்க்கம் வேண்டாம்!

    ஒரு அரிசோனன்

     நான்தான் உங்களுக்கு முன்னமேயே அறிமுகமான சொறிபிடித்த தெருநாய்!  நான் ஒரு கதை சொல்லி அது வெளிவந்தாலும் வெளிவந்தது, நான் மிகவும் பெரிய ஆள் –இல்லையில்லை, பெரிய நாய் ஆகிவிட்டேன்!  இப்பொழுது எனக்குச் சாப்பாட்டுக்குக் குறைவே இல்லை! கதை சொல்லும் நாய் என்று  ஒவ்வொரு தாய்மாரும், தந்தைமாரும் எனக்குக் கொஞ்சம் சாப்பாடு போடுகிறார்கள்!  என் எடைகூட ஏறிவிட்டது.  சொறிகூட கொஞ்சம் குறைந்துவிட்டது.  என்னைப் புகைப்படம் வேறு எடுத்து ஒரு அம்மையார் முகநூலில் போட்டிருக்கிறார் என்றால்  பாருங்களேன்! என் நிறம்கூட கொஞ்சம் மேருகேறியிருக்கிருக்கிறது.

    therunaai

    நன்கு உணவு கிடைப்பதால் தெருவெங்கும் சுற்றி அலைந்த களைப்பு தீர,  என்னால் சிறிது தூங்கி, சிந்திக்கக்கூட முடிகிறது.  அப்படிச் சிந்தித்தபோது என் முன்னோர் நாய் மேற்கொண்டு சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.  அதை நான் சொல்லுகிறேன், கேளுங்களேன்!

    .பஞ்சபாண்டவர்கள், பாஞ்சாலியுடன் எப்படி சொர்க்கத்திற்குச் சென்றார்கள், கடைசியில் தர்மபுத்திரரும், என் முன்னோர் நாயும்தானே மிஞ்சினார்கள் தர்மபுத்திரர் தேவேந்திரனின் இரத்தத்தில் செல்ல முடிவு செய்து அதில் ஏறிக்கொண்டார்.  இரதமும் சொர்க்கம் சென்றது என்று முன்பே சொல்லி இருக்கிறேன்.  அதற்குப் பின்னால் என்ன ஆயிற்று என்று இப்பொழுது சொல்கிறேன்

    சொர்க்கம் நெருங்க நெருங்க தர்மபுத்திரருக்கு ஒரே உற்சாகம்.  தன் தம்பிகளையும், பாஞ்சாலியையும் அங்கு சந்திக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, அவர்களுடன் என்ன பேசவேண்டும், தங்களைத் தொடர்ந்துவந்த என் முன்னோர் நாய் தனது தந்தையான எமதர்மன்தான் என்று அவர்களிடம் சொல்லி, அவர்கள் முகம் எப்படி மாறப் போகிறது என்பதைக் காணவேண்டும் என்று பலவிதமான எண்ண அலைகளில் மூழ்கினார்.

    மேலும், சொர்க்கம் எப்படி இருக்கும், அது பூவுலகம் மாதிரி இருக்குமா, கதைகளில் வர்ணித்தவண்ணம் இருக்குமா, அல்லது எதிரே பார்க்காதவகையில் தன்னை வியப்பில் ஆழ்த்துமா என்று சிந்தித்துத் தனது மனதில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார், எதற்குமே பரபரப்பு அடையாத தர்மபுத்திரர்.

    கடைசியில் சொர்க்கமும் வந்து சேர்ந்தது.  சொர்க்க வாசல் கதவும் திறந்தது.VLUU L200  / Samsung L200

    அங்கு கண்ட காட்சி தர்மபுத்திரரைத் திகைக்க வைத்தது.

    துரியன் விதம்விதமான, இதுவரை அவர் பார்த்தே இராத, கண்ணைப்பறிக்கும் புத்தாடையை அணிந்திருந்தான்.  ஆடையில் முத்தும், மணியும், மரகதமும், வைரமும், வைடுரியமும், பதிக்கப்பட்டு, தங்க இழைகளும் ஊடாடப்பட்டு இருந்ததால், அவனை ஒரும் ஒளிரும் தெய்வமாகவே காட்டியது.

    தர்மபுத்திரரால் தனது கண்களையே நம்பமுடியவில்லை.

    எனவே, கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு மீண்டும் பார்த்தார்.  அங்கு அழகிய, பொன்னாலான அரியணையில் அமர்ந்திருந்தான் துரியனேதான்.  அவனுக்கு அடுத்த அரியணையில், அட்டணக்கால் போட்டு அமர்ந்து, அட்டகாசமாய்ச் சிரித்துக்கொண்டு இருந்ததும் அவனது இளையோன் துச்சாதனன்தான்.  அடிக்கடி மீசையைவேறு நீவி விட்டுக்கொண்டிருந்தான்.

    தருமரை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை.  தங்கள் பேச்சே அவர்களுக்குப் பெரிதாக இருந்தது.

    தர்மருக்குத் தலை சுற்றியது.

    “அதர்மிகளான, அதர்மத்திற்கே ஆசான்களான, அதற்கு இலக்கணம் வகுத்த இவர்கள் சொர்க்கத்தில் நுழைந்தவுடனே கண்ணில் தென்படுகிரார்களே!” என்று கவலையுற்றார்.

    “ஒருவேளை இது நரகமோ?  நரகமே இப்படி இருந்தால், சொர்க்கம் எப்படிச் சிறப்பாக இருக்கும்!” என்று எண்ணிப்பார்த்து அவர் மனம் வியப்படைந்தது.

    “சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாமல் தேவேந்திரன் தன்னை எதற்கு நரகத்திற்கு அழைத்துவந்திருக்கிறார்?” என்று எண்ணிய தருமர், “விண்ணவர் கோனே!  இது எந்த இடம், சொர்க்கமா, நரகமா?” என்று வினவினார்.

    அவரை வியப்புடன் நோக்கிய தேவேந்திரர், “தருமபுத்திரா!  ஏன் இந்தக் கேள்வி?  நரகத்தின் நாயகன் உனது தந்தையான எமதருமன்தான்!  எமக்கு அங்கு செல்ல அனுமதி இல்லை.  அளப்பிலா இன்பத்தையே நல்கும் எனது சொர்க்கத்தை விடுத்து, உன்னை நரகத்திற்கு ஏன் அழைத்துவரப் போகிறேன்?” என்று சிறிது சினங்கலந்த குரலில் கேட்டார்.

    “துரியனும், அவனது இளையோனும் இங்கு இருக்கிறார்களே, தேவேந்திரரே!”

    “அவர்கள் போரிட்டு மடிந்தார்கள் அல்லவா!  எனவே அவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைத்திருக்கிறது!” என்ற விடை வந்தது.

    “இருப்பினும்…” என்று இழுத்தார் தர்மர்.

    ஏன் என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார் தேவேந்திரன்.

    “அவர்கள் முறையற்ற விதத்தில் போர்செய்தார்களே!”

    “அவர்கள் அடைந்தது மரணம் வீர மரணம்தானே!  அதற்குரிய நற்பலன் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது!”

    வாயை மூடிக்கொண்டார் தருமபுத்திரர்.

    திருதராடிரனின் மைந்தர்களான கௌரவர்கள் நூறு பேரும் சொர்க்கத்தில், சுகத்தை அனுபத்துக்கொண்டு, ஆனந்தம் காண்பது அவருக்குக் குழப்பமாகவே இருந்தது.  சகுனிகூட அங்கு காணப்பட்டான்.  ஆயினும் கர்ணன் அங்கு காணப்படவில்லை.

    எனவே, தேவேந்திரனிடம் வினவினார் தர்மர்.  “விண்ணவர் கோனே!  வீரமரணம் அடைந்தவர்கள் என்று சொல்லப்பட்ட கௌரவர்கள் அனைவரையும் இங்கு காண்கிறேன்.  ஆயினும், அவர்கள் பக்கம் கடைசிவரை நின்ற — வீரத்தில் நிகரற்ற என் தமையன் — கதிரவனின் மகனான கர்ணன் இங்கு இல்லையே, ஏன்?”

    “அவன் கௌரவர்களைப் போன்று ஒரு கொள்கைக்காக, சத்திரிய நெறிக்காகவா போரிட்டு மடிந்தான்?  அருச்சுனன் மேல்கொண்ட வெறுப்பினால் எண்ணற்ற தவறுகளை, அறமில்லாச் செயல்களை அல்லவா செய்தான்! அவன் கொடுத்த தைரியத்தில்தானே துரியன் அடாத செய்கைகளைச் செய்ய முனைந்தான்!  அதுமட்டுமா!  தீயில் உதித்த பாஞ்சாலியை வேசி என்றும், அவள் துகிலை உரியவேண்டும் என்று துரியனைத் தூண்டியதும், துரியனை தீநெறிக்குச் செல்ல வழிவகுத்ததும் அவன்தானே! தவறு செய்பவனைவிட தவறு செய்யத் தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்!”  தேவேந்திரரிடமிருந்து வெடித்துச் சிதறின சொற்கள்.

    “என் இளையோர்களான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், எங்கள் மனைவியான பாஞ்சாலி – இவர்கள் எங்கே?  அவர்களை நான் பார்க்கவேண்டும்!”  தருமரின் குரலில் இருந்த அழுத்தம் தேவேந்திரரையே ஒருகணம் அதிரச் செய்தது.

    தருமரை ஏறஇறங்கப் பார்த்துக்கொண்டே, “அவர்கள் இங்கு இல்லை!” என்று மெதுவாகக் கூறினார் தேவேந்திரர்.

    “இல்லையா?  பின் எங்கே?”  தருமர் குரலில் சிறிது உஷ்ணம் இருந்தது.  “எனக்கு உடனே தெரிந்தாகவேண்டும்!”

    “அவர்களுக்கு இப்போது இங்கு இடமில்லை, தர்மா!  உனக்குத்தான் இங்கு முழு இடம்!  இங்கு இருக்கும் எல்லா சுகபோகங்களையும் நீ அனுபவித்துக்கொண்டு காலங்காலமாக இங்கு இருக்கத் தடையில்லை!”

    “மழுப்பல் வேண்டாம், விண்ணவர் கோனே!  அவர்கள் எங்கே என்று எனக்குத் தெரிந்தாகவேண்டும்!”

    தருமரின் கோபம் தேவேந்திரரையே திணற அடித்தது.

    மென்று விழுங்கிக்கொண்டு, “அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள்.  உன்னை அங்கு அழைத்துச்செல்ல எனக்கு அனுமதி இல்லை.” என்ற தேவேந்திரர் தலையைக் குனிந்துகொண்டார்.

    “அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை, விண்ணவர் கோனே!  நான் நரகத்தின் நாயகரான எமதர்மராஜனின் மகன்.  நீங்கள் சொல்லும் சமாதானத்தில் —  துரியனும் அவன் உடன்பிறப்புகளும் வீரமரணம் அடைந்ததால் வீரசொர்க்கம் அடையத் தக்கவர்கள், ஆனால் வீரத்தின் விளைநிலமான என் உடன்பிறப்புகள், மாவீரன் சாத்தகி முதலானோருக்கு வீரசொர்க்கம் இல்லை என்பதில் –- எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

    “போர் முடிந்ததும் என் அன்னை குந்தி தேவியார் என்னைக் கர்ணனுக்கும் நீத்தார் சடங்கு செய்யச்சொல்லி, அவன் எனக்குத் தமையன் என்பாதை விளக்கினார்.  என் நண்பர்கள், உடன்பிறப்புகள் இல்லாத சொர்க்கம் எனக்குத் தேவை இல்லை.  இது அறநெறி கொண்டு ஒழுகுவோர் ஏகும் சொர்க்கபுரி அல்ல.  என்னைபொருத்தவரை இது நரகமே. என் உடன்பிறப்புகளும், மனைவியும் இல்லாத இந்த சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம்.  அவர்கள் இருக்குமிடத்தைச் சொல்லி, அங்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்!  நான் இதுவரை பின்பற்றிய என் அறநெறியின்மீது ஆணை! என்னை யார் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல இயலுமோ, அவரை உடனே இங்கு தருவழையுங்கள்!”

    தருமரின் தாங்கொணாச் சினம் தேவேந்திரரையே நடுங்க வைத்தது.

    dharmar in hell hell 1

    அவர் ஒரு எமதூதனை சொர்க்கத்தின் வாசலுக்கு வரவழைத்து, தருமபுத்திரரை அவனுடன் அனுப்பி வைத்தார்.

    கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் அவனுடன் நடந்து சென்றார் தருமர்.

    இருண்ட ஒரு நிலப்பரப்பை அவர்கள் அடைந்தனர்.

    அங்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்ட, தலையில்லாத முண்டங்களும், அவற்றிலிருந்து பெருகி ஓடும் குருதி ஆறும் நிரம்பி இருந்தன. சித்திரவதைப்படும் ஜென்மங்களின் கூக்குரல் ஒலி காதுகளைக் கிழித்தது.  நிண நாற்றமும், முடை நாற்றமும் மூச்சை முட்டியது.  உயிருடன் இருக்கும் ஆடையற்ற மனிதர்களை — அவர்கள் கதறக் கத –, கூரிய பற்கள் உடைய — மனதினால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்குப் பயங்கரமான, கொள்ளிக்கண்களை உடைய பிராணிகள் கடித்துத் தின்றுகொண்டு இருந்தன.  கழுகுகளும், கோட்டங்களும், நரிகளும், ஓநாய்களும் இடும் ஓலம் அந்த இடமெல்லாம் எதிரொலித்தது.

    விசித்திரமான உடலையும், இறக்கைகளையும், ஒளிரும் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே தெரியும் உடலும் உள்ள ஜந்துகள் விர்,விர்ரென்று அங்குமிங்கும் இதயத்தை நடுங்கவைக்கும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு பறந்தன.  அவை அருகில் வரும்போது பிணவாடை வீசி, வயிற்றைப் புரட்டியது.

    வெப்பக்காற்றினால் உடலெங்கும் வேர்வை பெருகியது.

    hell 2

    “அண்ணா, அண்ணா!” என்றும், “தம்பி, தம்பி!” என்றும், “,ஐயனே, அறநெறியின் குலக்கொழுந்தே என்னவரே!!” என்றும் அவருக்கு மிகவும் பழக்கமான குரலில் பரிதாபமான ஓலங்கள் கேட்டான்.

    “யார்?”  அவரையும் அறியாமல் தருமரின் வாய் ஒலி எழுப்பியது.

    “நான்தான் அண்ணா பீமன்!”

    “நான் அருச்சுனன்!”

    “நான் நகுலன், இவன் சகாதேவன்!”

    “ஐயனே, நான்தான் உங்கள் பாஞ்சாலி!”

    “யுதிட்டிரா, நான்தான் கர்ணன்!”

    குரல்கள் சேர்ந்து ஒலித்தன.

    தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் தருமர்.

    மெல்ல எழுந்து, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

    hell 3

    ஒருவர் பின் ஒருவராக, அங்கு சிதறிக்கிடக்கும் பிணக் குவியல்களுக்கு நடுவிலிருந்து மெல்ல எழ ஆரம்பித்தனர் அறுவர்.  அங்கு சிந்திக் கிடக்கும் செங்குருதிச் சகதியில் பலமுறை வழுக்கி விழுந்து, எழுந்து நின்றனர்.

    அவர்களைக் கண்டு திகைத்து நின்றுவிட்டார் தருமர்.

    தான் அவர்களை முன்பு பார்த்தபோது இருந்த அழகு எங்கே, கம்பீரம் எங்கே, வீரம் எங்கே?  எலும்புக்கூட்டுக்குத் தோலைப் போர்த்தியது போல இருக்கும் இவர்களா தமது உடன்பிறப்புகள்?  அழகுக்கே இலக்கணமான பாஞ்சாலியா இவள்?  ஒரு தடவை கண்டாலே வாழ்நாள் முழுதும் கிறங்கவைக்கும் அழகுடைத்த இவளா இப்படி அவலட்சணமாக, ஒருமுறை பார்த்தாலே முகத்தைத் திருப்பிக்கொள்ளும் அளவுக்குக் கோரமாகக் காட்ச் அளிக்கிறாள்!

    இது நிஜமா, அல்லது தனது மனமே நரகத்தின் குழப்பத்தால் சித்துவிளையாட்டு விளையாடுகிறதா?

    தன்னுடன் வந்த எமதூதனைப்பார்த்து புருவத்தை உயர்த்தினார்.

    “தர்மப் பிரபுவே!  இவர்கள் உங்கள் அண்ணன், தம்பிகள், மனையாட்டிதான்!” என்று பணிவாகப் பதில் வந்தது.

    கல்லாய்ச் சமைந்து நின்றுவிட்டார் அவர்.

    “ஏன்?” பெரிதாக வெடித்தது அவர் குரல்.

    “இந்த அநீதியை நான் பொறுக்கமாட்டேன்.  நான் இதுவரை பின்பற்றிய அறநெறி உண்மை என்றால் – நல்லோர்கள் நற்கதி அடைவார்கள் என்பது உண்மை என்றால் – இங்கு இவர்கள் இப்படிப்பட்ட கொடிய நரகத்தில் உழலுவது அறநெறியே அல்ல!  என் வாழ்நாளில் நான் கடைப்பிடித்த தருமத்தின் மீது ஆணையிடுகிறேன்!  இந்த அநீதியைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி – எந்தக் கடவுளர்களாக இருந்தாலும் சரி – அவர்களுக்கு எமதர்மராஜனின் மகனான நான் ஒரு சாபத்தை…..”

    அவரது வாயைப் பொத்தியது ஒரு கரம்.

    yudhisthira_passes_the_test

    தருமர் தலையைத் திரும்பிப் பார்த்தால்….

    தேவேந்திரர் நின்றுகொண்டிருந்தார்.  அதுமட்டுமா?  தருமரின் தந்தை எமதர்மராஜன், சிவன், பிரம்மா, விஷ்ணு, மாருத், அஸ்வினி தேவதைகள், இன்னும் பல தேவர்களும், கடவுளர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.  கொடிய நரகம் மறைந்து, இனிய சொர்க்கம் தோன்றியது.

    “அறநெறியின் உறைவிடமான நீ இப்படிக் கோபம் கொண்டு சபித்தால், சொர்க்கம், நரகம் எல்லாம் அழிந்துபோய்விடும்.  மாந்தர்களின் அதர்மத்தைக் கட்டுப்படுத்த இயலாது போகும்.” என்று திருவாய் மலர்ந்து அருளினார் இறைவனான உருத்திரன்.  எமதர்மனை அவர் பொருட்செறிவுடன் பார்த்தவுடன், அவர் பேச ஆரம்பித்தார்.

    “மகனே தர்மா!  நீ இதுவரை கண்டது ஒரு மாயத் தோற்றமே!  உன் உடன்பிறப்புகளோ, மனைவியோ, உனக்காக அறத்தை நிலைநிறுத்தப் போரிட்ட எவருமோ நரகத்தில் இல்லை.  அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.”

    “பின் ஏன் தந்தையே, எனக்கு இப்படிப்பட்ட மாயத்தோற்றம் காண்பிக்கப்பட்டது?”

    “உனது ஆசானான துரோனாச்சரியாரை வீழ்த்த, நீ ஒரு பொய்த்தோற்றத்தைக் கற்பித்து மயங்கி நிற்கச் செய்தாய் அல்லவா!  அந்தப் பொய்த்தோற்றத்தை உருவாக்கியதற்காகவே உனக்கு முதலில் நரக வேதனையும், உன் உடன்பிறப்புகள், மனைவி, உற்றார்கள் நரகத்தில் உழளுவதுபோன்றதுமான ஒரு பொய்த்தோற்றம் காண்பிக்கப்பட்டது.

    “உன் உடன்பிறப்புகளும் அறநெறியை நிலைநிறுத்த, போர்நெறியை மீறினர்.  பாஞ்சாலியின் சபதத்தினால் பீமன் போர்நெறியை மீறி, துரியனின் தொடையைப் பிளந்து கொள்ள நேரிட்டது. எனவே சிறிது நேரம் அவர்களும் நரகத்தில் உழல நேரிட்டது.  இனி அவர்கள் சொர்கத்தில்தான் காலம் கழிப்பார்கள்.  வீர மரணம் அடைந்ததால் கௌரவர்கள் முதலில் சிலகாலம் சொர்க்கத்தில் இருந்துவிட்டுப் பின்னர் அவர்களின் தீச்செயல்களுக்காகக் கடும் நரகத்தில் நீண்டகாலம் வாடுவார்கள்.  .

    “ஒருவர் அதிகமாய்ச் செய்த நற்செயலுக்கோ, அல்லது தீச்செயலுக்கோ உள்ள பயனை அவர்கள் பிற்காலத்திலேதான் அனுபவிப்பார்கள்.  அறத்தை அதிகமாகச் செய்பவர்கள் வெய்யிலுக்குப்பின் நிழல் போல துன்பத்திற்குப்பின் நல்லின்பத்தையும், தீச்செயலுக்குத் துணைபோகிறவர்கள், தாம் செய்த சில நற்செயலுக்காக சிறிதுகாலம் இன்பம் துய்த்துவிட்டுப் பிறகு கொடுமையான நரகத்திலும் உழல்வார்கள். இதுவே அறநெறியின் விதியாகும்.

    “செல், மகனே, செல்!  சொர்க்கத்தில் உன்னை எதிர்நோக்குபவர்களுடன் இனிதுவாழச் செல்!” என்று ஆசி நல்கினார்.  இனிய இசை முழங்கியது…

    …”சனியனே!  நடு ராத்திரியில் ஏன் ஊளையிடுகிறாய்?”  என்ற ஆதட்டலைத் தொடர்ந்து ஒரு கல் என் மீது விழுந்தது.  துடித்து எழுந்தேன் நான்.

    போதும் சாமி, போதும்.  உங்களுக்கு சொர்க்கத்தைப்பற்றி கதை சொல்லிச் சொல்லி, கல்லெறி வாங்க முடியாது சாமி!  நான் கதை சொல்வது சிலர் காதில் ஊளையாகக் கேட்டால் அதற்கு நான் என்ன சாமி செய்ய முடியும்?  நான் இனி தூங்கினால் போலத்தான்!  ஆளை —  இல்லையில்லை, இந்த நாயை விடுங்கள் சாமி!  நான் என் பிழைப்பை பார்க்கப் போகிறேன்!”

    **************************************

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • எழுத்தாளர் எஸ்பொ காலமானார்

    எஸ். பொ. மீளாத் துயிலில்..!

    aspo

    புகழ்பெற்ற இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அவுஸ்ரேலியாவில் வசித்துவந்த எஸ். பொ. என அழைக்கப்படும்
    எஸ். பொன்னுத்துரை சிட்னியில் இன்று (26 – 11 – 2014 ) காலமானார்.

    ஐயகோ ஐயகோ

    உள்ளதைச் சொல்லும் உரத்த குரல் ஓய்ந்ததோ?
    கள்ளமற்ற வெள்ளை மனம் கரைந்து மறைந்ததோ
    வெள்ளமான தெள்ளு தமிழ்நடை நோய்க்கு வீழ்ந்ததோ
    அள்ளக்குறையா என்அன்புக் கடலில் அலையும் ஓய்ந்ததோ

    எஸ். பொ. 04 – 06 – 1932 -ல் யாழ்ப்பாணம் – நல்லூரில் பிறந்தவர்.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறீஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றவர்.
    இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டார்.

    நைஜீரியாவில் கல்லூரி ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றியவர்.
    மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர்.

    நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளில் ஆளுமைமிக்கவராக விளங்கினார்..
    சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பவர் என இலக்கியத்துறையில் கணிக்கப்பட்டவர்.
    இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடங்கியவர்.

    பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.

    ”வீ” – ”அவா” – ”ஆண்மை” ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ”தீ” – ”சடங்கு” – ”மாயினி” நாவல்களுட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
    இவரது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ”எஸ். பொ. கதைகள்” என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.

    இவரது சில சிறுகதைகளும் ”தீ” – ”சடங்கு” நாவல்களும் ”வரலாற்றில் வாழ்தல்” என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.

    சென்னையில் ‘மித்ர’ பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”குழலூது கின்றான் குளிர்மேக வண்ணன்,
    கழலதை கன்றுக்குக் காட்டி, -விழலுக்(கு)
    இறைக்கா தவன்இறை யாதவன் ராகம்,
    தரைக்கான கீதகோவிந் தம்’’….கிரேசி மோகன்….

    Share
  • எங்கே போகின்றோம் ?

    எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கின்றது. மனித வாழ்வு ஒரு புனித வாழ்வு. மனிதப் பிறவி ஒரு புனிதப் பிறவி. ” மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்றார் அப்பர் அவர்கள். ” மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் ” என்றார் சம்பந்தப் பெருமான். ” புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே ” எனத் தேவர்கள் கவலைப்பட்டுச் சொல்லுவதாக மணிவாசகப் பெருமான் கூறுகின்றார். இப்படியெல்லாம் சொல் லும் அளவுக்கு… இந்தப் புவியும், அதில் வாழும் மனிதவாழ்வும் போற்றப்படு கின்றது. அந்தப் போற்றுதலுக்கு ஏற்ப எமது வாழ்வு அமைகின்றதா? அந்தப் போற்றுதலுக்கு உரித்துடையவர்களாக இருக்கின்றோமா ?

    எங்கே போகின்றோம்? என்ன செய்கின்றோம்? என்ன சிந்திக்கின்றோம்? எதுவே ஒரு திட்டமில்லாது இருக்கின்றது. கண்டதே காட்சி!கொண்டதே கோலம்! என்று வாழ்கின்றோம். அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக இருக்கின்றோம். முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும்முடிச்சுப் போடமுயல்கின்றோம். கரும்பிருக்க இரும்பைக் கடித்துப் பார்க்கின்றோம். கனியிருக்கக் காய் கவர்ந்து உண்ணுகின்றோம்.

    சிங்கத்தைவிட்டுச் சிறுநரியைப் பிடிக்கின்றோம். எங்களுக்குப் புரியவில்லை! தெரியவில்லை! திகைப்பு ! ஒரே மலைப்பு !சாந்தியில்லை… சமாதானம் இல்லை… அன்பு ஒளிந்துகொண்டுவிட்டது. அறம் வெளியே வர மறுக்கிறது. அஹிம்சை ஹிம்சையாகி நிற்கிறது. மன்னிக்கும் இயல்பு மறந்தே விட்டது. கல்வி காசாகி விட்டது. குருபக்தி கருகியேவிட்டது. கல்விக் கூடங்கள் காசுக் கூடங்களாகி   விட்டன. பெரியவரைக் காண்பதே பெரிய விஷயமாகிவிட்டது. சின்னத்தனம் எங்கும் சிரித்து நிற்கிறது. மனத்தில் இருட்டு! வழியில் திருட்டு! பார்க்குமிடங்க ளெல்லாம் படுகுழிகள் மயம் ! எங்கே போகின்றோம் ?

    கோவில்கள் கட்டப்படுகின்றன. கும்பாவிஷேகங்கள், மண்டலாபிஷேகங்கள் நடக்கின்றன. இலட்சார்ச்சனை, கோடியார்ச்சனை, மகாயாகம், சாந்திஹோமம், சங்காபிஷேகம், திருவிழாக்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன..இவற்றால் பலன் உண்டா? பலன் வந்ததா? இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால்…எங்கள் வாழ்வில் “சமயம் சமயமாக இல்லாது போய்விட்டமையேயாகும்”. சமயத்தை நாங்கள் யாருமே சரிவர அறியவில்லை. சமயத்துக்கான மனப்பாங்கைச் சரியாக வளர்த்துக் கொள்ளவும் இல்லை. ஒருகணம் யோசித்தால்…சமய வாழ்வையே வாழவில்லை! ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்தானே? நாம் அப்படி நடக்கின்றோமா? உயர்வு, தாழ்வு, பதவி, அந்தஸ்து காட்டப்படுவது முறைதானா?

    “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்” என்று அப்பர்பாடிய அந்த அருள் வாக்கை மறந்துவிட்டோம். “கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என மணிவாசகர் கண்ணப்பரைப் போற்றிய அன்பினை உணரவும் காட்டவும் தவறிவிட்டோம்.”பட்ட கட்டையிற் பகற்குருடு போகுது ” என்ற தத்துவத்தின் தாத்பரியத்தையும் அறவே மறந்து விட்டோம்.

    விளைவு … சமயம் சமயமாக இல்லை. எங்கள் சமயவாழ்வு சமய வாழ்வாக இல்லை. உண்பது, உடுப்பது, உறங்குவது, உல்லாசமாக வாழ்வது சமயவாழ்வா? “ஆடையணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவ தில்லை—அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை.” தன்னல மறுப்பு சமயத்தின் உட்கிடை. பொதுநலம் ஓம்புதல் சமயத்தின் உன்ன தம்.

    நான் வாழ வேண்டும். எனது குடும்பம் வாழ வேண்டும். எனக்கு எல்லாம் வரவேண்டும். நானே பெரியவன். மற்றவன் எக்கேடு கெட்டாலும் அதைப்பற்றி எனக்கென்ன? பணம்..பதவி..அந்தஸ்து..மற்றவனைவிட எனக்கும் எனது       குடும்பத்துக்கும் மட்டுமே வந்துசேரவேண்டும். இதுதான் சிந்தனை. இதுதான்   இன்றைய வழிபாட்டில் காணப்படுகின்றது. இதுதான் இன்றைய மனிதனின் மனப்பாங்காகவும் இருக்கிறது.

    இதை எப்படிச் சமயவாழ்வு என்று எடுக்கலாம்? சம்பந்தரும் அப்பரும் யாருக்காக வாழ்ந்தார்கள்? இறைவனிடம் தமது சொந்த சுகத்துக்காக எதையும் கேட்டனரா? மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும். அப்படி வாழ்வதற்குக் கழுமலத்தில் பெண்ணின் நல்லாளொடு இருக்கின்ற எம்பெருமான் துணை நிற்பார். அந்தப் பெருமானை வழிபடுவோம் வாருங்கள் என அடியவர்களுக்கு வழிகாட்டி நின்றார். அப்பர் முதலானோர்… சமயவாழ்வு , சைவம் தழைக்கத் தமது வாழ்க்கையையே தியாகம் செய்து நின்றார்கள். முதன் மந்திரிப் பதவியியும் அதனால் வரும் ஆடம்பர வாழ்வும் வாய்த்திருந்தபோதும் அவற்றை உதறிவிடுகிறார் மணிவாசகப் பெருமான். பெரியபுராணம் காட்டும் அடியார்கள் தமக்காக வாழாத பெரியவர்கள். சந்தனமாக, மெழுகுவர்த்தியாக வாழ்ந்தவர்கள்.

    “கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும்வேண்டா விறலினர்” என்று அவர்களை எமக்கெல்லாம் அடையாளம் காட்டுகின்றார் சேக்கிழார் அவர்கள்.

    ஆலயம் என்பது ஆன்மா லயிக்கின்ற இடமாகும். எல்லா வற்றையும் மறந்து ஆன்மா இறைவனை நினைக்கும் இடமாகும். அங்கே லயிப்பு இருக்கிறதா? லயிப்பதில் எம் மனம் நாட்டம் கொள்கிறதா? ஆலயத்தில்தான் எத்தனை வாக்குவாதங்கள்? ஆலயத்தில்தான் எத்தனை அந்தஸ்துச் சண்டைகள்.. நீயா..நானா ..பெரியவன்! எனக்கா — உனக்கா இந்த ஆலயத்தில் முதல் மரியாதை? எனக்குப் பரிவட்டமா? அல்லது உனக்குப் பரிவட்டமா? சுவாமி புறப்படும் முன்னர் நீ தேங்காய் உடைப்பதா? நான் உடைப்பதா? என்று பலரது மண்டைகளே உடைபடுவதைக் காண்கின்றோம்! இவைகள் பொருந்தக் கூடியனவா? இதுதான் சமயவாழ்வா? நாம் எங்கே போகின்றோம்?

    வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் தேவை. நோக்கம் இல்லாத வாழ்வு அர்த்தமற்ற வாழ்வாகும். வாழ்வுக்கு அர்த்தம் ஊட்டி நிற்பதே சமயவாழ்வுதான். சமயத்தை ” மதம் ” என்ற பெயராலும் அழைக்கின்றோம். மனிதனிடம் காணப்ப டுகின்ற ’மதத்தை ‘ அகற்ற உதவுங் காரணத்தால்தான் இப்படி ஒருபெயர் சூட்டப்பட்டதோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் மதத்தை அகற்றுவதற்கு ஏற்பட்ட ஒரு அமைப்பானது…மனிதனிடம் மதத்தை ஊட்டுவதற்குக் காரணியாக்கப் பட்டுவிட்டது. மதவாதிகளால், மதவெறியர்களால் இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.

    சிலுவை யுத்தம், இந்து முஸ்லீம் கலவரம், பாபர்மசூதி விவகாரம், அயர்லாந்து இங்கிலாந்துப் பிரச்சினை யாவும் ..மதவெறிபிடித்தவர்களின் வெறியாட்டங்களையே காட்டிநிற்கின்றது. இது வரலாறாகி நிற்கின்றது. உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன. மதங்களின் சடங்குகள் ஆசாரங்கள் வேறுபட்டனவாக இருக்கலாம். ஆனால்… எந்தச் சமயமாவது; அநீதியை, அறம் அல்லாதவற்றை, ஒழுக்கத்துக்குப் புறம்பானவற்றைச் செய் என்று சொல்லுகிறதா என்றால் .. இல்லை என்றுதான் விடை வரும். “அன்புதான் இன்ப ஊற்று…அன்புதான் இதய ஜோதி…அன்புதான் அரவணைக்கும் தாரகமந்திரம் “.

    அன்பின் முக்கியத்துவத்தையே எல்லாச் சமயங்களும் வற்புறுத்துகின்றன. எங்கள் சைவமும் அன்பைப் போற்றுகின்றது.”அன்பும் சிவமும் இரண்டல்ல.அன்பும் சிவமும் ஒன்றே” என்பது எங்கள் சமயத்தின் பெருந்த த்துவமாகும். இறைவன் அன்பு வடிவானவன். அன்புடையார்க்கு ஆண்டவன் அருகில் வருவான். அருளைத் தருவான் என்று எங்கள் சமயமும், சமயப் பெரியோரும் கூறுகின்றனர். இன்று உலகத்தில் அருகிக் காணப்படுவது என்ன வென்றால்; அதுதான் “அன்பு “. மனித வாழ்வில் அன்புத்தேவை இல்லாமல் போய்விட்டது. அன்புக்காக ஏங்குவோர் அநேகர். அன்பைக் காட்டுவார் யார்? அவர்கள் அன்புக்காய் ஏங்குகிறார்கள்! அவர்களது தாகம்தான் தணிக்கப் படுவதாகவில்லை.

    ஏக்கம், ஏமாற்றம், மனக்கவலை, மலிந்துகிடக்கிறது. பாதுகாப்பு, அன்பு, காருண்யம், இரக்கம் ஒறுத்துவிட்டது. எங்கும் ஒரே அந்தகாரம், குழப்பம், பதட்டம், பேராசை, பொறாமை, முரட்டுத்தனம் மலிந்துவிட்டது. உலகாயதம் உருக்கொண்டுவிட்டது. உலகம் அதன் கைப்பொம்மையாகிவிட்டது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்து வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். மனித வாழ்வில் பல செளகரியங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் உண்மைதான்.

    ஆனால் மனித மனங்களில் மட்டுந்தான் செளகரியங்களோ செளஜன்யங் களோ ஏற்பட்டதாகத் தெரியவில்ல. வாய்ப்புகள், வசதிகள் மனதில் கூடக்கூட மனங்களில் நல்ல மாற்றங்களும் ஏற்படவேண்டும். ஆனால் மாறாக உள்ளது. விரிவடைய வேண்டிய மனங்கள் சுருங்கிவிட்டன. நேராக இருக்க வேண்டிய மனங்கள் கோணலாகிவிட்டன.மனங்களில் நிறைவு தோன்ற மறுக்கிறது.கிடை த்ததற்கு மேலாக இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் பேராசை கொள்ளு கிறது. மேலும் கிடைப்பதற்கு– அது ; என்ன வழியானாலும் பரவாயில்லை என்று எண்ணுகிறது. இதனால் செய்யக்கூடாததை எல்லாம் செய்கிறது. மனித மனத்தில் வெறி ஏற்பட்டுவிட்டது. வெறிவந்தால் அங்கே நெறி அழிந்துவிடும்.

    நெறி அழிந்தால் அங்கே முறை தவறிவிடும். முறை தவறிவிட்டால் வாழ்க்கை வாழ்க்கையாக அமையாது. இதனையே இன்று நாளாந்தம் காண்கின்றோம்.

    இறை நம்பிக்கை குறைந்து தனது செயற்பாடுகளில் முற்றும் முழுதான நம்பிக்கை வந்துவிட்டது. எனவே எதுவும் செய்து எதையும் பெறலாம் என்ற முனைப்பு ஏற்பட்டுவிட்டது. இராவணர்கள், சூரர்கள், ஹம்சர்கள், இரணியர்கள் மலிந்துவிட்டார்கள். யாரை யார் திருத்துவது? யாருடைய சொல்லை யார் யார் கேட்பது? இறைத் தியானம் கலைந்துவிட்டது. லெளகீகம் மேலோங்கிவிட்டது.

    “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதைமட்டும் பார்த்தவர்கள்…..”அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்பதை பார்க்க மறந்து விட்டனரோ அல்லது மறுத்துவிட்டனரோ தெரியவில்லை!

    போதைவஸ்து, பொருள்கடத்தல், இலஞ்சம், ஊழல், மோசடி இவற்றால் பணம் சம்பாதிப்பது இன்று சாதாரணமாகிவிட்டது. பணத்தைச் சம்பாதிக்க   வேண்டும். உலகாயத வாழ்வை வாழவேண்டும்.பாவமாவது! புண்ணியமாவது! கடவுளா? சாமியா? தானமா? தர்மமா? நீதியா? நியாயமா? உண்மையா? நேர்மையா? ….. எதைப் பற்றியும் எள்ளளவும் கவலையே இல்லை. பணம் பண்ணுவது ஒன்றே குறிக்கோள். முடிவில் காண்பது என்ன? விரக்தி! வேதனை! பயங்கரம்!

    பாரததேசத்திலே பல மகான்களும்,துறவிகளும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு நாங்கள் போகவேண்டும் என்பதில்லை. மனத்தளவிலே ஓரளவுக்காவது துறவுநிலை தேவைதானே? எங்கள் மனவெழுச்சிகள் மாற்றம் உறவேண்டும். மாற்றப்படவேண்டும்! எங்கள் சிந்தனைகள் செல்லும்திசை திருப்பப்படவேண்டும்.எங்களின் செயற்பாடுகளில் தூய்மை துலங்கிட வேண் டும். இவற்றுக்குச் சமயவாழ்வுதான் துணைபுரியும்.சமய நெறிகள்தான் வழி காட்டும். இறையுணர்வுதான் நல்வழி இட்டுச்செல்லும்.

    கோவில்கள் சோழர்காலத்தில் சமூக நிறுவனங்களாக விளங்கின. ஆதுரர்சாலையாக, கலைக்கூடமாக, கல்விச்சாலையாக, நீதித்தலமாக, என்று பலநிலைகளில் விளங்கின.ஆன்மீகம் கலந்ததாக நீதி, ஆன்மீகம் கலந்ததாக கலைகள், ஆன்மீகம் கலந்ததாக பொருளாதார நடவடிக்கைகள் இருந்தன.

    அரசன் முதல் ஆண்டி வரை கோவிலையே நினைத்தார்கள். கோயிற்பணி செய்வதையே தமது வாழ்வின் பெரும்பயன் என எண்ணினார்கள். ஆண்டவனுக்குச் செய்யும் பணியே பெரியது என்று நினைத்தார்கள். கனவும் நினைவும் கோவில் பற்றியதும், ஆன்மீகம் பற்றியதுமாகவே இருந்தது. இதனால் சோழ சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து வளர்ந்தது. கலைகள் வளர்ந்தன. காவியம், ஓவியம், சிற்பம், கட்டிடம் யாவும் உன்னத நிலைக்கு வந்தன. திருமுறைகள் வகுக்கப்பட்டன. திருத்தொண்டர் புராணம் உருப்பெற்றது.

    இன்றோ எங்கள் கோவில்களில் உரிமைச் சண்டைகள் ஒருபுறம். நிர்வாகச் சண்டைகள் ஒருபுறம்.திருவிழாச் சண்டைகள் ஒருபுறம். அந்தஸ்துச் சண்டைகளும் ஒருபுறம். பூசைபண்ணுவதில் கூடச் சண்டைகள் நடக்கின்றன.

    இவையெல்லாம் தேவைதானா? கோவில்கள்…பிரச்சனைகளின் கூடமாகமாறி நீதிமன்றம் வரை சென்றுவிட்டதைக் காண்கின்றோம். ஒரு காலத்தில் நீதித் தலமாக விளங்கிய கோவில்கள் எங்களின் போக்கால் எள்ளிநகையாடும் விதத்திற்கு நிலைக்களனாகிவிட்டது.

    இதற்குக் காரணம் என்ன? எங்களது சிந்தனைகள் சமயச்சிந்தனைகளில் இருந்து வேறு நிலைக்குச்சென்றதும்… திருவிழாக்கள் களியாட்டமாக மாற் றப்பட்டதும்… அவசியமான காரியங்கள் கைவிடப்பட்டு ஆடம்பரங்கள் இடம் பிடித்துக்கொண்டதுமே ஆகும்.

    சமயச் சடங்குகள் முக்கியத்துவம் அற்றன என்றொரு மாயை ஏற்பட்டதும், சமயமே அர்த்தமற்றது என்ற நாத்திகவாதம் தலைதூக்கியதும், புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும்,வேதங்களுக்கும், ஆகமங்களுக்கும், வித்தியாசமான அர்த்தங்கள் கற்பித்து மக்கள் மத்தியில் விதைக்கப் பட்டமையுமேயாகும்.

    ராமகிருஷ்ணபரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி போன்ற வழிகாட்டிகள் இல்லாத நிலையுமாகும். யாவும் கொம்யூட்டர் மயமாகிவிட்டது. எங்கும் விஞ்ஞானம்.மெய்ஞ்ஞானம் வழிகாட்ட உகந்தது அல்ல என்ற வாதம் கவர்ச்சியாக அமைந்ததும் ஆகும்.ஆன்மீகத்தின் பெயரால் சமயத்தின் பெயரால் கடவுளின் பெயரால் பல போலிகள் நடத்தும் கபட நாடகங்கள் உண்மைச் சமயத்தின் உருவத்தைக் உருக்குலைத்துவிட்டது.

    சமயம் – அரசியல் லாபங்களுக்கு இடமாக்கப்பட்டது. அரசியல்வாதிகள் சமயத்தலைவர்களாக முற்பட்டனர். புனிதம் கெட்டது. தூய்மை அகன்றது. மக்களுக்கு…..பாதுகாப்பு – எது எனத்தெரியாத ஒரு நிலத்தோற்றம் பெற்றுவிட்டது. அரசியல் தலைவர்களா? ஆன்மீகத் தலைவர்களா? யார் உயர்ந்தவர்கள் / யார் உண்மையானவர்கள் ? என்னும் அளவுக்குச் சமயவாழ்வை அரசியல் வாழ்வும், ஆடம்பர வாழ்வும் … உருக்குலைத்துவிட்டன. மக்களும் கவர்ச்சிகளுக்குத் தங்களைப் பறிகொடுத்து விட்டனர். கவர்ச்சியினால் பகுத்தறிவும், பக்குவமும் மக்களைவிட்டு அகலத்தொடங்கிவிட்டது.பகுத்தறிவற்ற தன்மை… படாடோபத்துக்கே வழி சமைத்துவிட்டது. எங்கே போகிறோம் என்று தெரியாத ஒரு மயக்க நிலையைத் தோற்றுவித்துவிட்டது.

    இந்த மயக்க நிலையால் சுயநலமே மேலோங்கியது.பிறர்நலம் பேணல் என்பது மறக்கப்பட்டது. மற்றவர் துயர் துடைப்பது என்பது அவசியம் அற்றதாக ப்பட்டது. இறைபக்தி எள்ளி நகையாடப்பட்டது. கோவில் தரிசனமே பெரிதாகக் கொள்ளப்படாத ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் கண்டது என்ன? அமைதி குலைந்தது. சாந்தி நிலை தடுமாறுகிறது. அன்பு விலை ஏறிவிட்டது. அஹிம்சை யைப் பார்க்கவே முடியாது போய்விட்டது. குடும்ப உறவு சீரற்றதாகிவிட்டது. கல்விக்கூடங்களில் அமைதியில்லை.கலைகளில் காணப்பட்ட தெய்வீகத் தன்மை தரம் இறங்கிவிட்டது. வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது.

    இதனால் எங்கே போகிறோம் என்பதை அறியாது, உணராது, திட்டமிடாது போவதுபோலவே இருக்கின்றது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். ”குறிக்கோள் இலாது கெட்டேன்” என்னும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. எப்படியும் வாழலாம் என்ற நிலை மாற்றப்பட்டு, “இப்படித்தான் வாழவேண்டும்” என்னும் நிலை உருவாகவேண்டும். அதற்குச் சமயவாழ்வுதான் உகந்தது. எனவே…எங்கே போகிறோம் என்று உணர்ந்து தெளிந்து அறிந்து எங்கள் வாழ்க்கையை அமைக்கவேண்டும். அதுவே “மண்ணில் நல்லவண்ணம் வாழும் வாழ்வாகும்”. அதுவே “வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்வாகும். ” இதனை ஏற்படுத்தும் சக்தி இறைபக்தி யாகும். இறைபக்தியுடனான சமயவாழ்வை வாழ்ந்து எங்கள் குறிக்கோளை அடைவோமா?

    Share
  • ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    jay

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    (1847-1922)

     

    ‘இயற்கை அன்னை ஒரு பணியைப் புரிய வேண்டி இருந்தால், அதைச் செய்து முடிக்க ஓர் ஆக்க மேதையைப் படைக்கிறாள்!’

    ரால்ஃப் வால்டோ எமர்ஸன் (1803-1882)

    ‘மிஸ்டர் வாட்ஸன், இங்கே வாருங்கள், உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.”

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் படைத்த முதல் டெலிஃபோனில் நடந்த உரையாடல் (மார்ச் 10, 1876)

    ‘படைப்பு மேதைக்கு ஆக்க உணர்வு ஒரு சதவீதம்! வேர்க்கும் உழைப்பு தொன்னூற்றி ஒன்பது சதவீதம்!’ தாமஸ் ஆல்வா எடிஸன் (1847-1931)

    முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் தொழிற் புரட்சி மலர்ந்த போது, தகவல் தொடர்பு [Communication] வளர்ச்சி அடைய முப்பெரும் ஆக்க மேதைகள் மின்சாரம், மின்காந்த அலைகள் (Radio Waves) ஆகியவற்றைப் பயன்படுத்தி மெய்வருந்தி உழைத்தார்கள்! கம்பியின் மூலம் தகவல் தந்தி [Telegraph] அனுப்பும் முறையைச் செம்மைப் படுத்திப் பிறகு பெல் தயாரித்த தொலைபேசி அனுப்பியைச் சீர்ப்படுத்திய அமெரிக்க மேதை, தாமஸ் ஆல்வா எடிஸன். கம்பி வழியாக வாய்ப் பேச்சை அனுப்பி, பதிலையும் கேட்கும் தகுதியுள்ள தொலைபேசியை [Telephone] முதலில் படைத்த அடுத்த அமெரிக்க மேதை, அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். மூன்றாவது கம்பியில்லா தொடர்பைப் [Wireless Communication] படைத்த இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி. இருபதாம் நூற்றாண்டில் தொலைபேசித் தொடர்பும், கம்பியில்லாத் தொடர்பும், தொலைகாட்சித் தொடர்பும் பன்மடங்கு விருத்தியாகி, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாவிதத் தொடர்புகளும் கம்பியில்லா தொடர்புகளாய் மாறிக் கொண்டு வருகின்றன! பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடவுள் படைத்த உன்னத ஆக்கவினை யந்திர நிபுணர்களாய்க் கருதப் படுபவர்கள்: எடிஸன், பெல், மார்க்கோனி, ரைட் சகோதர்கள். அவர்கள் அனைவரும் வடஅமெரிக்க மண்ணில் ஆய்வுகள் நடத்தி, யந்திர யுகத்தை உலகத்தில் ஆலமர விழுதுகளாய்ப் பெருக்கியவர் என்று போற்றப்படுவர்கள். தந்தித் தகவல் தளவாடங்களை தாமஸ் எடிஸன் செம்மைப் படுத்தி வரும் போது, பெல் வாய்ச் சொற்களை நேரடியாக எவ்விதம் மின் சமிக்கையாக மாற்றிக் கம்பி வழியாக அனுப்பி அப்பால் காதில் கேட்பது என்ற ஆய்வுச் சோதனைகளில் மூழ்கி இருந்தார். 1861 இல் ஃபிலிப் ரெய்ஸ் ஜெர்மனியில் முதலில் பாதரஸ திரவத்தைத் [Mercury Liquid] தொடர்பு அனுப்பியில் [Transmitter] பயன்படுத்தி ஒரு தொலைபேசிச் சாதனத்தைப் படைத்தார். தாமஸ் எடிஸன் 1875 இல் தனது உதவிப் பொறியாளர் ஜேம்ஸ் ஆடம்ஸை ஜெர்மன் நிபுணரின் மாடலைப் பின்பற்றி ஒரு தொலைபேசியைத் தயாரிக்க ஏற்பாடு செய்தார்.

    முதல் தொலைபேசிக்கு அடித்தளமிட்ட நிபுணர்கள்

    1832 இல் அமெரிக்க மேதை சாமுவேல் மோர்ஸின் [Samuel Morse] புள்ளிக் குறியைப் [Morse Code (Dot & Dash)] பயன்படுத்தி விருத்தி செய்த தந்தித் தகவல் அனுப்பு முறை உலக நாடுகளில் 1844 ஆண்டு முதல் தொடர்ந்து உபயோகப் பட்டது. நேர்திசை மின்னோட்டத்தைப் [Direct Current] பயன்படுத்தி மின்காந்தச் சுற்றுக் கலன்களைக் [Electrical Solenoids] கொண்டு தந்தி அனுப்பு முறை ஏற்பாடுகள் தயாராயின. அதற்குப் பின்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிக் காலத்தில், மின்கம்பி மூலமாக நேரடிப் பேச்சில் தொடர்பு கொள்ளும் தொலைபேசி முறையைப் படைக்க நிபுணர்கள் போட்டி யிட்டனர். ஒலி அலைகளை எப்படி ஒப்பான மின்சாரத் துடிப்புகளாய் [Electric Pulses] மாற்றிக் கம்பியில் அனுப்பி, மீண்டும் ஒலி அலைகளாய்க் கேட்பது என்பதே அக்காலத்தில் சவாலாக இருந்தது!

    முதன்முதலில் 1861 இல் ஜெர்மன் மேதை ஃபிலிப் ரெய்ஸ் [Philips Gray] ஒலி அனுப்பிச் சாதனம் ஒன்றை அமைத்தார். ஒரு பெட்டிக்குள் இருக்கும் துளை ஒன்றின் மீது, இழுத்து மூடப்பட்ட தகடு ஒன்று வைக்கப் பட்டது. தகடின் பின்புறத்தில் பிளாட்டினத் தட்டு இணைப்பாகி யிருந்தது. பிளாட்டினத் தட்டு முன் புறத்தில் ஒரு பிளாட்டினக் கம்பியைத் தொடும்படி அல்லது நெருங்கும்படிப் பக்கத்தில் அமைப்பாகி யிருந்தது. ஒலிச்சக்தி அசைவுக் கேற்ப மெல்லிய தகடு அசையும் போது, பிளாட்டினத் தட்டு கம்பியைத் தொட்டும், தொடாமலும் மின்னோட்டத்தைக் கூட்டிக் குறைத்து மூலக் குரலுக்கு ஒப்பான ஒலியைக் கேட்கும்படி அனுப்புகிறது. பார்க்கப் போனால் ஃபிலிப்ஸ் ரெய்ஸின் சாதனம் மிக எளிதானது. இசை நாதங்களை அது அனுப்ப முடிந்தாலும், மனிதரின் சிக்கலான அதிர்வுகள் கொண்ட வாக்கு மொழிகளைச் செம்மையாக அனுப்புவதற்குத் தகுதி அற்றது. காரணம் அவர் அனுப்பியில் பயன்படுத்திய திரவம் அடர்த்தியான, ஒலி அதிர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்காத பாதரஸம்!

    அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரே காலத்தில் மூன்று படைப்பாளிகள் தொலைபேசியை ஆக்க முற்பட்டனர். 1871 ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலிய நிபுணர் அண்டோனியோ மியூச்சி [Antonio Meucci] ஒருவர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முயன்றவர் இருவர்: ஸ்காட்லண்டில் பிறந்து அமெரிக்கரான அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், அடுத்த அமெரிக்கர் எலிஸா கிரே [Elisha Gray (1835-1901)]. ஆனால் அவர்களில் வாய்ப் பேச்சை அனுப்பவும், காதில் கேட்கவும் பழக்கத்திற்குப் பயன்படும் தொலைபேசிச் சாதனத்தை முதலில் ஆக்கிப் பதிவு செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மட்டுமே! சிறப்பாக வேலை செய்த எலிஸா கிரேயின் சாதனம் ஒரே சமயத்தில் தயாரானாலும், யார் முதலில் படைத்தவர் என்ற வழக்குப் போட்டியில் பெல் ஒருவரே வெற்றி பெற்றார். அவரே தொலைபேசியின் முதல் படைப்பாளர் என்றும் உலகத்தில் கருதப் படுகிறார். தனது புதிய கருவியைப் பெல் விரைவில் வர்த்தகத் தொழிற்துறை உற்பத்திக்குப் பயன்படப் பதிவு உரிமை பெற்றார். ஆயினும் அவரது தொலைபேசிச் சாதனத்தில் ‘தகவல் வாங்கி ‘ [Receiver] மட்டுமே முறையாகப் பணியாற்றியது! பெல் ஆக்கிய தொலைபேசியில் செம்மையாக வாக்குச் சமிக்கைகளைத் ‘தகவல் அனுப்பி ‘ மூலம் [Transmitter] சரிவர அனுப்ப முடியவில்லை!

    தாமஸ் எடிஸன் செம்மைப் படுத்திய தகவல் அனுப்பி

    முதலில் படைக்கப் பட்ட தொலைபேசியில் சாதனப் பழுதுகள் மிகையாக இருந்தன.

    மென்மையான குரல் ஒலி அதிர்வுகள் சரிவரக் காதில் படாமலே மாய்ந்து போயின. பெல் தயாரித்த முதல் சாதனம் வெளிவந்த ஓராண்டுக்குப் பிறகு, 1878 இல் தாமஸ் ஆல்வா எடிஸனும், ஹென்றி ஹன்னிங்ஸ் [Henry Hunnings] என்பவரும் ‘கரித்துகள் தகவல் அனுப்பி ‘ [Carbon Granule Transmitter] என்னும் சிறப்பான ஒரு புதுவிதத் தகவல் அனுப்பியைத் தயாரித்தனர். ஒலிச்சக்தியின் அழுத்தப் பண்பைப் பயன்படுத்தி, கரித்துகள்களின் அடர்த்தியைக் கூட்டிக் குறைத்து, எடிஸன் ஒலி சமிக்கையின் தன்மையை மின்கம்பியில் அடுத்த முனைக்குத் தெளிவாக அனுப்ப முடிந்தது. கரி ஒரு சிறப்பான மின்சாரக் கடத்தி [Electrical Conductor] என்பது குறிப்பிடத் தக்கது. கரித்துகள்களை ஒரு கலனில் இட்டு அதன் அடர்த்தியை மிகையாக்கினால், மின்தடை குன்றிக் கம்பியில் மிகையான மின்னோட்டம் உண்டாகும். மாறாக கலனில் கரித்துகள்களின் அடர்த்தி தளர்ந்தால், மின்தடை கம்பியில் மிகுந்து, மின்னோட்டம் குறைகிறது. இந்த நியதியையே ஒலிச்சக்தி அனுப்புதற்கு எடிஸன் தனது அனுப்புச் சாதனத்தில் பயன்படுத்தினார்.

    நவீனத் தொடர்பு தகவல் அனுப்பியின் அமைப்பு

    தற்போதுள்ள தகவல் அனுப்பியில் அலுமினிய உலோகக் கலவைத் தகடு [Aluminium Alloy Diaphragm] ஒன்று குமிழ் வடிவான கரிக்கட்டியுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இந்த குமிழ்க் கரிக்கட்டி கரித்துகள் நிரம்பி இருக்கும் குழிந்த கரிக்கலன் ஒன்றின் உள்ளே அமைந்துள்ளது. இவ்விருக் கரி முனைகளும் (குமிழ்க் கரிக்கட்டி ஒரு முனை, குழிந்த கரிக்கலன் மறு முனை) மின்சாரக் கம்பியால் மற்ற மின்சாரச் சாதனங்களோடு இணைக்கப் பட்டுள்ளன. குரல் ஒலி உச்சரிப்புக்கு ஏற்ப எழும் காற்று அழுத்தத்தால் கரித்துகள்கள் நெருக்கப் பட்டோ அல்லது விடுவிக்கப் பட்டோ மின்தடையை [Electrical Resistance] குறைத்துக் கூட்டுகிறது. அப்போது சுற்றில் மின்னோட்டம் ஒலி உச்சரிப்புக்கு ஏற்ப ஒப்புநிலையில் ஏறி, இறங்கி ஒரு முனையில் வாங்கும் வாக்கு ஒலி மறு முனையில் அதே முறையில் அனுப்பப் படுகிறது. பெல் முதலில் தயாரித்த காதுமுனைச் சாதனம் [Earpiece] ஒரு நிரந்தரக் காந்த சாதனமும் [Permanent Magnet], மின்காந்தச் சாதனம் [Electro Magnet] ஒன்றின் மீது இயங்கும் மற்றோர் இரும்புத் தகடும் கொண்டிருந்தது. தற்போதுள்ள நவீனத் தொடர்பு தகவல் வாங்கிகளில் அவ்வித அமைப்பே பயன்பட்டு வருகிறது.

    அடுத்த கட்டுரையில் தொலைபேசியைப் படைக்க அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் செய்த முயற்சிகளையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும், மற்ற படைப்புகளையும் காண்போம்.

    [கட்டுரை தொடரும்]

    தகவல்:

    1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

    2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

    3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

    4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

    5. Encyclopaedia of Britannica (1978)

    6. The Children ‘s Encyclopedia of Science (1985)

    7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

    8. The Living World of Science in Colour (1966)

    9. Britannica Concise Encyclopedia [2003]

    10 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

    11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனி (http://www.thinnai.com/science/sc0203022.html)  [பிப்ரவரி 2, 2002]

    *****************

    Share
  • காதல் நாற்பது (25) கனத்துப் போன மனது !

    jay

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    துயரில் கனத்த இதயத்தை

    தூக்கிச் சுமந்தேன் ஆண்டு தோறும் !

    துயருக்கு மேல் துயர் உற்றேன்

    உன் முகத்தை நான்

    காணும் வரை

    எனதினிய காதலனே !

    தொடுத்த ஆரத்தின் முத்துக்கள் போல்

    அடுத்தடுத்து இதயத் துடிப்பு

    இயல்பான

    இன்பம் எல்லா வற்றிலும்

    உடனெழும்

    நடன வேளையில் !

    கனத்துப் போன என் இதயத்தைக்

    கடவுள் கைதூக்கி விடும்வரை

    நம்பிக்கை உடைந்து

    வேதனையே மேலோங்கும் !

    என் இதயத்தை

    உன் கம்பீரத்தின் முன்பு

    அன்புடன் சமர்ப்பணம் செய்ய நீ

    அழைத்தாய் என்னை !

    உன்னிதயம்

    என்னருகிலே உள்ள போது,

    பின்னது மூழ்கிடும் தானாய்,

    விரைவாய்,

    ஒரு கனத்த பளுவாய்,

    விண்மீன் களுக்கும், நிறைவேறாத

    விதிக்கு மிடையே !

    ********************

    Poem -25

    Sonnets from the Potuguese

    By: Elizabeth Browing

    A heavy heart, Beloved, have I borne

    From year to year until I saw thy face,

    And sorrow after sorrow took the place

    Of all those natural joys as lightly worn

    As the stringed pearls, each lifted in its turn

    By a beating heart at dance-time. Hopes apace

    Were changed to long despairs, till God’s own grace

    Could scarcely lift above the world forlorn

    My heavy heart. Then thou didst bid me bring

    And let it drop adown thy calmly great

    Deep being! Fast it sinketh, as a thing

    Which its own nature doth precipitate,

    While thine doth close above it, mediating

    Betwixt the stars and the unaccomplished fate.

    **********

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “காப்பளிக்கும் கண்ணனின்று கன்னத்தில் வண்ணத்தின்
    தீப்பறக்கத் தோற்றம் தருகின்றான் ,-ஆப்பிரிக்க
    GOATSதோலைப் போர்த்தியக் COWஅவன் கால்கவ்வ;
    GODSMUSTBE க்ரேசி கரெக்ட்”…கிரேசி மோகன் ….

    Share
  • இரா நடராசன் படைப்புலகத்தினுள்……

    எஸ் வி வேணுகோபாலன் 

     

    பேச்சு மொழியாகவே எதிரொலிக்கும் எழுத்து மொழி!

     

    ஓங்கி மண்டையில் அறைந்தாற்போல் நம்மை உலுக்கி எடுக்காத புத்தகத்தை 

    எதற்கு வாசிப்பானேன்…… 

    காஃப்கா 

     

    ணையாழி இலக்கிய இதழின் நீண்ட கால வாசகர்களில் ஒருவனான என்னை, ’90களின் பிற்பகுதியின் வெளியான அந்தக் குறுநாவல் அப்படியே போட்டு உலுக்கி எடுத்தது…பேரதிர்ச்சியின் ஆழத்தில் திணறடித்தது….ஓர் இலக்கிய பிரதியில் சமூகத்தின் ஆன்மாவை இப்படி பளீரென்று சாட்டையடியாக எடுத்து வைக்க முடியும் சாத்தியம், வெளியே வர முடியாத எண்ணக் குமிழிகளுக்கிடையே ஆட்படுத்தியது. சம காலக்  கல்வி முறையின் பரிதாபத்தை, பள்ளிக்கூடங்களில் நிகழும் உடலியல்-உளவியல் வன்முறையை அதற்கு முன்னரும், பின்னரும் கூட வாசிக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அந்தக் குறுநாவலின் தளம் அதற்கு மேலும், அவற்றைவிட நுட்பமான கட்டமைப்பிலும், பேசப்படாத செய்திகளினூடும், புறக்கணிக்கப்படும் கோணங்களிலிலும் அமைந்திருந்தது. வாசித்துவிட்டு கீழே வைக்க முடியாத கனத்தை அதன் கதை உள்ளிறக்கியது என்றால், தப்ப முடியாத கேள்விகளையும் அது காற்றில் கலந்து சுவாசிக்க வைத்துவிட்டது. பல லட்சம் வாசகர்களை விம்மி விம்மி அழவைக்கப் போகும் “ஆயிஷா”வை வாசித்த முதல் தலைமுறை வாசகர்களில் ஒருவனின் அன்றைய இராப்பொழுது எப்படி கடந்து போனது என்பதை இப்போது விவரிக்க முடியாது.

     

    நவயுகத்தின் கட்டியக்காரன் இரா நடராசன்.  ஏதோ ஓர் அழகான கவிதை. சிலிர்க்க வைக்கும் சிறுகதை. சிந்திக்க வைக்கும் கட்டுரை. போற்றத் தக்க ஆய்வு நூல் என்று சொல்லிவிட்டு நகர முடியாத எழுத்துக்கள் அவருடையவை. மன்னிக்க முடியாத படைப்பாளிகள் வரிசை ஒன்றை மானசீகமாக வைத்திருக்கும் வாசகர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவஸ்தைக்குள்ளாக்கும் எழுத்துக்களை இடைவிடாது நெய்து கொண்டிருக்கும் நெசவாளிகளில் ஒருவர் நடராசன்.

     

    பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும். அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றை வாசித்த மாத்திரத்தில் எங்கெங்கோ தேடிப் பிடித்து அவரது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து (93605 47808), அவரோடு முதன்முதல் பேசிய அந்த உரையாடலை மறக்கமுடியாது. ஏன்யா எங்களை இப்படிக் கொல்றீங்க….நாங்க என்னதான் ஆகறது… என்பதாகத் தான் தொடங்கியது எனது புகார்ப்பட்டியல்! அத்தனை வித்தியாசமான தொகுப்பு அது.

     

    அந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவத்தில், வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எழுதப் பட்டிருந்தது. ஆயிஷா கதையே, அறிவியல் ஆசிரியை ஒருவர் தமது ஆய்வு நூலுக்கு எழுதும் முன்னுரை போன்ற வடிவத்தில் கொடுக்கப் பட்டிருக்கும். தலைப்புக் கதையான “மதி எனும் மனிதனின் மரணம் குறித்து”, பிரேத பரிசோதனை அறிக்கை எப்படி இருக்குமோ அந்தப் படிவத்தை நிரப்பிய பாணியில் கதையை அத்தனை நேர்த்தியாகச் சொல்லிச் செல்லும். பாலின மாற்றத்திற்குள்ளான மதியை ஏற்க முடியாத குடும்பம், துரத்தித் துரத்தி கொச்சை செய்து மகிழும் சமூகம், இறுதியில் குடும்ப கௌரவத்தைக் காக்க சோதிடனின் ஆலோசனைப்படி நிகழ்த்தப்படும் கொடூரக் கொலை என்று பேசப்படும் செய்திகளில் திருநங்கையர் பிரச்சனைகள் குறித்து முதலாவதாகப் பேசிய கதைகளில் ஒன்றாக அதிர வைத்த கதை அது. வனத்துறை அதிகாரிகளிடம் தனது நேர்மையான நடத்தையால் சிக்கிக் கொண்ட நரிக்குறவன், நீதிமன்றத்தில் முன்வைக்கும் சாட்சிய நடையில் பேசும் வேறொரு கதை, காடுகளில் இருந்து பூர்வகுடிகள் விரட்டப்படுவதன் வலியை உணரவைக்கும். சிறையிலிருந்து மகள் தாய்க்கு எழுதும் கடித நடையிலான கதை, குகைக் கோவிலுக்குள் இருந்தபடி சாதிய சமூகத்தின்மீது சாட்டையடி அடிக்கும் பறையடி சித்தன் கதை….என் விரியும் பெருவெளி அந்தத் தொகுப்பு.

     

    “ரோஸ்” புத்தகத்தை யாரோ நண்பருக்குக் கொடுத்துவிட்டேன் என்பதற்காக என்னிடம் என் மகள் போட்ட சண்டை எளிதில் மறக்க முடியாதது. சூரியசந்திரன் எழுப்பிய அருமையான கேள்விக்கு, நடராசன் புத்தகம் பேசுது இதழுக்கான நேர்காணலில் இப்படி பதில் சொல்லி இருந்தார்: “ஆயிஷா ஓர் ஆசிரியனின் சுய விமர்சனம் என்றால், ரோஸ், ஒரு தந்தையின் சுய விமர்சனம்!” கேள்விகள் எழுப்பும் குழந்தைப் பருவத்தின் தேடலைத் தூண்ட நேரமற்ற நடுத்தர நகர வாழ்க்கையில் ஒரு சிறுவன் ரோஸ் என்றால் என்ன என்ற தனது எளிய கேள்விக்குப் படும் அலைக்கழிப்பான ஒரே ஒரு நாள் நிகழ்வுகள் சமகால பரந்த வாசிப்புக்கான கதை.

     

    நடராசனின் புனைவு மிகுந்த வேலைப்பாடுகள் உடையதாக நிகழ்கிறது. கடலூரில் வசிப்பதால் ஆழிப் பேரலை குறித்த நேரடி அனுபவம், சுனாமியை அடித்தளமாகக் கொண்டு சாகசமிக்க ஒரு குறுநாவலை, சாரணர் இயக்கத்தைப் பெருமைப்படுத்தும் வண்ணம் எழுத வைத்தது. அவரது “நாகா” நாவல், சாரணிய இயக்கம் குறித்த அற்புதமான செய்திகள் பலவற்றை உட்கொண்டிருப்பது. சதுரங்க ஆட்டம் குறித்த  வரலாற்றுத் தரவுகள், சுவாரசியமான செய்திகள் போன்றவை அவருள் நிரம்பித் ததும்புகையில், “ஒரு தோழரும் மூன்று நண்பர்களும்” என்ற மிகவும் வித்தியாசமான கதை ஆகிறது! கண்பார்வை அற்றவர்கள் படிக்கும் வண்ணம் பிரெயில் மொழியிலும் அச்சிடப்பட்ட அவரது “பூஜ்யமாம் ஆண்டு” அசாத்திய வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றைக் குறித்த அசரவைக்கும் செய்திகளை எளிதாக முன்வைத்தது.

     

    சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டோரின் தவிப்புகளையும், ஒடுக்கப்பட்டோரின் குரல்களையும், கவனம் பெறவேண்டியவர்களது கண்ணீரையும் இலக்கியமாக்கும் புதுமைச் சித்தர் நடராசன். கல்விமுறையின் அராஜக வன்முறை குறித்த தாளமாட்டாத வேதனைகள் அவரது எழுத்தின்வழி கலகக் குரல்களாக வெளிப்படுவதைத் தொடர்ந்து காண முடியும்.

     

    நாளைய தலைமுறைகளுக்கான கொடையாகவே வெளிவந்திருக்கும் “இது யாருடைய வகுப்பறை” நூல்,  அவரது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் வேர்வையோடு, மாற்றுக் கல்விமுரைக்கான அவரது தாகத்தையும், நம்பிக்கைகளையும் ஆவேசப் படையலாகக் கொண்டிருப்பது. கல்வி முறையை வருணாசிரம முப்பட்டைக் கண்ணாடி வழியாகவும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் பின்புலத்திலும், தாராளமய காலத்தில் ஈவிரக்கமற்ற போட்டியின் பலிபீடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதன் வரைபடத்திலிருந்தும் பேசும் இந்த நூல், ஆரோக்கியமான கல்வி வெளி இருக்கவே செய்யும் நாடுகளையும் பெருமிதம் பொங்க எடுத்துக் காட்டுவது.  நமது சமூகத்தின் பேசுபொருளாகவே உருப்பெற வேண்டிய விவாதங்களை மாற்றுக் கல்விக்கான போராளிகள் ஆயுதங்களாக்கிக் கொள்ளமுடியும்.

     

    அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆழத்தில் உறைந்திருக்கும் ஆய்வாளர்களின் குருதியை, அவர்கள் எதிர்கொண்ட அவமதிப்புகளை, பேசப்படாது போன அவர்களது துயரக் கதைகளை, பறிமுதல் செய்யப்பட அவர்களது சுதந்திரத்தை, களவாடப் பட்ட அவர்களது உழைப்பை, நலம் கெட புழுதியில் வீசப்பட்ட அவர்களது அறிவுச் செல்வத்தை, இரா. நடராசன், மூதாதையருக்கான கடமை ஆற்றல் போன்ற பொறுப்புணர்வோடு வழங்கி இருக்கும் எழுத்துக்கள் அசாத்தியமானவை.

     

    அவரது வாசிப்பும், தேடலும், பன்முக அக்கறையும் எப்போதும் வியக்க வைப்பது. பாரதி புத்தகாலயத்தின் “புத்தகம் பேசுது” மாத இதழின் ஆசிரியராக அவரது பங்களிப்பு, தமிழ் வாசக உள்ளங்களைப் பரவசப்படுத்தவும், எட்டு திக்கும் சென்று இலக்கியச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்து பெருமைப்படுத்தவும், சலனப்படுத்தவுமாக அமைந்திருப்பதை வாசகர்கள் உணரமுடியும். வாசிப்பின் இன்பத்தை மகத்தான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து ஓயாது மேற்கோள் காட்டும் வற்றாத அருவி அவரது தலையங்கங்கள். “ஏகாதிபத்திய போர்வெறியர்களை சர்வதேச நீதிமன்றத்தின்முன் கொலையாளிகளாக நிறுத்துங்கள்” என்று துணிவோடு பேசிய ஹெரால்ட் பின்ட்டர் உள்ளிட்டோரின் நோபல் பரிசு ஏற்புரைகளை இரா.நடராசனின் எழுதுகோல் நமக்குப் பரிமாறி உணர்வூட்டியது.

     

    “விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகளுக்காக” பால சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கும் அவரை தமிழ் வாசகர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும் கொண்டாட முடியும். பெண் அறிவியலாளர்கள் குறித்த ஆயிஷாவின் கேள்வி அவரையும் துரத்தியதில் உலக பெண் விஞ்ஞானிகள் குறித்தும் எழுதியவர் அவர். கணிதம் குறித்த ஆர்வத்தை “மலர் அல்ஜீப்ரா” முன்வைத்தது. ஆயிஷா உள்ளிட்டு அவரது கதைகள் சில குறும்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. “ஆயிஷா ” தமிழில் லட்சம் பிரதிகளுக்கு மேல் மக்களைச் சென்றடைந்ததோடு, இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடையது.

     

    மிக அண்மையில் வந்திருக்கும் அவரது “டார்வின் ஸ்கூல்”, பரிணாம வளர்ச்சி குறித்த விஷயங்களை சிறுவர்கள் இலகுவாகச் சென்றடையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும் அரிய புனைவு.

     

    சில ஆண்டுகளுக்குமுன், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழின் ஆசிரியர் குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்ற கூட்டத்தில், குழந்தைகள் குறித்தும், கல்வி முறை பற்றியும் படக் காட்சிகளுடன் மிகுந்த தயாரிப்போடு வந்திருந்தார். பயணச் செலவு குறித்துக் கேட்கையில், தமக்கு உடனே தேவைப்படும் இயல்பியல் புத்தகம் ஒன்றை எப்படியாவது வாங்கி அனுப்புமாறு கேட்டுக் கொண்டு விடைபெற்றுச் சென்றார்.

     

    தனியார் கல்வி நிலையத்தின் புகழ் வாய்ந்த முதல்வராக இருந்தவண்ணம் அவரது அசாத்திய வாசிப்பும், எழுத்தாக்கமும் ஏற்படுத்தும் பிரமிப்பு, யாரிடத்தும் “எனக்கு நேரம் கிடைப்பதில்லை” என்று சொல்லவே கூச வைத்துவிடுகிறது. அவரது அயல்மொழி அலமாரி வசீகரமானது. சரளமான மொழியில் கவிதைகளைத் தொட்டுத் தொடங்கும் அவரது உரைகளின் வேகமும், ஆவேசமும் அவரது படைப்புலகத்தின் பேச்சு மொழியாக உருவெடுத்து விடுகிறது.

     

    இன்னுமின்னும் எங்களைத் திண்டாட விடுங்கள், அலைக்கழியுங்கள், ஆவேசம் கொள்ளச் செய்யுங்கள், வாளாவிருக்க விடாதீர்கள் என்றே கேட்டுக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது அவரை!

     

    **********************

    நன்றி: தீக்கதிர் – இலக்கியச் சோலை (நவம்பர் 24, 2014)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “பூவைக் குமிடத்தில் பொன்வைப்போன் வள்ளலென்றால்,
    பூவைக்கும் பாதத்தில் பிள்ளையை -நீவைத்தாய்;
    கர்ண மகாப்பிரபு கேசவ் கலக்கும்நீ
    வர்ண மகாப்பிரபு வே” 

    “எதிர்காத்(து) இருப்பவர்க்கு ஏமாற்றம் தந்து
    எதிர்காத்தாய் வீசும் எவர்க்கோ -மதில்மேலே
    பூனைக்கீ டாமிரெண்டும்; பிள்ளை அழைத்தாலோ
    தூணைப் பிளந்துதெய்வம் தொப்….

    குழந்தை தெய்வமும் கேசவ் கொண்டாடும் தெய்வமும்….
    நம் நலம் பேணும் தாயும் சேயும் நலம் ….
    “ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்திட
    கானில் பிறந்தமணி கண்டனே ,-ஞானமே,
    தாய்மோ கினியவள் தாளில் பசித்திராய்
    போய்வன் புலிப்பால் பருகு”….கிரேசி மோகன் ….

    ஓணம் -அரி , திருவாதிரை -அரன்
    கானில் -காட்டில்….

    Share