எஸ் வி வேணுகோபாலன்

images (1)

கொஞ்சம் நுங்கு
ஒரு தேக்கரண்டி கடல்
ஒரு விரற்கடை வானம்
ஒரே ஒரு கிள்ளு மலை
இரண்டே இரண்டு பூக்கள்
போதும் என்றது இயற்கை…
பறவைகள் தயாரித்து அருளின
குழந்தைமையை உலகுக்கு

உப்பும் மிளகுப்பொடியும்
மேசையில் காத்திருக்க
முள்ளுக் கரண்டிகளோடு
தயாராகிறது பெரியவர்கள் சமூகம்
மின் சூடேற்றியில்
வெப்பமூட்டி பரிமாறப்பட இருக்கும்
குறும்புத்தனங்களைக்
கொத்திப் புரட்டி மென்று தின்ன!

முன்னாள் குழந்தைகளுக்கும்
வருங்காலக் குழந்தைகளுக்கும் இடையே
போராடிக் கொண்டிருக்கின்றனர்
இந்நாள் குழந்தைகள்

கல்லடி படும் சிறகுகளோடும்
பிய்த்தெடுக்கப் படும் தோகையோடும்
உலுக்கி எடுக்கப்படும் பிடரி முடிகளோடும்
புறக்கணிக்கப்படும் கொஞ்சு மொழியோடும்
நம்மைக் கடந்து போகின்றனர்
குழந்தைகள்

மதிப்பெண் காயங்களில் அன்பு பூசவும்
வகுப்பறை வன்முறையின் சூட்டைத் தணிக்கவும்
கவனிக்கப்பட ஏங்கும் விழிகளில் முத்தமிடவும்
அத்துமீறல்களில் கலங்கிய உள்ளங்களைத் தேற்றவும்
மெல்லிதயங்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்
குழந்தைகள்….

கொண்டாட்டங்களில் இன்னும்
நம்பிக்கையோடு உலவும் அவர்களது உலகில்
பறக்கவிடுவோம் அன்பின் பதாகைகளை….

நன்றி ; தமிழ் இந்து

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.