Blog

  • குரங்கு செய்வதைப் பாருங்கள்

    குரங்கு செய்வதைப் பாருங்கள்

    குழந்தையின் பால்புட்டிக் காம்பை வைத்துக்கொண்டு இந்தக் குரங்கு செய்வதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ரங்கன் என்கிற ரங்கப்பா

    ரங்கன் என்கிற ரங்கப்பா

    பாஸ்கர்

    ரங்கனோடு சினிமா பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி வரும்போது அவன் என் தொடையைக் கிள்ளி, “பார்ரா” என்பான்.

    அவன் என்னோடு கோலி, கில்லி ஆடினவன். சிறு வயது முதல் சிநேகம். எனக்குத் தெரிந்து டெர்லின் சட்டை போட்ட முதல் நண்பன். மூணு மாசம் பெரியவன். கோலி அடிக்கும்போது அவன் விரலை அழுத்திச் செலுத்தும் வேகம் ஆர்யபட்டா தான். எதிர்கோலி எகிறி விழும். அது கலர் கலராய் சுழன்று ஓடுவதைப் பார்ப்பது ஆனந்தம்.

    மஹா ரசிகன்.. எனக்கு சினிமா ரசனயை ஊட்டிய பலருள் இவனும் ஒருவன். கபாலி காமதேனுவில் இவனுக்கு எல்லாம் அத்துப்படி. கும்பலில் புகுந்து இவன் டிக்கெட் வாங்கி வரும் போது, எனக்கு இவன் சிவாஜியை விடப் பெரிதாய்த் தெரிந்தான்.

    கருட மூக்கு. படிப்பில் கெட்டி. என்னவோ என் மேல் அவனுக்கு ஒரு அன்பு. கூடவே வைத்துக்கொள்வான் ஒரு தளபதி போல். ஒரு நாள் எனக்கு ஜுரம் வந்த போது பக்கத்திலேயே இருந்தான். எனக்கு நட்பு தாண்டி ஒரு மரியாதை வந்துவிட்டது.

    பத்தாம் வகுப்பில் இடம் மாறும்போது அவன் நகர்ந்து போனான். மைதானத்தில், தெருவில் என எங்குப் பார்த்தாலும் சுவாரஸ்யம் இல்லாமல் பேசினான். ஒரு நாள் அவன் குடும்பம் காலி செய்த போது கழிப்பறைக்குள் சென்று அழுதேன். வெளியே வந்த போது அவன் வீட்டில் யாரும் இல்லை.

    ஞாயிறு அன்று அபிச்வரியில் அதே கருட மூக்கைப் பார்த்தபோது கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது. இது மூன்றாம் வருடமாம். ஒருவேளை நான் பக்கத்தில் இருந்து, டேய், புனர்ஜன்மம் கணேசனைப் பத்மினி அடிக்கற காட்சி எனச் சொல்லி, தொடையைக் கிள்ளியிருந்தால் அவன் எழுந்துகொண்டிருப்பான்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(405)

    குறளின் கதிர்களாய்…(405)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(405)

    அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்
    நண்பென்னும் நாடாச் சிறப்பு.

    -திருக்குறள் -74(அன்புடைமை)

    புதுக் கவிதையில்…

    அடுத்தவரிடம் காட்டும் அன்பு
    அனைவரையும் விரும்ம்பும்
    ஆர்வத்தை உருவாக்கும்..
    அதுவே
    அறிந்து நட்பாகிடும்
    அருஞ்சிறப்பையும் தந்திடுமே…!

    குறும்பாவில்…

    அனைவரையும் விரும்பும்
    ஆர்வத்தை உருவாக்கும் அன்பதுவே
    நட்பெனும் சிறப்பையும் தருமே…!

    மரபுக் கவிதையில்…

    அடுத்தவர் தம்மிடம் வெறுப்பகற்றி
    அவரிடம் விருப்பொடு பழகுமார்வம்
    கொடுத்திடும் அன்பெனு மரும்பண்பே
    கூடியே வாழவும் வைத்திடுமே,
    தடுத்திடா உறவதால் தான்தருமே
    தரணியில் நட்பெனும் நல்லறமே,
    அடுத்ததால் வந்திடும் சிறப்பதுவே
    அகிலமும் அன்பினா லிணைந்திடுமே…!

    லிமரைக்கூ…

    அடுத்தவருடன் பழகுமார்வம் தருமே,
    அன்பதுவே நட்பெனும் நல்லறம் தருவதால்
    சிறப்பெல்லாம் சேர்ந்தே வருமே…!

    கிராமிய பாணியில்…

    அன்புகாட்டணும் அன்புகாட்டணும்
    அடுத்தவங்ககிட்ட அன்புகாட்டணும்,
    பகமயில்லாம நட்புவளர
    அன்புகாட்டணும் அன்புகாட்டணும்..

    அன்பானது
    அடுத்தவங்ககிட்ட பழகிற
    ஆர்வத்தக் குடுக்குமே,
    அதுனால
    அவுங்களோட நட்பாகிற
    செறப்பும் சேருமே..

    அதுனால
    அன்புகாட்டணும் அன்புகாட்டணும்
    அடுத்தவங்ககிட்ட அன்புகாட்டணும்,
    பகமயில்லாம நட்புவளர
    அன்புகாட்டணும் அன்புகாட்டணும்…!

    Share
  • திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க | நிர்மலா ராகவன்

    திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க | நிர்மலா ராகவன்

    திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய என்ன செய்ய வேண்டும்? சிக்கல்கள் எதனால் எழுகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது, தீர்ப்பது? மகிழ்ச்சியை, இனிமையைப் பெருக்குவது எப்படி? அனுபவங்கள் வாயிலாக ஆலோசனை வழங்குகிறார் நிர்மலா ராகவன். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழநி மலையில் குரங்கும் குட்டியும்

    பழநி மலையில் குரங்கும் குட்டியும்

    பழநி மலையில் கண்ட குரங்கும் குட்டியும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிவியல் கடிதம் – 2: புறஊதா ஒளியில் சிதையும் நெகிழி

    அறிவியல் கடிதம் – 2: புறஊதா ஒளியில் சிதையும் நெகிழி

    2. புறஊதா ஒளியில் சிதையும் நெகிழி

    அன்பிற்குரிய அறிவியல் ஆர்வலனுக்கு,

    காலை வணக்கம்.

    நெகிழிக் கழிவுகளால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக, எளிதில் சிதைவடையும் பாலிமர்களை (பலபடிகள்) உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பாலிலாக்டைடை (polylactide) அடிப்படையாகக் கொண்ட, எளிதில் சிதைவடையும் பாலிமர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த செய்தியைத் தான் இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறேன்.

    சிதைவடையக்கூடிய பாலிலாக்டைடு அல்லது பாலிலாக்டிக் அமிலம் (polylactic acid), கோப்பைகள், பைகள், மக்கும் மருத்துவச் சாதனங்கள், போன்றவற்றில் முக்கிய மூலப்பொருளாகத் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சோளம், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மற்றும் கரும்பு ஆகியவற்றில் உள்ள சர்க்கரை புளிக்கவைக்கப்பட்டு லாக்டிக் அமிலம் பெறப்படுகிறது. பின்னர், லாக்டிக் அமிலத்திலிருந்து குறுக்கப் பலபடியாக்கல் (Condensation polymerization) முறையில் பாலிலாக்டைடு தயாரிக்கப்படுகிறது.

    பாலிலாக்டைடினால் ஆக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, கழிவுகளாக வெளியேற்றிய பின்னர், அவற்றைத் தொழில்துறை உரமாக்கல் முறையில் (62°C வெப்பநிலையும், 60%-மேலான ஈரப்பதமும் தேவைப்படும்) சிதைக்கப்படுகிறது. எனினும், பாலிலாக்டைடு இயற்கைச் சூழல்களில் அதாவது, மண்ணில் அல்லது நீரில், குறிப்பாகக் கடல் நீரில் எளிதில் சிதைவடைவதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

    எனவே, இயற்கைச் சூழலில் பாலிலாக்டைடின் சிதைவுறும் தன்மையைக் கூட்டுவதற்காகச் சில உத்திகள் கையாளப்படுகின்றன. அதில் ஒன்று, லாக்டைடை (lactide) மற்ற மோனோமர் உடன் சேர்த்துப் பலபடியாக்கல் (polymerization) முறையில் தயாரிப்பதாகும். இவ்வாறாகப் பெறப்படும் பாலிமர்கள் எளிதில் நீராற்பகுப்புக்கு உட்பட்டுச் சிதையக்கூடும். இதனால் சூழ்நிலைக்குத் தீங்கு நேரிடாது.

    இங்கு மோனோமர் பற்றியும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதாவது, மோனோமர் என்பது பாலிமரில் இருக்கும் ஓர் அடிப்படைத் தொகுதி அல்லது மூலக்கூறு. உதாரணமாக, பாலித்தீன் எனப்படும் பாலிஎத்திலீன் நெகிழி, எண்ணற்ற எத்திலீன் மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதில் எத்திலீன் மூலக்கூறு தான் மோனோமர்.

    சரி, நான் சொல்ல வந்த செய்தி இதுதான்.

    பாத் பல்கலைக்கழக (University of Bath) விஞ்ஞானிகள் தற்போது புறஊதா ஒளியை மட்டுமே பயன்படுத்தி எளிதில் சிதைவடையும் நெகிழியினைத் தயாரித்துள்ளனர். பாலிலாக்டைடில் வெவ்வேறு அளவு சர்க்கரை மூலக்கூறுகளை (மோனோமர்) இணைப்பதன் மூலம் நெகிழியின் சிதைவுத்தன்மை அதிகரிப்பதை ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

    பலபடியாக்கல் முறையில் சாந்தேட் (xanthate) மற்றும் லாக்டைட் (lactide) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு பாலி(லாக்டைட்-கோ-சாந்தேட்) (poly(lactide-co-xanthate)) தயாரிக்கப்பட்டுள்ளது. பாலிலாக்டைடுடன் ஒப்பிடும்போது பாலி(லாக்டைட்-கோ-சாந்தேட்) புறஊதா ஒளியில் எளிதில் சிதைவடைகிறது. ஆய்வு முடிவுகளின்படி, புறஊதா ஒளியில் வைக்கப்பட்ட பாலி(லாக்டைட்-கோ-சாந்தேட்), 6 மணி நேரத்திற்குள் 40% சிதைவு அடைவது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால், இந்தப் பாலிமர் சிதைவடையும் வினை வழிமுறையைப் பற்றி இன்னும் விரிவாக ஆராய வேண்டும் என்கிறது இக்குழு.

    எனினும், கடல் நீர், மண் போன்ற இயற்கைச் சூழலில் பாலி(லாக்டைட்-கோ-சாந்தேட் எளிதில் மக்கும் தன்மையுடையதாக இருக்கும் என்று இக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் புதிய பாலிமரைத் தற்போதுள்ள நெகிழி உற்பத்திச் செயல்முறையின் மூலமே எளிதில் தயாரிக்க முடியுமாம். இதனால் தயாரிப்புச் செலவும் குறைவாகவே இருக்கும்.

    இப்படிக்கு
    கனிமவாசன்

    நாள்: ஜூன் 12, 2022

    Reference

    UV degradation of poly(lactic acid) materials through copolymerisation with a sugar-derived cyclic xanthate. C. Hardy, G. Kociok-Köhn, A. Buchard, Chemical Communications, 58 (2022) 5463.

    Share
  • காணாமல் போனவர்கள்

    காணாமல் போனவர்கள்

    பாஸ்கர்

    ஒவ்வொரு வருடமாக
    ஒன்றைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறேன்.

    சென்ற வருடம் வரை வந்த பூம்பூம் மாட்டுக்காரன்
    இப்போது வருவதில்லை.

    சின்ன பிராயத்தில்
    மலைப்பாம்பைச் சுற்றிய பிச்சைக்காரன்
    எங்கிருப்பான் எனத் தெரியவில்லை.

    திருவிழாவில் பயாஸ்கோப்பில்
    ஊமைப்படம் காட்டியவன்
    திரைக்குள் இருந்து வெளியே வரவில்லை.

    பல்லி மிட்டாய் தாத்தாவுக்கு
    அப்போதே வயது அறுபது.

    ராப்பிச்சை என்ற
    வர்க்கமே இப்போதில்லை.

    தரையைத் தட்டும் நேபாளி
    குச்சியோடு போனான்.

    இருட்டையும் வெளிச்சத்தையும்
    முழுங்கிக்கொண்டு
    நிற்கிறது மரம் .
    என்னைப் போல
    இவர்களையும் அது
    பார்த்துக்கொண்டு இருக்கிறது
    இன்றும்.

    Share
  • கனடாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்

    கனடாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்

    கனடாவில் என்னென்ன வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன? அங்கே வாழ்க்கைச் செலவு எவ்வளவு? கனடாவில் குடியேற எளிய வழி எது? 40 – 50 வயதுக்கு மேலானவர்களும் கனடாவில் குடிபெயர முடியுமா? விரிவாகப் பதில் அளிக்கிறார், கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அபார கருணா சிந்தும்

    அபார கருணா சிந்தும்

    மஹா பெரியவா குறித்து ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய ‘அபார கருணா சிந்தும்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு

    காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு

    இன்று மஹா அனுஷம். காஞ்சி மஹா பெரியவா அவர்களின் 129ஆவது பிறந்த நாள். இத்திருநாளில், ‘காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இதில் மஹா பெரியவா அவர்களின் கூர்மையும் தெளிவும் செறிவும் கொண்ட அரிய படங்களை மஹாபெரியவா தளத்திலிருந்து நன்றியுடன் பயன்படுத்தியுள்ளோம். 4K தரத்தில் அவரைக் கண்டு மகிழுங்கள். அன்பே சிவம்! அறமே தவம்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 17

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 17

    முனைவர் ச.சுப்பிரமணியன்

    பேராசிரியர் முனைவர் கு.திருமாறன் எழுதிய ‘மூன்றாவது கண்’ ஒரு நக்கீரப் பார்வை

    முன்னுரை

    செய்யுள், கட்டுரை, சிறுகதை, நாவல் என்னும் இலக்கியத்தின் பன்முகப் பரிமாணங்களில் என்னைக் கவர்ந்ததும் நான் விரும்புவதும் கவிதையாகிய செய்யுளே!. அதற்கு அடுத்தபடியாக நான் பெரிதும் விரும்புவது கட்டுரைகளே. இதற்குக் காரணம் மூவர். ஒருவர் பேரறிஞர் அண்ணா. அடுத்தவர் அறிஞர் மு.வ.. மூன்றாமவர் கலைஞர். கலைஞர் முந்தைய இருவரைப் போல மெத்தப் படித்தவர் அல்லர். ஆனால் அவர் அன்றைய முரசொலியில் எழுதிய கடிதங்கள் எல்லாம் பொருண்மையால் கருத்து வேறுபாட்டுக்கு உரியனவாயினும் கட்டுமானத்தால் தமிழ்க்கட்டுரை இலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. உரைநடையில் எழுதப்படுவனவெல்லாம் எப்படிச் சிறுகதை, நாவல் ஆகாவோ, அதுபோலவே கட்டுரையும் ஆகாது. கட்டுரை உரைநடையால் ஆனது. ஆனால் அது உரைநடையினும் வேறுபட்டது. அதனை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் இந்த மூவரும். இது என் பார்வை. இன்றையத் தமிழுலகில் ஏதும் தெரியாதவர்களின் துறையாகக் கவிதைத் துறை இருந்து வருகிறது. ஓரளவு தெரிந்தவர்கள் கூடக் கவனிக்காத துறையாகக் கட்டுரைத்துறை தனிமைப்பட்டுள்ளது. அந்தத் தனிமையைப் போக்கவந்த வல்லாளர் சிலருள் பேராசிரியர் கு.திருமாறனும் ஒருவர். அவர் எழுதிய ‘மூன்றாவது கண்’ என்னும் கட்டுரைத் தொகுப்பினைப் பற்றிய என் பார்வை இந்தக் கட்டுரையின் உள்ளடக்கமாக அமைகிறது. இது என் பார்வை. பார்வைகள் மாறுபடலாம்., மாறுபட வேண்டும்.

    கட்டுரை இலக்கியம்

    சிறுகதை, நாவல் முதலியன தவிர்த்துத், தன்வாழ்க்கை வரலாறு, பயணக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், உரை நூல்கள் முதலியனவெல்லாம் உரைநடையில் அமைந்தவையாகும். ஆனால் இவைகள் கட்டுரைகளே. கட்டுரை இலக்கியங்கள் அல்ல. இலக்கியக் கட்டுரை என்பது இலக்கியத்தைப் பற்றிய கட்டுரை. பழந்தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவரான நச்சினார்க்கினியர் பொருளதிகாரத்தில் கூறும் முதற்பொருள் அமைதியும் கருப்பொருள் அமைதியும் அகத்திணை, புறத்திணை முரணமைதியும் மிகச் சிறந்த இலக்கியக் கட்டுரைக் கூறுகள் அடங்கியனவாகும். அறிஞர் மு.வ. அவர்களின் நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணைச் செல்வம் முதலியன இந்தப் பகுப்பில் வரும்.

    ஆனால் கட்டுரை இலக்கியம் என்பது இலக்கியம் சார்ந்துதான் வரவேண்டும் என்பதில்லை. இலக்கியம் சார்ந்தும் வரலாம். வேறு எந்தப் பொருள் பற்றியும் அமையலாம். ஆனால் அது ஒரு சுவையான இலக்கியத்தைப் படித்த உணர்வினைத் தரவேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘வெள்ளை மாளிகையில்’ அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் கம்பர், இலக்கியச் சாறு, ஆய்வுக்கட்டுரைகள், மறைந்த தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள் அப்போலோ விண்வெளிப் பயணம் பற்றித் தினமணியில் எழுதிய கட்டுரைத் தொடரும் ‘ஏன் இந்த வியட்நாம் போர்?’ என்னும் படைப்பும் ‘ஆனந்தவிகடன் துணை ஆசிரியர் திரு. மதன் அவர்கள் எழுதிய ‘வந்தார்கள்! வென்றார்கள்! முதலியனவும், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த பொருண்மைகளை இலக்கியமாகப் படைத்துக் காட்ட முடியும் என்பதற்குச் சான்றுகள் ஆகும். அவசரநிலைக் காலத்தில் முரசொலி நாளிதழில் கலைஞர் எழுதிய கடிதங்கள் தமிழ்க்கட்டுரை இலக்கிய வரலாற்றில் தனித்த இடம் பெறுதற்குரியன. பரந்த படிப்பும் ஆழமான சிந்தனையும் எளிவந்த மொழியாளுமையும் தனித்தன்மையும் வல்லார்க்கே கட்டுரையை இலக்கியமாக வடித்தெடுக்க இயலும். வெற்றுத் தரவுகளும் புள்ளி விவரங்களும் நீர்த்துப் போன மேற்கோள்களும் கிழிந்து போன சான்றுகளும் ஒரு நல்ல பொருண்மையை இருட்டடிப்புச் செய்துவிடும். படைப்பில் ஈடுபாடும் தொண்டு மனப்பான்மையும் கொண்ட படைப்பாளன் ஒருவன் கையில் அவை ‘தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாத’ இலக்கியமாக உருவெடுக்கும்! அத்தகைய வல்லாளர்களுள் ஒருவரான பேராசிரியர் முனைவர் கு.திருமாறன் எழுதியதே ‘மூன்றாவது கண்’ என்னும் இந்த நூலாகும்.

    மூன்றாவது கண்

    ‘மூன்றாவது கண்’ என்னும் தலைப்புடைய கட்டுரை இந்த நூலின் முதற்கட்டுரையாக அமைந்திருக்கிறது. ஐம்புலன்களில் ஒன்றான புறக்கண்ணின்றும் வேறுபடுவது அகக்கண். முன்னது புறக்கண். இது அகக்கண். இந்த அகக்கண்ணைத்தான் ‘மூன்றாவது கண்’ என்கிறார் ஆசிரியர். இது சரியே. இதற்கான விளக்கத்தையே இந்தக் கட்டுரை முன்னெடுக்கிறது.

    ஒன்றினைப் புறக்கண்ணால் காணுகிறபோது அகக்கண் மற்றொன்றினைக் காணுகிறது. ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’ என்பது திருமந்திரம். இந்த ‘மூன்றாவது கண்’ பல பரிமாணங்களை உள்ளடக்கியது. சிவபெருமானுக்கு நெற்றிக் கண் உண்டு என்பதும் அது. ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு கண்ணென்ப’ என்றவிடத்துக் கண் என்பது புறக்கண்ணின்றும் வேறாகி நிற்பதை உணரலாம்.

    கற்றல் என்பது தொழிற்பெயர். காட்சி என்பதும் தொழிற்பெயர் நீட்சி என்பது போல. முன்னது நூல்களைக் கண்ணால் கற்பதற்கும் பின்னது மனத்தால் உணர்வதற்கும் உரியது. திருவள்ளுவர் கற்றலைப் பொருட்பாலிலும் காட்சியை அறத்துப்பால் துறவறத்திலும் மிகக் கவனமாகப் பதிவிடுவதை நூலாசிரியர் திருமாறன் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    ‘மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் ‘காட்சி’ என்னும் சொல்லை அடைமொழி தந்து பயன்படுத்தியுள்ளார். ‘புன்மையில் காட்சி’, ‘மாசறு காட்சி’, ‘கடனறி காட்சி’, ‘நடுக்கற்ற காட்சி’ முதலியன வள்ளுவத் தொடர்கள்.

    என்னும் பகுதி தரவுகளைத் தேடுவதில் ஆசிரியரின் தளரா உழைப்பைக் காட்டுகிறது. இனி உவமங்களையும் உருவகத்தையும் அகக்காட்சியாகப் பதிவு செய்யும் ஆசிரியர் அதனைக் காணும் புலமையை மூன்றாவது கண்ணாகவே கருதுகிறார். இது சரியே. முன்பே பதிவிட்ட வண்ணம் புறக்கண்கள் ஒன்றில் ஈடுபட்டிருக்கும்போது வேறொன்றினைக் காண முற்படும் பொறி மூன்றாவது கண்ணாகத்தானே இருக்க முடியும்? வானத்து விண்மீன்களைக் கோள்களாகவே புறக்கண் காண, மூன்றாவது கண்ணுடைய புலவனுக்கு அவை விண்மகள் மேனியில் எழுந்த கொப்புளங்களாகக் காட்சியளிக்கின்றன.

    “மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
    வறியராம் உரிமைகேட்டால்
    புண்மீதில் அம்பு பாய்ச்சும்
    புலையர் செல்வராம் இதைத்தன்
    கண்மீதில் பகலி லெல்லாம்
    கண்டு கண்டு அந்திக்குப் பின்
    விண்மீனாய்க் கொப்பளித்த
    விரிவானம் பாராய் தம்பி!”

    என்னும் பாவேந்தர் பெற்றிருந்த மூன்றாவது கண்ணைப் படம்பிடித்துக் காட்டுகிறார். ரோசாவிற்கு அவ்வண்ணம் வந்ததற்குக் காரணம் அதற்குக் களையெடுத்து நீர்பாய்ச்சி வளர்த்தெடுத்த உழைப்பாளர்களின் குருதியே என்னும் பாவேந்தரின் தற்குறிப்பேற்றத்தை மூன்றாவது கண்ணாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர். மூன்றாவது கண்ணும் முகத்துக்கண்களும் ஒன்றிணைந்து நோக்கினாலேயே ஒழிய எந்தக் கற்றலும் எந்தக் காட்சியும் பற்றாது, பதிவாகாது என்பதே இந்தக் கட்டுரையின் பொருட்சாரம் எனலாம்.

    உண்மையே உயர்நெறி

    ‘உண்மையே உயர்நெறி’ என்னுந் தலைப்பில் அமைந்த இரண்டாவது கட்டுரை உள்ளத்தின் தன்மையாகிய உண்மையின் இயல்பையும் சிறப்பினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் சொற்களுக்கிடையே நிலவும் நுண்ணிய பொருள் வேறுபாட்டினை நன்கு விளக்கி, உலகவழக்காகிய பழமொழிகளை இணைத்துக் கதம்பமாகக் கட்டியிருக்கும் சொல்லாரம் இது. திருக்குறள், மகாகவி பாரதி முதலியோர் கவிதை வரிகளை எடுத்துக்காட்டி உண்மையின் சிறப்பினை உணர்த்தியிருக்கும் பாங்கு அரிய பொருளை எளிமையாக விளக்கும் ஆசிரியரின் கட்டுரை வன்மைக்குச் சான்றாகத் திகழ்கிறது.

    சினம் தவிர்த்தல்

    திருவள்ளுவர் இருக்க வேண்டிய பண்புகளை உடைமையாக்கியும் இருக்கக் கூடாத பண்புகளை இயல்பாக்கியும் குறள் வடிப்பார். ‘அன்புடைமை’ என்பார். ‘அழுக்காறாமை’ என்பார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அனைத்திடங்களிலும் கேடு மட்டும் தருவது சினம். தன்னையே கொல்லும் சினம் என்னும் வள்ளுவத் தொடருக்குச்,

    “சினங்கொள்வார் தம்மைத்தாம் தீயாற் சுட்டுச்
    செத்திடுவார் ஒப்பாவார்., சினங்கொள்வார்தம்
    மனங்கொண்டு தம்கழுத்தைத் தாமே வெய்ய
    வாள்கொண்டு அறுத்திடுவார் மானு வாராம்”

    என்னும் பாரதியின் வரிகளை எடுத்துக்காட்டி விளக்கும் ஆசிரியர் இறுதியாகக் காட்டியிருக்கும் பெட்டிச் செய்தியில் அறிஞர் பொற்கோவின்,

    “ஒருவன் சினம் கொள்ளுவானானால் அந்தச் சினத்தினால் பாதிக்கப்படுபவரும் உண்டு. பாதிக்கப்படாதவரும் உண்டு. ஆனால் சினம் கொள்ளுகிற ஒருவனை அந்தச் சினம் தப்பாமல் தீமைக்கு உள்ளாக்கும்’ என்னும் விளக்கம் தெளிவோடு அமைந்திருக்கிறது.

    ‘இல்வாழ்வார்க்கு ஆயின் தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு ஆயின் அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம் ஆதலின் இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒருதலைப்பட்டு  நோக்கற்பாலதாய மனம் அது ஒழித்து, புறத்தே போந்து பல தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி அது தன்னையும் வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு வாய்மை முதல் கொல்லாமை ஈறாய நான்கு அதிகாரத்திற்கும் ஒக்கும்”

    என்னும் பரிமேலழகரின் விளக்கத்தால் கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்னும் ஐந்து அதிகாரங்களும் துறந்தார்க்குப் பொருந்துவதுபோல் இல்லறத்தார்க்குப் பொருந்தாது. அதனாலேயே அவற்றைக் கடைப்பிடிக்காது கைவிட வேண்டும் என்பது பொருளன்று. பிறரை வஞ்சிக்கக்கூடாது என்பதும் உள்ளத் தூய்மையும், சினம் கொள்ளாமையும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாமையும், உயிர்களைக் கொல்லாமையும் எல்லார்க்கும் பொது என்னும் கருத்தினை ஆசிரியர் திறம்பட விதந்தோதுவது ஏற்கத்தக்கதே.

    உயிர்களைப் பேணுதல்

    தாவரங்களுக்கும் உயிருண்டு என்பது பாஸ்கரனின் அறிவியல் கண்டுபிடிப்பாகலாம். அது அறிவுப்பூர்வமான ஆய்வு முடிவு. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது’ வள்ளலார் உள்ளம். இது உணர்வுப் பூர்வமானது. அவர்வழி வந்த மகாகவி ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்று குழந்தைகளுக்குப் பாடிக் ‘காக்கைக் குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்னும் அனைத்துயிர்களையும் ஒன்றாகக் கருதியதைக் காணலாம். தமிழிலக்கியத்தில் சடாயுவாகிய பறவையையும் அனுமன் மற்றும் ஜாம்பாவான் ஆகிய விலங்குகளையும் மனிதநேயத்துடன் அணுகினான் இராமன் என்பது இடைக்காலப் புலவர் கம்பனின் சிந்தனை. இந்த நூலின் ஆசிரியர் திருமாறன் மனிதநேயக் கோட்பாட்டையும் உயிரிரக்கத்தையும் சங்க இலக்கியக் குறிப்பிலிருந்து காட்டுவது மிக மிகச் சிறப்பு.

    ‘அன்னை கூறினள் புன்னையது நலனே’ என்னும் நற்றிணை வரிகள் உயிர்களிடத்து அன்பு மட்டுமன்றி அவற்றை உறவாக்கிக் கொள்ளும் பழந்தமிழ்ப் பண்பாட்டை அருமையாகச் சுட்டியிருக்கிறார். ‘ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு யான் மணந்த ஞான்றே’ என்னும் குறுந்தொகை வரிகள் அஃறிணை உயிர்களை உயர்திணை மாந்தர்களாக எண்ணிச் சாட்சியாக வைத்த வரலாற்றைக் காட்டுகின்றன.

    நினைக்கப்படும்

    திருக்குறள் தொடரைத் (169) தலைப்பாகக் கொண்ட இந்தக் கட்டுரை, மறைவுக்குப் பின்னும் நினைக்கப்படுகிற மனிதர்களையும் நிகழ்ந்ததற்குப் பின்னும் நினைக்கப்படும் நிகழ்வுகளையும் சுருக்கமாகச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இப்பிறவியில் எந்தத் தவறும் செய்யாத கோவலனின் கேடு மாடலமறையோனால் நினைக்கப்பட்டது. செவ்வியான் கேடு நினைக்கப்பட்டதைப் பரிமேலழகரும் நினைத்திருக்கிறார்.

    பொருள் வைப்புழி

    பழந்தமிழ் இலக்கியத் தொடர்கள் பலவற்றைத் தலைப்புக்களாகக் கொண்டிலங்கும் இந்த நூலில் ‘பொருள் வைப்புழி’ என்பது திருக்குறள் தொடராகும். உடம்புக்கு வருவது நோய். உயிருக்கு வருவது பிணி. ‘பிறவிப்பிணி’ என்பது காண்க. உண்மையில் பசி என்பது உடல்நோவாக இருப்பினும் விளைவு நோக்கி அதனைப் பசிப்பிணி என்றனர். செல்வத்துப் பயனே ஈதல்!. புகழுக்கு ஈதலே தலையாய காரணம். திருக்குறளில் ஈகை என்னும் அதிகாரத்தை அடுத்துப் புகழ் என்னும் அதிகாரம் இல்லறவியலின் இறுதியதிகாரமாக வைக்கப்பட்டுள்ளது. பொருளின்றி ஈதல் இல்லை. இவற்றையெல்லாம் உறழ்ந்து நோக்கின் பிறர்தம் பசிப்பிணியைப் போக்குவதே பொருள் சேர்ப்பதன் நோக்கம் என்பது புலனாம். இந்தக் கருத்துக்களையெல்லாம் உட்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை,

    “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள் வைப்புழி” (226)

    என்னும் குறட்பாவை மையமிட்டு அமைந்திருக்கிறது. இனிச் ‘செவிக்குணவில்லாதபோழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதில் ‘ஈயப்படும்’ என்னும் சொல்லாடலின் அடிப்படையில் கல்வியளிப்பதும் அறிவுப் பசி போக்குவதே என்று எடுத்துரைக்கிறார். பவணந்தியார் கற்பித்தலை ‘‘ஈதல்’ என்பார். ‘ஈதல் இயல்பே இயம்பும் காலை’ என்பது நன்னூல். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதனால் ஈதல் என்பது அழிபசி தீர்த்தல் மேலாயிற்று என்பதை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். எனினும் அறியாமை போக்குவதே கல்வியன்றி அறிவுப்பசிக்குத் தீனி கல்வி என்பது அவ்வளவாகப் பொருந்துமாறில்லை.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    ‘எங்கெங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்பார் புலமைப்பித்தன். நிழல் தன்னை உருவாக்கும் பொருளைப் பிரியாது என்பது இயற்கை. நிழல் நீளுவதற்கும் சுருங்குவதற்கும் பொருட்பரிமாணத்துள்ளேயே அடங்குவதற்கும் பொருளே காரணம். ‘வீயாது அடியுறைந்தற்று’(208) என்பார் திருவள்ளுவர். அதுபோல ஒருவனின் உயர்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் அவனே காரணமன்றிப் பிறிதொருவர் காரணமாகார் என்பதை முன்னிறுத்தி அதற்காக இரண்டு வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டி இந்தக் கட்டுரையை அமைத்திருக்கிறார்.

    “நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
    நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
    மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும் தன்னைத்
    தலையாகச் செய்வானும் தான்” (நாலடி. 248)

    என்னும் பாடலுக்கு உரைபோல அமைந்த கட்டுரை இது.

    உண்டால் அம்ம இவ்வுலகம்!

    வழுதியின் தொடரைத் தலைப்பாகக் கொண்ட இந்தக் கட்டுரை புவியுள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பின்னும் வையகத்தார் மனத்துள் வாழும் மாபெரும் சான்றோர்களை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்னும் ஔவையின் மூதுரைக்கு விளக்கமாக அமைந்துள்ள இந்தக் கட்டுரையில்  ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதிகனையும் பகைநாடான பிரான்சுப் பகுதியில் சென்று தன்னலம் நோக்காத தொண்டு செய்த ஜெர்மனியின் ஆல்பர்ட் ஸ்வைட்சர் அவர்களையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது.

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    பன்னாட்டு மன்றத்தில் பேசும் இந்தியத் தலைவர்களுக்காகவே பூங்குன்றனாரால் எழுதப்பட்ட வரி இது. இந்தப் பாடலின் ஏனைய வரிகள் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட பெரும்பாலோருக்குத் தெரியாது. தெரிந்து வைத்திருக்கும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரை முன்வைத்து வாதம் செய்வது வாதமாகவே முடியும். பல கருத்துக்களைச் சொல்கிறார் பூங்குன்றனார். அத்தனைக் கருத்துக்களுக்கும்,

    “கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப்படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம்” (புறம். 192)

    என்னும் வாழ்வியல் உண்மையை அவர் உணர்ந்ததுதான் காரணம். இந்த வரி உட்பட பலவும் காரியமானால் ‘’திறவோர் காட்சியில் தெளிந்தமையே காரணமாகும்’. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற எண்ணம் ஏன் வரவேண்டும் என்பதற்கான விளக்கமே இந்தப் பாடல். புறநானூற்றின் இந்த வரியைத் தலைப்பாகக் கொண்டு அமைந்திருக்கும் இந்தக் கட்டுரையும் ஏனைய கட்டுரைகளைப் போலவே பல எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. அந்த எடுத்துக்காட்டுக்களுள் எல்லார்க்கும் தெரிந்த பழைய இலக்கிய வரிகளைவிட ஒரு சிலரே அறிந்த பாவேந்தர் வரிகள் மிக நுட்பமாகப் பொருத்தமாக எடுத்தாளப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியத்தைப் பாடுவதினின்றும் இந்தியத் தேசியத்தையும் இந்தியத் தேசியத்தைப் பாடுவதினின்று உலகத் தேசியத்தையும் பாடியவர் பாவேந்தர். பாரதியாரை ‘உலககவி’ என்பார் பாவேந்தர். அது அவருடைய கருத்து. உண்மையில் பாவேந்தரே உலககவி. இது நம் கருத்து. தனித்துவம் மிக்க இந்தக் கருத்தியல் அடிப்படையில் பாவேந்தரை இவர் அணுகியிருக்கிறார். ‘பாரதிதாசன் ஓர் உலககவி’ என்பது மிகப்பெரிய ஆய்வுக்களம்.

    “உன்வீடு உன் பக்கத்து வீட்டின்
    இடையில் வைத்த சுவரை இடித்து
    வீதிகள் இடையே திரையை விலக்கி
    நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
    ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
    ஏறு! விடாமல் ஏறு! மேன்மேல்
    ஏறி நின்று எங்கும் பாரடா இப்புவி மக்களை!
    பாரடா உன்றன் மானிடப் பரப்பை!
    பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
    என்குலம் என்று தன்னுடன் ஒட்டிய
    மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்!
    அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
    அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
    மானிட சமுத்திரம் நானென்று கூவு!”

    இரண்டு வீட்டிற்கும் இடையில் ‘வந்த சுவர்’ இல்லை. ‘வைத்த’ சுவர்’ என்கிறார். பாரதியார் நதிகளை இணைத்து வாணிகம் பாடினார். பாவேந்தரோ நாட்டொடு நாட்டையே இணைத்து ஓருலகச் சிந்தனையை முன்னெடுக்கிறார். என்குலம் என்று தன்னுடன் ஒட்டியது மானுடச் சமுதாயம் ஆதலின் பிறப்புச் சான்றுக்கு அடுத்தபடியாக மனிதகுல ஏற்புச் சான்றை இந்தச் சமுதாயமே கொடுக்கிறது. அறிவை விரிவு செய்வதன் மூலம் பார்வையை அகலமாக்கச் சொல்கிறார். உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்! புவியை நடத்து! பொதுவில் நடத்து! என்றெல்லாம் உலகம் பாடிய கவிஞன் பாரதிதாசன். சொல்லிக் கொண்டே போகலாம். தெரிந்த பாடலாயினும் இந்தப் பாடலைக் கண்டதும் தாய்வீட்டுக்கு வந்து தாயைப் பார்த்த மகளின் பூரிப்பு எனக்கு! உலகம் தழுவிய சிந்தனைக்குப் பாவேந்தர் வரிகளை எடுத்தாண்டிருப்பது குள்ள மனிதர்க்கும் கள்ள உள்ளங்களுக்கும் புரியாதது! அருமையான கட்டுரை.

    ஏவா மக்கள் மூவா மருந்து

    ‘நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்!’ என்பது ஒரு திரையிசைப்பாடலின் பல்லவி. இது ஒரு மரபுவழிச் சிந்தனை. பிறக்கின்ற பிள்ளைகள் நல்லவர்களாக அமைவது மரபா? சூழ்நிலையா? என்பது உளவியல் அறிஞர்களிடையே இன்னும் தீராத சிக்கலாக இருந்து வருகிறது. தனக்கு முதுமை வந்த பின்னும் நரை காணாததற்கு மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ என்னும் பிசிராந்தையார் வரிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரைத் தலைப்பு கொன்றை வேந்தனுக்குச் சொந்தமாயினும் கருத்து விளக்கத்திற்காகப் பல நூல்களையும் அறிமுகம் செய்கிறார்.

    “ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
    வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் – பொய்தெள்ளி
    அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
    இம்மைக்கு உறுதியில் லார்” (திரிகடுகம் 49)

    என்னும் நல்லாதனார் பாட்டையும் கோப்பெருஞ்சோழன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரையும் முன்னிறுத்திப் பாட்டை விளக்கிக் காட்டியிருக்கிறார்.

    இந்தக் கட்டுரையில் ‘மக்கள்’ என்னும் சொல்லுக்கான விளக்கமும் ‘மூ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி பற்றிய விளக்கமும் கட்டுரையின் மையக்கருத்தோடு அவ்வளவாகப் பொருந்தியிருப்பதாகக் கருத இயலவில்லை. ‘சாவா மருந்து’ (82) என்னும் திருக்குறள் தொடரும் ‘மூவா மருந்து’ என்னும் இத்தொடரும் ஒப்புநோக்கத்தக்கன. ‘மூ’ என்பது மூன்றினைக் குறிக்கும் என்பதும் அது ‘மூன்றின் வேர்ச்சொல் என்பதும் எந்த அளவுக்குக் கட்டுரைப் பொருளோடு தொடர்புடையது என்பது விளங்கவில்லை. ‘மூ’ என்பது ‘மூத்தல், முதுமை அடைதல் என்னும் பொருளைத் தருகிறது’ என்பது வேர்ச்சொல் பற்றிய முந்தைய தொடருக்கு முரணாக அமைந்திருப்பது காண்க. பிந்தையதே சரியெனின் முந்தையதைத் தவிர்த்திருக்கலாம். ஒவ்வொன்று. ஈரிரண்டு. மும்மூன்று, நன்னான்கு, ஐயைந்து என்றவிடங்களில் எல்லாம் அந்தந்த எண்ணின் முதல் எழுத்தே ஓரெழுத்து ஒரு மொழியாக அமைந்திருத்தல் காண்க. அதனாலேயே அவை வேர்ச்சொல் ஆகிவிடாது. இனிச் ‘சாவா மருந்து’ என்பதற்குச் சாவாமைக்குக் காரணமாகிய மருந்து எனப் பொருள் விரிக்கும் பரிமேலழகர் ‘அமிழ்தம்’ என்னும் ஒற்றைச் சொல்லால் அதற்கு உரைகாண்பதும் நோக்கத்தக்கது.

    கேள்வியும் விந்தையும்

    ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ என்ற கண்ணதாசன் வினாவிற்கு இதுவரை விடையில்லை. ஒரு கருத்தினை அல்லது கற்பனையை வினாவடிவில் அமைப்பது என்பது தமிழ்க்கவிதை உலகிற்கே சிறப்பானதொரு கவிதை உத்தியாகும். ‘அளிதோ தானோ? குளித்து மணல் கொண்ட கல்லா இளமை யாண்டுண்டு கொல்லோ?’ என்று விடைகாண முடியாத கேள்வியைத் தொடித்தலை விழுத்தண்டூன்றினார் அன்றைக்கு வினவினார். ‘கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?’ என்று கம்பன் வினவினான். கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாள்முகமோ? என்பார் புகழேந்தி! ‘பார்சிறுத்தலின் படை பெருத்ததோ? படை பெருத்தலின் பார் சிறுத்ததோ?’ என்பார் செயங்கொண்டார். ‘கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?’ என்பார் பாரதி! ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகம் இருந்தொரு லாபம் உண்டோ?’ என்பார் பாவேந்தர். இந்த நெறியை விளக்குவதே கட்டுரையாசிரியர் நோக்கம் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    உரையைக் கட்டுரையாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தலைப்பே கேள்வியும் விந்தையும் எனச் சுவையின்றி நிற்கிறது. காமத்துப்பால் எடுத்துக்காட்டுக்கள் ‘கேள்வி’ என்பதற்கு வினா என்னும் பொருண்மையையே முன்னெடுத்தலின் வினாவும் விந்தையும் என்றே இருந்திருக்கலாம் அல்லவா?

    கட்டுரையாசிரியர் சொற்பொருள் விளக்கம் தேவைப்படாத இடங்களிலும் அதனைக் காண முற்படுவதும் அனுபவத்தின் வெளிப்பாடாகிய கவிதைகளை அகராதிப் பொருளைக் கொண்டு சுவைக்க முற்படுவதும் கட்டுரைச் சுவை இல்லாத முடவனாகிவிடுகிறது. மேலும் இலக்கியச் சுவை பயக்க வந்த விந்தையான வினா உத்தி பற்றிய இந்தக் கட்டுரையின் இறுதி, அறிவியல் உண்மைகளுக்கு அடிப்படை வினாக்களே என அறிவியல் கட்டுரையாக நிறைவு பெறுகிறது என்பது சுட்டத்தகுந்தது.

    பாப்லோ நெருதா எழுதிய Book of Questions என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு ஈரோடு தமிழன்பன் எழுதிய கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டும் இங்கே நினைக்கத்தக்கன.

    வாழ்வியற் சிந்தனைகள்

    இந்தத் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் மூன்றும் வாழ்க்கையைப் பற்றிய வரையறை, இல்லறம், இல்லறத்தில் பொதுநலன் என்னும் பொருண்மைகளை உள்ளடக்கி நிரலாக அமைந்திருக்கின்றன.    இருப்பது (Existing) என்பது வேறு., வாழ்வது (Living) என்பது வேறு என்னும் வேறுபாட்டினைத் துல்லியமாக விளக்கும் ஆசிரியர்,

    “வாழ்க்கை என்பது புகைப்படலம் போன்றது’ என்கிறது விவிலியம். ‘வாழ்க்கை என்பது ஒரு நடமாடும் நிழல்’ என்கிறார் சேக்‌ஸ்பியர். ‘வந்ததோர் வாழ்வும் இந்திரசாலக் கோலம்’ என்கிறார் தாயுமானவர். ‘வாழ்வை குடங்கவிழ் நீரோட்டம் என்றே இரு’ என்கிறார் பட்டினத்தடிகள்”

    என ஆன்றோர் பலரின் கருத்துக்களை நினைவூட்டுகிறார். வாழ்க்கை என்பதன் பொருண்மை காலந்தோறும் வேறுபட்டு வந்திருக்கின்றன என்பதை முன்னெடுக்கும் ஆசிரியர், ‘உயிர் வாழ்தல்’, ‘வாழ்வாங்கு வாழ்தல்’, ‘இசைபட வாழ்தல்’, ‘பிறர்க்கென வாழ்தல்’ முதலிய வள்ளுவத் தொடர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

    கிழக்கில் தோன்றும் கதிரவன் தன் பயணத்தை மேற்கு நோக்கி அமைத்துக் கொள்வதைப் போல வாழ்க்கை ஒரு குறிக்கோளோடு அமைதல் வேண்டும் என்பார் அப்பர் பெருமான். வாழ்க்கையையும் பாடலையும் முன்னெடுக்கிறார். படிப்பும் பதவியுமே வாழ்க்கை என்னும் போக்கில் நடக்கும் கற்பித்தல் பணியைச் சாடும் ஆசிரியர் மனிதநேயத்தின் அடிப்படையில் மனிதனை உருவாக்குவதே கல்வி என்பதை அண்ணல் காந்தியடிகள், தந்தை பெரியார், வ.உ.சி. முதலிய சான்றோர்களைக் கொண்டு தன் பார்வைக்கு வலிமை சேர்க்கிறார்.

    “ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் மூன்று படிநிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மழலைப் பருவம் முதல் மணமாகும்  வரையிலான தனிமனித வாழ்க்கை நிலை. திருமணம் ஏற்ற நாள் முதல் இறுதி வரையிலான இல்லற வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை நிலை இந்த இரண்டு நிலைகளிலும் இணைந்து வரும் குமுக வாழ்க்கை. இம்மூன்றும் தனித்தனி தீவுகள் அல்ல. ஒன்றோடொன்று தொடர்புடையன ஒன்றின் தொடர்ச்சியாக அமைவன ஒன்றைச் சார்ந்து அமைவன” என்ற முன்னுரையுடன் வாழ்வியலின் அடுத்த நிலை பற்றிய தம் கருத்துக்களை விரிவாக்குகிறார் ஆசிரியர்.

    ‘தன்னம்பிக்கை, தன்னறிவு, தன்னடக்கம் ஆகிய முப்பெரும் பண்புகளே மனித மேம்பாட்டுக்கு உரிய உயரிய பண்புகளாகும்’ என்னும் டென்னிசனின் கருத்தினைத் தனிமனிதன் உயிர்வாழ்தல் நெறியாகக் கூறுகிறார் ஆசிரியர்,

    “விட்டுக் கொடுத்தவர்கள் ஒருநாளும் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போனவர்கள் ஒருநாளும் விட்டுக்கொடுத்ததில்லை’ என்னும் பேரறிஞர் அண்ணாவின் கருத்தினை இல்லறத்தின் வாழ்வியல் நெறிக்கான அறிவுரையாக நினைவூட்டுகிறார்.

    ‘பொதுவாழ்க்கை’ என்னும் சமுதாய வாழ்க்கை பெரும்பாலும் ஈதலறத்தால் ஆனது. பிறர்க்குக் கொடுத்துப் பெறுகிற இன்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பெறுகிறவன் பெறுகிற இன்பத்தைத் தான் அடைகிற இன்பமாகக் கருதுவதையே சமுதாய வாழ்க்கையின் இசைபட வாழ்தலின் சாரமாக எடுத்துரைக்கிறார். இல்லறத்தின் அடிப்படையாகப் பொதுநலம் அமைதல் வேண்டும் என்பதுதான் தமிழ்மரபு.

    “காமஞ்சான்ற கடைக்கோட் காலை
    ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
    அறம்புரி நெஞ்சின் கிழவன் கிழத்தியொடு
    சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

    என்னும் நூற்பாவால் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம். இந்த நூற்பாவின் விளக்கவுரையே பாவேந்தர் எழுதிய குடும்ப விளக்கு. அதில் அமைந்துள்ள ஐந்து இயல்களையும் இல்லறம் தொடங்கிப் பொதுநலம் பேசும் சமுதாய இலக்கியமாகவே படைத்திருக்கிறார். அதனால்தான் இந்த நூலாசிரியர் திருமாறன் குடும்ப விளக்கில் அமைந்துள்ள,

    “அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
    அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்பதல்லால்
    இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
    என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவும் இல்லை!
    ………………………………………………………………………………………………………
    தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாம்!
    தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்!
    எமதென்று சொல்லுகின்றோம் நாடோ றுந்தான்!
    எப்போது தமிழனுக்குக் கையா லான
    நமதுழைப்பை ஒருகாசு செலவு செய்தோம்?
    நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்
    அமைவாகக் குந்தி நினைத்தோமா? இல்லை.,
    அனைவரும் இவ்வாறு இருந்தால் எதுநடக்கும்?”

    என்னும் பள்ளியறைப் புரட்சிப் பாடலை எடுத்துக் காட்டித் தனிமனிதன், குடும்பம் இல்லறத்தோடு கூடிய சமுதாயத் தொண்டு ஆகியவற்றை விளக்கிக் காட்டுகிறார்.

    வரலாற்றுப் பதிவுகள்

    வாழ்வியல் பதிவுகள் என்பன வாழ்க்கையைப் பற்றிய விளக்கமன்று. வாழ்ந்தவர்களின் வரலாறுகளிலிருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் தொகுப்பு.  எனவே வாழ்வியலை விளக்கும் எந்தப் படைப்பானாலும் சான்றோர்களின் வரலாற்று அடிப்படையில் படைக்கப்பட வேண்டும். இந்த நூலாசிரியர் பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளிலும் சான்றோர்கள் அவர்தம் வாழ்வில் கண்ட பட்டறிவு நிகழ்ச்சிகளைப் பொருத்தமாக இணைத்திருப்பது அவர்தம் கட்டுரை வன்மையையும் பன்னூற் பயிற்சியையும் வரலாற்று அறிவையும் ஒருசேரக் காட்டுகிறது.

    மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்புலனறிவுக்கு அப்பாற்பட்டு உணரப்படும் அறிவினை மூன்றாவது கண் என உருவகப்படுத்தும் ஆசிரியர். ரே சார்லஸ் ராபின்சன் (Ray Charless Robinson) என்னும் இசைமேதையின் வரலாற்றைச் சுட்டுகிறார். ஏழு வயதில் தன் புறக்கண் பார்வையை முற்றிலுமாக இழந்த ராபின்சன் தன் மூன்றாவது கண்ணால் முயன்று உலகப்புகழ் பெற்ற பாடகராகவும் பாடலாசிரியராகவும் திகழ்ந்தார் என்பதைப் பொருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பார்வையிழந்து அட்டாவதானம் செய்து புகழ்பெற்ற கோவில்பட்டி இராமையா அவர்களின் வரலாற்றையும் இணைத்துக் காட்டுகிறார்.

    தன்னைக் காண வந்தவரிடம் (இருந்து கொண்டே) தான் இல்லை என்று சொல்லச் சொன்னார் தான் பணியாற்றிய ஒரு வணிக நிறுவனத்தின் தலைவர். பணியாளாக இருந்த சிறுவன் பொய் கூறமாட்டேன் என்று சொல்லித் தன் வேலையை இழந்தான். வேலையிழந்த அந்தச் சிறுவன் பின்னால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புகழடைந்தான். உண்மை பேசுவதன் உயர்வை அரிச்சந்திரனை மட்டும் கொண்டு விளக்கி வந்த நீண்ட நெடிய மரபில் அறிஞர் வ.சுப. மாணிக்கம் ஐயா அவர்களின் வரலாற்றைப் பதிவு செய்து மண்வாசனை மணக்கச் செய்கிறார் கட்டுரையாசிரியர்.

    முறையான பயணச் சீட்டு இருந்தும் ஏறிய புகைவண்டியில் இருந்து இறக்கிவிடப்பட்ட மோகன் என்னும் வழக்கறிஞர் ஆயிரம் மனப்போராட்டங்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பாமலே  விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தை அங்கேயே அமைத்தார். நம்முடைய இந்திய ஒன்றியம் அந்நிய ஆட்சியிலிருந்து விடுபடத் தொடங்கப்பட்ட விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய அந்த வழக்கறிஞரே அண்ணல் காந்தியடிகள் என்னும் வரலாற்றுக் குறிப்பை மற்றொரு கட்டுரையில் பதிவிடுகிறார்.

    ‘நினைக்கப்படும்’ என்னும் கட்டுரையில் தென்னாப்பிரிக்காவில் 22 ஆண்டுகள் தங்கி அந்த நாட்டு மக்களுக்காக விடுதலைப்போர் நடத்திய அண்ணல் காந்தியடிகளின் வரலாற்றை நினைவு கூர்கிறார். தேவாலயங்களில் நிகழும் கிறிஸ்தவத் திருமணங்கள் செல்லுபடியாகாது என்னும் சட்டத்தினை எதிர்த்து இந்துவாகிய அண்ணல் காந்தி அயல்நாட்டில் நடத்திக் காட்டிய சட்டப்போராட்டம் உலக வரலாறு காணாதது. அந்தப் போராட்டத்தில் அவருக்குத் துணைநின்ற வள்ளியம்மை என்னும் தமிழ்ப் பெண்ணின் தியாகத்தையும் கட்டுரையாசிரியர் தெளிவாகப் பதிவிடுகிறார். தென்னாப்பிரிக்காவில் காந்தி பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் பதிவிட்டிருக்கிறார்.

    சான்றோர்கள் அவர்கள் வாழுகின்ற காலத்தில் அந்தச் சமுதாயத்தினரால் மதிக்கப்படுவதில்லை என்பது தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு. சான்றோர்களின் தலையெழுத்து. முதுபெரும் தமிழறிஞரும் கப்பலோட்டிய தமிழனுமாகிய வ.உ.சி. அவர்கள் சிறைத்தண்டனை முடிந்து வெளியேறும்போது சுப்பிரமணிய சிவாவும் மற்றொருவர் என இருவர் மட்டும் சிறைவாசலில் வரவேற்றனர். வரலாற்றில் நினைக்கப்படுகிற காட்சி இது. ஆனால் நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்ச்சி இது.

    ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்னும் கட்டுரையில் சிலப்பதிகாரச் செம்மல் ம.பொ.சி. அவர்களின் கடும் உழைப்பையும் தன் முயற்சியையும் முன்னிறுத்திச் சாதாரண அச்சுக்கோப்பாளராகத் தொடங்கி மாபெரும் இலக்கிய வாதியாகத் திகழ்ந்த வரலாற்றைப் பதிவிடுகிறார். ம.பொ.சி.யின் வாழ்க்கை தனி வாழ்க்கை என்றால், தமிழ்ச் சமுதாயத்திற்குத் தொடர் கேடுகளைக் கொண்டு வந்த சுந்தரபாண்டியனைப் பற்றிய குறிப்பினையும் பதிவு செய்திருக்கிறார். மாலிக்காபூரை நோக்கிச் சுந்தரபாண்டியன் வடக்கு நோக்கி வைக்கப்பட்ட தலை இன்னும் தெற்கு நோக்கித் திரும்பவில்லை என்பதும் சிந்திக்கத்தக்கதே!

    ‘என்னைக் கவர்ந்த இலக்கியக் காட்சிகள்’ என்னும் கட்டுரையில் சமுதாயத் தொண்டர் சௌந்தரபாண்டியனார் மகனுடன் கொடைக்கானல் ஏரியில் பயணம் கொண்டிருந்த இரத்தினவேல் தேவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பினைப் பதிவிடுகிறார். பாண்டியனார் மகனார் ஏரியில் விழுந்து உயிர்விடப், பதறிப்போன தேவர் நடுங்கிக் கொண்டிருந்தார். செய்தி அறிந்த பாண்டியனார் மகனிழந்த வேதனையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தேவரைப் பாதுகாத்த அந்தக் கால நிகழ்வை இந்தக் கால சமுதாயத்திற்காக எழுத்தாக்கியிருக்கிறார். இந்த நூலில் உள்ள இத்தகைய வரலாற்றுப் பதிவுகளே வரலாற்று உணர்வைத் தூண்டும் சிறப்பினையுடையன.

    நிறைவுரை

    பேராசிரியர் முனைவர் திருமாறன் பேராசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொழிப்புலமை பெற்ற மொழிப்பற்றாளர். ஏதும் தெரியாமலேயே எல்லா விருதுகளையும் பெற்றுவிடுவோர் இடையில் எல்லாம் தெரிந்தும் எந்த விருதும் பெறாதவர். பெற விரும்பாதவர். சொந்தக் காசைச் செலவழித்து இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். இன்னும் சில நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். பள்ளிகளில் அறநெறி வகுப்பு ஒழிக்கப்பட்ட நிலையில் இத்தகைய நூல்களைப் பள்ளித் தமிழாசிரியர்கள் வாங்கி மாணவர்களுக்குப் பரிசளிக்கலாம். சில நிமிடப் பேச்சுக்களைப் பல பக்கக் கட்டுரைகளாக உருமாற்றம் செய்கிறபோது ஏற்பட்டிருக்கும் தவிர்க்க இயலாத சில சறுக்கல்களைத் தவிர அமைப்பாலும் உள்ளடக்கத்தாலும் சிறக்கிறது இந்த நூல். ஒரு ஊரக நூலகத்துக்குள் ஊரவலம் சென்று வந்த மனநிறைவு எனக்கு. இந்த நூலை நான் படித்தேன்! சுவைத்தேன்! நீங்கள் நிறைவடைய வேண்டாமா? உங்களுக்காகப் பகிர்கிறேன்!

    (தொடரும்…)

    Share
  • (Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    (Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    முன்னுரை

    கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என இலக்கிய வடிவங்கள் பல. இவற்றுள் கவிதைக்குரிய வடிவங்கள் பா, இனம் எனப் பல்கிப் பெருகும். பாக்களுள் வெண்பா தலையாயது.  எழுவகை வெண்பாக்களில் குறள் வெண்பா என்பதும் ஒன்று.  தமிழ்க்கவிதை வடிவங்களில் மிகக் குறுகிய வடிவம் இதுதான். ‘குறுகத்தரித்த குறள்’ என்பது ஆன்றோர் வாக்கு. குறள் என்பது யாப்புக்கான குறியீடு. அது திருக்குறளைக் குறிக்கிறபோது அடையடுத்த ஆகுபெயராய் நிற்கும். நுட்பமாக நோக்கினால் ‘குறள்’ என்னும் யாப்பே அடைபெற்று அழைக்கப்படுவது தெரியவரும். அதாவது ‘குறள்’ என்பது கருவியாகுபெயராய் நூலை உணர்த்திப் பின் அடைபுணர்த்து அழைக்கப்படுகிறது என்பதாம். திருக்குறளில் திருவள்ளுவர் தமது கருத்துக்களைக் குறள் வெண்பாவில் பதிவு செய்திருந்தாலும் அத்தனைக் குறட்பாக்களையும் ஒரே நெறியில் பதிவு செய்யவில்லை. தமது மெய்யறிவால் உணர்ந்த சிந்தனைகளைப் பல உத்திகளைக் கையாண்டு பதிவு செய்திருப்பதை  அறிய முடிகிறது. ‘தமிழ்க்கவிதைகளின் வெளிப்பாட்டு உத்திகள்’ என்னும் பேராய்வுக் களத்தில் ஒரு துளியாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    கட்டுரையின் கருதுகோள்

    ‘திருக்குறளில் வெளிப்பாட்டு உத்திகள்” என்பதையே இக்கட்டுரை தனக்குரிய கருதுகோளாகக் கொண்டு அமைகிறது.

    ஆய்வுக்களம் – எல்லை – நோக்கம் – பயன்

    முப்பால்களாக இயங்கும் திருக்குறளில் மூன்றாவது பகுப்பாகிய காமத்துப்பால் புலனெறிவழக்கப் புனைவாகத் தலைமக்கள் கூற்றுப் பகுதியென அமைந்துவிடுகிறது. ஆதலின் காமத்துப்பாலில் திருவள்ளுவர் நேரடிக் கூற்றாக எதனையும் பெற முடியாத நிலையில் ஏனைய அறம், பொருள் என்னும் இருபாலில் அமைந்துள்ள ஆயிரத்து எண்பது குறட்பாக்களே (1080) ஆய்வுக்களமாகவும் எல்லையாகவும் கொள்ளப்படுகிறது.

    வாழ்வியல் நெறிகளைப் பதிவு செய்ய திருவள்ளுவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட குறுகிய வடிவமான குறள் வெண்பாவில் அவர் கையாண்ட உத்திகளை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

    திருக்குறளில் அமைந்துள்ள வெளிப்பாட்டு உத்திகளை ஆராய்ந்து வடிவமைக்கப்படும் இக்கட்டுரையால் தமிழியல் ஆய்வுக்களப் பொருண்மை   விரிவும் ஆழமும் உடையதாகும் என்பதையும் இலக்கியச் சுவைஞர்கள் உத்திகளின் நோக்கத்தையும் திருவள்ளுவரின் படைப்பாளுமையையும் அவர்தம் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர உணர்ந்து கொள்ள இயலும் என்பதையும் பயனாகக் கருதுகிறது.

    ஆய்வு அணுகுமுறையும் நெறிமுறையும்

    திருக்குறளில் விரவிக்கிடக்கும் பல்வகை வெளிப்பாட்டு உத்திகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்கேற்ற வகையில் ‘அமைப்பியல்’ அணுகுமுறையும், திருக்குறளுக்குப் பிந்தைய பல்வகை இலக்கிய உத்திகளின் பயன்பாடு ஒப்பிட்டுக் காட்டப்படுதலின் ‘ஒப்பீட்டு முறைத் திறனாய்வு’ நெறியும் இக்கட்டுரையில் பின்பற்றப்பட்டுள்ளன.

    இலக்கியத்தில் உத்திகள்

    ஒரே பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு ‘உத்தி’ என்று பெயர். “இதனை வேற மாதிரிச் செய்யலாமா?” என்று கணித ஆசிரியர் கேட்பதைப் போன்றது இது. கணிதம் எல்லாருக்கும் இனிக்காது. இலக்கியம் பெரும்பாலும் இனிக்கும். இதனை எளிமையாக விளக்கலாம். தலைமக்கள் இருவருக்குமிடையில் காதல் வளர்கிறது. வளர்கின்ற காதல் ஊராருக்குத் தெரியவரும். இது உலகியல். இது இலைமறை காயாகத் தெரியும் போது அதனை ‘அம்பல்’ என்று இலக்கியங்கள் கூறும். ‘இன்னாருக்கு இன்னாரோடு தொடர்பு’ எனத் தெளிவாகத் தெரிகிறபோது அது அலர் என அடையாளப்படுத்தப்படும். இதனை ‘அலர் அறிவுறுத்தல்’ என அகத்துறையிலக்கணம் கூறும். தற்காலத் திரையிசைப்பாடலில் அலருக்கு ஆளான நான்கு உள்ளங்களை வெளிப்படுத்தும் பாடலுக்கான காட்சியைச் சித்திரிக்கும் இரண்டு பதிவுகளை இங்கே காணலாம்.

    “கண்ணா! ஜோடிக்குயில் மாலையிடுமா? இல்லை ஓடிவிடுமா? 1

    என்று தலைமகள் ஐயப்படுகிறாள்.

    ‘கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா? கங்கை வற்றி விடுமா?” 2

    என்று தலைமகன் ஆறுதல் கூறுகிறான். தன் அவசரத்திற்கான காரணத்தைத் தலைமகள் அங்கே பதற்றத்துடன் பதிவிடுகிறாள் இப்படி!

    “உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில்
    என்னென்னமோ பேச்சிருக்குது” 3

    இந்தப் பதற்றம் ஊராரின் அலர் தன்னைத் துரத்த தன்னை விரைந்து மணமுடித்துக் கொள்ள வேண்டும் எனத் தலைமகனை வற்புறுத்துவதாக அமைகிறது. “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது!” 4 என்னும் தொடரே அலரைக் குறிப்பது. இதே அலர்தூற்றலை மற்றொரு பாடல் வேறு மாதிரியாகப் பதிவு செய்திருக்கிறது.

    “பழச  மறக்கலையே,
    பாவி மவ நெஞ்சு துடிக்குது!
    ஒன்னையும் என்னையும் வச்சு
    ஊரு சனம் கும்மியடிக்குது” 5

    “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது’ என்னும் வெளிப்பாடு ஓர் உத்தி. ‘ஊரு சனம் கும்மியடிக்குது’ என்பது மற்றோர் உத்தி. பொருள் ஒன்றுதான். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரையிலக்கியம் வரை அலருக்கு அஞ்சுபவள் பெண்ணாகவே சித்திரிக்கப்படுகிறாள் என்பதும் நோக்கத்தக்கது. எளிய புரிதலுக்காகவே இந்தத் திரையிசைப்பாடல் எடுத்துக்காட்டாகக் கொள்ளப்பட்டது. (இத்தகைய திரைப்பதிவுகள் முழுமையான இலக்கியத் தகுதியினைப் பெறுவதற்கு உரியனவே என்பது கட்டுரையாளர் கருத்து)

    பழந்தமிழ் இலக்கியப் பொருண்மைகளும் உத்திகளும்

    குறட்பாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உத்திகள் பற்றிய ஆய்வே இதுவாயினும் கட்டுரைப்பொருள் விளக்கம் கருதி ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இந்தப் பத்தியில் தரப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள் பற்றிய கொள்கை ‘அகம் புறம்’ என வரையறுக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுவகைத் திணைகளாகவும் பகுக்கப்பட்டன. அதாவது அகம் என்பது பொருட்பாகுபாடு. முல்லை, குறிஞ்சி முதலியன திணைப்பாகுபாடு. புறம் என்பது பொருட்பாகுபாடு. ‘வெட்சி கரந்தை’ முதலியன திணைப்பாகுபாடு. ஒவ்வொரு பொருட்பகுதியின் உட்பிரிவுகளான திணையும் துறைகளுமே ‘பாடுதுறை’களாயின. இவற்றை மீறி எந்தப் பாடலையும் யாரும் பாடிவிட இயலாது. முடியாது. கூடாது. அகத்திணை முழுமையும் தலைமக்கள் கூற்றுப்பகுதிகளே! அதாவது தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர் முதலியோரின் கூற்றுப் பகுதிகளே கவிதைக் களங்களாகும். எந்தப் புலவனும் காதலைப் பற்றிய தனது கருத்தினை நேரடியாகப் பதிவு செய்ததாகக் குறிப்பில்லை. காதலைப் பற்றிய எந்தக் கருத்தும் அதனை வெளிப்படுத்திய பாத்திரங்களின் கருத்தாகவே நோக்கப்படும். இந்தப் புலனெறி வழக்கம் திருக்குறள் காமத்துப்பாலிலும் தொடர்ந்தது. வரையறைக்குட்பட்ட இந்தக் குறுகிய பொருட் பகுதிகளுக்குள்ளேயே இத்தனை இலக்கியங்கள் என்றால் அவற்றைக் ‘கூறியது கூறல்’ என ஒதுக்க இயலுமா? இயலாது. காரணம் ஒரு துறையைப் பற்றிப் புலவர் பலர் பாடியிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை உத்தியினால் சிறந்து நிற்கிறது. ‘ஐங்குறுநூறு’ முதலிய இலக்கியங்களில் ஒரு துறைக்குப் பத்துப்பாடல்கள் எனப் பாடப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பாடலும் தனித்தன்மையுடையன. புறத்திணைத்துறைகளும் அத்தகையனவே மருதன் இளநாகனார் பாடிய கையறுநிலையும் மாங்குடி  மருதனார் பாடிய கையறுநிலையும் ஒன்றாகாது. உத்திகளால் சிறந்திருந்தாலேயொழிய இத்தகைய இலக்கியங்கள் இவ்வளவு காலம் நிலைபெற்றிருக்க இயலாது. ‘அரைத்த மாவையே அரைத்திருந்தாலும்’ பலகாரச் செய்முறை மாறுபட்டிருப்பதால் சுவை வேறுபடுவதைப் போல இந்தக் கவிதைகளின் உத்திகள் மாறுபட்டிருப்பதால் காலத்தை வென்று நிற்கின்றன எனலாம்.

    மறையோன் புகழும் கோவலன்

    காப்பியத்தின் பாத்திரங்கள் படைப்பாளனால் உருவாக்கப்படுகின்றன. கவிதைச் சுவையும் கதைப்போக்கும் பின்னிப் பிணைந்த நிலையில் தேவையற்ற பதிவுகளைத் தவிர்த்துவிடுவது படைப்பாளனுடைய உரிமை. அந்த வகையில் குற்றமற்ற கோவலன் பாண்டியனால் கொலைக்கு ஆளாகத் தன் கணவன் குற்றமற்றவன் என்பதை உறுதி செய்யும் பொறுப்பில் கண்ணகி. இந்தக் கதையில் கோவலன் துன்பத்திற்கு என்ன காரணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாது. காப்பியத்தைப் பொருத்தவரையில் அவன் காரணமின்றிக் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் சென்றுவிட்டான் என்பதைத் தவிர கொலைபடும் அளவுக்கு அவன் செய்த குற்றம் ஏதுமில்லை. தன்னைவிட்டுப் பிரிந்து இல்லறத்தில் சிக்கல் ஏற்படுத்திய கோவலனுக்காகப் பரிந்து மதுரையைக் கண்ணகி தீக்கிரையாக்குகிறாள் என்றால் அவனுடைய பிற செயல்கள் அவளைக் கவர்ந்திருக்க வேண்டும். சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத ஒருவனுக்காக ஒரு பத்தினிப்பெண் வேற்று நாட்டு அரசவையில் நீதி கேட்டு நிற்கிறாள் என்றால் அன்றைய சமுதாயம் கோவலனை நன்கு அறிந்திருக்க வேண்டும். குறைந்த அளவு புகாரில் அவனுடைய பெருமைகள் உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். கோவலன், கண்ணகி மறைவு புகாரின் பேரவலத்திற்குக் காரணமானது என்பதை அறியமுடிகிறது. ஆனால் இந்தப் பெருமைக்கான செயல்களைக் காப்பியத்தில் எந்த இடத்திலும் பதிவு செய்ய இயலாது. செய்திருந்தால் காப்பியச் சுவை குன்றிவிடக் கூடும் என அடிகள் கருதியிருக்கலாம். அவன் மாதவியோடு வாழ்ந்த பதினாறு ஆண்டு காலத்தில் புகாரில் அவன் செய்த புகழுக்குரிய செயல்களை இளங்கோவடிகள் பதிவு செய்ய விரும்புகிறார். அடுத்த காதைகளில் கொலைபடும் கோவலன் மீது கற்பாருக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும் என அவர் உள்ளம் விரும்புகிறது. தக்கதொரு இடத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு மாடலமறையோன்  கிடைத்துவிடுகிறான். மதுரை நோக்கிச் செல்லும் கோவலனையும் கண்ணகியையும் நோக்கி அவன் கோவலன் செய்த அறச்செயல்களையெல்லாம் பட்டியலிடுகிறான். மணிமேகலை பிறந்தநாள் விழாவில் அந்தணனைப் புடைத்தழிக்க முயன்ற மதங்கொண்ட யானையின் மீதேறி அடக்கிய செய்தியைப்

    “பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
    கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” 6

    என்று கூறிப் பாராட்டுகிறான் மாடலமறையோன். கீரிப்பிள்ளையைக் கொன்று மனைவி செய்த பாவத்துக்காக அவளைப் பிரிந்த கணவனைக் கண்டு அவன் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்த வரலாற்றைத்,

    “தானம் செய்தவள் தன் துயர் நீக்கிக்
    கானம் போன கணவனைக் கூட்டி
    ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து
    நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ!”7

    என்னும் வரிகள் காட்டுகின்றன. வெளியூர் சென்று திரும்பி வந்த கணவனுக்கு அவன் மனைவி பற்றிய தவறான தகவலைத் தந்தவனைச் சதுக்கப்பூதம் அடித்துக் கொல்ல எத்தனிக்க, அவன் தாய் பதற, பொய்க்கரி புகன்ற அவனைக் காப்பாற்ற முயல்கிறான் கோவலன். மறுத்த பூதம் பொய்க்கரி கூறியவனைக் கொல்ல அவனுடைய தாயோடு சுற்றத்தாரையும் கோவலன் காப்பாற்றினான்.

    “பத்தினி ஒருத்தி படிற்றுரை எய்த
    மற்றவள் கணவற்கு அறியோன் ஒருவன்
    அறியாக் கரிபொய்த்து அறைந்துணும் பூதத்து
    கறைகெழு பாசத்துக் கையகப்படலும்
    பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு
    கட்டிய பாசத்துக் கடிது சென்றெய்தி
    என்னுயிர் கொண்டு ஈங்கு இவனுயிர் தாவென
    நன்னெடும் பூதம் நல்கா தாகி
    நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை
    ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
    அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து அவள்
    சுற்றத்தோர்க்கும் தொடர்புறும் கிளைஞர்க்கும்
    பற்றிய கிளைஞரின் பசிப்பிணியறுத்துப்
    பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” 8

    மறையோனின் இந்தப் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாளே தவிர மறுமொழி சொன்னாள் அல்லள். மகிழ்ந்தாளும் அல்லள். வருந்தினாளும் அல்லள். ‘இத்தகைய நல்லவனா கோவலன்?” என்னும் நல்லெண்ணத்தைக் கற்பார் மனத்தில் வரவழைப்பதற்காக அடிகள் செய்திருக்கும் காப்பிய உத்தி இது.

    இராமனைக் காப்பாற்றும் கம்பன் உத்தி

    பரம்பொருளாகிய பெருமாளை மனிதனாக்கிக் காப்பியம் படைத்த கம்பன் சில நேர்வுகளில் பிழைசெய் இராமனைக் காப்பாற்றும் நிலைக்கும் வரவேண்டியிருப்பதையும் காண முடிகிறது. வேறு வகையாகச் சொன்னால் தான் படைத்த பாத்திரத்தின்வழித் தானே செல்ல வேண்டிய நிலை வருகிறபோது சற்று நிதானிக்க வேண்டியிருக்கிறது என்பதாம். சுக்ரீவன் வாலியிடையே நடந்த போருக்கும் இராமனுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. வாலிக்கும் இராமனுக்கும் நேரடிப் பகையென்பதே இல்லை. தன்னைக் கொல்ல இராமன் வந்திருக்கிறான் என்று தன் மனைவி தாரை கூறியபோது அந்த நொடிவரை,

    “உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
    அழைத்து அயல் உலகினுக்கு அறத்தின் ஆறெலாம்
    இழைத்தவர்க்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
    பிழைத்தனை பாவி! நின் பெண்மையால் என்றான்” 9

    என்று நம்பி, மனைவியைக் கண்டித்தவன் வாலி. இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற பக்தியும் நம்பிக்கையும் இந்தப் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம். இராமன் வாலியை மறைந்திருந்து கொன்ற செயல் அந்த நம்பிக்கைக்குக் கேடாக முடிந்துவிடுகிறது. இராமனுடைய அம்பினால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த வாலி இராமனை ஏசுகிறான். இருவருக்குமிடையே நடந்த உரையாடல் முடிவில் வாலி “தன்னை மறைந்திருந்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என விடையிறுக்க இயலாத வினாவைக் கேட்கிறான். கம்பன் இங்கே தடுமாறுகிறான். இராமனைப் பேசவைப்பதா? பேசவைத்தால் என்ன விடை கூற வைப்பது? தன் கவியுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் கவியரசர், இராமனைப் பேச வைக்காது இலக்குவனைப் பேச வைக்கிறார். ஒரு பாட்டால் ஒரு பாத்திரத்தைக் காப்பாற்றி விட்டதாகக் கம்பன் எண்ணுகிறான்.

    “………. மாண்ட
    செவ்வியோய்! அனையது ஆக! செருக்களத்து உருத்து எய்யாதே
    வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால்
    எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான்”10

    ஒருவன் எழுத வேண்டிய தேர்வை வேறொருவன் எழுதினால் இன்றைய நிலையில் அது தண்டனைக்குரிய குற்றம். வகுப்பில் வினவப்பட்ட மாணவனைத் தவிர்த்து வேறொரு மாணவன் விடையிறுத்தால் இறுக்கப்படும் விடை சரியாகவே இருந்தாலும் ஆசிரியர் சினங்கொள்வாரேயன்றிச் சிரித்து ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால் இராமன் என்னும் தலைமகனின் பிம்பம் அல்லது பரிமாணம் சேதாரமடைந்து விடக்கூடாது என்பதற்காகக் கவிஞன் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமனைக் காப்பாற்றுகிறான்.

    “முன்பு நின்தம்பி வந்து சரண்புக, “முறையிலோயைத்
    தென்புலத்து உய்ப்பென் என்று செப்பினன். செருவில் நீயும்
    அன்பினை உயரிருக்கு ஆகி “அடைக்கலம் யானும் என்றி
    என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்ததென்றான்”.11

    “கவிக்குலத்தரசும் அன்ன கட்டுரை கருத்திற்கொண்டான்” என்றெழுதும் கம்பன் இலக்குவன் சொன்னது இதயத்துச் சொற்களல்ல அவை ‘இட்டுக்கட்டியன’ என்பதைப் புரிந்து கொள்கிறான். இங்கே அறிந்து கொள்ள வேண்டியது காப்பியத் தலைமைப் பாத்திரத்தின் பெருமையைக் காப்பாற்றவே தம்பியை விடையிறுக்கும் உத்தியைக் கம்பன் கடைப்பிடித்திருக்கிறான் என்பதேயாகும்.

    மேற்கண்ட சான்றுகள் படைப்பாளன் தன் உள்ளக்கருத்தினைப் பதிவிடுவதற்குரிய வெளிப்பாட்டு முறையே உத்தி என்பதைக் காட்டுகின்றன. ‘கம்பன் கண்ட இலக்கிய உத்திகள்’ என்னும் தமது ஆய்வு நூலில் ஆராய்ச்சிப் பேரறிஞர் ச.வே.சுப்பிரமணியனார் இது பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார் என்பது தகவலுக்காக இங்கே பதிவு செய்யப்படுகிறது.

    ஆடூஉ முன்னிலை – மகடூஉ முன்னிலை

    கீழ்க்கணக்கில் அமைந்துள்ள நீதிநூல்கள் சிலவற்றில் சில பாடல்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையில் ஒரு தனித்த நெறி பின்பற்றப்பட்டு வந்துள்ளது. புலவர் தனது கருத்தினை ஆசிரியர் கூற்றாக அமைக்காமல் ஆண்மகன் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போலவோ பெண்மகள் ஒருத்தியைப் பார்த்துக் கூறுவது போலவோ அமைக்கப்பட்டுள்ளது. முன்னதற்கு ‘ஆடூஉ முன்னிலை’ என்றும் பின்னதற்கு ‘மகடூஉ முன்னிலை’ என்றும் பெயர். இந்த நெறி திருக்குறளில் அறவே இல்லை. அங்கே அனைத்தும் ஆசிரியர் கூற்றே. வெளிப்பாட்டு உத்தியில் நிலவும் இந்த மாற்றம் சிந்திப்பதற்குரியது. இன்னொரு நுட்பமும் இந்நூல்களில் பதிவாகியிருக்கிறது. தலைமக்கள் கூற்றுப் பகுதியாகவே பதிவு செய்யப்பட்டு வந்த அகப்பொருள் செய்திகளையும் மகடூஉ முன்னிலையில் பதிவு செய்திருக்கும் புதுமை கீழ்க்கணக்கு நூல்களில் காணக்கிடக்கின்றது.

    அகப்பொருள் பதிவு

    திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்களில் வைத்து எண்ணப்படினும் ஏனைய பதினேழு நூல்களுக்கும் அதற்கும் நிலவும் வேறுபாடுகள் பல. பொருண்மையிலும் வெளிப்பாட்டு உத்தியிலும் கட்டமைப்பு உட்பட ஏனைய கூறுகளிலும் திருக்குறளின் தனித்தன்மையை மற்ற நூல்களால் பெற இயலவில்லை. இதனால் ஏனைய நூல்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணுதல் ஆகாது. அந்தந்த நூல்களின் தரமதிப்பீடு மற்றொரு நூலின் தர மதிப்பீட்டைப் பாதித்துவிடக் கூடாது என்பதே கருத்து. இந்த நூல்களில்தாம் அவ்விரு முன்னிலை உத்திகளும் கையளாப்பட்டுள்ளன.

    “முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம்! – வயங்கோதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு” 12

    என்பது “தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகள் புலவி நீங்கச் சொல்லியது” என்னும் துறையின் கீழ் அமைந்துள்ள நாலடியார் பாடல். துறைப்பொருளை அல்லது பொருளாகிய கூற்றினைப் பாத்திரத்தை நோக்கித்தான் கூறவேண்டுமே தவிர பாத்திரத்தோடு தொடர்பில்லாத முன்னிலை போலக் கருதி விளித்துக் கூறுதல் கீழ்க்கணக்கு நூல்களில் காணும் புதுமையாகும். இதுமாதிரியான துறைகளுக்கு அமைந்த பாடல்கள் அகத்திணை மாந்தர்களை நோக்கியே அமைந்திருக்குமேயன்றி இவ்வாறு உருவாக்கிய முன்னிலையை நோக்கி அல்லது முன்னிலைக்குரிய நபரை நோக்கி அமைந்ததற்குச் சான்றுகள் இல்லை!. “தலைமகள் பிரிவாற்றாமையைத் தோழிக்குச் சொல்லியது” என்னும் துறையில்,

    “கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
    என் ஈன்ற தாயும் பிழைத்ததென்? – பொன்னீன்ற
    கோங்கரும்பு அன்ன முலையாய்!  பொருள்வயின்
    பாங்கனார் சென்ற நெறி” 13

    என்று அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் தலைமகள் தோழியை நோக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் தோழியை மகடூஉ முன்னிலையாக்கி உரைப்பது காண்க!

    “பிறங்கருவி நல் நாட!” 14

    “இலங்கருவி நல் நாட!” 15

    “விறல் மலை நல் நாட!” 16

    என வருதல் காண்க. “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது” 17 என்று தலைவியை நோக்கிப் படர்க்கையில் தனக்குத்தானே பேசிக்கொள்வானேயன்றித் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறமாட்டான்.

    “யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்” 18

    எனத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். “நன்னீரை வாழி அனிச்சமே!”19 என்றும் “மலர்காணின் மையாத்தி நெஞ்சே!”20 “கருமணியிற் பாவாய் நீ!”21 எனப் பாத்திரமல்லாதவற்றை முன்னிலையாக்குவாரேயன்றிக் கீழ்க்கணக்கின் ஏனைய நூல்களைப் போல முன்னிலையை உருவாக்கிக் கூறுதல் குறளில் காண இயலாத நெறியாம். இதுகாறும் எடுத்துக்காட்டிய சான்றுகள் சிலவற்றால் படைப்பாளன் தான் கருதியது முடித்தற்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் இலக்கிய வெளிப்பாட்டு நெறிக்கே உத்தி என்பதும் இது இலக்கணத்திற்காகக் கூறப்படும் முப்பத்திரண்டு உத்திகளின் வேறானது என்பதும் பெறப்படும். அவை இலக்கண நூற்பாக்களைப் பற்றியன. இவை இலக்கியத்தின் கருத்து வெளிப்பாடு பற்றியன.

    திருக்குறளும் உத்தியும்

    தமது கருத்துக்களை மிகக் குறுகிய கவிதைக் கட்டுமானமான குறள் வெண்பா யாப்பில் எழுதுவது என்பது திருவள்ளுவர் எடுத்த முடிவு. அந்தக் குறள் வெண்பாவில் கருத்துக்களை ஒரே மாதிரியாக அவர் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் இக்கட்டுரை உணர்த்த விரும்பும் கருத்து. 1330 குறட்பாக்களும் செய்திகளே! ஒவ்வொரு தத்துவங்களே! ஒவ்வெரு அனுபவங்களே! ஆனால் இவற்றைப் பல முறைகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்.

    வெளிப்பாட்டில் வெளிப்படும் வினா

    கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளில் திருவள்ளுவரைப் பெரிதும் கவர்ந்திருப்பது வினா உத்தியே!. அவ்வுத்தியில் அமைந்த குறட்பாக்களை நோக்கினால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். சமுதாயத்தின் மீதும் தனிமனிதன் மீதும் சலிப்பு வந்த நிலையில் அவருடைய இந்த வெளிப்பாடு அமைந்திருக்கக் கூடும். ‘என்னத்த படிச்சு என்னத்த செய்யறது?” என்னும் வழக்கு நோக்குக. “பணம் இருந்து என்னங்க செய்யறது?” என்னும் வழக்கையும் நோக்குக. இந்த வழக்கைத்தான் வள்ளுவர் உத்தியாகக் கடைப்பிடித்திருக்கிறார் எனக் கருதலாம்.

    • ஞானத்தின் வடிவமான இறைவனை வழிபடுவதே நூல்களைக் கற்பதன் பயன் என்னும் ஒரு கருத்தினைக் ‘கற்றதனால் ஆய பயன் என்?’ என வினவுவார்.22
    • அறிவின் மற்றொரு பயன் உயிர்கள் மீது அன்பு காட்டுவது. இதனை ‘அறிவினான் ஆகுவது உண்டோ’ என வினவி அதற்கான விடையினைத் தொடர்ந்து பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை’ என்று சுட்டுவார்.23
    • அந்த அன்பைக் கட்டுப்படுத்த இயலாது என்பதை ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? என வினவுவார்.24
    • எதிர்மறை விளைவு ஏற்படுகின்ற இடத்தில்தான் சினத்தை அடக்குதல் வேண்டும். இதனை ‘அல்லிடத்துக் காக்கின் என்? காவாக்கால் என்?’ எனச் சாடுவார்.25
    • கருவியால் ஆராய்ந்து காலத்தால் செய்தால் அருவினை இல்லை என்பதை ‘அருவினை என்ப உளவோ?’ என்பார். 26
    • பிறவி யொழித்தவனுக்கு உடம்பும் மிகை என்பதை ‘மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல்?’ என்பார். 27

    என்றெல்லாம் அறம் மற்றும் பொருள் பற்றிய கருத்துக்களை வினா உத்தியினால் வெளிப்படுத்திக் காட்டிய வள்ளுவ நாயனார் தலைமக்களின் கூற்றுப் பகுதியாகப் படைத்துக்காட்டிய காமத்துப்பாலிலும் அப்பாத்திரங்களுக்குள் நுழைந்து வினவுவதும் வியப்பாக இருக்கிறது.

    • “ஒன்று கலந்த நெஞ்சத்தாரோடு ஊடுதலே உண்மையான இன்பம்” என்னும் கருத்தினைத் தலைமகன் வாயிலாக “புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?’ 28 என்று பதிவு செய்திருக்கிறார்.
    • ‘தன்னைப் பிரிந்து துன்புறும் தலைவியாகிய என்னை எண்ணுகிற தலைவனை நான் பெறாத போது நான் மட்டும் வருந்தி என்ன பயன்’ என்னும் தலைவியின் துயரத்தை “நோதல் எவன் மற்று?” 29 எனப் பதிவிடுகிறார்.
    • தலைவியின் துன்பம் அதுவானால் தனிமைத் துயரத்தில் தவிக்கும் தலைவன் கூற்றாகத் தலைவியை அன்றித் “துன்பத்திற்கு யாரே துணையாவார்?” 30 எனப் பதிவிடுகிறார்.
    • தன் தலைவன் வந்துவிடின் “புலப்பேன் கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன் கொல்?” 31 என்று தன் எதிர்கால விதும்பல்களை முன்கூட்டியே தனக்குத்தானே வினவும் தலைவியைக் காட்சிப்படுத்துகிறார்.

    இவ்வாறு தன் கருத்துக்களை வினா வடிவத்தில் பதிவு செய்திருக்கும் குறட்பாவின் தாக்கம் பின்வந்த கவிஞர் பெருமக்களை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாகக் காணலாம்.

    வாழையடி வாழையென வந்த வினா உத்தி

    கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த வினாவுத்தி தொடர்ந்து தமிழ்க்கவிதைப் பரப்பில் பேரளவாக இடம் பெற்று வந்துள்ளமையை அறியலாம்.

    “கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?
    கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்?
    ஓங்கு மாகடல் ஓதம் நீராடிலென்
    எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே” 32

    “புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டால் பொல்லாதோ?
    எத்தோ நின்அன்புடைமை எல்லோம் அறியோமோ?
    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?”33

    என்றெல்லாம் வழிவழியாக இந்த வினாமரபு, “செருப்புக்குத் தோல்வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” 34 என்று பரதியார் வினவுகின்ற அளவும் தொடர்ந்தது. ‘சுதந்திரப் பெருமை’35 சுதந்திரப் பயிர்’36 என்னும் இரண்டு பாடல்களயும் முற்றவும் வினாவுத்தியினாலேயே பாரதியார் வடிவமைத்திருப்பது இங்குச் சுட்டத்தகுந்தது. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?” 37 என்பார் பாரதிதாசன். “இன்பந்  தருந் தமிழில் அன்பு பிறந்ததுண்டு துன்பம் இனியுமுண்டோ?” 38 என்ற வினாவும் அவருக்குரியது. “சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?”39 என்பார் கண்ணதாசன். “எரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” 40 எனக் கொதிப்பார் வைரமுத்து.

    “இற்றைக் குமுகம் எழுந்திருக்க வேண்டாமோ?
    முற்றும் முடங்கியே மூழ்குவதோ? – வெற்றுரையால்
    பீடும் மறைவதோ? பேரெழுச்சி வாராதோ?
    நாடுமொழி காப்பீர் நயந்து” 41

    “ஒப்பனை வெல்லுமோ? உண்மை உறங்குமோ?
    முப்பாலுக் கீடோ பிறநூல்கள் – செப்பரிய
    தொண்டால் உழைப்பால் துணிவால் பெருவெற்றி
    உண்டாகும் என்றே உணர்! 42

    என்பன கடவூர் மணிமாறனின் வினாக்கள். இவரின் இந்த வினாக்களைத் தொடர்ந்து வேறு சிலரின் வினாக்களையும் கேட்கமுடிகிறது. உழைத்து ஓடாகிப் போன ஏழைகளின் புலம்பல்கள் வினாக்களாக வெடிக்கின்றன.

    “ஓய்வின்றி உழைப்பவர்க்கா பஞ்சம்? – நாங்கள்
    ஒன்றுபட்டால் இங்கென்ன மிஞ்சும்?
    நாய்படாத பாடெல்லாம் எமக்கா? நாட்டில்
    நல்லின்ப வாழ்வெல்லாம் உமக்கா?
    வேலையின்றி உண்பதுமோர் பிழைப்பா? – இந்த
    வேதனையை மாய்க்க வந்தால் மலைப்பா?
    சாலைகள்தான் எங்களுக்கு வீடா – இது
    சமவுடைமை உண்டாக்கும் நாடா?” 43

    என்னும் கருவூர் கன்னல் எழுப்பும் வினாக்கள் கற்பாரையும் கொதிக்க வைக்கின்றன. இயல்பான தொடரால் அமைக்கப்படுவதைவிட மேற்காட்டியவாறு  வினாக்களால் அமைக்கப்படும்போது கற்பார் உள்ளத்தில் எளிதாக பதியும் வாய்ப்பு அதிகம் என்பதே இவ்வுத்தியின் பயன் எனலாம். திருவள்ளுவர் பின்பற்றிய இந்த வினாவுத்தி தமிழ்க்கவிதையுலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்வதற்கே மேலே சில சான்றுகள் தரப்பட்டன.

    முன்னிலை ஏவல் ஒருமையும் வியங்கோளும்

    ‘யான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் விட்டாலேயொழிய உயிர் வீடு பெறாது என்னும் கொள்கையுடையவர் திருவள்ளுவர். அதனால்தானோ என்னவோ அவருடைய குறட்பாவில் முன்னிலை ஏவல் ஒருமையில் அமைந்த ஒரு குறட்பாவைக்கூட காண இயலவில்லை. அந்தக் குறையைப் பாரதி இப்படி ஈடு செய்கிறார்.

    “ஓடி விளையாடு பாப்பா” 44

    “கூடி விளையாடு பாப்பா” 45

    “மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” 46

    “திடங்கொண்டு போராடு பாப்பா” 47

    என்றெல்லாம் முன்னிலையில் பாடுகிறார் பாரதியார். தொடர்ச்சியாக வந்த பாவேந்தர்,

    “இன்பம் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு
    துன்பம் இனியுமுண்டோ?
    சொல்! சொல்! சொல்! பகையே!” 48

    எனப் பகையை நேரடியாக விளித்தே பேசுவதைக் காணமுடிகிறது. இந்த நிலை இற்றைநாள் வரை தொடர்கிறது.

    “தாழ்வை அகற்றித் தலைநிமிர்வாய்! போற்றுமுயர்
    வாழ்வில் சிறப்பாய் வளம்காண்பாய் – ஏழ்மையை
    ஓடவே செய்வாய்! ஒரு பயனும் நல்காத
    மூடப் பழக்கம் விலக்கு!” 49

    “மூலையில் நீயும் முடங்கிக் கிடக்காமல்
    வேலையில் நாளும் விழிபதிப்பாய் – காளை நீ!
    வேழமாய் வீறுசால் வெம்புலியாய் சிங்கமாய்
    வாழ வழிவகுக்க வா” 50

    வள்ளுவர் காலத்து இல்லாத அல்லது தேவைப்படாத மொழி, இன, நாட்டுணர்வு இன்றைக்குப் பெரிதும் தேவைப்படுதலின் இந்த வாய்பாட்டிலும் மணிமாறன் கவிதை செய்தார் எனக் கருதலாம். திருக்குறளின் உத்தி பற்றிய ஆய்வில் அவர் கையாளாது பிறர் கையாண்ட முன்னிலை பற்றிய இந்தப் பகுதி எதிர்கால ஆய்வு நோக்கியதாகக் கொள்ளலாம்.

    வியங்கோள்

    ஏவலின் முதிர்ச்சியே வியங்கோள். ‘வாழ்’ என்றால் ஏவல். ‘வாழ்க’ என்றால் வியங்கோள். கட்டளைப் பொருளில் வரும் ஏவல் வினைகளைக் காட்டிலும் வியங்கோளில் வரும் வினைகள் பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவை. நீதியுரைத்தலிலும் பண்பாடு காக்கும் திருவள்ளுவரின் பேராளுமை அவர் பயன்படுத்தியிருக்கும் வியங்கோள்களில் விளங்கக் காண்கிறது.

    “செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகுஅதனிற் கூரியது இல்” 51

    “மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
    ஒருவுக ஒப்பிலார் நட்பு” 52

    “உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” 53

    பொருளைச் ‘செய்’ என்னாது ‘செய்க’ என்று கூறியவர், ‘மருவு’, ‘கொள்’ என்றெல்லாம் ஏவலிருந்தும் வியங்கோளைப் பயன்படுத்துவார்.   எதிர்மறையிலும் ‘கொள்ளற்க’, ‘உள்ளற்க’ என்பார். இத்தகைய வெளிப்பாடுகளுக்குக் காரணம் ஞானம். அந்த வெளிப்பாடுதான் இன்றைக்கும் வள்ளுவத்தைத் தூக்கி நிறுத்துகிறது. பின்னாலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் இந்த நெறி பரவலாகப் பயன்பட்டு வந்துள்ளதை அறியலாம்.

    “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க!” 54

    “முடியும் திறத்தால் முயல்க!” 55

    “பழியின்மை மக்களால் காண்க! ஒருவன்
    கெழி யின்மை கேட்டால் அறிக – பொருளின்
    நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக!” 56

    என்னுமாறு அமைந்த கீழக்கணக்குப் பதிவுகள் வியங்கோள் ஆளுமையை விளக்கக் கூடும். இந்த வியங்கோள் நெறியை வள்ளற் பெருமான்,

    “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!
    அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆள்க – தெருள் நயந்த
    நல்லோர் நினைத்த நலம்பெறுக! நன்றுநினைந்து
    எல்லோரும் வாழ்க இசைந்து” 57

    என்னும் வெண்பாவில் தனது வேதனையைப் பதிவு செய்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக பாரதியாரும்,

    “ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!
    ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!” 58

    என்று பாடுகிறார். அவருடைய நண்பராகிய பாவேந்தர்,

    “தமிழ்மொழியைத் தாய் என்னும்
    தமிழர் வாழ்கவே!
    தமிழ்மொழிக்குத் தாழ்வுரைக்கும்
    தக்கை வீழ்கவே!
    தமிழ்வாழத் தாம் வாழும்
    தமிழர் வாழ்கவே!
    தமிழ்வீழத் தாம் தாழும்
    சழக்கர் வீழ்கவே!”59

    மொழியினம் நாடு பாடும் நம் மணிமாறன் வெண்பாக்களில் இத்தகைய வியங்கோள் வினை உத்திகள் வேண்டிய மட்டும் பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.

    “நல்லனவே எண்ணுக! நன்மை விளைத்திடுக!
    இல்லார்க் கிரங்கி உதவிடுக! – சொல்லினில்
    இன்பம் பெருக்கி இடரகற்றி எப்போதும்
    அன்பில் திளைக்க அறிந்து” 60

    “கண்ணும் கருத்துமாய் கடமையை ஆற்றுக!
    புண் மொழி பேசிப் புலம்பற்க! – மண்ணிலே
    நல்லவன் என்னும் நறும்புகழ் எய்துக!
    எல்லாம் அறிக! இசைந்து” 61

    உடன்பாடும் எதிர்மறையுமாக அமைந்த முன்னிலை வியங்கோள் வினைமுற்றுக்களால் சமுதாயத்தோடு தனக்குள்ள தொடர்பினை வெண்பா மூலம் புதுப்பித்துக் கொள்கிறார் மணிமாறன். ஒரு கருத்தினை வியங்கோளாக வெளிப்படுத்துவது என்பது மரபுசார்ந்த கவிதை வெளிப்பாடு என்பதை அறியவும்! சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதை காண்க.

    திருக்குறளில் தொழிற்பெயர்த் தொடரி

    திருவள்ளுவர் அறுவகைப் பெயர்ச் சொற்களையும் கையாண்டு கவிதை செய்த பெருந்தகை. அவற்றுள் தொழிற்பெயர்களைத் தொகுத்துத் தொடரியாக்கிறார். அந்தத் தொழிற்பெயர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்டு இணைந்து காணப்படுவது கூடுதல் சிறப்பு.

    “உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு” 62

    “ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்” 63

    “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு” 64

    மேற்கண்ட குறட்பாக்களில் உள்ள தொழிற்பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில் தொடர்ந்து அமைந்திருப்பதைக் காணலாம். இந்த நெறியும் பின்னாளில் தொடர்ந்து வந்திருப்பதை அறியமுடிகிறது.

    “இன்னறுங்கனி சோலைகள் செய்தல்,
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
    பின்னருள்ள தருமங்கள் யாவினும்
    பெயர்விளங்கி ஒளிற நிறுத்தல்,
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” 65

    இவ்வாறு அனைத்தும் தொழிற்பெயர்களாக அடுக்கியுரைப்பதனை, வெற்று வாய்மொழிகளாக இருப்பதனால் பயனில்லை செயல்வடிவம் பெற வேண்டும் என்பதைக் குறிப்பால் பெற வைக்கும் உத்தியாகவும் கருதலாம்.

    “கொள்ளை யடித்தல் குறுக்குவழி நாடுதல்
    கொள்கை மறந்தே குழப்புதல் – விள்ளரிய
    கேட்டை விளைத்திடுமிக் கீழோர் செயலெல்லாம்
    நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 66

    “மானம் இழத்தல் மதுவருந்தல் மற்றவர்க்கே
    ஆனவரை தீங்கிழைத்தல் அன்றாடம் – ஊனம்செய்
    கேட்டை விளைத்தல் கெடுமதியோர் நட்பெல்லாம்
    நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 67

    என்னும் கடவூர் மணிமாறன் பாடல்களில் தொழிற்பெயர்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம்.

    திருக்குறளில் படர்க்கைப் பதிவுகள்

    தனிமனித நெறியுரைத்த திருவள்ளுவர் பெரும்பாலும் படர்க்கை நிலையையே தமது வெளிப்பாட்டு உத்தியாகக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறட்பாக்களின் கட்டமைப்பால் அறியலாம்.

    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு” 68

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்” 69

    “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்” 70

    “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்தூறும் அறிவு” 71

    “மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
    எல்லாப் புகழும் தரும்” 72

    என்றெல்லாம் அறம் மற்றும் பொருட்பாலில் எண்பது விழுக்காடு வெண்பாக்களைப் படர்க்கையில் அமைத்துக் காட்டியவர் திருவள்ளுவர்.  படர்க்கை என்பது இலக்கணத்தில் மூன்றாவது நிலையாக இருக்கலாம். வாழ்க்கைப் பட்டறிவில் முதனிலை. அதனால்தான் தமிழின் அத்தனை நீதி நூல்களும் பெரும்பாலும் படர்க்கையைத் தேர்ந்தெடுத்தன. படர்க்கையில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் இலக்கியச் சுவையோடு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே ஆடூஉ முன்னலை மற்றும் மகடூஉ முன்னிலைகள் இடம்பெற்றன. இப்பொருண்மை தனி ஆய்வுக்கு உரியது. விரிந்த மனத்தால் எதனையும் எவரையும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வாழ்த்தவும் வையவும் படர்க்கை பயன்படும். ஆசிரியர் கூற்று என்பதும் அது.

    தமிழ் மறையில் தன்மைப் பன்மை

    தம் கருத்துக்களை முன்னிலையிலும் வியங்கோளிலும் குறள் வெண்பாவில் பதிவு செய்திருக்கும் திருவள்ளுவர் மூன்று குறட்பாக்களில் மட்டும்  தன்மைப் பன்மையில் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது.

    “பெருமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற” 73

    “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற” 74

    “மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பார் யாம்கண்ட தில்” 75

    என்பன காண்க. “யாம் அறிவதில்லை”, “யாம் கண்டவற்றுள்”, “யாம் கண்டதில்” என்பனவெல்லாம் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது. இத்தகைய உத்திகளின் பயன்பாட்டிற்குரிய நோக்கம் தனி ஆய்வுக்கு உரியது. இந்த நெறியால் ஈர்க்கப்பட்ட அப்பர் பெருமான்,

    “நாமார்க்கும் குடியல்லோம் நமனைஅஞ்சோம்
    நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்!
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” 76

    என்று பாடியிருக்கிறார். ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’77 என்பதும் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு”78 என்பதும் பாரதி முழக்கங்கள்.

    “நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு — தமிழா
    நாம் தமிழர்! நம் திறத்துக்கெவர் ஈடு?
    தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு! – நாம்
    தீர்த்துக் கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு!” 79

    இது பாவேந்தர் பாரதிதாசனின் தன்மைப் பன்மை உத்தி. அவருடைய பரம்பரைக் கவிஞர் நிரலில் வரும் நாடறிந்த நற்றமிழ்ப் பாவலர் கடவூர் மணிமாறன்,

    “கன்னல் தமிழ் காப்போம்! காழ்ப்பால் துயரிழைக்கும்
    புன்மையர் வீழப் பொருதிடுவோம் – நன்னெறியால்
    சூழும் பகைவெல்வோம்! சுற்றம் தழுவியே
    வாழும் வகையறிவோம் வா!” 80

    “நன்மை விளைத்திடுவோம்! நாடுமொழி நம்மினத்தை
    என்றுமே காப்போம்! இனியன – நன்றாற்றி
    மாற்றம் விளைப்போம்! மனத்தைப் புதுக்கிடுவோம்!
    ஏற்றமே காண்போம் இனிது” 81

    உளப்பாட்டுத் தன்மைப் பன்மையால் நேரிசை வெண்பா யாப்பில் தனது உயிர்மூச்சான கொள்கைகளைப் பதிவு செய்திருக்கும் இந்தப் பேராற்றல் பெரிதும் பாராட்டுக்குரியது. “பாதகம் செய்பவரைக் கண்டால் ‘நீ’ பயங்கொள்ளலாகாது” என்னாது ‘நாம் பயங்கொள்ளலாகாது’ எனப் பாரதி குழந்தையை அரவணைத்துப் பாடியது போலச் சமுதாய முன்னேற்றத்திற்குச் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து பாடுபடும் மணிமாறனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவதாம்.

    தன்னை அடையாளம் காட்டிய திருவள்ளுவர்

    ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் திருவள்ளுவர் தான் சொல்லுவதாக அதாவது தன்மை ஒருமையில் வரித்துக் கொண்டு சொன்ன கருத்துப் பதிவு ஒன்றே ஒன்றுதான். அது,

    “இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    ‘கரப்பார் இரவன்மின்’ என்று” 82

    பெரும்பாலும் அறியப்படாத இந்தப் பாட்டின் கண்ணழிப்பு (நானாகிய திருவள்ளுவன் “இரப்பாரையெல்லாம் இரப்பின் கரப்பார் (ஐ) இரவன்மின் என்று இரப்பன்). இந்தப் பாட்டுக்கு என்ன பொருள் என்றால் பொருளிருந்தும் கரந்தொழிக்கும் கயவரிடத்தில் இரக்கின்றவர்களைப் பார்த்து,

    “ஐயா! வைத்துக் கொண்டே இல்லை என்று மறுதலிக்கும் கயவர்களிடத்தில் இரக்காதீர்கள்” என்று நான் இரந்தேன்”

    என்பதாம். இந்த ஒரு திருக்குறளில்தான் திருவள்ளுவர் தன்மை ஒருமையில் பதிவிடுகிறார். இதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்பது கட்டுரையாளரின் அனுமானம். தன்மை ஒருமை பெரும்பாலும் முனைப்பின் அடையாளம். யான், எனது என்பனவற்றுள் அது ‘யான்’ என்னும் அகப்பற்று. அது எனது என்னும் புறப்பற்றினைக் காட்டிலும் கேடுதருவது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் அவர். எனவே அத்தகைய உத்தியினை அவர் தவிர்த்திருக்கக் கூடும். பின்னாலே வந்த கவிதை படைப்பாளர் பலரும் திருவள்ளுவர் அரிதாகப் பயன்படுத்திய உத்தியினை மிக எளிதாகவும் பேரளவிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். உருக்கும் திருவாசகத்தில்,

    “யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனக்கு என் கடவேன்?
    வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்!
    தேனேயும் மலர்க்கொன்றை சிவனே எம் பெருமான் எம்
    மானே உன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே!” 83

    என்று தன்மை ஒருமையில் வைத்துப் பாடியிருக்கிறார். திருவாசகம் முற்றிலும் சன்மார்க்கத்தையொட்டி எழுந்த நூலாதலின் குருவை வழிபடுதலுக்குச் சீடனாகிய தன்னை முன்னிலைப்படுத்துவது பொருத்தம் என்று அவர் கருதியிருக்கலாம். வள்ளற்பெருமான் தனது சமரச சன்மார்க்கக் கொள்கைகளை வலியுறுத்திப் பாடும் பொழுது,

    “புனைந்துரையேன்! பொய்புகலேன்! சத்தியம் சொல்கின்றேன்!
    பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே!” 84

    என்று பன்னியுரைக்கின்றார். மகாகவி பாரதி,

    “விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
    வேண்டியபடிசெலும் உடல் கேட்டேன்!
    நசையறு மனம்கேட்டேன்! நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்!
    தசையினைத் தீச்சுடினும் – சிவ
    சக்தியைப் பாடும் நல் அகம்கேட்டேன்!” 85

    எனத் தன் வேண்டுதலைப் பதிவு செய்திருக்கிறார். அவர் காட்டிய புதுத்தடத்தில் கவிப்பயணம் தொடங்கிய பாவேந்தர்,

    “ஆன என் தமிழ் ஆட்சியை நிறுவ
    அல்லல்கள் வரின் ஏற்பேன்!
    ஊனுடன் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
    உவப்புடன் நான் சேர்ப்பேன்!” 86

    என்று முழக்கமிடுகிறார். ஒவ்வொரு தமிழனும் மொழிக்கும் இனத்திற்கும் ஆற்ற வேண்டிய பணியினை ஆற்ற வேண்டும் என்னும் குறிப்பு இந்தத் தன்மைப் பதிவில் இருப்பதாகக் கருதலாம்.

    நிறைவுரை

    மூலப்பொருள் ஒன்றேயெனினும் கைத்திறப் பக்குவத்தால் படைப்புக்களின் தன்மைகள் மாறுபடுகின்றன. இந்த மாற்றம் ஒருவரே எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். பலர் எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். அந்தக் கையாளும் திறமைகளில் ஒன்றுதான் உத்தி என்பது. கவிதை உத்தியால் சிறக்கிறது. திருவள்ளுவர் தாம் படைத்த திருக்குறளில் தமது சிந்தனைகளைப் படர்க்கையில் கூறுகிறார். வியங்கோளில் கூறுகிறார். தன்மைப் பன்மையில் கூறுகிறார்.  தொழிற்பெயர்களை அடுக்கிக் கூறுகிறார். இவ்வளவு பொருளையும் இத்தனை உத்திகளில் கூறிய தெய்வப்புலவர் ஒரே ஒரு குறட்பாவில் மட்டும் தன்மை ஒருமையில் கூறியிருக்கிறார். வாழையடி வாழையென வந்த இத்த வெளிப்பாட்டு உத்தி ஓர் தொடர் மரபாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளது எனத் தெரிகிறது. கவிதைகளின் புறக்கட்டுமானங்களை நோக்குவார்க்கு இத்தகைய உத்தி மாறுபாடுகள் கண்ணிற்படாமல் போகாது. அவ்வாறு கண்ணிற்பட்டதன் விளைவே இக்கட்டுரை. கவிதைப் பதிவுகளை உத்திகளின் அடிப்படையில் சுவைப்பதற்கும் ஆராய்வதற்குமான ஆய்வுத் தொடரியில் இக்கட்டுரையும் ஒரு கண்ணியாக அமையக்கூடும் என்னும் நம்பிக்கையோடு நிறைவுறுகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. கங்கை அமரன் ‘இங்கேயும் ஒரு கங்கை’       திரையிசைப்பாடல்
    2. மேலது
    3. மேலது
    4. மேலது
    5. வைரமுத்து ‘முதல்மரியாதை’              திரையிசைப்பாடல்
    6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் அடைக்கலக்காதை      வரி. 2382-2383
    7. மேலது       வரி. 2403-2406
    8. மேலது       வரி. 2407-2430
    9. கம்பர்                 கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் பா.எண்.3965
    10. மேலது பா.எண் 4059
    11. மேலது பா எண்.4060.
    12. சமண முனிவர்கள் நாலடியார் காமம் நுதலியல்    பா.எண். 40-1
    13. மேலது                         பா.எண். 40.10
    14. மேலது                      கீழ்மை                 பா.எண். 35–3
    15. மேலது கீழ்மை                 பா.எண். 35– 4
    16. மேலது கீழ்மை                 பா.எண். 35 –8
    17. திருவள்ளுவர்       திருக்குறள்              கு.எண். 1091
    18. மேலது கு.எண். 1094
    19. மேலது கு.எண். 1111
    20. மேலது                              கு.எண். 1112
    21. மேலது கு.எண். 1123
    22. மேலது கு.எண். 02
    23. மேலது கு.எண். 315
    24. மேலது கு.எண். 71
    25. மேலது கு.எண். 301
    26. மேலது கு.எண். 483
    27. மேலது கு.எண். 345
    28. மேலது கு.எண். 1323
    29. மேலது கு.எண். 1308
    30. மேலது கு.எண். 1299
    31. மேலது கு.எண். 1267
    1. அப்பர் தேவாரம் 5ஆம் திருமுறை           பா.எண். 99
    2. மணிவாசகர் திருவெம்பாவை                     பா.எண். 3
    3. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்          ப 404
    4. மேலது ப 66
    5. மேலது ப 67
    6. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1    ப 22
    7. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
    8. கண்ணதாசன்       பாகப்பிரிவினை         திரையிசைப்பாடல்
    9. வைரமுத்து       சிவப்புமல்லி            திரையிசைப்பாடல்
    10. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 52
    11. மேலது                                                    ப 129
    12. கன்னல் கருவூர்        புயலைத் தாக்கும பூக்கள்             ப 81
    13. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 221
    14. மேலது
    15. மேலது
    16. மேலது
    17. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
    18. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 27
    19. மேலது                                          ப 76
    20. திருவள்ளுவர்       திருக்குறள்                          கு.எண். 759
    21. மேலது             கு.எண். 800
    22. மேலது             கு.எண். 798
    23. சமணமுனிவர் நாலடியார்                           பா.எண். 2
    24. முன்றுரையரையனார் பழமொழி                           பா.எண். 49
    25. விளம்பி நாகனார் நான்மணிக்கடிகை                    பா.எண். 61
    26. வள்ளலார்       திருவருட்பா – சமரசநிலை            பா.எண். 74-5
    27. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 36
    28. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி (தொகுப்பு நூல்) ப 6
    29. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 33
    30. மேலது       ப 50
    1. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 261
    2. மேலது கு.எண். 264
    3. மேலது கு.எண். 385
    4. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 173
    5. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 28
    6. மேலது
    7. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 72
    8. மேலது கு.எண். 50
    9. மேலது கு.எண். 156
    10. மேலது கு.எண். 396
    11. மேலது கு.எண். 457
    12. மேலது கு.எண். 61
    13. மேலது கு.எண். 300
    14. மேலது கு.எண். 1071
    15. அப்பர் தேவாரம் மறுமாற்றம் திருத்தாண்டகம் பா.எண். 1
    16. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் ப 26
    17. மேலது ப 23
    18. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் ப 521
    19. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 27
    20. மேலது ப 32
    21. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 1067
    22. மணிவாசகர் திருவாசகம் திருச்சதகம் பா.எண். 12
    23. வள்ளலார் திருவருட்பா – ஞானசரியை     பா.எண். 110 -1
    24. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 122
    25. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி ப 5

    துணைநூற்பட்டியல்

    1. அப்பர் தேவாரம் (தலமுறை), திருப்பனந்தாள் ஆதீனம் (காசிமடம்) ஜனவரி -1966
    1. கம்பர் கம்பராமாயணம் கங்கை புத்தக நிலையம், 13, தீன தயாளன் தெரு, தி.நகர், சென்னை – 600017
    1. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள், பூம்புகார் பிரசுரம், பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 600 108, நான்காம் பதிப்பு – 1991
    1. திருவள்ளுவர் திருக்குறள், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு, உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009
    1. மணிவாசகர் திருவாசகம், அப்பர் புத்தக நிலையம், 1621, தெற்கு ராச வீதி, தஞ்சாவூர். முதற்பதிப்பு – 1963
    1. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி தொகுப்பு நூல், மணிவாசகர் நூலகம், 12 – பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608101, முதற்பதிப்பு – ஜுலை 1993
    1. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1, பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை – 600 001
    1. கடவூர் மணிமாறன் வெண்பாச் சோலை, விடியல் வெளியீட்டகம், 1—53, பெரியார் நகர், குளித்தலை, கரூர் மாவட்டம், முதற்பதிப்பு – சூலை 2020
    1. கருவூர் கன்னல் புயலைத் தாக்கும் பூக்கள், தமிழ்ப்பாசறை, 79, தெற்கு நரசிம்மபுரம், கருவூர் – 639001, முதற்பதிப்பு – டிசம்பர் 1998
    1. பதினெண்கீழ்க்கணக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (மர்ரே பதிப்பு) அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை – 600 098, இரண்டாம் பதிப்பு – 1981
    1. வள்ளலார் திருவருட்பா, சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு, 7—99, அம்மன் கோவில் தெரு, கிருஷ்ணாகுளம் அருகில் சென்னை, முதற்பதிப்பு – அக்டோபர் 1942

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    ‘தமிழ்க் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்  (திருக்குறள்)  என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. திருக்குறளில் உத்தி பற்றிய இந்த ஆய்வு, ஆய்வு நெறிப்ப்டி கருதுகோள், வலிமையான தரவுகள், அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தரவுகள் மற்றும் சான்றுகள் பற்றிய விளக்கம், மேற்கோள்கள், சான்றெண் விளக்கம், துணை நூற்பட்டியல் ஆகிய உறுப்புகளைக் கொண்டு செவ்வையாகவும் பொறுப்புணர்வுடனும் நிகழத்தப்பட்டிருக்கிறது.
    1. தமிழ்க்கவிதைகளில் உத்தி என்னும் பொதுத்தலைப்பில் திருக்குறளில் உத்தி என்னும் பொருண்மை சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் ஒரு பரந்து பட்ட தமிழ்க்கவிதை களத்தையே   ஆய்வாளர் தம் ஆய்வுப்பார்வையால் காட்சிப்படுத்தியிருக்கிறார். .
    1. திருக்குறளை முன்னிறுத்திய இந்த ஆய்வுக் கட்டுரையில் கம்பன் முதல் கரூர் கன்னல் வரை இடம் பெறுகிறார்கள். வள்ளலார் முதல் வைரமுத்து வரை வந்து போகிறார்கள். காப்பியம் தந்த இளங்கோ முதல் கடவூர் மணிமாறன் வரை காட்சி தருகிறார்கள்.
    1. “ஒரே பொருளை  ஒன்றுக்கும் மேற்பட்ட  முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு உத்தி என்று பெயர்” என வரையறைத்துச் செய்திருக்கிற  தொடக்கம்  ஆய்வு நெறியில் ஆய்வாளரின் தோய்நத புலமையைக் காடடுகிறது.
    1. “திருவள்ளுவர் பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்”. என்னும் திருக்குறளில் விரவியுள்ள உத்தி பற்றிய பன்முக விளக்கம் ஆய்வாளரின் திருக்குறள் புலமையைக் காட்டுவதுடன் எதனையும் ஆய்வு நோக்கில் காணும் அன்னாருடைய இயல்பினையும் புலப்படுத்துவதாக உள்ளது.
    1. “யாம் அறிவதில்லை” “யாம் கண்டவற்றுள்” “யாம் கண்டதில் என்பனவெல்லாம்” என்னும் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது.   என்னும் தன்மைப் பன்மை பற்றிய பயன்பாட்டு வரையறையும் அதனையொட்டிப் பின்வந்த சான்றோர்களின் படைப்புகளைக் காட்டி அவ்வுத்தியின் தாக்கத்தைக் காட்சிப்படுத்தும் ஆய்வாளர், திருக்குறளில் கையாளப்பட்டிருக்கும் ஒவ்வொரு உத்தியும் பின்வந்த சான்றோர்களாலும் நோக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வுநெறிப்படி விளக்கியிருக்கிறார்.
    1. திருவள்ளுவர் “இரப்பன் இரப்பாரை எலலாம் இரப்பின் ‘கரப்பார் இரவன்மின்’ (1067) என்று ”ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தன்மை ஒருமையில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது ஆய்வாளரின் உழைப்பையும் ஆய்வின துல்லியத்தையும்  காட்டுகின்றன.

    ஆய்வு நெறிப்ப்டி கடும் உழைப்புடனும் ஒரு தேடல் பார்வையுடனும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை பகுப்பாய்வாக இருப்பினும் ஒவ்வொரு பத்தியிலும் ஆய்வு மணம் கமழ்வதை உணர முடிகிறது. ஆய்வாளருக்கு அறிவு இயற்பொருளாகவும் ஆற்றல் துணைப்பொருளாகவும் அமைந்திருப்பதைக் கட்டுரை வெளிப்படுத்துவதாக உள்ளது.


     

    Share
  • Online Rummies

    Online Rummies

    Baskar Seshadri

    The committee appointed by the state govt. on the banning of online games has to seriously work and submit the report, because earlier the Case was not handled properly and the Judge made it clear that the ban cannot be enforced since such games are in existence all over the world in India and in Tamilnadu too.

    When the game is a subject of intelligence or of chances is unsure at this stage was the contention of the court to reject the proposal last time. Hope this time the report has to be made more strongly citing all the mental agonies of the families are undergoing after the tragedy that had struck all these few years.

    Moreover the impact of the disturbance the young minds undergo is the second one apart from the monetary loss and the way in which the said victim had explored the ways to find money.

    Am sure there should be a strong connection to this victim of these games and those who collect Usury Interest.

    The govt. had moved on a right direction though its bit late. Let’s Hope the courts concerned see this issue as a serious problem and order to enforce the ban.

    An Interim stay is also an ideal one before the final order.

    Can you believe that thirty People had committed suicide so far these years because of the loss they had undergone?

    Share
  • No Complaints, But only Compliments

    Baskar Seshadri

    This morning around 4.30 am I was just returning back to home in Mandaveli after a coffee.

    Near R K Nagar I saw an auto and a young girl. It was well lit.

    The driver told he could not drop her because of some problem in the vehicle.

    I just thought I can drop the girl to the main road so that she can get an auto. But since she had a huge luggage she could not do that. Or she might have felt uneasy to travel with a stranger.

    When I found that I could do nothing I just asked her and the driver to wait over there a while. I came to main road near Spencer and after few minutes I was able to stop an auto-man and told him to drop her.

    So nice he was there to oblige and in next one minute he reached the girl and picked her to drop near Madhya Kailash where she has to board a bus to go out of station.

    She said thanks but only the two drivers deserve that. The one who remained with her with the stranded auto and the one who ferried her.

    Real Good Samaritans.

    Share