Blog

  • கோவிந்தம் போடுவோம்

    கோவிந்தம் போடுவோம்

    ‘கோவிந்தம் போடுவோம்’ என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • The Golden Connect – Madras Day Memories on Marina

    The Golden Connect – Madras Day Memories on Marina

    Seshadri Baskar

    I never had an idea that I would be having an interesting evening today (3rd September) near the sands of Marina overlooking the beautiful beach. It was a meeting arranged by the Golden Connect to discuss and share the memories of madras of seventies and before.

    In fact this should have been arranged a fortnight back when Madras day was on but it was scheduled only today. It was a mixture of gathering of old and young where those who have memories of those days shared their life in Madras.

    Many oldies like me shared the experiences of the old madras. From the rich culture to religion and from Cinema to clothing everything that was connected to old madras were shared by a group of people numbering around thirty.

    Though it was a small gathering the exchanges that were made by many was extremely great.

    One Lady shared her experience of having travelled in a small boat near Thannithurai Market and someone spoke in detail about the cycle rickshaw Journey to school. The most important Hire Cycle (Hour Cycle for us) was also a topical interest. From my end I shared an emotional connect of the sudden termination of the Tram Services. Luz, where there used to be a connecting point was in grim mood and when People realsied that the services were stopped they broke.

    Later children used the track to play the magnet game on kutchery road on the tracks. Years after when urban managers went to remove the tracks children cried for Hours and none of them could be convinced.

    It was a emotional attachment which any money can’t buy.

    In a meeting that lasted for two hours almost everyone had something to share. It was quite interesting to see youngies in the gathering.

    The organizers had planned for a regular meeting of this sort at-least once in three months.

    The meeting was held in Museum of possibilities building on the beach road opposite Avvaiyar Statue. The building is so cute and well furnished with air – conditioned comfort.

    Many people are interested to document the old madras with inputs from Octogenarian. A young girl was all on move to do a big story on Pelathope.

    It was my first visit to meet these people and i do not know anyone or their names. But the little group has the best potent to show case Madras in a Magnificent way in the coming days.

    What then? We all wound up for the day with coffee and some settled for ice cream and Bread of “Winners” who had put up a stall. Sipping a cup of coffee looking at the sea is a bonanza.

    Am glad that I did not take a nap this evening or did not choose for arguments in Facebook. Thanks to Golden connect for the Invite. Waiting for more.

    Share
  • எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? | நிர்மலா ராகவன்

    எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? | நிர்மலா ராகவன்

    எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? அந்த மொழியின் இயல்புக்கு ஏற்ப அதைப் பேசுவது எப்படி? இதோ கற்றுக் கொடுக்கிறார், நிர்மலா ராகவன்.

    ஆங்கிலத்தில் பேசும்போதும் எழுதும்போதும் சாதாரணமாக வரக்கூடிய பிழைகள் எவை எவை? இவற்றை எப்படி எழுத வேண்டும்? பேச வேண்டும்? நிர்மலா ராகவன் விளக்குகிறார்.

    பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(417)

    குறளின் கதிர்களாய்…(417)

    செண்பக ஜெகதீசன்

    மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
    பிறத்த லதனான் வரும்.

    – திருக்குறள் – 303 (வெகுளாமை)

    புதுக் கவிதையில்…

    மண்ணில்
    மனிதனுக்கு வரும்
    மாறாத தீவினைகளெல்லாம்
    அவனது
    மாறாத கோபத்தால்தான்..

    உண்மை யிதனை
    உளத்தில் கொண்டே
    யாரிடத்திலும்
    கோபம் கொள்ளும்
    கொடுஞ் செயலை
    மறந்திட வேண்டும்…!

    குறும்பாவில்…

    யாரிடமும் சினம்கொளாது மறந்திடவேண்டும்,
    மனிதனுக்கு வரும் தீவினைகளெல்லாம் அவனது
    கோபத்தினால்தான் என்பதை உணர்ந்தே…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனிதன் பெறுகின்ற
    மலையைப் போன்ற தீவினைகள்
    எண்ணில் பலவாய் வருவதெலாம்
    ஏறு மவன்தன் சினத்தாலே,
    உண்மை யிதனை உணர்தேதான்
    உலகி லுள்ள யெவருடனும்
    கண்மண் தெரியாக் கோபத்தைக்
    கைவிட் டுடனே மறப்பாயே…!

    லிமரைக்கூ…

    யாரிடமும் கொளாதே சினமதை,
    மனிதனுக்குத் தீவினையெல்லாம் வருவது சினத்தாலே
    என்பதுணர்ந்தே அடக்கிவை மனமதை…!

    கிராமிய பாணியில்…

    கொள்ளாத கொள்ளாத
    கோவம் கொள்ளாத,
    யாருகிட்டயும் எப்பவுமே
    கோவம் கொள்ளாத..

    ஒலகத்தில உள்ள
    மனுசனுக்கு வாற
    கெடுதலெல்லாம் அவனோட
    கோவத்தால வாறதுதான்,
    அத நல்லா ஒணர்ந்து
    யாருமேலயும் கோவப்படுறத
    உட்டுப்புட்டு
    அத மறந்துடணும்..

    அதால
    கொள்ளாத கொள்ளாத
    கோவம் கொள்ளாத,
    யாருகிட்டயும் எப்பவுமே
    கோவம் கொள்ளாத…!

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 54

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 54

    -மேகலா இராமமூர்த்தி

    மூக்கையும் காதுகளையும் சுக்கிரீவனிடம் இழந்த கும்பகருணன் கடுங்கோபத்தோடு போர்புரியத் தொடங்கினான். தன் கேடகத்தை எடுத்து வீசினான்; அது வானிலுள்ள விண்மீன்களைக் கீழே உதிர்த்தது.

    கும்பகருணனின் போராற்றல் கண்டு அஞ்சிய சாம்பன் இராமனைப் பார்த்து, “இது நமக்கு மிகவும் நெருக்கடியான தருணம்; இப்போது நீ இவனைத் தடுத்துப் போர் புரியாவிட்டால் குரக்குச் சேனையை முற்றாய் அரக்கர் படை ஒடுக்க வழிவகுத்தவனாவாய்; எனவே போரிடுக!” எனத் தூண்டினான்.

    அதுகேட்டுக் கும்பனுக்கு நேரெதிரே வந்த இராமன், தன் அம்பு மழையால் கும்பனின் கையிலிருந்த கேடகம், வாள், கவசம் என அனைத்தையும் அறுத்தெறிந்தான்; இராவணன் அனுப்பிய படை அப்போது கும்பகருணனின் உதவிக்கு வந்தது. அவற்றையும் அழித்தொழித்த இராமன், தனியே நின்ற கும்பகருணனை நோக்கி,

    ”படைக்கலங்களோடு எதிர்க்கவல்ல பெருந்துணையான படைகளை இழந்தாய்; தன்னந்தனியனாய் எதிர்நிற்கின்றாய்; நீதிநெறி தவறாத வீடணனோடு பிறந்தனை ஆதலின் உன் உயிரை உனக்குத் தருவேன்; இப்போது இலங்கைக்குத் திரும்பிப் போய்விடுகிறாயா? பின்பு மீண்டும் வருகிறாயா? அல்லது போர்செய்து இப்போதே இறந்துபடுகிறாயா? உனக்குப் பொருந்தியதை ஆய்ந்து சொல்லுக!” என்றான்.

    ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை
    எதிர்ஒரு தனி நின்றாய்
    நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்
    நின்உயிர் நினக்கு ஈவென்
    போதியோ பின்றை வருதியோ அன்றுஎனின்
    போர் புரிந்து இப்போதே
    சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி
    சமைவுறத் தெரிந்து அம்மா.
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7594)

    தன்னோடு போரிட்டுத் தோற்ற இராவணனுக்கு, ”இன்றுபோய் நாளை வா!” என்று வாய்ப்புக் கொடுத்ததைப் போலவே கும்பகருணனுக்கும் ”போய் வா!” என்று வாய்ப்பளிக்கின்றான் இராமன். முன்னவனுக்கு மதிப்புக்குரிய அரசன் என்ற முறையிலும், பின்னவனுக்கு அறநெறி வழுவா வீடணனின் அண்ணன் என்ற முறையிலும் இவ்வாய்ப்புகள் இராமனால் வழங்கப்படுகின்றன; இராவணன் அதனையேற்று வீரத்தைக் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்; ஆனால், கும்பகருணன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

    அவன் இராமனைப் பார்த்து, ”அழிவற்றவனே! எங்களால் தேவர்கள் பெருமை இழந்தார்கள்; அவ்வகையான பெருமித நிலைநோக்கி, தீண்டி வருத்தும் அணங்கையொத்த சீதை பிறர் மனைவி அவளைக் கைப்பற்றலாகாது எனத் தடுத்தேன்; அது ஏற்றுக்கொள்ளப் படாமையால் அதுகுறித்துத் தொடர்ந்து பேசும் வாக்கை இழந்தேன்; இப்போதோ உங்களால் என் செவியொடு மூக்கை இழந்தேன்; இத்தகு அவமானத்திற்குப் பிறகும் நான் இலங்கை நகருக்குத் திரும்புவது எங்ஙனம்? ஆதலால் போரிட்டு ஆவி துறந்தாலும் துறப்பேன்; நகருக்குத் திரும்பேன்” என்று மானவீரனாய் முழங்கிய கும்பகருணன், இராமன்மீது ஒரு குன்றைப் பெயர்த்து வீசினான்; இராமன் அதனைத் தன் அம்புகளால் தூளாக்கினான். எனினும், கும்பகருணன் மார்பிலிருந்த சங்கரன் ஈந்த கவசத்தை இராமனால் உடைக்க முடியவில்லை.

    சங்கரன் கவசத்தை அவனது படையாலேயே வெல்லவேண்டும் என்பதை உணர்ந்த இராமன், கும்பகருணனின் சிவ கவசத்தைத் தன்னிடமிருந்த பாசுபதக் கணையால் வீழ்த்தினான்.

    தொடர்போரில் இராமன் கும்பகருணனின் வலக்கையை வாளோடு அறுத்து எறிந்தான்; அறுத்து வீழ்த்தப்பட்ட அக்கையை இடக்கையில் எடுத்துக்கொண்டு அதனால் வானர சேனையை அடித்துக் கொன்றழித்தான் அந்த வீரன்! இன்றே வானர குலம் முற்றாய் எமனுலகு எய்திடுமோ எனும் அச்சத்தில் வானரர்களும் வானவர்களும் கும்பகருணனைப் பார்த்திருக்க, தன் அம்பால் அவனுடைய இடக்கையையும் வெட்டிக் கடலில் வீழ்த்தினான் இராமன்.

    தோள்வளையுடன் கடலில் வீழ்ந்த கும்பகருணனின் கையானது, பாற்கடலில் நடப்பட்டு, வாசுகி எனும் பாம்பு சுற்றிய மந்தரமலைபோல் தோற்றமளித்தது. அப்போதும் கும்பகருணனின் போர்வேகம் குறையவில்லை. அடுத்து இராமன் அவனுடைய வலக் காலை வெட்டி எறிய, அவன் தன் இடக் காலால் நொண்டிக்கொண்டு போரிட்டான். இடக் காலையும் இராகவன் தன் கணையால் துணிக்கவே, கைகளும் கால்களும் இழந்த நிலையிலும் அயராத கும்பகருணன், தீயினால் செய்யப்பட்டதுபோல், சினத்தினால் சிவந்த கண்களை உடையவனாய் தன் சிகையிலிருந்து கிளம்பிய தீயினால் திசைகளெல்லாம் கருக, மூங்கில்களால் நெருங்கிய மலை ஒன்றினை நாவினால் வானத்தைத் தீண்டுமளவு வளைத்து, பேய்கள் ஆரவாரிக்கும் பெரிய போர்க்களம் எரிந்து விழுமாறு பிலம்போன்ற தன் வாயைத் திறந்து நெடுந்தொலைவு வீசியெறிந்தான். அச்செயல்கண்டு வியந்த இராமனும் தன் மலர்க் கரங்களில் நடுக்கம் கொண்டான்” என்று கும்பகருணனின் மாவீரத்தை விதந்தோதுகின்றார் கம்பர்.

    தீயினால் செய்த கண்ணுடையான் நெடும்
    சிகையினால் திசை தீய
    வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால்
    விசும்புற வளைத்து ஏந்தி
    பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ
    பிலம் திறந்தது போலும்
    வாயினால் செல வீசினன் வள்ளலும்
    மலர்க் கரம் விதிர்ப்புற்றான்.
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7621)

    ஆனால், கை கால்களை இழந்துவிட்ட நிலையில் கும்பகருணனால் நெடுநேரம் போரிட இயலவில்லை. அவன் தன்னெதிர் நின்ற இராமனின் வில்லாற்றலை மனத்துள்ளே புகழ்ந்து, ஆயிரம் இராவணர்கள் வந்தாலும் இராமனை எதிர்க்கும் வலிமையற்றவர்களே என்று எண்ணியவனாய், தன்னால் இனி அண்ணனுக்கு உதவ இயலாத நிலையையும், இராவணன் இனி உயிர்பிழைத்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பதனையும் உணர்ந்து வருந்தினான்.

    ”அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறள்மொழிக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவன் கும்பகருணன் என்பதை அண்ணனுக்காகப் போரிட்டு அனைத்து உடலுறுப்புகளையும் இழந்த நிலையிலும் அண்ணனைக் காக்க இயலவில்லையே என்று அவன் வருந்துவதன் வாயிலாய் நாம் அறியமுடிகின்றது.

    தன் இறுதி உறுதியாகிவிட்டதை உணர்ந்த கும்பகருணன், இராமனை நோக்கிச் சிலவற்றை வரமாய் வேண்டுகின்றான்…

    ”இராமா! என் தம்பியாகிய வீடணன் நீதிமான்; தான் பிறந்த சாதியால் வந்த சிறுநெறி அறியாதவன்; நற்குணமில்லாத இராவணன் அவனைத் தம்பியென்றும் பாராமல் கொல்ல முயல்வான்; ஆதலால், அவனை நான் மீண்டும் உன்னிடம் அடைக்கலப்படுத்துகின்றேன். நீயோ உன் தம்பியோ அனுமனோ எப்போதும் வீடணனுடன் இருந்து அவனைக் காக்கவேண்டும் என்று உன்னை வேண்டுகின்றேன்.

    மற்றொன்றையும் நீ எனக்குச் செய்யவேண்டும்! முனிவர்களும் தேவர்களும் என் முகத்தை மூக்கில்லா முகம் என்று சொல்லிக் காண்பார்கள்; அவர்கள் அவ்வாறு நோக்காமல் உன் அம்பினால் என் கழுத்தை அறுத்து நீக்குவாய்; அறுத்து நீக்கிய பிறகு கழுத்தோடு கூடிய தலையைக் கரிய கடலுக்குள்ளே போக்குவாய்; இவையே நான் உன்னை வேண்டுவது” என்றான்.

    மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
    நோக்குவார் நோக்காமை நுன்கணையால் என் கழுத்தைப்

    நீக்குவாய் நீக்கியபின் நெடுந் தலையைக் கருங் கடலுள்
    போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான். (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7628)

    இறந்தபின்பும்கூடத் தன்னை யாரும் எள்ளி நகையாடிடக் கூடாது எனும் கும்பகருணனின் மானவுணர்ச்சி நம்மை மலைக்க வைக்கின்றது.

    கும்பகருணனின் வேண்டுகோளின்படியே அவன் சிரத்தை அறுத்து நடுக்கடலுள் வீழ்த்தினான் இராமன். கும்பனின் குன்றனைய முகம் கருங்கடலுள் சென்று மறைந்தது.

    தன்னலம் என்பது சிறிதுமற்றவனாய், அண்ணன் தம்பி எனும் எதிரெதிர் குணங்கள் கொண்டோரிடமும் ஒத்த பாசத்தை உடையவனாய், செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதன் பொருட்டு, தனக்கு உடன்பாடில்லாத செயலிலும், அண்ணனுக்காகப் போரிட்டு மடியும் மாவீரனாய், உறுப்புகள் குறைவுற்றபின் வாழாத மானவீரனாய் மிளிர்கின்ற கும்பகருணன், கம்பராமாயணத்தின் மிகச் சிறந்த பாத்திரங்களுள் ஒருவன் என்றால் மிகையில்லை.

    உலகக் காப்பியங்களில் கம்பருடைய கும்பனுக்கு ஒப்பாக ஹோமரின் இலியட் (The Iliad) காப்பியத்தில் வரும் ஹெக்டரையும் (Hector), மகாபாரதத்தின் வீட்டுமரையும் (பீஷ்மர்) நாம் கருதலாம். திராய் (Troy) நகரத்தின் இளவரசன் பாரிஸ், கிரேக்க அரசன் மேனலாசின் (Menelaus) மனைவி ஹெலனை (Helen) அழைத்துக்கொண்டு வந்ததால் கிரேக்கர்களுக்கும் துரோயன்களுக்கும் (Trojans) போர் தொடங்குகின்றது. அப்போரில் கிரேக்கப் படைவீரனான அக்கில்லஸ் (Achilles) கையால் தான் இறப்பது உறுதி என்று அறிந்திருந்தும் தன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போரிட்டு மடிகின்றான் பாரிஸின் அண்ணனான ஹெக்டர்.

    பிதாமகர் வீட்டுமரோ தமக்கு முடிவுவரப் போவது தெரிந்திருந்தும் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காகத் துரியோதன் பக்கம்நின்று போர்புரிந்து இறக்கின்றார். கும்பகருணனும் இம்மாவீரர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவன்.

    கம்பரின் இராமாயணம் வான்மீகத்தின் அப்பட்டமான மொழிபெயர்ப்பன்று; தன் தேவைக்கேற்பப் பாத்திரங்களைப் புதுக்கிப் படைத்துள்ளார் கம்பர் என்பதைப் பல இடங்களில் கண்டோம். வான்மீகருக்கு மாறாக எதிர்நிலைப் பாத்திரங்களான (antagonists) வாலி, இராவணன், கும்பகருணன், வீடணன் எனப் பலரையும் தம் காப்பியத்தில் அவர் உயர்த்திக் காட்டியிருப்பதைக் காண்கையில் அரக்கர்பக்கம் கம்பருக்கு இரக்கமும் ஈடுபாடும் அதிகமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    இங்கே போர்க்களத்தில் கும்பகருணன் இறந்துபட, அதனையறியாத இராவணன் அங்கே அரண்மனையில் கழிகாமம் சிறிதும் குறையாதவனாய்ச் சீதையை அடைய வேறு ஏதேனும் வழியிருக்கின்றதா என்று வினவிக் கொண்டிருந்தான் தன் அமைச்சன் மகோதரனை.

    ”அதற்கென்ன? மாயங்கள் செய்வதில் வல்லவனான மருத்தன் எனும் அரக்கனைச் சீதையின் தந்தை சனகனைப் போல் உருமாற்றி, அந்த மாயச் சனகனைக் கட்டிச் சீதைமுன் நிறுத்தி, இராவணனைச் சேருமாறு அவளிடம் அவனைச் சொல்லச் சொன்னால், தந்தைசொல் கேட்டு, அவளே உன் விருப்பத்துக்கு உடன்படுவாள்” என்று யோசனை கூறினான் மகோதரன். 

    அதுகேட்டு நனிமகிழ்ந்த இராவணன், அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டிவிட்டுச் சீதையை மருட்டும் பொருட்டு அசோகவனத்துக்குப் புறப்பட்டான். அங்கே சீதையின் எதிரில் பொன்னாசனத்தில் அமர்ந்தவன், அவளைத் தன்னாசைக்கு இணங்கும்படிக் கெஞ்சுகின்றான்; அவள் அதனை மறுக்கவே, ”இராமனைக் கொல்வதோடன்றி அயோத்தியிலுள்ளோரையும் மிதிலையிலுள்ள உன் தந்தையையும் பற்றிக்கொண்டுவர படைகளைச் செலுத்தியுள்ளேன்” என்று மிரட்டுகின்றான்.

    அவ்வேளையில் மகோதரன் தன் திட்டப்படி மருத்தன் எனும் அரக்கனை சனகன்போல் உருமாற்றி இராவணன் முன்பு கொண்டுவந்து நிறுத்துகின்றான்; அந்த மாயச் சனகன் இராவணனை வணங்குகின்றான். அதுகண்டு துணுக்குற்ற சீதை, தாய்ப்பறவை நெருப்பில் வீழ்வதுகண்ட குஞ்சுப் பறவைபோல் மனம் குமைந்தாள்.

    ”எந்தையே! என்னைப் பெற்றதால் உனக்கு இந்த நிலை வந்துவிட்டதே? என்னைச் சிறையிலிருந்து மீட்பதற்கு ஒருவரையும் காணேன்; என் பொருட்டுச் சிறைப்பட்டுள்ள உன்னை யார் மீட்கப் போகின்றார்?” என்று அரற்றினாள்.

    அவளின் துயர்கண்ட இராவணன். ”அழகியே! என்னை வருத்தும் இந்தக் காமநோயை நீ நீக்குவாய் ஆயின், மூவுலகையும் ஆளுகின்ற நான் அவை அனைத்தையும் உன் தந்தையாகிய சனகனுக்கு ஈந்துவிட்டு, உன்னைத் தொழுது வாழ்வேன்” என்று மாயா சனகன் முன்னிலையில் சீதையை வேண்ட, அவள் எரிமலைபோல் கனன்று அவனுக்குத் தன் மறுப்பைத் தெரிவிக்கின்றாள். சினங்கொண்ட இராவணன் அவளருகே செல்ல, அவனைத் தடுத்த மகோதரன் ”சனகன் வேண்டினால் சீதை உன் விருப்புக்கு மறுப்பின்றி இணங்குவாள்” என்று யோசனை சொல்கின்றான்.

    கட்டுண்டு தரையில் கிடந்த மாயா சனகனும் இராவணன் விருப்பத்துக்கு இணங்கித் தன் குலத்தைக் காப்பாற்றுமாறு சீதையின் கால்களில் வீழ்ந்து கெஞ்சுகின்றான்.

    முறையற்ற வாழ்விற்குத் தன்னை ஆட்படுத்த விரும்பிய அந்த மாயா சனகனை உண்மையான சனகன் என்றெண்ணிக் கடுங்கோபமுற்ற சீதை, ”நாயைவிடக் கீழ்மைப்பட்டவனே! வில்லேந்திய இராமன் அல்லாமல், என் பக்கத்தில் வந்த வேற்று ஆடவர்கள் விளக்கில் வீழ்ந்த விட்டில்பூச்சிபோல் உயிரிழப்பர் அல்லவா? விலங்குகளுக்கு அரசனாகும் தகுதிகொண்ட ஆண் சிங்கத்தோடு வாழ்ந்த ஒரு பெண் சிங்கம், தூய்மையற்ற இடத்தில் அழுக்கைத் தேடித்தின்னும் நரியோடு கூடிவாழ்வது உண்டோ?” என்று கர்ச்சித்தாள்.

    வரிசிலை ஒருவன் அல்லால் மைந்தர் என்மருங்கு வந்தார்
    எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற
    அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்குத் தின்னும்
    நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே.
    (கம்ப: மாயா சனகப் படலம் – 7699)

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • திருசிரமலை நாயகனே

    திருசிரமலை நாயகனே

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

     

    திருசிரமலை நாயகனே
    சத்தியமணி 31 08 22

    வெற்றி தரும் வேழமுக

    மைந்து மினிதா னனடி
    பற்றி பெறும் பாக்கியஉ

    பாத்தி யமென தாளனடி
    சுற்றி வரும் போதினிலே
    மனதாள துயர் களைந்
    தேற்றி தடையோட விடும்

    பாலன் விளையாடி வரும்
    நற்றி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே….1

    தாயுமா  னான்சிவ சிவம்
    தாயுமை சேர்ந்து நலம்
    தூயுமன தாளும் குணம்
    வாயுமுட னாசியி னில்
    காயமுடன் பிறக்கும் சுழல்
    தேயவுட னாளும் நிலம்
    பாயும் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே….2

    உச்சி மலையா ளுமறை
    போற்று தயாபர எழில்
    மெச்சி சிவசைவ குழாம்
    ஏற்று பிள்ளை யாரெனவே
    கச்சி யம்பலத் தானுறையும்
    காமாட்சி பெற்ற தனால்
    பச்சை பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..3

    காப்பு அரையில் அரவுயிடை
    கழலடி தண்டை மணிகளும்சேர்
    தோப்பு கரணம் போட்டதுமே
    துள்ளி நம்மில் ஏதுகுறை
    மூப்பு பிணியா வுமதை
    தீர்க்கு படியாகும் ரசம்
    நீர்ப்புக பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…….4

    மாமன் ரங்க நாயகனும்
    மருமான் மகிழவே நிலம்
    மாமிய வளாடும் குழை
    கேட்ட ணிந்தே தினம்
    நாமமி னிதாக நெற்றி
    நடுவி னிலிட்ட படி
    தாமத தாளமு டன்சுக
    தாள் பதித்தா டசிவ
    ராகம் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…….5

    சம்பு சலமாகி லிங்கம்
    நந்தி உடனோடு தவம்
    நம்பி துதிபாடி களிறு
    காத்த ஆனைக் காவினிலே
    தும்பி க்கையில் வலம்
    தூக்கி யெம்நா விலுரை
    எம்பி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே……6

    அண்ட சராசர பெற்று
    ஆளும் அகிலா ண்டரசி
    கண்ட சினம் தானழிய
    கண்ணெ திரில் பேருருவே
    உண்ட கொழுக் கட்டையதை
    கவளமென தின்ற வனே
    வண்டல் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே……7

    உருகி மனதுதி கள்பல
    எழுதி தனக்கானத் தமிழ்
    பருகி பெரும்வள மையுடை
    புலமைத் தரும் கணபதியே
    இருகி வரும் வளர்மதியே
    ஏற்றமிகு பதவி புகழ்
    மருகி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..8

    அரச மரத் தடியிலொரு
    அருளாள நதியின் கரை
    அரச ரும்முனி அகத்திர்சேர்
    அடிபணிய வைக்கும் கரி
    முரசரியும் முகத்தவனே
    முக்காலம் அறிந்தவனே
    பரிசப் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..9

    கருக விடும் அங்குசமும்
    கனிய வரும் பூரணமே
    அருக முடன் மாலையுள
    அத்தி முகங் கணபதியே
    எருக்க மொட்ட விழ்ந்திலே
    எட்டிசெலும் தீவினைகள்
    பெருக்கவர பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..10

    சுமுகமாய் வேழாய்ப் போற்றி
    சுகமு ம்மனத் துணிவே போற்றி
    ஒற்றை கொம்பாய் போற்றி
    ஓமென ஒலிப்பாய் போற்றி
    சிராப் பிள்ளையே போற்றி
    சிவஞானக் கொழுந்தே போற்றி
    திருசிர மலையப்பா போற்றி
    திருசிற் றம்பலம் போற்றி…11

    ஒருநாளும் துவளாது

    உன்பாதற் சலங்கையென
    வருநாளும் துதிகள் பாடி
    வாயினிக்க இசைகள் கூடி
    திருநாளும் தரிசனமும்
    தின்பண்ட பிராசதமும்
    அருள்வாய் உமைபாலா
    மணிநாதன் முன்சரணம்

    …….இன்னும் வரும்

    Share
  • கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம்

    கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, விநாயகர் சதுர்த்தியை இன்று மக்கள் கொண்டாடினார்கள். இதை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி, தெருவெங்கும் பந்தல் இட்டு, சரவிளக்குகள் அமைத்து, அந்த நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த உற்சாக விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீ கணபதி | கிருஷ்ணகுமார்

    ஸ்ரீ கணபதி | கிருஷ்ணகுமார்

    ‘ஸ்ரீ கணபதி’ என்ற அழகிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வல்லபை நாதனே வருவாய் அருள்வாய்

    வல்லபை நாதனே வருவாய் அருள்வாய்

    சரஸ்வதி ராசேந்திரன்

    குருவே சிவனின் கொழுந்தே ஆனைமுகனே
    குஞ்சரனே  எழிற்  குஞ்சரி    நாதனே
    வருவாய் விரைவாய் வந்தனை ஆள்வாய்
    வல்லபை நாதனே வாழ்த்தி வணங்கினேன்

    அருள்வாய்  உனையே அனுதினம்  பணிவேன்
    அன்னை பராசக்தியின் அரும்  புதல்வனே
    திருமால்   மருகா  தீனரஷனே  கணேசா
    திருவடி பணிந்தேன்  துன்பம்  துடைப்பாய்

    தஞ்சம் அடைந்தேன் தாங்குமருள் தந்திடுவாய்
    கொஞ்சுமருள் கணபதியே  கூட்டுவித்து ஆட்படுத்து
    அஞ்சிடும்  அன்பருக்கு  அபயம்   அளிப்பாய்
    பஞ்சமி  பைரவி  பார்வதி    மைந்தனே

    கறைகளைப்  போக்கி, கடுந்துயர்    நீக்கி
    கரைசேர  வைக்கும்   கணபதி  தாளே
    கருதிடும் நலன்களைக்  கனிவாய் அருள்வாயே
    கருணையில் பொறுத்தருள் கருக்கிடென் பிழைகளை

    பிணிகளைப்  போக்கி, பெரும்பலம்  தேக்கிடு
    பணிந்துணை  எண்ணுவேன் பேணிக்  காத்திடு
    வீணிலே  காலம்  கடத்தாது விரைந்து வந்திடு
    அணிமிகு  செயல்கள்  புரிந்திட  ஆசிகூறு

    சிறுமையைப்   போக்கிச்  சீருளம்   ஆக்கிடு
    வறுமையைப்  போக்கி  வளத்தைத்  தேக்கிடு
    செல்வம்  தருவாய் சிறப்பையும்   தருவாய்
    அல்லல்   நீக்கி  அனுதினம்   துணையாகு

    Share
  • (Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

    (Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                            
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    ஆய்வு முன்னுரை

    ஒரு குறிப்பிட்ட பண்போ பண்புகளின் தொகுப்புக்களோ ஓர் இனத்தை அடையாளம் காட்டும். சப்பானியர் அரை உடம்பைக் குனிந்து குறுக்கி வணங்குவது அவர்க்கே உரிய உயரிய பண்பாகும். இருகை கூப்பிக் ‘கரமலர் மொட்டித்து’ வணங்குவது பொதுவாக இந்தியர்களின் பண்பாடாகாவும் சிறப்பாகத் தமிழர்களின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. இது ஏதோ தற்புகழ்ச்சி என எண்ணுதல் நெறியன்று. உலக இனக்குழுக்களை ஆராய்ந்த ஆய்வறிஞர்கள் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து உலகிற்குச் சொன்ன ஒப்பற்ற உண்மை இது. இந்தப் பின்புலத்தில் ‘விருந்தோம்பல்’ என்னும் தமிழர்களுக்கே உரிய தனித்த அடையாளத்தைப் பற்றிய இலக்கியக் குறிப்புக்களின் தொகுப்பாய்வே இந்தக் கட்டுரையாகும்.

    கட்டுரைக் கட்டுமானம்

    ‘தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல்’ – ஒரு தொகுப்பாய்வு’  என்னுந் தலைப்பில் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழிலக்கியம் என்பது தமிழ்க்கவிதைகளேயாதலின் சங்க இலக்கியம் தொடங்கி இற்றை நாள் வரை உள்ள கவிதை இலக்கியங்களே ஆய்வுக்களமாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்படுகிறது. தொகுப்பாய்வு முறையில் செய்யப்படும் இந்த ஆய்வு, ஆட்சி மாற்றங்கள், வரலாறுகள் மாறிச் சென்றாலும் விருந்தோம்பல் முதலிய உயர்பண்புகள் மக்கள் வாழ்வியல் நெறியிலிருந்து விலகிச் செல்வதில்லை என்னும் ஆழமான கருத்தியலை வலியுறுத்துவதாக அமைகிறது. முன்னோர்களின் பண்பாட்டு இருப்புக்களைத் தேடிக் கண்டறிவதும், கண்டு மகிழ்ச்சியடைவதும், ஒல்லும் வகையால் தொடர்ந்து பின்பற்றுவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஒரு நூலில் ஒரு கருத்து பற்றிய விளக்கமுறை ஆய்வைப் பகுப்பாய்வு என்பராதலின் ஒரு கருத்து பற்றிய பன்னூல்களின் கருத்துக்களின் தொகுப்புப் பற்றிய ஆய்வு தொகுப்பாய்வு எனக் கருதப்படலாம். முன்னுரை, உள்ளடக்கத் துணைத்தலைப்புக்கள், முடிவுரை என்னும் வடிவத்தில் அமைக்கப்படும் இந்தக் கட்டுரை, இப்பொருள் பற்றிய முந்தைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் நினைவூட்டலாகவும் மீட்டுருவாக்கமாகவும் கருதப்படலாம்.

    விருந்து ஓர் இலக்கணப் பார்வை

    ‘விருந்து’ என்னும் சொல் விருந்தோம்பல், விருந்து புறந்தருதல், விருந்தயர்தல் என்னுமாறு பல்வகையான பின்னொட்டுக்களோடு இணைந்து பயன்படுத்தப்படுகிறது. ‘விருந்து’ என்ற சொல்லுக்குப் புதுமை என்று பொருள்.  பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பலைத் தொல்காப்பியம் குறிக்கிறது.

    விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்1

    விருந்து பற்றிக் கிட்டும் தலையாய சான்று இதுவே எனக் கொள்ளுதற்கு இடமுண்டு. இலக்கியங்களைப் பற்றிப் பேசும் தொல்காப்பியம் புதுமைப் போக்கோடு வெளிவரும் இலக்கியங்களையும் இந்தச் சொல்லால் அரவணைத்துக் கொள்வதையும் காண முடிகிறது.

    விருந்தே தானும்
    புதுவது கிளந்த யாப்பின் மேற்றே2

    தொல்காப்பியரை முக்காலமும் உணர்ந்த ஞானி என்பது பொருந்தாதாயினும் மொழி பற்றியும், அதன்கண் தோன்றி வளரும் இலக்கிய வளர்ச்சி மற்றும் நெறி பற்றியும் தெளிந்த ஞானம் பெற்றிருந்தார் என்பதற்குத் தொல்காப்பியமே சான்றாகும். தமிழின் இலக்கிய எதிர்காலத்தைச் சரியான தளத்தில் வைத்துக் கணிக்கின்ற நூற்பாவாக இது திகழ்கிறது எனலாம்.

    சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல்

    விருந்தயர்தல் இல்லறம். இல்லறம் கற்பியல். கற்பியல் அகம். ஆனால் இவ்வறத்தின் சிறப்பு நோக்கிய சங்கச் சான்றோர்கள் அகத்திலும் புறத்திலும் இவ்வறம் உள்ளிட்ட செய்திகள் கொண்ட பாக்களைக்  கோத்திருக்கிறார்கள். இது தனித்த விரிந்த ஆய்வுக்குரிய பொருளாகையால் ஒரு சில எடுத்துக்காட்டுக்களால் விளக்க முற்படலாம்.

    தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
    மாஅரை புதைத்த மணல்மலி முன்றில்
    வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
    தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர்
    இனிது மன்ற அம்மதானே!” 3

    என்னும் நற்றிணைப் பாடலில் தலைவன் வராதபோது தன் சிற்றூரும் இன்னாதிருந்தது என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தும் தோழி தலைவனைப் பற்றி அறியாத போது இருந்த ஊர்ச்சிறப்பில் வைத்து விருந்தோம்பலைக் கூறுவதை அறிய முடிகிறது. வருவிருந்து அயரும் தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர் இனிது’ என்பது தற்போது இன்னாமையைக் குறித்தது என்க.

    அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்             
    முல்லை சான்ற கற்பின்
    மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே4

    வினைமுடித்து மீளும் தலைவன் தலைவியை விரைந்து  காணும் அவாவுக்கான காரணங்களை அடுக்குகிறபோது அவளுடைய ஊர்ப்பெருமையைப் புகழ்வதன் வழி அவளுடைய விருந்தோம்பும் மாண்பை விதந்தோதுகிறான். அகத்திணைப் பாடலொன்றில் தலைவியின் பண்புநலன்களை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் கருத்து ஒரு பண்பாட்டுக் கருவூலமாகும். இளையான்குடி மாறனார் மழைக்கால இரவில் வந்த சிவனடியாரை உபசரித்த வரலாற்றுக்கு மூலமான முந்தைய சிந்தனை இது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடவந்த இடைக்காடனார், அவனுடைய விருந்தோம்பும் பண்பைக் குறிப்பிடுகிறார்.

    பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
    கீழ்மடை கொண்ட வாளையும்
    உழவர் படைமிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
    கரும்பிற் கொண்ட தேனும்,பெருந்துறை
    நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
    வன்புலக் கேளிர்க்கு விருந்து அயரும்
    மென்புல வைப்பின நன்னாட்டுப் பொருந! 5

    கிள்ளிவளவன் விருந்தில் வாளும் ஆமையும் தேனும் மலரும் கைகோத்துள்ளன என்பது நோக்கத்தக்கது. ‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ என்னும் சிந்தனைக்கு மூலமான ‘இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலுமிலரே’6 என்னும் சிந்தனையும் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்குக் கூடுதல் குறிப்பாகக் குறிக்கப்படுகிறது.

    கேளிர்போல கேள் கொளல் வேண்டி
    வேளாண் வாயில் வேட்பக் கூறி
    கண்ணில் காண நண்ணுவழி இரீஇ
    பருகு அன்ன அருகா நோக்கமொடு
    உருகு பாவைபோல் என்பு குளிர் கொளீஇ7

    பொருநர்களை உபசரித்தான் கரிகால்வளவன் என்னும் குறிப்பு அவன் உபசரித்த முறையினைப் பொருநராற்றுப்படை வழிக் காணமுடிகிறது.

    திருக்குறளில் விருந்தோம்பல்

    ‘நீதி’ என்பதற்கு வாழ்வியல் நெறி என்பது பொருத்தமாயின் திருக்குறளை ஒரு வாழ்வியல் நூல் எனல் பொருந்தும். தனிமனிதன் தொடங்கி அரசன் வரை உள்ள அனைவர்க்குமான வாழ்வியல் நெறியை அது நிரல்பட திறம்படக் கூறுகிறது. இந்தத் திருக்குறளில் விருந்தோம்பல் ஒரு தனித்த அதிகாரப் பொருண்மையாகக் கொள்ளப்பட்டுள்ளது என்பதே அதன் இன்றியமையாமையை ஓரளவு விளக்கக்கூடும். ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல், தான்  என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”8 என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் விருந்து பற்றிய தம் ஆய்வுக்கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

    விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய வந்தார் மேல் நின்றது. அவர் இருவகையர். பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும்அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல் சுற்றத்தார் எல்லா அறங்களும் தான் உளனாய் நின்றுசெய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று 9

    இந்தக் கருத்தினாலும் இதனைத் தொடர்நது வருகின்ற இரண்டு குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரையாலும் இல்லறம் கடைபோவதே விருந்தோம்புதலினால்தான் என்பது தெளிவாகும்.

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது 10

    என்னும் குறட்பா சிறப்புரையின் இறுதியில்  ‘இவை மூன்று பாட்டானும்  இல்நிலையின் நின்றான் அறம் செய்யும் ஆறு கூறப்பட்டது” என்று எழுதுகிறார் பரிமேலழகர். எனவே துறவறப்பயன் உயிர்களைப் பேணுதல் எனின் இல்லறப் பயன் விருந்தினரைப் பேணுதல் என்பது தெளிவாம்.

    காமத்துப்பாலில் ‘விருந்து’

    சங்க இலக்கியப் புறத்திணைப் பகுதியில் அமைந்துள்ள கொளுவும், அகத்திணைப் பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள திணை, துறை விளக்கமும் திருக்குறளில் பரிமேலழகர் உரையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பொருண்மை விளக்கமும் பொருள் தொகுப்பு விளக்கமும் அவற்றைத் தெளிவுபட புரிந்து கொள்வதற்கு உதவும் பெருங்கருவிகள் ஆகும். அவற்றைப் பற்றிய புரிதலின்றி அவ்விலக்கியப் பாடல்களின் பொருளுணர்தல் அரிதாம்.

    தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால
    அம்மா அரிவை முயக்கு11

    களவியல் சார்ந்த இந்தக் குறட்பாவிற்குத் துறைவகுத்த பரிமேலழகர்,”

    இவளை நீ வரைந்து கொண்டு உலகோர்தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தூடு படல் வேண்டும் என்ற தோழிக்கு (வரைவு மறுத்துத் தலைவன்  சொல்லியது)” 12

    என்றெழுதுகிறார். இல்லறத்துக்குட்படுத்த எண்ணும் தோழிக்கு அதன் பயனாகிய துறக்கச் செல்வம் தலைவியோடு கூடிய களவுப் புணர்ச்சியிலேயே கிட்டுமாதலின் தலைவன் மறுத்தான் என்பதாம். “இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்” என்னும் தலைவன் கூற்றினால் இது புலப்படும். ‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டல்’ இல்லறப் பகுதியே என்பதை நினவூட்டப் பரிமேலழகர், ‘தென்புலத்தார்’ 13 எனத் தொடங்கும் குறட்பாவைத் தலைவன் உரையிலும் வைத்துக் கூறினார். இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியாகத் திருக்குறள் காமத்துப்பாலில் இருவகை விருந்தின் சிறப்பும் போற்றப்பட்டுள்ளன என்பது இதனால் தெளிவாகும். தொல்காப்பியம் கற்பியலில் தலைமகள் பண்பாகக் கூறியதைத் திருவள்ளுவர் களவியலில் தோழி மற்றும் தலைவன் சிந்தனையில் வைத்துக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது.

    வறுமைக்கிலக்கணம் வருவிருந்து ஓம்பாமை

    வறுமைக்கான பொருள் வரையறையை திருவள்ளுவர் இரண்டு பாக்களில் கூறியிருப்பதை அறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று விருந்தோம்பல் அதிகாரத்திலும் மற்றொன்று பொறையுடைமை அதிகாரத்திலும் காணப்படுகிறது.

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ம்பா
    மடமை மடவார்கண் உண்டு14

    (செல்வமிருந்தும் விருந்தோம்புதலைச் செய்யாதவர்கள்) பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின்  மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையால் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம்.” 15

    என்னும் பரிமேலழகரின் உரை நுட்பத்தால் உடைமை எஞ்ஞான்றும் பயனோக்கியது என்பதும், செல்வத்துப் பயன் ஈதலாதலின் அது கடைபோகாவழி அது இன்மையாகுமேயன்றி உடைமையாகாது என்பதும் விருந்தோம்புதல் பண்பாட்டு விழுமியம் என்பதும் அதனைச்  செய்யாமை ‘பேதைமை’ என்பதும் பெறப்படும். இதே கருத்தினை வேறொரு வாய்பாட்டில் எதிர்மறையில் வைத்தும் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இல்லறத்தில் விருந்தோம்பலின் இன்றியமையாமை அதன் சிறப்பு ஆகியவற்றை எதிர்மறைமுகத்தால் திருவள்ளுவர் கூறியிருப்பது இங்குச் சிந்தனைக்குரியது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை தேவையெனின் இவற்றின் இன்மையே வறுமை எனப்படல் வேண்டும். ஆனால் திருவள்ளுவர் இவை மூன்றும் இல்லாதிருந்தும் விருந்தினரைப் போற்ற வேண்டும் எனவும் போற்றாமையே வறுமை என்றும் வறுமைக்குப் புதுவெளிச்சம் பாய்ச்சுகிறார்.

    இன்மையுள் இன்மை விருந்தொரால்., வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை16

    என்பது குறட்பா. அறனல்லாத விருந்தொரால் பொருளுடைமை ஆகாதவாறு போல என்னும் உவமத்தால் விளக்குகிறார். பொறையுடைமை உயர்ந்த பண்பே. அவ்வுயர்ந்த பண்பினை விளக்கப் பயன்படுத்தும் விருந்தோம்பல் அதனினும் உயர்ந்தது என்பது ஆற்றலால் பெற்ற பொருளெனக் கொள்க. ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்பது இலக்கணமாதலின்!

    விருந்தோம்புதலின் மூவகைப் பயன்கள்

    நல்லறம் செய்பவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் விருந்தோம்புவார்க்குப் பல்வகை நன்மைகள் கிட்டும் என விளக்குகிறார். இதனை இம்மைப் பயன், மறுமைப் பயன், இருமைக்கான பயன் என வகுத்துக் கொண்டு ஐந்து குறட்பாக்களில் கூறுகிறார்.

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று17

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்18

    வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம் 19

    இம்மூன்று குறட்பாக்களும் பகுத்தறிவுக்கு முரணாக அமைந்திருப்பதாகச் சிலர் கருதக்கூடும். ‘பருவந்து பாழ்படுதலும்’, ‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’ என்பதும் ‘வித்தும் இடல் வேண்டும்’ என்பதும் அறிவுக்கு முரணாக அமைந்திருக்கின்றன என்பதைவிட உலகியல் நோக்கிக் கூறியனவாகக் கொள்ள வேண்டும். எதிர்பாராமல் உதவிசெய்தவனைத் ‘தெய்வமே நேரில் வந்து உதவிய”தாகக் கூறுவதில்லையா? அதுபோல என்க.

    செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத்தவர்க்கு20

    இனைத்துணைத்து என்பதொன்றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன் 21

    என்னுங் குறட்பாக்களில் முறையே  மறுமைப் பயனையும் இருமைப் பயனையும் எடுத்துக் கூறுகிறார் திருவள்ளுவர். வேதம் ஓதுதல், யாகம் வளர்த்தல், விருந்தோம்புதல், தருப்பணம் செய்தல், பலியிடுதல் என்னும் வேள்வி ஐந்தனுள் ஒன்றுதான் விருந்தோம்புதல். ஒவ்வொரு வேள்விக்குமான பயன் வரையறுக்கப்பட்டுள்ளதெனினும் விருந்தோம்பலாகிய வேள்விக்கு அது செய்யும் அளவே அளவாக்கப்பட்டுள்ளது. ‘விருந்தின் துணை’ என்பதற்கு விருந்து செய்யும் அளவு என்பது பொருள். ‘சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ எனவும் ‘விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ எனவும் இல்லறத்தின் தலையாய கடமையாகிய விருந்தோம்பலை வலியுறுத்திய திருவள்ளுவர் அதன் அனைத்து வகைப் பயன்களையும் நிரல்படக் கூறுவதை நோக்குக.

    சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பல்

    குடிமக்கள் காப்பியம் எனச் சிறப்பிக்கப்படும் சிலம்பில் விருந்தோம்பலின் சிறப்பினைச் சித்திரிக்க ஏற்ற இடமில்லாது அடிகள் அல்லற்பட்டிருப்பது நன்கு புரிகிறது. இதே நிலை கம்பனுக்கும் வந்திருக்கிறது. கோவலனோடு  கண்ணகியாவது சில ஆண்டுகள் இல்லறம் நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் இராமனுக்கும்  சீதைக்கும் அந்த வாய்ப்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

    மருந்தான் விருந்து

    தலைவியின் ஊடல் நீக்கும் வாயில்களுள் விருந்தும் ஒன்று. இதனைத் தொல்காப்பியம் பலபடப் பேசுகிறது. சிலப்பதிகாரத்தில் இரவு நேர வண்ணனைப் பகுதியில் தொல்காப்பிய இலக்கணம் நினைவு கூரப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. பரத்தையர்பால் பல்வரிக்கோலம் புனைந்துப் புணர்ச்சியின்பம்  அனுபவித்து வீடு திரும்பும் கணவன்மார்கள் தங்கள் மனைவியர் தங்களிடம் ஊடல் கொள்வார்கள் என எதிர்நோக்கி விருந்தைத் துணைக்கழைத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இல்லத்தரசியர் ஊடல் நீங்காமையை அவர்தம்  முகக்குறிப்பினைக் கண்டு பேதுறும் கணவன்மார்கள் ‘ஊடல் தீர்க்கும் மருந்து விருந்தினும் சிறந்தது உண்டோ?’ என நெஞ்சு நடுங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருந்தொடு புக்க பெருந்தோள கணவரோடு
    உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
    வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
    மாதர் வாள்முகத்து மணித்தோட்டுக் குவளைப்
    போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
    விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்
    மருந்தும் தருங்கொல் இம்மாநில வரைப்பெனக்
    கையற்று நடுங்கும் நல்விளை நடுநாள் 22

    இதனால் விருந்தின் பயன்பரப்பு நடப்பியல் சார்ந்தது என்பதும்  இல்லறச் சிக்கலை மிக நுட்பமான முறையில் தீர்த்து வைக்கும் பேராற்றல் விருந்துக்கு உண்டு என்பதும் பெறப்படும்.  எல்லாரும் அறிந்த சிலம்பின் மற்றொரு காட்சி கொலைக்களக்காதையில் சித்திரிக்கப்பட்டுள்ளமையாகும். கணவனைக் குற்றவாளி எனச் சுமத்திய பழிக்காக மாமதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகி புகாரில் மாதவியோடு வாழ்ந்த காலத்து வந்த அவன் பிரிவைத் தனக்கேற்பட்ட இழப்பாகக் கருதவில்லை. இல்லறம் செய்ய தன் கணவன் உதவவில்லையே என்றுதான் வேதனைப்பட்டிருந்திருக்கிறாள். காப்பிய நிகழ்வுகளின் இறுதிக்காட்சியில் வைத்து இதனைக் காட்டுகிறார் அடிகள்.

    “அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”23

    தன் கணவன் மீது பழிபோடாத கண்ணகியை இங்கு நாம் காணலாம். ‘உன்னோடு இல்லறம் நடத்த நான் கொடுத்துவைக்கவில்லை’ என்பதே அவள் ஆதங்கமாக இருந்திருக்கிறது. அதனால்தான் ‘இழந்த என்னை’ எனத் தன்மீது தானே பழிபோட்டுக் கொள்கிறாள். இல்லறத்தில் இழக்கக்கூடாத ஒன்று எனக் கருதும் அளவுக்கு விருந்தோம்புதல் அரியதொரு அறமாகக் கருதப்பட்டுள்ளது என்பதைச் சிலம்பின் வழி அறியலாம். இந்தப் பகுதியில் வரும் ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னும் தொடரில் மனம் பறிகொடுத்த பாவேந்தர் தாம் எழுதிய குடும்ப விளக்கில் இதற்கான விரிவுரையைத் தந்திருக்கிறார்.

    வீட்டுக்கு வந்த விருந்தோம்பு நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்தபுகழ் ஞாலத்தில் என்னவெனில்
    உற்ற விருந்தை உயிரென்று பெற்றுவத்தல்!
    மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று ஆய்ந்ததிரு
    வள்ளுவனார் சொன்னார் அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய் ஒருபோதும் தள்ளாதே!
    ஆண்டு பலமுயன்றே ஆக்குசுவை ஊண்எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் தேவை வழக்கம் இவையறிய
    நந்தாவிளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற்று இருக்கையிலே
    தொட்டுப் பார் உன் நெஞ்சம் தோன்றுமின்பம்! – கட்டிக்
    கரும்பென்பார் பெண்ணை கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?” 24

    திருக்குறளில் விருந்தோம்பல் என்னும் தனியதிகாரத்தைப் போலவே பாவேந்தரும் தமது குடும்பவிளக்கில் விருந்தோம்பலைத் தனியியலாகவே அமைத்திருப்பதன் மூலம் குடும்பத்தின் தலையாய அறம் விருந்தோம்புதலே என்பதில்  அவருடைய பார்வை தெளிவாக இருந்திருக்கிறது என்பது புலனாம்.

    பெரியபுராணத்தில் விருந்தோம்பல்

    நம்மை நாடி வரும் விருந்தினரை இன்சொல்லால் மகிழ்வித்தும் உள்ளம் கலந்து உறவாடியும், தங்குவதற்கேற்ற இடமளித்தும், ஆடை அணிகலன்கள் முதலியவற்றையும் அளித்தும் உபசரிக்க வேண்டும். இவ்வாறு விருந்தினரை உபசரிப்பவர்களைத் தேவர்கள் தம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார்கள் என, ஏலாதி பண்டையத் தமிழரின் விருந்தோம்பல் முறையைத் தெரிவித்து ‘நல்விருந்து வானத்தவர்க்கு’ என்னும் குறட்பாத் தொடரையும்  நினைவூட்டுகிறது.

    இன்சொல்அளாவல்இடம்இனிது ஊண் யாவர்க்கும்
    வன்சொல் களைந்து வகுப்பானேல் மென்சொல்
    முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்
    விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து 25

    தமிழர்தம் இந்தப் பண்பாட்டு விழுமியத்தின் காப்பிய வடிவமே பெரியபுராணம். பெரிய புராணத்தின் சாரம் விருந்தோம்பலே. எந்தச் சூழ்நிலையிலும் எத்தகைய விருந்தோம்பலையும் மேற்கொள்ள வேண்டும் என்னும் அவ்வறத்தின் மேன்மையை முன்னெடுப்பதாக அமைந்திருப்பதுதான் இளையான்குடி மாறனார் புராணம்.

    ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்னுந் தன்மையால்
    நேர வந்தவர் யாவராயினும் நித்தமாகிய பத்திமுன்
    கூர் வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து
    ஈரம் மென்மதுரப் பதம் பரிவெய்த முன்னுரை செய்தபின் 26

     கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே
    மண்டு காதலின் ஆசனத்திடை வைத்து அருச்சனை செய்தபின்
    உண்டி நாலு விதத்தினில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா
    அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துள்ளார் 27

    செல்வம் மேவிய நாளில்  இச்செயல் செய்வதன்றியும் மெய்யினால்
    அல்லல் நல்குரவானபோதினும் வள்ளல் என்று அறிவிக்கவே
    மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாடோறும் மாறிவந்து
    ஒல்லையில் வறுமைப் பதம்புக உன்னினார் தில்லை மன்னினார். 28

    ஈரமேனியை நீக்கி இடம் கொடுத்து
    ஆர இன்னமுது ஊட்டுதுற்கு ஆசையால்
    தாரமாதரை நோக்கி, தபோதனர்
    தீரவே பசித்தார் செய்வதென்? என்று 29

    என்னும் பாடல்கள் விருந்து உபசரிப்பார்க்குப் பரிமேலழகர் சொன்ன ‘நன்று ஆற்றல்’ என்னும் சொல்லுக்கு இலக்கியமாக அமைந்துள்ளதைக் காணலாம். பெரியபுராணத்துள் வருகின்ற விருந்தோம்பும் நிகழ்வுகளுள் இன்றியமையாது குறிக்கப்படுபவை மூன்று.

    1. சிறுத்தொண்டர் புராணம்.
    2. அப்பூதிநாயானார் புராணம்.
    3. இளையான்குடி மாறனார் புராணம்

    இவற்றுள் முந்தைய இரண்டும் (பிள்ளைக்கறி உண்டமையும், மாண்ட இளைய திருநாவுக்கரசு மீண்டதும்) மீயுயர் கற்பனை கலந்து அமைய இறுதியாக உள்ள இளையான் குடிமாறனார் புராணம் நடப்பியல் சார்ந்து அமைந்துள்ளது நோக்குதற்குரியது.

    கம்பராமாயணத்தில் விருந்தோம்பல்

    கம்பராமாயணத்தில் நேரடியான உபசரிப்பைக் கங்கைப் படலத்தில் காணமுடிகிறது. ‘ஆறுகொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி வேறுள குழுவையெல்லாம் வென்று’ மானுட அவதாரம் பெற்றுவந்த இராமனுக்கு நாவாய் வேட்டுவன் குகன் செய்த விருந்து அது. இராமனை உபசரிக்க எண்ணிய எல்லை நீத்த அருத்தியன் ஆகிய குகன்.

    இருத்தி ஈண்டுஎன்னலோடும்.
    இருந்திலன்., எல்லை நீத்த
    அருத்தியன், தேனும் மீனும்
    அமுதினுக்கு அமைவது ஆகத்
    திருத்தினென் கொணர்ந்தேன்
    என்கொல் திருவுளம் என்ன. 30

    நெஞ்சினில் அன்பையும் கைகளில் தேன், மீன் முதலியவற்றையும் கொண்டு வந்தான் குகன். அவனுடைய ஆழமான அன்பை நோக்கிய இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டுக், “குகனே! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத்தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான்.

    அரியதாம் உவப்ப உள்ளத்து
    அன்பினால் அமைந்த காதல்
    தெரிதரக் கொணர்ந்த என்றால்
    அமிழ்தினும் சீர்த்த அன்றே
    பரிவினின் தழீஇய என்னின்
    பவித்திரம் எம்ம னோர்க்கும்
    உரியன இனிதின் நாமும்
    உண்டனெம் அன்றோ என்றான்31

    உள்ளத்து அன்பின் மிகுதியால் கொண்டு வந்த பொருள்கள் உண்ணத்தகாதன ஆயினும் சுமந்து வந்த அன்பு மிகுதியால் அவையும் உண்ணத்தகும் பயனைத் தரவல்லனவே என்னும் உயரிய கருத்தினைக் கவிச்சக்கரவர்த்தி இந்த இடத்தில் பதிவு செய்திருக்கிறார். கள்ளம் கபடமற்ற உள்ளமும் எளியவரை மதிக்கும் பெருந்தன்மையும் விருந்தோம்பல் அறத்தினை உயர்த்தும் என்னும் மாண்பினை இதனால் அறிந்து கொள்ளலாம்.

    உண்டபின் தாம்பூலம் தரிக்கும் வழக்கமுள்ளவன் இராமன்.  அதனை அவனுக்கு அன்பைக் குழைத்து மடித்துத் தரும் சீதை தற்போது அசோகவனத்தில். தான் இல்லாதபோது அவற்றையெண்ணி மருகுகின்றாள்.

    அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும் என்று அழுங்கும்!
    விருந்து வந்தபோது என்னுறுமோ என விம்மும்!” 32

    கணவனுக்கு அடைகாய் மடித்துக் கொடுப்பதும் இல்லறத்தில் விருந்தோம்புதலும் இணைந்து செய்ய வேண்டிய கடமை. அறம். அவ்விரண்டனையும் செய்ய முடியாமல் தான் தனித்து இருப்பதாகச் சீதை வருந்தினாள் என்பதாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் கணவனிடம் நேராகவே கூறினாள். சீதை செய்ய வேண்டிய கடமையைச் செய்ய இயலவில்லையே என தனக்குத்தானே மருகினாள்.  ‘இழந்த என்னை’ என்பது கண்ணகி வாக்கு. ‘என விம்மும்’ என்பது சீதையின் மெய்ப்பாடு. இரண்டிடங்களிலும் புலவர் பெருமக்கள் தலைமகன்களின் குற்றத்தைக் கூறாமல் தலைமகள்களின் வருத்தத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கது.  

    விருந்தோம்பும் கலைமரபு

    வீடு தேடி வந்தார்க்குச் சோறு போட்டு அனுப்புவதன்று விருந்தோம்பல்.  இல்லறத்தின் தலையாய கடமையாக விருந்தோம்புதல் குறிக்கப்படினும் அதனை முறையாகச் செய்ய வேண்டும், செய்தார்கள் தமிழர்கள் என்பதிலேதான் பண்பாட்டு விழுமியம் அடங்கியிருக்கிறது.

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து’” 33

    என்னும் குறட்பாவில் மோப்ப மற்றும் நோக்க என்னும் இரண்டு சொற்களுக்குத் தம் நுண்ணிய உரையினால் விளக்கம் சொல்வார் பரிமேலழகர். இந்தக் குறளில் அமைந்துள்ளது வேற்றுமை அணி. உவம அணி அன்று.

    சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும் அதுபற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். 34

    என்பது பரிமேலழகர் விளக்கம். அனிச்சப்பூ தீண்டுதலாகிய மூன்றாம் நிலையில்தான் வாடும். விருந்தினரோ நோக்குதலாகிய முதனிலையிலேயே வாடுவர் ஆதலின் அனிச்சப்பூவினும் மெல்லியர் என்பதாம். பரிமேலழகரின் இந்த உரை நுண்ணியம் அறிவு சார்ந்தது என்பதோடன்றிப் பண்பாடு சார்ந்தது எனல் பொருந்தும். திருக்குறள் உரைக்குப் பலகாலம் பின்னால் தோன்றிய விவேக சிந்தாமணி என்னும் நூலில் அழகர் சொன்ன மூன்று பண்புகள் ஒன்பதாக விரிவடைந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

    விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்தல், நல் மொழி இனிது உரைத்தல்,
    திருந்துற நோக்கல், வருகென உரைத்தல்,
    எழுதல், முன் மகிழ்வன செப்பல்,
    பொருந்து மற்றவன்தன் அருகுற இருத்தல்,
    போம் எனின் பின் செல்வ தாதல்,
    பரிந்துநல் முகமன் வழங்கல், இவ் வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே35

    என்னும் பாடலின் வழி, வரும் விருந்தினரை மெச்சுதலும், அவரிடத்து இன்மொழி பேசுதலும், முகமலர்ச்சி கொண்டு நோக்குதலும், வருக என வரவேற்றலும், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதும், அவன் மகிழும்படியான செய்திகளைக் கூறுதலும் வந்து சேர்ந்த அவனது அருகிலேயே அமர்வதும், விடை பெற்றுச்  செல்லும் போது நேசமுற்று பின் சென்று, மகிழ்வான முகத்துடன் அவனை வழியனுப்புதலுமாகிய  ஒன்பது வகையால் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது. விருந்தினர்கள் விடைபெற்றுச் செல்லும் போது, அவர்கள் பின்னே, ஏழடி நடந்து சென்று, தமிழரிடையே நிலவிய பண்டை மரபு ஆகும். இம்மரபைக், கரிகாலன், தன்னை நாடி வந்த பொருநர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் விடைபெறும் போது ஏழடி தூரம் நடந்து சென்று வழியனுப்பினான் என்பதைக்,

    “காவின் ஏழு அடிப் பின் சென்று” 36

    மேற்கண்ட பாடலடி விளக்குகிறது. மேற்கண்ட குறிப்புக்களிலிருந்து விருந்தோம்பல் என்பது தமிழ்மக்கள் வாழ்வியலின் ஒரு கூறாகவும் கலைமரபாகவும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்பதை அறியலாம். இதன் தொடர்ச்சியாக விருந்தயர்வாருக்கு இன்றியமையாத பண்பாக முகமலர்ச்சியே என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

    ஒப்புடன் முகம லர்ந்தே
    உபசரித் துண்மைப் பேசி
    உப்பில்லாக் கூழிட்டாலும்
    உண்பதே அமுத மாகும்
    முப்பழ மொடுபா லன்னம்
    முகங்கடுத் திடுவா ராயின்
    கப்பிய பசியி னோடு
    கடும்பசி ஆகுந் தானே37

    என்னும் பாடலடி உணர்த்துகிறது. விருந்தின் புண்ணியம், பொருளில் இல்லை. அயர்வாரின் உள்ளத்தில் இருக்கிறது. இல்லறத்தானின் உள்ளத்து இனிப்பு அவன் உபசரிக்கும் பொருளில் வந்து அமைகிறது. திண்ணனார் எச்சில்படுத்தியதில் உண்டான பாசம் இறைவனுக்கு இனித்தது போல! புளித்துப் போன குழம்பு, தவிடு, கூழ், புழுக்கள் பற்றிய மாவு, அரைக்கீரையின் வேர், கெட்டியாய் இல்லாத தயிர், பக்குவம் தவறிய சருக்கரைப் பாகு, கிளறிய களி, நன்றாகத் தீட்டப்படாத அரிசியில் பொங்கி இடப்பட்ட சோறு, உப்பு போடப்படாத நீராகாரம் ஆகிய இவையே ஆயினும், இவ்வுணவானது அன்புடன் பரிமாறப்பட்டதாயின் உண்பவன் மகிழ்வான். அவன் மகிழ்ச்சி உபசரித்தவனின் உள்ளத்தோடு கரைவதால்.

    கெட்டசாறு தவிடு கஞ்சி
    கிருமி உண்ட மா அரைக்
    கீரை வேர்தெளித்த மோர்மு
    றிந்த பாகு கிண்டுமா
    இட்ட சோறு கொழியல் உப்பி
    டாத புற்கை ஆயினும்
    எங்கும் அன்ப தாக நுங்க
    இன்ப மாயி ருக்குமே38

    ஆனால் தேன்பாகு, பசுநெய், பருப்பு வகைகள், முப்பழ வர்க்கங்கள்,  பால் சாத வகைகள், தாளிக்கப்பட்ட கறி வகைகள், பல்வகை பலகாரங்கள்  சுண்டக் காய்ச்சப்பட்ட திரட்டுப் பால், சருக்கரைப் பொங்கல் முதலியவற்றுடன் உணவு படைத்தாலும், அன்போடு இடப்படாததாயின் அங்கே விருந்தறம் நிறைவு பெறுவதில்லை.

    பட்ட பாத பசுவின் நெய்ப
    ருப்பு முக்க னிக்குழாம்
    பானி தங்கள் தாளி தங்கள்
    பண்ணி கார வகையுடன்
    அட்ட பாலகு ழம்பு கன்னல்
    அமுத மோடும் உதவினும்
    அன்பனோ டளித்தி டாத
    அசனம் என்ன அசனமே 39

    என்னும் பாடலடி உணர்த்துகிறது. எனவே எத்தகைய உணவினை இட்டாலும் அதனை அன்பினோடு இடுதல் வேண்டும் என்பதே பழந்தமிழரின் விருந்தோம்பல் கொள்கையாகும். இன்முகம், இன்சொல், இனியவை ஆற்றல் என்பனவற்றின் தொகுப்பே விருந்தோம்பல் என்பதை மேற்காட்டிய சில எடுத்துக்காட்டுக்களால் அறிந்து கொள்ள இயலும்.

    நிறைவுரை

    தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் பல. அவற்றுள் தலையாயது விருந்தோம்பல். இயற்கை வாழ்வினைப் புறந்தள்ளிச் செயற்கையில் சிந்தனைப் போக்கிய தற்காலத்தில் இது கனவாய்க் கற்பனையாய்ப் பொய்யாய்ப் புனைவாய் மெல்லப் புறப்பட்டு இல்லறத்தின் புறம் போயிருக்கலாம். அதன் சாரம் இன்னும் மணந்து கொண்டுதான் இருக்கிறது. தமழிலக்கியங்கள் முழுமையாகக் கிட்டாத காரணத்தால் இது பற்றிக் கிட்டும் செய்திகள் குறைவே. ஆனால் கிட்டியிருக்கிற அத்தனை இலக்கியங்களிலும் விருந்தோம்பல் பேசப்பட்டுள்ளது என்பதே உண்மை. விருந்தோம்பலைப் பெண் பின்பற்றியிருக்கிறாள். ஆண் நேசித்திருக்கிறான். ஆண்டவனுக்கு அடியவன் செய்திருக்கிறான். அடியவருக்கு சாமான்யன் செய்திருக்கிறான். அவதாரங்களுக்கும் விருந்தோம்பல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  மன்னர்கள் புலவர்களுக்குச் செய்திருக்கிறார்கள். புலவர்கள் தங்கள் மனைவியருக்கு இது பற்றிப் புகன்றிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் தமிழிலக்கியப் பெரும்பரப்பில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒளிவெள்ளமாய் ஊடுருவி நிற்பது விருந்தோம்பல் என்னும் பண்பே என்பதை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்புரிதலுக்கு இந்தக் கட்டுரை ஓர் அணிற்பங்காகக் கருதப்படலாம்.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர் தொல். கற்பியல்           நூ.எண். 11
    2. மேலது செய்யுளியல்                 நூ.எண். 231
    3. கதப்பிள்ளையார் நற்றிணை         பா.எண். 135 வரி.1-5
    4. இடைக்காடனார் நற்றிணை         பா.எண் 142 வரி 8-10
    5. இடைக்காடனார் புறநானூறு        பா.எண் 42 வரி. 12-18
    6. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி புறநானூறு பா.எண். 182
    7. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை.  வரி. 74-78
    8. திருவள்ளுவர் திருக்குறள்                      கு.எண். 43
    9. பரிமேலழகர் மேலது உரை
    10. திருவள்ளுவர் திருக்குறள்                        கு.எண். 45
    11. மேலது                                                                            கு.எண். 1007
    12. பரிமேலழகர் மேலது உரை
    13. திருவள்ளுவர் திருக்குறள்                         கு.எண். 43
    14. மேலது கு.எண். 89
    15. பரிமேலழகர் மேலது உரை
    16. திருவள்ளுவர் திருக்குறள்       கு.எண். 153
    17. மேலது                     கு.எண். 83.
    18. மேலது கு.எண். 84
    19. மேலது கு.எண்.  85
    20. மேலது கு.எண்.  86
    21. மேலது கு.எண்.  87
    22. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்  இ.வி.எ.காதை          வரி. 227-234
    23. மேலது கொலைக்களக்காதை             வரி. 73-75
    24. பாரதிதாசன் குடும்பவிளக்கு    கண்ணிகள் – 34-40
    25. கணிமேதாவியார் ஏலாதி                  பா.எண். 7
    26. சேக்கிழார் பெரியபுராணம்     பா.எண். 442
    27. மேலது பா.எண். 443
    28. மேலது பா.எண். 445
    29. மேலது பா.எண். 449
    30. கம்பர் கம்பராமாயணம் கங்கைப்படலம்.          பா.எண்.41 வரி. 1-3
    31. மேலது பா.எண். 42
    32. மேலது காட்சிப்படலம்                                 பா.எண். 15
    33. திருவள்ளுவர் திருக்குறள்                    கு.எண். 90
    34. பரிமேலழகர் மேலது உரை
    35. விவேகசிந்தாமணி பா.எண். 33
    36. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை வ. 7
    37. விவேகசிந்தாமணி பா.எண். 4
    38. மேலது பா.எண். 57
    39. மேலது பா.எண். 58

    துணைநூற்பட்டியல்  

    1. ஆசிரியர்குழு (உரை) ஏலாதி, சாரதா பதிப்பகம், சென்னை. பதிப்பு – 2018.
    1. கேசிகன் புலியூர் (உ.ஆ.), நற்றிணை, பாரி நிலையம், சென்னை – 600108, நான்காம் பதிப்பு – 1967.
    1. சுப்பிரமணியன் ச.வே. (ப.ஆ.), தொல்காப்பியம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்ன – 600108. ஐந்தாம் பதிப்பு – 2003 .
    1. சேக்கிழார் பெரிய புராணம், திருப்பனந்தாள் மடம், திருத்திய பதிப்பு – 1967
    1. திருவள்ளுவர், திருக்குறள், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -1975.
    1. துரைசாமிப்பிள்ளை ஒளவை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1967.
    1. துரை.அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1966.
    1. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை, தெ.இ. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1975.
    1. பத்மநாயன்(உரை) விவேகசிந்தாமணி, கற்பகம் புத்தகாலயம், சென்னை. பதிப்பு – 2008.
    1. பாரதிதாசன் குடும்பவிளக்கு, பாரி நிலையம், சென்னை – 108. நான்காம் பதிப்பு – 1966.
    1. வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உ.ஆ.) சிலப்பதிகாரம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை. திருத்திய இரண்டாம் பதிப்பு – ஜுலை 1999

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு’ என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. ஆய்வுப் பொருளின் பன்முகப் பயன்பாடு நோக்கிப், பழந்தமிழ்ப் பண்பாட்டுத் தேட்டங்களை நினைவூட்டுவதும் மீட்டுருவாக்கம் செய்வதும் அவற்றின் சிறப்புக்களை எடுத்து மொழிவதும் இன்றைய சூழலில் ஏற்றதே!
    1. ஒரே பொருண்மை பற்றித் தமிழிலக்கியப் பரப்பிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துருக்களின் ஆய்விற்குத் ‘தொகுப்பாய்வு’ எனப் பெயரிட்டிருப்பது பொருத்தமே!
    1. ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னுந் தொடர், ‘நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்’ என மரபு வழியாகப் பாவேந்தரிடம் அடைக்கலம் பெற்றிருப்பதைக் கட்டுரையாளர் சுட்டுவது அவர்தம் மரபுவழி ஆய்வுச் சிந்தனையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.
    1. கண்ணகிக்கும் சீதைக்கும் ஏற்பட்ட துன்பங்களுள் தலையாய துன்பமாக விருந்தோம்பாத் துயரமே என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கட்டுரையாளர் நிறுவுகிறார்.
    1. ‘அனிச்சப்பூவன்ன விருந்தினர்’ என்னும் உவமப் பொருளினும்  அனிச்சப்பூவினும் மென்மையானவர் விருந்தினர்’ என்னும் உறழ்ச்சிப் பொருளைப் பரிமேலழகர் உரைவழி எடுத்துக்காட்டி அது வேற்றுமையணி என நிறுவுவது கட்டுரையாளரின் இலக்கண வன்மையையும் ஆய்நெறிப் புலமையையும் ஒருசேரப் புலப்படுத்துகிறது.
    2. விருந்தோம்பும் நெறி மற்றும் உணவு வகைகள் முதலியவற்றை விவேகசிந்தாமணியிலிருந்து தொகுத்திருக்கும் கட்டுரையாளர், இளையான்குடி மாறனார் புராணத்தில் சித்தரிக்கப்படும் சிவனடியார் விருந்தோம்பலை அழகுற எடுத்தோதுகிறார்.
    3. பல இலக்கியங்களிலிருந்து தொகுத்த செய்தி மலர்களை  ‘விருந்தோம்பல்’ என்னும் மாலைக்குள் கண்ணியாக்கித் தரும் இந்த ஆய்வாளருக்குப் பாராட்டுக்கள்!

    Share
  • விநாயகா நின்னு | கிருஷ்ணகுமார்

    விநாயகா நின்னு | கிருஷ்ணகுமார்

    ‘விநாயகா நின்னு’ என்ற அழகிய பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். விநாயகர் சதுர்த்தியில் வேழ முகத்தவன் அருளால் வெற்றிகளைக் குவியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கஜ வதனா கருணா சதனா

    கஜ வதனா கருணா சதனா

    ‘கஜ வதனா கருணா சதனா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்தப் பிள்ளையார் சதுர்த்தியில் பெரும்பேறு பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தேடிச் சோறு நிதம் தின்று (சிறுகதை)

    தேடிச் சோறு நிதம் தின்று (சிறுகதை)

    மருங்கர்

    மார்கழி மாதம் முடிந்து, கல்யாண சீசன் தொடங்கிவிட்டாலும், சென்னை மாநகரம் அன்று கடும் குளிரில் சற்றே நடுங்கிக்கொண்டிருந்தது. ஒரு அலுவலகத்தின் முன் நன்கு பரந்து விரிந்த வராண்டா. அங்கே கிட்டத்தட்ட 20 பெண்கள் வட்டமாகக் குழுமி இருந்தனர். அவர்களுக்கு நடுவில், ஒரு கை வேக வேகமாய், சற்று நெளிவு சுழிவுகளோடு கோலம் போட்டுக் கொண்டு இருந்தது.  அந்தக் கை கோலம் போட்டவாறே,

    “நீங்க எப்போதும்  போடுற கோலம் போல இல்லாம, இந்தக் கோலத்துக்கு  எட்டாவது புள்ளியிலேயே  இப்படி வளைச்சுத்  திருப்பணும்” என்று பல விதமான குறிப்புகளைச் சொல்லியவாறே, அந்தக் கை  கோலத்தைப்  போட்டு முடித்தது. கொரோனா என்ற அரக்கனை,  தடுப்பு ஊசி மூலம் வெல்வது போன்ற ஒரு காட்சி அமைப்பு. அருகில் ஒரு அரசியல் அமைப்பின் கட்சிக் கொடியுடன் அதன் தலைவரது படம்.

    “மீனா, இந்தக் கொரோனா உருவத்தைச் சிவப்பு நிற பூவாலையும், தடுப்பூசியைப் பச்சை நிறப் பூவாலையும் அலங்கரியுங்கள். மணல் சிற்பம் போல 3டீ எபக்ட் தரணும்.” அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கோலம் போட்ட அந்த உருவம் எழுந்து நின்றது. சுற்றி இருந்த அனைத்துப் பெண்களும் ஒரே சமயத்தில் கைத்தட்டி ஆரவாரித்தனர்.

    “சூப்பர் சார்! அப்படியே கலர் பிரிண்ட் போட்ட மாதிரி இருக்கு!” என்றாள் மீனா.

    ராதாகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “நான் சொல்லிக் கொடுத்தாலும், அதை நீங்க கரெக்டா செய்யணும் இல்ல! இன்னும் மூணு வாரம்தான் இருக்கு. எம்.பி. வீட்டுக் கல்யாணம். வேலையில ரொம்ப கவனமா இருங்க” எனச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்!

    ராதாகிருஷ்ணன் இயற்பெயர் ரவி. பிறந்து ஐந்து வயது வரை நடக்கவில்லை. ஏன், எழுந்து கூட நின்றதில்லை. அவரது அம்மா கஸ்தூரி செல்லாத கோயிலோ, டாக்டரோ  இல்லை. ரங்கோலி கோலம் போடுவதில், அவளை அடித்துக்கொள்ள கிருஷ்ணகிரியில் ஆள் இல்லை என்பார்கள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொன்டே பலவிதமான கோலம் போடுவாள். அதைப் பார்த்துப் பார்த்து, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் ஏறிய  பைல் போல, குழந்தையின் நினைவில் அந்த நுட்பங்கள் ஏறிக்கொண்டன. குழந்தையை கோலத்தின்  அருகில் ஒரு நாள் விட்டுவிட்டு, வீட்டில் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பும் பொழுது, அதிர்ச்சியில் மூழ்கினாள்.

    குழந்தை இரண்டு கால்களை முட்டியிட்டபடி, முதுகைச் சற்று குனிந்தவாறு ஏதோ கோலமாவில் கிறுக்கிக்கொண்டு இருந்தது. அருகில் சென்று பார்த்தாள்.  அச்சு வைத்தாற்போல்  “ராதாகிருஷ்ணன்” படம். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அவளைப்  பார்த்ததும், குழந்தை ஓடி வந்து கட்டிக்கொண்டது. இன்று அவரது பூ மற்றும் கோலமாவு கலந்து 3டீ  எபக்ட் ரங்கோலி இல்லாத கல்யாணம் இல்லை எனச்  சொல்லலாம்!

    மூன்று வாரங்கள் வேகமாக ஓடின. கல்யாண வீடு. ராதாகிருஷ்ணன் ரங்கோலி  இறுதி கட்டப்  பணிகளைச் சரி  பார்த்துக்கொண்டிருந்தார்.

    “ராதா சார், சூப்பர். தலைவர் அசரப் போறார் பாருங்க!” என்று  பின்னிருந்து ஒரு குரல். திரும்பி பார்த்தார். அது பி.ஏ. சண்முகத்தின் குரல்.

    “சந்தோசம் சார்” என்றார் நிறைவாக ராதாகிருஷ்ணன்.

    “உங்க பினிஷிங் டச் சூப்பர் சார்! கொரோனாவை  எதிர்க் கட்சி சிவப்பு நிறத்திலேயும், தடுப்பூசி நம்ம கட்சி பச்சை நிறத்துல கொடுத்ததுதான் ஹைலைட்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

    “என்ன இந்த ஆளு லூசு மாதிரி பேசறான். பேப்பர் எதுவும் பார்க்கலையா. அதுதானே கொரோனா கலர்” என்று மனத்தில் நினைத்தாலும், சும்மா வந்த நன்மதிப்பை நிராகரிக்க மனசில்லாமல் ஆமோதித்தவாறு சிரித்தார்.

    “சார், நான் உங்க பேமண்டை அக்கௌன்ட்டுக்கு அனுப்பிட்டேன். அப்புறம், உங்க காரு பத்தி சொன்னீங்களே, ரொம்ப பழைய காரு போல”

    “ஆமா சார், விண்டேஜ் வோக்ஸ்வேகன் பீட்டில் கார்.   நாலு மாசமா ஒழுங்கா ஓட மாட்டேங்குது.  அப்பா ஞாபகமா வச்சு இருக்கேன். எம்.பி. சாரும்  விண்டேஜ் கார் வச்சு இருக்காருன்னு கேள்விப்பட்டேன்.”

    சிறிய அட்டையை அவர் கையில் கொடுத்தவாறே “எம்.பி. சார் காரை இங்கதான் சர்வீஸுக்குக் கொடுக்கறாரு” என்று சொல்லும் பொழுதே அவருக்கு ஏதோ ஒரு போன் கால் வந்தது. மினிஸ்டர் கிட்ட இருந்து என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து சென்றார்.

    மறு நாள். கிழக்கு தாம்பரம் “செங்கதிர் கார் வோர்க் ஷாப்” பன்னிரண்டு மணிக்கெல்லாம் காரோடு ஆஜராகிவிட்டார். எம்.பி.யின் பரிந்துரை வேறு . இராஜ மரியாதையுடன் உள்ளே உட்கார வைத்தனர்.

    சில  மணி நேரங்கள்  கழிந்தன.  ஒரு சின்ன பையன் “சார், உங்களை ஓனர் கதிர் கூப்பிடறாங்க.”

    பட்டறையை நோக்கி நடந்தார்.  அங்கிருந்து சிவப்பு நிற  பீட்டில் கார் கம்பீரமாகத் தெரிந்தது.  அதன் சின்னமான ஹூட், அதாவது வாகன முகடுதான்,  அதன் ஹைலைட்.  சிறு வயதில், அவரது  அப்பா அதில் சறுக்கு மரம் போல, அவரை வைத்து விளையாடியது மனத்தில் வந்து ஓடியது, இல்லை சறுக்கியது!  பழைய பீட்டில் காருக்கு  என்ஜின் பின்பக்கம். யாரோ அங்கே  இருப்பது  தெரிந்தது.  அருகில் சென்று “கதிர் சாரைப்  பார்க்கணும்” என்றார்

    “நான்தான் செங்கதிர், இந்த வோர்க் ஷாப்  ஓனர்” என்றாள் அந்தப் பெண்!

    எந்த ஒரு சலனமும் அவர் முகத்திலோ, குரலிலோ இல்லை. “ஓ, அப்படியா, நீங்க கூப்பிடீங்கன்னு பையன் சொன்னான் ” என்றார்.

    “சார், நீங்க கடைசியா சர்வீஸ் கொடுத்த இடத்துல சொதப்பிட்டாங்க. அவங்க போட்ட இந்தப் பாகம், இதுக்குச் சரிப்படாது . என்ஜின் சீரா இயங்குவதற்கு அதன்  தேவைக்கேற்ப சரியான அளவு எரிபொருளையும் காற்றையும் கலந்து  கொடுக்கணும். இந்தப் பாகம்  செவென்ட்டிஸ்க்கு அப்புறம்  வந்த பீட்டல் காருக்குத்தான் சரியா இருக்கும். அதனாலதான் இந்தப் பிரச்சனை வந்து இருக்கு”

    “ஓ, அப்படியா, உங்க கிட்ட ஒரிஜினல் பார்ட்ஸ் இருக்கா?” எனச் சற்றுக் கவலையுடன் கேட்டார்.

    “உ.பி.யில் இருந்து ஆர்டர் செய்யணும். இரண்டு வாரத்துல வந்துடும்”

    “ஓகே செங்கதிர், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பட்டதாரியா நீங்க? கார் சம்பந்தமான பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வரவேற்பறையில்  பார்த்தேன்.”

    “இல்லை சார், அப்பாவோட வோர்க் ஷாப்.  அப்பா இப்ப இல்ல. நான்தான் பாத்துக்கிறேன். சின்ன வயசுல இருந்து இங்கேதான் இருக்கேன். அவரோடேயே இருந்து எல்லாம் கத்துக்கிட்டேன். அப்பாவுக்கு விண்டேஜ் கார் மேல ஒரு பைத்தியம்” என்று சொல்லிவிட்டு பலவிதமான விண்டேஜ் கார்களைப் பற்றியும், அதன் என்ஜின் அமைப்பு, வேலை செய்யும் விதம் என அரைமணி நேரம் பேசினாள்.

    சிறிது மூச்சு விட்ட பிறகு “சாரி, சார், ரொம்ப போர் அடிச்சுட்டேன் போல” என்றாள்

    “நாட் அட் ஆல்! உங்க அப்பா பைத்தியம்னா, நான் ஒரு வெறியன்” என்றார் சிரித்துக்கொண்டே.

    “ஓகே சார், ஸ்பேர்   பார்ட்ஸ் வந்த உடனே கால் பண்றேன். காரை ஷெட்டுல லாக் பண்ணி வைக்கறோம்” என்றாள்.  சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.

    நல்ல பசி, அருகிலேயே  சிற்றுண்டி உணவகம் .

    “சார், உள்ளே இடம் இல்லை, ஏதாவது மரத்துக்கு கீழே உள்ள ஒரு டேபிள்ல  உட்காருங்க” என்றான் சர்வர்.

    நன்கு உயர்ந்த மரங்கள். அதன்  கீழே சில மேஜைகளும்,  நாற்காலிகளும் இருந்தன. மசால் தோசை, போண்டோ மற்றும்  டீயும் ஆர்டர் செய்தார்.

    “ஹலோ சார், உங்கள் பக்கத்தில் உட்கார்ந்தா ஓகேவா” என்று பின்னிருந்து  சற்று பரிச்சயமான குரல் செங்கதிர்! “வாம்மா உட்காரு” என்றார்.

    “தனி டேபிள் இல்ல , அதான்  உங்ககிட்ட கேட்கலாமுன்னு நினைச்சேன்” என்றாள்.

    “அதனால என்னம்மா, ப்ளீஸ்” என்றார்

    நன்றி என்று சொல்லிவிட்டு அவர் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள் . செங்கதிருக்கு 25 வயது இருக்கும். மாநிறம், சற்று ஒடிசலான தேகம். சுருள் முடி. பார்த்தால் திரும்பப் பார்க்கத் தோன்றும்  முகம். க்ரீஸ் பட்டு பட்டு, அவளது மினுமினுப்பு சற்று குறைந்துவிட்டது.

    “நீங்க தப்பா நினைக்கலேன்னா , நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?”  எனக் கேட்டாள்.

    “ப்ளீஸ்”.

    “சார், நீங்க என்னைய முதல்ல பார்த்தப்ப, நீங்க ஒரு ஆண் கிட்ட பேசப் போகிறோம் என்று நினைச்சீங்க. ஆனா நான் யாரு என்று தெரிஞ்சதுக்கு அப்புறம், நீங்க ஆச்சரியப்படவே இல்லை. பொதுவா நான் தான் மெயின் மெக்கானிக் என்று தெரிஞ்சாலே வண்டியக் கூட கொடுக்க மாட்டாங்க. நீங்க ஒரு ரீஆக்ஷனும்   காட்டவில்லை” என்று சற்று ஆச்சரியமாகக் கேட்டாள் .

    சிரித்துக்கொண்டே “நான் நீ ஒரு பெரிய மெக்கானிக் என்று நினைச்சேன், ஆனா நீ மனோதத்துவரா இருப்ப போல! நீ அன்பே வா படம் பார்த்து இருப்பே என்று  நினைக்கிறேன். அதுல டீ . ராமசந்திரன் சார், தான் ஒரு புண்ணாக்கு வியாபாரின்னு சொல்லுவாரு”

    உடனே அவள் இடைமறித்து “சார், அதுக்கு புரட்சித் தலைவர் நீங்க கொடுத்த ரீஆக்ஷன் தான் கொடுப்பாரு. வியாபாரியோட திறமையைத்தான்  பார்க்கணும். அவன் செய்யற வேலையை  இல்லை என்பாரு” என்றாள் சற்று பெருமிதத்துடன்!

    “ஸ்மார்ட் கேர்ள்” என்று அவர்  சொல்லும்பொழுதே, அவள் ஆர்டர் செய்த கீரை வடை வந்தது.

    “சார், இங்க கீரை வடை பேமஸ்!”

    “ஓ, அந்த சர்வர் போண்டோ என்று சொன்னான். ஒரு வேலை மீந்து போய் இருக்கும்.” என்றார் நக்கலாக.

    “இன்னொரு கேள்வி. கடைப் பையனுக்கு உங்களைத்  தெரியும் போல, ரங்கோலி ராதாகிருஷ்ணன்தான் உங்க  பெயராமே?” என்று சற்று ஆச்சரியத்துடன்  கேட்டாள் .

    “என்ன நீ, என்னைய பத்தி தெரிஞ்சு வச்சுக்கிட்டு, குறுக்கு விசாரணை பண்ண வந்து இருக்க போல?”

    “என்ன சார், இப்படி சொல்றீங்க. எல்லாம் தற்செயல்” என்று சற்று கலக்கத்துடன் சொன்னாள் .

    ‘சும்மா விளையாட்டாகச் சொன்னேன், கேளு”

    “உங்களைப்  பார்த்தப்ப எங்க அப்பா ஞாபகம் வந்தது. அதான் ஒரு விஷயத்தை  உங்ககிட்ட கன்சல்ட் பண்ணலாமுன்னு நினைச்சேன்”

    அதைக் கேட்டதும் அவர் சற்று உணர்ச்சிவசப்பட்டார்.

    “சொல்லும்மா” என்ற பொழுது , அவர் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்தன.

    “நம்ம இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. சாதாரணமா ஒரு ஆண் செய்யற வேலையை நானும், ஒரு பெண் செய்யற வேலையை நீங்களும் செய்யறீங்க” என்று சொல்லிவிட்டு ஏதோ சொல்ல நினைத்துச் சற்று தயங்கினாள் .

    “தயங்காம சொல்லும்மா”

    “நான் ஒரு பையனை லவ் பண்ணறேன் சார், அந்தப் பையனும் தான், நல்ல பையன், ஆனா அவனுக்கு நான் செய்யற வேலை  பிடிக்கலை. நான் என் வேலையை ரொம்ப நேசிக்கிறேன் சார்”

    “உன்னைப் பார்த்தவுடன் எனக்கு தெரிஞ்சது செங்கதிர். உனக்கு எந்த மாதிரியான உதவி வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டார்.

    “உங்களுக்கு இந்த மாதிரி பிரச்னை உங்க மனைவி கிட்ட இருந்து வந்து இருக்கா, நீங்கள் அதை எப்படி சமாளச்சீங்க”

    “ஓ அதுவா” என்று சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். “செங்கதிர், என் மனைவி மாலதி முதல் முதல்ல  என் அலுவலகத்திற்கு வந்தபோது, ரொம்ப டென்ஷன் ஆயிட்டா. கிட்டத்தட்ட 40 பெண்கள். அவளுக்கு நம்பிக்கை வரணும் என்று அவளைப் பல நாள் ஆபீஸ்ல உக்கார வச்சேன். அவ வேலைக்கு வெச்ச ஆண்கள் மூலமாக, வேலை பார்த்த  பெண்களுக்குப் பல பிரச்சனைகள். கொஞ்ச நாட்களில் என்னோட தொழில் ஆர்வம், பெண்கள் கிட்ட நடந்துக்கிட்ட முறை, எவ்வளவு குடும்பங்கள் என்னை நம்பி இருக்குன்னு எல்லாத்தையும்  புரிஞ்சுக்கிட்டா. இப்ப எல்லாம் அவள் என் அலுவலகத்திற்கு வருவதில்லை. அந்தப் பையனுக்கு  நீ செய்யற வேலை பிடிக்கலையா இல்ல, ஆண்களோட வேலை பார்க்கிறது பிடிக்கலையா?” எனச் சரியான கேள்வியையும், தன் தட்டில் இருந்த ஒரு போண்டோவையும்  அவள் முன் வைத்தார்!

    “சரியா சொல்ல மாட்டேங்கிறான் சார்”

    “அப்ப அவனை உன் பட்டறையில்ல ஒரு நாள் வந்து இருக்கச் சொல்லு . உன்கிட்ட வேலைப் பார்க்கிறவங்க, உன்னை எப்படி மதிக்கிறாங்கன்னு என்பதைப் பார்த்தாலே திருந்திடுவான். இல்லையின்னா, அவனைக்  கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு ஒரு நாள் வா, நான் அவன்கிட்ட பேசறேன்” என்றார் பெருந்தன்மையுடன்.

    “ரொம்ப தேங்க்ஸ் சார்! அப்படியே செய்யறேன்” என்றாள் சற்று தெளிவுடன்.

    “அது இருக்கட்டும்., நான் உன்கிட்ட உன் பட்டறையிலேயே ஒரு விஷயம் பத்தி பேச நினைச்சேன். டைம் கிடைக்கலை. இப்ப சொல்லலாமுன்னு தோணுது”

    “என்ன விஷயம் சார்?” என்று ஆச்சரியத்துடன்  கேட்டாள்.

    “நீ ஒரு  ஜி.டி. நாயுடு மாதிரி!  படிப்பறிவு இல்லை, ஆனா உனக்கு தொழில்நுட்ப அறிவு ஜாஸ்தி. ஒரு பாடப் புத்தகத்துல இருக்கற விஷயத்தை, நீ  விளக்கின விதம்   எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கறே!”

    “ஒரு ஆர்வம் தான் சார், அப்பா கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.”

    “மின்சார கார்தான் விரைவில் இந்த உலகை ஆளப் போகிறது என்று சொன்னப்ப எல்லாரும் கிண்டல் பண்ணாங்க.  ஆனா இன்னிக்கு உலகத்துல ‘எலான் மஸ்க்’ டெஸ்லா முதலாளிதான் பெரிய  பணக்காரராக இருக்காரு. “

    “சார் , இதை ..” என்று  ஏதோ சொல்ல ஆரம்பித்த பொழுது, சற்று கையை உயர்த்தி, பொறுமையாக இருக்கும்படி சைகை செய்தார் .

    தேடிச் சோறுநிதந் தின்று என்ற  மகா கவி பாரதியார் பாடலைக் கேட்டிருக்கிறீயா?”

    “சார், அந்தப் பாடல்  பெரும்பாலான நேரங்களில்  எனக்கு ஒரு ஊக்கம் தரக் கூடிய பாடல்” என்று சொன்னாலும் அவளுக்கு உள் மனத்தில் இன்னும் குழப்பமாகவே இருந்தாள் .

    “என் வேலை ரொம்ப சுலபமா போச்சு.  அவர் தேடித் தேடி உணவு உண்டு, பல வெட்டிக் கதை பேசி, மனசு நொந்து பலர் கஷ்டம் படும்படி நடந்து, நரைச்சு கிழவன் ஆகி யாருக்கும் பயன் இல்லாமல் தனக்கும் பயன் இல்லாமல் வாழ்கிற சராசரி மனிதன் மாதிரி தான் வீழ்வேன் என நினைத்தாயோன்னு கேட்பாரு. “

    “ஆனா அதுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, புரியலை!”

    “இரு, அவசரப்படாதே, சொல்லறேன்.  உன் வாழ்க்கை முடியறப்போ, நீ சில  ஆயிரம் கார் ரிப்பேர் பண்ணி இருப்ப, நல்ல சம்பாதிச்சும்  இருப்ப. நீ போன பிறகு, ஆனா நீ வந்த தடம் யாருக்கும் தெரியாது. வித்தியாசமா யோசி. எரிபொருள் உட்செலுத்தும் விதத்தில் நீ  ஒரு சின்ன மாற்றம் கண்டு பிடிச்சாலே, ஒரு வருசத்துக்கு இந்தியா பல ஆயிரம் கோடி  சேமிக்கலாம். இந்தியாவுல நிறையா பழைய கார் ஓடுது. நான் விண்டாஜ் காரை சொல்லலை, 90 மற்றும் இரண்டாயிரத்தில் வந்த கார்களைப்  பத்திதான் சொல்லறேன். உனது புத்தக அறிவையும், நடைமுறை அறிவையும்  வச்சு என்ன செய்யலாமுன்னு யோசி”

    அவள் முகத்தில் திடீரென்று 1000 வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசம்.

    “சார், எனக்கு  எப்பவும் வித்தியாசமா ஏதாவது செய்யனும்னு என்று ஆசை சார்.  சரியான வழிநடத்தல் இல்லை சார்.  நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஒரு கிளாரிட்டி கிடைத்தது சார் ” என்றாள் சந்தோசத்துடன்.

    “நான் உனக்கு ஒரு கோடுதான் போட்டுக் கொடுத்தேன். ரோடு போடறது உன் கையில்  தான் இருக்கு.  எந்த மாதிரியான விசயத்துல ஜெயிக்கணுமுன்னு முதல்ல கண்டுபிடி. வழி தானே பிறக்கும் . ஆல் தி பெஸ்ட்!”

    சிறிது நேரத்தில் விடைபெற்றாள் . சிறிது தூரம் நடந்தவுடன்  திரும்பி பார்த்தாள். அவளுக்கு அங்கு இருந்த மரம் ஒரு போதிமரமாய் தான் தெரிந்தது. யாருக்குத் தெரியும்.  ஒரு லேடி ஜி.டி. நாயுடுவோ , எலான் மஸ்க்காகவோ அவள்  இன்னும் சில வருடங்களில் வரலாம்! அவளுக்குள் இருந்த விளக்கின் திரியைச் சற்று தூண்டிவிட்டார்  அவ்வளவுதான். ஆனால் இது போன்ற வழி நடத்தல் இல்லாமல், தடம் மாறிய ரயில் வண்டிகள் தான் இங்கு அதிகம்!

    Share
  • மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)

    மாற்றுக் கோணங்கள் (சிறுகதை)

    செ. கோட்டாளம்

    வீட்டு வேலைகளெல்லாம் முடிந்துவிட்டன. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

    பிள்ளைகள் வீட்டிலிருந்தவரை ஓய்வில்லாமல் ஏதாவது வேலை இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் வளர்ந்து வெளியேறியபின் வீட்டிலும் எங்கள் வாழ்விலும் நிறைய வெற்றிடங்கள் தோன்றியதுபோலிருந்தது. அந்த வெற்றிடங்களை கணவரும் நானும் ஒருவருக்கொருவர் நிரப்ப முயன்றோம்.

    அவரருகில் வந்து அமர்ந்தேன். அவரோ படிப்பதில் கவனமாயிருந்தார். சற்றுநேரம் தொந்தரவுசெய்யாமலிருந்தேன்.

    சட்டென்று திரும்பி “என்ன?” என்று கேட்டார். நான் என்னையுமறியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்போலும். அதை உணர்ந்து சற்றே வெட்கி, “ஒன்றுமில்லை,” என்று சொல்லி வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.

    இந்த வயதிலும் அவரது கம்பீரத்தோற்றம் என்னை கவரவே செய்தது. திருமணமான புதிதில் அவர்கவனத்தை ஈர்க்க நான் செய்த குறும்புகளை நினைத்துக்கொண்டேன்.

    அவர் படித்துக்கொண்டிருந்த நூலை மேசையில் வைத்துவிட்டு, மீண்டும் என்பக்கம் திரும்பி, “என்ன சிரிப்பு?” என்றார். ஐயோ, மறுபடியும் மாட்டிக்கொண்டேன்.

    “ஒன்றுமில்லை. நம் தொடக்கநாள்களை நினைத்துக்கொண்டேன்.”

    அவர் புன்னகைத்து, “அப்படியா? என்ன நினைத்துக்கொண்டாய்?” என்றார்.

    “இப்படித்தான் நீங்கள் எதையாவது படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் வந்து உங்களை நோண்டுவேன்.”

    “அப்போதெல்லாம் நான் படிக்கவேண்டியது நிறைய இருந்தது. என் தொழில் அப்படி!”

    “இன்னும் படித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள்!”

    “இப்போது பொழுதுபோக்குக்காக நான் விரும்புவதை படிக்கிறேன். படிக்கவேண்டிய கட்டாயமில்லை.”

    “ஆம். இப்போதாவது நான் ஒருத்தி இருக்கிறேனே என்று திரும்பிப்பார்த்து பேசுகிறீர்கள்!”

    “முன்பு மட்டுமென்ன? நீ அருகில் வந்தால் புத்தகங்களை தூக்கியெறிந்துவிடுவேனே!”

    இருவரும் ஒரேநேரத்தில் தொடங்கி பெரிதாக சிரித்தோம். அந்த சிரிப்பில் ஏராளமான மறைபொருள்கள் பொதிந்து கிடந்தன.

    “நாம் தனியாயிருந்து எவ்வளவு கூத்தடித்திருக்கிறோம்!” என்றேன்.

    “ஆம். என் வேலை வெளியூரிலிருந்ததால் தனிமை கிடைத்தது. இது எல்லாருக்கும் கிடைப்பதில்லை.”

    “அதே தனிமை இப்போது மீண்டும் கிடைத்திருக்கிறது.”

    “அப்படியானால் இனியும் என்னை படிக்க விடமாட்டாய்?”

    “மாட்டேன்! என்னுடன் பேசுங்கள்!”

    அவர் சிரித்து, “என் தலைவிதி! எங்கு போனாலும் எனக்கு இதே தொல்லைதான்!”

    “என்ன, வேறு யாருமா?”

    “சீ, என்ன நீ? நான் கல்லூரியில் படித்தபோது என் நண்பன் வரதன் செய்த குறும்புகளை சொன்னேன்.”

    “ஆமாமாம். அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள். அவர்மீது எனக்கு பொறாமையாயிருக்கிறது.”

    அவர் வெடிச்சிரிப்பு சிரித்து, “போயும் போயும் அவன்மீதா உனக்கு பொறாமை? நீ பொறாமைப்பட எத்தனையோபேர் இருக்கிறார்கள்,” என்று என்னை சீண்டினார்.

    “யார், மாலாவா?” என்று நானும் அவரை சீண்டினேன்.

    “ஆம். அவளும் ஒருத்தி.”

    “மொத்தம் எத்தனைபேர்?”

    “எத்தனையோபேர்! அது சரி, மாலாவைப்பற்றி உனக்கு எப்படித்தெரியும்?”

    “நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள்! அவர்களை நீங்கள் காதலித்திருக்கிறீர்கள். அவர்கள் உங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.”

    “அதெல்லாம் வயதுக்கோளாறு; ஒரு இனம்புரியாத கவர்ச்சி! காதலென்றால் என்னவென்று நீ வந்தபிறகுதானே தெரிந்தது!”

    “உக்கும்! ஒன்றும் ஐசுவைக்கவேண்டாம்!”

    இதுபோன்ற பல பொருளற்ற உரையாடல்களுக்காக எங்களுக்கு நிறைய நேரமிருந்தது. மற்றொருமுறை எங்கள் நண்பர் மலரைப்பற்றிய உரையாடல் எழுந்தது. பாவம், அவர் அண்மையில் கணவரையிழந்த துயரத்திலிருந்து மீளாமலிருந்தார்.

    “அவர்களுக்கு கணவரே உலகம். வேறு சிந்தனை ஏதும் இல்லாமல் இருந்து பழகிவிட்டார்கள்,” என்றார் என் கணவர்.

    “ஆம். அவர் இறந்ததும் எப்படி துடித்துவிட்டார்கள்!”

    சற்றே சிந்தனையிலிருந்தபின் ஒரு பெருமூச்சை வெளியிட்டார். பிறகு சொன்னார், “இன்னும் நம் பெண்கள் தமக்கென்று ஒரு வாழ்வையும் தமக்கென்று ஒரு உலகையும் அமைத்துக்கொள்வதில்லை. கணவரும் குழந்தைகளுமே அவர்களுடைய உலகமாகிவிடுகிறது,” என்றார். அவர் படித்த நூல்களிலிருந்து எதையோ எடுத்துவிட்டார்போலும்.

    “இப்போது கொஞ்சங்கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் மலரும் அவர்கணவரும் பழங்காலத்தினர்.”

    “நாம் அவர்களைவிட மிகவும் இளையவர்கள் அல்லோம். நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.”

    “ஆம். நம் பிள்ளைகளாவது அப்படியிருக்கமாட்டார்கள் என்று நம்புவோம்,” என்றேன்.

    “இப்போது மலர் எப்படியிருக்கிறார்கள்? நீ பேசினாயா?”

    “ஆம். அன்று பேசினேன். என்னுடன் பேசுவதில் சற்று ஆறுதலடைகிறார்கள். நாமும் அடிக்கடி போய் பார்க்கவேண்டும்,” என்றேன்.

    நான் அவருக்கு நெருங்கிய தோழி. என்னுடன் எதையும் மனந்திறந்து பேசுவார். எனக்கு தன் துயரங்களை சொல்வதில் அவருக்கு ஒரு நிம்மதி!

    மற்றொருமுறை மாலாவைப்பற்றியும் வரதனைப்பற்றியும் பேச்சு எழுந்தது.

    மாலாவுக்கும் இரண்டு பிள்ளைகளாம். அவர்களும் வளர்ந்திருப்பார்கள். இவர் அவருடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை; எனினும் நண்பர்கள்மூலம் அவரைப்பற்றி தவறாமல் தெரிந்துகொள்வார். ஒருமுறை வேலன் என்ற ஒரு நண்பர் வீட்டுக்கு வந்திருந்தபோது இவர் அவரிடம் மாலாவைப்பற்றி அக்கறையுடன் விசாரித்ததில் எனக்கு இவர்மீது கோபமே வந்துவிட்டது.

    அன்று எங்கள் வீட்டுக்கு வந்தபோதே வேலனுக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது; அது எங்களுக்கு தெரியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து தம் நாற்பத்தாறாம் வயதில் இறந்துவிட்டார். இவரும் இவர்நண்பர்களும் மிகவும் துயரமடைந்தனர். வேலன் திருமணமே செய்துகொள்ளாமலிந்ததால் அந்த துயரத்தில் பங்கேற்க மனைவிமக்கள் இல்லை.

    “உங்கள் நண்பர் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?” என்றேன்.

    “அதுதான் எனக்கும் புரியாத புதிராயிருக்கிறது. நானும் பலமுறை கேட்டுவிட்டேன். சிரித்து மழுப்பிவிட்டான். வரதனும் அப்படித்தான்.”

    இதைச்சொன்னதும் அவர்முகத்தில் ஒரு திடீர்மாற்றம் ஏற்பட்டது. பல உணர்ச்சிகள் அவரை தாக்கியதை கண்டேன்.

    “எவ்வளவு முட்டாளாயிருந்தேன்!” என்றார். அவர்கண்கள் நீர்கோத்ததைக்கண்டு நான் பதறிவிட்டேன்.

    “என்னங்க? என்ன ஆனது? திடீரென்று இப்படி ஆகிவிட்டீர்கள்!”

    “வேலனும் வரதனும் திருமணஞ்செய்துகொள்ளாமலிருந்ததன் காரணம் எனக்கு விளங்குகிறது,” என்று சொல்லி சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

    “என்ன?” என்று கேட்டுவிட்டு அவர் பதில்சொல்ல காத்திருந்தேன்.

    மென்குரலில் நிதானமாக சொன்னார், “அவர்கள் காதலர்கள்!”

    “நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏதோ காதல் தோல்வியாயிருக்கலாம். அல்லது காதலிகளை வைத்திருந்திருக்கலாம்,” என்றேன்.

    “நான் சொல்வது உனக்கு புரியவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் காதலர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.”

    நான் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு விளங்கவில்லை. விளங்கியது; ஆனால் தடுமாறினேன். என் மூளை இரண்டுபகுதிகளாக விடுபட்டு தவறான திசையமைவில் மீண்டும் சேர்ந்துகொண்டதுபோலிருந்தது. கண்ணாடியில் பார்க்கும்போது நம் முகம் தெரியாமல் முதுகு தெரிந்தால் எப்படியிருக்கும்? அப்படி உணர்ந்தேன்.

    “அப்படியா நினைக்கிறீர்கள்?” என்றேன். வேறேதும் சொல்லத்தோன்றவில்லை. ஆனால் ஐயமில்லை. அவர்களிருவருடைய வாழ்க்கைகளையும் மாற்றுக்கோணத்தில் பார்த்தபோது எல்லாமே தெளிவானது. கோளாறு நம் கண்ணோட்டத்திலே இருந்திருக்கிறது. குருடிக்கு திடீரென்று கண்திறந்ததுபோலிருந்தது.

    இருவருமே படித்த அறிவாளிகள். சமுதாயம் மதிக்கும் பெரிய வேலைகளிலிருப்பவர்கள். வேறு காலக்கட்டமோ இடமோவாயிருந்தால் அவர்கள் தங்கள் உறவை வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்போதைய உலகில் அவர்களுக்கு இடமில்லாததால் மறைவில் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி வாழ்ந்திருக்கின்றனர்,

    பலநாள்களுக்குப்பிறகும் என் கணவர் துயரத்துடனே காணப்பட்டார். நான் அவரது கவனத்தை திருப்பி கலகலப்பாக்க முயன்றேன். அவர்மனத்தின் உள்ளெண்ணங்களை பகிருமாறு ஊக்கினேன்.

    “மலர் கணவரையிழந்த துயரத்தில் துடித்ததுபோலவே வரதனும் வேலனையிழந்து துடித்திருப்பான். மலருக்கு நீ இருப்பதுபோல் வரதனுக்கு நான் நெருங்கிய நண்பன். வேலன் இறந்ததும் வரதன் முதல்வேலையாக என்னிடமே பேசினான். ஆனால் நீ மலருக்கு அளித்த ஆறுதலை நான் வரதனுக்கு அளிக்கவில்லை. அவனது கவலையை நான் கற்பனையிலும் காணவில்லை. அவன் காதலனை இழந்தது மட்டுமல்லாமல் தன் துயரத்தை வெளியிடவியலாத நிலையிலும் தனியே தவித்திருப்பான்.”

    அவரை என்மீது சாய்த்துவைத்து ஆற்றுப்படுத்த முயன்றேன். சொல்வதற்கு ஏதும் கிடைக்கவில்லை. நாம் வாய்கிழியப்பேசும் இலக்கியமும் பண்பாடும் வாழ்க்கைமுறையும் விழுமியங்களும் இந்த நிலையை கையாள்வதற்கு பயிற்சியளித்திருக்கவில்லை. என்மீது சரிந்து குழந்தைபோல் அழுதுகொண்டிருந்தவரை உச்சந்தலையில் முத்தமிட்டு முதுகில் தடவினேன்.

    வரதனுக்கு இவர்மீதே முதலில் காதல் என்பதை இவர் உணரவில்லை; நான் சுட்டிக்காட்டப்போவதில்லை.


    About the Author

    J. Kottalam is retired after serving in the scientific and technological research and development fields. He was born in 1954 in Kotkai of southern Tamilnadu in India. Having received MSc from Indian Institute of Technology at Madras and PhD from Michigan State University in USA, he worked at institutions such as University of California at San Diego, Scripps Research Institute, Harvard University and Cray Research with scholars including Nobel laureate Martin Karplus. He contributed to developing numerical algorithms for simulating the structures and dynamics of macromolecules such as proteins and nucleic acids in supercomputers. His further contributions are in the fields of Computational Fluid Dynamics and Statistical Physics. Now he is engaged in developing aids necessary for bringing the scientific wealth available in English to Tamil in a planned systematic manner.

    Share