வல்லபை நாதனே வருவாய் அருள்வாய்

சரஸ்வதி ராசேந்திரன்
குருவே சிவனின் கொழுந்தே ஆனைமுகனே
குஞ்சரனே எழிற் குஞ்சரி நாதனே
வருவாய் விரைவாய் வந்தனை ஆள்வாய்
வல்லபை நாதனே வாழ்த்தி வணங்கினேன்
அருள்வாய் உனையே அனுதினம் பணிவேன்
அன்னை பராசக்தியின் அரும் புதல்வனே
திருமால் மருகா தீனரஷனே கணேசா
திருவடி பணிந்தேன் துன்பம் துடைப்பாய்
தஞ்சம் அடைந்தேன் தாங்குமருள் தந்திடுவாய்
கொஞ்சுமருள் கணபதியே கூட்டுவித்து ஆட்படுத்து
அஞ்சிடும் அன்பருக்கு அபயம் அளிப்பாய்
பஞ்சமி பைரவி பார்வதி மைந்தனே
கறைகளைப் போக்கி, கடுந்துயர் நீக்கி
கரைசேர வைக்கும் கணபதி தாளே
கருதிடும் நலன்களைக் கனிவாய் அருள்வாயே
கருணையில் பொறுத்தருள் கருக்கிடென் பிழைகளை
பிணிகளைப் போக்கி, பெரும்பலம் தேக்கிடு
பணிந்துணை எண்ணுவேன் பேணிக் காத்திடு
வீணிலே காலம் கடத்தாது விரைந்து வந்திடு
அணிமிகு செயல்கள் புரிந்திட ஆசிகூறு
சிறுமையைப் போக்கிச் சீருளம் ஆக்கிடு
வறுமையைப் போக்கி வளத்தைத் தேக்கிடு
செல்வம் தருவாய் சிறப்பையும் தருவாய்
அல்லல் நீக்கி அனுதினம் துணையாகு