Blog

  • குறளின் கதிர்களாய்…(73)

    -செண்பக ஜெகதீசன்

    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு. (திருக்குறள்-299: வாய்மை)

    புதுக் கவிதையில்…

    இருளைப் போக்கி
    ஓளியைத் தருவது விளக்கு...
    இதற்கு மேலாய்,
    பொய்யை விலக்கி
    அகயிருள் அகற்றுவதே
    சான்றோரின்
    சிறந்த விளக்கு…!

    குறும்பாவில்…

    புறயிருள் அகற்றிடும் விளக்கு,
    மாந்தர் அகயிருளகற்றும்
    பொய்யாமைதான் உண்மை விளக்கு…!

    மரபுக் கவிதையில்…

    கரிய இருளும் ஓடிவிடும்
        கண்டால் ஒளிரும் விளக்கினையே,
    பெரிதாய்ச் சிறிதாய் இருந்தாலும்
        பார்க்கும் இவையெலாம் விளக்கல்ல,
    அரிதாம் உண்மை கடைபிடிப்போர்
        அகயிருள் அகற்றிடும் மெய்விளக்கு,
    தெரிந்திடு இதுதான் உயர்விளக்கு
        தீய இருள்கெட ஒளிர்வதாலே…!

    லிமரைக்கூ…

    இருளகற்றும் விளக்கில் ஒளிர்ந்திடும் திரி,
    விளக்கதிலும், உள்ளயிருள் போக்கும்

    வாய்மைதான் விளக்கில் உயர்ந்தது தெரி…!

    கிராமிய பாணியில்…

    வெளக்கு வெளக்கு ஒளிவெளக்கு
    இருட்டப் போக்கும் ஒளிவெளக்கு..

    இந்த வெளக்கெல்லாம் வெளக்கில்ல,
    இதவிட ஒசந்தது மனவெளக்கு
    உண்ம பேசும் மனவெளக்கு,
    ஒசந்தவர் கொண்ட கைவெளக்கு
    மனசு இருட்டப் போக்கிடுமே
    மேன்ம யான வெளக்கிதுவே..

    வெளக்கு வெளக்கு ஒளிவெளக்கு
    இருட்டப் போக்கும் ஒளிவெளக்கு…!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 13-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான படத்தை எடுத்துள்ள திரு. பாபு ராஜ், இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் ஆகியோருக்கு எங்கள் நன்றி!

    little boy

    மரக்கிளையில் குறும்பு கொப்பளிக்க அமர்ந்திருக்கும் இச்சிறுவனின் இதழ்களில், வெளிவரத் துடிக்கும் முறுவல் ஒன்று ஒளிந்திருக்கக் காண்கின்றேன். கணினி விளையாட்டுக்களே கதியென்றாகிவிட்ட இன்றைய நகரப் பிள்ளைகள் முற்றும் தொலைத்துவிட்ட இயற்கையோடு இயைந்த இனிய வாழ்க்கை இச்சிறுவனுக்காவது வாய்த்திருப்பதை எண்ணி நம் மனமும் குழந்தையாய்க் குதூகலிக்கின்றது.

    அன்னையைப்போல் தன் கிளைக்கரங்களால் இச்சிறுவனை அணைத்திருக்கும் இம்மரத்திற்குத் தாழ்த்துகிறேன் என் சிரம்!

    வல்லமை வாய்ந்த நம் கவிஞர்களுக்கு இப்படம் சிறந்ததோர் கற்பனைக்களம் அமைத்துத் தந்திருப்பதை அவர்களின் படைப்புக்கள் உறுதி செய்கின்றன.

    இனி, போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் சிறப்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ள கவிதை வரிகளை முதலில் பார்த்துவிடுவோம்.

    ***

    யானையாகவும், ஒட்டகமாகவும், பல்வேறு வாகனங்களாகவும், படுக்கும் மெத்தையாகவும் தனக்குத் திகழும் மரத்தைப் போற்றும் சிறுவனை நம் கண்முன் காட்சிப்படுத்தியுள்ள திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

    ஒய்யார ஒட்டகமும் நீ
    பறக்கும் குதிரையும் நீ தான்
    அடி சறுக்காத யானையும் நீ
    பஞ்சு மெத்தையும் நீ தான்..!

    ஓடும் பஸ்ஸும் நீ தான்
    நான் ஓட்டும் காரும் நீ தான்
    வேகமெடுக்கும் பைக்கும் நீ
    உன் முதுகிலேறி ஓட்டுவேன் நான்..!

    இங்கிருந்தே நாம் போய் வரலாம்
    டெல்லி மும்பாய் கொல்கத்தா
    சுற்றிப் பார்ப்போம் சந்தோஷமா

    வாழ்நாள்பூரா உன் நிழலில் தான்
    காத்திடுவேன் உனை உயிர் போல்தான்
    நாளை நான் கூட தாத்தாவாகலாம்
    நீயும் என் பேரனை இது போல் சுமக்கலாம்..!

    ***

    குறும்புகள் பல செய்து மரத்தின் காவல்காரனிடம் அகப்பட்டுக்கொண்டு விழிக்கும் சிறுவனின் நிலையைக் குறும்புடன் கூறும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

    சிந்தனைக்கு பள்ளிக்குச் செல்லாமல் 
    துள்ளி  விளையாடும் 
    கள்ளன் அவன்
    கோலிக் குண்டு ஆடும் 
    பாலன் அவன்
    கண்ணன் அவன் என்று 
    கவி பாடினான்
    களிப்புடன் பாரதி ! அவன் 
    திருவிளையாடல்
    பெரிய புராணம் !
    பள்ளிக்குப் போவாது  
    மரமேறல் !
    மாங்கனி திருடல் !
    இன்று
    அகப்பட்டுக் கொண்டான்
    சுட்டிப் பயல் !
    விழிப்பதைப் பார் !
    காவல் காரன் கீழே
    கம்புடன் !

    ***

    மரத்தை வைத்தே, பொருள்பொதிந்த வாழ்வியல் நீதியை இந்தச் சுட்டிப் பையனுக்கு உணர்த்தும் திரு. கனவு திறவோனின் வரிகள்…

    மரத்திற்குக் கிளைகள் பலவுண்டு
    ஆனால் தண்டு ஒன்றுதான்
    உயரப் போனதும் எதிலும் அமரலாம்
    ஆனால் உயரப் போக
    வழுக்கும் தண்டு
    வசப்படாமலும் போகலாம்!
    மரத்தைத் தாங்கமட்டும்
    விழுதுகள் அல்ல
    ஏற கைப்பிடியும் அது தான்
    என்றுணர்ந்ததால்
    நீ உயரத்தில்!

    கிளைகளுக்கிடையில்
    உன் இருக்கை
    தெம்பைத் தருகிறது
    […]
    மரக்
    குரங்கு விளையாட அல்ல
    உலகைப் பார்க்க

    ***

    ’மரங்கள் வளர்த்து வையம் காப்போம்!’ எனும் ஆக்கபூர்வமான கருத்தை வலியுறுத்தும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    உயர்ந்த மரத்தினில் ஏறிநின்றே
    உலகம் பார்க்கும் சின்னவனே,
    பயிராய் இதனை வளர்த்திட்ட
    பாட்டனை என்றும் மறவாதே,
    உயிராய் மரங்களைக் காக்காமல்
    வெட்டிச் சாய்ப்பதை விரும்பாதே,
    இயன்ற வரையில் மரம்வளர்ப்போம்
    இனிதாய் வையம் வளம்பெறவே…!

    ***

    ’பறவையாய் மாறினால் எல்லா மரங்களும் போதிதான்!’ எனும் புதிய சிந்தனையைப் பதியன் போடும் திரு. கவிஜியின் வரிகள்…

    பறவையான பிறகு 
    அமரும் மரங்களெல்லாம் 
    போதியாகின்றன….

    ***

    மாயக்கண்ணன்போல் லீலை செய்து, அம்மாவின் அடிக்குப் பயந்து மரத்தில் பதுங்கியிருக்கும் சிறுவனுக்கு நல்லுரை புகட்டும் திரு. சாயாசுந்தரத்தின் வரிகள்…

    பாட்டி கூறிய இரவுக் கதையில் 
    மாயக் கண்ணன் செய்த மயக்கும் லீலையை 
    காலை எழுந்தவுடன் நீயும் செய்ய 
    குச்சி வைத்து விரட்டும் அன்னை யசோதையிடம் 
    தப்பித்து மரம் ஏறி அமர்ந்தாயோ நந்தனே ….
    […]
    பொய்யற்றுச் சூது அற்று
    கள்ளம் அற்று கபடம் அற்று
    அன்பெனும் எல்லையில்லா
    வானம் பார்க்க ஆளுக்கொன்றாய்
    சொருகி வைத்த இறகு விரித்து
    பறக்கலாம் சிறிதுக் காலம் கடந்த பின் …..
    […]
    மரம் விட்டு இறங்கி வந்து
    அம்மாவை அணைத்துக் கொள்ளேன்

    ***

    மரத்திலேறிய காரணத்தைச் சிறுவனிடம் நயமாக வினவி, ”அச்சத்தையும் ஆசையையும் விட்டொழி!” எனும் அறவுரையையும் அவனுக்களிக்கும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

    மாட்டிக் கொண்ட பட்டத்தை எடுக்க
    மரத்தின் மீதேறி அமர்ந்தாயோ
    போட்டியைக் காண்கின்ற ஆசையை கிரிக்கெட் 
    பொங்கிட வைத்து விட்டதோ
    கூட்டுக்குத் திரும்புகின்ற குருவிகள் கண்டு
    குதூகலம் அடைந்திட வந்தாயோ?
    காட்டுப்புலி உன்னைத் துரத்த பயத்தில்
    கலவரம் அடைந்து விட்டாயோ
    […]
    பாட்டினில்
    நான்சொல்லும் கருத்து இதுதான் 
    பயம்ஆசை இரண்டும் வேண்டாமே!

    ***

    கணினியில் கட்டுண்டு கிடக்காமல் கவின்மிகு மரக்கிளையில் அமர்ந்திருக்கும் சின்னவனின் மனத்தை அறிய வினாத்தொடுக்கும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    தொலைக்காட்சியும் கணினியும் கட்டுப்படுத்தாத
    அற்புதச்
    சிறுவனா நீ ? – வீட்டினுள் அடையாது
    கொளுத்தும்
    வெயிலுக்கு இதமாய்குளுமையான
    வேப்ப
    மரத்தில் தஞ்சம் புகுந்து விட்டாயோ ?
    […]
    மரத்தில்
    எத்தனை பறவைக் கூடுகள்
    ஒவ்வோர்
    கூட்டிலும் எத்தனை முட்டைகள்
    தெளிவாய்
    கணக்கெடுத்து வைத்துக் கொண்டாயோ ?
    நாளை
    நெல்லெடுத்து வைக்க வசதியாய் இருக்குமே !
    […]
    பத்திரமாக பார்த்துக் கொள்!- இயற்கை
    உனது
    சொத்து !

    ***

    ”குடும்ப வறுமைக்கு உன்னைப் பலிகொடுத்துக் குழந்தைத் தொழிலாளி ஆக்கமாட்டேன்! வறுமையை வென்று வாழ்வை வசமாக்குவோம்!” என வீரவுரை பகரும் மறத்தாயை மாண்புறக் காட்டும் திரு. கொ. வை. அரங்கநாதனின் வரிகள்…

    பொல்லாத வறுமையை காட்டி
    உன்னைப் பள்ளிக்கு அனுப்பாமல்
    […]
    மேலத் தெரு ஓட்டலுக்கு
    உழைக்கச் சொல்லி அனுப்பி
    அதில் உயிர் வாழ்வேன்
    என  நினைத்துத்தான்
    மரமேறிச் சென்று என்
    மனத்தை வதைக்கிறாயா?

    நீவீத் தலைவாரி 
    நெற்றியில் முத்தமிட்டு 
    பாடசாலை செல் பைந்தமிழே
    என நாளும் வழியனுப்பும்
    பாவேந்தன் பேத்தியடா நான்!
    […]
    வறுமையை
    வென்று
    வாழ்வை வசமாக்குவோம்
    வளர்ந்த மரமாகி
    வறியவர்க்கு நிழல் கொடுப்போம்

    ***

    மரக்கிளையில் தங்கும் பறவைகளும்கூட வாழ்க்கைப்பாடம் நடத்துவதை நயமுடன் நவிலும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    …ஏறிய மரக்கிளையில்  வந்தமர்ந்த 
    காக்கைகள் எனக்கு ஒற்றுமை பற்றியும் 
    குயில்கள் சங்கீதத்தையும் 
    கிளிகள் பேச்சின் இனிமையையும் 
    மயில்கள் நடனத்தின் சூட்சுமத்தையும் 
    சொல்லித்தந்த வேளை 
    வந்தமர்ந்த கழுகுமட்டும் 
    சமூகத்தில் நெளியும் 
    மூட நம்பிக்கை பாம்பை வட்டமிடும்
    பார்வை சொல்லிக் கொடுத்ததால் 
    முயற்சிக்கிறேன்.

    ***

    விகாசத்தோடு மரக்கிளைச் சிம்மாசனம் ஏறி நிகாசமற்ற ஆனந்தத்தோடு வீற்றிருக்கும் மாவீரனை நமக்கு அறிமுகப்படுத்தும் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகத்தின் வரிகள்…

    நிகாசம் இல்லாத ஆனந்தம்!
    மகாராசா போலவோ ஒரு
    மகாவீரன் போல இங்கு
    விகாசமான ஒரு சிம்மாசனம்!
    ஆகா! சொன்னீர்களே எல்லோரும்
    ஏறாதே முடியாது என்று!
    ஏகாடம் பண்ணாதீர்கள் யாரையும்!
    சகாயம் எமக்குத் துணிவொன்றே!

    (ஏகாடம் – ஏளனம்; விகாசம் – மலர்ச்சி;  நிகாசம் – உவமை)

     ***

    படிப்பில் கோட்டைவிட்டு, அன்னையின் அடிக்கு பயந்து மரமேறிய பாலனுக்குப் புத்திமதி சொல்லும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    …படிக்கும்போது
    இல்லாத பயம்
    அடிக்குப் பயந்து
    மரமேறி அமருகிறாய்

    போனால் போகட்டும்
    வெற்றியும் தோல்வியும்
    வீரனுக்கழகு
    ஒன்பதாவதுதானே
    அடுத்தமுறையாவது
    அயராமல் படித்து
    உயரப்பார்…

    ***

    ’மரம் இயற்கை தந்த வரமல்லவா!’ என்று வியந்துபோற்றும் சிறுவனின் நல்லுள்ளத்தைப் புகலும் திரு. ரோஷான் . ஜிப்ரியின் வரிகள்…

    நான் வேறு
    ஆயினும்….,
    எப்படி பரப்பினாய்
    எனக்கான கிளைகளை?
    எதிர்பார்ப்பு அறியா
    இயற்கை சேவகன்
    நீ என்றால் அதற்கு
    நிகருண்டா
    உன்னை மரம் என்பவனோடு நான்
    மல்லுக்கு நிற்பேன்
    உன்னை வரம் என்று போற்றி
    உயிர்வரை காப்பேன்.

    ***

    உச்சிக்கிளையில் ஒய்யாரமாய் அமர்ந்து உலகை இரசிக்கும் சிறுவனுக்குள் எழும் இமயம்தொட்ட இறுமாப்பை இயம்பும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    இமயம் தொட்ட இறுமாப்பு
    இதயம் நிரப்பி நிற்கிறது!
    உச்சிக் கிளையின் உயரத்தில்
    அச்சமின்றி நானும் வீற்றிருக்க
    பச்சை இலைகளின் குழுமை
    இச்சையுடன் என்னுள் பரவுகிறது!
    [..]
    பழக்கமாகிப் போன பழைய உலகத்தின் இயக்கத்தில்
    வேறு ஒரு பரிமாணம் தெரிகின்றதே என்னுள்
    உறுதியுடன் உச்சியில் அமர்ந்திருக்கும் போழ்து
    தன்னம்பிக்கை என்னுள் சுடர்கிறதே பிரகாசமாய்
    என் வதனம் மலர்க்கிறதே இறுமாப்புப் பூக்களை
    உச்சிக் கிளையின் உயரம் உல்லாச அழகு
    மெச்சுகின்றதே என் விக்கிரமாதித்த விடாமுயற்சியை!

    ***

    மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ’இளையபாரதத்திடம்’ தொலைந்துபோன நம் தாய்த்திருநாட்டின் முகவரியை மீட்பாய்!” என அன்பு வேண்டுகோள் விடுக்கும் திரு. கோபாலகிருஷ்ணனின் வரிகள்…

    மாநகர பூங்கா மரத்தினிலே, வியப்பும் ,பயமும் கலந்த உணர்வு கலவை
    உன் கண்ணிலே கசிவதை உணரமுடிகிறது என்னால் .
    ஏதோ வழக்கத்திற்கு மாறாய் நிகழ்வுகள் அரங்கேருகிற
    உன் பார்வை விரிப்பில்
    நம் ஊரில் விறகிலே வெந்த பானை இங்கே
    மின்சாரத்திலே வேகுகிறதோ ?
    […]
    இந்த சமுதாயத்தை கண்டு வேதனைப்படவும் அதை களையவேண்டும் என
    கனா காண மட்டுமே எங்களுக்கு ஆண்டவன் சக்தியை கொடுத்திருக்கிறான்.
    ஆனால் உன்னில் வீரிய சிந்தையாலும் விறைப்பேறிய தசைத்திறனாலும்
    தொலைந்த நம் முகவரியை மீட்டெடுத்து மானுடம் எந்நாளிலும் மண்ணுலகில்
    மகிழ்வாய் வாழ என் கனவுகளை உன் கரங்களில் சமர்பிக்கிறேன் …..

    ***

    சிந்தனைக்கு நல்விருந்தாய்ச் ’சொல்விருந்து’ படைத்த கவிஞர்குழாத்திற்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    அதிக எண்ணிக்கையிலான கவிதைகளை (வழக்கம்போலவே) எழுதிக் குவித்திருக்கும் திரு. ஜெயபாரதன், திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர் இருவருக்கும் என் சிறப்பான (ஸ்பெஷல்) பாராட்டுக்கள்!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடையாளம் காணவேண்டிய தருணமிது!

    மானுடர்க்கு நிழல்தந்து, புசித்திடக் கனி தந்து, வெட்டினாலும் மரக்கட்டைகளாய்ப் பயன்தந்து உதவும் மரங்கள், மனிதன் மறந்துவிட்ட பொதுநலத்தை நாளும் நமக்கு நினைவுறுத்தும் இயற்கை தந்த வரங்களே! அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை ஊருக்கு உதவுகின்ற நயனுடையானைப் பயன்தரும் மரத்தோடு ஒப்பிட்டார்!

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்.
    (குறள்: 216)

    அவ்வகையில், தன் தந்தை அழியாமல் காத்துவைத்த மரத்திலமர்ந்து, அம்மரத்தைப்போலவே ”நானும் ஊருக்குப் பயன்படுவேன்! அத்தோடு நில்லாமல், மேலும் பல மரங்கள்நட்டு மன்னுயிர்களைக் காப்பேன்!” என்று இலட்சியச் சபதமேற்கும் உயர்ந்த உள்ளங்கொண்ட சிறுவனை நம்முன் உலவவிட்டிருக்கும் திரு. சுரேஜமீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    அக்கவிதை…

    …நல்மரம் உன்னை
    நானும் பார்த்தே
    நன்றியாய் வளர்கிறேன்
    நாளைய நிழலாய்
    நம்பிக்கை தரவே
    நன்னெறி யேகி
    நாளும் பெற்றவர்
    நயம்படக் காத்திட!

    மரமாய் இருக்க
    மனிதர்க்கு நிழலாய்
    மாபெரும் கூடாய்
    மனைதேடும் பறவைக்கு
    தென்றல் தவழ
    தேடிடும் கிளையாய்
    தினமும் விளையாட
    திண்ணையாய் எனக்கும்!

    இன்னமும் வியப்பே
    இதுகாறும் நீயிருக்க
    எதிர்ப்படும் வீதியில்
    எல்லாம் சாய்ந்தும்
    உனைமட்டும் விலக்கி
    உயிர் காத்தவர்
    எந்தை எனும்போது
    எண்ணிலடங்கா மகிழ்வே
    […]
    உன்னிடம்
    கற்று
    உளதெலாம் கொடுத்து
    ஓங்கும் புகழொடு
    ஒற்றுமை சிறந்து
    உலகம் போற்ற
    உயர்வோம் என்றும்
    உன்னால் பெருமை
    இந்நாள் அறிந்தேன்
    விளையாட்டாய்
    வந்தயென்
    விழிப்பார்வை திறந்தாய்
    வீதியொரு
    மரம்நட
    வீறுகொண் டெழுவோம்!
    இனிவரும் சமுதாயம்
    இன்பமாய் வாழ்ந்திட
    இன்றே உறுதிகொண்டு
    இனிதாய் வளர்ப்போம்!
    […]
    அழகிய
    வனமாய்
    ஆகட்டும் உலகெலாம்!

    ***

    அறிவியல் வளர்ச்சியால் விரைவாய் அழிந்துவரும் அழகிய இயற்கையை எண்ணி வருந்தியும், சித்தப்பா தந்த மஞ்சள் சட்டையோடு மரக்கிளையில் அமர்ந்திருந்த தன் இளமைக்காலத்தை ஏக்கத்தோடு மனவெளியில் ஓடவிட்டும் பார்க்கின்ற ஓர் இனிய கவிதையைக் கண்டேன்; அதன் வரிகளில் இழையோடும் மெல்லிய சோகம் நெஞ்சைக் கனக்கச் செய்தது.

    அக்கவிதை…

    ஊரின் நுழைவில்
    கண்மாய் தூர்த்துக் கிடக்கிறது
    சாவடித் திருப்பம் கடந்ததும் வரும்
    மாதையன் தாத்தாவின் தோட்டம்
    கற்கள் நடப்பட்டு விற்பனைக்கு
    மலர்வல்லி அம்மன்
    கான்கிரீட் கோவிலுக்குள் குடி புகுந்து
    நாட்கள் பலவாகி விட்டிருக்கலாம்
    […]
    சின்னத்
    தெரு முடிவில்
    ஓங்கி நிற்கும் அய்யனார்
    சோர்ந்து நிற்கிறார் வயதின் காரணமாய்
    வடமூலைக் குளக்கரை ஒட்டிய
    என் மறுவீடான அப்பச்சி மரத்தை
    அடி நிழலில் நின்று நிமிர்ந்து பார்க்கையில்
    சுடர் சித்தப்பா பரிசளித்த
    பொத்தான்களற்ற மஞ்சள் சட்டையணிந்து
    பால்யத்தைத் தேடிச் சோர்ந்த என்னையே
    உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன்
    பால்யத்தின் நான்.

    இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஹரீஷைப் பாராட்டுக்குரியவராய்த் தேர்ந்தெடுக்கிறேன்.

    ***

    கவிஞர்களே! போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுவரும் உங்கள் ஊக்கமும், உற்சாகமும் என்னை எல்லையிலா மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ‘தேர்காலில் நின்றன்று திவ்யகீதை சொன்னவன்,
    CHARCOALலில் சிக்கினான் சித்திரமாய், -நேர்காணல்,
    தந்தவனே கேசவுன் தங்கக் கரங்களுக்கு,
    வந்தன மோடுநன்றி வாழ்த்து”….கிரேசி மோகன்….

    Share
  • நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்

    Neutrinos from Sun

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA

    https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA

    https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM

    http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s

    http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp

    ++++++++++++++

    அற்பச் சிறு நியூட்டிரினோ அகிலத்தின்
    சிற்பச் செங்கல் !
    அண்டத்தைத் துளைத்திடும்
    நுண்ணணு !
    அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த
    கோடான கோடி
    அக்கினிப் பூக்கள் !
    சுயவொளிப் பரிதிகளின்
    வயிற்றில் உண்டானவை !
    வலை போட்டுப் பிடிக்க முடியாத
    வையகக் குஞ்சுகள் !
    ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் !
    கண்ணுக்கும் தெரியா !
    கருவிக்கும் புரியா !
    எதனுடனும் இணையா !
    முன்னூறுக்கு மேற்பட்ட
    நுண்ணணுக்கள்
    விண்வெளியில் விளையாடும் !
    பிரபஞ்சத்தின்
    சீரமைப்பு முரணுக்குக்
    காரணம்
    நியூட்டிரி னோவா ?
    பிரபஞ்ச மூலச் சிசுவைப் படம்
    பிடிக்கப் போகிறார் !

    ++++++++++++++++++

    Icecube Project

    பனிப்பேழைத் திட்டத்தில் தூர விண்வெளி அரங்குகளிலிருந்து வரக் கூடிய 35 நியூட்டிரினோக்களைப் பதிவு செய்தோம்.  அவை மிக்க உயர் சக்தி உடையவை.  ஏனெனில் அவை வெகுதூரப் பயணத்தில் இயங்கி எவற்றுடனும் ஈடுபடாமல், பிரபஞ்சத் தகவல் கொண்டு வருபவை. மேலும் பூமியில் தோன்றும் நியூட்டிரினோக்களின் பண்பாடுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

    ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம், நீல்ஸ் போர்க் ஆய்வுக்கூடம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்]

    வட துருவச் சூழ்வெளியில் தோன்றிய நியூட்டிரினோக்கள் பொதுவாக மிவான் நியூட்டிரினோக்கள் [Muon Neutrinos].  அவை பூமி விட்டத்தைக் [13,000 கி.மீ / 8000 மைல்] கடந்து தென் துருவத்தை நெருங்கும் போது, குவாண்டம் துடிப்புகளில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ [Tau] நியூட்டிரினோக்களாக மாறிப் பனிப்பேழைக் கருவியால் பதிவு செய்யப் படுகின்றன.  இவ்விதம் ஆழ்ந்து உளவு செய்ய பனிப்பேழைத் திட்டம் எங்களுக்கு உதவி செய்கிறது.

    ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம்]

    தென் துருவத்தில் நியூட்டிரினோ பற்றிய பனிப்பேழை ஆராய்ச்சிகள்

    2010 டிசம்பரில் தயாரிக்கப்பட்ட தென்துருவப் பனிப்பேழை [Icecube] நியூட்டிரினோ ஆராய்ச்சித் திட்டம் 12 உலக நாடுகளின் 44 ஆய்வுக் கூடங்கள் பங்கெடுத்துப் பிரபஞ்ச மர்மமான நியூட்டிரினோக்களைப் பற்றி ஆழ்ந்து உளவு செய்ய உருவாக்கப் பட்டது.

    Fig 3 Catching High Energy Cosmic Rays

    பனிப்பேழை மாபெரும் ஒரு துகள் கண்டுபிடிப்புச் சாதனம்.  அதில் 86 வடங்கள், ஒவ்வொன்றிலும் 60 டிஜிட்டல் ஒளிப்பதிவு அமைப்பைக் [86 cables each with 60 Digital Optical Modules ] கொண்டுள்ளன. பனிப்பேழை அமைப்பு பூமிக்குக் கீழே 1.5 கி.மீ. ஆரம்பித்து 2.5 கி.மீ. வரை முடிவது. ஒவ்வொரு வடமும் வெந்நீரில் தோண்டிய துளையில் 2.5 கி.மீ. தூரம் நுழைக்கப் பட்டுள்ளது.  நியூட்டிரினோ பனித்திரட்சியில் மிக அபூர்வமாக பிண்டத்துடன் பின்னி இயங்குகிறது.  அப்படி மோதி இயங்கும் போது கதிர் வீசும் மின்னேற்றத் துகள்  [Charged Particle] ஒன்று தோன்றுகிறது. அதைத் தான் டிஜிட்டல் ஒளிப்பதிவுக் கருவி கண்டுபிடிக்கிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக [2011 – 2013] 5200 ஈடுபாடுகள் பதிவாகியுள்ளன. மூன்று வித நியூட்டிரினோக்கள்  இருப்பதாக நம்பப் படுகின்றன. அவை : எலெக்டிரான், மூவான், டௌ [Electron, Muon, Tau Neutrinos].  அவற்றைப் பற்றி பனிப்பேழைத் திட்ட துணைப் பேராசிரியர் ஜேஸன் கோசினென் கூறுகிறார்: “நாங்கள் கண்டுபிடித்து முடிவு செய்தது,  நியூட்டிரினோக்கள் [மூவான்கள்] உயர் சக்தி நிலையில் குவாண்டம் துடிப்பியக்கத்தில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ நியூட்டிரின்களாக மாறுகின்றன. பிரபஞ்சத் தூதாகக் [Messengers from the Universe] கருதப்படும் நியூட்டிரினோ பற்றி விஞ்ஞானிகள் இன்னும் பூரணமாக அறியவில்லை.  இந்த பனிப் பேழை ஆராய்ச்சிகள் அவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள மட்டும் உதவுகின்றன.”

    ajay

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sZPLcv-ASwc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6P9fEhuyx50

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gssq7Kngyow

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gX7jxnDMSHw

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o-y4m6c2h8o

    “அதனுடைய திணிவு நிறை எலெக்டிரானை விட மிகச் சிறியது ! ஃபெர்மி அந்த நுண்ணணு வுக்கு “நியூட்டிரினோ” என்று பெயரிட்டார் ! அவற்றின் சுழற்சி 1/2 (Spin 1/2) என்று இருக்கலாம் என்பது எனது யூகம். அவை மற்ற பிண்டத் துகளுடனும், ஒளித்திரளுடனும் இணைப்பாடு இல்லை. (No Interactions with Matter or Photons)”

    நோபெல் பரிசு விஞ்ஞானி : உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) (1930)

    “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல்வாதிகள் (Cosmologists). நியூட்டிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”

    ஜான் லேனர்டு விஞ்ஞானி ஹவாயி பல்ககைக் கழகம்

    Ice-cube observatory -2

    புதிரான கருமைச் சக்தியின் மர்மான நுண்ணணுக்கள் !

    பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் திணிவுப் பகுதியான கருமைச் சக்தி (Dark Energy) மனிதக் கண்ணுக்குப் புலப்படாமலும் என்னவென்று விளக்க முடியாமலும் “அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது ! அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) ! புதிருக்குள் புதிரான நியூட்டிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் ! அகிலவெளிப் புதிர்களை ஆழ்ந்து ஆராய விஞ்ஞானிகள் நுண்ணணு விரைவாக்கி கள் (Particle Accelerators), தொலைநோக்கிகள், துணைக்கோள்கள் ஆகியவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறார்.

    சில உயர்ச் சீரமைப்பு நுண்ணணுக்கள் (Super Symmetric Particles) மிகப் பலவீனமாக உடனியங்கும் துகள்களின் பிரதானக் குடிகள் (Prime Candidates for the very weakly interacting Particles) என்று ஜப்பானிய விஞ்ஞானி முராயமா கருதுகிறார். விரைவாக்கி கள் நுண்ணணுக்கள் எவ்விதம் தம்முள் உடனியங்குகின்றன என்று உளவவும், அவற்றின் திணிவு நிறையை (Mass) அளக்கவும் உதவுகின்றன. அம்முறையில் “நியூடிரினோ பௌதிகம்” (Neutrino Particle Physics) ஓர் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது ! 1995 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் தேசீய ஆய்வகத்தில் நியூட்டிரினோ வின் திணிவு நிறையை 5 eV (5 Electron Volt) (Mass of Neutrino is 1/100,000 of the Mass of Electron) என்று கண்டுபிடித்தது விண்வெளித் தேடலில் முக்கியத்துவம் பெறுகிறது !

    பிரபஞ்சப் பெரு வெடிப்பிலிருந்து கோடானகோடி நியூட்டிரினோ நுண்ணணுக்கள் சிதறி விண்வெளி எங்கும் பில்லியன் ஆண்டுகளாய்ப் பொழிந்து வந்துள்ளன. சூரியனைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் நியூட்டிரினோக்களை உற்பத்தி செய்கின்றன. வெடித்துச் சிதையும் சூப்பர்நோவாக்கள் நியூட்டிரினோக்களை வெளியாக்கி வருகின்றன ! எலெக்டிரானுக்கும் சிறிதான நியூட்டிரினோவுக்கு முதலில் நிறையில்லை என்றுதான் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். மேலும் நியூட்டிரினோ எலெக்டிரான் நியூடிரினோ, மியூவான் நியூட்டிரினோ, டௌ நியூட்டிரினோ (Electron Neutrino, Muon Neutrino & Tau Neutrino) என்று மூன்று வகையில் மிகச் சிறிதாக இருப்பதாலும், அவற்றைப் பிடித்துப் பரிமாணம், பண்பாடுகளைக் காண முடியாது. நியூட்டிரினோவின் நிறையை விரைவாக்கிகளில் கணிக்க முடியாது. கனடாவில் பூமிக்கடியில் பல மைல் ஆழத்தில் இருக்கும் ஸட்பரி சுரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள “ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககத்தில்” (Sudbury Neutrino Observatory SNO) பரிதியின் நியூட்டிரினோக் களைக் கனநீரில் பிடித்துப் பண்பாடுகளைக் காண முடிகிறது. அதுபோல் ஜப்பானில் நியூட்டிரினோவை நோக்க “உயர் காமியோகந்தே” (Super_Kamiokande) என்னும் பிரமாண்டமான விஞ்ஞானச் சாதனம் ஒன்று உள்ளது !

    நியூட்டிரினோவைக் கண்டுபிடித்த உலக விஞ்ஞானிகள் !

    13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சத்தில் நியூட்டிரினோப் பொழிவுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பிரபஞ்சம் கனலில் கொதித்து விரிந்து, விரிந்து மெதுவாகக் குளிர்ந்து அகிலப் பின்புலக் கதிர்வீச்சு (Cosmic Background Radiation) உஷ்ணம் தற்போது 1.9 டிகிரி கெல்வின் (-217 டிகிரி செல்ஸியஸ்) ஆக உள்ளது. ஆனால் நியூடிரினோவின் இருப்பு முதன் முதலில் 1930 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய விஞ்ஞானி உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) [1900-1958] என்பரால் அறிமுகமானது. அணுக்கருப் பீட்டாத் தேய்வில் சக்தியின் அழிவின்மைக் கோட்பாட்டை விளக்க வரும் போது புதுத் துகள் ஒன்றின் நிழல்தடம் அவருக்குத் தெரிந்தது. அதன் நிறை எலெக்டிரான் நிறையை விடக் குறைவானது ! அதற்கு எந்த மின்னேற்றமும் இல்லை (No Electrical Charge) ! ஏறக்குறைய புலப்படாத நுண்துகள் (Almost Invisible Particle) ! மற்ற துகள்களுடன் உடன்சேர்ப்பில்லை (No Interaction with Other Particles).

    இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) (1901-1954) அந்தத் துகளுக்கு “நியூட்டிரினோ” (Little Neutral One) என்று பெயரிட்டார். ஆனால் 1956 இல் ஃபிரெடிரிக் ரையின்ஸ் & கிளைடு கோவன் (Fred Reines & Clyde Cowan) இருவரும் முதன்முதலில் அணு உலையில் நியூட்டிரினோ உடனியக்கங்களை நிகழ்த்திக் காட்டினர். நியூடிரினோவின் நிறை எலெக்டிரான் நிறையை விடச் சிறியது என்று 1933 இல் எடுத்துக் காட்டியவர் எஃப். பெர்ரின் (F. Perrin). 1934 இல் ஹான்ஸ் பெத்தே & ரூடால்ஃப் பையர்ஸ் (Hans Bethe & Rudolf Peiers) இருவரும் நியூட்டிரினோவின் “குறுக்குப் பரப்பு” (Cross Section means Probability of Interaction) எலெக்டிரானின் குறுக்குப் பரப்பை விட மில்லியன் மடங்கு சிறியது என்று நிரூபித்தனர்.

    Fig 1B Neutrino Production

    அகிலக் கதிர்கள், சூரியன் போன்ற சுயவொளி விண்மீன்கள், அணு உலைகள், பூமிக்குள் நிகழும் கதிரியக்கத் தேய்வுகள் (Cosmic Rays, Sun Like Stars & Nuclear Reactors, Radioactive Decay within the Earth) ஆகிய நான்கு முறைகளையும் சேர்த்துப் பல்வேறு முறைகளில் மூன்றுவித நியூட்டிரினோக்களும் உண்டாக்கப் படுகின்றன ! வலுவில்லாத நுண்ணணு நியூட்டிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது ! பரிதியிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூட்டிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன ! எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூட்டிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை ! சூரியன், சந்திரன், பூமி அனைத்தையும் ஊடுருவிச் செல்பவை ! சூரியன் மட்டும் ஒவ்வொரு வினாடியும் 200 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் நியூட்டிரினோக் களை உற்பத்தி செய்கிறது ! வெடித்துச் சிதையும் ஒரு சூப்பர்நோவா சூரியனை விட 1000 மடங்கு மிகையான நியூட்டிரினோக்களை வெளியாக்கும் ! சுமார் 65 பில்லியன் நியூட்டிரினோக்கள் பரிதியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் 1 சதுர மீடர் பூமியின் சதுரத்தில் பாய்ந்து விழுகின்றன !

    கனடாவின் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNOLAB)

    அமெரிக்காவின் புருக்ஹேவன் தேசீய ஆய்வகத்தின் கூட்டுறவுடன் அண்டாரியோ, கனடாவில் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNO) 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1999 அக்டோபர் முதல் இயங்கத் துவங்கியது. அந்த ஆய்வகம் 6800 அடி ஆழத்தில் குடையப்பட்ட ஒரு சுரங்கத்தில் (Sudbury, Ontario Creighton Mine) அமைக்கப் பட்டுள்ளது. உளவும் பிளாஸ்டிக் கலத்தில் சுமார் 1000 டன் பூரணத் தூயக் கனநீர் (1000 Ton Ultra Pure Heavywater in Acrylic Plastic Container) கொண்டது. அந்த பூதக் கலமானது 7000 டன் தூய சாதா நீர் சுற்றியுள்ள கவசப் பானையில் வைக்கப் பட்டுள்ளது. அதில் பயன்படும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1000 டன் கனநீரைக் கனடா வாடகைக்குக் கொடுத்துள்ளது. அந்த சாதா நீர்ப் பானையில் 9500 அடுக்குப் படம் நோக்குக் கருவிகள் மூலம் (Photomultiplier Tubes PMT) நியூட்டிரினோக்கள் கனநீரில் உண்டாக்கும் நீல நிறச் “செராங்கோவ் கதிர்வீச்சைப்” (Blue Glow – Cerenkov Radiation) படம் எடுக்கலாம்.

    அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கருமைப் பிண்டத்துக்கு மூலமாகுமா ?

    பரிதியைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் அணுப்பிணைவு சக்தியில் கனல் வீசினாலும் நியூட்டிரினோ நுண்ணணு எவ்விதம் வெளியாகிறது என்பது அறியப்படாமல் பிரபஞ்சப் புதிராகவே இருந்து வருகிறது ! வானியல் விஞ்ஞானிகள் கண்ணுக்குப் புலப்படும் ஒளிமயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் இன்னும் ஏராளமான பிண்டம் (Matter) இருப்பதாகக் கணிக்கிறார்கள். ஏனெனில் காலாக்ஸி ஒளிமந்தைகளை ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிண்டங்களின் கவர்ச்சி நகர்த்திச் செல்கிறது. அந்தப் பிண்டம் ஒளியைத் தடுத்து மறைப்ப தில்லை ! மேலும் அந்தப் பிண்டம் ஒளியை உமிழ்வதுமில்லை ! ஆகவேதான் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பிண்டம் “கருமைப் பிண்டம்” (Dark Energy) என்று அழைக்கப் படுகிறது !

    இப்போது விஞ்ஞானிகள் மனதில் எழும் வினாக்கள் இவைதான் ! இதுவரை அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கணிக்கப் பட்ட கருமைப் பிண்டத்துக்கு அடிப்படை ஆகுமா ? இன்னும் புலப்படாமல் இருக்கும் புதிய நியூட்டிரினோக்கள் பிரபஞ்ச வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டுள்ளனவா ? அந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் அளிப்பவர் : ஹவாயி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் லேனர்டு (John Learned) என்னும் வானியல் விஞ்ஞானி ! “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன் களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூட்டிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல் வாதிகள் (Cosmologists).” நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார் ஜான் லேனர்டு.

    பிரபஞ்சத்தில் பேரளவு பிண்டம் எவ்விதம் ஆதியில் உண்டானது ? நியூட்டிரினோக்களைத் தவிர்த்துக் கருமைப் பிண்டத்தில் இன்னும் புலப்படாமல் இருக்கும் நுண்ணணுக்கள் பங்கேற்றிருக்கலாம் ! பிண்டம் எப்படித் தோன்றியது என்று அவை விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடத்தைப் போதிக்கலாம் ! பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த போது பிண்டமும், எதிர்ப் பிண்டமும் (Matter & Antimatter like Electron & Positron) சமப் பரிமாணத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் ! ஆனால் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் சேரும் போது அவை இணைந்து அழிகின்றன ! அப்படிச் சம அளவில் படைக்கப் பட்டிருந்தால் அவை அழிந்து வெறும் கதிர்வீச்சு மட்டும் (Radiation Energy) பிரபஞ்சத்தில் நிரம்பி யிருக்கும் ! ஏராளமாக ஏன் பிரபஞ்சத்தில் பேரளவு ஈர்ப்பாற்றல் கொண்ட பிண்டம் கொட்டிக் கிடக்கிறது ?  ஒரு வேளை நியூட்டிரினோக் கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலச் “சீரமைப்பு முரணுக்குப்” (Early Asymmetry of the Universe) பங்கேற்றி யிருக்கலாம் ! அது மெய்யானால் நமது உயிர்வாழ்வுக்கும் நியூட்டிரினோக்களே மூல காரணமாக இருக்கும் !

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Do Neutrios Hold Secrets to the Cosmos ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 South Pole Neutrino Detector Could Yield Evidences of String Theory (www.physorg.com/)
    20 Where Cosmology & Particle Physics Meet By : Paul Preuss – Science@berkeley Lab (Jan 30, 2006)
    21 Fermi Lab – MINOS Experiment Sheds Light on Mystery of Neutrino Disappearance (Mar 30, 2006)
    22 The Birth of Neutrinos (1930-1934)

    23 Dept of Energy USA, Solar Neutrinos & Sudbury (Canada) Neutrino Observatory (SNO) By : Richard Halm, Minfang Yeh, Keith Rowley, Zheng Chang & Alexander Garnov (July 27, 2004)

    1.  http://www.ps.uci.edu/~superk/neutrino.html  [1998]
    2.  http://en.wikipedia.org/wiki/IceCube_Neutrino_Observatory  [February 21, 2015]
    3.  https://icecube.wisc.edu/masterclass  [March 18, 2015]
    4.  http://phys.org/news/2013-05-icecube-neutrino-observatory-evidence-extraterrestrial.html  [My 16, 2015]
    5.  http://en.wikipedia.org/wiki/Neutrino [May 19, 2015]
    6. http://en.wikipedia.org/wiki/Neutrino_detector  [May 20, 2015]
    7.  https://icecube.wisc.edu/outreach/neutrinos

    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  May 23, 2015

    Attachments area
    Preview YouTube video IceCube Neutrino Observatory – Animated Overview

    IceCube Neutrino Observatory – Animated Overview

    Preview YouTube video Neutrino, measuring the unexpected–IceCube

    Neutrino, measuring the unexpected–IceCube

    Preview YouTube video Flat Earth, Ice cube neutrino observatory looking DOWN NOT UP! into Antarctica monopole

    Flat Earth, Ice cube neutrino observatory looking DOWN NOT UP! into Antarctica monopole

    Preview YouTube video A Day at SNOLAB

    A Day at SNOLAB

    Preview YouTube video inside snolab

    inside snolab

    Preview YouTube video Public Lecture—Neutrinos Get Under Your Skin

    Public Lecture—Neutrinos Get Under Your Skin

    Preview YouTube video Segre Lecture: Understanding Neutrinos Using Deep Dark Scien

    Segre Lecture: Understanding Neutrinos Using Deep Dark Scien

    Preview YouTube video neutrino japan facility Super Kamiokande

    neutrino japan facility Super Kamiokande

    Share
  • காதலின் பொன்வீதியில் – 5

    மீனாட்சி பாலகணேஷ்.

    நடுநின்ற படைமதனார்!

    இறையருள் தான் ஒரு ஆணையும் பெண்ணையும் காதலில் கருத்தொருமித்துக் கூட்டி அதில் வரும் இடையூறுகளையும் நீக்கி, அவர்கள் இருவரையும் வாழ்வில் ஒன்றுபட்டு இன்புற அருளுகின்றது என்பது எழுதப்படாத ஒரு நியதி! மானிடக் காதலர் காதலில் இடையூறு வரும் போது தான் கடவுளைத் துணைக்கழைப்பர் ! தெய்வீகக் காதலரோ ஒருவரை ஒருவர் கண்ட தருணத்திலிருந்தே தெய்வ அருளே தம்மை ஒருவருக்கொருவர் காண்பித்தது எனக் கருதி, அவ்வருளே வரும் இடையூறுகளையும் களைந்து தம் இருவரையும் வாழ்க்கையில் கூட்டி வைக்கும் எனவும் உறுதியாக நம்புவர்.

    தம்பிரான் தோழரான சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் உண்டான காதல் இத்தகைமைத்தே! ஆயினும் அது நிறைவேற ஒவ்வொரு கட்டத்திலும் சிவபிரானின் அருளும் உதவியும் தேவைப்பட்டது என்பது வெளிப்படையாக நாம் கண்பது.

    இறைவனால் மீளா அடிமையாக்கிக் கொள்ளப்பட்ட சுந்தரர் அவன் ஆணைப்படி திருவாரூர் செல்கின்றார். ஆரூர்க் கோவிலை வந்தடைந்த சுந்தரரை அவ்வூர்ப் பெரியார்கள் வரவேற்று உபசரிக்கின்றனர்.

    அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்து வரும் பரவை நாச்சியாரும் தம் தோழிமார் புடைசூழப் புற்றிடம் கொண்ட பெருமானான தியாகேசரின் தரிசனத்திற்காகக் கோவிலுக்குள் வருகின்றார்.

    ‘இருவரும் சந்திக்க வேண்டும் என்னும் ஊழ்வினையின் வலிமையால், சுந்தரர் பரவையாரைக் காண்கிறார்,’ என்கின்றார் பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான்.

    புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
    சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடைய நம்பி
    நற்பெரும்பான்மை கூட்ட நகை பொதிந்திலங்கு செவ்வாய்
    விற்புரை நுதலின் வேல்கண் விளங்கிழை அவரைக் கண்டார்.

    மகிழ்ச்சியால் புன்முறுவலுடன் விளங்கும் சிவந்த வாயையும் வில் போன்ற நெற்றியின் கீழ் வேல் போன்ற கண்களையும் உடையவரான பரவையாரைச் சுந்தரர் காண்கின்றார். காதல் வெள்ளம் உடனே கரைபுரண்டு ஓடியது! இவர் யார் என அதிசயித்தார்.

    கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
    விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
    அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்.

    கற்பக மரத்தின் மலர்க்கொம்புகளுடன் கூடிய கொம்போ! காமன் தனது பெருவாழ்வாகக் கொண்ட பொருளோ! அழகு எனும் பொருள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த புண்ணியமோ? அற்புதமோ எனவெல்லாம் அதிசயித்து ஒன்றும் விளங்காமையால், இது எதற்கும் இணையாகாத சிவபிரான் திருவருள் தானோ, அறியேனே என எண்ணினார் சுந்தரர். சிவனருளோ என்றதன் காரணம், இவர் சிவனுக்கே ஆளானவர்; ‘மீளா அடிமை,’ என்ற சாசனம் எழுதிக் கொடுத்தவர்; அவன் அருள் வழியிலே சென்று வாழ்கின்றவர்; ஆகவே இவ்வாறு பரவையாரைக் கண்ட அற்புதம் நிகழ்ந்தது அச்சிவனருளால் தான் என உறுதியாக நம்பினார்.

    இங்கு ஒன்றை நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிலகாலம் முன்பே சுந்தரரை இறைவனார் அவருடைய திருமண நிகழ்வின் போது முதிய அந்தணராக வந்து அடிமைப் படுத்தித் தடுத்தாட் கொண்டார். பின்பு, அவரைத் திருவாரூருக்கு வரச் செய்து, அழகில் சிறந்து விளங்கும் பரவையாரை அவர்முன் தோன்றச் செய்து, காதல் வயப்படவும் வைத்தார். ஆகவே நாவலூர் வன்தொண்டருக்கு இவையெல்லாம் இறைவன் திருவருள் செயல்களாகவே தோன்றியதில் ஒரு வியப்புமில்லையே!

    மேலும் காதல் வயப்பட்டுச் சிந்திக்கிறார் சுந்தரர். “நான்முகன் இத்தகைய அழகு மிகுந்த ஓவியம் ஒன்றினைத் தான் எழுத இயலாமையினால் உண்டான தனது வருத்தம் நிறைவு பெறும்படி தனது உள்ளத்தில் படைத்த மணிவிளக்கோ இவர்?” அழகான சொல்லாட்சி நிறைந்த பாடல்.

    ஓவியநான் முகனெழுத ஒண்ணாமை உள்ளத்தால்
    மேவியதன் வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ
    மூவுலகின் பயனாகி முன்நின்றது எனநினைந்து
    நாவலர்கா வலர்நின்றார் நடுநின்றார் படைமதனார்.

    புற்றிடங் கொண்டாரை வணங்கிச் செல்பவரான சுந்தரர், ‘மூவுலகிலும் பெறக்கூடிய பயனே என்முன் இங்கு நின்றது எனத் தெளிந்து மேலே செல்லாது நின்றார். இங்ஙனம் நின்ற அவருக்கும் அவரால் காணப்பெற்ற எழில்மாது பரவையாருக்கும் இடையில் இன்னொருவரும் யாரும் காணாமல் நின்றாராம்!

    அட! யாரவர்?வேறொருவரும் இல்லை!

    யாராலும் காணவியலாத அனங்கனான மதனன் தான் தனது படைகளுடன்- மலரம்புகளுடனும், கரும்பு வில்லுடனும்- இருவருக்கும் இடையே நடுவில் புகுந்து அவரது தொழிலைச் செய்ய ஆயத்தமாக நின்றார் !! அவர் வைத்த குறி தப்புமா? அந்தச் சிவபிரானையும் தனது மலரம்பினால் வீழ்த்தியவர் தானே! தம்பிரான் தோழர் மட்டும் எம்மாத்திரம்?

    பரவையாரின் கெண்டைமீன் கண்கள் நாவலூரரை, சுந்தரரைக் கண்ணுற்றன. இதுவும் பண்டு இறைவன் விதித்த விதி கூட்டியதால் நிகழ்ந்தது. பெண்மைக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களையும் விஞ்சி, அவற்றை அழித்து சுந்தரர் மாட்டு ஒரு பெரு விருப்பம் மனதில் எழுந்தது!

    முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
    தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
    மின்னேர்செஞ் சடைஅண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
    என்னேஎன் மனந்திரித்த இவன்யாரோ எனநினைந்தார்.

    “என் மனத்தை இதுகாறும் யாரும் கவரவில்லை! என் முன் பெரொளிப் பிழம்பெனத் தோன்றும் இவர் முருகப் பெருமானோ? தனக்கு ஒப்பில்லாத மன்மதனோ? மின்னல் போலும் செஞ்சடை கொண்ட அண்ணலான சிவபெருமானின் மெய்யருள் பெற்று விளங்குபவனோ? இவ்வாறு எனது மனத்தைத் திரியச் செய்த இவன் யார்?” எனப் பரவையார் எண்ணுவார். எண்ணிய வண்ணமே பரமனைச் சேவிக்கக் கோவிலுட் புகுந்தார்.

    அவரைக் கண்டு சுந்தரர், “இவர் யார்?” என் அருகிலிருந்தோரிடம் வினவ, “தேவர்களும் அணுகுதற்கு அரியவரான பரவை எனும் பெயர் கொண்ட மங்கை நல்லாள் இவர்,” எனும் மொழி கேட்டார்; பரவையாரிட ம் கண்டதும் கொண்ட காதலினால் வருந்திய சுந்தரர், “பரமனார் பரவையைத் தருவார்,” என்றபடி அரவின் ஆரம் புனைந்த சிவபிரானின் அடிபணிந்து இருந்தார். இறைவன் தன் காதலியைக் கூட்டி வைப்பார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தான் அவரை வழிநடத்திச் சென்றது.

    இறைவன் திருவருளே இம்மங்கையைக் காண்பித்தது ஆகையால் அத்திருவருள் எங்கே சென்றது எனக் கொஞ்ச நேரம் பரவை என்ற ஈசன் திருவருளினைத் தேடிக் களைத்தார் சுந்தரர். பின்பு தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கிருந்தார்.

    இங்கு நாம் ‘இறையருள் இருவரையும் சுலபமாகக் கூட்டி வைத்து விடும் அல்லவோ’ என்று எண்ணலாம்; ஆயினும் மானிடராய்ப் பிறந்தோர், தேவரே ஆனாலும், மானிட வாழ்வின் நியதிகளுக்குக் கட்டுப் பட்டவர் ஆகின்றனர் அல்லவா? ஆகவே, இங்கு சுந்தரரும், பரவையாரும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்ட போதும், நாம் இதுவரை பார்த்த மற்றக் காதலரைப் போலவே, ஒருவரையொருவர் யாரென்று அறியாத நிலை; எங்ஙனம் சந்திப்பது என்ற குழப்பம். இவர்களுடைய துயரை நீட்டிப்பதற்கெனவே, மாலைப்பொழுது வந்து இரவென நீண்டு வளர்கின்றதாம்.

    வாவி புள்ளொலி மாறிய மாலையில்
    நாவ லூரரும் நங்கை பரவையாம்
    பாவை தந்த படர்பெருங் காதலும்
    ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.

    இதனை வெகு அருமையாகச் சுட்டுகிறார் சேக்கிழார் பெருமான். சுந்தரர் பரவையாரின் காதல் நயத்தை ரசிக்கப் புகுந்த நாம் அக்காதலைப் பெருமைப்படுத்தும் புலவர் பெருமானின் கவிதை நயத்தினையும் அதன் உட்கருத்தையும் தான் சிறிது ரசிப்போமே!

    நீர் நிலைகளில் பகற்பொழுதினைக் கழித்த பறவைகள் மாலையில் தம் இருப்பிடங்களை அடைந்தன. நாவலூரர் ஆகிய சுந்தரர் பரவை எனும் பாவை தனக்குத் தந்த காதலினால் எழும் துன்பமும் அதன் பொருட்டுத் தன் உயிரைப் பற்றிச் சூழ்ந்து கொண்ட தனிமையையும் உடையவரானார் என்கிறார்.

    ஆவி சூழ்ந்த தனிமை என்பது மிக அருமையான ஒரு சொற் பிரயோகம். ‘என் ஆவி நல்குவர் ஆரூரை ஆள்பவர்’ என்று திடங்கொண்டுள்ளார் சுந்தரர். அதாவது ‘திருவாரூர் இறைவர் எனக்கு எனது உயிர் (ஆவி) போன்றவராகிய பரவையாரைத் தந்தருள்வார்,’ என்கிறார். இங்கு அவருக்கு உயிர் போன்ற பரவையார் அருகில் இல்லை; ஆனால் அப்பரவையார் தந்த காதலும் அதனால் வரும் துன்பம் நிறைந்த தனிமையும் மட்டுமே இருந்ததாம். ஆவியின்றி அது சூழ்ந்த தனிமை மட்டுமே இருந்ததால் இதனை ‘ஆவி சூழ்ந்த தனிமை’ எனக் குறிப்பிட்டார்.

    பிரிந்து இருக்கும் காதலர் படும் துயரங்களை சுந்தரரும் அனுபவிக்கிறார்.

    “எம் இறைவனின் நெற்றிக் கண்ணால் எரியுண்ட காமன் வெளிப்பட்டு என்முன் வந்து என்மேல் அம்பெய்வதும் அவ்விறைவனின் திருவுள்ளம் தானோ?” எனக் கூறி வருந்துவார்.

    தண்மதியிடம் கேட்கிறார்: “என் துயரைக் கண்டாய்; உன் இயல்பிலேயே நின்று தண்மையான கதிர்களைப் பொழியாமல் அதற்கு மாறாக வெம்மை மிகுந்த கதிர்களை வீசுகிறாயே! உன்னையா எம்மிறைவர் அருளுடன் எடுத்துத் தம் சடைமுடி மேல் அணிந்து கொண்டார்? நீ அவன் போன்றில்லையே?” என்பார்.

    “அலைகளை எடுத்தெறியும் திரைகடலே! எல்லாத் தேவர்களையும் அச்சுறுத்திய கொடிய நஞ்சினை நீ எம் தலைவனான இறைவனையே உண்ணுமாறு செய்து உன் அலைக்கரங்களால் அவரிடம் கொடுத்தாய்! உனது அக்கொடுமைக்கு முன் நான் எம்மாத்திரம்?” என்றும் புலம்புவார்.

    “இனிய பொதியமலைத் தென்றலே! நீ எங்கள் பிரானுடைய மலையில் அல்லவோ தோன்றினாய்? நீ வந்த வழியோ நீர் நிலைகள் நிறைந்த சோழ நாடு அன்றோ? பின்பு ஏன் என்மீது தீக்காற்றாக வீசுகிறாய்?” எனவும் தவிப்பார்.

    இவர் இவ்வாறு தவிக்க, பரவையாரும் இறைவனை வணங்கி அவ்வணக்கத்தின் பயனாக நல்ல கணவனைப் பெறும் குலமகள் போன்று, தம்மிடம் புதியதாகக் குடிகொண்ட காதலுடன் சென்று தனது மாளிகையினை அடைந்தார். சுந்தரரைப் பற்றியே எண்ணியிருந்தவர், தோழியரிடம், “இறைவனின் ஆலயத்தில் நம் எதிரே வந்தவர் யார்?” என வினவினார். அவர்கள் அவர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தம்பிரான் தோழரான ஆளுடை நம்பி எனக்கூறக் கேட்டார். காதலினால் தமது நிறையும் நாணும் ஒருசேர நீங்கிட, உயிரை மட்டும் தாங்கியவராகி, ஆற்றாமையால் துடித்தார்.

    என்றவுரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம்
    வன்றொண்டர் பால்வைத்த மனக்காதல் அளவின்றி வளர்ந்து பொங்க
    நின்றநிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்கஉயிர் ஒன்றுந் தாங்கி..’

    மெல்லிய பூம்படுக்கையில் வீழ்ந்து காதல் வருத்தத்தால் தவித்தார். பலவாறு புலம்பியும் வருந்தினார்.

    “திருவாரூரில் உறையும் ஈசரே! உம்மையன்றி என் துயரை யாரறிவார்? கங்கையும், நிலவும், புள்ளிகளையுடைய பாம்பும் ஊர்வதற்கு இடமாகிய சடையை உடையவரே! காளை மீது எழுந்தருள்பவரே! உம்மீது அன்பில்லாதவர் (பக்தி இல்லாதவர்) போல் நான் இத்துன்பத்தை அடையலாகுமோ?” எனவும் கேட்டார்.

    இவர்களுடைய பழைய கதையை நாம் சிறிது அறிந்து கொள்ள வேண்டும்.

    கயிலயங்கிரியில் தனக்கும் உமையம்மைக்கும் தொண்டு செய்த ஆலால சுந்தரரையும், கமலினியையும் அந்த இறைவனே திருவுள்ளம் கொண்டு மண்ணுலகில் மானிடராய்ப் பிறக்கச் செய்தார். அவர்கள் கயிலையில் ஒரேயொரு கணம் ஒருவரையொருவர் விருப்புடன் நோக்கியதால், புவியில் பிறந்து, காதலின்பத்தை உணர்ந்து, நல் வாழ்வும் வாழ்ந்து வருவீர்கள் என அருளினார்.

    ஒருவரை ஒருவர் கண்டு விரும்பியதும் கடிமணம் புரிந்து கொள்வதல்ல காதல். காதலின் சுவைகளான, பிரிவாற்றாமை, உடல் மெலிதல், இரங்குதல், ஊடல், கூடல் முதலிய எல்லாவற்றையும் அனுபவித்தும், இடையூறுகள் வரும்போது, அவற்றை எதிர் கொண்டு, தமது புத்தி சாதுரியத்தினாலும், இறையருளினாலும், கொண்ட காதலில் உறுதியாக நின்று, விரும்பிய துணையை அடையும் போதும் தான் காதலின் அருமை பெருமைகளும் உயர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றது. இத்தகைய காதலின்பத்தினைத் தம்பிரான் தோழரும் அனுபவித்திடத் திருவுள்ளம் பற்றினார் இறைவன். அதனால் தானோ என்னவோ, முதலில் மானுடரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தி, சுந்தரரை அடிமை கொண்டு தம் தோழராக்கிக் கொண்டார்.

    பின்பு, பரவையாராகப் பிறந்திருந்த கமலினியாரைக் கண்டு காதல் கொள்ளவும் செய்தார். இவற்றை எல்லாம் நடத்தி விளையாடல் புரிந்தவர், பின்பு இவர்கள் இருவரும் திருமணம் என்ற பந்தத்தில் இணையவும் திருவுளம் கொண்டார். சுந்தரர் கனவில் தோன்றி, “பரவையை உனக்குத் தலைவியாய்த் தந்தோம்,” எனவும், பரவையார் கனவில்தோன்றி, “நம்பி ஆரூரனுக்கும் உனக்கும் விரைவில் திருமணம் நிகழ்விப்போம்,” என்றும் உறுதி கூறி, அவ்வண்ணமே, அடியார்கள் மூலம் திருமணத்தை நடத்தியும் வைத்தார்.

    திருவாரூர் ஈசன் தனது தோழராய் வந்து இவ்வாறெல்லாம் அருள் செய்த திறத்தை வியந்து பாடி மகிழ்ந்துள்ளார் சுந்தரர்.

    ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
    தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
    மாழைஒண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா
    ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.. என வாழ்த்துகின்றார்.

    இறையருள் ஒன்றே துணை செய்து காதலின் பொன்வீதியில் இருவரை இணைத்து வைக்கும் என்பது மெய்யே அன்றோ?

    ************
    படம் உதவி: www.vivekabharathi.in

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”த்வமேவ கண்ணன் திருவடிக் காப்பென்று
    த்வஆவே! மேவும் தருணத்தில் , -த்வமேவ
    மாதாவாய், த்வமேவ மாதவமாய், த்வமேவ
    கீதாவாய், கேசவ் கரம்’’….கிரேசி மோகன்….

    Share
  • ‘கறுப்பு ஜூன் 2014’ – தொகுப்பு

    அன்பின் நண்பருக்கு,

    arish1

    எனது ‘கறுப்பு ஜூன் 2014’ – இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் ! எனும் முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பை இத்துடன் மின்னூல் வடிவில் இணைத்திருக்கிறேன்.

    arish

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைகள் குறித்த இக் கட்டுரைகள், ஆய்வாளர்கள், மாணவர்கள், மனிதாபிமானிகள், வருங்கால சந்ததிகள் என அனைவருக்கும் உதவக் கூடும் என்ற வகையில், உங்கள் ஊடகத்தின் வழியாக இந் நூலை இலவசமாகத் தர விரும்புகிறேன். எனவே இதனை உங்கள் நண்பர்களோடும், வாசகர்களோடும் பகிர்ந்து கொள்வது பலருக்கும் இந் நூல் இலவசமாகக் கிடைக்க வழி செய்யும்.

    இதனை இலவசமாக வினியோகிக்கவும், அச்சிட்டு வெளியிடுபவர்கள் அதற்குரிய செலவினை ஈடுகட்டும் விதத்தில், தகுந்த விலையை நிர்ணயித்து விற்பனை செய்து கொள்ளவும் முழு உரிமை வழங்கப்படுகிறது.

    நூலை இங்கும் அழுத்தி பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்
    23.05.2015

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”ஏகயோகம் பாற்கடலில், ஏகதாகம் ஆவின்பால்,
    ஏகபோகம் ஆய்ச்சி அடுக்களை, -ஏகரே,
    கைக்கு விடிகாலை கேசவ் விரலைந்தாய்
    கைக்குள் கிருஷ்ணன் கலப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று

     

    கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
    எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
    எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
    உண்ணுந் துணைக்காக்கும் கூற்று

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
    எண்ணுந் துணையில் பிறர் ஆகி நிற்பரால்
    எண்ணி உயிர் கொள்வான் வேண்டி திரியினும்
    உண்ணும் துணை காக்கும் கூற்று

    பொருள் விளக்கம்:
    கண்ணின் அருமையான கருமணியைப் போன்று, நட்பாக அன்பு செலுத்தும் தன்னலம் நிரம்பியக் காரியவாதிகள், தனது காரியம் நிறைவேறியது என்று நினைக்கும் பொழுதே தமது போலியான நட்பை விலக்கிப் பிரிந்துவிடுவர். (இத்தகையோர் செயலானது) தக்க தருணத்தில் உயிரை நீக்கிவிடும் விருப்பத்துடன் பின்தொடர்ந்து, நீக்க வேண்டிய உரிய நேரம் வரும் வரை உயிரை விட்டுவைத்திருக்கும் காலனின் செயல் போன்றது.

    பழமொழி சொல்லும் பாடம்: தன்னலம் கருதி நட்புப் பாராட்டுவோரின் நட்பு உண்மையானதன்று, தங்கள் எண்ணம் நிறைவேறும் வரை நட்பு செலுத்துவதாக நடித்து, தாம் விரும்பிய பலன் கிடைத்ததும் விலகிவிடுவர்.

    தன்னலவாதிகளின் நட்பைப் பற்றி…

    சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு. (குறள்: 821)

    மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோலத் தோன்றினாலும் இரும்பைத் துண்டாக்க பயன்படும் தாங்கு பலகை போல இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும் என்று இத்தகையோர் நட்பை விளக்குகிறார் வள்ளுவர்.

    மேலும்,

    உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என். (குறள்: 812)

    தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? என்று வள்ளுவர் எழுப்பும் கேள்வியும் சிந்திக்கத்தக்கது. தன்னலவாதியாக இத்தகைய நட்புக் காட்டும் மக்களை விலைமகளிருடனும், கள்வருடனும் ஒப்பிடுகிறார்,

    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர். (குறள்: 813)
    என்ற குறளில் வள்ளுவர்.

    Share
  • அம்மு

    கவிஜி

    அம்மு…………………..

    இந்த பெயரை
    உச்சரிக்க நினைக்கும்
    போதே, குடை தாண்டி
    ஒரு மழை என்னை
    நனைக்கத் தொடங்குகிறது..

    அம்மு……….

    கடற்கரையில் மழையோடு நிற்பதென்பது அலையோடு துளியாவது. பட்டுத் தெறிக்கும் மழையெல்லாம், கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெள்ளிக் கம்பிகளின் குட்டித் தம்பியென, ஒரு சாயலில் தலை சாய்க்கும், வித்தை விதைக்கிறது. பூத்தூவும் மழையில் நானும், ஆர்ப்பரிக்கும் கடலும், அழகிய அலையும் ஒரு நேர்க்கோட்டு சிந்தனையில், சட சடவென, குளிருக்கு நடுங்கும் குடையுடன், விரியும் கண்களில் வெண்மேகத் துளிகளின் ரீங்காரத்தை கண்களால் நிரப்பிக் கொண்டு காணாமல் போய்க் கொண்டிருந்தோம்….. மேகத்தை பிழிவதை உணர முடியும் தருணம். எங்கு பார்க்கினும், எங்கெங்கு பார்க்கினும் மழையே…… மழைதான் வெளியின் அர்த்தமோ..!

    எனது அர்த்தங்கள் கண் நிரம்பிய குளங்களானது ….மழையோடு, அவளோடு இருந்த நாட்கள், கனவோடு விடிந்த பூக்கள்…. இரும்பு பூக்களை இனம் மாற்றும் வித்தை இந்த மழைக்கு தெரிந்திருக்கிறது.

    சர்ர்ரென …. ஒரு புது வீணை மீட்டலாய், முதல் துளியை விரட்டிக் கொண்டே விழும் துளிகளெல்லாம் புதுத் துளிகள்தான் என்பாள்,கண்கள் விரிந்த மீனலோட்சனி. மழை மீது அவளுக்கு காதல். அவள் மீது எனக்கு காதல். என் மீது மழைக்கு காதல். அது ஒரு தொடர் சிந்தனை. எத்தனை யோசித்தாலும் புத்தனைப் புரியாததைப் போல, மழையின் தொடர்பற்ற தொடர்புகள் நினைவுகளைக் கிளறுவதில் சல்லடை தாண்டிய சில் ஊசிகள்….

    ஒரு பெரு மழை நாளில்தான் இதே இடத்தில் தன் காதலைக் கூறினாள் மீனலோட்சனி… உள்ளங்கையில் பிடித்த மழைத் துளிகளை தீர்த்தம் போல முகத்தில் தெளித்தாள் . நொடிகளில்,முகம் திருப்பி திரும்புவதற்குள், மழையோடு நீ இருந்தால், மனமெல்லாம் சுகமே என்றாள். குடை சாய்த்து, அவளைக் காணுகையில் மழைப் பெண்ணாய் கண்கள் விரிய நின்றாள். ஏதோ, இந்த மழையே அவளுக்காக பெய்வது போல் ஒரு கர்வம் அந்த மொட்டு கண்களில் கண் மை கரையச் செய்து கொண்டிருந்தது…மழைத் துளிகளால் நெய்யப்பட்டவள் போலொரு தோற்றம். முன் நெற்றியில் அரை நெற்றியை கூந்தலால் மறைத்திருந்தாள். மிச்சத்தை மழை போல் துளிகளாக்கி, அரை வட்ட நிலாவாய் நனையச் செய்திருந்தாள்.

    நினைவுகளின் கூடாரமாய், என்னைக் கவிழ்த்துக் கொண்டேயிருந்தது அவளின் மழைத் துளிகள். வானக் கண்ணில் நானொரு இறக்கை விரிந்த காகமாய் தெரியலாம். குடையின் படபடப்பு, நடுங்குவதாய் கூட உணரச் செய்யலாம். நின்று, நிதானமாய் மழைக்குள் மழை பார்ப்பது, சிந்தனைகளை நிறமாற்றிக் கொண்டிருந்தது. வெற்றிடத்தின் வியர்வைத் துளிகள் செவ்வக வடிவில் குறிப்பிட்ட இடைவெளியில் கடல், கரையை, வெளியை, பகலை நிறைத்துக் கொண்டேயிருந்தது… அம்முவின் அரவணைப்புகள் பெரும்பாலும் மழை நாளில் அதிகமாகும். அத்துமீறும் பெண்மையை, உணர்வது, ஆண்மையின் தவம். என் தவங்களை வரமாக்கிய போதனைகளின் துளிகளை, இந்த மழையே, காலம் காலமாய் கொண்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன், உணர்கிறேன்…. காது முழுக்க ஒரே விதமான பேரிசை, மழையின் சிரிப்பு அல்லது…. சிலிர்ப்பு. அது கத்திச் சொல்லும் காதலை கடல் அறிந்ததோ இல்லையோ நான் அறிவேன். மழையோடு தீர்ந்தவள் என் அம்மு…மழை இல்லாத ஊரில் அவள் இறந்து விடுவாள். அவள் அப்படித்தான்….முன் பின் போய் வந்த எண்ணங்களை மழை என்னும் திரைக்கதையாய் ஓட செய்கிறவள் அம்மு. காதலோடு இருக்க கல்யாணம் எதற்கு என்று அவள் கேட்ட நாளில் ஒரு மிதமான மழை வந்து கொண்டிருந்தது. எனக்கு சிரிப்பு வந்தது. அணைத்துக் கொண்டேன். இன்னொன்றும் கூறினாள். அன்று பெரு மழை நாள். “மனித பிறவியில் குழந்தை பெற்றுக் கொண்டே தீர வேண்டுமா? இந்த பூமியில் சந்ததிகளை விட்டுச் செல்லத்தான் வேண்டுமா?” என்றாள். இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டேன்….

    பாலம் பாலமாய் வெடித்துக் கிடக்கும் மண்ணைக் கண்டால், கண்களில் பெருமழை சிந்துவாள். அவளைப் புரிந்து கொள்வது சிரமம் என்றெல்லாம் இல்லை…. சுலபமாக புரிந்து கொள்ளலாம், மழையை புரிந்து கொள்வது போல….குழந்தைகளுக்கு பதிலாக, நாங்கள் மரம் வளர்த்தோம்…. மரம் சொன்ன கதைகள் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருக்கும்….எங்களிடம் மரங்கள் பேசின…. அவளிடம் நிறைய ரகசியங்கள் சொல்வதாக கூறுவாள்….வயதாக, வயதாக தலைமுடியில் கருப்பு மை அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றிய எண்ணத்தில் வெள்ளை அடித்தாள். ஐம்பது வயது தோற்றம், ஐம்பது வயதில் அப்படித்தான் இருக்கிறது…. இருக்கட்டும் என்றாள். . பால் போன்ற தலைமுடியில், ஒரு வித அனுபவம் பரிசுத்தமாகிறது…… அவளை சுலபமாக உணர்ந்து கொள்ளும் தருணங்களை இந்த மழை எனக்கு துளி துளியாய் சொல்லித் தந்திருக்கிறது……

    சொன்னால் நம்புவதற்கு சிரமம் தான். மழை மேல் சத்தியமாய் நாங்கள் ஒரு முறை கூட சண்டை போட்டது கிடையாது. கருத்து முரண்பாடுகளை கூட, இடம் மாற்றி யோசித்து புரிந்து கொள்வோம்…ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முத்தங்களாவது பரிமாறிக் கொள்வோம். காதலை காமத்தில் உணர்ந்து கொண்டேயிருப்போம். காமத்தை காதலில் புரிந்து கொண்டேயிருப்போம். மழை விடாத நாட்களில் மையிருட்டின் புயலை அவளிடம் உணர்ந்திருக்கிறேன்…. நிலவில் மழை வேண்டும் என்று வேண்டுவாள், மழையில் நடக்கும் நிலவாக. மெல்லிய தீண்டல்களின் பரிணாமமே, மழைத்துளியின் தொடுதல் என்பாள். விரல் கோர்த்துக் கொண்டு வீதி தாண்டும் வேளையில், குழியில் சேர்ந்திருக்கும் மழை நீரில் சடாரென எட்டிக் குதித்து சிரிப்பாள்…

    சிறுவயதில் ஒரு மழைநாளில், வீடே அதிர அதிர சிரித்த கதை ஒன்றைக் கூறுவாள். ‘அ ‘ வை பெரியதாக எழுதிவிட்டு, அது தான் ” ஆ ” என்று சொன்னதாக, அதற்கு பின்னால் பனி மூட்டமாய் ஒளிந்து கிடந்த மழலையின் புரிதல், சிரிப்பாய் வெளிப்பட்டதை நினைவு கூறுவாள். நான் சிரிக்கின்றேன். இப்போதும் சிரிக்கத் தூண்டும் செயல் அது…. அதுவும் அவள் கூறும் போது, அது இன்னும் சுவையாக மாறும், அதிகாலை மழை போல… என்னால், கடலில் கடலாகும் மழையை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. இந்த மழை ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்கிறது… அது கடலுக்கு புரிகிறது. அதையே, வேறு மாதிரி கரை புரிந்து கொள்கிறது….வெளியின் புரிதல் வினோதம். அது பல நேரங்களில் ஜன்னலையும், கதவையும் அடைத்து விடுகிறது….

    என் குடை, காற்றிலும், தட்… தட்… தட்…. என படும் துளிகளிலும் தலையாட்டி கதை கேட்டுக் கொண்டிருக்கிறது. தீரா தனிமைக்குள் சுதந்திரமாய், தன் ஆடைகளை கலைகிறது இந்த மழை. நிர்வாண மழையில் கற்புக்கு வேலையில்லை…. உயிர் கரைதலை உணர்த்தும் இம் மழை கணங்களில் மாறிக் கொண்டேயிருக்கும் புகைப்படம். அம்முவின் பல புகைப்படங்களில் சிறையாகி நிற்கும், மழைக் கம்பிகள், புகைப்படத்தின் காலங்கள்….மழையில் மழை நனைவதாக அவள் எழுதிய கவிதைகள் இன்னும் காயவில்லை என் நினைவு பாலையில். சிலபோது, மழையேறி, வான் வெளியில் மேகமாகிவிடும் மண் துகள்களின் மின்மினி அவள். அவளாக இருப்பது அழகு…. அவளோடு இருப்பது பேரழகு…. நான் பேரழகன் என்பாள்… இந்த முப்பது வருடங்களில் அவளின்றி கடல் கண்டது இதுவே முதல் முறை. இப்போது கடலாகவும் அவள் மாறிவிட்டதாக, அவளாகிய மழை சொல்லும் ரகசியம், என் தனிமையின் ஆழமாய் மணலுக்குள் ஆழப் பதிந்த என் பாதச் சுவடுகளை நனைக்கிறது…..

    எனக்குள் ஒரு வித கரைதல். நான் அழுது விடக் கூடாது. அழுவது அவளுக்கு பிடிக்காது. கண்ணீருக்கும் அழுகைக்கும் சம்பந்தம் இல்லை என்பது அவளின் மழைப்பாட்டு. கண்ணீரைத் துடைத்து, பின்னாலேயே பயணித்தது குடை தாண்டிய மழை…சட்டென நினைவு வருகிறது. அவளுக்கு குடை பிடிக்காது…. என்னால் இனி இந்த குடையைப் பிடிக்க முடியாது…. காய்ச்சல் தந்து விடும் என்பதால் வேறு வழியின்றி, பிடித்துக் கொள் என்பாள். வந்தாலும் பரவாயில்லை என்று குடை மறப்பேன் நான். இதோ இன்றும் குடையை காற்றின் கைகளில் தவழ விட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்…

    சாலையெங்கும் மழைத் துளிகளின் தலைவிரி கோலம். கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிய மனித கூட்டம், மழையை வெறித்த கண்களோடு , ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது….மரமற்ற சாலை, இனி ஒரு மழைக்காக எத்தனை காலம் காத்திருக்குமோ….? சாலையின் இருபக்கமும் வளைந்து இதழ்கள் தீண்டி நிற்கும் இலைகளோடு, மரங்கள் இருந்த காலத்தில், மீனலோட்சனி பச்சைக் கண்காரியாய் சிறகு விரித்து, மழையாக சிதறிக் கொண்டிருந்தாள் . இன்று சாலை மட்டுமே இருக்கிறது…

    காயாத சாலையில், உஷ்ணம், வெண் புகையாய் வெளியேறிக் கொண்டிருந்தது…திரும்பி பார்த்தேன்…. மழை நிறைந்த பெருவானமாய் கடல், பிரபஞ்சம் நனைத்துக் கொண்டிருந்தது….

    திறந்து கிடந்த வீட்டுக்குள் சாரல் துளிகள் சல்லடை துளைத்த துளி மீன்களாய் சிதறிக் கொண்டிருந்தது…வாசல் தாண்டி வீட்டுக்குள் நுழைந்த என் மீனலோட்சனி, உள்ளங்கையில் ஒளித்து வைத்திருந்த, மழைத்துளிகளை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப் படத்தில் தெளித்தாள்….அவளுக்கு மரணமும் வாழ்வும் ஒன்று தான்….அவளின் புன்னகை ஒரு பெரு மழையை தேக்கி வைத்திருந்தது….

    வாசலில் நனைந்து கொண்டிருந்தது, நான் கடற்கரையில் மழையோடு விட்ட குடை……

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ’காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றார் பாரதியார். ஆனால் நம்மில் பலருக்குக் ’காலை எழுந்தவுடன் காபி’ என்பதுதான் தாரக மந்திரம். படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி குடிப்பதற்குப் பதிலாகச் சிறிது எலுமிச்சை சாற்றைப் பருகினால் மிகநல்ல பலன்களைப் பெறலாம் என்று நம் காதோரம் கிசுகிசுக்கின்றது மருத்துவ அறிவியல்.

    அதைப் பற்றித்தான் கொஞ்சம் அறிந்துகொள்வோமே!

    lemon-juiceகாலைவேளையில் முதல்வேலையாக ஒரு கோப்பை வெந்நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவிட்டுப் பிற வேலைகளைக் கவனிப்பது நல்லது. மற்ற சத்துபானங்களைவிட இது சிறந்ததாகும். எலுமிச்சையின் புளிப்புச் சுவையை எண்ணி நாம் முகச்சுளிப்பு கொள்ளாது அதனைப் பருகினால் விளையும் நன்மைகளைப் பட்டியலிடுகிறேன் பாருங்கள்!

    எலுமிச்சையில் அமிலத்தன்மை மிகுதியாக உள்ளதால் (it contains citric acid) அது உடலினுள் சென்று வேதிவினை புரிந்து இரத்தத்தில் கலக்கும்போது உடலின் கார, அமில விகிதத்தைச் சமப்படுத்துகின்றது. வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாற்றைப் பருகினால், அது நம் கல்லீரலை (விறுவிறுப்பாய்) விழித்தெழச் செய்து, தேவையற்ற நச்சுப் பொருள்களை உடனடியாய் வெளியேற்றுகின்றது என்கிறார் அமெரிக்காவைச் சார்ந்த, நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைத்துறை நிபுணராகவும், மேற்கத்திய, கிழத்திய மருத்துவங்களை இணைத்துத் தீர்வுகாண்பதில் பயிற்சி பெற்றவருமான மருத்துவர் ஃப்ராங்க் லிப்மேன் (Dr. Frank Lipman).

    கல்லீரல் மட்டுமல்லாது இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்ட சீரணப் பாதைகளையும் (digestive tract) இச்சாறு சுத்தீகரித்து, நாமுண்ணும் உணவுகளை இப்பாதையில் சிக்கலின்றிப் பயணிக்க வைக்கின்றது.

    உடம்பில் எக்கச்சக்கமாக எடைகூடி, அதனைக் குறைக்க வழிதெரியாது திணறும் ’கனவான்’களுக்கு எலுமிச்சை கைகண்ட மருந்தாகும். எலுமிச்சைச் சாற்றில் நிறைந்திருக்கும் ’பெக்டின்’ (pectin) எனும் (நீரில் கரையும்) மாவுச்சத்து (complex carbohydrate) உடல் எடையை வெகுவிரைவாய்க் குறைக்கும் மாய வித்தைக்காரனாய்ச் செயல்படுகின்றது.

    இரவில் அதிகமாய் உணவு உண்போர் சிலருக்குக் காலையில் எழும்போது நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் முதலிய தொந்தரவுகள் இருக்கும். அவற்றை நீக்குதற்குச் சுடுநீர் கலந்த எலுமிச்சைச் சாறு அருந்துணையாகும். எலுமிச்சையிலுள்ள ஃப்ளாவனாய்டு எனும் கூட்டு வேதிப்பொருள் (Flavonoids), வயிற்றின் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த, சுடுநீரானது சீரணப்பாதையினைச் சீராக்க, வயிற்றுப் பிரச்சனைகளும் நெஞ்செரிச்சலும் சொல்லாமல் கொள்ளாமல் உடலைவிட்டு ஓட்டம்பிடிக்கும்; சுறுசுறுப்பு அங்கே இடம்பிடிக்கும்.

    இவையேயன்றி சீறுநீரகக் கற்களைக் கரைப்பது, மலச்சிக்கலைத் தீர்ப்பது, சளி உள்ளிட்ட தொற்றுநோய்களை நீக்குவது போன்ற எண்ணற்ற மருத்துவப் பயன்களை அள்ளிவழங்கும் மாமருந்து எலுமிச்சை.

    பொதுவாக நாம் எலுமிச்சையை ஊறுகாய் போடுவதற்கும், (எலுமிச்சை) சாதம் தயாரிப்பதற்குமே அதிகமாய்ப் பயன்படுத்துகின்றோம். இப்படிக் சுவையான வகையில் அதனை உண்பதில் தவறில்லை! ஆனால் இவ்வகைத் தயாரிப்புகளில் எண்ணெய், காரம், உப்பு போன்றவையும் கூடுதலாகச் சேர்ந்துவிடுவதால் எலுமிச்சையின் முழுப்பலனும்  நமக்குக் கிடைப்பதில்லை. எனவே அதன் முழுப்பலனும் கிடைக்கச் சாறாய் அருந்துவதே சாலச் சிறந்தது!

    மருத்துவப் பயன்களேயன்றி சிறந்த அழகுசாதனப் பொருளாகவும் பயன்பட்டுவருகின்றது எலுமிச்சை. எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு தேனோ அல்லது கடலை மாவோ கலந்து முகத்தில் பூசிச் சிறிதுநேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவிவந்தால் முகப்பொலிவு கூடி, முகத்தில் முகம் பார்க்கலாம்!

    சூரிய ஒளியால் தோலில் ஏற்படும் நிறமாற்றத்தைத் தடுக்கவும் (Suntan) எலுமிச்சைச் சாற்றை உபயோகிக்கலாம். தலையில் எலுமிச்சைச் சாற்றைத் தேய்த்துக் குளித்துவரப் பொடுகு பறந்தோடும்.

    கறைகளைப் போக்கும் வெளுப்பானாக (bleaching agent) எலுமிச்சை விளங்குவதால் துணி துவைக்கும் சோப்புகள் தொடங்கிப் பாத்திரம் துலக்கும் சோப்புகள், நீர்மங்கள், குளியல் சோப்புகள் என அனைத்திலும் இது முக்கிய மூலப்பொருளாய்த் திகழ்கின்றது.

    ”உங்க பேஸ்ட்டுல எலுமிச்சையும் உப்புமிருக்கா?” என்று வீட்டுக்கே வந்து கேட்டுவிட்டுச் செல்லும் தொலைக்காட்சி பற்பசை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம்! இப்பற்பசைகளை வாங்கி நம் காசைக் கரியாக்குவதைவிட, நம் வீட்டிலேயே இருக்கும் எலுமிச்சையில் சிறிதளவு சாறெடுத்து அத்துடன் ஒரு சிட்டிகை பொடிஉப்பைச் சேர்த்துப் பல்துலக்கினால் போதும்! ’ஜொலிக்குதே பற்கள் ஜொலிக்குதே’ என்று பாடத் தொடங்கிவிடுவோம்!

    இப்படி எலுமிச்சையின் மகத்துவத்தை முடிவில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்; ஆம்! எலுமிச்சை அளவில் சிறிதாயினும் ஆற்றலில் பெரிது!

    உடல்நலத்தைச் சிறப்பாய்ப் பேண எலுமிச்சை மீது இச்சை கொள்ளுவோம்! நோய்களைத் துச்சமெனத் தள்ளுவோம்!

     

    Share
  • இன்பமே எந்நாளும் துன்பமில்லை

    சு. கோதண்டராமன்.

     

    SHIVA_CHAKRA_by_VISHNU108ஒரு துன்பமில்லாத வாழ்வுதான் எல்லோரும் விரும்புகிறோம், ஆனால் யாரும் அப்படி வாழ முடிவதில்லை. துன்பத்துக்குக் காரணம் என்ன? ஆசையே என்று சமண சாக்கிய சமயங்கள் கூறுகின்றன. சமணத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த நாவுக்கரசர் ஆசைகளை முற்றிலுமாக ஒழித்துத் தானே துறவியாக வாழ்ந்தார்? அவருக்கு ஏன் சூலை நோய் ஏற்பட்டது? இது போன்ற விளக்கம் சொல்ல முடியாத துன்பங்களுக்குக் காரணம் முன்வினை என்கின்றன அச்சமயங்கள்.

    நமக்கு வரும் துன்பங்களை இரு வகையாகப் பிரிக்கலாம்- நிகழ்காலத் துன்பங்கள், வருங்காலத் துன்பங்கள். நாளைய துன்பங்களின் நினைவே நடுங்க வைக்கிறது. அதைத் தான் அச்சம் என்கிறோம். நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் நாள் முழுவதும் ஆயுள் முழுவதும் எதாவது ஒன்றுக்கு அஞ்சித்தான் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அரசன் தீயநெறியில் நடப்பவனாக இருந்தால் அவன் கொடுக்கவிருக்கும் தண்டனைக்கு அஞ்சி, உயிர் போய்விடுமோ என்று அஞ்சி நாமும் பொய்மை ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் விளைவாக நரகத்தில் இடர்ப்பட வேண்டியுள்ளது.

    அச்சமும் இன்பமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆயிரம் இன்பங்களுக்கு நடுவில் இருத்தி வைத்தாலும் எதிரில் அச்சம் தரும் பொருள் ஒன்று இருந்து விட்டால் அந்த இன்பங்களை அனுபவிக்க முடியுமா? எனவே துன்பத்தோடு கூட அச்சத்தையும் ஒழிக்க வேண்டும்.

    முன் வினைப்பயனாக விளைந்த துன்பங்களை நீக்குவது எப்படி? அவற்றை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று சமணம் சொல்கிறது. அவற்றிலிருந்து தப்பிக்க முயன்றால் மீண்டும் பிறந்து அனுபவிக்க நேரிடும். இந்தப் பிறவியிலேயே அனுபவித்துவிட்டால் மறுபிறவி இல்லாமல் போகும்.

    சமணத்துறவி நாவுக்கரசருக்குச் சூலை நோய் ஏற்பட்டது. அனுபவித்தால் தீர்ந்துவிடும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு அதை ஏற்றுக் கொண்டார். நோய் தீர்வதற்குப் பதிலாக, வர வர மிகுதிப்பட்டது. அவரால் தாங்க முடியவில்லை, கதறத் தொடங்கினார். தன் சகோதரியின் ஆலோசனையின் பேரில் சிவனைத் தஞ்சம் அடைந்தார். அதிகை வீரட்டானப் பெருமானிடம் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர், சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் என்று முறையிட்டார். நோய் நீங்கியது. அவர் ஒரு புதிய உண்மையைக் கண்டறிந்தார். துன்பம் நீங்க, ஆசையை ஒழித்தால் மட்டும் போதாது, ஆலமர் செல்வனிடம் முழுமையாகச் சரண் அடையவும் வேண்டும்.

    ஆசையும் முன்வினையுமே துன்பத்துக்குக் காரணம் என்ற கொள்கையைச் சமண சாக்கியங்களிலிருந்து ஏற்றுக் கொண்ட சைவம் துன்பத்திலிருந்து விடுபட ஒரு தீர்வையும் அளித்தது.

    நாவுக்கரசர் சமணம் விட்டுச் சைவத்திற்கு வந்து சேர்ந்தார். சமண குருமார்கள் அரசனிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்தினர். அரசனின் பகைமை தொடர்ந்து துன்பம் தந்தது. நஞ்சு ஊட்டப்பட்டார், நீற்றறையில் தள்ளப்பட்டார், கடலில் தள்ளப்பட்டார். அவர் அஞ்சவும் இல்லை, துன்பப்படவும் இல்லை. உயிர் போவதைப் பற்றி அஞ்சுபவர்கள் தாம் அரசனுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும். இவருக்கோ நரகம் பற்றிய அச்சம் கூட இல்லை. எதற்கும் அச்சம் இல்லாததால் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்தப் பிணியும் நம்மைப் பிணிக்காது, இன்பமாக வாழ்வோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று முழங்கினார்.

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

    தனக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதையும் அடுத்த பகுதியில் கூறுகிறார். அரசர்க்கெல்லாம் பேரரசனான சங்கரனுக்கு அடிமையாகத் தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டார் அவர். அவர் யாருக்கு, எதற்கு அஞ்ச வேண்டும்?

    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

    இந்த அச்சமின்மை அவரது பாடல்கள் எல்லாவற்றிலும் தொனித்தாலும் சில பாடல்களில் அது தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,திருநீறும், பிறையும், புலித்தோல் ஆடையும், பவளம் போன்ற நிறமும், காளையும், மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும், கெடில ஆற்று நீரும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியவர்கள் நாம். ஆதலின் நமக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை.

    சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
    வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
    அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
    திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

    தனக்கு இன்றும் அச்சமில்லை, தன்னை அச்சுறுத்தக்கூடிய பொருள் நாளையும் தோன்றாது என்ற உறுதியைப் புலப்படுத்தி இப்படிப் பத்துப் பாடல்கள் பாடுகிறார்.

    சிவபெருமானிடத்தில் சரணடைய வேண்டுமென்றால் உலகாயத இன்பங்களில் பற்று விட வேண்டும். தன் இடையில் கட்டிய கந்தல் தவிர வேறு எதையும் உடமையாகக் கொள்ளமல், கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் தூங்கியவர் அவர். என்னைக் காப்பது அவன் கடன், இறை பணி செய்வது என் கடன் என்று வாழ்ந்தவர். அவருடைய கீழ்வரும் பாடலைப் பாருங்கள். அம்பலங்களில் பாய் முதலியன இன்றி பூமி மேலேயே படுத்துக் கிடக்கிறார். இவரது பொறுப்பைச் சிவன் ஏற்றுக் கொண்டுவிட்டான். இவர் ஏன் பணக்காரர்களைத் துதி பாடி வாழவேண்டும்?

    புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
    உடன்கிடந்தாற் புரட்டாள் பொய்யன்று மெய்யே
    இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
    இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
    துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்
    சொற் கேட்கக் கடவோமோ துரிசற்றோமே.

    இதன் எதிரொலியைச் சங்கரரின் பஜகோவிந்தத்தில் கேட்கிறோம்.

    ஸுரமந்திர தருமூலநிவாஸ: சய்யா பூதலமஜினம் வாஸ: I
    ஸர்வபரிக்ரஹ போக த்யாக: கஸ்ய ஸுகம் நகரோதி விராக: II

    கோயில் வாசலிலோ, மரத்தடியிலோ தங்கி, தரையில் படுத்து, மான் தோலை உடுத்தி, எல்லா சுகானுபவத்தையும் துறந்து வைராக்கியத்துடனிருப்பது அனைவருக்குமே சுகம்தானே!

    சிவனுக்கு மீளா ஆளாக ஆகிவிட்டதால் அவருக்கு வருங்காலத் துன்பமாகிய அச்சம் நீங்கியது மட்டுமல்ல, நிகழ்காலத் துன்பங்களும் நீங்கிவிட்டன. கடந்த பிறவியில் செய்த வினைகளும் செயலிழந்து போய்விட்டன என்கிறார்.

    அல்லல் என்செயும் அருவினை என்செயும்
    தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
    தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
    எல்லையில்லதோர் அடிமை பூண்டேனுக்கே.

    படம் உதவி: http://ledi-arafely.blogspot.com/2012/04/blog-post_6249.html

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் ​40.

    நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி

    சுபாஷிணி

    ​சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதகுல வரலாற்றில் ஒரு வளர்ச்சி பதியப்பட்டது. ஹோமோ குழுவகை மனித குலம் கற்களாலும் பாறைகளாலும் உபகரணப் பொருட்களை உருவாக்கும் திறனைப் படிப்படியாக வளர்த்துக் கொண்ட காலகட்டம் அது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் சில சான்றுகளின் அடிப்படையில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் (Homo Errectus) மனித இனத்தின் உடற்கூறுகளை ஒத்திருப்பதை அறியமுடிகின்றது. இந்த வகையினர் விலங்கினத்திலிருந்து மாறுபட்ட, அறிவு வளர்ச்சி பெற்ற ஒரு இனக்குழுவாக இருப்பதை கிடைத்திருக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக மூளைப்பகுதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். ஏனைய விலங்கினங்களிலிருந்து மாறுபடும் வகையில் இவர்களது கால்களின் அமைப்பு, ஓடும் தன்மை ஆகியவையும், இவர்களின் பற்கள் அளவில் சிறியதாக மாற்றம் கண்டதையும், உடலின் மேல் அமைந்திருக்கும் மயிர் மெல்லியதாக மாற்றம் கண்டமையையும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஹோமோ இரெக்டஸ் குழுவினர் அடிப்படையில் விலங்கினங்களிலிருந்து மாறுபட்ட வகையில் கற்களையும் பாறைகளையும் கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு அடிப்படையான கருவிகளை உருவாக்கும் திறனை படிப்படியாக வளர்த்துக் கொண்ட இனமாகத் திகழ்கின்றனர்.

    ஜெர்மனியின் எஸ்ஸன் மாநிலத்தில் டூசல்டோர்வ் அருகே, ஆகஸ்டு மாதம் 1856ம் ஆண்டு, ஒரு சாதாரண நாளில், காடுகளைத் தூய்மை செய்யும் ஊழியர்கள் ஃபெல்தோவ் குகைப்பகுதியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது 16 எலும்புகள் ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டனர். கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புகளை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்தனர். இதனை ஆய்வு செய்த யோஹான் கார்ல் ஃபூல்ரோத் அவர்கள் இவை மனித எலும்புகள் தாம் என உறுதி செய்தார். கண்டெடுக்கப்பட்டபோது இது அக்குகையின் உள்ளே, முதுகுப்புறம் வெளியே தெரியும்படி படுத்த நிலையில், குகையின் முன்பகுதியை நோக்கியபடி தலைவைத்துக் கிடந்ததாக இதனைக் கண்டெடுத்தோர் தெரிவித்த குறிப்பு மட்டுமே உள்ளது.

    asub
    எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி (மே 2015)

    இது மட்டுமே முதல் முறையாக கண்டெடுக்கப்பட்ட பழமையான மனித எலும்புகள் அல்ல என்பது உண்மை. ஏற்கனவே பெல்ஜியம், கிப்ரால்டா போன்ற நாடுகளிலும் பண்டைய மனித குலத்தின் எலும்புகள் கிடைக்கப்பெற்றன என்ற போதும் அவற்றிற்கு இந்த எலும்புக் கூட்டிற்கு செய்யப்பட்ட விரிவான ஆய்வுகளைப் போல  மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கிய விஷயம்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்தார் போல செப்டம்பர் 1859ம் ஆண்டில் வெளியான சார்ல்ஸ் டார்வினின் “On the Origin of Species by Means of Natural Selection” என்ற நூலும் இந்த நியாண்டர்தால் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை மானுடவியல் ஆய்வுலகில் மிக துரிதமாகப் பிரபலமடைய உதவின. அப்போதிருந்த பழமைவாத உலகச் சிந்தனையைத் திருப்பிப் போடும் சார்லஸ் டார்வினின் இந்த அதி அற்புத கோட்பாடு, இந்த புதிய கண்டுபிடிப்பை மையப்படுத்தி தொடர் ஆய்வுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட அடிப்படையை அமைத்துக் கொடுத்தன. மனித இனம் அதன் பழமையான முன்னோர் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று  வந்த ஒரு இனம் என்னும் கோட்பாடு இந்த விஞ்ஞான ஆய்வோடு இணைந்து செயலாற்றத் தொடங்கியது.

    asuba

    ​அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியில் (மே 2015)

    அதன் பின்னர் இந்த ஆய்வுகள் தொடரப்படவில்லை. இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி இருக்கும் இடமும் பதியப்படாத நிலையில் அடுத்தடுத்து ஜெர்மனியில் நிகழ்ந்த யுத்தம், அரசியல் மாற்றம் என்ற வகையில் இந்த ஆய்வு தொடரப்படாமல் மறக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. 1997 மற்றும் 2000ம்  ஆண்டுகளிலும் இரண்டு அகழ்வாய்த்துறையினர் இந்த இடத்தை கண்டுபிடித்தே தீரவேண்டும் என முயற்சி செய்து ஆய்வில் இறங்கினர். ரால்ஃப் ஸ்மித், யூர்கன் தீஸன் ஆகிய இருவருமே அவர்கள். இவர்கள் ஆய்வு தோல்வியில் முடியவில்லை. நிலத்தின் மேல்பரப்பிற்கு 4 அடி கீழே மண்ணையும் பாறைகளையும் தோண்டி எடுத்து ஆய்வு செய்ததில் கற்கருவிகள், விலங்குகளின் எலும்புக் கூடுகள் ஆகியன கிடைத்தன. அவை மட்டுமல்ல மனித இனத்தின் உடல்கூறுகளைக் கொண்ட எலும்புக் கூடுகளும் கிடைத்தன. அதில் முன்பு 1856ல் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் மிச்சப்பகுதியும் அடங்கி இருந்தமை ஆய்வாளர்களுக்கு வெற்றிப்பாதயைக் காட்டியது.

    asu

    அருங்காட்சியகத்தின் முகப்பு பகுதி (மே 2015)

    ஜெர்மனியின் டூசல்டொர்ஃப் நகரில் பசுமையான சூழலில் ஃபெல்தோவ் குகைப்பகுதி அமைந்திருக்கின்றது. அங்கு தான் அழைத்துச் செல்கின்றேன். அருக்காட்சியகத்தைக் காண தொடர்ந்து வருக!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(150)

    –சக்தி சக்திதாசன்.

     

    hands

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் …

    150 மடல்கள், 150 வாரங்கள் இனிய உறவுகளான உங்களோடு என் மனக்கருத்துகளை மடல் வாயிலாக நான் பகிரத் தொடங்கி இத்தனை காலங்கள் ஓடிப் போயினவா?

    ஏதோ நேற்றுதான் சகோதரி பவளாவுடன் ஆரம்பித்தது இம்மடலின் துவக்கம்; 150 வார காலங்களுக்குள் எத்தனை எத்தனை நிகழ்வுகள்? எப்படி எப்படி நடந்து முடிந்து போயின.

    நீர்க்குமிழி போன்ற இந்த வாழ்க்கையில் நாம் காணும் எத்தனையோ வண்ணக் கனவுகள் கறுப்பு வெள்ளையாய் முடிந்து போயிருக்கின்றன. அதே சமயம் எத்தனையோ கறுப்பு வெள்ளையாக ஆரம்பித்தவைகள் வண்ண நினைவுகளாகவும் மிளிர்ந்திருக்கின்றன.

    என் அண்ணனின் இளம் மைந்தனின் மறைவு, என் நல் நண்பனின் அகால மரணம், என் மனைவியின் சித்தப்பாவின் மறைவு, என் மனைவியின் தந்தை… என் அருமை மாமனாரின் மறைவு என உள்ளத்தை உருக்கும் துயரமான நிகழ்வுகள் ஒரு புறம் …

    என் அருமை மைந்தனின் திருமணம், அதன் மூலம் மருமகளாக எமக்கு வாய்த்த ஒரு அன்பு மகள் என உள்ளத்தை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லக்கூடிய மகிழ்வான கணங்கள் மற்றொருபுறம் …

    அப்பப்பா! இவ்வாழ்க்கை எனும் பயணத்தில் எத்தனையோ உணர்வுகளின் கூட்டும் நிகழ்வுகள்.

    ஆம், இது ஒரு மகிழ்ச்சியான பயணம்தான். இது எங்கே எவ்விதம் தொடங்கும் என்றோ, எங்கே எப்படி முடியும் என்றோ கணித்துக் கூறக்கூடியவர் எவருமே இல்லை எனலாம்.

    இத்தகைய வாழ்க்கையிலே அடுத்தொரு துயரமிகு செய்தியாக எனக்கு நேற்று ஒரு செய்தி காதுக்கு எட்டியது.

    ஆமாம் 83 வயதான எனது ஒன்று விட்ட சகோதரரின் மறைவு !

    என் தாயாரின் மூத்த சகோதரியின் தலைப்பிள்ளை மூத்த மைந்தன். எனது தாய்வழி உறவில் குடும்பத்தில் மூத்தவர் எனும் அந்தஸ்து பெற்றவர். நானோ அதே வழியில் அனைவர்க்கும் இளையவன் எனும் அந்தஸ்தைப் பெற்றவன்.

    எனக்கும் அவருக்கும் ஏறத்தாழ 24 வயதுகள் வித்தியாசம்.

    நான் குழந்தையாக இருந்த போதே அவர் லண்டனுக்கு மேற்படிப்புக்காகச் சென்று விட்டார்.

    எனக்கு அறிவில் முதிர்ச்சி ஏற்படும் வரை அவரைப் பற்றி பெயரளவிலேயே கேள்வியுற்றிருந்தேன்.

    பின்பு அவர் இலங்கைக்கு விடுமுறையில் வரும்போது தனது சித்தியான என் அன்னையிடம் அடிக்கடி வந்து விடுவார். என் அன்னையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.

    இலங்கையிலே எனது வாலிப வயதுகளை வீணாக்கி விட்டு ஏதாவது ஒரு வகையில் வாழ்வில் முன்னேற வேன்டும் என்பதற்காக தாய்மண்ணில் கல்வியைத் தொலைத்தவன் மேல்நாட்டில் அதைத்தேடி லண்டன் செல்ல முற்பட்ட வேளையது…

    அப்போது லண்டனில் மாணவனாக நுழைவதற்கு வேண்டிய தகமைகளில் ஒன்றாக லண்டனில் எமக்க்குத் தேவையான வசதிகளை நல்கி எம்மை வழிநடத்துவதற்கு ஒருவர் கடித மூலம் உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதை ஆங்கிலத்தில் “ஸ்பான்சர் லெட்டர் ” என்பார்கள்.

    லண்டனுக்கு வந்த பின்பு நாம் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து மாட்டிக் கொண்டால் அதற்கு அக்கடிதம் கொடுத்தவரே பொறுப்பாவார்..

    அதனால் பலர் இதற்குத் தயங்குவார்கள்.

    ஆனால் என் ஒன்று விட்ட அண்ணனிடம் எனது தேவையை எனது அன்னை தெரியப்படுத்தியதும் எதுவித தயக்க்கமுமின்றி உடனடியாக எனது தேவையைப் பூர்த்தி செய்தவர் அவர்.

    ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிலையில் எடுக்கும் ஒரு தீர்மானம் அவனை கீழ்நிலைக்குத் தள்ளும் அல்லது மேல்நிலைக்குக் கொண்டு செல்லும்.

    அத்தகையதோர் முக்கியமான சந்தியில் யார் எமக்குக் கை கொடுக்கிறார்களோ, எமது வாழ்க்கையின் மாற்றத்திற்கு முக்கிய காரணமானவர்களோ அவர்களை நாம் மறக்கக் கூடாது என்று என் தந்தை எனக்கு அடிக்கடி சொல்லும் ஒரு அறிவுரை எப்படியோ என் மனதில் தங்கி விட்டது.

    அதனால் லண்டன் வந்ததும் அவருக்கு நான் ஒவ்வொரு முறை எனது மாணவ விசா அனுமதி புதுப்பிக்கப்பட்டதும் தொலைபேசியில் நன்றி சொல்வதுண்டு.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண்மணியே எனது அண்ணியாவார். என் அண்ணனுக்கேற்ற அருமையான பண்புகள் அனைத்தையும் அண்ணியும் கொண்டிருந்தார்.

    இலண்டன் மாணவ வாழ்க்கை என்பது நான் வந்த காலகட்டங்களில் மிகவும் சிரமான ஒன்று. கல்லூரிக்குச் சென்று படிப்பது மட்டுமன்றி எமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஒய்வுள்ள நேரங்கள் அனைத்தும் ஏதாவது ஓரிடத்தில் பகுதி நேர ஊழியம் செய்ய வேண்டியது அக்காலத்தின் கட்டாயம்.

    இது எனக்கு மட்டுமல்ல அக்காலகட்டத்தில் இங்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான என் தாய்நாட்டுச் சகோதர, சகோதரிகளுக்கும் உள்ளான நிலையே.

    அதனால் எனது அண்ணனுடனான தொலைபேசித் தொடர்பு கூட எப்போதாவது ஒருமுறைதான் நிகழும்.

    இந்நிலை மாறியது என் திருமணத்தின் பின்னால். நான் திருமணம் புரிந்ததும் அவருடன் ஒருநாள் பேசும் போது நான் அவருடன் தொடர்பு கொள்வது எப்போதாவது என்பது பற்றி மிகவும் கடிந்து கொண்டார்.

    அப்போதுதான் எனது போக்கின் தவறு புரிந்தது. அது மட்டுமல்ல அப்போது என் தவறை அழகாகச் சுட்டிக்காட்ட என் மனைவி என் கூட இருந்தது எனது புரிந்துணர்வை கூட்டியது.

    அதன் பின்னால் அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தேன். வைத்தியரான அவருடன் ஏதாவது வைத்திய சம்பந்தமான பிரச்சனை இருந்தால் கலந்துரையாடுவேன் மிகவும் அன்பாக அறிவுரைகள் வழங்குவார்.

    எல்லோருடனும் மிகவும் அன்பாகப் பழகும் சுபாவம் படைத்த என் மனைவியின் மீது என் அண்ணனும், அண்ணியும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

    இலண்டனில் தங்கியிருந்த என் பெற்றோர் உடல்நிலை தளர்ந்திருக்கும் வேளையில் தன்னால் முடிந்த வேளைகளில் அவர்களை வந்து பார்ப்பார்.

    என் மகன் டாக்டராகப் பட்டம் பெற்றதும் நானும் என் மனைவியும் அவனை அழைத்துச் சென்று அண்ணனிடமும், அண்ணியிடமும் ஆசீர்வாதம் பெற்றோம்.

    அப்போது தனது வைத்தியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அவர் தன்னிடமிருந்த வைத்திய சம்பந்தமான நூலை என் மகனுக்குக் கொடுத்து ஒரு நல்ல டாக்டாராக பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை தனது நாற்பது வருடகால சேவையின் அனுபவங்களைக் கூறி விளக்கியது இன்னும் என் மனதில் நிலை கொண்டுள்ளது.

    சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னனதாக தனது மனைவியை புற்றுநோய்க்கு பலி கொடுத்த அவரின் உடல்நிலை அதன் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைந்து வந்தது.

    எப்போதும் தானே தனது தேவைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் ரெடிங் எனும் இடத்திலுள்ள வைத்தியசாலையில் இறைபதமடைந்தார்.

    அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.

     

    அன்புச் சகோதரனே !
    சக உதிரத்தில் உதிக்கவில்லை
    சகோதரனாக மிளிர்ந்தாய்
    என் வாழ்க்கைத் தோட்டத்தில்
    மலர்ந்த செடிகளுக்கு நீயும்
    நீர் வார்த்திருக்கிறாய் என்பதுவே
    யதார்த்தமான உண்மை
    உண்மை, உழைப்பு, நேர்மை
    எனும் பொறுப்பான ஆயுதங்களுடன்
    வாழ்க்கை எனும் களத்தில்
    அகவைகள் எண்பத்து மூன்று
    ஆற்றியது ஒரு போராட்டமே
    மூத்தவனாய் நீ சென்ற
    அடிகளில் தொடர்ந்து
    இளையவன் நானும் செல்ல
    தொடர்ந்து ஆசிகள் அளிப்பாய்
    ஞானமாய் உதித்த உன் சொற்கள்
    ஞானேஸ்வரன் உனை எனக்கு என்றும்
    ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும்
    வைத்தியனாய் நீ ஆற்றிய தொண்டு
    வையத்தில் தமிழனாய் உனை என்றும்
    தலைநிமிர்த்தி வைக்கும்
    என் அன்பு ஞானேஸ் அண்ணா
    என்றும் எப்போது நல்லறிவு வேண்டுமெனில்
    உன்னுடன் ஒரு உரையாடல் போதுமே !
    உள்ளத்தில் அமைதி பொங்குமே !
    அன்னம்மா ! அன்னம்மா என்றெனது அன்னையை
    உன் சிற்றன்னையை அன்புடன் நீ விளிக்கும்
    சொற்களை இனி எப்போது
    என் செவி மடுக்கும்?
    வந்தவர் எல்லாம் செல்வது நியதி
    இருப்பினும் சிலரின் இழப்பு
    நெஞ்சினில் நீங்காத வடுவை
    நீக்கமற நிறுத்தி விடும்.
    அவர்களில் என் அண்ணா
    நீயும் ஒருவனென்பேன்.
    உன் ஆத்மசாந்திக்காய்
    கண்ணீர் அஞ்சலிகளோடு. . . .

    tear

    என் இனிய உறவுகள் உள்ளத்தை உருக்கும் துயரத்தை இம்மடல் வாயிலாக உங்கள் முன்றலில் இறக்கி வைத்து இளைப்பாற சந்தர்ப்பமளித்த உங்களுக்கும் என் இனிய வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் எனது பணிவன்புடன் கூடிய தாழ்மையான நன்றிகள்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 1

    ajay

    [1830 -1886]

    ஏகாந்த நிலையில்

    [Loneliness]

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர்.

    எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன.

    எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள்.

    +++++++++++++++++++

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -1

    ஏகாந்த நிலையில்

    ஒளிந்துளேன் நானென் மலருக் குள்ளே
    உன் மார்பு மேல் தொங்கும் மாலையில் !
    ஐயமின்றி அணிந்துள்ளாய் என்னை நீயும்;
    மற்றவை யாவும் தேவதைகள் அறியும்.

    ஒளிந்துளேன் நானென் மலருக் குள்ளே
    உன் மலர்க் கூடையில் கருகித் தேயுது;
    ஐயமின்றி என் மீதுனக்கு நேச உணர்வு;
    ஏறக் குறைய ஏகாந்த நிலை எனக்கு !

    ++++++++++++++++++++++

    Loneliness

    I hide myself within my flower
    That wearing on your breast,
    You, unsuspecting, wear me too—
    And angels know the rest.

    I hide myself within my flower,
    That, fading from your vase,
    You, unsuspecting, feel for me
    Almost a loneliness…

    ― Emily Dickinson, The Complete Poems

    Share