-மேகலா இராமமூர்த்தி

’காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றார் பாரதியார். ஆனால் நம்மில் பலருக்குக் ’காலை எழுந்தவுடன் காபி’ என்பதுதான் தாரக மந்திரம். படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி குடிப்பதற்குப் பதிலாகச் சிறிது எலுமிச்சை சாற்றைப் பருகினால் மிகநல்ல பலன்களைப் பெறலாம் என்று நம் காதோரம் கிசுகிசுக்கின்றது மருத்துவ அறிவியல்.

அதைப் பற்றித்தான் கொஞ்சம் அறிந்துகொள்வோமே!

lemon-juiceகாலைவேளையில் முதல்வேலையாக ஒரு கோப்பை வெந்நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவிட்டுப் பிற வேலைகளைக் கவனிப்பது நல்லது. மற்ற சத்துபானங்களைவிட இது சிறந்ததாகும். எலுமிச்சையின் புளிப்புச் சுவையை எண்ணி நாம் முகச்சுளிப்பு கொள்ளாது அதனைப் பருகினால் விளையும் நன்மைகளைப் பட்டியலிடுகிறேன் பாருங்கள்!

எலுமிச்சையில் அமிலத்தன்மை மிகுதியாக உள்ளதால் (it contains citric acid) அது உடலினுள் சென்று வேதிவினை புரிந்து இரத்தத்தில் கலக்கும்போது உடலின் கார, அமில விகிதத்தைச் சமப்படுத்துகின்றது. வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாற்றைப் பருகினால், அது நம் கல்லீரலை (விறுவிறுப்பாய்) விழித்தெழச் செய்து, தேவையற்ற நச்சுப் பொருள்களை உடனடியாய் வெளியேற்றுகின்றது என்கிறார் அமெரிக்காவைச் சார்ந்த, நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைத்துறை நிபுணராகவும், மேற்கத்திய, கிழத்திய மருத்துவங்களை இணைத்துத் தீர்வுகாண்பதில் பயிற்சி பெற்றவருமான மருத்துவர் ஃப்ராங்க் லிப்மேன் (Dr. Frank Lipman).

கல்லீரல் மட்டுமல்லாது இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்ட சீரணப் பாதைகளையும் (digestive tract) இச்சாறு சுத்தீகரித்து, நாமுண்ணும் உணவுகளை இப்பாதையில் சிக்கலின்றிப் பயணிக்க வைக்கின்றது.

உடம்பில் எக்கச்சக்கமாக எடைகூடி, அதனைக் குறைக்க வழிதெரியாது திணறும் ’கனவான்’களுக்கு எலுமிச்சை கைகண்ட மருந்தாகும். எலுமிச்சைச் சாற்றில் நிறைந்திருக்கும் ’பெக்டின்’ (pectin) எனும் (நீரில் கரையும்) மாவுச்சத்து (complex carbohydrate) உடல் எடையை வெகுவிரைவாய்க் குறைக்கும் மாய வித்தைக்காரனாய்ச் செயல்படுகின்றது.

இரவில் அதிகமாய் உணவு உண்போர் சிலருக்குக் காலையில் எழும்போது நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் முதலிய தொந்தரவுகள் இருக்கும். அவற்றை நீக்குதற்குச் சுடுநீர் கலந்த எலுமிச்சைச் சாறு அருந்துணையாகும். எலுமிச்சையிலுள்ள ஃப்ளாவனாய்டு எனும் கூட்டு வேதிப்பொருள் (Flavonoids), வயிற்றின் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த, சுடுநீரானது சீரணப்பாதையினைச் சீராக்க, வயிற்றுப் பிரச்சனைகளும் நெஞ்செரிச்சலும் சொல்லாமல் கொள்ளாமல் உடலைவிட்டு ஓட்டம்பிடிக்கும்; சுறுசுறுப்பு அங்கே இடம்பிடிக்கும்.

இவையேயன்றி சீறுநீரகக் கற்களைக் கரைப்பது, மலச்சிக்கலைத் தீர்ப்பது, சளி உள்ளிட்ட தொற்றுநோய்களை நீக்குவது போன்ற எண்ணற்ற மருத்துவப் பயன்களை அள்ளிவழங்கும் மாமருந்து எலுமிச்சை.

பொதுவாக நாம் எலுமிச்சையை ஊறுகாய் போடுவதற்கும், (எலுமிச்சை) சாதம் தயாரிப்பதற்குமே அதிகமாய்ப் பயன்படுத்துகின்றோம். இப்படிக் சுவையான வகையில் அதனை உண்பதில் தவறில்லை! ஆனால் இவ்வகைத் தயாரிப்புகளில் எண்ணெய், காரம், உப்பு போன்றவையும் கூடுதலாகச் சேர்ந்துவிடுவதால் எலுமிச்சையின் முழுப்பலனும்  நமக்குக் கிடைப்பதில்லை. எனவே அதன் முழுப்பலனும் கிடைக்கச் சாறாய் அருந்துவதே சாலச் சிறந்தது!

மருத்துவப் பயன்களேயன்றி சிறந்த அழகுசாதனப் பொருளாகவும் பயன்பட்டுவருகின்றது எலுமிச்சை. எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு தேனோ அல்லது கடலை மாவோ கலந்து முகத்தில் பூசிச் சிறிதுநேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவிவந்தால் முகப்பொலிவு கூடி, முகத்தில் முகம் பார்க்கலாம்!

சூரிய ஒளியால் தோலில் ஏற்படும் நிறமாற்றத்தைத் தடுக்கவும் (Suntan) எலுமிச்சைச் சாற்றை உபயோகிக்கலாம். தலையில் எலுமிச்சைச் சாற்றைத் தேய்த்துக் குளித்துவரப் பொடுகு பறந்தோடும்.

கறைகளைப் போக்கும் வெளுப்பானாக (bleaching agent) எலுமிச்சை விளங்குவதால் துணி துவைக்கும் சோப்புகள் தொடங்கிப் பாத்திரம் துலக்கும் சோப்புகள், நீர்மங்கள், குளியல் சோப்புகள் என அனைத்திலும் இது முக்கிய மூலப்பொருளாய்த் திகழ்கின்றது.

”உங்க பேஸ்ட்டுல எலுமிச்சையும் உப்புமிருக்கா?” என்று வீட்டுக்கே வந்து கேட்டுவிட்டுச் செல்லும் தொலைக்காட்சி பற்பசை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம்! இப்பற்பசைகளை வாங்கி நம் காசைக் கரியாக்குவதைவிட, நம் வீட்டிலேயே இருக்கும் எலுமிச்சையில் சிறிதளவு சாறெடுத்து அத்துடன் ஒரு சிட்டிகை பொடிஉப்பைச் சேர்த்துப் பல்துலக்கினால் போதும்! ’ஜொலிக்குதே பற்கள் ஜொலிக்குதே’ என்று பாடத் தொடங்கிவிடுவோம்!

இப்படி எலுமிச்சையின் மகத்துவத்தை முடிவில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்; ஆம்! எலுமிச்சை அளவில் சிறிதாயினும் ஆற்றலில் பெரிது!

உடல்நலத்தைச் சிறப்பாய்ப் பேண எலுமிச்சை மீது இச்சை கொள்ளுவோம்! நோய்களைத் துச்சமெனத் தள்ளுவோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.