Blog

  • தாகூரின் கீதங்கள் -6

     

    உனக்கது வேடிக்கை

    ajay

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    எப்படி சூனியம் ஆக்குவது

    அப்பொருளை ?

    இப்படித்தான் அர்த்தம் என்பார் சிலர் !

    அப்படி முழுவது மில்லை

    என்பாரும் உளர் !

    மீண்டும் மீண்டும் வினாவி என்னைச்

    சீண்டுவார் அவர் !

    வியப்பில்லை உனக்கு அது

    வேடிக்கைதான் ! நீ

    யாரெனச் சொல் எனக்கு ?

    ஒளிந் திருப்பது எங்கு ?

    வீணாகத் தேடி உன்னை

    விண்டு போனதென் இதயம் !

    பயணி தேர்ந் தெடுத்துச் செல்லும்

    எந்தப் பாதைக்கும்

    இடையூறு எப்போதும் நீ

    இழைக்க வேண்டுமோ ?

    முடிவாக அடையும்

    குடிசை நோக்கிச் செல்லும்

    ஊர்ப்புறப் பாதையை

    மேற்கொள் வார் குடிசை மக்கள் !

    பச்சைப் புல் மேயச் செல்லும்

    பசுக்கள் கூட்டம் !

    குடத்தில் நீர் கொண்டு வருவார்

    நூறு முறை

    அதே பாதை வழியாக

    குமரிப் பெண்டிர் !

    ************

    Original Source: A Tagore Testament,

    Translated From Bengali By Indu Dutt

    Jaico Publishing House (1989)

    121 Mahatma Gandhi Road,

    Mumbai : 400023

    *********************

    Share
  • எங்கிருந்தும் தொடங்க முடியாத தெரு!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    நேர்க்கோட்டில் வந்த ஊர்தியைக்
    குறுக்குக்கோட்டில் வைத்து
    விசாரணை செய்து கொண்டிருந்தார்கள்
    அவர்களுக்கான வசூல் வந்து சேரும் வரை
    போக்குவரத்தில் என்னிடமும் உங்களிடமும்
    கறந்த,தெரிந்த சில புள்ளிகள்!

    இத் தெருவில்
    வெற்று மதுக் குப்பிகள்
    வீசிக் கிடப்பது காண்கையில்
    ஊகிக்க முடிகிறது
    தறி கெட்டலையும் தவறணைப் பிசாசுகள்
    புகைந்தபடி நிலத்தில் கால்
    பட்டும், படாமலும் சற்றுமுன்
    காற்றையும் மாசுபடுத்திக்
    கடந்திருக்க வேண்டும் என!

    வெத்திலை, பாக்கு சாப்பிட்ட
    சில… சுண்ணாம்புகள்
    போறம்போக்கு இடம் என்ற போக்கில்
    காவி படிந்த பற்களைக் கழற்றி விட்டுப்
    போயிருந்தார்கள்!

    யாரோ ஒருத்தி
    வாசலைக் கூட்டிவந்து
    வீதிக்கு விட்டிருந்தாள்!

    அழகாய் இருந்த சுவர்
    அசிங்கமாகித் தெரிகையிலே தெரிகிறது
    கோதுமைக் கரைசலுடன்
    கட்சி ’போஸ்ட்டர்கள்’ஒட்ட
    இருவேறு கூட்டம்
    ஒன்றின் மேல் ஒன்றை ஒட்டியபடி
    இவ்வழி கடந்திருக்கின்றன என்று!

    பிச்சைக்காரன் மட்டுமல்ல,
    பஸ்ஸைத் தவறவிட்ட பயணியும் கூடப்
    படுத்துறங்கிப் பசியாறும் மடமான
    நிழல் வாகை நிழலில்
    சிற்றெறும்பின் யோசனையேனும்
    தோன்றாத ஒரு ‘பரதேசி’
    சிறுநீர் கழித்திருக்கிறான்!

    சுத்தப்படுத்துவதாயின்
    எங்கிருந்து தொடங்குவது
    என்ற கேள்வியுடன்
    முற்றுப் பெறுகிறது தெரு!

     

    Share
  • அறிவுடைமை

    -வேதா. இலங்காதிலகம்

    நாலடியார்

    அதிகாரம் 25 –  அறிவுடைமை

    நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்      naladiyar
    கணிகல மாவ தடக்கம்– பணிவில்சீர்
    மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
    கோத்திரங் கூறப் படும்.

     நளி – பெரிய,  கடல் – கடலின், தண் – குளிர்ந்த, சேர்ப்ப – கரையுடைய அரசனே  நல் கூர்ந்த – வறுமையடைந்த,  மக்கட்கு – மனிதர்க்கு, அணிகலமாவது – அணிதற்குரிய ஆபரணமாவது, அடக்கம் – அடங்கியிருத்தல், பணிவுஇல் – அடக்கமில்லாத, சீர் – தன்மையில், மாத்திரையின்றி – அளவு இன்றி வரம்பு கடந்து நடக்குமேல் – ஒழுகுவானாகில்,  வாழும் . அத்தகையவன் வாழும் ஊர் – ஊரினரால், கோத்திரம் – தன் குலம், கூறப்படும் – இழிந்து சொல்லப்படும்.  என்றவாறு…

    என் வரிகள்:

    மகா சமுத்திரத்தின் தண்மை
    மணற்தரையின் அதிபதியாம் மன்னனே!
    கீழ்ப்படியும் குணம் பொருளில்
    கீழ்நிலையாளரை வடிவாக்கும் நகை
    கீழ்ப்படிதலற்று எல்லையின்றி மனிதன்
    இயங்கினால் தன் சொந்தக்
    குடியாளராலேயே இவன் குலம்
    இழித்துக் கூறும் நிலையடையும்

     

    Share
  • உலாப்பேசி !

    -பா.ராஜசேகர்

    தென்றலும்
    பறவையும்
    மேகமும்
    தூது அப்போ!

    காலமெல்லாம்
    மாறிப்போச்சு
    கைபேசி
    உதவலாச்சு!

    மின் அலைகள்
    உணர்வலையாய்
    நுண்ணலைகள்
    தொடர்பலையாய்க்
    கையடக்கக்
    கைபேசி
    உலகாளும்
    அதிசயமே !

    படம் பிடிக்கப்
    படம் பார்க்க
    வலைத்தளங்கள்
    நீ பார்க்க!

    பொழுது போகும்
    விளையாட்டு
    பேசிப்பேசி
    பொழுதுபோச்சு!

    நொடிப்பொழுதில்
    உலகமேயுன்
    கை விரலில்
    கண்ணசைப்பில்!

    உயிர் பறிக்கும்
    மனங்கெடுக்கும்
    தீங்கிழைக்கும்
    மெய்ம்மறந்து
    அதில் நுழைந்தால்!

    விஞ்ஞானம்
    அவசியமே
    நன்மையோடு
    நிறுத்திக்கொண்டால் !?

     

    Share
  • அம்மா!

    -ராதா மரியரத்தினம்

    எம் பேரு நெனவில்ல​
    ஊரு நெனவில்ல
    தேரடி வீதியில் நின்ற​ என்னைப்               amma
    யார் பெத்த பிள்ளையோ
    தெம்பாக் கைபிடித்துக் கூட்டி வந்து
    காப்பகத்தில் சேர்த்து விட்டான்!
    அந்தப் பிள்ளை முகம் தேடுகிறேன்
    அதுவும் மறந்து போச்சு!

    உண்ண​ உந்துதல் இல்ல​
    உவப்பா சமைப்பாரும் யாருமில்ல​
    செத்த​  நாக்குக்குச்
    சுவையென்ன​ ஒரு கேடா?
    பொத்தி வளர்த்தேனே
    பொசுங்காம​ வெய்யிலில​
    சக்தியெல்லாம் திரட்டி
    உழைப்பையும் தந்தேனே!

    அப்பன் இல்லாப் பிள்ளையின்னு
    அடுத்தவர் சொல்லாம​
    அடுக்கடுக்காய்ப் படிக்க​ வைச்சேன்
    ஆளாக்கிப் பாத்துப்புட்டேன்
    ஒம் முகமும் ஒம் பேரும்
    நல்லா நெனவிருக்கு
    என் பேரன் முகம் பார்க்க​
    ஆசை கோடி இருக்கு!

    கண்ணை மூடினாலும்
    ஒன் நினைப்பு கொல்லுதய்யா நீ
    தும்மையிலே என்றாலும்
    இந்த​ ஆத்தா ஞாபகம் வரலையா?
    பாத்து நடந்துக்கப்பா!
    ஆத்தா கட்டை வேகிறப்போ
    கொள்ளிப் போடவேனும் வருவியா?

    Share
  • காலம் (6)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x1501

    அரியும் சிவனும் அறிவி லொருவர் ;
    தெரிந்தும் அடிமனம் தேடும் பிரிவை !
    கருணை இருந்தால் கடவுள் உடனே
    திருமுகம் காட்டும் தினம். (51) 19.02.2015

    கனிவு , பணிவு , கவனச் சிறப்பு ,
    பனிபோல் தெளிவாய்ப் பழகு மினிமை ,
    உதவும் குணத்தா(ல்) உயர்ந்த பதவி
    பதமாய் அமைதல் பலம். (52) 20.02.2015

    கருவில் இருந்து கடந்து மலர்ந்து
    உருவில் எழிலாய் உலகில் இருக்க
    உயிரும் உடலின் உதவி யுடனே
    கயிற்றில் நடக்கும் கதை. (53) 21.02.2015

    ஆதிமுதற் சொல்லே அமிர்தமாம் “ஓம்”மென
    ஆதிமறை கூறும் ! அணுவுக்குள் நாதியாய்
    ஆண்டவன் வாழ்வதை ஆத்திகம் நம்புமாம் !
    தூண்டிடத் தோன்றும் சுடர்.. (54) 22.02.2015

    அணிலை அறிவேன் ! அழகாகத் தாவும் !
    துணிவா யிலையின் துளியைக் குனிந்து
    கடித்துண்ணும் ! ஓடும் ! கவலை அறியாத்
    துடிப்பே அதற்குத் துணை. (55) 23.02.2015

    விதையை எடுத்து விதைத்தேன் ; நடந்தேன் ;
    அதையே மறந்தேன் ; அதன்பின் எதையோ
    நினைத்தே மரநிழல் நின்றேன் ! பலனோ
    வினையை விதைத்த விதி. (56) 24.02.2015

    உறவின் உயிரே உதவிடும் எண்ணச்
    சிறப்பாம் ; உடன்பிறப்பு சேர்தல் அறமாம் ;
    தினமும் செடிவேர்குச் சேர்க்கிற தண்ணீர்
    மனதை உயர்த்தும் மது. (57) 25.02.2015

    காலையும் மாலையும் காணும் கதிரவன்
    மூலையில் தூங்காமல் மூளையை வேலைக்குத்
    தூண்டுகிறான் ; இன்பத் துடிப்போ டியன்கவே
    தீண்டுகிறான் என்னைத் தினம். (58) 26.02.2015

    மனைவியும் மக்களும் மாறாத நட்பும்
    வினைப்பய னென்பர் ; விதியை நினையா
    இனிய உறவும் , எளியதோர் வாழ்வும்
    பனியிலும் தூயதே பார். (59) 27.02.2015

    மெய்மறக்கும் பாட்டும் , மெதுவாய்ச் சிரிக்கின்ற
    பொய்யிலாப் பிள்ளைப் பொலிவான மெய்யைக்கை
    தொட்டுத் தடவி துயர்மறக்கும் பேருமே
    விட்டு விலகா “திரு”. (60) 28.02.2015
    a

    Share
  • இரும்பு இயக்குநர்!

    -இரா.சந்தோஷ்குமார், திருப்பூர்

    வளைந்தும் நெளிந்தும்
    நீளும் காட்சியாவும்
    தொடர் கவிதையாய்…
    தாளம் தப்பாத
    தட தடவொலியும்
    இன்னிசைத்தேவனின்
    இனிய மெட்டில் பூத்த
    அபூர்வ ராகமாய்..!

    கதை
    திரைக்கதை
    இசை
    என
    எதை எதையோ
    என் சிந்தனையரங்கில்
    வேகமாய்த் திரையிடுகிறது
    ஜன்னலோரத்தில் நான்
    மெளனமாய்ப் பயணிக்கும்
    இந்தக் கோவை எக்ஸ்பிரஸ்!

     

    Share
  • ” அவன், அது , ஆத்மா” (13)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 13

    “ஆயிரங்கால் மண்டபமும், ஐயாத்துரை வாத்தியாரும்”

    கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையின் படித்துறைக்கு மிக அருகிலேயே ஆயிரங்கால் மண்டபம் ஒன்று இருக்கிறது. அதன் மேற்குப் பக்கத்தில், “ஸித்தி” அடைந்த சன்யாசிகளின் அதிஷ்டானகள் (சமாதிகள்) நிறைய இன்றும் இருக்கின்றன. இந்த ஆயிரங்கால் மண்டபத்தில்தான் ஒரு காலத்தில் “ஸமிஸ்கிருத கல்லூரி” சிறப்பாக நடந்து வந்தது என்றும், சரித்திர ஆராய்ச்சியாளர் நீலகண்ட சாஸ்திரி போன்ற அறிஞர்களும் இந்தக் கல்லூரியில் கற்றதாகவும் அவனுக்கு அப்பா அவனிடம் கூறுவார். இரவு நேரங்களில் “ஸமிஸ்கிருத நாடகங்கள், சொற்பொழிவுகள் நடைபெறும் என்றும், ப்ரும்மஸ்ரீ முத்துராமலிங்க அண்ணாவி (M.R. ஆதிவராகன் அவர்களின் தந்தை) கல்லூரியின் நிர்வாகியாக இருந்தார் என்றும் அவனுக்கு அப்பா அவனிடம் கூறுவார்.

    சங்கர ஜயந்தி உத்சவம் வெகு விமர்சையாக ஐந்து நாட்கள் இந்த மண்டபத்தில் தான் நடந்து வந்தது. அந்த நாட்களில் அவனை அவனுக்குத் தாத்தாவும், அப்பாவும் அங்கு தவறாமல் அழைத்துச் சென்றதும், வேத பண்டிதர்களின் வேதகோஷம் அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்ததையும், பூஜை, தீபாராதனைகள் முடிந்தவுடன் மகாப்பிரசாதமாக அன்னதானத்தில் கிராம மகாஜனங்கள் கலந்து கொண்டு மகிழ்ந்ததையும், வீட்டிற்குத் திரும்பும் பொழுது அந்தக் கோடை வெயிலின் சூடு அவன் கால்களைத் தாக்காமல் இருப்பதற்காக அவனுக்கு அப்பா அவனைத் தனது இரு தோள்களின் மீது அமர்த்திக்கொண்டு, தான் செருப்பணியாத கால்களுடன் நடையும் ஓட்டமுமாக வந்ததெல்லாம் அவனுக்கு இன்றும் குளிர்ந்த நினைவுகளாகத்தான் இருக்கின்றன.

    அந்த ஆயிரங்கால் மண்டபத்துள் வலம்புரி விநாயகர் , ஸ்ரீ காசிவிஸ்வநாதர், ஸ்ரீ விசாலாக்ஷி, ஸ்ரீ சங்கரர் சந்நிதிகள் இருந்தன. அதற்கு நித்யபடி பூஜையை பிரும்மஸ்ரீ ஐயாத்துரை வாத்தியார் செய்து வந்தார். அவர் ஒரு நல்ல வைதீகர். தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர். மிகச் சாதாரணக் குடும்பத்தை சேர்ந்தவர். வடக்கு மாடத் தெருவில் உள்ள பஜனை மடத்திற்கு எதிரில் ஒரு சிறிய வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.

    ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் அவனுக்கு அம்மா, ஒரு சிறிய பித்தளை அடுக்குச் சட்டியில் அரைப்படி பச்சரிசியும், சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் பாசிப்பருப்பும், கொஞ்சம் நெய்யும், கொஞ்சம் மண்டை வெல்லமும் வைத்து ஒரு காகிதத்தால் நன்கு மூடி, அதன் மீது பழம், பாக்கு, வெற்றிலையுடன் தட்சிணையாக “ஒரு ரூபாயும்” வைத்து அவனிடமோ அல்லது அவனது அக்கா பாலாவிடமோ தந்து ஐயாத்துரை வாத்தியாராத்தில் கொண்டுக் கொடுக்கச் சொல்வாள். அதில்தான் பிரதோஷ பூஜைக்காக சிவனுக்கு சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்யத்தை வீட்டில் செய்து கொண்டு ஆயிரங்கால் மண்டபத்துக்கு மாலை நான்கு மணிக்கெல்லாம் ஐயாத்துரை வாத்தியார் சென்று விடுவார். பூஜை முடித்து மாலை ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் ஒருகையில் சர்கரைப் பொங்கல் பாத்திரமும், ஒருகையில் விபூதி, குங்குமப் பிரசாதமுமாக அவர் அவனது வீட்டிற்குள் நுழைவதை, தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் அவன் பார்த்து விட்டு ஓடியே வீட்டிற்குள் வருவான். அவன் வரும் வேகத்தைப் பார்த்து,” டேய் கண்ணா….மொதல்ல கையையும் காலையும் அலம்பிண்டு அப்பறமா எங்கிட்ட வா….” என்று ஐயாத்துரை வாத்தியார் அவனிடம் சொல்வார். அவருக்கு அவன் “சக்கரைப் பொங்கலுக்காகத்தான்” இப்படி ஓடி வருகிறான் என்று நன்றாகத் தெரியும். அந்தச் சர்கரைப் பொங்கலுக்கேன்றே ஒரு தனி ருசி உண்டு. அவன் வந்தவுடன் அவனுக்கு வீபூதி இடுவார். ஒரு சிறிய பாத்திரத்தில் சக்கரைப் பொங்கலை எடுத்து வைப்பார். அதன் பிறகு அவனது வலது கையில் கொஞ்சம் சர்கரைப் பொங்கலைத் தந்து,” ஒசத்தி வாயில போட்டுக்கோ…எச்சிப்பண்ணாதே” என்பார். “பெரியவரை நமஸ்காரம்” பண்ணிக்கோ என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். அவனும் செய்வான். அகஸ்தியரை அவனுக்குத் தெரியாது. குட்டையான, உடல்முழுவதும் விபூதி அணிந்த, பஞ்சகச்ச வேஷ்டியும், இடுப்பில் இறுக்கி கட்டிய அங்கவஸ்திரமும் , கைகளில் பிரசாதப் பையுமாக நடந்துவரும் “ஐயாத்துரை வாத்தியாரின் தோற்றத்தில்தான் “அகஸ்தியரை” அவன் கண்டான். இன்றும் பிரதோஷ வேளைகளில் அவன் சிவனோடு ஐயாத்துரை வாத்தியாரையும் நினைத்துக் கொள்ளுகின்றான்.

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரைப் பகுதியில் இருக்கும் சில கோவில்களில் தொடர் திருட்டு நடந்தது. அப்பொழுது இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கோவில் சிலைகளைத் திருடர்கள் உடைத்துப் போட்டனர். சில நாட்கள் அங்கு பூஜை நடந்தது. உடைந்த சிலைகளைப் பார்த்து ஐயாத்துரை வாத்தியார் கண்ணீர் விட்டார். மிகுந்த வேதனையுடன் ஒருநாள் அவனுக்கு அப்பாவிடம்,”சுந்தரம்..நல்ல அழகான வலம்புரி விநாயகரோடு தும்பிக்கையை ஓடைச்சுட்டானே” என்று தழுதழுத்த குரலில், கண்களில் நீர் முட்ட ஐயாத்துரை வாத்தியார் சொன்ன வார்த்தையால் அருகில் நின்ற அவனது மனதும் வலித்தது.

    மிகவும் பாழடைந்து விட்ட அந்த ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியைச் சீர் செய்து “அண்ணாமலை” என்ற சின்னத்திரைத் தொடருக்கான படப்பிடிப்பும் நடந்தது. சமீபத்தில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், ரங்க்வாத்யாரின் மகன் “விஸ்வநாதனின்” முயற்சியுடன், கரந்தையார்பாளையம் பிராமண சமூகத்தின் இடமான அந்த “ஆயிரங்கால் மண்டபத்தை”த் தூய்மை செய்துள்ளனர். அதில் ஒரு பகுதியை “நீத்தார் கடன்” செய்யும் இடமாகப் பயன்படும் வகையில் சீர்செயதுள்ளதை அவன் சமீபத்தில் நேரில் பார்த்து மனம் ஆறுதல் கொண்டான். நல்ல செயல்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும், அது ஒருநாள், பாறைக்கு இடுக்கிலே விழுந்த அசுர வித்தாக அனைத்தையும் பிளந்து கொண்டு வெளிவரத்தான் செய்யும்.

    தேரோட்டி “கிருஷ்ணையர்”

    amv1அப்படி ஒரு ஆல, அசுர வித்துத்தான் “GLAD” கிருஷ்ண ஐயர். சந்திரா அப்பளம் டெப்போ என்ற ஒரு அப்பளக் கடையிலே அவரும் அவரது சகோதரரும் அப்பளம் எண்ணும் தொழிலாளியாக வேலைபார்த்து, பின்னாளில் “கணபதி லிங்கம் அப்பளம் டெப்போ” (GLAD) என்ற பெயரில் தன் மூத்த சகோதரர் ராமலிங்கம் ஐயருடன் சொந்தமாக அப்பளக் தொழிற்சாலையைத் துவங்கி, பலகாலம் அதை வெற்றிகரமாகச் செய்து வந்தார். அவருடைய அப்பளக் கடையில்தான் அவனுக்கு அம்மா வழித் தாத்தா சுப்பிரமணிய ஐயர் “கணக்கராக” வேலைபார்த்து வந்தார். இப்பவும் கிருஷ்ணையரின் குடும்பத்தினர் “கணக்கையர்” பேரன் என்றுதான் அவனை அறிமுகம் செய்து வைப்பார்கள்.

    கிருஷ்ணையருக்கு டுண்டிவிநாயகர் மீதும், ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள்மீதும், சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யாள் மீதும் அபார நம்பிக்கை. தன்னை வளர்த்த கிராமத்தின் நன்மைக்கு அவர் செய்த தொண்டுகள் அநேகம். அவன் நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடைபெற்ற “டுண்டிவிநாயகர்” கோவில் கும்பாபிஷேகத்திற்கு “GLAD” குடும்பத்தினர் சிறப்பாகத் திருப்பணிகளைச் செய்தனர். அப்பொழுது அரை டிராயரைப் போட்டுக் கொண்டு அவன் அந்தக் கோவிலைச் சுற்றி நண்பர்களோடு விளையாடியதும், கிருஷ்ணையர் அவனது இரண்டு கைகளிலும் சக்கரைப் பொங்கலையும், பஞ்சாமிருதத்தையும் இரண்டு பெரிய தொன்னைகளில் தந்து, “போருமோடா” என்று கேட்ட அன்பும் எத்தனை சுகமான நினைவுகள். அதேபோல “ஸ்ரீ ஆதிவராகர் கோவில்” தேர்த் திருப்பணிக்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், இளைஞர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு பாடம்.

    ather
    ஸ்ரீ ஆதிவராகர் கோவில் தேர், நூறாண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையானது. அதன் நான்கு வெளிச் சக்கரங்களும், உட்புறமுள்ள இரண்டு சக்கரங்களும் ஒவ்வொரு வருடத் தேரோட்டத்தின் பொழுதும் ஒவ்வொரு பலகையாக ஓட்டுப் போட்டே ஒட்டி வந்தனர். தேரின் கனம் அதிகமென சில தட்டுகள் குறைக்கப் பட்டன. தேர்ச் சிற்பங்கள் எல்லாம் சிதிலம் அடைந்தும் கயவர்களால் களவாடப் பட்டும், தேருக்கடியில் எப்பொழுதும் பன்றிக் கூட்டத்தின் கழிவுகளுமாகத் தேரைப் பார்க்கவே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். நம்ம ஊர்த்தேருக்கும் நல்ல நாள் வராதா. நம்ம பெருமாளுக்கு நல்ல தேர் வேண்டாமா? என்று தவித்த எத்தனயோ உள்ளங்களில் கிருஷ்ணையரின் உள்ளமும் ஒன்று. அவனது உள்ளமும் ஒன்று.

    அவன் அந்த ஏக்கத்தை “தேர்” என்ற சிறுகதையாக எழுதி, “கோமல் சாமிநாதனின்” வேண்டுகோளுக்கிணங்க அவரை ஆசிரியராகக் கொண்ட “சுபமங்களா” என்ற பத்திரிகைக்கு அனுப்பினான். அது 1993ம் வருடம் “மே” மாத இதழில் வெளியானது. அதைப் படித்துப் பாராட்டிய எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் “யானைச் சவாரி” என்ற பெயரில் தான் தொகுத்த சிறந்த சிறுகதைகள் தொகுதியில் சேர்த்து,” ஏய்..விஸ்வநாதா…உன்னோட “தேர்” சிறுகதைய “யானைச் சவாரி”த் தொகுப்புல சேர்த்திருக்கேன்டா” என்று நட்போடு சொன்னது அவனுக்குப் பெருமையாகவே இருந்தது.

    கிருஷ்ணையர் தன் சிந்தனையைச் செயலாக்க விரும்பி அவரது கிராமத்து நண்பர்களுடன், முக்கியமாக ஆசிரியர் குருசாமி, கல்கத்தா கண்ணன் (லெஷ்மணவாத்தியாரின் மாப்பிள்ளை), “புரூக்பாண்டு” கோபாலகிருஷ்ணன், V.G.R(v.g.ramachandran) என்ற ராமன் போன்ற நண்பர்களின் துணையுடன் ஒரு நல்ல நாளில் தேர்த் திருப்பணிக்கான வேலைகளை அந்தப் பெருமாளை நம்பியே தொடங்கினார்.

    கிராமத்துப் பெரியவர்களிடமும், வெளியூர்களில் உள்ள பக்தர்களிடமும் திருப்பணிக்கான காணிக்கைகளைப் பெற்றுவரத் தீர்மானித்து விரைவிலேயே செயல்படத் துவங்கினார். தேர்த்திருப்பணி குறித்த கடிதமும், பெற்றுக் கொண்ட பணத்திற்கான ரசீது புத்தகங்களும் தயார்செய்தனர். தங்களுது முயற்சியைத் திருவினையாக்க இறைவனையும், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளையும் வேண்டிக் கொண்டு “ரத வீதியில்” இறங்கினர். சென்ற இடமெல்லாம் பெருமாளுக்குக் காணிக்கை தடையின்றிக் கிடைத்தது. சென்னை, மும்பை, கல்கத்தா, டெல்லி என்று ஊரூராகச் சென்று பக்தர்களின் ஆதரவைப் பெற்றனர்.

    இதற்குள் 1999ம் வருடம் கிருஷ்ணையர் இருதய வலியால் பாதிக்கப்பட்டு சென்னை, மந்தைவெளியில் உள்ள BSS மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த செய்தி அவனுக்குக் கிடைத்தது. அவன் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தான். உடல் நலிவுற்றிருந்தாலும் மனம் நல்ல திடமாகவே இருந்தது. “டேய்..விஸ்வநாதா..ஸ்ருங்கேரிக்குப் போனயா..” என்று கேட்டு விட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல், “நம்ம ஆச்சார்யாள் எல்லாம் நன்னா நடக்கும்னு சொல்லிருக்கார்…அதனால எனக்கு உடம்பு சரியாயிடும்..தேர் வேலைகளச் சீக்கிரம் முடிச்சு அடுத்த வருஷம் தேர ஓட்டிடணும் …நான் இவா கூட திருச்சிக்குப் போய் “BHEL”ஆபீஸ்ல தேர்ச் சக்கரத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யணும்…இந்தா நீயும் ஒன்னால முடிஞ்சத வசூல் பண்ணிக் குடு” என்று ஒரு ரசீதுப் புத்தகத்தை அவனிடம் தந்தார். என்ன ஒரு உற்சாகம் அவருக்கு. அவன் அவருக்காக பிராத்தித்துக் கொண்டான். அவர் குணமாகி வீட்டிற்கு வந்து சில தினங்களிலேயே தேர்த் திருப்பணி வேலைகளுக்காகப் புறப்பட்டுவிட்டார். அலுவலக விடுமுறை நாளில் அவன் ஊருக்குச் சென்றிருந்தான். அன்று இரவில் அவன் “தேர்” வேலைகளைப் பார்த்துவரத் தேரடிக்குச் சென்றான். அங்கு ஒரு பெரிய மரத் திண்டில் கிருஷ்ணையர் உட்காந்திருந்தார். பக்கத்தில் குருசாமி சார் நின்று கொண்டிருந்தார். சில நண்பர்களும் இருந்தனர். “என்ன மாமா…எதுக்கு இப்படி ராத்திரிக்கும் வந்து ஒக்காந்திருக்கேளே…கொஞ்சம் தூங்கிட்டு வாங்கோ ” என்றவனிடம்,” இத நல்ல படியா முடிச்சு சுவாமி தேரோட்டம் முடிஞ்சாத்தான் தூக்கமெல்லாம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கிருஷ்ணையர்.

    அவரது ஆசையை பெருமாளும், ஆச்சார்யாளும் நிறைவேற்றி வைத்தனர். தேர் மிக அழகாக அமைந்து விட்டது. அவன் எப்படி ஒரு தேரை பெருமாளுக்குக் கனவு கண்டானோ அதே போல ரொம்ப அழகான தேரை பெருமாள் “கிருஷ்ணையர்” மூலமாகச் செய்து கொண்டார். 2000மாம் ஆண்டு சித்திராப் பௌர்ணமிக்கு முந்தய தினம் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளின் ப்ரும்மோஸ்ஸவத் “தேரோட்டம்” வெகு விமர்சையாக நடந்தது. பெருமாள் தேரில் அமர்ந்து அசைந்தசைத்து வரும் அழகை “கிருஷ்ணையரும்” பக்தர்களும் அணு அணுவாக ரசித்து மகிழ்தனர். அவனுக்கு ஆனந்தம் கரைபுரண்டோடியது. பெருமாள் சீக்கிரமே நிலையத்திற்கு வந்து விட்டார். நிலையத்திற்கு வந்ததும் “கிருஷ்ணையர்” சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து பெருமாளை வணங்கினார். எழுந்து நின்று பெருமாளை கண்ணீர்மல்க கைகூப்பினார். பக்தர்கள் கிருஷ்ணையரைப் பாராட்டினர். அவர் பெருமாளைக் கைகாட்டினார். ஊருக்கு உழைத்தல் யோகம் என்று மஹாகவி பாரதியார் சொன்னது இதைத்தானே.

    தந்த வேலையை சரியாக முடித்ததனால் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளே, ஸ்ரீமான் கிருஷ்ணையரை 2000ம் வருடம் புரட்டாசி மாதம் சரஸ்வதி பூஜை தினத்தன்று தன்னோடு வைகுண்டத்திற்கு அழைத்துக் கொண்டார்.

    (21.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    படங்கள் உதவிக்கு நன்றி :  அஸ்வின்,  K.V,. அன்னபூர்ணா

    Share
  • கவிதை

    உயிர் நண்பன்

    ………………………

    பள்ளியிலே சேர்ந்து படித்ததுமில்லை

    பனங்காட்டிலே சேர்ந்து மேய்ததுமில்லை

    பாலைவனம் மேய்கையிலே

    பால் நிலவு ஒளியினிலே

    பார்வையில் பட்ட மின்னலடா

    பாரதிதாசனின் கவிதைப் புத்தகமடா

    பக்கத்தில் நீ இல்லையென்றால்

    படபடக்கும் என் இதயமடா

    பரதேசிபோல வாழ்ந்தேனடா

    பரிதாபப்பட்ட அந்த இறைவனோ

    பரிசாக உன்னைத் தந்தானடா

     

    #றியாஸ் முஹமட்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    BRINGING THE KINGDOM OF HEAVEN TO EARTH ….

    ”வானந் தனிலேறி வைகுண்டம் வையமுற
    கோநந்த லாலா குதித்திடும், -ஆனந்த
    நர்த்தனம் செய்தல் நமக்காய், இவன்வந்த
    வர்த்தகம் பூமிவிடு விப்பு” ….கிரேசி மோகன்….

    Share
  • திருமண (நாள்) வாழ்த்து!

      என் தோழி பவள சங்கரி திருநாவுக்கரசுக்கு

     DSCN0926காலைச் சுடரொளி கண்களில் படர

    மாலை வான் நிறம் வாங்கிய வதனம் 

    முளரி அரும்புகள் முகிழ்த்த விழிகளில்
    ஒளிரும் புதிய உணர்வுகள் பூத்து
    வாழ்விலோர் திருநாள் கண்ட
    மகிழ்ச்சியில் மனந்தான் பூத்து
    செந்திரு போல் விளங்கும்
    செந்தமிழ் (பவள சங்கரி ) பெண்மை
    மாண்புறும் பெருநாள் உந்தன்
    மணநாளின் நினைவு நாளில்
    (கலைமகள் ஹிதாயாவின் வாழ்தலையை )
    வானத்தின் மழைத்தூ வலாய்
    குளிர்தமிழ்க் கவிதை யாலே
    பெய்திட வந்தேன் வளம்
    பெருக நும் வாழ்வின் வயல்

    வாழ்க்கைத் துணையை வரித்து இன்றென்
    நோக்கினில் உயர்ந்த பாச தோழியே பவள சங்கரி
    தீக்குள் கிடப்பினும் சுடர்விடும் பொன்போல்
    வாழ்கையில் என்றும் மாசின்றி வாழ்க…!!

    மாசணு காத மனத்துள் வாய்மை
    தேசு படர தெளிந்த நீ ரோடையின்
    ஓசையைப் போலும் உண்மையின் நாதம்
    ஆசு கவியாய் அகத்தினில் பொங்கி
    வீசும் தென்றலில் மேதினி பரவ…..!!!

    அண்ணன் (திருநாவுக்கரசு) கருணை மனத்தால்
    (இறைவன் வரமாய் ) தந்த மருமகள்
    இதயத்தை மனைவியின் இருப்பிட மாக்கிய
    (பவள சங்கரி) இன்றுன் வாழ்வின் மண நாளை நினைத்து
    எதிர் வரும் காலம் யாவிலும் துணையாய்,
    பிரிக்க இயலா பிணைப்பாய்,இறைவன்
    பேரரு ளாலே பிணைத்த வாழ்க்கைத்
    தலைவன் திருநாவுக்கரடசோடு சார்ந்து இல்லற
    வாழ்வின் தலைவியாய் வரும் வரும் நாளெலாம்
    வாழ்வாய் உனக்கென வரையிலா வாழ்த்துக்கள்…

    “இல்லறப் பூங்கா எழிலுறும் வண்ணம்
    எழிலாய் அமைந்த தோழி பவள சங்கரி அதன்
    சில் லெனும் நீரே,நீரில் மலர்ந்த
    செவ்வர விந்த மலரே,மலரின்
    உள்ளிருந் துளத்தின் உணர்விற் கலந்த
    உணர்வே,சுகந்த மணமே,கரும்பின்
    வெல்லப் பாகே,பாகுடைச் சுவையே…!
    மேலாம் நிதியே! என்றெலாம் போற்றும் …

    சங்க காலத் தமிழிலக் கியத்தின்
    மங்கா கவிதையின் சுவை நயம் நிறைக…!
    போதலர் தாமரைப் பொய்கையி லூறும்
    சீதள மிகும் இன் சுவை நீர் போலும்
    தீ திலா நெஞ்சில் சுரந்திடும் அன்பு நீர்க்
    வாழ்க்கையில் இருவர் கலந்தொரு மித்து,

    பொய்ப்பட பேசும் புவியின் கயமைகள்
    மெய்ப்படும் வாய்மை மேவிடும் வாழ்வினால்
    பொய்ப்பட ஆக புனித இல்லறத்தின்
    மெய்ப்பொருள் தேர்ந்து விரிகதிர் சுடர்களாய்

    கோபுரம் போலு யர்ந்த
    கொள்கையும்,அகன்ற வான் போல்
    ஆதுரம் மிகு குணமும்
    ஆழி போல் அழ்ந்த (அ)றிவும்
    சீருற பெற்று வாழ
    திகழ் பரம் பொருளாம் வல்ல
    இறைவனின் நெறிகள் பேணி
    சுகம் பெற வாழ்த்துகின்றேன்….!

    “மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை…”

    “பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
    திண்மையுண்டாகப் பெறின் “என வள்ளுவன்
    தீட்டிய குறளோ வியம் போல் வீட்டில்
    ஏற்றிய தீபம் போல் இருள் கடிந் தொளிர்வாய்..,.!

    பெண்ணின் பெருமையெலாம்
    பேசும் திருக்குறளின்
    நுண்ணரிய கருத்தெல்லாம்
    நுணுகிச் சுவைத்து நலம்
    பண்ணி ஆயிரங் காலப்
    பயிராய் தலைத்திடுவீர்…!

    குழலினில் யாழினில் எழுந்திடும் இசையிலும்
    கோடி இன்பம் கூட்டும் மழலை
    மொழிகளின் இனிமையும்
    செவிகளின் நிறைய….!
    உள்ளங்கள் ஒன்றாய் உணர்வுகள் ஒன்றாய்
    இன்பமும் துன்பமும் ஒருவருக் கன்றி
    இருவர்க் காம் எனும் இயல்பின ராகி….

    நீரோடு கயல்பிரி யாதது போல்
    நிலவொடுஒளிபிரி யாதது போல்
    காரோடு குளிர்பிரி யாதது போல்
    கடலிடை அலைபிரி யாதது போல்

    நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
    தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
    பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
    பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
    என்றும் – தொடந்து வாழ்க !

    “செந்தமிழ் கவிதையாய்
    சிறப்புடன் வாழ வாழ்தும் உங்களன்புத் தோழி

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share
  • சிகரம் நோக்கி … (5)

    சுரேஜமீ

    peak11

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    வானம் மாறவில்லை; வான்
    மதியும் மீனும் கடல் காற்றும்
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை!

    மனிதன் மாறிவிட்டான்!! – கண்ணதாசன்

    கவிஞனின் சிந்தனைத் தெளிவு, கற்றவர் அறிந்திட்டால், வாழும் மண்ணே சொர்க்கம் எனலாம். அறிய மறுக்கிறோமா அல்ல தன் தேவை எதுவரினும், தரணியைக் கெடுத்தேனும் பெற்றிட எண்ணும் அறியாமை நிழல் நம்மைத் தடுக்கிறதா? விடை சொல்ல மறுக்கும் ஒவ்வொரு கணமும், இப்புவியில் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சீற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

    இதுவரை நாம்

    சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இப்புவியின் இருப்பைக் கெடுக்கும் இயற்கையின் தலையாய பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அலசுவதில், முதல் நான்கு நிலைகளாக,

    1. மக்கள் தொகை
    2. காலநிலை மாறுபாடுகள்
    3. பல்லுயிர்ப் பெருக்கங்களின் இழப்புகள்
    4. வேதிப்பொருட்களின் சுழற்சி

    பற்றி சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம். மற்ற காரணிகளைப் பற்றி சுருக்கமாக இந்தக் கட்டுரையில், உங்கள் சிந்தனைக்குச் சில செய்திகளை இட்டுச் செல்ல விரும்புகிறேன்.

    5. தண்ணீரின் தேவை

    இந்த உலகம் மூன்றில் ஒரு பங்கு நீரால் சூழப்பட்டு இருந்தாலும், மக்களுக்குத் தேவையான சுத்தமான அல்லது சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒன்றும் வியப்பான செய்தி அல்ல. உலக ஆராய்ச்சி வல்லுநர்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன தெரியுமா? உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதும், இதே நிலை நீடித்தால், மிகக் கடுமையான விளைவுகளைச் சந்தித்து, மூன்றில் இரண்டு பங்கு மக்கள் குடிநீருக்காக தன்னை வருத்தும் நிலையும், அது சார்ந்த சமூகக் குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

    நண்பர்களே, இது ஏதோ படித்துவிட்டு நகர்ந்து செல்லக் கூடிய செய்தி அல்ல! சற்று யோசியுங்கள். என்றாவது எதிர்பார்த்து இருப்போமா நாம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் காலத்தை? உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? வளைகுடா நாடுகளில் குடிநீரின் விலை திரவ எரிபொருளை விட (Petrol) அதிகம் என்பது!

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் ஒரு குறளில் தண்ணீரின் இன்றியமையாமையை இப்படிக் கூறுகிறான்!

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை!

    விவசாயிகள் உணவுப் பொருள் உற்பத்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு நல்ல உணவாகவும் பயன்படுகிறது வான் மழை என்று சொன்னால், அதை நாம் சிறப்பாகச் சேமிக்க வேண்டாமா? இதன் உட்பொருளே, நாம் நீரைச் சேமிக்க வேண்டும் என்பதுதான்!

    வான்மழை நமக்கு மட்டுமல்ல! புவியில் உருவாகும் அனைத்து உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கும் இன்றியமையாதது என்று சொன்னால், நாம் இனி ஒரு கணம் கூட மரங்களை வெட்டுவதற்கும்,, நீர்நிலைகளை மூடுவதற்கும், இயற்கையை அழிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்து, குறைந்த பட்சம், இருக்கும் இயறகையைக் காப்பாற்றி, நீரின் அவசியத்தையும், அதை எப்படிச் சேமிப்பது என்பதோடு மட்டும் நின்று விடாமல், உபயோகிக்கப் பட்ட கழிவு நீரைக்கூட, தாவரங்களுக்குச் சென்றடையும் வகையில் செய்யவேண்டும்.

    முடிந்த வரை ஒவ்வொரு மனிதனும், எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் மரம் நட்டு, பாதுகாத்து, வான்மழை செழிக்க வகை செய்ய வேண்டும்!

    6. கடல்நீர் அமிலமயமாதல்

    அபரிமிதமான தொழிற்சாலைகளின் வளர்ச்சியும், அதன் விளைவாக வெளியாகும் கரியமில வாயுவின் அதிகப்படியான உற்பத்தியும், கடல்வாழ் உயிரினங்களைக் கிட்டத்தட்ட அதன் அரிச்சுவடு கூட இல்லாமல், அழித்திடும் நிலையை உருவாக்கி இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு இணையாக அதன் தேவைகளை நிறைவு செய்வதற்கு, தொழிற்சாலைகள் தேவை என்பதில் இரு கருத்து இல்லை. ஆனால், அவைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான சிந்தனை தேவை என்பதையும் நாம் அறிய வேண்டும்.

    குறிப்பாக, கரியமில வாயுவின் 25% கடலில் கலப்பதாகவும், அதன் காரணமாக ஏற்படும் அமிலங்கள், கடந்த 250 வருடங்களில் சுமார் 30% கடற்பரப்பில் அமிலத் தன்மையை உருவாக்கி இருக்கிறதென்றும், இன்னும் நூறு வருடங்களில், இது ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    7. மாசு படிதல் (Pollution)

    ஒரு நல்ல வெள்ளை நிறக் கைக்குட்டையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு அருகில் இருக்கும் சாலையில், ஒரு இரண்டு நிமிடம் நடந்து செல்லுங்கள். அதன்பின்னர், உங்கள் முகத்தைக் கைக்குட்டையால் துடையுங்கள். இப்போது, கைக்குட்டையின் நிறத்தைப் பாருங்கள். என்ன புரிகிறதா? நிறம் மாறி இருக்கிறதா? இந்த நிறம் மாற்றத்திற்கான காரணத்தை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? எதைக் கொடுத்தாவது, நம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயம், நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து, குடிக்கும் நீர் வரை இந்த அண்டத்தை மாசு படித்தியிருக்கிறதென்றால், அதற்கு முழுக்காரணமும்; நம் நவீன வாழ்க்கை முறைதான் என்றால் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். நாம் உபயோகப்படுத்தும் வீட்டு சாதனங்கள் தொடங்கி, வாகனத்திற்கு உபயோகிக்கும் திரவ எரிபொருட்கள், கனரக தாதுக்கள், நெகிழிப் பொருட்கள் மற்றும் செயற்கை இழைபொருட்கள், நம் சுற்றுச் சூழலில், அளவுக்கதிகமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, நம் வாழ்விற்கு சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கை வளத்தையும் அழிக்கிறது.

    என்றைக்கு மனதளவில் நாம் தெளிந்த சிந்தனையோடு, இயற்கையின் வரத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோமோ, அன்றுதான் நம்மால், ஒரு சுகாதாரமான, இயற்கையோடு ஒன்றிய வாழ்விற்கு, நம்மைத் தயார்படுத்தி, மனித வாழ்வின் பயனை நுகரமுடியும் என்பதை நாம் உணரவேண்டும்.

    நண்பர்களே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நமக்கோ இயற்கைக்கோ ஊறு நேராமல் இருந்தால், அதுதான், இந்த உலகிற்கு நாம் செய்யும் ஒப்பற்ற உதவி என்பதோடு மட்டுமல்ல, வளரும் சமுதாயத்திற்கு நாம் காட்டும் வழி என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது! இயற்கைப் பிரச்சினைகளைப் பற்றிய இந்த சிந்தனைகள், எவ்வளவு உணர்ச்சி பூர்வமானவை என்பதை நான் அறிவேன்.

    இணைந்த கைகளாக இருப்போமேயானால், இந்த பூமி நம்மை வாழ்த்தும்!

    தொடர்ந்து சிந்திப்போம்…..சிகரம் நோக்கி!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”சுந்தரி மாடுடன், சுந்தரன் கோகுலன்
    எந்திரிப்பான் நித்தம் எழுங்காலை: -தந்திடுவான்
    வைக்கோலாய் மாடுண்ண, வாய்க்குப் பதமருள்வான்:
    மைக்கேல் மதனகாம ராஜ்”….கிரேசி மோகன்….

    Share
  • சாஹித்ய அகாடமி

    கிரேசி மோகன்

     

    crazy1

     

    crazy

     

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே

     

    ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
    கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
    விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
    நட்டாரை ஒட்டி யுழி

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா
    கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டானே
    விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே
    நட்டாரை ஒட்டியுழி

    பொருள் விளக்கம்:
    மனமொத்த அன்பு கொண்ட உமையவளை தன்னுடைய ஒரு பகுதியாக, கட்வங்கத்தடி கொண்டு பகையழித்து வெற்றிக்கொடி நாட்டும் சிவனும் கொண்டான். (அதுபோல,) தனது உடலை விட்டு நீங்காது உடலுடன் முற்றுமாக இணைந்துவிட்டவரைப் போன்றே தனது நட்புக்குரியவரைக் கருதி அன்புடையவர் நட்பு பாராட்டுவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: அன்புடையவரின் நட்பின் திறமானது, தான் வேறு நண்பர் வேறென்ற எண்ணம் இல்லாததாக, நண்பரது வாழ்வின் இன்பதுன்பங்களை தன்னுடையதாகவேக் கருதும் சிறந்த நட்பாக இருக்கும்.

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு (குறள்: 788)

    நழுவும் ஆடையைத் தடுத்து மானம் காக்க உதவும் கை போல, நண்பருக்கு வந்த துன்பத்தை தனதாகக் கருதி உதவச் செல்வதே நட்பென வள்ளுவர் கூறிய நட்பின் திறம் இப்பழமொழி கூறும் கருத்துடன் பொருந்துகின்றது.

     

     

    Share