Blog

  • வல்லமைக்கு வயது- 06

     

    வெறும் புகழ்ச்சி அல்லஉண்மை !

    Vallamai_6th_year_300x1251

    வல்லமை யெனும் தேனமுதச்
    செந்தமிழின் –
    சுவையெல்லாம் உய்த்துணர்ந்தேன் !
    சிந்தையெலாம் நிறைந்த
    ஒரு –
    சுகானந்த அனுபவத்தில் திளைத்தேன் !
    களித்தேன் !!

    வல்லமை
    வெண்மையும்
    பசுமையும்
    மெலெழில் பூத்து ,
    இன்றைய தேவையில் –
    வாழ்வில்
    பசுமையும்
    சமாதானமும்
    அமைதியும்
    உணர்த்துவதாக இருகின்றது !

    வல்லமை
    கலை உள்ளங்களின்
    வாழ்வில் –
    செழுமை சேர்த்திருக்கின்றது !

    நல்ல முயற்சி
    பவள சங்கரி திருநாவுக்கரசு,
    அண்ணா கண்ணன்,
    தேமொழி,

    மேகலா இராமமூர்த்தி,,

    அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்),

    தி. சின்னராஜ்,

    மதுமிதா,

    இன்னம்பூரான்,

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்,

    விஜய திருவேங்கடம்,

    விசாகப்பட்டினம் வெ. திவாகர்,

    ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்,

    ஸ்ரீநிவாசன்,
    காமேஷ்,

    செல்வ முரளி,

    முனைவர் நாகபூஷணம்,

    ஆகியோர் துணிவில் மலர்ந்த தூய பணி !
    வல்லமையைப் பார்க்கும் போது
    படிக்கும் போது –
    அதற்கு எழுதும் போது
    நினைக்கும் போது
    நிறைவுகளே நெஞ்சில் நிறைகின்றன !
    வல்லமைத் தளத்தில் நின்று பார்த்து
    சளித்து களைத்தது போதும் !
    இக் குளிர் நீர் பொய்கையில்
    இறங்கி சுவை நீர் பருகி
    சிறிது விடாய் ஆற்றிக் கொள்ள விழைகிறேன் !

    வல்லமை
    கவிப்பூக்களை
    தன் சிற்றலைக் கரங்களால் ஏந்தி
    இசைபாட காலாயிருந்த
    நேசவுள்ளங்களின் துடிப்பு !

    வல்லமை
    இந்திய மண்ணில் ஊற்றெடுத்து
    குதித்தோடி உலகமெங்கும் ஓடிவரும் நதி !
    வயலில் பாய்ந்து
    வளர்த்திடும் செந் நெல் போல ,
    தூய சிந்தையில் ஊறி வரும்
    களம் நீர் தான்
    வளர்க்கும்எங்கள் கலைப் பயிரை !

    வளர் சுடர் போலொளி வீசும்
    வல்லமை –
    அறிவிலும் சிறந்த
    நல் இதயப் பேழை!
    தன்னகம் கொண்ட தமிழ் தளம்
    வல்லமைக்கென் பைந்தமிழ் வாழ்த்து !

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக
    உய்யும் ஒரேஆன்மன் ஒளியாக -அய்யநின்
    ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத
    ஆறாகா ஐந்தே அறிவு …. கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மே 18, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு இளம் அறிவாளி விசாலினி அவர்கள்

     

    k visalini

     

    ஐந்து உலக சாதனைகளை நிகழ்த்திய ஒரு இந்திய மாணவி. உலகிலேயே மிகவும் அறிவாளி இந்த  பதின்ம வயது தமிழ்ப்பெண்; அவரது நுண்ணறிவுத் திறன் புள்ளிகள் (Intelligence Quotient /IQ ) 225. உலக கருத்தரங்கங்களில் சிறப்புரையாற்ற தமது பத்து வயதிலேயே அழைக்கப்பட்டவர்; கூகுள், டெட் எக்ஸ் (TEDx) போன்ற உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனங்களின் இளவயது சிறப்புரையாளர் இவர் என்று நீளும் சாதனைப் பட்டியலுக்கு உரியவரான பதினைந்து வயது செல்வி விசாலினியை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம். விசாலினியை வல்லமைக் குழுவினருக்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகரான திரு. தேவ்ராஜ் அவர்கள். அவருக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வார இறுதியில் (மே 23, 2015) தனது இனிய பதினாறு வயதில் அடியெடுத்து வைக்கும் செல்வி விசாலினிக்கு வல்லமைக் குழுவினர்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    k visalini-b

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை “ஐ.ஐ.பி.இ. லக்ஷ்மி ராமன் மெட்ரிக்குலேஷன்” உயர்நிலைப்பள்ளி மாணவி விசாலினியின் பெற்றோர்கள் கல்யாண குமாரசாமி, சேது ராகமாலிகா. மின்னியலாளராகத் தொழில் புரியும் தந்தைக்கும், திருநெல்வேலியின், ‘ஆல் இந்தியா ரேடியோ’ வானொலியின் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றும் தாய்க்கும் பிறந்த ஒரேமகள். இவர் பிறந்த பொழுது பேச்சு வர தாமதமானபொழுது, வானொலியில் பேசும் தாய்க்கு பேச்சு வராத குழந்தையா என இவர் தாயிடமே வியந்து கேட்டவர்கள் உண்டு. மருத்துவர்கள் ஆலோசனையின்படி ராகமாலிகா இவருடன் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது பதவி உயர்வுகளுக்கான தேர்வுகளுக்குப் படிக்கும் பொழுது, தனது மகளை தன்னுடன் இருக்கச் செய்து பாடங்களை உரக்கப் படிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டார். இடைவிடாத தாயின் முயற்சியினால் மகள் திடீரென ஒருநாள் பேசத் தொடங்கினார். அதுமட்டுமின்றி படிப்பில் மிகவும் சூட்டிகையாகவும் விளங்கி ஆண்டுக்கு இரண்டு வகுப்புகள் என இரட்டை தேர்ச்சிகள் பெற்று பிறரைவிட வேகமாக முன்னேறத் துவங்கினார்.

    எட்டாம் வகுப்பு தேறிய இளவயது மாணவன் ஒருவன் பொறியியல் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டான் என்ற செய்தியைப் படித்த பெற்றோர்கள் விசாலினியையும் அவ்வாறு சேர்க்க இயலுமா என்று தகவல் சேகரித்த பொழுது, சிஸ்கோ நிறுவனத்தின் “சி சி என் ஏ” (CCNA – Cisco Certified Network Associate)தொழில் நுட்பத் தேர்வு எழுதிய சான்றுகள் கொண்டு வருமாறு அறிவுரை கிடைத்தது. பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமான சிஸ்கோ கணினித் தேர்வினை தனது 10 வயதில் எழுதிய விசாலினி, 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று இளம்வயதிலேயே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்ற உலக சாதனையைப் படைத்தார். இவருக்கும் முன்னர் பாகிஸ்தான் மாணவன் ஒருவர் தனது 12 வயதில் செய்த சாதனையை இவர் முறியடித்தார். இது போன்றே மைக்ரோசாஃப்ட்டின் “எம் சி பி” (Microsoft Certified Professional – MCP) தேர்விலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். இவரது சாதனை கின்னஸ்ஸின் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு, ‘சாதனையாளருக்குக் குறைந்தது வயது 14 இருக்க வேண்டும்’ என்ற விதிகளின் படி, விசாலினி தனது 14 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

    k visalini-c

    விசாலினி சிஸ்கோ தேர்வு சாதனைக்குப் பிறகு தினமலர் நாளிதழுக்கு அளித்த நேர்காணல் காணொளியை இங்கு காணலாம் (Dinamalar Interview about cisco examination – https://www.youtube.com/watch?v=jtsAwzNHF5c). விசாலினிக்கு எதையும் புரிந்து கொள்ளும் அறிவுத்திறனும், கற்றதை மறக்காத நினைவுத் திறனும் அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம் என இவரது தாய் கூறியுள்ளார். தொடர்ந்து, பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐ.டி.பி., ஆஸ்திரேலியா மற்றும் இ.எஸ்.ஓ.பி., தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வையும் பதினொரு வயதில் தேர்ச்சி பெற்று அதிலும் உலக சாதனையைப் படைத்தார். இதிலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். மேலும் நெதர்லாந்து நாட்டின் இ.எக்ஸ்.ஐ.என் – கிளவுடு கம்ப்யூட்டிங் தேர்விலும் 1,000 க்கு 1,000 மதிப்பெண் பெற்று, விசாலினி உலக சாதனை படைத்துள்ளார்.

    இவரது சாதனைகளுக்குப் பிறகு இவருக்கு நுண்ணறிவுத் திறன் சோதனை இரு வேறு இடங்களில் நடத்தப்பட்டது. மதுரை மனோவியல் மருத்துவர் நம்மாழ்வார், “பென்னட் காமத்’ என்ற அறிவியல் முறையிலான சோதனையைச் செய்தார். அச்சோதனையில் விசாலினி 11 வயதிலேயே  225 புள்ளிகள் பெற்றார். புனேயில் உள்ள மற்றொரு நிறுவனம் செய்த சோதனையின் மூலமும் இவரது நுண்ணறிவுத்திறன் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பெரும்பாலோரின் நுண்ணறிவுத் திறன் 90 முதல் 110 புள்ளிகளுக்குள் இருக்கும். இவரது நுண்ணறிவுத் திறனால், ‘உலகின் இளம் அறிவாளி’ என்ற சாதனையையும் செய்தார்.

    k visalini-a

    இரட்டைத் தேர்ச்சிகள் பெற்றதால் தன்னைவிட மூத்த மாணவர்களுடன் விசாலினி படிக்க நேரிட்டது. பள்ளிகள் இவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கின, ஒரு கல்வியாண்டில் மூன்று பள்ளிகள் இவரைப் புறக்கணித்து பெற்றோர்கள் இவரை, தகுந்த பள்ளியில் சேர்க்க அலையவும் நேர்ந்தது. மங்களூரிலுள்ள என் ஐ டி யும், திருவில்லிப்புத்தூர் பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேருமாறு அழைத்திருந்தும் விசாலியின் பெற்றோர் தற்பொழுது இவரை கல்லூரிக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு கல்லூரி வயதை எட்டியவுடன் அனுப்பத் திட்டமிட்டுள்ளார்கள்.

    டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல பெரியோர்களாலும் அறிஞர்களாலும் பாராட்டப் பட்டவர் விசாலினி. சில பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்தும் வாய்ப்பும், பல்கலைக் கழக கருத்தரங்குகளில், தலைமை விருந்தினராக உரையாற்றவும் இவர் தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறார். இந்த மாதம் (மே 2015) டெல்லியில் கூகுள் நிறுவனம் நடத்திய இந்தியக் கல்வி பற்றியக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றவும், கர்நாடகா மாநிலத்தில் நடந்த கணினி தொலைத்தொடர்பு உலகக் கருத்தரங்கில் தலைமை விருந்தினராக தலைமையுரை ஆற்றவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததை, இவரே வடிவமைத்த இவரது இணையதளச் செய்தி (http://www.kvisalini.com/) அறிவிக்கிறது.

    உலக சாதனைகள் …
    1. The Highest IQ in the World: 225
    2. The Youngest CCNA World Record Holder (Cisco Certified Network Associate): 90%
    3. The Youngest IELTS World Record Holder (International English Language Testing System): Band 6
    4. The Youngest Exin Cloud Computing World Record Holder: 100%
    5. The Youngest CCSA World Record Holder (Checkpoint Certified Security Administrator): 71%

    இந்த உலக சாதனைகள் வரிசையில் மேலும் பல சாதனைகளை இணைக்கவும், எதிர்காலத்தில் இவர் விரும்புவது போல கணினி நிறுவனம் ஒன்றைத் துவக்கவும், வாழ்க்கையில் மேலும் வெற்றிகள் பல பெறவும் வல்லமைக் குழுவினர் இவரை வாழ்த்தி விசாலினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    விசாலினி குறித்த தகவல்கள் பெற்ற தளங்கள்:
    http://www.kvisalini.com/
    http://www.theweekendleader.com/Success/822/beyond-her-years.html
    http://chittarkottai.com/

    தொடர்பு கொள்ள:
    விசாலினியின் மின்னஞ்சல் முகவரி: goldengirlvisalini@gmail.com

    Share
  • வல்லமைக்கு வாழ்த்து

    abq
    வல்லமை ஆறு ஆண்டு
    வெல்லமாய்த் தமிழில் வாழ்த்த
    நல்ல சொற்கள் வேண்டும்.
    சொல்லெடுத்து ஒரு சிற்பமாய்
    வல்லமையாய் வாழ்த்த மெல்லினம்
    வல்லினம் இடையினம் இணைத்து
    சில்லென்று தமிழில் குளித்து
    வெல்லமாய் வாழ்த்த வேண்டும்.
    சொல்லமைத்துத் தமிழில் ஒரு
    சொர்க்கபுரி  காண வழியுண்டு.
    பல்துறை விற்பன்னர் பழக்கமாகும்.
    துல்லியமாய் தமிழறிவு பெருகும்.
    எல்லோரும் வல்லமையாய் எழுதலாம்.
    வல்லமை வாழ்வு செழிக்கட்டும்.
    பல்துறை விற்பன்னர் பெருகட்டும்.
    பல்லாண்டு வாழ்க வல்லமை.
    வாழ்த்துவது
    பா வானதி வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க்.
    17-5-2015
    Share
  • படக்கவிதைப் போட்டி (13)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11267274_902111079853417_686643902_n

    88717027@N02_rதிரு. பாபு ராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கிரீன்லாந்தின் பனித்தளம் விரைவில் ஆறுகளாய் உருகி ஓடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது

     
     
     

    Greenland Rivers -2

    [ஆர்க்டிக் கிரீன்லாந்து வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்] 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I

    http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ]

    ++++++++++++++++++++

    சூட்டு யுகம் பூதமாய்ப் புவிக்கு
    வேட்டு வைத்து மீளுது !
    நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள்
    நாச மாக்கிப் போகுது !
    புயலை எழுப்ப மூளுது !
    பேய் மழை பெய்து அழிக்குது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    இயற்கை சிதைக்க விரையுது !
    கடல் வெப்பம், நீர் மட்டம் ஏறி
    கரைப் பரப்புகள் மூழ்க்குது !
    மெல்ல மெல்ல ஏறி உஷ்ணம்,
    வேட்டு வைக்க மீளுமிது
    சூட்டு யுகப் போரே !

    ++++++++++++++++

    Greenland Ice melting

    2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year]  என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது.  அதாவது  2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பு 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது.  2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர்.  கடைசி  மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.

    Van Den  Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE]

    Greenland Rivers

    கிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது !  அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக்குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன. 2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.

    லாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    கிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது.  நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.

    திடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]

    Arctic Ice Region

    “துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும்,  விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும்  கிடைத்தது.   இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது.   பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய்  நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”

    பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது.  இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில்  [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது.  கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன.   இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில்  ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000  முதல்  46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல்  61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.

    Arctic Ice Retreat

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!

    Greenland Iceberg

    அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Icebergs in the Sea

    “பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.

    டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    ajay

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Greenland Location

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Melting Days

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது.  கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.

    2.  20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    Fig 1 Carbon Emissions

    Fig 1 Global CO2 Concentrations

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!  கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது.  அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    6.  WHO [World Health Organization]  பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வரட்சி, பஞ்சம்,  கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்]  ஆண்டுக்கு 150,000 பேர் மரிப்பார் என்று எச்சரிக்கிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and  [11 Facts About Global Warming]

    Global Warming Effects

    ஆர்க்டிக் வட்டார பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்  [டிசம்பர் 2012]

    துருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும்,  பனிக்குன்றுகளும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் இரண்டாம் தொழிற் புரட்சி வலுவாகிக் கடும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் கொள்ளளவு மிகையாகி வருவதை யாரும் புறக்கணிக்க முடியாது.  அதனால் பூமியின் பருவ நிலைக் கோளாறுகள், முரண்பாடுகள் பேரளவில் தோன்றி உலக மக்கள் நடை வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து வருகிறார்.   21 ஆம் நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” ஹர்ரிகேன் கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்து நாசமான ஓர் நரகக் காட்சியை தீட்டியது.   2012 அக்டோபரில் அடித்த பூத ஹர்ரிகேன் “ஸாண்டி”  நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது.   ஹர்ரிகேன் கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.

    CO2  Emissions by countries

    சூட்டு யுகத்தில் 2012 ஆண்டில் அறியப்பட்ட சில எதிர்பாரா விளைவுகள்:

    26 ஆய்வகத்தின் 47 சூழ்மண்டல வாதிகள் கூடி 10 துணைக்கோள் அறிவிப்புகளைத் திரட்டி, துருவப் பனிப்பாறைச் சரிவுகளின் உறுதியான விளைவுகளை வெளி யிட்டுள்னர். 1992 முதல் 2011 ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளில் ஐரோப்பாவின் தூர இயக்கு உணர்வு துணைக்கோள் [ERS Mission : European Remote Sensing Satellite] அனுப்பிய தகவல்படி, கிழக்குக் கடற்கரை கிரீன்லாந்தின் பனித் தளம் ஐந்து கி. மீடர் [சுமார் 3 மைல்] சுருங்கி விட்டதாக அறியப் படுகிறது. துருவப் பகுதி பனித்தளப் பரிமாணத்தைக் கண்காணிக்கும் அந்த ஐரோப்பியத் துணைக் கோள் “பரிதி முகநோக்குத் துருவச் சுற்று வீதியில் [Sun-synchronouspolar orbit] சுற்றி வருகிறது. 1992 ஆண்டு முதல் கிரீன்லாந்து அண்டார்க்டிக் பகுதிகளின் பனித் தட்டுகள் உருகிக் கடல் மட்டம் 11 மில்லி மீடர் உயர்ந்துள்ளதாக அறியப் படுகிறது. 2012 ஆண்டு வெளியீட்டின்படி துருவத்தில் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா இரண்டின் பனிச்சிதைவு 1990 ஆண்டைப் போல் மூன்று மடங்காகப் பெருகி யுள்ளது.

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    Antarctica

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    Global ocean mean temperature

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    Atmospheric CO2

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    Sea Level Change

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

    Fig 1 Arctic Ice Melting

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.   [11 Facts About Global Warining ]

    7.   http://www.cosmosmagazine.com/news/676/ice-retreat-opens-passage-north-pole  [September 21, 2006]

    8.  http://www.spiegel.de/international/world/a-warming-arctic-greenland-s-ice-sheet-melting-faster-than-ever-a-661192.html  [November 13, 2009]

    9.  http://topics.nytimes.com/top/news/science/topics/globalwarming/index.html#  [December 6, 2012]

    10.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [December 8, 2012]

    11.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Katrina  [Katrina Hurricane Damage in New Orleans] [December 9, 2012]

    12.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Sandy  [Sandy Hurricane Damage in New York, New Jersey etc]

    13.  http://en.wikipedia.org/wiki/European_Remote-Sensing_Satellite  [European Remote Sensing Satellite Mission] [December 7, 2012]

    14.  http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment  The Gravity Recovery And Climate Experiment (GRACE), a joint mission of NASA and the German Aerospace Center  [Noember 20, 2012]

    15.  EcoAlert :  Forty Seven ESA/NASA Experts Warn of Increasing Ice Melt & Rising Sea Levels  [December 3, 2012]

    16. http://scitechdaily.com/rivers-glacial-meltwater-contribute-rising-sea-levels/  [Jan 13, 2015]

    17.  http://en.wikipedia.org/wiki/Greenland  [May 16, 2015]

    18.  http://www.nasa.gov/jpl/rivers-are-draining-greenland-quickly-nasa-ucla  [May 16, 2015]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  May 17, 2015

    Attachments area
    Preview YouTube video Greenland is the Melting Point – HD Documentary (1080p)

    Greenland is the Melting Point – HD Documentary (1080p)

    Preview YouTube video Rivers of meltwater on Greenland’s ice sheet contribute to rising sea levels

    Rivers of meltwater on Greenland’s ice sheet contribute to rising sea levels
    Share
  • வள்ளுவ மாலை

    சுரேஜமீ

    குறளென்ப சான்றோரே நீதிவழி நிற்றற்கு
    வேறொத்த நூலில்லை வாழ்வின் வகையறிய
    தேடிப்படி ஏட்டினிலே பேர்சொல்ல – ஊர்சொல்ல  valluvar
    வேண்டுமெனில் ஓதுகுறள் நன்று!

    நன்றுணர் ஏகும்செயல் யாவும் துணைநிற்க
    நானிலம் கண்டதோர் நூலாம் – திருக்குறள்
    நாடிடத் தீதறுகுணம் பெற்றுக் கலைமகள்
    நாளும் இருப்பாள் நின்று!

    யுகம்பல காணும் மொழிதாங்கி வந்ததோர்
    மூலிகையாம் வாழும்கலை சொல்லும் – திருக்குறள்
    சாதிக்கும் வாழ்க்கைக்குப் போதித்து வாய்ப்பளிக்கும்
    சோதித்துப் பார்க்கத் தெளிந்து!

    நில்லாத நீரோடைத் தாண்டும் தடைபோலச்
    சொல்லாடும் வேதம் திருக்குறளே மாந்தர்க்கு
    வேண்டுவர் வென்றிட உலகத்தில் யாவையும்
    தோண்டிட ஊறும் அறிவு!

    இச்சையால் பெற்றிடும் இன்பம் சிலநாளே
    பிச்சையோ வாழ்வில் கொடிது – செவ்வனே
    ஊனைத் திருத்தி உள்ளம் வழியேகத்
    தூணாம் திருக்குறள் கேள்!

     

    Share
  • வாழ்த்துக்கள்

    எல்லாம் தரும் இணைய இதழ்
    வல்லமை என்றொரு கலைக் களஞ்சியம்
    எல்லாப் படைப்புகளையும் வெளியிடும் தளம்
    எல்லோரையும் வரவேற்கும் அன்புத் தளம்
    நல்ல நல்ல செய்திகளைத் தரும் வலைத்தளம்
    சொல்லலாம் நம் எண்ணங்களை சுதந்தரமாக
    வெல்லலாம் வல்லமை விருதை ஆனந்தமாக
    மெல்ல மெல்ல ஆறு ஆண்டுகள் கடந்த
    வல்லமையே வாழ்க பல்லாண்டு

    விப்ரநாராயணன்

    Share
  • அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்!

    -கவிஞர் ருத்ரா

    அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்
    என் நரம்பில் தெறித்த பூவாணமாய்ப்
    பூத்தையல் போட்ட புது வானமாய்!
    அப்படி என்ன சொல்லி விட்டேன்?              rudra1poovanam
    நான் உன்னைக் காதலிக்கிறேன்
    நீ என்னைக் காதலிக்கிறாயா? என்று

    அது என்ன பண்டமாற்றா?
    நீ கேட்டாய்!
    ஏதாவது ஒரு வாக்கியத்தைத்தான்
    நான் சொல்லியிருக்க வேண்டும்!
    நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
    நிறுத்தியிருந்தால்
    அதற்கும் நீ சிரித்திருப்பாய்
    ஆனால் அதற்கப்புறம்
    உன் தூக்கம்
    சூடான தோசைக்கல்லில் உடைத்த‌
    ஹாப் பாயிலாய்
    சிதைந்து
    மஞ்சளும் வெள்ளையுமாய்
    ரங்கோலி ஆகியிருக்கும்!

    உன் எம் எம் ஃபோம் கூடச்‌
    சுநாமியாய்
    எங்கோ உன்னைச் சுருட்டி வீசியிருக்கும்
    மறுநாள் என்னைப் பார்க்கும் ஆவலில்
    கல்லூரி வகுப்புக்குள்
    என்னை எதிர்பார்த்து ஆவலுடன்
    விழித்தூண்டில் வீசிக்கொண்டு
    கண்ணுக்குத் தெரியாத அந்த “தக்கையில்”
    கண்பூத்து நின்றிருப்பாய்!

    நான் வந்தவுடன் என்னைப் பார்த்தவுடன்
    அதே அலட்சியம்…
    வேறு ஒரு விட்டம் நோக்கி
    வெறும் பார்வை
    அப்போதும் இதே சிரிப்பு…

    நான் கண்டுபிடித்து விட்டேன்
    அந்தக் கதிர்வீச்சின் கண்ணாடி இழைக்கீற்றுகளில்
    ஊமையாய்
    ரகசியமாய்
    ஒரு கண்ணீர்த்துளி
    முத்துக்கோத்துக்கொண்டிருப்பதை
    அது போதும்!

    அதற்கே நான்
    லுங்கி இல்லாமலேயே
    லுங்கி இருப்பதாய்
    உயர்த்திக்காட்டிக் காட்டி ஆடிக்கொண்டிருப்பேன்
    நீ வெடுக்கென்று திரும்பினாலும்
    அங்கு ஒரு “க்ளுக்” சிரிப்பு
    எனக்கு பன்னீர் தெளித்துக்கொண்டிருக்கும் என்று!

     

    Share
  • அலை

    -கவிஞர் ருத்ரா

    அலையா? கடலா?
    எது நீ சொல்?
    முட்டாளே!
    ஒன்று தானே இன்னொன்று!
    ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை           rudra
    ஹா!ஹா!ஹா!
    யாரை ஏமாற்றுகிறாய்?

    நீ
    காதலா? பெண்ணா? சொல்!
    இரண்டும்தான்
    அடிப்பாவி!
    என்ன ஏமாற்று வேலை?
    பெண்களையெல்லாம் தேடினேன்…பார்த்தேன்
    அங்கே காதல் இல்லை!

    காதலையெல்லாம் தேடினேன்…தேடினேன்
    அங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது
    அடி முட்டாளே!
    எங்காவது ஒரு இதயம் துடிக்க‌க்
    கேட்டிருக்கிறாயா?
    அந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா?
    அந்த இதயத்துக்குள்ளும்..இதயத்துக்குள்ளும்
    ஆயிரம் ஆயிரம்
    ரோஜா இதழ் அடுக்குகளாய்
    உணர்ந்து களித்து இலேசாய் ஆகியிருக்கிறாயா?
    அது வரை
    நீ கல்தான்!
    அதுவும் கல்லறையை மூடிக்கிடக்கும்
    கல்தான்!

    உன் அருகே
    ஒரு பச்சைப்புல்
    உன்னைப்பார்த்துக் கேலியாய்ச்
    சிரிப்பதைப் புரிந்துகொள்ளும்
    ஒரு மெல்லிய மின்னல்
    என்று உன்னைத்தாக்குகிறதோ
    அன்று
    நீயே…காதலின்
    கடல்!
    நீயே..காதலின்
    அலை!

     

    Share
  • சிட்டுக்குருவி

    -றியாஸ்முஹமட்

    நான் சின்னஞ்சிறிய
    சிட்டுக்குருவி
    உன் வாள் உருவி
    என்னை வெட்டிப் போடு!

    உன் துப்பாக்கிச் சொண்டால் 
    என்னைச் சுட்டுப்போடு!
    கைகட்டி வாழ்வேனோ?
    உன் கால்பட்டு மகிழ்வேனா?             Moineau friquet Passer montanus Eurasian Tree Sparrow

    சிறுபான்மைதானே
    சிறுமை என்கிறாய்!
    சிறகு விரித்து நான் பறக்கச்
    சிறகு முறித்துச்
    சிறையில்  அடைக்கிறாய்!

    நான் கூண்டுக்குள் இருந்தால்
    உமக்குக் குதூகலம்
    வெளியே பறந்தால்
    வேடத்தனம்!

    நாடகத்தனம் ஆடும் மனிதா!
    உமக்கு மட்டும் ஏனடா
    இத்தனை வெறித்தனம்?

    இறைவன் வகுத்த
    பாதையிலேதானே பறந்தேன்
    உன் வீட்டு சோற்றுப்
    பானையிலா விழுந்தேன்?

    அன்று…
    மக்களோடு மக்களாகக்
    கொஞ்சித்திரிந்தோம்
    கொஞ்சித் திரிந்த எங்களை
    அஞ்சித் திரியவைத்தாய்!

    அஞ்சித்திரிந்த
    எங்களை இன்று
    பூண்டோடு அழித்துக்
    கதை முடித்தாய்!

    மலடியாக எங்கள் குலத்துப்
    பெண்களை வாழ வைத்தாய்
    மனம் நொந்து அவர்களையும்
    சாபமிடவைத்தாய்!

    மரத்தை வெட்டி
    எங்கள் கூடுகளைத்
    தூக்கி எறிந்தாய்!

    எங்கள் தோப்புக்களை மனையிடங்களாக்கினாய்
    மனமில்லாது எங்கள் குஞ்சுகளை
    எட்டி உதைத்தாய்!

    கேட்டுப்பார்
    உங்கள் மூதாதையர்களை…
    நாங்கள் ஒரே வீட்டில்
    ஒன்றாக நடத்திய
    கூட்டுக் குடும்ப
    வாழ்க்கையைச்
    சொல்வார்கள்!

    கேட்டுப்பார்
    அந்த வயல்வெளிகளையும்
    வரப்பு மேடுகளையும்…
    குதூகலமாய்ப் பேசி
    கும்மாளம் அடித்த
    கதை சொல்லும்!

    எங்கள் இனத்தையே
    கொன்று குவித்து விட்டு
    இன்று சிட்டுக் குருவி தினம்
    கொண்டாடுகிறாயோ….?

    கொண்டாடு !
    கொண்டாடுவதும்
    பந்தாடுவதும்தானே
    உங்கள் இனத்தின் பண்பாடு!!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 166

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கவுந்தியும் மாடலனும் கோவலனுக்குக் கூறிய ஆறுதல் உரைகள்

    மாதவம் செய்த கவுந்தியடிகளும்
    மாமறையோன் மாடலனும்
    கோவலனிடன் இவ்வாறு கூறினர்:             kovalan
    இங்கே இங்ஙனம் தங்கியிருப்பது
    துறவறம் மேற்கொண்ட
    முனிவர்களுக்கு மட்டுமேயல்லாது
    இல்லறத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொருந்தாது

    இந்நகரில் இருக்கும் வணிகர்
    உன் பெருமையறிந்து உன்னை ஏற்றுக் கொள்வர்
    எனவே இவ்விடத்தை விடுத்து நீங்குக.
    சூரியனின் கதிர்கள் மேற்கில் மறையும்முன்
    உன் காதலி அவளோடு மதுரை நகர் புகுக.

    மாதரி என்னும் ஆயர்குல முதுமகள் கவுந்தியை வணங்குதல்

    அந்த நேரத்தில்
    அறம் செய்வதைப் பெரிதும் விரும்புகின்ற
    அறம் செய்பவர்கள் நிறைந்துள்ள
    புறஞ்சேரி எனும் மூதூரில் குடிகொண்டுள்ள
    பூப்போன்ற கண்களையுடைய
    ‘இயக்கி’ எனும் பெண் தெய்வத்திற்குப்
    பால் அன்னம் படைத்துவிட்டுத்
    திரும்பிக்கொண்டிருந்த
    அன்பும் பண்பும் நிறைந்த
    ஆயர்குல முதுமகள் மாதரி என்பவள்
    கவந்தியடிகளைக் கண்டு
    அவரடி தொழுது நின்றாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 107 -119
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • உன்னையறிந்தால் ….. ! (5)

    உனையறிந்தால்11
    குழந்தைகளும் விஞ்ஞானிகள்தாம்

    நிர்மலா ராகவன்

    நம்மைச் சுற்றி இருப்பவைகளை அறிவதுதான் விஞ்ஞானம். இந்த விந்தைக்குத்தான் ஐம்புலன்களும் பயன்படுகின்றன.
    தாய் அணைத்தால், பிறந்த குழந்தை உடனே அழுகையை நிறுத்திவிடும். ஏனெனில், அவளுடைய மணம் அதற்குப் பரிச்சயமான ஒன்று. கண்களைத் திறந்த உடனேயே வெளிச்சம் இருக்கும் திசையை நோக்கித் தலையை திருப்பும். கிலுகிலுப்பையால் ஓசை எழுப்பினாலோ, தாய் அருமையாகப் பேசினாலோ, அழுகையை மறந்து பார்க்கிறது. எது கையில் அகப்பட்டாலும் இறுகப் பற்றிக்கொள்கிறது. அதாவது, நுகர்தல், பார்த்தல், கேட்டல், தொடுதல் ஆகியவைகளைப் பயன்படுத்தி தன்னைச் சுற்றி இருப்பவைகளை அறிய முயல்கிறது.

    தவழத் தொடங்கியதும், தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும், பூச்சியையும் துரத்திப் பிடித்து, வாயில் போட்டுக்கொள்ளப் பார்க்கும். தாய் தடுத்தால், ஒரே ரகளைதான். (இந்தப் பெரியவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை! சுவை என்பதை பின் எப்படித்தான் அறிவதாம்!– குழந்தை வெறுத்துப்போய் அழுவதன் அர்த்தம் இதுதான்).

    குழந்தைகளுக்கு அறிவு வளருவதற்குப் பல்வேறு அனுபவங்கள் அமைய வேண்டும். அவைகளை நாம்தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    நான்கு நாள் குழந்தையாக இருந்த என் பேரனை நான் முழங்காலிலிட்டுக் குளிப்பாடும்போது, அலுப்பாக இருந்தது. யாருக்காவது, எதையாவது சொல்லிக் கொடுத்தே பழக்கமில்லையா? இயல்பாக, சோப்புக்கட்டியை எடுத்து, குழந்தையைத் தொட வைத்தேன். `இது கெட்டியா இருக்கு, பாத்தியா? Solid!’ பிறகு நீரில் அவன் கையை அளையவிட்டு, ஓசை எழுப்பி, `இது Liquid. எப்படிச் சத்தம் கேக்கறது, பாரு!’ பின்பு, கையை என் மூக்கின்கீழ் கொண்டுவந்து, `இது Gas. ஹை! காத்து மாதிரி இருக்குடா!’ என்று ஆரம்பித்தேன்.

    வீட்டில் குழந்தை முதன்முதலாகக் குளிக்கும் அழகைப் பார்க்க வெளியே நின்றிருந்த என் குடும்பத்தினர் பெரிதாகச் சிரித்தார்கள், “இப்போதுமா physics?” என்று. நான் அயரவில்லை. அதற்குப் புரிகிறதோ, இல்லையோ, எனக்குப் பொழுது போயிற்று. நாலைந்து நாட்கள் அதே பாடம்தான்.

    கண்ணை மூடிக்கொண்டு இருக்கிற சிசுவிடம் பேசுவது முட்டாள்தனமோ என்று தோன்ற, அடுத்த நாள் எதுவும் பேசாது, நீரை மொள்ள ஆரம்பித்தேன். குழந்தையின் தோள் உயர உயர எழுந்தது, `இன்று ஏன் என் கையை எதன்மேலும் வைக்கவில்லை?’ என்று கேட்பதுபோல்.

    அனைவரையும் கூவி அழைத்து, “என்னைக் கேலி செய்தீர்களே! இப்போது பாருங்கள்!” என்று என் வெற்றியைக் காட்டினேன். கண் மூடி இருந்தால் என்ன! தொடுதல், கேட்டல் இரண்டும்தான் இருக்கின்றனவே!

    மூன்று மாதக் குழந்தையிடம், “குருவி கீச்சுக் கீச்சுனு கத்தறதே! கேக்கறதா?” என்று நாம் எடுத்துக் கொடுத்தால், உன்னித்துக் கவனிக்கும். ஸ்கூட்டர், ஆகாய விமானம், ரயில் போன்ற வாகன ஒலிகளையும் இப்போது அறிமுகப்படுத்தலாம்.

    `வயதானால், தானே தெரிந்துவிட்டுப் போகிறது! இதையெல்லாமா சொல்லிக் கொடுப்பார்கள்!’ என்கிறீர்களா?
    குழந்தை தானே தெரிந்து கொள்வதற்குமுன் நாம் சொல்லிக்கொடுத்தால், அதன் செவிப்புலன் கூர்மையாகி, ஆர்வம் அதிகரிக்கும். இதனால்தான் பிறந்த குழந்தைகளிடம் பேசும்போது, நீட்டி முழக்கி, நாமே குழந்தைபோலப் பேசுகிறோம்.

    சிதம்பரத்தில் இசை நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவரது ஒன்றரை வயதுக் குழந்தை பேசவேயில்லை என்பதைக் கவனித்து, `நீ குழந்தையுடன் பேசமாட்டாயா?’ என்று அவருடைய இளம் மனைவியிடம் கேட்க, `அவள் பேசினால், நானும் பேசுவேன்,’ என்ற பதில் வந்தது.

    நான் குழந்தையிடம் என் பாடத்தை ஆரம்பித்தேன். “நேத்திக்கு கோயிலுக்குப் போனியா? அப்பாகூட போனியா? ஸ்கூட்டரிலே போனியா? ஸ்கூட்டர் எப்படிப் போச்சும்மா? டுர்..!’ வாக்கியங்கள் சிறியதாக இருந்தால் நலம்.
    குழந்தை மகிழ்ந்து சிரித்து, `டுர்..!’ என்றாள். அதுவரைக்கும் பேசாதவள், அன்று தூக்கத்தில் பாடினாள் என்று மகிழ்ந்தார்கள் பெற்றோர்.

    இரு பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தால், அதில் சிறு குழந்தையின் கவனம் போகாது. அசையாமல் கிடக்கும். அதுவே, தன் முகத்தைப் பார்த்துப் பேசுகிறார்கள் என்று தெரியும்போது, புரிகிறதோ, இல்லையோ, மனமகிழ்ச்சியைக் காட்ட, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும்.

    குழந்தை மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார், `ஒங்களைமாதிரி பாட்டிகிட்டே வளர்ற பிள்ளைங்கதான் நல்லாப் பேசும்!’
    வளவளவென்று பேசவேண்டாம். ஆனால், மொழித் திறனையாவது வளர்த்து வைப்போமே!

    எட்டு வயதுக் குழந்தைகள் நிறைய பேசும். சற்று கண்டித்து, `வாயைவிட கண்ணையும், காதையும் அதிகமாகப் பயன்படுத்து,’ என்று இப்பருவத்தில் அறிவுரை கூறலாம். எதையும் கூர்ந்து கவனித்தல் விஞ்ஞானத்துக்கு இன்றியமையாத திறன்.

    பார்ப்பவைகளை எல்லாம் விளக்குங்கள். வீட்டுக்கு வெளியே நடக்கும்போது, “கீ..ழே புல்லு — பச்சைக் கலர்.., மே..லே வானம். அது நீ..லம். பச்சை, நீலம். சூரியன் பாத்தியா? கண்ணைக் கூசலே?” இப்படி விளையாட்டுப்போல், நமக்கு எளிதான, ஆனால் குழந்தை அறிந்திராதவற்றை ஒவ்வொன்றாக விவரித்தால், குழந்தை மகிழும். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனுடன், வளர்ப்பவர்கள்மீது கொண்டுள்ள நெருக்கமும் அதிகமாகும்.

    இதேபோல், மரத்தாலான சாமான்கள், உலோகப்பொருட்கள், துணி போன்றவைகளைத் தொட்டுத் தடவி, தட்டி ஓசையெழுப்பினால், சருமத்தின் ஆர்வமும் தூண்டப்படாதா!

    சூடான, கூரான, அல்லது மின்சாரம் கசியும் பொருளைத் தொட்டு வைத்தால் என்ன ஆவது என்ற பதைப்புடன், `ஒண்ணையும் தொட்டு. விஷமம் பண்ணக்கூடாது!’ என்று மிரட்டுகிறாள் தாய். (`தாய்’ என்று இங்கே குறிப்பிடுவது பொதுப்படையாகத்தான்). எதையும் அறியவேண்டும் என்ற ஒரு குழந்தையின் இயல்பான ஆர்வத்துக்குத் தன்னையும் அறியாமல் முட்டுக்கட்டை போடுகிறாள்.

    மாறாக, கைபொறுக்கும் சூட்டில் ஒருவயதுக் குழந்தையின் விரல் நுனியை வைத்து, `ஊ..!’ என்று சொல்லிக் கொடுத்தால், வலி ஏற்படுத்தும் அனுபவம் இது என்று புரிந்துகொள்ளும். கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால், `ஊ..!’ என்று வலியைப் புலப்படுத்தும்.

    எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே அமைய, `இது எப்படிப்பா?’ என்று ஒரு குழந்தை கேட்கும்போது, `அம்மாவைக் கேளு,’ என்று அப்பா பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுகிறார். அம்மாவோ, `ஒனக்குப் பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே பொழுது சாஞ்சுடும்!’ என்று ஏளனத்தில் இறங்குகிறாள்.

    ஏதோ, நம்மையும் மதித்துக் கேட்கிறானே என்று, நமக்குத் தெரிந்த வகையில் எளிமையாகச் சொல்லிக் கொடுத்தாலே போதும். பெரிய விளக்கம் எலாம் தேவையில்லை. எப்படியும், ஒரு குழந்தைக்குத் தெரிவதைவிட நிறையத்தான் தெரிந்திருக்கும் நமக்கு. எதையும் அறியும் ஆர்வத்தைத் தூண்ட இது போதும். வயதானால், தானே ஆசிரியர்களைக் கேட்டுத் தம் அறிவை வளர்த்துக் கொள்வார்கள்.

    ஆசிரியர்களும் பெற்றோர் மாதிரித்தானா! கவலையை விடுங்கள். வாசகசாலைகள் இருக்கவே இருக்கின்றன!
    நம் அறியாமையால், அல்லது அலட்சியத்தால் இயற்கையாகவே அமைந்த ஐம்புலன்களின் ஆற்றல்களை நாம் கணிசமாகக் குறைத்து அல்லது அழித்து விடுகிறோம். இளமையிலேயே ஆர்வம் குன்றிவிட்டதால், பள்ளிப்பருவம் வந்தாலும், இவர்களுக்கு எதிலும் ஆர்வம் இருப்பதில்லை.

    `என் தாய் முட்டாள்!’ என்று சில மாணவிகள் என்னிடம் குறைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு மனம் நொந்திருந்தால், அப்படிக் கூறுவார்கள்!

    உங்களைவிட அனுபவசாலியாக உங்கள் மகனோ, மகளோ ஆகும்போது, தாம் கற்று அறிந்ததை ஆர்வத்துடன் உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். முற்பகல் செய்யின்…

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(72)

    -செண்பக ஜெகதீசன்

    என்பி லதனை வெயிற்போலக் காயுமே
    யன்பி லதனை யறம். (திருக்குறள்-77: அன்புடைமை)

    புதுக் கவிதையில்…

    எலும்பில்லா உயிரினங்களை
    வாட்டி வதைத்துக் கொல்லும்
    வெயில்…

    அன்பில்லாதவனை
    அழித்திடுமே அறம்…!

    குறும்பாவில்…

    எலும்பில்லா உயிர்களை
    வெயில் அழிக்கும்,
    அறமழிக்கும் அன்பில்லாதவரை…!

    மரபுக் கவிதையில்…

    உடலில் எலும்புகள் ஏதுமின்றி
    வெயிலில் செல்லும் உயிரினங்கள்
    சுடரும் கதிரவன் ஒளியதனின்
    சூடு தாங்கிடா தழிந்தொழியும்,
    இடரே வாழ்வில் என்றென்றும்
    இல்லை யென்றால் அன்பதுதான்,
    தடங்கல் வந்திடும் வழியினிலே
    தண்டனை தந்திடும் அறமதுவே…!

    லிமரைக்கூ…

    எலும்பில்லா உயிரினங்கள் சென்றால் புறம்
    எரித்துக் கொன்றிடும் வெயில்,
    அன்பில்லா மனிதனை அழித்திடுமே அறம்…!

    கிராமிய பாணியில்…

    வெயிலுவெயிலு கோடவெயிலு
    கொன்னுபோடும் கோடவெயிலு,
    எலும்பில்லாத உயிரயெல்லாம்
    எரிச்சிக்கொல்லும் கோடவெயிலு…

    அதுபோல
    அன்புவேணும் மனுசனுக்கு,
    அன்புயில்லா மனுசனத்தான்
    அறக்கடவுள் அழிச்சிருமே
    அந்த
    வெயிலப்போல அழிச்சிருமே…
    வெயிலுவெயிலு கோடவெயிலு
    கொன்னுபோடும் கோடவெயிலு…!

     

    Share
  • அப்பாவின் பேய்க் கதைகள்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    சிறுபிராயம் முதல் எனக்குக்
    கதைகளில் கொள்ளைப் பிரியம் என்பதால்
    எப்பவும் அப்பா ஏதாவதொரு கதையினைச்
    சொல்லிக்கொண்டிருப்பார்!

    முதலில் பயங்காட்டுவதாய் வரும்
    ’பேய்’க்கதையில் தொடங்கி
    அரச கதை, பின் நரிக்கதை
    சிங்கம் புலிக்கதை, ’கிரீஸ்’ மனிதன் கதை
    மொழிகடந்த தெருக்கதைகள் என
    அது ஒவ்வொன்றும்
    நீண்ட கதைகளால் ஆன கதைகள்!

    அவற்றைக் கேட்க
    இனிமையாகவும், சுவரஸ்யமாகவும்,
    பயங்கரமானதாகவும் இருந்தன
    கற்பனையில் கதைகளைக்
    கட்டிச் சமைத்துக் கதைப்பது கேட்க
    அப்போது பிடித்தமானதாய் இருந்தது!

    ஆனால் பின்வந்த காலங்களில்
    அப்பாவின் கதைகள்
    சப்பையாகவும், குப்பையாகவும்
    சகிக்க முடியாதபடி இருந்தன கேட்க!

    பொய்க்குக் கூட பொருந்தவுமில்லை
    எனக்குப் புத்தி பிடிபட்ட விடயம்
    அப்பாவுக்குப் பிடிபடாமல் இருந்திருக்கலாம்
    அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார்
    என்பதற்காக
    எல்லாக் கதைகளையும்
    கேட்டுக் கொண்டிருக்க முடியாது இல்லையா?

    இன்றும் அப்படித்தான்
    அப்பா கதை சொல்லத் தொடங்கினார்
    குறுக்கிட்ட நான்
    அப்பாவிடம் சொன்னேன்
    ”இது எனது முறை”
    நான் ஒரு கதை சொல்கிறேன் என்று!

    அப்பா காதுகளைக் கூர்மையாக்கினார்
    என் கதை கேட்க
    நான் சொன்னேன்
    அப்பாவுக்குரிய மரியாதையுடன்
    ”நீங்கள் ஓய்வெடுங்கள்!” என்று!

     

    Share