Blog

  • அதுவரும்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    ஒரு பறைவையின் இறகு உதிர்வது போல்
    ஒரு பூவின் இதழ் விரிவதுபோல்
    சிறு பசியில் குழந்தை அழுவதுபோல்
    பெரும் நிசியில் மௌனம் நுழைவதுபோல்
    அதுவரும்…

    இருண்ட வானம் கலைவதுபோல்
    மிரண்டகாளை அலைவதுபோல்
    மூர்க்கத்தனத்தின் பிரளயத்தோடும்
    பார்க்க இயலாப் பரபரப்போடும்
    அதுவரும்…

    தவணை கேட்க மறுத்த நொடியாய்த்
    தலையணையோடு சரித்தபடியாய்த்
    தாலாட்டுக் கேட்டுச் சிரித்தவடிவாய்த்
    தாயவள் வயிற்றில் தரித்தபடியாய்
    அதுவரும்…

    துயரத்தின் உயரத்தையும்
    நீளத்தின் ஆழத்தையும்
    வாழ்க்கையின் கோலத்தையும்
    அறிந்துணர்ந்து மனிதன் ஆராய
    அதுவரவேண்டும்!

    அது வந்தால்தான்
    வாழ்க்கையின் மெய், பொய்
    இரண்டையும் இனம்பிரிக்க ஏதுவாகும்!

    இங்கு இருப்பவனுக்கும்,
    மண்ணைப் பிரிப்பவனுக்கும்
    அடுத்தவனுக்குக் குழியைப் பறிப்பவனுக்கும்
    அவனவனின் அனுமதியின்றியே
    அதுவரும்…

    அவனோ நீங்களோ நானோ அழைக்காமல்
    மரணம் என்னும்
    மலர்ச்செண்டு கொண்டு
    நம்மை நாடி அடைய
    அதுவரும்!

     

    Share
  • அயல்நாட்டு நிச்சயதார்த்தம்!

    -ரா.பார்த்தசாரதி

    தாயும் தந்தையும்  ஜாதகம் பார்த்தார்கள்
    உன்னை எனக்கு  முடிவு  செய்கிறார்கள்
    ஆம் உன்னை ஸ்கைப்பில் காண விரும்பினேன்
    உன் பெற்றோர் அனுமதியுடன் தொடர்பு கொண்டேன்!

    நான்  கடின உழைப்பால் முன்னேறினேன்
    பிறர் உதவி கொண்டு முன்னேறமாட்டேன்
    நீயும் என்னைப்போல் இருக்கவேண்டும் என நினைப்பேன்
    எதையும் தனித்து நின்று சமாளிக்க வேண்டுமென  எதிர்பார்ப்பேன்!

    உரையாடும்போது  உன் குடும்ப நிலையைக் கூறுகின்றாய்
    உன் எதிர்காலப் படிப்பிக்கும் அடி போடுகின்றாய்
    உன் குடும்பத்திற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டுகிறாய்
    நீயும் நானும் வாழ்கையில் சரிபாதி என்கிறாய்!

    வரும் முன்னே பல எதிர்பார்ப்புக்கள், கட்டளைகள்
    இதற்கெல்லாம்  ஒத்துக்கொண்டால்தான்  திருமணம்
    நிச்சயிக்கப்பட்டும்  நின்றுபோன திருமணங்கள்
    எதையும் சாதரணமாகக் கருதும் இக்காலத் திருமணங்கள்!

    திருமணம் என்பது சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படுகிறதா?
    தாய் தந்தையர் பார்த்து  நிச்சயிக்கப்படுகிறதா?
    ஆண், பெண்  நேரிடை    சந்திப்பில் முடிவாகிறதா?
    ஜாதகத்தால்  நல்ல ஜோடிகள் புறக்கணிக்கப்படுகிறதா?

    திருமண  வயது வந்தாலே  ஆண், பெண்ணிற்குப் பல எண்ணங்கள்
    எதையும் பிறர் நிலையில் நின்று நினைக்காத  மனிதர்கள்
    இரு கைகள் இணைந்தால்தான் வாழ்க்கை என உணர்ந்தவர்கள்
    வரதட்சணை இல்லாத திருமணங்களே சிறந்த திருமணங்கள் !

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 12-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம், இப்படத்தைத் தேர்வுசெய்திருக்கும் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

     man

    பச்சைப்பசேல் என்ற வயல்வெளி, அருகே மாற்றுத் திறனுடைய பெரியவர் ஒருவர், அவரின் இருபுறமும் இளைய பாரதத்தினர் இருவர், இம்மக்களின் உள்ளம்போல் உயரப் பறக்கும் பலூன்கள் என்று பலவகை வண்ணக்கலவையோடு கூடிய இப்புகைப்படம் நம் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளை எழுப்பவே செய்கின்றது.

    அதோ… அந்தப் பெரியவரின் முகத்தைப் பாருங்கள்! அதில் ஏதோவோர் உறுதி பளிச்சிடுவதைக் காணமுடிகின்றது. அவர் முகத்தின் உறுதி அகத்திலும் இல்லாமலா போய்விடும்?

    ஐயா!

    உடலின் ஊனம் தனைக்கண்டு
    உள்ளம் தளரா மனங்கொண்டு
    திடமாய் உழைத்தால் உயர்வுண்டு
    தடைகள் கடக்க வழியுண்டு
    மாற்றுத் திறனை உடையவரே
    முயன்றால் ஒருநாள் இவ்வுலகை
    மாற்றும் திறனும் நீர்பெறுவீர்
    மாநிலம் போற்றும் நிலைபெறுவீர்

    என்று அவருள் நம்பிக்கை விதைகளை நாமும் தூவுவோம்!

     இனி, படக்கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் கருத்தாழமுள்ளவற்றை முதலில் காண்போம்!

    ***

    பலூனே உயரப் பறக்கும்போது அதனினும் பலமுள்ள மனிதன் துவளலாமா? எனப் பொருத்தமாய்க் கேள்வி எழுப்பும் திரு. கனவு திறவோனின் வரிகள்…

    காற்றடைத்த பலூனே
    உயரப் பறக்கும் போது
    உயிரடைத்த
    உடம்பு
    விழுந்தா விடும்
    மண்ணில்?
    எழுந்து நிற்க
    கால்கள் வேண்டாம்
    தூக்கி நிறுத்த
    துணைகள் வேண்டாம்
    இதயம் போதும்!
    மிரள வேண்டாம் நண்பா
    என் கவிதைக்குள் உன்னைக்
    காட்சியாக்கி
    ஊருக்குள் உன் உரத்தை
    உரக்கச் சொல்வேன்
    துணிந்து வா நண்பா!

    ***

    ’காலம் எங்கே போய்விடும்; அது என்னையும் வாழ வைத்திடும்’ என்ற மாற்றுத் திறனாளியின் மனோதிடத்தைக் காட்டும் திரு. ரா. பார்த்தசாரதியின் வரிகள்…

    என்னைப் போன்ற மாற்று திறனாளிக்கு  மனதில் பலமுண்டு 
    வாழ்க்கையில்  முன்னேற  எனக்கு என்றும் திறனுண்டு 
    வாழ்க்கையில் ஏமாற்ற பலரும், சிலரே உதவி செய்வதுண்டு 
    எங்கே சென்றிடும் காலம்! அது  என்னையும்  வாழவைக்கும் !

    ***

    ”ஊனம் உடலிலிருந்தால் என்ன? உண்மையாக உழைத்து உயர்பவர்கள் நாங்கள்!” என்று வீரமுழக்கமிடும் பெரியவரின் பெற்றியைப் போற்றும் திருமிகு. ஸ்ரேயாரேவதியின் வரிகள்…

    பச்சை பசுமைகளில் பேரப்பிள்ளைகள் !
    ஊனமாக இருந்தாலும் உண்மையாக உழைத்திடுவோம் !
    இன்பமாக வாழ்ந்திடவே விற்றிடுவோம் வண்ண பலூன்கள் !
    ஒற்றுமையாய் இருந்தால்தான் கோடிநன்மை அடைந்திடலாம்!
    அறிந்திடுங்கள் மானிடரே! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்களே!

    ***

    ’நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமிருக்க, ஊனமொரு தடையில்லை’ என்று கம்பீரமாய் முறுவலிக்கும் மாமனிதனைக் கவிதையில் காட்டியிருக்கும் திரு. ரோஷான் ஏ. ஜிப்ரியின் வரிகள்…

    வானவெளி பெருத்த ஒன்று
    உணர்ச்சிக்கு தோணவில்லை
    ஊனமிது வருத்தமென்று
    பலூன் விற்றோ,வடை விற்றோ
    வாழ விழியிருக்கு
    கங்கில் தெறித்த களம்மீண்ட எந்தனது
    நெஞ்சில் உரமிருக்கு நீ எதற்கு கலங்குகிறாய்…
    […]

    மூங்கில் பிடிக்குள்
    முறுவலிப்பாய் இருக்கின்றேன்
    தேங்கி அடங்கிடாமல்
    தேடலுக்காய் நடக்கின்றேன்

    ***

    மாலையிலே தான்கொண்ட போதைமயக்கம் தன்வாழ்க்கைப் பாதையையே மாற்றிப் பரிதவிக்கவிட்டதை வேதனையோடு நினைவுகூரும் பெரியவரைப் பாட்டில் காட்டியிருக்கும் திரு. கட்டாரியின் வரிகள்…

    மசண்டப் பொழுது சாயபோதயில
    மல்லாக்க நானுஞ் சாய
    என்னப்போல ஏத்திவந்தஒரு
    எளந்தாரி லாரிக்காரன்..
    காங்கிரீட்டு பாலத்தோட
    கழட்டிப் போனாங் எங்கால…..
    ஊனக்கால மூணுகாலா
    உத்தவுக பழிச்சிப் பாட..
    காரச்செவரு..சாணித்திண்ண
    கழனி தோட்டம் எல்லாம் போக..
    கப்பிரோடுக் கால்நடையா
    கருவேலஞ் செடி தெளிநெழலு….
    நாந்திணிச்ச நாறக்காத்துஎந்
    நாஞ்சிவிட்ட மூச்சுக்காத்து
    ரப்பரு மூட்டைக்குள்ள ரம்மியமா
    சிரிச்சியாட….
    நாம்பெத்த புள்ள ரெண்டும்
    நடுவீதி வந்திருச்சே…..

    ***

    ’நிலையில்லா வாழ்க்கையிலே மனிதருக்குள் பேதமும் வெறுப்பும் எதற்கு? ஆருயிர்க்கெலாம் அன்புசெயலன்றி மனித வாழ்வின் பயனேது?’ என்ற உயர்தத்துவங்களை உதிர்க்கும் காயம்பட்ட மனமொன்றைக் கண்முன்னே நிறுத்தும் திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

    குழந்தைக்கு இருக்கும்
    கள்ளமில்லா அன்பு உள்ளம்
    படித்தவர்க்கு பாரிலே
    இல்லாது போனதேன்..???

    உதறிவிட்ட உறவுகளால் நான்
    தெருவோரம் நின்றாலும்
    அன்பு காட்ட மறுக்கவில்லை
    மாசில்லா மழலைகள்…!

    வாழுகின்ற காலத்தில்
    பிறர் வாழ்விற்கு வாசனை
    சேர்க்க முடியாவிடினும்,
    பிறர் வாழ்வின் வாசனையை
    போக்காது காப்போமே…!

    மண்ணிலே பிறந்ததெல்லாம்
    மண்ணுக்கே சொந்தமாம்
    இதையுணர்ந்து ,
    வாழும் சில நொடிகளை
    மகிழ்வுடன் வாழ்வோமே.!!!

    ***

    கற்சிலைக் கடவுளரின் இரும்பு உண்டியலை நிரப்பும் மக்கள், பேசும் நற்சிலைகளாய் வீதியில் நிற்கும் ஏழைமாந்தர்க்கு உண்டி கொடுத்து அவர்தம் வயிற்றை நிரப்புவதில்லை! கடவுளரும் இக்கொடுமையைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை! எனும் கசப்பான உண்மையைக் கவினுற விளம்பும் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

    திருவிழாக் கோயிலில்
    காற்றுப்பலூன் விற்க
    வந்தோம் வயிற்றுப்பசி
    மட்டுமே ஜெயிக்க
    நிற்கிறோம் கால்கடுக்க..!
    உச்சி வெய்யிலிலே
    வாடிப்போகுது பிஞ்சுமனம்
    நெஞ்சில் ஈரம்
    இருப்பவர் வாங்குங்க
    அண்ணாச்சி ஒண்ணாச்சும் …!

    கோயிலுக்குள் கூட்டம்
    பக்திக்குக் குறைவில்லை
    இரும்பு உண்டியல்
    நிறைந்தாலும் நிறையும்
    ஏழைகள் வயிறு
    ஒருநாளும் நிறையாதே
    பக்தர்கள் கண்களில்
    சிலைக்கு மட்டுமே இடம்
    சிலையாக நிற்கும்
    எங்கள் பக்கமும்
    திரும்பட்டுமே மனம்..!
    முடிந்தால் கல்லுச்சாமி
    நீ எங்கிருக்கே
    எங்களுக்கும் காமி…!

    ***

    ’ஊன்றுகோல் இல்லை ஐயா…இது எனது மூன்றாம் கால்! விரிந்த மனத்தின் வெளிச்சத்தைக் காட்டவே இப்புகைப்படம்; என் ஊனத்தைப் பறைசாற்ற அன்று!” என்று மிடுக்காய்ப் பேசும்  மானுடனைப் போற்றும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    ஊன்றுகோல் என்றே உவமானம் சொல்லாதீர்
    மூன்றுகால் என்றே முடிவெடுங்கள்தோன்றும்
    நிலைபார்க்கும் நீங்கள் நினைக்கும் வகைஎன்
    அலையில்லை வாழ்க்கை அமிழ்து 

    பேரக் குழந்தைகள் பேருதவி யால்நெஞ்சு
    ஈர வயலாய் எழில்பூத்துசாரல்
    மழைபோல் மனம்நனைக்கும் மட்டில்லா அன்பால்
    தழைத்திருக்கும் வாழ்க்கை வயல்.
    […]
    வகையற்று வாடும் வரலாற்று சோக 
    புகைப்பட மல்ல இதுவேமுகைபோல் 
    விரிந்த மனசின் வெளிச்சத்தைக் காட்ட 
    தெரிந்த உணர்வின் திறம்.

    ***

    ’மன ஊனம் கொளலே தீது! உடல் ஊனம் முன்னேற்றத்திற்கென்றும் தடையாயிருந்திடாது!’ எனும் உற்சாகச் செய்தியை வரலாற்றுச் சாதனையாளர்கள் வாயிலாய் அறியத்தரும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    மன ஊனத்தைவிட
    உடல் ஊனம்பெரிதல்ல
    […]
    பீதோவன்செவிடாகிருந்த
    நிலையில்தான் 
    சாகாவரம் பெற்ற ராகங்களை
    உருவாக்கினார்
    கவிஞர் மில்டன்
    பார்வையற்ற நிலையில்தான்
    சொர்க்கம் இழக்கப்படல் 
    என்கின்றகாவியம் எழுதினார்
    ஜூலியஸ்சீசர்
    காக்கா வலிப்பு  நோய்
    இருந்தபோதும் மாவீரனாய்
    திகழ்ந்தார்
    இவர்கள்யாரும் யாரிடமும்
    அனுதாபத்தை
    எதிர்பார்க்கவில்லை
    […]
    இதோஇந்த மனிதனும் அப்படியே
    தன் மகன்களின்
    சந்தோஷத்தில் மகிழ்ச்சி கொள்ளும்
    மன உறுதி கொள்கின்றார்

    ***

    உழைப்பின் உயர்வைக் கண்டுமகிழ்ந்து காற்றாடியாய்க் காற்றில் பறக்கும் நெஞ்சத்தை நேயமுடன் விவரிக்கும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    போரின் வக்கிரங்கள் கொண்டு போயின
    வீரியமிக்க காளையின் காலையும் தான்!
    ஊன்று கோல்கள் ஆகிய மூங்கில்
    ஈன்றது அவன் தைரியத்தை மீண்டும்!
    […]
    உழைத்த கரங்கள் மண்ணில் மீண்டும்
    விதைத்த முளைகள் பயிர் கொண்டு பசுமை!
    பசுமை வயலில் மட்டுமா விளைந்தது
    தேசுடன் அவன் மனதிலும் தான்!
    பாசமாய் அவன் பெற்ற செல்வங்கள்
    மாசிலா அன்புடன் ஊன்றுகோல்களாய் அவனைச் சூழ்ந்திட
    லேசாகிக் கரைந்து மறைந்தன அவன் மனதின் ஊனங்கள்!
    […]
    நீலவானில் நீந்தும் காற்றாடி ஆன அவன் இதயம்!
    சீலமாய் உரைத்தது பகிரங்கமாக …ஒரு பழமொழி
    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்றே
    பச்சை
    வயல்களும் நீலவானமும் சாட்சியமாக…

    ***

    அருமையான கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்தித்துவருவோம் வாருங்கள்!

    காலில்லை என்று சோர்ந்துபோகாமல், கோலின் துணையோடு, தாளை(உழைப்பு) நம்பிப் புறப்படும் பெரியவரின் மனத்தில் ஊடாடும் ஆசைகளை இயல்பாய்க் கொணர்ந்திருக்கும் கவிதையொன்றைக் கண்ணுற்றேன்.

    அக்கவிதை…

    ஒற்றைக்கால் இல்லையென
    ஒருநாளும் சோர்ந்ததில்லை
    அற்றைக்கிரை தேடுதற்கு
    அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !

    பெற்றமகன் துணையிருக்க
    பெருமகிழ்வு கூடிடுதே
    விற்றிடுவேன் பலூனூதி
    விரட்டிடுவேன் வறுமைதனை !

    உற்றதுணை யாயெனக்கு
    உதவுமிரு ஊன்றுகோலே
    பற்றற்ற வாழ்க்கையிதே
    பழக்கமாக ஆயிற்றே !

    கற்காத காரணத்தால்
    கவலையென்னை வாட்டுவதால்
    கற்பிப்பேன் பிள்ளைக்கு
    கடமையது எந்தனுக்கு !

    குற்றுயிராய்க் கிடந்தாலும்
    குனிவுவர விடமாட்டேன்
    நற்பேரும் நானெடுப்பேன்
    நன்மைகளும் செய்திடுவேன் !

    சுற்றியுள்ள பசும்வயலும்
    சுவர்க்கம்தான் எங்களுக்கு
    வற்றாத வரமாக
    வசமாகும் வானமுமே ….!!

    இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. சியாமளா ராஜசேகரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    ***

    ’சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு’ என்பார் வள்ளுவப் பேராசான். ஆம்! வாழ்வில் துயரமும், துன்பமும் வரிசைகட்டி நிற்கும்போதுதான் அயராத நெஞ்சுரம் வேண்டும்; அதுவே துன்பத்தைத் தூர்த்தெறியும் கோடரி. அவ்வகையில், பிறரின் அனுதாபம் வேண்டாத, வீரவுணர்ச்சிமிக்க மாற்றுத் திறனாளியைத் தன் கவிதையெனும் உளிகொண்டு சிறப்பாய்ச் செதுக்கியிருக்கும் திரு. ருத்ரா. இ. பரமசிவனை இவ்வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    மூங்கில் எலும்புகள்
    முட்டு கொடுத்தது
    இந்த உலகத்தின் 
    மொத்த கனத்தையும்
    துணிக்கட்டு

    துணிச்சலில் நெய்த துணியில்.
    இன்னும்
    கனவு பாக்கியிருக்கிறது
    […]
    சொர்க்கத்தையும்
    கடவுள்களையும்
    அதோ பார்க்கிறேன்
    வண்ண வண்ணப் பலூன்களாய்.
    எங்களைக்கொல்ல
    உங்களுக்கு துப்பாக்கி குண்டுகள்
    தேவையில்லை.
    த்சோ த்சோ”…போதும்
    அந்த காலின் மிச்சத்தையா தேடுகிறீர்கள்.
    அதை நான் 
    அவன் சற்று வலியில் ஓய்ந்தால் 
    எடுத்துக்கொள்ளட்டுமே
    என்று இரவல் கொடுத்திருக்கிறேன்
    ஒலிம்பிக் வீரன்
    பீலே”வுக்கு.

    ***

    ஊக்கத்தோடு ஆக்கங்களைத் தொடர்ந்து படைத்தளித்துவரும் அனைத்துக் கவிஞர்களுக்கும் என் நன்றி!

     

    Share
  • ஆடைகட்டி வந்த நிலவோ …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    அமுதவல்லி

     

    ஆடைகட்டி வந்த நிலவோ …

    நிலவுக்கு ஆடைகட்டிய முதல் கவிஞன் தமிழனாகத்தான் இருக்க முடியும்! அதுவும் பண்பாடு, கலாச்சாரம், இவற்றை தன் வரிகளில்கூட விட்டுக்கொடுக்காத பட்டுக்கோட்டையார் வரைந்த பாடல்! டி.ஆர்.மகாலிங்கம் – பி.சுசீலா குரல்களில் அமுதவல்லி திரைப்படத்தில் அமர்க்களமாய் அமைந்த பாட்டு! விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் விளைந்த பாட்டு!

    சில பாடல்கள் இன்னார் பாடியதால்தான் பெருமை பெறுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. அவ்வகையில் டி.ஆர்.மகாலிங்கம் தவிர வேறு எந்தக் குரல் இப்பாடலுக்கு பொருத்தமானதாய் அமைந்திருக்க முடியும்? இசையமைப்பாளர் இசைவடிவம் தேர்ந்தெடுப்பதுபோலவே இன்னார் பாடினால் இந்தப் பாடல் நன்றாக வரும் … ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய்வதிலும்கூட வெற்றியின் ரகசியம் அமைந்திருக்கிறது!

    மடைதிறந்த வெள்ளமாய் கவிதையெனச் சொல்லும் திறம் என்ன சொல்ல? இப்பாடல் மெட்டுக்காக எழுதப்பட்டதா… அல்லது எழுதப்பட்டபின் இசையமைக்கப்பட்டதா என்பது உருவாக்கியவர்களுக்கே வெளிச்சம்… கேட்கின்ற போது மனம் துள்ளச் செய்வது என்னமோ நிச்சயம்!!

    காலங்கள் பல கடந்தாலும் காவியமாய் உலவும் பாட்டு! கனிவாய் சொல்லமுதம் சுகமாய் பெருகிடும்போது கேட்காத உள்ளம் ஏது? தெம்மாங்கின் நடைகலந்த இசையமைப்பில் தென்றல் தீண்டும் சுகம் தரும் கீதமிது!!

    ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
    இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
    குளிர் ஓடையில் மிதக்கும்
    மலர் ஜாடையில் சிரிக்கும்
    இவள் காடு விட்டு வந்த மயிலோ
    நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
    சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
    எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
    தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
    கிளை தான் இருந்து கனியே சுமந்து
    தனியே கிடந்த கொடி தானே
    கண்ணாளன் உனைக் கலந்தானந்தமே பெற
    காவினில் வாழும் கிளி நானே
    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
    சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

    அந்தி வெய்யில் நிறத்தவளோ
    குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
    உந்தி உந்தி விழும் நீரலையில்
    ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
    இன்பம் தந்த மயில் இவள் தானோ
    ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

    ஆஹா…ம்ம்…லாலா…
    அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
    அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
    வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
    மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

    இதயம் கனிந்து எதையும் மறந்து
    இருவர் மகிழ்ந்து உறவாட
    நன் நேரமிதே
    மனம் மீறிடுதே
    நன் நேரமிதே
    மனம் மீறிடுதே
    மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்
    [ஆடை கட்டி வந்த நிலவோ]

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    திரைப்படம்: அமுதவல்லி
    கவிஞர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியோர்: டி ஆர் மகாலிங்கம், பி சுசீலா
    காணொளி: https://youtu.be/G8QcPKPYc2Y

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “ஆழ்ந்து படித்தென்ன! , ஆராயா(து) ஆவைப்போல்,
    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம், -சூழ்ந்த
    அனன்யபக்தி யோடு அவன்தாள் பற்றல்,
    வினய விசிஷ்டாத் விதம்”….கிரேசி மோகன்….

    Share
  • வல்லமை டாட் காம் பற்றி என்னுடைய கருத்து!

    வல்லமை டாட் காம் பற்றி என்னுடைய கருத்தை கீழே கொடுத்திருக்கிறேன்.

    வல்லமை டாட் காமில் முதன் முறையாக நுழைந்தேன். பார்த்தேன். திகைத்தேன். !கடல் மாதிரி இருக்கிறது. சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மூன்றையும் தாரக மந்திரமாக கொண்ட வல்லமை பலருக்கு உபயோகமாகயிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிகிறது. அதில் பிரசுரமாகும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நிழற்படங்கள், தலையங்கம், நேர்காணல்கள், சமையல் பகுதி, ஓவியங்கள், ஒலி வெளி, காணொளி மற்ற பகுதிகள் பிரமிக்க வைக்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “ பிரமாதம் “ என்பேன்.

    எவ்வளவு பயனுள்ள கட்டுரைகள், பொருள் பொதிந்த தலையங்கம் , சுவைக்க சுவைக்க திகட்டாத கவிதைகள் , எண்ணிறந்த படைப்புகள் ! எல்லாவற்றையும் படிக்க ஒருவருக்கு நேரம் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு நாளுக்கு ஒருமுறையாவது எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வலையத்தில் நுழையலாம். விரும்பியதை படிக்கலாம். தொடர்ச்சியாக வல்லமையை ஒருவர் படித்து கொண்டு வந்தால் அவருடைய தமிழ் வளமாகும் என்பது திண்ணம். ஆர்வம் இருந்தால் கவிதையை உருவாக்கலாம். ஐந்து வயதில் இவ்வளவு முன்னேறியிருப்பது சாதனைதான். ஆண் வெற்றியாளருக்குப் பின்னால் ஒரு பெண்ணும், ஒரு பெண் வெற்றியாளருக்குப் பின்னால் ஒரு ஆணுமிருப்பதை போல் வல்லமையின் சாதனைக்கு, வெற்றிக்குப் பின்னால் ஆசிரியர் குழுமம் இருக்கிறது. அவர்களுடைய கடின உழைப்பு புரிகிறது. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வல்லமை மேலும் மேலும் விருட்சமாக வளர என் வாழ்த்துக்கள்.

    என். ஸ்ரீதரன்

    Share
  • ஆறாம் ஆண்டு தொடக்கம்

     
    நான்கு எழுத்திற்கு ஓர் சிறப்புண்டு,
    வல்லமை என்கிற பெயருண்டு

    ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்து,
    ஒப்பற்ற மின்னிதழாய் தரணியில் நிலைத்து ,

    கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஒத்துழைப்பினை நல்கட்டும்
    நற்றமிழின் நல்லிதழாய், என்றும் திகழட்டும் ,

    ரா.பார்த்தசாரதி

    Share
  • மனங்கனிந்த வாழ்த்துகள்

    ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்த “வல்லமை”க்கு வாழ்த்துக்கள்.

     

    இந்த “ஆறு” பெருகி
    எழுத்துக்களின்
    காவிரிக்கும்
    பூவிரிக்கும்
    தமிழின் மணம் விரிக்கும்.
    “சொல் பொருது”இரங்கும்
    மல்லல் பேர் யாறாய்
    நம் மனம் உள் பொருந்தி
    மகிழ்ச்சி நிறைக்கும்.
    இயக்கும் ஆசிரியர் குழுவுக்கும் படைப்பாளி நண்பர்கள் யாவருக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன் ருத்ரா

     

    Share
  • ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

    161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

    Vallamai_6th_year_300x1251

    கடந்த ஓராண்டில் வல்லமை, 4 போட்டிகளை நடத்தியுள்ளது. என் பார்வையில் கண்ணதாசன், மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் ஆகிய கட்டுரைப் போட்டிகளைக் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் அவர் நண்பர்களுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளது. எழுத்தாளர் வையவனின் ஆலோசனைப்படி, பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற மாதாந்திரக் கட்டுரைப் போட்டியை அறிவித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வாராந்தரப் படக்கவிதைப் போட்டியை வாசகர்களின் அமோக ஆதரவுடன் நடத்தி வருகிறது. தேமொழியின் யோசனையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்காக, சாந்தி மாரியப்பன் படங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க, மேகலா, இதற்கான நடுவராக இருந்து, உரியவர்களை நன்முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

    வாரந்தோறும் ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் சிறந்த ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்துள்ளோம். இந்தப் பணியை அன்பர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேமொழி சிறப்பாகத் தொடர்கிறார்.

    இந்த ஓராண்டில் பல்வேறு தொடர்களை வல்லமை வெளியிட்டுள்ளது. சொற்சதங்கை – கவியுள்ளம் – காற்று வாங்கப் போனேன் (கே.ரவி), திருமால் திருப்புகழ் – கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் (கிரேசி மோகன்), இசைக்கவியின் இதயம் (இசைக்கவி ரமணன்), என்னதான் இருக்கிறது வேதத்தில் (சு.கோதண்டராமன்), அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (சுபா), ஐந்து கை ராந்தல் (வையவன்), சுட்டும் விழிச்சுடர் (பவளசங்கரி), இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (சக்தி சக்திதாசன்), கவியரசு கண்ணதாசன் (காவிரி மைந்தன்), அவன், அது , ஆத்மா – காலம் (மீ.விசுவநாதன்), உன்னையறிந்தால் (நிர்மலா ராகவன்), நான் அறிந்த சிலம்பு (மலர்சபா), குறளின் கதிர்களாய் (செண்பக ஜெகதீசன்), தேகமும் யோகமும் (கவியோகி வேதம்), காதல் நாற்பது (ஜெயபாரதன்), ஓலைத் துடிப்புகள் (கவிஞர் ருத்ரா), சிகரம் நோக்கி (சுரேஜமீ)… எனத் தொடரும் தொடர்கள், வல்லமைக்கு வளமையும் பெருமையும் சேர்ப்பவை.

    இவையல்லாமல், நாகேஸ்வரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு நடப்புகளைக் குறித்துப் பத்திகளை எழுதி வருகிறார்கள். ஆய்வறிஞர்களும் பேராசிரியர்களும் தங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்கள். இவை வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்து வருகின்றன.

    கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மட்டுமின்றி,ஒலி வடிவிலும் வல்லமையில் கேட்க முடியும். கே.ரவி, இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட பலரின் பாடல்கள், வல்லமை நேயர்களின் நெஞ்சம் கவர்ந்தவை. எழுத்தும் ஒலியும் இணை சேர்ந்து வருவதைப் போல், எழுத்தும் ஓவியமும் சு.ரவியின் ஆக்கங்களில் இணை சேர்ந்து, வாசகர்களை வசீகரிக்கின்றன.

    வல்லமையின் இடுகைகளின் தொகுப்பினை ஒவ்வொரு நாளும் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே கொண்டு சேர்க்கும் வசதியும் வல்லமையில் உண்டு. சிறிது காலம் செயல்படாமல் இருந்த இந்த வசதி, நம் தள நிர்வாகி ஸ்ரீநிவாசன் அவர்களின் உதவியால், இப்போது மீண்டும் செயல்படுகிறது. வாசகர்களும் படைப்பாளர்களும் வல்லமை முகப்பில் பின்னூட்டங்களுக்கு மேலே உள்ள பெட்டியில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இட்டு, வல்லமையின் எல்லா இடுகைகளையும் அறியலாம்.

    வல்லமையின் சீரிய வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. கனிவும் அர்ப்பணிப்பும் மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்.

    இந்த இனிய தருணத்தில் இசைக்கவி ரமணன் அவர்களின் கனிந்த வாழ்த்து, நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

    இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
    இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
    அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
    அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!

    கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
    கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
    பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
    பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

    ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
    எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
    காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
    கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

    எனத் துல்லியக் கவிபாடி, நம் உள்ளங்களை அள்ளிய தெள்ளியர், அவர்.

    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

    என்ற அவரின் வாழ்த்து, வல்லமைக்கு மேன்மேலும் வலிமை ஊட்டுகிறது. அவரது கூற்றின்படி, பைந்தமிழின் களஞ்சியமாய் விரிவோம். பாரெங்கும் தொண்டுகள் புரிவோம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    craz

    ”நிறத்துக்கு நீலம், நினைப்புக்கு லீலை,
    கருத்துக்கு கொள்மனமே கீதை, -சிரத்துக்குள்,
    சீர்மல்கும் சீதரனை சிந்திக்க ஜீவன்கண்
    ணீர்மல்க ஆன்மாவா கும்….

    ”பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
    சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
    எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்

    Share
  • சாட்சி கணபதி பெருமாள்!

    craz

    காட்சி அளிக்கின்றார் கீழத் திருப்பதியில்
    மாட்சிமை மாம(ன்)அல மேலுமண, -சாட்சியாய்:
    நாம கணபதியை நாம வணங்கினால்,
    ஷேமம் ஜரகண்டி ஸ்பீட் ….கிரேசி மோகன்….

    “மாண்டு பிறந்திடும் மானுட வாழ்க்கையில் –
    யாண்டும் இருப்பு எழுத்தொன்றே -ஆண்டு –
    விழாகாணும் வல்லமைக்கு வாயார நன்றி –
    (ஆசிரிய )குழாமுக்கோர் ஒபோட்டுக் கூவு “….கிரேசி மோகன் ..

    Share
  • ஆனந்தமான ஆறாம் ஆண்டு!

    அன்பு நண்பர்களே!

    vallamai

    வணக்கம். ஒன்றாக இணைந்து பணியாற்றி அறுபது முழுமதி கண்டோம். புதிதாகப் பல கிளைகள் கண்டோம். கனிகள் பிறந்தன. சுவைத்தோர் ஆயிரம். சுவைபடச் செய்த அனைவருக்கும் இந்நாளில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். துஞ்சாமல், பல்வேறு நிலையிலும் எங்களோடு உடனிருந்து இவ்வளர்ச்சிக்கு உரமிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி கூறும் நேரமிது. உறுதுணையாக உடனிருந்து உதவிக்கரம் நீட்டும் தோழர், தோழியரே , வல்லமை என்னும் மலரின் மணம் வீசும் இதழ்களான, எழுத்தாளர்களே, உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தைகளால் வல்லமையை வளமையாக்கியிருக்கிறீர்கள். தேன் சிந்தும் மலரில் நுகர்கின்ற வண்டாய் வரும் வாசகர்களே உங்களுடைய அபரிமிதமான வருகையே எங்களை உற்சாகமூட்டுகிறது. இந்த வண்டுகளின் ரீங்காரமே நம் வல்லமையை மென்மேலும் சிறப்பாக்குகிறது. இந்நேரத்தில் இந்த இதழ் மேலும் சிறப்புப் பெற வழிகாட்டுதல் புரிந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து இணைந்திருப்போம். இன்தமிழ் இனிமையை இன்பமாய் சுவைப்போம். வாரீர்!!

    வல்லமை நிர்வாகக் குழு

    Share
  • ஆண்டுவிழாக் காணும் வல்லமைக்கு வாழ்த்து!

    — இசைக்கவி ரமணன்.

     

     

    butterfly-border-vவல்லமையின் வல்லமைக்கு எல்லோரும் காரணம், அதில்
    எல்லோரின் வல்லமைக்கும் வல்லமையும் காரணம், இது
    நல்லவர்கள் கூடியேற்றும் நற்றமிழின் தோரணம், இனி
    நாற்றிசையும் பரவட்டும் நமதுதமிழ்ப் பூமணம்

    இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
    இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
    அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
    அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!
    கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
    கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
    பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
    பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

    ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
    எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
    காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
    கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    சொல்லாண்டு வாழ்க! சுவைபலவும் காண்க!
    சோகமே இல்லாத சொர்க்கமாக விரிக!
    எல்லோர்க்கும் இடம்தந்தே மிகவிரிந்து வளர்க! இந்த
    ஏழைக்கும் இடம்தந்தீர் என்நன்றி ஏற்க!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

     

     

    அன்புடன்,
    ரமணன்
    16.05.2015

    Share
  • தேவை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    “கனவு காணுங்கள்” என்றார், அப்துல்கலாம் . கனவு காண்கிறோம். இந்தியா வல்லரசு ஆகவேண்டும். இது மட்டுமா? இது எங்ஙனம் சாத்தியம்? அதை நோக்கிய கனவுதான் இது! மக்களை வழிநடத்திச் செல்ல நல்ல தலைவர் வேண்டும் என்று கனவு காண்கிறோம். நல்ல தலைவர்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். யாரேனும் ஒருவர் இப்படி வந்தால் நாடே கட்டாயம் பின்னால் வரும். இளைய சமுதாயமே நாட்டு நடப்பைக் கண்டு நெஞ்சம் துடிக்கவில்லையா. உம் கனல் தெரிக்கும் பார்வையால் சுட்டுவிடத் தோன்றவில்லையா..

    நம் கனவுத் தலைவர் எப்படி இருக்க வேண்டும்? காமராசர் போல் படிக்காதவராக இருந்தாலும்  பண்பாளராக இருக்கலாம். கக்கனைப் போல எளிமையான நேர்மையானவராக இருக்கலாம். காமராசர் இறந்தபோது அவர் விட்டுச் சென்ற சொத்து நான்கு அரைக்கை சட்டை, நான்கு வேட்டி, 150 ரூபாய் பணம்… இவ்வளவுதான் அவர் சொத்துக் கணக்கில் தவறு நேரவே வாய்ப்பிருக்காது. கணக்கிடுவோருக்கும் எளிது. கக்கனின் சொத்து ஒரு பழைய சைக்கிள், இரண்டு கதர் வேட்டி, 2 கதர் சிப்பா அவ்வளவுதான். தோழர் ஜீவா அவர்களிடமும் கிட்டத்தட்ட இதே அளவுதான் சொத்து. ஆனால் அவர்களெல்லாம் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட பெருந்தலைவர்கள். காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின்போது, “மாணவர்களே கலாச்சாலை விட்டு வாருங்கள், சுதந்திரப் போராட்டத்திற்காகப் பாடுபடுங்கள். இளைஞர்களே தொழிலகத்தை விட்டு வாருங்கள் நாட்டின் போராட்டத்திற்கு நீங்கள் தேவை”, என்றார். இன்று இளைஞர்கள் கலாச்சாலையையும், தொழிற்சாலையையும் விட்டு தெருவில் இறங்கி சேவை செய்யத் தயாராக இருந்தாலும், தலைமையேற்று வழி நடத்த நல்ல தலைவர்கள் வேண்டுமே. கல்வி கற்காவிட்டாலும் கல்வி பற்றி தெரிந்தவர்கள் தேவை. பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்தவர் இல்லையென்றாலும் எதைச் செய்தால் இந்தியாவின் பொருளாதாரம் நிலைபெறும் என்று அறிந்தவராக இருக்க வேண்டும். சுய இலாபம் பார்க்காமல் மக்கள் நலம் பார்ப்பவர்களே தேவை. இந்தியாவை வல்லரசாக்கும் தலைவரைத் தேட வேண்டியதில்லை. மக்களை வலிமையுடையவராக மாற்றக்கூடிய நல்ல தலைவரே இன்றைய அவசியத்தேவை. உறங்கவில்லை. அப்துல் கலாம் சொன்ன கனவைக் காண்பதற்காக உறங்கவில்லை. நினைவோடு இருக்கிறோம். நல்ல தலைவரை எதிர்பார்த்து.. நல்ல தலைவரின் வழி செல்லக் காத்திருக்கிறோம்.. தேவை நல்ல தலைவர்.

    Share
  • சுட்டும் விழிச் சுடர்!

    பவள சங்கரி

    சுட்டும்-விழி1-300x76

    பெண்களுக்கான தனிப்பட்ட நீதி மன்றம்

    பெண்ணை மயில் என்றோம் – அவள்
    ஆட்டத்தை அடக்கி விட்டோம்!
    அவளைக் குயில் என்றோம்
    பாட்டை முடக்கி விட்டோம்!
    அவளை நிலவென்றோம்…
    பிறைகளை அபகரித்தோம்…
    பாரதி
    பெண்ணைப் பெண்ணென்றான்
    அவள்
    பிறப்புக்கு அர்த்தம் கண்டான்

    ஈரோடு தமிழன்பன்

    அரசாங்கத்தில் போடப்படுகிற பல திட்டங்கள் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும், போகப்போக அதன் பயன்பாடுகள் சுருங்கிக்கொண்டே போய்விடுகின்றன. இதற்கு பெரும்பாலும் மக்களும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எங்கு அநீதி நடந்தாலும், அது நமக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனமோ அன்றி நமக்கேன் தேவையற்ற வம்பு என்ற எண்ணமும் நம்மில் ஊறிப்போய் கிடக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது பார்க்கப்படும் கண்ணோட்டமும் பல நேரங்களில் வேறுபட்டே இருக்கிறது. இன்றைய உலகில், சமூக சேவை, கல்வி, அறிவியல், சட்டம், பொருளாதாரம், நிர்வாகம், அரசியல் என பல்வேறுவிதமான துறைகளில் மின்னிக்கொண்டுதான் உள்ளனர். இவையனைத்தையும் மீறி பெண்களுக்கு பாதுகாப்பு என்று வரும்போது அது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து நம் அரசாங்கம் இன்னும் கடக்க வேண்டிய தொலைவும் அதிகம் உள்ளது. நம் நாடு வல்லரசாக வேண்டும் என்ற பெரும் இலட்சியம் ஒரு புறம் இருந்தாலும், நம்முடைய அடிப்படை பாதுகாப்புத் திட்டங்களையாவது உடனடியாக சரிவர நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பொதுவாகவே நம் நீதித்துறை எந்த ஒரு வழக்கிற்கும், சூட்டோடு சூடாக தீர்ப்பு வழங்குதில்லை. குற்றவாளி தான் செய்த குற்றத்தையே மறந்துவிட்டு அடுத்த ஒன்றிற்கு ஆயத்தமாகும் நிலைக்கு வந்தாலும், அச்சட்டம் தம் கடமையை சரியான காலத்தில் நிறைவேற்றுவதில்லை. பெண்களுக்கென்று, பெண்களாலேயே நடத்தப்படும் வங்கி, காவல் நிலையங்கள் போன்றவைகள் செயல்பட்டாலும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உடனுக்குடன் விசாரித்து, தீர்ப்பு வழங்கும் வகையில் பெண்களுக்கான தனிப்பட்ட நீதி மன்றம் கட்டாயம் அவசியமாகிறது. பல ஆண்டுகள், பல்லாயிரம் செலவு செய்து நடையாய் நடந்த பின்னும் அதற்கான தீர்ப்பு என்பது பலப்பல வாய்தாக்களுக்குப் பிறகு விவாதத்திற்கு வந்து சலித்துப்போன நிலையில் வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் சிக்கல் மேலும் அதிகமாகிறதே தவிர வேறு எந்த பயனும் வருவதில்லை. இதனாலேயே பல வழக்குகள் நீதி மன்றம் வராமலே முடக்கப்படுகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக அடுத்த குற்றத்திற்கு தயாராகிவிடுகிறார்கள். அநீதி இழைக்கப்பட்ட பெண்ணே மேலும் துன்பத்திற்கு ஆளாகிறாள்.

    சமீபத்தில் இப்படியொரு மோசமான நிலை ஒரு 20 வயது இளம் பெண்ணிற்கு, அதுவும் மாற்றுத் திறனாளி பெண்ணிற்கு ஏற்பட்டிருப்பது நம் நாடு வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வாக இருக்கிறது. அரூர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்ற வியாழக்கிழமை (07-05-2015) இப்படி ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறது. மன நலமும், உடல் நலமும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணை தூரத்து உறவினனான ஒரு காமுகன் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியிருப்பதாக பாவப்பட்ட அந்த பெண்ணின் தாய் புகார் அளித்திருக்கிறார். பரிதாபமான நிலையில் இருக்கும் அப்பெண்ணை ஈவு இரக்கம் இல்லாமல், துண்டால் கட்டி பின்புறம் ஒரு தனிமையான இடத்திற்கு தூக்கிச் சென்று இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறான் கயவன். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தில், அப்பெண்ணின் தாயார் அருகிலிருந்த கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அவர்கள் அந்தத் தாயை அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார்கள். “ஓரு நாள் முழுவதும் வெளியில் காத்துக்கிடந்தும் புகார் அளிக்க உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை. மீண்டும் கடத்தூர் காவல் நிலையத்திற்கே திரும்பிச் செல்லும்படி கூறிவிட்டனர்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர். செவ்வாய்க்கிழமையன்று குற்றவாளியின் சார்பில் ஊர்க்காரர்கள் காவல் நிலையத்தை சூழ்ந்துகொண்டு சமரசத்திற்கு வலியுறுத்தியிருக்கின்றனர். கடத்தூர் காவல் நிலைய அதிகாரி சமரசம் செய்துகொள்வதாக கடிதம் எழுதிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதன் பிறகு காற்று வாக்கில் செய்தி எட்டி, TARATDAC மாவட்டச் செயலாளர் பி.சரவணன் , காவல்துறை கண்காளிப்பாளர் திரு லோகநாதன் அவர்கள் உதவியுடன் அப்பெண்ணை புதன் கிழமையன்று ADSP மையத்திற்கு அனுப்பியுள்ளார். பின் வியாழக்கிழமையன்று, ஐ.பி.சி. பிரிவு 376 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சமரசத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி அடித்து மிரட்டியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்கவே இத்தனை சிரமம் என்றால், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து, இன்னும் அங்கும் விலை பேசப்பட்டு, தீர்ப்பு என்று, எப்படி வரும் என்பது குற்றவாளியின் தரப்பு நிதி வசதியைப் பொறுத்ததுதான்.

    திருப்பூரில், திலகவதி என்ற பெண் கடந்த 4 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில், தற்காலிக இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். மேலதிகாரியின் பாலியல் அவதூறு பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அப்பெண்ணின் கணவர் ஸ்ரீதர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர்களுக்கு நிவேதா என்ற 6 வயது குழந்தை உள்ளது. திலகவதியை சக ஊழியர் ஒருவரோடு இணைத்து, மற்றொரு ஊழியர் அவதூறு பரப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதோடு திலகவதி மீது முதல்வரின் தனிப்பிரிவுக்கு யாரோ ஒருவர் புகாரும் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவிலிருந்து, இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலிலும் இருந்த திலகவதி வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கிற்கான நீதி என்று கிடைக்கும் என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த வீராசாமி என்பவரின் மனைவி புவனேசுவரி. 25 வயதான இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன் என்பவரின் தொடர்ந்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான புவனேசுவரி, கடந்த 7ம் தேதி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொது மக்கள் நேற்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து எஸ்பி உமா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்முருகன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். இனி இந்த வழக்கிற்கு நியாயம் கிடைக்கும் வரை மன உளைச்சல் தொடர்ந்தவண்ணம் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் இருக்க வேண்டியதுதான்..

    திருப்பூரில் வரதட்சிணை கேட்டு மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், மடத்துக்குளம் அருகிலுள்ள தளி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி உமாமகேசுவரி. நான்கு ஆண்டுகளாக திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    இப்படி அன்றாடம் எண்ணற்ற புகார்கள் காவல்துறையை நோக்கி படையெடுத்துக்கொண்டுதான் உள்ளன. பெரும்பாலோனோர் நீதி மன்ற இழுபறிக்கு அஞ்சி மனம் நொந்து புகாரை திரும்பப் பெறவும் செய்கின்றனர். சிலர் காவல் நிலையம் செல்லவே துணிவதில்லை. இது போன்ற நிலைகள் குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடுகின்றன. இதற்கான தீர்வை விரைவில் நிறைவேற்ற வேண்டியது சட்டத்தின் கடமையாகிறது. அந்த வகையில் மகளிருக்கான தனி நீதிமன்றம் அமைத்து இது போன்ற வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து, விரைவில் தீர்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டியது அரசின் உடனடி தேவையாக உள்ளது. தவறு செய்பவர்களின் எண்ணிக்கை இதனால் குறையும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

    Share