அதுவரும்!
-ரோஷான் ஏ.ஜிப்ரி
ஒரு பறைவையின் இறகு உதிர்வது போல்
ஒரு பூவின் இதழ் விரிவதுபோல்
சிறு பசியில் குழந்தை அழுவதுபோல்
பெரும் நிசியில் மௌனம் நுழைவதுபோல்
அதுவரும்…
இருண்ட வானம் கலைவதுபோல்
மிரண்டகாளை அலைவதுபோல்
மூர்க்கத்தனத்தின் பிரளயத்தோடும்
பார்க்க இயலாப் பரபரப்போடும்
அதுவரும்…
தவணை கேட்க மறுத்த நொடியாய்த்
தலையணையோடு சரித்தபடியாய்த்
தாலாட்டுக் கேட்டுச் சிரித்தவடிவாய்த்
தாயவள் வயிற்றில் தரித்தபடியாய்
அதுவரும்…
துயரத்தின் உயரத்தையும்
நீளத்தின் ஆழத்தையும்
வாழ்க்கையின் கோலத்தையும்
அறிந்துணர்ந்து மனிதன் ஆராய
அதுவரவேண்டும்!
அது வந்தால்தான்
வாழ்க்கையின் மெய், பொய்
இரண்டையும் இனம்பிரிக்க ஏதுவாகும்!
இங்கு இருப்பவனுக்கும்,
மண்ணைப் பிரிப்பவனுக்கும்
அடுத்தவனுக்குக் குழியைப் பறிப்பவனுக்கும்
அவனவனின் அனுமதியின்றியே
அதுவரும்…
அவனோ நீங்களோ நானோ அழைக்காமல்
மரணம் என்னும்
மலர்ச்செண்டு கொண்டு
நம்மை நாடி அடைய
அதுவரும்!
