அயல்நாட்டு நிச்சயதார்த்தம்!
-ரா.பார்த்தசாரதி
தாயும் தந்தையும் ஜாதகம் பார்த்தார்கள்
உன்னை எனக்கு முடிவு செய்கிறார்கள்
ஆம் உன்னை ஸ்கைப்பில் காண விரும்பினேன்
உன் பெற்றோர் அனுமதியுடன் தொடர்பு கொண்டேன்!
நான் கடின உழைப்பால் முன்னேறினேன்
பிறர் உதவி கொண்டு முன்னேறமாட்டேன்
நீயும் என்னைப்போல் இருக்கவேண்டும் என நினைப்பேன்
எதையும் தனித்து நின்று சமாளிக்க வேண்டுமென எதிர்பார்ப்பேன்!
உரையாடும்போது உன் குடும்ப நிலையைக் கூறுகின்றாய்
உன் எதிர்காலப் படிப்பிக்கும் அடி போடுகின்றாய்
உன் குடும்பத்திற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டுகிறாய்
நீயும் நானும் வாழ்கையில் சரிபாதி என்கிறாய்!
வரும் முன்னே பல எதிர்பார்ப்புக்கள், கட்டளைகள்
இதற்கெல்லாம் ஒத்துக்கொண்டால்தான் திருமணம்
நிச்சயிக்கப்பட்டும் நின்றுபோன திருமணங்கள்
எதையும் சாதரணமாகக் கருதும் இக்காலத் திருமணங்கள்!
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?
தாய் தந்தையர் பார்த்து நிச்சயிக்கப்படுகிறதா?
ஆண், பெண் நேரிடை சந்திப்பில் முடிவாகிறதா?
ஜாதகத்தால் நல்ல ஜோடிகள் புறக்கணிக்கப்படுகிறதா?
திருமண வயது வந்தாலே ஆண், பெண்ணிற்குப் பல எண்ணங்கள்
எதையும் பிறர் நிலையில் நின்று நினைக்காத மனிதர்கள்
இரு கைகள் இணைந்தால்தான் வாழ்க்கை என உணர்ந்தவர்கள்
வரதட்சணை இல்லாத திருமணங்களே சிறந்த திருமணங்கள் !