Blog

  • பரவச நரசிம்மர்….

    கிரேசி மோகன்

     
    தூணப் பிளந்து அழகிய சிங்கர் பிரகலாதனை அள்ளியணைத்து அருள் பாலிக்கிறார்(நன்றி உபயம்-ரங்கம் பாலாஜி)….முன்பு எப்பவோ ‘’பாகவதத்தை’’ ‘’வெண்பாகவதம்’’ ஆக்க முயன்றபோது(பாற்கடலை குடிக்கப் போன கம்பனின் பூனைதான் நினைவுக்கு வந்தது) என் தம்பி பாலாஜி மனைவி மீரா கொடுத்த ‘நாரயணீயத்தை’ படித்து ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு வெண்பா என்று எழுதினேன்….கபிலாவதாரத்தோடு நிற்கிறது….பெருமாள் அனுக்கிரகம் இருந்தால் முடித்து விடலாம்….அப்போது எழுதிய ‘நரசிம்மாவதாரம்’ ….கிரேசி மோகன்….

     

    நரசிம்மாவதாரம்….
    ————————

    crazy
    அல்லில் பகலில் அகத்துள் அதன்வெளியில்
    புல்புழு பூச்சி பறவையால் -கொல்லும்
    மனிதனால் காட்டு மிருகத்தால் சாகா
    தனதுயிர் கேட்டுத் தவம்….(1)

    இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
    வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
    மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
    தோன்றினன் நாரணத் தொண்டு….(2)

    ”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
    பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
    கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
    நற்கதியை நாரதன் நன்கு….(3)

    அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
    அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
    இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
    மறையென நின்றான் மகன்….(4)

    முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
    முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
    காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
    கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….(5)

    பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
    பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
    மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
    சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….(6)

    விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
    மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
    பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
    பேரலை போலெழுந்தான் பிஞ்சு….(7)

    கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
    நாவின்தன் மென்மையாய் நைந்தது -சாவிந்த
    பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
    நொள்ளையான ஆட்கள் நமுத்து….(8)

    ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
    கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
    நாரண சக்திக்கு பூரண பக்தியே
    காரணம் என்றான் கொழுந்து….(9)

    காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
    போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
    ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
    கூடத்து தூணுக்கே கை….(10)

    பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
    சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
    தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
    வேகமாய் வைகுண்டம் விட்டு….(11)

    கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
    உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
    பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
    காதுசிகை கோதி குதிப்பு….(12)
    சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
    சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
    இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
    கரநுனியால் கீறிக் கிழிப்பு….(13)

    ஆவேச மான அரியை அடக்கிட
    பூவாசத் தாயே பயந்திட -சாவாச
    மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
    தேகம் தழுவத் தணிவு….(14)

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
    குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….(15)

    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….(16

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி:  திங்களை நாய்குரைத் தற்று

     

    நெறியால் உணராது நீர்மையும் இன்றி
    சிறியார் எளியரால் என்று – பெரியாரைத்
    தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
    திங்களை நாய்குரைத் தற்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நெறியால் உணராது நீர்மையும் இன்றி
    சிறியார் எளியரால் என்று பெரியாரை
    தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல்
    திங்களை நாய் குரைத்து அற்று

    பொருள் விளக்கம்:
    உலகநெறிமுறை வழி அறிந்து கொள்ளாது, தகுதியும் இல்லாத அறிவற்ற சிறியோர், எளிமையாகத் தோற்றமளிக்கும் அறிவுடைய பெரியோரை தங்களையும்விடத் தாழ்மையானவர் எனக் கருதிக்கொண்டு, தங்கள் முன் அவர்களை இருக்கச் செய்து தகுதியற்ற சொற்களைக் கூறுவது, தண்ணொளி வீசும் நிலவை நாய் இளக்காரமாக நினைத்து அதனை நோக்கிக் குரைப்பதைப் போன்ற செய்கையாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: பெரியோரை எளியோராக நினைத்து தகுதியற்ற வார்த்தைகளைச் சொல்லும் கீழோரால் பெரியோர் புகழ் மங்குவதைவிட, அவ்வாறு பேசும் சிறியோரது அறியாமையையே வெளிப்படும்.

    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல். (குறள்: 97)

    பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொற்கள், அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும் என வள்ளுவர் குறிப்பதை உணர்பவர், தனது தகுதியைத் தாழ்த்திவிடும் தகாத சொற்களை உரைக்க விரும்பமாட்டார்கள்.

    Share
  • காதலின் பொன்வீதியில் – 4

    மீனாட்சி பாலகணேஷ்.

     

    உலகத்தின் முதல் காதல் கடிதம்!

    “உயர்ந்த குணங்களின் இருப்பிடமானவனே! பேரழகனே! உனது புகழ் செவிகளின் வழியாக எனது மனதை அடைந்து வாழ்க்கையின் துயரங்களைக் களைந்து விடுகின்றது; உனது அழகிய திருவுருவைக் காணப்பெறுவது கண்கள் செய்த பாக்கியம். எனது உள்ளம் தனது நாணத்தை விட்டொழித்து உன்னைக் கணவனாக வரித்துக் கொண்டு விட்டது!” எனும் ஸ்லோகத்துடன் துவங்குகின்றது ருக்மிணி கிருஷ்ணனுக்கு எழுதிய காதல் கடிதம்!

    அரசிளங்குமரி ருக்மிணி: அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியவள்; விதர்ப்ப நாட்டு மன்னனான பீஷ்மகனின் அருமை மகள். சிறுவயது முதற்கொண்டே துவாரகையின் நாயகனான கிருஷ்ணனைப் பற்றிக் கேள்விப் பட்டும், அவனுடைய வடிவழகைப் பற்றிச் சிந்தித்தும், கம்சனைக் கொன்று தன் தாய் தந்தையரைச் சிறைமீட்ட வீரப் பிரதாபங்களைக் கேட்டும், அவள் உள்ளம் அவன்பால், அந்த நினைக்கவொண்ணா ‘ஸ்ருத்வா குணான் புவன சுந்தரன்’ (உலகத்தில் பேரழகு வாய்ந்தவனும் உயர்ந்த குணங்களின் இருப்பிடமானவனும்) பால் காதல் வயப்படுகின்றது. மணந்தால் அவனையே மணப்பது என உறுதி கொள்கிறாள்.

    அவளுடைய அண்ணன் ருக்மிக்கு கிருஷ்ணனைக் கண்டால் பிடிக்காது. தன் தங்கையை செடி நாட்டரசன் சிசுபாலனுக்கு மணமுடிப்பதாக வாக்குக் கொடுத்து விடுகிறான். மகளின் மன நிலையை- அவள் மனம் கிருஷ்ணனின் பால் ஈடுபட்டு விட்டதை- அறிந்த அரசன் பீஷ்மகனும் அரசியும் செய்வதறியாது திகைக்கின்றனர்.

    திருமண நாள் நெருங்க நெருங்க ருக்மிணியின் உள்ளம் கவலை கொள்கின்றது; என்ன செய்வதென அறியாமல் திகைக்கிறாள். இங்கு காதலரின் நிலை எவ்வாறு உள்ளது தெரியுமா? கிருஷ்ணனைக் கணவனாக வரித்துக் கொண்டு விட்டாள் ருக்மிணி. அவன் தன்பால் காதல் கொண்டுள்ளானா என்பது பற்றி அவளுக்குத் தெரியாது! அவனுக்கும் அவள் உள்ளம் பற்றித் தெளிவாகத் தெரியாத நிலை! அதாவது ஒரு பேதைப் பெண் தன்னிடம் காதல் கொண்டு உருகி நிற்கிறாள் எனத் தெரியாது! (அவ்வாறென நாம் கதைப் போக்குக்காக எண்ணிக் கொள்ள வேண்டும்! எல்லாம் அறிந்த கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணின் உள்ளத்தைத் தான் அறிந்திரானா?)

    காதலின் பொன்வீதியில் கிருஷ்ணனுடன் கைகோர்த்து உலா வர வேண்டுமானால் அரசிளங்குமரியான ருக்மிணி தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவனுடன் இணைவதற்கு ஒரு உபாயம் அல்லது வழியைக் கண்டுணர வேண்டும்! காதல் கொண்டால் மட்டுமே போதாது! அதில் வெற்றியடையும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். வரும் சிக்கல்களை எதிர் கொள்ளும் துணிவும் உபாயங்களும் தேவை. இதில் இருவர் பங்கும் வேண்டும். அவள் அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவன் அவள் பக்கமாக இரண்டடி எடுத்து வைக்க வேண்டும். தமயந்தி போல இங்கும் காதல் வயப்பட்ட பெண்மையே இதற்கான வழிமுறைகளைச் சிந்தித்துப் பார்க்கின்றது. அவளுடைய அனுமதி இன்றி அவள் உள்ளத்தை ஒருவராலும் அடிமை கொள்ள முடியாது!

    ஏழு ஸ்லோகங்களைக் கொண்ட ருக்மிணியின் இக்கடிதம் மிகவும் அழகானது. தெளிவானது. ஆம்! அவளுடைய மன உறுதியும், உள்ளத் தூய்மையும், தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் எனும் துடிப்பும் பளிச்சிடும் சிறு காவியம் அது! முதல் இரு ஸ்லோகங்களில் எதனால் தான் கிருஷ்ணன் பால் காதல் வயப்பட்டேன் எனத் தெரிவிக்கிறாள்.

    “மானிடருள் சிங்கம் போன்ற உன்னை, உயர்குடியில் பிறந்து, குணத்திலும், அழகிலும், கல்வியிலும் சிறந்த எந்தப் பெண் தான் தன் கணவனாக வரித்துக் கொள்ள மாட்டாள்?”

    “நானும் அங்ஙனம் ஒரு பெண். உன்னை என் கணவனாக உளமாரத் தேர்ந்து கொண்டு விட்டேன். என் உடலையும் உள்ளத்தையும் உன் திருவடிகளில் அர்ப்பணித்தேன். சிசுபாலன் என்னைச் சொந்தம் கொண்டாட அனுமதிக்காதே! அது சிங்கத்திற்கே உரிய அரச காணிக்கையை நரி திருடிக் கவர்ந்து கொண்டு போவது போலாகும்!” என மூன்றாவது ஸ்லோகத்தில் கூறுகிறாள்.

    இது எத்தனை அழகான உவமை! தன் உள்ளங்கவர்ந்தவனைச் சிங்கத்திற்கும், மற்றவனை நரிக்கும் ஒப்பிடுகின்ற காதல் மனம் கொண்ட பெண்மையின் உறுதிப்பாடு!

    “நான் தான தர்மங்கள், ஏழை எளியவருக்கான உதவிகள் முதலிய புண்ணியம் மிகுந்த செயல்களை என் வாழ்நாளில் செய்திருப்பேன் ஆயின், அதன் பயனாக நீ இங்கு உடனே வந்து எனது கரம் பற்ற வேண்டும். எனது கரங்களைக் கொடியவனான சிசுபாலனின் கரங்கள் தொட்டு அசுத்தப் படுத்தலாகாது.”

    தன் காதலனான கிருஷ்ணனிடம் அவனுடைய வீரத்திலும் காதலிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் ருக்மிணி. ஆகவே மேலும் அவனை, அவனது ஆண்மையை, வீரத்தினைத் தட்டியெழுப்பும் சொற்களைப் பொதிந்து கடிதத்தை வரைகிறாள்:

    “எவராலும் வெல்ல முடியாத கிருஷ்ணா! நீ நாளையே விதர்ப்ப தேசத்திற்கு யாரும் காணாமல் விரைந்து வந்து, சிசுபாலனையும் அவன் படைகளையும் வென்று, என்னை ராட்சச முறையில் கவர்ந்து உந்தன் வெற்றிக்குப் பரிசாக திருமணம் புரிந்து கொள்வாய்!” என்கிறாள்.

    பின் சிறிது யோசிக்கிறாள். ‘விதர்ப்ப நாட்டிற்கு வா என்று விட்டேன். நான் எவ்வாறு அந்தப்புரம், தோழியர் குழாம் இவற்றைக் கடந்து அவனைச் சென்றடைவேன்?’ எனச் சிந்திக்கிறாள்.

    தனது மகிழ்ச்சிக்காகத் தன் சுற்றத்தார், உறவினர் யாரும் துன்பப் படலாகாது என எண்ணும் உயர்ந்த உள்ளம் கொண்டவள் அவள். சிந்தித்த போதில் ஒரு சிறந்த வழி புலப்படுகின்றது.

    “எவ்வாறு அரச மாளிகைக்குள் நுழைந்து என்னைச் சார்ந்த மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வராமல் என்னைக் கவர்ந்து செல்லலாம் என்றால், நான் கூறுகிறேன் கேள்! எங்கள்அரசகுல வழக்கப்படி, திருமணத்திற்கு முன்பு மணப்பெண் எங்களது குலதெய்வமாகிய கிரிஜா எனப்படும் துர்க்கையின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சம்பிரதாயம். அப்போது அங்கு நீ ரதத்துடன் வந்தால் உன்னுடன் நான் ஓடி வந்து சேர்ந்து கொள்வேன்.”

    இத்தனை துணிவுடன் வழிமுறைகளை எல்லாம் கூறிக் கடிதம் எழுதி விட்டாள் அரசமகள் ருக்மிணி. கடைசியாகத் திரும்பவும் அவநம்பிக்கை மெல்ல எட்டிப் பார்க்கிறது! இவ்வளவு எல்லாம் கூறியும் அந்த மாயக் கிருஷ்ணன் வராவிடின் என்செய்வது? ‘நான் தான் அவனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டேன். அவனுக்கு என்னிடம் ஈடுபாடு இருக்கிறதோ என அறியேனே! ஆனால் எப்பேர்ப்பட்ட நிலையிலும், கிருஷ்ணன் வராவிட்டாலும் கூட, சிசுபாலனை மணந்து கொள்வதென்பது மனதாலும் எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று,’ எனவெல்லாம் தனக்குத் தானே கூறிக் கொள்கிறாள்.

    இதுவரை துணிவுடன் திட்டங்கள் தீட்டிய அவள் உள்ளம் கசிந்து உடைந்து போகின்றாள். காதல் கொண்ட மாயவனின் மீது தனது கடைசி ஆயுதத்தினையும் பிரயோகித்து எழுதுகிறாள். ‘இத்தனை உயரியவனான உன்னிடம் நான் பூரண சரணாகதி அடைந்து விட்டேன். என் வாழ்வும் தாழ்வும் உன் கையில் தான். நீ வராவிட்டால், என்ன செய்வதென்பதையும் நான் தீர்மானித்துக் கொண்டு விட்டேன்,’ என எண்ணிக் கொண்டு மேலும் முடிவாக ஏழாவது ஸ்லோகத்தை எழுதுகிறாள்:

    “கிருஷ்ணா! உமையவளின் கணவரான சம்புவும் தமது குறைகளை நீக்கிக் கொள்வதற்காக உனது பாததூளியைத் தன்மீது தரித்துக் கொள்ள ஆவலுடன் உள்ளார். விதிவசத்தால் அத்தகைய பெரும் புகழ் வாய்ந்த கிருஷ்ணனாகிய நீ என்னைக் காப்பாற்ற வராவிட்டால், நான் என்ன தான் செய்வது? கடுமையான விரதங்களாலும் தவத்தாலும் எனது உயிரைப் போக்கிக் கொள்வேன். உன்னை அடையும் வரை திரும்பத் திரும்பப் பிறவிகளெடுத்துக் கடுந்தவம் இயற்றிக் கொண்டேயிருப்பேன்……….” என முடிகிறது ருக்மிணியின் கடிதம்.

    காதலின் வலிமையை உணர்ந்த உள்ளங்களைக் கண்ணீரில் மிதக்கச் செய்யும் இக்கடிதம் இப்போது கிருஷ்ணனைச் சென்றடைய வேண்டுமே!

    தனக்கு மிகவும் நம்பிக்கையான ஒரு முதிர்ந்த அந்தணரைக் கூப்பிட்டு, ருக்மிணி அவரிடம் தனது கடிதத்தைக் கொடுத்து விரைந்து சென்று கிருஷ்ணனிடம் சேர்க்குமாறு வேண்டுகிறாள்.

    தன்னிடம் சேர்ப்பிக்கப்பட்ட இக்கடிதத்தைக் கண்ட பின்னரும் கிருஷ்ணன் வாளாவிருப்பானா?

    குதிரைகளை ரதத்தில் பூட்டி, விதர்ப்ப நாட்டின் தலைநகரான குண்டினபுரத்தை நோக்கி விரைகிறான். தம்பியின் கருத்தறிந்த அண்ணன் பலராமன் உதவிக்காகப் படைகளுடன் தானும்அவனைப் பின் தொடர்கின்றான். நகரின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் தனக்கு உள்ளத்தைத் தந்தவளுக்காகக் காத்து நிற்கிறான் காதல் மன்னன்.

    krishna rukminiபின்பு என்ன?

    கடிதத்தில் குறிப்பிட்டபடி ருக்மிணி பூஜை செய்ய கிரிஜா கோவிலைத் தோழியர் புடைசூழ வந்தடைகிறாள். திருமகளின் அவதாரமான அவளைக் கண்ணாலாவது கண்டு மகிழ, அத்தனை அரசர்களும் வழியெங்கும் கூடி நிற்கின்றனர். அவளுடைய கண்கள் ரகசியமாகக் கிருஷ்ணனைத் தேடுகின்றன. காணாமல் உள்ளம் இன்னும் தளர்கின்றது. இனித் தனக்கு அந்த அன்னையே கதி என, “நந்தகோபன் மைந்தனை எனக்குக் கணவனாக அருளுவாய்,” என மனமுருகி வேண்டிக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வருகிறாள் ருக்மிணி.

    அவள் உள்ளம் எப்படியெல்லாம் தத்தளித்திருக்கும்? ‘முதிய அந்தணர் துவாரகையிலிருந்து திரும்பி வந்து கடிதத்தைக் கிருஷ்ணனிடம் சேர்ப்பித்ததைக் கூறினாரே?’ எனத் தவிக்கின்றது அவள் உள்ளம். தன்னை வந்து கவர்ந்து சென்று விடுவான் எனக் காத்திருந்தவன் காணவில்லை; சிசுபாலனுடனான திருமணத்திற்கு முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது. நாட்டின் மொத்தப் பார்வையும் அழகின் திருவுருவான அவள் மீது தான். இனி என்ன செய்யலாம்?

    நடை தளரக் கால்கள் பின்ன, உற்சாகம் குன்றிய உள்ளத்துடனும் குனிந்த தலையுடனும் நடந்தவள் செவிகளில் ‘ஜல்,ஜல்’ எனும் குதிரைக் குளம்பொலி கேட்கிறது. தோழியர் சிலர் எழுப்பிய, “ஹா,” எனும் ஆச்சரிய ஒலிகளைக் கேட்டுத் தலை நிமிர்ந்தவள் முன்பு….. காண்பது கனவில்லையே?

    இதனை எவ்வாறு வருணிப்பது?

    காதலில் கனிந்து பொலியும் புன்னகை பூத்த கதிர்மதியத் திருமுகம். கௌஸ்துபமும் துளசிமாலையும் தவழும் பரந்த மார்பும் திண்தோள்களுமாக, கரிய சுருண்ட குழல் கற்றைகள் நெற்றியிலும் தோள்களிலும் புரண்டு விளையாட, மயில்பீலி அணிந்த கிரீடமும் மஞ்சள் பட்டுப் பீதாம்பரமுமாக கருமுகில் வண்ணன். தான் இருந்த ரதத்தின் குதிரைகளின் கடிவாளங்களை ஒரு கரத்தால் உறுதியாகப் பற்றியபடி, அடுத்த கரத்தினை அவளை நோக்கி நீட்டியபடி அவளுக்காகவே காத்திருந்த கிருஷ்ணன். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல ஓடோடிச் செல்கிறாள் ருக்மிணி. அவளை பூப்பந்தை அள்ளுவது போலத் தூக்கியெடுத்து தன்னருகே ரதத்தில் இருத்திக் கொள்கிறான்.

    கிருஷ்ணனையும் தன் காதலின் உறுதியாலும் விவேகத்தாலும் அவனை அடைந்து விட்ட ருக்மிணியையும் ஏற்றிக் கொண்டு காதலின் பொன்வீதியில் அந்தத் தேர் துவாரகையை நோக்கி விரைகின்றது! காற்றென விரையும் குதிரைகளுடன் அவர்களின் காதலைப் போற்றும் நமது உள்ளங்களும் விரைகின்றன அல்லவா?

    ***********************************************************

    ருக்மிணியின் இக்கடிதம் உலகில் எழுதப்பெற்ற முதல் காதல் கடிதமாக எழுத்தாளர்களால், காவிய வல்லுனர்களால் கூறப்படுகின்றது. இது சாமானியமான ஒரு காதல் கடிதம் அல்ல; மன உறுதியுடன் தான் விரும்பும் ஆடவனையே மணாளனாக அடைய, ஒரு மெல்லியலாள் (ருக்மிணி), எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் தடைகளுக்கும் இடையே தன்னந்தனியளாகச் சிந்தித்து ஒரு வழியைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தான் காதல் கொண்ட மன்னனுக்குத் தெரிவித்து அவனையே மணந்த காதலின் உறுதியை, உயர்வைச் சிறப்புற பெருமையுடன் விளக்குகின்ற ஒரு இலக்கியப் பதிவேடு எனலாம்.

    ************************************************************

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”ஜப்பானாய் வாமனன் சித்திரத்தில், மாபலிக்காய்
    நிப்பானே விக்ரமனாய் நீண்டுயர்ந்து, -குப்பமாயர்,
    பாடியில் பயல்களுடன் பால்தயிர் பந்தியிடும்,
    ஜாடியவன், மூடிகே சவ்’’….கிரேசி மோகன்….

    Share
  • அப்படித்தானிருக்கிறாயா?

    கனவு திறவோன்

    பெண்ணே நீ எப்படி இருக்கிறாய்?
    இன்னமும் அப்படித்தானிருக்கிறாயா?
    அப்படித்தான்
    குனிந்து நிமிராமல்
    தரையைப் பாராமல்
    தெருவைக் கடக்கிறாயா?

    நீ கடந்த பின்னும்
    அங்கேயே அலைபவர்கள்
    இன்னும் எத்தனை பேர்?

    அப்படித்தான்
    சத்தம் காட்டாமல்
    கன்னம் அமுங்கச்
    சிரித்துக் கொண்டிருக்கிறாயா?

    அந்த ஒளிச்சிதறலில்
    சவுலாகப் பார்வை இழந்து
    பவுலாக உலகைப் பார்ப்பவர்
    இன்னும் எத்தனை பேர்?

    அப்படித்தான்
    படிக்காமல்
    பாஸாகிக் கொண்டிருக்கிறாயா?

    நீ பாஸாகப் படித்தவர்கள்
    இன்னமும்
    அரியர் எழுதிக் கொண்டிருக்கிறார்களா?
    அதை அறியாதவர்கள்
    இன்னும் எத்தனை பேர்?

    அப்படித்தான்
    பவுடர் பூசாமல்
    மினுமினுக்கிறாயா?

    உன் முன் பிரகாசிக்க
    பவுடர் அப்பிப் கொண்டு
    வந்தவர்கள்
    மூஞ்சியில் கரிபூசிப் போனவர்கள்
    இன்னும் எத்தனை பேர்?

    பெண்ணே நீ எப்படி இருக்கிறாய்?
    இன்னமும் அப்படித்தானிருக்கிறாயா?

    நீ அப்படித்தான் இருப்பாய்…
    நாங்கள்தான் மாறிக் கொண்டிருக்கிறோம்…
    நண்பனாக வந்து
    காதலனாகி
    நீ அண்ணன் என்றதும்
    தேவதாஸாகிக்
    கவிஞனாகி…
    நாங்கள்தான் மாறிக் கொண்டிருக்கிறோம்!

     

    Share
  • அன்னையவள் தெய்வமாக !

    -பா. ராஜசேகர்

    ஆயிரம்
    சொந்தங்கள்
    ஆரவாரம்
    செய்தாலும்…

    காசு
    பணம்
    கை நிறைய
    சேர்த்தாலும்…

    வான் முழங்க
    உன் புகழ்
    கொடிகட்டிப்
    பறந்தாலும்…

    உலகமெல்லாம்
    உன்
    கைக்குள்
    வந்தாலும்…

    அதிசயங்கள்
    செய்வதிலே
    நீ ஆளாகிப்
    போனாலும்…

    தொப்புள்கொடி
    உறவுன்னு
    உனக்கில்லை
    என்றிருந்தால்…

    பத்து மாசம்
    சுமப்பதற்குப்
    பெத்தவளே
    மறுத்திருந்தால்…

    வித்தைகாட்டி
    நீ நடத்தும்
    நாடகத்தின்
    உருவெங்கே?

    பெத்தவளைப்
    பட்டினியில்
    தள்ளிவிடும்
    நிலை நிறுத்து !

    அன்னையவள்
    தெய்வமாக
    எண்ணுகின்ற
    நிலைவேண்டாம் !

    உனக்கு
    அவளுயிரைப்
    பங்கிட்ட
    மனம் போதும் !

     

    Share
  • முகநூல் பெற்ற வரம்!

    -சுரேஜமீ

    முன்னம் பெற்றவளோ
    பின்னம் பிறப்பானோ
    இன்னம் இவனன்றி                                      facebook
    யாவரும் உறவின்றிப்
    போவதும் எங்கென்பேன்?

    பிறந்தால் இவன்போல்
    அற்றேல் பிறந்தென்ன?
    உற்றார் தாண்டி
    உலகம் உறவுகொள்ள
    உற்றான் இவன்!

    வரும் எனக் காத்திருந்து
    வந்ததல்ல வரம்
    வல்லமை தாங்கிநின்று
    வாழ்த்துக்கள் குவிந்ததனால்
    வருமானம் கொட்டிநிற்க
    வானெட்டும் புகழின்று!

    தேர்வில் வெற்றிபெற்றால்
    தேடிடும் வேலையிங்கே
    வாழ்க்கைத் தேடலில்
    வாகை சூட
    வாழ்வின் பயனதன்றோ
    வள்ளுவம் சொன்ன வழி!

    வாழ்க நீ மார்க்
    வாழ்வே வணங்க உன்னை
    வாருங்கள் தலைமுறையே
    வாழ்க்கையைக் கற்றிடவே
    வாழ்ந்திட இவன்போல
    வாழ்தலின் பொருள் விளங்க!

    வாழி நீ மார்க் சுக்கெர்பெர்க்
    வாழி நீ பல்லாண்டு
    வாழிய தமிழ் போல!!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

     

    Share
  • நளிர் நளினம் (குளிர் நீர்)

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    பளிங்கு பளிங்கு கண்ணாடி
    பளிங்கு பளிங்கு படிகம்
    வெளிப்படை! உயிர் காக்கும்!
    நளினம் தண்ணீர் – தெளிநீர்                  water
    தெளிப்பு சீவன்கள் கொழிப்பு!
    நளினமின்றி உயிருலகு இல்லை
    துளி பட்டாலும் துளிர்க்கும்
    நளிவுடை நளிர் திரவம்

    ஆறு, கடல், குளத்தில்
    பீறும் மழையாயும், குட்டையிலும்
    ஊறும் பஞ்சபூதத்தில் ஒன்று
    சேறு, குற்றம் களையும்
    மீறும் தீ அணைக்கும்
    வீறு கொண்டு பாயும்
    நீருக்குச் சிறை பனி
    நீராவி குளிர, திரவம்
    அசுத்தம் சிறுநீர்  உப்புநீர்
    அருமைப் பதநீர் தேனீர்
    அழுதால் கண்ணீர் சுடுநீர்
    பித்தநீர் மஞ்சள் நீர்
    இளநீர் குடிநீர்  பலவகை
    நீர் பூமியில் 71விகிதம்
    நிறமற்ற புதுமை தனித்தன்மை
    திறமைப் பயன் மின்சாரம்!

     

    Share
  • திருவாசகத்தில் பசு

    சு. கோதண்டராமன்.

    பக்தி மேலீட்டால் உருகிக் கசிந்த உள்ளத்திலிருந்து பொங்கிப் பீறிட்டு வெளிவந்து கேட்போர் உள்ளத்தையும் உருகிக் கசியவைப்பது திருவாசகம். காரிகை கற்றுக் கவி பாடியவரல்ல மணிவாசகர். ஆனால் அவரது படைப்பில் இலக்கியச் சிறப்புகளும் அடங்கி இருப்பது பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த இலக்கியச் சிறப்புகளில் ஒன்று உவமைகள் கையாளப்படும் பாங்கு. இவரது உவமைகள் கற்போரது உள்ளத்தில் கருத்தை அழுத்தமாகப் பதிய வைப்பதோடு அழகும் கூட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காணலாம்.

    மாணிக்கவாசகரின் உவமைகளுள் விலங்குகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றுள்ளும் மிக அதிகமாகப் பேசப்படுவது நாய். நன்றி உணர்ச்சிக்காகப் பாராட்டப்பட்டாலும் விலங்குகளில் மிகக் கீழானதாகக் கருதப்படுவது நாய்.

    இறைவனை மிக உயர்ந்தவனாகவும், தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கூறிக் கொள்வது பக்தர்களின் இயல்பு. மணிவாசகர் தன்னை மனிதரில் மிகத் தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதோடு நிற்காமல் நாயேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் இகழ்ந்து கொள்கிறார். நான் என்னும் செருக்கு முற்றிலும் ஒழிந்து விட்ட அவரது மனநிலையை இதிலிருந்து உணரமுடிகிறது.

    நாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை-விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு! அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது.

    அடிகள் தீட்டும் இந்த சொற்சித்திரத்தைப் பாருங்கள். ஒரு பசு மந்தை. பல பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றன. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறது.

    மெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போல, தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார்.

    ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
    உன் தாளிணை அன்புக்கு
    ஆரா அடியேன் அயலே
    மயல் கொண்டு அழுகேனே.
    (திருச்சதகம் 87)

    பக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தனது அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

    கடவுளை அடைய நம்முடைய பக்தி உணர்வு எவ்வளவு தீவீரமாக இருக்கவேண்டும் என்பதற்குத் திருவாதவூரார் காட்டும் உதாரணைத்தைப் பாருங்கள். புதிதாகக் கன்று ஈன்ற பசு தன் கன்றைச் சற்று நேரம் காணாவிட்டால் கூடக் கதறித் தீர்த்துவிடுகிறது. மேயச் சென்றால் கூட அதன் நினைவு கன்றிடமே உள்ளது. வயிறு நிரம்பியதும் அது கன்றிடம் திரும்பி வரும் வேகத்தையும் அதனை நக்கிக் கொண்டே பாலூட்டுவிக்கும் பாசத்தையும் பார்த்தவர்களுக்கு, கற்றா (கன்றை ஈன்ற பசு) போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற அவரது உவமையின் ஆழம் புரியும்.

    கூத்தா உன் குரைகழற்கே
    கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே.
    (திருப்புலம்பல் 3)

    கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
    (போற்றித் திருவகவல் 73)

    திருவாசகம் முழுவதும் மணியிடை நூல்போல் ஊடுருவி நிற்பது ஒரே உணர்ச்சி. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான என்னை ஆண்டுகொண்ட கருணைத்திறம் எவ்வளவு பெரியது என்று வியந்து, அந்தச் சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே அது. மாட்டை உவமையாக்கி மணிவாசகர் அதை விளக்கும் அழகைக் காணுங்கள்.

    நோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவர். இத்தகைய கன்றுக்கு நுந்து கன்று என்று பெயர். சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

    நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து
    நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
    தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
    தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
    (திருக்கோத்தும்பி 10)

    மாடு சில சமயம் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ஆள்வாரிலி மாடு என்றும் ஊரேறு என்றும் கூறப்படும். மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார்.

    …………………………….ஆள்வாரிலி மாடாவேனோ
    நெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு
    மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே
    (கோயில் மூத்த திருப்பதிகம் 7)

    சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட
    ஊரேறாய் இங்கு உழல்வேனோ
    (திருச்சதகம் 53)

    மாடு தொடர்பான பொருட்களும் திருவாசகத்தில் நிறைய இடம் பெற்றுள்ளன. உவமிக்கமுடியாத சிவானந்தத்திற்கு உவமையாக தேன், கரும்புச்சாறு இவற்றுடன் பாலும் அவரால் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மாடு வளர்ப்பவர்கள் வீட்டில் தயிர் கடைதல் ஒரு தினசரி வேலை. மணிவாசகர் தயிர் கடையப்படுவதைக் கூர்ந்து கவனிக்கிறார். மத்துக்கும் தாழிக்கும் இடையில் தயிர் தான் என்ன பாடு படுகிறது! புலன்களால் அலைக்கழிக்கப்பட்டுப் பரம்பொருளில் நிலைகொள்ளாமல் தவிக்கும் தன் மனதுக்கு அதை உவமிக்கிறார்.

    மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
    தேனிலாவிய திருவருள் புரிந்தவென் சிவநகர் புகப்போகேன்
    (திருச்சதகம் 40)

    மத்துறு தண்டயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி
    வித்துறுவேனை விடுதிகண்டாய்
    (நீத்தல் விண்ணப்பம் 30)

    மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திட வுடைந்து
    தாழியைப் பாவு தயிர்போற் தளர்ந்தேன்
    (அடைக்கலப் பத்து 6)

    நிறைய மாடு உள்ளவர்கள் நெய்யை ஒரு குடத்தில் சேகரித்து வைத்திருப்பர். அது வீசும் மணத்தால் கவரப்பட்ட எறும்புகள் மெள்ள குடத்தின் மீது ஏறி உள்ளே இறங்கி நெய்யை அடைந்துவிடும். நெய்ப்பசை கால்களை அசையவிடாமற் செய்யவே, அவை திரும்பிச் செல்ல முடியாமல் நெய் மீது மிதக்கத் தொடங்கும்.

    மனிதனும் அப்படித்தான். புலன்களுக்கு மகிழ்ச்சி தரும் உலகப் பொருட்கள் பால் நாட்டம் கொண்டு அவற்றை அடைவதிலேயே தன் முயற்சி முழுவதும் செலவிடுகிறான். அந்தப் போகப் பொருட்களை அடைந்த பின் அவனால் மீள முடிவதில்லை. இறைநாட்டம் அவனுக்கு இயலாமற் போகிறது. வாழ்வின் லட்சியம் என்ன என்பதை உணராமல் உரிய கடமைகளைச் செய்யாமல் புலனின்பத்தை மெய்யென்று மயங்கி, செய்யக் கூடாததைச் செய்து அதிலேயே உழலும் நம் போன்றோரின் நிலையைத் தன் மேல் சார்த்தி மணிவாசகர் புலம்புகிறார்.

    உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
    வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
    பொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா
    மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே
    (நீத்தல் விண்ணப்பம் 24)

    பசுவேறும் பரமனையே இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருந்த வாதவூரர் பசுவை உவமையாக்கித் தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளது நம்மைப் பரவசப்படுத்துகிறது.

    படம் உதவி: தினமணி (http://blog.dinamani.com/?p=2062)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(149)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்.

    அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடி வந்து விட்ட அடுத்ததொரு வாரம், கைவிரல்களின் அசைவினால் உள்ளத்தின் உணர்வுகளை மடல் மூலம் கொட்டித் தீர்க்கும் அவா. ஆமாம் இவ்வார மடலுடன் மீண்டும் உங்களோடு உறவாடுகிறேன்.

    கடந்தவாரம் இங்கிலாந்திலே ஒரு முக்கியமான வாரம். ஆமாம், தேர்தலும் அதன் முடிவின் படி இனிவரும் ஐந்து வருட காலத்திற்கு யார் இந்த இங்கிலாந்தில் அரசாட்சி எனும் தேரை ஓட்டிச் செல்லப் போகிறார்கள் என்னும் கேள்விக்கு விடை பகிறப்பட்ட வாரம்.

    சுருக்கமாகச் சொன்னால் இங்கிலாந்து பாராளுமன்றத்திலே 650 பாரளுமன்ற உறுப்பினர்கள். இங்கிலாந்து சட்ட விதிகளின் படி ஒரு கட்சிக்கு அரசமைக்கும் உரிமை அது தேர்தலில் 326 ஆசனங்களைக் கைப்பற்றினால் தான் கிடைக்கிறது.

    கடந்த தேர்தலில் இங்கிலாந்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியோ அன்றி லேபர் கட்சியோ இந்த 326 ஆசங்கள் எனும் பலத்தை பெற்றிருக்கவில்லை. விளைவு கூட்டரசாங்கம் அமைப்பதன் மூலம் தான் இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலமை இருந்தது.

    இவற்றில் கன்சர்வேடிவ் கட்சிதான் அதிக இடங்களைப் பெற்றிருந்தது எனவே மூன்றாவதாக 50 க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி இருந்த லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியுடன் இணைந்து கன்சர்வேடிவ் கட்சி கூட்டரசாங்கம் அமைத்தது. டேவிட் கேமரன் பிரதம மந்திரியானர். லிபரல் டெமாக்கிரட்ஸ் தலைவரான நிக் கிளேஹ் பிரதிப் பிரதமரானார்.

    அது பழையகதை சரி இனி இந்த 2015 புதுக்கதைக்கு வருவோம் …

    தேர்தல் தினமான மே 7ம் தேதி வரை எடுக்கப்பட்ட பொதுக் கருத்துக் கணிப்புகள், மற்றும் ஊடகங்கள், பிரபல அரசியல் அவதானிகள் அனைவருமே இத்தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் இம்முறையும் நிச்சயம் கூட்டரசாங்கம் தான் அமையும் என்று அடித்துக் கூறினர். சரி கூட்டரசாங்கம் எனில் யார் யாருடன் கூட்டரசாங்கம் அமைக்கப் போகிறார்கள் எனும் கேள்வி அனைவருடைய மனங்களிலும் தொக்கியிருந்தது.

    பிரதான கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தான் பெரும்பான்மை பலமிக்க கட்சிகளாகும் இவர்களுடன் யார் சேரப் போகிறார்கள்?

    அடுத்து அனைவருக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை இதுநாள்வரை லேபர் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஸ்காட்லாந்து இம்முறை முற்று முழுவதுமாக ஸ்காட்லாந்துக்கு தனிநாடு கோரி நிற்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் வசமாகி விடும் என்பதே!

    அக்கட்சியின் தலைவரோ திரும்பத் திரும்ப இனியும் இங்கிலாந்தில் டேவிட் கேமரன் ஆட்சி அமைய விடக்கூடாது நாம் லேபர் கட்சியுடன் இணைந்து அரசமைப்போம் என்று பகிரங்கமாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

    அடித்தது அதிர்ஷ்டம் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பிடித்துக் கொண்டது தன் வாதத்தை. “மக்களே நீங்கள் லேபர் கட்சிக்கு வாக்களித்தால் பின் வாசல் வழியே ஸ்காட்லாந்து தேசிய கட்சியை அரச கதிரையில் அமர்த்திவிடுவீர்கள். லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் ஸ்காட்லாந்து தேசியவாதிகளின் கைப்பாவையாகி விடுவார் விளைவு ஐக்கிய இராச்சியம் துண்டாடப்பட்டு விடும்” என்பதைத் தாரக மந்திரமாக்கி அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தமக்குச் சாதகமான ஊடகங்களிலும் ஊதத் தொடங்கினார்கள்.

    ஏற்கனவே ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு நடந்ததால் குழம்பிப் போயிருந்த மக்கள் மனதில் பீதி உருவாகத் தொடங்கியது. கன்சர்வேடிவ் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்ததால் ஏற்கனவே தமது செல்வாக்கை முற்றாக இழந்திருந்தனர் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியினர்.

    யூகிப் எனும் இங்கிலாந்து விடுதலைக் கட்சியினருக்கு வாக்களித்தால் மீண்டும் டேவிட் கேமரனின் ஆட்சி அமையும். பொதுநலத்துறைகளின் மீதான நிதிக்குறைப்பின் மூலம் அடிமட்டத் தொழிலாளர்களே பாதிக்கப் படுவார்கள். கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் முதலாளிகள் தமது பணப்பலத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்.

    இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் நிறுவனங்களுக்கு விலை போய்விடும் போன்ற வாதங்களை லேபர் கட்சியினர் முன் வைத்தனர். அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை முற்று முழுதாகச் சிதைத்தவர்கள் பழைய லேபர் கட்சியினரே, நாட்டின் பொருளாதாரம் சீராகி வரும் வேளையில் மீண்டும் லேபர் கட்சியிடம் பொறுப்பைக் கொடுத்து நாட்டின் வளர்ச்சியைப் பின் தள்ளப் போகிறீர்களா ? என்றனர் கன்சர்வேடிவ் கட்சியினர்.

    யூகிப் எனும் கட்சியினரின் ஆதரவுப் பெருக்கத்துக்குக் காரணம் மக்களுக்கு ஐரோப்பிய யூனியனின் மீது இருந்த சந்தேகமே. இச்சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பு மக்கள் மனதில் நியாயமானதொரு பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. இப்படியான சூழல்களுக்கு மத்தியில் ஒருவாறு மே 7ம் திகதி தேர்தல் நடந்து முடிந்தது.

    முடிவு!!!

    யாருமே எதிர்பார்க்காத வகையில் டேவிட் கேமரனின் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 332 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையமைத்து விட்டது. பொதுக்கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், அரசியல் அவதானிகள், ஊடகங்கள் அனைவரின் முகங்களிலும் அளவற்ற அசடு வழிந்தது.

    லேபர் கட்சி எதிர்பார்ப்புகளுக்கு முற்றும் மாறாக மோசமான தோல்வியைத் தழுவியது.

    லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த பாராளுமன்றத்தில் 50 க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் இத்தேர்தலில் எட்டே எட்டு ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியடைந்தது. இக்கட்சியின் பல முன்னணித் தலைவர்கள் தோல்வியடைந்தனர்.

    ஸ்காட்லாந்து தேசிய கட்சியினர் அங்கு போட்டியிட்ட 59 ஆசனங்களில் 56 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டினர்.

    யூகிப் எனும் கட்சியினர் எதிர்பார்ப்புக்கு முரணாக ஒரேயொரு ஆசனத்தை மட்டும் கைப்பற்றினர்.

    விளைவு !!!

    2015ம் ஆண்டு இங்கிலாந்துத் தேர்தல் மூன்று கட்சித் தலைவர்களைக் காவு கொண்டு விட்டது. ஆமாம் லேபர் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் , லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சித் தலைவர் நிக் கிளெஹ் , யூகிப் தலைவர் நைஜல் ப்ராஜ் ஆகிய மூவரும் சடுதியாக தாம் தமது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார்கள்.

    சரி அரசியல் அறிவில் பூஜ்ஜியமான இந்தப் பாமரனின் கணிப்பில் இத்தேர்தல் முடிவுகளின் காரணம் ?

    2015-1கன்சர்சேடிவ் கட்சியின் வெற்றிக்கு …
    இவர்கள் தமது தேர்தல் பிரசாரத்தை மிகவும் புத்திசாலித்தனமாக முன்னெடுத்தார்கள்
    லேபர் கட்சியினர் அரசமைக்க ஒரேவழி ஸ்காட்லாந்து பிரிவினைவாதிகளுடன் சேர்ந்த கூட்டரசாங்கமே எனும் வாதத்தில் வெற்றி கண்டார்கள்
    அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்தின் பொருளாதாரச் சூழல் தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு ஆதரவாக இருந்தமை

    லேபர் கட்சியின் தோல்விக்கு …
    இக்கட்சியின் தலைவரான எட் மில்லிபாண்ட் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை
    இக்கட்சி தன்னை இடதுசாரிக் கொள்கைகளின் வழி இழுத்துச் சென்றமை
    இக்கட்சி சிறு தொழில் செய்வோரையும், நாட்டில் செல்வத்தை ஈட்டும் தொழிலதிபர்களையும் எதிர்ப்பது போன்றதோர் உணர்வை எழுப்பியமை.
    ஸ்காட்லாந்தில் கடந்த தேர்தலில் முப்பதுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய இவர்கள் இப்போது ஒரு ஆசனத்தைக் கைப்பற்றுவது கூட சந்தேகம் எனும் எண்ணம் மக்களிடையே வலுப்பெற்றது

    2015-2லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியின் தோல்விக்கு …
    கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாணவர்கள் சர்வகலாசாலை செல்கையில் செலுத்தும் கட்டணத்தை அறவே ஒழிப்பது என்று அறிவித்து விட்டு பின்பு கூட்டரசாங்கத்தில் இணைந்ததும் அதை அப்படியே கைவிட்டதும்
    அடிப்படையில் இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த இவர்கள் 2010 தேர்தலின் பின்னால் முழு வலதுசாரிகளான கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தது இவர்களின் பல ஆதரவாளர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
    இவர்களது பிரசாரத்தில் கடந்த கூட்டரசாங்கத்தின் வெற்றி பெற்ற நடவடிக்கைகளில் தங்களுக்குரிய பங்கைச் சரிவர மக்களுக்கு விளக்காமல் விட்டது.

    ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் வெற்றி அனைவரும் எதிர்பார்த்தது போலவே மைந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு ஸ்காட்லாந்து மக்களிடையே தேசியவாத உணர்ச்சியை உசுப்பி விட்டதே இவர்களது அதீத வளர்ச்சிக்குக் காரணம் எனலாம்.

    யூகிப் எனும் கட்சியின் நிலை அவர்களுக்கு ஓரளவு வெற்றி என்றுதான் கூற வேண்டும். ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும் நாடளாவிய ரீதியில் ஏறத்தாழ இவர்களுக்கு நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

    2015-3இது இப்போது ஒரு புது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

    இரண்டு இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற ஸ்காட்லாந்து தேசிய கட்சி 56 ஆசனங்களைப் பெற்றுள்ளன, ஆனால் அதேநேரம் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற யூகிப் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது பலரை விகிதாசார முறையில் ஆசனங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் எனும் கோஷத்தை முன்வைக்கப் பண்ணியுள்ளது.

    அடுத்து வரும் ஐந்து வருட காலங்கள் நம் பிரதமர் டேவிட் கேமரன் எமை எங்கே கொண்டு செல்லப்போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?

    “மக்கள் குரலே மகேசன் குரல் ” எனும் கோட்பாட்டை பல அரசியல்வாதிகள் மறந்து போய்விடுகிறார்களோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சிந்தனைச் சிறகடித்தால்…

    -ராதா மரியரத்தினம்

    சிந்தனைச் சிறகடித்தால்
    சீறிடும் எண்ணங்கள்
    தென்றலும் புயலாகும்
    தண்ணொளி சுடும் நெருப்பாகும்              mariyaratnam
    வண்ணங்கள் இழந்த​ வாழ்க்கை
    வானவில்லாய் உருமாறும்!

    கற்பனைத் தேரேறி
    சொற்களும் ஆட்சி செய்தால்
    அத்தனையும் உயிர்ப்பாகும்
    பேனா முனையினிலே
    வண்ணத்துப் பூச்சிகளாய்
    வண்டினங்கள் மாறாதோ?
    எண்ணக் குவியல் எல்லாம்
    சிறகடித்துப் பறவையாய் மாறாதோ?

    பூசணிப் பழம்கூடப்​
    பல்லக்காய் மாறாதோ?
    தும்பிகள்கூட​ பேரிகையாய்த் தெரிய
    தூரத்து நீல வானிடைக்
    கண் சிமிட்டும் விடிவெள்ளிகள்
    நீலச் சேலையில் பதித்த​ வைரங்கள் ஆகாதோ?
    கற்பனைக்கும் எல்லை உண்டோ?
    சொற்பதங்கள் நடனமாடுமன்றோ?
    சிந்தனைச்  சிறகடித்தால்
    சீறிடும் எண்ணங்கள்!

    Share
  • ” அவன், அது , ஆத்மா” (12)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    (மீ.விசுவநாதன்)

    அத்யாயம்: 12

    “திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி”

    avs1

    அவன் 1966ம் வருடம் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் மாதத்தில் திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பில் சேர்ந்தான். அவனது வீட்டில் இருந்து இருபது நிமிடத்தில் அந்தப் பள்ளியை அவன் அடைந்து விடுவான். அந்தப் பள்ளியின் தோற்றமே ஒரு பெரிய கல்லூரியைப் போன்றிருக்கும். அழகான முகப்பும், ஏராளமான வேப்பமரங்களும், நாவல் மரமும் நிறைந்து படிக்கத் தூண்டும் சூழல் கொண்டது இந்தப் கல்விச் சாலை. பள்ளிக்குள் நுழைந்தவுடனேயே இடது பக்கத்தில் ஒரு அழகான சுடலை மாடன் சிலை இருக்கும். வலதுபுறம் மிகப்பரந்த வெளியும் சுற்றுச் சுவரின் பக்கத்தில் வரிசையாக வேப்ப மரங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். முகப்புக் கட்டிடத்திற்குப் பின்புறம் ஒரு மேடை உண்டு. அதன் அருகில்தான் நூல்நிலையம் இருந்தது. பகல் உணவுக்குப் பின்பும், ஓய்வு வேளைகளிலும் அவன் அந்த நூல் நிலையத்தில் அமர்ந்து கதைப் புத்தகங்களைப் படிக்கவே விரும்புவான். சிலவேளைகளில் நண்பர்களுடன் சறுக்குமரம் விளையாடுவதும் உண்டு.

    அவனுக்கு பச்சை நிறத்தில் அரைக்கால் டிராயரும், அரைக்கை வெள்ளைச் சட்டையும்தான் சீருடைகள். டிராயரின் இரண்டு பக்கத்துப் பைகளும் தட்டை, முறுக்கு, சீடை, நெல்லிக்காய், கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை அடைத்து வைக்கும் “கோடவுனாகவே” அவனுக்குப் பயன்பட்டன.

    இந்தப் பள்ளியின் தலைவர்களாக R. S. A. சங்கர ஐயர், A. வேலாயுத முதலியார், K. R. சுந்தரம் ஐயர் அகியோர் இருந்தனர். பிறகு இன்று வரை K. S. ராமன் தலைவராக இருக்கிறார். அதன் செயலாளர்களாக தியாகி. ய்க்யேஸ்வரசர்மா, சந்திரவிலாஸ் A. விஸ்வநாத ஐயர், ஸ்டோர் ராஜாமணி ஐயர் ஆகியோர் இருந்தனர், அதன் பிறகு1973ம் ஆண்டுமுதல் K. S. சங்கரசுப்ரமணியன் செயலாளராக இருந்து வருகிறார். பள்ளியின் வளர்ச்சிக்காக “வித்யா சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி இன்று வரை நேர்மையான நிர்வாகம் என்ற பெயரை இப்பள்ளிக்கு அளித்து வருகின்றனர். இந்த வித்யாசங்கத்தின் இன்றைய தலைவராக K. S. ராமனும், செயலாளராக K. S.சங்கரசுப்ரமணியனும், பொருளாளராக M. ராகவனும், சங்க உறுப்பினர்களாக K. S. சுந்தரம், R. சங்கர், ராதிகா ராமன் ஆகியோருடன் பள்ளித் தலைமை ஆசிரியர் P. சுப்பையா, நூலக மேலாளர் L. ராமகிருஷ்ணன், ஆசிரியை உஷா போன்றோரும் இருக்கின்றனர்.

    “தலைமை ஆசிரியர் N. ரங்கநாத ராவ்”


    avsஅவனுக்கு அப்பா அந்தப் பள்ளியில்தான் தலைமைக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். அவன் அந்தப் பள்ளியில் சேர்ந்த நேரத்தில் “N. ரங்கநாத ராவ்”தான் தலைமை ஆசிரியராக இருந்தார். நன்றாகச் சலவை செய்த மடிப்புக் கலையாத பச்சை நிறத்தில் முழுப் “பேன்ட்”ம், முழுக்கை வெள்ளைச் சட்டையும் அணித்து சரியான நேரத்தில் பள்ளியில் அவர் இருப்பார். கண்டிப்பானவர், அதேசமயம் கனிவானவர். அவரது கண்களில் அறிவின் தெளிவும், உறுதியும் இருக்கும். நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர்.

    1967ம் வருடம் அப்போதைய முதல் மந்திரி அண்ணாத்துரையைப் பள்ளிக்கு அழைத்திருந்தனர். அன்று வரவேற்புரையை தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் நிகழ்த்தினார். மிகத் தெளிவோடும், நகைச்சுவையோடும் பேசியதை மாணவ, மாணவிகள் உற்சாகமாகக் கைகளைத் தட்டி ரசித்தனர். முதலமைச்சர் பேசும் பொழுது தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் உரையின் அழகைப் பாராட்டினார். அதே போல 1971ல் கல்வி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியன் பள்ளிக்கு வந்திருந்த பொழுது தலைமை ஆசிரியர் மிகச் சிறப்பாகப் பேசியதும், கல்வி அமைச்சர்”கலையே வளர் தொழில் மேவிடு கவிதை புனை தமிழா, இலையே உணவிலையே இனியிலையே என்னும் எளிமை, இனிமேல் இலை எனவே முரசறைவாய் முரசறைவாய்” என்ற பாரதிதாசனின் கவிதையை ஓசை நயத்தோடு கூறியதும் அவனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

    ஒவ்வொரு நாளும் நடைபெறும் “இறை வணக்கம்” (Prayer) நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஏதேனும் ஒரு நல்ல கருத்தை மாணவர்களுக்குச் சொல்லுவார். மாணவர்கள் அமைதியாகக் கேட்பார்கள். அப்படி ஒரு காந்த சக்தி அவருக்கு இருந்தது. ஒரு முறை அவர் உரை நிகழ்த்தும் முன்பு “ஏமாறாதே ஏமாற்றாதே” என்ற திரைப்படப் பாடல் ஒலி காற்றில் மிதந்து வந்தது. மாணவர்களின் கவனம் அந்தப் பாடலில் சென்றதை அறிந்த தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் அந்தப் பாடலையே அன்றைய உரைக்குக் கருவாக எடுத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடங்கள் பேசினார். எப்படி வாழ்வில் கவனமாக இருக்கவேண்டும் என்ற பொருளில் அமைந்த அந்த அவரது அற்புதமான உரையை அவன் இப்பொழுதும் அசைபோடத்தான் செய்கிறான். ஆசிரியர்கள் எப்படி ஒரு மாணவனின் வாழ்க்கையை நன்கு அமைத்துத் தருகிறார்கள், மாணவர்கள் அதை எப்படி உள்வாங்கிக் கொண்டு மேலே மேலே உயருகிறார்கள் என்ற கேள்விகளுக்கு இது போன்ற நிகழ்வுகளே சரியான பதில்கள். அவன் அவனுடைய தலைமை ஆசிரியரான “ரங்கநாதராவ்”வை அவர் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த சமயம் சென்று பார்த்து அவரை வணங்கி வந்தான். “கண்ணா…நீ என் மாணவன். இன்று நீ நன்னா இருப்பதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாருக்கு” என்று அவர் அன்போடு அவன் தலையில் கைவைத்து ஆசிசெய்தார்.”சார்…அது உங்களைப் போன்ற ஆசிரியர்கள் போட்ட பிச்சை” என்றான்.

    அவனது வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி மேல்புறத்தில் உள்ள கடேசி வீட்டில்தான் அவர் குடி இருந்தார். ஆசாரமான மாத்வ குடும்பம். தெய்வ நம்பிக்கை மிக்கவர். தினமும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஆற்றங்கரையில் குளித்து, இடுப்பில் நார்மடிப் பட்டு கட்டி, வலது கையில் ஒரு செப்புச் சொம்பில் தண்ணீரும் கொண்டு எதோ மந்திரங்களை முணுமுணுத்தபடியே வருவார். காலையில் வீட்டில் அவர் பூஜை செய்யும் வேளை “டன்டட டட்டன் டன்டன்டன் டன்டட டட்டன் டன்டன்டன்” என்ற சந்தத்தில் “சேன்டி” அடிக்கும் மங்கல இசை அவனது வீட்டிற்குக் கேட்கும். அப்பொழுது மணி சரியாக ஏழேமுக்கால் என்று சொல்லிவிடலாம். அனேகமாக அவர் பள்ளிக்கு நடந்தேதான் வருவார். அவர் பள்ளிக்குச் செல்லும் முன்பாக அவனுக்கு அப்பாவை அவர் கூட்டிவரச் சொல்லி பள்ளியில் வேலை செய்யும் சுடலை முத்துவையோ, தளவாயையோ, பூதத்தானையோதான் அனுப்புவார். சில நாட்களில் பள்ளிக் காவலாளியாக இருந்த ஆதிமூலத் தேவரையோ அனுப்புவார். அந்த நேரத்தில் அவனோ, அவனுக்கு அக்காவோ வீட்டு நடையில்(முன் வாசலில்) இருப்பார்கள். அவர்களிடம், “அம்பி..அப்பாவ ஹெட்மாஸ்டர் ஐயா வரச்சொன்னாவ…அப்பாட்டச் சொல்லுதியா ” என்று அவர்கள் அன்பாகக் கூறுவார்கள். அப்படி அழைக்கும் ஆதிமூலத் தேவரை அவனுக்குப் பிடித்திருந்தது.

    “பள்ளிக் காவலாளி ஆதிமூலத் தேவர்”

    ஆதிமூலத்தேவரின் குரலில் ஒரு ஆண்மை இருக்கும். நல்ல நம்பிக்கையான தொழிலாளி. அவனுக்கு அப்பாவுக்கும்avs2 ஆதிமூலத் தேவரிடம் மிகுந்த அன்புண்டு. அவனுக்கு அப்பா பள்ளியின் சம்பள தினத்தன்று அம்பாசமுத்திரம் அரசுக் கருவூலத்தில் இருந்து பள்ளியில் வேலை பார்பவர்களுக்கான சம்பளப் பணத்தை வாங்கி வருவார். அப்பொழுது அப்பாவுக்குத் துணையாக பூதத்தானோ, ஆதிமூலத் தேவரோதான் சைக்கிளில் கூடவே சென்று வருவார்கள். அவனுக்கு அப்பா அவர்களுக்கு நண்பன்தான். அப்படிப் பழகுவார். பூதத்தான் மூக்குப்பொடி போடுவார். அந்தக் கையை வீட்டுத் திண்ணைச் சுவரில் தேய்க்கும் பொழுது,” ஒய்..பூதத்தான் இப்படி செவரெல்லாம் நாசமாக்காதேயும்….ஒரூ துண்டக் கைல வைச்சுக்கப் படாதோ….” என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். “அப்படியே பழகிடுச்சில்லேம்மா…” என்று பூதத்தான் நெளிவார்.

    அருகில் இருக்கும் ஆதிமூலத்தேவர்,” அம்மா சொல்லுதாவல்லா…அந்த நல்லதக் கேட்டுக் கிடுமே…” என்று பூதத்தானைப் பார்த்துக் கூறுவார். அவர்கள் ஹெட்மாஸ்டர் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் அவனுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் முறை அவனுக்குப் பிடித்திருந்தது.

    ஆதிமூலத் தேவர் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றபின் அவருக்கான ஓய்வூதியப் பணத்தை அரசாங்கத்திடம் இருந்து விரைவில் பெற்றுத் தர அவனுக்கு அப்பா மிகுந்த உதவி செய்தார். அதனால் அவருக்கு அவனது குடும்பத்தினர் மீதே ரொம்பவும் ஒரு விஸ்வாசம் இருந்தது. அவர் பணி ஓய்வு பெற்றபின் காலை பதினோரு மணிக்கு மேல்தான் தாமிரபரணிக்குக் குளிக்கச் செல்வார். தனது வழுக்கைத் தலையில் நிறைய எண்ணை தடவி இருப்பார். கூடவே ஒரு ஆட்டுக் குட்டியையும், அதற்கான ஒரு சிறிய இலைகள் உள்ள குழையையும் ஒரு கையிலும், மறு கையில் ஒரு வெள்ளைத் துண்டை இரண்டாக மடித்து வைத்தபடியம் மெதுவாக நடந்து செல்வார். சில விடுமுறை நாட்களில் அவனும் அவனது நண்பர்களும் வாய்க்கால் பாலத்தின் சுவர்களில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவனுக்கருகில் வந்து, “அம்பி ..இப்படி செவர்கட்டைல ஒக்கராதேயும்…தண்ணிக்குள்ள விழுந்திர மாட்டீரா” என்று கனிவோடு எச்சரிப்பார்.

    ஒரு நாள் அவன், ஆதிமூலத் தேவர் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மண்டபத்தை அவர் ஒருவராகவே சுத்தம் செய்வதை பார்த்தான். அந்த மண்டபச் சுவர்களில் நன்றாகப் படம் வரைபவர்களைக் கொண்டு அழகான படங்களை வரையச் சொன்னார். ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்னால் இருக்கும் கல்விளக்கில் எண்ணை விட்டு தினமும் தீபம் ஏற்றினார். அந்த மண்டபத்தில் யாரேனும் அசுத்தம் செய்பவர்களைக் கண்டால் அவர்களிடம், “எலேய்…இங்கயா வந்து அசுத்தம் பண்ணுதே..ஒங்க வீட்ல பண்ணுவயாலே..இது சாமி இருக்கற இடம்ல .. சுத்தமா இருக்கட்டும்…” என்று சண்டை போடுவார். அதனாலேயே, அவரின் கண்டிப்பாலேயே அந்த இடம் இன்றும் சுத்தமாக இருக்கிறது. அவர் செய்த பணியை யாரேனும் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆற்றங்கரையில் படி இறங்கும் இடத்தில் ஒரு அரச மரமும், நெல்லி மரமும், வேம்பு மரமும் நட்டு வைத்தார். அது இன்று வானுயர ஓங்கி நிற்கிறது. அதன் அடியில் ஒரு சிறிய விநாயகர் சிலையும் வைத்து இன்று வருவோர் போவோர் எல்லாம் வணங்கி வருகின்றனர் என்றால் அதற்குஆதிமூலத் தேவரின் நல்ல உழைப்பும், பக்தியுமே காரணம். அவர் எப்போதுமே அந்த கிருஷ்ண மண்டபத்தின் மேலேதான் படுத்திருப்பார். அப்படி ஒருநாள் படுத்திருந்தவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. தாமிரபரணியை நேசித்தவருக்கு அதன் கரையிலேயே, திறந்த வெளியிலேயே அமைதியான மரணம் அமைந்து விட்டது. அந்த ஸ்ரீகிருஷ்ண மண்டபத்தையும், கரையில் வானுயர நிற்கும் அரசமரத்தையும் இப்பொழுதும் அவன் பார்க்கத்தான் செய்கிறான். ஆதிமூலத் தேவரை நினைத்துக் கொள்கிறான்.

    (14.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • காலம் (5)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x150

    படகில் பயணம் ! பரந்து விரிந்த
    கடலில் இரவின் கலையின் நடனம் !
    சுடலைச் சிவனும் சுகமாய் உமையும்
    இடமாய் அமர்ந்த எழில். (41) 09.02.2015

    பசுதெய்வம் ! தட்டாமல் பால்தரும் எந்தச்
    சிசுக்குமே ! சாணந் திரட்டிப் பொசுக்க
    விபூதி கிடைக்கும் ; விரும்பி வணங்கும்
    கபோதிக்கும் தீருங் கலி. (42) 10.02.2015

    பசுவும் பசுமேய்க்கும் பாலனும் ஒன்றாய்
    விசும்புக் குலத்தின் வினைகள் நசுக்கும்
    பசுபதிகள் ; பாலோடு பக்தி சுரக்கும்
    பசுபற்றப் பாடம் படி. (43) 11.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    மாயக் குதிரை மனதைப் பிடித்தவன்
    மாயவன் கண்ணன் மடியிலே தோய்கிறான் !
    காயில் இனிப்பும் கனியில் கசப்புமே
    வாயில் உணர்ந்தே வளர். (44) 12.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    கரிவண்ணக் கண்ணன் களிநடை போட்டு
    விரிகூந்த லோடு வெளியில் தெரிகிறான் !
    வானமே நீர்த்தொட்டி வாரிமழை கொட்டல்போல்
    தானுமே ஆவான் தனி. (45) 13.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    கடல்தாண்டிப் போகாதே கட்டாயம் பாவம்
    உடனே வருமென்றார் ; ஊரூர் கடந்து
    கடல்தாண்டிப் போன “கவியனு மானால்”
    இடரெல்லாம் நீங்கும் எனக்கு. (46) 14.02.2015

    பஞ்சமா பூதம் படைத்த இறைவனைக்
    கொஞ்சமா திட்டுறோம் ; கொள்ளையாய் வஞ்சத்தைக்
    கூசாமல் செய்கிறோம் ; குட்டுப் படுகையில்
    ஏசாமல் ஏற்றே இரு. (47) 15.02.2015

    மூச்சுக்குத் தேவை முறையான காற்றோட்டம் !
    பேச்சுக்கும் அப்படியே ! பிள்ளைகள் பாசத்தால்
    கண்ணை மறைத்துக் கடமை தவறினால்
    அண்ணே அமைதிக்கே ஆப்பு. (48) 16.02.2015

    கண்ணனின் வெண்பசு காட்டுது வால்கொடை !
    பெண்மையின் ஆண்மையும் பேராழி வண்ணமும்
    உண்மையின் பேரெழில் ! உத்தவ நண்பனை
    எண்ணத்தில் வைத்தே இரு. (49) 17.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    சிவசிவ என்று சிலநொடி கூட
    இவனுளம் நிற்காது ; இந்தத் தவநெறி
    கிட்டத் தெரியாக் கிறுக்க னிதயமும்
    வெட்ட வெளியாம் சிவம். (50) 18.02.2015

    Share
  • சிவபிரதோஷம்!

    -மீ.விசுவநாதன்

    மணிக்கணக்காய் கண்மூடி உன்னை
         மனதினிலே கண்முன்னால் காணத்
    துணிவில்லை பொறுமையுமே இல்லை  sivamjpg
         துளிகூட பக்தியுளம் பேணாப்
    பிணியாளன் என்னும்பேர் பெற்றேன்
         பித்தனுனை எண்ணுவது மில்லை
    அணியணியாய் நற்கவியால் உன்னை
           அன்போடு போற்றுவது மில்லை!

    பெற்றோரைத் திட்டியவன்; ஊரில்
         பெரியோர்சொல் கேட்காமல் நித்தம்
    நெற்றிநீரைப் பூசாமல் காலி
         நெற்றியாக வைத்தவனின் உள்ளம்
    பற்றியவா! பரமசிவா! உன்னைப்
           பக்திசெயா மூடனுக்கும் ஞானம்
    பற்றிடவே அருள்செய்தாய்! அந்தப்
           பரந்தமனம் எனக்கில்லை ஈசா!      

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், காய், மா, காய், காய், மா )

     

    Share
  • என்வீட்டுப் பூனை!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    ஒரு பூனை
    அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டுக்
    கதறித் துடிப்பதாகக்
    கனவு கண்டு
    நித்திரையினைத் தொலைத்தேன்
    நிம்மைதியினை  இழந்தேன்…!

    காக்கா கோழிகளின்
    சங்கீத ராகம்
    என் காதுகளைக் குடையவே
    முற்றத்துப் பக்கம் பாதங்கள்
    கோலம் வரைந்தன
    கண்கள் நிஜங்களைத்
    தேடி அழைந்தன …!

    என் ராக் கனவுகள் –
    என்னை
    ஏமாற்ற வில்லை
    துரோகமிழைக்கவுமில்லை…!
    சில முக நூல் உறவுகளைப் போல்
    மன சந்தோஷத்தால்
    என் இதய மலர்
    சிரித்துக் கொட்டியது
    அழகான குட்டிகளின்
    பிறப்பினைக் கண்டு
    வருகையைக்  கண்டு…!

    நீண்ட தொல்லைகளுக்குப்
    பின் இன்றுதான்
    என் சுவாச மூச்சுக்கு
    மன நிம்மதி கிடைத்தது !

    இரவு நேர இருளில்
    அந்த உடுப்புப் பெட்டிக்குள்
    எலிகளின் அட்டகாசமா…?
    அல்லது
    விளையாட்டு பொம்மைககளின்
    குரலோசைகளா…?
    அல்லது
    உணர்வுகளின் சப்தங்களா…?

    உன் சுவாசம்பட்ட
    வீட்டுச் சந்துபொந்துகள்
    மூலை முடுக்குக்குகள்
    சூரியனைக் கண்ட பனிபோல
    மாறத் தொடங்கியுள்ளன

    உடம்பினைப் போர்த்திய
    துண்டினைப் பார்த்து
    உன் இதயம் –
    அழுது வடிவதேன்..?

    அதனால்தான் போலும்
    உன் உள்ளத்துக் கதவுகளை
    அடிக்கடி மூடித்
    திறந்து எனக்குள்
    உண்ணாவிரதம்செய்தனவோ?
    ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

    என் ஜீவன் –
    எலி, பல்லி, கரப்பத்தான்
    நுலும்பு கொசு, எறும்பு
    எதுவுமே அற்ற
    படுக்கையில் மனநிம்மதி நாடி
    உறங்க அழைந்தேன்!

    உன் குட்டிகளைக் கண்ட
    சின்ன எலிகளெல்லாம்
    உன்னைப் போலவே
    மரம் விட்டு மரம் தாவும்
    மந்திகளைப் போலவே
    இடம்மாறித் தடம் மாறிப்போயின
    நிலை மாறி..!

    சில கனவுகள் பலிக்கும்
    நினைவுகள் நிறைவேறும்
    என்ற நம்பிக்கைகள்
    எனக்குள் வாழ்கின்றன
    என் எதிர்பார்ப்புகளின்  இலட்சியங்களில்
    ஆரம்பமாகும்
    திசைகாட்டும் கப்பலைப்போல்
    என் வீட்டுப் பூனைகளும் …!

     

    Share