Blog

  • நிலவே முகம் காட்டு!

    -ரூபன், ஈச்சிலம்பற்றை, இலங்கை

    நிலவே ஒருநாள் முகம்காட்டு
    உன் முகவரி எனக்குத் தெரியட்டும்
    தவழ்ந்து தவழ்ந்து நீந்துகிறேன்
    நினைவு உள்ளே வரும்வரைத்
    தவமாய் இருந்து துாங்குகிறேன்
    தாவித்தாவிப் பிடிக்கிறேன்
    தள்ளித்தள்ளிப் போகிறாய்
    தவமும் கலைந்து போகுதடி
    தாவி அணைக்கத் துடிக்கிறேன்!

    இருட்டறை கொண்ட மாளிகையில்
    இருளும் சூழ இருக்கின்றாய்
    ஒற்றைப்பார்வை பார்க்கிறாய்
    ஓரக்கண்ணாய் தெரியுதடி
    ஓடி ஓடி வருகிறேன்
    உள்ளம் அணைத்துப் பிடிப்பதற்குக்
    கையும் ஒன்றை ஊன்றுகிறாய்
    கருணையுள்ளம் தெரியுதடி!

    சிவந்த சேலை உடுத்துக்கிட்டுச்
    சிவத்த சூரியன் வருகையில்
    மேனியும் அக்கினி நிறத்தில் தெரியுதடி
    வருவேன் வருவேன் இருந்திடுவாய்
    காலம் விரைவில் பதில்சொல்லக்
    கணப்பொழுதில் வந்திடுவேன்
    சொந்தம் நட்பும் பலம் கொள்ள
    இணைவோம் வாழ்வில் ஒன்றாக!

     

    Share
  • வெளிநாட்டு வாழ்க்கை!

    -துஷ்யந்தி, இலங்கை

    வாசல் வரை வந்த
    துன்பமெல்லாம் வழியனுப்ப
    வான்பறவை மேலேறி
    அயல்தேசம் காணப்
    பணங்கட்டிப் படியேற
    விடை கொடுக்கும் நிலையம்
    விமான நிலையம்…!

    புதிய தேசம் போனதும்
    புதிரான மனிதர்கள்…
    இவர் மொழிதனைப் பயின்று
    குணந்தனை உணர்ந்து
    கொடுத்திடும் தொழிலைக்
    கண்விழித்துச் செய்திட
    உறுதிகொண்டு நுழைபவன்
    சாதிப்பது நிச்சயம்…!

    அன்பான அன்னையின்
    அரவணைப்பும் இல்லை
    ஆசை மனைவியின்
    தலைகோதலும் இல்லை
    பெற்றெடுத்த மக்களின்
    ஸ்பரிசமும் இல்லை
    ஓடிவந்து உதவும் உயிர்
    நண்பனும் இல்லை..!

    அன்னமில்லை ஆகாரமில்லை
    அன்புக்கு யாருமில்லை
    பண்டிகைக் கொண்டாட்டமில்லை
    விடுமுறை நாட்களில்லை
    உணர்வுகள் அத்தனையும்
    வெறுமையாய் மாற்றிக்கொண்டு
    வேதனை நிலை வெளிக்காட்டாது
    இயற்கையோடு இயந்திரமாய்
    வெளிநாட்டில்  நாம்…!

    பணமிருக்கும் நாட்டிலே
    நல்ல மனதிற்கிடமில்லை
    குணமிருக்கும் தாய்நாட்டில்
    பணத்திற்கு வழியில்லை
    வாழ்க்கையெனும் ஓடத்திலே
    வந்தொட்டும் தடைகளாய்
    வந்ததெல்லாம் ஏற்றுக்கொண்டு
    வாழ்கின்றோம் மனிதர்களாய்…!!

     

    Share
  • இந்திய ஜனநாயகம் பயணிக்க வேண்டிய தூரம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் இல்லினாய் மாநில ஆளுநராக இருந்தவர் ப்ளகோஜேவிச்.  இவர் தன்னோடு தொடர்புடைய பொது நிறுவனங்களுக்கும் தன் தேர்தல் நிதிக்கும் பணம் சம்பாதிக்கச் செய்த ஊழல்களுக்காகவும் தன் சொந்த நலன்களுக்காகச் செய்த ஊழல்களுக்காகவும் மத்திய அரசைச் சேர்ந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் இவரைக் கைதுசெய்து அவர் மீது சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் மூலம் நிரூபித்து அவருக்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்தார்.  ப்ளகோஜேவிச் எப்போதும் 4000 டாலர்கள் பெறுமான, பிரத்தியேகமாக அவருக்காகத் தைக்கப்பட்ட கோட்டு, சூட்டுகளையே அணிவார்.  2016-இல் ஜனநாயக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வாய்ப்புக்களைப் பெற்றிருந்தார்.  இப்படிப் பிரபலமாக இருந்தவர் சிறையில் கழிப்பறைகளை மணிக்கு 12 காசுகள் பெற்றுக்கொண்டு சுத்தம் செய்து வருகிறார்.  இவர் செய்த ஊழல்கள் என்ன?

    2002-இல் ப்ளகோஜேவிச் இல்லினாய் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அமெரிக்காவில் ஆளுநர் தேர்தலுக்கு முன் இரண்டு கட்சியிலும் ஆளுநர் தேர்தலில் பங்குகொள்ள விரும்புவோர் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் முதல்நிலைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.  முதல்நிலைத் தேர்தலில் வெற்றிபெற்ற இரண்டு கட்சி வேட்பாளர்களும் பின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவார்கள்.  இப்படிப் போட்டியிட்டு இல்லினாய் மாநில ஆளுநராகப் பதவியேற்றவர் ப்ளகோஜேவிச்.  ஆளுநரின் பதவிக் காலமான நான்கு ஆண்டுகள் முடியும் முன்பே இவர் மீது பலவிதக் குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்தன.  இருப்பினும் 2006-இல் மறுபடி ஆளுநர் தேர்தலில் வெற்றிபெற்றார்.  தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்கள் மூலம் பிறரோடு உறவாடும்போது லஞ்சம் கேட்டதால் மத்திய அரசின் புலனாய்வுத்துறை இவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தொடங்கியது.  நீதிமன்றத்தின் அனுமதியோடு மத்திய அரசின் பப்ளிக் பிராசிக்யூட்டர் இவர் தொலைபேசியில் பேசும் பேச்சுக்களை ரகசியமாகப் பதிவுசெய்தார்.

    ப்ளகோஜேவிச் மாநில அரசின் பல துறைகளிலிருந்து எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்று தன் உதவியாளரோடு திட்டம் தீட்டியிருக்கிறார்.  தன் ஊழலை அம்பலப்படுத்த முயன்ற பத்திரிக்கைக்கு மாநில அரசு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க மறுத்திருக்கிறார்.  தேர்தல் நிதிக்காக 50,000 டாலர் பணம் எதிர்பார்த்து குழந்தைகள் மருத்துவமனைக்கு எட்டு மில்லியன் டாலர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

    இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008-இல் அமெரிக்க செனட்டில் இல்லினாய் மாநிலப் பிரதிநிதியாக, செனட்டராக இருந்தார்.  அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செனட்டர் பதவியை ராஜினாமாச் செய்தார்.  அந்தப் பதவிக்கு தேர்தல் வைக்காமலேயே இன்னொருவரை நியமிக்கும் உரிமை இல்லினாய் ஆளுநரான ப்ளகோஜேவிச்சிற்குக் கிடைத்தது.  அந்த உரிமையைப் பயன்படுத்தி அவர் தனக்கும் தன் மனைவிக்கும் ஆதாயம் தேட முயன்றார்.

    இந்த ஊழல்களுக்குத் தகுந்த சாட்சியங்கள் கிடைத்ததும் உடனேயே ப்ளகோஜேவிச்சையும் அவருடைய உதவியாளரையும் அவர்களுடைய வீடுகளிலேயே கைதுசெய்ய பப்ளிக் பிராசிக்யூட்டர் ஏற்பாடு செய்தார்.  சில மாதங்களிலேயே விசாரணை முடிந்து தீர்ப்பும் அளிக்கப்பட்டு ப்ளகோஜேவிச்சிற்கு பதினான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.  மேல்முறையீடு செய்யும் உரிமை இருந்தும் பிராசிக்யூட்டர் சேகரித்திருந்த ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் அதில் பயன் இல்லை என்று எண்ணி ப்ளகோஜேவிச் மேல்முறையீடு செய்யவில்லை.  அவர் செய்த, செய்யவிருந்த இந்தக் குற்றங்களுக்கே அவருக்கு பதினான்கு ஆண்டுகள் தண்டனை கிடைத்திருக்கிறது.  அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது சிறையில் தலைக்குச் சாயம் பூசிக்கொள்ளும் வசதி இல்லாததால் தலை முழுவதும் வெளுத்துவிடும் என்று ஒரு பத்திரிக்கை கேலிசெய்திருக்கிறது.

    நியூயார்க் மாநில அரசியலில் முக்கிய அதிகாரம் வகிப்பவர்கள் அதன் மேலவைத் தலைவர், கீழவைத் தலைவர், ஆளுநர் ஆகியோர்.  இந்த மூன்று பேர்களில் முதல் இரண்டு பேர் மீது லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடக்கப் போகிறது.  இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட உடனேயே அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே அவர்களை விட்டு விலக ஆரம்பிக்கிறார்கள்.  மேலவைத் தலைவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்; கீழவைத் தலைவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

    குற்றம் செய்த எவரையும் அமெரிக்க நீதித்துறை விட்டுவைக்காது.  இது அமெரிக்க ஜனநாயகம் செயல்படும் முறை.

    இந்தியாவில் ஒரு மாநில முதல்வர் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும் என்றாலும் முதல்வர் பதவிக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்த அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  ஆனாலும் இவர்தான் கட்சியில் எல்லாம்.  அவர் வைத்ததுதான் சட்டம்.  தமிழ்நாட்டு முதல் மந்திரியாக அவருடைய கட்சி அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் அவருடைய வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேகரித்தார் என்று ஒரு வழக்கு அவர் மேல் போடப்படுகிறது.  குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு கட்டத்திலும் வாய்தா கேட்கிறார்.  மறுப்பு எதுவும் சொல்லாமல் நீதிபதியும் கொடுக்கிறார்.  ஒவ்வொரு கட்ட விசாரணைக்கும் ஏதாவது ஒரு மறுப்புத் தெரிவித்து வழக்கின் அந்தப் பகுதி உச்சநீதிமன்றம் வரைக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.  இப்படியே பதினெட்டு ஆண்டுகள் வழக்கு நடந்து கடைசியில் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.  குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.  அவர் மேல்முறையீடு செய்கிறார்.  அதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.  கீழ்நிலைக் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டவருக்கு அடுத்த மேல் கோர்ட்டில் விடுதலை கிடைக்கிறது.  வழக்கை விசாரித்த நீதிபதி பிராசிக்யூசன் தரப்பு வாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.  நீதிபதியே பிரதிவாதியின் வக்கீல் ஆகிவிட்டார்.  குற்றம் சாட்டப்பட்டவர் ஒரே ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டு கோடி கோடியாகச் சம்பாதித்திருக்கிறார்.  இதற்கு ஆதாரம் காட்டவில்லை என்கிறார் நீதிபதி.  எந்தத் தொழிலும் இல்லாத பினாமி கம்பெனிகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வந்ததாக பிரதிவாதி சொல்வதை நீதிபதி ஒப்புக்கொள்கிறார்.  வளர்ப்பு மகன் திருமணத்தை அது கின்னஸ் புக்கில் இடம்பெறும் அளவிற்கு ஆடம்பரமாக நடத்தியிருக்கிறார்.  திருமணத்திற்கான கோடிக்கணக்கான செலவை பெண் வீட்டார் செய்திருப்பார்கள் என்று தானே நீதிபதி முடிவுசெய்துகொள்கிறார்.  வீட்டில் கோடி கோடியாகப் பெறும் தங்க, வைர நகைகளும் சேகரித்துவைத்திருக்கிறார் பிரதிவாதி.  வீட்டில் நான்கு பேர் சேர்ந்து வாழ்ந்ததனால் எல்லோருக்கும்சேர்த்து அத்தனை புடவைகளும் செருப்புகளும் நகைகளும் அதிகம் இல்லை என்கிறார் நீதிபதி.  பல கோடி பெறுமான எண்ணிலடங்கா பங்களாக்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்.   இவை கண்ணுள்ள எல்லாருக்கும் தெரியும்.  பங்களாக்கள் கட்டியதற்கும் தோட்டங்கள் வாங்கியதற்கும் ஆகியிருக்கக் கூடிய செலவு என்று நீதிபதி கணக்குப் போட்டிருப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஆடம்பர பங்களாக்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் போலும் என்று யாரும் நினைக்கலாம்.  இவையெல்லாம் எங்கிருந்து வந்ததென்று நிரூபிக்கவில்லை என்பது நீதிபதியின் வாதம்.  இவையெல்லாம் அவர் அரசியலுக்கு வரும் முன்பே சம்பாதித்த பணம் என்றும் பின் கம்பெனிகளில் சம்பாதித்த பணம் என்றும் வாதாடிய குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கூறியதை அப்படியே ஒப்புக்கொண்டிருக்கிறார் நீதிபதி.  மேலும் பிரதிவாதி சார்பில் இப்படியெல்லாம் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி.

    குற்றம் சாட்டப்பட்டவர் தவறாகத் தன் மீது சாட்டப்பட்ட குற்றத்திலிருந்து மீண்டு புடம் போட்ட தங்கமாக வந்திருப்பதாக மார் தட்டிக்கொள்கிறார்.  குற்றம் சாட்டப்பட்டவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டது சரி என்று சாதிக்க ஒரு கூட்டம்.  அவருடைய வழக்கறிஞர்களின் வாதத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புக் கூற ஒரு நீதிபதி.  குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கடவுளே துணைபுரிந்தார் என்று நம்பும் ஒரு கூட்டம்.  இப்படிப்பட்ட மக்கள் கூட்டங்களை இந்தியாவில் மட்டும்தான் பார்க்கலாம்.

    இந்திய ஜனநாயகம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

    Share
  • வேண்டும் வேண்டும் உங்கள் உறவு …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    vaendum vaendum2

     

    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு …

    இது அன்பின் பரிபாஷை… ஆழ் மனத்தின் குரல்…
    மண்ணில் வந்து பிறந்த உயிர்களில் மானுடர்களுக்கான தேவதரு!
    இன்னும் இன்னும் என்று உள்ளத்தில் தோன்றும் ஊற்று…
    எழுதிப் படிக்கும்போதே இனிக்கும் அமுதம்!
    குரலில் பிறந்து வந்தால் மயக்கும் கல்யாணி!
    மாலைப் பொழுதுகளில் மனதில் புது வருடல்!
    தேனில் நனைத்தெடுத்த பலாச் சுளை!
    உயிர்வரை சிலிர்க்கும் உன்னதக் கவிதை!
    மொத்தத்தில் எனக்கு நீ வேண்டும்… உனக்கு நான் வேண்டும்…

    கவிஞர் வாலி அவர்கள் வரிகள் தர மெல்லிசை மன்னர் இசையைத் தர… குரலைத் தருகிற குயில்கள்… எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்…

    வசந்தத்தில் ஓர் நாள் என்பது திரைப்படம். ஆனால் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் வசந்தம் வரும்!

    அணுக்களில் நிறைந்து நம்மை மயக்கும் காதல் அன்பில் விளையும் இன்ப ராஜ்ஜியம்…

    சொல்லால் அதனை சொல்லிவிட முடியாது… இருந்தாலும் கவிஞர்களின் முயற்சி…தொடர்கிறது!

    வர கவிஞர் போல் வந்த கவியரசர் இன்பத்துப்பால் பக்கம் நம்மை ஈர்க்கிறார்…

    ஒவ்வொரு வரியிலும் உள்ளம் கவர்கிறார்… ஆணின் தேவையென்ன பெண்ணவள் அறிவாள்…

    பெண்ணின் தேவையும் ஆணவன் அறிவான். உள்ளங்கள் இணைந்தபின் உரிமைகள் வளரும்…

    உணர்வின் அலைகள் இப்படியா எழும்? இப்பிறவி தாண்டியும் பிறக்கின்ற பிறவி எல்லாம் உன்னுடனே நான்…

    என்கிற உயிர்க்காதல் சரிதம் எழுதும்… காதலுக்கு மகுடம் சூட்டும்!

    இப்பாடல் ஒன்று போதும் … காதலில் வேண்டியதெல்லாம் கிடைக்கும்….

    காணொளி: https://www.youtube.com/watch?v=hjEe83VEt3c
    படம்: வசந்தத்தில் ஓர் நாள்
    கவிஞர்: வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்கள்: வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    பெண்:
    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

    தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
    தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
    நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
    நாளை என்பதே மறந்திட வேண்டும்

    ஆண்:
    வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

    நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
    நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
    கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
    கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
    வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

    பெண்:
    உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்
    உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
    ஆண்:
    உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
    ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்
    இருவரும்:
    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

    https://www.youtube.com/watch?v=hjEe83VEt3c

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    “சோவர்த்த மானமழை தேவர னர்த்தமாய்,
    ஆவர்த்த மானம் அதில்நனைய , -கோவர்த்
    தனத்தையன்று சுண்டுவிரலால் தாங்கி, தலையின்(இந்திரன்)
    கனத்தையன்று கர்வபங் கம்”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    “புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது”
    ————————————————————

    crazy

    ‘கோந்தே கிருஷ்ணா கரத்தில் குழலதனை
    ஏந்தா(து) இசைப்பதேன் ஏழிசையை!, -சாந்தமிகு,
    ஆய்ச்சி யசோதா அடுப்பூதத் தந்தனையோ,
    காய்ச்சிடப் பாலை, குழல் ….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மே 11, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள்

     

    RajaRajeswari profile

     

    சென்னை நகரின் ஆழ்வார்பேட்டையில், ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்து பரதநாட்டியம் குச்சுப்புடி நடனங்களை கண்ணாகக் கருதி பயிற்சி பெற்று வளர்ந்த தமிழ்ப் பெண்மணி ராஜ ராஜேஸ்வரி, தற்பொழுது அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று உள்ளார். சென்ற மாதம் நியூ யார்க் நகரின் நகராட்சித் தலைவர் ‘பில் டி பிளேசியோ’ (New York City – Mayor, Bill de Blasio) அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தபொழுது, நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் மக்கள் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர், தனது பன்மொழித் திறமையையும், கலாச்சாரப் பின்புலம் அளித்த அனுபவத்தையும் செவ்வனே பயன்படுத்தி நீதித்துறைக்கு பெருமை சேர்த்தவர் எனப் பாராட்டுரையும் வழங்கியுள்ளார். நியூ யார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தெற்காசிய பெண் நீதிபதி என்ற புகழை தமிழகத்திற்குத் தேடித்தந்த நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    நீதிபதி ராஜ ராஜேஸ்வரி முன்னர் ரிச்மாண்ட் கவுண்டி (மாவட்டம்) அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தவர். அப்பணியில் குற்றவியல், போதைப்பொருள் தடுப்பு, உச்சநீதிமன்ற வழக்குகள், பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை வழக்குகள் என நீதித்துறையின் பல பிரிவுகளிலும் பணிபுரிந்தவர் என்ற சிறப்பினைக் கொண்டவர்.

    தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் பேசுகிற ஆற்றல் வாய்ந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அயல்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயரும் குடும்பங்களில், குறிப்பாக தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தோர் குடும்பங்களில் குடும்ப வன்முறைகளும், சிறுவர்கள் மேல் வன்முறையும் அதிகம் நிகழ்வதையும், அவை அக்குடும்பப் பெண்களால், குடும்பத்தின் நலன் என்ற நோக்கில் வெளிவராது மறைக்கப்படுவதையும் தனது பணிக்காலத்தில் கண்டுணர்ந்தவர்.

    பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவது கண்டு மிகவும் வருந்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, குடிபெயர்ந்தோர் குடும்பங்களுக்கும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீதிகிடைப்பதில் தன்னால் உதவமுடியும் என்று கருதுகிறார். பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது முக்கியத்துவம் கொண்டது, அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று பதவியேற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்த நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.

    அநீதியாக, செய்யாத குற்றத்திற்காக ஒருவர் தண்டனை பெற்று, பின்னர் உண்மை தெரிந்து அவர் விடுவிக்கப்படும் செய்திகள் தெரியும் பொழுதெல்லாம் அது குறித்து மிகுந்த வேதனை அடைவேன் என்று கூறும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, அமெரிக்காவின் நீதித்துறை மிகச்சிறப்பானது என்று கூறவியலாது சிற்சில குற்றங்குறைகள் இருப்பினும், விரைவில் வழக்குகள் கையாளப்பட்டு நீதி வழங்கப்படுவது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்கிறார். ஒருவரது இனம், மதம், மொழி அடிப்படையில் யாரும் புறக்கணிக்கப்படாது நீதிபெறவேண்டும் என்று எடுக்கப்படும் முயற்சிகளால் உலகில் மிகச்சிறந்த நீதித்துறையைக் கொண்டது அமெரிக்கா என்பது இவர் கருத்து. குடிபுகும் அயல்நாட்டினருக்கு அமெரிக்கா ஒரு சிறந்தநாடு, முயன்று உழைத்து, தொடர்ந்து தங்கள் திறமையை வளர்த்துக் கொள்பவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பு இங்கு மறுக்கப்படுவதில்லை.

    டெல்லியில் நடந்த வன்புணர்வு போன்ற நிகழ்வுகள் நமது இந்தியச் சமுதாயத்தில் ஊறிப்போய்விட்ட பெண்களுக்கு எதிரான அநீதிகள், இவற்றை நாம் தடுக்காவிட்டால் நமது திறமைகள் முழுவதும் இந்த அநீதியின் காரணமாக வெளிவராது போகும். இது போன்ற கொடூரமான உயிரிழப்பு என்று ஒன்று நடக்காதவரை பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரும் அக்கறை கொள்வதுமில்லை. பெண்களோ குழந்தைகளோ தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை அடுத்தவர் கவனத்திற்குக் கொண்டுவரவும் தயக்கம் காட்டுவார்கள், அவர்கள் சொல்வதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை என்பதுடன் சொன்னால் சமூகத்தில் இகழ்ச்சியுடன் தாம் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதுமே அவர்களது நிலை என்கிறார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது அன்னை தமக்கு நாட்டியத்தில் ஆர்வத்தை ஊட்டுவித்தது போலவே, ஒரே ஒருவராவது அக்கறையுடன் முயற்சி எடுத்தால் நாம் வாழும் உலகம் மேலும் சிறந்த இடமாக மாறும் என்ற நம்பிக்கையையும் எனக்குக் கொடுத்துள்ளார் என்கிறார் இவர்.

    நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பத்மா, கிருஷ்ணன் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அவரது இளமைப் பருவம் செல்வச் செழிப்புடன் இல்லாவிட்டாலும் இனிமையான அமைதி நிறைந்த கலைக்குடும்ப வாழ்க்கையாக அமைந்ததில் மனநிறைவு உள்ளவர். நாட்டிய ஆசிரியையான  தனது தாயைப் போல நடனத்தில் சிறந்து விளங்கி, பத்து வயதிலேயே பிறருக்கும் கற்பிக்கும் திறனையும் கொண்டிருந்தார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. நிதி திரட்ட உதவியாகப் பல நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். கலாஷேத்திராவின் மாணவியான இவர் தனது தாயுடன் உலகின் பலநாடுகளுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளை செய்து வந்தவர்.

    அமெரிக்காவில் நாட்டிய நிகழ்ச்சிக்காக 1988ம் ஆண்டு வந்தவரை அமெரிக்காவில், பெண்களை பேதமுடன் பார்க்கும் மனப்பான்மை குறைவாக இருக்கும் நாகரிகம் இவரை மிகவும் கவர்ந்தது. அறிவாற்றல் மிக்க தனது தோழியர் சிலர் இளவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் திறமை புறக்கணிக்கப்பட்டதை எதிர்கொண்டவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது 16 வயதில் அமெரிக்காவிற்கு வந்தவர் சட்டம் பயின்று, அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணிபுரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிபதி பொறுப்பேற்கும் வகையில் உயர்ந்துள்ளார்.

    இன்றும்,  தனது 43 வயதிலும், இந்திய சமூக நிகழ்ச்சிகளிலும், கோவில் நிகழ்ச்சிகளிலும் தனது குழுவினருடன் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி தனது நடனக் குழுவிற்கு தமது 18 வயதில் விபத்து ஒன்றிற்குப் பறிகொடுத்த தனது அன்னையின் நினைவாக “பத்மாலயா நாட்டியப் பள்ளி” என்ற பெயர் சூட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய்க்குப் பலியான தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி, தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது நீதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

    RajaRajeswari2

    பதவியேற்புரையாக நகராட்சி தலைவரிடம் நன்றி நவின்ற பொழுது, இப்பதவி எனது அமெரிக்கக் கனவு நிறைவு பெற்றதை மட்டும் காட்டவில்லை, தொலைதூர நாடுகளில் வசிக்கும், வாழ்க்கையில் முன்னிலையை அடைய விரும்பும் இளம்பெண்களுக்கு, தானும் முயன்றால் தனது சமூகத்தில் ஒரு சிறப்பிடத்தைப் பெறலாம் என நம்பிக்கையளிக்கும் ஒரு முன்மாதிரியாக நான் விளங்க வாய்ப்பளித்துள்ளது என்று கூறினார். இந்தியாவில் இருந்து வந்தவர் என்ற முறையில் இந்தப் பெருமை கிடைத்ததற்குத் தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், நீதிபதியாக நியமிக்கப்பட்டது அவருக்கு பெருமையும் பணிவையும் ஒருங்கே வழங்கியது என்றும், தான் கற்பனையும் செய்யத் துணியாத பெருமை தனக்குக் கிடைத்தது ஒரு கனவினைப் போன்றிருப்பதாகவும் கூறினார்.

    தனது விடாமுயற்சியால் மிக உயர்ந்த பதவியைப்பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு தனது பணியின் மூலம் நீதிகிடைக்க வழி செய்வதிலும், அயல்நாட்டில் வாழும் மற்ற இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும், பெண்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட விரும்பும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களை மேலும் வெற்றிகள் பல அடைய வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    குறிப்பு:
    தகவல்களும் படங்களும் பல இணையதளங்கள் வழங்கிய பதிவுகளின் தொகுப்பு. தகவல்களும் படங்களும் தந்துதவிய  தளங்களுக்கு நன்றி.

    Share
  • படக்கவிதைப் போட்டி (12)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11215903_831189076935293_1668258411_n

     


    15574_10153246722319882_8836679936821475370_nதிரு. பிரேம்குமார் சச்சிதானந்தம்
    எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • எனது மரணம்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை.

    உடைவாளை
    இறுக்காத சரணாகதியும்
    உயிர்வாழக் கேட்கின்ற
    இறுதி நிலையுமாய்
    அமையும் அத்தருணம்
    நிகழ்கால நிரலொன்றின்
    நிச்சிலப் பொழுதொன்றில்
    நிமிடத்திற்கும்
    வினாடிக்கும் இடையில்
    கண்காணிப்பை மீறிக்
    கணிக்கப்பட்டிருக்கும் அந்நொடி
    யார் பிடித்து வைத்திருப்பாரோ
    யாருக்கும் தெரியாது!

    உள்ளிழுத்த காற்றை
    வெளியேறவிடாத வேளையாய்ச்
    சம்பவிக்கும் அச்சடங்கு!
     
    உடன்கட்டையேற என்னுடன்
    ஒப்புக்கொண்டவள்
    உயிர்க்கட்டை இறங்கத்
    தப்பிக் கொண்டவளாய்த் தள்ளிநின்று
    ஒப்பாரியை ஒப்புவிப்பாள் ஊருக்கு!
     
    பிள்ளைப் பாத்திரங்கள்
    பிரிந்த மாத்திரத்தில்
    கண்கள் பனிப்பார்கள் – கொஞ்சம்
    கவலை தொனிக்க!
     
    சக சொந்தங்கள் – என்
    சாமுன் குறைமெழுகி
    அனுதாபப் பூச்சுகளால்
    அநியாயத்துக்கு வெள்ளையடிப்பர்!
     
    பெயர்மறந்த ஊர்ப்பிரியத்தின் பேரால்
    “மையத்து”அல்லது பிணம் என்று
    மகுடம் சூட்டுவர்!
     
    ஊர்வலமாய் வரும் – என்
    உடல்வளம் கைம்மாற
    நான் ஆக்கிரமித்த மண்
    என்னை ஆக்கிரமிக்க
    வாய்பிளந்து
    வழிபார்த்துக் காத்திருக்கும்!

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 39

    பெரியார்-அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 3

    சுபாஷிணி

    பெயரில் குறிப்பிட்டிருப்பது போலவே இந்த நினைவகம் பெரியாரின் நினைவுகளோடு அண்ணாவை நினைத்துப் பார்க்கவும் வைக்கும் ஒரு இடமாக அமைந்திருக்கின்றது. தந்தை பெரியார் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் இக்கட்டிடத்தின் முற்பகுதியில் இடம்பெறுகின்றன. இக்கட்டிடத்தின் பின்பகுதியில் அண்ணா நினைவகம் உள்ளது. இப்பகுதியே பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது வாழ்ந்த இடம் என்ற குறிப்பையும் காண்கின்றோம். இது அலுவலகம் என்ற நிலையின்றி வீடு போலவே உள்ளது. இக்கட்டிடத்தைப் பார்ப்பவர்கள், 20ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி கட்டிட அமைப்பை இவ்வீட்டினைப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

    நினைவகத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா சிலையுடன் நான்

    anna

    சமையல் அறை, உறங்கும் அறை, திறந்த விசாலமான வீட்டின் நடுப்பகுதி, குட்டையான மேற்கூறை பகுதி ஆகியவை அதன் வடிவம் மாறாமல் இங்கே அவ்வாறே வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியிலும் சுவரில் கண்ணாடி போடப்பட்ட அலமாரிகளுக்குள் அண்ணா தொடர்பான பல தகவல்கள், பத்திரிக்கைச் செய்திகள் ஆகியன இருக்கின்றன. உள்ளே உள்ள ஆவணங்களை புகைப்படம் எடுக்க எனக்கு அனுமதி கிடைக்காததால் அவற்றை இப்பதிவில் பயன்படுத்த முடியவில்லை.

    ​அறிஞர் அண்ணா வாழ்ந்த பகுதியில் தோழியர் பவளா, டாக்டர்.பத்மாவதி

    as

    பேரறிஞர் அண்ணா தந்தை பெரியாருக்கு மிக அணுக்கமாக இணைந்திருந்தவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று அவரோடு சமூகப் பணிகளில் தம்மைப் பல ஆண்டுகள் ஈடுபடுத்திக் கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு அங்கு ஒரு நினவைகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலைப் பற்றி பலரும் அறிந்திருப்பர். தமிழ் மொழி மட்டுமன்றி ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என வேற்று மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர்.

    அரசியல் தலைவர், பேச்சாளர் என்பது மட்டுமன்றி கலைத்துறையிலும் ஈடுபட்டவர். முற்போக்கு சீர்திருத்த கருத்துக்களையும் கொள்கைகளையும் நாடகங்களின் வழியாகவும் திரைப்படங்களின் வழியாகவும் தமது எழுத்துக்களால் வெளிப்படுத்தி மக்களிடையே முற்போக்கு சிந்தனைகள் வளரச் செய்ததில் முக்கியப் பங்கு இவருக்கு உளளதை மறுக்க முடியாது.

    ​​as1

    தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது நீதிக்கட்சியில் இணைந்து பின்னர் திராவிடர் கழகத்திலும் இணைந்து சமூக விழிப்புணர்வு தரும் பல நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பெரியாருடன் கொண்ட கருத்து வேறுபாட்டினால் திராவிடர் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலருடன் 1949ம் ஆண்டு விலகி திராவிடர் முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை இவர் நிறுவினார். தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகவும் அறிஞர் அண்ணா பொறுப்பேற்றிருந்தார். தமது இறுதிக்காலத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 2ம் தேதி 1969ம் ஆண்டில் அறிஞர் அண்ணா மறைந்தார்.

    தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இருவருமே தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் ஏற்பட உழைத்தவர்கள். இருவருமே தமிழ்ச்சமூகத்திலே அக்கால கட்டத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகள், பெண் விடுதலை, சாதிக் கொடுமைகள், தீண்டாமை கொடுமை ஆகியன ஒழிய மக்கள் மத்தியில் பல்வேறு வகையில் சிந்தனையைத் தூண்டும் செயல் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

    ​பெரியார் அண்ணா நினைவகம்

    as2

    இவர்கள் இருவரையும் நினைவு கூறும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஈரோடு பெரியார் அண்ணா நினைவகம் நல்லதொரு வகையில் பராமரிக்கப்படும் ஒரு அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஈரோடு செல்பவர்களும் தந்தை பெரியார் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களும் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரலாம்.

    ஈரோட்டில் இருக்கும் பெரியார் புத்தகக்கடை

    as3

    ஈரோட்டில் இந்த நினைவகத்தின் அடுத்த பகுதியிலேயே தந்தை பெரியார் நூலகம் ஒன்றும் இருக்கின்றது. பெரியார் எழுதிய நூல்களும் பெரியாரைப் பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களும் இப்புத்தகக் கடையில் கிடைக்கின்றன. நான் சென்ற போது தந்தை பெரியாரின் 11 சிறு நூல்களை வாங்கிக் கொண்டேன்.

    சரி..ஈரோட்டிலிருந்து புறப்பட்டு விட்டோம். அடுத்த கட்டுரையில் உங்களை வேறொரு நாட்டில் உள்ள மேலும் ஒரு அருங்காட்சியகம் அழைத்துச் செல்கிறேன்.. புதிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன… பகிர்ந்து கொள்ள..!


    Suba.T.
    http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ – அருங்கலைப் படைப்புக்கள்

    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com – தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com – மின்தமிழ் மேடை
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி

    Share
  • உன்னையறிந்தால் …. (4)

    நிர்மலா ராகவன்

    உனையறிந்தால்11

    ஆத்திரக்காரனாக வளரும் குழந்தை

    கேள்வி: சில பிள்ளைகள் எளிதாக ஆத்திரம் அடைகிறார்கள். மனோநிலை சரியாகத்தான் இருக்கிறது. எதனால் இப்படி?

    விளக்கம்:

    பெற்றோரில் ஒருவர் மிகுந்த கோபக்காரராக இருந்தால், குழந்தையும் ஆத்திரக்காரனாக வளரும். சிறு குழந்தைகள் ஓயாது அழுதால், அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பசி, தூக்கம், உடல் நலமின்மை, எதையாவது பார்த்துப் பயந்துபோவது — இவைகளோடு, பொழுது போகாமல் அழுவதும் உண்டு. அழுகைதான் அவர்கள் மொழி.

    கூர்ந்து கவனித்தால், இப்படி அழுதால், இன்னது தேவை என்று புரிந்துகொள்ள முடியும். அணைப்பினால் அழுகையை உடனடியாக நிறுத்த முடியும். நாமும் பதட்டப்பட்டு, இல்லை, ஆத்திரப்பட்டு, குழந்தைகளையும் ஆத்திரக்காரர்களாக வளர்ப்பது எதற்கு?

    இரண்டு வயதுக்கு மேற்பட்ட எந்தக் குழந்தையும் தான் இனியும் பச்சைக்குழந்தை இல்லை, அதுதான் நடக்கவும், பேசவும் தெரிகிறதே என்று எண்ணிக்கொள்ளும். தன் சுதந்திர உணர்வை வெளிக்காட்டுவதேபோல், `வேண்டாம்,’ `மாட்டேன்,’ என்ற வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தும். மற்றபடி, அர்த்தம் புரிந்து பேசும் வார்த்தைகளில்லை.

    தாம் சொல்வதை உடனுக்குடன் கேட்கவில்லை என்றால் சில பெற்றோர் ஆத்திரம் அடைகிறார்கள். இவர்களுக்கு தம் வயதிலும், அனுபவத்திலும் மிகுந்த பெருமை. அதை அதிகாரமாகக் காட்டிக்கொள்வர்.

    `என் பேச்சைக் கேட்காது, எதிர்த்துப் பேசுவதா!’ என்று சிறு குழந்தைகளின்மேல் ஆத்திரப்படலாமா? இந்த `குற்றத்துக்காக’ சிறுபிள்ளைத்தனமாக பெற்றோர் தண்டிக்கும்போது, தான் செய்த தவறு என்ன என்றே புரிவதில்லை குழந்தைக்கு.

    சின்னக் குழந்தையை அடித்தாலோ, திட்டினாலோ, பெற்றோருக்குத் தன்மேல் அன்பில்லை என்றெண்ணி அஞ்சும். வருந்தி அழும். இதனால்தான், தன்னை அடித்த தாய் மீண்டும் அணைத்துச் சமாதானம் செய்யும்வரை அழுகை ஓய்வதில்லை. அடிப்பது ஒரு வினாடி என்றால், சமாதானப்படுத்த அரை மணி பிடிக்கும். இந்த அவதிக்கு, சின்னத் தவறுகளைக் கண்டும் காணாமலிருக்கலாம்!

    ஏழெட்டு வயதுக் குழந்தைகளுக்கு இத்தகைய நடத்தை குழப்பத்தை விளைவிக்கும்.

    `நான் எந்தத் தப்பும் செய்யவில்லையே! அப்பா ஏன் அடிக்கிறார்? அம்மா ஏன் கத்துகிறாள்?’

    இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது, சமாளிக்க முடியாத எது நேர்ந்தாலும், ஆத்திரப்படுவதுதான் வழி என்று நிச்சயித்து, அதன்படி நடக்கிறார்கள்.

    முதல் குழந்தை பிறந்ததும், அதை நல்லவிதமாக வளர்க்கவேண்டும், தன்னால் முடியாத சிகரங்களையெல்லாம் அதைத் தொட வழி வகுக்க வேண்டும் என்று பல கனவுகளைக் காண்பார்கள் சில இளம் பெற்றோர். அதனால் படபடப்பும், பயமும் உண்டாவதுதான் கண்ட பலன். ஏனெனில், குழந்தைகளும் வளர வளர, அதே உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள்.

    என் மலாய் மாணவி ஒருத்தி என்னிடம் வந்து கேட்டாள், “நான் பாடங்களை நன்றாகப் படித்துக்கொண்டுதான் ஒவ்வொரு பரீட்சைக்கும் வருகிறேன். வினாத்தாளில் வரும் எல்லாக் கேள்விகளுக்குப் பதில் தெரியும். ஆனால், எழுத முடியாமல் போகிறது. ஏனிப்படி, டீச்சர்?” என்று. கலக்கத்தில் அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது.

    ஒரு முறை, நான் அவள் வகுப்பு மாணவிகளைக் கோபித்தபோது, விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள் — என் மனம் நொந்து விட்டதே என்று! எவ்வளவு தூரம் அவள் தன் தாயை நேசித்தால், ஆசிரியையும் அப்படியே பாவித்து நடப்பாள்!

    “நீ மூத்த பெண்ணா? மிக நன்றாகப் படித்து, உன் தாயைப் பெருமைப்படுத்த நினைக்கிறாயோ?” என்று கேட்டேன்.
    அவள் ஒப்புக்கொண்டாள்.

    தான் செய்வதெல்லாமே பெற்றோரைத் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற ஓயாத கவலையால் இவளால் தன் முழுத்திறமையையும் காட்ட இயலாது போய்விட்டது.

    பரீட்சைக்குப் போகும்போதும், எழுதும்போதும் மனம் நிச்சலனமாக அல்லவோ இருக்க வேண்டும்!
    இவளைப்போல் தம் மனக்குறையைப் பிறரிடம் சொல்லி, அதைப் போக்கும் வழியை நாடுபவர்கள் அரிது. சிலர் தம் குறையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி, அதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள்.

    `ஏனோ இப்படி எதிலுமே வெற்றி பெற முடியவில்லையே!’ என்பவர்களது ஏக்கமும், நிராசையும் காலப்போக்கில் ஆத்திரமாக மாற வாய்ப்புண்டு..

    இப்படி எழும் ஆத்திரத்தைப் பிறர்மீது காட்டுவோரும் உண்டு, தம்மீதே காட்டிக் கொள்பவர்கள் கூடாத சகவாசம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நாடுகிறார்கள் — தம்மையே அழித்துக்கொள்ள விரும்புவதுபோல.

    பெரியவர்களுக்கு எரிச்சல் வர எத்தனையோ காரணங்கள்; மேலதிகாரியின் அவமதிப்பு, போக்குவரத்து நெரிசல், பணத் தட்டுப்பாடு இப்படி. அதை வெளிக்காட்டும் வகை புரியாது, பிள்ளைகளை வடிகாலாக ஆக்கிக் கொள்வது என்ன நியாயம்!
    சில பெற்றோர் தம் வயதொத்தவர்களுடன் அரட்டை அடித்து, ஓய்ந்து வீட்டுக்கு வரும்போது, பிள்ளைகளைக் கவனிப்பது எங்கே!

    இன்னும் சிலர் மனத்தளவில் குழந்தைப் பருவத்திலேயே தங்கிவிட்டவர்கள். அவர்களுடைய நினைப்பெல்லாம் கடந்த காலத்திலேயே இருக்கும். `அப்பா என்கூடப் பேசியதுகூட இல்லை, அக்காதான் அவருக்குச் செல்லம்,’ என்றெல்லாம், எப்போதோ சிறுவனாக இருந்தபோது நடந்ததைச் சொல்லிச் சொல்லி மாய்வார்கள். இதனால் நிகழ்காலத்தின் சுவையான சம்பவங்களை அனுபவிக்க முடியாது போய்விடுகிறது.

    சமீபத்தில் ஒரு மாது என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவரை நான் பார்த்ததில்லை. என்னிடம் பேசினால் ஆறுதலாக இருக்கிறது என்றார்.

    `என் கணவர் முன்கோபி. ஒன்றுமில்லாததற்கெல்லாம் கெட்ட வார்த்தை உபயோகிப்பார். அவர் போய்விட்டார். இப்போது, இரு மகன்களும் அவர் மாதிரியே இருக்கிறார்கள்! எனக்கு எங்காவது தனியாகப் போய்விட வேண்டும்போல இருக்கிறது!’ என்று பிரலாபித்தார்.

    `எங்கப்பா எப்பவும் திட்டுவார், அடிப்பார்,’ என்று இவரது மகன்கள் சிறு வயதில் தம் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கலாம். நாம் யார்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கிறோமோ, அவர்கள் மாதிரியே ஆகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

    `நாம் ஏன் இப்படி ஆனோம், நம் பிள்ளைகளும் நம்மைப்போலவே இளமைப் பருவத்தைக் குழப்பத்திலும், ஆத்திரத்திலும் கழிக்க வேண்டுமா?’ என்று நிறைய யோசித்தால், மாற வழியுண்டு.

    குழப்பத்தை வெளிக்கொணர, நம் மனதில் தோன்றியவற்றை எழுத்தாக வடிக்கலாம். இல்லையேல், படமாக வரையலாம். எழுதுவதும், வரைவதும் மிகச் சிறந்த வடிகால்கள். மனதில் நிம்மதி பிறந்தால் கோபமும், ஆத்திரமும் பறந்துவிடாதா!

    தொடரும்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 165

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கோவலன் தான் கண்ட கனவைக் கூறல்

    கோவலன் மாடலனிடம் கூறலானான்:
    கீழ்மகன் ஒருவன் செய்த சூழ்ச்சியால்
    காவல் காப்பதில் வல்லவனாம் பாண்டியனின்     kovalan kannagi
    இம்மதுரை நகர்தன்னில் ஐந்து பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்ட
    மணம் மிக்க கூந்தலையுடைய கண்ணகி
    நடுங்கும் வண்ணம் துயரடைந்தாள்.

    நான் உடுத்திருந்த ஆடை
    பிறரால் பறித்துக்கொள்ளப்பட்டுக்
    கொம்புகள் உடைய எருமையின் மீது
    ஏறிச் சென்றேன்;
    அழகான சுருண்ட கூந்தலையுடைய
    கண்ணகியும் நானும்
    பற்றுகளைத் துறந்த சான்றோர் பெரும்
    பேற்றினைப் பெற்றோம்.

    தன் மலரம்புகளை நிலத்தில் வீசிவிட்டு
    மன்மதன் ஏக்கம் கொண்டுச் செயலற்று நிற்கும்படி,
    மாதவி அழகுமிக்க மணிமேகலையைப்
    போதி மரத்தின் அடியில் உள்ள
    புத்தர் முன் துறவியாக்கினாள்.

    நள்ளிரவு யாமத்தில்
    நனவேதான் போல் தோன்றும்
    இக்கனவினைக் கண்டேன்
    அதன் பயன் விரைந்து வந்து சேரும்
    என நினைக்கிறேன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 95 -106

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • மணிக்குள் நிமிடமாய் மறைந்தவன்!

    -மெய்யன் நடராஜ்

    இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான் 
    மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான் 
    பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான் 
    அருவியின் இசையிலே அழகுடன் பாடுவான்! 

    மலைகளின் உயரமாய் மனதினைக் கொண்டவன் 
    பசுமையின் வடிவிலே மனந்தனை ஈர்க்கிறான் 
    முகில்களின் உருவத்தில் கருணையைப் பொழிகிறான் 
    வனங்களின் மரங்களாய் வசீகரம் கொள்கிறான்! 

    பயிர்களின் விளைச்சலால் பசியினைப் போக்குவான் 
    இருளினைக் காட்டியே ஒளியினை ஊட்டுவான் 
    கடல்தனில் அலைகளாய் மிதந்துமே திரிகிறான்
    காற்றினில் ஒலியெனக் கலந்துதான் இருக்கிறான்!

    வானத்தில் சுடரென வளமுடன் வருகிறான் 
    வையகம் செழித்திட வளம்பல தருகிறான் 
    ஞாலத்தை ஒருவனாய் ஆட்சியும் செய்கிறான் 
    நாளைக்கு என்பதை நேற்றிலே காண்கிறான்! 

    இனிமையைக் கொடுப்பதில் தேனென இனிக்கிறான் 
    கொடுமையை விலங்குகள் குணத்திலே விதைக்கிறான் 
    தனிமையில் இருந்திடத் துணையென வருகிறான் 
    கனிகளின் நடுவிலே சுவையெனக் கிடக்கிறான்! 

    இரவிலே நிலவென எழில்மழை பொழிகிறான் 
    உறவிலே உயிர்களின் உயர்குணம் வளர்க்கிறான் 
    பிரிவிலே நரகமாய் உழன்றுமே கொல்கிறான் 
    தீயிலே ஜோதியாய்த் திகழ்ந்தவன் வாழ்கிறான்! 

    தனித்தனி படைப்பதன் தனித்துவம் காட்டுவான் 
    தனக்கொரு இடமின்றித் தாண்டவம் ஆடுவான் 
    மணிக்குள்ளே நிமிடமாய் மறைந்தவன் கிடக்கிறான் 
    மனிதனைத் திருத்திட மறுத்தவன் திரிகிறான்! 

     

    Share
  • எங்கே ஒளிந்தாய்?

    -றியாஸ் முஹமட்

    புல்லோடும் பேசுகிறேன்
    புழுதியோடும் விளையாடுகிறேன்
    பூவே நீ அருகில் இருந்தால்
    பூமியிலே நான் பறக்கிறேன்
    புதுமையாக நீ வந்தாய்
    புன்னகையால் என்னைக் கொன்றாய்
    பூகம்பம் ஒன்றை நடத்திவிட்டுப்
    பூமியில் எங்கே ஒளிந்தாய்..?

    Share
  • உழவே உயிரெனக் கொள்க !

    -பா. ராஜசேகர்

    தூங்கி
    எழுந்ததும்
    வானத்தைப்
    பார்ப்பான்
    தூறல்                                                              farmer
    வருமா
    மேகத்தை
    கேட்பான்!

    அள்ளிய
    சாணியைக்
    கழனியில்
    சேர்ப்பான்
    தண்ணியக்
    காட்டி
    மாட்டையும்
    பூட்டி
    ஏரைப்
    புடிச்சி
    உழுகும்
    போ பாரு!

    கண்ணும்
    சொருகும்
    மண்ணும்
    பழகும்
    பழகிய
    மண்ணில்
    பலன்களைச்
    சேர்த்துப்
    பயிர்களை
    விதைப்பான்
    பசியிலே
    கிடப்பான்!

    நீருக்கு
    ஏங்கி
    வானத்தைப்
    பார்ப்பான்
    வரப்பிலே
    தூங்கிக்
    காலத்தைக்
    கழிப்பான்!

    உழவன்
    நலம்பேணும்
    காலங்கள்
    வருமோ?
    உழவுத்
    தொழிலும்
    மதிப்புதான்
    பெறுமோ?

     

    Share