எனது மரணம்!
-ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை.
உடைவாளை
இறுக்காத சரணாகதியும்
உயிர்வாழக் கேட்கின்ற
இறுதி நிலையுமாய்
அமையும் அத்தருணம்
நிகழ்கால நிரலொன்றின்
நிச்சிலப் பொழுதொன்றில்
நிமிடத்திற்கும்
வினாடிக்கும் இடையில்
கண்காணிப்பை மீறிக்
கணிக்கப்பட்டிருக்கும் அந்நொடி
யார் பிடித்து வைத்திருப்பாரோ
யாருக்கும் தெரியாது!
உள்ளிழுத்த காற்றை
வெளியேறவிடாத வேளையாய்ச்
சம்பவிக்கும் அச்சடங்கு!
உடன்கட்டையேற என்னுடன்
ஒப்புக்கொண்டவள்
உயிர்க்கட்டை இறங்கத்
தப்பிக் கொண்டவளாய்த் தள்ளிநின்று
ஒப்பாரியை ஒப்புவிப்பாள் ஊருக்கு!
பிள்ளைப் பாத்திரங்கள்
பிரிந்த மாத்திரத்தில்
கண்கள் பனிப்பார்கள் – கொஞ்சம்
கவலை தொனிக்க!
சக சொந்தங்கள் – என்
சாமுன் குறைமெழுகி
அனுதாபப் பூச்சுகளால்
அநியாயத்துக்கு வெள்ளையடிப்பர்!
பெயர்மறந்த ஊர்ப்பிரியத்தின் பேரால்
“மையத்து”அல்லது பிணம் என்று
மகுடம் சூட்டுவர்!
ஊர்வலமாய் வரும் – என்
உடல்வளம் கைம்மாற
நான் ஆக்கிரமித்த மண்
என்னை ஆக்கிரமிக்க
வாய்பிளந்து
வழிபார்த்துக் காத்திருக்கும்!